• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதோடுதான் நான் பாடுவேன்-32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
அத்தியாயம்-32

நமது இல்லம்” என்று பெயரிட்டிருந்த அந்த இல்லத்தின் முன் தன் காரை நிறுத்தி நிகிலன் கீழ இறங்க, மதுவும் தயங்கியவாறு காரிலிருந்து கீழ இறங்கினாள்...

ஒரு வேகத்தில் அவள் ரமணியை பார்க்கணும் என்று சொல்லிவிட்டாலும் அவர் எப்படி தன்னை வரவேற்க போகிறாரோ என்று பயந்து கொண்டே தன் கணவன் பின்னால் நடந்தாள்...

அவனும் திரும்பி அவள் பக்கம் பார்த்து

”ஏய்.. அம்மா கொஞ்சம் டிஸ்டர்ப் ஆ இருப்பாங்க.. நீ அவங்க மனசு கஷ்டபடுற மாதிரி எதுவும் நடந்துக்க கூடாது... என்ன புரிஞ்சுதா?? “என்று எச்சரிக்க, அவளும் சரியென்று தலை அசைத்தாள்...

பின் நிகிலன் முன்னால் நடக்க, அவன் பின்னே வந்தவள் நிமிர்ந்து அந்த இடத்தை பார்வையிட்டாள்..

அது ஒரு சென்னையில் இருந்து ஒதுக்கு புறமாக அமைந்திருந்த இடம்..

சென்னையின் போக்குவரத்து நெரிசல், வாகனங்களின் அலறல் சத்தம்,காய்கறி விற்பவர்களின் கூச்சல் என எதுவும் இல்லாமல் முக்கியமாக எந்தவித pollution ம் இல்லாமல் முதியவர்களுக்கு பொருத்தமாக வசதியாக சுத்தமான காற்றுடன் அமைதியாக இருந்தது அந்த இடம்......

நான்கு வருடங்கள் முன்பு, தன் இல்லத்தை நகரிலிருந்து இந்த மாதிரி அமைதியாக இருக்கும் பகுதிக்கு மாற்ற எண்ணி இடம் தேடி கொண்டிருந்தான் நிகிலன்..

அவன் பதவியை பயன்படுத்தி கொள்ள நிறைய பேர் அவனுக்கு நிலம் இலவசமாக கொடுத்து அவர்கள் காரியத்தை சாதித்து கொள்ள முன் வர, நிகிலன் அதை எல்லாம் மறுத்து விட்டான்...

இடம் தேடிய பொழுதுதான் இந்த இடத்தின் உரிமையாளர் வேலாயுதத்தை சந்தித்தான்... இந்த இடம் முன்பு விவசாயத்திற்கு பயன்படுத்த பட்ட நிலம்.. நீர் இல்லாமையால் வறண்டு தரிசாக கிடந்தது..

நிறைய பில்டர்ஸ் அவரை அணுகி பெரிய விலை கொடுத்து அந்த இடத்தை வாங்க தயாராக இருந்தனர்.. இந்த இடத்தை பிளாட் போட்டு விற்றால் நல்ல இலாபம் சம்பாதிக்கலாம்..

அப்படி இல்லையென்றால் வில்லா மாதிரியாக கட்டி விற்றாலும் நல்ல இலாபம் கிடைக்கும்.. இப்ப இருக்கும் மக்கள் நகரை விட்டு இது மாதிரி ஒதுக்கு புறமான இடத்தைதான் அதிகம் நாடுகின்றனர் அமைதிக்காக...

அதனால் இந்த இடத்தின் மதிப்பை புரிந்து கொண்டு பலர் போட்டி போட, அந்த நிலத்தின் உரிமையாளரோ அந்த இடத்தை வணிக மயமாக்க விரும்பவில்லை...

அவர் மகன்கள் இருவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட அதில் ஒருவன் நிகிலன் நண்பன்.. மகன்கள் கை நிறைய சம்பாதிக்க, அவருக்கு அதற்கு மேல் இதில் வரும் இலாபம் பெரிதாக தெரியவில்லை..

அந்த வயதில் தனிமையாக இருக்கும் பொழுது பணம் பெரிதாக தெரியவில்லை... உறவுகள், தான் பேசுவதை கேட்க நாலு பேர். என்று மக்களைத்தான் தேடினார் அந்த நேரத்தில்..

நிகிலன் முதியோர்களுக்காக இல்லம் ஆரம்பிக்கும் எண்ணம் வந்த பொழுதே நமது இல்லம் என்ற பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஐ ஆரம்பித்து அதன் வழியாகத்தான் எல்லா டிரான்சாக்சனையும் செய்து வந்தான்...

தன் நண்பர்கள் வட்டத்திலும் மற்றும் தன்னுடன் பயின்ற வகுப்பு தோழர்கள் என்றுதான் அவன் நிதி வசூலிக்க ஆரம்பித்தான்..

தன் பதவியை பயன்படுத்தி யாரிடமும் அவன் அணுகவில்லை.. அவன் நல்ல எண்ணத்தை புரிந்து கொண்டு நிறைய பிரமுகர்கள் தானாகவே உதவ முன் வந்தனர்....

அந்த இல்லத்தை பற்றிய செய்தி அவன் நண்பர்களிடமும் பரவ, அதில் ஒருவன்தான் அந்த இல்லத்தின் உரிமையாளர் மகன்... நிகிலன் இடம் தேடுவதை அறிந்து தன் தந்தையிடம் அறிமுக படுத்தி வைத்தான்..

அவருக்கு நிகிலனின் முயற்சி பிடித்து விட, அதோடு அவன் ஒரு நேர்மையான காவல் அதிகாரி.. அவன் வந்த பிறகு பல மாற்றங்களை இந்த சென்னையில் கொண்டு வந்தான் என்று அறிந்து இருந்தார்..

அதனால் அவன் மீது நம்பிக்கை வந்து விட,அதோடு இந்த இடம் கமெர்சியலாகாமல், வீட்டை துறந்து வரும் முதியோர்களுக்கு அடைக்கலமாக இருக்க போவதை உணர்ந்து தானாகவே அந்த இடத்தை இலவசமாக நிகிலனுக்கு கொடுக்க முன் வந்தார்

நிகிலன் அதை மறுத்து அவருக்கு ஒரு தொகையை கொடுத்து அந்த இடத்தை அந்த ட்ரஸ்ட் ன் பெயரில் பதிவு செய்தான்..

