பஞ்சாமிர்தம் சாப்பிட்டவர்களுக்குப் பழனி மலை நினைவுககு வராமல் போகாது. பழனி மலையின்மேல் முருகன் கோயில் கொண்டிருக்கிறான். இப்போது பழனி என்ற பெயர் மலைக்கும் அதன் அடிவாரத்திலுள்ள ஊருக்கும் சேர்ந்து வழங்குகிறது. பழைய காலத்தில் மலைக்குப் பொதினி என்று பெயர்; ஊருக்கு ஆவிநன்குடி என்று பெயர். பொதினி என்பதே பிற்காலத்தில் பழனி என்று மாறிவிட்டது.ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் பெயர். அவர்கள் அரசாண்ட இடம் ஆதலால் ஆவிநன்குடி என்று ஊருக்குப் பெயர் வந்தது. ஆவி, வையாவி என்று இரு வகையிலும் ஆவியர் குல மன்னர்களை வழங்குவதுண்டு. ஆதலால் வையாவிபுரி என்றும் சொன்னார்கள்;அதுவே நாளடைவில் வையாபுரி என்று மாறியது.
அந்த ஆவியர் குலத்தில் வந்தவன் பேகன் என்னும் குறுநில மன்னன். பாரியைப்போல அவனும் ஒரு வேள். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சொல்லுவார்கள். வையாவி ஊரில் உள்ள அரசனாகிய பெரிய பேகன் என்பது பொருள்.
பேகன் சிறந்த கொடையாளி. புலவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல். யாழை வாசித்துப் பாடும் பாணர்கள் வருவார்கள். அவன் அரண்மனையில் பல நாள் தங்குவார்கள். அவர்களுடைய இசையின்பத்தை நுகர்ந்து களிப்பான் பேகன். பிறகு பலவகைப் பரிசில்களை அளிப்பான். பொன்னாலாகிய தாமரைப் பூவை அவர்கள் அணியும்படியாகத் தருவான். அந்தக் காலத் தில் பாணர்களுக்குப் பொற்றாமரை அளிப்பது வழக்கம். பாணர்களுடைய மனைவிமார்கள் ஆடுவார்கள்; பாடுவார்கள். அவர்களுடைய ஆடல் பாடல்களையும் கண்டு மகிழ்வான். அவர்களுக்குப் பலவகை அணிகலன்களைப் பரிசளிப்பான். சில சமயங்களில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் தேரையும் அளிப்பதுண்டு.
சங்க காலப் புலவர்களில் தலைமையும் புகழும் பெற்றவர் கபிலர். அவர் பல முறை பேகனிடம் வந்து சில நாள் தங்கிச் சென்றார். கபிலர் பரணர் என்று சேர்த்துச் சேர்த்துச் சொல்வார்கள். கபிலரைப் போலவே பரணரும் பெருமதிப்பை உடையவர். அவரும் பேகனிடம் வந்தார். வேறு புலவர்களும் அவனை நாடி வந்தார்கள்; அளவளாவினார்கள்; பாடினார்கள்.
தமிழ்ப் புலவர்களிடம் மிகவும் மதிப்பு வைத்துப் பழகினான் பேகன். பொதினி மலையின்மேல் இருந்த திருக்கோயிலில் முருகன் எழுந்தருளியிருந்தான். மலையைச் சுற்றி வாழ்ந்த குறவர்கள் இடைவிடாமல் அப் பெருமானைத் தொழுது வழிபட்டார்கள். மழை பெய்யாவிட்டால் அவனுக்குப் பூசை போடுவார்கள். மழை மிகுதியாகப் பெய்தாலும் மழை நிற்கவேண்டு மென்று கும்பிட்டு வழிபடுவார்கள். குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனிடத்தில் அந்நில மக்களாகிய அவர்களுக்குச் சிறிதும் தளராத நம்பிக்கை இருந்தது. பேகன் அவர்களுடைய நல்வாழ்வைக் கண்டு களித்தான். அவர்களுக்கு உதவிகளைச் செய்தான். அவனும் மலையின்மேல் உள்ள முருகப் பெருமானை அடிக்கடி வழிபட்டுவந்தான். ஆவியர் குலத்துக்குப் பொதினி மலை முருகனே வழிபடு கடவுளாக விளங்கினான்.
ஒருநாள் பேகன் வெளியிலே காலாற உலாவி வரப் புறப்பட்டான். அவனுடன் இரண்டு மெய் காவலர் சென்றனர். அது கார் காலம். மேகம் வான் முழுதும் கப்பிக் கொண்டிருந்தது. குளிர் காற்று மெல்ல வீசியது. நெடுந்துாரம் சென்றவன் மீண்டு தன் இருப்பிடத்தை நாடி வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கே ஓர் அழகிய காட்சியைக் கண்டான். மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில் ஓர் அழகிய ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. அவன் அங்கே சற்று நின்றான். மயில் தன் இயல்புப்படி சர் சர் என்ற ஒலி உண்டாகும்படி தோகையை அசைத்தது. அப்போது குளிர்ந்த காற்று வீசியது.
அவன் ஆடல் மகளிருக்குப் பல பரிசு தரும் வழக்கமுடையவன். இப்போது ஆடுகின்ற இந்த மயில் ஆடல் மகளிரைப் போலத்தான் ஒய்யாரமாக ஆடியது. ஆனல் சர் சர் என்று ஒலி வருவானேன்? அது குளிரால் நடுங்குவதனுல்தான் அந்த ஒலி எழுகிறதென்று அவனுக்குத் தோன்றியது. உடனே அவன் உள்ளத்தில் இரக்க உணர்ச்சி உண்டாயிற்று.'பாவம்! இதற்கு வாய் இருந்தால் தனக்குக் குளிர்கிறதென்பதை எடுத்துச் சொல்லும். இந்த ஒலியினால் புலப்படுத்துகிறது போலும்! என்ன அழகான மயில் இது நடுங்க நாம் பார்த்திருக்கலாமா?' என்று சிந்தனை செய்தான். அவன் முருக பக்தன் அல்லவா? மயில் முருகனுடைய வாகனம் ஆயிற்றே! அது குளிரால் நடுங்கும்படி விடலாமா? முருகனைச் சார்ந்த எல்லாப் பொருள்களும் புனிதமானவை. மயில் மெல்லிய பறவை; அழகிய புள்; முருகனுக்கு ஊர்தியாகும் சிறப்பைப் பெற்றது. அதற்கு இரங்காமல் இருக்கலாமா?
எப்படியாவது அதன் துயரத்தைப் போக்க வேண்டும் என்று எண்ணிய அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சட்டென்று தன் மேல் உள்ள விலை உயர்ந்த போர்வையை எடுத்தான். மயிலின் அருகே சென்று அதற்குப் போர்த்துவிட்டான்.
அருகில் இருந்தவர்கள், "என்ன இது!" என்றார்கள்.
"பாவம்! குளிரால் நடுங்கும் அதற்கு இதைப் போர்த்தினால் நல்லதென்று தோன்றிற்று!"
அவர்களுக்கு வியப்புத் தாங்கவில்லை. பேகன் செய்தது பேதைமைச் செயல் என்று அவர்கள் எண்ணவில்லை. பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு தாங்காத அவனுடைய உள்ளத்தின் உயர்வையே அவர்கள் நினைத்துப் பார்த்தார்கள். அவனுடைய வள்ளன்மையை அவர்கள் நன்றாக அறிந்தவர்கள். புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் வாரி வழங்குவதைக் கண்டு வியந்திருக்கிறார்கள். பாணர்களுக்குப் பரிசில்கள் தருவதைக் கண்ணாரக் கண்டு களித்திருக்கிருர்கள். கூத்தர்களுக்கு விருந்தும் விரும்பும் பொருளும் வழங்குவதைப் பார்த்து இறும்பூது அடைந்திருக்கிருர்கள். ஆனால் இப்போது அந்த வள்ளல் செய்த செயலை வள்ளன்மைச் செயல் என்பதா? ஆடும் மயிலுக்குப் பரிசு வழங்கியதாகச் சொல்வதா? உயிர்க் கருணை என்று சொல்வதா? மயில் போர்வையைப் போர்க்குமா என்று அவன் யோசிக்கவில்லை. அது விலை உயர்ந்த மேலாடை ஆயிற்றே என்று தயங்கி நிற்கவில்லை. ஒரு பறவைதன் நாட்டில் வாழும் பறவை—துன்புறுவதாக எண்னினான்; அந்தக் கணத்திலே அவன் மனம் உருகியது; ஒன்றையும் எண்ணாமல் மேலே உள்ள படாத்தை எடுத்துப் போர்த்திவிட்டான்.
மயில் பறந்து போய்விட்டது. காவலர் பேகன் அளித்த போர்வையை எடுத்துக் கொண்டனர். உலகுக்கு அறிவிக்கக் காவலர்களுக்கு ஓர் அதிசயச் செய்தி கிடைத்தது. பேகனுடைய உள்ளத்தின் மென்மையை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சியை அவர்கள் காணும் வாய்ப்பல்லவா பெற்றார்கள்? பேகன் அரண்மனையை அடைந்தான். அவனுடன் சென்றிருந்த காவலர்கள் அவன் மயிலுக்குப் போர்வையை அளித்த அதிசயத்தை யாவரிடமும் சொல்லிச் சொல்லி வியந்தார்கள். புலவர்களிடம் புகன்றார்கள். புலவர்களுக்கு ஒரு செய்தி தெரிந்தால் வாளா இருப்பார்களா? தம்முடைய பாவினால் பேகன் புகழை முழக்கினார்கள்.
பரணர் அந்த அரிய செயலைப் பாராட்டினார். "மயில் மேலாடையை உடையாக உடுக்குமா?அன்றி மேலே போர்வையாகத்தான் போர்த்துக் கொள்ளுமா? இது பேகனுக்குத் தெரியாதா?தெரியும். ஆனால் அந்தச் சமயத்தில் அவன் கருணை உள்ளம் உருகியது. தன் படாத்தை மயிலுக்கு அளித்துவிட்டான்" என்று பாடினார்.