- Joined
- Nov 5, 2021
- Messages
- 592
- Reaction score
- 1,073
அத்தியாயம்-1
சீலிங் பேன் எதற்கு ஓடுகிறது என்பதே தெரியாமல் கீச் மூச்சென சுத்திக்கொண்டிருக்க, வழிந்த வியர்வையை துடைக்க கூட நேரமில்லாமல் வேட்டியோடு மல்லுக்கட்டி கொண்டிருந்தான் அவன்...
ட்ரென்ட்டிங்கில் இருக்கும் ‘ஒட்டிக்கோ கட்டிக்கோ’ வேஷ்டி கட்டினால் ஆகாதாமா?? தாத்தாஆ காலத்து பரம்பரை வேஷ்டியை கட்டினால் தான் பார்க்க போகிறவள் கட்டிக்க போகிறாளா?? இப்படியெல்லாம் நடுக்கூடத்தில் நின்று கத்த வேண்டும் என்று அவனுக்கும் ஆசை தான்..
“ப்ச்.. வீட்டுக்கு வந்துருக்குற ஆட்கள் முன்னாடி இஷ்டத்துக்கு நடந்துக்குற.. என்ன நினைப்பாங்க.. பழக்க வழக்கத்தை சொல்லி கொடுத்து வளக்கலைன்னு நாலு இடத்துல போய் சொல்ல மாட்டாங்க.. அப்புறம் யாரு உனக்கு பொண்ணு தருவா.. உன் தங்கச்சிய யாரு கட்டிப்பா..” என்று பத்து மணி நேரத்திற்கு போதனை கிளாஸ் எடுத்து விடுவார் வைஷ்ணவி அம்மையார்..
அதற்கு பயந்தே இடுப்பில் நிற்காத வேட்டியை ஆங்காங்கே பொதிந்து பெல்ட்டில் அடக்கி விட்டான்.. என்ன பிரயோஜனம்.. ஒன்பதாவது மாதம் போல உப்பிக்கொண்டு நிற்கிறது குட்டி தொந்தி..
அவன் கபீர்.. பார்த்ததும் பக்கத்து வீட்டு பையன் பீல் கொடுக்கும் சாதாரணமான தோற்றம்.. குடும்பத்தின் பொறுப்பான மூத்த பையனாய் படித்து முடித்ததும் நல்ல வேலையோடு சிறுக சிறுக சேமித்து தங்களுக்கென சொந்தமாய் வீட்டை கட்டிக்கொண்டிருக்கிறான்..
மிதமான வேகத்தில் வளர்ந்து வரும் கட்டிடத்தை கண்டதும் சில பெருசுகள், “வீட்டை கட்ட ஆரம்பிச்சாச்சு.. கையோட கல்யாண சாப்பாடு போடுறது தான் பாக்கி.. இப்பவே பாருங்க.. அடுத்த ஆறுமாசத்துக்குள்ள விளக்கேத்த மகாலக்ஷ்மி வந்துடுவா..” என்று உசுப்பி விட்டு, வைஷ்ணவிக்கு இந்த வார்த்தை போதாதா?? உடனே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு தோஷம் இருக்கிறதா என்று பரிகாரம் தேட துவங்கி விட்டார்.. அவன் சரி என ஒப்புக்கொள்ளும் வரை..
இருபத்தி ஒன்பதை கடப்பதற்குள் கல்யாணம் செய்து விட வேண்டும் என்று வைஷ்ணவியும், முப்பதிற்குள் கடல் கடந்து காணா தேசத்திற்கு ஓடிவிட வேண்டும் என்று இவனும் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்..
“ஐயையோ..” வைஷ்ணவியின் பெருங்குரலில் அதிர்ந்து, சொருகியதை நிறுத்திவிட்டு ஷார்ட்ஷை மாட்டிக்கொண்டு ஓடினான் பக்கத்திலேயே இருந்த மாமாவின் வீட்டிற்கு.. ஹாலில் விழுந்து கிடந்த ஈஸ்வரி அத்தையை வைஷ்ணவியும் குணசேகரன் மாமாவும் சேர்ந்து தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்று கொண்டிருந்தனர்..
