• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 1 -- கமலாவின் மனோரதம்



"இப்படிப் பயந்து ஓடுவது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை" என்றாள் கமலா."என் மனசை இந்தப் பஸ் கூடப் புரிந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் இப்படி நடு வழியில் நின்று தகறாறு பண்ணுகிறது."

"இந்தா! க‌ம‌லா, வாயைக் காட்டாதே,அட‌ங்கி இரு" என்று அத‌ட்டினாள் தாயார் காமாட்சி.

"எத‌ற்குக் குழ‌ந்தையை அத‌ட்டுகிறாய்?எதோ ம‌ன‌த்தில் ப‌ட்ட‌தைச் சொல்கிறாள். விள‌க்கினால் புரிந்து கொள்கிறாள்" என்றார் ம‌சிலாம‌ணி. "நன்றாக விளக்குங்கள். ஆனால் துடைப்ப‌க் க‌ட்டையைத்தான் எடுத்து வ‌ர‌வில்லை.ம‌ற்ற‌ச் சாமானன்க‌ளோடு அறையில் வைத்துப் பூட்டியாகி விட்ட‌து. அது ச‌ரி, ஏங்க‌ எல்லாச் சாமான்‌க‌ளும் ப‌த்திர‌மாக‌ இருக்கும் இல்லையா...?"

"ச‌ரிதான்" என்றாள் க‌ம‌லா சிரித்துக் கொண்டே. "ஜ‌ப்பான்கார‌னுக்குப் ப‌ய‌ந்து சென்னையைவிட்டு வெளியேறி வ‌ந்தோம். இப்போ திருட‌னுக்குப் ப‌ய‌ந்து ம‌றுப‌டியும் சென்னைக்கே போவோம். அங்கே எல்லாச் சாமான்க‌ளும் ப‌த்திர‌மாக‌ இருப்ப‌தைத் தெரிந்து கொண்டு ம‌றுப‌டியும் ஜ‌ப்பான்கார‌னுக்குப் ப‌ய‌ந்து கொண்டு ப‌ஸ் ஏறுவோம். ம‌றுப‌டியும் திருட்டுப் போகுமோ என்ற‌ க‌வ‌லையில்..."

"ஏண்டி என்னைக் கிண்ட‌லா ப‌ண்ண‌றே?" என்று தாயார் காமாட்சி கோப‌த்துட‌ன் எழுந்தாள்.

"உஷ்!உட்காரு" என்று அவ‌ள் கையைப் ப‌ற்றி அம‌ர்த்திய‌ மாசிலாம‌ணி "க‌ம‌லா நாம் ஜ‌ப்பான்கார‌னுக்குப் ப‌ய‌ந்து வெளியேறுவ‌தாக‌ நீ ஏன் நினைக்கிறாய்?" என்றார்."யுத்த‌ முய‌ற்சிக‌ளுக்கு நாம் உத‌வுகிறோம்.அவ்வ‌ள‌வுதான். ஜ‌ப்பான்கார‌ன் வ‌ந்தால் ப‌ட்டின‌த்தைப் பாதுகாப்ப‌து மிக‌ முக்கிய‌மான‌ காரிய‌மாகிவிடும். அப்போது போரில் உத‌வ‌க்கூடிய‌வ‌ர்க‌ள் த‌விர‌ ம‌ற்ற‌வர்க‌ள் ந‌க‌ர‌த்தைவிட்டு வெளியேறியிருப்ப‌துதான் அர‌சாங்க‌த்துக்கு வ‌ச‌தி. ஜ‌ப்பானிய‌ விமானங்க‌ள் வ‌ரும்போது அவ‌ற்றைச் சுட்டு வீழ்த்துவ‌தா? அல்ல‌து ஊரில் இருக்கிற‌ கிழ‌ம் க‌ட்டைக‌ளைக் குண்டு வீச்சிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருப்ப‌தா? அடிப‌ட்ட‌ சோல்ஜ‌ர்க‌ளுக்குச் சிகித்சை செய்வ‌தா? அல்ல‌து பெண்க‌ளுக்கும் குழ‌ந்தைக‌ளுக்கும் பாண்டேஜ் போட்டு அவ‌ர்க‌ள் அழுகையைச் ச‌மாதான‌ப்ப‌டுத்திக் கொண்டிருப்ப‌தா? அத‌னால்தான் அர‌சாங்க‌மே ந‌க‌ரைக் காலி செய்யுமாறு எல்லாரையும் கேட்டுக் கொண்டிருக்கிற‌து. யுத்த‌ முய‌ற்சிக்கு உத‌வ‌ முடியாத‌வ‌ர்க‌ள் முட்டுக்க‌ட்டை போடாம‌ல் இருப்ப‌தே பெரிய‌ உப‌கார‌ம்தான்!"

"அப்பா! நீங்க‌ள் சொல்வ‌து ரொம்ப நியாய‌ம்! கிழங் க‌ட்டைகள், குழந்தைகள் நகரைவிட்டு வெளியேற‌ வேண்டிய‌துதான். ஆனால் என்னைப் போல்‌ இள‌ம் வ‌ய‌துக்காரி உட‌ம்பில் ச‌க்தி உள்ள‌வ‌ள் யுத்த‌ முய‌ற்சிக‌ளில் ப‌ங்கெடுத்துக் கொண்டு உத‌வ‌ வேண்டுமே த‌விர‌ ஒதுங்கிக் கொண்டா உத‌வுவ‌து?"

" நீ என்ன‌த்தைய‌டி கிழிக்க‌ப் போகிறாய்?" என்றாள் காமாட்சி.

"ஏன் கிழிக்க‌ மாட்டேன்? வேறு எதுவும் இல்லையானால் பாண்டேஜ் துணியையாவ‌து நுனியில் கிழிச்சுக் க‌ட்டுப் போடுவேன். அடிபட்ட சோல்ஜர்களுக்கு நர்ஸாயிருந்து சேவை புரிவேன்.ஏர் ரெயிட் வார்டனாக இருந்து பணியாற்றுவேன். இன்னும் எத்தனையோ விதங்களில் உதவலாம். மனசு வைக்கணும்.தைரியமும் இருக்கணும்.அவ்வள‌வுதான்." "சிவ சிவா, வெள்ளைக்கார சோல்ஜர்களைத் தொட்டுக் கட்டுப் போடவா? புத்தி போகிறதே, உனக்கு?"

"வெள்ளைக்காரா மட்டும்தானா அம்மா? எத்தனையோ இந்திய சிப்பாய்கள் உயிரைத் திரணமாக மதித்து யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்களே, அவர்களுக்கு உதவிவிட்டுப் போகிறேன்."

"கமலா! நீ சொல்வது ஒருவிதத்தில் சரிதான். ஆனால் யோசித்துப் பார். நம்மை அடிமைப்படுத்தியிருக்கிற ஆட்சிக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்?" என்றார் தந்தை மாசிலாமணி.

"உஷ்! மெள்ள‌ப் பேசுங்க.பஸ் பிரயாணிகளிலேயே யாராவது சி.ஐ. டி.இருந்து வைக்கப் போகிறான்" என்ற காமாட்சி அம்மாள், நாலா புறமும் மிரள மிரளப் பார்வையைச் செலுத்தினாள்.

"அப்படி நீங்கள் நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷம் அப்பா. இப்போது உத்தரவு கொடுங்கள். எப்படியாவது இந்த நாட்டை விட்டுத் தப்பித்துக் கொண்டு போய் சுபாஷ்சந்திரபோஸ் படையிலே சேர்ந்து விடுகிறேன். அவர் என்னைப் பட்டாளத்திலே சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்றாள் கெஞ்சிக் கூத்தாடி நர்ஸாக ஊழியம் செய்யவாவது அனுமதி வாங்கிக் கொள்கிறேன்."

காமாட்சி அம்மாள் இப்போது ஓரேயடியாகப் பயந்து போய்க் கமலாவின் வாயைத் தன் வலக் கரத்தினால் பொத்தினாள்."காலம் கெட்டுக் கிடக்குடி. கதர்ச்சட்டை போட்டுக்கொண்டுகூட, சி.ஐ.டி.கள் உலவி வருகிறார்களாம். ஊர் போய்ச் சேருகிற வரையில் ஒரு வார்த்தை பேசப்படாது நீ ! புரிந்ததா? உம்!" என்று ரகசியக் குரலில் மிரட்டினாள்.

" பேச வேண்டாம் என்றாள் பேசாமல் இருந்து விட்டுப் போகிறேன். ஆனால் நாம் பயந்து கொண்டுதான் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையைமட்டும் என்னிடம் மறைக்கப் பார்க்க வேண்டாம். நான் ஒன்றும் விசுவைப் போல் குழந்தை இல்லை."

"காமாட்சி! கமலாவை என்னவோன்னு நினைத்தேன். எப்படிப் பேசுகிறாள் பார்த்தாயா? இனிமேல் இவளைக் குழந்தையாக நினைக்கக் கூடாது. எல்லா விஷயங்களையும் இவளுக்கும் தெரியப்படுத்தி மனம் விட்டுப் பேச வேண்டியது தான்."

"யார் நினைத்தார்கள், குழந்தை என்று? இரண்டு வருஷமாகச் சொல்லிக்கொண் டிருக்கிறேன். நல்ல வரனாகப் பாருங்கள் என்று. நீங்கதான் எப்ப கேட்டாலும் அவள் என்ன குழந்தைதானே இன்னும் இரண்டு வருஷம் போகட்டும் என்று தட்டிக் கழித்துக் கொண்ட்டிருந்தீங்க."

"கமலா! அம்மா சொல்வதைக் கேட்டாயா? அதையும் உத்தேசம் பண்ணித்தான் இப்போ கிராமத்துக்குக் கிளம்பியிருக்கோம். என் அண்ணா வேதாசலத்தை உனக்கு ஞாபகம் இருக்கோ. என்னமோ? ரொம்ப நாளாச்சு அவன் பட்டினத்துக்கு வந்து. அவன் வீட்டிலே போய் இந்த யுத்தம் முடிகிற வரை இருந்து கொண்டு அப்படியே உனக்கும் ஒரு நல்ல வரனைப் பார்த்து அங்கேயே கல்யாணத்தை முடித்துவிடப் போகிறேன்."

"அப்பா, ஏன் அதோடு நிறுத்தி விட்டீர்கள்? அப்புறம் எனக்கு வளைகாப்பு சீமந்தம் நடந்து, எனக்குப் பெண் குழந்தை பிறப்பதைக் கண் குளிரப் பார்த்து, அவளுக்கு ஆண்டு நிறைவு நடத்தி அட்சராப்பியாசம் செய்து, அப்புறம் பெண்கள் ஆறு கிளாஸுக்கு மேல் படிக்கக் கூடாதென்று சொல்லிப் படிப்பை நிறுத்தி, அவளை யார் தலையிலாவது கட்டி, அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து......"

"என்னம்மா அடுக்கிக் கொண்டே போகிறாய்?"

"பின்னே? பெண் ஜன்மத்துக்கு வேறு வேலை என்னப்பா? அடுப்பை ஊதுவதும் குழந்தை பெறுவதும் தானே?"

"கமலா! உன் மனம் இப்போது சரியில்லை. உன்னுடைய ஆசைப் பூனை மாலுவை விட்டுப் பிரிஞ்சு வந்த துக்கத்திலே என்னென்னவோ பேசுகிறாய்" என்றார் மாசிலாமணி.

"இந்தச் சமயத்தில் அதோ பாருங்க, அதோ!" என்றாள் காமாட்சி.

"என்ன? என்ன?" என்றனர் மற்ற இருவரும் ஏக காலத்தில். காமாட்சி அம்மாள் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார்கள். ஏழெட்டுக் குரங்குகள் நெடுஞ்சாலையில் ஒரு பக்கத்து மரத்திலிருந்து இறங்கிச் சாலையைக் கடந்து எதிர்ப் பக்கம் சென்றன. அங்கே ஒரு மரத்தின் மேல் ஏறத் தொடங்கின. அந்த மரத்தில் இருந்த பறவை இனங்கள் தங்கள் அமைதிக்குப் பங்கம் வந்து விட்டதாக ஏக காலத்தில் கிறீச்சிட்டு அலறின. அந்தக் குரங்குகளுள் சில தாய்க் குரங்குகள், அவற்றின் வயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தன. அதைக் கவனித்த கமலா, "என்னைப் போன்ற பெண்களுக்கும் அந்தக் குரங்குகளுக்கும் என்ன வித்தியாசம்?" என்று முணுமுணுத்தாள்.

அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர் போல், "அந்த இரட்டை வால் எங்கே?" என்று சத்தம் போட்டார் மாசிலாமணி.

குரங்குகளைப் பார்த்ததும்தான் பிள்ளை ஞாபகம் வந்ததாக்கும்?" என்று முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டாள் காமாட்சி.

"பஸ்ஸைவிட்டு இரங்காதேடா என்று அடித்துக் கொண்டேன். கேட்டானா? இப்போ பஸ் திடீரென்று கிளம்பி ஓட ஆரம்பித்து விட்டால் என்ன பண்ணுவது?" என்று அங்கலாய்த்தாள்.

"நான் பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறிப் பெற்றோர் தடை ஏதும் விதிப்பதற்கு முன்னால் 'சரேல்' என்று எழுந்து இறங்கி விட்டாள் கமலா. அவளுக்கு உடலும் உள்ளமும் வேக வேக உள்ளே அமர்ந்திருப்பது வேதனையாக இருந்தது.

வெளியே சென்று பார்த்தவள் முகத்தில் புன்னகை அரும்பியது. சில நிமிஷங்களுக்குப் பிறகு மறுபடியும் பஸ்ஸுக்குள் ஏறி வந்து, "அப்பா தம்பி விசு குறைச்சலா மார்க் வாங்கும் போதெல்லாம் ஒன்றுக்கும் பிரயோசனமில்லை; உருப்படாத கழுதை என்று திட்டுவீர்களே, நீங்க நினைத்தது தப்பு. அவன் எப்படியும் பிழைத்துக் கொள்வான். கரி பஸ்தானே இது? பின்னாலே இருக்கிற இஞ்சினின் பிடியைப் பற்றிச் சுழற்றிக் கொண்டிருக்கிறான். 'ஙொய், ஙொய்' என்று சத்தம் கேட்கிறதே அது தான். கண்டக்டருக்குக் கை வலி எடுத்து விட்டதாம். இவன் தன் கை வரிசையைக் காட்டுகிறான்.

