• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறிஞ்சித் தேன் - முதற் பாகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
குறிஞ்சித் தேன் - முன்னுரை

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கலைமகள் இதழ்களில் தொடர்கதையாக வந்த இக்கதையை, நீலகிரி வாழ் மக்களின் வாழ்வை முறையாகக் கண்டு ஆராய்ந்த பின்னரே எழுதினேன்.

பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கும் இம்மலைகளில் வண்டுகள் அந்தப் பருவத்தில் பாறை இடுக்குகளிலும் மரக் கொம்புகளிலும் அடையடையாகத் தேன் வைக்குமாம். இந்நாட்களில் குறிஞ்சி பூக்கும் பருவமே தெரியவில்லை. இயற்கை வாழ்வு குலைந்து செயற்கை வாழ்வின் அடித்தள முயற்சி போல் பணத்தைக் குறியாகக் கொண்ட வாழ்வுக்குத் தேவையான தேயிலை - காபியே மலைகளில் நீள நெடுக கண்ணுக்கு எட்டிய வரையில் இடம் கொண்டன. பச்சைத் தேயிலை மணத்தை நுகர்ந்து கொண்டு அந்தக் குறிஞ்சித் தேனின் இனிமையைக் கற்பனையால் கண்டு ஒரு வாழ்வில் நிகழும் மாற்றங்களையும் போராட்டங்களையும் சித்தரிக்க முயன்றிருக்கிறேன். நான் இந்நவீனத்தை எழுதத் துணிந்த நாட்களில் மனித வாழ்வின் நிலையாய ஈரங்களினின்று அகன்று செல்ல வழிவகுக்கும் வாழ்வின் வேறுபாட்டைக் குறியாகத்தான் புலப்படுத்த எண்ணினேன். இன்று அந்தக் கருத்து வருந்தத்தக்க வகையில் அச்சமூட்டும் உண்மையாகப் பரவியிருக்கிறது. எனினும் மனித மனத்தின் இயல்பான ஊற்றுக் கண்கள் அன்பின் அடிநிலையைக் கொண்டதென்று நம்பிக்கை கொள்வோம். நல்ல நல்ல செயல்கள் பயனளிக்க ஒரு தலைமுறைக் காலம் பொறுத்திருக்கலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

இப்புதினத்தை, கலைமகள் காரியாலயத்தார் நூல் வடிவில் கொண்டு வந்த போது, பேரன்பு கூர்ந்து டாக்டர் மு.வ. அவர்கள் முன்னுரை எழுதிச் சிறப்பித்தார்கள். அச்சிறப்பு, எழுத்துலகில் பேதையாக அடி வைத்திருந்த என்னை, கற்றறிந்த புலவோர் முன் அறிமுகம் செய்து வைக்கும் பெரு வாய்ப்பாக மலர்ந்தது. நான் முன்னும் பின்னும் பல புதினங்களைப் புனைந்தாலும், இந்நூலே வரலாற்றுத்துறை அறிஞர், ஆராய்ச்சியாளர், மாணவர் போன்றவரிடையே என்னை ஓர் இலக்கிய ஆசிரியையாக அறிமுகம் செய்வித்திருக்கிறது. இப்பெருமைக்கும் முன்னோடியாக, இந்நூலை ஆர்வமும் ஆவலுமாக ஒரு திறனாய்வாளரின் கண்கொண்டு நோக்கி, ஆய்வுரை செய்த டாக்டர். திரு.ந. சஞ்சீவி அவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலை நான் எழுதுவதற்காக மேற்கொண்ட அல்லல்கள் பலப்பல. புத்தகத்தைக் கையில் காண்கையில் அவை அனைத்தும் மறந்து போகும் என்றாலும், இக்கதையில் ஒவ்வொரு செய்தியையும் அறிந்து, ஆய்ந்து, புனையும் கதைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்ட நுட்பங்களை வாசகர் உணர்ந்திருப்பாரோ என்று மனம் தவித்ததுண்டு.

நான் எழுதி முடித்து, நூல் வெளியாகி நாலைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், நான் கனவிலும் கருதியிராத வகையில் ஒரு பேராசிரியர் இந்நூலைப் படித்து வியந்த ஆய்வுரை படித்தார் என்ற செய்தியைக் கேட்டதும் பெரு மகிழ்ச்சி எய்தினேன். நான் எவ்வாறு மலை மக்கள் வாழ்வை நுணுக்கமாகச் சிந்தனை செய்து கருத்துக்களைப் புலப்படுத்தினேனோ, அவ்வகையில் ஒவ்வொரு கருத்தையும் பேராசிரியர் சஞ்சீவி அவர்கள் ஆராய்ந்திருக்கக் கண்டேன். ஓர் இலக்கியப் படைப்பாளிக்கு இதை விட என்ன பெரிய பரிசு தேவை?

இந்நூலை இப்போது ஆறாம் பதிப்பாக தாகம் பதிப்பகத்தார் கொண்டு வருகின்றனர். இத்தருணத்தில், இப்பதிப்புக்கு அன்புடன் அனுமதி அளித்த கலைமகள் அதிபருக்கும், இந்நூலுக்குச் சிறப்புகள் சேர்த்த பேராசிரியர் திரு.சஞ்சீவி அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் வாசகர்கள் வழக்கம் போல் இதையும் ஏற்று மகிழ்விப்பார்கள் என்று நம்புகிறேன். வணக்கம்.

ராஜம் கிருஷ்ணன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1. 1. பாரு வந்தாள்

பிள்ளைக்கனி ஒன்றை ஈன்று, பசுமை, யாவும் உடலில் மின்னும் புதிய தாய்மையின் நிறைவும் பூரிப்பும் விளங்க அமைதியில் ஒன்றியிருக்கும் ஓர் அன்னையைப் போல், அந்த மலைப் பிரதேசம் பிற்பகலின் அந்த மோனத்தில் காட்சியளித்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி மலராடை புனைந்து கொள்ளை அழகின் குவியலாய்த் தோன்றும் அந்த மலைப் பிரதேசத்தில் அந்த நீலம் பூக்கும் பேராண்டு, வசந்தத்தில் எழில் வடிவாகக் குலுங்கி, வானவனின் அன்பைப் பெற்ற மலை மடந்தை, அருள்மாரியில் பசைத்துச் செழித்து அன்னையாக நிற்கும் கார்த்திகை மாசக் கடைசி நாட்கள்.

நீலமலையன்னையின் அருமை பெருமைகள், செல்வங்கள் சொல்லில் அடங்குபவையோ? வெம்மை நீக்கித் தண்மை தரும் தன்மையினாள்; கனிகளும் கிழங்குகளும் தானியங்களும் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கித் தரும் வன்மையினாள். சந்தனமும் சாம்பிராணியும் கர்ப்பூரமும் மணம் வீசும் சோலைகளை உடையவள். அவளிடம் தேனுக்குப் பஞ்சமில்லை. அவள் வளம் கொண்டு பாலைப் பொழியும் கால்நடைச் செல்வங்களுக்கும் பஞ்சமில்லை. அண்டி வந்தவரை நிற இன பேதம் பாராட்டாமல், காபியும், தேயிலையுமாகக் குலுங்கிக் கொழித்து, ஆதரித்துச் செல்வர்களாக்கும் தகைமை அவளிடம் உண்டு.

அழகு, எளிமை, ஆற்றல் அனைத்தையும் விளக்கும் இந்த மலையன்னையின் மடியையே தாயகமாகக் கொண்டு வாழும் மக்களுக்கு, அவள் சிறப்புகள் உடலோடும், உயிரோடும் கலந்திருப்பதில் வியப்பு உண்டோ?

கார்த்திகை மாதத்தின் இறுதி நாளின் அந்தப் பிற்பகலில், பசுங்கம்பளத்தை விரித்தாற் போல் பரந்து கிடந்த மலைச்சரிவில் ஜோகி சாய்ந்திருந்தான். அந்தச் சரிவோடு ஒட்டி நீண்டு செல்லும் குன்றில் காணும் குடியிருப்புத்தான் அவனுக்கு உரிய இடம்; அவன் பிறந்த இடம் குடியிருப்பைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் மரகதக் குன்றுகள் சூழ தெற்கில் மட்டும் சோலை சூழ்ந்த கானகங்கள் நீண்டு சென்று, வெளி உலகச் சந்தடிகளும் வண்ண வாசனைகளும், போலி மினுக்கல்களும் அவ்விடத்தை எட்டி விடாதபடி, மீண்டும் குன்றுகளைச் சுற்றி வளைத்துக் காத்து வந்தன. முப்புறமும் மரகதக் குன்றுகள் சூழ, நடுவே விளங்கிய அந்தக் குடியிருப்புக்கு, ‘மரகதமலை ஹட்டி’ என்றே பெயர். (ஹட்டி - குடியிருப்பு)

குன்றின் மேல் ஏறி வீடுகளுக்கு அருகில் சென்று நோக்கினால், மேற்கே மடிப்பு மடிப்பாக நீலவானின் வண்ணத்தில் யானை மந்தை போல் குன்றுகளும், அவற்றுக்கெல்லாம் சிகரமாக ‘தேவர் பெட்டா’ என்று அழைக்கப்படும் தேவர் சிகரமும் கண்கொள்ளாக் காட்சிகளாகத் திகழும். கீழ்ப்புறமும் பசுங்குன்றுக்கு அப்பால் வளைந்து வரும் கானகங்களும், நடுநடுவே வெள்ளை, சிவப்புப் புள்ளிபோல் குடியிருப்புகள் சிதறிக் கிடக்கும் மேடு பள்ளங்களும் இயற்கையன்னையின் பயங்கரம், கருணை என்னும் இரு தன்மைகளை விளக்குவன போல் தோன்றும்.

கீழ்வானில் மலைக்கு அப்பாலிருந்து ஆதவன் எழும்பித் தேவர் சிகரத்துக்குப் பின் மறையும் வரையிலும் ஜோகிக்கு வெளியிலுள்ள நாட்களில் வீட்டு நிழலில் தங்க விருப்பம் கிடையாது. ஒன்பது வயதுச் சிறுவனாக அவனுடைய உலகம் முழுவதும் விரிந்து பரந்த புற்சரிவுகளும், குன்றின் கீழ் நெளிந்து நெளிந்து பாம்புபோல் செல்லும் அருவியின் கரையும், அந்த ஹட்டியுந்தாம். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அவனுடைய நாட்களில் துன்பத்தின் சாயையை அவன் காணவில்லை. அதிருப்தி இருந்தால் அல்லவோ துன்பம் தலைகாட்டும்? ஜோகிக்கு அன்பான அம்மை உண்டு; சீலமே உருவெடுத்த அப்பன் உண்டு; ஒத்த தோழர்கள் உண்டு. கதை சொல்ல ‘ஹெத்தை’ (பாட்டி) உண்டு. பொழுது இன்பமாய் நகர, எருமைகளும் பசுக்களும் மேய்க்கும் பணியும் உண்டு. அவனுக்கு எட்டிய உலகுக்கு அப்பால் ஆசை பரந்து போக, தூண்டும் பொருள் ஏது?

அவனுடைய தோழர்களாக ராமன், பெள்ளி, ரங்கன், கிருஷ்ணன் முதலியோர். ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டே கீழிறங்கி அருவிக்கு அப்பால் வெகு தூரம் சென்று விட்டனர். ஜோகி அந்த ஓட்ட விளையாட்டில் களைத்துத்தான் சரிவில் சாய்ந்திருந்தான். அவர்கள் ஹட்டியைச் சேர்ந்த எருமைகளும் பசுக்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்ற வண்ணம், மண்டிக் கிடக்கும் புல்லை வெடுக்கு வெடுக்கென்று கடித்து இழுக்கும் ஒலி அவன் செவிகளில் விழும்படி, தன் காதைப் புற்பரப்போடு வளைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அது அவனுக்கு ஒரு விளையாட்டு.

ப்டுக் - ப்டுக் - இது சீலிப் பசு. டுப் - டுப் - இது மெதுவான மந்த கதி நீலி எருமையா?

எழுந்து உட்கார்ந்து ஜோகி, தன் அநுமானம் சரியா என்று பார்ப்பவனைப் போல் ஓசை வந்த திசையில் பார்வையைச் செலுத்தினான்.

சீலிப்பசு உட்கார்ந்து அசை போட்டுக் கொண்டிருந்தது. நீலி எருமையைக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் காணவில்லை. ராமன் வீட்டு எருமைக்கன்று மணி குலுங்க மேலிருந்து கீழே ஓடியது.

தன் ஊகம் சரியல்ல என்று ஜோகி மறுபடியும் புற்பரப்பில் காதை வளைத்துக் கொண்டு படுத்தான். ப்டுக் ப்டுக்கென்ற ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த ஓசையில் அலுத்து, நீலவானைப் பார்த்துக் கொண்டு திரும்பிப் படுத்தான். கண்களை இடுக்கிக் கொண்டு, நீலவானமும் குனிந்து தன்னையே பார்ப்பது போல் எண்ணியவனாய் நினைத்துப் பார்த்தான்.

அந்த நீலவானில் இருக்கும் சூரியனை நேர்க்கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், அந்தச் சூரியன் இல்லாமல் உலகம் இல்லை. அவர்கள் வணங்கும் ஈசனின் உயிர்த் தோற்றம் அந்தச் சூரியன். ஜோகியின் தந்தை லிங்கையர், காலையில் எழுந்ததும் கிழக்கு நோக்கிப் பொங்கி வரும் செங்கதிரோனையே கும்பிடுவார்.

“ஒளிக் கடவுளே, நீ வாழி. மழையைத் தந்து மண்ணைச் செழிக்க வைக்கும் மாவள்ளலே, நீ வாழி. எங்களுக்கு உன் அருளையும் ஆசியையும் நல்குவாய்!” என்று பிரார்த்தனை கூறிக் கொண்டே, எருமைகளையும் கன்றுகளையும் அவர் அவிழ்த்து விடுவார். அவர் வீடு திரும்புகையில், சூரியன் தேவர் சிகரத்துக்கு அப்பால் சென்று விடுவான். அப்போது ஜோகியின் அம்மை மாதி வீட்டில் இருளை நீக்க ஆமணக்கு நெய்யூற்றித் தீபமாடத்தில் அகல் விளக்கு ஏற்றி வைத்திருப்பாள். இரவில் சூரியன் இல்லாத போது, வீட்டில் அவர்களுக்கு அந்தத் தெய்வத்தின் சின்னமாக விளங்குவது அந்த விளக்கு. வீட்டில் அவ்விளக்கு இல்லாவிட்டால், நிலம் விளையாது, மாடு மடி சுரக்காது என்பதையெல்லாம் ஜோகி அறிவான்.

அவனுக்கு இருளென்றால் அச்சம் அதிகம். காடுகளில் வசிக்கும் குறும்பர் இருளில் தான் எவரும் அறியாமல் மந்திர மாயங்கள் செய்வார்கள். நாயாக, நரியாக, பூனையாக அவர்கள் வந்து மாயங்கள், தீமைகள் செய்த கதைகளை, ஜோகி ‘ஹெத்தை’ கூறக் கேட்டிருக்கிறான். அது மட்டுமா? சூரியன் இல்லாத சமயங்களான இரவுகளில் தான் சிறுத்தையும் கரடியும் பன்றியும் உலவுகின்றன. அவர்கள் பயிரைக் கடித்துப் பன்றிகள் பாழ் செய்கின்றன. சூரியன் இருந்தால், அவை வருமோ?

இத்தகைய முடிவில் எண்ணக்கொடி வந்து நின்றதும் ஜோகிக்கு மின்னலென ஒரு கீற்றுப் பளிச்சிட்டது.

வீட்டுக்குள் விளக்கு வைப்பது போல், நீள நெடுக, நிலத்தில், சோலையில், கொட்டிலில், ஆயிரமாயிரம் விளக்குகள் வைத்து விட்டால், மலை முழுவதும் விளக்குகளாகவே நிறைத்து விட்டால்? மரகத மலை முழுவதும், சுற்றிலும் விளக்குகள் போட்டு இருளின்றி அகற்றிவிட்டால், பகல் போல ஆகுமோ? இது போல் நீலவானம் தெரியுமோ?

ஜோகி தன் கண்களை மூடிக் கொண்டான். அவன் கற்பனையில் அவன் உலகமெல்லாம் அகல் விளக்குகளின் ஒளி படர்ந்தது. ஆனால் வான் முழுவதும் அந்த ஒளி படருமோ? எட்டுமோ?

அவன் கற்பனைக்கு அந்தக் காட்சியே எட்டவில்லை. உயர உயரக் கம்பங்கள் நட்டு, விளக்குகளை வைக்கலாம். ஓங்கி வளர்ந்திருக்கும் கானக நெடு மரங்களான கர்ப்பூர (யூகலிப்டஸ்) மரங்களில் விளக்குகள் பொருத்தலாம். பெரிய பெரிய மண் சட்டிகளில் நிறைய எருமை நெய்யோ, ஆமணக்கெண்ணெயோ ஊற்றிப் பெரிய திரிகள் இட்டு மலைகளின் மீதெல்லாம் வைக்கலாம்.

குடங்குடமாய், பானை பானையாய் எண்ணெய் வேண்டும். நெய் வேண்டும். மலை முழுவதும் ஆமணக்குச் செடிகளாக நிறைய வேண்டும். எருமைகள் கூட்டங்கூட்டமாய்ப் பெருக வேண்டும். அத்தனை எருமைகளையும் காக்க எத்தனை வலிமை வேண்டும்!

ஜோகியின் தந்தைக்குக் கைகளில் வலிமை உண்டு. அவர் எருமையின் மடியில் கை வைப்பதுதான் தெரியும்; ‘ஹோணே’ என்ற மூங்கிற் பாற்குழாயில் வெண்ணுரையாய்ப் பால் பொங்கி வரும். பழைய காலத்தில், மாடுகள் கறக்க நிறைய வலிமை வரவேண்டுமென்று வலத்தோள் பட்டையில் இரும்பைப் பழுக்கக் காய்ச்சிச் சூடு போடுவார்கள் என்று ஜோகியின் பாட்டி கதை சொல்லி அவன் கேட்டிருக்கிறான். வலியையும் வேதனையையும் பொறுத்தால் தான் வலிமை பெருகுமாம். ஆயிரமாயிரம் எருமைகளை ஒருவர் கறக்க வேண்டுமென்றால், அத்தனை பேரும் அத்தனை எருமைகளையும் காக்க வலிமை பெற வேண்டும்.

ஜோகியின் கற்பனைகள் இத்தகைய முறையில் படர்ந்து செல்லுகையில் குறுக்கே குறுக்கே சந்தேகங்களும் புகுந்து வெட்டின. அத்தனை எருமைகளும் எங்கே மேயும்? காடுகள் எல்லாம் பசும் புல்வெளிகளாகவும், ஆமணக்குச் செடிகளாகவும் ஆகிவிட்டால், சாமை பயிரிடுவது எங்கே? தானியங்களின்றி எப்படிச் சோறு சமைக்க முடியும்? கிழங்கு போட வேண்டாமா? வெறும் மோசைக் குடித்து விட்டு நாள் முழுவதும் இருக்க முடியுமோ?

நீண்டு கொண்டு போன கற்பனைக் கதிரின் முடிவு, இவ்விதமான நிறைவேறாத கட்டத்தில் வந்து நிற்கவே ஜோகிக்கு ஏமாற்றம் உண்டாயிற்று. யோசனைகளைக் கைவிட்டு அவன் நண்பர்களைத் தேடி ஓடுமுன், அவனுடைய நண்பர்களே ஓடி வந்தார்கள்.

“நான் தான் முதல்” என்று ராமன் ஓடி வந்து, மாடு மேய்க்கும் குச்சியாலேயே ஜோகியைத் தொட்டான். மற்றவர்களும் இரைக்க இரைக்கக் குன்றின் மேல் வந்தனர்.

நண்பர்களைக் கண்டதுமே ஜோகி, “கிருஷ்ணா, சூரியன் இல்லாது போனால் என்ன ஆகும்?” என்றான்.

கிருஷ்ணன் தினமும் எருமைகள் மேய்க்க வரமாட்டான். மரகத மலை ஹட்டியிலேயே செல்வாக்கு மிகுந்த மணியகாரரான கரிய மல்லரின் பெண் வயிற்றுப் பேரன் அவன். ஜோகியை விடக் கொஞ்சம் பெரியவன். அந்த வட்டகைக்கே புதுமையாக, கீழ்மலை மிஷன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையன் அவன்.

கிருஷ்ணன் சிரித்தான். “சூரியன் இல்லாது போனால் இரவு இருட்டு. இது தெரியாதா?”

“ஒரு நாள் இல்லையென்றால்? சூரியன் ஒரு நாள் வரவே இல்லை என்று வைத்துக் கொள்ளேன்!”

“போர்த்துப் படுத்துக் கொண்டு எழுந்திருக்காமல் தூங்குவோம்” என்றாள் பெள்ளி.

அண்டை வீட்டுக் காகையின் மகன் பெள்ளி. அவனும் ஜோகியோடொத்தவன் தான்.

“எழுந்திருக்காது போனால், எருமை கறப்பது எப்படி? இரவு நிலத்தில் முறைகாவல் காப்பவர் வீடு வருவதெப்படி? சூரியன் இல்லாமற் போனால் ஒன்றுமே நடக்காது. ‘இரிய உடைய ஈசரி’ன் அடையாளம் கண். சூரியன். அவர் கண்ணை மூடிவிட்டால் இருட்டாகவே இருக்கும்” என்றான் லோகி. (இரிய உடைய ஈசர் - பெரியவராக விளங்கும் இறைவன்.)

“ஈசரின் கோயிலிலே எப்பொழுதும் நெய்விளக்கு எரிகிறதே? அவர் கண்ணை மூடவே மாட்டார்” என்றான் கிருஷ்ணன்.

ரங்கன் இடி இடியென்று சிரித்தான். அவன் ஜோகியின் பெரியப்பன் மாதனின் மகன்; அங்கிருந்த எல்லோரையும் விட அவன் கொஞ்சம் பெரியவன். முரட்டுத்தனமான, முற்போக்கான யோசனைகளை அவன் சொல்லுவான்.

“மக்குகளே, இரிய உடைய ஈசர் ஒன்றும் அந்தக் கோயிலில் இல்லை” என்றான்.

“ஐயையோ! அபசாரம்! கோயிலிலே ஈசுவரனார் இல்லை என்கிறானே இவன்?” என்று பெள்ளி கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

ஜோகி அவன் துணிச்சலைக் கண்டு வாயடைத்து நின்றான்.

“பின்னே ஈசுவரனார் கோயில் எதற்கு இருக்கிற தாம்?” என்றான் கிருஷ்ணன்.

“கல்லு, படம் இரண்டுந்தான் அங்கே இருக்கின்றன” என்றான் ரங்கன் திரும்பவும்.

“உங்கள் வீட்டில் எருமை கறக்காது; பயிர் விளையாது” என்றான் பெள்ளி.

“இரிய உடைய ஈசன் கோயிலிலே இருக்கிறார்; அவர் கண் சூரியன் என்று சொல்லுவது சரியா? சூரியன் கோயிலுக்குள்ளிருந்தா வருகிறான் பின்னே?”

இந்த வாதம் ஏற்கக் கூடியதாகவே இருந்தது. ஆனால் விளங்குவதாக இல்லை.

தனக்கு எவரும் எதிர் பேசாமல் இருக்கவே வெற்றி கண்ட ஒரு பெருமிதத்தில் ரங்கன், “சூரியன் ஒரு நாள் கூட வராமல் இருக்காது. நாம் தூங்கி எழுந்து வரும் போது மலைகள் எல்லாம் அப்படியே இல்லையா? அருவி இல்லையா? அப்படித்தான் சூரியனும்?” என்றான்.

“மலையெல்லாம் காலையில் எழுந்து மாலையில் அமுங்குகிறதா? ஒரே இடத்தில் இருக்கிறதே? சூரியன் அப்படி இல்லையே? காலையில் அந்த இரட்டை மலைக்கு அப்பாலிருந்து வந்து, பகலெல்லாம் நகர்ந்து, தேவர் பொட்டாவுக்குப் பின்னே போகிறதே!” என்றான் கிருஷ்ணன்.

“அட, இதுதானா பிரமாதம்? சூரியன் வராமற் போனால் இரவில் விளக்கு வைப்பதைப் போல் பெரிய பெரிய விளக்குகளை வைத்துக் கொள்வோம்” என்றான் ரங்கன், பேச்சை வளைத்து.

“அதற்கு எவ்வளவோ நெய் வேண்டுமே!” என்று ஜோகி பிரச்னைக்கு வந்தான்.

“அருவித் தண்ணீரையெல்லாம் எண்ணெயாக்குவோம்” என்றான் கிருஷ்ணன் சட்டென்று.

ஜோகியின் வட்ட கண்கள் விரிந்தன. இந்த யோசனை அவனுக்குத் தோன்றவில்லையே?

“அருவித் தண்ணீரை எண்ணெயாக்க முடியுமோ? போடா முட்டாள்!” என்றான் ரங்கன்.

“சூரியன் வராமல் இருக்குமோ போடா, முட்டாள்!” என்றான் கிருஷ்ணன்.

ரங்கனுக்குக் கிருஷ்ணன் தன்னை எதிர்த்து வந்தது பிடிக்கவில்லை. “டேய் யாரையடா முட்டாளென்கிறாய்? ஒல்லிப் பயலே!” என்று மேல் துணியை வரிந்து கொண்டு சண்டைக்குக் கொடி கட்டினான்.

“முட்டாள், மட்டி!” என்றான் கிருஷ்ணன் பொறுக்காமல்.

ரங்கன் உடனே அவன் மீது பாய்ந்தான். இருவரும் அடித்துக் கொண்டு கட்டிப் புரண்டார்கள்.

இச்சமயத்தில், “ஜோகியண்ணா! ரே ஜோகியண்ணா!” என்ற இளங்குரல் ஒன்று மேலிருந்து ஒலித்தது. அந்தக் குரல்கேட்ட மாத்திரத்தில் கிருஷ்ணன் சட்டையை விடுத்துத் தலைத் துணியை நன்றாகச் சுற்றிக் கொண்டு மேலே ஓடினான். ஜோகி மேலே ஓடிக் கொண்டிருந்தான் முன்பேயே.

