இவள் என்னவள் - 7
தேவியின் அம்மா குறை கூறும் ரகம். தன்னை எல்லோரும் புகழ வேண்டும் என்பதற்காக தன் மகள் உள்பட அனைவரையுமே குறை சொல்லிக் கொண்டே இருப்பார். வீட்டில் தேவியின் தந்தை தனது குடும்பத்தை விட தொழிலுக்கு முக்கியத்துவம் தர, தாயாரோ அதை தனக்குச் சாதகமாக ஆக்கி குடும்பத்தில் தன்னுடைய ராஜ்ஜியத்தை
ஆரம்பித்தார். தன் வீட்டில் தனது ஆளுமையை காண்பித்தாரேத் தவிர கடமையை செய்யத் தவறினார், தேவிக்கோ தாயின் பங்கு எதிலும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
ரூபாவதியும், தேவியும் எப்போதும் எலியும் பூனையுமாக இருப்பார்கள். தேவிக்கு சிறுவயதில் தலை வாரி விடுவதோ, நல்ல உடைகளை தேர்ந்து எடுப்பதோ, சமையல், பலகாரங்களை செய்ய சொல்லிக் கொடுப்பதோ, எல்லாவற்றிலும் தாயின் கடமைகளை செய்யத் தவறினார் ரூபாவதி. பெண் பிள்ளைக்கு தாயின் அரவணைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, அதில் தனிமையும், வெறுமையும் அடைந்த தேவி தன் தாயின் மீது பற்றுதல் இன்றி வளர்ந்தாள்.
பத்மாவதியோ தாயாக இருந்து தேவிக்கு சமையல் உள்பட அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார். தேவியோ தன் தாயை விட பல மடங்கு மாமியாரிடம் பிரியமாக இருந்தாள். அக்ஷ்ரன் பிறந்தபொழுது கூட தேவி தன் தாய் கனடா வருவதை விரும்பவில்லை. தன் மாமியார் சஞ்சுவை விட்டு வர இயலாத
நிலையில் பத்மாவதி தான் தேவியின் தாயாரிடம் பேசி ரூபாவதியை அனுப்பி வைத்தார்.
குளித்துவிட்டு வந்தவர்களுக்கு சஞ்சுவும், பத்மாவதியும் உணவு பரிமாறினார்கள்.
அருண், “என்ன அம்மா? டைனிங் டேபிள நிரப்பி வச்சுருக்கிங்க”
“மாமா நீங்க வந்து முதல்ல உட்காருங்க, அக்கா வாங்க, பெரியம்மா இங்க வந்து உட்காருங்க” அனைவரையும் சஞ்சு உட்காரச் செய்தாள்.
“ஆஹா, எல்லோரும் ஆஜராயிட்டீங்க, நான் தான் லேட்டா? சோ சாரி... கொஞ்சம் ஒர்க் இருந்துச்சு, முடிச்சிட்டு வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு…..” என்று கூறிக்கொண்டே வந்து அமர்ந்தான் சிவு.
“சாப்பிட என்னென்ன தயார் பண்ணிருக்கீங்க சஞ்சு?“ அருண்
“அதுவா மாமா உங்களுக்குப் பிடிச்ச மீன் குழம்பு, மீன் ரோஸ்ட், அக்காவுக்கு பிடிச்ச மட்டன் கீமா பிரியாணி, ரய்தா, அப்புறம் மம்முக்கு பிடிச்ச மட்டன் சுக்கா அப்புறம் நம்ம எல்லோருக்கும் பிடிச்ச இறால் தொக்கு, கோழி வறுவல் அவ்வளவு தான்”
“என்னது அவ்வளவு தானா? விட்டா இதை வச்சு ஹோட்டல் நடத்திடலாமே” அருண்
“மாமா..... இது வெறும் அசைவம் மட்டும் தான் இன்னும் சைவம் அப்புறம் ஸ்வீட்ஸ் வேற இருக்கு”
தேவி, “அந்த லிஸ்டையும் சொல்லிரு, கேட்ட உடனே பசி போயிடும், போய் படுத்துக்கிற வேண்டியது தான்”
“அக்கா….. நீங்க லிஸ்ட் கேட்டுட்டு போய் படுக்கிறதுக்கா இவ்வளவு செஞ்சோம்” என்று தேவியை பார்த்துக் கேட்டாள்.
“சரி டா, சரி அதையும் சொல்லி முடி அப்புறம் சாப்பிட ஆரம்பிக்கிறோம்” சொல்லி விட்டு களிப்புடன் சஞ்சுவை எதிர்கொண்டாள்.