"இப்படி எதையாவது பண்ணிவிட்டு இராத்திரி முழுவதும் கைவலி, கால் வலி என்று அழுது என் பிராணனை வாங்கப் போகிறான்" என்று காமாட்சி அம்மாள் அலுத்துக் கொண்டாள். "அது கிடக்கட்டும், இப்போ நிலைமை என்ன? பஸ் புறப்படுமா, இல்லையா?"

அவர் கேள்விக்குப் பதில் சொல்வதுபோல் பஸ் கண்டக்டர் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு பஸ்ஸுக்குள் ஏறி வந்தார். "ஸார்! இஞ்சின் ரிப்பேர். அவங்கவங்க பஸ் டிக்கட்டை எடுத்துக் கொடுத்தீங்கன்னா பாக்கிப் பணம் வாபஸ் பண்ணுகிறேன். அல்லது அடுத்த பஸ் வரும் வரை காத்திருங்க. இடமிருந்தால் ஏறிக் கொள்ளலாம்" என்றார்.

"அட கடவுளே!" என்று மாசிலாமணி, "இந்த இழவுக்காகத்தானா அத்தனை பாடுபட்டு கறுப்பு மார்க்கெட்டில் இரண்டு மடங்கு தொகை கொடுத்து டிக்கெட் வாங்கினேன்!"

"அது என்ன கல்யாணம்? என்னிடம் சொல்லவே யில்லையே?" என்றாள் காமாட்சி அம்மாள்.

"சொன்னால் நீ எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சம்பாதித்துத் தந்து விடப் போகிறாயாக்கும்" என்று கடுகடுத்தார் மாசிலாமணி. ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை. 'உட்கார இடமிருந்தால் போதும்' என்றேன். 'ஒண்டிக் கொள்ளக் கூட இடம் கிடையாது' என்று சொல்லிட்டான். அப்புறம்தான் இந்த பஸ்ஸுக்கு டிக்கெட் வாங்கித் தொலைச்சேன், அதுவும் பிளாக்கிலே."

"எந்த வேளையில் வீட்டை விட்டுப் புறப்பட்டோமோ?" என்றாள் காமாட்சி. "பஞ் சாங்கத்தைப் பார்த்தீங்களா?"

"பார்க்காமல் என்ன? வீட்டை விட்டுக் கிளம்பியது நல்ல நேரம் தான். ஆனால் பஸ் புறப்பட்டது சரியான ராகு காலத்தில். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றார் மாசிலாமணி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 2 -- வசீகரப் பார்வை



மாசிலாமணி குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடக்குமென்றாலும் ஒருவரோடு ஒருவர் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப் பட்டிருந்தனர். கமலாவின் ஆசைகள் லட்சியங்கள் வேறாக இருந்தாலும் பெற்றோரை எதிர்த்துக் கொண்டு எதையும் செய்யக் கூடிய பெண் அல்ல அவள்.

சென்னையில் அவர்கள் குடித்தனத்தைக் காலி செய்துவிட்டு நாலு வீடுகளுக்கு அப்பால் ஓர் இல்லத்தில் ஓர் அறையை மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் எல்லாச் சாமான்களையும் போட்டுப் பூட்டி விட்டு, அத்தியாவசியமானதும் விலையுயர்ந்ததுமான உடைமைகளுடன் மட்டும் புறப்பட்டிருந்தார்கள்.

அவர்களைப் போலவே ஏராளமான குடும்பங்கள் பட்டணத்தை விட்டுக் கிளம்பியிருந்தன. எனவேதான் பஸ், ரயில் முதலியவற்றில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாயிருந்தது. ஜப்பானியர் குண்டு வீசப் போகிறார்கள் என்ற பீதியில் பஸ், ரயிலில் மட்டுமின்றிக் குதிரை வண்டியிலும் ரேக்ளாவிலும் ஏன் கால்நடையாகக் கூடச் சென்றவர் உண்டு.

'வருகிறேன்' என்று அண்ணா வேதாசலத்துக்கு ஒரு கார்டு எழுதிப் போட்டு விட்டுப் புறப்பட்டு விட்டார் மாசிலாமணி. ஆனாலும் உள்ளூர அவருக்குக் கவலைதான். கிராமத்தில் வரவேற்பு எப்படி இருக்குமோ? குடும்பத்தோடு போய் டேரா போட்டால் மன்னி என்ன சொல்லுவாளோ? நாலு நாளா, ஒரு வாரமா, மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கூட ஆகலாம், யுத்தம் முடிவதற்கு. ஏதோ சேமித்து வைத்த பணம் கொஞ்சம் இருக்கிறது. அண்ணா முதலில், 'இதெல்லாம் எதுக்குடா' என்று மறுதளித்தாலும் பின்னர் மன்னியின் போதனைக்கு இணங்கப் பணத்தை வாங்கிக் கொள்வார். நிச்சயம். ஆனால் அதுவும் எத்தனை நாளைக்கு வரும்? கமலாவின் கல்யாணத்தைப் பற்றிச் சற்று முன் பேசினேனே, அதை எப்படி நடத்தப் போகிறேன்?

இப்படி எத்தனையோ பெரிய கவலைகள் அவரை ஆட்கொண்டிருந்த போதிலும் அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இப்போது ஓர் உடனடிக் கவலை முதல் கவலையாக விசுவரூபம் எடுத்தது. இரவு எங்கே தங்குவது என்ற பிரச்னைதான் அது. பஸ் மேலே நகராது. அடுத்த பஸ் எப்போது வருமோ தெரியாது. வந்தாலும் அதில் இடமிருக்காது. நிற்பதோ நெடுஞ்சாலை. நேரமோ பிற்பகல்.

"அப்பா, 'குடும்பம் திண்டாடித் தெருவில் நிற்கிறது' என்பார்களே, அது என்ன என்பது புரிந்து விட்டது" என்றாள் கமலா சிரித்துக் கொண்டே.

அதைக் கேட்டு விட்டு, இவர்களைப் போலவே குழப்பத்தில் ஆழ்ந்திருந்த பயணியர் சிலரும் சிரித்தார்கள். ஆனால் காமாட்சி அம்மாளுக்குக் கோபம்தான் பொத்துக் கொண்டு வந்தது.

"பேச்சுதான் வாய் கிழியும். உருப்படியா ஒரு யோசனை தேறாது" என்றாள்.

"சாதாரணமாக என் யோசனையை யாரும் கேட்பதோ, மதிப்பதோ இல்லை. அதனால் நானும் சொல்வதில்லை. ஆனால் இப்போ நீயே கேட்பதால் சொல்கிறேன்" என்றாள் கமலா. "அப்பா! இப்படி வாங்களேன்" என்று பெற்றோரைச் சற்று ஒதுக்குப் புறமாக அழைத்துப் போனாள்.

அவள் பேசியதைக் கேட்டு விட்டு, "அடி என் தங்கமே! முதல் தடவையாக ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கே" என்றாள் காமாட்சி.

மாசிலாமணி விசுவை அழைத்துக் காதோடு ஏதோ கூறினார். விசு, விடுவிடென்று அவர்கள் வந்த வழியாகவே திரும்பி நடக்கலானான்.

சற்று நேரம் கழித்து அவன் ஒரு கட்டைமாட்டு வண்டியில் வந்தான். அதில் மாசிலாமணி குடும்பம் ஏறிக் கொண்டது. ரிப்பேரான பஸ்ஸினால் நிர்க்கதியாக விடப்பட்ட பயணிகள் சிலர் பொறாமைக் கண்களோடு பார்த்துக் கொண்டிருக்க அந்தக் குடும்பம் மாட்டு வண்டியில் பயணத்தைத் தொடர்ந்தது.

"எப்படி என் யோசனை?" என்றாள் கமலா. அவள் வருகிற வழியில் ஒரு கட்டை வண்டியைப் பஸ் கடந்து செல்வதைக் கவனித்திருந்தாள். அதில் சுமை ஏதும் ஏற்றி இருக்க வில்லை. அது பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு கிராமம் அல்லது நகரத்துக்குத்தான் போய்க் கொண்டிருக்க வேண்டும். பஸ் ரிப்பேராகிக் காத்திருந்த நேர்ந்த சமயத்தில் அது அவர்களை நோக்கிக் கணிசமாக முன்னேறி இருக்கும். கிட்டத்தில் வந்து விட்டால் பஸ்ஸில் வந்த பயணிகளுக்கிடையில் அதில் ஏறுவதற்கு ஏகப் போட்டி இருக்கும். எனவே தம்பி விசுவைத் தாங்கள் வந்த பாதையிலேயே திரும்பிப் போகச் சொல்லிச் சாலையில் ஒரு வளைவுக்கு அப்பால் அந்த வண்டியைப் பிடித்து முன்பணமும் கொடுத்து அதில் ஏறிவரச் சொல்லலாம் என்பதுதான் கமலாவின் யோசனை. அந்த வண்டி போய்ச் சேர்கிற கிராமம் அல்லது நகரத்தில் இரவுப் பொழுதைக் கழித்து விட்டால் பிறகு மறுநாள் பயணத்தைத் தொடர வேறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

கமலா திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. கட்டை வண்டிப் பயணம் வசதிக் குறைவாக இருந்தாலும் விசுவுக்கும் கமலாவுக்கும் புதிய அனுபவமாக, உற்சாகமளிப்பதா யிருந்தது. மாலை நேரத்துச் சூரியன் செக்கச் சிவந்த பந்தாகச் சுற்றிலும் மஞ்சள் நிற ஒளி வட்டத்துடன் தகதகக்கும் அழகைக் கமலா ரசித்தாள். இருபுறமும் வயல்களில் நடவு முடிந்து சிறிது காலமே ஆகியிருந்ததால் இளம் பச்சை நிறப் பயிர் பூங்காற்றில் அலைஅலையாக அசைவது மனோரம்மியமான காட்சியாக விளங்கியது. ஆங்காங்கே மூன்று நான்கு வெண் நாரைகள் ஜிவ்வென்று சேர்ந்தாற் போல் பறந்து வந்து ஒய்யார அழகுடன் வயல்களில் இறங்கின

"டைவ் பாம்பர் மாதிரி இறங்குகிறது பார்த்தியாடா" என்றார் கமலா தம்பி விசுவிடம். அவன் அவளை லட்சியம் பண்ணாமல் வண்டிக்காரனிடம், "நான் கொஞ்ச தூரம் ஓட்டி வருகிறேனே" என்று கயிற்றைப் பிடித்துக் கொள்ள அனுமதி கோரி கெஞ்சிக் கொண்டிருந்தான்.

மகிழ்ச்சிக் கிளுகிளுப்பெல்லாம் ராம பட்டணம் எல்லையை நெருங்கியதும் முடிந்து போயிற்று. துரதிருஷ்டவசமாக வண்டி மாடுகளில் ஒன்று படுத்துக் கொண்டு விட்டது. வண்டிக்காரன் மாட்டை எழுப்பப் பார்த்தான். முடியவில்லை.

"சாமி! மாடு இனிமேல் நடக்காது! அதோ இருக்கிறது ஊர். கூப்பிடு தூரம் தான். வாடகையை முழுசாகக் கொடுத்து விட்டு, இறங்கிப் போங்க" என்றான்.

"இறங்கி நடப்பது பெரிய காரியம் இல்லையப்பா. இத்தனை சாமான்களையும் எப்படிச் சுமப்பது?" என்றார் மாசிலாமணி. "இங்கே ஜாகை வசதியெல்லாம் எப்படி? சத்திரம் சாவடி, ஓட்டல் கீட்டல் ஏதாவது உண்டா?"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஊருக்கு வரணும்னு சொன்னீங்க. ஏத்திக் கிட்டு வந்தேன். இப்ப இறங்குங்க. இந்தப் பக்கமா முதலாளி ஐயா வந்தால் கோவிப்பார்" என்றான் வண்டிக்காரன்.

காமாட்சி அம்மாள் எல்லோருக்கும் முன்னதாக இறங்கி சாலையோரம் நின்றாள். சாமான்களைத் தகப்பனார் வண்டியிலிருந்தபடி எடுத்துத் தர கமலாவும் விசுவுமாகப் பிடித்து மெல்லக் கீழே இறக்கி வைத்தார்கள்.

வண்டிக்காரன், "தே, ஏ, உம், தே! எளூந்திருங்கறேன்!" என்று மாட்டை அதட்டியும் தாஜா பண்ணியும் பார்த்துக் கொண்டிருந்தான்.

காமாட்சி அம்மாளைத் தவிர மற்றவர்கள் காரியமாக இருந்ததால் நவநாகரிகமாக உடையணிந்த ஒரு பெண்மணி அந்த வழியாகப் போவதை அவர்கள் பார்க்கவில்லை. காமாட்சி அம்மாள் மட்டும் அவளை நிறுத்தி, "ஏண்டி பெண்ணே! இந்த ஊரில் இராத் தங்க இடம் கிடைக்குமா?" என்று கேட்டாள்.

அவள் குரல் ஒலித்ததும் மற்ற மூவரும் திரும்பிப் பார்த்தனர்.

அந்தப் பெண் மிகவும் அழகான யௌவன மங்கை என்பதை முதல் பார்வையிலேயே கண்டாள் கமலா. அடக்கமான ஆனால் நாகரிகமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்து தொங்கிய 'ஹாண்ட் பாக்' மடித்து வைத்திருந்த சிறு குடை, நீரோட்டம் போன்று நெளிநெளியான பட்டைக் கோடுகளை உடைய மெல்லிய ஆறு கெஜ சேலை. சிறிதளவு குதிகாலை உயுர்த்திக் காட்டிய ஸாண்டல்ஸ். இடது கரத்தில் கைக்கடிகாரம். வலக் கரத்தில் ஒரே ஒரு தங்க வளையல். கழுத்தில் டாலருடன் ஒற்றை வடச் சங்கிலி. காதில் நவீன மோஸ்தர் தோடு, பின்னிப் பிச்சோடா போட்ட கேசம். காதருகே சுருண்டு தொங்கிய மயிரிழைகள், பவுடர் பூசிப் பளிச்சென்ற முகம், நெற்றித் திலகம், மைதீட்டிய விழிகள், எடுப்பும் எழிலும் மிக்க தோற்றம் எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்ட கமலா, தன்னுடைய பயணக் களைப்பு மிக்க கசங்கிய கோலத்தையும் கர்நாடக பாணியையும் கூடவே எண்ணிப் பொருமினாள்.

