• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் 1 - பூகம்பம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்து ஒன்றாம் அத்தியாயம்


மதகடிச் சண்டை

ராஜம்பேட்டைத் தபால் சாவடியின் சுவரில் மாட்டியிருந்த காலெண்டர் ஏப்ரல் மாதம்! 1 தேதி என்று காட்டியது. ஸ்ரீ பங்காரு நாயுடு பி.பி.எம். தமது சிங்காதனத்தில் அமர்ந்து ஸ்டாம்புக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். தபால்கார பாலகிருஷ்ணன் தபால்களுக்கு முத்திரை குத்திக் கொண்டிருந்தான். "பாலகிருஷ்ணா! இது என்ன தொல்லை? தலையைக் காணோம் அப்பா!" என்றார் பங்காரு நாயுடு. "அதுதான் இருக்கே, ஸார்" என்றான் பாலகிருஷ்ணன். "இருக்கா? எங்கே இருக்கு?" "கழுத்துக்கு மேலே தொட்டுப் பாருங்க ஸார்!" "இந்தத் தலையைச் சொல்லவில்லை, தம்பி! இது போனாலும் பரவாயில்லையே? தபால் தலையையல்லவா காணவில்லை?" "எத்தனை தலை, என்னென்ன தலை காணவில்லை?" "இரண்டு முக்காலணாத் தலையைக் காணோம்!" "இவ்வளவுதானே? மசால்வடைக் கணக்கில் எழுதிவிடுங்க!" "உன் யோசனையைக் கேட்டால் உருப்பட்டால் போலத் தான். இருக்கட்டும்! இன்னுமா நீ தபாலுக்கு முத்திரை போடுகிறாய்?" "பட்டாமணியம் வீட்டுக் கலியாணம் வந்தாலும் வந்தது; முத்திரை அடிச்சு அடிச்சு என் கையெல்லாம் வலி கண்டுடுத்து, ஸார்!" "ஒரு கலியாணத்துக்கு இரண்டு கலியாணமாக நடக்கப் போகிறதல்லவா? மொத்தம் ஆயிரம் கலியாணக் கடிதாசு அச்சடிச்சாங்களாம்; அப்படியும் போதவில்லையாம்!" "இரண்டு கலியாணமும் நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, ஸார்!" "பின்னே நடக்காமல்? எல்லாம் நிச்சயம் ஆகிக் கடுதாசி கூட அச்சிட்டு அனுப்பிவிட்டார்களே!"
"கடுதாசி அச்சிட்டால் சரியாப் போச்சா? நான் ஒரு ஜோசியனைக் கேட்டேன். இரண்டு கலியாணத்தில் ஒன்று நடக்கிறது சந்தேகம் என்று சொன்னான்." "நீ எதுக்காக இந்த விஷயமாய் ஜோசியம் கேட்டாய்?" "சும்மாதான் கேட்டுவச்சேன்!" "இதுதான் உனக்கு ஜோலி போலிருக்கிறது. அதனாலே தான் மூன்றுநாள் கடிதங்களை டெலிவரி செய்யாமல் வைத்திருக்கிறாய். பட்டாமணியம் வீட்டுக் கடிதங்களை உடனே கொண்டு போய் அவரிடம் கொடுத்துவிடு, அப்பா! ஏதாவது முக்கிய விஷயமாக இருக்கும்." "பிரமாத முக்கிய விஷயம்! அது கிடக்கட்டும், ஸார்! இரண்டு நாள் முன்னே பின்னே கொண்டு போய்க் கொடுத்தால் தலையா போய்விடும்?" "தலை போகிறதற்காகச் சொல்லவில்லை, தம்பி! கிட்டாவய்யர் நல்ல மனுஷர்! நமக்குக்கூடக் கலியாணத்துக்குக் கடிதாசி வைத்திருக்கிறார். ஒருவேளை கலியாணச் சாப்பாடு பலமாகக் கிடைக்கும் நீ வரப்போகிறாய் அல்லவா?" "நான் வரமாட்டேன். நம்மைத் தனியாக வைத்தல்லவா சாப்பாடு போடுவார்கள்? இந்தப் பாப்பராச் சாதியே இப்படித்தான்."
"பிராமணத் துவேஷம் பேசாதே தம்பி! சாஸ்திரத்திலே என்ன சொல்லியிருக்கிறதென்றால், ஆதி காலத்தில் கடவுள் பிராமணர்களை முகத்திலிருந்தும் க்ஷத்திரியர்களைத் தோளிலிருந்தும்..." "நிறுத்துங்கள், ஸார்! இந்தப் பழங்கதையெல்லாம் யாருக்கு வேணும்? எல்லாம் பிராமணர்களே எழுதி வச்ச கட்டுக்கதை தானே! இந்தக் காலத்திலே பிராமணனும் கிடையாது; சூத்திரனும் கிடையாது எல்லோரும் மனிதர்கள்!" "அப்படியானால் சாஸ்திரமெல்லாம் பொய்யா? சாஸ்திரம் பொய்யென்றால் கிரகணத்தைப் பார்!- என்று வசனம் சொல்கிறதே!" "வெள்ளைக்காரன் கூடத்தான் கிரகணத்தைக் கண்டுபிடித்துச் சொல்கிறான். மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுத்தும் சாஸ்திரங்களைத் தீயிலே போட்டுக் கொளுத்த வேண்டும்!" "நீ இந்தச் சுயமரியாதைக்காரர்களின் கூட்டங்களுக்குப் போகிறாயோ?" "சுயமரியாதைக் கூட்டங்களுக்கும் போகிறேன்; காங்கிரஸ் கூட்டங்களுக்கும் போகிறேன்." "அப்படி என்றால் நீ உருப்பட்டாற்போலத்தான், போனால் போகட்டும். பட்டாமணியார் வீட்டுக் கடிதங்களை உடனே கொண்டுபோய்க் கொடுத்துவிடு. அந்தப் பம்பாய் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் கூடக் கடிதங்கள் இருக்கின்றன."
"அந்தப் பம்பாய்ப் பெண் இருக்கிறதே! அது சுத்த அரட்டைக்கல்லி! நான் முந்தாநாள் அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். என்னைப் பார்த்து, டா, டூ போட்டுப் பேசிற்று. 'இந்தா, அம்மா! டா, டூ எல்லாவற்றையும் பம்பாயிலே வைத்துக்கொள், இங்கே வேண்டாம்!' என்று சொல்லி விட்டேன்." "கிட்டாவய்யர் குழந்தையின் குணம் வராதுதான். ஆனால், வந்தபோது பம்பாய்ப் பெண்ணும் நல்ல குணமாய்த் தானிருந்தது. எட்டு நூறு ரூபாய் சம்பளக்காரன் கலியாணம் பண்ணிக்கிறேன் என்றதும் கொஞ்சம் கர்வம் வந்திருக்கலாம்!" "எட்டு நூறு சம்பளக்காரனாயிருந்தால் என்ன? எட்டாயிரம் சம்பளக்காரனாயிருந்தால் என்ன? யாராயிருந்தாலும் எனக்கு ஒன்றுதான்! டியூடி என்றால் டியூடி! சிநேகம் என்றால் சிநேகம்! அப்படி அந்தப் பம்பாய் பெண்ணுக்குக் கலியாணம் நடக்கிறது என்பதும் நிச்சயமில்லை; நின்னு போனாலும் போய்விடும்." "அப்படி உன் வாயாலே நீ எதற்காகச் சொல்கிறாய்!" "பின்னே வாயால் சொல்லாமல் கையாலேயா சொல்லுவாங்க?" இவ்விதம் சொல்லிக்கொண்டே பாலகிருஷ்ணன் தபால் பையை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான்.
பாலகிருஷ்ணன் வெளியே போய்ச் சிறிது நேரத்திற்கெல்லாம் சூரியநாராயணன் தபால் சாவடிக்கு வந்தான். போஸ்டு மாஸ்டர் பங்காரு நாயுடுவைப் பார்த்து, "எங்கள் வீட்டுக்கு ஏதாவது கடிதம் இருக்கிறதா, ஸார்?" என்று கேட்டான். "ஓ! இருக்கிறதே! உனக்கு, அப்பாவுக்கு, பம்பாயிலிருந்து வந்திருக்கிற அம்மாவுக்கு, அந்த அம்மாளின் பெண்ணுக்கு - எல்லாருக்கும் இருக்கிறது. பாலகிருஷ்ணன் எடுத்துக்கொண்டு போயிருக்கிறான். எதிரே அவனைப் பார்க்கவில்லையா?" "பார்க்கவில்லையே? எதிரே காணவில்லையே?" என்று சொல்லிக்கொண்டே சூரியா வெளியேறினான். அப்போது சூர்யா வெகு உற்சாகமான மனோநிலையில் இருந்தான். அவன் இஷ்டப்படியே எல்லா ஏற்பாடுகளும் ஆகியிருந்தன. அவனுடைய முயற்சியினால் லலிதாவுக்கும் பட்டாபிராமனுக்கும் கலியாணம் நிச்சயமாகிவிட்டது. இதில் இரு தரப்பாருக்கும் வெகு சந்தோஷம். சீதாவின் கலியாணத்தைத் தனியாக எங்கேயாவது ஒரு கோயிலில் நடத்தி விடலாமென்று பம்பாய் அத்தை சொன்னாள். மற்றவர்களும் அதற்குச் சம்மதிப்பார்கள் போலிருந்தது. சூரியா அது கூடாது என்று வற்புறுத்தி இரண்டு கலியாணமும் ஒரே பந்தலில் நடத்தவேண்டுமென்று திட்டம் செய்தான்.
இதனாலெல்லாம் உற்சாகம் கொண்ட சூரியா கலியாண ஏற்பாடுகளில் மிகவும் சிரத்தை கொண்டு அப்பாவுக்கு ஒத்தாசையாகத் தானே பல காரியங்களைச் செய்து வந்தான். நல்ல வேளையாக எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையும் முடிந்து விட்டது. முகூர்த்தத் தேதிக்குப் பத்து நாள் முன்னதாகவே சூரியா கிராமத்துக்கு வருவது சாத்தியமாயிற்று. மாப்பிள்ளை அழைப்புக்கு 'டிரஸ்' வாங்குவது சம்பந்தமாகச் சூரியா பட்டாபிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதற்குப் பட்டாபியின் பதிலை எதிர்பார்த்து இன்று தபால் சாவடிக்கு வந்தவன் ஏமாற்றமடைந்தான். திரும்பிப் போகும் போது சாலையில் இருபுறமும் பார்த்துக்கொண்டு போனான். பாலகிருஷ்ணன் எங்கேயாவது சாலை ஓரத்தில் மரத்தின் மறைவில் உட்கார்ந்து சுருட்டுக் குடித்துக்கொண்டிருக்கலாம் அல்லவா? அவன் எதிர்பார்த்தது சரியாயிற்று. சாலைத் திருப்பம் ஒன்றில் வாய்க்கால் மதகடியில் பாலகிருஷ்ணன் உட்கார்ந்து ஒரு கடிதத்தைக் கவனமாகப் படித்துக் காண்டிருந்தான். எவ்வளவு கவனமாக என்றால், சூரியா அவனுக்குப் பின்னால் வெகு அருகில் வந்து நின்றதுகூட அவனுக்குத் தெரியவில்லை. சூரியாவுக்கு அப்போது ஒரு விசித்திரமான சந்தேகம் உதித்தது. ஆகையால் 'பாலகிருஷ்ணா' என்று கூப்பிடப் போனவன் அடக்கிக்கொண்டு கீழே பாலகிருஷ்ணன் பக்கத்தில் கிடந்த கடிதத்தின் உறையை உற்றுப் பார்த்தான். அதில் பம்பாய் அத்தையின் விலாசம் எழுதியிருந்தது.
சூரியாவுக்குக் கோபம் வந்துவிட்டது. "அடே இடியட்! என்னடா செய்கிறாய்?" என்று கர்ஜித்தான். பாலகிருஷ்ணன் திடுக்கிட்டுத் திரும்பி, "என்னடா என்னை 'இடியட்' என்கிறாய்? நான் ஒன்றும் இடியட் இல்லை, நீ இடியட்; உங்க அப்பா இடியட்; உங்க தாத்தா இடியட்!" என்றான். சூரியாவின் கோபம் எல்லை மீறிவிட்டது. "என்னடா குற்றமும் செய்துவிட்டுச் சக்கர வட்டமாகப் பேசுகிறாய்?" என்று கர்ஜித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் கழுத்தில் கையை வைத்தான். உடனே பாலகிருஷ்ணன் சூரியாவின் பேரில் ஒரு குத்து விட்டான். இருவரும் குஸ்திச் சண்டை செய்யத் தொடங்கினார்கள். மதகடியிலே சண்டை நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் சாலையில் ஒரு பெட்டி வண்டி வந்து கொண்டிருந்தது. அதில் சீதா, லலிதா, ராஜம்மாள் மூவரும் இருந்தார்கள். அவர்களுடைய கண்ணும் கவனமும் சண்டை போட்டவர்களின் மீது ஏக காலத்தில் சென்றன. "ஐயோ! இது என்ன? சூரியாவும் தபால்கார பாலகிருஷ்ணனும் சண்டை போடுகிறார்களே!" என்று லலிதா கூவினாள். "ஆமாண்டி! இது என்ன வெட்கக்கேடு?" என்றாள் சீதா. ராஜம்மாள் மிக்க வருத்தத்துடன், "சூரியா! சூரியா! இது என்ன நடுரோட்டில் நின்று சண்டை? நிறுத்து!" என்று கூவினாள். ராஜம்மாளின் குரல் கேட்டதும் இருவரும் சண்டையை நிறுத்தி வெட்கிப் போய் நின்றார்கள்.
"சூரியா! வா, வண்டியில் ஏறிக்கொள்ளு! வீட்டுக்குப் போகலாம்!" என்றான் பாலகிருஷ்ணன். "அத்தை! இது விளையாட்டுச் சண்டை! நீங்கள் போங்கள்! நான் இதோ பின்னோடு வருகிறேன்" என்றான். "நிச்சயந்தானா?- பாலகிருஷ்ணா! சூரியா சொல்கிறது உண்மையா?" என்று அத்தை கேட்டாள். "ஆமாம், அம்மா! நாங்கள் சும்மாத்தான் சண்டை போட்டோ ம்!" என்றான் பாலகிருஷ்ணன். வண்டி மேலே நகர்ந்தது, சீதா லலிதாவைப் பார்த்து, "நீ இவ்வளவு சமர்த்தாயிருக்கிறாயே, லலிதா! உன் அண்ணா சூரியா மட்டும் ஏன் இத்தனை அசடாயிருக்கிறான்?" என்றாள். "அப்படிச் சொல்லாதே, சீதா! சூரியா ஒன்றும் அசடு இல்லை. ரொம்பச் சமர்த்து; மிக்க நல்லபிள்ளை. சண்டை போட்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும்; அப்புறம் தனியாக விசாரித்தால் தெரியும்" என்றாள் ராஜம்மாள். வண்டிக்காரனும் சேர்ந்து, "ஆமாம், அம்மா! நம்ம சின்ன ஐயா ரொம்பச் சமத்துப்பிள்ளை; இப்போது கொஞ்ச நாளாய்த்தான் ஒரு மாதிரியாய் இருக்கிறார்!" என்றான். வண்டி கொஞ்ச தூரம் போன பிறகு சூரியா, "பாலகிருஷ்ணா! உன்மேல் நான் கை வைத்தது பிசகுதான்; அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் நீ செய்த காரியமும் பிசகுதானே? பிறருக்கு வந்த கடிதத்தை நீ பிரித்துப் பார்க்கலாமா? அதுவும் நீ தபால்காரனாயிருந்து கொண்டு இவ்விதம் செய்யலாமா!" என்றான். "தப்புத்தான்; ஒப்புக் கொள்கிறேன் ஆனால் நல்ல எண்ணத்துடனேதான் செய்தேன்.
இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தால் உனக்கும் அது தெரியும்!" என்று சொல்லிப் பாலகிருஷ்ணன் கடிதத்தைச் சூரியா கையில் கொடுத்தான். சூரியா அந்தக் கடிதத்தில் முதல் நாலைந்து வரிகள் படித்தவுடனேயே அவனுடைய முகம் சிவந்தது. "இந்த மாதிரிக் கடிதம் இது என்பது உனக்கு எப்படித் தெரியும்?" என்று பாலகிருஷ்ணனைப் பார்த்துச் சூரியா கேட்டான். "நேற்று ஒரு கார்டு வந்தது, அதைத் தற்செயலாகப் பார்த்தேன். கன்னா பின்னா என்று எழுதியிருந்தது. இந்தக் கவரைப் பார்த்ததும் ஒரு மாதிரி சந்தேகம் உதித்தது. பிரித்துப் பார்ப்பது நல்லது என்று எண்ணினேன். நான் சந்தேகப்பட்ட படியே இருக்கிறது. அதற்கென்ன? உனக்கு ஆட்சேபம் இல்லையானால் இதை ஒட்டி அந்த அம்மாளிடம் டெலிவரி செய்துவிடுகிறேன். ஆனால் என்மேலே சுலபமாகக் கையை வைக்கலாம், என்னை மிரட்டி விடலாம் என்று மட்டும் நினைக்காதே! நான் நல்லவனுக்கு நல்லவன்; கில்லாடிக்குக் கில்லாடி! தெரியுமா?"
"நான் உன்மேல் கை வைத்தது தப்பு என்றுதான் முன்னேயே சொன்னேனே! இப்போதும் சொல்கிறேன் அதை மறந்து விடு, எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். இந்தக் கலியாணம் நடந்து முடிகிற வரையில் எங்கள் வீட்டுக்கு வருகிற கடிதங்களையெல்லாம் என்னிடமே கொடு. நான் பார்த்து உசிதபடி அவரவர்களிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்!" என்றான் சூரியா. "அது ரூலுக்கு விரோதம், கடிதங்களை அந்தந்த விலாசத்தாரிடந்தான் சேர்ப்பிக்க வேண்டும். இருந்தாலும் நீ கேட்கிறதற்காக அப்படியே உன்னிடம் கொடுக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். நான் பெரிய ரவுடி; யாருக்கும் கொஞ்சம்கூடப் பயப்பட மாட்டேன்!" என்றான் பாலகிருஷ்ணன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்து இரண்டாம் அத்தியாயம்


காதலர் உலகம்

சீதாவும் லலிதாவும் கலியாணம் நிச்சயமான நாளிலிருந்து ஆனந்தமயமான கனவு லோகத்தில் சொர்க்க சுகத்தை அநுபவித்துக் கொண்டிருந்தார்கள். பசும்புல் தரையில் அழகிய பட்டுப் பூச்சிகள் வர்ணச் சிறகுகளை அடித்துக்கொண்டு அங்குமிங்கும் சஞ்சரிப் பதைப் போல அவர்கள் இந்திரபுரியின் நந்தவனத்தில் யதேச்சையாக அலைந்து திரிந்தார்கள். தேவலோகத்து பாரிஜாத மரங்களிடையே அவர்கள் தேன் வண்டுகளாக உலாவித் திரிந்து பாரிஜாத புஷ்பங்களில் கசிந்த இனிய தேனைத் தேவாமுதத்தோடு பருகி மகிழ்ந்தார்கள். மாயா லோகம் போன்ற மேக மண்டலங்களுக்கு மேலே நின்று அவர்கள் ஆடிக் களித்தார்கள். நட்சத்திரங்களிடையே வட்டமிட்டு ஒருவரையொருவர் ஓடிப் பிடித்தார்கள். ஆகாச கங்கையைக் கையினால் அள்ளி ஒருவர் மேல் ஒருவர் தெளித்து மகிழ்ந்தார்கள். பசுமரக் கிளைகளில் இரு கிள்ளைகளாகி உட்கார்ந்து யாழிசை போன்ற மழலை மொழி பேசிக் கொஞ்சினார்கள். கலியாணம் நிச்சயமான நாளிலிருந்து இருவருடைய உள்ளங்களும் உடல்களும் அதிசயமான வளர்ச்சி பெற்றிருந்தன. முகங்கள் புதிய காந்தி பெற்று விளங்கின. மேனியில் புதிய மெருகு தோன்றித் திகழ்ந்தது.
தினம் பொழுது புலரும் போது அவர்களுக்கு மட்டும் ஒரு புதுமையான சௌந்தரியத்துடன் புலர்ந்தது. சூரியன் என்றுமில்லாத ஜோதியுடன் உதயமானான். அந்தி மயங்கிய நிழல் படர்ந்து வரும் மாலை நேரத்தின் மோகத்தையோ வர்ணிக்க முடியாது. ஆகா! இரவின் இன்பத்தைத்தான் என்னவென்று சொல்வது? வானத்தில் பிறைச் சந்திரன் பிரகாசித்தால் அதன் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்; முழு மதியா இருந்தாலோ உள்ளம் கடலைப்போல் பொங்கத் தொடங்கிவிடும். சந்திரனே இல்லாத இரவு மட்டும் அழகில் குறைந்ததா, என்ன? அடடா, கோடானு கோடி வைரங்களை வாரி, இறைத்ததுபோல் சுடர்விடும் நட்சத்திரங்களோடு வானம் விளங்கும் காட்சிக்கு இணை வேறு உண்டோ ? விழித்திருக்கும் வரையில் மூச்சு விடாமல் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். தூங்கினாலோ எத்தனை இன்பமயமான கனவுகள்? சீதாவின் அன்னை அகண்ட காவேரியில் வேனிற் காலத்தில் ஓடும் பளிங்கு போல் தெளிந்த ஊற்று நீரில் குளிக்கும் ஆனந்தத்தைப் பற்றி ஒரு நாள் சொன்னாள். தன்னுடைய இளம்பிராயத்தில் அவ்விதம் அடிக்கடி சென்று குளிப்பதுண்டு என்று கூறினாள்.
மாமா கிட்டாவய்யரை மிகவும் நச்சுப்படுத்திச் சீதா காவேரியில் போய்க் குளித்து வர அனுமதி பெற்றாள். தோழிகள் இருவரும் ராஜம்மாளும் வண்டி கட்டிக் கொண்டு காவேரியில் குளிக்கச் சென்றார்கள். பிருந்தாவனத்தில் கண்ணன் வாழ்ந்திருந்த காலத்தில் கோபாலரும் கோபியரும் யமுனையில் இறங்கிக் கண்ணணோடு நீர் விளையாடியபோது அடைந்த ஆனந்தத்துக்கு இணையான ஆனந்தத்தைச் சீதாவும் லலிதாவும் அன்று அடைந்தார்கள். அவ்விதம் அகண்ட காவேரியில் குளித்துவிட்டுத் திரும்பி வரும்போதுதான் சூரியாவும் பாலகிருஷ்ணனும் குஸ்திச் சண்டை போடும் காட்சியைக் கண்டார்கள். சீதாவுக்கும் லலிதாவுக்கும் சற்று நேரத்துக்கெல்லாம் அது மறந்து போய்விட்டது. மத்தியானம் சாப்பாடு முடிந்ததும் அந்தரங்கம் பேசுவதற்குத் தனி இடத்தை நாடி அவர்கள் குளத்தங்கரை பங்களாவுக்குச் சென்றார்கள். அந்த வருஷம் கார்த்திகை மாதத்தில் நல்ல மழை பெய்திருந்தபடியால் பங்குனி மாதக் கடைசியானாலும் குளத்தில் தண்ணீர் நிறைய இருந்தது. குளத்தில் தவழ்ந்து வந்த குளிர்ந்த தென்றல் சீதாவையும் லலிதாவையும் பட்டப் பகலிலேயே காதலரின் கனவு லோகத்துக்குக் கொண்டு போயிற்று.
அவர்களுடைய சம்பாஷணை அன்று பரிகாசத்தில் ஆரம்பமாயிற்று. "லலிதா? நலங்கின்போது உன்னைப் பாடச் சொல்வார்கள். 'மாமவ பட்டாபிராமா' கிருதியை நீ கட்டாயம் பாட வேண்டும். இல்லாவிட்டால் நான் உன்னோடு 'டூ' போட்டு விடுவேன். அப்புறம் பேசவே மாட்டேன்!" என்றாள் சீதா. "முதலில் நீ 'மருகேலரா ஓ ராகவா' கீர்த்தனத்தைப்பாடு! அதைக் கேட்டுத் தைரியப்படுத்திகொண்டு நானும் பாடுகிறேன். நீ தைரியசாலி, சீதா! எனக்கு அவ்வளவு தைரியம் இல்லையே! என்ன செய்வது?" என்றாள் லலிதா. "அடி திருடி! உனக்கா தைரியமில்லை என்கிறாய்? ஒரு வருஷத்துக்கு முன்னால் ஒருவருக்கும் தெரியாமல் அல்லவா நீயும் மிஸ்டர் பட்டாபிராமனும் கலியாணம் நிச்சயம் செய்துகொண்டு விட்டீர்கள்? தைரியம் இல்லாமலா அப்படிச் செய்தாய்?" "அதெல்லாம் ஒன்றுமில்லை. சீதா! நாங்கள் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை பேசிக்கொண்டது கூட இல்லையே?" "பேசிக் கொள்ளவில்லையா? அது எப்படி லலிதா? பொய் சொல்லாதே! வாயினால் நீ பேசினால்தான் பேச்சா?
கண்களினால் பேசினால் பேச்சு இல்லையா! போன வருஷம் நீ தேவபட்டணத்துக்குப் போயிருந்ததையெல்லாந்தான் சொன்னாயே? அதைவிட வாய்ப் பேச்சு என்னத்திற்கு, லலிதா? சீதையும் ராமரும் என்ன செய்தார்கள்? கலியாணத்திற்கு முன்னால் அவர்கள் வாயினாலா பேசிக் கொண்டார்கள்? மிதிலாபுரியில் இராமர் வீதியோடு போய்க்கொண்டிருந்தார். சீதா கன்னிமாடத்தில் உப்பரிகையில் நின்றுகொண்டிருந்தாள். ஒருவரையொருவர் கண்ணாலே மட்டும்தான் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்குள் அழியாக் காதல் ஏற்படுவதற்கு அது போதவில்லையா?" "போதாது என்று நான் சொல்லவில்லை. பேசுவதற்குத் தைரியம் இருந்தால் பேசக்கூடாது என்பது இல்லையே? உன் கலியாணம் நிச்சயமான பிறகு, உன்னை அவர் அழைத்துக் கேட்டதற்குப் பதில் சொன்னாயே? அதை நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது சீதா! அதை இன்னொரு தடவை சொல்லேன். எனக்கு மறுபடியும் அதைக் கேட்க வேண்டும் போலிருக்கிறது!" "அதற்கென்ன பேஷாகச் சொல்கிறேன் இன்னும் பத்துத் தடவை நீ கேட்டாலும் சொல்கிறேன். நிச்சயதார்த்தம் ஆன பிறகு அவர்கள் - எனக்கு மாமனாராகவும் மாமியாராகவும் வரப்போகிறவர்கள் - என்னைக் கூப்பிடுவதாக அழைத்துச் சென்றார்கள்.
ஒரு பக்கத்தில் எனக்குச் சந்தோஷமாயிருந்தது. மற்றொரு பக்கத்தில் என்ன கேட்பார்களோ என்னமோ என்று பயமாகவும் இருந்தது. ஆனாலும் அவர்கள் பேச்சைத் தட்ட முடியாமல் போனேன். அந்த மாமி என்னைக் கட்டிக்கொண்டு உச்சி முகந்து ஆசிர்வதித்தாள். 'நீ தான் எங்கள் வீட்டுக்கு லக்ஷ்மி, சரஸ்வதி எல்லாம். உன்னால்தான் எங்கள் குலம் விளங்கப் போகிறது' என்று ஏதேதோ சொன்னாள். மாமனாரோ நீளமாக ஏதேதோ பேசிக்கொண்டேயிருந்தார். என்னுடைய அழகுக்காகவும் சமர்த்துக்காகவுந்தான் வரதட்சணையில்லாமலும், சீர் இல்லாமலும் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொள்வதாக அவர் சொன்னது மட்டும் எனக்குப் புரிந்தது. அதே சமயத்தில் என்னுடைய கவனம் எல்லாம் மாப்பிள்ளையிடம் சென்றிருந்தது. பிறகு மாமனாரும் மாமியாரும் சற்றுத் தூரமாகப் போனார்கள். நானும் போவதற்கு ஆயத்தமானேன். உடனே மாப்பிள்ளை என்னைப் பார்த்து, "சீதா! போவதற்கு அவசரப்படாதே. சற்றுப் பொறு, உன்னை நான் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்; பதில் சொல்லுவாயல்லவா?" என்றார்.
நான் தலை குனிந்து மௌனமாயிருந்தேன். அவர் மறுபடியும், 'நேற்றைக்கெல்லாம் கலகலவென்று பேசிக் கொண்டிருந்துவிட்டு இன்றைக்குத் திடீரென்று பேசா மடந்தையானால் நான் விடமாட்டேன். என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். நீ என்னைக் கலியாணம் செய்துகொள்ள இஷ்டப்பட்டது எதற்காக?' என்று கேட்டார். அப்போது அவரை நிமிர்ந்து பார்த்தேன். நான் சொல்லப் போகும் பதிலை நினைத்து எனக்கே சிரிப்பு வந்தது 'அந்தக் கேள்வியை நான் அல்லவா கேட்கவேண்டும்? நீங்கள்தான் என் சிநேகிதியைப் பார்ப்பதற்காக வந்து விட்டு என்னைக் கலியாணம் செய்து கொள்ள இஷ்டப்படுவதாகச் சொன்னீர்கள்!' என்றேன். இதைக் கேட்டதும் அவர் சிரித்து விட்டார். ஆனால் உடனே முகத்தைக் கடுமையாக்கிக் கொண்டு, 'அப்படியானால் இந்தக் கலியாணத்தில் இஷ்டமில்லையென்கிறாயா? இப்போது ஒன்றும் முழுகிவிடவில்லை; கலியாணத்தை நிறுத்தி விடலாம். உனக்கு மனதில்லை என்றால் சொல்லி விடு' என்றார். 'ஆமாம் எனக்கு மனதில்லைதான். என் மனது என்னிடத்தில் இல்லை. நேற்று சாயங்காலம் மோட்டாரிலிருந்து இறங்கியபோதே தாங்கள் என் மனதை கவர்ந்து கொண்டு விட்டீர்களே? இப்போது எப்படி எனக்கு மனது இருக்கும்?" என்றேன்.
அப்போது அவருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே லலிதா; குதூகலம் ததும்பியது. 'நான் எத்தனையோ பி.ஏ. எம்.ஏ., படித்த பெண்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்; பழகியிருக்கிறேன். உன்னைப்போல் சமர்த்தான பெண்ணைப் பார்த்ததேயில்லை. உன்னை இப்போது பிரிந்து போக வேண்டுமே என்றிருக்கிறது!' என்று அவர் சொன்னார் என் வாய்க்கொழுப்பு நான் சும்மா இருக்கக் கூடாதா? 'இப்போது இப்படிச் சொல்கிறீர்கள், நாளைக்கு ஊருக்குப் போனதும் மறந்து விடுகிறீர்களோ, என்னமோ? 'பி.ஏ. எம்.ஏ' படித்த பெண்கள் அங்கே எத்தனையோ பேர் இருப்பார்கள்!' என்று சொன்னேன். 'அதற்குள்ளே புகார் சொல்ல ஆரம்பித்து விட்டாயா? பி.ஏ.யும் ஆச்சு; எம்.ஏ.யும் ஆச்சு? அவர்கள் எல்லாம் உன் கால் தூசி பெறமாட்டார்கள். உன்னைத் தவிர எனக்கு வேறு ஞாபகமே இராது?!' என்று அவர் கூறியபோது என் மனம் குளிர்ந்தது. இருந்தாலும் கிறுக்காக 'துஷ்யந்த மகாராஜா சகுந்தலையிடம் இப்படித்தான் சொன்னார். ஊருக்குப் போனதும் மறந்துவிட்டார்' என்றேன். 'சீதா! என்று அவர் அன்பு கனிய என்னை அழைத்து, 'துஷ்யந்தன் ராஜன்; அதனால் அவன் எது வேணுமானாலும் செய்வான். நான் சாதாரண மனிதன்தானே?' என்றார். 'நீங்கள்தான் எனக்கு ராஜா!' என்று நான் சொன்னேன். 'துஷ்யந்தன் தேசத்துக்கு ராஜா; நான் உனக்கு மட்டுந்தான் ராஜா. ஆகையால் உன்னை என்னால் மறக்க முடியாது; அடையாளந் தருகிறேன் அருகில் வா' என்றார் ஏதோ மோதிரம் அல்லது பவுண்டன் பேனா இப்படி ஏதாவது தரப்போகிறார் என்று நினைத்துக்கொண்டு அவர் அருகில் போனேன். அவர் எனது வலது கையைத் தமது இரண்டு கையாலும் பிடித்துக்கொண்டு கையில் முத்தம் கொடுத்தார். லலிதா; லலிதா அதை நினைத்தால் இப்போதுகூட என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறதடி" இவ்விதம் சீதா சொல்லிவிட்டுப் பின்வருமாறு பாடினாள்;
"எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன் கை இட்ட இடந்தனிலே
தண்ணென் றிருந்ததடி - புதிதோர் சாந்தி பிறந்ததடி
எண்ணி எண்ணிப் பார்த்தேன் - அவன் தான் யாரெனச் சிந்தை செய்தேன்!
