• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஊர்மிளையின் உன்னதம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
பகிர்வு பதிவு
ஊர்மிளையின் உன்னதம்
குழந்தைகள் சீதையும், ஊர்மிளையும் அவர்களின் சிறிய தந்தையும், ஜனகரின் சகோதரருமான குசத்வஜன் க்ருஹத்திற்குச் சென்றிருந்தனர்.

அரண்மனையில் ஆள்நடமாட்டமே இல்லாததுபோல, கனத்த அமைதி சூழ்ந்திருந்தது. அவர்கள் இருந்திருந்தால் இப்படியா இருக்கும் இந்த இடம்?

ஜலஜலக்கும் சதங்கைஒலி...

கலகலக்கும் சிரிப்பொலி...

சதா அரண்மனையின் இண்டு இடுக்கிலெல்லாம் எதிரொலித்துக் கொண்டல்லவா இருக்கும்!

"அந்தப்புரத்தில்தான் பெண்கள் இருக்க வேண்டும். ஆடவர் முன் வருவதைத் தவிர்க்க வேண்டும். அடக்கவொடுக்கம் அவசியம்..." போன்ற எல்லை மீறிய கட்டுப்பாடுகளால் கட்டிப்போட்டு வைக்காமல், தனது பெண்களுக்கு முழுசுதந்திரம் அளித்திருந்தார் ஜனகர்.

ஆனாலும், ஜனகரின் மனைவி சுனைநா, குழந்தைகள் விஷயத்தில், அன்போடு கலந்து கொஞ்சம் கண்டிப்பையும் வைத்திருந்தாள்.

அவ்வப்போது, சீதையையும், ஊர்மிளையையும் தன்னருகில் அமர்த்திக் கொண்டு நீதிக்கதைகளையும், நல்ல போதனைகளையும் உபதேசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

பெற்றோர் இருவரின் வழிநடத்துதலால், ஸ்வபாவமாகவே, குழந்தைகள் இருவரிடமும், தைரியம், தன்னம்பிக்கை இவற்றோடு, விவேகமும் ஞானமும் அபரிமிதமாக இருந்தது.
பெரும்பாலும் ஸத்விசாரங்களிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார் ஜனகமகாராஜா...

இதைத் தவிரவும், அவருக்கு ஒருவிஷயத்தில் விருப்பம் இருந்தது என்று சொன்னால், அது தனது மகள்கள் இருவரையும் விழிமூடாது பார்த்துக் கொண்டிருப்பதுதான்!
இப்பொழுது அவர்களின்றி வெறிச்சோடியிருந்த அரண்மனை, அவருக்கு வித்யாசமாக இருந்தது. மெல்ல நந்தவனத்தை நோக்கி நடந்தார்.

"இருங்கோ... நானும் வரேன்..."
ஜனகரின் மனைவி, சுனைநா பின்தொடர்ந்தாள். பேச்சு குழந்தைகளைச் சுற்றியே வட்டமிட்டது.

"சுனைநா... என் பொண்ணுகள் இல்லாம, அரண்மனையே வெறிச்சுன்னு இருக்கு... கவனிச்சயா?"

சுனைநா "களுக்" என்றுசிரித்தாள்.

"ஏன் சிரிக்கறே சுனைநா? நான் சொன்னதிலே என்ன தப்பு? ஒனக்கு அப்டித் தோணலையா?"

"எல்லாம் சரிதான்... ஆனா, அவா ரெண்டுபேரும் ஒருத்தன் வீட்டுக்கு, என்னிக்கு இருந்தாலும், போக வேண்டியவாதானே... அத நெனச்சுப்பாத்தேளா?" மௌனமானார் ஜனகர்...

சாதாரணமாகச் சட்டென்று உணர்ச்சிவசப் படக்கூடியவர் அல்லர் அவர்... ரொம்பவும் விவேக ஞானம் உள்ளவர். லோகாயதமான ஆசைகள் அற்றவர்தான்!
ஆயிரம் இருந்தும், தன்பெண்கள் விஷயத்தில் மட்டும் அவரால், தனது ஞானத்தை ப்ரயோகிக்க முடியவில்லை.அவர்கள் அன்புக்குத் தோற்றுப் போகின்ற சராசரித் தந்தையாகவே இருந்தார்.

"என்ன, பேச்சயே காணோம்? நா ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?"
சுனைநாவின் குரலில், ஜனகர் மீண்டார்...

"இல்ல சுனைநா... நீ சரியாத்தான் சொல்றே... நான்தான் மாறணும்..."
பேசிக்கொண்டே வந்தவரின் செவிகளில், வெளியேயிருந்து மிதந்து வந்த "ஷெனாய்" இசை விழுந்தது.

அது ப்ரத்யேகமாக, திருமண ஊர்வலம் என்று சொல்லப்படுகின்ற "பாராத்"தில் மட்டுமே வாசிக்கப்படுகின்ற ஒருசங்கதி. ஜனகரை அது அசைத்தது.

"என்பொண்கள்கூட, திருமண வயச நெருங்கிட்டாளே... இன்னும் எத்தனை நாளைக்கு இவா ரெண்டு பேரையும் என்கிட்டயே வெச்சுக்க முடியும்?" யோசனை மேலிட மனைவியிடம் பேசினார்.

"சுனைநா... நம்ம ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ண வேண்டிய வயசு ஆயிடுத்தேமா... ஒரு நல்லநாளா பாத்து, அவா கல்யாண விஷயத்துக்கு உண்டான முயற்சிய ஆரம்பிக்கணும்மா..."

"நானே ஒங்ககிட்டே அதபத்தி பேசணும்னுதான் நெனச்சுண்டிருந்தேன்...
எதுக்கும் நம்ம குலகுருகிட்ட அவா ரெண்டுபேரோட ஜாதகத்தையும் காட்டி, அவரோடு அபிப்ராயத்த வாங்கிண்டு அதுக்கு மேல ஆரம்பியுங்கோ..."

ஜனகருக்கும் அதுவே சரி என்று பட்டது. எல்லா விஷயத்திலும், தன் குலகுரு அஷ்டவக்கிரரைக் கலந்து ஆலோசிக்காமல், அவர் எதுவுமே செய்ததில்லை! குருவின்மேல் அவ்வளவு நம்பிக்கை ஜனகருக்கு!

அஷ்டவக்கிரரும் ஒருசிறந்த "தீர்க்கதரிசி" மிகுந்த மதிநுட்பமும், ஆச்சர்யமான ஞானமும் உடையவர். அவர்சொல், ஜனகரைப்பொருத்தவரையிலும், "வேதஸத்தியம்"

"அதுவும் சரிதான் சுனைநா... நாளைக்கே நம்ம குலகுருகிட்ட ரெண்டு குழந்தைகளோட ஜாதகத்தையும் காட்டி, அவரோட சம்மதத்தை வாங்கிக்கறேன்..."
அஷ்டவக்கிரரின் திருவாக்கு, எவ்வளவு தூரம் தம்மை நிலைகுலைய வைக்கப் போகிறது என்பதை அறியாதவராய், அரண்மனையை நோக்கி நடந்தார் ஜனகர்....
**************************************

தன்னைத் தேடி தன் ஆஸ்ரமம் வரை, இவ்வளவு விடிகாலையில் வந்த ஜனகரைப் பார்த்து ஆச்சரியமடைந்தார் அஷ்டவக்கிர முனிவர்.
தாள் வணங்கிய சிஷ்யனைக் குளிர நோக்கினார்.

"சொல் ஜனகா! என்ன விஷயமா இவ்ளோ தூரம் வந்திருக்க?"

"குருநாதா... தங்களுக்குத் தெரியாதது ஒன்னுமில்ல... என் ரெண்டு பொண்ணுக்கும் கல்யாண வயசாயிடுத்து... சீக்ரம் அவாளுக்கு விவாகம் பண்ணலாம்னு தோணிடுத்து... ஒங்க உத்தரவு வேணும்..."

"ரொம்ப நல்ல விஷயமாச்சே இது! "சுபஸ்ய சீக்ரம்"னு சொல்வாளே... நடத்திடேன்..."

"அதுக்கில்ல குருநாதா... கொழந்தைகளோட ஜாதகத்தைக் கையோட கொண்டு வந்திருக்கேன்... ஒருக்ஷணம் நீங்க அத பாத்துட்டேள்னா, மேற்கொண்டு ஆரம்பிச்சிடுவேன்..."

"அதுக்கென்ன... கொடுப்பா... பாத்துட்டாபோச்சு... ஈஸ்வரசித்தம் ஒன் விஷயத்தில நன்னாதான்பா இருக்கும்..."

பவ்யமாக ஜாதக ஓலையை, அஷ்டவக்கிரரிடம் அளித்தார் ஜனகர்.
சீதையின் ஜாதகத்தை, மேலெழுந்த வாரியாகப் பார்த்த முனிவர், சட்டென்று அதை தமது சிரசில் வைத்துக்கொண்டு, பின்கண்களில் ஒற்றிஎடுத்தார்...
வியப்புமேலிட, ஜனகர் அவரை நோக்கினார்...

"அடடா... இது இறையம்ஸம் உள்ள ஜாதகம்... சாக்ஷாத் மஹாலக்ஷ்மியோட அம்சமாவே வந்திருக்கா ஒன்பொண்ணு..."
ஜனகரின் முகம் மலர்ந்தது... நேரம் மெல்லமெல்லக் கரைந்து கொண்டிருந்தது.
இத்தனை நேரமும் வாய் மூடி இருந்த முனிவர், இப்பொழுது,

"ஒன்னோட கனிஷ்ட குமாரத்தியோட(இளையமகள்) ஜாதகத்தை கொடு..." என்று வாய் திறந்தார்...

ஜனகர் அதையும் சிரத்தையோடு, குருவிடம் சமர்ப்பித்தார். வெகு நேரத்திற்கு அமைதி நீடித்தது.

கண்களை மூடிய வண்ணம் இருந்த குருநாதர் முன்கைகட்டி அமர்ந்திருந்தார் ஜனகர்.
முனிவர் விழிமலர்ந்த போது, ஜனகர் தம்மையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.


"ஜனகராஜனே... நீ ஒன் கொழந்தைகளுக்கு விவாஹத்துக்கு உண்டான ஏற்பாடெல்லாம் ஆரம்பி... பாக்கலாம்..."

"க்ஷமிக்கணும்... குருநாதா... அவாளோட எதிர்காலம் நன்னா இருக்குமோன்னோ?"
ஒரு தகப்பனுக்குரிய ஆதங்கத்துடன் முனிவரிடம் வினவினார் ஜனகர்.

"அவசியம் தெரிஞ்சுக்கணும்னு நெனச்சா சொல்றேன்..."

"குருநாதா... அடியேன்கிட்ட சொல்லலாம்னு ஒங்க மனசுக்குப் பட்டுதுன்னா சொல்லுங்கோ..." சிஷ்யனுக்குரிய சகல லக்ஷணங்களுடன் பதிலளித்த ஜனகரை ஏறிட்டார் அஷ்டவக்கிரர். மெல்ல அந்த ரகசியத்தை, ஜனகரிடம் பகிர்ந்தார்.

"அரசபோகம் உண்டு; அனுபவிக்கும் யோகம்இல்லை!.."
"கரம்பிடிக்கும் கணவன் உண்டு;கல்யாண சுகம்தான் இல்லை!."
"தரமான சுற்றம் உண்டு; தாங்க ஓர்சொந்தம் இல்லை!.."
"வரம் போலும் வாழ்வு உண்டு; வாழத்தான் விதி இல்லை!.."

முனிவரிடமிருந்து வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும், ஜனகரைத் தீயாய்ச் சுட்டது.
******************************

மெல்ல, தன்னைச் சமாதானம் செய்து கொண்டார் ஜனகர்...

"கு..ரு...நா...தா..." அதற்குமேல்பேசஇயலாமல்தடுமாறினார்.
அவரையும் மீறி கண்களில் நீர் வழிந்தது.

"வேந்தனே... என்னஇது? என்சிஷ்யன் ஒரு சிறந்த ஞானி என்று எண்ணியிருந்தேனே... இறுதியில் நீயும் ஒரு சராசரி மானிடனாய் ஆனாயோ?"
சுதாரித்தார் ஜனகர்...

"க்ஷமிக்கணும் குருநாதா... குருதியில் பந்தபாசம் இன்னமும் கொஞ்சம் ஒட்டியிருப்பதால், அடியேன் உறுதி சற்றே சரிகிறது.

தமது சிஷ்யன் என்று சொல்லிக்கொண்டு தம்மையே அவமானப்படுத்துவதாக உணர்கிறேன் குருநாதா..." தன்னிரக்கத்தோடு தலைகவிழ்ந்தார்..
மனக் கொந்தளிப்போடு இருக்கின்ற ஜனகரை, சமாதானப்படுத்தும் விதமாய், அஷ்டவக்கிரர் பேசஆரம்பித்தார்.

"வேந்தே, எத்தனை முறை ஸத்விஷயம் பேசியிருப்போம்! எத்தனைமுறை இந்த அழிகின்ற உடலைப் பற்றியும், அழியாத ஆன்ம ஸ்வரூபத்தைப் பற்றிய விளக்கங்களையும் கண்டிருப்போம்? எல்லாம் மறந்தாயோ? நீ ராஜாவாக இருந்தாலும், தன்னை அறிந்தவனாய் இருப்பதால்தானே, உனக்கு, "ராஜரிஷி" என்று பட்டமே சூட்டினேன்! இந்த அஷ்டவக்கிரனின் கணிப்பும் பொய்யானதோ?" குற்ற உணர்வோடு, முனிவரை ஏறிட்டார் ஜனகர்.

"ஜனகனே...
சாதகமாக இருக்கும்போது சிலிர்த்து எழுவதும், பாதகமாய் இருக்கும்போது பதறிவிழுவதும், சாதாரண மனித ஸ்வபாவம்! ஆனால், நீ பற்றுகளை எல்லாம் விட்டொழித்தவன் என்பதை, நானே ஆராய்ந்து அறிந்திருக்கிறேன்!
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

ஒரு சமயம், நீயும் எனது மற்ற சீடர்களும் அமர்ந்து என்னிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அப்பொழுது உன் வேலையாள் ஒருவன் ஓடிவந்து, உன் அரண்மனை தீப்பற்றி எரிவதாகவும், பொருள் சேதம் அதிகமாக ஆகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தான். அன்று அவன்மேல் உனக்கு மகாகோபம் வந்தது!

"அதனாலென்ன? எரிந்து விட்டுப் போகட்டுமே.. ஸத்விஷயங்களை அறிந்து கொண்டிருக்கும் என்னிடம் இதுபற்றி இந்நேரம் பேசவேண்டிய அவசியம் என்ன?" என்று அவனைக் கடிந்து கொண்ட உன்னைப் பார்த்து, அன்று நான் உண்மையிலேயே பூரித்துப்போனேன்! அப்படிப்பட்டவனா, இன்று ஆசாபாசவலையில் அகப்பட்டாய்?"

"தவறுதான் குருநாதா... எங்கோ மனம் உரிமை கொண்டாடுகிறது...

"நான், என்னுடையது..." இவையெல்லாம் அடியேனை விட்டு இன்னமும் மொத்தமாய் நீங்கவில்லை என்றே தோன்றுகிறது.
எந்தப் பரிகாரம் செய்தால், என் குழந்தைகள் இந்தச் சிக்கலில் இருந்து மீள்வார்கள் என்றறியவே, என்னுள்ளம் இப்போது விழைகிறது.
ஞானம் இருந்த இடத்தை, பாசம் வந்து மூடிக்கொண்டது குருநாதா..."
அஷ்டவக்கிரர் பலமாய்ச் சிரித்தார்...

"பலகாலம் சேர்த்த வினைக்கு, பரிகாரமும் ஏது?
விதி வழியே உன்வாழ்க்கை! மதி வெல்லுமோ உன்வழக்கை?"

"குருநாதா... இருவர் வாழ்க்கையுமா அப்படி அமைந்திருக்கிறது?" ஆதங்கத்தோடு வினவினார் ஜனகர்.

"இருவேறு விதமாய்
இவ்விருவரின் பாதை...
இருந்தாலும் ஊர்பேசும்
இவர்களது காதை!"

குருநாதர் கூறுவதன் உட்பொருளை அறிய முயன்று தோற்றார் ஜனகர்.

மீண்டும் அஷ்டவக்கிரர் பேசினார்...

"ஒருத்திக்கு வனவாசம்...
ஒருத்திக்கு வெறும் ஸ்வாஸம்...
மறுமார்க்கம் இல்லையாம்!
திருமார்பன் எண்ணமாம்!"

கடைசியாக முனிவர் பேசிய வார்த்தைகளில், ஜனகரின் விவேகம் மெல்லத் தலைதூக்கியது.

"அவன் தீர்மானத்தை இவன் திருத்திவிட முடியுமா என்ன? எவ்வளவு அறிவீனனாய் ஆனேன்! அடியேனைப் பொறுத்தருளுங்கள் குருநாதா.."
கண்ணீரோடு விண்ணப்பித்த ஜனகரை, கைதூக்கி ஆசீர்வதித்தார் முனிவர்...
*****************************
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
"கட்டளை இடுங்கள் குருநாதா... இப்பொழுது அடியேன் செய்ய வேண்டியது என்ன?"

"உன்மகள் சீதைக்கு சுயம்வரத்துக்கு ஏற்பாடுசெய்..."

"சுயம்வரமா? குருநாதா... நாமே தேடிச்சென்றால், சரியான வரன் அமையாதா?"

"சரியான வரன் அமைவதற்குத்தான் சுயம்வரத்தையே நடத்தச் சொல்கிறேன் வேந்தனே..."
சற்று நிறுத்தியவர், மேலே தொடர்ந்தார்...

"உன்னிடம் ஒரு சிவதனுசு இருக்கிறது பார்... அதை எடுத்து நாண் ஏற்றுபவனுக்குத்தான் பெண்ணைக் கொடுப்பேன் என்பதை சுயம்வரத்துக்கான நிபந்தனையாகவை..."

"ஆனால், குருநாதா... அதை யாராலும் அசைக்கக்கூட இயலாதே..."

"நன்றாக யோசித்துப்பார் மன்னா... ஒருவரும் அதை அசைக்கவில்லையா?"

"இல்லை குருநாதா... அந்த சிவதனுசு இருக்கின்ற பெட்டியைப் பதினைந்து வீரர்களாவது சேர்ந்தால்தான் அசைக்கவே முடியும்!"

"ஆனால் மன்னனே... ஒருகன்றுக்குட்டி, அதை தன்காலால் நகர்த்திப்போனதே... அது உனக்கு ஞாபகம் வருகிறதா?"
ஜனகர் யோசித்தார்...

"கன்றுக் குட்டியா? என்ன சொல்கிறார் குருநாதர்?"
இடைவெட்டினார் அஷ்டவக்கிரர்...

"உன் வீட்டுக் கன்றுக் குட்டியைத்தான் சொல்கிறேன் மன்னா..."
ஜனகருக்கு இப்போது புரிந்து போனது...

அன்றொருநாள் சீதையும் ஊர்மிளையும் விளையாடிக் கொண்டிருந்த பந்து, நேரே சிவதனுசு இருந்த பெட்டியின் கீழே ஓடி மறைந்தது...
சீதை, விளையாட்டாய் அந்தப் பெட்டியைத் தன்காலால் நகர்த்தி, பந்தை எடுத்துச் சென்றாள்.
பார்த்துக் கொண்டே இருந்த ஜனகருக்கு பெரும் வியப்பு.
"இது எப்படி இவளுக்கு சாத்யமாயிற்று?"
இன்று வரையில் அவருக்குப் புரியாதபுதிர் அது!

"ஜனகனே... இப்பொழுது ஞாபகம் வந்ததா? நல்லது! அவளுக்கு நிகரான ஒருத்தனைத்தானே நீ தேடவேண்டும்! அதற்கு இதுதான் வழி..."

ஆனால், "இதுநடக்குமா? அப்படிப்பட்ட வீரனும் இருப்பானா?" என்ற கேள்வி ஜனகரின் பார்வையில் தேங்கி நின்றது.
புரிந்து கொண்ட முனிவர் திருவாய் மலர்ந்தார்.

"வீரனொருத்தன் வருவான்!
வில்லை வளைத்து விடுவான்!
ஆரணங்கை வெல்வான்!
அவள் கரமும் கொள்வான்!"

ஜனகர் சற்றே ஆஸ்வாசமானார்.

"குருநாதா... அடுத்ததாக ஊர்மிளைக்கு என்னவழி என்று கூறுங்கள்..."

"முன்ஏர் போனபாதை
பின்ஏரும் போகும்...
வரிசை கட்டி வருவார்...
பரிசம் போட்டு செல்வார்..."

குருநாதரின் வார்த்தைகளில் நிம்மதியடைந்தார் ஜனகர்.
சிலநாட்களில் சுயம்வர மண்டபம் தயாரானது.

"மண்டபம்அழகா? மங்கைஅழகா?" என பட்டிமன்றமே நடத்தி விடலாம்போல, பார்த்துப் பார்த்து நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது சுயம்வரம் நடக்கவிருந்த இடம்.

பலப்பல தேசத்து மன்னர்களும், இளவரசர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

வைதேஹியின் பேரழகு வெகுதொலைவு பரவியிருந்ததால், அழைக்கப்பட்டவரோடு, அழைக்கப்படாத சிலமன்னர்களும், தன்மானம் பார்க்காமல் தாமே வந்திருந்தனர்!

அந்தப் பெரும்கூட்டத்தில்,
தாரம் இருந்தவரும் இருந்தனர்...
தூரம் இருந்தவரும் இணைந்தனர்...
வந்திருந்தவர் எண்ணிக்கையில் அதிகம் இருந்தபடியால் சுயம்வரவிழா, ஒருவார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது..
அழகுக்கு அழகு செய்தாள் சுனைநா..

ஆனால், அத்தனை அணிகளும், சீதையின் அழகின் முன்தோற்றுத்தான் நின்றன!
அதற்காக, துடைத்து வைத்த குத்துவிளக்காய் சபை நடுவே நிறுத்த முடியுமா?
அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஜனகர், அஷ்டவக்கிரருடன் அந்தப்புரத்துள் நுழைந்தார்.

ஒருகணம், ஜனகரையும் ஸ்தம்பிக்க வைத்தாள் ஜானகி!
சுதாரித்தவர்,

"அம்மா சீதே... குருநாதரின் ஆசிகளை வாங்கிக்கொள்..." என்றார்.
அஷ்டவைக்கிரரை, வீழ்ந்து நமஸ்கரித்தாள் சீதா. மனமார வாழ்த்தியவர், ஒருகணம் அவளையே உற்றுநோக்கினார்.

"பொக்கிஷத்தை ஒளித்துவை...
போர்களத்தைத் தவிர்த்துவை..."
ஜனகர் புரிந்து கொண்டார்.

சுயம்வர நிபந்தனையில் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும், இவள் அழகினால் அங்கே சண்டையும் சச்சரவும் வரவாய்ப்பிருப்பதை, குருநாதர் கோடி காட்டுகிறார்!

"அப்படியே ஆகட்டும் குருநாதா..."
அஷ்டவக்கிரரின் ஆணையின் பேரில், சீதை வெளிவராமலேயே, சுயம்வரத்துக்கான போட்டி துவங்கியது.
*********************************

ஆறுநாட்களும் கடந்துபோய், சுயம்வர நிகழ்வு ஏழாம்நாளை எட்டிப்பிடித்தது.
அறிமுகம் செய்து கொள்ளும் சமயம், தன்னைத்தானே புகழ்ந்து பேசிக்கொண்ட அரசர்கள் அத்தனைப் பேரும் தோல்வியைத் தழுவி, வெளிறிய முகத்தோடு வெளியேறினர்.
ஜனகரும் முகம் வெளிறித்தான் அமர்ந்திருந்தார்.

"இன்று கடைசிநாள்... இன்றேனும் குருநாதர் சொன்னது நடக்குமா?"
தெய்வ வாக்காக, குருவின் வாக்கைக் கொண்டாடும் ஜனகருக்கும், ஒரு லேசான கலக்கம் இருக்கவே செய்தது..

ஏதேச்சையாக உப்பரிகையில் வந்து நின்றாள் ஜானகி. அவள் பார்வை அரண்மனை முன்னே விரிந்திருந்த வீதியில் படிந்தது.

மகரிஷியைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் முன்னே நடந்துவர, அவருக்குப் பின்னே இரண்டு யுவர்கள் வந்து கொண்டிருந்தனர். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் அரண்மனையைச் சமீபித்து விட்டனர்.

முதலில், கரியவனாய்த் தெரிந்தவன்தான் கண்களை ஆகர்ஷித்தான்... அவனைத் தாண்டிக் கொண்டு, அவள் பார்வை மேலே நகரவும் மறுத்தது.

பெண்களுக்கு என்றுமே சற்று உள்ளுணர்வு அதிகம்தான்!
"அந்தக் கரியவன்தான், எனக்கு உரியவன்!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் ஜானகி!

அரண்மனையுள் நுழைவதற்கு முன், தன் அகத்தில் நுழைந்த அந்த அழகனை, தன் இரு விழிகளும் விரிய தீர்க்கமாய் நோக்கியவள், அவனை அப்படியே தன் இதய சிம்மாசனத்தில் அமர வைத்து விட்டாள்!

ஆனால் அவனோ,
"அண்ணலும் நோக்கினான்...
அவளும் நோக்கினாள்..." என்ற கூற்றைப் பொய்யாக்கும் விதமாய்,
அவள் புறம் பார்வையைச் செலுத்தாமல், தன் முன்செல்கின்ற முனிவரைப் பின்தொடர்ந்த வண்ணம் இருந்தான்.

அதனால் என்ன?
திருமகளின் விழியில் விழுந்தவனுக்குத் தோல்வியும் உண்டோ?
விஸ்வாமித்ர முனிவரை, ஜனகர் சகல மரியாதைகளோடும் வரவேற்றார்.
அவையிலிருந்தோர் அனைவருக்கும் ஆச்சர்யம்!

"இந்த ராஜரிஷியைத் தேடிக் கொண்டு, அந்த ப்ரம்மரிஷி எதற்காக வந்திருக்கிறார்? சுயம்வரம் நடக்கின்ற இடத்தில் இவருக்கென்ன வேலை?"
தமக்குள் அனைவரும் பேசிக் கொண்டனர்.

தமக்கே உரிய பவ்யத்தோடு, விஸ்வாமித்திரரை நலம் விசாரித்த ஜனகர், சீதையின் சுயம்வர நிகழ்வைப் பற்றியும் அவரிடம் பகிர்ந்து கொண்டார்.

"அறிவேன்மன்னா! அறிந்தே வந்திருக்கிறேன்...
இன்றல்லவா இறுதிநாள்? உன்மகளின் மணம் உறுதியாகும் நாளும் இதுவே அல்லவா?"
இந்த வார்த்தைகள், தேனாய் ஜனகரின் செவிகளில் பாய்ந்தன...

