இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். லேப்டாப்பில் எதையோ பார்த்தபடி ஹாலில் ரிஸ்வி அமர்ந்திருந்தான்.
“ தில்லு.... டீ கொண்டு வா....” என அவன் பணிக்க,
“ எங்களுக்கும்” என்றபடி அவன் எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள் ரிதா.
“ ம்க்கும்.... தோட்டத்தில ஜொள்ளு விட்டது போதாது னு இங்க வேறயா?” என மனதிற்குள் அலுத்து கொண்டவள்,“ எனக்கு டீ வேண்டாம். ரிதா குளிக்க போகணும் னு சொன்னேனில்ல” என கிசுகிசுத்தாள்.
“ ஒரு நிமிஷம் இரு சரா. மச்சான் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்” என்றவள்,” உன்னை பற்றி தான்” என்றாள் ரகசியமாக.
“ என்னை பற்றியா? என்னை பற்றி எ.... என்ன கேட்கணும்?” என பயத்தில் மெதுவாக அலற
“ அடாடடடா... எதுக்குலா இப்படி பதறுற? முதல்ல இப்படி வந்து உட்காரு” என இழுக்க, முடியாது என சோபா பின்னாடியே நின்று கொண்டாள்.
“ மச்சான் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்”
இவர்கள் குசுகுசுவென பேசிக் கொள்வதை கவனித்து கொண்டிருந்தவன், “ சொல்லு ரிதா... ஒரு வழியா உன் ப்ரெண்ட் பேச பெர்மிஷன் கொடுத்துட்டாங்களா?” என்றான் சிரித்தபடி.
“ கொடுத்துட்டா” என பதிலுக்கு சிரித்தாள்.
“ பார்றா.... அவங்க சொன்னா தான் பேசுவியா?”
“ ஆமா” சற்றும் யோசிக்காமல் வந்தது பதில்.
“ அப்போ அவங்க என் கூட பேச கூடாது னு சொல்லிட்டா பேச மாட்டியா?” என்றான் ஆவலாக.
“ ம்ஹூம்.... பேச மாட்டேன்...”
“ அடிப்பாவி...”
“ ஆனா அவ அப்படி சொல்லமாட்டா....ஏன்னா... என் விருப்பத்துக்கு மாறா அவ எப்பவுமே பேச மாட்டா ” என பெருமிதமாக கூறியதும் மைசராவிற்கு தர்ம சங்கடமாக இருந்தது.
“ இவளிடம் எப்படி ரிஸ்வியை விட்டு விலக சொல்வது?” என விழித்தாள்.
“ ம்.... கிரேட்... குட் பிரண்ட்ஸ்ஷிப்”
“ ஓ.கே மச்சான்....விஷயத்துக்கு வருவோம். மைசரா ஃவேப்ரிக்ஸ் (துணி வகைகள்) பற்றி படிக்கணும் னு ஆசைபடுறா. அதுக்கு என்ன குரூப் எடுக்கலாம்?” என ஆலோசனை கேட்டாள்.
மைசராவை ஆச்சரியமாக பார்த்தவன்,” உங்களுக்கு எப்படி இந்த மாதிரி ஆசை வந்தது? உங்க வீட்டிலேயும் ஜவுளி பிசினஸ் தானா?” என கேட்க,மைசராவின் முறைப்பையும் மீறி கலகலவென சிரித்தாள் ரிதா.
“ பரம்பரை பழக்கம்” என காதை கடித்து தோழியிடமிருந்து ரகசியமாக ஒரு கிள்ளை வாங்கி கொண்டாள்.
குடிபோதையில் தன்னை முத்தமிட வந்தவன், தவறை அவன் செய்து விட்டு தன்னை அதட்டியவன், இப்போது எதுவுமே நடவாதது போல பேசுவதை கண்டு சராவுக்கு கோபம் கோபமாக வந்தது. ஆனாலும் அதை வெளி காட்டாமல்,
“ அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ஜஸ்ட் இன்ட்ரஸ்ட் தான்” என்றாள்.
“வெரி குட் இன்ட்ரஸ்ட்ங்க....அப்போ ப்யூசர்ல ஜவுளி கடை முதலாளி ஆக போறீங்க னு சொல்லுங்க” எனவும்
“ அவ ப்ளாஷ்பேக்லயே ஜவுளி கடை முதலாளி தான்” என நினைத்து கொண்டாள் ரிதா.