கண்ணன் திருவுருவம் அங்ஙனே கண்ணின்முன் நின்றதடி!

சீதாவுக்கும் சௌந்தரராகவனுக்கும் நடந்த சம்பாஷணையை ஐந்தாவது தடவையாகக் கேட்டுக் கொண்டிருந்த லலிதாவின் மனம் புயல் அடிக்கும்போது அலைகடல் பொங்குவது போலப் பொங்கியது. தன் மணாளன், பட்டாபிராமன் தன்னிடம் இப்படியெல்லாம் காதல் புரிவானா, இவ்வாறெல்லாம் அருமையாகப் பேசுவானா என்று அவள் உள்ளம் ஏங்கியது. அந்த எண்ணத்தைச் சட்டென்று மாற்றிக்கொண்டு, "சீதா நீ துஷ்யந்தனைப் பற்றிச் சொன்னாயே அது மட்டும் சரியல்ல. சகுந்தலை துஷ்யந்தன் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கிறது. துஷ்யந்தன் பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. அவன் ரிஷி ஆசிரமத்தில் வளர்ந்த, தாய் தகப்பன் அறியாத பெண்ணை மணந்து கொண்டானே? அது ஆச்சரியமில்லையா?" என்றாள் லலிதா. "அது ஆச்சரியந்தான், ஆனால் அதைப்போல எத்தனையோ நடந்திருக்கிறது. அனார்கலி கதை உனக்குத் தெரியுமா லலிதா? 'மங்கையர்க்கரசியின் காதல்' என்றும் புத்தகத்தில் அந்த அற்புதமான கதை இருக்கிறது" என்றாள் சீதா. "எனக்குத் தெரியாதே! அது என்ன கதை சொல்லு!" "அக்பர் பாதுஷாவின் பிள்ளை சலீம் தன்னை இளம் பிராயத்தில் வளர்த்த தாதியின் வளர்ப்புப் பெண்ணைக் காதலித்தான். அவளையே கலியாணம் செய்து கொள்வதாகச் சத்தியம் செய்து கொடுத்தான்.
அரண்மனை நந்தவனத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பக்கத்திலிருந்த ரோஜாப்பூப் புதர் மறைவிலிருந்து அக்பர் பாதுஷா கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்குப் பிறகு பட்டத்துக்கு வரவேண்டிய குமாரர் ஒரு தாதியின் வளர்ப்புப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா என்று அவருக்கு ஆத்திரம் பொங்கிற்று. உடனே அனார்கலியைப் பிடித்துச் சிறையில் அடைக்க உத்தரவு போட்டுவிட்டார். 'அனார்கலி' என்றால் பார்ஸீக பாஷையில் 'மாதுளை மொக்கு' என்று அர்த்தமாம். அது சலீம் அவளுக்கு அளித்த செல்லப் பெயர். சிறையில் அடைபட்ட அனார்கலி சலீமையே நினைத்து உருகிக் கொண்டிருந்தாள். அவன் தன்னை வந்து விடுவிப்பான். விடுவித்து மணம் புரிந்துகொள்வான் என்று ஆசையோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அக்பர் பாதுஷா செத்துப்போய் சலீம் பட்டத்துக்கு வருவதற்கு வெகுகாலம் ஆயிற்று. கடைசியில் சலீம் சக்கரவர்த்தி ஆனதும் முதல் காரியமாக அனார்கலியை விடுதலை செய்யப் போனான். அதற்குள் அனார்கலிக்குச் சித்தப் பிரமை பிடித்துவிட்டது. சலீமை அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. 'உங்களையெல்லாம் இங்கே யார் வரச் சொன்னார்கள்? என்னை விடுதலை செய்ய நீங்கள் யார்? சலீம் வந்து என்னை விடுவிக்கப் போகிறார். அதுவரையில் நான் இங்கேயே இருப்பேன்' என்றாள். இதைக் கேட்டு சலீம் மனம் உடைந்து போனான். அனார்கலியும் பிறகு சீக்கிரத்தில் இறந்து போனாள்."
இதைக் கேட்டபோது லலிதாவின் கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்தது. "ஏனடி அழுகிறாய், அசடே?" என்றாள் சீதா. "எனக்கென்னமோ, வருத்தமாயிருக்கிறது அம்மா! அவர்களுடைய உண்மையான காதல் எதற்காக இப்படித் துக்கத்தில் முடியவேண்டும்?" என்றாள் லலிதா. "காதற் கதைகள் அநேகமாக அப்படித்தான் முடிகின்றன. ரோமியோ ஜுலியட் கதையைப் பாரேன்! அவர்களுடைய காதலைப்போல் உலகத்திலேயே கிடையாது. ஆனால், கடைசியில் இரண்டு பேரும் செத்துப் போகிறார்கள்." "இரண்டு பேரும் ஒரு வழியாகச் செத்துப்போய் விட்டால் பாதகமில்லை, சீதா! ஒருவர் செத்து ஒருவர் இருந்தால் எவ்வளவு கஷ்டமாயிருக்கும்? சலீமைப் பார்! பிறகு அவன்தானே ஜஹாங்கீர் பாதுஷா ஆகி நூர்ஜஹானைக் கலியாணம் செய்து கொண்டான்? நூர்ஜஹான் உலகத்தில் எவ்வளவு பிரசித்தமான அழகியாய் இருந்தால் என்ன? அதற்காக, அவனால் அனார்கலியை எப்படி மறக்க முடிந்தது?"
"சில புருஷர்கள் அப்படித்தான், லலிதா! ஆனால் எல்லோரும் அப்படியில்லை. ஜஹாங்கீரின் மகன் ஷாஜஹானைப் பார்! அவன் மும்தாஜ் என்பவளைக் கலியாணம் செய்து கொண்டான். அவள் செத்துப் போன பிறகும் அவளை ஷாஜஹான் மறக்கவில்லை. அவளுடைய ஞாபகார்த்தமாகத் தாஜ்மகால் கட்டினான். தன் அரண்மனையிலிருந்து எப்போதும் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். பார்த்து கொண்டே செத்துப் போனான். இந்தக் காதல் ரொம்ப உயர்வாயில்லையா, லலிதா!" "உயர்வுதான்; ஆனாலும் சாவித்திரி சத்தியவான் கதை தான் எனக்கு எல்லாவற்றிலும் அதிகம் பிடித்திருக்கிறது. இராஜ்யத்தை இழந்து காட்டுக்கு வந்து குருட்டுத்தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்த சத்தியவானைச் சாவித்திரி காதலித்தாள். ஒரு வருஷத்திற்குள் சத்தியவான் செத்துப் போய் விடுவான் என்று தெரிந்தும் அவளுடைய உறுதி மாறவில்லை. யமனுடனேயே வாதாடிப் போன உயிரைக் கொண்டு வந்தாள். இதுவல்லவா உண்மையான காதல்? லைலா மஜ்னூன், அனார்கலி கதைகளைவிட நம் தேசத்துக் கதைகள் உயர்ந்தவைதான்."
"அப்படி நம் நாட்டில் கதைகள் என்று பார்த்தால், சுப்ரமண்ய ஸ்வாமிக்கும் வள்ளிக்கும் நடந்த காதல் கலியாணத்தைப்போல் ஒன்றுமே கிடையாது. வள்ளி குறப்பெண்; சுப்ரமண்யரோ சாஷாத் பரமசிவனுடைய குமாரர்; தேவ சேனாதிபதி அப்பேர்ப்பட்டவர் குறவர் குடியைத் தேடிவந்து வள்ளியை மணந்து கொண்டார் என்றால், அது எப்பேர்ப்பட்ட அதிசயம்? மணந்தது மட்டுமா! ஒவ்வொரு சிவன் கோவிலிலும் சுப்ரமண்யர் தமக்குப் பக்கத்தில் வள்ளியையும் வைத்துக் கொண்டிருக்கிறார். கேவலம் ஒரு குறத்தியை எல்லோரும் கும்பிடும் தெய்வமாக்கிவிட்டார்! உண்மையான காதலுக்கு இதைக் காட்டிலும் வேறு என்ன கதை இருக்கிறது. லலிதா! சுப்ரமண்ய ஸ்வாமி- வள்ளி கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சுப்ரமண்ய ஸ்வாமியைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுவாயே? அதைக் கொஞ்சம் பாடேன்" என்றாள். லலிதா பின்வரும் காவடிச் சிந்தைப் பாட ஆரம்பித்தாள்:- "பாளை வாய்க் கமுகில் வந்தூர் வாளை பாய் வயல் சூழ்செந் தூர் பாலனம் புரிய வந்த புண்ணியா!" சீதா குறுக்கிட்டு, "இது இல்லை, லலிதா! 'பொன் மயில்' என்று ஒரு பாட்டுப் பாடுவாயே? அதைப் பாடு!" என்று சொன்னாள். "சரி" என்று சொல்லி லலிதா ஆரம்பித்தாள்.
