- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
கட்டம் -1
'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்..ஆஆஆ..."
என்று ரேடியோவில் பி.சுசீலா அவர்களின் தேன் குரல் திவ்யமாக ஒளித்துக்கொண்டிருக்க அந்த வீட்டின் அதிகாலை வேளை செவ்வனே
ஆரம்பித்தது.அதன் இனிய சூழலிலயே தன் சமையல் வேலையை கவனித்துக்கொண்டிருந்த இல்லத்தரசி ரேகா தன் கணவரின் செவிப்பறை
கிழியும் சத்தத்தில் பூவுலகிற்கு வந்தார்.
"இந்த வீட்டில எல்லாருக்கும் காதுன்னு ஒன்னு ஆண்டவன் படைச்சானா இல்லையா?..எவ்வளவு நேரம் தொண்டை தண்ணி வத்துற
அளவுக்கு கத்துறது?."என்று வீடு அதிரும் அளவு கத்த
ரேகா மனதிற்குள் "இந்த மனுஷனுக்கு காபி எல்லாம் கொடுத்துட்டு தானே சமையல் வேலைக்கே வந்தேன்.அப்புறம் எதுக்கு இப்படி
காலையிலயே ஆரம்பிச்சிட்டார்.?"என்று முணுமுணுத்தப்படி கூடத்திற்கு வர
அங்கே அவரின் கணவர் திருவாளர் வெங்கடசுப்பு ரௌத்திர மூர்த்தியாக நின்றிருந்தார்.
ரேகாவிற்கு அவரின் காரணமில்லாத கோபம் எரிச்சலை அளித்தாலும் காலையிலயே வாக்குவாதம் செய்ய மனமில்லாததால்
சற்று பொறுமையாகவே அவரை அணுகினார்.
"என்னாச்சுங்க...என்னனு சொன்னாதானே தெரியும்?..இப்படி காலையிலயே கத்துற அளவிற்கு என்ன நடந்தது?" என்று கேட்க
வெங்கடம் பதில் கூறாமல் முறைக்க, இப்போது எரிச்சலுறுவது ரேகாவின் முறையானது.
"என்னங்க இது..இப்படி தொண்டை கிழியிற மாதிரி கத்திட்டு பதில் பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்? என்று சற்றே கடுமையான
தொனியில் கேட்க
இதற்கு மேல் பிகு செய்தால் தனக்கு மரியாதை இல்லை என்று அறிந்து வெங்கடம் தன் திருவாயை திறந்தார்.
"என்னடி சொல்லணும்?..உன் சீமந்த புத்திரன் தன் மனசில என்ன நினைச்சிட்டு இருக்கான்.?உன் பையனை மாதிரி தேங்காமுரி
வக்கீலுக்கு வரன் அமையறதே பெரிய விஷயம்..இதுல நானா அலைஞ்சு திரிஞ்சு ஒரு பொண்ணை பார்த்து வைச்சா அவங்க வீட்டுக்கு
போய் என்ன பண்ணிட்டு வந்திருக்கானு தெரியுமா?."என்று கேட்க
ஒன்றும் அறியாத ரேகா பேந்த பேந்த விழிக்க அதை பார்த்த வெங்கடம் பல்லை கடிக்க
"என்ன பண்ணினேன்?...பாருடிம்மா..எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமே இல்லை.தேவையில்லாமல் எங்க அப்பா பேச்சை நம்பி உங்க
எதிர்காலத்தை கெடுத்துகாதேம்மான்னு நல்ல புத்திமதி சொல்லிட்டு வந்தேன்.இதில என்ன தப்பு?."என்று கேட்டப்படி நம் கதாநாயகனே
திரையில் (!!) தோன்றினான்.
அதை கேட்டு இன்னும் கோபமுற்றார் வெங்கடம்..ரேகா அதிர்ச்சியுடன்
"என்னடா கார்த்திக் சொல்றே?..நீ போய் இப்படி எல்லாம் பேசினியா?..உனக்கென்ன பைத்தியமாடா?."என்று கேட்க
கார்த்திக்கோ சற்றும் அசராமல் "ஆமாமா...எத்தனை வாட்டி சொல்றது?..எனக்கு பொண்ணு பார்க்காதீங்க..பார்க்காதீங்கன்னு..ஒரு தடவை
சொன்னா புரியாது?..அம்மா..தயவுசெய்து என்னை இதுக்கு மேல் தொந்தரவு பண்ணாதீங்க..எனக்கு 28 வயசாகுது?..எனக்கு எது தேவை எது
தேவையில்லைன்னு எனக்கு தெரியும்.அந்த அளவுக்கு எனக்கு அறிவு இருக்குன்னு நம்பறேன்.ப்ளீஸ் இன்னொரு வாட்டி என்னை இந்த
மாதிரி செய்ய வைக்காதீங்க.":என்று அழுத்தமான ஆனால் தெளிவான குரலில் கூற
தாய் தந்தை இருவருமே ஸ்தம்பித்து தான் போயினர்.
