Seemaya nachinu erukuவைஷ்ணவியின் நிலைதான் இப்படியென்றால், மாதேஸ்வரன் மொத்தமாக பாழான நிலையிலிருந்தார். தனது மருமகனின் இன்னொரு பக்கத்தை அறிந்து கொண்டதில் முற்றிலுமாக உடைந்து போயிருந்தார்.
தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்தவன், மாதேஸ்வரனை அணைத்துக் கொண்டான்.
ரவி எதுவுமே பேசவில்லை. பேசினாலும் எதுவுமாகப் போவதில்லை. இது தானில்லை என்று சொல்ல முடியுமா? போலியானது என்று வாதிடத்தான் முடியுமா?
“இது எதேச்சையா ரெக்கார்ட்டான வீடியோப்பா. ஸ்வேதா பண்ணனும்ன்னு பண்ணல. பிரச்சனை ஆரம்பிச்சுருச்சுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், இந்த வீடியோவ கொடுத்தா. பத்து வருஷமா அவளை ரவி டார்ச்சர் பண்ணிட்டு இருந்திருக்கார்ப்பா. எல்லாமே அவர் சொன்னபடி தான் நடந்திருக்கு. இவருக்கு ஸ்வேதா மட்டும் பழக்கமில்லை. நிறைய பேர் கூட இருக்காம்.” ரவியை பார்த்தபடி ஷான் கூற, அவரது தலையில் இடியே விழுந்தது போலிருந்தது.
“இப்படியும் நாம ஏமாளியா இருக்க முடியுமா தம்பி?” வெறுத்துப் போய் மாதேஸ்வரன் கேட்க,
“இருந்திருக்கோமே...” என்றவன், “இன்னும் இருக்குப்பா... இதையும் கேளுங்க...” என்று முக்கியமான ஆடியோ ஆதாரங்கள் அனைத்தையும் போட்டுக் காட்டினான்.
அனைத்தையும் கேட்டவர்களால் எதுவும் பேச முடியவில்லை. அத்தனை தகிடுதத்தங்கள்.
இதையெல்லாம் எப்போது செய்தான் என்பதைக் கூட ரவியால் யோசிக்க முடியவில்லை. அவனது மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது.
“சரண்சிங் ஒரு புக்கீ ப்பா. அவன் மாதிரி இன்னும் நிறைய பேர் கூட ரவிக்கு பழக்கமிருக்கு. ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு டீலிங். ஆனா சரண் சிங் முக்கியமான ஆள். ரவி நேரடியா பெட்டிங் பண்ணல. ஆனா அவங்க சொன்ன மாதிரி பிக்ஸ் பண்ணி கொடுத்து இருக்கார். அதன் மூலமா சம்பாதிச்சு இருக்கார்.” என்றவன் சற்று இடைவெளி விட்டு, “அந்த பணத்தை எல்லாம் வெள்ளையாக்க நம்ம ட்ரஸ்ட்ட யூஸ் பண்ணிருக்கார்...” என்று சற்று மெல்லிய குரலில் கூற,
“என்ன ஷான் சொல்ற?” இருவரும் ஏக காலத்தில் அதிர்ந்து கேட்டார்கள்.
கிரிக்கெட்டை காட்டிலும் இது மிகப்பெரிய தவறாயிற்றே!
ரவிக்கு இது அனைத்தையும் விட அதிர்ச்சியாக இருந்தது.
“அபாண்டமா சொல்லாத ஷான்... பேசனும்ன்னு பேசிட்டு இருக்க...” முதன்முறையாக வாய் திறந்தான் ரவி.
அனைத்து ஆதாரங்களையும் ஹேக் செய்து அழித்து விட்டதாக ரவி கருதி இருக்கலாம். ஆனால் அதற்கு முன்னரே ஷானும் ப்ரீத்தியும் அனைத்தையும் பேக் அப் செய்து விட்டார்கள் என்பதை ரவி அறிய மாட்டான்.
