• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம்-1 : பூகம்பம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நாற்பத்தோராம் அத்தியாயம்

பாசறை

புத்த விஹாரத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அக்குதிரை வீரர்களில் மூன்று பேர் பரஞ்சோதிக்கு முன்னாலும், மூன்று பேர் பின்னாலுமாகப் பரஞ்சோதியைத் தங்களுக்கு நடுவிலேயே விட்டுக்கொண்டு சென்றார்கள். பொழுது நன்றாய் விடிந்த பிறகு பரஞ்சோதி அவர்களுடைய தோற்றத்தைக் கவனித்தான். அவர்கள் திடகாத்திரமுள்ள ஆஜானுபாகுவான மனிதர்கள் என்று தெரிந்து கொண்டான். இந்த வீரர்கள் ஏதோ ஒரு சைனியத்தைச் சேர்ந்தவர்களாய்த்தான் இருக்கவேண்டும். முக்கியமான யுத்த காரியமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் தன்னை ஏன் அந்தப் புத்த பிக்ஷு சேர்த்து அனுப்பினார்?

நேரமாக ஆக, பரஞ்சோதியின் மனக்கலக்கம் அதிகமாயிற்று. அவன் அந்த வீரர்களுக்கு முன்னால் போகவோ பின்னால் போகவோ முயன்ற போதெல்லாம், அவர்கள் அதற்கு இடங்கொடாமல் அவனை நடுவிலேயே விட்டுக் கொண்டு போனார்கள். இதைப் பார்க்கப் பார்க்க அவன் உள்ளத்தில் தனக்கு இவர்கள் வழிகாட்டி அழைத்துப் போகிறார்களா அல்லது சிறைப்படுத்திக் கொண்டு போகிறார்களா என்ற சந்தேகம் உதித்தது. ஸரீ பர்வதம் வடக்கே கிருஷ்ணா நதிக்கரையில் இருக்கிறதென்பது பரஞ்சோதிக்குத் தெரியும். ஆனால் அதிகாலையில் கிளம்பியதிலிருந்து இந்த வீரர்களோ மேற்குத் திசையை நோக்கியே போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவேளை கொஞ்ச தூரம் மேற்கு நோக்கிப் பிரயாணம் செய்த பிறகு வடக்கு நோக்கித் திரும்பலாம் என்று அவன் எண்ணியபடியும் நடக்கவில்லை.

சூரியன் உச்சி வானத்திற்கு வரும் வரையில் அவர்களுடன் பிரயாணம் செய்த பின்னர், பரஞ்சோதி தான் உண்மையில் சிறையாளியா இல்லையா என்பதை நிச்சயமாய்த் தெரிந்து கொள்ள விரும்பினான். அவ்விடத்தில் வடக்கு நோக்கித் திரும்பிய பாதையில் அவன் தன் குதிரையைத் திருப்பினான். கண்மூடித் திறக்கும் நேரத்தில் அந்த ஆறு குதிரை வீரர்களும் தன்னைச் சூழ்ந்து நிற்பதைக் கண்டான். அவர்களுடைய வேல்களின் முனைகள் அவனுடைய குதிரைமீது உராய்ந்து கொண்டிருந்தன.

எண்ணெய் ஊற்றி ஆயத்தமாய் வைத்திருக்கும் தீபத்தின் திரியானது அதன்மீது தீப்பட்டதும் சுடர்விட்டு எரியத் தொடங்குவதுபோல், பரஞ்சோதியின் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த ஆத்திரம் இப்போது கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. கோபத்தினால் அவனுடைய இரத்தம் கொதித்தது. கையிலே வேலை எடுத்தான் அதைத் தனக்கு அருகில் இருந்தவன் மீது பிரயோகிப்பதற்காக ஓங்கினான். ஆகா! என்ன ஏமாற்றம்! ஓங்கிய வேல் எங்கேயோ போய் விழுந்தது. வேலுக்கு உடையவனும் தொப்பென்று தரையில் விழுந்தான். எப்படி விழுந்தோம் என்பதே முதலில் பரஞ்சோதிக்குத் தெரியவில்லை. அப்புறம் தன் உடம்பின்மீது கயிறு ஒன்று சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டான். அந்த வீரர்களில் ஒருவன் சுருக்குப்போட்ட கயிற்றைத் தன்மீது எறிந்து தன்னைக் கீழே இழுத்துத் தள்ளிவிட்டான் என்பதை அறிந்தான். இரண்டாவது தடவை இவ்விதம் சூழ்ச்சியினால் தான் வெல்லப்பட்டதை நினைத்தபோது, பரஞ்சோதிக்கு ஒரு பக்கம் வெட்கமும் இன்னொரு பக்கம் ஆத்திரமும் பொங்கின.

அவனுடைய குதிரையோ தன் எஜமானனுக்கு இனிமேல் தன்னால் பயனில்லையென்று உணர்ந்து கொண்டதுபோல் வந்த வழியே திரும்பி ஓடிக்கொண்டிருந்தது. தப்பிச் செல்வதற்கு இவ்விதம் வழியே இல்லாமற் போகவே "இனிப் போராடுவதில் பயனில்லை; நடப்பது நடக்கட்டும்" என்று பரஞ்சோதி சும்மா இருந்தான். அந்த வீரர்களில் மூவர், குதிரை மீதிருந்து இறங்கிவந்து பரஞ்சோதியின் கரங்களை முதுகுப் பக்கம் சேர்த்து, பின் கட்டு முன் கட்டாகக் கட்டினார்கள். அந்த ஆறு குதிரைகளுக்குள்ளே அதிக வலிவும் ஆகிருதியும் உள்ள குதிரையின் மீது அவனை ஏற்றி வைத்தார்கள். அவனுக்குப் பின்னால், அவ்வீரர்களில் ஒருவனும் உட்கார்ந்து கொண்டான். மறுபடியும் குதிரைகள் மேற்குத் திசையை நோக்கிச் சென்றன.

அஸ்தமிக்க ஒரு ஜாமம் இருக்கும்பொழுது, பரஞ்சோதி தனக்கு முன்னால் ஓர் அபூர்வமான காட்சியைப் பார்த்தான். அப்போது அவர்கள் சென்ற பாறையானது வரவர மேடாகி வந்த பீடபூமியின் உச்சியை அடைந்திருந்தது. அங்கிருந்து பார்க்கும்போது வெகு தூரத்துக்கு வெகு தூரம் சமவௌிப் பிரதேசமாகக் காணப்பட்டது. அந்தப் பிரதேசத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் சைனியம் தண்டு இறங்கியிருந்தது.

ஆயிரக்கணக்கான போர் யானைகள் கருங்குன்றுகளைப் போல் வரிசைவரிசையாக அங்கு நின்றன. அந்தக் கருங்குன்றுகளுக்கு இடையிடையே அடித்திருந்த கூடாரங்கள் வெண்ணிற மணற் குன்றுகளைப்போல் தோன்றின. மற்றும் எண்ண இயலாத குதிரைகள், ஒட்டகங்கள், ரிஷபங்கள், ரதங்கள், வண்டிகள் ஆகியவை எங்கெங்கும் காணப்பட்டன. சர்க்கரை இறைந்து கிடக்கும் இடத்தில் மொய்க்கும் எறும்புகளைப்போல், லட்சோபலட்சம் வீரர்கள் சில இடங்களில் நெருங்கியும், சில இடங்களில் பரந்தும், வெகு தூரத்துக்கு வெகு தூரம் காணப்பட்டார்கள்.

கூடாரங்களின் மேலே வரிசை வரிசையாகக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் நடுநாயகமாக ஒரு பிரம்மாண்டமான கொடி வானளாவிப் பறந்து கொண்டிருந்தது. கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமுத்திரத்தை நெருங்கும்போது கேட்கும் 'ஹோ' என்ற பேரிரைச்சலைப் போல், இனந்தெரியாதபடி பல ஒலிகள் வந்து கொண்டிருந்தன. இந்தக் காட்சியைப் பார்த்த பரஞ்சோதியின் வாயிலிருந்து "ஆஹா!" என்ற சத்தம் எழுந்தது. அங்கே தண்டு இறங்கியிருப்பது பல்லவ சைனியந்தான் என்று எண்ணிய பரஞ்சோதியின் உள்ளத்தில், அப்போது அவனுடைய கட்டுண்ட நிலைமையையெல்லாம் மறக்கச் செய்துகொண்டு ஒரு பெரும் ஆர்வம் பூரித்து எழுந்தது. அது என்ன ஆர்வம் என்றால், மகத்தான வீரப் போருக்கு ஆயத்தமாகத் துடிதுடித்துக்கொண்டு நிற்கும் அந்த மகா சைனியத்தில் தானும் ஒரு போர் வீரனாகச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான்.

அந்தகாரம் சூழ்ந்த இரவில் பிரயாணம் செய்பவன் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கையில், திடீரென்று தோன்றிய மின்னலின் ஒளியிலே தான் போகவேண்டிய பாதையைக் கண்டுபிடிப்பதுபோல, பரஞ்சோதியும் தான் பிறவி எடுத்தது எதற்காக என்பதை அந்தக் கணத்தில் தௌிவாகக் கண்டுகொண்டான். ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவதற்காகவோ, தோத்திரப் பாடல்களை உருப்போட்டுப் பாடுவதற்காகவோ, கையில் சிற்றுளி கொண்டு கல்லைக் கொத்திக் கொண்டிருப்பதற்காகவோ, வர்ணங்களைக் குழைத்துச் சுவரில் சித்திரம் எழுதுவதற்காகவோ தான் பிறக்கவில்லை! கையில் வாளும் வேலும்கொண்டு போர்முனையில் நின்று, எதிரிகளின் தலைகளைப் பனங்காய்களைப் போல் உருட்டி அவர்கள் நெஞ்சில் வேலைப் பாய்ச்சி, இரத்த வெள்ளத்தில் நீந்தி, வெற்றி சங்கு முழக்கிப் பகைவர்களை ஹதாஹதம் செய்து விரட்டி 'வீராதி வீரன்' என்று உலகமெல்லாம் பாராட்டும்படி பெயர் எடுப்பதற்காகப் பிறந்தவன்தான் என்று உணர்ந்தான்.

இந்த எண்ணமாவது பரஞ்சோதிக்கு எல்லையற்ற குதூகலத்தை உண்டாக்கிற்று. ஆயனர் வீட்டில் புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்து அவன் பார்த்த மகேந்திர சக்கரவர்த்தியின் கம்பீர உருவம் அவன் கண்முன்னால் எழுந்தது. அதோ வானளாவிப் பறக்கும் கொடியின் அடியில் இந்த மகத்தான சைனியத்தின் பிரதம சேனாதிபதியான மகேந்திர சக்கரவர்த்தி வீற்றிருப்பார். அவர் முன்னிலையிலே தான் தன்னைக் கொண்டு போய் நிறுத்துவார்கள். சக்கரவர்த்தியின் சந்நிதியை அடைந்ததும், அவர் பாதங்களில் விழுந்து, 'பிரபு! பல்லவேந்திரா! தங்களுடைய வீர மகா சைனியத்தில் இந்தப் பட்டிக்காட்டில் பிறந்த அறியாச் சிறுவனையும் சேர்த்துகொள்ள அருள் புரிய வேணும்!" என்று வேண்டிக்கொள்வதென்று பரஞ்சோதி தீர்மானித்தான். சித்திரக் கலையுமாச்சு வர்ணச் சேர்க்கையுமாச்சு! ஆயனரும் நாகநந்தியும் எக்கேடு கெட்டாவது போகட்டும்!

இவ்விதம் பரஞ்சோதி எண்ணமிட்டுக் கொண்டே பாசறையை நெருங்கியபோது, அவனுடைய பொங்கி எழுந்த உற்சாகத்தை மீண்டும் சந்தேக நிழல் மறைத்தது. 'இங்கே இறங்கியிருப்பது பல்லவ சைனியந்தானா?' என்பதுதான் அந்தச் சந்தேகம். பல்லவ சாம்ராஜ்யத்தின் கொடி ரிஷபக்கொடி அல்லவா? இங்கே பறக்கும் கொடிகளில் காட்டுப் பன்றியின் உருவம் கடூரமாகக் காட்சியளிக்கின்றதே! ஒருவேளை இது வாதாபிச் சைனியமாக இருக்குமோ! பல்லவ இராஜ்யத்தின் மீது படையெடுத்து வரும் சைனியம் இது தானோ? அம்மம்மா! இவ்வளவு பிரம்மாண்டமான படை பலமுள்ள பகைவனா பல்லவ இராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறான்?