“ சரி.... உங்க காலேஜூல என்னென்ன கோர்ஸ் இருக்கு” என கேட்டான் ரிஸ்வி.
“ ம்.... ஒரு நிமிஷம் மச்சான்” என்றவள்,” சரா ... மேல என் ரூம்ல என்னோட லேப்டாப் இருக்கும். எடுத்துட்டு வாயேன்” என்றாள்.
மைசராவிற்கோ மீண்டும் அந்த அறைக்குள் செல்ல படுபயம். மாடியில் தெரியும் அறைகளை மிரட்சியோடு பார்த்தாள். அவளின் அரண்ட பார்வையை கண்ட ரிஸ்விக்கு சிரிப்பு வந்தது.
“ போங்க...” என ரிஸ்வி உந்த அவனை முறைத்தாள்.
அவளுக்கு மேலே செல்ல காலே எழும்பவில்லை. நல்லவேளையாக தில்லு டீ கொண்டு வர, “ சரா.... டீ வந்திடுச்சு. நீ டீ குடி. நான் எடுத்துட்டு வரேன்” என எழுந்தாள் ரிதா.
“ தில்லு..... அவ பெட்டி எல்லாம் மேலே கொண்டு வந்துடு” – ரிதா.
“ அப்பாடா” என சரா டீயை வாங்கி கொண்டு அமர்ந்துவிட்டாள். சிரிப்பை வாய்க்குள் அடக்கிய படி ரிஸ்வி சிரிக்க, அந்த வாயிலேயே குத்த வேண்டும் என தோன்றியது சராவுக்கு.
டீ குடித்த படி மாடிக்கு செல்லும் ரிதாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் மைசரா. மாடிபடியில் ஏறியவள் முதல் அறைக்குள் நுழைய குடித்த டீ புரை ஏறியது அவளுக்கு.
“ ஆச்சா... இரண்டாவது ரூம்முனு தானே சொன்னாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கே” என யோசித்து விழிகள் அறையையே வெறிக்க, இடது புறம் உள்ள ஒரு அறையிலிருந்து வெளியே வந்தான் ரமீஸ். அப்போது தான் மாடிபடியின் இடது புறம் ஒரு அறை இருப்பதையே கவனித்தாள் சரா. ஹாலில்லிருந்து பார்க்கும் போது வரிசையாக தெரிந்தது அறைகள். அப்படி பார்க்கும் போது மாடி படியின் இடது புறம் இருக்கும் ரமீஸின் அறையை முதல் அறை என்றும், வலது புறம் இருக்கும் அறைகளை இரண்டாவது, மூன்றாவது என்றும் வரிசை படுத்தலாம். தூக்க கலக்கத்தில் வந்த சரா இடது புறம் உள்ள அறையை கவனிக்கவேயில்லை.
“ அப்போ நாம தான் இவன் ரூமுல போய் படுத்துட்டோமா?” ஏற்கனவே விரிந்திருந்த விழிகள் இன்னும் விரிந்தது. நொடிக்கொரு உணர்ச்சியை காட்டும் அவளின் முகத்தை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தவன், தன்னுடைய அறையில் தான் அவள் படுத்திருந்தாள் என்பது அவளுக்கு புரிந்து விட்டது என்பதை உணர,
“ ஹா....ஹா...ஹா...” என வாய் விட்டு சிரித்தான் ரிஸ்வி.
மாடியிலிருந்து இறங்கி கொண்டிருந்த ரமீஸ்,” என்ன மாப்ள.... வீடே அதிர மாதிரி சிரிக்குற” என்றபடி வந்தான்.
“ அதுவா மச்சான்...” என மைசராவை பார்க்க, அவளுக்கோ படபடவென வந்தது. இப்போது தவறு அவள் மீதல்லவா? அவள் தானே அவனுடைய அறையில் போய் படுத்திருக்கிறாள்.
எங்கே சொல்லிவிடுவானோ என ஓரக்கண்ணால் பதட்டமாக பார்க்க,” FB ல ஒரு மீம் பார்த்தேன்” என மழுப்பிவிட்டதும் தான் உயிரே வந்தது.
அதற்கு மேல் அங்கே நிற்பாளா மைசரா? விடு விடு வென மாடிக்கு ஓட, அவளை பார்த்துக் கொண்டிருந்த ரிஸ்வியின் இதழ்கள் “ரொம்ப பயந்துட்டா முட்டகண்ணி” என முறுவலோடு முணுமுணுத்தது.
- மழை வரும்
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
பர்வீன்.மை