• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கரிப்பு மணிகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முன்னுரை

1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் வாழும் மீனவர் வாழ்க்கையை ஆராய்ந்து, ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும், திறனாய்வாளருமாகிய மதிப்புக்குரிய நண்பர் திரு.சிட்டி (சுந்தரராஜன்) அவர்களைச் சந்தித்தேன். அவர் நான் தூத்துக்குடியில் தங்கியிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு அன்புடன் விசாரித்தார். அத்துடன் "நீங்கள் தூத்துக்குடிப் பகுதியில் இன்னும் ஓர் களத்தை ஆராய்ந்து நாவல் எழுத வேண்டும். மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும் கூட உயிர் வாழ இன்றியமையாத ஓர் பொருள் உப்பு. நீர், காற்று, வெளிச்சம் போன்று இது இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கும் விலையின்றிக் கிடைக்க வேண்டும் என்று காந்தியடிகள் உப்பை முன்னிட்டு நாட்டு விடுதலைக்கான அறப்போரைத் துவக்கினார். நீங்கள் உப்பளங்களைச் சென்று பார்த்தும் ஓர் நாவல் புனைய வேண்டும்" என்று கூறினார். நான் ஒரு நாவலை எழுதி முடிக்கு முன் அநேகமாக இவ்விதமான தூண்டல்களுக்கான வாக்குகள் அடுத்த முயற்சியைத் துவக்க என் செவிகளில் விழுந்துவிடும். இம்முறை இது வெறும் வாக்கு என்று கூடச் சொல்ல மாட்டேன். மிகவும் அழுத்தமாகவே பதிந்து விட்டது. எனவே, 'அலைவாய்க் கரையில்' என்ற நாவலை முடித்த கையுடன் நான் தூத்துக்குடிக்குப் பயணமானேன். தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன்.

இதற்கு முன் நான் உப்பளங்களைக் கண்டிருந்திருக்கிறேன். வறச்சியான காற்றும் சூரியனின் வெம்மையும் இசைந்தே உப்புத் தொழிலை வளமாக்குகிறதென்ற உண்மையைப் உப்புப் பாத்திகளில் கரிப்பு மணிகள் கலகலக்கும் விந்தையில் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் இந்த வியப்புக்கப்பால் உப்புப் பாத்திகளில் உழைக்கும் தொழிலாளரைப் பற்றி எண்ணும் கருத்து அப்போது எனக்கு இருந்ததில்லை. இப்போது நான் அந்த மனிதர்களைத் தேடிக் கொண்டு உப்பளங்களுக்குச் சென்றேன்.

உப்புக் காலம் இறுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த புரட்டாசிக் கடைசியின் அந்த நாட்களிலேயே, உப்பளத்தின் அந்தப் பொசுக்கும் வெம்மையில் என்னால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க இயலவில்லை. கண்களுக்கெட்டிய தொலைவுக்குப் பசுமையற்ற - உயிர்ப்பின் வண்ணங்களற்ற வெண்மை பூத்துக் கிடந்தது. வெண்மையாகப் பனி பூத்துக் கிடந்திருக்கும் மலைக்காட்சிகள் எனது நினைவுக்கு வந்தாலும் எரிக்கும் கதிரவனின் வெம்மை அந்த நினைப்பை உடனே அகற்றிவிட்டது. அங்கே காலையிலிருந்து மாலை வரையிலும், கந்தலும் கண் பீளையுமாக, உப்புப் பெட்டி சுமந்து அம்பாரம் குவிக்கும் சிறுவர் சிறுமியரையும், பெண்களையும், பாத்திகளின் உப்பின் மேல் நின்று அதை வாரும் ஆண்களையும் கண்டேன். அப்போது எங்கோ ஃபிஜித் தீவினில் கரும்புத் தோட்டத் தொழிலாளர் நிலையை நினைந்துருகித் தன் கண்ணீரையும் பாக்களாக இசைத்த பாரதியின் வரிகள் என்னுள் மின்னின. அந்நியன் நாட்டை ஆளும் நாட்களல்ல இது. நாள்தோறும் எங்கெங்கெல்லாமோ பல மூலைகளிலும் மக்கள் உரிமைகளும், நியாயமான சலுகைகளும், நியாயமல்லாத சலுகைகளும் கோரிக் கிளர்ச்சிகள் செய்வதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்துவதும், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாடிக் கட்டிடங்களில் குளிர்ச்சியான இதம் செய்யும் அறையில் அமர்ந்து கோப்புக் காகிதங்களில் கையெழுத்துச் செய்யும் அலுவலகக்காரர்கள், மருத்துவ வசதிகளும், ஏனைய பிற சலுகைகளுமே மாதத்தில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் பெறுகின்றனர். சுதந்தர இந்தியாவில் மக்கட் குலத்துக்கு இன்றியமையாததோர் பொருளை உற்பத்திச் செய்வதற்கு உழைக்கும் மக்கள், உயிர் வாழ இன்றியமையாத நல்ல குடிநீருக்கும் திண்டாடும் நிலையில் தவிப்பதைக் கண்ட போது எனக்கும் குற்ற உணர்வு முள்ளாய்க் குத்தியது. ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் சுட்டெரிக்கும் வெய்யிலில் பணியெடுக்கும் இம்மக்களுக்கு, வாராந்திர ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளும் கூடக் கூலியுடன் கிடையாது. கிடைக்கும் கூலியோ உணவுப் பண்டங்களும், எரிபொருளும் உச்சியிலேறி விற்கும் இந்த நாட்களில், இம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே போதுமானதாக இல்லை. எல்லாவற்றையும் விட மிகக் கொடுமையானதும் ஆனால் உண்மையானதுமான தென்னவென்றால், உப்பளத் தொழிலாளி, இருபத்தைந்து ஆண்டுகள் பணியெடுத்திருந்தாலும், தனது வேலைக்கான நிச்சயமற்ற நிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறான் என்பதேயாகும். ஒரு சாதாரண குடிமகனுக்கு, ஒரு சுதந்திர நாட்டில் நியாயமாகக் கிடைக்க வேண்டிய எந்த வசதியையும் உப்பளத் தொழிலாளி பெற்றிருக்கவில்லை. வீட்டு வசதி, தொழிற்களத்தில் எரிக்கும் உப்புச் சூட்டிலும் கூடத் தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி, ஓய்வுக்கான விடுப்பு நாட்கள், முதுமைக்கால காப்பீட்டுப் பொருள் வசதி, குழந்தைகள் கல்வி, உப்புத் தொழில் இல்லாத நாட்களில் வாழ்க்கைக்கான உபரித் தொழில் ஊதிய வசதிகள் எதுவுமே உப்பளத் தொழிலாளிக்கு இல்லை என்பது இந்த நாட்டில் நாகரிகமடைந்தவராகக் கருதும் ஒவ்வொருவரும் நினைத்து வெட்கப்படவேண்டிய உண்மையாக நிலவுகிறது.

உப்பளத்து வறட்சி ஒவ்வொரு தொழிலாளிக்கும் உடல் நலத்துக்கு ஊறு செய்கிறது. கை கால்களில் கொப்புளங்கள் வெடித்து நீர் வடிந்து புண்ணாகின்றன. கண்களைக் கூசச் செய்யும் வெண்மை, கண் பார்வையை மங்கச் செய்கிறது. பெண்களோ அவர்களுடைய உடலமைப்பு இயல்புக்கேற்ற வேறு பல உடற்கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். தூத்துக்குடி வட்டகையில் உப்பள நாட்கூலி பல தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு ஆண்களுக்கு ரூ. 6-75, பெண்களுக்கு ரூ. 4-40 சிறுவர் சிறுமியருக்கு ரூ. 3-00 அல்லது 2-50 என்று பொதுவாக நிர்ணயித்திருக்கின்றனர். (அரசு நிர்ணய கூலி இதைவிடக் குறைவு என்று கேள்விப்பட்டேன்) ஆனால் இந்த நிர்ணயக் கூலி பெரும்பாலான தொழிலாளருக்கு முழுதாய் கிடைப்பதில்லை. ஏனெனில் தொழிலாளர், கங்காணி அல்லது 'காண்ட்ராக்ட்' எனப்படும் இடை மனிதர் வாயிலாகவே ஊதியம் பெறுகின்றனர். பதிவு பெற்ற தொழிலாளிகள், அளநிர்வாகத்தினரிடம் நேரடி ஊதியம் பெறுபவர் மிகக் குறைவானவர்கள் தாம். அநேகமாக எல்லாத் தொழிலாளரும் இடை மனிதன் வாயிலாகவே நிர்வாகத்தினரிடம் தொடர்பு பெறுகின்றனர். ஒரு நாள் ஒரு தொழிலாளி நேரம் சென்று அளத்துக்குப் போய்விட்டால் அன்று கூலி இல்லாமல் திரும்பி வருவதும் கூட வியப்பில்லையாம்! குழந்தைகள் ஆண்டைக் கொண்டாடுகிறோம். ஒரு நாட்டின் எதிர்காலம் மழலைச் செல்வங்களின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது என்ற நோக்கில் பல முனைகளிலும் திட்டங்களும் பாதுகாப்புப் பணிகளும் துவங்கப் பெறுகின்றன. அடிப்படைத் தேவைகளுக்கே போராடும் வறியவர்களாகவே நாட்டு மக்கள் பெரும்பாலானவர் நிலைமை இருக்கும் போது சிறுவர் உழைப்பாளிகளாக்கப் படுவதைத் தடைசெய்வது சாத்தியமில்லை. உழைப்பாளிச் சிறுவருக்கு சத்துணவு மற்றும் கல்வி வசதிகளும் அளித்து உதவத் திட்டங்கள் பற்றி ஆராயப்படுகின்றன. இந்நோக்கில் சிறார், எந்தெந்தக் காலங்களில் உழைப்பாளிகளாகக் கூலி பெறுகின்றனர் என்ற விவரங்கள் இந்நாட்களில் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் உப்பளத்தில் கருகும் குழந்தைகளைப் பற்றி யாரும் குறிப்பிட்டிராதது குறையாக இருக்கிறது. இந்நிலை வெளி உலகம் அறியாமல், கேட்பாருமற்று, உரைப்பாருமற்று அவலமாகவே தொடர்ந்து வந்திருக்கிறது. இச்சிறாருக்கு தனிப்பட்ட முறையில், அந்தத் தொழிற்களத்தில் அவர் ஈடாக்கும் உழைப்புக்குகந்த முறையில் உணவுப்பொருள், மருத்துவ வசதி (மற்றும் கல்வி)யும் அளிக்க வழி செய்யப்படல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நான் நெஞ்சம் கனக்க, உப்பளத் தொழிலாளரிடையே உலவிய போது, நண்பர் 'சிட்டி' அவர்கள் வாக்கை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன்.

இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக் கொறிக்கும் சிறு தீனிகளாகிவிடக் கூடாது. அது மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாத ஆரோக்கியமான சத்துணவைப் போல் சமுதாய உணர்வை, மனிதாபிமானத்தை, மக்களிடையே ஊட்டுவதாக இருக்க வேண்டும் என்ற நோக்கமே என்னைப் புதிது புதிதான களங்களுக்கு இட்டுச் செல்கிறது.

இம்முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருந்து ஆர்வமும் ஆவலுமாக உதவிய நண்பர்கள் பலருக்கும் நான் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். தூத்துக்குடி என்றாலே, நண்பர் திரு. ஆ.சிவசுப்பிரமணியனின் இல்லமே நினைவில் நிற்கிறது. வ.உ.சி. கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியராக இருக்கும் இவருடைய நட்பு, இலக்கிய வாழ்வில் எனக்குக் கிடைத்த கொடை என்று மகிழ்கிறேன். எந்த நேரத்திலும் சென்று உதவி வேண்டி அவரை அசௌகரியத்துக்குள்ளாக்கும் உரிமையை அவர் மனமுவந்து எனக்கு அளித்திருக்கிறார். இவரது இல்லம் என்றால், குடும்பம் மட்டுமல்ல. இக்குடும்பத்தில் பல மாணவர்கள் பேராசிரியர்கள் ஆகியோரும் இணைந்தவர்கள். அவர்களில் நானும் ஒருவராகி விட்டதால், உப்பளத்து வெயிலில் நான் காய்ந்த போதும், தொழிலாளர் குடியிருப்புகளில் நான் சுற்றித் திரிந்த போதும், நான் தனியாகவே செல்ல நேர்ந்ததில்லை. மாணவமணிகளான இளைஞர்கள் திரு. எட்வின் சாமுவேல், சிகாமணி ஆகியோர் நான் உப்பளத் தொழிலில் ஈடுபட்ட பலரைச் சந்தித்துச் செய்தி சேகரிக்க உதவியதை எந்நாளும் மறப்பதற்கில்லை.

உப்பளத் தொழிலாளரில் எனக்குச் செய்தி கூறியவர் மிகப் பலர். வேலை முடித்து வந்து இரவு பத்து மணியானாலும் தங்கள் உடல் அயர்வைப் பொருட்டாக்காமல் எனது கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து என்னைச் சந்தித்த தோழர்கள் திருவாளர் மாரிமுத்து, முனியாண்டி, கந்தசாமி, வேலுச்சாமி ஆகியோருக்கு நான் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன்.

எப்போதும் போல் எனது எழுத்துக்களை நல்ல முறையில் வெளியிட்டு எனக்கு ஊக்கமளிக்கும் தாகம் பதிப்பகத்தார் இதை நூல் வடிவில் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கும் நன்றி கூறி தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் எனக்கு ஆதரவு நல்கும் வாசகப் பெருமக்களின் முன் இதை வைக்கிறேன்.

ராஜம் கிருஷ்ணன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1
உத்திராயனத்துச் சூரியன் உச்சிக்கு நகர்ந்து செங்கதிர்க் குடை பிடிக்கிறான். தெற்குச் சீமையின் கடற்கரையோரங்களில் விரிந்து பரந்து கிடக்கும் உப்பளங்களில் இன்னோர் புத்தாண்டு துவக்கமாகி விட்டது. இட்ட தெய்வங்களின் மேலாடை களைந்து பரிமளதைலம் பூசி நீராட்டுவது போல் மண் அன்னையின் 'அட்டு' நீக்கி, பதமான களியும் மணலும் விரவி, நீரைக்கூட்டி, 'செய் நேர்த்தி' செய்யும் கோலங்கள் கடற்கரை நெடுகிலும் ஏக்கர் ஏக்கராக விரிந்த உப்பளங்களில் காட்சிகளாக விரிகின்றன.

'தைச்சீர்' கழித்து, பொன்னின் கதிர்களறுத்துக் களத்து மேடுகளில் நெல்மணிகளை உழவர் பெருமக்கள் குவிக்கும் அக்காலத்தில், ஆற்றோரத்து விளைநிலங்களில் மண் அன்னை பிள்ளை பெற்ற தாயாக மகிழ்ந்து காட்சியளிக்கிறாள். மீண்டும் மீண்டும் பசுமையில் பூரித்துக் கொழித்து இயற்கையில் மலரும் அன்னையாக உலகை உய்விப்பாள்.


ஆனால், இந்தக் கடற்கரையோரங்களில், பூமித் தாயின் பசுமையை அழித்து, உலகெங்கும், உயிர்க்குலமனைத்துக்கும் சாரமளிக்கும் கரிப்பு மணிகளை விளைவிக்கச் செய்நேர்த்தி செய்கிறார்கள். வானின்று பொழியும் காருக்குப் போட்டியாக, பூமிப்பெண்ணை என்னாலும் தாயாக்க இயலும் என்று கடலோன் பூமிப்பெண்ணின் உதரத்தில் தங்கி அவளை அன்னையாக்குகிறான். நல்லார் பொல்லாரென்ற சூதறியாத வானவனோ எல்லோருக்கும் பொதுவாக காய்ந்து, மண்ணை வெய்துயிர்க்கச் செய்கிறான். அவன் கொடையில் கரிப்பு மணிகள் கண் மலர்கின்றன.

விரிந்து பரந்த பாத்திகளுக்குச் செய்நேர்த்தி செய்யும் கால்கள் அனைத்தும் மனிதக் கால்கள். நீரும் களியும் மணலும் குழம்பிக் குழம்பி மனித ஆற்றலின் வெம்மைகளும் மண்ணின் உட்சூடும் கொதித்து ஆவியாகிப் போகும் 'செய்நத்து' கருவைக்காட்டு உப்பளத்திலும் நடக்கிறது. அந்தப் பாதங்கள் கறுத்துக் கன்றிப் புண்பட்டுத் தேய்ந்தாலும் இன்னும் ஆற்றலைக் கக்கும் இயக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

"செறுக்கி மவளுவ... அழுந்த மெறியுங்க...! சாமியாரே? ஆவட்டும்!..."

கங்காணியின் விரட்டல் கசையடிபோல் விழுந்து கொண்டே இருக்கிறது. இந்த அதட்டல்கள் அவ்வப் போது விழுந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் அங்கே பாத்தி மிதித்துப் பண்பாடு செய்யும் மேனிகள் இரத்தமும் சதையும் துடிப்பும் துள்ளலுமாக இல்லை. அமாவாசைக் கடலைப் போன்று ஆற்றலை அவர்களால் கொட்ட முடியாது. இறைத்து இறைத்து ஊற்றுக் கண் வற்றிய கிணறு. மேல் மழையோ அற்பம். சுரண்டினால் சிறிது நீர் பொசிந்து வரும். பிறகு நின்று போகும். மீண்டும் வெட்டினால் சுருசுருவென்று நீர் ஊறி வரும். அந்தப் பாத்தியில் எட்டுப் பேர் மிதிக்கிறார்கள்.

மருதாம்பா, மாரி, இசக்கி மூவரும் இளமையில் ஆளுகைக்கப்பால் அநுபவப் பாதையில் தேய்ந்து மெலிந்தவர்கள். இசககியின் மகளான பன்னிரண்டு பிராயத்தி முத்தம்மா, மாரியின் மகள் லெச்சுமி, பையன் கந்தவேலு கைக்குழந்தையை நிழலில் போட்டுவிட்டு, மூன்று பிராயத்து முதற் குழந்தையைக் காவலுக்கு வைத்து விட்டு அடிக்கொரு முறை அழுகையொலி கேட்கிறதா என்று பார்த்துக் கொண்டே மிதிக்கும் ருக்குமணி, ஆகியோரைத் தவிர ஒரே முதிய ஆண் மகனான அங்கே 'செய்நத்து'ச் செய்பவன், 'சாமியார்' என்றழைக்கப் பெறும் கண்ணுசாமிதான். அவன் மருதாம்பாளின் புருஷன்.

"ஏத்தா! இது ரிக்காடு டான்சில்ல குதிக்குறாளுவ... மெதிச்சுத் துவயிங்க! விருசா ஆவட்டும்! சாமியாரே, ஒமக்கு இது சரியல்ல. நீரு வாரும். 'சிப்சம்' எடுத்துப் போட..." என்று கங்காணி அவனை நிறுத்தித் தோளைப் பற்றி அழைத்துச் செல்கிறான்.

உட்சூடும் வெளிச்சூடும் சங்கமித்துக் கால்களில் நெருப்பைக் கக்குகின்றன. நெருப்புப் பந்தத்தில் நெருப்பு வளையத்தில்... அவர்கள் நடக்கிறார்கள். நடப்பு இல்லை... மிதித்தல். பையன் வாளியில் நீரெடுத்து அவ்வப்போது மண்ணில் விசிறிக் கொட்டுகிறான். அந்த நீர், அவர்கள் காலடிகளில் பாயும் போதே ஆவியாகிவிட, தேய்ந்து வெண் குறுத்தாகிவிட்ட அவர்கள் அடிகளில் கொப்புளத்தைத் தோற்றுவிக்கும் கொதிப்பைக் கக்குகிறது. அழுத்தமும் சூடும் மண்ணை மெத்து மெத்தென்று வெண்ணையாக குழைத்த பிறகு கெட்டித்து இறுகச் செய்யும் நிணமும் சதையும், பூவின் மென்மையுமான பெண்மையின் துடிப்புக்களும் இறுகிக் கெட்டித்துக் காய்ந்து போகும் இந்தச் 'செய்நேர்த்தி' தை, மாசி முழுதும் கூட நீண்டு போகும்.

மருதாம்பா, சற்றே தலைதூக்கி, கங்காணி, தன் புருஷனை அழைத்துச் செல்வதைப் பார்க்கிறாள். சென்ற ஆண்டு வரையிலும் சாதாரணத் தொழிலாளியாக இருந்த சுப்பன் இப்போது கங்காணியாகி விரட்டுகிறான். மிஞ்சினால் முப்பது வயசிருக்கும். கணக்கப் பிள்ளைக்கு அவ்வப்போது கையும் மனமும் நிறையக் காணிக்கை வைத்திருப்பான். கங்காணியாகி விட்டான். செய்நேர்த்திக் காலத்தில் நிர்ணயக் கூலி முழுவதையும் கொடுக்க மாட்டார்கள். உப்பெடுக்கத் தொடங்கி விட்டாலும் அந்த அளத்தின் இருநூறு ஏக்கரிலும் பண்பாட்டு வேலை முடியவில்லை என்று கூலியைக் குறைத்தே கொடுப்பார்கள். ஆணுடைய நிர்ணயக் கூலி பெண்ணுடைய கூலியை விட அதிகம் என்பதால், தன் புருஷனை ஜிப்சம் சுமக்கத் தள்ளிப் போகிறான் என்றுணர்ந்து மருதாம்பா சில நிமிடங்கள் செயலற்று நிற்கிறாள். கண்ணுசாமிக்குத் துல்லியமான கண் பார்வை போய் எத்தனையோ நாட்களாகி விட்டன. அவர்களைப் போன்ற உப்பளத் தொழிலாளிகள் யாருக்குமே தெளிவான கண்பார்வை கிடையாதுதான் என்றாலும் கண்ணுசாமிக்குக் கண்களில் நீர் வடிந்து நீர் வடிந்து, சென்ற ஆண்டிலிருந்து, கலத்திலிட்ட சோறு கூடத் தெரியாதபடி ஒளி மங்கிவிட்டது.

"நீரு பெட்டக்கண்ண வச்சிட்டு வார்பலவைப் புடிச்சித் தொழில் செய்ய ஏலாது. 'மெக்கிட்டு'க் கூலியா (மெக்கிட்டு - அன்றன்று சிறு கூலிக்குச் செய்யும் துண்டு வேலை) செய்நத்துக்கு இருந்துபோம்... அதும் கூட கணக்கவுள்ள கண்டாச் சண்டை போடுவா. ஆச்சி அளுகாண்டு எடுக்கே..." என்று வேலைக்குச் சேர்க்கும் போதே நிபந்தனை போட்டான் கங்காணி.

பெண்களுக்கு நான்கு ரூபாய் கூலி கொடுப்பான். அவர்களுடைய நிர்ணயக் கூலி நாலு ரூபாயும் நாற்பது பைசாவுமாகும். ஆண்களுக்கு நிர்ணயக் கூலி ஆறு ரூவாயும் சொச்சமுமாகும். ஆனால் செய்நேர்த்திக் காலத்தில் முழுக்கூலியைக் கண்களால் பார்க்க இயலாது. நான்கு ரூபாய் கொடுப்பான் முன்பெல்லாம். செய்நேர்த்திப் பணிக்கு ஆண்களை மட்டுமே எடுப்பார்கள். பெண்கள் வரப்பில் குவிந்த உப்பைத் தட்டுமேட்டில் கொண்டு சேர்க்கும் பணியைத்தான் பெரும்பாலும் செய்வார்கள். இந்நாட்களிலோ, ஆடவருக்கு அதிகக்கூலி என்பதால், பெண்களையும், இரண்டு ரூபாய்க் கூலிக்கு வரும் சிறுவர் சிறுமிகளையும் 'பாத்தி மிதிக்க'ச் செய்கிறார்கள். மிதித்து மிதித்து மண்ணைப் பண்படுத்த வேண்டும். காலால் அழுத்தினால் அடிபதியலாகாது. இவ்வாறு பண்படுத்தும் பாத்திகளே உப்பை விளைவிக்கும் 'பெண்' பாத்திகள். ஆண்டுதோறும் தவறாமல் இந்தப் பெண் பாத்திகளுக்குக் குறையாமல் சீரெடுக்க வேண்டும். இந்தப் பாத்திகளில் விளையும் உப்பு வெள்ளை வெளேரென்று, தும்பைப்பூ வண்ணத்தில் கற்கண்டைப் போல் தோன்றும். அவ்வளவும் தூத்துக்குடித் துறையிலிருந்து ஏற்றுமதியாகும் 'கல்கத்தா' உப்பு.

இந்த அளவில் கடலிலிருந்து நேராக நீரைக் கொண்டு வருவதில்லை. கிணறுகள் தோண்டி, அதிலிருந்து நீரை இறைவை இயந்திரத்தால் தெப்பம் என்று சொல்லப்பெறும் முதல் பாத்திகளில் பாய்ச்சுகிறார்கள். இப்பாத்திகளில் நீரின் அடர்த்தி கூடியதும், முதல் கசடுகளான சேரு, கீழே படிந்து விடும். இவ்வாறு ஆண்டு முழுவதும் படிந்த சேறு தான் இறுகிக் காய்ந்து நட்சத்திரச் சில்கள் பதித்தாற் போன்று ஜிப்சம் எனப் பெறும் கூட்டுப் பொருளாகிறது. இதைப் பெயர்த்தெடுக்கத்தான் கங்காணி, கண்ணுசாமியைத் தள்ளிச் செல்கிறான்.

"லே செவந்தகனி, சாமியாருக்கும் 'சிப்சம்' பேத்துக் குடு... இங்கிட்டு நின்னு திருப்பிப் போடுவாரு..."

"செவந்தகனியா?" என்று திருப்பிக் கேட்கும் கண்ணுசாமி எங்கோ ஓர் மூலையில் நோக்குகிறான்.

"ஆமா, நாதா, மெக்கிட்டா, காண்டிராக்டா மாமா?"

"மெக்கிட்டுன்னுதா சொன்னா. எனக்கு என்ன எளவு தெரியிது?..."

சிவந்தகனி மருதாம்பாளுக்குத் தம்பி முறையாகக் கூடியவன். அவன் ஒரு பாளத்தை வெட்டி, கண்ணுசாமியின் கைகளில் வைக்கிறான். கண்ணுக்கு எல்லாம் மொத்தையாக இருக்கிறது. போகும் தடம் தெளிவாகத் தெரியாமல் எங்கே கொண்டு எப்படிப் போடுவான்? கண்களிலிருந்து இனி வடிவதற்கு நீருமில்லை. 'பல் முளைத்துப்' போன அந்தப்பாளம் கைகளைக் குத்தி அவனை வளையச் செய்கிறது. தடம் தெரியாமல் அதையும் போட்டுக் கொண்டு விழுகிறான்.

"...கீள வுழுந்திட்டாரே... அவரால் ஆவாது. பாவம்..." சிவந்தகனி அவரைத் தட்டித் தூக்குகிறான். "ஏதும் அடிபட்டிச்சா மாமா? பாவம், உம்மால இனி அளத்து வேல செய்ய முடியுமா?..."

அவன் தூக்கிய பாளம் நொறுங்கி மண்ணும் சில்லுமாகக் கண்களில் விழுப்புழுதி பரவுகிறது. உச்சியில் வழுக்கை, காதோரங்களில் வெண்மையும் கருமையுமாகப் பிரிபிரியாக முடிக்கற்றை; சென்ற ஆண்டின் இறுதியிலிருந்தே வேலைக்குப் பாதி நாள் வர முடியாமல் ஆசுபத்திரிக்கும் சென்று வந்தான். கண் பார்வை மீளுமென்ற நம்பிக்கை இல்லை. அதற்குப் பிறகு தான் அவன் முகச்சவரம் செய்து கொள்ளவில்லை. பார்வை போனாலும் வயிற்றுப் பசி குறைகிறதா?

"சாமியாரே! உன்னால எதும் ஆவாது! இது வரய்க்கும் செஞ்சதுக்கு ரெண்டு ரூவாக்கூலி தாரேன்... அம்புட்டுத்தா..." என்று கங்காணிச் சுப்பன் கோடு கிழித்து விடுகிறான்.


ரெண்டு ரூபா... மருதாம்பாளுக்கு நான்கு ரூபாய் வரும். வீட்டில் நான்கு குழந்தைகள்... மழைக்காலம் முழுவதும் வேலை கிடையாது. அப்போது வாங்கித் தின்ற கடன், வீட்டு வாடகை, பழைய கடன், புதிய கடன், அரிசி, விறகு, செலவு சாமான்களின் விலைகள்...

மண்ணிலே விழுந்தவனால் எழுந்திருக்க இயலாத பாரங்கள் அழுத்துகின்றன. பகல் நேர உணவுக்கு மணி அடிக்கிறது.

மருதாம்பா வந்து அவன் கையைப் பற்றி அழைக்கிறாள்.

"வுழுந்திட்டயளா, சிவந்தகனி சொன்னா. செவனேன்னு பாத்தி மிதிச்சிய. வேலையில்லேன்னா... போறா, நீரு வாரும்."

உணர்ச்சிகள் களரியாக மோதுகின்றன. வாலிபம் கிளர்ந்த காலத்தில் அவன் துறைமுகத்தில் தொழிலாளியாக இருந்தான். முட்டையும், கறியும் தின்று வளர்த்த உடலில் நிமிர்ந்த ஆணவத் திமிர் இன்று கரைந்து, குத்துப்பட்டு வீழுந்து விட்டாலும், அந்தப் பழைய வடிவத்தை இன்னமும் நினைப்பூட்டும் உடலியல்பு மாறிவிடவில்லை. கருமை பாய்ந்து தடித்த நெற்றியும், நரம்புகள் புடைத்துத் தசைகள் 'முறுகத்' தெரியும் தோள்களும் கால்களும் தளர்ச்சியைக் காட்டவில்லை. மருதாம்பா அவன் கையைப் பற்றியிருக்கிறாள். அவள் கையிலும் நரம்புகள் புடைக்க, எலும்பு முட்டியிருக்கிறது. அந்தக் கை, ஒரு காலத்தில் எப்படி இருக்கும்?

மடையோரம் செழித்து வளர்ந்த தாழையின் நடுவே பூத்த குலைபோல் இருப்பாள். அவளைக் கட்டியவன் ஒரு கிழவன், ஈர்க்குச்சி போல் கையும் காலுமாக ஒரு சீக்காளி. பட்டாணி வறுக்கும் கடையில் வேலை செய்த அவன் கையில் கிடைத்ததைக் குடித்து விட்டும் வருவான். முதல் தாரத்துக்கு மூன்று வளர்ந்த பிள்ளைகள்.

மருதாம்பா துறைமுகத்தில் மூட்டை சுமக்க வந்த காலத்தில் அந்தக் கங்காணிக்கு இரையாகு முன் இவன் பார்வையில் உருகிப் போனாள். இவனுக்கும் அப்போது கல்யாணமாயிருந்தது. ஒரு மகளும் மகனுமாகக் குழந்தைகளும் இருந்தார்கள். ஆனால் கட்டியவள் ஒரு முசுடு. இவனுக்கு ஈடு கொடுக்கத் திராணியில்லாதவள். எனவே இவளை அவன் சேர்த்துக் கொண்டான். துறைமுகத்துத் தொழிலை விட்டு அந்நாளில் இவன் உப்பளத் தொழிலுக்குக் காண்டிராக்டாக வந்தான். கையில் காசு குலுங்கியது. ஆனால் இளமையும் எழிலும் நிறைந்த பெண்பிள்ளைக்குப் புருஷன் உடன் இருந்தாலே, தொழிற்களங்களில் அவர்கள் வரப்போரத்து மலர்களாகக் கருதப்படுவார்கள். கண்ணுசாமி அவளுக்குப் புருசனுமில்லை. எனவே இவள் நிமித்தமாக அந்தக் கணக்கப்பிள்ளைச் சுடலைமாடனிடம் மோத வேண்டியிருந்தது. அவன் சாய்கால் உள்ளவன். இவன் மீது கொலைக்குற்றம் சுமத்திச் சிறைக்கும் அனுப்பி வைத்தான். சிறையில் மூன்றாண்டுகள் கழித்துவிட்டுத் திரும்பி இவன் வந்த போது, மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிறந்தகம் சென்று விட்டாள்.

மருதாம்பாதான் இவனைக் கண்டு வீட்டுக்கழைத்துச் சென்றாள். அவள் கிழவனை விட்டு வந்து விட்டாள். அந்தக் கணக்கப்பிள்ளை அளத்திலும் வேலை செய்யவில்லை. இருவரும் அந்நாளிலிருந்து சேர்ந்து வாழ்கிறார்கள். இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களுமாகக் குழந்தைகள் குடும்பம். 'தாலிக்கெட்டை'ப் பற்றிக் கவலைப் படாமல் வளர்ந்திருந்தாலும், தொழில் இத்தனை ஆண்டுகளில் அவர்களுடைய வண்மையைக் கூட்டியிருக்கவில்லை. உப்பளத் தொழில் அத்தகையதுதான். எப்போதேனும் அந்த மணற்கரையில் பெய்யும் மழையைப் போன்ற அந்த அற்பக் கூலியினால் அவர்கள் பசித்தீயை முற்றிலும் அவித்து வறட்சியைத் தீர்க்க முடிவதில்லை.

வழுக்கு மரமாகத் தெரிந்த வாழ்க்கையில் அவர்களால் ஏறவே முடியவில்லை. மருதாம்பா சட்டுவமாகத் தேய்ந்து போனாள். ஒவ்வொரு மழைக்காலமும் சோதனைக்காலம். இடையில் பத்துப் பதினைந்து நாட்கள் எங்கேனும் கூலி வேலை கிடைத்தாலே பெரிது. அந்தக் கண்டம் தப்பி, புத்தாண்டன்று பாத்திப் பண்பாட்டுக்குத் தொழிலாளர் வரும்போது, அவர்களது அவல நிலையை உப்பளத்து முதலாளிமார் முற்றிலும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றால் தவறில்லை. ஐந்து ரூபாய் கூலி பேசிவிட்டு மூன்று ரூபாய் கொடுத்தாலும் மீறிச் சென்றுவிட இயலாமல் அவர்கள் பொருளாதார நிலை குழிபறித்து வைத்திருக்கிறது.

பன ஓலை கொண்டு வேயப்பெற்ற அந்தக் கொட்டகையில் உள்ளே சந்து சந்தாக வெய்யில் விழுந்து அவர்கள் உணவு கொள்வதைப் பார்க்கிறது. "மேல வெயில்... தள்ளி ஒக்காரும்" என்று மருதாம்பா அவனை நகரச் செய்கிறாள். பிறகு உணவுப் பாத்திரத்தைத் திறந்து, ஒரு வெங்காயத் துண்டையும் பச்சை மிளகாய்த் துண்டையும் கேழ்வரகுக் களியின் உருண்டையையும் அவன் கையில் வைத்துக் கொடுக்கிறாள்.

நசுக்கப் பெறும் உணர்வுகள் அலையலையாக உந்த உள்ளத்து விம்மல் வெளிப்படுகிறது. "நீ தேடிச் சோறு போட ஒக்காந்திட்டேன் பாத்தியா?" என்று விம்முகிறான்.

"பேசாதிரிம்..." என்று இரகசியக் குரலில் கடிந்து கொள்கிறாள் மருதாம்பா.

அங்கே வேலை செய்யும் அனைவருக்குமாக ஒரு பானை தண்ணீர்தான் குடிப்பதற்கு வைத்திருக்கிறார்கள்.

"ஏத்தா மொவத்தத் தொழில கழுவிக்கிறதுக்கென்ன..." என்று சிவந்தகனி யாரையோ சண்டை போடுகிறான்.

"நானென்ன சொம்பு தண்ணீயா எடுத்த? ஒரு கிளாசு, ஓங்காருவாரு தூள் பறக்கு..."

"இந்த அளத்துல தாவில! முன்ன பளஞ்சிபுர அளத்துல குடிக்க ஒரு சின்ன பக்கெட்டி தண்ணிதா வரும். அம்புட்டுப் பேரும் அத்தத்தா குடிக்கணும். ஒரு செறட்ட நீரு கெடய்க்காது செல நா. சித்திரக் கோடையில கெடந்து எரியுவம்..." என்று ஒரு கிழவி திருப்திப்படுகிறாள்.

கும்பியின் எரிச்சலைச் சோறு சற்றே தணித்தாலும், தண்ணீர்த் தாகம்...!

"எல்லாம் குடிச்சிப் போடாதிய" என்று சொல்லிக் கொண்டே அவர்கள் தங்கள் தங்கள் தூக்குப் பாத்திரங்களில் சிறிது நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். சிவந்தகனிதான் பங்கீடு செய்கிறான். "ந்திரீ... ஊத்து..." என்று கிழவி குழிந்த மூடியை மீண்டும் நீட்டுகையில் அவன் கண்டிப்பாக மறுக்கிறான். "ருக்மணி, புள்ளக்கிப் பாலு கொடுக்கா அவக்கு வேணும்" என்று பானையின் அடியில் ஒரு தம்ளர் தானிருக்கிறதென்று காட்டுகிறான்.

வெற்றிலைச் சாரும் புகையிலையும் போடுகிறவர்களும், பீடி கொளுத்தி வைப்பவர்களும், ஏதேனும் கட்டை தேடித் தலைக்கு வைத்துக் கொண்டு தலையைச் சாய்ப்பவர்களுமாக, சோற்றுக்கடை முடிகிறது.

"ஏத்தா, கங்காணிய பெரியாசுபத்திரில கொண்டு காட்டல?..." என்று மருதாம்பாளிடம் லெட்சுமி கேட்கிறாள். கண்ணுசாமி கங்காணி இல்லைதான். ஆனால் லெட்சுமிக்கு எல்லா ஆடவர்களும் கங்காணி என்றே நினைப்பு.

"பெரியாசுவத்திரில தா டாக்டர் பாத்து ஆபிரசன் பண்ணமின்னா; ஆபுரசன் பண்ணா சுத்தமா கண்ணு தெரியாம போயிடுமிண்ணு சொல்றாவ. இப்ப சோலியெடுக்க முடியாம இல்ல கடையில போயி சாமானம் வாங்கிட்டு வருவா. எங்க வளவில் அவிய பாட்டுக்கு நடந்திட்டுத் தா போவா, இந்த உப்பளத்துச் சூடு தா அக்கினியாட்டமா கண்ணுக்கு ஆவுறதில்லே..." என்று கூறுகிறாள் மருதாம்பா.

மீண்டும் மருதாம்பா பாத்தி மிதிக்கச் சென்று, மலை வாயில் கதிரவன் சாயும் வரையிலும் அவள் வேலை செய்யும் வரையிலும் கண்ணுசாமி அந்தக் கொட்டடியில் பிரும்மமாக உட்கார்ந்திருக்கிறான். ஐந்தரை மணியோடு பாத்தி மிதிப்பு ஓய்கிறது.

"வாரும் போவலாம்...!"

அவர்கள் குடியிருக்கும் இடம் இரண்டு மைல் தொலைவு இருக்கிறது. எல்லோரும் கைகளில் தூக்குப் பாத்திரங்களுடன் நடக்கின்றனர். சிறுவர்கள் ஓடுகின்றனர். பனை மரங்களினூடே செங்கதிரோன் இறுதியாகப் பிரியா விடை பெறும் ஒளியைப் பாய்ச்சுகிறான். நெருங்கி வரும் மருதாம்பா, அவன் செவிகளில் மட்டும் விழும்படியாகக் கேட்கிறாள்.

"ஏன் சவங்கிப் போயிட்டிய...?"

"சவங்காம என்ன செய்ய? ரெண்டு ரூவாக் கூலிக்குக் கூட ஏலாமப் போயிட்டனில்லா..."

அவனுடைய கை, வார் பலகைக் கம்பைப் பிடித்துப் பிடித்துக் காய்த்துக் கடினமாகி விட்ட கை, அவள் மணிக்கட்டைப் பற்றி அந்த எலும்பு முழியை அழுத்துகிறது.

"...நா... நாத்திக்கிழம போயி அந்த வுள்ளயக் கூட்டிட்டு வார..."

"எந்த வுள்ள?"

"அதா, ஒங்க வுள்ள பொன்னாச்சி பயலும் வரட்டும். ரெண்டோட ரெண்டா இருக்கட்டும். போன வருச மானோம்புக்குப் போனப்பவே செவந்தகனி பொஞ்சாதி சொன்னா. அவியளுக்கும் அஞ்சாறு வுள்ள; தம்பாட்டளத்துல (* தம்பாட்டளம் - தன் பட்டாளம் - சிறு அளவில் தாமாகவே உப்பு உற்பத்தி செய்யும் சிறு தொழில் அளம்) ஒண்ணும் கண்டு முதலாவுறதில்ல. நெதவும் அடியும் மிதியுந்தான்னா. இங்கு நாம கூட்டி வச்சிக்குவம். நாம குடிக்கிற கஞ்சிய அதுங்கக்கும் ஊத்துவம்னு தோணிட்டே இருக்கி. என்னாந்தாலும் அவிய ஆத்தா அநுபவிக்கிற சொத்து, நா அவகரிச்சிற்ற..."

இருளில் ஒலிக்கும் மந்திரச் சொற்களைப் போல அவன் செவிகளில் விழுகின்றன. அவன் ஆதரிக்கும் நெடு மரம், காய்ந்து பட்டுப்போகும் நிலையிலிருக்கிறான். தாயற்ற அந்தக் குழந்தைகளையும் கூட்டி வருவதாக அவள் சொல்கிறாள்.

இது...

அவன் மௌனமாக நடக்கிறான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
2
மருதாம்பா வாழ்க்கையின் மேடு பள்ளங்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளைக் கண்டு தளர்ந்து விட மாட்டாள். குடிகாரத் தந்தையும் அடிப்பட்டுப் பட்டினி கிடந்து நோயும் நொம்பரமும் அனுபவித்த தாயையும் விட்டு ஒரு கிழவனுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டுப் பிழைக்க வந்த போதும், தனது இளமைக்கும் எழிலுக்கும் வேறு கிளைகளில் பயன்களுண்டு என்று அவள் வயிறு பிழைக்க வந்த களத்தில் உணர்த்தப்பட்ட போதும் அவள் விம்மி எழவுமில்லை; சுணங்கிச் சோர்ந்து விடவுமில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் இலட்சியங்களோ, பற்றுக் கோடுகளோ எதுவுமில்லை. வாழ்க்கை என்பதே பசியோடும், வேற அடிப்படைத் தேவைகளோடும், உடலுழைப்போடும் ஏற்படும் இடைவிடாத போராட்டம், அதற்காகவே தான் மனித பந்தங்கள்; பொருளாதாரத் தேவைகளின் அடிப்படையிலேயே கிளைக்கும் நெருக்கடிகளும் வாய்ப்புகளும் தான் அவளைப் போன்றோருக்கு வாழ்க்கையின் போக்கையே அமைக்கின்றன என்று தெரிந்தவள் அவள்.


தெப்பத்தில் ஒதுக்கப்பெறும் கடல் நீரைப் போல் அவர்கள் தங்கள் உடலுழைப்பை யாருக்காகவோ குவிக்கின்றனர். கடல் நீர் தனது சாரத்தைப் பாத்திகளில் மணிகளாக ஈந்துவிட்டு நஞ்சோடையாக (நஞ்சோடை - உப்பை வாரிய பின் எஞ்சிய நீர் வெளிச்செல்லும் ஓடை) வெளியேறும் போது யாரோ அதைக் கவனிக்கிறார்கள்! எங்கேனும் தறிகெட்டு ஓடி மணலோடையில் போய்ச் சேரும். அல்லது எங்கேனும் காட்டிலே போய்த் தேங்கி முடியும். அவர்களுடைய உரமும் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் முயற்சியிலேயே பாத்திக் காடுகளிலும், தட்டு மேடுகளிலும் உருகிக் கரைகின்றன. பின்னர் யாருக்கும் எதற்கும் பயன்படாத நஞ்சோடை நீர் போல் ஒதுக்கப்படுகின்றனர். கண்ணுசாமியினால் அந்தக் குடும்பத்தைத் தாங்கும் முயற்சியில் இனி எதுவும் செய்ய முடியாது. மருதாம்பா அந்த ஞாயிற்றுக்கிழமையிலேயே அவனுடைய மகனையும் மகளையும் அழைத்து வருவதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை என்று நிச்சயம் செய்துவிட்டாள்.

பெரியகடை வீதியில் மிட்டாய்க் கடையில் கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயும் சேவும் வாங்கிக் கொள்கிறாள். பொரிகடலை, பழம் எல்லாவற்றையும் ஒரு பைக்குள் வைத்துக் கொண்டு சிவந்தகனியுடன் திருச்செந்தூர் பஸ் போகும் மூலையில் வந்து நிற்கிறாள். சிவந்தகனியின் மனைவி தாய்வீட்டில் பிள்ளை பெற்றிருக்கிறாள். அவளுக்குச் சிறுகாயல்தான் ஊர். அதனால் தான் அவனுடன் கிளம்பி இருக்கிறாள். மச்சான் என்று கண்ணுசாமி மனைவியின் தமையனாரைக் கொண்டாடியதில்லை என்றாலும் அவர் மீது அவனுக்குப் பெருமதிப்பு உண்டு. அவர் வழியே தனி. கொஞ்சம் படிப்பு, உலக அநுபவம், அரசியலில் ஈடுபாடு எல்லாம் உடையவர். அவரும் சிறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அது மிகவும் கௌரவத்தைக் கொடுக்கக் கூடியதோர் அனுபவமாக அவர் பெருமையைக் கூட்டியிருக்கிறது.

மருதாம்பா, அவரைக் கண்ணுசாமி சிறைக்குச் சென்ற காலத்தில் அவர் வந்த போது பார்த்திருக்கிறாள். முதல் மனைவி செவந்தியை அவர் தான் வந்து கூட்டிச் சென்றார். செவந்தியை அவருக்குத் தங்கை என்றே மதிப்பிட முடியாது. மகள் என்று சொல்லலாம். அந்நாளிலே முடி நரைத்துச் சுருக்கங்கள் விழுந்து ஐம்பது வயசு மதிக்கத் தோற்றமளித்தார். செவந்தி இறந்து போன போது நல்லகண்ணு சிறையில் தான் இருந்தான். அப்போது சிவந்தகனி அங்கு பெண் கட்டியிருக்கவில்லை. வெகுநாட்கள் சென்ற பின்னரே அந்தச் செய்தி தெரிய வந்தது. பிறகு ஒரு நாள் அவர் பொன்னாச்சியையும் பையனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் இருப்பிடம் தேடி வந்ததாக அவளுக்குச் சேதிதான் தெரிந்தது. அந்நாள் புருஷன் பெண்சாதி இருவரும் இரவில் இரட்டை கூலி வருகிறதென்று உப்பு வாரச் சென்றிருந்தனர். பொன்னாச்சி வயசுக்கு வந்து நீராட்டு விழா எதுவும் கொண்டாடிக் கடிதம் வரவில்லை. ஆனால் சிவந்தகனியின் பெண்சாதி மாரியம்மா பெண் வயசுக்கு வந்துவிட்ட விவரம் தெரிவித்திருக்கிறாள்.

மணப்பாடு செல்லும் பஸ் வருகிறது. அது பதினைந்து நிமிடங்களில் அவர்களைக் கொண்டு வந்து மாதாகோயிலின் முன் இறக்கி விடுகிறது. பரதவர் குடியிருக்கும் ஊர் அது. ஞாயிற்றுக்கிழமையாதலால் மாதாகோயிலில் பூசை நடந்து கொண்டிருக்கிறது. வெயில் சுள்ளென்று விழுகிறது. பஸ் நிறுத்தத்தில், மொந்தன் பழக்குலை, கடலை மிட்டாய், பீடிக்கட்டு, சோப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட கடை ஒன்றும், புரூ காப்பி பொம்மை ஒட்டியதோர் விளம்பரத்துடன் சாக்குப்படுதா தொங்கும் டீக்கடை ஒன்றும் இருக்கின்றன. மண்ணில், உச்சி எண்ணெய் பளபளக்கச் சிறுவர் சிலர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அரையில் மட்டும் ஒரு சேலைத் துண்டைச் சுற்றிக் கொண்டு வெற்றுடம்புடன் கூடிய ஒரு சிறுமி தன் இளம் இடுப்பில் மார்புக் கூடு பின்னித் தெரியும் ஒரு பிஞ்சுக் குழந்தையைச் சுமந்தவளாக பஸ்ஸிலிருந்து இறங்கிய அவர்களை வேடிக்கைப் பார்க்கிறாள். மாதா கோயிலைச் சுற்றியிருந்த தெருக்கள் பரதவர் குடியிருப்பு என்று துலங்குகிறது. வெயிலில் கிடக்கும் வலைகளும், கருவாட்டு மீன்களைக் காவல் காத்தபடி குந்தியிருந்து பேசும் பெண்களும் அவர்கள் செல்லுவதைப் பார்க்கின்றனர்.

பரதவர் குடியிருப்பைக் கடந்தால் பசுஞ்சோலைகளாகத் தென்னை, முருங்கை, ஆமணக்கு என்று மரங்களும் இடையே காரைக்கட்டு வீடுகளும் வருகின்றன. தென்னங்கிடுகுகளால் ஆன வேலிகளும், நித்திய மல்லிகைப் பூங்கொடியும் மஞ்சள் குங்கும வாயில் நிலைகளும் அந்த வீடுகளுக்குரியவர்கள் பொருளாதார நிலையில் சற்றே மேம்பட்டவர்கள் என்று உணர்த்துகின்றன. மாகாளியம்மன் கோயில் அங்கே நிலை பெற்றிருக்கிறது.

அப்பால் பன ஓலைக் கூரை வீடுகள் தெரிகின்றன. சுரைக்கொடி படர்ந்த கூரைகள், மண் சுவர்கள், குலுகுலுவென்று மணலில் விளையாடும் குழந்தைக் கூட்டம், கோழிகள்... மண்ணில் நிழல் கண்ட இடங்களில் குந்தி ஈருருவிக் கொண்டோ வம்பளந்து கொண்டோ இருக்கும் பெண்கள்...

"அதா ஒரு புள்ள ஒரல்ல குத்திக்கிட்டிருக்குப் பாரு. அந்த வூடுதா. எனக்கு இன்னும் மேக்கே ஒரு கல்லுப் போல போவணும். நா அஞ்சு மணி பஸ்ஸுக்குச் சரியா வாரேன். நீ கடத்தெருவில் வந்து நில்லு..." என்று கூறி சிவந்தகனி அவளைப் பையும் கையுமாக அங்கேயே விட்டுவிட்டுப் போகிறான்.

உரலில் கம்பு 'துவைத்து'க் கொண்டிருக்கும் பொன்னாச்சி தங்களை நோக்கி வரும் பெண்பிள்ளை யாரோ என்று கூர்ந்து நோக்குகிறாள். அவளுடைய மாமி அப்போது அடுத்த வீட்டுக்காரியுடன் அவள் இறைத்த தீனியை அயல் வீட்டுக் கோழி வந்து பொறுக்கித் தின்று விடுவது கண்டு இரைந்து கொண்டிருக்கிறாள்.

"சவங்க... இங்கெ வந்து அம்புட்டியும் தின்னு தீக்கு. அவவ கோளிய அடுத்தூட்டுக்கு வெரட்டிக் கொளுக்கவய்க்கிறாளுவ..." என்று மாமி இரைகையில், எட்டு வயசுள்ள குமரவேலு சிரித்துக் கொண்டு, "யம்மா, அந்தக் கறுப்பு கோளிய நாம ஒரு நா விருந்து வச்சிடுவம்..." என்று கூறுகிறான்.

"வாப்பீங்கலே! முளியத் தோண்டிப் போடுவ!" என்று அடுத்த வீட்டுச் சாக்குப்படுதாவுக்குள்ளிருந்து ஆக்ரோஷமான குரலுடன், அந்த வீட்டுக்குரியவள் வெளிப்படுகிறாள்.

இருபுறங்களிலும் நெருப்புப் பொறிகள் சீறும் நேரத்தில் மருதாம்பா போய்ச் சேருகிறாள்.

பொன்னாச்சியை மருதாம்பா பார்த்த மாத்திரத்தில் கண்டு கொள்கிறாள். மாநிறம் தான். அப்பனைப் போல் அகன்ற நெற்றி. வட்டமான கண்கள், முடி சுருண்டு அலையலையாக இருக்கிறது.

குமரவேலு திரும்பிப் பார்க்கிறான். மூலையில் ஏழாங்காயாடிக் கொண்டிருக்கும் வள்ளியும் குஞ்சரியும் எழுந்து வந்து பார்க்கின்றனர். மாமியும் உற்றுப் பார்த்து, தன் கட்டைக் குரலால், "யாரு?" என்று கேட்டு விழிகளை உயர்த்துகிறாள்.

மருதாம்பா இடுப்பிலிருந்த பையைக் கீழே இறக்குகையில் அதில் பழமும் பனையோலைப் பெட்டியும் இருப்பது தெரிகின்றன. புன்னகை இதழ்களில் மலருகின்றன.

"மயினி, என்னத் தெரியலியா? இது பொன்னாச்சிதான? நா, சின்னாச்சிதா வந்திருக்கிற. அவிய ஒடம்பு வாசியில்லாம இருக்காவ. சோலியெடுக்கவும் முடியல. நெதமும் பிள்ளையளப் பார்க்கணும் கூட்டிட்டு வா, கூட்டிட்டு வாண்டு சொல்லிட்டே இருக்காவ..."

மாமி முகத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயமாகப் பார்க்கிறாள். அந்தத் தெருவே இந்த அதிசயத்தைக் கண்டு மலைக்கிறது.

"ஆரு?... இவதா செவந்திக்குச் சக்களத்தியா?" என்று ஈருருவிக் கொண்டிருந்த கிழவி வந்து அவளை உற்றுப் பார்க்கிறாள்.

"அப்பெ வந்திருக்கிறானோ?"

"இல்ல..." என்று மருதாம்பா தலையசைக்கிறாள்.

மாமி சிதம்பர வடிவு கோழியைக் கூடையைப் போட்டு மூடிவிட்டு "உள்ளே வாரும்" என்றழைத்துச் செல்கிறாள். தட்டி கட்டிய திண்ணையை அடுத்த உள் வீட்டில் கம்போ கேழ்வரகோ புடைத்த தவிடு பரந்திருக்கிறது.

துணிகள், அழுக்காகத் தொங்கும் கொடி. சுவரிலும் கிறுக்கல்களும் சுண்ணாம்புத் தீற்றலும் சிவந்தச் சாந்துக் கையின் தீற்றலும் நிறைந்திருக்கின்றன. ஐந்து வயசு மதிக்கக் கூடிய பையன் ஒருவன் காகிதத்தைச் சுருட்டி சோப்பைக் கரைத்துப் பின் தாழ்வரையில் ஏதோ முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

சிதம்பர வடிவு ஓடிப்போய் அவன் முதுகில் இரண்டு வைக்கிறாள். அவன் கையிலிருந்து ஒரு நீல சோப்புத் துண்டை மீட்கிறாள்.

"கரியாப் போற பய, சோப்பைக் கரைக்கிறதே வேல!" என்று பின்னும் ஓர் அறை வைக்க, அவன் வாயைப் பிளந்து கொண்டு இயன்ற மட்டும் குரலெடுக்கிறான்.

"இங்க வால..." என்று மருதாம்பா அழைப்பது கண்டு அவன் திறந்த வாயை மூடியும் மூடாமலும் திகைத்தவாறே அவளுடைய கையிலிருக்கும் பழத்தால் ஈர்க்கப்பட்டு வருகிறான். மிட்டாய்ப் பெட்டி, கடலை எல்லாம் வெளியாகின்றன.

"பொன்னாச்சி மாமா ஊரில இல்ல. திர்நேலி போயிருக்கா. மாப்ளக்கி என்ன ஒடம்பு?"


"போன வருஷம் நீர்க்கோவ வந்து காலு நீட்ட முடியாம இருந்தாவ. அப்பமே பாதி நா சோலி எடுக்க முடியாமதா இருந்தாவ. பொறவு என்னேய? ரொம்பவும் மனத்தாவப் படுறாவ. நா எந்த மொவத்த வச்சிட்டுப் போவமின்னு. நாம போவம்னாலும் கேக்கல. அல்ல நீரு செவந்தனியக் கூட்டிட்டுப் போய் வாரும்னாலும் எப்பிடிப் போவமின்னு தாவப்படுறாவ. பிள்ளியளப் பாக்கணுமின்னும் மனசு அடிக்கி. அந்த பிள்ளியளுக்கும் அப்பச்சி வந்து பாத்தாரா கொண்டாராண்டு மனசில இருக்காதா? நேத்து நா சோலியெடுத்திட்டு வாரயில, பிள்ளயளப் பாக்கணுமின்னு கெடந்து கரயிறா. நாயித்துக்கெளம, கூட்டிட்டு வாரமின்னு வந்தே..."

பொன்னாச்சியின் உள்ளம் பௌர்ணமைக் கடலாக எழும்புகிறது. மாமி என்ன சொல்வாளோ என்று பார்க்கிறாள்.

"ஒங்க மக்கள நீங்க கூட்டிட்டுப் போகத்தா வந்திருக்கிய. ஆனா, அவிய ஊருல இல்லாதப்ப கூட்டிட்டுப் போறதுன்னா எப்பிடின்னு பாக்கேன்..."

மருதாம்பா உள்ளே வந்த குமரவேலு, வள்ளி, குஞ்சரி எல்லோருக்கும் கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயையும் சேவையும் எடுத்துக் கொடுத்துவிட்டுப் பெட்டியை அப்படியே சாமி கையில் கொடுக்கிறாள்.

பொன்னாச்சி உரலில் துவைத்துக் கொண்டிருந்த கம்புக் குருணையை வட்டச்சுளகில் வாரிக் கொண்டு வந்து வைக்கிறாள். உள்ளே தாழ்வரை அடுப்பில் பானையில் நீர் கொதிக்கிறது.

மாமி பொன்னாச்சியை அழைத்து, "கடையிலே போயி கருப்பட்டியும் காப்பித் தூளும் வாங்கிட்டு வா, அப்பச்சி வந்ததும் காசு தாரன்னு சொல்லு" என்று அனுப்புகிறாள்.

பதினெட்டைக் கடந்துவிட்ட பொன்னாச்சிக்குச் சிறு குழந்தையாகி விட்டாற் போலிருக்கிறது. மாமி ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து பொழுது போகும் வரையிலும் அவளுக்கும் தம்பிக்கும் அவர்களைத் தவிர யாருமில்லை என்று குத்திக் காட்டிக் கொண்டிருக்கிறாள். தங்கள் குடும்பத்துக்கே வருவாய் போதாமல் தத்தளித்துக் கொண்டிருக்கையில் நாத்தி மக்கள் இருவருக்கும் சோறோ, கஞ்சியோ பங்கு வைக்க வேண்டியிருக்கிறது; அவர்களை வைத்துக் கொண்டிருப்பது தேவையில்லாதது என்பது அவள் கருத்து.

பொன்னாச்சி எத்தனை நாட்கள் பட்டினியுடன் கண்ணீர் வடித்திருக்கிறாள்! மாகாளியம்மனை அவள் வேண்டாத நாளில்லை. வீட்டுக்குத் தண்ணீர் கொண்டு வருவதும், குத்துவதும், தீட்டுவதும், பெருக்குவதும், மெழுகுவதும், ஆக்குவதும், கழுவுவதும் அவள்தான். மாமி யாரையேனும் எப்போதும் ஏசிக் கொண்டிருப்பாள். நிரந்தரமாக அதற்கு உரியவர்கள் காலஞ்சென்ற நாத்தி, அவள் கண்காணாக் கணவன், பாரமாகிவிட்ட மக்கள், பிறகு, பிறரிடம் நிரந்தரக் கூலிக்குப் போகமாட்டேன் என்று தன் பட்டாளத்தைக் கட்டிக் கொண்டு மூட்டை உப்பு முக்கால் ரூபாய்க்கேனும் போகுமோ என்று அவதியுறும் அசட்டுப் புருசனை ஏசுவாள். மாமாவுக்குத் திருச்செந்தூர் வேலனிடம் அளப்பரிய பக்தி உண்டு. எனவே ஐந்து மக்களுக்கும் அவன் பெயரையே வைத்திருக்கிறார். பெரியவன் சக்திவேல் திருநெல்வேலியில், கல்லூரியில் இரண்டாண்டுகளாகப் படிக்கிறான். இரண்டாவது குழந்தை பிறந்ததும் இறந்து விட்டது. அடுத்து வள்ளி; அவளுக்குப் பன்னிரண்டு வயசாகிறது. இன்னும் வயசுக்கு வரவில்லை. பிறகு குஞ்சரி, குமரவேல், அடுத்தவன், ஞானவேல் கடைக்குட்டி. மாமி தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் அவனைப் பெற்றதும் கட்டுப்பாட்டு சிகிச்சை செய்து கொண்டு விட்டாள். அதனால் உடலுழைக்கக் கூடாது என்ற கருத்தில் வீட்டுப் பணிகள் ஏதும் செய்ய மாட்டாள்.

கடைவாயிலில் மூன்றாம் வீட்டு இசக்கி குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்கிறாள்.

"ஆரு வந்திருக்கிறாவ?" என்று விசாரிக்கிறான்.

"என்னக்க சின்னாச்சி. அப்பச்சி ரெண்டாந்தாரம் கெட்டல? அவ, என்னையும் தம்பியையும் கூட்டியாரச் சொல்லி அனுப்பியிருக்கா." பொன்னாச்சிக்கு முகத்தில் பெருமை பொங்குகிறது.

"நீங்க போகப் போறியளா? தூத்துக்குடிக்கா?"

ஒரு புதுமையுமில்லாத இந்தக் கிராமத்தை விட்டு நீங்கள் தூத்துக்குடிப் பட்டணத்துக்குப் போகப் போகிறீர்களா என்ற வியப்பில் இசக்கி கண்களை அகல விரிக்கிறாள்.

"பொறவு இங்க இனி என்ன சோலி? அப்பச்சிக்கு ஒடம்பு முடியலியா, அப்ப நாம போயிப் பாக்கண்டா?"

"மாமி அனுப்பிச்சிக் குடுப்பாவளா?"

"குடுக்காம? குடுத்துத்தானே ஆவணும். நாங்க போயிடுவோம். பச்சையப்பய எங்கேன்னு தெரியல. எங்க போனா? நீ பாத்தியா?"

"அதா, அந்தால ஜேம்சு கூடப் போனா..."

'பரவப் பிள்ளியகூடப் போய்த் தொலையிறா. குடியப் பழகிக் குடுத்திடுவா. போட்டும் தூத்துக்குடிக்குப் போயிட்டா அங்ஙன இந்தச் சல்லிய மெல்லாம் இல்ல...' என்று எண்ணிக் கொண்டு கடைக்காரரிடம் காபித்தூளும் கருப்பட்டியும் மாமி கூறியபடி கடனுக்குக் கேட்கிறாள்.

கடைக்காரன் கடனுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. அவள் நேராக முன்சீஃப் ஐயா வீட்டுச் சந்து வழிச் சென்று பின் முற்றத்தில் வந்து நிற்கிறாள்.

"ஆச்சி...?" என்று அவள் குரல் கொடுக்கையில் சந்து வழியாக உப்புப் பெட்டியும் கையுமாக வரும் தங்கபாண்டி "ஆரு? பொன்னாச்சியா...?" என்று கண்களை அகல விரிக்கிறான். அவள் தள்ளி நிற்கிறாள்.

"ஆச்சி இல்லையே? ஆறுமுவனேரி போயிருக்காவ. காலமே சொல்லிட்டுப் போனாவ..." என்று கொட்டிலில் உள்ள திண்ணையில் உப்புப் பெட்டியை அவள் வைக்கிறாள்.

"ஆச்சிக்கு இப்ப என்ன...?"

ஒரு விஷமச் சிரிப்பை நெளிய விட்டவாறு அவளை ஏற இறங்க அவன் பார்க்கிறான்.

வண்டியை ஓட்டிக் கொண்டு வரும் தங்க பாண்டி தன் பட்டாளத்து உப்பை எல்லாம் சேகரித்துக் கொண்டு சென்று மூட்டைக்காரர்களுக்கு விற்பான். உள்ளூரிலும் சிறு வியாபாரம் செய்வான்.

பொன்னாச்சிக்கு அவனிடம் சொல்லவும் விருப்பமில்லை. சொல்லாமல் வெறுங்கையுடன் திரும்பவும் மனமில்லை.

"மாமா திர்நேலி போயிருக்கியா, வீட்ட சின்னாச்சி வந்திருக்காவ. மாமி மாமா வந்ததும் தரதாச் சொல்லி கடயில கருப்பட்டியும் காபித்தூளும் வாங்கியாரச் சொன்னா. அரருவாத் துட்டு வேணும்..."

தங்கபாண்டி ஒரு உல்லாசப் பார்வையுடன் தனது இடுப்பிலிருந்து ஒரு ரூபாய்த் தாளை எடுத்து அவள் விரலைத் தீண்டியபடி வைக்கிறான்.

அந்தத் துட்டனை எரித்து விடுபவள் போல பார்த்து விட்டு, கையை உதறினாற் போல் நோட்டை எடுத்துக் கொண்டு அவள் கடைக்கு விரைந்து வருகிறாள். அவன் அவளைக் காணும் போதெல்லாம் இப்படித்தான் சாடைகள் சைகைகள் செய்கிறான். சவம், இனி அவள் தான் இந்த ஊரில் இருக்கப் போவதில்லையே!

அவள் காபித் தூளும் கருப்பட்டியுமாக வீட்டை நெருங்குகையில், மாமி வந்தவளிடம் ஒரு பாட்டம் 'ஆவலாதி' பாடிக் கொண்டிருக்கிறாள்.

"அன்னாடக் கஞ்சிக்கே வாரதில்லே. போன வருசம் பாதி நாளும் ஏலேலோ கெளங்குதா அவிச்சிக் கஞ்சி குடிச்சோம். மாசம் ரெண்டு நட கெணறு செப்பம் செய்யாம ஏலாது."

"லாரி வரப்பாதையில்லேண்ணா உப்புக்கு ஏது வெல? ஓடைக்கு மறுகரயில லாரி வரும். வண்டிக்கார உப்பள்ளிட்டுப் போயி அவங்கிட்ட விக்கியா. நமக்குக் குடுப்பது மூடைக்கி முக்கா ரூவாதா. மூடை மூணுக்கு வித்தாலும், அஞ்சுக்கு வித்தாலும் முக்கா ரூவாக்கி மேல நமக்கு ஒண்ணுமில்ல. நூறு நூறான சங்கத்து ஏக்கரில் இவியளப் போல நம்பாட்டளமிண்ணு இந்தத் தொழிலக் கட்டிட்டுருப்பவ ஆருமில்ல. அவயவிய கன்டிராட்டு, அது இதுண்ணு, அங்கங்க பொழக்கப் போயிட்டாவ. இவிய என்னியோ கெனா கண்டிட்டு ஆனவாடும்படுறா. கண்டவனயும் கூட்டிட்டு வந்து பிளசர் வச்சடிச்சி அம்புட்டு ரூவாயும் செலவு பண்ணதுதா மிச்சம். எங்க ஆம்பிளக்கி ஒரு சூதுவாது தெரியாது." மாமி மூச்சுவிடாமல் பொரிந்து தள்ளுகிறாள்.


பொன்னாச்சி கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு இறுத்துக் கருப்பட்டியும் சேர்த்து 'கிளாசில்' ஊற்றிக் கொண்டு வருகிறாள்.

"கையோடு கூட்டிட்டு வந்திடுண்ணுதா அனுப்பிச்சிருக்காவ. தலைப் பொண்ணு இத, இவளாட்டம இருக்கும். 'பாஞ்சாலி'ன்னு பேரு. தண்ணி தூக்கியாரும்; வீட்டுக்கார ஆச்சிக்கு ஒத்தாசையா எனுமேஞ் செய்யும். சோறோ கஞ்சியோ போட்டு அவியளே வச்சிருக்காவ. ஒரு பையன் பள்ளிக்கொடம் போறா. பொன்னாச்சி தம்பிய எங்க காணம்? பச்சமுத்துன்னு பேரில்ல?"

"ஆமா எங்க பெரிய பையனுக்கும் அவனுக்கும் ஒரு வருசம் அஞ்சு மாதந்தா வித்தியாசம். இந்த மாதா கோயில் ஸ்கூல்ல படிச்சிட்டு திருச்செந்தூர் போயிப் படிச்சு பத்து பாசாயி, இப்ப காலேஜில படிய்க்கியா. இந்தப் பயலையும் படிபடின்னுதா முட்டிட்டாவ. படிப்பு ஏறலியே? பரவப் பயலுவளோடு கடக்கரயில் திரியுவா, இத வராம் பாரும்!"

பையன் பொன்னாச்சியைப் போல் அப்பன் சாயலாக இல்லை. சிவப்பாக, கழுத்து மட்டும் உயர்ந்து, கிள்ளி எடுக்கச் சதையில்லாமல், பின்னிய மார்க்கூடுடன் விளங்குகிறான். பதினைந்து பதினாறு வயதுப் பையனாகவே மதிக்க இயலாது. குச்சிகுச்சியான முடி. அரையில் ஒரு கறுப்பு அரைச்சராய் மட்டுமே போட்டிருக்கிறான். மேனியில் ஒன்றுமில்லை.

மாமி அவன் கையில் ஒரு பழத்தையும் சிறிது மிட்டாயையும் எடுத்துக் கொடுக்கிறாள். "ஒங்க சின்னாச்சிலே, அப்பச்சி ஒன்னயும் அக்காளையும் தூத்தூடிக்கிக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காராம்...!" என்று தெரிவிக்கிறாள்.

பையன் எதுவுமே பேசாமல் மிட்டாயையும் பழத்தையும் அவசரமாக விழுங்குகிறான்.

"மீன் பரவப் பயலுவளோடு சேந்திட்டுப் போறானா? குடிக்கக் கத்துக்கிடுவானோண்ணு பயமாயிருக்கி. இங்ஙன அம்புட்டு ஆளுவளும் அதே. எங்க ஆம்பிள அந்த நாள்ள கள்ளுக்கடைக்குத் தீவச்சு செயிலுக்கும் போனாவ. இவனப் பத்தி எனக்கு இதே கவல. ஊரா புள்ள, நாம நாளக்கு ஆரும் என்னமேஞ் சொல்லுதாப்பல வச்சுக்கலாமா?"

"பின்ன இல்லியா மயினி? நீரு எம்புட்டு நா வச்சி சோறு போட்டாலும், அவ அப்பன் எம்புள்ளியண்டு தானே உருகா?"

மாமன் இல்லை என்பது வெறும் சாக்குதான் மாமிக்கு. அவர்களை அனுப்பிவிடுவதுதான் குறி என்று பொன்னாச்சி உணர்ந்து கொள்ளுகிறாள். சின்னாச்சியும அவர்களை அழைத்து போய்விட வேண்டும் என்ற தீவிரத்துடன் வந்திருப்பது கண்டு மனம் மகிழ்ச்சி கொள்கிறது.

மாமிதான் வந்தவளிடம் எப்படி நடக்கிறாள்! உண்மையில் மாமன் திடீரென்று எதிர்பாராமல் புறப்பட்டு வந்து விட்டால் அவர்கள் பயணத்தை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவார். உண்மையில் வேலு தைப் பொங்கல் கழித்துத்தான் கல்லூரி விடுதிக்குச் சென்றிருந்தான். திடீரென்று முதல் நாள் கல்லூரியில் ஏதோ பையன்களிடையே சண்டை. வகுப்புக்கள் நடக்கவில்லை. போலீசு வந்ததென்று முன்சீஃப் வீட்டுக்குத் தெரிந்த ஆசிரியர் செய்தி அனுப்பி இருக்கிறார். உடனே மாமா ஓடியிருக்கிறார். மாமியிடம் வேலுவைக் குறித்து அவர் கத்த, மாமி அழ, இங்கும் ஓரே கலவரமாக இருந்தது. பணம் கூட யாரிடமோ கடன் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்.

"ஏலே, முடியில கொஞ்சம் எண்ணெய் தொட்டா என்ன?" என்று மாமி கரிசனத்துடன் கேட்டு, எண்ணெய் புரட்டச் சொல்கிறாள். பெட்டியிலிருக்கும் நல்ல சராயையும், சட்டையையும் எடுத்துக் கொடுத்து அவனை அணியச் சொல்கிறாள்.

"இவன் போயிட்டா எனக்குக் கையொடிஞ்ச மாருதியாயிரும். நா பெத்த பயலுவவுட இவம் மேலதா எனக்கு உசுரு. துலாவில பாத்திக்குத் தண்ணி எறய்ப்பா. எங்க ஆம்பிள அங்ஙன இங்ஙன போயிட்டேயிருப்பா. சுசய்ட்டின்னும் சங்கம்னும் அவியளுக்கு சோலி. உப்பு எறங்கியிருக்கு மாமின்னு வந்து சொல்லுவா. நானும் அவனுமே வாரி வய்ப்பம். ஒரு நா இரு பரவங்களோடு வள்ளத்திலேறிப் போயிருக்கா. நா காணாம தவிச்சிப் போனே. பொன்னாச்சியும் அப்படித்தே. அவ முடி சீவிச் சட போடலீன்னா எனக்கு ஒறக்கம் புடிக்காது..." என்றெல்லாம் மாமி அருமை பெருமைகளை வாரி விடுகிறாள்.

குத்தியக் கம்பைப் போட்டுக் கிண்டி இறக்கிவிட்டு, மாமி மீன் கண்டம் வாங்கி வந்து குழம்பு வைக்கிறாள்.

பொன்னாச்சிக்கு இது கனவா, நினைவா என்று புரியவில்லை. எல்லாம் சுரவேகத்தில் நடப்பது போலிருக்கிறது. என்றாலும் அன்பான மாமனுக்குத் தெரியாமல் சொல்லாமல் இத்தனை நாள் வளர்ந்த இடத்தை விட்டுப் போகலாமா?

"மாமா என்னமே நெனச்சுக்க மாட்டாவளா..."

"என்னேய பின்னே? அப்பச்சி ஒடம்பு சொகமில்லாம, கூட்டிட்டு வாரும்னு அனுப்பிச்சிக் கொடுத்திருக்கயில நாமும் போகண்டாமா? மாமா வந்தாச் சொல்ற. வந்து பாக்கச் சொல்றே. அவியவிய சொத்த அவியவிய கிட்ட ஒப்படய்க்கிறதுதான மொறை?"

இந்த நியாய வார்த்தைகளுக்கு மேல் பேச்சுக்கு இடமேது?

பொன்னாச்சியுடன் தானும் புறப்பட வேண்டும் என்று ஞானம் அழுகுறான். குஞ்சரி அவளுக்கு அம்மா வைத்துப் பின்னியிருக்கும் ரோஸ் நாடாவையும், அவள் உடுத்தியிருக்கும் ரோஸ் சேலையையும் தொட்டுப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.

பொன்னாச்சி எல்லோரிடமும் விடை பெற்றுக் கொள்கிறாள். தெருவே அவர்களை வழியனுப்புகிறது. முன்சீஃப் வீட்டு ஆச்சி இல்லை. கோயில்காரர் வீடு, கொல்லாசாரி வீட்டு ஆச்சி எல்லோரிடமும் பொன்னாச்சி சுருக்கமாக விடை பெற்றுக் கொள்கிறாள்.

மாகாளி அம்மன் கோயிலில் கும்பிட்டு வேண்டிக் கொள்கிறாள். மாலை வெயில் மஞ்சள் முலாம் பூசத் தொடங்குகிறது. சிவந்தகனி பஸ் நிறுத்தத்தில் ஏற்கெனவே வந்து நிற்கிறான். பொன்னாச்சியை அவன் வியப்புடன் பார்த்த வண்ணம், "இதுதா மவளா?" என்று கேட்கிறான்.

"ஆமா, அது பய்யன்..."

மருதாம்பா சொல்லி முடிக்கு முன் பஸ் ஒன்று வருகிறது. இசக்கி இப்போதும் இடுப்பில் தங்கச்சியுடன் நிற்கிறது. "பொன்னாச்சி அக்கா, தூத்தூடிக்கா போற?" என்று விழிகள் விரிய அவள் கேட்கையிலேயே அவர்கள் வண்டிக்குள் ஏறிக் கொள்கின்றனர். பொன்னாச்சி நின்ற வண்ணம் அவளுக்குக் கையை அசைக்கிறாள்.

பஸ் கிளம்பி விடுகிறது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3
முன்பு மருதாம்பாள் பஸ் ஏறிய இடத்திலேயே இறங்கி விடுகிறாள். அப்போது முகங்கள் தெளிவாகத் தெரியாமல் மங்கும் நேரம். அவர்கள் லாரிகளும் பஸ்களும் போகும் கடைத் தெருவைத் தாண்டி நடக்கின்றனர். அவர்கள் ஊர் மாதா கோயிலை விடப் பெரிதாக ஒரு மாதாகோயில் உச்சியில் விளக்கொளிரத் தெரிகிறது.

மருதாம்பா கடையில் பொட்டுக் கடலையும் மொந்தன் பழமும் வாங்கிக் கொள்கிறாள். அந்தத் தெருக்களைத் தாண்டி, மணலும் முட்செடிகளுமான பரப்பைக் கடந்து, வேறு தெருக்கள் வழியே நடக்கின்றனர். ஒழுங்கில்லாத வீடுகள். சில வீடுகள் மஞ்சள் வண்ணச் சுவர்களும், மூங்கில் பிளாச்சு 'கேட்டு' மாகப் புதியவை என்று பறை சாற்றுகின்றன. இடை இடையே சாக்கடை, குப்பை மேடு, கடை, ஓட்டுவில்லை வீடுகள், தென்னங்கிடுகுகளான தடுப்புக்கள், இடைவிடாது எதிரே குறுக்கிடும் சைக்கிள் ஒலிகள் ஆகிய காட்சிகளை வியப்புடன் பார்த்துக் கொண்டு அவர்கள் நடக்கின்றனர்.


பொன்னாச்சி தனது இரண்டொரு துணிகளையும் தம்பியின் சராயையும் ஒரு கித்தான், பைக்குள் வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் சிறுமியாகத் தாயுடன் தூத்துக்குடியில் வாழ்ந்த காலத்து வீட்டை நினைவுக்குக் கொண்டு வர முயலுகிறாள். அதை கோல்டன்புரம் என்று சொல்வார்கள். எதிரே முட்செடிக் காடாக இருக்கும். அவள் வீட்டு வாயிலில் தம்பியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவள் அம்மா தண்ணீர் கொண்டு வரப் போவாள். லாரி வாசலில் வரும். லாரியில் இருந்து தலையில் துவாலை கட்டிக் கொண்டு ஒருவர் வந்து உள்ளேயிருந்து மண்வெட்டியையும், கூடையையும் எடுத்துப் போவார். அவர் அப்பச்சி. அவரிடம் அவளுக்கு மிகவும் பயம். அவருடைய கண்கள் சிவப்பாக இருக்கும். பெரிய மீசை வைத்திருப்பார். கட்டம் போட்ட லுங்கி உடுத்தியிருப்பார். அம்மாவை அடிப்பார். அவளையும் கூட அவர் அடித்து வெளியே தள்ளினார். ஒரு நாள் இரவு, அந்த முட்செடியிலிருந்து தலைவிருச்சிப் பிசாசு ஒன்று துரத்தி வருவது போல் அவள் பயந்து போய் அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.

அந்த அப்பச்சி... அவரை அவள் பார்க்கப் போகிறாள். அவர் உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறார்.

"சவத்துமாடன். அவனொரு மாப்பிள்ளை, இந்த வீட்டுக்கு!" என்று மாமியின் நாவில் அடிக்கடி வசைக்கு ஆளாகும் அப்பச்சியை அவள் பார்க்கப் போகிறாள். "அவ தளுக்கும், மினுக்கும் கண்டிராக்டானாலும், கணக்கவுள்ளயானாலும், சீலயவுக்குறவ..." என்ற ஏச்சுக்காளாகும் பெண் பிள்ளையான சின்னாச்சி இன்று மாமியிடம் மரியாதைக்குரியவளாக வந்து கூட்டிப் போகிறாள்.

அவள் உண்மையில் அப்படித் தளுக்கு மினுக்காகவேயில்லை. முடியை எண்ணெய் தொட்டுக் கோதிச் செருகியிருக்கிறாள். புதுமை மங்கிய நீலச்சேலை, வெண்மையாகத் தான் பிறப்பெடுத்திருந்தேன் என்று சொல்லும் ரவிக்கை. முகத்தில் எலும்பு முட்டிக் கண்கள் குழியில் இடுக்கிக் கிடக்கின்றன. எப்படியிருந்தாலும் இடைவிடாத மாமியின் இடிச்சொற்களிலிருந்து அவர்களை விடுவிடுத்திருக்கிறாள் அவள்.

அவர்கள் வீடு வெளியிலிருந்து பார்க்கக் காரைக்கட்டுச் சுற்றுச் சுவரும் வாயிலுமாக இருக்கிறது. வாயிலுள் நுழைந்து எதிரே தெரியும் வீட்டைச் சுற்றி அவர்கள் செல்கின்றனர். அந்த முற்றத்தில் ஒரு முட்டைச் சிம்னி விளக்கை வைத்துக் கொண்டு ஒரு பெண் பிள்ளை கல்லுரலில் உளுந்து ஆட்டிக் கொண்டிருக்கிறாள். திண்ணை போன்ற மேட்டில் ஒரு ஆண் காலோடு தலை போர்த்த வண்ணம் உட்கார்ந்து இருமிக் கொண்டிருக்கிறான். அங்கேயே சில குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். வரிசையாக உள்ள வாயில் கதவுகளில் ஒன்று பூட்டிக் கிடக்கிறது. நேர் எதிரே உள்ள மூன்றாவது வாயிலை நோக்கி மருதாம்பா வருகிறாள்.

"அப்ப நா வாரனக்கா!" என்று கூறியவனாகச் சிவந்தகனி அங்கேயே விடைபெற்றுத் திரும்பிப் போகிறான்.

திண்ணையில் இங்கேயும் காலோடு தலை போர்த்து உருவம் ஒன்று உட்கார்ந்திருப்பதைப் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள்.

சின்னம்மா வெறுமே சாத்தியிருக்கும் வாயிற்கதவைத் திறந்து சிம்னி விளக்கைத் தேடி ஏற்ற ஐந்து நிமிடங்களாகின்றன.

"பிள்ளிய வந்திருக்காவ, ஏதே... ஒங்கப்பச்சி கும்பிடுக..."

பொன்னாச்சி, அந்தச் சிம்னி விளக்கொளியில் தந்தையைப் பார்த்துக் குழம்பியவளாக நிற்கிறாள். தாடியும், நார் பறந்தாற் போன்ற முடியுமாக, அழுக்குத் துணியால் மேலும் கீழும் போர்த்திக் கொண்டு கும்பலாக அமர்ந்திருக்கும் இவரா அப்பச்சி...?

கால்களைத் தொட்டுப் பணிவுடன் கும்பிடுகிறாள். பச்சையையும் கும்பிடச் சொல்கிறாள்.

"எங்க இந்தப் பிள்ளயவ? ஏட்டி, பாஞ்சாலி? சரசி? பானையில பொட்டுத் தண்ணி இல்ல. குடி தண்ணியுமில்ல, கொடத்துல. ஏலே நல்லகண்ணு? அக்காளெங்கேலே?"

ஆடிக் கொண்டிருந்த பையன் வருகிறான். "பாஞ்சாலி ஆச்சிகூட சினிமாவுக்குப் போயிட்டு வந்தா. எனக்கு மிட்டாய் வாங்கித் தாரன்னியே?..." என்று அவள் சேலையைப் பிடித்து இழுக்கிறான்.

"தம்பியக் கூப்பிடு; இதப்பாரு பொன்னாச்சிக்கா, இது அண்ணெ..." என்று கூறிப் பொட்டுக் கடலையும் பழமும் கொடுக்கிறாள். அப்போது சரசி பிரிந்த தலையும் கிழிந்த பாவாடையுமாக வெளியிலிருந்து ஓடி வருகிறாள்.

"பாஞ்சாலி வந்தா கூப்பிடுடீ? பொட்டுத் தண்ணியில்ல. கேணிலேந்து ஒரு நடை தண்ணி கொண்டாரச் சொல்லுடி?..." கயிற்றையும் வாளியையும், பானையையும் பாஞ்சாலி வந்து தூக்கிக் கொண்டு சென்றதும் உள்ளே விளக்குடன் நுழைகிறாள் மருதாம்பா. சற்றைக்கெல்லாம் திடுக்கிட்டவளாக அவள், "ஏளா, உள்ளாற யாரு வந்தது? நா நேத்துதான் வெறவு வாங்கிப் போட்டுப் போன? ஒத்தக் குச்சியக் கூடக் காணம்?" என்று கூக்குரலிடுகிறாள். ஆனால் அந்த ஓலம் எந்த எதிரொலியையும் கிளப்பவில்லை. கொடக் கொடக்கென்று உளுந்துதான் மசிந்து கொண்டிருக்கிறது. பாறையில் முட்டி மோதி எதிரொலிக்கும் கடலலை போல் அவள் மீண்டும் மீண்டும் ஓலமிடுவாள். அப்பன் எதுவுமே பேசவில்லை. மருதாம்பா சரசியின் முதுகிலும் நல்லகண்ணுவின் முதுகிலும் ஆளுக்கு இரண்டடி வைக்கிறாள்.

"கதவைப் பூட்டிட்டுப் போன்னு சொன்னேனில்ல? மூதி தெருவுல ஆடப் போயிடறா! தொறந்த வீடுன்னா எந்த நாயும், களுதையும் எச்சிப் பொறுக்க வரும்... சவங்க..." என்று வசை பாடத் தொடங்குகிறாள்.

அவளுடைய சந்தேகத்துக்கு, அயல் பக்கத்துக்காரிகள் ஆளாகிறார்கள். அவள் சாடைமாடையாகச் சொன்ன பிறகும் மாவாட்டுபவள் சும்மா இருப்பாளா? மாவை வழித்து விட்டு வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறாள். பொன்னாச்சி இத்தகைய விறகுச் சண்டைகளைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போனவள். ஒளிமயமான கனவுகளைச் சரேலென்று மேகங்கள் மூடினாற் போல் ஒரு சோர்வு ஆட்கொள்ளுகிறது. அவளுடைய அப்பச்சியை இவ்வாறு செயலிழந்த துணிச் சுருளாக அவள் கற்பனை செய்திருக்கவில்லை.

இரவு மருதாம்பா ஏதும் சமைக்கவில்லை. விறகு பறி போய்விட்டது. ஆற்றாமையில் திண்ணையிலிருந்த புருசனையும், பொறுப்பில்லாத குழந்தைகளையும் திட்டி ஓயவில்லை. மழை அடித்து ஓய்ந்தாலும் நினைத்து நினைத்துச் சாரல் அடிக்கக் காற்று வீசுவதைப் போல் கிளம்புகிறது.

முன் வாசலுக்கு நேராக உள்ள வீட்டிலிருந்து ரேடியோப் பாட்டு ஒலிக்கிறது. பச்சை அந்தப் பக்கம் செல்கிறான். இந்த முற்றத்தின் பக்கமாக உள்ள 'சன்னலின் அருகே நின்று அங்கே பார்க்கிறான். ஒரு ஆச்சி, டிரான்ஸிஸ்டர் பெட்டியைத் திருகி, பாட்டு வைக்கிறாள். அவனைக் கண்டதும், "இப்படி வாலே, ஒம்பேரென்ன?" என்று அவள் அழைக்கிறாள்.

பச்சை நாணிக் கோணிக் கொண்டு உள்ளே செல்கிறான். அந்த முன்னறையில் ஒரு பனநார்க்கட்டிலில் ஆச்சி அமர்ந்திருக்கிறாள். அங்கே இன்னொரு பெரிய பெஞ்சி இருக்கிறது. ஒரு புறம் சுவரில் புத்தகங்கள் நோட்டுக்கள் தெரியும் ஷெல்ஃப்; அதன் மேல், சுவரில் உயரே ஒரு படம் இருக்கிறது. படத்தில் இளையவனாக, அரும்பு மீசையும் நேர்ப் பார்வையுமாக ஒரு பிள்ளை விளங்குகிறான். அந்தப் படத்துக்கு மஞ்சளும் நீலமும் கலந்த பட்டு நூல் மாலை போட்டிருக்கிறார்கள்.

பச்சை அந்தப் படத்தையே பார்க்கையில், ஆச்சி அவனிடம் "படிக்கிறியாலே?" என்று கேட்கிறாள். ரேடியோவில் பாட்டு இல்லை. பேச்சு வருகிறது. அதை அணைத்துவிட்டு, ஒரு காகிதப்பையில் இருந்து வேர்க்கடலையை எடுத்து உரித்துத் தின்கிறாள்.

அவனிடமும் இரண்டு கடலையைப் போட்டவாறே மீண்டும், "படிக்கிறியாலே? கேட்டதும் வதில் சொல்லு?" என்று கேட்கிறாள்.

"படிச்சேன், இப்ப நிறுத்திட்டே..."

"ஏ...? சோலிக்குப் போறியா?"

"மாமன் அளத்துல சோலி எடுப்பே. தம்பாட்டளம்."

"எம்புட்டு?"

"ரெண்டேக்கரு..."

அவள் உதட்டைப் பிதுக்குகிறாள். "அக்காளும் சோலிக்குப் போகுமா?"


"இல்லே... வீட்டுவேல எல்லாம் செய்யும். எப்பன்னாலும், உப்பு வாரிப் போட வரும்."

"இங்கேயே இருக்கப் போறியளா?"

பையன் தெரியாது என்று தலையசைக்கிறான்.

இதற்குள் அடுத்த வீட்டுக்காரி பெருங்குரலெடுத்து ஏசுவது செவியில் விழுகிறது. பையன் முற்றத்துக்கு வருகிறான். பொன்னாச்சியும் அங்கு நிற்கிறாள். பாஞ்சாலி தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு வாயிற்படியிலேயே நிற்கிறாள். குஞ்சுகளைப் பின் தள்ளிவிட்டு இரண்டு பெட்டைகள் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போல் இருவரும் வாய்ச் சண்டை போடுகின்றனர்.

ஒருவழியாக ஓய்ந்து எல்லோரும் முடங்குகின்றனர். குழந்தைகள் எல்லோரும் பொட்டுக்கடலை, பழத்துடன் உறங்கிவிட்டனர். உள்ளே சின்னம்மாவும் படுத்து உறங்கிவிட்டாள்.

பொன்னாச்சிக்கு உறக்கம் வரவில்லை. அன்று பகலே அவள் சரியாக உணவு கொள்ளவில்லை. பசி, குடைகிறது. அவளுக்குப் பல நாட்களில் இப்படித்தான் ஏதேனும் தின்ன வேண்டும் போல் பசி கிண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு திரும்பித் திரும்பிப் படுத்து உறங்க முயலுகிறாள்.

பொழுது விடிந்தால் அடுப்புக்கு வைக்க ஒரு குச்சி இல்லை. மருதாம்பாவுக்கு சோறு எதுவும் பொங்க நேரமில்லை. பொன்னாச்சியை எழுப்பி, "ஏத்தா ஒங்கையில் இருக்கிற துட்டுல ரெண்டு வெறவும் அரிசியும் வாங்கி ஒல போட்டு பொங்கிக்கோ. நா அளத்துக்கு போவணும். கங்காணியிட்டக் கேட்டு எதினாச்சிம் துட்டு வாங்கி வார. நேராச்சி இப்ப" என்று கிளம்ப ஆயத்தமாகிறாள். பொன்னாச்சி திகைத்து விழிக்கிறாள்.

மாமி, மூன்று ரூபாய் கோயில்காரர் வீட்டிலிருந்து கடன் வாங்கி வந்து அவளுக்குக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறாள். சின்னம்மாவின் சொரூபம் வெளியாகிறது!

இந்தப் புதிய இடத்தில் அவள் எங்கிருந்து விறகு வாங்குவாள்?

"அரிசி...?"

"பாஞ்சாலி வரும். அவ வாங்கிக் குடுப்பா. தம்பி இருக்கானே? பின்னால கிணறு காட்டிக் குடுக்கும். ஒண்ணே முக்கா ரூவாக்கு அரிசி வாங்கிப் பொங்கு. இந்தப் பிள்ளங்களுக்கும் போடு. நா வார. ஒரு சுடு தண்ணி வைக்கக் கூட லாவன்னா இல்லை..." பொன்னாச்சி மலைத்து நிற்கையிலேயே கூரையில் செருகியிருக்கும் பன ஓலையைக் கையிலெடுத்து காலுக்கு ஒரு மிதியடி பின்னக் கிழித்தவாறு நடந்து செல்கிறாள். திகைப்பிலிருந்து விடுபட, பொன்னாச்சிக்கு வெகு நேரமாகிறது. அந்த வீட்டுக்காரி இட்டிலிக் கடை போடுபவ போலிருக்கிறது. விடியலிலேயே எங்கிருந்தோ நீர் கொண்டு வருகிறாள். அவள் புருசன் இருமிக் கொண்டே இருக்கிறான். வள்ளியோடொத்த மகளை எழுப்பி அமர்த்தி உரலில் அரைக்க பணிக்கிறாள். இன்னொரு வீட்டுக் கதவு பூட்டுத் திறந்து உட்பக்கம் சாத்தியிருக்கிறது. அதற்குரியவரை அவள் இன்னும் பார்க்கவில்லை.

அவள் செய்வதறியாமல் முற்றத்தில் நின்று கொண்டிருக்கையில் வீட்டுக்கார ஆச்சி, பல்லைச் சாம்பலால் துலக்கிக் கொண்டு அங்கு வருகிறாள். நல்ல உயரம்; பறங்கிப் பழமாய்ச் சிவப்பு. தீர்க்கமான மூக்கும் கண்களுமாக ஒரு காலத்தில் நல்ல அழகாக இருந்திருப்பாள். எள்ளும் அரிசியுமாய்ப் போன கூந்தலை அள்ளிச் செருகியிருக்கிறாள். வளர்த்த காதுகளில் பொன்னகையில்லை. மேல் காதில் மட்டும் வாளியும் முருகும் இருக்கின்றன. நெற்றியில் நீளமாகப் பச்சைக்கோடு, துலங்குகிறது. இடது புறங்கையில் கோலமும், இன்னும் ஏதோ பச்சைக் குத்தும் தெரிகின்றன. மினுமினுக்கும் ஆரஞ்சு வண்ணச் சேலையும் வெண்மையான ரவிக்கையும் அணிந்திருக்கும் அவள் பொன்னாச்சியைப் பார்ப்பதற்காகவே அங்கு வந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது.

குண்டு முகத்தில் கண்களால் அவளை வியப்புடன் பொன்னாச்சியும் பார்க்கிறாள். முதல் நாளிரவே பாவாடை, ரோஸ் சேலை, ஜாக்கெட் செட்டைப் பத்திரமாக அவிழ்த்து வைத்து விட்டுப் பழைய சேலையைப் பின் கொசுவம் வைத்து உடுத்தியிருக்கிறாள். அந்த ஒரு செட் ஆடைகளே அவளுக்குப் புதுமையாக, முழுதாக இருக்கின்றன. அவளுக்கு மூன்றாண்டுகளுக்கு முன் மங்கல நீராட்டுக்கென்று மாமன் வாங்கித் தந்த சேலை அது. திருச்செந்தூர்க் கடையில் எழுபது ரூபாய்க்கு வாங்கி வந்தார்.

பிறகு, ஒரே ஒரு பழைய பாவாடையும் பாடியும் தான் உள்ளாடைகள்! சாதாரண நாட்களில் அவள் முழுச் சேலையை முரட்டுச் சேலையைத் தான் பின் கொசுவம் வைத்து உடுத்துவது வழக்கம். மூக்குத் துளைகளில் ஈர்க்குகளும், காதுத் துளைகளில் சன்னமாகச் சீவிய நெட்டியும் தான் அணிகள், அவளுக்குக் கைகளில் முழியே கிடையாது. போட்டிருக்கும் பிளாஸ்டிக் வளையல்கள் இரண்டும் மொழு மொழுத்த கைகளில் பதிந்து இருக்கின்றன.

"சின்னாச்சி அளத்துக்குப் போயிட்டாளா?" என்று விசாரிக்கிறாள்.

"ஆமா..."

"தண்ணிகிண்ணி வச்சாளா? சோறாக்கினாளா? ராவுல வறவக் காணமின்னு சொக்குவும் அவளும் சண்ட போட்டாவளே?"

பொன்னாச்சிக்குத் திகில் பிடித்துக் கொள்கிறது. வாயைக் கிளறி வம்புக் கிழுக்கிறாளா? இவளிடம் எப்படிப் பேசுவது? ஊரிலும் இவ்வாறு வாயைக் கிளறுபவர்கள் உண்டு. அவள் ஏதேனும் பேசிவிட்டால் மாமி நார் நாராகக் கிழித்தெறிந்து விடுவாள்.

எனவே மௌனமாக நிற்கிறாள்.

"ஏட்டி பாஞ்சாலி! ரெண்டு வெறவு கொண்டு ஒங்கக்காளுக்குக் குடு! அடுப்புப் பத்தவய்க்கட்டும்!" என்றவள் குரலை மிக மிகத் தாழ்த்தி, "ஒங்கப்ப எடுத்துக் குடுத்து அதுக்கு வார காசுக்கு என்னமேந் தின்னிடுவா. குடிய்க்கவுஞ் செய்வா. இது ஒள்ளதுதே!..." என்று தெரிவிக்கிறாள். பாஞ்சாலி இரண்டு விறகை எடுத்துக் கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் வைக்கிறாள்.

பொன்னாச்சிக்கு நா எழவில்லை.

"ஏட்டி, அரிசி இல்லேன்னா, மூலக்கடையிலே வாங்கிக் குடு!" என்றும் உத்தரவிடுகிறாள். "பய ஒந் தம்பியா? சோலிக்குப் போவானா?"

"போவணும்..."

"சின்னாச்சி கங்காணியிடம் சொல்றன்னிச்சா?"

"ஒண்ணுஞ் சொல்லல. அவுசரமாப் போயிட்டாவ..."

"ஆமா காலமே அதிகப்படி எதுவானாலும் அட்டுச் சொமக்கக் கூலி கெடய்க்குமேண்ணு போயிருப்பா! அவாத என்னவே? ஒன்னப்பச்சிக்குக் கண்ணு சுத்தமாத் தெரியல. அன்னிக்கு அளத்துல சோலியெடுக்கையில் கீழவுழுந்திட்டாராம். பொறவுதா ஒங்களக் கூட்டி வாரமின்னு போனா..."

மருமம் துலங்கிவிட்டது. ஆனால் என்னம்மா வேலை பற்றி எதுவும் சொல்லவில்லையே?

"தம்பிக்குன்னாலும் எதானும் கூலி வேலை கெடச்சாத் தேவலை..."

பொன்னாச்சியின் கண்கள் ஒளிருக்கின்றன. 'ஒங்களால முடியுமா...' என்று கேட்கும் ஆவல் அது.

"ஆமா. பய இல்லாட்டி இங்ஙன கவுமுத்து புளியமுத்து ஆடப் போயிருவா! கெட்ட சகவாசமெல்லாஞ் சேர்ந்திடும்..." என்றவள் பாஞ்சாலியைத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி மூலையில் வாய் கொப்ளிக்கிறாள். காரிக் காரி உமிழ்கிறாள்.

"நீங்க ஏதானும் சோலி வாங்கிக் குடுத்தா, ரொம்ப தயவா இருக்கும், ஆச்சி. சின்னம்மாவுக்கு நாங்க பாரமா இருக்கண்டா..." ஆச்சி சேலை முன்றானையை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.


"சோலி இப்ப கெடக்காம இல்ல. 'பனஞ்சோல' அளத்துலியே சொல்லி வாங்கித்தார. அறவக் கொட்டடியிலோ, எங்கோ தம்பிக்கும், ஒனக்கும் கூட கெடய்க்கும். பனஞ்சோல அளத்துல வேல கெடக்கிறது செரமம்! அங்க கங்காணி மொறயில்ல. கண்ட்ராக்டு, ஒங்க சின்னாச்சி, அப்பன் சோலியெடுத்த அளம் சின்னது. கங்காணிமாரு கெடுபிடி ரொம்ப இருக்கும், நிர்ணயக் கூலின்னு சொல்லுவா. ஆனா கங்காணி வாரத்துக்கு ஒரு ரூபா புடிச்சிட்டுத்தா குடுப்பா. பொறவு அட்வான்சு, போனசு ஒண்ணு கெடையாது. அப்புசி மழை விழுந்திட்டா வேலயுமில்ல. வேல நேரம்னு கண்டிப்புக் கெடையாது. ஏ குடிக்கத் தண்ணி கூடக் கெடையாது. பனஞ்சோல அளம் அப்பிடில்ல, பெரீ...சு. மூவாயிரம் ஏக்கர். வேலக்கி எடுக்கையில அட்வான்சு குடுப்பா. பொறவு தீவாளி சமயத்தில நிக்றகப்ப சேலயொண்ணு போனசாத் தருவா. ஒரு கலியாணம் காச்சின்னா, அளத்துல சோலியெடுக்குற புள்ளக்கி இருநூத்தம்பது ரூபா குடுக்கா..."

பொன்னாச்சிக்குக் கேட்க கேட்க உள்ளம் துள்ளுகிறது. இருளாகக் கவிந்திருக்கும் எதிர்கால வாழ்வில் ஒளியிழைகளை அல்லவோ ஆச்சி காட்டுகிறாள்?

"ஆச்சி! ஒங்கக்கு ரொம்பப் புண்ணியமுண்டு. அந்த அளத்துல எனக்கும் தம்பிக்கும் வேல வாங்கித் தாரும். நாங்க எங்க மாமன் அளத்துல வாருபலவை போட்டு உப்பு வாருறதுதா, என்ன வேலன்னாலும் முசிக்காம செய்யிவம்..."

ஆச்சி கண்களை இடுக்கிக் கொண்டு சிறிது நேரம் யோசனை செய்கிறாள். பிறகு நீண்டதோர் சுவாசத்தை வெளியாக்குகிறாள்.

"இங்கெல்லாம் 'லோக்கல்' உப்பில்ல, கல்கத்தா அளம். வரி உப்பு வாருவாக. அதெல்லாம் ஆம்பிளதா வாருபலகை போடுவா."

"பொம்பிளக்கிப் பண்பாட்டு சோலியும், பொட்டி செமக்கிற சோலியுந்தா, என்னைப் போல பொண்டுவ, ராவுல உப்பு அறவக் கொட்டடியிலும் வேலக்கிப் போவாக. நாளொண்ணுக்கு எனக்கு நாலு நாலரை வரை வரும். தம்பிக்கு ரெண்டரை மூனு வரும். இப்ப ரேட் ஒசத்தியிருக்காண்ணு சொன்னா..."

பொன்னாச்சிக்கு அந்தக் கணத்திலேயே பனஞ்சோலை அளத்துக்குப் பறந்து போய்விட வேண்டும் போலிருக்கிறது. ஒரு நாளைக்கு அவளுக்கும் தம்பிக்குமாக ஆறு ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, மாசத்தில் நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் வரும். மாமாவின் அளத்தில் மொத்தமாகக் கூட அவ்வளவு தேறாது. மாமிக்கு அவளை எங்கேனும் அளத்தில் வேலைக்கு சேர்க்கலாம் என்ற யோசனை இருந்தாலும் கூட மாமா அதற்கு இடம் கொடுத்ததில்லை. அங்கிருந்து ராமக்காவும் கமலமும் கண்ணாடிக்காரர் அளத்துக்குப் போவார்கள். அவர்களுடன் அனுப்பி வைக்கலாம் என்று மாமி கருத்து தெரிவித்ததுண்டு. ஆனால் மாமா மிகவும் கண்டிப்பானவர். அவள் இங்கே வந்து அளத்தில் வேலை செய்கிறாள் என்று தெரிந்தால் கூடப் புறப்பட்டு வந்து கூட்டிப் போனாலும் ஆச்சரியமில்லை.

ஆனால்... மாசத்தில் நூற்றைம்பது வருமானம்! பொழுது விடிந்து நிதமும் கம்புக்கும் கேழ்வரகுக்கும் அரிசிக்கும் மிளகாய்க்கும் பீராயப் போகவேண்டாம். கடன் சொல்லிக் கடையில் சாமான் வாங்க வேண்டாம். தீபாவளிக்குப் புதிய சேலை போனஸ்... பிறகு கல்யாணம். அவளுடைய கண்களில் நீர்துளித்து விடுகிறது.

கல்யாணம் என்ற ஒன்றைப் பற்றி நினைக்கக் கூட முடியாத நிலை. அளத்தில் வேலை செய்கையில் அங்கேயே சோலி எடுக்கும் ஒரு ஆம்பிள்ளையைக் கட்டினால் இரண்டு பேருக்கும் பணம் கிடைக்குமோ?...

நினைக்கும் போது நெஞ்சு குழையும் நாணம் மேலிட்டு முகம் சிவக்கிறது.

பாஞ்சாலியும் பச்சையும் சென்று அரிசியும் மிளகாய் புளியும் வாங்கி வருகின்றனர்.

அப்பன் எழுந்து மெள்ளப் பின்புறத்துக்கு நடக்கிறார்.

அவள் கையைப் பற்றிக் கொள்ளச் செல்கிறாள்.

"எனக்குப் பழக்கம் தாவுள்ள, நீ போ! வெறவு செவத்தாச்சி குடுத்திச்சா?"

"ஆமா"

"அந்தாச்சி ரொம்ப தங்கமானவுக. முந்நூறு ரூவா கடனிருக்கு அவியக்கிட்ட. எப்படிக் குடுக்கப் போறம்...!" என்று பெருமூச்சு விட்டவாறே நடந்து செல்கிறான். சரசி அப்பனின் கைக்குச்சியை எடுத்துக் கொடுக்கிறாள்.

பொன்னாச்சி வறுமை அறியாதவளல்ல. ஆனால், இங்கு அடிப்பும் கூட இடிந்திருக்கிறது. நீர்ப்பானையும் கூடக் கழுத்தில் ஓட்டையாக இருக்கிறது. துணியைச் சுருட்டி அடைத்திருக்கிறார்கள். பித்தளை என்பது மாதிரிக்குக் கூடக் கிடையாது. அலுமினியம் குண்டான் ஒன்றைத் தவிர உருப்படியாக அப்பச்சியும் சின்னம்மாவும் சாப்பாடு கொண்டு செல்லும் அலுமினியம் தூக்குப் பாத்திரங்கள் தாம் இருக்கின்றன. தண்ணீர் குடிக்கக் கூடப் பித்தளையிலோ வெள்ளோட்டிலோ ஒரு கிளாசு இல்லை. பிளாஸ்டிக் தம்ளர்கள் இரண்டுதாம் அழுக்கேறிக் கிடக்கின்றன. வாளியும் ஒழுகுகிறது. துணிக்கந்தையால் அடைத்திருக்கிறார்கள். அவர்கள் வதியும் அறையும், சமையல் செய்யும் பின் தாழ்வரையும் ஓட்டுக் கட்டிடங்களானாலும் மிகப் பழைய நாளையக் கட்டிடமாக, பந்தல் போல் வெளிச்சத்தை ஒழுக விடுகிறது.

பொன்னாச்சி வீட்டை ஒட்டடை தட்டிப் பெருக்கி, மண்குழைத்துப் பூசி அடுப்பைச் சீராக்குகிறாள். ஒரு சோறு பொங்கி, குழம்பு வைத்து, குழந்தைகளுக்கும் அப்பனுக்கும் போடுகிறாள். பிறகு நல்லக்கண்ணு, மருது, சரசி எல்லோருக்கும் எண்ணெய் தொட்டு முடி சீவி, அழுக்குத் துணிகளை நீர் கொண்டு வந்து கசக்கிப் போடுகிறாள். தம்பி சிவத்தாச்சியிடம் சிநேகம் பிடித்து விட்டான். அவனை எங்கோ கூட்டிச் சென்று பன ஓலை வாங்கி வருகிறாள் ஆச்சி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அவளுக்குப் பெட்டி முடையத் தெரியும் போலிருக்கிறது. நாரைக் கிழிப்பதைப் பொன்னாச்சி வேடிக்கை பார்க்கிறாள்.

அப்போது "ஆச்சி இருக்காவளா?" என்ற குரலொளி கேட்கிறது.

கரேலென்று குண்டாக, காதில் வயிரக்கடுக்கன்கள் மின்ன, மேலே வெள்ளைவெளேரென்று சட்டையும் உருமாலும் அணிந்து ஒரு பெரியவர் வந்திருக்கிறார். தலை முன்புறம் வழுக்கையாகி, காதோரங்களில் வெண்மையாக நரைத்திருக்கிறது.

வாயிற்படிக்கு நேராக முற்றத்தில் பொன்னாச்சி தான் நிற்கிறாள். அவளைப் பார்த்துத்தான் அவர் கேட்டிருக்கிறார். அவள் சரேலென்று விலகிக் கொள்கிறாள். ஆள் ஒருவன் ஒரு சாக்கை (பத்துப்படி அரிசியோ தானியமோ இருக்கும் என்று தோன்றுகிறது) கொண்டு வந்து முன்புறம் இறக்குகிறான்.

"ஆரு இவிய? புதுசா இருக்கு?" என்று கேட்டாவாறு அவர் மெத்தை நாற்காலியில் அமர்ந்து ஆச்சி கொடுக்கும் விசிறியால் விசிறிக் கொள்கிறார்.

"கண்ணுசாமி இல்ல அவன் பிள்ளியதா. ஊரிலேந்து நேத்து கூட்டியாந்தா. அவனுக்குத்தா கண்ணு தெரியல. சோலியுமில்லே..."

"அப்பிடியா?"

"ஆமா நா நெனச்சிட்ட நாச்சப்பங்கிட்டியோ, ஆறுமுவங்கிட்டியோ கூலி எழுதிக்கிடச் சொல்லணுமின்னு. நீரே வந்தீரு..."

"முத்தன் அரிசி குத்தி வந்திருக்குன்னா. அன்னியே நீ சொன்னியே, சம்பா அரிசி வேணுமின்னு, சரி எடுத்திட்டு வருவமின்னு வந்த. அளத்துக் கோயில்ல கிருத்திக பூசைக்கு இன்னக்கிப் பெரியவிய போவணுமின்னா. அதும் சொல்லிட்டு இப்பிடி வந்தே. கோயில்ல முன் மண்டபம் கட்டிய பெறவு நீ பார்க்கலியே? பெரிய மண்டபம் ட்யூப் லைட்டெல்லாம் போட்டு, வள்ளி கல்யாண சித்திரமெழுதியிருக்கா. அளத்துக்காரவா ஒரு கலியாணம் காச்சின்னு திருச்செந்தூர் போகண்டா..."

அவள் எங்கோ பார்த்துக் கொண்டு ஓலை கிழிக்கிறாள்.

"தா பாஞ்சாலி? செம்பில நல்ல தண்ணி கொண்டா?"


அவள் தண்ணீர் கொண்டு வந்ததும் வாயிலிருக்கும் சக்கைகளை முற்றத்து மூலையில் சுவரில் வாரியடிக்கத் துப்புகிறார். பிறகு தண்ணீரால் வாயை அலசிக் கழுவிக் கொப்பளிக்கிறார் - மீண்டும் போய் உட்காருகிறார்.

"பெரியவிய ஒடம்பு ரொம்பத் தளந்து போச்சி. ஆரு வந்து கலியாணம் காச்சின்னாலும், சாவு செலவுண்ணாலும் கோயில் காரியம்னாலும் ஏன்னு கேக்குறதேயில்ல. பத்து இருவது தூக்கிக் கொடுக்கா. நேத்து கேட்டாவ. 'செந்திலாண்டவங் கோயிலுக்கு மண்டபம் கட்டிய பெறகு செங்கமலம் வந்தாளா'ண்ணு. வரலான்னா ஏன் கூட்டி வந்து காட்டலேம்பாக, அதான் சொல்லிட்டுப் போலாமின்னு வந்தே. நாளக்கிக் கிருத்திகைப் பூசை. அதோடு பால் குளத்தாச்சி இறந்துபோன நாளு. அம்மங் கோயிலிலும் பூசயுண்டு, காரு அனுப்பிச்சிக் குடுக்கவா?"

"நா ஒரு கோயிலுக்கும் வரல. இவளுக்கு அளத்துல ஒரு கூலி போட்டுக் கொடுக்கணும்..."

"அதுக்கென்ன? நாச்சப்பங்கிட்டச் சொல்லிவிட்டுப் போற. காலம அளத்துக்குப் போனா எடுத்துக்கறா. பொறவு எப்ப வார, நீ?"

"எனக்குச் சாமியே இல்ல. என் சாமி செத்துப் போச்சு. எனக்குக் கோயிலுமில்லே..."

"அது சரி, சாமி செத்துப் போச்சுண்ணா மறுபேச்சு என்ன இருக்கு...?"

பொன்னாச்சி சன்னலில் தெரியாத வண்ணம் பின்னே முற்றத்தில்தான் நிற்கிறாள். அவர் எழுந்து போகிறார். வாயிலில் ரிக்ஷா அதுகாறும் நின்றிருப்பதை அறிவித்துக் கொண்டு அது திரும்பிப் போகிறது.

"ஏட்டி, பாஞ்சாலி? ஒங்கக்காளக் கூப்பிடுடீ?"

அவள் அழைக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. பொன்னாச்சியே உள்ளே செல்கிறாள்.

"ஒனக்கு அதிட்டந்தா. இவ பழைய கணக்கவுள்ள. கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்தாப்பில வந்தா. நாளக்கு சின்னாச்சிய பொழுதோடு கூட்டிட்டுப் போயி, அட்வான்ச வாங்கிக்கிங்க... இருவத்தஞ்சும் இருவத்தஞ்சும் அம்பது ரூவா கொடுப்பா..."

பொன்னாச்சிக்கு அந்த அம்மைக்கு எப்படி நன்றி கூறுவதென்று புரியவில்லை. அந்தக் கணக்கப்பிள்ளை இவளுக்கு உறவு போலும்!

மலர்க்குவியல் பூரித்தாற் போல் முகம் உவகையால் பொங்குகிறது.

வாயில் திண்ணையில் சாய்ந்திருக்கும் தந்தையைத் தொட்டு, "அப்பாச்சி, அந்த ஆச்சி எனக்கும் தம்பிக்கும் பனஞ்சோலை அளத்துல வேலக்கிச் சொல்லிருக்கா. நாளக்கிச் சின்னாச்சியக் கூட்டிட்டுப் போயி அட்வான்சு வாங்கிக்குமின்னு சொல்றாவ. அம்பது ரூவா குடுப்பாவளாம்..." என்று பூரிக்கிறாள்.

அப்பச்சியின் கண்டத்திலிருந்து கொப்புளம் உடைந்தாற் போல் விம்மல் ஒலிக்கிறது. அவள் தலையைக் காய்த்துப் போன கையால் தடவுகிறார். பேச்சு எழவில்லை.

அவள் மாகாளியம்மனை நினைத்துக் கொள்கிறாள்; திருச்செந்தூர் ஆண்டவனை நினைக்கிறாள். "மாமன் வந்து சண்டையொன்றும் போட்டுவிடக் கூடாதே..." என்ற நினைப்பும் ஓடி மறைகிறது. முதல் கூலியில் ஒவ்வொரு ரூவாய் எடுத்து வைக்க வேண்டும்.

சின்னம்மா வீடு திரும்பும் போது நன்றாக இருட்டி விடுகிறது. ஒரு பெட்டியில் அரிசியும், விறகுக் கட்டுமாக அவள் வருகிறாள்.

கண்கள் ஆழத்தில் இருக்கின்றன. சுமையை இறக்கி விட்டு நீர் வாங்கிக் குடிக்கிறாள்.

"எனக்குந் தம்பிக்கும் பனஞ்சோலை அளத்துல வேலைக்குச் சொல்லியிருக்கா அத்தாச்சி. நாளாக்கிக் கூட்டிப் போகச் சொன்னாவ. அட்வான்ஸ் தருவாகளாம்?"

"ஆரு வந்திருந்தா?"

"ஒரு கரத்த ஆளு. கடுக்கன் போட்டிருந்தா..."

"சரித்தா முத்திருளாண்டி..."

"அந்த அளம் நீங்க போற தாவுலதா இருக்கா சின்னம்மா?"

"இல்ல அன்னிக்கு பஸ்ஸில வந்தமில்ல? அங்கிட்டுப் போயி வடக்க திரும்பணும். அந்த அளத்துக்கு செவந்தியாபுரம், சோலக்குளம் ஆளுவதா நெரயப் போவா. இங்கேந்து ஆருபோறான்னு பார்க்கணும்..."

வாழ்க்கை வண்ணமயமான கனவுகளுடன் பொன்னாச்சியை அழைப்பதாகத் தோன்றுகிறது. அந்தக் கனவுகளுடன் உறங்கிப் போகிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
4

சேல் பட்டு அழிந்தது செந்தூர்
வயல் பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடி
யார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும்
சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என்
தலை மேல் அயன் கையெழுத்தே...

கையிரண்டையும் தலைமேல் உயர்த்திக் குவித்துச் செந்தூர் முருகன் சந்நிதியில் மனங்குழைய நிற்கிறார் அருணாசலம். திருநெல்வேலி சென்று வருவதென்றால் வரும் போது அலைவாயில் மூழ்கி, முருகனைத் தரிசித்து அவன் காலடியில் மனச்சுமையை இறக்கி ஆறுதல் தேடுவதென்றும் அவருக்குப் பொருள்.


தூத்துக்குடி சென்று திருநெல்வேலிக்குச் செல்வதை விட, திருச்செந்தூர் முருகனைக் கண்டு செல்வதென்றால் ஓர் ஆறுதல். வயது வந்த பிள்ளை, கல்வி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தானும் முன்னுக்கு வந்து நாட்டின் பெருமையை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோள் ஓர் ரேகையளவும் இல்லாமல் அற்ப காரணங்களுக்காக அடிதடியிலா இறங்குவான்? கல்லூரி விடுதியில் இரண்டு கோஷ்டிகள் ஒருவருக்கொருவர் சண்டை, அதுவும் சாதிச் சண்டை. விடுதி அறையில் சக்திவேல் ஒரு அரசியல் தலைவரின் பெயரை எழுதி வைத்தானாம். இன்னொரு மாணவன் அதை அழித்துவிட்டு வேறொரு அரசியல் தலைவரின் பெயரை சூட்டினானாம். இவர் ஒரு ஜாதி, அவர் ஒரு ஜாதி. ஆக நெருப்புப் பொறி பறந்து அடிதடியில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

"முருகா! நீ என்றைக்கு இவர்களுக்கெல்லாம் நல்ல புத்தியைக் கொடுக்கப் போகிறாய்!"

குடும்பம் அவற்றின் நிமித்தமான எண்ணற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் சுழற்றி அவன் காலடியில் வைத்து விட்டுச் சிறிது நேரம் மெய்மறந்து நின்று ஆறுதல் கொள்கிறார். பன்னீர் இலைப் பிரசாதமும் குங்குமமும் வாங்கிக் கொண்டு வெளியே வருகிறார்.

மரத்தடியில் நின்று ஈரவேட்டியை உயர்த்திப் பிடிக்கிறார்.

கிழக்கே தகத்தகாயமாகத் தங்கக் கதிரவன் அலை வாயில் பட்டாடை விரிக்கிறான். எத்தனை நாட்கள் பார்த்திருந்தாலும் அலுக்காத காட்சி. சில நாட்களில் மனம் குழம்பி ஆற்றாமையில் அல்லலுறும் போது, பஸ்ஸுக்குக் கொடுக்கக் காசில்லாமல் பொடி நடையாக நடந்தே அலைவாய் முருகனைக் காண வந்திருக்கிறார். அந்தக் கடலில் மேனியை நனைத்து, உள்ளத்தை அவன் கோலத்தில் நனைத்துக் கொண்டால் அந்தச் சுகமே தனி.

எத்தனை ஆண்டுகளாகவோ அலைவாய் முருகனைக் காண வருகிறார். இப்போது, எத்தனை மண்டபங்கள், எத்தனை கூட்டங்கள்! பயணிகளை ஏற்றி வரும் 'டூரிஸ்ட்' பஸ்கள் கார்கள் என்று சந்நிதி முழுவதும் கும்பல். பயணியர் விடுதிகள் வேறு மாடி மாடியாக எழும்பியிருக்கின்றன. ஆனால்...

முருகனைச் சுற்றி வேடக்காரர்கள் மலிந்து கிடக்கின்றனர். எங்கு பார்த்தாலும் எச்சில் துப்புபவனும், இயற்கைக் கடன் கழிப்பவனும், அங்கேயே இட்லி வாங்கித் தின்பவனும், படுத்துக் கிடந்து பிச்சை வாங்கும் கபடப் பண்டாரமும், தங்கள் செல்வ நிலையைத் தம்பட்ட மடித்துக் கொண்டு முருக பக்தியென்று கள்ளக் கண்ணீர் விடும் போலிகளும் அலைவாய் முருகனைச் சூழ்ந்திருக்கின்றனர். இதுதான் இன்றைய உலகின் ஓர் மாதிரித் துண்டு! வேட்டியை ஆட்டிக் காய வைத்து உடுத்திக் கொண்டு, சட்டையை அணிந்து கொள்கிறார் அருணாசலம். முதல் நாளிரவே எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. பசி வயிற்றைக் கிண்டுகிறது.

நீண்ட சந்நிதித் தெருக் கொட்டகை வழியே நடந்து வருகையில் மண்டபத்தில் உள்ள ஐயர் கடையில் ஏறி அமர்ந்து கொள்கிறார். மூக்குக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு காலைத் தினசரியைப் பார்க்கிறார். ஐந்து ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்து ஆச்சி அவரை மகனைப் பார்த்து வர விரட்டினாள். இன்னும் ஒரு ரூபாய் எழுபத்தைந்து பைசா மீதி இருக்கிறது. பஸ்ஸுக்குக் கொடுத்து, நான்கு இட்லியும் காப்பியும் சாப்பிட முடியும்.

அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நயினார் பிள்ளை வருகிறான். "என்ன அண்ணாச்சி? எப்ப வந்திய?" என்று கேட்டுக் கொண்டு அமருகிறான்.

நயினார் பிள்ளை அந்தக் காலத்தில் திருச்செந்தூர் வட்டக் காங்கிரஸ் இயக்கத் தொண்டர்களில் அரும்பாடுபட்டுப் பெயரும் புகழும் பெற்றவன். கள்ளுக்கடை மறியலுக்கு அவரும் அவனும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். 'ஸால்ட் இன்ஸ்பெக்டர்' லோன் கொலைச் சதியில் சிறைக்குச் சென்று வந்தவன். இந்நாள் மண்டபத்தில் ஒருபுறம் தையற்கடை வைத்திருக்கிறான். பெண்கள் உடைகள் தைக்கிறான். அரசியலுக்கே வருவதில்லை. அவன் மட்டுமில்லை. அந்நாட்களில் ஆர்வமும் உண்மையுமாக நாட்டு விடுதலையையும் நல்வளர்ச்சியையும் நம்பிப் பாடுபட்ட தொண்டர்கள் எல்லோருமே இப்படித்தான் விலகி விட்டார்கள்.

"எங்க இப்படி வந்திய? தொழில் நிலம் எப்படி இருக்கு?"

"எப்படி இருக்கு? ஒண்ணும் சொல்றதுக்கில்ல. நேத்துக்கூட டி.ஆர்.ஓ.வைப் பார்க்கணுனும்தா தங்கி இருந்தேன். அமைச்சர் வந்திருக்கிறார்ன்னாவ. பெடிசன் எதுவும் தயார்ப் பண்ணிட்டுப் போகல. ஒண்ணும் வாவன்னா இல்ல நயினாரு. அந்தக் காலத்துல ஒரு முடிவெடுத்தா எப்படி எல்லாரும் ஒத்துக் கிளர்ச்சியோ, எதுவோ பண்ணினம்? அவனுக்கு அப்பவும் பெண்சாதி பிள்ளிய இல்லாமலா இருந்தாவ? இல்லாட்டா வெள்ளக்காரனை வெரட்டிருக்க முடியுமா? இப்ப ரொம்ப சுயநலமாப் போச்சு. அவனவன் தன் மட்டுக்கு நல்லா வந்திடணும், பணம் சம்பாதிக்கணும்னு எதுவும் செய்யிறான். 1947ல் இந்திய சர்க்கார் உப்பு வரி வாணான்னு சட்டம் போட்டது. அந்தக் காலத்தில் காங்கிரசில் இருந்தவன், இல்லாதவன் எல்லோருமா ஒத்துமையாக் கூடித்தான், தூத்துக்குடி சப்கலெக்டரிடம் மகஜர் கொடுத்தோம். எங்களுக்கு நிலம் பட்டா போட்டுத் தரணும்னு. அப்போதும் கூட்டுறவுச் சங்கமாவது இன்னொண்ணாவதுன்னு பணபலமுள்ளவன் எதிர்த்துத்தா மறிச்சான். அப்படியும் இருநூற்றைம்பது பேர் ஒத்துமையாக்கூடி இருந்ததால், இருநூறு ஏக்ராவுக்கு மேல் ஒதுக்கினாங்க, தன்பட்டாளம் செய்யுங்கள்னு. அப்போது புறம்போக்கு நிலம் குறிச்சுக் காட்டினோம், ஒதுக்கினாங்க. அப்போது இந்த ஓடை நடுவில் வந்து மறிக்கும், ஓடைக்கப்பால் ஆளையே விழுங்கும் தனி முதலாளியின் அளம் ஆயிரக்கணக்கான ஏக்கராகும்னு ஒரு நினைப்புமில்ல. கடோசில என்ன ஆச்சு? இருபது வருசமாகப் போவுது. ஓடை குறுக்கிடுவதால் பாதை இல்லை. லாரி வந்து உப்பெடுக்க முடியாது. அதனால, நாம அயனான உப்பு வாரினாலும் மூடை எட்டணாக்கும் முக்கா ரூபாய்க்கும் சீரழியிது. வண்டிக்காரன் ஓடையில் இறங்கி வந்து முக்கால் ரூபாய் மூடைன்னு இங்கே உப்பெடுத்து அந்தால மூணு ரூபாய்க்கு விக்கிறான். அதனால, இந்தத் தம்பாட்டளத்தில் ஒண்ணும் முன்னுக்கு வர முடியாதுன்னு அவனவன் நிலத்தைச் சும்மா போட்டு வச்சிருக்கான். முன்ன, இருபதம்ச திட்ட காலத்துல, இதுக்கு எப்படியானும் வழி பிறக்குமின்னு நம்பி, பாலத்துக்குத் திட்டமெல்லாம் போட்டு, பணம் செலவு பண்ணி எல்லாம் எழுதி எடுத்திட்டு நாங்க கலக்டரப் பார்த்தோம். அப்ப இதான் கேட்டாரு. இருநூறு ஏக்கராவில் பத்து ஏகரா கூட நீங்க அளம் போடலியே? இது என்ன கூட்டுறவுன்னாரு. நிலம் வச்சிருக்கிறவ அங்கங்க பிழைக்கப் போயிட்டான். அன்னிக்குக் காந்தி எதுக்கு உப்பு சத்தியாக்கிரகம் பண்ணப் போனாரு? ஒரு ஏழை, தன் கஞ்சிக்குப் போடும் உப்புக்கு வரி கொடுக்க வேண்டாம் என்பது மட்டுமல்ல, சொந்தமா பாடுபட்டு தன் நிலத்தில் விளைவெடுக்கணும். அவனுடைய தேவைக்கு அவன் சம்பாதிக்க முடியும்னு சொன்ன அந்த அடிப்படையில் தான் தன்பட்டாளம்னு லட்சியம் வச்சோம். இப்ப... ஆயிரக்கணக்கானத் தனிப்பட்ட முதலாளிகள் தன் பட்டாளம் பெருக்கியிருக்கா? குடும்பம் குடும்பமா அங்கே கொத்தடிமை செய்யப் போவுறாங்க. பொம்பிளப் பிள்ளைக, தாழக் குறுத்துப் போல, இம்மாட்டுப் பொடியலுவ, எல்லாரையும் கங்காணிய கண்ட்ராக்டுக, கூட்டிட்டுப் போறாவ. இதுக்கா சொதந்தரம் வாங்கினம்?..."

அருணாசலத்துக்குப் பழைய நண்பர் கிடைத்து விட்டால் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்து விடுவார். வைத்த இட்டிலியை இன்னமும் தொடவில்லை.

"இப்பக் காலம் அந்தக் காலம் இல்ல அண்ணாச்சி. எல்லாம் யாபாரம் தானிப்ப. தாய் மகன் தொடர்பு, புருசன் மனைவி பிரியம் எல்லாமே இது செஞ்சா இதுக்குப் பர்த்தியா என்ன கிடைக்கும்னு ஆயிப்போச்சு. அந்தக் காலத்துல கதர்ச்சட்டை போட்டவங்களைப் போலீசு மகன் தேடிட்டுப் போவான். அவனுடைய தாயார், தலைமறைவுக்காரங்களைத் தானே ஒளிச்சு வச்சுச் சாப்பாடு போடுவா. இப்ப நினைச்சிப் பார்க்க முடியுமா? அது வேற காலம்; இது வேற... அதைச் சொன்னாக் கூட இப்ப ஆருக்கும் புரியாது."

நயினார் பிள்ளை சொல்வது உண்மைதான் என்று அவருக்குத் தோன்றுகிறது. அவருக்கு இரண்டு பெண்கள் தாம். படிக்கப் போட்டு ஒருத்தி டீச்சராக இருந்தாள். இரண்டு பேரையும் கட்டிக் கொடுத்து விட்டார். பெண் குழந்தைகள் தேவலை என்று தோன்றுகிறது.

எக்ஸ்பிரஸ் பஸ்ஸுக்கு திருச்செந்தூரிலிருந்து இருபது நிமிடம் கூடப் பிடிக்கவில்லை. ஊர் வந்துவிட்டது. மாதா கோயிலின் முன் கொண்டு வந்து இறக்கிவிட்டான். வள்ளி பள்ளிக்கூடத்துக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண் பையன், படிப்பதைக் காட்டிலும் ஊர் திரிவதில்தான் குறிப்பாக இருக்கிறான். குமரனைக் காணோம்.

"ஏட்டி, குமரன் பள்ளிக்கூடம் வரல?"

"அவன் அம்மாளிடம் துட்டு வேணும்னு அழுது பெரண்டிட்டிருக்கா" என்று செய்தி தெரிவிக்கிறாள். அன்றாடம் ஐந்து பைசா வைத்தாலே பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடிக்கிறான். பள்ளிக்கூடம் செல்வதற்காக ஊக்கக் காசாக ஆச்சி கொடுத்துப் பழக்கி, அது இல்லாமல் போகமாட்டேன் என்று விழுந்து புரளுகிறான்.


வீட்டு வாசலில் மனைவி குந்தியிருந்து ஈருருவிக் கொண்டிருக்கிறாள். அவரைக் கண்டதுமே எழுந்து "வேலுவைக் கூட்டி வரல...?" என்று கேட்டுக் கொண்டு உள்ளே பின் தொடருகிறாள். அவர் பதில் ஏதும் கூறாமல் சட்டையை எடுத்து ஆணியில் மாட்டுகிறார். ஞானம் படுத்தபடியே எதற்கோ கோபித்துக் கொண்டிருக்கிறான்.

"பையனுக்கு... ஒண்ணில்லையே?"

"கல்லுக்குண்டாட்டம் இருக்கா? அவனுக்கென்ன, கொளுப்புதா அதிகமாயிருக்கு. எனக்கு இவம் படிச்சி உருப்படுவான்னு தோணல."

"நீரு ஏம் எறிஞ்சு விழுறீம்? போலீசுச் சவங்க எதுக்காக நாம பெத்த புள்ளயப் போட்டு அடிக்கணும்? அவனுவ கொட்டடில அடிபடவா நாம பெத்து விட்டிருக்கம்?"

"மூடு ஓ ஊத்தவாய. போலீசுக்காரன ஏன் சொல்லுற? திமிரெடுத்துப் போயி இவனுவ திரியிறானுவ. படிக்கப் போனவன் படிப்பில் இல்ல கவனம் செலுத்தணும்? ரூமுக்குப் பேர் வைக்கிறானாம்? மானக்கேடு... சரி, இப்ப என் கோவத்தை நீ கிளப்பாத. சடையன் வந்தானா? பொன்னாச்சி எங்க? பச்சைய இளந்தண்ணி குத்திவைக்கச் சொன்னே, எங்கே வாரப் போயிருக்கானா? தங்கபாண்டி வண்டி கொண்டாந்தாலும் வருவான்..."

"அல்லாம் குத்திக்கெடக்கு. வண்டியும் மோட்டாரும் வந்து உம்ம உப்ப வாரிட்டுப் போப்போரா! ஏங்கெடந்து கனாக்காணுதீம்!" என்று நொடித்துவிட்டு ஆச்சி உள்ளே செல்கிறாள்.

திடீரென்று நினைவுக்கு வந்தவராக அவர் கத்துகிறார்.

"அந்தக் குமரன் பயல ரெண்டு உதை கொடுத்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக் கூடாது? இந்தப் பய ஏன் இன்னும் எந்திரிக்காம படுத்திருக்கிறான்? லே, எந்திரிந்து காலம பல்விளக்கி, சாமி கும்பிடணும்னு உனக்கு எத்தினி தடவ சொல்லியிருக்கேன்? எந்திரிலே?"

"அப்பா, பொன்னாச்சியும் பச்சையும் ஊருக்குப் போயிட்டாவ" என்று ஞானம் ஆர்வத்துடன் எழுந்து அறிவிக்கிறான் பதிலுக்கு.

அவர் விழித்துப் பார்க்கிறார்.

"என்னலே உளறுறே?"

"நெசமாலும், அவிய வந்து அளச்சிட்டுப் போயிட்டா தூத்தூடிக்கு!" அவருக்கு எதுவும் புரியவில்லை. "என்ன சொல்றா இவ?"

சிதம்பர வடிவு அவரை நிமிர்ந்து பார்க்காமலே சுளகில் எதையோ எடுத்துக் கொழிக்கிறாள்.

அவர் வந்து பின்புறமாக அவள் முடியைப் பற்றுகிறார்.

"பிள்ளையளை எங்கே அனுப்பிச்ச...?"

"ஐயோ... முடிய வுடும்?" என்று அவள் கூந்தலைப் பற்றிக் கொள்கிறாள். "போறம் போறம்னு சொல்லுறவள நா புடிச்சா வச்சுக்க முடியும்? அவ சின்னாச்சியாமே, அந்த சக்களத்தி வந்தா. வந்து கொமஞ்சா, மாமா ஊரில் இல்ல, பொறவு என்ன வந்து ஏசுவாண்ணு சொன்னா அவ கேக்கா இல்ல. நீரு என்னைப் போட்டுக் காச்சுவீம்!" என்று முன்றானையை முகத்தில் தேய்த்துக் கொண்டு மூக்கை சிந்துகிறாள். "அவ... சின்னச்சியிட்ட என்ன சொன்னா தெரியுமா? சோறுண்டு ரெண்டு நாளாச்சுண்ணா. நா அப்படிப் பாவியா? ரெண்டு நாளா முக்காத் துட்டு கெடயாது. இவ போவேண்ணு குதிய்க்கா. கோயில்காரரு வீட்டேந்து மூணு ரூவா அவளே வாங்கிட்டு வந்து போயிட்டா, தம்பியயும் கூட்டிட்டு. நா பட்டினி கெடக்கே. எம்புள்ளய பட்டினி கெடக்கு; வராத விருந்துக்கு இருந்த அரிசிய வடிச்சிப் போட்ட. கடயில கடன் சொல்லி அவதா காப்பித்தூளும் கருப்பட்டியும் வாங்கியாந்தா!"

அவருக்கு இதில் ஏதோ சூது இருக்கிறதென்று புலனாகிறது.

"இத்தனை நாளா இல்லாத சின்னாத்தா ஒறவு எப்படி முளைச்சிருக்குன்னு ஒனக்கு அறிவு வேண்டாம்? அளத்தில பாத்திமெதிக்க ஆள் கேட்டிருப்பா. அந்தக் காலத்துல தேயிலைத் தோட்டத்திலே மலங்காட்டில சாவுறதுக்கு எப்படி ஆள் பிடிப்பாளாம் தெரியுமா? தேனும் பாலும் வழியிம்... காக்காய ஓட்டத்தா ஆளும்பானாம்?" என்று அவர் இரைகிறார்.

"நானென்ன கண்டே! நீரு எங்கிட்டச் சலம்பாதீம்!" என்று கூறிய அவள் கூந்தலை அள்ளிச் செருகிக் கொண்டு சுளகில் கொழித்த அரிசிக் குருணையுடன் அடுப்படிக்குச் செல்கிறாள்.

தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டுமானால் கையில் பணமில்லை. அன்று காலையில் தொழி திறந்து பாத்திக்கு நீர் பாய்ச்ச்யிருந்தார். உப்பு குருணைச் சோறாக இறங்கியதும் இளந்தண்ணீர் பாய்ச்சும்படி பச்சையிடம் கூறிச் சென்றிருந்தார். உப்பு வாருவதற்கு இறங்கியிருக்கும்.

செந்தூர் முருகனை வாய்விட்டுக் கூவி அழைத்தவராக அவர் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு நடக்கிறார்.

வெகுநாட்கள் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. தாயார் மருமகளைப் பார்க்காமலே போகிறேனே என்று கண்களை மூடினாள். சிதம்பரவடிவு உறவு பெண்தான். செவந்திக்குக் கட்டி வைத்த மறுவருடத்திலேயே இவளை மகனுக்குக் கட்டி வைத்தார் தந்தை.

புருசன் சரியில்லாமல் செவந்தி அண்ணன் வீட்டுக்கு வந்தாலும் சோற்றுக்குப் பாரமாக இருக்கவில்லை. இட்லிக் கடை போட்டாள். பரவர் வீடுகள் எல்லாம் அவளுக்கு வாடிக்கை. பெட்டி முடைவாள், வலை கூடப் பின்னக் கற்றாள். சுறுசுறுப்பும் கருத்தும் உடைய அவள் கையில் எப்போதும் காசு இருக்கும். அட்டியலும் கை வளையலும் மகளுக்கென்று வைத்திருந்தாள். புருஷன் குடித்துவிட்டு வந்து நகையைக் கேட்டான் என்றுதானே அவள் புருசனையே வேண்டாம் என்று விலக்கி விட்டு வந்தாள்?

உழைப்பின் காரணமோ, அவருடைய போதாத காலமோ, அவளுக்கு நீர் வியாதி வந்தது. இரண்டு மாதம் படுக்கையில் கிடந்து விட்டுக் கண்ணை மூடிவிட்டாள். தன் பாட்டளத்தில் முழுக்கஞ்சி கூடக் குடிக்க முடியவில்லை. 'கூட்டுறவு உப்புத் தொழிலாளர், உற்பத்தி விற்பனைச் சங்கம்' என்ற ஒன்றை உருவாக்கவே பங்குகள் சேர்க்க வேண்டியிருந்தது. இப்போதும் அவர் பேரில் முக்கால் ஏக்கர், செவந்தி பேரிலும் அவள் மகன் பச்சை பேரிலும் என்று மூன்று பங்கு... இரண்டே கால் ஏக்கரில் அவர் உப்பு விளைவிக்கிறார்; அவளுடைய நகைகளை எல்லாம் விற்றுவிட வேண்டியதாகி விட்டது. சக்திவேலுவுக்கு அரசு உபகாரச் சம்பளம் கிடைக்கிறதென்றாலும், அவன் செலவு அவர் கையை அதிகமாகவே கடிக்கிறது. தன்பட்டாளம் கூட்டுறவில் நல்வளர்ச்சி பெற்றுப் பொருளாதார அளவில் அவர்கள் முன்னுக்கு வருவதைப் பற்றி அவர் இன்னும் கனவு காண்கிறார். பொன்னாச்சியை நல்ல பையனாக, உழைப்பாளியாக குடிக்காத, பிறன் மனை நோக்காத ஒரு மாப்பிள்ளைக்குக் கட்டி, இந்த அளத்தில் பாடுபடுபவனாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தார். பெண்கள் நான்கு சுவர்களைத் தாண்டி, பாத்திக் காட்டில் இன்னொருவன் அடிமையாக வேலைக்குச் செல்வதனால் ஏற்படும் கேடுகளை அவர் அறிந்தவர். அதனால் தான் இந்தச் சமுதாய அமைப்பில், பெண்களைத் தங்கள் இல்லம் தாண்டிப் பாதுகாப்பில்லாத வேலைக்கு அனுப்புவதைக் காட்டிலும் கிடைக்கும் கால் வயிற்றுக் கஞ்சியே மேல் என்று நிச்சயமாக நம்பியிருந்தார்.

ஓடையில் நீரேற்றம் தெரிகிறது. ஒதுக்கி விட்டிருக்கும் மீன்பிடி வள்ளங்கள் ஒன்றும் இல்லை. இறால் பிடிப்பதற்கென்று குத்தகை பேசி ஏழாயிரம், எட்டாயிரம் கடன் பெற்று தூத்துக்குடியில் இருந்து 'ரெடிமேட் வள்ளங்'களை நிறைய வாங்கி விட்டிருக்கின்றனர். தாமிரபரணித்தாய், கடலரசனைத் தழுவப் பல கைகளாகப் பிரிந்து கொண்டு ஆவலோடு வரும் இடம் அது. ஒவ்வொரு ஓடையும் ஒரு கையில் விரல்களைப் போல் தெரிகிறது. முட்புதர்களும் தாழைகளுமாக நிறைந்த, அந்த இடத்தில் சங்கமுகேசுவரர் கோயில் இருக்கிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை என்றால் காட்டுப்பாதையில் நடந்து வந்து நீராடி ஈசுவரனைத் தரிசனம் செய்பவர்கள் உண்டு. கோயிலுக்கு மேற்கே மூங்கில் துறை ஊரில் இருந்து வந்து குருக்கள் பூசை செய்வார்.

பாலத்தை மேற்கே ஓடை பிரியுமுன் போட்டு விட்டால், லாரி வரும் சாலை வந்து விட்டால், அந்த அளங்கள் வளமையை வாரிக் கொடுக்குமே?

ஆனால் பாலம் கட்டும் யோசனை, திட்டம் எல்லாம் தயாராக்கிக் கொடுத்த பின் ஓடையின் பரதவர் வள்ளங்கள் நிறுத்துவதற்குத் தடங்கலாகுமென்றும், அவர்கள் பாயை விரித்துக் கொண்டு பாலத்தடியில் செல்ல முடியாதென்றும் பாலம் கட்டக் கூடாதென்றும் மனுக் கொடுத்திருக்கிறார்களாம்.

அந்தச் செய்தியே கனவுப் பூங்காவில் வீழ்ந்த இடிபோல் தோன்றியது. இங்கு... பொன்னாச்சியையும் மகனையும் சின்னாத்தா கூட்டிப் போயிருக்கிறாள்!

இத்தனை நாளாக இல்லாத கரிசனமா, வாஞ்சையா? எது?

அளத்தில் உப்பு கண்ணாடி மணிகளாக, பரல்களாக இறங்கியிருக்கிறது. ஆயிரமாயிரமான ஏக்கர் நிலங்களில் ஆட்களை விரட்டி செய்நேர்த்தி செய்தவர்களுக்குக் கூட இவ்வளவு நேர்த்தியாக உப்பு இறங்கியிருக்காது. மூட்டை ஐந்து ரூபாய்க்குத் தாராளமாகப் போகும் இது... இதை தங்கபாண்டி, வண்டியை ஓடையில் இறக்கிக் கொண்டு போவான். அவருக்கு எப்போதும் முடை. அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொள்வது கட்டாயமாகி விடுகிறது. அவனிடம் உப்பு கண்டு முதலாகு முன்பே கடன் வாங்கி விடுகிறார். இப்போது அவன் வந்தால், உப்பை வாரிவிடலாம். பணம் இருபது ரூபாய் வாங்கிக் கொள்ளலாம்...

சட்டையைக் கழற்றி வைத்து விட்டு அங்கு பன ஓலையினால் வேயப்பெற்றிருக்கும் சிறு அறைக் கதவைத் திறந்து வாருபலகை, வாளி ஆகியவற்றை எடுக்கிறார். பாத்தியின் கீழிறங்கி, சலசலவென்று கலகலத்துச் சிரிக்கும் மணிகளை வார் பலகையில் கூட்டி ஒதுக்குகிறார்.

தொலைவில் தங்கபாண்டியின் வண்டிச் சத்தம் கட கடவென்று கேட்கிறது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5
கிழக்கே கடலின் அடிவரையிலிருந்து பொங்கி வரும் விண்மணி கண்களைக் குத்தும் கதிர்களைப் பரப்புகிறான். வாயிலில் பெரிய வளைவில் 'பனஞ்சோலை ஸால்ட் வொர்க்ஸ்' என்ற எழுத்துக்கள் தெரியும் கதவுகள் அகன்று திறந்திருக்கின்றன.

தலைக்கொட்டை எனப்படும் பனஓலையால் பின்னிய சும்மாட்டுச் சாதனமும், அலுமினியத் தூக்கு மதிய உணவும் கைகொண்டு ரப்பர் செருப்பும் ஓலைச் செருப்புமாக உப்பளத்துத் தொழிலாளர் அந்த வாயிலுள் நுழைந்து செல்கின்றனர். சிறுவர் சிறுமியர் கந்தலும் கண் பீளையுமாக மேய்ச்சலுக்கு ஓட்டிப் போகும் மாட்டுக் கும்பலை ஒத்து உள்ளே விரைகின்றனர். முடியில் விளக்கெண்ணெய் பளபளக்க, அன்றைப் பொழுதுக்குப் புதுமையுடன் காணப்படும் இளைஞரும் அந்தக் கும்பலில் இருக்கின்றனர். முக்காலும் பாத்திகளில் 'செய்நேர்த்தி' முடிந்து தெப்பத்தில் கட்டிய நீரைப் பாத்திகளுக்குப் பாயத் திறந்து விட்டு விட்டார்கள். உப்பை வாரிக் குவிக்கத் துவங்கிவிட்டனர். பொன்னாச்சியும் தம்பியும் வேலைக்குச் சேர்ந்து மூன்று சம்பளங்கள் வாங்கி விட்டனர். இத்தனை நாட்களில் பாத்திப் பண்பாட்டிலேயே மிதித்து அவளுடைய மென்மையான பாதங்கள் கன்றிக் கறுத்துக் கீறல்கள் விழுந்து விட்டன.


உப்பளத்து வேலையில் 'சமுசாரி வேலை' என்று சொல்லப் பெறும் பசிய வயல் வரப்புகளில் வேலை செய்வது போல் குளிர்ச்சியைக் காண இயலாது. இங்கு உயிரற்ற வறட்சியில், பண்புள்ளவர் செவிகளும் நாவும் கூசும் சொற்களைக் 'கண்ட்ராக்ட்' நாச்சியப்பன் உதிர்த்த போது முதலில் அவள் மருண்டு தான் போனாள். அவர்கள் பண்பற்ற வசைச் சொற்களைத் தவிர்த்து மரியாதையாகப் பேசியே அறியார் என்பதை இப்போது புரிந்து கொண்டிருக்கிறாள்.

எல்லை தெரியாமல் விரிந்து பரந்து கிடந்த பாத்திகளைக் கண்டு இன்னமும் அவளுக்கு மலைப்பு அடங்கவில்லை. மாமனின் தன் பட்டாளத்தில் வேட்டி காயப் போட்டாற் போல், பாய் விரித்தாற் போல் பாத்திகளில் உப்பு இறங்கியிருக்கும். இங்கோ... வானக் கடலைப் போல் ஓர் வெண் கடலல்லவா இறங்கியிருக்கிறது! தெப்பங்களே (தெப்பம் - கடல் நீரை முதன் முதலாகச் சேமிக்கும் பாத்தி) ஆத்தூர் ஏரி போல் விரிந்து கிடக்கின்றன!

வேலை செய்யும் ஆட்களோ, பலவிதங்கள். அவளைப் போல் நாச்சியப்பன் கண்டிராக்டின் கீழ் வேலை செய்யும் பெண்கள் பலர் இருக்கின்றனர். வரப்பில் குவியும் உப்பை வழித்துப் பெட்டி பெட்டியாகத் தட்டு மேட்டில் அம்பாரம் குவிக்கும் பணிதான் அவர்களுக்கு.

உப்பைக் கொத்துப் பலகை போட்டு உடைப்பவர்களில் சில பெண்களும், வாருபலகை கொண்டு உப்பை வாரி வரப்பில் ஒதுக்கும் ஆண்களும் கங்காணிகளின் கீழ் வேலை செய்கின்றனர். ஒரு கங்காணியின் ஆதிக்கத்தில் ஐந்து பேருக்கு மேலில்லை. இவர்களைத் தவிர, தனிப்பட்ட முறையில் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு பணி செய்யும் தொழிலாளர்களும் உண்டு. தம்பி பச்சைமுத்துவுக்கு அறவைக் கொட்டடியில் வேலை கொடுத்திருக்கின்றனர். உப்பை, அறைவை ஆலைகள் இரவோடிரவாக மாவாக்கிக் குவிக்கின்றன. அந்தத் தூளைப் பெட்டி பெட்டியாகச் சுமந்து கொட்டடிக்குள் குவிக்கும் பணியில்தான் எத்தனை சிறுவர் சிறுமியர்! பச்சைக்குப் பதினாறு வயதாகிவிட்டது என்று அவள் கூறியும் நாச்சியப்பன் நம்பவில்லை. அவனுக்கு நான்கு ரூபாய் கூலி இல்லை. அறைவைக் கொட்டடியில் இரண்டரை ரூபாய்தான் கூலி கிடைக்கிறது. அட்வான்சு பெற்றதுமே சின்னம்மா அவனுக்கும் அவளுக்கும் காலில் போட்டுக் கொள்ள ரப்பர் செருப்பு வாங்கித் தந்தாள். அவள் அளத்தில் பெட்டி சுமக்கையில் எல்லோரையும் போல் ரப்பர் செருப்பைக் கழற்றி விட்டு, பனஓலையில் பின்னி இரண்டு கயிறுகள் கோத்த மிதியடிகளை அணிகிறாள். அதுவே ஒரு நாளைக்கு ஒரு சோடி போதவில்லை. சனிக்கிழமை மாலையில் கூலி கொடுக்கிறார்கள். தலைப்புரட்ட எண்ணெய், அரசி, புளி, மிளகாய் எல்லாம் தட்டில்லாமல் வாங்க முடிகிறது. சென்ற வாரம் சின்னம்மா அவளுக்குப் புதிய ரவிக்கை ஒன்றும், தம்பிக்குத் துண்டு ஒன்றும் எடுத்து வந்தாள். பருப்பு நிறையப் போட்டு வெங்காயம் உரித்துப் போட்டுக் குழம்பு வைத்துத் திருப்தியாக உண்டார்கள். அடுத்த சனிக்கிழமைக்குக் கறி எடுத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்று ஆசையை அப்பன் வெளியிட்டார். பசி... பசி அவிய இந்த உப்புக்கசத்தில் எரிய வேண்டும்.

நாச்சியப்பன் பேரேட்டைப் பார்த்துத் தன் கீழுள்ளவர் பேர்களைப் படிக்கிறான். மாரியம்மாலே மூன்று பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு அசிங்கமான வசையைச் சொல்லிக் கூப்பிடுகிறான். அல்லி... அவள் பிள்ளையையும் தூக்கி வருகிறாள். கொட்டடியில் விட்டு விட்டு உப்புச் சுமக்க வேண்டும். அன்னக்கிளி... அன்னக்கிளி சூலி.

பொன்னாச்சியைக் கீழ்க்கண்ணால் பார்க்கிறான் நாச்சியப்பன். அவன் பார்வையில் அவள் துடித்துப் போகிறாள். அங்கு வேலை செய்யும் பெண்களில் யாரும் பொன்னாச்சியைப் போல் சூதறியாத பருவத்தினரில்லை. இந்த ஒரு மாச காலத்தில் அவன் அவளைப் பார்க்கும் பார்வை மட்டுமே ஆகாததாக இல்லை. போகும் போதும் வரும்போதும் கழுத்தில் தொடுவதும், கையைத் தீண்ட முயல்வதும், இன்னும் அருவருப்பான சைகைகள் செய்வதுமாக இருக்கிறான். பேரியாச்சி என்ற கிழவி ஒருத்தி, கொத்து பலகை போடுவாள். "புதுசா தளதளப்பா இருக்கா. ஏட்டி, ஒம்பாடு சோக்குதா. சோலிக்கீலியெல்லா சொம்மா போக்குக் காட்டத்தா..." என்று கேலி செய்தாள். பொன்னாச்சிக்கு நாராசமாக இருந்தது. "ஆச்சி, நீங்க பெரியவிய பேசற பேச்சா இது?..." என்றாள் கோபமாக.

பேரேட்டில் பெயர் படிக்கும் போதே அவன் பொன்னாச்சியை அன்று கூட்டத்திலிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்து விடுகிறான்.

"ஏவுள்ள! நீ அவளுவ கூட உப்பள்ளப் போகண்டா. இப்பிடி வா சொல்லுற..."

பொன்னாச்சி தன் விழிகள் நிலைக்க, நகராமல் நிற்கிறாள். மற்றவர்கள் எண்பத்தேழாம் நம்பர் பாத்தியில் குவித்த உப்பை வாரிக் கொட்ட நடக்கின்றனர். மாசாணம் கொட்டடியில் ஒரு புறமுள்ள கிடங்கறையில் சென்று பெட்டிகள், மண்வெட்டி முதலியவற்றை எடுத்து வருகிறான்.

"அங்கிட்டு வாடி, விருந்துக் கொட்டடியப் பெருக்கித் துப்புரவு பண்ணு. சாமானமிருக்கி, தேச்சுக் கழுவ..." என்று அவளைக் கையைப் பற்றி இழுக்கிறான்.

அவன் கையை வெடுக்கென்று உதறிக் கொள்கிறாள். மற்றவர் யாரும் காணாதது போல் செல்கின்றனர்.

விருந்துக் கொட்டடி என்ற கட்டிடம் மிகத் தொலைவில் இருக்கிறது. அதன் வாயிலில் கார் வந்து நிற்கக் கண்டிருக்கிறாள். அங்கு முதலாளிமார் வருவார்கள். அதன் ஓர் புறம் அலுவலகமும் இருக்கிறது. அங்கிருந்துதான் கணக்கப்பிள்ளை சம்பளத்தைப் பெற்று வந்து 'கண்ட்ராக்டி'டமோ, கங்காணியிடமோ கொடுப்பார்.

பொன்னாச்சி விரிந்து கிடக்கும் அந்தப் பாத்திக் காட்டில் அவளை அவன் அழைத்துச் செல்வதை யாரேனும் நிமிர்ந்து பார்க்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே அச்சம் நடுங்கச் செல்கிறாள். ஆட்கள் ஒவ்வொருவராக இப்போதுதான் வருகிறார்கள். விருந்து கொட்டடி என்பது கொட்டடியில்லை. அது பங்களா போலவே இருக்கிறது. கீழே நடக்கக் கூசும் பளிங்குத் தரையில் அடிவைக்கவே மெத்தென்ற விரிப்பு- பூப்போட்ட திரைகள்; மெத்தென்ற உட்காரும் ஆசனங்கள். அவள் தயங்கியவளாக வெளிவராந்தாவில் நிற்கிறாள்.

"ஏட்டி, நிக்கிற? இங்ஙன உள்ள வா! சாமானங் கெடக்கு. தேச்சுக் கழுவு, இங்க பெருக்கி, பதவிசாத் துடச்சி வையி! முதலாளி வராக...!" என்று சொல்லிவிட்டு கட்டிடத்தைச் சுற்றி உள்ளே அழைத்துச் செல்கிறான். பின் தாழ்வாரத்தில் குழாயடியில் வெள்ளி போன்ற சாப்பாட்டு அடுக்கு கூசா, தம்ளர்கள், தட்டு ஆகியவை கிடக்கின்றன. சோப்புத் தூளை எடுத்துப் போடுகிறான். அவள் துலங்க அமருகிறாள்.

நெஞ்சில் சுருக்சுருக்கென்று, மணலில் கத்தி தீட்டுவது போன்றதோர் அச்சம் குலைக்கிறது. இது வெறும் பாத்திரம் துலக்க அல்ல. "முருவா... முருவா" என்று உள்ளம் ஓலமிடுகிறது.

சாமான் துலக்கும் போது, அங்கிருந்து ஓடி விடப் பின் கதவு திறந்திருக்கிறதா என்று பார்க்கிறாள். பின் கதவு கம்பி வலைகளால் பாதுகாக்கப் பெற்றிருக்கிறது. ஆனால், பூட்டப் படாமல் திறந்து தானிருக்கிறது. அவள் வெகுவிரைவில் பாத்திரங்களைத் துலக்கிக் கழுவிக் கவிழ்த்து வைக்கிறாள். அச்சத்தில் நா உலர்ந்து போனாலும், குழாயில் கொட்டுவது நல்ல நீர் தானா என்று பார்க்கக் கூடத் தெம்பு இல்லை. அந்தத் தாழ்வரையின் ஓர் ஓரத்தில் வேண்டாத சாமான்கள் போடும் ஓர் அறை இருக்கிறது. பெயின்ட் தகரங்கள், கொத்து வேலைக்கான தட்டுமுட்டுக்கள், நார்ப் பெட்டிகள், உடைந்து போனதோர் நாற்காலி ஆகியவை இடம் கொண்ட அந்த அறையில் அவன் ஏதோ பார்ப்பவனாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். "இங்க வாட்டி, வாரியல் இருக்கு பாரு. சுத்தமா இந்த ரூம்பைத் தட்டிப் பெருக்கு!"

அவள் பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சாகப் பதுங்கி, தோளைப் போர்த்துக் கொண்டு உள்ளே செல்கிறாள்.

வாரியல் அவிழ்ந்து கொட்டிக் கிடக்கிறது. அவள் அதைத் திரட்டிக் கட்டும் போது அவன் அவள் மீது விழுந்து மாராப்புச் சேலையைத் தள்ளி விடுகிறான்.

அவள் பலம் கொண்ட மட்டும் அவன் கையைக் கிள்ளித் தள்ளுகிறாள், "என்னிய விடு...! என்னிய விடுரா. சவத்து மாடா? சவம்..."


காலை நீட்டி அவனை உதைக்கப் பார்க்கிறாள்.

வெளியே யாரோ நடமாடும் அரவம் கேட்கிறது.

அவனுக்கு ஆத்திரம். அவளைச் சுவரில் வைத்து மோதுகிறான்.

"ஒன்ன வழிக்குக் கொண்டார எனக்குத் தெரியும்டீ...?" என்ற மாதிரியில் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீசையைத் திருகிக் கொள்கிறான். அதைப் போன்றதோர் அருவருப்பான எதையும் அதற்கு முன் அவள் மனம் உணர்ந்திருக்கவில்லை. அவள் விர்ரென்று திறந்த ஒற்றைக் கதவு வழியாகக் குழாயடியில் வந்து நிற்கிறாள்.

"மூளி... ஒனக்கு அம்புட்டிருக்கா? செறுக்கி மவ... ஒந்திமிரு பதங்கொலைய நீயே வந்து விழுவ. பத்தினித்தனமா காட்டுறே?..."

வெளியே கார் வந்து நின்றிருக்கிறது. முதலாளிமார்... யாரோ வந்திருக்க வேண்டும். அவன் நாய் வாலைக்குழைத்துக் கொண்டு ஓடுவதைப் போல் ஓடுகிறான். பொன்னாச்சி பின் கதவைத் திறந்து கொண்டு ஓட்டமாக ஓடி வருகிறாள். தான் ஒரு கசத்தில் வந்து மாட்டிக் கொண்டது புரிகிறது.

அவள் தப்பிவிடலாம். இந்த அளத்துச் சோலிக்கு முழுக்குப் போட்டுவிட்டு நின்றுவிடலாம். ஆனால், அட்வான்ஸ் இருபத்தைந்து ரூபாயை எப்படித் திருப்பிக் கொடுப்பார்கள்?

கண்களில் நீர் கரிப்பாய் சுரந்து கரகரவென்று கன்னங்களில் இறங்குகிறது. 'ஐட்ராவை' ('ஐட்ரா' - ஹைட்ரா மீட்டர் எனப்படும், நீரின் அடர்த்தியைச் சோதித்தறியும் கருவி) மூங்கிற்குழாய் நீரில் விட்டு டிகிரி பார்த்துவிட்டு அதை மீண்டும் 'போணி'க்குள் போட்டுக் கொண்டு நிமிர்ந்த ராமசாமி, இவள் கண்ணீர் வடிய தன்னந்தனியாக ஓடுவதைப் பார்க்கிறான்.

"ஏவுள்ள... ஏ அளுதிட்டுப் போற?... ஏ...?"

அவனுடைய வினா அப்போது மனதை இதமாக வந்து தொடுகிறது என்றாலும் அவன் யாரோ? அவனும் ஒரு கங்காணியாக இருப்பானாக இருக்கும்? அவனைச் சற்றே நிமிர்ந்து பார்த்தாலும் மறுமொழி கூறவில்லை.

எண்பத்தேழாம் நம்பர் பாத்தி வரப்பில் நின்று மாசாணம் கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு சேர்ந்த உப்பை வாளியினால் வாரிப் பெட்டிகளில் நிரப்புகிறான். அடுத்த பாத்தி ஒன்றில் பேரியாச்சி நீண்ட பிடியுள்ள கொத்துப் பலகையில் நீரில் பாளமாகக் கட்டியிருக்கும் உப்பைச் சலங்கைகளாக உடைக்கிறாள். மாசாணம் அவள் மகன் தான். கல்யாணம் கட்டி, மருமகளும் வேலை செய்கிறாளாம். ஆனால், இந்த அளமில்லை. அவர்கள் குடியிருக்கும் செவந்தியாபுரம் அளத்திலேயே வேலை செய்கிறாளாம்.

முகத்தைத் துடைத்துக் கொண்டு பெட்டியில்லாமல் வந்து நிற்கும் அவளை மற்ற பெண்கள் பார்க்கின்றனர். அவளைக் குரோதப் பார்வை கொண்டு நோக்கும் வடிவாம்பா "குடுத்து வச்சவிய நிக்கிறாவ. ஏட்டி எங்கட்டி பாத்து வாயப் பொளக்குறே? ஓ மாப்பிளயா அவுத்திட்டுக் கெடக்கா?" என்று இன்னொருத்தியைக் கடிவது போல் ஏசுகிறாள். இங்கே பெண்களும் கூட எவ்வளவு கேவலமாக ஏசுகிறார்கள். மாமி ஏசுவாள்; அல் அயல் சண்டை போட்டுப் பார்க்காதவளல்ல அவள். ஆனால் இந்தப் பாத்திக் காட்டில், உப்புக் கசத்தில் புழுத்த நாயும் குறுக்கே செல்லாத வசைகள்!

நரநரவென்று உப்பு கால் சதைகளின் மென்மையை வருடி இது வேறோர் வாழ்வு என்று அறிவுறுத்துகிறது. பசுமையற்ற அந்த உப்பு வெளியிலே, மென்மையின் உயிர்த்துடிப்புக்களுக்கு இடமே கிடையாது. ஏரிபோல் விரிந்திருக்கும் தெப்பங்களில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கபடமான கொக்குகளைத் தவிர ஒரு புழு பூச்சி கிடையாது. இங்கே வந்து தங்கினாலும் இந்த உப்பு அவற்றைத் தன் மயமாக்கி விடும்.

பொன்னாச்சி பெட்டியை எடுத்து வந்து உப்புச் சுமக்கிறாள்.

சுட்டெரிக்கும் கதிரவன் உச்சிக்கு ஏறி, பாத்திகளில் நீரை உறிஞ்சுகிறான். அந்த நீர் உனக்கு மட்டும் உரிமையில்லை என்றுரைத்துக் கொண்டு வறண்ட காற்று, குருதியை உழைப்பாக்கும் நெஞ்சங்களையும் உலரச் செய்கிறது. பெட்டி - உப்பு - நடை - சுமை - தட்டு மேடு - அம்பாரம்... இவற்றுக்கு மேல் சிந்தையின்றி, மனிதத் துளிகள் இயந்திரமாகி விடும் இயக்கம். இங்கு சிரிப்பும் களிப்பும் தோய்ந்த பேச்சு உயிர்க்காது.

பொன்னாச்சிக்குக் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று விடாய் விசுவரூபம் எடுக்கிறது. விருந்து கொட்டாயில் கொட்டிய குழாயை நினைத்துக் கொள்கிறாள். பகலுணவுக்கு மணியடிப்பார்கள்.

சோற்றுக் கொட்டுக்குப் போய் நீரருந்தலாம்? அங்கும் குழாயுண்டு. ஆனால் அந்த மாசாணம் அதைக் குத்தகை எடுத்திருக்கிறான்; இலகுவில் விடமாட்டான். உணவு நேரத்தை விட்டால் நீரருந்த முடியாது.

'கண்ட்ராக்டு' நாச்சியப்பன் குடைபிடித்துக் கொண்டு தட்டு மேட்டில் வந்து நிற்கிறான். பொன்னாச்சி அவன் நிற்கும் பக்கம் உப்பைக் கொட்ட அஞ்சி அம்பாரத்தின் இன்னோர் பக்கம் கொட்டி விட்டுத் திரும்புகிறாள். அம்பாரம் குவிக்கும் ஆண்டியை, செருப்பின் அடியில் உப்பு தெரிய நின்று அவன் விரட்டுகிறான்.

நாச்சியப்பன் பின்னர் அவளைச் சீண்டவே குடையும் கையுமாக வரப்பில் இறங்கி வருகிறான். இரு கைகளையும் தூக்கி உப்புப் பெட்டியை அவள் சுமந்து வருகையில் அவன் எதிர்ப்பட்டு, வேலையை விரைவாக்க முடுக்கும் பாவனையில் கைவிரலை அவள் விளாவில் நுழைத்து சீண்டி விட்டுப் போகிறான். அந்த உப்பை அவன் மீது கொட்டி அவனை மிதிக்க வேண்டும் என்ற ஓர் ஆத்திரம் பற்றி எரிகிறது பொன்னாச்சிக்கு.

ஆனால், ஏலாமை கண்களில் நீரைப் பெருக்கி, பாத்தி காடுகளும் உப்புக் குவையும் வெறும் வெண்மைப் பாயல்களாகக் கரையப் பார்வையை மறைக்கிறது.

சிறுவயசில் அவள் தாயுடன் குளத்துக்குக் குளிக்கச் செல்வாள். அந்நாட்களில் குளத்தில் நடுவில் மலர்ந்திருக்கும் அல்லிப் பூக்களைப் பறிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கும். ஆனால் அம்மா அவளைக் கீழே இறங்க விட மாட்டாள். கணுக்கால் நீருள்ள படியிலேயே அமர்த்திக் குளிப்பாட்டித் துடைத்துக் கரைக்கு அனுப்பி விடுவாள். "இன்னும் இன்னும்..." என்று ஆழத்தில் இறங்க வேண்டும் என்று அவள் கத்துவாள்.

"ஆளண்டி, அறிவு கெட்டவளே, போனா ஒளையிலே மாட்ட்க்கிட்டு முடிஞ்சி போவ!" என்பாள்.

ஆனால் அவளுக்கு அப்போது அது உறைத்ததில்லை. அந்நாள் மற்றவர் நீந்திச் சென்று மலர் பறித்து வருவது அவளுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். பின்னர், அவள் தாய் இறந்து போன பிறகு ஒருநாள், அவள் பூப்பறிப்பதற்காக இருகைகளையும் நீரின் மேல் அகலப் பாய்ச்சிக் கொண்டு ஆழத்தில் இறங்கினாள்.

சேற்றில் கால் புதைந்து விட்டது. தூக்க முடியவில்லை. கைகளை அடித்துக் கொண்டு அவள் தத்தளிக்கையில் பனையேறி வீராசாமி குதித்து அவளை இழுத்துக் கரை சேர்த்தான். "ஏவுள்ள, நீச்சம் தெரியாம கசத்துல எறங்கே?" என்று கடிந்தான்.

இப்போது அது நினைவுக்கு வருகிறது.

பகல் நேர உணவுக்கான ஓய்வு நேரம் முக்கால் மணி.

தம்பி பச்சைக்கும் அப்போது ஓய்வு நேரம் தான். இருவருக்கும் தனித்தனித் தூக்குகள் வாங்கவில்லை. தம்பி, கண் இமைகளில், காதோரங்களில் பொடி உப்பு தெரிய, ஓடி வருகிறான். உப்பின் நெடியில் கண்கள் கரிக்க, கன்னங்களில் நீர் ஒழுகிக் காய்ந்து கோடாகி இருக்கிறது. "மொவத்த நல்ல தண்ணில கழுவிட்டு வாரதில்ல... மேலெல்லாம் உப்பு. இத்தத் தட்டிக்க வாணாம்?" என்று அவன் மீது கையால் தட்டுகிறாள்.

படிக்க வேண்டும் என்று பள்ளிக்குச் சேர்ந்தால் ஓடி ஓடி வந்து விடுவான். காலையில் மாமி சக்திவேலுவுக்கு மட்டும் வெளியிலிருந்தேனும் இட்டிலியோ ஆப்பமோ வாங்கித் தின்னக் காசு கொடுப்பாள். அவளுடைய தாய் இருந்த வரையிலும் அதே வீட்டில் தனியடுப்பு வைத்து இட்டிலிக் கடை போட்டாள். அப்படி வயிற்றுக்கு உண்ட பழக்கத்தில், காலையில் வெறுந் தண்ணீரைக் குடித்துவிட்டுப் பள்ளிக்கூடம் போகாமல் ஓடி ஓடி வந்து அக்காளிடம் "பசிக்குதக்கா" என்பான். பிறகு அவன் படிக்காமல் பரவப் பிள்ளைகளுடன் கடலுக்குப் போவது, அல்லது வேறு வேலை செய்வதென்று தாவி, படிப்பதை விட்டு விட்டான்.

தூக்குப் பாத்திரத்தைத் திறந்து நீர்ச் சோற்றையும் துவையலையும் அவனுக்குக் கையில் வைத்துக் கொடுக்கிறாள்.

"அக்கா, அங்ஙன ஒரு டைவர் இருக்கா, கடலுக்குள்ளேந்து மிசின் தண்ணியக் குழாயில கொண்டிட்டு வாரதில்ல? அந்த டைவர் தா கடலுக்கடில இருந்து பைப்பெலா முடுக்கித் தரா. பெரிய... பைப். நாம் போயிப் பார்த்தே. கடலுக்கடில ஆளத்தில போயி மீன்குட்டி மாதிரி நீச்சலடிச்சிட்டே பைப் மாட்டுறா..."

பொன்னாச்சிக்கு அவன் பேசுவது எதுவும் செவிகளில் உறைக்கவில்லை.

"ஆனாக்கா... அந்தாளு, எப்பமும் கள்ளு குடிச்சிருக்கா, இல்லாட்ட தண்ணிக்குள்ள கெடக்க முடியுமா? போலீசொண்ணும் அவியளப் புடிக்காதாம். அளத்து மொதலாளியே பர்மிசன் குடுத்து அதுக்குன்னு ரெண்டு ரூபாயும் குடுப்பாவளாம்!"

பொன்னாச்சிக்கு அது ரசிக்கவில்லை.

"நீ ஒருத்தரிட்டவும் போகண்டா, பேசண்டா, ஒஞ்சோலியுண்டு, நீயுண்டுன்னு வா..." என்று அறிவுரை கூறுகிறாள்.

வயசாகியும் கபடம் தெரியாமல், வளர்ந்தும் வளர்ச்சி பெறாத பிள்ளை. இவனுக்கு அவளைத் தவிர வேறு யாரும் ஆதரவில்லை.

ஆனால்... அந்தக் கண்டிராக்டிடமிருந்து அவள் எப்படித் தப்புவாள்?

இந்தத் தம்பிக்கு அவளுக்கேற்பட்டிருக்கும் சோதனை யூகிக்கத் திறணுண்டோ?...

"ஏக்கா, நீ சோறுண்ணாம எனக்கே எல்லா வச்சித்தார..."

"இல்ல ராசா..." என்பவளுக்குக் குரல் தழுதழுக்கிறது. "இந்த உப்புக் காட்டில் இப்பிடிச் சீரளியிறமேன்னு நினைச்சே..." என்று கண்களைத் துடைத்துக் கொள்கையில் அங்கே புளித்த வாடை சுவாசத்தை வளைத்துக் கொள்கிறது. யாருடைய சோறு இப்படிப் புளித்திருக்கிறது" என்று கேட்பது போல் திரும்பிப் பார்க்கிறாள்.

கொட்டடியில் கூட்டம் நிறைந்திருக்கிறது. யார் யாரோ ஆணும் பெண்ணுமாகத் தொழிலாளிகள். 'ஐட்ராவை' வைத்துக் கொண்டு டிகிரி பார்க்கும் அந்த இளைஞன், அவளை 'ஏன் அழுகிறாய்' என்று கேட்டவன், கை, கால் கழுவிக் கொண்டிருக்கிறான்.

"ஆகா... சோறு மணக்கு... எனக்குஞ் சோறு வையிடீ ராசாத்தி..." என்று ஒருவன் வந்து குந்துகிறான். இடையில் அவனிடமிருந்துதான் புளித்த கள்ளின் நெடி வருகிறது. கறுத்து நனைந்த சல்லடத்தைத் தவிர அவனது கறுத்த மேனியில் துணியில்லை. திரண்ட தோள்கள்; எண்ணெயும் நீரும் கோத்த முடி; சிவந்த கண்கள்...

"அக்கா, நாஞ் சொன்னேனில்ல, இவெதா... அந்த டைவரு."

அவன் நெருக்கிக் கொண்டு அவள் சோற்றுக் கையை பற்றும் போது அவள் தூக்குப் பாத்திரத்துடன் எழுந்து திமிரப் பார்க்கிறாள்.

அப்போது கால் கழுவிக் கொண்டிருக்கும் அந்த 'ஐட்ரா' இளைஞன் பாய்ந்து வந்து அவனை இழுத்து ஓர் உதை விடுகிறான்.

"ராஸ்கோர்ல்... பொண்டுவ கிட்ட வம்பு பண்ணு... ஒன்ன எலும்ப நொறுக்கிப் போடுவ..."

அவன் வாய் குழற அழுகுரலில் கத்துகிறான்.

"குடிகாரப் பய..."

"நீ சோறுண்ணும்மா.. இனி அவெ வரமாட்டா இந்தப் பக்கம்..."

பொன்னாச்சி விழிகள் பூச்சொரிய அவனைப் பார்த்த வண்ணம் நிற்கிறாள்.

'அந்தக் கண்ட்ராக்டர் காலமாடனுக்கும் இப்படி ஒரு பூசை போடுவாரோ இவர்?'...

பசுமையற்ற கரிப்பு வெளியில் ஓர் நன்னீரூற்றின் குளிர்மை இழையோடி வந்து படிவதாகத் தெம்பு கொள்கிறாள் அவள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
6

அந்த ஆண்டுக்கான முதலுப்பை வாரி எப்போதோ அம்பாரம் குவித்து விட்டார்கள். ஆனால் கங்காணி தொழிலாளர் கூலிக்கு முதலுப்பு வாரும் பூசை இன்னமும் போடவில்லை. ஆயிரமாயிரமாகப் பரந்து கிடக்கும் ஏக்கர் பாத்திகள் எல்லாவற்றிலும் செய்நேர்த்தி முடியவில்லை என்று கணக்குப்பிள்ளை பூசை என்ற ஆயத்தை இன்னும் நிகழ்த்தவில்லை. நான்கு மூலைகள் கொண்ட சிறு சதுரமேடு போல் கட்டப் பெற்றிருக்கும் பூடத்துக்கு வெள்ளையடித்து அழகு செய்வது கண்டு பேரியாச்சி, "பூடத்துக்குப் பூசை போடுறாக போல இருக்கு..." என்று ஆறுதல் கொள்கிறாள்.

அவர்களுக்கெல்லாம் இனி முழுக்கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.


பொன்னாச்சிக்கு அதைப் பற்றிய ஆர்வமும் ஆவலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவளும், பச்சையும் 'கண்ட்ராக்ட்' கூலிகள். அவர்களுக்கு நாச்சியப்பன் மனமுவந்து கொடுப்பது தான் கூலி. பொது நிர்ணயக் கூலி முறையில் அவர்கள் அளத்தில் பணியெடுக்கவில்லை.

பூடத்தின் முன் வாழையிலை விரித்து, உப்பை அள்ளி வைத்து, கற்பூரம் காட்டிக் கும்பிடுகிறான் பிச்சைக்கனி. அந்த முதலுப்பு, முதலாளிகள் வீட்டுக்குப் போகும் உப்பு. விளைச்சலைப் பற்றியோ, இலாப நட்டங்களைப் பற்றியோ நினைக்க அவர்களுக்கு உரிமையுமில்லை ஒன்றுமில்லை.

காலையில் எங்கோ ஆலைச்சங்கு ஒலிப்பதைக் கணக்கு வைத்துக் கொண்டு எழுந்து, சின்னம்மாவும், அவளும், தம்பியும், அலுமினியம் தூக்குப் பாத்திரங்களில் பழைய சோற்றையோ, களியையோ எடுத்து வைத்துக் கொண்டு அதையே கொஞ்சம் கூழாகக் கரைத்துக் காலை நேரத்துக்கு அருந்தி விட்டு, பாத்திக் காட்டில் நடப்பதற்கான பன ஓலை மிதியடிகளைக் கோத்து வாங்கிக் கொண்டே நடப்பார்கள். அந்த மிதியடிகள் ஒரு நாளைக்கு ஒரு சோடி போதாமல் பகலுடன் கிழிந்து விடுகின்றன. நறநறவென்று தெரியும் உப்புக்கு ரப்பர் செருப்பு ஈடு கொடுக்காது. வெட்ட வெளியில் பெண்களான அவர்களுக்கு இயற்கைக் கடன் கழிக்க ஓர் மறைவிட வசதிகூடக் கிடையாது. சூலியான அன்னக்கிளி தவித்துப் போகிறாள். எங்கோ கடற்புரத்தை நாடி அவர்கள் நாலைந்து பேராக நடக்கின்றனர்.

"ஆச்சி, அடிவயிறு கல்லா நோவு..." என்று கிழவியான பேரியாச்சியிடம் அன்னக்கிளி கரைகிறாள். அவள் கண்கள் குழியில் எங்கோ கிடக்கின்றன. கன்னத்தெலும்புகள் முட்டியிருக்கின்றன. நான்கு குழந்தைகள் பெற்றிருக்கிறாள். இது ஐந்தாவது பிள்ளைப்பேறு. புருசன் ஐந்தாறு மாசங்களுக்கு முன் இவளை விட்டு ஓடிப்போய் விட்டானாம். அவளைப் பற்றி 'ஒரு மாதிரி'யானவளென்று அழகம்மா, பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறாள்.

"ஏட்டி. நீர்க்கோவயின்னா, பெருஞ்சீரவம் வெந்தியம் ரெண்டயும் வெடிக்கவுட்டுக் கிழாயம் வச்சிக் கருப்பட்டியப் போட்டுக் குடிக்கிறதில்ல? நாலு புள்ள பெத்தவதானே?" என்று பேரியாச்சி இரைந்து பேசுகிறாள்.

பொன்னாச்சிக்கும் கூடச் சில நாட்களில் இட்டுப் போகிறது. கண்களிலிருந்து தாரையாக நீர் வழிந்து பார்வையை மறைக்கிறது. அதைத் துடைக்கக் கூட முடியாமல் இயந்திரம் போல் வரப்புக்கும் தட்டு மேட்டுக்குமாக உப்புப் பெட்டி சுமக்கிறாள்.

அப்பனைக் காணும் போது அவளுக்கு இப்போதெல்லாம் கசிவு தோன்றுவதேயில்லை. அவர் அவள் புறப்படும் போதெல்லாம் படுத்திருக்கிறார். மாலை நேரங்களில் எங்கோ தேநீர்க் கடையில் அரசியல் பேசிவிட்டு சுடுசோறு தின்பதற்கு வந்து விடுகிறார்.

அன்று பெட்டியைத் தலையில் வைத்து அவள் நடக்கையிலே மாமனின் நினைவே தோன்றுகிறது. "பெண் குழந்தைங்க புறா போல, நம்ம வீட்டு பாதுகாப்பை விட்டு வெளியே அனுப்பக் கூடாது..." என்று வாய்க்கு வாய் பேசுவார். மாமா எத்தனையோ நாட்கள் தூத்துக்குடிக்கு வருபவர் தாம். கயிறு வாங்கணும், இரும்பாணி வாங்கணும், தாசில்தாரைப் பார்க்கணும், என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பஸ் ஏறுவாரே, அவர் வரக்கூடாதா!

"அப்பனைப் பார்த்தாச்சில்ல? கிளம்பு?" என்று சொல்ல மாட்டாரா? சின்னம்மாவின் மக்கள் அவளிடம் ஒட்டவேயில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அவளுக்கும் நெருங்கி உறவாட நேரம் இருக்கிறதா?

வள்ளிக்கும் குஞ்சரிக்கும் அவள் தான் சடை பின்ன வேண்டும். ஓடைக் கரையிலிருந்து மாமா, தாழம்பூக் குலை கொண்டு வருவார். அவ கத்தி கத்தியாக வெட்டித் தைத்து விடுவாள். ஞானம் அவள் தட்டினால்தான் உறங்குவாள். வேலு முன்பு வந்திருந்த போது கூட அவனுக்குப் புத்தகமெல்லாம் தட்டி வைத்தாள். அவனுடைய சட்டையையும் சராயையும் குளத்தில் சோப்புப் போட்டு அலசிக் கொண்டு வந்து, மூங்கில் கழியை நுழைத்துக் காயப் போடுவாள்.

"பொன்னம்மா தோச்சா பொட்டியே போடவாணாம்!" என்பான். அவன் பொன்னம்மா என்று தான் அவளைக் கூப்பிடுவான்.

அவன் பரீட்சைக்குப் படிப்பதற்கு அவளைத் தான் தேநீர் போட்டுத்தரச் சொல்லுவான்.

அந்த மாமன் வீட்டை விட்டு அவள் அவர் இல்லாத போது வந்திருக்கலாமா?

பகலில் உணவு கொள்ளும் நேரத்தில், ராமசாமி என்ற அந்த ஐட்ரா பார்க்கும் ஆள் அவளைப் பார்த்துக் கொண்டு அங்கே தான் உணவு கொள்கிறான்.

அவன் அவளிடம் எதுவும் பேசுவதில்லை. ஆனால் அவனுடைய பார்வை, "பயப்படாதே, நான் இருக்கிறேன்" என்று சொல்வது போல இருக்கும்.

அவன் தண்ணீர்க் குழாயில் நீரருந்துகையில் பச்சையிடம், "தண்ணி குடிச்சிக்கோ?" என்று குழாயை ஒப்படைப்பது வழக்கமாகிறது.

"அவரு மாசச் சம்பளக்காரரா அக்கா! மொதலாளிக்கு வேண்டியவியளா!" என்று பச்சை பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறான்.

அதனால் தான் மற்றவர் யாரும் சகஜமாக அந்த ஆளிடம் பேசிப் பழகுவதில்லையோ?

"ஒனக்கு ஆரு சொன்னா?"

"அந்த 'டைவர்' சொன்னா! அந்தாளோட அப்பச்சி முன்ன பெரிய முதலாளியக் கொலை செய்யறதுக்கு இருந்தான்னு போலீசு கண்டுபிடிச்சி செயிலுக்குக் கொண்டு போயிட்டாவளாம். அப்ப இவிய ஆத்தா அளுதிச்சாம். மொதலாளி எரங்கி இவரை வேலைக்கு வச்சாளாம். அப்பா இப்ப செத்துப் போச்சாம். இப்பம் மாசச் சம்பளமாம் அதாம் பவுருன்னு கருவிட்டுப் போறா அந்த டைவரு..."

"நீ அந்தக் குடிகாரச் சவத்துங்கூடப் பேசாதே..." என்று அவள் பச்சையை எச்சரித்து வைக்கிறாள்.

அந்தச் சனிக்கிழமை மாலையில் சின்னம்மா கூலி வாங்கி வருகையில் கருவாடு வாங்கி வந்திருக்கிறாள்.

சுடுசோறு வடித்து நிமுர்த்து முன் பச்சை சில நாட்களில் படுத்துவிடுகிறான். அவசரமாக வடித்து எடுத்து, ஒரு துவையலை அரைத்து அப்பனுக்கும் குழந்தைகளுக்கும் பொன்னாச்சி சோறு போடுகிறாள்.

"கருவாடா? வறக்கலியா?" என்று நா ருசிக்க உண்ணும் ஆவலில் அப்பன் கேட்கிறார். சின்னம்மா பட்டென்று பதில் கொடுக்கிறாள்.

"தலைப்புரட்ட, காலுக்குக் குழச்சிப் போட எண்ணெயில்ல. எண்ண என்ன வெல தெரியுமா?"

அப்பச்சி பேசவில்லை. தட்டில் கைகழுவிவிட்டு, நகர்ந்து கொள்கிறார். தம்பி வாசல் திண்ணைக்குப் போய்ச் சுருண்டு கொள்கிறான். சரசுவும் நல்லகண்ணுவும் வாசலுக்கு ஓடி ஆச்சி வீட்டில் ரேடியோப் பெட்டி பாடுவதைக் கேட்கப் போகின்றனர்.

சின்னாச்சியும் அவளும் சோறு வைத்துக் கொண்டு அமருகின்றனர். கருவாடு நன்றாக இல்லை. வீச்சம் குடலைப் புரட்டுகிறது. முகம் முகத்துக்குத் தெரியவில்லை. உயிர் பிழைக்க மட்டுமே அன்ன ஆகாரம் கொடுக்கும் கூலியைப் போன்று ஓர் சிம்னி விளக்கு. அந்த மஞ்சள் ஒளியில் விவரம் காண முடியாது. ஒரு குழம்பு வைத்துச் சுவை காணக்கூட முடிவதில்லை. மாமன் வீட்டிலும் வறுமை தான் என்றாலும், நிதமும் இந்த வேகாச் சோறு இல்லை. இந்த நூல் பிடித்த வரைகள் அங்கு இல்லை. இந்த ஒளியில் முகம் சுளித்தாலும் கண்டு கொள்ள முடியாது. அது அவசியமும் இல்லை. அவர்கள் உழைப்பின் பயனான உணவைக் கொண்டு பசி எரிச்சலைப் புதைக்கின்றனர்.

பொன்னாச்சிக்கும் தம்பிக்கும் அந்தச் சனிக்கிழமையில் கூலி போடவில்லை. ஞாயிறன்று காலையில் தம்பியைக் கூட்டிச் சென்று அளத்தில் ஆபீசில் போய் வாங்கிக் கொள்ள வேண்டும். "நேரமாகி விட்டது. நாளைக்கு வா!" என்று கண்ட்ராக்ட் கூறினான். எல்லோரும் வருவார்கள் என்றாலும் அவளுக்கு நெஞ்சம் அச்சத்தினால் கட்டிக் கிடக்கிறது. அதை நினைத்தால் சோறும் இறங்கவில்லை.

"சின்னாச்சி... எனக்கு இந்தப் பனஞ்சோலை அளம் ரொம்பப் பயமா இருக்கி..."

மன ஆற்றாமையின் சுமைகளில் மோதுண்டு சொற்கள் மெல்லப் பிரிகின்றன. சின்னம்மாவோ, முத்துக் கொறிக்கவில்லை. பீடி புகைக்கும் அப்பன், உணர்ச்சியை விழுங்கிக் கொள்வது போல் "அஹம்" என்று கனைக்கிறார்.

< "ஒங்க கங்காணியிட்டச் சொல்லி, எனக்கும் ஒங்க கூட அளத்துல வேல வாங்கித் தாரும் சின்னாச்சி. ஒங்க கூட இருந்தா பயமில்லாத பதனமாயிருக்கும்."

இதற்குமேல் தனது சங்கடத்தைச் சூசகமாக உணர்த்த முடியாதென்று அவள் நினைக்கிறாள். இதற்கும் சின்னாச்சி எதிரொலி எழுப்பவில்லை.

அப்பன் பீடிக்காரல் பாய்ந்தாற் போன்று கனைத்து, தொண்டையைச் செருமிக் கொள்கிறார். மெள்ள எழுந்து சென்று வெளியே காரித் துப்புகிறார். பிறகு வந்து உட்காருகிறார். இத்தனை நேரமும் சின்னம்மா வாய் திறக்கவில்லை.

பொன்னாச்சி, "அந்தக் கண்டிராக்டு, மோசமா நடக்கா. நாளக்கி ஆபீசில போயிக் கூலி வாங்கிக்கணுமா" என்று சங்கடத்தை வெளியிடுகிறாள்.

"ஆரு, நாச்சப்பனா? சவத்துப்பய, அவன் முழியப் புடுங்கித் தேரில போடணும். அந்தப்பய, ஒரு நேரக் கஞ்சிக்கு வக்கில்லாம இருந்தவ, பொண்டுவள கணக்கபிள்ளமாருக்குக் கூட்டிக் குடுத்துக் கொடுத்துத் திரியிறான். ஒம்மேல மட்டும் அவெ கய்ய வய்க்கட்டும்..."

அவர் முடிக்கவில்லை, பூமி பிளந்து குருதி கொப்புளித்தாற் போன்று சின்னம்மாவின் குரல் ஆங்காரமாக வருகிறது.

"ஆமா! என்னேயிவீரு! முன்னபின்னக் கண்ட்ராக்டு கங்காணிச் சவங்க செய்யாததியா செய்யிறா அவெ? நீரு என்னேஞ்சீரு? சீலயப் புடிச்சிளுத்துப் பதங்கொலய வய்க்கிறது கொஞ்சமா? வயித்துப் பசின்னு நாலு செவத்துக்குள்ளேந்து வெளியே வந்தா இந்த மிருவங்கதா. இதுங்க சீரளிக்கிறதுதா...?"

தோலை நீக்கிச் சீழும் இரத்தமும் குழம்பும் புண்ணை வெளிக்காட்டினாற் போன்று பொன்னாச்சி விக்கித்துப் போகிறாள். மருதாம்பாளின் முகத்தில் மஞ்சள் ஒளி நிழலாடுவது தெரிகிறது; கண்கள் பளபளக்கின்றன.

"ஏம் பேசாம இருக்கீரு? ஏ?... ஏ?..."

சோற்றுக்கையுடன் அவள் எழுந்து வெறி பிடித்தாற் போன்று அவர் மேலே போட்டிருக்கும் துணியுடன் கழுத்தைப் பற்றுகிறாள்.

குரூரம் கெக்கலி கொட்ட அவள் பொங்கெழுச்சி கண்டு அப்பன் அதிர்ச்சியுற்று ஆவியாகப் போகிறார். அவள் கையைப் பிடித்துக் கொண்டு, "வாணா... வாணா மருதாம்பா, என்னிய விட்டிரு..." என்று கெஞ்சும் குரல் அழுகையாகத் தழுதழுக்கிறது.

"இருட்டில் வந்து தட்டுமேட்டுல லாரின்னு கொரல் குடுப்பா. உள்ளாற வந்து சீலயப் புடிச்சி இளுத்திட்டுப் போவா. புருசனாம் புருசன், அவ ஒடம்பில ரத்தமா ஓடிச்சி? இவ சீலயப்புடிச்சி இளுத்திட்டுப் போவையில பாத்திட்டு ஒக்காந்திருப்பா, காலம் வந்ததும் கட்டயெடுத்திட்டு அடிச்சுக் கொல்லுவான், பாவி, ஊரம்புட்டும் பாத்திட்டிருக்கும் - நாசகாரக்கும்பல்..."

பொன்னாச்சிக்கு அந்தச் சிற்றம்மையைக் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.

இந்த அப்பனைக் கூட அவ்வளவுக்கு யாரும் தூற்றியதில்லை; ஏசியதில்லை. ஆனால் கண்ணால் பார்த்திராத இந்தச் சின்னம்மாவை எவ்வளவுக்கு யார் யாரோ ஏசியிருக்கின்றனர்! அப்பனின் குரல் அழுகையிழைபோல் இருட்டு குகையில் ஒன்றி மறைகையில் சின்னம்மா குரல் உடைய விம்முகிறாள்.