பாசறையின் முன் வாசலை அடைந்ததும், வீரர்கள் குதிரைகளின் மீதிருந்து கீழே இறங்கிப் பரஞ்சோதியையும் கீழே இறக்கிவிட்டு அவனை நடத்தி அழைத்துச் சென்றார்கள். பாசறைக்குள் புகுந்து சென்றபோது, பரஞ்சோதியின் மனத்தில் முன்னமே தோன்றியிருந்த சந்தேகம் உறுதியாயிற்று. பாசறையில் ஆங்காங்கு நின்ற வீரர்களின் தோற்றமும் அவர்களுடைய பேச்சின் பாஷையும், இந்த சைனியம் பல்லவ சைனியமாக இருக்க முடியாது என்று ஐயமறத் தெரிவித்தன.

"ஆஹா! பகைவர்களின் பாசறைதான் இது! இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டோமே? தப்பிச் செல்வதற்கு வழியே இல்லை போலிருக்கிறதே?" என்று பரஞ்சோதி எண்ணியபோது, அவனுடைய சப்த நாடியும் ஒடுங்கிவிட்டன. சற்று முன் உள்ளத்தில் ஏற்பட்ட குதூகலம் நிராசையாக மாறியது. அவன் உடம்பைப் பிணித்திருந்த கட்டுக்கள் அப்போது முன்னை விடப் பன்மடங்கு அதிகமாக வலித்தன. மனச் சோர்வினாலும் உடல் வலியினாலும் அவன் நிமிர்ந்து நடக்கக்கூட முடியாமல் தள்ளாடவே, அவனை அவ்வீரர்கள் இழுத்துக்கொண்டு போக வேண்டியதாக நேரிட்டது. அப்போது சற்றுத் தூரத்தில் அறிமுகமான முகம் ஒன்று தன்னை நோக்கி வருவதைப் பரஞ்சோதி கண்டான். அருகில் நெருங்கியதும் அந்த முகம் நேற்று முன்தினம் அவனுக்கு வழித்துணையாகக் கிடைத்த வஜ்ரபாஹுவின் முகந்தான் என்பது தெரிந்தது.

முதலில் பரஞ்சோதிக்குச் சிறிது உற்சாகம் உண்டாயிற்று. உடனே அவன் மனத்தில், 'நாம் இந்தக் கதியை அடைவதற்கு மூலகாரணம் இந்த மனிதன்தான்' என்ற எண்ணம் தோன்றியது. வஜ்ரபாஹுவோ பரஞ்சோதியைப் பார்த்து மிக்க அதிசயத்தை அடைந்தவனைப் போல், "தம்பி! இது என்ன கோலம்?" என்றான், பிறகு, அவனை அழைத்து வந்த வீரர்களைப் பார்த்து ஏதோ கேட்டுவிட்டு, "தம்பி பயப்படாதே! சத்யாச்ரய புலிகேசி மன்னரிடம் உள்ளது உள்ளபடி சொல்லு உனக்கு தீங்கு ஒன்றும் நேராது!" என்று கூறினான். வஜ்ரபாஹுவின் வார்த்தைகளைக் காட்டிலும் அவனுடைய பிரகாசமான கண்களில் மின் வெட்டைப்போல் தோன்றிய சமிக்ஞையானது பரஞ்சோதிக்கு அதிக தைரியத்தை ஊட்டியது.​
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நாற்பத்திரண்டாம் அத்தியாயம்

சத்யாச்ரயன்

வாதாபியைத் தலைநகராகக் கொண்டு, வடக்கே நர்மதை வரையிலும் தெற்கே துங்கபத்திரை வரையிலும் பரந்து கிடந்த சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியை - பாரத நாட்டில் அந்தக் காலத்திலிருந்த வீரர்களுக்குள்ளே ஒப்பற்ற மகா வீரனாகிய புலிகேசியை நேயர்கள் இப்போது சந்திக்கப் போகிறார்கள். அப்படிச் சந்திப்பதற்கு முன்னால், அந்த வீரனின் பூர்வ சரித்திரத்தை நேயர்கள் தெரிந்து கொள்ளுதல் உபயோகமாக இருக்கும். புலிகேசியும் அவனுடைய சகோதரர்களும் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களுடைய சிற்றப்பன் மங்களேசனுடைய கொடுமைக்கு ஆளாக நேர்ந்தது. மங்களேசனுடைய சிறையிலிருந்து அவர்கள் தப்பி ஓடி, வெகுகாலம் அடர்ந்த காடுகளில் ஒளிந்து வாழ்ந்தார்கள். அப்படிக் காட்டில் வசித்த காலத்தில் அவர்கள் அனுபவித்த அளவில்லாத கஷ்டங்கள் அவர்களுடைய தேகத்தை வஜ்ரதேகமாக்கி, அவர்களுடைய உள்ளத்தில் வயிரம் ஏற்றி அவர்களை இணையற்ற வீர புருஷர்களாகவும் ஈவிரக்கமற்ற கடூர சித்தர்களாகவும் செய்து விட்டன.

காலம் கை கூடி வந்தபோது, புலிகேசியும் காட்டை விட்டு வௌிவந்து, சிற்றப்பனை எளிதில் வென்று அப்புறப்படுத்திவிட்டு வாதாபிச் சிங்காதனத்தில் ஏறினான். பின்னர், தன் வீரத் தம்பிமார் துணைகொண்டு வாதாபி இராஜ்யத்தை விஸ்தரிக்கத் தொடங்கினான். வடதிசையில் அவனுடைய ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டு போய் நர்மதை நதிக் கரையை எட்டியபோது அவனுடைய சைனியம் உத்தர பாரதத்தின் ஏக சக்கராதிபதியாக விளங்கிய ஹர்ஷவர்த்தனரின் படைகளுடன் முட்டவேண்டியதாயிற்று. நர்மதை நதியின் இரு கரைகளிலும் பல வருஷ காலம் போர் நடந்தது. வாதாபிப் படைகள் எவ்வளவோ வீரத்துடன் போர் புரிந்தும், வடநாட்டிலிருந்து மேலும் மேலும் ஹர்ஷரின் சைனியங்கள் வந்துகொண்டிருந்தபடியால், முடிவான வெற்றி காணமுடியவில்லை. இந்த நிலைமையில் லட்சோபலட்சம் வீரர்கள் அடங்கிய பெரும் சைனியத்துக்கு ஹர்ஷவர்த்தனர் தாமே தலைமை வகித்து வருவதாகத் தெரியவந்தபோது, புலிகேசி மேலும் அவருடன் போராடுவது விந்திய பர்வதத்தில் முட்டிக் கொள்வதேயாகும் என்பதை உணர்ந்து சமாதானத்தைக் கோரினான். மகா புருஷரான ஹர்ஷவர்த்தனரும் அதற்கு உடனே இணங்கியதுடன் புலிகேசியின் வீர தீரங்களைப் பாராட்டி நர்மதைக்குத் தெற்கேயுள்ள பிரதேசத்துக்குச் சக்கரவர்த்தியாக அவனை அங்கீகரித்தார்.

பின்னர், புலிகேசியின் கவனம் தென்னாடு நோக்கித் திரும்பிற்று. அவ்விதம் திரும்புவதற்கு முக்கிய காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர்கள் ஜைன முனிவர்கள். புலிகேசி சிங்காதனம் ஏறுவதற்கு ஜைனர்கள் உதவிசெய்த காரணத்தினால், வாதாபியில் சமண முனிவர்களுக்கு விசேஷச் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. அவர்களுடைய முயற்சியினாலேயே கங்கபாடி மன்னன் துர்விநீதனுடைய மகளுக்கும் புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனுக்கும் விவாகம் நடந்தது.

காஞ்சி மகேந்திர சக்கரவர்த்தி ஜைன மதத்திலிருந்து விலகிச் சைவ சமயத்தை மேற்கொண்டபோது, நாடெங்கும் உள்ள சமணர்களின் உள்ளம் கொதிப்பை அடைந்தது. ஏனெனில், கல்வியிற் சிறந்த காஞ்சி மாநகரமானது வெகு காலமாக சமணர்களுடைய குருபீடமாக இருந்து வந்தது. காஞ்சியில் வேகவதியாற்றுக்கு அப்பாலிருந்த பகுதி 'ஜின காஞ்சி' என்று வழங்கி வந்தது. தென்பெண்ணையாற்றின் முகத்துவாரத்தருகில் இருந்த பாடலிபுரம் என்னும் ஊரில் தென்னாட்டிலேயே மிகச் சிறந்த சமணப்பள்ளி புகழுடன் விளங்கி வந்தது. இத்தகைய பிரதேசத்தில், சமணத்தின் செல்வாக்குத் தாழ்ந்து சைவம் ஓங்குவது என்பதைச் சமண சமயத்தலைவர்களால் சகிக்கக்கூட வில்லை.

இவர்களுடைய தூண்டுதலுடனே புலிகேசியின் ஏக சக்கராதிபத்திய வெறியும் சேரவே, அவ்வீர மன்னன் இது வரையில் யாரும் கண்டும் கேட்டுமிராத பிரம்மாண்டமான சைனியத்துடனே தென்னாட்டின் மேல் படையெடுப்பதற்குச் சித்தமானான். படையெடுப்புச் சைனியம் கிளம்பியபோது, வெற்றி முழக்கத்துடனே காஞ்சியில் பிரவேசித்து மகேந்திரனுக்குப் புத்தி புகட்டலாம் என்ற எண்ணத்துடன் ஜைன ஆசார்யர்களும் சைனியத்துடனே புறப்பட்டார்கள். ஆனால், தலைநகருக்கும் பாசறைக்கும் வித்தியாசம் அதிகம் என்பதையும் சக்கரவர்த்தி புலிகேசிக்கும் போர்த் தலைவன் புலிகேசிக்கும் மிக்க வேற்றுமை உண்டு என்பதையும் விரைவிலேயே அவர்கள் கண்டார்கள். தலைநகரிலேயே பூஜ்ய பாதர், ரவிகீர்த்தி முதலிய ஜைன குருமாருக்குச் சக்கரவர்த்தியைக் காட்டிலும் அதிகமான மரியாதை நடந்தது. போர்க்களத்திலோ அவர்களைத் திரும்பிப் பார்ப்பவர்கள் யாரும் இல்லை. அந்தக் குருமார் வைஜயந்தி பட்டணத்தைக் கொளுத்தக் கூடாது என்று சொன்னதைப் புலிகேசி அலட்சியம் செய்த பிறகு, அவர்களுக்குப் போர்க்களத்தில் இருக்கவே மனங்கொள்ளவில்லை. புலிகேசியிடம் சிறிது விவாதம் செய்து பார்த்த பிறகு, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள். சளுக்கச் சக்கரவர்த்தியை அவருடைய முக்கியப் படைத்தலைவர்கள் சகிதமாக நாம் சந்திக்கும்போது, மேற்கூறியபடி ஜைன குருமார்கள் பாசறையிலிருந்து போய் விட்டதைக் குறித்துத்தான் பேச்சு நடந்துகொண்டிருந்தது.

வானை அளாவிப் பறந்து கொண்டிருந்த வராகக் கொடியின் கீழே, விஸ்தாரமான கூடாரத்தின் நடுவில், தந்தச் சிங்காதனத்தில், மணிமகுடம் தரித்த புலிகேசி மன்னன் கம்பீரமாக அமர்ந்திருந்தான். சிங்காதனத்துக்கு எதிரே தரையிலே விரித்திருந்த இரத்தினக் கம்பளத்தில் ஏழெட்டுப் பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் படைத் தலைவர்கள் முதலிய பெரிய பதவி வகிப்பவர்களாக இருக்க வேண்டுமென்று அவர்களுடைய தோற்றத்திலிருந்து தெரிய வந்தது. அவர்கள் எல்லாருடைய கண்களும் பயபக்தியுடன் புலிகேசியின் முகத்தையே நோக்கியவண்ணம் இருந்தன.