“அக்கா, வறுத்த பருப்பு குழம்பு, உருண்டை காரக் குழம்பு, ரசமல்லாய், பாசந்தி, பருப்பு பாயசம்“, வேற என அவள் யோசிக்க ரூபாவதி இடையிட்டு
“என்ன சம்மந்தி மொத்தமா சாப்பாடு போட்டு இப்பவே வீட்ட விட்டு வெளியேற்றிடுவீங்க போல” ரூபாவதி தனது வழக்கமான பேச்சை ஆரம்பிக்க…
அத்தை, “எங்க அம்மாவோட பழக்கமே இப்படி தான், நான் லண்டன்ல இருந்து வந்தபோது கூட இப்படி தான் சமைச்சாங்க. அதிலேயும் எங்க அம்மாவுக்கு பிள்ளைங்க மேல ரொம்ப பாசம். அதனால அவங்க கையாலே சமைச்சு போடுறதுனா அவ்வளவு திருப்தி, இதுல நீங்க எல்லாத்தையும் சாப்பிடணும்னு அவசிமில்லை, உங்களுக்கு வயசு ஆயிருச்சுல அதனால நீங்க என்ன பண்றிங்கனா சிம்பிளா தக்காளி ரசம் இருக்கு அதை சாப்பிடுங்க போதும். எங்க அம்மவோட ஸ்பெஷல் அது“
“இல்ல தம்பி, எனக்கு வயசு ஒண்ணும் ஆகல, எதுக்கு சம்மந்திக்கு சிரமம்னு தான் யோசிச்சேன்” என்று வாய் கூறினாலும், விட்டா சாப்பாடு போடாம அனுப்பி வச்சுருவாங்க போல இருக்கே, அமைதியா சாப்பிட்டு இடத்தை காலி பண்ணிட வேண்டியதுதான் என மூளைக்குள்ளே சிந்தனை ஒட்டம் ஒடியது ரூபாவதிக்கு.
“அத்தை, நீங்களா இவ்வளவும் சமைச்சீங்க? நீங்க மூட்டு வலியை வேற வைச்சிக்கிட்டு எதற்கு இதெல்லாம்?” தேவி
“என்னோட பிள்ளைங்கள மாற்றி மாற்றி பிரிஞ்சு இருக்கேன், சில வருஷத்துக்குப் பிறகு இப்பதான் இரண்டு பேரும் ஒண்ணா இருக்காங்க. என்னோட மனத்திருப்திக்கு தான் நான் இதெல்லாம் ரெடி பண்ணிருக்கேன், நீங்க எல்லாரும் நல்லா சாப்பிடுங்க வேற எதைப் பற்றியும் யோசிக்காதிங்க” என்றார்
பத்மாவதி
அருண் சாப்பாட்டை ருசித்துக் கொண்டே “அம்மா உங்க கைருசி மாறவே இல்ல, ரொம்ப நல்லாயிருக்கு இப்படியே நீங்க சமைச்சுப் போட்டா அப்புறம் ஒரு மாசம் கழிச்சு விமானத்தில் என்ன ஏத்தமாட்டாங்களே”
“ஏன்டா அப்படி சொல்ற?” என்ற வார்த்தையில் சங்கடம் தெரிய கேட்டார் பத்மாவதி
“அம்மா சில், இப்படியே சாப்பிட்டா பின்ன என்னைய விமானத்தில் ஏற்றினா வெயிட் தாங்கணுமே?” அருண்.
தேவி, “அதுவும் நல்லது தான், பேசாம தமிழ்நாட்டிலேயே இருந்திடலாம்”
“உனக்கு ஆசைதான்டி, விட்டா என்னைய அனுப்பி வைச்சிட்டு நீ இங்கேயே இருந்திடுவ “
“ஆமா..ஆமா.....நம்ம பிரச்சினைகளை பேசினா இன்னைக்கு முடியாது, அத்தை இந்த பருப்பு பாயசம் எப்படி செஞ்சிங்க? ரொம்ப அருமையா இருக்கு, அதே மாதிரி ரய்தால மாதுளை, திராட்சை உதிர்த்துப் போட்டு இருக்கீங்களே, பார்க்கவே அவ்வளவு ரசனையா இருக்கு. இப்படி சின்ன சின்ன விஷயங்களை எப்படி பார்த்து பக்குவமா செஞ்சிருக்கிங்க”
“அண்ணி.... அதை நீங்க சஞ்சுகிட்ட தான் கேக்கணும்”
“சஞ்சு உனக்கு சமைக்கத் தெரியுமா?” என்றாள் தேவி
“இல்ல அக்கா, மம்முக்காக அவருக்குப் பிடிச்ச டிஷ் செஞ்சு பழகினேன், சமையல் செய்யுறத விட, அதை அழகாவும், ரசனையவும் இருந்தா தான் மம்முக்கு பிடிக்கும் அக்கா”
“ஒகோ, அப்படியே எல்லா வகையான சமையலும் செஞ்சு பழகு... வேற வீட்டுக்குப் போனா சமையல் செஞ்சு தான ஆகணும்” என்றாள் ரூபாவதி
“இதேமாதிரி நீங்களும் உங்க பொண்ணுக்கு சமையல் சொல்லிக் கொடுத்திருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்”
“ஏன் தம்பி, அப்படி சொல்றீங்க? என் பொண்ணு சமையலுக்கு என்ன குறைச்சல்?”
“அம்மா உன்ன குறை சொல்வாங்க அப்படின்னு முந்திக்கிட்டு எனக்கு ஆதரவா பேசாதீங்க. அவர் உண்மைய தான சொன்னாரு, எனக்கு தெரிஞ்சது ஒண்ணு, இரண்டு சமையல், அதுவும் என் மாமியார் தான் சொல்லி கொடுத்தாங்க”
பத்மாவதி, “வழவழன்னு பேசிக்கிட்டு இருந்தா எப்படி? கொஞ்சம் பேசாம சாப்பிடுங்க”
சிவு, பரவாயில்லை மனசுல பட்டத அம்மாவா இருந்தாலும் நச்சுனு அண்ணி சொல்லிடறாங்களே என மனதில் நினைத்தான்.
“ஒண்ணே ஒண்ணு சொல்லியே ஆகணும், சஞ்சுவுக்கு அப்படியே உங்க கைப்பக்குவம் அம்மா”, அருண்
“புத்திசாலி பொண்ணுடா எதை சொல்லிக் கொடுத்தாலும் கப்புன்னு புடிச்சுக்குவா, கற்பூரம் மாதிரி”, பத்மாவதி
“ஆஹா ஆள் ஆளுக்கு இவள ஏத்தி விடுறீங்களே, சும்மாவே குதிப்பா, இதுல புகழ்ச்சி வேறயா? அப்ப சொல்லவே வேண்டாம்“ சிவு
சஞ்சுவின் முகம் வாடிப்போய் மம்ம்.....மு... என சிணுங்கினாள்.
அவளின் சோர்ந்த முகத்தைக் கண்ட தேவிக்கு சற்று சங்கடமாக இருக்க, தன் தங்ககைக்கு ஆதரவாய் தன் குரலை உயர்த்தினாள்.
“ஏன் சிவு? என் தங்கச்சியப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? நான் இருக்கிறப்போ இந்த மாதிரி எதுவும் சொல்லாதிங்க”
“ஏன்டா, சின்னப் புள்ள அவளப்போய், அமைதியா சாப்பிடு சிவு “ அருண்
“எதுக்கு மம்முவ சத்தம் போடுறீங்க ?”
“அடேங்கப்பா உன் மம்முவ நாங்க எதுவும் சொல்லக்கூடாதோ” தேவி
“ஆமா, …..மம்மு தான் ஒண்ணுமே சொல்லலியே” சஞ்சு சொல்ல, சிவு இதழோரம் சிரித்துக் கொண்டே இருந்தான்.
“அடிப்பாவி, அப்புறம் ஏன் மூஞ்சிய அப்படி வைச்ச, நான் ஏதோ நீ வருத்தப்படுற மாதிரி சிவு பேசிட்டான் அப்படின்னு, உனக்கு சப்போர்ட்க்கு வந்தா நீ எங்களயே கலாய்க்குறியா?” தேவி.
“இங்கு வா சஞ்சு” என்று அவளை அழைத்து ரசமலாயை ஊட்டிவிட்டான் சிவு. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
பத்மாவதி, ”இவங்க இரண்டு பேரும் இப்படிதான்? இவங்களுக்கு நடுவுல போனா நம்மல கிறுக்கு ஆக்கிடுவாங்க. இவங்க ரெண்டு பேரும் இருக்கிறப்போ நம்மெல்லாம் கொஞ்சம் இவங்க கிட்டயிருந்து தள்ளியே இருந்துக்கிறது தான் நமக்கு நல்லது”
“இதை முதல்லயே சொல்லக்கூடாதா? அம்மா. நானும், தேவியும் மாட்டியிருக்க மாட்டோமே”
“அடவிடுங்கண்ணா, இதெல்லாம் ஒர் விஷயமா, சாப்பிடுங்க. அது சரி உங்க வேலை எல்லாம் எப்படி போகுது?” சிவு.
