என்னை சாய்த்தாளே உயிர் தாராயோ
அத்தியாயம் 23
கண்முன்னே காதல் கதகளி நீயாட..
கட்டி இழுக்க தோன்றுதடி உன்னை...
கண்ணே கனியமுதே என்னில் சேர வருவாயோ...?!
காலம் முழுதும் காத்திருக்கிறேன்..
உன் மூச்சு காற்று என் சுவாசமாகிட...
தன் கண்முன்னே கண்டது நிஜம் தானா... பார்கவி எங்கே..? காணோமே... எங்கே போனாள். ஒன்றுமே விளங்கவில்லை மித்ரனுக்கு. இப்போது என்ன செய்வது. கண்டிப்பாக ராஜசேகர் நம்பும்படி சொல்ல வேண்டும். இல்லையெனில் தான் மாட்டிக் கொள்வது நிஜம். விரைந்து செயல்பட்டார்.
கீர்த்தனாவிற்கு பார்கவிக்கும் ஏதோ பெரிய வாக்குவாதம். அதில் மனமொடிந்து அழுது கொண்டே பார்கவி வந்தார். டிரைவருக்கு உடம்பு சரி இல்லாததால், தானே போய் பார்கவியை அழைத்து வர சென்றார். அப்போது தான் பார்கவி அழுது கொண்டே வெளியே வந்ததை மித்ரன் பார்த்தார். கீர்த்தனா மிகவும் தரக்குறைவாக பேசினார். வரும் வழியில் கொஞ்ச நேரம் கடற்கரையில் இருந்து வருகிறேன். என்னை தனியே விடு என்று பார்கவி மித்ரனிடம் கூறினார். அதனால் மித்ரன் காருக்கு அருகிலே நின்று விட்டார். ஆனால் வெகு நேரம் ஆகியும் பார்கவி திரும்பி வரவேயில்லை.
இது தான் மித்ரனின் கதை. கேட்டதும் ராஜசேகர் பதறிப் போனார். கண்டிப்பாக கீர்த்தனா மேல் தவறு இருக்காது என்று மனம் அடித்து சொன்னது. ஆனால் சூழ்நிலை, நேரம் அவருக்கு எதிராக வாதாடியது. மித்ரன் சொன்ன கட்டுக்கதையை கடைசியில் நம்புவதை தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் பார்கவி இப்போது உயிரோடு இல்லை. உடலும் கிடைக்கவில்லை.
விஷயம் அறிந்து பதறி ஓடி வந்த கீர்த்தனாவை ராஜசேகர் சந்திக்கவே விரும்பவில்லை. கோபத்தில் தன் உயிருக்கு உயிரான தோழியை ஏதும் சொல்லிவிடுவோமோ.. என அஞ்சினார். அது மித்ரனுக்கு வசதியாய் போய் விட்டது. கீர்த்தனாவை கண்டபடி பேசி அவர் தான் பார்கவி மரணத்திற்கு காரணம் என்று அங்கு இருந்தவர்கள் அனைவரையும் நம்பவைத்து மிகவும் கேவலமாக வெளியேற்றினார் கீர்த்தனாவை.
இருவரும் கோபத்தில் அதன் பிறகு சந்திக்கவில்லை.. இல்லை இல்லை சந்தர்ப்பத்தை தடுத்து நிறுத்தினார் மித்ரன்.
பல வருடங்கள் கழித்து இப்போது தான் எதிர்பாராத விதமாக கீர்த்தனாவும் ராஜசேகரும் சந்தித்துக் கொள்கின்றனர்.
"ஹ்ம்ம்.. சொல்லு ராஜு.. நீ ஏன் அன்றைக்கு என்னைப் பார்க்கவே இல்லை. அப்படின்னா மத்தவங்க சொன்னதை தான் நம்பி இருக்க. என்னை நம்பல. எத்தனை வருஷம் ஒண்ணா பழகியிருப்போம். இருந்தும் உனக்கு நம்பிக்கை இல்ல..ன்..னா... நான் எவ்ளோ பெரிய துரதிஷ்டசாலி..." குற்றம்சாட்டும் குரலில் தொடங்கி வருத்தத்தில் முடித்தார்.
