அதைக் கையில் வாங்கிக் கொண்டவன் "தேங்க் யூ" என்று கூறிவிட்டு ஹாட் சாக்லேட்டில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டான். மித்ரன் அதைப் பிரித்துப் படித்துப் பார்ப்பான் என்று எதிர்பார்த்து அருகில் நின்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மரியாதையாகத் தன்னை விளித்ததையும் தேங்க் யூ சொன்னதையும் உணர்ந்து கொண்டவளின் மனது வெகுவாகக் காயப்பட்டுப் போனது. அவன் எப்பொழுது 'டி' என்று சொன்னாலும் முறுக்கிக் கொள்பவள் முதன்முறையாக அந்த அழைப்புக்காக ஏங்கத் தொடங்கினாள்.
"இப்படி யாரோ மூணாவது மனுஷங்கக் கிட்டப் பேசுற மாதிரிப் பேசாதீங்க அத்தான். மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு" தயக்கம் விலக்கி நேரடியாகவே கூறினாள் சம்ரிதி.
"நீங்க என்னை மூணாவது மனுஷனா தானே நினைச்சிருக்கீங்க. இல்லைன்னா இவ்வளவு பெரிய விஷயம் தெரிஞ்சும் அதை என்கிட்ட மறைச்சிருக்க மாட்டீங்கல்ல. உரிமையானவனா நினைச்சிருந்தா என் தோள் சாயத் தானே வந்திருக்கணும். நீங்க தான் அப்படி நினைக்கலையே" அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்து எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான் மித்ரன்.
அவனருகில் வந்து அமர்ந்த சம்ரிதி "அப்படியெல்லாம் இல்லை அத்தான்" என்று மித்ரனின் கைப்பிடித்துப் பேசத் தொடங்க, கையை அவளிடமிருந்து உறுவிக் கொண்டான் மித்ரன்.
"சொல்லித் தெரிவதில்லைக் காதல்" என்று அவள் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சொல்லி முடித்தவன், அவளுடைய ஹாட் சாக்லேட்டை எடுத்து அவளுக்கு ஊட்டி விடத் தொடங்கினான்.
கண்களில் நீர் வழிய வழிய அந்த ஹாட் சாக்லேட்டை சாப்பிட்டு முடித்தாள் சம்ரிதி. அவன் கைவளைவில் கைக் கோர்த்துக் கொண்டு தோளில் சாய முற்பட, "நான் ஏற்கனவே சொன்னது தான். பத்து நாள் கழிச்சு முடிவு பண்ணலாம்" என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டான் மித்ரன்.
'நீங்க என்னை உங்களை விட்டுப் போக சொல்ல மாட்டீங்க. சொல்லக் கூடாது' மனதோடு எண்ணிக் கொண்டாள் சம்ரிதி.
அலுவலகத்தில் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் மித்ரனின் அறையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சம்ரிதி. மித்ரன், சம்ரிதி, வாங் லீ மூவருடைய அறைகளும் அடுத்தடுத்து தான் அமைந்திருக்கும். நடுவில் பாதிக்கு மேல் வெறும் கண்ணாடித் தடுப்புகள் தான்.
தன்னுடைய அறையிலும் மித்ரனுடைய இருக்கையைப் போலவே போடப்பட்டிருந்த இருக்கையை எதிர்புறமாக மாற்றிக் கொண்டாள் சம்ரிதி. எப்பொழுது வேண்டுமானாலும் அமர்ந்த நிலையிலேயே மித்ரனைப் பார்ப்பதற்காக இந்த ஏற்பாடு. நடுவிலிருக்கும் கண்ணாடித் தடுப்புக்குண்டானத் திரையை எப்பொழுதுமே நீக்கித்தான் வைத்திருப்பாள்.
வாங் லீ கூட அலுத்துக் கொள்வான் 'உங்கள் காதலுக்கு ஒரு அளவே இல்லையா என்று'. எதையும் காதில் வாங்கிக் கொண்டதில்லை சம்ரிதி. எப்பொழுது லேப்டாப்பில் இருந்து கண்ணை எடுத்தாலும் எதிர்த் திசையில் அமர்ந்திருக்கும் மித்ரன் முகம் பார்த்துவிட்டே பின் மீண்டும் திரையைக் காண்பாள்.
