பிரான்மலை
பாரிக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அழகும் அறிவும் நிரம்பின அவர்களுக்குக் கபிலர் தமிழறிவு ஊட்டினார். பாரியினிடம் வந்த புலவர்கள் அவ்விருவருடைய அறிவையும் கண்டு வியந்தார்கள். அவர்கள் போகும் இடங்களிலெல்லாம் பாரியின் புகழோடு அவனுடைய பெண்களின் புகழையும் பரப்பினார்கள். பாண்டிய மன்னனுக்குப் பாரி மகளிரின் பெருமை தெரிந்தது. அவர்களை மணந்துகொண்டால் பாரியின் உறவும் கிடைக்கும் என்று எண்ணினான். அவனுக்கு முன்பே மணமாகி-யிருந்தது; பட்டத்தரசி ஒருத்தி இருந்தாள். பல பெண்களை மணப்பது மன்னர்களின் வழக்கமாக இருந்ததால் அவனுக்குப் பாரி மகளிரின்மேல் விருப்பம் உண்டாயிற்று.
அவன் பாரிக்கு ஓலை போக்கினான். இரு பெண்களையும் தனக்கு மணம் புரிவிக்க வேண்டுமென்று ஓலை கூறியது. பாரி அதைக் கண்டவுடன் சினந்தான். அவன் மகளிராகிய அங்கவை சங்கவை என்னும் இருவரும், “அரசர் அந்தப்புரத்தில் நூறு பேரோடு சேர்ந்து நாங்கள் வாழ விரும்பவில்லை” என்று தெரிவித்தார்கள். வந்த தூதுவன் மறுப்புடன் மீண்டு சென்றான்.
பாரியின் புகழைக் கேட்டுப் பொறாமை அடைந்திருந்தான் பாண்டியன். ஆகவே அவன் தன் மகளை மணம் செய்து தர மறுத்ததையே காரணமாக வைத்துக்கொண்டு அவனோடு போர் தொடுக்க எண்ணினான். இந்தச் செய்தி சோழனுக்கும் சேரனுக்கும் எட்டியது. அவர்களும் பாரியின் மேன்மையை உணர்ந்து பொறாமை கொண்டவர்களே. அவர்களுக்கும் பாரியை அடக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. காரணம் இல்லாமல் அவன் மேல் போர் தொடுக்கலாமா? பாண்டியன் செய்த காரியத்தையே அவர்கள் செய்தார்கள். தனித்தனியே பாரியின் மகளிரை மணக்க வேண்டுமென்று தூது விட்டார்கள்; மறுப்பே விடையாக வந்தது.
பாரியை வெல்லவேண்டும் என்ற கருத்துத் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர்களாக விளங்கிய மூவருக்கும் உண்டாகிவிட்டது. அவர்கள் ஒன்றுகூடி அவனோடு போர் செய்யத் தமக்குள் ஆலோசனை செய்தார்கள்; போர் முரசு கொட்டினார்கள்.
பாரி தன் படைவீரர்களை யெல்லாம் ஒன்று கூட்டினான். நாட்டிலுள்ள ஆடவர்களில் வலிமையும் காளைப் பருவமும் உடையவர்கள் படையில் சேர்ந்தார்கள். நாடு முழுவதையும் காப்பதைவிடப் பறம்பு மலையைக் காப்பாற்றுவது எளிது என்று தோன்றியது. ஆகவே படை முழுவதையும் அம்மலையின் மீது, வைத்துக்கொண்டு அரண்களையெல்லாம் செப்பம் செய்தான் பாரி.
மூவேந்தர் படைகளும் பறம்புநாட்டின் எல்லேயை அடைந்தன. பேருக்கு ஒரு சிறு படை ஆங்கே நின்று அப்படைகளை எதிர்த்தது. சில நாழிகைகளில் அது பகைப் படைகளுக்கு வழி விட்டுவிட்டது. அதைக கண்டு மும்மன்னர்களுக்கும் பெருமகிழ்ச்சி உண்டாகியது. எதிர்ப்பு இல்லாமலே பறம்பையும் பாரியையும் கைவசப்படுத்தி விடலாம் என்று எண்ணினார்கள். அதற்கு ஏற்றபடி அவர்கள் நாட்டுக்குள்ளே நுழைந்து செல்கையில் யாரும் எதிர்க்கவில்லை. பறம்பு மலையை அடைந்தார்கள். அந்த மலையின்மேல் பாரி படையுடன் தங்கியிருப்பதை அறிந்தார்கள்.
மலையின்மேல் ஏறுவதற்குக் குறுகிய வழிகள் சில இருந்தன. ஆனால் அந்தப் பெரும்படை முழுவதும் எளிதில் அவற்றின் வழியே ஏற இயலாது. அன்றியும், பகைப்படை அடிவாரத்துக்கு வந்துவிட்டதை அறிந்த பாரியின் படைவீரர்கள் மேலிருந்து கற்களை உருட்டினர்கள். அவை கீழேயிருந்த படைகளின் மேல் வந்து தாக்கின. மலையின்மேல் ஏறுவது எளிதாகத் தோற்றவில்லை. கீழிருந்து அம்பை எய்தார்கள். அம்புகளை யாரைக் குறிபார்த்து எய்வது? மேலுள்ள வீரர்கள் மறைந்து நின்று சிறிய துளைகளின் வழியே அம்பை எய்தார்கள். அவை பலரைக் கீழே வீழ்த்தின. தாம் நினைத்த வண்ணம் பாரியை எளிதில் வெல்வது இயலாத காரியம் என்பதை இப்போது முடிமன்னர்கள் உணர்ந்தார்கள்.
மூவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். மலையைச் சுற்றித் தங்கள் படையை நிறுத்தி முற்றுகையிடுவதென்றும், கீழிருந்து உணவுப் பொருள் மேலே செல்ல முடியாமல் தடுக்க வேண்டுமென்றும், நாளடைவில் உணவில்லாமல் மேல் உள்ளவர்கள் தாமே சரணடைவார்கள் என்றும் நினைத்தார்கள். அதன்படியே படைகள் நின்றன.
மேலே பாரியும் கபிலரும் படைவீரர்களும் இருந்தார்கள். அவர்கள் தம் கையில் சேமித்து வைத்திருந்த உணவுப் பண்டங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தினார்கள். மலையின்மேல் மூங்கில்கள் முற்றியிருந்தன. அவற்றில் விளைந்த நெல்லைத் தொகுத்து அரிசியாக்கிச் சோறு சமைத்தார்கள். இனிய பலாப்பழங்களை உண்டு பசியாறினார்கள். பலாக்கொட்டைகளை மாவாக்கி அதிலிருந்து உணவுப் பண்டங்களைச் செய்து உண்டார் கள். வள்ளிக் கிழங்குகளைப் பறித்தெடுத்துச் சுட்டுத் தின்றார்கள். மிகுதியாகத் தேனடைகள் இருந்தமையால் இனிய தேன் குடம் குடமாகக் கிடைத்தது. பல பல சுனைகளில் தெளிந்த நீர் இருந்தது. ஆகவே, கீழிருந்து உணவுப் பண்டம் வாராமையால் அவர்களுக்கு எந்த இடையூறும் நேரவில்லை.
சில மாதங்கள் முற்றுகை நடந்து கொண்டிருந்தது. மன்னர்கள், மேலே இருப்பவர்கள் எப்படி உண்டு வாழ்கிறார்கள் என்று அறியாமல் வியப்படைந்தார்கள். ஒரு நாள் அம்பிலே கோத்த ஓலையொன்று மேலிருந்து கீழே வந்தது. கபிலர் ஒரு பாடல் பாடி அனுப்பியிருந்தார். "மலைமேல் எங்களுக்கு மூங்கில் நெல் கிடைக்கிறது. பலாமரங்கள் கணக்கில்லாத பழங்களை வழங்குகின்றன. வள்ளிக் கிழங்குக்குப் பஞ்சமே இல்லை. எங்கே பார்த்தாலும் தேனடைகள் மலிந்திருக்கின்றன. வானத்தில் நட்சத்திரங்கள் இருப்பதைப்போலத் தெளிந்த நீர்ச் சுனைகள் பல இங்கே இருக்கின்றன. ஆகவே எங்களுக்கு உணவுப் பஞ்சம் இல்லை. நீங்கள் அங்கே ஒவ்வொரு மரத்துக்கும் ஒவ்வொரு யானையாகக் கட்டி வைத்தாலும் சரி, பல பல தேர்களைக் கொண்டுவந்து நிறுத்தினாலும் சரி, உங்களால் பறம்பு மலையைக் கைக்கொள்ள முடியாது” என்ற கருத்து அந்தப் பாட்டில் இருந்தது. அதைக் கண்டு சேர சோழ பாண்டியர்கள் ஒன்றும் தெரியாமல் விழித்தார்கள்.
கபிலர் ஒரு தந்திரம் செய்தார். கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அவற்றைப் பறக்கவிட்டுக் கீழே வயல்களில் விளையும் நெற்கதிர்களைக் கொண்டு வரும்படி செய்தார். அப்பறவைகள் கொண்டு வந்த நெல்லைக் கொண்டு சோறு சமைத்து அதையும் உண்டார்கள் பாரியின் வீரர்கள்.
பல காலம் முற்றுகையிட்டிருந்தாலும் உணவுக் குறைவு மேலே இருப்பவர்களுக்கு நேராது என்பதை மன்னர்கள் அறிந்து, தம் படைகளை மீட்டுக்கொண்டு தம் ஊரை அடைந்தார்கள். அவர்களுக்கு மனத்துக்குள் கோபம் மூண்டாலும் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டார்கள். போன பிறகும் பாரியைத் தொலைக்க வஞ்சகமாக ஏதாவது வழி உண்டா என்று ஆராய்ந்தார்கள்.
பாரியிடம் புலவரும் பாணரும் விறலியரும் தடையின்றிப் பரிசு பெற்றுச் செல்வதைத் தமிழுலகம் நன்கு அறிந்திருந்தது. முடி மன்னர் மூவரும் அறிந்திருந்தார்கள். அதனால், யாழ் வாசிக்கத் தெரிந்த சிலரை அழைத்துத் தம் கருத்தை முடிக்கும் படி ஏவினார்கள். அவ் வஞ்சப் பாணர்கள் பாரியிடம் சென்று யாழிசையாலும் பாட்டாலும் அவன் அன்பைப் பெற்றனர். ஒரு நாள் மலைவளம் காணவேண்டும் என்று அவனுடன் சென்றனர். கபிலர் அப்போது வெளியூர் சென்றிருந்தார்.
பறம்பு மலையின்மேல் மரங்கள் அடர்ந்த சூழலில் அந்த வஞ்சகர்களுடன் பாரி நடந்து சென்றான். அப்போது அந்தக் கொடுஞ் செயலாளரில் ஒருவன் பாரியை வாளால் துணித்து வீழ்த்திவிட்டான். பின்பு அந்த வஞ்சகர்கள் தம் வேடத்தை மாற்றி ஓடி விட்டார்கள்.
பொய்யாது பெய்த மேகம் வறண்டது. புலவர்களுக்கு வற்றாது நல்கிய அருவி வற்றியது. பறம்பு நாடு மட்டுமா கண்ணீர் வடித்தது? தமிழ்நாடு முழுவ துமே பாரியின் மறைவுக்காகப் புலம்பியது. கபிலர் வெளியூரிலிருந்து ஓடி வந்தார். உயிருடன் தம் நண்பனைக் காண முடியாததற்காக அடித்துக்கொண்டு அழுதார். தாமும் உலக வாழ்வை நீத்துவிடவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ஆனாச் பாரியின் மகளிர் இருவரையும் தக்க இடத்தில் மனம் செய்து கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தால் அவ்வாறு செய்யவில்லை.
பாரி மறைந்த பிறகு பகை மன்னர் அவன் நாட்டைக் கைப்பற்றத் தொடங்கினர். அதனை அறிந்த கபிலர் அங்கவை, சங்கவை என்னும் இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே புறப்பட்டுவிட்டார். சில வேளிர்களிடம் சென்று அப்பெண்களை மணம் புரிந்துவ்கொள்ளும்படி கேட்டார். பல காரணங்களால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். கடைசியில் மனம் வெறுத்துப்போன அச்சான்றோர் இரண்டு பெண்களையும் ஒரு நல்ல குடும்பத்தில் அடைக்கலமாக ஒப்பித்துவிட்டு, ஒருவரும் அறியாமல் பெண்ணையாற்றங்கரையில் பட்டினி கிடந்து உயிர் நீத்தார்.
சில நாட்களுக்குப் பின்பு தமிழ்ப் புலமையிற் சிறந்த மூதாட்டியாகிய ஒளவையார் அப்பெண்கள் இருக்குமிடத்தை அறிந்து, மலையமான் திருமுடிக்காரியின் மரபில் வந்த ஒருவனுக்கு அவர்களை மணம் முடித்துவைத்தார்.