“மாமா... சரண் சிங் மூலமா அந்த ரெண்டு ஹேக்கர்ஸ் வெச்சு நீங்க எல்லாத்தையும் ஹேக் பண்ணி டெலீட் பண்ணிட்டதா நினைக்கலாம். ஆனா அத்தனையும் அதுக்கு முன்னாடியே நாங்க பேக் அப் பண்ணிட்டோம். உங்களுக்கு ஹேக் பண்ண தெரிஞ்சா எங்களுக்கு ரிவர்ஸ் ஹேக்கிங் பண்ண தெரியாதா?” என்று சிரித்தவன்,
“உங்க ஜாதகமே இப்ப என் கைல. உங்க ஜாதகம் மட்டுமில்ல, சைலேஷ், சரண்சிங், ஹெக்டே இன்னும் உங்க சர்க்கிள்ல இருக்க அத்தனை பேரோட ஜாதகமும் என்னோட டேட்டாபேஸ்ல இருக்கு. கொஞ்சம் அப்படி இப்படின்னு நீங்க போனாலும், முழுசா லீக் பண்ணி விட்டுடுவேன். சைலேஷ் மாதிரி உங்களை ஓட விடாம இருக்கேன். வைஷுவுக்காக. ஜாக்கிரதை...” என்றவன், மாதேஸ்வரன் புறம் திரும்பி,
“எஸ் ப்பா. நம்ம ட்ரஸ்ட்ல நிறைய பேரோட ப்ளாக் மணி எல்லாத்தையும் கொண்டு வந்திருக்கார். அதுக்கு லிங்க் சைலேஷ். டெம்பிள் ட்ரஸ்ட். டோனேஷனுக்கு ப்ராப்பர் ரெக்கார்ட்ஸ் தேவையில்லை. சோ இவருக்கு ஈசியா இருந்திருக்கு. இவரோட பெர்சண்டேஜ எடுத்துகிட்டு, வெளிநாட்டுல இருந்து பாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட் மாதிரி சம்பந்தப்பட்டவங்களுக்கு பணத்தை அனுப்பி இருக்கார்.” என்றவன் சற்று ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, “ஒரு வருஷத்துல கிட்டத்தட்ட பன்னிரெண்டாயிரம் கோடிய மாத்தி இருக்கார் ப்பா... அதுல இவரோட கமிஷன் மட்டும் இரண்டாயிரத்து நானூறு கோடி...” என்றவனின் வார்த்தைகளை மாதேஸ்வரனால் ஜீரணம் செய்ய முடியவில்லை.
“நான் உள்ள வந்துட்டா, இதெல்லாம் கெட்டுடும்ன்னு சொல்லி தான் என்னை எப்படியாவது காலி பண்ணனும்ன்னு ட்ரை பண்ணிருக்கார்...” என்றவன், “இப்ப சொல்லுங்கப்பா. இவரை எப்படி நான் சும்மா விட முடியும்?” என்று கேட்க,
“சும்மா விடறதா? எதுக்குடா? எதுக்கு சும்மா விடற? இந்த நாய் இனிமே இந்த படிய மிதிக்கக் கூடாது...” சொன்னது மாதேஸ்வரனில்லை, வைஷ்ணவி!
ரவுத்தரமாக எழுந்தவள், “என்ன தைரியம் இருந்தா, இவ்வளவு விஷயம் பண்ணிருப்ப. பண விஷயத்தைக் கூட விட்டுடுவேன். ஆனா என் கூட வாழ்ந்து ஒரு பிள்ளையும் பெத்துகிட்டு, ஊர் மேய்ஞ்சு இருக்கயே... உன்னையெல்லாம் எல்லாம் நான் மன்னிக்கவே மாட்டேன். நீ தான் உலகம்ன்னு நான் நம்பிட்டு இருந்ததுக்கு நீ கொடுத்த பரிசா இது?” என்று வைஷ்ணவி ரவுத்திரமாக கேட்க,
தலைகுனிந்த ரவி, “சாரி வைஷு...” என்றவனின் குரல் வெளியே வரவேயில்லை.
பளாரென அவனை அறைந்தவள்,
“என்ன டா சாரி? எதுக்குடா சாரி சொல்ற? நீ பண்ணது எல்லாம் மன்னிக்கக் கூடிய தப்பா? ஒரு சாரி சொல்லிட்டா எல்லாமே சரியாகிடுமா?”
“ஆகாது வைஷு. எது எப்படி இருந்தாலும் உன்னை என்னோட உயிரா பார்க்கறேன் வைஷு...” என்றவனின் குரல் தழுதழுத்தது.