ஐந்து பிராயம் மதிக்கத் தகுந்த சிறுமி ஒருத்தி, ஓடி வந்தாள். சிவந்த குண்டு முகம், கருவண்டு விழிகள், சுருட்டையான தலைமுடி, தோள்மீதும் நெற்றி மீதும் புரண்டது. இடுப்பில் வெள்ளை முண்டு உடுத்து, பெரிய மனுஷியைப் போல் மேல் முண்டும் போர்த்திருந்தாள். அவள் கைகளில் பளபளக்கும் புது வெள்ளிக் காப்புக்கள் பெரிய வளையமாகத் துவளத் துவள ஆடிக் கொண்டிருந்தன. அவை அவளுக்கு உரியனவாக இருக்க முடியாது. பெரிய அளவாகத் தோளுக்கு ஏறும் கடகமாக இருந்தன.

“ஜோகியண்ணா தங்கைப் பாப்பா வந்திருக்கிறது. அம்மா, மாமி, அத்தை எல்லாரும் வந்திருக்கிறாங்க. பொரி உருண்டை, கடலை, ஆரஞ்சி எல்லாம் கொண்டு வந்திருக்கிறாங்க. வாங்க, வாங்க” என்று கூறி, அந்த அதிசயத்தைப் பார்க்க அவள் குத்துச் செடியின் பக்கம் நின்று கைகளை ஆட்டி அழைத்தாள். அவள் கைகளை வீசிய வேகத்தில், ஒரு வெள்ளிக் காப்பு நழுவி, குத்துச் செடிகளுக்கிடையில் உருண்டதை, இருந்த இடம் விட்டு நகராமலே குரோதம் பொங்கக் கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருந்த ரங்கன் சட்டென்று கவனித்தான்.

பெள்ளியும் ராமனுங்கூட ஓட எல்லோருமாக மேலே ஏறி வீட்டுப் பக்கம் சென்று விட்டனர். அவர்கள் தலை மறையும் வரையில் ரங்கன் மட்டும் பார்த்துக் கொண்டே நின்றான், விவரிக்க இயலாத ஆத்திரத்தோடும் ஏமாற்றத்தோடும்.

‘சிற்றப்பன் வீட்டுக்குத் தினமும் எவரேனும் வருகிறார்கள். நினைத்த போதெல்லாம் ஜோகி சாப்பாடும் பொரிமாவும் வெல்லமுமாய்க் குதிக்கிறான். ஆனால் நம் வீட்டிலோ?’

ரங்கனுக்குச் சொந்த அம்மை இல்லை. சின்னம்மைக்கும் தந்தைக்கும் எந்நேரமும் சண்டை. சண்டை போடாமல் அவனுடைய சிற்றன்னை ஒரு வேளைச் சோற்றை எடுத்து வைப்பவள் அல்ல. இருக்கும் ஒரே எருமையும் நோஞ்சல்; கன்றும் நோவு கண்டு இறந்து போயிற்று. ஏன்? ஏன் இப்படி?

பாரு, வந்தவள், ஜோகியைத்தான் கூப்பிட்டுக் கொண்டு ஓடினாள். அந்தக் கிருஷ்ணன் பயலுக்குச் சட்டையும் தொப்பியுமாய்ப் பள்ளிக்கூடம் போகும் கர்வம். பெள்ளி பூனைக்கண் மட்டி; கல்லைக் கல் என்று சொன்னால் இரிய உடையார் சாபம் கொடுப்பார் என்றான். சை!

சிறு உள்ளத்தில் பொருமி வந்த அனல் மூச்சுடன் அவன் திரும்பிப் பார்க்கையில், அந்த நோஞ்சல் எருமைதான் வெடுக்கு, வெடுக்கென்று புல்லைக் கடித்து இழுத்துக் கொண்டிருந்தது. கிழப்பருவம் கோலமிட்ட, அதைக் கண்டதும் அவனுடைய ஆத்திரத்துக்கு ஓர் இலக்குக் கிடைத்து விட்டது.

கீழிருந்த குச்சியினால் அதன் முதுகில் வீறு வீறென்று ஐந்தாறு அடிகள் வீறினான். அது உருண்டு கொண்டே மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்கும்படி, கத்திக் கொண்டே சரிந்தது.

ரங்கனின் ஆத்திரம் இன்னும் தீரவில்லை. இடையில் தென்படும் குத்துச் செடிகளை முறித்துப் போட்டுக் கொண்டே மேலேறியவன், காப்புக் கிடந்த செடிப் புதரண்டையில் வந்தான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அதை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். பிறகு கீழ் நோக்கி ஓடினான்.

சரிவில் உருண்ட எருமை, மடிந்த காலுடன் நீட்டிக் கொண்டிருந்த பாறை ஒன்றில், முன் இரு கால்கள் முட்ட, பரிதாபமாகக் கத்திக் கொண்டே இருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1. 2. காப்பு எங்கே?

மாடுகள் மேய்வதற்கென்றே ஒதுக்கி விட்டிருந்த அந்தப் பசுங்கன்றோடு தொடர்ந்து சென்ற மேட்டில் முதல் முதலில் தனியாகக் காணப்பெற்ற நீண்ட கொட்டகை, பொதுவான மாட்டுக் கொட்டிலாகும். அப்பால் இரு வரிசையாக உள்ள இருபது வீடுகளும், மரகதமலை ஹட்டியைச் சேர்ந்தவை. தனியாக, மேற்கே சரிவில் காணும் நான்கு வீடுகளும், அந்த ஹட்டியைச் சேர்ந்த ‘தொரியரு’க்கு உரியவை.

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன், மைசூரிலிருந்து பண்டிப்பூர்க் காடுகளின் வழியே நீலகிரி மலையில் வந்து குடியேறியதாகச் சொல்லப்படும் படக மக்கள் சமூகத்திடையே அவரவர் தொழிலுக்குத் தகுந்தபடி சில பிரிவுகள் இருந்தன. ஹரிவர், உடையர், அதிகாரி, கணக்கர், கடக்கர், தொரியர் என்ற பெயரில் முறையே, குருமார்களாகவும், அதிகாரிகளாகவும் கணக்கர்களாகவும் இருந்தனர் என்றும் கூறுவர். தொரியர் என்ற பிரிவினர், மற்ற பிரிவினருக்குப் பணிபுரியும் மக்களாக, ஒவ்வொரு ஹட்டியிலும் குடியிருந்தனர். பணிபுரிபவர் என்ற முறையில் இருந்தாலும், உயர்ந்தவராகக் கருதப்பட்ட மக்களுக்குப் பிள்ளைகள் போன்ற உறவுடையவராகவே தொரியர் கருதப்பட்டு வந்தனர் என்றும் தெரிய வருகிறது.

ஹட்டியின் கீழ்ப்புறம் சிறு வீட்டைப் போலவே தோன்றும் குடில், தெய்வ முன்னோராகிய ‘ஹத்தப்பா’வின் கோயில். கோயிலுக்கு முன் விரிந்திருக்கும் சமவெளியான மைதானமே குடியிருப்பின் பஞ்சாயத்துக் கூடும் பொது இடம். மேற்கு ஓரத்திலிருந்து மலையைச் சுற்றி வளைந்து தெற்கே ஓர் ஒற்றையடிப் பாதை சென்றது. கோயிலுக்குப் பின்புறத்திலிருந்து வரும் பாதை, அந்தப் பாதையில் இணையும். இந்த இணைப்பு இடத்தில் நாலடி உயரமுள்ள மேடை ஒன்று உண்டு. அங்கிருந்து நோக்கினால், கீழேயிருந்து ஊருக்குள் வரும் பாதையில் வருபவர்களைக் காண முடியும். ரங்கனின் தந்தை மாதன், நாளின் பெரும்பாலான பகுதியை, அந்தக் கல்மேடையில் அமர்ந்தே கழித்து விடுவது வழக்கம்.

பாரு, ஜோகி, ராமன், பெள்ளி, கிருஷ்ணன் எல்லோரும், தொரியர் குடியிருப்பைத் தாண்டி, அவசரமாக மேலே குறுக்கே ஏறி, இரைக்க இரைக்க ஓடி வந்தனர். ஜோகியின் வீடு கோயிலைப் பார்த்து இருக்கும் கோடி வீடு. வீட்டு வாசலில் ஹட்டியிலுள்ள பெண்கள் எல்லோருமே கூடியிருந்தனர்.

பாரு, ஜோகிக்கு மாமன் மகள். கிழக்கே அருவிக் கரையோடு காடுகளைத் தாண்டி நடந்தால், ஜோகியின் மாமன் ஊராகிய மணிக்கல் ஹட்டிக்குப் போகலாம். பாருவின் தாய், கீழ்மலையில் தன் அம்மையின் வீட்டில் பிரசவித்து, குழந்தையுடன் அன்று கணவன் வீடு செல்லுகிறாள். வழியிலே நாத்தியின் வீடு வந்து தங்கி, பெரியவளான பாட்டியின் ஆசி பெற்று, மறுநாள் மணிக்கல் ஹட்டி செல்லப் போகிறாள்.

அண்மையில் ஓடுகள் வேய்ந்து காரை பூசிப் புதுப்பித்திருந்த ஜோகியின் வீட்டில், மணியகாரரின் மகள், கிருஷ்ணனின் தாய், சாயும் வெயிலில் நின்றபடியே குழந்தையை ஏந்திக் கொண்டிருந்தாள். வெல்லமும் பாலும் ருசித்த குழந்தை நாவைச் சப்புக் கொட்டிக் கொண்டு பல் இல்லாத வாயைக் காட்டி எங்கோ பார்த்துச் சிரித்தது.

“இனிப்புக்கு சப்புக் கொட்டுகிறாள், பார்” என்று அவள் குழந்தையை கொஞ்சி முத்தமிட்டுக் கொண்டிருக்கையில், ஜோகி ஆவலுடன் அந்தப் பெண்டிர் கூட்டத்தில் புகுந்து பாய்ந்து வந்தான்.

“அட! வந்தது யாரென்று தெரிந்து விட்டதா? கண்ணைத் திருப்பிப் பார்த்துச் சிரிக்கிறாள். ஜோகி, பார். உன்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்!” எல்லாருமே சிரித்தார்கள்.

சிரிப்புக்கும் அவர்கள் கேலிகளுக்கும் ஜோகிக்குப் பொருள் விளங்கவில்லை. அவன் நோக்கமெல்லாம் குழந்தையின் மீதே குவிந்தது. பரபரக்கும் விழிகளால் பார்த்து அதிசயித்தான்.

எத்தனை அழகு, அந்தக் குழந்தை! ரோஜா நிறம்; கறேலென்ற சுருண்ட தலைமயிர், சிறு நெற்றியில் வந்து விழுந்தது. சின்ன மூக்கு; செப்பு வாய்; பிஞ்சுக் கைகள்; குஞ்சுக் கால்கள்.

“எனக்கு - என்னிடம் தரச் சொல்லுங்களம்மா” என்று அவன் இரு கைகளையும் நீட்டிய போது எல்லோரும் சிரித்தார்கள்.

“உனக்குத்தான். உனக்கு இல்லாமலா மாமன் மகள்? இதோ பார்; ஐய! உன்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்” என்று குழந்தையைத் தாழ்த்தி அவனிடம் காட்டினாள் கிருஷ்ணனின் தாய்.

“இவள் - ரங்கனுக்கு. ஜோகிக்கு பாரு” என்றாள் மாமி அதற்குள்.

இந்தப் பேச்சில் வெட்கமும் நாணமும் பிறக்காத பருவமல்லவா?

“ம்... எனக்குப் பாரு வேண்டாம். இந்தப் பாப்பாத்தான் வேண்டும்” என்று அவன் சிணுங்கினான். மறுபடி சிரிப்பொலி எழும்பியது.

“பார்த்துக் கொள்ளம்மா உன் பையனுக்கு இருப்பதை? நேருக்கு நேர் பாரு வேண்டாமென்று சொல்கிறானே! ஏண்டா, பாருவுக்கு என்ன? வந்ததும் வராததுமாய் உன்னைப் பார்க்கத்தானே ஓடி வந்திருக்கிறாள்? அவள் நன்றாக வேலை செய்வாள்; உனக்கு நல்ல பையனாகப் பெற்றுத் தருவாள்” என்று அவன் தலையில் செல்லமாக இடித்தாள் மாமி.

அவள் பேச்சின் பொருளை உணராத ஜோகி, தனக்கே உரிய வேகத்துடன், “ஹூம், எனக்கு இந்தப் பாப்பாவைத்தான் பிடிக்கிறது” என்றான்.

“ஆயிரம் பொன் தர வேண்டும். ஆமாம்; சும்மாக் கிடைக்காது!” என்றாள் மாமி, கேலியான கொஞ்சலில்.

“தருவேன்” என்று ஜோகி தலையை ஆட்டினான். மீண்டும் ஒரே சிரிப்பு.

“எங்கேயிருந்து ஆயிரம் பொன் தருவாய்? ஆசையைப் பார்!” என்று அதிசயித்தாள் பெள்ளியின் பாட்டி.

“தருவேன்” என்றான் ஜோகி திடமாக.

“ஆயிரம் கறவை எருமையுங் கூட வேண்டும்” என்றாள் மாமி மீண்டும் குமிண் சிரிப்புடன்.

“ஆகா, நீ தேவலையடி! என் பையன் ஏதோ சாது என்றால் நீ மேலே மேலே போகிறாயே! ஆயிரம் கறவை, சீதனமாக இங்கே வர வேண்டுமாம்; என் பையன் சோடையா?” என்று ஜோகியின் தாய் மாதி பாய்ந்தாள்.

“உனக்கு ஏன் அதற்குள் ஆத்திரம்? வேண்டுமானால் உன் பையன் மாமன் காலடியில் பொன்னை வைத்துக் கும்பிட்டு, ‘மாமா உங்கள் பெண்ணைத் தாருங்கள்’ என்று கேட்கிறான்!” என்றாள் மாமி கேலிக் கோபத்தில்.

“அது சரி, அது சரி” என்று பெண்கள் கலகலவென்று சிரித்து ஆமோதிக்கையில், கிருஷ்ணனின் தாய் அவனை உட்காரச் செய்து, மடியில் குழந்தையை விட்டாள்.

மலர் போன்ற குழந்தையை இளங்கால்களில் ஏந்திக் கொண்டு, சாயுஜ்யம் கிடைத்த மகிழ்ச்சியில், ஜோகி இருந்தான். அவன் தாய் மாதிக்கு, ஜோகிக்குப் பிறகு பிறந்த இரு குழந்தைகளும் தக்கவில்லை. ஆகையால், தனக்கு நினைவு தெரிந்து ஜோகி இத்தகைய இன்பத்தை அநுபவித்ததில்லை.

ஜோகி பெரு மகிழ்ச்சியில் எத்தனை நேரம் ஆழ்ந்திருக்க முடியும் என்று எண்ணுபவள் போல் மாமி குழந்தையை அவன் மடியிலிருந்து எடுத்தாள்.

“மாமி, மாமி!” என்று கெஞ்சினான் ஜோகி.

“இதோ பார், உங்கையன் வீடு வந்ததும் பத்து ரூபாய் கேட்டு வாங்கி மாமியிடம் கொடுத்துப் பெண்ணைக் கேள்” என்றாள் பாட்டி சிரித்துக் கொண்டே.

“ஏ மாமி, பத்து ரூபாய் கொடுத்தால் பாப்பாவை இங்கே கொடுப்பீர்களா?”

“அட போடா, அசட்டுப் பயலே!” என்றாள் அம்மை.

“ஏன் அம்மா?”

“பாப்பா இப்போது வரமாட்டாள். பெரியவளாக வளர்ந்ததும், நீ ஐயனைப் போல ஆனதும், பணம் கொடுத்து இங்கே நம் வீட்டுக்கு அழைத்து வருவோம். அப்போது பாப்பா உனக்குச் சோறு வைப்பாள். தண்ணீர் கொண்டு வருவாள். சாமை விதைத்து வீட்டுக்குத் தானியம் கொண்டு வருவாள். இப்போது பாப்பாவால் என்ன முடியும்?” என்று அம்மை விளக்கினாள்.

மாமி குழந்தையைப் பாட்டியிடம் கொடுத்து விட்டு, உள்ளிருந்து ஒரு வட்டத் தட்டு நிறையக் காஞ்சிப் பொரியும் வெல்லப் பாகும் கலந்து செய்த உருண்டைகளைக் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தாள்.

பாருவின் கையில் பொரி உருண்டை கொடுக்கும் போதுதான் அவள் கைகளில் இருந்த வெள்ளிக் காப்பைக் காணாமல் திடுக்கிட்டாள்.

“காப்பெங்கே, பாரு?”

பாரு சுற்று முற்றும் பார்த்துத் திருதிருவென்று விழித்தாள்.

“எங்கேடி காப்பு?”

“பெரிசு; பின்னால் கை பெரிசானதும் போட்டுக் கொள்ளலாம் என்றேன்; கேட்டாயா? எங்கேயம்மா விழுந்தது?”

“நீ ஊரிலிருந்து வரும் போது இருந்ததா? அதைப் பார்” என்றாள் பாட்டி.

“அங்கே வரும் போது காப்பு ஆடியதை நான் பார்த்தேன்” என்றான் கிருஷ்ணன்.

“எங்கெல்லாம் ஓடினார்களோ?” என்று தாய் பாருவின் மேல் முண்டை அவிழ்த்து உதறினாள்.

“வாருங்கள், எங்கே போனீர்களென்று காட்டுங்கள்” என்று மாதி முன்னே நடந்தாள்.

“அம்மா, நான் காப்பைத் தேடி எடுத்து வந்தால் மாமி பாப்பாவைத் தருவார்களா?” என்று ஜோகி முகம் ஒளிர ஓடி வந்தான்.

“அசட்டுப் பயலே! என்ன இப்போதே பாப்பா பித்தாயிட்டே?” என்று அம்மை அதட்டினாள்.

கதிரவன் மேல் வானில் சாய்ந்து விட்டான். சில்லென்ற குளிர்காற்று வீசியது. பாரு முன்னே ஓடினாள். மாதியும் குத்துச் செடிகள், புதர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டே ஜோகியைப் பின் தொடரச் சென்றாள். எங்கும் புது வெள்ளிக் காப்பு மின்னவில்லை. மாடுகளை எல்லாம் சிறுவர் கொட்டிலுக்கு ஓட்டிச் சென்றனர்.

சட்டென்று நினைவு வந்தவனாய் மாதி கேட்டாள்; “ரங்கன் எங்கே?”

“அதோ! எருமை ஒன்று கால் மடித்து விழுந்து கிடக்கிறதே!”

“ம்... ஙே... ய்...” என்று அதன் ஒலி வேதனையைக் கொண்டு அவர்கள் செவிகளில் புகுந்தது.

ஜோகி வேகமாக இறங்கினான்.

“பெரியப்பன் வீட்டு நோஞ்சல் எருமை பள்ளத்தில் எப்படிச் சரிந்தது?” அதன் முதுகிலே அடிப்பட்டு ரத்தம் கன்றியிருந்த கோடுகள் அவள் கவனத்தைக் கவர்ந்தன. இளம் உள்ளம் மெழுகைப் போல் நெகிழ்ந்தது.

“யார் அடித்து ஓட்டினார்கள்? ரங்கா! ரே ரங்கா!” என்று ஜோகி சுற்றுமுற்றும் பார்த்துக் குரல் கொடுத்தான்.

“எருமை விழுந்து காலொடிந்து போச்சு, ரங்கா?”

எதிர்க்குரல் எழவில்லை. பொரி உருண்டைக் கைபிசுக்குப் பிசுக்கென்று ஒட்டிக் கொள்ள, சிறுவன் எருமையின் உடலைத் தடவினான்.

காப்பை மறந்து நின்ற பாரு, எருமையின் காலுக்குக் கீழ் உறைந்திருந்த குருதியைக் கண்டாள்.

“ஐயோ, ரத்தம்!”

அவள் போட்ட சத்தம் மாதியை அங்கே தள்ளி வந்தது. சற்று எட்ட, குன்றை ஒட்டிய விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த ஆண் - பெண் அனைவரையும் அவர்களின் சலசலப்பு அங்கே தள்ளி வந்து விட்டது.

ரங்கனின் சின்னம்மையான நஞ்சம்மை. நேர் எதிரே உள்ள மைத்துனன் வீட்டுக் கோலத்தைக் காணச் சகியாமல் அப்போதுதான் களையெடுப்பவள் போல் நிலத்துப் பக்கம் வந்திருந்தாள். கூட்டம் சேர்ந்த இடத்துக்கு வந்து தங்கள் வீட்டு எருமை விழுந்து காலொடித்துக் கொண்டு விட்டதை அறிய அவளுக்கு ஆத்திரம் பீறி வந்தது.

ரங்கனையே நோக்கி அவள் கடுகடுப்புப் பாய்ந்த தென்பதைக் கூற வேண்டுமா?

“ஈசுவரா! எருமைக்குக் காலே ஒடிந்து போச்சே! அந்தச் சோம்பேறிப் பயல் எங்கே போனான்?”

“அதுதான் தெரியவில்லை, பெரியம்மா” என்றான் ஜோகி.

“சேரும் இடத்திலே சேர்ந்து மேடு உயருகிறது. பறிந்த இடத்திலே பின்னும் பள்ளம் பறிகிறது. இருந்த ஓர் எருமையும் போச்சே! வீட்டுத் தலைவன் வேலை வெட்டி செய்யாமல் பொழுது போக்கிரானென்றால், இந்தப் பையனும் உதவாத பயலானானே! ஒருத்தி பாடுபட்டு வீட்டில் சாப்பிட முடியுமா? ஊருக்கெல்லாம் வாழ்வு இருக்கிறது. இந்த நஞ்சம்மைக்குச் சுகமில்லை” என்றெல்லாம் பிரலாபிக்கலானான்.

“அடாடா? இது யார் வேலை? ஏண்டா? முரட்டுப் பயல்களா? எருமையை இப்படியா அடிப்பது?” என்று கேட்ட வண்ணம் ஜோகியின் தந்தை லிங்கையா, எருமையைத் தூக்க முயன்றான்.

“அவன் குடும்பத்துக்கு நஷ்டத்துக்கு மேல் நஷ்டம்” என்று கிருஷ்ணனின் தாத்தா கரியமல்லர் முணு முணுத்தார்.

“அருவியிலிருந்து பானையில் தண்ணீர் கொண்டு வாருங்கள்” என்று லிங்கையா சிறுவர்களை விரட்டி விட்டு, எருமைக்கு வைத்தியம் செய்ய உட்கார்ந்து விட்டான்.

“கொட்டிலுக்கு ஓட்ட முடியாது. இங்கே வைத்துத்தான் பச்சிலை போட்டுக் கட்ட வேண்டும். ரங்கன் எங்கே?”

லிங்கைய்யா நஞ்சம்மையைத் தான் பார்த்தான். தூண்டிக் கொடுக்காமலே பொல பொலக்கும் அவளுக்கு இது போதாதா?

“கஷ்டகாலம், யார் பொறாமைக் கண்ணோ, ஏவலோ? ஒன்றன்பின் ஒன்றாக வருகிறதே” என்று தொடர்ந்து உதவாக்கரை ரங்கனின் அடங்காத்தனம், முரட்டுச் செயல், வேலை செய்ய வணங்காமை, திருட்டுத்தனம், பொய் எல்லாக் குணங்களையும் சொல்லிப் பிரலாபிக்கலானாள்.

“கவலைப்படாதீர்கள். அண்ணி, இன்றிரவு பயிருக்குக் காவல்முறை எனக்கு. பரணிலிருந்து குரல் கொடுக்கிறேன். தொரியமல்லனும் உடன் இருக்கிறான். தீ வளர்த்துக் கொண்டிருந்தால், ஒன்றும் வராது. மெள்ள இரண்டு நாளில் வீட்டுக்கு ஓட்டிப் போவோம். “ஜோகி, கொஞ்சம் புல்லறுத்துப் போட்டுவிட்டு வா!” என்றான் லிங்கையா, அண்ணன் மனைவிக்குத் தேறுதலாக.

நஞ்சம்மை தலைவிதியை நொந்த வண்ணம் வீட்டுக்குச் சென்ற போது, எட்டு வயசுப் பெண் ரங்கி, அழும் குழந்தையை அடித்து அதட்டிச் சமாளித்துக் கொண்டிருந்தாள். அடுப்பில் வேக வைத்திருந்த மொச்சை விதை, நீரின்றித் தீய்ந்தது. அருவி நீர் எடுத்து வந்திருக்கவில்லை.

“எருமையும் போயாச்சு, ஏண்டி சோம்பேறி, தண்ணீருக்குப் போகவில்லை?”

“போகவில்லையம்மா.”

“ஏண்டிப் போகவில்லை?”

“வந்து...”

“வந்து, வராமல்! ஏண்டி நீயும் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறாய்? தகப்பன் சோம்பேறி, பையன் உதவாக்கரை, நீயும் உருப்படாதே.”

“ஜோகி வீட்டிலே மாமி வந்திருக்கிறாங்கம்மா.”

“அங்கே மாமி வந்தால் உனக்கென்னடி கழுதை? உனக்குப் பையனைக் கூட்டி வந்திருக்கிறாளா? வாயைப் பிளந்து கொண்டு வேடிக்கை பார்த்தாயா? துப்புக் கெட்டவளே! எருமை விழுந்து, இருந்ததும் போச்சு; குழந்தைப் பாலுக்கும் வழியில்லை.” பொல பொலத்துக் கொண்டே, அவள் பானையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

சற்றைக்கெல்லாம் அவளுடைய குழந்தைகளின் தந்தை கண்கள் பாழாய் சிவக்க, தள்ளாடும் நடையுடன் வீட்டுப் படியேறி வந்து, முன்புறம் வெளிமனை என்று அழைக்கப்படும் பகுதியில் விழுந்தான். காப்பைச் செருகிக் கொண்டு அருவிக்கரைப் பக்கம் நடந்து சென்ற ரங்கன் வீடு திரும்பவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.3. ரங்கனின் கனவு

குழந்தை பிறந்ததிலிருந்து, தானாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலை வரும் வரையிலும், தாயின் அன்பிலும் தகப்பனின் ஆதரவான அரவணைப்பிலும் உரம் பெறுகிறது. அவர்கள் ஊட்டும் தன்னம்பிக்கையிலேயே நிமிர்ந்து நிற்க முயலுகிறது. அந்த அன்பு வரும் திசை சூன்யமாக இருந்தால், ஏமாறிப் பொலிவு குன்றிக் குழந்தை மந்தமாக ஆகலாம். ரங்கனுக்கோ, அன்பு வர வேண்டிய திசையில் அனல் போன்ற சொற்களைக் கேட்கும் அனுபவமே இருந்தது. அண்டை அயலில் ஒத்தவர்களின் மேன்மைகளைக் கண்டு வேறு மனம் கொந்தளித்தது. ஏமாற்றமும் பொறாமையுமாகச் சேர்ந்தே, ரங்கனின் உள்ளத்தில் எதிர்த்து எழும்பும் அரணாக, தான் எப்படியேனும் எல்லோரையும் விட மேலானவனாக வேண்டும் என்று ஆவேசமாக, பெருந்துணிச்சலாக உருவெடுத்து வந்தன.

