• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கோடுகளும் கோலங்களும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 19

“யக்கோ...”

“என்ன கன்னிப்பா ஒரே சந்தோசமா இருக்கே! என்ன விசயம்?”

“அக்காவக் கூப்பிடுங்க மாமா. அவங்ககிட்டத்தா மொதல்ல சொல்லணும்.”

“செவந்தி, கன்னியப்பன் கூப்பிடுறான்...” கணவன் முற்றத்தில் நின்றபடி கூறுகிறான்.

“என்னன்னு கேளுங்க! நா சோறு வடிச்சிட்டிருக்கே. சரோ காலேஜிக்குக் கிளம்பிட்டிருக்கு...!”

உள்ளிருந்தபடியே அவள் குரல் கேட்கிறது. சரோ இப்போதெல்லாம் பாவாடை தாவணி சேலை அணிவதில்லை. இரண்டு செட் சல்வார் கமிஸ் வாங்கியிருக்கிறாள். காலை ஏழரை மணிக்குள் வீடு விட வேண்டும். அதிகாலையிலேயே எழுந்து சித்தமாகிறாள். எப்போதுமே சரோவுக்கு சுத்தமாக மடிப்பாக உடை அணிய வேண்டும். பள்ளியில் படித்த நாட்களிலும் சீருடையைத் துவைத்து உலரப் போட்டிருந்தால் விரித்து விட்டு அழகாக மடித்துக் கொள்வாள். இப்போது கூடுதலாக இந்த உணர்வு வந்திருக்கிறது. காலையிலேயே சோப்பு போட்டு அலசி உள் முற்றத்துக் கயிற்றில் உலர்த்தி விடுகிறாள்.

“ஏம்மா நா நல்லா அலசி உலர்த்த மாட்டேனா உனக்கு நேரமாகுமில்ல?”

“நீ பிரிக்கவே மாட்டே. நான் உலர்த்தி மடிச்சிப் பெட்டிக் கடியில் வச்சா, இஸ்திரி போட்ட மாதிரி இருக்கும்” என்று சொல்கிறாள்.

கன்னியப்பன் முற்றத்தில் பார்த்துக் கொண்டே நிற்கிறான்.

“என்ன சமாச்சாரம் எங்கிட்டச்சொல்லக் கூடாதா?”

“உஹூம்... அம்மாகிட்ட மட்டும் தான் சொல்லுவ...” என்று வெள்ளைச் சிரிப்புடன் நெளிகிறான்.

“சரி சரி அம்மா நீ போயிக் கேளு. நா சாப்பிட்டுக்கிறே...”

“என்னவாம் அவனுக்கு அவுசரம் இப்ப?” சுடு சோற்றை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கிறாள். தட்டில் ஒரு ஈடு இட்டிலியைத் தட்டி சாம்பார் கிண்ணத்தை நகர்த்தி வைக்கிறாள்.

சரோ தண்ணிர் குப்பியில் தண்ணிர் ஊற்றித் திருகிக் கோணிப்பை போல் பெரிதாக இருக்கும் பையில் வைத்துக் கொள்கிறாள். உள்ளே சாப்பிட உட்காருகிறாள்.

“அம்மா, டிபன் டப்பியில் ஒரு ஸ்பூன் வேணும். நேத்து ஸ்பூன் எங்கோ விழுந்திருக்கு தெரியல...”

“என்ன கன்னிப்பா? என்ன விசயம்? மீசைக்காரரு சொல்லி அனுப்பினாரா?”

அவன் அவளை நடை வரை தள்ளிச் செல்கிறான்.

“வந்து... இன்னிக்கி சாயங்காலம் நீங்களும் மொதலாளியும் வரீங்க. அதுக்கு மின்னாடி காலம காஞ்சிபுரம் வர்ரீங்க...”

“எதுக்கு? என்ன சொல்லுற நீ?”

“அதாங்க, உங்களுக்கு தெரியுமேக்கா...! மீசக்காரரு, இன்னிக்கி நிச்சிதார்த்தம் வச்சிக்கலான்னு...”

செவந்தி சுதாகரித்துக் கொள்ளு முன், சரோ சாப்பிட்டுக் கை கழுவுவது தெரிகிறது.

“அக்கா உங்களையும் முதலாளியையும் வுட்டா எனக்கு ஆரிருக்காங்க!” குரல் நெகிழ்கிறது.

செவந்தி புரிந்து கொள்கிறாள்.

“ஓ, அப்படியா? லட்சுமி மாமா சம்மதிச்சிட்டாரா? என்னங்க” உட்பக்கம் கணவரைக் கூவி அழைக்கிறாள். அம்மா இப்போது தான் பல்விளக்கிவிட்டுக் கொல்லையில் இருந்து வருகிறாள்.

“அவங்கதா இன்னைக்கு நாளு நல்லாருக்கு, நிச்சயதார்த்தம் வச்சிக்கலான்னு சொன்னாங்க. நீங்களும் மொதலாளியும் காலம ஏங்கூட காஞ்சிபுரம் வரணம். அதுக்கு நல்லதா ஒரு சீல எடுக்கணுமுங்க...”

“ட்டேயப்பா கன்னிப்பன் மொகத்தப் பாருங்க! இன்னிக்கு நிச்சியதார்த்தமாம். காஞ்சிபுரம் போயிச் சீல எடுக்கணுமாம்!”

சரோ பையுடனும், வரிச்சட்டத்துடனும் வருகிறாள். வாசலில் நிற்கும் சைகிளில் பையை மாட்டுகிறாள்.

“சரோ நெதக்கிம் காஞ்சிபுரம் போயிப் படிக்கிதில்ல? ஆமா கிறிஸ்தவங்கசாமி சிலுவ போல அதொன்னு கொண்டிட்டுப் போற? இப்பவும் சிலுவக் காலேஜியா? இத சொந்தமா வச்சிட்டுக் கும்பிடணுமா? வேதத்துல சேத்துடுவாங்களா?”

“இது கும்புடறுதுக்கில்ல. இதுக்குப் பேரு ‘டிஸ்கொயர்’ இத்த டிராயிங் போர்டில் வச்சி வரையிவோம். பிளான் எல்லாம். நீங்க காஞ்சிபுரம் வாரீங்களா? எங்க இன்ஸ்டிட்யூட் தெரியும்...”

“நீயெல்லாம் ரொம்பப் படிச்சி, பேப்பரிலல்லாம் பேரு வந்திடிச்சி. எனக்கு அதெல்லாம் புரியாது சரோ. நா அம்மாவையும் அப்பாவையும் கூட்டிட்டுப் போற. இன்னிக்குச் சாயங்காலம் பட்டாளக்காரர் வூட்டுக்கு நீயும் வரணும்...”

“விருந்து உண்டா? லட்டு, பாயிசம், வடை அப்ப வாரேன்...”

“நிச்சயம் உண்டு. சரோ வந்திடு.”

அவள் சிரித்துக் கொண்டே சைகிளில் ஏறிச் செல்கிறாள்.

பத்து மணியளவில் கன்னியப்பன் பளிச்சென்ற வேட்டியுடுத்தி கோடு போட்ட நீலச்சட்டை அணிந்து, துவாலைப் போட்டுக் கொண்டு வந்து நிற்கிறான். செவந்தியின் அப்பா வாசல் திண்ணையில் இருக்கிறார்.

“கன்னியப்பனா? ஏய் மாப்பிள கணக்கா இருக்கிற. உக்காரப்பா” அவனைப் பற்றி பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்கிறார்.

“உங்களக் கும்புடறே மாமா. எனக்கு நெனப்புத் தெரிஞ்சா நாள்ளேந்து இந்தூடுத்தா பெறந்த வூடு. ஆயியப்பந் தெரியாத எனக்கு...”

“கன்னிப்பா, செவந்தி வெவரம் சொல்லிச்சி. நீ ரொம்ப ஒசந்து போயிட்டப்பா! எங்களெல்லாம் காட்டியும் ஒசந்தவ. பொண்ணும் பூமியும் ஒண்ணுதா. மேமயா பாவிக்கணும். பூமில அழுக்கும் கூளமும் போடுறோம். அத்தையே நமக்குப் பயிரா, தானியமாத் தருது. பொன்னா மாத்தித்தருது. பொம்புளயும் அப்படித்தா. நீ எத்தினி குத்தம் பண்ணினாலும் பொறுக்குறா. சகிக்கிறா. அத்த மனசுல வச்சிட்டு அதுக்கு அன்பா அனுசரணையா தாய்க்கு சமானமா மதிச்சி நடக்கணும். பூப்போல வச்சிக்கணும்...”

“ஏதேது கன்னிப்ப மாட்டக் கூட அடிக்க மாட்டா. வாயால ட்ராய் ட்ரய்ன்னு வெறட்டுவா லட்சுமிதா இவன வெரட்டப் போற...” என்று கூறிக் கொண்டு செவந்தி வருகிறாள். ரங்கனும் வாயிலில் வந்து நிற்கிறான்.

முன்பெல்லாம் சாமி கும்பிட, சாமான் வாங்க என்று ரங்கன் அடிக்கடி காஞ்சிபுரம் செல்வான். தான்வா பயிற்சி பெற்றபின், சாந்தியுடன் காஞ்சிபுரம் செல்ல வாய்ப்புக்கள் அதிகமாகி இருக்கிறது. விரிவாக்க அலுவலர் அலுவலகத்துக்கு விதைகள் பற்றி தீர்மானிக்க, வாங்க, இரண்டு மூன்று தரம் தான்வா மகளிர்கூட்டம் நடந்தது. பெரிய மேடம் வந்திருந்தார்.

சரோவின் கல்லூரியை எட்ட இருந்து ரங்கன் பஸ்ஸில் போகும் போதுகாட்டுகிறான்.

ஒரு புதிய பாதையில் அவர்கள் செல்கிறார்கள். இரண்டு தடவை பயிர் வைத்தாயிற்று. கொல்லை மேட்டில் போட்ட பயிரில் பட்டாளத்தாரின் கடனைக் கட்டி, மேல் பணமும் கையில் தங்கியிருக்கிறது. இனி மழைக்கு முன் வீட்டுக் கூரையைச் செப்பம் செய்ய வேண்டும். அடுத்த ஆண்டில் முன்பு அண்ணன் கலியாணத்தின் போது, வைத்த பூமியையும் மீட்க வேண்டும். அதில் தென்னை இருக்கிறது. கிணறு பம்ப் எல்லாம் இருக்கின்றது. அதில் சாகுபடி செய்தால், அண்ணனுக்கு ஏதேனும் அனுப்பி வைக்கலாம். மூன்று வருசம் சரோ படிக்க, பையன் படிக்க செலவுகள் அதிகம்தான். இடையில் சரோவுக்கு ஏதேனும் நகைகள், பண்ட பாத்திரங்கள் வாங்கிச் சேமிக்க வேண்டாமா?

நிறுத்தத்தில் வந்து இறங்குகையில் ஊமை வெயில் எரிக்கிறது. நேராகக் கடைக்குப் போகிறார்கள். தாமரைப் பூக்கலரில், அரக்குக் கரையில் இரண்டிழை சரிகை போட்ட ஒரு சேலை எடுக்கிறார்கள். எண்ணுற்று ஐம்பது ரூபாய். அரக்கில் சரிகைக் கட்டம் போட்ட ரவிக்கை. அந்தக் குழந்தைக்கு ஒரு கவுன். நூற்றிருபது ரூபாய்...

“ஓட்டலுக்குப் போய், சாப்பிடலாம் வாங்க...” என்று கன்னியப்பன் கூப்பிடுகிறான்.

“ஏம்ப்பா, வூட்ட சாப்பிட்டதே செரிக்கல. எதுக்கு ஒட்டல் இப்ப? பணத்த ஏன் விரயம் பண்ணுற?” என்று ரங்கன் மறுக்கிறான்.

“மொதலாளி, இன்னிக்கு நான் சொல்லுறத நீங்க தட்டக் கூடாது, நீங்க சாப்பிடணும்.”

“அட வூட்ட சோறாக்கி வச்சிருக்க. வீணாகும். எதானும் டி.பன் சாப்பிடுவம் போதும்!”

“சரி அப்ப டிபன் சாப்புடலாம் வாங்க!”

ஓட்டலில் எந்த நேரத்திலும் கும்பல் இருக்கும் போலும்! கன்னியப்பனுக்கு இந்த மாதிரி வெளிப்பாடு என்றோ ஒரு நாள் தானே? மேசையில் உட்காருகிறார்கள்.

“யப்பா, மூணு அல்வா, மூணு மசால்தோசை, கொண்டா!”

“தோசைவேற என்னாத்துக்கு? ஸ்வீட் போதும்...”

“அட நீங்க சும்மா இருங்கக்கா” மஞ்சளாக அல்வா ஒரு தட்டில் வருகிறது.

கன்னியப்பன் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்துக் கொள்கிறான்.

“நல்லாருக்கா... அன்னிக்கொருநா வேறொரு ஒட்டல்ல மைசூர் பாக் வாங்கின. ஒரே காரல் கசப்பு...” என்றுபேசிக் கொண்டே அநுபவிக்கிறான்...

“கன்னியப்ப நெறையப் பணம் சேத்து வச்சிருக்காப்பல?”

அரும்பு மீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு அவன் சிரிக்கிறான்.

“எவ்வளவு வச்சிருக்கேப்பா சும்மா சொல்லு!”

“என்ன மொதலாளி, நீங்க?”

“எவ்வளவு? பத்துத் தேறுமா?”

“அவ்வளவுக்கில்லீங்க. ஏழுக்கு ஒரு பத்திரம் வாங்கி வச்சிருக்கிறேன். ஆறு வருசத்துல ரெண்டு பங்காகும்னாங்க. அதிர்ஷ்டம் இருந்தா டி.வி. காரு எல்லாம் பிரைஸ் கூட வருமாம்...” சிரிப்பாய் வழிகிறது.

“வந்திச்சின்னா, சொந்தத்துக்கு ஒரு அரக்காணி, கால்காணினாலும் வாங்கணுங்க...”

“இப்பத்தான் உனக்குப் பொஞ்சாதி வழி வருதில்ல? ரெண்டேகராவுக்கு மேல இருக்குமே?”

“நமக்குன்னு ஒரு அம்பது சென்ட்ன்னாலும் இருக்கணுங்க”

“கிணறு இருக்கு. உன் உழைப்பு இருக்கு. ஜமாய்சிடுவ. உங்காயா சம்மதிச்சிச்சா?”

அவன் பேசவில்லை.

செவந்தி பேச்சை மாற்றுகிறாள்.

“லட்சுமி நல்ல பொண்ணு. பட்டாளத்தாரு முதலிலேயே அவளுக்கு அவள வச்சிட்டு சந்தோசமா குடும்பம் நடத்தற ஒருத்தனுக்கு கட்டி வைக்கணும்னு நல்ல யோசனை, நல்ல முடிவு. அந்தப் பய அழிச்சது போக, பத்து சவரன் நகை இருக்கு. அவம்மா தாலிய பத்திரமா வச்சிருக்கிறேன்னெல்லாம் சொன்னாரு. கன்னியப்பனுக்கு நல்ல எடம். அவளுக்கும் கன்னியப்பனைப் போல ஒரு புருசன் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்... நல்லாருப்பீங்க.”

“இப்பக் கூட தாலிக் கூறை வாங்குறது நம்ம முறைன்னு தோணிச்சி. நா அதுக்குன்னே ஆயிரம் ரூபா தாரேன்னு சொன்ன. அதுக்கு அவரு, என் சம்சாரம் போட்டுட்டிருந்த தாலி. அவ நல்லா வாழ்ந்தா. அத்த அழிச்சி செஞ்சி வச்சிருக்கிறேன். நீ பணம் வச்சிக்கன்னாங்க. அதா சீல நல்லா வாங்கணும்னு வந்த மொதலாளி...”

“சும்மா என்ன மொதலாளி மொதலாளின்னு கொழப்ப தாப்பா. மாமோன்னு கூப்டு போதும். கலியாணம் எங்க வச்சி நடக்க?”

“நம்ம ரோட்டோரத்து அம்மங் கோயில்ல வச்சித் தாலி கட்டிட்டு ரிஜிஸ்திரார் ஆபீசில பதிவு பண்ணனும்னு பட்டாளத்தார் சொல்லிட்டாரு. சரின்னே... சரிதானேக்கா?”

“ரொம்ப சரி...”

“எம்பக்கம் நீங்கதாங்க மனுசா...”

நெஞ்சு நிறைந்திருக்கிறது.

அன்று சாயங்காலம் சைகிளில் புருசனும் பெண் சாதியுமாகப் போகிறார்கள். பட்டாளத்தாரின் தங்கை வீடு கூரை வீடுதான். ஆனால் பெரிய வசதியான வீடு. பளிச்சென்று துடைத்துக் கோலம் போட்டு மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரித்திருக்கிறார்கள். ஒயர் இழுத்து வாசல் கம்பத்தில் இரண்டு வாழைத்தண்டு விளக்குகள் போட்டிருக்கிறார்கள். லட்சுமியே வாசலில் வந்து “வாங்கக்கா!” என்று அழைக்கிறாள். பூப்போட்ட ஒரு பச்சை சில்க்குச் சேலை அணிந்திருக்கிறாள். பின்னல் பின்னித் தொங்கவிட்டு ரிப்பன் முடிந்து, நிறையப் பூச்சூடி இருக்கிறாள். காதில் தோடு, மாட்டல், இரண்டு மூக்கிலும் மூக்குத்தி அணிந்து, புதுமையாக காட்சித் தருகிறாள். பெண் குழந்தை, அவன் வாங்கி வந்திருக்கிற புதிய கவுனை அணிந்திருக்கிறது. ராமையா, பின்புறம் சமையல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பவர், இவர்களைக் கண்டு விரைந்து வருகிறார்.

“வாங்க, வாங்க சம்பந்தி அம்மா...எங்க நம்ம இன்ஜினிர் பொண்ணு வரல?”

“வருவா. முன்ன பின்ன வூடு வர ஆறு மணி ஆகுது சில நாள்ள. வந்ததும் வந்திடுவா.”

“சின்னப் பய்யன் வரல?”

“அவ கூட வருவான். படிச்சிட்டிருக்கச் சொன்னேன்...”

வெற்றிலைப் பாக்கு, பழம், கல்கண்டு, சர்க்கரை எல்லாவற்றையும் எடுத்துத் தட்டுக்களில் வைக்கிறார்கள்.

“மாப்புளயக் காணல?”

“இத வந்திடுவா. நீங்க காபி சாப்பிடுங்க!”

லட்டு காராபூந்தி கொண்டு வைக்கிறாள் லட்சுமி. அவள் அம்மா காபி கொண்டு வருகிறாள்.

சற்றைக்கெல்லாம் புது மாப்பிள்ளையாக, கன்னியப்பன் வருகிறான். நெற்றியில் சந்தனம், குங்குமம், மில்காரர் அங்கவஸ்திரம் விசிற வந்து உட்காருகிறார். அண்டை அயல்காரர்கள், வங்கிக்காரர் ராமலிங்கம், எல்லோரும் வர களை கட்டி விட்டது. ஆடியோ காசெட், நாதசுரம் ஒலிக்கிறது. ரங்கனும் செவந்தியும் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ராமையாவும் அவர் சகோதரியும் நின்று பாக்கு வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள்.

சரோசா சொன்னபடி சரவணனுடன் வந்து விடுகிறாள்.

இரவு சிரிப்பும் கேலியுமாகச் சாப்பிட்டுவிட்டு அவர்கள் திரும்புகையில் மணி பத்திருக்கும். ஆவணி மாசம். நிலவு பாதியாகத் தெரிகிறது. சைகிளில் தொங்கும் பையில் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பழமும், லட்டும், வடையும், வெற்றிலைப் பாக்கும் கொண்டு வருகிறார்கள். அப்பா வாயில் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார்கள். லேசாக இழுப்பு இருக்கிறது.

குடித்திருக்கிறார் என்று தோணுகிறது.

“கலியாணம் ஆயிடிச்சா?”

“கலியாணம் சொர்ணவாளிப்பட்டம் அறுவடையான பின் அப்பசிக்குப் போயிடும். அப்ப அவங்க மக பிள்ளைங்க வருவாங்க போல. இது நிச்சியம்தான? கன்னியப்பனுக்கு நல்ல அதிர்ஷ்டம்தா...” என்று செவந்தி சொல்லி பையில் இருந்து லட்டு வடை எல்லாம் எடுத்து அப்பாவிடம் கொடுக்கையில் அம்மாவும் அங்கே இருப்பது தெரிகிறது.

“என்ன பெரிய அதிர்ஷ்டம். அறுத்தவளப் போயிக் கெட்டுறா! ஆயா வந்தாளா? எடுத்து வளர்த்தவளக் கால வாரிவுட்டுப் போட்டு ஆக்கம் கெட்டவளப் போயிக் கெட்டுவானா?”

“சீ! வாயை மூடு” என்று அப்பா கத்துகிறார்.

“என்ன பேச்சுப் பேசுற நீ! அந்த ஆயா ஒரு மூதேவி. மகள இதுவே சாதிக் கெட்டவன் பின்னே போனன்னு குத்தி சாகடிச்சிருக்கும். இங்க வந்து உக்காந்து திட்டுது. எனக்குக் கெட்ட கோவம் வந்திடிச்சி. இந்த வூட்டுப்படி இனி வராதேன்னு தெரத்தின.”

“ஆமா உங்களுக்கு ஏ அறுத்தவள்னு சொன்னா கோபம் வருது? முதமுதல்ல இவம் போயி அவ வூட்ல விழலாமா? கன்னி கழியாத புள்ளகளா இல்ல? அவப்ப என்ன சாதியோங்கறது சரியாத்தா இருக்கு. அதும் மொதல்ல கட்னவனுக்கு ஒரு பொட்டப் புள்ள வேற...”

“தா பேசக்கூடாதுன்னா பேசாத! உன்னிய வெட்டிக் கொன்னிருவ! அன்னிக்கே நம் மூட்டில் இப்படி ஒரு கலியாணம் நடந்திருக்க வேண்டியது. வூடு தேடி வந்து பொண்ணு கேட்டாரு. அவர ஏசி அனுப்பிச்சிட்டு, இந்தப் பாவி எவனையேனும் கட்டிட்டு சொத்தப் பிரிசிட்டுப் போயிடுவான்னு; அவ பங்குக்கு ஒண்ணுமில்லாம இவப்பனே எழுதிட்டா... அந்தப் பாவம் என்னிக்கின்னாலும் தலை மேலதா தொங்கிட்டிருக்குங்குறத மறந்திடாதே!”

கொல்லென்று அமைதித் திரைபடிகிறது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 20

வயசுப் பெண்ணைத் தனியாகப் பஸ்ஸில் அனுப்புவது, ஆண் பிள்ளைகள் பழக இடமுள்ள கல்லூரியில் படிக்க வைப்பது என்பதை நினைத்தும் பாராத ஒரு குடும்பத்தில் செவந்தி துணிந்து தன் மகளை அனுப்பி இருக்கிறாள். இந்த மூன்று ஆண்டுகளில் அவள் எத்தனை பழிகள், மனதோடு எத்தனை நெருப்புக் கண்டங்கள், கவலைகளுக்கு மனசைக் கொடுத்திருக்கிறாள்?

அடுப்படியில் இருந்தாலும் கொட்டிலில், கழனியில், களத்து மேட்டில் எங்கிருந்தாலும் சரோ அடிமனசில் ஒரு சக்தியாக வியாபித்திருக்கிறாள் என்றால் தவறில்லை.

சில நாட்களில் ஐந்து மணியுடன் வந்து விடுவாள். அவள் சைக்கிள் வந்து நிற்கும் ஒசை, அவள் வேக நடை, அம்மா என்று நடையிலேயே கொடுக்கும் குரல், ஆகியவற்றில் நெஞ்சுக்கனம் எப்படி உருகும்!

சரோ இப்படி ஒரு சக்தியாக உருவாவாள் என்று அவள் நினைத்திருக்கவே இல்லை. ஒரு காசு அவளறியாமல் செலவழிக்கவில்லை. இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஏற்ற இறக்கங்கள்; முட்டல்கள், மோதல்கள்! ஆனால் முன் இருந்திராத நம்பிக்கையல்லவோ அவர்கள் மாற்றி மாற்றிப் பயிர் விளைவிக்கச் செய்கிறது?

சென்ற ஆண்டில் சுவர்ணவளி நெல்லைப்போட்டு அது அறுவடையாகும் சமயத்தில் மழை கொட்டிப் பயிர் நஷ்டமாகிவிட்டது. வீட்டைச் சுமாராகச் செப்பனிட்டிருக்கிறாள். ஆனால் போக்கியத்துக்கு விட்ட நிலத்தை மீட்பது லட்சியமாகவே இருக்கிறது.

“அம்மா லீவு நாளில் நடவு வைத்துக்கொள். நானும் ஒரு கைக்குவாரேன்” என்று சரோ நிலத்து வேலையில் ஈடுபடுவது சாதாரணமாகி விட்டது. சாந்தி சைக்கிளில் வந்து நடவு நடுவதை விட கால் சட்டையைச் சுருட்டி விட்டுக் கொண்டு சேற்றில் இறங்கும் மகள் புதுமையாகிறாளே? முடி, பின்னல் நீண்டு விழும். அதிகாலையில் எழுந்தாலும் சீவிச் சிடுக்கெடுக்க எண்ணெய் முழுக்காடி நேரம் செலவழிக்க முடியவில்லை. மரபுகள், கோடுகள் அழிக்கப்படுகின்றன. அவளே ஓரளவு முடியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு அளவாக அம்மாவையே கத்திரிக் கோலால் வெட்டி விடச் சொல்லி விட்டாள்.

“இதென்னடீ அநியாயம்? வாழுற வூட்டுப் பொம்புள இப்படிச் செய்யலாமா” என்று பாட்டி ஆரம்பித்ததுதான் தாமதம். பட்டென்று சென்று வாயைப் பொத்துவாள் சரோ.

“பாட்டி உங்க காலம் அது. இது எங்க காலம் சும்மாருங்க! இங்க நா முடி சிங்காரிச்சிட்டிருந்தேன்னா பஸ் போயிடும்” என்று ஒரே போடாகப் போட்டு விட்டாள்.

கோடுகள் அழியப்படும் போது கூக்குரல்கள் எழத்தான் எழுகின்றன. ஆனால் மன உறுதிக்கு முன் அந்தக் கூக்குரல்கள் எடுபடாதுதான். செவந்திக்குத்தான்மகள் எது சொன்னாலும் நியாயமாக வேத வாக்காக இருக்கிறது.

“ஆம்புளப் புள்ளங்க கூட படிகிறதுன்னா, தொட்டுப் பழகாமலா இருக்கும்? சதா சினிமா டி.வி.ல காட்டுறாங்களே? செவந்தி புத்தி கெட்டு இந்தப் பொண்ண வுட்டு போட்டா. என்ன கொண்ட்டு வரப்போகுதோ...” என்று அம்சுவின் அத்தை பிரலாபித்தது அவள் செவிகளில் விழுந்து விட்டது. விடுவிடென்று போகிறாள்.

“ஏ, பெரியம்மா? உங்களுக்கு வேற வேல இல்ல? நீங்க வயலுக்குப் போகலே? கடைக்குப் போகல? பொம்புளயும் பொம்புளயும் நாலு முருங்கைக்காக முடி புடிச்சி இழுத்திட்டுக் கேவலமா ஊரக் கூட்டல கழுநீருக்கும் கருமாதிக்கும் வித்தியாசம் இல்லாம தொண்டத் தண்ணி வத்த கத்தல? அத்தவுட நான் காலேஜுக்குப் போய் படிப்பது கேவலமின்னா இருக்கட்டும். இன்னொரு தடவ என் காதுல இப்படி இங்க யாருன்னாலும் அடுத்த வூட்டுச் சங்கதியக் காது மூக்கு வச்சிப் பேசட்டும். போலீசக் கூட்டியாந்துடுவே! இப்பல்லாம் பொம்புள போலீசு இருக்கு. ஜாக்கிரதை” வாயடைத்துப் போயிற்று.

கல்வியறிவு, வெளி உலகத்தின் அன்றாடத் தொடர்புகள் இரண்டும் பெண்ணுக்கு நிமிர்ந்து நிற்கும் உறுதியை மட்டும் கொடுக்கவில்லை. கசடுகளை ஒதுக்கிக் கொண்டு முன்னேறவும் துணிவைக் கொடுப்பதுமாகச் செவந்தி புரிந்து கொள்கிறாள்.

ரங்கன் சைகிள் கடை இருந்தாலும், முழுமனசுடன் அவள் ஊன்றிய விவசாயத் தொழிலில் ஈடுபடுகிறான்.

“செவந்தி பூச்சி இருக்குது. அதோட அதைச் சாப்பிடும் நன்மை செய்யும் இனமும் இருக்கு. இப்ப மருந்து வானாம். விளக்குப் பொறி வச்சிப் பாக்கலாமா?” என்று அவளிடத்தில் யோசனை கேட்கிறான்.

“ஆமாங்க மருந்தடிச்சா நல்ல பூச்சியும் அழிஞ்சிடும்... ப்யூட்ரான் போட்டிருக்கு பார்ப்போம்...” என்று அவள் சொன்னால் ஒத்துக் கொள்கிறான்.

பொம்புள சொல்லிக் கேட்பது கேவலம் என்று ஊன்றியிருந்த மனப்பான்மை தகர்ந்து விட்டது.

படிப்பு, படித்து ஏற நல்லது கெட்டது பிரித்தறியும் விவேகமும் விரிவாவதைச் செவந்தி உணருகிறாள்.

செயல் முறை அறிவுக்காகச் சென்னையின் எல்லைக்குள் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு சக மாணவர்களுடன் செல்ல வேண்டி இருக்கும். தனி வகுப்புகள் ஆலோசனை விவாதங்கள் என்று நேரம் கழித்து வீடு திரும்புவதைத் தவிர்க்கவியலாது. இறுதிப் பரிட்சை முடிந்த பின் நேர்முகப் பயிற்சி என்ற அளவில் ஒரு தொழிலகத்தில் சில நாட்கள் அவள் சேர வேண்டும். கிண்டியில் அந்தத் தொழிற்சாலை இருக்கிறதாம்.

அவருடைய தோழி ஒருத்திக்கு சென்னையில் வீடு இருக்கிறதாம். வசதியாகத் தங்கிக் கொள்ள அழைத்திருக்கிறாள். அவளுடன் தந்தையும் சென்றிருக்கிறார்.

சின்னம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற அவா இன்னமும் ஈடேறவில்லை. இரண்டொரு முறை செவந்தியும் சாந்தியும் சென்னைக்குச் சென்றார்கள். தான்வா அலுவலகம் சென்று பெரிய மேடத்தைப் பார்த்தார்கள். திருவள்ளுர், காரணை ஆகிய இடங்களில் நடந்த சிறப்புப் பயிற்சிக்குப் போனார்கள். இப்போது இங்கேயே தான்வா மகளிர் சங்கம் என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். செவந்தி தலைவர். சாந்தி செயலாளர். சுந்தரி, வேனி, எல்லோரும் தான்வா பயிற்சி பெற்று சுயமாகத் தங்கள் நிலங்களில் பயிர் செய்கிறார்கள்.

மொத்தத்தில் திண்ணையில் குந்தி இருந்து ஏதேனும் பேசக் கூடப் பொழுது இல்லை.

இந்த நவரைப் பட்டம் கொல்லை மேட்டில் இவர்கள் கடலையும் மிளகாயும் பயிரிட்டிருக்கிறார்கள்.

கத்திரி வெய்யில் சுட்டெரிக்கக் காலையிலேயே சென்ற கணவனை எதிர்பார்த்து செவந்தி நிற்கிறாள். கோயில் தோப்பு புளிதான் வாங்கி உடைத்து, கொட்டை எடுக்கிறார்கள்.

“ராவிக்கு சரோ வராதா?”

அம்மா சும்மா இருக்கமாட்டாளே?

“நீ சும்மா துணப்பாத அது பத்து நா ட்ரெய்னிங் இருக்கப் போகுது. அதா அப்பா போயிருக்காரில்ல? எங்களுக்கு இல்லாத கவல உனக்கென்ன...”

இரவு ஒன்பது மணிக்கு ரங்கன் வரும்போது அம்மா வீட்டில் இல்லை. நீலவேனி டி.வி. வாங்கிவிட்டாள். அம்மா மட்டுமில்லை. சரவணனும் அங்கே போய்விடுகிறான். சரோ இருந்தால் தான் கண்டிப்பு அவனுக்கு. வாசல் திண்ணையில் ஒரு விசிறியை வைத்து விசிறியபடி அப்பனுடன் அவள் இருக்கிறாள். அவன் விர்ரென்று சைகிளில் வந்து இறங்குகிறான். உள்ளே வருகிறாள். கையில் இருக்கும் பையை அவளிடம் கொடுக்கிறான்.

மாம்பழங்கள்... ஏதோ புத்தகம்...

“சரவணன் எங்கத் துரங்கிட்டனா? அவனுக்குத்தா சரோ மாடல் பேப்பர் வாங்கிக் குடுத்திச்சி!”

“சரோ... எங்க அவங்க பிரண்ட் வீட்டிலா இருக்கு?”

“அங்கதாம் போன. இவங்க... பாக்டரிக்குக் காலம எட்டு மணிக்குள்ள வரணும். அவங்க வூடு, திருவான்மியூர் பக்கத்தில இருக்கு. ரெண்டு பேரும் வர்றதுன்னா பரவாயில்லை. அது எலக்ட்ரானிக்ஸ் எடுத்திருக்கு. இது மெக்கானிக்கல். அம்பத்துரில் இல்ல. இங்க கிண்டி எஸ்டேட்டுக்குள்ள நிறைய சின்ன சின்ன தொழிலகங்கள் இருக்கு. இவங்க பாக்டரில டிரெயின்ங் எடுக்கலாம்னு லெட்டருக் குடுத்துச் சொல்லிருக்காரு. தான்வா அம்மா, அம்பத்துரில் பவர் டிரில்லர்... பாக்டரிக்கு சரோ மின்னியே பாத்து பேசிருக்குப் போல... திருவான்மியூரிலிருந்து இது பல்லாவரத்து தங்கிக்கிறதுன்னு முடிவு பண்ணி சேத்துட்டே கிண்டி கிட்டக்க. நிறைய பஸ் இருக்குது.”

இவளுக்கு ஆவல் துடிக்கிறது.

“பல்லாவரம்ன்னா.... அங்க எங்கே?”

“சின்னம்மா இருக்காங்கல்ல, அவங்க இருக்கிற ஆஸ்டல்தா.”

“திருவான்மியூர்ன்னு இடம் வச்சிட்டு கிண்டி பாக்டரில வந்து பார்த்துக்கிட்டோம். பால் பேரிங் எல்லாம் செய்யற பாக்டரியாம். அங்கேந்து சின்னம்மாவப் பார்க்க ஹோமுக்கு வந்தோம். அவங்களுக்கு ரொம்ப சந்தோசம். உடனே வெளியே ஆளனுப்பி காபி மிக்சர் எல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்திச்சி. சின்னம்மா பேருல எல்லாருக்கும் மதிப்பு இருக்கு. அங்கே சமையல் வேலை செய்யிது. கூட ரெண்டு எடுபிடி பொம்பிளங்களாம். எல்லாம் பொம்புளங்க. திருவான்மியூர்லேந்து ஏவாரணும். என் ரூமில தங்கிக்கட்டும் பாப்பா. இங்க ஆஸ்டல்ல எல்லாம் வேலை செஞ்சிட்டுத் தனியா இருக்கிற லேடீஸ்தா. ஸ்ட்டுடண்ட்ஸ் கூட போன வருசம் ரெண்டு பேர் இருந்தாங்க. பிறகு இப்ப வேலைக்குப் போறவங்களுக்கு மட்டும்ன்னு வச்சிருக்காங்க. ரொம்பப் பாதுகாப்பு. கிறித்தவங்கதான் நடத்திட்டிருந்தாங்க. ஆனா இங்க இதுக்கு தலைவியாக இப்ப இருக்ற அம்மா சொர்ண லலிதா பெரிய சோஷியல் வொர்க்கர். அவங்க மின்ன எம்பியா இருந்தவங்க. கேள்விப்பட்டிருப்பீங்க. ரொம்ப நல்ல மாதிரி. இவங்களுக்கு ரெண்டு பையன்க அமெரிக்காவுல டாக்டராக இருக்காங்க. இங்க இந்த ஹாஸ்டல் தவிர, நீலாங்கரையில் பெரிய முதியோர் இல்லம் நடத்தறாங்க. பார்வையில்லாத வங்ளுக்காக ஒரு சங்கம் கூட அவங்க தலைமையில் நடக்குது... எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. எப்படியோ ஆடிக்காத்துல பறந்து வந்து இப்படி ஒரு பத்திரமான எடத்துல விழுந்திட்ட... ன்னு சொல்லிச்சு. நமக்கு அது குத்தாறப்பில இருந்தாலும் பெரிசா எடுத்துக்கறதுக்கில்ல.

“பத்து நாட்களுக்கு எங்கூடத் தங்க அம்மா பர்மிசன் குடுப்பாங்க. இல்லாட்டி இப்ப ஒரு ரூமில மூணு பேர் இருக்கிற இடத்துல ஒண்னு காலி இருக்கு. பத்து நாளைக்கு நூறு ரூபா கேட்பாங்க. குடுத்திடலாம். பிரச்சன இல்லன்னிச்சி. காலம ஏழரைக்குள்ள உனக்கு நாஷ்டா குடுத்திடறேன். பகலுக்கு அங்க காண்டின்ல எதானும் சாப்பிட்டுக்க. இங்க எட்டரைக்கு நாஷ்டா சாப்பிட்டு கையில் ஒரு சாம்பார் சாதம் எலுமிச்சை சாதம் தயிர் சாதம் லஞ்ச் கட்டிட்டு போற வங்க இருக்காங்க. அது ஏழரைக்குள்ள ஆவாது. ராத்திரிக்கு எட்டுக்குள்ள டின்னர் ரெடியாயிடும்னிச்சு. இதவிட பத்தரமா வசதியாக நம்ம குழந்தையைப் பாத்துக்கப்போறவங்க யாரு? அதுதா சொல்லச் சொல்லக் கேக்காம இந்த மாம்பழம் வாங்கிக் கொடுத்திச்சி.”

இவர்கள் சமையலறையில் தணிந்த குரலில் பேசுவது அப்பனுக்கு எப்படி எட்டியதோ?

“ஏம்பா ராசாத்திய பாத்தியா? ஒரு நட இங்க வரச் சொன்னியா?”

“பாத்த மாமா. அவங்க கூடத்தா இப்ப சரோவ வுட்டிருக்க...”

“எப்பிடி மக கூட இருக்காளா? மக நல்லபடியா வச்சிக்கிதா?”

“மக அவங்ககூட இல்ல. இவங்க ஒரு ஆஸ்ட்ல்ல இருக்காங்க. சமையல் வேலதா. ஆனா நல்லபடியா இருக்கேன். பிரச்னை எதும் இல்லைன்னு சொல்லிச்சி...”

செவந்தி மாம்பழத்தைக் கழுவி நறுக்குகிறாள்.

மெல்லியதோல். உருண்டையான ருமானி. ஒரு துண்டை அப்பனுக்குக் கொடுக்கிறாள். அப்பன் அதை வாயில் போட்டுக் கொள்கிறான். கண்களில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணிர் பெருகிறது.

“ஏம்ப்பா... இப்ப இஸ்கூல் லீவுதான. ராசாத்தி மகளையும் பிள்ளைகளையும் மருமவனையும் ஒரு வாட்டி கூட்டிட்டு வரச் சொல்லலாமில்ல. மக ருக்கு நல்லபடியாக இருக்கிறதா ருக்குமணி அவ ஆத்தா பேரை அதுக்கு வச்சிது. அதுக்கு ஒரு நெல்லது செய்யல பாவி நாங்க...” உணர்ச்சி வசப்பட்டு மார்பில் அறைந்து கொள்கிறார்.

“அப்பா.... என்ன இது? உங்ககிட்ட எதும் சொல்ல முடியல. அவங்கள நினைச்சா ஒடம்புக்கு ஆவறதில்ல இல்ல.”

“இல்ல செவந்தி. நெஞ்சு ஆறாத புண் இது. உங்கம்மா பழிகாரிதா என்ன அப்படி தடுத்துப் போட்டது. ஒரு பாவமும் அறியாத அவ மேல அபாண்டம் சுமத்தினா. அந்தப் பாவம் இங்க புண்ணா இருக்கு. அவ இங்க வந்து நா மனசில வச்சுக்கல என்று சொல்லுற வரைக்கும் ஆறாது...”

ரங்கன் மெளனமாக கலத்தில் போட்ட சோற்றைச் சாப்பிடுகிறான். அப்போது தான் பாட்டியும் பேரனும் டி.வி. பார்த்து விட்டு வருகிறார்கள். “ஏய் இங்க வா! படிக்கிறப்ப இப்படி ராத்திரி பத்து மணிக்கு டி.வி. பாத்திட்டு படிச்சி எப்பிடித் தேருவே? ரெண்டாயிரம் கட்டி சேர்த்திருக்கு. சரோக்கு ஒரு பத்து பைசா அதிகமா செலவு பண்ணல. இன்னி வரையிலும் அவங்க டீச்சர் எல்லாம் பெருமையா பேசும்படி வந்திச்சி. நீ...” இழுத்து வைத்து முதுகில் ஒர் அறை விடுகிறான்.

உடனே சரவணன் பெரிதாக அழத் தொடங்குகிறான். “மூடுமூடு ராஸ்கல். சத்தம் போட்டே பலி வச்சிடுவே. மூடு. அக்கா மாடல் கொஸ்சின் பேப்பர் அவங்க பிரண்ட்கிட்டந்து வாங்கிக் கொடுத்திருக்கு, போயி சோறு துன்னிட்டுப் படுத்துக்க. விடிகாலம நாலு மணிக்கு எழுப்பி விடுவே.. படிக்கணும்! போ...”

பாட்டிக்குப் பொறுக்கவில்லை. “அது வரலன்னுதா சொல்லிச்சி. நாந்தா கூட்டிட்டுப் போன. அங்க அவன் புஸ்தகம் வச்சி படிச்சிட்டுதா இருந்தா.”

“அது சரி கெடுக்கறதே நீங்கதா. நீங்க டி.வி. பார்க்கப் போனா அவ எதுக்கு? போங்க! போங்க!”

வேலை முடிந்து மாட்டுக்கு வைக்கோல் போட்டுவிட்டு செவந்தி சேலையை உதறிக் கொண்டு வாயிலுக்கு வருகிறாள். ஒரே புழுக்கமாக இருக்கிறது. காற்றே வரவில்லை. தரையில் தலைப்பை உதறிக் கொண்டு தலை சாய்கிறாள்.

“செவந்தி... ஒரு விசயம் சொல்ல வானாம்னாலும் சொல்லாம முடியல... முருகன் இப்ப பத்து நாள் மின்னக் கூட பட்டணம் வந்திருந்தானாம். வயிற்றுவலி அல்சர்ன்னு வைத்தியம் பண்ணிக்கிறானாம். இளைச்சிப் போயிட்டான். அவங்க மச்சினிச்சி வீட்டில் பார்த்தேன்னு சின்னம்மா சொல்லிச்சி. ருக்கு அங்கதா ஏரிக்கரைப் பக்கம் குடிசையில் இருக்காப்பல. இவங்க ஏரிக்கரைப் பக்கம் ஜீவா நகர்ன்னு புதிசா வீடுகள் கட்டிருக்காங்க. அங்க இருக்காங்க. எனக்கென்னமோ, ஒரு நடை போயி பாத்துட்டு ஒராயிரம் ரூபான்னாலும் குடுத்திட்டு வரணும்னு. ஏன்னா, அப்ப நான் சரோவக் கூப்பிடப் போனப்ப, அண்ணி குத்தலா பேசிச்சி. நாம ஒண்ணும் அவங்க சொத்த அபகரிக்கலன்னு காட்டணும். அம்மா அப்பாக்கு சோறு போட்டு வைத்தியம் பண்ணி நல்லபடியா வச்சிருக்கிறம்... நீ சொல்லு நாயத்த...”

“நீங்க நினைச்சா சரி. சரோவும் படிப்பு முடிச்சிட்டது. எங்கனாலும் வேலைக்குப் போயிடும். நடவுக்குன்னு பணம் வச்சிருக்கிற. நாளக்கே ஆயிரம் போல எடுத்திட்டு போய் வந்திருங்க. ஆனா இது விசயம் அப்பா அம்மாவுக்கு தெரிய வேண்டாம்.”
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 21

இதற்கு முன் இந்த தான்வா திட்டத்தின் பெரிய ‘மேடம்’ என்று சொல்லப்படும் ஆபிசரைப் பல தடவைகள் செவந்தி பார்த்திருக்கிறாள். அவர் அவள் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்து ஒவ்வொரு மறுப்பையும் பொருட்படுத்தாமல் ஊக்கி இருக்க வில்லையெனில் இன்று இந்தப் பெரிய ஆபிசில் அடி வைக்க அவளுக்குத் தகுதி வந்திருக்குமோ? வாசல் கூர்க்கா முன்னறைப் பெண்மணி எல்லோரையும் தாண்டி அவளும் சரோவும் சில்லென்று குளிர்ச்சி அணையும் அந்த அறைக்குள் வருகிறார்கள்.

உள்ளே வரும் போது ஒரே அச்சம். ஒரு கூச்சம்; அச்சம்.

‘இந்தம்மா எவ்வளவு எளியராக இருந்தார்? ஆனால் எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறார்’ என்ற வியப்பு.

உள்ளே நாற்காலியில் ஒரு பருமனான பெண்மணி, காதில் பெரிய தோடு மூக்குத்தி, தங்கச்சங்கிலி வளையல்களணிந்து உட்கார்ந்திருக்கிறாள். அவளுடன் ஒரு பதினான்கு பதினைந்து வயசுப் பெண்ணும் நிற்கிறாள்.

“அடடே வாங்க செவந்தியம்மா. வா சரோ. உட்காருங்க” என்று நாற்காலிகளைக் காட்டி உட்காரச் சொல்கிறார்கள்.

சரோ “தேங்க்யூ மேடம்” என்று சொல்லிக் கொண்டு உட்காருகிறாள்.

“இந்தம்மா தஞ்சாவூர் பக்கத்திலிருந்து வந்திருக்காங்க. வளர்மதின்னு பேரு. தான்வா பயிற்சியெடுத்தவங்க. இப்ப விவசாயத்தோட பால் மாடு வாங்கி கூட்டுறவு சங்கத்தில் நூறு பெண்களை ஈடுபடுத்தி இருக்காங்க. அவங்க அனுபவம் கேளுங்க.”

“வணக்கம்” என்று சரோ அவளைப் பார்த்துக் கை குவிக்கிறாள்.

“நூறு மாடுன்னா, எப்படிங்க?”

“அதான் தான்வா மகளிர் சங்கம்ன்னு ஒண்ணு வச்சிட்டோம். அதில் நூறு பெண்களுக்கு லோன் வாங்கி மாடு வாங்கினோம். பெண்களுக்கு இதில் உபரியாய் வருவாய் இருக்கு. லோன் அடைஞ்சு அதிகமாக வருவாய். மேலும் மாடுகள் விருத்தியாகுது. இப்ப சொசைட்டிக்கு பால் விட்டது போக கூடுதலாகக் கிடைக்குது. இதை எப்படித் தொழில் பண்ணலாம்னு யோசனை கேட்க வந்தேன்.”

செவந்தி வியந்து நிற்கிறாள்.

“ஏம்மா பவர் டிரில்லர் பற்றிக் கேட்டியே. பாக்டரிக்கு போய் பார்த்தாயா?” என்று சரோவிடம் அவர் கேட்கிறார்.

“அந்த மேடத்தை ஆபீசில் பார்த்தேன். ஆனால் பாக்டரிக்கு போகவில்லை. ரிசல்ட் வந்து பர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணிட்டேன் மேடம்.”

கையில் வைத்திருக்கும் பையில் இருந்து பால்கோவாப் பெட்டியைத் திறந்து நீட்டுகிறாள்.

“வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோசம், சரோ.”

அந்தப் பெண்மணியிடமும் நீட்டுகிறாள். அவள் ஒரு துண்டை எடுத்துக் கொள்கிறாள். “நீயும் எடுத்துக் கொள்” என்று அந்தப் பெண்ணிடமும் நீட்டிவிட்டு பெட்டியை மேசை மீதே வைக்கிறாள்.

“மேடம், நீங்க அன்னிக்கு வந்து என்னிய தூண்டிவிட்டு இழுத்திங்க. எங்க வீட்ல மகா லட்சுமி அடி வச்சதா நினைக்கிறேன். இப்ப எங்க பக்கம் ஒரு காணி அரைக்காணி வச்சிருக்கும் வீடுகள்ள ஆம்புளய எதிர்பார்க்காமல் பெண்களே விவசாயம் செய்யிறாங்க. நாங்களும் தான்வா மகளிர் சங்கம் வச்சிருக்கிறோம். மீனாட்சி மேடமும் பத்மாவதி மேடமும் வந்தாங்க. அடுத்தாப்பல உரம் ஊட்ட மேற்றுவதற்கு மண்புழு பத்தி சொன்னாங்க.. அதும் செய்யணும்னு இருக்கிறோம்...”

“நீங்களெல்லாரும் கிராமங்களை விட்டு வந்து பட்டணங்களில் அல்லல் படாமல் முன்னேறனும். நன்றாக வாழ வேண்டும். சமுதாயம் வளமடையனும் என்பதே தான்வாவின் நோக்கம்.”

“பெண்கள் எல்லாம் செய்கிறோம். உழுவதற்குத்தான் சரியாக ஆள் கிடைப்பதில்லை. ரொம்பக் கூலியாகுது. பெண்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் செய்து கொள்கிறோம். ஒருகாணி, அரைக்காணி, நடவு அறிப்பு என்றால் ஒரே மாதிரியான கூலிதான். அவங்க உழவுக்கு எம்பது நூறு நமக்குப் பதினைஞ்சான்னு கேட்டுக்கறாங்க. ஆனா நாங்க எங்களுக்குள்ள கூட்டிக்கிட்டா எல்லாருக்கும் தானே கஷ்டம்னு உசத்தல. ஆனா இதுபத்தி பேச்சிருக்கு. எங்கூட்டுக்ககாரரு லோன் எடுத்து டிராக்டர் வாங்கலாங்கறாரு. அவரே ஒட்டக் கத்துக்கறாரு. ஆனா ரொம்ப வெலயாவுது... போக்கியத்துக்கு வுட்ட பூமிலன்னாலும் திருப்பலான்னு...”

சரோ, அம்மாவின் முழங்காலில் மெள்ள இடிக்கிறாள். இந்த அம்மா பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அதற்குப் பொருள்.

“நீங்க வேணுமானால் ‘பவர் டிரில்லர’ப் போய்ப் பாருங்களேன். அதை ஒரு அம்மாதான் தயாரிக்கிறாங்க. டிராக்டர் விலை வராது. உண்மையில் பெண்கள் ஓட்டணும்னு தயாரிக்கிறாங்க.”

“அப்படீங்களா? ஆம்புளங்க இல்லாம நாமே எல்லாம் செய்ய முடியுங்களா?”

“கேளு, சரோக்கிட்டச் சொன்னேன். டிரெயினிங் புரோகிராமுக்கே போக லெட்டர் கேட்டா; குடுத்தேன்.”

“நான் அவங்கள இங்க ஆபீசில் பார்த்து அனுமதி வாங்கிட்டேன். ஆனா கிண்டியிலேயே டிரெயினிங் புரோகிராம் முடிச்சிட்டேன். இப்பக் கூட அவங்க ஒரு லேடி தொழில் முனைவராக இருப்பதால் எங்கள போன்றவர்களுக்கு ஆதரவு கொடுப்பாங்களான்னு கேக்கலாம்னு வந்தேன்... பவர் டிரில்லரையும் பார்க்கலாமே?”

“ஓ... தாராளமாய் போய்ப் பாருங்க!”

அந்த அலுவலகத்தைவிட்டு அவர்கள் அம்பத்தூர் தொழிற் பேட்டைக்குப் பஸ் ஏறி வந்து இறங்குகிறார்கள். பவர்டிரில்லர் தொழிற்சாலையைத் தேடி வரும்போது நண்பகல் நேரம். புரட்டாசி மாதப் புழுக்கம். கூர்க்காவிடம் சொல்லி வரவேற்பில் சரோ முன்பே பெற்று வந்த கடிதம், தான்வா மேடம் கொடுத்த கடிதம் எல்லாவற்றையும் காட்டுகிறார்கள்.

உள்ளே நுழையும் போதே நான்கு சக்கரமுள்ள ஒரு டிராக்டர் மிகச் சிறியது நிற்கிறது. இன்னொரு பக்கம் இரண்டே சக்கரமுள்ள கையால் தூக்கி உழக்கூடிய பவர் டிரில்லர்.

