- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
அத்தியாயம் 28
அவளுக்கு நல்ல நினைவு வரும் போது, அவள் வண்டியில் போய்க் கொண்டிருக்கிறாள். அவளை வண்டியில் ஏற்றியது, மங்கலாக நினைவில் நிழலாடுகிறது. ‘ஏம்பா, என்னிய எங்கே கொண்டு போறீங்க?...’ அவள் கேள்விக்குப் பதில் இல்லை. முன்னே யாரோ வண்டி ஒட்டுகிறான். கார்... அவள் தலையை யாரோ பற்றிச் சாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார்...? யாரோ ஒரு பெண்...
அவள் உட்கார முயலுகிறாள். ஏதோ இறுக்கிக் கட்டியிருந்த கட்டுகள் எல்லாம் அவிழ்ந்து விட்டாற்போல் உடல் வெலவெலத்துத் துவளுகிறது... முருகா...! இது என்ன பயணம்?...
கண்களை மூடி மூடித் திறக்கிறாள்.
“அப்பவே புள்ள வந்து கூட்டபோது மருவாதியாப் போயிருக்கலாம்ல! இப்பபாரு. காலம வந்து பாக்குற. கதவு துறக்கர உள்ள பூட்டிருக்கே. பின்னால வந்து, குதிச்சி, பாத்தா வுழுந்து கெடக்குது. வயிசானாலும் வீம்புல கொறவில்ல...”
ரங்கனின் குரல்தான்.
ஆக, முருகனே இவளை அப்புறப்படுத்துகிறான்.
எங்கே கொண்டு போகிறான் ?
குடிலில், அந்த குண்டு, சப்பை மூக்கியின் ஆளுகைக்கா?
இல்லை... மரகதம் கடித்துத் துப்பும் வீட்டுக்குள்ளா?
“நான் மாபாவி... மாபாவி. பிரும்மசரியம், ஒழுக்கம் எல்லாம் பொய்” என்று சுப்பய்யாவின் குரல் மின்னுகிறது.
“நான் பாவி, மன்னிக்கமாட்டேன்னு சொன்னேன்; நீ மன்னிக்க வேண்டாம்; ஆனால் உனக்கும் மன்னிப்புக் கிடையாதுன்னு போயிட்டார் தாயம்மா !”
அநு அழுகிறாள்.
இவள் எங்கே கொண்டு செல்லப்படுகிறாள்?
உலகத்தில் என்ன அதிசயம் என்று குளத்தில் இருந்த யட்சன் கேட்ட கேள்விக்கு தருமபுத்திரன் என்ன சொன்னான் ? நாள் தோறும் உயிர்கள் மடிவதை மனிதன் பார்க் -கிறான். ஆனால் தான் வாழ்வதைப் பற்றி கனவுகளையும் கற்பனைகளையும் சமைத்துக் கொள்வதுதான் அதிசயம் என்று தானே சொன்னார்?
அப்படி இவள் கண்ணமங்கலக்கனவில் நின்றாள். ஆறு, கோயில், நல்லநீர், மனித சிநேகம், மாசுபடாத சூழல்... ஏதோ ஒரு வாயிலில் இவள் வண்டி வருகிறது. வண்டியிலிருந்து இறங்கி அந்தப் பெண்ணும் ரங்கனும் வீட்டுப்படி ஏற்றிக் கூட்டிச் செல்கின்றனர். இவளால் நிமிர்ந்து பார்க்கக் கூட முடியவில்லை.
அங்கே ஒரு கூடத்தில், நாற்காலியில் உட்கார வைக்கிறார்கள்.
வீட்டில் யாரும் இருப்பதாகக் குரல் கேட்கவில்லை. ஒரு சாப்பாட்டு மேசை; அதைச் சுற்றிய நாற்காலிகளில் ஒன்றில்தான் அவளை உட்காரவைத்திருக்கிறார்கள். தலை தரிக்கவில்லை. மேசை மீது கவிழ்ந்து கொள்கிறாள்.
அப்போது தான் பார்க்கிறாள். அவள் சேலை...யில்லை, உடுத்தியிருப்பது. நீளமாக கவுன்... நைட்டி, ‘அது’ போட்டிருக்கிறாள். ‘முருகா ?’ இதென்ன கோலம் ? இதையா இவளுக்கு மாட்டிவிட்டார்கள்?
