lakshmiperumal
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 4,840
- Reaction score
- 3,628
Nice ?
ரிஸ்வி பாவம்.உறவுகள் எந்த இடத்தில் புரிந்து கொள்ள தவறுகிறார்களோ ;அதன் பின்னர் நெருங்க முயற்சிக்க யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.சரா தான் இவ்விடத்தில் முயற்சி செய்ய வேண்டும்மழையை கொட்டும் வானிலையில், குளிர் பரவியிருக்கும் சூழ்நிலையில் அவன் மனம் வாதிட விரும்பவில்லை. அள்ளி பருக துடிக்கும் கைகளுக்கு தடை விதித்தவனால் கண்களுக்கு தடையிட முடியவில்லை.
பிறை நெற்றி வருடி, உயர்த்திய புருவத்தின் அழகில் விழுந்து, பெரிய கண்களில் மயங்கி, கூர் நாசியில் சறுக்கி, செந்நிற இதழ்களில் அழுத்தமாக பதிந்து,உப்பிய கன்னங்களில் கிறங்கி, நாடியில் தேங்கி, சங்கு கழுத்தில் இறங்கி, ஏறி தணியும் மார்பில் தஞ்சம் புகுந்திட விழைய, அவனது பார்வை பயணத்தில் திடுக்கிட்டவள் வாயடைத்து போனாள்.
சட்டென பரவிய அமைதியில் சுயம் பெற்றவன் நிமிர்ந்து அவள் கண்களை பார்க்க ஏற்கனவே கங்கென தகித்த கண்களில் இப்போது ஜூவாலை பறக்க, அதில் உல்லாசமாக குளிர் காய்ந்தவன்,” நல்லா தானே திட்டிட்டு இருந்தே.... ஏன் நிறுத்திட்டே மெஹர்” என்றானே பார்க்கலாம்.
அவனது செய்கையில் பெண்ணவளுக்கு கோபம் வந்தாலும் அவள் அடிமனம் ரசித்து தொலைத்தது.
“ ப்ச்.... லாக்க ரிலீஸ் பண்ணுங்க” அவள் பல்லை கடிக்க,
இதற்கு மேல் தனித்திருப்பது அபாயம் என உணர்ந்தவன் அவள் சொல்லுக்கு பணிந்தான்.
அவள் கதவை திறந்து இறங்கும் முன்,” மெஹர் இத வாங்கிக்கோ” என அவள் முன் மீண்டும் பையை நீட்டினான்.
அவள் வாங்காமல் அமைதியாக இருக்க,“ இன்னும் கோபம் போகலயா மெஹர்? வேணும் னா மறுபடியும் திட்டிக்கோ” என்றான் விஷமமாக.
அவனது சேட்சையில் முறைக்க முயன்று தோற்று போனாள் மெஹர்.“ ப்ச்... முதல்ல என்னை மெஹர் னு கூப்பிடுறத நிறுத்துங்க.” என்றாள் பேச்சை மாற்றும் விதமாக.
“ ஏன்?”
“ எனக்கு பிடிக்கல.”
“ பட் எனக்கு பிடிச்சிருக்கு மெஹர்”
“ ப்ச்.... மைசரா தான் என் பேரு...”
“ நோ.... நோ... மைசரா மெஹர் தானே உன் பேரு. எனக்கு மட்டும் மெஹர். ஓ.கேவா மெஹர்?” அவனது காதலை மீண்டும் மீண்டும் அவளுக்கு உணர்த்தினான்.
“ ப்ளீஸ்.... அப்படி கூப்பிடாதீங்க...”
“மெஹர மெஹர் னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிடுறதாம் மெஹர்” அவளை வேண்டுமென்றே வெறுப்பேற்றினான்.
இரு கைகளாளும் காதுகளை பொத்தியவள்,” அய்யோ அப்படி கூப்பிடாதீங்க ரிஸ்வி.” என அலறினாள். நழுவி செல்லும் இதயத்தை தடுக்க முடியவில்லை அவளால்.
அவள் தன் பெயரை உச்சரித்தததை ரசித்தவன் அவளயே பார்த்தான்.