புலிகேசியும் அவனுடைய படைத் தலைவர்களும் பேசிய பாஷையில் தமிழ்ச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் கலந்திருந்தன." (பிற்காலத்தில் இந்தக் கலப்பு மொழியே கன்னட பாஷையாயிற்று.) "லட்சணந்தான்! இந்த திகம்பர சந்நியாசிகள் என்ன எண்ணிக்கொண்டு நம்முடன் கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் இஷ்டப்படியே யுத்தத்தை நடத்துவதாயிருந்தால் உருப்பட்டாற் போலத்தான்" என்று புலிகேசி கூறினான். "அவர்கள் போய்விட்டதே க்ஷேமம்; அவர்கள் நம்மோடு வந்து கொண்டிருந்தால் யுத்தம் செய்யவே முடியாது; கோயில்களும் சங்கராமங்களும் ஸ்தூபங்களும் கட்டிக் கொண்டு போகலாம்!" என்றான் ஒரு படைத்தலைவன் எல்லாரும் கலகலவென்று சிரித்தார்கள்.

சிரிப்பு அடங்கியதும் இன்னொரு படைத் தலைவன், "ஜைனமுனிவர்களை அனுப்பிவிட்டோம்; சரிதான், ஆனால், புத்த பிக்ஷுவின் இஷ்டப்படிதானே யுத்தம் நடத்துவதாக ஏற்பட்டிருக்கிறது?" என்று கூறி புலிகேசியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். "ஆகா! அது வேறு விஷயம் பிக்ஷுவின் யோசனையைக் கேட்டதில் இதுவரையில் நாம் எவ்வித நஷ்டமும் அடையவில்லை. எந்த காரியமும் தவறாகப் போனதுமில்லை" என்றான் புலிகேசி. பிறகு, எதிரிலிருந்தவர்களில் ஒருவனைக் குறிப்பிட்டுப் பார்த்து, "நம் ஒற்றர் படை வெகு லட்சணமாக வேலை செய்கிறது போலிருக்கிறதே! பிக்ஷுவின் தூதனை நம்முடைய ஆட்கள் கண்டுபிடித்துக்கொண்டு வருவதற்கு மாறாக, தூதனல்லவா நம்மைத் தேடிப் பிடித்திருக்கிறான்?" என்று கூறியபோது இயற்கையாகவே கடுமையான குரலில் இன்னும் அதிகக் கடுமை தொனித்தது.

அந்த ஒற்றர் படைத்தலைவன் ஒருகணம் தலை குனிந்திருந்து விட்டு, பிறகு நிமிர்ந்து புலிகேசியை நோக்கி, "ஏதோ பிசகு நேர்ந்திருக்கிறது. நான் அனுப்பிய ஆட்கள் இன்னும் வந்து சேரவில்லை..." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கூடாரத்திற்குள் யாரோ வருவது கண்டு திரும்பிப் பார்த்து, "ஆகா! இதோ வந்துவிட்டார்களே!" என்றான். அப்போது, பின்கட்டு முன்கட்டாகக் கட்டியிருந்த பரஞ்சோதியை முன்னால் தள்ளிக்கொண்டு அவனைச் சிறைப்பிடித்து வந்த வீரர்கள் உள்ளே வந்துகொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த புலிகேசி, "இது என்ன? இது என்ன? இந்தச் சிறுவன் யார்?" என்று கேட்டது, பரஞ்சோதியின் காதில் இடி முழக்கம்போல் விழுந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம்

மர்ம ஓலை

இராஜாதிராஜனான புலிகேசி மன்னன் ஒல்லியாக உயர்ந்த ஆகிருதியும், வற்றி உலர்ந்து எலும்புகள் தெரிந்த தேகமும் உடையவனாக இருந்தான். அவனுடைய முகத்தோற்றம் இரும்பையொத்த நெஞ்சத்தையும், தயைதாட்சண்யம் இல்லாத கடூர சுபாவத்தையும் பிரதிபலித்தது. கோவைப் பழம்போல் சிவந்து அனல் கக்கிய அவனுடைய கண்களைப் பார்க்கும் போது, கழுகின் கண்களைப் போன்று தூரதிருஷ்டியுடைய கண்கள் அவை என்று தோன்றியது. புலிகேசியின் முகத்தைப் பார்த்ததும் நமக்கு ஒருகணம் திகைப்பு ஏற்படுகிறது. 'ஆ! இந்த முகத்தை இதற்கு முன்னால் எங்கேயாவது பார்த்திருக்கிறோமா என்ன?' என்று வியப்புறுகிறோம். 'கம்பீரக்களையுடன் கடூரம் கலந்த இந்த முகத்தையும் அறிவொளியுடன் கோபக் கனலைக் கலந்து வீசும் இந்தக் கண்களையும் வேறு எங்கேயும் பார்த்திருக்க முடியாது' என்று தீர்மானிக்கிறோம். 'இத்தகைய முகம் வேறு யாருக்காவது இருப்பதென்றால், அது யமதர்ம ராஜனாகத்தான் இருக்க வேண்டும்!" என்ற முடிவுக்கு வருகிறோம். புலிகேசியின் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட பரஞ்சோதியும் அதே முடிவுக்குத்தான் வந்தான்.

பரஞ்சோதியைப் பிடித்துக்கொண்டு வந்த வீரர்களின் தலைவன் சத்யாச்ரய புலிகேசிக்கு வணக்கம் செலுத்திவிட்டு, வடபெண்ணை நதிக்கரையிலுள்ள பௌத்தமடத் தலைவர் இந்த வாலிபனைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போகச் சொன்னதிலிருந்து நடந்தவற்றை விவரமாகக் கூறிவந்தான். அவன் சொல்லிமுடிப்பதற்குள்ளே புலிகேசி பொறுமை இழந்தவனாய், "அதெல்லாம் இருக்கட்டும்; இவன் யார்? எதற்காக இவனைக் கொண்டுவந்தீர்கள்?" என்று கோபக் குரலில் கர்ஜித்தான். வீரர் தலைவன் நடுங்கிய குரலில், "நாகநந்தி பிக்ஷுவிடமிருந்து சத்யாச்ரயருக்கு ஓலை கொண்டு வந்ததாக இந்த வாலிபன் சொல்லுகிறான். இதோ அந்த ஓலை!" என்று கூறி, பரஞ்சோதியிடமிருந்து வழியில் கைப்பற்றிய ஓலையைப் புலிகேசியிடம் சமர்ப்பித்தான். புலிகேசி ஓலையைப் பிரித்து, கவனமாகப் படித்தான். அப்போது அவனுடைய முகத்தில் வியப்புக்கும் குழப்பத்துக்கும் அறிகுறிகள் ஏற்பட்டன. ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்தபிறகும் தௌிவு ஏற்பட்டதாகத் தோன்றவில்லை. அவன் ஓலையைப் படித்தபோது, அவனுக்கு எதிரில் இருந்த படைத் தலைவர்கள் அவனுடைய முகத்தையே பார்த்தவண்ணம் இருந்தனர்.

பரஞ்சோதியோ சொல்லமுடியாத மனக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். அவன் நாகநந்தியின் ஓலையை எடுத்துக் கொண்டு கிளம்பியபோது, இம்மாதிரி பகைவர்களிடம் சிறைப்பட்டு எதிரி அரசன் முன்னால் நிற்க நேரிடுமென்று நினைக்கவே இல்லை. அந்த எதிரியின் பாசறையில் வஜ்ரபாஹுவைச் சந்தித்ததும், அவன் போகிறபோக்கில், "சத்யாச்ரய புலிகேசியிடம் உண்மையை உள்ளபடி சொல்லு!" என்று கூறியதும் அவனுடைய மனக் குழப்பத்தை அதிகமாக்கின.

இன்னும் நாகநந்தி தன்னிடம் ஓலையைக் கொடுத்த போது கூறிய வார்த்தைகள் நினைவு வந்தபோது அவன் தலையே கிறுகிறுக்கும் போல் ஆகிவிட்டது. 'இந்த ஓலையை நீ சத்யாச்ரயரிடமே கொடுக்க வேண்டும்; வேறு யாரிடமும் கொடுக்கக்கூடாது. சத்யாச்ரயரை ஒருவேளை நீ வழியிலேயே சந்தித்தாலும் சந்திக்கலாம். எப்போது எந்தக் கோலத்தில் அவர் இருப்பார் என்று சொல்லமுடியாது. அவரை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நீ அதிசயப்படாதே!' - இவ்விதம் நாகநந்தி பிக்ஷு கூறியது அவனுக்கு நினைவு வந்தது. 'நாகநந்தி கூறிய சத்யாச்ரயர் இந்த வாதாபி சக்கரவர்த்தி புலிகேசியா? நாம் கொண்டு வந்த ஓலையில் உள்ள விஷயம் அஜந்தா வர்ணக் கலவை சம்பந்தமானதுதானா? அல்லது, ஒரு பெரிய மர்மமான சூழ்ச்சியில் நாம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோமா?' என்று பரஞ்சோதி எண்ணியபோது, அவன் அறிவு குழம்பியது.

புலிகேசி சட்டென்று தலையைத்தூக்கி, எதிரே இருந்த படைத்தலைவர்களைப் பார்த்து, "இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? என்று கேட்டான். உடனே, "உங்களால் ஒரு நாளும் ஊகம் செய்ய முடியாது" என்று தானே மறுமொழியும் கூறிவிட்டு, இடிஇடியென்று சிரித்தான். இடிமுழக்கம் நிற்பதுபோலவே சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு, காவலர்களுக்கு நடுவில் கட்டுண்டு நின்ற பரஞ்சோதியை உற்று நோக்கினான். புலிகேசியினுடைய கழுகுக் கண்களின் கூரிய பார்வை பரஞ்சோதியின் நெஞ்சையே ஊடுருவுவது போலிருந்தது.

புலிகேசி அவனைப் பார்த்துக் கடுமையான குரலில், "பிள்ளாய்! உண்மையைச் சொல்! நீ யார்? எங்கு வந்தாய்? இந்த ஓலையைக் கொடுத்தது யார்? இதிலுள்ள விஷயம் இன்னதென்று உனக்குத் தெரியுமா?" என்று சரமாரியாகக் கேள்விகளைப் போட்டான். அந்தக் கேள்விகளில் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதவனாய் பரஞ்சோதி மௌனம் சாதித்தவண்ணம் நின்றான். அதனால் புலிகேசியின் கோபம் கணத்துக்குக் கணம் பொங்கிப் பெருகிற்று. அதைப் பார்த்த படைத் தலைவர்களில் ஒருவன், "பிள்ளையாண்டான் செவிடு போலிருக்கிறது!" என்றான். இன்னொருவன், "ஊமை!" என்றான். மற்றொருவன், "அதெல்லாம் இல்லை பையனுக்கு நம்முடைய பாஷை புரியவில்லை! அதனால்தான் விழிக்கிறான்!" என்றான்.

அப்போது புலிகேசி, "ஆமாம்; அப்படித்தான் இருக்க வேண்டும். ஜைன முனிவர்கள் கோபித்துக் கொண்டு போனதில் அதுதான் ஒரு சங்கடம். அவர்கள் இருந்தால் எந்த பாஷையாக இருந்தாலும் மொழிபெயர்த்துச் சொல்லி விடுவார்கள். போகட்டும், இவனைக் கொண்டுபோய்ச் சிறைப்படுத்தி வையுங்கள், பிறகு பார்த்துக் கொள்வோம்!" என்று கூறியவன், திடீரென்று, "வேண்டாம், இவன் இங்கேயே இருக்கட்டும். சற்று முன்பு வந்திருந்த வீரன் வஜ்ரபாஹுவை உடனே போய் அழைத்து வாருங்கள்!" என்றான்.

