• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.22. அடிகள் கூறிய ஆரூடம்




துறவியை நீராடச் சொல்லிவிட்டு அவருடைய பூசைக்கு வேண்டிய மலர்களைக் கொய்வதற்காக நந்தவனத்துக்குச் சென்ற குழல்மொழியை அம்பலவன் வேளான் சந்தித்தான் அல்லவா? மகாமண்டலேசுவரர் உங்களிடம் சொல்லும்படி முக்கிய செய்தி கூறியனுப்பியிருக்கிறார் என்று வேளான் கூறவும், "என்ன அவசரச் செய்தியோ?" எனப் பதறிப் போனாள் அவள்.

"அம்மா! வசந்த மண்டபத்தில் தங்கியிருக்கும் துறவியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ளச் சொன்னார். அடிகள் மாபெரும் சித்துவித்தைகள், மந்திர தந்திரங்கள் எல்லாம் கைவரப் பெற்றவராம். சிறிது மனங்கோணினாலும் சொல்லாமல் இங்கிருந்து மறைந்து விடுவாராம். அவர் இங்கிருந்து மறைந்து விட்டால் அதனால் தென்பாண்டி நாட்டுக்கே பலவிதத்திலும் தீங்குகள் உண்டாகுமாம். கண்ணை இமை காப்பது போல் இந்தத் தீவிலிருந்து வெளியேறி விடாமல் அவரைப் பத்திரமாக காக்க வேண்டும் என்று கூறி அனுப்பினார்" என்றான் படகோட்டி அம்பலவன் வேளான்.


இதைக் கேட்டதும் குழல்மொழிக்கு நிம்மதி ஏற்பட்டது. "அப்பா! இவ்வளவுதானா? என்ன பிரமாதமான செய்தியோ என்று பயந்து போனேன். இதைத்தானா திரும்பவும் அப்பா உன்னிடம் சொல்லிவிட்டுப் போனார். ஏற்கனவே என்னிடம் அவர் கூறிய செய்திதானே!" என்று அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு நந்தவனத்துக்குள் நுழைந்தாள் அவள்.

வேளான் வந்த வழியே திரும்பிப் படகுத்துறைக்குப் போய்ச் சேர்ந்தான். இடையாற்று மங்கலம் அரண்மனை நந்தவனத்தில் இல்லாத மலர் வகைகள் தென்பாண்டி நாட்டிலேயே இல்லை என்று சொல்லி விடலாம். தீவின் நிலப் பரப்பில் கட்டடங்களும் மாளிகைகளும் அமைந்திருந்த பகுதி போக எஞ்சிய பகுதி முழுவதும், வானளாவிய மரங்களும், மலர்ச் சோலைகளும், பசும் புல்வெளிகளும், மலர் வாவிகளும் நிறைத்துக் கொண்டிருந்தன. நந்தவனத்துக்குள் சென்ற குழல்மொழி கால் நாழிகைக்குள் பலவகை மலர்களாலும் குடலையை நிரப்பிக் கொண்டு திரும்பி விட்டாள்.

அடிகள் நீராடி வழிபாடுகளை முடித்துக் கொண்ட பின் குழல்மொழி அவரை அட்டிற்சாலை சமையலறைக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினாள். உணவு முடிந்ததும் குழல்மொழி அவரை நோக்கி, "அடிகளே! தாங்கள் இனி வசந்த மண்டபத்தில் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மாலையில் நான் அங்கு வருவேன். வேளானிடம் சொல்லிப் படகில் சிறிது நேரம் பறளியாற்றில் சுற்றி வரலாம்" என்றாள்.

"பெண்ணே! பகலில் உறங்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. இப்போது நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். இந்த இடையாற்று மங்கலம் மாளிகையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாக இருக்கிறது. நீ என்னோடு கூட வந்து சுற்றிக் காட்ட முடியுமா?" என்றார் அவள் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே.

அவருடைய விருப்பத்தைக் கேட்டுக் குழல்மொழி திகைத்தாள். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தயங்கினாள். அவர் வெளியிட்ட விருப்பம் அத்தகையதாக இருந்தது. தென்பாண்டி நாட்டின் படைத் தலைவனான தளபதி வல்லாளதேவன் கூட வெளியிட முடியாத விருப்பம் அது. இன்று வரை இடையாற்று மங்கலம் மாளிகையின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் குறைவின்றி முழுமையாகப் பார்த்தவர் மகாமண்டலேசுவரரைத் தவிர வேறு யாருமில்லை. அவருடைய அருமைப் புதல்வியான குழல்மொழிக்கும் அந்தரங்க ஒற்றனான நாராயணன் சேந்தனுக்கும் கூடத் தெரியாத இரகசியப் பகுதிகள், பாதுகாப்புக்குட்பட்ட இடங்கள் எத்தனையோ அந்த மாளிகையில் உண்டு. அப்படி இருக்கும் போது ஊர் பேர் தெரியாத இந்தத் துறவிக்கு மாளிகையைச் சுற்றிக் காட்டுவது எப்படி முடியும்? 'சுற்றிக் காட்டலாம் என்றே வைத்துக் கொண்டாலும் எவற்றைக் காட்டுவது? எவற்றை மறைப்பது?' குழல்மொழி இரு தலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தாள்.

"நீ தயங்குவதைக் கண்டால் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஏதோ சில இடையூறுகள் இருப்பதாக அல்லவா தெரிகிறது? முடிந்தால் சுற்றிக் காட்டலாம். இல்லாவிட்டால் நான் வற்புறுத்தவில்லை" என்று தணிவான குரலில் மன்னிப்புக் கேட்பது போன்ற தொனியில் கூறினார் துறவி.

"இடையூறுகளா? அப்படி ஒன்றுமில்லை. இந்த மாளிகையைப் பொறுத்தவரையில் என்னுடைய தந்தை சில கட்டுப்பாடுகளும் வரையறைகளும் வைத்திருக்கிறார்."

"என்ன கட்டுப்பாடுகளென்று நான் அறியலாமோ?"

"எல்லா இடங்களையும் எல்லோருக்கும் சுற்றிக் காட்டுவதில்லை! அரண்மனையில் இருப்பவர்களும் சரி, வந்து போகிற விருந்தினர்களும் சரி, இன்னார் இன்ன பகுதிகளில் தான் பழக வேண்டுமென்று கடுமையான கட்டுக்காவல் வைத்திருக்கிறார்."

அவள் கூறியதைக் கேட்டுத் துறவி மறுமொழி கூறாமல் இலேசாகப் புன்முறுவல் செய்தார்.

"என்ன நீங்களாகவே சிரித்துக் கொள்ளுகிறீர்கள்?"

"மகாமண்டலேசுவரரின் கூர்மையான அறிவு எப்படியெல்லாம் வேலை செய்கிறதென்று நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு வந்தது."

"பரவாயில்லை அடிகளே! உங்கள் விருப்பத்தை நான் கெடுக்கக் கூடாது. எழுந்து வாருங்கள். இந்த மாளிகையில் எந்த இடங்களையெல்லாம் காட்ட முடியுமோ அவற்றைக் காட்டுகிறேன்."

"நீ காட்டாத இடங்களையெல்லாம் நான் என்னுடைய தவ வலிமையைக் கொண்டு ஞான நோக்கத்தால் பார்த்து விட்டால் என்ன செய்வாய்?"

"அப்படி ஞான நோக்கத்தால் பார்க்கிற சாமர்த்தியமுள்ளவர் எல்லா இடங்களையும் இருந்த இடத்திலிருந்தே பார்த்துக் கொள்ளலாமே?" என்று பச்சைக் குழந்தை போல் கைகொட்டிச் சிரித்து அவரைக் கேலி செய்தாள் மகாமண்டலேசுவரரின் புதல்வி.

"நீ பெரிய குறும்புக்காரப் பெண்! உன் தந்தையின் சூழ்ச்சி, சாதுரியம் ஆகியவற்றில் முக்கால் பங்கு உனக்கு வந்திருக்கிறது" என்று சிரிப்புக்கிடையே கூறிக் கொண்டே சுற்றிப் பார்ப்பதற்காக எழுந்திருந்தார் துறவி.

குழல்மொழி அவரை அழைத்துக் கொண்டு அவருக்கு முன் நடந்தாள்.

"அடிகளே! துறவிகளுக்கு முக்காலமும் உணரும் திறன் உண்டென்று கேள்விப் பட்டிருக்கிறேன். இத் தென்பாண்டி நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய சில முக்கியமான செய்திகளைப் பற்றி நான் உங்களிடம் ஆருடம் கேட்கப் போகிறேன்."

"ஆகா தாராளமாகச் சொல்கிறேன். எதிர்காலம் ஒளி நிறைந்ததாக இருக்கப் போகிறது. வெற்றிகளும், செல்வங்களும் விளையப் போகின்றன. மாதந் தவறாமல் மூன்று மழை பொழியப் போகிறது..."

"போதும்! போதும்! நிறுத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் முதல் சோதியுடன் பிறந்ததிலிருந்து இன்று வரை பொதுவாக எல்லோரும் வைத்துக் கொண்டிருக்கிற நாலைந்து புளுகு மூட்டைகளையே நீங்களும் அவிழ்த்து விடுகிறீர்களே? மாதம் மூன்று மழை பெய்வதை இன்னொருவர் கூறியா அறிந்து கொள்ள வேண்டும்? வளத்துக்கு இருப்பிடமான நாஞ்சில் நாட்டில் மாதம் முப்பது நாளும் எங்கேயாவது மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது..." முன்னால் நடந்து கொண்டிருந்த குழல்மொழி திரும்பி நின்று அவரைக் கேலி செய்தாள்.

அப்போது அவர்கள் இருவரும் இடையாற்று மங்கலம் மாளிகையில் தெற்கு மூலையில் ஒரு முக்கியமான பகுதிக்கு வந்திருந்தார்கள். கண்ணாடி போன்ற சுவர்களில் தீட்டியிருந்த உயிர்க்களை சொட்டும் ஓவியங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே நடந்தார் துறவி. மகாமன்னராகிய பராந்தகப் பாண்டியரின் வீரச் செயல்கள் அந்த ஓவியங்களில் தீட்டப்பட்டிருந்தன. இன்னும் தென்பாண்டி நாட்டின் அரச மரபைச் சேர்ந்த வீரர்களின் போர் செயல்கள், வாழ்க்கைக் காட்சிகள், அறச் செயல்கள், திருப்பணிகள் எல்லாம் தீட்டப்பட்டிருந்தன. அந்த ஓவியங்களை நிமிர்ந்து பார்க்கும் போது இளந் துறவியின் மயக்கும் முகத்தில் பெருமிதச் சாயல் படர்ந்தது. விரிந்து அகன்ற வீர மார்பும், செறிந்து உயர்ந்த தோள்களும் விம்மிப் புடைத்தன. விழிகளில் அற்புதமானதொரு ஒளி மின்னியது. துறவிக்கு மனதில் சுய நினைவு, சூழ்நிலைகளை மறந்த ஒரு பெரும் பரவசம் உண்டாயிற்று. தன்னோடு குழல்மொழி என்ற பெண் வந்து கொண்டிருப்பது கூட அவருக்கு மறந்து போய்விட்டது. சுவர்ப்பரப்பில் துடிக்கும் உயிர்களாக நின்ற அந்த ஓவியங்களில் பந்த பாசங்கள் இல்லாத துறவியின் உணர்ச்சியைக் கவர அப்படி என்னதான் இருந்ததோ? எதிரே பார்க்காமல் சுவரைக் கண்டு கொண்டே நடந்தவரை "நில்லுங்கள்! இதற்கு மேல் போகக் கூடாது. இனிமேல் கடுமையான பாதுகாப்புக்கு உட்பட்ட இடம்" என்று குறுக்கே கை நீட்டி வழிமறித்தாள் குழல்மொழி.

சுவர்ச் சித்திரங்கள் என்ற கனவுலகத்திலிருந்து விடுபட்டு எதிரே பார்த்தார் துறவி. அந்த இடத்துக்கு எதிரே இருந்த அறை வாயிலில் தூய வெள்ளைத் திரை தொங்கியது. திரையில் பாண்டிப் பேரரசின் அடையாளச் சின்னமாகிய மீனின் உருவமும் நாஞ்சில் நாட்டுக் கலப்பை, மேழி வடிவங்களும் பெரிதாக வரையப்பட்டிருந்தன. திரைக்கு இப்பால் மின்னல் தண்டு போல் ஒளி வீசும் உருவிய வாள்களுடன் இரண்டு யவன வீரர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தனர். 'அடல் வாள் யவனர்' என்ற சங்கத் தமிழ் நூல்களின் வர்ணனைக்கு ஏற்பக் கருமெழுகில் பிடித்துப் பிடித்து உருவாக்கிய இரண்டு பயங்கரச் சிலைகள் நிற்பது போல் ஆடாமல், அசையாமல் நின்று கொண்டிருந்தனர் அந்த யவன நாட்டுக் காவல் வீரர்கள்.

"ஏன் இதற்கு மேல் போகக்கூடாது என்கிறாய்? போனால் என்னவாகிவிடும்?" என்று கேட்டார் துறவி.

"நான் தான் முன்னமேயே சொன்னேனே! இந்த மாளிகையில் என் தந்தையாரின் விருப்பத்துக்கு இணங்கத்தான் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும். அவருடைய உத்தரவை மீறினால் அவருக்குக் கோபம் வந்து விடும். என்ன செய்வார் என்றே சொல்ல முடியாது."

"யாரும் பார்க்கக் கூடாத அறைகளில் இதுவும் ஒன்றோ?"

"ஆமாம்!"

"அப்படியானால் சரி! இதற்கு மேல் நாம் போக வேண்டாம். உன் வார்த்தைக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால் அந்தத் திறைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதையாவது தெரிந்து கொள்ளலாமோ?" - துறவி கேட்டார்.

குழல்மொழி கொற்கைத்துறை ஒளி முத்துக்களைப் போன்ற தன் அழகிய பல்வரிசை தெரியச் சிரித்தாள். "அடிகளே! நீங்கள் பெரிய தந்திரக்காரர். அந்த இடத்துக்கே போகக்கூடாதென்று நான் சொல்கிறேன். நீங்களோ அங்கே என்ன இருக்கிறதென்று கேட்கிறீர்கள்? கெட்டிக்கார மனிதர்தாம் நீங்கள்."

"சொல்லாவிட்டால் போயேன். நான் ஆருடத்தால் கண்டு பிடித்துத் தெரிந்து கொண்டால் அப்போது என்ன செய்வாய்? இதோ கண்டு பிடித்து விடுகிறேன் பார்!" என்று சொல்லி ஏதோ மந்திரத்தை உச்சரிக்கிறவர் போல் பாவனை செய்தார்.

"அடே அப்பா! கண்டுபிடித்து விடுவீர்களோ? எங்கே, கண்டுபிடித்துச் சொல்லி விடுங்களேன், பார்ப்போம்."

"இதோ கேட்டுக் கொள், தென்பாண்டி வேந்தர் மரபின் சுந்தர முடியும், வீர வாளும், பொற் சிம்மாசனமும் ஆகிய அரசுரிமைச் சின்னங்கள் இருக்கின்றன அங்கே."

துறவியின் ஆருடத்தைக் கேட்டு அதிர்ந்து போய் நின்ற குழல்மொழியின் முகத்தில் ஈயாடவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.23. ஊமை பேசினாள்



திருநந்திக்கரைச் சமணப் பெரும்பள்ளியின் வாசலில் அந்தப் பூக்கார ஊமைப் பெண்ணிடம் சேந்தனைப் பற்றி விசாரித்து விட்டுத் தளபதி வல்லாளதேவன் சாலையில் இறங்கிச் சென்ற சில கணங்களுக்குப் பின் ஓர் அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. அதிசயமென்றால் வெறும் அதிசயமா அது? வியப்பையும், திகைப்பையும் ஒருங்கே உண்டாக்கக் கூடிய அதிசய நிகழ்ச்சி அப்போது அங்கே நடைபெற்றது.

சமணப் பள்ளியின் கிழக்குப் புறம், இருபது முப்பது அடி பள்ளத்தாக்கு நிலமாக இருந்தது. அந்தப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் சிறிய காட்டாறு ஒன்றின் கிளைக் கால்வாய் பாய்ந்து கொண்டிருந்தது. கால்வாய்க்கு அப்பால் சமவெளி நிலத்தில் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் பாக்கு மரங்களும் தென்னை மரங்களும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. பாக்கு மரங்களின் தூரில் மினுமினுவென்று மின்னும் முக்கோண வடிவப் பச்சை இலைகளும், கொத்துக் கொத்தாக மிளகுக் கொடிகளும் தழுவிப் படர்ந்திருந்தன.

தளபதியின் தலை மேற்கே திருநந்திக்கரைச் சாலையின் திருப்பத்தில் மறைந்ததோ இல்லையோ, தரையின் இடைவெளி தெரியாமல் படர்ந்து கிடந்த கீழ்ப்புறத்துப் பள்ளத்தின் பசுமையிலிருந்து இரண்டு செந்நிறக் குதிரைகளும் ஒரு குட்டை மனித உருவமும் மெதுவாக வெளியேறி மேட்டுக்கு வந்தன. அந்த உருவமே நாராயணன் சேந்தன்.

அப்போதும் அந்தப் பூக்காரப் பெண்ணுடன் அவள் தந்தையும் அங்கே தான் உட்கார்ந்து கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம்? எந்த ஓர் அழகிய பெண்ணைப் பிறவிச் செவிடு என்றும் பிறவி ஊமை என்றும் தளபதி எண்ணி, படைத்தவன் கைகளைத் தூற்றிக் கொண்டு போனானோ, அந்தப் பெண் இப்போது நாராயணன் சேந்தனிடம் வாய் திறந்து பேசினாள். "ஐயா! நீங்கள் கூறியபடியே அந்த மனிதரிடம் நடித்து ஏமாற்றி அனுப்பி விட்டோம். நான் ஊமையாகவே நடித்து விட்டேன். என் தந்தையும் தமக்கு ஒன்றும் தெரியாதென்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார்" என்று குயிலின் இனிமையும் யாழின் நளினமும் செறிந்த குரலில் நாராயணன் சேந்தனிடம் கூறினாள் அந்தப் பூக்காரப் பெண்.

"மிகவும் நல்ல காரியம் செய்தீர்கள்! உனக்கும் உன் தந்தைக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன், பெண்ணே!" என்று சொல்லிக் கொண்டே தன் இடுப்புக் கச்சையை அவிழ்த்து இரண்டு பொற்காசுகளை அந்தப் பெண்ணிடம் எடுத்துக் கொடுத்தான் நாராயணன் சேந்தன். வட்டமாக இருந்த அந்தக் காசுகளின் ஒருபுறம் மகர மீன் வடிவம், இன்னொரு புறம் யானையின் உருவம் அமைந்திருந்தன. பாண்டிய நாட்டில் பராந்தகனின் இறுதிக் காலத்தில் வெளியிடப் பெற்ற நாணயங்கள் அவை.

காசுகளைப் பெற்றுக் கொண்டு மலர்ந்த முகத்தோடு கை கூப்பி வணங்கினாள் அவள்.

"ஐயா! நீங்கள் அடிக்கடி இந்தப் பக்கம் குதிரையில் வந்து போக வேண்டும்!" உபசாரத்துக்காகச் சொல்லுகிறவனைப் போலக் கிழவன் அந்த வார்த்தைகளைச் சொன்னான்.

உடனே நாராயணன் சேந்தன் முகத்தில் குறும்பு மிளிரச் சிரித்துக் கொண்டே கிழவனையும் அவன் பெண்ணையும் பார்த்து, "ஆகா! அதற்கென்ன? அடிக்கடி வருவதற்கு தடையில்லை. ஆனால் அடிக்கடி என்னிடத்தில் இரண்டு பொற்காசுகள் இருக்காதே?" என்று குத்தலாக ஒரு போடு போட்டுவிட்டுப் புறப்பட்டான்.

அவன் புறப்படுகிற சமயத்தில், "கொஞ்சம் பூக்கள் தருகிறேன். உங்கள் இல்லத்துக்குக் கொண்டு செல்லுங்கள்" என்று கூறிப் பூக்களை அள்ளினாள் அவள். "அதற்குப் பயனே இல்லை. நான் இன்னும் ஒற்றைக் கட்டைதான்!" என்று கூறி நகைத்தான் நாராயணன் சேந்தன்.

"இன்னுமா உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை?" என்று கேட்டார் கிழவர்! "உங்கள் மகளைப் போல ஓர் அழகான நல்ல பெண் கிடைக்கிற வரை திருமணமே செய்து கொள்வதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே ஓரக்கண்ணால் அந்தப் பூக்காரப் பெண்ணை நோக்கினான். அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

"வருகிறேன், பெரியவரே!" என்று ஒரு குதிரையில் ஏறிக் கொண்டு இன்னொன்றின் கடிவாளக் கயிற்றைப் பிடித்தவாறே பக்கத்தில் நடத்திக் கொண்டு புறப்பட்டான் சேந்தன்.

வந்த வழியே திரும்பிச் சென்று முன்பு எந்தச் சாலையில் பறளியாற்று வெள்ளத்தினால் உடைப்பு ஏற்பட்டிருப்பதாகத் தளபதியிடம் சொல்லி அவனைச் சுற்று வழியில் இழுத்தடித்தானோ அதே சாலையில் தான் இப்போது சென்றான் சேந்தன். கூற்றத் தலைவர் கூட்டத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சேந்தனும் அரண்மனைக்குப் போகிறான் போலிருக்கிறது. போகட்டும். அவனுக்கும் முன்பே நேயர்களை அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போய் அங்கு நடக்கும் விறுவிறுப்பான நிகழ்ச்சிகளைக் காண்பித்து விட விரும்புகிறேன் நான். திருநந்திக்கரைச் சமணப்பள்ளியில் சேந்தனால் ஏமாற்றப்பட்டு மனம் சோர்ந்து கால்நடையாகக் கிளம்பிய தளபதி வல்லாளதேவனும், ஏமாற்றிவிட்டுக் குதிரையில் கிளம்பிய சேந்தனும் புறத்தாய நாட்டு அரண்மனைக்கு வந்து சேர வெகு நேரம் செல்லுமாகையினால் நாம் முந்திக் கொண்டு விடலாம்.

"திரையை அகற்றி விடுங்கள்" என்று மகாமண்டலேசுவரர் கூறியவுடனே திரைக்குப் பின்னாலிருந்து ஆள் நடந்து செல்லும் அரவம் கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் பரபரப்படைந்தார்கள். "பிடி! பிடி! யாராயிருந்தாலும் ஓடி தப்பி விடக்கூடாது" என்று அங்கிருந்த காவல் வீரர்களைப் பார்த்துக் கூச்சலிட்டார் மகாமண்டலேசுவரர். அங்கு நின்று கொண்டிருந்த மெய்க்காப்பாளர்களும், காவல் வீரர்களும் வாள்களை உருவிக் கொண்டும், கூர்மையான வேல்களை ஓங்கிக் கொண்டும் தடதடவென்று ஓசையுண்டாகும்படித் திரைக்குப் பின்னால் பாய்ந்தோடினர். திரைக்குப் பின்னாலிருந்த பகுதியில் சாளரங்களோ, கதிர்மாடங்களோ, பலகணிகளோ இல்லாததால் பகல் நேரத்திலேயே இருண்டு கிடந்தது. அதன் காரணமாகத் தேடிச் சென்றவர்களே ஒருவர் மேல் ஒருவர் மோதிக் கொண்டனர். கண்டுபிடிக்க வேண்டிய ஆள் மட்டும் அகப்படவே இல்லை. மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறம் சுவரோரமாக ஒரு படிக்கட்டு கீழ் நோக்கி இறங்கிச் சென்றது. அது அரண்மனையின் நிலவறைக்குச் செல்லும் பாதை. புறத்தாய நாட்டு அரண்மனையின் பல பகுதிகளில் அமைந்திருந்த நிலவறைகளில் முக்கியமானது அதுதான். போர்க் காலங்களிலும், அரசியல் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும் காலத்திலும், அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த கலைப்பொருள்கள், சிலைகள், முன்னுள்ள வேந்தர்கள் வழங்கிய நாணயங்கள், உபயோகித்த ஆயுதங்கள், கவசங்கள் இவற்றையெல்லாம் அந்த நிலவறையில் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம்.

திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவன் தப்பிச் சென்றிருந்தால் கீழே நிலவறைக்குச் செல்லும் படிக்கட்டைத் தவிர வேறெந்த வழியினாலும் தப்பிச் சென்றிருக்க முடியாது. சிலர் நிலவறைக்குள் போகும் வழியிலும் சிறிது தூரம் சென்று தேடினார்கள். ஆள் அகப்படவில்லை. படிக்கட்டு ஆரம்பமாகும் இடத்தில் ஒரு சிறிய சதுரமான வெள்ளைப் பட்டுத் துணி கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு போய் மகாமண்டலேசுவரரிடம் கொடுத்தார்கள்.

"ஆள் அகப்படவில்லையா?" என்று சினம் பொங்கும் குரலில் அதட்டிக் கேட்டார் அவர்.

"நிலவறைக்குள் போய்த் தப்பிச் சென்றிருக்கலாமென்று தெரிகிறது. படி இறங்கும் வழியில் இந்தப் பட்டுத் துணி கிடந்தது" என்று சொல்லி துணியை அவரிடம் கொடுத்தார்கள் தேடிச் சென்று திரும்பியவர்கள்.

"உடனே ஓடிப் போய்க் கீழே நிலவறைக்கு இறங்கும் வழியின் கதவை அடைத்து முன்புறமாகத் தாழிட்டு விடுங்கள்" என்று கூறி அவர்களை மறுபடியும் துரத்தினார் மகாமண்டலேசுவரர். அவர்கள் கதவை அடைக்கச் சென்றதும் அங்கு கூடியிருந்த அத்தனை பேருக்கும் நடுவில் அந்தப் பட்டுத் துணியை விரிக்காமல் ஒரு மூலையில் தூணின் மறுபுறம் மறைவில் போய் நின்று கொண்டு அதை விரித்துப் பார்த்தார். பயமும் கலவரமும் அடைந்த பீதியின் நிழல் பதிந்த முகங்களால் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு மகாராணியாரும் கூற்றத் தலைவர்களும் மந்திராலோசனை மண்டபத்து இருக்கைகளில் வீற்றிருந்தனர். மெய்க் காப்பாளர்களும், வீரர்களும் நிலவறைக்குச் செல்லும் வழியை அடைப்பதற்காக அதன் கனமான பெரிய மரக்கதவை இழுத்து மூடும் ஓசை மண்டபம் எங்கும் எதிரொலித்தது.

மகாமண்டலேசுவரர் விரித்துப் பார்த்த அந்தப் பட்டுத் துணியில் ஏதோ ஒரு குறிப்பிட்ட குழிவினருக்கு அடையாளச் சின்னம் போன்றதொரு சித்திரம் தீட்டப்பட்டிருந்தது.

ஒரு வீர இளைஞன் தன் வலது கையில் உருவி ஏந்திய வாளினால் தனது தலையை அரிந்து குருதி ஒழுக இடது கையால் தாங்கி நிற்பது போல் அந்த ஓவியம் அமைந்திருந்தது. அந்த இளைஞர்களின் தலைபுறமாக மகரமீன் இலச்சினையும் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் அந்த ஓவியத்தைக் கவனமாகப் பார்த்தார். பட்டுத் துணியில் வரையப் பெற்றிருந்த அந்த அடையாளச் சின்னம் அவருக்குப் புதியதல்ல. தென்னவன் ஆபத்துதவிகளின் அடையாளம் அது. ஆபத்துதவிப் படையைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனும் அந்த மாதிரித் துணியை இடுப்புக் கச்சையாக அணிந்து கொள்வது வழக்கம்.

பட்டுத் துணியை மடித்து வைத்துக் கொண்டார் இடையாற்று மங்கலம் நம்பி. அவர் மனத்தில் பல விதமான சந்தேகங்கள் உண்டாயின.

'ஆபத்துதவிப் படைகளைச் சேர்ந்த யாவரும் இப்போது கோட்டாற்றிலுள்ள தென் திசைப் பெரும் படையின் குடியிருப்பில் அல்லவா தங்கியிருக்கிறார்கள்? அவர்களோ அல்லது அவர்களில் ஒருவனோ இப்போது இங்கே எப்படி வந்திருக்க முடியும்? திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவன் ஆபத்துதவிகளில் ஒருவன் தானோ? அல்லது என்றைக்காவது தென்னவன் ஆபத்துதவிகள் இங்கே அரண்மனைக்கு வந்திருந்த போது நிலவறைக்கு அருகில் இதைத் தவறிப் போட்டு விட்டார்களா? இந்தப் பொருள் நிலவறைக்கருகில் கிடந்ததனால் மட்டும் நாம் ஆபத்துதவிகளின் மேல் சந்தேகப்பட்டு விடுவதற்கில்லை. வேறு எவனாவது நம்முடைய பகைவர்களின் கையாளாகிய ஒற்றன் வந்து ஒட்டுக் கேட்டு விட்டுப் போயிருக்கலாம். நாம் இந்தத் துணி ஒன்றை மட்டும் சான்றாகக் கொண்டு யாரையும் குற்றவாளியாக முடிவு எய்து விடுவதற்கு இயலாது' - என்று சிந்தித்து முடிவு செய்து கொண்டார் மகாமண்டலேசுவரர்.

அவர் தூண் மறைவிலிருந்து மறுபடியும் மந்திராலோசனை மண்டபத்தின் நடுவில் வந்து நின்ற போது அவருடைய உத்தரவுப் படியே நிலவறைக் கதவை அடைத்து விட்டதாக வீரர்கள் வந்து கூறினார்கள்.

எல்லாருடைய கண்களும் அவருடைய முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தன.

"சந்தேகப்பட்டுக் கொண்டே இந்த இடத்தில் கூட்டத்தை நடத்தக் கூடாது. அவசியமானால் நிலவறையைத் திறந்து தீபங்களோடு உள்ளே சென்று தேடிப் பார்த்து விடலாம். இந்த மந்திராலோசனை மண்டபத்தை சுற்றியும் வெளிப் பகுதிகளில் சந்தேகப்படத் தக்க புதிய மனிதர்கள் யாரும் இல்லை என்று உறுதியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் கூற்றத்தலைவர் கூட்டத்தை இங்கே தொடங்குவது நன்றாயிராது" என்று தம் கருத்தைக் கூறினார் பவழக்கனிவாயர்.

ஏதோ கவலையில் ஆழ்ந்து போய் அமர்ந்திருப்பவர் போல் தலைகுனிந்து ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தார் மகாராணி வானவன்மாதேவியார்.

"பவழக்கனிவாயர் கூறுவது சரியே! 'தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்' - என்று தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் கூறியிருப்பதைப் படிக்காதவர்கள் நம்மில் யாருமில்லை. தென்பாண்டி நாட்டு அரசியல் இரகசியங்களை அறிவதற்காக யார் யாரோ சூழ்ச்சி செய்கிறார்கள் போலிருக்கிறது. இல்லையானால் அந்தரங்க மந்திராலோசனைக் கூட்டம் நடைபெறும் இந்த இடத்தில் நமக்கு மிக அருகில் வந்து ஒளிந்திருக்கும் அளவுக்கு ஒரு மூன்றாவது மனிதனுக்குத் துணிவு ஏற்படுமா?" என்றார் பல்லாயிரங் காலத்துப் பயிர் போலச் சிறந்த தொன்மை வாய்ந்த அதங்கோட்டாசிரியர் குடும்பத்தில் பிறந்த ஆசிரியர். படிப்பின் பெருமிதமும் கலையின் எழிலும் ஒருங்கு தென்படும் அவருடைய ஒளி பொருந்திய முகமண்டலத்தில் இதைச் சொல்லும்போது கவலை இருள் சூழ்ந்திருந்தது.

"மகாராணியாரும், மகாமண்டலேசுவரரும் இங்கு வருவதற்கு முன் நாங்கள் இதே இடத்தில் நீண்ட நேரமாகப் பல செய்திகளையும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் திரைக்குப் பின்னால் யாரும் ஒளிந்திருந்ததாக எங்களுக்குத் தெரியவில்லையே" என்றார் கூற்றத் தலைவர்களுள் ஒருவராகிய கழற்கால் மாறனார்.

"ஒளிந்திருக்கவில்லை என்று நீங்களும் நானும் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? ஒரு வேளை, பேச்சில் கவனமாக இருந்த நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம். திரைக்குப் பின்னால் இருப்பதை இங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நாம் எப்படிக் கவனித்திருக்க முடியும்? நம் பேச்சையே தப்பி ஓடினவன் முழுவதும் கேட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்று கழற்கால் மாறனாரின் கருத்தைத் திருத்தினார் நன்கனிநாதர்.

"இந்த மந்திராலோசனைக் கூட்டத்தை இவ்வளவு நடந்த பின்பும் இன்றே நிகழ்த்துவானேன்? நாளைக்குத் தள்ளிவைத்து விடலாமே!" என்றார் அதுவரை ஒன்றும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த வானவன்மாதேவியார்.

"ஆம்! அப்படிச் செய்வதுதான் நல்லது" என்ற குரல் எல்லோருடைய வாயிலிருந்தும் ஒலித்தது. ஆனால் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பி மட்டும் வாயைத் திறக்கவே இல்லை. அவருடைய மௌனத்தை மகாராணி கவனித்து விட்டார்.

"மகாமண்டலேசுவரருடைய கருத்து என்னவோ?" என்று மெல்லக் கேட்டார் மகாராணி.

"கூட்டத்தை இன்றே நடத்தி விட வேண்டுமென்பதுதான் என் கருத்து. வேண்டுமானால் இந்த இடத்தில் நடத்தாமல் வேறோர் இடத்தில் நடத்தலாம். இன்றைக்கு என்று குறிப்பிட்ட கூட்டத்தை இன்றே நடத்தலாம். நடத்தாமல் போவதால் எத்தனையோ புதிய தொல்லைகள் உண்டாகலாம்" என்று அவர் உறுதிமொழி கூறிய போது அதில் தீர்மானமான பிடிவாதம் ஒலித்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.24. கரவந்தபுரத்துத் தூதன்


இந்த அத்தியாயத்தின் கதை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்னால் நேயர்களுக்கு ஒரு சில சரித்திர உண்மைகளைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியது அவசியமாகிறது. பாண்டியர் அரச மரபு பற்றியும், அவர் வீரச் செயல்கள் பற்றியும் சிறிது அறிந்து கொண்டால் கதையின் மேற்பகுதிகளை நன்றாக விளங்கிக் கொள்வதற்கு முடியும்.

அளவற்றுப் பரந்த, காலத்தின் பேரெல்லைக்கும் எட்டாமல் விரிந்து கொண்டே போகின்ற பழமையைத் தன் குலச் செல்வமாகக் கொண்ட பாண்டியர் மரபின் முதலரசன் வடிவம்பலம் நின்ற பாண்டியன். நிலந்தரு திருவின்நெடியோன் எனவும், மாகீர்த்தி எனவும் சிறப்புப் பெயர்கள் பூண்டிருந்தான் இம் மன்னன். தமிழ் மொழியின் முழு முதல் தனி நூலாகவும், இலக்கணக் களஞ்சியமாகவும் விளங்கும் தொல்காப்பியம், இவன் அவையில் பெரும் புலவராக விளங்கிய அதங்கோட்டாசிரியர் தலைமையில் தான் அரங்கேற்றம் பெற்றது. அதங்கோட்டாசிரியன் வழிமுறையினரான ஒவ்வொருவரும் பிற்காலத்தே பன்னூறாயிரம் ஆண்டுகள் அதே குடிப்பெயர் கொண்டு தமிழின் புகழ் பரவ வாழ்ந்திருக்கலாம். இந்தக் கதையில் வரும் அதங்கோட்டாசிரியர் பழைய அதங்கோட்டாசிரியரின் பிற்காலத் தலைமுறையினரில் ஒருவராக இருக்க வேண்டுமென்று கொண்டு இந்தக் கதைக்காகக் கற்பனை செய்யப்பட்ட பாத்திரமாவார்.

வடிவம்பலம் நின்ற பாண்டியன் (இந்தக் கதை நிகழும் காலத்தின் தென்பாண்டி நாட்டின் வற்றாத நீர் வளத்துக்குக் காரணமாக இருக்கும் பறளியாறு எனப்படும் பஃறுளியாற்றை முன்பு முதன்முதலாக வெட்டுவித்தான். கடல் தெய்வத்தை வழிபட்டுக் கொண்டாடும் 'முந்நீர் விழா' என்ற விழாவை ஏற்படுத்தினான். தலைச்சங்கத்தின் இறுதியில் ஆண்ட பெரும் பேரரசனான இவன் காலத்துக்குப் பின் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் குற்ப்பிடத்தக்கவன்.

இவர்கள் காலத்துக்குப் பின் கடைச்சங்க காலத்துக்கு முன்னுள்ள கால இடைவெளி பாண்டியர் வரலாற்றின் இருள் சூழ்ந்த பகுதியாகும். கடைச் சங்கத்தின் முதல் பாண்டிய மன்னாகிய முடத்திருமாறன் காலத்தில் குமரிமலைத் தொடரும், குமரியாறும், குமரி நாடும் - ஆகிய தென்பாண்டி நாட்டின் தென்கோடி நிலப்பரப்பு முழுவதும் கடல்கோளால் அழிந்தது. இனிய பெருங்கனவு போல், அழகிய சுவைக் காவியம் போல், சிறந்து இலங்கிய கபாடபுரம் என்ற நகரத்தைக் கடல் விழுங்கிவிட்டது.

முடத்திருமாறனுக்குப் பின் பதினைந்து பாண்டிய அரசர்களின் வழிமுறைக்கு அப்பால் இறுதி மன்னனாகிய நம்பி நெடுஞ்செழியனோடு கடைச்சங்கப் பாண்டியர் மரபு முடிந்து விடுகிறது. நம்பி நெடுஞ்செழியனுக்குப் பின் பாண்டிய நாட்டில் களப்பிரர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. பாண்டியன் கடுங்கோன் தலையெடுத்த பின்பே பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி ஒழிந்தது.

  • "தன்பாலுரிமை நன்கனம் அமைத்த
    மானம் போர்த்த தானை வேந்தன்
    ஒடுங்கா மன்னர் ஒளிநக ரழித்த
    கடுங்கோ னென்னும் கதிர்வேல் தென்னன்"
  • என்று அவன் புகழை வேள்விக் குடிச் செப்பேடு போற்றிப் பாடியது. கடுங்கோன் முதலான பிற்காலப் பாண்டியர் வழியில் கோச்சடையன், இரணதீரன், நெடுஞ்சடையன் பராந்தகன் முதலிய புகழ்பெற்ற அரசர்களெல்லாம் ஆண்டு முடித்த பின் வரகுண மகாராசன் என்னும் ஈடு இணையற்ற பேரரசன் முடிசூட்டிக் கொண்டான். பிறவிக் கடலைக் கடக்கும் ஞானத்தோணியாம் திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் இவ்வரசன் காலத்திலேயே வாழ்ந்துள்ளார். சைவத் திருமுறைகளின் தொகுப்பாசிரியராகிய நம்பியாண்டார் நம்பி தம்முடைய கோயில் திருப்பண்ணியார் விருத்தத்தில் வரகுண மகாராசனைப் புகழ்ந்திருக்கிறார்.

    வரகுணனின் புதல்வனான சீமாறன் சீவல்லபன் தன் இரு மக்களுள் மூத்தவரான வரகுண வர்மனுக்குப் பட்டம் சூட்டிக் கொண்டான்; இவனுக்கும் வானவன்மாதேவி என்னும் பட்டத்தரசிக்கும் பிறந்த முதல்வனே இந்தக் கதையில் வரும் இராசசிம்மன்.

    இனி இங்கே தலைப்பில் காணும் கரவந்தபுரம் பற்றிக் காண்போம். தென்பாண்டி நாட்டுக்கும் வடபாண்டி நாட்டுக்கும் நடுவே நெல்வேலிக் கோட்டத்துத் தென்கோடியில் பாண்டியப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசு ஒன்று இருந்தது. கோட்டையும் கொத்தளமுமாகப் பாதுகாப்பு அமைப்புடன் கரவந்தபுரம் என்ற பெயர் கொண்டு புகழ் பரப்பியது. இந்தக் கதையில் வரும் இராசசிம்மனின் தந்தையான சடையவர்ம பராந்தகனின் காலத்தில் கரவந்தபுரத்துக் கோட்டையும் அதன் ஆட்சி உரிமையும் உக்கிரன் என்னும் குறுநிலவேள் கையிலிருந்தது. செருக்கின் காரணமாக உக்கிரன் பாண்டியப் பேரரசை அவமதித்தான். அதனால் பெருமன்னரான பராந்தக பாண்டியர் அவனை அடக்கிச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தார். பாண்டியனின் சிறையில் சில திங்கள் துன்புற்ற பின் ஒப்புக் கொண்டு மீண்டும் தன் கோட்டையைப் பெற்றான் உக்கிரன். அதிலிருந்து கரவந்தபுரத்து ஆட்சியும் உக்கிரன் கோட்டையும் பாண்டியப் பேரரசின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்தன. கரவந்தபுரத்துக் கோட்டை உக்கிரனுடைய மகன் உரிமையாயிற்று.

    இதன் பின் பாண்டி நாட்டு அரசியலில் இளவரசனான இராசசிம்மனுக்கும், அவன் தாய் வானவன்மாதேவிக்கும் ஏற்பட்ட குழப்பம் நிறைந்த சூழ்நிலைகளையும், வடபாண்டி நாட்டையும், மதுரையையும், வடதிசை மன்னர் வென்று கைப்பற்றியதையும், இராசசிம்மன் தலைமறைவாகச் சென்றதையும், கதையைப் படித்து வரும் நேயர்கள் அறிவார்கள். எஞ்சிய தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லையாக இருந்தது கரவந்தபுரமே. தென்பாண்டி நாட்டுக் கோட்டையில் கூற்றத் தலைவர்கள் கூடியிருந்த அதே நாளில் கரவந்தபுரத்துக் கோட்டையின் வடக்கே பயங்கரமான சில சங்கேத நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் சிற்றரசனாக இருந்த பெரும் பெயர்ச் சாத்தன் அதிர்ச்சியடைந்து போய் உடனே அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து விவரங்களை அறிவிப்பதற்காக ஒரு தூதனை அவசரமாகவும் பரம இரகசியமாகவும் அனுப்பினான். இனிமேல் கதையைப் படியுங்கள். சரித்திரச் சூழ்நிலை ஒருவாறு விளங்கியிருக்கும்.

    திருநந்திக்கரையிலிருந்து கால்நடையாகப் புறப்பட்ட தளபதி எப்படியும் அன்று இரவுக்குள் அரண்மனைக்குப் போய்விட வேண்டுமென்று துடியாய்த் துடித்தான். அவன் உள்ளம் என்ன செய்வதென்றறியாமல் தவித்தது. திருநந்திக் கரையிலோ, அதைச் சார்ந்துள்ள இடங்களிலோ பிரயாணத்துக்கு குதிரை கிடைக்குமென்று தோன்றவில்லை. 'முக்கியமான பல செய்திகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டியிருப்பதனால் மகாமண்டலேசுவரரோ, கூற்றத் தலைவர்களோ, காலையிலேயே கூட்டத்தை முடித்துக் கொண்டு ஊர்களுக்குத் திரும்பியிருக்க முடியாது. என்ன அவசரமாயிருந்தாலும் நாளைக்குத் தான் அரண்மனையிலிருந்து புறப்படுவார்கள். இப்போதே இங்கு எங்காவது குதிரை மட்டும் கிடைத்தால் பொழுது மங்குவதற்குள் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்!' இப்படிப் பலவாறு சிந்தித்த பின் கால்நடையாகவே முன்சிறைவரை செல்வதென்றும் அங்கே யாரிடமாவது தேடிப் பிடித்துக் குதிரை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஒரு முடிவான தீர்மானம் செய்து கொண்டு புறப்பட்டான் வல்லாளதேவன்.

    சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த மழையின் அளவையும் சேர்த்து வெயில் வாட்டிப் பிழிந்து கொண்டிருந்தது. சாலையின் இருமருங்கிலும் மரங்கள் மட்டும் இல்லாமல் இருந்தால் தளபதி நடந்து சென்றிருக்கவே முடியாது. நாஞ்சில் நாட்டின் சிறப்புகளிலெல்லாம் சிறப்பு அதன் அற்புதமான சாலைகள். ஒவ்வொரு சாலையும் ஒரு பசுஞ்சோலையாகக் காட்சியளிக்கும். சத்தியத்தின் முன்னும் பின்னும் அறம் காரணத்துணையாக நிற்பது போல் சாலையின் இருபுறமும் சிறிதும் வெயில் நுழைய முடியாதபடி அடர்ந்த மரங்கள் பசுமைக் குடையாக நின்றனவென்றால் நிழலுக்குக் கேட்கவா வேண்டும்?

    முன்சிறையை நோக்கிச் சாலையில் நடந்து கொண்டிருந்த போது சாலையின் இருபுறமும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டான் தளபதி. பச்சைப் பசும்பாய் விரித்தாற் போன்ற நெல் வயல்கள், அவற்றின் இடையேயுள்ள நீர்ப் பள்ளங்களில் தீப்பிடித்தது போல் மலர்ந்துள்ள பல செந்நிற மலர்கள், கரும்புத் தோட்டங்கள், கதலிக்காடுகள், கன்னிப் பெண்ணைப் போல் கலகலத்துப் பாயும் சிற்றோடைகள்! என்ன வளம்! என்ன அழகு! வாழ்நாள் முழுவதும் அந்தத் தென்பாண்டி நாட்டு காட்சிகளில் ஒரு புதிய அழகு பிறந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.

    பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்தில் ஒருசிறைப் பெரியனார் என்ற புலவர் நாஞ்சில் நாட்டைப் பற்றி வருணித்துப் பாடியிருக்கும் புறநானூற்றுப் பாடலின் அழகிய கருத்துகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன.

    'விதைத்த வித்துகள் தண்ணீர் இல்லையே என்பதனால் முளைக்காமற் போகமாட்டா. முளைத்துச் செழித்துக் கரும்பு போல் வளரும். கோடைக் காலத்தில் எங்கும் வறட்சி தென்படும் போது பெண்களின் கண்களை ஒத்த கருங்குவளை மலர்கள் பாருக்குமிடமெல்லாம் வளமாகப் பூத்துக் கிடக்கும். கறுப்பு நிற அடி மரத்தையுடைய மலர்கள் உதிர்ந்து மிதக்கும்படி நீர்க் கால்கள் கடலை நோக்கி ஓடும்.'

    'ஆகா! இந்தப் புலவருக்குக் கருங்குவளைப் பூக்களை நினைக்கும் போதே பெண்களின் கண்கள் தானே நினைவுக்கு வருகிறதே! உலகத்தில் கவிநோக்கு என்பதே இப்படித்தான் இருக்கும் போலும்! அழகுள்ள ஒரு பொருளைப் பார்க்கும் போது அதே அழகுள்ள மற்றொரு பொருளின் நினைவை அது தூண்டி விடுகிறதோ?'

    தன்னை அறியாமலே திருநந்திக்கரையில் பூ விற்றுக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் எழில் முகம், நினைவுகள் ஓடி மறையும் அழகிய தடக்கண்கள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கத் தொடங்கினான் தளபதி வல்லாளதேவன்.

    தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். 'சற்று முன் அந்தப் புலவரைப் பற்றி இகழ்ச்சியாக எண்ணினேன்! எனக்கு மட்டும் இப்போது எந்த நினைவு உண்டாகிறது? உடம்பில் இரத்தமும் உள்ளத்தில் நினைக்கும் உரமும் இருக்கிறவரை மனிதர்கள் எல்லோருக்கும் இந்த நினைவுத் தொத்துநோய் பொதுவானதுதானோ?'

    சிந்தித்தவாறே முன்சிறையை நெருங்கிக் கொண்டிருந்தான் அவன். இன்னும் கால் நாழிகைத் தூரம் நடந்தால் முன்சிறையை அடைந்து விடலாம். தொலைவில் தென்படும் ஓவியம் போல் அவன் நடந்து கொண்டிருந்த சாலையிலிருந்து பார்க்கும் போது ஊர் மங்கலாகத் தெரிந்தது. எந்த ஊரையும் தொலைவிலிருந்து பார்க்கும் போது கோவிலும், கோபுரமும், வீடுகளும், மரங்களுமாக அதன் அழகே தனிக்கவர்ச்சி மிகுந்து தோன்றும். அருகில் நெருங்கி உள்ளே நுழைந்து விட்டால் அந்தக் கவர்ச்சி இருப்பதில்லை. நுழைந்து பார்க்கும் போது கவலையும், துன்பமும், வேதனையும், வஞ்சனையும் தான் அவற்றுள் தெரிகின்றன.

    ஊர் நெருங்க நெருங்கத் தளபதியின் மனத்தில் சிந்தனைகள் குறைந்து சொந்தக் கவலைகள் எழுந்தன. 'முன்சிறையில் எங்கே போய்த் தேடி யாரிடம் குதிரை கேட்பது? குதிரை கிடைத்தாலும் அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் இரவாகிவிடுமே? காலையிலிருந்து கூற்றத் தலைவர் கூட்டத்தில் என்னென்ன முக்கியமான செய்திகளைப் பேசி முடிவு செய்தார்களோ? அவற்றையெல்லாம் நான் அருகிலிருந்து அறிந்து கொள்ள முடியாமல் கெடுத்து என்னை, இந்தக் குட்டையன் ஏமாற்றி விட்டானே? இனி நான் இரவில் அரண்மனைக்குப் போனாலும் அந்தரங்கக் கூட்டத்தில் நடந்தது பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்பதும் இயலாது. என்ன நடக்கிறதோ பார்க்கலாம். எண்ணத்தில் அவநம்பிக்கை கலந்திருந்தாலும், வல்லாளதேவனுக்கு அதனிடையே ஒரு சிறு நம்பிக்கையும் இருந்தது. 'வைகறையிலேயே ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் தன் கூட்டத்தோடு அரண்மனைக்குச் சென்றிருப்பதனால் அவன் மூலமாக ஏதாவது நடந்த செய்திகள், பேசப்பட்ட விவரங்கள், குறிப்பாகவோ வெளிப்படையாகவோ தெரியலாம்' என நம்பினான் தளபதி. மந்திராலோசனைக் கூட்டம் நடக்கிற இடத்தில் எல்லோரையும் உள்ளே இருக்கவிட மாட்டார்கள். ஆனால் குழைக்காதன் குறிப்புத் தெரிந்தவன். சமயத்துக்கேற்றாற் போல் சாமர்த்தியமாக நடந்து கொள்ள அவனுக்குத் தெரியும் என்று எண்ணித் தற்காலிகமாகத் திருப்தியடைந்தான் தளபதி.

    'நேரே முன்சிறை அறக்கோட்டத்துக்குப் போனால் அங்கே பகல் உணவை முடித்துக் கொள்ளலாம். அறக்கோட்டத்தில் இருப்பவன் கூட நாராயணன் சேந்தனின் தமையனான அண்டராதித்த வைணவன் தானே? அவனிடமே அவனுடைய தம்பி செய்த வஞ்சனையை விவரித்து நம்முடைய அவசர நிலையையும் கூறி குதிரை சம்பாதித்துத் தருமாறு கேட்கலாம். நாராயணன் சேந்தனைப் போல் அடங்காப்பிடாரி இல்லை அவன் தமையன். பரம சாது, அப்பாவி மனிதனுங் கூட. நாம் சொன்னால் உடனே கேட்பான்' என்று எண்ணியவனாக ஊருக்குள் நுழைந்து அறக்கோட்டத்துக்குச் செல்லும் பகுதியில் நடந்தான் வல்லாளதேவன்.

    அறக்கோட்டத்து வாசலை அவன் நெருங்கிய போது அங்கே அண்டராதித்த வைணவனும், அவன் மனைவி கோதையும் நின்று கொண்டு யாரோ ஒரு குதிரை வீரனை வழியனுப்பிக் கொண்டிருந்தனர். குதிரையின் மேல் வீற்றிருந்தவன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்றுக் கொண்டு புறப்படத் தயாராயிருந்தான்.

    திடீரென்று தளபதி வல்லாளதேவன் கால்நடையாக அங்கு வந்து சேர்ந்தது அவர்களுக்கு வியப்பை அளித்தது. குதிரையின் மேல் இருந்தவன் பரபரப்படைந்து உடனே கீழே குதித்துத் தளபதியை வணங்கினான். அண்டராதித்தனும் கோதையும் கூட வணங்கினர்.

    "கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச் சாத்தனிடமிருந்து வருகிறேன். அவசர ஓலை ஒன்றுடன் அரண்மனைக்குத் தூதனுப்பப் பட்டிருக்கிறேன்" என்று தளபதி வல்லாளதேவனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் புதியவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.25. நிலவறைக்குள் நிகழ்ந்தவை



திருநந்திக்கரையில் தளபதியை ஏமாற்றி விட்டு அவசரமாகக் குறுக்கு வழியில் அரண்மனைக்குத் திரும்பி வந்து விட்டான் நாராயணன் சேந்தன். கோட்டை வாயிலில் நுழையும் போதே குறிப்பாகச் சில காட்சிகளைக் கண்டு காவல் வீரர்கள் இரண்டொருவராகக் கூடி நின்று கொண்டிருந்தனர். தான் ஏறி வந்த குதிரை, கைப்பற்றிக் கொண்டு வந்த தளபதியின் குதிரை இரண்டையுமே கோட்டைச் சுவர்களின் அருகே ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு அதன் பின்பு தான் கோட்டைக்குள் நுழைந்தான் சேந்தன்.

அரண்மனையை ஒட்டியே அத்தாணி மண்டபமும், ஆலோசனைக் கூடங்களும், உள்படு கருமக் கோட்டங்களும் சார்பாக இருந்தன.

கோட்டையின் முதல் இரண்டு பிரதான வாயில்களைக் கடந்த பின்பே மகாராணியின் அரண்மனை அமைந்திருந்தது. கோட்டையின் ஒவ்வொரு வாயிலும் பாண்டிய மரபின் புகழ்பெற்ற அரசர் ஒருவருடைய பெயரைத் தாங்கிக் கொண்டிருந்தது.

முதல் வாயிலாகிய பராந்தகப் பெருவாயிலைக் கடக்கின்றவரை நாராயணன் சேந்தனுக்கு ஒரு தடையும் ஏற்படவில்லை. மதிற் சுவரோரத்தில் சிறு சிறு கும்பல்களாகக் காவல் நின்று கொண்டிருந்த வீரர்கள் கூட அவனை ஒரு பொருட்டாக மதித்துத் தடுக்கவோ விசாரிக்கவோ செய்யாமல் போகவிட்டு, வாயிலை நெருங்கிய போது தான் அன்றைய தினம் கோட்டையிலும் அரண்மனைக்குள்ளும் எவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிய வந்தது.

அவனுக்குப் பின்புறம் 'சுரிகை' எனப்படும் பயங்கரமான சுழல் வாளை அணிந்த இரண்டு வீரர்கள் மௌனமாகப் பின் தொடர்ந்தனர். நாராயணன் சேந்தனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கோபத்தோடு பின்புறம் திரும்பித் தன் புறாமுட்டை போன்ற பெரிய கண்களை உருட்டி விழித்து அவர்களைப் பார்த்து, "ஏன் என்னைப் பின் தொடருகிறீர்கள்? நான் மகாமண்டலேசுவரரின் அந்தரங்க ஒற்றன். அவர் இங்கே தங்கியிருக்கும் போது அவரைப் பார்ப்பதற்கு வரவும், போகவும் எனக்கு முழு உரிமை உண்டு. நான் சந்தேகத்துக்குரியவனோ, உளவறிய வந்திருப்பவனோ, அல்லவே?" என்று சீற்றத்தோடு கேட்டான். அப்போது சேந்தனுக்குக் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்துவிட்டன. உதடுகள் துடித்தன.

ஆனால் அவனுடைய கேள்விக்கு அவனைப் பின் தொடர்ந்த வீரர்கள் பதிலே சொல்லவில்லை. அவ்வளவேன்? அவனுடைய சினமும், கொதிப்புடன் வெளிப்பட்ட கேள்வியும் அவர்கள் முகங்களில் உணர்ச்சியின் ஒரு சிறிய மாறுதலையாவது தோற்றுவிக்க வேண்டுமே. அது கூட இல்லை. அவர்கள் சிலைபோல் நடந்தனர். அவன் நின்றால் அந்த வீரர்களும் நின்றனர்.

சேந்தன் திகைத்தான். அவன் மனத்தில் சந்தேகமே வளர்ந்தது. சிறிது திகிலும் எட்டிப் பார்த்தது. அவர்களை அடியிலிருந்து முடிவரை நன்றாகக் கவனித்துப் பார்த்தான். ஆபத்துதவிப் படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமென்று அவனுக்குத் தோன்றியது. அவர்கள் நடந்து கொண்ட விதமும் அவர்களைப் பற்றி அனுமானிக்க ஏற்றதாகத்தான் இருந்தது. காரணமோ மறுமொழியோ கூறாமல் பாதுகாப்புக்காக எதையும் செய்யும் உரிமை ஆபத்துதவிகளுக்கு மட்டுமே உண்டு.

'வந்தது வரட்டும்! இவர்களிடம் கேள்வி கேட்டு கெஞ்சிக் கொண்டு நிற்பதில் பயனில்லை. துணிந்து உள்ளே நுழைகிறேன். முடிந்ததைச் செய்து கொள்ளட்டும்' என்று பின்னால் வருபவர்களைக் கவனிக்காமல் வரகுணன் வாயிலில் நுழைந்தான் அவன். பின்னால் தொடர்ந்து வந்த ஆபத்துதவிகள் வரகுணன் வாயில் வரைதான் அவனைப் பின்பற்றி வந்தனர். அதற்கு மேல் அவர்கள் அவனைப் பின் தொடரவும் இல்லை; உள்ளே போகக் கூடாதென்று தடுக்கவும் இல்லை. பேசாமல் வாயிலுக்கு இந்தப்புறமே ஒதுங்கி நின்று கொண்டனர். ஆனால் வாயிற் காவலுக்கென்றே வழக்கமாக அந்த இடத்தில் அரண்மனையைச் சேர்ந்த வேறு இரு காவலர்கள் இருப்பதுண்டு. அவர்கள், "காலையிலிருந்து அரண்மனையில் கூற்றத் தலைவர்களின் அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. உள்ளே யாரையும் விடுவதற்கு அனுமதி இல்லை" என்று சொல்லி நாராயணன் சேந்தனைத் தடுத்து விட்டனர். தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகி விட்டது. 'ஆபத்துதவிகள் அந்த மட்டில் விட்டார்களே!' என்று மகிழ்ச்சியோடு உள்ளே நுழையப் போக இவர்கள் தடுத்துவிட்டார்களே! என்று தயங்கி நின்றான் சேந்தன்.

"காவல் வீரர்களே! உங்கள் கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போது யாரையும் உள்ளே விடக்கூடாது என்று கட்டுப்பாடு நல்லதுதான். ஆனால் எல்லோரையும் அதற்காகத் தராதரம் பார்க்காமல் தடுத்து நிறுத்தி விடலாமா? நான் இப்போது உடனே மகாமண்டலேசுவரரைச் சந்தித்து ஓர் அவசரச் செய்தியைக் கூறியாக வேண்டுமே! என்னை நீங்கள் இப்படித் தடுத்தால் நான் என்ன செய்வது? உங்களிடம் வாதாடிக் கொண்டிருக்காமல் நான் திரும்பிப் போய் விட்டாலோ, என்னை உள்ளே விட மறுத்த குற்றத்துக்காக நீங்கள் தான் பிறகு மகாமண்டலேசுவரரிடம் திட்டுக் கேட்க நேரிடும். எனக்கென்ன வந்தது? நான் பேசாமல் இப்போதே திரும்பிப் போய்விடுகிறேன்" என்று நாராயணன் சேந்தன் நயத்துடனும், பயமுறுத்தல் போலவும் பேசி உடனே திரும்பிப் போய் விடுகிறவனைப் போல் நடித்தான்.

அவனுடைய தந்திரமான பேச்சும், நடிப்பும் நல்ல பயனை அளித்தன.

"ஐயா! இருங்கள். போய்விடாதீர்கள். எங்களுக்கு எதற்கு வம்பு? உங்கள் பெயரைச் சொல்லுங்கள். உள்ளே போய் மகாமண்டலேசுவரரிடமே சொல்லி அனுமதி பெற்று வந்துவிடுகிறேன். அதுவரையில் இப்படி நில்லுங்கள்" என்றான் காவலர்களில் ஒருவன். உடனே நாராயணன் சேந்தன் மகாமண்டலேசுவரரின் பெயரைக் கூறியதும் காவலன் அடைந்த பரபரப்பைக் கண்டு சிரித்துக் கொண்டே தன் பெயரைக் கூறினான். காவலன் அதைக் கேட்டுக் கொண்டு உள்ளே சென்றான். கோட்டைக்குள் ஆபத்துதவிகள் இரகசியக் காவல் புரிவதையும், காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்திருப்பதையும் பார்த்த போது அன்று ஏதோ சில முக்கிய நிகழ்ச்சிகள் அங்கு நடந்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் நாராயணன் சேந்தன்.

உள்ளே போனவன் திரும்பி வருகிற வரையில் மற்றவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி ஏதாவது தெரியும் என்று அவன் வாயைக் கிளறி வம்புக்கு இழுத்தான். ஆனால் அந்த மற்றொரு காவலன் சேந்தனின் கேள்விகளுக்கு அமுத்தலாக இரண்டொரு சொற்களில் பதில் சொல்லி முடித்துவிட்டான். அவனிடமிருந்து தான் எதிர்பார்த்த எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை சேந்தனுக்கு.

அதற்குள் உள்ளே சென்றவன் திரும்பி வந்தான். "மகாமண்டலேசுவரர் உங்களை அழைத்து வரச் சொன்னார்."

"நானே போய்க் கொள்வேன். நீ ஒன்றும் என்னை அழைத்துச் செல்ல வேண்டாம்" என்று கூறிவிட்டு வரகுணன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றான் நாராயணன் சேந்தன்.

அரண்மனையில் கொலுமண்டபத்தின் வடக்குப் புறத்தில் புலவர்கள் வாதிடும் இடமான அரசவைப் பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. 'அந்தரங்க மந்திராலோசனைக் கென்றே தனி மண்டபம் இருக்கும் போது அரசவை பட்டிமண்டபத்தில் ஏன் கூடியிருக்கிறார்கள்?' என்ற கேள்வி சேந்தன் மனத்தில் உண்டாயிற்று. பட்டிமண்டபத்தின் வெளிப்புறத்திலேயே மகாமண்டலேசுவரருக்காகக் காத்துக் கொண்டு நின்றான் அவன்.

சிறிது நேரத்தில் அவர் வெளியே வந்தார். "என்ன செய்தி? இப்பொழுதுதான் வருகிறாயா?" என்று மலர்ந்த முகத்தோடு தம் அந்தரங்க ஒற்றனை வரவேற்றார். "சுவாமீ! தளபதியைத் திருநந்திக்கரை வரைக்கும் இழுத்தடித்து உரிய காலத்தில் கூட்டத்துக்கு வரமுடியாமல் ஏமாற்றி விட்டேன்" என்று அவர் காதருகில் வந்து கூறினான் சேந்தன்.

"அதெல்லாம் சரிதான் சேந்தா! இப்போது வேறொரு திறமையான செயலை உன் கைகளில் ஒப்படைக்கப் போகிறேன். மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறமுள்ள நிலவறையின் கதவை வெளிப்புறமாக அடைத்துத் தாழ் போடச் செய்திருக்கிறேன். நீதான் நிலவறைக்குள் போய் அங்கு ஒளிந்திருப்பவனை யாருக்கும் தெரியாமல் வெளியே இழுத்துக் கொண்டு வர வேண்டும். என்ன சொல்கிறாய்? உன்னால் முடியுமா? முடியாதா?" என்று மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் அவர்.

'ஐயோ! நான் மட்டும் தனியாகவா?' என்ற சொற்கள் சேந்தனுடைய நாக்கு நுனி வரை வந்து விட்டன. அவரிடம் தனக்கிருந்த பயம், மரியாதைகளை எண்ணி அவற்றைக் கூறிவிடாமல் 'ஆகட்டும்' என்பது போல் தலையை ஆட்டினான்.

"போ! முதலில் அதைக் கவனி! வேறு யாரையும் உன்னோடு துணைக்குக் கூப்பிடாதே! நீ மட்டும் தனியாகவே போ!" என்று துரத்தினார் மகாமண்டலேசுவரர்.

"சுவாமி! இன்னொரு இரகசியம். உங்களிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்" என்றான் சேந்தன்.

"என்ன சொல்லேன்?"

"அரண்மனையில் ஆபத்துதவிகள் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?"

"அது எனக்கு முன்பே தெரியும்! நீ போய் உன் காரியத்தைப் பார்."

சேந்தன் நிலவறையை நோக்கிப் புறப்பட்டான். இருட்குகையாக, அந்தகாரக் களஞ்சியமாக இருக்கும் நிலவறையில் தனியாக நுழைய வேண்டுமென்பதை நினைத்த போதே துணிவு மிகுந்தவனான நாராயணன் சேந்தனுக்கே பாதாதிகேச பரியந்தம் நடுங்கியது. ஒரு நாழிகை இரண்டு நாழிகையில் சுற்றித் தேடிப் பார்த்து விடக்கூடிய நிலவறையா அது? விடிய விடியத் தேடினாலும் அங்கு ஆள் ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியாதே! வேறு யாராவது வந்து அவனிடம் அந்த வேலையைச் செய்யும்படி கூறியிருந்தால் முடியாது என்று மறுத்திருப்பான். அல்லது செய்வதாக ஒப்புக் கொண்டு செய்யாமல் இருந்திருப்பான். மகாமண்டலேசுவரரே கட்டளையிட்டிருக்கும் போது அலட்சியமாக இருக்க முடியுமா?

வெளிப்புறம் இழுத்து அடைத்திருந்த மரக்கதவைத் திறந்து கொண்டு நிலவறையின் இருண்ட படிகளில் இறங்கினான் சேந்தன். எந்த விநாடியும் அந்த இருள் பரப்பின் எந்த மூலையிலிருந்தும், எதிரி ஒருவரின் முரட்டுக் கைகள் தன் கழுத்திலோ, பிடரியிலோ பாய்ந்து அழுத்தலாம் என்ற முன் எச்சரிக்கை அவன் மனத்தில் இருந்தது.

படிகளைக் கடந்து நிலவறைக்குள் இறங்கியாயிற்று. நின்ற இடத்திலிருந்து மிரண்ட விழிகளால் நான்கு புறமும் பார்த்தான். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்திருந்த அவன் கண்களுக்கு அந்த இருள் பழகுவதற்குச் சில கணங்கள் ஆயின. இருளை ஓரளவு ஊடுருவும் கூர்மை கண்களுக்கு வந்த பின் சுற்றிலும் நிறைந்திருந்த பொருள்கள் மங்கலாகத் தெரிவதைக் கண்டான்.

வலது புறச் சுவர் முழுவதும் மனிதர்கள் தலையிழந்த முண்டங்களாய்த் தொங்குவது போல் செப்புக் கவசங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. இன்னொரு புறம் மின்னல் துண்டங்களைச் சுவரில் பிடித்துப் பதிப்பித்து வைத்திருந்தது போல் வீர வாள்கள் வரிசையாக விளங்கின. மூலைக்கு மூலை பழைய நாணயங்கள் குவிந்திருந்தன. ஒரு காலத்தில் பாண்டி மண்டலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இப்போது பயன்படாமல் போன அந்த நாணயங்கள் தன் கால்களில் இடறிய போது, 'காசு எத்தனை பேர்க் காலை இடறி விடுகிறது? நான் இப்போது காசை இடறிவிடுகிறேன்' என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டான் சேந்தன். நிலவறையில் தன்னைச் சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலைகள் யாரோ உயிருடன் கூடிய மனிதர்கள் தன்னைப் போல் பயந்து ஒடுங்கி மௌனமாக அந்த இருளில் நின்று கொண்டிருப்பது போல் அவன் கண்களுக்குத் தோன்றின.

வலது கையில் தாமரை மலரை ஏந்தி அபிநயம் பிடிப்பது போன்ற பாவனையில் ஒரு நடன மங்கையின் சிலை, வட்டக் கண்ணாடியால் தன் முகத்தை அழகு பார்த்துக் கொண்டே நெற்றிக்குத் திலகமிடும் கோலத்தில் ஒரு குமரிப் பெண்ணின் உயிரும் உணர்வும் துடிக்கும் உருவம், கைகளில் விளக்குத் தாங்கி நிற்கும் விளக்குப் பாவைகளின் வெண்கலச் சிலைகள், பாண்டிய அரச பரம்பரையைச் சேர்ந்த மன்னர்களின் சிற்பங்கள் எல்லாம் அங்கு இருந்தன. சுவரின் உச்சியில் ஒளியும் காற்றும் சிறிது நுழைந்து விட்டுப் போகட்டுமென்று அவ்விடத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரு சிறு வட்டத் துவாரங்கள் அமைத்திருந்தார்கள். அந்த உயிரற்ற சிலைகளுக்கும் பொருள்களுக்கும் நடுவே உயிருள்ள ஒரு மனிதன் ஒளிந்து கொண்டிருந்தால் அவனை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? சேந்தனுக்கு தலைசுற்றி மயக்கம் வந்துவிடும் போலிருந்தது.

அப்போது இருந்தாற் போலிருந்து நடன மங்கை சிலைக்கு அருகில் நிழல் அசைவது போல் கருப்பாக ஏதோ அசைந்தது.

"நில் அங்கேயே! ஓர் அடி நகர்ந்தாலும் உன் உயிர் உனக்குச் சொந்தமில்லை" என்று கையிலிருந்த வாளை ஓங்கியவாறு கத்திக் கொண்டே பாய்ந்தான் சேந்தன். அவன் கையில் இருந்த வாள் நடன மங்கையின் வெண்கலச் சிலையில் மோதி மணி அடித்தாற் போன்ற பெரிய ஓசையையும் எதிரொலியையும் உண்டாக்கிவிட்டு இரண்டாக முறிந்து கீழே விழுந்தது. 'வெறும் பிரமைதானோ?' என்று திகைத்து நின்றான். யாரோ மெல்லச் சிரிக்கின்ற ஒலி அவனுக்கு அருகில் மிகமிக அருகில் கேட்டது.