“ முன்னாடி என்னை எப்படி கூப்பிடுவீங்களோ அப்படியே கூப்பிடுங்க”
“முன்னாடி உன்னை எப்படி கூப்பிடுவேன் மெஹர்?”
அவன் கேட்டதில் விழித்தாள் சரா. ரிஸ்வி முன்பு அவளை எப்படி அழைப்பான் என்றே அவளுக்கு நினைவேயில்லை. இப்போது அழைக்கும் மெஹர் மட்டுமே நினைவில் நின்றது.
“ என்ன மெஹர் ஞாபகம் வந்திடுச்சா”
அவள் இல்லை என்பது போல் தலையசைக்க,” எப்படி ஞாபகம் வரும் மெஹர்? உன்னை இதுவரைக்கும் நா பேர் சொல்லி கூப்பிட்டதேயில்லையே.....” கொஞ்ச கொஞ்சமாக தன் காதலை அவளுள் கடத்தினான். மங்கையவள் போட்டு வைத்த பூட்டுகள் எல்லாம் சாவி இல்லாமலே திறந்து கொண்டன.
“ ஏன்?”
“ ஏன்னா? உன்னை பார்த்த நொடியிலிருந்து நீ எனக்கு மெஹர் தான். ஆனா உரிமையோட அப்படி கூப்பிடுற வாய்ப்பு தான் கிடைக்கவேயில்லை. அதே சமயம் எல்லாரும் கூப்பிடுற மாதிரி கூப்பிடவும் பிடிக்கல.” தூவானமாய் தூறிக் கொண்டிருந்த அவள் மனதில் இப்போது பெரும் மழை வலுத்தது.
“ இவன் என்ன சொல்லி கொண்டிருக்கிறான். என்னை பார்த்த நொடியிலிருந்து காதலிக்கிறானா?” அவன் கூறுவதை கிரகிக்கவே சிறிது நேரம் பிடித்தது அவளுக்கு.
“ நான் வாய்ப்புக்காக காத்திருக்கிறவன் இல்ல மெஹர். வாய்ப்புகளை உருவாக்குபவன். ” என்றவனின் மென்னகையை ரசித்தது பெண் உள்ளம்.
“ அடப்பாவி.... கேடிடா நீ....” அவனது மென்னகை அவளையும் தொற்றி கொண்டது.
இருவருக்குமே அதற்கு மேல் என்ன பேசுவது என தெரிவதில்லை. தன் மேல் கொண்ட காதலை சொல்லுவான் என அவளும், தன் காதலை இப்போதாவது உணருவாள் என அவனும் எதிர்பார்த்திருந்தனர்.
“ இவ்ளோ பேசுறான் ஐ லவ் யூ னு சொல்ல மாட்ருக்கானே....”
“ இவ்ளோ பேசுறேன் என்னை இவ்ளோ லவ் பண்ணிருக்கீங்களா ரிஸ்வி னு கேட்குறாளா பாரு” மற்றவரின் பதிலுக்காக மனதிற்குள் ஆசையோடு காத்திருந்தனர்.
ஆனால் அங்கே நிசப்தம் மட்டுமே மொழியாக இருந்தது. இத்தனை நாளாய் ரிஸ்வி தன் காதலை மெஹரிடம் கூற வேண்டும் என நினைக்கவில்லை தன் காதலை அவள் உணர வேண்டும் என்றே விழைந்தான். ஆனால் இப்போது அவள் உணர்ந்தும் அதை வெளிக்காட்டாமல் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள் அந்த முரடனின் அழுத்தக்காரி...
கிட்ட தட்ட ஆறு மாதங்கள்..... என் மீதான காதலை இதயத்திலேயே பூட்டி வைத்திருக்கிறான். ஒரு நாள் கூட நான் அவனோடு சிரித்து பேசியதில்லையே.... கோபத்தையும் வெறுப்பையும் தவிர வேறெதையும் வெளிகாட்டியதில்லையே..... நாம் பேசிக் கொண்ட நாட்களை விட முறைத்து கொண்ட நாட்கள் தானடா அதிகம்? எப்படியாடா என் மீது இத்தனை நேசம் கொண்டாய்? என் மனதிற்கு நான் போட்டு வைத்த கதவை எல்லாம் தூள் தூளாக்கி உள்ளே வந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டாய். இனி எப்படி உன்னை வெறுப்பேன்? இல்லை இல்லை எப்படி வெறுப்பதை போல நடிப்பேன்? சொல்லி விடவா? என் மனம் எங்கிலும் பொழியும் காதல் மழையை உன் மீது கொட்டி விடவா?