வஜ்ரபாஹுவை அழைக்க ஆள் போனபிறகு, புலிகேசி படைத் தலைவர்களைப் பார்த்துக் கூறினான். "இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறது, தெரியுமா? கேளுங்கள் அதிசயத்தை! இந்த ஓலை கொண்டுவருகிற பையனிடம் அஜந்தா வர்ண இரகசியத்தைச் சொல்லி அனுப்ப வேணுமாம். இரண்டு வருஷம் நான் அஜந்தா குகைகளிலேயே வசித்திருந்தும் அந்தப் புத்த பிக்ஷுக்களிடமிருந்து வர்ண இரகசியத்தை என்னால் அறிய முடியவில்லை. பிக்ஷுக்கள் அவ்வளவு பத்திரமாக அஜந்தா வர்ண இரகசியத்தைப் பாதுகாக்கிறார்கள். அப்படியிருக்க இந்தப் பிள்ளையிடம் அதைச் சொல்லி அனுப்பும்படி இந்த ஓலையில் எழுதியிருக்கிறது. எழுத்தோ நம் பிக்ஷு எழுதியதாகவே தோன்றுகிறது. இதைப்பற்றி நீர் என்ன நினைக்கிறீர், மைத்ரேயரே!" என்று சொல்லிக் கொண்டே, புலிகேசி மன்னன் அந்த ஓலையை ஒற்றர் படைத் தலைவனிடம் நீட்டினான்.

மைத்ரேயன் ஓலையை வாங்கிக் கவனமாகப் படித்தான். பின்னர் சக்கரவர்த்தியைப் பார்த்து, "சத்யாச்ரயா! இதில் ஏதோ மர்மமான செய்தி இருப்பதாகத் தெரிகிறது. பையனை விசாரிக்கிறபடி விசாரித்தால் தெரிகிறது!" என்றான். "அழகுதான், மைத்ரேயரே! பையனை எப்படி விசாரித்தாலும் அவன் சொல்கிறது நமக்கு விளங்கினால் தான் உபயோகம்? அதற்காகத்தான் வஜ்ரபாஹுவை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்றான் புலிகேசி.

இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வஜ்ரபாஹு கூடாரத்துக்குள் நுழைந்தான். புலிகேசியின் அருகில் வந்து வணங்கி, "இராஜாதி ராஜனே! மறுபடியும் ஏதாவது ஆக்ஞை உண்டா?" என்று கேட்டான். "வஜ்ரபாஹு, உம்மைப்போலவே இந்தப் பையனும் எனக்கு ஓர் ஓலை கொண்டு வந்திருக்கிறான். ஆனால், அதிலுள்ள விஷயம் மர்மமாக இருக்கிறது. ஓலையை யார் கொடுத்தார்கள், யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்பதை விவரமாக விசாரித்துச் சொல்லும், அதற்காகத்தான் உம்மை மீண்டும் தருவித்தேன்" என்றான்.

வஜ்ரபாஹு பரஞ்சோதியின் பக்கம் திரும்பி உற்றுப் பார்த்து, "ஆகா! இந்தப் பையனா? இவனை நான் முந்தாநாள் இரவு மகேந்திர மண்டபத்தில் பார்த்தேனே! இவனைப் பார்த்ததுமே எனக்கு சந்தேகம் உண்டாயிற்று. விசாரித்தேன்; ஆனால், பையன் அமுக்கன்; மறுமொழியே சொல்லவில்லை!" என்றான். "இப்போது விசாரியும், மறுமொழி சொல்லாவிட்டால் நாம் சொல்லச் செய்கிறோம்" என்றான் வாதாபி அரசன். "மன்னர் மன்னா! இவன் சுத்த வீரனாகக் காண்கிறான். இவனைப் பயமுறுத்தித் தகவல் ஒன்றும் அறிய முடியாது. நானே விசாரித்துப் பார்க்கிறேன்" என்று வஜ்ரபாஹு கூறி விட்டு பரஞ்சோதியை நோக்கி, "தம்பி! நான் அப்போதே சொன்னேனல்லவா, அதன்படி சத்யாச்ரயரிடம் உள்ளது உள்ளபடி சொல்லு! பயப்பட வேண்டாம். நான் உன்னை தப்புவிக்கிறேன்" என்றான்.

அதற்குப் பரஞ்சோதி, "ஐயா! எனக்குப் பயமே கிடையாது எதற்காகப் பயப்படவேண்டும்? உயிருக்குமேலே நஷ்டமாகக் கூடியது ஒன்றுமில்லை அல்லவா? இந்த ஓலையை நாகார்ஜுன பர்வதத்துக்குக் கொண்டுபோய்ச் சத்யாச்ரயரிடம் கொடுக்கும்படி நாகநந்திபிக்ஷு கூறினார். நீங்கள் சொல்லுகிறபடி இவருக்குத்தான் இந்த ஓலை என்றால், பெற்றுக்கொண்டு விடை எழுதிக் கொடுக்கட்டும் நான் எடுத்துக்கொண்டு திரும்புகிறேன். அல்லது இந்த ஓலை இவருக்கு அல்ல என்றால் ஓலையைத் திருப்பிக் கொடுக்கட்டும் வேறு என்ன நான் சொல்லக்கூடும்?" என்றான்.

வஜ்ரபாஹு புலிகேசியைப் பார்த்து, "அரசர்க்கரசரே! ஓலையை நாகநந்தி பிக்ஷுதான் கொடுத்ததாகவும், அதில் ஏதோ அஜந்தா வர்ணச் சேர்க்கையைப்பற்றி எழுதியிருப்பதாகவும் பிள்ளையாண்டான் சொல்கிறான். அந்த ஓலையை நான் சற்றுப் பார்வையிடலாமா?" என்று கேட்டான். புலிகேசி ஓலையை வஜ்ரபாஹுவிடம் கொடுத்து, "இதிலிருந்து தெரியக்கூடியது ஒன்றுமில்லை நீர் வேணுமானாலும் பாரும்" என்றான். வஜ்ரபாஹு ஓலையில் சிறிது நேரம் கவனம் செலுத்தி விட்டு, "பிரபு! நாகார்ஜுன பர்வதத்திலுள்ள புத்த சங்கராமத்தின் தலைவரின் திருநாமம் சத்யாச்ரய பிக்ஷு தானே?" என்று கேட்டான். "ஆமாம், அதனால் என்ன?" "இந்த ஓலை அவருக்கே இருக்கலாம் அல்லவா?" "இருக்கலாம்; ஆனால், நாகநந்தி அவருக்கு இம்மாதிரி விஷயத்தைப் பற்றி எழுத நியாயமே இல்லையே?"

"பிரபு! இந்த ஓலையைப் படித்ததும் நாகநந்தி பிக்ஷு கூறிய ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வருகிறது. கிருஷ்ணா நதிக் கரையோடு வேங்கி ராஜ்யத்தின்மேல் படையெடுத்துச் செல்லும் தங்கள் சகோதரருக்கும் செய்தி அனுப்பவேண்டும் என்று அவர் சொன்னார். ஒருவேளை தங்கள் சகோதரர் விஷ்ணுவர்த்தன மகாராஜாவுக்கு இதில் ஏதாவது செய்தி இருக்கலாம் அல்லவா?" இதைக் கேட்டதும் புலிகேசியின் முகம் பிரகாசமடைந்தது. "வஜ்ரபாஹு! நீர் மகா புத்திசாலி நம்முடனேயே நீர் இருந்து விடலாமே? பல காரியங்களுக்கு அனுகூலமாயிருக்கும்" என்றான்.

பிறகு, தன் படைத் தலைவர்களிடம் சிறிது கலந்து யோசித்து விட்டு, "எப்படியும் விஷ்ணுவர்த்தனனுக்கு நான் ஓலை அனுப்ப வேண்டியிருக்கிறது. ஓலையுடன் ஒன்பது வீரர்கள் போகட்டும். அவர்களுடன் இந்தப் பையனையும் அனுப்புங்கள். இவனுடைய ஓலையின் விஷயம் என் தம்பிக்கும் விளங்காவிட்டால், இவனை உடனே சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டு அனுப்புங்கள்!" என்றான். பிறகு வஜ்ரபாஹுவை நோக்கி, "இந்த விஷயத்தைப் பையனிடம் சொல்லும்" என்று ஆக்ஞாபித்தான். வஜ்ரபாஹு பரஞ்சோதியிடம், "தம்பி! நாகார்ஜுன மலைக்கு இங்கிருந்து சக்கரவர்த்தியின் ஓலையுடன் ஒன்பது வீரர்கள் நாளைக் காலையில் போகிறார்கள். அவர்கள் உன்னையும் அழைத்துப் போவார்கள். நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். நாளை இராத்திரி உன்னை அநேகமாக நான் வழியில் சந்திப்பேன்" என்றான்.

பரஞ்சோதி அகமும் முகமும் மலர்ந்தவனாய், "ஐயா! தங்களுடன் பிரயாணம் செய்வதாயிருந்தால் நரகத்துக்கு வேணுமானாலும் நான் வரச் சித்தம். தங்களிடம் கதை கேட்க அவ்வளவு ஆவலாக இருக்கிறது!" என்றான். "பையன் என்ன சொல்கிறான்?" என்று புலிகேசி கேட்டதற்கு, "பிள்ளையாண்டான் பலே கைகாரன்; தான் கொண்டுவந்த ஓலை தங்களுக்கு இல்லையென்றால் தன்னிடமே திருப்பிக் கொடுத்துவிடும்படி கேட்கிறான். இளங்கன்று பயமறியாது என்று தமிழிலே ஒரு பழமொழி உண்டு!" என்றான் வஜ்ரபாஹு. புலிகேசி சிரித்துவிட்டு, "அப்படியா? நல்லது; ஓலையைப் பையனிடமே கொடுத்து வைக்கலாம். இப்போதைக்கு அவனுடைய கட்டையும் அவிழ்த்து விடுங்கள்!" என்றான். ஓலையைப் பரஞ்சோதியிடம் கொடுத்ததோடு, அவனுடைய கட்டுக்களையும் உடனே அவிழ்த்து விட்டார்கள். பிறகு, அவனைச் சக்கரவர்த்தியின் சமூகத்திலிருந்து அழைத்துச் சென்றார்கள்.

மறு நாள் அந்தி மயங்கும் சமயத்தில் பரஞ்சோதியும் அவனுக்கு முன்னும் பின்னுமாகச் சென்ற ஒன்பது வீரர்களும் காட்டு மலைப் பாதையில் ஒரு குறுகிய கணவாயைத் தாண்டி, அப்பால் சற்றுத் தூரத்திலிருந்த ஒரு பழைய பாழடைந்த வீட்டை அடைந்தார்கள். அந்த வீட்டின் வாசல் திண்ணையில் ஒரு முதிய கிழவன் உட்கார்ந்திருந்தான். தலையும் தாடியும் நரைத்த அக்கிழவன் உலகப் பிரக்ஞையே அற்றவனாய்க் கையிலிருந்த ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்தான். பத்துக் குதிரைகள் சேர்ந்தாற்போல் வந்து அவ்வீட்டின் வாசலில் நின்றதைக்கூட அவன் பொருட்படுத்தவில்லை.

அந்த வீரர்களில் ஒருவன் கிழவனை என்னவோ கேட்க, அவன் இரண்டொரு வார்த்தையில் மறுமொழி கூறிவிட்டு மறுபடியும் ஜபமாலையை உருட்டலானான். அன்றிரவு அந்தப் பாழ் வீட்டிலேயே தங்குவதென்று அவ்வீரர்கள் முடிவு செய்தார்கள். தங்களில் நாலு பேரை நாலு ஜாமத்துக்குக் காவல் செய்யவும் ஏற்படுத்திக் கொண்டார்கள். எல்லாரையும்விட அதிகக் களைப்புற்றிருந்த பரஞ்சோதிக்குப் படுத்தவுடனேயே கண்ணைச் சுற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. தூக்கத்தில் ஆழ்வதற்கு முன்னால் அவன் மனத்தில் கடைசியாக 'வஜ்ரபாஹு இன்றிரவு சந்திப்பதாகச் சொன்னாரே? இனி எங்கே சந்திக்கப் போகிறார்?' என்ற எண்ணம் தோன்றியது.

