• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 11 -- சிலிர்ப்பும் சினமும்



ஞாயிற்றுக் கிழமை முழுவதும் சமூக சேவா சங்கக் கட்டடம் திமிலோகப் பட்டது. ஒத்திகை நடந்த நேரம் பாதி. அரட்டையிலும் தமாஷ் பேச்சிலும் கழிந்த நேரம் பாதி. பவானி தங்களுடன் வந்து சகஜமாகப் பழகி நாடகத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டதில் அனைவருக்கும் ஒரே ஆனந்தம். பதினெட்டு மணி நேரம் இருந்த இடத்தை விட்டு நகராமல், சீட்டாடி 'ரிக்கார்டு' ஏற்படுத்தியிருந்த பத்மனாபன் கூடச் சீட்டாட் டத்தைச் சற்று மறந்து நாடக ஒத்திகையைப் பார்க்க வந்து விட்டாரென்றால் அதற்குப் பவானியின் தோற்றத்திலும் சுபாவத்திலும் இருந்த வசீகர சக்திதான் காரணம். அந்தச் சங்கத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் ஏதோ தேவேந்திர பதவி கிடைத்துவிட்டது போல் மகிழ்ந்து கொண்டிருக்க, கோவர்த்தனன் மட்டும் இருக்கிற பதவியையும் இழந்து விட்டவர் போல் முகத்தைத் தூக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

அந்தப் பக்கமாகப் போன ஒரு வழக்கறிஞரை அழைத்து, "என்ன மிஸ்டர் சேஷாசலம்! என்னமோ நாடகமாமே? நல்ல தங்காள் கதையா? அரிச்சந்திரன் வரலாறா?" என்று கேட்டார்.

"சே! அதெல்லாம் பழம் காலம்னா! இப்பல்லாம் சமூகக் கதைதான் எடுக்கும்" என்றார் சேஷாசலம்.

"ஓகோ! காதலித்த கமலாசினியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாத கதாநாயகன் ஒப்பாரி பாட்டுப் பாடியபடியே தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகிறானா?" என்றார் ஏளனமாக, கோவர்த்தனன்.

மாஜிஸ்திரேட்டின் மனநிலையை அவரது பேச்சின் தோரணையிலிருந்து புரிந்து கொண்டுவிட்ட சேஷாசலம், அவர் போக்கிலேயே பேசி நல்ல பெயர் தட்டிக் கொள்ளப் பார்த்தார்.

"அப்படி ஏதாவது நவீனக் காதல் கதையாக இருந்தாலும் தேவலாமே. இவர்கள் காந்தி பக்தர்களோல்லியோ? அதனால் சமூக சேவை பற்றிய இலட்சிய நாடகம் போடுகிறார்கள்."

"பலே, பலே! சமூக சேவையா? விதவைகளுக்கெல்லாம் பொட்டு வைத்து விபசாரிகளுக்கெல்லாம் பூச்சுட்டி அழகு பார்க்கப் போகிறானா கல்யாணம்?"

"ஹூம்! அப்படி ஏதாவது இருந்தாலும் தேவலாம். நாடகத்தைப் பார்க்க அருவருப்பாயிராது. இங்கே ஆளுக்கொரு துடைப்பக் கட்டையைத் தூக்கிக் கொண்டு கூத்தடிக்கிறா!"

"அதென்ன கண்ணறாவி?"

"ராமப்பட்டணம் போன்ற ஒரு சிறு பட்டணத்தில் படித்த வாலிபர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லோரும் வேலை நேரம் போகப் பாக்கியை வெட்டிப் பொழுதாய்ப் போக்குகிறார்கள். சீட்டாட்டம், சில்லறைப் பேச்சு. இந்தச் சமயம் கல்கத்தாவிலிருந்து ஒரு பெண் வருகிறாள். அந்த பட்டணத்தில் குடியேறுகிறாள். அவள் மாலை நேரத்தில் ஊரில் உள்ள ஏழைக் குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு படிப்பு, பாட்டு, டான்ஸ், தையல் வேலை என்று சொல்லித் தருகிறாள். இதைப் பார்த்த அந்த ஊர் வாலிபர்களிடம் மனமாற்றம் உண்டாகிறது. அவர்களும் உபயோகமாக ஏதும் செய்ய நினைக்கிறார்கள். ஊர் சுத்தமாகிறது. குளம் ஒன்று வெட்டியாகிறது. சேரிக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடம் ஒன்று கட்டுகிறார்கள்..."

"இது என்ன பிதற்றல்? வாழ்க்கைக்கு ஒத்து வராத கதை?"

"வாழ்க்கையில்தான் சமூக சேவை என்றால் உடம்பு வணங்கவில்லை. நாடகத்திலாவது செய்து பார்த்து விடுவோமே என்பதால் இருக்கும்!" என்று கூறி சேஷாசலம் பெரிதாகச் சிரித்தார்.

ஒரு போடு!" என்று கூறியபடி கோவர்த்தன்னன் அவர் முதுகில் ஒரு போடு போட்டதும் அவருக்கு அந்தக் கடும் வெய்யிலிலும் உச்சி குளிர்ந்து விட்டது.

அன்று மாலை பவானி ஒத்திகை முடித்து புறப்பட்டபோது, டென்னிஸ் மட்டையை விர்ரென்று சுற்றிக் கொண்டு அவளெதிரே நின்றார் கோவர்த்தனன். "என்ன ஒத்திகை ஒரு வழியாக முடிந்ததா? ஒரு ஸெட் ஆடுவோமா?"

"இல்லை ஸார், ரொம்ப 'டயர்ட்'" என்று கூறியபடியே பவானி கைக்குட்டையால் முகத்தை ஒற்றிக் கொண்டாள். "நாளைக் காலை வேணுமானால் சந்திப்போம்."

"ஆல்ரைட்" என்றார் கோவர்த்தனன். "சீக்கிரம் வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக்கொள். கார் தயாராக இருக்கிறது. போவோமா?"

"வேண்டாம். வேண்டாம். எனக்காக நீங்கள் அவசரப்பட்டுக் கிளம்புவானேன்? இருந்து டென்னிஸ் ஆடிவிட்டு வாருங்கள். கல்யாணாம் என்னைப் போகும் வழியில் வீட்டில் இறக்கி விடுவார்" என்றாள் பவானி.

கோவர்த்தனன் தாம் ஆட விரும்பவில்லை என்று கூற முடியாதவராக அவ்விருவரும் இணை சேர்ந்து நடப்பதைப் பார்த்துச் சீற்றப் பெருமூச்சு விட்டபடி நின்றார்.

காரில் போகும்போது, "சுத்த ஃபிராட்" என்றான் கல்யாணம்.

"யாரை இத்தனை நல்ல வார்த்தை கூறி வாழ்த்துகிறீர்கள்?" என்றாள் பவானி.

"எல்லாம் இந்த மாஜிஸ்திரேட்டைத்தான்."

"ஏன், அவருக்கென்ன? மிஸ்டர் கல்யாணம், நீங்கள் அவரை மதிக்காவிட்டாலும் அவர் பதவிக்கு மதிப்புத்தர மறுக்கக்கூடாது" என்றாள் பவானி.

"சரி, உன்னதமான, மதிப்புக்குரிய, அரிய பெரிய, உயர் பதவியில் அமர்ந்திருக்கும் ஃப்ராட் கோவர்த்தனன்! - போதுமா?"

பவானி சிரித்தாள். "என்ன கோபம் அவர்மீது உங்களுக்கு?"

"சொன்னால் நம்புவது கூடக் கஷ்டமாயிருக்கும். ஆனால் நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அந்த மனுஷன் உங்களை விலைக்கு வாங்கி விட்டதாகவே நினைக்கிறார். அவருடன் மட்டும் தான் நீங்கள் பேசிப் பழக லாம், விளையாடலாம். வேறு யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணுகிறார். உங்களை நாடகத்தில் கதாநாயகியாகப் போட்டதற்காக என்னைக் கத்தியைக் காட்டி மிரட்டவே செய்தார்!"

"இஸ் இட்? நிஜமாகவா?"

"ஆமாம். ஆனால் நான் அதை லட்சியம் பண்ணவே இல்லை. அவருக்குப் பயப்படவும் இல்லை. அவர் அதிகாரம் எல்லாம் கோர்ட் வரைதான். வெளியே வந்தால் அவர் மாஜிஸ்திரேட் இல்லை. கோவர்த்தனன்."

"அதெல்லாம் சரி. ஒப்புக் கொள்கிறேன். என்றாலும் அவர் என்னிடம் ரொம்ப அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறீர்களே! அதுவும் உங்களுடன் நான் நெருங்கிப் பழகினால் பொறாமைப்படும் அளவுக்கு! ஐ ஆம் த்ரில்ட்!"

அவள் சிலிர்ப்பு அவன் சினத்தைத் தூண்டியது. "வண்டியைத் திருப்பட்டுமா?" என்றான் கல்யாணம் கோபமாக.

"எதற்கு?"

"பாவம்! அவருடன் டென்னிஸ் ஆடாமல் வந்து விட்டீர்களே!"

"ஆமாம், பாவம்!" என்றாள் பவானி. கூடவே, "பரவாயில்லை. இன்றைய ஏமாற்றத்தின் நினைவோடு நாளை விளையாடும் போது அவர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்" என்றாள்.

கல்யாணம் பொங்கிய கோபத்தைக் கார் மீது காட்டினான். அது தன் சக்தியை யெல்லாம் திரட்டிக் கொண்டு அதிகபட்ச வேகத்தில் பாய்ந்தது.

"மெதுவாக ஓட்டுங்கள், குப்பைத் தொட்டியைக் கண்டால் உங்கள் காருக்குக் காதல் பிறந்து விடுகிறது" என்று பவானி கூறியதை அவன் காதில் விழுந்ததாகக் காட்டிக் கொள்ளவே யில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 12 -- யாரை நம்புவது?



பவானியை அவள் வீட்டில் இறக்கிவிட்ட கல்யாணம், நேரே தன் இல்லத்துக்குத் திரும்ப மனம் இல்லாமல் மாசிலாமணி குடும்பம் இறங்கியிருந்த ஜாகைக்குப் போனான்.

ரங்கநாத முதலியாரின் அந்தப் பழைய வீட்டில் கமலா சுவரில் ஆணி அடிக்க முயன்று கொண்டிருந்தாள். விசுவம் சில படங்களை வைத்துக் கொண்டு நின்றான்.

கல்யாணத்தைப் பார்த்ததும் சற்று பயந்து போன விசு, "பாருங்கள் மாமா! ஆணி அடிக்கக் கூடாது என்று இந்த வீட்டுக்காரர் சொன்னாரில்லையா? அக்கா கேட்ககே மாட்டேனென்கிறாள்" என்றான்.

"ஒன்றிரண்டு ஆணிகள் அடித்தால் பாதகமில்லை. அவர் வந்து கேட்டால் என்பேரில்பழியைப் போடு. நான் தான் ஆணி அடித்ததாகச் சொல்லிவிடு.

"பொய்யா சொல்லச் சொல்கிறீர்கள்?"

"வேண்டாம். அதையே நிஜமாக்கிவிட்டால் போச்சு" என்றான் கல்யாணம்.

"நல்ல காரியம். நீங்களே ஆணி அடித்து விடுங்கள். அக்கா அப்பவே பிடித்து ஆணி அடிக்கிறாள், அடிக்கிறாள், இன்னும் ஒரு ஆணி கூட அடித்தபாடில்லை."

"இங்கே வா, உன் முதுகிலே நாலு அடி அடிக்கிறேன்" என்றால் கமலா.

கல்யாணம் அவளிடமிருந்து சுத்தியையும் ஆணிகளையும் வாங்கிக் கொண்டான். "உன்னால் முடியாது, நான் அடித்துத் தருகிறேன்" என்றான். ஸ்டூல் மீது ஏறி, "இதோ பார்த் தீர்களா? இப்படிப் பிடித்துக் கொண்டு இப்படி அடிக்க வேண்டும்" என்று கூறிய படியே அடிக்க ஆரம்பித்தான்.

பிறகு ஒவ்வொரு முறை அடிக்கும்போதும், 'இது மாஜிஸ்திரேட் பதவிக்கு விழும் அடி, இது அவருடைய மேனாட்டு மோகத்துக்கு விழும் அடி, இது அவர் பொறாமை மீது விழும் அடி. இது அவர் காதல் மேல் விழும் அடி' என்று மனசுக்குள் கூறிக் கொண்டே போடு போடென்று போட்டான். கடைசியில், 'இது அவர் தலைமீதே விழும் பலத்த அடி' என்று எண்ணியவாரு சுத்தியை வீசியபோது அது ஆணியைத் தாக்காமல், அவன் விரலை நன்றாகப் பதம் பார்த்து விட்டது.

கல்யாணம், 'ஆ' வென்று அலறியபடி கையை உதறினான்.

"ஐயோ! விரலில் ரத்தம்" என்றான் விசு. கல்யாணம் பல்லைக் கடித்தபடி வலியைப் பொறுத்துக் கொன்டு "பாதகமில்லை, வீடு போய்ச் சேர்ந்து மருந்து போட்டுக் கொள்கிறேன். இப்போதைக்கு ஒரு வெள்ளைத் துணி இருந்தால் தண்ணீரில் நனைத்துக் கட்டலாம்" என்றான்.

கதிகலங்கிப் பிரமித்துப் போய் நின்ற கமலா சுய நினைவு பெற்றவளாக நடுங்கும் குரலில் "இதோ கொண்டு வருகிறேன்" என்று கூறி ஓடிச் சென்று தனக்குப் பிடித்தமான பூப்போட்ட கைக்குட்டை ஒன்றை நனைத்து எடுத்து வந்தாள்.

"இங்கே கொடுங்கள். நானே கட்டிக் கொள்கிறேன்" என்றான் கல்யாணம்.

"இல்லை. ஒற்றைக் கையால் கட்டிக் கொள்ள வராது. நானே கட்டி விடுகிறேன்"என்றால் கமலா.

அவள் கட்டுப் போட்ட போது தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாள். கல்யாணமும் பரிவு மேலோங்க அவளைக் குனிந்து நோக்கினான்.

அந்தக் கண்களை அதிக நேரம் உரையாட அனுமதியாமல், விசுவம், "அழகாய்த்தானிருக்கிறது. காயம் பட்டது இடது கை, அக்கா வலது கையைப் பிடித்துக் கொண்டு கட்டுப் போடுகிறாளே" என்றான்.