இந்தச் சின்னம்மாவும் ஒரு காலத்தில் பொன்னாச்சியைப் போல் உதயத்தில் இதழ் விரிக்கும் மலராக எதிர்காலக் கனவுகள் கண்டவளாக இருந்திருப்பாளோ? வயிற்றுப் பசியுடன் போட்டி போட இயலாத கனவுகள் அவளையும் வருத்தி குலைத்திருக்கும். அவளை ஓர் ஏலாத குடும்பக்காரன் கலியாணம் என்று வளைத்துக் கொண்டிருக்கிறான்.

பிறகு... பிறகு... இந்த அப்பன்...

இவருக்கா அவள் இரக்கப்பட்டாள்?

சின்னம்மா இப்போது எதற்கு விம்மி அழுகிறாள்? தன்னுடைய சுகந்த மணங்களெல்லாம் சேற்றுக் குட்டையிலும் தெருப் புழுதியிலும் சிந்திவிட்டதென்று அழுகிறாளோ?

பொன்னாச்சிக்கு நெஞ்சு கட்டிப் போகிறது. சோறு இறங்கவில்லை. வேலியும் காவலும் இல்லாமல், உயிர்ப்பும் மென்மையும் வறண்டு போகும் உப்புக் காட்டில் தன்னைப் போல் நலம் குலைய நிற்கும் ஒவ்வொரு பெண்ணையுமே நினைத்துச் சின்னாச்சி அழுவதாகத் தோன்றுகிறது.

அன்றிரவு பொன்னாச்சிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மாமன் வரமாட்டாரா, திரும்பிப் போய்விட அழைக்க மாட்டாரா என்று கூட நினைத்தாளே. அந்த நினைப்பு உகந்ததாக இல்லை. இங்கே இந்தக் களத்தில், கங்காணிகளும் கணக்கப்பிள்ளைகளும், 'கண்ட்ராக்ட்'களும் நச்சரவுகளாய் ஊரும் களத்தில், காவலில்லாத பூச்சிகளாய் அவர்கள் இருக்கிறார்களே. அது தொடர்ந்து கொண்டே இருக்குமா?... இதைத் தட்டிக் கேட்க ஆளில்லாமலே இருந்து விடலாமா?

'தட்டிக் கேட்க' என்று தோன்றுகையில் ராமசாமி, அந்த 'ஐட்ரா' ஆள், முதலாளிக்கு வேண்டிய ஆள் என்று தம்பி சொன்ன அந்த... அவர் முகம் நினைவுக்கு வருகிறது. அதிக உயரமுமில்லை; பருமனுமில்லை. வெள்ளைச் சட்டையும் வெளுத்த முண்டாசும் அரும்பு மீசையும் குளிர்ந்த விழிகளுமாக அந்த ஆள்... "தண்ணீர் குடிச்சீட்டீங்களா?" என்று கேட்கும் ஆள்... அவளுடைய சங்கடங்களைப் புரிந்து கொண்டு விலக்கிய ஒரே ஆள்...

அவரும் அந்தப் பாத்திக் காட்டில் தான் இருக்கிறார். உப்புக் கடலினால் கரிப்பு மணிகள் மட்டுமே விளையவில்லை. நல்முத்து கூட விளைகிறது. ஆனால் அது அருமையானது. அதனால் விலைமதிப்பற்றது.

மறுநாட் காலையில் சின்னம்மா, பச்சையையும் அப்பனையும் அனுப்பி அவளுடைய கூலியைப் பெற்றுவர செய்கிறாள். ஞாயிற்றுக் கிழமையில் நல்ல தண்ணீர்க்குளம் தேடிச் சென்று துணி துவைத்து வருகிறார்கள். அன்றுதான் மாசத்துக்கொரு முறையான எண்ணெய்த் தலை முழுக்கும் வைத்துக் கொள்ள வேண்டும். கூந்தலைக் கோதிக் கொண்டு அவள் சன்னலின் அருகே நிற்கையில் ஓலை கிழித்துக் கொண்டிருக்கும் வீட்டுக்கார ஆச்சி,

"ஏட்டி? கூலி போடலியா நேத்து?" என்று வினவுகிறாள்.

"இல்ல. அப்பச்சியும் பச்சையும் போயிருக்கா?"

"அதாங் கேட்டே. காலையில் சின்னாச்சி வாடவையும் சீட்டுப் பணமும் குடுத்திடுவா. காணமேன்னு கேட்டே..."

பொன்னாச்சிக்கு அவள் வாடகைப் பணத்தை நினைவு படுத்தும் மாதிரியில் கோபம் வருகிறது. என்றாலும் எதுவும் பேசவில்லை. இவளுடைய ஒரே பையனும் மூன்று வருஷங்களுக்கு முன் இறந்து போனானாம். வட்டிக்குக் கொடுக்கும் பணத்தைக் கண்டிப்பாக வாங்கி விடுகிறாள்.

அவளிடம் உப்பளத் தொழிலாளரின் பாத்திரங்கள், நீர் குடிக்கும் லோட்டாவிலிருந்து சருவம் வரை அடகு பிடிக்கப் பட்டவை கிடக்கின்றனவாம். அந்த முன்னறைக்கு நேராக உள்ள அறையில் இரும்பு அலமாரியும் கட்டிலும், சாமான்களும் நிறைந்திருப்பதை பாஞ்சாலி அவளிடம் சொல்லி வியந்தாள். ரோசத்துடன் சின்னம்மாவிடம் அப்பனும் பச்சையும் கூலி பெற்று வந்த உடனேயே அவள் கடனுக்காக பணத்தையும், வாடகையையும் கொடுத்து விட வேண்டும் என்று கூறுகிறாள்.

"இப்ப வேணா... அடுத்த கூலிக்குக் குடுக்கலாம். அடுப்புக்கு வய்க்கப் பானை ஒண்ணு வாங்கணும். அவிய ஒண்ணுஞ் சொல்லமாட்டா."

"எங்கிட்டக் கேட்டா; ஏங்குடுக்கலன்னு..."

"பானை வாங்கணுமின்னா ஒண்ணுஞ் சொல்லமாட்டா. மேலுக்கு அப்படி வெட்டித் தெறிச்சாப்பல பேசினாலும் கெரு ஒண்ணுங் கிடையாது. பாவம் ஒரே பய... அவன் போயிட்டா... அதுலேந்து ஆச்சி முன்னப் போலவே இல்ல..."

"ஆச்சி புருசன் எங்கேயிருக்கா?"

"புருசனொன்னுமில்ல. அந்தக் காலத்துல அளத்துல சோலி எடுக்கறப்ப அந்தக் கணக்கவுள்ள வாரானே, அவங் கொலச்சி பெரி முதலாளி, இப்ப கெழமா படுத்த படுக்கையாயிருக்காண்ணு சொல்லிக்கிடுவா. அவனுக்குக் கூட்டி வச்சிட்டா. அவெ அந்த காலத்துல பொம்பிளன்னா பேயா அலையுறவ. ஆனா, இந்தாச்சி ஒரு கௌரவப் பட்டாப்பலவே வீட்டோடு இருந்திட்டா. பொட்டி கிட்டி மொடயும். இந்த வளவெல்லாம் அந்தக் காலத்துல அந்தக் கணக்கவுள்ள வகையா வந்ததுதா. ஒரு பையன் இருந்தா, நல்ல வாளிப்பா... அதா போட்டோ வச்சிருக்கே, வாசல்ல, அதுதா. படிச்சிட்டிருந்தா காலேசில. பொக்குனு போயிட்டா..."


'எனக்குச் சாமில்ல. எஞ்சாமி செத்துப் போயிட்டா'ன்னு அவள் கூறிய சொற்கள் பொன்னாச்சிக்கு நினைவில் மின்னுகின்றன.

"வயசுப்புள்ள எப்படிப் போயிட்டா? காருல கீருல அடிபட்டுப் போயிட்டானா?"

"என்னென்னவோ சொல்லிக்கிறாவ. நமக்கு என்னம்மா தெரியும்? அந்தப் பய, ஆனா, மொதலாளி செறுப்பத்துல எப்படி இருந்தாவளோ அப்பிடியே இருப்பா. கெளவனுக்கு நாலு பொஞ்சாதி கெட்டி மொத்தம் பன்னண்டு ஆம்பிளப் பிள்ள இருக்கா. கடோசிக்காரந்தா வேதக்காரப் பொம்பளயக் கெட்டி, கிறிஸ்தியானியாயிட்டா. அவியளுக்கு அளத்துல செவந்தியாவரம் பக்கம் பிரிச்சிட்டாவ. அவதா துரை அளம்பா. முன்ன ஒண்ணாயிருந்த அந்தக் காலத்துல நாங்கூட செய்நத்துக்கு ஒண்ணே கால் ரூவா கூலிக்குப் போயிருக்கே. அந்தப் புள்ளயல்லாங் கூட இப்படி அச்சா மொதலாளியப் போல இருக்க மாட்டாவளாம். சொல்லிக்குவா. எனக்கென்ன தெரியும்? நடந்த தென்னன்னு கிளக்கால உதிச்சி மேக்கால போறவனுக்குத்தா தெரியும். இந்தப் பய பங்களாவுக்குப் போனானா ஒருநா. போட்டோவப் பார்த்தானாம். ஆத்தாகிட்ட வந்து, நானும் அவிய மகந்தானே, எனக்கொரு பங்கு சொத்து வாரணுமில்ல? பத்து லட்சம் பங்கில்லேன்னாலும் ஒரு லட்சம் வரணுமில்லன்னானாம். வக்கீலக் கண்டு பேசுவன்னானாம். பொறவு என்ன நடந்ததுன்னு தெரியாது... வக்கில் புரத்துல அம்மன் கொடை வரும். அன்னிக்குத்தா தேரியில இந்தப்பய அந்தால வுழுந்து கெடந்தா. நீல டௌசரு. சரட்டு எல்லாம் அந்தால இருக்கு... ஆச்சி கூத்துப் பாக்க ஒக்காந்திருக்கா. சேதி சொன்னாவ. போலீசெல்லாம் வந்தது. என்னமோ தண்ணியக் குடிச்சிட்டா. அதுதாண்ணு சொல்லி மறச்சிட்டாவ..."

பொன்னாச்சி திடுக்கிட்டுத் திகைத்து சொல்லெழும்பாமல் அமர்ந்திருக்கிறாள். அடுப்பு திகுதிகுவென்று எரிகிறது; பானைச்சோறு பொங்குகிறது. சின்னம்மா ஒரு சுள்ளியை இழுத்து நீரைத் தெளித்துச் சிறிது அணைக்கிறாள்.

"அப்படியா...? அப்படிக் கூடச் செய்வாங்களா சின்னம்மா? அப்ப அந்த அளத்து மொதலாளிக்குப் பன்னண்டு லச்சமா இருக்கு..."

"நமக்கு என்னாத்தா தெரியிது. நாம லச்சத்தைக் கண்டமா, மிச்சத்தைக் கண்டமா. சொல்லிக்குவாக. உப்புத் தொழில்ல ஒரம் போடணுமா, களை எடுக்கணுமா, பூச்சி புடிச்சிடுமேன்னு பயமா? மிஞ்சி மிஞ்சி, மழை பெஞ்சாக் கொஞ்சம் கரையும். மறுவருசம் காஞ்சா உப்பாகும். இந்தத் தூத்துக்குடி ஊரிலேயே பேயறதில்லை. காயிறது பார். பேஞ்சிச்சின்னா அளத்துக்கு வேலய்க்கு வர ஆளுவ ரொம்ப இருக்கமாட்டா. காஞ்சிச்சின்னா கோயில்பட்டி அங்க இங்கேந்தல்லாம் கூலிக்கு இங்க ஆளு வந்து விழும். அதனால் மொதலாளி மாருக்கு நட்டம் எங்கேந்து வரும்? சிப்சம், (சிப்சம் - ஜிப்சம் எனப்பெறும் கூட்டுப் பொருள் சிமிட்டி உற்பத்திக்கு இன்றியமையாதது) மாங்கு (மாங்கு - மண்ணும் கசடும் கலந்த உப்பு) எல்லாம் மூடமூடயா வெல. சிமிட்டி ஃபாக்டரிக்கு அப்படியே போவுது. நாம சொமை சொமக்கிறோம்... வேறென்ன தெரியுது?..."

பொன்னாச்சி சிலையாக இருக்கிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
7

அன்று நாச்சப்பன் பொன்னாச்சியையும் அன்னக்கிளியையும் கசடு கலந்து கிடக்கும் உப்பை, ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குக் கொண்டு போடப் பணிக்கிறான். அவை யாரேனும் கருவாடு போடவோ, தோல் பதனிடவோ வாங்கிப் போவார்களாக இருக்கும்.

அன்னக்கிளியைப் பார்க்கையில் பொன்னாச்சிக்கு அச்சமாக இருக்கிறது. அவளுடைய கன்னத்து எலும்புகள் முட்ட, கண் விழிகள் சதையில் ஒட்டாமல் தெரிய, வயிறு குவிந்து இருக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவள் குனிந்து 'மாங்கு' எனப்படும் அந்தக் கசடை வாளியில் வாரிப் பெட்டியில் போடுகிறாள்.

குனிந்து நிமிர்ந்து அதை அவளால் செய்ய இயலவில்லை.

"நானே பெட்டியில எடுத்துப் போடுறேன் அக்கா..." என்று பொன்னாச்சி அவள் வேலையை இலகுவாக்க முற்படுகிறாள்.

அன்னக்கிளி தலையில் பெட்டியைச் சுமந்து கொண்டு ஒரு நடை கொண்டு போய் கொட்டு முன் பொன்னாச்சி இரண்டு முறைகள் பெட்டியை நிரப்பிக் காலி செய்து விடுகிறாள்.

வெயில் உச்சிக்கு ஏறிக் காய்கிறது. அன்னக்கிளிக்கு மூச்சு வாங்குகிறது. நஞ்சோடையின் அருகே கூடையுடன் கீழே உட்கார்ந்து விடுகிறாள்.

"ஏனக்கா?... உடம்புக்கு என்னேனுமா?..."

"இல்லே... எனக்கு தாவமாயிருக்கு. தண்ணி... தண்ணி வேணும்..." என்று மூச்சிரைக்க அவள் சாடை காட்டுகிறாள். பொன்னாச்சிக்கு அவளைக் காணவே நடுக்கமாக இருக்கிறது.

தனது பெட்டியை வைத்துவிட்டுத் தொலைவில் இருக்கும் கொட்டடிக்கு ஓடுகிறாள். கொட்டடியில் இப்போது குழாயில் தண்ணீர் விடுவார்களா? அவள் ஓடி வருவதை நாச்சப்பன் பார்த்து விடுகிறான்.

"செறுக்கிவுள்ள. ஏண்டி ஓடியார? வேலயப் போட்டுட்டு..." என்று நாக்கூசும் சொற்களால் வசைபாடுகிறான்.

"தண்ணி வேணும்... தாவத்துக்குத் தண்ணி. அன்னக்கிளி அக்கா தண்ணி கேக்கா."

"அதுக்கு, அவ என்ன ராணிமவ ராணியா? ஒன்ன அனுப்பிச்சி வய்க்கா?... கண்ட களுதங்களுக்கும் படுக்க விரிச்சிட்டு வயித்தச் சாச்சிட்டு வாரா! ஒருநாக் கூட ஒளுங்கா வேல செய்றதில்ல!..."

வசைகள் உதிருகின்றன. ஆனால் 'ஐட்ரா' ராமசாமி அங்கு கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு உப்பு வாருகிறான். அவன் அவள் நீர் வேண்டி வந்ததறிந்து வாரு பலகையைப் போட்டுவிட்டு எங்கிருந்தோ தண்ணீர் கொண்டு வருகிறான்.

"ஆருக்குத் தண்ணி வேணும்?"

"குடுங்க. பிள்ளத்தாச்சி... அன்னக்கிளியக்கா, மயக்கமா உக்காந்திட்டா..."

வாளியும் குவளையுமாக அவனும் அவளுடன் செல்கிறான்.

அன்னக்கிளி கவிழ்ந்தாற் போல் உட்கார்ந்தபடியே முதுகு சரியக் கிடக்கிறாள். முட்டியை ஊன்றினாற் போல் மடித்துக் கொண்டு குப்புற வீழ்ந்து கிடக்கிறாள்.

"முருகா... முருகா!" என்று அவள் மனசுக்குள் கூவிக் கொள்கிறாள்.

கீழே அமர்ந்து அவள் முகத்தை மெல்லத் தூக்கி, "இத தண்ணி, அன்னக்கிளியக்கா?... தண்ணி கேட்டியே?" என்று அவள் தலையைத் தூக்குகிறாள். முகத்தில் வியர்வைப் பெருகுகிறது. கைகள் இரண்டையும் வயிற்றில் கோத்தாற் போல் வைத்துக் கொண்டிருக்கிறாள். சற்றே நகருகையில், கீழே உப்பு மிதிலாடும் மண்ணில் அவளது நிணநீர்... கறுப்புச் சீலைத் துண்டை நனைத்துக் கொண்டு...

அவளுக்கு நெஞ்சு ஒட்டிக் கொள்கிறது.

பேரியாச்சி இருக்குமிடம் தேடி ஓடிப் போகிறாள்.

"ஆச்சி...! ஆச்சி? அங்க வந்து பாரும்... அன்னக்கிளி அக்கா... உதரமாச் சரியிது..."

கிழவி கொத்து பலகையைப் போட்டுவிட்டு விரைகிறாள். இன்னும் வேறு சில பெண்களும் ஆண்களும் திரும்பிப் பார்த்து வருகின்றனர்.

"இவளுவ வெக்கங்கெட்ட வேசிக. வகுத்துப்புள்ள கீளவுளற வரயிலும் ஏன் சோலிக்கு வரணம்?"

"மாசமாவலன்னான்னாலும் மானக்கேடில்ல? வூட்ட கெடந்தா என்ன?"

"நாலு புள்ளிய, இவ என்னேய்வா? இருந்தாலும் தயிரியம், அளத்துல வந்து வுளுந்து கெடக்கலாமா?"

ராமசாமி சற்று எரிச்சலுடன், "ஏன் தலைக்கித்தலை பேசுறிய? பலவை எதானும் கொண்டிட்டு வந்து கொட்டடிக்குத் தூக்கிட்டுப் போகலாம் வாங்க!" என்று அங்கு வேடிக்கை பார்க்க நிற்கும் வார்முதல் கங்காணி செல்வராசை அழைக்கிறான்.

"ஏலே, நீ புள்ளப் பேறு பார்க்க வாரே! போலே! பொண்டுவ இளுத் தெரிவாளுவ. இந்தச் சிறுக்கியளுக்கு நெஞ்சுத் தகிரியம். மொதலாளி காருல ஆசுபத்திரிக்கிக் கூட்டிப் போவார்னு கூட வுழுவாளுவ."

ராமசாமி அந்த செல்வராசை ஒரு மோது மோதித் தள்ளுகிறான்.

"ஒரு ஆத்தா வயித்துல பொறக்கல நீ? அக்கா தங்கச்சி தெரியாது ஒனக்கு? உசுருக்கு அவ மன்னாடுதா... இவெ பேசுதா!"

அவன் சந்தனசாமியைக் கூட்டிச் சென்று அலுவலகக் கொட்டடியில் கிடக்கும் ஒரு பெஞ்சியை எடுத்து வருகிறான். தலையில் சுற்றிய துண்டை எடுத்துப் போடுகிறான்.

இன்னும் அதைப் பின்பற்றிப் பல தலை துணிகள் விழுகின்றன.

கொட்டடியில் பேரியாச்சியும், அழகுவும், வடிவாம்பாவும் அவளைச் சுற்றி இருக்கின்றனர்.

நாச்சப்பன் எல்லா வசைகளையும் பொல பொலத்துத் தீர்த்துவிட்டான். அன்று திட்டமிட்டபடி வேலை நடக்கவில்லை.

பகலுணவுக்கு அவர்கள் திரும்பும் நேரத்தில் கொட்டடியிலிருந்து பச்சைச் சிசுவின் குரல் கேட்கிறது. அந்தக் கரிப்பு வெளியில் உயிர்த்துவத்தை எதிரொலித்துக் கொண்டு அதன் முதல் அழுகையின் ஒலி கேட்கிறது. "பொட்டவுள்ள!" என்று அழகுதான் முதலில் அறிவிக்கிறாள். பொன்னாச்சி கொட்டகை ஓரத்தில் எட்டித்தான் நின்று அதைக் கேட்கிறாள்.

"பொட்டவுள்ள... பொட்டவுள்ள..."

யாரோ அறைந்து அறைந்து கூறுவது போல் பொன்னாச்சியின் நெஞ்சில் அந்த ஒலி மோதி எதிரொலிக்கிறது.

"பொட்டவுள்ளயா?..." என்று, ஏதோ உச்சக்கட்டத்தை எதிர்ப்பார்த்திருந்தாற் போல் நின்றவர் சப்பிட்டவராகச் சாப்பாட்டுத் தூக்குடன் செல்கின்றனர்.

ராமசாமி தான் சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்கோ வெளியே சென்று, தேநீரோ காப்பியோ வாங்கி வருகிறான். பிறகு உப்பு எடுத்துச் செல்ல வந்த லாரியிலோ, எதிலோ பிள்ளை பெற்றவளைத் தூக்கிவிட்டு, ஆசுபத்திரிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்கிறான். கங்காணி செல்வராசுவுக்கு ஒரே ஆத்திரம்.

செல்வராசுவும் படிக்கத் தெரிந்தவன். டிகிரி பார்க்கும் வேலைக்காரனுக்கு மாசம் சம்பளம். டிகிரி பார்த்து தொழி திறந்து மூடி வேலை செய்வது, உப்பு வாருவதை விடக் கொஞ்சம் 'கௌரவ' வேலை என்று நினைப்பு. சட்டை போட்டுக் கொண்டு 'ஐட்ரா மீட்டரும்' அளவைக் குழாயுமாகத் தான் வளைய வரவேண்டும் என்று அந்தப் பணிக்காக கணக்கப்பிள்ளை தங்கராசுவை எப்படி நைச்சியம் செய்யப் பார்த்தான்! ஒவ்வொரு வாரமும் சம்பளத்தில் பத்து ரூபாய் பிடித்துக் கொள்ளச் சம்மதித்தான். பஸ்தர் மிட்டாயும், ஆரஞ்சியும் வாங்கிக் கொண்டு சென்று வீட்டில் வைத்தான். கடைசியில் 'ஐட்ரா' வேலை அந்தப் பயலுக்கு ஆகிவிட்டது. அந்தப் பயல், அறைவைக் கொட்டடியில் உப்பு பொடி சுமக்க வேலைக்கு வந்து சேர்ந்தவன் தான். அரசியல் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுகிறான்.

"கணக்கவுள்ள, என்ன இப்படி ஏமாத்திட்டீரே..." என்றான் மனத்தாங்கலுடன்.

"அந்தாளு பெரிய இடத்து சிவாரிசு. நா பொறவு என்ன சேய?" என்றான் கணக்கப்பிள்ளை.

இதற்குப் பிறகு அட்டி கிடையாது.

செல்வராசு இப்போது ஆத்திரத்துடன் பொன்னாச்சியின் செவிகளில் விழும்படி, "...இவனுக்கு அந்தப் பொம்பிள வாய்ப்பு..." என்று கூறித் தனது அவமானத்துக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறான். அன்று நாச்சப்பன் 'அத்தனை மாங்கை'யும் வழித்துப் போட்ட பின்னரே அவர்கள் வேலை முடிந்து போகலாம் என்று கட்டளை இடுகிறான். அவர்கள் வேலை முடிக்கும் போது மணி ஏழாகி விடுகிறது.

தம்பி, பாவம் அவனுக்குப் பசி எடுக்கும்; தூக்கம் வந்து விடும்.

அவன் அக்காளுக்காகக் காத்திருக்கையில் ராமசாமி அவனிடம், "நீங்க எங்கேந்து வாரிய?" என்று விசாரிக்கிறான்.

"தூத்தூடி... ஆரோக்கியமாதா கோயில்ல அதுக்குப் பின்னால போவணும்..."

"ஒங்க கூட ஆரும் வாரதில்ல?"

"இல்ல..."

"அப்பச்சி, அம்மா இருக்காவ?"

"அப்பச்சிக்குக் கண் தெரியாது. அம்மா செத்துப் போச்சு. சின்னாச்சி அளத்து சோலி பாக்குது..." என்று பச்சை விவரங்கள் தெரிவிக்கிறான்.

பொன்னாச்சி வந்த பிறகு அவனும் அவர்களுடன் பாலம் வரையிலும் சைக்கிளுடன் நடந்து வருகிறான். செவந்தியாபுரத்தில் தான் இருப்பதாகவும், தெரிக்காட்டைத் தாண்டும் வரையிலும் உடன் வருவதாகவும் கூறி வருகிறான். அங்கு ஒரு கடையில் அவர்களுக்குத் தேநீர் வாங்கித் தருகிறான். பொன்னாச்சிக்கு முதலில் தயக்கமாக இருக்கிறது. யாரும் எதுவும் பேசுவார்களோ என்று அஞ்சுகிறாள். அவளையும் இணைத்துச் செல்வராசு பேசிய சொற்கள் மென்சதையில் உப்பாய் வருடுகின்றன.

"வாங்கிக்கம்மா, ஏ, பயமாயிருக்கா? தம்பி, நீ சொல்லு, ஒன் அக்காளுக்கு! நா ஒண்ணுஞ் செஞ்சிர மாட்டே..."

அவள் பிறகு தேநீரை வாங்கி அருந்துகிறாள். தனது ஆயுளில் அத்தகைய இனிமையை அநுபவித்ததில்லை என்று தோன்றுகிறது.

அவள் வீட்டுப்படி ஏறியதும் மாமன் வந்திருக்கும் குரல் கேட்கிறது.

"இப்பதா வாரீங்களா? இந்நேரமா ஆவுது? எட்டடிக்கப் போவுது?"

"இன்னைக்கு அளத்துள ஒரு பொம்பிள, புள்ள பெத்திட்டா" என்று செய்தியவிழ்க்கிறான் பச்சை.

"அப்புறம்?..." என்று மாமா வியந்து பார்க்கிறார்.

"எல்லாரும் வேலையவுட்டுப் போட்டு வேடிக்கை பாத்திட்டு நின்னிட்டா. கண்டிராக்ட் வரப்பு உப்பு தட்டு மேட்டுக்குப் போவாம வுட மாட்டேனிட்டா" என்று கூறும் பொன்னாச்சிக்கு சட்டென்று நினைவு வருபவளாக, "நீங்க எப்ப வந்திய மாமா, மாமி, பிள்ளையள்ளாம் சொவமா? ஞானத்தைதன்னாலும் கூட்டி வரப்படாதா?" என்று வினவுகிறாள்.

அவள் பரபரப்பாகப் பேசியே கேட்டிராத மாமாவுக்கு அவள் முற்றிலும் மாறிப் போயிருப்பதாகத் தோன்றுகிறது.

"நானிங்க சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்தேன். யாரும் இல்ல. பெறகு வீட்டுக்கார ஆச்சி சொன்னாவ, நீங்க வர ஆறு மணியாவுன்னு. ஒங்க மாமி சொன்னா, அவப்பச்சிக்கு ஒடம்பு சரியில்லன்னு கூட்டிப் போனான்னா. சரி, ஒடம்பு நல்லானதும் வந்திடுவீங்கன்னு இருந்தேன். பிறகு இன்னிக்கு இங்க வர சோலி இருந்தது. சுசய்ட்டி விசயமா வந்தா நீங்க வேலய்க்கிப் போயிருக்கிய..." பொன்னாச்சிக்குத் தான் குற்றவாளியாக நிற்பதாகத் தோன்றுகிறது.

"நீங்க தப்பா நினைச்சுக்க வேண்டாம் மாமா. இங்க சின்னம்மாக்கும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. எத்தினி காலந்தா ஒருத்தருக்குப் பாரமா இருக்க? பொறவு இந்த வீட்டுக்கார ஆச்சிதா பனஞ்சோல அளத்துல அட்வான்சு, போனசு எல்லாம் கெடய்க்கும்னு வேலைக்கு சேத்து விட்டா..."

"அட... பொன்னாச்சியா இம்புட்டுப் பேச்சுப் பேசுறா?" என்று அவர் கேட்பது உண்மையில் பாராட்டா, அல்லது இடக்கா என்று புரியவில்லை.

"இப்படியேதான் ஆள ஏமாத்தறானுவ. ஏத்தா ஆடு நனயிதுண்ணு ஓநாய் அழுமா? அட்வான்சாம், அட்வான்ஸ்? படிக்கிற பருவத்துப் பிள்ளைய எல்லாம் ஆசைக்காட்டி மடக்கிப் போட்டு உப்புச் செமக்க வைக்கிறானுவ. காது குத்து, கண்ணாலம் காச்சி, மொதலாளி பணம் கொடுப்பான்னு கங்காணிய குழையடிப்பானுவ. இந்தத் தொழிலாளி யாரானும் முன்னுக்கு வந்த கதை எங்கயானும் உண்டா? செந்திலாண்டவ அளத்து முதலாளி, நாங்க கூட்டுறவு ஏக்கருக்குப் பட்டா வாங்கையிலே அவனும் கட்டுக்குத்தவை நூறு ஏக்கர் வாங்கினா, அப்பமே தெரியல எங்களுக்கு. அவன் வாக்கா, ஓடைக்கு அப்பால வாங்கினா. இப்ப, அவன் ஆயிரம் ஏக்கருக்கு மேல சேத்துட்டான்; வார்முதல் தொழில் பண்ரா. குத்தாலத்துல பங்களா, கொடைக்கானல்ல பங்களா, செந்தியாண்டவனுக்கு சேவை பண்ணப் போனா அங்க ஒரு பங்களா... பொண்ணு பிள்ளயெல்லாம் அமெரிக்காவுக்கும் ஜர்மனிக்கும் போறா, ஊரில இருக்கிவ தொழிலையெல்லாம் வளச்சிப் போட்டுக்கிறான். இப்ப உப்புத் தொழிலாளி நீரு - நீருன்னுதா வெச்சுக்குவமே. ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு தான் பதம்? கண்ணு வெள்ளப்பட வழிஞ்சி ஒண்ணில்லாம உக்காந்திருக்கீரு..."

மாமாவுக்கு ஆவேசம் வந்துவிட்டதென்று பொன்னாச்சி நினைக்கிறாள். அவர் பேசத் தொடங்கினால் இப்படித்தான் பேசிக் கொண்டே போவார். ஆனால் வீட்டில் மட்டும் அவர் பேச்சு எடுபடாது.

"சொம்மா கெடந்து சலம்பாதீம், மொதலாளி தொழிலாளிண்டு. அவிய மொதலாளியா இருந்து இத்தினி பேருக்கும் கூலி கொடுத்துத்தா காக்கஞ்சிக்கின்னாலும் அடுப்பு புகையிது. ஒங்களுக்குள்ள ஒத்துமயில்லாதப்ப அதப் பேசி என்ன பிரேசனம்? சங்கக்கார அத்தினி பேரும் அளத்துல பாடுபட்டு ஒத்துமையா நிக்கிறியளா? மூடமுக்கா ரூவாயிண்டு இங்க வாங்கி இவனுவளே மத்தவனுக்கு விக்க துரோகம் செய்யிறா" என்று மடக்கி விடுவாள். அவரால் மறு பேச்சுப் பேச முடியாது.

மருதாம்பா கருப்பட்டிக் காப்பியை இறுத்து, வட்டக் கொப்பில் (வட்டக் கொப்பி - டவரா தம்ளர்) ஊற்றி மாமனுக்குக் கொண்டு வந்து வைக்கிறாள். அந்தப் பளபளக்கும் 'வட்டக் கொப்பி' வகையறா பெரியாச்சியிடமிருந்து பாஞ்சாலி கேட்டு வாங்கி வந்ததென்று பிறகுதான் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். உறைக்கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து மேல் கழுவிக் கொண்டு மசாலை அரைத்துக் கொடுக்கிறாள் பொன்னாச்சி.

மாமா இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறார். காப்பி குடித்தாகிவிட்டது.

