"அப்பா அம்மா என்னை எருமைமாடுன்னு சொல்றாங்கப்பா" போட்டுக் கொடுக்கும் வேலையைக் கச்சிதமாக செய்தாள் சம்ரிதி.
"எதுக்காவது என்னைக் கூப்பிடு வைச்சுக்குறேன் உன்னை" சிரித்துக் கொண்டே மிரட்டிவிட்டுச் சென்றார் லெக்ஷ்மி.
எப்பொழுது குரல் கொடுத்தாலும் உடனடியாக அங்கு வந்து சேரும் தந்தை இன்னும் வராததால், 'எங்க போனாங்க இந்த அப்பா' என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க, தோட்டத்தில் ராஜன் இருக்கவில்லை. மித்ரன் மட்டுமே நின்று இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தான் இன்னும் தாவணியை அணிந்து கொள்ளவில்லை என்பதோ, ஜன்னலை மூடாமல் உடை மாற்றியதோ எதுவும் நினைவிலாடவில்லை சம்ரிதிக்கு. பார்த்த விழி பார்த்தபடி அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டாள். அவன் கண்களிலிருந்து தன்னுடையக் கண்களைப் பிரித்தெடுக்க முடியவில்லை சம்ரிதியால்.
மித்ரனும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தான். பழையகாலத்து முறைப்படி கட்டிய வீடு. ஒரே ஜன்னலாக இல்லாமல் கீழ் மேலாகப் பிரித்து இரண்டு கதவுகள் இருந்தன. கீழ் ஜன்னல் மூடி இருக்க மித்ரனுக்குத் தெரிந்ததெல்லாம் அவளின் முகம் மட்டுமே. அந்தக் கண்களிலிருந்து தன் பார்வையை விலக்கிக் கொள்ள விருப்பமில்லாமல் பார்த்திருந்தான் மித்ரன்.
'ஜன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி
அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே
எந்தநாள் வரும் உயிர் உருகிய இந்த நாள் சுகம்
அதை நினைக்கையில் இரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்'
"இளநீர் குடிக்கிறியாய்யா" என்ற ராஜனின் குரல்தான் இவர்கள் இருவரின் மோன நிலையையும் கலைத்தது. குப்பென்று மனத்தில் பரவிய சந்தோஷத்துடன் ஒரு கையால் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு, உதட்டில் விரிந்த மந்தகாசப் புன்னகையுடனும், "வேண்டாம் மாமா. ஏற்கனவே ஜில்லுன்னு தான் இருக்கு" என்று பதிலளித்தான் மித்ரன். பங்குனி மாத வெயில் சில்லென்று இருக்கிறதா? என்ன சொல்கிறான் இவன் என்று முழிப்பது இப்பொழுது ராஜனின் முறையாகிப் போனது.
அவரிடம் பதிலளித்துவிட்டு வீட்டைச் சுற்றிக் கொண்டு முன்வாசல் வழியாக வரப் பார்க்க, அடுத்ததாகக் குறுக்கிட்டது நேஹா.
"என்ன மித்ரன் சார், முகம் சும்மா லைட்டுப் போட்டு விட்ட மாதிரி பிரகாசமா மின்னுது. என்ன விஷயம்?" என்று வழிமறித்து நக்கலடித்தாள் நேஹா.
'அய்யோ படுத்துறானுங்களே' என்று தான் முதலில் தோன்றியது மித்ரனுக்கு. இருந்தாலும் அதை வெளிக்க்காட்டிக் கொள்ளாமல், "அண்ணி தூங்கி முழிச்சாச்சா அண்ணி? ஏன் அண்ணி இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிச்சிட்டீங்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே அண்ணி" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் மித்ரன்.
"டேய் இருடா... ஏற்கனவே உன் பிரகாசமான மூஞ்சியைப் பார்த்தே லைட்டா நெஞ்சு வலி வர்ற மாதிரி இருந்துச்சு. நீ வேற அண்ணினெல்லாம் கூப்பிட்டு இல்லாத ஹார்ட் அட்டாக்கை வரவழைச்சுடாதே. எனக்கு வேற இப்பதான் கல்யாணமாயிருக்கு" என்று நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே நேஹா கிண்டலடிக்க,
"தெரியுதில்ல இப்பதான் கல்யாணமாச்சுன்னு அப்பப் போங்க போய் முதல்ல உங்க புருஷனைக் கவனிக்கிற வழியைப் பாருங்க. அதை விட்டுட்டு..." என்று சொல்லிக் கொண்டே விலகிச் செல்லப் பார்த்தான் மித்ரன்.
அவன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய நேஹா, "இரு செல்லம் இந்த பிரகாசத்துக்கு என்ன காரணமுன்னு சொல்லிட்டுப் போ" என்று கிடுக்கிப் பிடி பிடித்தாள் நேஹா.
"நானும் அண்ணியாச்சே கொட்டக் கூடாதுன்னுப் பார்த்தா ஓவரா பண்ற" என்று சொல்லிக் கொண்டே அவள் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தா மித்ரன்.
