முன்னுரை
ஒரு பக்கச் சிறுகதைப் போட்டியை ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச் சங்கம் www.GreaterHoustonTamilSangam.org மெய்நிகர் பண்டிகைக்கால கொண்டாட்டமாக அறிவித்தது. அதில் நானும் “தீபாவளி(லி)” என்கிற சிறுகதையை எழுதிக் கலந்து கொண்டேன். போட்டி முடிவு நவம்பர் 21, 2020 அன்று அறிவித்தார்கள். அதில் என் கதை முதல் பரிசு பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் படித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும். - அனிதா ராஜேஷ்.
தீபாவளி(லி)
தீபாவளி அதிகாலை. தூரத்தில் எங்கோ அம்மா, அப்பா பேசும் சத்தம். கண் முழிக்காமல் கவனமாய் கேட்கிறேன்.
“ஏய், எந்திரிடி! எவ்ளோ நேரம் தான் உன்னை எழுப்புறது? நல்ல நாள் பெரிய நாளுக்கு சீக்கிரம் எழும்புவோம், வாசல் கூட்டி, வாசல் தெளிச்சுக் கோலம் போட அம்மாவுக்கு உதவுவோம், தலை குளிச்சு விளக்கேத்துவோம், சமையல் கட்டில் கூட மாட வேலை செய்வோம்… இது எதுவும் இல்லை.”
”சும்மா, புள்ளைய திட்டாம போய் வேலையைப் பாரு. எப்ப பாரு புள்ளையவே திட்டிக்கிட்டு. புள்ளையே நேரம் தாண்டி தான் படுத்துச்சு. சும்மா நை நைனு…”
“ராத்திரி கண்ணு சிவக்க படம் பார்த்துட்டு நேரங்கெட்டுத் தூங்கினா எப்படி நேரத்தோட காலையில் கண்முழிக்க முடியும்? நேரத்தோட தூங்குங்கனு சொன்னா அப்பாவும், பொண்ணும், காது கொடுத்துக் கேட்டா தானே. காலையில், எருமை மாடு மாதிரி அசையாம தூங்கு. வீடு உருப்பட்டுடும். உங்களுக்கு என்னங்க. உங்களை யாரும் குறை சொல்ல மாட்டாங்க. நாளைக்கு இவ வாக்கப்பட்டுப் போற வீட்டில் என்னைத் தானே குறை சொல்லுவாங்க… பொண்ண எப்படி வளர்த்திருக்கா பாருன்னு. நான் வாங்கி வந்த வரம். அப்பாவுக்கும் பொண்ணுக்கும் நான் என்ன சொன்னாலும் காதில் நுழையாது!”
கண் விழிக்க… சுத்தி யாருமில்லை. எந்த சத்தமும் கேட்கவில்லை. எழுந்து, முகம் கழுவி, பல் துலக்கி, வாசல் தெளித்து, அம்மா விரும்பும் கோலமிட்டு, அப்பாவிற்கு பிடித்த வண்ணமிட்டு, குளித்து, அம்மா, அப்பா வாங்கி தந்த புத்தாடை அணிந்து, பால் காய்ச்சி, அடுப்பில் வைத்த எண்ணெய் சட்டியில் பலகாரம் சுட்டு, இட்லி அவித்து, கறிக்குழம்பு சமைத்து, தோட்டத்தில் இருந்த வாழை மரத்தில் இருந்து எடுத்த இரு வாழை இலையில், சமைத்ததை படையல் போட்டு, விளக்கு ஏற்றி, அப்பாவிற்கு பிடித்த வாசனை அகர்பத்திக் கொளுத்தி, சூடம் காட்டினேன்.
அதற்கு மேல் தாங்காமல்… “அப்பா, நீங்க சொல்லுங்க அம்மா கிட்ட, நம்ம பொண்ணு நீ விரும்புகிற மாதிரி தான் இன்னைக்கி எல்லா வேலையும் சரியா நேரத்தோட செஞ்சிருக்கானு. அம்மாவும், நீங்களும் என் கூடப் பேச மாட்டீங்களா?”
அய்யய்யோ… அம்மா, அப்பாவிற்கு காபி கலக்க மறந்துட்டேன் என்பது பேசிக்கிட்டு இருக்கும் போதே எனக்குச் சட்டுனு நியாபகம் வந்தது. அவசர அவசரமா சமையல் கட்டுக்குள் நுழைந்து, அப்பாவிற்கு சர்க்கரை போடாத சூடான காபியும், அம்மாவிற்கு காபித்தூளும், சக்கரையும் அதிகமா கலந்து ரெண்டு ஆத்து ஆத்தின காபியும் எடுத்து வந்து படையலில் வைத்தேன்.
நான் கண் கலங்க, போனவாரம் காலமான அம்மாவும், அப்பாவும் ஜோடியாய் மாலையுடன் சட்டத்தினுள் இருந்து என்னைப் பார்த்துப் பாசமாய்ச் சிரித்தார்கள்.
- அனிராஜி / AniRaje