அங்கேயாவது தந்தையைப் பார்த்துவிட மாட்டோமா என்று தவித்தவளுக்கு யாருமற்ற அந்த சூழ்நிலையே வெறுமையைத் தர அங்கேயே சரிந்து அமர்ந்து அழத் தொடங்கினாள். மகளின் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் வந்தாலும் துடித்துப் போகும் ராஜன் இப்பொழுது அதே மகள் இப்படிக் கதறித் துடிப்பதைப் பார்த்திருந்தால் அவர் கண்கள் ரத்தக் கண்ணீரை சொரிந்திருக்கும்.
ஒருவேளை இப்பொழுதும் அவ்வாறுதான் துடித்துக் கொண்டிருந்தாரோ? அவர் துடிப்பதைப் பார்த்துக் கடவுளுக்கே பொறுக்காமல் ஒரு ஆளை அனுப்பி வைத்ததைப் போல் திடீரென்று ஆஜானுபாகுவாய் ஒரு மனிதர் வந்து சம்ரிதியின் எதிரில் நின்றார்.
முதலில் என்னவென்று பொறுமையாய் விசாரிக்க, அப்பா என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் எதுவும் வரவில்லை சம்ரிதி வாயிலிருந்து. "பொம்பளைப் புள்ள இந்த இடத்துக்கெல்லாம் இப்படி தனியா வரக் கூடாது. முதல்ல கிளம்பும்மா இங்கயிருந்து" என்று கொஞ்சம் மிரட்டலாகக் கூற,
அந்த மிரட்டலுக்குப் பலனிருந்தது. அழுகையை நிறுத்திவிட்டுப் பேந்தப் பேந்த விழித்தவளை வழியில் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏற்றி அனுப்பி வைத்தார் அந்த மனிதர். யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுநனருக்கு எப்படித் தன்னுடைய வீடு தெரியும்? தான் முகவரி கூறாமல் எவ்வாறு சரியாக வீடு வந்து சேர்ந்தோம்? கையில் பைசாவும் இல்லாமல் என்று எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை சம்ரிதி.
அவள் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இவர்கள் இருவரும் தன்னுடைய தாய் தந்தையர் இல்லையென்றால் தனக்கு இந்த உடலும் வேண்டாம் உயிரும் வேண்டாம். யாரோ முகம் தெரியாதவர்களுடைய பெண்ணாகத் தன்னைக் கற்பனை செய்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை அவள் மனது. உடம்பில் ஓடும் மொத்த ரத்தத்தையும் வெளியேற்ற வேண்டும் போலத் தோன்றியது.
மொத்தத்தில் சாக வேண்டும் போல் தோன்றியது. இறந்து போயாவது தந்தையைப் பார்க்க வேண்டும். மீண்டும் குழந்தையாய் மாறி அவர் மடியில் அமர்ந்து கொள்ள வேண்டும். அவர் நெஞ்சில் முகம் புதைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எண்ணியவாறே ஆட்டோவில் இருந்து இறங்கிக் கேட்டைத் திறந்து கொண்டு விறுவிறுவென்று வீட்டினுள் நுழைந்தவளை வரவேற்றது லெக்ஷ்மியின் அழுகைக் குரல்.
"சம்ரிதி... ரிதிம்மா... எங்கேடா போன? அம்மா எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா? அப்பாவும் இல்லாமல் அம்மா உயிரோட இருக்குறதே உனக்காகத்தானேடா. அம்மாவை விட்டுட்டு நீ எங்கேடா போன?" என்று அவளைக் கட்டிப் பிடித்து தலை முதல் கால் வரை தடவிப் பார்த்து, முகமெங்கும் முத்த மழை பொழிந்து தான் இத்தனை நேரமும் அவளைக் காணாமல் தவித்தத் தவிப்பைப் போக்கிக் கொண்டிருந்தார் லெக்ஷ்மி.
அவரின் பரிதவிப்பைப் பார்த்த பிறகே தான் செய்து வைத்த காரியம் புரிந்தது. 'ச்சே எவ்வளவு சுயநலமா யோசிச்சிட்டேன். அம்மா சொல்ற மாதிரி அப்பாவுக்குப் பிறகு அவங்க உயிரோட இருக்குறதே எனக்காகத் தானே. அப்படியிருக்கும் போது நான் என்னைப் பத்தி மட்டுமே யோசிச்சு...' அதற்கு மேல் நினைக்கக் கூடப் பிடிக்கவில்லை சம்ரிதிக்கு.
ஏதேதோ காரணங்கள் கூறித் தாயை சமாதானப்படுத்தியவள் அன்று முதல் அவருக்காக வாழத் தொடங்கினாள். ஆனால் என்ன முயன்றும் மனதில் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட வெறுமையையும் விரக்தியையும் விரட்டியடிக்க முடியவில்லை. கடமைக்காக வாழத் தொடங்கினாள்.