"பொன் மயில் ஏறி வருவான் - ஐயன்
பன்னிரு கையால் தன்னருள் சொரிவான் (பொன்)
செங்கதிர் வேலன் சிவனருள் பாலன்
மங்கை வள்ளி மணாளன்
பங்கயத்தாளன் தீனதயாளன் (பொன்)
புன்னகை தன்னால் இன்னல்கள் தீர்ப்பான்
புன்மை இருள் கணம் மாய்ப்பான்
கன்னலின் இனிய தண்தமிழ் அளிப்பான்" (பொன்)

பாட்டு முடியுந்தருணத்தில், "பலே பேஷ்! லலிதா நீ இவ்வளவு நன்றாய்ப் பாடுகிறாயே? அன்றைக்கு மதராஸ்காரர்கள் வந்தபோது மட்டும் பாடவே மாட்டேன் என்று வாயை இறுக மூடிக் கொண்டாயே? அது ஏன்?" என்று கேட்டுக்கொண்டே சூரியா உள்ளே வந்தான். அவனைத் தொடர்ந்து ராஜம்மாளும் உள்ளே வந்தாள். சூரியாவுக்குச் சீதா பதில் சொன்னாள். "அன்றைக்கு அவளுக்குப் பாடப் பிடிக்கவில்லை; அதனால் பாடவில்லை. நாளைக்குக் கலியாணத்தின்போது! 'மாமவ பட்டாபிராமா' கீர்த்தனம் பாடுகிறேன் என்று சொல்லியிருக்கிறாள்!" சூரியா, "சபாஷ்! அதுதான் சரி. பட்டாபிராமனுக்கு அப்படித்தான் பட்டாபிஷேகம் செய்யவேண்டும்!" என்றான். லலிதாவுக்கு நான் நளன் - தமயந்தி கதை சொல்கிறேன்" என்று கூறிவிட்டுச் சீதா லலிதாவைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு பங்களாவை விட்டு வெளியேறினாள். அந்தரங்கம் பேசக்கூடிய ஏகாந்தமான இடத்தைத் தேடி அவர்கள் சென்றார்கள். லலிதாவும் சீதாவும் போனபிறகு ராஜம்மாள் சூரியாவைப் பார்த்து, "குழந்தை! சாலையோரத்திலே தபால்காரனோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தாயே அது எதற்காக? எனக்கு என்னமோ சந்தேகமாயிருக்கிறது என்னிடம் உண்மையைச் சொல்லு!" என்றாள். "அத்தை! அவசியம் சொல்லித்தான் தீரவேண்டுமா? அது உங்கள் சம்பந்தமான விஷயந்தான். ஏற்கனவே உங்களுக்கு எவ்வளவோ கவலை. மேலும் உங்களைத் துன்பப்படுத்துவானேன் என்று சொல்ல வேண்டாமென்று பார்த்தேன்!" என்றான் சூரிய நாராயணன். "அப்பா, சூரியா! இனிமேல் என் மனத்தை வருத்தப்படுத்தக்கூடிய விஷயம் உலகில் ஒன்றுமே இருக்க முடியாது. எத்தனையோ வருத்தங்களையும் கஷ்டங்களையும் அநுபவித்து அநுபவித்து என் மனத்தில் சுரணையே இல்லாமல் போய் விட்டது. எவ்வளவு வருத்தமான விஷயமாயிருந்தாலும் என்னை ஒன்றும் செய்துவிடாது தயங்காமல் சொல்லு!" என்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்து மூன்றாம் அத்தியாயம்


அத்தையும் மருமகனும்

சூரியா சற்று நேரம் அல்லிக் குளத்தையும் அதற்கப்பாலிருந்த சவுக்க மரத் தோப்பையும் பார்த்துக்கொண்டிருந்து விட்டுக் கூறினான்? "பார்க்கப் போனால் அப்படியொன்றும் பிரமாத விஷயம் இல்லை. வருத்தப்படுவதற்கு அவசியமும் இல்லை, மொட்டைக்கடிதம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதாவது கையெழுத்து, காலெழுத்து ஒன்றும் இல்லாத கடிதம். பொறாமையினாலும் துவேஷத்தினாலும் நல்ல காரியத்தைக் கெடுப்பதற்காகச் சிலர் அப்படிக் கடிதம் எழுதுவதுண்டு. அந்த மாதிரிக் கடிதம் உங்களுக்கு வந்திருக்கிறது, அத்தை! அதைத் தபால்கார பாலகிருஷ்ணன் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான். பெரிய போக்கிரி அவன், அதனாலேதான் அவனோடு சண்டை போட்டேன்." "நான்கூட அந்தப் பையனை இங்கே அடிக்கடி பார்த்திருக்கிறேன்! நல்ல பிள்ளையாய்த் தோன்றினான்! அவன் விஷயம் இருக்கட்டும்... கடிதத்தில் என்ன எழுதியிருந்தது! அதைச் சொல்லு!" "என்னமோ கன்னாபின்னா என்று எழுதியிருந்தது! அதைச் சொல்லத்தான் வேண்டுமா அத்தை?" "யாரைப்பற்றி என்ன எழுதியிருந்தது? உன் அத்திம்பேரைப் பற்றியா? அல்லது என்னைப் பற்றியா?" "உங்கள் இருவரைப்பற்றியுமில்லை!"
"அப்படியானால் சீதாவைப்பற்றியா? எந்தப் பாவி என்ன எழுதியிருந்தான்?..." என்று ராஜம்மாள் கூறியபோது அவளுடைய குரலில் அளவில்லாத கோபம் கொதித்தது; முகத்தில் ஆக்ரோஷம் பொங்கியது. "இல்லை, இல்லை! சீதாவைப்பற்றியும் இல்லை. சீதாவைப் பற்றி எழுத என்ன இருக்கிறது? என்ன எழுத முடியும்? அத்தை நீங்கள் எவ்வளவோ கஷ்டங்களை அநுபவத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் சீதாவைப் போன்ற ஒரு பெண்ணை நீங்கள் பெற்றது உங்களுடைய பாக்கியந்தான்!" ராஜம்மாளின் முகம் மறுபடியும் மலர்ந்தது. சீதாவைப் பற்றியும் ஒன்றும் இல்லையா? பின்னே யாரைப்பற்றி என்ன எழுதியிருந்தது?" என்று கேட்டாள். "சீதாவுக்கு வரன் பார்த்து முடிவு செய்திருக்கிறோமே, அந்த மாப்பிள்ளையைப் பற்றித்தான் எழுதியிருந்தது!" "என்ன சூரியா! மாப்பிள்ளையைப்பற்றி என்ன எழுதியிருந்தது?" என்று ராஜம்மாள் பரபரப்போடு கேட்டாள். "அதை சொல்வதற்கே எனக்குக் கஷ்டமாயிருக்கிறது, அத்தை! ஆனாலும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதுதானே? ராகவன் பம்பாயிலே ஏற்கனவே ஒரு பெண்ணுடன் சிநேகம் வைத்துக் கொண்டிருந்தானாம். அவள் ஒரு நாள் பத்மாபுரத்துக்கு வந்து அவனோடு சண்டை போட்டு ரகளை பண்ணிவிட்டாளாம்; ஊரெல்லாம் சிரித்ததாம். இன்னும் அவன் இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன் - அவனுக்குப் போய்ப் பெண்ணைக் கொடுக்கலாமா என்று எழுதியிருந்தது."
ராஜம்மாள் பெருமூச்சு விட்டாள். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள் பின்னர், "இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?" என்று கேட்டாள். "மாப்பிள்ளையின் தாயாரையும் தகப்பனாரையும் பற்றிக் கேவலமாய் எழுதியிருந்தது. அந்தப் பிராமணர் ரொம்பப் பணத்தாசை பிடித்தவராம். அந்த அம்மாள் ரொம்பப் பொல்லாதவளாம். முதல் நாட்டுப் பெண்ணை ரொம்பப் படுத்தியபடியால் அவள் பிறந்து வீட்டோ டு போய்விட்டாளாம். பிற்பாடு அவள் புருஷனும் அவளோடு போய் விட்டானாம். இப்படிப்பட்ட சம்பந்தம் உங்களுக்கு எதற்காக என்று எழுதியிருந்தது. ராஜம்மாள் மறுபடியும் சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு "சூரியா! இன்னும் ஏதாவது உண்டா?" என்றாள். "வேறு முக்கியமாக ஒன்றும் இல்லை. 'இந்த மாதிரி இடத்தில் பெண்ணைக் கொடுப்பதைவிடக் கிணற்றிலே பிடித்துத் தள்ளிவிடலாம்' என்றும் 'கிளியை வளர்த்து பூனையிடம் கொடுக்க வேண்டாம்' என்றும் இம்மாதிரி ஒரே பிதற்றலாக எழுதியிருந்தது. அத்தை! உங்கள் பெயருக்கு இனிமேல் கடிதம் வந்தால் என்னிடமே கொடுக்கும்படி பாலகிருஷ்ணனிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? இனிமேல் கடிதம் வந்தால் உங்களிடமே கொடுக்கச் சொல்லி விடட்டுமா?"
"சூரியா! உனக்கு வயது அதிகமாகாவிட்டாலும், நல்ல யோசனைக்காரனாயிருக்கிறாய். மன்னிகூட அடிக்கடி இதைப் பற்றித்தான் சொல்லிச் சந்தோஷப்படுகிறாள். 'என் மூத்த பிள்ளை கங்காதரன் ஒரு மாதிரிதான். அவனுக்குக் குடும்பத்தின் விஷயத்தில் அவ்வளவு அக்கறை போதாது. தங்கைக்குக் கலியாணம் நாலு நாள்தான் இருக்கிறது. இன்னும் வந்து சேரவில்லை, பாருங்கள்! அடுத்தாற்போலச் சூரியா எவ்வளவு பொறுப்பாக எல்லாக் காரியமும் செய்கிறான்!' என்று இன்றைக்குக் காலையில்கூட உன் அம்மா சொல்லிச் சந்தோஷப்பட்டாள். உன் அம்மா சொன்னது ரொம்ப சரியான விஷயம். உன்னிடம்தான் நானும் யோசனை கேட்கப் போகிறேன். இந்தக் கடிதத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், சூரியா? அதில் உள்ளது உண்மையாக இருக்குமென்று உனக்குத் தோன்றுகிறதா?" என்று கேட்டாள் ராஜம்மாள். "நான் அப்படி நினைக்கவில்லை, அத்தை! யாரோ பொறாமை காரணமாக எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன். அதற்காகக் கலியாணத்தைத் தடங்கல் செய்வது சரியல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, என்னமோ? மேலும் அத்திம்பேருக்கு இதெல்லாம் தெரிந்தால் என்ன சொல்வாரோ, என்னமோ? அவர் இன்னும் வந்து சேரவில்லையே?"
"அத்திம்பேரிடமிருந்து நாலு நாளைக்கு முன்னால் கடிதம் வந்தது. கலியாணத்துக்கு முதல் நாள் வந்து சேர்ந்து விடுவதாக எழுதியிருக்கிறார். டில்லியில் மாப்பிள்ளையைப்பற்றி விசாரித்தாராம். மிகவும் திருப்திகரமாகச் சொன்னார்களாம். ரொம்பக் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்கியிருப்பதாகவும் மேல் உத்தியோகஸ்தர்களுக்கு மாப்பிள்ளை பேரில் ரொம்பப் பிரியம் என்றும் சம்பளம் இரண்டாயிரம் ரூபாய் வரையில் ஆகும் என்றும் சொன்னார்களாம்." "அத்தை நான் சொன்னது சரிதானே? யாரோ பொறாமைக்காரர்கள்தான் இப்படியெல்லாம் எழுதியிருக்க வேண்டும்." "இந்தக் காலத்தில் நல்ல வரன் கிடைப்பது எவ்வளவோ கஷ்டமாயிருக்கிறது. எத்தனையோ பேர் இப்படிப்பட்ட நல்ல வரனுக்குப் பெண்ணைக் கொடுக்க வந்திருப்பார்கள். கலியாணம் நிச்சயம் ஆகாதபடியால் அவர்கள் பொறாமைப்பட்டு இப்படி எழுதியிருக்கலாம்." "அப்படித்தான் இருக்கும்; சந்தேகமேயில்லை."