“ஏம்மா? நீ ரங்கன் பொஞ்சாதி மருதுதானே? என் சீலய ஏண்டி எடுத்திட்டு இத்தை மாட்டினீங்க? இதென்னடி கோலம், இந்த வயசில எனக்கு ?”
“கோச்சுக்காத தாயி, நீ சீலைய நனச்சிட்டுத் தொப்பயாக் கெடந்த ஒடனே அது போன் போட்டுச் சொல்லிட்டு எனக்கு ஆளனுப்பிச்சிது. ஒடம்பு நாத்தமெடுக்காது?... இது புதுசுதா... என் தங்கச்சி வச்சிருந்தா. ஆபத்துக்கு ஒண்ணில்லேன்னு துக்கி மாட்டின...” சிறிது நேரத்தில் ரங்கன் இன்னொரு பணியாளனுடன் வருகிறான்.
“நீங்க போன் போட்டப்பவே அம்மா ரூம் சுத்தமாக்கச் சொல்லிட்டாங்க...” அவளை இருவருமாக நடத்திக் கூட்டிச் செல்கின்றனர்.
கீழே பளிங்காகத் தரை. ஒரு வாயிலில் நுழைந்து ஒழுங்கை போன்ற பகுதி கடந்து ஒர் அறைக்கு வருகிறார்கள்.
அந்த அறையில் ஒரு கட்டிலில், மெத்தை - விரிப்பு - தலையணை அதில் உட்கார்த்துகிறார்கள்.
“படுத்துக்கம்மா? உம்மவன் வூடுதா. அவுரு டில்லிக்குப் போயிருக்கிறாரு சந்தோசமா இரு...!”
அவள் பதிலை எதிர்பாராமலே ரங்கனும் அவன் சம்சாரமும் போகிறார்கள். அவளுக்குத் துயரம் கரையும் கண்ணீர்கூட வரவில்லை.
‘என் ஆயுசில நான் கட்டில் மெத்தைன்னு சாயவில்லை. இப்ப, இதெல்லாமும் தண்டனையா, முருகா?’
நான் என்ன தப்பு பண்ணிட்டேன்? கருப்பு, அசத்தியம், பொய்யின்னு துணை போக மாட்டேன்னு சொன்னது தப்பா? முருகா, என்னைக் கீழே தள்ளினியே, அப்பிடியே சாகவுட்டிருக்கக் கூடாதா?...
“ஆ... படுத்துக்குங்க பெரியம்மா! அப்புறம் நாங்கல்லாம் எப்படிப் பிழைக்கிறது?”
‘வெள்ளையில் சிறு பூப்போட்ட சல்வார் கமிஸ் அணிந்த ஒர் அழகான பெண் கழுத்தில் ரப்பர் மாலையுடன் அவளைப் படுக்க வைக்கிறாள்.
பன்னிர்ப்பூப்போல முகம். சிரிப்பு. பளீர்ச்சாயம் இல்லை. ஒரு மென்மையான மணம்; அவள் தொட்டபோது உணர்வே இதமாக இருக்கிறது.
காதுகளில் அதை மாட்டிக் கொண்டு, அவளும் நாற்காலியில் அமர்ந்து அவள் நெஞ்சை, முதுகைப் பரிசோதிக்கிறாள். கண்களை நீக்கிப் பார்க்கிறாள். இரத்த அழுத்தம் பார்க்கிறாள்.
“பெரிம்மா, நீங்க சரியாவே சாப்பிட மாட்டீங்களோ? ஒடம்புல ரத்தமே இல்ல...?’
“ஏன் சாப்புடாம?... நேத்துக்கூட அநு புள்ளங்களோட, இங்க புள்ள கேக் வாங்கியாந்து குடுத்தா...”
அவளுக்கு அதெல்லாம் புரிந்திருக்காது.
மென்மையாகச் சிரிக்கிறாள்.
“உங்க உடம்புக்கு ஒண்ணில்ல. நல்லா சாப்புடனும்; ரெஸ்ட் எடுக்கணும், தூங்கணும். ஒரு நாலஞ்சு நாள்ள சரியாயிடும். பிறகு உங்க அநு, புள்ளங்க, சிங்கா, அதென்ன சிங்கு?... அங்கே போயி ஜாலியா இருக்கலாம். இப்ப உங்களுக்கு ஒரு பொண்ணு சாப்பாடு கொண்டு வரும். சாப்பிடுங்க. எந்திரிச்சி நடக்கக் கூடாது. மாத்திரை கொண்டாந்து குடுப்பேன். போட்டுட்டு நல்லா தூங்குவீங்க. எதுவானும் வோணுன்ன, இத, மணி கொண்டாந்து தலப்பக்கம் ஸ்டுல்ல வைக்கிறேன். அடியுங்க. கன்னிம்மா ஒரு பொண்ணு வருவா இப்ப, அவ உங்களுக்கு எது வோணுன்னாலும் செய்வா. வரட்டுமா?...”