பரஞ்சோதி அன்றைக்கும் தூக்கத்தில் கனவு கண்டான். புலிகேசியின் கூரிய கழுகுப் பார்வை ஒரு கணம் அவன் நெஞ்சை ஊடுருவிற்று. 'இவனை யானையின் காலால் இடறச் செய்யுங்கள்!' என்று புலிகேசி கட்டளையிடுகிறான். பரஞ்சோதி தன்னை இடற வந்த யானையின் மீது வேலை எறிந்துவிட்டு ஓடுகிறான். யானை அவனை விடாமல் துரத்தி வருகிறது. கடைசியில், அது கிட்ட நெருங்கிவிட்டது . யானையின் தும்பிக்கை தன் தோளில் பட்டதும், பரஞ்சோதி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறான். பார்த்தால் யானையின் முகம் அந்த வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து ஜபமாலை உருட்டிக் கொண்டிருந்த கிழவனின் முகமாகவும், துதிக்கை அக்கிழவனின் கையாகவும் மாறியிருக்கின்றன. இது கனவில்லை; உண்மையாகவே அந்தக் கிழவன் தன்னைத் தொட்டு எழுப்புகிறான் என்பதைப் பரஞ்சோதி உணர்ந்ததும் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நாற்பத்துநாலாம் அத்தியாயம்

மாயக் கிழவன்

கிழவனுடைய கையில் வேல் ஒன்று இருப்பதையும், அதைப் பெற்றுக்கொண்டு தன்னுடன் கிளம்பி வரும்படி கிழவன் சமிக்ஞை செய்வதையும், பலகணி வழியாக வந்த நிலவின் மங்கிய ஒளியில் பரஞ்சோதி உற்றுப் பார்த்துத் தெரிந்து கொண்டான். பரஞ்சோதி சிறிது தயங்கியபோது, கிழவன் அவனுடைய ஒரு கையைத் தன்னுடைய இடது கையினால் அழுத்திப் பிடித்தான். உடனே, பரஞ்சோதிக்குப் பழைய ஞாபகம் ஒன்று வரவே, அந்த மாயக் கிழவன் கொடுத்த வேலை வாங்கிக்கொண்டு துள்ளி எழுந்தான். இருவரும் வீட்டின் கொல்லைப்புறம் வழியாக வௌியே வந்தார்கள். பரஞ்சோதி தன்னுடைய குதிரையும் இன்னொரு குதிரையும் அங்கே சேணம் பூட்டி ஆயத்தமாக நிற்பதைக் கண்டான். இருவரும் குதிரைகள் மேல் பாய்ந்து ஏறிக்கொண்டார்கள்.

பரஞ்சோதி எதிர்பார்த்ததுபோல், கிழவனுடைய குதிரை உடனே பாய்ச்சலில் கிளம்பவில்லை. பரஞ்சோதிக்கு முதுகுப் புறத்தைக் காட்டிய வண்ணம் அவன் ஏதோ செய்து கொண்டிருந்தான். எனவே, பரஞ்சோதியும் தன்னுடைய குதிரையை இழுத்துப் பிடிக்க வேண்டியதாயிற்று. தாமதம் செய்துகொண்டிருந்த கிழவன் நடுவில், "தம்பி! என்னை யார் என்று தெரிகிறதா?" என்று கேட்டான். "தாடியைப் பார்த்து முதலில் ஏமாந்துதான் போனேன். கையைப் பிடித்து அழுத்தியதுந்தான் தெரிந்தது. பிசாசுக்குப் பயப்படாத சூரர் வஜ்ரபாஹு தாங்கள்தானே?" என்றான் பரஞ்சோதி.

உரத்த சத்தத்துடன் சிரித்துக்கொண்டு கிழவன் திரும்பிய போது அவன் முகத்திலிருந்த நரைத்த தாடியைக் காணவில்லை. தாடி நீங்கிய முகம் வீரன் வஜ்ரபாஹுவின் முகமாகக் காட்சி அளித்தது. "யோசித்துச் சொல்லு, அப்பனே! என்னோடு வருவதற்கு உனக்குச் சம்மதமா?" என்று வஜ்ரபாஹு கேட்க, பரஞ்சோதி, "எனக்கு வரச் சம்மதந்தான். உங்களுக்குத்தான் இங்கிருந்து போகும் உத்தேசம் இல்லை போலிருக்கிறது!" என்றான். "ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?" "பின்னே, இப்படிச் சத்தம் போட்டுப் பேசுகிறீர்களே? அவர்கள் விழித்துக்கொள்ள மாட்டார்களா!" "அவர்களை எழுப்புவதற்காகவேதான் இரைந்து பேசுகிறேன். தூங்குகிறவர்களை ஏமாற்றிவிட்டு ஓடித் தப்பித்துக் கொண்டான் என்ற அவப் பெயர் அச்சுதவிக்கிராந்தனுடைய வம்சத்தில் உதித்த வீரன் வஜ்ரபாஹுவுக்கு வரப்படுமா?" என்று கூறி, எதையோ நினைத்துக்கொண்டவன்போல் இடி இடியென்று சிரித்தான்.

இதற்குள் வீட்டு வாசலில் காவலிருந்த வீரன் குதிரைகளின் காலடிச் சத்தத்தையும் பேச்சுக் குரலையும் கேட்டு வீட்டைச் சுற்றிக் கொல்லைப்புறம் வந்து பார்த்தான். இரண்டு பேர் குதிரை மேலேறிக் கிளம்பிக் கொண்டிருப்பதை அவன் கண்டு, "ஓ!" என்ற கூச்சலுடன் வீட்டுக்குள் ஓடினான். உடனே, அந்த வீட்டுக்குள் வீரர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பும் சத்தமும், "என்ன? என்ன?" என்று கேட்கும் சத்தமும், "மோசம்!" "தப்பி ஓடுகிறார்கள்" என்ற கூக்குரலும் ஒரே குழப்பமாக எழுந்தன.

வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் ஏறியிருந்த குதிரைகள் முதல் நாள் வந்த பாதையில் திரும்பிச் செல்லத் தொடங்கின. ஆனால், வஜ்ரபாஹு குதிரையை வேண்டுமென்றே இழுத்துப் பிடித்து அதன் வேகத்தைக் குறைத்ததுடன் ஆங்காங்கு நின்று நின்று சென்றான். பரஞ்சோதி இந்த தாமதத்தைப்பற்றிக் கேட்டபோது, "சளுக்கர்கள் நம்மை வந்து பிடிப்பதற்கு அவகாசம் கொடுக்க வேண்டாமா? அவர்கள் வழி தப்பி வேறு எங்கேயாவது தொலைந்து போய் விட்டால்...?" என்றான். "போய்விட்டால் என்ன?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"இவ்விடத்துக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு மலைக் கணவாய் இருக்கிறதல்லவா? அந்தக் கணவாயில் துர்க்கா தேவி கோயில் ஒன்று இருக்கிறது. நேற்று வரும்போது நீ கவனித்தாயா?" "இல்லை!" "நீ எங்கே கவனிக்கப் போகிறாய்? உன்னுடைய கவனமெல்லாம் ஒருவேளை திருவெண்காட்டுக் கிராமத்திலே இருந்திருக்கும்...." "என்ன சொன்னீர்கள்?" "அந்தத் துர்க்கையம்மன் கோயில் வழியாக நான் நேற்றைக்கு வந்தபோது, இன்று சூரியோதய சமயத்தில் அம்மனுக்கு ஒன்பது உயிர்களைப் பலி கொடுப்பதாக வேண்டிக் கொண்டு வந்திருக்கிறேன். இவர்கள் வேறு வழியில் போய்விட்டால், என்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற முடியாதல்லவா?" ஆனால், மேற்கூறிய கிழவனின் வார்த்தைகள் பரஞ்சோதியின் செவியில் விழுந்தனவாயினும், அவன் மனத்தில் பதியவில்லை.

பெரியதொரு வியப்பு அவனுடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. திருச்செங்காட்டங்குடியிலிருந்து அவன் கிளம்பியதிலிருந்து, எத்தனை எத்தனையோ அதிசய சம்பவங்களைப் பார்த்திருக்கிறான். இவ்வளவிலும் இடையிடையே அவனுடைய மனமானது திருவெண்காட்டுக்குப் போய் வந்துகொண்டிருந்தது. ஆனால் அந்த விஷயம் இந்த வேஷதாரி வஜ்ரபாஹுவுக்கு எப்படித் தெரிந்தது என்று நினைத்து, பரஞ்சோதி ஆச்சரியக்கடலில் மூழ்கினான்.

பலபலவென்று பொழுது விடியும் தருணத்தில் வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் ஒரு மலைக் கணவாயை அடைந்தார்கள். அவர்கள் இதுகாறும் வந்த பாதையானது அங்கே குறுகி இருபுறமும் செங்குத்தாக, ஓங்கி வளர்ந்த பாறைச் சுவர்களின் வழியாகச் சென்றது. கணவாயைத் தாண்டியதும், ஒரு பக்கம் மட்டும் பாறைச் சுவர் உயர்ந்து, இன்னொரு பக்கம் அகல பாதாளமான பள்ளத்தாக்காகத் தென்பட்டது.

இந்த இடத்துக்கு வந்ததும் வஜ்ரபாஹு தன் குதிரையை நிறுத்தினான்; பரஞ்சோதியையும் நிறுத்தும்படிச் செய்தான். காலை நேரத்தில் குளிர்ந்த இளங்காற்று மலைக் கணவாயின் வழியாக ஜிலுஜிலுவென்று வந்தது. பட்சிகளின் மனோகரமான குரல் ஒலிகளுடன் தூரத்திலே குதிரைகள் வரும் காலடி சத்தம் டக், டக், டக், டக் என்று கேட்டது. "தம்பி! உன்னை மறுபடியும் கேட்கிறேன்; அந்தச் சளுக்க வீரர்கள் வருவதற்குள்ளே தீர்மானமாகச் சொல். உனக்கு என்னோடு வருவதற்கு இஷ்டமா?" என்று வஜ்ரபாஹு கேட்டான்.

"உங்களோடுதான் வந்துவிட்டேனே? இனிமேல் திரும்பிப் போக முடியுமா?" "உனக்கு இஷ்டமில்லாவிட்டால் இப்போதுகூட நீ திரும்பிப் போய் அவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம்" "சேர்ந்துகொண்டு..." "அவர்கள் போகும் இடத்துக்கு நீயும் போகலாம்." "அவர்கள் எங்கே போகிறார்கள்?" "நாகார்ஜுன மலைக்குப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் போகப் போவது யமலோகத்துக்கு!" "அங்கே அவர்களை அனுப்பப் போவது யார்!" "உனக்கு இஷ்டமிருந்தால் நீயும் நானுமாக; இல்லாவிட்டால் நான் தனியாக.."

"பரஞ்சோதி சிறிது யோசித்துவிட்டு, "தாங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டான். "பல்லவ சைனியத்தின் பாசறைக்கு!" "ஆஹா! நான் நினைத்தபடிதான்!" என்றான் பரஞ்சோதி. "உனக்கு எப்படித் தெரிந்தது?" "நேற்றெல்லாம் யோசனை செய்ததில் தெரிந்தது." "இன்னும் என்ன தெரிந்தது?" "தாங்கள் காஞ்சிச் சக்கரவர்த்தியின் ஒற்றர் என்றும் தெரிந்தது." "தம்பி! உன்னை என்னவோ என்று நினைத்தேன் வெகு புத்திசாலியாக இருக்கிறாயே?" "ஐயா! நான் தங்களுடன் வந்தால் பல்லவ சைனியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்வார்களா?" என்று கேட்டான் பரஞ்சோதி. "கட்டாயம் சேர்த்துக்கொள்வார்கள் கரும்பு தின்னக் கூலியா? உன்னைப் போன்ற வீரனைப் பெறப் பல்லவ சைனியம் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!" என்றான் வஜ்ரபாஹு.

பரஞ்சோதி இதற்கு மறுமொழி சொல்லவில்லை. சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, "அப்பனே! என்ன யோசிக்கிறாய்?" என்று வஜ்ரபாஹு கேட்டான். "என்னிடமுள்ள ஓலையை என்ன செய்வது என்றுதான்!" "அதோ தெரிகிற பள்ளத்தாக்கிலே ஓடுகிற தண்ணீரிலே போடு. அதனால் இனிமேல் பிரயோஜனம் ஒன்றுமில்லை." "நாகநந்தியும் ஆயனரும் எவ்வளவு ஏமாற்றமடைவார்கள்?" "ஆம்; நாகநந்தி பெரிய ஏமாற்றந்தான் அடைவார்!" என்று கூறிவிட்டு, வஜ்ரபாஹு 'கலகல'வென்று சிரித்தான். "ஏன் சிரிக்கிறீர்கள்?" "இப்படிப்பட்ட கும்பகர்ணனாகப் பார்த்து, அந்தப் புத்த பிக்ஷு ஓலையைக் கொடுத்தாரே என்றுதான்."

"ஐயா! தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் இப்படியே நாகார்ஜுன மலைக்குப் போய் நாகநந்தியின் ஓலையைக் கொடுத்து விட்டுப் பின்னர் பல்லவ சைனியத்தின் பாசறைக்கு வருகிறேன்." "வீண் வேலை, அப்பனே! நாகநந்தி உன்னிடம் கொடுத்த ஓலை அக்கினிக்கு அர்ப்பணமாகிவிட்டது!" "என்ன சொன்னீர்கள்!" "நாகநந்தியின் ஓலை தீயில் எரிந்துபோய்விட்டது என்றேன்." "இதோ என்னிடம் இருக்கிறதே!" "அது நான் எழுதிவைத்த ஓலை, தம்பி!" "என்னுடைய சந்தேகம் சரிதான்!" என்று பரஞ்சோதி கூறி ஓலைச் சுருளை எடுத்து வீசிப் பள்ளத்தாக்கில் எறிந்தான். "அன்றிரவு தீபத்தில் மயக்க மருந்து சேர்த்து என்னைத் தூங்க வைத்துவிட்டுத்தானே ஓலையை எடுத்தீர்கள்?" என்று கேட்டான். "உன்னுடைய வேலின் முனையைப்போலவே உன் அறிவும் கூர்மையாகத்தான் இருக்கிறது!" என்றான் வஜ்ரபாஹு.

வஜ்ரபாஹுவை ஆச்சரியமும் பக்தியும் ததும்பிய கண்களினால் பரஞ்சோதி பார்த்து, "ஐயா! நாகநந்தி என்னிடம் அனுப்பிய ஓலையில் என்ன எழுதியிருந்தது?" என்று கேட்டான். "புலிகேசியைக் காஞ்சி மாநகருக்கு உடனே வந்து, தென்னாட்டின் ஏக சக்ராதிபதியாக முடிசூட்டிக் கொள்ளும்படி எழுதியிருந்தது!" "அடடா! அப்படிப்பட்ட துரோகமான ஓலையையா நான் எடுத்துக்கொண்டு வந்தேன்? ஐயோ! என்ன மூடத்தனம்!" என்று புலம்பினான் பரஞ்சோதி. "போனதைப்பற்றி அப்புறம் வருத்தப்படலாம் இதோ சளுக்க வீரர்கள் யமனுலகம் போக அதிவேகமாக வருகிறார்கள். நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று வஜ்ரபாஹு கேட்டான். "தங்கள் விருப்பம் எப்படியோ, அப்படி!" "சரி, இந்தக் கணவாயின் இருபக்கமும் நாம் இருவரும் நிற்கலாம். முதலில் வருகிறவன் மார்பில் உன்னிடமுள்ள ஈட்டியைப் பிரயோகம் செய். அப்புறம் இந்த வாளை வைத்துக் கொண்டு உன்னால் முடிந்த வரையில் பார்!" என்று வஜ்ரபாஹு கூறி, தான் வைத்திருந்த இரண்டு வாள்களில் ஒன்றைக் கொடுத்தான். பரஞ்சோதி ஆர்வத்துடன் அந்த வாளை வாங்கிக் கொண்டு தன்னுடைய 'கன்னி'ப் போருக்கு ஆயத்தமாய் நின்றான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நாற்பத்தைந்தாம் அத்தியாயம்

மலைக் கணவாய்

சூரியன் உதயமாகி இரண்டு நாழிகைப் பொழுது ஆனபோது, அந்த மலைக் கணவாய்ப் பிரதேசம் கோரமான ரணகளமாய்க் காட்சியளித்தது. இளம் கதிரவனின் செங்கிரணங்கள் பாறையில் ஆங்காங்கு தோய்ந்திருந்த கரும் இரத்தத்தில் படிந்து ரணகளத்தின் கோரத்தை மிகுதிப்படுத்திக் காட்டின. கால் கை வெட்டுண்டும், தலை பிளந்தும் தேகத்தில் பல இடங்களில் படுகாயம் பட்டும் உயிரிழந்த ஒன்பது வீரர்களின் பிரேதங்கள் அந்தக் கணவாய் பாதையிலே கிடந்தன. அப்படிக் கிடந்த உடல்களினிடையே வஜ்ரபாஹு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அந்த உடல்களை அவன் புரட்டிப் பார்த்தும் அவற்றின் உடைகளைப் பரிசோதித்தும் எதையோ பரபரப்புடன் தேடிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. சற்றுத் தூரத்தில் ஒரு பாறையின் மீது பரஞ்சோதி உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் மிகுந்த சோர்வும் அருவருப்பும் குடிகொண்டிருந்தன. கையிலே வாளைப் பிடித்து ஊன்றிக் கொண்டிருந்தான். பக்கத்திலே இரத்தம் தோய்ந்த வேல் கிடந்தது.

சற்று முன்னால் நிகழ்ந்த கொடுமையான ஒரு சம்பவம் பரஞ்சோதியின் மனக் கண் முன்னால் நின்றது. சளுக்க வீரர்களில் மூன்று பேரைப் பரஞ்சோதியும் ஐந்துபேரை வஜ்ரபாஹுவும் யமனுலகுக்கு அனுப்பினார்கள். அவர்களுக்குச் சற்றுத் தூரத்திலேயே நின்ற ஒன்பதாவது வீரன் சண்டையிடாமல் குதிரையைத் திருப்பி விட்டுக் கொண்டு ஓடப் பார்த்தான். அப்போது வஜ்ரபாஹு வேலை எறிய, அது ஓடுகிறவன் முதுகில் போய்ப் பாய்ந்தது, அவனும் செத்து விழுந்தான். அதுவரையில் வஜ்ரபாஹுவின் அஸகாய சூரத்தனத்தைப் பார்த்துப் பார்த்து வியந்து கொண்டிருந்த பரஞ்சோதிக்கு இதைப் பார்த்ததும் பெரும் வெறுப்பு உண்டாயிற்று. "ஓடுகிறவன் முதுகில் வேல் எறிவதும் ஒரு வீரமா?" என்று வஜ்ரபாஹுவை அவன் மனம் இகழத் தொடங்கியது.

திடீரென்று 'ஆ!' என்ற சத்தத்தைக் கேட்டு பரஞ்சோதி திரும்பிப் பார்த்தபோது, வஜ்ரபாஹு ஓர் ஓலையைக் கையில் வைத்துக்கொண்டு படிப்பதைக் கண்டான். பிறகு, வஜ்ரபாஹு விரைந்து வந்து பரஞ்சோதி உட்கார்ந்திருந்த பாறைக்குப் பக்கத்தில் நின்ற தன் குதிரைமீது ஏறிக் கொண்டான். பரஞ்சோதி இன்னும் எழுந்திராமல் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, "தம்பி! நீ வரப்போவதில்லையா?" என்று கேட்டான். பரஞ்சோதி ஆசாபங்கமும் அருவருப்பும் நிறைந்த கண்களினால் ஒரு தடவை வஜ்ரபாஹுவைப் பார்த்துவிட்டு மறுபடியும் முன்போல் தலையைக் குனிந்து கொண்டான்.

வஜ்ரபாஹு குதிரையுடன் பரஞ்சோதியின் அருகில் வந்து, "அப்பனே! கைதேர்ந்த வீரனைப் போல் நீ சண்டையிட்டாய். அதிலாகவத்துடன் போர் புரிந்து மூன்று ராட்சஸச் சளுக்கர்களைக் கொன்றாய். உன்னைப் பல்லவ சைனியத்தின் குதிரைப் படைத்தலைவனாக ஆக்கவேண்டும் என்று பல்லவ சேனாதிபதியிடம் சொல்ல எண்ணியிருக்கிறேன். இத்தகைய சோர்வும் சோகமும் உன்னை இப்போது பிடித்ததன் காரணம் என்ன?" என்று கேட்டான். பரஞ்சோதி மறுமொழி சொல்லவும் இல்லை; தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. வஜ்ரபாஹுவின் முகத்தையே பார்க்கவிரும்பாதவன்போல் கிழக்கே மலைக்கு மேலே சூரியன் தகதகவென்று ஒளி வீசிச் சுழன்று கொண்டிருந்த திசையை நோக்கினான்.

வஜ்ரபாஹு குதிரையை இன்னும் கொஞ்சம் பரஞ்சோதியின் அருகில் செலுத்திக்கொண்டு கூறினான்: "தம்பி! உன்னை இந்த நிலையில் பார்த்தால் எனக்கு யாருடைய ஞாபகம் வருகிறது தெரியுமா? குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் இருதரப்பு சைனியங்களும் வந்து யுத்தத்துக்கு ஆயத்தமாக நின்றன. யுத்தம் ஆரம்பிக்க வேண்டிய சமயத்தில் அர்ச்சுனன் வில்லைத் தேர்த்தட்டில் போட்டுவிட்டு, 'எனக்கு ராஜ்யமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்னால் யுத்தம் செய்ய முடியாது!' என்று சோகமடைந்து விழுந்தான். உன்னை இப்போது பார்த்தால் அந்த அர்ச்சுனனைப் போலவே இருக்கிறது."

அர்ச்சுனன் என்ற பெயர் காதில் விழுந்தவுடனேயே பரஞ்சோதி வஜ்ரபாஹுவை நோக்கினான். அவனுடைய கண்களிலே சோர்வு நீங்கி ஒரு புதிய ஒளி சுடர் விட்டது. வஜ்ரபாஹு நிறுத்தியதும், "அப்புறம் என்ன நடந்தது?" என்று ஆர்வத்துடன் கேட்டான். "நல்ல வேளையாக அர்ச்சுனனுக்குக் கிருஷ்ண பகவான் ரதசாரதியாக அமைந்திருந்தார். பரமாத்மா அர்ச்சுனனைப் பார்த்து 'அர்ச்சுனா! எழுந்திரு! நீ ஆண்பிள்ளை! க்ஷத்திரியன்! யுத்தம் செய்வது உன் தர்மம், கையிலே வில்லை எடு!' என்றார். இந்த மாதிரி இன்னும் பதினெட்டு அத்தியாயம் உபதேசம் செய்தார்! அதனால் அர்ச்சுனனுடைய சோர்வு நீங்கி மறுபடியும் ஊக்கம் பிறந்தது..." என்று சொல்லி வஜ்ரபாஹு நிறுத்தினான். "பிறகு?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"பிறகு என்ன? அர்ச்சுனன் காண்டீபத்தைக் கையில் எடுத்து நாணேற்றி டங்காரம் செய்தான். கிருஷ்ணபகவான் பாஞ்ச ஜன்யம் என்கிற சங்கை எடுத்து 'பூம் பூம்' என்று ஊதினார். உடனே மகாபாரத யுத்தம் ஆரம்பமாயிற்று." "யுத்தம் எப்படி நடந்தது?" என்றான் பரஞ்சோதி. "லட்சணந்தான்; இங்கே நான் உட்கார்ந்து உனக்குப் பாரத யுத்தக் கதை சொல்லிக் கொண்டிருந்தால், இப்போது நடக்க வேண்டிய யுத்தம் என்ன ஆகிறது?" என்று சொல்லி விட்டு வஜ்ரபாஹு தன்னுடைய குதிரையைத் திருப்பிக் கொண்டு அந்த மலைப் பாதையில் மேலே போகத் தொடங்கினான்.

பரஞ்சோதி துள்ளி எழுந்து வேலையும் வாளையும் எடுத்துக் கொண்டு தன் குதிரையின் மீது தாவி ஏறினான். விரைவில் அவன் வஜ்ரபாஹுவின் அருகில் போய்ச் சேர்ந்தான். வஜ்ரபாஹு திரும்பிப் பார்த்து, "தம்பி! வந்து விட்டாயா? உன் முகத்தைப் பார்த்தால், என்னோடு சண்டை பிடிக்க வந்தவன் மாதிரி தோன்றுகிறது; அப்படித்தானே?" என்றான். "பயப்படாதீர்கள் அப்படி நான் உங்களோடு சண்டை செய்ய வந்திருந்தாலும் பின்னாலிருந்து முதுகில் குத்திவிட மாட்டேன்! முன்னால் வந்துதான் சண்டையிடுவேன்! போர்க்களத்திலிருந்து ஓடும் எதிரியின் முதுகில் வேலை எறிந்து கொல்லும் தைரியம் எனக்குக் கிடையாது!" என்று பரஞ்சோதி கசப்பான குரலில் சொன்னான்.

வஜ்ரபாஹு சற்று மௌனமாயிருந்துவிட்டு, "அப்பனே! ஓடித் தப்ப முயன்றவனை நான் வேல் எறிந்து கொன்றிராவிட்டால் என்ன நேரும் தெரியுமா?" என்றான். "என்னதான் நேர்ந்துவிடும்?" "நாம் பார்த்த மாபெரும் வாதாபி சைனியம் ஒரு மாதத்திற்குள்ளாகக் காஞ்சி நகரின் வாசலுக்கு வந்து சேர்ந்து விடும். வைஜயந்தி பட்டணத்துக்கு என்ன கதி நேர்ந்ததென்று சொன்னேன் அல்லவா?" "வைஜயந்தியின் கதி காஞ்சிக்கு நேருமா? பல்லவ சைனியம் எங்கே போயிற்று? மகேந்திர சக்கரவர்த்தி எங்கே போனார்?" "அதுதானே மர்மமாயிருக்கிறது, தம்பி! காஞ்சியிலிருந்து கிளம்பிய மகேந்திர பல்லவர் எங்கே போனார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை! அவர் இன்னும் பல்லவ சைனியத்தின் பாசறைக்கு வந்து சேரவில்லையாம்!" என்றான் வஜ்ரபாஹு. பரஞ்சோதி சற்றுச் சும்மா இருந்துவிட்டு, "ஐயா! அப்புறம் அர்ச்சுனன் என்ன செய்தான்? சொல்லுங்கள்!" என்று கேட்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நாற்பத்தாறாம் அத்தியாயம்

புலிகேசியின் காதல்

வறண்ட மலைப் பிரதேசங்களையும் அடர்ந்த வனப் பிரதேசங்களையும், நீர் வற்றி வெண்மணல் பரந்த நதிகளையும் கிளி கொஞ்சும் மாந்தோப்புக்கள் சூழ்ந்த அழகிய கிராமங்களையும் கடந்து வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் இடைவிடாது பிரயாணம் செய்து கொண்டு போனார்கள். சில சமயம் வஜ்ரபாஹு வீர ரஸம் செறிந்த பாரத யுத்தக் கதைகளைப் பரஞ்சோதிக்குக் கூறுவான். அர்ச்சுனனுடைய வில் தொழில் திறன்களையும், அபிமன்யுவின் அசகாய சூரத்தனத்தையும், பீமனுடைய கதாயுதம் நிகழ்த்திய விந்தைகளையும் பற்றி வஜ்ரபாஹு சொல்லும் போதெல்லாம் பரஞ்சோதிக்கு ரோமாஞ்சம் உண்டாகும். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தானும் பாண்டவர்களின் கட்சியில் நின்று வீரப் போர் செய்வதாக எண்ணிக் கொள்வான். அவனையறியாமலே அவனுடைய கைகள் வில்லை வளைத்து நாணேற்றும்; பகைவர் மீது வேலை வீசும்; வாளைச் சக்கராகாரமாய்ச் சுழற்றும்.

இன்னும் சில சமயம், வஜ்ரபாஹு ஆழ்ந்து யோசனை செய்யத் தொடங்கி விடுவான். அப்போது பரஞ்சோதி கேட்கும் கேள்விகளுக்கு அவன் விடை சொல்லமாட்டான். மேடு, பள்ளம், காடு, தண்ணீர் என்று பாராமல் குதிரையை நாலு கால் பாய்ச்சலில் விடுவான். அவன் பின்னோடு பரஞ்சோதி குதிரையைச் செலுத்திக் கொண்டு செல்வதே பெரும் பிரயத்தனமாயிருக்கும். இன்னும் சில சமயம் வஜ்ரபாஹு வாதாபி சைனியத்தின் படையெடுப்பைப் பற்றியும் பல்லவ ராஜ்யத்துக்கு வந்திருக்கும் பேரபாயத்தைப் பற்றியும் பேசுவான். அப்போதெல்லாம் அவனுடைய தொனியில் கவலை நிறைந்திருக்கும். அமைதி குடி கொண்ட அழகிய கிராமங்களின் ஓரமாக அவர்கள் போகும்போது, "ஆஹா! இந்தக் கிராமங்களுக்கெல்லாம் இன்னும் கொஞ்சநாளில் என்ன கதி நேரப் போகிறதோ, தெரியவில்லையே?" என்று சொல்லுவான்.

நீண்ட கிளைகளை நாலாபுறமும் பரப்பிக் கொண்டு குளிர்ந்த நிழல் தந்து நின்ற விசாலமான ஆலமரங்களையும், பசுமையான தென்னந் தோப்புக்களையும் பார்க்கும்போதெல்லாம் வஜ்ரபாஹு பெருமூச்சு விடுவான். "மறுபடியும் நாம் இந்தப் பக்கம் வரும்போது கண் குளிரும் இந்தப் பசுமையைக் காண்போமா?" என்பான். இந்த அதிசயமான கவலைக்குக் காரணம் என்னவென்று பரஞ்சோதி வற்புறுத்திக் கேட்டபோது வஜ்ரபாஹு கூறினான்; "அப்பனே! நீ அந்த வாதாபி சைனியத்தின் பாசறையை முழுவதும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்தேன்! அந்த பிரம்மாண்டமான யானைப் படையையும் நினைத்து, இந்தப் பசுமையான மரத்தோப்புகளையும் பார்த்தால், எனக்கு கண்ணில் ஜலம் வருகிறது. ஒரு யானை ஒரு நாளில் எவ்வளவு ஆகாரம் சாப்பிடும், தெரியுமா?" "தெரியாது, ஐயா!" "ஆறு மரக்கால் அரிசி, ஒன்பது தார் வாழைப்பழம், இருபத்தைந்து தேங்காய், ஓர் ஆலமரத்தில் பாதி இவ்வளவையும் சாப்பிட்ட பிறகு யானையின் பசி அடங்காது!" "அம்மம்மா!" என்றான் பரஞ்சோதி.

"இவ்வளவுக்கும் மேலே யானைப்பாகனுக்கும் அதன் வயிற்றில் இடம் இருக்கும்! ஆனால் யானைகள் சைவ விரதம் கொண்டவையாகையால் யானைப்பாகனைச் சாப்பிடுவதில்லை!" பரஞ்சோதி சிரித்துவிட்டு, "வாதாபிப் படையில் அப்படி எத்தனை யானைகள் இருக்கின்றன?" என்று கேட்டான். "பதினையாயிரம் யானைகள், அப்பனே! பதினையாயிரம் யானைகள்! இவ்வளவு யானைகளும் ஒரு தடவை காஞ்சிநகர் வரையில் வந்துவிட்டு திரும்பினால் போதும்! அவை வந்துபோன வழியெல்லாம் பசுமையென்பதே இல்லாமல் பாலைவனமாய்ப் போய்விடும்." "காஞ்சி நகரம் வரையில் வாதாபி சைனியம் வந்துவிடும் என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அது ஏன்?"

"பதினையாயிரம் யானைகளையும் ஐந்து லட்சம் காலாட் படைகளையும் யாரால் தடுத்து நிறுத்த முடியும் தம்பி? கடவுளே பார்த்து நிறுத்தினால்தான் நிறுத்தியது!" "காஞ்சிக் கோட்டையை ஏன் அவ்வளவு பத்திரப்படுத்தினார்கள் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது" என்று பரஞ்சோதி சொன்னதைக்கேட்டு வஜ்ரபாஹு ஏளனக் குரலில் சிரித்தான். "ஏன் சிரிக்கிறீர்கள், ஐயா?" என்று பரஞ்சோதி கேட்டான். "காஞ்சிக் கோட்டையை ரொம்பவும் பத்திரப்படுத்தி இருப்பதாகத்தான் ஒரு காலத்தில் நான் கூட நினைத்தேன். ஆனால் அந்த எண்ணம் எவ்வளவு தவறு என்று இப்போது தெரிகிறது." "ஏன்? கோட்டைக்குப் பத்திரம் போதாதா?" என்று பரஞ்சோதி கேட்டான். இரகசியச் சுரங்க வழியாகத் தன்னை நாகநந்தி வௌியேற்றியது அவன் ஞாபகத்துக்கு வந்தது.

"வாதாபி யானைகள் சாராயத்தைக் குடித்துவிட்டு வந்து காஞ்சிக் கோட்டையின் கதவுகளை மோதும்போது கோட்டைக் கதவுகள் எப்படி நொறுங்கிச் சின்னா பின்னமாகப் போகின்றன என்பதை நினைத்தால் சிரிப்பு வருகிறது" என்றான் வஜ்ரபாஹு. "இதென்ன விந்தை? யானைகள் சாராயம் குடிக்குமா என்ன?" "யானைகளை மாமிச பக்ஷணிகளாகச் செய்ய முடியவில்லை. ஆனால் மதுபானம் செய்யப் பழக்கியிருக்கிறார்கள். வாதாபி சைனியத்தில் ஆயிரக்கணக்கான வண்டிகளில் பெரிய பெரிய சால்களில் சாராயம் கொண்டு வருகிறார்கள். யானைகளைச் சாராயம் குடிக்கச் செய்து கோட்டைக் கதவுகளை முட்டச் செய்யப்போகிறார்களாம்!" "இது என்ன அநாகரிக யுத்தம்" என்றான் பரஞ்சோதி. "யுத்தமே அநாகரிகந்தான், தம்பி!" என்றான் வஜ்ரபாஹு.

"எல்லா யுத்தத்தையும் அநாகரிக யுத்தம் என்று சொல்ல முடியுமா? நாட்டைக் காப்பதற்காக மகேந்திர சக்கரவர்த்தி நடத்தும் யுத்தம் அநாகரிக யுத்தமா?" என்றான் பரஞ்சோதி. "மகேந்திர சக்கரவர்த்தியின் பெயரை மட்டும் என் காது கேட்கச் சொல்லாதே! தேசப் பாதுகாப்பை அசட்டை செய்து விட்டு ஆடலிலும் பாடலிலும் அவர் காலம் கழித்ததை நினைத்தால் எனக்குக் கோபம் கோபமாய் வருகிறது!"

பரஞ்சோதி வஜ்ரபாஹுவின் முகத்தைச் சற்றுக் கவனமாய்ப் பார்த்துவிட்டு, "அப்படியானால், காஞ்சிக் கோட்டையைப் பாதுகாக்கவே முடியாது என்று நினைக்கிறீர்களா?" என்றான். "வாதாபி சைனியம் நேரே காஞ்சிக்கு வந்துசேர்ந்தால் காஞ்சிக் கோட்டையைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது!" "அப்படி வந்து சேராதல்லவா?" "அதன் பொருட்டுத்தான் ஓட முயன்றவன் முதுகில் வேலை எறிந்து கொன்றேன். நாகநந்தி கொடுத்ததாகப் புலிகேசியிடம் ஓர் ஓலை கொடுத்திருக்கிறேன். அதைப்பற்றிப் புலிகேசிக்குச் சந்தேகம் தோன்றாதிருந்தால் காஞ்சியைத் தப்புவிக்கலாம்." "நீங்கள் கொடுத்த ஓலையில் என்ன எழுதியிருந்தது, ஐயா?"