"ப்ரம்மரிஷியே... தம்மை மீண்டும் வணங்குகிறேன்... தமதுவாக்குபலிக்கட்டும்..."
சிரம்தாழ்த்தி, அவரது ஆசிகளை ப்ரார்த்தித்தார் ஜனகர்.

"சுபம் உண்டாகட்டும்!"
இப்பொழுது ஜனகரின் பார்வை, முனிவரோடு வந்த இரு யுவர்களின் மீதும் பதிந்தது.

"யார் இவர்கள்?" என்று அவர் கேட்க நினைப்பதை அறிந்து கொண்ட விஸ்வாமித்திரர் திருவாய் மலர்ந்தார்.

"ஜனகரே.. இதோ நிற்கிறார்களே... இந்த இரண்டு யுவர்களும் அயோத்தி வேந்தன் தசரதனின் புத்திரர்கள்... மூத்தவன் இராமன்... இளையவன் இலக்ஷ்மணன்...
எனது யாகத்தைப் பாதுகாத்து கொடுப்பதற்காக என்னோடு வந்தவர்கள்...
இவர்கள் ஸகாயத்தில் யாகமும் நல்லபடியாய் முடிந்தது... இந்த சுயம்வர நிகழ்வைக் கேள்விப்பட்டே இங்கு வந்தேன்... இந்நிகழ்வில், மூத்தவன் ராமன் பங்குகொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்..."

"அப்படியே ஆகட்டும் மகரிஷியே... தங்கள் சித்தம் என்பாக்யம்..." என்று பதிலளித்த ஜனகர் முதன்முதலாக ராமனை பாதாதி கேசமும், கேசாதி பாதமுமாகத் தீர்க்கமாக நோக்கினார்.

"அடடா... எப்பேர்ப்பட்ட அழகன் இவன்! என்மகளுக்கு ஏற்றவனாய்த் தெரிகிறானே... இவனது கம்பீரமும் தோற்றமும் என்னை ஆக்ரமிக்கிறதே! குருநாதர் மட்டும் இந்த நிபந்தனையை வைக்காதிருந்தால், கண்ணை மூடிக்கொண்டு, இவனுக்கே என்மகளை தாரை வார்த்திருக்கலாமே..."

"தெய்வமே! இவன் இந்தப் போட்டியில் வெற்றியடைய அனுக்ரஹம் செய்யேன்..."
மனதுக்குள் ப்ரார்த்தித்தார் மன்னர்...

அவையிலிருந்த அரசர்கள் ஒவ்வொருவரும் தோல்வியையே தழுவினர்... இறுதி நாளானபடியால், இந்த சுயம்வரத்தின் முடிவைப் பார்த்து விட்டுப் புறப்படலாம் என்ற அவாவில் தத்தமது இருக்கைகளில் மீண்டும் வந்தமர்ந்தனர்.
இன்னமும் தன் திறமையைக் காட்ட எஞ்சியிருந்தது, தசரத தனயன் மட்டுமே...

இப்பொழுது விஸ்வாமித்ரர் எழுந்தார்...
"மகனே ராமா! ஜெயம் உண்டாகட்டும்...
வில்லிலே நாணேற்று...
வீரத்தை நிலைநாட்டு!"

முனிவரின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான் ராமன். மகரிஷியின் சொல்லுக்குப் பணிந்து, வில்லுக்கு விடிவைத்தர, அடியெடுத்து வைத்தான்...
பெட்டியுள், "சிவதனுசு" அவன் தீண்டலுக்காய், தவிப்போடு காத்திருந்தது...
*********************************

அன்று தூசு படர்ந்திருந்த கல்லுக்கு விடிவு தந்தவன், இன்று இத்தனைப் பேர்களின் தீண்டலினால் மாசுபடர்ந்திருந்த வில்லுக்கும் ஒரு விடிவைத்தரத் தீர்மானித்து அதை நெருங்கினான். உள்ளே... அந்தப்புரத்தில், ஜானகியின் இடதுகண் துடித்தது...

சபையில் இப்பொழுது பெருத்த அமைதி நிலவியது. அந்த நிசப்தத்தைமீறி, ஜனகரின் இதயத்துடிப்பு மட்டும் இராமனுக்கு மிகவும் துல்யமாகக் கேட்டது..
அவரது மனது ராமனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

மெல்ல வில்லைத் தீண்டினான். சிலிர்த்தது தனுசு... தொட்டு நேர்நிறுத்தினான். நெகிழ்ந்தது தனுசு. பட்டுக்கயிற்றால் ஆன நாணை ஏற்றினான்... பட்டென அவன் சரணத்தில் வீழ்ந்தது தனுசு... அந்த சிவதனுசுவிற்கும் ஶ்ரீராமனைத் தெரிந்திருந்தது!
அதனால்தான் அது, சிலிர்த்தது... நெகிழ்ந்தது... வீழ்ந்தது!.
மகிழ்ச்சியின் ஆரவாரம் மண்டபத்தை நிறைத்தது...

விஸ்வாமித்திரர் இருந்த விடத்திலிருந்தே இருகரம் உயர்த்தி ஆசிர்வதித்தார்.
ஜனகரோ, இருகரம்கூப்பி, கண்ணீர் மல்க, ராமனுக்குத் தமது நன்றியை மானசீகமாகத் தெரிவித்துக் கொண்டார்.

இலக்குவனின் முகத்திலோ, "என்அண்ணன்" என்கிற பெருமிதம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அரசர்களின் கரவொலியோ, ஆத்மார்த்தமாய் அவர்கள் ஒவ்வொரு வரும் மகிழ்வதை பறைசாற்றிக் கொண்டிருந்தது.

ஆரவாரம் குறைவதாகவே தெரியவில்லை. இதற்குள் விஷயம் தாயையும் பெண்ணையும் சென்றடைந்தது. நற்செய்தியால் உவந்து நின்றாள் மாதா... நாணத்தால் சிவந்து நின்றாள் மங்கை...

அஷ்டவக்கிரரின் உத்தரவின் பேரில், அழகுப்பதுமை அவைக்கு அழைத்து வரப்பட்டாள். சபை, மேலும் சோபைஅடைந்தது. அங்கே குழுமியிருந்த ஆயிரமாயிரம் பேர்களின் விழிகளும் அவள் ஒருத்தியின் மேலேயே பதிந்திருந்தது. அத்தனை அரசர்களும் ஒன்றுபோல நினைத்தனர்...

"அடையத் தகுந்த அழகா இது?
ஆராதிக்க அல்லவா வேணும்!
சாக்ஷாத் அந்த மகாலக்ஷ்மியே புவி இறங்கினாற் போலல்லா தோன்றுகிறது!
இவளுக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத நாமோ சுயம்வரத்தில் பங்கு கொண்டோம்!
என்னே அறிவீனம்!"

"இதோ நிற்கிறானே... ஶ்ரீராமன்... இவனல்லவா, அவள் கரம்பிடிக்க ஏற்றவன்!
தேவியின் அழகுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் இருப்பதோடு, வீரதீரத்திலும் இணையற்றவனாய் விளங்கும் இவனுக்கல்லவா உரியவள் அவள்!
இவர்கள் சேர்த்தியைக் கண்டு களிப்பதே, வாழ்வின் பெரும்பாக்யமாகத் தோன்றுகிறதே..."
தெய்வ சந்நிதானம், அத்தனைப் பேருடைய எண்ணங்களையும் தூய்மையாக்கி இருந்தது!

அஷ்டவக்கிரர் ஆசீர்வதித்துக் கொடுத்த மாலையை சீதை கரமேந்தினாள்..
சுயம்வர நிகழ்ச்சியின் வழக்கப்படி, பெண் தன்னைப் போட்டியில் வெற்றி கொண்ட ஆடவனுக்கு மாலையிட்டு மகிழ்வைத் தெரியப்படுத்த வேண்டும்.

ஆஜானுபாஹுவாய் நின்றிருந்தவனை நெருங்கினாள் ஜானகி. கைகளிலிருந்த மாலையை, அவன் கழுத்தில் சாற்ற, சற்றே கண்களை உயர்த்தினாள்.
அண்ணலும் நோக்கினான்...
அவளும் நோக்கினாள்...
ஒருக்ஷணம்... ஒரேக்ஷணம்தான்... இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தனர்...

பிரிந்தவர் கூடினால், பேசவும் வேண்டுமோ? அங்கே, வாய்ச்சொற்களுக்குத் தேவையில்லாமல் போனது..
"என்னுள் நுழைந்து ஆக்ரமித்தவனே...
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?"
அவள் கண்களே பேசியது...
தனது புன்முறுவலாலேயே சமாதானம் செய்தவன், அவளது மாலையை, ஆசையோடு ஏற்றான்.
கரகோஷம் விண்ணைப் பிளந்தது...
ஜெயகோஷம் மண்ணில் நிறைந்தது...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
தக்க சன்மானங்களோடு, அயோத்திக்கு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுபச்சேதியைச் சொல்லி, தசரதரை அவரது பரிவாரங்களுடன் அழைத்து வரும்படி தனது வீரர்களுக்கு, ஜனகர் கட்டளை இட்டிருந்தார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட தசரதனின் கண்களில் ஆனந்தபாஷ்பம் பெருகியது.
தனது குருநாதரான வசிஷ்டரின் தீர்க்க த்ருஷ்டியை எண்ணி மெய்சிலிர்த்தார்.
அவரை நமஸ்கரித்து, அவரது ஆசிகளைப் பெற்றவர், அவரது தலைமையில், விதேஹம் நோக்கிப் புறப்பட்டார். தன்னோடு பரதசத்ருக்னர்களையும் இன்னும் சில முக்யஸ்தர்களையும் கூட்டிக் கொண்டார்.

பட்டமஹிஷிகள் மூவரும் ராமனையும் சீதையையும் வரவேற்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள அயோத்தியிலேயே தங்கிவிடும்படி ஆயிற்று.
மிகுந்த மரியாதையோடும், உற்சாகத்தோடும் தசரதரை வரவேற்றார் ஜனகர்.

ஜானகியும் ரகுநந்தனும் குலகுருவையும், தசரத மன்னரையும் நமஸ்கரித்தனர்..
சீதையைப் பார்த்து பார்த்துப் பூரித்துப் போனார் தசரதர்.
"இவள் இனி என்பெண்..." என்று பாசத்தோடு உரிமை கொண்டாடினார்.

ஜனகர், தனது மனைவியையும், இளையமகள் ஊர்மிளையையும் தசரதருக்கும், வசிஷ்டருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். இருவரும் பெரியவர்களை நமஸ்கரித்து அவர்களது ஆசிகளைப் பெற்றனர்.

அடுத்ததாக தனது சகோதரன் குசத்வஜன், அவரது மனைவி, அவர்களது பெண்கள் மாண்டவி, ஸ்ருதகீர்த்தி ஆகியோரையும் அறிமுகம் செய்து வைத்தார் ஜனகர்.

அவர்களும் பெரியோர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றனர். இப்பொழுது வசிஷ்ட முனிவருக்கு, அந்த யோசனைத் தோன்றியது.

"நல்லகுலம். பண்பிலும், அடக்கத்திலும் மேம்பட்ட குடும்பமாய்த் தெரிகிறது. ஏன் இவர்களது மற்ற பெண்களையும், அயோத்தியின் மருமகள்களாக ஏற்கக்கூடாது?" தன் எண்ணத்தை தசரதரிடம் பகிர்ந்தார். அவருக்கும் இந்த யோசனை பரமத்ருப்தியை அளித்தது.

ஆனால், எப்படிக்கேட்பது? ஏனோ கொஞ்சம் தயக்கமிருந்தது.
"கவலையைவிடு தசரதா... உன் சம்மதத்தைத்தான் எதிர்பார்த்தேன்... உனக்கும் இந்த விஷயத்தில் உடன்பாடு இருப்பதால், மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை நானே பார்த்துக் கொள்கிறேன்..."

நேரே அஷ்டவக்கிரரிடம் வந்தார் வசிஷ்டர்.

"முனிவரே... ஒருயோசனை... உம்மிடம் விண்ணப்பிக்கலாமோ?"

"மஹரிஷியே... அடியேனிடம் உமக்கென்ன தயக்கம்? எதுவானாலும் உத்தரவிடுங்கள்..."

"சொல்வதற்கு தயக்கம்...
கொள்வதற்கு விருப்பம்...
என்ன செய்யலாம்?"

வசிஷ்டர் கேட்கவும், அஷ்டவக்கிரர் அவர் சொல்ல வருவதைச் சட்டென்று அனுமானித்தவராய், விடையளித்தார்..

"விருப்பம் உறுதியெனில்
குழப்பம் வீணன்றோ?"

"ஒற்றைப்பூவே கொள்ள வந்தோம்...
மற்றைப் பூக்களும் மணக்கிறதே..."
அஷ்டவக்கிரருக்கு, இப்பொழுது வசிஷ்டரின் அவா, தெளிவானது.

"சூடிக் கொண்டால்
சுகமே விளையும்!
நாடி வந்ததும்
நலமே முடியும்..."
சாதகமான பதில் வரவும், வசிஷ்டர் அவரையே பொறுப்பேற்கக் கோரினார்.

"குருவாயிருந்து துவக்கி வைப்பீர்...
திருவாய் மலர்ந்து நடத்தி வைப்பீர்..."
அஷ்டவக்கிரர் உடன்பட்டார்...

"தெய்வசித்தம் அதுதானே!
செய்ய வைப்பதும் அவன்தானே!"
ஜனகரிடம் இது விஷயமாய் பேசிவிட முடிவெடுத்தார்.

"மன்னா...
பொன்னான வாய்ப்பு
தன்னாலே வருகிறது;
உன்னாலே ஆகும்! சம்மதம்
சொன்னாலே போதும்..."
குருநாதர் எதைப் பற்றி பேசுகிறார் என்பது புரியாதவராய், அவரை ஏறிட்டார் ஜனகர்.

"நம் வீட்டுப் பூவையெல்லாம்
நாடி வந்து கேட்கிறார்...
உம்முடைய விருப்பமிதில்
உவந்து எதிர்பார்க்கிறார்..."
ஜனகருக்கு ஒருகணம் தன் செவிகளையே நம்பமுடியவில்லை...

"நிஜமா, இது நிஜமா?"
தன்னையே ஒருமுறை கேட்டுக் கொண்டார்.

***************************
எத்தனை விவேகியாக இருந்தாலும், சந்தோஷமோ, வருத்தமோ அதிகமாக வரும்போது, சிலநேரங்களில் கொஞ்சம் அசைத்துப் பார்த்துதான் விடுகிறது.
ஜனகரும் தாம் விதிவலக்கல்ல என்று நிரூபித்தார்!
சந்தோஷம் அவர் முகத்தில் ததும்பி வழிந்தது. அஷ்டவக்கிரர் ஜனகரைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தார்.

"வேந்தே...
இன்றைய இன்பமும்
நாளைய துன்பமும்
அன்றே அவனும் எழுதி வைத்தானே!"
சட்டென்று ஜனகர் புரிந்து கொண்டார்.

"எப்படி மறந்தேன்? அன்றே குருநாதர் எல்லாவற்றையும் சொன்னாரே! அதன்படி தானே இதுவரை நடந்து வந்திருக்கிறது!
எனில், பின்னால் வரவிருப்பதும் தவிர்க்க இயலாதது என்றல்லவா ஆகிறது!
அப்படி இருக்கும்போது, இந்த தற்காலிக மகிழ்ச்சியில் தன்னிலை இழக்கலாமோ?" சுதாரித்துக் கொண்டார்...

"க்ஷமியுங்கள் குருநாதா... தவறுதான்... அடியேன் வெறும்கருவிதான்! அவனன்றோ அடியேனை இயக்குகிறான்..."

"ஒருகருவி, இன்பம் வரும்போது ஆடுவதும், துன்பம் வரும்போது, வாடுவதும் சரியில்லையே..."

"விதி வழி நடக்கின்ற செயல்களுக்கு மகிழ்வதும், வருந்துவதும் அறிவீனமல்லவா?
தாம் எத்தனை உபதேசம் செய்திருந்தும், தமது சீடன் நிலை தடுமாறினேனே... அடியேனைப் பொறுத்தருளுங்கள் குருவே..."

"இதோ இப்பொழுதே, இது சம்பந்தமாய் அனைவரிடமும் கலந்துபேசிவிட்டு, ஒரு நல்ல முடிவோடு தம்மிடம் வருகிறேன்.. அடியேனை ஆசீர்வதியுங்கள்..."
அஷ்டவக்கிரரின் அனுமதியோடு, ஜனகர் தமது மனைவியிடமும், சகோதரர் குசத்வஜன், அவரது மனைவி ஆகியோரிடமும் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார். மிகுந்த மகிழ்ச்சியுடன், அனைவருமே, ஒன்று போல தமது சம்மதத்தைத் தெரிவித்தனர்.

ஆனால், கொஞ்சம் முற்போக்கு எண்ணம் கொண்ட ஜனகரோ, பெண்களின் சம்மதம் இதில் அவசியம் என்றார். மாண்டவியும், ச்ருதகீர்த்தியும் தமது பெற்றோர் எந்த முடிவெடுத்தாலும், தமக்கு முழுசம்மதம் என்று கூறி விட்டனர்..

இப்பொழுது ஜனகர், தன்பெண் ஊர்மிளையின் சம்மதத்தைக் கேட்டார்.
"தந்தையே... மூவரில் என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவது யாரெனத் தெரியாமலேயே, எப்படிச் சம்மதிப்பது?

ஊர்மிளையின் இந்தக் கேள்வி, சுற்றியிருந்தவர்கள் அத்தனைப் பேருக்கும் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.

"ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சுதந்திரமா?" என்ற எண்ணம் அவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

"உன் கேள்வி ந்யாயமானதுதான் ஊர்மிளா... நான்கூட இது பற்றி யோசிக்கவே இல்லை... நம் குருநாதர் மொத்தமாக சம்மந்தம் பேசி முடிக்க சம்மதம் கேட்டார். நானும் உங்கள் எல்லாரிடமும் கலந்து பேச வந்து விட்டேன். இது விஷயமாய் அவரிடம் நான் இப்பொழுதே பேசுகிறேன். ஆனால்... ஊர்மிளா... உனக்கு தசரதர் வீட்டு மருமகளாய் செல்வதில் விருப்பம் இருக்கிறதல்லவா?"

"தந்தையே.. எனக்கு யாரைத் தீர்மானம் செய்கிறீர்களோ, அவரிடம் நான் ஒரு சில வார்த்தை பேச ஆசைப்படுகிறேன்... அதன் பிறகு, எனது சம்மதத்தைச் சொல்கிறேன்..." அத்தனைப் பேரும் மொத்தமாய் அதிர்ந்தனர்...

"சரிம்மா... உன் விருப்பம் போலவே ஆகட்டும்..."

தன் குருநாதரிடம் அனைவரது சம்மதத்தையும் தெரிவித்த ஜனகர், ஊர்மிளையின் எண்ணத்தையும் அவரிடம் பகிர்ந்தார்.

"இது பற்றி வசிஷ்டரிம் பேசுவோம் வா..."
என்று ஜனகரையும் அழைத்துக் கொண்டு வசிஷ்டர் முன்வந்து நின்றார் அஷ்டவக்கிரர்... அந்நேரம், அவரருகில் தசரதரும் அமர்ந்திருந்தார்.

"சம்மதம் தந்தார் அனைவருமே...
சந்தோஷ நிகழ்வுகள் இனிவருமே..."
இந்தச் செய்தியில், வசிஷ்டர், தசரதர் இருவருமே மிகவும் மகிழ்ந்து போயினர்...

"இனி அடுத்தது என்ன செய்ய வேணும் குருநாதா?"
வசிஷ்டரை வினவினார் தசரதர். அதற்குள் அஷ்டவக்கிரர் இடைமறித்தார்.

"இன்னார்க்கு இன்னாரென்று
சொன்னால் அல்லவோ நன்று?"
வசிஷ்டரும் ஆமோதித்தார்.

"தசரதா... இருபக்கமும் அவரவர் வயதிற்கேற்றவாறு திருமண பந்தத்தை ஏற்படுத்தலாம்..."

"பரதனுக்கு மாண்டவி...
இலக்குவனுக்கு ஊர்மிளை...
சத்ருக்னனுக்கு ச்ருதகீர்த்தி..." இந்த ஏற்பாடு இருதரப்பு பெரியோர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது..

அவரவரும் தமது வாழ்க்கைத் துணையாய் வருபவரிடம், சற்றுநேரம் பேசிக் கொள்ளட்டும் என்றும் ஏற்பாடானது.

ஜனகர், தன் பெண்ணரசியிடம் வந்தார்.
"ஊர்மிளா... உனக்கு மாலையிடப் போவது, இராமனின் நிழலாய்த் தொடர்கிறானே, அந்த லக்ஷ்மணன்மா..." என்றார்.

"அ...வ...னா?"
ஊர்மிளை எதிர்கொண்ட விதமே, வித்யாசத்தைச் சொன்னது.
***************************************

இராமனுக்கு சீதை மாலையிட்ட அந்நாளிலிருந்து, கடந்த பத்து நாட்களாக, லக்ஷ்மணனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் ஊர்மிளை.

முதன் முதலில், அவனை ராமனது சகோதரனாக அறிந்தபோது, அவளுக்குப் பெரும்வியப்பு.

அது எப்படி... ஒருவன் கருமையைப் பெருமைப்படுத்த வந்தப் பேரழகனாயும், மற்றொருவன் சிவந்தவனாய்... சற்றும் முன்னவன் அழகுக்குக் குறையாதவனாயும் இருக்கிறார்கள்?

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளிலும், இது நிகழ்வதுண்டோ?
தந்தையிடமே தன் ஐயத்தை வெளிப்படுத்தினாள். அவர் சொல்லித்தான் இருவரும் வெவ்வேறு தாய்க்குப் பிறந்தவர்கள் என்பதையும், ராமனது தந்தைக்கு மூன்று மனைவியர் என்பதையும் அறிந்தாள். தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு!

"ஏகபத்னி" வ்ரதனாய் தன்தந்தையைப் பார்த்திருந்த அவளுக்கு, இந்த விஷயம் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை. அரசாளும் மன்னர்களின் வாழ்வில் இதுவெல்லாம் சகஜம்தான் என்றாலும், மனம் தந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தது. ஜனகர் புரிந்து கொண்டார்.

"அம்மா... ஊர்மிளை... அவருக்கு வெகுகாலமாய் புத்திரப்ராப்தி இல்லாதிருந்ததாம். அரசபரம்பரைக்கு வாரிசு வேண்டாமா? அதுதான்..."
தந்தையை முடிக்க விடவில்லை ஊர்மிளை.

"தந்தையே... தமக்கும் வெகுகாலம் புத்திரப்ராப்தி இல்லாமல்தானே இருந்தது?"
அவள் கேள்வியில் இருந்த ந்யாயத்தில், ஜனகர் வாயடைத்துப் போனார்!
மிகத் தெளிவான சிந்தனைகளோடு, தமது பெண்கள் இருவரும் இருப்பதில், அவருக்குச் சற்றுப் பெருமிதம் வரத்தான் செய்தது!.

இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் ஊர்மிளைக்கு உறுத்தல் என்றில்லை!
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், வேறொரு விஷயமும் அவளைக் குடைந்து கொண்டு தானிருந்தது..

முதன் முதலாக, தன்னை லக்ஷ்மணன் பார்த்தது, அவளுக்கு நினைவில் வந்து போனது. இருசகோதரர்களுக்கும், தமது மனைவியையும், மகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார் ஜனகர்.

சரேலென்று தலையை உயர்த்தி, அவன் அவளைப் பார்த்த அந்தநொடி... அந்தப்பார்வை... அவள் மனதில் அப்படியே இன்னமும் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது!

ஏறக்குறைய, ஒருசர்ப்பம் தலையை உயர்த்திப் பார்ப்பதுபோல் ஒருபார்வை!
"இதுஎன்ன, இப்படி ஒருபார்வை!" என்று நினைத்துக் கொண்டாள்.

பின்னால் வந்த நாட்களிலும், அவளைச் சந்திக்க நேர்ந்த ஓரிரு சமயங்களிலும், அவன் அவளைத் தவிர்க்கவே செய்தான். அந்த வயதில், ஒவ்வொரு பெண்ணுக்கும் வரக்கூடிய சந்தேகம், ஊர்மிளைக்கும் வந்தது.

"ஏன்... நான் அழகாய் இல்லையா? என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிற அளவுக்கு நான் அவனுக்கு ஒரு பொருட்டில்லையா?"

"யாரிடம், சகஜமாக இந்தக் கேள்வியைக் கேட்கமுடியும்?"
வெகுநேரம் யோசித்தவளுக்கு, தனது சகி "வசுதா"வின் நினைவு வந்தது.

"வசு... ஒன்கிட்ட ஒரு விஷயம் கேப்பேன்... ஒளிவு மறைவில்லாம, எது நெஜமோ, அத சொல்லணும்... சரியா?"

"என்னடி, பீடிகை எல்லாம் ரொம்ப பலமாயிருக்கு..."

"நான்கேக்கறதுக்கு ஒன்னால உண்மையான பதில் சொல்ல முடியுமா, முடியாதா?"

"என் மனசுக்கு எது உண்மைன்னு படறதோ, அததான் நான் சொல்வேன்... சரியா?"

"அப்போ சொல்லு... நான் அழகா இருக்கேனா, இல்லயா?"
கலகலவென நகைத்தாள் வசுதா...

"இன்னிக்கு என்ன ஒன்னோட சந்தேகம் புதுமாதிரியா இருக்கு? இப்ப எதுக்கு இந்தக் கேள்வி திடீர்னு?"

"கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு வசு... எதிர் கேள்வி கேட்காத..."

"ஒங்க அக்கா தங்கை ரெண்டு பேருக்கும் அழகுக்கு என்னடி கொறச்சல்?"

"ஒங்கக்கா கண்டெடுத்த அழகின்னா, நீ கடைஞ்செடுத்த அழகி!"

"நான் மட்டும் ஒரு ஆணா இருந்திருந்தா, நிச்சயமா ஒன்னத்தான் கல்யாணம் பண்ணியிருப்பேன்..." சொல்லிவிட்டு, குறும்பாய்ச் சிரித்தாள் வசுதா...

"சீ... போடி..." என்ற ஊர்மிளைக்கு நாணத்தினால், முகம் குங்குமமாய்ச் சிவந்தது.
"அட... பாரேன்... ஒன்முகத்தில, அந்தி நேரத்து அழகெல்லாம் தெரியறது..."
வசுதா கேலி செய்யவும், பொய்க் கோபத்துடன், அவளைத் தள்ளிவிட்டாள் ஊர்மிளை.

ஆகக்கூடி, தனது அழகு, இன்னொரு பெண்ணையே ஈர்க்கவல்லதாய் இருக்கிறது! இத்தனை இருந்தும், இவன் நம்மை வேண்டுமென்றே அலட்சியப்படுத்துகிறான்.