இன்னொரு முறை பளாரென அறைந்தாள்.
“எப்படி, இவ்வளவு கேவலமா எத்தனையோ பேர் கூட இருந்துட்டு என்னை உயிரா நினைக்கறேன்னு சொல்லுவ? உனக்கே கூசல?” என்றவளின் முகத்தில் அத்தனை அருவருப்பு!
“ப்ளீஸ் வைஷு... என்னை எவ்வளவு அடி வேணும்னாலும் அடிச்சுக்க. ஆனா என்னை வெறுத்துடாதம்மா. அதை என்னால தாங்க முடியாது...” என்றவனின் கண்களில் உண்மையில் கண்ணீர் வழிந்தது.
“உன்னை மாதிரி நானும் பொறுக்கிட்டு வந்து என்னை மன்னிச்சிருன்னு சொன்னா அதை உன்னால ஏத்துக்க முடியுமாடா? உனக்கு நான் என்ன அவ்வளவு இளிச்சவாயா தெரியறேனா? பொம்பளைங்கன்னா உனக்கு அவ்வளவு இளப்பமா போச்சா?” என்று இன்னும் அவள் ஆத்திரம் தீரும் மட்டும் அடித்தாள்.
ஆனாலும் அவளது ஆத்திரம் தீரவில்லை.
அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு நின்றான் ரவி. அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனைவியின் இந்த அவதாரத்தை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. தான் பொம்மையாக ஆட்டுவித்த மனைவிதானே என்ற இறுமாப்பு அவனிடம் இருந்தது நிஜம். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அவள் மூலமாகவே அறிந்து கொண்டிருந்தான்.
“நிதானமா இரு வைஷு...” என்று கூறிய ஷான், “ரவியை ரொம்பவும் காட்டிக்கொடுத்தா நம்ம பேர் தான் கெட்டுப் போகும். அதனால தான் மொத்தத்தையும் தூக்கி குட்டைல போட்டு இருக்கேன். குழம்பற வரைக்கும் குட்டைய குழப்பிட்டு இருக்கலாம். கொஞ்ச நாள்ல இந்த விஷயம் அடங்கிடும். இந்த நேரத்துல நம்ம பொறுமை தான் முக்கியம்...” என்று கூற,
“இல்ல ஷான். இதுக்கு மேல பொறுமையா நான் இருக்க மாட்டேன்...” என்றவள், சற்று நிதானத்துக்கு வந்து, “எனக்கு இனிமே இவன் தேவையில்லைப்பா. டைவர்ஸ் பண்ணிடறேன்...” என்று பெரிய குண்டை தூக்கிப் போட,
“வைஷு...” என்ற ரவியின் குரலிலிருந்த அதீத அதிர்ச்சியை ஷான் கூட எதிர்பார்க்கவில்லை.
“நிதானமா யோசிச்சு சொல்லு வைஷு.” மாதேஸ்வரன், நிதானமாக கூறினார்.
“இதுல யோசிக்க தேவையில்லப்பா...”
“இல்ல வைஷு, நீ நிதானமா இல்ல. கோபத்துல எந்த முடிவும் எடுக்காத. டைவர்ஸ்ங்கறது பெரிய வார்த்தை. அதுக்கப்புறம் இருக்க வாழ்க்கைய நினைச்சு பாரு. உனக்காக தான் ரவிய இவ்வளவு விட்டு வெச்சுருக்கேன். நீ சொன்னா, இந்த விஷயத்தை இதுக்கு மேல கொண்டு போக மாட்டேன். ஆனா அவரோட எந்த கனெக்ஷனும் இந்த வீட்டுக்கும் சரி, கம்பெனிக்கும் சரி இருக்காது. நீ சொல்றதுல தான் இருக்கு. இன்னைக்கு நைட் முழுக்க யோசி. அப்புறமா முடிவு பண்ணு...” ஷான் பொறுமையாக அவளுக்கு ஒவ்வொன்றாக கூற, அவளது முகம் சற்று நிதானத்துக்கு வந்தது.
