• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் 2 - 'புயல்'

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முதல் அத்தியாயம் :

டில்லிப் பிரயாணம்

சென்னையிலிருந்து புறப்பட்டு நாற்பத்தெட்டு மணி நேரத்துக்கு அதிகமானபடியினால், உட்கார்ந்து உட்கார்ந்து சலித்துப் போன பிரயாணிகளைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டும் பெருமூச்சு விட்டுப் புகையையும் கரித்தூளையும் கக்கிக் கொண்டும் சில சமயம் வீல் என்ற சத்தமிட்டு அலறிக் கொண்டும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என்னும் பெயரினால் பிரசித்தி பெற்ற நீராவித் தொடர் வண்டி தண்டவாளத்தின் மீது நீள நெடுகச் சென்றது. டில்லி ஸ்டேஷன் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரந்தான் இருந்தது என்றாலும், அந்த ஒரு மணியும் ஒரு யுகமாக மேற்படி ரயிலில் பிரயாணம் செய்தவர்களுக்குத் தோன்றியது. அவர்கள் எல்லாரிலும் அதிகமாக மனத்தில் அவசரமும் பரபரப்பும் கொண்டிருந்த சீதாவுக்கோ பாக்கியிருந்த அந்த ஒரு மணியும் ஒரு பிரம்ம யுகமாகத் தோன்றியது. மனிதர்களுக்கு ஒரு சதுர்யுகம் பிரம்மதேவருக்கு ஒரு பகல் என்று கணக்கு. அப்படியென்றால் பிரம்ம யுகம் எவ்வளவு நீண்டது என்பதை நேயர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். அந்தக் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு வண்டி ஒன்றில் சீதா பிரயாணம் செய்தாள். சீதாவின் மாமியார் காமாட்சி அம்மாளும் அதே வண்டியில் பக்கத்தில் இருந்தாள்.

காமாட்சி அம்மாளின் மடியைச் சிம்மாதனமாகக் கொண்டு வீற்றிருந்த இன்னொரு ஸ்ரீமதி யார்? அந்த ஸ்ரீமதியிடம் காமாட்சி அம்மாள் ஏன் அவ்வளவு பயபக்தி கொண்டிருக்கிறாள்? அவள் தன்னுடைய தோளிலும் கன்னத்திலும் 'பளீர் பளீர்' என்று அடிப்பதை எதற்காகப் பொறுத்துக் கொண்டிருக்கிறாள்? அப்புறம் நடப்பது இன்னும் விசித்திரமாயிருக்குது. காமாட்சி அம்மாளின் மடியில் வீற்றிருந்த ஸ்ரீமதியைச் சீதா கோபமாகப் பார்த்துப் பயமுறுத்துவதாகத் தன் மூக்கில் விரலை வைத்துக்கொண்டு, "வஸந்தி! இதோ பார்! பாட்டியை அடிக்காதே! தெரியுமா!" என்று அதட்டுகிறாள். உடனே சீதாவுக்கும் அந்த ஸ்ரீமதி இரண்டு அடி கொடுக்கிறாள். மாமியார், மருமகள் இருவரும் பலமாகச் சிரிக்கிறார்கள்! "லயிலின் கயவைத் தற! கயவைத் தறக்காத்தா அப்பித்தான் அய்ப்பேன்!" என்று ஸ்ரீமதி வஸந்தி மழலை மொழி பேசியதும் நமக்கு ஒருவாறு விஷயம் புரிகிறது. ஸ்ரீமதி வஸந்திதேவி, காமாட்சி அம்மாளின் கண்ணுக்குக் கண்ணான செல்லப் பேத்தி. சௌந்தரராகவனும் சீதாவும் பெற்றெடுத்த சீமந்த புத்திரி. இப்போது அவளுடைய பிராயம் இரண்டு வருஷம் ஆறு மாதம்.

பாட்டியையும் அம்மாவையும் வஸந்தி மாற்றி மாற்றி அடித்ததற்குக் காரணம் என்னவென்பதை நேயர்கள் அவளுடைய மழலைப் பேச்சிலிருந்து ஊகித்திருப்பார்கள். ரயிலில் பலகணி வழியாக குழந்தை வெளியே எட்டிப் பார்க்கிறாள் என்பதற்காகக் காமாட்சியம்மாள் பலகணிக் கதவை மூடியிருந்தாள். மூடிய கதவைத் திறக்கவேண்டும் என்பது வஸந்தியின் கட்சி. இரண்டு பக்கமும் ஜன்னல் வழியாகப் பார்க்க முடியாவிட்டால் ரயிலில் பிரயாணம் செய்வதின் உபயோகம்தான் என்ன என்பது வஸந்தியின் கேள்வி. இதற்குத் தக்க பதில் சொல்ல முடியாத காரணத்தினால் காமாட்சி அம்மாள் சீக்கிரத்திலேயே ஜன்னல் கதவைத் திறக்கும்படி நேர்ந்தது. கதவைத் திறந்ததும் வஸந்தி தன் சின்னஞ்சிறு கையின் பட்டுப் போன்ற மிருதுவான ஆள்காட்டி விரலை வெளியிலே சுட்டிக்காட்டி, "அம்மா! அது என்ன? பாத்தி அது என்ன?" என்று கேட்டாள். "அது ஒரு பழைய காலத்துக் கோட்டை!" என்றாள் சீதா. "கோத்தைன்னா என்ன?" என்று வஸந்தி கேட்டாள். "கோட்டைன்னா கோட்டைதான்! உனக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. சூரியா மாமாதான் வரவேணும்" என்றாள் சீதா. "சூரியா மாமாவைக் கூப்பிது அம்மா!" "இப்போது கூப்பிட்டால் அவருக்குக் காது கேட்காது. ரயில் நின்ற பிறகு வருவார் கொஞ்ச நேரம் சும்மா இரு!" "லயிலு நின்ன அப்பதம் எதுக்கம்மா வரணும்? லயிலு ஓதறபோதே மாமா வந்தா என்ன?" "ரயிலு ஓடுகிற போது வந்தால் உன் தலையில் ஒரு குட்டு!?" என்று சீதா குழந்தையின் தலையிலே ஒரு செல்லக் குட்டு குட்டினாள். "போ, அம்மா?" என்று சொல்லிவிட்டு வஸந்தி மறுபடியும் வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.

வஸந்தியைப் போலவே வெளியே நோக்கிக் கொண்டிருந்த காமாட்சி அம்மாள், "அதோ ஒரு கோட்டை! அங்கே ஒரு கோட்டை! எங்கே பார்த்தாலும் ஒரே கோட்டையாயிருக்கிறதே சீதா! இதையெல்லாம் யார் கட்டியதோ?" என்றாள். "பல ராஜாக்கள் கட்டியதாயிருக்கும், அம்மா! சுமார் ஆயிரம் வருஷம் டில்லிதான் இந்தியாவின் தலைநகரமா இருந்தது. ஆக்ராவிற்கும் டில்லிக்கும் நடுவில் இப்படித்தான் எங்கே பார்த்தாலும் இடிந்த கோட்டையாயிருக்கும்" என்றாள் சீதா. "நம்முடைய தென் தேசத்திலே யாத்திரை போனால் இரண்டு பக்கமும் ஒரே கோவிலாயிருக்கும். ஐந்து நிமிஷத்துக்கு ஒரு கோபுரம் தெரியும். சிதம்பரத்திலிருந்து திருச்சிராப்பள்ளி போகிற வரைக்கும் ஒரு தடவை நான் ஐந்நூறு கோபுரத்திற்கு மேலே எண்ணினேன். இந்தப் பக்கத்தில் கோயில் என்ற பேச்சே கிடையாது போலிருக்கிறது!" "இந்த வழியிலே மதுரை - பிருந்தாவனத்திலே மட்டும் கோவில் இருக்கிறது, அம்மா! பிருந்தாவனத்தில் இருக்கிற கோவில் நம்ம பக்கத்திலேயிருந்து வைஷ்ணவாள் வந்து கட்டியதாம். மற்றபடி இந்த வழியிலே கோயில் கிடையாதுதான். காசிப் பக்கம் போனால் ஏராளமான கோயில் இருக்குமாம்." "டில்லிப் பட்டணத்தில் கூடக் கோவில் கிடையாதா சீதா!"