"யார் அது சிரிப்பது? மானமுள்ள ஆண்பிள்ளையானால் நேருக்கு நேர் வந்து நிற்க வேண்டும்." பயத்தையும் நடுக்கத்தையும் மறைத்துக் கொண்டு தன் முழு மூச்சையும் அடக்கி இரைந்து கத்தினான் அவன். அவன் குரல் ஆயிரம் பதினாயிரம் எதிரொலிக் குரல்களாக மாறி அந்த நிலவறைக்குள் ஒலித்து அவனையே பயமுறுத்தின. எதிரொலி ஓய்ந்ததும் முன்பு கேட்ட அதே சிரிப்பொலி முன்னிலும் பலமாகக் கேட்டது. சேந்தன் இரண்டு கைகளாலும் இருளைத் துழாவிக் கொண்டு முன்னால் பாய்ந்தான். பிறந்த மேனியராய்ப் பல கன்னிப் பெண்கள் இருளில் நின்று கொண்டு இருப்பது போல் அவனைச் சுற்றிலும் அவன் உயரத்துக்குச் சரியாக சிலைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளாமல் இருட்டில் பார்த்து நடக்க வேண்டியிருந்தது. அவன் முன்னால் நடக்க நடக்க அந்தச் சிரிப்பொலியும் அவனைவிட்டுத் தள்ளிச் சென்று கொண்டே இருந்தது. திடீரென்று ஒரு பெரிய வௌவால் வேகமாகப் பறந்து வந்து சேந்தன் முகத்தில் மோதியது. அப்போது சேந்தனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் யாரோ முகத்தில் ஓங்கி அடித்து விட்ட மாதிரி இருந்தது. கையிலிருந்த ஒரே ஒரு பாதுகாப்புக் கருவியான வாளும் சிலையில் மோதி முறிந்துவிட்டது.

உயிரின் மேலுள்ள இயற்கையான ஆசையும், பயமும் சேந்தனைக் கட்டுப்படுத்தி நிறுத்தின. சுவரில் வரிசையாகக் கட்டப்பட்டுத் தொங்கும் வாள்களின் வரிசையிலிருந்து ஒன்றை உருவிக் கையில் எடுத்துக் கொண்டு அப்புறம் அந்த நிலவறை முழுவதும் சுற்றலாமென்று எண்ணினான் அவன். பயம் அந்த முன்னெச்சரிக்கையை அவன் மனத்தில் எழுப்பி விட்டிருந்தது.

பதற்றமும் அவசரமும் உந்தித் தள்ளச் சுவர் அருகில் சென்று ஒரு வாளின் நுனியைப் பிடித்து இழுத்தான். அது மேற்புறம் நன்றாக இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததால் அவ்வளவு லேசாக அவன் இழுத்த மாத்திரத்தில் கைக்கு வந்துவிடவில்லை. எனவே பக்கத்தில் சென்று இரண்டு கைகளாலும் பலங்கொண்ட மட்டும் அதைப் பிடித்து இழுத்தான். அடுத்த விநாடி நூற்றுக்கணக்கான வெண்கல மணிகளை ஒரே சமயத்தில் யாரோ தாறுமாறாக அடித்தது போன்று ஓர் ஒலிக் குழப்பம் அங்கு உண்டாயிற்று. மடமடவென்று சுவரிலிருந்த அத்தனை வாள்களும், கேடயங்களும் சரிந்து உதிர்ந்தன. நாராயணன் சேந்தன் பின்னுக்கு விலகி நின்று கொண்டான். அவன் எதிர்பாராதது நடந்து விட்டது. அந்தச் சுவரில் கட்டப்பட்டிருந்த எல்லா வாள்களும் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரை ஒரே நீளக் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தன. அவன் இழுத்த வேகத்தில் கயிறு அறுந்து விட்டது. அந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் அவன் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே நிலவறையிலிருந்து வெளியேறும் படியில் மேலே யாரோ ஏறி ஓடும் காலடியோசை கேட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.26. வேடம் வெளிப்பட்டது


குழல்மொழியின் முகத்தில் தென்பட்ட வியப்பைக் கண்டு துறவி சிரித்தார். "இந்த அறைக்குள் இருப்பதை நான் எப்படி இவ்வளவு சரியாகக் கண்டு பிடித்துக் கூறினேன் என்று தானே நீ வியப்படைகிறாய்?"

குழல்மொழி அவருடைய கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் ஒரு கணம் அவருடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

"ஏன் அப்படி என்னையே பார்க்கிறாய்? என்னுடைய ஆருடத் திறமையைப் பரிசோதிப்பது போல் நீ கேள்வி கேட்டாய். நான் பதில் கூறினேன். இத்தனைக் கட்டுக் காவல்களையும் கடந்து யவன வீரர்கள் வாளேந்தி நின்று அயராமல் காக்கும் இந்த இடத்துக்குள் இருப்பதைப் புள்ளி பிசகாமல் தெள்ளத் தெளிய அடிகள் எப்படிக் கூறினாரென்று சிந்தித்துப் பார்க்கிறாயா?"

அடிகளின் கேள்விகளைக் கவனிக்காதது போல் இருந்து விட்டு, "சரி! வாருங்கள். மேலே சுற்றிப் பார்க்கலாம்" என்று கூறி அவரை அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள் குழல்மொழி.

"முடியாது பெண்ணே! நான் ஏமாற மாட்டேன். இந்த யவன வீரர்களின் காவலுக்கு அப்பால் என்ன இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளாமல் நான் இங்கிருந்து ஓர் அடி கூட நகர மாட்டேன்!" என்று கூறி அவர் பிடிவாதமாக அங்கிருந்து புறப்பட மறுத்தார்.

"அதுதான் அங்கிருப்பதை உங்கள் ஆருடத்தினால் சொல்லி விட்டீர்களே?"

"சொன்னால் மட்டும் போதுமா? எங்களுடைய முன்னோர் சுந்தர முடியையும், வீர வாளையும் நான் ஒரு முறையாவது கண் குளிரக் காண வேண்டாமா?" துறவி உருக்கமான குரலில் அவளைக் கெஞ்சினார்.

"அதென்ன? 'எங்களுடைய முன்னோர்' என்கிறீர்கள்? அடிகளுக்குத் தமிழில் தன்மை, முன்னிலை, படர்க்கை வேறுபாடொன்றும் தெரியவே தெரியாதோ? நீர் தான் பாண்டிய மரபின் இறுதி வாரிசு போலல்லவா பேசுகிறீர்?" என்று திருப்பிக் கேட்டாள் இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி.

"ஏன்? அப்படி இருக்க முடியாதோ? உனக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். இதோ ஒரு கணம் பொறுத்திரு" என்று சொல்லிவிட்டு அங்கே பக்கத்திலிருந்த வேறோர் மண்டபத்தில் நுழைந்து மறைந்தார் அடிகள். அவர் என்ன செய்யப் போகிறார் என்று அறியும் ஆவலோடு அந்த மண்டபத்தின் வாயிலையே பார்த்துக் கொண்டு தான் நின்றிருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றாள் குழல்மொழி.

சிறிது நேரம் கழித்து மண்டபத்துக்குள்ளிருந்து வெளிவந்த ஆளைப் பார்த்த போது அவள் அப்படியே அதிர்ச்சி அடைந்து போய் நின்றாள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இளவரசன் இராசசிம்ம பாண்டியன் அவள் முன்பு வந்து நின்றான். அவனுடைய கவர்ச்சிகரமான கண்களிலும், சிரிப்புக் குடியிருக்கும் செவ்விதழ்களிலும் குறும்புத்தனம் குமிழியிட்டது. வியப்பும், பயமும், வெட்கமும் ஆகிய அத்தனை உணர்ச்சிகளும் அந்தப் பெண்ணின் பிறைச் சந்திரனையொத்த நெற்றியில் சங்கமமாயின.

"நான் தான் துறவி. துறவி தான் நான். இந்த உண்மை உன் தந்தைக்கும் அவருடைய அந்தரங்க ஒற்றனான நாராயனன் சேந்தனுக்கும் நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே உனக்கு மட்டும் தெரியவிடாமல் மறைத்துக் கொண்டேன் நான். இப்போது நீயும் தெரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் வந்துவிட்டது. தெரிந்து கொள்" என்றான் இராசசிம்மன்.

துறவியாக வேடம்போட்டு இளவரசராக மாறித் தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி நிற்கும் அவரிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்தாள் அவள்.

"இப்போதாவது சொல்! எதிர்காலத்தில் யாருடைய தலையில் சூடுவதற்காக வைக்கப்பட்டிருக்கிறதோ அவன் கூடவா தனது முன்னோர் பயன்படுத்திய சுந்தர முடியையும் வீரவாளையும் பார்க்கக் கூடாது?"

"இனி உங்களைத் தடுக்க நான் யார்? அதோ அந்த பயங்கரமான அந்த யவனக் காவல் வீரர்களே இன்னாரென்று தெரிந்து கொண்டவுடன் உருவிய வாளை உறைக்குள்ளே போட்டுக் கொண்டு வணங்கி நிற்கிறார்களே?" என்று அதுவரையில் வாய் திறவாமல் இருந்த குழல்மொழி வாய் திறந்து மறுமொழி சொன்னாள்.

"அந்த வாள்களுக்கு நான் என்றும் அஞ்சமாட்டேன்; இதோ குறுகுறுவென்று வண்டு சுழல்வது போல் என்னைப் பார்க்கின்றனவே இந்த வாள்கள்தான் என்னைப் பயமுறுத்துகின்றன" என்று நகைத்துக் கொண்டே அவள் கண்களுக்கு அருகில் சுட்டு விரலை நீட்டிக் காட்டினான் இராசசிம்மன்.

குழல்மொழியின் பொன்னிறக் கன்னங்களில் குங்குமக் கோடுகள் படர்ந்தன. கண்களின் விழித்திரைகளில் இன்ப நிறைவு பொங்கும் உணர்ச்சிகளின் சாயல்கள் ஓடி மறைந்தன.

"வேடம் மாறியதற்கு ஏற்பப் பேச்சும் மாறுகிறாற் போலிருக்கிறதே? இளவரசர் தலைமறைவாக இருந்த காலத்தில் படித்துக் கொண்ட பேச்சுக்கள் போலிருக்கின்றன இவையெல்லாம்?" என்றாள் அவள்.

"எல்லாம் அந்த நாளிலிருந்தே உன்னைப் போன்ற பெண்களிடம் படித்துக் கொண்ட பேச்சுத்தானே? பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை அரண்மனை நந்தவனத்தில் சிறு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்போமே, அப்போது நடந்ததெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதா குழல்மொழி? உங்களுக்கெல்லாம் அப்போது ஏழெட்டு வயது கூட இருக்காது. பட்டுப் பாவாடை மண்ணில் புரள நீ, தளபதியின் தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி இன்னும் இரண்டு மூன்று சிறுமிகள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு அரண்மனை நந்தவனத்துக்குப் பூப்பறிக்க வருவீர்கள். நான் அப்போது பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவன். வாட்போர் கற்றுக் கொண்டிருந்த சமயம் அது. வேடிக்கையாக வாளை உருவிச் செடிகளை வெட்டுவேன். உங்கள் பூக் கூடைகளைத் தட்டி விடுவேன். உங்களுக்கு அப்போது எப்படிக் கோபம் வரும்? என்னை என்னென்ன பேச்சுப் பேசுவீர்கள்?" பழைய இளமை நினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது ஏற்படும் ஒருவித ஏக்கம் மிகுந்த குரலில் பேசினான் இராசசிம்மன்.

"ஏ, அப்பா! உங்களுக்குத்தான் எவ்வளவு நினைவாற்றல்? நாங்கள் கூட மறந்து விட்டோம். சிறு வயதில் நடந்தவற்றையெல்லாம் மறந்து விடாமல் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறீர்களே?" என்று சொல்லிச் சிரித்தாள் குழல்மொழி. சொல்லி முடித்ததும் அவள் நெஞ்சம் மேலெழுந்து தணிய ஒரு பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது. அவள் உள்ளத்திலும் துள்ளித் திரிந்த காலமான அந்தப் பிள்ளைப் பருவத்து நிகழ்ச்சிகள், அவற்றைப் பற்றிய நினைவு அலைகள், கழிவிரக்கங்கள் எல்லாம் குமுறி எழுந்தன.

"வயது ஆக ஆக மனிதனுக்கு எது தன்னுடைய சொந்தக் கணக்கில் மீதமாகிறது தெரியுமா, குழல்மொழி? பழைய இளமை நினைவுகள் மட்டும் தான். இதோ என்னைப் பார், எத்தனை அரசியல் குழப்பங்கள், வெற்றிகள், தோல்விகள், சூழ்ச்சிகள், சோதனைகள் எல்லாம் வயதான பிறகு என்னைப் பிடித்துக் கொண்டன! தெரிந்தோ, தெரியாமலோ என் வயதையும் பொறுப்பையும் இவை அதிகப்படுத்தி விட்டன. அந்தப் பிள்ளை மனம், அந்த விளையாட்டுத் தனமான குறும்புகள் எல்லாம் இப்போது கல்லாக முற்றி விட்டன."

தன் உள்ளத்தின் அடக்க முடியாத துன்ப உணர்ச்சிகளின் தடுக்க முடியாத வெள்ளத்தையே உடைத்து விடுவது போல் அவளிடம் மனம் திறந்து பேசினான் அவன்.

பேசிக் கொண்டே இருந்தவன் பேச்சை நிறுத்திவிட்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்த போது மென்மையான சோகம் படிவதைப் போன்ற கண்களின் கடைக்கோடியில் இரு நீர் முத்துகள் உதிர இருந்தன. அவன் பார்த்ததும் திடுக்கிட்டவள் போலத் தன் கையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் குழல்மொழி.

"அடடா! உணர்ச்சி வசப்பட்டு எதையெதையோ பேசி உன் துன்பத்தைக் கிளறி விட்டுவிட்டேன் போலிருக்கிறது. இதுவரை நான் கூறியவறை மறந்து விடு. வா! உள்ளே போய் அந்தச் சுந்தரமுடியையும் பொற் சிம்மாசனத்தையும், வீர வாளையும் இருவருமே பார்த்துவிட்டு வருவோம்."

"நான் வரவில்லை! நீங்கள் மட்டும் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்."

"பரவாயில்லை! நீயும் வா!" இராசசிம்மன் அவளை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு உள்ளே போனான்.

ஆகா! அந்த அறைக்குள் தான் என்ன ஒளி! என்ன அழகு! தாமரைப் பூவைப் போல் வட்டமாகப் பளிங்கு மேடை! அந்த மேடையின் மேல் ஒரு நீண்ட, பெரிய தந்தப் பேழை, பக்கத்தில் பட்டு உறையினால் பொற் சிம்மாசனம் மூடி வைக்கப்பட்டிருந்தது. தரைப் பரப்பின் மேல் குங்குமச் சிவப்பில் ஒளி நிறைந்த இரத்தினக் கம்பளங்களை விரித்திருந்தார்கள். கோவிலின் கர்ப்பக் கிருகத்துக்குள் நிற்பதைப் போன்று பயபக்தியோடு தந்தப் பேழைக்கு முன் வந்து நின்றனர் இராசசிம்மனும் குழல்மொழியும். அறை முழுவதும் பரிமளமான மணங்கள் கலந்து நிறைந்திருந்தன. தெய்வச் சிலைக்கு முன் நின்று மரியாதை மிளிரும் கண்களால் பார்ப்பது போல் அந்தப் பேழையை இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றான் இராசசிம்மன்.

"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?" அவள் கேட்டாள்.

"பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? ஊழி ஊழியாகப் பொதியமலைத் தென்றலையும் முதிய தமிழ்ப் புலமையையும் போற்றிப் பாராட்டி அசைந்த முடி எதுவோ அது இப்போது இந்த நான்கு முழ நீளமுள்ள தந்தப் பேழைக்குள் அடங்கி விட்டதே!" என்று இரங்கிய குரலில் கூறிக் கொண்டே பிறகு அருகில் நெருங்கி அந்தப் பேழையைத் திறந்தான் அவன். உள்ளிருந்து ஒரு நட்சத்திர மண்டலமே எட்டிப் பார்ப்பது போல் ஒளிக்கீற்றுகள் பாய்ந்தன. மஞ்சள் நிறப் பட்டு விரிப்பின் மேல் அந்த மின்னல் முடி வெண்ணிலா விரித்தது. அதனருகே பேழையின் நீளத்துக்குச் சரியாக வைரக் கற்களும், வெண் முத்துக்களும் விரவிப் பதித்த உறைக்குள் வீரவாள் ஒன்று மறைந்து கொண்டிருந்தது.

'மகாமன்னரான என் தந்தைக்குப் பின்னர் இந்த ஒளி முடியும், வீரவாளும் இப்படியே பேழையில் உறங்க வேண்டியதுதானா? இவற்றைப் பேழைக்குள் பார்க்கும் போது, கண்ணின் நடுமையத்துக் கருவிழிகளைக் கூச வைக்கும் இந்த ஒளியைப் பார்க்கும் போது, என் உள்ளம் ஏன் இப்படிப் பொங்கி மேலெழுகிறது? உணர்ச்சிகளில் ஏன் புதிய வேகம் உண்டாகிறது? வெறும் முடியும், வாளும் மட்டுமா இதற்குள் அடைபட்டிருக்கின்றன? என் கண்களுக்கு இவை வேறொரு விதமாகவும் தோன்றுகின்றனவே! என் தந்தையின் தலைமுறைக்குப் பாண்டியப் பேரரசின் புகழும், வீரமுமே இப்படிச் சிறைப்பட்டு விட்டனவா?' அவனுடைய உள்ளத்தில் அலை அலையாகச் சிந்தனைகள் எழுந்தன.

இரண்டு கைகளாலும் அவற்றைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான். குழல்மொழி எதுவும் பேசத் தோன்றாமல் மருண்ட விழிகளால் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள். அவன் பேழையை மூடிவிட்டுக் கடுமையான காவலுக்கு உட்பட்ட அந்தச் சிறிய அறையைச் சுற்றிலும் தன்னுடைய விழிகளைச் சுழற்றினான்.

பின்பு, "போகலாம் வா!" என்று குழல்மொழியையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான். யவன வீரர்கள் மறுபடியும், வணக்கத்தோடு வழிவிட்டு விலகி நின்று கொண்டனர்.

மாளிகையின் மற்றப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கும் போது குழல்மொழியும் இராசசிம்மனும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. இதற்கிடையில் தன் தோற்றத்தைப் பழையபடி துறவிபோல் மாற்றிக் கொண்டு விட்டான் அவன்.

கடைசியாக இடையாற்று மங்கலம் மாளிகையின் மேல் மாடத்தில் நிலா முற்றத்தின் திறந்த வெளியில் வந்து நின்றார்கள் அவர்கள் இருவரும். அந்த மாளிகையிலேயே உயர்ந்த இடம் அதுதான். அங்கிருந்து கீழே நாற்புறத்துக் காட்சிகளும் அற்புதமாகத் தெரிந்தன. இடையாற்று மங்கலம் என்ற பசுமைப் போலப் பறளியாறு பாய்ந்து கொண்டிருந்தது. வர்ணக் கலவைகளை வாரி இறைத்தது போல அரண்மனை நந்தவனத்தில் பல நிற மலர்கள் தெரிந்தன.

"உலகத்தின் சாதாரணமான அழகை உலக நிலைக்கும் மேலே இருந்து கண்டால் எவ்வளவு அழகாக இருக்கிறது, பார்த்தாயா?" என்று சிரித்துக் கொண்டே கூறினான் இராசசிம்மன்.

"உண்மைதான்! எந்தச் சாதாரணப் பொருளின் நிலையையும் நன்றாக உணர வேண்டுமானால் அதை விட உயர்ந்த நிலையிலிருந்து தான் காண வேண்டும்." குழல்மொழி பேச்சில் தத்துவத்தைக் கொண்டு வந்து புகுத்தினாள்.

ஆனால் இராசசிம்மன் அவளுடைய பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல் வேறொரு காட்சியில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

"இதென்ன? என்னிடம் பேச்சைக் கொடுத்துவிட்டு இதைக் கவனிக்காமல் எங்கே பார்க்கிறீர்கள்?" என்று சிறிது சினத்துடனே கடிந்து கொண்டு அவன் பார்வை சென்ற திசையில் தானும் பார்த்தாள் குழல்மொழி.

பறளியாற்றின் நடுவில் ஒரு படகு வேகமாக அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தது. படகில் வீற்றிருந்தவர்கள் நன்றாகத் தெரியாவிட்டாலும் வேளான் தான் அதைச் செலுத்திக் கொண்டு வருகிறான் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. படகில் இருந்த மற்ற மனிதர்களை இன்னாரென்று குழல்மொழியால் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த திசையில் பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் இராசசிம்மனின் முகத்தில் வியப்பு மலர்வதை அவள் கவனித்தாள்.

"இவ்வளவு அவசரமாக வேளான் யாரைப் படகில் ஏற்றிக் கொண்டு வருகிறான்?" என்று இராசசிம்மனிடமே கேட்டாள் குழல்மொழி.

"ஆம், அவசரம் தான். நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு முக்கியமான மனிதன் என்னைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறான். நீ சிறிது நேரம் இங்கேயே இரு. அவனைச் சந்தித்துப் பேசிவிட்டு வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே மேல்மாடத்திலிருந்து இறங்கிச் சென்று விட்டான் இராசசிம்மன். அவன் நின்று பதில் சொல்லாமல் வேகமாகச் செல்வதைக் கண்டு திகைத்துப் போய் நின்றாள் குழல்மொழி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.27. சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்
நிலவறையிலிருந்து ஆள் தப்பித்துக் கொண்டு மேலே ஓடும் காலடியோசை கேட்டதும் நாராயணன் சேந்தனுக்கு இதயத் துடிப்பே நின்று விடும் போலிருந்தது. அப்படியே இருட்டில் தாவிப் பாய்ந்து ஓடிப் பிடிக்கலாமென்றால் காலடியில் அவனைச் சுற்றிக் கூர்மையான வாள்கள் சிதறிக் கிடந்தன.

அவற்றை மிதியாதபடி பதறாமல் கீழே குனிந்து உட்கார்ந்து கொண்டு கை விரல்களை அறுத்து விடாமல் சிதறியிருந்த வாள்களை ஒதுக்கி வழி உண்டாக்கிக் கொண்டான். பின்பு தப்பிச் சென்றவனைத் துரத்திக் கொண்டு படியேறி ஓடினான். ஆனால் தப்பித்தவன் போகிற போக்கில் தாழிட்டுக் கொண்டு போயிருப்பதைக் கண்டதும் சேந்தனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பலங்கொண்ட மட்டும் கதவைத் தன் கைகளால் ஓங்கித் தட்டினான். நீண்ட நேரமாக அப்படித் தட்டிக் கொண்டே இருந்தான். கைகள் தான் வலித்தன. "சரிதான்! வகையாக மாட்டிக் கொண்டு விட்டேன். இந்த முரட்டுக் கதவை விடிய விடியத் தட்டினாலும் யாருக்குக் கேட்கப் போகிறது? இந்த இருட்டுக் கிடங்கில் பட்டினி கிடந்து சாக வேண்டுமென்று தான் என் தலையில் எழுதியிருக்கிறதோ என்னவோ?" என்று கதவடியில் கன்னத்தில் கையை ஊன்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டான். காலையில் இடையாற்று மங்கலத்திலிருந்து கோட்டாற்றுக்கும், கோட்டாற்றிலிருந்து தளபதியை அலைக்கழிப்பதற்காகத் திருநந்திக்கரைக்கும் அலைந்து களைத்திருந்த நாராயணன் சேந்தன் உட்கார்ந்தவாறே தூங்கத் தொடங்கி விட்டான்.

மறுபடியும் அவன் கண் விழித்த போது அவனுக்காகவே திறந்து வைக்கப்பட்டிருந்தது போல் நிலவறையின் மேற்கதவு திறந்திருந்தது. கதவுக்கு அப்பால் மந்திராலோசனை மண்டபத்தில் யாரோ பெண்களின் சிரிப்பொலியும் பேச்சொலியும் கேட்டன. அதற்குள் ஒரு குட்டித் தூக்கம் தூங்கி முடித்திருந்த சேந்தன் மேலே எழுந்து வந்தான். 'யார் கதவைத் திறந்து வைத்திருக்கக் கூடும்?' என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது. 'தான் கைவலிக்கத் தட்டியபோது ஒருவரும் திறக்கவில்லை. அலுப்பினால் கண் அயர்ந்து விட்ட போது யாரோ பூனை போல் மெல்ல வந்து கதவைத் திறந்திருக்கிறார்கள். திறந்ததுதான் திறந்தார்கள், கீழே கதவருகில் உட்கார்ந்து கொண்டிருந்த என்னைக் கவனிக்கவில்லையே!' என்று அவன் நினைத்தான்.

உள்ளிருந்து வெளியேறி மேலே வந்த பின் கதவை முன் போலவே அடைத்துத் தாழிட்டு விட்டு மந்திராலோசனை மண்டபத்தில் கும்மாளமடிக்கும் அந்தப் பெண்கள் யார் என்று பார்க்க வந்தான்.

தளபதியின் தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி, மகாராணியாரின் உடன் கூட்டத் தோழிகளைச் சேர்ந்த இன்னும் இரண்டு மூன்று பெண்கள் - எல்லோரும் அங்கு உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். விளையாட்டினிடையே இலக்கியச் சர்ச்சையும் நடந்து கொண்டிருந்தது.

"ஏண்டி, விலாசினி? தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரா? அல்லது அதங்கோட்டாசிரியரின் மாணவரா?" என்றாள் பகவதி.

"சதுரங்க விளையாட்டினிடையே இந்தச் சந்தேகம் உனக்கு எங்கிருந்து முளைத்தது...?" விலாசினி சிரித்துக் கொண்டே கேட்டாள்.

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த சமயத்திலா நாராயணன் சேந்தன் அங்கே தலையைக் காட்ட வேண்டும்?

"ஆ! அதோ, அகத்தியரே நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவரையே நேரில் கேட்டு விடலாம்" என்று நாராயணன் சேந்தன் குட்டையாயிருப்பதைச் சொல்லாமல் சொல்லிக் கேலி செய்தாள் ஒருத்தி.

"ஓ! இந்த அகத்தியரா? இவருக்கு உளவறியும் வேலையைத் தவிர எதுவும் தெரியாதே. பாவம்! இந்த உலகத்தில் எல்லோருடைய உடம்பும் மேல் நோக்கி வளருகின்றன என்றால் இவருடைய உடம்பு மட்டும் கீழ் நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது" என்று சேந்தன் காதில் கேட்டு விடாமல் மெல்லச் சொல்லிச் சிரித்தாள் ஒருத்தி.

"நிலவறைக் கதவைத் திறந்தது நீங்கள் தானா?" என்று கடுமையான குரலில் அவர்களைக் கேட்டான் சேந்தன்.

விளையாட்டை நிறுத்திவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அந்தப் பெண்கள். அவர்கள் பதில் சொல்லாமலிருந்தது அவனுடைய கடுமையை அதிகப்படுத்தியது.

"பெண்களாகச் சேர்ந்து கொண்டு விளையாட்டாக ஏதாவது செய்து விடுகிறீர்கள். அதனால் பெரிய பெரிய காரியங்கள் கெட்டுப் போய்விடுகின்றன."

"ஐயா! ஒற்றர் பெருமானே! உமக்குக் கோடி வணக்கங்கள் செலுத்துகிறேன். எங்களிடம் வம்புக்கு வராமல் போய்ச் சேருங்கள். உள்ளே இருந்து யாரோ கதவைத் தட்டுவது போலிருந்தது. 'திறக்கலாமா, வேண்டாமா?' என்று நீண்ட நேரம் யோசித்தோம். கடைசியில் நாங்கள் திறந்த போது யாரும் உள்ளேயிருந்து வெளியில் வரவில்லை. நிலவறைக்குள் எட்டிப் பார்த்ததில் படியருகில் யாரோ உட்கார்ந்திருப்பது போல் தெரிந்தது. இரண்டு மூன்று முறை 'யார்? யார்?' என்று இரைந்து கேட்டுப் பார்த்தோம். பதில் இல்லை. நிலவறைக்குள் இருட்டாக இருந்ததனால் எங்களுக்குப் பயமாக இருந்தது. பேசாமல் திரும்பி வந்துவிட்டோம்" என்று பகவதி அவனுக்குப் பதில் கூறினாள்.

சேந்தன் மகாமண்டலேசுவரரைச் சந்திப்பதற்காக அங்கிருந்து சென்றான். அவன் மனத்தில் சந்தேகங்களும், வயிற்றில் பசியும், உடம்பில் அலுப்பும் வளர்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு இடையே வேறொரு வகைப் பயமும் அவனுக்கு ஏற்பட்டது. 'முன்கோபக்காரனும், செல்வாக்கு மிகுந்தவனுமான தளபதி வல்லாளதேவனிடம் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டேனே, அதன் விளைவு என்ன ஆகுமோ?' என்று உள்ளூர அஞ்சிக் கொண்டிருந்தான்.

'திருநந்திக்கரையிலிருந்து அரண்மனைக்கு வந்து சேருவதற்குத் தளபதிக்குக் குதிரை கிடைக்கப் போவதில்லை. தளபதி கோட்டாறிலுள்ள படைச்சாலைக்குச் சொல்லி அனுப்பிக் குதிரை வரவழைக்க வேண்டும். அல்லது கடல் துறையிலிருந்து மிளகுப் பொதி ஏற்றிவிட்டுத் திரும்பும் வணிகப் பெருமக்களின் வாகனங்களில் ஏதாவதொன்றில் இடம்பிடித்து வரவேண்டும். இந்த இரண்டு வழியுமே சாத்தியப் படாவிட்டால் இன்றிரவிற்குள் இங்கே வந்து சேர முடியாது.' இந்த ஒரே ஒரு சமாதானம் தான் சேந்தனுக்கு தற்காலிகமான தன்னம்பிக்கையைக் கொடுத்தது.

'இன்னும் கூற்றத் தலைவர் கூட்டம் நடந்து கொண்டுதான் இருக்கும். அதற்குள் எங்கே முடிந்திருக்கப் போகிறது?' என்ற எண்ணத்தினால் மகாமண்டலேசுவரர் பட்டி மண்டபத்தில்தான் இருப்பாரென்று கருதிக் கொண்டு அங்கே சென்றான். ஆனால் பட்டிமண்டபத்தில் யாருமில்லை. கூட்டமும் முடிந்து அவரவர்கள் தங்கும் இடங்களுக்குப் போயிருந்தார்கள். சேந்தனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

பட்டிமண்டபத்திலிருந்து அவன் திரும்பிய போது பின்புறம் தோள்பட்டையின் வலதுபுறம் ஒரு கை அழுத்தித் தொட்டது. நாராயணன் சேந்தன் அலறிவிட இருந்தான். தன்னைச் சமாளித்துக் கொண்டு பயத்தை அடக்கியவனாகத் திரும்பிப் பார்த்தான். பட்டிமண்டபத்துத் தூண் ஒன்றின் மறைவிலிருந்து ஆபத்துதவிகளின் படையணியின் தலைவனான மகரநெடுங்குழைக்காதன் சேந்தனுக்கு முன்னால் வந்து நின்றான். அவன் அப்போதிருந்த நிலையைப் பார்த்த போது சேந்தனுக்கு வியப்பு மட்டும் ஏற்படவில்லை. பயம் தான் அதிகமாக ஏற்பட்டது. மகர நெடுங்குழைக்காதனின் கண்கள் நெருப்புத் துண்டங்களைப் போலச் சிவந்திருந்தன. அங்கியும், மேலாடையும், அங்கங்கே தூசியும் அழுக்கும் பட்டுக் கிழிந்திருந்தன. முகத்திலும் கை கால்களிலும் சிராய்த்து இரத்தக் கசிவு தெரிந்தது. அந்த நிலையில் நாராயணன் சேந்தனைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தான். அவன் சிரிக்க வேண்டுமென்று எதையோ நினைத்துக் கொண்டு சிரித்தது போலிருந்தது. பயங்கரமாகவும் இருந்தது அந்தச் சிரிப்பு.

"என்ன ஐயா? இங்கே பட்டிமண்டபத்துத் தூண்மறைவில் நின்று கொண்டு என்ன செய்கிறீர்?" என்று கேட்டான் சேந்தன். குழைக்காதன் சேந்தனுக்குப் பதில் சொல்லாமல் அவன் முகத்தை உற்றுப் பார்த்து மெல்லச் சிரித்தான். இயற்கையாகச் சிரிக்கிற சிரிப்பாக இல்லை அது.

"ஆபத்துதவிகளின் செயல் மட்டும் தான் கடுமையானதென்று இதுவரையில் கேள்விப்பட்டிருந்தேன். அவர்களுடைய பார்வையும், சிரிப்பும் கூட அல்லவா கடுமையாக இருக்கின்றன!"

சேந்தன் அதோடு பேச்சை விடவில்லை. மேலும் தொடர்ந்தான். "உங்கள் திருமேனியில் தென்படும் விழுப்புண் (காயங்கள்)களையும், கிழிசல்களையும் பார்த்தால் யாருடனோ போரிட்டுவிட்டு வந்திருப்பது போல் தோன்றுகிறதே?"

"அப்பனே! என் உடம்பைப் பற்றிச் சொல்ல வந்து விட்டாய். உன்னையே கொஞ்சம் நிதானமாகப் பார்த்துக் கொள். நீ எப்படியிருக்கிறாய் என்பது தெரியவரும்." எதையோ மறைத்துக் கொண்டு சிரிக்கிறாற் போன்ற அந்த மர்மச் சிரிப்பு, அது ஆபத்துதவிகள் படைத்தலைவனுக்கே உரியது போலும். பேச்சின் இறுதியில் கடைசி வார்த்தை அவன் வாயிலிருந்து வெளிவந்து முடிந்த பின் அந்தச் சிரிப்பு மலர்ந்தது. குழைக்காதன் கூறிய பின்புதான் சேந்தன் தன் தோற்றத்தைத் தானே பார்த்துக் கொண்டான். ஏறக்குறைய தன் நிலையும் அதே போல் இருந்ததைச் சேந்தன் அப்போதுதான் உணர்ந்தான். 'அடடே! இந்தத் தோற்றத்தோடு மகாமண்டலேசுவரரைப் பார்ப்பதற்கு வேறு கிளம்பி விட்டேனே! நல்லவேளை, இவன் இதைக் கண்டு சொல்லியிராவிட்டால் இப்படியே போய் அவருக்கு முன்னால் நின்றிருப்பேன்' என்று எண்ணியவனாய் மகரநெடுங்குழைக்காதனிடம் விடைபெற்றுக் கொண்டு உடைமாற்றி வருவதற்குக் கிளம்பினான்.

நாராயணன் சேந்தனின் தலைமறைந்ததோ இல்லையோ, அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல் பட்டிமண்டபத்துக்குள் நுழைந்து மந்திராலோசனைக் கூட்டம் நடந்த இடத்தில் எதையோ தேடினான் ஆபத்துதவிகள் தலைவன். அங்கே அவன் தேடிய பொருள் எதுவோ அது கைக்குக் கிடைப்பதற்கு அதிக நேரம் ஆகவில்லை. அவன் எடுத்துக் கொண்டு போவதற்காகவே அங்கு வைக்கப்பட்டிருந்தது போல் சுலபமாகக் கிடைத்துவிட்டது.

பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் மந்திராலோசனைக் கூட்டம் நடந்த போது மகாமண்டலேசுவரர் எந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாரோ, அதன் கீழே தான் அந்தப் பொருள் அவனுக்குக் கிடைத்தது. அது வேறொன்றுமில்லை, ஆபத்துதவிகளின் முத்திரைச் சின்னம் பொறித்த ஒரு பட்டுத்துணி. கீழே குனிந்து எடுப்பதற்கு முன் அதைத் தான் எடுப்பதை எங்கிருந்தாவது யாராவது பார்க்கிறார்களா என்று அவன் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டிருக்கும் போலும்! ஒரு வேளை தன்னைச் சோதிப்பதற்காகத்தான் அதைத் தேடி வருவதைப் பார்ப்பதற்காகவே அவ்வளவு சுலபமாகப் போட்டு வைத்திருக்கலாமே என்று அவன் பயந்திருக்க வேண்டும்.

அதனால் தான் அவ்வளவு தயக்கத்துடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டு அவன் அதை எடுத்தான். ஆனால் தன்னுடைய நிதானமும் முன்யோசனையும் தன்னை ஏமாற்றிவிட்டன என்பதை அந்தத் துணியை எடுத்து வழக்கம் போல் இடுப்பில் அணிந்து தலை நிமிர்ந்த போது அவன் தெரிந்து கொண்டான்.

மேலேயிருந்து இரண்டு பெரிய குடை மல்லிகைப் பூக்கள் அவனுடைய முன் தலையில் உதிர்ந்து நெற்றியில் நழுவி விழுந்தன. அந்தப்புரத்து நங்கையர்கள் தங்கள் அளக பாரத்திற்குப் பூசும் வாசனைத் தைலத்தின் மணம் அந்தப் பூவின் மணத்தில் விரவியிருந்தது. மகரநெடுங்குழைக்காதன் திடுக்கிட்டு மேலே நிமிர்ந்து பார்த்தான்.

மேலே அந்த இடத்துக்கு நேரே அந்தப்புரத்தின் மாடத்தில் ஒரு பெண் முகம் விருட்டென்று திரும்பி மறைந்தது. திரும்பும் போது கருநாகம் போன்ற அந்தப் பெண்ணின் சடை சுழன்று அதிலிருந்து மல்லிகைப் பூக்களில் மேலும் சில அவன் மேல் உதிர்ந்தன. இளம் பெண் முகமாகத்தான் தெரிந்தது. திரும்பிய வேகத்தில் அவனால் முகத்தை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக் கொள்ளுவதற்கு முடியவில்லை. 'எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு நான்கு புறமும் பார்த்தேன்! மேலே பார்க்கத் தவறி விட்டேனே!' என்று உதட்டைக் கடித்துக் கொண்டான் மகரநெடுங்குழைக்காதன். சிறிது நேரம் ஏதோ சிந்தித்துக் கொண்டு அங்கேயே நின்றான். கீழே கிடந்த அந்தக் குடை மல்லிகைப் பூக்களை ஒன்று விடாமல் பொறுக்கித் தன் அங்கியில் மறைத்து வைத்துக் கொண்டு புறப்பட்டான்.

அவன் புறப்பட்டுச் சென்றதும் அங்கு மற்றோர் ஆச்சரியம் நிகழ்ந்தது. உடை மாற்றிக் கொண்டு மகாமண்டலேசுவரரைச் சந்திக்கச் சென்று விட்டதாக நாம் யாரைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறோமோ அவன் பட்டிமண்டபத்து மேல் கோடித் தூண் ஒன்றின் மறைவிலிருந்து வெளிவந்தான். உண்மையில் நாராயணன் சேந்தன் மகரநெடுங்குழைக்காதனிடம் விடைபெற்றுக் கொண்டு போவது போல் போக்குக் காட்டினானே ஒழிய அங்கிருந்து போய் விடவில்லை. பட்டிமண்டபத்தில் ஆபத்துதவிகள் தலைவன் அலங்கோலமான நிலையில் தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே சேந்தனைப் போல் அறிவுக் கூர்மையுள்ள ஒற்றனுக்குச் சந்தேகங்கள் ஏற்படாமலிருக்குமா? தெளிவற்ற பல குழப்பமான எண்ணங்களும், சந்தேகங்களும் அவனுக்கு உண்டாயின. 'ஆபத்துதவிகள் தலைவன் பட்டிமண்டபத்தில் தனியாக என்ன செய்கிறான்?' என்பதைப் பார்த்து வைத்துக் கொண்டால் பின்பு மகாமண்டலேசுவரர் கேட்கும் போது கூறுவதற்கு வசதியாக இருக்குமென்று தான் அவன் மறைந்திருந்து அதைக் கண்காணித்தான்.

அதன் பின் சேந்தன் பட்டிமண்டபத்திலிருந்து வெளியேறிப் பராந்தகப் பெரு வாயிலுக்கு வந்து நின்றான். பராந்தகப் பெரு வாயிலிலிருந்து மேற்கு நோக்கி இரண்டாங் கோட்டை வாசல் திருச்சுற்றினுள்ளே சென்றால் அரண்மனை விருந்தினர் மாளிகைகள் பூந்தோட்டத்துக்கு நடுவே இருந்தன. அந்த மாளிகையில் ஒன்றில் தான் மகாமண்டலேசுவரர் தங்கியிருக்க வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும்.

கோட்டைக்குள் யாரோ குதிரையில் வரும் ஒலி கேட்டு சேந்தன் பராந்தகப் பெருவாயிலின் முகப்பில் தயங்கி நின்றான். வருவது யார் என்று பார்த்து விட்டு அதன் பின் விருந்தினர் மாளிகைக்குப் போகலாமென்பது அவன் எண்ணம். ஒரே குதிரையில் இரண்டு பேர்கள் ஏறிக் கொண்டு வருவதைப் பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. முன்னால் உட்கார்ந்திருந்தவன் இன்னாரென்று தெரிந்து கொள்ள முடியவில்லை. தோற்றத்திலுள்ள நிலையைக் கொண்டு பார்த்தால் ஏதோ அரசாங்கத் தூதன் மாதிரி இருந்தது. குதிரை அருகில் வந்ததும் பின்னால் உட்கார்ந்திருந்த இரண்டாவது ஆளின் முகம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் பயத்தோடு சரேலென்று பூந்தோட்டத்தின் அடர்ந்த பசுமைக்குள் புகுந்து தன்னை மறைத்துக் கொண்டான் சேந்தன். கோட்டைக்குள் வந்த குதிரையில் வீற்றிருந்த இரண்டாவது ஆள் வல்லாளதேவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.28. நள்ளிரவில் நால்வர்

முன்சிறை அறக்கோட்டத்தின் வாயிலில் எதிர்பாராத விதமாகக் கரவந்தபுரத்துத் தூதுவனைச் சந்திக்க நேர்ந்தது இரண்டு வகையில் நன்மையாக முடிந்தது தளபதி வல்லாளதேவனுக்கு. ஒன்று அந்தத் தூதுவன் கொண்டு வந்திருந்த அதிமுக்கியமான அவசரச் செய்தியைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றொரு நன்மை, 'அரண்மனைக்குப் போவதற்குக் குதிரையில்லையே?' என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் தூதுவனுடைய குதிரையிலேயே இருவரும் போய்விடலாம். பசி தீர அறக்கோட்டத்தில் சாப்பிட்டுவிட்டுப் பின்பு அரண்மனைக்குப் புறப்படலாம் என்று தான் முதலில் தளபதி நினைத்திருந்தான். ஆனால் தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தியின் அவசரத்தை அறிந்த போது பசி, களைப்பு எதுவுமே அவனுக்கு மறந்து போய்விட்டன. தூதுவனின் குதிரையிலேயே பின்புறமாகத் தாவி ஏறி உட்கார்ந்து கொண்டு புறப்பட்டு விட்டான்.

"மகா சேனாதிபதி எங்களுடைய அறக்கோட்டத்தையும், எங்களையும் இப்படி ஒரேயடியாக அவமதித்து விட்டுப் போவது கொஞ்சம் கூட நன்றாயில்லை. இன்னும் ஓரிரண்டு நாழிகைகள் தங்கி உணவருந்தி எங்கள் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு போகலாமே!" என்று முன்சிறை அறக்கோட்டத்திலுள்ள அண்டராதித்த வைணவனும் அவன் மனைவி கோதையும் மரியாதையாக வேண்டிக் கொண்டதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை.

பதில் சொல்லாமலே அவன் குதிரையை விட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்து, 'தளபதிக்குத் தம் மேல் ஏதோ கோபம் போலிருக்கிறது?' என்று எண்ணிக் கொண்டு மேலும் வற்புறுத்திச் சொல்லாமல் பயந்து போய் நின்று விட்டனர் வைணவனும் அவன் மனைவி கோதையும்.

"தூதுவனே! நீ கொண்டு வந்திருக்கும் செய்தி மட்டும் மெய்யாக இருக்குமானால் இப்போதுள்ள சூழ்நிலையில் நம்மைப் போல் பரிதாபப்படத் தக்கவர்கள் வேறு யாருமில்லை. நல்ல சமயத்தில் நீ வந்திருக்கிறாய். இப்போது அரண்மனையில் மகாமண்டலேசுவரர் உள்படக் கூற்றத் தலைவர்கள் எல்லோரும் இருப்பார்கள். நாம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி எல்லோரிடமும் கலந்து பேசிவிடலாம். குதிரையை மட்டும் இன்னும் சிறிது வேகமாகவே செலுத்திக் கொண்டு போ" என்று தூதுவனைத் துரிதப்படுத்தினான் தளபதி. தூதுவனும் தன்னால் இயன்ற அளவு குதிரையை வேகமாகச் செலுத்திக் கொண்டு போனான்.

பட்டி மண்டபத்தில் நடந்த கூற்றத் தலைவர்களின் கூட்டத்தில் நம்பிக்கையும் ஒளியும் நிறைந்த எதிர்காலத் தீர்மானங்களை உருவாக்கியிருந்தார்கள்.

அன்று கூற்றத் தலைவர்களுக்கும் மகாமண்டலேசுவரருக்கும் முன்னால் தன் நிலையைப் பற்றி விவரிக்கும் போது மகாராணி வானவன்மாதேவிக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது.

"மகாமன்னர் இறந்த பிறகு மகாமண்டலேசுவரரும் நீங்களும் எனக்குப் பெரும் பதவியையும் மரியாதையையும் அளித்திருக்கிறீர்கள். ஆனால் இந்த அரசபோக ஆடம்பரங்களை நீண்ட நாட்கள் அனுபவிக்கும் பொறுமை எனக்கு இல்லை. என் அருமைப் புதல்வன் எங்கே இருக்கிறானென்றே நான் அறிய முடியவில்லை. என்னைச் சுற்றிலும் துன்பங்களையும், சூழ்ச்சிகளையும் காண்கிறேன். எனது பிறந்தகமாகிய சேர நாட்டுக்காவது சென்று அமைதியாக வாழ்வேன். அதையும் செய்ய விடாமல் உங்கள் அன்பு என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மகாமன்னரையும் இழந்து யாருக்காக இங்கு வாழ வேண்டும்? இப்படி நான் வாழ்வது கூடச் சிலருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. என்னையே அழித்து விடுவதற்குக் கூடச் சூழ்ச்சிகள் நடக்கின்றன."