பிறந்ததிலிருந்து தாய் மற்றும் தந்தையின் அன்பெனும் கூட்டுக்குள்ளே வளர்ந்தவளுக்கு திடீரென்று அந்தக் கூடு தனக்கு சொந்தமானதே அல்ல என்று தெரிய வரும்பொழுது அவளின் மனநிலையை விவரிக்க வார்த்தைகளுக்கும் பஞ்சமாகிப் போனதே.
சம்ரிதி என்ற பெயரைக் கேட்டவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவளுடைய கள்ளங்கபடமற்ற சிரித்த முகம். அந்தக் குழந்தைத்தனமான சிரிப்பை விரும்பாதவர் யாருமில்லை. அந்தச் சிரிப்பை மறந்தாள். பேச்சை மறந்தாள். சுற்றம் மறந்தாள். சுயம் மறந்தாள். மித்ரனையும் மறந்தாள்.
அவளது நினைவில் இருந்ததெல்லாம் அம்மாவுக்காக உயிர் வாழ்ந்து தான் ஆக வேண்டும். கடமைக்கு வாழ்த் தொடங்கினாள். பேச்சும் இல்லை சிரிப்பும் இல்லை எந்த விஷயத்திலும் பற்றுதலும் இல்லை. கடமைக்கு உண்டு உறங்கி கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளித்து உணர்ச்சிகள் துறந்து மரத்துப் போனாள் சம்ரிதி.
அவளின் இந்த மாற்றத்தைப் பார்த்துப் பயந்து போன லெக்ஷ்மி, மித்ரன் அழைத்த பொழுது அவனிடம் கவலையோடு புலம்பித் தீர்த்துவிட்டார்.
"என்னாச்சுன்னு தெரியலை மித்ரா, உடம்பு சரியில்லாம போனதால அவங்கப்பா ஞாபகம் ரொம்ப வந்து இப்படி நடந்துக்குறாளா? என்னன்னு ஒன்னும் புரியலையே" இவளை எண்ணி எண்ணி மருகித் தான் போனார் லெக்ஷ்மி.
மித்ரனுக்குமே அந்த செக்யூரிட்டி ஏஜென்சியிலிருந்து ரிப்போர்ட் போயிருந்ததால், "நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அத்தை. நான் பார்த்துக்குறேன்" என்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு என்ன செய்து இவளை மாற்றுவது என்று யோசிக்கத் தொடங்கினான்.
மித்ரனுமே ஆரம்பத்தில் லெக்ஷ்மி நினைத்ததைப் போல் தந்தையின் பிரிவுத் துயர் தாங்காமல் தான் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்றே நினைத்தான். சம்ரிதியை எவ்வாறு அந்த இழப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வருவது என்று யோசித்த பொழுது அவன் நினைவுக்கு வந்தவள் தேஜூ. உடனே அவளுக்கு அழைத்தும் விட்டான். அவனுடைய அழைப்பை ஏற்றவள்,
"என்னடா இது வெளியில மழை எதுவும் பெய்யுதா? மிஸ்டர் புன்னகை மன்னன் உலகமகா அதிசயமா எனக்கு ஃபோன் பண்ணியிருக்கீங்க" கேலியுடனே பேச்சைத் தொடங்கினாள் தேஜூ.
"எனக்கு உன்கிட்டயிருந்து ஒரு உதவி வேணும் தேஜூ" மிகவும் பவ்வியமாக வந்தது பதில் மித்ரனிடமிருந்து.
"அதானே பார்த்தேன். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? சரி சொல்லுங்க என்ன செய்யணும்? உதவின்னு வந்துட்டா, இந்த தேஜூவை நம்பினோர் கைவிடப்படப் படார் மாமா"
"எல்லாம் சரி இந்த ஓவர் பீட்டர் தான் தாங்க முடியலடா சாமி" மித்ரன் போலியாக அலுத்துக் கொள்ள,
"உதவி மாம்ஸ் உதவி... மறந்து போச்சா? மேட்டருக்கு வாங்க பாஸ்" அலட்டாமல் பதில் கொடுத்தாள் தேஜூ.
"சம்ரிதி" என்று மித்ரன் தொடங்கவுமே படபடவெனப் பொரியத் தொடங்கி இருந்தாள் தேஜூ. "அவ ஆளே ரொம்ப டல்லாயிட்டா மாமா. நானும் என்னென்னமோ செஞ்சு பார்க்குறேன். ஒன்னும் கதைக்காக மாட்டேங்குது. வாயவே திறக்க மாட்டேங்குறா. சிரிக்கக் கூட மாட்டேங்குறா மாமா. பெரியம்மா பாவம், இவளைப் பத்திக் கவலைப்பட்டே அவங்க ஒரு வழி ஆகிடுவாங்க போல. நானும் அவ பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லி வைச்சு அவளை சுத்தி எப்பவும் யாராவது இருக்குற மாதிரிதான் பார்த்துக்குறேன். இதுக்கு மேல என்ன செய்றதுன்னும் எனக்குப் புரியல"
"அவளோட கவனத்தை வேற பக்கம் திசைத் திருப்பணும் தேஜூ. சம்ரிதி நல்லா படிப்பா. அதான் அவளை பார்ட் டைம்ல சி.ஐ.எம்.ஏ கிளாஸ்ல போடலாமுன்னு பார்க்குறேன். இன்ஸ்டிட்யூட் எல்லாம் கூட விசாரிச்சுட்டேன். நீயும் அவ கூட சேர்ந்து கிளாஸ் போறியா?" என்று மித்ரன் கேட்க,
"ஆத்தீ யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்குறீங்க மாமா நீங்க? இந்த உதவி மட்டும் என்னால முடியவே முடியாது" தெறித்து ஓடினாள் தேஜூ.