"கிடையாது அம்மா! அவ்வளவு பெரிய பட்டணத்திலே ஒரு கோவிலைக் கூட நான் பார்க்கவில்லை; ரொம்ப காலமாய் டில்லியில் துருக்க ராஜ்யந்தான் நடந்தது. அதனாலே டில்லியில் எங்கே பார்த்தாலும் மசூதிகளாயிருக்கும். மசூதி இல்லாவிட்டால் துருக்க ராஜாவைப் புதைத்த சமாதி இருக்கும். நான் பார்த்த வரையில் டில்லியில் ஒரு கோவில்கூட என் கண்ணுக்குத் தட்டுப் படவில்லை. யாரோ பிர்லா என்கிற பணக்காரச் சீமான் புதிதாகக் கோயில் கட்டுகிறார் என்று சொன்னார்கள்." "தாஜ்மகால், தாஜ்மகால் என்று ஜபம் பண்ணுகிறாயே அதுவும் யாரோ ஒரு ராஜாவைப் புதைத்த இடந்தானோ?" உண்மையில் சீதாவின் மனம் அப்போது 'தாஜ்மகால்' ஜபம் செய்யவில்லை. ரயில் ஓடும் சமயம் சக்கரங்கள் உருண்டு உருண்டு போகும்போது அந்தச் சத்தத்திலிருந்து ஒருவித சுருதியும் தாளமும் ஏற்படுகின்றன அல்லவா? அந்தச் சுருதிக்கும் தாளத்துக்கும் இசையச் சீதாவின் மனது "டில்லி ஜங்ஷன்" "சௌந்தரராகவன்" என்றுதான் ஜபம் செய்து கொண்டிருந்தது. டில்லி ஜங்ஷன் பிளாட்பாரத்தில் தங்களுடைய வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டு தன் கணவன் காத்திருப்பான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. நீண்ட காலமாகப் பிரிந்திருந்த கணவனைச் சந்திப்பதில் அவளுக்கு இருந்த அவசரத்தினாலே தான் ரயில் வெகு மெதுவாகப் போவதாய் அவளுக்குத் தோன்றியது.

இவ்விதம் மனம் சௌந்தரராகவனிடம் லயித்திருந்தாலும் மாமியாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமையைக் கருதியே பதில் சொல்லி வந்தாள். "இல்லை, அம்மா! தாஜ்மகால் ராஜாவைப் புதைத்த இடமல்ல; ராணியைப் புதைத்த இடம். ஷாஜஹான் என்னும் டில்லி பாதுஷாவுக்கு மும்தாஜ்மகால் என்று ராணி இருந்தாள். அவளிடம் பாதுஷாவுக்கு ரொம்பஆசை. அவள் இறந்த பின் ஷாஜஹான் வேறு கலியாணம் செய்து கொள்ளவில்லை. அவளைப் புதைத்த இடத்தில் தாஜ்மகால் என்னும் அற்புதமான கட்டிடத்தைக் கட்டினான். முழுதும் வெள்ளைப் பளிங்குக் கல்லால் கட்டி அதில் பலவர்ணக் கற்களினால் சித்திரப் பூ வேலைகள் செய்வித்தான். உலகத்திலேயே அவ்வளவு அழகான கட்டிடம் வேறு கிடையவே கிடையாதாம்!" "நீ பார்க்கவில்லையா, சீதா!" "இன்னும் பார்க்கவில்லை முன்னே நான் இங்கே வந்திருந்தபோது முழுசாக மூன்று மாசம் கூட இருக்கவில்லையே? 'தாஜ்மகாலுக்குப் போகலாம், போகலாம்' என்று உங்கள் பிள்ளை சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் சீமைக்குப் போக உத்தரவு வந்து விட்டது!" "அதனால் என்ன சீதா? இனிமேல் டில்லியில் தானே இருக்கப் போகிறீர்கள்? எப்போது இஷ்டமோ, அப்போது போய்ப் பாருங்களேன்!" "அதென்ன 'போய்ப் பாருங்களேன்' என்று சொல்கிறீர்கள்? நீங்களுந்தான் எங்களோடு வரவேண்டும் எல்லாருமாய்ப் போய்ப் பார்த்தால் போகிறது!"

"எனக்கு என்னத்துக்கடி அம்மா, இதெல்லாம்? ஏதாவது கோவில் குளத்துக்குப் போனாலும் பிரயோஜனம் உண்டு. தாஜ்மகாலும் கீஜ்மகாலும் எனக்கு எதற்கு? நான் பார்த்து என்ன ஆகப் போகிறது?" "அப்படிச் சொல்லாதீர்கள்! போய்ப் பார்த்தால் அப்புறம் அதிசயப்படுவீர்கள். டில்லியில் கூட ஷாஜஹான் கட்டிய அரண்மனை இருக்கிறது. அதில் திவானிகாஸ் என்றும் திவானிஆம் என்றும் இரண்டு இடங்கள் இருக்கின்றன. அவற்றை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். பதினாயிரம் கண்ணால் பார்த்தாலும் அலுக்காது ஓரிடத்தில் ஷாஜஹானுடைய அந்தப்புரமாம். அதில் ராணிகள் குளிப்பதற்காகப் பளிங்குக் கல்லாலேயே குளங்களும் வாய்க்கால்களும் அருவிகளும் கட்டியிருக்கிறார்கள். அடடா! அந்த அற்புதத்தை நேரில் பார்த்தால்தான் அதன் மகிமை தெரியும்." "அது எவ்வளவு மகிமையாயிருந்தாலும் சரி, எனக்கு வேண்டாம். டில்லியில் கோவில் இல்லாவிட்டால் போகட்டும்; இந்தக் கண்மணிதான் (வஸந்தியைக் காட்டி) எனக்கு சுவாமி, அம்மன், கோவில், குளம் எல்லாம் என்று நினைத்துக் கொள்கிறேன். ஆனால், சீதா! டில்லிப் பட்டணத்தில் எப்போதுமே துருக்க ராஜாக்கள்தான் ஆண்டார்களா? ஹிந்து ராஜாக்கள் எப்போதுமே ஆளவில்லையா?" "ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் டில்லியில் ஹிந்து ராஜாக்கள் இருந்தார்களாம்; பிரிதிவிராஜன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" "கேட்ட மாதிரி இருக்கிறது; அதற்கு மேல் ஒன்றும் ஞாபகம் இல்லை நீ சொல், சீதா! பொழுது போகட்டும்!"

"டில்லியில் பிரிதிவிராஜன் என்று ஒரு ராஜா இருந்தான். டில்லிக்குப் பக்கத்தில் இன்னொரு ராஜ்யத்தில் ஜயச்சந்திரன் என்ற ராஜா இருந்தான். ஜயச்சந்திரனுக்குச் சம்யுக்தை என்ற குமாரி இருந்தாள். ஜயச்சந்திரனுக்குப் பிரிதிவிராஜன் மீது ஜன்மப் பகை. ஆனால் ஜயச்சந்திரனுடைய குமாரி சம்யுக்தை பிரிதிவிராஜன் பேரில் காதல் கொண்டு அவனையே கலியாணம் செய்து கொள்ளுவதென்று தீர்மானித் திருந்தாள்..." "எப்படி அவளுக்குப் பிரிதிவிராஜன் பேரில் காதல் உண்டாயிற்று? அவர்கள் எப்போதாவது பார்த்துக் கொண்டதுண்டா?" "இல்லை, அம்மா! பிரிதிவிராஜனுடைய பராக்கிரமத்தையும் அழகையும் பற்றிச் சம்யுக்தை கேள்விப்பட்டிருந்தாள். நளனைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தமயந்தி காதல் கொண்டது போல் சம்யுக்தையும் பிரிதிவிராஜன் பேரில் காதல் கொண்டாள்." "நல்ல காதல்! அப்புறம்?" "அப்புறம் சம்யுக்தையின் கலியாணத்துக்காக ஜயச்சந்திரன் சுயம்வரம் வைத்தான். அதற்கு ஐம்பத்துநாலு தேசத்து ராஜாக்களையும் அழைத்தான். ஆனால் டில்லி பிரிதிவிராஜனை மட்டும் அழைக்கவில்லை. அழைக்காததோடு பிரிதிவிராஜனை அவமானப்படுத்துவதற்காக அவனைப்போல் ஒரு சிலை செய்து சுயம்வர மண்டபத்தின் வாசலில் காவல்காரனைப்போல் நிறுத்தி வைத்திருந்தான்!" "சேச்சே! என்ன கேவலமான காரியம்! அவனுக்கு ஏன் அப்படிப் புத்தி போயிற்று?"

"போதாத காலந்தான் நம்முடைய இந்திய தேசத்துக்கே போதாத காலம். அப்போது, சம்யுக்தை என்ன செய்தாள் தெரியுமா? கையில் மணமாலையுடன் ஒவ்வொரு ராஜாவாகப் பார்த்துக் கொண்டு வந்தாள். அவர்கள் கழுத்திலேயெல்லாம் மாலையைப் போடவில்லை. மண்டபத்தின் வாசலிலே பிரிதிவிராஜனுடைய சிலை வைத்திருந்ததை அவளுடைய தோழி அவளுக்குச் சொல்லியிருந்தாள். மண்டப வாசலண்டை வந்ததும் சட்டென்று அந்தச் சிலைக்குப் பக்கத்தில் போய்க் கையிலிருந்த சுயம்வர மாலையைச் சிலையின் கழுத்தில் போட்டாள்.." "சுத்த அசட்டுப் பெண்ணாயிருக்கிறாளே! சிலையின் கழுத்திலே மாலையைப் போட்டு என்ன பிரயோசனம்?" "என்ன பிரயோசனமா? கேளுங்கள்! சிலையின் கழுத்திலே மாலையைப் போட்டதும் அதற்கு அந்த க்ஷணமே உயிர் வந்துவிட்டது! சம்யுக்தையைக் கட்டித் தூக்கிக்கொண்டு போய்..." "சிலைக்காவது, உயிர்வரவாவது? ஏதோ நிஜமாக நடந்த கதை சொல்கிறாய் என்றல்லவா நினைத்தேன்? விக்கிரமாதித்தன் கதை மாதிரி இட்டுக் கட்டிக் கதை சொல்கிறாயாக்கும்!" "இல்லை, அம்மா! நிஜமாக நடந்த கதைத்தான்!" "நிஜமாக நடந்த கதை என்றால் உண்மையாகவே சிலைக்கு உயிர் வந்தது என்று அர்த்தமா?" "பின் என்ன அர்த்தம்?"