“இல்ல ஷான். யோசிச்சு இந்த நாய நான் மன்னிச்சுட கூடாது. நீ என்ன செய்யணுமோ அதை செய். நான் செய்ய வேண்டியதை நான் பார்த்துக்கறேன்.” என்று உறுதியாக கூறினாள்.
ரவி வைஷ்ணவியிடம் கெஞ்சிப் பார்த்தான். இனி அவளுக்கு துரோகம் செய்ய மாட்டேனென்று கதறியும் பார்த்தான். அவளது மனது இரங்கவில்லை. அவன் மேலிருந்த அதீத நம்பிக்கையும் காதலும், அவன் மேல் அதீத வெறுப்பாக மாறியிருந்தது.
அன்று மாலையே, முழுமையாக ரவிச்சந்திரனை வெளியேற்றியது ஜுபிடர் என்ற செய்தியும், ரவிச்சந்திரனை டைவர்ஸ் செய்ய வைஷ்ணவி முடிவு என்ற செய்தியும் மீடியாவில் ட்ரென்டிங் ஆனது.
நிருபர்களை சந்தித்த மாதேஸ்வரன், “பெட்டிங், மாட்ச் பிக்ஸிங் புக்கீகளுடன் திரு ரவிச்சந்திரனுக்கு தொடர்பிருப்பதாக நாங்கள் அறிகிறோம். கிரிக்கெட் என்பது நமக்கு விளையாட்டில்லை. நமது வாழ்க்கையின் ஒரு பகுதி. நம்முடைய உணர்வில் கலந்துவிட்ட பந்தம். அதில் இது போன்ற ஊழல்களை மருமகன் என்பதற்காக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த குற்றசாட்டுகளை ரவிச்சந்திரன் சட்டபூர்வமாக சந்தித்து மீள முடிந்தால் மீண்டு வரட்டும். ஆனால் இனி அவரை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று முதல், எங்களது நிறுவனத்திலிருந்தும், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட எங்களது அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் அவரை நிரந்தரமாக விலக்குகிறோம். இனி அனைத்துப் பொறுப்புகளையும் எனது மகனும் மகளும் மட்டுமே கவனிப்பார்கள்.”
உணர்ச்சி மயமாகக் கூறியவரின் கண்கள் கலங்கியது!
அருகிலிருந்த ஷான் அவரை அணைத்துக் கொண்டான்!
சமூக ஊடங்களில் மாதேஸ்வரனின் பெயர் உயர பறந்தது.
‘பீ-லைக்-மாதேஸ்வரன்’ என்றும் ‘பீ-லைக்-சென்னை-டீம்’ என்றும் ட்ரென்ட் ஆகி முதலிடத்தை பிடித்தது!
ரவியின் சகாப்தம் அவர்களது குடும்பத்தில் முடிந்தது. இனி சட்டம் மட்டுமே அவனை தண்டிக்க முடியும். அந்த சட்டத்தையும் வளைத்து அவன் மீண்டு விடுவான் தான். ஆனால் எந்நாளிலும் மாதேஸ்வரனின் வீடு அவனை வரவேற்காது. வைஷ்ணவியின் மனக்கதவு அவனுக்காக திறக்காது!
ஆனால் காலம் என்ன செய்ய காத்திருக்கின்றது என்பது நமக்கு இப்போது தெரியாது. அவன் திருந்தி விட்டான் வருந்திவிட்டான் அதனால் வைஷ்ணவி சேர்ந்து விட்டாள் என்று முடிக்க இது படமோ, நாவலோ அல்ல...
இது வாழ்க்கை!
மேலே ஏறுகிறவன், கீழே இறங்குவான்! கீழே போனவனும் மேலே ஏறி வருவான்!
சுருக்கமாக வாழ்க்கை என்பது பாம்புகளும் ஏணிகளும் நிறைந்த பரமபத விளையாட்டு!
முழுமையாக நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்றும் யாருமில்லை. நல்லது என்பதையும் கெட்டது என்பதையும் காலமும் சூழ்நிலையும் மட்டும் தான் முடிவு செய்ய முடியும். பலருக்கு கெட்டவனாக இருப்பவன் கூட யாரோ ஒருவரின் வாழ்வில் ஹீரோதான்! பார்க்கலாம் காலபோக்கில் ரவி ஹீரோவாகிறானா என்று!