"அதான் சொல்றேன்னே கீர்த்தி.. மன்னிச்சிடு. அன்றைக்கு பார்கவியோட இழப்பை தாங்க முடியாத சோகத்துல இருந்தேன். அந்த நிலைமையில் உன்னை பற்றி தவறாக விஷயம் என் காதுக்கு வருது. அப்போ என்ன செய்வேன் நான். என்னால தெளிவா யோசிக்கக்கூட முடியல. உன்னை ஏதாவது சொல்லிருவேன்னு பயந்து தான் உன்னை பார்க்கல. அதுக்கு அப்புறம் உன்னை சந்திக்க எவ்ளோ தரம் முயற்சி செய்தேன். ஆனால் வாய்ப்பே கிடைக்கல".
இருவரும் கோபத்தை இறக்கி வைத்துவிட்டு மனம்விட்டு பேசினர். கீர்த்தனாவால் பார்கவி ஏன் தற்கொலை செய்தார் என்பதற்கான காரணத்தை சொல்ல முடியவில்லை. ஒரு வேளை தனக்கும் ராஜுவுக்குமான உறவை தவறாக எண்ணிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் தற்கொலை முடிவிற்கு போயிருப்பாரா..??!
முஹும்... வாய்ப்பே இல்லை. பார்கவி தைரியசாலியான பெண் ஆயிற்றே.. இறந்த ஒருவரை பற்றி எப்படி தவறாக சொல்வது. அவர் தவறாகவே நடந்திருந்தாலும் அவர் உயிரோடு இல்லாத தருணம் குறை கூறுவது எவ்வளவு பெரிய இழுக்கு. ச் ச...! ராஜுட்ட சொல்ல வேண்டாம். பின் பார்கவியை தப்பா நினைப்பார். அவர் மனைவி பற்றி எப்பவுமே நல்ல விதமாகவே நினைக்கட்டும்.
இந்த மித்ரன் பையன் ஏன் எங்களை பற்றி தவறாக சொல்ல வேண்டும். ஒருவேளை போகும் போது பார்கவியை கட்டிபிடிச்சதை மிரட்டுனதா தப்பாக நினைச்சியிருப்பானோ...??! பார்கவி ஏன் அழுதா..?? கீர்த்தனாவால் ஏன் பார்கவி தற்கொலைக்கு சென்றார் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
ஒருவேளை பார்கவியுடனான உரையாடல் பற்றியும், அந்த பரமபத விளையாட்டை பற்றியும் கீர்த்தனா பகிர்ந்து கொண்டிருந்தால் பின்னால் வரும் பெரும் ஆபத்திலிருந்து தப்பியிருக்கலாமோ..?!
"சரி விடு கீர்த்தி. பார்கவி மனசுல என்ன இருந்ததுன்னு நமக்கு தெரியாது. அவளோட ரகசியம் கடைசி வரை அவளுக்கு மட்டும் தெரிஞ்சதாகவே இருக்கட்டும். அப்புறம் இப்போ நீங்க எங்கே இருக்கிறீங்க. அந்த பிரச்சினைக்கு பிறகு வீடு மாறி போயிட்டீங்கன்னு பக்கத்துல இருக்கிறவங்க சொன்னாங்க"
"ஆமா. தேவாக்கு வேலை இங்கே செட் ஆச்சு. சோ உடனே கிளம்ப வேண்டியதா போயிச்சு. அப்புறம் வேலை குழந்தைங்கன்னு வாழ்க்கை அப்படியே ஓடிற்று".
குழந்தைகள் குடும்பம் வேலை என்று பேச்சு நாலாபுறமும் சென்றது. ஒரு நாள் கண்டிப்பாக வீட்டுக்கு குடும்பத்துடன் வருவதாக முடிவெடுத்து விட்டு இருவரும் தற்காலிகமாக பிரிந்து சென்றனர்.
###########
அங்கே ரவியின் அறையில் இருந்த ஆராதனாவிடம், தன் காதல் இவளுக்கு புரியவில்லையே என்ற ஆதங்கத்தில் வார்த்தையை தவறவிட்டிருந்தான். இருவரும் கீரியும் பாம்புமாய் சீறிக் கொண்டிருக்க அவன் ஆராதனா அணிந்திருந்த செயினில் உள்ள அந்த கற்கள் பற்றி சொல்ல வருகிறான்.
"இந்த கல்லு சொல்லும் என்னோடனா காதலை.... உனக்கு எல்லாமே விளையாட்டு தானே..??! உனக்கெங்க புரியபோகுது.?!"
"அப்போ நான் மனுஷி இல்லை. இந்த கல்லு மாதிரின்னு சொல்லறீங்க".