"அந்தச் சிலைக்குப் பின்னால் நிஜப் பிரிதிவிராஜன் ஒளிந்து கொண்டிருந்தான். சமயம் பார்த்துச் சம்யுக்தையைக் கொண்டு போவதற்காகவே அவன் வந்து காத்துக்கொண்டிருந்தான். உடனே அவன் சம்யுக்தையைத் தூக்கிப் பக்கத்திலே தயாராயிருந்த குதிரையின் மேலே வைத்துக்கொண்டு பறந்தான். நிசமாகப் பறந்தானா என்று கேட்காதீர்கள்! பறக்கிறது மாதிரி வேகமாகக் குதிரையை விட்டுக்கொண்டு போனான். அவனைப் பிடிப்பதற்காக ஜயச்சந்திரனும் அவனுடைய ஆட்களும் தொடர்ந்தார்கள் ஆனால் முடியவில்லை. பிரிதிவிராஜனுடைய வீரர்கள் குறுக்கிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்...." "அப்புறம் பிரிதிவிராஜனும் சம்யுக்தையும் கலியாணம் செய்து கொண்டு ரதியும் மன்மதனும் போல் சந்தோஷமாயிருந்தார்களாக்கும்!" "அப்படி இருந்தால்தான் தேவலையே? இல்லவே இல்லை. அந்தக் காலத்தில் கோரிமுகம்மது என்ற துருக்க ராஜா வடக்கேயிருந்து படையெடுத்து வந்தான். டில்லி வரையில் வந்து விட்டான். அவனைப் பிரிதிவிராஜன் நன்றாகத் தோற்கடித்துத் திருப்பி அனுப்பினான். முதலில் இரண்டு மூன்று தடவை இப்படி நடந்தது. அதற்கப்புறம் சம்யுக்தையின் தகப்பன் ஜயச்சந்திரன் கோரிமுகம்மதுவுக்கு ஓலை அனுப்பினான். 'நீ மறுபடியும் படையெடுத்து வா! உனக்கு நான் உதவி செய்கிறேன்' என்று.கோரிமுகம்மது, ஜயச்சந்திரன் இரண்டு பேரும் சேர்ந்து பிரிதிவிராஜனுடன் யுத்தம் செய்தார்கள். பிரிதிவிராஜன் கடைசி வரையில் சண்டை போட்டு யுத்தகளத்தில் செத்து விழுந்தான்."

"ஐயோ! பாவம்! சம்யுக்தையின் கதி என்னவாயிற்றோ!" "சம்யுக்தை தீயில் குதித்துப் பிராணனை விட்டாள். அது முதல் டில்லியில் துருக்க ராஜ்யம் ஏற்பட்டது. சீக்கிரத்தில் ஜயச்சந்திரனும் ராஜ்யத்தை இழந்து துருக்க ராஜாவுக்கு அடிமையானான்." "என்ன விபரீதம்? இதற்குத்தான் பெரியவர்கள் சொல்கிறதைக் கேட்டு நடக்க வேண்டும் என்கிறது. சம்யுக்தை தகப்பனார் சொன்னபடி கேட்டிருந்தால் இப்படியெல்லாம் நடந்திராது அல்லவா?" "அழகாயிருக்கிறதே, நீங்கள் சொல்வது! அது எப்படி சம்யுக்தையின் பேரில் பழி போடுகிறீர்கள்? ஜயச்சந்திரன் செய்தது என்ன நியாயம்? மகளுடைய சம்மதப்படி அவளைக் கலியாணம் செய்து கொடுத்திருந்தால் என்ன? அது மட்டுமல்லாமல் சொந்த மாப்பிள்ளையின் பேரில் துவேஷத்தினால் அன்னிய ராஜாவோடு சேர்ந்தானே? அது எவ்வளவு பெரிய துரோகம்! என்னைக் கேட்டால், கலியாண விஷயத்தில் மட்டும் அப்பா அம்மா தலையிடுவது ரொம்பப் பிசகு என்று சொல்வேன். பெண்ணாயிருந்தாலும் சரி, பிள்ளையாயிருந்தாலும் சரி, அவர்களுக்குப் பிடித்திருப்பவர்களைக் கலியாணம் செய்து கொள்வதற்கு அப்பா அம்மா குறுக்கே நிற்கக் கூடாது. அப்படிக் குறுக்கே நிற்பவர்களைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு விடவேண்டும்!"

இந்த வார்த்தைகள் காமாட்சி அம்மாளுக்கு ஒரு பழைய ஞாபகத்தை உண்டாக்கின. அவளுடைய முகம் சுருங்கியது; இதைப் பார்த்த சீதா, "அம்மா! உங்களுக்கு தலை வலிக்கிறதா, என்ன?" என்று கேட்டாள். "இல்லை!" என்று சொன்னாள் காமாட்சி அம்மாள். பிறகு, "நீ சொல்கிறது அவ்வளவு சரியில்லை, சீதா! தாயார் தகப்பனார் சொல்கிறது எப்போதும் தப்பாயிராது! குழந்தைகளின் நன்மைக்காகத்தான் சொல்லுவார்கள். குழந்தைகள் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்று தானே தாயார் தகப்பனாருக்கு இருக்கும்? எல்லாரும் ஜயச்சந்திரனைப்போல் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் சௌக்கியமாயிருக்க வேண்டும் என்றுதான் பெற்றவர்கள் யோசனை செய்து சொல்வார்கள்!" என்றாள். "வாஸ்தவந்தான், அம்மா! எல்லாரும் ஜயச்சந்திரனைப் போல் இருப்பார்களா? இப்போது என்னுடைய கலியாணத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையின் இஷ்டம் போல் நீங்கள் விட்டதனால்தானே நடந்தது? இல்லாவிட்டால் நடந்திருக்குமா!" என்றாள் சீதா. மறுபடியும் காமாட்சி அம்மாளின் மனத்தில் சுருக்கென்று தைத்தது எனவே அவள் பேச்சை மாற்ற விரும்பினாள். "சூரியாவுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லையே, சீதா! ஏன் ஆகவில்லை என்று உனக்கு ஏதாவது தெரியுமா? குற்றங்குறை ஏதேனும் உண்டோ?" என்று கேட்டாள். "அதெல்லாம் ஒன்றும் இல்லை; சூரியாவுக்கு அப்படியொன்றும் வயதாகி விடவில்லையே? இருபது அல்லது இருபத்தொன்று தானிருக்கும். ஆனால் அவனிடம் கலியாணத்தைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தவர்களிடம், 'நான் கலியாணமே பண்ணிக் கொள்ளப் போவதில்லை' என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்."

"பசங்கள் எல்லாருமே கொஞ்ச காலம் அப்படித்தான் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். கிட்டிமுட்டி வரும்போது சரி என்று சொல்லிவிடுவார்கள். சூரியா எது வரையில் படித்திருக்கிறான்?" "பி.ஏ. படித்துக்கொண்டிருந்தான்; இப்போது படிப்பை விட்டுவிட்டான்." "ஏன் விட்டுவிட்டான்? படிப்பு வரவில்லையா? சூரியாவைப் பார்த்தால் கொஞ்சம் அசடுப்போலத்தான் தோன்றுகிறது." "பார்ப்பதற்கு சூரியா அப்படித்தான் இருப்பான், ஆனால், உண்மையிலே ரொம்பக் கெட்டிக்காரன். என் கல்யாணம் நடந்ததே அவனால்தான் என்று சொல்லவேண்டும். உங்கள் பிள்ளை 'லலிதாவைப் பிடிக்கவில்லை; சீதாவைத்தான் பிடித்திருக்கிறது' என்று சொன்னதும் என் மாமாவும் மாமியும் மிக்க கோபம் அடைந்துவிட்டார்கள். அவர்களைச் சூரியாதான் சமாதானப்படுத்தினான்." "உன் மாமாவும் மாமியும் கோபித்துக்கொண்டால் கலியாணம் நின்று போய் விடுமா? கடவுள் யாருக்கு யார் என்று முடிபோட் டிருக்கிறாரோ அந்த மாதிரிதான் நடக்கும். அது இருக்கட்டும், சீதா! சூரியா ஏன் படிப்பை விட்டுவிட்டான்?"

"அவனுக்கு என்னவோ இங்கிலீஷ் படிப்புப் பிடிக்கவில்லையாம்! பி.ஏ. பாஸ் செய்துவிட்டால் அப்பாவும் அம்மாவும் ஏதாவது உத்தியோகம் பார்க்கும்படி வற்புறுத்துவார்களாம். யாராவது பெண்ணைக் கொடுக்கிறேன் என்று வந்து அவனைத் தொந்தரவு செய்வார்களாம்...." "பெண்ணைக் கொடுக்கிறேன் என்று வந்தால் அது ஒரு தொந்தரவா? நான் கூட என் தம்பி பெண்ணுக்குப் பார்க்கச் சொல்லலாம் என்றுதான் இவ்வளவு தூரம் சூரியாவைப்பற்றிக் கேட்கிறேன். உத்தியோகம் பார்க்காமல் அவன் வேறு என்ன செய்யப் போகிறானாம்." "இந்தப் பக்கத்தில் எங்கேயோ காங்கிரஸ் நடக்கிறதாம்; அதற்காக வருகிறானாம். ஆனால் திரும்பி ஊருக்குப் போகப் போவதில்லை யாம். டில்லியிலேயே தங்கியிருந்து பத்திரிகைகளுக்கு எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறானாம்." "ஓகோ! பத்திரிகைக்கு எழுதுவானா என்ன? அவ்வளவு கெட்டிக்காரனா? அப்படியென்றால் தேவலையே? சீதா! ராகவன் பத்திரிகைக்கு எழுதியதால்தான் அவனுக்குப் பெரிய உத்தியோகம் கிடைத்தது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ?" "உங்கள் பிள்ளையையும் இவனையும் ஒன்றாகச் சொல்லாதேயுங்கள். அவரைப்போல் இவனுக்குப் படிப்பு உண்டா? அவ்வளவு சாமர்த்தியந்தான் உண்டா? ஏதாவது காமாசோமா என்று தமிழ்ப் பத்திரிகைக்கு எழுதுவான்."

இந்தச் சமயத்தில் ரயில் 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு கொஞ்சம் மெதுவாயிற்று. தூரத்தில் அநேக ஜனங்கள் ஏக காலத்தில் இரைச்சல் போடும் சத்தம் கேட்டது. சீதா ரயிலுக்கு வெளியில் எட்டிப் பார்த்தாள். "அம்மா! அம்மா! டில்லி ஸ்டேஷன் அதோ தெரிகிறது உங்கள் பிள்ளை ஸ்டேஷனுக்கு வந்திருப்பார்." "வந்திருக்கிறானோ அல்லது ஆபீஸில் அதிக வேலை என்று வேறு யாரையாவது அனுப்பி வைக்கிறானோ?" "அதெல்லாம் இல்லை; அவர் கட்டாயம் ஸ்டேஷனுக்கு வந்திருப்பார்" என்றாள் சீதா. இந்தச் சம்பாஷணையின் ஆரம்பத்திலேயே வஸந்தி தூங்கிப் போய்விட்டாள். குழந்தையைச் சீதா தட்டி எழுப்பி, "வஸந்தி வஸந்தி! டில்லி வந்துவிட்டது. அப்பா பிளாட்பாரத்தில் வந்திருப்பார், எழுந்திரு எழுந்திரு" என்றாள். காது செவிடுபடும்படியான பலவகை இயந்திரச் சத்தங்களுக்கும் மனிதரின் கூக்குரலுக்கும் மத்தியில் கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ் டில்லி ஸ்டேஷனுக்குள் பிரவேசித்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இரண்டாம் அத்தியாயம்

ரயில்வே சந்திப்பு

டில்லி ரயில்வே நிலையத்துக்குள் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பிரவேசித்தபோது பக்கத்துப் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ஜனங்களின் முகங்கள் சீதாவின் கண்களில் தோன்றி மறைந்தன. ஆனால், அவளுடைய கண்களிலோ, கவனத்திலோ அந்த முகங்கள் ஒரு கணமும் நிற்கவில்லை. ஒரே ஒரு சுந்தர முகத்தை, தன் உள்ளத்தில் உறைந்து ஆத்மாவுடன் கலந்த முகத்தை, சீதாவின் கண்கள் ஆர்வத்துடன் தேடின. அந்த முகம் தெரிந்ததும், "வஸந்தி அதோ அப்பா!" என்று சீதா கூச்சலிட்டது ரயில்வே ஸ்டேஷன் சத்தங்கள் அவ்வளவுக்கும் மேலாகக் 'கிறீச்' என்று கேட்டது. சௌந்தரராகவனைப் பார்த்த பிறகும் கூட இந்தச் சனியன் பிடித்த ரயில் எதற்காக மேலே நகருகிறது என்று சீதாவுக்குத் தெரியவில்லை. ராகவன் நின்ற இடத்துக்கு அப்பால் சுமார் முப்பது அடி தூரத்தில் சீதா இருந்த வண்டி போய் நின்றது. "வஸந்தி! அதோ பார், அப்பா வருகிறார்!" என்று குதூகலித்தாள் சீதா. "அப்பா எங்கே? காத்து அம்மா!" என்றாள் குழந்தை. கூட்டத்தில் இடிபடாமல் நாஸுக்காகப் புகுந்து விலகிக் கொண்டு சீதா இருந்த வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்த ராகவன் திடீரென்று பாதி வழியில் நின்றான்.

சீதா இருந்த வண்டிக்கு எதிர்ப்புறத்தில், பிளாட்பாரத்தின் மறுபக்கத்திலிருந்து, ஒரு ரயில் 'வீல்' என்று சத்தமிட்டுக் கொண்டு புறப்பட்டது. சௌந்தரராகவன் அந்த வண்டியை நோக்கினான். ஒரு கணம் அங்கேயே தயங்கி நின்றான். பிறகு சீதாவை நோக்கி வருவதற்குப் பதிலாக, எதிர்ப்புறத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்த வண்டியை நோக்கி அவசரமாகச் சென்றான். இந்தச் சமயம் அவன் கூட்டத்தையும் நெருக்கத்தையும் பொருட்படுத்தவில்லை. முட்டி மோதிக் கொண்டும் இடித்து பிடித்துக் கொண்டும் சென்றான். ராகவன் இலக்கு வைத்துப்போன ரயில் வண்டியில் பலகணிக்கு அருகில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தியைப் பார்த்து ராகவன் ஏதோ கேட்டான். அவள் ஏதோ பதில் கூறினாள், இவன் திரும்ப ஏதோ சொன்னான். இதற்குள் ரயில் நகரத் தொடங்கியது. கடைசி கார்டு வண்டி போகிற வரையில் ராகவன் அங்கேயே நின்று போகும் ரயிலையும் பலகணிக்கு வெளியே தெரிந்த அந்தப் பெண்ணின் முகத்தையும் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு, திரும்பி, சீதா இருந்த வண்டியை நோக்கி வந்தான்.

மேலே கூறிய நிகழ்ச்சியைச் சீதா கண் கொட்டாது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள். தன்னையும் குழந்தையையும் பார்த்த பிறகு சௌந்தரராகவன் நேரே தங்களிடம் வராமல் எதிர்ப்பக்கத்து ரயிலை நோக்கிப் போனது சீதாவுக்குச் சிறிது ஏமாற்றம் அளித்தது. இன்னொரு ரயிலில் இருந்த பெண்கள் யார் என்பது அவளுக்குத் தெரியாது. எனினும் தன்னைவிட அவர்களை முக்கியமாகக் கருதி ராகவன் அங்கே போய்ப் பேசியது சீதாவின் உள்ளத்தில் 'சுருக்' என்ற வேதனையை உண்டாக்கியது. மேற்சொன்னதெல்லாம் அவளுடைய உள்ளத்தின் ஒரு நிமிஷ நேரத்து அனுபவம் தான். ராகவன் அருகில் வந்ததும் மனது ஒரே குதூகலமடைந்தது. "வஸந்தி! அப்பா கிட்டப்போ!" என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பலகணி வழியாக வெளியே எடுத்து விட்டாள். குழந்தை தாவிக்கொண்டு அப்பாவிடம் சென்றது. ராகவனும் ஆசையோடு வாங்கிக் கொண்டான். ஆனாலும் அவனுடைய மனது குழந்தையிடம் லயிக்கவில்லை என்பதை அவன் முகம் காட்டியது.