"ஆணவம் பிடித்தவனாய் இருப்பானோ? இல்லை ஏறெடுத்துப் பார்க்கின்ற தைரியம் இல்லாதவனாய் இருப்பானோ?"

"இந்த இரண்டில் எது இவன்?" என்ற ஐயம் அவளுள் தலைதூக்கிய அதே நேரம்தான், ஜனகர், "அம்மா ஊர்மிளை... உனக்கு மாலையிடப் போவது ராமனது நிழலாய்த் தொடர்கின்ற லக்ஷ்மணன்" என்றார்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
"வாருங்கள் தேவி..."
லக்ஷ்மணன் வரவேற்றது, ஊர்மிளைக்கு விசித்திரமாக இருந்தது.

"நான் ஊர்மிளை... நீங்கள் என்னைப் பேர் சொல்லி அழைக்கலாம்... ஒருமையிலும் விளிக்கலாம்..."

"தேவி... உரிமை வந்த பிறகு, ஒருமையில் அழைப்பதில் தவறில்லை என்று நினைப்பவன் நான்..."

"என்னை உரிமை கொள்ளும் எண்ணம், தமக்கு இருக்கிறதா?"

"தேவி... திருமண பந்தத்தில் பெண்ணின் விருப்பமே முக்கியம் என்பது என்அபிப்ராயம்... விருப்பமுள்ள பெண்ணைத் திருமணம் செய்தால், வாழ்வில் வருத்தத்துக்கு இடமில்லை அல்லவா?"

"தாம் சொல்வதும் சரிதான்... ஆனால் இளவரசே... என்னைப் பற்றிய தமது நிலைப்பாட்டையும் நானறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..."

"தேவி... முதலில் நான் இளவரசன் இல்லை என்பதைத் தாம் அறிந்து கொள்ள வேண்டும். அரச குடும்பத்தில் பிறந்ததனால், தாம் அப்படி அழைத்ததாக எடுத்துக் கொள்கிறேன்... மற்றபடி, நான் ஒரு அடிமையே!"
தூக்கி வாரிப்போட்டது ஊர்மிளைக்கு!

"தாம் கூற வருவதன் பொருள் எனக்கு விளங்கவில்லையே..."

"தேவி... நான், என்அண்ணனுக்கு அடிமை! அவனுக்கு சேவை செய்வதையே பரம ப்ரயோஜனமாகக் கருதுபவன்..."

"அன்புக்கு நான் அடிமை" என்று சொல்லுங்கள் இளவரசே...

"இல்லை தேவி... "அன்புக்கு" என்று சொல்லி விட்டால், அதில் பலதரப்பட்ட அன்பும் புகுந்து விடும். பெற்றோர், உற்றோர் என்று பட்டியல் நீளும்..."
"நான் சொல்வது அப்படியல்ல.. என் அண்ணனது அன்புக்கும், பண்புக்கும் மொத்தமாய்த் தோற்றுப் போனவன் நான்... அவனைப் பிரிந்து என்னால் ஒரு க்ஷணம்கூட இருக்க முடியாது..."

"தமக்கு என்று ஒரு துணை வந்த பிறகும், இப்படித்தான் இருப்பீரோ?" ஊர்மிளை, நேரடியாகவே கேட்டாள்.

"தேவி... தாம் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது ரொம்பவும் அவசியம்...
என்அண்ணன் எனக்குஉயிர்! எனது இந்த உடல், பொருள், ஆவி அத்தனையும் அவனுக்கே சமர்ப்பணம்...
என்வாழ்வில், அவனுக்குப் பிறகுதான் எனக்கு மற்ற எந்த உறவும்!"

"இதை நன்கு உணர்ந்து கொண்டு, தாம், தமது சம்மதத்தைத் தெரிவிக்கலாம். இப்பொழுதும் இன்னும் காலம் கடந்து விடவில்லை..." ஊர்மிளை கொஞ்சம் நிதானித்தாள்.

"ஒருவேளை அவசரப்பட்டுக் கேட்டு விட்டேனோ? தவறு என்மீது தானோ?"
யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவள் உள்மனது அவளோடு விவாதம் செய்தது.

"இதில் என்ன தவறு? தனக்கானவன் தன்னிடம் ஆசையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்புதானே!"
அவள் மனதின் ஓசை லக்ஷ்மணனை எட்டியது.

"மன்னியுங்கள் தேவி... நான் அவனுக்கானவன்!
இயல்பான எதிர்பார்ப்புகளுடன் என்னைத் திருமணம் செய்து கொண்டால், தாம் ஏமாந்து போய் விடுவீர்கள். அதனால், ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுங்கள்... அதுவே நம் இருவருக்கும் நல்லது..."
எதனால் ஈர்க்கப்பட்டோம் என்பது தெரியாமலேயே, ஊர்மிளை தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.

"அதனாலென்ன? உலகில் எத்தனை அண்ணன் தம்பி, அக்கா தங்கை பாசங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். நாளாக நாளாக, எல்லாம் மாறித்தான் போகும்!

"இது போகட்டும்... எனது "அந்த" சந்தேகத்தை இவன் முன்வைப்போம். அதற்கு என்ன சமாதானம் சொல்கிறான் என்று பார்ப்போம்... பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்..."

"இருக்கட்டும் இளவரசே... இதைப் பற்றி நானும் யோசிக்கிறேன்...
ஆனால் எனக்கு வோறொரு விஷயம் தம்மிடம் பேச இருக்கிறது...”

"என்ன?" என்பதைப் பார்வையினால் வினவினான் லக்ஷ்மணன்.
"எந்தப் பெண்ணுக்கும் முதல் ஆதர்ஸ ஆண், அவளது தந்தையே... எனக்கும் அப்படித்தான்... அவரிடம் எல்லாமும் எனக்குப் பிடிக்கும்..."
"எனக்கு அவர் அளித்திருக்கின்ற சுதந்திரம்... அவர் என்மீது வைத்திருக்கின்ற பாசம்... குடும்பத்தின் மீது வைத்திருக்கின்ற பற்றுதல்... இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்... எல்லாவற்றையும் தாண்டி, அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்... அவர் ஒரு ஏகபத்னிவ்ரதன்..." சற்றே நிறுத்தி, லக்ஷ்மணனை ஊடுருவினாள்.

அன்று பார்த்தாற் போன்றே சரேலென்று தலையை உயர்த்தி ஒருபார்வை...
அவனுக்குப் புரிந்து விட்டது என்பதை ஊர்மிளை உணர்ந்தாள். தான் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைச் சொல்ல இனி அவசியம் இல்லை என்பதும் தெரிந்தது.

"தேவி... எந்தச் சூழ்நிலையிலும் ஒருத்தியைத் தவிர, என் எண்ணத்திலும் வேறொருத்தியை இருத்தேன்... இது என் அண்ணன் மீது ஆணை!"
நிம்மதியாக இருந்தது ஊர்மிளைக்கு...

"இந்த "அண்ணன்" விஷயம் மட்டுமே கொஞ்சம் நெருடல்... பார்க்கலாம்... என்ன செய்யலாம் என்பதைச் சற்று நிதானமாகவே யோசிப்போம்..."
அவளது எண்ண ஓட்டத்தை இடைமறித்தது லக்ஷ்மணனின் குரல்...

"தேவி... தாம் என்னிடம் வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்?"
ஒருகணம்... ஒரே ஒரு கணம்தான் தயங்கினாள்.

"ம்... அதுவா? தாம் ஒரு அரவம் போல் சரேலென்று தலையுயர்த்திப் பார்ப்பதை விடுத்து, கொஞ்சம் அரவணைப்பது போல் பார்த்தால், நன்றாக இருக்கும்..."
சொல்லிக் கொண்டே, கலகலவென்று சிரித்தவாறு வெளியே ஓடிவந்தாள்...
அங்கே... அஷ்டவக்கிரர் நின்று கொண்டிருந்தார்.
**********************************


சுதாரித்துக் கொண்ட ஊர்மிளைக்கு மின்னலாய் ஒரு எண்ணம்...
"மனதை அரிக்கத் துவங்கியுள்ள இந்த ப்ரசன்னைக்கான தீர்வுக்கு குருநாதரையே அணுகலாமே... தந்தையும் அப்படித்தானே செய்வார்..."
தான் நினைத்ததை வெளியே சொல்லாமல், அஷ்டவக்கிரரின் பாதம் தொட்டு நமஸ்கரித்தாள்.

கைகளை உயர்த்தி ஆசி வழங்கிய முனிவர், அவளையே சற்று உற்று நோக்கினார்...
"விருப்பம் இருக்கு மனதிலே...
குழப்பம் இருக்கு முடிவிலே...
சரிதானே?" என்றார்.
மிகச் சரியாக அனுமானித்த குருநாதரை, இருகரங்களையும் கூப்பிட்டு தொழுதாள் ஊர்மிளை...

"தாமே எனக்கு வழிகாட்ட வேண்டும் குருநாதா..."
இருவரும் நந்தவனத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த துளசிக்காட்டில் அமர்ந்தனர்.
தனக்கும் லக்ஷ்மணனுக்கும் நடந்த சம்பாஷணை மொத்தமும் சொல்லி முடித்தாள் ஊர்மிளை.

பொறுமையாக அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்த அஷ்டவக்கிரர் திருவாய் மலர்ந்தார்.

"அவன் அவதாரம் எடுத்ததே அவனுக்காய்... இவன் தாரம் பின் வருவானோ உந்தனுக்காய்?"

"எனில் குருநாதா... இப்போது நான் என்ன செய்யட்டும்? தாமே ஒரு நல்ல தீர்ப்பைச் சொல்லுங்கள்...

"கணவனுக்கு உதவிடவே
கன்னியுந்தன் பிறவி இது!
கணக்கெல்லாம் பார்க்காதே!
காதல் கடந்த உறவே இது!.."


ஏதோ புரிந்தாற் போலிருந்தாலும், இன்னமும் முழுதும் தெளிவடையா நிலையிலேயே இருந்தாள் ஊர்மிளை...

அஷ்டவக்கிரர் தொடர்ந்தார்.
"மணக்கப் போகும் மகராசனால்
நினைக்கும் வாழ்வு உனக்கில்லை!
கணக்கிட்டான் அயன் அன்றே!
கட்டுப்படுவாய், உனைவென்றே..."


"கு..ரு...நா...தா.." தடுமாறியது ஊர்மிளையின் குரல்...

"அப்படிச் சபிக்கப்பட்டப் பிறவியா எனது?"

"சாபம் என்று நினைத்தாலே
சங்கடம்தான் மிஞ்சுமே!
த்யாகம் என்று கொண்டாலே
தவிப்பும் துடிப்பும் கொஞ்சமே...
"
கண்கள் கலங்கியது ஊர்மிளைக்கு!

"க்ஷமிக்கணும்... குருநாதா... இதற்கொரு மாற்று உண்டா?"

"விதியை மாற்றவொண்ணாதே...
வீண் ப்ரயத்தனம் செல்லாதே...
பதி இவனேதான், பெண்மானே,
பழகிக் கொள்வாய் நீதானே..."


"சரி குருநாதா... தமது உத்தரவு... ஆனால், இந்த வலியைத் தாங்கும் பக்குவத்தை மட்டுமாவது எனக்கு அருளுங்கள்..."

"மந்திரம் ஒன்று சொல்லுவேன்..
மனதில் அதை நீ கொள்ளுவாய்!..
தந்திரமாயது ப்ரயோகிக்க,
துன்பக்கனல் நீ வெல்லுவாய்..."


"ஆகட்டும் குருவே... அப்படியே..." அஷ்டவக்கிரர், அந்த துளஸி வனத்தினிடையே, ஊர்மிளைக்கு மந்திர உபதேசம் செய்தார்...

"ஒரு முறையே இது உதவிடுமாம்!
உன் விழைவதையும் முடித்திடுமாம்!
பலமுறை எண்ணிச் செயல்படவும்,
பெற்றது உனக்குப் பலன்தருமாம்..."

அஷ்டவக்கிரர் எச்சரித்தார். ஊர்மிளை புரிந்து கொண்டாள்.

"நடந்தது நமக்குள் இருக்கட்டும்!
நல்மனம் ரகசியம் காக்கட்டும்!
கடந்திடும் உந்தன் காலமுமே!
கடவுளின் அருளும் துணை வருமே..."

அஷ்டவக்கிரரை நமஸ்கரித்து விடைபெற்றவள், தன்சம்மதத்தைத் தெரிவிக்க, தெளிந்த மனதுடன், தந்தையை நோக்கி நடந்தாள்...
*******************************************

வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், நாணம் வெளிப்பட, தனது சம்மதத்தை தந்தையிடம் தெரிவித்தாள் ஊர்மிளை.

அவ்வளவுதான்... உடனே சகோதரிகள் மூவரும், பெருமகிழ்ச்சியோடு ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டனர்.

சற்று நேரத்துக்கு அங்கே ஆனந்த அலைவீசியது... பெற்றவளிடமும், சுற்றத்தாரிடமும் கூட இந்த சந்தோஷம் தொற்றிக்கொண்டது.
அதற்குள், மேற்கொண்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளைக் குறித்த பேச்சுக்களைத் துவக்கினார் வசிஷ்டர்.

அயோத்திக்கு வீரர்களை அனுப்பி, பட்ட மகிஷிகள் மூவரையும் உடனே அழைத்து வருவதற்கான ஆயத்தங்கள், ஜனகர் தரப்பில் துரிதமாக நடந்தேறின.
தக்க சன்மானங்களோடு, சுபச்செய்தியை ஏந்தி, வீரர்கள் அந்த க்ஷணமே புறப்பட்டுச் சென்றனர்.

மிதிலையைப் பொறுத்தவரையில்... ஊரே விழாக்கோலம் பூண்டது.
தத்தமது இல்லத்தின் சுபநிகழ்வாக, ப்ரஜைகள் அனைவருமே உணர்ந்தனர். தம் இருப்பிடங்களை எல்லாம் அழகுபடுத்தினர்.

வீதிகள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டன. வருகின்ற கூட்டத்தை சமாளிப்பதற்காக, நீர்நிலைகள் சுத்திகரிக்கப்பட்டன.
சத்திரம் சாவடிகள், அவசரகதியில் கட்டப்பட்டன. எங்கும் வண்ண விளக்குகளின் தோரணங்கள், "தேவலோகமோ இது!" என்ற ப்ரமிப்பை ஏற்படுத்தின.

திருமண வைபவத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு, ப்ரஜைகள் புத்தாடைகளையும், சற்று வசதியுள்ளவர்கள், அவற்றோடு பொன்நகைகளையும் வாங்கிக் கொண்டனர்.

ப்ரஜைகள் அனைவருக்கும் விருந்தும் கேளிக்கைகளும் இப்பொழுதிலிருந்தே துவங்கப்பட்டன.

பட்டமஹிஷிகள் வந்து சேர்வதற்கான அவகாசத்தைக் கணக்கில் கொண்டு திருமண வைபவம் பத்துநாட்கள் தாண்டிய ஒரு சுபநாளில் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, அரண்மனையும் தன்னை அலங்காரம் செய்து கொள்ளத் தயாரானது. மிகக்குறைந்த அவகாசமே இருந்தபடியால், அத்தனை காரியங்களையும் குறைவறச் செய்து முடிப்பதில் இருக்கின்ற ச்ரமங்களை எண்ணி கொஞ்சம் மலைத்துப் போயிருந்தார் ஜனகர்.

அந்த நேரம், அங்கே தேவேந்திரனே வருகை தந்தான். வியந்து நின்றார் ஜனகர்.
"ஜனக மஹாராஜனே... தாம் திருமண வைபவத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலை அடைய வேண்டாம். தேவர் உலகம் முழுபொறுப்பையும் எடுத்துக் கொள்ளும். தாம் எதுவும் விட்டுப் போகாமல் இருக்கிறதா என்று சரிபார்த்துச் சொன்னால் மட்டும் போதும்..." ஆச்சர்யத்தில் உறைந்து போயிருந்த

ஜனகர், மெல்ல வாய்திறந்தார்.
"தேவேந்திரா... தாமா அடியேன் வீட்டுக் கல்யாணத்தை நடத்தி வைக்கப் போகிறீர்கள்? அவ்வளவு பாக்யசாலியா அடியேன்? இதற்கு அடியேனால் தமக்கு என்ன கைமாறு செய்து விடமுடியும்?"

தேவேந்திரன் குரல் இடைமறித்தது.
"மன்னனே... இது எமது கடமையுமாகும்.. தாம் ராஜரிஷியல்லவா? தம்மைக் கௌரவப்படுத்துவது எமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது... அதனால், தயைகூர்ந்து அனுமதியுங்கள்"
தேவ ரகசியத்தை மறைத்து இந்திரன் பேசினான். ஜனகர் பவ்யமாய் தலையசைத்தார்...

திவ்ய தம்பதிகளின் சம்பந்தத்தினால், சகோதர, சகோதரியர் திருமணமும் விமரிசையாகக் கொண்டாடப்படுவதற்கான சௌபாக்யத்தை அடைந்தது.
திருமணம் நடக்கவிருக்கின்ற மண்டபத்தின் முகத்தில் ஜய, விஜயர் என்னும் துவார பாலகர்களே, குலையோடு கூடிய பச்சை வாழை மரங்களாக மாறி நின்றனர்.

தேவகன்னியர்கள் பலரும் மண்டபத்தில் தோரணங்களாக மாறியிருந்தனர்.
தேவலோக சிற்பியின் வரவால் திருமணமேடை வெகுநேர்த்தியாக நிறுவப்பட்டது.

ஹோமகுண்டத்தில் எழும்ப இருக்கின்ற வேள்வித்தீயில் ஆவாஹனம் ஆக, அக்னிதேவன் தயாராக இருந்தான்.

ரிஷிகள், முனிவர்களின் வேதகோஷங்கள், வீசுகின்ற காற்றில் எப்பொழுதும் கலந்தே இருந்தது.

சாக்ஷாத் அன்னபூரணியின் மேற்பார்வையில், திருமணநாளது விருந்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பலவிதமான காய்களும், கனிகளும், வந்து நிரம்பிய வண்ணம் இருந்தன.

வாசனை மலர்களும் மாலைகளும் தேவலோகத்து நந்தவனங்களிலிருந்து அன்றன்று வந்துசேர ஏற்பாடாகியிருந்தது.
மணமக்களுக்கான உயர்ந்த வாசனை த்ரவியங்கள் இமயமலைச் சாரலிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தன.

அவர்கள் அணிவதற்குண்டான பொன்னும் மணியும் இணைந்த பட்டாடைகள் ஒருபுறம் தயாராகிக் கொண்டிருந்தன. மணமகன்களைச் சார்ந்தவர்கள் தங்குவதற்காக, அனைத்து வசதிகளோடும் கூடிய பெரியபெரிய மாளிகைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மணமக்கள் ஊர்வலம் வருவதற்கான உயர்வகை குதிரைகள் தேவலோகத்திலிருந்து வந்து இறங்கி இருந்தன.

வீணை இசைக்கச்சேரி நடத்துவதற்காக, நாரதரே வந்திருந்தார்.
ஆடலோடு பாடலுமாய் ஏற்பாடாகியிருந்த நிகழ்ச்சிகளில், ரம்பை, திலோத்தமை, மேனகை இவர்களது பங்களிப்பு ப்ரதானமாக இருந்தது.

மங்கள வாத்யங்கள் முழங்குவதற்கு வசதியாய், பலப்பல இசைக்கருவிகள் வந்து இறங்கியிருந்தன... இசை விற்பன்னர்களின் குழாம் ஒன்றும் மண்டபத்தில் அணிவகுத்திருந்தது.

தேவ, கந்தர்வ, கின்னரர்களின் திரளால், மண்டபம் நிரம்பி வழிந்தது.
எந்த எழிலைப் பேசுவதென்றே தெரியாமல், தேவேந்திரனின் திருமாளிகையாய் ஜ்வலித்தது, மிதிலையின் திருமண மண்டபம்.

அப்படிப் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றும் வெகுநேர்த்தியாகவும் ச்ரத்தையாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அத்தனை ஏற்பாடுகளையும் பார்த்துவாயடைத்துப் போயிருந்தார் தசரதர்!

ஆயிற்று... பட்டமஹிஷிகள் மூவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதிலை வந்திறங்கினர். உடனே தத்தமது மருமகள்களைப் பார்த்து விடவேண்டும் என்ற ஆசை மூவரையுமே தொற்றிக் கொண்டது.

மணப்பெண்கள் நால்வரும் ராஜமாதாக்களை நமஸ்கரித்து எழுந்தனர்.
அயோத்தியின் மருமகள்களது அழகு, பட்டமஹிஷிகளை மிகவும் பெருமிதம் கொள்ள வைத்தது.

அவர்கள் ஒவ்வொருவரையும் ஜனகர் முன்வந்து அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்பொழுதுதான், சுமித்திரை வாய்திறந்தாள்.
"நான் ஊர்மிளையோடு கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும். என் சம்மதத்தின் பேரில், அவள் லக்ஷ்மணனைத் திருமணம் செய்து கொள்ளட்டும்..."
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
ஒருகணம் அங்கே கனத்த மௌனம் சூழ்ந்தது... பொங்கி வரும் பாலில், நீர்தெளித்தாற் போல, அத்தனை பேருடைய சந்தோஷமும் சட்டென்று வடிந்தது.
தசரதருக்கு சுமித்திரையின் போக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கோசலையும் கைகேயியும், வரும் வழியில்கூட, சுமித்திரை தங்களிடம் இது பற்றி ஏதும் சொல்லவில்லையே எனப் பேசிக் கொண்டனர். ஜனகர்தான் முதலில் சுதாரித்துக் கொண்டார்.

"அதற்கென்ன ராஜாமாதா, தம் விருப்பம்போல் ஆகட்டும்..."
அந்த அறையில், ஊர்மிளையும், சுமித்திரையும் மட்டுமே இருந்தனர்.
கனிவோடு ஊர்மிளையை ஏறிட்டாள் சுமித்திரை.

"அம்மா ஊர்மிளை... ஒன்னோட நன்மைக்காகத்தான், நான் ஒன்கிட்டே பேசவே ஆசப்பட்டேன்..."

"நான் கேக்கப்போற கேள்விகளுக்குத் தெளிவான பதிலை ஒன்கிட்ட எதிர்பாக்கறேன்மா. ஒன்னோட பதில் எதுவானாலும், நான் நிச்சயம் தப்பா எடுத்துக்கமாட்டேன்... சரியா?"
சுமித்திரையின் அணுகுமுறை, ஊர்மிளைக்குப் பிடித்திருந்தது.

"கேளுங்கோ ராஜமாதா..."
சற்று நிதானித்து சுமித்திரை தொடர்ந்தாள்...

"ஒனக்கு நெஜமாவே லக்ஷ்மணனைப் பிடிச்சிருக்காமா?"
உண்மையைச் சொல்லப் போனால், இந்தக் கேள்வியை, இந்த நேரத்தில், சுமித்திரையிடமிருந்து ஊர்மிளை எதிர்பார்க்கவே இல்லை!
ஆனாலும், "பிடிச்சிருக்கு" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

"தப்பா நெனச்சுக்காதே ஊர்மிளை... அவனோட பேசறதுக்கான வாய்ப்பு ஒனக்குக் கெடச்சுதா?"

"கெடச்சுது மாதா..."

"தன்னப் பத்தி அவன் ஒன்கிட்ட ஏதாவது சொன்னானாமா?"
சற்றுநேரம் ஊர்மிளை மௌனமாகவே இருந்தாள்.

"எதுவானாலும் சொல்லுமா... தயங்காதே..." சுமித்திரை தூண்டினாள்.

"ரா...ஜ...மா..தா..."

"எல்லாம் தெரிஞ்சுதான் நான் இந்தத் திருமணத்துக்கு சம்மதிச்சேன்..."

"தெரிஞ்சா சம்மதிச்சே?"
சற்று அதிர்ச்சியோடு வினவினாள் சுமித்திரை...

"ஆமாம் ராஜமாதா... அவருக்கு அண்ணன்தான் உலகம்னு தெரிஞ்சுண்டேன்...
கல்யாணத்துக்கு அப்புறமும் அண்ணனோட சேவையிலதான் தன்ன ஈடுபடுத்திப்பார்னு தெரிஞ்சுண்டேன். ஒருமனைவிக்குத் தரவேண்டிய முக்யத்துவம் எதுவும், அவர், எனக்குத் தரப்போறதில்லைனு தெரிஞ்சுண்டேன்..."

"என்ன பொண்ணும்மா நீ... எல்லாத்தையும் சரியா தெரிஞ்சுண்ட நீ, முடிவை மட்டும் ஏன் தப்பா எடுத்திருக்கே?"
ஊர்மிளை சுமித்திரையின் விழிகளை நேருக்குநேர் சந்தித்தாள்.

"மாதே... இந்த ஜன்மத்தில் அவர்தான் என்பதின்னு புரிஞ்சுண்டேன்... அதனால் எல்லாத்தயும் தாங்கிக்கற பக்குவத்தோடதான் இருக்கேன்..."

"ஊர்மிளை... இது நீ சுயமா எடுத்த முடிவா... இல்ல... யாரோட கட்டாயத்திலயாவது எடுத்த முடிவா?"

"கட்டாயத்துல எடுத்த முடிவு இல்ல மாதா... தெய்வத்தோட ஸங்கல்பத்துக்குக் கட்டுப்பட்டு எடுத்த முடிவு..."

"ஆனா ... இந்த வாழ்க்கையில ஒனக்கு சந்தோஷமே இருக்காதேமா..."

"மாதே... எனக்கு என்ன காத்திண்டிருக்குன்னு தெரிஞ்சுண்டுதான், நான் அவர கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்கேன்..."

"இல்லம்மா... நீ ஏதோ வேகத்தில பேசற.. சம்மதம் இல்லனு நீ சொல்லியிருக்கணும்... இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல... அனாவசியமா ஒன்வாழ்க்கைய வீணடிச்சுக்காதமா..."

"மாதே... எதிர்த்துப் பேசறேன்னு நெனச்சுக்க வேண்டாம்... இவர விட்டுட்டு, நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிண்டாலும், என் விதிப்ரகாரம்தானே வாழ்க்கை அமையப்போறது..."

"ஹும்... அவனுக்குக் கல்யாணமே வேண்டாம்னு நெனச்சுண்டு இருந்தேன்.. எந்தப் பொண்ணோட வாழ்க்கையையும் பணயமாக்கறதில எனக்கு விருப்பம் இல்ல..."

"ஆனா மாதா... என்னால அவர் வாழ்க்கையில ஆகவேண்டிய காரியம் ஏதோ இருக்குனு நெனக்கறேன்... அதனாலதான், தெய்வம் எங்கள சேத்து வெக்கறது..."

"இதுக்குமேல நான் சொல்றதுக்கு என்னஇருக்கு? ஒன் இஷ்டம்போல ஆகட்டும்மா..."