"அடேடே! நான் கூட கவனிக்கவில்லை" என்றான் கல்யாணம்.

கமலா வெட்கமடைந்து நாணியவளாக அதே சமயம் இன்னொரு கரத்தையும் பற்ற வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ந்தவளாக, நிஜமாகவே காயம் பட்டிருந்த இடத்தில் கட்டுப் போட்டாள்.

இதையெல்லாம் அவள் பெற்றோர் சமையலறைக் கதவு ஓரமாக நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

மாசிலாமணி கனைத்துக் கொண்டே வந்து, "அடடா, மாப்பிள்ளை கையிலே என்ன?"என்றார், ஒன்றும் அறியாதவர் போல.

"அதற்குள் அவரை மாப்பிள்ளையாக்கி விட்டீர்களா? நன்றா யிருக்கிறதே" என்றாள்காமாட்சி அம்மாள்.

"அடேடே தவறிச் சொல்லி விட்டேன்."

"பரவாயில்லை. நெருப்பு என்றால் வாய் வெந்துவிடுமா?" என்றான் கல்யாணம்.

"அதற்கில்லை தம்பி; இந்தப் பெண்ணுக்கோ கல்யாண வயதாகி விட்டது. இந்தக் காலத்தில் பெண்களை அதிக நாட்கள் கல்யாணம் இல்லாமல் வைத்துக் கொள்ளக் கூடாது. இந்த வருஷமே எப்படியும் கல்யாணம் செய்துவிட நினைத்தோம். அதற்குள் இந்தப் பாழும் ஜப்பான் யுத்தம் வந்து எங்களை ஊரை விட்டே கிளப்பி விட்டது."

"அதனால் என்ன? கமலாவுக்கு மாப்பிள்ளை அகப்படுவதுதானா கஷ்டம்? அவளுடைய குணத்துக்கும் புத்திசாலித்தனத்துக்கும்...."

"அழகுக்கும்" என்று விசு எடுத்துக் கொடுத்தான். கல்யாணம் தொடர்ந்து: ".....எத்தனையோ பேர் நான் நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். உங்களுக்குக் கவலையே வேண்டாம். கமலாவுக்கு நல்ல வரனாகப் பார்த்துக் கல்யாணம் செய்து வைப்பது என் பொறுப்பு."

கமலா அவனைப் பார்த்த பார்வையில் கோபம் மேலோங்கி யிருந்ததா? துயரம் பொங்கி வந்ததா என்று கூற முடியாது. ஆனால் ஓரிரு கணங்களே நீடித்த அந்தப் பார்வை கல்யாணத்தின் அந்தராத்மாவையே ஊடுருவி ஒரு குலுக்குக் குலுக்கி விட்டதென்னவோ உண்மை. அவள் 'விருட்'டென்று திரும்பி உள்ளே சென்றாள்.

"கல்யாணப் பேச்செடுத்தாலே இந்தப் பெண்ணுக்கு ஒரே சங்கோஜம்" என்று காமாட்சி கூறியது கல்யாணத்துக்கு ஏதோ கனவில் கேட்பது போலிருந்தது.

மறுநாள் காலை பவானி டென்னிஸ் உடையில் மாஜிஸ்திரேட்டைச் சந்தித்தபோது மிகுந்த உற்சாகத்துடன் இருந்தாள். "என்ன சரித்திரக் கதைகளில் வருகிற கதாநாயகன் மாதிரி எனக்காக வாளேந்திப் போரிடவே ஆரம்பித்து விட்டீர்களாமே?" என்றாள்.

"என்ன சொல்கிறாய் நீ?" என்று கோவர்த்தனன் ஒன்றும் தெரியாதவர் போல் வினவினார்.

கல்யாணம் கூறியதை யெல்லாம் பவானி விவரித்ததும், "அடப் பாவமே! அந்தத் தறுதலை அப்படியா சொன்னான்? பெரிய கில்லாடி தான்!" என்றார்.

"சே! அவரை அப்படி யெல்லாம் ஏசாதீர்கள்" என்றாள் பவானி.

"பின்னே கதையை அப்படியே தலை கீழாக மாற்றிவிட்டால் என்ன அர்த்தம்? பவானி! அவன் நேற்று மாலை என்னிடம் வந்து என்ன சொன்னான் தெரியுமா? நீ தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாய் என்றால் சொல்கிறேன்."

"பாதகமில்லை சொல்லுங்கள்."

"அவனுக்கு உன்மீது காதலாம். ஆனால் நீயோ என்மீது உயிரையே வைத்திருக்கிறாயாம். அதனால் அவனை லட்சியம் பண்ணவே மாட்டேன் என்கிறாயாம். ஆக, அவன் கண்களுக்கு நான் பெரிய வில்லனாகக் காட்சியளிக்கிறேன்!"

"அழகுதான்!" என்று கூறிச் சிரித்தாள் பவானி. "அப்புறம்?"

"இவன் அப்பாவுக்கு இங்கே பக்கத்தில் உள்ள ஏலமலையில் ஹிமகிரி எஸ்டேட் என்று இருக்கிறது. அங்கே வேலை செய்கிற ஆட்களை விட்டு என் கையைக் காலை முறித்துப் போட்டு விடப் போவதாக மிரட்டினான்!"

"ஐயைய்யோ!"

"எனவேதான் கத்தியை உருவிக் காட்டியும், துப்பாக்கி லைசென்ஸ்கூட இருப்பதாகக் கூறியும் அவனை நான் பயமுறுத்தி வைக்க வேண்டியதாயிற்று" என்றார் கோவர்த்தனன்.

"சேச்சே! அவ்வளவு மோசமானவரா கல்யாணம்? பார்த்தால் சாது போல் இருக்கிறாரே?"

"அவன் வெறும் பயந்தாங்குளிதான்... ஆனால் பணத் திமிர் படைத்தவன். காசை விட்டெறிந்தால் அடியாட்கள் பக்க பலமாக நிற்பார்கள் என்ற தைரியம்" என்றார் கோவர்த்தனன்.

பவானி அங்கு வந்தபோது அவளுக்கிருந்த உற்சாகம் இதற்குள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது. மிகச் சுலபமாக அவள் டென்னிஸில் கோவர்த்தனனிடம் தோற்றுப் போனாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 13 -- மலைப் பாதை



ராமப்பட்டணத்திலிருந்து ஏல மலையின் உச்சி இருபது மைல் தூரம் தான். மொத்தம் மூவாயிரத்து ஐந்நூறு அடி உயரம் தான். ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியாரின் ஹிமகிரி காப்பி எஸ்டேட் இன்னும் கிட்டத்திலேயே மூவாயிரத்து இருநூறு அடி உயரத்தில் அமைந்திருந்தது. அந்த எஸ்டேட்டை நோக்கிக் கல்யாணம் உற்சாகமாகக் காரோட்டிப் போய்க் கொண்டிருந்தான்.

சாலையின் இருபுறமும் காப்பிச் செடிகளில் வேணி தொடுத்தாற் போல் வெண்மை நிறத்தில் காப்பிப் பூக்கள் மலர்ந்திருந்தன. காலைச் சூரியனின் ஒளியில் வெள்ளித் தகடுகளாக ஸில்வர் ஓக் மரங்களின் இலைகள் தகதகத்து மலையமாருதத்தில் சலசலத்தன. அவை காப்பிச் செடிகளுக்கு நிழல் கொடுத்தன. ஆனால் குடை விரிந்தாற்போன்று சூரிய ஒளியை மறைத்து விடாமல் தேவையான அளவில் வடிகட்டிக் கொடுத்தன. இப்படி ஒரு தாயின் பரிவுடன் காப்பிச் செடிகளைக் கவனித்துக் கொள்ளும் பணியைக் காப்பித் தோட்டங்களின் இதர சில பகுதிகளில் ஆரஞ்சு, பேரி, கொய்யா போன்ற வேறு சில மரங்கள் செய்து பழங்களும் ஈந்து கொண்டிருந்தன. உயரமான மரங்களில் உருவாகியிருந்த தேன் கூடுகளின் மணமும் பல்வேறு மலர்களின் நறுமணங்களும் பட்சி ஜாலங்களின் இனிய கானங்களும் காற்றில் கலந்து வந்து மலை வாசஸ்தலம் உடலுக்குத் தந்த குளுகுளுப்புடன் மனத்துக்குக் கிளுகிளுப்பையும் ஊட்டின.

கல்யாணம் அடிக்கடி பார்த்துப் பழகிய காட்சிகள்தாம் இவை என்றாலும் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் புதுப்புது குதூகல உணர்வுகளை அவன் அடைவது வழக்கம். இன்றோ இந்த எழிலையெல்லாம் தன்னுடன் சேர்ந்து பவானியும் அனுபவிக்கிறாள் என்ற எண்ணமானது அவனை எங்கோ சொர்க்க வானில் உயரே உயரே கொண்டு சென்றது! அந்த அளப்பரிய ஆனந்தத்தைக் காரின் பின் ஸீட்டில் பவானியின் மாமா குணசேகரன் உட்கார்ந்திருக்கிறார் என்ற நினைப்பு கூடக் குறைத்துவிடவில்லை.

குணசேகரன், "பவானி! இத்தனை வருஷமா நான் ராமப் பட்டணத்தில்தானே இருக்கேன். இவ்வளவு அழகான மலைகளும் நந்தவனங்களும் இங்கே இருப்பதை அறியாமலேயே காலத்தை ஓட்டியிருக்கிறேன்! கல்கத்தாவிலிருந்து நீ வந்து அழைத்துப் போய்க் காட்டுகிறாய்! நல்ல வேடிக்கை" என்றார்.

"ஆமாம், சென்னையிலேயே இருப்பவர்கள் மகாபலிபுரம் போயிருக்க மாட்டார்கள்; ஏன், லைட் ஹவுஸ்கூட ஏறியிருக்க மாட்டார்கள்" என்றான் கல்யாணம்.

"நான் அப்படியில்லை; எல்லா இடங்களையும் பார்க்க ஆசைப்படுவேன். சந்தர்ப்பம் கிடைக்கா விட்டால் ஏற்படுத்திக் கொள்ளவாவது செய்வேன்" என்றாள் பவானி.

இந்தப் பயணத்தைக்கூட மேற்கொள்ள அவள் தானாகவேதான் முயற்சி எடுத்துக் கொண்டாள். மாஜிஸ்திரேட் கோவர்த்தனன், 'ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணனுக்கு ஏலமலையில் எஸ்டேட் உண்டு. அங்கிருந்து சில குண்டர்களை அனுப்பி என்னைத் தாக்கப் போவதாகக் கல்யாணம் மிரட்டினான்' என்று சொன்னதிலிருந்து இங்கே மலை ஏறிப் பார்த்துவிட அவள் ஆவலா யிருந்தாள். அதோடு மாஜிஸ்திரேட்டின் குற்றச்சாட்டைச் சற்று ஆராய்ந்து பார்த்து வரும் எண்ணமும் ஏற்பட்டிருந்தது.

எனவே இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு சமயம் கல்யாணம் வழக்கம்போல் அவளுக்குத் தன் காரில் லிஃப்ட் தருவதாகக் கூறியபோது, அவள் இனியும் ஆவலை அடக்க முடியாதவளாக, "நான் உங்கள் காரில் இன்று முதல் ஏறப் போவதில்லை; உங்கள் மேல் எனக்குக் கோபம்" என்று பேச்சை ஆரம்பித்தாள்.

"அடடா! நான் என்ன தப்பு பண்ணி விட்டேன்?" என்றான் கல்யாணம்.

"உங்களுக்கு இங்கே ஏலமலையில் எஸ்டேட் இருப்பதாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்றாள் பவானி.

"சொல்லிக் கொண்டிருப்பார்களா? அழைத்துப் போக வேண்டும். கோடை விடுமுறையில் ஒரு மாதம், இரண்டு மாதம் என்று எங்கள் குடும்பம் அங்கே போய்த் தங்குவதுண்டு. ஆனால் இந்தத் தடவை அப்பா அம்மாவை மட்டும் அனுப்பி விட்டு நான் இங்கேயே இருக்கத் தீர்மானித்துவிட்டேன்."

"ஏன்? நாடக ஒத்திகை, சமூக சேவை எல்லாம் தடைப்படுமே என்றா?"

"அப்படி யொன்றும் இல்லை. ராமப் பட்டணமே மலை வாசஸ்தலம் போல் குளிர்ந்து காணப்படுகிறது எனக்கு. நீங்கள் இங்கு குடியேறிய பிறகு!"

"அழகுதான், எனக்கு மலைச் சாரல்களையெல்லாம் பார்க்க ரொம்பப் பிடிக்கும். உங்கள் பெற்றோர் எப்போது புறப்படுகிறார்கள், சொல்லுங்கள். அவர்களுடன் நான் போகிறேன்; நீங்கள் வேணுமானால் இங்கேயே இருந்து சமூகப் பணிகளைச் சிரத்தையாகக் கவனித்துக்கொண்டிருங்கள்!"

"சரி, அப்படியே செய்வோம்! அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டியாகி விட்டது. இப்போது காரில் ஏறலாம் அல்லவா?" என்றான் கல்யாணம்.

பவானி சிரித்துக் கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள். "நானும் சீக்கிரத்தில் ஒரு கார் வாங்கப் போகிறேன்" என்றாள்.

"போச்சுடா! உங்களுக்கு அவ்வப்போது ஒரு லிஃப்ட் தருகிற திருப்தியாவது எனக்கு இருந்தது. அதற்கும் ஆபத்து வந்து விட்டதா?" என்றான் கல்யாணம்.

"நீங்கள் தாராள மனமுடையவராக இருப்பதால் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக் கொள்ளலாமா நான்? கடைசியில் நான் காரில் ஏறுவதே பெரிய தொந்தரவாக நீங்கள் எண்ணும் காலம் வந்துவிடும்."

"நீங்கள் புதுக் கார் வாங்கின மறு நாளே இந்தக் கார் ரிப்பேராகிவிடும் பாருங்கள். அப்புறம் நான் உங்களிடம் அடிக்கடி லிஃப்ட் கேட்பேன். அப்போது என்ன பண்ணுவீர்கள்? இது ஏதடா பெரிய தொந்தரவாப் போச்சு என்று நினைப்பீர்களா?"