“அத்தை..” என அதிர்ச்சியோடு நெருங்கிய கபீர், “ஏம்மா.. வழிய விடுங்க.. கொஞ்சம் காத்து வரட்டும்.. லோ ப்ரெஷர்ல மயங்கியிருக்கலாம்..” என படபடத்தவனை “நான் பாத்துக்குறேன்டா.. நீ முதல்ல பூர்வாவை கவனி.. உள்ள போய் அரைமணி நேரம் ஆச்சு.. இன்னும் கதவை திறக்கலை..” என விரட்டாத குறையாய் தள்ளினார் வைஷ்ணவி..
அவனும், “பூர்வா... பூர்வா..” கதவை தட்ட, பேச்சு மூச்சில்லை..
அதே நேரத்தில் “தொம்மு தொம்முன்னு தட்டி கதவை உடைச்சிடாத.. சாரி தான கட்டிட்டு இருக்குறா.. வெளிய வர டைம் ஆகும்.. டிஸ்டர்ப் பண்ணாத.. தாய்க்கும் புள்ளைக்கும் வேற வேலையே இல்லையா??” குளித்த பக்கெட்டோடு வந்தாள் அருமை தங்கை மோனிஷா..
“என்ன நடக்குதுன்னு தெரியாம லூசு மாதிரி பேசாதே மோனி.. அத்தை மயங்கி விழுந்தது கூட தெரியாம உள்ள என்ன பண்றா?? நானும் இவ்ளோ நேரம் தட்டிப்பார்த்துட்டேன்.. உள்ள இருந்து ‘ஹான், வர்றேன்’னு ஏதாவது பதில் சொல்லியிருக்கணுமில்ல.. சைலெண்ட்டா இருக்குது.. உங்களுக்கு இதே வேலையா போச்சு.. ப்ளஸ்டூல மார்க் குறைஞ்சாலும் காலேஜ்ல அட்டெண்டன்ஸ் இல்லைன்னாலும் இப்படி ஏதாவது பண்ணி ஆட்களை பயமுறுத்திடணும்.. எல்லாம் உன்னால தான்.. டெய்லி படிக்குறேன்னு ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தது போதும்.. நாளையில இருந்து இங்கேயே தான் தூங்கணும்.." நேரம் பார்த்து சுட்டினான் கபீர்..
“ஹே.. எதுக்கு எல்லாரும் இவ்ளோ சீரியஸ் ஆகுறீங்க.. ஒரு சின்ன விஷயத்தையும் ஊதி பெருசாக்குறதுல இவனை மிஞ்ச ஆளே இல்லை.. சாதாரணமான விஷயம்.. கதவை திறக்கலை அவ்ளோ தானே..” சூழ்நிலை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே நினைத்தாள் மோனிஷா..
“எல்லாம் தெரிஞ்சவ மாதிரி பேசாதடி.. கபீர் அத்தானை நான் லவ் பண்ணும் போது எதுக்காக அவனுக்கு தனியா பொண்ணும் எனக்கு மாப்பிள்ளையும் பாக்குறீங்க.. எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்குறதுல என்ன பிரச்சனைன்னு என்கிட்டே தான் கேட்டா.. அண்ணியும் கோபத்துல அடிச்சிட்டாங்க.. அப்ப அழுதுட்டே கதவை மூடிக்கிட்டவ தான்.. இன்னும் திறக்கலை..” வைஷ்ணவி கூறிய பின்னே தீவிரம் புரிந்தது..
“மோனி.. நீ பாரு..” கட்டளையிட்டு, “பூர்வா.. கதவை திற..” என பலமாக தட்டி ஓய்ந்த கபீர், ‘ஒருவேளை மோனி சொல்வது போல நிலைமை சாதாரணமாகவே இருக்கலாம்..’ என்ற யோசனையோடு தாழ்ப்பாள் துவாரம் வழியே நோக்கலானான்.. அங்கே உத்திரத்தில் சேலையை கோர்த்து அந்தரத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தாள் அவள்..
“ஐயோ..” என படபடத்த இதயத்தையும் மீறி அட்ரீனலின் வேகமெடுக்க, கட்டிட வேலைகளுக்கு நடுவே கிடந்த கடப்பாரையால் கதவை உடைத்தெடுத்தான்.. உள்ளே மகளிருந்த கோலத்தில் அதிர்ந்த குணசேகரன் நெஞ்சை பிடித்துக்கொண்டு தூணிலே சாய்ந்திட, வேகவேகமாய் தூக்கிலிருந்து தூக்கினான் கபீர்.. பூர்வாயை கபீரும் குணசேகரனை பெண்களும் ஆற்றி தேற்றி ஆசுவாசப்படுத்தி சேர்க்கும் முன் மூச்சே வாங்கியது..
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே கெஞ்சி கூத்தாடி இப்ப தான் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னான்.. அங்கேயும் இங்கேயுமா கேட்டு ஒரு சம்பந்தம் கூடி வந்து, பார்க்க போற நேரத்துல இப்படியா அபசகுணமா நடக்கணும்.. அங்காள பரமேஸ்வரி இது உனக்கே அடுக்குமா?? நான் உனக்கு என்ன குறை வச்சேன்.. பையனுக்கு ஒரு கல்யாணம், காட்சின்னு பண்ணி பார்க்கணும்னு ஆசைப்பட்டது ஒரு குத்தமா??” என தன்னப்போலே புலம்பினாலும், “ஏ எருமை குரல்.. முடி அடியில முடிச்சாவது போட்டு வை.. தண்ணீ சொட்ட சொட்ட வந்து நிக்குற.. போ.. வெளிய போய் துவட்டிட்டு வா..” இக்கட்டான சூழ்நிலையிலும் சட்டம் பேசிய வைஷ்ணவியை முறைத்தபடியே வெளியே சென்றாள் ராகவி..
வைஷ்ணவியை கூறியும் குத்தமில்லை.. கேட்கும் பொழுதெல்லாம் திருமணம் வேண்டாமென மறுத்திடும் மகன், தன்னுடைய காலத்திற்கு பிறகு தனிமரமாய் வாழ்ந்து விடுவானோ என்ற பயத்திலே இப்பொழுதெல்லாம் அதிகமாகவே புலம்பவும் முணுமுணுக்கவும் தொடங்கி விட்டார்..
மயக்கத்திலிருந்து தெளிந்த ஈஸ்வரியோடு சேர்த்து பெரியவர்கள் மூவரும் கப்பல் கவிழ்ந்ததென கன்னத்தில் கைவைத்து ஹாலில் அமர்ந்திருக்க, விரக்தியே உருவான பூர்வாவின் முன் காபி கப்பை நீட்டினான் கபீர்..
“எனக்கு வேணாம்..” மூக்கை உறிஞ்சினாள்.. “வாங்கி குடிடி.. அடுத்த தடவை ஸ்ட்ராங்கா தூக்கு போடுறதுக்காவது உடம்புல தெம்பு வேணும்ல..” என குத்தலாக பேசிய ராகவியை வலியோடு நோக்கினாள் அவள்..
“என்னை பார்க்காத.. வாங்கி குடி..” என அதட்டவும் “எனக்கு வேணாம்.. என்னை தனியா விடுங்க..” சிணுங்கியவளின் கண்ணீர் உருண்டு கன்னத்தில் விழுவதற்கு முன்னே பளாரென விழுந்த அடியில் தேகம் தீயாய் எரிந்தது..
ஈஸ்வரியோ மேலும் கீழும் மூச்சிரைத்தபடியே, “உன்னை பெத்தது தான்டி நான் பண்ணுன பெரிய பாவம்.. பத்து மாசம் சுமந்து பெத்த வயித்தை பத்தி எரிய வைக்குற.. நீயெல்லாம் நல்லா இருப்பியா??” ஆத்திரத்தை மகள் மீது இறக்கிட, தடுக்க சென்று சிலதை தானும் வாங்கிக்கொண்ட கபீர், “அத்த, கொஞ்சம் பொறுங்க..” என்றான்..
தாயின் ஆத்திரத்தையும் வெறுப்பையும் ஒருசேர கண்டதில் அரண்ட பூர்வா, கண்ணீர் வழிந்தோட மோனிஷாவிடத்தில் ஒடுங்கியிருந்தாள்.. “அத்த.. இவளை அடிச்சே கொன்னுட்டா உங்க ஆத்திரம் தீர்ந்துடுமா?? சொல்லுங்க.. தீரும்னா கொன்னுடுவோம்..” என குறுக்கே புகுந்த மோனிஷாவிடம் ஈஸ்வரியின் பாச்சா பலிப்பதில்லை.. மனதில் பட்டதை நெற்றி பொட்டில் அடித்தாற் போல வெடுக்கென கூறிவிடுவாள் என்பதால் ஒருவித தயக்கம்..
“மோனி..” அண்ணனின் அதட்டலை பொருட்படுத்தாமல், “நீ சும்மா இரு.. பேசாத.. பூர்வா என்னைக்காவது லவ் பண்றேன்னு உன்கிட்ட சொல்லியிருக்குறாளா??” என கேட்டவளுக்கு இடம் வலமாக தலையசைத்து வைத்தான் கபீர்..
"எனக்கும் தெரியாது.. மனசுல இருக்குறதை முதல் தடவை சொன்னவளை இந்த அடி அடிச்சா எந்த உண்மையை தான் சொல்ல தோணும்.." சலித்து கொண்டாள் மோனிஷா..
மொத்த பிரச்சனைக்கும் மையப்புள்ளியாய் போன கபீர் அத்தையின் முகத்தை பார்த்தான்.. புரிகிறது.. எல்லாருக்குமே தன் மகளை பெரிய இடத்தில் வைத்து பார்க்க வேண்டுமென்று தான் விரும்புவார்கள்.. யாரும் தன்முன்னே தன்னால் வளர்ந்த ஒருவனிடம் மகளை கொடுத்து மிக சாதாரணமாய் வாழ்வதை பார்ப்பதற்கு முன்வர மாட்டார்கள்.. இதற்கு ஈஸ்வரி மட்டும் விதிவிலக்கல்ல.. நியாயமான எதிர்பார்ப்பு தான்..
பலநாள் தவத்திற்கு பின் கிடைத்த ஒரே பெண்ணை இருபத்தி ஐந்து வருடங்களாய் பாராட்டி சீராட்டி வளர்த்துவிட்டு, மாத சம்பளத்திற்கு உழைக்கும் சராசரி ஆண்மகனுக்கு கட்டிக் கொடுப்பதற்கு ஈஸ்வரி ஒன்று தியாக தாயில்லை..
ஆண் துணையின்றி வைஷ்ணவியின் குடும்பம் படும் அல்லல்களை நேரில் பார்க்கிறார் தானே.. இவ்வளவு நாட்கள் உழைத்த அனைத்தையும் தங்கையின் திருமணத்திற்காக.. அதற்கு அடுத்து தான் அவனுக்கும் அவனின் வாழ்க்கைக்கும்..
மொத்த வீடும் மௌனத்தில் மூழ்கி ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்துக் கொண்டிருக்க, “கபீர் அத்தானுக்கு தாராளமா கல்யாணம் பண்ணி வைங்க.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நான் எந்த வம்பும் பண்ண மாட்டேன்.. ஆனா எனக்கு கல்யாணம் பண்ணனும்னு மட்டும் நினைக்காதீங்க.. என்னால அந்த இன்னொருத்தரோட வாழ முடியாம, அடுத்தவங்களோட வாழ்க்கையையும் சேர்த்து எதுக்காக வீணாக்கணும்.. நான் இப்படியே இருக்குறேன்.. கடைசி வரைக்கும் குணசேகரன் பொண்ணாவே..” என குரல் உயர்த்தினாள் பூர்வா... அவளின் முடிவில் தொனித்த தைரியத்திற்கு மோனிஷாவின் ஆதரவு காரணமாய் இருக்கலாம்..
பேசியவள் விறுவிறுவென அறைக்குள் சென்று கதவை சாத்துவதற்கு முன், “பயப்படாதீங்க.. என்னை எதுவும் பண்ணிக்க மாட்டேன்.. நான் உருவாக்காத உடம்பையும் உயிரையும் தற்கொலை பண்ணி பறிக்குறதுக்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை..” என தெளிவாக பேசிவிட்டே சென்றாள்..
“நீங்க என்னம்மா சொல்றீங்க??” என தாயிடம் கேட்ட வைஷ்ணவிக்கு, “நான் சொல்றதுக்கு என்ன இருக்கு.. கல்யாணத்துக்கு பிறகும் என் அண்ணன் தான் தாங்குனான்.. இப்ப என் புள்ளையையும் நீ தான் தாங்கணும்னு சொல்ற தைரியம் எனக்கில்லப்பா..” என்ற பதிலே கிடைத்தது..
“ஈஸ்வரி..” குணசேகரனின் குரலில் திரும்பிய ஈஸ்வரியிடம், “உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?? பூர்வா கபீரை காதலிக்குறான்னு..” என கேட்ட தங்கையை பார்வையில் அடக்கினான் கபீர்..
திருதிருவென விழித்த ஈஸ்வரி, “அவனுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கும் போதே சொல்லிட்டா.. நான் வேணாம்னு தான் சொன்னேன்.. அதான் இன்னைக்கு உங்க தங்கச்சிக்கிட்டேயே அதிகப்பிரசங்கித்தனமா கேட்டுட்டா.. என்ன பண்றதுன்னு தெரியாம கையை நீட்டினேன்..” கையை பிசைந்து கொண்டு வருந்தினார்..
“அறிவிருக்கா??” என பல்லை கடித்த குணசேகரன், “அப்பவே சொல்லி தொலைச்சிருந்தா அவக்கிட்ட பேசி பார்த்துருப்பேன்.. இப்ப பாரு.. நம்ம மேல இருந்த மொத்த நம்பிக்கையும் போயிடுச்சு.. என்ன சொல்லிட்டு போறான்னு கேட்டல்ல.. ஒரே பொண்ணா பெத்து வளர்த்தது கடைசி வரை என் வீட்டுலேயே கிடந்து மருகிட்டு கிடக்குறதுக்கா?? நான் அவக்கிட்ட என்னன்னு பேசுவேன்??” என்ற குணசேகரனின் குரல் உடைந்தது..
மேலும் அங்கிருந்து அண்ணனை சங்கடப்படுத்த விரும்பாமல் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் வைஷ்ணவி.. மோனிஷா வயிற்று பிள்ளையாக இருக்கும் போது மஞ்சள் கயிற்றை பறிகொடுத்த வைஷ்ணவிக்கு அடைக்கலம் கொடுத்த அண்ணன் வீட்டில் தான் பெற்ற பையனால் பிரச்சனை உண்டாகும் என்று எதிர்பார்த்திருக்க வில்லை.. ஹாலில் கிடந்த கணவனின் படத்தை வெறித்தபடியே அமர்ந்துவிட்ட தாயை பாவமாக பார்த்தபடியே நின்றாள் மோனிஷா..
சிறுவயதில் தன் குடும்பத்திற்கு பக்கபலமாய் இருந்த மாமாவின் நன்றி கடனை செலுத்துவதற்கு முன்பே மனதை நோகடிக்கும் அளவிற்கு கஷ்டத்தை கொடுத்து விட்டோமே என்ற வருத்தத்தில் விட்டத்தை வெறித்து கொண்டிருந்தான் கபீர்..
“வைஷு.. எந்திரி.. அந்த வீட்டு சம்பந்தத்தை பேசி முடிச்சிட்டு வரலாம்.. ஏன் லேட்டுன்னு கேட்டா ஏதாவது காரணம் சொல்லி சமாளிப்போம்.. மோனி.. நீயும் போய் கிளம்புடா.. அம்மா வருவா..” திடீரென வந்த குணசேகரன் பேசுவது புரியாமல் இன்னும் அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் மோனிஷா..
அவரின் குரலில் வெளியே வந்த கபீரோ நேருக்கு நேர் குணசேகரனை நோக்கும் மனதைரியமின்றி தலை கவிழ்ந்து நிற்க, மோனிஷாவிற்கு அண்ணன் மீது கோபம் கொப்பளித்து கொண்டிருந்தது.. அவனால் தானே அம்மா, மாமாவின் முன் கலங்கி நிற்கிறார்..
“அண்ணே.. பூர்வா எப்படி இருக்குறா?” என தயக்கமாக தொடங்கிய வைஷ்ணவிக்கு பதிலேதும் கிடைக்காமல் போக, “அவ்ளோ உறுதியா கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்றவளை என்ன பண்ணுறது?? எனக்கு தெரியுது.. அவளை பொண்ணு கேக்குற தகுதி என்கிட்டே இல்லை.. ஆனா இவ்ளோ நாள் நான் பட்ட கடனை தீர்க்குறதுக்கு ஒரு வாய்ப்பு கேக்குறேன்.. உனக்கு விருப்பம் இருந்தா மட்டும்..” என வார்த்தைகளை விழுங்கினார் வைஷ்ணவி..
மாமா நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார்.. ஏனெனில் படிப்பு செலவு, மருத்துவ செலவென அத்தியாவசிய தேவைகளுக்கு பாகுபாடின்றி மூன்று குழந்தைகளுக்குமே பணத்தை தாராளமாய் வாரி இறைத்தார் குணசேகரன்..
ஆனால் பூர்வீக இடத்தை தங்கைக்கு பிரித்து கொடுக்கும் போது, “இருக்கட்டும் வைஷு.. அவனோட எல்லா தேவையையும் நான் நிறைவேத்திட்டா சாதிக்குறதுக்குன்னு அவனுக்கு எதுவும் இருக்காது.. வளரட்டும்.. அவனோட சொந்த முயற்சியில ஒரு வீட்டை கட்டட்டும்.. அப்ப நான் உதவி பண்ணுவேன்னு எதிர்பார்ப்பு அவனுக்குள்ள இருக்க கூடாது.. அப்ப தான் தாய்மாமனா என்னோட கடமையை சரியா செஞ்சிருக்கேன்னு அர்த்தம்..” என்றார்..
இந்த பேச்சுவார்த்தை நடக்கும்போது அவனுக்கு வயது வெறும் பனிரெண்டு தான்.. எப்பொழுதுமே குணசேகரனுக்கு கபீரின் பேரில் பிடித்தம் உண்டு.. இவனுக்கும் அவரென்றால் தனிமரியாதை.. நண்பனுக்கும் மாமாவிற்கும் இடைப்பட்ட ஒரு உறவு அவர்களுக்குள்.. அது தான் இப்பொழுது திருகிக்கொண்டு முடிச்சாகி நிற்கிறது..
பழைய காட்சிகள் முடிந்ததும் “மாமா, பூர்வா கிட்ட நான் பேசி பாக்குறேன்..” குனிந்த தலை நிமிராமல் கூறியவனிடம், “கபீர், வேணாம்.. எனக்கு ரொம்ப தர்மசங்கடமா இருக்குது.. இதுநாள் வரைக்கு நான் எதையும் எதிர்பார்த்து பண்ணினதில்லை.. தங்கச்சி பையனுக்கு இப்ப இதை செஞ்சா நாளைக்கு நமக்கு ரெண்டு மடங்கா செய்வான்னு ஒரு காலத்துலேயும் யோசிச்சதில்லை.. பூர்வாவை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா ஏலத்துக்காக வீட்டுல வளர்த்த ஆட்டோட கதையா இருக்கும்.. வேணாம் ப்பா..” அவரின் பக்குவமான வார்த்தைகள் பேசியது..
“மாமா, ஒருதடவை..” கபீரின் குரல் கெஞ்சலாய் வர, “சரி உன் இஷ்டம்..” என்றுவிட்டார்.. குணசேகரனின் சூழ்நிலை தான் இக்கட்டில் மாட்டிக்கொண்டிருக்கிறது..
என்றாவது ஒருநாள் பிரதிபலன் எதிர்பார்த்து தான் உதவினாரோ?? என்று கேள்வி எழுந்துவிடுமோ என்ற தன்மானம் அடிக்கிறது.. ஊருக்கே வந்து சேராத டிசைன் வைத்த சைக்கிளை ஆறுவயது மகளுக்காக அறுபது கிலோமீட்டர் தாண்டி சென்று வாங்கி வந்த பாசமிகு தந்தையின் மனம் அடிவாங்குகிறது..
கபீர் சென்றபோது பூர்வா கட்டிலில் சுருண்டிருந்தாள்.. இவனை கண்டதும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தமர்ந்தவள் தரையையே வெறுமையாய் நோக்கினாள்..
“ம்க்கும்..” என செருமிக்கொண்டு அவன் தொடங்கும் முன், “என்ன?? எப்படியாவது பேசி மனசை மாத்திடுன்னு அனுப்புனாங்களா?? ஏன்னா அப்பாவால பேச முடியாது.. அம்மா சொன்னா கேக்க மாட்டேன்.. அத்தை.. பாவம்.. அவங்களை ஏன் இதுல இழுத்துக்கிட்டு.. கடைசியா சம்பந்தப்பட்ட ஆளே வந்தாச்சு.. நான் உறுதியா தான் இருக்குறேன்.. இது அட்ட்ராக்ஷனும் இல்லை.. இம்ப்ரெஷனும் இல்லை.. பிறந்ததுல இருந்தே பாக்குறேன்.. கபீர் அத்தான்னா பிடிக்கும்.. அந்த பிடிக்கும் வார்த்தை எப்ப காதலா மாறிச்சுன்னு கேட்டா தெரியாது.. பிறக்கும் போதே காதலா இருந்திருக்கலாம்.. ஆராய்ச்சி பண்ணுறதுக்குள்ள ரெண்டு பேருமே கிழவன் கிழவி ஆயிடுவோம்.. வாழ்க்கை முடிஞ்சதுக்கு அப்புறமா 96ல வர்ற மாதிரி ஒருநாள் கண்டுபிடிக்க வேண்டியது தான்.. இது உண்மையாவே காதல் தான்னு.. அந்த அளவுக்கு பொறுமை எனக்கில்லை.. நான் தெளிவா தான் இருக்குறேன்..” என மூச்சு விடாமல் பேசி முடித்தாள்..
பதில் பேச வார்த்தைகளின்றி விக்கித்து நின்றவனிடம், "அவங்க கிட்ட சொன்னதையே தான் இப்பவும் சொல்றேன்.. காதல்ல பின்வாங்க மாட்டேன்.. என் முடிவும் மாறாது.. கல்யாணம் பண்ணி வச்சா சேர்ந்து வாழலாம்.. இல்லைன்னாலும் வாழலாம்.. ரெண்டு பேரும் அவரவர் வீட்டுல.." என்றாள்..
வெளியே வரவும் எதிர்பார்த்து காத்திருந்த குணசேகரன், "ஏதாவது சொன்னாளா??" என கேட்க, “மாமா, என்னால எதுவும் பண்ண முடியல.. உங்களோட மனசாட்சிக்கு நான் ஏலத்துக்காக ஆளாக்குன ஆடா தெரிஞ்சா வேண்டாம்.. இதை அப்படியே விட்டுடலாம்.. நீங்க ஆளாக்குன கபீரா தெரிஞ்சா பூர்வாவுக்கு எது நல்லதோ அதை செஞ்சிடுங்க..” என்றுவிட்டு நடந்தான்..
தொடரும்...
Last edited: