• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

துளசி மாடம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 31

பொழுது விடிந்தால் முகூர்த்தம். கலியாண வீடு அரவம் அடங்கி உறங்க இரவு இரண்டு மணிவரை ஆயிற்று. இரண்டரை மணிக்குச் சமையற்காரர்கள் கூடத் துண்டை விரித்து அடுப்படியிலேயே தலை சாய்த்து விட்டார்கள்.

நடு இரவு இரண்டே முக்கால் மணி சுமாருக்கு வாசலில் சுமார் ஆயிரம் பேர் வரை உட்காருகிற மாதிரி போட்டு அலங்கரித்திருந்த கல்யாணப் பந்தலில் தீப்பிடித்துவிட்டது. ஒரே கூச்சலும் கூப்பாடுமாகத் தூக்கக் கிறக்கத்தில் இருந்து விழித்து என்ன நடந்திருக்கிறது என்று சுதாரித்துக் கொள்ளவே எல்லோருக்கும் சில விநாடிகள் பிடித்தன. தீயை அணைக்க அந்தக் காற்று வீசிய காலை வேளையில் யாவரும் மிகவும் சிரமப்பட்டனர். காலை எட்டரையிலிருந்து ஒன்பது மணிக்குள் முகூர்த்தம். ஏறக்குறைய முகூர்த்தத்துக்கு மணமேடை போட்டிருந்த இடம் உட்பட எரிந்து சாம்பலாகி விட்டது.

சிறிதும் கலங்காமல் வேணுமாமா சாரங்கபாணி நாயுடுவைக் கூப்பிட்டு, "நீர் என்ன பண்ணுவீரோ தெரியாது நாயுடு! எவனோ கொலைகாரப் பாவி - கிராதகன் இங்கே இந்த அக்கிரமம் பண்ணியிருக்கான். காலம்பர ஆறுமணிக்குள்ளே மறுபடியும் பந்தலை நீர் போட்டாகணும். லட்ச ரூபாய் செலவானாலும் பரவாயில்லே. காரியம் நடக்கட்டும்" - என்று உணர்ச்சி மயமாகி உரிமையோடு நாயுடுவுக்கு உத்தரவு போட்டார்.

"ஆகட்டுங்க...! நானாச்சு" - என்றார் நாயுடு. காலை ஐந்தரை மணிக்குத் தீப்பிடித்த சுவடே தெரியாதபடி, ஜிலுஜிலுவென்று பழைய அலங்காரத்தோடு மறுபடியும் புதுப்பொலிவுடன் விளங்கிற்று அந்த மணப்பந்தல்.

*****

கமலியின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் கொண்டு போய்ப் போட்டுக் காண்பிப்பதற்காக மூவி காமிராவில் மாப்பிள்ளை அழைப்பு முதல் அந்தக் கலியாண நிகழ்ச்சிகள் எல்லாம் ஒன்றுவிடாமல் கலர் பிலிமில் படமாக்கப்பட்டது. அதிகாலையிலிருந்து வைதீகச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. வசந்தி கடைசி முயற்சியாக ஒரு முறை போய்க் காமாட்சியம்மாளை அழைத்துப் பார்க்கலாம் என்று புறப்பட்டுச் சென்று முயன்று பார்த்தாள். ஆனால், காமாட்சியம்மாள் எழுந்து நடமாடக் கூட முடியாத நிலைக்குத் தளர்ந்திருந்தாலும், "மாமீ! மனசிலே ஒண்ணும் வச்சிக்காமே வந்து சந்தோஷமாக் கல்யாணத்தை நடத்திக் குடுங்கோ. இது உங்காத்துக் கல்யாணம்" என்று வசந்தி வேண்டியபோது அதற்கு உற்சாகமாகவோ எதிராகவோ இசைவாகவோ பதில் சொல்லாததாலும் வசந்தியே மேற்கொண்டு அதை வற்புறுத்தவில்லை.

"எல்லாம் ரொம்ப லட்சணமாகத்தான் இருக்குடி உங்க காரியம்! பிள்ளைக்கு அம்மா இங்கே இப்பிடிக் கிழிச்ச நாராக் கெடக்கறா, நீங்க பாட்டுக்கு அங்கே ஜாம் ஜாம்னு மேளதாளத்தோட கல்யாணத்தை நடத்திண்டிருக்கேளே!" என்று முத்து மீனாட்சிப் பாட்டியும் கிராமத்திலிருந்து வந்திருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மாவும் வசந்தியிடம் குறைப்பட்டு அலுத்துக் கொண்டார்கள். ஆனால் காமாட்சியம்மாள் உற்சாகமாக இல்லையென்றாலும் அப்போது வசந்தியைச் சினந்தோ கடிந்தோ எதுவும் பதில் சொல்லவில்லை. அதே சமயம் காமாட்சியம்மாளின் அந்த பதிலில் எந்த இசைவும் கூடத் தெரியவில்லை.

"நான் தான் இப்படிக் கெடக்கிறேனே? எங்கே வரது? எதுக்குப் போறது?" - என்று கிணற்றுக்குள்ளிருந்து வருவதுபோல வார்த்தைகள் தளர்ந்து நலிந்து வெளி வந்தன அவளிடமிருந்து.

"தொடங்கறச்சேயே அச்சான்யம் மாதிரி அபசகுனமாக் கல்யாணப் பந்தல்லே நேத்து ராத்திரி தீப்பிடிச்சுடுத்தாமேடீ?" - என்று முத்துமீனாட்சிப் பாட்டி நீட்டி முழக்கிக் கொண்டு ஆரம்பித்தாள். வசந்தி அதற்குப் பதில் சொல்லவில்லை. மனிதர்களின் சூழ்ச்சியால் நடைபெறும் காரியங்களுக்கு எல்லாம் அச்சான்யம், அபசகுனம் என்று பெயர் சூட்டிவிடும் பழங்கால மனப்பான்மையை எண்ணி வியந்தாள் வசந்தி. முன்பு சர்மா வீட்டு வைக்கோற் படைப்பில் தீப்பற்றிய போதும் இதே போலத்தான் கமலியின் தலையில் அந்தப்பழி போடப்பட்டது என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. காமாட்சியம்மாள் கல்யாணத்துக்கு வருகிற நிலையில் இல்லை என்று தெரிந்ததுமே அவள் அங்கே அதிக நேரம் தங்கவில்லை. ஊர் முறைப்படி மீண்டும் காலையில் வீடுவீடாக நேரில் சென்று அழைக்க வேண்டியவர்களை அழைத்துவிட்டுத் திரும்பினாள். கமலி-ரவி மேலிருந்த சீற்றம் இயற்கையாகவே காமாட்சியம்மாளிடம் இப்போது தணிந்திருக்கிறதா அல்லது உடல் நிலையின் தளர்ச்சி காரணமாகக் குறைந்திருக்கிறதா என்பதை வசந்தியால் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. எனினும் கல்யாணத்துக்கு அழைக்கப்போன தன்னிடம் சீறி விழுந்து வசைமாரி பொழியக்கூடும் என்று தான் எதிர்பார்த்ததற்கு மாறாகக் காமாட்சியம்மாள் நிதானமாகவே நடந்து கொண்டது வசந்திக்கு ஆச்சரியத்தை அளித்திருந்தது.

திருமணத்தில் எந்தச் சடங்கும் எந்த மந்திரமும் விட்டுப் போகக் கூடாது என்பதில் கமலி அக்கறை காட்டினாள். சர்மாவும், வேணுமாமாவும் கூட அதைப் புரோகிதரிடம் வற்புறுத்தியிருந்தார்கள். "சீக்கிரமா முடியுங்கோ. நாழியாறது" - என்று உள்ளூர் வைதீகக் குடும்பங்களிலேயே சடங்குகளையும் மந்திரங்களையும் தட்டிக் கழித்துவிட்டு விரைவாக முடித்துக் கொண்டு போக விரும்பும் இந்தக் காலத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு பிரெஞ்சு யுவதி இதில் இத்தனை அக்கறை காட்டுவது புரோகிதருக்கு வியப்பை அளித்தது.

முரண்டும், பொறாமையும் நிறைந்த உள்ளூர் மனிதர்கள் சிலர் தான் வரவில்லையே ஒழியக் கலியாணம் ஜேஜே என்றிருந்தது. கூட்டத்துக்கோ, ஆர்வத்துக்கும் கலகலப்புக்குமோ குறைவில்லை. இறைமுடிமணி மேல் சீமாவையர் போட்டிருந்த பொய் வழக்கு கோர்ட்டில் முடிவாகாமல் இன்னும் இழுபட்டுக் கொண்டிருந்ததனால் - அவர் திருமணத்துக்கு வர முடிந்திருந்தது. நிறையத் தொழிலதிபர்களும், வர்த்தகர்களும், பிரமுகர்களும்கூட வந்திருந்தார்கள்.

"உம்மை சாட்சாத் ஆஞ்சநேயர்னுதான் சொல்லணும் நாயுடு! அநுமார் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்த மாதிரி ராத்திரியோட ராத்திரியா எல்லாச் சாமானையும் கொண்டு வந்து எப்படியோ கல்யாணப் பந்தலைப் பழையபடி போட்டு முடிச்சுட்டீர்..." என்று நாயுடுவைப் பாராட்டினார் வேணுமாமா. பெண்மணிகளின் கூட்டத்தைப் பொறுத்தவரை உள்ளூர் வைதீகக் குடும்பத்துப் பெண்களும் உறவுக்காரர்களின் வீட்டுப் பெண்களும் அதிகம் தென்படவில்லை என்றாலும், சற்றே நாகரிகமடைந்த குடும்பத்துப் பெண்களும், உத்தியோக நிமித்தம் வெளியூர் சென்றிருந்தவர்களும் வேணு மாமா, சர்மா ஆகியோரின் உறவு வகையினருமான பெண்களும் வித்தியாசம் பாராட்டாமல் அந்த திருமணத்துக்கு இயல்பாக வந்திருந்தார்கள்.

பாணிக்ரஹணம், ஸப்தபதி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் முதலிய திருமணச் சடங்குகளைப் பற்றி ஏற்கெனவே புத்தகங்களில் படித்தும், ரவியிடம் கேட்டும் அறிந்திருந்த கமலி இப்போது ஒவ்வொன்றையும் தன் சொந்த அனுபவமாகவே இரசித்து மகிழ்ந்தாள். அவற்றை அப்போது அவள் அந்தரங்கமாக விரும்பினாள் என்றே சொல்லலாம்.

"ஏழு அடிகள் என்னோட உடன் நடந்து வந்து விட்ட நீ இனி என் தோழியாகிறாய். நாம் இருவரும் உயிர் நண்பர்களாகி விட்டோம்! உன்னோடு இன்று நான் அடையும் சிநேகிதத்திலிருந்து இனி என்றும் பிரிக்கப்பட்டவனாக மாட்டேன். என்னுடைய சிநேகிதத்திலிருந்து நீயும் பிரிக்கப் பட்டவளாக மாட்டாய். நாம் இருவரும் ஒன்றுபட்டவர்களாவோம். நாம் இனிமேல் செய்யவேண்டிய அனைத்திற்கும் இன்னின்னவற்றை இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று ஒன்றாகச் சங்கல்பம் பண்ணிக்கொண்டு நாம் செயற்படுவோம். ஒத்த மனத்தோடு பிரியமுள்ளவர்களாகவும் ஒருவர்க்கொருவர் பிரகாசிப்பவர்களாகவும், நல்லெண்ணம் உடையவர்களாகவும், உணவையும், பலத்தையும் சேர்ந்தே அநுபவிக்கிறவர்களாகவும் வாழ்வோம். எண்ணங்களால் நாம் ஒத்த கருத்துடையவர்களாவோம். விரதங்களையும் நோன்புகளையும், சேர்ந்தே அனுஷ்டிப்போம். நம்முடைய விருப்பங்கள் ஒத்தவையாக இருக்கட்டும். நீ 'ரிக்' வேதம் ஆகவும் நான் 'ஸாம' வேதம் ஆகவும் இருப்போம். நான் விண்ணுலகமாக இருக்கிறேன். நீ பூமியாக இருக்கிறாய். நான் வித்துக்களாகவும் நீ விதைக்கப்படும் நிலமாகவும் இருக்கிறோம்! நான் சிந்தனை! நீ சொல்! என்னுடையவளாக என்னை அனுசரித்தவளாக நீ ஆவாய்! பிள்ளை பேற்றுக்காக, வற்றாத செல்வத்துக்காக இன்சொல்லுக்கு உரியவளே, நீ என்னுடன் வருக."

என்ற பொருளுள்ள 'ஸப்தபதி'யைக் கேட்டுக் கமலி ரவியை நோக்கிப் புன்முறுவல் பூத்தாள். நான்கு நாள் மாலையும், ஊஞ்சல் நலுங்கு வைத்துப் பாடுதல் முதலிய பெண்களின் சடங்குகள் எல்லாம் குறைவில்லாமல் அந்தக் கலியாணத்தில் இருந்தன. ஒவ்வொரு சடங்கிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், கமலி பெருமகிழ்ச்சி அடைந்தாள். ஒரு கிராமாந்தரத்துக் கலியாணத்தில் உள்ள சின்னச் சின்ன மகிழ்ச்சிகளும் சுவாரஸ்யங்களும், உல்லாஸங்களும், சந்தோஷங்களும் சிலிர்ப்புக்களும் சிரிப்புக்களும் அந்தத் திருமணத்திலும் இருந்தன. கண்ணுக்கு மையிட்டுக் கைகளுக்கும் கால்களுக்கும் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிக் கூந்தலைச் சவுரி வைத்து நீளப் பின்னிப் பட்டுக் குஞ்சலங்கள் கட்டித் தமிழ் நாட்டு மணப்பெண்ணாகவே கமலியைத் தோன்றச் செய்திருந்தாள் வசந்தி. நிறமும், இதழ்களின் வெளுத்த ரோஸ் வண்ணமும்தான் வித்தியாசமாகத் தெரிந்தன. மையூட்டியிருந்த காரணத்தால் கமலியின் விழிகளில் கூட அப்போது அதிக வேறுபாடு தெரியவில்லை.

திருமண நாளன்றும், அடுத்த சில நாட்களிலும் குமார், பார்வதி, இருவரும்கூடக் கலியாண வீட்டிலேயே செலவழித்துவிட்டதால், காமாட்சியம்மாள் பெரியம்மாவுடனும், முத்துமீனாட்சிப் பாட்டியுடனும் வீட்டில் தனித்து விடப்பட்டாள். அந்த வீடும் கல்யாணத்துடன் சம்பந்தப்பட்டது என்பதைக் காட்டுவதைப் போல வாசலில் குலை தள்ளிய வாழைமரங்களும், மாவிலைத் தோரணமும் கட்டப்பட்டிருந்தன. சுவரில் வெள்ளைச் சுண்ணாம்புப் பட்டைகளும், புதிய செம்மண் பட்டைகளும் அடிக்கப்பட்டிருந்தன. வாசலில் செம்மண் கோலம் பெரிதாகப் போடப்பட்டிருந்தது. ஆனால் வீட்டின் உள்ளே மட்டும் நிசப்தம் நிலவியது. சில சமயங்களில் காமாட்சியம்மாளின் இருமல், முனகல் ஒலிகள் மட்டும் கேட்டன. பாட்டியின் பேச்சுக்குரல் இடையிடையே கேட்டது. மற்றபடி வீட்டை ஒரு முறைக்காக மங்கல அடையாளங்களோடு அலங்கரித்துவிட்டு வெளியூரில் நடைபெறும் கலியாணத்துக்குப் புறப்பட்டுப் போயிருந்தவர்களின் இல்லத்தைப் போலவே அரவமற்றிருந்தது அந்த வீடு. "நலங்கு பஞ்சத் தேங்காய் எல்லாம் ஒரே தடபுடல் படறதாண்டீ காமு! இந்த அக்கம் பக்கத்து ஊர்களிலேயே நலங்கு பாடறதுலே கெட்டிக்காரின்னு பேரெடுத்தவள் நீ! ஆனா உங்காத்துப் பிள்ளை கல்யாணம் நீ போகாமலேயே நடக்கறது" - என்று முத்துமீனாட்சிப் பாட்டி காமாட்சியம்மாளிடம் ஆரம்பித்தாள். காமாட்சியம்மாள் முதலில் இதற்குப் பதில் எதுவுமே சொல்லவில்லை. ஆயிரம் அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் வீட்டுத் தகராறுகள் பாட்டி மூலம் ஊர் வம்பாகப் பரவுவதைக் காமாட்சியம்மாள் விரும்பவில்லை என்று தெரிந்தது. சிறிது நேரம் கழித்து ஆவலை அடக்க முடியாமல் காமாட்சியம்மாளே கலியாணத்தைப் பற்றிப் பாட்டியிடம் ஏதோ விசார்த்தாள்.

"உங்காத்திலே தங்கியிருந்துதே அந்த வெள்ளைக்காரப் பொண்தானா இதுன்னு நம்பவே முடியலேடீ காமு! அப்பிடி அலங்கரிச்சு நம்ம கல்யாணப் பொண்களை மாதிரி மணையிலே கொண்டு வந்து உட்கார்த்தியிருக்கா" - என்று பாட்டி கூறியதைக் கேட்டு காமாட்சியம்மாளுக்கு உள்ளூறப் போய்ப் பார்க்க வேண்டும்போல ஆசையிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முத்து மீனாட்சிப் பாட்டியும், பெரியம்மாவும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து தயங்கிப் பேசாமல் இருந்தாள் காமாட்சியம்மாள். ஆனால் பாட்டி பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தாள்.

"உள்ளூர் வாத்தியார் ஜம்புநாத சாஸ்திரி இந்தக் கலியாணத்துக்குப் புரோகிதரா இருக்க மாட்டேனுட்டாராம். இன்னிக்கு நிறையப் பணம் கெடைக்கும்னு இதுக்கெல்லாம் வந்து நின்னுட்டேன்னா நாளைக்கி ஊர்லே நாலு பெரிய மனுஷர் நல்லது கெட்டதுக்கு என்னை மதிச்சுக் கூப்பிடமாட்டான்னு ஒதுங்கிட்டாராம். அப்புறம் வேணுகோபாலன் நெறையப் பணம் செலவழிச்சு மெட்ராஸ்லேருந்து யாரோ ஒரு புது வாத்தியாருக்கு ஏற்பாடு பண்ணினானாம். அந்தப் புது வாத்தியார்தான் இப்ப எல்லாம் பண்ணி வைக்கிறாராம். தானங்கள் தட்சிணைகள் வாங்கறதுக்குக்கூட உள்ளூர் வைதீகாள் யாரும் போகல்லையாம். ஆனா வெளியூர்லேருந்து நெறைய வைதீகாள் வந்திருக்காளாம்... என்னதான் கோர்ட்டிலே அந்தப் பிரெஞ்சுப் பொண்ணு நம்ம மனுஷாளை விடச் சுத்தமானவள்னு ஜட்ஜ் தீர்ப்புச் சொல்லிவிட்டாலும், உள்ளூர் வைதிகாள் தயங்கறா. ஆனால் வெளியூர்லேயிருந்து நெறைய வைதிகாளை வரவழைச்சிருக்காளாம்..."

"பொண்ணை யார் தாரை வார்த்துக் குடுத்தாளாம்."

"இதுவரை நோக்கு அது தெரியாதாடி காமு? வேறெ யாரு! அந்த வேணுகோபாலனும் அவள் ஆத்துக்காரியும்தான் தாரை வார்த்துக் குடுத்தாளாம். அதான் இந்தக் கல்யாணத்துக்காக அவாத்துலே சுமங்கலிப் பிரார்த்தனை கூட நடந்ததுன்னேனே?"

இதற்கு மேல் காமாட்சியம்மாளாக யாரிடமும் எதுவும் வலிந்து விசாரிக்கவில்லை.

முகூர்த்தம் முடிந்த மறுநாள் பிறபகல் பெரியம்மா அப்போதுதான் தூங்கி விழித்திருந்த காமாட்சியம்மாளிடம் சொன்னாள்.

"உன்னைப் பார்த்துட்டுப் போறதுக்காக உங்காத்துக்காரரும் அந்த வேணுகோபாலனும் வந்துட்டு போனாடீ காமு! நீ நன்னா அசந்து தூங்கிண்டிருந்ததை அவாளே பார்த்தா, 'எழுப்பட்டுமா'னு கேட்டேன். 'எழுப்ப வேண்டாம். தூங்கட்டும்! அப்புறமா வந்து பார்த்துக்கறோம்'னு உன் உடம்பைப் பத்தி விசாரிச்சுட்டுப் பொறப்பட்டுப் போயிட்டா."

"இவா வந்து பார்க்கல்லேன்னுதான் இப்போ குறையா? வரலேன்னு இங்கே யார் அழுதாளாம்?"

"இவாள்ளாம் வரா - வரலேங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்டீ! நீ பத்து மாசம் சொமந்து பெத்த பிள்ளை கல்யாணத்தைப் பண்ணிண்டு 'ஆசீர்வாதம் பண்ணும்மா'ன்னு வந்து நமஸ்காரம் பண்ணினானோடீ? அவனுக்கு எங்கே போச்சுடீ புத்தி?" என்றாள் முத்து மீனாட்சிப் பாட்டி.

"வந்தா வரா, வராட்டாப் போறா. யார் வரலேன்னும் இங்கே நான் ஒண்ணும் தவிக்கலே பாட்டீ?"

"அப்பிடிச் சொல்லாதே! நீ விரும்பலே விரும்பறேங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். மொறைன்னு ஒன்னு இருக்கோல்லியோ? அவாளாத் தேடிண்டு வந்து உன்னை நமஸ்காரம் பண்ண வேண்டாமோ?" இதைக் கேட்டுக் காமாட்சியம்மாளுக்குக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அழுகையை அடக்க முடியவில்லை. அந்தக் கல்யாணத்தைப் பொருட்படுத்தாதவள் போலவும், புறக்கணித்தாற்போலவும் அவள் பாசாங்கு பண்ணினாலேயொழிய, மனம் என்னவோ அங்கேதான் இருந்தது. ஒவ்வொரு விநாடியும் அங்கே அந்தக் கல்யாண வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதைப் பற்றித்தான் அவள் மனம் சதா கற்பனை செய்து கொண்டிருந்தது. ரவியையும், கமலியையும், வசந்தியையும், சர்மாவையும், கல்யாண வீட்டையும் பற்றியே அவள் உள் மனம் நினைத்து உருகிக் கொண்டிருந்தது. கல்யாண வீட்டைப் பற்றி முத்து மீனாட்சிப் பாட்டியும், பெரியம்மாவும் எதையாவது கூறிய போதெல்லாம் சிரத்தையின்றிக் கேட்பது போல் மேலுக்குக் காட்டிக் கொண்டாளே தவிர அவற்றை உண்மையில் அவள் மிகவும் சிரத்தையோடு கூர்ந்து விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நான்கு நாளும் ஔபாசனம், ஊஞ்சல், நலங்கு - நிறைவு நாளன்று மாப்பிள்ளை பெண்ணுடன், கல்யாண வீட்டார் ஊர்வலமாகப் போய் அகஸ்திய நதியில் 'பாலிகை' கரைக்கப் போகிறார்கள் - என்று ஒவ்வொன்றாகக் கலியாண வீட்டுத் தகவல்களை அறிந்து வந்து காமாட்சியம்மாளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள் முத்துமீனாட்சிப் பாட்டி. ஒரு விஷயம் பற்றிக் காமாட்சியம்மாளே ஞாபகமாகப் பாட்டியை விசாரித்தாள்:

"கிருஹப் பிரவேசம்னு ஒண்ணு உண்டே, அதை என்னிக்கு வச்சிக்கப் போறாளாம் பாட்டீ?"

"நான் அதை ஒண்ணும் விசாரிக்கல்லேடீ காமு!"

"விசாரியுங்கோ, அன்னிக்கி எல்லாரும் இங்கேதானே வருவா... நாம தடுக்க முடியாதே... அவா வீடு, அவா வாசல், நாம என்ன பண்ண முடியும்?"

"அதுவும் அப்படியா சமாசாரம்? எனக்கு அது நெனைவே இல்லையேடீ?" - என்றாள் பெரியம்மா. அன்று மாலையிலேயே முத்துமீனாட்சிப் பாட்டி அந்தத் தகவலை விசாரித்துக் கொண்டு வந்து சொன்னாள்:

"பாலிகை கரைச்ச மத்தா நாள் கிருஹப் பிரவேசத்துக்கு ஏத்ததா இருக்காம்டீ காமு! அதனாலே அன்னிக்கிக் காலம்பர ஆறு மணியிலேருந்து ஏழரை மணிக்குள்ள ஒரு முகூர்த்தத்திலே இங்கே கிருஹப் பிரவேசத்துக்காக வராளாம். நீ உடம்பு சௌகரியமில்லாமப் படுத்துண்டுட்டதாலே சமையல் மத்ததுக்கு எல்லாம் அவாலே மனுஷாளை இங்கே முன்கூட்டியே அனுப்பிச்சுடுவான்னு நினைக்கிறேன்" என்று காமாட்சியம்மாள் மனத்தில் வெறுப்பை வளர்க்க நினைத்துப் பேசினாள்.

"கிருகப் பிரவேசத்துக்கு மட்டும் ஏன் இங்கே தேடிண்டு வரணும்டீ? அதையும் அங்கேயே எங்கேயாவது பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே? சாஸ்திரப்படி புள்ளையாத்திலேதான் பண்ணணும்னு இவாளுக்கு என்னடீ நிர்ப்பந்தம் வந்தது?" என்று கிராமத்திலிருந்து வந்து தங்கியிருந்த பெரியம்மா குறுக்கிட்டுச் சொன்ன போது காமாட்சியம்மாள் அதை அவ்வளவாக வரவேற்கவோ, இரசிக்கவோ இல்லை என்று தெரிந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 32
காமாட்சியம்மாளின் அந்தரங்கத்தில் இந்தக் கலியாணம், இதன் வைபவங்கள், இது தொடர்பான கிருஹப் பிரவேச முகூர்த்தம் எல்லாவற்றின் மேலும் வெறுப்புத்தான் நிரம்பிக் கிடக்கிறதென்று தாங்களாகவே கற்பித்து நினைத்துக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் பாட்டியும் பெரியம்மாவும்.​

ஆனால் காமாட்சியம்மாளின் உள்மனமோ கமலியையும் ரவியையும் விதம்விதமாக மணக்கோலத்தில் கற்பனை செய்து கொண்டிருந்தது. நெற்றிச் சரமும், மாட்டலும், பின்னல் குஞ்சலமும் குண்டலமும், கூரைப் புடவையுமாகக் கமலியை நினைத்து நினைத்துத் தன் அகத்திலேயே ஓர் அழகிய மணக்கோலத்தை உருவாக்கி உருவாக்கித் திருப்தியும் அதிருப்தியுமாக மாறி மாறி அடைந்து கொண்டிருந்தது காமாட்சியம்மாளின் உள்ளம்.

"நீயானா இப்படிப் படுத்த படுக்கையாகக் கெடக்கறே! படியேறி வரபோது பொண்ணையும் மாப்பிள்ளையையும் மஞ்சநீர் சுத்திக் கொட்டி வரவேற்கறதுக்குக் கூட மனுஷா இல்லே இங்கே. உன் பொண் பாருவோ, வேணுகோபாலன் பொண் வசந்தியோ முன்னாடியே வந்து மஞ்சநீர் கரைச்சு வச்சுண்டு நின்னால்தான் உண்டு" - என்று யோசனை சொன்னாள் முத்து மீனாட்சிப் பாட்டி.

"நீக்க சொல்றது நியாயந்தான். நமக்குப் பிடிச்ச கல்யாணமோ, பிடிக்காத கலியாணமோ புள்ளை நம்மாத்துப் பிள்ளை. கல்யாணத்தைப் பண்ணிண்டு புது வேஷ்டியும் காப்புமாப் பொண்ணைக் கூட்டிண்டு வாசல்லே வந்து நின்னுட்டா 'வாங்கோ'ன்னு மஞ்சநீர் சுத்திக் கொட்டி வரவேத்துத்தானே ஆகணும். வேறே என்ன பண்ணமுடியும்?" என்று பெரியம்மாவும் பாட்டியோடு சேர்ந்து கொண்டாள். உண்மையில் அந்த விஷயத்தைச் சாதகமாகவோ பாதகமாகவோ தீர்மானிக்க வேண்டிய காமாட்சியம்மாள் மட்டும் இன்னும் ஒரு முடிவுக்கு வர இயலாதவள் போல் கண்களில் நீர் நெகிழப் படுத்திருந்தாள். பாட்டி மீண்டும் காமாட்சியம்மாளை ஆழம் பார்த்தாள்.

"ஆயிரமிருந்தாலும் நல்லது கெட்டதுலே விட்டுக் குடுத்துட முடியுமோ? நம்மாத்துப் பிள்ளை நம்மாத்துக் கலியாணம்" -

"இந்த மாதிரிச் சமயத்துலே விட்டுக் குடுத்து முகத்தை முறிச்சுண்டுட்டா ஊரிலே நாலு பேர் நாலு தினுசாப் பேசறத்துக்கு எடமாயிடுமோன்னோ?" - இது பெரியம்மா.

"நீங்க ரெண்டு பேரும் சித்தே பேசாமே இருங்கோ! எனக்கு மூளையே கொழம்பிப் பைத்தியம் பிடிச்சிடும் போலே இருக்கு பாட்டி!" என்று அழுகைக்கிடையே இருவரையும் வேண்டிக் கொண்டாள் காமாட்சியம்மாள். அவளை அவர்களால் அப்போது உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் என்ன மனப்போக்கில் இருக்கிறாள் என்பதை அறிய அவர்கள் செய்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

நாளைக்கு இரவு பாலிகை கரைக்கிறார்கள். நாளன்றைக்குப் பொழுது புலர்ந்தால் கிருஹப் பிரவேசம். காமாட்சியம்மாள் என்ன நினைக்கிறாள் என்பது யாருக்கும் புரியாத புதிராயிருந்தது. அவள் முகத்தில் தெம்பும் இல்லை. உடலில் சக்தியும் கிடையாது. கண்களில் அழுகையும் நிற்கவில்லை. யாரிடமும் மனம் விட்டு அவள் பேசவும் இல்லை.

கிருஹப்பிரவேசத்திற்கு முதல் நாளே முத்துமீனாட்சிப் பாட்டி, "நல்ல காரியத்திலே வெள்ளைப் புடவைக்காரி அங்கே நின்னா இங்கே நின்னான்னு இந்தாத்திலே எனக்குக் கெட்ட பேர் வரப்பிடாதுடீம்மா" - என்று காமாட்சியம்மாளிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டுப் போய் விட்டாள். முத்துமீனாட்சிப் பாட்டி போனபின் பார்வதியிடமும், குமாரிடமும், காமாட்சியம்மாளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத் தெரிந்தவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள் கிராமத்திலிருந்து வந்திருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மா.

காமாட்சியம்மாள் மிகவும் வைதிகமாகக் கட்டிக் காத்து வந்த சமையலறைக்குள் தங்களை நுழைய விடுவாளோ மாட்டாளோ என்கிற பயத்தில் பின்புறம் தோட்டத்தில் கீற்றுப் பந்தல் போட்டுச் சமையலுக்குக் கோட்டையடுப்பு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் சமையற்காரர்கள். மறுநாள் காலையில் கிருஹப்பிரவேசம் என்றால் முதல் நாள் இரவே தன் வீட்டுத் திண்ணையில் வந்து படுத்துக் கொள்ள விரும்பியும், ஒரு சுபமுகூர்த்தத்துக்கு முன்னால் அநாவசியமாகக் காமுவுக்கும் தனக்கும் சண்டை மூண்டு விடுமோ என்ற முன்னெச்சரிக்கையாலும், தயக்கத்தினாலும் சர்மா அதைத் தவிர்த்திருந்தார். வாசலில் கட்டியிருந்த வாழை மரங்களும் மாவிலைத் தோரணமும், செம்மண் கோலமும் தவிர வேறு கலகலப்போ ஆரவாரமோ பரபரப்போ இன்றி விளங்கியது அந்த வீடு. உள்ளேயிருந்த காமாட்சியம்மாள் வேதனையால் ஈனஸ்வரத்தில் முனகும் ஒலியும், இருமல்களும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அந்த வீட்டில்தான் மறுதினம் அதிகாலையில் கமலியும் ரவியும் கிருஹப்பிரவேசம் செய்யப் போகிறார்கள் என்பதற்கான முன்னறிகுறி எதுவுமே இல்லாதிருந்தது. அக்கம் பக்கத்தார் வந்து போகிற கலகலப்போ ஆரவாரமோ கூட அப்போது அவ்வீட்டில் இல்லை.

மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கே காமாட்சியம்மாளுக்குத் தூக்கம் கலைந்து விழிப்பு வந்து விட்டது. தற்செயலாக அன்று வெள்ளிக்கிழமை வேறு. அம்மாவுக்குத் துணையாகக் கல்யாண வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து படுத்திருந்த பார்வதியும், குமாரும் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். காமாட்சியம்மாள் தான் முதலில் விழித்துக் கொண்டிருந்ததனால் தட்டுத் தடுமாறி எழுந்திருந்து கிணற்றுப் பக்கம் சென்றாள். அப்போது அவளைத் தடுப்பதற்கு அந்த வீட்டில் யாரும் இல்லை. அதிகாலைக் குளிர்காற்று சில்லென்று முகத்தில் வந்து உராய்ந்தது. தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களின் வாசனையைச் சுமந்து கொண்டு வந்து பரப்பியது அந்தக் காற்று. கிணற்றில் தானே தண்ணீர் இறைத்து நீராடினாள் காமாட்சியம்மாள். உள்ளே திரும்பி வந்து விசேஷ நாட்களில் தான் விரும்பி அணியும் கருநீல நிறத்துச் சரிகைப் பட்டுப் புடவையை அணிந்து தலையைத் துவட்டி ஈரத்தோடு நுனி முடிச்சுப் போட்டு நெற்றிக்குத் திலகமிட்டுக் கொண்டாள். மாட்டுத் தொழுவத்துக்குப் போய் பால் கறந்து வைத்தாள். தோட்டத்தில் போய் பூக்கொய்து கொணர்ந்து தொடுத்துக் கொஞ்சம் தன் தலையில் செருகிக் கொண்டு மீதத்தை அப்படியே வைத்தாள். வீட்டின் புராதனமான ஆகிவந்த வெள்ளித் தாம்பாளத்தை உள்ளேயிருந்து எடுத்துத் துலக்கி அதில் ஆரத்திக்கு மஞ்சள் நீர் கரைத்து வைத்தாள். வாசல் தெளித்துக் கோலம் போட்டாள்.

பார்வதி கண் விழித்த போது அம்மாவே எழுந்து நீராடிய கூந்தல் ஈரம் புலராமல் கூடத்திலிருந்து குத்து விளக்கு ஏற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனாள்.

"இந்த உடம்போட உன்னை யாரும்மா எழுந்திருக்கச் சொன்னது! ஐயையோ... பச்சைத் தண்ணியிலே குளிக்க வேறே செஞ்சிருக்கியா? ஏம்மா இதெல்லாம் பண்ணினே? அதான் இதெல்லாம் கவனிக்கிறதுக்குன்னு நான் வந்திருக்கேனே?"

"சரிதான் போடீ... நீ பெரிய மனுஷி! உனக்கென்ன தெரியும்டீ இதெல்லாம்... போ... நீயும் போய்ச் சீக்கிரமாக் குளிச்சிட்டு வா..."

அம்மாவின் இந்தத் திடீர் மாறுதலும் உற்சாகமும் பார்வதியால் உடனே நம்ப முடியாதபடி இருந்தன. பல நாட்களாகச் சரியான உணவு இன்றி வெறும் கஞ்சியும், பழங்களுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த அம்மாவின் குரலிலோ, செயல்களிலோ மிடுக்கு இல்லை என்றாலும் தானே ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்தினாலும் நலிந்திருந்தும் வலிந்து பெறுவதற்கு முயன்ற சக்தியினாலும், காமாட்சியம்மாள் அந்த அதிகாலையில் அவ்வீட்டின் சுமங்கலியாகவும் கிருஹ லட்சுமியாகவும் பொலிவுடன் நடமாடிக் கொண்டிருந்தாள்.

கிராமத்துக்கே உரிய சோபையுடன் கிழக்குத் திசை வெளுத்துக் கொண்டிருந்தபோது, தெருக்கோடியிலிருந்து மேளம் நாதஸ்வர இசையுடன் கூட்டமாக மனிதர்கள் வரும் ஒலியரவங்கள் கேட்டன. காமாட்சியம்மாள் தெருத் திண்ணைக்கு வந்து எட்டிப் பார்த்துக் கமலியும் ரவியும் மற்றவர்களும் தான் வடக்குத் தெருவில் கல்யாண வீட்டிலிருந்து புறப்பட்டுக் கிருஹப் பிரவேசத்துக்காக ஊர்வலமாக வருகிறார்கள் என்று புரிந்து கொண்டாள். மகிழ்ச்சியாலும், வலிந்து ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்தினாலும் தனது உடல் நிலைக்கு மீறிய செயல்களை அப்போது அவள் செய்து கொண்டிருந்தாள். தலைசுற்றிக் கீழே மயங்கி விழுந்து விடாமல் திண்ணைத் தூணை இறுகப் பற்றிக் கொண்டாள்.

கண்களுக்கு நேரே பூச்சி பறந்தது. நெஞ்சு படபடவென்று வேகமாக அடித்துக் கொண்டது. உடம்பு நடுங்கியது. அப்போதுதான் குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்திருந்த பார்வதி அம்மாவைப் பார்த்துப் பதறிப் போய், "என்னம்மா இது? மயக்கமா வரதா? நிற்கவே தள்ளாடறயே?... உன்னை யார் இதெல்லாம் பண்ணச் சொன்னது? நான் பார்த்துக்கறேன். நீ பேசாமப் போய்க் கம்பளியைப் போர்த்திண்டு உள்ளே படுத்துக்கோ..." என்று இரைந்தாள்.

"கத்தாதேடீ! இப்ப எனக்கு ஒண்ணுமில்லே... உள்ளே சுவாமி படத்தண்டே தாம்பாளத்திலே ஆரத்தி கரைச்சி வச்சிருக்கேன்... போய் எடுத்துண்டு வா..." என்று மிகவும் தளர்ந்த குரலில் காமாட்சியம்மாளிடமிருந்து பதில் வந்தது.

பறவைகளின் கலவையான எழுச்சிக் குரல்களும், அதிகாலைக் குளிர்ச்சியும் மூன்றாவது வீட்டில் யாரோ ஒரு மூத்த வைதிகர் வேதம் சொல்லிக் கொண்டிருந்த கணீரென்ற குரலும் நாதஸ்வரக்காரரின் பூபாளமுமாக அந்த வைகறையை அதிகம் அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டிருந்தன.

அக்கம்பக்கத்திலும் எதிர்வரிசையிலும் வீடுகளில் எழுந்து வந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். பாருவை ஆரத்திக்காக உஷார்படுத்த முன்கூட்டியே ஓட்டமும் நடையுமாக எதிர்கொண்டு வந்த வசந்தி திண்ணையில் காமாட்சி மாமியைப் பார்த்து வியப்பும் திகைப்பும் அடைந்தாள்.

"என்ன மாமி இது? இந்த உடம்போட நீங்க எதுக்கு இதெல்லாம் வந்து அலட்டிக்கறேள்...? போய்ப் படுத்துக்குங்கோ..."

"எனக்கு ஒடம்புக்கு ஒண்ணும் இல்லேடீ... வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் படுக்கையிலே விழிப்போடப் படுத்திண்டிருக்கப் பிடிக்கலே... வா... இப்பிடி உட்கார்ந்துக்கோ. ஆரத்தியை எடுத்துண்டுவரப் பாரு உள்ளே போயிருக்கா."

உள்ளேயிருந்து பார்வதி மஞ்சள் நீர்த் தாம்பாளத்தோடு வந்தாள். காமாட்சியம்மாளை வாசலில் பார்த்ததும் எடுத்த எடுப்பில் 'கலியாணப் பெண்ணையும் பிள்ளையையும் வீட்டுக்குள் விடமாட்டேன்' என்று சண்டை போட்டுத் தடுக்கத்தான் அந்த உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் எழுந்து வந்து உட்கார்ந்திருக்கிறாளோ என்று முதலில் எண்ணித் தயங்கிய வசந்தி சிறிது பேச்சுக் கொடுத்துப் பார்த்த பின்பே மாமிக்கு இடைஞ்சல் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்பதையும் அவள் தானாகவே கொஞ்சம் மனம் மாறிச் சுமுகமான நிலைமையில் தான் வந்து உட்கார்ந்திருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டாள். காமாட்சியம்மாளின் இந்தச் சிறிதளவு மனமாற்றம் கூட வசந்திக்குப் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. எதிர்பாராத புதிய திருப்பமாகவும் இருந்தது.

"என்ன மாமீ... குளிச்சேளா... ஈரத்தலையோட நுனி முடிச்சிப் போட்டிண்டிருக்கிற மாதிரித் தெரியறதே?" என்று மாமியின் தோற்றத்தைப் பார்த்து விசாரித்தாள் வசந்தி.

"ஆமாண்டி நல்ல நாளும் அதுவுமா 'அபிஷ்டு' மாதிரிக் குளிக்காமப் படுத்துண்டிருக்க முடியறதா?"

இப்படிக் காமாட்சியம்மாள் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே ஊர்வலமும் மனிதர்களும் வீட்டை நெருங்கி வந்திருந்தனர்.

சர்மா, ரவி, கமலி, வேணு மாமா எல்லோருக்குமே காமாட்சியம்மாளை ஆரத்தித் தட்டுடன் வாசலில் பார்த்ததும் பெரிய ஆச்சரியமாயிருந்தது. ஆரத்தி சுற்றிக் கொட்டும் போது பாடும் பாட்டுக்காக மேளமும் நாதஸ்வரமும் சகல வாத்தியங்களும் சில நிமிஷங்கள் ஒலிப்பது தவிர்த்து நின்றன. காமாட்சியம்மாளும் வசந்தியும் தான் ஆரத்தி சுற்றிக் கொட்டினார்கள். காமாட்சியம்மாளே பாட்டும் பாடினாள். "பத்திரம்! வலது காலை எடுத்து முன்னே வச்சு உள்ளே வா..." என்று காமாட்சியம்மாளே கமலிக்குச் சொல்லி அழைத்துக் கொண்டு போனது இன்னும் நம்ப முடியாததாக இருந்தது. யாரும் கவனிக்காமல் பேசாமல் கொள்ளாமல் விட்டுவிட்ட தனிமையில் தனக்குத் தானே நினைத்து நினைத்து காமு மெல்ல மனம் மாறியிருக்க வேண்டும் என்று நினைத்தார் சர்மா. காமாட்சியம்மாளே, "ரெண்டு பேரும் சித்தே இப்பிடி என் பின்னாடி வாங்கோ..." என்று மணமக்களைத் தன் படுக்கையருகே அழைத்துச் சென்றாள். அதுதான் நல்ல சமயமென்று வேணு மாமா, "இந்தாடா ரவி! அம்மாவை ஆசீர்வாதம் பண்ணச் சொல்லு!..." என்று அட்சதை நிரம்பிய வெள்ளிக் கிண்ணத்தை அவனிடம் நீட்டினார்.

ரவி அட்சதையை அம்மா கையில் கொடுத்துவிட்டுக் கமலியோடு அவளை நமஸ்காரம் செய்தான். "தீர்க்காயுஸா இருக்கணும்" - என்று அம்மாவின் மெல்லிய குரல் சாதகமாக ஒலித்ததுமே அவர்கள் மனத்தில் பாலை வார்த்தாற்போல இருந்தது.

தான் கறந்து வைத்திருந்த பாலில் தன் படுக்கையருகே வைத்திருந்த மலைப்பழங்களில் இரண்டு மூன்றை உரித்து விண்டு போட்டுக் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்தபின், "கல்யாணத்திலே பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் பாலும் பழமும் கொடுக்கணும்னு சாஸ்திரம்டா! நான் அங்கே தான் வரமுடியலே... இந்தா! முதல்லே இரண்டு பேருமா இதைக் கொஞ்சம் சாப்பிடுங்கோ சொல்றேன்" - என்று கமலிக்கும், ரவிக்கும் பாலும் பழமும் கொடுத்தாள் காமாட்சியம்மாள். அந்தப் பரிவு - ஒன்றுமே வித்தியாசமாக நடந்து விடாதது போன்ற காமாட்சியம்மாளின் அந்த அன்பு எல்லாம் ரவியையும் கமலியையும் மற்றவர்களையும் திணற அடித்தன.

திடீரென்று நின்று கொண்டிருக்கும்போதே தலை சுற்றி மயங்கி விழுவது போல தள்ளாடும் அம்மாவை ரவி பாய்ந்து தாங்கிக் கொண்டான்.

"நீ சித்தே புருஷா பக்கம் போய் இருடாப்பா. இப்போ எனக்கு என் மாட்டுப் பொண்ணோட தனியா ரெண்டு வார்த்தை பேசணும்..."

ரவி விலகிப் போய் மற்றவர்களோடு சேர்ந்து கொண்டான். தள்ளி நின்று கொண்டிருந்த கமலியை ஜாடை செய்து அருகே அழைத்தாள் காமாட்சியம்மாள். அப்படி அழைத்த அவள் முகமும் பார்வையும் நிஷ்களங்கமாக இருந்தன.

காமாட்சியம்மாள் அப்போதிருந்த தளர்ச்சியைப் பார்த்துக் கமலி அவளை அப்படியே அணைத்தாற் போலத் தாங்கிச் சென்று கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, "உங்களுக்கு இருக்கிற தளர்ச்சியில் நீங்கள் நிற்கக் கூடாது! உட்கார்ந்து கொண்டே சொல்லுங்கள்" - என்று அருகே பவ்யமாக நின்று கொண்டாள். காமாட்சியம்மாள் அப்படியே அவளை விழுங்கி விடுகிறவளைப் போல வைத்த கண் வாங்காமல் பார்த்து அவளது இன்னும் காப்புக் களையாத கையுடன் கூடிய அழகிய மணக்கோலத்தைச் சில விநாடிகள் தன்னுள் இரசித்தாள்.

அதிகாலையில் தானே தொடுத்துத் தனக்கு வைத்துக் கொண்டது போக மீதியிருந்த பூவைப் பாருவிடம் எடுத்துக் கொண்டு வரச்சொல்லித் தன் கையாலேயே கமலிக்குச் சூட்டி விட்டாள்.

"நீ ஏன் நிற்கிறே? நீயும் இப்பிடிப் பக்கத்திலே உட்கார்ந்துக்கோ. சொல்றேன்" -

கமலி அப்படியே கட்டிலுக்குக் கீழே காமாட்சியம்மாளின் காலடியில் அமர்ந்தாள்.

"நீ ரொம்பக் கெட்டிக்காரி... எல்லாம் உன் மனசு போலவே நடந்திருக்கு. எனக்கும் இப்போ இந்த நிமிஷம் உன் மேலயோ அவன் மேலேயோ எந்த மனஸ்தாபமும் இல்லை. ஆனா மனஸ்தாபம் இருந்ததுங்கறது நிஜம். எனக்கு இப்போ மனசு திருப்தியா நெறைஞ்சு இருக்கு. நீயும், என் புள்ளையும் தீர்க்காயுஸா - படு சௌக்கியமா இருப்பேள் - அதிலே சந்தேகமில்லே. என்னமோ என் அக்ஞானம்... நான் முரண்டு பிடிச்சேன். குறுக்கே நின்னேன். இப்போ அதை நானே மறந்துட்டேன். நீயும் மறந்துடணும். மன்னிச்சிடணும்னுகூடச் சொல்வேன்."

"ஐயையோ நீங்கள் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நான் ரொம்பச் சிறியவள். உங்களிடம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியவள். நான் யாரு உங்களை மன்னிக்க?"

"நீ அகந்தையில்லாதவள்... நிஜமான படிப்பாளி. அதுனாலேதான் நான் இத்தனை கடுமையாச் சோதனை பண்ணினப்புறமும் நீ எங்கிட்டப் பவ்யமாக இப்பிடிச் சொல்றே. பரவாயில்லே இப்போ நான் உங்கிட்ட ஒண்ணே ஒண்ணு மட்டும் வேண்டிக்கிறதுக்கு மீதம். இருக்கு."

"நீங்கள் வேண்டிக் கொள்ளக் கூடாது, உங்கள் மருமகளுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்" -

"நான் வேண்டுதல்னுதான் சொல்லுவேன்ம்மா! நீ உத்தரவுன்னு எடுத்துண்டா அதைப்பத்திச் சந்தோஷப்படறேன்."

"உன்னைப்போல் நான் இந்தாத்து மாட்டுப் பொண்ணா உள்ளே நுழைஞ்சப்போ என் மாமியார் எனக்கு எதைச் சொன்னாளோ அதை நான் உனக்குச் சொல்லியாகணும்! ஆனா ஒரு வித்தியாசம், நாங்கள்ளாம் இந்த தேசத்துக்காரா. நீ வேற தேசத்திலேருந்து வந்துருக்கே. இந்தத் தேசத்து ஆசார அநுஷ்டானங்களைப் புரிஞ்சுண்டிருக்கே. கொண்டாடறே. படிப்பும் பணிவும் சேர்ந்து அமையறது கஷ்டம். உங்கிட்ட ரெண்டுமே அமைஞ்சிருக்கு."

"எப்போது அக்கினி சாட்சியாக உங்கள் பிள்ளையைக் கல்யாணம் செய்து கொண்டு நான் உங்கள் மருமகள் ஆகிவிட்டேனோ அப்புறம் என்னை ஏன் வேறு தேசம் என்று நீங்கள் சொல்லணும்?"

"இனிமே அப்படிச் சொல்லலேடீ! தேசம் எதுவாயிருந்தா என்னம்மா? பிரியம், பாசம், உபகாரம், மனுஷத்தன்மை, சத்யம், சகிப்புத் தன்மை, நியாயம், சிரத்தைங்கறதெல்லாம் அத்தனை தேசத்துக்கும் ஒண்ணுதான். இந்த தேசத்துக்காராளைவிட இந்த தேசத்து விஷயங்கள்ளே உனக்கு அதிகமான பக்தி சிரத்தை இருக்குன்னு கோர்ட்டிலேயே தீர்ப்பாயிருக்குன்னு எல்லாரும் பேசிண்டா.

"என் ஆசையெல்லாம் வேறொண்னுமில்லே. என் பிள்ளையோட நீ இங்கேயே கிருஹலட்சுமியா இருந்து இந்தாத்துலே பெற்றுப் பெருக்கி விளக்கேத்தணும்கறதுதான். இது கலப்புக் கல்யாணம். இங்கே இருக்கறவா - பார்க்கறவா - கொறை சொல்லிண்டே இருப்பான்னு தயங்கியோ பயந்தோ வேற தேசத்திலேயே நிரந்தரமா இருந்துடலாம்னு நீ நெனைக்கப்படாது. இங்கேயே இருந்து இந்தாத்திலே விளக்கேத்திண்டு வரணும். புருஷா அக்னி சந்தானம் ஔபாசனம்னு பண்ணி நெருப்பு அணையாமக் காத்துண்டு வர மாதிரி இந்தக் குடும்பத்திலே பொண்டுகளும் தலைமுறை தலைமுறையா ஒரே வித்திலேருந்து வளர்ற துளசியைச் சம்ரட்சணம் செஞ்சு பூஜை பண்ணிண்டு வரோம். பூஜை பண்ண மனுஷா இல்லாமல் இந்தாத்துத் துளசி மாடம் ஒரு காலத்திலேயும் வாடப்பிடாது. அதிலே நாள் கிழமைகளில் மட்டுமில்லாமே எல்லா நாள்ளேயும் தீபம் பிரகாசிக்கணும்.

"இங்கே இந்தக் குடும்பத்தோட சௌபாக்கியங்களும், லட்சுமி கடாட்சங்களும், விருத்தியும் நாங்க பரம்பரையா சரீர சுத்தத்தோடேயும் அந்தரங்க சுத்தத்தோடேயும் பண்ணிண்டு வர துளசி பூஜையாலேன்னுதான் எங்களுக்கு நம்பிக்கை. நாங்க நல்ல நாள் தவறாமே விரத நியமம் தப்பாமே துளசி மாடத்திலே ஏத்தற விளக்குத்தான் இதுவரை இந்தக் குடும்பத்தைப் பிரகாசப்படுத்திக் காப்பாத்திண்டு வரது. எத்தனையோ தலைமுறைக்கு மின்னே ராணி மங்கம்மா காலத்திலே விரத நியமம் தப்பாத ஒரு பிராம்மண சுமங்கலிக்குத் தானம் பண்ணணும்னு தை வெள்ளிக்கிழமையும் அதுவுமா சொக்கத் தங்கத்திலே பண்ணின சொர்ண விளக்கு ஒண்ணை வச்சுண்டு அந்த ராணி, கிராமம் கிரமாமாத் தேடிப் பார்த்தாளாம். கடைசியா அந்தச் சொர்ண தீபத்தை இந்தக் குடும்பத்து மாட்டுப் பொண் ஒருத்திதான் தானம் வாங்கிண்டாளாம். அன்னியிலேருந்து இந்தக் குடும்பத்து மாட்டுப் பொண்கள் ஒவ்வொருத்தரா அந்தச் சொர்ண தீபத்தையும் துளசி பூஜை பண்ற உரிமையையும் முந்தின தலைமுறைப் பெரியவா கிட்டேருந்து பரம்பரை பரம்பரையா அடைஞ்சிண்டு வரோம். இன்னிக்கும், நாளையும் தை வெள்ளிக்கிழமை தவறாமே நான் அந்தத் தங்க விளக்கைத் துளசி மாடத்திலே ஏத்தி வைக்கிறதுண்டு! இந்தா இப்போ அதை நீ வாங்கிக்கோ. இனிமே நீ அந்தப் பூஜையைத் தொடர்ந்து பண்ணிண்டு வா" - என்று காமாட்சியம்மாள் எழுந்திருந்து பெட்டியிலிருந்து அந்தத் தங்க விளக்கை எடுத்துத் திரியிட்டு ஏற்றிக் கமலியிடம் நீட்டினாள்.

"உங்கள் கட்டளைப்படியே இந்த வீட்டின் கிருஹ தீபம் அணையாமல் - துளசிமாடம் வாடாமல் இங்கிருந்து குடும்பம் நடத்தறேன். ஆனால் தயவு செய்து நானும் 'இவரு'மாக ஒரே ஒரு தடவை என் பெற்றோரைப் பார்த்து வருவதற்காகப் போய் வர மட்டும் அனுமதி தாருங்கள் அம்மா" - என்று கூறி வணங்கி அந்தத் தீபத்தை இரண்டு கைகளாலும் அணையாமல் பயபக்தியோடு வாங்கிக் கொண்டாள் கமலி. காமாட்சியம்மாள் கமலியின் கோரிக்கைக்கு இணங்கினாள். அப்போது அவளுடைய கண்களில் நீர் நெகிழ்ந்தது. அவள் தளர்ச்சியோடு படுக்கையில் சாய்ந்து கொண்டாள். சிறிது தொலைவிலிருந்து வசந்தியும், ரவியும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சர்மா, வேணு மாமா முதலியோர் புரோகிதருடன் கிருஹப் பிரவேசத்துக்கான வைதிக காரியங்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். பார்வதி அவர்களுக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள். குமார் அப்போதுதான் தூங்கி எழுந்திருந்து தோட்டத்துக் கிணற்றுக்கு நீராடப் போயிருந்தான். பளபளவென்று விடிந்து ஒளி பரவிக் கொண்டிருந்தது.

காமாட்சியம்மாள் ஏற்றிக் கொடுத்த தீபத்தை அப்படியே கைகளில் ஏந்தியபடி பின்புறம் கிணற்றடியில் துளசி மாடத்துக்குச் சென்றாள் கமலி. அடுத்த சில விநாடிகளில், துளசிமாடத்தருகே இருந்து,

  • "துளசி! ஸ்ரீசகி சுபே பாபஹாரிணி புண்யதே
    நமஸ்தே நாரத நுதே நாராயண நம ப்ரியே..."

  • என்ற கமலியின் இனிய குரல் ஒலிக்கத் தொடங்கியது. அவள் துளசி பூஜையை முடித்துக் கொண்டு உட்பக்கம் திரும்பியபோது கூடத்தில் இயல்பை மீறிய அமைதி நிலவியது. ரவி, சர்மா, வேணு மாமா, வசந்தி, பார்வதி, குமார் எல்லோரும் காமாட்சியம்மாளின் படுக்கையருகே கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். கமலியும் அங்கே விரைந்தாள். காமாட்சியம்மாள் மயங்கினாற் போலப் படுக்கையில் சாய்ந்து துவண்டு கிடந்தாள்.

    சர்மா காமாட்சியம்மாளின் பொன்நிற உள்ளங்காலில் சூடுபறக்கத் தேய்த்துக் கொண்டிருந்தார். எல்லார் முகத்திலும் கவலையும் பரபரப்பும் தெரிந்தன. ரவி அம்மாவின் கையைப் பிடித்து 'பல்ஸ்' பார்த்துக் கொண்டிருந்தான். வேணு மாமா குமாரைக் கூப்பிட்டு "டாக்டரைக் கூப்பிட்டுண்டு வா! ஓடு! வாசல்லே கார் நிக்கறது, உங்கம்மாவுக்கு இங்கிலீஷ் டாக்டர்ன்னாப் பிடிக்காது. ஆனாலும் பரவாயில்லே. வடக்குத் தெருவுக்குப் போய் எங்காத்துக்கு நாலு வீடு தள்ளி இருக்கிற டாக்டரைக் கூட்டிண்டு ஓடிவா" - என்று அவனை அவசர அவசரமாகத் துரத்தினார். குமார் ஓடினான். பார்வதி அதற்குள்ளேயே பயந்து அழத் தொடங்கியிருந்தாள். சர்மா காலைத் தேய்ப்பதை நிறுத்திவிட்டு வேணு மாமாவையும் ரவியையும் நோக்கி உதட்டைப் பிதுக்கினார். நேரே பூஜை அறைக்குப் போய் இது மாதிரிச் சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்கென்று காசிச் செம்பில் எப்போதோ சேமித்து வைக்கப்பட்டிருந்த கங்கா தீர்த்தத்தைக் கொண்டு வந்து காமாட்சியம்மாளின் வாயில் இரண்டு உத்திரணி சேர்த்தார். தீர்த்தம் கடை வாயிலும் கன்னங்களிலும் சரிந்து வழிந்தது.

    அதுவரை அமைதியாகப் பொறுத்துக் கொண்டிருந்த சர்மா சிறுகுழந்தை போல் விசும்பி விசும்பிக் கோவென்று கதறியழுதார்.

    "கொடுத்தவச்ச மகராசி! வெள்ளிக்கிழமையும் அதுவுமாப் பார்த்துப் பூவும் குங்குமமுமாப் போய்ச் சேர்ந்துட்டா?" - என்று கிருஹப் பிரவேசத்துக்கு வந்திருந்த பட்டினத்து வாத்தியார் தம் உதவியாளரின் காதருகே மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ரவிக்குக் கண் கலங்கியது. கமலி, வசந்தி எல்லாருமே வாய்விட்டு அழுது விட்டார்கள்.

    துளசி மாடத்தில் அந்தக் குடும்பத்தின் குலவிளக்கான புராதனமான சொர்ண தீபம் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த போது, கிருஹ தீபமாக விளங்கிய காமாட்சியம்மாள் ஏதோ வீட்டுக்கு மருமகள் வந்ததும் அவளிடம் சொல்லிக் கொண்டு போவதற்காகவே காத்திருந்தது போல் போய்ச் சேர்ந்தாள். வசந்தி கமலியின் காதருகே மெல்லச் சொன்னாள்: - "மாமி உங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போகணும்னே காத்துண்டு இருந்த மாதிரின்னா இருந்துட்டுப் போயிட்டா?"

    கமலியால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. மேலும் வாய்விட்டு விசும்பி அழத் தொடங்கி விட்டாள் அவள்.

    "அழாதேடி! கமலி! நீ ரவியைக் கல்யாணம் பண்ணிண்டு உங்க நாட்டோட போயிடுவியோங்கறது தான் சதா மாமியோட கவலையா இருந்தது. உங்கிட்ட என்ன சொன்னா மாமீ?"

    "நான் இங்கேயே இருந்து குடும்பம் நடத்தி இந்தத் துளசி பூஜையை விடாமப் பண்ணணும்னு என்னிடம் வாக்கு வாங்கிக் கொண்டு அந்தத் தங்க விளக்கை எடுத்துக் கொடுத்தாள்." -

    "பின்னே என்ன? மாமிக்குக் குடுத்த வாக்கைக் காப்பாத்து! அந்தத் துளசிச் செடி வாடாமையும், விளக்கு அணையாமையும் பார்த்துக்கோ" - என்று உணர்ச்சி பொங்கும் குரலில் கமலிக்குப் பதில் சொன்னாள் வசந்தி.

    சங்கரமங்கலத்தில் பொழுது நன்றாக விடிந்து சூரியனின் கதிரொளி கோவில் கோபுரக் கலசங்களில் பட்டுப் பளீரென்று சுடர்விட்டு மின்னத் தொடங்கியிருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முடிவுரை

இது வரை துளசிமாடம் கதையை ஆர்வத்தோடு படித்து வந்த வாசகர்களுக்கு இப்போது இங்கே இப்படி ஒரு சிறிய முடிவுரை எழுத வேண்டியதாகிறது. கிழக்கத்திய கலாசாரம் மேற்கத்திய மக்களாலும், மேற்கத்திய கலாசாரம் கிழக்கத்திய மக்களாலும், மாறி மாறி அழுத்தமாகக் கொண்டாடப்படுவதைச் சில சமயங்களில் சிலரிடம் காண்கிறோம். உலகம் சிறியதாகி வருகிறது. மனிதர்களிடையே முரண்டுகளும், வெறுப்புக்களும் தணிந்து வருகின்றன. 'ஆஸ்திகரான' சீமாவையரை விட நாஸ்திகரான இறைமுடிமணி பண்பட்டவராயிருக்கிறார். சங்கரமங்கலத்து இந்துப் பெண்களைவிட அதிக இந்தியத் தன்மையை விரும்பி நேசிக்கிறாள் பிரெஞ்சுப் பெண்ணான கமலி. வைரம் பாய்ந்த காமாட்சியம்மாளின் மனத்தையே கடைசியில் இளகச் செய்து அறவே மாற்றிவிட அவளால் முடிகிறது. நேர் எதிர் இலட்சியங்களுள்ள சர்மாவும், இறைமுடிமணியும் நெருங்கிய நண்பர்களாகப் பழக முடிகிறது.

நம்மைச் சுற்றி உலகெங்கும் 'Transfer of values' (மதிப்பீடுகளின் மாறுதல்) மதங்களையும், சமய நம்பிக்கைகளையும் பூர்வீகமான கலாசாரப் பழக்க வழக்கங்களையும் மெல்ல அசைத்துக் கொண்டு இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் ஓரிடத்திலிருந்து பெருகும் நீர்ப் பெருக்கு மற்றோரிடத்தில் சென்று தவிர்க்க முடியாதபடி நனைந்து பாய்ந்து பரவுவது போல் கலாசாரப் பரிமாற்றம் (Cultural Exchange) அல்லது கலாசார மடை மாற்றங்கள் (Cultural transformation) நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை யாராலும் அழித்து விடமுடியாது.

இக்கதையில் கமலியும், ரவியும் அந்தக் கலாசாரப் பரிமாற்றங்களின் சின்னங்களே. ஆயிரம் வேறுபாடு இருந்தாலும் பாசமும் அரவணைத்து ஏற்றுக் கொள்வதுமே முடிவாக இந்தியத் தாய்மார்களின் நிறைவான பண்பு என்பதைத் தன் வாழ்விலும், மரணத்திலும் ஒருசேர நிரூபிக்கிறாள் காமாட்சியம்மாள்.

பண்பாடு என்பது பரவலாகும்போது வெறும் தேசீய அடையாளப் புள்ளி (National identity) நீங்கி 'மானிடம்' என்ற சர்வ தேசிய அடையாளம் (Inter-national Identity) உடனே வருகிறது. இந்தக் கதை 'சங்கரமங்கலம்' என்ற ஒரு சின்னக் கிராமத்தில் நடந்தாலும் இதில் வரும் மனிதர்கள் அந்தக் கிராமத்தை விடப் பரந்த உலகத்தைப் பாதிப்பவர்கள், பாதித்தவர்கள், பாதிக்கப் போகிறவர்கள்.

(நிறைந்தது)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top