பிளாட்பாரத்தில் நடந்த மேற்படி ஒரு நிமிஷ நாடகத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாளுக்கு ஒன்றும் தெரியாது. அவள் சாமான் வகையறாக்களைச் சரி பார்த்து வண்டியிலிருந்து இறக்குவதில் முனைந்திருந்தாள். "சீதா முதலில் நீ கீழே இறங்கு! சாமான்களை எல்லாம் இறக்கிய பிறகு நான் இறங்குகிறேன்!" என்றாள் காமாட்சி அம்மாள். சீதா வண்டியிலிருந்து இறங்கினாள், போர்ட்டர்களுக்குக் கட்டளை போட்டுக் கொண்டிருந்த சௌந்தரராகவனுக்குப் பக்கத்தில் போய் நின்றாள். அவனாக ஏதாவது சொல்லுவான், கேட்பான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் ஒன்றும் பேசுகிற வழியாகக் காணவில்லை. "நீங்கள் ஸ்டேஷனுக்கு வருவீர்களா, வரமாட்டீர்களா என்று நானும் அம்மாவும் பந்தயம் போட்டுக் கொண்டு வந்தோம்!" என்றாள் சீதா. ராகவன் காதில் அது விழுந்ததாகவே தோன்றவில்லை. அவன் மனம் வேறு எங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. "புறப்படுவதற்கு இரண்டு நாளைக்கு முன்பு வஸந்திக்கு உடம்பு சரியில்லை. புறப்பட முடியுமோ, என்னமோ என்று பயமாய்ப் போய்விட்டது!" என்றாள் சீதா. கொஞ்சம் ராகவனுடைய கவனம் திரும்பியது "வஸந்திக்கு என்ன உடம்பு?" என்று கேட்டான். "அஜீரணம் மாதிரி இருந்தது?" குழந்தைகளுக்கு அஜீரணமே வரக்கூடாது. குழந்தைகளுக்கு என்னவிதமாக உடம்பு வந்தாலும் அது வளர்ப்பவர்களுடைய தப்பிதந்தான்?" என்று ராகவன் கடுமையான குரலில் கூறினான்.

தான் ஆரம்பித்த பேச்சு பிசகாய்ப் போய்விட்டதென்பதை அறிந்து சீதா மௌனமானாள். சாமான்கள் இறக்கப்பட்ட பிறகு காமாட்சி அம்மாள் பெஞ்சுகளுக்கு அடியில் குனிந்து பார்த்துவிட்டு ரயிலிலிருந்து இறங்கினாள். ராகவனை அருகில் வந்து பார்த்து, "ஏண்டா அப்பா!" இப்படி இளைத்துப் போயிருக்கிறாயே?" என்றாள். "ஆமாம், அம்மா! இளைத்துத்தான் போய்விட்டேன். இத்தனை நாள் உங்களையெல்லாம் பார்க்காத கவலையினாலே தான்!" என்றான் ராகவன். இந்தச் சமயத்தில் அதே ரயிலில் வேறொரு வண்டியிலிருந்து இறங்கிய சூரியா அவர்கள் நிற்குமிடத்துக்குச் சமீபமாய் வந்து சேர்ந்தான். ராகவன் அவனை ஏறிட்டுப் பார்த்தான். ஆனால் ஒன்றும் பேசவில்லை போர்ட்டர்களைப் பார்த்துச் "சாமான்களை எடுங்கள்" என்றான். சூரியாவுடன் ராகவன் பேசாதது சீதாவுக்கு மனக் கஷ்டத்தை அளித்தது. சூரியாவைக் கடைக் கண்ணால் பார்த்தாள். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

பிறகு மனத்தைத் தைரியப்படுத்திக்கொண்டு, "சூரியாவை உங்களுக்குத் தெரியுமோ, இல்லையோ?" என்று கேட்டாள். "எந்தச் சூரியாவை?" என்றான் சௌந்தரராகவன். "எந்தச் சூரியாவை என்கிறீர்கள்? லலிதாவின் அண்ணா சூரியாதான்!" "மாப்பிள்ளை! அடியோடு என்னை மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது!" "ஓகோ! கலியாணத்தின்போது ஒரே கோபமாக இருந்தானே, அந்தப் பையனா? இங்கு எங்கே வந்தான்?" என்று ராகவன் கேட்டான். இதனால் சீதாவின் மனக் கஷ்டம் மேலும் அதிகமாயிற்று. நல்லவேளையாக அந்தச் சமயம் காமாட்சி அம்மாள் அவர்களுடைய பேச்சில் தலையிட்டாள். "வழி நெடுகச் சூரியாதான் எங்களுக்கு ஒத்தாசையாயிருந்து வந்தான்; அவன் வந்திராவிட்டால் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாய்ப் போயிருக்கும்" என்றாள். "இந்த வண்டியிலேயே இவன் வந்தானா, என்ன? இறங்குகிறபோது நான் பார்க்கவில்லையே?" என்றான் ராகவன். "இல்லை, மாப்பிள்ளை ஸார்! நான் மூன்றாம் வகுப்பு வண்டியில் வந்தேன். அப்படி ஒன்றும் இவர்களுக்கு நான் பிரமாதமான ஒத்தாசை செய்துவிடவில்லை!" என்றான் சூரியா. "அதனால் பாதகமில்லை ஆனால் என்னை மட்டும் மாப்பிள்ளை சார் என்று கூப்பிடாமல் இருந்தால் சரி. கொஞ்சம் அநாகரிகமாகத் தோன்றுகிறது" என்றான் ராகவன். இதற்குள் போர்ட்டர்களின் தலையில் சாமான்கள் ஏறிவிட்டன. ராகவன் கையிலிருந்த குழந்தையைக் காமாட்சி அம்மாள் வாங்கிக் கொண்டாள். ராகவன் முன்னால் வழிகாட்டிச் செல்ல மற்றவர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள்.

"இதுதானா நமக்கு வாங்கியிருக்கிற மோட்டார் கார்?" என்று சீதா கேட்டாள். அவளுடைய குரலில் குதூகலம் தொனித்தது. அதற்கு ராகவன் பதில் சொல்லவில்லை. சாமான்களைக் காரில் ஏற்றியானதும் காமாட்சியம்மாளையும் சீதாவையும் குழந்தையுடன் பின் ஸீட்டில் உட்காரச் செய்தான். தான் முன் புறத்தில் டிரைவருடைய ஸீட்டில் உட்கார்ந்து கொண்டான். அவனுக்குப் பக்கத்து ஸீட் காலியாகத்தானிருந்தது. சூரியா விடைபெற்றுக் கொள்வதற்காக நின்றான். காலி இடத்தில் சூரியாவை ஏறிக்கொள்ளச் சொன்னால் என்ன என்று சீதாவுக்குத் தோன்றியது. ராகவன் சொல்வான் என்று எதிர்பார்த்தாள் அவன் சொல்லவில்லை. சீதா ஏமாற்றத்துடன் சூரியாவைப் பார்த்தாள். அவளுடைய மனோ நிலையைத் தெரிந்துகொண்ட சூரியா முகபாவத்தினால் தன் அனுதாபத்தைத் தெரிவித்து கொண்டான். வண்டி புறப்படலாயிற்று சீதா மெல்லிய குரலில், "அம்மா சூரியா உங்களிடம் சொல்லிக் கொள்கிறான் போலிருக்கிறது!" என்றாள். காமாட்சி அம்மாள், "ஏண்டாப்பா, சூரியா! போய் வருகிறாயா? ஊருக்குப் போவதற்குள்ளே ஒரு நாளைக்கு ஆத்துக்கு வந்துவிட்டுப் போ!" என்று சொன்னாள். "சீதாவுக்கு மாமியாரிடம் நன்றி உணர்ச்சி பொங்கியது. சூரியா, "ஆகட்டும், மாமி! அவசியம் வந்துவிட்டுப் போகிறேன். மாப்பிள்ளே! உங்களுடைய விலாசம் என்ன?" என்று கேட்டான்.

ராகவனுடைய குணம் ஒருவாறு சூரியாவுக்கு ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது. அதற்காக அத்தங்காளின் உறவை விட்டு விடுவதாக அவனுக்கு உத்தேசம் இல்லை, மாப்பிள்ளை தன்னை அழைக்காவிட்டால் அவர்களுடைய ஜாகையில் போய்ப் பார்த்து விடுகிறது என்று தீர்மானித்திருந்தான். "நம்பர் எட்டு, நாதிர்ஷா ரோடு?" என்று சொல்லிவிட்டு ராகவன் மோட்டாரை விட்டான். மோட்டார் போகத் தொடங்கியதும் சீதா மறுபடியும் உற்சாகம் கொண்டாள். "வஸந்தி பார்த்தாயா? அப்பா மோட்டார் ஓட்டுகிறார்!" என்றாள். "நானும் மோட்டார் ஓத்துவேன்!" என்றாள் வஸந்தி. சீதா கலகலவென்று சிரித்தாள், "கேட்டீர்களா அம்மா உங்கள் பேத்தியின் பேச்சை! இவளும் கார் ஓட்டுவாளாமே?" என்றாள். "ஓட்டினாலும் ஓட்டுவாள்; இவள் பெரியவளாகும் போது உலகத்திலேயே இன்னும் என்னவெல்லாம் அதிசயம் நடக்கப் போகிறதோ!" என்றாள் காமாட்சி அம்மாள். ராகவன் அப்போது பேச்சில் தலையிட்டு, "அம்மா! பொம்மனாட்டிகள் கார் ஓட்டுகிறது, வரப்போகிற அதிசயம் இல்லை! இப்போதே எத்தனையோ ஸ்திரீகள் கார் ஓட்டுகிறார்கள். அதனால் வீதிகளில் ஒரே அபாயமாய்ப் போய் விட்டது பெண்பிள்ளை ஓட்டுகிற மோட்டார் கார் வருகிறதென்றால் வீதி உடனே காலியாகி விடுகிறது! ஜனங்கள் அப்படிப் பயந்து நாலாபுறமும் ஓடி ஒதுங்குகிறார்கள்!" என்று சொன்னான்.