“ஒவர் ஸ்மார்ட்டா வேலை செஞ்சா தான் நமக்கு அங்க வேலை இருக்கு, ஏன்னா அப்பதான் அவங்க நாட்டோட பொருளாதாரம் வளரும்".
"நம் ஊர் மக்களுக்கெல்லாம் நாட்டோட பொருளாதாரத்தைப் பற்றியெல்லாம் கவலையில்லை, வீட்டோட பொருளாதாரம் முன்னேறினா போதும்" சிவு
“அதுசரி தான், உள்ளுரில் உழைப்பு நடத்த முடியாதவன் தான், வெளிநாட்டு வேலைக்குப் போறான். எனக்கே கொஞ்சம் தன்மானம் தடுக்கத்தான் செய்யுது, அவசரப்பட்டு போயிட்டேன்”’
“உங்களுக்கு பிடிக்கலைனா வந்து நம்ம பிஸினஸ எடுத்து நடத்துங்க, நான் உங்களுக்கு உதவியா இருக்கேன்”
“நீ கஷ்டப்பட்டு உருவாக்கிட்டு அதைப் போய் என்கிட்ட தூக்கி கொடுக்கப் போறியா?”
“ நீங்க இந்த வீட்டுடோட மூத்தவர் அண்ணா. எல்லா அதிகாரமும் முதல்ல உங்க கையில் தான் இருக்கணும்”
“இந்த முற்போக்கு சிந்தனையை எல்லாம் விட்ரு சிவு, யாருக்கு திறமை இருக்கோ அவங்க தலைமை தாங்கணும். நீ திறமைசாலி உன்மேல எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு”
“இல்லண்ணா, நான் ........”என தொடங்கும் போதே
சரி சரி.... இந்த பேச்சை நான் இந்தியாவுக்கு நிரந்தரமா வந்த பிறகு பேசிக்கலாம்”
அனைவரும் சாப்பிட்ட பிறகு ஒய்வு எடுக்க தத்தம் அறைக்குச் சென்றனர். சிவு
மட்டும் சிறிது வெளிவேலை இருப்பாதாகக் கூறி சென்றுவிட்டான்.
சஞ்சுவோ தூக்கம் வராமல் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதிரவனும் மறைய எத்தனிக்கும் தருணம், இன்னும் யாரும் எழுந்து இருக்கவில்லை. வெளியே போன மம்முவும் இன்னும் வரல. மம்மு வரவும் கோவிலுக்குப் போகணும். போன் பண்ணி சீக்கிரமா வர சொல்லுவோமா? என யோசிக்கும்போதே, வேண்டாம் மெதுவா அவரோட வேலையை முடிச்சிட்டு
வரட்டும். டிவியில் காதல் பாட்டைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். சிவுவும் வெளிவேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
“பாட்டு சத்தம் எப்பவும் கேட் வரைக்கும் வரும் இன்னைக்கு ‘சத்தமே இல்லாம பாக்குற’ அது மட்டும் இல்லாம, ஏன் சஞ்சு நீ மட்டும் தனியா உட்கார்ந்து இருக்க?”
“நீங்க எத்தன விதமா கேட்டாலும் ஒரே பதில் தான் மம்மு, எல்லோரும் தூங்குறாங்க மம்மு”
“ஒஹோ, நீ தூங்கலையா? “
“ நான் தான் எந்த வேலையும் செய்யிறது இல்லையே, சோ நோ டயர்ட், அப்புறம் எப்படி தூக்கம் வரும்”
“ரொம்பவும் தன்னடக்கம் தான் உனக்கு. நீ தான் இரண்டு நாளா எல்லா வேலைகளையும் செஞ்சுட்டு இருக்க”
“இதெல்லாம் ஒரு வேலையா மம்மு? சரி, உங்களுக்கு குடிக்க என்ன வேணும் சொல்லுங்க, கொண்டு வர்ரேன்”
“ஏன் லட்சுமி ஆச்சி இல்லையா?”
