17
கடுமையான காய்ச்சலில் மறுநாள் ஜீவா கல்லூரிக்குச் செல்லவில்லை. ஜெஸி இவளை வந்து பார்த்து விட்டு கல்லூரிக்குச் சென்று விட்டாள்.
பாலு சார் பள்ளிக்குப் போய் விட்டார். பள்ளியைத் தான் தான் தாங்க வேண்டும் என்ற மனப் பிராந்தி அவருக்கு.
“ நான் இருக்கிற தைரியத்தில் ஆடறாரு. இல்லன்னா தெரியும் செய்தி! “ என்று அதற்கு கோபப்பட்டார் சௌந்திரம்.
அதிக மன உளைச்சலினாலோ அல்லது அதிக காய்ச்சலினாலோ அல்லது இரண்டும் காரணமோ தெரியவில்லை இப்போது வலிப்பு வந்து இருந்தது. பொதுவாக காரணமின்றி வலிப்பு வருவதாகக் கூறப் படுகிறது.
மயக்கம் தெளிந்து மலங்க மலங்க விழித்தவளைப் பார்க்க மனோஜ் வந்து விட்டான்.
இவர்கள் கார் ரிப்பேர் ஆகி இருந்தது தெரிந்து வந்தானா? என்பது தெரியவில்லை.
கைத்தாங்கலாக செளந்திரம் இவளை அழைத்து அவன் காரில் பின் இருக்கையில் ஏற்ற முன் பக்கம் பாலு சார் அமர்ந்து கொள்ள மனோஜ் வண்டியைக் கிளப்பினான்.
மருத்துவ மனையில் ஈ ஈ ஜி எடுத்து ஊசி போட்டு ஆஸ்பத்திரி படுக்கையில் படுக்க வைத்து விட்டுப் போய் விட்டார்கள். இப்போது ஜீவா அருகே அவள் பெற்றோரும் மனோஜும் மட்டும். ஜெஸி இன்னும் வரவில்லை.
பாலு சார் அழுது விட்டார். இதற்காகத்தான் மகளைப் பொத்தி பொத்தி வளர்த்தார். அதில் அவள் கொஞ்சம் தத்தியாக வேறு வளர்ந்திருந்தாள்.
திருமணமாகி சில வருடங்களுக்கும் பல வேண்டுதல்களுக்கும் பின் பிறந்தவள் ஜீவா. ஆறு மாதம் இருக்கும் பொது முதலில் காய்ச்சல் வந்து வலிப்பு வந்தது. தொடர்ந்து ஐந்து வருடங்கள் மருந்து சாப்பிட்டு சரியானது. இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் இந்த சோதனை ஏன்? என்று தவித்தார்.
வலிப்பு ஒரு வியாதி அல்ல. அது வியாதியின் அறிகுறி எனப்படுகிறது. அவளுக்கு மீண்டும் என்ன பிரச்சனை என்று உழன்றார்.
சௌந்திரம் முகத்தில் கவலை அப்பிக் கிடந்தாலும் ஏதோ யோசனை ஓடுவது புரிந்தது.
“ ஆன்டி! ரிசப்ஷன்ல உங்களை வரச் சொன்னாங்களே? பார்திட்டிங்களா?” என்று ஆரம்பித்தான்.
‘ எப்போ வரச் சொன்னாங்க?’ என்று யோசித்துக் கொண்டே அவர் வெளியேறினார்.
பாலு சார் ஆரஞ்சு ஜுஸ் பிழிந்து கொண்டு இருந்தார்.
“ சார்! நர்ஸ் வர்றாங்க. அவங்ககிட்ட ஜீவாவுக்கு என்ன சாப்பிடக் குடுக்கலாம்ன்னு டீட்டைலா கேட்டுருங்க. எல்லாம் குடுக்கலாம்ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் தெளிவாக கேட்டுருங்க” என்று அனுப்பி வைத்தான்.
அவர் ஜூஸைப் பார்க்க “ அது நான் போட்டுக் குடுத்துடுறேன் “ என வாங்கிக் கொண்டான்.
ஜீவா உறக்கத்தில் இருந்தாள். அப்போ ஜுஸ்? எழுப்பி கொடுப்பதாக இருந்தார் வாத்தியார். அத்தனை மருந்து உடலில் ஏறி இருக்கிறது. வயிற்றில் ஒன்றும் இல்லாவிட்டால் எப்படி? என்று அங்கலாய்ப்பு அவருக்கு.
சேர்ரை மெதுவாகச் சத்தம் வராமல் இழுத்து அவள் அருகில் போட்டுக் கொண்டான்.
“ இதை இப்போ சொல்றது தப்பு தான். உன்னை ஆண்டிகிட்டயும் சார்கிட்டயும் விட்டுட்டு இப்படிக் கையைக் காட்டிட்டு இருக்கிறது ரொம்ப கஷ்டமாக இருக்கு. இப்போ நான் உன் பக்கத்துல இருக்கணும்ன்னு தோணுது. அவங்களை விட உனக்கு நெருக்கமணவனா இருக்கணும். அதுக்கு நான் உன் புருஷனா இருக்கணும் “
ரிசப்சனில் நர்ஸ் கத்தரித்து விட்டதால் திரும்பி வந்திருந்த சௌந்திரம் வாசலில் நின்று விட்டார். வாத்தியார் தன் பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தரோ என்னவோ அவர் இன்னும் வரவில்லை.
மனோஜ் தொடர்ந்தான்.
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் இங்க _ உங்க வீட்டுக்கு பக்கத்துல வர்றதுக்கு முன்னாலேயே பிடிக்கும் “ என்று மனோஜ் சொல்லவும் ஜீவா உறக்கத்தில் திடுக்கிட்டு கனவுக்குள் விழித்தாள்.
அதன் பிறகு அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதில் பதியலாயின.
“ பாலு சாரைப் பாக்க ஸ்கூலுக்கு வந்திருந்தேன். அப்போ ஓல்ட் ஸ்டூடண்ட்ஸ் பார்ட்டி இருந்துச்சு. நான் வாராண்டால போட்டு இருந்த பெஞ்ச்ல சாருக்கு வெயிட் பண்ணினேன். அவரும் பங்ஷன்ல தான் இருந்தார்.
ஆஃபீஸ் ல இருந்து நேர அங்கே வந்துட்டேன். ரொம்ப டயர்டா இருந்துச்சு. தவிர அது என் அடிசனல் வொர்க். சோ ரொம்ப டல்லாத்தான் இருந்தேன். ஆனா அப்போ அந்த ஜாப்பை இவ்வளவு ரசிச்சுப் பண்ணுவேன்னு தெரியாது.
பெஞ்சில் இருந்து பார்த்தபோ ஆப்போசிட் பில்டிங்ல பட்டு தாவணி உடுத்திக்கிட்டு நீ யார்கிட்டயோ பேசி சிரிச்சிட்டு இருந்தே.
அங்க வச்சுத்தான் உன்னை முதன் முதல்ல பாத்தேன். அப்பவே நீ என் மனசு பூரா அள்ளிக்கிட்டே.உன்னைத் தவிர யாரும் _ எதுவும் என் மனசுல பதியலை. அது ஏன்னு இன்னும் புரியலைம் உனக்கு புரியலை.
உனக்கு நினைவு இருக்கா? அத்தனை பேர் இருந்தாலும் என்னை அவங்க பார்த்தாலும் யாரும் எனக்குப் பச்சைத் தண்ணீர் கூடத் தரலை. அவங்களும் சின்னப் பசங்க தான். அதை தப்பு சொல்லலை. தவிர எண்ணி வாங்கி இருப்பாங்க. அதுக்கு என்ன செய்ய முடியும்?
நீயும் அப்படித்தான் என்னைப் பார்த்தும் பார்க்காமலும் இருந்த. ஆனா உனக்கு குடுத்த கேக்கையும் கூல்ட்ரிங்சையும் வாங்கிகிட்டு அதையும் என்னையும் மாறி மாறி பார்த்த.
அந்தப் பார்வை எனக்கு அத்தனைப் பிடிச்சுது.
நீ என்கிட்ட வருவியா? மாட்டியான்னு எதிர்பாத்துக்கிட்டே இருந்தேன்.
மேக்சிமம் நீ வர மாட்டேன்னு தான் நினைச்சேன்.
நீ கூல்ட்ரிங்ஸை உடைக்கவும் நிச்சயம் வர மாட்டேன்னு முடிவே பண்ணிட்டேன். சின்ன பிள்ளைங்க அப்படித்தான் இருப்பாங்கன்னு எனக்கு சிரிப்புதான். தப்பா நினைக்கலை.
ஆனா நீ அதை எடுத்துக்கிட்டு என்னைப் பார்த்து வந்த. நான் கண் எடுக்காமல் பார்த்தேன்.” சொல்லிக் கொண்டே வந்தவன் அந்த நாளுக்கேச் சென்றான்.
தன்னை நோக்கி வந்தப் பெண்ணை அசையாமல் பார்த்தான் மனோஜ்.
புற அழகு பெற்றோர் கொடுப்பது. அதில் பெருமை ஒன்றும் இல்லை.
ஆனாலும் அவள் அழகு மனதைக் குளிர்வித்ததை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இவன் அருகில் வந்து குளிர் பானத்தையும் கேக்கையும் கொடுத்து விட்டு “ இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் சார்” எனச் சொல்லிவிட்டு போனால்.
“ அன்னைல இருந்து என் நாள் இனிமையாவே இல்லைடி… நீ இல்லாம. உன்னை என் கூடவே இருத்திக்கணும்ன்னு அப்போ பிடிச்சு துடிக்கிறேன்.” என்றவன் அவள் முகத்தைப் பார்த்து இனிமையாக மெல்லச் சிரித்தான்.
“அத்தனை சந்தோசத்திலையும் யாரோ ஒருத்தன் என் பசியும் தாகமும் கவனிச்சியே? உன்னோடதை எனக்கு விட்டுக் குடுக்கரதை சொல்லிக் காட்டவே இல்லையே? என் அசதி உனக்கு மட்டும் புரிஞ்சதே?
இத்தனைக்கும் நான் உன்னைக் கவனிச்சது உனக்குத் தெரியாது. நீ உன் ஃப்ரெண்ட்ஸ்சோட ரொம்ப பிசியா இருந்த.” என்றவன் மெல்ல அவள் முகத்தில் விழுந்திருந்த முடிக் கற்றையைக் காதோரம் ஒதுக்கி விட்டான்.
“ எங்கிருந்து ஜீவா எனக்காக வந்த? என் வயிறை நிறைச்சது உனக்கு சாதாரண விசயம். என்னை உனக்கு நினைவு இல்லவே இல்லை.
ஆனா என் நினைவெல்லாம் நீ மட்டும் தான்.” சொல்லிக் கொண்டே வந்தவன் தன் நெஞ்சத்தை தடவிக் கொண்டு பின்னேத் தொடர்ந்தான்.
“ நீ என் ஜீவன் ஜீவா.
என் தாரமும் நீதான் தாரா”
அது ஒரு நடுத்தர தனியார் மருத்துவமனை. அந்த பகல் பொழுதில் நல்ல கற்று வந்தது. அதில் திரைச்சீலைகள் அசைய அந்த மென் காற்றில் மனோஜின் மனநிலை மாறியது.
இரண்டு கைகளாலும் தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்.
அறையின் கதவைத் திரும்பிப் பார்த்தான்.
யாராவது வருவதாக இருந்தாள் கதவைத் திறக்கும் சத்தம் கேட்கும்.
‘ பார்த்துக் கொள்ளலாம் ‘ என்று இளமை அவன் தோள் தட்டியது.
அவன் மெல்ல எழுந்து அவள் அருகில் வந்தான். அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டான்.
ஜீவா மயக்கத்தில் அல்லது உறக்கத்தில் அவனை நெருங்கி அணைத்துக் கொண்டாள்.
அவள் முக வடிவை அளந்தவன் உதடு முணுமுணுத்து பாடியது.
“அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்சப் பொன் மயிலே
என்ன தயக்கம்?
என்ன மயக்கம்?
நீ சிரிச்சப் போதும்
குறிஞ்சி பூக்கும் “
பாடிக் கொண்டே அவளை முத்தமிட விழைகையில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு விலகினான்.
அவளை படுக்கையில் தலையணையை சரியாக வைத்துப் படுக்க வைத்துக் கொண்டு இருக்கும் போது நர்ஸ் வந்தார்.
“ என்ன சார்? வரும் போது ஏதோ சாங் கேட்டுச்சு?” எனக் குடைந்தார்.