"தம்பி! அந்த விஷயத்தைப்பற்றி நீ கேளாமலிருந்தால் நான் பொய் சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படாது!" என்று முன்னொரு தரம் பரஞ்சோதி கூறிய வார்த்தைகளை வஜ்ரபாஹு இப்போது திருப்பிக் கூறினான். பரஞ்சோதி சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, "ஐயா! நீங்கள் கொடுத்த ஓலையின் பலனாகச் சளுக்க சைனியம் காஞ்சிக்கு வராமல் வாதாபிக்கே திரும்பிப் போய் விடுமா?" என்று கேட்டான். "அப்பனே! காஞ்சி என்ற பெயரைக் கேட்டதும் புலிகேசியின் கண்களில் தோன்றிய ஆசை வெறியை நீ பார்த்திருந்தாயானால் இவ்விதம் கேட்டிருக்க மாட்டாய். என்னை அச்சுத விக்கிராந்தனுடைய சந்ததியில் வந்தவனாக நினைத்துக்கொண்டே புலிகேசி தன்னுடைய மனத்தை நன்றாக திறந்து காட்டினான்..." "அது யார் அச்சுதவிக்கிராந்தன்?" என்று பரஞ்சோதி குறுக்கிட்டுக் கேட்டான். எந்த விஷயத்தையும் ஐயந்திரிபறத் தெரிந்து கொள்வதில் அவனுக்கு அடங்காத ஆசை ஏற்பட்டிருந்தது.

"பாண்டிய நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் மத்தியில் இருநூறு வருஷத்துக்கு முன் தனி அரசு செலுத்திய அச்சுதக் களப்பாளனைப் பற்றி நீ கேட்டதில்லையா? அந்த அச்சுதக் களப்பாளனின் வம்சம் நான் என்றதும் புலிகேசி நம்பி விட்டான். 'நீ காஞ்சி நகர் பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டான். 'பார்த்திருக்கிறேன்' என்றேன்; காஞ்சிநகர்க் காட்சிகளை விவரமாக வர்ணிக்கும்படி சொன்னான். நான் அவ்விதமே காஞ்சியை வர்ணித்தபோது, புலிகேசியின் முகத்தில் தோன்றிய பரபரப்பைப் பார்க்க வேணுமே! எலியைப் பார்த்த பூனையின் கண்களில் தோன்றும் ஆசைவெறி புலிகேசியின் கண்களிலும் அப்போது தோன்றியது. இராவணன் சீதையைப் பார்த்து என்ன சொன்னான் தெரியுமா தம்பி! 'என்னிடம் நீ ஆசை கொள்கிறாயா? அல்லது உன்னைக் காலைப் போஜனத்துக்குப் பலகாரமாகச் செய்து சாப்பிட்டு விடட்டுமா?' என்றானாம். அதுபோல புலிகேசி காஞ்சி நகரைக் கட்டி ஆள ஆசைப்பட்டாலும் படுவான்; அல்லது அதை அக்கினிக்கு இரையாக்க விரும்பினாலும் விரும்புவான். புலிகேசியின் காதல் விபத்திலிருந்து காஞ்சிமா தேவியைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வஜ்ரபாஹு கூறிவிட்டு நெடிய மௌனத்தில் ஆழ்ந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நாற்பத்தேழாம் அத்தியாயம்

பிரயாண முடிவு

சூரியாஸ்தமன சமயத்தில் ஒரு மலைப் பாதையின் முடுக்குத் திரும்பியதும் பல்லவ சைனியம் தண்டு இறங்கியிருக்கும் பாசறை தென்பட்டது. பல்லவ சைனியத்தைப் பார்த்தவுடனேதான் வஜ்ரபாஹுவின் கவலைக்கு எவ்வளவு தூரம் காரணம் உண்டு என்பதைப் பரஞ்சோதி உணர்ந்தான். வாதாபி சைனியத்துக்கும் பல்லவ சைனியத்துக்கும் அவ்வளவு மலைக்கும் மடுவுக்குமான தாரதம்மியம் இருந்தது. "தம்பி? பார்த்தாயா?" என்றான் வஜ்ரபாஹு. "பார்த்தேன், ஐயா!" "இன்னமும் நீ நம்புகிறாயா, பல்லவ சைனியம் ஜயிக்கும் என்று?" "கட்டாயம், ஜயிக்கும் ஐயா! சந்தேகமே இல்லை!" என்று பரஞ்சோதி அழுத்தந்திருத்தமாகச் சொன்னான். "அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாயே, எதனால் சொல்கிறாய்."

"பல்லவ சைனியத்தின் பட்சத்தில் தர்ம பலம் இருக்கிறது. அதோடுகூட, மகேந்திர சக்கரவர்த்தியும் இருக்கிறார்!" "ஏது ஏது, மகேந்திர சக்கரவர்த்தியிடம் உனக்கு அபார நம்பிக்கை இருக்கிறதே?" என்றான் வஜ்ரபாஹு. "ஆம், ஐயா!" "பல்லவ சக்கரவர்த்தியை நீ பார்த்திருக்கிறாயா, தம்பி?" "முன்னம் இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆயனச் சிற்பி வீட்டில் புத்த விக்கிரகத்துக்குப் பின்னால் நான் ஒளிந்திருந்தபோது ஒரு தடவை பார்த்தேன். இன்னொரு தடவை காஞ்சியில் நடு ராத்திரியில் மாறுவேடத்தில் பார்த்தேன். அப்போது சக்கரவர்த்தி கிட்டத்தட்டத் தங்களைப் போலத்தான் இருந்தார்! தங்களைப் போலவே பெரிய மீசையும் வைத்திருந்தார்."

"ஆமாம்! நான்கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்; மகேந்திர சக்கரவர்த்தி சில சமயம் மாறுவேடம் பூண்டு ஊர்சுற்றுவது உண்டு என்று. சக்கரவர்த்தியை நான் என்றும் என்னைச் சக்கரவர்த்தி என்றும் கூடச் சிலர் சந்தேகப்பட்டிருக்கிறார்கள்." "எனக்கு அம்மாதிரியெல்லாம் சந்தேகம் கிடையாது ஐயா!" "அது போகட்டும், வாதாபி சைனியம், பல்லவ சைனியம் இரண்டையும் நீ பார்த்திருக்கிறாய். தம்பி! இன்னமும் பல்லவ சைனியத்தில் சேருவதற்கு இஷ்டப்படுகிறாயா?"

இஷ்டப்படுவது மட்டுமல்ல; பல்லவ சைனியத்திலே சேரத் துடித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே நாம் பேசிக் கொண்டு நிற்கும் நேரமெல்லாம் வீண் போவதாகவே நினைக்கிறேன்." "அப்படியானால், எனக்கு விடைகொடு!" "என்ன? என்னை இங்கே விட்டுவிட்டா போகிறீர்கள்?" "ஆமாம்; நான் முதலில் போய்ப் பல்லவ சக்கரவர்த்தியைப் பார்த்து உன்னைப்பற்றிச் சொல்கிறேன். அவர் இஷ்டப்பட்டால் உன்னை அழைத்து வரச் செய்வார். அது வரையில் நீ பாசறைக்கு வௌியிலேதான் காத்திருக்க வேண்டும்." "சக்கரவர்த்தி பாசறையில் இருக்கிறாரா? காஞ்சியிலிருந்து கிளம்பியவரைப் பற்றி அப்புறம் செய்தியே இல்லை என்றீர்களே!" "இதற்குள்ளே ஒருகால் வந்திருக்கலாமல்லவா?"

"ஐயா! சக்கரவர்த்தியை நான் ஒரு தடவை நேரில் பார்க்க விரும்புகிறேன். அதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும்!" என்று பரஞ்சோதி ஆர்வத்துடன் சொன்னான். "எதற்காகச் சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு அவ்வளவு ஆவலுடன் இருக்கிறாய்?" என்றான் வஜ்ரபாஹு. "காஞ்சிக் கோட்டையைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்புவிக்கும்படி கேட்டுக் கொள்வதற்குத்தான்!" "ஓகோ! மதயானையின் மீது வேல் எறிந்த வீரன் அல்லவா நீ? சிவகாமி சுந்தரியைக் காப்பாற்றியது போல் காஞ்சி சுந்தரியையும் காப்பாற்ற விரும்புகிறாய் போலிருக்கிறது! உன்னைப் போன்ற மகா வீரனை, தாளம் போட்டுக் கொண்டு பாசுரம் பாடுவதற்கும் கல்லுளியை வைத்துக் கொண்டு கல்லைச் செதுக்குவதற்கும் உன் மாமா அனுப்பி வைத்தாரே! அது எவ்வளவு பெருந்தவறு?" "சிற்பக் கலை தெய்வீகக் கலை, ஐயா!"

"போதும் போதும்! அப்படியெல்லாம் சொல்லித்தான் மகேந்திர சக்கரவர்த்தி பல்லவ சாம்ராஜ்யத்தை இந்தக் கதிக்குக் கொண்டு வந்து விட்டார். சக்கரவர்த்தியிடம் நானும் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளப்போகிறேன். 'மலையைக் குடைவது, பாறையைச் செதுக்குவது முதலிய காரியங்களை எல்லாம் நிறுத்துங்கள். பல்லவ ராஜ்யத்திலுள்ள அவ்வளவு சிற்பிகளையும் ஏவி ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரத மண்டபம் கட்டச் சொல்லுங்கள். அந்த மண்டபங்களில் ஒவ்வொரு நாளும் ஜனங்கள் கூடிக்கேட்கும்படியாக மகாபாரதம் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள்' என்று கேட்டுக் கொள்ளப் போகிறேன்." "இதெல்லாம் எதற்காக?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"இந்த யுத்தத்தை மகேந்திர சக்கரவர்த்தியாலும் பல்லவ வீரர்களாலும் மட்டும் ஜயித்து விடமுடியாது. பல்லவ நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் வீரமும் பௌஷ்யமும் அடைய வேண்டும். உயிரைத் திரணமாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்." வஜ்ரபாஹு பரஞ்சோதியைப் பிரிந்து செல்வதற்கு முன்னால் அவனை அன்புடன் தழுவிக்கொண்டு, "தம்பி! எனக்கு ஒரு மகன் இருக்கிறான்; அவனுக்கும் உன்னுடைய வயதுதான். நீங்கள் இருவரும் சேர்ந்தீர்களானால் எவ்வளவோ அரும் பெரும் காரியங்கள் செய்யலாம்!" என்றான். பரஞ்சோதி, நாத் தழுதழுக்க, "ஐயா! சிறு பிராயத்தில் நான் என் தந்தையை இழந்தேன்! என்னையும் உங்கள் புதல்வனாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்!" என்று கூறினான்.

வீரன் வஜ்ரபாஹு பாசறைக்குள் புகுந்து சென்ற பிறகு பரஞ்சோதிக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாகத் தோன்றியது. சக்கரவர்த்தியிடமிருந்து தன்னை அழைத்து வரும்படி எப்போது ஆக்ஞை வருமென்று அவன் ஆவலுடன் காத்திருந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பல்லவ சைனியத்தின் பாசறையில் ஒரு பெரிய கலகலப்பு ஏற்பட்டது. திடீரென்று பல ஆயிரம் வீரர்களின் குரல்கள் எழுப்பிய ஜயகோஷம் வானவௌியையெல்லாம் நிரப்பி மலை அடிவாரம் வரை சென்று எதிரொலி செய்தது. சங்கங்களும் முரசங்களும் பேரிகைகளும் சேர்ந்து முழங்கிய பேரொலி வானமுகடு வரையில் சென்று முட்டித் திரும்பியது. பாசறையின் வாசலில் நின்று காவல் புரிந்த வீரர்களைப் பரஞ்சோதி தயக்கத்துடன் நெருங்கி, பாசறைக்குள்ளே மேற்கூறிய கோலாகலத்தின் காரணம் என்னவென்று கேட்டான். அதற்கு, "மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி பாசறைக்கு வந்து விட்டார்!" என்று குதூகலமான மறுமொழி கிடைத்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top