இப்படி மகாராணி வானவன்மாதேவியார் பேசிக் கொண்டு வரும்போதே, "மகாராணியார் அப்படி அஞ்சக் கூடாது. தென்பாண்டி நாட்டு வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், கைகளில் வலிமையும், வாளில் ஒளியும் இந்த விநாடி வரை குன்றிவிடவில்லை. மகாராணியாரை அழிக்க எந்தத் தீய சக்தியாலும் முடியாது" என்று ஆவேசம் பொங்கும் குரலில் உறுதியாகக் கூறினார் இடையாற்று மங்கலம் நம்பி. அதை ஆமோதிப்பது போல் அங்கிருந்த மற்றவர்களும் சிரக்கம்பம் செய்தனர்.

"அது சரிதான்! குமார பாண்டியர் எங்கேயிருக்கிறார் என்றறிவதற்கு நாமாகவே ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா? இப்படி வாளாவிருந்தால் அவரைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள முடியும்?" என்று மகாமண்டலேசுவரர் பக்கமாகத் திரும்பி ஒரு கேள்வியைக் கேட்டார் சுழற்கால் மாறனார்.

மகாமண்டலேசுவரர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பே, மற்றவர்களும் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தனர்.

"இளைய சக்கரவர்த்தியை உடனே அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டாமா?" என்று கேட்டார் ஒருவர்.

"மகாராணியாரின் கவலைகள் குறைந்து நிம்மதியும், அமைதியும் உண்டாக வேண்டுமானால் குமார பாண்டியர் எங்கிருந்தாலும் தேடிக் கொண்டு வந்து முடிசூட்டி விடுவதே முறை" என்றார் மற்றொருவர்.

"எல்லோரும் சற்று அமைதியாக இருங்கள். என்னுடைய கருத்தை விரிவாகச் சொல்லி விடுகிறேன். இதுவரை இந்த எண்ணங்கள் எல்லாம் எனக்குத் தோன்றாமல் போய்விடவில்லை. அல்லது தோன்றியும் எவற்றையும் செயல்படுத்தக் கூடாது என்பதற்காக நான் பேசாமல் இருக்கவில்லை. என்னுடைய ஒவ்வொரு தயக்கத்துக்கும் ஒரு முக்கியமான காரணம் இருக்கும். இளவரசர் எங்கேயிருக்கிறார் என்று தேடுவதோ, தேடிக் கண்டுபிடிப்பதோ எனக்குக் கடினமான காரியமில்லை. நினைத்தால் இப்போதே கொண்டு வந்து நிறுத்தி விட முடியும் என்னால். ஆனால் நான் சூழ்நிலையைப் பற்றிச் சிந்திக்கிறேன். தென்பாண்டி நாட்டு அரசியலில் ஒழுங்கையும் அமைதியையும் ஏற்படுத்தி விட்டால் நமக்கு இருக்கும் பிற பகைகள் நீங்கும். அதன்பின் குமார பாண்டியருக்கு முடிசூட்டலாமென்பது என் எண்ணம்" என்று அவர் கூறிய சமாதானத்தைக் கேட்ட போது மற்றவர்களுக்கு அவரை எதிர்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முகத்தில் ஈயாடாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

"அலை ஓய்ந்து நீராட முடியாது. பகைவர்களை எண்ணிக் கொண்டே எவ்வளவு நாட்களுக்குப் பேசாமல் இருக்க முடியும்? தவிர முடிசூட்டுவதற்கும் இளவரசரைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே அழைத்து வருவதற்கும் என்ன சம்பந்தம்? முடி சூட்டுவதைப் பின்னால் வைத்துக் கொண்டாலும், இளவரசர் இப்போதே இங்கு வந்து இருக்கலாமே! அவ்வாறு இருப்பது மகாராணியாருக்கும் ஆறுதல் அளிக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று துணிந்து இடையாற்று மங்கலம் நம்பியை நோக்கி நேருக்கு நேர் கூறினார், அதுவரை ஒன்றும் பேசாமல் அமைதியாக வீற்றிருந்த அதங்கோட்டாசிரியர்.

"வடதிசை மன்னர்களின் படையெடுப்பு இந்தச் சமயத்தில் நேரலாமென்று மகாமண்டலேசுவரர் எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. குமார பாண்டியர் இங்கு வந்திருந்தால் படையெடுப்பைச் சமாளிக்க நமக்கு உதவி கிடைக்கும். குமார பாண்டியரின் தாய்வழி மாமன்மார்களும், மகாராணியாரின் பிறந்த வீட்டுச் சகோதரரும் ஆகிய சேரர் படை உதவியை நாம் பெறலாம். சேர வேந்தரிடம் அவர் படை உதவி செய்வதற்கு மறுக்க இயலாதபடி அவருடைய மருமகராகிய குமார பாண்டியரையே தூதனுப்பலாம். இதையெல்லாம் மகாமண்டலேசுவரர் நன்றாகச் சிந்தித்திருந்தால் இளவரசரைத் தேடி உடனே இங்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கலாமே!" என்று பவழக் கனிவாயரும் அதங்கோட்டாசிரியரோடு சேர்ந்து கொண்டார்.

பேசுவதற்கு அஞ்சி உட்கார்ந்திருந்த கூற்றத் தலைவர்களும் சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராக அதே கருத்தை ஆதரித்துப் பேசத் தலைப்பட்டனர். மகாராணியாரின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் என்பதை இடையாற்று மங்கலம் நம்பி குறிப்பாகப் புரிந்து கொண்டார். பல்லாண்டுகளாக நிமிர்ந்து நின்று பிடிவாதத்தாலும், அறிவுத் திறனாலும், தம் எண்ணமே எல்லாருடைய எண்ணமாகவும், தம் சொல்லே எல்லோருடைய சொல்லாகவும், தம் செயலே எல்லோருடைய செயலாகவும் - வெற்றி பெற்று வந்த அவருடைய அரசியல் வாழ்வில் முதல் முதலாக ஒரு வளைவு ஏற்பட்டது. மற்றவர்களை மாற்றி அவர்களைத் தம் வழிக்குக் கட்டுப்படுத்தும் சாமர்த்தியமான கலையில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அவர் முதன் முதலாக மற்றவர்களுக்காக மாறிக் கட்டுப்படும் நிலையை அடைந்தார். எதற்கும் எவராலும் அசைந்து விட முடியாமல் கல்லாய் முற்றிப் போயிருந்த அந்த உள்ளத்தில் சற்றே தளர்ச்சி உண்டாயிற்று. ஆனால் அந்தத் தளர்ச்சி வெளிப்பட்டு விடாமல் மிகத் தந்திரமாக மறைத்துக் கொண்டார் அவர். ஒரு நளினமான சிரிப்பினால் மட்டுமே அதை அவரால் மறைக்க முடிந்தது.

"நல்லது! இன்றைய தினம் உங்கள் எல்லோருடைய கருத்தையும் குறிப்பாகவும், வெளிப்படையாகவும், தெளிவாக மறைக்காமல் என்னிடம் கூறிவிட்டீர்கள். நான் ஒப்புக் கொள்கிறேன். இன்னும் நான்கு நாட்களுக்குள் குமார பாண்டியரை இங்கே கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன்."

மகாமண்டலேசுவரருடைய இந்தப் பேச்சில் அதங்கோட்டாசிரியர் மறுபடியும் குறுக்கிட்டார்.

"மகாமண்டலேசுவரரை யாரும் வற்புறுத்தவோ, அவசரப்படுத்தவோ விரும்பவில்லை. நான்கு நாட்களில் தேடிக் கொண்டு வர வேண்டுமென்று அவசரப்பட்டுத் துன்பமுற வேண்டாம். வேண்டிய நாட்களை எடுத்துக் கொண்டு பதறாமல் தேடிப் பார்க்கலாமே!" என்றார் ஆசிரியர் பிரான்.

"தேவையில்லை! நான்கு நாட்களே அதிகம். விரும்பினால் நான்கு நாழிகைக்குள் இளவரசரை அழைத்து வர என்னால் முடியும்?" என்று முகத்தில் அடித்தாற் போல் அதங்கோட்டாசிரியருக்குப் பதில் சொல்லிவிட்டார் இடையாற்றும் மங்கலம் நம்பி.

"முடிந்தால் செய்யுங்கள்!" என்று படித்தவருக்கே உரிய அடக்கத்தோடு பேச்சை முடித்து விட்டார் ஆசிரியர். 'ஏனடா இந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தோம்' என்று ஆகிவிட்டது அவருக்கு. தம் மேல் மகாமண்டலேசுவரருக்கு உள்ளூரச் சிறிது கோபம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவருடைய பேச்சிலிருந்தே அதங்கோட்டாசிரியர் புரிந்து கொண்டார்.

இளவரசர் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டதும் மற்றொரு கூற்றத் தலைவர் கூட்டம் நடத்துவதென்றும், அதில் மற்ற விஷயங்களைப் பேசி முடிவு செய்து கொள்ளுவதென்றும் தீர்மானித்த பின் அன்றையக் கூட்டம் அதோடு முடிந்து விட்டது.

பட்டி மண்டபத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது நாராயணன் சேந்தன் வந்ததும், மகாமண்டலேசுவரர் அவனை இரகசியமாக நிலவறைக்கு அனுப்பியதும் நேயர்களுக்கு நினைவிருக்கலாம். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் அவரவர்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதிகளுக்குச் சென்று விட்டனர். மகாமண்டலேசுவரர் மட்டும் தாம் நிலவறைக்கு அனுப்பியிருந்த சேந்தன் திரும்பி வருவானென்று எதிர்பார்த்துச் சிறிது நேரம் அங்கே தாமதித்தார். இடையே மற்றொரு காரியத்தையும் அங்கிருந்தவாறே முடித்துக் கொண்டார். அவர் அங்கே சேந்தனுக்காகத் தாமதித்துக் கொண்டு நின்ற போது அந்தப் பட்டி மண்டபத்தின் மேலே இருந்த அந்தப்புரத்து மடத்தில் புவன மோகினி என்ற வண்ண மகளின் உருவம் தெரிந்தது. புவன மோகினி அந்த அரண்மனையில் வண்ண மகளாகப் பணி புரிபவள். வண்ண மகளின் வேலை அந்தப்புரத்திலும், கன்னி மாடத்திலும் உள்ள அரச குடும்பத்துப் பெண்களுக்கு அலங்காரம் செய்வதாகும். மற்றவர்களுக்கெல்லாம் அவள் அலங்காரம் செய்து விட்டால்தான் அழகு பிறக்கும். ஆனால் அவளுக்கோ யாரும் அலங்காரம் செய்யாமலே அபூர்வமான அழகும் இளமையும் வாய்த்திருந்தன. உண்மையில் புவன மோகினி என்ற பெயருக்கு அவள் பொருத்தமானவள் தான். பின்னிவிட்ட சடை அசையப் பிறைமதி போல் மல்லிகைச் செண்டு சூடி நடந்தாளானால் பார்க்கிறவர்களின் உள்ளமெல்லாம் பறிபோக வேண்டியதுதான்.

கீழே நின்று கொண்டிருந்த மகாமண்டலேசுவரர் புவன மோகினியைக் கைதட்டிக் கூப்பிட்டார். மதிப்புக்குரிய மகாமண்டலேசுவரருடைய அழைப்புக்குப் பணிந்து கீழே இறங்கி ஓடோடி வந்தாள் புவன மோகினி.

"பெண்ணே! எனக்கு உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும். இதோ இந்த ஆசனத்தின் கீழே இந்தப் பட்டுத் துணியைப் போட்டு விட்டுப் போகிறேன். இன்னும் சிறிது நேரத்துக்குள் இதை எடுத்துச் செல்ல வரும் மனிதனை நீ மேலேயிருந்து கவனித்து வைத்துக் கொள். அப்புறம் வந்து என்னிடம் சொல்" என்று கூறிவிட்டுத் தம் இடுப்பிலிருந்து ஒரு சிறு பட்டுத் துணியை எடுத்துத் தாம் உட்கார்ந்திருந்த ஆசனத்தின் கீழே போட்டுவிட்டுச் சென்றார் மகாமண்டலேசுவரர். புவன மோகினி அவர் கூறியபடியே செய்ய ஒப்புக் கொண்டு மாடத்தில் போய் நின்று கீழே கவனித்தாள். இதே சமயத்தில் விலாசினி, பகவதி முதலியவர்கள் மந்திராலோசனை மண்டபத்துப் பக்கமாகச் சதுரங்கம் விளையாடச் சென்று விட்டதனால் புவன மோகினி அந்தப்புரத்தில் தனியாகவே இருந்தாள். அதனால் அவர் தன்னிடம் ஒப்புவித்துச் சென்றிருந்த உளவறியும் வேலையை அவள் சரியாகச் செய்ய முடிந்தது. கூடிய வரையில் தான் அங்கே நின்று கண்காணிப்பது கண்காணிக்கப் படுகிறவருக்குத் தெரியாமல் இருக்க வேண்டுமென்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் அவள் குனிந்து பார்த்த போது அவளுடைய தலையில் அணிந்திருந்த குடை மல்லிகைப் பூக்கள் அவளைக் காட்டிக் கொடுத்து விட்டன. அந்தப் பாழாய்ப் போன பூக்கள் கீழே உதிர்ந்து அவள் எண்ணத்தில் கலக்கத்தை உண்டாக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

புவன மோகினி உடனே ஓடிப்போய் இடையாற்று மங்கலம் நம்பியிடம் செய்தியைத் தெரிவித்துவிட்டு வந்திருந்தாலும் அவள் மனத்தில் பயம் ஏற்பட்டது. ஆபத்துதவிகள் தலைவனின் நெருப்புப் போன்ற விழிகளும், குரூரமான முகமும் அடிக்கடி தோன்றி அவளைப் பயமுறுத்தின. 'மகரநெடுங்குழைக்காதன் தான் அவனை மேலேயிருந்து கண்காணித்த போது தன்னைப் பார்த்திருப்பானோ?' என்ற பயத்தினால் அன்றிரவு தூக்கமே அவளை அணுகுவதற்கு மறுத்தது. பழி பாவத்துக்கு அஞ்சாதவன், ஈரமற்றவன், கல் மனமுடையவன் என்று ஆபத்துதவிகள் தலைவனைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்த செய்திகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து அவளை மிரட்டிக் கொண்டிருந்தன.

புவன மோகினி, ஆபத்துதவிகள் தலைவனை எண்ணி நடுங்கி உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் நாராயணன் சேந்தன் தளபதி வல்லாளதேவனை எண்ணி உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்தான்.

'ஐயோ! நான் தளபதியிடம் சிக்கி அடிபட வேண்டுமென்றுதான் என் தலையில் எழுதியிருக்கிறது போலும். இவ்வளவு தூரம் ஏமாற்றி திருநந்திக்கரை வரையில் இழுத்தடித்தும் எவன் குதிரையிலோ இரவல் இடம் பிடித்து அரண்மனைக்கு வந்துவிட்டானே. அவனோடு போகாமல் யாரோ ஒரு தூதுவனையும் அல்லவா அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான்? என்ன ஆகப் போகிறதோ?' என்று கவலை கொண்டு தூக்கம் இழந்தான் சேந்தன்.

அந்தப்புரத்து மேல் மாடத்திலிருந்து தன் மேல் உதிர்ந்த பூக்களை வைத்துக் கொண்டு தன்னைக் கண்காணித்த பெண் புலி யாரென்று தூக்கமில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தான் குழைக்காதன். 'முதல் முதலாகக் கூற்றத் தலைவர் கூட்டத்தில் என் பேச்சு எடுபடாமல் தோற்றுப் போய்விட்டதே!' என்று மனம் புழுங்கிக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். அன்று நள்ளிரவு வரையில் இவர்கள் நால்வரும் உறங்கவே இல்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.29. கொள்ளையோ கொள்ளை



இராசசிம்மன் அப்படி நடந்து கொண்டது குழல்மொழிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. 'அக்கரையிலிருந்து படகில் வருபவர் யாராக இருந்தால் தான் என்ன! எவ்வளவு அவசரமாக இருந்தால் தான் என்ன? அதற்காக ஒரு பெண்ணிடம் தனிமையில் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தவர் இப்படியா முகத்தை முறித்துக் கொண்டு போவது போல் திடீரென்று போவார்?' என்று எண்ணி நொந்து கொண்டாள். வந்தவர்களோடு விரைவில் பேசி முடித்து அனுப்பிவிட்டுத் திரும்பி வந்து விடுவார் என்று நிலா முற்றத்துத் திறந்த வெளியிலேயே அவள் இராசசிம்மனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரமாகியும் அவன் திரும்பி வராமற் போகவே அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. கீழே இறங்கி வந்துவிட்டாள்.

அவள் கிழே இறங்கி வந்த சமயத்தில் படகோட்டி அம்பலவன் வேளான் வசந்த மண்டபத்துப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தான். முதலில் படகில் வந்தவர்களை அழைத்துக் கொண்டு இராசசிம்மன் முன்பே வசந்த மண்டபத்தில் தான் தங்கியிருந்த இடத்துக்குப் போயிருக்க வேண்டுமென்று குழல்மொழி அனுமானித்து உணர்ந்து கொண்டாள்.

'வந்திருப்பவர்கள் யார்? என்ன காரியத்துக்காக வந்திருக்கிறார்கள்?' என்று அவனிடம் கேட்கலாம் என்று எண்ணி வேளான் வருவதை எதிர்பார்த்து நின்றாள் குழல்மொழி.

சிறிது நேரத்தில் வசந்த மண்டபத்திலிருந்து மாளிகைக்கு வரும் ஒற்றையடிப் பாதையில் வேளான் வருவது தெரிந்தது. அவன் தான் நின்று கொண்டிருக்கிற இடத்துக்கு வந்து சேருகிற வரை ஆவலை அடக்கிக் கொள்ளும் பொறுமை கூட அவளுக்கு இல்லை. மான் துள்ளி ஓடுவது போல் வேகமாக ஓடிச் சென்று அவனை எதிர்கொண்டு, "வேளான்! வந்திருப்பவர்கள் யார்? எதற்காக இவ்வளவு அவசரமாய் அடிகளைச் சந்திக்க வந்திருக்கிறார்கள்?" என்று அவனை நடுவழியிலேயே மறித்துக் கொண்டு கேட்டாள். வேளான் சிறிது தயங்கி நின்று விட்டுப் பின்பு கூறலானான். "அம்மா! அவர்கள் இன்னாரென்பதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் அக்கரையிலிருந்து வசந்த மண்டபம் வரை என்னுடன் வந்தார்கள் என்று பெயரே ஒழிய என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 'இந்தத் தீவில் மகாமண்டலேசுவரரின் விருந்தினராக ஒரு துறவி வந்து தங்கியிருக்கிறாரே, அவரை நாங்கள் சந்திக்க வேண்டும்' என்று சுருக்கமாக என்னிடம் கூறினார்கள். ஆனால் வந்திருப்பவர்களுடைய பேச்சையும் நடையுடை பாவனைகளையும் கூர்ந்து கவனித்தால் நம்முடைய முத்தமிழ் நாட்டின் எந்தப் பகுதியையும் சேர்ந்தவர்களாகத் தெரியவே இல்லை. துறவிக்கு அவர்கள் மிகவும் வேண்டியவர்கள் போலிருக்கிறது. எல்லோருடனும் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து ஏதோ இரகசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். வேறு யாரையும் தப்பித் தவறிக் கூட அந்தப் பக்கம் விட்டுவிடக் கூடாதென்று எனக்குக் கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்."

வேளானுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த குழல்மொழி, "என்னைக் கூடவா உள்ளே விடக்கூடாதென்று உத்தரவு?" என்று சிரித்துக் கொண்டே வேடிக்கையாகக் கேட்டாள். "ஆம்! உங்களையும் தான் விடக் கூடாதென்றிருக்கிறார்" என்று வேளான் சொல்லியதும், அவளுக்கு உச்சந்தலையில் ஓங்கி அடித்த மாதிரி இருந்தது. ஏதோ விளையாட்டுத்தனமாகக் கேட்டாளேயன்றி அந்தப் பதிலை எதிர்பார்த்துக் கேட்கவில்லை. அந்தப் பதிலை அவனிடமிருந்து கேட்டதும் அவள் கண்களில் சினம் கொண்ட சாயல் ஒளிர்ந்தது. புருவங்கள் நெளிந்து வளைந்தன. "பரவாயில்லையே! வந்து ஒரு நாள் கழிவதற்குள் அடிகளுக்கு இவ்வளவு அதிகாரம் செய்யும் உரிமை வந்து விட்டதா?" என்று வெடுக்கென்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றாள் அவள். அவ்வளவு கோபத்திலும் இராசசிம்மன் தான் அடிகளாக நடிக்கிறான் என்ற உண்மையைப் படகோட்டியிடம் கூறத் துணிவு வரவில்லை அவளுக்கு. 'நான் கூட வரக்கூடாதாமே? அப்படி என்ன தான் இரகசியம் பேசுகிறார்களோ? வரட்டும், சொல்கிறேன்" என்று இராசசிம்மன் மேல் ஊடலும், பொய்க்கோபமும் கொண்டு அரண்மனைக்குச் சென்றுவிட்டாள் குழல்மொழி. இராசசிம்மன் வசந்த மண்டபத்துக்கு வரக்கூடாதென்று சொல்லிவிட்டதனால் இடையாறு மங்கலம் அரண்மனையில் போவதற்கு இடமோ, பேசுவதற்குத் தோழிகளோ இல்லாமலா போய்விட்டார்கள் அவளுக்கு!

அதன் பின் அன்று அவள் வசந்த மண்டபத்துப் பக்கம் வரவேயில்லை. துறவியும் அவரைச் சந்திக்க வந்திருந்தவர்களும் கூட வசந்த மண்டபத்தை விட்டு வெளியேறவில்லை. படகோட்டி அம்பலவன் வேளான் யாரையும் உள்ளே விட்டு விடாமல் பாதுகாப்பாக வசந்த மண்டபத்துப் பாதை தொடங்கும் இடத்தில் காவலுக்கு உட்கார்ந்து கொண்டான்.

இருட்டியதும் வழக்கமாகத் துறவியை உணவுக்கு அழைத்துக் கொண்டு போக வருவாள் குழல்மொழி. அன்று அதற்காகவும் அவள் வரவில்லை. "நீ போய் அவர்களைச் சாப்பிட அழைத்துக் கொண்டு வா!" என்று ஒரு தோழியை வசந்த மண்டபத்துக்கு அனுப்பினாள். அந்தத் தோழி அடிகளைத் தேடிக் கொண்டு வசந்த மண்டபத்துக்குச் செல்லும் போது இருட்டி நான்கைந்து நாழிகைகள் ஆகியிருக்கும். துறவியும் அவரைத் தேடிப் புதிதாக வந்திருப்பவர்களும் கூடியிருப்பதால் தீபாலங்காரங்களினால் ஒளி மயமாகவும், பலருடைய பேச்சுக் குரல்களால் கலகலப்பாகவும் இருக்குமென்று நினைத்துக் கொண்டு வசந்த மண்டபத்துக்கு வந்த தோழி அங்கிருந்த நிலைமையைக் கண்டு திகைத்துப் போனாள். வசந்த மண்டபம் இருண்டு கிடந்தது. அங்கே எவருடைய பேச்சுக் குரலும் கேட்கவில்லை. இருளும், தனிமையும் ஆட்சி புரிந்த அந்த இடத்தில் நிற்பதே பயமாக இருந்தது தோழிக்கு. அவள் வசந்த மண்டபத்தின் எல்லாப் பகுதிகளையும் நன்றாகச் சுற்றிப் பார்க்காமல் முகப்பிலேயே பயந்து கொண்டு திரும்பி விட்டாள். வசந்த மண்டபத்தின் பின்புறமிருந்த தோட்டத்துக்குள் சென்று பார்த்திருந்தால் ஒரு சிறிய தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் துறவியும், அவரைத் தேடி வந்தவர்களும் ஏதோ சதிக்கூட்டம் நடத்துகிறவர்களைப் போல் அந்தரங்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை அவள் பார்த்திருக்கலாம். ஆனால் அந்தத் தோழிக்குத்தான் அவ்வளவுக்குப் பொறுமையில்லாமல் போய்விட்டதே!