"ஸ்... ஆ... வலிக்குது பக்கி... இரு உங்க அண்ணாகிட்ட சொல்றேன்."
"செல்ஃப் ஆப்பு வைச்சுக்காத சீனியர். நீ நாளைப்பின்ன அவன்கிட்ட சண்டை போட்டேன்னு வை அவன் என்ன பண்ணுவான் தெரியுமா? டைரக்டா உன் மேல கை வைக்காம எனக்கு லஞ்சம் கொடுத்து உன்னைக் கொட்ட சொல்லுவான். நானும் நல்லா வைச்சு செய்வேன். இதெல்லாம் தேவையா சொல்லு" அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்தான் மித்ரன்.
"அப்படிங்குற..." என்று நேஹா யோசிக்கத் தொடங்க அவளுக்குமே 'செஞ்சாலும் செய்வாரு இந்த மனுஷன்' என்றே தோன்றியது. அதை வெளிககாட்டிக் கொள்ளாமல், "ஒருநாள் என்கிட்ட மாட்டாமயா போவ? அன்னைக்கி இருக்கு உனக்கு" என்று கூறிச் சென்றாள்.
"ஊஃப்" என்று அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டு, 'என் காதலுக்கு எதிரி வேற யாரும் வேண்டாம். இதுங்களே போதும். முடியலைடா சாமி' என்று பொருமிக் கொண்டே முன் வாசல் நோக்கி நடந்தான் மித்ரன்.
இங்கு சம்ரிதிக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. 'அச்சோ ரித்து இப்படியா பண்ணுவ? ட்ரெஸ் மாத்தும் போது ஜன்னலை மூட மாட்டியா? ஒருவேளை பார்த்திருப்பாங்களோ? ச்சே ச்சே இருக்காது. கீழ ஜன்னல் மூடி தானே இருந்துச்சு. அதுனால ஒன்னும் தெரிஞ்சிருக்காது. எதுக்கும் அப்புறமா போய் அங்க நின்னு பார்க்கணும், அங்கயிருந்து பார்த்தா எதாவது தெரியுதான்னு' என்று மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டவள் சில பல சேஃப்டி பின்களின் உதவியுடன் தாவணியை அணியத் தொடங்கினாள்.
இளமஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் பாவாடை மற்றும் பிளவுஸ், அதற்குத் தோதாக மெரூன் நிறத்தில் தாவணி அணிந்து வந்தாள் சம்ரிதி. கழுத்தில் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத அளவுக்கு மெல்லிய செயின், ஒரு கையில் வாட்ச், மற்றொரு கையில் மெல்லிய நான்கைந்து வளையல்கள், நெற்றியில் சின்ன மெரூன் நிற ஸ்டிக்கர் பொட்டு. இடைவரை நீண்டிருந்த கூந்தலில் முல்லைப்பூச்சூடி தேவதையாக வெளியே வந்தாள் சம்ரிதி.
நேராக சமையலறைக்குச் சென்றவள், "ம்மா சரியா இருக்கான்னு பாருங்க" என்று கூறிக் கொண்டே அங்கிருந்த மசாலா பணியாரத்தைக் கையிலெடுக்க, அவள் கையிலிருந்ததைப் பிடுங்கிக் கொண்டே "வாவ் யாரிந்த தேவதை?" என்று அவளிடம் வம்பு வளர்த்தான் பார்த்திபன்.
"ம்ச் கிண்டல் பண்ணாதீங்க மாமா. இன்னைக்கு ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்சுக்கு ஃபேர்வெல் பார்ட்டி. நான் பாட்டுப் பாடணும். அதுக்குத்தான் இந்த காஸ்ட்யூம்" என்று கூறிக் கொண்டே இன்னொரு பணியாரத்தைக் கையிலெடுக்க,
"ம்ச் சம்ரிதி... தட்டெடுத்துக்கிட்டு டைனிங் டேபிளுக்குப் போ. நான் வைக்கிறேன். ஆமா பாட்டு பாடி பிரக்டிஸ் பண்ணியா? ஒன்னுமே பண்ணலை" என்று கேட்டவாறு அவளுக்கு உணவைப் பரிமாறினார் லெக்ஷ்மி.
"ம்மா இவங்க எல்லாம் சினிமா பாட்டுதான்மா கேட்பாங்க. அதெல்லாம் பார்த்துக்கலாம்."
"சரி சரி சீக்கிரம் கிளம்பு. அப்பா வெயிட் பண்றாங்க பாரு" ராஜன்தான் தினமும் காலையில் வண்டியில் அழைத்துச் சென்று அவளைக் காலையில் கல்லூரியில் இறக்கி விடுவார். மாலையில் கல்லூரிப் பேருந்தில் வந்துவிடுவாள்.
"நேத்துப் பால் கொழுக்கட்டை, இன்னைக்கு மசாலா பணியாரம் இதெல்லாம் உங்களுக்கு செய்யத் தெரியுமுன்னே எனக்கு இப்பதான்மா தெரியுது" ஓரக்கண்ணால் வெளியில் நின்றிருந்த மித்ரனைப் பார்த்துக் கொண்டே கூறினாள் சம்ரிதி.