வேலையே செய்யாமல் அவனை ரசித்தத் தருணங்களும் உண்டு. மித்ரன் அவனறையில் உள்ளத் திரையை வேண்டுமென்றே மூடி வைத்தாலும் வேலை மெனக்கெட்டு எழுந்து சென்று அதைத் திரும்பவும் திறந்து வைத்துவிட்டு வருவாள்.
எதிரில் யாரும் இருந்து பேசிக் கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் சில பல புன்னகைகள், கண் சிமிட்டல்கள், அரிதாகச் சில ரகசிய முத்தங்கள் கூடக் கிடைத்திருக்கின்றன சம்ரிதிக்கு. அதையெல்லாம் எண்ணிக் கொண்டவளுக்கு இப்பொழுது மித்ரன் இல்லாத அந்த அறையைக் காணவே வெறுமையாக இருந்தது.
தனியாக வீட்டில் இருக்கக் கூடாதென்று வம்படியாக வாங் லீ வீட்டில் விட்டுச் சென்றிருந்தான் ஹாங்காங்கிற்கு அலுவலக வேலை நிமித்தமாக. அது வரையில் ஒரு ஒட்டாதத் தன்மையுடன் இருந்தவன் கிளம்பும் பொழுது மட்டும் நெற்றியில் முத்தமிட்டு, கன்னம் தட்டி "டேக் கேர் டா" என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தான்.
முத்தங்களில் பல வகை இருக்க இந்த நெற்றி முத்தம் மட்டும் இத்தனை சந்தோஷத்தையும் கூடுதலாக நிம்மதியையும் நிறைவையும் தருகிறதே ஏன்? வியந்து கொண்டாள் சம்ரிதி. அவளின் மோன நிலையைக் கலைப்பதற்காகவே வந்து சேர்ந்தான் வாங் லீ.
"என்ன பகல் கனவா? கனவுல என் நண்பன் வந்தானா?" சிரித்துக் கொண்டே கேட்டான் வாங் லீ.
"ம்ப்ச்... ப்ரோ போதும். வீட்டுல நீங்களும் லீ ஜிங்கும் சேர்ந்து பண்றது போறாதா. இப்ப வேற ஆரம்பிக்கணுமா? நீங்களும் காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணீங்க. அப்புறம் ஏன் எங்களை மட்டும் இப்படிக் கிண்டல் பண்றீங்க?" செல்லமாக அலுத்துக் கொண்டாள் சம்ரிதி.
"அதையேதான் நானும் சொல்றேன். நாங்களும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணோம். இருந்தாலும் உங்களவுக்கு..." என்று மேலே சொல்லாமல் இழுத்தவனை முறைத்துப் பார்த்தாள் சம்ரிதி.
"ஓகே ஓகே கூல் டவுன். நீ இங்க கனவு காண்றது அங்க உன் ஆளுக்குத் தெரிஞ்சிடுச்சுப் போல. போஃன் பண்ணினான்" என்று கூறி கையிலிருந்த அலைப்பேசியைத் தூக்கிக் காண்பித்தான்.
"என்ன சொன்னாங்க? சீக்கிரமே வர்ற மாதிரி எதுவும் சொன்னாங்களா?" ஆவலாக வினவினாள் சம்ரிதி.
"சொன்ன டேட்ல தான் வர்றானாம். கரெக்டா அன்னைக்குத்தான் நம்ம கம்பெனி அனிவர்சரி பார்ட்டி வருது இல்லையா? நீயும் லீ ஜிங்கும் சீக்கிரமே கிளம்பி நேரா சென்தோஸா (Sentosa Island) போயிடுங்க. நான் மித்ரனை ஏர்போர்ட்ல பிக் அப் பண்ணிட்டு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அங்க வந்துடுவோம்"
"இது ஏற்கனவே பேசினது தானே. இப்ப இதைச் சொல்றதுக்கு எதுக்கு ஒரு போஃன்?" முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டாள் சம்ரிதி.
"இது மட்டுமா பேசினோம்? நாங்க பிரெண்ட்ஸ்குள்ள ஆயிரம் விஷயம் பேசிக்குவோம்மா. அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியுமா?" அலுத்துக் கொண்டான் வாங் லீ.