பவானி கலகல வென்று சிரித்தாள். "உங்கள் தகப்பனார் இந்த வட்டாரத்திலேயே பெரிய வழக்கறிஞர் என்று பெயர் வாங்கியதில் அதிசயமில்லை. நீங்களே இந்தப் போடுபோடும்போது அவர் எதிர்த்தரப்பு வக்கில்களை என்ன பாடு படுத்துவார் என்று ஊகிக்க முடிகிறது."

"அப்பா, இப்போதெல்லாம் கேஸ்களை ரொம்பக் குறைத்துக் கொண்டுவிட்டார். எஸ்டேட் விவகாரம் எல்லாம் கூட என் தலையில் கட்டிவிட்டார். மாசத்தில் இரண்டு மூன்று தடவையாவது மலை ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். அடுத்த முறை நான் போகும்போது நீங்களும் வரலாமே?"

"ஆகட்டும், மாமாவைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்" என்றாள் பவானி.

"அவரையும் அழைத்து வாருங்கள். அவருக்கும் ஒரு மாறுதல் வேண்டாமா?"

இந்த உரையாடலின் விளைவுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை நாடக ஒத்திகையை ஒத்திப் போட்டுவிட்டு அவர்கள் கிளம்பி யிருந்தார்கள். கல்யாணம் ஒரே குஷியான மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் காருக்கு அது பிடிக்கவில்லை. அவன் கவனம் முழுவதும் தன்னிடமே திருப்பப்பட வேண்டும்; பவானிக்கு அதில் பங்கு சேரக் கூடாது என்று கருதியது போல் அது 'மக்கர்' செய்து நின்று விட்டது. காரின் முன்புறமிருந்து குபுகுபு என்று ஆவி அடித்தது.

"பார்த்தீர்களா? இதற்குத்தான் நான் புதுக் கார் வாங்குகிறேன் என்றேன். பாதி தூரமாவது வந்திருப்போமா?"

"முக்கால் திட்டத்துக்கு மேலேயே வந்தாகிவிட்டது. இங்கேயே இருங்கள். ஐந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன்" என்ற கல்யாணம் தொலைவில் தெரிந்த சில பண்ணை யாட்களின் குடிசைகளை நோக்கி நடந்தான் தண்ணீர் பெற்று வர.

பவானி காரைவிட்டு இறங்கினாள். காலாற நடந்தாள். அவள் கரத்தில் ஒரு பைனாகுலர் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு மரத்தின் நிழலில் சாலை ஓரமாக நின்று பைனாகுலர் வழியே சுற்று வட்டாரத்தை நோட்டம் விட்டாள்.

"ரொம்ப ஓரமாகப் போகாதே அம்மா! கிடுகிடு பள்ளம்!" என்று காரினுள்ளேயிருந்து மாமா குணசேகரன் குரல் கொடுத்தார்.

"ஜாக்கிரதையாக இருக்கிறேன், மாமா!" என்று கூறிய பவானி பைனாகுலர் வழியே தொலைவில் பட்சிகள், மிருகங்கள் ஏதும் தெரிகின்றனவா என்று பார்த்தாள்.

அவ்விதம் நோக்கியபோது அவள் திகைப்பும் வியப்பும் அளிப்பதான ஒரு காட்சியைக் கண்டாள்.

கீழே வெகு தூரத்தில் ஒரு மொட்டைப் பாறை மேல் பெண் ஒருத்தி நிற்பது தெரிந்தது. அவள் புடவைத் தலைப்பை நெஞ்சோடுகொணர்ந்து பின்னால் தொங்கவிடாமல் இடக் கரத்தால் ஒரு முனையை உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். மலைக்காற்றில் அந்தத் தலைப்பு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.

பவானி வைத்த கண் வாங்காமல் அவளைச் சற்று நேரம் பார்த்தாள். அவள் ஆத்மப் பிரதட்சணம் செய்வது போல் மெல்லத் திரும்பி நாலாபுறமும் பார்வையைச் செலுத்துவதைக் கண்டாள்.

ஏதோ கிட்டாத விடுதலைக்காக அவள் ஏங்குவது போலவும் அங்கே வந்து நின்று போலியான ஒரு சுதந்திரத்தைச் சற்று நேரம் அனுபவித்துவிட்டுத் திரும்ப எண்ணுவது போலும் பவானிக்குத் தோன்றியது. அப்படி சுதந்திரப் பறவையாயத் தன்னைச் சற்று நேரம் பாவித்துக் கொண்டு தாற்காலிக மன ஆறுதலையேனும் அடைய எண்ணும் அந்தப் பெண் யார்? பைனாகுலர் வழியாகப் பார்த்தாலும்கூட இத்தனை தூரத்திலிருந்து இன்னார் என்று இனம் கண்டு கொள்வது கஷ்டம். 'ஆயினும்.....அவள்........ஒரு வேளை கமலாவாக இருக்கலாமோ? என்று பவானிக்குத் தோன்றியது.

உடனேயே அப்படி இராது என்றும் நினைத்தாள். 'கமலா தன்னந் தனியாக இப்படிக் கிளம்பி வருவாளா?.....ஏன் வர முடியாது? பஸ் ஏறி மலைப் பாதையில் சற்றுத் தூரம் வந்த பிறகு இறங்கிக் கொண்டிருக்கலாம் இல்லையா? ஆனால் பார்க்கப் பழக அவள் அத்தனை கட்டுப்பெட்டியாக இருக்கிறாளே.....? இருந்தாலென்ன? அப்படிப் பட்டவர்கள்தான் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ளுகிற நெஞ்சழுத்தம் உள்ளவர்களாகவும் விளங்குவார்கள். யாரும் எதிர் பார்க்க முடியாத காரியங்களைத் திடும்மென்று செய்து வைப்பார்கள்....... சேச்சே, இது கமலாவாக இருக்க முடியாது.......ஆனால் இல்லை......ஏன், கீழே திரும்பவும் இறங்கிச் சென்றதும் அவளையே கேட்டுவிட்டால் போகிறது. அவளிடம் பேசி அவள் மனத்தை அறிந்து கொள்ள முயல வேண்டும்.'

பவானி பார்த்துக் கொண்டே இருக்கையில் அந்தப் பெண் நாலு பாறைகளை நாலு எட்டில் தாண்டி மலைப் பாதையை அடைந்தாள். பஸ் வரும் சத்தம் அவள் காதில் விழுந்திருக்க வேண்டும். ஒரு வளைவில் திரும்பி இப்போது கண்ணுக்குப் புலப்பட்ட பஸ்ஸை நிறுத்தி அவள் ஏறிக் கொண்டாள். சற்று நேரத்தில் பஸ் பவானியின் கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 14 -- ஹிமகிரி எஸ்டேட்



ஏலமலையில் கோபாலகிருஷ்ண முதலியாரின் எஸ்டேட் பங்களா மிகவும் வசதியாக இருந்தது. சாப்பாட்டுக் கூடம் தவிர, இரண்டு மூன்று பெரிய அறைகள், பங்களாவைச் சுற்றிப் பெரிய தோட்டம் எல்லாம் இருந்தன.

கையோடு டிபன் காரியரில் கொண்டு வந்திருந்த இட்டிலி தோசைகளையெல்லாம் ஒரு கை பார்த்து விட்டுக் குணசேகரன் கட்டிலில் கட்டையைக் கிடத்திக் குறட்டைவிடத் தொடங்கி விட்டார். உண்ட மயக்கம்.

கல்யாணம் எஸ்டேட் விவகாரங்களில் மூழ்கி மேஸ்திரிகள் மூன்று நான்கு பேர்களை விசாரிப்பதும் கட்டளைகள் இடுவதும் கணக்குப் பார்ப்பதும் பணத்தை எண்ணுவதுமாக இருந்தான்.

பவானி தோட்டத்தில் மெள்ள வளைய வந்தாள். அதில் ஒரு பக்கமாகக் கல்யாணத்தின் 'டப்பா' கார் நின்றது. 'இது இத்தனை உயரம் ஏறி வந்ததே அதிசயம்தான்' என்று எண்ணினாள் பவானி. 'இவ்வளவு பெரிய எஸ்டேட்டுக்கும் பங்களாவுக்கும் சொந்தம் கொண்டாடுகிற செல்வந்தர்கள் அந்தப் பழைய மாடல் காரை விற்க மனமின்றி வைத்திருப்பது விசித்திரம் தான். உயிரற்ற பொருள்களிடம் கூட நாளடைவில் சில சமயம் பாசம் வளர்ந்து விடும் போலும். ஜடப் பொருள்களிடம் கூட அன்பு செலுத் தும் கல்யாணமா அடியாட்கள் அனுப்பிக் கையைக் காலை முறித்துவிடுவதாக மாஜிஸ்டிரேட் கோவர்த்தனனை மிரட்டி யிருப்பார்? நம்பவே முடியவில்லையே! என்றாலும் காதல் கீதல் என்று அசட்டுத்தனமாக ஏதாவது எண்ணிக் கொண்டால் சில அபத்தக் காரியங்களையும் அதன் விளைவாகச் செய்யலாம்தான். யோசித்தபடியே நடந்து தோட்டத்தைக் கடந்து பிரதான சாலைக்கு வந்துவிட்ட பவானி திரும்பிப் பங்களாவை நோக்கினாள். கல்யாணம் காரியங்களை முடித்துக் கொண்டுபடி இறங்கித் தன்னை இங்குமங்கும் திரும்பித் தேடுவதைக் கண்டாள். அவன் பார்வையில் படுமாறு நின்று கரம் அசைத்தாள். பங்களா வாசலில் நின்ற காரைத் தட்டிக் கொடுத்துவிட்டு அவன் இவளை நோக்கி நடந்தான். எப்படியோ இரண்டு மூன்று தடவை குளிர்ந்த நீரைக் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்ட அது, கடமை முடிந்த திருப்தியுடன் நிற்பதாகத் தோன்றியது.

"என்ன யோசனை? இங்கு வந்து நிற்கிறீர்கள்?" என்றான் கல்யாணம் நெருங்கி வந்து.

"உங்களைக் கணவனாக அடையப் போகிறவள் பாக்கியசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தப் பழைய காரிடம் இத்தனை அன்பு செலுத்துகிறவர் மனைவியை எவ்வளவு பிரியமாக நடத்துவீர்கள்?"

"மனைவி பழகிப் பழசான பிறகு அவளிடம் எனக்கு அன்பு பெருக்கெடுக்கும் என்கிறீர்களா? அல்லது ஒரு கிழவியைப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள் என்கிறீர்களா?"

"இரண்டுமில்லை. இத்தனை பெரிய எஸ்டேட்டை நன்றாகக் கட்டி ஆளக் கூடிய திறன் படைத்தவளாகத் தேடிப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்கிறேன்.

"எஸ்டேட்டுக்கு எஜமானியாவதா முக்கியம்? கணவனின் மனத்தை அன்பினால் ஆளும் சாமர்த்தியமுள்ளவளாக இருப்பதல்லவா விசேஷம்?"

"ஆளுநரையே ஆள்வதற்கு அபாரத் திறமை வேண்டும். நீங்கள் கலகலப்பாகப் பேசும்போதே காரியவாதியாகவும் இருக்கிறீர்கள். இங்கே வந்ததும் வராததுமாக எஸ்டேட் விவகாரங்களில் இறங்கி விட்டீர்களே!"

"இல்லாதபோனால் இங்கே சில ஆசாமிகள் நம்மையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார்கள். எஸ்டேட்டில் வேலை செய்பவர்களில் நல்ல மாதிரியானவர்களும் உண்டு. பொல்லாதவர்களும் உண்டு.

"பொல்லாதவர்களை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் வேலைக்கு?"

"அப்படிப்பட்ட சிலரும் நிர்வாகத்துக்குத் தேவைதான். மற்றவர்களுக்கும் பயம் இருக்கும். ஒழுங்காக வேலை செய்வார்கள். ஆனால் அந்தக் குண்டர்களிடம் நாம் ஏமாந்து விடக் கூடாது. தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள்."

"குண்டர்கள் என்றால்....?"

"ஆயிரம் ரூபாய்க்காக ஆறு தலைகளைச் சீவிவிடக்கூடிய முரடர்களும் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள்!"

"அப்படியானால் மாஜிஸ்டிரேட் சொன்னதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம் என்று சொல்லுங்கள்!"

"கோவர்த்தனனா? என்ன சொன்னார்?"

"'எஸ்டேட்டில் உள்ள ஆட்களை அனுப்பிக் கையைக் காலை முறித்துப் போட்டுவிடுவேன்' என்று அவரை மிரட்டினீர்களாமே?"

"அடப் பாவமே! அப்படியா சொன்னார்? பெரிய கஜப் போக்கிரியாக இருக்கிறாரே? இவனுக்கெல்லாம் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் வேறு தருகிறார்களே அதைச் சொல்லுங்கள்!"

"மிஸ்டர் கல்யாணம்! நீங்கள் கோவர்த்தனனையோ அவர் வகிக்கிற பதிவியையோ இளக்காரமாகப் பேசுவது தவறு. ஏற்கெனவே ஒரு தடவை உங்களை எச்சரித்திருக்கிறேன். அவரும் மனிதர்தாம். சில குறைகள் அவரிடமும் இருக்கலாம். ஆனால் அதனால் அவர் தம் பதவிப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற மாட்டார் என்று நினைப்பதற்கில்லை."

"நான் எதுவும் சொல்லவே வேண்டாம். கூடிய சீக்கிரம் அவர் சாயம் தானாக வெளுத்து விடும். அப்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்."

"நீங்கள் இருவருமே ஏதோ அசட்டுப் பொறாமைக்கு ஆளாகி ஒருவரை யொருவர் ஏசிக்கொள்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது."

"அவருக்கு என்மீது பொறாமையோ என்னவோ எனக்குத் தெரியாது. அதனால்தான் ஒருவேளை என்மீது வீண்பழிகள் சுமத்துகிறார் போலிருக்கிறது. இருக்கலாம். ஆனால் அவரைப் பற்றி நான் ஏற்கனவே உங்களிடம் கூறியது - அதாவது கத்தியைக் காட்டி விரட்டினார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதோடு வேறு ஒரு விஷயமும் எனக்கு இப்போது தெரிய வந்திருக்கிறது."

"ஆரம்பித்து விட்டீர்களா? புதிதாக ஒரு கதையை?"