அதோடு அவரையே அந்த இடத்தை பார்த்து கொள்ள , மேற்பார்வையிட வேண்டிக் கொண்டான்...

அவரும் தனியாக இருக்க பிடிக்காமல் மக்களோடு இருக்க வாய்ப்பு கிடைத்ததே என்று அங்கயே தங்கிக் கொண்டார்..

இடம் கிடைத்ததுமே வேலையை உடனே ஆரம்பித்து விட்டான்...

நிகிலன் அவருக்கும், ரமணிக்கும் தனியாக, கொஞ்சம் வசதியுடன் அறைகளை கட்ட முனைய, அவர்கள் இருவருமே அதை மறுத்துவிட்டனர்.

“எல்லாருக்கும் ரூம் எப்படி இருக்குமோ அதே மாதிரியே எங்களுக்கும் அறைகள் இருக்கட்டும் பா... இனிமேல் பெருசா என்ன வசதி வேண்டி இருக்கு...” என்று ரமணி வெறித்த பார்வையுடன் சொல்லி விட்டார்.

நிகிலனும் அவர்கள் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி அறைகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான்...

அங்கு தங்குபவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் என்பதால் மாடி வைத்து கட்டாமல், ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் கலந்து பேசி, பழக என்று பெரிய ஹால் மாதிரி அமைப்பை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கட்டில், பீரோ என்று வைத்து அமைத்தான்...

தனிமையை விரும்புவர்களுக்கும் மற்றும் தம்பதிகளாக அந்த இடத்தை நாடி வருபவர்களுக்கு என்று தனி அறை மற்றும் அடிப்படை வசதிகள் வைத்து சிம்பில் ஆக அந்த இல்லத்தை கட்டினான்...

அவன் நெருங்கிய நண்பர்களான ஆதியும், வசியும் அவனுக்கு எல்லாவிதத்திலும் உதவி செய்தார்கள்..

ஆதி அவனுடைய ஆதித்யா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனம் வழியாக அந்த இல்லத்தை இலவசமாக கட்டும் பணியை எடுத்து கொண்டான்...

வசீகரனோ அங்கு இருப்பவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உடனே பார்க்க என்று ஒரு நர்ஸ் ஐ ஏற்பாடு பண்ணி அவர்களுக்கான மருந்துகளின் செலவை ஏற்று கொண்டான்...

அதோடு மாதம் ஒரு முறை அவனே வந்து அங்கிருக்கும் பெரியவர்களின் உடல் நிலையை சரிபார்ப்பான்...

நிகிலன், பெரியவர்கள், காலையிலும், மாலையிலும் காலாற நடக்க என்று சிறிய தோட்டத்தை உருவாக்கி, அதில் ஆங்காங்கே சிமென்ட் பென்ச் கள் போடபட்டு அழகு செடிகளும், பூஞ்செடிகளும் வைத்து பராமரித்து வந்தான்..

அதே போல அந்த இல்லத்தை சுற்றி மீதியிருந்த இடத்தில் நான்கு வருடங்கள் முன்பே மரகன்றுகளை நட்டிருக்க, அவைகள் எல்லாம் பெரிதாக வளர்ந்து நன்றாக நிழல் கொடுக்க, வறண்ட பாலைவனமாக இருந்த அந்த இடமே, குளிர்ச்சியாக இருந்தது இப்பொழுது...

******

அந்த இல்லத்தையும், அதன் சுற்று புறத்தையும் கண்ட மது, சென்னைக்கு வெளியில் இப்படி ஒரு இடமா என்று வியந்தாள்..!

அதுவும் இல்லாமல் நான்கு பேருடன் ஆரம்பித்த இல்லம், இப்பொழுது கிட்டதட்ட 100 பேராக வளர்ந்திருந்தது....

மன கஷ்டத்தில் வீட்டை துறந்து வந்த முதியவர்கள் அதிகமாக இருக்க, இங்கு கிடைக்கும் நல்ல சுத்தமான காற்றும், பராமரிக்கபட்ட தங்கும் இடம், சத்தாண உணவு மற்றும் இங்கு இருக்கும் பெரியவர்களுக்காக பொழுது போக்கிற்காக அவர்களுக்கு பிடித்த மாதிரி பல வசதிகளும் இருந்தன...

நிகிலன் முயற்சியை பாராட்டி கமிசனரும் அவருக்கு முடிந்த உதவியை செய்தார்.. மற்ற தலைவர்களும் தாங்களாகவே முன் வந்து உதவி செய்ய, இந்த இல்லத்தை நல்ல முறையாக பராமரிக்க முடிந்தது...

பிள்ளைகளால் கை விட பட்டவர்கள் மட்டுமல்லாமல், பெற்று வளர்த்து படிக்க வைத்து தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு வேலைக்காக அனுப்பி வைத்த பெற்றோர்கள் தனிமையில் தவிக்காமல் இருக்க, இந்த மாதிரி இடங்களை நாடி வர ஆரம்பித்தனர்...

அவர்கள் பிள்ளைகளும் நிகிலனுக்கு மாதா மாதம் பணம் கட்டி விடுவதாக சொல்ல, நிகிலன் அதை மறுத்துவிட்டான்..

இது முழுக்க முழுக்க இலவசமாக செய்யும் சேவை..அதனால் பணம் வேண்டாம்.. என்று மறுத்து விட்டான்..

அவர்களும் வேற வழியிலலாமல் அவர்கள் விரும்பும் தொகையை அந்த ட்ரஸ்ட்டுக்கு நன்கொடையாக வழங்கினர்..

இந்த இல்லத்தின் சிறப்பு பற்றி தெரிய வர, இன்னும் சிலரோ ஒரு வாரமோ, இரண்டு வாரமோ இங்கு வந்து தங்கி விட்டு செல்வது வழக்கம்...

அதோடு, சில பேர் வாழ பிடிக்காமல் வருபவர்களும், பிள்ளைகளை வெறுத்து இனிமேல் அவர்கள் முகத்தில் முழிக்க மட்டேன் என வந்தவர்களுக்கும் முதலில் கவுன்சிலிங் கொடுக்க வைத்து, அவர்களின் பிள்ளைகளயும் அழைத்து பேச வைத்து, அவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்து நிறைய பெரியவர்களை மீண்டும் அவர்கள் வீட்டில் சேர்த்து விட்டிருக்கிறான் நிகிலன்..

ரமணி மாதிரி முற்றிலும் வெறுத்து வருபவர்களை மேலும் வற்புறுத்தாமல் அங்கயே தங்க வைத்து விடுவான்..

இன்னும் சிலர் தங்கள் உயிர் பிரிந்தாலும் பிள்ளையிடம் சொல்லக்கூடாது என்று சொல்லி அவனையே இறுதி காரியம் செய்ய சொல்லி கேட்டிருக்க, அதுமாதிரி ஒரு இரண்டு பேர் இங்கயே இறந்திருக்க, அவர்களுக்கும் நிகிலனே மகனாக நின்று அவர்கள் இறுதி காரியத்தை செய்திருக்கிறான்...

அவன் எப்பொழுதும் அங்கிருப்பவர்கள் அனைவரையுமே அன்போடு அரவணைக்க அவர்களும் நிகிலன் மேல் பாசமாக இருந்தனர்...

இந்த இடத்தை பற்றி சிவகாமி மருமகளிடம் ஏற்கனவே சொல்லியிருந்தார்.. அதை எல்லாம் கேட்ட பொழுது நம்பாமல், இப்பொழுது நேரில் பார்க்க அவளுக்குமே ஆச்சர்யமாக இருந்தது..

தன் கணவனை நினைத்து பெருமையாக இருந்தது...

“நான் கலெக்டர் ஆனால், அரசாங்கத்துலயே முதியோர்களுக்காக இந்த மாதிரி ஒரு இல்லத்தை அமைத்து தர வேண்டும்.. “ என்று எண்ணிக் கொண்டாள் மது...

*****

அந்த இல்லத்தின் உள்ளே செல்லும் பாதையில் நிகிலன் நடக்க, வழியில் அந்த இடத்தின் பழைய உரிமையாளரான வேலாயுதத்தை சந்தித்தான்.

நிகிலன் அவரிடம் தன் மனைவியை அறிமுக படுத்தி வைத்ஹான்... மதுவும் அவர் காலில் விழுந்து வணங்கினாள்....

“நீங்க இந்த இடத்தை கொடுத்து உதவியதுக்கு ரொம்ப நன்றி ஐயா... “ என்று மது அவருக்கு மனமார நன்றி சொல்ல, அவருமே மகிழ்ந்து போய் அவளை ஆசிர்வதித்தார்...

பின் இருவரும் உள்ளே சென்றனர்..

வழியில் சந்திப்பவர்களிடம் எல்லாம் நிகிலன் நின்று நலம் விசாரித்து ஓரிரு வார்த்தைகள் பேசி முன்னே நடந்தான்...

அந்த இல்லத்தின் சமையல் செய்யும் கண்ணம்மா வை கண்டதும் நிகிலன் நின்று அவரிடம் நலம் விசாரிக்க, அவரும் மதுவை தெரிந்து கொண்டு ஆசையாக வரவேற்று அவளுக்கு நெட்டி முறித்தார்..

“ஆமா...கண்ணம்மா... ரமணி மா எங்க?? எங்கயும் காணோமே... “ என்று விசாரித்தான் நிகிலன்..

“என்னாச்சுனு தெரியலை தம்பி.. அம்மா இன்னைக்கு காலையில் இருந்தே ரூம் ஐ விட்டு வெளியில் வரலை தம்பி.. “ என்றார் வருத்தமாக..

அதற்கான காரணம் அவனுக்கு தெரிந்ததால்

“சரி கண்ணம்மா... நான் போய் பார்க்கிறேன்.. “ என்று புன்னகைத்து ரமணியின் அறையை நோக்கி நடந்தான்...

மதுவும் அவன் பின்னே சென்றாள்..

சிறிது தூரம் நடந்ததும் ஒரு அறையின் கதவை மெல்ல தட்டி கதவை திறக்க, அங்கு ஒல்லியான தேகத்தில் கட்டிலின் மேல் அமர்ந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி....

கண்ணில் வேதனையும் முகத்தில் ஏதோ சொல்ல முடியாத சோகமும் சூழ, வாழ்க்கையை வெறுத்த மாதிரி அமர்ந்திருந்த அவரின் கோலம், நிகிலனுக்கு மனதை பிசைந்தது...

அவன் பின்னால் நின்றிருந்த மதுவும் அவரை காண, அவர் தான் ரமணியாக இருக்கும் என்று எண்ணியவள், அந்த அறையை வேகமாக கண்ணால் சுற்றி பார்க்க திக் என்றது அவளுக்கு..

அரண்மனை மாதிரி அவ்வளவு பெரிய வீட்டில் இருந்திருக்க வேண்டியவர்…

இப்படி இந்த சின்ன அறையில்…. அதிக வசதியில்லாமல் இப்படி அனாதை மாதிரி இருக்கிறாரே என்று நெஞ்சை அடைத்தது மதுவுக்கும்.....

நிகிலனுக்கும் அவரை இந்த அறையில் பார்க்கும் பொழுதெல்லாம், அதுவே வேதனையாக இருக்கும்..

அவருக்கு வசதி செய்து கொடுக்க முயல ரமணி மறுத்து விட்டார்....

“எல்லோருக்கு எப்படி இருக்கோ அப்படியே என் அறையும் இருக்கட்டும் நிகில்.. இனிமேல் சொகுசா இருந்தா என்ன, இல்லைனா என்ன “ என்று மறுத்து விட்டார்...

அவரின் இந்த நிலையை கண்டு வருந்தியவன் மெல்ல

“மா... “ என்று அழைத்தான்...

அவன் குரலை கேட்டதும், அவசரமாக தன் கண்ணை துடைத்து கொண்டவர், வாயில் புறம் பார்த்து

“வா நிகில் கண்ணா...எப்படி இருக்க?? “ என்றார் தன் வேதனையை மறைத்து கொண்டு...

“ஹ்ம்ம்ம் என்னாச்சும்மா ??.. ஏன் இப்படி இருக்கீங்க.?? “என்று முன்னே வந்தான்...

“எனகென்னப்பா?? நான் நல்லாதான் இருக்கேன்... “என்றவர் அப்பொழுதுதான் நிகிலன் பின்னே மறைந்து நின்று தலையை மட்டும் எட்டி பார்த்த மதுவை கண்டு கொண்டவர், சில நொடிகள் கண்ணை சுருக்கி அவளை உற்று பார்த்தார்....

பின் அவளை அடையாளம் கண்டு கொண்டு

“அடடா... மதுவும் வந்திருக்காளா?? வாம்மா... “ என்று சிரித்தார்...