“இல்ல மம்மு, அவங்களும் கொஞ்ச நேரம் ஒய்வு எடுக்கிறாங்க, பாவம் காலையில் இருந்து நிறைய வேலை பார்த்து சோர்வா இருந்தாங்க, நைட் வேற சாப்பாட்டுக்கு தயார் பண்ணணும்ல அதான் நான் தான் போய் ஒய்வு எடுக்கச் சொன்னேன்”
“எப்படி சஞ்சு, உனக்கு மட்டும் இதெல்லாம் தோணுது?” என வியப்பாய் கேட்டான்.
“என்னது மம்மு?”
“லட்சுமி ஆச்சிக்கு ஒய்வு கொடுக்கணும்னு தோணுச்சு பார்த்தியா..”
“அப்படி ஒண்ணும் இல்ல மம்மு, காலையில இருந்து நம்ம கண் முன்னாடியே வேலை செய்றாங்க, நமக்கு ஒய்வு தேவைப்படுதுனா அவங்களும் பாவம்தான.
சரி டீ, காபி என்ன வேணும் சொல்லுங்க”
“உனக்கு எது விருப்பமோ அதையே கொண்டு வா சஞ்சு” இருவருக்கும் சேர்த்து சுக்கு கலந்த தேநீரை கொண்டு வந்தாள்.
“மம்மு என்னைய கோவிலுக்கு கூப்பிட்டுப் போறீங்களா?"
“அத விட எனக்கு வேற என்ன வேலை இருக்கு, சீக்கிரமா கிளம்பி வா போகலாம்” அவள் தயார் ஆகி வருவதற்குள், அவன் சென்று பைக்கை தயார் செய்தான்.
“மம்மு, நானே இன்னைக்கு பைக்ல போகலாம்னுதான் நினைச்சேன், பார்த்தா நீங்களே பைக்கை எடுத்துட்டிங்க.”
“நீயும் நினைச்சியாடா... செம்ம வேவ் லென்த் இல்ல”
“இருக்கணும்ல மம்மு, கிளம்புங்க போகலாம். என்னதான் சொகுசு கார்ல போனாலும் பைக்ல போற மாதிரி இருக்காது”
“இது உனக்கு என்ஜாய் பண்ணுற மாதிரியா இருக்கு, இங்க பாரு ரோட்டுல வர்றப்பவே கண்ணுல தூசி விழுகுது, இந்த அந்திமாலை வெயில் வேற...........
இதெல்லாம் உனக்கு நல்லாயிருக்கு அப்படிதானே”
“மம்மு உங்களுக்கு ஒரு சீக்ரெட் சொல்லவா?”
“அது என்ன? “
“உங்களுக்கு மேஜிக் பத்தி தெரியுமா? உங்களுக்கு கண்டிப்பா தெரியாது, நானே
சொல்லவா? “மேலும் அவளே தொடர்ந்தாள்
“தண்ணீர் மேல ஒரு சிலர் நடந்து காட்டுவாங்களே, அப்படி நடக்கிறது மேஜிக் இல்ல மம்மு, நாம நடக்கிறப்ப நம்ம கால் பூமில படுறத ரசிச்சு நடக்குறோமே அது தான் மேஜிக், வானம், செடி, பூ இதை எல்லாம் பார்க்கிறப்ப ஒரு பீல் வருமே அது
மேஜிக்”
“இப்ப நீ என்னமா சொல்ல வர்ற ?”
“ரொம்ப சிம்பிள். இயற்கையை ரசிக்கத் தெரிஞ்சா, இருள் கூட அழகு தான், அப்படியே சூரியனப் பாருங்க இளமஞ்சளும் ஆரஞ்சும் கலந்த அந்த பிரகாசம் செம்ம, காற்று அடிக்கிறப்ப மண் வாசனை வருது பாருங்க. இந்த பீல் இருக்கே........”
“இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்க?”
“நம்ம வீட்டுல தான் பல்கலைக்கழகமே இருக்கே”என்றாள் சஞ்சு
“யார் அம்மாவா?”
“எஸ் மம்மு”
சாமி தரிசனத்தை முடித்து கோவிலை வலம் வருகையில் அங்கு இருந்த இளம் பெண்கள் சிவுவை கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தனர். சஞ்சுவை பார்த்துப் பொறாமை பட்டவர்களும் உண்டு.
“மம்மு இங்கு உட்காருவோமா...”
“ம்ம்ம் .....சரி பிரசாதத்தை எடு செம்ம நெய் வாசனை, ஆளத் தூக்குது.. “
“மம்மு , கோவிலை சுற்றி வரும் போது அங்க உள்ள பெண்கள் உங்களையே பார்த்தாங்க கவனிச்சீங்களா?”