"உன்கிட்ட கேட்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீ ஏன் ஹான்ட் போஃன் வைச்சுக்க மாட்டேங்குற? இந்தக் காலத்துல இது ரொம்ப அவசியமானது இல்லையா? இது இல்லாம நீ எப்படி சமாளிக்குற?" தொடர்ந்து கேட்டான் வாங் லீ.
"எல்லா கேள்விக்கும் ஒரே ஆன்சர்தான். அப்பாவுக்கு செல்போன் பிடிக்காது." சிரித்துக் கொண்டே பதிலளித்தாள் சம்ரிதி. ஆனாலும் எப்படி எனும் விதமாக வாங்லீ தோள் உயர்த்திப் பார்க்க,
"நானும் ஸ்கூல் டேஸ்லயே அப்பாக்கிட்ட கேட்டிருக்கேன் செல்போன் வாங்கித் தரச் சொல்லி. அதுக்கு அப்பா 'அதை ஷர்ட் பாக்கெட்ல போட்டாலே ஹார்ட் அட்டாக் வருதுன்னு சொல்றாங்க. அது எதுக்குடா நமக்கு. அதான் வீட்டுல போஃன் இருக்குல்ல. உன்னை ஸ்கூலுக்கு நான்தான் கூட்டிட்டுப் போறேன் கூட்டிட்டு வரேன். இப்போதைக்கு வேண்டாம்டா. அவசியம்னா பார்த்துக்கலாம்' அப்படின்னு சொன்னாங்க.
உங்களுக்குத் தெரியுமா ப்ரோ, கடைசியில எங்கப்பா இறந்தது ஹார்ட் அட்டாக்லதான். அதுக்கப்புறம் எப்படி எனக்கு செல் போஃன் யூஸ் பண்ண மனசு வரும். அதான் அப்படியே பழகிட்டேன்.
எனக்கு இதுல ஒன்னும் கஷ்டம் தெரியலை. இப்பவும் உங்க பிரெண்ட் எனக்குப் பேசணுமின்னா இங்க கூப்பிட்டிருப்பாங்க" என்று கூறி அலுவலகத் தொலைப்பேசியை சுட்டிக் காட்டியவள்,
"ஆனா எனக்குத் தெரியாம ரெண்டு பேரும் சேர்ந்து ரகசியமா ஏதோ பேசியிருக்கீங்க. ஹ்ம்ம்.. கண்டுபுடிக்கிறேன்" என்று தீவிர முகப் பாவனையுடன் வாங் லீயிடம் கூறினாள் சம்ரிதி.
"வில்லங்கமா எதையும் யோசிக்காதம்மா. மீ பாவம். சத்தியமா வேற எதையும் நாங்க பேசலை" அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் வாங் லீ.
"இல்லையே நமப முடியலையே. நாம வீட்டுக்குப் போயிட்டு லீ ஜிங்கையும் வைச்சுக்கிட்டு இந்த விஷயத்தைப் பத்திப் பேசலாம்" சிரித்துக் கொண்டே சம்ரிதி கூற, "ஆளை விடுங்கம்மா" என்று கூறி அங்கிருந்து விரைந்து சென்றான் வாங் லீ.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக மனத்தில் அழுத்திக் கொண்டிருந்தப் பாரத்தை இறக்கி வைத்ததில் சம்ரிதி தெளிவாகியிருந்தாள். எதுவாக இருந்தாலும் இனி மித்ரன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்திருந்தது. அந்த நம்பிக்கைக் கொடுத்தத் தைரியத்தில் வாழ்க்கையை எதிர் நோக்கிக் காத்திருந்தாள்.
இவர்களால் ஹாங்காங்கில் இருப்பதாக நம்பப்பட்டவனோ இரண்டே நாட்களில் அங்கு வேலையை முடித்துக் கொண்டு இந்தியாவில், தமிழ் நாட்டில், தென் கோடியில் உள்ள கன்னியாகுமரியில் சுற்றிக் கொண்டிருந்தான் கையில் சம்ரிதி கொடுத்தப் பத்திரத்தோடு.