- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
அத்தியாயம் 11 -- சிலிர்ப்பும் சினமும்
ஞாயிற்றுக் கிழமை முழுவதும் சமூக சேவா சங்கக் கட்டடம் திமிலோகப் பட்டது. ஒத்திகை நடந்த நேரம் பாதி. அரட்டையிலும் தமாஷ் பேச்சிலும் கழிந்த நேரம் பாதி. பவானி தங்களுடன் வந்து சகஜமாகப் பழகி நாடகத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டதில் அனைவருக்கும் ஒரே ஆனந்தம். பதினெட்டு மணி நேரம் இருந்த இடத்தை விட்டு நகராமல், சீட்டாடி 'ரிக்கார்டு' ஏற்படுத்தியிருந்த பத்மனாபன் கூடச் சீட்டாட் டத்தைச் சற்று மறந்து நாடக ஒத்திகையைப் பார்க்க வந்து விட்டாரென்றால் அதற்குப் பவானியின் தோற்றத்திலும் சுபாவத்திலும் இருந்த வசீகர சக்திதான் காரணம். அந்தச் சங்கத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் ஏதோ தேவேந்திர பதவி கிடைத்துவிட்டது போல் மகிழ்ந்து கொண்டிருக்க, கோவர்த்தனன் மட்டும் இருக்கிற பதவியையும் இழந்து விட்டவர் போல் முகத்தைத் தூக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
அந்தப் பக்கமாகப் போன ஒரு வழக்கறிஞரை அழைத்து, "என்ன மிஸ்டர் சேஷாசலம்! என்னமோ நாடகமாமே? நல்ல தங்காள் கதையா? அரிச்சந்திரன் வரலாறா?" என்று கேட்டார்.
"சே! அதெல்லாம் பழம் காலம்னா! இப்பல்லாம் சமூகக் கதைதான் எடுக்கும்" என்றார் சேஷாசலம்.
"ஓகோ! காதலித்த கமலாசினியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாத கதாநாயகன் ஒப்பாரி பாட்டுப் பாடியபடியே தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகிறானா?" என்றார் ஏளனமாக, கோவர்த்தனன்.
மாஜிஸ்திரேட்டின் மனநிலையை அவரது பேச்சின் தோரணையிலிருந்து புரிந்து கொண்டுவிட்ட சேஷாசலம், அவர் போக்கிலேயே பேசி நல்ல பெயர் தட்டிக் கொள்ளப் பார்த்தார்.
"அப்படி ஏதாவது நவீனக் காதல் கதையாக இருந்தாலும் தேவலாமே. இவர்கள் காந்தி பக்தர்களோல்லியோ? அதனால் சமூக சேவை பற்றிய இலட்சிய நாடகம் போடுகிறார்கள்."
"பலே, பலே! சமூக சேவையா? விதவைகளுக்கெல்லாம் பொட்டு வைத்து விபசாரிகளுக்கெல்லாம் பூச்சுட்டி அழகு பார்க்கப் போகிறானா கல்யாணம்?"
"ஹூம்! அப்படி ஏதாவது இருந்தாலும் தேவலாம். நாடகத்தைப் பார்க்க அருவருப்பாயிராது. இங்கே ஆளுக்கொரு துடைப்பக் கட்டையைத் தூக்கிக் கொண்டு கூத்தடிக்கிறா!"
"அதென்ன கண்ணறாவி?"
"ராமப்பட்டணம் போன்ற ஒரு சிறு பட்டணத்தில் படித்த வாலிபர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லோரும் வேலை நேரம் போகப் பாக்கியை வெட்டிப் பொழுதாய்ப் போக்குகிறார்கள். சீட்டாட்டம், சில்லறைப் பேச்சு. இந்தச் சமயம் கல்கத்தாவிலிருந்து ஒரு பெண் வருகிறாள். அந்த பட்டணத்தில் குடியேறுகிறாள். அவள் மாலை நேரத்தில் ஊரில் உள்ள ஏழைக் குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு படிப்பு, பாட்டு, டான்ஸ், தையல் வேலை என்று சொல்லித் தருகிறாள். இதைப் பார்த்த அந்த ஊர் வாலிபர்களிடம் மனமாற்றம் உண்டாகிறது. அவர்களும் உபயோகமாக ஏதும் செய்ய நினைக்கிறார்கள். ஊர் சுத்தமாகிறது. குளம் ஒன்று வெட்டியாகிறது. சேரிக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடம் ஒன்று கட்டுகிறார்கள்..."
"இது என்ன பிதற்றல்? வாழ்க்கைக்கு ஒத்து வராத கதை?"
"வாழ்க்கையில்தான் சமூக சேவை என்றால் உடம்பு வணங்கவில்லை. நாடகத்திலாவது செய்து பார்த்து விடுவோமே என்பதால் இருக்கும்!" என்று கூறி சேஷாசலம் பெரிதாகச் சிரித்தார்.
ஒரு போடு!" என்று கூறியபடி கோவர்த்தன்னன் அவர் முதுகில் ஒரு போடு போட்டதும் அவருக்கு அந்தக் கடும் வெய்யிலிலும் உச்சி குளிர்ந்து விட்டது.
அன்று மாலை பவானி ஒத்திகை முடித்து புறப்பட்டபோது, டென்னிஸ் மட்டையை விர்ரென்று சுற்றிக் கொண்டு அவளெதிரே நின்றார் கோவர்த்தனன். "என்ன ஒத்திகை ஒரு வழியாக முடிந்ததா? ஒரு ஸெட் ஆடுவோமா?"
"இல்லை ஸார், ரொம்ப 'டயர்ட்'" என்று கூறியபடியே பவானி கைக்குட்டையால் முகத்தை ஒற்றிக் கொண்டாள். "நாளைக் காலை வேணுமானால் சந்திப்போம்."
"ஆல்ரைட்" என்றார் கோவர்த்தனன். "சீக்கிரம் வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக்கொள். கார் தயாராக இருக்கிறது. போவோமா?"
"வேண்டாம். வேண்டாம். எனக்காக நீங்கள் அவசரப்பட்டுக் கிளம்புவானேன்? இருந்து டென்னிஸ் ஆடிவிட்டு வாருங்கள். கல்யாணாம் என்னைப் போகும் வழியில் வீட்டில் இறக்கி விடுவார்" என்றாள் பவானி.
கோவர்த்தனன் தாம் ஆட விரும்பவில்லை என்று கூற முடியாதவராக அவ்விருவரும் இணை சேர்ந்து நடப்பதைப் பார்த்துச் சீற்றப் பெருமூச்சு விட்டபடி நின்றார்.
காரில் போகும்போது, "சுத்த ஃபிராட்" என்றான் கல்யாணம்.
"யாரை இத்தனை நல்ல வார்த்தை கூறி வாழ்த்துகிறீர்கள்?" என்றாள் பவானி.
"எல்லாம் இந்த மாஜிஸ்திரேட்டைத்தான்."
"ஏன், அவருக்கென்ன? மிஸ்டர் கல்யாணம், நீங்கள் அவரை மதிக்காவிட்டாலும் அவர் பதவிக்கு மதிப்புத்தர மறுக்கக்கூடாது" என்றாள் பவானி.
"சரி, உன்னதமான, மதிப்புக்குரிய, அரிய பெரிய, உயர் பதவியில் அமர்ந்திருக்கும் ஃப்ராட் கோவர்த்தனன்! - போதுமா?"
பவானி சிரித்தாள். "என்ன கோபம் அவர்மீது உங்களுக்கு?"
"சொன்னால் நம்புவது கூடக் கஷ்டமாயிருக்கும். ஆனால் நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அந்த மனுஷன் உங்களை விலைக்கு வாங்கி விட்டதாகவே நினைக்கிறார். அவருடன் மட்டும் தான் நீங்கள் பேசிப் பழக லாம், விளையாடலாம். வேறு யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணுகிறார். உங்களை நாடகத்தில் கதாநாயகியாகப் போட்டதற்காக என்னைக் கத்தியைக் காட்டி மிரட்டவே செய்தார்!"
"இஸ் இட்? நிஜமாகவா?"
"ஆமாம். ஆனால் நான் அதை லட்சியம் பண்ணவே இல்லை. அவருக்குப் பயப்படவும் இல்லை. அவர் அதிகாரம் எல்லாம் கோர்ட் வரைதான். வெளியே வந்தால் அவர் மாஜிஸ்திரேட் இல்லை. கோவர்த்தனன்."
"அதெல்லாம் சரி. ஒப்புக் கொள்கிறேன். என்றாலும் அவர் என்னிடம் ரொம்ப அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறீர்களே! அதுவும் உங்களுடன் நான் நெருங்கிப் பழகினால் பொறாமைப்படும் அளவுக்கு! ஐ ஆம் த்ரில்ட்!"
அவள் சிலிர்ப்பு அவன் சினத்தைத் தூண்டியது. "வண்டியைத் திருப்பட்டுமா?" என்றான் கல்யாணம் கோபமாக.
"எதற்கு?"
"பாவம்! அவருடன் டென்னிஸ் ஆடாமல் வந்து விட்டீர்களே!"
"ஆமாம், பாவம்!" என்றாள் பவானி. கூடவே, "பரவாயில்லை. இன்றைய ஏமாற்றத்தின் நினைவோடு நாளை விளையாடும் போது அவர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்" என்றாள்.
கல்யாணம் பொங்கிய கோபத்தைக் கார் மீது காட்டினான். அது தன் சக்தியை யெல்லாம் திரட்டிக் கொண்டு அதிகபட்ச வேகத்தில் பாய்ந்தது.
"மெதுவாக ஓட்டுங்கள், குப்பைத் தொட்டியைக் கண்டால் உங்கள் காருக்குக் காதல் பிறந்து விடுகிறது" என்று பவானி கூறியதை அவன் காதில் விழுந்ததாகக் காட்டிக் கொள்ளவே யில்லை.