"எல்லாம் தெய்வ ஸங்கல்பம்தான் மாதே..."
என்று சொல்லிக் கொண்டே, ஆறுதலாய் அவள் கரம் பற்றினாள் ஊர்மிளை.
நெகிழ்ச்சியில் சுமித்திரையின் கண்கள் பனித்தன... அப்படியே இழுத்து ஊர்மிளையை அணைத்துக் கொண்டாள்.

முகமலர்ச்சியோடு வெளியே வந்த மகளைக் கண்டு, ஜனகரும், மற்றவர்களும் நிம்மதி அடைந்தனர்.
குறிப்பாக தசரதர், கோசலை, கைகேயி மூவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
*************************************

முதல்நாள் மாப்பிள்ளை அழைப்பு...
சூரியகுலத்தில் உதித்த தசரத குமாரர்கள் நால்வருமே நான்கு சூரியர்கள் போல் காட்சியளித்தனர்.

அதிலும் ரகுநந்தனின் அழகு கோடிசூர்ய ப்ரகாசமாய் ஜ்வலித்தது.
வெகுநேர்த்தியுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேவலோகத்து குதிரைகளில், நால்வரும் மிதிலையின் வீதிகளில் பவனி வந்தனர்..
உதயமான சில நாழிகைக்கெல்லாம் தொடங்கிய ஊர்வலம், அந்திசாயும் வரை நீடித்தது.

சாதாரணமான ஒருத்தர் மாப்பிள்ளையாக பவனி வந்தாலே, சற்றுநேரம் நின்று பார்ப்பது மனித ஸ்வபாவம்! ஆனால் இன்றோ, தெய்வமே திருவீதி உலாவருகிறது! ப்ரத்யக்ஷமாய், அனைவர் கண்களுக்கும் தன்னை இலக்காக்கிக் கொண்டு. இப்படி ஓர்வாய்ப்பு, அவ்வளவு எளிதில் கிடைத்து விடக்கூடியதா என்ன?

தமது பேரன்பைத் தவிர, வேறு ஏதும் தரவியலாத பாமரஜனங்கள், கண்ணேறு(த்ருஷ்டி) கழிக்க, ராஜகுமாரர்களுக்கு மஞ்சள்நீர் சுற்றி, மனம் மகிழ்ந்தனர்.

சற்று வசதி படைத்தவர்கள், புஷ்பம், சந்தனம், உயர்ந்த த்ரவியங்கள் இவற்றை அரசகுமாரர்களுக்கு தமது பரிசாகக் கொடுத்து, அகமகிழ்ந்து போனார்கள்.
ஒருவழியாக ஊர்வலம் திருமண மண்டபத்தை அடைந்தபோது, வானில் விண்மீன்கள் தெரிய ஆரம்பித்திருந்தது.

அடுத்தநாள் விடியலில், தங்கக்குடங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த புனித நன்னீரில், மணமக்களின் நீராடல் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு, காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடந்தேறியது.

பூரணகும்ப மரியாதைகளுடன் அழைத்து வரப்பட்ட ராஜகுமாரர்கள் நால்வரும், மணமேடையில் தயாராய் அமர்ந்திருக்க, மணப்பெண்கள் நால்வரும், பொன்னும் மணியும் இழைத்த பட்டாடை அணிந்து, பொன்நகைகள் பூண்டு, முகத்தை மெல்லிய திரையால் மறைத்து, பெற்றோரும், உற்றோரும் புடைசூழ, அழகு பிம்பங்களாய், மணமேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.
ராஜகுமாரர்களின் அருகில், மணப்பெண்கள் அமரவும், கன்னிகாதான க்ரியைகள் தொடங்கின.

பிறகு மணப்பெண்கள் நால்வரும், பெரியோர்களால் ஆசீர்வதித்துக் கொடுக்கப்பட்ட கூறையுடுத்தி வந்து, ராஜகுமாரர்களின் அருகில் அமர்ந்தனர்.
அஷ்டவக்கிரர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளாலும், மற்றும் பெற்றவர்களாலும், பெரியோர்களாலும், ஆசீர்வதிக்கப்பட்ட மங்கள(ல) நாண், ராஜகுமாரர்களின் கரங்களில் கொடுக்கப்பட்டது.

மந்திரகோஷங்களும், மங்கல வாத்யங்களும் முழங்க, மலர்களும், அட்சதையும் மழையாய்ப் பொழிய, ராஜகுமாரர்கள், மிதிலையின் இளவரசிகளை மணந்து, அவர்களை அயோத்தியின் மருமகள்களாக ஆக்கிக் கொண்டனர்.

இதற்குப் பிறகு, மாலை மாற்றுதல், பாணிக்ரஹணம், ஸப்தபதி, ஆகிய சடங்குகளும் இனிதே நிறைவேறின.

வசிஷ்டரின் பத்தினி அருந்ததி நேரிலேயே வந்திருந்ததால், தனியாக, "அருந்ததி பார்த்தல்" என்ற நிகழ்ச்சிக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.
தம்பதியர் நால்வரும், குலகுரு வசிஷ்டரையும், அவரது பத்னி அருந்ததியையும் நமஸ்கரித்து, ஆசிகளைப் பெற்றனர்.

பிறகு, விஸ்வாமித்ரர், அஷ்டவக்கிரர் ஆகியோரது நல்லாசிகளையும் ஏற்றனர்.
அதற்கடுத்த படியாக, இரண்டு பக்க பெற்றோர்களையும், மற்ற பெரியோர்களையும் நமஸ்கரித்து, அவர்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களையும் ஸ்வீகரித்துக் கொண்டனர்.
இந்த வைபவம் நடந்தேறிய நேரம், ஒருநாட்டிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மிதிலை வாசிகளுக்கு ராஜகுமாரர்களைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லாததால், அவர்களை அனைரும் அறிந்து கொள்ள வசதியாய், அவர்களைப் பற்றிய நிகழ்வே நாட்டிய நாடகமாகியது. குலகுரு வசிஷ்டரும், விஸ்வாமித்ரரும், காட்டிக் கொடுத்தபடி, நிகழ்ச்சிகள் காட்சிகளாயின.

மிதிலை மக்களுக்கு மட்டுமல்லாமல், மிதிலை இளவரசிகளுக்கும் தத்தமது கணவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் அதிகம் இருந்தது.
தசரதன் தவமிருந்து பெற்றெடுத்ததிலிருந்து ஆரம்பித்த நிகழ்ச்சி,

ராஜகுமாரர்கள் வளர்ந்தது, அவர்களின் கல்வி, வீரவிளையாட்டுக்கள் எனத் தொடர்ந்து, விஸ்வாமித்ரர், ராமலக்ஷ்மணர்களை காட்டுக்கு அழைத்துச் செல்வது வரையில் நாட்டிய நாடகத்தின் முதல் பகுதியாக நடந்து முடிந்தது.
இடைவேளை கொடுக்கப்பட்டு, அனைவரும் விருந்துக்குத் தயாராயினர்.

சாக்ஷாத் அன்னபூரணி, பக்குவம் சொல்லத் தயாரான விருந்து அல்லவா? சுவைக்குக் கேட்கவா வேண்டும்? இரண்டடி நீளத்திற்கு இடப்பட்ட தலைவாழை இலையில், முதல்வரிசை முழுவதும் நெய்மணக்கும் இனிப்புகள் நிறைந்திருந்தன.

அடுத்த வரிசையில், இனிப்பைச் சமன் செய்ய வந்த காரவகைகளின் அணிவகுப்பு. அதற்கடுத்த வரிசை விதம்விதமான கனி வகைகளுக்கு...
அதற்கும் அடுத்த வரிசை காய்கறிகளுக்கு... கடைசியாக மல்லிப்பூவாய் அரிசிச்சோறு...

கேட்டுக் கேட்டுப் பரிமாறிய பாங்கு அனைவரையும் ப்ரமிக்க வைத்தது.
பந்தியில், தேவேந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட அதே மரியாதை, தெருக்கோடி ஜனங்களுக்கும் சமமாக அளிக்கப்பட்டதில், ஜனகரின் மாண்பு மேலும் பளிச்சிட்டது.
*****************************************
விதேஹத்திலிருந்து புறப்பட்ட ரதங்கள் எல்லாம் அயோத்தியை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவை ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமரால், இடையில் வழிமறிக்கப்பட்டன.

சிவதனுசை முறித்ததில் பெரும் சீற்றம் அவருக்கு இருந்தது.. அதனால் அதற்கு காரணம் ஆனவர் யாரோ, அவர் தன்னிடமிருந்த விஷ்ணு தனுசிலும் நாணேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

ராமன் அந்த விஷ்ணு தனுசை, பரசுராமரிடமிருந்து வாங்கி, அதிலும் நாணேற்ற, பரசுராமர் தமது சீற்றம் தணிந்து, ராமன் சாக்ஷாத் விஷ்ணுவின் அவதாரமே என உணர்ந்து, தனது தவவலிமை யாவற்றையும், ராமனுக்கே தாரை வார்த்து, விடை பெற்றார்.

இந்த நிகழ்வுக்குப் பின், எந்தத் தடையுமின்றி ரதங்கள் அயோத்தி வந்தடைந்தன. அயோத்தியின் கோலாகலங்கள் மிதிலை இளவரசிகளை ப்ரமிக்கச் செய்தன.

"மிதிலையில்தான் இருக்கிறோமோ?" என்ற அவர்களது சந்தேகத்தை, ஆங்காங்கே பறந்து கொண்டிருந்த கோசல தேசத்துக் கொடிகள், காற்றில் ஆடிஆடி, "இல்லை, இல்லை" என்று பதில் கூறி, தீர்த்து வைத்தன.
தசரதர் மேலும், இளவரசர்கள் மீதும், ப்ரஜைகள் வைத்திருந்த ப்ரீதியை, நகரம் அலங்கரிக்கப்பட்ட நேர்த்தியிலிருந்து அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது.

தேவேந்திரனின் உதவி இல்லாமலேயே, தேவலோகமாய் அயோத்தி ப்ரகாசித்தது. வாண வேடிக்கைகளும், வாத்யக் கச்சேரிகளுமாய், நகரின் வீதிகள் நிரம்பி இருந்தன. இந்த சந்தோஷத்தை முன்னிட்டு, அவரவர்களும் அன்னதானம் வேறு செய்து கொண்டிருந்தனர்.

செவிக்கும் உணவு... வயிற்றுக்கும் உணவு... என்பதாய் அயோத்தி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஊர்ந்து ஊர்ந்துதான், ரதங்கள் அரண்மனையை அடைய முடிந்தது.

தேவ சிற்பியான மயனின் உதவியோடு, சுமந்திரர், புதிதாக, மிக அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய ஒரு மாபெரும் மாளிகையை நிர்மாணம் செய்திருந்தார்.

அயோத்தி மக்களை மட்டுமல்லாமல், அண்டை நாட்டு அரசர்களையும், அதற்குள்ளாக, சுமந்திரரே அழைத்திருந்தார். தசரதருக்கு மிகநெருக்கமான தேவலோக வாசிகளும், தேவேந்திரனும் கூட விருந்தாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள்.

ஆசி வழங்குவதற்காக அழையாமலே வந்திருந்த முனிவர்களையும், ரிஷிகளையும் பார்த்து, தசரதரின் மாண்பை மிதிலை இளவரசிகள் புரிந்து கொண்டனர்.

அயோத்தி வந்து சேர்ந்த இரண்டாம் நாள் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. உதயத்திலிருந்தே அனைவரையும் சந்தோஷம் தொற்றிக் கொண்டது.
சாரிசாரியாக வந்தவர்கள் அனைவருமே, அழகாக வரிசையில் அமர்த்தப்பட்டனர். வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையை ரகுநந்தன் புறக்கணித்தான்.

"மேடையில் நாம் நான்கு ஜோடிகளும் அமர்ந்து கொண்டோமானால், இத்தனை திரளாய் வந்திருக்கும் அனைவரும் நம்மைக் காண மிகவும் ச்ரமப் பட்டுப் போவார்கள்...வேண்டாம். நாமே நடந்து சென்று ஒவ்வொருவரின் ஆசியையும் பெறுவோம்..வரிசையில் அமர்ந்திருப்பதால், அவர்கள் அனைவருமே நம்மை அருகில் காணலாம்..."
தம்பிகளுக்கும் அண்ணன் கூறுவதே சரியெனப்பட்டது.

ராமனும் சீதையும் முன்னே செல்ல, மீதி மூன்று ஜோடிகளும் பின்தொடர்ந்தனர். முதல் வரிசை ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
அவர்கள் அனைவரையும் நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றதும், அடுத்தடுத்த வரிசைகளில் அமர்ந்தவர்களை நோக்கி நான்கு ஜோடிகளும் நகர்ந்தனர்.

இரண்டு கரங்களையும் அழகாகக் குவித்து,
இதழில் புன்னகையை அள்ளித் தெளித்து,
ஈரவிழிகளால் அனைவரையும் குளிர அணைத்து,
இராமனும் சீதையும் வருகின்ற அழகில்,
குழுமியிருந்தோர் அனைவரும் பரவசத்தின் எல்லையைக் கண்டனர்.

அண்ணனை அடியொற்றி தம்பிமார்களும் தத்தமது பத்னிகளுடன் சென்ற அழகு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது.

தம்மிடம் வருவதற்கு முன், முன்னழகை அனுபவித்தவர்கள், தம்மைத் தாண்டிச் சென்றதும் பின்னழகை அனுபவித்தனர்..

பின்வரிசைக்கு அவர்கள் நகர்ந்தபோது, முன்வரிசையில் இருந்தவர்கள், தமது பார்வையிலேயே அவர்கள் இருக்கும் வண்ணம், மாறி அமர்ந்தார்கள்!
மொத்தத்தில், நான்கு ஜோடிகளும் நகரநகர, அமர்ந்திருந்தவர்கள் அத்தனைப் பேரின் விழிகளும், அவர்களோடு இம்மியும் மாறாமல் கூடவே நகர்ந்தன..
அந்த ப்ரம்மாண்டமான மாளிகை முழுவதும் வலம்வந்து முடித்த போது, மாலையாகி விட்டிருந்தது.

கண்களுக்கு பெரும் விருந்தாக இவர்களது காட்சிகளே இருந்ததால், தயாரித்து வைத்திருந்த விருந்தை உண்ண ஒருவருமே முன்வரவில்லை...
அவர்களை எல்லாம் கட்டாயப்படுத்தி, விருந்துண்ண வைப்பதற்குள், தசரதரின் சேவகர்களுக்குப் போதும்போதும் என்றாகிவிட்டது!
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
ஆரவாரமெல்லாம் அடங்கி அரண்மனை இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தது.
சிரிப்பும் சீண்டலுமாய்... களிப்பும் காதலுமாய்...
ஜோடிகள் வளைய வந்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு முகத்திலும், பூரிப்பும் புன்னகையும் தேங்கி இருந்தன.
ஆனால், ஊர்மிளையின் முகத்தைப் பார்த்து சுமித்திரையால், அவள் சந்தோஷமாக இருக்கிறாளா என்று அனுமானிக்க முடியவில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், அவளை ஒருநாள் கேட்டேவிட்டாள்.

"ஊர்மிளை.... நீ சந்தோஷமா இருக்கயா மா? என்பிள்ள உன்ன சந்தோஷமா வெச்சுண்டிருக்கானா மா?"

ஒரு நிமிடம் மௌனமாக இருந்தவள், மெல்ல வாய்திறந்தாள்..
"மாதே... என்ன தப்பா நெனச்சுக்க வேண்டாம்… என்னோட சந்தோஷத்த, ஒங்க பிள்ள எப்டி எனக்குத் தர முடியும்?"

"சந்தோஷம், துக்கம் எல்லாமே, நம்ம மனச பொருத்த விஷயம்தானே மாதே!
எதிர்பார்ப்பு பூர்த்தியானா வர சந்தோஷமும், அது நிறைவேறாம போயிடுத்துன்னா வர துக்கமும், நம்மகிட்டயேதானே இருக்கு!"

"என்னப் பொருத்தவர, நான் என்னோட மனச எந்த சஞ்சலமும் நொழையாம பத்ரமா பாத்துண்டு இருக்கேன் மாதே.. அதனால, என்ன எதுவுமே பாதிக்காது…"
ஸ்தம்பித்து நின்றாள் சுமித்திரை!..

"இது எப்டி இவளுக்கு சாத்யமாறது!.. வயசில எவ்ளோ சின்னவ இவ!..
என்னோட வயசுக்கு, எனக்கே சிலநேரம் இது சாத்யமாகாம போயிடறதே.." ஊர்மிளையைக் கேட்டே விட்டாள்..

"மாதே… வயசு சம்பந்தப்பட்ட விஷயமா, பக்குவம்கிறது?"

"ஒரு பாறையக்கூட உளியால தட்டித்தட்டிதானே பக்குவப்படுத்தறா!
அதபோலதானே மாதே, நம்ம விதிவழியா வர ஒவ்வொன்னும், நம்மள கொஞ்சம் கொஞ்சமா பக்குவப்படுத்தறது!”
"அதோட இல்லாம, குருவருளும் திருவருளும் இருந்தா, எந்த வயசிலயும் எதுவும் சாத்யம்தானே மாதே?" வியப்பின் எல்லையிலிருந்தாள் சுமித்திரை!..

"எப்பேர்ப்பட்ட பெண்இவள்! இவளை மருமகளாக அடையும் தகுதி எனக்கிருக்கிறதா? என்மகனுக்கு இவளை மனைவியாய் அடையும் தகுதியும் இருக்கிறதா?"
சுதாரிப்பதற்கே அவளுக்குச் சற்றுநேரம் பிடித்தது.

"அம்மா ஊர்மிளை.. ஒனக்கு இந்த வயசில இருக்கற பக்குவம், எனக்கு இப்பவும் இல்லயேம்மா..."
விழியோரத்தில் நீர்துளிர்க்க அவள் பேசியதும், ஊர்மிளை சட்டென்று, அவளைப் பார்த்து ஒரு புன்னகையை வீசினாள்.

"மாதே… தெய்வ ஸங்கல்பம் என்னவோ, அதுதானே நடக்கும்! எதுக்கும் கவலப்படாதீங்கோ..." ஊர்மிளையின் குறையைக் கேட்டு, ஏதாவது சமாதானம் சொல்லலாம் என்று வந்த சுமித்திரை, இப்போது, அவளுடைய பேச்சில், தான் சமாதானமாகிப் போனாள்!..

"ஊர்மிளை... ஊர்மிளை…" அவசரமாகக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்தான் லக்ஷ்மணன்.

ஏதோ சித்திரம் வரைந்து கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள்.

"வா... கொஞ்சம் வெளியே போயிட்டுவரலாம்..."

"இன்றென்ன அதிசயம்?" என்பதுபோல் அவனை ஏறிட்டாள் ஊர்மிளை.

"ராமண்ணாவும் சீதாமாதாவும் சரயு நதியோரம் இருக்கற வனத்துக்குப் போகப் போறாளாம்… நாமும் போலாம் வா..."
ஊர்மிளைக்கும், ஒரு மாறுதலுக்குச் சற்று வெளியில் போய்வர வேண்டும்போல் இருந்ததால், உடனே கிளம்பிவிட்டாள்.

ப்ரமிக்க வைத்தாள் சரயு!
சுழித்து சுழித்து அவள் ஓடிவருகின்ற வேகம் கொஞ்சம் அச்சுறுத்துவதாய் இருந்தது.

கரையோரம், காலாற நடந்துவிட முடியாதபடி, சேறும் சகதியுமாய் இருந்தது.
அருகிலிருந்த வனத்திலிருந்து, நீர் அருந்துவதற்காக அவ்வப்போது வந்துபோன பலவிதமான மிருகங்களின் காலடிச்சுவடுகளும் அங்கு காணப்பட்டன.

தொலைவிலிருந்து யானையின் பிளிறலும், துஷ்ட மிருகங்களின் உறுமலும் கேட்டவண்ணம் இருந்தன. அண்ணனும் தம்பியும் இரண்டடி முன்னே செல்ல, சீதையும், ஊர்மிளையும் பின்தொடர்ந்தனர்.
வனம் கண்ணில் பட்டதும்தான் தாமதம்... சீதை மெய்மறந்தாள்…

"ரகுவீரரே... பார்த்தேளா…
எவ்வளவு தினுசுதினுசா பூக்கள்!
இந்தக் காத்திலதான் எவ்ளோ விதவிதமான வாசனை கலந்துருக்கு!
பச்சைபசேல்னு எவ்ளோ குளிர்ச்சியா இந்த இடம் இருக்கு!"
பரவசமானாள் சீதை.

"ஊர்மிளை..வாயேன்.. கொஞ்சதூரம் உள்ளபோய் பாத்துட்டு வரலாம்…
ஏதோ அருவி விழற சத்தம் நன்னா கேக்கறது.. கிட்டப்போய் பாக்கலாம் வா…"

"சீதே... உள்ளேந்து துஷ்ட மிருகங்களோட குரல் ஒனக்குக் கேக்கலயா?"

"நாம ஏன் அதுக்கெல்லாம் பயப்படணும் ஊர்மிளை?
ராகவ சிம்மனும், லக்ஷ்மண வேழமும் நம்ம கூடவே இருக்கச்சே, நமக்கு எதுக்கு பயம்?" கலகலவெனச் சிரித்தாள் சீதை.

அவளது சந்தோஷத்தைப் பார்த்து, ராமன், லக்ஷ்மணன் இருவருமே மகிழ்ந்தனர்.

"வா ஊர்மிளை… ஒன்னும் பயமில்ல… நாங்க இருக்கோம் இல்ல..." சொல்லியவாறு, லக்ஷ்மணன், ஸ்வாதீனமாக, அவளோடு கைகோர்த்து நடந்தான்.

அவன் ஸ்பரிசம், அவளுள் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கவே செய்தது!
******************************
ஒரேஒரு கணம்தான்... நிலைதடுமாறினாள் ஊர்மிளை.
பின்னர் மெதுவே, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"இந்தச் சிலிர்ப்பும் களிப்பும்... இதோ இந்த சரயூ நதியின் ஓட்டமாய், சற்றைக்கெல்லாம் ஓடிவிடத்தான் போகிறது...
இதற்கா நான் மயங்குகிறேன்? எத்தனை உபதேசம் ஆகியிருந்தும் என்ன பயன்?
மனம் என்வசத்தில் இல்லையே…"
தன்னையே நொந்து கொண்டவள், அண்ணனின் ஒவ்வொரு அடியையும் உன்னிப்பாய் கவனித்த வண்ணமிருந்த சுமித்திரையின் மகனின் பிடியிலிருந்த தன்கைகளை, விடுவித்துக் கொண்டாள்!

ஆனால், அவனோ அதையும் உணர்ந்தான் இல்லை.
வெள்ளி நாணயங்கள் விழுந்தோடுவது போன்ற சீதையின் கலகலவென்ற சிரிப்பொலி, அவளை நினைவுகளின் சுமையிலிருந்து மீட்டெடுத்தது.
எதையோ கணவனுக்குக் காண்பித்து, அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவனும் ஆர்வமாய் அவள் காட்டிய இடத்தைப் பார்ப்பது தெரிந்தது.

அது என்னவென்று ஊர்மிளைக்குப் புரிபடும் முன்னரே, லக்ஷ்மணன் குரல் கொடுத்தான்.

"ராமண்ணா.... நீங்க வேண்டாம்... இங்கயே இருங்கோ... நானே போய் கொண்டு வரேன்..." சொல்லிக் கொண்டே வேகவேகமாய் போனவன், சட்டென்று உயர்ந்திருந்த அந்த மரத்தின் மீதேறினான்.

திரும்பி வந்தவன் கைகளில் ஒரு தூக்கணாங் குருவியின் காலியானகூடு இருந்தது! பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாக இருந்த அந்தக்கூடு, ஜானகியை கவர்ந்ததில் வியப்பில்லை!

லக்ஷ்மணனிடமிருந்து அதைவாங்கி, மிகவும் ஆர்வத்தோடு ஆராயத் துவங்கிய சீதையை, வைத்த கண்வாங்காமல், ரகுநந்தன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏதேதோ சந்தேகங்களை கேட்ட வண்ணம் இருந்த சீதையின் கவனம், சற்றைக்கெல்லாம் வேறு ஒன்றின்மீது திரும்பியது.

கூட்டை அப்படியே கீழே போட்டவள், சிறுகுழந்தைபோல, இருகரங்களையும் தட்டி, சந்தோஷமாய் கூவினாள். அவள் காட்டிய இடத்தில் பலவிதமான வண்ணங்களில், பலவிதமான வடிவங்களில் புஷ்பக்காடே இருந்தது.

"மாதே... இருங்கள்… நான் பறித்துக் கொண்டு வந்து தருகிறேன்…"
சிட்டாய்ப் பறந்தான் லக்ஷ்மணன்.
தனது மேல் அங்கவஸ்திரம் நிறைய புஷ்பங்களை அள்ளிக் கொண்டு வந்தவன், அப்படியே சீதையின் கரங்களில் கொடுத்தான்.

அவள் முகமும் பூவாக மலர்வதைப் பார்த்து அண்ணனும் தம்பியும் மகிழ்ந்து போயினர்..

"ஹே ஊர்மிளை.. அங்கயே ஏன் நிக்கற? இந்தப் பூவெல்லாம் எவ்ளோ அழகா இருக்குப்பார்… வா... ஒனக்கு எதுவேணுமோ எடுத்துக்கோ..."

சீதையைச் சங்கடப்படுத்த விரும்பாமால், அவள் குரலுக்குக் கீழ்படிந்தாள் ஊர்மிளை…

அந்த நேரம், எங்கிருந்தோ ஒரு சிறிய மான்குட்டி ஒன்று ஓடிவந்தது. பாவம்... அது இவர்களை எதிர்பார்க்கவில்லை போலும்!

மிரட்சி கண்களில் வழிந்தது. திரும்பி ஓடிவிட யத்தனிப்பதற்குள், லக்ஷ்மணன் ஒரே தாவலில் அதைப் பிடித்துவிட்டான்.

கைகொட்டி, குழந்தையாய் சிரித்தாள் சீதை! அந்த மான்குட்டியைத் தடவித்தடவி கொடுத்தாள்.

தன்கைகளில் ஏந்தி குழந்தை போலும் அதைக் கொஞ்சினாள். ராமனுக்கு அவளது செய்கைகள் சிரிப்பையே வரவழைத்தது. அண்ணன் முகத்தில் சிரிப்பைப் பார்த்த லக்ஷ்மணன் முகத்திலும் ஆனந்தம்!

ரொம்பவும் தனியளாய் ஆனது போல் உணர்ந்தாள் ஊர்மிளை.

"எதற்காக நான் இங்க வந்தேன்?ஏன் இப்படி செய்தேன்?" தன்னையே கேட்டுக் கொண்டாள்.

ராமன் சீதையின் அந்யோன்யம், தனக்குள் உணர்ச்சிகளைத் தூண்டி விடுமோ என்ற அச்சம் அவளுக்குத் தலைதூக்கியது.