“அப்படியா நான் கவனிக்கலையே சஞ்சு”
“நீங்க லேசா கண் சிமிட்டினா போதும், எல்லா பொண்ணுங்களும் உங்க பின்னாடியே வந்துருவாங்க”
“ஏன் சஞ்சு? ஒரு தடவை முயற்சி பண்ணிப் பார்க்கவா?”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், கோவிலுக்கு வந்துருக்கோம், அமைதியா மனச அலைபாய விடாம பார்த்துக்கோங்க”
கடவுளே, இவ என் கூட இருக்கும் போது மனச எப்படி அலை பாயாமல் இருக்கும்.... இல்லவே இல்ல அலைபாயமா இருந்தா தான் தப்பு. என் நிலைமையை எப்ப இவ புரிஞ்சுக்க போறாளோ தெரியல கடவுளே. அவன் மனதில் தோன்றியதை சஞ்சு அறிந்த பாடில்லை.
“மம்மு, அந்த பொண்ணுங்கள பார்க்கிறப்ப பாவமா இருக்கு”
“ஏன்மா , உனக்கு ஏன் பாவமா இருக்கு?”
“பின்ன, உங்களையே இப்படி பார்க்கிறாங்க, ரொம்ப ஷேமா இருக்கு மம்மு…..”
“ஷேமா? அடிப்பாவி என்ன பார்க்க அவ்வளவு கேவலமாவா இருக்கு”
“ம்.......இது யோசிக்க வேண்டிய விஷயம் ஆச்சே மம்மு, சிறிது யோசிப்பது போல் பாசங்கு செய்து பின் இரண்டு கைகளையும் பெரிதாக விரித்து காண்பித்து, கொஞ்சம் அழகு தான்” என்றாள்.
“ஏய் இது கொஞ்சமா?” என அவள் தலையில் மெல்ல தட்டினான்,
சஞ்சுமா நீ சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?”
“அதுவா மம்மு, நம்ம வீட்ல எப்பவும் எல்லோருக்கும் மனசும் உடம்பும் ஆரோக்கியமா இருக்கணும், இதை விட முக்கியமான வேண்டுதல் என்னோட மம்மு எப்பவும் சந்தோஷமா இருக்கணும், பிஸினஸ்ல நிறைய ஜெயிக்கணும்”
“உனக்காக எதுவும் வேண்டிக்கலயா சஞ்சு?”
“நான் வேண்டிக்கிட்டதே எனக்காக தான் மம்மு, நம்ம வீட்டுல எல்லோரும் ஆரோக்கியாமா இருந்தா தான எப்பவும் என்ன செல்லமா பாத்துப்பீங்க”
“ஆஹா, பொது நலத்திலும் ஒரு சுயநலம்! சும்மாவா சொன்னாங்க அந்தக் காலத்திலேயே பெரியவங்க”
“மம்மு அது இருக்கட்டும், நீங்க என்ன வேண்டிக்கீட்டீங்க? முதல்ல அத சொல்லுங்க” என்றாள் ஆர்வம் மிகுதியாய்..
“இன்னைக்கு காலையில ஒரு தேவதையோட தரிசனம் கிடைச்சிருச்சு, அதேமாதிரி தினமும் தேவதை முகத்தில் முழிக்கணும் அப்படின்னு வேண்டிக்கிட்டேன்”
“அதப் போய் ஏன் மம்மு, கடவுள்கிட்ட கேக்குறிங்க, என்கிட்ட சொன்னாலே போதுமே. ஆனா ஒரு கண்டிஷன் சும்மா தேவதைன்னு சொல்லி என்னைய ஒட்டக்கூடாது, ஓகே வா”.
“கிண்டல் பண்ணலடா, உண்மையிலேயே நீ என்னோட தேவதை தான்”
“என்னோட செல்ல மம்மு.. நீங்க கொஞ்சம் ஓவரா தான் என்னப் பத்தி சொல்ற மாதிரி தெரியுதே...!”
உதடுகள் வார்த்தைகளை சலிப்பாக உதிர்த்தாலும், சிவுவின் வார்த்தைகளைக் கேட்ட சஞ்சுவின் உள்ளம் சந்தோஷத்தில் கூத்தாடியது.
இதே மாதிரி எப்பவும் மம்முவுக்கு நான் தேவதையா இருப்பேனா?
Last edited: