கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் ….
- சாரல்
அத்தியாயம் 27
விடிந்தும் விடியாததுமாய் இருந்தது அந்தக் காலைப் பொழுது…
தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தாள் ரோஜா…
“ஏய் … ஜா… என்னடி பண்ணுது…? ஏன் இப்படி உருளுற…? அம்மாவைக் கூப்பிடட்டா…?”
“இல்லை கிருஷ்… எங்கம்மாப்பா இருந்திருந்தா, இந்நேரம் வளைகாப்பு முடிஞ்சு ஊர்ல எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருப்பாங்க தான…? எல்லாரும் வந்தாங்க, சாப்பிட்டுட்டு போயிட்டாங்க…அவ்வளவு தான் இல்லை…?”
“என்ன ஆச்சுடி உனக்கு…இங்க என்ன குறை…? எங்கம்மாக்கு நீன்னாதான் உசிரு…நீயே இப்படி ஃபீல் பண்ற…?”
“ஏன்டா இப்படி மீ கூட என்னை கோர்த்து விடற…? எனக்கும் மீ மட்டும் தான் உலகம்… இந்த உலகத்திலேயே உனக்கு அப்புறம் அவங்கதான் எனக்கு எல்லாம்… இன்ஃபேக்ட் சில டைம் உன்கிட்ட ஷேர் பண்ண முடியாத விஷயங்களை கூட அவங்க கிட்ட ஷேர் பண்ண முடியும்… ஆனா இது வேறடா…”
“இப்படி நான் ஒரு குழந்தைய சுமக்குற நேரத்துல, நான் கருவாகி பிறந்து வளர்ந்த என் வீட்டை ரொம்ப மிஸ் பண்றேன்…என் அம்மாவை இல்ல… இப்ப புரிஞ்சுதா…?”
மூக்கை பிடித்து ஆட்டியவள் கிருஷின் நெஞ்சிலேயே உறக்கம் கொள்ள, புரிந்தும் புரியாமலும் கிருஷ் முழித்து கொண்டிருந்தான்…
அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு, கீழே வந்தவன், நேராக சென்றது கிட்செனை உருட்டி கொண்டிருந்த வேதாவிடம் தான்…
“ஆளே இல்லாத ஊருல யாருக்கும்மா டீ ஆத்துற…?”
“ம்…….நான் பெத்து போட்ட எரும கிடாவும், வளர்த்து விட்ட எருமை கன்னுகுட்டியும் காலையில எழுந்ததுமே , கழநித் தண்ணி முகத்துலதான் முழிக்குங்க… அப்ப காலா காலத்தில கழநித் தண்ணியை காய்ச்சி வச்சாத்தானே ரெண்டு எருமைங்களையும் மேய்க்க முடியும் அதான்….”
“எப்படியோ நீ போடுற டீ கழநித் தண்ணின்னு ஒத்துகிட்டியே….”
“இது போதும் எனக்கு இது போதுமே…
வேறென்ன வேண்டும் , கழுவிய தண்ணி போதுமே…” பாடிக்கொண்டே நகர,
“காலையிலேயே வம்பு வளர்த்துகிட்டு… போட்டென்னா பாரு…”
“ரோ எங்கடா…? இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே…? உடம்பு சரியில்லையா…? எதுவும் பிரச்சனையா இருந்தா என்ன கூப்பிட வேண்டியது தானே… தண்டத்துக்கு பிறந்திருக்கு பாரு…முதல்ல மேயரது முக்கியம் உனக்கு”
மாடிக்கு செல்ல எத்தனித்தவரை நிறுத்தி….,
“தாய்க்கிழவி நில்லு… இன்னும் உனக்கு பதினாறு வயசு பருவ மங்கைன்னு நினைப்பா …. பாய்ஞ்சுகிட்டு படியேர்ற…? சொல்றதை கேளு ஃபர்ஸ்ட்….”
“அவள நாம இவ்வளவு கவனிச்சும் ,சொந்த ஊர சொந்த வீட்டை ரொம்ப மிஸ் பன்றாளாம்…அவ பெத்தவங்க இருந்திருந்தா கூட்டிட்டு போயிருப்பாங்கன்னு ரொம்ப ஃபீலிங்….தூக்கம் வராமல் புரண்டு இப்போ தான் தூங்குறா… இதுக்கு மேல எப்படித்தான் பார்த்துக்கிறது இந்த கிறுக்கிய…”
“வாய் மேலயே போடுவேன் , கிறுக்கின்னு சொல்லிட்டு இருந்தால்…., இதுலாம் புள்ளத்தாச்சியா இருந்திருந்தால் தான்டா தெரியும்… நீ வயித்துல இருக்கும் போது எங்க ஊரு மணியண்ணன் கடை இனிப்பு போண்டா வேணும்னு ஆசைப்பட்டென்னு , என் கோந்து கார் வச்சு கூட்டிட்டு போய் வாங்கி கொடுத்தாரு…”
“ புள்ளைக்கு அப்பனா பாசம் காட்டுற யார் வேணும்னாலும் இருந்திடலாம்டா ஆனா கடைசி வரை நல்ல துணையா இருக்க, கொஞ்சமாச்சும் அவள் இருக்கிற இடத்தில இருந்து யோசிக்க தெரிஞ்சிருக்கணும்… இது ரெண்டு பேருக்கும் பொருந்தும்… நாம குடுத்த வாழ்க்கையில தான் வனப்பா வாழுறாங்கிற இறுமாப்பு தெரியுது உன் பேச்சுல….இது நல்ல வளர்ப்புக்கு அழகு இல்லை…அவ உன்னை கட்டிக்கிடலன்னா நீ காலம் முழுக்க மொட்டை பையன் டா… ஒரு நாயி உன்னை மதிச்சிருக்காது… இப்ப குடும்பஸ்தனா யோக்கியனா நடந்துக்க, இன்னும் நான் என்னுதுதான் பெருசுன்னு நினைப்போட திரிஞ்ச , ரோ கிட்ட, உன்னை டைவேர்ஸ் பண்ண சொல்லிடுவேன் பார்த்துக்க….”
“ஆனா ஒன்னு , அவ கிறுக்கி தான்டா…. இவ்வளவு நாளா என்னடி ஆசைன்னு வளைச்சு வளைச்சு கேட்டுட்டு இருந்தேன்… அப்படியெல்லாம் கேட்ட என்கிட்ட சொல்லாம கேணகிறுக்குப்பய உன்கிட்ட சொன்னா பார்த்தியா…? என்ன செய்யலாம் அவளை…?”
“இந்தா பாரு தாய்க்கிழவி , சரி தப்பு பண்ணிட்டேன் நான் ஒத்துக்கிறேன்… அதுக்குன்னு கேணை கோனைன்னு கழுவி ஊத்தாம ,என்ன செய்யறதுன்னு சொல்லு… உன் ஆளு அவர் ரேஞ்சுக்கு காரு வச்சு அழைச்சுட்டு போனாரு…, என் ரேஞ்சுக்கு கப்பல் வச்சு அழைச்சுட்டு போலாம்னா , இவ ஏரியால கடல் இல்லை… பேசாம குழி தோண்டி கால்வாய் அமைச்சுரவா…?”
“ஆமாம் பெருசா காவாய் நோண்ட வந்துட்டான்….,ஒரு வாய்க்கால் கூட நொண்ட முடியாது ,வாயைப் பாரேன்…”