"மாமியார், மாமனார் விஷயங்கூட விசாரித்தேன். காமாட்சி அம்மாள் பேரில் ஒரு பிசகும் இல்லை என்றும், மூத்த நாட்டுப் பெண்தான் ரொம்பப் பொல்லாதவள் என்றும் தெரிந்தது. புருஷன் வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு எப்போது பிறந்தகத்துக்குப் போனாளோ, அப்போதே குணம் சரியில்லை என்று தெரியவில்லையா? 'என்னோடு வந்து எங்க அப்பா வீட்டில் இருந்தால் இரு; இல்லாவிட்டால் நீ எனக்குப் புருஷன் இல்லை' என்று சொல்லிவிட்டாளாம். அவள் எப்பேர்ப்பட்ட ராட்சஸி யாயிருக்க வேண்டும்?" "தாடகை - சூர்ப்பனகை போன்றவளாய்த்தான் இருப்பாள்!" "ஒருவேளை அந்தப் பெண்ணே விஷமத்துக்காக இப்படியெல்லாம் யாரையாவது கொண்டு எழுதச் சொல்லியிருக்கலாம்." "அப்படியும் இருக்கக்கூடும்!" "ஆகக்கூடி, கலியாணத்தை நடத்திவிட வேண்டும் என்றுதானே நீயும் நினைக்கிறாய், சூரியா!" "கட்டாயம் நடத்தியேதான் தீரவேண்டும். இவ்வளவு ஏற்பாடு நடந்த பிறகு இனிமேல் ஒரு நாளும் பின் வாங்கக் கூடாது." "அப்படியே அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதில் ஏதாவது உண்மையா யிருந்தாலும் நாம் என்ன செய்யமுடியும், சூரியா! இந்த உலகத்தில் நாமாகச் செய்யக் கூடியது என்ன இருக்கிறது? பகவானுடைய சித்தம் எப்படியோ அப்படித்தான் எதுவும் நடக்கும். சீதா இந்த உலகத்தில் சந்தோஷமாயும் சௌக்கியமாயும் இருக்க வேண்டும் என்று பராசக்தியின் சித்தம் இருந்தால் அப்படியே நடக்கும். இந்தக் கலியாணம் நடக்க வேண்டும் என்பது பகவானுடைய விருப்பமாயிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது."
"அதில் என்ன சந்தேகம், அத்தை! லலிதாவைப் பார்க்க வந்தவன் எப்போது சீதாவைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னானோ, அதிலிருந்தே இது பகவானுடைய செயல் என்று ஏற்படவில்லையா!" "என் மனத்தில் இருந்ததையே நீயும் சொன்னாய், சூரியா! அந்த இரண்டு மூன்று நாளும் எனக்கு எவ்வளவு குழப்பமாயிருந்தது தெரியுமா? மன்னியின் மனது வேதனைப்படப் போகிறதே என்று நினைத்து நினைத்து எனக்குத் தூக்கமே வரவில்லை. நீதான் எப்படியோ உன் அம்மாவின் மனத்தைத் தேற்றிச் சரிப்படுத்தினாய். நீ மட்டும் இங்கே இருந்திராவிட்டால் எல்லாம் ஒரே குழப்பமாய்ப் போய்விட்டிருக்கும். உன்னுடைய அப்பாவுக்குக் கூட அன்றைக்கு ஆங்காரம் வந்து விட்டது. நீதான் அந்த வக்கீல் வீட்டுப் பிள்ளையைப் பற்றி உடனே எடுத்துச் சொல்லி அண்ணாவையும் சாந்தப்படுத்தினாய். நீ இங்கே வந்திராவிட்டால் எப்படி ஆகிப் போயிருக்கும்? இதைப்பற்றியெல்லாம் யோசிக்க யோசிக்க என் மனத்தில் இது பகவானுடைய சித்தத்தினால் நடைபெறுகிறது என்று நிச்சயம் ஏற்பட்டு இருக்கிறது."
"யாரோ அசூயை பிடித்தவர்கள் மொட்டைக் கடிதம் எழுதுவதற்காகக் கடவுளுடைய விருப்பத்துக்கு நாம் தடங்கல் செய்வதா? கூடவே கூடாது." "என் எண்ணமும் அதுதான் சூரியா! நீ அந்தத் தபால்காரப் பையன் பாலகிருஷ்ணனிடம் செய்திருக்கும் ஏற்பாடுதான் நல்லது. யார் யாரோ எழுதும் பொய்க் கடிதங்களைப் படித்து என் மனத்தைக் கெடுத்துக் கொள்வானேன்? என் பெயருக்கோ, சீதா பெயருக்கோ வரும் கடிதங்களையெல்லாம் நீயே வாங்கிக் கொள். படித்துவிட்டு எங்களிடம் கொடுக்கக் கூடியதாயிருந்தால் கொடு; இல்லாவிட்டால் கிழித்து எறிந்துவிடு. இன்னும் உன் அப்பாவுக்கு வரும் கடிதங்களைக் கூட நீ வாங்கிப் பார்ப்பது நல்லது. எனக்கு எழுதியதுபோல் அண்ணாவுக்கும் யாராவது எழுதி, அவருடைய மனதும் கலங்கிப் போகலாமல்லவா?"
"ஆம், அத்தை! அப்பாவுக்கு வரும் கடிதங்களைக் கூட நானே வாங்கிப் பார்ப்பது என்றுதான் எண்ணியிருக்கிறேன்." "சூரியா! நீ செய்யும் உதவிக்கு நான் என்ன பதில் செய்யப்போகிறேன்! நீ என்றைக்கும் சௌக்கியமாயிருக்க வேண்டும் உனக்குப் பெரிய உத்தியோகம் ஆகவேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்." "பெரிய உத்தியோகமா? எனக்கா? அந்தமாதிரி ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. அத்தை! நாம் பிறந்த தேசத்துக்காகப் பாடுபட வேண்டும், ஏழை எளியவர்களுக்கு உழைக்க வேண்டும் என்பதுதான் என் மனத்தில் உள்ள ஆசை. பெரிய உத்தியோகம் பண்ணவேண்டும் என்றோ, நிறையப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்றோ எனக்கு ஆசை கிடையாது. பரோபகாரத்துக்காகப் பாடுபடும் மனமும் சக்தியும் எனக்கு ஏற்பட வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள், அத்தை!" "சூரியா! நீ இந்த வயதிலேயே இவ்வளவு பரோபகாரியாயிருக்கிறாயே? பெரியவன் ஆகும்போது எவ்வளவோ பரோபகாரம் செய்வாய். ஆனால் நம்முடைய சொந்தக் காரியத்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ள வேண்டும். "அது சரிக்கட்டி வராது, அத்தை! சொந்தக் காரியத்தைக் கவனித்தால் பரோபகாரம் செய்ய முடியாது. பரோபகாரம் செய்தால் சொந்தக் காரியம் கெட்டுத்தான் போகும்" என்றான் சூரியா.
சற்று நேரம் குளத்தங்கரைப் பங்களாவில் மௌனம் குடி கொண்டு இருந்தது. அந்த மௌனத்தினிடையே சவுக்கு மரத்தோப்பில் காற்றுப் புகுந்து அடிக்கும் சத்தம் கடல் அலை சத்தத்தைப் போலக் கேட்டது. "அத்தை! முன்னொரு நாள் இந்த அலை ஓசை போன்ற சத்தத்தைக் கேட்டு நீங்கள் பயந்தீர்கள். காரணம் அப்புறம் சொல்கிறேன் என்றீர்கள்" என்றான் சூரியா. அப்போது ராஜம்மாளின் முகத்தை மேகத்திரை மறைப்பது போலத் தோன்றியது. "சொல்லுகிறேன், சூரியா! இந்த நிமிஷத்தில் நானும் அதைச் சொல்ல வேண்டும் என்றே எண்ணினேன். இங்கே வருவதற்கு முன்னால் பம்பாயில் நான் வியாதிப்பட்டுப் படுக்கையாய்க் கிடந்தேன் அல்லவா? அப்போது சுர வேகத்தில் என்னவெல்லாமோ பிரமைகள் எனக்கு உண்டாகும். காணாத காட்சிகளையெல்லாம் காண்பேன். அவற்றில் சில காட்சிகள் இன்பமாயிருக்கும்; சில பயங்கரமாயிருக்கும். நானும் சீதாவும் சமுத்திரக் கரையில் நிற்கிறோம். சீதா சமுத்திரத்தில் இறங்கிப் போகிறாள். 'போகாதேடி! போகாதேடி!' என்று நான் கத்துகிறேன். ஓ என்ற அலை ஓசையினால் நான் கத்தும் குரல் அவள் காதில் விழவில்லை. மேலும் சமுத்திரத்தில் போய்க் கொண்டிருக்கிறாள். திடீரென்று ஒரு பெரிய அலை வந்து அவள் மேல் மோதுகிறது. அவளைக் காப்பாற்றுவதற்காக நானும் கடலில் இறங்குகிறேன். எனக்கு நீந்தத் தெரியுமல்லவா? அலைகளை எதிர்த்துச் சமாளித்துக் கொண்டு நீந்திப் போகிறேன்.
ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் கடலும் அலையுமாயிருக்கிறதே தவிர, சீதா இருந்த இடமே தெரியவில்லை! அலைகளின் பேரிரைச்சலுக்கு மத்தியில் 'சீதா! சீதா!' என்று அலறுகிறேன். என்னுடைய கைகளும் சளைத்துப் போய் விடுகின்றன; அந்தச் சமயத்தில் கையில் ஏதோ தட்டுப்படுகிறது அது சீதாவின் கைதான். அவளுடைய கையைப் பிடிக்கிறேன்; வளை உடைகிறது கை நழுவப் பார்க்கிறது. ஆனாலும் நான் விடவில்லை, கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். இம்மாதிரி பல தடவைக் கண்டேன். சூரியா! ஒவ்வொரு தடவையும் பிடித்துக்கொள்ளும் சமயத்தில் பிரக்ஞை வந்துவிடும். அவ்வளவும் உண்மையாக நடந்தது போலவே இருக்கும் இன்னும் அதை நினைத்தால் எனக்குப் பீதி உண்டாகிறது; உடம்பு நடுங்குகிறது. சவுக்குத் தோப்பின் சத்தத்தைக் கேட்டாலும் அந்த ஞாபகம் வந்து விடுகிறது." சற்றுநேரம் பொறுத்துச் சூரியா, "இதையெல்லாம் நீங்கள் சீதாவிடம் எப்போதாவது சொன்னீர்களா!" என்று கேட்டான். "ஆமாம் சொன்னேன்! அவளை ஜாக்கிரதையாக இருக்கும்படியும் சொல்லியிருக்கிறேன்.""அத்தை! இதை நீங்கள் சீதாவிடம் சொல்லியிருக்கக் கூடாது!" என்றான் சூரியா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்து நான்காம் அத்தியாயம்


கலியாணமும் கண்ணீரும்

ராஜம்பேட்டை அக்கிரகாரம் திமிலோகப்பட்டது. கிட்டாவய்யர் வீட்டுக் கலியாணம் என்றால் சாதாரண விஷயமா? விவாக தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலேயே மேளம் கொட்டியாகிவிட்டது. பிறகு ஊரில் எந்த வீட்டிலும் அடுப்பு மூட்டப் படவில்லை. எல்லாருக்கும் சாப்பாடு கிட்டாவய்யர் வீட்டிலேதான். வீதி முழுவதும் அடைத்துப் போட்டிருந்த பந்தலில் ஊர்க்குழந்தைகள் சதா காலமும் கொம்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்கள். மாட்டுச் சதங்கைகளில் சத்தம் கேட்டவண்ணமாக இருந்தது. வண்டிகளுக்கும் ஓய்ச்சல் ஒழிவென்பதே கிடையாது. கலியாணத்துக்கு முதல் நாள் இரண்டு கலியாணத்துக்குச் சம்பந்திகளும் வந்துவிட்டார்கள். பிறகு ஊருக்கு உற்சவத்தோற்றம் உண்டாகிவிட்டது. தேர்த் திருவிழா மாதிரி ஜே ஜே என்று ஏகக்கூட்டம். ஜான வாச ஊர்வலம் மேளதாளங்களுடனும் மத்தாப்பு வாண வேடிக்கைகளுடனும் அமோகமாக நடந்தது. இவ்வளவு குதூகலத்துக்கும் உற்சாகத்திற்குமிடையில் ஒரே ஒரு விஷயம் மட்டும் எல்லாரும் கொஞ்சம் மனச் சஞ்சலத்தை உண்டாக்கி வந்தது. அது சீதாவின் தகப்பனார் துரைசாமி ஐயர் இன்னும் வந்து சேரவில்லையே என்பதுதான். ஆனால் இது காரணமாகச் சீதாவின் கலியாணத்தை நிறுத்தி வைக்கும் பேச்சு ஏற்படவில்லை. ராஜம்மாளின் மனம் எத்தகைய வேதனை அடைந்திருந்ததென்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம். ஆயினும் அவள் அதை வெளியில் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. தன்னுடைய கணவர் வந்து சேராவிட்டாலும் கலியாணத்தை நடத்திவிட வேண்டியதுதான் என்று சொல்லிவிட்டாள். இந்தக் கலியாணத்தை மனப்பூர்வமாக ஆமோதித்து துரைசாமி ஐயர் எழுதியிருந்த கடிதம் அவளுக்கு இந்த விஷயத்தில் மிக்க ஒத்தாசையாயிருந்தது.
அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்த பிறகு சம்பந்திகளுக்குச் சிறிது ஏற்பட்டிருந்த தயக்கமும் நீங்கிவிட்டது. பிறகு எல்லாருமே ரயில்வே உத்தியோகத்தைப் பற்றிப் பரிகாசமாகப் பேசி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர், "எனக்குச் சீமந்தக் கலியாணம் வருகிறது. மூன்று நாள் லீவு வேண்டும்!" என்று கேட்டதற்கு வெள்ளைக்கார மேல் உத்தியோகஸ்தர், "அதெல்லாம் முடியாது; சீமந்தக் கலியாணத்தைப் பர்த்திக்கு ஆள் போட்டு நடத்திக் கொள்!" என்று பதில் சொன்னாரல்லவா? இந்தக் கதையை பலவிதமாக மாற்றி ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். இரவு பத்து மணிவரையில், அதாவது கடைசி ரயிலுக்குக் கூடத் துரைசாமி வரவில்லையென்று ஏற்பட்ட பிறகு கிட்டாவய்யர் தம் சகோதரியுடன் ஆலோசனை செய்தார். ராஜம்மாளின் தமக்கை அபயாம்பாளும் அவளுடைய கணவரும் சீதாவைக் கன்னிகாதானம் செய்துகொடுக்க வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. "சீதா கொடுத்து வைத்த புண்ணியசாலி; அதனாலேதான் வைதிக ஆசார அனுஷ்டானமுள்ள தம்பதிகள் அவளைக் கன்னிகாதானம் செய்து கொடுக்க நேர்ந்திருக்கிறது" என்று ராஜம்மாள் தன் மனத்தைத் திருப்தி செய்துகொண்டாள்.
அபயாம்பாளுடைய பெருமைக்கோ அளவேயில்லை. 'இப்படி அந்தப் பிராமணர் பண்ணிவிட்டாரே?" என்று புகார் சொல்லிக்கொண்டே அவசர அவசரமாக ஓடி ஓடிக் காரியங்களைச் செய்தாள். "நாளைக்குப் பொழுது விடிந்தால் நான் பட்டுப்பாயில் உட்கார்ந்தேயிருக்க வேண்டும். ஒரு காரியமும் செய்ய முடியாது. இன்றைக்குச் செய்தால்தான் செய்தது!" என்று பறந்தாள். கிட்டாவய்யர் தாம் செய்யவேண்டிய காரியங்களிலெல்லாம் லலிதாவையும் சீதாவையும் சரி சமமாகப் பாவித்தே, சகல கலியாண ஏற்பாடுகளும் செய்தார். பெண்ணுக்கு முகூர்த்தப் புடவையாகட்டும், மாப்பிள்ளைக்கு முகூர்த்த வேஷ்டியாகட்டும், ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமமாக வாங்கியிருந்தார். ஆனால், வீட்டு ஸ்திரீகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சீர்வரிசைகளில் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்தது. சரஸ்வதி அம்மாள் தன் மகள் லலிதாவுக்கு ஒரு விதமாகவும் சீதாவுக்கு ஒரு விதமாகவும்தான் செய்தாள். சரஸ்வதி அம்மாளின் தாயார் இந்த வித்தியாசம் காட்டுவதில் மும்முரமாக இருந்தாள். ஆனால் ராஜம்மாளின் தமக்கை அபயாம்பாளோ அந்த மாதிரி ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதில் அக்கறை காட்டினாள். அடிக்கடி ராஜம்மாளிடம் வந்து "இதென்னடி அநியாயம்? இந்த மாதிரி ஒரு கண்ணுக்கு வெண்ணையும் இன்னொரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் தடவுவது உண்டா? இரண்டு கண்களையும் சமமாகப் பாவிக்க வேண்டாமா?
இப்படிப் பாரபட்சம் செய்கிறாளே மன்னி? மன்னி செய்கிறது ஒரு பங்கு என்றால் அவள் அம்மா செய்கிறது மூன்று பங்கா யிருக்கிறது. நானும்நீயும் இந்த வீட்டில் பிறந்தவர்கள்தானே? லலிதாவுக்கு இருக்கிற பாத்தியதை சீதாவுக்கு இல்லாமல் போய்விட்டதா" என்று புலம்பினாள். அவளைச் சமாதானப்படுத்துவது ராஜம்மாளுக்குப் பெரும் வேலையாயிருந்தது. "நீ வாயை மூடிக் கொண்டு இரு, அக்கா! அந்த மனுஷர் இப்படி வருவதாகச் சொல்லி வராமல் மோசம் பண்ணிவிட்டதற்கு ஏதோ இந்த மட்டில் நடக்கிறதே என்று நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தக் காலத்தில் யாருக்கு யார் இவ்வளவு தூரம் செய்வார்கள்? அண்ணாவின் நல்ல குணத்தினால் இதுவாவது நடக்கிறது! இல்லாவிட்டால் என் கதி என்ன? பகவானுடைய அருளால் எனக்கு வாய்த்திருக்கிற மாப்பிள்ளையும் சம்பந்திகளும் 'அது இல்லை; இது இல்லை' என்று குற்றம் சொல்லாதவர்கள். அப்படியிருக்க நீ எதற்காக வீணில் அலட்டிக் கொள்கிறாய்? நடந்தவரையில் சந்தோஷப்பட வேண்டாமோ!" என்று ராஜம்மாள் அக்காவுக்கு ஆறுதல் கூறினாள்.
சீதாவுக்கு மனதிற்குள் எவ்வளவோ குறை இருக்கத்தான் செய்தது. அப்பா வராமல் இருந்துவிட்டாரே என்று ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. லலிதாவுக்குச் செய்கிற மாதிரி தனக்குச் செய்வாரில்லையே என்று துக்கம் பீறிக் கொண்டு வந்தது. அந்த மாப்பிள்ளை சம்பந்திகளுக்கு நடக்கிற உபசாரங்கள் தன்னை மணக்க வந்த மணவாளனுக்கும் அவளைச் சேர்ந்தவர்களுக்கும் நடக்கவில்லையே என்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதையெல்லாம் சீதா மனத்திற்குள் அடக்கிக் கொண்டு, "நடக்கட்டும்! நடக்கட்டும். லலிதாவுக்கு எவ்வளவு வேணுமானாலும் நடக்கட்டும். ஆனால் நான் அடைந்த பாக்கியம் அவளுக்கு ஏது? என் கணவருக்கு அவள் கணவன் இணையாவானா?" என்று எண்ணி முகமலர்ச்சியுடன் இருந்து வந்தாள்.
இவர்கள் எல்லாரைக் காட்டிலும் அதிகமான மன வேதனைக்கு உள்ளாகியிருந்தான் சூரியா. இதற்குக் காரணம் கலியாணத்திற்கு முதல் நாள் ராஜம்மாள் பெயருக்கு வந்த ஒரு தந்திதான். வழக்கம்போல் தபால் வாங்குவதற்குத் தபால் ஆபீஸுக்குப் போயிருந்தபோது, தபால் ரன்னர் தனியாகக் கொண்டு வந்திருந்த தந்தியையும் அவன் வாங்கிக் கொண்டான். அதைப் பிரித்துப் படித்ததும் அவன் திடுக்கிட்டுச் சொல்ல முடியாத மனக் குழப்பத்துக்கு ஆளானான். "கலியாணத்தை நிறுத்திவிடவும், காரணம் நேரில் வந்து தெரிவிக்கிறேன் துரைசாமி" என்று அந்தத் தந்தியில் எழுதியிருந்தது. அது விஷயமாக என்ன செய்வது என்று சூரியாவுக்கு இலேசில் தீர்மானம் செய்ய முடியவில்லை. சீதாவின் கலியாண விஷயமாக மொட்டைக் கடிதங்களை எழுதிய விஷமிகள் இந்தத் தந்தியையும் கொடுத்திருக்கலாம். ஏன் கொடுத்திருக்கக்கூடாது? அநேகமாக உண்மை அப்படித்தான் இருக்கும்.ஆனால் தந்தியை மற்றவர்களிடம் காட்டினாலும் அதைப் பற்றிச் சொன்னாலும் பெருங்குழப்பம் உண்டாகிவிடும்.