"இனிமேல், இவாளோட நான் வரக்கூடாது. இந்தத் தப்ப இனி ஒருதரம் செய்யக் கூடாது…"

தனக்குத்தானே கட்டளை இட்டுக் கொண்டாள்.
**********************

அரண்மனைக்குத் திரும்பி வெகுநேரம் ஆகியும், லக்ஷ்மணன் கண்களில் தென்படவே இல்லை. வழக்கம்போல் தனித்திருந்த ஊர்மிளை, கிளம்பும்போது, தான் பாதி வரைந்து விட்டிருந்த ஓவியத்தை கைகளில் எடுத்துப் பார்த்தாள்.

"இந்த ஓவியமும், என் மனசயே ப்ரதிபலிக்கிறதோ?"
என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

அந்தச் சித்திரத்தில், ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு ஒற்றைமரம் நின்று கொண்டிருக்கிறது. அந்த மரத்தின் கீழே, தனியாக ஒருபெண் அமர்ந்திருக்கிறாள்... அவள் முகத்தில், தனிமை வரிவரியாகக் கோலமிட்டிருந்த காட்சி, நிதர்சனமாய்...

"யார் இவள்? என்னப் போலயே இருக்காளே... பேசாம என்பேரயே இவளுக்கு வெச்சுடலாமா?"

பிறகு, தன்யோசனையைத் தானே நிராகரித்தாள்...

"வேணாம்... பின்னாடி அது விமர்சனங்களுக்கு எடமாயிடும்... இவளுக்கு

"அனாமிகா"னு (பெயரில்லாதவள்) பேர்வெச்சுடறேன்...
அப்பதான், நாளைக்கு எந்தவிதமான சர்ச்சைக்கும் ஆளாகாது..."
தூரிகையை எடுத்தவள், முழுவதும் தீட்டி முடித்தாள்... சித்திரத்தின்மேலே, முத்து முத்தான தன்கையெழுத்தில்,
"அனாமிகா" என்றுஎழுதினாள்...
சித்திரத்தின் கீழே,

"உனக்குத் துணை நீயேதான்...
உயிருள்ளவரை, உன்நிலை இதுதான்..." என்று எழுதினாள்.
அந்தச் சித்திரத்தையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், சற்றைக்கெல்லாம் அதை எடுத்து பத்திரப்படுத்தி வைத்தாள்.

சிறிது நேரத்தில், கண்கள் செருக அப்படியே உறங்கியும் போனாள்.
விடிகாலை கண்விழித்த போது, லக்ஷ்மணன் எங்கோ கிளம்பிச் செல்ல தயாரக இருப்பதை கவனித்தாள்..

"சௌமித்ரரே... இவ்வளவு அதிகாலையில கிளம்பறேளே... ஏதாது அவசரவேலையா? இன்னும் பொழுதுகூட சரியா விடியலயே..."

"அ... ஆமாம் ஊர்மிளை... அண்ணாவோடயும், சீதாமாதாவோடயும் கொஞ்ச நாழி பேசிட்டு வரலாம்னு கெளம்பறேன்..."

"நேத்து ராத்திரி ரொம்பநாழி அவாளோடதான் பேசிண்டு இருந்தேன்...
சீதாமாதாவுக்கு எவ்ளோ விஷயம் தெரிஞ்சிருக்கு தெரியுமா?
நெறய கதை, உபதேசம் எல்லாம் சொல்றா.
கேக்கறதுக்கே ரொம்ப ரம்யமா இருக்கு...
நீயும் வேணா வரயா?"
அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் பதில் கூறியவன், தான் கிளம்புவதிலேயே குறியாய் இருந்தான்.

சட்டென்று அவன்மேல், ஊர்மிளைக்கு கோபம் வந்தது.
"என்னதிது! இங்கிதமே தெரியாம இப்படி இருக்காரே...
அவாளுக்குனு கொஞ்சம் நேரமாவது இவர்தர வேணாமா? எப்போ பாத்தாலும், இவர் அங்க போய் ஒக்காந்துண்டிருந்தா நன்னாவா இருக்கும்?"
மனதில் பட்டதை, அவனிடத்தில் அப்படியே சொன்னாள்.

ஆனால், லக்ஷ்மணன் அவள் கூறியதை, அப்படியே நிராகரித்தான்...
"ஊர்மிளை... எனக்கு சீதாமாதா வேற... சுமித்திரை மாதா வேற இல்ல...
ராமண்ணாவோ எனக்கு தந்தையோட ஸ்தானம்.
ஒரு அப்பா அம்மாவ பாக்கறதுக்கு, கொழந்தை அடிக்கடி போறதில என்னதப்பு?
அதுவும் இல்லாம, எந்தஒரு அப்பா அம்மாவும், தன்கொழந்தய எடஞ்சலா நெனக்கவே மாட்டா..."

"அடக்கடவுளே... இல்வளவு விவரமில்லாதவரா இருக்காரே..." உள்ளுக்குள்ளேயே பொருமினாள்ஊர்மிளை...

"கொஞ்சம் நான் சொல்றத கேளுங்கோ... ஒங்க சீதாமாதா சொல்றகதையும், உபதேசமும் எனக்கும் நன்னாத் தெரியும். எல்லாம் எங்க அம்மா சொல்லிக் கொடுத்ததுதான். அத கேக்கறதுக்கு, இவ்ளோ காலங்காத்தால நீங்க அங்க போறது சரியாப்படலே... நேத்தி ராத்திரியும், அவா நேரம் கழிச்சுதான் படுத்துண்டிருப்பா... சொல்றத, புரிஞ்சுக்கோங்கோ...
நாம அடுத்தவாளுக்குத் தொந்தரவா இருக்கக்கூடாது..."

"அதெல்லாம் நான் பாத்துக்கறேன்... நீ தேவயில்லாம, ஒன்னையும் குழப்பிண்டு, என்னயும் குழப்பாதே ஊர்மிளை..." போயேபோய் விட்டான்!..

"ஹும்... நான், சொல்லி, இவர் எதுவுமே கேக்கப் போறதில்ல... நான் எதுக்கு இவர் விஷயத்தில தேவையில்லாம தலயிடணும்? அண்ணனாச்சு... தம்பியாச்சு..."

நினைத்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தவள், நேரே பெட்டியைத் திறந்து, தான்நேற்று பத்திரப்படுத்தியிருந்த "அனாமிகா"வை கைகளில் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள்.

"இனிமே, ஒன்னோடதான என் பொழுதெல்லாம் போகப்போறது அனாமிகா... என் உணர்ச்சிகளோட வடிகாலே இனி நீ தான்..." சொல்லிக் கொண்டே, அடுத்த ஓவியத்தில், "அனாமிகா"வை எப்படி நிறுத்த வேண்டும் என்ற கற்பனையில் ஆழ்ந்து போனாள்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
அனாதரவாக இருந்தவளின் பொழுது, அனாமிகாவோடு கரைய ஆரம்பித்தது...
ஊர்மிளையின் அனாமிகா, நிறைய அவதாரம் எடுத்தாள்...
ஆள் அரவமில்லாத ஒருஒற்றையடி பாதையில், தனியளாய் போய்க் கொண்டிருப்பாள்...
வெண்ணிலவு தவழும் இரவின் மடியில், இந்தப் பெண்ணிலவு, வானில் ஒளிர்கின்ற விண்மீன்களை எண்ணிக் கொண்டிருப்பாள்...
சுழலிலே சிக்கிய ஒருசிறுபடகில், அவள் மட்டுமே இருப்பாள்!
அமானுஷ்யமான வனாந்திரத்தில், அபலையாய் நிற்பாள்!
மொத்தத்தில், ஊர்மிளையின் சுயபச்சாதபத்தின் சுவடுகளாகவே, அனாமிகா மாறிப் போயிருந்தாள்!
தன்னால் உருவாக்கப்பட்ட பாத்திரமே அனாமிகா என்பதும், ஒருகாலகட்டத்தில், ஊர்மிளைக்கு மறந்து போயிருந்தது.
அவளை ஏதோ உயிருள்ள ஒரு பெண்ணாகவே கற்பனை செய்து கொண்டு, அவளிடம் ஆறுதல் வார்த்தைகள் பேசி வரலானாள்...
அந்த வார்த்தைகள், அனாமிகாவுக்கு ஆறுதல் அளித்ததோ இல்லையோ, ஆனால் நிச்சயமாய் ஊர்மிளையின் காயங்களுக்கு மருந்திட்டன!
லக்ஷ்மணனுடன் தனக்குத் திருமணம் ஆனதைக்கூட ஒருதற்செயலான நிகழ்ச்சியாகப் பார்க்கக் கற்றுக் கொண்டாள்.
அவனிடம் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், தனித்திருக்க, தன்னைப் பழக்கிக் கொண்டாள்.
குற்ற உணர்ச்சியில் குறுகிப் போயிருந்த சுமித்திரையின் மனஉறுத்தலைக் குறைக்க தன்னால் இயன்ற அளவு முயற்சிகளையும், அவ்வப்போது செய்து வரலானாள்.
அடிக்கடி அவளைப் போய்பார்த்து, பேசுவதை வழக்கமாகவும் கொண்டிருந்தாள்.
அப்படி ஒரு சமயம், சுமித்திரையின் அறையில் ஊர்மிளை இருந்தபோது, தாயைப் பார்ப்பதற்காக வந்த லக்ஷ்மணன், அன்னையோடு இவள் இருக்கக் கண்டு, புருவத்தை உயர்த்தினான்...
"இங்க என்ன பண்ற ஊர்மிளை?"
அவள் வாய் திறப்பதற்குமுன், சுமித்திரை முந்திக் கொண்டாள்..
"ஓ... பரவாயில்லயேப்பா... ஒனக்கு இவளோட பேர்கூட ஞாபகத்திலேஇருக்கே.."
"மா....தே.... நீங்க என்ன சொல்ல வரேள்னு புரியலயே..."
"இது மட்டுமா? ஒனக்கு நெறய விஷயம் புரியாமதானே இருக்கு! அதில இதுவும் ஒண்ணுனு வெச்சுக்கோப்பா..."

சுமித்திரையின் குத்தல் பேச்சுக்குக் காரணம் ஊர்மிளைதான் என்பதாக அனுமானித்தவன்,
"ஊர்மிளை... ஒனக்கு இங்கென்ன வேலை? இங்க வந்து எதுக்கு சுமித்திரா மாதாவைத் தொந்தரவு பண்ணறே?" என சினம் மேலிட வினவினான்.
தன் தவறை மறைக்க, அவன் பேசுவது, ஊர்மிளைக்குப் புரிந்தது.
"சௌமித்ரரே... தப்பா நெனச்சுக்காதீங்கோ... மாதாவுக்குப் பேச்சுத் துணைக்காகத் தான் வந்தேன்...
ராஜாங்க கார்யங்களோட சுமையால, மன்னராலே, மாதாவுக்கு நேரம் ஒதுக்க முடியல...
மாதாவ பாக்கறதுக்கு ரொம்பப் பாவமா இருந்தது. அதனாலதான்..."
ஊர்மிளை முடிக்காமல் இழுத்ததைப் பார்த்ததும், சுமித்திரை நெகிழ்ந்து போனாள்.
"இந்தப் பெண்ணுக்கு, இங்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறதே... எங்கு சென்றால், எம் பாவங்கள் எல்லாம் கரையும்?"
தன்னைத்தானே வினவிக் கொண்டவளின் விழிகள் நனைந்தன.

ஆறுதலாய் அவளைப் பார்த்துப் புன்னகைத்த ஊர்மிளை, அங்கிருந்து அகன்றாள்.
இத்தனை நாளும் நெஞ்சில் கொந்தளித்துக் கொண்டிருந்ததை, இன்று லக்ஷ்மணனிடம் கொட்டித் தீர்த்தாள் சுமித்திரை.
"ஏன் இப்படி அவளுக்குத் துரோகம் செய்யற லக்ஷ்மணா?
ஒனக்கே இது ந்யாயமா படறதா? பெண்பாவம் பொல்லாதுனு ஒனக்குத் தெரியாது?"
துடித்துப் போனான் லக்ஷ்மணன்!
"மாதே... ஒங்க மனசு எனக்குப் புரியறது...
ஆனா, ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஊர்மிளைகிட்ட இது விஷயமா, கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருந்தேன் மாதே...
யோசிச்சு முடிவு எடு... பின்னாடி வருத்தப்படாதேன்னு சொல்லியும், அவ ஏன் என்னக் கல்யாணம் செஞ்சுண்டானு தெரியல..."
"என்னால என்ன மாத்திக்க முடியல மாதே...
எனக்கு ராமனிடம் இருக்கும் ஈர்ப்பு, மீதி எந்த விஷயத்திலயும் இல்ல...
என்ன கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கோ மாதே..."

"நான் ஏன் இப்டி இருக்கேன்னு ஒரு பெத்தவளா ஒங்களால சொல்ல முடியலைனா பரவாயில்ல.
ஆனா, எல்லாரும் ஒங்கள தீர்க்கதரிசின்னு சொல்றாளே...
அதனால ஒங்கள கேக்கறேன்... நான் ஏன் இப்டி இருக்கேன்?
நீங்களே சொல்லுங்கோ மாதா... என்னால என்ன மாத்திக்க முடியலயே..."
கண்ணீரோடு, தாயின் மடியில் முகம் புதைத்தான் தனயன்.
சுமித்திரைக்கும் விழிதிரண்டது.
தன்னை மீறிய செயலாய், ஆறுதலாய் அவனைத் தடவி கொடுத்தாள்.
லக்ஷ்மணன் சென்ற வெகுநேரத்திற்குப் பிறகும், அவள் மனம் அவனையே சுற்றிச்சுற்றி வந்தது.
எத்தனை யோசித்த போதும், ஊர்மிளைக்கு லக்ஷ்மணன் செய்கின்ற துரோகம், சுமித்திரைக்கு மலையாகத்தான் தெரிந்தது!
"சரி... இதற்கானத் தீர்வை ராமனிடமே கேட்போம்... அவன் எடுத்துச் சொன்னாலாவது, இவன் மாறுகிறானா பார்ப்போம்..."
என்று மனதில் தீர்மானித்தவள், ராமனிடம் பேசுவதற்கான சரியான தருணத்திற்காகக் காத்திருந்தாள்.
************************
குலகுரு வசிஷ்டரோடும், முக்யமான மந்திரிகளோடும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்காக தசரதர் ஆலோசித்துக் கொண்டிருந்த விஷயம், எப்படியோ வெளியில் கசிந்திருந்தது.
அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத தகவல் என்பதால், அவரவரும் கூடிக்கூடி ரகசியமாய்ப் பேசிக் கொண்டனர்.
மன்னர் வாயினால் அறிவிக்கப்பட்ட சேதியானால், பேசுவதற்கு எந்தத் தடையுமில்லை.
ஆனால் இது இன்னமும் வெளியிடப்படவில்லை! அதனால், அதை பேசுவதற்கு அனைவருக்கும் தயக்கம் இருந்தது.
இந்த நிலையில்தான், மன்னர், ப்ரஜைகளை ஒருமுக்யமான விஷயத்திற்காக அழைத்திருக்கிறார் என்ற சேதி வந்து சேர்ந்தது.
மக்கள் அனைவரையும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. குறிப்பிட்ட நாளும் வந்தது. நேரமும் வந்தது.
அவ்வளவு பெரிய திரளும், மன்னரின் வாயிலிருந்து வருகின்ற செய்திக்காக ஆசையோடு காத்திருந்தது..
மக்களிடம் ராஜ்ய பரிபாலனம் சரியாக நடந்து வருகிறதா, ஏதேனும் குறைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறதா, போன்றவற்றை முதலில் கேட்டறிந்தார் தசரதர்.

அதன் பிறகு, வயோதிகத்தின் காரணமாக, தம்மால் முன்போல் இயங்க முடியவில்லை என்றும், அதனால் தனது மூத்தகுமாரன் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யலாம் என உத்தேசித்திருப்பதையும் கூறியவர், ப்ரஜைகளின் சம்மதத்தையும், இந்த விஷயத்தில் கோரினார்.
அவ்வளவுதான்... கூட்டம் கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தது.
"சீக்கிரம் செய்யுங்கள் மன்னா... அப்படியே செய்யுங்கள்..."
ஒரே குரலில் அனைவரும் உடனடியாக சந்தோஷத்தோடு சம்மதம் தெரிவித்தது, தசரதருக்கு அவர்கள் இந்தச் செய்திக்காகவே வெகுகாலமாய் காத்திருக்கிறார்களோ என்ற எண்ணத்தை உண்டாக்கியது!
அங்கே, அவ்வளவு சந்தோஷ அலைவீசியது!
இனி மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை குலகுருவிடம் ஆலோசித்தார் தசரதர்...
முதலில் பட்டாபிஷேகத்துக்கான நாள் அடுத்த சுபமுஹுர்த்தத்திலேயே குறிக்கப்பட்டது.
மீதி ஏற்பாடுகள் எல்லாம் வசிஷ்டரின் அறிவுறுத்தலின்படி சுமந்திரரே மேற்கொண்டார்.
தன்வாயினால் இந்த இனிய சேதியை, தமது மனைவிகள் மூவருக்கும், சொல்ல ஆசைப்பட்டார் தசரதர்.
முதலில், கோசலையிடமும், சுமித்திரையிடமும் இந்த சந்தோஷ சமாசாரத்தைப் பகிர்ந்தார்.
சேதிகேட்டு, கோசலையைவிட, சுமித்திரையே அதிக ஆனந்தம் அடைந்தாள்!
"நல்ல முடிவு அரசே!
தமது மேற்பார்வையில், ராமன் நாடாளட்டும்!..
தமக்கு மங்களம் உண்டாகட்டும்!.." என்று தன்மனதைத் திறந்தாள் அவள்.
கடைசியாகத்தான், தசரதர் தனது காதல் மனைவியான கைகேயியின் அந்தப்புரத்துக்குச் சென்றார்.
"மற்றவர்களிடம் விஷயத்தைச் சொல்வது வேறு.
என் கைகேயியிடம் சொல்வது வேறு.
ராமன் அவள் மகன் அல்லவா?
அவளுக்குத்தான் அனைவரை விடவும் ஆனந்தம் அதிகமிருக்கும்.
ஏற்கனவே பூவாய் மலர்ந்திருக்கும் அவள்முகம்,
இந்த விஷயம் கேட்டால் என்ன ஆகும்?..
சந்தோஷத்தில் என்னை அணைத்துக் கொண்டு தட்டாமாலை சுற்றுவாளோ?
இல்லை, நெகிழ்ச்சியில் அழுதே விடுவாளோ?"

ஆயிரம் யோசனைகளோடும், எதிர்பார்ப்புகளோடும் உள்ளே நுழைந்தவர், பின்நடந்த நிகழ்வுகளால், அரைஉயிராய், நினைவுதப்பி, அங்கேயே விழுந்து கிடந்தார்.
கைகேயிதான், துணிச்சலோடு சுமந்திரரை வரவழைத்து, தனது கட்டளைகளை ராமனுக்குச் சொல்லி அனுப்பினாள்!
நேற்று இரவு வரையில் இருந்த அரண்மனையா இது?
ஒவ்வொருவர் முகத்திலும் துக்கம் அப்பிக் கிடந்தது.
ராமனுக்குப் பட்டாபிஷேகம் இல்லை என்ற சேதியைவிட, ராமன் பதினான்கு வருஷகாலம் வனவாசம் செய்ய வேண்டும் என்ற உத்தரவு, ஒவ்வொருவர் உதிரத்தையும் கொதிக்க வைத்தது!
விஷயம் அறிந்த லக்ஷ்மணன், விஷப்பாம்பாய்ச் சீறினான்.
அவனை நெருங்கவே அனைவரும் அச்சப்பட்டனர்!
மரவுரி தரித்து வந்த ராமனையும் சீதையையும் கண்டவனின் கண்கள், ஆறாகக் கண்ணீரைப் பெருக்கின.
"ராமண்ணா... எங்கே கிளம்பிட்டேள்? வனத்துக்கா?"
துக்கம் தொண்டையை அடைக்கவினவினான்..
"ஆமாம் லக்ஷ்மணா... தந்தை கட்டளை அதுதானே!"
"அ...ண்...ணா.... நான் மட்டும், இங்க இருப்பேன்னு நெனச்சேளா?"

"நீ இங்கதான் இருக்கணும் லக்ஷ்மணா... நம்ம மூணுமாதாக்களையும், தந்தையையும் பாத்துக்கற கடமை ஒனக்கிருக்கு.. அதுவும் இல்லாம, ஒன்ன நம்பி ஊர்மிளை இருக்கா... அவள மறந்தயோ?"
ராமனின் இந்த வார்த்தை, சுமித்திரையை கலங்க வைத்தது...
"இவன்கிட்டதான், லக்ஷ்மணன் விஷயம் பேசணும்னு நெனச்சுண்டு இருந்தேன்... ஆனா... அதுக்குள்ள என்னவெல்லாமோ நடந்துடுத்தே..."
அவள் எண்ண ஓட்டத்தை தடைசெய்வது போல, அழுகையோடுகூட லக்ஷ்மணன் இப்போது பேசினான்...
"இல்லண்ணா... என்னால ஆகாது.. நீங்க இல்லாம ஒருக்ஷணம் கூட நான் இங்க இருக்க மாட்டேன்... எனக்கு ஒங்களத்தவிர, வேற யாருமே வேண்டாம்...
நீங்க என்ன ஒங்களோட கூட்டிண்டு போகலைனா, அப்பறம் என்ன உயிரோட பாக்கவே முடியாதுண்ணா..."
உடைந்து போய் அழுதவனை, தேற்றக்கூடத் தெரியாமல், அனைவரும் விக்கித்து நின்றனர்!
அந்தநேரம், லக்ஷ்மணனின் தோள்களை, ஒருகை ஆதரவாய்த் தாங்கியது.
கண்ணீர் மறைக்கின்ற கண்களின் வழியே பார்த்தவனுக்கு, தன்னை அரவணைப்பது, ஊர்மிளைதான் என்பதுபுரிந்தது..
"ஊ...ர்...மி...ளை...."
சிறுகுழந்தையாய் அவள் மார்பில் முகம் புதைத்து, தேம்பித்தேம்பி அழுதான்..
அவளது ஆறுதல், இப்பொழுது அவனுக்கு இதம் அளித்தது! அவனது அந்தச் செய்கை,
"இப்பொழுதேனும், இவன் அவளை மனைவியாக அங்கீகரித்தானே!" என்று சுமித்திரையை, ஒருகணம் எண்ண வைத்தது!
தனது சேலைத் தலைப்பால் அவன் முகத்தை மெல்லத் துடைத்தாள் ஊர்மிளை. கைத்தாங்கலாக, அவனைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

வருத்தத்தில் இருக்கின்ற குழந்தை, தனது தாயின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு, பின்தொடர்வது போல், ஊர்மிளையைத் தொடர்ந்தான் லக்ஷ்மணன்...
**************************************

"சௌமித்ரரே... எதுக்கு இவ்ளோ வருத்தப்படறேள்? இப்போ என்ன ஆயிடுத்து? ஒங்க சகோதரரோட நீங்களும் போகணும்... அவ்ளோதானே?"
சரேலென்று நிமிர்ந்தான் லக்ஷ்மணன்.
"ஊ..ர்...மி..ளை...
அப்போ நானும் வனம் போறது ஒனக்கு சம்மதமா?"
ஒருகணம் அவனை ஆழமாக ஊடுருவினாள் ஊர்மிளை.
"சௌமித்ரரே... நான் கேக்கறேனேனு தப்பா நெனச்சுக்காதீங்கோ...
என்னோட சம்மதத்த கேட்டா இதுவரையிலும் நீங்க நடந்துண்டு இருக்கேள்?"
குற்ற உணர்ச்சியில் தலைகவிழ்ந்தான் லக்ஷ்மணன்.
"ப்ச்... விடுங்கோ... இப்போ அத பேசறதுல ஒரு லாபமும் இல்ல... விஷயத்துக்கு வருவோம்...
ஒங்களுக்கு ஒங்க சகோதரர் இல்லாம இருக்க முடியாது. அவரோட ஒங்களுக்குப் போயே ஆகணும்...
அதுக்கு நான் தடையாயிடுவேனோனு பயப்படறேள்... அதானே?"
நேரிடையாக ஊர்மிளை கேட்ட கேள்வியில், வாயடைத்து நின்றான் லக்ஷ்மணன்.
"கவலப்படாதீங்கோ சௌமித்ரரே... ஒங்க வழியில நான் உபத்திரவமா குறுக்க வரமாட்டேன்...
நீங்க தாரளாமா ஒங்க சகோதரரோட புறப்படலாம்..."
"ஊர்மிளை... நெஜமாவா சொல்ற?"

விரக்தியாக சிரித்தாள் ஊர்மிளை.
"சௌமித்ரரே... எனக்கு இழப்புனு பெரிசா ஒன்னும் இல்ல!
அக்னிசாட்சியா அன்னிக்கு என்ன கல்யாணம் பண்ணிண்டதோட சரி...
இன்னிவரைக்கும் எனக்குள்ள எரியற அக்னிய நான் தனியாதான் சமாளிச்சுண்டு இருக்கேன்..."
"அதோட இல்லாம ஓரமா இருந்தே ஒங்கள பாத்து பழகிட்ட எனக்கு, நீங்க தூரமா போறதால, பெரிசா ஒன்னும் பாதிப்பு ஏற்படப் போறதில்ல..."
"இதெல்லாம் சொல்லிக் காமிக்கணும்னு சொல்லல... ஆனா, நீங்க புதுசா எனக்கு எதுவும் தண்டனை தரப்போறதில்லைனு தெரிஞ்சுக்கறதுக்காக சொல்றேன்.."
"நீங்கதான், நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே, நீங்க ஒங்க சகோதரருக்கு அடிமைன்னு சொல்லிட்டேளே..
ஒருஅடிமைக்கு வாழ்க்கப்பட்ட நான், என்னோட உரிமையப் பத்திப் பேசக்கூடாது இல்லயா?"
எத்தனைதான் கட்டுப்பாட்டோடு இருந்தாலும், அவளையும்மீறி, விழிகள் உடைப்பெடுத்துக் கொண்டன.
ஒருவிதமான இயலாமையோடு லக்ஷ்மணன் பார்த்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில், இயல்பு நிலைக்கு மாறினாள் ஊர்மிளை.