'இவள் ஏதோ உத்தியோகத்தில் இருக்கிறாள்' என்பது உடனே புரிந்து போயிற்று கமலாவுக்கு. கரத்தில் அவள் மடித்துப் போட்டிருந்த கறுப்புக் கோட்டு அவளை ஒரு வக்கீல் என்று காட்டிக் கொடுத்து விட்டது.

'அடேயப்பா! இந்த முகம்தான் எத்தனை களையானது! இந்த விழிகள்தாம் எவ்வளவு வசீகரமானவை! இவள் வழக்காடவே வேண்டாம். கோர்ட்டுக்குள் வந்து நின்று கண்களைச் சுழற்றி நாலு புறமும் ஒரு பார்வை பார்த்தால் போதும். கேஸ் ஜெயம்தான்!" என்று எண்ணினாள் கமலா.

'ஆனால் அப்படிப்பட்ட வெற்றியை விரும்புகிறவளாகவும் இவள் தோன்றவில்லை. அறிவுக் களையும் இந்த முகத்தில் விகசிக்கிறது. இந்தக் கண்களின் பிரகாசமும் ஒளிரும் நெற்றியும் தேர்ந்த ஞானத்தின் விளைவுகள்.'

இவ்வாறு முடிவு கட்டிய கணத்தில் தான் எப்படியெல்லாம் சுதந்திரமாக இருக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டும் என்று விரும்பினாளோ அப்படியெல்லாமும் அதற்கு மேலும் தன் எதிரே நிற்கும் இந்தப் பெண் விளங்குகிறாள் என்று கமலாவுக்கு நிதர்சன மாகப் புரிந்தது. அதனால் மகிழ்ச்சியும் பொறாமையும் ஒரே சமயத்தில் தன் நெஞ்சை நிரப்புவதை அவள் உணர்ந்தாள். அந்தப் பெண்ணுடன் இன்னும் நெருங்கிப் பழகி, நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. கூடவே, 'இவளுடன் என்ன பேச்சு' என்று மனம் வினவியது.

"அம்மா, என் பெயர், 'ஏண்டி பெண்ணே'யில்லை. பவானி. இந்த ஊரில் இராத் தங்க இடம் வேண்டுமென்றால் ஹோம்ரூல் கோபால கிருஷ்ணன் வீட்டுக்குப் போங்கள்" என்றாள் அந்தப் பெண்.

"ரொம்பப் பரோபகாரியோ?"

"அவர் பராபகாரியோ என்னமோ, அவர் மகன் கல்யாணசுந்தரம் ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்லவர். பிறருக்கு உதவவென்றே பிறந்தவர். நிச்சயம் உங்களுக்கு இடம் தேடிக் கொடுப்பார்" என்ற பவானி கமலாவைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.

அந்தப் புன்னகை நட்பின் அறிகுறியாகவும் தோன்றியது. ஏளனமாகவும் பட்டது கமலாவுக்கு. (தொடரும்)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 3 -- மர்ம மங்கை



ராமப்பட்டணம் அனுமார் வீதியில் ஒரு கட்டிடத்தின் வாசலில் 'சமூக சேவா சங்கம்' என்று தமிழிலும் அதற்கு மேலே 'Social Service Club' என்று ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை எழுதி மாட்டி யிருந்தது.

பவானி இந்த இடத்துக்கு வந்ததும் சுற்றுச் சுவர் கேட்டருகே தயங்கி நின்றாள். கட்டிடத்தின் முன்புறம் டென்னீஸ் கோர்ட் டில் ஆடி விட்டு வியர்வையை ஒரு டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டே அப்பால் புல்வெளியில் போட்டிருந்த சாய்வு நாற்காலிகளை நோக்கி நடந்தார் மாஜிஸ்திரேட் கோவர்த்தனன்.

அப்போது அவர் பார்வை வீதி ஓரமாய் நின்று பெயர்ப் பலகையை அண்ணாந்து நோக்கிக் கொண்டிருந்த பவானி பேரில் விழுந்தது. உடனே, "உள்ளே வரலாமே?" என்றார். "அங்கத்தினர்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டோ என்னமோ என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன்." பவானி பேசியபடியே முன்னேறி அவரை நோக்கி நடந்தாள்.

நாற்காலி ஒன்றை அவளுக்காக இழுத்துப் போட்டு விட்டு, "அதற்கென்ன நீங்களும் அங்கத்தினராகி விட்டால் போகிறது" என்றார் கோவர்த்தனன்.

பையனை ஜாடை காட்டி அழைத்து, இரண்டு ஸ்பென்ஸர் லெமனேட் கொண்டுவரச் சொன்னார். கூடவே, "ஐஸ் போடலாமல்லவா?" என்று பவானியைக் கேட்டார்.

"எனக்குப் போடலாம்; உங்களுக்கு வேண்டாம்" என்றாள் பவானி. "இன்னும் வியர்வை கூட அடங்க வில்லையே?"

அந்தக் கரிசனம் அவரை ஒரு வினாடி திகைக்க வைத்தது. "தாங்க்ஸ்" என்றார் புன்னகையுடன். அவர் அவளை அப்போது பார்த்த பார்வையில் நன்றி உணர்ச்சிக்கும் அதிகமாக ஏதோ ஒன்று இருந்தது. அவள் யோசனைப்படியே பையனுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

"பெண்களை இந்தக் கிளப்பில் சேர்த்துக் கொள்கிறீர்களா?" என்று பவானி உரையாடலில் விட்டுப் போன இடத்துக்குத் திரும்ப வந்து சேர்ந்தாள்.

"இதுவரை சேர்த்துக் கொண்டதில்லை. ஏனெனில் எந்தப் பெண்ணூம் சேர முன்வர வில்லை."

"க்ளப்பின் விதிமுறைகளில் அதற்கு இடையூறு ஏதுமில்லையே?"

"இடையூறாக இருந்தால் விதிமுறைகளை மாற்றி விடுகிறோம்."

"என்ன அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டீர்கள்? மற்றவர்கள் சம்மதிக்க வேண்டாமா?"

"பவானிக்காக யாரும் எதையும் செய்வார்கள்!"

"இப்படிப் பேசினால் எனக்குக் கவலை அதிகரிக்கிறது."

"என்ன கவலை?"

"இத்தனை மதிப்பு என் மீது இந்த ஊர்க்காரர்கள் வைப்பதென்றால் அதற்குத் தகுதியுள்ளவளாக நான் விளங்க வேண்டுமே என்றுதான்."

"உங்கள் தகுதிக்கு என்ன குறைச்சல்? பி.ஏ.பி.எல். படித்திருக்கிறீர்கள். கோர்ட்டில் எல்லோரும் பிரமிக்கும்படி வாதாடுகிறீர்கள். சகஜமாக எல்லாருடனும் பழகுகிறீர்கள். அதேசமயம் கண்ணியத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்கிறீர்கள். இவ்வளவும் போதாதென்று பார்ப்பதற்கும் அழகா யிருக்கிறீர்கள்!"

பவானி தன் முகம் சிவக்காமல் இருக்க ரொம்பவும் பிரயாசைப்பட்டுத் தோற்றுப் போனாள். "இப்படிப் புகழ ஆரம்பித்தால் சகஜமாகப் பழக வேண்டாம் என்றே தோன்றிவிடும். இந்தக் கிளப்பில் சேர்வது பற்றியும் புனராலோசனை செய்ய வேண்டியதுதான்."

"புகழ்ச்சி பிடிக்காத ஒரு நபரை என் வாழ்க்கையில் இப்போதுதான் நான் முதல் தடவையாகப் பார்க்கிறேன். அது உங்கள் மதிப்பை மேலும் உயர்த்துகிறது" என்று கூறிய மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் 'லெமனே'டைத் தட்டிலிருந்து எடுத்து பவானியின் கரத்தில் கொடுத்தார். பிறகு, "நானும் இனி உங்களைப் புகழவில்லை; மற்ற அங்கத்தினர்களையும் எச்சரித்து வைக்கிறேன். கிளப்பில் சேராமல் இருந்து விடாதீர்கள். இந்தச் சூழ்நிலை கொஞ்சம் 'கலர்ஃபுல்' ஆக இருக்கட்டும்" என்றார்.

"இன்னும் ஒரு நிபந்தனை."

"என்ன அது?"

"நீங்கள், போங்கள், வாருங்கள் என்று மற்றவர்கள் என்னிடம் பேசட்டும். ஆனால் உங்களைப் பொறுத்தவரை அந்த மரியாதையெல்லாம் என்னிடம் கூடாது." மாஜிஸ்திரேட் சிரித்தபடியே, "இது என் வயதுக்கு நீங்கள் தரும் சலுகையா? அல்லது பதவிக்கா?" என்று கேட்டார். "இரண்டுக்கும் மேலே நம் நட்புக்கு ஓர் அடையாளமாக!" கோவர்த்தனன் தாம் உறிஞ்சிக் கொண்டிருந்த லெமனேடை மேஜையின்மேல் வைத்து விட்டு, அவளை நேருக்கு நேர் பார்த்து, "உன்னை ஒரு மர்மமான பெண் என்று பலர் என் காதுபடக் கூறுவதில் உண்மை இருக்கிறது" என்றார். "உன் பேச்சிலும் மர்மம் இழையோடுகிறது." "அட ஆண்டவனே! நான் மர்மங்களை விடுவிக்கவே கல்வி கற்றேன். தொழிலும் பயிலுகிறேன். மர்மங்களை சிருஷ்டிக்க அல்ல. உங்களுக்குத் தெரியாததா?" "அது சரி, ஆனால் நீ திடுதிப்பென்று ராமபட்டணத்தில் எப்படி முளைத்தாய்? எங்கிருந்து வந்தாய்? ஏன் வந்தாய்? முதலிய பல விவரங்கள் மர்மமாகத்தானே உள்ளன?"

"யாருக்கும் ஒரு மர்மமும் இதில் தேவையில்லை. ஒரு பொதுக்கூட்டம் போட்டு வேண்டுமானால் பேசி விடுகிறேன்."

"பொதுக்கூட்டம் எதற்கு? ராமப் பட்டணம் அப்படியொன்றும் பெரிய ஊர் இல்லை. இங்கே வருகிறானே கல்யாணசுந்தரம் என்று ஒரு பையன் அவனிடம் சொன்னால் போதும். ஊர் முழுவதும் தமுக்கு அடித்து விட்டு வந்து விடுவான்."

பவானி மெளனமானாள். கல்யாணத்தை அவர் சற்று அலட்சிய பாவத்துடன் ஏளனமாகப் பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை.

"மர்மமான மெளனம்" என்றார் கோவர்த்தனன்.

"மெளனத்தில் மர்மம் இருக்கலாம். ஆனால் என்னைப்பற்றி ஒரு மர்மமும் இல்லை. நான் கல்கத்தாவிலிருந்து வந்தேன். இங்கே என் தாய்மாமனுடன் தங்கியிருக்கிறேன். அவர் ரிடையரானவர். மாமி காலமாகி இரண்டு வருஷங்களாகின்றன. சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டு காலம் தள்ளுகிறார். என் தகப்பனார் பாதுகாப்புத் துறையில் உயர் அதிகாரி. என்னையும் என் தாயாரையும் யுத்தத்தை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து இங்கே அனுப்பிவிடத் தீர்மானித்தார். ஆனால் என் தாயார் அவரை விட்டு வரப் பிடிவாதமாக மறுத்து விட்டாள். என்னை மட்டும் இருவரும் சேர்ந்து வற்புறுத்தி ரயிலேற்றி விட்டார்கள்."

இந்தச் சமயத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. பக்க வாத்தியங்களின் ஓசையும் எழுந்தது. பவானி புருவங்களை உயர்த்தி, "ஏக அமர்க்களமாய் இருக்கிறதே?" என்றாள். "ஆமாம், இந்தக் கல்யாணம் வந்து சேர்ந்ததிலிருந்து ஒரே பாட்டும் கூத்தும் தான். ஏதோ நாடகம் நடத்தப் போகிறார்களாம்; பண வசூல் செய்து ஏழைகளுக்கு உதவப் போகிறார்களாம். பேசாமல் பிரிட்ஜோ டென்னிஸோ ஆடி விட்டுப் போகாமல் இதெல்லாம் என்ன வேண்டிக் கிடக்கிறது?" "சமூக சேவா சங்கம் என்ற பெயருக்கு ஏற்பக் கல்யாணம் ஏதாவது செய்ய நினைத்திருப்பார். நியாயம் தானே?" என்ற பவானி, "உண்மையில் நான்கூட அவரைத் தேடிக் கொண்டுதான் இங்கு வந்தேன். உங்களைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்ததில் வந்த காரியமே மறந்து விட்டது. இதோ ஒரு நிமிஷத்தில் வந்து விடுகிறேன்" என்று கூறி வீட்டுக் கட்டிடத்தை நோக்கி நடந்தாள்.

கோவர்த்தனன் அவள் போவதை முகம் சிணுங்கப் பார்த்தாலும் அந்த நடையழகை ரசித்துக் கொண்டுமிருந்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 4 - பவானி மந்திரம்!



மாடு படுத்துக் கொண்ட இடம் சாலையில் ஒரு மதகடியில். பின்னால் ஒரு பாரின் கார் வந்து நின்றது. அதை நம் கதாநாயகன்

கல்யாண சுந்தரம் பி.ஏ.பி.எல். ஓட்டிக் கொண்டு வந்தான். மாட்டு வண்டிக்குப் பின்னால் வந்து கார் நின்றது. மேலே முன்னேற முடியாததால் கோபத்துடன் 'ஹாரனை' அழுத்தினான் கல்யாண சுந்தரம். வண்டி நகருகிற வழியாக இல்லை.

"கொஞ்சம் கூட 'ரோட் சென்ஸே' கிடாயாது. எல்லாம் 'நான் சென்ஸ்' தான்" என்று உரக்கக் கூறியபடியே இறங்கி வண்டியை நோக்கி நடந்து வந்தான்.

"தமிழிலே திட்டுங்க சாமி" என்றான் வண்டிக்காரன்.

அவன் நிலைமையை உணர்ந்து பரிதாபப்பட்ட கல்யாணம், "ஏம்பா, மாடு படுத்துக்க இங்கேதான் இடம் பார்த்துதா?" என்றான்.

"அது மதகைக் கண்டுதா? பிளஷரைக் கண்டுதா? கொஞ்சம் மாட்டைத் தூக்கி விடுங்க சாமி" என்றான் வண்டிக்காரன்.

"தூக்கி விட்டுடுவேன். ஒண்ணும் பெரிய விஷயமில்லை. ஸில்க் சட்டை அழுக்காகி விடுமோன்னுதான் பாக்கிறேன். இன்றைக்குத்தான் சலவை பண்ணி வந்தது."

"அது சரி" என்று அலுத்துக் கொண்டே வண்டிக்காரன் மாட்டை அவிழ்க்க ஆரம்பித்தான்.

இதற்குள் மாசிலாமணி கல்யாணத்தை நெருங்கி, "ஏன் ஸார்? ஹோம்ரூல் கல்யாணசுந்தரத்தின் மகன் கோபாலகிருஷ்ணன் வீடு இந்த ஊரில் எங்கே இருக்கிறது தெரியுமோ?" என்று கேட்டார்.

"தெரியாதே" என்றான் கல்யாணம்.

"அப்பா! மாற்றிச் சொல்லி விட்டீர்கள், 'கல்யாண சுந்தரத்தின் அப்பா கோபால கிருஷ்ணன் வீடு' என்று விசாரியுங்கள்" என்றாள் கமலா.

கல்யாணம் கமலாவைப் பார்த்தான். அவள் தன் தாயாருக்குப் பின்னால் மறைந்தும் மறையாமலும் நின்று கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய அழகிய, பெரிய, கரிய நயனங்கள் அவனுடைய சுந்தரமான முகத்தை வட்டமிடத் தவறவில்லை.

கல்யாணசுந்தரம் அந்தப் பார்வையில் சில விநாடிகள் கட்டுண்டவனாக நின்றான். பிறகு, "எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றான்.

"மதராஸிலிருந்து வருகிறோம். இந்த ஊரில் முன் பின் யாரையும் தெரியாது. அவரும் அவர் மகனும் ரொம்பப் பரோபகாரிகள் என்று கேள்விப்பட்டோம். அவர் வீட்டிலே இன்று இரவு தங்கிவிட்டு..."

"அவர் வீட்டிலே ஏற்கனவே நாலு குடும்பங்கள் வந்து தங்கியுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரி ஆறு பேர். வக்கீல் கோபாலகிருஷ்ணன் தம்முடைய கேஸ் கட்டுக்களை வைக்கக் கூட இடமில்லாமல் திண்டாடுகிறார்."

இதற்குள் காமாட்சி அம்மாள் ஓர் அடி முன்னால் வந்து, "ஏண்டாப்பா நீ யாரு?" என்றாள்.

"நான் தான் ஹோம்ருல் கோபாலகிருஷ்ணன் மகன் கல்யாண சுந்தரம்."

"நினைச்சேன். முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது."

"என்ன தெரிந்தது?"

"நல்ல பிள்ளை, உபகாரி என்று தெரிந்தது. என்னமோ அப்பா நீதான் கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கணும். வயசுப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டோம். இன்று இராத்திரி தங்க இடம் பார்த்துக் கொடுத்தாலும் போதும்."

காமாட்சி அம்மாளுக்குப் பின்னால் மறைவாக நிற்பது போல் பாவனை செய்தபடி அதன் மூலமே தன்பால் கவனத்தை ஈர்த்த கமலாவை இரண்டாவது தடவையாகப் பார்த்தான், கல்யாணம். கொஞ்சம் யோசித்தான்.

"இந்த ஊரிலே இப்போது வேறு எது கிடைத்தாலும் கிடைக்கும். தங்க இடம்தான் கிடைக்காது. மதராஸ்காரர்களில் பாதிப் பேர் இந்தச் சின்னப் பட்டணத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்."

"அப்படிச் சொல்லக் கூடாது அப்பா! நீதான் ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டும்."

"ஆகட்டும் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்த சிநேகிதர் ஒருவர் வீடு காலியாக இருக்கிறது. வடக்கு வீதியிலே தேரடி சமீபமாக வந்து சேருங்கள். அங்கே சந்திக்கிறேன்" என்று கூறிய கல்யாணம் காரை நோக்கி நடந்தான்.

"பவானி அக்கா சொன்னது சரியாகத்தான் இருக்கு. ரொம்பப் பரோபகாரிதான்" என்றாள் கமலா.

"என்னது! பவானி சொன்னாளா?" சட்டென்று திரும்பிக் கமலாவைப் பார்த்துக் கேட்டான் கல்யாணம்.

கமலா திடுதிப்பென்று அவன் நேருக்கு நேர் தன்னிடம் பேசவே பதறியவளாகத் தாயாரின் பின்னால் மறைந்து கொண்டாள்.

"ஆமாம், அந்தப் பெண் பவானிதான் சொன்னாள். அதனால்தான் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிய வந்தது" என்றார் மாசிலாமணி.

"ஏன் ஸார்! அதை முன்னாலேயே சொல்லக் கூடாது! வாங்க, வாங்க! வந்து காரிலே ஏறுங்க" என்று உபசாரம் செய்தான் கல்யாணம்.

"நடந்தே போயிடலாமே, அம்மா. எதுக்காக அவருக்குச் சிரமம்?" என்றாள் கமலா. பவானியின் பெயரைக் கேட்டதுமே கல்யாணத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை அவளால் ரசிக்க முடியவில்லை.

"பேசாமே அந்த கறுவடக டின்னைத் தூக்கிக் கொண்டு வா, கமலா! இருட்டிக் கொண்டு வருகிறது பார்" என்று உத்தர விட்டாள் காமாட்சி.

ஆளுக்கொரு பொருளாகச் சுமந்து கொண்டு போய்க் கார் டிக்கியிலும் கூரைக் காரியர் மேலும் ஏற்றினார்கள். காருக்குள் அமர்ந்து கொண்டார்கள்.

வண்டிக்காரன் இதற்குள் மாட்டை அவிழ்த்து வண்டியை நகர்த்திச் சாலையோரம் விட்டிருந்தான்.

கல்யாணசுந்தரம் டிரைவர் ஆசனத்தில் அமரக் கதவைத் திறக்கப் போனபோது, அவன், "சாமி சாமி! வாடகை!" என்று கத்தினான்.

கல்யாணசுந்தரம் ஐந்து ரூபாய் நோட்டை அலட்சியமாய் எடுத்துக் கொடுத்துப் "போ" என்றான்.

காருக்குள்ளிருந்தபடி இதைப் பார்த்த காமாட்சி அம்மாள், "இது என்ன இந்தப் பிள்ளை இப்படி ஊதாரிச் செலவு பண்ணுகிறானே" என்று கமலாவிடம் கிசுகிசுத்தாள்.

"மாமா பெரிய பணக்காரர் போலிருக்கு" என்றான் விசுவம்.

'பணக்காரனா இருந்தால் போதுமா? இப்படி வாரி வழங்க மனசு வந்து விடுமா என்ன? எல்லாம் பவானி என்கிற அந்தப் பெயர் செய்கிற மாயா ஜாலவேலை என்று கமலாவின் அந்தராத்மா கூறியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 5 - பூட்டு திறந்தது!



பூட்டிக் கிடந்த ஒரு பழைய வீட்டின் வாசலுக்கு வந்து சேர்ந்ததும் கல்யாணசுந்தரம் காரை சாலை ஓரமாய் நிறுத்தினான். "இதுதான் வீடு. ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி யிருக்கிறது. மதராஸ்காரர்கள் வந்து தங்குவது என்றால் சாமானியமா?" என்றான்.

"ராமப்பட்டணமே அதிர்ஷ்டம் பண்ணியிருப்பதாகச் சொல்லுங்கள். சென்னையிலே யிருந்து இந்த ஊருக்கு ஏகப்பட்ட பேர் வந்து டேரா போட்டிருப்பதாகக் கூறினீர்களே!" என்ற மாசிலாமணி, கார்க் கதவைத் திறக்கத் தெரியாமல் தவித்தார். அதே போல் பின் ஸீட்டில் காமாட்சி அம்மாளும் யாரேனும் கதவைத் திறந்துவிடக் காத்திருந்தாள். விசு, "கார்க் கதவைத் திறக்கக் கூடவா தெரியாது?" என்று பெரிய மனுஷ தோரணையில் கேட்டு விட்டுச் சட்டென்று இறங்கி, படீரென்று தன் பக்கத்துக் கதவைச் சாத்தினான்.

கல்யாணத்தின் காதில் அந்த ஓசை நாராசமாக விழுந்தது. முகத்தைச் சுளுக்கிக் காதுகளைப் பொத்திக் கொண்டு, "அப்பனே, உனக்குக் கார் கதவைத் திறக்கத் தெரிகிறது; ஆனால் சாத்தத் தெரியவில்லை. கொஞ்சம் மெதுவா மூடு. என்னதான் வெள்ளைக்காரர் தயாரித்த காரானாலும் இந்தப் போடு போட்டால் தாங்காது" என்று கூறியபடியே இறங்கினான். இதற்குள் விசு மற்றவர்கள் இறங்கக் கதவுகளைத் திறந்தான். கல்யாணம் டிக்கியைத் திறந்து விட்டு விட்டுக் காரின் கூரைமேல், காரியரில் இருந்த சாமான்களை இறக்க ஆரம்பித்தான்.

மாஜி சென்னைவாசிகள் ரொம்பக் கரிசனத்தோடு, "நீங்கள் சிரமப்பட வேண்டாம். நாங்க இறக்கிக் கொண்டு போய் வைக்கிறோம்" என்று உபசாரமாகச் சொன்னார்களே ஒழிய கல்யாணசுந்தரம் காரியம் செய்வதை யாரும் தடுக்கவில்லை. பெட்டியை ஒரு கையிலும் ஒரு பெரிய கூடையை மற்றொரு கையிலும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்த கல்யாணம், பளு தாங்காததால் கூடையை திண்ணையின் மேல் 'ணங்' கென்று வைத்தான்.

"ஐயோ போச்சு! போச்சு! ஊறுகாய் ஜாடி யெல்லாம் உடைஞ்சிருக்கும். இதற்குத்தான் அவரைத் தூக்கச் சொல்லாதே. நீ எடுத்துக்கோ என்று சொன்னேன், கேட்டியா?" என்றாள் காமாட்சி அம்மாள் கமலாவைப் பார்த்து.

"பாதகம் இல்லை அம்மா! இவர் கார்க் கதவை விசு உடைத்ததற்கும் இவர் நம் ஊறுகாய் ஜாடிகளை உடைத்ததற்கும் சரியாய்ப் போய் விட்டது" என்றாள் கமலா.

அவள் ஒரு பெட்டியையும் படுக்கையையும் தூக்கிக் கொண்டு வாசல் பக்கம் வந்து கொண்டிருந்தாள்.

"இப்படிக் கொடு" என்று கை நீட்டினான் கல்யாணம். "படுக்கையை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். பெட்டி என்ன தான் சீமையிலே தயாரானதானாலும் உங்களுடைய தகலடித் தாக்குதலைத் தாங்காது" என்றாள் கமலா.

அவன் சிரித்துக் கொண்டே படுக்கையை வாங்கிக் கொண்டு போய்ப் படியேறித் திண்ணையில் தொப்பென்று போட்டுவிட்டு வேகமாய்த் திரும்பிய சமயம் கமலா கடைசிப்படி ஏறிக் கொண்டிருந்தாள். அவன் மீது இடித்து விடாதிருக்க அவள் இப்பால் நகர அவனும் அதே நேரத்தில் அதே திசையில் நகர, இவள் உடனே எதிர்ப் பக்கம் பாய அவனும் அதையே செய்ய... இப்படி மூன்று நாலு தடவைகள் தடுமாறும்படியாகிவிட்டது.

"இது என்ன, இவா இரண்டு பேரும் வீட்டு வாசல்லே பால்ரூம் டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டா?" என்றான் விசு, தான் பார்த்த ஓர் ஆங்கிலப் படத்தை நினைவுக்குக் கொணர்ந்தவனாக.

"அசடு! தத்துப் பித்தென்று பேத்தாதே" என்று காமாட்சி அம்மாள் அதட்டினாள்.

கமலா வெட்கமடைந்தவளாகப் படிகளை விட்டு இறங்கி ஓரமாய் ஒதுங்கி நின்றாள்.

"சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்திருங்கள். வீட்டுச் சொந்தக்காரரிடம் சாவி வாங்கிக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கல்யாணம் மறுபடி காரில் ஏறி அதைக் கிளப்பிக் கொண்டு போனான்.

"ரொம்பப் பழங்காலத்து வீடு" என்றாள் காமாட்சி அம்மாள்.

"வீடு என்று கிடைத்தால் போதாதா? இதுவே சைதாப்பேட்டையில் இருந்தால் ஐம்பது ரூபாய் வாடகை கேட்பார்கள்." என்றார் மாசிலாமணி முதலியார்.

"இப்போது யார் வாடகை கொடுக்கிறார்கள். எல்லாரும்தான் ஜப்பான்காரனுக்குப் பயந்து விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறார்களே" என்றாள் கமலா.

"நாம் மட்டும் பயப்படாமல் என்ன செய்தோமாம்?" என்றான் விசு.

"நாம் எங்கேடா பயந்தோம்? பீதியல்லவா அடைந்தோம். ஒரே கிலி!" என்றாள் கமலா.

விசுவினால் சும்மா உட்கார்ந்திருக்க முடிய வில்லை. கதவருகே போய்ப் பூட்டைப் பிடித்து இழுத்தான். பூட்டு திறந்து கொண்டது.

"பார்த்தீர்களா! ஒரு 'மாஜிக்' செய்தேன். பூட்டுத் திறந்து கொண்டது. வாருங்கள்! வாருங்கள்!" என்றான் விசு.

எல்லோரும் உள்ளே போனார்கள். காமாட்சி அம்மாள் விடுவிடு என்று வீட்டைச் சோதித்து விட்டு வந்து, "சமையலறை கொஞ்சம் கூட வசதியாய் இல்லை. அம்மி, கல்லுரல் ஒன்றும் கிடையாது. அடுப்பு இடிந்து கிடக்கிறது. நான்தான் சொன்னேனே ரொம்பப் பழங்காலத்து வீடு" என்றாள்.

கமலா கணப்பொழுதும் வீணாக்காமல் பின்கட்டில் அகப்பட்ட ஒரு துடைப்பத்தைக் கொணர்ந்து முற்றத்தை ஒட்டினாற்போலிருந்த இடத்தைத் துப்புரவாகப் பெருக்கினாள். மேஜை நாற்காலிகளைத் துடைத்தாள். சாமான்களை அவளும் விசுவுமாக உள்ளே எடுத்து வந்து வைத்தார்கள்.

இன்னும் சில நிமிஷங்களில் நன்றாக இருட்டிவிடும் என்று உணர்ந்தவளாக அவசரம் அவசரமாகக் கொல்லைப்புறம் சென்று கிணற்றிலிருந்து ஒரு குடம் நீர் இழுத்து முகம் கழுவினாள். மறுபடியும் உள்ளே வந்து முகத்தைத் துடைத்துப்பவுடர் போட்டுக் கொண்டாள். முற்றத்தில் மட்டுமே இருந்த வெளிச்சத்தில் நெற்றிக்கு இட்டுக் கொண்டாள்.

ஸ்விட்ச் இருக்கிற இடமே தெரியவில்லையே?" என்று காமாட்சி அம்மாள் சுவர்களில் தேடினாள்.

"விளக்கு இருந்தால்தானே ஸ்விட்ச் இருக்கும்? வீட்டுக்கு மின் இணைப்பே கிடையாது" என்றார் மாசிலாமணி.

"அட கடவுளே! போயும் போயும் இப்படிப்பட்ட வீடுதானா கிடைத்தது உங்களுக்கு?"

"வாயை மூடிக் கொண்டு இரு. இன்று ராத்திரி தங்குதற்கு இடம் கிடைத்ததே அதைப் பார்க்கலை? புகார்களை அடுக்க ஆரம்பித்து விட்டாள்!" என்றார் மாசிலாமணி.

"நீங்கள் எதற்கு என்மேல் எரிஞ்சு விழறேள்? அந்தப் பிள்ளையாண்டான் நல்ல மாதிரியா இருக்கான். அவனிடத்திலே சொன்னால் எல்லாம் சரிப்படுத்தித் தருவான். ஒரு நாள் இரண்டு நாள் இருந்தாலும் எதற்காக அசௌகரியப்பட்டுக் கொண்டு இருக்கணும்?"

"ஆமாம்! இரண்டு நாட்களுக்காக விளக்கு மட்டுமா போட்டுத் தருவா? வெள்ளை அடிச்சு, ரிப்பேர் பார்த்தும் தருவா. கேட்டுப் பாரு" என்றார் மாசிலாமணி.

"ஏன் இரண்டு நாட்களோடு போவானேன்? ஊருக்கு ஒரு கடிதாசு எழுதிப் போட்டால்போச்சு. உங்க அண்ணா, 'தம்பி வரக் காணுமே' ன்னு உருகவா போகிறார்?"

மாசிலாமணியும் ஏறத்தாழ அவளைப் போலவேதான் அப்போது சிந்தித்துக்கொண் டிருந்தார். 'கிராமத்துக்குப் போய் அண்ணாவுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்பதற்காகவே கடவுள் இங்கே நம்மைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறாரோ?" என்று நினைக்கத் தொடங்கி யிருந்தார். என்றாலும், "அதையெல்லாம் போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். எடுத்த எடுப்பிலேயே அவர்களைப் பயமுறுத்தி விடாதே" என்று மனைவியை எச்சரித்து வைத்தார். "இரவு தங்குவதற்கு மட்டும்தான் இடம் கேட்டு இங்கே வந்திருக்கிறோம். அதை மறந்து விடாதே" என்றார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 6 -- கோபம் தணிந்தது



விசுவும் கமலாவிடம் தலைவாரிக் கொள்ளச் சீப்புக் கேட்டான். அவள், "இப்போ கொடுக்க முடியாது" என்றாள். "அப்புறம் அம்மாவிடம் சொல்லிவிடுவேன்!" "சீ பேசாமலிருடா." "அம்மா! கமலா அதற்குள் அலங்காரம் பண்ணிக் கொள்ள ஆரம்பித்து விட்டாள். எதற்காகத் தெரியுமா?"

"சீ, சும்மா இருடா!" என்றாள் கமலா கையை ஓங்கிச் சீப்பை அவன் மேல் கோபத்தில் விட்டெறிந்தாள்.

விசுவம் அதை லாகவமாகப் பிடித்துக் கொண்டு, "கொடுத்துட்டியே, எனக்குக் கிடைச்சுடுத்தே" என்றான். அவள் அவனைத் தாவிப் பிடிக்க வந்தபோது நழுவி வாசல் புறம் ஓடினான்.

அங்கே கல்யாணசுந்தரமும் வீட்டுச் சொந்தக்காரர் ரங்கநாதனும் வந்து கொண்டிருந்தனர். விசு ரங்கநாதன் மீது முட்டிக் கொண்டான்.

அவர், "இது என்ன அக்கிரமம்? வீடு திறந்திருக்கிறது; என் உத்தரவின்றி யாரோ என் வீட்டை ஆக்கிரமித்தது மட்டுமின்றி இப்படி என்னையே உள்ளே வர விடாமல் மோதி வதைக்கிறார்களே" என்றார்.

கல்யாணமும் வியப்படைந்தவனாக விசுவைப் பிடித்து நிறுத்திக் கொண்டு, "கதவு எப்படித் திறந்தது?" என்று கேட்டான்.

"எனக்கு மந்திரம் தெரியும் மாமா! 'ஓபன் ஸீஸேம்' என்றேன்! கதவு திறந்து கொண்டது."

"பார்த்தீர்களா பையனின் கெட்டிக்காரத்தனத்தை" என்று கல்யாணம் மெச்சிக் கொண்டான்.

"மாஜிக்காவது, மேதாவிலாசமாவது. சுத்தப் போக்கிரித்தனமா இருக்கிறதே. சொந்தக்காரன் அனுமதியின்றிப் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே போவதா? இதைச் சும்மா விடக் கூடாது! கேஸ் போடப் போகிறேன்."

"கண்டிப்பாகச் செய்யுங்கள். ஆனால் ஒன்று. வக்காலத்து என்னிடமே வர வேண்டும். உங்களுக்குத் தான் தெரியுமே. இந்த ஊருக்குப் பவானி வந்ததிலிருந்து மற்ற வக்கீல்களுக்குக் கேஸ் கிடைப்பதென்பதே குதிரைக் கொம்பாகி விட்டது."

"ஸார்! ஸார்! அதோ பாருங்கள். வாசற்படிக்கு மேல் என்ன எழுதியிருக்கிறது?" என்று விசுவநாதன் கை காண்பித்தான்.

அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் "வெல்கம்" என்று எழுதியிருந்தது. "இப்படி, 'நல்வரவு' என்று எழுதிவிட்டுத் தாத்தா கோபித்துக்கொள்ளலாமா?"

"ஏண்டா பயலே! என்னைப் பார்த்தால் உனக்குத் தாத்தாவாகத் தோன்றுகிறதா?"

"இல்லை, இல்லவே இல்லை. கொள்ளுத் தாத்தாவாகத்தான் தோன்றுகிறது."

"பையன் சுத்த வாலாக இருக்கிறான். குடும்பத்தில் மற்றவர்களும் இப்படித்தான் இருப்பார்கள். இவர்களை ஒருநாளும் குடி வைக்க முடியாது. இப்போதே கிளப்பிவிட்டு மறு காரியம் பார்க்கவேண்டும்" என்று கூறியவாறே உள்ளே நுழைந்தார் ரங்கநாதன்.

அவர் கால் நிலைப்படியில் தடுக்க, விழப் போனார். கல்யாணம் சட்டென்று அவரைத் தாங்கிக் கொண்டான்.

"பார்த்தீரா? இதற்குத்தான் வீட்டுக்கு எலெக்ட்ரிக் லைட் போடும் என்றேன். கேட்டீரா?" என்றான் கல்யாணம். "கொஞ்சம் இருங்கள். ஓர் அரிக்கேன் லாந்தர் இரவல் வாங்கிக்கொண்டு வருகிறேன்."

"வேண்டாம். இங்கேயே ஒரு லாந்தர் காமிரா அறையில் இருந்தது" என்று காமாட்சி அம்மாள் குரல் கேட்டது. "டேய் விசு! வந்து விளக்கை வாங்கிண்டு போடா."

"வேண்டாம், வேண்டாம். நான் வந்த வழியே திரும்பப் போகிறவன்தான். கல்யாணம், நீ இருந்து இவர்களைக் கிளப்பி விட்டு வந்து சேர்."

"அப்படிச் சொல்லாதீர்கள் சுவாமி. இந்தப் பையன் கொஞ்சம் துடுக்கு. இவன் தாயார் தகப்பனார் ரொம்ப நல்லவர்கள். இவனுக்கு அக்கா ஒருத்தி இருக்கிறாள். கல்யாணம் ஆக வேண்டிய பெண். அவளைப் பார்த்தால் உங்களுக்கே மனம் இளகிப் போகும்."

"எனக்கே மனம் இளகிப் போகும் என்றால் என்ன அர்த்தம்? நான் அவ்வளவு கல் நெஞ்சக்காரன் என்கிறாயா?"

"இல்லை இல்லை. எதைச் சொன்னாலும் தப்பாக எடுத்துக் கொள்கிறீர்களே?"

"தப்பும் எடுக்கலை. தாரையும் எடுக்கலை. இன்னும் அதற்குக் காலம் வரவில்லை."

இரண்டு பேரும் உள்ளே போனார்கள். "தாத்தா நல்ல சுபமான வார்த்தையாச் சொல்லிண்டு உள்ளே நுழையறார்" என்றான் விசு.

மாசிலாமணி முற்றத்தின் பக்கத்திலிருந்த பழைய சாய்வு நாற்காலியில் விச்ராந்தியாக விசிறிக் கொண்டு அமர்ந்திருந்தார். "வாருங்கள், வாருங்கள்" என்றார்.

"இது வேறேயா? என் வீட்டுக்குள்ளே நான் வருவதற்கு 'வாருங்கள் வாருங்கள்' என்று எனக்கே உபசாரமா?"

"வந்தவர்களை வாருங்கள் என்று அழைப்பது நம் நாட்டுப் பண்பாடு. அதனால்..."

"சொந்தக்காரர் அனுமதி இல்லாமல் பூட்டை உடைச்சு வீட்டுக்குள் நுழையறதும் நம் நாட்டுப் பண்பாடோ?"

கல்யாணம் இப்போது குறுக்கிட்டு, "இந்தவீட்டின் சொந்தக்காரர் ரங்கநாத முதலியார் என்று சொன்னேனே இவர்தான்... ரொம்ப நல்ல மனிதர் பரோபகாரி...." என்றான்.

"நிறுத்தப்பா உன் வர்ணனையை. நான் நல்லவனுமில்லை. பரோபகாரியு மில்லை! நல்லவர்களுக்கு நல்லவன்; பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவன்!"

"மன்னிக்கணும். சத்தியமா நாங்க பூட்டை உடைக்கலை. இந்தப் பயல் போய்ப் பூட்டைத் தொட்டான்..."

"நான் தொடக்கூட இல்லை. கிட்டப் போனேன். அது தானாகத் திறந்துகொண்டது" என்றான் விசு.

காமாட்சி அம்மாள் தூண் மறைவிலிருந்தபடியே பேசினாள்: "அஸ்தமிக்கிற வேளையிலே நாங்க இந்த ஊரிலே வந்து அகப்பட்டுக் கொண்டோம். கல்யாணம் ஆக வேண்டிய வயசிலே இந்தப் பெண் வேறே இருக்கிறாள். இவளையும் அழைத்துக்கொண்டு இனிமேல் இந்த இருட்டிலே நாங்கள் எங்கே போகிறது? அடி பெண்ணே, கமலா! மாமாவுக்கு நமஸ்காரம் பண்ணடி!"

"வேண்டாம்; வேண்டாம்! நமஸ்காரமும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு ரங்கநாதன் கமலாவை பார்த்தார்.

பிறகு, கல்யாணத்தை நோக்கி, "என்னமோ வந்து விட்டார்கள். இரவு நேரத்தில் இவர்களை வீட்டை விட்டுப் போகச் சொல்ல மனமில்லை" என்றார்.

"இப்படி நீங்கள் சொல்வீர்கள் என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியும். இல்லா விட்டால் இவர்களை இவ்வளவு நம்பிக்கையுடன் இங்கே அழைத்து வந்திருப்பேனா? உங்களுடைய பரோபகார குணம்...."

"சரி! சரி! இப்படியே முகஸ்துதி பண்ணி வாடகைக்கு நாமத்தைப் போட்டு விடப் பார்க்காதே. ஒரு நாள் தங்கினாலும் ஒரு மாத வாடகை!"

"ஒரு மாத வாடகை என்ன? மூன்று மாத வாடகையே வாங்கிக் கொள்ளுங்கள். இவர்களும் அவ்வளவு அவசரமாகக் கிளம்பப் போவதாகத் தெரியவில்லை."

"மாதம் எழுபத்தைந்து ரூபாய். காலணா குறைக்க முடியாது. சுவரிலே ஆணி கீணி அடிக்கக் கூடாது. சிம்னி விளக்கை எரிய விட்டு புகை அடையச் செய்யக் கூடாது. அடிக்கடி ஒட்டடை அடித்துச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்."

"அதற்கெல்லாம் நான் பொறுப்பு; வாருங்கள் போகலாம்" என்று கல்யாணம் ரங்கநாதனை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

கமலா விசுவிடம், "அந்த மாமாவுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லுடா" என்றாள்.

விசு வாய் திறப்பதற்குள்ளாகக் கல்யாணம் கமலாவைத் திரும்பிப் பார்த்து, "இப்படிப் போகிற போக்கில் தாங்க்ஸ் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பெரியவரை அவர் வீட்டில் இறக்கி விட்டுத் திரும்பி வந்து சாவகாசமாகக் கேட்டு வாங்கிக்கொள்கிறேன்" என்றான்.

கமலாவின் நெஞ்சு கிளுகிளுத்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 7 --- பிரமிக்க வைத்த பவானி



சமூக சேவா சங்கத்தின் கட்டிடத்துக்குள் இரண்டு மூன்று அறைகள் இருந்தன. பெரிய கூடம் ஒன்றில் சீட்டாடுவதற்காகப் பல மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஓர் அறையில் புத்தக அலமாரிகள், சில மேஜை நாற்காலிகள், வேறு ஒரு அறையில் பிலியர்ட்ஸ் டேபிளைச் சுற்றிச் சிலர் ஜோக் அடித்துச் சிரித்தபடியே பந்துகளைக் குச்சியால் தட்டிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாகப் பின்புறம் இருந்த ஓர் அறைதான் மிக முக்கியமானது. அதுதான் அங்கத்தினர்களுக்கு டிபன், காப்பி தயாராகும் சமையலறை. ராமப்பட்டணம் சோஷியல் சர்வீஸ் கிளப்பின் ரவா கேசரியும் உருளைக்கிழங்கு போண்டாவும் சுற்று வட்டாரத்தில் ஏழெட்டு மைல்களுக்கு ரொம்பப் பிரசித்தி. சோஷியல் சர்வீஸ் கிளப் என்பதில் 'சர்வீஸ்' என்ற பதத்தை மறந்து விட்டு சோஷியல் கிளப்பாக அது பிரமாதமாக நடந்து வந்தது.

கல்யாணசுந்தரம் அதில் சேர்ந்த பிறகு சமீப காலமாகப் புரட்சி கரமான சில மாறுதல்களைப் புகுத்தி யிருந்தான். அவனுக்கு இளம் அங்கத்தினர்களிடையே ஆதரவும் இருந்ததால் நூலகத்தில் ஆங்கில நாவல்களுடன் பல தமிழ்ப் புத்தகங்களும் வந்து சேர்ந்தன. அவற்றில் சில துப்பறியும் அல்லது சமூக நாவல்கள். வேறு பல 'இந்தப் புரட்சி', 'ஏழை அழுத கண்ணீர்', 'உலகம் உருப்படுவது எப்படி?', 'எரிமலை', 'அக்னி ஆறு' முதலிய பல பயங்கரப் பெயர்களைக் கொண்டிருந்தன.

இவற்றுள் ஒன்றைப் பாதி படித்துக் கொண்டிருந்த வாலிபன் ஒருவன் பட்டென்று அதை மூடிவிட்டு, "இந்த உலகம் ஒருநாளும் உருப்படப் போவதில்லை" என்ற மகத்தான உண்மையைப் பளிச்சென்று சொன்னான்.

"உலகத்தின் பேரிலே உனக்கு என்னப்பா அவ்வளவு கோபம்?" என்றான் இன்னொருவன்.

"எனக்கு என்ன கோபம்? எனக்குக் கோபமே வராது. உண்மையைத்தான் சொல்கிறேன். இந்த உலகத்திலே ஏழை- பணக்காரன், முதலாளி - தொழிலாளி; மேல்சாதி - கீழ்சாதி, ஆண்சாதி - பெண்சாதி இப்படிப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிற வரையில் இந்த உலகம் உருப்படப் போகிறதே இல்லை."

"அது சரிதானப்பா, இந்த வித்தியாசங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? அதை நீ சிந்தனை செய்து பார்த்தாயா?" என்று மூன்றாவதாக ஒருவன் கேட்டான்.

"சிந்திப்பது என்பதுதான் நம்மில் யாரிடமுமே கிடையாதே? அதனால் தானே இந்தக் கதிக்கு வந்திருக்கிறோம்."

"அடிப்படையான காரணம்தான் என்ன? சிந்தித்திருக்கிற நீதான் சொல்லேன்."

"மதந்தான் அப்பா, காரணம்! மதந்தான். ஹிந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதம், யூத மதம். இவற்றுக்குள்ளே குட்டி குட்டி மதங்கள்! சைவம் - வைஷ்ணவம் - புரோடஸ்டண்ட் - ரோமன் கத்தோலிக். இப்படி மத வேறுபாடுகளாலேதான் இந்த உலகம் நாசமாய்ப் போகிறது!"

"மதத்தைச் சொல்லப் போய்விட்டாயே? அதற்கும் அடிப்படையான காரணம் என்ன என்பதை நீ சிந்தித்தாயா?"

"நீ தான் சொல்லு!"

"கடவுள் அப்பா, கடவுள்! இந்த உலகத்திலிருந்து கடவுளையே ஒழித்துக் கட்டிவிட்டால் இந்த உலகத்தில் மதம் இல்லை, சாதி இல்லை, ஏழை பணக்காரன் இல்லை....."

"நீ இல்லை, நான் இல்லை, உலகமே இல்லை! ஏதோ உன்னுடைய மூளையிலேதான் முதன் முதலில் இந்த அபூர்வமான யோசனை உதித்திருக்கிறது என்று நினைக்காதே! இரணிய கசிபு காலத்திலிருந்து எத்தனையோ பேர் கடவுளை ஒழித்துக் கட்டியாகி விட்டது."

"நிறுத்துங்க அப்பா, உங்கள் வெறும் பேச்சை! பேசிப் பேசி என்ன பிரயோஜனம்? பேச்சைக் குறையுங்கள்; காரியத்தில் செய்து காட்டுங்கள்!"

"நாங்களா வேண்டாம் என்கிறோம்? காரியத்தில் ஏதாவது செய்து காட்டத்தான் இங்கே கூடியிருக்கிறோம். அந்தக் கல்யாண சுந்தரம் இன்னும் வந்து தொலையலையே?"

"கல்யாணம் வரும் வரை நாம் காத்திருப்பானேன்! நாம் ஆரம்பித்தால் அவன் வருகிற போது வந்து சேர்ந்து கொள்கிறான்."

"சரி, ஆரம்பித்து விடுவோம்."

சிலர் தபலா, ஆர்மோனியம் முதலிய வாத்தியக் கருவிகளைக் கொணர்ந்தார்கள். சுருதி கூட்டிக் கொண்டு கடவுள் வணக்கப் பாட்டைப் பாட ஆரம்பித்தார்கள்.

திடீரென்று ஒருவன் பெஞ்சு மீது ஏறி நின்று கொண்டு, "ஆ! ஏழைகள்! ஏழைகள்! ஏழைகள் படும் பாட்டை நினைத்து என் ரத்தம் கொதிக்கிறது! இதயம் வெடிக்கிறது! என் தொண்டை காய்கிறது! அடே, பையா! ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா!" என்றான்.

"அடசீ! கேட்டதுதான் கேட்டாய். சோடாவாகக் கேட்கக்கூடாதோ? நாடக ஒத்திகைக்கென்று வாங்கி வைத்திருக்கிற சோடாக் கலரை யார் குடிச்சுத் தீர்ப்பது?"

இந்தச் சந்தர்ப்பத்தில் அறை வாசலில் வந்து நின்ற பவானி, "நாடக ஒத்திகை ரொம்பத் தீவிரமாக நடக்கிறது போலிருக்கிறதே" என்றாள்.

அறையிலிருந்த வாலிபர்கள் அனைவரும் அழுத்தம் திருத்தமாய் ஒலித்த அந்தப் பெண் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பவானியைப் பார்த்ததும் பிரமித்துப் போய் நின்றார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 8 -- காதலை வளர்த்த கார்!



பவானியைத் தெரியாதவர்கள் ராமப்பட்டணத்தில் யாரும் கிடையாது. அவளிடம் பேசிப் பழகாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவளை, அவள் அங்கு வந்த நாளிலிருந்தே அனைவரும் அறிவார்கள்.

எனவே அந்த வாலிபர்களுக்கு வாயடைத்துப் போயிற்றென்றால் அது, 'யார் இந்தப் பெண்? என்று புரியாததால் அல்ல. 'பவானி இங்கே எப்படி வந்தாள்? எதற்காக? என்று புரியாதது ஒரு காரணம். 'எவ்வளவு நேரமாக இங்கு நிற்கிறாள். தாங்கள் தர்க்கம் புரிந்ததையும் நாடக ஒத்திகை நடத்தியதையும் எவ்வளவு தூரம் பார்த்திருப்பாள்? அப்படி பார்த்திருந்தால் தங்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருப்பாள்?' என்றெல்லாம் சிந்தனைகள் அடுக்கடுக்காக எழுந்ததால் வியப்பும் வெட்கமும் ஒருங்கே அடைந்தது மற்றொரு காரணம்.

சில வினாடிகள் பொறுத்துப் பிரமிப்பிலிருந்து விடுபட்ட ஒருவன், "வாருங்கள், உட்காருங்கள்" என்று ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அதனைக் கைக்குட்டையால் துடைத்தான். அவ்வளவுதான். அத்தனை இளைஞர்களும் திக்பிரமையிலிருந்து விடுபட்டவர்களாக அவளை உபசரிக்கத் தொடங்கினார்கள்.

"டேய் பையா! காண்டீனில் பாதம் அல்வா பாக்கியிருக்கா? இல்லை எல்லாவற்றையும் விழுங்கித் தொலைத்து விட்டார்களா? போய்ப்பாரு!" என்று அதட்டல் போட்டான் ஒருவன். இன்னொருவன், "இழவு இந்த அறையில் ஃபானே இல்லை. வெந்து புழுங்குகிறது. அந்தக் கிழம் கட்டைகள் சீட்டாடுவதற்கு எதற்கு டேபிள் ஃபான்? சீட்டுப் பறக்கும். அதைப் போய் எடுத்து வருகிறேன்" என்று கூறிவிட்டு விரைந்தான். மூன்றாவதாக ஒருவன் ஆரஞ்சு கலர் ஒன்றை உடைத்துக் கண்ணாடி டம்ளரில் ஊற்றினான்.

நாற்காலியில் அமர்ந்த பவானி, "உங்கள் உபசரிப்புக்கெல்லாம் ரொம்ப தாங்ஸ். ஆனால் நீங்கள் சிரமப்பட வேண்டாம். எனக்கு ஒரு சின்ன உதவிதான் தேவை. மிஸ்டர் கல்யாண சுந்தரத்தைப் பார்க்க வந்தேன். அவர் இங்கே இல்லை என்று தெரிகிறது. அவர் வந்தால் ஒரு செய்தி சொல்லி விட்டால் போதும்" என்றாள்.

அவன் வந்தால் சொல்வது என்ன. அவனே வந்தாச்சு! வாடாப்பா கல்யாணம்! உன்னைத் தேடிக் கொண்டு அதிர்ஷ்ட தேவதையே வந்திருக்கிறது!" என்று சுரம் இறங்கிய குரல் ஒன்று ஒலித்தது.

பவானி திரும்பிப் பார்த்தாள். "என் பாக்கியம்! என்னைத் தேடி வந்தீர்களா?" என்று கல்யாணம் கேட்டபடியே அவளை நெருங்கினான்.

"உங்களைப் போன்ற ஒரு பரோபகாரி நண்பராகக் கிடைத்தது என் பாக்கியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள் பவானி.

"மிஸ்டர் கல்யாணம்! இப்போது கூட ஓர் உதவி கோரித்தான் வந்தேன். எனக்காக அல்ல. இந்த ஊருக்குப் புதிதாக ஒரு குடும்பம் வந்திருக்கிறது. ஊர் எல்லையில் மதகடியில் அவர்கள் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். 'கல்யாண சுந்தரம் என்று இந்த ஊரில் இருக்கிறார். ரொம்ப நல்லவர். உங்களுக்கு நிச்சயம் உதவுவார். நான் போய் அவரை அனுப்புகிறேன்' என்று சொல்லி விட்டு வந்தேன். மாலை நேரத்தில் இங்கே தான் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை. வாசலில் மாஜிஸ்திரேட்டைப் பார்த்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்ததில் வந்த காரியம் மறந்து தாமதமாகி விட்டது. நன்றாக இருட்டியும் விட்டதே! அவர்கள் அங்கே தவித்துக் கொண்டிருப்பார்கள்!"

"தவிப்பதா? நான் இருக்கும் போதா? அதுவும் நீங்கள் பிரியப்பட்டுச் சொன்ன பிறகா? நோ, நோ! அவர்களுக்கு ஜாகை பார்த்துக் கொடுத்து விட்டுத்தான் வருகிறேன்!"

"நிஜமாகவா? ஆல்ரெடி?"

"எஸ், உங்கள் விஷயத்தில் நீங்கள் 'எள்' என்பதற்கு முன் எண்ணெயுடன் நான் நிற்பேன்."

"என்னால் நம்பவே முடியவில்லையே?"

"நம்பிக்கை பிறக்கணும்னா என்னுடன் வாங்க. அழைத்துக் கொண்டு போய்க் காட்டுகிறேன். இங்கே ஒத்திகைக்கு எல்லாரும் காத்திருப்பார்கள். சொல்லி விட்டுப் போகலாம் என்று தான் வந்தேன். திரும்பி அவர்கள் தேவைகளை விசாரிக்க வருவதாகக் கூறிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். கம், லெட் அஸ் கோ!"

"ஓ.கே." என்றாள் பவானி மகிழ்ச்சியுடன். "ஒத்திகை நடந்து கொண்டிருக்கிற சமயத்தில் குறுக்கிட்டதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று தன்னைச் சுற்றிக் குழுமி நின்ற வாலிபர்களிடம் கூறி, கரம் கூப்பி விட்டு வாசலை நோக்கி நடந்தாள்.

"நீங்கள் ஒத்திகையைத் தொடர்ந்து நடத்துங்க. நான் நாளைக்கு வந்து சேர்ந்து கொள்கிறேன்" என்று கல்யாணமும் நண்பர்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

"ஆமாம், கல்யாணம் இப்போ வேறு ஒரு நாடகத்துக்கு ஒத்திகை பார்க்க வேண்டியிருக்கு. 'காதல் கல்யாண நாடகம்!" என்று ஒருவன் கூறியதும் மற்றவர் கொல்லென்று சிரித்ததும் கல்யாணத்தின் காதுகளுக்கு எட்டியது.

'முட்டாள்! காதல் கல்யாண நாடகமா இது? வாழ்க்கையே அல்லவா?' என்று தனக்குள் நண்பனைக் கடிந்துரைத்து முணுமுணுத்தவாறே பவானியைப் பின் தொடர்ந்தான் கல்யாணம்.

காரில் அவளுக்கு பின் கதவைத் திறந்து விடுவதா? முன் கதவையா? என்று கல்யாணம் சற்றுத் தயங்குவதற்குள் பவானிதானாகவே முன்கதவைத் திறந்து அமர்ந்து கொண்டாள். கார் கிளம்பி வாசல்கேட்டை நோக்கிச் சென்ற போது மாஜிஸ்திரேட் இன்னும் அதே இடத்தில் அதே நாற்காலியில் அமர்ந்திருக்கக் கண்டாள் பவானி. காரிலிருந்தபடியே, "வருகிறேன் ஸார்! குட் நைட்" என்று கூறி விடை பெற்றாள். கோவர்த்தனன் கரம் அசைத்தாரேயொழிய அவ்விருவரும் சேர்ந்து போவதைப் பார்க்க அவர் மனம் எரிமலையாகக் கொந்தளித்தது.

இந்தப் பயணத்துக்குச் சீக்கிரம் முடிவு ஏற்பட வேண்டாம் என்று கருதியவனாகக் கல்யாணம் மெல்ல காரை ஓட்டினான். மாசிலாமணி குடும்பத்தைச் சந்தித்துக் குடிவைத்த விவரங்களையெல்லாம் சாங்கோ பாங்கமாகக் கூறினான்.

அவனுடைய பிறருக்கு உதவுகிற குணத்தைப் போற்றிய பவானி, "இந்த நாடகத்தைக்கூட ஏழை எளியோருக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நடத்தப் போகிறீர்களாமே? என்று அரங்கேறுகிறது? தேதி நிச்சயமாகி விட்டதா?" என்று கேட்டாள்.

"தேதி என்னமோ நிச்சயித்து விட்டோம். ஆனால் கதாநாயகி வேஷத்துக்குத்தான் ஆள் இல்லை. ஆண் பிள்ளையைப் பெண் வேஷம் போட்டுக் கொள்ளச் சொல்வது முட்டாள்தனம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதில் 'ரியாலிடி' கொஞ்சமும் இருப்பதில்லை. உருக்கமாக அமைய வேண்டிய காட்சிகூட நகைச்சுவையாகி விடுகிறது. கதாநாயகி வேஷம் ஏற்க யாராவது ஒரு பெண்மணி முன்வந்தால் நாடகம் 'ஸக்ஸஸ்'; இல்லையேல் 'ஃபெய்லியர்'!"

"மேடை ஏறி நடிக்க இந்த ஊரில் எந்தப் பெண் முன்வருவாள்? வீண் ஆசை" என்றாள் பவானி.

"அதனால்தான் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாயிராமல் பெரிய நகரத்திலிருந்து வந்தவர்களாகப் பிடித்துப் போடலாம் என்று யோசனை பண்ணுகிறேன். சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களே என்பதால் உடனே இல்லா விட்டாலும் இரண்டு நாட்கள் கழித்துக் கேட்டுப் பார்க்க உத்தேசம். அந்தப் பெண் கமலாவும் பார்க்கச் சுமாராக இருக்கிறாள். மேடை ஏறி நடிக்கச் சம்மதிப்பாள் என்று தோன்றுகிறதா உங்களுக்கு?"

"சிவசிவா! அவள் பெண் ஜன்மமாகிய என் முன்னால் நின்றே இரண்டு வார்த்தை பேச வில்லையே. அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். அவளாவது, மேடை ஏறி நடிக்கவாவது?"

இந்தப் பதிலையே பவானி கூற வேண்டும் என்று எதிர்பார்த்த கல்யாணம் திருப்தி அடைந்தவனாக, "அப்படியானால் ஒன்று செய்யுங்கள்; நீங்களே கதாநாயகி பாகத்தை ஏற்று நடித்து விடுங்கள்" என்றான்.

"அதற்கென்ன? செய்து விட்டால் போகிறது!" என்றாள் பவானி.

இவ்வளவு சுலபமாக அவள் சம்மதித்து விடுவாள் என்று எதிர்பாராத கல்யாணம் திடுக்கிட்டதால் கார் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. பவானி பதற்றமடைந்து "ஸ்டெடி, ஸ்டெடி" என்று எச்சரித்தபடியே ஸ்டியரிங்கைப் பற்றக் கரத்தை நீட்டினாள். அவள் சாய்ந்த போது அவள் தோள்கள் கல்யாணத்தின் தோள்களை உரசின. அவளுடைய நீண்ட அழகிய விரல்கள் கல்யாணத்தின் விரல்களைத் தீண்டியதில் அவற்றின் மிருதுத் தன்மையை அவன் உணர்ந்தான்.

அவ்வளவுதான்! கல்யாணத்தின் உடம்பெல்லாம் சிலிர்த்து நெளிந்தது. ஸ்டியரிங்கைப் பற்றியிருந்த அவன் கரங்கள் மட்டும் நிதானத்துடன் இருக்குமா என்ன?

கார் பாம்புப் பாதை வகுத்து பிறகு அதிலிருந்து பிரிந்து போய்ச் சாலையோரக் குப்பைத் தொட்டி ஒன்றின் மீது 'ணங்' என்று மோதிக் கொண்டு நின்றது.

"ஐயோ!" என்று அலறியபடியே கரங்களில் முகம் புதைத்துக் குனிந்து கொண்டாள் பவானி.

அவள் மறுபடியும் கண் திறந்து நிமிர்ந்து பார்த்த போது, தெரு விளக்கின் மங்கிய ஒளியில் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டாள். கல்யாணம் கீழே இறங்கிக் கார் எந்த அளவுக்குச் சேதம் அடைந்திருக்கிறது என்று பார்த்துத் திருப்தியுடன் தலையசைத்து விட்டு அதன் 'பானெட்' டின் மேல்குனிந்து அதனை முத்தமிட்டான்.

பிறகு திரும்பி வந்து மீண்டும் பவானிக்குப் பக்கத்தில் அமர்ந்தான். "ஒண்டர்ஃபுல், ஒண்டர்ஃபுல்! நாடகத்தில் நான்தான் கதா நாயகன்! வேறு யார் போட்டிக்கு வந்தாலும் விடப் போவதில்லை" என்றான்.

"காருக்கு ரொம்ப சேதமோ?" என்று கவலையுடன் கேட்டாள் பவானி.

இடது பக்க மட்கார்டில் பலத்த சேதம். சொட்டை விழுந்திருக்கிறது. பெரிதாக. ஆனால் நான் அதை ரிப்பேர் செய்யவே போவதில்லை. திஸ் இஸ் மை லக்கி டே!

அதன் நினைவாக அந்தப் 'பெண்' டை அப்படியே வைத்திருக்கப் போகிறேன்.

பவானி குபீரென்று அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

வான வில்லின் வண்ணங்களையும் மல்லிகை மணத்தையும் பட்டின் மென்மையையும் ஜல தரங்க நாதத்தையும் ஒருங்கே ஒரே சமயத் தில் உணர்ந்தான் கல்யாணம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 9 -- நெருப்பாக ஒரு நெடுமூச்சு



மாசிலாமணி முதலியார் தம் மனைவியிடம், "இந்த வீட்டுக்காரர் என்ன, நாம் ஒரு நாள் தங்கினாலும் ஒரு மாதத்து வாடகை கொடுத்தாக வேண்டும் என்று சொல்லி விட்டுப் போகிறாரே, இது என்ன அநியாயம்?" என்று அலுத்துக் கொண்டார்.

"அந்தப் பிள்ளை அவரைத் தூக்கி அடிப்பது போல் பேசுகிறான். 'ஒரு மாதமென்ன மூணு மாத வாடகை வேணுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்கிறான். இந்த மாதிரி ஊதாரியை நான் பார்த்ததே இல்லை" என்றாள் காமாட்சி.

"அவர் விளையாட்டுக்காக அப்படிச் சொன்னார் அம்மா!" என்றாள் கமலா.

இதற்குள் முன் பக்கம் சற்று நசுங்கிப் போன கோலத்தில் வாசலில் கார் வந்து நின்றது. கல்யாணமும் பவானியும் இறங்கி உள்ளே வந்தார்கள்.

"ஆமாம்; விளையாட்டாகத்தான் சொன்னேன்" என்றான் கமலா கூறியதைக் கேட்டுக் கொண்டே வந்த கல்யாணம். "ரங்கநாத முதலியார் கடுமையாகப் பேசுகிறாரே ஒழிய ரொம்ப நல்லவர். நீங்கள் இருக்கிற நாளைக்கு வாடகை கொடுங்கள் வாங்கிக் கொள்வார்."

பவானி, "உங்களுக்கு இங்கே எல்லாம் வசதியாக இருக்கிறதா?" என்று கேட்டாள். கல்யாணத்தைத் தேடிப் பிடித்து உங்களிடம் அனுப்புவதாகக் கூறிவிட்டு வந்தேன். ஆனால் இவரை நான் காண்பதற்கு முன் இவரே உங்களைப் பார்த்து விட்டார்."

"அப்படியொன்றும் வசதியான வீடு என்று சொல்வதற்கில்லை" என்றாள் காமாட்சி.

"இந்தப் பழைய வீட்டுக்கு எழுபத்தைந்து ரூபாய் வாடகையாமே?"

"அப்படித்தான் சொல்வார். கொடுத்ததை வாங்கிக்கொள்வார்" என்றான் கல்யாணம்.

"ஏன் மாமா! சுவரிலே ஆணியே அடிக்கப் படாதோ? அக்காவின் கண்ணாடியை மாட்டுவதற்குக்கூட ஆணி அடிக்கக் கூடாதோ?" என்றான் விசு.

"அதிகமாக அடிக்கக் கூடாது. ஒன்றிரண்டு அடித்தால் பாதகமில்லை."

"என்னமோப்பா நீ நல்ல பிள்ளையாய் இருக்கிறாய். நாங்கள் இந்த ஊரிலே இருக்கும் வரையில் நீதான் எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்."

"ஆகட்டும். உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால் இந்தப் பையனை அனுப்புங்கள். ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் வீடு என்று கேட்டால் சொல்லுவார்கள்."

"பிரமாதமா ஒண்ணும் வேண்டாம். நாலு எலெக்ட்ரிக் லைட் போட்டுக் கொடுத்து அம்மி, கல்லுரலுக்கு ஏற்பாடு பண்ணி, சமையல் அறையில் அடுப்பைக் கொஞ்சம் சரிப்படுத்தி விட்டால் போதும்."

"செய்துவிடலாம். நான் ரங்கநாதனிடம் பேசுகிறேன். முடித்துத் தருவார். தங்கமான மனுஷன்."

"அம்மா பசிக்கிறது" என்றான் விசு.

காமாட்சி மாசிலாமணி இருந்த பக்கம் திரும்பினாள். "ஏங்க, மார்க்கெட்டுக்குப் போய் ஏதாவது காய்கறி வாங்கிக்கொண்டு வருவதுதானே?" என்றாள். பிறகு, "அடி கமலா! ஏன் சும்மா நிற்கிறாய்? உள்ளே போய் அடுப்பு மூட்டு!" என்று அதட்டினாள்.

"விறகு இல்லையே அம்மா!" என்று நினை வூட்டினான் விசு.

கல்யாணம், "இன்று ராத்திரி சமையல் வைத்துக் கொள்ள வேண்டாம். ஹோட்டலிலிருந்து சாப்பாடு அனுப்பி விடுகிறேன்" என்றான்.

"நீ மகராஜனாய் இருப்பாய். அடி கமலா! காரியரைத் தேய்ச்சு வைச்சயா இல்லையா? எடுத்துக் கொடேன்."

பவானியும் கல்யாணமும் விடைபெற்றுப் போனார்கள். "ரொம்ப நல்ல பிள்ளை. இந்த மாதிரி நமக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்கக்கூடாதோ?" என்றாள் காமாட்சி.

"கிடைப்பான், கிடைப்பான். இவன் அப்பா இந்த ஊரிலேயே பெரிய வக்கீலாம்" என்றார் மாசிலாமணி.

இந்தச் சமயத்தில் கமலா மெல்ல நழுவிக் காமிரா உள்ளில் இருந்தபடி ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள். கல்யாணமும் பவானியும் சிரித்துப் பேசியபடி காரின் முன்புறம் அருகருகே அமர்வதைக் கண்டாள். கார் கிளம்பி விரைந்தது. நெடுமூச்சு ஒன்று அவள் நெஞ்சிலிருந்து அவளையும் அறியாமல் எழுந்தது. நெருப்பாக அவளைத் தகித்தது அது.

"இவன் தகப்பனார் பெரிய வக்கீலா யிருந்தால் என்ன? என் அப்பா கூடத்தான் தாசில்தார்" என்று காமாட்சி சொல்லிக் கொண்டிருந்தாள்.

"போதும்; போதும்! உன் பிறந்த வீட்டுப் பெருமையை ஆரம்பித்து விடாதே! அவ்வளவு லஞ்சம் வாங்கிச் சேர்த்தாரே காலணா மிச்சம் வைத்து விட்டுப் போனாரா? அத்தனையையும் அழிச்சு ஒழிச்சார்."

"ஐயய்யோ, அந்த உத்தமரைப் பற்றி அப்படிச் சொல்லாதீர்கள். பணம் காசைக் கையாலும் தொட மாட்டாரே!"

"லஞ்சம் வாங்குகிற எந்தப் பேர்வழி ஒத்துக் கொள்வான். தான் பணம் காசுக்கு ஆசைப்படுவதாக? அகப்பட்டுக் கொண்டால் வழக்காடக்கூட உண்டியல்தான் குலுக்குவான்."

"போதுமே அம்மா உன் பேச்சு! பேசாமல் படுத்துக் கொள்ளேன்" என்றாள் கமலா.

"இன்னும் சாப்பாட்டுக் கடையே முடியலையேடி?"

"அப்படியாவது அவா வாங்கி அனுப்பிச் சாப்பிடணுமா? அவரிடம் காசையாவது கொடுத்திருக்கக் கூடாதா? எனக்கு வேண்டாம் சாப்பாடு. எனக்குப் பிடிக்கவுமில்லை. பசிக்கவுமில்லை. போய்ப் படுத்துக்கறேன்" என்றாள் கமலா.

'இது என்ன இந்தப் பெண்ணுக்குத் திடீரென்று அலுப்பு வந்து விட்டது?' என்று புரியாமல் கணவனைப் பார்த்தாள் காமாட்சி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 10 -- தலைகீழ் உலகம்!



ராமப்பட்டணம் அட்வொகேட், 'ஹோம் ரூல்' கோபாலகிருஷ்ணன் வீடு ஜே ஜே என்று இருந்தது. சென்னையிலிருந்து வந்த உற்றார் உறவினரும் தெரிந்த மனிதர்களும் மட்டுமின்றி முன் பின் தெரியாதவர்கள் கூட ஒருசிலர் அந்தப் பெரிய வீட்டில் முகாமிட்டிருந்தனர். முற்றத்தின் இரு புறமும் இருந்த நாலு பெரிய அறைகள் இவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன.

பின்பக்கம் கிணற்றில் வாளியில் நீர் இழுத்துக் கொட்டிக் கொண்டு குளித்தபிறகு தலையைத் துவட்டியபடியே அப்போது மிகப் பிரபலமா யிருந்த தியாகராஜ பாகவதர் பாடல் ஒன்றைப் பாடியவாறு முற்றத்துக்கு வந்தான் கல்யாணசுந்தரம். முற்றத்தின் இரு பக்கமும் இருந்த நாலு அறைகளையும் நோட்டம் விட்டான். அவற்றின் வாசலில் ஜப்பான் அறை, ஜெர்மன் அறை, அமெரிக்கா அறை, பிரிட்டிஷ் அறை என்று பெயர்கள் வர்ண சாக்பீஸால் எழுதப் பட்டிருந்தன. இவர்களுள் யாரை அழைத்துக் குசலம் விசாரிக்கலாம் என்று சற்று நேரம் யோசித்தவனாக நின்ற கல்யாணம், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக, "ஜப்பான் மாமா! பொழுது விடிந்து எழுந்தாச்சா? ராத்திரி நன்றாகத் தூங்கினீர்களா?" என்று குரல் கொடுத்தான். முற்றத்தின் இடது பக்க அறை ஒன்றிலிருந்து குள்ளமாக ஒருவர் வெளிப்பட் டார். "ஆகா! ஆனந்தமாகத் தூங்கினேன். லோகோபகாரிகளாக நீயும் உன் அப்பாவும் இருக்கிறபோது எனக்கு என்ன கவலை? கவலையே இல்லாததாலே தூக்கத்துக்கும் குறைவில்லை. ஆனா... ஒரு விஷயம் மட்டும் உன் காதிலே போட்டு வைக்கணும். கல்யாணம்! பக்கத்து அறையிலே இருக்கே ஒரு கடுவன் பூனை. அவன் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு!"

"ஏன்? என்ன நடந்தது?"

"நேற்று இரண்டணா கொடுத்து ஒரு வாரப் பத்திரிகை வாங்கிக் கொண்டு வந்து வைத்தேன். இன்று காலையில் காணோம். அவன்தான் எடுத்திருக்கணும். ஏன்னா அதிலிருந்த ஒரு விகடத் துணுக்கை இவன் பெண்டாட்டி கிட்டச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தான். விடுவேனா பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்."

"ஏன் ஜப்பான் மாமா, ஜெர்மன் மாமாவே அதைக் காசு கொடுத்து வாங்கி யிருக்கக் கூடாதா?"

"அந்தக் கஞ்ச மகாபிரபுவா வாங்குவான்? நேற்று சாயந்திரம் ஹோட்டலுக்குள் நுழையறான்; எதிரேயே நான் நிக்கறேன். உபசாரத்துக்குக்கூட 'வா'ன்னு சொல்லலையே!"

"இதோ பாருங்க, நீங்க சண்டை போடறது பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் ஜப்பான் மாமாவாகிய நீங்கள் பக்கத்து அறைவாசியான ஜெர்மன் மாமாவோடு சண்டை பிடிக்கக் கூடாது. இரண்டு பேருமா சேர்ந்து கொண்டு எதிரே இருக்கும் பிரிட்டிஷ் அமெரிக்க அறைகளில் உள்ளவர்களோடு யுத்தம் பண்ணுங்கள்; வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் சரித்திரத்தையே மாற்றி விடாதீர்கள்! என்ன, புரிந்ததா?"

ஜப்பான் அறை விருந்தினரைத் திரு திருவென்று விழிக்க வைத்து விட்டுக் கல்யாணசுந்தரம் ரேழிக்குப் பக்கத்தில் தன் தகப்பனாரின் காரியாலய அறையை அடைந்தான்.

அலமாரியைத் திறந்து சட்டையை மாட்டிக்கொண்டே, "அப்பா! உலகமே தலைகீழாக மாறிப் போச்சு" என்றான்.

காலைப் பத்திரிகையைச் சாவகாசமாக ராகம் போட்டுப் படித்துக் கொண்டிருந்த "ஹோம்ரூல்' கோபாலகிருஷ்ணன் சாய்வு நாற்காலியில் சற்று நிமிர்ந்து, "கவனித்தேன், காதில் விழுந்தது" என்றார்.

"அதைச் சொல்லவில்லை அப்பா. அலமாரிக்கு மேலே பாருங்கள்" என்றான் கல்யாணம்.

மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு பத்திரிகையை ஒரு உதறு உதறிவிட்டு, அண்ணாந்து நோக்கினார், கோபாலகிருஷ்ணன். அங்கே மெய்யாலுமே உலகம் தலைகீழாக இருந்தது."சே! அந்தக் 'குளோ'பைச் சரியாக‌ நிமிர்த்தி வைடா. யார் செய்த விஷமம் இது?" என்றார் தந்தை.

"ஒருவரும் விஷமம் பண்ணவில்லை. அம்மா நேற்று ஒட்டடை அடித்தாள்.அப்போ அந்த ஒட்டடைக் காம்பு பட்டுக் கீழே விழுந்திருக்கும்.திருப்பி வைக்கிறப்போ உலக்கத்தையே கவிழ்த்து விட்டாள்! இதனால் என்ன விபரீதம் எல்லாம் நேரப் போகிறதோ?"

"இதோ இப்போதே விபரீதம் வந்து கொண்டே இருக்கிறது" என்றார் தம் மனைவி அறைக்குள் நுழைவதைக் கடைக் கண்ணால் நோக்கி விட்ட கோபாலகிருஷ்ணன்.

"விபரீதம் என்ன, பிரளயமே வந்தாலும் நீங்கள் மாற மாட்டேள், உங்கள் பிள்ளையும் மாற மாட்டான். நானும்தான் கேட்கிறேன்.இது என்ன வீடா,ஸவலை ராமசாஅமி முதலியார் சத்திரமா? வீட்டில் கால் வைக்க இடமில்லையே?இப்படி உங்கள் பிள்ளை அக்கிரமம் பண்ணுகிறான். நீங்களும் தட்டிக் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்."

"ஏன் உன் பிள்ளை இல்லையா? நீதான் கேளேன்!"

"நீங்கள்தான் அவனுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்து விட்டீர்கள்."

" நான் செல்லம் கொடுத்தேனா? உன் பேரே செல்லம். என் பேரில் பழியைப் போடுகிறாயே!"

"ஆமாம், எல்லாம் நான் சொல்கிறபடிதான் நடக்கிறதாக்கும்?"

"பின்னே, அப்பாவுக்கு 'ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன்'னு பேர் வந்ததே அதனால்தானே அம்மா?"

"நீ சும்மா இருடா. எனக்கு இன்றைக்கு இரண்டிலொன்று தெரிந்தாக வேண்டும். இங்கே டேராப் போட்டிருக்கிறார்களே இவர்களெல்லாம் இன்னும் எத்தனை நாட்கள் இங்கே இருக்கப் போகிறார்கள்?"

"யுத்தம் முடிகிற மட்டும்."

"யுத்தம் எப்போ முடியும்?"

"ஹிட்லருக்குப் போன் போட்டுக் கேட்டுச் சொல்கிறேன்" என்றார் கோபாலகிருஷ்ணன்.தந்தை மகன் இருவர் முகங்களிலும் புன்னகை அரும்பியது.

"கேட்கிறதை உடனே கேளுங்களேன். அதுக்குக் கூட வேளை லக்னம் எல்லாம் பார்க்கணுமா என்ன?" என்று மேஜை மீது இருந்த போன் ரிஸீவரை எடுத்துக் கொடுத்தாள் செல்லம்.

கல்யாணம் குபீரென்று சிரித்தான்.ஆனால் அவன் தந்தைக்கு தம் மனைவியின் அறியாமையையும் வெகுளித்தனத்தையும் எண்ணியபோது நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது.

'ஹோம் ரூல்' என்று சொல்கிறோம். இயக்கம் கூட நடத்துகிறோம்.ஆனால் சராசரி இந்திய மக்கள் இப்படி அறியாமையில் மூழ்கி இருக்கும்போது வெள்ளைக்காரன் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்து விட்டு எப்படி வெளியேறுவான்? அப்படியே அவன் வெளியேறினாலும் கிடைக்கும் சுதந்திரத்தை மக்கள் எப்படிப் போற்றிக் காப்பாற்றப் போகிறார்கள்?' என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.

"அப்பா! அம்மாவுக்கு எல்லாம் விவரமாக விளக்கிச் சொல்லுங்கள். சாயந்திரம்வரை பொழுது போய் விடும். அதற்குள் நான் கிளப்புக்குப் போய் வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் கல்யாண சுந்தரம்.

"காலை வேளையில் என்னடா கிளப்?" என்றாள் செல்லம்.

"ஞாயிற்றுக் கிழமைதானே அம்மா? நாள் முழுவதும் நாடக ஒத்திகை நடக்கிறது. வரட்டுமா?"

அவள் பதிலுக்குக் காத்திராமல் அவன் புறப்பட்டு விட்டான்.

சமூக சேவா சங்கம் இயங்கிய கட்டடத்தின் வாசலில் காரை நிறுத்திவிட்டுக் கல்யாணம் கீழே இறங்கியதும் இறங்காததுமாக ஒரு பையன் ஓடோடி வந்தான். "ஸார்! மாஜிஸ்டிரேட்டுக்கு உங்களை ஒரு நிமிஷம் பார்க்க வேண்டுமாம்" என்றான்.

"அப்படியா? இதோ!" என்று கல்யாணம் கூறிவிட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடி நாற்காலியில் அமர்ந்திருந்த கோவர்த்தனனை நோக்கி நடந்தான். "குட் மார்னிங்" என்றதும், அவர், "உட்காருங்கள் மிஸ்டர் கல்யாணம். நாடகமெல்லாம் எந்த மட்டில் இருக்கிறது?" என்று விசாரித்தார்.

"ஐந்தாறு நாட்கள்தானே ஒத்திகை நடந்திருக்கிறது? இன்னும் ஒரு மாதமாவது ஆகும் அரங்கேற."

"கல்யாணம்! ஐ லைக் யூ. உங்க பரோபகார குணமும் ஊரு முழுக்கப் பிரசித்தி. அதை நான் வரவேற்கிறேன். சந்தோஷப் படறேன். இப்பக்கூடப் பர்மா அகதிகளுக்காக நிதி திரட்ட நாடகம் போடுகிறீர்கள். ரொம்ப 'நோபிள் மைண்ட்' இருந்தாத்தான் அப்படி யெல்லாம் உதவத் தோன்றும். அதை நான் பாராட்டறேன். நானே உங்க நாடகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தித் தரதாக்கூட முடிவு செய்திருக்கேன். என்னால் எவ்வளவு முடியுமோ ஹெல்ப் பண்ணறேன்."

"தாங்க்யூ ஸார்! தாங்க்யூ!" என்று கல்யாணம் குதூகலத்துடன் சொன்னான். "உங்க ஒத்துழைப்பு இருந்தால் எங்களுக்குப் பெரிய பலம்."

"ஆனா ஒண்ணு, மிஸ்டர் கல்யாணம்! கொஞ்சம் யோசித்துப் பாருங்க. இருபது ஆண்பிள்ளைத் தடியன்களுக்கு மத்தியிலே ஒரு பெண்ணை இழுத்து நிற்க வைச்சு, நடிக்கச் சொல்றது நல்லா இருக்கா? இட் இஸ் நாட் கரெக்ட். அது மட்டும் எனக்குப் பிடிக்கலை!"

"அழகுதான் போங்கள்!" என்று சிரித்தான் கல்யாணம். எங்க நாடகக் குழுவிலே இருபதே பேர் தான். ஆனா இந்தக் கிளப்பிலே இருநூறு பேர் அங்கத்தினர்கள். இருநூறு தடியன்களுக்கு மத்தியில் அவளை இந்தக் கிளப்பில் சேர அழைப்பு விடுத்த நீங்களே இருபது தடியன்களுக்கு மத்தியில் அவள் நடிக்கக் கூடாது என்று சொல்வது என்ன நியாயம்? நீங்கள் தினம் அவளுடன் டென்னிஸ் ஆடலாம். நான் தினம் அவளுடன் சேர்ந்து நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கக் கூடாதா?"

"கல்யாணம்! புரியாதது மாதிரி நடிக்காதீர்கள். நடிப்பெல்லாம் நாடகத்தோடு நிற்கட்டும். என்னுடன் அவள் டென்னிஸ் ஆடுவது வேறு; உங்கள் காதலியாக அவள் மேடை ஏறி நடிப்பது வேறு!"

"எப்படி வேறாக முடியும்? இரண்டும் இருவித விளையாட்டுத்தான். பொழுது போக்குத்தான்."

"கல்யாணம் நான் உங்களோடு வாதாட விரும்பவில்லை. நீங்க செய்வது நன்றாயில்லை. எச்சரிக்கிறேன். அப்புறம் உங்க இஷ்டம்!"

அவர் தம் கையிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கை விளையாட்டாக உதறினார். அதில் மறைவாகப் பொருத்தப் பட்டிருந்த விசை காரணமாக மேலுறை கழன்று எட்டப் போய் விழ இதுகாறும் உள்ளே மறைந்திருந்த மிகக் கூர்மையான ஒரு நீண்ட கத்தி பளபளத்தது.

அதன் முனையை ஒரு விரலால் கூர் பார்த்த கோவர்த்தனன், "என்ன அப்படி வியப்புடன் பார்க்கிறீர்கள் கல்யாணம்? நான் துப்பாக்கிகூட வைத்திருக்கிறேன். கைத்துப்பாக்கி, வேட்டைத் துப்பாக்கி எல்லாமே இருக்கின்றன. அவற்றுக்கு லைசென்ஸ்களும் வாங்கி வைத்திருக்கிறேன்!" என்றார்.

கல்யாணம் விருட்டென்று எழுந்தான். "மிஸ்டர் கோவர்த்தனன்! உங்களிடம் எனக்குள்ள மதிப்புக் குறையும்படி நடந்து கொள்ளாதீர்கள். ப்ளீஸ்!" என்று கூறி விட்டுத் திரும்பி நடந்தான்.

அவனை முந்திக் கொண்டு, காலைச் சூரிய ஒளியில் பளபளத்தவாறு கத்தி பாய்ந்து சென்று அவனுக்கு முன்னாலிருந்த ஒரு மரத்தில் பதிந்து அதிர்ந்தது! குறி அரையங்குலம் பிசகி யிருந்தாலும் கத்தி அவனைத் தாக்கியிருக்கும். கல்யாணம் பிரமித்துப் போனான்.

பின்னால் கோவர்த்தனன் கலகலவென்று சிரிப்பது அவன் காதில் விழுந்தது!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top