தன்னை கண்டதும் ஏதோ திட்டப் போகிறார்.. இல்லைனா வெறுப்பை காட்ட போகிறார் என்று பயந்து வந்தவளுக்கு, அவர் தன்னை இயல்பாக அழைத்ததும் ஆச்சர்யமாக இருந்தது...

தன் பயத்தை விலக்கி, நிகிலன் பின்னால் இருந்து

“எப்படி இருக்கீங்க அத்தை?? “ என்று கேட்டவாறு முன்னால் வந்தாள்...

“அத்தையா?? “ என்று முழித்தார் ரமணி..

“ஐயோ.. நாம எதுவும் தப்பா சொல்லிட்ட மோ?? என்று யோசித்தவள்

“வந்து... இவர் உங்களுக்கு மகன் னா, நான் உங்களுக்கு மருமகள் தான வேணும்.. அதான் அத்தைனு கூப்பிட்டேன்... “என்றாள் தயங்கியவாறு...

அதை கேட்டு முகத்தை சுழித்தவர்

“மருமக என்ற வார்த்தையை மட்டும் என்கிட்ட சொல்லாத மது.. அதை கேட்டாலே அலர்ஜியா இருக்கு.. “என்றார் முகத்தில் வெறுப்பும் மற்றும் கசப்புடன்...

அந்த முக பாவத்திலயே தன் மருமகளால், அவர் எவ்வளவு வேதனைகளை அனுபவித்து இருக்கிறார் என்று புரிந்தது..

ஓரளவுக்கு தன்னை சமாளித்துக் கொண்ட மது

“ஹ்ம்ம்ம் அப்படீனா அம்மானு கூப்பிடவா?? உங்களுக்கு இரண்டு பசங்கதான... என்னை வேணா உங்க பொண்ணா ஏத்துக்கங்க... “ என்று கன்னம் குழிய சிரித்தாள் மது...

அவளின் அந்த குழந்தை தனமான முகத்தையும், வெகுளியான சிரிப்பையும் கண்ட ரமணிக்கு, ஏனோ அவளை உடனே பிடித்து விட்டது...

“ஹ்ம்ம்ம் அப்படியே கூப்பிடு மா.. எனக்கு பெண் குழந்தை னா ரொம்ப ஆசை... கௌதம்க்கு அப்புறம் அடுத்து ஒரு பொண்ணு வேணும்னு வேண்டாத சாமியில்ல...

ஆனா அந்த பாக்கியம் மட்டும் கிடைக்கவேயில்லை...

இப்ப நினைச்சா அதுவும் ஒரு விதத்துல நல்லதுக்குதான் தோணுது.. இப்படி வந்து நான் கஷ்ட படுவதை போல, என்னோடு சேர்ந்து என் பொண்ணும் கஷ்ட பட்டிருப்பா...” என்று பெருமூச்சு விட்டவர்

“அகிலா குட்டியதான் அப்பப்ப ஆசையா தூக்கிக்குவேன்... ஆனா இந்த நிகில் பயல் மாதிரி, அவ என்னவோ என்கிட்ட ஒட்டவே மாட்டேனுட்டா..

அந்த மகி பயலும் அப்படித்தான்.. எப்பவும் அவங்க அம்மா முந்தானியை புடிச்சுகிட்டே சுத்துவாங்க.. பெரியவன் தான் எப்பவும் என் கூடவே இருப்பான்.. “என்றார் பெருமையாக..

“ஹ்ம்ம் சரி மா.. “ என்றவள் அவர் அருகில் சென்று அமர்ந்து, அவர் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு

“அப்புறம் ஒரு சந்தேகம் மா.... என்னை எப்படி பார்த்த உடனே கண்டு புடிச்சீங்க..?? “என்றாள் ஆச்சர்யமாக...

“ஹா ஹா ஹா.. நான் உன்னை போட்டோல பார்த்திருக்கேனே.. “என்றார் சிரித்தவாறு..

“போட்டோவா?? ஒரு வேளை இந்த சிடுமூஞ்சி கொண்டு வந்து காமிச்சிருப்பானோ?? “ என்று சந்தேகமாக தன் கணவனை பார்க்க, அவனும் சந்தேகமாக ரமணியைத்தான் பார்த்துகொண்டிருந்தான்...அதை கண்டவர்

“இந்த பயல எதுக்கு மது பார்க்கிற?? .. இவன் எங்க கொண்டு வந்து காமிச்சான்.. உன் மாமியார் தான் உங்க கல்யாண ஆல்பத்தை கொண்டு வந்து காமிச்சா.. “ என்று சிரித்தார்..

“என்னது அத்தையா?? “ என்றாள் மது ஆச்சர்யமாக...

“ஆமாம் மது.. சிவாதான் நேற்று என்னை பார்க்க வந்த பொழுது ஆல்பத்தையும் எடுத்து வந்தா.. அப்பதான் உன்னை போட்டோல பார்த்தது.. “ என்று சிரித்தார்...

“பாரேன்.. இந்த அத்தை எப்ப பார் இவங்களை வில்லி ரேஞ்சுக்கு திட்டிகிட்டே இருக்காங்க.. ஆனா எனக்கு தெரியாம வந்து இவங்களை பார்த்துட்டு போயிருக்காங்க.. பேட் அத்தை.. “ என்று உள்ளுக்குள் தன் மாமியாரிடம் சண்டை இட்டு கொண்டிருந்தாள்..

“என்னடா யோசனை?? ஓ.. வீட்ல எப்ப பார் என்னை திட்டிகிட்டே இருக்கிற உன் மாமியார், எப்படி என்னை பார்க்க வந்தானு ஆச்சர்யமா இருக்கா... ??

சிவா அப்படிதான்... வெளில என்னை திட்டினாலும் உள்ளுக்குள்ள என்மேல அவளுக்கு பாசம் அதிகம்.. என்னதான் என்னை திட்டினாலும் மாசம் ஒரு தரம் வந்து என்னை பார்த்துட்டு போய்டு வா... என்னைப் பார்க்காம அவளால இருக்க முடியாது...

இந்த பையன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனுட்டானு என் மேல கோபமா இருந்தா... நான் என்ன பண்ண மது?? ஆரம்பத்துல ஏதோ என் கவலையெல்லாம் இவன்கிட்ட கொட்டினேன் தான்..