கண்களைத் துடைத்துக் கொண்டவள், மனப் புண்களையும் மறைத்துக்கொண்டாள்!
"சௌமித்ரரே, போய்ட்டு வாங்கோ... தமக்கு மங்களம் உண்டாகட்டும்..." இரண்டு கரங்களையும் கூப்பினாள்...
கொஞ்சம் தயக்கத்தோடு லக்ஷ்மணன் ஊர்மிளையைப் பார்த்தான்... மென்று விழுங்கினான்.
"ஊ..ர்...மிளை... நான் ஒன்ன ஏமாத்தினதா நெனக்கறயா?"
இதழோரம் ஒரு கேலிப்புன்னகையைத் தவழவிட்டாள் ஊர்மிளை...
"சௌமித்ரரே... நீங்க என்ன ஏமாத்தல... நானும் ஏமாறல... நம்மளோட தலையெழுத்துதான் நம்ம ஏமாத்திடுத்து..."
"விதிவசம்"னு சொல்வாளே... அது இதுதான்! நீங்களும், நானும் என்ன பண்ண முடியும்?"
நெகிழ்ந்து போனான் லக்ஷ்மணன்! இப்போது, அவன் கண்களில் நீர் துளிர்த்தது.
"எவ்வளவு பெரிய உதவி செய்யறதுக்கு தன்ன கொடுத்துருக்கா... இவளுக்கு நான்தான் எவ்ளோ கடமைப்பட்டிருக்கேன்!"
தன் எண்ணத்தை அவளிடம் வெளிப்படுத்தினான்.
"ஊர்மிளை... ஒன்னோட இந்த பேருபகாரத்துக்கு, நான் என்ன கைமாறு செய்யப்போறேன்?"

"இது உபகாரம் இல்ல சௌமித்ரரே... இதவிட்டா, நம்ம ரெண்டு பேருக்குமே வேற வழி இல்லை...
தம்மால், தமது சகோதரரைப் பிரிந்து உயிர் வாழ முடியாது. என்னால், ஒரேயடியாக தம்மைப் பிரிந்துவிட முடியாது. எங்கயோ நீங்க இருக்கேள்னு நெனச்சுண்டு, காலத்த ஓட்டிடுவேன்..."
தன்னையுமறியாமல், அவளைச் சட்டென்றுத் தழுவிக் கொண்டான் லக்ஷ்மணன்.
துள்ளி விலகினாள் ஊர்மிளை!
"சௌமித்ரரே...
பெண்ணாகவே இருந்தாலும், எனக்கும் உணர்ச்சிகள் உண்டு...
போகிற போக்கில் நீங்கள் பத்த வைத்து விட்டுப்போற ஒருசிறுபொறி, காட்டுத் தீயாமாறி, என்ன கொள்ளை கொண்டு போக்கூடாது...
இத்தனை நாளாய் செஞ்சுண்டிருக்கிற தவத்தில, எந்த இடையூறையும் நான் விரும்பலை... நீங்க போய்டு வாங்கோ..."
கரங்களைப்பற்றி, அவனை அறைக்கு வெளியே கொண்டு வந்து விட்டவள், எல்லாக் கதவுகளையும் அறைந்து மூடினாள்.
"ராமண்ணா... ஊர்மிளை... என்னயும் ஒங்களோட கெளம்பச்சொல்லிட்டா... அதனால, நானும் ஒங்களுக்குத் துணையா வரேன்..."
"சுமித்ராமாதே... என்ன ஆசீர்வாதம் பண்ணுங்கோ..."
என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானித்த சுமித்திரை, இனிபேசி எதுவும் பயனில்லை என்ற முடிவுக்குவந்தாள்.
"பதினாலு வருஷம் கழிச்சுதான் மறுபடியும் பாக்கமுடியும்... நல்லபடியா அனுப்பிவெப்போம்..."
அன்னையாய், அவனுக்கு ஆசிவழங்கினாள். ஆனால், ஒருபெண்ணாய் அவள்மனது, ஊர்மிளைக்காக உருகியது.

நீருக்குள் மீன் அழுதால் எப்படி வெளியே தெரியாதோ, அதுபோன்று, இப்பொழுது அனைவரும் ராமன் மனைவியோடும், தம்பியோடும் வனம் ஏகுவதை எண்ணி ஆற்றாமை தாங்காமல் அழுத அழுகையில், சுமித்திரையின் ஊர்மிளைக்கான கண்ணீரும் கலந்து மறைந்தது.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
கங்கை கரையில், குகனுடைய ப்ரதேசத்தில் அன்றைய பொழுது கழிந்தது.
குகனோடு இரவு முழுவதும் பேசிக்கொண்டிருந்ததால், லக்ஷ்மணனுக்கு அன்று உறக்கம் வரவில்லை.
விஸ்வாமித்ர முனிவரிடமிருந்து, "பலை, அதிபலை" ஆகிய மந்திர உபதேசங்கள் ராமலக்ஷ்மணர்களுக்கு, ஆகியிருந்தபடியால், பசி, தாகம், சோர்வு முதலிய உபாதைகள் லக்ஷ்மணனைத் தீண்டவில்லை..
குகனுடைய உதவியால் கங்கையைக் கடந்து, வனத்திற்குள் ப்ரவேசமும் செய்தாயிற்று...
அன்றைய பகல்பொழுதுக்கு, ராமனுக்கும் சீதைக்குமாக, சில கனிவகைகளை ஆகாரமாக, லக்ஷ்மணன் சேகரித்துத் தந்தான்.
உண்ட பிறகு, சற்று நேரம் அவர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அன்றைய இரவைக் கழிப்பதற்காக வேண்டி, லக்ஷ்மணன் ஒருதற்காலிகமான குடிலை அமைத்தான்.
அதற்குள் அந்திசாய்ந்து, இரவும் கவிந்திருந்தது.
துஷ்ட அரக்கர்களும், ம்ருகங்களும் நடமாடும் ப்ரதேசம் ஆனதால், தான் இரவெல்லாம் காவல் காக்க இருப்பதாகக் கூறிய லக்ஷ்மணன், குடிலுக்கு வெளியிலேயே தங்கிக் கொண்டான்.

நள்ளிரவைத் தாண்டிய நேரம்... கடந்த இருதினங்களாக உறக்கமற்று இருந்த லக்ஷ்மணன் விழிகள், உறக்கத்துக்காக கெஞ்சின.
குடிலைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து பார்த்தான்... குளிர்நீரால் கண்களைக் கழுவியும் பார்த்தான்.
என்ன செய்தும், இயற்கையின் நியதியைத் தடுத்துவிட முடியுமா என்ன?
கண்கள் அவனையும் மீறி செருக ஆரம்பித்தன.
"அச்சோ... நான் என்ன செய்வேன்?
வந்த ஓரிரு நாட்களுக்குள்ளாகவே எனக்கு இரவு உறக்கம் தேவைப்படுகிறதே!
யஜமானனுக்கு சேவகம் செய்வதுதானே, ஒரு வேலைக்காரனின் கடமை?
அதை விடுத்து, யஜமானனுக்குச் சரியாக, உண்டு உறங்கி எழுந்தால், அது எந்த விதத்தில் ந்யாயமாகும்?
பிறகு, யஜமானனுக்கு, இந்த வேலைக்காரனின் தேவைதான் என்ன?"
சிந்தனை வயப்பட்டான் லக்ஷ்மணன்.
"இது ஒருநாள், இருநாள் வந்து போகக் கூடிய ப்ரச்சனையில்லை... இது இனி தினமும் எனக்குப் பெருந்தொல்லையாகவும், மிகப் பெரிய சவாலாகவும் இருக்கப் போகிறது... என்ன செய்வது?"
தீவிரமாக யோசித்தவனுக்கு, ஒரு சிறு நம்பிக்கை பிறந்தது.

"நாம் ஏன் உறக்கத்திற்கு அதி தேவதையான நித்ராதேவியிடமே, இதற்கு ஒருதீர்வைக் கேட்கக்கூடாது?"
எண்ணிய வேகத்திலேயே, செயல்படவும் செய்தான் லக்ஷ்மணன்.
நித்ராதேவியைக் குறித்த மந்திரத்தைக்கூறி, அவளை அழைத்ததும், அவள் உடனே ப்ரஸன்னமானாள்.
இருகரம் குவித்து, சிரம் தாழ்ந்து வணங்கினான், லக்ஷ்மணன்.
"சொல் சௌமித்ரா! எதற்காக என்னை அழைத்தாய்?"
"தேவி... தம்மால் அடியேனுக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது... அதற்கு தமது அனுக்ரஹத்தை யாசிக்கிறேன்..."
"என்னவென்று சொல்வாய் லக்ஷ்மணா..."
"தேவி... தந்தை சொற்படி பதினான்கு வருஷ வனவாசத்திற்காக அடியேனது சகோதரன் ராமன், தனது பத்னியுடன் வனம் வந்திருக்கிறான். அவர்களுக்குக் காவலாக அடியேனும் உடன் வந்திருக்கிறேன்.
ஆனால், இந்தக் காவலாளிக்கு, இரவானால் உறக்கம் வந்து விடுகிறதுதேவி..."
நித்ராதேவி சிரித்தாள்...
"இது இயற்கைதானே சௌமித்ரா... இதற்குப் போய் என்னை ஏன் அழைத்தாய்?"
"தேவி... சற்று அடியேனது ப்ரச்சனையைக்கேட்டு, தாமே அதற்கு ஒரு தீர்வையும் தரவேண்டுகிறேன்.."
"சொல்..."
"தேவி... தாம் அறியாததல்ல...
கானகம் என்பது துஷ்ட அரக்கர்களும், துஷ்ட ம்ருகங்களும் சுற்றித் திரியும் ப்ரதேசம்... அதுவும் இரவில்தான் இவைகளின் சஞ்சாரமும் அதிகம்.
இந்த சமயத்தில், சகோதரனைக் காவல் காக்க வேண்டிய அடியேனும், அவனோடு சேர்ந்து உறங்கினால், வந்த ப்ரயோஜனமே வீணாகி விடாதா?"
"சரியே... அதற்கு... நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?"
"தேவி... தாம்நினைத்தால், இந்த பதினான்கு வருஷகால வனவாசமும், அடியேனுக்கு உறக்கமே இல்லாமல் செய்துவிட முடியாதா?"
வாய்விட்டே சிரித்தாள் நித்ராதேவி...
"இது என்ன லக்ஷ்மணா... இயற்கைக்கு விரோதமாகப் பேசுகிறாய்!
உலகின் ஜீவராசிகள் அனைத்தும் உறங்கி எழவேண்டும் என்பதுதானே விதி!
பக்ஷிகளும், ம்ருகங்களும்கூட இதற்கு விலக்கல்லவே..."

"புரிகிறது தேவி... இந்த இயற்கைக்குக் கட்டுப்பட்டால், அடியேன் ராமனுக்குக் கைங்கர்யம் செய்ய முடியாமல் போய்விடுமே... தாமே இதற்கு ஒரு மாற்றுவழி கூறுங்கள் தாயே... இயலாதவனாய், இந்த லக்ஷ்மணன் தம்முன் நின்று, தம் சகாயத்தை ப்ரார்த்திக்கிறேன்..."
மனம் இரங்கினாள் நித்ராதேவி...
"ஹும்.... ராம கைங்கர்யம் என்கிறாய்...
என்னால் ஆன சகாயத்தையும் கோருகிறாய்...
ஆனால், அப்படி மொத்தமாக உறக்கத்திலிருந்து உனக்கு விலக்கு அளிப்பதுதான் சாத்யமாகப் படவில்லை..."
"தேவி... என்னைக் கைவிட்டு விடாதீர்கள்.. இந்த எளியவன் மேல் கருணை வையுங்கள்..."
மன்றாடினான் லக்ஷ்மணன்...
இன்னும் சற்று இரங்கி வந்தாள் நித்ராதேவி...
"சரி... இதற்கு ஒரேஒரு வழிதான் இருக்கிறது. உனது உறக்கத்தை யாராவது வாங்கிக் கொள்ள முன் வருவார்களா? அப்படி இருந்தால் சொல்! அவர்கள் உனக்காக உறங்க, நீ விழித்திருக்க இயலும்!"
மலைத்து நின்றான் லக்ஷ்மணன்...
"தே...வி..."
தடுமாறினான்..

"ஆமாம் லக்ஷ்மணா... இந்த ஒரேவழிதான் இருக்கிறது.. உனக்காக த்யாகம் செய்ய யார் இருக்கிறார்கள் என்று யோசித்து, பதிலைச் சொல்..."
"த்யாகம்" என்ற வார்த்தையைக் கேட்டதுமே, லக்ஷ்மணனுக்கு, ஊர்மிளையின் ஞாபகம்தான் வந்தது.
அவன் முகத்தில் சட்டென்று ஒரு சின்ன ப்ரகாசம் தோன்றியது.
*******************************.

லக்ஷ்மணன் முகம் சட்டென்று ப்ரகாசம் அடைவதைக் கவனித்தாள் நித்ராதேவி.
"என்ன சௌமித்ரா, உனக்குப் பதிலாக உறங்க விருப்பம் தெரிவிக்கும் நபரை, கண்டறிந்தாயா?"
லக்ஷ்மணன், முகமெல்லாம் மகிழ்ச்சிபொங்க, பதிலிறுத்தான்..
"ஆம் தேவி! என் பத்னி ஊர்மிளை... எனக்காக இந்தக் காரியத்தை நிச்சயம் செய்வாள். தாங்கள் தைரியாமாக எனது உறக்கத்தை அவளுக்குத் தந்து விடலாம்."
அவனது பரபரப்பைப் பார்த்த நித்ராதேவியின் இதழ்களில் ஒரு ஏளனப்புன்னகை தவழ்ந்தது. அதை, கவனித்து விட்டான் லக்ஷ்மணன்!

"ஏன் தேவி? இதில் தவறொன்றும் இல்லையே... தன் கணவனுக்காக, ஒரு பத்னி இதை ஏற்கலாம் அல்லவா?"
சிறிது சினம் வெளிப்பட, நித்ராதேவி பேசினாள்.
"அதை நீ முடிவு செய்யக் கூடாது லக்ஷ்மணா... அவள் உனக்குப் பத்னியாகவே இருந்தாலும், உன் சார்பில் உண்ணுவதையும், உறங்குவதையும், அவள் விருப்பம் அறியாமல், அவள் மேல் திணிக்க முடியாது.. அதுதர்மமும் அல்ல! இந்த விஷயத்தில் எனக்கு அவளது விருப்பம் அவசியம்!"
விக்கித்து நின்றான் லக்ஷ்மணன்.
"எனில் தேவி... இதற்கு முடிவுதான் என்ன? அண்ணனை இந்த வனத்தில் தனியாக விட்டுவிட்டு, மீண்டும் அயோத்தி சென்று, ஊர்மிளையின் சம்மதம் பெற்று வருவது என்பது மிகவும் ச்ரமமான காரியமாயிற்றே..."
கவலை தோய்ந்திருந்த அவன் முகத்தைப்பார்க்க, நித்ராதேவிக்கு, கொஞ்சம் பரிதாபமாக இருந்தது.
"அந்தக் கவலை உனக்கு வேண்டாம் லக்ஷ்மணா... நானே நேரில் சென்று அவளைப் பார்த்துப் பேசிக் கொள்கிறேன்...
அவள் தனது சம்மதத்தை தெரிவித்தாளானால், இந்த விஷயம் உன்விருப்பம் போல நிறைவேறும்!"

"ஆகட்டும் தேவி... தமது சித்தம் அடியேனது பாக்யம்..."
கைகூப்பி விடையளித்தான் லக்ஷ்மணன்.
நிச்சயம், ஊர்மிளை, இதற்கு சம்மதிப்பாள் என்றே அவனுக்குத் தோன்றியது! இங்கே, அயோத்தியில் காரிருள் சூழ்ந்திருந்தது.
சகோதரர்கள் வனமேகிய மறுநாளே, தசரதர் விண்ணுலகம் எய்தி விட்டார்.
அன்றைக்கெல்லாம் சுமித்திரைக்கு ஆறுதலாய், அவளை விட்டு அகலவேயில்லை ஊர்மிளை!
அடுத்தநாள் விடியலில் தன்னை அறியாமல் சுமித்திரை உறங்கியிருந்தாள்..
அவளைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல், தன் அறைக்குத் திரும்பினாள் ஊர்மிளை.
அதன்பிறகு, சுமித்திரைக்கு கொஞ்சம் தனிமை தேவை என்பதை உணர்ந்தவளாய், மீண்டும் அவளைக் காணச் செல்லவில்லை..
இதோ... இன்றோடு, நான்கு நாட்களாகிறது, ஊர்மிளை உறங்கி!
நள்ளிரவு தாண்டிய நேரம். ஏனோ லக்ஷ்மணன் நினைவு, அவளை இன்று அதிகம் வாட்டி எடுத்தது!
இத்தனைக்கும் லக்ஷ்மணன், அவளை ஒரு மனைவியாய், என்றுமே பார்த்ததில்லை!
இருந்தும், "அவன் உடன் இருக்கிறான்" என்ற நினைவே, அவளை இத்தனைக் காலமும் நடத்திக் கொண்டிருந்தது.
இப்பொழுது அவனில்லாத அந்த அறை, அவள் மனப்புழுக்கத்தை மேலும் அதிகரிப்பதாக இருந்தது.
சற்றுக் காலார நடந்து வரலாம் என்ற எண்ணத்தில், நந்தவனம் நோக்கி நடந்தாள் ஊர்மிளை.
வானில் பௌர்ணமி நிலவு பாலாய்க் காய்ந்து கொண்டிருந்தது.
புஷ்பங்கள் மலர்ந்தும், மலராத நிலையில், மணத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தன.
நிசப்தமான அந்த இரவில், எங்கோ தூரத்திலிருந்து மிதந்து வந்த மெல்லிய ஷெனாய் இசை, அவளை ஹிம்ஸிப்பதாகவே இருந்தது!
"வேண்டாம்... இந்த இசை என்செவிகளில் விழவேண்டாம்..." என்று எண்ணியவளாய், நந்தவனத்தில் இன்னும் கொஞ்சதூரம் நடந்தாள்.
வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு, பௌர்ணமி நிலவும் அவளுக்குத் துணையாக வந்து கொண்டிருந்தது.
பன்னீர் புஷ்பங்களை ஏந்திக் கொண்டிருந்த அந்த மரம், அவளை ஈர்த்தது. அதன் அருகே சென்றவள், மெதுவாக அந்த நிலவொளியில், அதை அண்ணாந்து பார்த்தாள்.

இலைகளைவிட, புஷ்பங்களாலேயே நிறைந்திருந்தது அது!..
"ஹும்... செடிகொடிகள் கூட புஷ்பித்து, தமது சந்தோஷத்தைச் சொல்லிக் கொள்கின்றன... ஆனால்நான்?
இந்த மரம் செடிகொடிகளுக்கு இருக்கின்ற ஏற்றம்கூட, எனக்கு இல்லையே.."
அவளையறியாமல், கழிவிரக்கத்தில் கண்ணீர் வழிந்தது.
மிகவும் தளர்ந்தவளாய், அப்படியே சரிந்து அந்த மரத்தின் அடியில் அமர்ந்தவள், தனது முழங்கால்களுக்கிடையில், முகம் புதைத்துத் தேம்பினாள்.
துக்கம் தீர, தனிமையில் அவள் அழுது கொண்டிருந்த அந்த வேளையில், ஒருகரம் அவளது தோளைத் தீண்டியது...
சிலீரென்று ஒருஅச்சம் உடல் முழுவதும் வ்யாபிக்க,, தலை நிமிர்ந்தாள் ஊர்மிளை...
அவள் முன் நின்று கொண்டிருந்த பெண்ணை, அவள் இதுவரை பார்த்ததில்லை!
"நீ... யார்? ஒனக்கு... இங்க என்ன வேலை?"
தட்டுத்தடுமாறி, பதட்டத்தில் வாய்குழற அவளை வினவினாள் ஊர்மிளை...
பதிலாக, அந்தப் பெண் ஆறுதலாய் புன்னகைத்தாள்.
"பதறாதே ஊர்மிளை... நீ தனியா இங்க அழுதுண்டு இருக்கறத பாத்துட்டு, ஒனக்கு ஆறுதலா, நாலு வார்த்த சொல்லலாம்னு வந்தேன்... பயப்படாதே..."
அவள் பதிலில், ஊர்மிளையின் படபடப்பு, சற்று அடங்கியது.
"நீ... நீ... இந்த அரண்மனையில வேலை செய்யறயா? எதுக்காக என் பின்னாடி வந்த?
கொஞ்சம் தனிமை வேணும்னு தானே, நான் இந்த ராத்திரி நேரத்தில இங்க வந்தேன்..
அப்படியிருந்தும், இப்டி தொந்தரவு செய்யறயே... ஒனக்கே இது நன்னா இருக்கா?"
சற்றுக் கோபமாகவே கேட்டாள் ஊர்மிளை!
****************************
"தனிமையில இங்க வந்து ஒக்காந்துண்டா மட்டும் ஒன்னோட துக்கம் போயிடுமா?"
அந்தப் பெண் எதிர் கேள்வி கேட்கவும், ஊர்மிளைக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இயலாமையால், கோபம்தான் வந்தது.
"இங்க பாரு... நீ யாருன்னே எனக்குத் தெரியாது... தெரிஞ்சுக்கணும்னும் நான் விரும்பல... தயவுசெஞ்சு நீ மொதல்ல இங்கேந்து கெளம்பு..."
"கெளம்பறதுக்காக நான் இங்க வரல ஊர்மிளை...
ஒன்கிட்டபேசி, ஒன் துக்கத்த எப்டி கொறைக்கலாம்னு பாக்கறதுக்குத்தான் நான் வந்துருக்கேன்..."
"ஹும்... யாராலேயுமே என்னோட துக்கத்த கொறக்க முடியாது... நீ வீணா என்ன தொந்தரவு பண்ணாத... இங்கேந்து கெளம்பற வழிய பாரு..."
"ஒனக்கு நல்ல வழிகாட்டலாம்னு வந்தா, என்ன தொறத்தறதுலயே இருக்கயே... கொஞ்சம் நான் சொல்லப் போறத காது கொடுத்து கேளு..."
இப்போது ஊர்மிளைக்கு எரிச்சல்தான்வந்தது.
"ஐயோ, யார்நீ? இப்டி என் உயிர வாங்கறயே... இங்கேந்து நீ போகமாட்டயா?"
"போயிடறேன்... அதுக்கு முன்னாடி ஒன்புருஷன், ஒன்கிட்ட ஒருவிஷயம் கேட்டுண்டு வரச் சொல்லியிருக்கான்... அதுக்குப் பதில தெரிஞ்சுண்டு இங்கேந்து கெளம்பிடறேன்..."
இதழோரத்தில் ஏளனச் சிரிப்பைத் தவழ விட்டாள் ஊர்மிளை...
"யாரு, என்புருஷன் ஒன்ன அனுப்பியிருக்காரா? ஏன் இந்த அர்த்தராத்திரியில வந்து இப்படி ஒளரிண்டிருக்க?
என்புருஷன் கங்கையை எல்லாம் தாண்டிப்போய், ஏதோ ஒருகானகத்தில வாசம் செஞ்சுண்டு இருக்கார்...
அவர் ஒன்கிட்ட சேதி சொல்லி அனுப்பினார்னு சொல்றயே... இத என்ன நம்பச் சொல்றயா?"
"நீ சொல்ற அதே கானகத்துலேந்துதான் நான் வரேன் ஊர்மிளை... ஒன்னோட புருஷன், தனக்கு ஒதவறதுக்காக என்ன கூப்பிட்டான்... அவனுக்கு நான் ஒதவி செய்யணும்னா, அதுக்கு ஒன்னோட சம்மதம் எனக்கு வேணும்..."
சட்டென்று, ஊர்மிளையை சினம் ஆக்ரமித்துக் கொண்டது...
"நீ ஒன்னப்பத்தி என்ன நெனச்சுண்டிருக்க? என் புருஷன் ஒன்னோட ஒதவிய கேட்டாரா?
போயும் போயும் ஒரு பெண்ணோட ஒதவிய கேக்கற அளவுக்கா, என்னவர கேடுகெட்டவரா நெனச்சே?"
அவளைத் தன்விழிகளாலேயே எரித்து விடுவதுபோல ஊர்மிளை பார்த்த அதேநேரத்தில், அந்தப்பெண், தன்சுயரூபம் எடுத்தாள்...
அதிர்ந்தே போனாள் ஊர்மிளை...
"நீ...நீங்...கள்... யார்?.."
நடுங்கும் குரலில் வினவினாள்...
கலகலவெனச் சிரித்தபடியே, அவள் பதிலிறுத்தாள்...
"ஊர்மிளை... நான்தான் "நித்ராதேவி!"
வியப்பும் நடுக்கமும் மேலிட ஊர்மிளை அவளை வணங்கினாள்.
"மன்னியுங்கள் தேவி... தாம் யாரென அறியாமலே, தம்மோடு வாதம் செய்து விட்டேன்... எனது பிழையைப் பொறுத்தருளுங்கள் மாதே..."