அது பொய்த் தந்தி என்று அவர்கள் நம்புவது கடினம். எல்லா ஏற்பாடுகளும் நடந்து சம்பந்திகளும் வந்து இறங்கிய பிறகு கலியாணத்தை நிறுத்துவது என்பது எவ்வளவு அசம்பாவிதம்? சீதாவும் அவள் தாயாரும் எவ்வளவு துக்கம் அடைவார்கள்? எல்லாருக்குமே எவ்வளவு அசந்துஷ்டி உண்டாகும்? சம்பந்திகள்தான் என்ன நினைப்பார்கள்? ஊரார் என்ன சொல்வார்கள்? சுற்றுப்புறத்துக் கிராமவாசிகள் எல்லாம் கேலி பண்ணிச் சிரிப்பார்களே? ஒரு பொய்த் தந்தி இவ்வளவு விபரீதங்களையும் விளைவிப்பதற்கு இடங்கொடுத்து விடுவதா? எது எப்படியிருந்தபோதிலும் இந்தத் தந்தியை இப்போது எல்லாரிடமும் காட்டிக் குழப்பம் விளைவிக்கக்கூடாது என்று சூரியா முடிவு செய்தான். இராத்திரிக்குள் எப்படியும் துரைசாமி ஐயர் வந்து விடக்கூடும். அவர் வந்த பிறகு அப்படி அவசியமாயிருந்தால் கலியாணத்தை நிறுத்திக் கொள்ளட்டும். அப்போது கூட அவரைக் காரணம் கேட்டு வாதாடிப் பார்ப்பது தன்னுடைய கடமை. எது எப்படியானாலும் தந்தியைப் பற்றி இப்போது பிரஸ்தாபிக்கக் கூடாது. ராத்திரியும் துரைசாமி ஐயர் வராவிட்டால் பார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு முடிவு செய்திருந்த சூரியா ராத்திரி வந்து சேரும் வண்டியிலும் துரைசாமி ஐயர் வராமற் போகவே முன்னைக் காட்டிலும் அதிகக் குழப்பத்தில் ஆழ்ந்தான். ஜானவாஸ ஊர்வலம் எல்லாம் நடந்த பிறகு தந்தியைப் பற்றிப் பிரஸ்தாபிப்பது மேலும் கஷ்டமாகிவிட்டது. யாரோ ஒரு முட்டாள் மடையன், பொறாமைப் பிசாசு, கொடுத்திருக்கக் கூடிய பொய்த் தந்தி காரணமாக இவ்வளவு ஏற்பாடுகளும் நின்று போவதால் சீதாவுக்கும் ராஜம்மாளுக்கும் ஏற்படக்கூடிய அதிர்ச்சியை நினைத்தபோது சூரியாவுக்குத் தந்தியைக் கொடுக்கும் தைரியம் தனக்கு வரவே வராது என்று தோன்றிவிட்டது. "கடவுள் விட்ட வழி விடட்டும்; நடந்தது நடக்கட்டும்; தந்தியை அமுக்கி விடுவதுதான் சரி" என்று முடிவு செய்தான். ஆனால் அமுக்கிய தந்தி அவனுடைய மூளைக்குள் இருந்து தொல்லைப்படுத்திக் கொண்டேயிருந்தது. இரவில் ஒரு கணமும் தூக்கமில்லாமல் செய்து கொண்டிருந்தது. மறுநாள் பொழுது விடிவதற்குள் கலியாண முகூர்த்தத்துக்குரிய ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. பத்து மணிக்குள்ளே முகூர்த்தமாகையால் ஒரே பரபரப்பாகக் காரியங்கள் நடைபெற்றன. "முகூர்த்தம் வந்து விட்டது! சீக்கிரம்! சீக்கிரம்!" என்று தலைக்குத் தலை கூச்சல் போட்டார்கள். மாப்பிள்ளைகள் இரண்டு பேரும் காசி யாத்திரை புறப்பட்டுப் பத்து அடி தூரம் போகக்கூட இடங்கொடுக்கவில்லை.
"எல்லாம் சட்பட் என்று நடந்தன. கன்னிகாதான - திருமாங்கல்ய தாரணத்துக்கு உரிய நல்ல முகூர்த்தம் வந்தது. இரட்டை நாதஸ்வரங்கள் காதைத் துளைக்கும்படி கிறீச்சிட தவுல் வாத்தியங்களை அடித்த அடியில் வீடெல்லாம் கிடுகிடுக்க, வேத மந்திர கோஷங்கள் வானை அளாவ, வீட்டு ஸ்திரீகள் நூற்றெட்டு அபஸ்வரங்களுடன் "கௌரீ கல்யாணம்" பாட, சீதாவின் கழுத்தில் ஸ்ரீ சௌந்திரராகவன் திருமாங்கல்யத்தைக் கட்டினான். அதே சமயத்தில் பட்டாபிராமன் லலிதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி முடிச்சுப் போட்டான். திருமாங்கல்யதாரணம் ஆனபிறகு பரபரப்பும் சத்தமும் ஓரளவு அடங்கின. வீட்டுக்குள்ளே அத்தனை நேரம் நெருக்கி அடித்துக்கொண்டு வியர்க்க விருவிருக்க உட்கார்ந்திருந்தவர்கள் இனித் தங்களுடைய பொறுப்புத் தீர்ந்தது என்பது போலக் கொஞ்சம் காற்று வாங்க வாசற்பக்கம் சென்றார்கள்; சூரியாவும் வெளியே வந்தான். காலையிலிருந்து உள்ளுக்கும் வாசலுக்கும் ஆயிரம் தடவை நடந்திருந்த சூரியாவின் மனம் இப்போது சிறிது அமைதி அடைந்தது. "கலியாணம் நடந்துவிட்டது. இனி மாறுவதற்கில்லை" என்ற எண்ணம் அவனுக்கு அந்த நிம்மதியை அளித்தது. சற்று நேரத்திற்கெல்லாம் வண்டி மாட்டின் சதங்கை சத்தம் 'ஜில் ஜில்' என்று கேட்டது. தெரு முனையில் கிட்டாவய்யரின் பெட்டி வண்டி வந்தது. முதல் நாள் மாலை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்க் காத்துக் கொண்டிருந்த வண்டிதான்.
அது வெற்று வண்டியாக வரவில்லை. உள்ளே உட்கார்ந்திருந்தவர் பம்பாய் அத்திம்பேராகத்தான் இருக்க வேண்டும். சூரியா பரபரப்புடன் வண்டியை எதிர் கொண்டழைப்பதற்கு முன்னால் சென்றான். கலியாணப் பந்தலின் முகப்பில் வண்டி நின்றது. வண்டியில் இருந்தவர் இறங்குவதற்குள்ளே சூரியா, "அத்திம்பேரே! என்ன இப்படிச் செய்து விட்டீர்களே! உங்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து இங்கே எல்லாருடைய கண்ணும் பூத்துப் போய் விட்டது!" என்று சொன்னான். வண்டிக்குள் இருந்தது துரைசாமி ஐயர்தான். அவர் சூரியாவை ஏற இறங்கப் பார்த்தார். "என் பெயர் சூரியா. சீதாவின் அம்மாஞ்சி நான்?" என்று சூரியா தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். "ஓகோ! கிட்டாவய்யரின் இரண்டாவது பையனா?" "ஆமாம், அத்திம்பேரே! ஏன் இத்தனை தாமதமாய் வந்தீர்கள்? பதினைந்து நிமிஷந்தான் ஆயிற்று திருமாங்கல்ய தாரணம் நடந்து. பெரிய அத்தையும் அவளுடைய அகத்துக்காரரும் கன்னிகாதானம் செய்து கொடுத்தார்கள்." "என்ன? என்ன? திருமாங்கல்யதாரணமா! யாருக்கு? எப்போது?" "ஏன்? லலிதா, சீதா இரண்டு பேருக்குத்தான்." "சீதாவுக்கா? சீதாவுக்குக் கூடவா? மாப்பிள்ளை யார்?"
"சௌந்தரராகவன் தான்! என்ன அத்திம்பேரே? உங்களுக்குக் கலியாணக்கடுதாசி வரவில்லையா? ஆனால் உங்களுக்குத்தான் முன்னமே தெரியுமே? தில்லியிலிருந்து எழுதியிருந்தீர்களே!" "நான் ஒரு தந்தி கொடுத்திருந்தேனே?" என்று துரைசாமி ஐயர் கேட்ட போது அவருடைய பேச்சுக் குளறியது. "தந்தியா? ஒன்றும் வரவில்லையே? என்ன தந்தி?" என்று சூரியா துணிச்சலாகக் கேட்டான். சீதாவின் கலியாணத்தை நிறுத்தி விடும்படி தந்தி கொடுத்திருந்தேன். அது வரவில்லையா?" சூரியா தன் மனக் குழப்பத்தைச் சமாளித்துக்கொண்டே, "அத்திம்பேரே! இப்போது நினைவு வருகிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் ஒரு தந்தி வந்தது. கலியாணத் தடபுடலில் அதை நான் பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. அதை அத்தையிடம் கொடுக்கவும் சந்தர்ப்பப் படவில்லை. இதுதானா நீங்கள் கொடுத்த தந்தி?" என்று சட்டைப்பையில் துழாவித் தந்தியை எடுத்துக் கொடுத்தான்.
துரைசாமி ஐயர் தந்தியைப் பிடித்துப் பார்த்தார். "ஆமாம் இதுதான்! ஆகா! இது ஏன் நேற்றைக்கே வரவில்லை? பட்டிக்காடு ஆனபடியால் இப்படித் தாமதித்து வந்ததாக்கும். எல்லாம் கடவுளுடைய செயல், நாம் என்ன செய்யலாம்? சூரியா! இந்தத் தந்தியைப்பற்றி ஒருவரிடமும் சொல்லாதே" என்றார். "ஆம் அத்திம்பேரே! இனிச் சொல்லி என்ன பிரயோஜனம்? நடந்தது நடந்து விட்டது!" என்றான் சூரியா. "ஆமாம்; நடந்தது நடந்து விட்டது, கடவுளுடைய சித்தம் அப்படி!" என்று சொல்லி விட்டுத் தந்தியைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டார் துரைசாமி. இதுவரை சீதா அடிக்கடி தன் கடைக் கண்ணால் மாப்பிள்ளை சௌந்தரராகவனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று வாசலில் வாசற்படி வழியாகத் தன் தந்தை வருவதைப் பார்த்தாள். அவ்வளவு நேரமும் அவள் மனத்திற்குள் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிக்கொண்டு வந்துவிட்டது. விசித்து விசித்து விம்மி விம்மி அழத்தொடங்கினாள். கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகியது.
ராஜம்மாள் உணர்ச்சி மிகுதியினால் செயலற்றுத் தூணோடு தூணாக நின்றாள். ஆகையால் அவளால் பெண்ணைத் தேற்றுவதற்கு முடியவில்லை. அந்தக் கடமையை, சீதாவைச் சற்று முன்னே கன்னிகாதானம் செய்து கொடுத்த அபயாம்பாள் செய்தாள். "அசடே! எதற்காக அழுகிறாய்! அப்பாதான் வந்து விட்டரே! இந்த மட்டும் வந்தாரே என்று சந்தோஷப்படு!" என்றாள். சீதாவின் மாமியாரும் அருகில் வந்து தேறுதல் கூறினாள். பக்கத்தில் உட்கார்ந்து சீதாவின் புடவைத் தலைப்பையும் மாப்பிள்ளையின் அங்கவஸ்திரத்தின் முனையையும் முடிச்சுப்போட முயன்று கொண்டிருந்த சுண்டுப்பயல் கூடத் தேறுதல் கூறினான். "அழாதே! அத்தங்கா! அழுதால் கண்மையெல்லாம் கன்னத்தில் வழிந்துவிடும்!" என்று சொன்னான். துரைசாமி ஐயர் வந்து சீதாவின் அருகில் உட்கார்ந்து, "அழாதே அம்மா! ரயில் இப்படி மோசம் செய்து விட்டது! இல்லாவிடில் நான் வராமல் இருப்பேனா?" என்று சொல்லிச் சீதாவின் முதுகை மிருதுவாகத் தட்டிக் கொடுத்தார்.
அப்படியும் அழுகை நிற்காததைக் கண்ட சௌந்தரராகவன் இலேசாகத் தன் மனைவியின் கரத்தை தொட்டு, "சீதா!" என்றான். சீதாவின் கண்ணீர்ப் பெருக்கு உடனே நின்றது. அவள் கண்ணீர் ததும்பிக்கொண்டிருந்த தன் வட்டமான பெரிய கண்களால் சௌந்தரராகவனை ஒரு தடவை பார்த்தாள். அந்த பார்வையில் எத்தனையோ விஷயங்கள் பொதிந்து கிடந்தன. வாயினால் விவரிக்க முடியாத இதயத்தின் மர்மச் செய்திகள் எவ்வளவோ அந்தப் பார்வையில் செறிந்திருந்தன. காதல் என்னும் அகராதியின் உதவி கொண்டு சௌந்தரராகவன் அந்தப் பார்வையின் பொருள்களை அறிந்து கொண்டான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top