அந்த வேகத்தில் தான் அவன் எருமைத் தீனமாகக் குரல் கொடுத்தும் எக்கேடு கெட்டாலென்ன என்று இறங்கி, அருவியைத் தாண்டிக் கிழக்குப் பக்கம் இன்னும் இறங்கிச் சென்று காட்டுக்குள் புகுந்தான்.

திரும்பி மரகதமலைக்கு வராமலே ஓடிவிட்டால் என்ன? மூக்கு மலையில் அவன் அத்தை இருக்கிறாள்; மாமன் ஒருவர் இருக்கிறார்.

இல்லையெனில் ஒத்தைக்குப் போய்விட்டால்?

இடுப்புக் காப்பு இருக்கிறேன் இருக்கிறேன் என்று அவன் இருதயத் துடிப்புடன் ஒத்துப் பாடியது. காப்பை, காசு கடன் கொடுக்கும் லப்பையிடம் விற்றால் ஒரு முழு வெள்ளி ரூபாய் கிடைக்குமே; ஒரு முழு வெள்ளி ரூபாய்!

கீழ் மலைக்கு அப்பால், துரை எஸ்டேட் சமீபம், லப்பையின் காசுக் கடை இருக்கிறதென்பதை ரங்கன் அறிவான்.

ஒத்தைக்குப் போனால் அங்கும் காசுக்கடை இருக்காதா என்ன?

ஒத்தையில், சந்தைக் கடைகளில் சிறு பையன்கள் சாமான் கூடை சுமப்பார்களாம். துரை, துரைசானி மார்கள் காய்கறி வாங்க வருவார்களாம். அவர்கள் இஷ்டப்பட்டால் வெள்ளிக் காசுகளே கொடுப்பார்களாம். இந்த விவரங்களை எல்லாம், மூன்றாம் விட்டுத் தருமன் ரங்கனுக்குக் கூறியிருக்கிறான். தருமன் சில நாட்கள், ஒத்தையில் சாலை வேலை செய்து காசு சேர்த்துக் கொண்டு ஊர் திரும்பியவன். நாளொன்றுக்கு ஆறணாக கூலி வாங்கினானாம். ஹட்டியில் என்ன இருக்கிறது?

இடுப்புக் காப்பு, அடுக்கடுக்கான வெள்ளி நாணயங்களாகவும், தங்க மொகராக்களாகவும் பெருகி வளர்வது போல அவனுடைய ஆசைப் பந்தல் விரிந்து கொண்டே போயிற்று. நடையும் திசை தெரியாத கானகப் பாதையில் எட்டிப் போயிற்று.

வானளாவும் கர்ப்பூர (யூகலிப்டஸ்) மரங்கள் சூழ்ந்து சோலையின் மணம் காற்றோடு சுவாசத்தில் வந்து கலந்தது. ஒத்தைக்குச் செல்லும் வழியைப் பிறர் சொல்ல அவன் அறிந்திருக்கிறானே தவிர, சென்று அறியானே! மரகத மலையிலிருந்து வடகிழக்கில் அடுத்தடுத்துத் தெரியும் மூக்குமலை, மொட்டை மலை, புலிக்குன்று எல்லாவற்றையும் தாண்டி அப்பால் செல்ல வேண்டுமாம்.

ஒத்தை சென்று விட்டால், வெள்ளிக் காசுகளாகச் சேர்த்துக் கொண்டு பெருமிதத்தோடு ஹட்டிக்குத் திரும்பி வருவானே! அவன் குதிரையிலே ஏறி ஸர்ஸ் கோட்டும் தலைப்பாகையுமாக வரும் காட்சியை, ஹட்டியில் உள்ளவர் அனைவரும் யாரோ என்று கண்டு வியந்து பிரமிக்க மாட்டார்களா?

அப்போதே இராஜகுமார நடை போட்டவனுக்கு, கானகத்துச் சூழ்நிலை, தனிமையின் அச்சத்தை நெஞ்சில் கிளர்த்தியது. ‘சோ’ என்று மரக்கிளைகள் உராயும் ஓசை; புதர்களண்டையில் அவன் அடிச்சத்தம் நெருங்குகையில் பறவைக் குஞ்சுகள் எழுப்பும் அச்ச ஒலிகள்; சூழ்ந்து வரும் மங்கல்; பாதை இல்லாத தடம்; இவையெல்லாம் அவன் தைரியத்தை வளைத்துக் கொண்டு பின்வாங்கத் தூண்டின.

மரகத மலையிலிருந்து நோக்கினால் மூக்குமலை மிக அருகில் காண்பது போல் தோன்றுகிறதே! இத்தனை காடுகளைக் கடந்து எப்படிச் செல்வது?

“ரே, ரங்கா? எங்கே வந்தே?”

ஒரு புதரடியில் கள்ளிகள் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்த பெள்ளியின் தமக்கையின் குரல் அவனை அந்தத் திசையில் நோக்கச் செய்தது.

ஹட்டிப் பெண்கள் ஐந்தாறு பேர் அவனை வியப்புடன் நோக்கினர். ரங்கனுக்குத் தன் திருட்டு எண்ணம் அவர்களுக்குத் தெரிந்து விட்டாற் போல் உள்ளூர ஒரு நடுக்கம் உண்டாயிற்று.

“எங்கே வந்தாய்? சுள்ளிக்கா? தவிட்டுப் பழம் முள்ளுப் பழம் தேடி வந்தாயா?”

“இப்போது ஏது தவிட்டுப் பழம்? பூ வந்திருக்கிறது இப்போதுதான்.”

“சின்னம்மா விறகுக்கு வந்தார்களா? கூட வந்தாயா?”

அவன் பேசாமல் நிற்கையிலே ஆளுக்கொரு கேள்வி கேட்டு அவனைத் திணற அடித்தார்கள்.

இருட்டும் நேரமாகி விட்டது; இனிக் காட்டு வழி தாண்டி, மலைகள் பல ஏறிக் கடந்து வழி தெரியாத ஒத்தைக்குக் கிளம்புவது சரியாகாது.

“விளையாடிக் கொண்டே வழி தெரியாமல் வந்தேன் அக்கா” என்று சொல்லிக் கொண்டே ரங்கன் திரும்பி நடந்தான்.

விறகுச் சுமையுடன் அவர்கள் முன்னே நடக்க, ரங்கன் அவர்களை இலக்கு வைத்துக் கொண்டே பின்னே நடந்தான்.

அருவி கடந்து, மாடுகள் மேயும் கன்றின் பக்கம் ஏறி அவர்கள் ஹட்டிக்குச் செல்கையிலே, ரங்கன் அருவிக் கரையோரம் நடந்து விளைநிலங்களின் பக்கம் ஏறினான். பூமித்தாய்க்கு வண்ண ஆடைகள் அணிவித்தாற் போல் தோன்றும் விளை நிலங்களை அவன் கடந்து வருகையில் இருள் சூழ்ந்து விட்டது.

சோம்பலை உடையவனின் உடைமை நான் என்று ஆங்காங்கே தரிசாகக் கிடக்கும் பூமி உரிமையாளரின் குணத்தைப் பறைசாற்றியது. குத்துச் செடிகளும் களைகளும் தான் தோன்றிகளாய்க் காணும் விளைநிலம், ஆணும் பெண்ணும் ஒத்து வாழாத குடும்பத்துக்குடையது என்பதைத் தெரிவித்தது. ரங்கனுக்கு எல்லாம் தெரியும். ஒவ்வொரு சதுரமாக, நீள்பரப்பாக, முக்கோணப் பாத்திகளாக, இது இன்னாருடையது, இன்னாருடையது என்று அவன் பார்த்துக் கொண்டே வந்தான். சாமைப் பயிர் கதிர் விட்டுப் பூமியை நோக்கித் தாழ்ந்து, நாணங்கொண்ட மங்கையென நின்றது. முக்கோணப் பரப்பில் பசேலென்று முழங்கால் உயரம் தோன்றும் உருளைக் கிழங்குச் செடிகள், கிருஷ்ணனின் தாத்தா கரியமல்லருக்கு உரியவை. அருகில் முள்ளங்கிக் கிழங்குகள் கொழுத்துப் பருத்து, பூமி வெடிக்க, உள்ளிறுக்கம் தாங்கவில்லை என்று கூறுவன போல் வெளியே தெரிந்தன. கரியமல்லரின் நிலத்தை ஒட்டிய சிறு சதுரம், சிற்றப்பன் லிங்கையா புதியதாக வாங்கிய பூமி. அது ஜோகிக்கு உரியது. அந்தச் சதுரத்தில், இலைக் கோசும் பூக்கோசும் பெரிய பெரிய கைகள் கொண்டு என் குழந்தை என் குழந்தை என்று அணைப்பவை போல் உள்ளிருக்கும் குருத்தை, பூவை, ஆதவனுக்குக் காட்டாமல் மூடிப் பாதுகாத்தன. ஜோகியின் தந்தை, சிற்றப்பன், மண்ணில் வருந்தி உழைக்கும் செல்வர். ஜோகியின் அம்மையோ, பொன்னான கைகளால் பூமி திருத்துவதைப் பேறாக எண்ணுபவள். ஜோகியின் பாட்டி, ஒன்று விதைத்தால் ஒன்பதாய்ப் பெருகும் கைராசி கொண்டவள்.

ரங்கனுக்குப் பூமியைப் பார்த்து அவர்கள் வீட்டையும் எண்ண எண்ண தங்கள் சிறுமை உறுத்தும் முள்ளாக நெஞ்சை வேதனை செய்தது. அவர்கள் குடும்பத்துக்குரிய மண், அந்த நோஞ்சல் எருமை போலவே, சிவப்பு மண்ணாக, செழிப்பின்றி, பசுமையின்றி காட்சியளித்தது. அந்தப் பக்கம் அநேகமாகப் பழுப்பும் சிவப்புமான மண் தான். தெற்கோரம், அருவி வளைந்து செல்லும் இடம். கிருஷ்ணனின் தாத்தாவுக்குச் சொந்தமான பூமி மட்டுமே கரிய வளம் கொண்டது. ஆனால் ஜோகியின் தந்தை, ரங்கனின் சிற்றப்பன், அந்தப் பழுப்பு மண்ணையே வளமிட்டு வளமிட்டுப் பொன் விளையும் மண்ணாக்கி விட்டாரே! இரண்டு பசுக்களும், மூன்று எருமைகளும் உள்ள வீட்டில் வளத்துக்கு ஏது குறை?

ரங்கனின் தந்தை நிலத்தில் வணங்கி வேலை செய்ததுமில்லை; சின்னம்மை பொருந்து உழைத்ததுமில்லை. வீட்டில் பொருந்தி இரண்டு நாட்கள் வேலை செய்தால், எட்டு நாட்கள் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு அண்ணன் வீடான கோத்தைக்குச் சென்று விடுவாள். ரங்கனின் தந்தை சில நாள் ஒத்தைப் பக்கம் எங்கேனும் கூலி வேலைக்குப் போவார். அந்த ஆறணாக் கூலியையும் சாராயத்துக்குக் கொடுத்து விட்டு வருவார்.

பூமியில் வேற்றுமையைக் கண்ட வண்ணம் நின்ற ரங்கனின் உள்ளத்தில் ஆற்றாமை சொல்லொணாமல் பொங்கி வந்தது. ஆத்திரத்துடன், கொழுத்து நின்ற முள்ளங்கிச் செடிகள் நாலைந்தைப் பிடுங்கினான். குழியொன்றில் பாய்ச்சுவதற்காக ஊற்றியிருந்த நீ மிகுந்திருப்பது கண்டு, அதில் கழுவினான். கடித்துச் சுவைத்துக் கொண்டே நடந்தான்.

காவற் பரணருகில் வந்ததும் நின்றான். தூரத்தில் சூழ்ந்து வந்த இருட்டில் புற்சரிவில் எருமை, விழுந்த இடத்தில் படுத்திருந்தது தீப்பந்தம் எரிவதிலிருந்து தெரிந்தது. அதன் அருகில் யாரோ நிற்கிறார், யாரது? சிற்றப்பனாக இருக்குமோ?

சிற்றப்பன் தன்னை ஒரு வேளை கண்டு கொண்டு திரும்புவாரோ என்ற எண்ணத்துடன் காவற் பரணை நிமிர்ந்து பார்த்தான்.

மேட்டிலிருந்து குட்டையான இரு கால்களும், பள்ளத்திலிருந்து உயரமான இரு கால்களும் காவற் பரணைத் தாங்கி நின்றன. குட்டைக் கால்கள் உள்ள பக்கம் பரணுள் ஏற வழியுண்டு.

இரவில், முள்ளம்பன்றிகள் கிழங்குகளைத் தோண்டிப் போடும். மான்கள் தளிர்களைத் தின்று விடும். இரவுக்கு இருவர், காவல்முறையாக ஊதுகுழலும், தீயும் நாயுமாய்த் துணைக் கொண்டு அந்தப் பரணில் இருந்த நட்ட பயிரைப் பாதுகாப்பார்கள்.

இன்று யார் முறையோ?

ரங்கன் கிழங்குகளைத் தின்று தீர்த்துவிட்டு, இருட்டுக்கும் குளிருக்கும், வீடாக வெறுப்புக்கும் அஞ்சி, பரணில் ஏறிக் கொண்டான்; ஒரு மூலையில் சுருண்டு முடங்கினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.4. பாலும் பாவமும்

லிங்கையா வீடு திரும்பியதும், அன்று வழக்கம் போல் சுடுநீரில் உடல் கழுவிக் கொண்டு, பால்மனைக்கு வந்து, மடி ஆடை உடுத்துக் கொண்டான். ஒரே மாதிரியான ஹட்டியின் இல்லங்கள், தாழ்ந்து குறுகிய வாயில்களைக் கொண்டவையாய், இரு முக்கியமான பகுதிகளை உடையனவாய் அமையப் பெற்றவை. முன்புறம் சிறு வராந்தாவைப் போன்ற பகுதியை ஒட்டி, ஒவ்வொரு வீட்டிலும், வெளிமனை என்ற பகுதி உண்டு; அதை அடுத்து, உள்மனை என்ற பகுதியில் வாயிலுக்கு நேர்வளைவான வாயில் சமையற் பகுதியைப் பிரிக்கும் உள்மனையின் வலது ஓரத்தில், பால்மனை அல்லது பூசை அறை, சுவரோடு ஒட்டிய வளைவு வாயிலுடன் இணைந்திருக்கும். உள்மனையின் நடுவே, சமையலறை வாயிலில், சுவர்த்தண்டில், எல்லா இடங்களுக்கும் வெளிச்சம் தெரியும் வண்ணம் தீபமடம் அமைக்கப் பெற்றிருக்கும். மேலே, மூங்கிலால் ஆன சேமிப்புப் பரண்களும் உண்டு.

இரவில் சூரியனின் பிரதிநிதியான விளக்குத் தெய்வத்துக்கு அஞ்சலி செய்துவிட்டு, லிங்கையா பால் கறக்கப் புறப்பட்டு விட்டான். காப்புக் காணாத செய்தியை ஆற்றாமையுடன் கணவனிடம் கூற வந்த ஜோகியின் தாய், அவன், ‘ஹொணே’ சகிதம் பால் கறக்கப் புறப்பட்டு விட்டதை அறிந்து, ஒதுங்கி நின்றாள். குழந்தையின் மடியில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்த மைத்துனன் மனைவி, சரேலென்று எழுந்து அடுப்படிக்கு ஒதுங்கினாள்.

பால்கறக்கும் அந்த வேளை, அவர்களுக்குப் புனிதமான வேளை. இறைவனை வழிபடுகையில் கடைப்பிடிக்கும் புனித விதிகள் அனைத்தும், பால் கறக்கும் சடங்கைச் செய்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை. கொட்டிலுக்குச் சென்று மூங்கிற்குழாய் வழிய வழியக் கறந்த பாலைப் பெரிய பானையில் ஊற்றிக் கொண்டு அவன் வரும் போது, பெண்கள் எவரும் குறுக்கே வரமாட்டார்கள்; பேச மாட்டார்கள். பால் மனையாகிய புனித அறைக்குள் அவர்கல் புகவும் மாட்டார்கள்; அப்படிப் புனிதமாகக் கறந்த பாலை, அடுப்பிலிட்டுக் காய்ச்ச மாட்டார்கள்; பேதைப் பருவம் தாண்டிய பெண்கள், அந்நாட்களில் பாலை அருந்தவும் மாட்டார்கள்.

பால்மனையில் பாலை எடுத்துக் கொண்டு வந்து லிங்கையா வைத்ததும், மாதி வெளியே வைத்திருந்த கலத்தில், வீட்டுச் செலவுக்கு வேண்டிய பாலை ஊற்றினான். வேறொரு கலத்தில், தமையன் வீட்டுச் செலவுக்குத் தனியாகப் பாலூற்றி வைத்தான். மீதிப் பாலைப் புரை ஊற்றி வைத்துவிட்டு, மடி ஆடையை மாற்றிக் கொண்டான்.

கையில் அண்ணன் வீட்டுக்கு வேண்டிய பாலுடன் அவன் புறப்பட்டதும் மாதி எதிரே வந்தாள்.

“பால் - அண்ணன் வீட்டுக்கா?”

“ஆமாம். ஏன்?”

“எல்லோரும் சொல்வதைப் போல் நீங்கள் பரிவு காட்டுவதாலேயே உங்கள் அண்ணன் குடும்பம் தழைத்துப் பிழைக்காமல் போகிறது. நீங்கள் முந்தித் தானியமாய் அளக்கிறீர்கள்; பாலாய்ச் சாய்க்கிறீர்கள். அவர்கள் ஏன் வேலை செய்கிறார்கள்?”

அவள் கணவனை ஒரு நாளும் அப்படித் தடுத்ததில்லை. வெகு நாட்களாக இருந்த குடைச்சல் அன்று வெளிவந்து விட்டது.

“இன்று பார்த்து உன் உபதேசத்தைச் செய்கிறாயா நீ?”

“இந்தப் பாலை அண்ணி குடிக்கிறாள்!” மாதியின் குரலில் கடுமையும் கசப்பும் பீறி வந்தன.

“அப்படியானால் பாலைக் கொடுக்காதே என்கிறாயா மாதம்மா? எருமை ஒன்று இருந்தது; அதுவும் காலொடிந்து கிடக்கிறது. ஓர் அப்பனுக்குப் பிறந்து ஒன்றாக ஒட்டியிருந்த கிளை ஒன்று வாட ஒன்று பார்ப்பது கேவலம். அவரவர் பாவம் அவரவர்க்கு. தடுக்காதே.”

இளகிய உணர்ச்சிகளைக் குரலுடன் விழுங்கிக் கொண்டு லிங்கையா எதிர் வீட்டுக்குச் சென்றான்.

வெளிமனையில், தமையன் போதையுடன் விழுந்து கிடந்தான். தீப மாடத்தில் ஒளி இல்லை. எட்டு வயசு ரங்கம்மை மூலையில் உட்கார்ந்து அழுத குரலே கேட்டது.

“ரங்கி, அம்மை இல்லை?”

சிற்றப்பனின் குரல் கேட்டதுமே ரங்கி அழுகையை நிறுத்திவிட்டு, “அம்மை அருவிக்குப் போனாள்” என்றாள்.

“இந்நேரம் கழித்தா? ஏனம்மா விளக்கு வைக்க வில்லை? விளக்கெண்ணெய் இல்லையா?”

உண்மையில் அவள் இருட்டில் விளக்கெண்ணெய்க் கலயத்தை நழுவவிட்டு உடைத்திருந்தால். தாய் திரும்பியதும் அவளுடைய கடுமையைச் சமாளிக்க வேண்டுமே! ரங்கி மறுபடியும் நினைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.

“தா, ரங்கம்மா ஏம்மா அழறே?” சிற்றப்பன் பரிவோடு அவள் தலையை நிமிர்த்தித் தூக்கிக் கேட்ட போது, அவள் அழுகை அதிகமாயிற்று. இந்த நிலையில் குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு நஞ்சம்மை திரும்பி விட்டாள்.

“விளக்கேற்றவில்லை? ஏ ரங்கி, யாரது?” என்று குரல் கொடுத்துக் கொண்டே நுழைந்தவள், வந்தவர் மைத்துனர் என்பதை உணர்ந்தாள்.

“மெள்ள, இருட்டு அண்ணி” என்று லிங்கையா எச்சரிக்கையிலேயே ரங்கி நழுவ விட்டிருந்த விளக்கெண்ணெய் தரையில் அவளுடைய காலுக்கடியில் புகுந்து சறுக்கச் செய்து, தலைக்குடத்தைக் கீழே தள்ளி உடைத்து ஒரு நொடியில் அங்கே ஒரு பிரளயத்தை உண்டாக்கி விட்டது.

“ஈசுவரா!” என்று கத்திக் கொண்டே கீழே சாய்ந்த நஞ்சம்மை பெரிய கூக்குரலிடுமுன், லிங்கையா வீட்டுக்கு ஓடி விளக்கை எடுத்து வந்தான். அவன் பின், மாதி, பாரு, ஜோகி எல்லாருமே வந்தார்கள்.

“எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்தீர்களா? பாழாய்ப் போன பெண்ணே! விளக்கெண்ணெய் கலயத்தை உடைத்து விட்டு ஒப்பாரி வைக்கிறாயே! எருமை போச்சு, வீட்டுப் பயலைக் காணோம், தண்ணீர் குடமும் போச்சு” என்று பிரலாபம் தொடங்கி விட்டாள் அவள்.

“பாலை எடுத்து உள்ளே வை. அட என்னவோ இருட்டில் நடந்து விட்டது. மாதி, எல்லாம் துடைத்து விடு. இதைப் போய்ப் பெரிசு பண்ணாதீர்கள்.”

சமாதானம் செய்துவிட்டு லிங்கையா சென்றான். ரங்கி, அழத் தொடங்கிய குழந்தைத் தம்பியை எடுத்துக் கொண்டு பாரு, ஜோகியுடன் வெளியேறினாள், சமயம் வாய்த்தவளாக.

கணவனின் சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பவளாக மாதி எல்லாவற்றையும் எடுத்துச் சுத்தம் செய்யும் வரையில் நஞ்சம்மை அழுது புலம்பிய வண்ணம் மடிந்த காலுடன் உட்கார்ந்திருந்தாள். இது போன்ற சம்பவங்கள் மாதிக்குச் சகஜமானவை என்றாலும் வீட்டில் புதுக் குழந்தை ஒன்று வந்து, அதற்காகக் கொண்டாடும் மகிழ்ச்சி விருந்து கலகலப்பற்றுப் போகும்படி சம்பவங்கள் நேர்ந்ததில் அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.

லிங்கையா, “அப்பாடா!” என்று ஒரு வழியாக வீட்டுக்குள் வந்து அப்போதுதான் அமர்ந்தான். குழந்தைகள் எல்லோரும் ரங்கம்மை உட்பட, சுற்றி உட்கார்ந்து விட்டனர். அம்மாதிரி அவன் உட்கார்ந்தால், குடும்பத் தலைவன் உணவு கொள்வதற்குரிய பெரிய வட்டிலை வைத்து மனைவி அமுது படைக்க வேண்டும் என்பதே பொருள். அன்று மாதி வட்டிலை வைக்குமுன் மருமகளை, அவன் மடியில் கொண்டு வந்து விட்டாள்.

“அட! தங்கச்சி, எப்போது வந்தாய்? சுகமா?” லிங்கையாவின் விசாரணைக்குக் குழந்தையின் தாய் தலையை நீட்டினாள்.

“சாயங்காலம் வந்தேன். அண்ணனுக்கு வாயில் ஈ புகுந்தது தெரியவில்லை” என்றான்.

“அட, தொரியன் வந்தானா?”

“ஆமாம்!”

“கிண்ணத்தில் பால் கொண்டு வா, மாதி!” அவன் சொல்லு முன்னரே இனிக்கும் பாலுடன் கிண்ணம் வந்து விட்டது.

“நல்ல வீட்டில் வாழ்க்கைப்பட்டு, ஒன்று விதைத்தால் ஓராயிரம் பெருக, வீடு நிறைய மக்களுடன் சுகமாக இருக்கட்டும்” என்று அவன் வாழ்த்திக் குழந்தையின் நாவில் பாலை வைத்த பின், “பேரென்ன, அம்மே?” என்றான்.

“கிரிஜை!”

“நல்லபேர்” என்று குழந்தையைத் தாயினிடம் கொடுத்தான் அவன்.

“பாருவின் காப்பு அகப்படவே இல்லை. வந்ததும் ஜோகியைத் தேடிக் கொண்டு ஓடினாள். எங்கே விழுந்ததோ தெரியவில்லை. ரங்கன் ஒருத்தன் தான் அங்கு இவர்கள் வந்த பின் இருந்தானாம். அந்தப் பயலை இன்னமும் காணவில்லை.”

மாதியின் கூற்றில் பொதிந்திருந்த நுட்பமான உலகம் லிங்கையாவுக்கு எட்டாமல் இல்லை.

அயர்ந்து மறந்தால் ‘பலப்பெட்டி’யைத் திறந்து வெல்லமோ, பொரியோ, மாவோ, தேனோ எடுக்கும் சுபாவம் அவனுக்கு உண்டு. அது வளமை இல்லாத வீட்டில் வளரும் குறை. அந்தச் சுபாவம் குறித்து மாதி அவனைப் பற்றிக் கொண்டு வரும் புகார்களை அவன் செவிகளில் போடுக் கொண்டதே இல்லை.