"நீங்கள் நம்ப மாட்டீர்கள்; வேண்டுமென்றே நான் மீண்டும் வீண் பழி சுமத்துவதாகக் கருதுவீர்கள். அதனால் உங்களிடம் அது பற்றிப் பேசவே வேண்டாம் என்றுதான் சற்று முன்வரை கூட எண்ணினேன். ஆனால் இப்போது 'என்னிடம் உங்களுக்கு மதிப்புக் குறைந்து போனாலும் பாதகமில்லை; உங்களை அவரிடமிருந்து காப்பாற்றி எச்சரிக்க வேண்டியது என் கடமை' என்று தோன்றுகிறது. நான் ரேடியேட்டருக்குத் தண்ணீர் தேடி வழியில் தென்பட்ட ஒரு கிராமத்துக்குள் நுழைந்தேன் அல்லவா? அப்போது..."

"அப்போது...." பவானியால் ஆவலை அடக்கிக் கொள்ள முடியவில்லை.

"அங்கே இரண்டு ஸி.ஐ.டி. க்கள் கிராம மக்களிடம் ஒரு ஃபோட்டோவைக் காட்டி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சிறையிலிருந்து தப்பியோடிய கைதியாம். இந்தப் பக்கம் வந்து தலைமறைவாய் இருக்கலாம் என்று சந்தேகப் படுகிறார்களாம்."

"அந்தப் ஃபோட்டோவை நீங்களும் பார்த்தீர்களா?"

"பார்த்தேன். அந்தப் படத்தில் இருந்தவன் ஏறத்தாழ நம் மாஜிஸ்டிரேட் போலவேதான் இருந்தான். கோவர்த்தனன் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்ளும் வேறு சில ஜாடை மாற்றங்களைச் செய்துகொண்டு மிருக்கிறார். ஆனால் நான் ஏமாறவில்லை. அந்தப் படத்தில் இருந்தது அவரேதான்!"

"இல்லை. இவ்வளவு நெருக்கத்தில் வந்துவிட்டார்கள்; அவர்களாகவே தெரிந்து கொண்டு விடுவார்கள் என்று எண்ணினேன். இன்னொரு காரணமும் உண்டு." "என்ன?"

"மாஜிஸ்திரேட் உங்கள் நண்பர். உங்கள் மதிப்பில் இன்னமும் விழுந்து விடாமல் நிமிர்ந்து நிற்பவர். எனவே உங்களையும் கலந்தாலோசித்துக் கொண்டு....."

"மிஸ்டர் கல்யாணம்! எனக்கு நீங்கள் பெரிய உபகாரம் செய்ய வேண்டும்" என்றாள் பவானி பரபரப்புடன்.

"சொல்லுங்கள், காத்திருக்கிறேன்" என்றான் கல்யாணம்.

"இந்த விஷயத்தை ஒரு ஜீவனிடமும் நீங்கள் பிரஸ்தாபிக்கக் கூடாது. கையடித்துச் சத்தியம் செய்வீர்களா?"

"உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்றால் இதோ இப்போதே செய்கிறேன்" என்று கல்யாணம் அவள் வலக் கரத்தைத் தன் இடக் கையால் பற்றிப் பின்னர் தன் வலக்கரத்தையும் அவள் உள்ளங்கையோடு இணைத்தான். இணைத்த கரத்தை எடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. பவானிக்கு தன்னை விடுவித்துக் கொள்ளச் சக்தி இல்லை. "தாங்க்யூ மிஸ்டர் கல்யாணம், தாங்க்யூ" என்றபோது அவள் குரல் கரகரத்தது. உடல் துவண்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 15 -- பிரியா விடை!



பவானிக்குப் புதிதாகக் கார் சென்னையிலிருந்து வந்து சேர்ந்தது. அவள் ஏற்கனவே கார் ஓட்டப் பழகி லைசென்ஸும் பெற்றிருந்தாளாதலால் அது வந்து சேர்ந்ததுமே எங்கேயாவது புறப்படத் தீர்மானித்தாள். எங்கே போவது என்று எண்ணிய மாத்திரத்தில் ஏலமலைப் பாதையில் மறுபடியும் உயரே ஏறிச் செல்ல வேண்டும் என்று தோன்றியது.

அந்த மலையில் ஆங்காங்கே உள்ள குக்கிராமங்களில் இன்னமும் சி.ஐ.டி.க்கள் வந்து விசாரிக்கிறார்களா? அவர்கள் தேடும் நபர் இன்னார் என்று கண்டுபிடித்து விட்டார்களா? தோல்வி அடைந்து திரும்பி விட்டார்களா? அல்லது ஒருவேளை தாங்கள் தேடும் நபர் மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் தான் என்று முடிவுக்கு வந்து அவரைக் கைது செய்யத் தயங்கி மேலிடத்து உத்தரவு பெறத் திரும்பி யிருக்கிறார்களா? இப்படியெல்லாம் பலவிதக் கேள்விகள் பவானியின் உள்ளத்தில் எழுந்தன. அவற்றுக்கு விடையை அந்தக் கிராமங்களில் விசாரித்தால் அறியலாம் எனவும் எண்ணினாள். பதில்களைத் தெரிந்து கொள்ளும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் அவளால் முடியவில்லை.

கல்யாணத்தையும் பின்னோடு அழைத்துச் சென்றால் நல்லது. பேச்சுத் துணையாக இருக்கும். ஆனால் கல்யாணம் ஹைகோர்ட்டில் நடந்து வந்த ஒரு வழக்கு விஷயமாக அவன் அப்பாவின் ஆணையை ஏற்றுச் சென்னை சென்றிருந்தான். புறப்படுவதற்கு முன் பவானியிடம் வந்து விடைபெற்றுக் கொண்ட காட்சியை இப்போது எண்ணினாலும் பவானிக்குச் சிரிப்பு வந்தது.

பிரிவாற்றாமையால் காதலி வருந்துவாளோ என்று கலங்கிய காதலன் போல, "கவலைப் படாதீர்கள், இரண்டே நாட்கள்தான். உடனே திரும்பி விடுவேன். உங்கள் நினைவாகவே இருப்பேன்" என்று அவன் திரும்பத் திரும்பக் கூறினான்.

பவானி, "எதற்கு இத்தனை சமாதானம் சொல்கிறீர்கள்? நான் உங்களைப் பிரிந்து தவித்து உருகிவிடப் போவதில்லை" என்றாள்.

கல்யாணத்துக்கு முகம் வாடிவிட்டது. "சேச்சே, நான் அதற்குச் சொல்லவில்லை. நாடக ஒத்திகையெல்லாம் தாமதமாகிறதே, அதை எண்ணித்தான் கவலைப் பட்டேன்" என்று சமாளித்தான்.

பவானிக்குப் பாவமாக இருந்தது. ஆறுதலாகப் பேசினாள். "பாதகமில்லை, நீங்கள் இல்லாவிட்டாலும் இருப்பதாகவே பாவித்து ஒத்திகைகளைச் சரியாக நடத்துகிறோம். அரங்கேற்றம் குறித்த நாளில் ஜாம் ஜாம் என்று நடக்கும். ஒரு குறையும் வராது."

"சரி. அப்போ நான் போய் வரட்டுமா? உம்... வருகிறேன்....சீக்கிரம் திரும்பிவிடுகிறேன்..... வரட்டுமா?" தயங்கித் தயங்கி நின்றான் கல்யாணம். லேசில் கிளம்ப மாட்டான் போலிருந்தது.

"சென்று வாருங்கள்! வென்று திரும்புங்கள். வெற்றித் திலகமாக நெற்றித் திலகமிட்டு அனுப்பி வைக்கட்டுமா?" என்றாள் பவானி நாடக பாணியில். டயலாக் குக்கு ஏற்ப நடிக்கவும் செய்தாள் வேடிக்கையாக.

கல்யாணத்துக்குச் சற்று முன் ஏற்பட்ட தாபம் தீர்ந்து உச்சி குளிர்ந்து விட்டது. "சாமானிய கேஸ் இல்லை இது. பெறப் போவது மாபெரும் வெற்றி. உங்கள் வாழ்த்து என் நெஞ்சுடன் இருக்குமாதலால் நான் வெல்வதும் உறுதி" என்று உற்சாகமாகக் கூறிச் சென்றான்.

அதையெல்லாம் இப்போது நினைத்துச் சிரித்துக் கொண்டாள் பவானி. 'கல்யாணம்தான் ஊரில் இல்லை. அவர் அப்பாவையாவது பார்த்து வைத்தால் என்ன?' என்று அவளுக்குத் திடும்மென்று தோன்றியது. 'அவர் வீட்டுக்கு இதுவரையில் போனதே இல்லையே நான். இந்த ஊருக்கே பெரிய மனிதர்; பிரசித்தி பெற்ற வழக்கறிஞர். மரியாதைக்காகவாவது ஒரு தடவை போய்ப் பார்க்க வேண்டாமா? ஏலமலைக்கு இன்னொரு சமயம் போய்க் கொண்டால் போகிறது. இருள் கவிகிற நேரத்தில் மலை ஏறுவதை விடப் பகல் போதில் செல்வது நல்லது. தக்க துணையுடன் போவதும் உசிதம்தான். கோர்ட் விடுமுறை நாளில் மாமாவையும் அழைத்துக்கொண்டு போகலாம். இப்போது ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியாருக்கு நமது மரியாதைகளைச் சமர்ப்பித்து விட்டு வருவோம்.'

எண்ணத்தை உடனே செயலாக்கத் துணிந்து கிளம்பினாள் பவானி. புது கார் பாங்காக ஓடியது. உள்ளத்தைக் குடைந்து கொண்டிருந்த கவலைகலை மீறி ஓர் உற்சாகம் பிறந்தது அவளுக்கு.

ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் தம் ஆபீஸ் அறையில் உட்கார்ந்து கேஸ் கட்டுக்களைப் படித்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் உன்னிப்பாகப் படித்த பிறகு அந்தத் தாள்களை முன்னும் பின்னுமாகப் புரட்டி நோட்டம் விட்டபடியே தமக்குத் தாமே பேசிக் கொள்ளவும் ஆரம்பித்தார்.

"சட்டம் ஒரு கழுதை என்று சொல்கிறது சரியாகத்தான் இருக்கிறது. கீழ்க் கோர்ட்டு தீர்ப்பு இரண்டு வருடக் கடுங்காவல். அப்பீல் கோர்ட்டிலே தீர்ப்பு குற்றமே ருசுவாக வில்லை; கேஸ் டிஸ்மிஸ்! ஹைகோர்ட்டிலே தீர்ப்பு மறுபடியும் அடியிலிருந்து விசாரணை நடத்தணும்! எப்படி இருக்கிறது. கதை? சட்டத்தைக் கழுதை என்று சொல்வதிலே என்ன தப்பு?..."

இத்தருணத்தில் காலடி ஓசை கேட்கவே நிமிர்ந்த கோபாலகிருஷ்ணன், "அடேடே! நீயா, பூஜை வேளையிலே கரடி நுழைந்த மாதிரி...." என்றார்.

அவர் மனைவி அழைக்குள் முன்னேறியவாறே, "ஆமாம், கழுதை, கரடி, குரங்கு இன்னும் என்னென்ன சொல்லணுமோ சொல்லுங்கள்....." என்றாள்.

"அடேடே உன்னைச் சொல்லலேடி பழ மொழியைச் சொன்னேன்.....இருக்கட்டும். இப்போ நீ எதற்காக வந்தே? நான்தான் ரொம்ப வேலையாக இருக்கேன்னு தெரியுமே? உன் பிள்ளையானால் டிராமா, காலட்சேபம்னு போயிடறான். ஒரு நிமிஷம் வீட்டிலே இருந்து உதவ மாட்டேன் என்கிறான். அவனை ஹைகோர்ட் கேஸ் விஷயமாக மெட்ராஸுக்கு அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. ஆயிரம் சால்ஜாப்பு சொன்னான். எனக்கு மெட்ராஸுக்கும் ராமப்பட்டணத்துக்குமாக அலைய முடிகிறதா சொல்லு. ஏதுடா அப்பாவுக்கு வயதாகி விட்டதே. நாம் கொஞ்சம் கேஸ்களைப் பார்த்து உதவி பண்ணுவோம் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை."

"உங்களுக்கு என்ன அப்படி வயதாகி விட்டது?" என்றாள் செல்லம்.

"போன வருஷம் ஐம்பது; இந்த வருஷம் நாற்பத்தொன்பது அவ்வளவுதான். உன் இளமைத் தோற்றத்துக்கு ஏற்ப நான் வருஷா வருஷம் வயசைக் குறைச்சுண்டுதானே வரணும்?"

"போதும் பரிகாசம்! கல்யாணம் என்றைக்குத் திரும்பி வருகிறான் என்று கேட்கத்தான் வந்தேன். இனிமேல் இந்த வீட்டில் ஒரு நிமிஷம் கூட என்னால் இருக்க முடியாது. வந்திருக்கிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல என்னால் முடியவில்லை. உங்கள் பிள்ளைக்கு ஒரு கல்யாணத்தையாவது இதற்குள் பண்ணி வைத்திருந்தால்..."

"வைத்திருந்தால் என்ன? மாமியாரும் மருமகளும் ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டிருப்பீர்கள். உங்கள் கேஸிலே வாதாடறதுக்குத்தான் அப்பா பிள்ளை இரண்டு பேருக்கும் பொழுது சரியாக இருக்கும்."

"இப்போ மாத்திரம் புரட்டி விடுகிறீர்களாக்கும்? பொழுது விடிந்துஒரு கட்சிக்காரனைக் கூடக் காணோம்."

"நீயே போய் ஊரெல்லாம் சொல்லி விட்டு வருவாய் போலிருக்கே? என்றாவது ஒரு நாள் இப்படித்தான் இருக்கும்."

இத்தருணத்தில் வாசலில் ஹாரன் சத்தமும் தொடர்ந்து கார் என்ஜின் ஒரு முறை உறுமிவிட்டு ஓயும் சத்தமும் கேட்டது.

"பார்த்தாயா? நீ சொல்லி வாய் மூடுவதற்குள் கட்சிக்காரர் யாரோ வருகிறார்!"

வாசலிலிருந்து "ஸார்!" என்று குரல் கேட்டது.

"நீ உள்ளே போ சீக்கிரம்" என்றார் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன். "காரிலே யாரோ பெரிய மனிதர்கள் வந்து இறங்கியிருக்கிறார்கள்"

"எதற்கு இப்படி விரட்டறேள்? பெண் பிள்ளைக் குரல் மாதிரி இருக்கே!"

"இருக்கட்டுமே! அதனால் என்ன? பெண்ணுக்கு வக்கீலை நாட வேண்டிய பிரமேயமே இருக்காதா? இடத்தைக் காலி பண்ணு. சீக்கிரம். உம்!"

செல்லம்மாள் திரும்பித் திரும்பி இரண்டு தடவை பார்த்துக் கொண்டே வேண்டா வெறுப்பாக உள்ளே போனாள். முதலியார் மிகக் கவனமாகக் கேஸ் கட்டைப் படிக்கத் தொடங்கினார்!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 16 -- ஜின்னா தோற்றார்!




வந்தவள் பவானி. அவள் சற்று நின்று பார்த்துவிட்டுப் பெஞ்சில் அமர்ந்தாள். அப்படியும் முதலியார் தலை நிமிரவில்லை. தொண்டையைக் கனைத்துக் கொண்டு "வக்கீல் ஸார் ரொம்பப் பிஸியாக இருக்கறாப் போலிருக்கு" என்றாள் பவானி.

முதலியார் நிமிர்ந்து பார்த்துத் திடுக்கிட்டார்.

எழுந்து நின்று, "வரணும் வரணும்... நீங்க வந்ததை நான் பார்க்கவே இல்லை. என்ன சேதி? எப்போ வந்தீங்க? அடே நாற் காலி! பியூனைக் கொண்டாடா! சேச்சே! அடே பியூன் நாற்காலி கொண்டாடா!"

"வேண்டாம். பெஞ்சே சௌகரியமாயிருக்கு" என்றாள் பவானி.

"அந்த மடையன் பியூன் யாராவது வருகிற சமயம் பார்த்து எங்கேயாவது தொலைஞ்சு போயிடறான். குமாஸ்தாவுக்கு இன்றுதான் திவசம். அவனும் வரவில்லை.

"குமாஸ்தாவுக்கா ஸார் திவசம்? காலமாகி ரொம்ப நாள் ஆச்சோ?"

"இல்லை; இல்லை. குமாஸ்தாவின் தாயாருக்குத் திவசம். அது போனால் போகட்டும். எங்கே வந்தீர்கள்? என்ன விஷயம்?"

"ஒன்றுமில்லை ஸார்! சும்மாத்தான். புது கார் இப்பத்தான் வந்தது. ஒரு டிரைவ் போகலாம் என்று கிளம்பினேன். இந்த ஊரில் என்ன மெரீனாவா? மவுண்ட் ரோடா? என்ன இருக்கிறது. புதுக் காரைப் பெருமையுடன் ஓட்டிப் போக? பெரும்பாலும் கூடைப் புழுதி எழுப்புகிற கப்பி ரோடுதான். ஆகவே ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியார் வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ஜம்பம் அடித்துக்கொண்டு வரலாமே என்று தோன்றியது. புறப்பட்டு விட்டேன். உங்க மகன் கல்யாணத்திடமும் சொல்லியிருந்தேன். புதுக்கார் வரப்போகிறதென்று." "ஐஸீ." அவன் மெட்ராஸ் போயிருக்கான்."

"தெரியுமே! என்னிடம் சொல்லிக் கொண்டு தான் கிளம்பினார். அவரைப் பார்க்க நான் வரவுமில்லை. உங்க ஆசிர்வாதத்தைக் கோரித்தான் வந்திருக்கேன். இந்தப் பக்கத்தில் லீடிங் லாயர் நீங்க. இந்த ஊருக்கு வந்ததிலிருந்து நான் உங்களைச் சந்தித்துப் பேசினதே இல்லை. மரியாதைக்காவது வந்து பார்க்கணும் என்று ரொம்ப நாட்களாய் எண்ணம். இன்று புதுக் காரும் வரவே...."

"எதற்காக என்னைப் போய்ப் பிரமாதமாகப் புகழ்கிறீர்கள்?" என்றார் கோபால கிருஷ்ணன். "ஊர் முழுதும் பவானி என்ற பெயரைக் கேட்டாலே 'ஓஹோஹோ' என்கிறார்கள். கோர்ட்டுக்கு நான் வரும் போது சில சமயம் உங்களைச் சுட்டிக் காட்டி இன்னாரென்று என்னிடம் சக வக்கீல்கள் சொல்லியிருக்கிறார்கள்."

"நல்ல வார்த்தைகளாகத்தானே ஸார் பேசினார்கள் என்னைப் பற்றி? குற்றம் குறை ஒன்றும் கூறவில்லையே?"

"கிராஸ் எக்ஸாமினேஷனைக் கிளாஸா நீங்க நடத்தறதாக் கேள்விப் பட்டேன். அப்படிப்பட்டவர் என்னைத் தேடி வருவதென்றால் அது என் பாக்கியம்தான்" என்றார் கோபாலகிருஷ்ணன்.

"விளையாட்டுக்குக்கூட இப்படி நீங்க உங்களையே குறைத்துப் பேசிக் கொள்ளக் கூடாது. அனாவசியமாக என்னைத் தூக்கி வைக்கவும் வேண்டியதில்லை. நான் இந்தத் தொழிலுக்குப் புதுசு. உங்களைப் போன்றவர்கள் என்னை 'கைட்' பண்ணனும். அடிக்கடி ஏதாவது சந்தேகங்கள் சட்டப் பாயிண்டிலே தோன்றும். நீங்க கிளியர் பண்ணனும். உங்கள் மகளைப் போல் நினைத்துக் கொள்ளுங்கள். என்ன சரிதானா?"

"அதற்கு என்ன ரொம்ப சரி!"

"இப்போ கூடப் பாருங்க. உங்க அட்வைஸ்ஸைக் கேட்டுக் கொண்டு போகலாம் என்று தான் வந்தேன். ஒரு விஷயமா."

"சொல்லுங்கள்."

"'ஏ' வந்து 'பி' யைக் கத்தியால் குத்தினால் அது கொலை முயற்சி. ஆனால் சும்மா கத்தியைக் காட்டிப் பயமுறுத்தினால்...?"

"சட்டப்படி அதுவும் தப்புத்தான். ஆனால் 'மோடிவ்' நிரூபிக்கப்படணும். சும்மா விளையாட்டாப் பேசிக்கிட்டிருந்தோம்னு சொல்லி 'ஏ' தப்பிக்கப் பார்க்கலாம். கத்தியால் மிரட்டி விரும்பத் தகாத இன்ன காரியத்தை 'ஏ' சாதித்துக் கொண்டான் என்பதாக நிரூபிக்கணும்."

"'ஏ' சொல்கிறார், ''பி' என்னை எஸ்டேட் ஆட்களை விட்டு அடிக்கப் போவதாகப் பயமுறுத்தினான். அதனால் தான் நான் கத்தியைக் காட்டி அவனை மிரட்டினேன்' என்று."

"என்ன இதெல்லாம்? உங்க நாடகத்திலே வருகிற காட்சியா? கல்யாணம் எழுதின நாடகத்திலே நீங்க சஸ்பென்ஸ் சேர்க்கறீங்களா?"

"இல்லை சார்! என் வாழ்க்கையே ஒரு பெரிய சஸ்பென்ஸாக இருக்கு."

"யார் உங்களை மிரட்டுகிறார்கள்? என்ன விஷயம்?"

"எதுவுமே எனக்கு நிச்சயமாகத் தெரியலே. உறுதிப்படுத்திக் கொள்ள முடியாததால் எந்த ஒரு நபர் மீதும் குற்றம் சுமத்தவும் தயக்கமாயிருக்கு. ஆனால் மனம் மட்டும் கிடந்து அடித்துக் கொள்கிறது. ஏதோ விபரீதம் நேரப் போகிறது அதுவும் என் காரணமாக நிகழப் போகிறது என்று.."

ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன் அவளை உற்றுப் பார்த்தார். "நீ ரொம்பக் குழப்பம் அடைந்திருக்கிறாய்" என்றார்.

"அப்பாடா, புரிந்து கொண்டுவிட்டீர்களே" என்றாள் பவானி. "என் மனசோடு ஒப்பிடும்போது ஜின்னாவின் முஸ்லீம் லீக் கொள்கைகள் கூட ரொம்பத் தெளிவானதாகத் தோன்றும். அத்தனை குழப்பம்!"

"ஐயோ பாவம்."

"ஆமாம், ஸார்! ஜின்னாவை நினைச்சாலே ரொம்பப் பரிதாபமாகத்தான் இருக்கு" என்று சிரித்துக் கொண்டே கூறிய பவானி.

கோபாலகிருஷ்ணனை நோக்கி அடுத்த கேள்விக் கணையை வீசினாள்; "ஸார்! இன்னொன்று கேட்கிறேன். ஒரு நபரை உத்தமர் என்று நமக்கு மிக நன்றாக, உறுதியாகத் தெரியும். ஆனால் அவர் பெரிய குற்றம் புரிந்து விட்டதாக நிதர்சனமாகச் சாட்சியம் இருக்கிறது. அந்தச் சமயத்தில் ஒரு வக்கீலின் கடமை என்ன? சாட்சியத்தின்படி நடப்பதா? அல்லது மனச்சாட்சிப்படி நடப்பதா?"

ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் தலையைச் சொறிந்து கொண்டார். "நடந்ததை நடந்தபடி விவரித்தால் தேவலாம். இப்படி மர்மமாகக் கேட்டால் என்ன பதில் சொல்வது?"

"சரி, அது வேண்டாம். இதற்குப் பதில் கூறுங்கள். ஒரு மனுஷன் அவ்வளவாக நல்ல சுபாவம் உள்ளவன் இல்லை. அவனோடு பழக வேண்டாம் என்று அறிவு எச்சரிக்கிறது. ஆனால் மனம் அறிவுக்குக் கட்டுப் படாமல் எதனாலோ அவன்பால் ஈர்க்கப் படுகிறது. ஆனால் அதைக் காதல் என்றும் கூறுவதற்கில்லை. ஏதோ போன ஜன்மத்தில் விட்டுப்போன தொடர்பு இப்போது புதுப்பிக்கப்படுவது போல் ஒரு பிரமை. இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் ஒரு பெண் எப்படி நடந்து கொள்வது?"

"'த்சொ. த்சொ த்சொ" என்று சத்தம் எழுப்பியபடி தலையை அசைத்தார் கோபால கிருஷ்ணன். "உனக்காக நான் ரொம்பப் பரிதாபப்படுகிறேன் பவானி!"

"ஏன் ஸார்? எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. பைத்தியம் பிடிக்காமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் வந்து சற்று நேரம் பேசினேன். பெரிய கிரிமினல் லாயர் என்று பெயரெடுத்தவர் ஆயிற்றே. எனக்குத் தெளிவு பிறக்கிற மாதிரி ஏதாவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். கடைசியில் பார்த்தால் உங்கள் மூளையையும் குழப்பியதுதான் மிச்சம் என்று தோன்றுகிறது.

"உன்னை என் மகள் போல் நினைத்துக் கொள்ளச் சொன்னாய். சரி என்றேன். வார்த்தை மீற மாட்டேன். ஆனால் உனக்கு என்னைத் தகப்பனாக ஏற்கும் மனப் பக்குவம் இன்னும் வரவில்லை. அதனால்தான் குறிப்பிட்டுக் கூறாமல் குயுக்தியாகப் பேசுகிறாய். உனக்கு எப்பொது மனம் விட்டுப் பேசத் தோன்றுகிறதோ சொல்லு. கேட்கிறேன். என்னால் முடிந்த யோசனைகளைக் கூறி உதவிகளையும் செய்கிறேன். இதற்கு அதிகமாக நான் என்ன சொல்ல முடியும்?"

"அது போதும் ஸார் எனக்கு" என்ற பவானி எழுந்து விடை பெற்றுக்கொண்டாள். அவள் நன்றி கூறவில்லை. ஆனால் கலங்கி நீர் ததும்ப நின்ற கண்களை அவரிடமிருந்து மறைத்துக்கொள்ள அவள் பிரயாசைப் படாததே நன்றியை உணர்த்தியது.

பவானி சென்றதும் செல்லம்மாள் மறுபடியும் தன் கணவன் அறைக்குள் நுழைந்து, "என்னங்க, யாரோ ஒருத்தி வந்திருந்தாளே அவள் பெண்தானே?" என்றாள்.

"ஏன், அதிலே உனக்கு என்ன சந்தேகம்?"

"அந்தப் போடு போட்டாளே! பெண் என்றால் இப்படியா இருப்பார்கள்?"

"பின்னே எப்படி இருப்பாள்? அவளுக்கு என்ன குறை? அழகாய், இலட்சணமாய் நாகரிகமாய் இருக்கிறாள். படித்து பி.ஏ. பி. எல். பட்டமும் வாங்கி யிருக்கிறாள். எல்லோரும் உன்னைப்போல் கர்நாடகமாக இருக்கணுமா என்ன?"

"சரியாய்ப் போச்சு; நீங்க பேசறதைப் பார்த்தால் இந்த வீட்டிலேயே அவளைத் தங்கவைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!"

"ஏன், அப்படிச் செய்தால் என்ன? அவள் கூட 'என்னை உங்கள் பெண்ணாகப் பாவித்துக் கொள்ளுங்கள்' என்றுதான் சொன்னாள். மருமகப் பெண்ணாகக்கூட ஏற்கலாம். ஆனால்....."

"போதும், வேறெ வினையே வேண்டாம். ஏற்கனவே இந்த வீட்டில் நீங்க அப்பா பிள்ளை இரண்டு பேர் வக்கீல் வேலை பார்த்து என்னைப் பேச விடாமல் அடிக்கிறீங்க. மருமகளும் வக்கீலாக வந்து விட்டால் நான் ஊமையாகி விடவேண்டியதுதான்."

"அப்படி நடந்தால் தேவலாமே. ஆனால் என் கவலை வேறு. ஏற்கனவே அவள் இந்த ஊருக்கு வந்த பிறகு அநேகமாக எல்லாக் கட்சிக்காரங்களும் அவகிட்டதான் போறாங்க. இந்த வீட்டுக்கே அவள் வந்து குடியேறி தன் பெயரையும் எழுதித் தொங்க விட்டால் இப்போ எனக்கு வந்துகொண்டிருக்கிற ஒன்றிரண்டு கேஸ்களும் அவகிட்டத்தான் போகும்" என்று கூறி ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் இடி இடியென்று சிரித்தார்.

"என்ன சிரிப்பு? எனக்குப் பிடிக்கவேயில்லை!" என்று தோளில் முகவாயை இடித்துக்கொண்டு உள்ளே போனாள் செல்லம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 17 -- "உனக்கும் காதலா?



ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து பவானி வெளியே வந்தபோது தன் காரில் டிரைவர் ஆசனத்தில் யாரோ உட்கார்ந்திருப்பது சாலை விளக்கின் மங்கிய ஒளியில் அவளுக்குத் தெரிந்தது. காரைப் பூட்டாமல் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு போனது தவறு என்று தோன்றியது. கூடவே அனுமதி இன்றிக் காருக்குள் ஏறி அமர்ந்திருக்கும் நபர்மீது கோபமும் பொத்துக் கொண்டு வந்தது. ஒரு வக்கீலின் வாதத் திறமைகளை யெல்லாம் காட்டி அவனுடன் சண்டை பிடிக்கும் நோக்கத்துடன் அவள் பரபரப்பாக அடியெடுத்து வைத்தாள். ஆனால் காரை நெருங்கியபோது அது சிறுவன் விசு என்பதையும் அவன் புதுக் காரைத் தான் ஓட்டுவதாகக் கற்பனை செய்து கொண்டு "டிர்ர்ர்....டிர்ர்!" என்று சத்தப்படுத்தியபடியே ஸ்டியரிங்கை அசைப்பதையும் கண்டாள். அவளுக்குக் கோபிக்க மனம் வரவில்லை. என்றாலும் விளையாட்டாக "யாருடா அவன், காரிலே விஷமம் பண்ணுகிறது! போலீஸைக் கூப்பிடட்டுமா?" என்று அதட்டினாள்.

"ஓ, பேஷாகக் கூப்பிடு, பவானி அக்கா! சாலையின் வலது பக்கம் வண்டியை நிறுத்தியிருக்கிறாயே, வந்து பார்க்கட்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர். பத்து ரூபாய்தான் ஃபைன். பவானி பி.ஏ. பி.எல். லின் வாதத் திறமை ஒன்றும் அங்கே பலிக்காது!" என்றான் விசு.

"அட போக்கிரி! ரூல்ஸ்ஸெல்லாம் நல்லாத் தெரிந்து வைத்திருக்கிறாயே!" என்றாள் பவானி.

"அது மட்டுமில்லே. கார் ஓட்டவே எனக்குத் தெரியும். ஆனால் சாலை தெரிந்தால் கால் எட்டாது. மற்றப்படி கியர், பிரேக், கிளச் சப் ஜாடா கச்சிதமா எனக்குத் தெரியும்."

"பலே பேஷ்! கெட்டிக்காரன் தான். நகரு சொல்கிறேன். உன்னை வீட்டில் விட்டு விட்டுப் போகட்டுமா?"

"சரி அக்கா." அவன் நகர்ந்து கொண்டான். "ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு வரட்டுமா?"

"ஐய்யய்யோ! புது கார்! எங்கேயாவது மோதிவிட்டால்?"

"ஒன்றும் ஆகாது பவானி அக்கா! நீயும் பிடிச்சுக்கோ, நானும் பிடிச்சுக்கிறேன். கொஞ்ச தூரம், என்ன? ப்ளீஸ்!"

"ஆல்ரைட், அதோ அந்த இரண்டாவது விளக்குக் கம்பம் வரைதான்" என்ற பவானி காரைக் கிளப்பினாள். விசு அவள் அருகே] ஆசனத்தின் மீதே மண்டியிட்டு ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டான்.

"அது சரி, நீ இங்கே எப்படி வந்து சேர்ந்தாய்?" - பவானி கேட்டாள்.

"கல்யாணம் மாமாதான் என்ன உதவி வேண்டுமானாலும் தம்மை வந்து பார்க்கும்படி சொல்லியிருக்கிறாரே. அதனால் தான் வந்தேன். "நீங்க காரை விட்டு இறங்கி உள்ளே போவதைப் பார்த்தேன். புதுக் கார் ஜோரா இருக்கு அக்கா."

"என்ன உதவி இப்போ தேவைப்பட்டது கல்யாணத்திடம்?"

"கிணற்று ஜகடைக்கு கிரீஸ் போடணுமாம். கீங் கீங் என்று சத்தம் போடறதாம். அக்காவுக்கோ எனக்கோ எட்டலை. கிணற்று மதில் மேல் ஏறி நிற்கப் பயம். அதனால் கல்யாணம் மாமாவை அழைத்துக்கொண்டு வருமாறு கமலாக்கா சொன்னாள். இங்கே வந்தா அந்தச் செல்லம் மாமி வள்ளுன்னுவிழுந்து விரட்டறா. பேர்தான் செல்லம் வெல்லம் என்று."

"இன்னும் இரண்டு நாட்களிலே வந்துவிடுவார் கல்யாணம் மெட்ராஸிலேருந்து, சொல்லி அனுபறேன்" என்றாள் பவானி.

"இரண்டு நாளென்ன இருபது நாட்கள் கழித்து வேணுமானாலும் வரட்டும், ஒன்றும் அவசரமில்லை" என்றான் விசு. "கிணற்று ஜகடை கீங் கீங் என்று கத்தினால் கத்திட்டுப் போகட்டும். யாருக்கு நஷ்டம் அல்லது கஷ்டம்?"

"அது சரி" என்று சிரித்தாள் பவானி. "சரியாக உட்கார், ஊர்வலம் போனது போதும். வேகமாய் விடலாம் வண்டியை."

விசு ஸ்டீரிங்கிலிருந்து கரத்தை எடுத்து விட்டு அமர்ந்தான்.

"கஷ்டமோ நஷ்டமோ இல்லை என்றால் கிரீஸ் போட எதற்குக் கல்யாணம் மாமாவைக் கூப்பிட வந்தாய்?" என்றாள் பவானி.

"ஐய்யய்யே இதுகூடப் புரியலையா உனக்கு? கமலா அக்காவுக்குக் கல்யாணம் மாமா மேலே லவ்! அவரை அடிக்கடி பார்க்கலைன்னா இவளுக்குப் பித்துப் பிடித்த மாதிரி ஆயிடும். அதனால் தான். ஆணி அடிக்கணுமா கல்யாணம் மாமாவைக் கூப்பிடு. துணி உலர்த்தக் கம்பி கட்டணுமா கல்யாணம் மாமாவைக் கூப்பிடுன்னு என் பிராணனை வாங்கறா."

பவானிக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. வியப்பாகவும் இருந்தது. "இந்தா விசு! நீ சின்னப் பையன். இப்படி யெல்லாம் பேசக் கூடாது" என்றாள்.

"கமலா அக்காவுக்குக் கல்யாணம் மாமா மேலே லவ் என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வரது? உங்களுக் கும் கல்யாணம் மாமா மேலே லவ்வா?" என்றான் விசு.

"ஏய், அசடு! சினிமா டிராமாவிலே எதையாவது பார்த்துவிட்டு உளறாதே! சமர்த்தா இருக்கணும், புரிந்ததா?"

"சரி" என்றான் விசு.

இதற்குள் வீடு வந்து விட்டது. விசு கீழே இறங்கிக் கோபத்தோடு வேகமாகப் படாரென்று கதவைச் சாத்தினான். பவானிக்குத் தூக்கி வாரிப் போட்டது! அவனை அதட்டியதற்குப் பழி வாங்கி விட்டானே! புத்தம் புதுக் கார். கதவு கழன்று விழாததே அதிசயம்தான்.

ஒரு பக்கம் கோபமும் ஒரு பக்கம் அவன் போக்கிரித்தனத்தை நினைத்துச் சிரிப்பும் பொங்க அவள் கீழே இறங்கினாள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன் இம்முறை கார் இடதுபுறமாக நிற்கிறதா என்று பார்த்துக் கொண்டு சரியாகப் பூட்டிக் கொள்ளவும் செய்தாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 18 -- அந்தப்புரத்தில் அரசிளங்குமரிகள்



"வாம்மா பவானி! இந்த ஊர் எல்லைக்குள் நுழைந்ததுமே மகா லட்சுமி மாதிரி எதிரே வந்து நின்றாய். உடனேயே ஜாகை வசதி கிடைத்தது. அந்தப் பிள்ளை கல்யாணம் தங்கக் கம்பி. ரொம்ப ஒத்தாசையாக இருக் கிறான்" என்று கூறிப் பவானியை வர வேற்றாள் காமாட்சி.

"இன்னும் உங்களுக்கு என்னென்ன உதவி வேணுமோ எல்லாவற்றையும் அவரையே கேளுங்கள்" என்றாள் பவானி.

"அப்படி ஒண்ணும் அதிகமாக உபகாரம் தேவையில்லை. விசுவைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, 'அவன் அப்பாவுக்கு ஓர் உத்தியோகத்தைப் பார்த்துக் கொடுத்து, இந்தப் பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணி வைச்சுட்டாப் போதும்."

"முதல் இரண்டு காரியங்களும் கஷ்டப் படலாம். மூன்றாவது முடிந்த மாதிரிதான். கட்டாயம் சுலபமாக நடந்துவிடும். கல்யாண சுந்தரம் இருக்கிறாரே அவரே பிரும்மச்சாரி தான். உங்கள் பெண்ணுக்குத் தகுந்த வரன்."

"ஆனால் அவர்கள் குடும்பம் பணக்காரக் குடும்பம் அது இது என்கிறார்களே."

"அதனால் என்ன? மிஸ்டர் கல்யாணசுந்தரத்துக்கு ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமே கிடையாது. தீவிர சோஷலிஸ்ட் அவர் அப்பா மட்டும் தடுக்கவில்லை என்றால் சொத்தை யெல்லாம் தானம் பண்ணி விடுவார். நாட்டில் ஏழைகள், பரம ஏழைகள் என்ற இரண்டே வகுப்பார்தாம் இருக்க வேண்டும் என்பது அவர் சித்தாந்தம். அந்த அளவுக்குச் சமூக சீர்திருத்த ஆர்வம் கொண்டவர். உங்கள் பெண்தான் என்ன சாமானியப்பட்டவளா, அவள், அழகு, சமர்த்து, அறிவு, படிப்பு..."

"கடைசியாகச் சொன்னது மட்டும் அக்காவிடம் கிடையாது. பூஜ்யம்" என்றான் விசு.

"தடிப்பயலே! சும்மா இரு. நீ ஒருத்தன் படித்துக் குப்பை கொட்டினால் போதும்" என்றார் மாசிலாமணி.

"உண்மையைச் சொன்னாலே எல்லோருக்கும் கோபம்தான் வரும்" என்றான் விசு.

"விசு! அக்கா எதுவரை படித்திருக்கிறாள்?"- பவானி கேட்டாள்.

"எட்டாவதோடு படிப்புக்குக் கொட்டாவி விட்டுவிட்டாள்."

"அதற்கு மேல் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று நிறுத்தி விட்டோம்" என்றார் மாசிலாமணி.

"நீ என்ன நினைச்சுண்டாலும் சரி பவானி. அந்த விஷயத்திலே நாங்க கொஞ்சம் கர் நாடகம்தான்" என்றாள் காமாட்சி.

"நினைக்கிறது என்ன? இதெல்லாம் அவரவர் மனசையும் சூழ்நிலை சந்தர்ப்பங்களையும் பொறுத்தது. கால மாறுத லுக்கு ஏற்ப நாளடைவில் மன மாற்றங்களும் நடக்கும். நிதானமாகப் படிப்படியாகத் தான் ஏற்படும். ஒரு விதத்தில் பார்த்தால் நீங்க கமலாவின் படிப்பை எட்டாவதோடு நிறுத்தியதே நல்லதுதான்"

"ஏன், எப்படி?" என்று மாசிலாமணி தம்பதி ஏகோபித்துக் கேட்டனர்.

"கல்யாணசுந்தரத்தின் தாயாருக்குப் படித்த பெண்களைக் கண்டாலே பிடிக்காது! அதிகம் படிக்காது, குடித்தனப் பாங்காக இருக்கும் நாட்டுப் பெண்ணாகத் தனக்கு வர வேண்டும் என்று அந்த அம்மாவுக்கு ஆசை."

இதைக் கேட்டுக் கொண்டே யிருந்த கமலாவின் மேனி சிலிர்ப்பதைப் பவானி ஓரக் கண்ணால் பார்த்துப் புன்னகை பூத்தாள். அவள் விடைபெற்றுச் செல்ல முற்பட்டபோது, "குங்குமம் கொடேன் கமலா!" என்றாள் காமாட்சி. ஏதோ கனவுலகிலிருந்து விடுபட்டவள் போல் திடுக்கிட்டுக் கமலா அவசரம் அவசரமாக எழுந்து போய்க் குங்குமச் சிழிழை எடுத்து வந்து நீட்டினாள்.

பவானி நெற்றிக்கு இட்டுக் கொண்டு புறப்பட்டபோது வாசல்வரையில் வழியனுப்ப வந்த கமலா, "அடிக்கடி வந்து கொண்டிருங்கள் அக்கா!" என்றாள்.

"வருகிறேன். ஆனால் இங்கே வரலாமா அல்லது ஏலமலைப் பாதையில் பத்தாவது மைல் கல்லில் மொட்டைப் பாறை ஒன்று இருக்கிறதே அங்கே சந்திப்போமா?" என்றாள் பவானி. "அங்கே யென்றால் மனம் விட்டுப் பேசலாம் இல்லையா?"

கமலா அதிர்ச்சி அடைந்தவளாக, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றாள்.

"அடி கள்ளி! எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறாயா? பூனை போலிருந்து கொண்டு புலி போல் பாய்கிறவளாயிற்றே நீ. நானே காரில்கூடத் தனியாகப் போகத் தயங்குகிறேன். அம்மாதிரி ஏகாந்தமான இடங்களுக்கு நீ பஸ்ஸில் ஒருவருக்கும் தெரியாமல் போய் விட்டு வருகிறாய்!"

"அக்கா! மெதுவாகப் பேசுங்கள். அம்மா காதில் விழுந்தால் தோலை உரித்து விடுவாள்."

குரலைச் சற்றுத் தாழ்த்திக் கொண்ட பவானி, "அடுத்த தடவை இரண்டு பேரும் இந்தக் காரில் சேர்ந்தே போவோம். பொழுதோடு போய்விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடுவோம். என்ன சொல்கிறாய்?" என்றாள்.

"சொல்ல என்ன இருக்கிறது? நான் எப்போதும் தயார். எனக்கென்ன கோர்ட்டா, ஆபீஸா? வெட்டிப் போது போக்கிக் கொண்டிருக்கிறேன்" என்று சற்றே ஆதங்கம் குரலில் எட்டிப் பார்க்கப் பேசினாள் கமலா. "ஆனால் அப்பா, அம்மா தான் சம்மதிப்பார்களோ என்னவோ?"

"நான் அழைத்துப் போகிறேன் என்றால் மறுக்க மாட்டார்கள். வரட்டுமா?" என்ற பவானி ஆயிரமாயிரம் வண்ணக் கனவுகள் காணக் கமலாவுக்கு வழிவகுத்து விட்டுக் காரில் ஏறிச் சென்றாள்.

மலை அரசனுடைய ராஜ்யத்தின் தலைநகர் போல விளங்கியது அந்தப் பகுதி. காப்பித் தோட்டங்களின் செயற்கை எழில் பல இடங்களில் மனோரம்மியமாக இருந்தது என்றால் அந்தப் பகுதிகளின் இயற்கை அழகு கொழித்துக் கொஞ்சியது. தலைநகரின் மையமான இடத்தில் ஓங்கி நின்ற அரண்மனையாக ஒரு மொட்டைப் பாறை. அரண்மனையா அது? இல்லை. அங்கு இப்போது குடியேறியிருந்த அரசிளங்குமரிகள் அந்தப்புரமாகவே மாற்றி விட்டிருந்தனர்! சரக்கொன்றை மரம் ஒன்று அவர்கள் மீது பொன் விதானம் விரித்திருந்தது. திரண்டு கொண்டிருந்த கரிய மேகங்கள் காரணமாய் வீரியம் குன்றிய மாலை நேரத்து வெய்யிலையும் அந்த விதானம் வடிகட்டி அனுப்பி அதே காரணத்தால் தனது தங்கத் தோற்றம் மேலும் தகதகக்கக் கண்டது.

அருகிலேயே ஓர் அர்ச மரம் சாமரம் வீசுவதுபோல் அசைந்தாடிச் சலசலத்தது. ராமப்பட்டணத்தை யொட்டியிருந்த பெரியதோர் ஏரி மீதாகத் தவழ்ந்து வந்த மலையமாருதம் இருவர் மேனியையும் குளிர்வித்தது. அடிமரத்தில் ஒய்யாரமாகச் சாய்ந்திருந்த அவ்விருவரும் அரசிளங்குமரிகளா அல்லது வனதேவதைகளேதானா? கமலா தன்னிடமிருந்த சொற்ப ஆடைகளிலேயே மிகவும் புதிதான ஒன்றை அணிந்திருந்தாள். இதை ஒரு விசேஷதினமாகக் கருதி வழக்கத்தை விடச் சிரத்தையுடன் ஒப்பனைகளையும் கவனித்துச் செய்துகொண்டிருந்தாள். பவானி இந்தப் பயணத்துக்காக விசேஷ சிரத்தை ஏதும் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் காட்டவில்லை என்றாலும் சாதாரணமாகவே அவள் நவீன நாகரிகங்களிலும் அன்றைய நாகரிகத்தை அறிந்தவள். ஒன்று பச்சைக் கிளி என்றால் மற்றது மாடப் புறா. ஒன்று மஞ்சள் சாமந்தி, மற்றது இளஞ்சிவப்பு ரோஜா. ஒன்று கும்மிக் கீதம், மற்றது இங்கிலீஷ் டியூன்! ஒருத்தி அல்லி ராணி, மற்றொருத்தி கிளியோபாத்ரா! ஏகந்தச் சூழல் அளித்த சுதந்திர உணர்வு அவர்களை ஏதோதோ மனோராஜ்யங்களில் பறக்கச் செய்தது. அதே சமயத்தில் ஒருவித நெருக்கத்தையும் பிணைப்பையும் அவ்விருவரிடமும் உண்டாக்கி அடிமைப்படுத்தவும் செய்தது.

"மழை வருமோ?" என்றாள் கமலா.

"வரலாம். இம்மாதிரி சில்லென்று காற்று வீசும்போது உன் பக்கத்தில் நான் இருந்து என்ன பிரயோசனம்? கல்யாணம் அல்லவா இருக்க வேண்டும்?" என்றாள் பவானி.

"அக்கா! உண்மையாகத்தான் பேசுகிறீர்களா? அல்லது என்னை ஏமாற்றுகிறீர்களா? அனாவசியமாக என் ஆசைகளை வளர்த்து விட்டால் அது மோதிச் சிதறும்போது என் இதயமும் சுக்கு நூறாக உடைந்து போகும்.

"கமலா! கல்யாணம் உன்னை ஏற்றுக் கொள்வார் என்று என்னால் சத்தியம் செய்து தரவா முடியும்? ஆனால் கல்யாணம் உன்னை மனைவியாக அடையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பேன். அவர் உன்னை மறுக்க எந்தக் காரணமும் எனக்குத் தோன்றவில்லை.

நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் உங்கள் இல்வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இனிமையாகத் தங்கு தடையின்றி ஓடும். உங்களை இணைத்து வைக்க நான் என்னால் முடிந்ததை யெல்லாம் செய்வேன்."

"அன்று நீங்கள் வீட்டுக்கு வந்து என் ஆசைக்குத் தூபம் போட்டுவிட்டுப் போனதிலிருந்து நான் இந்த உலகத்திலேயே இல்லை,அக்கா!"

"கல்யாணத்துடன் கரம் கோத்துக் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாயாக்கும்! என்னவெல்லாம் விளையாடினீர்கள்? எல்லாவற்றையும் ஒன்று விடாமல் இப்போது சொல்லியாக வேண்டும் எனக்கு!"

"மகிழ்ச்சிக் கடலில் மிதந்தேன். திடீரென்று அதுவே துயரக் கடலாகவும் மாறியது. அதில் மூழ்கிப் போனேன்."

"துயரமா? என்ன துயரம் உனக்கு?"

"இத்தனை அன்பான ஓர் அக்காவைத் தெய்வமாகப் பார்த்து என்னிடம் அனுப்பி வைத்திருக்கும்போது அவளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவள் மீது சந்தேகித்துக் கோபதாபப் பட்டும் பொறாமையால் வெந்துருகியும் பலவிதமாகச் சபித்தோமே என்று என்னை நானே நொந்து கொண்டு அழுது தீர்த்தேன்!"

இப்படிக் கூறி வரும்போதே கமலா மீண்டும் பொல பொலவென்று கண்ணீர் உகுத்தாள்.

"அசடே! எதற்கு என்னைச் சபித்தாய்? ஏன் இப்போது அழுகிறாய்? நிறுத்து, சொல்கிறேன்" என்று அதட்டும் பாவனையில் பேசிய பவானி தன் புடவைத் தலைப்பால் கமலாவின் முகத்தை ஒற்றினாள்.

"நீங்களும் அவரும் சேர்ந்து சேர்ந்து காரில் போவது வருவதைப் பார்த்தும் பேசிப் பழகுவதைக் கண்டும் பொறாமைப் பட்டேன். அக்கா! என் நல்வாழ்வைப் பறித்துக்கொண்டு போக வந்த பரம விரோதியாக உங்களை எண்ணினேன். மனசுக்குள் உங்களைச் சபித்தேன். தாறுமாறாகத் திட்டினேன். அக்கா! என்னை மன்னிப்பீர்களா?" என்று கேட்ட கமலா பவானியின் மடியில் விழுந்து முகத்தைப் புதைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழலானாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 19 -- இன்னொருவர் ரகசியம்



கமலாவை அவள் இல்லத்தில் விட்டு விட்டுப் பவானி வீடு திரும்பியபோது இருட்டி வெகு நேரமாகி விட்டிருந்தது. பவானியின் மாமா குணசேகரன் கவலையோடு வாசலிலேயே காத்திருந்தார். "என்னம்மா, கால தாமதமாகுமென்றால் வழக்கமாய்ச் சொல்லி விட்டுப் போவாயே? நெஞ்சைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறேன். பெற்றோரை விட்டு நூற்றுக்கணக்கான மைல்களுக்கு இப்பால் என் பொறுப்பில் வந்து சேர்ந்திருக்கிறாயே?" என்றார்.

"எதிர்பாராமல் தாமதமாகி விட்டது, மாமா! அந்தப் பெண் கமலா இருக்கிறாளே, அவளோடு மலைச்சாரலுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு சுவாரசியத்தில் பொழுது போனதே தெரியவில்லை. இருள்கிறது, கிளம்பலாம் என்று நான் எண்ணிய சமயம் அந்தப் பெண் 'ஓ' வென்று அழ ஆரம்பித்து விட்டாள். அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது."

"அட பாவமே! எதற்கு அழுதாள் குழந்தை?"

"குழந்தையா? நாலு குழந்தைகளுக்கு அவளே தாயாக இருக்கக் கூடிய வயசு!"

"இருக்கட்டுமே. பெற்றோருக்கு அவள் எப்போதும் குழந்தைதான். நீகூடத்தான் இருக்கிறாய். கல்யாண வயதாகவில்லையா உனக்கு? எனக்கு என்னமோ இன்னமும் குழந்தையாகவே தோன்றுகிறாய். அதனால் தான் உனக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஞாபகமே இன்று மாலை வரையில் ஏற்படவில்லை.

"அடடே! இன்று சாயந்திரம் மட்டும் போதி மரத்தின் அடியில் போய் அமர்ந்தீர்களாக்கும்!" என்று கூறிய பவானி சிரித்தாள்.

"ஞானோதயம் என்னை நாடி வந்தது. பவானி! மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் உருவில் வந்தது!"

"அதுதானே பார்த்தேன். இல்லாத போனால் உங்கள் தங்கமான மனத்தில் அசட்டு யோசனைகள் எல்லாம் உதயமாகுமா என்ன?"

"எது அம்மா அசட்டுத்தனம்? உன் திரு மணத்தைப் பற்றி நினைத்துப் பாராமலேயே கல்கத்தாவில் உன் பெற்றோரும் இங்கே நானும் காலத்தை ஓட்டுகிறோமே, அதுவல்லவா அசட்டுத்தனம்? அதைச் சுட்டிக் காட்டி மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் பொறுப்பை உணர்த்தியது எவ்வளவு புத்திசாலித்தனம்!"

"பலே! என் கல்யாணத்தில் அத்தனை அக்கறையா அவருக்கு! உம்... இன்னும் என்ன சொன்னார்?" உணர்ச்சிகளை மறைத்துக்கொள்ள முயன்ற பவானி, தோற்றுப் போனாள். அவள் முகம் 'ஜிவ்' வென்று சிவந்து போனது.

"சொல்ல வேண்டியதை யெல்லாம்தான் சொன்னார். 'பவானியின் படிப்புக்கும் ஆற்றலுக்கும் அறிவுக்கும் அழகுக்கும் யௌவனத்துக்கும் சாமர்த்தியத்துக்கும் ஏற்ற வரனாகப் பார்க்க வேண்டும்' என்றார். அதைவிட முக்கியம் வழக்கறிஞராகத் தொழில் நடத்தும் உனக்கு அந்தத் தொழிலில் தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டக் கூடிய கணவனாக அமைவது என்பதை ஞாபகப்படுத்தினார்."

"பவானிக்கு வரப் போகும் கணவன் குறைந்த பட்சம் ஒரு மாஜிஸ்திரேட்டாக இருக்க வேண்டும். அவன் வாலிப மிடுக்குடன், அழகனாக, அறிவாளியாக, அனுசரித்துப் போகிறவனாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருபாரே?"

"சொன்னார் பவானி."

"அதாவது..."

"அதாவது தன்னையே மாப்பிள்ளையாக ஏற்கலாம் என்று சங்கோஜத்தை விட்டுக் கூறினார் பவானி. ஏனம்மா உன் அபிப்பிராயம் என்ன?"

"நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள்? வாக்குக் கொடுத்துவிடவில்லையே?" என்று கலவரமடைந்தவளாகக் கேட்டாள் பவானி.

"அப்படியெல்லாம் செய்வேனா பவானி? நீ என்ன பட்டிக்காட்டுப் பெண்ணா? உன் விருப்பத்தைத் தெரிந்துகொள்ளாமல் ஒப்புதல் அளிப்பேனா?"

"நல்ல வேளை!" என்று பெருமூச்செறிந்தாள் அவள்.

"நல்ல நாளும் வேளையும் பார்க்க வேண்டியதுதான்" என்றார் குணசேகரன். "மாஜிஸ்திரேட் ரொம்ப நல்லவர். கௌரவமான உத்தியோகம். ஹைகோர்ட் ஜட்ஜ் வரை பதவி உயரலாம். உன்னை மனமார விரும்புகிறார் என்று நிதரிசனமாய்த் தெரிகிறது. நிச்சயமாய் நீ தொழில் நடத்துவதற்கு முட்டுக்கட்டை போட மாட்டார். இதைவிட நல்ல வரன் எங்கே கிடைப்பான்? ஒவ்வொருத்தர் பெண்ணைப் பெற்று விட்டு மாப்பிள்ளை தேடி நாயாய் அலைகிறார்கள். இங்கேயோ முதல்தர மாப்பிள்ளை நம் வீடு தேடி வந்திருக்கிறார். ஒரு வார்த்தை "சரி" என்று சொல். உடனே உன் பெற்றோருக்குத் தந்தி அடித்து வரவழைக்கிறேன்."

"மாமா! மேன்மைதங்கிய பிரிட்டிஷ் அரசரின் மகத்தான தபால் தந்தி இலாகாவுக்கு ஒன்றே முக்கால் ரூபாய் நஷ்டம். நீங்கள் தந்தி அனுப்பப் போவதில்லை" என்றாள் பவானி.

"ஏன் அம்மா? மாஜிஸ்திரேட் கோவர்த்தனனிடம் என்ன குறையைக் கண்டாய்?"

"அவருக்கு ஒரு குறையும் இல்லை. மன்மதன் போலிருக்கிறார் என்று சர்ட்டிபி கேட் வழங்க வேண்டுமா? நான் தயார். ஆனால் எனக்குத்தான் திருமணத்தில் நாட்டம் இல்லை."

"ஏன் அப்படிச் சொல்கிறாய் பவானி? ஒரு வேளை.... அந்தப் பையன் கல்யாணம்."

"மாமா! கல்யாணத்தையும் என்னையும் சம்பந்தப்படுத்திக் கோவர்த்தனன் ஏதாவது பிதற்றியிருந்தால் அதை மறந்து விடுங்கள். எனக்கும் அவருக்கும் இடையே தொழில் ரீதியாகவும் சமூகப் பணியாற்றுவதிலும் உள்ள தொடர்பு தவிர வேறு பிணைப்பு எதுவும் கிடையாது. நீங்கள் ஏதாவது கூறப்போக அது அந்தப் பெண் கமலாவின் காதில் விழுந்து விட்டால் போதும். மேலே பாய்ந்து பிடுங்கிவிடுவாள் உங்களை."

"அவள் என்ன நாயா? புலியா?"

"இரண்டும்தான். கல்யாணம் அவளை ஏற்றால் நன்றியுள்ள நாயாக வாழ்நாளையெல்லாம் அவனுக்கு அர்ப்பணிப்பாள். கல்யாணத்தை அவளிடமிருந்து பிரிக்க முயல்கிறவர் மீது புலியாகப் பாய்வாள். கல்யாணமே அவளை வெறுத்து ஒதுக்கி விட்டால் தற்கொலை செய்து கொண்டு சாவாள்?

"சற்றுமுன் சொன்னேனே. என் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது தீர்த்தாள் என்று. அதற்குக் காரணம் அவளுக்குக் கல்யாணசுந்தரத்தின் மீதுள்ள ஆசைதான். அவர் என்னடா என்றால் அவளை லட்சியம் பண்ணுவதே கிடையாது. சதா நாடகம், சமூக சேவை என்று அலைகிறார்."

"நாடகம், சமூக சேவை என்று மட்டும்தான் அலைகிறானா கல்யாணம்? உன் பின்னாலும் சுற்றுகிறான். இல்லையா?" என்றார் குணசேகரன்.

"மாமா! நீங்கள் பொல்லாதவர்! எல்லோரையும் சரியாக அளந்து வைத்திருக்கிறீர்கள். அந்தக் கணிப்பு எனக்குக் கல்யாணத்தினிடம் ஈடுபாடு இல்லை என்பதையும் உங்களுக்கு உணர்த்தியிருக்குமே?"

"அதைப் புரிந்து கொண்டிருக்கிறேன் பவானி. அதனால் தான் கோவர்த்தனன் இங்கு வந்து என்னிடம் பேசிவிட்டுப் போனதிலிருந்து நம்பிக்கையும் மகிழ்ச்சியுமாக நீ வீடு திரும்பக் காத்திருந்தேன். ஆனால் அந்த ஆசைக்கு நீ அணை போடுகிறாய். இன்னும் ஒரு தடவை யோசித்துப் பார் பவானி. கோவர்த்தனன் உன்மீது உயிரையே வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. டென்னிஸ் ஆட வழக்கம்போல் நீ வரவில்லை என்றதும் உனக்கு என்னவோ ஏதோ என்று பதறித் துடித்துக் கொண்டு வீடு தேடி விசாரிக்க வந்துவிட்டார் என்றால் அவர் அன்பு எத்தனை ஆழமானதாக இருக்க வேண்டும்?"

"சேலம் மாவட்டக் கேணியைத் தோற்கடிப்பதாக அத்தனை ஆழம் இருக்குமா?" என்றாள் பவானி சிரித்துக் கொண்டே. குணசேகரன் அவள் ஹாஸ்யத்தை ரசிக்காதது கண்டு, "எனக்குக் கோவர்த்தனன் பேரில் கோபதாபமோ வெறுப்போ ஏதும் இல்லை, மாமா! எனக்குத் திருமணத்தில் இப்போதைக்கு விருப்பமில்லை. அவ்வளவுதான். ஒன்று மட்டும் உங்கள் திருப்திக்காகச் சொல்லி வைக்கிறேன். என்றைக்காவது நான் கல்யாணம் பண்ணிக் கொள்வது என்று தீர்மானித்தால் கோவர்த்தனன் போன்ற ஒருவரைத்தான் மணந்து கொள்வேன். சரிதானா?"

"ஊஹூம், எனக்குப் புரியவில்லை, பவானி!" என்றார் குணசேகரன். "கோவர்த்தனனே 'இதோ நான் தயார்' என்னும்போது கோவர்த்தனன் போன்ற வேறு ஒருவரைத் தேடுவானேன்?"

"அதைப் பற்றிப் பேச எனக்கு உரிமை இல்லை, மாமா! அது இன்னொருவர் ரகசியம்!" என்றாள் பவானி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 20 -- இரக்கமற்ற இரவுகள்



அன்றிரவு பவானிக்குத் தூக்கமே வரவில்லை. அன்று மட்டும்தானா? இது போன்ற எத்தனையோ இரவுகள் அவளிடம் இரக்கமின்றி நடந்து கொண்டு வதைத்திருக்கின்றன.

மாறனின் மலர்க் கணைகளால் தாக்குண்டவர்கள் இப்படி உரக்கமின்றித் தவிப்பது சகஜம் என்று அவள் படித்திருக்கிறாள். அது உண்மைதான். அவள் விஷயத்தில். உமாகாந்தனும் இப்போது எங்கோ கண்காணாத இடத்தில் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால் வியப்பில்லை.

ஆயினும் அதே மன்மதன் பல சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டு மலர்க் கணைகளுக்குப் பதில் அரும்பு அம்புகளை ஏவிவிடுவதாக அவளுக்குப்பட்டது. அதுதான் ஒருதலைப்பட்சமான காதலாகப் பரிணமித்துப் பல குழப்பங்களுக்கும் துயரங்களுக்கும் மக்களை ஆளாக்குவதாக அவள் தர்க்கரீதியாக ஒரு முடிவுக்கு வந்தாள். தன்னைச் சுற்றியுள்ளவர்களையே அவள் எண்ணிப் பார்த்தாள். 'எவ்வளவு விசித்திரமான நிலை! கமலாவுக்குக் கல்யாணத்தின் மீது காதல். கல்யாணமோ என்னை அடைய ஆசைப்படுகிறார். மாமா குணசேகரன் தன் மருமாள் மாஜிஸ்திரேட்டைத் திருமணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். கோவர்த்தனனுக்குக் கொஞ்சம் இடமளித்தால் போதும். அவர் என்னை விழுங்கி ஏப்பம்கூட விட்டு விடுவார்! அத்தனை மோகம் அவருக்கு என் மீது! ஆனால் நான் மனமார நேசிப்பதோ உமாகாந்தனை. அவரோ எங்கே இருக்கிறார், என்று திரும்புவார் என்பதொன்றும் தெரியவில்லை!'

இந்தச் சிக்கல்கள் எப்படித் தீரப் போகின்றன என்று நினைத்தபோது பவானிக்குச் சிரிப்பு வந்தது. கூடவே உமாகாந்த் இந்த நிமிஷத்தில் எங்கு, எத்தனை கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணத்தில் மனம் வேதனைப்பட்டது.

உள்ளத்தை முறுக்கிப் பிழியும் இந்தத் துயரத்தை யாரிடமாவது சொல்லிக்கொண்டு ஆறுதல் பெறக்கூட அவளால் முடியவில்லை. 'கமலாவுக்கும் எனக்குமிடையே இது விஷயத்தில் எவ்வளவு வித்தியாசம்! கமலா கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் மனம் விட்டு வாய்விட்டுத் தன் ஆசைகளை என்னிடம் வெளியிட்டாளே. அப்படி என்றால் யாரிடமாவது பேச முடிந்ததா? பதிலுக்குக் கமலா விடம் என் அந்தரங்கங்களைச் சொன்னேனா? கல்லூரிப் படிப்பும் வழக்கறிஞராகத் தொழில் நடத்துவதும் அந்த அளவுக்கு ஒரு போலி கௌரவத்தை வளர்த்து வார்த்தைகளுக்கு வரம்பு கட்டுகின்றன!

'கமலாவைப் போலவே நானும் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியிருக்கலாமோ?

சேச்சே! கல்லூரிப் படிப்பு இல்லாதிருந்தால் உமாகாந்தை என்னால் எப்படி சந்தித்திருக்க முடியும்? அவர் காதலைப் பெறும் பாக்கியத்தை எப்படி அடைந்திருக்க முடியும்? அந்த ஆனந்தமான ஆண்டுகளை எண்ணும் போதே மேனி சிலிர்க்கிறதே! இப்போது அவரைப் பிரிந்து துயருற்றாலும் என்றாவது ஒரு நாள் அவரை மீண்டும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையே எத்தனை இனிமையான ஓர் அனுபவமாகவும் இருக்கிறது! கல்கத்தாவில் அவருடன் நெருங்கிப் பழகிய அந்த இரண்டு ஆண்டுகளைத் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொணர்ந்தே இருபது வருஷங்களை ஓட்டி விடலாமே!'

இத்தனைக்கும் அவள் பி.ஏ. படித்த அந்த இரண்டு ஆண்டுகளிலும் உமாகாந்துடன் அடிக்கடி கொஞ்சிக் குலவி மகிழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவன் அருகில் இருக்கிறான். அதே கல்லூரியில்ல் எம்.ஏ. வகுப்பில் சரித் திரப் பிரிவில் படிக்கிறான். தன்னை விரும்புகிறான். தன்னைச் சந்திக்க நேரும்போதெல்லாம் சிரித்துப் பேசுகிறான் என்ற சூழலே போதுமானதா யிருந்தது.

அன்றைக்கே அவன் லட்சியவாதி. கதர் தான் உடுத்துவான். சுதந்திர இயக்கத்தில் இயன்ற அளவில் பங்கேற்பான். "படிப்புக்குக் குந்தகம் ஏற்படாத அளவில் நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று அவனது பெற்றோர்களுக்கு மேலாக அவளும் வற்புறுத்துவாள்.

"பொய்யான சரித்திரத்தை எழுதி வைத்திருக்கிறார்கள் ஆங்கிலேயர். இதைப் படித்துப் பட்டம் பெற்றுத்தான் என்ன லாபம்?" என்று கேட்பான் உமாகாந்த். "சரித்திரத்தை ஒரு நாள் நான் மாற்றி எழுதிக் காட்டுகிறேன், பார்!" என்பான்.

அப்படி மெய்யாலும் ஒரு சந்தர்ப்பம் நிகழவே செய்தது! காலாண்டுப் பரீட்சையின் விடைத் தாள்களைத் திருத்திக் கொடுத்திருந்தார் பேராசிரியர். அதைக் கொண்டுவந்து பவானியிடம் காட்டினான் உமாகாந்தன். அவன் முகத்தில் குறும்புப் புன்னகை தவழ்ந்தது. பெரிய கோழி முட்டை சிவப்பு மையால் போட்டிருந்தார் பேராசிரியர். திகைத்தாள் பவானி. அவளால் நம்பவே முடியவில்லை. அறிவுச் சுடரை உள்ளடக்கியதால் ஒளிரும் நெற்றியுடன்கூடிய உமாகாந்தன் சைபர்மார்க் வாங்குவதா? இலேசாக நடுங்கிய கரங்களால் ஒரு வரி பேராசிரியர் எழுதியிருந்தார்; "எக்ஸலண்ட் இங்கிலீஷ் பட் ராங் ஹிஸ்டரி!" அவளுக்குப் புரிந்துவிட்டது! உமாகாந்தன் ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்த பாடப் புத்தகங்களின்படி பரீட்சை எழுத வில்லை. உண்மைச் சரித்திரத்தை எழுதியிருக்கிறான். ஆங்கிலேயரின் ஆளுகையால் இந்தியா அடைந்த நன்மைகளை எழுதவில்லை. இந்தியா அந்த நன்மைகளை எப்படியும் காலக்கிரமத்தில் தானாகவே பெற்றிருக்கும் என்று வாதாடி யிருந்தான். அவர்கள் கொணர்ந்த சீர்திருத்தங்களில் எதுவுமே அவர்கள் இந்த நாட்டை அடிமைப்படுத்திய தீமைக்கு ஈடாகிவிடாது. ஆங்கிலேயரின் வீரத்தை அவன் வாழ்த்தவில்லை. அவர்களது ஆணவத்தையும் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் விவரித்திருந்தான். வியாபாரம் பண்ண வந்தவர்கள் நாடாளும் ஆசை கொண்ட விந்தையை விளக்கியிருந்தான். அவனது ஆங்கில அறிவு அத்தனையையும் பயன்படுத்தி அற்புதமாக எழுதிய கட்டுரை!

" 'பிரமாதமான ஆங்கிலம் என்று நீங்கள் தட்டிக் கொடுத்திருப்பது சரி; ஆனால் இதைத் தவறான சரித்திரம் என்று எப்படி நீங்கள் சொல்லலாம்? என்று பேராசிரியரிடம் வாதாடினேன். அவர் வெலவெலத்துப் போய்விட்டார் !" உமாகாந்தன் கூறி விட்டுச் சிரித்தான்.

"அவர் கடமையைச் செய்தார்" என்றாள் பவானி கலவரத்துடன். அவன் கரங்களைப் பற்றிக் கொண்டு, "காலாண்டுப் பரீட்சை இது; பாதகமில்லை. இறுதிப் பரீட்சையில் இப்படி எழுதி மோசம் போய் விடாதீர்கள். வாழ்க்கையின் இரண்டு ஆண்டுகள் வீணாகி விடும்!" என்று கெஞ்சினாள்.

"அது எனக்குத் தெரியாதா, பவானி? இதைவிடப் பிரமாதமாக ஆங்கிலேயரின் ஆற்றல்களை மெச்சி எழுதி டிஸ்டிங்க்‌ஷன் வாங்குவேன்! பேராசிரியரிடமும் அந்த வாக்குறுதியை அளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்!" என்றான் உமாகாந்தன் அவள் விரல்களைச் சமாதானமாக வருடியவாறு.

என்றாலும் அந்த வாக்குறுதியை நிறை வேற்ற அவனால் முடியாமலே போயிற்று!
(தொடரும்)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top