மென்மையாகச் சிரித்து விட்டுக் கதவை மூடிக் கொண்டு போகிறாள்.
யார் இந்தப் பெண் ? சந்திரியின் மகள்... பேரென்னவோ சொன்னாள். அர்ச்சனாவோ, என்னவோ, அவளில்லை இது. ஒரு கால் இது மரகதத்தின் மகளா? ரஞ்சிதத்தின் மருமகளா?... அந்தக் கொடியில் இப்பிடி ஒரு மலரா?... ஆனால் நஞ்சை உள்ளே வைத்திருக்கும் பூக்கூட அழகாக இருக்கிறது. இல்லை. எல்லாப் பூக்களும் தியாகம் செய்யத் தானே மண்ணில் உதிக்கின்றன?
சற்றைக்கெல்லாம் தட்டில் சாப்பாட்டுடன் கன்னியம்மா என்ற பெண்ணைக் கூட்டிக் கொண்டு, டாக்டர் பெண் வருகிறாள். நீர்ப்பாத்திரத்தை ஒரமாக இருந்த மேசை மீது வைக்கிறாள்.
“இதபாருங்க, இவதான் கன்னிம்மா. உங்களுக்கு என்ன தேவைப்படுதோ அத இவ கிட்டச் சொல்லுங்க. உங்களுக்கு இவ ஒரு பேத்தி...” அழுந்த வாரிய பின்னலும், ஒரு பூப் போட்ட மஞ்சள் வாயில் சேலையுமாக பளிச்சென்று இருக்கும் பெண், கை குவிக்கிறாள்.
“இவங்க யாரு தெரிமில்ல? எம்.பி. அய்யாக்கு அம்மா. பெரியவங்கள இப்படிக் கும்பிட்டா போதாது. நல்லா பாத்துக்கணும். சீக்கிரம் நல்ல படியா உடம்ப குணப் படுத்தணும்.”
“சரிங்க டாக்டரம்மா!”
“முதல்ல இவங்கள மொள்ள பாத்ரூமுக்குப் போகணுன்னா கூட்டிட்டுப்போ. முகத்தைத் துடைச்சிவிட்டு, சாப்பாடு குடு, பிறகு, இதா, இந்த மாத்திரை வச்சிருக்கிறேன், மூணு மாத்திரை. குடுக்கணும்...”
“சரிங்க டாக்டரம்மா.”
“அப்ப, நா வரேன் பெரிம்மா ? மாத்திரை சாப்பிட்டுட்டு நல்லாத் துங்குங்க...”
கன்னத்தைச் செல்லமாகத் தட்டிவிட்டுப் போகிறாள்.
கன்னியம்மா, கதவைத் தாழிடுகிறாள்.
அவளை மெள்ள எழுப்பி, அருகிலுள்ள குளியலறைக்குக் கொண்டு செல்கிறாள்.
ஓ... குளியலறையா? பளபளவென்று பளிங்கு எதிரே கண்ணாடி, கழுவும் தொட்டி. கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்க்க, கருப்பும் வெளுப்புமாகப் பம்மென்று முடி முகம் ‘அசிங்கமாக’ப் படுகிறது. எப்போதேனும் அவள் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாளா? புருசன் இருந்த நாட்களில் கூடக் கண்ணாடி பார்த்து முகம் சீவிப் பொட்டு வைத்துக் கொண்டதில்லை. அடங்காத முடியை ஒரு மரச்சிப்பினால் அழுந்த வாரி கையால் சுமாராக வகிடு பிளந்து. முடிந்து கொள்வாள். ஒரு ஊசி செருக வேண்டும். இப்போது முடி கூழையாகிவிட்டது. என்றாலும், இறுக முடிவதுபோல் செருகிக் கொள்வாள்...
உக்காருங்க...
“அடிம்மா. இதுல...”
உயர கால் தொங்கப்போட்டு உட்காரும் கழிப்புக்கலம்.