உள்ளிருந்து நடுத்தர வயசில் ஒரு ஒட்டு மீசைக்காரர் வருகிறார்.

“நாங்கள் ‘தான்வா’ பெண்கள். இந்தப் பாக்டரி, டிரில்லர் பார்க்க வந்தோம்” என்று சரோ, தன் ஈடுபாட்டை படிப்பைச் சொல்லுகிறாள்.

“புரொப்ரைட்டர் மேடம் இருக்காங்களா?”

“அவங்க பாக்டரிக்குக் காலமே வந்திட்டுப் போயிட்டாங்க; நீங்க வாங்க, பாருங்க.”

தொழிற்சாலையில் நீளப் பல பகுதிகள் இருக்கின்றன. இயந்திரங்கள் இயங்குகின்றன. அராவுதல் வெட்டுதல் வட்ட வடிவமாக்கல் என்று...

செவந்தி மலைப்புடன் பார்த்து நிற்கையில் சரோ, ஈடுபாட்டுடன் ஒவ்வொரு பகுதியிலும் சென்று பார்க்கிறாள். வரைதல் என்று ஒரு தனிப்பகுதி. அதையும் கடந்து அவர்கள் முழுதாக உருவாக்கப்பட்ட இயந்திரக் கலப்பை நிற்கும் ஓரிடத்திற்கு வருகிறார்கள்.

“இங்க இப்ப டிமான்ஸ்ட்ரேட் வசதி இல்ல” என்று சொல்லிவிட்டு அவர் பல இணைப்புகளைக் காட்டுகிறார்.

“இத பாருங்க இது புழுதி உழவு. ரோடோடில்லிங்.”

“இதுதா பட்லர் இல்ல?”

கட்டிகளை உடைக்கும் சீப்பு போன்ற கொழு முனைகள். இவர்கள் மாட்டுடன் இணைக்கும் மத்துக் கடைவது போல் சேற்றைக் குழம்பாக்கும் பட்லர்.

“இது என்ன கத்தி கத்தியாக?”

“இதுதான் அறுவடை செய்யும்.”

“நீங்க வாங்கறதானா ரெண்டே நாள் டிரெய்னிங் போதும். அது நாங்களே தாரோம்.”

“எவ்வளவு டீசல் ஆகுதுங்க ஒரு ஏகர் உழ?”

“ஒரு மணிக்கு ஒண்ணரை லிட்டர் ஆகும். ஒரு நாளைக்கு எட்டு மணிநேர வேலை செய்தால் மூணரை ஏக்கர் உழலாம்.”

“ஏயப்பா..” என்ற செவந்தி மலைக்கிறாள்.

“மூணு ஏர் மூணு சோடி மாடு...”

கணக்குப் போடுகிறாள்...

ஒன்றும் புரியவில்லை.

ஆனால் சரோதான் வெகு நேரம் அவரிடம் ஏதேதோ ஆங்கிலத்தில் பேசுகிறாள். தன் கைகளால் அதன் கைகளைத் தூக்கி நிமிர்த்திப் பார்க்கிறாள்.

மதிய உணவு நேரம் வந்து விடுவதால் அவரவர் கலைந்து வருகிறார்கள்.

“என்னப்பா வின்சென்ட்” என்று கேட்டுக் கொண்டே அங்கே முன்புறம் வழுக்கையாக ஒருவர் வருகிறார்.

சரோவைப் பார்த்துக் கொண்டே நிற்கிறார்.

“ஏய்... நீ... சுகந்தா அவங்க வீட்டுக்கு வந்திருக்கல?”

“ஆமாம்.நீங்கள் மிஸ்டர் கருணாகரன் இல்ல. அவங்க என் மாமி...”

“நீ டி.எம்.ஈ. படிச்சிட்டிருந்தேல்ல.”

“முடிச்சிட்டேன் சார். நீங்க மாமி தங்கச்சி வீட்டுக்குப் பின் வீட்டில இருகிறவங்கல்ல? நீங்க இங்கே வேலை பண்ணறீங்களா ஸார்?”

“ஆமாம்மா. ஆப்டர் ரிடயர்மெண்ட் இங்க இருக்கிறேன். நான் டிராயிங் போர்ட் பக்கமிருந்து பார்த்தேன். ஏதோ தெரிஞ்சாப்பல இருந்தது.”

“அம்மா, நம்ம மாமி தங்கச்சி இருக்காங்கல்ல. அவங்க வீட்டுக்குப் பின்னாடி உள்ள வீட்ல இருக்காங்க. இவங்க மக அருணா இவங்க எல்லாரும் அப்ப மதுரைக்கு வந்தாங்க. பயணம் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி சார். ரொம்ப சிரிக்க சிரிக்க பேசுவாங்க. நேரம் போனதே தெரியாம. அருணா என்ன பண்ணுது சார்?”

“அவ மியூசிக் காலேஜுக்குப் போறா. உங்க மாமா கூடப் போன மாசம் ஏதோ அல்சர்ன்னு டாக்டர்ட்ட காட்ட வந்தாப்பல. செயின் ஸ்மோக்கரா இருந்தாரு. இப்ப வுட்டுட்டேன்னாரு...”

“பெரிய வங்களுக்கு யார் புத்தி சொல்லுறது? பட்டாத்தான் தெரியும்” என்று செவந்தி முணுமுணுக்கிறாள்.

“பவர் டிரில்லர் வாங்கப் போறீங்களா?”

“விலை ரொம்ப இருக்குமே சார்.. யோசனை பண்ணனும். டிமான்ஸ்ட்ரேட் பண்ணி காட்டுவாங்கன்னு நினைச்சேன். மேலும் டீசல் இல்லாம மான்யூல் டிரில்லர் பெண்கள் ஒட்டலாம்ன்னு சொன்னாங்க.”

“ஒண்ணு பண்ணாங்க... வொர்க்அவுட் ஆகல..”

“சார் எனக்கு இங்க வேலை கிடைக்குமா? பெண் தொழில் முனைவோர்ன்னு சொன்னாங்க. ரிசப்ஷன் டிராயிங்கலேந்து கடைசிவரை ஒரு பெண் கூட இல்லை. எங்களைப் போல இருக்கறவங்களுக்கு இங்கே வாய்ப்பே இல்லையா?”

அவர் சிரிக்கிறார்.

“இங்கே அவங்க பெண்களை வேலைக்கே எடுப்பதில்லை. முன்பு ஒரு பெண்ணை டிராயிங் செக்ஷனில் வேலை கொடுத்து வைத்தாராம். அவள் நிமித்தமாக இங்கே காதல் ஊதல்ன்னு பிரச்னை வந்திட்டதாம். அதற்குப் பிறகு பாலிசியாகவே வச்சிட்டதாகக் கேள்வி. நீங்க கேட்டுப் பாருங்க...”

சரோ ஒன்றும் பேசவில்லை.

செவந்திக்கும் உவப்பாக இல்லை. வெளியே வருகிறார்கள்.

மணி இரண்டடித்து விட்டது.

ஓர் ஓட்டலைக் கண்டுபிடிக்கிறார்கள். எலுமிச்சை சாதமும் தயிர் சாதமும் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

செவந்தி சின்னம்மாவுக்காக அரை கிலோ திராட்சைப் பழம் வாங்கி வைத்துக் கொள்கிறாள்.

இருவரும் மூன்று மணியளவில் அந்த விடுதியை நாடி வருகின்றனர். பகலின் அமைதியில் விடுதி உறங்குகிறது.

சரோவைப் பார்த்ததும் கூர்க்கா உள்ளே விடுகிறான்.

முன்னே உள்ள விருந்தினர் கூடத்தில் வந்து மணி அமுக்குகிறாள். வார்டன் அம்மா எட்டிப் பார்க்கிறாள்.

“ஓ... ராசாத்தியப் பார்க்க வந்தவங்களா? ராசாத்தி...?”

சின்னம்மா கிரைண்டரில் மாவழித்து கொண்டிருந்தாள் போலிருக்கிறது. அவசரமாகக் கையைத் துடைத்த வண்ணம் வருகிறாள்.

“சரோ, செவந்தி வாங்க!”

உள்ளே சென்று நன்றாகக் கை கழுவித் துடைத்துக் கொண்டு வருகிறாள்.

செவந்திக்குக் கண்ணிர் முட்டுகிறது. அவள் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.

“சின்னம்மா, நீங்க எங்களத் தல குனிய வச்சிட்டீங்க. அப்பா நிதம் புலம்பிட்டிருக்காரு. அவரு உடம்பும் சரியில்ல. அத்தயும் இத்தயும் நினைச்சி குடிச்சிடிட்டு வாராரு. அம்மாவுக்கும் அவருக்கும் கொஞ்சம் கூட நெரப்பில்ல. எந்நேரமும் பிருபிருப்பும் சண்டையுந்தா. நீங்க ஒரு நடை வரணும். சின்னம்மா பழசெல்லாம் மறந்திடணும். உங்க கால்ல விழுந்து நான் கும்புடறேன்.” அவள் காலடியில் விழுந்தே பணிகிறாள்.

“சீ, இதென்னம்மா செவந்தி. அதது அந்தந்த நேரக் கோளாறு. நடந்திச்சி. பாப்பா எங்கூட இங்க வந்து தங்கிச்சி. பெரும்மையாக இருந்திச்சி. நல்ல கொணம். இங்க அத்தினி பேருக்கும் இதும் பேரில் இஷ்டம். எல்லாம் விசாரிப்பாங்க. மேக் கொண்டு வேலைக்குப் போகப் போவுதா? மாப்புள பாத்திருக்கிங்களா?”

“அதெல்லாம் ஒண்ணும் இப்ப யோசனை இல்ல. ஒங்க கொல்ல மேட்டுப் பூமில வெள்ளாம செய்யிறம். நெல்லுப் போட்டோம். கடல போட்டோம். முளவா போட்டோம். போன வாட்டி நீங்க சரோ இங்க இருந்ததுக்குக் கூட எதும் வாணாம்னு சொன்னிங்களாம். இப்ப இத்த வாங்கிக்கனும்...” கைப்பை கவரில் வைத்திருக்கும் ஐநூறு ரூபாயை அவளிடம் நீட்டுகிறாள்.

“அய்ய இதென்ன! நீ போட்டுருந்த சங்கிலியக் கழட்டி வாங்கிட்டு வந்தேனில்ல? சும்மாவா குடுத்தீங்க. அது கெடக்கட்டும். வச்சிக்க. நாளையு மின்னியும் நீங்க ஒர முற நல்லாயிருந்தா எனக்குத்தா சந்தோசம். போன மாசம் முருகன் பொஞ்சாதிய அழச்சிட்டு வந்தான். ஒடம்பு சரியில்லாம எளச்சிப் போனா. மனசு சங்கடப்பட்டுது. நீங்க வந்திட்டுப் போயிருக்கிறதே எனக்குப் பெரிசு. செவந்தி பணத்த உள்ள வையி.”

“இல்ல, நீங்க உங்களுக்கில்லன்னாலும் ருக்குவுக்கு ஏதானும் வாங்கிக் குடுங்க. லீவு வந்திச்சின்னா புள்ளங்கள அழச்சிட்டு நீங்களும் வாங்க சின்னம்மா”

அந்தக் கவரை அவள் கைகளில் வைத்து மூடிவிட்டு அவள் மகளுடன் திரும்புகிறாள்.

ஊரில் வந்து இறங்கும் போது மணி ஏழு.

சைக்கிள் கடை வெளிச்சத்தில் பட்டாளத்தார் நிற்கிறார். ரங்கன் இருக்கிறான்.

இத வந்திட்டாங்க.

“செவந்தி! கன்னிப்பன் அப்பாவாயிட்டான். காஞ்சீபுரம் ஆசுபத்திரில காலம பொண் ஒண்ணு, ஆணொன்னு.”

முதலில் லட்சுமிக்கு இருக்கும் பெண்ணைச் சேர்த்துச் சொல்லுவதாக செவந்தி எண்ணுகிறாள். “அப்ப ஆம்புளப்புள்ள பொறந்திருக்கா. நா அப்பமே நினைச்சே. சுகப்பிரசவந்தானே.”

“முதல்ல பொண்ணு பிறந்து அரைமணி கழிச்சி ஆம்புள. இங்க இந்த விலாசினி டாக்டரம்மா ரெட்டயா இருக்கும்னு கூட சொல்லல, பாருங்க. நா இப்பதா பாத்திட்டு வேணுங்கற சாமானெல்லாம் வாங்கிக் குடுத்திட்டு உங்கள கூட்டிட்டுப் போகலான்னு வந்தே...”

“நாங்க இவ வேல விசயமா போனோம். எப்படியோ சுகமாயிட்டது இல்ல? கன்னியப்பனுக்கு ரொம்பப் பொறுப்பாயிட்டது.”

“இருக்கட்டும் இருக்கட்டும். இன்ஜினிர் பொண்ணு வேலை கெடைச்சிச்சா?”

“இல்ல தாத்தா. பட்டளாத்துலதான் சேர வோணும்.”

“பலே! பலே! சேத்து வுட்டுடலாம்! இப்பதா பட்டாளத்துல உங்களையும் எடுக்கிறாங்களே!”

“அந்தப் பட்டாளம் இல்ல தாத்தா. சோத்துப் பட்டாளத்த சொல்றேன். இத்த உற்பத்தி பண்ணாத்தானே ரெட்டையும் ஒத்தையுமாப் பெருகுற உற்பத்திக்கு ஈடுகொடுக்கலாம்? பவர்டில்லர் பார்த்தம். எழுபதாயிரம் ஏறக் குறைய ஆகும். அது சரி. நமக்கு அங்க எதினாச்சிம் வேலை வாய்ப்பு இருக்குமான்னு பார்த்தே. அந்தம்மா, பொண்ணுங்கள பாக்டரில வேலைக்கு வச்சா காதல் பிரச்னை வந்திடுமாம். அதுனால எல்லாம் மீசைக்காரங்களாவே வைச்சிருக்காங்க... நாமுடிவு பண்ணிட்ட... முதல்ல பால் மாடு வாங்குவோம். பால் உற்பத்தி கூட்டுறவு. பிறகு பவர் டில்லர், அதுக்குள்ளே நாமே ஏதாலும் காம்பொனன்ட் பண்ணும் தொழில்முனைவர் இங்கேயே இங்கேயே!”

“பலே!” என்று ராமையா மீசையில் கை வைக்கிறார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 22

கரும்பாக்கம் பெண்கள் உயர் நிலைப் பள்ளி விழாக் கோலம் கொண்டிருக்கிறது.

‘தான்வா மகளிர் மாநாடு - கரும்பாக்கம் - டிசம்பர் 27’ என்று கொட்டையாக எழுத்துக்கள் தெரியும் முகப்புத் துணி காற்றில் ஆடாதபடி நான்கு முனைகளிலும் அகல நாடாவினால் கம்பங்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பள்ளியின் நடு ஹாலில் மேடை போட்டிருக்கிறார்கள். மேடையைச் சுற்றிக் குருத்தோலைகளாலும் வண்ணக் காகிதங்களாலும் தோரணங்கள் அழகு செய்கின்றன. சுவர்களில் அறிவொளிக் காரர்கள் பொருத்திய படங்கள், வாசகங்கள், வாழ்த்துக்கள்... மாநாடு காணும் தான்வா மகளிருக்கு வாழ்த்துக்கள். கரும்பாக்கம் பால் உற்பத்தியாளர் சங்கம். நிலவள வங்கியின் வாழ்த்துக்கள்.

சின்னச்சின்ன நுணுக்கங்கள்... பெரிய லாபங்கள்... வருக வருக... என்று ஆட்சியாளரையும் டேனிடா திட்ட அலுவலரையும் விரிவாக்கப் பணியாளரையும் வரவேற்கும் வாசகங்கள். காலையில் இருந்து மாநாடு நடைபெறுகிறது. வழக்கமான வரவேற்பு உரை, அலுவலர் ஆட்சியாளரின் வாழ்த்துக்கள் எல்லாம் முடிந்தாயிற்று. அரிமா சங்கத் தலைவி லாவண்யா அம்மாள், இந்த மாநாட்டுப் பெண்களுக்குப் பகலுணவாகச் சோற்றுப் பொட்டலம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். அந்த அம்மையார் தாம் வரவேற்புக் குழுத் தலைவர். முன் வரிசையில் பல முன்னணிப் பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் பூமியுடனும் பெண்கள் முன்னனேற்றத்துடனும் தொடர்பு கொண்டவர்கள். கூட்டு முயற்சியில் நம்பிக்கை வைத்து ஊக்கியவர்கள்.

வானொலிக்காரர்கள் ஒரு புறம் இந்த நடவடிக்கைகளைப் பதிவு செய்கிறார்கள். சரோ... சரோ.. அங்கே நிற்கிறாள். உயரமாக ஒரு வெளிர் நீல சல்வார் அணிந்து குட்டையான முடியைச் சீவி ஒரு வளையத்தில் இறுக்கிக் கொண்டு நிற்கிறாள். எப்படி வளர்ந்து விட்டாள். தன்னம்பிக்கையின் வடிவாக நிற்கிறாள்.

கரும்பாக்கம் மகளிர் பால் உற்பத்திச் சங்கம் காண எப்படிப் பாடுபட்டு பெண்களைச் சேர்த்தாள். பங்குத் தொகை பிரித்து மூலதனம் திரட்டி முப்பத்தைந்து பேருக்கு பால் மாடு வாங்கி பால் உற்பத்தி தொடங்கி நடக்கிறது. நூறு மாடுகள் என் இலட்சியம் என்று நிற்கிறாள். யூரியா தெளித்து வைக்கோலுக்கு ஊட்டமேற்றும் வித்தை இப்போது பலன் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்!” என்ற வாசகம் செவந்தியின் கண்களில் படுகிறது. முன் வரிசையில் அவள் பிற்பகல் நடவடிக்கைகளில் பங்கு பெறுபவளாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் ஏதோ கனவு உலகத்தில் இருப்பது போல் தோன்றுகிறது.

இன்னும் பிற்பகல் விவாதங்கள் தொடங்கவில்லை. அறிவொளிக்காரர்களின் இசை நிகழ்ச்சி மேடையேறி இருக்கிறது. இந்த இளைஞர்கள் எல்லாம் சரோவின் தோழர்கள். ‘டிரம்’ என்று சொல்லும் தாளம் கீ போர்டு கிட்டார் எல்லாம் செவந்திக்குப் புதுமையானவை.

சரோவும் இன்னும் மூன்று பெண்களும் சேர்ந்து பாடுகிறார்கள்.

‘பட்டா - படி கற்போம்
பாட்டா - படி... கற்போம்
பாட்டி - படி
மாமா - படி’

என்று பல்லவியைச் சொல்லி அவர்கள் பாடப் பாட தாளங்களும் குரல்களுமாக மகிழ்ச்சி அலைகள் பரவுகின்றன. “கண்ணுக்கு மை அழகு. கட்டை விரலுக்கு அழகாகுமா? பெண்ணுக்கு கல்வி கொடு. பெருமையை தேடிக் கொள்ளு!” சாந்தி, ஜனாபாய், பாப்பம்மா, எல்லாரும் இந்த மாநாட்டுக்கு எத்தனை நாட்கள் பாடுபட்டிருக்கிறார்கள். இதோ பெரிய மேடம் உட்கார்ந்து பாட்டை அனுபவிக்கிறார். அவ்வப்போது ஒருங்கிணைந்த முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சரோ முனையவில்லை என்றால் இது சாத்தியமா என்று தோன்றுகிறது. கன்னியப்பனுக்குக் கட்டி வீட்டோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தது எத்தனை மடத்தனம் என்று தோன்றுகிறது.

கூடை நிறைய பழத்தில் ஓர் அழுகல் இருந்தால் மணம் இருக்காது. நாற்றம் தான் பரவும் என்ற கருத்தைத்தான் இதுவரை இவர்கள் வாழ்க்கையில் கற்றிருந்தார்கள். குறைகள் குற்றங்கள் ஆற்றாமைகள் புகார்கள். “புருசஞ் செத்து அவ உள்பாடி ரவிக்கை போட்டுட்டு திரியறா” என்ற செய்தி எங்கோ யாரையோ பற்றிக் காற்றில் மிதந்து வரும். உடனே எல்லாப் பெண்களும் விதி மீறி கோடு தாண்டுபவர்கள் என்று கடித்துக் குதறுவார்கள். நாற்று நடும்போது பேசமாட்டார்கள். ஆனால், புளி கொட்டை எடுக்கும் போதோ, உளுந்து பருப்பு உடைத்துப் புடைக்கும் போதோ, இந்த மாதிரி அவதூறுகள் வேலையைச் சுவாரசியமாக்கும். படி தாண்டிப் போன பெண்ணை வீட்டுல சேத்துப்பாங்களா? அது கழண்டு போனதுதா...?

“அதுக்குத்தான் ஆளாயி ஒரு வருசத்துக்குள்ள கேக்க வந்தவங்க கிட்டச்சாட்டி வுடனும்ங்கிறது?” என்பார்கள்.

இப்போது அந்தக் கருத்துக்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. கோடுகள் இன்று அழிக்கப்பட்டிருகின்றன.

பாட்டு நின்று, ஜனாபாய் மேடை மீதேறி மைக்கின் முன் நின்று பேசுவது கூடச் சிந்தையைக் கிளப்பவில்லை.

பெரிய மேடத்தை அவர்கள் மேடைக்கு அழைக்கிறார்கள். அவர் மறுக்கிறார். “நான் இங்கேயே உட்கார்ந்து நீங்கள் பேசுவதைக் கேட்பேன்.”

“கரும்பாக்கம் தான்வா மகளிர் அணி இப்போது மேடைக்கு வருகிறது. இவர்கள் குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்து விட்ட சாதனையாளர்கள். சோதனையில் சாதனை செய்து காட்டிய முன்னணிப் பெண்மணி செவந்தி இப்போது தன் அநுபவங்களைக் கூறுவார்.”

செவந்திக்கு தன்னைத் தான் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆகிறது.

“செவந்தி!”

சரோ ஒடிவந்து அவள் தோளைப் பற்றி உசுப்புகிறாள். “எல்லாம் நினைப்பிருகில்ல? நல்லாப் பேசு.”

செவந்தி மேடைக்கு ஏறுகையில் முழங்கால்கள் நடுங்குவன போல ஒரு பிரமை.

“பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய” என்று சொல்ல வேண்டும் என்று சரோ சொல்லிக் கொடுத்து சொல்லச் சொன்னதெல்லாம் சுத்தமாக நினைவில் வரவில்லை. புளிச்சோற்றின் மிளகாய் பெருங்காய் நெடிமட்டும் நெஞ்சில் நிற்பதாக உணருகிறாள்.

என்ன பேச...?

பெண்கள் மட்டுமில்லை... ஆண்கள்... ஓரமாக நிறைய பேர் நிற்கிறார்கள். பட்டாளத்தார் மீசையை முறுக்கிக் கொண்டு, மூத்த பேத்தியைப் பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டு கன்னியப்பன்... அங்கே... துணுக்கென்று ஒரு குலுக்கல். யாரது? வெள்ளைச்சேலையில் சிறு சிவப்புக்கரை போட்ட சேலை புள்ளிப்போட்ட ரவிக்கை... முடி நரைத்து காது மூக்கு மூளியாக... ஆனால் மலர்ந்த முகத்துடன் சின்னம்மாவா அது?

செவந்தி தன் மனவெழுச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுயலுகையில்,

“பேசும்மா பேசு” என்று சரோ மைக்கை சரி செய்வது போல் உசுப்புகிறாள்.

யாரையும் கூப்பிடாமல் பட்டென்றதுவங்கி விடுகிறாள்.

“எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல. நான் ஆறாவது வரைதான் படிச்சேன். அதற்குப்பிறகு பொம்புள புள்ளக்கி படிப்பு எதுக்குன்னு நிறுத்திட்டாங்க. அப்பல்லாம் அப்படி தாங்க. இப்ப நா எங்க பொண்ணப் படிக்க வைக்கணும்னு படிக்க வச்சிட்டேங்க. அது காஞ்சிபுரம் போயி மூணு வருசம் இன்ஜினியர் படிச்சிருக்குங்க. அதுனாலதா ரொம்ப முன்னேற்றம்.” சரோ தலையில் கை வைத்துக் கொள்கிறாள்.

இவளுக்குச் சட்டென்று தான் தப்பு பண்ணுவதாகப் படுகிறது. “தான்வா மேடம் தாங்க எங்களுக்கு மொத ஊக்கம். அவங்க வூடு தேடி வந்து சொல்லிக் கொடுத்தாங்க. பயிர் பண்ணப்புறமும் வந்து வந்து பார்த்தாங்க. அதுக்கு மின்ன இந்த யூரியாவ வேப்பம் பிண்ணாக்கில் கலந்து போடணும்னு தெரியாது. எங்கப்பா நெறய யூரியா வாங்கிப் போடுவாரு...” பேசிக் கொண்டே போகிறாள். உள்ளுணர்வு சரியாகப் பேசவில்லை என்று சொல்லுகிறது.

ஜனாபாய் மேடை மீதிருக்கும் மணியை அடிக்கிறாள்.

“சரிம்மா நல்லா பேசனிங்க” என்று சொல்லுகிறாள். கடைசியில் நினைவு வந்து விடுகிறது. “ஏதானும் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சிக்குங்க. வணக்கம்.”

சரோ வெளி வராந்தாவில் அழைத்து வந்து கடிந்து கொள்கிறாள்.

ஏம்மா எழுதிக் குடுத்தத்தான படிக்க சொன்ன. அத்தப் படிக்க வேண்டியதுதான. என்னமோ திண்ணையில உக்காந்து கத பேசற மாதிரி பேசுற!”

“அத்த நா அங்கியே பைக்குள்ளே வச்சிட்டே சரோ...”

“போகட்டும்போஅடுத்ததடவை நல்லாப் பேசுவ போயி உக்காந்துக்கோ...”

“சரோ ராசாத்தி சின்னம்மா போல இருக்காங்க. வந்திருக்காங்க. கடாசில வெள்ள சீல உடுத்திட்டு நோட்டீசு குடுத்தியா.”

“அவங்க ஆஸ்டல் நடத்துறாங்களே சொர்ணவல்லியம்மா அவங்க மகதா இந்த லயன்ஸ் லாவண்யாம்மா. நாமதா வரச் சொல்லியிருந்தோமே. வந்திருப்பாங்க போல. இரு நான் பாத்திட்டு முன்ன கூட்டி வாரேன்.”

இதற்குள் செவந்தியை சாந்தி கூப்பிடுகிறாள். “நீங்க இங்க வந்து உக்கர்ந்துக்குங்க. அப்புறம் பேசப் போங்க மககிட்ட...”

சரோ வெளியில் சென்று வானொலிக்காரர்களுக்குத் தேநீர் கொண்டு வருகிறாள்.

மேடையின் மீது பெரிய குங்குமப் பொட்டும் பெரிய - மூக்குத்தியுமாக குட்டை குஞ்சம்மா கணிரென்று பேசுகிறாள்.

“எங்களுக்கு ஏரித் தண்ணிர் தான் பாசனம். முன்னெல்லாம் ஏரியில் ஒரு போகத்துக்கு நிச்சியமாத் தண்ணீர் கிடைக்கும் பயிர் வைப்போம். மூணு வருசமா தண்ணி சரியாக இல்லை. போன வருசந்தான் நான் தான்வா பயிற்சி எடுத்தேன். கடல போட்டு நல்லா விளைஞ்சிச்சி. ஏரி தண்ணிதா பிரச்னை. ஒரு பக்கம் ஏரி மண்ண வெட்டி வெட்டி மண்ணெடுத்திட்டுப் போறாங்க. இன்னொரு பக்கம் ஏரிய தூத்து மேடு பண்ணி பிளாட் போட்டு வூடு கட்டுறாங்க. போனவருசம் பெரிய மழ வந்தப்ப அங்க கட்டியிருக்கிற மூணு வூடும் தண்ணிக்கு நடுவ நின்னிச்சி. எங்களுக்குத் தண்ணி வார பக்கம் காவாயில தண்ணி வாரதில்ல. மதகு மேலும் தண்ணி கீழும் இருந்தா எப்படித் தண்ணி வரும்? நாங்க தான்வா பெண்கள் ஏழெட்டுப் பேர் தாசில்தார் ஆபிசிற்குப் போனோம். கூட்டம் போட்டுச் சொன்னோம். எல்லாம் பார்க்கிறோம். சத்தம் போடாதீங்கன்னிட்டாங்க. இதுக்கு நாமெல்லாம் சேர்ந்து ஒரு முடிவு கட்டணும். இங்க வந்து பிறகு நிறைய ஊரில இது போல ஏரி பராமரிக்காம உதவாம போறதா தெரியுது. தனித்தனியா அரசாங்கத்துல கேட்டுப் பிரயோசனமில்ல. இதுக்குக் கூட்டா சேரணும். நன்றி. வணக்கம்.”

குஞ்சம்மா உட்காருவதற்கு முன்பே இன்னொருத்தி நெடியவள் ஆத்திரத்துடன் மேடையேறுகிறாள்.

“அவங்க சொல்றது மெய்தாங்க. எங்கூரிலும் இது நடக்குது..”

“பேர் சொல்லுங்க. எந்தக் கிராமம் சொல்லுங்க?”

“என் பேரு சக்குபாய். எலக்கூரு எங்க ஊரு. திருவள்ளுர் வட்டம். எங்களுக்கு நஞ்செய்ப் பயிர் போடுற நிலந்தாங்க. ஏரிப்பாசனம். இப்ப கேணியும் தோண்டியிருக்கிறோம். மண்ணெடுத்து மண்ணெடுத்து தண்ணி கீழே போயிட்டது. ஏரி பாதியும் குப்பையும் அதும் இதும் கொட்டி தூத்து பிளாட் போட்டு வித்திட்டாங்க. கேட்டா, நகர்ப்புற அபிவிருத்தின்னு சொல்றாங்க. விளைச்சல் நிலமெல்லாம் பிளாட்டாகுதுங்க. எங்கூட்டுக்காரரும் சேர்ந்து, பஞ்சாயத்துப் போர்டு, தாசில்தார்னு முறையிட்டுப் பார்த்தோம். இப்ப எங்கூட்டுக்காரரு பிடிசன் போட்டு வயல்ல வூடுகட்டக் கூடாதுன்னு ஸ்டே வாங்கியிருக்காரு. இதுக்குன்னு செலவுக்கு என் நகையக் கழட்டிக் குடுத்திருக்கேங்க. இது மாதிரி விளைச்சல் நெலம் தண்ணி எல்லாம் போயிட்டா, நம்ம விவசாயத் தொழில் என்ன ஆவுதுங்க? இதுக்கு எல்லாம் சேந்து நடவடிக்கை எடுக்கணும். தரிசு நிலத்தில வூடு கட்டலாம். விளையற நிலத்தக் குடுக்காம பாத்துக்கணுங்க... அதா.”

செவந்திக்குத் தன்னை விட எல்லோரும் குறிப்பாக விசயத்தை நல்லபடியாகப் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. வியாபாரிகள் விலை வைக்கும் பிரச்னை, உழவர் பிரச்னை, இதெல்லாம் அவள் குறித்துக் கொண்டிருந்தாள். இப்போது அவள் முறை முடிந்த பிறகு எப்படிப் பேசுவது?

அடுத்தவள் யார் என்று பெயரைக் கவனிக்கவில்லை. ஆங்காங்கே பேச்சுச்சத்தம் அமைதியைக் குலைக்கிறது. ஜனா பாய் மேசையைத் தட்டுகிறாள். அரிமா லாவண்யா அம்மாளும் பெரிய மேடமும் எழுந்திருக்கின்றனர். “நீங்க உக்காந்துக்கங்க. நான் வாரேன்” என்று அவர் மட்டும் எல்லோரையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே விடை பெறுகிறார். மேடையில் கரண்ட் பிரச்னை அடிபடுகிறது.

“நஞ்சவயல் தான். கிணற்றில் தண்ணீர் கிடக்கு. ஆனால் கரண்ட் கிடைக்கல்ல. மின்ன பதினாலு மணி நேரம் கரண்ட் கிடைச்சிச்சி. இப்ப பத்து மணி நேரமா குறைச்சிட்டாங்க. பேசுறாங்க. எல்லாரும் விவசாயிக்கு மின்சாரம் ப்ரீன்னு. ஆனா, அது எங்கே கிடைக்குது. தொழிற்சாலைக்கு முன்ன குடுக்கறாங்க. எங்களுக்கு பக்கத்துல ஃபாக்டரி இருக்கு. இரும்பு பீரோ செய்யிறாங்க. அதுக்கு எப்பவும் கரண்ட் போகுது. இரும்பு பீரோவவுட பயிரு முக்கியமில்லீங்களா? பயிரு விளஞ்சாத்தான பீரோவுல வச்சுப் பூட்டலாம்.”

எல்லோரும் கைதட்டிச்சிரிக்கிறார்கள்.

“தண்ணியில்லாம முளவாச் செடி காஞ்சி போச்சிங்க. அப்படியே நஷ்டம். போயிப் போயி ஈபி ஆபீசில் இன்ஜினியருங்களப் பார்த்தோம். தான்வா மகளிர் சங்கம் சேந்து போயிப் பிடிசன் கொடுத்தோம். சில பேரு சொல்றாங்க. திருட்டுக் கரண்டு எடுக்கிறதாம். இல்லாட்ட ‘சம்திங்’ குடுக்கிறதாம். அதெல்லாம் நேர்மையா? தான்வா பொண்ணுங்க அப்படியெல்லாம் குறுக்கு வழிக்குப் போகக் கூடாதுன்னு தீர்மானம் வச்சிட்டோம். நமக்கு விவசாயம் முக்கியம்னு கரண்டுக்கு கவர்மெண்ட் வழி செய்யனும்...”

அடுத்து வருபவள் அபிராமவல்லி. மதுராந்தகம் பக்கம். பொத்தேரி கிராமம்.

“ஏம்மா நாம கஷ்டப்பட்டு நெல்லு பயிர் பண்ணுறோம். அதை வித்தாத்தான் நமக்கு எல்லாத்துக்கும் காசு. நமக்கு எப்படி விலை கிடைக்கிது? மூட்டை முன்னூறு முன்னுத் தம்பதுன்னு வச்சிருக்காங்க. ஆனா அரிசியாக்கிட்டா அது கிலோ பத்து ரூபாய்க்கு மேல போகுது. சரி நாமே நெல்லக் காய வச்சு ஆறவச்சி அரிசியாக்கி விக்கலான்னா முடியிதா? உடனே களத்து மேட்டிலேயே வியாபாரிங்க நம்ம மூடையைச் சாதகமாக்கிக் குறைச்ச விலை நிர்ணயிக்கிறாங்க. நாம கடனை அப்பத்தான் உடனே அடைக்க முடியும். இல்லாட்டி வட்டிகட்டணும். சர்க்கார் விற்பனைக்கூடம் வச்சிருக்காங்க. ஆனா, இங்கே வெளியே இருக்கிற வியாபாரிங்க தான் அங்கேயும் விலையை கம்மியா நிர்ணயிக்கிறாங்க. யாருமே அதிக விலைன்னு ஏற்றாமல் பாத்துக்கறாங்க.”

செவந்தி இதே பிரச்னையை இவ்வளவு நன்றாகச் சொல்லியிருக்க முடியாது என்று நினைக்கிறாள்.

இப்படி வரிசையாக ஒவ்வொருவரும் வந்து பிரச்னைகள், அநுபவ பாடங்கள் என்று பேசுகிறார்கள்.

ஒரு பெண் சுற்றுப்புறச் சூழல் பற்றிப் பேசுகிறாள். குப்பையை, சாணி கூளங்களை அப்படியே மேடாகக் கொட்டுவதில்லையாம். எட்டடிக்கு ஆறடி பள்ளம் தோண்டி அதில் குப்பையும், கூளமும் அடுக்கடுக்காகப் போட்டு மண்புழு விட்டிருக்கிறார்களாம். ஊட்டச் சத்து மிகுந்த உரமாகிறதாம். அதை விதைக்கும் கொடுக்கிறாளாம். பால் மாடு பராமரிப்பு, அதன் பிரச்னைகள்...

ஒரு வயசு முதிர்ந்த உழைப்பாளிப் பெண் எழுந்து நிற்கிறாள். கீச்சுத் தொண்டையில் கேட்கிறாள்.

“ஏம்மா, பொண்டு வளா, எல்லாம் சரித்தா, இந்த ஆம்புளங்க சாராயம் குடிக்காம, ஒழுங்கா இருக்க எதனாலும் வழி சொல்லுவீங்களா?”

கொல்லென்று அமைதி படிகிறது. பிறகு மற்றவளைப் பார்ப்பதும், நமட்டுச் சிரிப்புச் சிரிப்பதுமாக மழுப்புகிறார்கள்.

“ஏண்டி சிரிக்கிறாயா? எங்க காலத்துல இப்படி எதும் பேசத் தெரியாது; படிக்கத் தெரியாது. குடிச்சிட்டு வந்தா, அடிச்சு மொத்தினா, சோறெடுத்து வைடீன்னான். வச்சோம். உழச்சிட்டு வரவன், காவாயில குளிச்சிட்டு கள்ளுத்தண்ணிய ஊத்திட்டுத்தா வீட்டுக்கு வருவா. இப்ப என்னன்னா, நெலத்து வேல கேவலம்னு கொத்துக் கரண்டி புடிக்கிறான். ரிஸ்ட் வாட்ச், சர்ட்டுன்னு ஆபீசர் கணக்க ஒரு நாளக்கி நுத்தம்பது சம்பாதன பண்றான். அத்தயும் குடிச்சி, பொண்டாட்டி தாலியையும் உருவிட்டுப் போயிக் குடிக்கிறான். அதென்ன எளவுடி! ஆயிர ரூவாக்கு ஒரு பாட்டிலாம். படிக்கிற புள்ள குடிக்கிறான். வெள்ளயும் சுள்ளயுமா உடுப்புப் போட்டு கிட்ட ஆபீசரும் குடிக்கிறானுவ இதெல்லாம் உனுக்கு எப்படித் தெரியும்னு கேக்குறியளா? கைப்பூணுக்குக் கண்ணாடி வேணுமா? இந்தப் பொம்புளக, படிச்சி என்ன பிரயோசனம்? நாலு காசு சேத்து காதுல மூக்குல தொங்க விட்டுக்கிட்டு என்ன பிரயோசனம்? எங்க பெரிய பண்ண வூட்டில, புறா போல பொண்ணு, நூறு சவரன் போட்டு, காணி எழுதி வச்சி, பட்டணத்துல போயி கலியாணம் செஞ்சி வச்சாங்க. ஆறாம் மாசம் பொண்ணு வூட்டுக்கு வந்திரிச்சி. ஒரு நகை இல்ல. உடம்புல பாவி சிகரெட்டால சுட்டிருக்கறா. இப்படி எல்லாம் நாங்க கேட்டதில்லம்மா! புள்ள இல்லன்னா தள்ளி வச்சிட்டு ரெண்டாவது கட்டுவாங்க. அப்பம் படிக்கல. இப்ப படிச்ச பொண்ணுக்கு இப்பிடி மதிப்பின்னா, இது என்னாடிம்மா மின்னேத்தம்!” ஜனாபாய் மணி அடிக்கிறாள்.

“பெரியம்மா, ரொம்பக் குறிப்பாக விஷயங்களை முன் வைக்கிறார். படித்த பெண்கள் இதற்குப் பதில் சொல்ல வரவேண்டும்!”

சரோ, அவர்களுக்குக் காரா பூந்திப் பொட்டலமும், தம்ளரில் தேநீரும் வழங்கும் பணியில் இருக்கிறாள்.

பதிலாக விஜயலட்சுமி, இரண்டு பெண்களுக்குத் தாய் மேடையேறுகிறாள். “பெண்கள் இருவரும் பத்து முடித்திருக்கிறார்கள். நிலத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். ஆனால், பெண் கேட்டு வருபவர்கள் அதை மதிக்கவில்லை. பத்துக் கூடப் படிக்காத தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் முறை மாப்பிள்ளை, முப்பது சவரன் கேட்கிறான். அம்பத்தூர் ஃபாக்டரியில் வேலை பார்க்கும் ஒரு மாப்பிள்ளை, பைக் வாங்கித் தரச் சொல்கிறான். விசாரித்ததில் அவன் குடிகாரன். ஒழுக்கம் இல்லாதவன் என்று தெரிகிறது. முன்பெல்லாம் நிலம், உழைப்பு, ஆடு, மாடு, உறவு எல்லாம் மதிப்பாக இருந்தன. இப்போது உயிரில்லாத பொருட்கள் டி.வி., பைக், கிரைண்டர், மிக்ஸி அதோடு கூரை தாலியும் பெண் வீட்டிலிருந்தே கேட்கிறார்கள்...”

ஜனாபாய் மணியடிக்கிறாள்.

“இன்னும் யாரேனும் பேச இருக்கிறார்களா?”

ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். செவந்தி எழுந்து நிற்கிறாள். மறுபடி மேடை ஏறலாமா? அநுமதிதருவார்களா?

இவள் தயங்கும் போதே ஓர் அற்புதம் நிகழ்கிறது.

“நா ரெண்டு வார்த்தை சொல்லட்டுங்களா?”

வெள்ளைச்சீலையில் சிவப்புக்கரை... வெள்ளை ரவிக்கை... சின்னம்மா...

காது மடல்கள் குப்பென்று சிவப்பது போல்செவந்திக்குத் தோன்றுகிறது.

“தலைவி அம்மா அவர்களே! சகோதரிகளே, பெண்களே! சம்பந்தப்பட்ட எல்லா விசயமும் பேசினர்கள். குடிபற்றி, வரதட்சணை பற்றி எல்லாரும் சொன்னிர்கள். மிகப் பெரிய கொடுமையை இங்கே சொல்லணும்னு நினைக்கிறேன். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழணும். அதற்குதான் ஆண்டவன் ஆணையும் பெண்ணையும் படைச்சிருக்கிறார். கலியாணம்னு சேத்து வைக்கிறாங்க. பொம்பிள கிட்ட வாழ்நாள் முழுதும் இருக்கப் போற, வாழப் போற ஆண், புடிச்சிருக்கான்னு கேக்கிறதில்ல. கலியாணமே ஆம்பிளக்குத்தா. அவ ஏதோ விதி வசத்தால முன்னாடி செத்திட்டா அவ பாவியாயிடறா. அவ செத்திட்டா, இல்ல இருக்கறப்பவே கூட அவன் வேற கலியாணம் செய்யிற கொடுமை... இன்னிக்கு நடக்குது. புருசன் செத்து போகலன்னாலும் உழைக்கிறா. அவன் செத்தா பத்தாம் நாள் அவள உக்காத்தி வச்சி பூ முடிச்சி புதுசு உடுத்தி கை நிறய வளயல அடுக்கி அத்த ஒடச்சி பொட்ட அழிச்சி, பூவப் பிச்சி இதே பொம்பிளங்க எதுக்கு அவமரியாதை பண்ணணும். புருசன் செத்து போனா அவ உலகத்திலே இருக்கக் கூடாதா? அவ பேரில் அத்தினி நாக்கும் அபாண்டம் போடக் காத்திருக்கும்.

“அவளுக்கு ஒரு பொண்ணு இருந்தா அது மேலயும் அந்த பாவம் விடியும். அதுக்கு ஏதானும் தவறு நேந்திச்சின்னா, தாய நடு வீதில நிக்க வச்சி, உறவு சனமின்னு சமுதாயம்னு நாட்டாம பண்ணுறவ அடிப்பா. இந்த பொம்பிளங்க ஏன், சொந்த அக்கா தங்கச்சியே பாத்திட்டிருப்பா. அவ புருசன் இல்லாததால எப்பவும் யார் குடியும் கெடுக்கவே நினைச்சிட்டிருப்பாளாம். அவ சொந்த அப்பாவே அவளுக்குன்னு சேர வேண்டிய சொத்தக் கூட அவ பேருக்குக் குடுக்க மாட்டா. ஏன்னா அவ சாதி இல்லாம யாரையும் தேடிட்டுச் சொத்தக் கொண்டு போயிடுவாளாம். அவ்வளவு பயம் புருசனில்லாதவகிட்ட!

“நீங்க எல்லாம் விவசாயம் செய்யிறவங்க! பயிர்த் தொழில் செய்யிறவங்க! உங்கள்ல எத்தினி பேருக்கு உங்க பேரில பட்டா நிலம் இருக்கு? அண்ட கட்டுறதிலேந்து அறுப்பு அறுக்கிற வரை நீங்க வேலை செய்யிறீங்க. நிலம் மட்டும், புருசன் பேரிலோ, அப்பா பேரிலோ, மாமன், மச்சான் பேரிலோ இருக்கும்.

“இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, பெண்ணுகளப் படிக்க வச்சிடறோம். வரதட்சணை கேக்கறாங்கங்கறது மட்டும் பிரச்னை இல்ல. அடிப்படையில் நாமே நம்ம பொண்ணுகளே, அக்கா, தங்கச்சி, அண்ணி, நாத்தின்னு ஒருத்தருக்கொருத்தர் விரோதமாப் பார்க்கிறோம். புள்ள குடிகாரனா இருப்பா. கலியாணம் கட்டினாதான் திருந்துவான்னு கட்டி வைப்பா. பிறகு இந்த தாயே இவ வந்ததாலே அவன் குடிச்சிக் கெட்டுப் போறாம்பா. அவ, அம்மாளப் பத்தி பொண்டாட்டிட்டச் சொல்லி அவள ஏமாத்தி நகை நட்டு வாங்குவா. அவள் பத்தி அம்மாக்கிட்டச் சொல்லி அவ ஏதானும் நாத்துநட்டு கள எடுத்தும் சம்பாதிச்சிட்டு வந்தா அத்தப் புடுங்கிட்டுப் போவா. எத்தினி குடும்பங்கள்ள இப்படி நடக்குது?

“நீங்க... ஏ நாம எல்லாம் முதல்ல ஒத்துமையா இருந்து, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணும். பொண்ணா பிறந்திட்டா அவளுக்குச் சாதி மதம் ஏதும் இல்ல. நாம ஒத்துமையா இருந்தாத்தா, நம் முன்னேற்றத்துக்குப்பாடுபட முடியும்...”

படபடவென்று கைத்தட்டல் வெகு நேரம் ஒலிக்கிறது.

“குடியை எதிர்த்து நாம போராடலாம். வரதட்சனையை எதிர்த்தும் நாம போராடலாம். பெண்களால் எல்லாம் செய்ய முடியும். நாம ரொம்ப ஒத்துமையா இருக்கணும். ஒரு பொண்ணு அவளா கெட்டுப் போகமாட்டா. ஆனா அப்படி முத்திரை போட்டுட ஆணுக்கு ஒரு அதிகாரமா உரிமை கொடுத்திருக்காங்க. இதெல்லாம் நாம ஒத்துமையா நின்னுதான் மாத்தணும். எனக்கு இதப் பேசணும்னு தோணிச்சி. வந்தேன், வணக்கம்.”

கைகுவித்துவிட்டு அவள் படி இறங்கப் போகுமுன் ஜனாபாய் அவளை நிறுத்துகிறாள்.

“அம்மா ரொம்ப நல்லாப் பேசினிங்க. நாங்க இதெல்லாமும் தீர்மானம் போடுகிறோம். உங்க பேரு, நீங்க எந்த கிராமம்னு சொல்லுங்க...”

செவந்தி விலுக்கென்று எழுந்து மேடைக்குப் போகிறாள்.

“இவங்க அதே ஊர்தா. எங்க சின்னம்மா”

கைத்தட்டல் அதிருகிறது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 23

செவந்தி சின்னம்மாளை வீட்டுக்கு வரும்படி வருந்தி அழைக்கிறாள். ஆனால் அவள் வீட்டுப் பக்கம் திரும்பாமலே போய்விட்டாள். “நீங்கள் எல்லோரும் முன்னேற்றமாக வந்ததைப் பார்க்க ஆசை இருந்தது; இருக்கட்டும் அம்மா...” என்று மட்டும் சொன்னாள்.

இதைக் கேள்விப்பட்ட பிறகு அப்பன் மிகவும் தளர்ந்து போனார். அம்மாவைக் காணுந்தோறும் சண்டை. கத்தல்கள். வண்டியோட்டிக் கொண்டு எருவடிப்பார். வேலைக்குப் போவார். மாலையில் நன்றாகக் குடித்துவிட்டு வருவார்.

சரோதான் அவரைத் திருத்த அன்றாடம் மல்லுக்கு நிற்பவள். "தாத்தா உங்களுக்கு அப்படி என்னக் கஷ்டம். நீங்கள் இப்படி குடிச்சுக்கிட்டே இருந்தால், குடல் வெந்து போகும். நீங்கள் நினைக்கிறாப்பல சீக்கிரம் செத்துப் போக மாட்டீங்க. யமன் தூண்டில மாட்டி இந்த சாராயத்தால சித்திரவதை பண்ணுவா, நாங்க வீட்டைக் கவனிப்பமா? மாட்டைப் பாப்பமா, பயிரைப் பாப்பமா? நாங்க சந்தோசமா இருக்கணும்னு நினைக்கிறீங்களா இல்லையா?”

“நா... ராசாத்திய ஒருக்க பாக்கணும், எத்தனை கொதிச்சிருந்தா அவமேடையில பேசிப்பிட்டு இங்க வராம போயிருக்கா.”

“ஐய, அவங்களுக்கு அப்படி விரோதமில்ல தாத்தா, இன்னும் இங்க இருகிற பொம்பிளங்க சாதிக் கெட்டு சாங்கியம்னு அசிங்க மெல்லாம் பண்ணக்கூடாது. அதனால நாம தான் கட்டுக்குலைஞ்சு போகிறோம்னு சொன்னாங்க. அப்பிடிச் சொன்னாத்தா இந்த மரமண்டைகளில் உரைக்கும். அவங்க அன்னைக்கு லாவண்யா அம்மா கூடக் காரில் வந்திருந்தாங்க. சோத்துப் பொட்டலமெல்லாம் அவங்கதான் ஏற்பாடு செய்திருந்தாங்க. அதெல்லாம் எடுத்து வச்சிக்குடுக்க ஒத்தாசையா இவங்க வந்திருந்தாங்க. அப்படியே திரும்பி போயிட்டாங்க. நா அழச்சிட்டு வாரேன். நீங்க இனி இந்தச் சனியன் பக்கம் போறதில்லன்னு ஏங்கிட்ட சத்தியம் வுடுங்க...”

“அவ வரமாட்டாம்மா. நாங்க அத்தினி கொடும செஞ்சிருக்கோம். புள்ளயக் கொண்டு வந்து ஒரு சமயம்ன்னு விட்டப்ப என்ன செஞ்சோம். அத்த வெரட்டி அடிச்சோம். அவ மனசு எரிஞ்சி சாபமிட்டத எப்படி மறக்க முடியும்? முருகனுக்கு என்னமோ வராத நோவு வந்திருக்காம். சோறு தண்ணி இறங்காம குச்சியாப் போயிட்டானாம்.”

“பாவம்... பாவம் செஞ்சவங்க... அனுபவிக்கிறம்... யம்மா கண்ணு அவனுக்கு ஏதானும் ஆச்சின்னா அந்தப்புள்ள கழுத்து நிறைய தங்கமும் பட்டுமா லட்சணமா வந்து நின்னிச்சே அது கதி...” மார்பில் அறைந்து கொள்கிறார். கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. செவந்தி திடுக்கிட்டுப் போகிறாள்.

“அப்பா அப்பா... அதெல்லாம் ஒண்ணுமில்ல. முருகனுக்கு அப்படி ஒண்ணுமில்ல. சும்மா சிகரெட் குடிக்கிறா. அது அல்சர் வந்திருக்கு. அதுக்கு ரொம்ப பவுரா அமெரிக்காவிலிருந்து மருந்து தருவிச்சி குடுக்கறாங்களாம். ஒண்ணுமே பயமில்லைப்பா...” என்று தேற்றுகிறாள்.

“செங்கண்ணு பொஞ்சாதி சொன்னாளாம். இப்ப இவ எதுக்கு வந்தா? கொம்பேறி மூக்கம் பாம்பு கடிச்சிட்டு மரத்து மேல ஏறி நின்னு செத்தவம் புகையிறானான்னு பாக்குமாம். அப்படி வந்து மீட்டிங்கி பேசுனாளாம். அவளப் பாம்பு புடுங்கன்னு சொல்றா, எங்கிட்டியே!”

“இந்தப் போக்கத்தவங்க பேச்ச நீங்க நம்புறீங்களப்பா? இத பாருங்க, முருகனுக்கு நல்லபடியாயிடும். அப்படில்லாம் நமக்கு வாராது. கோழி மிதிச்சிக் குஞ்சி சாவுமா? சின்னம்மா அப்படி நிச்சயம் நினைக்கறவங்க இல்ல...” என்று சமாதானம் செய்ய முயலுகிறாள்.

கரும்பாயி அம்மன் கோயில் புதுப்பிக்கப்படுகிறது. சித்திரை மாசத்தில் குட முழுக்குச் செய்ய வேண்டும் என்று ஊரில் எல்லோரும் கூடித் தீர்மானிக்கிறார்கள்.

தைப் பொங்கல் கழிந்து மாசி மாசத்தில் ஓர் அந்தி நேரம்... கோயில் முகப்பில், தோளில் தொங்கிய மூட்டையுடன் கோயில் சாமியார் வந்து உட்காருகிறார். அப்போது கோயில் கமிட்டிக்காரர்கள் அங்கிருக்கிறார்கள். சொந்தமான சாமியாரைக் கண்ட சந்தோசம் ரங்கனுக்குப் பிடிபடவில்லை, வீட்டுக்கு ஓடி வருகிறான்.

“செவந்தி... நம்ம ஊருக்கு நல்ல காலம் பிறந்திட்டது”

“எனக்கு உடம்பு புல்லரிச்சி போச்சி. அந்தப் போலிச்சாமி, என்ன திமிரில சாமி ஜல சமாதியாயிட்டாருன்னு சொன்னா!... பச்சில மூட்ட தொங்குது. அதே முகம். தாடி முடி அதே மாதிரி இருக்கு. வந்திட்டாங்க. ‘சாமி உங்கள நினைக்காத நாளில்ல.. இந்த அம்மாதா உங்கள இப்பக் கொண்டு விட்டான்னு’ சொல்லி அப்படியே வுழுந்தே. வாங்க போய்க் கும்புட்டு வரலாம். அப்பா எங்கே?”

“சரோ கதவடச்சி உள்ள போட்டிருக்கு.”

“அவுரயும் கூட்டிட்டுப் போவோம் வா....”

செவந்திக்கு ஆறுதலாக இருக்கிறது. வீட்டிலுள்ள அனைவருமே, சாமியைக் கண்டு வணங்கப் புறப்பட்டு விடுகிறார்கள். அம்மா மட்டும் வீட்டில் இல்லை.

கதவைப் பூட்டிக் கொண்டு சரோ, சரவணன் செவந்தி ரங்கன் அப்பா எல்லாரும் முகம் தெரியாத இருட்டில் செல்வதை சுந்தரி பார்க்கிறாள். “கோயிலுக்குப் போறம்...” என்று சுருக்கமாகச் செவந்தி தெரிவிக்கிறாள்.

கோயிலின் முன்மண்டபம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. வாயிலிலேயே பெரிய வாழைத்தண்டு விளக்குகள் சாமியார் வந்து விட்டார் என்று வந்திருக்கும் சிலரை இனம் காட்டுகிறது. வரதராஜன், சிவலிங்கம், நாச்சப்பன் இவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள். சாமியார் கிணற்றடியில் நீரிறைத்துத் தலையில் ஊற்றிக் கொண்டு இருக்கிறார்.

“நிறையப் பச்சிலைக் கொண்டாந்து இந்நேரம் அங்கே வச்சிட்டிருந்தாரு” என்று பூசாரி தெரிவிக்கிறான்.

நீராடி முடிந்து திருநீரு பூசிக் கொண்டு வேம்படியில் வந்து உட்காருகிறார்.

ரங்கன் அருகில் செல்லுமுன் சாமியே கையசைக்கிறார்.

அவன் பணிவுடன் அருகில் செல்கிறான்.

சாமி அவனை அழைக்கவில்லை. அப்பனைத்தான் கையசைத்து அழைக்கிறார்.

“சாமி...!”

குரல் தழு தழுக்க அப்பா அவர் காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுகிறார்.

அவர் எழுந்து அவரை எழுப்புகிறார். அப்பாவுக்கு நிற்க முடியவில்லை.

அவர் பிடித்து அருகில் உட்கார வைத்துக் கொள்கிறார்.

“எத்தனை நாளா இப்படி...?”

அப்பா பதில் சொல்லவில்லை. தேம்பித் தேம்பி அழுகிறார். “நாளக்குக் காலம, சுத்தமா ஒண்ணும் சாப்புடாம வெறும் வயிற்றோட இங்க வாங்க... ஒரு பச்சிலைக் கசாயம் தாரேன். மொத்தம் நாலு வேளை. ரெண்டு நா... எல்லாம் சரியாப் போயிடும்... அந்தத் தண்ணி நெனவே வராது...” முதலில் எல்லோருக்கும் என்னதென்று புரியவில்லை.

மூடிக்கிடந்த கண் திறந்தாற்போல் ஒரு பிரகாசம்...

இரண்டு நாட்களும் காலையிலும் மாலையிலும் அவரே பயபக்கதியுடன் சென்று அந்த பச்சிலைக் கசாயத்தை வாங்கிக் குடிக்கிறார். வெறும் தயிர் சோறுதான் உணவு.

இரண்டாம் நாள் கசாயம் கொடுத்ததும், “நாளைக்குக் காலம எண்ணெய் தேச்சுத் தலை முழுகிடுங்க. உங்களைப் பிடிச்ச வேதனை நமைச்சல் எல்லாம் போய் மன அமைதி வரும்...

“பிறகு, இஞ்சி நூறு கிராம் வாங்கிக் கழுவித் தோல் சீவித் துண்டு துண்டா நறுக்கி நிழல் உலர்த்தலாகக் காய வையுங்க. சுத்தமான தேன் கால் லிட்டர் வாங்கி அதில் அதைப் போடுங்க.. காலம வெறும் வயிற்றில் ஆறுதுண்டு இஞ்சியும் ஒரு ஸ்பூன் தேனும் சாப்பிடுங்க. சாராயம் யாரேனும் குடிச்சிட்டு வந்தால் கூடப் பிடிக்காது. காத தூரம் ஒடி வருவீங்க.”

ஊர் முழுதும் சாமியாரின் இந்த வைத்தியம் பற்றிப் பரவுகிறது. சரோ அவசரமாக மகளிர் சங்கத்தில் ஒரு கூட்டம் கூட்டுகிறாள். “சாமியார் பச்சிலை மருந்து கொடுக்கிறார். எல்லாரும் அவவ புருசன அண்ணன் தம்பி அப்பான்னு கூப்பிட்டு வாங்க...” என்று விளம்பரம் செய்கிறாள்.

பிறகு சாமியாரிடம் சென்று பணிகிறாள் “சாமி இந்த ஊரு சனங்கள் நல்லவர்கள். உழைப்பாளிகள். சாராயம் ஒண்ணு தான் கெடுக்கிறது. ஆந்திரத்தில் பெண்கள் போராடினார்களாம். அது போல் இங்கு வராதான்னு ரொம்பவும் ஆசைப் பட்டேன். சாமி நீங்க இங்கேயே இருக்கணும். எங்க ஊருல ஓராள் கூட அந்தக் கண்ராவி பாட்டில இங்க வரவுடக்கூடாது. உங்களுக்கு நாங்க என்ன உதவின்னாலும் செய்யிறோம்.”

“இஞ்சி நார் இஞ்சிதான் கிடைக்கிறது. காஞ்சிபுரம் போயி சுத்தத் தேனும் இஞ்சியும் வாங்கிட்டு வந்தாங்க. ஏங்க்கா தண்ணி இருக்கயில் நாம ஏன் இஞ்சி மஞ்சா போடக்கூடாது.”

“லட்சுமியா சொல்கிறாள்? என் லட்சுமி கன்னியப்ப அவனுக்கு இந்தப் பழக்கம் உண்டா?”

லட்சுமி புருசனைக் காட்டிக் கொடுத்துவிட்டதை எண்ணி நாணத்தால் குனிகிறாள்.

“நெதியும் இல்லன்னாலும் என்னிக்கின்னாலும் குசியா இருக்கறச்ச வாங்கி ஊத்திக்கும். எங்க மாமா பட்டளாத்துல முன்ன குடிப்பாராம், ஆனா அங்கேந்து வந்த பிறகு அதும் குடிச்சு குடிச்சே புத்தி கெட்டு மகன் போன பிறகு வெறுத்துப் போனவர். மாமாக்குத் தெரிஞ்சி அவர் இங்க இருக்கும் போது இவருக்குப் பயம். அதான் சாமிக்கிட்ட கூட்டியாந்திட்டே” என்றாள்.

அன்று பால் எடுத்துக் கொண்டு சொசைட்டிக்கு வந்தவனைச் சரோ பிடித்துக் கொள்கிறாள்.

“மருந்து குடிச்சப்புறம் அந்தப்பக்கம் போகவே கூடாது. தெரியுமில்ல. அப்படிப் போனா ஆளு போகமாட்டா. கை கால் விழுந்திடும்.”

“இல்ல சரோ நிச்சயமா இல்ல. இந்த வேல்ச்சாமி பழனி இவனுவதா என்னிக்கானும். சத்தியமா இனி மாட்டே சாமி கிட்ட சத்தியம் வுட்டிருக்கே... எல்லாம் ஃபுல் ஸ்டாப். தெரியுமில்ல. அப்படின்னா முற்றுப்புள்ளி. பொண்ணிருக்கு ஆணிருக்கு. அடுத்த வருசம் பவர் டில்லர் வாங்கணும்!” அவன் நாணிக் குறுகுகிறான்.

“அது சரி எங்களயெல்லாம் நீ வெரட்டிட்ருக்க. நீ எப்ப கல்யாணச் சீலை உடுத்தி, தலைப்பட்டம் கட்டி, மூக்குத்தி செயின் போட்டுகிட்டு மாப்புள கூட வரப்போற? ஏன் சரோ?”

“அதெல்லாங் கிடையாது. மூக்குத்தி, செயின் சரிகைச் சேலை எதும் கிடையாது. நீங்க லட்சுமிய கட்டிட்டபுலதா, சாமி முன் மால மாத்திட்டு போயி ரிஜிஸ்தார் ஆபீசில பதிவு பண்ணுவோம்.”

“விருந்து?”

“போட்டுட்டாப் போச்சி!”

“அப்ப... மாப்புள ஆரு சரோ? அறிவொளி இயக்கத்துல செவுப்பா ஒல்லியா அரும்பு மீசை வச்சிகிட்டு ஒருத்தர் இருந்தாரே... அவருதானா?”

சரோ இடி இடி எனச் சிரிக்கிறாள்.

“அவருக்குக் கலியாணம் கட்டி ஒரு புள்ள இருக்கு. இப்ப நீங்க அதும் இதும் வம்படிக்காம வூட்டுக்குப் போங்க.”

அறிவொளி இயக்கம் என்று ஆண் பிள்ளைகள் உள்ள குழுக்களில் அவள் தீவிரமாக ஈடுபட்டு அங்கே இங்கே கற்போம், கற்பிப்போம் என்று பாட்டுப் பாடிக் கொண்டு போவதைச் செவந்தியால் தடை செய்ய முடியவில்லை. குடியை ஒழிக்க இந்தச் சாமியாரிடம் பச்சிலை மருந்து கொள்ள, ஓர் இயக்கம் போல் ஆட்களை அந்த இயக்கமே கொண்டு வருகிறது. சாமியார் பச்சிலை கொண்டு வருவதற்காக அடிக்கடி கண்ணப்பர் மலைக்குப் போக வேண்டியிருக்கிறது.

“பத்திரிகை ரேடியோ பேட்டி எதுவும் வரக்கூடாது. இது வியாபாரம் இல்ல. உள் மனசோடு குடியை விட்டு நல்ல மனிதராக வேண்டும் என்ற உறுதி இருந்தாலே இங்கு வரவேண்டும்...” என்று சரோவுக்கும் அவள் சகாக்களுக்கும் அவர் எச்சரித்திருக்கிறார்.

சரவணன் படித்து ஊன்றும் வரையிலும் சரோ கல்யாணம் என்று கட்டிக் கொண்டு இடம் பெயர்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்ற உள்ளுர வேண்டிக் கொள்கிறாள் செவந்தி.

நிறைய வெளி உலகில் பழகுவதனால், கீழ் மட்டத்தில், இருந்து மேல் மட்டம் வரையிலும் ஒரு திறந்த மனதுடன் தொடர்பு கொள்வதால் சரோ ஒர் அச்சமற்ற துணிவுடன் தலையெடுத்திருப்பது செவந்திக்குப் புரிகிறது.

பழைய கோடுகளை அழிக்கிறோம் என்ற உணர்வில்லாமலேயே அவை அழிந்து போனதைக் காண்கிறாள். தெருவில் இருக்கும் இளம் குருத்துகள், சரோ அக்கா போலப் படிப்போம் என்று ஆதரிசம் கொள்ளும்படி அவள் முன்னோடியாக இருக்கிறாள். அவள் நிச்சயமாக பண்ட பாத்திரம் தட்சணை என்று பெண்மக்களை விட்டுக் கிடுக்கிப்பிடி போட அனுமதிக்க மாட்டாள். மேலும் அவள் மனதுக்குப் பிடித்தவன் என்று வரும் போது அவன் அவள் சுதந்தரங்களைக் கட்டுப் படுத்தாதவனாகத்தான் இருப்பான். அவன் இவர்கள் சாதி சமூகத்தைச் சாராமலிருந்து இருவரும் விரும்பினால் இவர்கள் முட்டுக்கட்டை போடக்கூடாது.

இதெல்லாம் சாத்தியமில்லை என்று ஒரு புறமும் சாத்தியமாகும், அவள் நல்லது கெட்டது தரம் பிரிக்கும் பக்குவம் பெற்றிருக்கிறாள் என்ற தைரியமும் அவள் மனதில் அவ்வப்போது தோன்றாமல் இல்லை.

ஒரு நாள் ராமையா சரோவுக்கு ஒரு நல்ல வரன் இருப்பதாக வந்து சொன்னார்.

“பங்களுரில் பையன் வங்கியில் வேலை செய்கிறானாம். தகப்பனார் இல்லை. தாயார் மட்டும் இருக்கிறாள். நல்ல குணம். பெண் படித்து நல்ல மாதிரியாக இருந்தால் போதும். ரொக்கம் இது அது வேண்டாம் என்ற சொல்கிறார்கள். சொந்தத்தில் சிறு வீடு இருக்கிறது. சரோவுக்கு பங்களுரில் சிரமமில்லாமல் வேலையும் கிடைக்கும்...” என்று சொன்னார்.

“இப்ப பேசக்கூடாது. என் லட்சியம்... இங்க காளை மாடெல்லாம் பசுக்களாக மாறணும். பணம் பண்ணணும். பவர் டில்லர் வாங்கணும். இங்க விட்டு நகர மாட்டேன். அந்தம்மா.. நா வேல கொடுப்பானே? நீயே வேலை கொடுக்கும்படி ஏதேனும் காம்பொனன்ட் செய்யும்படி முதலாளியாகு... ன்னாங்க. செஞ்சி காட்டணும். ஒரு அஞ்சு வருசம்... அதற்குள், யாரேனும் என் காரியத்தில் கை கொடுக்கும் வாழ்க்கைத் துணை வந்தால்... ஓ.கே.!” என்று முடித்துவிட்டாள்.

“அந்தப் பையன் கிட்டச் சொல்றேன்” என்று போனார் அவர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 24



கரும்பாயி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா.

செவந்தியின் குடும்பத்துக்கு இந்த விழா, குடும்ப உறவுகளே புதுப்பிக்கப்படும் ஒரு விழாவாகப் பொலிகிறது.

முருகனும் அண்ணி சுகந்தாவும் இரண்டு பிள்ளைகளுடன் முதல் நாளே வந்து இறங்குகிறார்கள்.

இந்த வீட்டில் இப்போது நல்ல கழிப்பறை வசதி இருக்கிறது. முன்புறம் விரிவாக்கி கழி போட்டு படியை உயர்த்தி பார்வையாகக் கட்டி இருக்கிறார்கள். அன்று பார்த்த அண்ணன் அண்ணியா!

பழைய கறுத்த உதடுகளும் டம்பப் பேச்சும் திமிரான பார்வையும் போய் விட்டன. உடல் மெலிந்து போயிருக்கிறது. குண்டான கன்னங்களும் ஒட்டிப் போயிருக்கின்றன. முன் முடி வழுக்கை விழுந்திருக்கிறது என்றாலும் இணக்கமான பரிவு வேண்டிய பார்வை. அவன் மேல் இரக்கத்தைத் தோற்றுவிக்கிறது.

பட்டும் பகட்டும் கர்வமுமாக வந்த அந்த அண்ணியா?

அவளுடைய கர்வமும் பெருமையும் புண்ணில் காய்ந்த பொருக்குகள் போல் உதிர்ந்துவிட்டன. அந்த வயிரங்கள் காதுகளில் இல்லை. கழுத்தில் வெறும் மஞ்சட் சரடுதான் இருக்கிறது. கைகள் இரண்டிலும் கண்ணாடி வளையல்கள்...

வந்திறங்கியதும் வாய் நிறைய “அக்கா சவுக்கியமா? சரோ எப்படி இருக்கே! உங்கள எல்லாம் மறுபடி பார்த்து நல்லபடியா சாமி கும்பிட வேணும்னு ஒரே தாபமாப் போயிடுச்சி” என்று கைகளைப் பற்றிக் கொள்கிறாள். கண்கள் தளும்புகின்றன.

திவ்யாவும் கார்த்திக்கும் “சரோ அக்கா, சரவணன் அண்ணா” என்று ஒட்டிக் கொள்கிறார்கள். இப்போது நன்றாக வளர்ந்திருக்கிறார்கள். அண்ணி அண்ணனை ஏதோ கைப்பிள்ளையைப் பராமரிப்பது போல் பாவிக்கிறாள்.

அவனுக்குப் பல்விளக்க புருசும் பேஸ்ட்டும் எடுத்துக் கொடுப்பதில் இருந்து, இட்டிலியை ஆறவைத்து மிளகாய் பொடி இல்லாமல் தயிர் ஊற்றி வைப்பதும், பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கொடுப்பதுமாகக் கவனிக்கிறாள்.

அவளே அடுப்படிக்கு வந்து புகையடுப்பில் அவனுக்கு தக்காளி பருப்பு ரசம் வைக்கிறாள்.

சில சமயங்களில் செவந்திக்கு எல்லோரும் கண்ணாமூச்சி ஆடுவது போல் தோன்றுகிறது.

“ராசா மாதிரி இருந்த பிள்ளை. உருகி உக்கிப் போயிட்டா. அந்தப் பாவி என்ன சாபமிட்டாளோ...” என்று அம்மா ஊடே கடித்துத் துப்புவது மாறவில்லை.

கன்னியப்பனின் ஆயாவைப் போல் திருந்தாத சன்மங்கள். தெருக்காரர் அவர்களைப் பற்றிப் பேசாமலிருப்பார்களா?

வெறும் வாயையே மெல்லுபவர் ஆயிற்றே?

ஆனாலும் சரோவின் வாய்க்கும் கண்டிப்புக்கும் சிறிது பலன் இருக்கத்தான் செய்கிறது.

“சரோ, விவசாயம் பால் சொசைட்டி இதோட சரியா? படிச்ச படிப்புக்கு மேலே திட்டம் உண்டா” என்று முருகன் கேட்கிறான்.

“இருக்கு மாமா பவர்டில்லர் வாங்கணும். விவசாயம் பூரா எங்கையில்” என்கிறாள் உற்சாகமாக...

“உன்னைப் போல் மெக்கானிக்கல் லைன் படிச்ச பையனுக்கு பேப்பரில் விளம்பரம் செய்வோம். இரண்டு பேருமாக சேர்ந்து ஏதேனும் தொழில் ஆரம்பிக்கலாம்.”

“மாப்பிள்ளைக்குப் பேப்பரில் விளம்பரமா?” என்று செவந்தி மலைக்கிறாள். காலம் எவ்வளவு மாறிவிட்டது!

அன்று குடமுழுக்கு விழா.

கோயில் வளைவே மக்கள் கடலாகக் காட்சியளிக்கிறது. ஒரு புறம் தீ வளர்த்து வேள்வி நடக்கிறது.

ஊரின் பெரிய தலைகள், வாணிபம் செய்வோர், உழைப்பாளிகள்... பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று காலையிலேயே எல்லோரும் குழுமியிருக்கின்றனர்.

பந்தல் போதாமல், மஞ்சளும் நீலமும் சிவப்புமாகப் பட்டை போட்ட சாமியானா என்ற நிழல் வசதியும் செய்திருக்கிறார்கள். செவந்தியின் குடும்பத்தினர் அதிகாலையிலேயே நீராடித் தூய்மை பெற்று, தேங்காய் பழம், பூ வெற்றிலைப் பாக்கு கர்ப்பூரம் ஆகிய பூசனைப் பொருட்களுடன் கோயில் வளைவுக்கு வந்து விட்டார்கள். ஒலி பெருக்கி பக்திப்பாடல்களை இடைவிடாமல் ஒலி பெருக்கிக் கொண்டிருக்கிறது.

இவர்கள் வேள்விச் சாலைப்பக்கம் சென்று வணங்கி வலம் வந்து கருப்ப கிரகத்தில் அம்மனைத் தரிசித்துக் கொண்டு வெளியே வந்து சாமியானாவில் உட்கார்ந்து கொள்கிறார்கள். அண்ணனும் அண்ணியும் அம்மாவும் அப்பாவும் உட்கார்ந்ததைப் பார்த்த பின் செவந்தி எழுந்திருக்கிறாள். சரோ, சரவணன் ரங்கன் மூவரும் கூட்டத்தில் கலந்து போகிறார்கள்.

பட்டாளத்தார்.... கன்னியப்பன் குடும்பம். கன்னியப்பன் சந்தனம் குங்குமம் நெற்றியில் வைத்துக் கொண்டு இடுப்பில் துண்டுக் கட்டித் திறந்த மார்புடன் பூசைப் பொருட்கள் உள்ள தூக்குக் கூடையை வைத்திருக்கிறான். லட்சமி ஒரு குழந்தையையும் அவள் அம்மா ஒரு குழந்தையையும் வைத்திருக்கிறார்கள். அனிதா பாட்டனாரின் கையைப் பிடித்துக் கொண்டு வருகிறாள்.

“அம்மா... டி.வி. எடுக்கிறாங்க! நாம விழுவோமா?” என்று கார்த்திக் ஓடி வந்து கேட்கிறான்.

இரண்டு பெரிய பலூன்களை வாங்கிக் கொண்டு சரோ வருகிறாள்.

“இந்தாங்க. இந்தா திவ்யா பலூனை வச்சிட்டுக் காட்டுங்க! டி.வி.காரர் கிட்டச் சொல்லிருக்கே. விழுவீங்க.”

“எதுக்கு சரோ இப்ப? உடச்சிடுவாங்க.”

அண்ணி அண்ணனுக்கே நேரம் தவறாமல் பழச்சாறும் மாத்திரையும் எடுத்துக் கொடுக்கிறாள்.

“உடய்க்கிறத்துக்குத்தான வாங்குறது?”

செவந்தி எதிலும் ஒட்டாமல் கூட்டத்தில் பார்வையில் துழாவுகிறாள். சின்னம்மாவுக்குக் கும்பாபிசேகப் பத்திரிகை வைத்துக் கடிதமும் கொடுத்து அனுப்பியிருந்தாள். குடும்பத்துடன் வரவேண்டும் என்று அவளே எழுதியிருந்தாள்.

பார்க்காதவர்கள், இடையில் வயது கூடி உருமாறியவர்கள், சிநேகிதர்கள், உறவுகள் விசாரணைகள்...

சின்னம்மா இவ்வளவு வைராக்கியமாக இருப்பாளா?

எல்லோரும் சரேலென்று எழுந்து நிற்கிறார்கள். ஒரு பேரலை வந்தாற்போல் கூட்டத்தில் ஆரவாரம்.

சாமியார் குருக்களையா பூசாரி சங்கரலிங்கம் எல்லோரும் கும்பங்களுடன் மூங்கில் படியில் ஏறுகிறார்கள்.

புனித நீர்க்கலசங்களை சாமியார் வாங்கிக் கும்பத்தில் சொறிகிறார். வெயில் பளபளக்கிறது. அந்தப் புனித நீரைச் சற்று இறங்கி நின்று கொண்டு கூட்டத்தின் மீது வீசித் தெளிக்கிறார். கைகளில் ஏந்துபவர்களும் தலை வணங்கி ஏற்பவர்களுமாகச் சூழலே புனிதமாகிறது. ஆதவனும் தன் கதிர்களை மேகத்துள் முடக்கிக் கொள்கிறான்.

“உங்க மீது விழுந்திச்சா... எங்கமேல விழுந்திச்சி. இந்தாங்க கையில்... இந்தாங்க” கணவன் குழந்தைகள் பெற்ற புனிதத்தை அண்ணி முகமலர்ந்து செவந்திக்கு நீட்டுகிறாள்.

பிறகு இசைப் பேருரை, பாட்டுக் கச்சேரி எல்லாம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. மாலையில் கலைப் பயணக்காரரின் அறிவொளி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லோரும் திரளாகக் குழுமி இருந்து பார்த்துக் கேட்டுப் பயனடைய வேண்டும் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு கேட்கிறது. செவந்திக்கு எல்லாம் நிறைவாக இருந்தும் நெஞ்சம் தோய்ந்து விடுகிறது.

பிரசாதம் இரண்டு இடங்களில் வழங்குகிறார்கள்.

“மாமா மாமி இங்கே நீங்க இருங்க, நான் உங்களுக்கு பிரசாதம் வாங்கிட்டு வந்து தாரேன்” என்ற சரோ போகிறாள்.

“வாணாம்; நாம அங்க போயித்தான் வாங்கணும்... போகலாமில்ல..”

“சரி, அப்ப இந்தக் கூடை, பையெல்லாம் நான் பாத்துக்கறேன். அம்மா நீ தாத்தா எல்லோரும் போங்க... பாட்டி. சேந்து போங்க!” என்று சரோ கூறுகிறாள்.

ஆனால் பாட்டி தனியாக விடுவிடென்று போகிறாள்.

“வூட்டப் பூட்டிட்டு வந்திருக்கு. மாட்டுக்குத் தண்ணி வைக்கணும்...”

பெரிய தவலையில் சர்க்கரைப் பொங்கல்; ஒரு பெரிய கூடையில் இலை போட்டுத் தயிர்சாதம்.

வரிசையில் ஒவ்வொருவராக ரங்கன் விடுகிறான். முதலில் தொன்னைகள் கொடுக்கிறார்கள். பிறகு ஒவ்வொரு கரண்டி பிரசாதம் வழங்கப் பெறுகிறது.

இந்த அம்மாவும் வாங்கிட்டுப் போயிருக்கலாமில்ல? சரவணன், திவ்யா, கார்த்திக், அவள்...

“அப்பா எங்கே?”

அப்பாவுக்காக அவள் கூட்டத்தில் ஆராய்கிறாள். ஆராய்ந்தவளாக அந்த சாமியானாவுக்கு வருகிறாள்.

சாந்தி குழந்தைகள் புருசன்...

உட்கர்ந்து சாப்பிடுகிறார்கள். சரோ அவளுடைய தோழிகளுடன் அவசரமாக வெளியேறுகிறாள்.

அண்ணனையும் அண்ணியையும் பார்த்தவாறு அவள் திரும்புகிறாள்.

சின்னம்மா அண்ணனின் பக்கத்தில்...

அதே வெள்ளைச் சேலை... கொடி கொடியாகக் கருப்புக்கரை. மகள் ருக்கு.. ஒரு கிரேப் சேலையும், கனகாம்பரப் பூவுமாக நிற்கிறாள். குச்சிகள் போல் கால்கள் தெரிய பம்மென்ற கவுனணிந்து பாப் முடியுடன் இரண்டு பெண்கள்... நெடுநெடுவென்று ஒட்டிய கன்னங்களும் ஒட்டு மீசையுமாக டீசர்ட் அணிந்த மருமகன். சின்னம்மா முருகனின் கையைத் தன் கையில் வைத்துக் கொண்டு எதோ நெஞ்சு நெகிழப் பேசுகிறாள்.

ருக்குவைப் பக்கத்தில் அழைத்து உட்கார்த்துகிறாள் அண்ணி. டீசர்ட் அணிந்த மருமகன் கை கூப்புகிறான்.

சரேலென்று அப்பா நினைவு வருகிறது.

இப்போதும் சின்னம்மா அவரைப் பார்க்காமல் போய் விடுவாளோ? அன்று மாநாட்டில் நழுவ விட்டாற் போல் நழுவ விடக் கூடாது. அவர் இலக்கில்லாமல் கூட்டத்தில் புகுந்து விரிவுரை கேட்கும் கும்பலில் ஆராய்ந்து விரிச்சிட்ட யாகசாலைப் பக்கம் துழாவி, மீண்டும் பிரசாதம் வழங்கும் இன்னோர் இடத்துக்கும் வருகிறாள். அங்கு அறிவொளி இயக்கத் தோழர்களுடன் சரோ பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். லலிதா, தேவிகா என்ற பெண்கள் காஞ்சியிலிருந்து வந்திருக்கிறார்கள்.

“சரோ! தாத்தா பிரசாதம் வாங்கிட்டாரா? பார்த்தாயா?”

“பார்க்கல. பாட்டிதா எந்திரிச்சி போச்சு. நா வாங்கிக் கொடுத்தேன்.”

“சின்னம்மா வந்திருக்காங்க. ருக்குவும் கூட வந்திருக்கு. அவங்க மாமாகிட்டப் பேசிட்டிருக்காங்க. அப்பாதானே பார்க்கணும்ன்னாரு.”

அவளாகச் சொல்லிக் கொள்கிறாள். சரோ இதில் எந்த முக்கியத்துவமும் இருப்பதாகப் புரிந்து கொள்ளவில்லை.

சுந்தரி... தன் பிள்ளைகளுடன் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருகிறாள். பையன் ஒரு பாட்டிலில் தண்ணிரைக் கொண்டு வருகிறான். சாப்பிட உட்காருகிறார்கள்.

“சுந்தரி? அப்பாவப் பாத்தியா? சின்னம்மா வந்திருக்காங்க. அவர்தான் பார்க்கணும், பேசணும்னு துடிச்சிட்டிருந்தாரு?”

“அதா கிணத்தாண்ட எல்லாருக்கும் தண்ணி எறச்சிக் குடுத்திட்டிருக்காரு. இத இவ அங்கேருந்துதா வாரான். நாங் கொஞ்சம் எரச்சி ஊத்தன. எல்லாம் வெயில்ல தாகம் தாகம்னு வராங்க... பானையில் தண்ணி ஊத்தி வச்சிருந்தாங்க. காலியாயிடிச்சி. செவந்தி சாயங்காலம் வரைக்கும் இருக்கப் போறியா? நாம வூட்டுக்குப் போயி கொஞ்சம் பாத்திட்டு ஆறுமணிக்கு வந்தாப் பத்தாது? சரோ, அறிவொளி இயக்க நாடகம் எட்டு மணிக்குத் தானே?”

செவந்தி காதில் வாங்கிக் கொள்ளவில்லை.ஒரே குறியாக கிணற்றுக் கரைக்கு வருகிறாள்.

“அப்பா...?”

காதுகளில் பூ... திரும்பியே பாராமல் தண்ணிர் இறைத்துக் குடத்தில் ஊற்றுகிறார்.

அவள் அருகே சென்று அவரைத் தொடுகிறாள்.

“அப்பா நா இறைக்கிறேன். நீங்க பிரசாதம் சாப்புட்டீங்களா?” மேலெல்லாம் வேர்வையா தண்ணிரா என்று தெரியாமல் நனைந்து இருக்கிறது. வேட்டியைத் தார் பாய்ச்சி இருக்கிறார்.

“விடுங்க... நான் இறைச்சி ஊத்தறேன். சின்னம்மா வந்திருக்காங்க. ருக்கு மருமகன் குழந்தைங்களை கூட்டிட்டு வந்திருக்காங்க. நாம உக்காந்திருந்தோமே, அந்த இடத்தில் சின்னம்மா அண்ணன் அண்ணி கூட உட்கார்ந்து பேசிட்டிருப்பாங்க...” உடனே அவர் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் அங்கு ஒடுவார் என்று நினைத்தாளே, அது நடக்கவில்லை.

நிறைந்த குடத்தை எடுப்பவர் தலையில் ஏற்றிவிட்டு நிற்கிறார். “அப்பா! நீங்க போங்க. ஒருவேள அண்ணிக்குப் போல அவங்க அப்படியே பஸ் ஏறிப் போயிடுவாங்களோன்னுதா ஓடி வந்தேன்...”

“தெரியும் செவந்தி. அவங்க வாசல்ல வாரப்பவே பாத்திட்டே உங்கம்மா அதுனாலதா வூட்டுக்கு ஓடிட்டா...”

அவள் வாயடைத்து நிற்கிறாள்.

“அவளுக்குப் பார்க்க இஷடமில்லாம தா அன்னைக்கு இந்த எல்லைக்கு வந்திட்டுத் தெருவ மிதிக்காம போனா. எத்தினி நாளானாலும் அந்த நினைப்பு வரத்தா வரும்... நா தூரத்தலேந்து அவ வந்தப்ப பார்த்தேன். அது போதும். எனக்கு இப்ப எந்தக் கிலேசமும் இல்ல. சாமி சொல்லிச்சி. அமைதியாயிருன்னு. இந்த மனசில அமைதியா இருந்தாலே சுத்துப்புறம் நோவு நொடி செடியாத் தாக்கும் விசப்பூச்சி வாராம இருக்கும்னு. நா அதுவும் இதுவும் ஏன் நினைக்கணும்.” செவந்தி திகைத்துப் பார்க்கிறாள்.

அவளைப் பாத்து மன்னிப்புக் கேக்காம நெஞ்சு ஆறாதுன்னு கரைந்து போன அப்பனா?

சுருக்கம் விழுந்த இந்த முகத்தில்... இதுதான் தெளிவா?

“செவந்தி, உங்கிட்ட ரங்கன் சொல்லல. ஆனா முருகனுக்கு வந்த நோவு, இரைப்பை புத்துன்னு சொன்னா. கெடந்து துடிச்சே. அந்தப் பொண்ணு அவ்வளவு நொடிச்ச பொண்ணு, சொத்து சொகம் நகை நட்டு எல்லாம் தோத்து, சாவித்திரி போல யமங்கிட்ட வாதாடி அவ உசிரை மீட்டிருக்கு. இப்ப நல்லா குணமாயிட்டது. சோதிச்சிச் சொல்லிட்டாங்கன்னாங்க... என்னமோ எல்லாம் அந்தத் தாயின் கிருபைதான்.”

“சாமி சொன்னாங்க. கெட்டவங்கன்னு யாருமே இல்ல. பகை வெறுப்பு பொறாமை பழி எல்லாம் மனிசனே உண்டாக்கிக் கொள்ளும் கசடுகள். மாயைகள். இதெல்லாம் நீக்கி விட்டா, உள்ளேருந்து தண்ணீர் கரும்பா வரும். எல்லார் மனசிலும் அதாம்மா...” அப்பா அவள் தலையில் பரிவுடன் கையை வைக்கிறார்.

“உனக்கு நல்ல மனசு. அவ மக ருக்குவுக்கும் அந்தப் புள்ளங்களுக்கும் நல்லது செய்யி. படிக்க வையி, நீ செய்வே... இதுக்கு மேல எனக்கு என்னம்மா வோணும்?”

உணர்ச்சி மிகுதியில் நெஞ்சு முட்டுகிறது.

மனம் மிக இலேசாகிறது.

சரேலென்று வானம் மங்க... கோடையிடி முழங்குகிறது. “மழை ... மழை...” என்று எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறார்கள்.

செவந்தி ஏதோ நினைவு வந்தாற் போன்று விடுவிடென்று சாமியானாவை நோக்கி முன்னேறுகிறாள்.

நிறைந்தது
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top