- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
50. முதல் தண்டனை
1907- ம் வருஷம் ஜூலை மாதம் முதல் தேதி வந்தது. அன்று டிரான்ஸ்வால் எங்கும் இந்தியர்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டு அநுமதிச் சீட்டுப் பெறும் காரியாலயங்கள் திறக்கப்பட்டன. இந்தக் காரியாலயங்களுக்கு அருகில் சத்தியாக் கிரஹத் தொண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டார்கள்.. விஷயம் தெரியாததினாலோ அல்லது பயத்தினாலோ பதிவு செய்து கொள்ள வரும் இந்தியர்களுக்குச் சாத்வீக முறையில் எச்சரிக்கை செய்வதற்காகவே தொண்டர்கள் நிறுத்தி வைக்கப் பட்டார்கள். தொண்டர்களுக்கென்று தனியாக ஒரு அடை யாளம் கொடுக்கப் பட்டிருந்தது. முரட்டுத்தனமாகவோ அவமரியாதையாகவோ பேசக் கூடாதென்றும், லவலேசமும் பலாத்காரத்தைக் கையாளக் கூடாதென்றும் தொண்டர்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லப் பட்டிருந்தது. கறுப்புச் சட்டத் துக்கு உட்படுவதால் இன்னின்ன தீமைகள் விளையும் என்பதைக் கூறும் அச்சுப் பிரசுரத்தைக் கொடுத்து விட்டு, அதில் கண்ட விவரங்களை விளக்கிச் சொல்வதே தொண்டர்களின் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் போலீஸார் தலையிட்டுத் தொண்டர்களை வைதாலும் அடித்தாலும் தொண்டர்கள் பொறுமையாகப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பொறுக்க முடியாமற் போய்விட்டால் அங்கிருந்து அப்புறம் போய்விட வேண்டும். போலீஸார் கைது செய்தால் சந்தோஷமாகச் சிறைக்குப் போக வேண்டும்.
இவ்விதமாக, சாத்வீக மறியல் என்னும் ஆயுதமான து 1907-ம் வருஷத்திலேயே காந்திஜியினால் உருவாக்கப்பட்டது. இந்த ஆயுதத்தைக் காந்திஜி பிற்காலத்தில் இந்தியாவில் பற்பல துறைகளிலும் உபயோகப்படுத்தினார். கள்ளுக்கடை மறியல், விதேசி ஜவுளிக் கடை மறியல் முதலியவை நடந்தன. இந்தச் சாத்வீக மறியல் முறையினாலேயே இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்வது மிகையாகாது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் இந்த முறையை ஆரம்பித்த போது அது முற்றும் புதுமையா யிருந்தபடியால் பல தொல்லைகள் ஏற்பட்டன. "வெறுமனே 'அப்பா ஐயா!' என்று கெஞ்சினால் யார் கேட்பார்கள் ? " என்று எண்ணிய இந்தியர்கள் சிலர் இருந்தார்கள். இவர்கள் இரகசியமாகப் பயமுறுத்தல் முறைகளைக் கையாண்டார்கள். பயமுறுத்தலுக்கு உள்ளானவர்கள் உடனே சர்க்காரின் பாதுகாப்பைக் கோரினார்கள். சர்க்காரின் பாதுகாப்பு உடனே கிடைத்தது. இது காரணமாக இந்திய சமூகத்தில் பலவீனமும் பிளவும் ஏற்பட்டன. சில பிரபல வியாபாரிகள் இராத்திரி பத்து மணிக்கு மேலே பதிவுக் காரியாலயங்களுக்குச் சென்று பதிவு செய்து கொண்டார்கள். இம்மாதிரி சுமார் ஐந்நூ று இந்தியர்கள் வரையில் பதிவு செய்து கொண்டு அநுமதிச் சீட்டுப் பெற்றார்கள்.
ஆனால் டிரான்ஸ்வால் சர்க்கார் இதனால் திருப்தி அடைய வில்லை. சட்டம் அமுலுக்கு வந்து சில மாதங்கள் ஆகியும், சுமார் பன்னிரண்டாயிரம் இந்தியர்களில் ஐந்நூறு பேர் தான் புதிய சட்டத்துக்கு உட்பட்டார்கள் என்பது சர்க்காருக்கு அவமானந் தரும் நிலைமை அல்லவா ? ஆகவே அடக்கு முறையைக் கையாள வேண்டியதுதான் என்று அதிகாரிகள் தீர்மானித்தார்கள்.
முதன் முதலில் அத்தகைய அதிர்ஷ்டம் கிடைக்கப் பெற்றவரின் பெயர் பண்டித ராமசுந்தரம். இவர் வட இந்தியர், பிரசங்கத் திறமை வாய்ந்தவர். சம்ஸ்கிருத சுலோகங்களும் துளசிதாஸ் ராமாயணப் பாடல்களும் சொல்லக் கூடியவர். ஜெர்மிஸ்டன் என்னுமிடத்தில் இவர் இருந்தார். அந்த ஊரில் வசித்த இந்தியர்களிடையில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந் தார். அந்த ஊரிலிருந்த இந்தியர்கள் இவராலேதான் பதிவு செய்து கொள்ள முன்வரவில்லை யென்று அதிகாரிகள் கருதி இவரைக் கைது செய்தார்கள். கோர்ட்டில் விசாரணை நடந்து ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. தென்னாப் பிரிக்கா முழுவதும் இவருடைய பெயர் பிரசித்தியாயிற்று. இந்தச் சம்பவத்தின் பயனாக இந்தியர்களின் உறுதியும் உற்சாகமும் அதிகமாயினவே தவிரக் குறையவில்லை. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிறைக்குப் போகத் தயாரானார்கள். ஜெர்மிஸ்டனில் ஒரு இந்தியர்கூடப் பதிவு செய்து கொள்ளவில்லை.
அதிகாரிகளின் கோபம் அதிகமாயிற்று. ஜோகானிஸ்பர்க்கில் இருந்து இயக்கத்தை நடத்தி வைத்த முக்கியமான தலைவர்கள் பேரில் நடவடிக்கை எடுத்தாலன்றிச் சட்டத்தை அமுல் நடத்த முடியாது என்று தீர்மானித்தார்கள். எனவே சில முக்கியமான இந்தியத் தலைவர்களைப் பொறுக்கி எடுத்து, 1907-ம் வருஷம் டிசம்பர் 28௳ கோர்ட்டில் ஆஜராகி, அவர்கள் பேரில் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்குக் காரணம் காட்டவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.
இப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட தலைவர்களில் காந்திஜி ஒருவர் என்று சொல்ல வேண்டியதில்லை. இன்னொருவர் குவின் என்னும் சீனர். இந்தியர்களைப் போலவே சீனர்களும் கறுப்புச் சட்டத்துக்கு உட்படுத்தப் பட்டார்கள். ஆகையால் சீனர்களும் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்திருந்தார்கள்.
இன்னொரு தலைவர் பெயர் தம்பி நாயுடு. இவருடைய பெற்றோர்கள் தமிழ்-நாட்டிலிருந்து மோர்சி எனப்படும் மொரீஷஸ் தீவுக்குச் சென்று குடியேறியவர்கள். அந்தத் தீவில் பிறந்தவர் தம்பி நாயுடு. இந்தியா தேசத்தை அவர் பார்த்ததே யில்லை. ஆயினும் தாய்நாடாகிய இந்தியா மீது அவர் கொண்டிருந்த பக்திக்கு அளவேயில்லை யென்று காந்தி மகாத்மா எழுதியிருக்கிறார். இன்னும் அவருடைய குணாதிசயங்களைப் பற்றி மிக வியந்து எழுதியிருக்கிறார். இங்கிலீஷ், தமிழ், தெலுங்கு, ஹிந்துஸ்தானி முதலிய பல பாஷைகள் தம்பி நாயுடுவுக்குத் தெரியுமாம். நீகிரோ பாஷைகூடத் தெரியுமாம். எந்த வேலையையும் மட்டமான து என்று அவர் நினைக்க மாட்டாராம். பொது கூட்டத்துக்குத் தலைமை வகிக்க நேர்ந்தாலும் வகிப்பாராம். தலையில் மூட்டை தூக்கிக் கொண்டு சாலையில் போக வேண்டி வந்தாலும் போவாராம். சமூகத்துக்காகச் சர்வ பரித் தியாகமும் செய்வதற்குத் தயாராயிருந்தாராம். இரவு பகல் என்று பாராது பொது வேலைகளில் ஈடுபடுவாராம். "தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரக இயக்கத்தின் சரித்திரத்தில் தம்பி நாயுடுவின் பெயர் எப்போதும் நிலைபெற்று விளங்கும்" என்கிறார் காந்தி மகான்.
குறிப்பிட்ட தினத்தில் 'நோட்டீசு' கிடைத்தவர்கள் எல்லாரும் கோர்ட்டுக்குப் போனார்கள். யாரும் எதிர் வழக்கு ஆடவில்லை. ஆகவே, 'இரண்டு வாரத்திற்குள் அவர்கள் கறுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்து கொள்ள வேண்டும், அல்லது டிரான்ஸ்வாலை விட்டுப் போய்விடவேண்டும்' என்று மாஜிஸ்ட்டிரேட் தீர்ப்பு அளித்தார்.
ஆனால் அந்தத் தீர்ப்பின்படி ஒருவரும் பதிவு செய்து கொள்ளவும் இல்லை; டிரான்ஸ்வாலை விட்டுப் போகவும் இல்லை. 1908-ம் வருஷம் ஜனவரி 10-ம் தேதி தவணை தீர்ந்தது. அன்று எல்லோரும் மறுபடியும் கோர்ட்டுக்கு வரவழைக்கப்-பட்டார்கள். மாஜிஸ்ட்டிரேட்டின் உத்திரவை மீறிய குற்றத்தைச் செய்ததாக எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள்.
கோர்ட்டில் இந்த விசாரணை ஆரம்பமாகிக்கொண்டிருந்த சமயத்தில் பிரிட்டோரியாவிலிருந்து ஒரு செய்தி வந்தது. அங்கேயும் சில இந்தியத் தலைவர்கள் இதே மாதிரி விசாரணை செய்யப்பட்டு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனையும் அதைத் தவிரப் பெருந் தொகை அபராதமும் விதிக்கப்பட்டனர் என்று தெரிந்தது. உடனே காந்திஜி தாம் ஒரு வாக்கு மூலம் கொடுக்க விரும்புவதாகவும் அதற்குக் கோர்ட்டார் அநுமதி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதுவரை ஒன்றுமே சொல்வதற்கில்லை யென்று சொல்லி வந்த காந்திஜி இப்போது வாக்குமூலம் கொடுப்பதாகச் சொன்னதும் மாஜிஸ்ட்ரேட்டுக்குச் சிறிது வியப்பா யிருந்தது. ஒரு வேளை, காந்திஜி பயந்துபோய்ப் பணிந்து விடுவதாகச் சொல்லப் போகிறாரோ என்று எண்ணினார். அவருடைய கோரிக்கையின்படி வாக்குமூலம் கொடுக்க அநுமதி தந்தார். காந்திஜியின் சகாக்களும் மற்றும் விசாரணையைக் கவனிப்பதற்காகக் கோர்ட்டில் கூடியிருந்த நூற்றுக் கணக்கான இந்தியர்களும் "காந்திஜி என்ன சொல்லப் போகிறாரோ?" என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
காந்திஜி கொடுத்த வாக்குமூலத்தின் சாராம்சம் இது தான் :- "கறுப்புச் சட்டத்துக்கு இந்தியர்கள் உட்படக் கூடாது என்கிற இயக்கத்தை ஆரம்பித்தவனும் அதற்குத் தலைமை வகித்து இதுவரை நடத்தி வந்தவனும் நான். ஆகையால் சட்டத்தை மீறிய மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிகமாகவும் கடுமையாகவும் தண்டனை கொடுக்கும்படி கோர்ட்டாரைக் கேட்டுக் கொள்கிறேன்."
இதைக் கேட்ட மாஜிஸ்ட்ரேட் திணறிப்போனார். காந்திஜியைத் தண்டிக்க அவருக்கு மனம் வரவில்லை. தண்டியாமலிருக்கச் சட்டம் இடந்தரவில்லை. எனினும் காந்திஜியின் கோரிக்கையை நிறைவேற்ற அவர் மறுத்து இரண்டு மாதம் வெறுங்காவல் தண்டனை அளித்தார். அவ்விதம் தீர்ப்பு அளிக்கப்பட்டவுடனே காந்திஜியைப் போலீசார் சூழ்ந்து சிறைச்சாலைக்குக் கொண்டுபோனார்கள்.
இவ்விதமாக, 1908-ம் வருஷம் ஜனவரி-10 உலக சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாயிற்று.