"அம்மா! துறவியையும் அவரோடு வந்திருந்தவர்களையும் வசந்த மண்டபத்தில் காணவில்லை" என்று குழல்மொழியிடம் திரும்பி வந்து சொல்லிவிட்டாள் அந்தத் தோழி.

"வசந்த மண்டபத்துக்குப் போகிற பாதையின் தொடக்கத்தில் அம்பலவன் வேளான் காவலுக்கு உட்கார்ந்திருப்பானே? அவனைக் கூடவா காணவில்லை!"

"ஆம்! அவனையும் காணவில்லை!"

"சரிதான், படகில் அக்கரைக்குப் போயிருப்பார்கள். அடிகளுக்குத் திடீரென்று சுசீந்திரத்துக்குப் போய்த் தாணுமாலய விண்ணகரத்தில் தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆசை உண்டாகியிருக்கும். நமக்கென்ன வந்தது? எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நாம் தூங்கலாம்" என்று சுவாரஸ்யமில்லாமல் பேசினாள் குழல்மொழி.

அதன் பின் அடிகள் உணவு கொள்ள வரவில்லையே என்று அங்கு யாரும் அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. இரவு பத்துப் பதினொரு நாழிகைக்கெல்லாம் இடையாற்று மங்கலம் மாளிகையில் பூரண அமைதி நிலவியது. மகாமண்டலேசுவரரின் செல்வப் புதல்வியும், மாளிகையிலிருந்த மற்றப் பணிப் பெண்களும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த கன்னிமாடப் பகுதிக்குப் போய் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர்.

இரவின் நாழிகைகள் ஒவ்வொன்றாக வளர்ந்து கொண்டிருந்தன. நடுச்சாமத்தை எட்டிப்பிடித்து விட்ட போது வானமும், நட்சத்திரங்களும் சோகை பிடித்த மாதிரி வெளுத்து ஒளி மங்கிக் கொண்டு வந்தன. மாளிகையில் அங்கங்கே அவசியமான இடங்களில் காவல் வைக்கப்பட்டிருந்த வீரர்களெல்லாம் கூடச் சோர்ந்து கண் மயங்கும் நேரம் அது.

அந்த நேரத்தில் வசந்த மண்டபத்தின் பின்புறத்துத் தோட்டத்திலிருந்து அடிகளும் மற்ற மூவரும் புறப்பட்டனர். மாளிகையின் பிரதான வாசலில் கொண்டு போய் விடும் ஒற்றையடிப் பாதையில் வந்து படகோட்டியின் குடிசையருகே தயங்கி நின்றனர். அன்று குளிர் அதிகமாக இருந்ததனால் படகோட்டி அம்பலவன் வேளான் குடிசைக்குள்ளேயே படுத்திருந்தான்.

வசந்த மண்டபத்திலிருந்து வந்து நின்றவர்களில் ஒருவன் படகோட்டியின் குடிசைக் கதவருகே வந்தான். ஓசைப்படாமல் கதவை வெளிப்பக்கமாக இழுத்துத் தாழிட்டான்.

"அடே! படகை அவிழ்த்து வைத்துக் கொண்டு புறப்படுவதற்குத் தயாராக நீ துறையிலேயே இரு. நாங்கள் விரைவில் காரியத்தை முடித்துக் கொண்டு வந்து விடுகிறோம்" என்று மற்றவர்கள் அவனைத் துறையில் இருக்கச் செய்துவிட்டு மாளிகையை நோக்கி விரைந்தனர். குரல் தான் கேட்டதே ஒழிய இருளில் அவர்கள் முகங்கள் சரியாகத் தெரியவில்லை. அதன் பின் அன்றிரவு நடுச் சாமத்துக்கு மேல் இடையாற்று மங்கலம் மாளிகையில் எந்தப் பகுதியில் என்ன நடந்ததென்று எவருக்கும் தெரியாது.

பொழுது விடிந்த போது அலறிப் புடைத்துக் கொண்டு குழல்மொழியின் கன்னிமாடத்து வாசலில் வந்து கூக்குரலிட்டனர் யவனக் காவல் வீரர்கள். மாளிகை முழுவதும் கூச்சலும் ஓலமுமாக ஒரே குழப்பமாக இருந்தது. அந்தக் குழப்பங்களாலும், கூப்பாடுகளாலும் தூக்கம் கலைந்த குழல்மொழி எழுந்திருந்தவுடன் அந்த யவனக் காவல் வீரர்களின் முகத்தில்தான் விழித்தாள். அவர்கள் ஒன்றும் விளக்கிச் சொல்லத் தோன்றாமல் 'ஓ'வென்று வீறிட்டு அலறி அழத் தொடங்கினர்.

"ஏன் அழுகிறீர்கள்? விடிந்ததும் விடியாததுமாக இப்போது என்ன நடந்து விட்டது? விவரத்தைச் சொல்லுங்கள். இதென்ன? மாளிகை முழுவதும் கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறதே!" என்று பதறிப் போய் அதிர்ச்சியடைந்து கேட்டாள் குழல்மொழி. அதே சமயம் மாளிகையின் எதிர்ப்புறம் பறளியாற்றுப் படகுத் துறையில் 'தடால், தடால்' என்று ஏதோ இடிபடும் ஓசை கேட்டது. நாலைந்து வீரர்கள் என்னவென்று பார்ப்பதற்காக அங்கே ஓடினார்கள். போய்ப் பார்த்த போது அம்பலவன் வேளான் தன் குடிசைக்குள்ளிருந்து வெளிப்புறமாகத் தாழிட்டிருந்த கதவைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தான். அந்த ஓசையைக் கேட்டு அங்கே போன வீரர்களில் ஒருவன் கதவைத் திறந்து விட்டான். இல்லையானால் கதவு பிழைத்திருக்காது. வேளான் வெளியே வந்து பார்த்த போது துறையில் கட்டியிருந்த படகைக் காணவில்லை. "ஐயோ! படகைக் காணவில்லையே?" என்று கூச்சலிட்டான் அவன்.

"போ, ஐயா! உன் ஓட்டைப் படகு போனதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது. கொள்ளை போகக்கூடாத மாபெரும் ஐசுவரியம் நேற்றிரவு இந்த மாளிகையிலிருந்து கொள்ளை போய்விட்டது. மகாமண்டலேசுவரர் கண்ணுக்குக் கண்ணாக வைத்துப் பாதுகாத்து வந்த பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீரவாளும், பொற்சிம்மாசனமும் காணாமல் போய் விட்டனவே!" என்று வேளானின் வாய்க் கூச்சலை அடக்கினான் ஒருவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.30. புவன மோகினியின் பீதி

நள்ளிரவு வரை இடையாற்று மங்கலம் நம்பிக்கு ஒற்றறிந்து கூறியதற்காக ஆபத்துதவிகளின் தலைவன் தன்னை எப்போது எப்படித் துன்புறுத்துவானோ என்று அஞ்சி மஞ்சத்தில் உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்த புவன மோகினி அரண்மனை நாழிகை மன்றத்தில் ஒவ்வொரு யாம முடிவிலும் அடிக்கும் மணி அடித்து முடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் தன்னையறியாமலே துயில் வயப்பட்டாள். நன்றாக அயர்ந்து தூங்கி விடவில்லையானாலும் உடல் சோர்வடைந்து தன்னுணர்வை இழந்திருந்தது. தூக்கத்தில் ஒரு முறை புரண்டு படுத்தாள்.

புரண்டு படுத்த சிறிது நேரத்தில் கழுத்தின் பின்புறம் பிடரியில் ஏதோ வெப்பமான மூச்சுக்காற்று உரசிச் செல்லுவது போலிருந்தது. தலையில் பூச்சூடிக் கொண்டிருந்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெப்பக் காற்றுப் பட்டு உறைப்பது போலிருந்தது.

உண்மைதானா? அல்லது தூக்கக் கலக்கத்தில் ஏதாவது சொப்பனம் காண்கிறோமா? என்று சந்தேகப்பட்டு மெல்லக் கண்களைத் திறந்தாள் புவன மோகினி. தலையருகே யாரோ குனிந்து பூவை முகர்ந்து பார்ப்பது போல் ஒரு பிரமை, ஒரு குறுகுறுப்பு அவள் மனத்தில் உண்டாயிற்று. தலைப்பக்கம் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. தலைமாட்டில் ஆள் நின்று கொண்டிருந்தால் திரும்பிப் பார்த்துத்தான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. சுவரில் நிழல் நன்றாக விழும். புவனமோகினி எதிர்பார்த்தது வீண் போகவில்லை. எதிர்ச் சுவரில் ஓர் உருவத்தின் கரிய நிழல் பயங்கரமாகப் படிந்திருந்தது. கண்களைத் திறந்து அந்த நிழலைப் பார்த்ததும், பீதியினால் 'வீல்' என்று அலறி விட்டாள் அவள். அந்த அலறல் அவள் வாயிலிருந்து முழுமையாக வெளிப்பட்டு விடாமல் ஒரு முரட்டுக் கை தலைப் பக்கத்திலிருந்து அவள் வாயைப் பொத்தியது. அச்சத்தினால் மை தீட்டிய அவள் கண் இமைகளுக்குக் கீழே விழிகள் பிதுங்கின. முகம் வெளிறியது. படுத்திருந்தாலும் பயத்தினால் உடம்பு 'வெட வெட'வென்று நடுங்கியது. நெஞ்சங்கள் திடீரென்று மலைகளாக மாறிக் கனத்து இறுகி அழுத்துவது போல் மூச்சு அடைத்தது. பயத்தோடு பயமாக தலையை ஒருக்களித்துத் திருப்பி மிரளும் விழிகளால் தலைப் பக்கம் பார்த்தாள். தூண்டா விளக்கின் மங்கலான ஒளியில் ஆபத்துதவிகள் தலைவனின் முகத்தைக் கண்டாள் புவன மோகினி. அவள் நெஞ்சு 'படக் படக்' என்று வேகமாக அடித்துக் கொண்டது. வலிமை பொருந்திய அவனது இரும்புக் கை அவள் வாய்க்குக் கவசம் போட்டுப் பூட்டியது போல் அழுத்திப் பொத்திக் கொண்டிருந்தது. ஆபத்துதவிகள் தலைவனின் மற்றொரு கை அவள் கழுத்துக்கு நேர் உயரப் பாம்பு நெளிவது போன்ற சிறு குத்துவால் ஒன்றை ஓங்கிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அந்தச் சமயத்தில் எதிர்ச் சுவரில் தெரிந்த அவன் நிழல் கூடப் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. சிறிது நேரம் அப்படியே கழிந்தது. அவள் கழுத்துக்கு நேரே ஓங்கியிருந்த கத்தியாலேயே விளக்கின் திரியை நசுக்கி அணைத்தான் அவன். சுடர் நாற்றமும், திரி கருகிய புகையும் மூச்சில் கலந்து நெஞ்சைக் குமட்டின. விளக்கு அணைந்து இருள் பரவியவுடன் புவன மோகினியின் பயம் அதிகமாயிற்று. பலங்கொண்ட மட்டும் அவன் கையைப் பிடித்துத் தள்ளித் திமிறி எழுந்து மீண்டும் கூச்சலிட்டாள் அவள். இருட்டில் அவன் ஓடிவிட்டான்.

அவள் போட்ட கூச்சலைக் கேட்டு விளக்கோடும் தீப்பந்தங்களோடும், அந்தப்புரத்துப் பெண்களும், காவல் வீரர்களும் அங்கு ஓடி வந்த போது யாரும் வந்து போன சுவடே தெரியவில்லை. அவ்வளவு விரைவில் வந்த ஆள் தப்பி விட்டான். புவன மோகினி கூறியதை அவர்களில் எவருமே நம்பத் தயாராயில்லை. "அடி, பைத்தியக்காரப் பெண்ணே! ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டாயா? உன் கூச்சலால் அந்தப்புரத்தையே அதிரச் செய்துவிட்டாயே? என்னதான் பயங்கரமாகச் சொப்பனம் கண்டாலும் இப்படியா கூச்சல் போடுவார்கள்?" என்று வண்ண மகள் புவன மோகினியை விலாசினியும், பகவதியும் கேலி செய்யத் தொடங்கி விட்டார்கள். புவன மோகினி தன் அனுபவம் உண்மை என்பதைக் கடைசி வரை அவர்கள் நம்பும்படி செய்ய முடியவில்லை. அவள் கனவு தான் கண்டிருக்க வேண்டுமென்று பிடிவாதமாகச் சாதித்தார்கள் அவர்கள். அதன் பின் அன்றிரவு அவளைச் சுற்றிப் பன்னிரண்டு தோழிப் பெண்களைப் பக்கத்துக்கு மூன்று பேர்கள் வீதம் நான்கு பக்கமும் துணைக்கு காவலாகப் படுத்துக் கொள்ள செய்த பின்பே படுக்கையில் படுத்தாள். இங்கே இது நடந்த நேரத்தில் தான் இடையாற்று மங்கலத்து மாளிகையில் அந்தப் பயங்கரக் கொள்ளையும் நடந்திருக்கிறது. ஒரே இரவில் ஒரே நேரத்தில் இரண்டு குழப்பங்கள் நடந்து விட்டன.

மறுநாள் பொழுது புலர்ந்த போது தென்பாண்டி நாட்டின் அரசியல் வாழ்வுக்கு அதிர்ச்சி தரும் உண்மைகளும் வந்து சேர்ந்தன. மகாமண்டலேசுவரர் கண் விழுத்து எழுந்தவுடன் கரவந்தபுரத்திலிருந்து வந்திருந்த தூதுவனை அவருக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினான் தளபதி வல்லாளதேவன். அதற்கு முன்பே முதல் நள்ளிரவு புவன மோகினியின் பள்ளியறையில் நடந்த கலவரம் அவர் காதுக்கு எட்டியிருந்தது. கரவந்தபுரத்துத் தூதுவன் தான் கொண்டு வந்திருந்த முத்திரையிட்டு ஜாக்கிரதையாகப் பத்திரப்படுத்திய ஓலையை மகாமண்டலேசுவரரிடம் கொடுத்தான்.

அவசர அவசரமாக அதன் மேலிருந்த அரக்கு முத்திரைகளைக் கலைத்து உதிர்த்துவிட்டு ஓலையைப் பிரித்துப் படித்தனர்.

"தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரர் திருச்சமூகத்துக்குக் கரவந்தபுரத்து உக்கிரன் கோட்டைக் குறுசில் வேள் பெரும்பெயர்ச்சாத்தன் பல வணக்கங்களுடன் அவசரமாய் எழுதும் திருமுகம்.

"வடபாண்டி நாட்டு மதுரை மண்டலம் முழுதும் வென்று கைப்பற்றியதோடு ஆசை தணியாமல் கோப்பரகேசரி பராந்தக சோழன் தென்பாண்டி நாட்டின் மீது தக்கவர்களின் படைத் துணையோடு படையெடுக்கக் கருதியுள்ளான். இந்தப் படையெடுப்பு நாம் எதிர்பாராமலிருக்கும் போது மிக விரைவில் திடீரென்று நம்மேல் நிகழும் என்று தெரிகிறது. சில நாட்களாக இங்கே உக்கிரன் கோட்டையிலும், இதைச் சுற்றியுள்ள இடங்களிலும் சோழ மண்டலத்து ஒற்றர்களும், உளவறிவோரும் இரகசியமாக உலாவக் காண்கிறேன். மிக விரைவில் வடதிசை மன்னர் படையெடுப்பால் - நாம் தாக்கப்படுவோம் என்பதற்குரிய வேறு சில சங்கேதமான நிகழ்ச்சிகளை நமது வட எல்லைப் பிரதேசங்களில் அடிக்கடி காண முடிகிறது. கீழைப்பழுவூர்ச் சிற்றரசன் பழுவேட்டரையன் கண்டன் அமுதனும், சோழமண்டலத்துப் பாம்புணிக் கூற்றத்து அரசூருடையான் தீரன் சென்னிப் பேரரையனும், கொடும்பாளூர் மன்னனும், பரதூருடையானும், இப்படையெடுப்பில் பராந்தக சோழனுக்கு உறுதுணையாயிருப்பார்களென்று தெரிகிறது. தென்பாண்டி மண்டலத்தின் வட எல்லைக் காவல் பொறுப்பு அடியேனிடம் ஒப்புவிக்கப்பட்டிருப்பதால் இந்தச் செய்தியை உடனே தங்களுக்கும், மகாராணி வானவன்மாதேவியாருக்கும் அறிவித்து விட வேண்டுமென்று இத்திருமுகம் எழுதலானேன்.

"கட்டளைப்படி இத் திருமுகம் கொண்டு வருவான் மானகவசனென்னும் உத்தமதேவன் பால் மறுமொழியும் படையெடுப்பைச் சமாளிக்கும் ஏற்பாட்டு விவரங்களும் காலந் தாழ்த்தாது அறிவித்து அனுப்புக.

"இங்ஙனம் தென்பாண்டி மண்டலப் பேரரசுக்கு அடங்கிய குறுநிலவேள்." பெரும்பெயர்ச்சாத்தனின் திருமுகத்தைப் படித்து முடித்ததும் இடையாற்று மங்கலம் நம்பி மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளானார். இவ்வளவு சீக்கிரமாக இந்தப் படையெடுப்பு நேருமென்று கனவிற் கூட எதிர்பார்க்கவில்லை அவர். உடனே தளபதியையும் கரவந்தபுரத்துத் தூதுவனையும் அழைத்துக் கொண்டு மகாராணியாரைச் சந்திப்பதற்காக அந்தப்புரத்துக்குச் சென்றார் அவர். செய்தியை மகாராணியாரிடம் படித்துக் காட்டியபோது அவரும் அதிர்ச்சிக் குள்ளானார். "மகாமண்டலேசுவரரே! ஒரே ஒரு வழிதான் எனக்குத் தோன்றுகிறது. அவசரமாக விரைவில் நீங்கள் இராசசிம்மனைத் தேடிக் கொண்டு வந்தால் அவனையே சேர நாட்டுக்குத் தூதனுப்பலாம். அவனே நேரில் போனால் மாமன்மாராகிய சேரர்கள் படை உதவி செய்ய நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள். சேரர் படை உதவி கிடைத்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டாம். இப்போது இதைத் தவிர வேறு ஒரு வழியும் எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் உடனே இராசசிம்மனைத் தேடிக் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறினார் மகாராணியார்.

"மகாராணியார் என்னை மன்னிக்க வேண்டும். ஓர் இரகசியத்தை இந்தக் கணம் வரை உங்களிடம் சொல்லாமலே மறைத்து வந்திருக்கிறேன். குமாரபாண்டியர் சில நாட்களாக என் விருந்தினராக இடையாற்று மங்கலம் வசந்த மண்டபத்தில் தான் தங்கியிருக்கிறார். இப்போதே சென்று இங்கு அழைத்து வரச் செய்கிறேன்."

"உண்மையாகவா?" மகாராணியின் குரலில் அவநம்பிக்கையும், வியப்பும் போட்டியிட்டன. தளபதி வல்லாளதேவனின் முகத்தில் ஆச்சரியத்தின் உணர்வுச் சாயைகள் கோடிட்டன. அன்று இடையாற்று மங்கலத்து நிலவறையில் அந்தத் துறவியைப் பார்த்துக் குமாரபாண்டியரோ எனத் தான் அடைந்த பிரமை அவனுக்கு நினைவு வந்தது. தூதுவன் திகைத்துப் போய் நின்றான். "உண்மைதான்! சில நாட்களுக்கு முன்பு தான் கடல் கடந்த நாட்டிலிருந்து இளவரசரை இரகசியமாக இங்கு வரவழைத்தேன். யாருக்கும் தெரிந்து விடக் கூடாதென்பதற்காக அவரை மாறுவேடத்திலேயே விழிஞம் துறைமுகத்திலிருந்து இரவோடிரவாக அழைத்துச் சென்றேன். இடையாற்று மங்கலத்தில் இப்போதும் இளவரசர் துறவி போல் மாறுவேடத்திலேயே தங்கியிருக்கிறார். ஒரு சில முக்கியமான அரசியல் காரணங்களுக்காக இளவரசர் வரவைத் தங்களுக்குக் கூடத் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நான் எவ்வளவு முன்னேற்பாடாகவும், பரம இரகசியமாகவும் இதை மறைத்தேனோ, அவ்வளவு எதிர்பாராத விதமாக சிலருக்கு இந்த இரகசியம் புரிந்து விட்டது" என்று கூறிக் கொண்டே சிரித்துவிட்டுத் தளபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் அவர். ஏற்கெனவே அவர் மேலே சிறிது மனக்கசப்போடு இருந்த தளபதி, "மற்றவர்களுக்கும் சாமர்த்தியம், அறிவு, சூழ்ச்சித்திறன் எல்லாம் இருக்க முடியும் என்பதைச் சில சமயங்களில் தாங்களும் தங்களுடைய அந்தரங்க ஒற்றனும் மறந்து விடுகிறீர்கள்" என்று குத்தலாக அவருக்குப் பதில் சொன்னான்.

"சேந்தன் அசட்டுத்தனமாக எதையாவது செய்திருப்பான். அதையெல்லாம் மனத்தில் வைத்துக் கொள்ளாதே தளபதி!" அவனைச் சமாதானப்படுத்தித் தழுவிக் கொள்கிறவர் போல் குழைந்து பேசினார் இடையாற்று மங்கலம் நம்பி.

"ஓகோ! அசட்டுத்தனத்தைக் கூடத் திட்டமிட்டுக் கொண்டு செய்வது தான் தங்களுக்கும், தங்கள் ஒற்றனுக்கும் வழக்கம் போலிருக்கிறது. இன்றுதான் எனக்கு உங்களைச் சரியாகப் புரிகிறது" என்று சுடச்சுடப் பதில் கொடுத்தான் தளபதி. அதற்கு மேலும் அவரை வம்புக்கு இழுக்க வேண்டுமென்று அவன் ஆத்திரம் அவனைத் தூண்டியது. மகாராணியாரின் முன்னிலையில் அப்படிச் செய்வது மரியாதைக் குறைவாகப் போய்விடும் என்று அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்து விட்டான். தளபதியும், மண்டலேசுவரரும் பேசிக் கொண்ட விதத்தைக் கவனித்ததில் அவர்களுக்குள் ஏதோ பிணக்கு இருக்கிறது என்ற குறிப்பு மட்டும் மகாராணியாருக்குப் புரிந்தது. 'அது என்ன பிணக்கு?' என்பதை அவர்களிடமே வற்புறுத்தித் தூண்டிக் கேட்க விரும்பவில்லை. "மகாமண்டலேசுவரரே! இன்னும் எதைச் சிந்தித்துக் கொண்டு நேரத்தைக் கழிக்கிறீர்கள்? தூதுவன் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குப் பதில் ஓலை கொடுத்து அனுப்பி வையுங்கள். உடனே இடையாற்று மங்கலம் சென்று வடதிசை மன்னர் படையெடுப்பு விவரங்களைக் கூறிக் குமாரபாண்டியனை இங்கே அழைத்து வாருங்கள். இன்று இரவிலேயே மறுபடியும் கூற்றத் தலைவர்களைக் கூட்டி இளவரசனையும் உடன் வைத்துக் கொண்டு கலந்து ஆலோசிப்போம். உடனே புறப்படுங்கள். தாமதத்துக்கு இது நேரமில்லை" என்று வானவன்மாதேவியார் அவரைத் துரிதப்படுத்தினார்.