கார்த்திக் என்கிற கார்த்திக்கேயன் 28 வயதான இளம் வக்கீல்..சிறு வயதிலருந்தே தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக
இருந்து தீர்க்கமாக முடிவெடுக்கும் வழமை உண்டு என்றாலும் அதே சிறு வயதிலிருந்தே அவனை நம்பாமல் சந்தேகித்தே வாழ்ந்து
கொண்டிருக்கும் அவன் தகப்பனாருக்கு இதில் முற்றிலும் வழக்கத்திற்கு மாறான ஒன்றாகத்தான் தோன்றியது.இதனால் தான் தந்தை
மகன் இருவருக்கும் எக்காலத்திலும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டதே இல்லை.ஏதோ ஜெனரேஷன் கேப்... என்பார்களே அந்த பரம்பரை
இடைவெளி இவர்களுக்கு சற்றே அதிகமாக இருப்பதால் இருவருக்குள்ளும் சண்டைக்கு அளவே இல்லை.
இப்படி தினமும் அடித்துக்கொள்ளும் இருவரிடம் இருந்து தன்னையும் பாதுகாத்துக்கொண்டு இவர்களையும் பாதுகாத்துக்கொண்டிருக்கும்
ஒரே ஜீவன் வேறு யார் நம் ரேகா தான்.
இப்படியாக இவர்களின் அறிமுகம் முடிந்துவிட்டதால் நாம் நேராக பிரிச்சினைக்கு போகலாம்.
அவன் பேசியதை கேட்ட வெங்கடம் அவனிடம் பேசாமல் ரேகாவிடம் திரும்பி "எவ்ளோ தைரியம் இருந்தா உன்பையன் இப்படி பேசுவான்?
எல்லாம் சம்பாதிக்கிற திமிர் இவனை இப்படி எல்லாம் பேசவைக்குது."என்று தன் சத்தத்தை கூட்ட
கார்த்திக்கும் பதிலுக்கு "ஏன் எனக்கு திமிர் இருந்தா என்ன குறைச்சல்?..நான் தலையெடுத்ததுக்கு அப்புறம் தான் இந்த வீடு
கொஞ்சமாச்சும் உருப்பட்டிருக்கு.இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்.30 வருஷமா கலெக்டர் ஆபிஸ் கிளர்க்காவே இருந்து
கிளர்க்காவே ரிடையர்ட் ஆகி பிரயோஜனமே இல்லாத வாழ்க்கையையா நான் வாழுறேன்"என்று பதிலடி கொடுக்க
வெங்கடத்திற்கு தலைக்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வர ரேகாவை ஒரு தீப்பார்வை பார்க்க
ரேகா இவர்கள் இருவரையும் இதற்கு மேல் பேசவிட்டால் மூன்றாம் உலகப்போரே வந்துவிடும் என்றறிந்து
"டேய்..வாயை மூடுடா..அப்பான்னு ஒரு மரியாதை இல்லாமல் பேசுறே நீ.அவர் இல்லைன்னா நீ இப்போ படிச்சு சம்பாதிச்சிருக்கவே
முடியாது அதை முதலில் ஞாபகம் வைச்சிக்கோ. உனக்கென்ன நாங்க உனக்காக எந்த பொண்ணையும் பார்க்ககூடாது
அதானே..சரிப்பா இனி நாங்க எதுவும் செய்யலை..அதுக்கு போய் வாய்க்கு வந்ததை பேசுறே..போடா போய் வேலைக்கு
கிளம்பற வழியை பாரு "என்று அதட்டுவது போல் அதட்டி தன் கணவனையும் குளிரவைத்து தன் பிள்ளைக்கு ஏற்றாற்போலவும்
நியாயத்தை வழங்கி புத்திசாலித்தனமாக அந்த சூழ்நிலையை அணுகினார் ரேகா.இதனால் அங்கே ஏற்பட இருந்த பூகம்பத்தின்
திவீரம் சற்றே மட்டுப்பட்டது என்றே கூறலாம்.
கார்த்திக் தன் தாயின் அதட்டலுக்கான காரணம் அறிந்தவனே ஆதலால்...தனக்கு சாதகமான செய்தியும் கிடைத்து விட்டப்படியால்
அங்கே நிற்காமல் தன் வேலையை பார்க்க ஆரம்பிக்க
ரேகாவும் வெங்கடத்திடம் திரும்பி "இன்னும் என்னங்க 'பே'னு பார்த்துட்டு இருக்கீங்க..போங்க போய் கடைக்கு போய் காய்கறி கொஞ்சம்
வாங்கிட்டு வாங்க..வீட்டுல ஒரு காய் இல்லை."என்று அவரையும் விரட்டியபடி தன் சமையல் வேலையை தொடர
இப்போது சுத்தமாக குழம்பி நின்றது வெங்கடசுப்பு தான்.
"இப்போ இங்க என்ன நடந்துச்சு...அவன் தான் பொண்ணு பார்க்க வேண்டாம்னு சொன்னானா இவளும் சரின்னுட்டாளே.நம்மக்கிட்ட ஒரு
வார்த்தை கூட கேட்கலையே?..இவ நம்மளுக்கு சப்போர்ட் பண்ணாளா?.இல்லை அவனுக்கு சப்போர்ட் பண்ணாளா?.ஒன்னும்
புரியலையே "என்று புலம்பிக்கொண்டிருக்கும் போதே ரேகாவின் குரல் அதிரடியாக ஒலித்தது.
"ஏங்க இன்னுமா நின்னுட்டு இருக்கீங்க..போங்க கடைக்கு போயிட்டு வாங்க...அடப்போங்கன்னா.."என்று கையில் ஒரு பையை திணித்து
அனுப்ப...தன் விதியை நொந்துக்கொண்டே தன் திருமதிக்காக கடைவீதி சென்றார் வெங்கடம்.
@@@@@@
"டேய்..உனக்கு என்னதாண்டா பிரச்சினை..இந்த வரன் நிஜமாவே நல்ல வரன்..இதை போய் இப்படி கெடுத்திட்டியே?.உங்க அப்பா
கத்துறதுல தப்பே இல்லை."என்று ரேகா இப்போது நடுநிலையாக தன் மகனிடம் தனியாக அவன் மனதை கேட்டறிய
அவனோ சிரிப்புடன் தன் தாயை ஏறிட்டான்.
ரேகா "ஏண்டா நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன்.நீ ஒண்ணும் பேசாமல் சிரிச்சா என்ன அர்த்தம்? நான் என்ன உங்க அப்பாவை
மாதிரி கத்திட்டா இருக்கேன்.மனசு விட்டு பேசணும்னு தானே கேக்குறேன்.சொல்லுடா"என்று கேட்க
கார்த்திக் அதே சிரிப்புடன் "ஏம்மா நான் எத்தனை வாட்டி சொல்றது?.எனக்கு இந்த அரேஞ்ச்டு மேரேஜ்ல நம்பிக்கை கிடையாதுன்னு.
சும்மா போயிட்டு சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டுட்டு அஞ்சே நிமிஷம் பேசிட்டு அந்த பொண்ணு முகத்தை கூட பார்க்காமல் நிச்சயம்
பண்றதெல்லாம் ஒரு கல்யாணமா சொல்லு.?அது என் வருங்கால மனைவிக்கு பண்ற துரோகம்மா.."என்று வாதாட
ரேகா "ஏண்டா அப்போ லவ் மேரேஜ் தான் பண்ணுவியா?"என்று அழுத்தமாக கேட்க
கார்த்திக் "ஏம்மா லவ் மேரேஜ்ல என்ன தப்பு?."என்று கேட்க
ரேகா "டேய்..ஏண்டா இப்படி பைத்தியம் மாதிரி பேசுறே? உங்கப்பாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது கதகளியே ஆடிருவாருடா.
உனக்கு ஏண்டா அரேஞ்ச்டு மேரேஜ்ல இவ்ளோ வெறுப்பு?.:என்று கெஞ்சல் தொனியில் கேட்க
கார்த்திக் "எனக்கு ஏன் இந்த வெறுப்புன்னு உனக்கே தெரியும்மா..?" என்று கூற
ரேகா "என்னடா எனக்கு எப்படி தெரியும்?."என்று புரியாமல் கேட்க
கார்த்திக் "நீயும் அப்பாவும் அரேஞ்சுடு மேரேஜா லவ் மேரேஜா?"என்று கேட்க
ரேகாவுக்கு சட்டென்று யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது..அவர் தன் மகனையே வெறித்துப்பார்க்க
கார்த்திக்கோ கையை கட்டிக்கொண்டு அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
பின் "சொல்லும்மா..உனக்கும் அப்பாவும் அரேஞ்சுடு மேரேஜா இல்லை லவ் மேரேஜா?."
ரேகா மெல்லிய குரலில் "இதென்னடா கேள்வி எங்க காலத்துல ஏது லவ் எல்லாம்? அரேஞ்சுடு தான்" என்று கூற
கார்த்திக் மெல்லிய சிரிப்புடன் "அதனால தான்மா எனக்கு அதுக்கு மேல இருந்த நம்பிக்கையே போச்சு.நீயும் அப்பாவும் ஒண்ணா
உட்கார்ந்து சிரிச்சு பேசின நாளே நான் பார்த்ததில்லை.ஒத்த ரசனையோட ஒண்ணா வேலை பார்த்தோ இல்லை சுவாரசியமான
விஷயங்களை பேசியோ நான் பார்த்ததே இல்லை.ஏன் ஒரு நாள் கூட அவர் உன்னை வம்பிழுக்காமல் சண்டை போடாமல் இருந்த
நாளை நான் பார்த்ததே இல்லை.இப்போ சொல்லும்மா உங்களை பார்த்த எனக்கு எப்படி இந்த மாதிரி கல்யாணத்தில் பிடித்தம் வரும்"
என்று கேட்க
ரேகா இப்போது அர்த்தமுள்ள சிரிப்புட அவனை ஏறிட்டாள்.
"அன்பில் நிறைய வகை இருக்கு கார்த்திக்.எல்லாராலும் அன்பை வெளிப்படையாக காட்ட முடியாது.அதுக்கும் நம்ம வரம் வாங்கிட்டு
வந்திருக்கணும்.நீ சொல்ற மாதிரி சில பேர் இருக்கலாம்.ஆனால் இப்படியெல்லாம் இருந்தா தான் அவங்க மனமொத்த தம்பதிகள் என்று
அர்த்தம் இல்லை.அதை புரிஞ்சிக்கோ."என்று அவனுக்கு புரியவைக்க முயற்சிக்க
அவனோ தான் பிடித்த பிடியில் உடும்பாய் இருந்தான்,
"இருக்கலாம்மா..ஆனால் அந்த மாதிரி அன்பை நானறிய உங்க கிட்ட பார்த்ததே இல்லை.என்னால கடனுக்கு ஒரு வாழ்க்கை வாழ
முடியாதும்மா..எனக்கு வரப்போரவ என்னில் பாதியா இருக்கணும்.என் மனசும் அவ மனசும் எல்லா விஷயத்திலும் ஒத்துப்போகணும்.
என் கண்ணோட்டம் என் பிடித்தங்களை எல்லாத்தையும் அவளும் ரசிக்கணும்.இதுக்கெல்லாம் மனசில் காதல் இருந்தால் தான் முடியும்.
அதனால் தான் சொல்றேன் எனக்கு காதல் திருமணம் தான்.இதை உன் மணாளன் கிட்ட சொல்லி சம்மதம் வாங்க வேண்டியது உன்
பொறுப்பு."என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக கூறிவிட்டு தன் அலுவலகத்திற்கு கிளம்பிவிட ,ரேகா சிலையென நின்றார்.
ஒரே மகன் என்பதாலோ என்னவோ ரேகா சிறு வயதிலிருந்து கார்த்திக்கின் எந்த ஒரு நியாயமான ஆசைக்கும் தடையிட்டதில்லை.
அதே போல் அவனும் தன் சுதந்திரத்தை உணர்ந்து தான் இதுவரை இருந்து வந்தான்.ஆனால் இந்த விஷயத்தில் என்னவோ
அவன் சற்றே அதிகமாக முரண்டு பிடிப்பதாக அவருக்கு தோன்றியது.வாழ்வில் நெளிவு சுழிவுகளை தெரிந்துக்கொள்ளாமல்
விட்டுவிடுவானோ என்று அஞ்சினார்.
அவனின் இந்த முடிவுக்கு தானும் தன் கணவரும் தான் காரணம் என்ற எண்ணம் வேறு அவர் மனதை சிறிது காயப்படுத்தியிருந்தது.
பிள்ளைகளின் சில பிடிவாத குணங்களுக்கு,தப்பான கண்ணோட்டங்களுக்கு பெற்றவர்களின் வாழ்வே பல சமயம் காரணமாக இருந்து
விடுகிறது.இதில் ரேகாவின் வாழ்க்கையும் முக்கியமான எடுத்துக்காட்டு.
ஆயினும் மனிதன் என்னதான் கணக்கிட்டு வாழ்ந்தாலும் இறுதியில் முடிவெடுப்பது இறைவன் ஒருத்தனே அல்லவா?.
கார்த்திக்கின் ஆசை நிறைவேறுமா?.இல்லை நிலைதடுமாறுமா?..
பொறுத்திருந்து பார்ப்போம்..
(முதல் நகர்வு முடிந்தது.)