"இதுக்கெல்லாம் பேரே மாப்பிள்ளைப் பலகாரம்தான். பார்த்தி புது மாப்பிள்ளை. அப்புறம் அவனுக்கு இதெல்லாம் செய்ய வேண்டாமா?" கேட்டுக் கொண்டே அவளுக்கு காலேஜுக்கும் பேக் பண்ணிக் கொண்டிருந்தார் லெக்ஷ்மி.
"அத்தை சொல்லவே இல்லை இதெல்லாம் நீங்க எனக்காகவா பண்ணீங்க? நான் வேற யாருக்கோன்னுல்ல நினைச்சேன்" என்று பார்த்திபன் கூற,
"எங்கம்மாவுக்கு செலக்டிவ் அம்னீஷியா மாமோய். பார்க்க வேண்டியவங்களைப் பார்த்தாதான் இந்த ஐட்டமெல்லாம் எங்கம்மாவுக்கு செய்யிறதுக்கு ஞாபகத்துக்கு வரும்" பேசிக் கொண்டு இருந்தவள் மித்ரன் உள்ளே வரவும் வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்குக் கிளம்பினாள்.
"போகலாமாப்பா" என்று கேட்ட சம்ரிதிக்கு "ஹ்ம்ம் போகலாம்டா" என்று இடது கையை உதறிக் கொண்டே பதிலளித்தார் ராஜன்.
"மாமா ஏன் கையை அப்பப்ப உதறிக்கிட்டே இருக்கீங்க? வலிக்குதா? அடிக்கடி நெஞ்சை வேற நீவி விடுறீங்க. என்ன மாமா பண்ணுது? அவரைக் கவனித்துக் கொண்டிருந்த மித்ரன் அக்கறையாகக் கேட்டான். குரலே சற்றுக் கலங்கி இருந்தாற் போல் தோன்றியது.
"ஒன்னுமில்லைய்யா.. ரெண்டு நாளா வெறும் எண்ணெய் பலகாரமா சாப்பிட்டோம் இல்லையா அதான். இதுக்குப் போய் இவ்வளவு வருத்தப்படுற" சிரித்துக் கொண்டே அவன் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டார் ராஜன்.
"நான் இந்த ப்ரொஜெக்ட் முடிஞ்சு வந்தப்புறம் உங்களைக் கூட்டிட்டுப் போய் ஒரு ஃபுல் பாடி செக்கப் பண்ணணும்" என்றான் மித்ரன்.
"உத்தரவு மகாராஜா" என்று இடைவரை குனிந்து ராஜன் பதிலளிக்க, அவரிடமிருந்த வண்டி சாவியை வாங்கியவன், "நான் சம்ரிதியைக் காலேஜ்ல ட்ராப் பண்றேன். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க" என்று கூறி வண்டியில் ஏறி அமர்ந்துவிட்டான்.
சம்ரிதி தயக்கமாகத் தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, அவரும் சம்மதமாகத் தலையசைத்துப் போய் வருமாறு கண்களால் ஜாடை காட்டினார். அந்த முப்பது நிமிடப் பயணம் அத்தனை ஏகாந்தமாக இருந்தது இருவருக்கும். பேச்சுகளற்ற மௌனம் வழியெங்கும் நீடித்திருக்க, அந்த ஏகாந்தத்தை ஆழ்ந்து அனுபவித்தனர் இருவரும்.
சம்ரிதி பயிலும் கல்லூரியும் வந்து சேர, கிளம்பவா என்று கண்களால் சம்மதம் கேட்டவனிடம் இறங்கி நின்று அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே, "என் காலேஜுக்கு உங்களுக்கு வழி தெரியுமா மாமா?" என்று கேட்டு வைத்தாள் சம்ரிதி.
அவள் எதற்காகக் கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் விரிந்த புன்னகையுடன், "வழி தெரியாமலா" என்று ஆரம்பிக்கவும் "ஹேய் மிஸ்டர் புன்னகை மன்னன்" என்று ஆர்ப்பாட்டமாக தூரத்தே ஒரு குரல் கேட்கவும் சரியாக இருந்தது.
நாக்கைச் சுழற்றி சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன் 'இதோ வருகிறது பார் உன் கேள்விக்கான பதில்' என்பது போல் அந்தக் குரல் வந்த திசையைக் கண்களால் சம்ரிதிக்கு சுட்டிக் காட்டினான். 'அச்சோ மறந்தே போயிட்டேனே' எனும் விதமாக தலை சரித்து, கண்களையும் மூக்கையும் சுருக்கிக் கொண்டு நாக்கைக் கடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் சம்ரிதி.
அவள் முகம் காட்டிய பாவனையை மித்ரன் ரசித்துப் பார்க்கவும், அந்தக் குரலுக்கு சொந்தக்காரி இவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது. அவள் அஸ்வினி தேஜஸ்வினி.