இவன் அதை புடிச்ச்சுகிட்டு கல்யாணமே வேண்டாம்னு இருப்பானு யார் நினைச்சா?? ...

அதுக்கப்புறம் நானுமே இவன் கிட்ட நிறைய தரம் சொல்லிட்டேன்.. இவன் புடிச்ச பிடிவாதமா மறுத்திட்டான்.. நான் என்ன செய்ய?? .. அவளுக்கு நான் சொல்லிதான் இவன் கல்யாணத்தை மறுத்திட்டானு கோபம்... “ என்றார் வருத்தமாக...

“மா...இப்ப எதுக்கு அதெல்லாம் பேசறீங்க... “என்றான் நிகிலன் அவர் வருத்ததை தாளாமல்..

“ஹ்ம்ம்ம் எல்லாம் உன்னால தான் டா .. நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணியிருந்தா எனக்கு ஏன் கெட்ட பேர் வந்திருக்குமாம்?? எப்படியோ சிவா நல்ல மனசுக்கு தான் தங்கமான மருமக வந்திட்டா... எல்லாம் அவ கும்பிடற அந்த வேலன் சேர்த்து வச்சுட்டான்... “ என்று சிரித்தார் ரமணி...!

“ஹ்ம்ம்ம் நான் பண்ணின பாவம்தான் எனக்கு இப்படி ஒரு மருமக வந்து எங்க குடும்பத்தை ஆட்டி படைச்சிட்டா.. “என்றார் வருத்தமாக..

அவர் கையை மெல்ல அழுத்திய மது

“கவலை படாதிங்க மா..எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்... “ என்றாள் ஆறுதலாக...

அவரும் தன்னை சமாளித்து கொண்டு

“நானும் உங்க கல்யாணம் ஆனதில் இருந்தே, உன்னை இங்க கூட்டிகிட்டு வரசொல்லி இவன்கிட்ட சொல்லி சலிச்சு போச்சு மது .. இவனும் இன்னைக்கு நாளைக்கு னு கூட்டிகிட்டு வரவேயில்லை...

இப்பதான் மனசு வந்து கூட்டி வந்திருக்கான்.. அது கூட நீ சொல்லி தான் வந்திருப்பான் னு நினைக்கிறேன்.. “என்றார் சிரித்தவாறு...

“ஆமா.. இந்த விருமாண்டி என்னை கூட்டிகிட்டு வந்திட்டாலும்.. “ என்று மனதுக்குள் திட்டியவள், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்

“அவருக்கு வேலை அதிகம் மா.. அதோட நானும் க்ளாஸ்க்கு போய்டறதால நேரம் இல்லை... அதான் வர முடியலை.. “ என்று சமாளித்தாள்..

அதை கேட்டு ரமணிக்கு ஆச்சர்யம்..

எப்ப சமயம் கிடைக்கும்… தன் கணவனைப் யாரிடமாவது பற்றி குற்றப் பத்திரிக்கை வாசிக்கலாம்.. என்று காத்திருக்கும் பொண்ணுங்க மத்தியில், தன் கணவனை விட்டு கொடுக்காமல் மது பேசியதை கண்டு ஆச்சர்யபட்டார்...

நிகிலனுக்குமே ஆச்சர்யமாகத்தான் இருந்தது..

ரமணியிடம் அவனைப்பற்றி புகார் செய்தால், அவர் அவனை திட்டுவார் என்று தெரியும்.. ஆனால் இவள் அதற்கு இடம் கொடுக்காமல் பூசி முழுகிய விதம் ஆச்சர்யத்தை கொடுத்தது...

ரமணியும் அதை புரிந்து கொண்டு

“பரவாயில்லையே.. உன் புருசனை விட்டு கொடுக்காம பேசற.. இப்படியே கடைசி வரைக்கும் இருக்கணும்...

எனக்கு வாய்த்தவள்தான் சரியில்லை.. இந்த கௌதம் பயலும், ஆரம்பத்துலயே அவளை தட்டிக்கேட்காம, கண்டுக்காம விட்டுட்டான்...அப்படி மயக்கி வச்சிருக்கா என் பையனை... சரியான மயக்கும் மோகிணி... “ என்று தன் மருமகளை ஒரு மூச்சு திட்டி தீர்த்தார்..

*****

வந்ததில் இருந்தே ஒன்றை கவனித்து இருந்தாள் மது..!

ரமணி என்னதான் பேசினாலும், இடையில் தன் பையன் கௌதம் பற்றி தானாகவே பேச்சில் அடிக்கடி வந்திருந்தது..

அதிலிருந்தே அவர் பையனை எவ்வளவு நேசிக்கிறார்….எவ்வளவு தேடுகிறார் என்று புரிந்தது மதுவுக்கு...

என்னதான் தன் கணவனை அவர் மூத்த மகன் என்று சொன்னாலும், பெத்த மகனுக்கும், வளர்த்த மகனுக்கும் வித்தியாசம் இருக்கும் தானே...

நிகிலன் அவர் மீது உயிராக இருந்தாலும், அவரின் முழு மொத்த பாசம், முதலில் அவர் மகன் கௌதம் க்குத்தான். பிறகுதான் தன் கணவன் என்று புரிந்தது மதுவுக்கு.

“இப்படி பட்ட பாசமான அம்மாவை விட்டு, அந்த கௌதம் அண்ணாக்கு செல்ல எப்படி மனசு வந்ததோ?? “என்று எண்ணியவள்

“கௌதம் அண்ணாக்கும் உங்க மேல பாசம் இருக்கு மா.. என்ன? வெளில காட்டிக்க மாட்டேங்குறார்.. அவ்வளவுதான்..” என்றாள் மது அவரை சமாதான படுத்த...

“ம்ச்... அதெல்லாம் ஒன்னும் இல்ல மது.. அந்த பய கல்யாணம் ஆன உடனேயே மாறிட்டான்... பொண்டாட்டிதான் அவனுக்கு உலகம்.. இந்த அம்மா எப்படி இருக்கானு கூட நினைச்சு பார்க்க மாட்டேங்கிறான்..

ஏதோ இந்த பெரியவன் இருக்கறதால தான் நான் இவ்வளவு நாளா இந்த உயிரை புடிச்சு வச்சுகிட்டிருக்கேன்.. இவனும் இல்லைனா எப்பயோ என் புருஷன் போன இடத்துக்கே போய் சேர்ந்திருப்பேன்.. “ என்று கண் கலங்கினார்...

