"அத்தான்"
"இரு நான் பேசி முடிச்சிடுறேன். அதுக்கப்புறம் நீ பேசு. எல்லாருக்கும் அவங்கவங்க கல்யாணத்தைப் பத்தி ஆயிரம் கனவுகள் இருக்கும். என்னோட ஒரே கனவு, ஆசை என்ன தெரியுமா? நான் உன் கண்ணைப் பார்த்துகிட்டே உன் கழுத்துல தாலி கட்டணும். அந்தக் கண்ணு ரெண்டும் காதலோட என்னைப் பார்க்கிறதை நான் பார்த்துக்கிட்டே, உன்னை என்னோட சரிபாதியா ஆக்கிக்கிடணும்னு ஆசைப்பட்டேன்.
ஆனா அது நடக்கலை. நான் தாலி கட்டும் போது உன் கண்ணுல தெரிஞ்சது பயம் பயம் பயம் மட்டும் தான். தாலி கட்டுறது நான்தான்னு உனக்குப் புரிஞ்சுதா இல்லையான்னு கூட நான் யோசிச்சிருக்கேன். இப்படி நான் ஆசைப்பட்டது தப்பா? அந்த அளவுக்குக் கூட எனக்குத் தகுதி இல்லையா?
மனசு வலிக்குது டா... ரொம்ப வலிக்குது. என்னால முடியல. இதை உள்ளுக்குள்ளேயே போட்டுப் புழுங்கிப் புழுங்கி எனக்குத் தலையே வெடிச்சுடும் போல இருக்கு. எனக்கு தயவுசெய்து சொல்லுடா... என்ன நடந்துச்சுன்னு." தான் குறித்த ஒரு மாதக் கெடுவின் தொடக்கமாகத் தன்னுடைய ஆட்டத்தை சம்ரிதியிடமிருந்தே தொடங்கினான் மித்ரன்.
“அத்தான் ஏன் தகுதி அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க.” அவன் கன்னத்தை தன் இரு கரங்களால் பற்றிக் கொண்டவள், “எனக்குத்தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க எந்தத் தகுதியும் இல்ல. நான் உங்களோட இந்த வளர்ச்சியைப் பார்த்து, உயரத்தைப் பார்த்து பயந்துட்டேன். எனக்கு உங்க மாமா பொண்ணுங்குறதைத் தவிர வேற என்ன தகுதி இருக்கு?”
பேசிக் கொண்டே நிலவினைப் பார்த்தவள், “நிலா வானத்துல இருந்தா தானே அத்தான் அழகு. அது தரைக்கு வந்தா அதோட தன்மையை அது இழந்துடாதா? என்னோட ஆசைக்காக அதை என் கைக்குள்ள சுருக்குறது தப்புன்னு நினைச்சேன். நாம ஆசைப்பட்டவங்க எந்தக் கஷ்டமும் படாமல் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறதும் காதல்தான்.
நீங்க சந்தோஷமா இருக்குறதைப் பார்த்துக்கிட்டே உலகத்துல எங்காவது ஒரு மூலைல வாழ்ந்துட்டுப் போயிடலாமுன்னு நினைச்சேன். ஆனா உங்க உலகமே நாந்தான்னு இப்பப் புரிஞ்சுக்கிட்டேன். இன்னொரு தடவை நீ என்னைக் காதலிக்கவே இல்லையான்னு கேட்டீங்க கொன்னுடுவேன்… சொல்லிட்டேன்.” காதலாக ஆரம்பித்துக் கோபமாக முடித்தாள் சம்ரிதி.
ஒருவேளை இவள் கூறுவது போலத்தானோ, நாம் தான் தேவையில்லாமல் நடுவில் குழப்பிக் கொண்டோமோ என்றே முதலில் எண்ணத் தோன்றியது மித்ரனுக்கு. ‘அப்படியென்றால் திருமணம் முடிந்ததற்கு அவளுக்கு சந்தோஷமாகத் தானே இருந்திருக்க வேண்டும். ஆனால் இவள் முகத்தில் அப்பொழுது சந்தோஷத்திற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லையே. இவள் எதையோ மறைக்கிறாள்’ மித்ரனின் மனது நம்ப மறுத்தது. ‘இனி இவளிடம் கேட்பது வீண். வேற என்ன பண்ணலாம் என்று யோசிப்போம்’ யோசனையாக அவளைப் பார்த்துக் கொண்டே கரையேறுவதற்காக ப்ளோட்டரிலிருந்து தண்ணீருக்குள் உடலைத் திருப்பியவாறு இறங்கினான்.
அதைப் பார்த்த சம்ரிதிக்கு ஏனோ அவன் சட்டென்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டதாகத் தோன்றியது. “அத்தான்” என்று அலறியவள் தானும் தண்ணீருக்குள் குதித்திருந்தாள். நாம்தான் நீச்சலில் அரைகுறை, அவன் அனாயாசமாக நீச்சலடிப்பான். சர்பிங், ஸ்கீயிங் போன்ற அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தவன் என்பதெல்லாம் மறந்தே போனது பெண்ணுக்கு.
மித்ரனைக் காப்பாற்றுவதாக நினைத்து நீருக்குள் குதித்தவளைக் கடைசியில் அவன் தான் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அவள் மூழ்கும் அளவுக்கு இருந்த தண்ணீரில் காலை கீழே ஊன்ற முடியாமல் தவிக்க மித்ரன் தான் அவளை இடையோடு சேர்த்துத் தூக்கிப் பிடித்திருந்தான்.
அவள் முகத்தைப் பார்க்கப் பார்க்க பொங்கி வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு வாய்க்குள் அடக்கியவன், “இப்ப எதுக்குடி தண்ணிக்குள்ள குதிச்ச? நான் மேல ஏறத்தானே வந்தேன், அதுக்கு எதுக்கு நீ அந்தக் கத்து கத்திட்டு குதிச்ச?”
அவனை சராமாரியாக அடித்துக் கொண்டே, “சொல்லிட்டு செய்ய மாட்டீங்க. நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா” சொல்லிக் கொண்டே அடிப்பதையும் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
அவள் அடிகளைத் தவிர்ப்பதற்காக அங்குமிங்கும் தன் தோள்களை நகர்த்திக் கொண்டிருந்தவன் சற்று நேரம் கழித்தே உணர்ந்தான் அவன் கைகளுக்குள் அகப்படும் மென்மையை. கைகள் அவளிடையின் மென்மையை வேகமாக ஆராய, கண்களோ அவளை மொத்தமாக மேய்ந்து கொண்டிருந்தது.
தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்தவன் சட்டென்று விளையாட்டை நிறுத்திவிடவும் கேள்வியாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் சம்ரிதி. அந்தக் கண்களிரண்டும் தன் மேனியில் பயணித்த இடங்களைப் பார்த்து உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்ததுப் பெண்ணவளுக்கு. சற்றுத் தாமதமாகவே தன் வெற்றிடையில் அவன் கரத்தின் வெப்பத்தையும் அழுத்தத்தையும் உணர்ந்தாள் அவள்.
அவளை மேலும் தன் மீது மொத்தமாக சாய்த்துக் கொண்டவன் கரகரத்தக் குரலில், “சமி கிஸ் மீ” என்றான். அதிர்ந்து விழித்தவள் “ஹ்ம்ம்” என்க, “பேபி கிஸ் மீ” என்றான் மீண்டுமாக.
அந்தக் குரல் பேதைக்குள் வித்தை காட்ட, மெல்ல அவன் இதழின் மேல் தன் இதழைப் பொருத்தினாள். கண்ணோரம் சிரிப்பில் சுருங்க அவள் இதழ்களைத் தனதாக்கிக் கொண்டான் மித்ரன். நீண்ட இதழ் முத்தம் நீண்டுகொண்டே இருந்தது. யாரோ வருவது போல் அரவம் கேட்கவுமே அவளை விட்டு விலகினான் மித்ரன். இன்னும் மோன நிலையிலேயே இருந்தவளின் காதோரம் குனிந்தவன், “இதுவே தெரியலை… இதுல அன்னைக்கு யாரோ மேட்டரைப் பத்தியெல்லாம் பேசினாங்க. அது யாருன்னு தெரியுமா பேபி உனக்கு?” சிரித்துக் கொண்டே ரகசியக் குரலில் வினவ,
அவன் மார்பில் கைவைத்து அவனைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்டவள், அங்கிருந்த கைப்பிடியைப் பற்றிக் கொண்டு மேலேறி வெளியே வந்தாள்.
“நான் உங்க டிரெஸ்சைப் போட்டுக்கிட்டு வீட்டுக்குப் போறேன். நீங்க இப்படியே வீடு வந்து சேருங்க. இதுதான் உங்களுக்குப் பனிஷ்மெண்ட்.” சொன்னவள் அவன் உடுப்புகளைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்த உடை மாற்றும் அறைக்குள் நுழைந்திருந்தாள்.
அவள் வெளியே வரும்வரைப் பொறுத்தவன், “எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லப்பா… நம்ம லிசா இல்ல லிசா, அதான் நீ கூட அவ பார்வையே சரியில்லைன்னு சொல்லுவியே அவ வீடு இந்தப் பக்கம்தான்னு நினைக்கிறேன். நான் வேணா அவ வீட்டுக்குப் போய் வேற டிரெஸ் வாங்கிக்கவா” கண்ணடித்துக் கேட்டான்.
“ஹையடா… அவ வீடு வரைக்கும் கண்டுபுடிச்சு வைச்சாச்சா? போங்க சாமி போங்க… எங்கேயோ போங்க என்னமோ பண்ணுங்க. நான் வீட்டுக்குப் போறேன்” சொன்னவள் நடையைக் கட்டிவிட்டாள்.
“பொண்டாட்டிக்குப் பொறாமை வருமுன்னு பார்த்தா கோவம் வந்திடுச்சு போலயே! ஹேய் பொண்டாட்டி நில்லுடி கன்னிப் பையனை இப்படித் தனியா விட்டுட்டுப் போகலாமா?” இவனும் கத்திக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.
இவர்கள் இருவரும் பேச்சு மும்முரத்தில் அங்கிருந்த மித்ரனின் அலைப்பேசி அதிர்ந்ததையோ, அதில் விஸ்வநாதனின் கைப்பேசி எண் ஒளிர்ந்ததையோ கவனிக்கவில்லை.