“ அது….”
“அதான் என்ன?” _ அவர் அவனை விடுவதாக இல்லை.
“ சும்மா வாட்ஸ்அப் ஸ்டேடஸ் பார்த்திட்டு இருந்தேன்” என்று உளறினான்.
“ என்ன? இங்கே பேஷண்ட் பாக்க வந்தீங்களா? பாட்டு பாக்க வங்தீங்களா? பேஷண்ட் டிஸ்டர்ப் செய்யான வெளியப் போங்க” நர்ஸ் கடித்துத் துப்பியதில் மனசே இல்லாமல் வெளியே வர சௌந்திர ம் கை கட்டிக் கொண்டு நின்று கொண்டு இருந்தார்.
‘ உங்க வேலையா அத்தை? கொஞ்சம் இரக்கம் காட்டக் கூடாதா?’
‘ அதுக்கு நீ அடக்கி வாசிச்சிருக்கணும்’
இருவரும் பார்வையில் பேசிக் கொண்டு எதிர் எதிர் திசையில் அதாவது மனோஜ் ரூமுக்கு வெளியேயும் சௌந்திரம் உள்ளேயும் சென்றனர்.
ஏதோ நினைத்தவனாக உள்ளே தீடீரென்று வந்த மனோஜ் “ இல்ல.. நீங்க டிஸ்சார்ஜ் ஆகும் போது கூட்டிட்டுப் போகத்தான் கார் எடுத்துத் வந்தேன். ஷீட் எழுதிட்டா சொல்லுங்க. வெளிய வெயிட் பண்றேன் “ என்றான்.
இனியும் உத்தமனா வேசம் போட்டுக் கொண்டு அவளை விலகி இருக்க முடியும் எனத் தோன்றவில்லை அவனுக்கு.
“ இல்லை. நாங்க டாக்ஸி வசிக்கிறோம். நீங்க எங்களுக்காக வேலையைப் போட்டுட்டு இத்தனை தூரம் வந்து இவ்வளவு செய்ததுக்கு ரொம்ப நன்றி “ _ சௌந்திரம் கை கூப்ப _
‘ நக்கலா?’ என்பதாகப் பார்த்தான் மனோஜ்.
“ நிஜமா நீங்க இல்லன்னா எங்களால சமாளிச்சு இருக்க முடியாது. ரொம்ப நன்றி தம்பி. மத்த விசயம் அப்புறம் பேசுவோம் “ _ முடித்து விட இவன் முகம் சுறுங்கிப் போனது.
இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் நிலை அறிந்து மேலே பேசாமல் கிளம்பினான்.
“ டாக்ஸி பிடிக்க வேண்டாம். காரைத் திருப்பி அனுப்பி வைக்கிறேன். ஜெகன் வருவார். நீங்க அதுல வந்துறுங்க “ அதற்கு மேல் நிற்காமல் கிளம்பி விட்டான்.
போகும் அவனை யோசனையாக பார்த்தார் ஜீவாவின் அம்மா.
அவன் போய் பத்து நிமிடங்கள் கழித்து திரும்ப வந்தார் வாத்தியார்.
“ வாத்தியார் பிள்ளை மக்குண்ணு சொல்லுவாங்க. இங்க என்னடான்னா வாத்தயாரே மக்கா இருந்த என்னதான் பண்றது ?” சௌந்திரம் சிடுசிடுக்க _
“ ஏன்? இப்போ என்ன ஆச்சு?” பாலு நிதானமாகக் கேட்டார்.
“ பாப்பாவை அந்த வயசு பையன் கிட்ட விட்டுட்டு அப்படி இங்கதான் போனீங்க நீங்க? நான் வந்து பத்து நிமிசம் கழிச்சு வந்திருக்கீங்க ? இதுல நீங்க இருக்கீங்கன்னு நான் போனேன் பாருங்க என் புத்தியை…” கொதித்தார் அன்னை.
“ ஹெய். மனோஜ் நல்ல பையன். தேவை இல்லாம டென்ஷன் ஆகாதே” பாலு கூலாகச் சொன்னார்.
இப்போது இவரிடம் ஒன்றும் சொல்லிக் கொள்ள வேண்டாம் என்று வாயை மூடிக் கொண்டார் சௌந்திரம்.
'
Last edited by a moderator: