• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கரிப்பு மணிகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
18

நீர்க் கரையில் காணும் தாவரங்களில் எல்லாம் புதிய துளிர்கள் அரும்பியிருக்கின்றன. தாழைப் புதரில் செம்பட்டுக் கூர்ச்சாகக் குலைகள் மணத்தைக் காற்றோடு கலக்கின்றன. காலைப் பொழுதுக்கே உரித்தான இன்ப ஒலிகள் செவிகளில் விழுகின்றன. ஏதேதோ பெயர் தெரியாத பறவையினங்கள், ஜீவராசிகள், ஓடைக்கரைப் பசுமையில் கீதமிசைக்கின்றன. அவற்றுக்குச் சோற்றுக் கவலை, தொழிற் கவலை, கல்யாணக் கவலை, பிள்ளை குட்டிக் கவலை எதுவுமே இல்லை. அந்தந்த நேரத்து இயற்கை உந்துதலுக்கேற்ப வாழ்கின்றன. ஒரு பறவை பட்டினி கிடந்து செத்ததாகத் தெரியவில்லை. மனிதன் அறிவு பெற்றிருக்கிறான். ஒருவன் மற்றவனை அமுக்கி வாழ்வதே அறிவு பெற்றதன் பயனாக இருக்கிறது. இந்த இடைவிடாத போராட்டம் தான் எல்லா நிலைகளிலும் என்று நினைத்துக் கொண்டு அருணாசலம் நடக்கிறார்.

அவர் சற்று முன் தான் தூத்துக்குடியிலிருந்து வரும் முதல் காலை பஸ்ஸில் வந்து இறங்கினார். நேராக வீட்டுக்குள் செல்லாமல் அளத்துக்கு நடக்கிறார். முதல்நாள் மாலையில் சென்றிருந்தவர், இரவே திரும்பியிருக்கலாம். ஆனால், கூட்டத்தில் உட்கார்ந்து விட்டார். பொழுது சென்றது தெரியவில்லை. பொன்னாச்சிக்காக அந்தப் பையனைக் கண்டு வரத்தான் அவர் சென்றிருந்தார். அவன் வீட்டுப் பக்கமே மண் திடலில் எல்லோரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். கங்காணிமார், பெண்கள், கூலிக்காரர்கள் எல்லோருமே இருந்தார்கள். தொழிற்சங்கத்துத் தன்பாண்டியனும் இருந்தான்.


"தொழிலாளிகளை ஒண்ணு சேக்கறதுன்னா 'மம்முட்டி, கடப்பாரை, தடி இதுங்களை வச்சிட்டு வேலைக்கிப் போனா கை வேறு கால் வேறக்கிடுவம்'னு பயமுறுத்தித்தான் ஆகணும்னா, அந்த அடிப்படையே சரியில்லை" என்று பேசிக் கொண்டிருந்த இளைஞன் தான் ராமசாமி என்று தெரிந்து கொண்ட போது மனதுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அங்கேயே உட்கார்ந்து விட்டார்.

"தொழிலாளிகள் தங்கள் நிலைமைகளள உணர்ந்து ஒண்ணு சேரணும்!" என்றூ அவன் கூறிய போது ஒருவன் நையாண்டி செய்தான்.

"கொக்கு தலையில் வெண்ணெய வச்சுப் பிடிக்கிற கதை தா அது. இப்ப தொழிலாளியெல்லாம் உணராமயா இருக்காவ? உணந்துதா அணு அணுவாச் செத்திட்டிருக்கம்!"

"அது சரி, இங்கே ஒரு பேச்சுக்குச் சொல்லுற குடி தண்ணி இங்கே இல்ல. எத்தினி காலமாவோ எல்லாப் பொண்டுவளும் பாத்திக் காட்டுல உழச்சிட்டு வந்து மைல் கணக்கா தவ தண்ணிக்கும் நடக்கா. இது ஒரு மனு எளுதிச் சம்பந்தப்பட்டவங்க கிட்டக் குடுக்கணுமின்னோ எல்லோரும் சேந்து கூட்டாக் கூச்சல் போட்டுக் கேட்கணுமின்னோ ஆரு வழி செஞ்சிருக்கா? நமக்குப் பிரச்சினை ஒண்ணா, ரெண்டா? வெளி உலகமெல்லாம் திட்டம் அது இதுன்னு எத்தினியோ வருது. எது வந்தாலும் நம்ம வாய்க்கும் எட்டுறதில்ல. இந்தப் பிள்ளங்களுக்குப் படிக்கணுமின்னாலும் வசதியில்ல. நானும் ஒண்ணேகா ரூவாக் கூலிக்கு உப்புக் கொட்டடிக்குத் தாம் போன. அதே படிக்க வசதி இருந்தா வேற விதமா முன்னுக்கு வந்திருக்கலாம். நம்ம உலகம் உப்பு உப்புன்னு முடிஞ்சி போவு. கரிப்பிலியே இந்தத் தொழிலாளி அழுந்திப் போறா. இதுக்கு ஒரு நல்ல காலம் வரணுமின்னா நாம முன்னேறணும்னு நினைச்சு ஒண்ணு சேந்துதா ஆகணும்..."

அந்தச் சொற்கள் அவரது உள்ளத்தில் இன்னமும் எதிரொலிக்கின்றன. பொன்னாச்சியை அவனுக்குத்தான் கட்டவேண்டுமென்று அவர் முடிவு செய்துவிட்டார். ஆனால் அந்தத் தாயை அவரால் முதல் நாள் பார்த்துப் பேச முடியவில்லை. பையனை அறிமுகம் செய்து கொண்டு சிறிது நேரம் பேசினார்.

தங்கபாண்டி ஓடை கடந்து வண்டி ஓட்டிக் கொண்டு வருகிறான். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு அவர் நிற்கிறார்.

"நேத்து நீரு எங்க போயிருந்தீரு மாமா?" என்று கேட்ட வண்ணம் அவன் வண்டியை விட்டிறங்கி வருகிறான்.

"நேத்து நீ உப்பெடுக்க வந்தியா?"

"நா வரல மாமா. தீர்வ கட்டலன்னு முனுசீப்பு ஆளுவ உப்பள்ள வாராவன்னாவ. ஆச்சி புருவருத்திட்டிருந்தா..."

அவர் திடுக்கிட்டுப் போகிறார். அவர் வீட்டில் ஆச்சியைப் பார்க்கவில்லை. சட்டையைக் கழற்றி மாட்டி விட்டு, அறைச்சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.

அவர் உடனே பரபரப்பாக அளத்தை நோக்கி விரைகிறார்.

முனிசீப்பு அவ்வளவுக்குக் கடுமை காட்டி விடுவாரோ?

யாரும் வந்திருக்கவில்லை. சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார்... அவர் வரப்பில் வாரி ஒதுக்கிய உப்பு அப்படியே தானிருக்கிறது. தீர்வை கட்டவில்லை. இரண்டாண்டுத் தீர்வை பாக்கி இருக்கிறது. அது மட்டுமில்லை. வரும் ஆண்டுடன் குத்தகையும் புதுப்பிக்க வேண்டும். இருநூறு ஏக்கர் கூட்டுறவு உற்பத்தி நிலம் என்று பேர் வைத்துக் கொண்டு பத்து ஏக்கர் கூட உற்பத்தி செய்யவில்லை என்றால் குத்தகையை ரத்து செய்து விடுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் உண்டு என்று அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அந்த அச்சம் வேறு ஒரு புறம் அவருள் கருமையைத் தோற்றுவிக்காமல் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேல், அப்படியெல்லாம் நடக்காது என்ற ஓர் தைரியம் அவருக்கு எப்போதும் இருக்கிறது.

தங்கபாண்டியிடம் கோபம் வருகிறது.

"ஏன்ல பொய் சொன்ன?"

"நா ஆச்சி சொன்னதைக் கேட்டுச் சொன்ன, அப்ப இன்னிக்கு வாராவளா இருக்கும்..."

"அவெ உப்ப அள்ளி ஒனக்குக் கொள்ள வெலக்கிக் குடுப்பான்னுதான் சிரிக்கே?"

முன் மண்டையில் முத்தாக வேர்வை அரும்புகிறது அவருக்கு.

"கோவிச்சுக்காதிய மாமா. வண்டி கொண்டாரட்டுமா உப்பள்ளிப் போகட்டுமா?"

"எலே... இங்கி வாலே... ஒங்கிட்ட ஒரு ஒதவி வேணும்."

அருணாசலம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு முன் மண்டையைத் துண்டால் ஒத்திக் கொள்கிறார்.

"சொல்லு மாமா!"

"ஒரு அந்நூறு ரூவா வேணும்ல. வட்டுக் கடனாக் குடுத்தாலும் சரி..."

அவனுடைய கண்களில் ஒளிக்கதிர்கள் மின்னுகின்றன.

"இப்ப மொடயா மாமா? வட்டுக் கடன் வாங்கித் தீர்வை கட்டவா போறிய?"

"வேற மொடயும் இருக்குலே. ஒங்கிட்ட இருக்குமா?"

"அண்ணாச்சிட்டத்தா கேக்கணும். எப்படியும் இந்தப் புரட்டாசிக்குள்ள மழக் காலம் வருமுன்ன கலியாணம் கெட்டி வய்க்கணும்னு மயினியும் சொல்லிட்டிருக்கா. பொண்ணு ரெண்டு மூனு பாத்து வச்சிருக்கா, ஆனா எனக்குப் பிடித்தமில்ல..."

"புடிச்ச பொண்ணாப் பாத்துக் கெட்டு, ஒனக்குப் பொண்ணா இல்ல?"

"ஒங்கிட்டச் சொல்றதுக்கென்ன மாமா? பொன்னாச்சிப் புள்ளயத்தா மனசில இட்டமாயிருக்கு..."

"ஒங்கிட்டப் பணம் இருந்தாக் குடு. இல்லேன்னா வேற தாவுலன்னாலும் ஏற்பாடு பண்ணித்தாலே. ஊரூரு பஸ் சார்ச்சி குடுத்திட்டுப் போயி அவனவங்கிட்டத் தீர்வை பிரிக்க வேண்டியிருக்கு. ஒரு பய கண்ணுல அம்புடறதில்ல. வேலை செய்யிறா, நல்ல துணி போடுறா, பொஞ்சாதிப் புள்ளய கூட்டிட்டுச் சினிமாவுக்குப் போறா. இதுக்குத் தீர்வை ரெண்டு ரூபா குடுக்கணும்னா இப்ப கையில பைசா இல்லைன்றா, இது கூட்டுறவா? கமிட்டிக்கார, பேர் போட்டுக்கதா கமிட்டிக்காரன்னு நினய்க்கா..." என்று வயிற்றெரிச்சலைக் கொட்டுகிறார் அருணாசலம்.

"பாக்கேன் மாமா, எங்கிட்ட இருந்தா அட்டியில்ல. ஒங்கக்குக் குடுக்க என்ன மாமா? ஆனா வட்டிதா முக்கா வட்டி ஆவுமேன்னு பாக்கேன். தவற தாவுல தா வாங்கணும்..."

"வட்டிக்குச் சோம்பினா முடியுமா? தொழிலாளி நிலைமை வட்டிக்கு வாங்கறாப்பலதான இருக்கு? வங்கில கடன் கொடுக்காங்க. தொழிலாளிய நம்பி எவன் ஷூர்ட்டி போடுறா?"

அருணாசலம் அவனுடைய ஆசையையும் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்டு தான் அவனுக்கு நம்பிக்கை கொடுப்பது போல் நடிக்கிறார். அவனை ஏமாற்றுவதற்குக் கஷ்டமாகத் தானிருக்கிறது.

ஆனால் பொன்னாச்சி ராமசாமிக்கே உரியவள் என்று அவர் தீர்மானித்து விட்டார். தங்கபாண்டியனைப் போல் பலரைக் காண முடியும். அவன் துட்டுச் சேர்ப்பான். பெண்ணைக் கட்டுவான். நகை நட்டுப் போட்டு இரண்டு நாள் கொஞ்சி விட்டு மூன்றாம் நாள் அடித்து அதிகாரம் செய்வான். குடிப்பான், நகையை வாங்கி அடகு வைப்பான். இங்கே பாலம் வந்தால் இவன் தொழில் படுத்துவிடும். ('பாலமாவது வருவதாவது' என்று அவரைப் போன்றவர்கள் அவநம்பிக்கைக்கு இடம் கொடுக்கலாகாது!)

ஆனால் ராமசாமியோ, ஆயிரத்தில் ஒரு பையன். மாசச் சம்பளம், அவனுக்கென்று அவர்கள் காட்டிய 'தயாளம்' எல்லாவற்றையும் பொது இலட்சியத்துக்காக உதறி விட்டு வந்திருக்கிறான். தலைவன் என்று சொல்லிக் கொண்டு வரும் ஆட்களிடம் இல்லாத நேர்மை இவனுக்கு இருக்கிறது. அவன் தலைவனாக வருவான். அவனுக்குப் பெண்ணைக் கொடுத்துச் சேர்த்துக் கொள்வது அவருக்குப் பலம். பொன்னாச்சி அவனிடம் இட்டமாக இருக்கிறாள். அவன் தான் சிறந்தவன். அதற்காக இவனை ஏமாற்றலாம்...

"ஏல... ஆச்சியிட்ட மூச்சி விட்டிராத... பத்திரம்!" என்று எச்சரித்து வைக்கிறார்.

அவன் சிரித்துக் கொள்கிறான். "பொன்னாச்சிய எப்ப மாமா கூட்டிட்டு வாரிய? மானோம்புக்குக் கூட இந்தப் பக்கம் எட்டிப் பாக்கல அந்த வுள்ள?"

"கூட்டிட்டு வாரணுந்தா. ஒனக்குத் தெரியாதா தங்கபாண்டி. வந்தா ஒரு சீலை எடுத்து நல்லது பொல்லாது செய்யணும். இங்க என்ன இருக்கு? இந்தப் பய்யன் படிச்சு முடிச்சு வாரங் காட்டியும் குறுக்கு முறிஞ்சிடும் போல இருக்கு. ஏதோ அப்பன், சின்னத்தா என்னிக்கிருந்தாலும் தாயோடு பிள்ளையோடு போக வேண்டியது தான?..."

"...அது சரி. பொன்னாச்சி எங்கிட்டச் சொல்லிட்டுத் தா பஸ் ஏறிப் போச்சு..."

அவன் மீசையைத் திருகிக் கொண்டு சிரித்துக் கொள்கிறான்.

"அப்பிடியா?" என்று அவர் வியந்தாற் போல் கேட்கிறார்.

"ஆமா... பணம் எப்ப வேண்டும் மாமா?"

"நாளைய கொண்டாந்தாலும் சரி, நா நோட்டு எழுதிக் குடுக்கே."

"அதுக்கென்ன மாமா, ஒங்க பணம் எங்க போவு?"

அவன் ஆசை நம்பிக்கையுடன் வண்டிக்குச் சென்று ஏறிக் கொண்டு போகிறான்.

ஐநூறு ரூபாய் கைக்கு வந்ததும், அந்தத் தாலியை மூட்டு விட வேண்டும். ஒரு சேலை, இரண்டொரு பண்டங்கள், வேட்டி எல்லாம் வாங்கி, திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கல்யாணம்... கல்யாணம். அவர் தொழியைத் திறந்து விட்டு, கிணற்றில் நீரிறைக்கத் தொடங்குகிறார்.

ஆச்சி குளிக்க அவ்வளவு காலையில் சென்றிருக்க மாட்டாள். முன்சீஃப் வீட்டுக்குச் சென்றிருப்பாளோ?

பசி கிண்டுகிறது.

குழந்தைகள் அவர் வந்துவிட்டதைச் சொல்லியிருப்பார்கள். உப்பை வாரிப் போட வேண்டும். அவள் வருவாளோ? சற்றே ஆசுவாசமாகச் சார்ப்பு நிழலில் அமர்ந்து கொள்கிறார். அவள் தலையில் வட்டி, இடுப்பில் மண்குடம் சகிதமாக வருவது தெரிகிறது. சோறு கொண்டு வந்திருப்பாள்...

அவள் அருகே வந்ததும் நல்ல நீர்க் குடத்தை வாங்கி வைக்கிறார். தலைச்சுமையையும் இறக்கியதும் அவள் சேலை மடிப்பிலிருந்து ஒரு பழுப்பு நிறக் கடித உறையை எடுத்து அவரிடம் கொடுக்கிறாள். 'துணைச் செயலாளர்' கூட்டுறவு உப்புத் தொழிலாளர் உற்பத்தி விற்பனைச் சங்கம் என்று போட்டு மேலிடத்திலிருந்து வந்திருக்கும் கடிதம்.

"தீர்வை கட்டச் சொல்லி வந்திருக்கிற நோட்டீசுதான? இத மூட்ட கட்டிக்கிட்டு வந்தியாக்கும்!"

"எனக்கு என்னெளவு தெரியும்? வள்ளிப் பொண்ணை வுட்டுப் படிக்கச் சொன்ன. நேத்து முன்சீஃப் வீட்டு ஆச்சி சொன்னாவ. லீசைக் கான்சல் பண்ணிடுவாகன்னு. என்னவோ பாட்டரி வர போவுதா? அவிய பாலங்கீலம் போட்டுக்குவாகளாம்! என்ன எளுதியிருக்குன்னு எனக்கென்ன எளவு தெரியும்?"

அவருக்குக் கை நடுங்குகிறது. கண்ணாடி இல்லாமல் படிக்க முடியாது. "கண்ணாடி கொண்டாந்தியா?"

"கொண்டாந்திருக்கே!" என்று பனநார்ப் பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுக்கிறாள்.

அவர் கைகளைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியை மாட்டிக் கொண்டு கடிதத்தைப் பிரிக்கிறார். அருணாசலத்துக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் கூட்டுறவுச் சங்க கடிதங்கள் தமிழில் வருகின்றன. அவர்களுடைய நிலக் குத்தகை இருபது ஆண்டுகள் முடிந்து விடுவதாலும், மூன்று தீர்வைகள் கட்டியிராததாலும், நிலக் குத்தகை இனி புதுப்பிக்கப்படுவதற்கில்லை என்றும் கடிதம் தெரிவிக்கிறது.

முன்பே அந்த அதிகாரி "இருநூறு ஏகராவில் பத்தே ஏகராக்கூட நீங்கள் உப்பு விளைவிக்கவில்லை. இது எப்படிக் கூட்டுறவுச் சங்கம் நன்றாக நடப்பதாகக் கொள்ள முடியும்?" என்று கேட்டார்.

நிலம் பட்டா செய்யும் போது எல்லோரும் வந்தார்கள். இப்போது...

அவருடைய கண்களிலிருந்து கரிப்பு மணிகள் உதிருகின்றன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
19

உப்பளத்து வேலை முடித்து நெடுந்தொலைவு நடந்து வருவது பொன்னாச்சிக்கு இப்போதெல்லாம் சோர்வாகவே இல்லை. பாஞ்சாலியும் பச்சையும் துணையாக வருவதனால் மட்டும் தானா இந்த மாறுதல்? இல்லை. அச்சமும் எதிர்ப்புமாக இருந்த உலகமே இப்போது நம்பிக்கை மிகுந்ததாகத் தோன்றுகிறது; இங்கிதமாகக் கவிந்து கொண்டிருக்கிறது. முட்செடிகள் முன்போல் தலைவிரிச்சிப் பிசாசுகளாகத் தோன்றவில்லை. 'என்னம்மா?' என்று கண்சிமிட்டி இரகசியம் பேசுகின்றன. யார் வந்தாலும் எதிர்த்து விட முடியும் என்று தோன்றுகிறது. இந்தத் தெம்புக்கு என்ன காரணம்?

புரட்டாசியில் நவராத்திரி விழா - எங்கு பார்த்தாலும் அம்மன் கொலுவிருக்கையும், பூசையும் பொங்கலும் அமர்க்களப்படும். அதற்கு முன்னர் மாளய அமாவாசையில் மழை மணி விழும் என்பார்கள். ஆனாலும் முக்காலும் விழாது. வேலை நீடிக்கும். மாமன் வந்து போயிருக்கிறார். பனஞ்சோலை அளத்தில் ஒரு ஆண்டு முழுதும் மழைக்காலம் வரையில் வேலை செய்தால் ஒரு சேலை எடுத்துக் கொடுப்பார்கள். கல்யாணமென்றாலும் பணம் இருநூற்றைம்பது கொடுப்பார்கள். மாமனுக்குக் கஷ்டம் அதிகமிருக்காது... பிறகு...

சாயாககடைப் பக்கம் ராமசாமி நின்று ஒரு சிரிப்பைச் சிந்துகிறான். அவனருகில் இன்னும் பல இளைஞர்கள் சூழ்ந்திருக்கின்றனர்.

"ஏதும் விசேசமா?" என்று அவன் கேட்கும் போது அவர்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள். அவளுக்கு ஏதோ மணமேடையில் மற்றவர் கேலி செய்வது போல நாணம் கவிகிறது.

பாஞ்சாலி வெடுக்கென்று, "இன்னிக்கு இனிஸ்பெட்டர் வந்தாவ, எங்கள எல்லாம் கொட்டடிலிலேந்து அந்தால பம்ப் கொட்டடி தாண்டி கோயில் செவர் மறப்புல ஒக்காத்தி வச்சிட்டா..." என்று சேதி தெரிவிக்கிறாள்.

"யாரு இனிஸ்பெட்டரு? போலீசா வந்திச்சி?" என்று அங்கு எட்டிப் பார்க்கும் ஒருவன் விசாரிக்கிறான்.

"அட, இல்லப்பா, 'லேபர் இனிஸ்பெட்டர்' வந்திருப்பா. பிள்ளங்களை ஒளிச்சி வைப்பா!" என்று ராமசாமி விளக்கம் கூறுகிறான்.

"என்னக் கங்காணி அடிச்சிட்டார்; தொழியத் தொறந்துவுடுன்னு அவியதா சொன்னா. பொறவு ஏண்டா தொறந்தேன்னு அடிச்சா. வேற தொழியல்ல தொறக்கச் சொன்னேங்கா. மூக்குலேந்து ரத்தம் வந்திச்சி" என்று பச்சை செய்தி தெரிவிக்கிறான்.

"இருக்கட்டும். எல்லாத்துக்கும் விடிவு காலம் வரும். நாமல்லாம் கோரிக்கை குடுப்பம். ஞாயிற்றுக்கிழமை வாரம்..."

பொன்னாச்சிக்குப் பூமியில் கால் பாவி நடப்பதாகவே தெரியவில்லை. வீட்டுக்குள் அவர்கள் நுழைகையில் அவர்கள் வீட்டு முற்றத்தில் இருள் பரவும் அந்த நேரத்தில் யாரோ கையில் பையுடன் நிற்கிறான். அரையில் பூப்போட்ட கைலியும், மேனியில் ஒட்டாத பாம்புத் தோல் போல் படம் போட்ட சட்டையும் அணிந்து கையில் கடியாரம் கட்டிக் கொண்டிருக்கிறான். மோதிரம் விரலில் பளபளக்கிறது. முடியில் வாசனை எண்ணெய் தொட்டு சீவியிருக்கிறான். அருகில் வரும் போதுதான் திடுக்கிட்டாற் போல் நிற்கிறாள். சிரித்துக் கொண்டு அவளிடம் பையை அவன் நீட்டுகிறான்.

தங்கபாண்டி... தங்கபாண்டி எதற்கு வந்திருக்கிறான்? அவள் பையை வாங்கிக் கொள்ளாமல் தயங்கி நிற்கிறாள். அப்போது சரசி ஓடி வந்து, "அக்கா, மாமா ஊரிலேந்து இவ ஒன்னப் பாக்க வந்திருக்கா..." என்று செய்தி அவிழ்க்கிறாள்.

"சின்னம்மா வரல சோலி முடிஞ்சி?"

"நல்ல தண்ணிக்குப் போயிருக்கா..."

"வாங்கிக்க பொன்னாச்சி! மாமா தா என்ன அனுப்பினா."

"மாமா சொகந்தானா? மாமி புள்ளிய எல்லாமும் எப்படியிருக்கா? போன வாரந்தா மாமா வந்திட்டுப் போனா..."

"சொகந்தா. ஆனா... மாமாவுக்கு வாயுக்குத்து மூச்சுக் குத்து வந்து படுத்திருக்காவ, அதா என்ன அனுப்பிச்சாவ. கூட்டிட்டுவான்னு சொன்னாவ..."

"ஒம்ம அனுப்பிச்சாவளா?"

அவள் கேட்டுக் கொண்டு அவனைச் சட்டை செய்யாமல் உள்ளே சென்று தாழிட்ட கதவைத் திறக்கிறாள்.

பச்சையிடம் அவன் பையைக் கொடுக்கிறான்.

"என்ன அது?"

"ஒண்ணில்ல பொண்ணாச்சி... கொஞ்சம் சேவும் மிட்டாயும் வாங்கியாந்த. பொறவு கட்டிக்கப் போற பொண்ண வெறுங்கையோட பாக்க வருவனா?" அவன் சிரிப்பு - வெண்மையான பற்கள் இருட்டில் கள்ளமில்லாததாகப் பளிச்சிடுகிறது. ஒரு கணம் அவள் குலுங்குகிறாள்.

"மாமன் இந்த அப்பியியிலியே கலியாணத்த முடிச்சிடலாண்ணு சொன்னாவ. அத அங்க பாத்திக் காட்டு அனுப்பியிருக்கிறாவ. திரிச்சிக் கூட்டியாந்துடணும், ஒடம்பு முடியாம போச்சின்னாவ. தீர்வ கட்டல. முன்சீஃபு ஆளுவள வுட்டு உப்ப வாரிட்டுப் போயிட்டா. பொறவு நாந்தா அஞ்சு நூறு கடங்குடுத்த. தூத்தூடி போயி அத்தக் கூட்டிட்டு வந்திருன்னாவ..."

இவனும் குடித்திருப்பானோ என்ற ஐயம் கொண்டு அவள் பார்க்கிறாள். நிச்சயமாக மாமா இப்படிச் சொல்லி இவனுடன் புறப்பட்டு வர அனுப்பி இருக்க மாட்டார்! வேலுவை அனுப்பினாலும் அனுப்பியிருப்பார்! வேலு கால் பரீட்சை முடிந்து ஊர் திரும்பியிருப்பானோ?

"எப்படின்னாலும் நானிப்ப உம்மகூடப் புறப்பட்டு வரதுக்கில்ல. மாமாவுக்கு ஒடம்பு முடியலின்னா சங்கட்டமாத்தானிருக்கு. இன்னிக்கி விசாளன். வெள்ளி போவ நாயித்துக்கிளம நா வார, இல்லாட்டி பச்சைய அனுப்புறமின்னு சொல்லும்..."

அவன் மேல் பேச்சுப் பேசுவதற்கே இடமில்லாமல் அவள் உள்ளே சென்று விடுகிறாள்.

தங்கபாண்டி பையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு ஏமாற்றத்துடன் அங்கிருந்து அகலுகிறான்.

மாளய அமாவாசையன்று மழை மணி விழும் என்று எதிர்பார்ப்புடன் உப்பளத்தில் கெடுபிடியாக வேலைகள் நடக்கும். மழை மணி விழுந்துவிட்டால் உப்புக்காலம் தூத்துக்குடியில் ஓய்ந்துவிடும் என்று தீர்த்து விடுவதற்கில்லை. பருவ மழை நாகப்பட்டணம், பாண்டிச்சேரி, கேரளத்துக்கரை என்று எங்கு அடித்துக் கொட்டினாலும், புயல் சுழன்று அடித்தாலும் தூத்துக்குடி உப்புக்குப் பெருஞ்சேதம் விளைவிக்க உடனே வந்து விடாது. உப்புக்காலம் தீபாவளியையும் தாண்டி நீடிப்பதுண்டு. ஆனால், மழை மணி விழுந்தால் உப்பு விலை ஏறும். தொழிலாளருக்கு வேலை கடுமையாகும். மழை அவர்களுக்குச் செழிப்புக்கும் வண்மைக்கும் பயன்படாததாகத் தொழிலை முடக்கி, முதலாளிகளுக்கு லாபத்தைக் கொண்டு வரும். அந்த லாபம் தொழிலாளருக்கு உபரியாக வண்மை கூட்டாது. எனவே அந்தக் காலங்களில் மிகத் தீவிரமாக உப்பை வாரித் தட்டு மேடுகளில் சேர்ப்பதும், மழையில் கரையாமல் ஓலைத் தடுப்புப் போடுவதும், அல்லது விரைவாக விற்று மூட்டைகளாக்கி விலை ஏற்ற காலத்தில் அம்பாரங்களைக் கரைப்பதுமாகப் பணிகள் நெருக்கும்.

இந்தக் காலத்தில் தொழிலாளர் அனைவரும் திரண்டு மேலிடத்துக்குத் தங்கள் கோரிக்கைகளை வைத்தால்? முக்கியமாகப் பனஞ்சோலை அளத்திலும் தொழிலாளர் ஒன்று பட வேண்டும்!

'ஞாயிற்றுக்கிழமை வாரன்' என்ற சொல் பொன்னாச்சியின் செவிகளில் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. சின்னம்மா, அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரையிலும் உப்பு அறைவை ஆலையில் அதிகப்படி வேலை என்று மூன்று மணிக்கே எழுந்து போகிறாள். சரசிக்கு சங்கமலத்தாச்சியின் வீட்டில் படுக்கை. அதிகாலையிலேயே பொன்னாச்சி எழுந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வந்து நிரப்பி, வீடு பெருக்கி, பாண்டம் கழுவித் துப்புரவு வேலைகளில் ஈடுபடுகிறாள். அப்பன் எழுந்து பின்புறம் செல்கிறார்.

செங்கமலத்தாச்சி வழக்கம் போல் வாயிற்படியில் அமர்ந்து சாம்பற் கட்டியை வைத்துப் பல் துலக்குகையில், ராமசாமி, பழனிவேலு, மரியானந்தம், மாசாணம் எல்லோரும் வருகின்றனர்.

"ஒங்களப் பாத்துப் போகத்தா வந்திருக்கம் ஆச்சி..." என்று ராமசாமி புன்னகை செய்கிறான்.

"எல, பொய் சொல்லாத! பொய் சொன்னா அரக் கஞ்சியும் கெடக்காது!"

அவன் கலகலவென்று சிரிக்கிறான். கண்கள் சிவந்து இருக்கின்றன. முடிசீவி, புதுமையாக அவன் தோற்றமளித்தாலும் தூங்கியிராத அயர்வு அவன் முகத்தில் தெரிகிறது.

"சத்தியமா ஆச்சி, ஒங்களத்தா பார்க்க வந்தது. இங்க, தொழிலாளர் பொண்டுவள ஒண்ணு சேக்கணுமின்னு ஒங்களத்தா கேக்க வந்தே..."

"பொண்டுவள ஒண்ணு சேக்கறதா? ஆதி நாள்ளேந்து அது முடியாத காரியமின்னு தீந்து போயிருக்கே. ஒனக்குத் தெரியாதால?" என்று கேட்டுவிட்டு ஆச்சியே பதிலையும் கூறிக் கொள்கிறாள்.

"ஆனா ஒனக்கெப்படித் தெரியும்? ஒங்கப்பச்சிக்கு ஆத்தா முதல்லியே செத்திட்டா. அவியளோட பொறந்தவெல்லாம் ஸ்லோன்ல கெடக்கா. மாமி நாத்தி மயினி சண்டை, சக்களத்தி சண்ட ஒண்ணும் பாத்திருக்க மாட்ட. பொண்டுவள ஒண்ணு சேக்கணுமின்ற; அது ஆவாத காரியமல்ல!"

"ஏட்டி சரசி! ரூம்ப பெருக்கிப் போடுறீ?" ஆச்சி மகிழ்ச்சியான நிலையில் தானிருக்கிறாள் என்று ராமசாமி புரிந்து கொள்கிறான்.

சரசி பரபரவென்று முன்னறையைப் பெருக்கித் தள்ளுகிறாள். பாதி முடைந்த ஓலைப் பெட்டியை நகர்த்தி வைத்துப் பெஞ்சியைத் துப்புரவாக்குகிறாள்.

"வாங்க, உள்ள வந்து இரிங்க..."

செம்பு நீரெடுத்துப் பின்புறம் சென்று வாய் கொப்புளித்து விட்டு சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வருகிறாள்.

நெற்றியில் நீண்ட பச்சக்கோடு. இடது புறங்கையில் ஒரு யாகசாலைக் கோலம். கைத்தண்டின் உட்புறம் மூன்றெழுத்துக்கள் தெரிவதை ராமசாமி கவனிக்கத் தவறவில்லை. அது முத்திருளாண்டியின் பெயரல்ல. அவர்கள் பெஞ்சியில் அமர்ந்து கொள்கின்றனர்.

"ஏட்டி, ஒரு ஏனத்தை எடுத்திட்டுப் போயி இட்டிலி வாங்கிட்டு வா. சாம்பாருக்கு தூக்குக் கொண்டு போ!" மீண்டும் உள்ளே சென்று மெதுவான குரலில் சரசிக்குக் கட்டளை இடுவது அவர்கள் செவிகளில் விழுகிறது.

சரசி சொக்குவின் வீட்டுப்படியில் பெரிய போகணியை வைத்துக் கொண்டு நிற்கும் போதுதான் திண்ணை மெழுகும் பொன்னாச்சி பார்க்கிறாள். போகணியைக் கொண்டு வந்திருக்கிறாள் இட்டிலிக்கு?
"ஆரு வந்திருக்கிறது டீ? ஆரு?"

"அவியதா, ஆரெல்லாமோ வந்திருக்கிறாவ...!"

பொன்னாச்சி முற்றத்துக்குப் பத்து வயசுச் சிறுமியாக ஓடி வந்து, சன்னல் வழியாகப் பார்க்கிறாள். அவன் குரல் கேட்கிறது.

"ஆச்சி, ஏனிப்படி செரமப்படுறிய? நாங்க டீ குடிச்சிட்டுத்தா வாரம்!"

"அது தெரியும்ல!..." என்று இலைக்கிழிசல்களில் இட்லியும் சட்னியும் எடுத்து வைக்கிறாள்.

"போயி ஆறுமுவத்தின் கடையில், நல்ல டீயா, நாலு டீ, ரொம்பச் சக்கரை போட்டுக் கொண்டாரச் சொல்லிட்டு வா!" என்று விரட்டுகிறாள்.

அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு அவள் நார்க்கட்டிலில் அமர்ந்திருக்கிறாள். எல்லோரும் வீச்சும் விறைப்புமாக வளர்ந்திருக்கும் வாலிபப் பிள்ளைகள். ஊட்டமும் செழுமையுமில்லாமல் இல்லாமையும் சிறுமையும் நெருக்கினாலும் வாலிபம் கிளர்ந்தெழும் பிள்ளைகள். அவர்கள் அங்கே சாப்பிடுவதைப் படத்திலிருந்து அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். காலையில் எழுந்ததும் அவனுக்கு நான்கு இட்டிலியும் சொக்கு கொண்டு வந்து வைத்து விடுவாள். அதைக் கண்ட பிறகுதான் அவன் எழுந்து முகம் கழுவிக் கொள்வான். அந்தப் பெஞ்சியில் தான் அவன் படுத்திருப்பான்; உட்கார்ந்து பேசுவான், படிப்பான். அவன் போன பிறகு அவள் இட்லி தின்பதையே விட்டுவிட்டாள். பையன் தேநீர் கொண்டு வருகிறான். அதை அவளே அவர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறாள்.

"நீங்க ஒண்ணும் எடுத்துக்கலியே ஆச்சி?" "நா சாயா குடிக்கமாட்டே. இதா கருப்பட்டி போட்டு நீரு கொதிக்கவச்சி ரெண்டு காப்பித்தூளப் போட்டு எறக்கி வச்சிடுவ. அதுதா. வெத்தில பொவயில. நா இட்டிலி டீத்தண்ணி ரெண்டும்..." தொண்டை கம்மிப் போகிறது. எழுந்து வெளியே செல்கிறாள்.

"ஏட்டி? பொன்னாச்சி? இங்ஙன வாட்டீ! மாப்பிள வந்திட்டான்னு ஒளிஞ்சிக்கிற?... சின்னாச்சி என் சேறா?"

"அப்பச்சியக் கூப்பிடுடீ!"

"சின்னம்மா வெள்ளெனவே அறவ மில்லுக்குப் போயிருக்காவ, இத வந்திருவா. அப்பச்சி பல்லு வெளிக்கிட்டிருக்காவ..."

"அவியல்லாம் தொழில் சம்பந்தமா பேச வந்திருக்கா... ஒரு விடிவு காலம் வராண்டாமா? பொண்டுவதா கூடிச் சேரணுமின்னு வந்திருக்கா. பாஞ்சாலியவுட்டு இந்த வளவில இருக்கிற அளத்துப் பொண்டுவ, வித்து மூடக்காரவுக எல்லாரையும் கூட்டிட்டு வாரச் சொல்லு? செவந்தகனி மாதா கோவிலுக்குப் போறவுல இசக்கிமுத்து, ஜீனத்து வாராளே, அவ அண்ண, எல்லாரிட்டயும் ஆச்சி கூட்டியாரச் சொன்னான்னு சொல்லு..."

சற்றைக்கெல்லாம் அங்கே திமுதிமுவென்று கூட்டம் கூடி விடுகிறது. முற்றத்தில் வந்து ஆங்காங்கு குந்துகின்றனர்.

"மூடை அம்பது கிலோன்னு போட்டுக் கூலியைக் குறைச்சிட்டாங்க. ஒம்பது பைசான்னு, அதைச் சொல்லணும்?" என்று இசக்கிமுத்து நினைவுபடுத்துகிறான்.

"இப்ப நாம முக்கியமா இதுவரய்க்கும் சேராத ஆளுகளைச் சேர்க்கிறதா பார்க்கணும். பனஞ்சோல அளத்துத் தொழிலாளியளை இதுவரைக்கும் ஒரு வேல நிறுத்தத்திலும் ஆரும் ஈடுபடுத்தல; நாம வேற பக்கம் அடிபிடின்னு நின்னு போராடி பத்துப் பத்துப் பைசாவா கூலி கூட்டிட்டு வந்திருக்கம். அங்கேயும் அது போல இருக்கிற அளங்கள்ள தா தொழிலாளிய ஏமாத்தப்படுறாங்க. பச்சப் புள்ளியள ரெண்டு ரூவாக் கூலி மூணு ரூவாக் கூலின்னு ஆச காட்டி அதுங்களுக்கு எதிர்காலம் இல்லாம அடிக்கியா. அவியளுக்குப் படிப்பு, அறிவு விருத்திக்குத் தொழில் பயிற்சி எதுக்கும் வாய்ப்பு இல்ல. இந்தத் தடவை நம்ம உப்புத் தொழிலாளிய, ஆலைத் தொழில் சட்டத்துக்குக் கொண்டு வாரணும். நம் ஒவ்வொருத்தரும் பதிவு பெற்ற தொழிலாளின்னு மாறணும் முப்பது வருசம் வேலை செஞ்சாலும் நம்ம பேரு அவங்க பேரேட்டில் இல்ல. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் ஒரு சம்பந்தமுமில்ல. முக்கியமா இதுக்கெல்லாம் போராடணும்..."

ராமசாமி சொல்லிக் கொண்டே போகிறான்.

"பொண்டுவல்லாம் எதெது சொல்லணுமோ சொல்லுங்கட்டீ!" என்ற செங்கமலத்தாச்சி, உள்ளே சென்று அந்த செல்ஃபில் வரிசை குலையாமல் வைத்திருக்கும் நோட்டுப் புத்தகங்களிலிருந்து ஒன்றை உருவிப் புரட்டிப் பார்க்கிறாள். அதில் அவன் பெயர் மட்டும் தான் எழுதி இருக்கிறான். உள்ளே தாளெல்லாம் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றுரைக்கின்றன. அவனுடைய பேனா.. பேனா. பேனா மாதிரி பென்சில்...

தூசி தட்டி வைக்கும் பொருள்கள். அதை எடுத்துக் கீறிப் பார்க்கிறாள். பிறகு அவற்றைக் கொண்டு வருகிறாள்.

"எல்லாம் கேட்டு ஒளுங்கா வரிசையா எளுதிக்கிங்க!"

"மரியானந்தம் அண்ணாச்சி காயிதமும் பேனாவும் கொண்டு வந்திருக்கானே? அதுக்குத்தானே அவெ வந்தது?"

இருந்தாலும் ஆச்சி கொடுத்த நோட்டை வாங்கிக் கொள்கிறான் ராமசாமி. அதில் ஒவ்வொரு கோரிக்கையையும் கேட்டு அவன் எழுதிக் கொள்கிறான்.

நண்பகல் கடந்து வெயில் இறங்கும் வரையிலும் அவர்கள் பொழுது போவது தெரியாமல் பேசுகின்றனர். பிறகு ஒவ்வொருவராகக் கலைந்து போகின்றனர்.

பொன்னாச்சி உள்ளே சோறு வடிப்பதும், வெளியே வந்து பேச்சைக் கேட்பதுமாக அலைபாய்கிறாள். எல்லோரும் கலைந்த பின்னரே நினைவுக்கு வருகிறது. பாஞ்சாலிதான் கவலையுடன் கேட்கிறது, "அக்கா, அம்மா ஏ இன்னும் வரல? அறவை மில்லுக்குப் போயிட்டுக் காலம வந்திடுமே? ஏ வரல..."

அடிமண் ஈரமாகக் கை வைத்ததும் பொல பொலவென்று சரிந்தாற் போல் ஓர் உணர்வு குழிபறிக்கிறது.

'சின்னம்மா பொழுது சுவருக்கு மேல் ஏறியும் ஏன் வரவில்லை?'

"அப்பச்சி? சின்னம்மா வரயில்லை...? பச்சயப் போயிப் பாக்கச் சொல்லலாமா? செவந்தகனி மாமனக் கூப்பிடுடீ..."

அவள் வாசலுக்கு வருகிறாள். செங்கமலத்தாச்சி வாயிற் படியில் நிற்கிறாள். சைக்கிளை வைத்துக் கொண்டு ஒரு ஆள் அங்கு ராமசாமியிடம் ஏதோ கூறிக் கொண்டிருக்கிறான்.

அவன் முகம் கறுக்க அவர்களை நாடி வருகிறான்.

"பேச்சியம்மன் அளத்துல காலம ஆரோ லாரி அறபட்டுப் பொம்பிள கெடந்தாளாம். ஆசுபத்திரில போட்டிருக்காம். இவ விசாரிச்சிட்டு வந்திருக்கா... சின்னாச்சி கருவேலக் காட்டு அளமில்ல?"

"ஐயோ...!" என்று ஒலி பீறிட்டு வருகிறது.

"சின்னம்மா... சின்னம்மா அங்கதா அதியப்படி வேலன்னு போனாவ... சின்னம்மா..."

பாஞ்சாலியும் சரசியும் அக்காவின், அழுகையொலி கேட்டு விம்மி அழத் தொடங்குகின்றனர். கண்ணுசாமியோ இடி விழுந்தாற் போல் உட்கார்ந்து விட்டான்.

சோறு வடித்து, தட்டு போட்டிருக்கிறாள். சாப்பிட உட்காரவில்லை. எல்லோரையும் பெரியாசுபத்திரிக்கு அழைத்துச் செல்கிறான் ராமசாமி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
20

அவர்கள் செல்லுமுன் போலீசு விசாரணை போன்ற சடங்குகளெல்லாம் முடிந்துவிட்டது. சடலத்தைக் கிடங்கிலிருந்து தான் எடுத்து வருகின்றனர். மருதாம்பாளின் முகம் என்று அடையாளமே தெரியவில்லை. முடியெல்லாம் பிய்ந்து குதறப்பட்டிருக்கிறது. மாமிக்கு முடி வெண்மையும் கருமையுமாக இருக்கும். சின்னம்மாவுக்குக் கருமை மாறாத முடி - அது சிதைந்து கூழாகி உருப்புரியாமல்... லாரியில் முகம் நசுங்கி விட்டதா?

பொன்னாச்சி லாரியில் அடிபட்ட உடம்பை அதுவரையிலும் பார்த்ததில்லை.

"ஐயோ, சின்னம்மா!" அவள் துயரம் பொங்கி வரக் கதறி அழுவதைக் கண்டு குழந்தைகள் எல்லோரும் கதறுகின்றனர்.


"இது லாரி மோதலல்ல. அறவை மில்லுல அடிபட்டு விழுந்திருக்கா. வெளிலே பாதையில அடிபட்டு விழுந்தான்னு சொல்றாவ. பொய்யி. அறவை மில்லுல மிசின் பில்ட்டில மாட்டியிருக்கும். அதா விசாரணை எல்லா அதுக்குள்ள ஆயிரிச்சி. ஞாயிற்றுக்கிழமையாதலால் அதிக ஆட்கள் நடமாட்டமுமில்லை. கொண்டு வந்து வெளியே போட்டு லாரியில் அடிபட்டிருக்கிறாள் என்று சொல்லியிருப்பார்கள்" என்று ராமசாமியும் தனபாண்டியனும் பேசிக் கொள்கின்றனர்.

வாயைத் திறந்து பேசமாட்டாள். பேசினால் அது சாட்டையடி போல் இருக்கும். அந்தச் சின்னம்மா உப்பளத்துக்கே இரையாகி விட்டாள்.

"சின்னம்மா! வெடிஞ்சதும் வந்துடுவேன்னு ரெண்டு ரூவாக் காசுக்காவ ஒழக்கப் போயி இப்படிக் கிடக்கிறயளே?..." என்று உள்ளம் புலம்பியழுகிறது. அவள் தாய் இறந்து போனபோது கூட அவள் இத்துணைத் துயரம் அனுபவிக்கவில்லை. தன் மீது வானமே இடிந்து கவிந்தாற் போன்று ஓர் சோகத்துள் அவள் அழுந்திப் போகிறாள்.

அவள் தன்னையும் தம்பியையும் அழைக்க வந்ததும் திரும்ப நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டு தூத்துக்குடி பஸ்ஸில் ஏறியதுமான காட்சிகள் படலங்களாகச் சுருள் வீழ்கின்றன. அப்பனுக்கு உடம்பு சரியில்லை என்று அவளைக் கூட்டி வந்தவள் போய் விட்டாள். "அய்ந்நூறு ரூபா கடன்... கடனிருக்கு..." என்று சோற்றுப் பருக்கைகளை அளைந்து கொண்டு பிரமை பிடித்து உட்கார்ந்து விடும் சின்னம்மா... அவள் போய் விட்டாள். அவள் யாரோ? தான் யாரோ? சின்னம்மா எங்கோ பிறந்து எங்கோ எப்படியோ வளர்ந்து, யாருக்கோ மாலையிட்டு யாருடனோ, எப்படியோ வாழ்ந்து மக்களைப் பெற்று, இந்த உப்புக் காட்டில் உடலைத் தேய்த்து...

"சின்னம்மா!..." என்று கதறிக் கொண்டு உடலின் மீது விழுந்து அழுகிறாள் பொன்னாச்சி.

ராமசாமி அவளைக் கனிவுடன் தொட்டுத் தூக்குகிறான். "அழுவாத புள்ள. நீயே அளுதா மத்த புள்ளயெல்லாம் என்ன செய்யும்? அப்பச்சிக்கு ஆரு தேறுதல் சொல்லுவா...?"

அப்போது கங்காணியும் இன்னொரு ஆளும் அங்கு வந்து தனபாண்டியனை அழைத்துச் செல்கின்றனர். அவர்களிடம் பேசி விட்டு அவர் ராமசாமியிடம் வந்து விவரம் தெரிவிக்கிறார்.

"நூறு ரூபாய் செலவுக்குத் தந்திருக்கா. 'வட்டிக்கடன் ஓடிப் போச்சு, வேல அதிகப்படி நாஞ் செய்யிறேன் கங்காணி'ன்னு கெஞ்சிக் கேட்டா. எரக்கப்பட்டுக் குடுக்கப் போயி அறவை மில்லில மிசின் பெல்ட்டில மாட்டிக் கிட்டிச்சி. மொதலாளிக்கு மனசுக்கு ரொம்பச் சங்கட்டமாப் போச்சி. கூட இன்னுமொரு பொம்பிளயும் ஆம்பிளயாளும் இருந்திருக்காவ. ஓடி வந்து எடுக்குமுன்ன தல மாட்டிக்கிச்சு. வேணும்னு ஆரும் செய்யறதில்ல. எல்லாருக்கும் இது கஷ்டந்தா. மொதலாளி வீட்டில இன்னிக்குக் கலியாணப் பேச்சுப் பேச வராக. சொன்ன ஒடன ஸ்கூட்டர் எடுத்திட்டு ஓடியாந்தா. பொறவு போலீசெல்லாம் வ்ந்து எழுதிட்டுப் போயிட்டு ஆசுபத்திரிக்குக் கொண்டாந்தா. ஆரயும் குத்தம் சொல்றதுக்கில்ல. அந்தப் பொம்பிள தூக்கக் கலக்கத்தில தெரியாம... விழுந்திட்டா...ன்னு சொல்றானுவ. என்ன பண்ணலாம்?"

முப்பது ஆண்டுகள் ஒரே இடத்தில் வேலை செய்த தொழிலாளிக்கே எந்த ஈட்டுத் தொகையும் கிடைப்பதில்லையே?

சின்னம்மாளை மண்ணில் புதைத்து விட்டு அவர்கள் வீடு திரும்புகையில் இரவு மணி ஒன்பதடித்து விடுகிறது. ராமசாமி அன்று வீட்டுப் பக்கமே செல்லவில்லை. அப்பனின் வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை. அழக்கூட தெரியாத சிலையாகிவிட்டார். சிவந்தகனிதான் அவரை முழுகச் செய்து கொண்டு வந்து உட்கார்த்தினான் திண்ணையில்.

சிவந்தகனியின் மனைவி சோறாக்கி வந்து அவர்களுக்கெல்லாம் போட்டாள்.

ராமசாமியும் படுக்கவில்லை.

செங்கமலத்தாச்சியும் உட்கார்ந்திருக்கிறாள்.

"என்ன விட்டுப் போட்டுப் போயிட்டா... நா என்ன பண்ணுவே..." என்று கண் தெரியாமல் விம்மும் அப்பனைப் பார்த்தாலே பொன்னாச்சிக்கு அழுகை வெடிக்கிறது.

"ஏட்டி அழுவுற? அழுதா என்ன ஆகும்? அவ போயிட்டா மவராசி. அந்தப் பய காட்டில மடிஞ்சி கெடந்தப்ப ராப்பவலா எம்பக்கத்துல ஒக்காந்து கெடந்தா. வேலய்க்கிப் போவல. நா ஒரு மாசம் இப்படியே ஒக்காந்து கெடப்பே. படுக்க மனமிராது - அளத்துலேந்து வந்து ஒக்காந்து தேத்துவா. ஒங்கக்கு ஆறுதல் சொல்ற துக்கமில்லதா ஆனா, இப்பிடியே இருந்திட்டா எப்பிடி? இந்த ஒலகத்தில நினச்சிப்பாத்தா நமக்கெல்லாம் சொகமேது துக்கமேது? ஒரு ஆம்பிளக்கின்னு அடிமப்பட்டுப் புள்ள குட்டியப் பெற்றது சொகமின்னா அதுல இன்னொரு பக்கம் எம்புட்டு நோவும் நொம்பரமும் இருக்கி! பொம்பிளக்கி சுகமும் துக்கந்தாம்பா. அதெல்லாம் இன்னிக்கு நினைச்சிப் பாக்கே. சுகம் எது துக்கம் எது? சுகப்பட்டவ நீண்டு நிக்கிறதுமில்ல, துக்கப்பட்டவன் மாஞ்சு போயிடறதுமில்ல. சினிமா பாக்கப் போறான், இப்பல்லா. அதுல சுகம் துக்கம் பாட்டு ஆட்டம் அழுகை எல்லாம் வருது. கடோசில ஒரு முடிப்பப் போட்டு மணியடிச்சிடறாங்க. எந்திரிச்சி வரோம்... அப்பிடித்தா..."

பொன்னாச்சி கண்ணீர் காய்ந்து கோடாக, அசையாமல் உட்கார்ந்து இருக்கிறாள். அவள் கூந்தல் தோள்களில் வழிந்து தொங்குகிறது. மங்கலான நிலவொளி தவிர வேறு விளக்கு அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை.

"நேத்து இந்நேரம் கூட உசிரோட இருந்தா. இப்பிடிப் போயிடுவான்னு கொஞ்சங் கூட நினப்பு இல்ல..." என்று நினைவு கொள்ளும் போது சோகம் தாளாமல் குழி பறிக்கிறது.

"அவளுக்கு ஆட்டம் முடிஞ்சி மணி அடிச்சிட்டா ஆண்டவ. இல்லாட்ட எதுக்கு இந்தக் கூலிக்கிப் போறா?... பொம்பிளயாப் பொறக்கறதே பாவந்தா. கல்லுல நீதா போயி இடிச்சிக்கிற, முள்ளுல நீதா கால வச்சிக் குத்திக்கிற. ஆனால் கல்லு இடிச்சிச்சி, முள்ளு குத்திச்சின்னுதா ஒலவம் பேசும். ஏன்னா, கல்லும் முள்ளும் எதித்திட்டு வராது. பாத்திக்காட்டுல இளவயிசா ஒரு புள்ள வந்திட்டா அந்த காலத்துல யாரும் என்னேனும் செய்யலான்னு இருந்தது. பொறவு என்ன? மருதாம்பா கெட்டவ; புருசன் இருக்கையில விட்டு ஓடிட்டா. அவெ மானின்னெல்லாந்தா பேசுவா. அந்த காலத்துல நாத் தெருவுல போனா காறி உமிஞ்சவங்க உண்டு. சண்டையிலே போராடி கெலிச்சி வந்தாலும் அவெம்மேல எதிராளி அம்புப்பட்ட வடு இல்லாம போவாது. அப்பிடி எத்தினியோ வடு; இன்னிக்கு எல்லா வடுவையும் செமந்திட்டு நானிருக்கே. ஆச்சின்னு வாராக. சோத்துக்குத் தட்டில்லாத புழக்கம். சல்லிப் புழக்கம். தொழிலில்லாத காலத்துல அத்தயும் இத்தயும் வச்சு பத்து இருவதுன்னு வாங்கிட்டுப் போறாவ. கூலிக் காசுல அப்பப்ப கடன் கொண்டு வந்து தாராவ. அவ போராடி செயிக்காமயே போயிட்டா..."

ஆச்சி தகரப் பெட்டியைத் திறந்து துணியில் சுற்றிய வெற்றிலையை எடுத்து நீவிவிட்டுக் கிழித்து சுண்ணாம்பு தடவி அரைப்பாக்கையும் அதையும் போட்டுக் கொள்கிறாள்.

ராமசாமி அசையவில்லை. பொன்னாச்சிக்கு அன்று சோலை தன்னைத் துரத்தி வந்தது நினைவில் நெருடுகிறது.

ராமசாமிக்கு அதை அவள் சாடையாகக் கூறினாள். சோலை என்று பெயரும் கூறவில்லை. அவன் அவளிடம் வெறுப்புக் காட்டாமல் இருப்பானோ?

ஆச்சி புகையிலைச் சாற்றை வெளியில் போய் துப்பிவிட்டு வருகிறாள்.

"பொழுது ரெண்டு மணி இருக்கும். வேல வெட்டிக்குப் போவாணாமா? ஒன் ஆத்தாக்குச் சொல்லி அனுப்பினியா ராமசாமி?"

"இல்ல, ஆனால் சொல்லியிருப்பா மாசாணம். கங்காணிட்டியும் சமாளிச்சிக்கும்னு சொன்னே. செத்தப் படுத்து ஒறங்கணும். மூணு நாளா ராவுலதா வேல. ஆனா இப்ப படுத்தாலும் ஒறக்கம் புடிக்குமான்னு தெரியல. ஒரு உப்பளத் தொழிலாளியின் குடும்பம் எப்படி இருக்குங்கறதுக்கு இந்தக் குடும்பமே போதும். முப்பது வருசம் வேல செஞ்சும் ஒரு பிசுக்கும் ஒட்டல. பெரிய போராட்டத்துக்கு நாம கொடி எடுத்துத்தானாகணும். கட்சி கிட்சின்னு ஒண்ணூம் ஒதுங்கக் கூடாது. ஆச்சி நீங்கதா இதுக்கு சப்போர்ட்டா இருக்கணும். ரெண்டு நா வேலயில்லேன்னாக் கூடக் கஞ்சி குடிக்க ஏலாமப் போயிரும். முன்ன இருபத்து மூணு நா ஸ்டைக் பண்ணினாங்க. பனஞ்சோல அளம் இல்ல அப்ப. தாக்குப் புடிக்காம ஆளுவ போயிட்டா. கூலி கொறஞ்சி போச்சி. அப்படி அத்திவாரம் இல்லாத வீடு கட்டக் கூடாது..."

ஆச்சி ஏதும் மறுமொழி கூறவில்லை.

புகையிலைக் காரத்தில் அமிழ்ந்தவளாக மௌனமாக இருக்கிறாள். பிறகு பொன்னாச்சியைக் கிளப்புகிறாள்.

"போட்டி, போயி செத்தப் படுத்து ஒறங்கு. மாமனுக்குச் சொல்லி அனுப்பியிருக்கு. வெடிஞ்சி அவிய துட்டிக்கு வருவா. அப்பச்சி என்னேயான்னு பாரு! வெடிஞ்சி மத்தது பேசிக்கலாம்."

பொன்னாச்சி பெருஞ்சோரத்திலிருந்து எழுந்திருக்கிறாள்.

"நீ இந்நேரம் வீட்டுக்குப் போவாட்டி இப்படியே கெடந்து ஒறங்கு. தலையாணி போர்வை தார..." என்று ராமசாமியிடம் கூறுகிறாள்.

"அதெல்லாந் தேவையில்ல ஆச்சி. ஒறக்கம் வந்தா நின்னிட்டே கூட ஒறங்கிடுவ. இப்ப நீரு பாயி தலையாணி தந்தாலும் உறக்கம் வராது போல இருக்கி..."

"போட்டி... போ, ஏ நிக்கிற."

பொன்னாச்சி அங்கிருந்து அகலுகிறாள்.

ராமசாமிக்கு ஒரு தலையணை கொண்டு வந்து ஆச்சி கொடுக்கிறாள்.

"ஆத்தாட்ட இந்தப் புள்ளயப் பத்திச் சொல்லியிருக்கியா?"

அவன் திடுக்கிட்டாற் போல் நிமிர்ந்து பார்க்கிறான். உடனே மறுமொழி வரவில்லை. அம்மாவின் நினைப்பு மாறானது. அவள் உப்பளத்தில் வேலை செய்யும் பெண்கள் யாரையும் மருமகளாக்கிக் கொள்ள ஒப்ப மாட்டாள். சண்முகக் கங்காணியின் தங்கச்சி மகள் வாகைக்குளம் ஊரில் இருக்கிறதாம். எட்டுப் பிள்ளைகளுக்கு நடுவே பூத்திருக்கும் அல்லி மலராம்... அவன் செவி கொடுத்துக் கேட்கவில்லை. இதற்காக அவனால் தாயிடம் போராட முடியாது. ஏனெனில் அவனுடைய அன்னையின் உலகம் குறுகிய எல்லைகளுடையது. நிமிர்ந்து பார்க்கும் இயல்பு இல்லாதவள் அவள். அளத்தில் இருநூறு ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு வந்திருப்பதையே அவன் அவளுக்குத் தெரிவிக்கவில்லை. தன்னை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்றுதான் கூறியிருக்கிறான். அவள் நாள் முழுவதும் தன்னுடைய உலகத்திலேயே கனவு காண்கிறாள்.

அவள் மௌனம் சாதிப்பதைக் கண்டு ஆச்சி மீண்டும் வினவுகிறாள்.

"ஏன்ல... ஆத்தாட்ட சொல்லலியா?"

"இல்ல. பொறவு சொல்லிக்கலான்னுதா சொல்லல..."

அவனுடைய குரல் அமுங்கும்படி பொன்னாச்சி ஓடி வருகிறாள்.

"ஆச்சி...? அப்பச்சி... அப்பச்சிய வந்து பாருங்க...! முளிச்சாப்பல கட்டயா இருக்காவ... எப்படியோ..."

சாவு வீடென்று கொளுத்தி வைத்திருக்கும் சிறு விளக்குச் சுடர் பெரிதாக்கப் பட்டிருக்கிறது. அவன் விழித்தபடியே கட்டையாகக் கிடக்கிறான்; அசைவேயில்லை.

அந்தப் பெண்பிள்ளை போன பிறகு... அவனுக்கு... எல்லாமே ஓய்ந்து விட்டது.

பொன்னாச்சியின் ஓல ஒலி வளைவில் எல்லோரையும் திடுக்கிட்டெழச் செய்கிறது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
21

அப்பன் இறந்தாலும் அம்மை இறந்தாலும் வெகு நாட்களுக்குத் துயரம் கொண்டாடுவதற்கில்லை. ஏனெனில் வயிற்றுக் கூவலின் முன் எந்த உணர்ச்சியும், மான - அபிமானங்களும் கூடச் செயலற்றுப் போய்விடும். உயிர் வாழ்வதே உழைப்புக்கும் அரைக் கஞ்சியின் தேவைக்கும் தான் என்றான பிறகு மென்மையான உணர்ச்சிகள் ஓடி ஒளிந்து கொள்கின்றன. பளிங்குச்சில்லும் மணலும் களியும் கொண்டு மண்ணின் உயிர்க் கண்களைத் துப்புரவாகத் துடைத்த பின்னர், அதில் பசுமையை எதிர்பார்க்க முடியுமா? அந்தப் பாத்தி கரிப்பு மணிகளுக்கே சொந்தமாகி விட்டதால் பசுமை துளிர்க்கும் மென்மையான உணர்ச்சிகளைப் பாராட்டுவதற்கில்லை. பொன்னாச்சியும் பச்சையும் வேலைக்கு வருகின்றனர், ஒரு வாரம் சென்றதும்.

"பாவம், சின்னாத்தா, அப்பன் ரெண்டு பேரும் ஒன்னிச்சிப் போயிட்டா..." என்று பேரியாச்சி இரங்குகிறாள்.

"இந்த வுள்ளியளுக்கு ஆத்தான்னு கொடுப்பினயில்லாமலேயே போயிடிச்சி... அந்தப் பய்யனப் போலீசில புடிச்சிட்டுப் போனப்ப, சின்னாத்தா தா ஆனவாடும்பட்டான்னு சொல்லிச்சி பாவம்..." என்று இறந்தவளின் மேன்மையைக் கூறுகிறாள் அன்னக்கிளி.

"இப்பிடிக்கும் நல்லவிய இருக்காவ. சக்களத்தி வுள்ளியளக் கொல்லுறவியளும் இருக்கிறாவ. ஏதோ ஒலவம்" என்றெல்லாம் தங்கள் உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்கையில் கண்ட்ராக்ட் வந்து விட்டார். வாயை மூடிக் கொள்கின்றனர்.

வழக்கம் போல் அவனது அதிகாரம் தூள் பறக்கிறது. அறைவை ஆலையில் எட்டும் பத்துமான குஞ்சுகள் மூன்று ரூபாய்க் கூலிக்குக் கண்ணிதழ்களிலும் செவியோரங்களிலும் மூக்கு நுனிகளிலும் மாவாகப் பொடி அலங்கரிக்கத் தலைக்கொட்டை கட்டிக் கொண்டு பொடி சுமக்கிறார்கள். தட்டு மேட்டில் அம்பாரங்கள் குவிந்து, நண்பகலின் உக்கிரமான ஒளியில் பாலைவன மலைகளைப் போன்றும் கறுப்பும் வெளுப்புமாக ஓடும் குன்றுகளைப் போன்றும் பிரமைகளைத் தோற்றுவிக்கின்றன.

மாளய அமாவாசை நெருங்கி வருகிறது. ராமசாமிக்கு நிற்க நேரமில்லை. கோரிக்கைகளைத் தயாராக்கி விட்டார்கள். அவனுடைய மனக்கண்ணில் எல்லா அரசியல் கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கக்காரர்களும் சேர்ந்து அவற்றை எல்லா முதலாளிகளுக்கும் கொடுப்பதும், அமாவாசையன்று மழை மணி விழுவதும், பின்னர் தட்டு மேடுகளில் அம்பாரங்கள் வாருவாறின்றிக் கிடப்பதும், நிர்வாகங்கள் இறங்கி வருவதுமான சாத்தியக் கூறுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

பதிவு கூலி - ஓய்வு நாளயச் சம்பளம், மழைக் காலங்களில் மறுவேலை அல்லது அரைச் சம்பளம் - முதுமைக்கால ஊதியம் - மருத்துவ உதவி, பெண்களுக்குச் சமவேலை, சம கூலி நிர்ணயம் - பேறு கால உதவி, ஓய்வு, பிள்ளை காக்கும் பால் வாடிகள், உப்பளப் பாதிப்பினால் வரும் நோய்களுக்குத் தக்க மருத்துவப் பாதுகாப்பு, எல்லாம் கேட்கிறார்கள். கூடுமான வரையிலும் எல்லோரையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த அவனும் மற்றவர்களும் ஓயாது அலைகிறார்கள். அவனுக்குத் திருமணத்தைப் பற்றிய நினைப்பு இப்போது இல்லை.

அருணாசலத்துக்குக் கால்கை பிடிப்பு மாதிரி வந்து ஒரு வாரம் காய்ச்சலும் நோவுமாகப் படுக்கையில் தள்ளிவிட்டது. மரணச் செய்தி கேள்விப்பட்டு வந்து குழந்தைகளை ஊரில் கொண்டு போய் ஒரு வாரம் வைத்திருக்கவும் கூட இயலாமல் படுத்து விட்டார். மாமி தான் வேலுவைக் கூட்டிக் கொண்டு வந்து இரண்டு நாட்கள் இருந்து சென்றாள். அவருக்கு இப்போது உடல்நிலை குணமாகியிருக்கிறது. தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்கு வந்து உடலைக் காட்டிச் செல்கிறார். ஆஸ்பத்திரிக்கு வந்து திரும்புகையில் ஆச்சியைப் பார்க்கப் படி ஏறுகிறார்.

ஊமை வெயிலின் துளிகளை மேல் துண்டால் ஒத்திக் கொள்கிறார்.

சரசி பன ஓலை கிழிக்கிறாள். செங்கமலத்தாச்சி ஓலைப் பெட்டி முடைந்து கொண்டிருக்கிறாள். மூக்குக் கண்ணாடி மூக்கில் தொத்தி இருக்கிறது.

"வாரும், வாரும் - இரியும்? ஆசுபத்திரிக்கு வந்தியளா?"

"ஆமா, எல்லா வேலைக்குப் போயிருக்காவளா?"

"போயிருக்கா. நோட்டீசு குடுத்தா, பொறவு வேலை இருக்காது. மொதலாளிய அம்புட்டெல்லால எறங்கி வருவாகளா? கருக்கல் விடியிதுன்னா லேசா?" என்று கூறிக் கொண்டு பெட்டியை வைத்து விட்டு மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கொள்கிறாள்.

"ஓலை கெடக்கிதா? முன்னல்லாம் ஆடி மாசம் வாங்கி வச்சிப்ப. இப்ப ஒண்ணும் சேயாம இருந்திட்ட, நேத்துப் போயி திரிஞ்சி வாங்கியாந்தே. மழக்காலம் வந்திட்டா கடனுக்கு வருவாக. வேலய விட்டு நின்னாலும் கையில காசுக்கு என்னேயுவா?"

"இப்பத்தான் வாரியளா? சாப்பாடு ஏதும் வக்கச் சொல்லட்டா?"

"எல்லாம் ஆச்சு... காலமேயே வந்திட்ட, வட்டுக் கடன் வாங்கி சுசய்ட்டிக்குத் தீர்வை கட்டிட்டு இப்ப பிரிக்கற. இந்தத் தரகன் பயலுக்குக் காசா இல்ல? பத்து ரூவாக்கி இப்ப வா, அப்ப வான்னுறா. அட, லீசைக் கான்சல் பண்ணிட்டுப் போறா. நீ ஏன் இத்தக் கட்டிட்டு அழுவுறியன்றா. ஒரு மனுசன் பேசற பேச்சா இது? நாமெல்லாம் மனுசங்களா இல்லியான்னு இப்ப எனக்கே சந்தேகமாப் போயிட்டு. உங்ககிட்ட உளுமையைச் சொல்லுற..."

ஆச்சி பேசவில்லை. அவருக்கு ஆற்றாமை தாளாமல் வருகிறது.