"அளத்துல ஒருத்தி பிள்ள பெறுறவரய்க்கும் ஏன் வேல செய்யிதா? கொஞ்சம் மனுசாபிமானத்தோட பேறு காலத்துக்கு அலவன்சு மாதிரி ஏதாவது கொடுக்கிறாவளா? இவங்களுக்கு அதனாலே கொறஞ்சிடுமா? உப்பு நட்டம் வந்தா மீனுல லாபம் வரும். மிசின் போட்டு வாங்கிவிட்டிருக்கா. மீனுல நட்டம் வந்தா காடுகரை வச்சிருக்கா. காபித் தோட்டம் வாங்கறா. பணம் பணத்தோட சேரச் சேர சுயநலம் அதிகமாகி மனிசாபிமானம் போயிடும் போல இருக்கு. ஒரு கூலின்னு நிர்ணயம் செஞ்சா, எல்லா அளக்காரனும் அதெக் குடுக்கிறாவளா? எடயில கண்ட்ராக்டுன்றா. ஆடுமாடுங்கள சப்ள பண்ணுறாப்பல தொலாளிங்களை வளச்சிட்டுப் பணம் பண்றா. மொதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடுவ இவெ கமிசன். இதுக்குச் சட்டம் கெடயாது. சரிதானேம்மா?" சின்னம்மா வட்டக் கொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டு "அதுக்கு என்னேயலாம்? கூலி ரேட்படி குடுக்கிறவங்ககிட்ட மேக்கொண்டு முக்காத்துட்டுக் கிடையாது. மழக்காலம், தீவாளி, பண்டியல் போனசு, சீலன்னு ஒண்ணு கெடயாது. மே நாளு, சுதந்தர நாளு லீவு கூடக் கெடயாது. அதுக்கு இது தாவிலயில்ல?" என்று கேட்கிறாள்.

"நீங்க எந்த அளம்?"

"கருவேலக் காட்டு அளம். திருச்செந்தூர் ரோடில பக்கந்தா. பாலெந்திரும்பினா வந்துடும்; இங்கதா அஞ்சு வருசமா வேல. இவியளும் செய்நத்துக்கு வந்தா. இப்பவும் லேசா தொழி (தொழி - தெப்பம் - கசடு தங்கும் முதல் பாத்தி) வார கொள்ள ரெண்டில ஒண்ணில குடுப்பா. வாருபலவை போட்டிட்டு தானிருந்தாவ. கங்காணி ஒருத்தர்னு இல்லாம மாறிட்டே இருப்பம். கால் கொப்புளம் வந்து ஒரு நா, ரெண்டு நான்னா போகாம இருந்தா ஒண்ணில்ல. போன வருசம் இந்தப் புள்ளக்கி பேதி காய்ச்சல் வந்து பத்து நா சோலிக்குப் போகல. கங்காணி ஒரு ரூவாக் கூலிக் குறச்சிட்டுக் குடுத்தா ஒரு நாளக்கி... என்ன சொல்றியே?"

"என்னத்த சொல்றது? முதலாளியளுக்கு தொழிலாளிய ஒத்துமையில்லாம இருக்கிறதேதா லாபம். யூனியன் தலைவர்னு யாரானும் செல்வாக்கா தலையெடுத்திட்டா, அவனை ஒடனே வாய்க்கரிசி போட்டு, அவம் பக்கம் இழுத்திடறா. சொல்லி பிரேசனமில்ல?"

சாப்பாடு ஆனதும் மாமா கிளம்பி விடுகிறார்.

"ரா இருந்துட்டுக் காலமே போவலாமே?" என்று அப்பச்சி மரியாதையாகக் கூறுகிறார்.

"இல்ல ஒரு ஆளப் பாக்கணம், ஒம்பது மணிக்குதான் வீட்டுக்கு வருவான்னா. நா வாரே... பொன்னாச்சிப் பதனமா இருந்துக்க. எல்லா இருக்காவ, இருக்கிறம்ன்னாலும் அவவ தன்னத்தானே பேணிக்கணும். தயிரியமாயிருந்துக்க. பிறகு முருகன் இருக்கிறான்!" என்று அறிவுரை கூறிக் கொண்டு நடக்கிறார்.

பச்சை அதற்குள் படுத்துவிட்டான். அவனை எழுப்பி வருகிறாள் பொன்னாச்சி.

"லே தம்பி. ஒளுங்கா பெரியவங்க சொன்ன பேச்சைக் கேட்டு நடந்துக்க; வேண்டாத சகவாசத்துக்குப் போகாத, வாரன் மாப்பிள! வரேம்மா...!"

அவர் படியிறங்கிச் செல்லும் வரையிலும் பொன்னாச்சி உடன் வந்து திரும்புகிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
8

ராமசாமி வேலை முடிந்ததும் நேராகக் குடிசைக்குத் திரும்பமாட்டான். தலைத்துணியை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு படிப்பகத்துக்குச் செல்வான். கந்தசாமியின் தேநீர்க்கடையில் தொழிலாளரைச் சந்தித்து நிலவரம் பேசுவான். ஒரு சராசரி உப்பளத் தொழிலாளியில் இருந்து அவன் மாறுபட்டவன்.

அவன் துவக்கப்பள்ளிக் கல்வி முடித்து ஆறாவதில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவன் தந்தையின் ஆதரவு குடும்பத்துக்கு இல்லாததாயிற்று. அவனுடைய தந்தை சாத்தப்பனுக்கு அவனுடைய அம்மாளுக்கே படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அளத்தில் வார்முதல் தொழிலாளியாக இருந்த அவர் தொழிலாளிகளைக் கூட்டிச் சங்கம் சேர்த்து, உரிமை கோரும் முயற்சிகளில் ஈடுபட்டு முன்னின்று உழைத்தவர். அந்நாளில் தொழிலாளர் தலைவராக இருந்த அங்கமுத்துவை அவர்களுடைய குடிசையில் அடிக்கடி பார்க்கலாம். சிவப்பு வண்ணத்தில் அச்சிட்ட துண்டு நோட்டீசுகளைச் சிதற விட்டுக் கொண்டு அவன் தந்தை சைக்கிளில் செல்வதை அவன் பார்த்திருக்கிறான். எழுத்துக் கூட்டி அதைப் படிக்க முனைந்திருக்கிறான்.


"தொழிலாளத் தோழர்களே, எழுச்சி பெறுங்கள்" என்ற வாசகங்கள் அன்றே அவனுக்குப் பாடமானவை. பிறகு தந்தையை ஒரு நாள் போலீசு பிடித்துச் சென்றதும், தங்கச்சியையும் அவனையும் அல் அயலில் விட்டு விட்டு அவன் அம்மா, கருப்பிணியாக இருந்த அம்மா, தூத்துக்குடிக்கும் வக்கீல் வீட்டுக்கும் அலைந்ததும் அவனுக்கு இன்னமும் மறக்கவில்லை. தங்கச்சி காய்ச்சல் வந்து இறந்து போயிற்று. அம்மா பிள்ளை பெற்று வெகுநாட்கள் படுக்கையிலிருந்தாள். பிறந்த குழந்தையும் இறந்து போயிற்று. சண்முகம் கங்காணி, அவனை அறைவைக் கொட்டடியில் ஒன்றே கால் ரூபாய் கூலிக்கு உப்புப்பொடி சுமக்கக் கொண்டு விட்டார். அந்தக் காலத்தில் அவர்கள் வீட்டுக்கு அவரைத் தவிர வேறு யாரும் வரமாட்டார்கள். பிறகு மூன்று வருடங்கள் சென்ற பிறகு ஒரு நாள் ராமசாமி தலைக்கொட்டையும் தானுமாகக் காலையில் வேலைக்குக் கிளம்புகையில் தாடி மீசையுடன் ஒரு ஆள் அவர்கள் வீடு தேடி வந்ததைக் கண்டான். அவர் அவனைச் சிறிது உற்றுப் பார்த்து விட்டுக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் உகுத்தார்.

அவனது நினைவில் இப்போதும் அவருடைய காய்த்துச் செதில் செதிலாகப் போயிருந்த உள்ளங்கை உறுத்திக் கொண்டிருக்கிறது.

அவரை அப்பா என்றே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அங்கமுத்துவுடன் வீட்டுக்குள் அப்பா எவ்வளவோ பேசி அவன் கேட்டிருக்கிறான். ஞாயிற்றுக் கிழமையானால் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு ஒவ்வொரு தொழிலாளியாகத் தேடிச் செல்வார்கள். அவர் ஓய்ந்திருந்தே அவன் அதற்கு முன் கண்டிருக்கவில்லை. ஆனால், சிறையில் இருந்து வந்த பின் அவர் பேசியதாகவே அவனுக்கு நினைவில்லை. முழங்காலைக் கட்டிக் கொண்டு குடிசைக்குள் உட்கார்ந்திருந்தார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, காலையில் அவர் படுத்த இடம் காலியாக இருந்தது. அக்கம் பக்கமெல்லாம் தேடினார்கள்.

சண்முகக் கங்காணி தான் அவர்களுக்கு அப்போதெல்லாம் ஆதரவாக இருந்த ஒரே மனிதர். தானுண்டு, தன் தொழிலுண்டு என்று இருப்பவர். அவன் தாயிடம், "தங்கச்சி, ஊர்க்குருவி பருந்தாவ எலுமா? நாம் ஊர்க் குருவியாலப் பெறந்திருக்கம். இப்படிக் குழந்தைகளையும் குடும்பத்தையும் வச்சிட்டு அவன் இந்த வம்புக்கெல்லாம் போலாமா?" என்பார். அப்பன் அந்த நல்ல நாட்களில் அவரைக் கண்டாலே ஏசுவாராம்.

"தொட நடுங்கிய. ஒங்களாலதா ஒத்துமையும் விழிப்புணர்ச்சியும் இல்லாத போகுது" என்பாராம். ஆனால் சண்முகக் கங்காணி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவர் தாம் தேடினார்.

அம்மா திருச்செந்தூர்ப் பக்கம் சோசியரிடம் போய்க் குறி கேட்டு வந்தாள். அவனையும் உடன் அழைத்துச் சென்றாள்.

கறுத்த முடித் தலையில் எண்ணெய் பளபளக்க குங்குமப் பொட்டும் கழுத்தில் பல வகை மணி மாலைகளுமாக அமர்ந்திருந்த சோதிடர், சோழிகளை வைத்துப் பார்த்து அப்பன் இன்னும் மூன்றே நாட்களில் திரும்பி விடுவார் என்றார். 'ஒரு பெண் பிள்ளை மயக்கு; அவள் சூதுதான். வடக்கே போயிருக்கிறார். வந்தாக வேண்டும்' என்று புருவங்களை நெறித்து, உதடுகளைக் குவித்து விவரங்கள் மொழிந்தார்.

அம்மா யாரோ பெண் பிள்ளையை நினைத்துக் கைகளை நெறித்துச் சாபமிட்டாள். திரும்பி வரும் போது... பச்சையம்மன் கோயில் நவராத்திரிச் சீர் பொங்கல் வைக்கப் பெண்களெல்லாரும் கூடியிருந்தார்கள். பாட்டுப் போட்டிருந்தார்கள். ராமசாமிக்கு அப்போதெல்லாம் சினிமாப் பாட்டென்றால் உயிர். அம்மா, கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்தி வைத்தாள். விழுந்து விழுந்து கும்பிட்டாள். நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்கள்.

காலையில் அவன் ஏழு மணிக்கு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் சண்முகக் கங்காணியும் கணக்கப் பிள்ளையும் அவர்கள் குடிசைக்கு வரக் கண்டான். அம்மா பரபரத்துக் குடிசைக்குள்ளிருந்து வெளி வந்து பார்த்தாள்.

"மக்கா...!" என்ற கங்காணி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கடற்கரையில் அப்பச்சியின் உடல் ஒதுக்கப்பட்டிருந்தது. மீன்கள் கண்களைக் கொத்தியிருந்தன.

அவர் இறந்தபோது அவர்களுடன் இருந்து உண்மையாகக் கண்ணீர் வடித்தவர் சண்முகக் கங்காணி தாம்.

அப்பா திரும்பி வந்த பின் நன்றாக உடல் தேறிப் பழைய வலிமைகளைப் பெற்றிராது போனாலும், அன்பும் அரவணைப்புமாகச் சில நாட்களேனும் அவர் இருந்திருந்தால் அவருடைய இழப்பை ராமசாமியும் தாயும் அதிகமாக உணர்ந்திருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லாமல் அவர் திரும்பியதும், இறந்து போனதும் கனவில் நிகழ்ந்த சம்பவங்களாக நினைவில் ஆழமாகப் பதியாமல் போய்விட்டது. ராமசாமியின் வாழ்க்கையை அந்த நிகழ்ச்சி அப்போது பாதிக்கவில்லை.

சண்முகக் கங்காணிக்கு நீர்க்கோவை, வாதம் வந்து அவரைப் படுக்கையில் தள்ளிவிட்டது. அவருடைய தம்பி மகன் ஒருவன் தூத்துக்குடிச் சந்தையில் கடை வைத்திருக்கிறான். அவனிடம் சென்று தங்கி வைத்தியம் செய்து கொள்ளப் போய்விட்டார். சண்முகக் கங்காணிக்கு மனைவி இல்லை. இரண்டே புதல்வியர்; அவர்களைக் கட்டிக் கொடுத்து அவர்கள் பாறை உடைத்து சல்லி எடுக்கும் குத்தகை வேலை செய்யும் கணவர்களுடன் வடக்கே சென்று விட்டனர். ஆனால், கங்காணி அளத்தை விட்டுச் செல்லு முன் அவனை உப்பு அறவைக் கொட்டடியிலிருந்து வெளியே உப்பு வாரும் பணிக்கு அமர்த்திச் சென்றார்.

"ஏலே, நீயுண்டு ஒஞ்சோலியுண்டுண்ணு நடந்துக்க. வேற எந்த சாரிப்பும் வேண்டா. ஒன்னப்ப வம்புதும்பு செய்யப் போயித்தா இந்த மட்டும் வந்ததெல்லா..." என்று அறிவுரை செய்து விட்டுப் போனார். அப்போது அவனுடைய இளம் மனதில், வாலிபம் கிளர்த்த முரட்டுத்தனம் முத்திரை பதிக்கவில்லை. வெளியாரின் பேச்சும் நடப்பும், தந்தை ஏதோ பயங்கரமான குற்றத்தைச் செய்ததால் சிறைக்குச் செல்ல வேண்டி வந்ததென்றும், அவரே தாம் தவறுக்கு வருந்தி, தனது ஆயுளை முடித்துக் கொண்டார் என்றும் அவன் கருதுமளவுக்கு அநுதாப ஈரமில்லாமலிருந்தன. தந்தை செய்த பயங்கரக் குற்றம் என்னவென்பதை அவன் வாலிபனாக வளர்ந்து வர, உப்பளத்தில் பெறும் அனுபவங்கள், வேலைச்சூழல் இவற்றின் வாயிலாகவே உணர்ந்து கொண்டிருக்கிறான்.

ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு நாள் அவன் அளத்தில் பணியெடுத்த பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு ஆள் அவனைப் பார்த்து விட்டுச் சட்டென்று இறங்கினார்.

"நீ... யாருலே, பாத்தாப்பல இருக்கு?"

அவன் கூச்சத்துடன் அவரைப் பார்த்தான். கையில் தங்கப்பட்டை கடிகாரம் கட்டி இருந்தார். வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு, நடுத்தர வயசுக்காரராக இருந்தார்.

"...நீங்க யாரு...?"

"எம்பேரு தெரியுதா? தனபாண்டியன்னு..."

அவன் கேட்டிருக்கிறான். தொழிலாளர் சங்கத்தின் ஒரு தலைவராக அவருடைய பெயர் பிரபலமாகி கொண்டிருந்தது. ஒரு வேளை அப்பச்சியைத் தெரிந்திருக்குமோ?...

"நான் சாத்தப்பன் மகன்..."

"அதா, ஒங்கப்பா முகம் அப்படியே இருக்கு. வீட்டில அம்மா சுகமா? தங்கச்சியக் கட்டிக் குடுத்தாச்சா..."

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. "தங்கச்சி இல்ல... எறந்து போச்சு..."

"அடாடா..." என்றவர், அவன் தகப்பனார் தொழிலாளர் சங்கம் தழைக்க எப்படியெல்லாம் பாடுபட்டார் என்று சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்தார். உண்மையில் செல்வாக்குடன் அவர் தொழிலாளரை ஒன்று சேர்த்ததே முதலாளிக்குப் பிடிக்காமல், அவர் மீது சதிக்குற்றம் சுமத்திச் சிறையில் தள்ளினார்கள். இப்போது, உப்பளத் தொழிலாளரை மீண்டும் ஒன்று சேர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல சங்கத்தை அமைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றெல்லாம் எடுத்துரைத்தார்.

வாயிலில் சைக்கிளை வைத்துவிட்டுக் குனிந்து அவரும் குடிசைக்குள் வந்தார்.

"அம்மா! ஒங்களப் பாக்க ஒராள் வந்திருக்கு!"

அம்மா சிறு சிம்னி விளக்கைப் பொருத்தினாள்.

"அண்ணி, எப்படிப் போயிட்டிய? என்ன ஞாபகம் இருக்கா?..." என்று நெகிழ்ந்த குரலில் வினவினார்.

அம்மா சங்கடத்துடன், "இல்லாம என்ன..." என்று திடீர்த் துக்கத்தை வரவழைத்துக் கொண்டு கண்களை முன்றானையால் துடைத்துக் கொண்டாள்.

"தனபாண்டியம்மா. அவரு பெரிய தலைவர், எவ்வளவு பாடுபட்டார்? இந்தத் தொழிலாளிகள் ஒண்ணு சேரணும், அவர்களை அழுத்தும் முதலாளித்துவத்தைத் தட்டிக் கேட்க ஒரு நாக்கு வேணும்னு அவர் பாடுபட்டு உயிரையே பணயம் வச்சிட்டா. அண்ணி, நா இன்னிக்கு உயிரோட உங்க முன்ன வந்து நின்னு பேசுறேன்னா, அது அன்னிக்கு நீங்க காட்டின கருணையாலதான். போலீசு என்னைக் கண்ணி வச்சுத் தேடினப்ப, அடுப்பு வச்ச எடத்துல பலகை போட்டு துணியப் போட்டு என்னப் படுக்கச் சொல்லி அண்ணனும் நீங்களும் எடங்கொடுத்தீங்க, ஒங்க சோறும் உப்பும் தின்னு மூணு நாள் இருந்தேன். அதெல்லாம் எப்படி மறக்கும்?" என்று கண்ணீர் வடித்தார்.

அம்மா எங்கோ முகட்டைப் பார்த்தாள். "எனக்கு ரொம்ப விசனமான விசயம், சாத்தப்பன் தற்கொலை செஞ்சிட்டான், புத்திசாதினமில்லைன்னு சொல்லிக்கிறான்களே, இதுதான் புரியல. இதில ஏதோ மருமம் இருக்குன்னு படுது. நீங்க அன்னிக்கு என்ன நடந்ததுன்னு வெவரமாச் சொல்லணும். சும்மா விடக் கூடாது இதை..." என்றார் தனபாண்டியன்.

கடந்த ஐந்து வருஷங்களுக்குப் பிறகு இப்போது இதை இவர் ஆராய வந்திருப்பதன் நோக்கம் என்ன என்று ராமசாமி முதலில் திகைத்தான்.

"தொழிற்சங்கத்தை இப்ப பலப்படுத்தணும். இப்ப உப்பளத் தொழில் மின்னவிடவும் கஷ்டம். இந்தப் பனஞ்சோலை அளம் எவ்வளவு பெரிசாப் போச்சு? முன்ன அந்தக் காலத்துல துலாவச்சு அடிச்சா, அஞ்சு பாத்தி ஆறு பாத்தி ஒரு மனுஷன் வாருவான். இப்ப, மிசின் தண்ணியை எரச்சுக் கொடுத்து, அதே ஒரு ஆள் முப்பத்தஞ்சி பாத்தி வாருறான். கூலி அந்த அளவுக்கு உசந்திருக்கா?" என்று கெட்டித்துப் போன உப்பை உதைத்து உலுக்குவது போல் கேட்டார்.

கலகலவென்று அது குறைபாடுகளாக அப்போதுதான் ராமசாமிக்கு உறைத்தது.

அம்மா எதுவும் பேசாமலே நின்றிருந்தாள். பிறகு நாத்தழுதழுக்க, "ஒங்கள நான் ரொம்பவும் கேட்டுக்கறேன். பையன் ஏதோ வேலய்க்கிப் போயிட்டிருக்கா. அவனுக்கு ஒரு கல்யாணம் கட்டி குழந்தை குட்டி பிறந்து விளங்கணும். மொதலாளி மாரெல்லாம் முன்னப்போல இல்ல. இப்பல்லாம் அவிய காரில் வருவா; போவா. தொழில்காரங்க ஆம்பளயா, பொம்பளயான்னு கூடப் பாக்கிறவங்க இல்ல. போன வருசம் முச்சூடும் மழ இல்ல. உப்புக்கும் வெல இல்லதா. ஆனா இங்க தட்டில்லாம கூலி கொடுத்தாவ; வூடு மோடு போடணுன்னாலும் ஏதோ கல்யாணச் செலவுன்னாலும் பணம் குடுப்பா. ஒங்க கிட்டச் சொல்ற, ராமசாமிக்கு மாசச் சம்பளமாவே ஆக்கி வச்சிடறேன்னு கங்காணியாரே அப்பவே சொல்லிருக்கா..." என்றாள்.

அவர் சிறிது நேரம் வாயடைத்துப் போனாற் போல நின்றார்.

"நீங்க ரொம்பப் பயப்படுறிய. இதெல்லாம் சூழ்ச்சி. நியாயத்தை ஒருத்தன் கேட்கத் தலையெடுத்தால் அவனை மடக்கி விடுவார்கள். சாத்தப்பன் தற்கொலை செய்து கொண்டார் என்பது வெறும் கதை. அவரை அறிந்தவர் யாரும் நம்ப முடியாது. அவர் இறந்த பிறகு அந்தப் பொம்புள வந்தாளா?"

அம்மா தலையை வேகமாக ஆட்டினாள். "அவ வெவரமே பொறவு எவரும் பேசியதில்ல. ஆருக்கும் ஏதும் தெரியாது. அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்ல. ஏதோ கேட்பார் பேச்சக் கேட்டு முதலாளிக்குத் துரோவம் செய்திட்டமேன்னு ஏக்கம் புடிச்சே பிரும்மமாப் போயி தன்னையே முடிச்சிட்டாவ. இதுக்கு ஆரை நோவ?... நீங்க எதுவும் பேசி இப்ப இந்தப் பையனுக்குத் தீம்பா எதுவும் வரவச்சிடாதீக... ஒங்களக் கும்புட்டுக்கிறேன்..."

அம்மா அன்று இவர் காலில் வீழ்ந்துதான் கும்பிடவில்லை.

தனபாண்டியன் அன்று அதற்கு மேல் பேசவில்லை.

ஆனால் அவர் சென்ற பின் அம்மா அவனிடம், "மக்கா, தெளிஞ்சு கெடக்கிற மனசை அவெ குட்டத் தண்ணியாக்கிடுவா. இப்பிடித்தே காயிதமும் அதும் இதும் கொண்டுப் போவாக, ராவோட ராவா மீட்டங்கி பேசும்பாவ, அங்கமுத்துன்ற அந்தாளு கூடதா இவ வருவா. இவயெல்லாம் வாரதுக்கு முன்ன, உங்கய்யா, அவர் சோலியுண்டு அவருண்டுண்ணுதா இருந்தா. இவல்லாம் விடமாட்டா. சொதந்தரம் வந்து ஆருக்கென்ன? முதலாளியளுக்குத்தா சொதந்தரம்பா... கடோசில என்ன ஆச்சி? இவியளத் தூண்டிட்டு உள்ள போக வச்சிட்டு, அவனுவ தப்பிட்டாக மக்கா. நீ இவியக் கூடச் சிநேகம் ஒண்ணும் வச்சுக்காத, வேண்டாம்."

எலும்புகள் முட்ட, எண்ணெய்ப் பசைகன்றிச் சுக்காயி வறண்ட தோலில் கீறல்களுடன் அம்மா கெஞ்சிய போது ராமசாமி குழைந்து போனான். கடலலை மோத வருவது போலும், அவன் விவரமறியாக் குழந்தையாக எதிரிட நிற்பது போலும் அவள் அஞ்சி அவனைப் பற்றிக் கொள்ளப் பார்த்தாள்.

ராமசாமி அப்போது கேட்டான்.

"அந்தப் பொம்பிளன்னாரே அவரு. அது ஆரு அம்மா?" அம்மா அவனைத் திரும்பிப் பாராமலே பதிலளித்தாள். "அவ ஆரோ. நமக்கும் அவளுக்கும் ஒரு தொடிசுமில்ல. நீயாரும் பேசறதக் கேக்கண்டா. நமக்கு உள்ளது போதும். நல்ல பெண்ணா ஒனக்குக் கட்டி வய்க்கணும்..."

அம்மா அப்படித் தீர்த்துவிட்டாலும் அவனால் ஒதுங்கி விடுபட்டு விட முடியவில்லை. உப்பைக் கக்கி விட்டு வரும் நஞ்சோடை நீரும் கரிப்பாகத்தானே இருக்கிறது?

ராமசாமியிடம் சாடைமாடையாக அக்கமும் பக்கமும், தொழில் செய்யும் இடங்களிலும் 'அந்தப் பொம்பிளை'யைப் பற்றிச் செவிகளில் போடத்தான் செய்தார்கள். 'அந்தப் பொம்பிளை', அவனுடைய தந்தையின் கையைப் பற்றி மனைவியாக வந்தவள். மிக அழகா இருப்பாள்.

அப்போது பெரிய முதலாளி சிறு வயசுக்காரர்... அவ்வளவு தான். அப்பாவின் முகத்தில் பிறகு அவள் விழிக்கவில்லை...

ராமசாமி படிப்பகத்தில் வந்து பத்திரிகைத்தாளைப் புரட்டிக் கொண்டே இருக்கிறான். படித்தது எதுவுமே மண்டையில் ஏறவில்லை.

பொன்னாச்சியின் முகமே வந்து கவிகிறது. அன்று தம்பி உடம்பு சரியில்லை என்று வேலைக்கு வரவில்லை. அவள் மட்டும் காத்திருந்தாள்.

அவளைத் தனியே கண்டதும் விழிகள் கலங்கித் துளிகள் உதிர்ந்தன. அவன் பதைத்துப் போனான்.

"ஏவுள்ள? என்ன?"

அவள் முந்தானையால் துடைத்துக் கொண்டு விம்மினாள்.

"அந்தக் கண்ட்ராக்டுச் சவம் என்னியக் கெருவச்சிட்டே இருக்கா. எனக்கு பயமாயிருக்கு... இன்னிக்கி..."

"இன்னிக்கு...?"

அவனுக்கு நெஞ்சு துடிக்க மறந்து போயிற்று.

"அவனைக் காலத் தூக்கி ஒதச்சிட்ட, 'விரிசாப் போடி'ன்னு தொட்டுத் தொட்டுக் கிள்ளினா; பொக்குனு ஆத்திரத்தோட ஒதச்சிட்ட. ஆரும் பாக்கல. ஆனா என்னேய்வானோன்னு பயமாயிருக்கு..."

அவன் விழிகளைக் கொட்ட மறந்து போய் நின்றான்.

"ஏத்தா? ஒம்பேரென்னன்னு சொன்ன?"

அவளை வெட்கம் கவிந்து கொள்கிறது.

"என்ன சேஞ்ச?... சொல்லே..."

அவள் கதகதத்த பட்டுத்துண்டுக்குள் புதைந்தாற் போல் நிலத்தைப் பார்க்கிறாள்.

"ஒம் வாயால சொல்லுவுள்ள, காலத்தூக்கி அவன ஒதச்சே... சரிதானா? கால்ல ஓலச்செருப்புப் போட்டிருந்தல்ல?"

"ம்..." என்று தலையை ஆட்டுகிறாள் பொன்னாச்சி. "அது நா ஒதச்சப்ப அவமேல பட்டு கீளவுழுந்திற்று..."

"எங்காது குளுந்திருக்கு. எப்பிடி ஒதச்சன்னு காட்டுவியா பொன்னாச்சி...?"

அழுகை போய்ச் சிரிப்பு வருகிறது.

அது மலர்ப்பாதம். எலும்பு முண்டி நரம்பெடுத்து முழித்துப் பார்க்காத பாதம். உப்பு அவள் பாதங்களில் படிந்து மென்மையைக் குத்திக் கிளறினாலும், அவள் உயிர்த்துவமுள்ள மனிதப் பெண். உப்பு அவளைப் புழுவாக்க, முதுகெலும்பைத் தின்றுவிடவில்லை. அவள் வீறு கொண்டு ஒரு அசுரனை உதைத்தாள்!

அந்தக் காலைப் பற்றி முத்தமிட வேண்டும் போலிருந்தது ராமசாமிக்கு.

"அவெ கருவச்சிருக்க மாட்டா? அவெ அக்குரமத்துக்கு நா எடங்குடுக்கலன்னுதா ரொம்ப வருமங்காட்டறா..."

"அது சரி, நீ ஒதச்ச பெறவு அவ என்ன சேஞ்சா? மீசல மண்ணத் தட்டிட்டுப் போனானா?" என்று அவன் சிரித்தான்.

"நீங்க சிரிக்கிறிய, இவெ இப்படியிருக்காண்ணு, மொதலாளிக்குத் தெரியுமா! அவியக்கிட்ட சொன்னா என்ன?"

"பொன்னாச்சி, இப்பிடி அக்குருமமுன்னு மொதல்ல கொரல் குடுக்கறதே நீதான்! எல்லாரும் இவனுவ என்ன சேஞ்சாலும் எதுக்கத் தெரியாம அடங்கிப் போவா. பவருள்ளவ சேட்ட சேஞ்சா அது லாவம்னு அடங்கிப் போற பொண்டுவளத்தா இதுவரய்க்கும் நா கேள்விப் பட்டிருக்கே, பாத்துமிருக்கே. நீ... நீதா தயிரியமா எடுத்து சொல்ற. ஏ அழுற? சிரிக்கணும், நா ரொம்ப சந்தோசப் படுற, ஒனக்கு ஒண்ணும் வராது... நமக்கெல்லா நல்ல காலம் வரப்போவுது. அதுக்கித்தான் ஒனக்கு அந்தத் தைரியம் வந்திருக்கு..."

"அப்ப நா பயப்படாண்டாம்..."

"நிச்சயமா. நா இருக்க வுள்ள. ஒங்கிட்டச் சொல்ற, எனக்கு வீட்டுக்குப் போனாக்கூட ஒன் ஞாபகமாகவே இருக்கு. இத்தே பெரிய அளத்துல, நீ இருக்கிற பக்கமே நா சுத்திவாரன்னு கூட அவங்கண்டிட்ருப்பா. நீ பயப்படாதே நானிருக்க... எப்பவும்..."

ராமசாமி இந்த உரையாடலை நூறு முறைகள் உயிர்ப்பித்துப் பார்த்து மகிழ்ந்திருப்பான். இன்னும் அலுக்கவில்லை. சினிமாக் காட்சிகளுக்கு அவன் எப்போதேனும் செல்வதுண்டு. கதாநாயகியை வில்லன் துரத்தி இம்சை செய்வான். சரேலென்று கதாநாயகன் குதிரை மீதேறித் தாவி வந்து அவன் முன் குதிப்பான்; உறைவாளை உருவி, அந்தக் கொடியவனுடன் கத்திச் சண்டை செய்வான். அவன் தலை உருளும். கதாநாயகி ஆனந்த மிகுதியால் கதாநாயகனின் அருகில் வந்து மலர்ச் செண்டென அவன் மார்பில் முகம் பதிப்பாள்... ராமசாமி தானே அந்தக் கதாநாயகனாக மாறிப் போகிறான். நாச்சப்பனின் தலை உருண்டு கிடக்கிறது. பொன்னாச்சி... பொன்னாச்சி...

யாரோ அவன் கையிலிருக்கும் பத்திரிகையை உருவவே அவன் திடுக்கிட்டு நிமிருகிறான்.

தனக்குள்ளே நாணியவனாக, பிறகு சமாளித்துக் கொள்கிறான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top