தன் காதலை மொழிய வார்த்தைகள் கிடைக்கவில்லை அந்த சண்டைக்காரிக்கு. கடலில் தேடும் ஓர் துளியாய் அவள் மனம் அல்லாட, அவள் முன் மீண்டும் பையை நீட்டினான்.
“ இது புத்தாடையா? இல்லை உன் காதலின் அச்சாரமா?” விழி வழி அவள் கேட்க
“ இரண்டும் தான்” என அவனது விழிகள் மொழிய
கண்ணோடு கண் கலந்து அவள் கரம் நீட்ட, “ டொக்.... டொக்....” கார் கண்ணாடியை தட்டும் சத்தத்தில் இருவருமே திரும்பி பார்த்தனர்.
கோபம் அடக்கிய முகத்தோடு நின்றிருந்தார் சபூரா. தாயை கண்டதும் மெஹராய் இருந்தவள் சராவாய் மாறி போனாள். மழை பெய்யும் நினைப்பு கூட இல்லாமல் வேகமாக காரை விட்டு இறங்கினாள்.
அடித்து பெய்யும் மழையில் அரவமின்றி கிடந்தது சாலை. தாயின் முகத்தை பார்க்கையில் அந்த மழையிலும் வியர்த்தது அவளுக்கு. பின்னாடி ரிதா கையை பிசைந்த படி நின்றிருந்தாள்.
“ உ.... உம்மா.... அது... வந்து...”
“ மழை பெய்ததால நா வந்து ட்ராப் பண்ணேன் மாமி” என்றான் ரிஸ்வி காரிலிருந்து இறங்கி. இருவரின் முகத்திலும் தெரியும் பதட்டம் அந்த தாயை கலவரபடுத்தியது. ஆனால் அவரால் எதுவும் கேட்க முடியவில்லை. முரடன் ஆமா.... உங்க பொண்ண காதலிக்கிறேன் னு நெஞ்சை நிமிர்த்தி சொல்வானே..... அவனை கண்டிக்க முடியாத கோபத்தில் மகளை முறைத்தார் அவர்.
“ ஏன் மாமி? நான் ட்ராப் பண்ண கூடாதா?” அவன் அழுத்தமாக கேட்க,
“ அப்... அப்படிலாம் ஒன்னுமில்ல பா.... சரி.... சரி... மழையில நினையுறீயே.... நீ.... நீ கிளம்பு ரிஸ்வி” என படபடத்தார்.
பின்னே “ ஏன் மாமி என்னை வீட்டுக்கு கூப்பிட மாட்டீங்களா?” என அவரை வம்பிழுப்பானே....
“ சரா.... மழையில நனையாதே சீக்கிரம் வா....” என்று விட்டு சபூரா முன்னே செல்ல, மைசரா அவனை திரும்பி பார்த்தாள்.
அவளது பார்வையில் உயிர் கலங்கி போனவன் பையை அவளிடம் நீட்ட, இதயம் முழுதும் சுமையோடு இடவலமாய் தலையசைத்தாள் மெஹர் இல்லை இல்லை மைசரா.
“ எது வேண்டாம்? புத்தாடையா? என் காதலா?” அவன் விழிகள் அவளை சுட்டது.
“ இரண்டும் தான்....” வேதனை ததும்பும் அவள் விழிகள் வடித்த வெந்நீரை மழை ஒன்றே அறியும். உடலை தொடரும் நிழல் போல தாயின் பின்னால் விரைந்தாள் மைசரா.அவளது செயலில் தவித்து போனான் ரிஸ்வி.
