மனதிற்குள்ளே ஏதோ யோசனையுடன் வந்ததாலோ என்னவோ அவரும் இங்கு நடந்து கொண்டிருந்த களேபரத்தைக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் பேசுவதைத் தவிர்த்திருப்பார். இப்பொழுது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. தயக்கத்துடனே அலைப்பேசியைக் காதுக்குக் கொடுத்தார்.
"ம்ஹ்ம்ம்ம்" இவர் இங்கு லேசாகக் குரலைக் கனைக்கவுமே அங்கு பேச்சைத் தொடங்கியிருந்தாள் சம்ரிதி.
"ஹலோ மாமா... எப்படி இருக்கீங்க? உங்க ஃபிரெண்ட் ராதாகிருஷ்ணன் அங்கிள் எப்படி இருக்காங்க? இன்னைக்கு தானே அவங்களுக்கு சர்ஜரின்னு சொன்னீங்க... போய் பார்த்தீங்களா மாமா? இப்போ அங்கயிருந்து தான் வர்றீங்களா?" முந்தாநாள் பார்த்த மாமனிடம் மூவாயிரம் கேள்விகள் கேட்டாள்.
"அப்புறம் மாமா இனிமே உங்க பொதுச்சேவைக்கெல்லாம் நீங்க இந்த நாலு மாமாஸ்கிட்டயும் பணம் கேட்க வேண்டாம். என்னை உங்க பையன் அவங்க கம்பெனியோட சி. எஃப். ஓன்னு சொல்லிட்டாங்க... அப்போ சம்பளமும் கொடுக்கணுமில்ல, என்னோட மொத்த சேலரியும் உங்களுக்குத்தான் மாமா" மகிழ்ச்சியுடனே தகவலைத் தெரிவித்தாள் பெண்.
ஆனால் அதைக் கேட்ட மனிதருக்குத்தான் காதில் விழுந்த விஷயம் அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. விஸ்வநாதன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் டெல்லியிலிருந்து சென்னைக்கு ஜாகையை மாற்றிக் கொண்டனர் விஸ்வநாதனும் சுஜாதாவும்.
மற்ற மகன்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருக்க பார்த்திபனுடன் சென்னையிலேயே ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டு இருந்துவிட்டனர். விஸ்வநாதன் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கொண்டு பொதுச்சேவை சமூகப்பணி என்று கிளம்பிவிடுவார்.
பத்து விஷயங்கள் செய்தார்களென்றால் அதில் இரண்டு தான் உண்மையில் பிறருக்கு உபயோகமாக இருந்தது. மீதி எட்டும் இவர்களின் வீண் பந்தாவிற்கும் பணத்திமிரைப் பறைசாற்றுவதற்குமாய் இருந்தது. அதனால் மகன்கள் யாரும் இவரின் இந்தச் செயலுக்கு ஆதரவு காட்டுவதில்லை.
'இவங்க அம்மா கேட்டா மட்டும் எவ்வளவுன்னாலும் காரணமே கேட்காம தூக்கிக் கொடுக்குறானுங்க. நாம் கேட்டா மட்டும் ஏன் எதுக்குன்னு ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்க வேண்டியது. நாலு பேருமே இப்படித்தான் இருக்கானுங்க' என்று விஸ்வநாதன் புலம்புவது சம்ரிதிக்கு நன்றாகவே தெரியும். இதை மனதில் வைத்தே சம்ரிதி அவ்வாறு கூறியிருந்தாள்.
கேட்ட மனிதர் தான் அதனை சரியான கோணத்தில் புத்திக்கு கொண்டு செல்லவில்லை. இவள் யார் தன் மகனின் பணத்தைத் தனக்குத் தர என்பதாகத்தான் அவரின் எண்ணம் இருந்தது. எனவே வார்த்தைகளும் எந்தவித தடுப்பணைகளும் இன்றி வீரியமாக வந்து விழுந்தது.