"இல்லை. இந்த கல்லு கூட என்னோட உணர்வுகளை புரிஞ்சிக்கும். ஆனா நீ இருக்கீயே..." ஏதோ சொல்ல வந்தவன் வாயிற்குள்ளேயே முனகி கொண்டான்.
அந்த அளவுக்கு தாழ்ந்து போயிட்டேனா நான்...?? கோபம்... கோபம்... அவ்வளவு கோபம்... பெண்ணவளிடத்தில்.
"சரி தான்.. அப்புறம் எதுக்கு அப்படிப்பட்ட பொண்ணை நீங்க லவ் பண்ணறீங்க. பேசமா போக வேண்டியது தானே. உங்களுக்கும் பிடிக்கல. எனக்கும் பிடிக்கல. பின்ன எதுக்கு சேர்த்து வைக்கணும். பேசாம அவரவர் வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு போக வேண்டியது தானே...??! எதுக்கு முட்டாள் தனமா நடந்துக்கணும்?"
சட்டென அவன் தோள்களை இழுத்து பிடித்து அழுத்திய வேகத்தில் எலும்புகள் நொறுங்கிவிடும் அளவுக்கு வலித்தது. முகத்தில் அத்தனை கோபம்... அதையும் தாண்டி அந்த கண்களில் வருத்தம் இழையோடியதை பெண்ணவள் மனம் குறித்துக் கொண்டது.
"என்ன சொன்ன... இப்போ நீ என்ன சொன்ன... போக வேண்டியது தானே... அதாவது என் வேலையை பார்த்துட்டு போகணும்ன்னு சொல்லுற... ஹாங்...!"
அவளது தோள்களை பிடித்திருந்த கைகளை உதறிய வேகத்தில் தொப்பென அந்த நாற்காலியில் சாய்ந்தாள். அதிலேயே தெரிந்தது அவனது கோபம். எழுந்து அவன் அங்கும் இங்கும் நடந்தபடியே...
"இப்போ சொல்லுறீயே உன் வேலையை பார்த்துட்டு போன்னு.. அதை அப்பவே சொல்லியிருக்க வேண்டியது தானே...?"
எப்போ..? நான் என்ன சொன்னேன்..??!
பேந்த பேந்த விழித்தாள்.
"நாலு வயசுல மிட்டாய் வாங்கி தாரேன் என் கூட வான்னு ஒருத்தன், யாருமில்லா இருட்டு பக்கம் கூட்டிட்டு போனானே.. அப்போ நீ கூட நல்லா சிரிச்சிகிட்டே அவன் பின்னாடி நாய் குட்டி கணக்கா போனீயே... அதற்கு அப்புறம் அவன் எந்த மிட்டாய் எப்படி உனக்கு தந்தான்.. எந்தெந்த இடத்துல கொடுத்தான்... நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி.. கத்தும் போது தொண்டை குழி நிறைய வச்சி அழுத்தி உ.. உ... உன்னை... "
"ஷிட்.. ஷிட்..ஷிட்.."
கோபத்தில் பற்களை நறநறவென கடித்து அதற்கு மேல் சொல்ல முடியாமல் வார்த்தைகள் தந்தியடிக்க... விரலால் தலையை அழுந்த கோதி கொண்டான். அவள் அன்று அனுபவிக்க இருந்த வேதனை இன்றும் அவனுக்குள் வலியை மிச்சம் வைத்திருந்தது.
அவளோ.. அவன் சொல்ல சொல்ல அதிர்ச்சியில் விழிகள் தெறிக்க கண் முன்னே காட்சிகள் மங்கலாக தெரிய இப்போது அனுபவித்தது போல தேகம் நடுங்க விதிர்விதிர்த்து போய் அமர்ந்திருக்க.... அவன் தொடர்ந்தான்
"அப்போ உன்னை காப்பாத்த வந்தானே ஒருத்தன்... உன்னோட தலை முடிக்கு கூட எந்த பாதிப்பும் வராம பத்திரமா உன்னோட வீட்ல கொண்டு போய் விட்டானே... அப்போ சொல்ல வேண்டியது தானே... போடா உன் வேலையை பார்த்துட்டுன்னு... அப்போ எதுக்காக என்னை விட்டு போகாதன்னு சொன்ன?!"
அதிர்ச்சியில் சிலையாய் அமர்ந்திருந்தாள் ஆராதனா.
"பத்து வயசு இருக்கும்போ.. கண்ணாமூச்சி விளையாடிக்கிட்டு இருந்த நேரம் தவறுதலா தெருவோரம் இருந்த சாக்கடை குழியில விழுந்து... மூச்சுக்காற்று இல்லாம உயிருக்கு துடிச்சியே அப்போ ஒரு கேணயன் வந்து.. அந்த நாற்றத்தையும் அழுக்கையும் பொருட்படுத்தாம உன்னோட சுவாசமா அவன் இருந்தானே.. அப்போ சொல்லியிருக்க வேண்டியது தானே.. போடா.. முட்டாபயலே உன் வேலையை பார்த்துட்டுன்னு..."
ஹாங்... இவன் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறான். அது ராம் தானே..?! அம்மா அப்பாவை எல்லாம் கூட்டிக்கொண்டு வந்து காப்பாற்றியது... ?
அதன் பின் தானே ராம் நட்பு கிடைத்தது, கீது அறிமுகம், எல்லாம் நினைவில் இப்போது தெளிவாக வந்தது.
மெதுவாக அவளது அருகில் வந்து, நாற்காலியின் இருபுறமும் தன் கைகளை தாங்கி, குனிந்து அவள் முகம் பார்த்தபடி, பேசினான்...
"நீ ஒன்பதாம் வகுப்பு பரீட்சை எழுதிட்டு வீட்டுக்கு வர வழியில... உன்னோட ஹார்மோன் மாற்றத்தால, பொண்ணுங்கிற நிலையை உணர்ந்தியே.. அப்போ என்ன பண்ணுறது.. எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம பயந்து போய் தவிச்சியே... அப்போ ஒருத்தன் வந்து அவனோட சட்டையை கழற்றி உன்னோட இடுப்புல விரிச்சி கட்டிவிட்டு, பயப்படாத.. இது சாதாரண விஷயம் தான். தைரியமா போ. உன் கூடவே நான் இருக்கும் போது உன்னை யாரும் தப்பா பார்க்க விட்ருவேனா..??! போ. உன் பின்னாடியே நான் வர்றேன்ன்னு சொன்னானே அப்போ அவனை பார்த்து சொல்லியிருக்க வேண்டியது தானே... போடா.. முட்டாள்ன்னு...!!!!"
முட்டை கண் போண்டா கண்ணாக பிளந்தது பிளந்தபடி.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.
இடப்புருவம் உயர்த்தி அவன் கேட்ட தினுசில் இருக்கும் சூழ்நிலை மறந்து பெண்ணவள் சொக்கி தான் போனாள் அவன் அழகில்.
"டான்ஸ் ஆடி முடிச்சிட்டு அம்மணி ஒய்யாரமா நடந்து போய் ஒரு லூசுகிட்ட வம்படியா போய் மல்லுகட்டுனீயே.. அப்போ எந்த கிருஷ்ணர் வந்துமா உன்னை காப்பாற்றுனார்...?!!"
இளநகை மின்ன அவன் கேட்ட அழகில் பெண்ணவள் மயங்கி தான் மீண்டாள்.
"கனவுலகில் மிதந்துகிட்டு தத்தி மாதிரி நடு ரோட்டுல போயி மண்டையை முட்டிக்க பார்த்தியே... ஹ்ம்ம்.... அப்போ கூட ஒன்று தெளிவா உலறுனியே.. ஏழடுக்கு வானவில்லுக்கு எட்டடுக்கு உடுப்பு காரின்னு ஏதோ தத்து பித்துன்னு ..." சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தான்.
"ஹ்ம்ம்... அப்போலாம் சொல்லியிருக்க வேண்டியது தானேமா... போட உன் வேலையை பார்த்துகிட்டுன்னு....!
அப்போ எல்லாம்..
போகாத.. என் கூடவே இரு.. அப்படின்னு வயசு பையன்னு கூட பார்க்காம கையை இழுத்து பிடுச்சு வச்சுக்கிட்டு செஞ்சி...யே அட்டூழியம்!! அப்போலாம் இந்த ரோஷம் எங்க போச்சாம்..??!" சிரித்தபடியே மூக்கோடு மூக்கு உரசி கேட்டான். ஏதோ அடம்பிடிக்கும் குழந்தையிடம் தாய் கொஞ்சி பேசி சமாதானம் செய்வது போல.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... ஒரே நாளில் இத்தனை அதிரடி வேண்டுமா...?! குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் பெண்ணவள் மூளை சோர்ந்து போய் சிந்திக்க மறந்தது.