அத்தியாயம் - 7
மித்ரனிடமிருந்து கோபமாக வார்த்தைகள் வெளிப்படவும் சட்டென மௌனியாகினாள் சம்ரிதி. காரில் அதன் பிறகு எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் போனது. இடைப்பட்ட காலத்தில் மறந்திருந்த ஒரு விஷயம் மறுபடியும் ஞாபகம் வரும் போல் தோன்றியது. அதேதான், அழுகை வரும்போல் இருந்தது. பார்வையை வெளிப்புறம் திருப்பிக் கவனத்தைத் திசைத் திருப்ப முயன்றாள். ஓரளவுக்கு முயற்சி பலன் கொடுத்தது.
வீட்டிற்கு வந்தபின்னும் கூட இருவருக்குமிடையில் இருந்த மௌனச்சுவர் உடையவில்லை. மித்ரன் டிவியைப் போட்டுக் கொண்டு அதன் முன் அமர்ந்துவிட, உள்ளே சென்று சின்னக் குளியல் போட்டு வெளிவந்தவள் கிட்சனுக்குள் புகுந்து கொண்டாள். குளித்த பின் மனம் சற்று அமைதியடைந்தது போல் தோன்றியது. இருவருக்குமாய் சேர்த்து இரவுணவை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
அமர்ந்திருந்த மித்ரனின் முன் தட்டு நீட்டப்பட்டது. அவன் நிமிர்ந்து முகம் பார்க்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கோபமாக இருப்பதை பின் எப்படித்தான் வெளிப்படுத்துவதாம்? அதற்குத்தான் இந்த முகத்திருப்பல். பார்த்த மித்ரனுக்குத்தான் கோபம் போய் அந்த இடத்தை சிரிப்பு ஆக்கிரமித்துக் கொண்டது இவளின் சிறுபிள்ளைத்தனமான செயலால்.
எப்பொழுது உண்டாலும் மித்ரன் ஒரு வாயாவது இடையில் சம்ரிதிக்கு ஊட்டாமல் உண்ண மாட்டான். இன்று வேண்டுமென்றெ அவளைச் சீண்டுவதற்காகவே முழுவதுமாக உண்டு முடித்துவிட, பார்த்துக் கொண்டிருந்தவளுக்கோ கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
'எனக்கு ஊட்டாம சாப்பிட்டுட்டீங்கல்ல' என்று புறுபுறுத்துக் கொண்டே தன் தட்டில் இருந்ததை அரையும் குறையுமாக விழுங்கி வைத்தவள் ஒட்டுமொத்தக் கோபத்தையும் அடுக்களையில் இருந்த பாத்திரங்களில் காட்டிக் கொண்டிருந்தாள். நானும் சளைத்தவனில்லை என்று மித்ரனும் டிவி வால்யூமைக் கூட்டிக் கொண்டு இருந்தான்.
மித்ரன் இவளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே மேலும் மேலும் கோபமேற்றியது பெண்ணுக்கு. 'கோவமா பேசினதைக் கூட விட்டுடலாம். சமாதானமா ஒரு வார்த்தை கூட பேசாம இருந்தா என்ன அர்த்தம்? என்னமோ நான்தான் தப்பு பண்ணின மாதிரி... இப்ப இந்த விஷயத்துல யாரு பிடிவாதம் பிடிக்கிறது? நானா இல்ல அவங்களா? எனக்கு ஊட்டாம சாப்பிட்டீங்கல்ல இப்ப என்ன பண்றீங்க பார்க்கலாம்' மனதிற்குள்ளே அவனை வறுத்தெடுத்தவள் கையில் இரண்டு சிறிய கப்களில் பாலை ஊற்றிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
அப்பொழுதுதான் வந்து கட்டிலில் அமர்ந்தவனிடம் பால் கோப்பையை நீட்ட 'என்னதிது?' என்பது போல் ஒரு பார்வை பார்த்து வைத்தான். பாலோ டீயோ காபியோ எது அருந்தினாலும் இருவரும் பாதிப் பாதியாக ஒரே கப்பில் அருந்துவதைத்தான் வழக்கமாக வைத்திருந்தனர் இருவரும். இன்று தனக்கு ஊட்டி விடாத கோபத்தில் ஒரு கோப்பையை இரண்டாக்கியிருந்தாள் சம்ரிதி.
தன்னை மிதப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் சென்று அவள் கையிலிருந்த கோப்பையை வாங்கியவன், தன்னுடையதையும் எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தான். எப்பொழுதும் இருவரும் ஒன்றாகக் குடிக்கும் பெரிய கப்பில் இருவரின் பாலையும் ஊற்றியவன் அதனைப் பருகிக் கொண்டே வெளிவந்தான். பாதியைக் குடித்துவிட்டு மீதியை அவள் கைகளில் திணித்தவன் வேலை முடிந்ததென சென்று படுத்துவிட்டான்.
கோபத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இவனை முறைத்துக் கொண்டு நின்றவளிடம், "சீக்கிரம் பாலைக் குடிச்சுட்டு வந்து படு சமிம்மா. நாளைக்குக் காலையிலேயே முக்கியமான போர்ட் மீட்டிங் இருக்கு. ரெண்டு பேரும் காலையில சீக்கிரம் கிளம்பணும்" என்று கூறி மேலும் வெறுப்பேற்றினான்.
"முடியாதுத்தான்... நீங்க மட்டும் எனக்கு ஊட்டிவிடாம சாப்பிட்டீங்க, நான் மட்டும் ஒரே கப்புல பால் குடிக்கணுமா?" சிறுபிள்ளையென காலைத் தரையில் உதைத்துக் கொண்டு கூற,
அவளுடைய பாவனைகளில் தன்னைத் தொலைத்தவன் எழுந்து சாய்வாக அமர்ந்து கொண்டு, "ஆக, நான் ஊட்டிவிடாம சாப்பிட்டதுதான் சமி பேபிக்கு கோவமா? அப்படின்னா அத்தான் ரொம்ப சாரிடா. இனிமே எப்ப சாப்பிட்டாலும் உனக்கு ஊட்டிவிட்டுட்டுத்தான் சாப்பிடுவேன். சரியா... வா இப்ப பாலைக் குடிச்சிட்டு வந்து படு வா... நான் கூட வேற என்னமோ கோபமுன்னு நினைச்சேன்" என்று சிறு பிள்ளைக்குக் கூறுவது போல கூறி முடித்தான்.
அவன் சொல்லவும்தான் நாம் எதற்கு அவனிடம் கோபமாக இருந்தோம் இப்பொழுது என்ன பேசி வைத்திருக்கிறொம் என்பது புரிந்தது சம்ரிதிக்கு. தன் தலையில் தானே தட்டிக் கொண்டவள்,
"என்னமோ குழந்தைக்கு சமாதானம் சொல்ற மாதிரி சொல்றீங்க... நான் ஒன்னும் சின்ன புள்ள கிடையாதுத்தான். நீங்க பேச்சை மாத்தாதீங்க."
"யாரு நானா? நானா பேச்சை மாத்தினேன். நீ சொன்னதுக்குதான் பதில் சொன்னேன். சரி இப்ப நேரடியாவே விஷயத்துக்கு வரேன். நீ சொன்னதேதான். நானும் ஒன்னும் சின்னக் குழந்தை கிடையாது. நீ சொல்றதெல்லாம் நம்புறதுக்கு" நிதானமாகவே பதில் கொடுத்தான் மித்ரன்.
"ஐயோ அத்தான்... நான் எத்தனை தடவை தான் சொல்றது, அப்போ அப்பா இறந்த புதுசு... எனக்கு வேற எதுவுமே மனசுல நிக்கலை... அதான்"
"சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதே சம்ரிதி. மாமா இறந்தது உனக்குப் பெரிய துக்கம்தான். நான் இல்லைங்கல. ஆனா நீ தெளிவாகிட்ட... ஓரளவுக்காவது உன்னை நீயே தேத்திக்கிட்ட. அத்தையையும் நீ பார்த்துப்பேங்குற நம்பிக்கை வந்தப்புறம் தான் நானும் அம்மாவும் திருச்சியிலிருந்து கிளம்பினோம். ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு?"
"அதெல்லாம் பிரச்சனையில்ல. வேற என்னமோ நடந்திருக்கு. மாமா இறந்து ஆறு மாசம் வரைக்கும் நீ நார்மலா தான் இருந்த. அதுக்கப்புறம் தான் திடீர்ன்னு ஒரு நாள் மாமாவை தகனம் பண்ணின இடத்துக்கே நீ போயிருக்க. அங்க போய் உட்கார்ந்து அழுதிருக்க. அங்க இருந்த ஒரு பெரியவர் உன்னை சமாதானப்படுத்தி, பொண்ணுங்க இங்கெல்லாம் வரக் கூடதும்மான்னு சொல்லி உன்னை வீட்டுக்கு அனுப்பி வைச்சார். உண்மையா இல்லையா சொல்லு?" படபடவென்று மித்ரன் கேட்க அதிர்ந்து விழித்தாள் சம்ரிதி.
இந்த விஷயமெல்லாம் தன் தாயாருக்குக் கூடத் தெரியாதே. இதெல்லாம் எப்படி இவன் கண்டுபிடித்தான் என்று என்ன முயன்றும் சம்ரிதியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
"என்ன பார்க்குற? இதெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியுமுன்னா? மாமா இறந்ததுக்கு அப்புறம் உன்னையும் அத்தையையும் அப்படியே அம்போன்னு விட்டுட்டுப் போனா என் மனசாட்சியே என்னைக் காரித் துப்பும். நான் எவ்வளவோ சொல்லியும் அத்தை திருச்சி வீட்டை விட்டுட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு அந்த வீடு முழுக்க மாமாவோட நினைவுகள் நிரம்பி இருக்கு. அதனால ஓரளவுக்கு மேல நான் வற்புறுத்தலை. ஆனா உங்க ரெண்டு பேரோட பாதுகாப்பு? அதுக்குதான் பிரைவேட்ல செக்யூரிட்டி ச்ர்வீஸ் ப்ரொவைடர்ஸ் கிட்ட அக்ரிமென்ட் போட்டு மந்த்லி பேமென்ட் பேசிஸ்ல உங்களுக்கேத் தெரியாம உங்களைப் பாதுகாக்க ஆள் போட்டேன்."
"நீ எங்க போற? என்ன பண்ற? எல்லாத்தையும் என் கண்காணிப்பிலேயே வச்சிருந்தேன். ஆனா என்ன பண்ணி என்ன? எங்கே நான் கோட்டை விட்டேன்னு எனக்கே தெரியலையே. ஒருவேளை உன்னை... உன்னை... யாராவது... அதனால லூசுத்தனமா எதாவது யோசிச்சுகிட்டு என்னை வேண்டாமுன்னு சொன்னியா?" பரிதவிப்புடனே அவள் அருகில் வந்து கன்னம் பற்றிக் கேட்க,
"கொன்னு போட்டிருப்பேன் அத்தான். அப்படி எதாவது நட்ந்திருந்தா அவன் உயிர் என் கையால தான் போயிருக்கும்" ஒரு நொடிகூட இடைவெளியின்றி பட்டென பதில் வந்தது சம்ரிதியிடமிருந்து.
"இதான்... இதுதான் என் சம்ரிதி. சம்ரிதி அமைதியான பொண்ணுதான். ஆனா நிச்சயமா கோழை கிடையாது. அவளை அப்படி கோழையா எங்க மாமா வளர்க்கலை. ஆனா இந்த சம்ரிதி நடுவுல எப்படி காணாம போனா? நான் உன் கழுத்துல தாலி கட்டும்பொழுது கூட உன் கண்ணுல நான் சந்தோஷத்தைப் பார்க்கலை. எனக்கு எப்படி வலிச்சுது தெரியுமா சமிம்மா?
உன்னோட சம்மதமில்லாம உனக்கு நான் தாலி கட்டிட்டேனோன்னு எனக்கு இப்ப வரைக்கும் உறுத்திகிட்டே இருக்கு. கல்யாணம்தான் அப்படி அவசரக் கோலத்துல முடிஞ்சிடுச்சு. இனி ஆரம்பிக்கப் போற வாழ்க்கையாவது உன்னோட முழு சம்மதத்தோட சந்தோஷத்தோட நடக்கணுமுன்னு நான் நினைக்குறதுல என்ன தப்பு இருக்கு சொல்லு" கட்டிலில் அமர்ந்து அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டே கூறினான் மித்ரன்.
"நானேதானே சொல்றேன் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்ன்னு... அப்புறம் என்ன தயக்கம் அத்தான்" முணுமுணுப்பாகவே பதில் தந்தாள் சம்ரிதி.
"என்னால முடியலையே. ஜஸ்ட் லைக் தட் என்னை நீ இன்னோருத்திக்கு விட்டுக் கொடுத்ததை என்னால ஒத்துக்க முடியலையே. சின்ன வயசுலயிருந்து உன்னை மட்டுமே நினைச்சுக்கிட்டு இருந்த மனசு அதை ஒத்துக்க மாட்டேங்குதே. நீ எப்போ எனக்குள்ள வந்த தெரியுமா? என்னோட ஏழாவது வயசுல நீ என் மனசுக்குள்ள வந்த சமிம்மா." அப்பொழுதேவா என்பதுபோல் வியந்து பார்த்தவளைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே தொடர்ந்தான் மித்ரன்.