“என்னமா…? இது சின்ன புள்ளையாட்டம்.. அதான் நீங்களே சொல்லிட்டிங்க இல்ல.. இவர் இருக்கார்னு.. அதோட இனிமேல் உங்க பொண்ணு நானும் இருக்கேன் உங்களுக்காக... நீங்க இனிமேல் வருத்தபடக்கூடாது... “ என்று செல்லமாக கண்டித்து, அவரை கட்டிக் கொண்டாள் மது..

பின் ஏதோ யோசித்தவள்.

“கௌதம் அண்ணாவும் பாசாமாதான் இருக்கார் மா... இல்லைனா உங்களுக்காக கேக் கொடுத்து விட்டிருப்பாரா?? “என்றாள் சிரித்தவாறு..

அதை கேட்டு குழம்பிய ரமணி

“நீ என்ன சொல்ற மது?? “ என்றார் ..

“ஆமாம் மா..நாங்க இப்ப நம்ம வீட்ல இருந்துதான் வர்ரோம்.. கௌதம் அண்ணா பிறந்த நாளுக்காக கேக் கட் பண்ணினோம்.. உங்களுக்கு கொடுக்க சொல்லி அவர் தான் பேக் பண்ணி கொடுத்து விட்டார்... “ என்றவள் தன் ஹேன்ட்பேக்கில் இருந்த கேக் பாக்சை எடுத்து ரமணியின் கையில் கொடுத்தாள்..

பின் தன் அலைபேசியில் அவள் பதிந்திருந்த கௌதமின் கேக் வெட்டும் வீடியோவை எடுத்து காண்பித்தாள்..

அவள் வசந்தியை விடுத்து கௌதம் ஐ மட்டுமே கவர் பண்ணியிருந்தாள்.. புது ட்ரெஸ்ஸில் கௌதம் சிரித்த முகமாக அந்த பிறந்த நாள் கேக் வெட்டியதை கணடதும் அவர் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தன...

மது அந்த பாக்சை திறந்து அதில் இருந்த கேக்கை எடுத்து

“உங்க பையன் பிறந்த நாள் கேக் ஐ நீங்களும் சாப்பிடுங்க.. “ என்றாள்...

அவர் மறுக்க, மது வற்புறுத்தி அவருக்கு அந்த கேக் ஐ ஊட்டி விட்டாள்...

அவரும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டே

“ஓவ்வொரு வருசமும் அவன் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவோம்... ஒரு 10 பேராவது சுத்தி நின்னு கேக் வெட்டுவோம்.. இப்படி அனாதை மாதிரி தனியா நிக்கிறானே...

அவன் பிறந்த நாளுக்காக கடைக்கு போய் புது ட்ரெஸ் எல்லாம் கூட வாங்கி வச்சேன்.. இந்த பையன் பார்க்க வருவான் னு .. கடைசியா வரவே இல்லை... ஒரு போன் கூட பண்ணலை.. “ என்றார் வேதனையுடன்...

****

கௌதம் எப்பவும் தன் பிறந்த நாள் அன்று, காலையில் எழுந்ததும் தன் அன்னையிடம் அலைபேசியில் அழைத்து ஆசி வாங்கி விடுவான்..

அது தெரிந்தோ என்னவோ வசந்தி இன்று காலையில் இருந்தே அவனை தனியாக விடாமல் எதாவது வேலையை சொல்லி. அவளுடனே வைத்து கொண்டாள்.

அதனால் இன்று அவனால் போன் பண்ண முடியாமல் போயிருந்தது...

“என்ன மா சொல்றீங்க.. அண்ணாவுக்காக ட்ரெஸ் வங்கினீங்களா?? எப்படி?? “ என்றாள் மது ஆச்சர்யமாக

“ஹ்ம்ம் நேற்று சிவா வந்தப்போ நானும் அவளும் தான் சிட்டிக்கு போய் அவனுக்காக ட்ரெஸ் வாங்கி வந்தது.. அவன் வந்தா வெறும் கையோட அனுப்ப வேண்டாம்னு..

ஒவ்வொரு பிறந்த நாளுக்குமே வாங்கி வைப்பேன்.. அன்று இல்லைனாலும் அவன் வர்றப்போ எடுத்துகிட்டு போய்டுவான்.. இந்த வருசம் தான் வரவும் இல்லை.. போனும் பண்ணலை.. “ என்றார் மீண்டும் வருத்தமாக..

மது வரும்பொழுது அவர் வெறித்து அமர்ந்திருந்த பார்வையின் அர்த்தம் இப்பொழுது புரிந்தது..

“எங்க நீங்க எடுத்த ட்ரெஸ்ஸை காமிங்க... “ என்றாள் மது ஆர்வமாக

“ம்ச் அது எதுக்கு மா ?? “ என்றார் சலிப்புடன்

“இல்ல மா.. நீங்க போய் எடுத்து வாங்களேன்..” என்றாள் கொஞ்சலாக..

அவரும் எழுந்து அருகில் இருந்த அலமாரியை திறந்து தன் மகனுக்காக வாங்கி வைத்திருந்த அந்த புது ட்ரெஸ் ஐ கொண்டு வர, அதற்குள் மதுவின் அலைபேசிக்கு மெசேஜ் வந்திருந்தது.. அதை பார்த்தவள் முகம் புன்னகையில் விரிந்தது..

ரமணி எடுத்து வைத்திருந்த ட்ரெஸ்ஸை கொண்டு வந்து காட்ட,

“வாவ்.. சூப்பர் செலக்சன் மா... “ என்று பாராட்டினாள் மது ..

“ஹ்ம்ம்ம்ம் நல்லா செலக்ட் பண்ணி என்ன பண்ண??.. இந்த பய வரலையே.. “என்றார் மீண்டும் வேதனையுடன்..

“சரி.. உங்க பையனுக்கு உங்க மேல பாசம் இருக்கா இல்லையானு இப்ப டெஸ்ட் பண்ணலாமா?? என்றாள் மது சிரித்தவாறு

“டெஸ்ட் ஆ?? “ என்று குழப்பமாக பார்த்தார் ரமணி..

“ஆமாம் மா.. உங்க பையனுக்கு பாசம் இருந்தால், நீங்க கண்ணை மூடிகிட்டு உங்க பையன் இப்பயே இங்க வரணும்னு மனதார வேண்டுங்க... உண்மையான பாசம் இருந்தா நீங்க வேண்டறது கண்டிப்பா நடக்கும்.. “ என்றாள்..

