அருமையான விளக்கம் சகா..எளிமையான முறையில்!’எது கவிதை?’ என்பது ஒரு சிக்கலான வினா சகோ! யார் ஒருவரும் ’இதுதான் கவிதை’ என்று அறுதியிட முடியாது!
மரபுக்கவிதைகளுக்காவது அமைப்பிற்கான இலக்கணம் இருக்கிறது, ஆனால், புதுக்கவிதைக்கு அதுவும் இல்லை. பின் எதுதான் கவிதை?
அவ்வினாவை இப்படிக் கேட்டுப் பாருங்களேன்: ஒரு சொற்றொடர் எப்போது கவிதை ஆகிறது?
‘நான் வீட்டிற்குப் போனேன்’ என்பது சொற்றொடர்,
‘நான்
வீட்டிற்குப் போனேன்’
என்று எழுதுவதாலோ, அல்லது
‘போனேன்
நான்
வீட்டிற்கு’
என்று எழுதுவதாலோ இது கவிதை ஆகிவிடுமா?
என்வரையில் ‘கவிதை’ என்பதை இரண்டு நிலையில் வரையறுப்பேன்:
1. அது மொழியின் உச்சபட்ச ஆளுமை - இதைவிட ஒரு செய்தியை அழகாய்த் துல்லியமாய் இனிதாய் சொல்லிவிட இயலாது என்ற ஆகச் சிறந்த மொழியாளுமை கவிதை
2. அது சொற்களால் அமைந்த ஓவியம் (ஆங்கிலத்தில் 'ideogram' என்பார்கள், படங்கள் மூலம் செய்தி சொல்வது. சூரியனின் படத்தை வரைந்தால் சூரியன், வெயில், வெப்பம், காலை, வெளிச்சம் போன்ற பல தகவல்கள் நம் மூளைக்குள் நேரடியாக உணரப்படுகிறது அல்லவா? அப்படி) கவிதை என்பது அதில் இருக்கும் சொற்களைத் தாண்டி ஒரு பொருளை மனத்தில் பதிய வைக்கும்.
இதனைப் ‘படிமம்’ என்ற உத்தியாகவும் சொல்வார்கள்.
நிலா, ரோஜா, மெழுகுவர்த்தி போன்றவற்றை நாம் கவிதையில் கையாள்கையில் அவற்றின் நேரடிப் பொருளைத் தாண்டி வேறொன்றைக் குறிக்கச் செய்கிறோம்.
இப்படி வழமையன மொழி அமைப்பை விடுத்து மாறுபட்ட ஒன்றைத் தருவதும் கவிதைதான்.
இதற்கு மேல் இவற்றை வரையறுக்க இயலாது!
நான் கவிதைகள் படிப்பதும் எழுதுவதும் எல்லாம் ‘எது கவிதை’ (எது நல்ல கவிதை) என்ற அந்த ஆதிவினாக்களின் விடையைத் தேடியே... அதைத் துல்லியமாக அறியும் நொடியில் நான் படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்திவிடுவேன் என்று நம்புகிறேன்!
வினாக்கள் எழும் போதே, விடைகள் தேடி ஓட மனம் விரையும்..
அதன் ஆழத்தை தொட தூண்டவும் செய்யும்..
ஆழத்தை தொட்டவனால், அதில் இருந்து அவ்வளவு எளிதாக வெளி வர முடியாது சகா..
அந்த ஆழத்தை பயன் படுத்தி பல படைப்புகளை இயற்றவே மனமானது ஆசை கொள்ளும்..