அத்தியாயம்-4
ஒரு வாரம் ஓடியிருந்தது..
அன்று அதிகாலை எழும்பொழுதே மிகவும் உற்சாகமாக இருந்தான் வசீகரன்...
இன்று மட்டுமல்ல எப்பொழுதுமே காலையில் எழும்பொழுது உற்சாகமாக இதயத்தை வைத்து கொள்ளவேண்டும்.. தேவையில்லாத கவலைகளையும் குப்பைகளையும் இதயத்தில் தேக்கி வைத்து அதற்குள் உழன்று கொண்டிருக்ககூடாது...
“முடிந்தவரை நேற்றைய கசப்பான, இதயத்தை வருத்தும் எல்லாவற்றையும் தூக்கி தூர போட்டு மறுநாள் காலையில் எழும் பொழுது இதயத்தை எப்பவும் பிரஸ்ஸாக வைத்து கொள்ள வேண்டும் அன்றைய நாளின் புது அனுபவங்களை சேகரிக்க ..” என்று ஒரு இதயநல மருத்துவனாய் மற்றவர்களுக்கு அறிவுறுத்துவதால் அவனுமே அதை எப்பவும் பின் பற்றுவான்...
அதனால் காலை எழும்பொழுது ஐயோ எழனுமே என்று முகத்தை சுழிக்காமல் உற்சாகமாக எழுவது அவன் வழக்கம்...
அதிலும் இப்பொழுது கூடுதலாக அந்த குறும்புக்காரியும் அவன் இதயத்தில் குடியேறியிருக்க அவன் உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும்??
எவ்வளவு களைப்பாக இருந்தாலும் அவளின் அந்த மலர்ந்த முகத்தை அதில் இருக்கும் குறும்பு சிரிப்பை நினைத்தாலே அவன் அசதி எல்லாம் பறந்து உற்சாகம் ஓடிவந்து அவனை ஒட்டிகொள்ளும்...
இன்றும் அதே போல மனதில் புத்துணர்ச்சியுடன் எழுந்தவன் குளியலறைக்குள் சென்று ரெப்ரெஸ் ஆகி தான் அணியும் ட்ராக் பேன்ட்க்கு மாறியவன் தன் காலை ஓட்டத்தை ஆரம்பித்தான்...
வழக்கம் போல உல்லாசமாக விசில் அடித்த படி அங்கு இருந்த மக்களை, மரம் செடி கொடிகளை ரசித்துக் கொண்டே ஓடியவன் அந்த பூங்காவில் இருந்த ஒரு ரோஜா செடியை கண்டு அதிசயித்து நின்றான்....
அந்த செடி அங்கு வைத்ததில் இருந்தே தினமும் அதை கவனித்துக் கொண்டே இருக்கிறான்.. அந்த செடி மெல்ல வளர்ந்து ஒரு வாரம் முன்புதான் மொட்டு விட்டிருந்தது...
வீட்டில் ஒரு செடி வைத்தால் அதை அந்த வீட்டு குழந்தைகள் தினமும் சென்று பார்த்துவருவர்... ஒவ்வொரு நாளும் எவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்று ஆர்வமாக கவனித்து ஆர்பரிப்பதில் ஒரு சுகம்..
அதையும் பள்ளியில் தன் வகுப்பு தோழர்களிடம் பெருமையாக சொல்லி கொள்வர் அவர்கள் வீட்டு புதுசெடி எவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்று ...
அதே போல வசியும் அந்த ரோஜா செடியை தினமும் கவனித்து வருவான்.. சென்ற வாரம் அரும்பியிருந்த அந்த ரோஜா மொட்டு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்ததை தினவும் கவனித்து வந்தான்தான்....
இன்று அதிசயமாக அந்த மொட்டு விரிந்து அழகிய பெரிய ரோஜாவாக மலர்ந்திருந்தது....அதுவும் அவனுக்கு பிடித்த இளமஞ்சள் நிறத்தில்...
அதிலும் அதன் மேல் பனித்துளிகள் பட்டு ஆங்காங்கே திரண்டு நிக்க, அந்த பனியில் நனைந்த புது ரோஜா இன்னும் அழகாக சிரித்தது அவனை பார்த்து....
அந்த ரோஜாவையே இமைக்க மறந்து ரசித்திருந்தான்.... அந்த பனிமலரின் சிரிப்பை பார்க்கையில் தானாக அவனுக்கு தன் பனிமலரின் நினைவு வந்தது...
அவளும் இதே போலத்தான் மலர்ந்து சிரித்திருந்தாள் அன்று... சிறிது நேரம் கண் குளிர அந்த மலரை ரசித்தவன் சுற்றிலும் பார்த்து யாரும் அருகில் இல்லை என்று பார்த்து கொண்டு குனிந்து அந்த பனிமலரின் இதழில் தன் இதழை வைத்து அதற்கு வலிக்காமல் மெல்ல முத்தமிட்டான்....
அப்படியே அது தன்னவளின் திரண்டு சிவந்திருந்த இதழை தீண்டிய சுகத்தை தர அப்படியே உள்ளுக்குள் சிலிர்த்து கிறங்கி நின்றான்....
தன்னவளுக்கே தன் முதல் காதல் பரிசை கொடுத்ததை போல இருந்தது அவனுள்...
தான் கொடுத்த பரிசிற்கு அந்த சண்டக்காரி அவனை செல்லமாக முறைத்து பார்ப்பதை போல அந்த பட்டு ரோஜாவும் அவனை பார்த்து செல்லமாக முறைக்க, அதன் இதழை மனமே இல்லாமல் விடுத்து அதன் முறைப்பை ரசித்தவாறு கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான்....
பின் “Have a nice a day டார்லிங்... மீண்டும் நாளை சந்திக்கலாம்... பை... “ என்றவாறு அந்த பனிமலருக்கு கை அசைத்து விடை பெற்று தன் ஓட்டத்தை தொடர்ந்தான்....
நம் நாயகனுக்கு எதிரான அவன் பனிமலரோ காலையில் சீக்கிரம் எழும் பழக்கமே கிடையாது...எப்பவும் 8 மணிக்கு மேல் தன் அன்னையின் வழக்கமான திட்டை காது குளிர கேட்டு போனால் போகட்டும் என்று மனமே இல்லாமல் எழுபவள்...
பின் அவசர அவசரமாக கிளம்பி, தன் அன்னை திட்டிக் கொண்டே அவளுக்கு ஊட்டி விட, காலை உணவை அவசரமாக வாயிற்றில் திணித்து கொண்டு அவசரமாக அலுவலகத்திற்கு ஓடுபவள்...
அதுவும் இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கமாக 9 அல்லது 10 மணிக்குத்தான்... உறங்குவது போரடிக்க, போனால் போகுது என்று எழுவாள்...
இன்றும் அதே போல போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு நன்றாக உறங்கி கொண்டிருக்க, திடீரென்று தன் இதழில் யாரோ முத்தமிட்டதை போல இருக்க, திடுக்கிட்டு விழித்தாள்...
தன் கண்ணை கசக்கி விட்டு சுற்றிலும் பார்க்க, யாரும் இல்லை அங்கு...
“சே.. என்னது இது??... யாரோ முத்தமிட்டதை போல, அதும் நேரில் அனுபவித்த மாதிரியே இருந்ததே... “ என்று மெல்ல தன் இதழை வருடியவள்
“ஒரு வேளை கனவோ?? கனவில் கூட யார் இப்படி செய்ய முடியும்.?? ஒரு வேளை என் வருங்கால புருசனோ?? “ என்று தன் தலையை தட்டி யோசித்தவள்
“ஹ்ம்ம்ம்ம் யாரா இருந்தால் என்ன.. இன்னொரு தரம் இப்படி பண்ணினான் இந்த மலர்கிட்ட நல்ல வாங்கி கட்டிக்குவான்... இப்ப நம்ம தூக்கத்தை கண்டினுயூ பண்ணலாம் .. “ என்று மீண்டும் படுத்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள்...
தன் காலை ஓட்டத்தை முடித்து வீட்டிற்கு திரும்பியவன் டைனிங் டேபிலில் அமர்ந்திருந்த தன் அன்னை மற்றும் தங்கையை கண்டு அங்கு சென்றவன் தன் தாயின் கழுத்தை கட்டிக் கொண்டு காலை வணக்கத்தை சொல்லி, பின் தங்கையின் தலையை செல்லமாக பிடித்து ஆட்டி அவள் கன்னத்தை கிள்ளியவன் உல்லாசமாக விசில் அடித்தபடி துள்ளலுடன் மாடிப்படியில் தாவி ஏறினான் தன் அறைக்கு செல்ல....
அவனின் செயலை கண்டு அதிசயித்தனர் தாயும் மகளும்...
“ஹ்ம்ம்ம் என்னாச்சு மம்மி?? “ என்று வசு கண்ணால் ஜாடை காட்டி தன் அன்னையை கேட்க அவரோ எனக்கு தெரியாது… என்று உதட்டை பிதுக்கி சிரித்தார்...
“ஹ்ம்ம்ம் சம்திங் ராங் மம்மி.. எதுக்கும் உன் புள்ளைய குளோசா வாட்ச் பண்ணுங்க... “ என்று கண்சிமிட்டி சிரித்தவாறு பள்ளிக்கு கிளம்பி சென்றாள்...
துள்ளலுடன் தன் அறைக்கு சென்றவன் மேலும் தன் உடற்பயிற்சியை முடித்து பின் குளித்து முடித்து மருத்துவமனை செல்ல தயாராகி கீழ வந்தான்....
தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த மீனாட்சி தன் மகன் வருவதை கண்டதும் அவரும் உள்ளே வந்து அவனுக்கு காலை உணவை எடுத்து வைக்க, அவனும் அவருடன் மற்ற விசயங்களை பேசிக் கொண்டே அவருக்கு எதுவும் பேச, கேட்க வாய்ப்பு கொடுக்காமல் அவசரமாக உணவை முடித்து கை கழுவி நழுவி சென்றான்...
அவனின் செய்கையிலயே ஏதோ விசயம் இருக்கிறது என்று புரிந்து கொண்ட அந்த தாய் அவசரமாக பூஜை அறைக்கு சென்று அந்த ஈசனின் முன் நின்று தன் வழக்கமான கோரிக்கையை வைத்தார்.....
தன் அன்னையின் பார்வையில் இருந்து தப்பித்த சந்தோசத்தில் தன் காரை எடுத்து கிளம்பியவன் சிறிது தூரம் சென்றதும் காரில் இருந்த பாடலை ஒலிக்க விட அதில் ஒலித்த பாடலை கண்டு இன்னும் சிலிர்த்து போனான்...
பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்…
சேலை மூடும் இளஞ்சோலை..
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்……
என்று எஸ்.பி.பி சார் உருகி அனுபவித்து பாட, அவனும் தன் வசீகர குரலில் அவருடன் இணைந்து அனுபவித்து பாடினான் உல்லாசமாக...
அதில் ஒலித்த ஒவ்வொரு வரிகளும் அவனுக்கு அவன் பனிமலரை நினைவு படுத்த மெல்ல சிரித்து கொண்டான்...
இன்றோடு அவளை பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது... அவளை பார்த்து பழகியது என்னவோ 10 நிமிடங்கள் தான்... ஆனால் அதுவே அவனுக்கு பல நூறு வருசம் அவளுடன் பழகிய உணர்வை கொடுத்தது..
அவளின் ஒவ்வொரு செயலும் வார்த்தையும் அவன் இதயத்தில் கல்வெட்டாக பதிந்து போயின இந்த ஏழு நாட்களில்..
பின்ன அவள் பேசிய அதே டயலாக்கை தினமும் 1000 முறையாவது சொல்லி பார்த்தால் அது மனதில் பதியாமல் என்ன செய்யுமாம்??
அவளை மீண்டும் பார்க்க அவன் இதயம் ஏங்கினாலும்
“என்னவள் எங்கிருந்தாலும் என்னை தேடி வருவாள்....நீ ரொம்ப அலட்டிக்காத... “ என்று தன் இதயத்தை அடக்கிவிடுவான்.... அவன் இதயமும் அந்த இதய நல மருத்துவனின் பேச்சை கேட்டு அடங்கினாலும் ,அவன் கண்கள் அவனுக்கு அடங்க மறுத்தன...
அவைகள் தன்னவளை தேடி எல்லா திசையிலும் பார்வையை சுழல விட்டவாறே தான் இருந்தன இந்த ஏழு நாட்களில்.. ஆனால் பாவம் அவைகளுக்கு ஏமாற்றமே.. அவளின் தரிசனம் கிடைக்கவேயில்லை...
இன்றும் அவன் உதடுகள் பாடலை பாடினாலும் கண்கள் சுற்றிலும் அவளை தேடிக் கொண்டிருக்க, ஒரு சிக்னலில் அவன் காரை நிறுத்தி பச்சை விளக்குக்காக காத்திருந்தான்....
அப்பொழுது திடீரென்று அவன் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது... அவன் உள்ளே பனிமழை பொழிய ஆரம்பிக்க, என்னது இது?? என்று முழித்தவனுக்கு புரிந்து விட்டது அவன் தேவதை இங்குதான் இருக்கிறாள் என்று..
உடனே அவசரமக அந்த இடத்தை ஆராய, அவனை ஏமாற்றாமல் அவளும் அவனுக்கு தரிசனம் கொடுத்தாள்...