“வேண்டாம் மது மா... அதெல்லாம் அவன் வரமாட்டான்.. “ என்று மறுத்தார் ரமணி..

“வருவாரா ?? மட்டாரானு ?? இப்ப பார்க்கலாம்.. நீங்க சும்மா ட்ரை பண்ணுங்க மா... “ என்றாள்...

“ஹ்ம்ம் இல்ல.. இருங்க... நானே கண்ணை மூடிக்கிறேன்... “ என்றவள் எழுந்து ரமணியின் கண்களை மூடிக் கொண்டு,

“ஒரு நிமிடம் நல்லா வேண்டிக்கோங்க.. “ என்றாள்...

ரமணியும் கண்ணை மூடி வேண்ட

“சரி ... இப்ப கண்ணை திறந்து பாருங்க..” என்று தன் கையை அகற்ற, கண்ணை திறந்து பார்த்தவர், அதிர்ச்சியில் உறைந்து நின்றார்...

எதிரில் கௌதம் சிரித்தவாறே நின்று கொண்டிருந்தான்...

அவனை கண்டதும் நம்ப முடியாமல் கண்ணை மீண்டும் சுறுக்கி பார்க்க, அதற்குள் முன்னே வந்த கௌதம்

“மா.... என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.. “ என்று அவர் காலில் விழுந்தான்...

தன் கோபம் எல்லாம் பறந்து போ, க குனிந்து அவனை தூக்கியவர்

“எப்பவும் சந்தோசமா சிரிச்சுகிட்டே நீண்ட ஆயுளுடன் இருப்பா..” என்று தலையில் கை வைத்து ஆசிர்வதிக்க, அதில் நெகிழ்ந்து போனவன் அப்படியே அவரை கட்டி கொண்டான்....

சில விநாடிகள் இருவருமே அந்த அணைப்பில் உருகி நிக்க, பின் மெல்ல நிமிர்ந்தவன்

“என்னை மன்னிச்சிடு மா.. உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்... “என்றான் கண் கலங்க....

உடனே அருகில் இருந்த மது

“அடடா.. என்ன அண்ணா இது?? .. பிறந்த நாள் அதுவும் யாராவது கண் கலங்குவாங்களா?? அம்மா... உங்களுக்கும் தான்... பழசையெல்லாம் எதுவும் பேசாதிங்க...

நீங்க சொன்ன மாதிரி அண்ணா உங்கள பார்க்க வந்திட்டார் இல்லை.. இப்ப ஒத்துக்கறீங்களா அவருக்கும் உங்க மேல எவ்வளவு பாசம் இருக்குனு.. “என்று சிரித்தாள்..

ரமணியும் ஒத்துக் கொள்வதாக தலையாட்ட

“சரி.. அப்படீனா உங்க பிறந்த நாள் பரிசை அண்ணாக்கு கொடுங்க...” என்று அவர் கட்டிலில் வைத்திருந்த அந்த ஆடையை எடுத்து வந்து ரமணியின் கையில் கொடுத்து கௌதம்க்கு கொடுக்க வைத்தாள்...

ரமணியும் அவனிடம் கொடுக்க அதை மகிழ்ச்சியோடு வாங்கியவன் பிரித்து பார்க்க அப்படியே அசந்து நின்றான்...

நேற்று அவனுக்காக ட்ரெஸ் வாங்க வசந்தி அழைத்து சென்ற பொழுது, இதே ட்ரெஸ் தான் அவன் தேர்வு செய்தது.. அவனுக்கு பிடித்த கலர் அது..

ஆனால் அது வசந்திக்கு பிடிக்காததால் அதை வாங்க மறுத்து விட்டாள்...

அவன் மனம் அறிந்து அதையே தன் அன்னை வாங்கி வைத்திருக்கவும் அப்படியே நெகிழ்ந்து போனான் கௌதம்...!

“சூப்பரா இருக்கு மா.. ரொம்ப தேங்க்ஸ் மா..” என்று அவரை மீண்டும் கட்டிகொண்டு கன்னத்தில் முத்தமிட, ரமணிக்கு இன்னும் மகிழ்ச்சியாகி போனது...

ரொம்ப நாளைக்கு பிறகு கொஞ்சம் சந்தோசம் திரும்பியிருந்தது அவர் கண்களில்....

நிகிலன் அங்கு நடப்பவைகளை எல்லாம் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்..

நிகிலன், இந்த பயல எத்தனையோ முறை அழைத்திருக்கிறான் ரமணியை வந்து பார்க்க சொல்லி...

ஆனால், எதாவது ஒரு காரணத்தை சொல்லி வர மறுத்து விடுவான்..

இன்று அவன் இங்கு வந்ததே ஆச்சர்யம் நிகிலனுக்கு...அங்கு நடப்பதையே ஆச்சர்யத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தான்.

மதுவும் அவர்களின் சந்தோச நொடிகளை ரசித்தவள்

“ஓகே அண்ணா.. அப்படியே நல்ல பையனா போய் இந்த ட்ரெஸ் ஐ போட்டுகிட்டு வருவீங்களாம்... நாங்க எல்லோரும் பார்ப்போமாம்... “ என்றாள் சிரித்தவாறு....

“இப்பவே வா.. நான் அப்புறம் போட்டுக்கறேன் மது .. “ என்றவனை வற்புறுத்தி அந்த ஆடையை போட சம்மதிக்க வைத்தவள்

“சும்மா வெட்க படாம போய் மாத்திகிட்டு வாங்க னா..” என்று அவனை பிடித்து அந்த அறையின் வாயில் பக்கம் தள்ளினாள் பின்னால் இருந்து...

“விடமாட்டியே மது குட்டி.. “ என்றவாறு அவனும் வெளியில் செல்ல, தன் கணவன் அருகில் வந்தவள்

“சார்... ஒரு நிமிசம் உங்க கிட்ட பேசணும் வர்ரீங்களா?? “ என்றாள் ரகசியமாக...

அவன் அவளை முறைத்தவாறு வெளியில் வர, அவள் ஏதோ ரகசியமாக கெஞ்சிக் கேட்டாள்..

அதை கேட்டு மறுத்து அவளை முறைக்க,

“ப்ளீஸ் சார்.... இந்த ஒரு முறை மட்டும் தான்.. இனிமேல் இதுமாதிரி எதுவும் கேட்க மாட்டேன்... “ என்றாள் கெஞ்சலாக...