“காப்பு எங்கே விழுந்ததோ? பழியோரிடம் பாவமோரிடம் என்று எதுவும் பேசாதே” என்று மனைவியைக் கடிந்து கொண்டான்.

மாதி வட்டிலைக் கொண்டு வந்து வைத்து சாமைச் சோறும் மணக்க மணக்க நெய்யுமாக அமுது படைத்தாள். மொச்சைப் பருப்பின் புளியில்லாத குழம்பை ஊற்றினாள். சோற்றைக் கலந்து லிங்கையா குழந்தைகளுக்கெல்லாம் கொடுத்தான். அவனுக்கு உணவு இறங்கவில்லை. வீட்டுக்கு வராமல் எங்கோ குளிரில், பசியும் பட்டினியுமாகப் பதுங்கியிருக்கும் ரங்கனின் நினைவு, சோற்றைக் கசக்கச் செய்தது.

மனைவி கொண்டு வந்து வைத்த பாலை மட்டும் வேண்டா வெறுப்பாகக் குடித்து விட்டு, அவன் இரவு காவலுக்குக் கிளம்பி விட்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.5. இரவு காவல்

கறுப்புக் கம்பளியைத் தலையோடு போர்த்தபடி, சில்லென்ற பூமியில் செருப்பொலிக்க, ஊது குழலும் நெருப்புப் பெட்டியுமாக லிங்கையா காவற்பரணுக்கு நடந்தான். பத்து இருபது நாட்கள் காவல் இருக்க வேண்டும். பின்னர் அறுவடை.

வானில் பிறைச் சந்திரன் தோன்றி, அதற்குள் தேவர் சிகரத்துக்கு ஓடி விட்டான். வானம் நிர்மலமாக, ஆயிரமாயிரம் தாரகைக் குழந்தைகள் விளையாடும் தடாகமாக விளங்கியது. தேவர் சிகரத்துக்கு மேல் தோன்றிய பிறையைக் கண்டதும் லிங்கையாவின் இதழ்கள் அவனையும் அறியாமல் ‘ஹரஹர சிவசிவ பஸ்வேசா’ என்று முணுமுணுத்தன. கால்கள் பழக்கத்தில் இருளில் முட்டுப் பாறையில் அடி வைத்து, தொரியர் வீடுகளின் பக்கம் செல்லும் பாதையில் இறங்கின. சாக்கு, கம்பளி, பந்தம் சகிதம் மல்லன் நின்று கொண்டிருந்தான்.

“மல்லா!...”

“ஆமாங்கைய்யா” என்று குரல் கொடுத்தான் அவன். முன்னே லிங்கையாவும், பின்னே மல்லனுமாக நடந்தனர். எதிரே கானகப் பக்கத்திலிருந்து நரிகளின் தொடர்ந்த ஊளையொலி எழும்பியது. மல்லைன் பின் வந்த நாய் எதிர் ஊளையிட்டுக் கொண்டே முன்னே ஓடியது. “நேத்து நம் கோழியை நரி பிடித்துப் போய்விட்டதுங்க” என்றான் மல்லன். அந்த வார்த்தை லிங்கையாவின் கவனத்தைக் கவரவில்லை. சில்லென்ற முகத்தில் உராய்ந்த தண்மை, அந்த ஆண்டின் முதற்பனியை அறிமுகப்படுத்தியது. சாதாரணமாக அந்தப் பனி, அவனைக் கவலை கொள்ளச் செய்திருக்கும். ஏனெனில், கடும்பனி பெய்யத் தொடங்கு முன் அறுவடை நடந்து விட வேண்டும். எப்போதும் மார்கழிக் கடைசியில் தான் கடும்பனி பெய்யத் துவங்கும். தைப் பொங்கல் பெரிய பண்டிகைக்குள் அறுவடை செய்து விடுவார்கள். பின்னர், மாசி நன்னாளில் இறைவர் கோயிலின் முன் அழல் மிதித்த பிறகு, விதைக்கும் திருநாளைக் கொண்டாடுவர்.

பனியையும் பயிரையும் மீறி அப்போது லிங்கையாவை வாட்டிய கவலை என்ன?

ஒரு கிளை தழைக்க, ஒரு கிளை காய்ந்து விடுவது ஏன்?

அண்ணியோ, “எவர் செய்த வினையோ, எவர் செய்த ஏவலோ?” என்று ஓலமிடுகிறாள். அண்ணனின் பூமி நல்ல விளைவு கொடுத்தாலல்லவோ, வழக்கமாகக் காட்டுக் குறும்பருக்குச் சரியான மானியம் கொடுக்க முடியும்? மந்திர தந்திரங்களில் வல்ல குறும்பரின் வினையை எண்ணி அண்ணி அஞ்சுவதில் வியப்பில்லையே!

அண்ணியை நினைக்கும் போதெல்லாம் சில நாட்களாக லிங்கையாவின் உள்ளத்தில் ஒரு புதுக் கவலை தோன்றிக் கொண்டிருந்தது.

குடும்பத்தில் ஒரு புதுப் பெண் வந்து புகுந்து, தலைவனையும் அவனுக்குரிய பூமியையும் உடைமைகளாகக் கொண்டு உழைத்து, அவனையும் சிறப்பித்து, அந்தக் குடும்பத்தின் வேர் நசித்து விடாதபடி, தளிர்த்துத் தழைக்க வைக்கிறாள். ஏவலைப் போல் உரைத்து, உயர்ந்தவற்றை மக்களுக்கும் கணவனுக்கும் பகிர்ந்தளித்து விட்டு, மிகுதியாகும் ‘கொரளி’ மாவைக் கூட உண்டு நிறைவெய்தும் படகப் பெண்களின் சிறப்பைச் சொல்லி மாளுமோ; இத்தகைய பெண்களை மாணிக்கங்கள் என்று போற்றிப் பேண வேண்டியது ஆணின் கடமையன்றோ!

தமையனாக, குடும்பத்தின் மூத்தவனாகப் பிறந்தவன் இதை உணர்ந்திராதது, லிங்கையாவின் சீலம் மிகுந்த நெஞ்சிலே அளவு கடந்த வேதனையையும் துயரத்தையும் தோற்றுவித்திருந்தது. அண்ணன் மட்டும் அல்ல; பலரும் அந்த அருமைகளை உணர்ந்திருக்கவில்லை. பொன்னைப் பித்தளை என எண்ணுவது போல், பெண்ணின் சேவைகளைச் சுயநலத்திற்காக உபயோகப் படுத்திக் கொண்டு, குடும்ப வளர்ச்சியின் உயிர் ஊற்றாகிய அன்பைப் பெருக்கிப் பிணைப்பைப் பின்ன மறந்து விடுகின்றனரே! இணைப்பில் உயிரூட்டமில்லாததால் தேய்ந்து பெரியோரின் குற்றங்களினால் விளையும் துன்பங்கள், தீமைகள், எத்தனை சக்தி வாய்ந்தவை ஆகி விடுகின்றன! திருமண பந்தம் என்பது விலக்க முடியாததன்று என்ற அருமையான உரிமையை மிக அவசியமான நிலையில் மட்டுமே உபயோகித்துக் கொள்ளலாம் என்ற அரிய உரிமையை - மலிவான சரக்காக்கி விடுவது, எத்தனை தூரம் சிறுவர்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது!

லிங்கையாவின் தந்தை, தம் நாளில் இரு பெண்களைக் கொண்டார். மூத்தவளின் மகன் தான் அந்த அண்ணன், மாதன். மூத்தவள் பிரிந்து சென்ற பின் அவர் இன்னொருத்தியைக் கொண்டார் - தாயின் அரவணைப்பில் வித்தியாசம் கண்டதாலோ என்னவோ, லிங்கையா அறியான்; ஊகந்தான். அண்ணன் மாதன், குடும்பத்தில் என்றுமே ஒட்டவில்லை. சாப்பாட்டுக்கு எப்படியோ வரும் என்ற நம்பிக்கை அண்ணனுக்கு விழுந்து விட்டது. கவலை இல்லாமல், வருந்தி உழைக்காமல், உல்லாசம் விரும்பும் ஊதாரி என்று பெயரெடுத்து விட்டான் மூத்த மகன்; மூத்தவள் மகனல்லவா?

லிங்கையாவின் தந்தை உயிருடன் இருந்த நாட்களிலேயே மூத்தவனைத் தனியாக வைத்து, நிலமும் பிரித்துக் கொடுத்தார். தம் உடல் சாயுமட்டும், அந்த மகனின் பூமியில் தாமே பாடுபட்டுப் பலன் கண்டார்.

ரங்கனின் தாயின் முகம் லிங்கையாவின் நினைவில் அப்போது தோன்றியது. சந்தனத்தை அரைத்த கலவையின் நிற மேனியாள். அவர்கள் சமூகத்திலேயே, அபூர்வமான அழகான வட்ட முகம் படைத்தவள் அவள். அவள் சிரித்தால் கபடமற்ற குழந்தையின் நினைவே வரும்.

லிங்கையாவின் தந்தை அவளுடைய அழகையும் உடற்கட்டையும் மண்ணில் வேலை செய்யும் பாங்கையும் கண்டே நூறு ரூபாய் கொடுத்து, தம் மூத்த மகனுக்கு அவளைக் கொண்டு வந்தார். ஒரே ஆண்டில் மாய்ந்து விட்டாளே?

அண்ணன் மாதனுக்குத் தேனில் அளைந்த குரல். நடனமாடுவதில் அவனை மிஞ்சுபவர் இல்லை. எங்கே இறைவனுக்குரிய விழா நடந்தாலும், மரணமென்றாலும், கோத்தர் இசைக்கேற்ப நடனமாடுவதற்கு அவர்கள் சமூகத்தில் முதல் அழைப்பு அவனுக்கே உண்டு. இறைவனைப் புகழ்ந்து அவன் தீங்குரலில் இசைக்கத் தொடங்கினால் மெய்மறக்காதவர் இருக்க மாட்டார்கள்.

அன்று - அன்று அவள் வெண்மலர் போல் சோர்ந்து விழுந்த சமயம் கூட அண்ணன் வீட்டில் இல்லை. கோத்தைப் பக்கம் தெய்வத் திருவிழாவுக்காகச் சென்றிருந்தான். எதிர்மனையின் வாசலில் அவசரமாக நிரைச்சல் கட்டினார்கள். சிசுவைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள் போலும்! ஏற்ற கடனைப் பிறர் கையில் ஒப்பித்துவிட்டுச் சில மணிகளில் அவள் மாய்ந்து விட்டாள்.

அந்தக் குழந்தை இப்பிறவியில் அறிந்திழைத்த குற்றம் எதுவுமே இல்லை. தகப்பனின் விதியே மகனைச் சூழுமோ?

தன் மகன் அல்லாத மகனின் மகனை, இளங்குழந்தை என்று பாட்டி எடுத்துச் சீராட்டினாள் என்று கொள்வதை விட சிற்றப்பன் லிங்கையாவே தாயாக இருந்து அந்தக் குழந்தையை வளர்த்தான் என்று கொள்ளலாம். ரங்கனின் தாய் இறந்து ஆறு மாசங்கள் கழிந்ததுமே, நஞ்சம்மைக்கு ஐம்பது வெள்ளி கொடுத்து, அண்ணனுக்குக் கட்டி வைத்தார் அவன் தந்தை.

“எருமையைப் போய்ப் பார்க்க வேண்டும் என்றீர்களே?”

வழி விட்டு எங்கோ சுற்றி வருகிறாரே என்று புரியாதவனாகத் தொரிய மல்லன் குரல் கொடுத்தான்.

“ஓ...” என்று நினைவுக்கு வந்த லிங்கையா, “நீ போய்ப் பார்த்து வா” என்றான்.

மல்லன் பந்தத்தை எடுத்துக் கொண்டு செல்கையில், லிங்கையா பரணில் ஏறினான். உள்ளே ரங்கனின் கால் தட்டுப்பட்டது. திட்டுக்கிட்டுக் கையை எடுத்த அவன் சட்டென்று நெருப்புக் குச்சியைக் கிழித்துப் பார்த்தான். சுருண்டு ரங்கன் படுத்திருந்தான். எருமையை முரட்டுத் தனமாக அடித்து விட்டுச் சின்னம்மைக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறானோ?

தன் மேல் போர்த்திருந்த கம்பளியை எடுத்து ஒரு புறம் அழுத்திப் பிடித்தபடி எழுந்து உட்கார்ந்தான். இருட்டானாலும் சிற்றப்பனின் கனிந்த முகம், வெகு அருகில், அவன் முகத்துக்கு முன் தெரிந்தது.

சிற்றப்பன், கையில் தட்டுப்பட்டது. காப்பென்று உணர்ந்தான். அந்தப் பிள்ளையைப் பார்த்த அவன் கண்களில் வெம்பனி சுரந்தது.

“ரங்கன்!” தொண்டை தழுதழுத்தது. “இப்படிச் செய்யலாமா தம்பி? நீ... வீட்டுக்கு மூத்த பையன், உன்னைத் தோளோடு போட்டுக் கொண்டு நான் வளர்த்தேன். என் உடம்புடன் தேய்ந்து பெரியவனான நீ இப்படிப் போவாய் என்று நான் நினைக்கவில்லையடா தம்பி!”

ரங்கன் குரோதம் பொங்க விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இருளில் அது லிங்கையாவுக்குத் தெரியவில்லை.

“திருட்டு வேலை இந்தச் சின்ன வயசிலே ஆகுமா ரங்கா?”

“யார் திருடினார்கள்? கீழே கிடந்ததை எடுத்து வைத்துக் கொண்டால் திருட்டா அது?” என்றான் ரங்கன் ஆத்திரத்துடன்.

லிங்கையா சட்டென்று நாவைக் கடித்துக் கொண்டான். அப்படியும் இருக்கலாமே!

“அப்படியானால் கிழேதான் கிடைத்ததா?”

“பின்னே, நான் உங்கள் வீட்டில் வந்து திருடினேனா?”

“இல்லையென்றால், எனக்கு அந்தக் கால் ஒடிந்த எருமை நடந்து வீட்டுக்கு வந்தாற் போல் சந்தோஷமாகிறது, ரங்கா! கீழே கிடந்தது எடுத்துச் செருகிக் கொண்டாய். சரி, மல்லன் வரட்டும். வீட்டுக்கு வந்து, சாப்பிட்ட பின் படுக்கலாம்” என்றான் லிங்கையா.

“நான் ஒன்றும் வீட்டுக்கு வரவில்லை.”

“ஏண்டா தம்பி?”

“வீட்டிலே எனக்கு என்ன இருக்கிறது, யார் இருக்கிறார்கள்? எனக்கு அம்மா இல்லை, அண்ணன் இல்லை, அத்தை இல்லை, மாமன் இல்லை, மகள் இல்லை, என்னை யாரும் கூப்பிடப் போறதில்லை.”

கடைசி வார்த்தைகளைச் சொல்லுகையில் உள்ளத்து ஆற்றாமை அழுகையாக வெளிவந்து விட்டது.

சிற்றப்பன் ஆதரவுடன் அவன் முதுகைத் தடவினான். “அப்படியெல்லாம் சொல்லாதே ரங்கா; நான் இல்லையா உனக்கு? உனக்கு ஏன் அத்தை இல்லை, மாமன் இல்லை? பாரு வந்திருக்கிறாள், பார்க்கவில்லையா நீ?... நான் சொல்வதைக் கேள், சிற்றப்பா வீட்டிலேயே இரு. இதோ மல்லன் வந்து விட்டான். நாம் வீட்டுக்குப் போகலாம், வா.”

திகைப்புடன் நின்ற மல்லனிடம் திரும்பி, “எருமையைப் பார்த்தாயா?” என்றான்.

“பார்த்தேன்... பரணில் ரங்கனா?” என்றான் மல்லன்.

“ஆமாம். நீ இங்கே இரு. நான் வீட்டுக்குப் போய் வருகிறேன்” என்று பரணின் படியிலிருந்து இறங்கி, மல்லனிடமிருந்து தீப்பந்தத்தை வாங்கிக் கொண்டான் லிங்கையா.

தன்னைக் கைப்பிடித்து இறக்கி அழைத்துக் கொண்டு தீப்பந்தத்துடன் அவன் மேடேறிச் செல்கையில், ‘இன்று சிற்றப்பன் காவல் இருக்கும் முறை என்று தெரியாமற் போயிற்றே. இவர் பிடித்து விட்டாரே!’ என்று ஆத்திரந்தான் பொங்கி வந்தது. எதிர்த்து வெளியேறத் துடிக்கும் துடிப்புக்கு ஒரு போக்குக் கிடைத்து, அதைச் சிற்றப்பன் சிரங்குக்குக் குளிர்சந்தனம் போட்டு அமுக்குவதைப் போல் அமுக்கி விட வந்ததை அவனால் ஏற்க முடியவில்லை. சிற்றப்பன் வீட்டில் எத்தனை நாளைக்கு ஒளிய முடியும்? அப்போதும் சின்னம்மை ஏசமாட்டாளா? அந்த ஹட்டியும் உறவினரும், மக்களும் தன்னுடைய கட்சியில் இருப்பதாகவே அவனால் எப்போதும் நினைத்திருக்க முடியவில்லையே! அந்த இடத்தை விட்டு ஓடும் எண்ணத்தில் தான் எத்தனை ஆறுதலும் மகிழ்ச்சியும் இருந்தன!

ஆனால் அவன் ஆத்திரத்துக்கு, தன்னைப் பற்றிக் கொண்டு மேடேற்றிச் செல்லும் கையை உதறும் வலிமை வரவில்லை. போதாக்குறைக்குப் பசியும் குளிரும் வேறு. அந்தக் கைச்சூட்டை உதறாதே என்று பொங்கி வரும் ஆத்திரத்தை அமுக்கின.

பையனின் உள்ளத்தை அறியா லிங்கையா, ‘மாதலிங்கேசுவரா, இந்தக் குலக்கொழுந்துக்கு தீமை வராமல் இருக்கட்டும். இந்தக் கை துணையாக, இந்தத் தீப்பந்த ஒளி துணையாக, இருட்டான பள்ளத்திலிருந்து மேலே இவனை அழைத்துச் செல்கிறேன். நல்ல வழியில் செல்லுவதை இந்தப் பந்தமும் இந்தக் கையுமே இன்று காப்பது போல் என்றும் காக்கட்டும்’ என்றெல்லாம் என்ணியவாறு நடந்தான்.

ஹெத்தப்பா கோயிலிலிருக்கும் தீபம் ஒன்றே விடிவிளக்குப் போல் கிராமம் இருக்குமிடம் காட்ட, பெரிய வீட்டின் குழந்தைகள் அனைவரும் உறங்குவது போல ஊர் ஓசை ஓய்ந்திருந்தது. அந்த அமைதியினூடே தேனில் அளைந்த தீங்குரல் ஒன்று இறைவனின் புகழை இசைத்துக் கொண்டிருந்தது.

‘ஆகா! என்ன அற்புதம்? அண்ணன் தானா பாடுகிறான்? அவன் இவ்வுலக மனிதன் தானா? அல்லது யட்சனோ? கின்னரனோ? இரவின் மோனத்திலே எழும் இவ்வொலி, ஊதாரி, பொறுப்பறியாத சோம்பேறி என்று பலரும் கருதும் அண்ணனின் கணத்திலிருந்துதான் வருகிறதா? அவன் சுயநினைவுடன் பாடுகிறானா, அல்லது தெய்வத்தின் ஆவேசம் குடிகொண்டிருக்கிறதா?’

அந்த ஒலியில் அவன் உள்ளம் தன்னை மறந்த லயத்தில் மூழ்கியது. நெஞ்சம் நெக்குருக, வாயிலில் கதவை இடிக்கவும் மறந்தவனாக நின்றான்.

இன்னிசையின் அலைகள் தவழ்ந்து தவழ்ந்து வந்து எங்கோ சென்று கொண்டே இருந்தன. உயர உயர வானுலகின் எல்லையை முட்டி, அந்த முக்கண்ணனை அழைக்கின்றனவோ ஒரு வேளை?

என்ன பாக்கியம் செய்தவன் அண்ணன்! வீடும் மாடும் பூமியும் நிலையுள்ளவையா? இப்படி அந்த இறைவனைக் கூவி அழைக்கும் பேறு அவனுக்கில்லையே?

ரங்கனின் நல்வாழ்வு பற்றி அவன் நினைத்தற் கொப்ப, இந்த அபூர்வமான இன்னிசை ஒலிப்பது நல்லதொரு சூசகம் போலும்! முன்னோர் பழம்பெருமை குலையாமல் தீபமெனச் சுடரும் ஒளியாய் வாழ்ந்து பெருகுவான் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும் இசையோ? ரங்கனும் அந்த இசையில் கட்டுண்டவனாகத்தான் சிற்றப்பனை ஏதும் கேட்காமலே நின்று கொண்டிருந்தான்.

வீட்டுக்குள்ளிருந்து குழந்தை அழும் குரல் வந்தது. சுய நினைவுக்கு வந்த ஜோகியின் தந்தை கதவை இடித்தான்.

“மாதி, மாதி!”

தீப மாடத்து அகலைத் தூண்டி எடுத்துக் கொண்டு வந்து மாதி பரபரக்கக் கதவைத் திறந்தாள்.

இரவு அவன் சரியாக உணவு கொள்ளவில்லை. குளிரோ காய்ச்சலோ?

“என்ன?... உடம்புக்கு ஒன்றுமில்லையே?” என்றாள் பரபரப்புடன் அகலைத் தூக்கிப் பிடித்து.

“ஒன்றும் இல்லை; ரங்கா, உள்ளே வா!”

மாதி அப்போதுதான் ரங்கனைப் பார்த்தாள். வழியில் படுத்திருந்த மைத்துனன் மனைவி சட்டென்று பாயை மடக்கிக் கொண்டு ஒதுங்கினாள்.

மாதி, வியப்புடன் விளக்கை ஏந்திக் கொண்டு சமையற் பகுதிக்கு அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

“எங்கே இருந்தான் இவன்?”

“ஒன்றும் கேட்காதே!” லிங்கையா ஜாடை செய்தான்.

“சோறு இருக்கிறதா?”

“களி இருக்கிறது! குழம்பு இருக்கிறது.”

லிங்கையா, மனைவி சோறெடுத்து வைப்பதை எதிர்பார்க்கவில்லை. விளக்கை வாங்கித் தண்டில் வைத்துவிட்டு அவனாகவே வெண்கல வட்டிலைக் கழுவி வைத்து, குளிர் நீரில் மிதந்த ராகிக் களி உருண்டையில் ஒன்றை வைத்து, அடுப்பின் மீது பானையில் மூடி வைத்திருந்த குழம்பையும் எடுத்து ஊற்றினான். அவனாகவே கலந்து, “இந்தா ரங்கா...” என்று கையில் வைக்கையில், தந்தையின் குரல் கேட்ட ஜோகி எழுந்து வந்தான்.

“எங்கே எழுந்து வந்தாய்? போடுப் படுடா” என்று தாய் விரட்டினாள்.

“ஏன் விரட்டுகிறாய்? வரட்டுமே! இங்கே உட்கார், ஜோகி” என்றான் தந்தை.

இரவில் எங்கோ ஒளிந்திருந்த ரங்கனை அழைத்து வந்து தந்தை உணவு கொடுப்பது அவனுக்குப் புதுமையாக இருந்தது. தன்னை அறியாமல் அவன் கையும் அந்தக் களிக்கு நீண்டது. லிங்கையா, மகனின் கையிலும் ஒரு கவளம் வைத்தான். தானும் உண்டான்.

“இப்படி ஒரே கலத்தில் உண்பது போல, என்றும் பிரியாமல் பகிர்ந்து உண்டு இருக்க வேண்டும். ஜோகி, ரங்கா இரண்டு பேரும் பிரிந்தால் சங்கடம், துன்பம் தெரியுமா?”

இருவரும் தலையை ஆட்டினார்கள்.

இருவருக்கும் கைகழுவ நீரூற்றிவிட்டு, அவன் கலத்தையும் கழுவி வைத்துவிட்டு வெளியே வந்தான்.

“சோறு வைத்தேன். உண்ணவில்லை; களியை உண்கிறீர்களே?” என்று மாதி சொல்லிக் கொண்டே முன்னே வந்து நின்றாள்.

“அப்போது இறங்கவில்லை! ரங்கா, ஜோகி இரண்டு பேரும் ஒரே படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள்!”

இருவரையும் நெருங்கப் படுக்க வைத்துவிட்டுக் கம்பளியால் போர்த்தினான்.

“ஈசுவரரை நினைத்துக் கொண்டு தூங்குங்கள்.”

உள்ளத்தில் நிறைவுடன் அவன் வெளியே நடந்த போது விளக்கை வைத்துக் கொண்டு அவனருகில் நின்ற மாதி கதவைத் தாழ்போட வெளியே வந்தாள்.

“இங்கே வா” என்று அவளை வெளியே அழைத்தான் லிங்கையா. புறமனைக்குள் போய் நின்ற அவனிடம் என்ன சேதியோ என்று அவள் நெருங்கினாள். லிங்கையா ஒன்றுமே சொல்லவில்லை. மடியை அவிழ்த்து, காப்பை அவளிடம் நீட்டினான். “நான் எருமையைப் பார்க்கப் போகையிலே பளிச்சென்று கீழே கிடந்தது. எடுத்து வந்தேன். கீழே நழுவ விட்டுவிட்டு, ஒன்றும் அறியாத குழந்தைகள் மேல் பழியைப் போட்டுவிட்டாயே?”

மாதி ஒன்றுமே பேசாமல் காப்பைக் கையில் வாங்கிக் கொண்டாள். “ரங்கனை இந்நேரத்தில் எங்கே பார்த்தீர்கள்?” என்றாள்.

“சின்னம்மைக்குப் பயந்து கொண்டு பரணியிலே பசியோடு சுருட்டிக் கட்டிக் கொண்டு படுத்திருந்தான். அழைத்து வந்தேன். நீ ஒன்றும் சொல்லாதே. குழந்தைகள் மனசு பால்; பெரியவர்கள் பேச்சுப் புளியாக இருக்கக் கூடாது. மனம் கெட்டு விடும்.”

மாதி ஒன்றும் பேசவில்லை.

“வரட்டுமா? கதவைப் போட்டுக் கொள்!”

கம்பளியை உதறிப் போட்டுக் கொண்டு வெளியே வந்தான். அண்ணனின் இசை ஓய்ந்து விட்டது. இரவு நிர்மலமாக இல்லை. பனி என்னும் கல்லாத் துகிலால் தன்னை மூடி மறைத்துக் கொண்டிருந்தாள் மலையன்னை. விர்ரென்று இறங்கி வருகையில் அவன் மனசில் நிம்மதி இருந்தது என்று கூறி விட முடியாது. ஏடு படிந்தாற் போன்ற திருப்திதான். வேற்றுமையில்லாமல் மாதி முழு மனதுடன் ரங்கனை மகனாகப் பாவிக்க வேண்டுமே? அன்னை இல்லாத குறை எத்தனை பெரிய குறை! அண்ணனின் இசை, ஓயாத இசையாய், மாயாத அலைகளாய், இனிமையின் மெல்லிய பாகுக்கம்பிகள் போன்ற உருவத்துடன் செவியூடு சென்று இருதயத்தைத் தொட்டு விட்டாற் போல் ஒரு சிலிர்ப்பு உண்டாயிற்று உடனே.

அவன் தனிப்பிறவி; உலகக் கவலை ஒட்டாமல், இன்பங்களை மட்டும் பற்றிக் கொண்டு வாழும் தனிப்பிறவி. மண் கவனிப்பாரற்றுக் கிடந்தாலும், இல்லை; மனைவி ஒட்டாத நீராகப் பிரிந்து போனாலும் இல்லை. மகனை மட்டும் எப்படிக் கவனிக்கப் போகிறான்?

ஆனால் அந்த இசையின் கூடுதலால், அவன் தட்டு, ஒன்றுமில்லாமல் உயர்ந்துதான் நின்றது. அத்தனை பொறுப்புகளையும் செல்வங்களையும் சுமந்தும் தன் தட்டு, பாதாளத்தில் கிடப்பது போல் உணர்ந்தான். அவன் குடும்பத்துக்கு ஒரு மகன் வருவது சுமையாகுமா? நல்ல மகனாக ஆக்கிவிட்டால் அவனும் ஒரு செல்வம் அல்லவா?

ஏன், உலகின் கண்களுக்கு மட்டும் பிரிந்து நாடகமாடுவானேன்? பிரிவில் என்ன இருக்கிறது? ஹட்டி நிலங்களுக்கே காவல் ஒத்து முறைபோட்டு, கடமையைப் பகிர்ந்து எல்லோரும் ஆற்றவில்லையா? பணிபுரியும் தொரியன் உடல் நலக்குறைவால் படுத்துவிட்டால், ஆளுக்குக் கொஞ்சம் பங்கிட்டு அவனுக்கு உணவளிக்கவில்லையா? ஒரு குடும்பம் என்று மனசில் கொண்ட பிறகு, மண்ணை மட்டும் ஏன் பிரித்து வேற்றுமை கொண்டாடித் தரிசாகப் போட வேண்டும்?

அண்ணனுக்காக, ரங்கனுக்காக, மற்ற குழந்தைகளுக்காக் அந்த மண்ணிலும் விளைவு பொன்னாகப் பாடுபட வேண்டும். தை பிறந்து பெரிய பண்டிகை கழிந்ததும், முன்பாக, ரங்கனுக்கு முறைப்படு பால் கறக்கும் உரிமையைத் தரும் சடங்கை நிறைவேற்ற வேண்டும். பின்னே, மாசி நன்னாளில் மாதலிங்கர் கோயில் முன் அழல் மிதித்துப் புனிதமான பின், விதைக்கும் திருநாளில், அந்தப் பூமியிலும் விதைத்து விடப் பண்படுத்த வேண்டும்.

இவ்விதமெல்லாம் தனக்குத்தானே தீர்மானம் செய்து கொண்டவனாக ஜோகியின் தந்தை, காவற் பரணை நெருங்கினான்.

பூம்... பூம்... பூம்... என்று ஊதுகுழலெடுத்து ஊதியவனாய்க் கையில் பந்தத்துடன் வந்து கொண்டிருந்தான் மல்லன்.

தன் தீர்மானங்களுக்கு அது வெற்றிச் சங்கு போல் ஒலிப்பதாக எண்ணிக் கொண்ட ஜோகியின் தந்தைக்கு, மகனைப் பெற்ற மகிழ்வில் நிறைவோடு அடங்கிய அன்னையின் மனசைப் போல் நிறைவு உண்டாயிற்று.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.6. கனவில் கண்ட ஒளி

காவலுக்கு வந்து அன்று போல் ஜோகியின் தந்தை ஒரு நாளும் கண் அயரவில்லை. கடனும் கவலையும் வஞ்சமும் வறுமையும் வருத்தும் உடலை ஏறிட்டுப் பார்க்காத நித்திரா தேவி, அவனை அன்று பரிபூரண நிம்மதியில் தாலாட்டிக் கண்ணயரச் செய்து விட்டாள். அந்த உறக்கத்தினூடே பின்னிரவில் அவன் ஒரு கனவு கண்டான்; கவலையில் பிறந்த கனவல்ல அது; நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, பொல்லா மனம் சிருஷ்டித்த மாயமல்ல அது. அவனுக்கு அது இறைவன் அருள் கொண்டு கூறிய நற்செய்தியாகத் தோன்றியது.

பெருநெருப்பு ஒன்று கீழ்த்திசையில் தெரிகிறது. செஞ்சோதியாய், சொக்க வைக்கும் ஒளிப்பிழம்பாய், இருளைக் கரைக்கவல்ல அனற் குவையாய்த் தோன்றிய அந்த மண்டலத்தில், முதியவர் ஒருவரின் முகம் தெரிந்தது. கம்பீரமான அகன்ற நெற்றி; வீரத் திருவிழிகள்; உயர்ந்த மூக்கு, சாந்தம் தவழும் புன்னகை இதழ்கள்; செவிகளில் மணிக்குண்டலங்கள் ஒளிர்கின்றன; நெற்றியிலே செஞ்சந்தனம் துலங்குகிறது. அந்த முகத்தை வைத்த கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாமென்று தோன்றியது லிங்கையாவுக்கு. அறிவும் ஞானமும் பழுத்த அந்த முகம் தன்னை அழைப்பதாகவும், ஓயாது அழைத்துக் கொண்டே இருப்பதாகவும் தோன்றியது. யார் இவர்? அழற்கடவுளோ? அல்லது அழலேந்தும் பெம்மானின் ஒரு தோற்றமோ?... இல்லை தருமதேவனோ? காலதேவனோ? ஒளித் தெய்வமோ?

அவன் அந்த முகத்தின் காந்தியில் லயித்துக் கிழக்கு நோக்கியே செல்ல ஆரம்பித்தான். சிறி து நேரம் சென்ற பின்னரே, அவனுக்குத் தான் மட்டும் நடக்கவில்லை, கூடச் சிறு பையன் ஒருவனையும் அழைத்து வருகிறோம் என்று புலனாயிற்று. அவன் ரங்கன் என்பது அவன் மனசுக்குத் தெரிந்தது. பையன் சாதாரணமான கச்சையும், மேற்போர்வையும் கம்பளியுமாக இல்லை. உள்ளாடை, மேலாடை இரண்டும் அணிந்திருக்கிறான். தலைமுடியை உச்சியில் முடிந்து கொண்டு நெற்றியில் சந்தனப் பொட்டுடன் விளங்குகிறான். மேலாடை நழுவி நழுவி விழுவதால் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொள்கிறான்.

“வேகமாக வா, ரங்கா!” என்று கூறிய வண்ணம் லிங்கையா திரும்பிப் பார்க்கிறான்.

ஆ! ரங்கன் என்று நினைத்தேனே? சந்தனப் பொட்டணிந்த பால் வடியும் இந்த முகம் ஜோகிக்கு உரியதல்லவோ?

“நீயா வந்தாய்? ஜோகி, நெருப்புச் சுடும். நீ சிறியவன் போ” என்றான் அவன்.

“சுடாது. ஹெத்தே சுவாமியை நானும் பார்த்துக் கும்பிட வருவேன் அப்பா” என்று குதித்து நடக்கிறான் குழந்தை.

“நீ வேண்டாம் ஜோகி, ரங்கன் தான் வேண்டும். ரங்கன் எங்கே? ரங்கா?” கையை உதறிவிட்டு அவன் திரும்புகிறான்.

கீழ்த் திசையில் அடர்ந்த காட்டுச் சோலைகளிடையே புகுந்து அந்த ஒளிக் கதிரோன் உலக பவனிக்குப் புறப்பட்டு விட்டான். மாதன், சுருட்டும் கையுமாக வெயிலில் வந்து குதித்துக் கொண்டிருந்தான்.

முன் இரவின் இன்னிசை நினைவுக்கு வர, லிங்கையா புன்னகையுடன் எதிரே வந்தான்.

“வா தம்பி, காவலுக்குப் போய் வருகிறாயா? ஆமாம் எருமை கால் ஒடிந்து போச்சாமே? அப்பப்பா! என்ன பெண் பிள்ளை தம்பி, வீட்டில் மொலு மொலு வென்று உயிரை எடுக்கிறாள்!” என்றான் கசப்புடன் அண்ணன்.

இந்த வார்த்தைகளை உள்ளிருந்தே கேட்ட நஞ்சம்மை, அம்பாய் பாய்ந்து வந்தாள்.

“நானா உயிரை எடுக்கிறேன்? இந்த வீட்டில் எந்தப் பெண்பிள்ளை இருப்பாள்? ஓர் உப்புக்குக் கூட உதவாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று அவர்கள் சிரிக்கிறார்கள். உதவாக்கரைப் பயல், நேற்றுப் போனவன் தலையே நீட்டவில்லை. குழந்தைக்கு வேறு காய்ச்சல். வீட்டில் ஒரு பண்டமில்லை. விளக்குக்கு எண்ணெய் இல்லை...”

அவள் ஓயாமல் நீட்டியதற்கும் அண்ணன் சிரித்தான்.

“மலையிலிருந்து விழும் அருவி கூட நிற்கும் தம்பி, இவள் வாய் நிற்காது. ரங்கன் பயல் எங்கே? நீ கண்டாயா?” என்றான்.

“இரவு பரணியிலே படுத்திருந்தான். வீட்டுக்கு அழைத்து வந்து சோறு போட்டேன். அங்கேதான் தூங்குவான். விளையாட்டுப் பையன். பொறுப்பு வந்துவிட்டால் சரியாய்ப் போய்விடுவான். ஒரு நாள் பார்த்து, அவனுக்கு பால் கறக்கும் உரிமையைத் தரும் சடங்கைச் செய்து விட வேண்டும்” என்றான் லிங்கையா.

உடனே அண்ணன் மனைவி பாய்ந்தாள்.

“தம்பிக்காரர் கிண்டல் செய்கிறார், கேளுங்கள்! நேரே சிரிப்பதைக் காட்டிலும் சிரிக்காமல் சிரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே! எனக்கு நாவைப் பிடுங்கிக் கொள்ளத் தோன்றுகிறது. இந்த வீட்டுக்கு ஏன் வந்தோம் என்று இருக்கிறது. எருமை ஒன்றையும் பிள்ளை கீழே தள்ளித் தீர்த்து விட்டான். கையாலாகாத உங்களிடம் சடங்கு செய்யலாம் என்று சொல்கிறாரே!”

“இப்படியெல்லாம் ஏன் தப்பாக நினைக்கிறீர்கள் அண்ணி? நாம் வெவ்வேறு வீடு தானே ஒழிய, வெவ்வேறு குடும்பம் அல்ல. இது வரையிலும் அப்படி நினைத்திருந்தாலும் இனியும் அப்படி நினைக்க வேண்டாம். என்னிடம் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். நம்மிடம் இருக்கிறதென்று சொல்லுங்கள். ரங்கன் வேறு, ஜோகி வேறு அல்ல; நம் கொட்டிலில் மாடுகள் இல்லையா?” என்றான் லிங்கையா.

தம்பியின் பேச்சில் அண்ணன் உருகிப் போனான். அவன் தன் பலவீனத்தை அறிவான். ஆனால் அதை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு இடமின்றியே அவன் பலவீனத்துக்கு அடிமையாகி விட்டான்.

“தம்பீ...!” என்று உணர்ச்சியுடன் தம்பியின் கைகளைப் பற்றினான். அவன் கைகள் நடுங்கின. அந்தக் கரடுமுரடான முகத்தில் அவன் கண்டத்திலிருந்து வரும் இசை போல் கண்ணீர் உருகியது.

நஞ்சம்மை இதுவும் நிசமாக இருக்குமோ என்று அதிசயித்து நின்றாள்.

“கூலி வைத்தேனும் எல்லாப் பூமியையும் திருப்புவோம். அண்ணி, நீங்கள் இனிமேல் வீட்டுத் தொல்லையை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நம் வீடு வந்து எடுத்துப் போங்கள்; இல்லையேல் சொல்லி அனுப்புங்கள்!” லிங்கையா இவ்விதம் மொழிந்துவிட்டுத் தன் வீட்டுக்குள் சென்றான். பரபரப்புடன் காலைப் பணிகளில் ஈடுபடலானான்.

காலைப் பணிகளை முடித்து விட்டு அவன் மறுபடி வெளியே கிளம்புமுன் மாதி அவனிடம் வந்தாள். ரங்கனைப் பற்றிப் பேசத்தான்.

“அவர்கள் பையனை இங்கே வைத்துக் கொள்வது சரி; நஞ்சக்கா பேசுவது நன்றாக இல்லை. அவர்கள் பையனை நாம் அபகரித்துக் கொள்கிறோமாம். தண்ணீருக்குப் போன இடத்தில் சத்தம் போடுகிறாள். ஒரு குளம் வறட்சி என்றால் இன்னொரு குளத்துத் தண்ணீரை ஊற்ற முடியுமா? நமக்கு என்ன?”

ஜோகியின் தந்தை, மனைவியை நிமிர்ந்து விழித்துப் பார்த்தான். அவள் அந்தப் பார்வைக்கு அடங்குபவளாக இல்லை.

“பெரியவரே பார்த்து முன்பே அவர்களை வேறாகப் பிரித்திருக்கிறார். இப்போது நீங்கள் ஏன் மாற்ற வேண்டும்; அவர்கள் பூமியில் நீங்கள் பாடுபடவும் வேண்டாம்; அவர்கள் பிள்ளையைச் சொந்தமாக நம் வீட்டில் வைத்துக் கொள்ளவும் வேண்டாம்.”

“மாதி!” என்றான் லிங்கையா; “நீ என்ன என்றுமில்லாமல் பேசிக் கொண்டு போகிறாய்? அண்ணியின் பேச்சுக்கு நீ ஏன் வகை வைக்கிறாய்? அண்ணி அந்த வீட்டில் நெடுநாள் இருப்பாள் என்று எண்ணுகிறாயா நீ?”

லிங்கையாவுக்கு வேதனை மண்டிக் குரலில் படிந்தது.

“ஒருநாள் அண்ணி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி விடுதலை வாங்கிப் போய் விடுவாள் என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது மாதி!”

“நாமே பாடுபட்டு எத்தனை நாள் அந்தக் குடும்பத்துக்கு உழைக்க?”

“என்ன செய்வது? காக்கைதான் கூடு கட்டும். குயில் கூட்டு கட்டுவதில்லை. குயில் கூடு கட்டுவதில்லை என்று காக்கை ஒரு குயில் குஞ்சைக் கூட வளர்க்காமல் விடுவதில்லை. மாதி, தொதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மண்ணில் பாடுபடாதவர்கள். அவர்கள் மலையில் நாம் வந்து குடியிருக்கிறோமே என்ற காரணத்துக்காக, நாம் இன்னும் அறுவடைக்கு அறுவடை அவர்களுக்குத் தானியம் கொடுக்கிறோம். சட்டியும் பானையும் அரிவாளும் கொட்டும் ஈட்டியும் செய்து நமக்குத் தந்து, நம் வாழ்வுக்கும் சாவுக்கும் வந்து மேளமும் தாளமும் பாட்டும் அளிக்கும் கோத்தருக்கு நாம் தானியம் கொடுக்கிறோம். காட்டுக் குறும்பரிடம், மந்திரம் மாயம் என்று பயந்து கொண்டு அவர்கள் கேட்பதெல்லாம் கொடுக்கிறோம். மனையில் வாழும் மற்றவரிடமெல்லாம் சகோதர முறை கொண்டு வாழ்கையில், அண்ணன் என்ன தீங்கு செய்தான். அவன் குடும்பத்தைப் பட்டினிப் போட? இந்த வீட்டில் முதலில் பிறந்த அண்ணன் ஐயனுக்குச் சமானம். அவனை நான் பட்டினி போடுவதா? சொல்லு மாதி?”

மாதி வாயடைத்து நின்றாள்.

“சரி, சுடு தண்ணீர் போட்டு வை, நான் மணியக்காரர் வீடு வரையில் போய் வருகிறேன்”என்று லிங்கையா பணித்து விட்டு வெளியேறினான்.

அந்தச் சாரியில் மறு கோடி வீடுதான் கிருஷ்ணனின் தாத்தா கரிய மல்லரின் வீடு. ஊருக்குப் பெரியவர். அவருக்கு வாரிசாக மகன் இல்லை. இரு மனைவிகள் கட்டியும் மூவரும் பெண்மக்களே; மூவரும் மணமாகி கணவர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். இளையவளை, அடுத்த மணிக்கல் ஹட்டியில் தான் மணம் செய்து கொடுத்தார். அவளுடைய மகனான கிருஷ்ணன் தான் தாத்தாவின் அருமைப் பேரனாக, சர்ஜ் கோட்டும் தொப்பியும் அணிந்து, கீழ்மலை மிஷன் பள்ளிக் கூடத்துக்குப் போய் வந்து கொண்டிருந்தான். ஊரில் ஒரு தவறும் முற்றிச் சச்சரவு உண்டாகாதபடி, ஓர் அணைப் போல் இருந்து வந்த அதிகாரி அவர். அவருடைய அணையில், அந்த மரகத மலையும், மணிக்கல் ஹட்டியும், அடுத்துச் சுற்றியுள்ள சின்னக் கொம்பை, கீழ்மலை முதலான குடியிருப்புகளும் அடங்கி, அவர் வாக்குக்கு மதிப்பும் செல்வாக்கும் வைத்திருந்தன. சுற்றியுள்ள அந்த ஐந்தாறு குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கும் பொதுவான கோயில்கள், பொதுவான விழாக்கள் உண்டு. விதைக்கவும், விதைத்த பலனை அநுபவிக்கவும், விழாக்களுக்கு நாள் நிச்சயிக்கவும் கூட்டம் போட்டுத் தீர்மானங்கள் செய்து கொள்வார்கள்.

கரியமல்லரை ஜோகியின் தந்தை காணவந்த போது, அவர் வாசல் வராந்தாவில், தொரியன் கயிற்றுக் கட்டிலுக்குக் கயிறு போடப் பார்த்துக் கொண்டிருந்தார்.

லிங்கையாவைக் கண்டதுமே அவர், “நல்லாயிருக்கிறாயா? வா! எருமை விழுந்து காலொடிந்தது எப்படி இருக்கிறது?” என்று விசாரித்த வண்ணம் புறமனைக்குள் வரவேற்றார்.

“அப்படியேதான் இருக்கிறது. நான் உங்களிடம் ஒரு முக்கியமான சேதி சொல்ல ஆலோசிக்க வந்தேன்” என்றான் லிங்கையா.

“அப்படியா? நானுங்கூட ஒரு முக்கிய காரியமாக உனக்குச் சொல்லியனுப்ப நினைத்திருந்தேன். உட்கார்.”

பொதுவாக, பயிரைக் குறித்து விளைவைக் குறித்து, அறுவடையைக் குறித்து அவர்கள் மேலெழுந்தவாரியாகப் பேசிக் கொண்டிருக்கையில், கிருஷ்ணனின் தாய் வந்து லிங்கையாவைக் குசலம் விசாரித்தாள். பருக மோர் கொண்டு வந்து வைத்து உபசரித்தாள்.

“அண்ணன் மணிக்கல் ஹட்டிப் பக்கம் வருவதே இல்லை!” என்று குற்றம் சாட்டினாள்.

“வந்து மாசக் கணக்கில் உட்காருவேன். விருந்தாக்கிப் போடவேண்டும்” என்றான் ஜோகியின் தந்தை நகைத்த வண்ணம்.

“வருஷக் கணக்கில் வந்து உட்கார்ந்தாலும் தங்கை சளைக்க மாட்டாள்” என்று பதிலுக்கு அவள் நகைத்தாள்.

லிங்கையா, பெரியவரைப் பார்த்தவண்ணம் தொண்டையைக் கனைத்துக் கொண்டு தொடங்கினான்.

ஏறக்குறைய அவன் வாயெடுக்கும் முன், கரியமல்லரே! “நானே முக்கியமாகௌன்னைப் பார்க்க இருந்தேன், தம்பி. நம்மையன் கோயில் நெருப்பைக் காக்க, அந்தக் கீழ்மலைப் பையன் வந்து ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன. அவன் இனிக் கல்யாணம் கட்டிக் கொண்டு வீட்டுக் கொடியைக் காக்க வேண்டும் என்று அவன் மாமன் நேற்று என்னிடம் வந்து அபிப்பிராயப்பட்டான். அடுத்தபடியாக ஐயன் நெருப்பைக் காக்க ஒரு பையன் வரவேண்டுமே! சீலமுள்ளவனாய், பொய் சூது அறியாதவனாய், இறைவர்க்குரிய காணிக்கைகளைத் தனக்கே சொந்தமென்று எண்ணும் பேராசை இல்லாதவனாக, நினைத்த போது உண்ணும் பெருந்தீனிக்காரனாக இல்லாதவனாக நல்ல பையனைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! உன் பையன் ஒரு குறிஞ்சி ஆகவில்லை?” என்று கூறி நிறுத்தினார்.

ஜோகியின் தந்தை, கண்ட கனவையும், தன் யோசனையையும் அவற்றை வெளியிடுமுன், பெரியவர் வாயிலே வந்த செய்தியையும் எண்ணி எண்ணி உள மகிழ்ந்தான். எத்தகைய சுப சூசகங்கள்!

ஆனால் ரங்கனுக்குப் பதிலாக பெரியவரும் ஜோகியையே குறிப்பிட்டுக் கேட்டதுதான் மலரிடையே ஒரு சிறு முள்ளென உறுத்தியது அவனுக்கு. “இல்லையே! ரங்கனுக்குத்தான் சரியான பிராயம். நானும் நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்” என்று லிங்கையா கனவை விவரிக்கையில், இடையிடையே கரியமல்லர் தம்மை மறந்து தலையை ஆட்டினார். கண்கள் கசிய, கீழ்த்திசை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டார்.

லிங்கையா, கனவில் கண்ட ஐயனையும் ஜோதியையும் விவரித்ததுடன், கையில் பிடித்துச் சென்ற பாலகன் ஜோகி என்பதை மாற்றி, ரங்கன் என்று கூறினான்.

கரியமல்லர் கண்களை மூடியவராய் அமர்ந்திருந்தார்.

அந்த மலைப் பிராந்தியத்தில் முதல் முதலாக வந்து ஊன்றிய முன்னோரான ஹெத்தப்பரின் நினைவுக் கோயில் அது. அந்தப் பக்கத்து மலைக்காரர் அனைவரும் அவருடைய வழி வந்தவர்கள் என்பது நம்பிக்கை. இளமையின் விகாரம் தோய்ந்த எண்ணம் முளைக்காத பாலப் பருவத்துப் பையனே, அந்தக் கோயிலின் நெருப்பைக் காக்கும் புனிதமான பணிக்கு உகந்தவனாவான். அந்த நெருப்பே, அந்தக் கோயிலுக்குடைய தெய்வம். ஊரார் காணிக்கையாக அளிக்கும் எருமைகளும், தானியங்களும் தீயைக் காக்கும் பையனுக்கு உரியவைதாம் என்றாலும், அவன் எந்தவிதமான ஆடம்பர சுகபோகங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. வீடு சுற்றம் யாவும் மறந்து, அந்தப் புனித நெருப்பைப் போற்றும் பணி ஒன்றே அவனுடையது. ஒரு நாளைக்கு ஒரு முறையே அவன் உண்ணலாம். கட்டில் மெத்தை முதலிய சுகங்களை அவன் மேனி நுகரக் கூடாது. தன் ஒரு வேளை உணவையும் அவன் தானே பொங்கிக் கொள்ள வேண்டும். அந்தக் கோயிலையும், தெய்வ மைதானத்தையும் தவிர, அவன் வேறு எந்த இடத்துக்கும் முன் அறிவிப்பின்றிச் செல்லலாகாது. பருவ மங்கையர், அந்தக் கோயிலின் எல்லைக்குள் எக்காரணத்தை முன்னிட்டும் வரமாட்டார்கள். அப்படி வந்து விட்டாலும், ஐயனின் நெருப்பைக் காப்பவன், அவர்களிடம் உரையாடக் கூடாது. இத்தகைய ஒழுக்கங்களுடன் ஒரு சிறுவனைத் தேர்வது எளிதாமோ?

மௌனத்தைக் கலைத்தவராய் கரியமல்லர், “கோயிலுக்கு முன் இன்று மாலை பஞ்சாயத்துக் கூடுவோம். எல்லோருக்கும் செய்தி அனுப்புகிறேன்” என்றார்.

“ஐயனே மொழிந்த அருள் வாக்காக எனக்குத் தோன்றுகிறது” என்றான் லிங்கையா.

“கலந்து ஆலோசிப்போம், கனவென்று சொல்லும் போது எவரும் அதை மறுக்க மாட்டார்கள்.”

“பையன் இன்னும் பால் கறக்கும் உரிமை பெறவில்லை. அடுத்த சோமவாரம் அதையும் செய்யலாம் என்று எண்ணியிருக்கிறோம். பெரியவர்களாய் நீங்கள் ஆசி கூறி நடத்தி வைக்க வேண்டும்.”

“செய்யலாம். எல்லாம் இரிய உடைய ஈசுவரனின் செயல். அண்ணன் வீடில் இருக்கிறானா லிங்கா?”

“நான் அவரிடங்கூடக் கனவைச் சொல்லவில்லை. ஐயனின் பணி பையனுக்குக் கிடைக்கும் பாக்கியம் அல்லவா? அண்ணன் என்ன மறுக்கப் போகிறாரா? வீடு இரண்டாக இருந்தாலும் வெவ்வேறாகத் தோன்றினாலும் அண்ணனும் நானும் ஒன்றுதான்.”