"அந்தக் காலத்தில என்னென்ன லட்சியம் வச்சிட்டிருந்தம்! காந்தி கனவு கண்ட ராமராச்சியம் வரப்போறதுன்னு நினச்சம். ஒரு மனுசன் குடிக்கற கஞ்சிக்குத் தேவையான உப்பு, அதுதான் சத்தியம்னு ஒரு உத்தமமான போராட்டத்தையே அதுல வச்சி ஆரம்பிச்சாரு. இன்னிக்கு அஞ்சும் குஞ்சுமா உப்புப் பெட்டியில எட்டு மணி கருகிட்டு வருதுவ. இதுவளுக்குக் காந்தின்னா தெரியுமா, தேசம்னா தெரியுமா? பசி தெரியும். இன்னொன்னு சினிமா. இதுக்காவ எதையும் செய்யத் துணியிதுங்க. நாங்கல்லாம் படிக்க வசதியில்லாத காலத்துல பனயேறிப் பிழைக்கிற குடும்பத்துல தாம் பெறந்தம். இன்னிக்கு நினைச்சுப் பாக்கறப்ப அப்ப எங்க லட்சியம் எம்புட்டுக்கு உன்னதமாயிருந்திருக்குன்னு தெரியுது. திருச்செந்தூர் தாலுகா காங்கிரசில் இருந்த இளயவங்க எப்படி இருந்தோம்! அம்புட்டுப் பேரும் ஒரு வாப்புல கள் குடிக்கக் கூடாது, கதர் உடுத்தணும்னு பிரச்சாரம் செய்யிவம். இப்ப என்னடான்னா, காலேஜில படிக்கிற பய, பொண்டுவ பின்னாடி திரியிறா, சீண்டுறா, வெக்கக் கேடு. பாரதியார் அன்னிக்குப் பாடி வச்சாரே, பாஞ்சாலி சபதம், அதப்பத்திச் சொல்லுவாக. அவர் நம்ம தேசத்தையே பாஞ்சாலியா நெனச்சிப் பாடினாருன்னுவாக. 'பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து குழல மீதினிற் பூசி நறு நெய் குளித்தே சீவிக்குழல் முடிப்பேன்...'னு பாஞ்சாலியையா பாடினாரு? இந்தத் தேசம் நெஞ்சுல ஒரமில்லாம அடிபட்டுக் கிடக்கிறது. பொறுக்காம பொங்கி வந்துருக்கு. இன்னிக்கு எனக்கு இந்த உப்புத் தொழிலாளிய எல்லாரும் பாஞ்சாலியளா நிக்கிறாப் போல தோணுது..." தொண்டை கம்மிப் போகிறது.

"சரசி! லோட்டாவில குடிக்கத் தண்ணி கொண்டாம்மா!"

அவர் தண்ணீரருந்துகையில் ஆச்சி மௌனமாக இருக்கிறாள்.

"எனக்குத் தெரிஞ்சு அளக்கூலி நாலணாவிலேந்து நாலு ரூவா வரையிலும் உசந்தும் அரக்கஞ்சியே பிரச்சினையாகத் தானிருக்கு..."

ஆச்சி உடனே கேட்கிறாள்.

"அதுக்காவ எதுவும் நின்னு போயிடுதா? மனுசன் வயசாகாம நிக்கிறானா? புள்ளய பெறக்காம நிக்கிதா? நீங்க காலத்துல எதானும் ஏற்பாடு செஞ்சு பொன்னாச்சிக்கும் ஒரு கலியாணங் கெட்டி வச்சிரணும். நம்ம இல்லாமயும் இருப்பும் அடிபிடியும் எப்பவுமிருக்கு. அந்தக் குடும்பத்துக்கு இப்ப ஒம்மத் தவிர ஆருமில்லாம போயிட்டா. கடல்ல அல ஓயுமா? அலயிலதா குளிச்சி எந்திரிக்கணும். அவெ ஆத்தாகிட்டச் சொல்லுலேன்ன, வாணங்கா?"

"நானும் அன்னிக்குப் போனே. எங்கிட்டயும் அதாஞ் சொன்னா. நா ஒரு இருபத்திரண்டு நா, மாசம் கழியிட்டும்னு தானிருக்கே. அவ அம்மா தாலி இருக்கு. தாலிப் பொன் வாங்கறாப்பல கூடல்ல... இன்னிக்கு நிலைமை இல்ல! ஒரு சீல வேட்டி வாங்கி முடிச்சிடலாம்... பச்சைப் பயல் எப்படி இருக்கா?"

"வேலக்கிப் போறா; சம்பளத்தக் கொண்டு பொன்னாச்சியிட்ட தா கொடுக்கா. இங்ஙனதா எல்லாம் கெடக்கும். சின்னது ரெண்டு மூணு நா ராவெல்லாம் சொல்லத் தெரியாம அளுதிச்சி. வூட்டுக்குப் போகவே பயமாயிருக்கும்பா பாஞ்சாலி; நாங்கூட ராமசாமியக் கலியாணங் கட்டிட்டா இந்த வளவிலியே வந்திருக்கட்டு முங்கே. அவெ ஆத்தா ஒப்புவாளோ என்னமோ?..."

ஆச்சி முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

தூத்துக்குடி ஊர் திருமந்திர நகராம். பனமரங்கள் கூடச் சலசலக்காதாம். ஆனால் உப்பளத்துத் தொழிலாளர் சலசலக்கப் போகிறார்கள். வானிலே மேகமூட்டம் தெரிகிறது. கரிப்பு மணிகளைப் பிரசவிக்கும் அன்னை சோர்ந்து துவண்டாற் போல் கிடக்கிறாள். காலையில் தொழிதிறந்தால் பன்னிரண்டு மணிக்குக் குருணைச் சோறு இறங்கவில்லை. காற்றில் இருக்கும் வறட்சி ஓர் ஈரமணத்தைச் சுமந்து கொண்டு வந்து மெல்ல மேனியை வருடுகிறது. மாளய அமாவாசையன்று மணிகள் விழுமென்று பார்த்திருக்கிறார்கள்; விழவில்லை.

"அடுத்த சம்பளம் இருக்குமோ, இருக்காதோ?" என்ற கேள்வியுடன் பெண்டிர் சாமான் பத்து வரவுக் கடையில் கூடுகின்றனர்.

"இந்த இருவது ரூவாய கணக்கில வச்சிட்டு இருவது கிலோ அரிசி போடும்..." என்று நார்ப்பெட்டியை நீட்டுகிறாள் ஒருத்தி.

"ஏத்தா? எப்பிடி இருக்கி? இன்னும் நிலுவை அறுவது ரூவாயும் சில்வானமும் இருக்கி. அம்பது ரூவான்னாலும் தீத்துட்டா அம்பது ரூவா சாமானம் எடுத்துட்டுப் போ!" என்று கடைக்காரன் மாட்டுகிறான்.

"எத்தினி நாளக்கி மொடங்குவாகளோ?"

"அது எப்பிடித் தெரியும்? ரொம்ப உஜாராத்தா இருக்கா. கங்காணிமாரெல்லாமும் சேர்ந்திருக்காவ, பனஞ்சோலை அளம், தொர அளம் மொத்தமும் சேந்திருக்காவ..."


"ம், இதுபோல எத்தினி பாத்திருப்போம்? பிள்ள குட்டி தவிச்சிப் போயிரும், வெளியாளக் கொண்டு வருவா, இல்லாட்டி பத்து பைசா ஏத்துவா?" என்பன போன்ற பேச்சுக்கள் எங்கு திரும்பினாலும் செவிகளில் விழுகின்றன.

ராமசாமியின் அன்னை வாயிலிலேயே நிற்கிறாள். அவன் வீட்டில் வந்து தங்கி மூன்று நாட்களாகி விட்டன. அவளால் கட்டிக் காக்க இயலாத எல்லைக்கு அவன் போய்விட்டான்.

செவந்தியாபுரத்தில் இருந்த வரையிலும் அவளுக்கு வெளிமனித உறவுகளென்ற உயிர்ச்சூடு இருந்தது. பேரியாச்சி, அன்னக்கிளி எல்லோரும் பேசுவார்கள். அன்னக்கிளி குழந்தையைக் கொண்டு விடுவாள். அவள் ஆடு வளர்த்திருக்கிறாள், கோழி வளர்த்திருக்கிறாள். அவரையோ சுரையோ கொடி வீசிக் கூரையில் பசுமை பாயப் படரப் பாடுபடுவாள். இப்போது மாசச் சம்பளமில்லை. முன்போல் அவன் அவள் கையில் பணம் தருவதில்லை. அரிசி வாங்கிப் போட்டான். நல்ல தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க எதிர் வீட்டிலிருக்கும் மங்காவை மாசம் இரண்டு ரூபாய்க்கு ஏற்பாடு செய்திருக்கிறான். அவள் தான் இவளிடம் பல செய்திகளை வந்து சொல்கிறாள்.

"ஒம் பய்ய, அந்தப் பொன்னாச்சியத் தொடுப்பு வச்சிருக்கா. அதா, இப்ப மாலக்காரர் அளத்துல அறவைக் கொட்டடில அடிபட்டுச் செத்தாள ஒரு பொம்பிள...?"

முதியவளுக்குக் காது கேட்காதென்று சத்தம் போட்டுப் பேசுகிறாள் மங்கா.

"பனஞ்சோல அளத்துப் பெரிய முதலாளிக்கு வைப்பா இருந்தாளே ஒரு பொம்பிள? அவ வளவுலதா இந்தப் பொண்ணும் இருக்கு. இந்த மீட்டங்கியெல்லா அங்கதா கூடிப் பேசறாவளாம். அவக்கு ரொம்ப பவுரு..."

இதெல்லாம் அவள் செவிகளில் விழுகிறதோ இல்லையோ என்ற மாதிரியில் மங்கா அவளை உறுத்துப் பார்க்கிறாள். ஆனால் அவளுள் ஒரு கடலே கொந்தளிக்கிறது. நினைவலைகள் மோதுகின்றன.

பையன் எந்த வலையில் சென்று விழுந்துவிடக் கூடாது என்று அஞ்சினாளோ அங்கேயே போய் விழுந்து விட்டான். இதற்கு முன் இது போன்று வேலை நிறுத்தம் என்ற ஒலி காற்று வாக்கில் வந்ததுண்டு. ஆனால் பனஞ்சோலை அளத்தை அது தட்டிப் பார்த்ததில்லை. மேலும் ராமசாமி மாசச் சம்பளக்காரன். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்ததில்லை. சோலிக்குச் செல்வான்; வருவான். கால் புண் வ்ந்தாலும் கூடப் பாக்கை உரசி விழுதெடுத்து அப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பான். அவன் இப்போது வீட்டுக்கே பாதி நாட்கள் வருவதில்லை.

"அந்தப் பொம்பிள செத்தால்ல? அதுதா இப்ப நிலம் நட்ட ஈடுன்னு அஞ்சாயிரம் கேக்கச் சொல்லி இந்தப் பொம்பிள தூண்டிக் கொடுக்களாம். அவக்கு ஒரு பய இருந்து செத்திட்டானில்ல. என்ன எளவோ சாராயங் குடிச்சி? அந்த ஆத்திரம். மொதலாளி மார எதுக்கச் சொல்லி இந்த எளசுகளத் தூண்டிக் கொடுக்கா!"

"அந்த சக்காளத்தி வீடு எங்கிட்டிருக்குன்னு தெரியுமாட்டீ?" என்று கேட்கிறாள் முதியவள்.

மங்கா இடி இடி என்று சிரிக்கிறாள்.

"ஐயோ? நீ போகப் போறியா?... வாணாம். ரொம்பது தூரம் போவணுமா. உம்பய்ய ராவுக்கு இன்னிக்கு வருவா. சோறாக்கி வையி!"

மங்கா போகிறாள்.

அந்தத் தாய் பித்துப் பிடித்தாற் போல நிற்கிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
22

ஓடைக்கரை நெடுகத் தாழைப் புதர்களில் மணத்தை வாரிச் சொரியும் பொன்னின் பூங்குலைகள் மலர்ந்திருக்கின்றன. வேலுவுக்குப் பரீட்சையின்றிக் கல்லூரி மூடிவிட்டதால் ஊருக்கு வந்திருக்கிறான். அவன் முள் செறிந்த தாழைகளை விலக்கிக் கொண்டு கவனமாக இரண்டு பூங்குலைகளைக் கொய்து கொண்டு வருகிறான்.

மஞ்சள் பூச்சு படர்ந்த முகத்தில் திருநீறும் குங்குமமும் துலங்க, மொடமொடவென்று கோடிச் சேலையை உடுத்துக் கொண்டு பொன்னாச்சி சங்கமுகேசுவரர் சந்நிதியில் புது மணப் பெண்ணாக நிற்கிறாள். குஞ்சரியும், வள்ளியும், பாஞ்சாலியும், பச்சையும் அவளைப் பார்த்துக் கொண்டே சுற்றிச் சுற்றி வருகின்றனர். மூங்கில் துறையிலிருந்து குருக்கள் முன்னதாகவே அதிகாலையில் வந்து ஈசுவரனுக்கு அபிடேகம், ஆராதனை முடிக்கிறார். ஓர் புறம் அடுப்பு மூட்டி பொங்கலும் வைத்திருக்கிறார்.


முதல் நாள் காலையில் வேலுதான் சென்று பொன்னாச்சியையும் குழந்தைகளையும் கூட்டி வந்திருக்கிறான். திருமணம் என்று சொல்லாமலேயே அவர்களை அழைத்து வரச் செய்திருக்கிறார் அவர். ராமசாமி மாலை ஏழு மணி சுமாருக்கு தனபாண்டியுடனும் வெள்ளைச்சாமியுடனும் வந்தான்.

"அம்மாளைக் கூட்றிட்டு வான்னே?..." என்று மாமன் கேட்ட போது, அவன் சிரித்து மழுப்பி விட்டான். அவன் முரண்பாடாகத் தகராறு செய்வாளென்றும், திருமணம் முடித்துக் கூட்டிக் கொண்டு போனால் போதும் என்றும் மொழிந்தான். காலையில் நேராகக் கோயிலுக்கு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு, அவளுக்கு இருபத்தைந்து ரூபாயில் ஒரு சேலையும் ஏழு ரூபாயில் ஒரு ரவிக்கையும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறான். இரவில் யார் யாரையோ பார்க்க வேண்டிய வேலை இருக்கிறதாம். "ஏழு மணிக்கு நாங்கூட்டியார..." என்று தனபாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டு சென்றிருக்கிறார். சிலுசிலுத்து ஓடும் ஓடையில் மாமன் முழுகி, வேறு வேட்டியணிந்து பட்டையாகத் திருநீறு அணிந்து தட்டத்தில் எல்லாவற்றையும் எடுத்து வைக்கிறார். வெண் சம்பங்கியும் அரளியும் ரோஜாவும் கட்டிய இரண்டு மாலைகள் - வெற்றிலை பாக்கு, ஒரு சீப்பு பழம், இரண்டு தேங்காய் எல்லாவற்றுடன் அந்தப் புடவை ரவிக்கை, மாப்பிள்ளைக்கு அவர் வாங்கிவைத்த வேட்டி, துண்டு ஆகியவற்றையும் வைக்கிறார். பின்னர், பத்திரமாகக் கொண்டு வந்திருக்கும் அந்த மங்கிலியத்தை புதிய சரட்டில் கோத்து அதன் நடுவே வைக்கிறார். தங்கபாண்டியிடம் வட்டிக் கடன் பெற்று முதல் வேலையாக அதை மீட்டு விட்டார். உப்பின் வெப்பமும் உயிரற்ற வெண்மையும் கவிந்த வாழ்க்கையில் இந்த இளம் பருவம் உப்புக் காட்டில் ஓடி வரும் ஆற்றின் கால்களைப் போன்று குளிர்ச்சி பொருந்தியது. இந்தக் குளிர்ச்சி தரும் இனிமைகளே இவர்கள் வாழ்வில் பசுமைகளாகும். எனவே, கல்யாணத்தை இவர்கள் மிகப் பெரியதாக எதிர் நோக்கியிருக்கும் போராட்டத்துக்கு முன்பே வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து விட்டார்.

இந்த இனிய சேதி பொன்னாச்சியைப் பூரிப்பிலாழ்த்தியிருக்கிறது. மாமியினால் அதிகாலை நேரத்தினால் நடந்து வர ஏலாது என்று கூறிவிட்டாள். ஆனால் பொன்னாச்சிக்கு அன்போடு முழுக்காட்டி, சடை கோதி, மலர் அலங்காரம் செய்திருக்கிறாள். அவள் மாப்பிள்ளையுடன் வரும் காலை நேரத்தில் இனிப்பும் பாயசமும், புட்டும் சமைத்து வைத்திருப்பாள்.

ஒரு சிறு கைமணியை அடித்து, குருக்கள் பூசைக்கு வானவரையும், தேவதைகளையும் அழைக்கிறார்.

கிழக்கே விண்மணி பொற்சுடராய்ப் பொங்கிச் சிரிக்கிறாள். வசந்தகாலத்து இன்பசாரலின் துளிகள் பசும்புல்லில் வீற்றிருக்கையில் ஒளிக்கதிரின் கால்பட்டுச் சிதறும் வண்ண மாலையாக உலகம் தோன்றுகிறது.

அருகிலுள்ள வேம்பின் உச்சியில் இரு பச்சைக்கிளிகள் கொஞ்சுகின்றன.

"அதா, கிளி! கிளி!..." என்று அந்தக் குழந்தைகள் கவடற்ற ஆனந்தத்தில் மூழ்கிக் கூச்சலிடுகின்றன.

உதயத்தின் செம்மை மாறி, ஒளிக்கற்றைகளில் வெம்மை ஏறுகிறது. மாமன், ஓடைக்கரையினூடே வரும் ஒற்றையடிப் பாதையில் வெண்மையாக ஆள் அசைந்து வருவது தெரிகிறதா என்று முகத்தை நிமிர்த்திப் பார்க்கிறார். வேலு அவர்களை எதிர் கொண்டு அழைப்பவனாக பாதி வழிக்கே ஓடிச் சென்று நிற்கப் போகிறான்.

அருணாசலத்துக்கு அடிமனதில் ஓர் அச்சம் உண்டு. ஏனெனில் தங்கபாண்டி அந்தப் பக்கமே நடமாடுபவன். அவன் பொன்னாச்சி தனக்குரியவளென்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறான். அதனாலேயே அவர் கேட்டவுடன் பணமும் கொடுத்திருக்கிறான். அவனுக்குத் தெரிந்தால் ஏதேனும் இடையூறு செய்து விடுவானோ என்ற அச்சத்தில் அவர் இந்தத் திருமணத்தையே இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டாம் என்றே நினைத்திருந்தார். ஆனால் எல்லோரும் திருச்செந்தூர் சென்று மணமுடிப்பதென்றால், செலவு அதிகமாகும். அதற்கேற்ற தாராளம் கூட இப்போது இல்லை.

"நாங்க முன்னாடி மாப்பிள்ளையோடு வந்து காத்திருப்பம். நீங்கதா பொண்ணுக்குச் சிங்காரிச்சிக் கூட்டியார நேரமாவும்" என்று தனபாண்டியன் கூறினாரே? மணி எட்டாகிறது. இன்னும் வரவில்லை? எட்டு மணிக்கு அவர்கள் மணமுடித்துத் திரும்பி விட வேண்டும் என்றல்லவா திட்டம் போட்டிருக்கின்றனர்!

பொறுமையுடன் உச்சி விளிம்பில் நிற்பதைப் போன்று ஓர் பரபரப்பு அவரை அலைக்க, மேற்கே அவர் விழிகளைப் பதித்திருக்கையில், பின்புறமிருந்து குரல் கேட்கிறது.

"என்ன மாமா? என்ன விசேசம் இன்னிக்கு? கோயில்ல வந்து?... அட... பொன்னாச்சியா?... என்ன இன்னிக்கு?" என்று மண்டபத்தின் பக்கம் தங்கபாண்டியின் குரல் கேட்டு அவர் திடுக்கிட்டவராக வருகிறார். அவர் உமிழ் நீரை விழுங்கிக் கொள்கிறார். "எங்க வந்த நீ?"

"நா கிளித்தட்டு ஓடப்பக்கம் வரயில இங்க ஆளுவ தெரிஞ்சிச்சி, என்ன விசேசம்னு வந்த, அங்ஙன ஆர எதிர்பார்த்திட்டு நிக்கிறிய?"

"ஆரயுமில்ல, சக்திவேலு வந்திருக்கா. அவ பெறந்த நாளு அவாத்தா ஏதோ நேந்துக் கிட்டாப்பல... அவனுக்காவத்தா நிக்கே..."

முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா? தங்கபாண்டியன் கண்கள் கபடத்தை நிரப்பிக் கொண்டு பொன்னாச்சியின் மீது பதிகின்றன. பிறகு தட்டத்துக்கு மாறுகின்றன.

"கெளவா, பொய்ய ஏஞ் சொல்ற?" என்ற முணமுணப்புடன் அவர் மீது குரோதப் பார்வையை வீசுகிறான்.

"அதுக்கு ரெண்டுமால, புதுச்சீல, வேட்டி... ஒம்ம மவனுக்கு இவளக் கட்டி வைக்கப் போறியளா?"

"தங்கபாண்டீ! வாயத் தொறந்து வார்த்தய அநாவசியமா வுடாத. ஒஞ்சோலியப் பார்த்திட்டுப் போ!"

"என்ன சோலி? என்னவே சோலி? இப்ப ஏன் சோலி இதா. எனக்கு இப்ப பணம் வேணும்? என் ரூவாய வச்சிட்டு மறுவேலை பாரும்!"

"சரி, தார. நீ முதல்ல இந்த இடத்தில இப்ப ஏங்கிட்ட வம்புக்கு வராத. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. போல..."

அவர் அழாக் குறையாகக் கெஞ்சுகிறார்.

"அது சரி. எனக்கு இப்ப பணமொட. ஒங்ககிட்டக் கேக்கத்தா வந்த..." என்றவன் கண்சிமிட்டும் நேரத்தில் லபக்கென்று குனிந்து தட்டத்தில் வெற்றிலை பூமாலைகளுக்கிடையே புதிய மஞ்சட்சரட்டில் கோத்து வைத்திருந்த மங்கிலியத்தை எடுத்து விடுகிறான்.

அவர் பதறிப் போகிறார். "ஏல, குடுரா அதெ. கொரங்குப் பயலே? அத்த ஏண்டா எடுத்த?" அவன் பின் அவர் ஓடுகிறார்.

"நீரு என்னிய மோசஞ் செய்தீரல்ல? இந்தத் தாலிய இப்ப கெட்டி இவள இழுத்திட்டுப் போவ."

பொன்னாச்சி அஞ்சிச் சந்நிதிச் சுவரோரம் ஒண்டிக் கொள்கிறாள்.

"சங்கமேசுவரா! இதுவும் ஒன்சோதனையா?" என்று கலங்கிய அவர் அவன் கையைப் பற்றி அவன் மடியில் கட்டிக் கொள்ளும் அந்த மங்கிலியத்தைக் கவர முயலுகிறார். ஆனால் அவன் அவரைத் தள்ளிவிட்டு ஓடியே போகிறான்.

பொன்னாச்சி இடி விழுந்த அதிர்ச்சியுடன் மாமனை எழுப்புகிறாள்.

பச்சை சக்திவேலுடன் போய்விட்டானா?

"அவ ஓடிட்டா... ஓடிட்டா!" என்று பாஞ்சாலி கத்துகிறாள்.

"பாவிப் பய, இதுக்கு அநுபவிப்பான். இவனுக்கு மண்ண வெட்டிப் போடுற..." என்று மாமன் குடி முழுகிப் போன ஆத்திரத்தில் கத்துகிறார்.

சக்திவேலும் பச்சையும் வருகின்றனர்.

"எங்கலே போயிட்டிய? அந்த மடப்பய தாலியத் தூக்கிட்டு ஓடிட்டானே? நான் ஒரு மட்டி. தாலிய மடிலல்ல வச்சிருக்கணும்!" என்று புலம்புகிறார்.

"நீங்க கடசீ நேரத்துல எடுத்து வச்சாப் போதுமே? யாரு அந்தப் பய...?" என்று விசாரிக்கிறார் குருக்கள்.

"என் கரும வினை? ஈசுவரன் ரொம்ப சோதிக்கிறார்!"

சக்திவேலுக்கு எதுவும் புரியவில்லை.

"யாரச் சொல்லுறியப்பா? அவங்கல்லாம் அங்க வாராங்க. எதோ பஸ்ஸில் வந்து இறங்கி வராப்பில..."

மாமனின் முகத்தில் ஈயாடவில்லை.

மணாளனை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்பதற்கு மாறாக அதிர்ச்சியுடன் கண்களில் நீர் கசிய, பொன்னாச்சி நிற்பதைக் கண்டு ராமசாமி திடுக்கிடுகிறான்.

"என்ன வுள்ள? என்ன நடந்திச்சி?"

"ஒண்ணில்ல, நீங்கல்லா வரக்காணமின்னுதா, கொஞ்சம் சடைவு..."

சங்கமுகேசுவரனுக்கு முன்பு சாத்திய ரோஜா மாலையைக் குருக்கள் மூலையில் போட்டிருக்கிறார். அதைப் பிரித்து எடுத்து, நூலை தனியே பிரித்து முறுக்கி மஞ்சட் தூளைப் பூசி விரைவில் மாமன் கொண்டு வருகிறார். அதில் பொன்னின் சின்னமில்லை; ராமசாமி ஏதோ நடந்திருக்கிறதென்று ஊகித்துக் கொள்கிறான். எனினும் கேட்கவில்லை. அந்த மஞ்சட் கயிற்றை அவளுக்குப் பூமாலையுடன் அணிவித்து அவளை உரிமையாக்கிக் கொள்கிறான். குருக்கள் மணியடித்து மணமக்களுக்காக அருச்சனை செய்கிறார். பொங்கல் பிரசாதம் பெற்று மணமக்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வருகையில் அருணாசலத்தின் கண்களிலிருந்து நீரருவி பெருகுகிறது. புட்டும் பயற்றங் கஞ்சியும், பழமும் பப்படமுமாக மாமி அவர்களுக்குக் காலை விருந்தளிக்கிறாள்.

மாமியின் காலைக் கும்பிட்டுப் பணிகையில் புதிய தாலியை எடுத்துக் காட்டவில்லை. முனிசீஃப் வீட்டாச்சியை, இன்னும் தெரிந்தவர்களைக் கும்பிடுமுன் மாகாளியம்மன் கோயிலையும் வலம் வந்து பணிகின்றனர். பின்னர் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு தூத்துக்குடி பஸ் ஏறுகின்றனர்.

தெரு முனையில் இவர்கள் வருவதை வாயிலிலிருந்தே சரசி பார்த்து விடுகிறாள். "அக்கா வந்திற்று... அக்கா... அல்லாம் வந்திட்டாவ...!" என்று உள்ளே ஓடுகிறாள். சொக்கு வருகிறாள்; பவுனு வருகிறாள். சொக்குவின் புருசன் கூட எழுந்து நிற்கிறான்.

செங்கமலத்தாச்சி எங்கே?

"ஆச்சியில்ல சரசு?"

"ஆச்சிய, அந்தப் பெரிய கணக்கவுள்ள ரிச்சாவில கூட்டிட்டுப் போனாவ!"

பொன்னாச்சி கேள்விக் குறியுடன் அவள் முகத்தைப் பார்க்கிறாள்.

"பெரி... முதலாளிக்கு ரொம்ப ஒடம்பு சாஸ்தியாயிருக்குன்னு கூட்டிப் போனா. படுத்த படுக்கையா இருக்காவளா..." என்று மெல்லிய குரலில் சாடையாகச் சேதி தெரிவிக்கிறாள் சொக்கு.

பொன்னாச்சி சட்டென்று நினைவு வந்தவளாகச் சொக்குவையும், அவள் புருசனையும் அடி தொட்டுப் பணிகிறாள்.

அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி; பவுனுவும் சொக்குவும் குலவையிட்டு வாழ்த்துகின்றனர். இலைகளில் இட்டிலியுடன் சீனியும் சட்னியும் வைத்து அவளுக்கும் ராமசாமிக்கும் உண்ணக் கொடுக்கிறாள் சொக்கு.

"நாங்க அங்கேயே உண்டாச்சு. இப்ப வாணாம்..." என்றால் அவள் விடுகிறாளா?

"இருக்கட்டும்... உண்டுக்கடீ... உங்கப்பா, ஆயி, சின்னம்மா, ஆருமே பாக்க இல்லாம போயிட்டாவ..." என்று கண் கலங்குகிறாள். சிவந்தகனி பழமும் கலரும் வாங்கிக் கொண்டு ஓடி வருகிறான். சிவந்தகனியின் பெண்சாதி அவள் புடவையைத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறாள். குழந்தை பழத்துக்குக் கை நீட்டுவதை விலக்கிக் கொண்டு அவளுக்கு இலையில் பழத்தை வைக்கிறாள். சேவு பொட்டலத்தை அவிழ்த்து வைக்கிறாள். "அக்காவுக்கு ரொம்ப ஆசை... கலர் குடிச்சிக்கும் மாப்பிள! பொன்னாச்சி! கலர் குடிச்சிக்க...!" என்று சிவந்தகனி உபசரிக்கிறான்.

"என்னத்துக்கு இப்படிச் செலவு பண்ணுறிய?" என்று பொன்னாச்சி கடிந்து கொள்கிறாள். "சரசி! கிளாசெடுத்திட்டு வா!"

"இருக்கட்டும். கலியாணம் கட்டி வாரவங்களுக்கி ஒரு விருந்தாக்கிப் போட இல்லாத போயிட்டம். நீங்க ஆருக்கும் குடுக்க வாணா. நா அவியளுக்கு வேற வாங்கிக் குடுப்ப..."

இந்த அன்புப் பொழிவில் திளைத்த பின் ராமசாமி அவளைத் தன் குடிலுக்கு அழைத்துச் செல்கிறான். மாலை மயங்கும் அந்த நேரத்தில் வீடு திரும்பும் அனைவரும் அந்த மணமக்களைப் பார்த்து வியந்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கூந்தலில் தாழையும் மருவும் மணக்க, தன் மகனுடன் வந்து அடி தொட்டுப் பணியும் பெண்ணைக் கண்டு தாய் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள். சிறிது நேரம் பேச்சே எழவில்லை. பிறகு அவன் முகத்தை அவள் கை தடவுகிறது.

"ஏ ராசா...!..."

கண்களில் ஒளி துளும்புகிறது.

"அம்மா, இவ தா ஒம் மருமவ... பொன்னாச்சி."

தாய் அவளுடைய கழுத்திலுள்ள மஞ்சட் சரட்டைக் கையிலெடுத்துப் பார்க்கிறாள். வெறும் மஞ்சள் சரடு. ஒரு குன்றிமணி பொன்னில்லை.

"இம்புட்டு நா வேல செஞ்சே! அளத்து மொதலாளி கலியாணத்துக்கு ஒண்ணுமே இல்லேன்னுட்டாவளா? ஒரு மிஞ்சி தங்கமில்ல."

"அம்மா இவ பேரே பொன்னாச்சிதா! அம்புட்டும் தங்கம்!" அவனுடைய நகைச்சுவைப் பேச்சு அவளுக்கு ரசிக்கத்தானில்லை. பொன்னாசிக்கோ, பாயசத் துரும்பாய் நினைவுப் பிசிறுகள் நெஞ்சில் தைக்கின்றன.

இரவு, பாய் தலையணையை உள்ளே வைத்துவிட்டு, தாய், தனது துணி விரிப்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்து விடுகிறாள். அந்தச் சோபன இரவில், பொன்னாச்சி கண்ணீர் தோய்ந்த பனி மலர் போல் விலகி நின்று அவனைப் பணிகிறாள்.

"என்னவுள்ள இது?"

"நீங்க பொறவு மனக்கிலேசப் படக்கூடாது. தாலியத் தங்கபாண்டி எடுத்திட்டுப் போனா. ஒங்கக்குத் தெரியும். அவெ தாலியத்தா கொண்டு போனா. என் ராச நா எப்படிச் சொல்லுவே ஒங்ககிட்ட."

ராமசாமிக்கு இதையெல்லாம் கேட்கப் பொறுமையில்லை.

"நீ ஒண்ணுஞ் சொல்லாண்டா. சொல்லவுடமாட்ட..."

அவள் கை அவனைத் தடுத்து நிறுத்துகிறது. அவன் திகைத்துப் போகிறான்.

"நா அன்னியே ஒங்ககிட்டச் சொன்ன; அந்தக் கிழக்கில உதிப்பவஞ் சாட்சியா என் அந்தராத்மாவுல துளி அழுக்கு கெடயாது. ஆனா, பாத்திக்கட்டுச் சேறு எம்மேல பட்டிரிச்சு!..."

"அட, சே, இந்த நேரத்துல இத்தையெல்லாஞ் சொல்லிட்டு? அந்த நாச்சப்பமூஞ்சில அன்னைக்கே குடுத்தனே?"

"நாச்சப்ப இல்ல. அவனை நா சமாளிச்சிட்ட. அந்தச் சோலப் பய குடிச்சிட்டு தேரிக் காட்டு இருட்டில.." அவள் தேம்பித் தேம்பி அழுகிறாள்.

ஒரு கணம் பருக்கைக் கல் குத்திவிட்டாற் போன்று ராமசாமி திடுக்கிட்டுப் போகிறான். ஆனால் மறுகணம் அவன் வென்று விடுகிறான்.

பொன்னாச்சியின் கண்ணீர் கரிப்பில் உதடுகள் அழுந்துகின்றன.

"நீ பொன்னு... தங்கம். எந்தச் சேறும் ஒம் மேல ஒட்டாது. நீ தங்கம்..."

அந்தக் கரிப்பு ஈரேழு உலகங்களிலும் கிடைக்காத இனிமையாக இருக்கிறது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
23

செங்கமலத்தாச்சி நிறையப் பன ஓலை சேகரித்து முன்னறை முழுவதும் அடைத்து இருக்கிறாள்.

சரசி அவள் உள்நோக்கைப் புரிந்து கொண்டு விட்டாற் போல் தோன்றும்படி வெடுக்கென்று கேட்கிறது. "ஆச்சி! அவியல்லாம் அளத்துக்குப் போகாம மொடங்கிட்டா, பொட்டி செலவிருக்குமா? ஆரு வாங்குவா?" அந்தச் சிறுமியை ஆச்சி உறுத்துப் பார்க்கிறாள்.

பதினைந்து ரூபாய்க்கு வாங்கி வந்து விட்டேன் என்று பெருமிதத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாளே? அட... இந்தப் பொடிசிக்குப் போன புத்தி எனக்குப் போகலியே? உப்பளத்து வேலை ஓய்ந்து விட்டால் ஓலைப் பொட்டிக்கு ஏது அவ்வளவு கிராக்கி? ஆனால் அளத்து வேலை அப்படி ஓய்ந்து விடுமா?... ஒன்றுமில்லாமல் ஓய்ந்து விடலாமா?...

"பொன்னாச்சி என்னேயா ட்டீ?"

கத்தியை எடுத்து ஓலையை வாகாக்கிக் கொண்டு ஆச்சி கேட்கிறாள்.

"கூட்டிட்டு வாரட்டுமா ஆச்சி?"

"கூப்பிடு...!"

சற்றைக்கெல்லாம் புதிய தாலி துலங்க, பளிச்சென்று முகத்தில் திருநீறும் குங்குமமுமாக, ஈரக்கூந்தல் முடிப்புடன் அவள் வருகிறாள்.

"சாமான மெல்லாம் வாங்கியிருக்கா... ட்டீ?"

அவள் தயங்கி நிற்கிறாள்.

"நாளக்கிலேந்து வேலயில்ல. தெரியுமில்ல?"

"தெரியும் ஆச்சி?"

"ராமசாமி ஆத்தாள இங்க கூட்டியாரன்னு சொன்னானா? அங்க வேற எதுக்கு வாடவை?"

"வார முன்னா..."

"சரி, பச்சையைக் கூட்டிட்டுப் போயி, அரிசியும் வெறவும் வாங்கி வச்சிக்க. பொறவு எப்பிடி இருக்குமோ?..."

அவள் தன் சுருக்குப் பையைத் திறந்து ஐம்பது ரூபாய் எடுத்துக் கொடுக்கிறாள்.

இந்த ஆச்சி பத்துக் காசுக்கு ஒவ்வொரு சமயம் கணக்குப் பார்ப்பாள். செம்போ லோட்டாவோ கொண்டு வந்து வைத்து விட்டு முடைக்குப் பணம் பெற்றுச் செல்லும் கூலிக்காரரிடம் வட்டி முனை முறியாமல் வாங்கி விடுவாள். ஆச்சி இப்போது கொஞ்ச நாட்களாகப் பைசா கணக்கை விட்டு விட்டு இப்படி வந்தவருக்கெல்லாம் செலவழிக்கிறாள்.

பச்சையையும் பாஞ்சாலியையும் சாமானுக்கு அனுப்பிவிட்டு அவள் அடுப்பை மூட்டிப் பானையைக் கழுவி உலை போடுகிறாள். பொழுது உச்சிக்கு ஏறுகிறது. அவள் அரிசியைக் கழுவுகையில் "இங்க இருந்துக்க!" என்ற குரல் கேட்டு வெளியே வருகிறாள்.

மகன் தாயைக் கொண்டு வந்து அமர்த்துகிறான்.

வெள்ளம் தலைக்கு மேல் செல்வது போலும், தான் ஓட்டைப் படகில் தொத்திக் கொண்டிருப்பது போலும் பீதி நிறைந்த முகத்துடன் அந்த அம்மை அவளைப் பார்க்கிறாள்.

சில தட்டுமுட்டுக்கள், துணி மூட்டை, சைக்கிளில் வைத்துக் கட்டி வந்திருக்கிறான். முற்றத்தில் மரியானந்தம் சைக்கிளுடன் நிற்கிறான்.

"ஆச்சி...? நீங்க சொன்னாப்பில செஞ்சிட்ட..."

"பேச்சு வார்த்தை என்ன ஆச்சி?"

"தனபாண்டியன், அகுஸ்தின், செல்லையா எல்லா கட்சிக்காரரும் பேசுறாவ. பனஞ்சோல அளத்துள நடக்காதுன்னு சொல்றா. ஆச்சி, நாங் கேள்விப்பட்டது நிசமா?"

"என்ன கேள்விப்பட்ட?"

"ஒங்களப் பெரி கணக்கவுள்ள வந்து கூட்டிட்டுப் போனாவளாம். ஏ அவியள்ளாம் தூண்டிக் குடுக்கேன்னு கேட்டாவளாம்..."

"கேட்டாக. நா ஆரு அவியளத் தூண்டிக் குடுக்க? கும்பி காஞ்சு, குலை எரிஞ்சா தானே அதிகமா புகையிதுன்னே... 'என்னடி அதிக்கிரமா பேசுத? மரியாதிய நடக்க'ண்ணா. நீ முதல்ல மரியாதிய நடண்ணே..."

"பெரிய முதலாளிட்டியா?"

ஆச்சி தலைநிமிராமல் "ஆமாம்" என்று தலையாட்டுகிறாள். "ஒடனே இந்த ஆண்டி என்னக் கூட்டிட்டு வெளீ ரூம்புல வந்து பயமுறுத்தினா. 'நீ என்ன நினைச்சிட்டு அவியள இப்பிடிப் பேசின? அவிய வயசு காலத்துல ரொம்பக் கிலேசப்பட்டு ஒன்னப் பாத்துப் பேசணுமின்னு பெருந்தன்மையாக் கூட்டு விட்டா, நீ மட்டு மரியாதியில்லாம நடக்கே! அவவ நிலமய நினைச்சிப் பேசணும்'ன்னா. 'எனக்குத் தெரியும். என்னேவிய? போலீசுல புடிச்சிக் குடுப்பிய. ஆள் வச்சி அடிப்பிய, அம்பிட்டுதான?'ன்ன. எனக்கு இனி என்ன பயமிருக்கி?"

"'நீ அநாசியமாப் பேசுத. ஒனக்கு வூடு பணம் ஒதுக்கியிருக்கு. இப்ப வேணுன்னாலும் ஆயிரம் ஒதுக்கிறமுன்னா முதலாளி. பேசாம வாங்கிட்டு ஒதுங்கிப் போ. இந்தத் தலத்தெறிப்பு பயகளைச் சேத்துட்டு வம்புல எறங்காத, ஆமாம்...'ன்னு பயங்காட்டினா."

"எனக்குப் பணம் வாணா. ஒங்க அந்தூராத்துமாவத் தொட்டுப் பாத்துப் பேசும். ஒங்கக்கு உப்பச் சுரண்டிக் குடுக்க ஒழக்கிற பொண்டுவளையும் ஆம்பிளகளையும் புள்ளகளயும் நீங்க குளிரும்படி வச்சிருக்கல. ஒங்ககிட்ட பணமிருக்கி, அந்த வலத்துல போலிசைக் கையில போட்டுக்குவிய, ஏ, சாமியையே கையில போட்டுக்குவிய; ஆனா நீங்க பண்ண பாவம் ஒங்கள சும்மா விட்டிராது'ன்னு சொல்லிவிட்டு மடமடன்னு எறங்கி வந்திட்ட..."

ராமசாமி வியப்பினால் சிலையாகி நிற்கிறான். அவன் கண்களில் முத்தொளி மின்னுகிறது.

"ஆச்சி! ஒங்களுக்கு நாங்க ரொம்ப ரொம்பக் கடமப் பட்டிருக்கிறம். ஒங்க 'சப்போட்டு'தா எங்களுக்கு இப்ப தயிரியத்தையே குடுத்திருக்கு. என்ன வந்தாலும் ரெண்டில ஒண்ணுன்னு துணிஞ்சி நிக்கோம்..."

பொன்னாச்சி முற்றத்தில் நின்று சன்னல் வழியாக அவன் அவளைக் கூப்பிடுவதைப் பார்க்கிறாள். அவர்கள் சென்ற பின்னர், ஒரு கலியாண வீட்டின் பரபரப்போடு அவள் வீட்டுப் பணிகளில் இறங்குகிறாள். சோற்றை வடித்து முதலில் அவன் அன்னைக்கு வட்டிக்கிறாள்.

"கஞ்சியில் உப்பு போட்டுக் கொண்டாட்டி. இப்ப அது போதும்..." என்று கூறுகிறாள் முதியவள்.

பச்சை விறகு வாங்கி வருகிறான். பாஞ்சாலி பெட்டியில் சுமந்து வந்த அரிசியை அந்த அம்மை கொட்டிப் புடைத்துச் சீராக எடுத்து வைக்கிறாள். குழந்தைகள் அனைவரையும் குளிக்கச் செய்து துணி கசக்கி, சோறு போட்டுக் கடையெல்லாம் ஓய்ந்த போது வெயில் சுவரின் மேல் ஓடி விட்டது.

ராமசாமி வருகிறானோ என்று அவள் வாயிலில் எட்டி எட்டிப் பார்க்கிறாள்.

திமுதிமுவென்று சிவந்தகனியும் இன்னும் நாலைந்து பேரும் சில தடிகளை மூங்கில் கம்புகளைத் தூக்கிக் கொண்டு வந்து நுழைகின்றனர்.

"இதெல்லா என்ன?"

ஒருவன் அரிவாள் வைத்திருக்கிறான்.

"யார்ல அது?..." என்று ஆச்சி வெளியே வருகிறாள்.

"நாங்கதா ஆச்சி... இதெல்லா இங்க வச்சிருக்கம்..."

"ராமசாமி வரானா?"

"இல்ல. ஆனா நாளேலேந்து வேலக்கி போவ இல்ல... மொத்த அளக்காரரும் வந்தது வரதுன்னிருக்கம். இதபாறம், பனஞ்சோல அளத்து டைவர் சோலை தெரியுமில்ல?"

பொன்னாச்சி திடுக்கிட்டுப் பார்க்கிறாள். ஆம். சோலை தான்! "பொன்னாச்சி! சொவமா? நானும் சேந்திருக்க. பனஞ்சோல அளத்துல எல்லாத் தொழிலாளியளும் சேர்ந்திருக்கா!"

"உசிரைக் குடுத்திட்டு நீருல முழுகிக் குழாமாட்டுவே. நாளக்கு, ஆறு ரூவா கூலின்னு சொல்லிட்டு ரெண்டு ரூவாக் கணக்கு சரக்குக்குன்னு புடிச்சிக்கிடுவா கணக்கவுள்ள. எனக்கு சொதந்தர நா, மே தினத்துக்குக் கூட லீவுள்ள. இதெல்லா ராமசாமி சொன்ன பொறவுதா தெரிஞ்சிச்சி. என்ன எம்புட்டு நாளா ஏமாத்திட்டிருக்காவ!"

பொன்னாச்சி சிலையாகிறாள்.


"அருவால்லாங் கொண்டிட்டு வந்தியளா? அல்லாம் இங்ஙனமும் இருக்கட்டும்! என்னக் கேக்காம ஆரும் தொடாதிய! பொறவு, வம்பு தும்பு ஒங்களால வந்ததுன்னா, அம்புட்டும் வீணாயிரும். அளத்து வாசல்ல நின்று ஆரும் சோலிக்குப் போவாம பாத்துக்கும்..."

ஒரு கட்டுக்குள் சீராக அடக்கி வைப்பது எவ்வளவு பெரிய செயல்? மாலை தேய்ந்து இருள் பரவுகிறது. மீண்டுமொரு முறை சோறுண்ண நேரம் வந்துவிட்டது. சுற்றிச் சுற்றி வந்த சிறுவர்களும் பச்சையும் திண்ணையில் படுத்ததும் உறங்கிப் போகின்றனர். கிழவி படியிலேயே உட்கார்ந்திருக்கிறாள்.

பொன்னாச்சிக்கு மனம் அலைபாய்கிறது.

"ஏட்டி? நீ சோறு தின்னிட்டுக் கதவைப் போட்டுட்டுப் படுடீ! அவெ வருவா, நாலிடம் போவா - வேலையவுட்டு நிக்கிறமின்னா லேசா? பணம் பிரிப்பா... போ! வந்தா கதவத் தட்டுவா, நா இங்ஙனதான இருக்க. ஒறங்க மாட்ட..."

பொன்னாச்சிக்குப் படுத்தால் உறக்கம் பிடித்தால் தானே?

வெகு நேரம் அதையும் இதையும் எண்ணி மனம் அலைபாய்கிறது. பிறகு எழுந்து சென்று பானைச் சோற்றில் நீரூற்றி வைக்கிறாள்.

"ஆச்சி, உள்ள வந்து ஒறங்குறியளா?"

அந்தத் தாய் மறுத்து வாயிற்படியிலேயே சுருண்டு கொள்கிறாள். முற்றத்தில் நின்று வானைப் பார்க்கையில், அங்கு கோடி கோடியாகச் சுடர்கள் இரைந்து கிடக்கின்றன.

மணி என்ன ஆயிருக்கும் என்று தெரியவில்லை. சொக்கு புருசன் எழுந்து உட்கார்ந்து இருமுகிறான். அவள் உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொள்கிறாள்.

உறக்கம் வந்தது தெரியவில்லை. தங்கபாண்டி மஞ்சள் மஞ்சளாகப் பழக்குலையும் கையில் பிடித்து வருவது போல் ஒரு கனவு. சின்னம்மா பழத்தைப் பிய்த்துச் சிரித்துக் கொண்டு அப்பச்சியிடம் கொடுக்கிறாள். நிசம் போலிருக்கிறது. சட்டென்று விழித்துக் கொள்கிறாள். எங்கோ கோழி கூவுகிறது. ஆளரவம் கேட்பது போலிருக்கிறது. அவள் கதவைத் திறக்கிறாள். இரண்டு வலிய கரங்கள் அவளை வளைக்கின்றன. "வுடும்... வுடும்... ஆச்சி, புள்ளயள்ளாம் முழிச்சிடுவாக..." என்று கிசுகிசுக்கிறாள் அவள்.

அவள் கதவை மெல்லத் தாழிடுகிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
24
திங்கட்கிழமை காலையில் சாரி சாரியாக உப்பளக்காரர் தெருக்களில் செல்லவில்லை. கையில் அலுமினியத் தூக்குப் பாத்திரமும், பொங்கிப் பீளை சார்ந்த கண்களும் தலைக் கொட்டைச் சுருட்டுமாகப் பெண்களும் சிறுவர் சிறுமியரும், அடிமிதித்துச் சாலையின் பொடி யெழுப்பவில்லை. கோல்டன் புரம், கிரசன்ட் நகர், ஆகிய எல்லாத் தொழிலாளர் குடியிருப்புக்களிலும் ஆண்களும் பெண்களும் வீடுகளில் கூடி நின்று வானில் மேகங்கள் கூடுவதைப் பார்த்துப் பேசுகின்றனர். சிறுவர் சிறுமியர் வேலையில்லை என்று தெருக்களில் விளையாடுகின்றனர்.

அருணாசலம் முதல் பஸ்ஸுக்கே வந்து இறங்குகிறார்.

"வாரும்!" என்று செங்கமலத்தாச்சி வரவேற்கிறாள்.

"வழியெல்லாம் போலீசப் பாத்த. என்னமோ காதுல விழுந்திச்சி. ஆரோ தலைவரைப் போலீசி பிடிச்சில உள்ள கொண்டிட்டுப் போயிட்டான்னா. ராமசாமி வந்தானா?"

"விடியக்காலம வந்திற்றுப் போனா பாத்த..."

பொன்னாச்சி முற்றம் பெருக்குபவள், பேச்சுக் குரல் கேட்டு ஓடி வருகிறாள்.

"என்ன சொல்றிய மாமா? போலீசுல ஆரப் புடிச்சிட்டுப் போனாவ?"

"பொன்னாச்சியா? எப்பிடிம்மா இருக்கே? ஒம்மாமியா எங்கேருக்கா?"

"இங்கதா. அவிய காலப் புடிச்சிட்டுப் போவாதேன்னு அழுதாவ. என்னயும் ஏசிட்டிருக்கி... மாமா. ஆரப் போலீசில புடிச்சிப் போனா?"

"தெரியலம்மா, சொல்லிக்கிட்டா பஸ்ஸில. இது வழக்கம் தான? நா இங்க வருமுன்ன மூணா நெம்பர், நாலா நெம்பர் தெரு வழியாத்தா வர்றே. எந்த அளத்துககாரரும் வேலய்க்குப் போவல. இன்னிக்கு மானம் கறுத்திருக்கு. இப்ப மழை வந்தா, வாரின உப்பக் காவந்து பண்ணல, முடை போடலன்னா நட்டமாயிடும். மொதலாளி மாரு எறங்கி வருவா. ஒரே வழி தா. ஆனா, கூலிய வாணா பத்து பைசா ஏத்துவானே ஒழிய, ஒரு தொழிலாளிக்குச் சட்டப்படி கொடுக்க வேண்டிய சலுகை, வசதியெல்லாம் குடுப்பானா? இத்தனை நாளக்கி லீவுன்னு பட்டியல் போட்டு இனிஸிபெக்டரிட்டக் காட்டுவானுவ. ஆனா சொதந்தர நாளுக்கும் மே நாளுக்கும் கூட சில அளங்களில் லீவு கிடையாது கூலியோட. இத்தினி நா ருசி கண்டவுக இப்ப திடீர்னு எல்லாம் விட்டுக் கொடுப்பாகளா? எத்தினி நா குஞ்சும் குழந்தையுமா பட்டினி கிடப்பாக?"

செங்கமலத்தாச்சி பேசவேயில்லை.

மாமன் முன்பு இவ்வாறு வேலை நிறுத்தம் செய்த கதைகளைப் பற்றி பேசுகிறார்.

லாரி அளத்துக்குள்ளார வரக்கூடாது. தொழிலாளிகளே சுமந்து வந்து ஏற்ற வேண்டும். அதனால் அவர்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும் என்று வாதிட்ட தொழிலாளர் தலைவனை எப்படிக் கொன்று விட்டார்கள் என்று விவரம் கூறுகிறார்.

திடீரென்று செங்கமலத்தாச்சி பட்டாசு சீறுவது போல வெடிக்கிறாள்.

"ஒமக்கு அறிவிருக்காவே?"

அந்தக் குரலில் அவர் நடுங்கிப் போகிறார்.

"கொல்லுற கதையப் போயி இப்ப சொல்லுறீம்! நாயமா இருக்கற எதையும் வேரோட கெல்லிற ஏலாது தெரிஞ்சிக்கும்! ஒரு புல்லுக்கூட எடுக்க எடுக்க முளைக்கிது. அந்தவுள்ள கண்ணுல வுசுர வச்சிட்டுப் பாத்திட்டிருக்கி, ஒமக்கு வயசானதுக்கு தயிரியம் சொல்லணும்னு தெரியாண்ட?"

மாமன் பாவம், உமிழ்நீரை விழுங்கிக் கொள்கிறார். "தப்புத்தான், தப்புத்தான். என்னமோ சொல்ல வந்து நெதானமில்லாம பேசிட்ட, மன்னிச்சிக்கும்..."

ஓடி வந்த ஆறு அணை கண்டு முட்டினாற் போன்று திகைத்துப் போகிறார்.

"பேசத்தான் தெரியும். பேசிட்டே இருப்பிய; எல்லாம் பேசுறான். படிச்சிவ, படியாதவ, தெரிஞ்சவ, தெரியாதவ, ஆம்புள, பொம்புள அல்லாம் பேசுறாவ. சினிமால, ரேடியோல தெருவில, கடயில பேச்சு பேசிய ஏமாத்துரானுவ; பேசியே ஏமாந்தும் போறம். செத்துப் போனவப் பத்தி இப்ப என்ன பேச்சு? இருக்கிறவகளப் பத்தி இல்ல இப்ப நினப்பு?"

'செவத்தாச்சி' என்று குறிப்பிடும் செங்கமலமா? புருசனை விட்ட, தரங்கெட்டுப் போன, மகனைப் பறிகொடுத்த ஒரு பெண் பிள்ளையா?

"நாயம் அம்மா. ஒங்களுக்குத் தெரிஞ்சது எனக்குத் தெரியாமப் போச்சி, மன்னிச்சிக்கும்..." என்று நெஞ்சம் தழுதழுக்க அவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

"என்ன ஏங் கும்பிடுறிய? இரியும். பொன்னாச்சி, பானையவச்சி கொஞ்சம் கூடவே போட்டு வடிச்சி வையி. ஒரு குளம்பும் காச்சி வையி. ஆரும் பசி பட்டினின்னு வருவா..." என்று கட்டளை இடுகிறாள்.

பகல் தேய்ந்து மாலையாகிறது. மாமன் சாப்பிட்டு விட்டு வெளியே செல்கிறார். வளைவே கொல்லென்று கிடக்கிறது. ஆச்சி பெட்டி முடைகிறாள். சொக்கு மாவாட்டுகிறாள். பொன்னாச்சி தண்ணீரெடுத்து விட்டு வேலை முடித்து விட்டாள். வெளிக்கு இயங்கிக் கொண்டிருந்தாலும் உள்ளத்தில் கருக்கரிவாளின் கூர்முனை ஊசலாடுவது போல் ஓர் அச்சம் நிலைகுலைக்கிறது. வேலை முடக்கம் ஒரு நாள் இரண்டு நாளுடன் முடியுமா?

"அக்கா!... அக்கா!" என்று பச்சை ஓடி வருகிறான்.

"எல்லோரும் ஊர்கோலம் போறாக! வாங்க... எல்லாரும் அங்க நின்னு பாக்கறாங்க...!"

நல்லகண்ணு, சொக்குவின் பையன், மருது, பாஞ்சாலி, சரசி எல்லோரும் தெருவில் ஓடுகின்றனர். அவளும் கூட ஆவலுடன் தொழிமுனைக்குச் செல்கிறாள். அவளுடைய நாயகன் செல்வதைப் பார்க்கத்தான்!

"உப்பளத் தொழிலாளர் சங்கம் வாழ்க! எங்களுக்கு நியாயம் வேண்டும்! எங்களை ஆளைச் சட்டத்துக்கு உட்பட்ட பதிவுத் தொழிலாளியாக்குங்கள்! நீதி கொல்லாதீர்! ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவேலை சமக்கூலி..."

கோஷங்கள் காற்றிலே மிதந்து வந்து செவிகளில் அலை அலையாக விழுகின்றன.

பச்சை, பாஞ்சாலி நல்லகண்ணு எல்லோரும் புரியாமலே 'ஜே' கோஷம் போடுகின்றனர். ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் முன்னேறி வருகிறது. காவல்துறையினர் முனையில் ஆங்காங்கு முதுகில் எதையோ சுமந்து கொண்டு நிற்பதை பொன்னாச்சி பார்க்கிறாள். கடலாய் அந்தக் கூட்டம் தெருவை நெருக்கியடித்துக் கொண்டு வருகிறது. அந்தப் பெருங்களத்தில் பூத்த பல வண்ண மலர்கள் போல் வண்ணக் கொடிகள்... மிகுதியும் செவ்வண்ணக் கோலங்கள்...

கூட்டம் தெருவைக் கடக்குமுன் என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை. கோஷ அலைகள் சிதறுகின்றன. கற்கள் பாய்கின்றன. பச்சையின் நெற்றியில் ஒரு கூறிய கல் பாய்ந்து குருதிப் பொட்டிடுகிறது.

"எலே, பச்சை, வால... எல்லாம் வாங்க... வீட்டுக்குப் போவலாம்!" என்று பொன்னாச்சி கத்துகையில் காவல் துறையினர் கண்ணீர்க் குண்டுகள் வெடிக்கின்றனர். பீதியில் நடுநடுங்கிக் கூட்டம் சிதறுகிறது. பொன்னாச்சிக்கு கண்ணீர்க் குண்டைப் பற்றித் தெரியாது. கண்ணில் எரிய எரிய நீராய் வர, குழந்தைகளை அதட்டி இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வருகிறாள்.

"குண்டு போடுறாவ!"

"ஏலே, வால, போலீசு புடிச்சு அடிப்பாவ!" என்று தாய்மார் விவரம் அறியாத பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர்.

"அக்கா, மாமா கொடி புடிச்சிட்டுப் போனாவ, பாத்தியாக்கா...?" தன் கணவனைத் தான் மாமா என்று கூறுகிறான் என்பதைப் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள்.

"நிசமாலுமா! எனக்கு ஆரும் ஏதும் புரியல!" என்று கூறியவண்ணம் அவன் காயத்தில் அவள் மஞ்சளும் சுண்ணாம்பும் குழைத்து வைக்கிறாள். எரிச்சலுடன் பொருட்படுத்தாத கிளர்ச்சி அவனுக்கு.

"குண்டு வெடிச்சாங்களே, அது ஆரையும் சாவடிக்காதாம்! ஆனா கண்ணுல தண்ணியாக் கொட்டுது... எனக்குக் கூட அவிய கூடப் போவணும்னு ஆச, ஏக்கா இழுத்திட்டு வந்திட்ட?"

"வாணா வாணா, நீ போனா இந்தப் பொடியெல்லாம் போவும்..."

இந்த அமர்க்களங்கள் எதுவுமே தன் செவிகளில் விழாத மாதிரியில் ஆச்சி கருமமே கண்ணாகப் பெட்டி முடைந்து கொண்டிருக்கிறாள்.

நாட்கள் நகருகின்றன.

மாமனுக்கு இங்கு நிலைக்கவும் பொருந்தவில்லை. ஊரிலும் இருப்பாக இல்லை. தங்கபாண்டியிடம் சண்டை போட்டுத் தாலியைத் திரும்பப் பெறுகிறார். வாரி வைத்த உப்பை அவன் வண்டியிலேற்றிச் செல்கிறான்.

ராமசாமி எப்போதோ இருட்டில் கள்வனைப் போல் வருகிறான். அவசரமாகச் சோறுண்கிறான். "வட்டுக்காரர் அளத்துல ஒரு பயல உள்ளவுடுறதில்லன்னு மாமுண்டி நிக்கியா. பனஞ்சோல அளத்துல சோல தொழியத் தெறிந்து உப்பெல்லாம் கலாமுலான்னு ஆக்கிட்டானாம். பய போலீசு காவலுக்கு மீறி கடல்ல முக்குளிச்சிட்டே போயி மிசினத் தவராறு பண்ணிட்டேன்னா... வேலக்கிப் போவ பயந்திட்டே அல்லாம் நின்னிடுவாங்க. ஆனா, வெளியாளவுட்டா, தொலஞ்சம். அதுதா கட்டுக் கோப்பா இருக்கணும். இப்ப அந்தக் கட்சி இந்தக் கட்சி இல்ல. எல்லாரும் ஒரு கட்சி. நமக்கு ஒரு மனிசன்னு வேண்டிய தேவைகளுக்கு உரிமை வேணும்..."

கை கழுவ அவள் நீரெடுத்துக் கொடுக்கையில் சரட்டில் பொற்சின்னம் குலுங்குவதைப் பார்த்து விடுகிறான்.

"மாமா கொண்டாந்தா..."

இளமையின் தாபங்கள் கட்டவிழ்கின்றன.

"தயிரியமா இருவுள்ள; நம்ம பக்கம் நியாயம் இருக்கு. நா வார..." கதவைத் திறந்து அவனை வெளியே செல்ல விடுவது மிகக் கடினமாக இருக்கிறது.

எண்ணெய் விளக்கில் திரி மட்டுமே எரியத் தொடங்கும் நிலை. ஆச்சி வீட்டு முற்றத்தில் கடனுக்குப் பெண்கள் வந்து மொய்க்கின்றனர். ஆச்சி உள்ளே சென்று பெட்டியைத் திறந்து ஐந்து, பத்து என்று எடுத்துக் கொடுக்கிறாள்.

பச்சையின் நெற்றியில் அன்று கல்பட்ட காயம் வீங்கிச் சீழ்கோத்துக் கொள்கிறது. ஓலைப் பெட்டிகளைச் சந்தையில் கொண்டு போட்டுவிட்டு வந்து நெற்றியைப் பிடித்துக் கொண்டு உட்காருகிறான்.

ஆச்சி ஒரு ரூபாயை அவனிடம் எடுத்துக் கொடுத்து, "பெரியாசுபத்திரில போயி எதானும் மருந்து போட்டுட்டு வாலே?" என்று அனுப்புகிறாள்.

அன்று காலையில் வான் இருள மழை மணிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பொட்பொட்டென்று குதிக்கின்றன. பிறகு களிப்பும் கும்மாளமுமாகக் கதிரவனுடன் விளையாடிக் கொண்டு காய்ந்த மண் வெய்துயிர்க்கப் படபடவென்று பொழிகிறது. தட்டுமேட்டு அம்பாரங்களை இப்போது எந்தக் குஞ்சும் வந்து தொடலாகாது. வங்கிக்கு ஈடுகட்டிய குவைகள் கரைந்து விடக்கூடும். அவற்றை விற்று மூடைகளாக்க ஒரு ஈ காக்கை போகக் கூடாது.

தங்கள் போராட்டம் வெற்றிப் பாதையில் செல்லும் எக்களிப்புடன் அவர்கள் பசியையும் மறந்து களிக்கின்றனர்.

சிவந்தகனி அன்று மாலை நான்கு மணியளவில் மூச்சிரைக்க ஓடி வருகிறான்.

"பனஞ்சோல அளத்துல புது ஆள் கொண்டு லாரியோட உள்ளார போனாவளாம். ஒம்மாப்பிள, இன்னும் மொத்த பேரும் குறுக்க விழுந்து மரிச்சாவளாம். அடிதடியாம். மாப்பிளயைப் புடிச்சிட்டுப் போயிட்டாவளாம்...!"

அவனுக்கு மூச்சிறைக்கிறது.

அப்போது செங்கமலத்தாச்சி பூமி வெடித்துக் கிளம்பும் கொழுந்து போல் வெளியே வருகிறாள்.

"என்னலே?"

"பனஞ்சோல அளத்துல, லாரியோட ஆள் கொண்டு வந்திருக்கானுவ..."

அவள் முடி பிரிந்து விழுகிறது. "லாரியோட, ஆள் கொண்டு வாராகளாமா?..."

ஒரு கணம் அவள் சக்தியைத் திரட்டிக் கொள்வது போல் நிச்சலனமாக நிற்கிறாள். மறுகணம் இடுப்பிலிருக்கும் சாவியைக் கையில் எடுக்கிறாள்.

"ஏட்டி, பொன்னாச்சி? ந்தா... சாவியப் புடிடீ...! எல்லாம் பதனமாப் பாத்துக்க!" என்று முற்றத்தில் போட்டிருக்கும் கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே பாய்கிறாள்.

கண்மூடிக் கண் திறக்கும் வேகத்தில் நடக்கிறது. சாவியைப் பொன்னாச்சி பெற்றுக் கொண்டு நிமிர்வதற்குள் அவள் ஓடி விட்டாள்.

ராமசாமியின் அன்னை, என்ன நடக்கிறதென்று புரியாமலே ஓர் தனி உலகத்திலிருந்து யாரையோ வசை பாடத் தொடங்குகிறாள். ஆனால் அவள் அந்தத் தெருவில் நீண்ட கழியுடன் ஓடும் காட்சி, வறண்ட பொட்டலில் தீக்கொழுந்து போல் ஓர் மாங்கன்று துளிர்ந்தாற் போன்று அந்நியமாகத் தெரிகிறது. அவள் ஓடும் போது அள்ளிச் செருகிய முடி அவிழ்ந்து பறக்கிறது. தெருவில் சாதாரணமாகச் செல்லும் சைகிள்காரர், குடும்பக்காரர், கடைக்காரர் எல்லோரும் சட்டென்று திரும்பி நிதானித்துப் பார்க்கு முன் அவள் தெருத் திரும்பி விடுகிறாள்.

குப்பை மேடும் முட்செடிகளுமான இடத்தின் ஒற்றையடிப் பாதையில் அவள் புகுந்து விரைகிறாள். ஆங்காங்கு மண்ணில் ஓரமாக விளையாடும் சிறுவர் சிறுமியர் அவளை நின்று பார்க்கின்றனர்.

"ஐயா! எல்லாம் வாரும்! எல்லாம் வாருங்க! பனஞ்சோல அளத்துல ஆளுவளக் கொண்டிட்டு வாராவளாம்! வாங்க! அளத்துக்காரவுக வாங்க!"

அவள் உப்புத் தொழிலாளருக்குக் குரல் கொடுத்துக் கொண்டு ஓடுகிறாள். ஒரு தீப்பந்தம் புயற்காற்றுச் சூறாவளியில் பறந்து செல்வது போல் மணல் தேரியில் கம்பும் கையுமாக ஓடுகிறாள்.

"அளத்துப் பொண்டுவள்ளம் வாங்க! வாங்கட்டீ!" டீக்கடைப் பக்கம் சில இளைஞர் நிற்கின்றனர். ஒருவன் கையில் 'டிரான்சிஸ்டர்' வைத்துக் கொண்டிருக்கிறான். எங்கோ நடக்கும் பாரதி விழா நிகழ்ச்சிகளை அது அஞ்சல் செய்து கொண்டிருக்கிறது. மாமா அருணாசலமும் அங்கேதான் உட்கார்ந்து இருக்கிறார்.

"அளத்துக்காரவுக வாரும்! அக்கிரமத்தத் தட்டிக் கேக்க வாரும்!"

சிவப்புச் சேலையும் கம்புமாக யார் குரல் கொடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்?

அந்தக் கூட்டம் தேரிக் காட்டில் அவளைத் தொடர, விரைந்து செல்கிறது. மணலில் கால் புதைய அவள் முன்னே ஓட்டமும் நடையுமாக போகிறாள்...

"ஆளுவளைக் கொண்டிட்டா வாரிய? வந்தது, வாரது ரெண்டில ஒண்ணு. பொறுத்திருக்கும் பூமி தேவியும் வெடிச்சிடுவால...! நாசகாலம் ஒங்கக்கா, எங்கக்கான்னு பாத்திடுவம்! நா கற்பு பெசகிட்டேன்னு சாபம் போட்டு மவன விட்டு ஆத்தாள வெட்டச் சொன்னா. அந்த ஆத்தாதா ஆங்காரத் தெய்வமானா, ஆங்காரத் தெய்வம்! எலே வாங்க! பனஞ்சோல அளத்துல ஆளெடுக்கிறாவளாம்! தடுக்க வாங்க!... வாங்க..."

அந்த ஒலியைக் காற்று மணல் வெளியெங்கும் பரப்புகிறது. அருணாசலம் அங்கேயே நிற்கிறார். உடல் புல்லரிக்கிறது.

பாண்டியன் அவையில் நியாயம் கேட்கச் சென்ற கண்ணகியோ? பாரதியின் பாஞ்சாலி இவள் தானோ? இந்த அம்மை, இவள் யார்? ஆண்டாண்டு காலமாக வெறும் பாவைகளாக, பூச்சிகளாக அழுந்தி இயலாமையின் சின்னங்களாக இருந்த சக்தியின் ஆவேச எழுச்சியோ?

"ஏய்? யாருலே? அளத்துல தொழிலாளியளுக்கு எதிரா ஆள கொண்டு வாராகளாம்! வாங்கலே, வந்து தடுப்போம் வாங்க?"

மாமனின் உள்ளத்திலிருந்து கிளர்ந்து வரும் ஒலி பாறையின் இடையே பீச்சும் ஊற்றுப் போல் ஒலிக்கிறது.

பனமரங்களும், முட்புதர்களும் நிறைந்த பரந்த மணற் காட்டில் அந்தக் கூட்டம் விரைந்து செல்கிறது.

முற்றும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top