"தளபதி, உனக்கும் எனக்கும் என்னுடைய ஒற்றனுக்கும் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணமாக எத்தனையோ உட்பகைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் இந்தச் சமயத்தில் நாம் மறந்து விட வேண்டும்" என்று அவனிடம் கெஞ்சுவது போல் கூறினார் இடையாற்று மங்கலம் நம்பி.

இந்தச் சமயத்தில் ஒரு வீரன் அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து, "மகாமண்டலேசுவரரைத் தேடிக் கொண்டு இடையாற்று மங்கலத்திலிருந்து அவசரமாக ஓர் ஆள் வந்திருக்கிறான்" என்று தெரிவித்தான். "அவனை உடனே இங்கு அழைத்துக் கொண்டு வா" என்று உத்தரவிட்டார் மகாமண்டலேசுவரர்.

படகோட்டி அம்பலவன் வேளான் உள்ளே வந்து நின்றான். அவன் முகம் பேயறைபட்டது போல் வெளிறிப் போயிருந்தது.

"சுவாமி! மாளிகையில் நடக்கக்கூடாத அநியாயம் நடந்து விட்டது. எந்தப் பொருள்களை உயிரினும் மேலானவையாகக் கருதிப் பாதுகாத்து வந்தோமோ, அந்தப் பொருள்கள் நேற்றிரவு கொள்ளை போய்விட்டன. பாண்டிய மரபின் சுந்தர முடியையும் வீர வாளையும் பொற் சிம்மாசனத்தையும் பறிகொடுத்து விட்டோம். இன்று காலையில் தான் தெரிய வந்தது. கொள்ளை நடந்த பின் வசந்த மண்டபத்தில் வந்து தங்கியிருந்த அந்தச் சாமியாரையும், நேற்றுக் காலை அவரைத் தேடி வந்து அவரோடு தங்கியிருந்த ஆட்களையும் தீவின் எல்லையிலேயே காணவில்லை." படகோட்டி மூச்சுவிடாமல் கூறிக் கொண்டே போனான். அங்கிருந்தவர்கள் அனைவரும் கல்லாய்ச் சிலையாய்ச் சமைந்து நின்றார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1.31. செம்பவழத் தீவு

இடையாற்று மங்கலம் மாளிகையில் பாண்டிய மரபின் மரியாதைக்குரிய மாபெரும் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போன மறுநாள் அங்கே ஒருவகைப் பயமும் திகைப்பும் பரவி விட்டன. சாவு நிகழ்ந்த வீடு போல், மழையைக் கொட்டித் தீர்த்து விட்ட வானம் போல், ஓர் அமைதி. பறிகொடுக்கக்கூடாத பொருளைப் பறிகொடுத்து விட்டால் ஏற்படுமே அந்த அமைதி, இடையாற்று மங்கலத்தில் சோகம் கலந்து சூழ்ந்திருந்தது.

அமைதியும், துயரமும் கலந்த இந்தச் சூழ்நிலையிலிருந்து நேயர்களை அழகான கடல் பகுதிக்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறேன். தென் மேற்குக் கோடியில் அலைகொட்டி முழக்கும் மேலைக் கடலின் நுழைவாயிலெனச் சிறந்து விளங்கும் விழிஞம் துறைமுகத்தைப் பற்றி நம் நேயர்கள் முன்பே அறிந்து கொண்டிருப்பார்கள். அந்தத் துறைமுகத்தில் தானே நாராயணன் சேந்தன் என்ற அபூர்வமான மனிதனை நேயர்களுக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைத்தேன்!

இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன மறுநாள் நண்பகல் உச்சி வேளைக்கு விழிஞம் துறைமுகத்துக்குத் தெற்கே ஐந்து காத தூரத்தில் ஒரு வனப்பு மிக்க தீவின் கரையோரமாகக் கடலில் மிதக்கும் வெண்தாமரை போல் அழகிய கப்பலொன்று விரைந்து செல்வதைக் காண்கிறோம். ஆ! அதென்ன உச்சிவேளையின் ஒளிக்கதிர்களில் அந்த மரக் கலத்தின் பாய்மரக் கூம்பில் ஆண் சிங்கம் ஒன்று பாய்வதற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போல் ஒரு காட்சி தெரிகிறதே! அல்ல! அல்ல! அது ஒரு கொடி தான். அந்தக் கொடி காற்றில் ஆடி அசையும் போதெல்லாம் அதில் தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் சிங்கத்தின் உருவம் உயிர்ப்பெற்றுப் பாய்வது போல் பார்க்கிறவர்களின் கண்களில் ஒரு பிரமையை உண்டாக்கி விடுகிறது. தீவின் பெயர் தான் அப்படியென்றால் அவர்களுடைய நிறம் கூடவா செம்பவழம் போலிருக்க வேண்டும்? கூந்தலில் அடுக்கடுக்காக மயில் தோகைகளையும், முழு நீளத் தாழை மடல்களையும் சூடிக் கொண்டு அன்னமும், கிளியும், குயிலும், மானும் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தாற் போலத் துள்ளி ஓடி வரும் அந்தத் தீவின் யுவதிகளை எப்படி வருணிப்பது? அந்த மாதிரி ஒளியும் வசியமும் நிறைந்த கரிய கண்களை அவர்களுக்கு மட்டும் தான் அமைக்க வேண்டுமென்று படைத்தவன் தீர்மானம் செய்து வைத்துக் கொண்டிருந்தானோ? அவ்வளவுதான். அடடா? அந்தத் தீவில் தான் என்ன எழில், எவ்வளவு இயற்கைக் கவர்ச்சி. தீவுக்கு என்ன பெயர் என்று சொல்லவும் வேண்டுமோ? கரையோரமாக இரத்தக் காடு முளைத்தது போல படர்ந்து கிடக்கும் செம்பவழத்தீவு! எத்தனை இனிமையான பெயர். மேலைக் கடலில் மூலைக்கு மூலை பரவிக்கிடக்கும் பன்னீராயிரம் 'முந்நீர்ப் பழந்தீவு'களில் அதுவும் ஒன்று.

கொத்துக் கொத்தாகக் கடலை நோக்கித் தொங்குவது போல் மேகங்கள், தீவின் பசுமை, கப்பல் செல்லும் அழகு, கடல் மக்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசியது போல் பவழக் கொடிகள் - ஆகிய இவற்றின் அழகில் மயங்கி, அந்தக் கப்பலில் பிரயாணம் செய்வோர் யார்? எதற்காகப் பிரயாணம் செய்கின்றனர்? எங்கே பிரயாணம் செய்கின்றனர்? என்பது போன்றவற்றை நாம் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாதல்லவா?

அதோ கப்பல் செம்பவழத் தீவின் கரையோரமாக நிற்கிறது. பயங்கரமான மீசையோடு காட்சியளிக்கும் ஒரு முரட்டு மீகாமன் (மாலுமி) கீழே குதித்துத் தீவின் கரையோரத்துத் தென்னைமரம் ஒன்றில் கப்பலை நங்கூரம் பாய்ச்சுகிறான். ஏதோ, தேர், திருவிழா அதிசயங்களைப் பார்க்க ஓடி வருகிறவர்களைப் போல் அந்தத் தீவில் ஆண்களும், பெண்களும் கப்பலைப் பார்க்க ஓடி வருகிறார்கள். ஆகா! அந்தத் தீவின் மக்கள் தான் என்னென்ன விநோதமான முறைகளில் உடையணிந்திருக்கிறார்கள்.

முகத்திலும், விழிகளிலும், வியப்பும், புதுமையும் இலங்கக் கப்பல் நின்ற இடத்தைச் சூழ்ந்து கொண்டார்கள் அவர்கள். மீகாமன் அவர்களை வழிவிட்டு ஒதுங்கி நின்று கொள்ளுமாறு அதட்டினான்.

இப்போது அந்தக் கப்பலிலிருந்து செம்பவழத் தீவின் கரையில் இறங்கப் போகிறவர்களைப் பார்க்கலாம்.

உள்ளேயிருப்பவர்கள் கரையில் இறங்குவதற்காகத் தூக்கிக் கட்டியிருந்த மரப் படிக்கட்டைத் தணிவாக இறக்கி வைத்தான் மீகாமன்.

முதலில் குமார பாண்டியன் இராசசிம்மன் சிரித்த முகத்தோடு கீழே இறங்கினான். தாடி மீசையோடு கூடிய பழைய துறவித் தோற்றத்துக்கும் இப்போதைய இளமைத் தோற்றத்துக்கும் தான் எவ்வளவு வேற்றுமை? அடுத்து முதல் நாள் அவனைத் தேடி இடையாற்று மங்கலத்துக்கு வந்திருந்தவர்களும் கப்பலிலிருந்து இறங்கினார்கள்.

"சக்கசேனாபதி! இந்நேரத்துக்குள் செய்தி தென்பாண்டி நாடு முழுவதும் பரவியிருக்கும். அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்துக்காகப் போய் தங்கியிருக்கும் மகாமண்டலேசுவரருக்கு இடையாற்று மங்கலத்திலிருந்து கொள்ளை போன தகவல் கூறி அனுப்பப்பட்டிருக்கும்." தன்னோடு கப்பலிலிருந்து இறங்கியவர்களின் மூத்தவரும், வீரகம்பீரம் துலங்கும் தோற்றத்தை உடையவருமான ஒருவரைப் பார்த்து இராசசிம்மன் நகைத்துக் கொண்டே இவ்வாறு கூறினான்.

"இளவரசே! திருடினவர்கள் திருட்டுக் கொடுத்தவர்களுக்காக அனுதாபப்படுவது உண்டோ?" என்றார் சக்கசேனாபதி.

"சக்கசேனாபதி! இந்த இடத்தில் பயனப்டுத்தத் தகுதியற்ற ஒரு வார்த்தையை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள். யார் திருடினவன்? யார் திருட்டுக் கொடுத்தவன்? என்றோ ஒரு நாள் என் தலையில் சூட்டிக் கொள்ளப் போகிற முடியையும், இடையில் அணிபெற வேண்டிய வாளையும் இன்றே பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் மறைத்து வைக்கப் போகிறேன். பொருளுக்கு உரியவர்கள் பொருளை எடுத்துச் சென்று பத்திரப்படுத்துவதைத் திருட்டு என்று கூறக் கூடாது."

சக்கசேனாபதி சிரித்தார். கம்பீரமான ஆண் சிங்கம் போன்ற அவருடைய முகத் தோற்றத்திலும், பார்வையிலும் ஒருவித மிடுக்கு இருந்தது. அவர் முகத்தைப் பார்க்கும் போது பிடரி மயிரோடு கூடிய ஓர் ஆண் சிங்கத்தின் நிமிர்ந்த பார்வை நினைவுக்கு வராமற் போகாது. வீரத்தின் மதர்ப்பும் ஆண்மையும் விளங்கும் பருத்த, உயர்ந்த தோற்றம் அவருடையது. இந்தக் கதையில் மேற்பகுதிகளில் இன்றியமையாத சில நிகழ்ச்சிகளுக்கும், மாறுதல்களுக்கும் காரணமாக இருக்கப் பொகிறவர் சக்கசேனாபதி.

அவர் ஈழ மண்டலப் பேரரசின் மகா சேனாபதி. குமார பாண்டியனின் உற்ற நண்பரும் இலங்கைத் தீவின் புகழ்மிக்க வேந்தருமாகிய காசிப மன்னரின் படைத்தலைவர். தந்தை காலஞ்சென்ற நாளிலிருந்து இராசசிம்மனின் இளமைக் காலத்தில் அவனுக்கு எத்தனையோ முறை கடல் கடந்து சென்று ஒளிந்து கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அவனுக்கு ஆதரவளித்து உதவி செய்தது இலங்கைப் பேரரசே. அவன் மனச் சோர்வோடு கடல் கடந்து சென்ற போதெல்லாம் வரவேற்று ஆதரவளித்தவர்கள் சக்கசேனாபதியும், காசிபனும் தான். தென்பாண்டி நாட்டு இளவரசன் தன் அரசியல் வாழ்க்கையின் துன்பம் நிறைந்த சூழலில் கழித்த சந்தர்ப்பங்கள் கணக்கற்றவை. வளமான கடற்கரை, அழகான மலைத்தொடர், இளமரக் காடுகள், குளிர்பொழிற் சோலைகள் அத்தனையும் நிறைந்த ஈழ நாட்டின் சூழலில் சொந்தத் துயரங்களை மறந்து விடுவான் இராசசிம்மன். அனுராதபுரத்துக் கற்கனவுகளைக் காணும் போதெல்லாம் சோர்வும் ஏமாற்றமும் நிறைந்த அவன் உள்ளத்தில் ஆயிரமாயிரம் திடம் வாய்ந்த எண்ணங்களும், நம்பிக்கைகளும் முகிழ்ந்திருக்கின்றன. வாழ்க்கையின் துன்பங்களைத் தமிழ்நாட்டிலும் அவைகளை மறக்கும் இன்பங்களை ஈழநாட்டிலும் அனுபவித்தான் இராசசிம்மன்.

இப்போதும் ஈழநாட்டின் படைத்தலைவர் இந்த மரக்கலத்தில் அவனை அங்கே தான் அழைத்துக் கொண்டு போகிறார். இடைவழியில் சிறிது தங்கிச் செல்வதற்காக அந்தத் தீவில் இறங்கியிருக்கிறார்கள் அவர்கள்.

சக்கசேனாபதியும், இராசசிம்மனும் கரையில் இறங்கி நின்று பேசிக் கொண்டிருந்த நேரத்துக்குள் அந்தக் கப்பலில் அவர்களோடு வந்திருந்த ஆட்கள் தீவின் கரையில் இரத்தினக் கம்பளங்களையும் சித்திரத் துணிகளையும் கொண்டு தங்குவதற்கு ஓர் அழகான கூடாரம் அமைத்து விட்டார்கள். தென்னை மரக் கூட்டங்களின் இடையே காற்றில் ஆடி அசையும் பசுந் தோகைகளின் கீழே எழும்பி நின்ற அந்தச் சித்திரக் கூடாரம் மண்ணைப் பிளந்து கொண்டு தானே மேலே வந்து தோன்றும் மலர் வீடு போல் காட்சியளித்தது. அன்றைய இரவு முடிய அங்கே பொழுதைக் கழித்து விட்டு மறுநாள் காலை மறுபடியும் கடற் பயணத்தைத் தொடரலாம் என்பது சக்கசேனாபதியின் திட்டம். தங்குவதற்கு அத்தியாவசியமான பொருள்கள் மட்டும் கப்பலிலிருந்து கூடாரத்துக்குள் இறக்கி வைக்கப்பட்டன. நீராடி உணவு முடிந்ததும் அன்று பகல் முழுவதும் இராசசிம்மனும், சக்கசேனாபதியும் கூடாரத்தில் ஓய்வு பெற்று நிம்மதியாக உறங்கினர்.

கதிரவன் மலைவாயில் விழுகிற நேரத்துக்குக் குமார பாண்டியனும், சக்கசேனாபதியும் அந்த அழகிய தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டனர். உடனிருந்த ஆட்கள் கப்பலுக்கும் கூடாரத்துக்கும் காவலாக இருந்தனர். மாலை நேரத்தில் அந்தத் தீவின் அழகு பன்மடங்கு மிகுதியாகத் தோன்றியது. வானப் பரப்பு முழுவதும் குங்குமக் குழம்பும், கீழே கடலில் மிதக்கும் பசுமைக் கனவு போல் அந்தத் தீவும் இருந்தது.

விந்தையும் விநோதமும் பொருந்திய கடல்படு பொருள்களான சங்கு, முத்து, சிப்பிகள், சலங்கைகள், பல நிறம் பொருந்திய கடற்பாசிக் கொத்துகள் இவற்றையெல்லாம் குவியல் குவியலாகக் குவித்து விற்கும் தீவின் கடைவீதிக்குள் அவர்கள் நுழைந்தார்கள்.

சக்கசேனாபதியையும் அழைத்துக் கொண்டு அந்தக் கடைகளில் ஒன்றை நெருங்கினான் தென்பாண்டி நாட்டு இளவரசன் இராசசிம்மன்.

வனப்பும், வாளிப்பும் நிறைந்த உடலோடு சிரிப்பும் மலர்ச்சியும் கொஞ்சும் முகத்தையுடைய இளம் பெண் ஒருத்தி அந்தக் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். முற்றிலும் கடலில் கிடைக்கும் அலங்காரப் பொருள்களாலேயே அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். கழுத்தில் முத்து மாலை, செவிகளில் முத்துக் குண்டலம், நெற்றியில் முத்துச் சுட்டி, கைகளில் சங்கு வளையல், கால்களில் முத்துச் சிலம்பு, அள்ளி முடிந்த அளகபாரத்தில் இரண்டொரு மயில் கண்களைத் தோகையிலிருந்து பிரித்துச் செருகியிருந்தாள்.

அவர்களைக் கண்டதும் தோகையை விரித்துக் கொண்டு எழுந்திருக்கும் இளமயில் போல் பாதங்களில் சிலம்பு ஒலிக்க எழுந்து நின்று அவள் வரவேற்றாள். அடடா! அப்போது அந்தப் பெண் சிரித்த சிரிப்புக்குத்தான் எவ்வளவு கவர்ச்சியும் ஆற்றலும் இருந்தன.

"சக்கசேனாபதி! இந்தத் தீவின் கடலில் சிப்பிகளில் மட்டும் முத்தும் பவழமும் விளையவில்லை. இங்குள்ள பெண்களின் வாய் இதழ்களிலும், வாய்க்குள்ளும் கூடப் பவழமும், முத்தும் விளைகின்றன போலும்!" என்று மெல்ல அவர் காதருகில் சிரித்துக் கொண்டே சொன்னான் குமார பாண்டியன். அவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.

சிறிய செவ்விளநீர் அளவுக்கு வலப்பக்கமாக வளைந்து செந்நிறத்தோடு அழகாக விளங்கிய ஒரு சங்கைக் கையில் எடுத்தான் இளவரசன். பவழத்தில் கைப்பிடியும், முத்துக்களில் விளிம்பும் கட்டி வைத்திருந்த அந்தச் சங்கு அவனுடைய உள்ளத்தைக் கவர்ந்தது.

ஆனால் இதென்ன? அவன் அதைக் கையில் எடுத்ததைப் பார்த்ததும், கண்களில் கலவரமும், முகத்தில் பதற்றமும் தோன்ற நின்ற இடத்திலிருந்து ஓடி வந்து அந்தப் பெண் அவனுடைய கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். இளவரசனுக்குச் சிரிப்பு வந்தது. சிறிது சினமும் உண்டாயிற்று! பூவைக் காட்டிலும் மென்மையான அந்தப் பட்டுக் கைகள் தன் மேல் தீண்டியதால் ஏற்பட்ட உணர்வு அவன் உடலில் பாதாதி கேச பரியந்தம் பரவியது. சிரிப்பு, சினம், சிருங்காரம் மூன்று உணர்ச்சிகளும் பதிந்த பார்வையால் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் அவன்.

அப்போதுதான் பூத்த கருங்குவளைப் பூக்களைப் போல் நீண்டு குறுகுறுவென்றிருக்கும் அவள் கண்களில் பயத்தையும், பரபரப்பையும் அவன் கண்டான்.

அந்த நிலையில் ஏதோ பெரிய நகைச்சுவைக் காட்சியைக் கண்டு விட்டவர் போல் இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு அடக்க முடியாமல் குலுங்கக் குலுங்கச் சிரித்தார் சக்கசேனாபதி. ஒரு கணம் இராசசிம்மன் தயங்கினான். அந்தப் பெண்ணின் கைகளிலிருந்து தன்னை எப்படி விடுவித்துக் கொள்வதென்று திகைத்தான்.

"ஏதேது? இந்த செம்பவழத் தீவில் பெண்களெல்லாம் பெரிய வம்புக்காரர்களாக இருப்பார்கள் போலிருக்கிறதே?" அவன் சக்கசேனாபதியைப் பார்த்துக் கூறுகிறவனைப் போல் இதழ்களில் குறும்புநகை நெளிய அவளைப் பேச்சுக்கு இழுத்தான்.

"வருகிறவர்கள் அளவுக்கு மீறித் துணிச்சல் உள்ளவர்களாயிருக்கும் போது நாங்கள் வம்புக்காரர்களாக மாறுவது வியப்பில்லையே!"

"நீ சங்கு விற்கிறவள். நான் வாங்கப் போகிறவன். வாங்க இருக்கும் பொருளை எடுத்துப் பார்ப்பதற்குக் கூட நான் உரிமையற்றவனா?"

"சங்கு என்றால் ஒரு பொற்கழஞ்சுக்கு ஐந்தும், ஆறுமாக அள்ளிக் கொடுக்கின்ற சாதாரணச் சங்கு இல்லை இது! வலம்புரிச் சங்கு! இதன் விலை ஆயிரம் பொற்கழஞ்சுகள். இந்தத் தீவின் எல்லையிலேயே இந்த மாதிரிச் சங்கு ஒன்று தான் இருக்கிறது. இதை விற்க வேண்டுமானால் யாராவது பேரரசர்கள் வாங்க வந்தால் தான் முடியுமென்று என் தந்தை சொல்லியிருக்கிறார்!"

"பெண்ணே! பேரரசர்கள் கிடக்கிறார்கள்! அவர்கள் எல்லாம் பேருக்குத்தான் அரசர்கள். நான் இரண்டாயிரம் பொற்கழஞ்சுகள் தருகிறேன். இந்தச் சங்கை எனக்கு விற்பாயா?"

"இல்லை, பொய் சொல்கிறீர்கள் நீங்கள். உங்களைப் பார்த்தால் உங்களிடம் இரண்டு பொற்கழஞ்சுகள் கூட இருக்காது போல் தோன்றுகிறது. நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். மரியாதையாக சங்கை வைத்துவிட்டுப் போகிறீர்களா...? இல்லையானால்...?"

"அடேடே! உன் கோபத்தைப் பார்த்தால் என்னை இப்போதே அடித்துக் கொன்று விடுவாய் போலிருக்கிறதே? வேண்டாம்! இதோ வாங்கிக் கொள்..." இப்படிச் சொல்லிக் கொண்டே சக்கசேனாபதியின் பக்கமாகத் திரும்பினான் இராசசிம்மன்.

அவர் இடுப்பிலிருந்து தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்த இரண்டு பட்டுப்பை முடிப்புகளை அவன் கையில் கொடுத்தார். அவன் அதை வாங்கி அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தான்.

பைகளை வாங்கிப் பிரித்துப் பார்த்த அந்தப் பெண் ஆச்சரியத்தால் வாய் அடைத்துப் போய் நின்றாள். பை நிறையப் பொற்கழஞ்சுகள் மின்னின. அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தலைநிமிர்ந்து பார்த்த போது அவர்களைக் காணவில்லை.

தொலைவில் கடைவீதி திரும்பும் மூலையில் கையில் வலம்புரிச் சங்கோடு அந்த இளைஞனும் அவனோடு வந்த முதியவரும் வேகமாகச் செல்வது தெரிந்தது. அளவொத்து மேலெழும்பித் தணியும் இரு செவ்விளநீர்க் காய்கள் போல் நெஞ்சங்கள் நிமிர்ந்து தணியக் கடைவீதி மூலையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் அந்தப் பெண்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top