"ஜஸ்ட் ஸ்டாப் இட் சம்ரிதி... முதல்ல எதிர்ல பேசுறவங்க என்ன பேசுறாங்கன்னு காது கொடுத்துக் கேளு. நீ பாட்டுக்கு பேசிகிட்டே போற. இந்தச் சின்ன விஷயம் கூட உனக்குத் தெரிய மாட்டேங்குது, நீ கம்பெனியை நிர்வாகம் பண்ணவா? விளங்கின மாதிரி தான்" காரசாரமாகப் பொரிந்து தள்ளினார் விஸ்வநாதன்.
"சாரி மாமா" சட்டென குரல் இறங்கிப் போனது சம்ரிதிக்கு. இத்துடனாவது நிறுத்தியிருக்கலாம், ஆனால் அன்று அவர் நாக்கிற்கு சனீஸ்வர பகவான் மொத்தமாக குடிபெயர்ந்துவிட்டதால் அவரின் பேச்சு தொடர்ந்தது.
"நீ கொஞ்சங்கூட எம் பையனுக்குப் பொருத்தமே கிடையாது. அவன் அழகுக்கும் அந்தஸ்த்துக்கும் ஆயிரம் பேர் போட்டிப் போட்டுக்கிட்டு வந்தாங்க பொண்ணு கொடுக்க. நான் படிச்சுப் படிச்சு சொன்னேனே உன் தகுதிக்குத் தகுந்த பொண்ணா பார்க்கலாமுன்னு... கேட்டாதானே?"
"வளர்த்த பாசம் அது இதுன்னு முட்டாள்தனமா யோசிச்சு இப்ப கஷ்டப்பட்டுக்கிட்டு நிக்கிறான். இனிமேலாவது உன்னை நீ மாத்திக்கிட்டு அவனுக்கேத்த மாதிரி நடந்து பழகு. அவன் மூவ் பண்ற சொசைட்டிக்கு ஏத்த மாதிரி நீ மாறு. பட்டிக்காட்டுத்தனமா நடந்துக்காத. உங்க அப்பா...."
"போதும் நிறுத்துங்க" சிம்மத்தின் கர்ஜனையாக வெளிவந்திருந்தது மித்ரனின் குரல். விஸ்வநாதன் குரல் உயர்த்தவுமே உடல் இறுகிப் போய் அமர்ந்திருந்தவன் இறந்து போன மாமாவைப் பற்றிய பேச்சு வரவும் தன்னை மீறிக் கத்தியிருந்தான்.
"போதும் இதோட நிறுத்திக்கோங்க... இன்னும் ஒரு வார்த்தை என் சம்ரிதியைப் பத்தியோ இல்ல என் மாமாவைப் பத்தியோ வந்துச்சு அப்புறம் நானும் பேச வேண்டியது வரும். பார்த்துக்கோங்க."
"எனக்கு இந்த சம்ரிதிதான் புடிச்சிருக்கு. இவ இப்படி இருக்குறதுதான் புடிச்சிருக்கு. இவளைத்தான் நான் காதலிச்சேன், இப்பவும் காதலிக்கிறேன் என் ஆயுசுக்கும் இவளைத்தான் காதலிப்பேன். முதல்ல எனக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காதுன்னு தெரியுமா உங்களுக்கு? அதெப்படி தெரியும்? என்கிட்ட பேசியிருந்தா தானே தெரியும். நான் சம்பாதிக்க ஆரம்ப்பிச்சதுக்கு அப்புறம் தானே என்கிட்ட நல்லா பேசவே ஆரம்பிச்சீங்க."
அப்புறம் எப்படி என் விருப்பத்தைப் பத்தி எல்லாம் உங்களுக்குத் தெரியப் போகுது? என் கல்யாண விஷயத்துல நடந்ததுக்கே நான் உங்க மேல செம்ம கடுப்புல இருக்கேன். இதுக்கு மேலேயும் எதும் பேசி உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க. வைங்க ஃபோனை" என்று கூறி அழைப்பைத் துண்டித்திருந்தான் மித்ரன்.