"தேஜூவை நம்பினோர் கைவிடப்படார்னெல்லாம் சொல்லிட்டு இப்ப இப்படி பேக் அடிக்கிறியே தேஜூ"
"அதுக்குன்னு உதவி கேட்குறதுக்கு ஒரு வரைமுறை வேண்டாமா? சம்ரிதி இஷ்டப்பட்டு படிக்கிற ஆளு. நானெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்கிற ஆள் மாமா. என்னைப் போய் அதுவும் சி.எம்.ஏ... சான்சேயில்ல மாமா"
"சி.எம்.ஏ இல்ல தேஜூ, சி.ஐ.எம்.ஏ... சி.எம்.ஏவுக்கு மொத்தமா பதினாறு பேப்பர். இதுக்கு மொத்தமே பனிரெண்டுதான் தேஜூ. கொஞ்சம் கன்சிடர் பண்ணேன். நீ போறதாயிருந்தா அவளும் எதிர்க்கேள்வி கேட்காம சேர்ந்திடுவா. படிக்க ஆரம்பிச்சுட்டான்னா அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நார்மலாயிடுவா தேஜூ. ப்ளீஸ்" மித்ரன் சொல்லவும் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினாள் தேஜூ.
"அப்படிங்குறீங்க..." யோசனையாக தேஜூ இழுக்க,
"ஆமாங்குறேன்" அடித்துக் கூறினான் மித்ரன்.
"சரி மாமா. உங்களுக்காகப் பண்றேன். ஆனா ஒன்னு சம்ரிதி கூடப் போறேன் வரேன் எல்லாம் ஓகே. சம்ரிதி எல்லா பேப்பரும் பாஸ் பண்ணிட்டா. நீ பண்ணலையான்னு என்னைப் பார்த்து இந்த சமூகம் கேள்வி கேட்கக் கூடாது சொல்லிட்டேன். அதுக்கு நீங்க தான் பொறுப்பு. ஆமா" ஒருவழியாக ஒப்புக் கொண்டாள் பெண்.
"சமூகத்துக்கெல்லாம் பயப்படுற ஆளா நீ" என்று மித்ரன் கேலியாக வினவ,
"பார்த்தீங்களா காரியம் முடிஞ்சதும் கழட்டி விடுறீங்க. சரி நானும் ஒன்னும் உங்களுக்காக இதைச் செய்யலை. சம்ரிதிக்காகத் தான் செய்றேன். முதல்ல அவ எனக்குத் தங்கச்சி. அப்புறம்தான் உங்களுக்கு...." என்று கேள்வியாக நிறுத்தியவள், "ஆமா உங்களுக்கு அவ யார் மாமா?" என்று குறும்புடன் கேட்டு வைத்தாள் தேஜூ.
"எனக்கு..." என்று அவளைப் போலவே இழுத்தவன், "எனக்கு ராஜா மாமான்னா உசிரு. ராஜா மாமாவுக்கு சம்ரிதின்னா உசிரு" என்று அதே குறும்புடன் கூறி முடித்தான் மித்ரன்.
"அதானே டைரக்டா சொல்லிட மாட்டீங்களே. நானே ஒருநாள் கண்டுபுடிக்கத் தான் போறேன். அன்னைக்கி இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்" என்று கூறி மேலும் கொஞ்ச நேரம் வளவளத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் தேஜூ.
இந்த வெகுளிப் பெண்ணிடமாவது ஒரு முறை ஒரே ஒரு முறை தங்கள் உள்ளத்திலிருப்பதை சம்ரிதியோ அல்லது மித்ரனோ வெளிப்படுத்தி இருந்தால் இவளே பிற்காலத்தில் நடந்த பல குழப்பங்களை நடக்க விடாமல் தடுத்திருப்பாள். ஆனால் எதற்காக என்று தெரியாமலே இருவரும் மாற்றி மாற்றித் தங்கள் காதலை மறைத்து வைத்தார்கள்.
எது எப்படியோ மிதரனின் திட்டம் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியது. சம்ரிதி முழுக்க முழுக்க தன்னைப் படிப்பில் மூழ்கடித்துக் கொண்டாள். கல்லூரி அது முடிந்த பின் சி.ஐ.எம்.ஏ என்று வேறு எதைப் பற்றியும் யோசிக்க நேரமில்லாமல் அல்லது யோசிக்க விருப்பமில்லாமல் ஓடத் தொடங்கி இருந்தாள் சம்ரிதி.