• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

துளசி மாடம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 21

ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்கு இடையிலான உறவு என்ன என்பதைச் சொல்லாமலே சேர்ந்து தங்கியிருப்பது என்பது சங்கரமங்கலத்தைப் போன்ற ஓர் இந்தியக் கிராமத்தில் தொடர்ந்து சாத்தியமாகக் கூடியது இல்லை. அதுவும் பெண் முற்றிலும் புதியதும் அந்நியமானதுமான ஒரு நாட்டிலிருந்து வந்தவள் என்னும் போது வதந்திகளுக்கு ஒரு வரம்பே இருக்க வழியில்லை. ஒழுங்கும் நியாயமும் கூட இராது. வதந்திகளுக்கும் விவஸ்தை இராது. அந்த வதந்திகளைப் பரப்புகிறவர்களுக்கும் விவஸ்தை இராது. சாதாரண விஷயங்கள் பிரமாதப்படுத்தப்படுவதும் பிரமாதமான விஷயங்கள் சாதாரணப் படுத்தப்பட்டுக் கொச்சையாக்கப்படுவதும் அந்த வதந்திகளைப் பொறுத்தவரை மிகவும் சகஜம்.

ரவியும் கமலியும், ஊருக்கு வந்ததிலிருந்து இலைமறைகாயாக அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இறைமுடிமணியின் பகுத்தறிவுப் படிப்பகத்தில் நடந்த கமலியின் சொற்பொழிவும் அந்தச் சொற்பொழிவில் கமலியை அறிமுகப்படுத்திய அவர் 'விசுவேசுவர சர்மாவின் எதிர்கால மருமகள்' என்கிற குறிப்புடன் கமலியைப் பற்றிக் கூறியிருந்ததும் ரவியைக் கொண்டே அவளுக்கு மாலையணிவிக்கச் செய்ததும் இப்போது வதந்திகளை வளர்த்து மிகவும் அதிகப்படுத்தியிருந்தன.

சர்மாவிடமே பகுத்தறிவுப் படிப்பகச் சொற்பொழிவில் 'அவரது எதிர்கால மருமகள்!' என்று கமலியை இறைமுடிமணி அறிமுகப்படுத்தியது பற்றி இரண்டொருவர் விசாரித்திருந்தனர். ஒளிவு மறைவாகப் பேசுவதோ விஷயங்களைப் பூசி மெழுகுவதோ, ஆஷாடபூதித்தனமோ இறைமுடிமணிக்கு அறவே பிடிக்காதென்பது சர்மாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் வக்கீல் நோட்டீஸ்களைப் பற்றியும், இதைப் பற்றியும் இறைமுடிமணியிடமே நேரில் பேச வேண்டுமென்று எண்ணினார் அவர்.

கமலியையும் ரவியையும் கோவிலுக்கு அனுப்பிவிட்டு இறைமுடிமணியைப் பார்க்கப் புறப்பட்டிருந்தார் சர்மா.

முதலில் பலசரக்குக் கடைக்குப் போய்ப் பார்த்தார். அங்கே அவர் இல்லை. அவருடைய மருமகன் குருசாமிதான் இருந்தான். அவனே விவரமும் சொன்னான்.

"மாமா விறகுக் கடையிலே இருக்காக. அங்ஙனே போனாப் பார்க்கலாம்."

பலசரக்குக் கடையில் நல்ல கூட்டம் இருந்தது. சீமாவையரின் துஷ்பிரசாரம் எதுவும் எடுபடவில்லை என்று தெரிந்தது. கலப்படமில்லாமல் விலையும் நியாயமாக வைத்து வியாபாரம் செய்ததால் அந்தக் கடையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. கடைக்குச் சாமான் வாங்க வருகிற ஆண்களோ, பெண்களோ, சிறுவர்களோ, யாவரிடமும் காண்பிக்கப்பட்ட மரியாதையும், பண்பாடும், அக்கறையும், அந்தக் கடைக்குத் தனிப் பெருமையை அளித்திருந்தன. இறைமுடிமணி கடைக்கு வைத்திருந்த பெயர், கடையில் மாட்டியிருந்த படம், அவரது தனிப்பட்ட கொள்கைச் சார்புகள் எதுவும் விற்பனையைப் பாதிக்கவில்லை. சர்மாவுக்கே நிலைமை புரிந்தாலும் ஒரு வார்த்தைக்காக "வியாபாரம்லாம் எப்படி இருக்கு குருசாமி?" - என்று அவனையும் கேட்டு வைத்தார்.

"ரொம்ப நல்லாவே இருக்குங்க" என்று அவனிடமிருந்து பதில் வந்தது. பின்பு அங்கிருந்து இறைமுடிமணியின் விறகுக் கடைக்குப் போனார் அவர்.

விறகுக் கடைக்கு அவர் போனபோது இரண்டு மூன்று லாரியில் மூங்கில் சவுக்குக் கட்டைகள், கிடுகுக் கீற்று எல்லாம் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.

"தேசிகாமணீ! நாம தனியாக் கொஞ்சம் பேசணும். இங்கே ரொம்பக் கூட்டமா இருக்கே? ஆத்தங்கரைப் பக்கமாப் போகலாமா?"

"ஒரு பத்து நிமிஷம் உட்காரேன் விசுவேசுவரன்! லோடு இறக்கிக்கிட்டிருக்காங்க."

சொன்னபடி பத்து நிமிஷத்தில் இறைமுடிமணி வந்துவிட்டார். அவரும் சர்மாவும் பேசிக் கொண்டே ஆற்றங்கரைப் பக்கம் நடந்தார்கள்.

இறைமுடிமணியை ஆற்று மணலில் ஓரிடத்தில் உட்கார வைத்து விட்டுச் சர்மா - சந்தியா வந்தனத்தை முடித்துக் கொண்டு வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றார். அவர் வருகிறவரை இறைமுடிமணி ஆற்று மணலில் காத்திருக்க வேண்டியதாயிற்று.

சர்மா வந்ததும் அவரே பேச்சை ஆரம்பித்தார்:

"எனக்கும் கமலிக்கும் வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கு. வேணு மாமாவுக்கும் உனக்கும் தவிர வேறு யாருக்கும் நான் இதைச் சொல்லலே. கமலிக்கும் ரவிக்கும் மட்டும் தெரியும்."

"எதுக்கு வக்கீல் நோட்டீஸ்? யார் விட்டிருக்கானுவ?"

"யார்னு சொல்றது? எல்லாம் ஊர் ஜனங்கள் தான். என் நடத்தைகள் மடத்து முத்ராதிகாரிங்கிற பதவிக்கும், வைதிகத்துக்கும் பொருத்தமாயில்லையாம். கமலி இந்து ஆலயங்களுக்குள்ளே கேள்வி முறை இல்லாமத் தரிசனத்துக்குப் போறாளாம்..."

"உங்கள் ஆளுங்களைப் போலப் பொறாமை புடிச்சவங்க உலகத்துலேயே கிடையாதுப்பா! வரவரக் கோயிலுக்குப் போற ஆளுங்களே கொறைஞ்சி போச்சு. நமக்குப் புடிக்குதோ புடிக்கலியோ அதை நிஜமா நம்பிப் போற ஒருத்தர் ரெண்டு பேரையும் உங்கள் ஆளுங்களே கெடுத்துப் போடுவாங்கன்னு தோணுதுப்பா! அதுக்கு எங்க பிரச்சாரமே கூட வேணாம் போலிருக்கே."

"சீமாவையர் தான் தூண்டி விட்டு எல்லாக் காரியமும் பண்ணுவார்னு தோண்றது. என்னை நேரே பார்த்துட்டாத் தேனாப் பேசறார், விசாரிக்கிறார். ஆனாப் பின்னாலே பண்றதும் தூண்டி விடறதும் எல்லாம் இப்பிடிக் காரியங்களா இருக்கு."

"அவன் நாசமாப் போயிருவான். பாம்பு, தேளு, நட்டுவாக்கிலி மாதிரித் திரிஞ்சுக்கிட்டு இந்த ஊரைக் கெடுக்கிறான். எங்கடையை ஒழிச்சிப்பிடறதுன்னு தலை கிழே நின்னு பார்த்தான். முடியலே. ஜனங்க சரக்கு எப்படியிருக்குதுன்னு பார்த்தாங்களே ஒழிய ஆளு யாருன்னு பார்க்கலே." -

"இப்ப இந்த நோட்டீஸ்லேயும் உனக்குக் கடை வாடகைக்கு விட்டதை ஒரு குத்தமா எழுதியிருக்கா."

"அப்பிடியா?... உனக்கு இத்தினி தர்ம சங்கடம் என்னாலே வரும்னா நானே இதைக் கேட்டிருக்க மாட்டேனே? வாடகைக்கு யாருக்காவது விடப் போறதை நமக்குத்தான் விடட்டுமேன்னு கேட்டு வச்சேன்."

"நீ கேட்டதும் தப்பில்லே. நான் விட்டதும் தப்பில்லே தேசிகாமணி! எல்லாம் முறையாத்தான் நடந்திருக்கு. அஹமத் அலி பாய்க்கு விடலாம். உனக்கு விடப் படாதா?"

"கோவில் குளத்தை வெறுக்கிறவனைவிடக் கோவில் சிலைங்களையே பணங்குடுத்துத் திருடிக் கடத்தி அந்நிய நாட்டுக்கு விற்கிறவங்களே தேவலைன்னு பார்த்தாங்க போலிருக்கு! தவிரவும் பாய் சீமாவையருக்குப் பாட்டில், ஸெண்டு, ஃபாரின் சரக்குங்க, சமயத்திலே கைமாத்து எல்லாம் குடுக்கிறவரு வேற!"

"அதிருக்கட்டும்! உன்னோட படிப்பகத்துக் கூட்டத்திலே நீ ரவியோட கூட வந்திருக்கிற அந்தப் பெண்ணைப் பத்திச் சொல்றப் போ, ஏதோ 'என் எதிர்கால மருமகள்'னு சொன்னியாமே?"

"ஆமாம், சொன்னேன்! உள்ளதைச் சொல்றதுக்கு ஏனப்பா எல்லாரும் பயந்து பயந்து சாகறீங்க? கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிச்சாலும் அந்தப் பொண்ணைத் தவிர வேறே யாரையும் கட்டிக்கிடப் போறதில்லைன்னு தனியாப் பேசிக்கிட்டிருக்கிறப்பத் தம்பியே எங்கிட்டச் சொல்லிடிச்சு. அந்தப் பெண்ணோ தம்பி மேலேயும் நம்ம நாடு, நம்ம நாட்டுப் பழக்க வழக்கங்கள் எல்லாத்து மேலேயும் உயிரையே வச்சிருக்கு. மூடநம்பிக்கை, மூடப் பழக்க வழக்கங்களைக் கூட ஏன்னுகேக்காமே கடைப்பிடிக்க அது தயாராயிருக்கு. எங்க படிப்பகத்திலே எந்தக் கூட்டத்திலேயும் கடவுள் வாழ்த்து - வெங்காயம் அது இது எல்லாம் கிடையாது. அன்னைக்குக் கூட்டத்திலே திடீர்னு யாரும் எதிர்பாராமே அந்தப் பொண்ணு என்னா செஞ்சிச்சிது தெரியுமா விசுவேசுவரன்? பேச்சைத் தொடங்கறதுக்கு முன்னாடி தானே தன் குரலிலே ஏதோ ஒரு கணபதி ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துப்பிட்டுத் தான் தொடங்கிச்சு.

"எங்க இயக்க ஆளுங்க ரொம்பப் பேருக்கு அது பிடிச்சிருக்காது. ஆனா அது தமிழிலே பேசின அழகிலே அத்தினி பேரும் அதை மறந்திட்டானுவ. ரெண்டொரு விடாக்கண்டங்க மட்டும் கூட்டம் முடிஞ்சதுமே எங்கிட்ட வந்து கேட்டானுவ. 'அதுனோட நம்பிக்கைப்படி அது கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கு! நம்மையோ படிப்பகத்தையோ அது பாதிக்காது'ன்னு பதில் சொல்லி அவனுகளை அனுப்பிச்சேன். உங்க ஐயமார் குடும்பத்திலேயே கூட இத்தினி நறுவிசாப் பதவாகமா ஒரு படிச்ச பொண்ணு ரவிக்குப் பொருந்தறாப்பல கிடைக்க மாட்டாப்பா. அந்தப் பொண்ணு கமலிக்கு நிறம் மட்டுமில்லே. குணமும் தங்கந்தானப்பா... எனக்கு இதிலே ஒளிவு மறைவு எல்லாம் தெரியாது. நிஜத்தைப் பேசினேன். மறைச்சுப் பேச எனக்குத் தெரியாதுப்பா!"

"வெளிப்பட வேண்டிய காலத்துக்கு முந்தி வெளிப்படற நிஜங்கள் வதந்தியாயிடும். சில நிஜங்களும் பிரசவிப்பதைப் போலப் பத்து மாதக் காலமோ, அதற்கு மேலோ நிறைந்து பின் வெளிவர வேண்டும். காலத்துக்கு முந்திய பிரசவம் குறைப் பிறவி ஆகியும் விடும் தேசிகாமணீ."

"சரிதான்! ஆனா ஒரு பொண் பிரசவிக்கப் போறாங்கிறது ஒண்ணும் அத்தினி இரகசியமா இருக்க முடியாதே?" -

இதைக் கேட்டுச் சர்மா சிரித்தார். இறைமுடிமணியின் வாதம் முரட்டுத்தனமாக இருந்தாலும் அதை எதிர்த்து சர்மா மேலும் விவாதிக்கவில்லை. இறைமுடிமணி தொடர்ந்தார்.

"அது மட்டுமில்லே விசுவேசுவரன்; இன்னொண்ணையும் தம்பி எங்கிட்டச் சொல்லிச்சு. நடுவிலே ஒருநாச் சாயங்காலம் இப்ப நீயும் நானும் பேசிக்கிட்டிருக்கிற மாதிரி இதே ஆத்தங்கரையிலே தம்பியும் நானும் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப மனசுவிட்டுப் பலதை எங்கிட்டச் சொல்லிச்சு. எல்லா வெள்ளைக்காரப் பொம்பளங்களையும் போலக் காதலிச்சாலே கல்யாணமாயிடிச்சின்னோ, மோதிரம் மாத்திக் கிட்டாக் கல்யாணமாயிடிச்சின்னோ அந்தப் பொண்ணு நினைக்கலியாம். 'இந்த ஊரு முறைப்படி சாஸ்திர சம்மத்தோட ஒரு சடங்குகூட விடாம, நாலுநாள் கல்யாணம் நடத்தணும்னு ஆசைப்படுது'ன்னு தம்பி சொல்லிச்சு! 'என்னப்பா பயித்தியக்காரத் தனமாயிருக்கு? இந்தூர்ல இருக்கறவங்களையே சீர்திருத்தத் திருமணத்துக்கும் பதிவுத் திருமணத்துக்கும் நாங்க தயாராக்கிட்டு வர்றோம். விஞ்ஞானம் வளர்ந்த தேசத்திலேருந்து வர்ற இளம் பொண்ணு ஒண்ணு இப்பிடிப் பத்தாம் பசலித்தனமா ஆசைப்படுதே'ன்னு நான் கூடத் தம்பியைக் கேலி பண்ணினேன்! 'இல்லே! இங்கே புறப்பட்டு வர்றப்பவும் வந்தப்புறமும் அதைக் கமலி வற்புறுத்துது'ன்னு தம்பி சொல்லுது. இந்த விஷயத்தை அது தன் பேரண்ட்ஸ் கிட்டவே சொல்லி அந்த மாதிரிக் கல்யாணத்துக்கு ஆகற செலவுக்குன்னு நெறையப் பணம் வேறே வாங்கிட்டு வந்திருக்குன்னும் தம்பி சொல்லுச்சுப்பா."

"ஊர் உலகம் ஒரு பக்கம் இருக்கட்டும் தேசிகாமணீ. என் மனைவி காமாட்சி இருக்கறவரை அது நடக்கவே நடக்காதுப்பா."

"நீதான் அவங்க மனசையும் மாத்தணும். ஒருத்தரோட முரண்டுக்காக மத்தவங்க தாங்க ஆசைப்படற நல்வாழ்வைக் கெடுத்துக்க முடியாது."

"வக்கீல் நோட்டீஸ் விஷயமா என்ன சொல்றே நீ?"

"சும்மா மிரட்டறானுவ! கோர்ட்டுக்கு வந்தா ஒரு கை பார்த்துடலாம். நீ தைரியமா இரு. எதுக்கும் பயப்படாதே!" -

வேணு மாமாவின் யோசனையை நண்பனிடம் கூறினார் சர்மா.

"நல்ல யோசனைதான்! நோட்டீஸுக்குப் பதில் எழுதாதே. விஷயம் கோர்ட்டுக்கு வரட்டும் பார்க்கலாம்."-

மேலும் சிறிது நேரம் பொதுவான பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு இருவரும் புறப்பட்டார்கள். தம் கடை முகப்பு வந்ததும் இறைமுடிமணி விடைபெற்றார். அப்போது சர்மாவின் மனம் தெளிவாக இருந்தது. நண்பனிடம் மனம்விட்டுப் பேசியதில் கலக்கங்கள் நீங்கியிருந்தன.

சர்மா வீடு திரும்பியபோது பார்வதி விளக்கு ஏற்றி வைத்துத் தீப நமஸ்காரம் செய்து சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தாள். காமாட்சி பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் பேசுவதற்குப் புறப்பட்டுப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது.

பார்வதியின் சுலோகம் முடிந்ததும், "பாரு! இங்கே வாம்மா!" - என்று சர்மா மகளைக் கூப்பிட்டார். பார்வதி அவரருகே வந்ததும் அவளைப் பூஜையறைக்கு அழைத்துச் சென்று, "ஒரு முக்கியமான விஷயமாப் பூக்கட்டிக் குலுக்கிப் போடறேன். சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு ஒரு பொட்டலம் எடும்மா" - என்றார்.

பார்வதி அப்பா சொன்னபடியே செய்தாள். அவள் எடுத்துக் கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்ததும், சர்மாவின் முகம் மலர்ந்தது.

"காயா பழமா அப்பா?"

"பழந்தான் அம்மா!" - பிரித்த பூப்பொட்டலத்தை அப்படியே கண்களில் ஒற்றிக் கொண்டார் அவர். வாசலில் யாரோ படியேறி வருகிற ஓசை கேட்டது. பார்வதி எட்டிப் பார்த்துவிட்டு, "அண்ணாவும் கமலியும் கோயில்லேருந்து திரும்பி வராப்பா..." என்றாள்.

பொன்நிற நெற்றியில் வெளேரென்ற விபூதிக் கீற்றும் குங்குமமுமாகக் கமலி சர்மாவுக்கு முன்வந்து, "கோவில் பிரசாதம் வாங்கிக் கொள்ளுங்கள்" - என்று தட்டில் காகிதங்களில் மடித்து வைத்திருந்த விபூதி, குங்குமம், வில்வத் தளங்களை அவர் முன் நீட்டினாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 22

பரம வைதீகரான அப்பா எங்கே கமலியின் கையிலிருந்து பிரசாதம் வாங்காமல் நாசூக்காகத் தட்டிக் கழித்து விடுவாரோ என்று உடன் வந்து அருகே நின்ற ரவி மனத்தில் எண்ணித் தயங்கினான். ஆனால் அப்படி ஏதும் நடந்து விடவில்லை.

சர்மா புன்முறுவலோடு பிரசாதம் எடுத்துக் கொண்டார். கமலி கையிலிருந்த தட்டைக் கண்களில் ஒற்றிக் கொண்டு அவர் பிரசாதம் எடுத்துக் கொண்ட காட்சியை ரவியால் அப்போது நம்பவே முடியாமல் இருந்தது.

"திருப்பணிக்குப் பணம் குடுத்து ரசீது வாங்கினேளா?"

"இதோ ரசீது வாங்கியிருகோம்பா" - ரவி கோயில் திருப்பணிக்குப் பணம் கொடுத்துக் கமலி பேருக்கு வாங்கியிருந்த ரசீதை எடுத்து அப்பாவிடம் நீட்டினான்.

கமலி மாடிக்குப் போனாள். அவளைப் பின் தொடர்ந்த ரவியை, "நீ கொஞ்சம் இரு... உங்கிட்டப் பேச வேண்டியதிருக்கு" - என்று அவன் காதருகே கூறினார் சர்மா.

"இதோ வந்துடறேன்ப்பா; ஒரு நிமிஷம்" என்று அவருக்கு மறுமொழி கூறிவிட்டு மாடிப்படியேறினான் ரவி.

*****

அந்த வினாடியில் சர்மாவின் மனநிலை துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தது. ஒரு பரிசுத்தமான பூரண ஞானியின் துணிச்சலுடனும், ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வெறுப்பற்ற மகிழ்ச்சியுடனும் இருந்தார் அவர்.

மாடிக்குப் போன ரவியை எதிர்பார்த்துக் கையில் பஞ்சாங்கத்துடனும் பென்சில் பேப்பருடனும் மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவரைப் போல் கீழேயே காத்திருந்தார் அவர்.

ஏதோ இனம் புரியாமல் ரவிக்கும் மனத்தில் ஒரு குதூகலம் பிறந்திருந்தது. அப்பா தன்னைக் கூப்பிட்டுக் கமலியைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போகச் சொன்னதும், கமலியின் கையிலிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டதும் அதன்பின் உடனே 'உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும், வருகிறாயா?' - என்று தன்னைத் தனியே அழைத்ததும் நல்ல அடையாளங்களாகப் பட்டன அவனுக்கு.

அப்பா கொஞ்சமும் தயக்கமின்றிக் கமலியின் கையிலிருந்து கோயில் பிரசாதத்தை வாங்கிக் கொண்ட பெருந்தன்மையை அவளிடமே சொல்லி வியந்துவிட்டு, "இதுவே அம்மாவாயிருந்தா ஒரு ஸீன் கிரியேட் பண்ணியிருப்பா கமலி! என்னதான் இருந்தாலும் அப்பா அப்பாதான்" என்று கூறியபின் கீழே இறங்கித் தந்தையை சந்திக்க வந்தான் ரவி.

அவன் படியிறங்கத் தொடங்கியபோது, "உங்கள் அம்மாவும் இப்படி முகமலர்ச்சியோடு என் கையிலிருந்து பிரசாதம் வாங்குகிற நாள் ஒன்று வரும். அதையும் நீங்கள் உங்கள் கண்களாலேயே பார்க்கத்தான் போகிறீர்கள்" என்று கமலி உற்சாகமாகப் பதில் சொல்லியது அவன் காதில் விழுந்தது.

"தோட்டத்துக் கிணற்றடிக்குப் போய்ப் பேசலாமா" என்று கேட்ட ரவிக்கு, "வேண்டாம்! இங்கே மூணாம் மனுஷா யார் இருக்கா இப்போ? திண்ணையிலே உட்கார்ந்து பேசலாம் வா" என்று பதில் சொல்லியபடி திண்ணைக்கு அவனை அழைத்துச் சென்றார் சர்மா.

அப்பாவின் கையில் பஞ்சாங்கமும் பேப்பர் பென்சிலும் இருப்பதைப் பார்த்து இன்னும் அதிக வியப்பு உண்டாயிற்று ரவிக்கு. எதற்கும் அவரே விஷயத்தை முதலில் சொல்லட்டும் என்று சிறுவனாயிருந்தபோது அதிகாலையில் அவரிடம் படிப்பதற்காக அடக்க ஒடுக்கமாக அதே திண்ணையில் அதே இடத்தில் எப்படிப் பவ்யத்தோடு உட்காருவது வழக்கமோ அப்படியே இன்றும் இப்போதும் உட்கார்ந்தான் அவன்.

"ஏண்டா! உன் மனசிலே என்ன தான் இருக்கு? உனக்கு நான் என்ன பண்ணணும்கிறதை நீ முதல்லே எங்கிட்டச் சொல்லணுமே ஒழிய என்னை மூணாம் மனுஷன் மாதிரி நெனைச்சுண்டு மூணாம் மனுஷனா இருக்கிற தேசிகாமணி கிட்டவும், வேணு மாமா கிட்டவும் முதல்லே சொல்லி அப்புறம் அவா அதை எங் காதுலே போடற மாதிரி விடப்படாது. அது கொஞ்சம் கூட நன்னா இல்லே. இந்தச் சின்ன விஷயத்திலே நீ ஏன் இத்தனை இங்கிதம் இல்லாமே நடந்துக்கணும்னு தான் எனக்குப் புரியலே."

இதைக் கேட்டதும் திருடனுக்குத் தேள் கொட்டினது மாதிரி இருந்தது ரவிக்கு. என்ன பதில் சொல்லலாம் என்று அவன் தன் மனத்தில் வார்த்தைகளை யோசித்துத் திரட்டுவதற்கு முன் தந்தையே மேலும் தொடர்ந்தார்.

"நான் முடிவு பண்ண வேண்டிய சமாச்சாரத்தைப் போயி நீ தேசிகாமணி கிட்டவும் வேணு மாமா கிட்டவும் பிரஸ்தாபிச்சு என்ன பிரயோஜனம்?"

"தப்புத்தான் அப்பா! உங்களுக்கு ரொம்பவும் வேண்டியவாளாச்சேன்னு பிரஸ்தாபிச்சேன்."

"நான் முடிவு பண்ணியாச்சு! உங்கம்மா முதல் ஊரார் வரை யாருக்கும் என்ன உறவு, எதுக்கு வந்திருக்காள்னு கமலியைப் பற்றி ஓர் உறவும் சொல்லாமே இப்படி மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம வீட்டோட வச்சுண்டு வீண் வதந்திகளையும் ஊர் வம்பையும் அரட்டையையும் பெருக விடறத்துக்குப் பதில் துணிஞ்சு உனக்கும் அவளுக்கும் சாஸ்திரோக்தமாகவே ஒரு கல்யாணத்தைப் பண்ணிடறது எவ்வளவோ தேவலை. முன்னே எப்பவோ ஒரு நாள் வந்த புதிசிலே நீயே எங்கிட்டேக் கேட்டே. அப்போ நான் அதுக்குத் தயங்கினேன். இப்போ நானே அதுக்குத் துணிஞ்சிட்டேன்."

ரவிக்குத் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. பேசுவது அப்பாதானா என்றே சந்தேகமாயிருந்தது.

"அப்பா... நிஜமாவா...?" என்று உற்சாக மேலிட்டுக் கூவினான் ரவி.

"பின்னே என்ன? உங்கிட்ட விளையாட்டுப் பேச்சுப் பேசவா வேலைமெனக்கெட்டு இப்போ கூப்பிட்டிருக்கேன்? இந்த மாசக் கடைசியிலே ஒரே ஒரு முகூர்த்தம் தான் மீதமிருக்கு. பெத்தவனோ, பெத்தவளோ இங்கே இல்லாமே யாருடா அவளைத் தாரை வார்த்துக் குடுப்பா?"

"கேபிள் குடுத்தா கமலியோட அப்பா அம்மா ரெண்டு பேருமே கூட இங்கே வருவா அப்பா... ஆனா நீங்க சொல்ற முகூர்த்தத்துக்குள்ளே அது முடியாது. வேணு மாமாவை வேணாக் கேட்டுப் பார்க்கலாம்."

"ஏண்டா ஏற்கெனவே நீ அவரிட்டப் பேசி முடிவு பண்ணி வச்சாசா? என்னமோ தயாரா எல்லாம் ஏற்பாடு பண்ணிட்ட மாதிரிச் சொல்றியே?"

"இல்லே... கேட்டா ஒத்துப்பார்னு பட்டது. அதான் சொன்னேன்."

"சரி! வா, போகலாம். அவரிட்டேயே நேரக் கேட்டுடுவோம்."

"நான் எதுக்குப்பா? நீங்க கேட்டாலே ஒத்துப்பார். நானும் அவசியம் உங்க கூட வந்தாகணும்னா வரேன்."

"சும்மா கூட வாயேன் போயிட்டு வரலாம். நீ ஒண்ணும் பேசவேண்டாம். கேட்கிறதெல்லாம் நானே அவரிட்டக் கேட்டுக்கறேன்."

கூட வருவதற்கு ரவி சற்றே சங்கோஜப்பட்டாற் போலத் தோன்றியது. ஆனாலும் தட்டிச் சொல்லாமல் புறப்பட்டான். அந்த விஷயத்தில் அப்பாவின் திடீர் முடிவும் அவர் காட்டிய அவசரமும் உண்டாக்கிய சந்தோஷ அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவனால் முற்றாக மீள முடியவில்லை. அதனால் தெருவில் நடந்து போகிற போது அப்பாவிடம் அவன் எதுவுமே பேசக்கூட இல்லை. வீட்டிலிருந்தபடி இறங்கியதும் நிறைந்த தண்ணீர்க் குடத்தோடு ஒரு சுமங்கலி தெருவில் எதிர்ப்பட்டபோது, "சகுனம் ரொம்ப நன்னா ஆறது" என்றார் சர்மா.

வேணு மாமா வீட்டை அவர்கள் அடைந்த போது அவர் திண்ணையிலிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே ஒரு பெரிய பழுக்காத் தாம்பளம் நிறையப் பழம் - பூ வெற்றிலை பாக்கு - பச்சை ஏலக்காய்க் கொத்து எல்லாம் இருந்தன. வேணு மாமா அப்போது மிக மிக உற்சாகமாயிருந்தார்.

"வாங்கோ! என்னோட எஸ்டேட் மானேஜர் புதுசா வீடு கட்டிக் கிருகப் பிரவேசம் பண்றானாம். இப்பத்தான் வந்து அதுக்கு என்னை அழைச்சிட்டுப் போறான். ஏது... அப்பாவும் பிள்ளையுமா இப்படிச் சேர்ந்து வந்திருக்கேள்... ரவிக்கும் எவனாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கானா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லே. கோவில் திருப்பணி டொனேஷன் விஷயம் நீங்க சொன்னபடி பண்ணியாச்சு ரவியே கூடப் போயிப் பணத்தைக் குடுத்துக் கமலி பேருக்கு ரசீதும் வாங்கிண்டு வந்துட்டான்."

"சபாஷ்! அப்புறம்?"

"சுபஸ்ய சீக்கிரம்னு பெரியவா சொல்லுவா. இந்த ஊர்க்காராளும், மத்தவாளும் பண்ற புரளியைப் பார்த்துப் பார்த்து நேக்கே தைரியம் வந்தாச்சு... நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஓர் ஒத்தாசை செஞ்சாகணும். இது மாதிரி ஒத்தாசையைப் பண்ற துணிச்சல் இந்த ஊர்ல உங்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்கிறத்துக்கில்லே."

"ஏதேது? பீடிகை ரொம்பப் பெரிசாப் போடறேளே? விஷயம் என்னன்னு முதல்லே சொல்லுங்கோ."

கூட்டி முழுங்கித் தட்டுத் தடுமாறி ஒரு வழியாக விஷயத்தைச் சொன்னார் சர்மா.

இதைக் கேட்டு உடனே பதில் எதுவும் சொல்லாமல் சிறு குழந்தை போல் வயதுக்கு மீறின உற்சாகத்தோடு உள்ளே ஓடிய வேணு மாமா கைப்பிடி நிறையச் சர்க்கரையோடு திரும்ப ஓடிவந்து சர்மாவை வாய் திறக்கச் சொல்லிப் பிடிவாதம் பண்ணி அதைக் கட்டாயமாக அவர் வாயில் போட்டார். உற்சாகம் கரை புரண்டது வேணு மாமாவுக்கு.

"இப்பவே வசந்திக்குத் தந்தி கொடுத்தாகணும். நீர் கொஞ்சம் கூடக் கவலைப்படாதேயும், எப்போ கமலியை நான் தாரை வார்த்துக் குடுக்கணும்னு நீரே சொல்றீரோ அப்போ பெண்ணுக்குப் பிறந்த வீடு இதுதான். கல்யாணமும் இந்த வீட்டிலேயே தான் நடக்கணும். லக்கினப் பத்திரிகை, முகூர்த்தக்கால் எல்லாத்துக்கும் உடனே ஏற்பாடு பண்ணிடறேன்."

"உம்ம ஆத்துக்காரியை ஒரு வார்த்தை கேட்டுக்க வேண்டாமோ?"

"கேட்கணும்கிறதில்லே. 'வசந்தி மாதிரி இவளும் நம்ப பொண்தான். இவளை நாமதான் தாரைவார்த்துக் குடுக்கணும். புதுப் புடவையைக் கட்டிண்டு மணையிலே வந்து என் பக்கத்திலே நில்லு'ன்னா மறு பேச்சுப் பேசாம வந்து நிப்பாள் என் ஆத்துக்காரி. அவளைப் பத்தி நீர் ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். உம்மாத்திலே தான் அந்தக் கஷ்டமெல்லாம். உம்ம ஒய்ஃப் இந்தக் கல்யாணத்தை ஒத்துண்டு மணையிலே வந்து நிப்பாளோ, சர்மா?"

"அதைப் பத்தி இப்போ நான் நிச்சயமா ஒண்ணும் சொல்றதுக்கில்லே. ஆனா அது சந்தேகம்தான்."

"அதனாலே ஒண்ணும் பாதகமில்லே. ஒத்து வராத மனுஷாளுக்காக உலகம் காத்துண்டு நிக்காது. இருபது முப்பது வருஷத்துக்கு முந்தி உம்ம கல்யாணமும் என் கல்யாணமும் நடந்த மாதிரி சாஸ்திரோக்தமா ஒரு சின்ன விஷயம் கூட விட்டுப் போகாமல் நாலு நாள் ஜாம் ஜாம்னு இதை நடத்திப்பிடலாம். நீர் எதுக்கும் கவலைப் படாதீயும். எல்லாத்தையும் என்கிட்ட விட்டுடும். நான் பார்த்துக்கறேன். இப்ப நீர் சம்பந்தி. பிள்ளை வீட்டுக்காரன். நீர் வந்திருந்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தால் மட்டும் போறும். மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்."

"நான் அப்படி விட்டுட முடியுமா? எல்லாக் கல்யாணமும் போல இல்லியே இது? நானும் சேர்ந்து கவலைப் பட்டாகணுமே? நாலு நாள் முகூர்த்தத்துக்கு வாத்தியார் ஒத்துண்டு வரணும். சீமாவையர் சொல்லி வச்சு மிரட்டித் தடுப்பார். 'இது சாஸ்திர சம்மதமான கல்யாணமில்லே. வரமுடியாது'ன்னு வைதிகாள் அட்டி சொன்னா என்ன பண்ணுவேள்? அப்படி ஏதானும் இடைஞ்சல் வரும்னு தான் தோன்றது, வந்தாலும் பரவாயில்லே. நானே எல்லாம் பண்ணிக்கிறேன். பிருஹஸ்பதி ஸ்தானத்திலே நானே இருந்துடறேன்."

"அதுக்கு அவசியம் இருக்காது சர்மா! இன்னிக்கி முக்காவாசிப் புரோகிதாளும் வைதிகாளும் சாஸ்திரத்தையும் மந்திரங்களையும் நல்ல ரேட்டுக்கு வித்திண்டு தான் இருக்கா. கூடப் பத்து ரூபா தட்சிணை தர்றதா இருந்தாச் சீமாவையர் ஆத்திலே பூர்வ காரியங்கள் பண்ணி வைக்கிற அதே வாத்தியாரே வந்து நம்ம கமலியோட கல்யாணத்தை நடத்தி வச்சாலும் ஆச்சரியப் படறதுக்கில்லே."

"இந்த ஈரோப்பியன்ஸ் வேடிக்கையான ஜனங்களா இருப்பா போலிருக்கு. இதுக்கெல்லாம் வேணும்னு ஆசைப்பட்டுத் தன்னோட அப்பாகிட்டவே சொல்லி வேண மட்டும் பணம் வாங்கிண்டு வந்திருக்கா அவ. நீங்க சிரமப்படணும்கிறதேயில்லே... அதையே கமலிகிட்டக் கேட்டு எல்லாச் செலவுக்கும் வாங்கிக்கலாம்..."

"உளறாதேயும் சர்மா! எனக்கென்ன சிரமம் இதிலே? நான் இதைப் போலப் பத்துக் கல்யாணத்தைச் சொந்தமாக் கையிலேருந்து செலவழிச்சுப் பண்ணி வைப்பேன். அத்தனை சௌகரியத்தைப் பகவான் எனக்குக் கொடுத்திருக்கான்... எனக்கு இன்னும் ஒரு பொண்ணிருந்து அவளுக்குக் கல்யாணம் பண்ண நேர்ந்தா அதுக்கு நான் தானே கையிலேருந்து செலவழிக்கணும்?"

"அதுக்கில்லே! நீங்க தப்பாப் புரிஞ்சுக்கப்படாது. கமலி இதை ஒரு ப்ரஸ்டிஜ் இஷ்யூவா எடுத்துக்காமே இருக்கணும் பாருங்கோ. அதுனாலே நீங்க இதுக்காகன்னே அவகிட்ட இருக்கிற டிராவலர்ஸ் செக்ஸை மாத்திப் பணம் எடுத்துக்கிறதுதான் முறை" என்று அதுவரை பேசாமல் இருந்த ரவி மெல்லக் குறுக்கிட்டு விளக்கினான்.

"அப்பிடியா? பொண்ணுக்கு அப்பாவைக் கல்யாணத்துக்குச் செலவழிக்கக்கூடாதுன்னு சொல்ற முதல் மாப்பிள்ளையை இப்போதாண்டா பார்க்கிறேன், ரவி" என்று சிரித்தபடியே அவனைப் பார்த்துக் கூறினார் வேணு மாமா.

சர்மாவோ ரவியோ அப்போது வேணு மாமாவை எதிர்த்து எதுவும் பேசவில்லை. உடனே புறப்பட்டு வரச் சொல்லி பம்பாயிலிருக்கும் தன் மகள் வசந்திக்கு ஓர் அவசரத் தந்தி கொடுத்துவிட்டு வரச் சொல்லி ரவியையே தபாலாபீசுக்குப் போகச் சொல்லி அப்போது அனுப்பினார் வேணு மாமா.

"கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளையை வேலை வாங்கறேனேன்னு நினைச்சுக்காதே அப்பா! எப்போ சாஸ்திரோக்தமான கல்யாணம்னு முடிவாயாச்சோ அப்புறம் பொண் பிறந்தாத்திலே தான் வந்து இருக்கணும். கமலி இங்கே வந்து தங்கிக்கணும்னா அவளுக்குத் துணை வேணும். அதனாலே வசந்தி உடனே வர வேண்டியதாயிருக்கு. அவ இருந்தாத்தான் இந்தக் கல்யாணம் சோபிக்கும். அதுவும் இந்தக் கல்யாணத்துலே அவளுக்குக் கொள்ளை ஆசை."

தந்தியைக் கொடுத்துவிட்டு வரப் புறப்பட்டான் ரவி.

"இன்னிக்கு என் மனசு சந்தோஷமா இருக்கறாப்பலே வேறே எந்த நாள்லேயும் இத்தனை சந்தோஷமா இருந்ததில்லே சர்மா! லக்கினப் பத்திரிகை எழுத ஒரு நல்ல நாள் நாழிகை பாருங்கோ."

"என் மனசிலே திருப்தியும் இருக்கு தயக்கமும் இருக்கு. இது தவிர்க்க முடியாதது. இதைச் செய்துதான் ஆகணும்கிற நிர்ப்பந்தமும் ஒரு புறம் இருக்க - ஊரார் வாயை மூடி அடைக்கவாவது இதைத் தாமசப்படுத்தறதை விடச் சீக்கிரமே பண்ணிடறது நல்லதுன்னுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். ஆனா இதிலேயும் பல சிரமங்கள் வரும்..."

"சிரமம் ஒண்ணும் வராது. நானாச்சு, இதை மங்களகரமா முடிச்சுவைக்க."

"நீர் மட்டும் இல்லை. உம்மைப் படைச்ச பிரும்மாவே வந்தாலும் என் ஆத்துக்காரி காமாட்சியை மனசு மாறும்படி பண்ண முடியாது. விஷயம் தெரிஞ்சதும் என்னை அவ பிடுங்கித் தின்னப்போறா."

"இதமா எடுத்துச் சொல்லிப் பார்த்துச் சமாதானப் படுத்த முடியாதோ சர்மா? உம்மை விடவா உம்ம ஆத்துக்காரி பெரிய வைதீகம்?"

"என்னைவிட வைதீகமோ இல்லியோ, முரண்டு அதிகம். அறிவு, காரண காரியத்துக்குச் செவி சாய்க்கும், முரண்டு எதுக்கும் செவி சாய்க்காது."

"ரவியையே விட்டுப் பேசிப் பார்க்கச் சொல்லு மேன்."

"யார் சொன்னாலும் அவ கேக்க மாட்டா, அது அவ பிறந்த ஊர் ராசி. தலைப்பை இழுத்து இழுத்துப் போர்த்திண்டு அடக்க ஒடுக்கமா அதிகப் படிப்பில்லாமத் தனக்குக் கட்டுப்படற மாதிரி ஒரு கிராமாந்தரத்து மாட்டுப் பொண்ணைக் கனவு கண்டுண்டிருக்கா அவ."

"கல்யாணம் பண்ணிக்கப் போறது அவளா உம்ம பிள்ளையான்னு கேக்கறதுதானே? அவன் வேலை பார்க்கற தேசம், அவனோட படிப்பு - சூழ்நிலை அதுக்கெல்லாம் பாந்தமா ஒரு பொண்ணைப் பார்க்கறதா? நம்ம கட்டுப் பெட்டித்தனம், மடிசஞ்சி மனப்பான்மை இதையெல்லாம் யார் கேக்கறா இப்போ? அதிர்ஷ்டவசமா அவனே அப்பிடி ஒரு நல்ல பொண்ணைத் தேடிண்டுட்டான். இதுக்கு ஏன் நாம குறுக்கே தடையா இருக்கணும்?"

"பணிவுக்கும் அடக்கத்துக்கும் கூட கமலிகிட்டக் குறையொண்ணும் இல்லே. இத்தனை அடக்கமாகவும் விநயமாகவும் இன்னிக்கி நம்ம தேசத்துப் பொண்டுகள் இருப்பாளான்னு எனக்கே சந்தேகம் தான்."

"நீர் இரண்டு நாள் கொஞ்சம் பொறுமையா இரும் சர்மா! எதுக்கும் வசந்தி வந்துடட்டும், அவளை விட்டு மாமிகிட்டப் பேசிப் பார்க்கச் சொல்லலாம். அநேகமா அவ பிளேன்லேதான் வருவா. இந்தக் கமலியோட கல்யாண விஷயத்திலே அவளாலே ஆவலை அடக்கிக்க முடியாது."

"தனக்கா மனசுலே பட்டாலொழியக் காமு இதுக்கு சம்மதிக்கமாட்டா. முரண்டுன்னா அப்படி ஒரு முரண்டு அவளுக்கு."

தந்தியைக் கொடுத்துவிட்டு ரவி தபாலாபீஸிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 23

வேணு மாமா ரவியைக் கேட்டார்.

"எக்ஸ்பிரஸ் டெலகிராமாக் குடுத்தியோ? ஆர்டினரியாக் குடுத்தியோ? இங்கே அவ சீக்கிரம் வந்தாகணும்."

"எக்ஸ்பிரஸ்தான் மாமா. எப்படியும் நாளைக் காலம்பரத்துக்குள்ளே வசந்திக்குக் கிடைச்சு அவ பம்பாயிலிருந்து இங்கே புறப்பட்டுடலாம்?"

சர்மா கையோடு பஞ்சாங்கம் கொண்டு வந்திருந்ததைப் பார்த்து முகூர்த்தக் கால் நடுவதற்கும் லக்கினப் பத்திரிகை வைப்பதற்கும் உடனே நாள் பார்த்துச் சொல்லும்படி அப்போதே அவரை வேண்டினார் வேணு மாமா. சர்மாவும் உடனே பொறுமையாகவும், நிதானமாகவும் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்து விவரங்களைத் தெரிவித்தார்.

அன்று தமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் ரவியையும் சர்மாவையும் வடை பாயசத்தோடு அங்கே தம் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டுமென்று மன்றாடினார் வேணு மாமா.

"அதெல்லாம் இன்னிக்கி வேண்டாம். லக்கினப் பத்திரிகை எழுதற அன்னிக்கி வச்சிக்கலாம். உங்க வீட்டுச் சாப்பாடு எங்கே ஓடிப் போறது?" என்று சொல்லிக் கொண்டு வேணு மாமாவிடம் விடை பெற்றுத் தன் மகன் ரவியுடன் வீடு திரும்பினார் சர்மா.

திரும்பி வீட்டுக்கு நடக்கிற போது அவர்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. என்றாலும், "தங்கமான மனுஷன், உபகாரி. உபகார குணமும் மனோ தைரியமும் மனுஷா கிட்டச் சேர்ந்து அமையறது ரொம்பவும் அபூர்வம். சில பேர் இது மாதிரி நல்ல காரியத்துக்கு முன் வந்து உபகாரம் பண்ணணும்னு நினைப்பன். ஆனால் துணிஞ்சு முன் வந்து உபகாரம் பண்றதுக்கு வேண்டிய மனோ தைரியம் இராது" - என்று வேணு மாமாவைப் புகழ்ந்து சொல்லிக் கொண்டு வந்தார் சர்மா.

ரவி, அப்பா சொல்லியதை ஆமோதிப்பது போல் மௌனமாக இருந்தான். ஏற்பாடுகள் நிறைவெய்துகிறவரை இது பற்றிப் பிறரிடம் எதுவும் பேசுவதில்லை என்று இருவரும் பரஸ்பரம் தங்களுக்குள் எச்சரிக்கை உணர்வோடு கூறிக் கொண்டார்கள். காமாட்சியம்மாளிடம் இது பற்றிப் பேசுகிற பொறுப்பைக் கூட வேணு மாமா சொல்லியது போல் வசந்தியின் வசம் விட்டுவிடலாம் என்று தந்தை, மகன் இருவருமே கருதினார்கள். அன்றிரவு கமலியிடம் மட்டும் குறிப்பாக இந்த விஷயத்தைப் புலப்படுத்தினான் ரவி.

மறுநாள் காலை முதல் தபாலில் கிடைத்த ஒரு கடிதம் அவர்கள் ஏற்பாட்டில் சிறு மாறுதல் ஒன்றை உண்டாக்கியது. சர்மாவுக்கும் கமலிக்கும் வக்கீல் நோட்டீஸ்கள் அனுப்பியிருந்தவர்கள் அதன் நகல்களை ஸ்ரீ மடம் ஹெட் ஆபீஸ் மானேஜருக்கு அனுப்பியிருந்ததுடன், சர்மாவையும் ரவியையும் இல்லாததும் பொல்லாததுமாகக் குறை சொல்லி சில மொட்டைக் கடிதங்களும் கூடப் போட்டிருந்தார்கள் போலிருக்கிறது.

ஸ்ரீ மடம் மானேஜர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை, என்றாலும் ரவியையும், அவனோடு வந்திருக்கும் பிரெஞ்சுப் பெண்மணியையும் ஸ்ரீ மடத்துக்கு வரச் சொல்லி, பெரியவர்களைத் தரிசனம் செய்து விட்டுப் போகுமாறு யோசனை கூறியிருந்தார். எழுதியிருந்த பாணியிலிருந்து அந்தத் தரிசனமே இவர்களுக்கு ஒரு சோதனையாகவோ பரீட்சையாகவோ அமையும் போலிருந்தது. பெரியவர்களின் குறிப்பறிந்து அந்த மகா ஞானியின் சமிக்ஞையோ ஆக்ஞையோ பெற்றுத்தான் அந்தக் கடிதமே மானேஜரால் எழுதப்பட்டிருக்குமென்று சர்மாவால் சுலபமாக அனுமானிக்க முடிந்தது.

கடிதத்தை ரவியிடம் படிக்க கொடுத்து, "அவளைக் கூட்டிக் கொண்டு ஒரு நடை போய்விட்டு வா! பெரியவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்" - என்றார் சர்மா. ரவி அதற்கு உடனே ஒப்புக் கொண்டான். ஆனால் சிறிது தயக்கத்தோடு தந்தையைக் கேட்டான்.

"இந்த ஊர்க்காரா ஒரு வண்டி குத்தம் சுமத்திக் கோள் சொல்லி எழுதின கடிதாசையும், வக்கீல் நோட்டிஸையும் பார்த்துட்டு மடத்திலேருந்து இதை எழுதியிருக்கா. என்ன நடக்குமோ? வரச் சொல்றது அவா. போகச் சொல்றது நீங்க. மகாஞானியும் பூர்ண திருஷ்டியும் உள்ள ஒருத்தரைத் தரிசிக்கப் போறதை எங்க பாக்கியம்னு நெனைச்சு நானும் கமலியும் போறோம். இதிலே வேற ஒண்ணும் சிரமமோ கஷ்டமோ வராதே?"

"ஒரு கொறையும் வராதுடா! போய் அவா அநுக்கிரகத்தையும் வாங்கிண்டு வந்து சேருங்கோ..."

யோசிக்கவோ, பிரயாணத்துக்குத் திட்டமிட்டுத் தயாராகவோ கூட அவர்களுக்கு நேரமில்லை. உடனே கிடைத்த பகல் நேர ரயிலைப் பிடித்து விரைந்தார்கள் அவர்கள். மறுநாள் அதிகாலை ஐந்து ஐந்தரை மணிக்குத்தான் அங்கே போய்ச் சேர முடிந்தது.

ஸ்ரீ மடத்தையும், பழம் பெருமை வாய்ந்த ஆலயங்களையும் தரிசிக்க வரும் பக்தர்களுக்காகவும், யாத்திரீகர்களுக்காகவும் அந்த ஊரில் தங்குவதற்கு சில நல்ல லாட்ஜுகளும் ஹோட்டல்களும் ஏற்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் தங்கி நீராடி உடைமாற்றிக் கொண்டு ரவியும் கமலியும் தயாரானார்கள். ஊருக்கு வெளியே இரண்டு மூன்று மைல் தொலைவில் ஒரு மாந்தோப்பில் ஆசார்ய சுவாமிகள் தங்கியிருப்பதாகவும் அப்போது சாதுர் மாஸ்ய விரதம் இருப்பதால் அவர் யாரோடும் பேசுவதில்லை என்றும் எல்லாம் சமிக்ஞைதான் என்றும் ஹோட்டல் மானேஜர் கூறினார். கூட்டம் சேருவதற்கு முன் சீக்கிரமே போய் விட்டால் சுலபமாக தரிசனம் ஆகும் என்று சொல்லி அவரே ரவியும் கமலியும் அந்த மாந்தோப்புக்குப் போவதற்கு ஒரு டாக்ஸியும் பேசி விட்டார்.

பழைய நாள் சுங்குடிப் புடவை போலத் தோன்றிய ஓர் எளிய கைத்தறிப் புடவை அணிந்து குங்குமத் திலகமிட்டு, நீராடிய ஈரம் புலராத கூந்தலை நுனிமுடிச்சிட்டுக் கொண்டு அதிகாலையின் புனித உணர்வுகள் நிறைந்த மனத்துடன் புறப்பட்டிருந்தாள் கமலி. நிறமும் கண்களும், கூந்தலும் வித்தியாசமாகத் தோன்றின என்பது தவிர மற்ற விதங்களில் அவள் ஓர் இந்தியப் பெண்ணாகவே காட்சியளித்தாள். சில நோட்டுப் புத்தகங்களும் டைரியும் அவள் கையில் இருந்தன.

அரையில் சரிகைக் கரையிட்ட பட்டாடையும், மேல் உத்தரியமும், பொன் நிற மார்பில் வெளேரென்று மின்னல் இழையாகத் துலங்கிய யக்ஞோபவீதமுமாகப் புறப்பட்டிருந்தான் ரவி. நடுவழியில் பழக்கடை, பூக்கடை இருந்த பகுதியில் நிறுத்தி ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சைப் பழங்களும், ஒரு பச்சைத் துளசி மாலையும் வாங்கிக் கொண்டார்கள் அவர்கள்.

அதிகாலையில் கிழக்கு வெளுத்துக் கொண்டிருக்கும் போது அப்படி ஒரு தரிசனத்துக்காகப் போவது மனத்துக்கு ரம்மியமாக இருந்தது. ரவி கமலி இருவருடைய மனங்களும், சரீரங்களும் அப்போதுதான் பூத்த பூக்களைப் போல் சிலிர்ப்புடனும் நறுமணத்துடன் தண்ணென்றும் களங்கமற்றும் இருந்தன. மனங்களும் உடல்களும், உஷ்ணமின்றிக் குளிர்ந்திருந்தன.

அந்த அதிகாலையிலும் கூடப் பெரியவர்கள் தங்கியிருந்த மாந்தோப்புக்கு வெளியே நாலைந்து டூரிஸ்ட் கோச்கள், பத்துப் பன்னிரண்டு கார்கள், சில குதிரை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. அவர் தங்கியிருப்பதை ஒட்டி அந்த இடம் ஒரு க்ஷேத்திரமாகி இருந்தது. அந்தப் பெரிய மாந்தோப்பில் நடுவாக இருந்த ஒரு தாமரைப் பொய்கையின் கரையில் சிறு குடிசை போன்ற பர்ணசாலை ஒன்றில் அவர் தங்கியிருந்தார். கோயில் கர்ப்பக்கிருஹத்தில் இருப்பது போல் அந்த இடத்தைச் சுற்றித் துளசியும், கர்ப்பூரமும் சந்தனமும் - நெய்யும் கலந்த வாசனை நிலவியது. ஆணும் பெண்ணுமாக நிறைய பக்தர்கள் கையில் பழத் தட்டுக்களுடன் தரிசனத்துக்குக் காத்திருந்தனர். ரவி கமலியோடு ஸ்ரீ மடத்து நிர்வாகியைப் போய் பார்த்தான். அவர் பிரியமாக வரவேற்றுப் பேசினார். எங்கே தங்கியிருக்கிறார்கள், எப்போது வந்தார்கள் என்ற விவரங்களை எல்லாம் விசாரித்துக் கொண்டார். தங்கியிருக்கிற இடத்தில் எல்லாம் சௌகரியமாயிருக்கிறதா என்றும் கேட்டார். "நீங்கள் சமஸ்கிருதத்திலும், சாஸ்திரங்களிலும் இந்தியக் கலாசாரங்களிலும் நிரம்ப ஈடுபாடுள்ளவராயிருப்பதை அறிந்து பெரியவர்களுக்கு வெகு திருப்தி" என்று நடுவே கமலியைப் பார்த்துத் திடீரென்று ஒரு வாக்கியம் சொன்னார் அவர். தங்களைப் பற்றித் தாங்கள் அங்கே வருவதற்கு முன்பே நிறையப் பேச்சு நடந்திருப்பதை ரவியும் கமலியும் அதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. பெரியவர்கள் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பதால் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுப் புரிந்து கொள்வார்கள் என்பதையும் அவர்கள் எதுவும் பேச மாட்டார்கள் என்பதையும் கமலிக்கு விளக்கினார் அவர். மொட்டைக் கடிதாசுகள், வக்கீல் நோட்டீஸ்கள் பற்றி அவரும் எதுவும் பேசவில்லை. அவர்களும் பேசவில்லை.

அங்கே தரிசனத்துக்குக் காத்திருந்தவர்களோடு அவர்களும் போய் நின்று கொண்டார்கள். ஓர் ஐரோப்பிய யுவதி புடைவை குங்குமத் திலகத்தோடு தரிசனத்துக்கு வந்திருப்பது காத்திருந்த மற்றவர்களிடம் சிறிது வியப்பை உண்டாக்கியது. சிலர் ரவியிடம் வியந்து விசாரித்தார்கள். சிலர் கமலியிடமே ஆங்கிலத்தில் விசாரிக்க ஆரம்பித்து அவள் தமிழிலேயே பதில் சொல்லியது கண்டு ஆச்சரியப்பட்டார்கள். கமலியைச் சுற்றி இளம் பெண்கள், மாமிகளின் கூட்டம் கூடிவிட்டது.

பெரியவர்கள் பொய்கையில் நீராடிவிட்டுப் படித்துறையிலேயே ஈர ஆடையுடன் ஜபம் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். படித்துறையிலிருந்து அவர் குடிலுக்கு வந்ததும் தரிசனம் கிடைக்கலாம் என்று காத்திருந்தவர்களிடையே பேச்சு நிலவியது.

கிழக்கு நன்றாக வெளுத்து மாந்தோப்பில் பறவைகளின் குரல்கள் வீச்சுக் குறையத் தொடங்கியிருந்தன. ஸ்ரீ மடம் நிர்வாகி அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்தார்.

"நீங்க ரெண்டு பேரும் படித்துறைக்கே போயிடுங்கோ. பெரியவா உட்கார்ந்திருக்கிற படிக்கு ஒரு படியோ, ரெண்டு படியோ கீழே இறங்கிண்டா அங்கேயிருந்தே அவாளோட பேசச் சௌகரியமாயிருக்கும்."

அவர் கூறியபடி அவர்கள் இருவரும் படித்துறைக்கு விரைந்தனர். பொய்கையில் பூத்திருந்த பல செந்தாமரைப் பூக்களில் ஒன்று கரையேறிப் படிக்கட்டில் அமர்ந்திருப்பது போல் கிழக்கு நோக்கித் தேஜோ மயமாக அமர்ந்திருந்தார் அவர். கிழக்கே உதித்துக் கொண்டிருந்த இளஞ்சூரியனின் வரவு படித்துறையில் வீற்றிருந்த இந்த மூத்த ஞான சூரியனைக் காண வந்தது போலிருந்தது. அவர் பாதங்களின் அருகே பழத் தாம்பாளத்தை வைத்துவிட்டுக் கீழே சற்று அகலமாக இருந்த மற்றொரு படியின் அசௌகரியமான குறுகிய இடத்துக்குள்ளேயே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்கள் ரவியும், கமலியும்.

மலர்ந்த முகத்தோடு, ஆசி கூறுகிற பாவனையில் அவரது வலது கரம் உயர்ந்து தணிந்ததை அவர்கள் காண முடிந்தது. வெளிநாடுகளில் சுற்றிய பழக்கத்தாலும் அந்த மகானுக்குத் தான் யாரென்று நினைவிருக்குமோ, இராதோ என்ற தயக்கத்தாலும் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன், "சங்கரமங்கலம் விசுவேசுவர சர்மாவின் ஜ்யேஷ்ட குமாரன்..." என்று தொடங்கிய அவனைப் புன்முறுவலுடன் "போதும், தெரிகிறது" - என்கிற பாவனையில் கையமர்த்திவிட்டு உட்காரும்படி இருவருக்குமே ஜாடை காட்டினார் அவர். கமலி நோட்டுப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைப் புரட்டி வைத்துக் கொண்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவரோ அதே மலர்ந்த முகத்தோடு 'சரி தொடங்கு' - என்பது போலக் கையை அசைத்தார். தயக்கங்கள் இல்லாமல் தடைகள் இல்லாமல் சொல்லி வைத்தது போல் எல்லாம் நடந்தது.

"ஏதோ எனக்கு இருக்கும் குறைந்த ஞானத்தைக் கொண்டு கனகதாரா ஸ்தோத்திரம், ஸௌந்தர்யலஹரி இரண்டையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறேன் பெரியவர்கள் கேட்டருள வேண்டும்!" - கமலி வேண்டினாள்.

புன்முறுவலோடு அவளை நோக்கி அவர் கையை அசைத்தார். ஒளி நிறைந்த அந்த விழிகளில் ஞானத்தின் நிறைவும் கனிவும் தெரிந்தன. முதலில் சமஸ்கிருத ஸ்லோகத்தையும் அப்புறம் பிரெஞ்சு மொழி பெயர்ப்பையும் அவள் படித்தாள். அவர்களுக்கிடையே ஒரு பவ்யமான சாட்சியைப் போல் அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ரவி.

அங்கே படித்துறைக்கு மேலே பக்தர்களின் கூட்டம் கூடி விட்டது. ஓர் ஐரோப்பியப் பெண்மணி ஸ்பஷ்டமான - குறையில்லாத உச்சரிப்போடு ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தைச் சொல்லி, அதன் பிரெஞ்சு மொழி பெயர்ப்பையும் கூறுவதைக் கூட்டத்தினர் நிசப்தமாகக் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்தனர். கூட்டத்துக்கு அது ஒரு புதிய மெய் சிலிர்க்கச் செய்யும் அனுபவமாயிருந்தது.

சிற்சில இடங்களில் சைகையாலேயே 'மறுமுறையும் படி' - என்று தெரிவித்துக் கமலியைத் திரும்பக் கூறச் செய்து கேட்டார் அவர். எப்போது நிறுத்தச் சொல்லி ஜாடை காட்டுகிறாரோ அப்போது நிறுத்திவிடலாம் என்று படித்துக் கொண்டிருந்தவளை - அவர் நிறுத்தச் சொல்லாமலே சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் போவதை யாருமே உணரவில்லை. ஸௌந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம் முடிந்து அவள் தாள்களை மூடியதும், "வேறு ஏதாவது மொழி பெயர்ப்பு வேலை நடக்கிறதா?"... என்று எண்ணி அதையும் சைகை மூலமே அவர் கேட்டபோது, கமலி அதைப் புரிந்து கொண்டு "பஜ கோவிந்தம் பண்ண முயன்று கொண்டிருக்கிறேன்" என்றாள். வாயருகே வலது கையை அடக்கமாகப் பொத்தி அவள் பதில் கூறிய பாணியின் இந்தியத் தன்மையை அனைவரும் வியந்து கொண்டிருக்கும் போதே, "பஜ கோவிந்தத்தைப் பிரெஞ்சு மொழியில் பண்ணத் தொடங்கியிருந்தால் அதிலிருந்தும் ஒன்று சொல்லேன்" - என்பது போல் சைகை செய்தார் அவர்.

"புனரபி ஜனனம், புனரபி மரணம்... புனரபி ஜனனி ஜடரே சயனம்..." - என்ற பகுதியைச் சொல்லிவிட்டு அதன் பிரெஞ்சு மொழி பெயர்ப்பைக் கூறினாள் கமலி.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் நினைத்தது - அந்த நினைப்பின் சைகையிலேயே அவளுக்குத் தவறாமல் புரிந்ததுதான். 'மகான்கள் பேசாமலே தங்களுடைய நினைப்பைப் பிறருடைய இதயத்தில் தெளிவாக்கி விடுவார்கள். வாயும் செவியும் பாமரர்களுக்குத் தான். அப்படிக் கேட்கவும் பேசவும் செய்யும் கருவிகள் இல்லாமலே கேட்பிக்கவும், பேசுவிக்கவும் செய்ய மகான்களால் முடியும்' என்பதை அவருடைய அந்த நிலைமை அவர்களுக்கு உணர்த்தியது.

நீண்ட நேரத்திற்குப் பின் அவருடைய பார்வை ரவியின் பக்கம் திரும்பியது. அவன் பவ்யமாகத் தன்னைப் பற்றிய விவரங்களையும், கமலியைப் பற்றிய சில தகவல்களையும் கூறினான். பிரான்சில் இந்திய மொழிகளைக் கற்கும் மாணவர்கள் பற்றிச் சொன்னான். அவர்களில் முதன்மையாகத் தேறிப் பக்குவம் பெற்றவள் கமலிதான் என்பதையும் கூறினான்.

பழத் தட்டிலிருந்து ஒரு மாதுளையையும், ஆப்பிளையும் துளசி மாலையையும் வலது கையால் தொட்டு ஆசீர்வாதம் செய்து அவர்களிடம் தனித்தனியே அளித்தார் அவர். அவனுக்கு ஆப்பிளும், அவள் கையில் மாதுளையும் வந்திருந்தன. இருவரையும் முகமலர்ந்து ஆசீர்வதித்தார் அவர். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்த பின் புறப்பட இருந்த போது கமலி திடீரென்று ரவியே எதிர்பாராத விதமாக ஓர் ஆட்டோகிராப் நோட்டையும் பேனாவையும் எடுத்துப் பெரியவர்களிடம் நீட்டவே - அது சம்பிரதாயமில்லையே என்று ரவி தயங்கி நின்றான். பெரியவர்களோ முகமலர்ச்சியோடு புன்முறுவல் பூத்தபடி ஆட்டோகிராப் நோட்டின் அந்தப் பக்கத்தில் கொஞ்சம் அட்சதையையும் குங்குமத்தையும் தூவிக் கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார். 'மறுபடி வாருங்கள்' என்று சைகையும் காண்பித்தார்.

படியேறி மேலே வந்ததும் ரவி கடிகாரத்தைப் பார்த்தான். காலை பத்தே முக்கால் மணி ஆகியிருந்தது. மாந்தோப்பில் வெயில் இன்னும் உறைக்கவில்லை. மடத்துப் பிரசாதங்கள், பிரசுரங்கள் அடங்கிய உறைகளோடு வந்த மானேஜர், "பெரியவா பேனாவைத் தொட்டு எழுதி ஆட்டோகிராப் போடறதுங்கறது எந்த நாளிலேயும் வழக்கமில்லை. ஆனாலும் இவா மேலே இருந்த பிரியத்தாலே அந்த ஆட்டோகிராப் தாளிலே அட்சதை குங்குமத்தை எடுத்துத் தூவினதே பெரிய அநுக்கிரகம்னு தான் சொல்லணும். இதுக்கு முன்னாடியும் இப்பிடி எத்தனையோ பேர் விவரம் தெரியாமல் ஆட்டோ கிராப்பை எடுத்து நீட்டியிருக்கா - ஆனால் அப்போ எல்லாம் பெரியவா மறுத்தாப் போலக் கையைத் தடுத்து நீட்டிப் போகச் சொல்லிடுவார். முதமுதலா இன்னிக்குத்தான் இப்படிச் சிரிச்சிண்டே சுமுகமா அட்சதை குங்குமத்தை எடுத்துத் தாளிலே இட்டதை நானே பார்க்கறேன். நீங்க ரொம்பக் குடுத்து வச்சிருக்கணும்" - என்றார்.

அவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண்டார்கள் அவர்கள். "ஸௌந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம்லாம் பிரெஞ்சிலே அச்சானதும் மறந்துடாமே நீங்க மடத்து லைப்ரரிக்கு அனுப்பி வைக்கணும்" என்று கமலியிடம் கூறினார் அவர்.

ஹோட்டலுக்குத் திரும்பி ரவியும் கமலியும் சிற்றுண்டு காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஸ்ரீ மடத்து நிர்வாகி அனுப்பியதாகப் பித்தளை டவாலி அணிந்த மடத்து ஊழியன் ஒருவன் ஏதோ ஒரு கடிதத்தோடு அவர்களைத் தேடி வந்திருந்தான். கடிதம் உறையிட்டு ஒட்டி அவன் தந்தை பெயருக்கு எழுதப்பட்டிருந்தது.

ரவி ஊர் திரும்பியதும் தந்தையிடம் சேர்த்து விடுவதாகச் சொல்லி அதை வாங்கிக் கொண்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 24

ஊருக்குத் திரும்பும் போது கமலிக்கும், ரவிக்கும் மனம் நிறைவாக இருந்தது. 'சொல்லாமற் செய்வர் பெரியோர்' - என்பது போல் தர்ம சங்கடமான எதைப் பற்றியும் சொல்லாமல், கேட்காமல் அநுக்கிரகம் செய்து அனுப்பியிருந்தார் பெரியவர். அவரது அந்தப் பரந்த கருணையையும் பெருந்தன்மையையும் வியந்து கொண்டே சங்கரமங்கலம் திரும்பியிருந்தார்கள் அவர்கள். ரவியும், கமலியும் ஊர் திரும்பிய அதே நாளில் சில மணி நேரம் முன்னதாகவே வசந்தியும் அங்கே பம்பாயிலிருந்து வந்திருந்தாள். சென்னை வரை விமானத்தில் வந்து அப்புறம் இரயில் பயணம் செய்து சங்கரமங்கலத்தை அடைந்ததால் எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே அவள் வந்து சேர முடிந்திருந்தது. முதல் வேலையாக வசந்தி சர்மாவின் வீட்டுக்கு வந்து பெட்டி சூட்கேஸ்களுடன் கமலியைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டாள். நாலு நாள் கலியாணம் முடிந்து கிருஹப்பிரவேசத்துக்காகப் புகுந்த வீட்டுக்குள் நுழைவது வரை இனிமேல் கமலி வேணு மாமா வீட்டில்தான் இருப்பதென்று முடிவாகியிருந்தது. சர்மா, வேணு மாமா இருவருமே சேர்ந்து செய்த ஏற்பாடு தான் இது.

ஸ்ரீ மடத்திலிருந்து ஊருக்குத் திரும்பி வந்ததிலிருந்து ரவி தன் அம்மாவிடம் ஒரு மாறுதலைக் கவனித்து உணர முடிந்தது. அவள் அப்பாவிடமும், அவனிடமும் பேசுவதை அறவே நிறுத்தியிருந்தாள். அவர்களாக வலுவில் போய்ப் பேச முயன்றாலும், பதில் சொல்லாமல் கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள்.

"நீ மடத்துக்குப் புறப்பட்டுப்போன மறுநாளிலேர்ந்தே எங்கிட்ட இப்படித்தான் முறைச்சிண்டிருக்கா. வேணு மாமாவும் நாமும் பேசிண்டிருந்ததெல்லாம் எப்படியோ இவ காது வரை எட்டியிருக்கும்னு தோண்றது" என்றார் சர்மா. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரவியும் நினைத்தான். அன்றைக்குச் சாயங்காலமே வசந்தியை அம்மாவிடம் பேசச் சொன்னால் அவள் கோபத்துக்குக் காரணம் என்னவென்று தெளிவாகப் புரிந்துவிடுமென்று சர்மாவும் ரவியும் எண்ணினார்கள். தற்செயலாகவே அன்று மாலை வேணு மாமாவின் பெண் வசந்தி ரவி கமலி கல்யாண விஷயமாகக் காமாட்சியம்மாளிடம் பேசிப் பார்ப்பதென்று ஏற்பாடாகியிருந்தது. ஸ்ரீ மடத்து மானேஜர் ரவி மூலம் சர்மாவுக்கு எழுதி அனுப்பியிருந்த கடிதத்தில் பெரியவர்கள் இவர்களிடம் எப்படி மிகவும் பிரியமாக நடந்து கொண்டார் என்ற விவரங்களை எல்லாம் விவரித்து விட்டு வேறு சில செய்திகளையும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை அப்படியே காமாட்சியம்மாளுக்குப் படித்துக் காட்டிவிடச் சொல்லலாமா என்று கூட எண்ணினார் சர்மா. தானோ ரவியோ இருவரில் யார் அந்தக் கடிதத்தைப் படித்துச் சொல்ல முயன்றாலும் பொய்யாக இட்டுக்கட்டி ஒரு கடிதத்தை வாசிப்பதாக அவளுக்குச் சந்தேகம் வரும் என்பதால் பார்வதியிடமும் குமாரிடமும் அதைக் கொடுத்தனுப்பினார். "தங்களை நம்பாததோடு அம்மா அதைப் படிக்கத் தொடங்குவதற்குக் கூட விடவில்லை" - என்று திரும்பி வந்து கடிதத்தைக் கொடுத்தார்கள் குமாரும் பார்வதியும். சர்மா தாமே நேரில் போய் மீண்டும் முயற்சி செய்யத் தயங்கினார். கடைசியாக அந்தக் கடிதத்தை வசந்தியிடம் கொடுத்துப் பார்க்க முடிவு செய்தார். ஏற்கனவே ரவியும் கமலியும் ஊரில் இல்லாத போது இந்த விஷயம் காதில் விழுந்ததுமே ஹிஸ்டீரியா வந்தது போல் அழுது கதறிக் கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருந்தாள் காமாட்சி அம்மாள். சொல்லக் கூடாததை எல்லாம் சொல்லியிருந்தாள். கேட்கக் கூடாததை எல்லாம் கேட்டிருந்தாள். ரவியிடமும் கமலியிடமும் சொன்னால் அவர்கள் மனம் வீணில் புண்படுமே என்றுதான் அவற்றையெல்லாம் சர்மா அவர்களிடம் சொல்லாமல் மறைத்திருந்தார்.

காமாட்சியம்மாளுக்கு இரத்தக் கொதிப்பு உண்டு. வீட்டில் அவளைப் பொருட்படுத்தாமல், அவளுடைய அபிப்பிராயத்தை இலட்சியமே செய்யாமல் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தக் கல்யாண ஏற்பாடுகள் அவள் உடல் நிலையையும், மன நிலையையும் பெரிய அளவில் பாதித்திருந்தன. குமாரிடம் சொல்லிக் கயிற்றுக் கட்டிலை எடுத்துக் கூடத்தில் போட்டு மெத்தென்று விரித்துத் தலைக்கு உயரமாக வைத்து அதில் படுத்துக் கொள்ளச் சொல்லியும் கேட்காமல் வேண்டுமென்றே ஈரத் தரையில் புடவைத் தலைப்பை விரித்துப் படுத்துக் கொண்டிருந்தாள் காமாட்சியம்மாள். சரியான அன்ன ஆகாரமின்றித் தளர்ந்தும் போயிருந்தாள். அன்றைக்குச் சாயங்காலம் வசந்தி காமாட்சியம்மாளிடம் பேச வரும் போதும், தானோ, ரவியோ வீட்டில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார் சர்மா. காமாட்சியம்மாள் ஆத்திரப்பட்டுச் சீறினாலும், எரிந்து விழுந்தாலும் பொறுமையிழந்து விடாமல் அவளிடம் தொடர்ந்து பேசி எடுத்துச் சொல்லி விவாதிக்கும்படி வசந்தியிடம் கூறியிருந்தார் அவர். திட்டமிட்டிருந்தபடி மாலையில் சர்மா ஆற்றங்கரைக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். ரவி இறைமுடிமணியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கலாம் என்று அவருடைய கடைக்குப் போனான். குமார் கல்லூரியில் அடுத்தவாரம் வரப்போகிற ஒரு பரீட்சைக்காகத் திண்ணையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான். பார்வதி உள்ளே வீட்டுக்காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எப்போது பம்பாயிலிருந்து வந்தாலும் மாமிக்கென்று சில சமயங்களில் அவளே பிரியப்பட்டுச் சொல்லியிருக்கிற பேரீச்சம்பழமும், உலர்ந்த திராட்சை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டு வந்து தருவது வசந்தியின் வழக்கம். அதிலும் பக்குவப்படுத்தப்பட்டு மெதுவாக்கப்படாமல் காய்ந்த ருத்ராட்சக் கொட்டைபோல் பேரீட்சை தான் வேண்டும் என்றாள் மாமி. அதுதான் பூஜைக்கு ஆகுமாம்.

அழகாகப் பாலிதீன் பைகளில் கட்டிய பேரீச்சை, உலர்ந்த திராட்சை, முந்திரிப்பருப்போடு, காமாட்சியம்மாளைச் சந்தித்தாள் வசந்தி.

"உங்க உடம்புக்கென்ன மாமீ! நாரா இளைச்சுப் போயிட்டேளே இப்படி?"

"வாடீயம்மா! நீ எப்போ ஊர்லேர்ந்து வந்தே!"

"காலம்பர வந்தேன் மாமி! மறக்காம உங்க பண்டம்லாம் வாங்கிண்டு வந்திருக்கேன்." -

"கலியாணத்துக்காகப் பொறப்பட்டு வந்திருக்கியாக்கும்?"-

குரலிலிருந்து மாமி சுபாவமாக அதைக் கேட்கிறாளா எகத்தாளமாகக் கேட்கிறாளா என்பதை வசந்தியால கண்டுபிடிக்க முடியாமலிருந்தது.

"நான் ஊருக்கு வரத்துக்குத் தனியா காரணம்னு ஒண்ணு வேணுமா மாமி? அடிக்கடி ஊருக்கும் பம்பாய்க்குமா வந்துண்டும் போயிண்டும் தானே இருக்கேன்..."

இருவருக்கும் இடையே சிறிது நேரம் எதைப் பேசுவது எப்படி மேற்கொண்டு முறியாமல் சுமுகமாக உரையாடலை வளர்ப்பது என்று தெரியாமல் மௌனம் நிலவியது.

சிறிது நேரத்திற்குப் பின் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு குழந்தைக்குப் பழைய கதையைச் சொல்லுவது போல் காமாட்சியம்மாளே ஆரம்பித்தாள்:- "புருஷா அக்னி சந்தானம்னு - ஔபாசனம் பண்ணி - நெருப்பு அணையாமக் காத்துண்டு வர மாதிரி இந்தக் குடும்பத்திலே பொண்டுகளும் தலைமுறை தலைமுறையா ஒரே வித்திலிருந்து வளர்ற துளசியை வளர்த்துப் பூஜை பண்ணிண்டு வரோம். இந்தக் குடும்பத்தோட சௌபாக்கியங்களும், லட்சுமி கடாட்சமும், விருத்தியும் நாங்க பரம்பரையாகச் சரீர சுத்தத்தோடயும் அந்தரங்கச் சுத்தத்தோடயும் பண்ணிண்டு வர துளசி பூஜையாலேதான்னு எங்களுக்கு நம்பிக்கை. நாங்க நல்ல நாள் தவறாமே, விரத நியமம் தப்பாமே துளசி மாடத்திலே ஏத்தற விளக்குத்தான் இதுவரை இந்தக் குடும்பத்தைப் பிரகாசப்படுத்திக் காப்பாத்திண்டு வரது. எத்தனையோ தலைமுறைக்கு முன்னே ராணிமங்கம்மா காலத்திலே விரத நியமம் தப்பாத ஒரு பிராமண சுமங்கலிக்கு தானம் பண்ணனும்னு தை வெள்ளிக்கிழமையும் அதுவுமா சொக்கத் தங்கத்திலே பண்ணின சொர்ண விளக்கு ஒண்ணை வச்சுண்டு கிராமம் கிராமமாகத் தேடினாளாம். கடைசியா அந்தச் சொர்ண தீபத்தை இந்தக் குடும்பத்து மாட்டுப் பொண் ஒருத்திதான் தானம் வாங்கிண்டாளாம். அன்னிலேர்ந்து இந்தக் குடும்பத்து மாட்டுப் பெண்கள் ஒவ்வொருத்தரா அந்த சொர்ண தீபத்தையும் துளசி பூஜை பண்ற உரிமையையும் முந்தின தலைமுறை பெரியவா கிட்டேருந்து பரம்பரை பரம்பரையா அடைஞ்சிண்டு வரோம். இன்னிக்கும் தை வெள்ளிக்கிழமை தவறாம அந்தத் தங்க விளக்கைத் துளசி மாடத்திலே நான் ஏத்தி வைக்கிறேன்." -

இப்படிச் சொல்லியபடியே தன் தலைமாட்டிலிருந்த ஒரு பழைய காலத்து ஒழுகறைப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு பட்டுத் துணியில் சுற்றி வைத்திருந்த அந்தத் தங்க விளக்கை எடுத்து வசந்தியிடம் காட்டினாள் காமாட்சியம்மாள்.

"நான் இந்தாத்து மூத்த மாட்டுப் பெண்ணா வந்ததும் எங்க மாமியார் இதை எங்கிட்டக் குடுத்தா..." என்று கூறி ஒரு பெருமூச்சுடன் அந்தப் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு வசந்தியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் காமாட்சியம்மாள்.

"ஒண்ணும் கவலைப்படாதீங்கோ மாமி! உங்க மாமியார் உங்ககிட்டக் குடுத்ததைப் போலவே நீங்களும் உங்க மூத்த மாட்டுப் பொண்ணிட்ட இதைக் குடுக்கலாம். அதுக்கு ஒரு கொறையும் வராது..."

"குமாருக்குக் கல்யாணமாயி ரெண்டாவது மாட்டுப் பொண்ணாவது இந்தக் குடும்பத்துக்கு ஏத்தவளா வந்தா அவகிட்டக் குடுக்கலாம்?"

"ஏன் மாமி! உங்க மூத்த மாட்டுப் பொண்ணுக்கு என்ன கொறை வந்தது?"

"போறும்டீ! அவளைப் பத்தியோ ரவியைப் பத்தியோ எங்கிட்டப் பேச்சே எடுக்காதே, என் வயிறு பத்திண்டு எரியறது. நம்ம ஆசாரம் அநுஷ்டானம் எதுவுமே புரியாத யாரோ ஒருத்தியை எந்த தேசத்திலிருந்தோ இழுத்துண்டு வந்துட்டு அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவன் ஒத்தைக் கால்லே நிற்கிறதும், அதுக்கு எல்லாம் தெரிஞ்ச இந்தப் பிராமணனும் தலையாட்டறதும் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை. எல்லாம் சீரழிஞ்சு குட்டிச் சுவராத்தான் போகப் போறது. அவன் பாட்டுக்கு அவளைக் கட்டிண்டு அடுத்த மாசமே பிளேன்ல ஏறிப் பிரான்சுக்குப் போகப் போறான். மாட்டுப் பொண் வரான்னா வீட்டிலே விளக்கேத்தி வைக்க லட்சுமி வரான்னு எங்க நாள்லெ சொல்லுவா...? எங்கேருந்தோ வந்துட்டு அங்கேயே திரும்பிப் புருஷனையும் இழுத்துண்டு போகப் போற யாரோ ஒருத்தி எப்பிடி இந்தாத்து லட்சுமியாக முடியும்டீ?"

"மாமீ! நீங்க எதை வேணாச் சொல்லுங்கோ, ஆனா நம்ம ஆசார அனுஷ்டானம் தெரியாதவள்னு மட்டும் கமலியைப் பத்திச் சொல்லாதீங்கோ. நம்ம குடும்பங்களிலே இப்போ வளர்ற இளம் பொண்களைவிடக் கமலி எத்தனையோ சிரேஷ்டமானவள். அவள் தெரிஞ்சிண்டிருக்கிற அத்தனை ஆசார அநுஷ்டானம் இப்போ நம்மளவாளுக்குக் கூடத் தெரியுமாங்கறதே எனக்குச் சந்தேகம் மாமி! அப்பிடியில்லேன்னாப் பெரியவாளே ஸ்ரீ மடத்துக்கு அவளை வரச் சொல்லி அநுக்ரகம் பண்ணுவாளா? அவ பிரெஞ்சிலே மொழி பெயர்த்திருக்கிற ஸௌந்தரிய லஹரியையும், கனகதாரா ஸ்தோத்திரத்தையும், பஜ கோவிந்தத்தையும் கேட்டுட்டுப் பெரியவாளே ஆசீர்வாதம் பண்ணியிருக்கான்னா அது எத்தனை பெரிய விஷயம்? அதைப் பத்தி ஆச்சரியப்பட்டு ஸ்ரீ மடத்து மானேஜரே உங்காத்து மாமாவுக்குப் பெரிசா ஒரு லெட்டர் போட்டிருக்கார்... படிக்கிறேன்... கேக்கறேளா?"

"வேண்டாம்டீ! ஸ்ரீ மடத்து மானேஜருக்கு முந்தின மடம் ஏஜண்டாக இங்கே இருந்த சீமாவையர் மேலே ஏகக் கோபம். சீமாவையர் சங்கரமங்கலம் சம்பந்தப்பட்ட மடத்து ஆஸ்திகளை எல்லாம் ஊழல் மயமாப் பண்ணிப்பிட்டார்னு அவருக்குப் பதிலா இந்தப் பிராமணரைக் கூப்பிட்டு நியமிச்சதே அந்த மானேஜர் தான். அவர் இந்தப் பிராமணருக்கு நெருங்கின சினேகிதம். அவராலே இவரை விட்டுக்குடுத்து எழுத முடியாது. என்னைச் சரிப்படுத்தறதுக்காக இந்தப் பிராமணரே அவரை விட்டு இப்பிடி இங்கே ஒரு கடிதாசு எழுதச் சொல்லியிருந்தாலும் ஆச்சரியப்படறத்துக்கில்லேடீ!"

மாமியின் பிடிவாதத்தை எப்படிச் சமாளிப்பதென்று வசந்திக்குப் புரியவில்லை. பிள்ளை அந்தப் பிரெஞ்சுக்காரியை மணந்து கொள்வதன் மூலம் நிரந்தரமாக அவள் அவனைப் பிரான்ஸுக்கே இழுத்துக் கொண்டு போய் விடுவாள் என்ற மனக்குறை மாமியின் சொற்களில் தொனிப்பதைக் கவனித்தாள் வசந்தி. கமலியின் நற்பண்புகளையும் தன்னடக்கத்தையும், கோடீசுவரர்களாகிய தன் பெற்றோரிடமிருந்து அவள் ரவியை நம்பி அவனோடு புறப்பட்டு வந்திருக்கும் இணையற்ற எளிமையையும் ஒவ்வொன்றாக மாமியிடம் விவரித்தாள் வசந்தி. நல்ல வேளையாக அதைக் கேட்கவே அப்படியே நிறுத்தி மறுக்காமல் மாமி அப்போது எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டாள்.

"நேக்குத் தெரியும்டீ! நீ, ஒங்கப்பா, எல்லாருமே இந்தக் கலியாணத்துலே உள்கைகள். எல்லாருமாச் சேர்ந்து நேக்கு எதிராச் சதி பண்ணிண்டிருக்கேள்னு நன்னாத் தெரியும். இந்த விஷயத்திலே நீ இப்படித்தான் பேசுவேன்னும் நேக்கு முன்னாலேயே தெரியும்."

"தப்பா நான் ஒண்ணும் சொல்லலே மாமி! உள்ளதைத்தான் சொல்றேன். கமலி ரொம்பத் தங்கமான பொண்ணு."

"இருக்கட்டுமேடீ. யார் வேண்டாம்னது? தங்க ஊசீன்னா அதுக்காக அதை நாம எடுத்துக் கண்ணைக் குத்திக்கணுமா என்ன?"

"உங்க மேலே அவளுக்குத் தேவதா விசுவாசம் மாமி. 'புராதனமான இந்தியப் பெண்மையின் கலாசாரச் சின்னம்'னு உங்களைப் பற்றி அவ எங்கிட்டச் சொல்றது வழக்கம் மாமி..."

"அதாவது சுத்தக் கர்நாடகம், மடிசஞ்சீன்னு என்னைக் கேலி பண்றாளா?"

"சிவ, சிவ! அப்படியில்லே மாமி! வேடிக்கைக்காகக் கூட அந்த மாதிரி அவளைப் பத்திச் சொல்லாதீங்கோ. உங்களை அவ தேவதையா மதிக்கிறா."

"...நேக்கு அவளைக் கட்டோடப் பிடிக்கலைடீ."

"நீங்க அப்படிப் பாராமுகமா இருக்கக்கூடாது. மகாலட்சுமி மாதிரி சுமங்கலியா வந்திருந்து மாமாவோட மணையிலே கூட நின்னு கல்யாணத்தை நடத்தித் தரணும். நாங்க பொண்ணாத்துக்காராளா ஏத்துண்டிருக்கோம். நீங்க கட்டாயம் வந்து நடத்தித் தரணும்..."

"இந்தத் தட்டுக் கெட்டுப்போன கல்யாணத்துக்குச் சாஸ்திரம், பொண்ணாத்துக்காரா, புள்ளையாத்துக்காராள்னு இதெல்லாம் வேற கேக்கறதாக்கும்?"

"மாமி! நீங்க ரொம்பப் பெரியவா... மங்களமான காரியத்தைப் பத்தி உங்க வாயாலே இப்படி வார்த்தை சொல்லப்படாது. உங்களைக் கொறை சொல்ல எனக்கு அத்தனை வயசாகலை!"

"புள்ளைக்கு அம்மாவைக் கலந்துக்காமே - அவ சம்மதமே இல்லாமே நடக்கப்போற கல்யாணத்துக்கு - இப்படி வந்து அவளைக் கூப்பிடறது மட்டும் என்ன நியாயம்?"

"நீங்க வந்து கூட இருந்து ஆசீர்வாதம் பண்ணாமே இந்தக் கல்யாணம் நிறையாது."

"நான் ஏன் வரேன்? நேக்கு மான ரோஷம் இல்லையா என்ன? இந்தப் பிராமணர் என்கிட்ட ஒரு வார்த்தை கூடக் காதிலே போடாம இத்தனை தூரம் ஏற்பாடு பண்ணியிருக்கார். லக்கினப் பத்திரிகை முகூர்த்தக் கால் எல்லாம் கூட ஏற்பாடு பண்ணியாச்சாம். யாரிட்ட வந்து நீ காது குத்தறே? நான் இந்தக் கலியாணத்துப் பக்கமே தலைவச்சுப் படுக்கப் போறதில்லே. யாரோ ஒருத்தியை எவனோ ஒருத்தன் எங்கேயோ கல்யாணம் பண்ணிண்டா எனக்கென்ன வந்தது?"

மாமியின் கோபத்தை மறுபக்கமாகப் புரட்டிப் பார்த்தால் ரவியின் மேல் அவளுக்கு இருந்த பிள்ளைப் பாசம் புரிந்தது. மிகவும் பிரியமான விஷயத்தைப் பற்றி வெறுப்போடு பேசிக் கொண்டிருந்தாள் மாமி. அந்த வெறுப்பிலும், கோபத்திலுமே பிரியத்தின் அளவு தெரியக்கூடிய தொனி மறைந்திருந்தது. வசந்தி சுற்றி வளைத்து விதம் விதமாக முயற்சி செய்து மாமியின் மனத்தை இளக்க முயன்றாள். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. சுற்றுப்புறத்து கிராமங்களில் உள்ள ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி வைத்தால் தான் பிள்ளைக்கு ஊரோடு தேசத்தோடு, தாய் தந்தையோடு சம்பந்தமும் தொடர்பும் இருக்க முடியும். கமலி போன்ற ஒரு பிரெஞ்சுப் பெண்ணை மணந்து கொண்டு பிரான்ஸுக்கே போவதால் ரவி நிரந்தரமாகத் தங்களை விட்டே நழுவிப் போய்விடுவானோ என்று இனம் புரியாத அச்சம் ஒன்று மாமியின் உள் மனத்தில் இருப்பது புரிந்தது. அதைத்தான் வசந்தியால் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது. கடைசி முயற்சியாக மாமியிடம்,

"கல்யாணம் பழைய முறைப்படி நாலு நாள் நடக்கப் போறது. நலுங்கு, ஊஞ்சல், பாலிகை வளர்க்கறது எல்லாம் நாலு நாளும் உண்டு" என்றாள் வசந்தி.

"எத்தனையோ விஷயத்திலே சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாத்தையும் நீங்க மீறியாச்சு! இது ஒண்ணுலே மட்டும் எதுக்குச் சாஸ்திரம்? பேசாம அவா நாட்டு முறைப்படி ரிஜிஸ்டிரார் ஆபீஸிலே போய்ப் பதிவு பண்ணிக்க வேண்டியதுதானே? இல்லேனாச் சர்ச்சிலே போயி மோதிரம் மாத்திக்கலாமே?" என்று கசப்பாக எரிச்சலோடு பதில் சொன்னாள் மாமி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 25

தன் மூத்த பிள்ளையை அழகும் பண்பும் இளமையும் உள்ள அந்நிய நாட்டுப் பெண் ஒருத்தி தன்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போய்விடப் போகிறாள் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் அடிப்படையில் அவள் மேல் கொண்ட வெறுப்புமாக இருந்தாள் காமாட்சியம்மாள். வசந்தி எவ்வளவோ முயன்று பார்த்தும் காமாட்சியம்மாளிடமிருந்து சாதகமான மறுமொழியையோ சுமுகமான வார்த்தைகளையோ பதிலாகப் பெற முடியவில்லை. ஒரே முரண்டாக இருந்தாள் காமாட்சியம்மாள். உடல்நிலை சரியாயிருக்கிற காலங்களில் சூரியோதயத்திற்கு முன்பே ஆற்றங்கரைக்குப் போய்விட்டுத் திரும்புவதைத் தவிர வெளியில் எங்கும் நடமாடாத காமாட்சியம்மாளுக்கு எல்லா விவரமும் முன்கூட்டியே எப்படித் தெரிகிறதென்பது பெரிய புதிராயிருந்தது. பார்வதியை விசாரித்ததில் அந்தப் புதிர் விடுபட்டது. பக்கத்து வீட்டு முத்துமீனாட்சிப் பாட்டி திரிலோக சஞ்சாரி போல் அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களிலும் எங்கே யார் வீட்டில் என்ன நடக்கிறதென்று ஊர் வம்புகளைத் தெரிந்து கொண்டு வந்து அம்மாவுக்குச் சகலத்தையும் அவ்வப்போது காதில் போட்டுக் கொண்டிருப்பதாகப் பார்வதி வசந்தியிடம் தெரிவித்தாள்.

"புருஷா ஆயிரம் தப்புப் பண்ணலாம். பொம்மனாட்டி மட்டும் முரண்டு பண்ணி மூஞ்சியைத் தூக்கிண்டு நின்னாள்னா அப்புறம் தனியா அவா எதைச் சாதிச்சுட முடியும்?" - என்பதுதான் பக்கத்து வீட்டுப் பாட்டி அடிக்கடி காமாட்சியம்மாளிடம் சொல்லும் வாக்கியம் என்பதைக் கூடப் பார்வதியே தெரிவித்தாள்.

முரண்டும், அறியாமையும், அசூயையும், கொண்டது விடாக் குணமுள்ள சில பாட்டிகள் தான் கிராமங்களின் அரசியல்வாதிகளாக இருப்பார்களோ என்று எண்ணினாள் வசந்தி. நிச்சயமான கல்யாணங்களைக் கலைப்பது, நெருங்கிப் பழகுகிறவர்களிடையே மனஸ்தாபங்களை உண்டாக்குவது, மறைமுகமாகப் பழி தீர்த்துக் கொள்வது, வதந்திகளைப் பரப்புவது, புறம் பேசுவது, கோள் மூட்டுவது இவையெல்லாம் ஒவ்வோர் கிராமத்திலும் சில பாட்டிகளின் செயல்களாக இருந்தன. இந்த மாதிரிக் கெட்ட குணமுள்ள பாட்டிகளின் செயல்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் நல்ல சுபாவமுள்ள சில பாட்டிகள் கூட ஒதுங்கி இருந்து விடுவது வழக்கமாயிருந்தது. காமாட்சியம்மாளிடம் தான் பேசிப் பார்த்ததைப் பற்றி சர்மாவிடமும், தன் தந்தையிடமும் விவரங்களைத் தெரிவித்து விட்டாள் வசந்தி. தான் காமாட்சியம்மாளிடம் பேசியதைப் பற்றிக் கமலியிடமோ, ரவியிடமோ, வசந்தி எதையும் விவரிக்கவில்லை. வீணாக அவர்களைக் கலவரப்படுத்த வேண்டாமென்று தான் அதை விட்டிருந்தாள்.

வேணுமாமாவைப் பொறுத்தவரை வசந்தி காமாட்சியம்மாளைப் பார்த்து விட்டு வந்து கூறிய எதுவும் அவரது உற்சாகத்தைப் பாதிக்கவில்லை. கலியாண ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் அவர். அந்த வட்டாரத்திலேயே செல்வாக்குள்ள நாதஸ்வர வித்துவான் ஒருவரிடம் முன்பணம் கொடுத்து இரட்டை நாதஸ்வரத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. மற்ற ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. கலியாணம் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

இவற்றால் சீமாவையரின் ஆத்திரமும் வயிற்றெரிச்சலும் அதிகமாயிருந்தன. எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்க்கிறாற்போல் நடுவில் இன்னொரு சம்பவமும் நடந்துவிட்டது; சீமாவையர் அதில் வகையாக மாட்டிக் கொண்டு அகப்பட்டிருந்தார்.

சங்கரமங்கலம் புனித அந்தோணியார் ஆரம்பப்பள்ளியின் ஆசிரியை மலர்கொடி பள்ளிக்கூடம் முடிந்து சீமாவையரின் மாந்தோப்பு வழியாக வீடு திரும்பும் போது முன்பு பல முறை அவளை வழி மறித்து வம்பு பண்ணியது போல் வம்பு பண்ணிக் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார் அவர். தோப்பில் அவருக்குத் துணையாக அவர் அடியாட்கள் இரண்டு பேரும் இருக்கவே சீமாவையருக்குத் துணிச்சல் அதிகமாகிவிட்டது. அகமத் அலி பாயின் கடத்தல் சரக்குகளோடு சேர்ந்து இங்கே வந்து, அவருக்குப் பிரியமாகக் கொண்டு வந்து தரப்பட்டிருந்த 'சீமைச் சரக்கு' வேறு உள்ளே போயிருந்தது. சீமாவையரின் தோப்பில் இறைவைக் கிணற்றை ஒட்டிப் பம்ப் செட் மோட்டாருக்காக ஒரு சிறிய சிமெண்டுக் கட்டிடம் உண்டு. அவர் குடிப்பதற்காகவும் மற்ற லீலாவிநோதங்களுக்காகவும் இந்தக் கட்டிடம் பயன்பட்டு வந்தது. அவர் வீடு அக்கிரகாரத்துக்குள் நடுவாக இருந்ததனால் அங்கே ஒரு நாளும் இந்த விவகாரங்களை அவர் வைத்துக் கொள்வதில்லை. தோப்பு ஊரிலிருந்து ஒதுங்கி இருந்ததனால் இதற்கெல்லாம் வசதியாயிருந்தது. நீண்ட நாள் நழுவி நழுவிப் போய்க் கொண்டிருந்த மலர்க்கொடியை அன்று எப்படியும் வசப்படுத்தியே தீருவது என்று சீமாவையர் கையைப் பிடித்து இழுத்தவுடன் அவள் கூப்பாடு போட்டிருக்கிறாள். பின்னாலேயே அவளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இறைமுடிமணியின் இயக்கத்து ஆட்கள் ஓடிவந்து சீமாவையரைக் கையும் களவுமாகப் பிடித்துத் தோப்பிலிருந்த தென்னை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டார்கள். இறைமுடிமணிக்குத் தகவல் அனுப்பி அவர் போலீஸுக்குச் சொல்லியனுப்பிவிட்டு வந்தார். சீமாவையரின் அடியாட்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருந்த பகுத்தறிவுப் படிப்பக இளைஞர்களை எதிர்க்க முடியாமல் உடனே போய் அகமத் அலி பாய்க்குத் தகவல் தெரிவித்தார்கள். பணம் விளையாடியது. போலீஸ், எதிர்பார்த்தபடி உடனே தோப்புக்கு வரவில்லை. ஆனால் சீமாவையரைத் தப்பச் செய்வதற்காக அகமத் அலிபாய் ஒரு கூலிப் பட்டாளத்தை அனுப்பியிருந்தார். இருட்டியதும் தோப்பில் புகுந்த அந்தக் கூலிப் பட்டாளம் முதல் வேலையாகச் சீமாவையரைத் தென்னை மரத்திலிருந்து அவிழ்த்துவிட்டுத் தப்பச் செய்து விட்டது. அப்புறம் நடந்த கலகத்தில் பகுத்தறிவுப் படிப்பக ஆட்களில் சிலருக்கும், அவர்களைத் தேடி அங்கு வந்திருந்த இறைமுடிமணிக்கும் அரிவாள் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. போலீஸ் வருவதற்குள் கூலிப் பட்டாளம் தப்பி ஓடிவிட்டது. அங்கே வந்து சேரப் போலீஸார் வேண்டுமென்றே அதிக நேரமாக்கினாற் போலப் பட்டது.

அவசர அவசரமாகத் தப்பி ஓடிய சீமாவையர் தான் எந்த நேரத்தில் மாந்தோப்பில் அந்தப் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்ததாக அவர்கள் போலீசில் புகார் செய்திருந்தார்களோ அதே நேரத்தில் சிவன் கோவிலில் குடும்பத்தோடு சென்று அர்ச்சனை செய்து தரிசனம் பண்ணிக் கொண்டிருந்ததாகச் சாட்சிகளும், ஓர் அலிபியும் ஜோடனை செய்தார்.

போலீஸார் சீமாவையரின் தோப்பில் அத்துமீறிப் புகுந்து கலகம் விளைவிக்க முயன்றதாகப் பகுத்தறிவுப் படிப்பக ஆட்கள் மீதும் இறைமுடிமணி மீதும் வழக்குப் பதிவு செய்திருந்தார்கள்.

இறைமுடிமணிக்கு இடது தோள்பட்டையில் சரியான அரிவாள் வெட்டு. சங்கரமங்கலம் லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அவரைச் சேர்த்திருந்தார்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்க அதிக நேரமாகி விட்டதால் நிறைய இரத்தம் வீணாகி இருந்தது. தகவல் தெரிந்து சர்மா, ரவி, கமலி எல்லோரும் பதறிப் போய் ஆஸ்பத்திரிக்கு விரைந்திருந்தார்கள். ஏற்கனவே இறைமுடிமணியின் மருமகன் குருசாமியும், மனைவி மக்களும், குடும்ப நண்பர்களும், இயக்க நண்பர்களுமாக ஆஸ்பத்திரியில் கவலையோடு குழுமியிருந்தனர். இறைமுடிமணிக்கு நிறைய இரத்த இழப்பு ஏற்பட்டதனால் புது இரத்தம் செலுத்த வேண்டி இருந்தது. அவரது இயக்கத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு இரத்தம் கொடுக்க முன் வந்தனர். ஆனால் சோதனை செய்து பார்த்ததில் ஒருவரது இரத்தமும் அவரது குரூப் இரத்தமாக இல்லை.

டாக்டர் சர்மாவைப் பார்த்தார். அவரைக் கேட்கலாமா வேண்டாமா என்று தயங்கினார்.

"என் இரத்தம் சேர்றதான்னு பாருங்கோ. ஒண்ணும் எனக்கு ஆட்சேபணை இல்லை" - என்று மகிழ்ச்சியோடு டாக்டரைப் பின் தொடர்ந்தார் சர்மா.

என்ன ஆச்சரியம்! சர்மாவின் இரத்தம் கச்சிதமாகச் சேர்ந்தது. சர்மா இறைமுடிமணிக்காக இரத்தம் கொடுத்தார். மறுநாள் காலை இறைமுடிமணி நல்ல பிரக்ஞையோடு பேச முடிந்த நிலையில் இருந்தபோது தன்னைப் பார்ப்பதற்காக ஹார்லிக்ஸ், பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்த சர்மாவிடம், "எங்கள் ஆளுங்கள்ளாம் நான் பொழைச்சு எந்திரிச்சப்புறம் ஒரு வேளை ஆஸ்திகனா மாறிடுவேனோன்னு கூடப் பயப்படறாங்கப்பா! நீயில்ல எனக்கு இரத்தம் குடுத்தியாம்?" - என்று வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே சர்மாவைக் கேட்டார். அப்போது அருகே இருந்த படிப்பக ஆள் ஒருவர், "ஒரு ஐயரு ரத்தவெறி பிடிச்சுப் போய் அதைச் சிந்த வைச்சாரு. இன்னொருத்தரு அதைக் குடுத்துச் சரிப்படுத்தினாரு" - என்று சொன்னார். இறைமுடிமணி அந்த ஆளை உறுத்துப் பார்த்தார். "இந்தா நீ கொஞ்சம் வெளியில இரு சொல்றேன். நானே பெறவு கூப்பிடுறேன்" - என்று சொல்லி அந்த ஆளைப் போகச் சொன்னார் இறைமுடிமணி. உடனே சர்மா "அவரை ஏன் கோபிச்சுக்கறே தேசிகாமணி! அவரு உள்ளதைத்தானே சொல்கிறார்?" - என்றார். ஆனால் அந்த ஆள் இறைமுடிமணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு உடனே வெளியேறி விட்டார். அவர் வெளியேறியதும் இறைமுடிமணி சர்மாவிடம் கூறினார்:

"செய்யிற அக்கிரமத்தையும் செஞ்சுப்போட்டு நானும் என் ஆளுங்களும் அவரு தோப்பிலே அத்து மீறி நுழைஞ்சி கலகம் பண்ணிச் சொத்துக்குச் சேதம் விளைவிச்சிருக்கோம்னு போலீஸிலே புகார் பண்ணியிருக்காரு சீமாவையரு. அந்த நேரத்திலே அவரு சிவன் கோவில்ல குடும்பத்தோட அர்ச்சனையில்லே பண்ணிக்கிட்டிருந்தாராம்? தனக்கு ஆபத்துன்னாச் சாமியைக் கூடப் பொய்சாட்சிக்கு இழுக்கிறானுவ" -

"யாரைச் சாட்சிக்கு இழுத்தா என்ன? அக்கிரமம் பண்றவா அழிஞ்சுதான் போயிடுவா..."

"அழிஞ்சு போகலியே விசுவேசுவரன்! நேர்மாறா அக்கிரமத்தை எதிர்க்கப் போன நாங்களில்லே கையும் காலும் வெட்டுப்பட்டு இப்படி ஆஸ்பத்திரியிலே வந்து அழிஞ்சு கிடக்கிறோம். நாலு காசு வசதியுள்ளவன் இங்கே நியாயம், சட்டம், போலீசு எல்லாத்தையும் கூட வெலைக்கி வாங்கிடறானே?"

"வாஸ்தவம், தெய்வத்தை நம்பறவாளைவிடப் பணத்தையும், வசதிகளையும் நம்பித் தொழறவா தேசத்திலே அதிகமாயிட்டா. யோக்கியமாயிருக்கணும், உழைச்சுச் சம்பாதிக்கணும்கிற நம்பிக்கையே போயிடுத்து. நல்லவனாயிருக்கணும்கிற நம்பிக்கையை விட நல்லவனைப் போல இருந்துட்டாப் போறும்னு திருப்திப் படறதே அதிகமாயாச்சு-"

"வேதத்தைச் சொல்லுற வாய் பொய்யையும் சொல்லுது. சீமாவையர் கடவுளை நம்பறதைவிட அதிகமாக அகமத் அலி பாயோடு பணத்தைத்தான் நம்புறாரு."

"என்னைப் பொறுத்தவரை எவன் யோக்கியனாயிருக்கானோ, எவன் மத்தவனை ஏமாத்தாமே உழைச்சு வாழறானோ, எவன்கிட்டச் சூதும், வாதும் வஞ்சனையும் இல்லியோ அவனெல்லாம் ஆஸ்தீகன் தான். எவன் அயோக்கியனாயிருக்கானோ, எவன் மத்தவனை ஏமாத்தி, உழைக்காமச் சுரண்டி வாழறானோ எவன்கிட்டச் சூதும் வாதும் வஞ்சனையும் நிரம்பியிருக்கோ அவனெல்லாம் தான் நிஜமான நாஸ்தீகன்!"

"நீ சொல்றே... ஆனால் உலகத்துனோட கண்ணிலே சீமாவையருதான் ஆஸ்தீகர், நான் நாஸ்தீகன். முரடன்! ஊரோட ஒத்துப் போகாதவன்..."

"அப்படி யார் யார் நெனைக்கறாளோ தெரியாது. ஆனா நான் அப்படி உன்னைப் பத்தி நெனைக்கலே தேசிகாமணி!"

"நீ நெனைக்க மாட்டப்பா... அதைக் கூடப் புரிஞ்சுக்கத் தெரியாதவனா நான்?"

இந்த உரையாடலின் போது இருவருமே மனம் நெகிழ்ந்த நிலையில் இருந்தார்கள். இறைமுடிமணி பத்து நாட்களுக்கு மேல் ஆஸ்பத்திரியில் இருக்க நேர்ந்தது. அப்படி அவர் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக இருந்த நாட்களில் சர்மா நாள் தவறாமல் ஆறுதலாக அவரைப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு நாள் சர்மா ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டுத் திரும்பியபோது வழியில் சந்தித்த சாஸ்திரி ஒருவர் சர்மாவிடம் பேச்சுக் கொடுத்தார் - அந்தச் சாஸ்திரி சீமாவையருக்கு மிகவும் வேண்டியவர். அவரிடம் சர்மாவாக வலுவில் பேசப் போகவில்லை. பாதையில் எதிர்ப்பட்டு அவராகத் தம்மை நிறுத்தி க்ஷேமலாபம் விசாரிக்கவே சர்மாவும் பதில் பேசினார்.

"எங்கே போயிட்டு வரேள் சர்மா?"

"எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட சிநேகிதன் ஒருத்தன் ஒரு கலவரத்திலே வெட்டுக் காயப்பட்டு ஆஸ்பத்திரியிலே படுத்த படுக்கையா இருக்கான் - அவனைப் போய்ப் பார்த்துட்டு வாரேன்."

"யாரு? அந்தச் 'சூனா மானா'க்காரன் தானே, 'சாமியில்லே தெய்வமில்லே'ன்னு சதா நாஸ்தீகப் பிரசாரம் பண்ணிண்டிருக்கானோ இல்லியோ, அதான் தெய்வமாப் பார்த்து இந்த்த் தண்டனையை அவனுக்குக் குடுத்திருக்கு."

இதைக் கேட்டுச் சர்மாவுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. கடவுளின் செயல்களுக்கு இப்படிக் கொச்சையாக அர்த்தம் கற்பிக்கிற ஆஸ்திகனைவிட மோசமான நாஸ்திகன் வேறொருவன் இருக்க முடியாது என்று பட்டது அவருக்கு. தெய்வ சிந்தனைகளில் மிகவும் மோசமான தெய்வ நிந்தனை, 'கடவுள் தம்மை எதிர்த்துப் பேசுகிறவன் வீட்டில் கொலை விழச் செய்வார், தம்மைத் துஷ்பிரசாரம் செய்கிறவனை உடனே கையைக் காலை வாங்கிப் பழி தீர்த்துக் கொள்வார்' என்று மூட பக்தியால் பாமரத்தனமாக விளக்கம் கொடுப்பதுதான். இந்த மூடத்தனமான விளக்கம் சரியாயிருந்தால் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாத, அல்லது வெற்றி மமதையில் நிதானமிழந்த ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியைப் போலக் கடவுளும் பழி வாங்கவும், பகை தீர்க்கவும், எங்கே எங்கே என்று தேடித் தவித்துக் கொண்டு திரிவது போலாகிவிடும். இவ்வளவு வேதங்கள் உபநிஷதங்களைக் கரைத்துக் குடித்திருந்தும் அதே சாஸ்திரி அத்தனை மௌட்டீகம் நிறைந்த ஒரு விளக்கத்தைக் கொடுத்தது கண்டு சர்மா அப்போது அருவருப்பு அடைந்திருந்தார். அவரை விட - அவற்றை எதிர்ப்பதற்காகவே சாஸ்திரம் சம்பிரதாயங்களைப் படித்துக் கொண்ட இறைமுடிமணி இன்னும் தெளிவாகவும் பிரக்ஞையுடனும் நன்றாகவும் படித்திருப்பதாகச் சர்மாவுக்குத் தோன்றியது.

சர்மா தன் மனத்தினுள் இருந்த எரிச்சலை அமைதிப் படுத்திக் கொண்டு "சாஸ்திரிகளே! நீர் சொல்றபடி வச்சுண்டுட்டாத் தனக்கு கெடுதல் பண்றவாளையும், தன்னை எதிர்க்கிறவாளையும் எப்படா தேடிப் பிடிச்சுக் கையைக் காலை வெட்டித் தண்டிக்கலாம்னு ஒருவிதமான சுயநலத்தோடு தெய்வம் தயாராக் காத்துண்டிருக்கற மாதிரின்னா ஆறது?" என்றார்.

"இல்லியோ பின்னே? தெய்வம் எப்பிடிப் பொறுத்துக்கும்னேன்?"

இதைக் கேட்டுச் சாஸ்திரிகளின் மௌட்டீகத்துக்காக மட்டுமின்றி மந்த புத்திக்காகவும் சேர்த்து இரக்கப்பட்டுக் கொண்டே மேலும் அவரையே கேட்டார் சர்மா:-

"பொறுமையே பூஷணம்னும் சகிப்புத் தன்மையே சத்தியம்னும் மனுஷாளுக்கெல்லாம் முன்மாதிரியாக் கத்துக்குடுக்க வேண்டிய தெய்வம், நீர் சொல்ற மாதிரி அத்தனை பொறுமையில்லாததாயும், அவசரக் குடுக்கையாகவும் சுயநலமாகவும் இராது சாஸ்திரிகளே-"

"நீங்க என்ன சொல்றேள் சர்மா? 'அவனோட' பழகிப் பழகி வரவர நீங்களே இப்பல்லாம் 'அவன்' மாதிரிப் பேச ஆரம்பிச்சுட்டேள்..."

"அதில்லே! சமயா சமயங்கள்ளே ஆஸ்தீகாளும் தங்களை அறியாமத் தெய்வத்தை அவமதிச்சுப் பேசிடறதுண்டு. அதுவும் கூடத் தெய்வ நிந்தனைதான். நீங்க சொன்னதையும் அதிலே தான் சேர்த்துக்கலாம். நம்ம துவேஷத்தை, நம்ம மௌட்டீகத்தை, நம்ம அஞ்ஞானத்தை நம்மோட பழி வாங்கற மனப்பான்மையை இதுக்கெல்லாம் அப்பாற்பட்ட பரம்பொருள் மேலே ஏத்தி வச்சு அது பழி வாங்கிடும், கண்ணை அவிச்சுப்பிடும், காலை ஒடிச்சிப்பிடும்னெல்லாம் சொல்றது எத்தனை அபத்தம்? 'வேண்டுதல் வேண்டாமை' இல்லாதவன்னு பகவானைப் பத்தி ஆயிரம் சாஸ்திரங்கள்ளே நீர் திரும்பத் திரும்பப் படிச்சு என்ன பிரயோஜனம் சாஸ்திரிகளே?"

எவ்வளவோ அடக்கிக் கொள்ள முயன்றும் சர்மா குரலில் கடுமை தொனித்து விட்டது. சாஸ்திரிகள் சர்மாவுக்குப் பதில் சொல்லாமல் கோபத்தோடு நேரே சீமாவையர் வீட்டுத் திண்ணைக்கு விரைந்தார். அங்கே அவர் எதிர்பார்த்தது போல் வம்பர் சபை கூடியிருந்தது. இவர் போவதற்கு முன்பேயே 'சர்மா எதிர்ப்புத்'தான் அங்கே நடந்து கொண்டிருந்தது. சீமாவையர் அத்தனை பேருக்கும் தாராளமாக வெற்றிலை சீவல் வழங்கிச் சர்மா எதிர்ப்பை உற்சாகப்படுத்தி விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சாஸ்திரி வந்து சொன்னதைத் தொடர்ந்து கூடியிருந்தவர்களிடம் சீமாவையரே சர்மாவைப்பற்றி மேலும் குறை கூறித் தூபம் போட்டுவிட வசதியாயிருந்தது.

"என்னோட மாந்தோப்பிலே பம்ப்செட் மோட்டாரைக் கொள்ளையடிக்கணும்னு திட்டம் போட்டு ஆள் கட்டோட நுழைஞ்சவன் அந்த இறைமுடிமணி. நல்லவேளையா என் குத்தகைக்காரனோட ஆள்கள் சமயத்தில் வந்து என் ஆஸ்தியைக் காப்பாத்தியிருக்காங்க. அப்படிப்பட்ட கிராதகனுக்கு பரிஞ்சுண்டு போய் நிற்கிறார் சர்மா. அவருக்கு வரவரப் புத்தியே பேதலிச்சுப் போச்சு. ஒரே அடி மேலே அடியா வரது. புள்ளை என்னடான்னாப் பிரெஞ்சுக்காரியை இழுத்துண்டு வந்து நிற்கிறான். கடைசியிலே இவரே அவாளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதாயிடுத்து. சாஸ்த்ரோக்தமா நாலு நாள் கல்யாணமாம், சாஸ்திரம் ஒரு கேடு இவருக்கு! பண்ற கந்தரகோளம்லாம் பண்ணிட்டுச் சாஸ்திரமாம் சாஸ்திரம்!"

"அது மட்டுமில்லே சீமாவையர்வாள்! ஆஸ்பத்திரியிலே சாகக் கிடந்த அந்தக் கறுப்புச் சட்டைக்காரனுக்கு ஓடிப்போய் ரத்தம் குடுத்துக் காப்பாத்தியிருக்கார் இவர்..."

"இவருக்குத் தாத்தா வந்தாலும் அவனைக் காப்பாத்த முடியாது சுவாமீ! அவன் அகமத் அலி பாயைப் போய் விரோதம் பண்ணிண்டிருக்கான். பாய் கோடீசுவரன். அவரோட போட்டி போட இந்த வெறகுக் கடைக்காரனாலா ஆகும்?"

"ஆனா அவன் அக்ரகாரத்திலே வச்சிருக்கற பலசரக்குக் கடையிலே வியாபாரம் ரொம்ப நன்னா ஆறதுங்கறாளே ஓய்! விலை எல்லாம் ரொம்ப நியாயமாயிருக்குங்கறா, சரக்கும் கலப்படமில்லாமே சுத்தமாகவும் நன்னாவும் இருக்காமே... எல்லாரும் பேசிக்கிறாளே..."

"சும்மா ஒரு ஸ்டண்ட்! அதெல்லாம் கொஞ்ச நாள் ஜனங்களைக் கவரணும்கறதுக்காகக் குடுப்பன். போகப் போகத்தான் சுயரூபம் தெரியும்." - என்று அதை மறுத்தார் சீமாவையர். இறைமுடிமணியைப் பற்றியோ சர்மாவைப் பற்றியோ யாருக்கும் ஒரு சிறிய நல்லபிப்பிராயம் கூட ஏற்பட்டு விடாமல் கவனித்துக் கொள்வதில் சீமாவையருக்கு அளவு கடந்த அக்கறை இருந்ததென்னவோ உண்மை! 'இறைமுடிமணி'யின் கடை, வியாபாரம் எல்லாம் பற்றி ஊர் முழுவதும், மரியாதையும் நல்லெண்ணமும் பெருகுவதையே அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது. சர்மாவையும், இறைமுடிமணியையும் கோர்ட்டு, கேஸ் என்று இழுத்தடிப்பதற்கான செலவுகளை இரகசியமாக அகமத் அலிபாய் ஏற்றுக் கொண்டிருந்தார். அகமத் அலிபாயின் கோபத்துக்குக் காரணம் சர்மாவை வீடுதேடி போய்க் கையில் முன்பணத்தோடு கெஞ்சிப் பார்த்தும் கேட்காமல் அவர் அந்த இடத்தை இறைமுடிமணிக்கு விட்டிருந்தார் என்பதுதான். அதே காரணத்தாலும், தொழிற் போட்டியாலும் தனக்குக் கிடைக்காத இடம் அவருக்குக் கிடைத்து விட்டதே என்ற எண்ணத்தினாலும் இறைமுடிமணியின் மேலும் அவருக்கு எரிச்சல் ஏற்பட்டிருந்தது. சர்மாவையும் இறைமுடிமணியையும் அலைக்கழித்துக் கஷ்டப்படுத்துவதற்காகச் சீமாவையருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்கத் தயாராயிருந்தார் அகமத் அலிபாய்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 26

கமலி ரவி கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே ஸ்ப் கோர்ட்டிலிருந்து ஸம்மன் சர்மாவுக்கும் கமலிக்கும் வந்து சேர்ந்திருந்தது. கமலி போய்த் தரிசனம் செய்திருந்த சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கோவில்களின் தூய்மை கெட்டு விட்டதால் அவற்றுக்கு மறுபடி உடனே சம்ப்ரோட்சணம் செய்ய ஆகிற செலவு என்று ஒரு கணக்குப் போட்டுப் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கோரி வழக்குத் தொடுத்திருந்தார்கள். வழக்குத் தொடுப்பதற்கான செலவு, தூண்டுதல் எல்லாம் சீமாவையர், அகமத் அலிபாய் ஆகியோருடையது என்றாலும், ஒவ்வொரு கோவிலுக்கும் சம்ப்ரோட்சணம், யாகசாலை, கும்பாபிஷேகம், மண்டலாபிஷேகச் செலவுகளுக்கு நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தவர் பாதிக்கப்பட்ட உள்ளூர் ஆஸ்திகர் என ஒருவராகவோ சிலராகவோ முன் வந்திருந்தார்கள். கோவில் கமலி நுழைந்ததனால் தூய்மை கெட்டுப் போய் ஆஸ்திகர்களும் முறையான இந்துக்களும் தொழுவதற்குப் பயன்படாமற் போய் விட்டதென்றும், எவ்வளவு விரைவில் கும்பாபிஷேக ஏற்பாடு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் செய்தாக வேண்டுமென்றும் வழக்குத் தொடுத்தவர்கள் கோரியிருந்தார்கள். எனவே சர்மாவுக்கும், கமலிக்கும் வந்திருந்த கோர்ட் நோட்டீஸில் விரைவாக விசாரணைக்கு ஒரு தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. முன்பு செய்தது போலவே கோர்ட் நோட்டீஸுடன் வேணு மாமாவிடமே கலந்தாலோசித்தார் சர்மா. வேணு மாமா சிறிதும் கலங்காமல் யோசனை சொன்னார்.

"கலியாணத்துக்கு ஒரு வாரம் இருக்கறப்போ பார்த்து நீரும், கமலியும் கோர்ட்லே வந்து நிற்கிற மாதிரி நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கா, பரவாயில்லே, கவலைப்படாதேயும். ப்ராக்டீஸ் பண்ணாததாலே எனக்கு வக்கீலுக்குப் படிச்சதே மறந்து போச்சு, ஆனா இந்தக் கேஸுலே உமக்கும் கமலிக்கும் நானே வக்கீலா இருந்து கவனிச்சுக்கறேன். பைத்தியக்காரத்தனமா இந்தக் கேஸைப் போட்டவங்க மூஞ்சியிலே கரியைப் பூசிண்டு போறாப்ல பண்றேனா இல்லையா பாரும்!"

"இப்போ நீங்க எதுக்குச் சிரமப்படணும்? வேறு யாராவது வக்கீல்கிட்ட விட்டுடலாமே? இதுனாலே கல்யாண ஏற்பாடுகளை நீங்க கவனிச்சுண்டிருக்கிறது தடைப்படுமே?"

"ஒண்ணும் தடைப்படாது. இந்தக் கேஸுலே சில நுணுக்கமான ஆர்க்யுமெண்டுகள் இருக்கு. அதை எல்லாம் பத்தி நான் ஏற்கெனவே யோசிச்சு வச்சிருக்கேன். ஃபூன்னு உள்ளங்கையாலே ஊதி விடறாப்ல ஊதி விட்டுடலாம். கவலைப்படாதேயும் சர்மா..."

"என் தலையை உருட்டணும்கிறதுக்காகவோ என்னவோ எல்லாப் பேப்பர்லியும் கொட்டை எழுத்திலே பெரிய நியூசாப் போட்டுட்டா இதை. சாதாரணமா எத்தனையோ கேஸ் சப்கோர்ட்டிலே வரது. அதை எல்லாம் நியூஸாப் போடறதில்லே..."

"உம்ம தலையை உருட்டணும்னு பேப்பர்காராளுக்கு ஒண்ணும் இராது. 'வெள்ளைக்காரி கோவிலுக்குள்ளே நுழைஞ்சிட்டாள்'ன்னு வழக்குன்னா அதுலே ஒரு 'சென்சேஷன்' இருக்கோல்லியோ. அதுனாலே பெரிய நியூஸாப் போட்டிருப்பா."

"நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டிருக்கிற புள்ளிகளிலே ரெண்டொருத்தர் அந்தந்தக் கோவில்களோட தர்மகர்த்தாக் குழுவிலே கூட இருக்கா. அதுனாலே, அர்ச்சகாள், குருக்கள், எல்லாம் கூட வேணும்னே பயந்துண்டு நமக்கு எதிரா சாட்சி சொல்லலாம்." -

"இந்த ரெண்டு கோயில்லேயும் கமலி தரிசனத்துக்குப் போனப்போ இருந்த அர்ச்சகாள் யார் யாருன்னு நினைவிருக்கோ சர்மா?"

"கமலி கோவிலுக்குப் போறப்போ எல்லாம் உங்க பொண் வசந்தியோ, ரவியோ, அல்லது பாருவோ கூடத் துணைக்குப் போயிருக்கா. அவாளைக் கேட்டா அந்த சமயத்திலே அர்ச்சகா யார் யார் இருந்தான்னும் தெரிஞ்சுண்டுடலாம். அது ஒண்ணும் பெரிய சிரமமில்லே-"

"உடனே தெரிஞ்சுண்டு வந்து சொன்னீர்னா அந்த அர்ச்சகாளைக் கொஞ்சம் வரவழைச்சுப் பேசலாம். கேஸ் நமக்குச் சாதகமா முடியறத்துக்கு ரொம்ப உபயோகப்படப் போற விஷயம் இது."

"இன்னிக்கே விசாரிச்சுச் சொல்லிடறேன். வேற சாட்சி ஏதாவது வேணுமா?"

"உம்ம சிநேகிதன் அந்தப் பகுத்தறிவுப் படிப்பக ஆள் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லச் சம்மதிப்பாரா?"

"இதிலே அவரோட சாட்சிக்கு எந்த விதத்திலே இடம் இருக்கு? இது கோவில் குளம், பக்தி தரிசனம்னு வர்ற கேஸ், தேசிகாமணிக்கு அதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது."

"நம்பிக்கை இருக்கறதும் இல்லாததும் வேற விஷயம். அவரோட தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் அடங்கிய பகுத்தறிவுப் படிப்பகத்திலே போய்ப் பிரசங்கம் பண்றதுக்கு முந்திகூட ஏதோ கடவுள் வாழ்த்து மாதிரி ஒரு ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துட்டுத்தான் கமலி பிரசங்கம் பண்ணினாள்னு கேள்விப்பட்டேன். அப்படி அவள் செஞ்சதைத் தங்களுக்குப் பிடிக்காத விஷயமா இருந்தும் ஒரு நாகரிகம் கருதி அவர் யாரும் தடுக்கலேன்னும் கேள்விப்பட்டேன்."

"இருக்கலாம், ஆனா அது இந்தக் கேஸுக்கு எப்படிப் பிரயோஜப்படும்?"

"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சர்மா! நடந்ததைக் கோர்ட்ல வந்து அவர் சொல்லுவாரோ இல்லியோ?"

"தாராளமா வந்து சொல்லுவார். தேசிகாமணி நிஜத்தைச் சொல்றதுக்கு எங்கேயும் யார் முன்னாடியும் பயப்படறது இல்லே."

"அது போதும் எனக்கு."

"பாவம்! இந்தச் சீமாவையர் பண்ணுன அக்கிரமத்திலே வெட்டுக் காயம் பட்டு ஆஸ்பத்திரியிலே கெடந்துட்டு இப்பத்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருக்கார் அந்த மனுஷன்."

"என்ன பண்றது சர்மா? விபூதிப் பூச்சு, தெய்வ நம்பிக்கைங்கிற வேஷம் எல்லாமாச் சேர்ந்து சீமாவையர் முதல் நம்பர் ஆசாரக்கள்ளனாயிருந்தும் அவரை நல்லவனா உலகத்துக்குக் காட்டிடறதே?"

"யாருக்கும் பயப்படாமே மனப்பூர்வமா உள்ளதைச் சொல்லணும்னாத் தேசிகாமணியை ஆஸ்திகனா ஒத்துக்கலாம். சீமாவையரைத்தான் உண்மையான நாஸ்தீகன்னு சொல்லணும். வேஷம் போடறவனை விட வெளிப்படையானவன் யோக்கியன். சீமாவையருக்குச் சாஸ்திரம், புராணம், சம்ப்ரதாயம், ஒரு மண்ணும் தெரியாது. தெரியறதாக வேஷம் போடறார். ஒண்ணைக் குறை சொல்லிப் பேசறதுன்னாக்கூட அதைப் பத்தி முழு விவரமும் தெரிஞ்சுக்காமப் பேசப்படாதுன்னு அத்தனையையும் முறையாக் கத்துண்டு ஒண்ணுமே தெரியாத பாமரன் மாதிரி நடந்துக்கற தேசிகாமணி எவ்வளவோ சிலாக்கியம்பேன்..."

"முடிஞ்சா சீமாவையரைக் கூட இதிலே சிக்க வைச்சுப் பாக்ஸ்லே ஏத்திக் குறுக்கு விசாரணை பண்ணணும்னு எனக்கு ஆசை."

"அவர் தான் நேரே வரவே மாட்டார். மத்தவாளைத் தூண்டிவிட்டு ஆழம் பார்க்கறதே அவர் வழக்கம். மத்தவாளுக்குக் கெடுதல் பண்றதையே ஒரு ஆர்ட்டா டெவலப் பண்ணிண்டவர் அவர். அவரோட பக்தி விசுவாசம் எல்லாமே வெறும் பாசாங்கு."

"கமலி கோயிலுக்கு வந்ததாலே கோயிலோட சுத்தம் கெட்டுப் போச்சுன்னு கேஸ் போட்டிருக்கிறதிலிருந்தே அது தெரியலியா?"

"சும்மா பேருக்குத்தான் கமலி மேலே கேஸ் போட்டிருக்காளே ஒழிய உண்மையிலேயே அவா கோபமெல்லாம் என் மேலேயும் தேசிகாமணி மேலேயும் தான். என்னைச் சிரமப்படுத்தணும், எனக்குத் தொந்தரவு குடுக்கணும்னு தான் எல்லாம் நடக்கிறது. சீமாவையர் பார்த்துண்டிருந்த ஸ்ரீ மடத்து முத்திராதிகாரி பதவியாலே பல வகையிலே அவர் நிறைய பணம் பண்ணிக்க வழி இருந்தது. அவராலே மடத்துப் பேரே கெட்டுடும்னு பயந்து பெரியவா எங்கிட்ட அதை மாத்தினா. அதனாலே ஒரு கோபம். ரெண்டாவது, அவர் சொல்றபடி நான் கேட்டுட்டாப் பரவாயில்லேன்னு முயற்சி பண்ணிப் பார்த்தார். நெலங்களைக் குத்தகைக்கு அடைக்கிறது, மடத்து மனையை வாடகைக்கு விடறதுலே எல்லாம் அவர் சொன்னதை நான் கேக்கல்லேன்னு வேறெ என் மேலே தாங்க முடியாத ஆத்திரம் அவருக்கு."

"சீமாவையர் மட்டும் விட்னெஸ்ஸாவோ, வேறெப்படியோ பாக்ஸ்லே ஏறினார்னா இத்தனையையும் பகிரங்கமா எக்ஸ்போஸ் பண்ணிடலாம் சர்மா..."

"அவர் சிக்கறது கஷ்டம். தண்ணிப் பாம்பு மாதிரி சுபாவம் அவருக்கு. தலையை மட்டும் வெளியிலே நீட்டுவார். கையிலே நாம கல்லை எடுத்தமோ முக்குளிச்சு ஓடிப்போய் ஒளிஞ்சுண்டுடறதுதான் அவர் வழக்கம்."

"உதாரணம் பிரமாதம் சர்மா!... இந்த மாதிரிக் கையாலாகாதவனை நல்ல பாம்போட கூட ஒப்பிட்டு நல்ல பாம்பை அநாவசியமா அவமானப்படுத்த நீர் தயாராயில்லேன்னு தெரியறது."

"நல்ல பாம்புக்குக் கொஞ்சம் மானரோஷம் உண்டு. அதை அடிக்கக் கம்பை ஓங்கினா எதிர்த்துச் சீறும்; படமெடுக்கும். கடிக்கக் கூட வரும்..."

சர்மா சீமாவையரைச் சித்தரித்த விதத்தைக் கேட்டு வேணு மாமா இரசித்துச் சிரித்தார். அப்புறம் சர்மாவிடம் வினவினார்:

"கோயில் திருப்பணிக்குக் கமலி பேரிலே நன்கொடை கொடுத்து ரசீது வாங்கச் சொன்னேனே; அந்த ரசீதைப் பத்திரமா வச்சிருக்கேளா? அதுலே என்ன எழுதியிருக்குன்னு இப்போ நினைவிருக்கோ?"

"இந்து ஆஸ்தீகப் பெருமக்களே! இது உங்கள் திருப்பணி; உவகையோடு முன் வந்து உதவுங்கள்'ன்னு தலைப்பிலே அச்சிட்டிருக்கான்னு நினைப்பு. அப்புறம் தேதி, பணம் குடுத்தவங்களோட பேர், கீழே தர்மகர்த்தாக்களில் ஒருத்தரோட கையெழுத்து எல்லாம் அதிலே இருக்கு."

"பலே! அதைப் பத்திரமா எடுத்துண்டு வந்து எங்கிட்டக் குடுத்துடும்."

"கேஸ், விசாரணை, வாய்தான்னு ரொம்ப இழுபடுமோ? அப்படி இழுபட்டா நம்ம கல்யாணக் காரியங்களையே கவனிக்க முடியாம இதுக்குன்னே அலைய வேண்டியதான்னா போயிடும்?"

"இழுபடாதுன்னு தோன்றது. 'பப்ளிக் இன்ட்ரஸ்ட் உள்ள அவசர விஷயம்'னு வற்புறுத்தி அவா கேஸ் போட்டிருக்கா. கமலி நுழைஞ்சதாலே கோவில் சாந்நித்யம் கெட்டு முறைப்படி தினசரி வழிபட வருகிற எல்லா இந்துக்களுக்கும் பயன்படாததாகி விட்டதுன்னும், உடனே சம்ப்ரோட்சணம் செய்தாகணும்ன்னும் தான் வழக்கு. அதனாலே கேஸை எடுத்துண்டாச்சுன்னா உடனே விசாரணை நடந்து முடிஞ்சுடறதுதான் வழக்கம். எப்பிடியும் ரெண்டுலே ஒண்ணு சீக்கிரமா முடிவாயிடும்."
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 27

கமலி சங்கரமங்கலத்துக்கு வந்ததிலிருந்து அவள் சம்பந்தப்பட்ட அவர் பழகியிருக்கிற மனிதர்களைப் பற்றிய விவரங்களைச் சர்மாவிடமும், ரவியினிடமும், விசாரித்து அறிந்த பின் சாட்சியமாகப் பயன்படக் கூடியவர்கள் எனத்தாம் கருதிய பட்டியல் ஒன்றை முதலில் தயாரித்துக் கொண்டார் வேணு மாமா. சந்திப்பதற்காக அவர்களுக்கெல்லாம் தகவலும் சொல்லியனுப்பினார்.

சர்மாவிடம் ஏற்கெனவே அவர் சொல்லி அனுப்பியிருந்தபடி கமலி எந்தெந்தக் கோவில்களுக்குத் தரிசனத்துக்குப் போயிருந்தாளோ அந்தந்தக் கோவில்களில் அப்போது சந்நிதியிலிருந்த அர்ச்சகர்கள் வேணு மாமாவை வந்து சந்திக்கும்படி ஏற்பாடு ஆகியிருந்தது. அன்று மாலையில் அர்ச்சகர்கள் வருவதாகச் சொல்லி அனுப்பியிருந்தார்கள். உடனே வேணு மாமா கமலியைக் கூப்பிட்டு, அர்ச்சகர்கள் வரப்போகிற விவரத்தைச் சொல்லி, "அவாளை நான் இங்கே கூடத்திலே உட்கார வச்சுப் பேசப் போகிறேன். அவாள்ளாம் வர்றப்போ இதே கூடத்தில் காஸட் ரெக்கார்டரை ஆன் பண்ணிட்டு விளக்கு ஏத்தி வைச்சு நீ ஸ்லோகம் சொல்லிண்டிருக்கணும். அவா வந்ததும் ரெக்கார்டரை ஆஃப் பண்ணாமே அப்படியே விட்டுட்டு நீ போயிடலாம். அல்லது மௌனமா இங்கேயே இருந்தும் கவனிக்கலாம்" என்றார். கமலியும் அதற்குச் சம்மதித்தாள்.

அன்று சாயங்காலம் அர்ச்சகர்கள் வேணு மாமாவைத் தேடி வந்தார்கள். வேணு மாமா கூடத்து ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் தரையில் ஓர் உயரமான மணைப் பலகையில் திருவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. மாக்கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட மணைப் பலகையின் அடியில் காஸெட் ரெக்கார்டர் 'ஆன்' செய்யப்பட்டு வெளியே அதிகம் தெரியாமல் இயங்கிக் கொண்டிருந்தது.

"ஓங்கார பூர்விகே தேவி! வீணா புஸ்தக தாரிணீ!
வேதமாத: நமஸ்துப்யம் அவைதப்யம் ப்ரயச்சமே"

என்று ஸ்லோகத்தைச் சொல்லி முடித்துவிட்டு விளக்கை வணங்கி எழுந்திருந்தாள் கமலி. உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்த அர்ச்சகர்களை வேணு மாமாவும் கமலியும் மரியாதையாக எழுந்து முன் சென்று நின்று வரவேற்றார்கள்.

அவர்களை ஒவ்வொருவராகப் பிரியத்தோடு பேர் சொல்லி அழைத்து விளக்கு வைத்திருந்த மணைப் பலகைக்கு அருகே போடப்பட்டிருந்த பெஞ்சியில் அமரச் செய்தார் வேணு மாமா. அவர் கேட்க வேண்டுமென்றே அவர்கள் காத்திருக்கவில்லை. அவர்களாகவே கமலியைச் சுட்டிக்காட்டி, "சாட்சாத் மகாலட்சுமி மாதிரி இருக்கா! சித்தே முன்னே இவ ஸ்லோகம் சொல்லிண்டிருக்கிறதைக் கேட்டப்போ மெய் சிலிர்த்தது. சரஸ்வதி தேவியே இங்கே வந்து சொல்லிண்டிருக்காளோன்னு தோணித்து. 'இவளுக்கு' எதிராக் கோர்ட்டிலே வந்து சாட்சி சொல்லணும்னு எங்களையெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தறா சுவாமி."

"அப்படி கோவில்லே இந்தக் கமலி என்னதான் பெரிய தப்புப் பண்ணிட்டா? எதுக்காக யார் வந்து உங்களை இப்போ நிர்ப்பந்தப்படுத்தறா?..."

"தப்பாவது ஒண்ணாவது? அப்படிச் சொன்னா நாக்கு அழுகிப் போயிடும். அதைப் போல அபசாரம் வேற இருக்க முடியாது. நிஜத்த அப்படியே சொல்லணுமானா ஆசார அநுஷ்டானம் தெரிஞ்ச நம்ம மதஸ்தர்களைவிட அதிக ஆசார அநுஷ்டானத்தோடவும் அடக்க ஒடுக்கமாகவும் இவ கோவில்லே நடந்துண்டான்னு சொல்லணும்."

"இதுதான் நெஜமானா நீர் இதை அப்படியே கோர்ட்டிலே வந்து சொல்ல வேண்டியதுதானே?"

"கோர்ட்டிலே வந்து என்ன சொல்லுவேனோ தெரியாது. ஆனா இதுதான் சத்தியம். நிர்ப்பந்தத்துக்காகவும் பொழைப்புக்காகவும் கோயில்லே எக்ஸிக்யூடிவ் ஆபீசர் சொல்றதுக்காகவும் சீமாவையருக்காகவும் பயந்து அவா வக்கீல் என்ன சொல்லிக் குடுக்கறாரோ அதை அங்கே வந்து ஒப்பிக்கிற பாவத்தைப் பண்ணணும் சுவாமி! நீங்க எங்களைத் தப்பா புரிஞ்சுக்கப்படாது. எங்களைத் தொந்தரவு பண்ணி நிர்ப்பந்தப் படுத்தறா! வேற வழியே இல்லை."

-இப்படி வருத்தப்பட்ட மூத்தவரான அந்த ஓர் அர்ச்சகரைத் தவிர உடன் வந்திருந்த மற்ற இரு அர்ச்சகர்களிடமும் சில கேள்விகள் கேட்டுப் பதில் சொல்ல வைத்தார் வேணு மாமா. அப்புறம் பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றினார்.

"நான் உங்களை எல்லாம் வரச் சொன்னது இதைப் பத்திப் பேசறதுக்கில்லே. இவ ஏதோ ரெண்டு மூணு பிராமணாளுக்கு வஸ்திர தானம் பண்ணனும்னா, அதுக்காகத்தான் உங்களை எல்லாம் வரச்சொல்லி அனுப்பினேன்" - என்று கமலியைக் கூப்பிட்டு ஜாடை காட்டினார். மூன்று பெரிய பிளாஸ்டிக் தட்டுகளில் தயாராக வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் எடுத்து வைக்கப்பட்டிருந்த கோடி வேஷ்டி அங்கவஸ்திர செட்டுக்களைக் கமலியே அவர்கள் ஒவ்வொருவருக்காகக் கொடுத்துவிட்டு மிகவும் பவ்யமாகக் குனிந்து அவர்களை வணங்கினாள் அவர்களும் ஆசீர்வாதம் செய்தார்கள். அவர்கள் சென்ற பின் விளக்கு வைத்திருந்த மணைப் பலகைக்கு அடியிலிருந்து காஸெட் ரெக்கார்டரை எடுத்து 'ரீ வைண்டிங் பட்ட'னை அமுக்கி ரீவைண்ட் செய்து மறுபடி போட்டுப் பார்த்ததில் எல்லாம் கச்சிதமாகப் பதிவாகி இருந்தது. கேஸ் விசாரணைக்கு வருவதற்கு முன்பே மற்ற சாட்சிகளையும் வரவழைத்துப் பேசிவிட்டார் வேணு மாமா.

*****

விசாரணை நாள் வந்தது. ஏற்கெனவே தினசரிப் பத்திரிகைகளில் பிரமாதப்படுத்தப்பட்டுத் தடபுடலாகி இருந்ததனால் அன்று சப்-கோர்ட்டில் ஏகக்கூட்டம். சப்-ஜட்ஜ் ஆசனத்தில் வந்து அமர்ந்ததும் விசாரணை தொடங்கிற்று.

"நீர் உமது வீட்டிலே கமலியை விருந்தினராகத் தங்க வைத்துக் கொண்டதும், அவள் சங்கரமங்கலத்திலும் சுற்றுப் புறத்திலும் உள்ள இந்த ஆலயங்களைத் தரிசிக்க அவளுக்கு உதவி செய்ததும் உண்மைதானா?" என்று சர்மாவை விசாரித்தார் எதிர்தரப்பு வக்கீல். சர்மா உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார். கமலி சாட்சி சொல்லுமுன் சத்தியப் பிரமாணத்துக்காக அவர்கள் பைபிளை எடுத்துக் கொடுக்க - அவள் தானே பகவத் கீதையைக் கேட்டு வாங்கிப் பிரமாணத்தைச் செய்துவிட்டுத் தனது சாட்சியத்தைத் தொடங்கினாள்.

"இந்துக் கோவில்களில் தரிசிக்கப் போனது உண்மைதானா?" என்று கமலியிடம் கேட்கப்பட்டது. கமலி ஒரே வாக்கியத்தில் 'உண்மைதான்' - என்று மறுக்காமல் அதை ஒப்புக் கொண்டுவிட்டாள்.

"அப்படியானால் வேலை மிகவும் சுலபமாகப் போயிற்று. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இருவருமே தாங்கள் செய்தவற்றை மறுக்காமல் செய்ததாக அப்படியே ஒப்புக் கொண்டு விட்டார்கள். மேற்கொண்டு விசாரிப்பதற்கு இனி எதுவுமில்லை. கனம் கோர்ட்டாரவர்கள் நியாயம் வழங்கிப் பாதிக்கப்பட்ட கோவில்கள் சுத்தி செய்யப்பட்டுச் சம்ப்ரோட்சணம் நடைபெற வழி செய்து கொடுக்க வேண்டும்" என்று வழக்குத் தொடுத்திருந்தவர்களின் வக்கீல் தம் வாதத்தைத் தொகுத்து முடித்தார்.

அப்போது வேணு மாமா கமலிக்கும் சர்மாவுக்கும் வக்கீல் என்ற முறையில் எழுந்திருந்து அந்த வாதத்தை ஆட்சேபித்தார். அவர் தரப்பு வாதத்தை அவர் எடுத்துச் சொல்லலாம் என்று சப்-ஜட்ஜ் கூறவே வேணு மாமா மேலும் தொடர்ந்தார்.

"இதை நான் ஆட்சேபிக்கிறேன். கமலி எந்த அந்நிய மதத்தையும் சேர்ந்தவள் இல்லை. அவள் பல ஆண்டுகளாக இந்து மதத்தையும் இந்து கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையுமே அனுஷ்டித்து வருகிறாள்."

வேணு மாமா இவ்வாறு கூறியவுடன் கமலி அந்நிய மதத்தினள் இல்லை என்பதற்கும், இந்துப் பழக்க வழக்கங்களையே அவள் அனுசரித்து வருகிறாள் என்பதற்கும் போதிய சாட்சியங்கள் வேண்டும் என்று எதிர்த் தரப்பு வக்கீல் கேட்டார்.

சாட்சியங்கள் இப்போதே தயார் என்றும் கோர்ட்டார் விரும்பினால் அவர்களை ஒவ்வொருவராக ஆஜர்படுத்த முடியும் என்றும் வேணு மாமா நீதிபதியை நோக்கிக் கூறினார். நீதிபதி சாட்சியங்களை ஆஜர்ப்படுத்தி நிரூபிக்குமாறு கோரவே முதல் சாட்சியாகச் சங்கரமங்கலம் 'செயிண்ட் ஆண்டனீஸ் சர்ச்' பாதிரியாரை அழைத்தார் வேணு மாமா.

கமலி என்ற அந்தப் பிரெஞ்சு யுவதியை ஒருநாள் கூடத் தான் சர்ச்சில் பிரேயருக்காக வந்து பார்த்ததில்லை என்றும் மாறாகப் புடவை குங்குமத் திலகத்துடன் பிள்ளையார் கோயில், சிவன் கோயில் வாசல்களில் அடிக்கடி பார்த்திருப்பதாகவும் பாதிரியார் சாட்சி சொன்னார். எதிர்த் தரப்பு வக்கீல் பாதிரியாரிடம் ஏதோ குறுக்கு விசாரணைக்கு முயன்றார். ஆனால் அது அப்போது பயனளிக்கவில்லை.

அடுத்து, ரவி கூண்டிலேறிச் சாட்சி சொன்னான். பிரான்ஸில் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் இந்திய இயல் பேராசிரியன் என்ற முறையில் மாணவியாக அவளைச் சந்தித்த நாளிலிருந்து கமலி இந்துக் கலாசாரத்தில் ஈடுபாடுள்ள பெண்ணாய் இருப்பதாக ரவியின் சாட்சியம் விவரித்தது. ரவியைத் தொடர்ந்து சங்கரமங்கலம் இரயில் நிலையத்தில் போளி ஆமவடை விற்கும் சுப்பாராவ், நியூஸ் பேப்பர் கன்னையா, பழக்கடை வரதன், வழித்துணை விநாயகர் கோயில் பூக்கடைப் பண்டாரம் ஆகியோர் பல மாதங்களுக்கு முன் சங்கரமங்கலத்துக்கு முதல் முதலாகக் கமலி வந்ததிலிருந்து தோற்றத்தாலும் நடை உடை பாவனையாலும், அவள் ஓர் இந்துப் பெண் போலவே நடந்து கொண்டு வருவது தங்களுக்குத் தெரியும் என்று சாட்சியமளித்தார்கள்.

அடுத்து ஏலக்காய் எஸ்டேட் ஓனர் சாரங்கபாணி நாயுடு சாட்சியளிக்கும்போது கமலி தன்னை முதன் முதலாகச் சந்தித்த சமயத்திலேயே தன்னிடம் அஷ்டாட்சர மந்திரம் பற்றி விவரித்து விசாரித்ததையும் தனது எஸ்டேட்டில் அவள் விருந்தாளியாகத் தங்கியிருந்தபோது கவனித்ததையும் வைத்து நடையுடை பாவனை பழக்க வழக்கங்கள் வழிபாட்டு முறைகளால் மட்டுமின்றி ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடனேயே அவள் இந்து கலாசாரப் பற்றைக் கொண்டிருப்பவள் என அவளைத் தான் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

நாயுடுவைக் குறுக்கு விசாரணை செய்த எதிர்த் தரப்பு வக்கீல் "அஷ்டாட்சர மந்திரம் பற்றி அவள் உம்மிடம் விசாரித்ததிலிருந்தே அவளுக்கு அதைப் பற்றி அதற்கு முன்பு ஒன்றுமே தெரியாதென்று கொள்ளலாமல்லவா?" என்று குறுக்குக் கேள்வி கேட்டு மடக்கினார்.

"நான் அப்படிச் சொல்லவில்லையே? அஷ்டாட்சர மந்திரம் பற்றி விவரித்துவிட்டு எனக்கு அதுபற்றி எந்த அளவு தெரிந்திருக்கிறதென்று அறிவதற்காக என்னை அவள் விசாரித்தாள் என்று தானே சொன்னேன்" - என்றார் நாயுடு. கோர்ட்டில் ஒரு பெரிய சிரிப்பலை எழுந்து ஓய்ந்தது.

கமலிக்குப் பரதநாட்டியம் கற்பித்த சிவராஜ நட்டுவனாரும், கர்நாடக சங்கீதம் கற்பித்த பாகவதரும் அவளுக்கு இந்துமதப் பற்றுண்டென்றும், தங்களிடம் அவள் மிகவும் குரு பக்தியோடு நடந்து கொண்டாளென்றும் அவளது பூஜை புனஸ்காரங்களைப் பார்த்து அவளைத் தாங்கள் சாதாரண இந்துக்களைவிடச் சிறந்த இந்துவாக மதித்திருப்பதாகவும் சாட்சியமளித்தார்கள். தத்தம் வீடுகளுக்கு நுழையும்போது வாசல் நடையிலேயே செருப்பைக் கழற்றி விட்டுக் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டபின் பூஜையறைக்கு சென்று வழிபட்ட பின்பே அவள் கற்றுக் கொள்ளத் தொடங்குவது வழக்கம் என்பதையும் அவர்கள் கோர்ட்டில் விவரமாகத் தெரிவித்தார்கள்.

கடைசியாக இறைமுடிமணி சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட போது சத்தியப் பிரமாணத்தையே 'கடவுள் ஆணையாக' என்று செய்ய மறுத்து 'மனச் சாட்சிக்கு ஒப்ப' என்று தான் பண்ணினார் அவர். உடனே எதிர்த்தரப்பு வக்கீல் "கடவுள் நம்பிக்கையற்ற - மத நம்பிக்கையில்லாத அவரது சாட்சியம் இந்த வழக்கில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது" - என்று வன்மையாக மறுத்தார்.

"அவரது சாட்சியத்தைக் கூறட்டும். அதன்பின் அவசியமானால் நீங்கள் அவரைக் குறுக்கு விசாரணை செய்யலாம்" என்று நீதிபதி இடையிட்டுக் கூறவே இறைமுடிமணி சாட்சியத்தைத் தொடர்ந்தார்.

"இந்து கலாசாரத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறி மார்தட்டிக் கொள்ளும் ஜாதி இந்துக்களை விட மெய்யான இந்துவாக இருப்பவள் கமலி. என்னைப் போல் ஜாதிமத நம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் இல்லாதவர்கள் நடத்தும் பகுத்தறிவுப் படிப்பகத்தில் வந்து பேசும் போது கூட எங்கள் ஆட்சேபணையையும் பொருட்படுத்தாமல் தனக்குத்தானே கடவுள் வாழ்த்துப் பாடிவிட்டுத்தான் அவள் தன் பிரசங்கத்தைத் தொடங்கினாள்" - என்பதாகத் தன் சாட்சியத்தைக் கூறினார் இறைமுடிமணி.

இதில் எதையும் குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் போயிற்றே என்று எதிர்த்தரப்பு வக்கீலுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இறைமுடிமணியின் சாட்சியம் முடிந்தபின் வேணு மாமா தன் வாதத்தை முடித்துக் கூறும்போது மேலும் விவரித்துப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவற்றை அழகாகவும் கோவையாகவும் நிரல்படவும் எடுத்துரைத்து விவாதித்தார் அவர்.

"இந்து ஆசார அனுஷ்டானங்களுடன் கோவிலின் புனிதத் தன்மைக்கோ சாந்நித்தியத்துக்கோ எந்தப் பாதிப்புமில்லாமல் ஆலயங்களில் தரிசனத்துக்காகச் சென்றிருக்கும் என் கட்சிக்காரரை வம்புக்காக அவதூறு செய்யவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு தான் இந்த வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதே ஒழிய வழக்குத் தொடுத்திருப்பவர்களின் கோரிக்கையில் எந்த நியாயமுமில்லை. சட்ட விரோதம் என்ற பேச்சுக்கே இதில் இடம் கிடையாது. மறுபடி சம்ப்ரோட்சணம் பண்ணிய பின்புதான் சுத்தமாக வேண்டுமென்ற அளவுக்குக் கோவில்களில் இப்போது எந்த சுத்தக் குறைபாடும் நடந்து விடவில்லை என்பதை வற்புறுத்திக் கூற விரும்புகிறேன்.

"தவிர நேற்றும் இன்றும் அதே கோவில்களில் முறைப்படி பூஜை புனஸ்காரம், பொது மக்களின் தரிசனம் எல்லாம் வழக்கம் போல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வழக்குத் தொடுத்திருப்பவர்கள் தெரிவித்திருப்பது போல் என் கட்சிக்காரர் சென்று தரிசித்ததால் பாதிப்பு ஏற்பட்டுப் பொது மக்கள் உபயோகத்துக்குப் பயன்படாதபடி இதில் எந்தக் கோவிலும் இழுத்து மூடிப் பூட்டப்பட்டு விடவில்லை என்பதையும் கனம் கோர்ட்டார் கவனிக்க வேண்டும்."

-இந்த இடத்தில் எதிர்த் தரப்பு வக்கீல் எழுந்திருந்து பலமாக ஆட்சேபிக்க முற்பட்டார், அதை நீதிபதி ஏற்காததால் வேணு மாமாவே தொடர்ந்தார்.

"மேலும் எனது கட்சிக்காரரை இந்த ஆலயங்களும் இவற்றைச் சேர்ந்தவர்களும் இதன் தர்மகர்த்தாக்களும் பரம ஆஸ்திகராகவும், மரியாதைக்குரிய இந்துவாகவும் சந்தேகத்துக்கிடமில்லாதபடி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதோ இந்த ரசீதே போதிய சாட்சியமாகும். சிவன் கோவிலின் புனருத்தாரணத் திருப்பணிக்கு இந்து ஆஸ்திகர்களிடம் கேட்டு வாங்கும் நன்கொடைக்காக அளிக்கப்படும் இரசீதுகளில் இதுவும் ஒன்று. இதில் இந்த ஆலய தர்மகர்த்தாவின் கையெழுத்துக்கூட இருக்கிறது. வேடிக்கையாகவும் முரண்பாடாகவுமுள்ள ஒரு விஷயம் என்னவென்றால் அதே தர்மகர்த்தா இந்த வழக்கைத் தொடுத்திருப்பவர்களில் ஒருவராகவுமிருக்கிறார். என் கட்சிக்காரர் ஆலயத்திற்குள்ளேயே நுழையத் தகுதியற்றவர் என இவர்கள் கருதியிருப்பது மெய்யானால் அர்த்த மண்டபம் வரை உள்ளே வர அனுமதித்து ரூபாய் ஐநூறு நன்கொடையும் பெற்றுக்கொண்டு அவளிடம் இந்த ரசீதைக் கொடுத்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்த ரசீதில் 'இந்து ஆஸ்திகர்களிடமிருந்து கோயில் திருப்பணிக்காக நன்கொடையாய்ப் பெற்ற தொகைக்கு இரசீது' என்று வேறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பணம் தேவைப்படுகிறபோது மட்டும் இந்து ஆஸ்திகராக ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒருவரைத் தரிசனத்துக்கு வரும்போது மட்டும் அந்நிய மதத்தினர் என்று தவறாகக் கருதி ஒதுக்குவது என்ன நியாயம்? எனது கட்சிக்காரர் தரிசனத்துக்குப் போயிருந்தபோது தான் இந்த நன்கொடையை ஆலயத் திருப்பணிக்கு அளித்திருக்கிறார் என்பதைக் கோர்ட்டாரவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த நன்கொடையை வாங்கும்போதோ இதற்காக இரசீது கொடுக்கும்போதோ எனது கட்சிக்காரர் கோவிலுக்குள் நுழைந்தால் கோவில் புனிதம் கெட்டு 'சம்ப்ரோட்சணம்' செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என ஆலய நிர்வாகிகளுக்குத் தோன்றாமல், பின்னால் சிறிது காலம் கழித்து அப்படித் தோன்றியிருப்பதன் உள்நோக்கம் என்னவென்றுதான் எனக்குப் புரியவில்லை."

இப்போதும் எதிர்த்தரப்பு வக்கீல் ஏதோ ஆட்சேபிப்பதற்காகக் குறுக்கிட்டார். ஆனால் நீதிபதி வேணு மாமாவின் பக்கம் பார்த்து 'லெட் ஹிம் கன்டின்யூ' என்று கூறவே எதிர்த்தரப்பு வக்கீல் அமர வேண்டியதாயிற்று.

வேணு மாமா தம் வாதங்களைத் தொகுத்துரைத்து அந்தத் திருப்பணி ரசீதையும் நீதிபதியின் பார்வைக்கு வைத்துவிட்டு அமர்ந்தார். மறுநாள் வாதங்கள் தொடரும் என்ற அறிவிப்புடன் அன்று அவ்வளவில் கோர்ட் கலைந்தது.

அந்த வழக்கு விசாரணையைக் கவனிப்பதற்காக பூமிநாதபுரம், சங்கரமங்கலம் கிராமங்களிலிருந்து நிறையப் பொதுமக்கள் கோர்ட்டில் வந்து குழுமியிருந்தனர்.

கோர்ட் கலைந்து வெளியே வரும்போது பத்திரிகை நிருபர்கள் கமலியைப் புகைப்படமெடுப்பதில் போட்டி போட்டுக்கொண்டு முந்தினர். வேணு மாமா அந்த வழக்கைக் கொண்டு சென்று எடுத்துரைத்த முறையைப் பல வக்கீல்கள் முன் வந்து பாராட்டினார்கள்.

எல்லாரையும் போல் ஒரு பார்வையாளராக வந்து கோர்ட்டில் அமர்ந்திருந்த சீமாவையர் அங்கிருந்து மெல்ல நழுவிக் கொண்டிருந்தார்.

"ஏய் விசுவேசுவரன்! பன்றதை எல்லாம் பண்ணிப் போட்டுத் தண்ணிப் பாம்பு ஒண்ணுந் தெரியாத மாதிரி மெல்ல நழுவுது பார்த்தியா?" என்று சர்மாவின் காதருகே நெருங்கி முணுமுணுத்தார் இறைமுடிமணி. சீமாவையரைக் குறிப்பிட்டுப் பேச அவர்கள் இருவரும் தங்களுக்குள் வைத்திருந்த பெயர் 'தண்ணிப் பாம்பு' என்பதாகும். கோர்ட்டிலிருந்து திரும்புகிற வழியில் மார்க்கெட் முகப்பில் வாழை இலை மண்டி அருகே காரை நிறுத்திக் கல்யாணத்திற்காக இலை காய்கறி எல்லாவற்றுக்கும் வேணு மாமா அட்வான்ஸ் கொடுத்தபோது "இப்ப என்ன இதுக்கு அவசரம்? கேஸ் முடியட்டுமே?" - என்று தயக்கத்தோடு இழுத்தார் சர்மா.

"கேஸைப்பத்தி ஒண்ணும் கவலைப்படாதியும்" - என்று வேணு மாமா சர்மாவுக்கு உற்சாகமாகப் பதில் கூறினார். அவருடைய தன்னம்பிக்கையும், தைரியமும், உற்சாகமும் சர்மாவையும் மற்றவர்களையும் அப்போது மிகவும் வியப்பில் ஆழ்த்தின.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 28

மறுநாள் விசாரணைக்காக கோர்ட் கூடிய போது இந்த வழக்கின் தனித் தன்மையை உத்தேசித்து மேலும் சில சாட்சியங்களை விசாரிக்க விசேஷமாக அநுமதிக்க வேண்டும் என்றும், வழக்கை முடிவு செய்ய அது மிகமிக உபயோகமாக இருக்கும் என்றும் எதிர்த்தரப்பு வக்கீல் வேண்டியபோது வேணு மாமா எழுந்திருந்து அதை ஆட்சேபித்தார். ஆனால் நீதிபதி அதற்கு அனுமதியளித்ததோடு, "அவரது சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் வசதியும் உங்களுக்கு இருக்கும் போது கவலை எதற்கு?" என்று வேணு மாமாவுக்கு உணர்த்தினார்.

அன்றைக்கு எதிர்த்தரப்பு வக்கீல் என்னென்ன சாட்சியங்களை விசாரிப்பார் - வழக்கை எப்படி எப்படித் திரித்துக் கொண்டு போக முயல்வார் என்பதை எல்லாம் அப்போதே வேணு மாமாவால் ஓரளவு அநுமானம் செய்து கொள்ள முடிந்திருந்தது. சப்-ஜட்ஜ் கூறியது போல் எதிர்த்தரப்பு சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்து வகையாக மடக்கலாம் என்ற நம்பிக்கையோடு அதற்கு இசைந்து அமர்ந்தார் அவர்.

வழக்கு எப்படிப் போகிறதென்று அறியும் ஆவலுடன், கமலி, சர்மா, ரவி, வசந்தி எல்லாரும் அங்கே கோர்ட்டில் வந்து அமர்ந்திருந்தார்கள். பொது மக்களும் முதல் நாள் போலவே அன்றும் கூட்டமாக வந்திருந்தார்கள்.

இந்து சமயப் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் எதையும் கமலி அறியாதவள் என்பதை நிரூபிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது போல் அமைந்திருந்தது முதல் சாட்சி.

சிவன் கோவில் பிரதான வாயிற் காவற்காரரான முத்து வேலப்ப சேர்வை என்பவர் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருநாள் மாலை கமலி காலில் செருப்புக்களுடன் கோயிலில் நுழைந்ததாகச் சாட்சியமளித்தார். அது நிர்ப்பந்தித்து வற்புறுத்தி வலுக்கட்டாயமாகத் தயாரித்த சாட்சி என்பது முதலிலேயே தெளிவாகத் தெரிந்தது.

வேணு மாமா அந்தக் கோயில் வாட்ச்மேனைக் குறுக்கு விசாரணை செய்தார். முதலில் அது நடந்த நாள் நேரம் முதலியவற்றை மறுபடி விசாரித்தார். வாட்ச்மேன் அதற்குப் பதில் கூறியபின்,

"அப்படித் தரிசனத்துக்கு வந்தபோது கமலி தனியாக வந்தாளா? வேறு யாரும் உடன் வந்தார்களா?" என்று கேட்டார்.

"வேறு யாரும் உடன் வரவில்லை" என்று அவனிடமிருந்து பதில் வந்தது.

"உன் கடமைப்படி நீ காலில் செருப்புடன் உள்ளே போகக் கூடாது என்று அவளைத் தடுத்தாயோ இல்லையோ?"

"நான் தடுக்கத்தான் தடுத்தேன். ஆனால் அவங்க 'அப்பிடித்தான் போவேன்'னு - என்னை மீறி உள்ளே நுழைஞ்சிட்டாங்க."

"நீ எந்த மொழியில் தடுத்தாய்? அவங்க எந்த மொழியில் மாட்டேன்னு பதில் சொன்னாங்க..."

"நான் தமிழ்லேதான் சொல்லித் தடுத்தேன். அவங்க தான் என்னமோ புரியாத பாஷையிலே பேசினாங்க."

"புரியாத பாஷையிலே பேசினாங்கன்னு சொல்றியே? அப்பிடியானால் அவுங்க சொன்னது, 'செருப்பைக் கழற்றாமே அப்பிடித்தான் உள்ளே போவேன்'னு அர்த்தமுள்ளதா உனக்கு எப்பிடிப் புரிஞ்சுது...?"

"இல்லீங்க அவங்க... தமிழ்லேதான் பேசினாங்க..."

"முதல்லே புரியாத பாஷையிலே பேசினாங்கன்னு நீ சொன்னது நிஜமா? அல்லது இப்போ தமிழ்லே தான் பேசினாங்கன்னு சொல்றியே, இது நிஜமா?"

திகைத்துப் போன சாட்சி முழித்தார். பதில் சொல்லவில்லை. கூண்டில் கையைப் பிசைந்து கொண்டு நின்றார். வேணு மாமா குறுக்கு விசாரணையை முடித்துக் கொண்டு தமது இடத்தில் போய் அமர்ந்தார். தம்முடைய அடுத்த சாட்சிக்கு ஆயத்தமானார் எதிர்த்தரப்பு வக்கீல்.

அடுத்து சிவன் கோவில் அர்ச்சகர்கள் மூவரும் ஒவ்வொருவராகச் சாட்சி சொல்ல வந்தார்கள். முதல் சாட்சி கைலாசநாதக் குருக்கள், ஐம்பத்தெட்டு வயதானவர். சிவாகமங்களிலே தேர்ந்த ஞானமுள்ளவர். சங்கரமங்கலம் சிவன் கோவிலில் பிரதம அர்ச்சகராயிருந்தார் அவர்.

அவர் சாட்சிக் கூண்டில் ஏறிக் கடவுள் சாட்சியாக உண்மை பேசுவதாகச் சத்தியப் பிரமாணம் செய்த போது வேணு மாமா, சர்மா எல்லாருக்குமே மிகவும் வேதனையாயிருந்தது. இத்தனைப் பெரியவர், இவ்வளவு படித்தவர் பொய்ச் சாட்சி சொல்லத் துணிந்து வந்து விட்டாரே என்று உள்ளூற மனம் வருந்தினார்கள் அவர்கள்.

"அந்தப் பிரெஞ்சுப் பொண்ணுக்கு நம்ம சாஸ்திரம் சம்பிரதாயம் ஒண்ணும் தெரியாததோட அதை எல்லாம் அவ கொஞ்சமும் மதிக்காதவள்னும் தெரியறது. நான் சுவாமி சந்நிதியிலே அவளுக்குக் குடுத்த 'விபூதி - வில்வதளம்' எல்லாத்தையும் அவ உடனே காலடியிலே போட்டு மிதிச்சதை என் கண்ணாலேயே பார்த்தேன்" - என்று சாட்சியம் அளித்தார் கைலாசநாதக் குருக்கள்.

"குருக்களே! நீங்க இதை மனப்பூர்வமாகத்தான் சொல்றேளா? அல்லது ஏதாவது நிர்ப்பந்தத்துக்காகவா?"

-வேணு மாமா இப்படிக் கேட்கத் தொடங்கியதை எதிர்த்தரப்பு வக்கீல் ஆட்சேபணை செய்தார்.

அடுத்து மேலும் இரண்டு அர்ச்சகர்கள் இதே போல் கமலி கோயில் முறைகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டதாகவும், கோயில் பிரகாரத்தில் விவரந் தெரியாமல் அவள் அப்பிரதட்சணமாகச் சுற்றியதாகவும் சாட்சியம் அளித்தார்கள்.

"அப்படிப் பிரகாரத்தில் சுற்றும் போது அவள் தனியாயிருந்தாளா? வேறு யாராவது கூட இருந்தார்களா? எந்தத் தேதியன்று என்ன நேரத்தில் அது நடந்தது?" - என்று எல்லாரிடமுமே அடுத்தடுத்து ஒரே கேள்வியைக் கேட்டார் வேணு மாமா. எல்லாரும் ஒரே தேதி நேரம் கூறியதோடு கமலியைத் தாங்கள் தனியேதான் கோவிலில் பார்த்ததாகவும் தெரிவித்தார்கள். வேணு மாமா எல்லோரிடமும் ஏன் தேதி நேரம் கேட்கிறார் என்பது எதிர்த்தரப்பு வக்கீலுக்குப் புலப்படாமல் பெரிய புதிராயிருந்தது.

அடுத்தபடியாகப் பஜனை மடம் பத்மநாப ஐயர், வேததர்ம பரிபாலன சபை காரியதரிசி ஹரிஹர கனபாடிகள், கர்ணம் மாத்ருபூதம், மிராசுதார் சுவாமிநாதன் ஆகிய நால்வரும் "கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள ரதி மன்மத சிற்பத்தின் கீழே அந்தச் சிற்பத்தில் எப்படி ரதியும் மன்மதனும் கட்டித் தழுவிக் கொண்டிருந்தார்களோ அதே போலக் கமலியும், ரவியும் பகிரங்கமாகக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததாகவும் நாலு பேராகச் சேர்ந்து தரிசனத்துக்காகப் போயிருந்த தங்கள் கண்களில் கோயிலின் புனிதத் தன்மைக்குப் பொருந்தாத இந்த அருவருக்கத்தக்க ஆபாசக் காட்சி தென்பட்டதாகவும்" ஒவ்வொருவராகக் கூண்டிலேறிச் சாட்சி கூறினார்கள். இந்த ஆபாசக் காட்சியைக் கண்டு அந்தச் சமயத்தில் பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்த மற்ற ஆஸ்திகர்களின் மனம் புண்பட்டு அவர்கள் வருந்திக் கூறியதைத் தாங்கள் கேட்டதாகவும் மேலும் சாட்சிகள் தெரிவித்தார்கள். அதைக் கேட்டுக் கமலி, ரவி, சர்மா, வசந்தி ஆகியோருக்கு அந்த அபாண்டப் பழியையும் புளுகையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் நெஞ்சு குமுறியது. வேணு மாமா மட்டும் புன்முறுவலோடு எழுந்திருந்து தன் குறுக்கு விசாரணையைத் தொடங்கினார். அந்த நான்கு பேரிடமும் கிளிப்பிள்ளை போல ஒரே கேள்வியைத் தான் திரும்பத் திரும்பக் கேட்டார் அவர்:

"ரதி மன்மத சிற்பம் சங்கரமங்கலம் சிவன் கோவிலின் எத்தனையாவது பிரகாரத்தில் இருக்கிறது? எந்தத் தேதியில் எந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது?"

"ரதி, மன்மத சிற்பம் சிவன் கோவிலின் இரண்டாவது பிரகாரத்தின் வடக்கு மூலையில் இருக்கிறது" என்று சொல்லிவிட்டுத் தேதியும் நேரமும் சொல்லத் தயங்கினார், முதலில் குறுக்கு விசாரணைக்கு ஆளான பஜனை மடம் பத்மநாப ஐயர்.

உடனே வேணு மாமா, "காலில் செருப்புடன் நுழைந்ததாக வாட்ச்மேன் சொன்ன அதே தேதியில் தான் இதுவும் நடந்ததா? அல்லது வேறு தேதியா?" - என்று குறுக்கிட்டு விசாரித்தார்.

"வாட்ச்மேன் கூறிய சம்பவம் நடந்த அதே தேதியில் அதே நேரத்தில்தான் இதுவும் நடந்தது" - என்று சாட்சியிடமிருந்து பதில் கிடைத்தது. மற்ற மூன்று சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தபோதும் இதே பதில்தான் அவர்களிடமிருந்து கிடைத்தது.

கடைசியாக ஒரு தர்மகர்த்தர் சாட்சியம் அளித்தார்.

"கோவில் திருப்பணிக்கு என்று கமலியின் பேரில் அளிக்கப்பட்ட ரசீது கமலியால் நேரில் பணம் கொடுத்து வாங்கப்பட்டது அன்று என்றும் வேறு ஒருவர் பணத்தைக் கொடுத்து கோயிலுக்கு வராமல் வெளியிலேயே கமலியின் பெயருக்கு அந்த ரசீதை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்" - என்றும் அவரது சாட்சியத்தில் கூறப்பட்டது. ரசீதிலிருக்கும் கையெழுத்தும் தம்முடையதுதான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். உடனே வேணு மாமா எழுந்திருந்து,

"ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நன்கொடை வசூலுக்கான ரசீதுகளைத் தவிர நூறு ரூபாய்க்கு மேற்பட்ட வசூல் வேலையைத் தேவஸ்தான ஆபீஸே கோவிலுக்குள் வைத்துத்தான் செய்ய வேண்டும் என்று திருப்பணி நிதி வசூல் குழுவில் தீர்மானம் போட்டீர்களா இல்லையா?" - என்று கேட்டு மடக்கியதும் தர்மகர்த்தா திணறிப் போனார். நிதி வசூல் குழுவில் போடப்பட்ட அந்த இரகசியத் தீர்மானம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்பதே அவரது திணறலுக்குக் காரணம். 'கமலி கோவிலுக்குள் வந்து தேவஸ்தான அலுவலரிடம் பணத்தைச் செலுத்தி அந்த ரசீதை வாங்கவில்லை. வெளியே யாரோ அவள் பெயரில் பணத்தைக் கட்டி வாங்கிய ரசீது அது' - என்ற தமது பொய்ச் சாட்சியம் அடிபட்டுப் போனதைத் தர்மகர்த்தா அந்த நிமிஷமே உணர்ந்தார்.

வற்புறுத்தித் தயாரிக்கப்பட்ட எல்லாச் சாட்சியங்களும் தவிடு பொடியாகும்படி வாதத்தைத் தொடர்ந்தார் வேணு மாமா.

"கனம் கோர்ட்டாரவர்களே! கைலாசநாதக் குருக்கள் முதலிய மூவரும் நிர்ப்பந்தத்துக்குப் பயந்து இங்கே இதுவரை பொய்ச் சாட்சி சொன்னார்கள் என்பதை இதோ இந்த ஒலிப்பதிவு நிரூபிக்கும்!" - என்று சொல்லி காஸெட் ரெக்கார்டரை எடுத்து 'ஆன்' செய்தார் வேணு மாமா. எள் போட்டால் எள் விழுகிற ஓசை கேட்கும் அவ்வளவு அமைதியோடு கோர்ட்டு அதைக் கேட்டது. அந்த எதிர்பாராத ஒலிப்பதிவுச் சாட்சியம் அனைவரையுமே பிரமிக்க வைத்து விட்டது.

டேப் ஒருமுறை ஓடி முடிந்ததும் சாட்சியத்துக்குப் பயன்படும் பகுதியை மறுமுறையும் போட்டுக் காட்டினார் வேணு மாமா. கமலியின் குரல் ஒலியோடு கூடிய ஸ்லோகம் முடிந்தவுடன்,

"இவ ஸ்லோகம் சொல்லிண்டிருக்கறதைக் கேட்டப்போ சரஸ்வதி தேவியே வந்து சொல்லிண்டிருக்காளோன்னு தோணித்து. இவளுக்கு எதிராக கோர்ட்டிலே வந்து சாட்சி சொல்லணும்னு எங்களைக் கூப்பிட்டு நிர்ப்பந்தப்படுத்தறா சுவாமி!"

"ஆசார அநுஷ்டானம் தெரிஞ்ச நம்ம மதஸ்தர்களை விட அதிக ஆசார அநுஷ்டானத்தோடவும் அடக்க ஒடுக்கமாகவும் இவ கோவில்லே நடந்துண்டான்னு சொல்லணும்."

"கோர்ட்டிலே வந்து என்ன சொல்லுவேனோ தெரியாது. ஆனா இதுதான் சத்தியம். நிர்ப்பந்தத்துக்காகவும் பொழைப்புக்காகவும் கோயில் எக்ஸிக்யூடிவ் ஆபீஸர் சொல்றதுக்காகவும் சீமாவையருக்காகவும் பயந்து அவா வக்கீல் என்ன சொல்லிக் குடுக்குறாரோ அதை அங்கே வந்து ஒப்பிக்கிற பாவத்தைப் பண்ணனும் சுவாமி! நீங்க எங்களைத் தப்பாப் புரிஞ்சுக்கப்படாது. எங்களைத் தொந்தரவு பண்ணி நிர்ப்பந்தப்படுத்தறா, வேறு வழி இல்லை."

ஒலிப்பதிவை சப்-ஜட்ஜ் கூர்ந்து கேட்டார். ஏதோ குறித்துக் கொண்டார். தங்களுக்கு எதிராக்ச் 'சதி செய்து விட்ட' தங்கள் குரலையே கேட்டுக் குருக்கள்மார் மூவரும் ஆடு திருடின கள்ளர்கள் போல விழித்தனர். "இது உங்கள் குரல் தானே?" - வேணு மாமா குருக்களைக் கேட்டார். குருக்களில் எவரும் அதை மறுக்க முடியாமல் இருந்தது.

"என் வீட்டிற்கு வந்திருந்தபோது கமலியைப் பற்றி நீங்களாகவே முன்வந்து என்னிடம் இவ்வாறு நல்லபடி கூறியது உண்மைதானே?"

ரெக்கார்டரிலிருந்து ஒலித்தது தங்கள் குரல்தான் என்பதையோ தாங்கள் அவ்வாறு கூறியிருந்ததையோ அவர்கள் மறுக்கவில்லை.

"இந்த ஒலிப்பதிவு குருக்கள் மூவரையும் பயமுறுத்தி எங்கேயோ கடத்திக் கொண்டு போய்ப் பதிவு செய்ததாக இருக்க வேண்டும் என்றும் கொலை மிரட்டலுக்குப் பயந்து அவர்களை இப்படிப் பேசச்சொல்லி பதிவு செய்திருக்கிறார்கள்" என்றும் வழக்குத் தொடுத்திருந்தவர்களின் சார்பில் கூறப்பட்ட வாதத்திற்குப் போதிய ஆதாரமில்லாமற் போகவே நீதிபதி அதை ஏற்கவில்லை. முற்றிலும் எதிர்பாராத விதமாக இந்தக் காஸெட் ரெக்கார்டர் சாட்சியம் வரவே குருக்கள் மூவரும் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். அதன்பின் அவர்களால் எதையும் மறுக்க முடியவில்லை. மேற்கொண்டு புதிய பொய்களைப் பேசும் திராணியோ அல்லது தெம்போ அப்போது அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

மிகவும் 'டிரமடிக்' ஆக அந்தக் காஸெட் ரெக்கார்டர் சாட்சியத்தை வழக்கில் கொண்டு வந்து அனைவரையும் திணற அடித்திருந்தார் வேணு மாமா. சாட்சிகளும் இதை எதிர்பார்க்கவில்லை. எதிர்த்தரப்பு வக்கீலும் இதை எதிர்பார்க்கவில்லை. தங்களுடைய பலவீனமான ஒரு பேச்சு இப்படிப் பதிவு செய்யப்பெற்று வைக்கப்பட்டிருக்கிறது என்பது சாட்சிகளுக்கே தெரியாமலிருந்ததுதான் அதிலிருந்த இரகசியம். இந்தத் திருப்பம் வழக்கின் போக்கையே மாற்றிவிட்டது. எதிர்த்தரப்பு வக்கீலுக்கு ஏறக்குறைய நம்பிக்கையே போய்விட்டது.

எதிர்த்தரப்பு வக்கீலின் முகம் வெளிறியது. காஸெட் ரெக்கார்டர் சாட்சியம் முடிந்தவுடன் வேணு மாமா தமது கட்சிக்காரர் ஸௌந்தர்ய லஹரி கனகதாரா ஸ்தோத்திரம், பஜ கோவிந்தம் முதலிய நூல்களை பிரெஞ்சு மொழியில் பெயர்த்திருப்பதையும் அதற்காக இந்து மதாசாரியர்களான மகான்களின் ஆசியையும், பாராட்டையும் அவர் பெற்றிருப்பதையும் கூறி ஸ்ரீ மடம் மானேஜர் அது சம்பந்தமாகச் சர்மாவுக்கு எழுதியிருந்த கடிதத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

ரதி மன்மத சிற்பத்தின் கீழ்க் கமலியும் ரவியும் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்ததாகவும் பஜனை மடம் பத்மநாப ஐயர் முதலியோர் கூறிய சாட்சியத்தை வேணு மாமா மிகச் சுலபமாகவே மறுக்க முடிந்தது. அவர்கள் சொன்ன தேதி நேரமும், வாட்ச்மேன் கமலி செருப்புக் காலுடன் கோவிலுக்குள் நுழைந்ததாகக் கூறிய தேதி நேரமும், குருக்கள் அவள் பிரசாதத்தைக் காலடியில் போட்டு மிதித்ததாகக் கூறிய தேதியும் நேரமும் - ஒன்றாக இருப்பதைச் சுட்டிக்காட்டி "முன் இரு சாட்சிகளும் அந்த நாளில் அதே நேரத்தில் கமலி மட்டும் தான் தனியாகக் கோயிலுக்குள் வந்தாள் என்று கூறும்போது மற்றவர்கள் அவள் ரவியோடு ரதிமன்மத சிற்பத்தின் கீழ் அலங்கோலமாகச் சேர்ந்து நின்றதைப் பார்த்ததாக கூறுவது கட்டுக்கதை. சாட்சியங்கள் முரண்படுகின்றன. அதை எல்லாம் விடப் பெரிய விஷயம் இந்த சாட்சிகள் சிவன் கோவிலுக்குப் போய் வருடக்கணக்கில் ஆகிறதென்றும் கோயிலில் எது எங்கிருக்கிறது என்றே இவர்களுக்கு மறந்து போய்விட்டது என்றும் இவர்கள் சாட்சியத்திலிருந்தே தெரிகிறது. சிவன் கோவில் ரதி மனமத சிற்பம் இரண்டாவது பிரகாரத்தில் இருக்கிறது என்றும் அதன் கீழ் தான் கமலியையும் ரவியையும் ஆபாசமான நிலையில் சேர்ந்து பார்த்ததாகவும் இவர்கள் கூறினார்கள். ஒருவேளை வாய் தவறிச் சொல்கிறார்களோ என்று மறுபடியும் நான் கேட்டேன். மறுபடி கேட்டபோது கூட எல்லோரும் இரண்டாவது பிரகாரத்தில் என்று தான் பதில் சொன்னார்கள். சங்கரமங்கலம் சிவன் கோவிலில் ரதி மன்மதன் சிற்பம் இருக்குமிடம் மூன்றாவது பிரகாரம் என்பது பிரசித்தமான உண்மை. இதிலிருந்தே இவர்கள் கூறிய நிகழ்ச்சி என் கட்சிக்காரரை அவமானப் படுத்த வேண்டுமென்று திட்டமிட்டு இட்டுக் கட்டியது என்பது தெரிகிறது" - என்று வேணு மாமா கூறியபோது, "நிகழ்ச்சிக்கு இடமான பிரகாரம் இரண்டாவதா, மூன்றாவதா என்பதல்ல இங்கு வாதம். சம்பந்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் அநாசாரமாகவும் ஆபாசமாகவும் நடந்து கொண்டார்கள் என்பதுதான் முக்கியம்" - என்று குறுக்கிட்டார் எதிர்த்தரப்பு வக்கீல். அதற்குமேல் பேச எதுவுமில்லாதது போல் அமர்ந்துவிட்டார் அவர்.

மேற்கொண்டு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று எதிர்த்தரப்பு வக்கீலிடம் கேட்கப்பட்டது. பேருக்குப் பழைய குற்றச் சாட்டுக்கள் சிலவற்றையே திரும்பக் கூறிவிட்டுக் கோவிலில் சம்ப்ரோட்சணம் விரைவில் நடக்கும்படி உத்தரவாக வேண்டுமென்று மீண்டும் கோரினார் எதிர்த்தரப்பு வக்கீல்.

தீர்ப்புக்குரிய நாளாக ஒரு வாரம் கழித்து ஒரு நாளைக் குறிப்பிட்டுக் கூறினார் நீதிபதி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 29

"கோவில் வழிபாடு - முதலிய பல உடனடியான பொது நன்மை சம்பந்தப்பட்ட அவசர விஷயங்கள் தீர்ப்பைப் பொறுத்துக் காத்திருப்பதால் ஒரு வாரம் என்பது மிகவும் அதிகமான காலதாமதமாக இருக்குமோ?" என்று கருத்துத் தெரிவித்தார் எதிர்த்தரப்பு வக்கீல். அவருடைய கோரிக்கைக்குப் பின் அடுத்த மூன்றாவது நாளே தீர்ப்புக் கூறுவதாக அறிவித்தார் நீதிபதி.

அன்று அவ்வளவில் கோர்ட்டு கலைந்தது. கோர்ட் வாசலில் கூடி நின்று கொண்டிருந்த அர்ச்சகர்கள் வேணு மாமா வெளியே வந்ததும், அவரருகே வந்து சூழ்ந்து கொண்டனர்.

"என்ன சுவாமீ! ஏதோ நம்பிக்கையிலே உம்ம கிட்டத் தனியாச் சொன்னதைப் பதிவு பண்ணிக் கோர்ட்டிலேயே போட்டுக் காட்டி மானத்தை வாங்கிட்டேளே? இப்படிப் பண்ணலாமா நீங்க?" - என்று கைலாசநாதக் குருக்கள் அவரிடம் பரிதாபமான குரலில் கேட்டார்.

"பொய் சொல்றவாளை எங்கே வேணுமானாலும் எப்பிடி வேணுமானாலும் மானத்தை வாங்கலாம் சுவாமி! அதுலே தப்பே இல்லே" - என்று தாட்சண்யமே இல்லாமல் கடுமையாக அவருக்குப் பதில் சொன்னார் வேணு மாமா. அர்ச்சகர்கள் அந்தக் கடுமையைத் தாங்கமுடியாமல் அவரை விட்டு விலகிச் சென்றனர்.

"பொய் சொல்றவாளுக்கு அவா சொந்த வாயும் நாக்கும் கூட ஒத்துழைக்காது. அந்த வாட்ச்மேன் கமலி புரியாத பாஷையில் பேசினாள்னு முதல்லே சொல்லிட்டு அப்புறம் தடுமாறிப் போய்த் தமிழிலேதான் பேசினாள்னு உளறினான் பாருங்கோ. பஜனை மடம் பத்மநாப ஐயரும் மத்தவாளும் என்னையும் கமலியையும் ரதி மனமதச் சிற்பத்தின் கீழே ஆபாசமான நிலையிலே பார்த்ததாகப் புளுகிட்டு ரதி மன்மத சிற்பம் இரண்டாவது பிரகாரத்திலே இருக்குன்னு சாதிச்சானே? பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமோ? நேத்து விசாரணையோடு விட்டிருந்தாலும் பரவாயில்லே இன்னிக்கு அவா வக்கீல் தயார்ப் பண்ணிக் கொண்டு வந்துவிட்ட அத்தனை சாட்சிகளும் நன்னா அசடு வழிஞ்சுட்டா" - என்றான் ரவி.

"அது மட்டுமில்லேடா! கடவுள் மேலே ஆணையா நெஜம் பேசறோம்னு பிரமாணம் பண்ணிட்டுப் பொய் புளுகின இந்தப் பக்த சிகாமணிகளைவிட மனசாட்சி மேலே ஆணையா நெஜம் பேசறே'ன்னு உள்ளதை உள்ளபடியே சொன்ன அந்த நாஸ்திகன் எத்தனையோ சிலாக்கியமானவன்" என்று இறைமுடிமணியைப் புகழ்ந்தார் சர்மா.

அன்று கோர்ட்டில் பஜனை மடம் பத்மநாய ஐயர் முதலியவர்கள் தங்கள் வயதுக்கும் படிப்புக்கும் சாஸ்திர ஞானத்துக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் ஆபாசமாக இட்டுக் கட்டிப் புளுகிய புளுகு சர்மாவை மிகமிக மனவேதனைப் படச் செய்திருந்தது. தன் மேலுள்ள விரோதம் ஒன்றையே நினைத்துத் தங்களைச் சிறுமைப்படுத்திக் கொள்ளக் கூட அவர்கள் தயங்கவில்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. கோர்ட் வாசலிலிருந்து வீடு திரும்பக் காரில் புறப்பட்டார்கள் அவர்கள்.

"நுணலும் தன் வாயால் கெடும்னு வசனம் சொல்வாளே சர்மா! அதுபோல அவா நிர்ப்பந்தப்படுத்தி இங்கே கொண்டு வந்து நிறுத்தின சாட்சியங்களே அவாளை நன்னாக் காமிச்சுக் குடுத்துடுத்து" என்றார் வேணு மாமா. கமலி எதுவும் பேசாமல் காரில் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

"இதை எல்லாம் பார்த்துட்டு எங்க தேசத்தைப் பத்தியே தப்பா நினைச்சுக்காதேம்மா! உயர்ந்த விஷயங்களும் சாஸ்திரங்களும் தத்துவங்களும் தோன்றின அளவு உயர்ந்த மனிதர்கள் அதிகம் தோன்றாததுதான் எங்களோட குறை. படிக்கறதுக்கும் வாழறதுக்கும் சம்பந்தமில்லாமப் போனதுதான் இன்னிக்கு இந்த தேசத்தோட கோளாறு" என்று உருக்கமான குரலில் மன்னிப்புக் கேட்பதுபோல் கமலியைப் பார்த்துச் சொன்னார் சர்மா.

"அறியாமையால் மனிதர்களில் யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்குத் தேசம் எப்படிப் பொறுப்பாகும்? தேசத்தைப் பற்றித் தப்பாக நான் ஏன் நினைக்க வேண்டும்?" - கமலியே பதிலுக்கு அவரைக் கேட்டதிலிருந்து தேசத்தைப் பற்றி அவள் தவறாக எதுவும் நினைக்கவில்லை என்று தெரிந்தது.

*****

கோர்ட் வழக்கு என்று மற்றவர்கள் அலைந்து கொண்டிருந்த சமயத்தில் காமாட்சியம்மாளின் உடல் நிலை மேலும் மோசமாகி இருந்தது. குமாரும் பார்வதியும்தான் வீட்டில் அம்மாவைக் கவனித்தும் கொண்டிருந்தார்கள். ஒரு கோபத்துடனும் முரண்டுடனும் மற்றவர்களைத் தன்னருகே அண்டவிடாமல் வீம்பு பிடித்தாள் அவள். சர்மா தன்னைக் கலந்து கொள்ளாமலும், பொருட்படுத்தாமலுமே ரவிக்கும் கமலிக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார் என்று அறிந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து காமாட்சியம்மாள் மீளவே இல்லை. அன்றிலிருந்து படுத்த படுக்கையாகி விட்டாள். சர்மாவையோ மற்றவர்களையோ பொருட்படுத்தக் கூடாதென்ற முரண்டில் தன் பிறந்தகத்து ஊருக்குக் குமாரைப் பஸ்ஸில் புறப்பட்டுப் போகச் சொல்லி முன்பு சங்கரமங்கலத்தில் பிரம்மோத்ஸவ சமயத்தில் வந்து தங்கள் வீட்டில் தங்கிவிட்டுச் சர்மாவுடன் கோபித்துக் கொண்டு வேறு வீட்டுக்குப் போய்த் தங்கிய தன் பெரியம்மாப் பாட்டியை அழைத்து வரச் செய்திருந்தாள் காமாட்சியம்மாள். கமலியே வேணு மாமா வீட்டுக்குப் போயிருந்ததனால் பாட்டி தன்னோடு வீட்டில் தங்க ஆட்சேபணை எதுவும் இராதென்று எண்ணித்தான் காமாட்சியம்மாள் அவளை வரவழைத்திருந்தாள். பத்து அரைத்துப் போடுவதற்கென்றும் நாட்டு வைத்தியம் சொல்வதற்கென்றும் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி வேறு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தாள்.

'அப்பாவைப் பற்றியோ, ரவி அண்ணாவைப் பற்றியோ, கமலியைப் பற்றியோ, பேசினாலே அம்மா எரிந்து விழுகிறாள், கோபப்படுகிறாள் - அவளுக்கு, அதனால் உடம்புக்கு அதிகமாகி விடுகிறது' என்று தெரிந்து குமாரும் பாருவும் அவர்களைப் பற்றியெல்லாம் அம்மாவிடம் பிரஸ்தாபிப்பதையே தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். கூப்பாடுகளும் வெளிப்படையான சண்டை சச்சரவும் இல்லை என்றாலும் வீட்டில் சண்டையின் அறிகுறியான ஒரு வேண்டத்தகாத அமைதி தொடர்ந்து நிலவிக் கொண்டுதானிருந்தது.

ஒத்தாசைக்காகக் குமார் பெரியம்மாவைக் கிராமத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்து விட்ட தினத்தன்று மாலையிலேயே அந்தப் பெரியம்மா காமாட்சியம்மாளிடம் தற்செயலாகக் கமலியைப் பற்றி விசாரித்திருந்தாள்.

"ஏண்டீ காமு! இந்தாத்திலே மின்னே நா வந்திருக்கிறப்போ ஒரு வெள்ளைக்காரி உன் புள்ளையோட வந்து தங்கியிருந்தாளே அவ எங்கேடீ? ஊருக்குத் திரும்பிப் புறப்பட்டுப் போயிட்டாளா? அவளாப் போனாளா இல்லை நீங்களே போகச் சொல்லிட்டேளா?"

காமாட்சியம்மாள் முதலில் இதற்குப் பதிலே சொல்லவில்லை. ஒன்றுமே காதில் வாங்கிக் கொள்ளாதது போலப் பேசாமல் இருந்துவிட்டாள். ஆனால் கிழவி விடுகிற வழியாயில்லை. தொணதொணத்தாள்.

"இப்போ இதை ஏன் விசாரிக்கிறேன் தெரியுமோடீ காமு? ஒரு சமாசாரம் கேழ்வைப் பட்டேண்டீ! நம்மூர் மனுஷா கொஞ்சப்பேர் பெரியவாளைப் பார்க்கப் புறப்பட்டுப் போயிருந்தா, அவா திரும்ப ஊருக்கு வந்து சொன்னா: அந்த வெள்ளைக்காரியும் உன் புள்ளையுமாப் பெரியவாளைப் பார்க்க அங்கே வந்திருந்துதுகளாம். அந்த வெள்ளைக்காரி ஸௌந்தரிய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம்லாம் பெரியவா மின்னாடி ஸ்பஷ்டமா பாடினதோட மட்டுமில்லாமே அவா பாஷையிலேயும் மொழி பெயர்த்துச் சொன்னாளாம். பெரியவா ரொம்பச் சந்தோஷமாக் கேட்டுண்டிருந்தாளாம். அவர் மௌனம்கறதாலே ஒண்ணுமே பேசலையாம். ஆனா ரொம்பப் பிரியமாக் கேட்டதோட மட்டுமில்லாமத் திருப்தியோட இவாளை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிச்சார்னு அதைப் பார்த்துட்டு வந்து ஊர்லே மனுஷா ஒரேயடியாக் கொண்டாடறா. ஊர் முழுக்க இதே பேச்சுத்தாண்டி. நேக்கே ஆச்சரியமாப் போச்சு, நம்பறதுக்கும் முடியலே. நம்பாமே இருக்கறத்துக்கும் முடியலே. ஒரு விசேஷமில்லாதவாளை அவா அப்பிடிப் பிரியமா உட்கார வச்சுண்டு பேசறதும் வழக்கமில்லே. ரெண்டு வருஷத்துக்கு மின்னாடி இந்தூர்ச் சீமாவையர் மடத்துச் சொத்தைக் கையாடிப்பிட்டுப் பெரியவாளைப் பார்த்துத் "தாராள மனசோட க்ஷமிக்கணும்னு" போய் நின்னப்போ அவர் மௌனமாயில்லாமே இருந்தும் கூட ஒரு வார்த்தை கூடப் பேசாமல் "போயிடு!"ன்னு கையை மட்டும் மறிச்சு அசைச்சுப் போகச் சொல்லிட்டாராம். அப்பேர்க்கொத்தவர் இவாகிட்ட இப்படி பிரியமா இருந்தார்னா அதுலே என்னமோ விசேஷம் இருக்கணும்டீ காமு..."

"எங்கிட்டயும் வந்து சொன்னா... ஆனா நான் அதை நம்பலே பெரியம்மா! வேற யாரும் சொல்லலே... இந்தப் பிராமணரே தான் சொன்னார். என் மனசை மாத்தறதுக்காகக் கதை கட்டி அளந்து விடறார்னுதான் நெனைச்சேன். 'மடத்து மானேஜரே லெட்டர் போட்டிருக்கார்... படிச்சுக்காட்டறேன்... கேளு'ன்னார், அதையும் நான் கேட்கல்லே."

"பொய்யாயிருக்காதுடீ! நடந்திருக்கும்னு தான் தோண்றது. நம்மூர் மனுஷா அத்தனை பேர் வந்து வாய் ஓயாமக் கொண்டாடறாளே?... பொய்யாயிருந்தா அப்பிடிக் கொண்டாடுவாளோடீ?"

காமாட்சியம்மாள் மௌனத்தில் ஆழ்ந்தாள். மேற்கொண்டு பெரியம்மாளிடம் என்ன பேசுவதென்றே அவளுக்குத் தெரியவில்லை. கமலிக்கும் ரவிக்கும் கலியாணம் ஏற்பாடாகியிருப்பது முதல் சகலத்தையும் தெரிந்து கொண்டுதான் பெரியம்மா தன்னிடம் இப்படிப் பேச்சுக் கொடுத்து ஆழம் பார்க்கிறாளா, அல்லது சாதாரணமாகத் தனக்குத் தெரிந்திருப்பதைத் தெரிவிக்கிறாளா என்று காமாட்சியம்மாளால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது அப்போது. பெரியம்மா அதற்குள் தன் பழைய கேள்வியையே இரண்டாம் முறையாகத் திரும்பவும் கேட்டுவிட்டாள்.

"என்னடீ! பதிலே சொல்ல மாட்டேங்கறே? அந்த வெள்ளைக்காரி இங்கே இருக்காளோ? ஊருக்குத் திரும்பிப் போயாச்சோ? உன்னைத் தாண்டீ கேழ்க்கறேன்..."

"இன்னம் போகல்லே பெரியம்மா! வடக்குத் தெருவிலே வேணு மாமா ஆத்திலே போய்த் தங்கியிருக்கா. அந்த மாமாவோட பொண் வசந்திக்கும் இவளுக்கும் ரொம்ப சிநேகிதம்! பம்பாயிலேருந்து அவளும் பொறப்பட்டு வந்திருக்கா. எங்கேயாவது போகட்டும். இப்போ இங்கே தொல்லையில்லாம நிம்மதியாயிருக்கு" - இந்த உரையாடல் இதற்கு மேல் நீளாமல் கவனித்துக் கொள்ளவே காமாட்சியம்மாள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால் தொடர்ந்து பெரியம்மாவை அவளால் அப்படித் தவிர்த்துவிட முடியவில்லை.

இரண்டு நாள் கழித்துப் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி, "ஏண்டி காமு! நீ எங்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லலியேடீ? கோர்ட்டிலே கேஸு நடக்கறதாமே! ஊரெல்லாம் பேசிக்கிறாளே? உங்காத்துக்காரர் சாட்சி சொன்னாராம். உன் பிள்ளை சாட்சி சொன்னானாம்" - என்று பெரியம்மாவையும் வைத்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தபோது தவிர்க்க முடியாமல் கமலியைப் பற்றிய பேச்சு வந்து விட்டது. காமாட்சியம்மாளே பாட்டியிடம் அதுபற்றி விசாரித்தாள்: "அது என்ன கேஸ் பாட்டீ! எனக்கொண்ணுமே தெரியாது. இப்போ இந்தாத்திலே இதெல்லாம் யாரும் எங்காதிலே போடறதும் இல்லே..."

"என்னமோ அந்த வெள்ளைக்காரப் பொண்ணு நம்ம கோவில்லே எல்லாம் நுழைஞ்சதாலே கோவிலோட சாந்நித்யம் கெட்டுப் போச்சு, மறுபடி கும்பாபிஷேகம் பண்ணியாகணும்னு ஊர்க்காரா பணம் கேட்டுக் கேஸ் போட்டிருக்காளாமே? அது செருப்புக் காலோட கோவிலுக்குள்ளே நுழைஞ்சுதாமே?"

"மத்தது எல்லாம் எப்பிடியோ எனக்குத் தெரியாது பாட்டீ? ஆனாக் கமலி செருப்புக் காலோட கோவில்லே நுழைஞ்சாங்கறதை நான் நம்பலே. இந்தாத்திலே அந்தப் பொண் தங்கியிருந்தப்போ நான் கவனிச்சவரை சுத்தம் ஆசார அநுஷ்டானத்திலே அவமேலே அப்பழுக்குச் சொல்ல முடியாது பாட்டீ! நம்ம மனுஷா இல்லே, நம்ம தேசம் இல்லே, நம்ம நிறம் இல்லேங்கறதைத் தவிர மரியாதை அடக்க ஒடுக்கம் - பணிவு, பவ்யம் இதிலெல்லாம் குத்தம் சொல்ல முடியாது."

இதைக் கேட்டு முத்துமீனாட்சிப் பாட்டியே தன் செவிகளை நம்ப முடியாமல் பேசுவது காமாட்சியம்மாள் தானா என வியந்து சந்தேகத்தோடு அவள் முகத்தைப் பார்த்தாள்.

"ஏன் பாட்டி அப்பிடிக் கண்ணை இடுக்கிண்டு என்னை என்னமோ மாதிரி பார்க்கறேள்? நான் இப்படிப் பேசறேன்னு சந்தேகப்படறேளா? நமக்கு வேண்டாதவங்கறதுக்காக ஒத்தரைப் பத்தி அபாண்டமாப் பொய்யும் புளுகும் பேசிடறது சரியில்லே. கமலி மேலே நேக்கிருக்கிற மனஸ்தாபம் வேறே. அவளும் ரவியும் போயிருக்கச்சே பெரியவா அவ ஸ்லோகம் சொல்லிக் கேட்டுத் திருப்தியா கேள்விப்பட்டுட்டு இங்கே வந்து சொல்றா. அதை நாம கொறை சொல்லலாமோ? ஒருத்தரை நமக்குப் பிடிக்கல்லேன்னா இல்லாததையும் பொல்லாததையும் எல்லாம் சொல்லிக் கோர்ட்டிலே போட்டு மானத்தை வாங்கறது இந்தூர்க்காராளுக்கு ஒரு வழக்கமாப் போச்சு-"

"கோர்ட்டிலே அந்த வடக்குத் தெரு வேணு கோபாலன் தான் கமலிக்கும் உங்காத்துக்காரருக்கும் வக்கீலாம். 'கமலி பத்தரைமாத்துத் தங்கம். சாட்சாத் சரஸ்வதியோட அவதாரம்னு' வேணுகோபாலன் வீட்டிலே போய்ப் பேசிப்பிட்டு வஸ்திரதானம் வாங்கிண்டு கோர்ட்டிலே போய், 'அவ கோவில் ஆசாரத்தையே கெடுத்துட்டா'ள்னு நேர் மாறாகச் சாட்சி சொன்னாராம் கைலாசநாதக் குருக்கள். அவர் தன்னாத்திலே வந்து சொன்னதை இரகசியமா டேப் ரெக்கார்டுலே பதிவு பண்ணி வச்சுண்டிருந்து கோர்ட்டிலே ஜட்ஜுக்குப் போட்டுக் காமிச்சிப் பொய்ச்சாட்சி'ன்னு வாதாடி குருக்களோட மானத்தை வாங்கிப்பிட்டாராம் அந்த வேணுகோபாலன்."

"பின்னே என்ன பாட்டீ? அத்தனை வயசானவர், கோவில்லே சுவாமியைத் தொட்டுப் பூஜை புனஸ்காரம்லாம் பண்றவர், வாய் கூசாமக் கூண்டிலே ஏறிச் சத்தியம் பண்ணிட்டுப் பொய் சொல்லலாமோ?"

"பொய் சொன்னதோட மட்டுமில்லாமே கமலியும் ரவியும் கோவில்லேயே என்னமோ அசிங்கமா நடந்துண்டான்னு வேற கதை கட்டி விட்டாளாம்டீ காமு!"

"கேஸ் எப்பிடி ஆகும்னு ஊர்ல பேசிக்கிறா பாட்டி?"

"உனக்கெதுக்குடி அம்மா இப்போ அந்தக் கவலை? ஏற்கெனவே அரை உடம்பாப் போயிட்டே, கிழிச்சுப் போட்ட நாராப் படுத்த படுக்கையா இருக்கே. இந்தக் கவலை வேற எதுக்கு? நோக்கு இருக்கற கவலை போறாதோடீ?"

"கவலையில்லே... தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கேக்கறேன்."-

"வேணுகோபாலனும் உங்காத்துக்காரரும் கேஸைப் பத்தியே கவலைப்படாமே தங்களுக்கு ஜெயிச்சுடும்கற நம்பிக்கையோட கலியாண காரியங்களைக் கவனிச்சுண்டிருக்காளாம். இன்னிக்குக் கூட வேணுகோபாலனாத்துலே சுமங்கலிப் பொண்டுகள் பிரார்த்தனையாம். அவரோட சொந்தப் பொண்ணோட கலியாணத்துக்கு முந்தி எப்பிடி சுமங்கலிப் பொண்கள் பிரார்த்தனை பண்ணறதுண்டோ அப்பிடியே இந்த வெள்ளைக்காரி கலியாணத்துக்கும் கூடப் பண்ணியாறதாம்..."

இந்த உரையாடலை இதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மா இப்போது மெல்லக் குறுக்கிட்டாள்:

"என்னடீ காமு! பாட்டி ஏதோ கலியாணம்கறாளே? என்னதுடீ?"

முதலில் காமாட்சியம்மாள் சிறிது தயங்கினாள். அப்புறம் எதையும் மறைப்பதைவிட உண்மை பேசுவது நல்லதென்று, பெரியம்மாவிடம் எல்லா விவரமும் சொல்லித் தன் மனஸ்தாபத்தையும் கூறிவிட்டாள். இந்தக் கலியாண ஏற்பாடு காரணமாகவே தனக்கும் தன் கணவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமற் போய்விட்டது என்றும் கூறினாள் காமாட்சியம்மாள்.

"கலி முத்திப் போச்சு! அதுனாலேதான் இப்பிடி எல்லாம் நடக்கறது டீ" - என்றாள் பெரியம்மா.

காமாட்சியம்மாள் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.

"உன் பிள்ளை ரவிக்குத்தான் புத்தி இப்பிடிப் போச்சுன்னா சகல் சாஸ்திரமும் வேதமும் படிச்ச உங்காத்துக்காரருக்கு ஏண்டீ இப்பிடிப் புத்தி போச்சு?"

"... விட்டுத் தள்ளுங்கோ... இனிமே அதைப் பத்தி நாம பேசிப் பிரயோஜனமில்லே பெரியம்மா, நாம் சொல்லி இங்கே யாரும் கேக்கறவா இல்லே..."

இதைச் சொல்லும்போது காமாட்சியம்மாளுக்குத் தொண்டை கமறியது, குரல் கரகரத்து நைந்தது. உணர்வும் சொற்களும் கலந்து குமுறின. கண்களில் ஈரம் பளபளத்தது.

"வியாகரண சிரோமணி குப்புசாமி சர்மாவோட வம்சத்திலே இப்பிடி ஒண்ணு நடக்கணும்னு தலையிலே எழுதி இருக்கு... கிரகசாரம் தான்... போ..."

-காமாட்சியம்மாள் தன் முகம் பெரியம்மாவுக்கும் முத்து மீனாட்சிப் பாட்டிக்கும் நேரே தெரியாதபடி படுக்கையில் மறுபுறம் ஒருக்களித்தாற் போலத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந்தோடியது. ரவியின் கலியாணத்தைப் பற்றி அவள் வருடக்கணக்காகக் கட்டி வைத்திருந்த கோட்டைகள் தகர்ந்த வேதனையில் மெல்ல அழத் தொடங்கியிருந்தாள் அவள்.

"கஞ்சி சாப்பிடறயாடீ? வெறும் வயத்தோட எத்தனை நாழிதான் இருப்பே?"

"வேண்டாம் பெரியம்மா! பசியே தோணலை. மந்தமா இருக்கு! சித்தே நாழி கண் மூடறேன். ரொம்ப அசதியா இருக்கு."

அவர்களோடு சம்பாஷணையைத் தவிர்க்க விரும்பிக் காமாட்சியம்மாள் பொய்யாகக் கற்பித்துக் கொண்ட தூக்கம் அது.

*****

நாளைக் காலையில் கேஸ் தீர்ப்பு என்றால் முதல் நாள் முழுவதும் சர்மாவும், வேணு மாமாவும் பரஸ்பரம் வேண்டியவர்களைப் பார்த்துக் கலியாணத்திற்கு அழைப்பதும் பத்திரிகை கொடுப்பதுமாக இருந்தனர். கோர்ட்டைப் பற்றியோ கேஸைப் பற்றியோ, தீர்ப்பைப் பற்றியோ கவலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். சென்னையிலிருந்து ஒரு வாரப் பத்திரிகை ஆசிரியர் இந்த விநோதமான கலியாணத்தை - நான்கு நாளும் ஒரு நிகழ்ச்சி கூட விடாமல் புகைப்படம் எடுக்க வரலாமா என்று அனுமதி கேட்டு எழுதியிருந்தார். 'ஆட்சேபணையில்லை; வரலாம்' - என்று பதில் எழுதியவுடன், அந்தப் பத்திரிகையாசிரியருக்கு ஒரு திருமண அழைப்பிதழையும் தபாலில் அனுப்பி வைத்தார் வேணு மாமா. தினசரிப் பத்திரிகைகளில் கோர்ட் செய்தியும், கேஸ் நடப்பது பற்றிய செய்தியும், போதாதென்று ஒரு பிராம்மண இளைஞருக்கும் ஒரு பிரெஞ்சுக்காரக் கோடீசுவரரின் மகளுக்கும் சாஸ்திர முறைப்படி, நான்கு நாள் நடக்கப் போகும் திருமணம் பற்றிய செய்தியும் பளிச்சென்று வெளி வந்து தடபுடல் பட்டுக் கொண்டிருந்தது. அது ஒரு பரபரப்பான செய்தியாகிப் பரவிவிட்டதால் எங்கும் அதைப் பற்றிய பேச்சாகவேயிருந்தது.

சர்மா இறைமுடிமணிக்குக் கலியாணப் பத்திரிகை கொடுக்க அவருடைய விறகுக்கடைக்குப் போனபோது, அவர் அப்போது தான் கிடைத்த தமது இயக்க நாளேடான 'சீர்திருத்தச் செய்தி'யைத் தபாலிலிருந்து தனியே பிரித்து எடுத்துப் படித்துக் கொண்டிருந்தார். 'சீர்த்திருத்தச் செய்தி' ஒரே பிரதிதான் தபாலில் சங்கரமங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளாக அதற்குச் சந்தாக்கட்டி அதை விடாமல் வரவழைத்துக் கொண்டிருந்தார் இறைமுடிமணி. அதிகம் கடைகளுக்கோ நியூஸ் ஸ்டால்களுக்கோ வந்து தொங்காத தினசரி அது. அதிலும் அந்த அதிசயத் திருமணத்தைப் பற்றி அக்ரகாரத்திலும் ஓர் அதிசயம் - என்ற தலைப்பில் செய்தி பிரசுரமாகியிருந்தது. இறைமுடிமணி, சிரித்தபடியே அதை சர்மாவிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். சர்மா அதைப் படித்துவிட்டு இறைமுடிமணியிடமே திருப்பிக் கொடுத்தார். திருமண அழைப்பிதழை வாங்கிக் கொண்ட இறைமுடிமணி, "வேறே ஒரு கோர்ட்டில் சீமாவையர் எங்க மேலே போட்ட கேஸ் நடந்துக்கிட்டிருக்கு. அந்த பொண்ணு மலர்க்கொடியை உங்க சீமாவையரு கையிலேருந்து காப்பாத்துறதுக்காக அவரு மாந்தோப்பில் நாங்க நுழையப் போக தோப்பிலே திருட நுழைஞ்சதாக எங்க மேலே கேஸ் போட்டுக் கோர்ட்டிலே நடக்குது விசுவேசுவரன்! நானும் எங்க ஆளுங்களும் ஜெயிலுக்குப் போயிடணும்னு சீமாவையருக்கு கொள்ளை ஆசைப்பா. அவரு ஆசைப்படி நடந்து நான் ஜெயிலுக்குப் போகாமே வெளியிலே இருந்தேன்னாக் கலியாணத்துக்குக் கட்டாயமா வர்றேன்ப்பா" என்றார்.

"அதெல்லாம் நடக்காதுப்பா... ஜெயிலுக்கெல்லாம் நீ போகமாட்டே. கலியாணத்துக்குக் கட்டாயம் வந்துடு தேசிகாமணீ!" என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டு வந்தார் சர்மா. மறுநாள் விடிந்தது. சப்கோர்ட்டில் கேஸ் நடந்தபோது கூடியிருந்ததைவிட அதிகக் கூட்டம் தீர்ப்பைக் கேட்கக் கூடி விட்டது. அன்று கமலி, சர்மா ஆகியோரின் மேல் உள்ளூர் ஆஸ்திகர்கள் போட்டிருந்த வழக்கின் மேல் தீர்ப்புக் கூறப்பட இருந்தது. கமலி வசந்தி, ரவி, சர்மா, வேணு மாமா, இறைமுடிமணி எல்லோருமே நீதி மன்றத்துக்கு வந்திருந்தார்கள். சீமாவையர் முதலிய பிரமுகர்களும் வந்திருந்தார்கள். பத்திரிகை நிருபர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததற்குக் காரணம் ஏற்கெனவே எல்லாப் பத்திரிகைகளும் இந்த வழக்கைப் பற்றிய செய்திகளை முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்திருந்ததுதான். தீர்ப்பை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இது பற்றி எங்கும் பரபரப்பான பேச்சு இருந்தது.

நீதிபதி தமது இருக்கையில் வந்து அமர்ந்ததும் கோர்ட் அமைதியடைந்து நிசப்தமாகியது. நிறையப் பக்கங்களில் எழுதப்பட்டிருந்த அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி படிக்கத் தொடங்கினார். முதற் சில பக்கங்களைப் படித்து முடிக்கும்வரை அதிலிருந்து யாரும் வழக்கின் முடிவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்து மதத்தின் நிலைகள் பழக்க வழக்கங்கள், அதில் மத மாற்றத்துக்கான சாஸ்திர பூர்வமான - அதிகார பூர்வமான ஒரு சடங்கு என எதுவும் இல்லாமலிருப்பது ஆகியவை பற்றி முதலில் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது. நீதிபதி தொடர்ந்து தம்முடைய தீர்ப்பைப் படித்துக் கொண்டிருந்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 30

"இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே அதை வளர்ப்பதற்கும், வளர்ப்பதற்குத் துணை செய்கிறவர்களுக்கும் தடையாக இருப்பது போன்ற நிகழ்ச்சிகளைப் பொது வாழ்வில் இங்கே பல சமயங்களில் பார்க்க முடிகிறது. சுயநலமும், பொறாமையும் பிறர் நன்றாக இருக்கப் பொறாத இயல்புமுள்ள தனி மனிதர்களால் ஒரு கூட்டமோ, ஒரு சமூகமோ மட்டுமல்லாமல் ஒரு மதமே கூட வளர்ச்சி தடைபட்டுக் குன்றிப் போக முடியுமோ என்று கூடத் தோன்றுகிறது. கிறிஸ்தவ மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் இருப்பது போல பல நாடுகள், பலவகை மக்கள் என்றில்லாமல் இந்தியாவிலும் அண்டை நாடாகிய நேபாளத்திலும் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதம் உண்மையான பக்தி சிரத்தையோடு தன்னை அணுகி அனுசரிபவர்களுக்கு எல்லாம் தாராளமாகத் தன்னுள் இடமளிப்பதுதான். முறையான திட்டமிடப்பட்ட சமயம் அங்கீகரித்த 'கன்வர்ஷன்' அல்லது 'மாற்றி ஏற்றுக்கொள்ளுதல்' என்பதின்றி அநுசரிப்பவர்களும், சுவீகரித்துக் கொள்ளுபவர்களும் கூட உள்ளே வருமாறு அனுமதிக்கும் பரந்த பண்பு இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் புதியது இல்லை. நீண்ட நாட்களாக வழக்கமான ஒன்றுதான். அன்னி பெஸண்ட் முதல் பலர் இப்படி இந்தியக் கலாசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏராளமான ஐரோப்பியர்கள் இப்படிப் பக்திசிரத்தையோடு இந்து தர்மத்தை அநுசரிப்பவர்களாக மாறி இருந்திருக்கிறார்கள். இதற்குப் பல முன் மாதிரிகள் காட்டலாம் (சில முன்மாதிரிகள் நீதிபதியால் விவரிக்கப்பட்டன). இங்கே இந்த வழக்கின் சாட்சியங்களைக் கொண்டு கவனிக்கும் போது குற்றம் என்பதாகச் சாட்டியிருப்பவற்றுக்கு நிரூபணமில்லாததோடு அவை வேண்டுமென்றே வலிந்து தயாரிக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன. கமலி என்ற பிரெஞ்சுப் பெண்மணி இந்துவாகவே தோன்றி வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்கள் நியாயமாகவும் செம்மையாகவும் உள்ளதுடன் சத்திய பூர்வமாகவும் தென்படுகின்றன. அவள் நுழைந்ததனால் ஆலயங்கள் பரிசுத்தம் கெட்டுவிட்டன என்று ஆட்சேபிப்பவர்களின் பரிசுத்தம் தான் இங்கே சந்தேகத்துக்கு இடமானதாகத் தெரிகிறது.

சொல்லப்போனால் சாட்சியங்களிலிருந்தும், விவரங்களிலிருந்தும் உள்ளூர் இந்துக்களை விட அதிக பக்தி சிரத்தையுடனும், முறையுடனும், தூய்மையுடனும் அவள் இந்துக் கோவில்களில் சென்று வழிபட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆகவே கோவில்களில் எந்தப் பரிசுத்தமும் எந்தப் புனிதத் தன்மையும் இதனால் கெட்டுவிடவில்லை. இக் காரணங்களால் இவ் வழக்கை நான் தள்ளுபடி செய்கிறேன்" - என்று தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டது. தீர்ப்பில் பிரதிவாதிகளாகிய கமலி சர்மா முதலியோருக்கு வாதிகள் உரிய செலவுத் தொகையைத் தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது - எதிர்பார்த்ததுதான் என்றாலும் வேணு மாமா உற்சாகமாக முகமலர்ந்து, "பார்த்தீரா? இந்தத் தீர்ப்பைத்தான் நான் எதிர்பார்த்தேன்" என்றார் சர்மாவிடம். ரவி ஓடிவந்து வேணு மாமாவைப் பாராட்டிக் கை குலுக்கினான். கமலி மனப்பூர்வமாக நன்றி சொன்னாள். அன்றைய மாலைச் செய்தித் தாள்களுக்கும் அடுத்த நாள் காலைச் செய்தித் தாள்களுக்கும் இதுதான் தலைப்புச் செய்தியாக இருந்தது. சீமாவையர் கோஷ்டி, தீர்ப்பைக் கேட்டபின், "கலி முத்திப் போச்சு! உலகம் நாசமாத்தான் போகப் போறது. உருப்படப் போறதில்லை" - என்று வயிற்றெரிச்சலோடு சொல்லத் தொடங்கியிருந்தது. பழிவாங்கும் வேலை, கமலி-ரவி கல்யாணத்துக்குப் புரோகிதர், சமையற்காரர்கள் கிடைக்காதபடி செய்வது ஆகிய சில்லரைக் குறும்புகளில் உடனே ஈடுபட்டார் சீமாவையர். புரோகிதர்களை எல்லாம் அவரால் தடுத்துவிட முடிந்தது.

"ஓய் ஜம்புநாத சாஸ்திரி! இன்னிக்கு வேணு மாமா பணத்தை வாரிக் குடுக்கப் போறார்னு சாஸ்த்ரோக்தமா அங்கீகரிக்கப்படாத கல்யாணத்துக்கெல்லாம் புரோகிதரா போய் உட்கார்ந்து நீர் அதை நடத்திக் குடுத்துடறது சுலபம். நிறைய வருமானமும் கிடைக்கும். ஆனால் இதுக்கப்புறமும் நாளைப் பின்னே ஊர்லே நாலுபேர் உம்மை மதிச்சு நல்லது கெட்டதுக்கு வாத்தியாரா ஏத்துப்பாளாங்கறதை யோசியும்" என்று புரோகிதரைக் கூப்பிட்டுக் கலைத்தார் சீமாவையர்.

புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி தயங்கினார். பயப்பட்டார். திடீரென்று காசி யாத்திரை போவதாகச் சொல்லிக் கொண்டு ஊரை விட்டுத் தலைமறைவாகி விட்டார்.

"கலியாணத்துலேதான் காசியாத்திரை வரும். ஆனா அதுக்கு முன்னாடி இவரே காசியாத்திரை புறப்பட்டுவிட்டாரோ?" என்று அதைப்பற்றிக் கேலியாகச் சர்மாவிடம் கூறிவிட்டுச் சீமாவையர் போன்றவர்களுக்குப் பயப்படவும் தயங்கவும் செய்யாத நகர்ப்புறப் புரோகிதர் ஒருவரைத் தந்தி கொடுத்து வரவழைத்தார் வேணு மாமா. புரோகிதரிடம் பலித்ததுபோல் உள்ளூர்ச் சமையற்காரரிடம் சீமாவையரின் ஜம்பம் சாயவில்லை. சமையல்காரச் சங்கரையர், "நான் பத்தாளை வச்சுண்டு எப்படா கலியாணங்கார்த்திகை நல்லது கெட்டது வரப்போறதுன்னு தேடி அலைஞ்சிண்டு காத்திண்டிருக்கேன். வர்ற வேலையை உமக்காக என்னாலே விட முடியாது. அதுவும் அபூர்வமாக நாலுநாள் கல்யாணம். முன்னே ஒருநாள்; பின்னே ஒருநாள்னு சமையல்காராளுக்கு ஆறு நாள் வேலை. பேசாமே உம்ம வேலையைப் பார்த்திண்டுபோம். இதிலே எல்லாம் வீணாத் தலையிடாதியும். ஊர்லே யார் யாரோட கல்யாணம் பண்ணிண்டா உமக்கென்ன வந்தது?" - என்று சீமாவையரிடம் கறாராக மறுத்துச் சொல்லிவிட்டார் சமையற்காரர். சீமாவையரால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி பயந்து போய்க் காசியாத்திரை புறப்பட்டதைச் சர்மாவிடம் கேள்விப்பட்ட இறைமுடிமணி, "இந்த மாதிரிப் புரோகிதங்களை நம்பாதீங்க. பதிவுத் திருமணமோ, சீர்திருத்தத் திருமணமோ பண்ணிக்குங்கன்னு எங்க இயக்கம் ரொம்ப நாளாச் சொல்லிட்டு வாரதே இதுக்காவத்தான்" - என்று சொல்லிச் சிரித்தார். சர்மாவும் பதிலுக்கு விடவில்லை. கேட்டார்: "இப்போ அதிலே மட்டும் என்ன வாழுதாம்? தலைவர், வாழ்த்துரை வழங்குவோர்னு ஒரு புரோகிதருக்குப் பதில் ஒன்பது புரோகிதன் வந்தாச்சே? எந்தக் கட்சி சர்க்காரோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவா கல்யாணம்னா மந்திரியே புரோகிதரா வந்து எல்லாம் பண்ணி வச்சுடறார்."

"அட நல்ல ஆளுப்பா நீ! நீயும் உன் முரண்டிலேருந்து மாறப் போறதில்லை. நானும் என் முரண்டிலேருந்து மாறப் போறதில்லே. விட்டுத் தள்ளு" - என்றார் இறைமுடிமணி. கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள் அவர்களுக்கு வந்தாலும் அவை கண்ணியமான முறையில் இருந்தன. நட்பைப் பாதிக்கவில்லை. இவர் அவரைக் கேலி பண்ணுவது போல் பேசுவதும் அவர் இவரைக் கேலி பண்ணுவதுபோல் பேசுவதும் சகஜமாயிருந்தாலும் இருவரும் தங்களுக்குள் ஒரு போதும் எல்லை கடந்து போனது கிடையாது. கலியாணத்துக்கு முதல் நாள் மாலை வழித்துணை விநாயகர் கோவிலிலிருந்து அவ்வூர் வழக்கப்படி மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. பிரசித்தி பெற்ற வாத்தியக் கோஷ்டியின் இரட்டைத் தவில் நாதஸ்வரக் கச்சேரி என்பதால் ஊரே அங்கு திரண்டு விட்டது.

"மாப்பிள்ளை அழைப்புக்குப் புது சூட், ஷூ எல்லாம் ரெடி!" - என்று வசந்தி வந்து ரவியிடம் சொன்னபோது,

"வர வர பிராமணக் குடும்பங்களில் கல்யாணம்கிறதே ஒரு 'ஃபேன்ஸி டிரஸ் காம்பெடிஷன்' மாதிரி ஆயிண்டு வரது! இது எப்படி நம்ம கலியாணத்திலே நுழைஞ்சுதுன்னே புரியலே. அழகா லட்சணமா வேஷ்டி அங்கவஸ்திரம் போட்டுண்டு மாப்பிள்ளை அழைப்புக்கு வந்தா என்ன கொறஞ்சுடப் போறது? இதெல்லாம் வேண்டாம். எடுத்துண்டு போ. மாப்பிள்ளைக்கு சூட் கோட்டுன்னாக் கலியாணப் பொண்ணுக்கும் 'ஸ்கர்ட்' போட்டுக் கொண்டு வந்து நிறுத்தலாமே? இதென்ன பைத்தியக்காரத்தனம்? இண்டியன் மேரேஷ் ஷுட் பி ஆன் இண்டியன் மேரேஜ்" - என்று சொல்லி ரவி சூட் அணிய மறுத்துவிட்டான். அவன் இப்படிக் கூறியதைக் கேட்டு சர்மாவுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. வெளிநாட்டில் வேலைபார்க்கும் படித்த மாப்பிள்ளை பட்டு வேஷ்டி அங்கவஸ்திரத்தோடு ஜானவாஸத்துக்கு வந்ததை ஊரே பெரிய ஆச்சரியத்தோடு பார்த்தது.

மாப்பிள்ளை அழைப்பைப் பார்க்கவும், புகழ்பெற்ற இரட்டையர்களின் நாதஸ்வர இன்னிசையைக் கேட்கவும் ஊரே வழித்துணை விநாயகர் கோவிலைச் சுற்றியும், வீதிகளிலும் கூடிவிட்டது. சங்கரமங்கலத்தையே திருவிழாக் கோலங்கொள்ளச் செய்திருந்தது அந்தத் திருமணம். கோர்ட், கேஸ் என்று வேறு நடந்து விளம்பரமாகி இருந்ததனால் அந்தத் திருமணத்தைப் பற்றிய செய்தி உள்ளூரிலும் அக்கம் பக்கத்து ஊர்களிலும் அதிகப் பரபரப்பை உண்டாக்கியிருந்தது.

கையில் ரிஸ்ட் வாட்ச், கழுத்தில் தங்கச் சங்கிலியோடு இளம் வயதினரான ஒரு நகர்ப்புறத்துப் புரோகிதர் தமது உதவியாளரோடு வந்து வைதிகச் சடங்குகளை நடத்தி வைத்தார். கமலியை அசல் கிராமாந்தரத்து அழகியை எவ்வாறு அலங்கரிப்பார்களோ அப்படி மணப்பெண்ணாக அலங்கரித்திருந்தாள் வசந்தி. கைகளிலும் பாதங்களிலும் முதல் நாள் மருதாணி அரைத்து இட்டுக் கொண்டதன் விளைவாகச் சிவப்புப் பற்றி அவளுடைய நிறத்துக்கு அந்தச் சிவப்பு மிகவும் அழகாக எடுத்துக் காட்டியது. அலங்காரம் முடிந்ததும் வசந்தி தன் கண்களே திருஷ்டி பட்டு விடுமோவென்று கமலிக்குத் தானே கண்ணேறு கழித்தாள்.

வேணு மாமாவின் ஏற்பாடு எல்லாமே பிரமாதமாயிருந்தன. ரவி-கமலி திருமணத்தை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டு பிரமாதமாக நடத்திக் கொண்டிருந்தார் அவர். உள்ளூரில் அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களையும் சேர்ந்தவர்கள் ஒரு சிலரைத் தவிர அநேகர் இந்தக் கலியாணத்தை ஏதோ ஒரு வேடிக்கை போலப் பார்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களிற் சிலர் இந்தக் கல்யாணத்தைக் கேலி பண்ணினார்கள். வேறு சிலர் ஒதுங்கி நின்று புறம் பேசினார்கள். வழித்துணை விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை காரில் ஊர்வலம் புறப்பட்ட அதே நேரம் சீமாவையர் வீட்டுத் திண்ணணயில் வம்பர் சபை கூடியிருந்தது. ஆனால் சபையின் ஆட்கள் சுரத்தில்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

"என்ன ஓய் ஹரிஹரையர்! மாப்பிள்ளை அழைப்புக்கு நீர் போகலியா? ஜானவாஸ விருந்து பிரமாதமா ஏற்பாடு பண்ணியிருக்காளாம். மாட்டுப் பொண் பிரெஞ்சுக்காரியோ இல்லியோ, அதுனாலே ஆட்டுக்கால் சூப், மீன் குழம்பு, மட்டன் பிரியாணீன்னு..." என்று வேண்டுமென்றே சீமாவையர் வம்பைத் தொடங்கினார்.

சமையல் சங்கரையர் தான் கல்யாணத்தில் நளபாகப் பொறுப்பேற்றிருக்கிறார். முழுக்க முழுக்க சைவச் சமையல்தான், எல்லாம் வைதீக சம்பிரதாயப்படிதான் நடக்கிறது என்பதெல்லாம் சீமாவையருக்கு முழுமையாகத் தெரிந்திருந்தும் எப்படியாவது விசுவேசுவர சர்மாவின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற முரண்டு தான் இப்படி எல்லாம் அவரைத் தாறுமாறாகப் பேச வைத்திருந்தது. ஆனால் ஹரிஹர ஐயர் விடவில்லை.

"என்னை யார் ஓய் கூப்பிடக் காத்துண்டிருக்கா. நீர் தான் முந்தின ஸ்ரீமடம் ஏஜெண்ட். இப்போ உம்ம ஸ்க்ஸஸராத்தான் சர்மாவே ஏஜெண்டா இருக்கார். உம்மையே அழைக்கல்லேன்னா என்னை யார் அழைக்கப் போறா?" - என்று சீமாவையரைப் பதிலுக்குக் கேட்டார்.

"என்னைச் சர்மா அழைக்கல்லேன்னு உமக்கு யார் சொன்னா? என் பேருக்குப் பத்திரிகை அனுப்பிச்சிருக்கார். நான் தான் போகலை. கண்ட தறுதலைக் கல்யாணத்துக்கெல்லாம் போறது எனக்குப் பிடிக்கல்லே" - என்று அத்தனை வெறுப்புக்கிடையேயும் ஜம்பமாகப் பேசினார் சீமாவையர். உள்ளூறத் தாங்க முடியாத எரிச்சல் அவருக்கு. சர்மாவை அப்படியே கடித்துத் துப்பிவிட வேண்டும்போல அவர் மேல் அத்தனை கோபம் வந்தது சீமாவையருக்கு. கேஸ் வேறு தள்ளுபடி ஆகிவிட்டதால் அந்த எரிச்சலும் கோபமும் முன்பிருந்ததை விட இரண்டு மடங்கு ஆகி இருந்தன. எப்படியாவது சர்மாவை தலையெடுக்க விடாமல் பண்ணி அவமானப்படுத்தி விட வேண்டுமென்று சீமாவையரின் உள்மனம் கறுவிக் கொண்டிருந்தது.

"நாம் தான் இங்கே வேலையத்துப் போய் உட்கார்ந்திண்டு இருக்கோம். ஊரே அங்கே மாப்பிள்ளை அழைப்பிலேதான் கூடியிருக்கு. வாண வேடிக்கைக்கு மட்டும் சிவகாசிக்காராளுக்குப் பத்தாயிர ரூபாய்க்குக் காண்ட்ராக்ட்டாம்; நாதஸ்வரத்துக்கு ஐயாயிரமாம்! அந்த வேணு கோபாலையர் பணத்தைத் தண்ணியாச் செலவழிக்கிறாராம். சர்மாவோட புள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அந்தப் பிரெஞ்சுக்காரியே அவள் அப்பாகிட்டே சொல்லிக் கையோட இதுக்குன்னே நிறையப் பணம் வேற கொண்டு வந்திருக்காளாம். எல்லாம் ஜாம் ஜாம்னு நடக்கறது. நீரும் நானும் வரலேன்னு அங்கே யார் ஓய் கவலைப்படறா? பெரிய பெரிய கோட்டீஸ்வர வியாபாரியெல்லாம் வேணு கோபாலய்யருடைய சிநேகிதன்கிற முறையிலே வந்து உட்கார்ந்துண்டிருக்கான். மலைமேலேருந்து அத்தனை எஸ்டேட் ஓணரும் வந்தாச்சு. ரோட்டரி கிளப் மெம்பர்ஸ் பூரா ஊர்வலத்திலே காருக்கு முன்னாடி நடந்து வரா. சர்மாவுக்கு என்ன குறைங்காணும்?" என்று ஹரிஹர ஐயர் மேலும் விவரங்களைச் சொல்லிச் சீமாவையரின் வயிற்றெரிச்சலைக் கிளப்பிவிட்டார்.

"பார்த்திண்டே இரும்! பகவான் ஒருத்தன் இருக்கான். இந்த அக்ரமம் பொறுக்காமே அவன் ஏதாவது பண்ணத்தான் போறான். தெய்வக் குத்தம் சும்மா விடாது" - என்று கையைச் சொடுக்கி நெரித்தார் சீமாவையர். அவரால் தாங்கிக் கொள்ள முடியாமலிருந்தது.

"நமக்குப் பிடிக்கறதோ பிடிக்கலியோ! நல்ல காரியம் நடக்கறபோது துக்கிரி மாதிரி ஏன் இப்படிக் கையைச் சொடக்கி அஸ்துப் பாடணும்? பேசாம இருமேன்" - என்று ஹரிஹர ஐயரே தமது செயலைக் கண்டு அருவருப்பு அடைந்தபோது சீமாவையருக்குச் சிறிது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. கேஸ் தோற்றுப் போய்த் தள்ளுபடியாகிய பின் தான் வலிந்து தன்னுடன் சர்மாவை எதிர்க்கக் கட்சி சேர்த்தவர்களில் பலரும் சோர்ந்து துவண்டு போயிருப்பது சீமாவையருக்கே மெல்ல மெல்லப் புரிந்தது. அதிகநாள் அவர்களை எல்லாம் சர்மாவின் எதிரிகளாக நிறுத்தி வைத்துத் தொடர்ந்து சர்மாமேல் விரோதத்தையும் வெறுப்பையும் ஊட்டிக் கொண்டிருப்பது என்பது நடவாத காரியமாக இருக்குமோ என்று அவருக்கே தோன்றியது. இறைமுடிமணிமேல் பொய் வழக்குப் போடப் போக அவர் வேறு, சீமாவையரைப் போன்ற வேஷதாரிகளைத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலை என்று ஆக்ரோஷமாகக் கிளம்பியிருந்தார். சீமாவையருடைய கேடுகாலம் ஆரம்பமாகியிருந்தது. சர்மா போன்ற ஆஸ்திகரையும் அவர் எதிர்த்தார். இறைமுடிமணி போன்ற நாஸ்திகரையும் அவர் எதிர்த்தார். இருவருடைய விரோதத்தையும் அவர் சம்பாதித்துக் கொண்டிருந்தார். நேர்மாறாகச் சர்மா இருசாராருடைய அன்பையும் சம்பாதிக்க முயன்று கொண்டிருந்தார். சூழ்நிலை மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது. கோயில் கேஸ் தள்ளுபடியான பின் சீமாவையரின் மதிப்பு ஊரில் குறைந்திருந்தது. என்றாலும் அவரது அடாவடித் தனங்கள் என்னவோ குறையவில்லை. கடைசி முயற்சியாகச் சமையற்காரரைக் கலைத்து விட்டோ புரோகிதரைக் கலைத்து விட்டோ கல்யாணத்தைக் கெடுப்பதில் முனைந்து பார்த்துத் தோற்றிருந்தார் சீமாவையர். சீமாவையருக்கு இருந்த சமூக அந்தஸ்தைவிட அதிகமான சமூக அந்தஸ்தும், படிப்பும், பணச் செல்வாக்கும் வேணு மாமாவுக்கு இருந்ததனால் சீமாவையரின் எதிர்ப்பை அவர் ஒரு சிறிதும் லட்சியம் பண்ணவே இல்லை.

அன்று மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் முடிந்து விருந்தினர்கள் சாப்பிட்டு முடிய இரவு பதினொரு மணியாயிற்று. இரண்டு பந்தியோ மூன்று பந்தியோ - சிக்கனமே பாராமல் வந்தவர்களுக்கெல்லாம் - ஜாதி வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஒரு சேர உட்காரச் செய்து விருந்தளித்தார் வேணு மாமா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top