“ச்சே இதுக்குத்தான் இவரோட பேசுறதே கிடையாது" மூணுமுணுத்தவாறே அமர்ந்திருந்த சோஃபாவின் திண்டை ஓங்கிக் குத்தினான். எதிரிலிருந்த டீப்பாயும் காலால் ஒரு உதை வாங்கியது.
'ஏற்கனவே சாயங்காலத்திலிருந்து ஒரே அழுகை. இப்போ மறுபடியும் ஆரம்பிக்கப் போறாளோ... போச்சுடா' சட்டென நினைவு வந்தவனாகத் திரும்பிப் பார்க்க, மித்ரன் நினைப்புக்கு மாறாக இவனை நன்றாக முறைத்துக் கொண்டு அருகில் அமர்ந்திருந்தாள் சம்ரிதி. ஆச்சரியத்தில் புருவம் உயர்த்த,
"இப்ப எதுக்கு மாமா, மாமாவை அந்த திட்டு திட்டுறீங்க?" முதல் கேள்விக்கணை பாய்ந்து வந்தது சம்ரிதியிடமிருந்து.
"ஆஹான்..." மெச்சிக் கொண்டவன், "என்ன மாமாமா?" என்று வம்பிழுக்க,
"ம்ச்..." தனக்குள்ளே சலித்துக் கொண்டவள், "இப்ப எதுக்கு அத்தான் மாமாகிட்ட அவ்வளவு கோவமா பேசுறீங்க?"
"இந்த வார்த்தையை சொல்ல உனக்கு இத்தனை நாள் தேவைப்பட்டுச்சா சமிம்மா" கண்ணோடு கண் கோர்த்து கேட்க, அந்த காந்தக் கண்களின் ஈர்ப்புவிசை தாங்காமல் மெல்லத் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் பெண்.
"என் கண்ணைப் பார்த்து பதில் சொல்லு சமி... என்னை அத்தான்னு கூப்பிட உனக்கு இத்தனை நாளா? அப்படி நான் என்னடா தப்பு பண்ணினேன்?" இவ்வளவு நேரமும் சிங்கமாய் கர்ஜித்துக் கொண்டிருந்தவன் நலிந்த குரலில் கேட்க, பரிதவித்துப் போனாள் சம்ரிதி.
"நீங்க எந்த தப்பும் பண்ணலை அத்தான். நான்தான் எல்லாத்துக்கும் காரணம். என்னை மன்னிச்சு உங்க சமியா என்னை ஏத்துப்பீங்களா அத்தான்?" கேட்கும் பொழுதே குரல் கலங்கிப் போக, இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
"ஏன்டா மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுற? நீ எப்போதுமே என்னோட செல்ல சமி பேபி தான்" மூக்கைப் பிடித்து ஆட்டிக் கொண்டே செல்லம் கொஞ்ச,
"அத்தான் நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்க தானே" வாகாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே, சட்டை பட்டனைத் திருகியபடியே நிமிர்ந்து முகம் பார்த்துக் கேள்வி கேட்க, "இப்படி கேட்டா கோவம் வராதுன்னு தான் நினைக்கிறேன்" புன்முறுவலுடனே பதிலளித்தான்.
"ம்ப்ச் விளையாடாதீங்க அத்தான். இனிமே மாமாகிட்ட இவ்வளவு கோவமாவெல்லாம் பேசாதீங்க அத்தான். என்ன இருந்தாலும் உங்களைப் பெத்தவங்க. அவங்க இருக்கும்போது அவங்க அருமை நமக்குத் தெரியாது. இல்லாதபோது தான் தெரியும். எங்கேயாவது பெத்தவங்களே பிள்ளையோட வாழ்க்கை வீணா போகணும்னு நினைப்பாங்களா? இப்ப என்ன மாமா யாரை சொன்னாங்க? என்னைத் தானே? என்னைப் பேசுறதுக்கு அவங்களுக்கு இல்லாத உரிமையா?"
