இந்த ‘சுமங்கலி’ கருத்து எப்படித் தோன்றியிருக்கும்?
எனது கருத்து / கற்பனை என்று கூட சொல்லலாம்!
மனிதர்கள் காட்டுவாசிகளாய் இருந்து மெல்ல சிறு குழுக்களாய் மாறத் தொடங்கியது ஆற்றங்கரை நாகரிகங்களின் தொடக்கத்தில் என்று நாம் அனைவரும் அறிவோம்!
மனிதனை அலைய வைத்த முக்கியமான காரணி உணவு.
மனிதன் விவசாயத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிய பின் ஆற்றங்கரைகளில் நிரந்தரமாகக் குடியேறத் தொடங்கினான்.
அதற்கு முன் அவனது உணவிற்கான மூலங்கள் (sources) இரண்டு: 1. வேட்டை 2. சேகரித்தல்
இதனை வேட்டையாளர்-சேகரிப்பாளர் சமூகம் (hunter-gatherer) என்பர்.
குழுவில் பெரும்பாலும் ஆண்களே வேட்டைக்காரர்கள்.
பெண்கள் சேகரிப்பாளர்கள்.
ஆண்களின் வேலை குழு இருக்கும் (பாதுகாப்பான) இடத்தை (குகை)விட்டு நெடுந்தொலைவு சென்று வேட்டையாடி உணவு கொண்டு வருதல்.
பெண்களின் வேலை குடியிருக்கும் இடத்திற்கு அருகிலேயே இருக்கும் செடி கொடிகளின் பழம் காய் முதலியவற்றைச் சேகரித்தல்.
இதிலிருந்து மனித சமுதாயம் மாறி விவசாயிகளாய், ஆற்றங்கரைகளில் குடியேறிய பின்பும் பல நூற்றாண்டுகளாக இருந்த இந்த ‘வேட்டைக்கார-சேகரிப்பாள’ கூறுகளையும் பழக்கவழக்கங்களையும் மனிதனால் கைவிடவோ மாற்றிக்கொள்ளவோ இயலவில்லை!
இதற்கு ஒரு அடிப்படைக் காரணம் நமது பரிணாமக் கூறுகளிலேயே இது பொதிந்து இருப்பதுதான்!
(எடுத்துக்காட்டாய், ஆண்களின் உடம்பில் கொழுப்பு சேர்கையில் முதலில் வயிற்றுப் பகுதியைச் சுற்றித்தான் சேர்கிறது, இது அவர்களத் ஓட்டத்தைத் தடை செய்யாது. ஆயுதங்களைப் பயன்படுத்தும் கை, கால்கள் போன்றவை வலுவாக இருக்கும். ஆனால், பெண்களின் உடலில் கொழுப்பு சேர்கையில் கை, கால் என்றுதான் முதலில் சேரும். இது அவர்களது வயிற்றுப் பகுதியைக் கொழுப்பிலிருந்து விலக்கி வைக்கிறது! பொதுவாக ஆண்கள் ஒரு தலைமைக்குக் கீழ் கட்டுப்பட்டு, கொடுத்த கட்டளையைக் கேள்வி கேட்காமல் நிறைவேற்றும் தன்மையுடையவர்கள். பெண்களிடம் இந்தக் கூறு இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆண்களின் திசை அறிதல் உணர்வு பெண்களைவிட அதிகம். ஆனால், பெண்களுக்கு ஆபத்தை அறிதல், ஒரே நேரத்தில் பல விடயத்தில் கவனம் செலுத்துதல் போன்ற உணர்வுகள் அதிகம்!)
எனவேதான், மனிதன் ஆற்றங்கரைகளில் நிரந்தரமாக அமைந்து, சமூகம் என்று வளரத்தொடங்கியபோதும் இந்தக் கூறுகள் அவரைவிட்டுப் போகவில்லை.
போர் என்பது ஆண்களின் வேலையாகவே இருந்தது.
வீட்டு நிர்வாகம் என்பது பெண்களின் வேலையாகவே இருந்தது.
இவற்றுக்கேற்பவே நமது உடற்கூறுகளும் அமைந்தன.
எனவே, வேட்டை, போர் போன்ற உயிருக்கு உத்திரவாதமில்லாத வெளி வேலைக்கு ஆண்கள் சென்று வருகையில் அவர்கள் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று பெண்கள் கவலைப்பட்டனர்.
அவர்களது மனக்கவலைக்கு ஒரு வடிகாலாய் மதச் சடங்குகளை உண்டாக்கிக்கொண்டனர்.
போருக்குப் போகும் ஒரு ஆண் இறப்பது வெறும் உறவு இழப்பு மட்டுமல்ல.
போரில் வெல்லும் குழு தோற்ற குழுவின் பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டு செல்வர். அதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்கும்?
இதனாலேயே, போரில் ஆண்கள் இறந்தது தெரிந்தால் அவர்களின் பெண்களும் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர். (பின்னாளில் உருவான ‘சதி’ போன்ற வழக்கக்களுக்கு இதுவே மூலமாக இருந்திருக்கும்!)
இவற்றால் எல்லாம்தான் ஆண்-பெண்ணின் வாழ்க்கைப் பின்னப்படுகிறது.
ஆனால், ஒரு பெண்ணின் இருப்பு பெரும்பான்மையும் நோய், பிள்ளைப்பேறு முதலிய காரணங்கள்தான். எனவே, ஆணின் இறப்பு பெண்ணைப் பாதிக்கும் அளவிற்குப் பெண்ணின் இறப்பு ஆணைப் பாதித்திருக்காது. இது நம் சமூகங்களில் தோன்றிய இரண்டாம் தார மணம் முதலிய பழக்கங்களை விளக்கும்!
இப்படி என்றோ ஆதியில் இருந்த காட்டுவாசி வாழ்க்கையின் மிச்சங்கள்தான் இந்தக் கைம்பெண் கொடுமைகளும், ‘சுமங்கலி’ ஆசைகளும்!
எவ்வளவோ மாறி, எத்தனையோ ‘வளர்ச்சி’ அடைந்த பின்னும் இவற்றை எல்லாம் விட இயலாமல் நாம் அல்லாடுகிறோம்!