“அது எனக்குத் தெரியாதா? நீ கிடைக்காத தம்பி.”

“நான் வரட்டுமா? மாலையில் பார்க்கலாமா?”

“ஆகட்டும். நீயும் பையனைக் கேட்டு, அண்ணனையும் வீட்டில் கேட்டுச் சொல். பிறகு எல்லாம் ஏற்பாடு செய்து விடலாம்” எற்னு கூறி, கரியமல்லர் அவனை உடன் வந்து வாசலில் வழியனுப்பினார்.

லிங்கையா அப்படியே வீடு திரும்பவில்லை. எருமையைப் பார்த்து வரச் சரிவின் பக்கம் நடந்தான்.

அவன் பகலில் வீடு திரும்புவதற்குள், பெண்டிர் வாயிலாக, செய்தி காட்டுத் தீ எனப் பரவி விட்டது. மாதிக்கு இது எதிர்பாராத செய்தியாக இருந்தது. ஒருவிதத்தில் அவளுக்குத் திருப்தியே. ஐந்தாறு ஆண்டுகள் அப்படி ஒரு ஒழுங்கில் இருந்தால், பையன் நல்லவனாகத் தலையெடுப்பான். காணிக்கைகளிலிருந்து, ஏதோ ஒரு பகுதியேனும் அவனுக்கென்று கிடைக்கும். வேலை வெட்டி செய்யாமல் சாப்பிட விரும்பும் குடும்பத்தினருக்கு இது ஒரு நல்ல வாய்ப்புத்தானே?

ரங்கன் உண்டைவில்லும் கையுமாக, அருவிக்கரைப் புதர்களில் நின்று விளையாடிக் கொண்டிருக்கையில், ஜோகியும் பெள்ளியும் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டவராகப் பரபரத்து ஓடி வந்தார்கள்; உரைத்தார்கள். கை அப்படியே நிலைத்தது. கண்களையே அவன் கொட்டவில்லை.

“என்னையா? ஹெத்தப்பா கோயிலுக்கா?”

“ஆமாம்; அப்பனுக்கு நேற்று இரவு இரியர் கனவில் வந்து சொன்னாராம். திங்கட்கிழமை, எருமை கறக்க ‘ஹொணே’ எடுத்து உன்னிடம் கொடுக்கப் போகிறார்கள்” என்றான் ஜோகி.

அதிர்ந்தவனாக நின்ற ரங்கன், “நான் மாட்டேன்” என்றான் சட்டென்று.

“அதெப்படி? ஐயன் கனவில் நீதானே வேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம்?” என்றான் ஜோகி.

“ஹம், பொய்; நான் மாட்டேன்” என்றான் ரங்கன்.

“நேற்று நீ கோயிலில் இரியர் இல்லை என்று சொன்னாய். எருமை விழுந்து காலை உடைத்துக் கொண்டது. இப்போது கனவில் ஐயனே வந்து சொல்லி இருக்கையில் நீ மாட்டேனென்று எப்படிச் சொல்வாய்?” என்றான் பெள்ளி.

“நான் மாட்டேனென்றால் என்ன செய்வாராம்?” என்றான் ரங்கன்.

“அபசாரம் கேடு விளையும்” என்று பெள்ளி பயமுறுத்தினான்.

ரங்கன் செய்வதறியாமல் நின்றான்.

அவனுக்கு யார் மீதென்று சொல்ல முடியாமல் கோபம் பொங்கி எழுந்தது; கோயிற்பணியின் கட்டுப்பாடுகளை அவன் ஓரளவு அறிவான். ஒரே முறை அவன் சமைத்து உண்ண வேண்டும். அதுவுங் கூடச் சட்டியை ஒரே ஒரு தரந்தான் கவிழ்க்க வேண்டும். எவ்வளவு விழுகிறதோ இலையில் அதையே உண்ண வேண்டும். கோயிலின் எல்லையைத் தாண்டி செல்லும் சுதந்தரம் கிடையாது.

அவனுள் இந்த நினைவுகள் எழும்பியதும் கிலி படர்ந்து விட்டது. சிற்றப்பா சூழ்ச்சியா செய்துவிட்டார்? அன்பாக உள்ளவர் போல் பேசியதெல்லாம் நடிப்பா? சுற்றியுள்ள கிராமங்களை எல்லாம் விட்டு, எத்தனையோ பையன்களை விட்டு, அவனைத் தேர்ந்தெடுத்தது அநியாயம்.

எத்தனை ஆண்டுகளோ! சிறை, சிறை வாழ்வு, மாட்டேனென்று சொல்லக் கூடாதா?

வெளிக்கு அவன், ‘இரியரும் இல்லை, ஒன்றும் இல்லை’ என்று வீம்புக்குச் சொன்னாலும், அடி மனசில் அச்சப் படபடப்புத் துடித்தது. எருமைக்குக் கேடு வந்தது கிடக்கட்டும்; முதல் நாள் அவன் அப்படிச் சொன்னதால் தான் இரிய உடையார் சிற்றப்பனின் கனவில் வந்து அவனையே கேட்டு, அவனுக்குத் தண்டனை கொடுக்கிறாரோ!

துயரமும் ஏமாற்றமும் கோபமும் அவன் கண்களில் நீரை வருவித்தன. ஆத்திரத்துடன் குத்துச் செடிகளை ஒடித்தெறிந்தான். அழகாகப் பூத்திருந்த மஞ்சள் வாடாமல்லிகை மலர்களைக் கிள்ளி அருவியில் போட்டான். இருளானாலும் பரவாயில்லை என்று முதல் நாள் தப்பி ஓட முயன்றவன் போயிருக்கலாகாதா? காப்பு வேறு கையில் இருந்தது. பொல்லாத வேளை, பரணில் வந்து தான் படுத்தானே! வேறு எவரேனும் காவல் இருந்திருக்கக் கூடாதா? காப்பு, சிற்றப்பன் கையில் சிக்கிவிட்டது. இனி அதுபோல் தப்பிச் செல்லும் சந்தர்ப்பம் வருமா? கையில் ஒரு வெள்ளிப் பணங்கூட இல்லாமல் ஒத்தைக்கு ஓடி விடலாமா? எப்படிச் செல்வது?

ஜோகி அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். யோசனை செய்தவன் போல், “உன்னையே பிடித்ததானால் தான் இரிய உடையார் உன்னைத் தேர்ந்திருக்கிறார். ஐயன் நெருப்பைக் காத்தால் தானியமெல்லாம் வரும், பூமி கொத்தாமலே விளையும். உன்னிடமே ஈசுவரனார் கனவில் வந்து பேசுவார்” என்றான்.

ரங்கன் அன்று முழுவதும் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தான். அப்போது மாட்டேன் என்று அவன் மறுத்தால் அத்தனை பேரும் ஒரு முகமாக அவனிடம் எதிர்ப்புக் காட்டுவார்கள். அவன் தப்பி ஓடுவதே அசாத்தியமாக ஆனாலும் ஆகிவிடும். பால் கறக்கும் சடங்குக்குக் கூட்டமாக எல்லாரும் வருவார்கள். பால்மனையில் தான் சிற்றப்பா வெள்ளிப் பணங்களை மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அவன் அறிவான். அன்று எப்படியேனும் சில வெள்ளிப் பணங்களை எடுத்துக் கொண்டு ஓடி விடலாம்.

மறுநாள் மாலையில், சுற்றுப்புறக் குடியிருப்பின் பிரதிநிதிகளான தலைவர்களும் பெரியவர்களும் கோயில் மைதானத்தில் கூடினார்கள். கோயிலின் முன்னுள்ள மரத்தடியில் மேடையில் தலைவராகக் கரியமல்லர் வீற்றிருந்தார். அப்போது ரங்கன் நீராடி, சுத்தமான உள்ளாடையும் மேலாடையும் தரித்து, தந்தை ஒரு புறமும், சிறிய தந்தை ஒரு புறமுமாக அமர்ந்திருக்க, நடுவில் இருந்தான்.

கரியமல்லர் எழுந்து விஷயத்தை உரைத்தார்; “ஐந்து ஊர்களின் பிரதிநிதிகளாய் வந்திருக்கும் பெரியவர்களே, இரிய உடையார் முன் வணங்கி, இன்று கூட்டத்தைக் கூட்டியிருப்பதற்குக் காரணத்தை விளக்குகிறேன். ஐயன் கோயிலில் புனித நெருப்பைக் காக்க அமர்ந்த பையன் தேவனுக்கு, வரும் மாசம் இருபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அவன் குலமும் குடும்பமும் வளர, அவன் இதுவரை காத்து வந்த இறைபணியை விட்டு, அவனுக்கென்று உள்ள கடமையை மேற்கொள்ள வேண்டும்; இல்லையா?”

“ஆமாம், ஆமாம்” என்று நாற்புறங்களிலிருந்து ஒலிகள் இணைந்தன.

“இறைவரின் நெருப்பைக் காக்கும் பணி சாமானியமானது அல்ல. வாக்கும் மனமும் தூயவையாய், கோயில் எல்லையைப் புனிதமாக்கிக் கொண்டிருக்கும் இப்பணிக்கு, இதுவரையில் இருந்த தேவன், ஒருவிதமான அப்பழுக்குக்கும் இடமில்லாமல் பணி செய்து, நம் கிராமங்களும் பெற்றோரும் பெருமைப்படும்படி நிறைவேற்றி விட்டான். இது போல் அடுத்த பையனை எப்படித் தேர்ந்தெடுப்போம் என்று நமக்கெல்லாம் கவலையாக இருந்து வந்தது. ஆனால், குழந்தைகளாகிய நம்மை, நம்முடைய ஐயன் சோதனை செய்யவில்லை. நேற்றிரவு வழியைக் காட்டிவிட்டார். அவரே பையனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். மரகத மலையில், சிவச் செல்வரான தருமலிங்கரை அறியாதவர் உண்டோ?”

“இல்லை” என்ற ஒலி எழுந்தது.

“உண்மையான சிவ பக்தர் அவர். நம்முடைய முந்நூறு பாவங்களில் ஒன்றையும் மனசால் நினையாமல் அரன் திருவடி அடைந்தவர். அவருடைய வழியில் வந்த பையனை, மூத்த குடியின் மூத்த புதல்வனை, ஐயன் தமக்குத் தேர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஆணைக்கு மறுப்புக் கூற நாம் யார்?”

“பையன் புனிதப் பணிக்கு வேண்டிய எல்லாவித அம்சங்களையும் கொண்டவனாக இருக்கிறான். ஒரு குறிஞ்சியும் ஓராண்டும் கடந்தவன். நம் மாதண்ணனின் இனிய இசை கேட்டுப் பரவசமடையாதவர் உண்டோ இம்மலையில்? சிற்றப்பன் லிங்கையா தொட்டது பொன்னாகும் கையை உடையவன். நல்ல நிலத்தில் விளைந்த இந்த மணியைப் பற்றி இனி நான் சொல்லவும் வேண்டுமா? இறையவரே தேர்ந்தது, அந்தக் குடும்பத்தின் சிறப்புக்கு ஓர் எடுத்துக் காட்டு அல்லவா?”

“சந்தேகமில்லாமல், சந்தேகமில்லாமல்!”

“ரங்கா இப்படி வந்து பெரியவர்களை வணங்கு.”

ரங்கன் வணங்கிய போது, “புனித நெருப்பு என்றும் ஒளிரட்டும், சிறுவன் சீலம் விளங்கப் பணிபுரிந்து ஊர்களுக்கெல்லாம் சுபிட்சத்தை அளிக்கட்டும்” என்று பெரியவர்கள் அனைவரும் வாழ்த்தினார்கள்.

“வழக்கம் போல், தினத்துக்கு வீட்டுக்கொரு பிடியாக வரும் தானியமும், கோயிலுக்கென்று விடப்பட்ட எருமைகளின் பாலும், இவன் பணிக்கு ஒரு காணிக்கையாக இருக்கட்டும். இதை ஒப்புக் கொண்டு, பையனின் தந்தை முன் வந்து, இந்தச் செய்தியை உறுதிப்படுத்தட்டும்!” கம்பீரமான குரலில் கரியமல்லர் இப்படிக் கூறி முடித்த போது ரங்கனின் தந்தை எழுந்து வந்தான்.

சிறிது நேரம் பிரமை பிடித்தவன் போல் கண்கல் பளபளக்க நின்றான்.

  • ஹர ஹர சிவ சிவ பஸவேசா
    ஹர ஹர சிவ சிவ பரமேசா

  • என்று அவன் கண்டத்திலிருந்து எழும்பிய இன்னொலி, அந்த மலைக்காற்றின் அலைகளூடே பரவி, அந்தச் சூழ்நிலையையே புனிதத்தில் முழுக்கியது. கூடியிருந்தவரை, திங்களும் கங்கையும் தரித்த எம்பிரானின் நினைவில் ஒன்றச் செய்தது.

    அண்ணனுக்கு வாழ்வே இசையாக விளங்கும் மேன்மையை உன்னி உன்னித் தம்பி கண்ணீர் சொரிந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.7. புலியோ? வினையோ?
அன்று திங்கட்கிழமை. ரங்கன் பால்மனையில் புகுவதற்கான உரிமைச் சடங்கு அன்று தான் நடைபெற இருந்தது. அதிகாலையிலேயே வீடு மெழுகி சுத்தம் செய்து சுடுநீர் வைத்து அனைவரும் நீராடினர். அண்ணன் தம்பி இருவரின் குடும்பமும் ஒன்று கூடின. கிழங்கும் கீரையும் மொச்சையும் சாமையும் தினையும் அரிசியும் வெல்லமும் அந்தச் சிறிய சமையற்கட்டில் நூறு பேர் விருந்துக்குக் குவிந்தன. முதல் ஈற்றுக் கன்றுடன் மொழு மொழுவென்று நின்ற காரி எருமையைக் குளிப்பாட்டி, மணிகள் கட்டி அலங்கரிப்பதில் ரங்கனின் தந்தை ஈடுபட்டிருந்தான். ஜோகியும் ரங்கம்மையும் ஹட்டிப் பையன்களுடன் குறுக்கும் நெடுக்கும் போவதும், வெல்லமும் பொரியும் வாங்கித் தின்பதும், சிரிப்பதும், விளையாடுவதுமாகக் களித்துக் கொண்டிருந்தனர்.

ரங்கன் மட்டும், புது உள்ளாடை மேலாடை தரித்து, அலங்கரித்த பொம்மை போல் நின்று கொண்டிருந்தான். ஒன்றிலும் அவன் மனம் செல்லவில்லை. தூரத்தில், யானை மந்தை போல் தெரியும் குன்றுக் கூட்டங்களுக்கும் அப்பால் அடர்ந்த கானகங்களுக்கு அப்பால், தொட்டபெட்டா சிகரத்துக்கும் பின்னே மறைந்திருக்கும் ஒத்தை நகரை அவன் ஏக்கச் சிந்தனைகள் வட்டமிட்ட வண்ணம் இருந்தன.

பல வண்ண மக்கள் குழுமும் இடம், குதிரைகளும் வண்டிகளும் வீதிகளில் ஓடும் பட்டணம். கடைகளில் என்னவெல்லாம் பொருள்கள் இருக்குமோ? வெள்ளிக் காசுகளுக்கு அவர்களிடம் பஞ்சமே கிடையாதாம். மேற்கே, ஜான்ஸன் துரையின் எஸ்டேட்டில் தேயிலைச் செடிகளையும், காபிச் செடிகளையும் அவன் ஒரு நாள் போய்ப் பார்த்ததில்லையா? லப்பையின் காசுக்கடை, முறுக்கு, சுண்டல் விற்கும் கிழவி கடை எல்லாம் அங்கே தான் இருக்கின்றன. ஒரு துரையின் தோட்டத்திலேயே எத்தனையோ மனிதர்கள், எத்தனை எத்தனையோ துரைகளும் துரைசானிகளும் உள்ள ஒத்தை நகரில், என்ன என்ன விந்தைகள் உண்டோ? அந்த அற்புத அதிசய நகரத்துக்கு அவன் ஓடியே தீருவான். ஆம், ஹட்டியை விட்டு அவன் போயே தீருவான்!

ஒவ்வொரு நிமிஷமும் நெருங்க நெருங்க அவன் பரபரப்பு அதிகமாயிற்று. அடுத்த வாரம், ஹெத்தப்பர் கோயில் புனித நெருப்பை அணைத்து விடுவார்கள். மறுவாரம் வன்னி கடைந்து, புதுத் தீ மூட்டி, அவனைக் கோயில் எல்லையைக் காக்கச் சிறைப் புகுத்தி விடுவார்கள்.

மூக்கு மலையிலிருந்தும், மணிக்கல் ஹட்டியிலிருந்தும் மாமன் மாமிகள், அத்தை முதலிய உறவினர் வந்து கூடினார்கள்.

“நல்லா இருக்கிறீர்களா? நல்லா இருக்கிறீர்களா?” என்ற க்ஷேம விசாரணைகளும், “வாருங்கள், வாருங்கள்” என்ற வரவேற்புக் குரல்களுமாக வீட்டில் கலகலப்பு நிறைந்தது.

மண்டை வெடிக்கும் வெயிலோ, பனியோ அன்று இல்லை. குளிர்காற்று மெல்லத் தவழ்ந்து சென்று உடலைச் சிலிர்க்கச் செய்து கொண்டிருந்தது.

லிங்கையா காலையே நீராடி மடியுடுத்து, பால் மனையைச் சுத்தம் செய்தான். பெண் மக்கள் ஒதுங்கி நிற்க அவன் பாற்கலங்களைத் துலக்கி, சுடுநீரூற்றிக் கழுவி வைத்தான். தனியாக ஒரு மூங்கிற் பாற்குழாய் உண்டு. அது வழி வழி உபயோகித்த பாற்குழாய். சுத்தம் செய்து அந்தப் பாற்குழாயை அம்மையென நின்ற எருமையின் அருகில், ரங்கனைக் கையைப் பிடித்து, லிங்கையா அழைத்து வந்தான். அருகில் நின்ற அண்ணனிடம் பாற்குழாயைத் தந்து, “அண்ணா, நீங்கள் முதலில் பாலைக் கறந்து, பையனிடன் பாற்குழாயைத் தாருங்கள்” என்றான்.

அண்ணன் அதை வாங்கித் தம்பியிடமே திருப்பித் தந்தான்; “இருக்கட்டும் தம்பி; நீதான் மங்களகரமான கைகளை உடையவனாக இருக்கிறாய். உன் கைக்கு அவை மடி சுரப்பதை போல் நான் எங்கும் பார்க்கவில்லை. நீயே அவற்றை பேணுகிறாய். நீயே பாலை முதலில் கறந்து, ஆசி கூறிப் பையனின் கையில் ‘ஹொணே’யைக் கொடு” என்றான்.

தம்பி குழுமியிருக்கும் பெரியவர்களைப் பார்த்தான்; நிசப்தம் நிலவியது. அண்ணன் பக்கம் மீண்டும் பார்வையைத் திருப்பினான் தம்பி.

“நீங்கள் மூத்தவர், அண்ணா, நீங்கள் தருவது சம்பிரதாயம்” என்றான், தொண்டைக் கரகரக்க.

“இருக்கும். மாமா, பெரியவராக நீங்கள் சொல்லுங்கள். மல்லண்ணா நீங்கள் சொல்லுங்கள். குடும்பத்தில் நான் மூத்தவன் என்பது பேருக்குத்தான். என் தலையில் பொறுப்பைச் சுமத்தாதீர்கள். நான் கட்டுக்களில் அகப்பட விரும்பவில்லை. வீட்டுப் ‘பலப்பெட்டி’யை எவன் நிரப்பப் பாடுபடுகிறானோ, இளம் பிள்ளைகளுக்கு வழிவழியான பண்பாட்டையும் உழைப்பையும் எவன் தன்னுடைய நடத்தையால் கற்றுக் கொடுக்கிறானோ, அவனே மூத்தவன், அவனே உரியவன். என் கையால் என் கொட்டில் பெருகவில்லை; நீயே கொடு; தட்டாதே” என்றான் அண்ணன்.

மூக்குமலை மாமனும், கரியமல்லரும், “ஆமாம், அதுவே சரி; நீயே அதைச் செய், லிங்கா. பாற்குழாயை வாங்கிக் கொள்!” என்றனர். லிங்கையா தட்டமுடியாமல் ‘ஹோணே’ என்ற அந்தப் பாற்குழாயை இரு கைகளையும் நீட்டிப் பெற்றுக் கொண்டான். கிழக்கு முகமாக அவன் அமர்ந்து, அந்தப் புனிதமான சடங்கை ஆரம்பித்தான்.

ஜோகிக்கு, தந்தை மாடுகளைக் கறக்கப் பார்க்கையில் கைகளும் விரல்களும் துடிக்கும். மந்திர மாயம் போல் அவன் தந்தை கை வைக்கையிலேயே பாற்குழாயில் வெண்ணுரை எழும்பிப் பால் பொங்கி வருவதைப் போல் நிரம்பி வரும். வரம்பை மீறி அது பொங்கி நிற்கும் சமயம், ஆடாமல் அசையாமல் அவன் பாற்கலத்தில் மெள்ளச் சேர்ப்பான்.

இன்றும் ஜோகி, கண்களில் ஆவல் ஒளிரப் பார்த்துக் கொண்டிருந்தான். கன்றுமுட்டி, எருமை மடி சுரந்ததும், பாற்குழாயை இடுக்கிக் கொண்டு, பால் கறக்கும் விதம் காட்டி, முக்காலும் நிரம்பிய பாத்திரத்தை லிங்கையா ரங்கனிடம் தந்தான்.

ரங்கன் அதை ஏந்திக் கொண்டு, சிறிய தந்தை காட்டியபடி, படபடக்கும் நெஞ்சும் நடுங்கும் விரல்களுமாய், பாலைக் கறக்க முயன்றான். பேருக்கு இரண்டு பீர் தான் கிடைத்தது.

கறந்த பாலை எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்குள் நுழைகையில், அனைவரும் வழி விட்டு ஒதுங்கி நின்றனர். மாதி, தலைவனுக்கு உரிய உண்கலமாகிய பெரிய வெண்கல வட்டிலையும், வேறு கலங்களையும் கொண்டு வைத்து ஒதுங்கி நின்றாள்.

“முதலில் பெரிய வட்டிலில் பாலை விடு. இன்று முதல் இந்த வீட்டுப் பொறுப்பில் நீ பங்கு கொள்கிறாய். குடும்பத்துக்கு வேண்டுமென்ற பாலைக் கறந்து தா. எனக்கு எல்லாவித நலன்களும் கூடட்டும் என்று நம் ஐயனை, இரிய உடையாரை வேண்டி விடு, ரங்கா!” என்றான் சிற்றப்பன்.

ரங்கனுக்கு எண்ணங்களும் சொற்களும் எழும் கலகலப்பு உள்ளத்தில் இருந்தால் தானே?

மாடு கறந்து கொண்டு, மண்ணை வெட்டித் தானியம் விதைத்துக் கொண்டு ஹட்டிக்குள் அழுந்திக் கிடப்பதுதானா முடிவு?

இல்லை, இல்லவே இல்லை.

இல்லை, இல்லை என்று மனசு தாளம் போட, அவன் உண்கலத்தில் பாலை ஊற்றிய போது, அவன் கை நடுங்கியது. அவன் கை நடுங்குவதைக் கண்ட ஜோகியின் தந்தை உதவியாகக் கைநீட்டிப் பிடித்துக் கொள்ளுமுன், பாற்குழாய் ஆடிப் பால் கீழே சிந்திவிட்டது.

லிங்கையாவுக்கு, நேரக்கூடாதது நேர்ந்து விட்டாற் போல் நெஞ்சு திடுக்கிட்டது. குழுமியிருந்தவர்களின் கசமுச ஒலிகள் எழும்பின. லிங்கையா சட்டென்று அவன் கையைப் பிடித்து மற்றக் கலங்களில் பாலை ஊற்றினான். இது நிகழ்கையிலேயே பெண்டிர் பக்கம் கசமுசவென்ற ஒலி வலுக்கத் தொடங்கியது. புனிதமான சடங்கு நிகழ்கையிலே பெண்களின் பேச்சு எழுவதா? மூக்குமலை மாமன் கோப முகத்தினராய் பெண்கள் பக்கம் நோக்கினார்.

அந்தக் கசமுசப்புக்குக் காரணமும் இதுதான். நஞ்சம்மைக்குச் சடங்கு மைத்துனன் வீட்டில் வைத்துச் செய்வதிலேயே இஷ்டமில்லை. அந்த வீட்டில் பால்மனை இல்லையா, உண்கலம் இல்லையா? அதை அல்லவா முதலில் வைத்துப்பாலை ஊற்றச் செய்ய வேண்டும்? அவனுக்குத் தன்மனைக்கு எதையும் தேடி வரும் பொறுப்புக் கிடையாதா? முதலில் அண்ணன், தம்பியையே செய் என்று கூறியது போல், தம்பி மனைவி தன்னிடமே அந்த உரிமையை விடுவாள் என்று அவள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தாள். மரியாதைக்குக் கூட அல்லவா அவள் அதை மொழியவில்லை? அவர்கள் செய்வன எல்லாம் சூழ்ச்சிகள் இல்லையா? பையனையுங் கூட குடும்பத்துக்குப் பிடுங்கிக் கொள்கிறார்களா?

தன் அதிருப்தியை அவள் வெளியிட்டுவிட்டாள்.

மூக்குமலை மாமி முன் வந்து சமாதானமாக, “அந்த மனைக்குச் சென்று அங்கேயும் பால் ஊற்றட்டும்” என்றான்.

“இருக்கட்டும், இருக்கட்டும்” என்று கையமர்த்திய ஜோகியின் தந்தை, சமையற் பகுதிக்கு வந்து, எல்லாப் பாண்டங்களிலும் பாலைத் தெளிக்கச் செய்தான். பின்னர், எதிர் மனைக்கும் சென்றான். முன்னதாக நஞ்சம்மை சென்று அங்கு உண்கலம் எடுத்து வைக்கவில்லை. மாமியே எடுத்து வைக்க, பாலைத் தெளிக்கச் செய்தான். பிறகு, குழுமியிருந்தவர்களில் தந்தை மீதும், தாயார் மீதும், பெரியவர்கள் மீதும் பாலைத் தெளிக்கச் செய்தான்.