"நான் சின்னப் பிள்ளையிலிருந்தே அவங்க பார்க்க வளர்ந்தவ தானே? அந்த உரிமையில கொஞ்சம் கூட பேசிட்டாங்க. நீங்களே யோசிச்சுப் பாருங்க நேஹா அக்காகிட்டயோ இல்ல மத்த ரெண்டு அக்கா கிட்டயோ மாமா இந்த மாதிரி பேசியிருக்காங்களா? அவங்க கோவமா இருக்கும்போது நாம கொஞ்சம் பொறுமையா போறதுனால நாம ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டோம். எனக்காக அத்தான் ப்ளீஸ்..."
"சரி உனக்காக நான் இனிமே அவரை எதிர்த்துப் பேசலை. இன்னைக்கும் நான் பொறுமையா தான் இருந்தேன். ராஜா மாமாவைப் பத்தி பேச ஆரம்பிக்கவும் தான் எனக்குக் கோவம் வந்துடுச்சு. ஆனா இன்னோன்னும் நீ புரிஞ்சுக்கணும். என்னால் யார்கிட்டயும் எதுக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க முடியாது. அது யாரா இருந்தாலும் சரி." சற்று இலகுவாகவே பதில் வந்தது மிதரனிடமிருந்து.
"என்னை அவ்வளவு புடிக்குமா அத்தான்" மெல்லிய குரலில் கேள்வி எழுந்தது பெண்ணிடமிருந்து.
"அதுல இன்னமும் உனக்கு சந்தேகமா பேபி? நிரூபிக்கட்டுமா அத்தானுக்கு இந்த பேபியை எவ்வளவு பிடிக்குமுன்னு" கண்களில் வருடக் கணக்காய் தேக்கி வைத்தக் காதலை வழியவிட்டு அவள் விழி பார்த்து வினவிய பொழுது செவ்வானமாய் சிவந்து போனது சம்ரிதியின் முகம்.
பெண்ணவளின் கன்னச் சிவப்பும் வெட்கமும் துடிக்கும் இதழ்களும் ஆயிரம் கதைகள் மன்னவனுக்கு உரைக்க, மெல்ல அவள் இதழ் நோக்கிக் குனிந்தான் மித்ரன். சம்ரிதி பட்டென்று கண்களை மூடிக் கொள்ள, அவள் முகத்தைக் கைகளில் ஏந்தியவன்,
"சமிம்மா, கண்ணைத் திறந்து என்னைப் பாரு" காதோரமாய் இரகசியக் குரலில் முணுமுணுக்க, ஒட்டு மொத்த உடலும் கூசிச் சிலிர்த்ததுப் பேதைக்கு. காதின் பின்புறம் கழுத்தினோரம் இருந்த பொன்னிற முடிகள் சிலிர்த்துக் கொண்டு நிற்க, அதைப் பார்க்கப் பார்க்க ஒட்டுமொத்த தாபமும் கட்டுப்பாடின்றிப் பெருக்கெடுத்தது மித்ரனுக்கு.
முத்த ஊர்வலத்தை அவள் நெற்றியிலிருந்து ஆரம்பித்தவன், மூடியிருந்த கண்கள், மூக்கின் நுனி, கன்னங்கள் என்று ஊர்கோலம் போக, அடுத்து இதழில் தான் இளைப்பாறுவான் என்று மங்கை எதிர்பார்த்து இதழ் துடித்துக் காத்திருக்க, அந்தக் கள்வனோ கன்னங்களோடு நிறுத்திவிட்டு விஷமப் புன்னகை புரிந்து காத்திருந்தான்.
எதிர்பார்த்தது கிடைக்காத ஏமாற்றத்தில் பெண்ணவள் கண் திறக்க அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே இதழமுதம் பருகத் தொடங்கினான். அதிர்ச்சியிலோ ஆனந்தத்திலோ இல்லை ஆச்சரியத்திலோ அந்தக் கண்களிரண்டும் இன்னும் பெரிதாக விரிந்து, பின் இதழமுதத்தில் மயங்கிக் கிறங்கிப் பின் மெல்ல மெல்ல மூடிக் கொண்டது.