"போகட்டும் ஊர்மிளை... இப்பொழுது நான்கூறுவதை எல்லாம் நன்றாகக் கேட்டுக் கொண்டு, உனது எண்ணத்தைச் சொல்வாய்...
உன்னவன் என்னை உன்னிடம் அனுப்பி வைத்திருக்கிறான்.
மந்திரத்தால் அவன் என்னை அழைத்திருந்தான்...
நான் அங்கு சென்றபோது, தன் கஷ்டத்தை என்னிடம் கூறி, தனக்கு உதவுமாறு கோரினான்..."
"என்னவருக்கு கஷ்டமா? ஏன்? என்னஆச்சு?.."
பதற்றத்தோடு, இடைமறித்தாள் ஊர்மிளை...
"ஆமாம் ஊர்மிளை... உறக்கத்தைத் தவிர்க்க இயலாமல், ரொம்பவும் கஷ்டப்படுகிறான்..."
ஊர்மிளை குறுக்கிட்டாள்...
"அவர் கிளம்பிச் சென்றதிலிருந்து உறக்கம் இல்லாமல் நான் அவஸ்தைப்படுகிறேன்...
ஆனால், அங்கே, அவருக்கு உறக்கத்தைத் தவிர்க்க முடியவில்லையாமா?"
இகழ்ச்சியாகக் கேட்டாள் ஊர்மிளை.
"ஊர்மிளை... காதல் வயப்பட்ட மனது உன்னுடையது... கடமைக்கு வசப்பட்ட மனது அவனுடையது!
இந்த வித்யாசம்தான் உங்கள் உறக்கத்திலே எதிரொலிக்கிறது!"
"தேவி... தாம் கூறுவது எனக்கு விளங்கவில்லையே..."
"சொல்கிறேன் ஊர்மிளை... கடமையின் சுமைதாங்காமல் சோர்ந்து போகின்ற உன்னவனுக்கு உறக்கம் வருகிறது.
ஆனால், காதலின் வேட்கையினால், இமைமூடாமல் இருக்கின்ற உனக்கு, உறக்கம் வரமறுக்கிறது.
சரிதானே, நான்சொல்வது?"
நித்ராதேவியின் பேச்சிலிருந்த நிஜம் சுடவும், வாய் மூடி தலைகுனிந்தாள் ஊர்மிளை.
"இருக்கட்டும்... நான் வந்த விஷயத்தைச் சொல்கிறேன் கேள்மகளே...
உன்னவன், தன்சகோதரனின் கைங்கர்யத்துக்காக, பதினான்கு வருஷமும், தனக்கு உறக்கமே வரக்கூடாது என என்னிடம் ப்ரார்த்தித்திருக்கிறான்.
இயற்கைக்கு விரோதமாக செயல்பட முடியாதெனினும், இதற்கு ஒரு விதிவிலக்கு இருப்பதாக நான் அவனிடம் சொல்லி வந்திருக்கிறேன்..."
ஊர்மிளை, தன்னைஉற்றுக்கவனிப்பதைஉறுதிசெய்துகொண்டு, நித்ராதேவி தொடர்ந்தாள்.
"அவனது உறக்கத்தை, யாரேனும் ஒருவர் விரும்பி ஏற்றுக் கொண்டால் மட்டுமே, இந்த பதினான்கு வருஷகாலமும் அவனால் விழித்திருக்க இயலும் என்று கூறினேன்...
உடனே அவனுக்கு உன் ஞாபகம்தான் வந்தது..."
"ஓ... இப்பொழுது..... என் நினைவு வந்ததோ?"
ஊர்மிளையின் எதிர் கேள்வியில் தொனித்த ஓராயிரம் அர்த்தங்களையும், ஒரு நொடியில் உணர்ந்து கொண்டாள் நித்ராதேவி.
"சொல் ஊர்மிளை, உனக்கு சம்மதமானால் மட்டுமே இது நிகழும்!
நீ சம்மதம் தெரிவிக்கின்ற பட்சத்தில், உன் உறக்கத்தோடு, அவன் உறக்கத்தையும் சேர்த்து நீ உறங்கியாக வேண்டும். அதாவது, இந்த பதினான்கு வருஷமும், பகலும் இரவுமாக நீ உறங்கியபடியே இருக்க வேண்டும்.
இது ச்ரமசாத்யமான காரியம்தான். அதனால்தான், உன் விருப்பத்தை அறிய இங்கே வந்தேன்..."
"தேவி... தமது வருகையின் நோக்கம் முழுவதும் இப்பொழுது உணர்ந்தேன்...
தனிமையின் கோரப்பிடியில் துவண்டு போயிருக்கும் எனக்கும் இந்த உறக்கம் ஒரு வரப்ரசாதமாகவே அமையும்.
ஆனால், இதை ஏற்பதற்கு முன், தம்மிடம் எனக்கு இரண்டு கோரிக்கைகள் இருக்கின்றன தேவி.
தாம் அதற்கு, இந்த அபலைக்கு அனுக்ரஹம் செய்வீர்களா?"
ஊர்மிளை அணுகிய விதம், நித்ராதேவியை நெகிழச் செய்தது.
"சொல் மகளே... வரம்புக்கு உட்பட்டதாக இருந்தால் நிச்சயம் செய்கிறேன்..."
"பாக்யவதியானேன் தேவி...
முதல் கோரிக்கை..
எனக்கு அமையப் போகின்ற இந்த உறக்கத்தில், கனவில்கூட, என் கணவரது நினைவு என்னைத் தீண்டாதிருக்க, தாம் கடாக்ஷிக்க வேண்டும்.
இரண்டாவது கோரிக்கை..
இந்தப் பதினான்கு வருஷ உறக்கத்தில்பசி, தாகம் உள்ளிட்ட இயற்கை உபாதைகள் எதுவுமே எனக்கு இருக்கக்கூடாது..
அன்னை உமது மடியில், அத்தனையும் மறந்து, ஆழ்ந்த உறக்கத்தில் நானிருக்க வேண்டும்..."
"அப்படியே ஆகட்டும் ஊர்மிளை... உனது கோரிக்கைகள் இரண்டையுமே நான் ஏற்கிறேன்..."
"சந்தோஷம் தேவி.. தம்மிடம் ஒரு முஹுர்த்த காலம் அவகாசம் மட்டும் இப்போது வேண்டுகிறேன்...
அதன் பிறகு தமது மடியில் என்னைத்தாம் ஏற்கலாம் தேவி..."
"காத்திருக்கிறேன் மகளே..."
நித்ராதேவியின் அனுமதியோடு, அரண்மனை நோக்கி நடந்தாள் ஊர்மிளை...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
தனது அறைக்கு வந்த ஊர்மிளை, தான் கடைசியாக வரைந்திருந்த "அனாமிகா"வின் சித்திரத்தை எடுத்தாள்...
அதையே சற்று நேரம் உற்றுப் பார்த்தாள்.
அதில்... நிலவெரிக்கின்ற நள்ளிரவில், பஞ்சணையைப் புறக்கணித்திருந்த அனாமிகா, தன் நெஞ்சணையில், ஒரு சித்திரத்தை அணைத்துக் கொண்டு, கண்ணீர் சிந்திய வண்ணம், சாளரத்தின்ஊடே,
வெளியே வெறித்த பார்வையுடன், நின்று கொண்டிருந்தாள்...
சட்டென்று, ஊர்மிளை, அதன் கீழே அழகாக எழுதினாள்.
"வேண்டாத போதும்
வந்தவொரு தெய்வம்
நீண்டதான நித்திரை
நங்கையெனக்கீந்தது..
ஆண்டாடுகள் ஆனாலென்?
அபலைக்கேது வருத்தமே?
ஈண்டிதுவே என்பரிசு!
இல்லை இனி உறுத்தலே!"

த்ருப்தியோடு அதை ஒருமுறை பார்த்தவள், மற்றவர் கண்படுமாறு அந்தச் சித்திரத்தை, அருகிலிருந்த விளக்கு மாடத்தில் நிறுத்தி வைத்தாள்.
பஞ்சணையில் சாயுமுன்.
படைத்தவனை நினைக்கவில்லை!
பெற்றவரை நினைக்கவில்லை!
உற்றவனை நினைக்கவில்லை!
மற்றெவரையுமே நினைக்கவில்லை!
குருநாதர் அஷ்டவக்கிரரை மட்டுமே ஸ்மரித்தாள்...
இரண்டு கரங்களையும் குவித்து ப்ரார்த்தித்தாள்...
"குருநாதா... தாம் காட்டிய பாதையில்தான், இதுவரை மிகுந்த ச்ரமங்களோடு பயணித்து வந்தேன்...
இப்பொழுது, தானாய் வந்த வாய்ப்பொன்றைப் பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன்... எனக்கு அனுமதி அளியுங்கள் குருநாதா..."
மனம் உருக வேண்டியவள், மெல்ல பஞ்சணையில் சாய்ந்தாள்.
அதற்கே காத்திருந்த நித்ராதேவி, அவளை மெதுவாகத் தீண்டினாள்.
ஏனோ, தேவியின் மனமும் கனத்து, விழியோரம் நீர் துளிர்த்தது.
இங்கே... ஒரேநாளில், லக்ஷ்மணனுக்கு, இரவும், பகலும் பேத மற்றுப் போனது.
அவனால் வெகுலகுவாக, எந்நேரமும் விழித்திருக்க முடிந்தது...
உறக்கத்தின் சுவடற்றவனாய், உற்சாகத்தின் இருப்பிடமாய் மாறிப்போயிருந்தான்... இந்த மாற்றத்துக்கான காரணம், அவனுக்குப் புரியவும் புரிந்தது!
ஊர்மிளை இருக்கின்ற திக்கு நோக்கி, நெகிழ்ச்சியோடு வணங்கினான்.
காலையிலிருந்தே ஊர்மிளையின் அறைக்குப் போவதும், வருவதுமாக தாதியர்கள் இருந்தனர்.
"என்ன ஆச்சு... இத்தன நேரமெல்லாம் இளவரசி தூங்க மாட்டாங்களே... ஒடம்பு ஏதும் சரியில்லயா?"
தமக்குள் பேசிக் கொண்டனர். இருந்தாலும் அருகே நெருங்கி, அவளைத் தீண்டத் தயங்கினர்.
சூரியன் உச்சிக்கு வருகின்ற நேரம் சமீபித்துக் கொண்டிருந்தது.
"இனியும் தாமதிக்கறது நல்லதில்ல... ராஜமாதாவிடம் விஷயத்தைச் சொல்வோம்..." என்று எண்ணியவர்கள், நேரே சுமித்திரையிடம் வந்தார்கள்.
அவர்கள் தயக்கத்தைப் பார்த்த சுமித்திரைக்கு, ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.
"சொல்லுங்கள் தாதியரே... என்ன விஷயமாய் என்னிடம் வந்தீர்கள்?"
வந்திருந்தவர்களில் ஒருத்தி, தன்னைச் சுதாரித்துக் கொண்டு, மெல்ல வாய் திறந்தாள்..
"ராஜமாதா... வழக்கமா விடிகாலைல எழுந்துடற ஊர்மிளைதேவி, இன்னிக்கு இது வர எழுந்திருக்கலை.. ஏதாது ஒடம்புக்கு அசௌகர்யமானு தெரியலை...
கிட்ட நெருங்கிக்கூப்டாலும், எழுந்திருக்கல... நீங்க வந்து ஒருமுறை பார்த்தா நல்லது மாதா..."
தூக்கிவாரிப் போட்டது சுமித்திரைக்கு...
"என்னது? இத்தன நேரமா எழுந்திருக்கலையா? ஏன் முன்னாடியே நீங்க வந்து சொல்லல?"
தாதியரைச் சினந்து கொண்டவள், பதைபதைப்பு தொற்றிக்கொள்ள, ஓட்டமும் நடையுமாய் ஊர்மிளையின் அறைக்கு வந்து சேர்ந்தாள்..
அங்கே... நிச்சலனமாய் உறங்கிக் கொண்டிருந்தாள் ஊர்மிளை.
அறை வாசலிலிருந்தே,
"ஊர்மிளை... அம்மா ஊர்மிளை... கொஞ்சம் எழுந்துருமா... இவ்ளோ நாழியெல்லாம் தூங்கமாட்டயே... ஏன்மா? ஒடம்புக்கு ஏதாது முடியலயா?" என்று கேட்டுக் கொண்டே, அவளைநெருங்கினாள்..
அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, சட்டென்று குனிந்து அவளது நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.
உடல்சூடு சாதாரணமாக இருந்தது. மூச்சும் சீராகவே இருந்தது.
ஒன்றும் புரியாதவளாய், அவள் அருகே அமர்ந்த சுமித்திரை, மெல்ல ஊர்மிளையின் சிரத்தை எடுத்து தன்மடியில் வைத்துக் கொண்டாள்..
சலனமில்லாத சந்திரனாய் ஒளிர்ந்த அந்த கள்ளம் கபடற்ற முகத்தில், ஒருவிதமான அசாதாரண அமைதிகுடி கொண்டிருந்ததை, சுமித்திரையால் உணர முடிந்தது..
"என்ன ஆயிற்று இவளுக்கு?"
விஷயம் புரிபடாத காரணத்தால், அரண்மனை வைத்தியரை, உடனே அழைத்து வரும்படி கட்டளையிட்டாள்.
ஆனால், அவள் மனம் மட்டும், "இது சாதாரண உறக்கம் இல்லை..." என்று சொல்லிக் கொண்டே இருந்தது..
வைத்தியர் வருவதற்குள், இவளது இந்த நிலைக்கு தனக்கு ஏதேனும் துப்பு கிடைக்குமா என்றறிய, அறையைச் சுற்றுமுற்றும் ஒரு நோட்டம் விட்டாள்...
அப்பொழுதுதான், வித்யாசமாய், விளக்கு மாடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தச் சித்திரம், அவளைக் கவர்ந்தது.
****************************

அந்தச் சித்திரத்தைக் கையிலெடுத்துப் பார்த்தாள் சுமித்திரை...
வார்த்தைகளின் தேவையின்றி வெகுஅழகாக, ஒரு பெண்ணின் சோகத்தை, அதுபகிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள்..
மேலே, "அனாமிகா" என்று பெயரிடப்பட்டிருந்ததையும், கீழே தகவலைத் தருகின்ற ஒரு சேதியையும் பார்த்தவள், உடனே, இது ஊர்மிளையின் கைவண்ணமே என்பதை ஊகித்து விட்டாள்.
அப்பொழுது அங்கே வந்த தாதியரும், சுமித்திரையின் ஊகத்தை உறுதிப்படுத்தினர்.
"ராஜமாதா... எல்லாமே ஊர்மிளைதேவி வரஞ்சதுதான்மா.. தினமும் அவங்களோட பொழுதுபோக்கே இதுதான்மா.. இங்க பாருங்க... இந்தப் பெட்டி நிறைய, அவங்க எவ்ளோ வரஞ்சு வெச்சுருக்காங்கனு..."
"இவ்ளோ சித்திரங்களா?" அதிசயித்தாள் சுமித்திரை.
"அனாமிகா"வாலேயே நிரப்பப்பட்டிருந்தது பெட்டி.
ஒரு பெண்ணாய், சுமித்திரைக்கு, ஊர்மிளையின் மனதை, "அனாமிகா"வில் படிக்க முடிந்தது.
இப்பொழுது, கடைசியாக அவள் தந்திருக்கின்ற சேதியிலிருந்து, ஏதோ ஒரு தெய்வம் அனுக்ரஹிக்க, இந்த நீள் உறக்கத்தை, அவள் வரமாகப் பெற்றிருக்கிறாள் என்பதையும் உணர முடிந்தது...
"ஆண்டாடுகள் ஆனாலென்?"
என்று ஊர்மிளைஎ ழுதியதிலிருந்து, அவள் நித்திரை கலைய நிறைய வருடங்கள் ஆகும் என்கிற அதிர்ச்சியான நிஜம், சுமித்திரையை முகத்தில் அறைந்தது!
ஒருகணம், அவளையுமறியாமல் விழிகள் நீரைப்பெருக்கின...
"இந்த அயோத்திக்கு மருமகளாக வந்ததிலிருந்து, எந்தச் சுகமும் காணவில்லையே, இந்த அப்பாவிப்பெண்!"
அவள் மனது கிடந்து அங்கலாய்த்தது.
அரண்மனை வைத்தியர், அரக்கப்பரக்க, வந்து சேர்ந்த அந்த நேரம், சுமித்திரை அழுது கொண்டு தானிருந்தாள்..
"சொல்லுங்கள் ராஜமாதா... ஊர்மிளைக்கு என்ன ஆயிற்று?"
"வைத்தியரே... அதைத்தாம்தான்... சொல்லவேண்டும்! எனக்கு... மிகவும்... கவலையாக இருக்கிறது..." படபடப்பில் வாய் குழறியது.
"கவலைப்படாதீர்கள் மாதா... சரிசெய்துவிடலாம்... பெரிதாக ஒன்றும் இருக்காது..."
ஆறுதல் கூறிய வைத்தியர், ஊர்மிளையை நீண்டநேரம் பரிசோதித்தார்...
அவரால் எதுவும் அனுமானிக்க இயலவில்லை என்பதை சுமித்திரை மெல்ல உணர ஆரம்பித்தாள்.
"சொல்லுங்கள் வைத்தியரே... தாம் என்ன கண்டறிந்தீர்கள்? ஊர்மிளைக்குப் பெரிதாக ஒன்றுமில்லையே?"
நம்பிக்கையே இன்றிதான் வினவினாள் சுமித்திரை.
வைத்தியர் உதட்டைப் பிதுக்கினார்.
"என்னை மன்னியுங்கள் ராஜமாதா... என்னால் எதுவும் கண்டறிய முடியவில்லை...
நாடித்துடிப்பு துல்யமாக இருக்கிறது... அதில் ஒரு குறையுமில்லை...
நல்விதமாய் சுவாசமும் இருக்கிறது... அதிலும் குற்றமில்லை.
ஆனால், எழுப்ப இயலாத உறக்கத்தில், இவர்கள் ஆழ்ந்திருப்பதுதான், ஏன் என்று புரிபடவில்லை.
இந்த விஷயம் மிகவும் சவாலான ஒன்றாக இருக்குமெனத் தோன்றுகிறது..."
தனது இயலாமையை ஒப்புக் கொண்டவரைப் பார்த்து, சுமித்திரை மீண்டும் வினவினாள்.
"சரி... இதைச் சொல்லுங்கள் வைத்தியரே... அவளுக்கு எப்பொழுது விழிப்புவரும்?"
"தெரியலை ராஜமாதா... வாரங்கள் ஆகலாம்... மாதங்கள் போகலாம்..
ஏன், வருஷங்கள்கூட உருண்டோடலாம்... நம்கையில் எதுவுமே இல்லை! "
"எனில் வைத்தியரே, அன்ன ஆஹாரமின்றி இவளை எப்படிப் பேணுவது?"
துக்கம் தொண்டையை அடைக்கக் கேட்டாள் சுமித்திரை.
"கவலை வேண்டாம் ராஜமாதா... இமயமலைச் சாரலில் கிடைக்கின்ற சில மூலிகைகளின் பெயரைச் சொல்கிறேன்... தாம் அவற்றை வரவழைத்துக் கொடுங்கள்... அதைக் கொண்டு நான் இவருக்கு ஒரு மூலிகைப்படுக்கை தயார் செய்து விடுகிறேன்.
அதில் இவர்கள் ஒரு வருஷகாலம் உறங்கலாம்... பசி, தாகம், போன்ற உபாதைகளும் இருக்காது...
பொலிவும் குன்றாது... ஒரு வருஷகால முடிவில், மீண்டும் புதியபடுக்கை தயார் செய்து, அதில் இவரைக் கிடத்தலாம்...
இந்தவிதத்தில், இவருக்கு மூச்சு உள்ள வரையில், எத்தனை வருஷங்கள் வேண்டுமானாலும், இவரை நம்மால் பாதுகாக்க முடியும்..."
"இதுவாவது ஒருவழி இருக்கிறதே..." என்று சற்றே ஆறுதல் அடைந்தாள் சுமித்திரை...
வைத்தியரின் அறிவுரைப்படி அதிவேகமாகச் செயல்படவும், மூலிகைப்படுக்கை, சீக்கிரமாகவே தயார் செய்யப்பட்டு விட்டது..
ஊர்மிளையும், வெகு ஜாக்ரதையாக அதில் கிடத்தப்பட்டாள்.

"இதோ இன்று எழுவாள்... இதோ இப்பொழுது கண்விழிப்பாள்..." என்ற நம்பிக்கையில், ஒவ்வொரு நாளும், ஊர்மிளையின் அறைக்கு நடையாய் நடக்கலானாள் சுமித்திரை...
**********************************
கேகயத்திலிருந்து பரத சத்ருக்னர்கள் முதல்நாள் மாலை அயோத்தி திரும்பியிருந்தனர்.
தசரதருக்கான அந்திம க்ரியைகளுக்கான ஏற்பாடுகள் குலகுரு வசிஷ்டரின் தலைமையில், ஒருபுறம் நடக்க ஆரம்பித்திருந்தது.
விடிந்தும் விடியாததான அதிகாலை நேரத்தில், மிதிலையிலிருந்து ஜனகரும், அவரது சகோதரர் குசத்வஜனும் வந்து சேர்ந்தார்கள்.
அத்தனை பேர்களின் கண்ணீருக்கிடையில், மளமளவென்று ஆகவேண்டிய காரியங்கள் அனைத்தும் நடந்து முடிந்தன...
மரியாதை நிமித்தம், அண்டை நாடுகளிலிருந்து வந்திருந்த மன்னர்களும், ப்ரதிநிதிகளும், மீண்டும் தத்தமது இடம் நோக்கிப் புறப்பட்டனர்.
குடும்ப உறுப்பினர்களோடு நெருங்கிய சொந்தங்கள் சிலர்மட்டும், அரண்மனைக்குத் திரும்பி வந்திருந்தனர்.

தான் முடி சூடிக்கொள்வதைத் தீர்மானமாக மறுத்த பரதன், இப்பொழுது, வசிஷ்டர், சுமந்திரர், இன்னும் சில மிக முக்கிய மந்திரிகளோடு, ராமனைத் திரும்ப அழைத்து வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
மூன்று பட்டமகிஷிகளுமே இந்த விஷயங்களிலெல்லாம் ஈடுபடவில்லை.
கோசலை, கணவனை ஒருபுறமும், மகனை ஒருபுறமும் பிரிந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள்.
கோசலையோடு கூடவே தங்கியிருந்த சுமித்திரைக்கும் ஏறக்குறைய கோசலையின் நிலைதான் என்றாலும், உபரியாக ஊர்மிளையின் கவலை வேறு அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது.
மகனால் வெறுத்து ஒதுக்கப்பட்ட கைகேயியோ, யாரெதிரும் வருவதற்கு விருப்பம் இல்லாதவளாய், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாள்.
இந்த நிலையில்தான், ஜனகர், கோசலையையும் சுமித்திரையையும் தாம் காணவிரும்புவதாகக் கூறி, தாதியர் மூலம் அனுமதிகோரியிருந்தார்.
அவ்வளவுதான்... ராஜாமாதாக்கள் இருவரையுமே பதற்றம் தொற்றிக் கொண்டது.
"ஜனகரை எப்படிச் சமாளிப்பது? அவர் பெற்ற இரு மகள்களையுமே நம்மால் சரியாகப் பாதுகாக்க முடியவில்லையே...
"என் மகள்களை, உமது மகள்களாக அரவணைப்பீர்கள் என்று நம்பித்தானே உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன்...
இப்பொழுது, இப்படிச் செய்து விட்டீர்களே..." என்று அவர் கேட்டு விட்டால், என்ன செய்வது?"
இந்தக் கேள்வி அவர்களை ஆதியோடு அந்தம் நடுங்க வைத்தது.
"வேறு வழியில்லை...
"அவரைச் சந்தித்தே ஆகவேண்டும்... என்ன நடந்தாலும்சரி..."
ஒருவாறு தம்மைச் சுதாரித்துக்கொண்டு, முகத்தைத் திரையிட்டு மறைத்தவாறு, உடல் குறுக, உள்ளம்கூச, இருவரும் ஜனகரின் முன்வந்து நின்றனர்.
"ஒரு பெற்றவனாய், அவர் கேட்கப் போகின்ற ந்யாயமான கேள்விகளுக்கு, நம்மிடம் பதில் இல்லையே..."
மனது இருவருக்கும் படபடவென அடித்துக் கொண்டது.
அவர்களது நிலையை, மகாஞானியான ஜனகர் சட்டென்று ஊகித்தார்...
"ராஜமாதாக்களுக்கு நமஸ்காரம்... தாம் இருவரும் மிகவும் பதற்றமாக இருப்பது, பார்த்தாலே தெரிகிறது... ஆனால், தேவிகளே... இது அவசியமில்லாதது..."
"விதிவசம் எல்லாம் நடக்கும்போது, வீண்விவாதங்களால் என்ன பயன் வந்துவிடப் போகிறது?"

"முன்னவள் வனவாசம் சென்றதற்கும், பின்னவள் வெறும் ஸ்வாசத்தோடு வீழ்ந்து கிடப்பதற்கும், தாம் இருவரும் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? அவரவர்களும் வாங்கிக் கொண்டு வந்த வரம் அப்படி!"
"இல்லையென்றால், அரியணை ஏற வேண்டியவன், ஆரண்யம் செல்வானா?"
"ஒருத்தி நிழலாய்த் தொடர்ந்ததும், ஒருத்தி நினைவின்றிப் படர்ந்ததும், தம் இச்சையிலா நிகழ்ந்தது?
இது "அவன் திருவிளையாடல்" தேவியரே!
அதனால், தாமிருவரும் குற்றஉணர்ச்சி இன்றி இருக்க ப்ரார்த்திக்கிறேன்..."
அவ்வளவுதான்...
ஜனகரின் இந்த ஆறுதல் மொழிகளைக் கேட்ட மாத்திரத்தில், கோசலையும், சுமித்திரையும் தம்மையும்மீறி, "கோ"வெனக் கதறிஅழுதனர்.
இத்தனை நாளும் அரித்துக் கொண்டிருந்த மனத்தின் ரணத்துக்கு, ஜனகர் என்னும் மாமனிதரின் வார்த்தைகள், அங்கே மருந்தாய் அமைந்தது.
சிறிதுநேரம் அவர்கள் மனபாரம் இறங்கும்வரை ஜனகர் காத்திருந்தார்.

"தேவியரே... தாம் இருவருமே ஞானத்தில் சிறந்தவர்கள் என்பதை அடியேன் நன்கறிவேன்...
ஆதலால், தம் இருவருக்கும் ஒன்றை நினைவுபடுத்த விழைகிறேன்...
இந்த உலகில் பெரும்பாலும், எந்த நிகழ்வும் நாம் விரும்புவது போல நடந்து விடுவதில்லை!
"அவன்" என்ன நினைக்கிறானோ, அதுவேதான் எப்பொழுதும் நடந்தேறுகிறது!"
"நாம் அனைவருமே, அவன் கைப்பாவைகளே! அப்படி இருக்கும்போது, நாம் ஏன் நடந்து போன நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்?
தாம் இருவரும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, சகஜமாக இருங்கள்..."
இன்னமும் கண்களில் நீர் பெருகியபடி இருக்க, நெகிழ்ச்சியோடு, ராஜமாதாக்கள் இருவரும், ஜனகரை இருகரம் குவித்து வணங்கினர்...
அந்த நேரம் சுமந்திரர் அங்கே வந்து சேர்ந்தார்.
மூவரையும் சிரம் தாழ்த்தி வணங்கியவர், ராஜமாதாக்கள் இருவரையும் பார்த்து,
"மாதாக்கள் இருவருக்கும் ஒருநற்செய்தி...
இராமனை மீண்டும் அயோத்தி அழைத்து வருவதற்காக, இளவரசர் பரதர் அதிவேகமாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்.
நாம் அனைவரும், நாளை மறுநாள், வனம் நோக்கி பயணிக்கிறோம்.
தம் இருவருக்கும் வருவதற்கு விருப்பமானால், நான் வந்து அழைத்துச் செல்கிறேன்.
இப்பொழுது, செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருப்பதால், பின்னர் வந்து, இது விஷயமாய், தம் இருவரையும் சந்திக்கிறேன். எனக்கு விடை கொடுங்கள்..."
பணிவோடு சொல்லி நகர்ந்தார்.
அவர் சென்ற பிறகு, சுமித்திரை ஜனகரை நோக்கி, மெல்ல வாய்திறந்தாள்.
"ராஜரிஷி... தமக்கும் விருப்பமானால், எங்களோடு கானகம் வரலாம்அல்லவா?"
பதில் கூறாமல் மௌனமாக இருந்தார் ஜனகர்.
அவர் மனதில், அஷ்டவக்கிரர் சொன்ன விஷயங்கள் எதிரொலித்தன...
"அரசபோகம் உண்டு;
அனுபவிக்கும் யோகம் இல்லை!"
"வரம்போலும் வாழ்வு உண்டு;
வாழத்தான் விதியில்லை!"
"ஒருத்திக்கு வனவாசம்..
ஒருத்திக்கு வெறும் ஸ்வாசம்..."
அதனால், மறுதலிப்பாகத் தலை அசைத்தார் ஜனகர்!
"எப்படி இருந்தாலும், குருநாதர் வாக்கு நிச்சயம் பலிக்கத்தான் போகிறது...
எதற்கு வீணாக மனதை வருத்திக் கொள்ள வேண்டும்?" என்று அவர் சிந்தை ஓடியது.
மீண்டும் சுமித்திரை வலியுறுத்தினாள்.
"தம்மைப் பார்த்தவுடன், ராமன் நிச்சயம் மனது மாறுவான் என்று எனக்குத் தோன்றுகிறது... அதனால், தாம் எங்களுடன் வர ப்ரார்த்திக்கிறேன்..."
சோகமான புன்னகையுடன், ஆனால் அதேசமயம் தீர்கமான உறுதியுடன், ஜனகர் பதிலளித்தார்..
"என்னை மன்னியுங்கள் ராஜமாதா... மணக்கோலத்தில் என் இரு பெண்களையும் பார்த்ததை, இன்னமும் என் கண்களிலும், நினைவிலும் சேமித்து வைத்திருக்கிறேன்...
அது கலைந்து போவதில் எனக்கு விருப்பமில்லை... இப்பொழுது என்நெஞ்சில், என் இரு பெண்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை துளியும் இல்லை! அதனால், என்னை வற்புறுத்தாதீர்கள்..."
"தாம் நினைப்பது நிறைவேற, இறைவன் திருவுளம் இரங்கட்டும்..."

துக்க வீட்டுக்கு வந்தவர்கள், "போய்வருகிறேன்" என்று சொல்லும் வழக்கம் இல்லையாதலால்...” சட்டென்று திரும்பி நடந்தார் ஜனகர்...
கண்களை மறைக்கின்ற விழிநீர் ஊடே, அந்த "பெண்களைப் பெற்றவன்" தொய்ந்த நடையுடன் வெளியேறுவதை, ராஜமாதாக்கள் இருவரும் மனம் வலிக்க, பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
தாதியர்களின் பொறுப்பில், ஊர்மிளையை விட்டுவிட்டு, ராஜமாதாக்கள் மூவரும், ராமனை அழைத்து வர பரதனுடன் கானகம் சென்றனர்.
ஆனால், முடிவு சாதகமில்லாமல் போயிற்று.
அவரவரும் கனத்த மனத்துடன் மீண்டும் அரண்மனை வந்து சேர்ந்தனர்.
சுமித்திரையைப் பொறுத்த வரையில், அவளுக்கிருந்த "ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து, அவர்கள் மூவரும் அயோத்தி திரும்பி விடமாட்டார்களா?" என்ற சிறு எதிர்பார்ப்பும் தோல்வியைத் தான் தழுவியது.

தினமும், ஊர்மிளையைப் பார்ப்பதும், ஏக்கப் பெரு மூச்சு விடுவதுமாகத் தான் சுமித்திரையின் காலம் நகர்ந்தது.
ஆனால், ஒருகுறையும் நேர்ந்து விடாமல், ஊர்மிளையை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வருவதில் மட்டும், சுமித்திரை கொஞ்சமும் அசரவில்லை!
இப்படியே... நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாக உருண்டோடின.
யார் எதிர்பார்த்தார்களோ இல்லையோ, சுமித்திரை ஒவ்வொரு நாளும், ராமலக்ஷ்மணர்களின் வரவை ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருந்தாள்.
அவர்கள் திரும்பி வந்து விட்டால், ஊர்மிளை நிச்சயம் எழுந்து விடுவாள் என்று அவளது உள்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.
முதலில், தன் மகனோடு சந்தோஷமாய் ஊர்மிளை வாழவேண்டும் என்று ஆசைப்பட்டவள், இப்பொழுது ஒரு சாதாரண வாழ்க்கையாவது, மற்றவரைப்போல, அவள் வாழ வேண்டும் என்று தாபப்பட்டாள்.
ஊர்மிளையைப் பார்க்கும் போதெல்லாம் அப்படியே உருகிப் போகலானாள் சுமித்திரை!
"பாவிப்பெண்! இப்படிஅனுபவிக்கிறாயே... இதுஎன்ன பாவம்டி!"
என்று வாய்விட்டே புலம்புவாள்.

சற்று நேரத்துக்கெல்லாம்,
"இல்ல, இல்ல... இது ஒன்னோட பாவம் இல்ல... என்னோட பாவம்டி!"
"தங்கக்கிளி மாதிரி வந்தவ, இப்போ சிறகொடிஞ்ச கிளி மாதிரி கிடக்கறது என்னோட பாவமே தான்!"
என்று புலம்பி, துக்கம் தாளாமல், தலையில் அடித்துக் கொண்டு, சிலநேரம் அழுவாள்!
சிலசமயங்களில், அவள் தலையை, தன்மடியில் கிடத்திக் கொண்டு, ஆறுதலாய் கோதிவிடுவாள்.
சற்றும் பொலிவு குன்றாமல் இருக்கின்ற அந்த முகத்தைப் பார்த்து, ஒரு சிறுநிம்மதியும் அடைவாள்.
சில நாட்களில், உறங்குகிற ஊர்மிளைக்கு செவிகேட்கும் என்று நினைத்துக் கொண்டு, அவள் காதருகில், "இன்னும்..........மாசம்தான் பாக்கி இருக்கு...சீக்கிரம் லக்ஷ்மணன் வந்துடுவான்...
அவன் வந்துட்டான்னா, ஒன்ன இந்த தூக்கத்திலேந்து மீட்கறதுக்கு, நிச்சயமா ஏதாது வழி பண்ணுவான்..." என்று குழந்தையைப் போலப் பேசுவாள்..
இப்படியே, அங்கலாய்ப்பதும், ஆறுதல் கூறுவதுமாய், ஆண்டுகளை நகர்த்திக் கொண்டிருந்தாள் சுமித்திரை.
நீண்ட காலத்திற்குப் பிறகு... அன்று... சுமித்திரை மிகவும் சந்தோஷமாய் இருந்தாள்.
ராமன் ஊர் திரும்புவதற்குச் சரியாக இன்னும் மூன்று நாட்களே மீதமிருந்தன.
ஓடிவந்தாள் ஊர்மிளையிடம்! தன்னை மீறிய உற்சாகம் அவளிடம் இருந்தது.
ஊர்மிளையின் தலையை எடுத்து, தனது மடியில் வைத்துக் கொண்டவள், மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டாள். பிறகு, அவள் காதோரம் மெல்ல கிசுகிசுத்தாள்.
"ஊர்மிளை... ஒன்னோட இந்த கோரமான தூக்கம் ஒரு முடிவுக்கு வரப்போறது... லக்ஷ்மணன் இன்னும் மூணேநாள்ல இங்க வந்துடுவான்... நீ வேணாபாரேன்... நிச்சயமா, அவன் ஒனக்கு ஏதாது நல்லவழி பண்ணுவான்..."
தனது அரண்மனை வைத்தியர் மீது இல்லாத நம்பிக்கை, தான் பெற்ற மகன் மீது அவளுக்கு, அபரிமிதமாகஇருந்தது!..
நாட்களைக் கணக்குப் பண்ணிக் கொண்டிருந்தவள், இப்பொழுது மணித்துளிகளை எண்ண ஆரம்பித்திருந்தாள்...
நேற்றுதான் வனவாசத்தின் கடைசிநாள்...
சுமித்திரையின் கணக்குப்படி, இன்று உச்சிப்போதுக்குள் அவர்கள் வந்து சேர்ந்துவிடவேண்டும். ஆனால், அந்தி சாய்ந்தும் அவர்கள் வரவில்லை...
கால்கடுக்க உப்பரிகையிலேயே, அவர்களை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தவளுக்கு, பசி, தாகம், தூக்கம் எதுவுமே ஏற்படவில்லை.
இரவு கவிந்து விட்டபொழுதும், அவள் எதிர்பார்ப்பு மட்டும் குறையவே இல்லை...
"இதோ... இன்னும் சிறிது நேரம்... இன்னும் சிறிது நேரம்தான்..." என்று சொல்லிச் சொல்லியே, வீதியின் ஒல்வொரு அசைவையும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
கிட்டத்தட்ட நடுஜாமம் ஆனபோது, இரண்டு சேவகர்கள் குதிரையில் வந்து இறங்கினார்கள்.
வாயிற் காப்பாளினிடம் அனுமதி பெற்று, அவர்கள் உள்ளே வருவதற்குள், சுமித்திரை மூச்சிறைக்க, கீழே இறங்கி வந்திருந்தாள்.
அவள் கேட்பதற்கு முன், சேவகர்கள் முந்திக் கொண்டார்கள்.
"ராஜமாதாவுக்கு நமஸ்காரம்..
நம் இளவரசர்கள் நால்வரும், சீதாமாதா, குருவசிஷ்டர் ஆகியோருடன் நாளை காலையில் வருவதாக, கைகேயி தனயன், தமக்கு சேதி அனுப்பி இருக்கிறார்..."
இத்தனை நேரமும் சிந்தனை வயப்பட்டிருந்தவளுக்கு, இந்த செய்தியால், இப்பொழுது தான், சற்று ஆறுதல் பிறந்தது.
"எனில், இப்போது ராமலக்ஷ்மணர்கள் எங்கு இருக்கிறார்கள்?"
சுமித்திரை கேட்ட கேள்விக்கு, சேவகர்கள் பொறுப்புடன் பதிலளித்தார்கள்.

"ராஜமாதா.. இன்று அஸ்தமிக்கும் நேரம்தான், ராமலக்ஷ்மணர்கள், நந்தி க்ராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்...
அதனால், சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், அனைவரையும் காலையில் புறப்படச் சொல்லி இருக்கிறார் குருவசிஷ்டர்...
காட்டு வழிப் பாதையில், இரவு நேரப் பயணத்தை அவர் விரும்பவில்லை.
ஆனால், தாம் காத்திருப்பீர்கள் என்றுதெரிந்தே, தம்மிடம் எங்களை அனுப்பி வைத்தார்..."
ஒரு நிம்மதிப் பெருமூச்சு சுமித்திரையிடமிருந்து வெளிப்பட்டது.
"அப்பாடா... இனியேனும் அயோத்திக்கு நல்விடியல் அமையட்டும்..."
தன்னைப் போலவே இவ்வளவு நேரமாய்த் தவித்துக் கொண்டிருக்கும் கோசலையிடமும், கைகேயியிடமும் இந்த நற்செய்தியைப் பகருவதற்காக, ஒருகுழந்தையின் குதூகலத்துடன் விரைந்தாள் சுமித்திரை...
இத்தனை காலமும் இருள் அப்பிக் கிடந்த அயோத்தியை, தனது பொன்னான கிரணங்களினால், நன்றாக விளக்கிக் கொண்டு உதித்தான் ஆதவன்.
இரவெல்லாம் உறங்காமல் இருந்த ராஜமாதாக்கள் மூவரும், விடியலிலேயே, தமது ஸ்நானம், பூஜை இவைகளை முடித்துக் கொண்டு, அரண்மனை வாயிலுக்கே வந்து காத்துக் கிடந்தனர்.
சுமந்திரரின் உத்தரவின் பேரில், வெகுநாட்களுக்குப் பிறகு, அயோத்தி விழாக்கோலம் பூண்டிருந்தது.
எல்லோர் மனதிலும் உற்சாகம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
திடீரென்று அனைவரையும் பரபரப்பு தொற்றிக் கொண்டது..
மங்கலவாத்தியங்கள், மண் அதிர முழங்கின.
"ஜெயராம" கோஷம் விண் அதிர எழுந்தது...
வெகுகாலமாய் பசியோடிருந்த அத்தனை விழிகளுக்கும், அமிர்தம் பாய்ச்சுவதுபோல, அயோத்தியின் கிழக்குவானில் ஒரு புஷ்பக விமானம் ஒளிர்ந்தது...
*************************************

புஷ்பக விமானத்திலிருந்து, ரகுகுல சூரியன் உதயமாகி, தரை இறங்கவும், மரியாதை நிமித்தம் காரணமாக, வானுலாவும் ரவி, தன் கிரணங்களின் தீக்ஷண்யத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டான்..
அந்த நேரம், மந்த மாருதம் வீசவும், சூழல் மேலும் ரம்யமாகியது... ராமனுக்குப் பின்னே, அவன் நிழலாய், ஜானகிதேவி தோன்றினாள்.
அவளது வதனத்தைக் காணும் போதில், இரவில் வரவேண்டிய திங்கள், ஒரு மாறுதலாய், பகலில் வருகை தந்ததோ என எண்ண வைத்தது.
இந்தத் திவ்ய தம்பதிகளின் பின்னாலேயே, லக்ஷ்மணன், அவர்களின் பாதுகாப்பு கவசமாய்த் தொடர்ந்து வந்தான்.
அவனுக்குப்பின்னால்பரத, சத்ருகனரும், குலகுருவசிஷ்டர்உள்ளிட்டமுக்கியமானவர்களும்அணிவகுத்தனர்..
வெற்றி முரசு கொட்டவும், பேரிகை முழங்கவும், ராமன் அரண்மனையுள் ப்ரவேசிக்க ஆயத்தமானான்.
பொற்கலசங்களை எழில் மடந்தையர் ஏந்தி நிற்கவும், மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது.
மாதாக்கள் மூவரையும், நான்கு சகோதரர்களும், ஜானகியும் நமஸ்கரித்து எழுந்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகான இந்த சந்திப்பில், வார்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்பட, விழிநீர் வெள்ளமே பெருக்கெடுத்தது.
பிறகு, மெல்ல அனைவரும் சுதாரித்துக் கொண்டனர். பரஸ்பர விசாரிப்புகள் தொடங்கின.

ஒவ்வொருவர் கேள்வியையும் உன்னிப்பாகக் கவனித்து, பதிலளித்து வந்தாலும், ராமனுக்கு, கூடவே நிற்கின்ற லக்ஷ்மணனிடம் ஏதோ வித்யாசம் தெரிவது புரிந்தது.
லக்ஷ்மணனது விழிகள் மட்டுமின்றி, அவனது மனமும் அலைபாய்ந்து கொண்டிருப்பதை, ராமனால் உணர முடிந்தது.
தனது முகக் குறிப்புணர்ந்து செயலாற்றக் கூடியதம்பியின் அகக்குறிப்பை, இப்போது படித்தான் ராமன்.
சுற்றியிருந்த திரளை ராமனது கண்கள் துழாவின...
"எங்கே ஊர்மிளை?"
"அவளைக்காணவில்லையே...
ஓ... அதுதான் இளவலின் தடுமாற்றத்துக்கான காரணமோ?
சரி... யாரைக்கேட்பது?"
அப்பொழுதுதான் சுமித்திரா மாதா, தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான் ராமன்...
அவள் தன்னிடம் ஏதோ சொல்ல விழைவதையும் ராமன் புரிந்து கொண்டான்.
ஆம்... இராம தரிசனத்தால், சுமித்திரை மாதாவை இத்தனைக் காலமாய் பீடித்திருந்த கலக்கங்கள் அத்தனையும் அப்பொழுது விடைபெற்றிருந்தன!
"என்ன அறிவீனம் எனக்கு! எப்பேர்ப்பட்ட துக்கத்தையும் தவிடு பொடியாக்கவல்ல என்ராமன் அருகில் இருக்கும் போதா, ஊர்மிளையைப் பற்றி நான் கவலைப்பட வேண்டும்?
அவனை விடுத்து, இந்த விஷயத்தில் நான் அடுத்தவரை நாடுவதாவது?" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் அவள்!
மனம் உறுதியாய் நின்றதும், வார்த்தை வெளிவந்தது...
"ரா...மா... கொஞ்சம் என்னோட வாப்பா... ஒன்னாலே ஆகவேண்டிய காரியம் ஒன்னு எனக்கிருக்கு..."
"ஆகட்டும் மாதே... இதோ..."
உடன் புறப்பட்ட லக்ஷ்மணனை, கண் அசைவாலேயே தடுத்து நிறுத்தினான் ராமன்...
சுமித்திரை மாதாவை தொடர்ந்து சென்றவன், தன்னை அவள் எங்கு அழைத்துச் செல்கிறாள், என்னசேதி என்று அறியும் ஆவலில் வினவினான்.
"சொல்லுங்கோ மாதே... என்னவிஷயம்?"
"சொல்றேன் ராமா... குறையெல்லாம் ஒன்கிட்டே சொல்லலைனா, வேற யார்கிட்ட போய் சொல்றது? ஒன்னாலதான் எனக்கு துக்க நிவிருத்தி ஆகணும்..."
ராமன் ஆறுதலாய் அவளது கரங்களை வருடிக் கொடுத்தான்.
"எதுவானாலும் நான் இருக்கேன் மாதே... கவலப்படாம சொல்லுங்கோ..."
சற்று ஆஸ்வாசம் அடைந்த சுமித்திரை தொடர்ந்தாள்...
"அன்னிக்கு, கல்லாய் கெடந்த ஒருபெண்ண, நீ எழுப்பினது எனக்கு ஞாபகம் இருக்கு ராமா... அதுனால, இப்போ, கட்டையா கெடக்கற ஒரு பெண்ண எழுப்பற விஷயத்தில ஒன்னோட ஒத்தாசை எனக்குத் தேவைப்படறதுப்பா..."
புரியாமல் அன்னையை ஏறிட்டான் ராமன். சுமித்திரை மெதுவாக விளக்கினாள்.
"நீங்கள்ளாம் வனத்துக்குப் போன நாலஞ்சுநாள் கழிச்சு ஒறங்க ஆரம்பிச்ச ஊர்மிளை, இந்தப் பதினாலு வருஷமா, இராப்பகலா தொடர்ந்து ஒறங்கிண்டு இருக்காப்பா... அவள எழுப்பறதுக்கான என்னோட எல்லா முயற்சியும் தோத்துப் போச்சுப்பா... அன்ன ஆகாரம் எதுவும் கெடையாது... மூலிகைகளோட ஒதவியாலேதான், இத்தன நாளா, அவள நான் பத்ரமா பாதுகாத்துண்டிருக்கேன்..." துக்கம் தொண்டையை அடைக்க, சுமித்திரையின் குரல் கம்மிக் கொண்டே போனது.
அதிர்ந்தான் ராமன்!
"மா...மா...தா... நீங்க என்ன சொல்றேள்? பதினாலு வருஷமா தொடர்ந்து ஒறக்கமா?என்னால நம்பவே முடியலயே..."
"என்னாலும் நம்ப முடியல ராமா... அரண்மனை வைத்தியரும் கை விரிச்சுட்டார்... அவ எப்போ எழுந்துப்பான்னு சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டார்...
கடைசியில, அவரோட அறிவுரைப்படி, மூலிகையெல்லாம் தருவிச்சு, அதுல ஒருபடுக்க செஞ்சு, இத்தன வருஷமா அவள நான் காப்பாத்திண்டு இருக்கேம்பா..."
குலுங்கிக் குலுங்கி அழுகின்ற சுமித்திரையின் தோள்களை ஆறுதலாகப் பற்றினான் ராமன்...
"கவலப்படாதீங்கோ மாதா... ஊர்மிளைக்கு சரியாயிடும்... நான் அவள பாக்கலாமா?"
"அதுக்குத்தான் நான் உன்ன கூட்டிண்டு வந்தேன் ராமா... இ...இதோ....இந்த அறைக்குள்ள தான் இருக்கா..."
"நீ போய் பாரு... நீ வர வரைக்கும், நான் இங்கயே காத்துண்டு இருக்கேன்..."
அழுது கொண்டே கை காட்டியவளை, சமாதானம் செய்து விட்டு ராமன் அந்த அறையுனுள் நுழைந்தான்...
அங்கே... ஒரு படுக்கையில்... ஜனகனின் வாரிசு, தரையில் விழுந்த பூங்கொடி போல படர்ந்திருந்தது...
மெல்ல ராமன் அவள் பெயரை உச்சரித்தான்...
"ஊர்மிளை... உறக்கம் நீங்கி எழுந்திரு..."
முப்பது முக்கோடி தேவர்கள் உட்பட, எந்த பரப்ரம்மத்தை, எல்லோரும், "உத்திஷ்ட நரஸார்தூலா..." என்றும், "அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருள்வாயே..." என்றும்,
இன்று வரை கூறி துயில் எழுப்புகிறார்களோ, அந்த பரப்ரம்மம், தனது சரித்திரத்தில் முதன் முறையாக, தன் திருவாய் மலர்ந்து, ஊர்மிளையை, துயில் நீங்கி எழுந்து கொள்ளப் பணித்தது...
*******************************
பல நாட்களாய், இந்த உலகத்தில் உறங்கிக் கிடப்பவர்களுக்கும், பல விஷயங்களிலும் பேதையாய் உறங்கிக் கிடப்பவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வைத் தர வேண்டுமானால், அது அந்த எம்பிரானாலேயே ஆகும்!
அப்படித்தான், ஊர்மிளையும், ராமனின் அனுக்ரஹத்தினால், இத்தனை நீண்ட வருடத்துத் துயில் நீங்கி, ஒரு நொடிப் பொழுதில், ஒரு பூவானது தன் இதழை விரிப்பதுபோல, மெல்லக் கண் திறந்தாள்...
ஏதோ, நேற்று இரவு படுத்து, இன்று விடியலில் எழுந்தது போன்று, அவள் உறக்கம் நீங்கி எழுந்தது வெகு இயல்பாய் இருந்தது...
சாதாரணமாகவே, விழித்தெழும்போது, மங்கல வஸ்துகளைக் காணவே எவரும் விரும்புவர்...
ஆனால், ஊர்மிளைக்கோ, அனைத்து மங்கள(ல)ங்களின் இருப்பிடமே, அவள் கண்முன்னே நின்று காட்சியளித்தது!
தூங்கி எழுந்தவளின் விழி இரண்டும், அந்தத் தீர்த்தனின் தரிசனத்தால், தம்மை விளக்கிக் கொண்டன!
உடல் அவயவங்கள் யாவும், அந்த உத்தமனின் த்ருஷ்டி வைபவத்தால், தளர்வு நீங்கி, தெம்படைந்தன...
ஒருகணம் நிதானித்தவள், சட்டென்று எழுந்து தன்னைத் திருத்திக் கொண்டாள்.

இருகரம் குவித்தவள், வெகுசகஜமாக, "சீதாபதே... தாம்சௌக்யமாக இருக்கிறீரா?" என்று ராமனை வினவினாள்...
புன்னகையோடு தலையசைத்த ராமன், ஊர்மிளையின் இந்தப் பெருந்தவத்துக்கு ஒருபரிசு கொடுக்க எண்ணினான்.
ஒருகணம்... ஒரேகணம்... தனது நிஜமான ஸ்வரூபத்தை, சீதையோடான சேர்த்தி சேர, காட்டிக் கொடுத்தான்...
அவ்வளவுதான்...
ஊர்மிளையின் உடல் உயிர்த்தது... உயிர் சிலிர்த்தது...
"ப்...ர...போ..."
மேலே பேச இயலாமல், மொழி மறந்தது... விழி நிறைந்தது...
"சொல் ஊர்மிளை... உன் தவம் பலித்ததா?"
ராமன்வினவியும், ஊர்மிளை, பேச்சின்றி வாயடைத்து நின்றாள்...
"என்ன ஊர்மிளை... என் கேள்விக்குப் பதில் இல்லையே..."
ஒரு விடையை அவளிடமிருந்து எதிர்பார்த்தவன், அவளுக்குப் பேசுகின்ற சக்தியையும் கொடுத்தான்...
கொட்டித் தீர்த்தாள் ஊர்மிளை...
"ப்ரபோ... இந்தப் பேதையை தமது காருண்யத்தால், க்ஷமித்து அருளுங்கள்..."
"தம்மை இத்தனைக் காலமும், சௌமித்ரரின் சகோதரராகவே எண்ணியிருந்தேன்...
ஆனால் தாமோ, சாக்ஷாத் அந்த "பரமாத்ம ஸ்வரூபம்" என்பதை, இன்று கண்டுணர்ந்தேன்..."
"அது போலவே, சீதையை எனது முன்னவள் என்றே நினைத்திருந்தேன்...
ஆனால், இந்த மூல ஸ்வரூபத்தின் "கண்" அவள் என்று இப்போது அறிந்தேன்..."
"என்னே எனது பாக்யம்! தாம் இருவரும் அவதாரம் செய்துள்ள இடத்தில், இந்த ஈனப் பிறவிக்கும் ஒரு தொடர்பு இருக்கும்படி அனுக்ரஹம் செய்துள்ளீர்கள்... இதற்கெல்லாம் அடியேன் தகுதியானவள் தானா?"
கண்களில் நீர் வழிய நின்றவளைப் பார்த்ததும், ராமனுக்கு மனம் மேலும் கனிந்தது.
"ஊர்மிளை... உனக்கா தகுதியில்லை என்கிறாய்?
எப்பேர்ப்பட்ட உத்தமி நீ! எவ்வளவு பெரிய த்யாகத்தை, ப்ரதிபலன் கருதாமல், அனாயாசமாய் செய்து முடித்திருக்கிறாய்! உன் பெருமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதல்லவா?"
இராமன் சொல்லச் சொல்ல, தன் இரு செவிகளையும் இறுகப் பொத்திக் கொண்டாள் ஊர்மிளை...
"இல்லை... இல்லை... இல்லை... ப்ரபோ... நான் எந்தத் தியாகமும் செய்யவில்லை... எந்தப் பெருமையும் எனக்கு ஏற்புடையதும் அல்ல... தமது திவ்ய கடாக்ஷத்திற்கெல்லாம் எனக்கு எந்த விதமான அருகதையும் இல்லை!"
கண்ணீர் குளமாகக் கண் இரண்டும் காட்சியளிக்க, "தன்னிலை" விளக்கம் தந்தாள் ஊர்மிளை!
ஆச்சர்யத்தோடு அவளை நோக்கினான் ராமன்...
"நீ... நீ என்ன சொல்கிறாய் ஊர்மிளை?"
"நிஜத்தைச் சொல்கிறேன் ப்ரபோ... எனது "முழு சுயநலத்தை" என்னால் மறக்கவும் முடியாது... மறுக்கவும் முடியாது...
அப்படியிருக்கும் போது, அதை "த்யாகம்" என்று சொல்வதை, என்னால் எப்படி ஏற்க முடியும்?"
"ஊர்மிளை... எனில், உனது இந்த பதினான்கு வருஷ உறக்கம் "த்யாகம்" இல்லை என்றா சொல்கிறாய்?"
"ஆம் ப்ரபு... அது "த்யாகம்" இல்லை! "தன்நலம்" ப்ரபு... அத்தனையும் "தன்நலம்!" என்னைப் பற்றிய தமது புரிதல் மிகவும் தவறாக இருக்கிறது ப்ரபு..."
"நீ என்ன சொல்ல வருகிறாய் ஊர்மிளை?"
நீர்வழியும் கண்களைத் துடைத்துக் கொண்டவள், நிமிர்ந்து ராமனை தீர்க்கமாய் நோக்கினாள்...
"உப்புக்கும் ப்ரயோஜனப்படாத என் பிறவியை, தாம் "ஒப்பிலாதபிறவி" என்று உயர்வாகப் பேசுவதைத் தவறு என்கிறேன் ப்ரபு..."
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top