வீட்டிற்குள் நுழைந்ததும் நனைந்த ஆடையை மாற்றும் சாக்கில் அறைக்கு சென்றவள் குலுங்கி குலுங்கி அழுதாள். தன் பார்வையிலேயே தன்னை கதிகலங்க வைப்பவனை இன்று உயிர்கலங்க விட்டு விட்டு வந்துவிட்டேனே..... இத்தனை நாளாய் தெரியாமலே அவனை காயபடுத்தினேன் இன்று தெரிந்தே குத்தி கிழித்து விட்டேனே.... எப்படி தாங்குவான் என் ரிஸ்வி.....
ரிதா கதவை தட்டவும், முகத்தை துடைத்து விட்டு வெளியே வர, தேநீரோடு அமர்ந்திருந்தார் சபூரா. அவரது உணர்ச்சி துடைத்த முகம் சராவுள் பயத்தை கிளம்பியது.
“ சரா....” சபூரா அழைக்க, திடுக்கிட்டு திரும்பினாள் மைசரா.
“ ம்மா....”
“ நீ பர்ஸ்ட் டே இன்டர்ன்ஷிப் போயிட்டு வந்து பேசுனது ஞாபகம் இருக்கா”
“...............”
“ உனக்கும் ரிஸ்விக்கும் நடுவுல எதுவுமில்லை னு நிரூபிக்கனும் சொன்னேன்.”
கண்கள் கலங்க அமைதியாக அமர்ந்திருந்தாள் மைசரா. மகளின் அமைதியில் அவளது மனம் சபூராவுக்கு புரிந்து போனது. “சொன்னதை சாதித்து விட்டானே அவன்.” அவர் மனம் விரக்தியாய் மெச்சிக் கொண்டது. வாழ்வில் முதன்முறையாக தன் முன்னே தலைகுனிந்து அமர்ந்திருக்கும் மகளை பார்க்க வருத்தமாக இருந்தது.
“ சரா....”
நடுரோட்டில் கொட்டும் மழையில் தவித்து போய் நின்றிருந்தவனை நினைத்து கொண்டிருந்தவள் கலங்கிய கண்களோடு நிமிர்ந்தாள். மகளின் நிலை புரிய தான் செய்தது அந்த தாயிக்கு. ரிஸ்வி யார் அவளது மாமி மகன் தானே? முறைப்பையன் தானே? இருவரும் விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது. ஆனாலும் என்ன செய்வது இத்தனை காலமாய் ஆட்டி வைக்கும் பூதம் இன்னமும் அவரை ஆட்டி வைத்தது.
“ நாளைக்கு கன்ட்சன்ட் லெட்டர் ரெடி பண்ணி தரேன். கொடுத்துட்டு வந்திடு.” எனவும் ரிதா அதிர்ந்து பார்க்க, சராவோ உதட்டை கடித்து அமர்ந்திருந்தாள். அவள் என்ன பதில் சொல்வாளோ என ரிதா பார்த்திருக்க,
“ சரி மா....” என ஒத்துக் கொண்டாள் மைசரா.
“ உம்மா எல்லாம் உன் நன்மைக்கு தான் சொல்லுவேன் சரா” என அவள் தலையை வருடிவிட்டு வேதனையோடு அறைக்கு சென்றார் சபூரா.
“ என்ன சரா..... சாச்சி வந்திடு னு சொல்றாங்க நீயும் சரி னு சொல்றே.... அவ்ளோ தான் சரா?” என்றாள் ஆதங்க குரலில்.
“ என்னை என்ன செய்ய சொல்றே” தன் ஆற்றாமையை அவள் மீது காட்டியவள் எழுந்து வாசலுக்கு சென்றாள். இரண்டாம் மாடியிலிருந்து ரிஸ்வியை விட்டு வந்த இடத்தை பார்த்தவள் ஸ்தம்பித்து நின்றாள்.
கொட்டும் மழையில் இன்னும் அதே இடத்தில் அசையாமல் நின்றிருந்தான் ரிஸ்வி.
- மழை வரும்....
தங்கள் கருத்துகளை எதிர்நோக்கும்
பர்வீன்.மை