அவளின் ப்ளீசில், காரில் வரும்பொழுது அவள் எது சொன்னாலும் கேட்க கூடாது என்று எடுத்திருந்த சபதம் மறந்து விட,அவன் தலை தானாக ஆடியது...

அதை கண்டதும் “தேங்க்ஸ் சார்... “என்று குதித்தவாறு அறை உள்ளே ஓடினாள்...

*****

உள்ளே சென்றவள் நேராக ரமணியின் அலமாரிக்கு சென்று அதை திறந்து பார்க்க, அங்கு பல வண்ண சேலைகள், புதுசாக பிரிக்காமல் அப்படியே மடித்தபடி வைக்க பட்டிருந்தன...

அதை கண்டு அதிசயித்தவள்

“அம்மா...எதுக்கு இவ்வளவு புடவை இங்க இருக்கு.. ? “ என்றாள் புரியாதவாறு...

“அதெல்லாம் என் பெரிய பையன் எனக்காக வாங்கி கொடுத்தது மது... ஒவ்வொரு பண்டிகைக்கும், அவன் சிவாவுக்கு புடவை எடுக்கும் பொழுது, எனக்கும் சேர்த்தே தான் எடுப்பான்.. நான் வேண்டாம் னு சொன்னாலும் கேட்க மாட்டான்...

ஆனா இதையெல்லாம் கட்டிகிட்டு நான் எங்க போறேன்.. அதனால அதெல்லாம் பிரிக்காம அப்படியே இருக்கு.. “ என்றார் ஆதங்கத்துடன்....

அதை கேட்ட மது அதில் இருந்த புடவைகளில் ஒன்றை தேர்வு செய்து எடுத்து வந்தவள்

“சரி மா.. எழுந்து இந்த புடவையை கட்டுங்க.. “ என்றாள்..

ரமணி புரியாமல் முழிக்க,

“நீங்கதான இதையெல்லாம் கட்டிகிட்டு எங்க போறேனு சொன்னீங்க.. இன்னைக்கு நீங்க இந்த புடலையை கட்டிகிங்க... ஒரு ஸ்பெஷல் இருக்கு .. “என்றாள் அதட்டும் தொனியில்..

“அதெல்லாம் வேண்டாம் மது.. “ என்று ரமணி மறுக்க,

“அதெல்லாம் வேணும் மா... கிளம்புங்க... எனக்காக..ப்ளீஸ்... “ என்று பாவமாக கெஞ்ச, அதற்கு மேல் மறுக்க முடியாமல் ரமணியும் எழுந்து அந்த புடவையை மாற்றிக் கொண்டார்...

மது அவருக்கு தலை வாரி சடை போட்டு முகத்துக்கு சிறு ஒப்பனை செய்த பின் பார்த்தவள் அசந்து நின்றாள்....

ஒரு கண்ணாடியை கொண்டு வந்து அவர் முகத்தை காட்டியவள்

“பாருங்க மா ... எவ்வளவு சூப்பரா இருக்கீங்க... அப்படியே 10 வயது குறைஞ்சு போச்சு... எனக்கு அக்கா மாதிரி ஆயிட்டீங்க... “ என்று சிரித்தாள்..

“அட போடா மது ... சும்மா ஓட்டாத.. “என்றார் மெல்ல வெட்கபட்டு..

“நிஜமாலும் மா... நான் சொன்னா நம்பலைனா உங்க பெரிய பையன் வந்த உடனே பாருங்க... நான் சொன்ன மாதிரி தான் சொல்லப் போகிறார்.. “ என்றாள் சிரித்தவாறு..

“அப்புறம் இப்ப பார்க்க எவ்வளவு சூப்பரா இருக்கிங்க.. இப்படியே எப்பவும் இருங்க.. அத விட்டுட்டு, எப்ப பார் கண்ணுல சோகத்தையும் விரக்தியும் வச்சுகிட்டு விட்டத்தை பார்த்துகிட்டே இருக்க கூடாது.

அப்படி இருந்தா மட்டும் வாழ்க்கை சரியாகிடுமா??

எப்பவும் நாம தொலைத்ததையும், நமக்கு கிடைக்காமல் போனதையும் நினைத்து வருத்தபடாமல், நம்மகிட்ட இருக்கிறத நினைச்சு சந்தோச பட்டுக்கணும் மா..

கௌதம் அண்ணா உங்களை விட்டு போனா என்ன… உங்களை உயிரா நினைக்கிற உங்க பெரிய பையன நினைச்சுக்கங்க.. உங்க மேல அக்கறை காட்டற உங்க பிரண்ட் சிவா அத்தை… அப்புறம் இப்ப உங்க பொண்ணு நான் இருக்கேன்..

இப்படி நல்லவங்க எல்லாம் சுத்தி இருக்க, அதை நினைத்து பெருமை பட்டுக்கங்க மா .. நாம வருத்த பட்டு சோகமா இருக்கிறதால ஒன்னும் மாறிட போவதில்லை...

இருக்கிறவரைக்கும் பிரியா ஜாலியா இருங்க... இன்னும் சூப்பரா இருப்பீங்க.. “என்று அவர் கன்னத்தை பிடித்து கிள்ளி, செல்லமாக ஆட்டி சிரித்தாள் மது...

அதை கண்ட ரமணி ஆச்சர்யபட்டு நின்றார்..

இதுவரை இதையே தான் நிகிலனும் அடிக்கடி சொல்லுவான்.. ஆனால் அவரால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை..

இன்று மது வந்ததும், அவரிடம் உரிமையாக அதட்ட, அதை தட்ட முடிய வில்லை அவர்க்கு..

அதோடு இந்த மாதிரியாகஅவரிடம் யாரும் நெருக்கமாகவும் இருந்ததில்லை..

நிகிலன், கௌதம் இருவருமே ஓரளவுக்கு வளர்ந்த பிறகு சிறு இடைவெளி தான்... என்னதான் பசங்களை பாசமா வளர்த்தாலும், பெண் புள்ளைங்க மாதிரி இப்படி உரிமையா நடந்துக்க முடியாது என்று புரிந்து கொண்டார்..

“அதனால் தான் பொண்ணை பெத்தவங்க கொடுத்துவச்சவங்க னு சொல்வாங்க போல.. “ என்று நினைத்து சிரித்து கொண்டார் ரமணி...!

நீண்ட நாட்களுக்கு பிறகு, அவர் முகத்தில் வந்திருந்த சிரிப்பு அது.. !!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top