“கீழ வழுவழுன்னு இருக்கு, பத்திரம், உக்காந்துக்குங்க...” அவள் உட்கார்ந்து கொள்கிறாள். பல்விளக்க ஒரு பற்பசை தருகிறாள். நிற்க முடியவில்லை. அப்படியே விரலால் துலக்கிக் கொள்கிறாள். பல் பொடியோ, வேப்பங்குச்சியோ வைத்துத் துலக்கித்தான் பழக்கம். கடையில் ஏதேதோ பற்பொடிகள், கொடுக்கிறான். அவள் பற்களுக்கு ஒரு கேடும் இல்லை. அநுவுக்கு எப்படிப் பற்கள் தேய்ந்தும் விழுந்தும் முகத்தையே மாற்றிவிட்டன?
கன்னியம்மா, அவள் முகத்தைத் தேங்காய்ப் பூத்து வாலையால் துடைத்து, படுக்கைக்குக் கூட்டி வருகிறாள்.
பக்குவமாக பருப்பும் சோறும் ரசமுமாகப் பிசைந்து, முன்னே ஸ்டூலில் வைக்கிறாள்.
அழுக்குக் குளத்தில் தாமரைகளா ?...
வயது முதிர்ந்து, உடலும் உள்ளமும் நலிந்த காலத்தில், இந்தப் பரிவும் பேணுதலும் எத்துணை ஆறுதல் அளிக்கிறது?
“கொஞ்சம் தயிரூத்தி சோறு பிசையட்டுமா பெரிம்மா? இஞ்சி ஊறு காய் இருக்கு.”
“வாணாந்தாயி, எனக்குத் தாயா நிக்கிறீங்க. போதும்மா. வழக்கத்தைவுட நெறய சாப்புட்டேன். நீ போட்ட கையி...” என்று அந்தக் கையைக் கண்களில் வைத்துக் கொள்கிறாள். கையில் ஈரம் படிகிறது. சம்பு அம்மா, நீங்க இந்த ரூபத்துல வந்திருக்கீங்களா? என்னிய இந்தக் கண்ணம்மாளக் கரையேத்த கன்னியம்மா ரூபத்துல வந்திருக்கீங்களா? அம்மா, உங்களுக்கு நா ஒண்ணுமே செய்யலியே ?...” என்று விம்முகிறாள்.
மாத்திரை சாப்பிட்ட சற்று நேரத்தில் அவள் மயங்கி, உறங்கிப் போகிறாள். கனவுகள், பிரிசல்கள் எதுவும் இல்லாத ஆழ்ந்த உறக்கம். நேரம் என்ற உணர்வையே மிதித் தெறிந்துவிட்ட உறக்கம்.
கண்ணை மெல்லத் திறக்க உணர்வு வரும்போது, அறைக்குள் வெளிச்சம் பரவி இருக்கிறது.
உனக்கு எது தேவைப்பட்டாலும் ‘மணி அடி, கன்னியம்மா வருவாள்’ என்று டாக்டர் பெண் சொன்னது நினைவுக்கு வரவில்லை. மெள்ள எழுந்திருக்கிறாள். வயிற்றில் உள்ள பலங்களைத் தோண்டிப் போட்டுவிட்டாற் போல் பலவீனம் ஆட் கொள்கிறது. நரம்புகளே அறுந்தாற் போன்று துடித்த நிலை இல்லை என்றாலும், நிற்கத் திராணி இல்லை. மெல்ல கட்டிலில் நகர்ந்து சுவரைப் பற்றி நடந்து குளியலறைக்கு வருகிறாள். விழுந்து விடுவோமோ, பளிங்குத் தரை பாழாகிவிடுமோ? கேலி பேசுவார்களோ என்றெல்லாம் அச்சம் வதைக்கிறது. தரையின் அப்பழுக்கற்ற தன்மை பாழாகிறது. போர்க்களத்தில், கோழைக்கும் வீரம் வருமாம். அவள் எப்படியோ சமாளித்து, வாளியில் நீர்பிடித்து ஊற்றுகிறாள். கழுவ முடியவில்லை. மெள்ள எழுந்து வாய் கழுவிக் கொள்கிறாள். கண்கள் பாதாளத்தில் போய், முகம் தேய்ந்து சோர்ந்து, வீம்பும் துணிவும் அடிபட்ட சருகாய்க் காட்சி அளிக்கிறாள்.