பகுதி −37
அயோத்திக்குள் நுழைய மறுத்த பரதன், நந்திகிராமத்தை அடைந்ததும், குலகுரு வசிஷ்டரின் அனுமதியோடு, தான் அங்கேயே தங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினான்.
வசிஷ்டரும், ராஜாங்கக் கார்யங்களில், பரதனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தானும் அந்த கிராமத்திலேயே தங்கிவிடுவதென்று முடிவெடுத்தார்..
இதைத் தவிரவும் சில முக்கியஸ்தர்களை, பரதன் தனது உதவிக்காக, உடன் வைத்துக்கொள்வதென்று தீர்மானமாயிற்று.
பரதனது குடிலில், ராமனது பாதுகைகளின் ப்ரதிஷ்டைக்காக, ஒரு சிம்மாசனம் உண்டாக்கப்பட்டது. பட்டுத்துணியால் அலங்கரிக்கப்பட்ட அந்த சிம்மாசனத்தில், ராமனின் பாதுகைகள் வைக்கப்பட்டு, குலகுரு வசிஷ்டரின் மேற்பார்வையில், அதற்குப் பட்டாபிஷேகமும் நடந்தேறியது.
ராமனின் பாதுகைகளைத் தனது தலைவனாக ஏற்ற பரதன், அதன் ப்ரதிநிதியாகத் தான் இருந்துகொண்டு, ராஜாங்கக் கார்யங்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.
ஒரு தொண்டனாக, தனது பயணத்தைத் தொடங்கிய பரதன், அரண்மனை வாழ்க்கையின் ஆடம்பரங்களைத் தவிர்த்தான்.
ராமனைப் போலவே தானும் மரவுரி தரித்தான்.
இந்த பதினான்கு வருடங்களும், தவ வாழ்க்கை மேற்கொள்ள முடிவெடுத்தவன், அனைத்து போகங்களையும், அறவே துறந்தான்.
தனது மனைவி மாண்டவியையும், தனது தாய்மார்களுடன் அயோத்திக்கே அனுப்பி வைத்து, தனது தவவாழ்க்கைக்கு எந்தவிதமான பங்கமும் நேராமல் பார்த்துக் கொண்டான்..
அயோத்தியை அடைந்த கைகேயியோ, தனக்கென ஒதுக்கப்பட்ட அந்தப்புரத்துள், மீண்டும் நுழையவே இல்லை!
அந்தபுரத்தை ஒட்டியிருந்த நந்தவனத்தில், தான் தங்குவதற்காக, ஒரு சிறிய குடிலை அமைத்துக்கொண்டாள்.
அயோத்தியின் பட்டமஹிஷியாய் இருந்ததற்கான தனது அடையாளங்கள் அனைத்தையும், துப்புரவாக விலக்கினாள்.
உடலில் ஒற்றை வஸ்திரம்... வெற்றுத்தரையில் படுக்கை...
வெறும் நீராகாரமே உணவு... வேலை ஆட்களையும் நிராகரித்தாள்.
வெளிஉலகிலிருந்து முழுவதுமாய் தன்னை ஒதுக்கியும் கொண்டாள்.
"கைகேயி" என்று ஒருத்தி இருப்பதையே அனைவரும் மறந்துபோகும்படி, தன்னை மொத்தமாய்த் தனிமைப்படுத்திக் கொண்டாள்.
சதா ராமஸ்மரணை...
"ராம" நாம ஜபமே வாழ்க்கையாய், நாளும் பொழுதும், பகலும் இரவும், மாறிமாறிப் போய் கொண்டிருந்தது..
"நாம" பலம் துணையிருந்ததால், அவளால் எல்லாவற்றையும் வெகு எளிதாக உதற முடிந்தது.
தனது நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு, ராமன் அயோத்தி திரும்பும் அந்த நந்நாளுக்காக, கணம்கணமாய் காத்திருக்க ஆரம்பித்தாள்.
இங்கே... ராமனது வனவாசம் சிற்சில சந்தோஷங்களுடனும், சிலபல சிரமங்களுடனும் நகர்ந்து கொண்டிருந்தது.
அவ்வப்போது கைகேயியின் ஞாபகம் வந்து, மனம் வருந்துகின்ற ராமனை, பக்குவமாகப் பேசி, சகஜ நிலைக்குக் கொண்டுவருவதை, சீதை ஆத்மார்த்தமாய் செய்துவந்தாள்.
சுமித்திரைக்கு அளித்த வாக்கின்படியே, அணுக்கத் தொண்டனாய் இருந்துகொண்டு, சீதைக்கும் ராமனுக்கும் பார்த்துப் பார்த்து கைங்கர்யங்களைச் செய்வதை, லக்ஷ்மணன், தனது கடமையாய் அறிந்திருந்தான்.
எத்தனை எத்தனையோ நிகழ்வுகளைத் தாண்டி, வனவாசம் இறுதிநிலையை எட்டிற்று. தன் நோக்கம் நிறைவேறுவதற்கான சமயம், நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ராமன் புரிந்து கொண்டான்.
வகுத்தபடியே, ராவணன், ஒருநாள் சீதையைக் கவர்ந்து சென்று, இலங்கையில் சிறை வைத்தான்.
தன் மனைவியை மீட்பதற்காக, பலப்பல இன்னல்களைக் கடந்து, ராவணனுடன் போர்புரிய, ராமன் இலங்கை வந்தடைந்தான்.
பகுதி − 38
ராவணணுக்குத் தன் பலம் குறித்த கர்வம் இருந்தது...
தன் படைபலத்தின் மேல் அசாத்ய நம்பிக்கையும் இருந்தது..
அதனால், "என்னை, யாரென்ன செய்துவிட முடியும்?" என்ற இறுமாப்பு மிகமிக அதிகமாய் இருந்தது.
ராமன் முதலில் ராவணனது படைகளைச் சிதறடித்தான்.
ராவணனுக்குத், "தன்னை சீண்டிப் பார்க்கவும் ஒருவனா?" என்ற படபடப்பு வந்தது.
அடுத்ததாக, அவனது வீரர்களை, ஒவ்வொருவராக வீழ்த்தினான் ராமன். இப்பொழுது, கொஞ்சம் பதைபதைத்தான் தசமுகன்.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தனது மகன் இந்த்ரஜித்தை, போர்களத்திற்கு அனுப்பி வைத்தான். எப்படியும், அவனைத் தாண்டி, தன்னை எவரும் நெருங்க முடியாது என்ற கணிப்போடு காத்திருந்தான்.
ஆனால், அவனது கணிப்பை பொய்யாக்கும் வகையில், இந்த்ரஜித், இலக்குவனால் கொல்லப்பட்டான் என்ற சேதி இடியாய் வந்திறங்கியது.
இந்தப் பேரிழப்பை ஜீரணித்துக் கொள்ளவியலாத ராவணன், ஆக்ரோஷம் மேலிட, உறங்கிக் கொண்டிருந்த தன் சகோதரன் கும்பகர்ணனை எழுப்பி, போர்களத்திற்கு அனுப்பி வைத்தான்.
உறக்கம் கலைந்து வந்தவனை, ராமன் கருணை பொங்க, மீளா உறக்கத்திற்கே அனுப்பி வைத்தான். இப்படியாக, ராவணன், முதலில் தன் படைகளை இழந்தான்...
அடுத்ததாக, தன் தனயனை இழந்தான்... கடைசியாக, தன் சகோதரனையும் இழந்தான்...
இனி தானே, ராமனை ஒரு கை பார்த்து விடுவது என்று கோபத்தோடு கூடிய தீர்மானத்துடன், தேர் ஏறி வந்தான்...
முதலில் தேரோட்டி ராம பாணத்துக்கு, இறையானான்.
அதன்பின், ராவணன் ஆயுதங்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக, தனது பாணங்களால் சிதற அடித்தான் ராமன்.
அடுத்ததாக, "இவன் ராவணேஸ்வரன்" என்று பறைசாற்றிக் கொண்டிருந்த அவனது கிரீடத்தையும் அசகாயமாகக் கொய்து எறிந்தான்.
கடைசியாக, அவன் நின்றிருந்த தேரையும் அழித்தான்..
இப்பொழுது, நிராயுதபாணியாக, ராமன் எதிரே நின்றான் இராவணன்.
இப்படி நிற்கின்ற ஒருவனைக் கொல்வது தகாத காரியம் என்று போர் நெறிமுறைகள் சொல்வதை நன்கறிந்த ராமன், ராவணனைப் பார்த்து,
"இன்று போய், நாளை வா..." என்று ஒற்றை வரியில் உயிர்பிச்சை அளித்து அனுப்பிவைத்தான்.
ராமன், தன் கூடாரத்துக்கு வந்து சேர்ந்தான்... அந்தி சாய்ந்து, மெல்ல இருள் கவியத் தொடங்கி இருந்தது. ராமனது சிந்தை முழுதும் ராவணனே நிறைந்திருந்தான்..
வாஸ்தவத்தில், இந்தக் கால அவகாசம், ராவணனுக்கு மட்டும் தேவைப்படவில்லை. அது ராமனுக்குமே தேவைப்பட்டது.
எவ்வளவு துஷ்டனாய் இருந்தாலும், அவனைக் கொல்வதற்கு, ராமனுக்கு மனம் வரவில்லை..
"எத்தனை பெரிய சிவபக்தன்!. எவ்வளவு பாண்டித்யம் பெற்றவன்! எப்பேர்ப்பட்ட வீரன்! அநியாயமாய் பெண்ணாசையால் அழிகிறானே..." பச்சாதாபப்பட்டான்.
ஒரு சொல்... ஒரேயொரு சொல்... "மன்னித்துவிடு" என்று ராவணன் வாயிலிருந்து வந்தால், அத்தனையையும் நிறுத்திவிடலாமே என்ற நப்பாசை, அவன் உள்ளத்தை அலைக்கழித்தது.
"எந்த முடிவு சரியாக இருக்கும்?" என்று தனக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தான்.
கொஞ்சம், தனிமையில் யோசனை செய்ய வேண்டியிருந்தது.
"வாயுபுத்ரா... கொஞ்சநாழி என்ன தனியா இருக்க விடு.."
ராமனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, மாருதி அங்கிருந்து அகன்றான்.
ராமனது எண்ணங்கள் பின்னோக்கிச் சுழன்றன.
"இந்த நாளுக்காகத் தானே, நான் புவி இறங்கியது..."
"இந்த அசுரனின் வதத்திற்காகத் தானே, அனைவருமே காத்திருக்கின்றனர்..."
"நான் இந்த இலக்கை அடைவதற்காகத்தானே, என் கைகேயி மாதா, அத்தனை பழிபாவங்களையும் வலிய ஏற்றாள்?"
"இதோ... இந்தக்கணம் வரை, அனைத்தும் இழந்த பிறகும், அந்த ராவணன் தனது ஆணவத்தை மட்டும் இழக்காமல், இன்னமும் என்முன் நின்று கொண்டுதானே இருக்கிறான்!
"தனது தவற்றுக்காக, அவன் வருந்துவதாகவும் தெரியவில்லையே... நான், அவனுக்காக இரங்க வேண்டிய அவசியம் என்ன?" மனம் தெளிந்தவன், மறுநாள் விடியலுக்காகக் காத்திருந்தான்.
பகுதி − 39
அடுத்த நாள் உதயம், பூபாரத்தைக் குறைத்து, நல்விடியலைத் தருவதாக அமைந்தது.
தன் எதிரே போர்புரிய வந்து நின்ற ராவணன் மீது, சக்ரவர்த்தித் திருமகன், ப்ரம்மாவினால் அளிக்கப்பட்ட அஸ்திரத்தை, மந்திர உச்சாடனம் செய்து பிரயோகித்தான்.
அது ராவணனின் உயிரைக் குடித்து, தனது கடமையை நிறைவேற்றியது.
தேவர்கள் பூமாரிப் பொழிந்தார்கள். கந்தர்வ கின்னரர்களின் ஆரவாரமும், கரகோஷமும் விண்ணை எட்டியது. வானரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து, ஆடிப்பாடினர்.
ராமனைச் சுற்றி நின்றிருந்த ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
இந்த சந்தோஷமான தருணத்தில், ராமனை ஆசீர்வதிக்க, தசரத மகாராஜாவும் விண்ணுலகினின்று எழுந்தருளினார்.
தந்தையைக் கண்ட ராமன், பரவசத்தால் உடல் சிலிர்த்தான்.
மன்னரோ, ராமனின் வெற்றியால் வந்த பெருமிதத்தில் பூரித்திருந்தார்...
"செய்ய முடியாத காரியத்த செஞ்சுட்ட ராமா... ஒன்ன மகனா அடஞ்சது என்னோட பாக்யம்..." நெகிழ்ந்தார் தசரதர்.
"தந்தையே, ஒங்க ஆசியாலதானே என்னால இத சாதிக்க முடிஞ்சது!"
அடக்கமாகச் சொன்னான் ராமன்...
"ராமா... இந்த சாதிக்க முடியாத காரியத்த நீ செஞ்சு காட்டியிருக்கே... அதுக்குப் பரிசா, நான் ஒனக்கு ஏதாது தரணும்னு ஆசப்படறேன்... ஒனக்கு என்ன வேணுமோ கேளு..."
தசரதர் சொல்லச் சொல்ல, ராமன் மலர்ந்தான்.
"தந்தையே... எனக்கு ஒரே ஒரு ஆசதான் இருக்கு... அத நீங்க பூர்த்தி செய்வேளா?"
ராமன் வினவியதும், தசரதர் பெருமகிழ்வு கொண்டார்..
"நிச்சயமா பண்றேன் ராமா... ஒன் விருப்பம் எதுவானாலும், அத நிச்சயம் நெறவேத்துவேன்..."
"எனில், நீங்க, என்னோட கைகேயி மாதாவ, மனசார மன்னிக்கணும்... மாதா எந்தத் தப்பும் பண்ணல..."
இதைச் சற்றும் எதிர்பார்க்காத தசரதர், சிறிதுநேரம், வாய்மூடி மௌனமாயிருந்தார்.
அவராகப் பேசட்டும் என்று ராமனும் காத்திருந்தான்.
பிறகு, மெல்ல தசரதரே வாய்திறந்தார்.
"வாஸ்தவத்தில், கைகேயிதான் என்ன மன்னிக்கணும் ராமா... நான்தான் அவள சரியா புரிஞ்சுக்காம, அவ மனசு நோகும்படி, ரொம்பத் தப்பா பேசிட்டேன்... அத நெனச்சு, இப்போ ரொம்ப வருத்தப்படறேன்..."
"பாக்கப்போனா, அவ மட்டும் அன்னிக்கு ஒன்ன காட்டுக்கு அனுப்பாம இருந்திருந்தா, இந்த ராவணவதம் நடந்திருக்க வாய்ப்பே இல்ல..."
"எவ்ளோ தீர்க்கதரிசி அவ! எத்தனையோ தடவை, நீ ஸாக்ஷாத் ஈஸ்வர அவதாரம்னு என்கிட்ட சொல்லி இருக்கா... ஆனா, நான் அத என்னிக்குமே நம்பினதில்ல ராமா.. ஒன் மேல வெச்சிருக்கற கண்மூடித்தனமான பாசத்திலேதான், அவ அப்படி பேசறாள்னு நெனச்சேன்..."
"நான் என்னிக்குமே ஒன்ன என்னோட பிள்ளையாதான் பாத்தேன் ராமா... ஆனா அவ, நீ ஈஸ்வர அவதாரம்னு தெரிஞ்சுண்டு, ஒன் நோக்கம் நெறவேறணும்னு, ஒனக்கு அனுகூலமா எல்லாத்தையும் பண்ணியிருக்கா..."
"பாவம்... என்கிட்ட மட்டும் இல்ல ராமா... எல்லார் கிட்டயுமே, அவளுக்குக் கெட்டபேர்தான் கெடச்சிருக்கும்னு நெனக்கறேன்... இப்டி தன்னயே த்யாகம் செஞ்சுண்டு, ஒன் நல்லதுக்காகப் பாடுபட்டிருக்கா..."
துக்கம் தொண்டையை அடைக்க, தசரத மன்னரின் கண்கள் நீரைச் சொரிந்தன...
"இப்போ சொல்றேன் கேட்டுக்கோ ராமா... இந்த பூலோகத்தில, இனி எந்த காலத்திலேயும், என்கைகேயி மாதிரி இன்னொரு பொண்ணு பொறக்கறதுக்கு வாய்ப்பே இல்ல... அதனால, அவளோட அந்தப் புனிதமான பேர வெச்சுக்கற தகுதியும் எந்தப் பொண்ணுக்கும் இனிமே கெடையாது.
"கைகேயி"ன்னு சொன்னா, இந்த லோகத்திலேயே, அது என்னோட பத்னி கைகேயியா மட்டும்தான் இருக்கும்..."
தசரதர் பேசப்பேச, ராமனின் விழிகளிலிருந்து ஆனந்தபாஷ்பம் பெருகியது...