“வற்றாத பால் வழங்க வளம் பெறுவாய்; எருமைகளும் பசுவினங்களும் செழிக்கட்டும்” என்று ஒவ்வொருவரும் ஆசிகள் வழங்கினர். பின்னர் மீதியுள்ள பாலுடன் சிற்றப்பன் அழைத்துச் செல்ல, ரங்கன் பால்மனைக்குச் சென்றான். கைப்பாலை வைத்தான்.

சடங்குகள் இத்துடன் நிறைவேறியதும், “நாளையிலிருந்து நீதான் இந்த எருமையைக் கறக்க வேண்டும், ரங்கா!” என்றார் தந்தை.

ரங்கனின் முகம் கார்கால வானை ஒத்திருந்தது.

“பசி பையனுக்கு, முதலில் அவனுக்கு உணவு வையுங்கள்” என்றார் கரியமல்லர்.

பாலும் வெல்லமும் நெய்யும் சேர்ந்த பொங்கலை மணக்க மணக்கத் தையல் இலையில் (மினிகே இலைகள்) முதியவளான பாட்டி ரங்கனுக்குப் படைத்தாள். ரங்கனின் விரல்கள் இனிய உணவில் அளைந்தன; சோறு ருசிக்கவில்லை. நெஞ்சு அடைத்தது.

“ஏண்டா தம்பி, சாப்பிடு, பசி இல்லையா?” என்றாள் பாட்டி.

“தனியாகச் சாப்பிடக் கஷ்டமாக இருக்கும். இல்லையா ரங்கா!” என்று லிங்கையா அருகில் வந்தான்.

இதற்குள் பெரிய உண்கலங்களையும், தையல் இலைகளையும் கொண்டு வந்து மாதி எல்லோருக்கும் வைத்து அமுது படைக்கலானாள். நாலைந்து பேர்களாய் ஒரு குடும்பமாய்ப் பழகியவர்களாய், ஒவ்வொரு கலத்தைச் சுற்றி அமர்ந்தனர். இனிய களியும் சோறும் குழம்பும் மோருமாய்ப் பெண்டிர் பரிமாற அண்ணன் தம்பி ஒற்றுமையைப் புகழ்ந்த வண்ணம் எல்லோரும் உணவருந்தலாயினர்.

“எருமை நடந்துவிடுமா லிங்கையா?” என்று ஒருவர் சட்டென்று கேட்டார்.

இச்சமயம் இதை ஏன் நினைவுபடுத்துகிறான் என்று நினைத்த லிங்கையா சட்டென்று முந்திக் கொண்டு, “கால் கூடினால் நடந்து விடும். நாலைந்து நாளில் மெள்ளக் கொட்டிலுக்குத் தூக்கி வந்துவிடலாம்” என்றான்.

முதல் நாள் முறைகாவல் இருந்த ராமன், “நேற்று நாய் விடாமல் குரைத்தது. அருவிக்கரைக்கு அப்பால் கொள்ளி போல் கண்கள் தெரிந்தன. எனக்கு என்னவோ சந்தேகமாக இருந்தது. காட்டிலிருந்து ஏதோ மோப்பம் அறிந்து வந்திருக்கிறது. நான் ஈட்டி கொண்டு போகவில்லை. பயமாக இருந்தது” என்று விவரித்தான்.

ஜோகியின் தந்தை திடுக்கிடுகையிலே, “வேட்டைஇருக்கிறதா? இல்லை, நரி ஆட்டுக்கடா எதையானும் பார்த்து விட்டுப் புலி என்கிறாயா?” என்றான் நான்காம் வீட்டு போஜன்.

“அட, அத்தனைக் குருடா நான்? தொரியனைக் கேட்டுப் பார்!” என்றான் ராமன் ரோஷத்துடன்.

லிங்கையாவுக்குக் கவலை மேலிட்டது.

“அப்படியானால் சுற்றுக் கிராமங்களில் தெரிவித்து வேட்டைக்காரர்களை உஷார்படுத்தி அழைத்து வர வேண்டாமா? அருவிக்கரை வரையிலும் வந்ததென்றால் நம் ஆடுமாடுகளுக்கு அபாயமில்லையா?” என்றான்.

“சொல்லி அனுப்புவோம்” என்று கூறியபடியே கரியமல்லர் எழுந்து கை கழுவப் போனார். அனைவரும் உண்டு முடித்துத் தாம்பூலம் தரிப்பதும் புகைபிடிப்பதுமாக வெளிப் புல் திட்டுக்கு வந்து விட்டனர். இளைஞராக இருந்தவர்கள், ஹெத்தப்பா கோயில் முன், மைதான மூலையில் இருந்த உருண்டைக் கல்லைத் தூக்குவது பற்றிய பேச்சுக்களில் உற்சாகமடைந்தவராய் அங்கே சென்றனர். ஜோகியின் தந்தை, உண்டு முடித்ததும் ஏதோ ஓர் உந்தலால் எருமை மேயும் குன்றின் பக்கம் நடந்தான். அவன் முதல் நாள் மாலையில் அதைப் பார்த்ததுதான். ஜோகி தினமும் காலையில் புல்லரிந்து கொண்டு செல்வான். அன்றைக் கோலாகலத்தில் அவன் போட்டானோ இல்லையோ?

முட்டுப் பாறையைக் கடந்து லிங்கையா இறங்குகையிலே மாடு மேய்க்கும் சிறுவர்கள் இருவர் ஓடி வந்தனர். அவர்கள் மரகதமலை ஹட்டியைச் சேர்ந்தவரல்லர்.

“புலி புலி! அதா எருமையைக் கடிச்சு, இழுத்திட்டுப் போச்சு!” லிங்கையாவுக்கு அவனுள் ஏதோ ஒரு மாளிகை குலுங்கி விழுந்தாற் போல் அதிர்ச்சி உண்டாயிற்று. உண்ட உணவு குலுங்க, உணர்வு இருள, அவன் ஓடினான்.

புல்லின் சரிவிலே அவன் அமைத்திருந்த சாக்குக் கூடாரத்திலே அவன் கண்ட காட்சியை எப்படிச் சகிப்பான்!

எருமையின் தலை தனியாகப் பிடுங்கப்பட்டு, பாதி சிதைந்து இரத்தமும் களரியுமாக இருந்தது. உடலில் பாதி காணப்படவில்லை. அது வந்து இழுத்துப் போன தடமாக அருவிக்கரை வரையிலும் அப்பாலும் இரத்தம் சொட்டிப் பெருகியிருந்தது.

மண்ணிலும் மந்தையிலும் உயிரை வைத்திருந்த அந்தப் பெருமகனின் கண்களிலே நீர் கோர்த்தது.

இது எதைக் குறிக்கிறது? புனிதச் சடங்கை நிறைவேற்றும் நாளிலே, இந்த அவலம் எந்தத் தீமையைக் குறிக்கிறது? ஐயனே!

அவன் அந்த மண்ணில் பிறந்து, நினைவு தெரிந்து, இப்படி ஒரு படுகளரியைத் தன் கண்களால் கண்டதில்லையே! புலி, புலி என்பார்கள். அஞ்சிக் காபந்துகள் செய்வார்கள். ஒரே ஒரு முறை எப்போதோ மூன்றாம் வீட்டு மல்லனின் தாத்தா, சிறுத்தை ஒன்றை ஈட்டி எறிந்து கொண்டு வந்ததுண்டு. அது தவிர, ஜான்ஸன் எஸ்டேட் துரை கூட, இந்தப் பக்கம் புலி இல்லை என்று சொல்லிக் கொண்டு காடையையும் கவுதாரியையும் முயலையும் அல்லவோ சுட்டுக் கொண்டு போகும் செய்தி கேட்டிருக்கிறான்? அப்படியிருக்க பட்டப்பகலில், புலி தோன்றி இப்படி ஒரு கோரத்தை நிகழ்த்திப் போயிருக்கிறதே! இது புலிதானா? அல்லது மந்திரமா, மாயமா!

ஒரு நினைவு அவனுள் தோன்றி, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலும் சிலிர்ப்பை ஓட்டியது.

ரங்கன் - ரங்கன் இரிய உடையாருக்கு உகந்தவன் அல்லனோ?

‘மகனே, ஜோகியல்லவா, நான் தேர்ந்தெடுத்த பையன்? நீ ஏமாற்றுகிறாயே! என்று ஐயன் கேட்கும் கேள்வியா? ஈசுவரா, இதென்ன சோதனை?’

கண்கள் ஆறாய்ப் பெருக, அவன் அந்த இடத்திலேயே நின்றான். சற்று நேரத்தில் ஆண், பெண், குஞ்சு குழந்தைகள், ஹட்டி அடங்கலும் அங்கே ஓடி வந்தன.

அப்படி வராதவன், மன ஆறுதலும் மகிழ்ச்சியும் பரபரப்பும் அந்தச் சமயத்தில் உடையவன் ஒருவன் இருந்தான், ரங்கன்!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.8. விடுதலை ஓட்டம்

வானம் சோவென்று கொட்டித் தீர்க்கும் என்ற அளவில் அடைக்கருக்கல் இட்டிருந்தது. ஒரே கணத்தில் பளீரென்று சூரியன் உதயமானால் அந்த மலைப் பிரதேசம் எப்படி ஒளிருமோ, அப்படி ரங்கனின் இருதயத்தில் கவிந்த ஏக்கக் கவலைகள் கரைந்து, அவன் உடலிலும் உள்ளத்திலும் அளவற்ற சுறுசுறுப்பை உண்டாக்கியது அந்த நிகழ்ச்சி. பத்து நிமிஷ நேரத்துக்குள், தான் பிறந்து வளர்ந்து பழகிய மரகத மலையை விட்டு, கனவு கண்ட ஒத்தை நகரை எண்ணி, எவரும் போகாத பக்கத்திலுள்ள ஒத்தையடிப் பாதையில் அவன் ஓடிக் கொண்டிருந்தான். இடுப்பில் முழுசாக இருந்த இரண்டு வெள்ளி ரூபாய்களும், மூன்றே காலணாச் சில்லரையும் அவனுடைய ஓட்டத்துக்கு உயிரான வேகம் கொடுத்தன. ‘ஐயோ!’ என்று வீட்டார் அப்படி அப்படியே எல்லாவற்றையும் போட்டுவிட்டு ஓடிய போது, பால்மனைக்குள் ஒரு கலத்துக்குள் பட்டுப்பை ஒன்றில் சிற்றப்பன் சேமித்து வைத்திருந்த பத்து ரூபாயிலிருந்து எடுத்த வெள்ளி ரூபாய்கள் அவை. கட்டவிழ்ந்ததும் ஓடும் கன்று போல் அவன் திரும்பிப் பாராமலே, வழியை நோக்காமலே தான் ஓடினான். டீ எஸ்டேட்டைக் கடந்ததும், மலை, காடு!

எந்த மலை? எந்தக் காடு?

ரங்கன் அந்தப் பக்கத்தையே இதுவரையில் அறிந்திருக்கவில்லை! கானகத்துள் ஒற்றையடிப் பாதையாகத் தென்பட்ட இடத்தில், இளங்கால்கள் கல்லிலும் முள்ளிலும் குத்த, வேகமாக ஓடினான். ஆங்காங்கே குறும்பரோ கோத்தரோ தென்பட்டால் அவன் அஞ்சிப் பதுங்கிப் பின்பு சென்றான். மலை ஒன்றின் மேல் ஏறி அவன் சுற்றும் முற்றும் பார்த்த போது, சூரியன் இருந்த திசை கொண்டு, மரகத மலை எந்தப் பக்கம் இருக்கிறது, தேவர்பெட்டா எங்கே தெரிகிறது என்பதை அறிய முடிந்ததே தவிர, வண்ண விசித்திர ஒத்தை நகர் வண்ண மயிலைப் போல் அவன் கண்முன் விரிந்து கிடக்கவில்லை.

இருதயம் படபடக்க, அந்த மலையையும் கடந்து, ரங்கன் ஓட்டமாக ஓடினான். சிறு துணியில் அவன் முடிச்சிட்டு வந்திருந்த களியும் பொரி உருண்டையும் வெல்லமும் குலுங்க, பின்னும் ஒரு மலைச்சரிவில் வந்து நின்றான். கீழே ஒரு ஹட்டி இருந்தது. நெஞ்சத் துணிவு மாய்ந்தது. கால்கள் பின்னிக் கொண்டன. எவரேனும் தெரிந்து கொள்வார்களோ? அது என்ன ஹட்டியோ? அவனுக்கு உறவினரோ, சிற்றப்பனுக்குத் தெரிந்தவரோ இருந்துவிட்டால்?

ஹட்டியின் அருகில் செல்லாமலே அவன் மீண்டும் இறங்கிக் கானக வழியில் புகுந்தான். இளம் உள்ளத்தில் கிலியை ஊட்டும் விசித்திரமான ஒலிகள் அவனுக்குக் கேட்டன.

“இரிய உடை ஈசரே, இன்று என்னைப் பத்திரமாகச் சேர்த்து விடுங்கள். என்னை ஒத்தையில் கொண்டு சேர்த்து விடுங்கள்” என்றெல்லாம் ‘இரிய உடையார் இல்லை’ என்று மறுத்த உள்ளம், அந்த இக்கட்டான நிலையில் பாவங்களை மன்னிக்கச் சொல்லி இறைஞ்சியது.

புதர்களிலும் பாறையின் பக்கங்களிலும் புலி ஒளிந்திருக்குமோ என்ற கிலி அவனுக்கு உண்டாயிற்று. வெகுதூரம் பல காடு மலைகளைக் கடந்து அவன் ஓடிய பிறகு, திக்குத் திசை தெரியவில்லை. மரகத மலையோ, தேவர் பெட்டாவோ அவன் கண்களில் படவில்லை. கழுகு மூக்குப் போன்ற பாறையுடன் ஒரு மலைதான் அவனுக்கு முன் இப்போது தெரிந்தது. இளங்கால்கள் நோவ, அந்த வனாந்திரத்தில் நிர்க்கதியாக வந்து நின்ற அவன் கண்களில் நீர் பெருகியது.

“ஐயனே, நான் பொன்னுடன் திரும்பி வந்து உங்கள் கோயிலுக்கு நான்கு எருமைகள் விடுவேன். என்னைக் காப்பாற்றும்!” என்று வாய்விட்டுக் கதறினான். சிறிது தேறி, ஒரு வேளை இரவுக்குள் உயிரோடு இருக்கிறோமோ இல்லையோ என்ற நினைவுடன், பொரி உருண்டையைத் தின்று கொண்டே நடந்தான்.

பொழுது தேயும் சமயத்தில், அந்தக் குன்றின் உச்சியில் அவன் நின்று பார்க்கையில், அவன் உள்ளத்தில் தெம்பு பிறந்தது. வளைந்து சென்ற குன்றுகளின் நடுவில், பசுமையான புல்வெளி; வளைவான குறுகிய பொந்து போன்ற வாயில்களுடன் ‘கணக்’ புல்லால் வேயப் பெற்ற குடிசைகள்; ஒரு புறம் கல் கட்டிடமான கோபுரம்; இன்னொருபுறம் எருமை மந்தைகள் நிற்கும் கொட்டடி.

தொதவர் மந்து! மனிதவாடை தெரியாத கானகத்திலிருந்து, மக்கள் குடியிருப்பைக் கண்டுவிட்ட தைரியத்தில் அவன் அந்த மந்தையை நோக்கி நடந்தான். புதுக்குளி அணிந்த பூசாரி அருவித் துறைக்குப் போய் வரும் வழியில் அவனைச் சந்தித்தான்; உற்றுப் பார்த்தான். ரங்கனுடனேயே நடந்தான்.

தொதவன் அவன் மொழியில் ரங்கனை ஏதோ விசாரித்தான். ரங்கனின் நெஞ்சம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. மறுமொழியின்றி நேராக நடந்தான். குடிசை ஒன்றின் வாசலில் வந்து உட்கார்ந்தான். அந்தக் குடிசை வாசலில் கம்பளி போர்த்த கிழவி ஒருத்தியும் இளைஞனான ஒருவனும் அமர்ந்திருந்தனர். ரங்கனுடன் வந்த பூசாரி அவர்களைப் பார்த்து ஏதோ பேசினான். குடிசைக்குள்ளிருந்து வெண்ணெய் பளபளப்பு மின்னும் திரிக்கப்பட்ட கூந்தலையுடைய அழகி ஒருத்தி வந்தாள். சற்றைக்கெல்லாம் அங்கே கூட்டம் அவனைச் சுற்றிக் கூடிவிட்டது. அவர்களுடைய மொழியில் என்ன என்னவோ கேட்டு அவனைத் திணற அடித்தார்கள்.

ரங்கன் மறுமொழியே பேசவில்லை. ஓடி வந்த களைப்பு. துணி முடிப்பிலிருந்து களியையும் வெல்லத்தையும் எடுத்துத் தின்னத் தொடங்கினான்.

ஒரு கிழவன் அருகில் வந்து அவன் தலையை நிமிர்த்தி.

“ஹட்டியிலிருந்து வருகிறாயா? எங்கே வந்தாய்?” என்று அன்புடன் ரங்கனின் தாய்மொழியில் வினவினான்.

“எனக்கு ஒத்தை. அண்ணனுடன் ஹட்டிக்கு வந்தேன். எனக்கு மணிக்கல்ஹட்டி. அண்ணன் முன்னே போய்விட்டான். நான் ஒரு ஒத்தைக்குப் போக வேண்டும். வழி தவறி விட்டது” என்று பொய்யை நிசமாக நடிக்கையிலே அவனுக்கு அழுகை வந்துவிட்டது.

“வழி தானே தவறியது? போகட்டும், காலையிலே ஒத்தை போகலாம்” என்று கிழவன் ஆதரவாக அவனை சமாதானம் செய்தான்.

அன்றிரவு அவர்களின் இளம் விருந்தாளியாக இருந்து, ரங்கன் சாமைச் சோறும் நெய்யும் உண்டு, அந்த அடக்கமான குடிசையிலே உறங்கிய பிறகு, காலைக் கதிரவனுடன் தன் ஒத்தைப் பிரயாணத்தைத் தொடங்கச் சித்தமானான். உடன் ஒரு தொதவ வாலிபன் துணை வர, கதிரவன் உச்சிக்கு வருமுன்பே ரங்கன் ஒத்தையின் எல்லையை அடைந்தான்.

வளைவாக மலைகளைச் சுற்றியும் குறுக்கே பிளந்தும் ஓடும் சாலைகளின் அழகைச் சொல்ல முடியுமோ? மேட்டிலும் பள்ளத்திலும் எத்தனை எத்தனை கட்டிடங்கள்! சிலுவை உச்சியுடன் தோன்றும் மாதா கோயில் கோபுரத்தைக் கண்டு ரங்கன் அதிசயித்தான். அதுவும் தொதவர் கோயில் போலும்!

தெருக்களில் எத்தனை துரைமார்கள்! பளபளக்கும் டாங்கா வண்டிகள்; நிமிர்ந்து ராஜநடை போடும் குதிரைகள்; தலைப்பாகை அணிந்த மக்கள்; நாய்களைப் பிடித்துக் கொண்டு செல்லும் துரைசானிகளின் ஒய்யாரந்தான் என்ன! முள்ளுப் பழம் போன்ற உதடுகளும், ஒரே வெள்ளைமேனியுமாய் அவர்கள் தெய்வப் பிறவிகள் போலும்!

துணை வந்த தொதவனிடம், “எனக்கு இனிமேல் போகத் தெரியும்” என்றான் ரங்கன்.

“இனி இப்படித் தனியாக வராதே” என்ற பொருள்பட நோக்கிவிட்டு, அவன் பாதையில் இருந்த கடை ஒன்றில் நின்றான்.

ரங்கன் பார்த்தது பார்த்தபடி திறந்த வாயுடன் அதிசயித்து நின்றான். தெருக்களில் சுற்றினான்; ‘பொட்டானிகல்’ நந்தவனத்து ரோஜாச் செடிகளைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். கவர்னர் மாளிகை வாசலில் நின்ற மெய்காப்பாளர்களையும் குதிரைகளையும் எட்ட நின்று அச்சம் தோய எட்டிப் பார்த்தான். பின்னும் நடந்தான். கடைவீதியில் லாலாவிடம் காலணாவுக்கு மிட்டாய் வாங்கி ஆவல் தீர ருசித்துத் தின்றான். இரவு நெருங்கும் வரையில் இவ்விதம் சந்தைக் கடைகளின் அருகில் திரிந்தான்.

இரவு கடும்பனி பெய்யுமே எங்கே முடங்குவது? மேலாடையை இறுகப் போர்த்துக் கொண்டு, ஒரு கடை வாசலில் சுருட்டிக் கொண்டு அன்றிரவு உறங்கினான். மறுநாள் சந்தையில் ஒரு கூடை வாங்கி வைத்துக் கொண்டான். காயும் கறியும் முட்டை மீன் வகைகளும் வாங்க அங்கே வரும் வெள்ளைக்காரச் சீமான் சீமாட்டிகளைச் சுற்றி “கூலி கூலிஸார், கூலி!” என்று கூவிக் கொண்டு வர, அவன் ஒரே நாளில் பழகிவிட்டான்.

முதல்நாளே இரண்டணாச் சம்பாதித்தான். அதனால் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. காசு! ஹட்டியில் காசைக் கண்ணால் பார்க்க முடியுமோ? வெறும் சாமைச் சோறு, களி!

அவன் வெறுப்புடன் உதடுகளை மடித்துக் கொண்டான். கோயம்புத்தூர்ப் பக்கத்திலிருந்து அந்த மலையில் பிழைக்க வந்த மூதாட்டி ஒருத்தி ஆப்பம் சுட்டு விற்றாள். தம்படிக்கு ஒன்று. ஆறு ஆப்பங்கள் காலை வேளையில் அவன் பதிவாகச் சென்று தின்று வரலானான். அவனுடைய சம்பாதனையில் ஹட்டியில் காணாத என்ன என்னவோ தின்பண்டங்களைத் தின்ன முடிந்தது.

அப்போது பனிக்காலமாதலால் உருளைக் கிழங்கும் இலைக்கோசும், பூக்கோசும், களைக்கோசும், முள்ளங்கியும் சந்தையில் வந்து குவிந்திருந்தன. வெள்ளைச் சீமான்கள் வந்து அந்தக் கடைகளைச் சுற்றி வரும்போதெல்லாம் எல்லாக் கடைக்காரர்களும், தங்கள் சரக்குகளின் நயத்தையும் அருமையையும் கூறிக் கூறிக் கூவுவார்கள். வியாபாரம் அவர்களிடந்தான் அநேகமாக ஆகும். கூடை சுமந்து, கூலி வேலை செய்த ரங்கனுக்கு, அந்தச் சந்தையில் சுப்புபிள்ளையின் சிநேகம் கிடைத்தது. கோழி முட்டைகளும், பூக்கோசு, இலைக்கோசுகளும் அவன் கூடையில் வியாபாரத்துக்குக் கொண்டு வருவான். அவசரமாகப் படிக்குப் பாதியாகப் போட்டுவிட்டுப் போய்விடுவான். ஒரு நாள் ரங்கனே அவனுடைய பத்துப் பூக்கோசுகளையும் இருபது முட்டைகளையும் விற்று, அவனிடம் பணத்தைக் கொடுத்தான்.

ரங்கனுக்கு உடல் வணங்கி மண்ணோடு இயைந்து உயிர் வாழும் நாட்டமே இல்லை. வெள்ளிப் பணம் சம்பாதிக்கும் ஆசை அவனுக்கு விழுந்து விட்டது. அவனுக்கு வியாபாரத் திறமையும், காலை முக்காலாக்கிப் பிழைக்கும் சாமார்த்தியமும் இருந்தன. இந்தக் குணத்தைச் சுப்புப் பிள்ளை கண்டு கொண்டான்.

வற்றல் காய்சி எடுபிடிப் பையனாக, மேஜர் துரை பங்களாவில் சில ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு வந்த சுப்புதான் சுப்புப்பிள்ளையாக, அரண்மனை போன்ற பங்களாவில் குதிரைக்காரர், குசினிக்காரர், நாய்க்காரர், பட்லர், ஆயா முதலிய பணியாளரின் படைக்கே தலைவனாகும் நிர்வாகத் திறமையை அடைந்திருந்தான். துரை வீட்டு நிர்வாகத்திலே அவன் பிழைத்து திண்டுக்கல்லிலுள்ள குடும்பத்துக்கு பணம் அனுப்பி, ஒத்தையில் வீடொன்றும் வாங்கிவிட்டானென்றால், அவனுடைய சாமார்த்தியத்துக்கு அத்தாட்சி தேவையில்லை அல்லவா? துரை பங்களாத் தோட்டத்தில் காய்கள் பயிராகும். ஜாதிக் கோழிகளின் பண்ணை ஒன்று இருந்தது. அவற்றை ஒரே கணக்காக வைத்துக் கொண்டு, பெருகுவதை அவ்வப்போது பணமாக்கும் முயற்சியில் அவனுக்கு ரங்கனைப் போல் ஒரு பையன் தேவையாக இருந்தான். நாளொன்றுக்கு ஒரு ரூபாய்க்கு மேல் பையன் சம்பாதித்துத் தந்தால் ஒரு நாளைக்கு அவனுக்கு ஓரணாக் கொடுக்கக் கூடாதா? அந்த ஓரணா இரண்டணாவையும் மிச்சம் பிடிக்க, சுப்புப்பிள்ளை ஒரு வழியைக் கையாண்டான்.

“வண்டுச்சோலையில் தான் என் வீடு இருக்கிறது. நீ மாலையில் வீட்டுக்கு வந்துவிடேன். இரவில் உனக்குச் சாப்பாடு தந்துவிடுகிறேன்” என்றான்.

ரங்கனுக்குக் கசக்குமா? துரை பங்களாவிலிருந்தே அந்தப் பங்கையும் சுப்புப்பிள்ளை பெற்று வந்துவிடுவான். சாமைச் சோற்றுக்குப் பின் ஆப்பமும் மிட்டாயும் புளிக் குழம்பும் அரிசிச் சோறும் ருசித்த ரங்கனுக்கு, துரை பங்களாவில் தயாராகும் புலால் உணவின் ருசியும் பழக்கமாயிற்று.

வாழ்க்கை அவனுக்குப் பிடித்திருந்தது. கையிலே, பையிலே செப்புக் காசுகளும் நிக்கல் காசுகளும் குலுங்கின. வெள்ளிப் பணமாக எத்தனை நாட்கள் செல்லும்!

தன் இனத்தார் எவரேனும் வந்தால் கண்டு கொள்வரோ என்பதால் அவன் தலையில் துணி சுற்றுவதை விட்டான். முழுக்கைச் சட்டை அணிந்து, ஆங்கிலமும் தமிழும் கொச்சையாகப் பேசக் கற்றான். உதகை நகர வாழ்க்கையில் துரிதமாக முன்னேறினான். ஊரின் நினைவே ரங்கனுக்கு எழவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1. 9. பால் பொங்கியது

ரங்கன் ஹட்டியை விட்டுச் சென்ற பின் இரண்டு பனிக் காலங்கள் வந்து போய், இரண்டாவது வசந்தமும் வந்து விட்டது. கீழ்மலை மாதுலிங்கேசுவரர் கோயிலில் அழல் மிதிக்கும் திருவிழா நிறைவேறி, பூமி திருப்பி, புது விதை விதைக்கும் விழா நடைபெற்று, பயிரும் வளர்ந்தாயிற்று. காய்ச்சலில் கிடந்து புது இரத்தம் ஊறும் உடல் போல, வறண்ட மரங்களிலெல்லாம் புதுத் தளிர்கள் தோன்றின. காய்ந்து கிடந்த புல்தரையெல்லாம், திரை கடலோடித் திரும்பும் தந்தையை வரவேற்கத் துள்ளிவரும் இளம் குழந்தை போல் தளிர்த்துச் சிரித்தது. இத்தனை நாட்களாக எங்கிருந்தனவோ என்று விந்தையுறும் வண்ணம் சின்னஞ்சிறு வண்ண மலர்கள், புல்லிடுக்குகளில் எட்டிப் பார்த்து, அடக்கமான பெண் குழந்தைகளைப் போல இளம் வெயில் கள்ளமிலா நகை புரிந்தன. பற்கள் கிடுகிடுக்கும் தட்பம் தேய்ந்து வர, இதமான வெதுவெதுப்பில், இயற்கையன்னை, தான் பெற்ற மக்களைச் சீராட்டும் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தாற் போன்ற கோலம் எங்கே பார்த்தாலும் விளங்கின. காடுகளில் வேட்டைக்காரர், கோஷ்டி கோஷ்டியாகத் தென்படுவார்கள். தேவர் பெட்ட சிகரத்திலும் குமரியாற்றியின் வீழ்ச்சியிலும் மகிழ்வு பெற, வெள்ளை மக்கள் தேடி வரும் காலம் வந்துவிட்டது.

ஊரெல்லாம் இன்பம் கொண்டு வரும் வசந்தகாலம், சென்ற இரண்டு ஆண்டுகளாக ஜோகியின் வீட்டில் இன்பத்தைக் கொண்டு வரவில்லையே! அந்த வீட்டில் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன!

அதிகாலையில், புள்ளினங்களின் இன்னொலியும் கோழிகளின் கூவலும் கேட்குமுன்னமே ஜோகியின் உறக்கம் அன்று கலைந்து விட்டது. கூரையை அண்ணாந்து பார்த்த வண்ணமே படுத்திருந்தான். மேலே, மூங்கிலாலான பரண். அந்தப் பரணில் வீட்டுக்கு வேண்டிய தானியங்கள், கிழங்குகள் முதலிய பண்டங்களைச் சேமித்து வைத்திருப்பார்கள். அவனுடைய தந்தையின் உடலுழைப்பாலும், தாயின் ஒத்துழைப்பாலும் தானியங்களும் குறையாமல் எப்போதும் அந்த வீட்டில் நிறைந்திருக்கும். ஜோகியின் சிறு உள்ளத்தில், இதுவரை கவலை குடியிருந்ததே இல்லை.

‘ரங்கனின் வீட்டைப் போன்றதன்று நம் வீடு. எத்தனை பேர் எப்போது வந்தாலும் சோறும் களியும் கொடுக்கத் தானியங்கள் உண்டு’ என்பது அவனுள் சிறு பருவத்திலேயே ஊன்றிய நம்பிக்கையும் பெருமையுமாக இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது ஆட்டம் கண்டுவிட்டது. ஒரு குறிஞ்சிக்குரிய ஆண்டுகள் முழுவதும் கடந்திராத பருவத்தினான அவனுடைய உள்ளத்தில், குடும்பத்தைப் பற்றிய பொறுப்பும் கவலையும் தாமாகப் புகுந்து விட்டன.

அண்ணாந்து பரணையே பார்த்துக் கொண்டிருந்தவன், அருகில் கம்பளியை இழுத்து மூடிக் கொண்டு உறங்கும் தந்தையைப் பார்த்தான்.

அவனுடைய தந்தை லிங்கையா இந்நேரம் வரையிலும் தூங்குவாரா? அதற்குள் எழுந்து காலை பிரார்த்தனையுடன் மாடுகளை அவிழ்க்கப் போய் விடுவாரே! அந்த மச்சிலுள்ள தானியம் அடுத்த அறுவடை வரையிலும் போதுமானதாக இருக்கலாம். அதற்குப் பின்?

ஜோகியின் பெரிய தந்தை இப்போதேனும் வேலைக்குச் செல்கிறானா? இல்லையே! மாறுதல்கள், நஷ்டங்கள் எல்லாம் பெரியப்பனின் வீட்டுக்குத்தான் வந்தன. அவர்கள் எருமையைத் தான் புலி கொண்டு போயிற்று; ரங்கன் எங்கோ ஓடிப் போனான்.

ஆனால், பெரிய தந்தை முன் போலவே உணவு கொள்கிறான்; மாலையில் வீடு திரும்புகிறான் தள்ளாடிய வண்ணம். பெரியம்மை முன் போலவே சத்தம் போடுகிறாள்; சாபமிடுகிறாள்; மைத்துனன் வீட்டிலிருந்து தானியமும் பாலும் பெற்றுப் போகிறாள். முன்போலவே ரங்கி அழும் குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு தன்னோடொத்த சிறுமிகளுடன் ஓடி விளையாடுகிறாள். அவர்கள் வீட்டில் ஒன்றுமே இல்லை.

ஆனால், ஜோகியின் வீட்டில் மட்டும் என்ன வந்தது?

அன்று ரங்கனைக் காணவில்லை என்று அறிந்ததும் ஜோகியின் தந்தை எப்படி அழுதான்; “இரிய உடைய ஈசா, நான் தப்புச் செய்தேன். நான் உன்னை ஏமாற்றப் பார்த்தேன். நீ என்னை ஏமாற்றி விட்டாயே! நான் பாவி, நான் பாவி!” என்று முட்டிக் கொண்டல்லவா அழுதான்? ரங்கன் மறைந்ததற்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?

அவன் அப்படி அழுத போது ஹட்டியே கூடி அவனைத் தேற்றியது. கரியமல்லர் நான்கு கிராமங்களுக்கும் உடனே ஆளனுப்பினார். கோத்தைப் பக்கம் மாமன் வீடு, அத்தை வீடு எங்குமே ரங்கனைக் காணக் கிடைக்கவில்லை.

அப்படியானால் ரங்கன் எங்கே போயிருப்பான்? அவனுக்கு எப்படித் துணிச்சல் வந்திருக்கும்? மணிக்கல்லட்டியிலிருந்து அன்றொரு நாள் வந்த பாருவின் தந்தை ஒத்தையில் கூட விசாரித்துப் பார்த்ததாகவும், காணவில்லை என்றும் தெரிவித்து விட்டார். ஒரு வேளை எருமையைக் கொன்ற புலியே ரங்கனையும் இழுத்துப் போயிருக்குமோ?

புலி நிசமான புலியோ, குறும்பர்களின் ஏவலோ? இரண்டு ஆண்டுகளாகக் குறும்பர்களுக்குப் பெரியப்பன் பங்கில் மானியம் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் கோபம் கொண்டு தீங்கிழைக்கின்றனரோ?

இப்படி நினைக்கையில் ஜோகியின் உடல் நடுங்கியது. இம்முறை பயிர் விளைவிக்க முடியாதபடி, அவன் தந்தை நோயில் விழுந்து விட்டானே, அதுவும் குறும்பர்களின் சூழ்ச்சியாக இருக்குமோ?

சில நாட்களாகவே அவன் தந்தைக்கு ஒரு விதக் காய்ச்சல் வருகிறது. அந்தக் காய்ச்சல் வரும் போது உடலைத் தூக்கித் தூக்கிப் போடப் பற்கள் கிடுகிடுக்க, குளிர் நடுங்குகிறது. அம்மை அமுக்கிப் பிடித்துக் கொள்வாள். எல்லா கம்பளிகளையும் போட்டு மூடுவார்கள். பின்னர் அருகில் உட்கார முடியாதபடி உடல் அனல் பறக்கும். கண்களை விழிக்காமல் அவன் பிதற்றுவான். “என் ஐயனே நான் உங்களை ஏமாற்ற நினைத்தேன். பாவி, பாவி!” என்றெல்லாம் அலறுவான். “அட ரங்கா, காப்பை எடுத்து எங்கேயடா ஒளித்து வைத்தாய்? காப்பை எடுத்த மாதிரி, பட்டுப் பைப் பணத்தையும் நீதானே எடுத்திருக்கிறாய்?” என்று அதட்டுவான். ஒவ்வொரு தடவை விழிகள் கொட்டையாக உருண்டு விட, எழுந்து ஓடுவான். ஒரு நாள் இந்தக் காய்ச்சல் அவனை அலைத்து அழிக்கும். மறுநாள் இரவே, குளமாக வேர்த்து, காய்ச்சல் விட்டு விடும். காலையில் சுடுநீரும் கஞ்சியும் அருந்தி, சோபையிழந்தவனாக அவன் மாடுகளைக் கறப்பான். அதற்குள் களைப்பு வந்துவிடும். என்றாலும், பகலில் விளை நிலத்துக்குப் போய் மனசிலுள்ள ஆசையையே சக்தியாய்த் திரட்டிக் கொண்டு உழைப்பான். மறுநாள் பகலுக்கு மறுபடியும் சொல்லி வைத்தாற் போல் அந்தக் குளிரும் காய்ச்சலும் வந்துவிடும்.

அண்டை வீட்டுப் பெள்ளி, அன்று ஜோகியிடம், அம்மாதிரியான ஏவல் காய்ச்சல் அவனுடைய அத்தை மகனுக்கு வந்ததாகவும், குறும்பர் தலைவனிடம் சென்று பேசிக் காணிக்கைகள் வைத்த பிறகு காய்ச்சல் போய்விட்டதாகவும் கூறியிருந்தான். அப்பனுக்கும் அது மாதிரி ஏதும் செய்யாவிட்டால், அடுத்த ஆண்டு குடும்பம் எப்படி நடக்கும்? முதல் நாள் முழுவதும் அவனுக்குக் காய்ச்சல்; எழுந்திருக்கவில்லை. அம்மையோ பாவம்! அவன் தந்தை விதைத்திருக்கும் சொற்ப நிலத்தில் அவள் அல்லவோ பாடுபடுகிறாள்! அலுப்பு; சலிப்பு; இன்னமும் உறங்குகிறாள்.

ஜோகி இத்தகைய கவலை பாயும் எண்ணங்களுடன் விழித்துக் கொண்டிருக்கையில் பாட்டி மெள்ள மெள்ளப் பழக்கத்தில் எழுந்து சென்றாள். அவளுக்குக் கண்பார்வை அவ்வளவு தெளிவில்லை. என்றாலும், மகன் படுத்துவிட்ட பிறகு தனக்குப் பொறுப்பு அதிகமாகி விட்டது போல் அதிகாலையிலேயே எழுந்து கொட்டிலில் சாணத்தை வாரி, எருக்குழியை நிரப்புவதைத் தன் பொறுப்பாகக் கொண்டு விட்டாள்.

“அம்மே!... அம்மா...!” தந்தை ஈன சுரத்தில் முனகியது கேட்டு, ஜோகி அருகில் சென்றான். சிறு விழிகளில் பரிதாபமும் கவலையும் தேங்க, “அப்பா!” என்றான்.

“பாட்டி எழுந்தாச்சா? சுடுநீர் - தாகமாயிருக்கிறதே?” என்று சைகை காட்டினான் லிங்கையா.

ஜோகி பாட்டியை அழைக்கவில்லை; அம்மையையும் அழைக்கவில்லை. துள்ளி ஓடினான். சருகுகளையும் சுள்ளிகளையும் போட்டு அடுப்பில் தீ மூட்டினான்; பானையிலிருந்து நீரெடுத்துப் பல்லாயை அடுப்பில் வைத்தான்.

அடுப்புச் சுள்ளிகள் வெடித்த சத்தமும், புகையும் மாதியை எழுப்பி விட்டன. மேல் முண்டையும், தலை வட்டையும் சரியாக்கிக் கொண்டு பரபரப்புடன் அடுப்படிக்கு வந்தாள். “ஜோகி! நீயா?”

“அப்பா சுடுநீர் கேட்டாரம்மா; தாகமாக இருக்கிறதாம்.”

“என் கண்ணே!” என்று கூறிய அவள், மைந்தனின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக் கொண்டாள். எத்தனை இதம்! எத்தனை ஆறுதல்! எத்தனை மகிழ்ச்சி!

ஜோகியின் கவலைகள் கண்களில் உருகி வந்தன.

“எத்தனை நாளைக்கம்மா அப்பாவுக்குக் காய்ச்சல் அடிக்கும்? பெரியப்பாவைப் போல் அப்பாவும் வேலை செய்யாவிட்டால் நாம் என்னம்மா செய்வோம்?”

“அந்த ஈசன் என்ன தான் நினைத்திருக்கிறானோ?” என்று கூறிய மாதியின் கண்களில் ஈரம் பசைத்தது.

“அம்மா, பெள்ளி சொல்கிறான், குறும்பர் ஏவர் வைத்து விட்டார்களாம். நிசமாய் இருக்குமாம்மா?”

“மந்திரமோ, மாயமோ, நன்றாக இருந்த கிளைக்கு, இந்த வீட்டுக்குப் பழுது வந்துவிட்டது. ஜோகி, தொரியனுடன் போய்த் தாத்தாவை அழைத்து வருகிறாயா? மணிக்கல்லட்டியிலிருந்து?”

“தாத்தா வந்து ஐயனின் காய்ச்சலை எப்படியம்மா போக்குவார்?”

“மருந்து தருவாரடா குழந்தாய்?”

இந்நிலையில் பல்லாயில் வைத்த நீர் கொதித்தது. முதல் நாள் கொண்டு வந்த தேயிலையைப் போட்டு, அந்த நீரை எடுத்து அவள் ஆற்றிக் கணவனுக்குக் கொண்டு சென்றாள்.

செழுங்கருமை கலந்து உரமேறிய மண்ணின் நிறம் போன்ற மேனி நிறம் பசலை படர்ந்து வெளுத்து விட, கன்னங்களில் எலும்பு முட்ட, அவன் முகத்தைக் கண்டதும் மாதியின் கவலைகள் எத்தனை அடக்கினாலும் அடங்காமல் எழும்பின.

“என்ன சொல்லிக் கொண்டிருந்தாய் மாதி?”

“ஒன்றும் இல்லை” என்று அவள் தரையை நோக்கினாள்; “இப்படியே போய்க் கொண்டிருந்தால் எத்தனை நாளைக்கு?”

கண்களில் நீர் சுரப்பதை அறிந்த கணவன், கசிந்தவனாய் அதைத் துடைத்தான். “ஏன் அழுகிறாய்? எனக்கு ஒன்றுமில்லை” என்றான்.

“நான் மணிக்கல்லட்டிக்கு ஐயனுக்குச் சொல்லி அனுப்புகிறேன். பிடிவாதம் செய்யாதீர்கள். நம் எருமைகளை ஓட்டிக் கொண்டு அங்கே போய்விடுவோம். எனக்கு இங்கே இருக்கவே பயமாக இருக்கிறது.”


அவள் மனசில் படர்ந்த யோசனை இதுவே. கொத்தும் முள்ளும் பிடிக்கும் கை நன்றாக இருந்தால் எங்கேதான் பிழைக்க முடியாது? அண்ணன் குடும்பத்தையும் தாங்கும் சுமை கழிய வேண்டுமானால், மரகத மலையை விட்டுப் போகாமல் முடியுமா? ஒரு பையன் இருக்கிறான்; வயசுக்கு வந்து குடும்பத்துக்குப் பொறுப்பாவான் என்றிருந்த அற்ப சொற்ப நம்பிக்கையையும் வற்ற அடித்துவிட்டுப் பையன் மாயமாய்ப் போய்விட்டான். இனி, நடக்கப் பயிலும் குழந்தை என்றைக்கு நடவுக்குப் பெரியவனாவான்?

மரகதமலை மண்ணை உதறிவிட்டுப் போகும் வரையில் குடும்பத்துக்கு விடுதலை இல்லை என்றே அவன் நினைத்தாள்.

அவள் எண்ணத்தை அறிந்ததும் ஜோகியின் தந்தை குரலில் உறுதியுடன், “ஒருவரையும் வரச் சொல்ல வேண்டாம். என்னால் இந்த இடத்தை விட்டு வர முடியாது” என்றான்.

“அப்படியானால் உங்கள் அண்ணன் குடும்பத்தை எங்கேயாவது போய்ப் பிழைக்கச் சொல்லுங்க.”

“நீ என்னிடம் இந்தப் பேச்சை எப்படி மாதி எடுத்தாய்?” இருப்பதைப் பகிர்ந்து வாழ்வது நம் கடமை, பயந்து ஓடுவது கோழைத்தனம் அல்லவா?”

“ஒருவர் சுகமாக இருக்க, ஒருவர் சாவதா?”

“நான் இன்னொருத்தியைக் கட்டியிருந்தேனானால் நீ என்ன செய்வாய், மாதி?”

“இன்னொருத்தி பிள்ளைகளைப் பெற்றுத் தருவாள்; பூமியில் வேலை செய்வாள்; வீண் பேச்சுப் பேசிச் சண்டை போட்டு, இருக்கும் பிள்ளையை விரட்ட மாட்டாள்!” என்றாள் காரமாக.

“பிள்ளையை அவள் விரட்டவில்லை. நான் விரட்டினேன் மாதி, நான் விரட்டினேன். இரிய உடையார் ஆணையை நான் சரியாக ஏற்கவில்லை.”

“மனப்பிராந்தியில் நீங்கள் இதையே சொல்லி என்ன பயன்?”

“மாதி, நேற்று புலியுடன் சண்டை செய்வது போல் கனவு கண்டேன். தாவி வந்து மேலே கைகளைப் பிடுங்க வருகிறது. நான் எதிர்த்து எதிர்த்து வீழ்த்துகிறேன். அது பின்னும் பின்னும் சாகாமல் வருகிறது. நானும் சாகாமல் சளைக்காமல் போராடுகிறேன்.”

“அப்புறம்?”

“அப்புறம் முடிவே இல்லை. ஜோகி திரும்பினான். கை சில்லென்று மேலே பட்டது. விழித்துக் கொண்டேன். ஜோகிக்கு அண்ணன் கையைப் போல் தண்ணென்ற கை; சூடாகாத உடம்பு.”

“உங்கள் அண்ணனைக் குழந்தையுடன் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? காலையில் எழுந்து, என்னை எழுப்பாமல், பாட்டியை அழைக்காமல், தானே சுடுநீர் காய்ச்சினான். கன்றுகளையும் மாடுகளையும் அவிழ்த்து, இப்போது பாட்டிக்கு உதவியாகக் குப்பை கூட்டுகிறான். எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அவன் உங்கள் மகன்.”

“கனவு, சண்டை முடியாமலே முடிந்து விட்டது. அதற்கு என்ன பொருள் என்று புரிகிறதா உனக்கு?”

“இதற்கெல்லாம் அர்த்தம் உண்டா?”

“நான் வாழ்க்கையெல்லாம் போராடப் போகிறேன். புலியை எதிர்த்து நிற்பது போல் நிற்கப் போகிறேன்! இந்த நோவோடு போராடிப் போராடி சாகாமலே நிற்கப் போகிறேன்.”

இப்படியெல்லாம் பேசாதீர்கள்” என்று கண்களில் நீர் முத்துக்கள் சிதற, அவன் வாயைப் பொத்தியது அவள் கரம்.

“அழகும் உடற்கட்டும் பார்த்து, நூறு ரூபாய் கொடுத்து உன் அக்காளை மூத்த மகனுக்கு ஐயன் கொண்டு வந்தார். அந்த அழகும் கட்டும் நிலைக்கவில்லை; அழகில்லாமல் மெலிந்த பெண்ணை மாமன் எனக்குத் தந்தார். ஐம்பது வெள்ளி ரூபாய்க்கு, விலை மதிப்பில்லாத தங்கத்தைத் தந்தார். நான் இப்படியே போராடிக் கொண்டிருந்தால், நீ வெறுக்க மாட்டாயே மாதம்மா?”

“என் ஜோகியை விட்டு நான் போவேனா? இதெல்லாம் என்ன பேச்சு? நம் குழந்தையை இன்னோர் அம்மா வந்து பார்க்க நான் விட்டுப் போவேனா? எனக்கு உங்கள் இந்த உயிர் இருக்கும் இடம் கோயில். என் குழந்தைகள் அதில் ஒளிரும் தீபங்கள்.”

மண்ணோடு விளையாடும் அந்தக் கைகள் அவன் கண்ணீரில் நனைந்தன.

சுள்ளென்று வெயில் உறைத்த பின் மெள்ள ஜோகியின் தந்தை எழுந்து வந்தான். பால்மனைக்குச் சென்று மடியுடுத்திக் கொண்டான். மெலிந்த கைகளில் பாற்குவளையுடன் வீட்டுப் பின்புறம் எருமையினிடம் வந்தான். ஜோகி கன்றை அவிழ்த்து விட்ட போது எருமை, அருமை எஜமானனின் கையை நக்கியது.

அளவற்ற பலவீனத்தினால் அன்று ஜோகியின் தந்தையினால் பாற்குழாயைக் கூடச் சரியாகப் பிடிக்க முடியவில்லை. அவன் கைகளுக்குத்தான் மாடுகள் பாலைப் பொழுந்தனவே தவிர, அவன் பலம் ஓய்ந்து விட்டது. ஓர் எருமை கறக்கு முன் அவன் உடலில் இறுக்கம் உண்டாயிற்று. பாத்திரத்தில் பாழை ஊற்றியவன், சோர்ந்து அங்கேயே சாய்ந்து விட்டான்.

மாதி, பார்த்தவள் பதறினாள். அவன் பாற்குவளை ஏந்தி மடியாடை தரித்து வரும் நேரம், எதிர் நிற்கக் கூடத் தயங்கும் அவள், ஓடிச் சென்று சுவருடன் சாய்ந்த நிலையில் தாங்கிக் கொண்டாள்.

“என்ன? ஐயோ! நான் காகையண்ணனை வரச் சொல்லியிருப்பேனே! உடல் சில்லிட்டு வேர்க்கிறதே?” என்று அவள் கண்ணீருடன் மாமியைப் பரபரப்புடன் அழைத்தாள்.

மாட்டுக் கோலுடன் நின்ற ஜோகி ‘கோ’ வென்று கதறியதைக் கண்ட தந்தை மெள்ளக் கண் விழித்து, அவனை உட்காரச் சொல்லிச் சைகை காட்டினான்.

“மாதி” என்றான்.

“என்ன?”

“இன்று திங்கட்கிழமை அல்ல?”

“ஆமாம்.”

“ஜோகிக்குச் சுடுநீர் வைத்து முழுக்காட்டி, நல்ல துணிகள் உடு; வெல்லம் இருக்கிறதில்லையா? நீயும் முழுகி விட்டுச் சீனிப் பொங்கல் வை.”

மாதி விழிக்கடையில் உருண்ட நீரைச் சுண்டி எறிந்தாள். அவனுடைய உள் எண்ணம் புரிய அவளுக்கு நேரமாகவில்லை. அந்தப் பையனுக்கு ஊர் கூட்டி, ‘கூடு, கூடாக’த் தானியம் சமைத்து விருந்து வைத்துச் செய்த வைபவத்தை, இன்று தன் மைந்தனுக்கு ஒரு கோலாகலமுமின்றிச் செய்யப் போகிறான் லிங்கையா. இளஞ் சிறுவன் ஜோகி இப்போதே வீட்டுப் பொறுப்பை ஏற்கப் போகிறானா?

“ஜோகி மிகவும் சின்னப் பையனாயிற்றே!” என்றாள்.

“குறுக்கே பேசாதே. ஜோகிக்கு எருமை கறக்க மிக ஆசை இல்லையா ஜோகி?”

“ஆமாமப்பா, ரங்கனுக்குச் செய்த போதே நானும் கறக்கிறேன் என்றேனே!”

“இன்று நீதான் பால்மனைக்குப் போகப் போகிறாய்; போ, அம்மை சுடுநீர் வைக்கையில் அந்த எருமைக்குத் தண்ணீர் ஊற்று” என்றான் லிங்கையா.

ஜோகி மகிழ்ச்சியுடன் ஓடினான்.

அன்று முற்பகல், வீட்டு வாசலில் ஜோகி குளிப்பாட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருந்த எருமைக்கு அருகில் மெல்ல வந்த தந்தை, ‘ஹொணே’யில் கொஞ்சம் பாலைக் கறந்தான். மைந்தன் கையில் அதைக் கொடுக்கையில், ‘பஸவேசா, இன்று இந்தப் பையன் இந்த உரிமையை ஏற்கட்டும். இவனை ஐயனின் நெருப்பைக் காக்க நான் கட்டாயமாக விடுகிறேன். என்னை மன்னித்துவிடு. இந்தக் குடும்பங்கள் ஒரு குறையுமில்லாமல் தழைக்கட்டும்’ என்று மனம் இறைஞ்சி நின்றது.

ஜோகி இரு கைகளையும் நீட்டிப் பாற்குழாயைப் பெற்றுக் கொண்டான். அவனுடைய பிஞ்சு விரல்கள் வெகுநாள் பழக்கப்பட்ட பணியைச் செயவன போல் இயங்கின. குவளையில் பால் வெண்ணுரையாகப் பொங்கி வந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top