ராகவனுடைய நகைச்சுவையை ரசித்துச் சீதா சிரித்தாள். பழைய அனுபவத்திலிருந்து, ராகவனுடைய ஹாஸ்யத்தைப் புரிந்து கொண்டு சிரிக்காவிட்டால் அவனுக்கு கோபம் வரும் என்பதைச் சீதா அறிந்திருந்தாள். ஏதாவது புரியாவிட்டால் ராகவன் விளக்கிச் சொல்லமாட்டான். "உன்னிடம் வந்து சொல்லப் போனேனே?" என்று முடித்துவிடுவான். இதனால் அவன் பேச்சுப் புரிந்தாலும் புரியாவிட்டாலும் சீதா சமயோசிதம் பார்த்துச் சிரித்து விடுவது வழக்கம். சீதாவின் சிரிப்பு நிற்பதற்குள் 'டர்ர்ர்' என்ற சத்தத்துடன் கார் நின்றது. ராகவன் சட்டென்று பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். வயதான முஸ்லிம் ஸ்திரீ ஒருத்தி உயிர் தப்பினாள். இன்னும் அரை அங்குலம் வண்டி நகர்ந்திருந்தால் அந்த முஸ்லிம் ஸ்திரீயின் பேரில் வண்டி மோதி அவளைக் கீழே தள்ளி இருக்கும். முதலில் காமாட்சி அம்மாளுக்கும் சீதாவுக்கும் விஷயம் இன்னதென்று தெரியவில்லை. தெரிந்து கொண்டதும் அவர்களுக்கு அடி வயிற்றில் நெருப்புச் சுட்டது போலிருந்தது. "ஏம்மா, மோத்தார் நின்னுத்து?" என்று கேட்டாள் வஸந்தி. மறுபடியும் கார் போக ஆரம்பித்ததும் காமாட்சி அம்மாள், "ஏண்டாப்பா, மோட்டார் ஓட்டுவதற்கு டிரைவர் வைத்துக் கொள்ளவில்லையா? நீயே எதற்காக ஓட்ட வேண்டும்!" என்றாள். "டிரைவர் வைத்துக்கொண்டால், சம்பளம் கொடுக்க வேணுமே? மாதாமாதம் பணத்துக்கு எங்கே போகிறது? இந்த ஊரிலே டிரைவர்களுக்கு ரொம்பக் கிராக்கி!" என்றான் ராகவன்.

அப்போது சௌந்தரராகவனுக்கு மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் என்பது அவன் தாயார், மனைவி இருவருக்கும் தெரியும். ஆகையால், 'பணத்துக்கு எங்கே போகிறது' என்று அவன் கேட்டது பரிகாசத்துக்காக என்றே நினைத்தார்கள்! சீதா சிரித்தாள். "எதற்காகச் சிரிக்கிறாய்! நான் சொல்கிறது வேடிக்கை என்று நினைத்தாயா?" என்றான் ராகவன். "ஆமாம்!" என்றாள் சீதா. "எதனால் வேடிக்கை என்று உனக்குத் தோன்றுகிறது?" என்று ராகவன் கேட்டான். "மாதம் ஆயிரத்து இருநூறு ரூபாய் சம்பளம் வருகிறது; டிரைவருக்குக் கொடுக்கப் பணம் இல்லையென்றால் யாராவது நம்புவார்களா? உங்கள் செல்வக் குமாரி வஸந்திகூட நம்பமாட்டாளே!" என்றாள் சீதா. "பெண்ணையும் உன்னைப் போலவே வளர்த்துக் கொண்டு வருகிறாயாக்கும்!" என்றான் ராகவன். அதற்கும் சீதா சிரித்துக்கொண்டே, "என் மாதிரி வளர்க்காமல் வேறு யார் மாதிரி வளர்க்க வேண்டுமாம்!" என்று கேட்டாள். இந்தச் சந்தர்ப்பத்தில் ராகவன் ஓட்டிய கார் தனக்கு இந்து முஸ்லீம் வேற்றுமைப் புத்தி கிடையாது என்று நிரூபித்தது. இப்போது ஒரு ஹிந்து ஸ்திரீ மீது அது ஏறப் பார்த்தது! நல்ல வேளையாக ஏறிவிடவில்லை. "ஏண்டாப்பா ராகவா! இன்னும் மோட்டார் நன்றாய் விடுவதற்கு நீ கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறதே! அதற்குள்ளே என்ன அவசரம்? நன்றாய்க் கற்றுக்கொள்ளுகிற வரையிலாவது டிரைவர் வைத்துக் கொள்ளக்கூடாதா?" என்றாள் காமாட்சி அம்மாள்.

"எனக்கு நன்றாய் மோட்டார் விடத் தெரியும் அம்மா! ஆனால் இன்றைக்கு மனது கொஞ்சம் குழம்பியிருக்கிறது அதனால்..." "இன்றைக்கு மனது எதற்காகக் குழம்ப வேண்டும்?" "செத்துப் போனதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் திடீரென்று உயிரோடு வந்து நின்றால், மனக் குழப்பம் ஏற்படாதா? அதிலும் தான் தானில்லை என்று சாதிக்கப் பார்த்தால்?...." "என்ன சொல்கிறாய், ராகவா! எனக்கு அப்படி ஒன்றும் உடம்பு அதிகமில்லையே? நாலு நாளைக்கு இன்புளூயன்ஸா சுரமாயிருந்தது! அவ்வளவுதான். ஏண்டி சீதா! நீ ஏதாவது எனக்கு உடம்பு ரொம்ப அதிகமாயிருந்தது என்று கடிதம் எழுதிவிட்டாயோ!" "உங்களுடைய உடம்பைப்பற்றி நான் எழுதவே இல்லையே?" என்றாள் சீதா. "நானும் உங்களைச் சொல்லவில்லை, அம்மா! உங்களுக்கு உடம்பு அசௌக்கியமாயிருந்த விஷயமே எனக்கு இது வரைக்கும் தெரியாது வேறொருவரைப்பற்றிச் சொன்னேன்." "அப்படி யார் செத்துப் பிழைத்து உயிரோடு வந்தது?" "ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் பார்க்கவில்லையா?" "நான் பார்க்கவில்லையே? எந்த ரயில்வே ஸ்டேஷனில்?" "டில்லி ஸ்டேஷனில்தான் உங்கள் வண்டி வந்து நின்றதும் எதிர்ப்புறத்தில் ஒரு வண்டி புறப்பட்டது அதிலே பார்க்கவில்லையா?" "நான் ஒன்றும் பார்க்கவில்லை அதில் யார் போனது?" "அப்புறம் சொல்கிறேன்" என்றான் ராகவன்.

காமாட்சி அம்மாள் எதிர்ப்புறத்து ரயிலைப் பார்க்கவில்லைதான்; ஆனால் சீதா பார்த்துக்கொண்டிருந்தாள். ராகவன் ஓடிப்போய் யாரோ ஒருத்தியிடம் இரண்டு வார்த்தை பேசியதையும், அதற்குள்ளே வண்டி போய் விட்டதையும் ராகவன் ஒரு மாதிரி முகத்துடன் திரும்பி வந்ததையும் சீதா பார்த்துத் தன் மனதில் பதிய வைத்துக்கொண்டிருந்தாள். "அந்த ரயிலில் போனது யார் என்று கேளுங்கள், அம்மா!" என்று மாமியாரைத் தூண்டினாள்.இதற்குள் மூன்றாவது தடவையாக மோட்டார் வண்டி நின்றது. சடக்கென்று நின்றபடியால் மறுபடியும் மாமியாருக்கும் மருமகளுக்கும் பயம் உண்டாயிற்று. "என்ன? என்ன?" என்றார்கள். "ஒன்றும் இல்லை; வீடு வந்துவிட்டது!" என்றான் ராகவன். சீதா வீட்டைப் பார்த்தாள்; அழகான சின்னஞ்சிறு பங்களா. முன்புறத்திலும் இரு பக்கங்களிலும் பூஞ்செடிகள் இளமரங்கள். சீதாவின் உள்ளத்தில் இன்பம் பொங்கித் ததும்பியது. "வஸந்தி! உன் வீட்டைப் பாரடி, எவ்வளவு அழகாயிருக்கிறது?" என்றாள். "இது அப்பா கத்திய வீதா, அம்மா? நம்பளுக்காகக் கத்தியிருக்காளா?" என்றாள் வஸந்தி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மூன்றாம் அத்தியாயம்

துயரத்தின் வித்து

கலியாணம் நடந்த உடனேயே சௌந்தரராகவன் சீதாவைத் தன்னுடன் புதுடில்லிக்கு அழைத்துப் போனான். இங்கிலீஷ் ஹோட்டல் ஒன்றில் தற்காலிகமாக அவர்கள் தங்கினார்கள். ஒரு மாத காலம் கந்தர்வலோகத்தில் சஞ்சாரம் செய்து காண்டிருந்தார்கள். புதுடில்லியின் அழகான சாலைகளிலும் சதுக்கங்களிலும் பழைய டில்லியின் இடிந்த கோட்டைகளிலும் இடியாத அரண்மனைகள், மசூதிகளிலும் அவர்கள் கைகோத்துக் கொண்டு உலாவி வந்தார்கள். இம்மாதிரி சில வருஷங்களுக்கு முன்னால் இன்னொரு பெண்ணுடன் கைகோத்துக்கொண்டு இதே இடங்களில் உலாவியது பற்றி ராகவனுக்கு அவ்வப்போது நினைவு வருவதுண்டு. ஆனால் அந்த நினைவை அலட்சியமாக உதறி எறிந்து விட்டுப் பக்கத்தில் நின்ற தன் தர்மபத்தினி சீதாவின் கரத்தை ராகவன் கெட்டியாகப் பிடித்துக்கொள்வான். பிறகு ராகவன் இங்கிலாந்துக்கு அவசரமாகப் புறப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பேரில் சீதாவைச் சென்னைக்கு அழைத்து வந்து தன் பெற்றோர்களிடம் விட்டான். தானும் சில நாள் தங்கியிருந்து, சீதாவுக்கு ஆயிரம் விதமாகத் தேறுதல் கூறினான். அச்சமயம் சீமைக்குப் போவதால் தன்னுடைய உத்தியோக வாழ்க்கைக்கு ரொம்ப அனுகூலம் ஏற்படும் என்றும், அப்படிப்பட்ட அருமையான சந்தர்ப்பம் மறுபடி கிடைப்பது அரிது என்றும், அதை நழுவவிடுதல் மிக்க அறிவீனமாகும் என்றும் எடுத்துச் சொன்னான்.

மனதாரத் தெரிந்தெடுத்து ஆசையுடன் மணந்து கொண்ட மனைவியை அவ்வளவு சீக்கிரம் பிரிந்து செல்வதில் தனக்கு மட்டும் வருத்தமில்லையா என்று கேட்டான். வாழ்க்கையில் தன்னுடைய முன்னேற்றத்திற்கு அவள் குறுக்கே நிற்கலாமா என்றான். அடுத்த தடவை தான் வெளிநாட்டுக்குப் பிரயாணமாகும்போது அவளையும் அவசியம் அழைத்துப் போவதாக உறுதிமொழி கூறினான். சீதாவுக்கு ஒரு பக்கத்தில் தன்னுடைய இதய நாயகனை இவ்வளவு சீக்கிரத்தில் பிரிய வேண்டியிருக்கிறதே என்று துக்கம் துக்கமாய் வந்தது. இன்னொரு பக்கத்தில் ராகவன் சீமைக்குப் போவது பற்றிப் பெருமையாகவும் இருந்தது. அழுது கொண்டே சிரித்தாள், சிரித்துக் கொண்டே அழுதாள். ஒரு நிமிஷம் 'போகவேகூடாது' என்று பிடிவாதம் பிடித்தாள். அடுத்த நிமிஷம், "கட்டாயம் போக வேண்டும்" என்று வற்புறுத்தினாள். கடைசியாக விடை கொடுத்து அனுப்பினாள். ராகவன் திரும்பி வருவதற்கு பதினைந்து மாதத்துக்கு மேலாயிற்று. அதற்குள் சீதாவின் வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்ச்சிகள் நேர்ந்தன. அவளுடைய அருமைத் தாயார் பம்பாய் ராஜம்மாள் தன் ஒரே மகளுக்கு நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்தோம் என்ற மனத்திருப்தியுடன் இந்த மண்ணுலகை நீத்துச் சென்றாள். தன்னுடைய புருஷர் துரைசாமி அய்யரின் மடியின் மீது தலையை வைத்துக்கொண்டு கடைசி மூச்சை விடும் பாக்கியம் அவளுக்குக் கிடைத்தது. அதோடு அவள் பெரிதும் ஆசை வைத்திருந்த அகண்ட காவேரிக் கரையில் அவளுடைய உடல் தகனமாகும் பேறும் கிடைத்தது.

தாயார் இறந்து பல தினங்கள் வரையில் சீதா கண்ணீரும் கம்பலையுமாயிருந்தாள். மாமியார் எத்தனை ஆறுதல் சொல்லியும் அவளுடைய துக்கம் தீரவில்லை. மாமனார் பகவத் கீதையிலிருந்து எவ்வளவு சுலோகங்கள் சொல்லி வியாக்யானம் செய்து காட்டியும் அவளுடைய மனம் நிம்மதியடையவில்லை. இப்பேர்ப்பட்ட துக்கம் தனக்கு நேர்ந்த சமயத்தில் தன் அருமைக் கணவர் பக்கத்தில் இல்லாமற் போனது அவளுடைய துயரத்தை அதிகமாக்கியது. உண்மையான அன்பு, சினேகம் இவற்றின் பெருமை அதுதான் அல்லவா? அன்புடையவர்களிடமும் சிநேகிதர் களிடமும் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டால் துக்கம் குறைந்து சீக்கிரத்திலேயே மனச்சாந்தி ஏற்படுகிறது. அன்புள்ளோரிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டால் அந்தச் சந்தோஷம் பொங்கிப் பெருகுகிறது. சீதாவுக்கு நேர்ந்த பெருந்துக்கத்தை அவளுடன் பகிர்ந்து கொள்ளச் சௌந்தரராகவன் அருகில் இல்லை.இதனால் அவளுடைய துக்கம் வெகு காலம் நீடித்திருந்தது.சீதாவின் வாழ்க்கையில் இன்னொரு முக்கிய சம்பவம் - சந்தோஷமான சம்பவம் - நேர்ந்த பிற்பாடுதான், அந்தத் துக்கம் மறைந்தது.

சீதா தன் உயிருக்கே நேர்ந்த அபாயத்திலிருந்து கடவுள் அருளால் பிழைத்து எழுந்து தான் பெற்ற செல்வக் கண்மணியைப் பார்த்த பிறகு மற்றதெல்லாம் அவளுக்கு மறந்தே போய்விட்டது. தாயாரை நினைத்துக்கொண்டு துக்கப்படுவதற்கு இனிமேல் அவளுக்கு நேரம் ஏது? அதோடு கூடக் காமாட்சி அம்மாளும் மற்றும் அக்கம் பக்கத்து மூதாட்டிகளும், "உன் அம்மாவே உன் வயிற்றில் பெண்ணாய் வந்து பிறந்து விட்டாள்!" என்று அடிக்கடி சொன்னதனால் சீதாவுக்கு அத்தகைய நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. தன் குழந்தையின் முகத்தைப் பார்ப்பதில் உண்டான ஆனந்தத்தில் தன்னைப் பெற்ற தாயின் முகத்தை மறந்தாள். சீமைக்குப் போயிருக்கும் கணவன் திரும்பி வந்ததும் குழந்தையை அவரிடம் காட்டி ஆச்சரியக் கடலில் மூழ்கச் செய்யும் நேரத்தை எண்ணி எண்ணி உள்ளமும் உடலும் பூரித்தாள். சீமைக்குப் பயணமாகும்போது ராகவன் சீதாவைக் கான்வெண்ட் ஸ்கூலுக்கு அனுப்பச் சொல்லிப் பெற்றோர்களிடமும் ஏற்பாடு செய்துவிட்டுப் போனான். அதன்படி சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகவில்லை என்று அறிந்ததும் அவன் மிக்க கோபம் கொண்டு கடிதம் எழுதினான். அந்தக் கடிதத்துக்குப் பதிலாக அவனுடைய தகப்பனார், "உன்னுடைய சீமந்தக் கலியாணத்துக்கு அடுத்த மாதம் முகூர்த்தம் வைத்திருக்கிறது; உடனே புறப்பட்டு வந்து சேரவும்" என்று எழுதினார்.

சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகாத காரணம் இப்போது ராகவனுக்குப் புலனாயிற்று. அதனால் அவன் சந்தோஷமடைந் தானா, அதிருப்தி கொண்டானா என்று சொல்ல முடியாது. பதில் கடிதத்தில் பரிகாசமாக, சீமந்தக் கலியாணத்தை ஆறு மாதம் தள்ளி வைத்துக் கொள்ளவும்; தள்ளி வைக்க முடியாவிட்டால் பர்த்தி வைத்து நடத்தி விடவும்!" என்று எழுதியிருந்தான். சீதாவுக்கு இந்தக் கடிதம் அளவில்லாத கோபத்தை அளித்தது. ராகவனுடைய கடிதங்களை விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தைப் போல் போற்றிப் பத்திரப்படுத்தும் வழக்கமுடைய சீதா மேற்படி கடிதத்தைச் சுக்கலாகக் கிழித்தெறிந்தாள். ராகவன் அவ்வாறு பரிகாசமாகப் பதில் எழுதியது பற்றி மாமியாரிடம் புகாரும் சொன்னாள். மாமியாரும் மருமகளும் வெகு ஒற்றுமையாகவும் அன்யோன்னியமாகவும் இருந்து வந்தார்கள். "மருமகள் மெச்சிய மாமியார் இல்லை" என்னும் பழமொழி அவர்கள் விஷயத்தில் பொய்யாயிற்று. "அம்மா! உங்களிடம் இருந்து குடித்தனம் செய்ய முடியாதென்று என் 'ஓர்ப்படி' பிறந்த வீட்டோடு போய் விட்டாளாமே? அவள் எவ்வளவு பெரிய ராட்சஸியா இருக்க வேண்டும்?" என்றாள். அக்கம் பக்கத்து வீடுகளில் தன் மாமியார் தன்னை அன்புடன் நடத்துவது பற்றிப் பெருமையுடன் சொல்லிக் கொண்டாள். காமாட்சியம்மாளின் மனோரதம் நிறைவேறி விட்டது. அந்த அம்மாள் பத்மாபுரத்தின் வீதிகளில் கம்பீரமாகப் பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கினாள்.

சௌந்தரராகவன் சீமையிலிருந்து திரும்பி வந்தான். வஸந்தியைப் பார்த்து அகமகிழ்ந்து முகமலர்ந்தான். சீதா கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போகாததினால் ஏற்பட்ட கோபத்தையும் மறந்தான். புதுடில்லியில் ஜாகை கிடைத்ததும் கடிதம் எழுதி அவர்களைத் தருவித்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுப் போனான். நல்ல ஜாகை கிடைப்பதற்கு இத்தனை காலம் ஆகிவிட்டது. சீதா புதுடில்லிக்கு வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆயிற்று; அந்த ஏழு நாளும் புது ஜாகை போடும் ஏற்பாடுகளில் எல்லாரும் முனைந் திருந்தார்கள். இந்த நாற்காலியை எடுத்து அந்த அறையில் போடுவது, அந்த அலமாரியைத் தூக்கி இந்த அறைக்குக் கொண்டு வருவது, கட்டில்களை மாற்றி மாற்றிப் போடுவது, சமையல் வேலைகளுக்கு ஏற்பாடு செய்வது, அம்மிக் குழவியும் கல்லுரலும் சம்பாதிப்பது, கிராமபோனும் ரேடியோவும் வைப்பது ஆகிய காரியங்களில் சதா ஈடுபட்டிருந்தார்கள். சாயங்காலம் வந்ததும் சீதா முன்போல அதாவது கலியாணம் ஆனவுடனே வந்திருந்த நாட்களைப்போல் ராகவனுடன் வெளியில் உலாவச் செல்ல வேண்டுமென்று ஆசைப்படுவாள். காரியம் அதிகமாக இருந்தபடியால் அந்த ஆசையை அடக்கிக் கொள்வாள்.

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள் காலை ராகவனைப் பார்த்து, "இன்று சாயங்காலம் சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்து விடுங்கள். வெளியில் எங்கேயாவது அழைத்துப் போங்கள்!" என்றாள் சீதா. "நான் அழைத்துப் போவது என்ன? உனக்கு இஷ்டமான போது இஷ்டமான இடத்துக்குப் போய் வருவதுதானே!" என்றான் ராகவன். "அழகாயிருக்கிறது; நான் மட்டும் தனியாகப் போவதாக்கும்?" "போனால் என்ன? உன்னை யாராவது வழிப்பறி செய்து கொண்டு போய் விடுவார்களா? இங்கே இன்னும் பிரிட்டிஷ் ராஜ்யம் நடக்கிறது; காங்கிரஸ் ராஜ்யம் பூராவும் வந்து விடவில்லை!" என்றான் ராகவன். "என்னை ஒருவரும் கொண்டுபோய் விடமாட்டார்கள்; வாஸ்தவந்தான். ஆனாலும் தனியாகத்தான் போக வேண்டும் என்றால், நான் போகவே மாட்டேன்." "தனியாகப் போக வேண்டாம்; உன் மாமியாரையும் கூட அழைத்துக் கொண்டு போயேன்?" "மாமியாரை நான் கூட அழைத்துக் கொண்டு போவதற்கு உங்களுடைய அனுமதி வேண்டுமாக்கும்!" என்று சீதா பொய்க் கோபம் வருவித்துக் கொண்டு சொன்னாள். "சரி; சரி! கோபித்துக்கொள்ளாதே! இன்று சாயங்காலம் சீக்கிரம் வந்து உன்னை 'வாக்கிங்'க்கு அழைத்துப் போகிறேன்," என்று சொல்லிவிட்டு ராகவன் சென்றான். அவ்விதமே அன்று மாலை சீக்கிரமாக ராகவன் திரும்பி வந்தான். சீதாவைப் பார்த்து "மோட்டாரில் 'வாக்கிங்' போகலாமா? அல்லது கால்நடையாகப் போகலாமா?" என்று கேட்டான்.

வழக்கப்படி சீதா ராகவனுடைய ஹாஸ்யத்துக்காகச் சிரித்துவிட்டு, "மோட்டாரில் 'வாக்கிங்' எப்படிப் போவது? நடந்தே போகலாம்!" என்றாள். காமாட்சியம்மாள் தான் 'வாக்கிங்' வரவில்லையென்றும் குழந்தையைப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினாள்; சீதா விரும்பியதும் இதுதான். ஆகையால் ராகவனுடன் உல்லாசமாக கிளம்பினாள். இருவரும் கன்னாட் சர்க்கிளுக்கு வந்து ஒரு தடவை சுற்றிப் பார்த்துவிட்டு 'இந்தியா கேட்'டை நோக்கிச் சென்றார்கள். இந்தியா கேட்டுக்குப் பக்கத்தில் உள்ள செயற்கை நீர் ஓடைகளில் ஒன்றுக்கு அருகில் பச்சைப் பசும்புல் தரையில் உட்கார்ந்தார்கள். அப்போது சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்து வரும் சமயம். நானா திசைகளிலும் வரிசை வரிசையாக வானத்து நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுக் கொண்டு இந்தியத் தலைநகரின் மின்சார தீபங்கள் பிரகாசித்தன. "கந்தர்வலோகம் என்று சொல்கிறார்களே! அந்த கந்தர்வலோகம் இதைவிடவா அழகாயிருக்கும்?" என்றாள் சீதா. "நான் கந்தர்வலோகத்துக்குப் போனதில்லை; அதனால் இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை" என்றான் ராகவன். சீதா சிரித்துக்கொண்டே நானும் கந்தர்வலோகத்துக்குப் போனதில்லை; ஆனால் கந்தர்வலோகத்தைப் பற்றிப் பாரதியார் 'ஞான ரதம்' என்ற புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்திருக்கிறேன். புதுடில்லியைவிடக் கந்தர்வலோகம் அவ்வளவு ஒன்றும் ஒசத்தியில்லையென்று எனக்குத் தோன்றுகிறது!" என்றாள். "நான் 'ஞான ரத'த்தில் ஏறினதில்லை; அதனால் அபிப்பிராயம் சொல்ல முடியாது" என்றான் ராகவன்.

ஞான ரதம் வெறும் கற்பனை ரதம். ஆனால் நீங்கள் வான ரதத்தில் ஏறி ஆகாசத்தில் பறந்திருக்கிறீர்கள். ஞான ரதத்தைப் போல் கந்தர்வலோகமும் கற்பனை லோகந்தான். நீங்களோ லண்டன், பாரிஸ் முதலிய உண்மை நகரங்களுக்கெல்லாம் போயிருக்கிறீர்கள். ஏன்னா? புதுடில்லியைவிட லண்டனும் பாரிஸும் அழகுதானே?" என்று சீதா கேட்டாள். "ஏன்னா என்று இனிமேல் என்னை அழைப்பதில்லை என்று நீ சபதம் செய்தால் உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்" என்றான் ராகவன். "ஆகட்டும்; இனிமேல் 'ஏன்னா' என்கவில்லை; 'ஏன் ஸார்?' என்கிறேன். லண்டன் அழகா, டில்லி அழகா? ஏன் ஸார்?" என்றாள் சீதா. "லண்டன் ஒரு விதத்தில் அழகு; டில்லி இன்னொரு விதத்தில் அழகு" என்றான் ராகவன். சீதாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது ராகவனுடைய கண்கள் அங்குமிங்கும் சுழன்று பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு சமயம் சாலையோடு இரண்டு பெண்கள் நடந்து போனார்கள். சாய்ந்து படுத்திருந்த ராகவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்து அவர்களை உற்றுப் பார்த்தான்; மறுபடியும் புல் தரையில் சாய்ந்து கொண்டான். டில்லி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சம்பவம் சீதாவுக்கு ஞாபகம் வந்தது. "ஏன் ஸார்! அன்றைக்கு ரயில்வே ஸ்டேஷனில் யாரோ ஒருத்தியைப் பார்த்துப் பேசினீர்களே? அவள் யார்? என்று சீதா கேட்டாள். "அவள் யாராயிருந்தால் உனக்கென்ன?" என்று ராகவன் கேட்ட குரலில் கடுமை தொனித்தது.

"யார் என்று சொன்னால் என்ன!" "சொல்ல முடியாது." "ஏன் சொல்ல முடியாது?" "எனக்கு இந்த ஊரில் எத்தனையோ பேரைத் தெரியும். அவர்களையெல்லாம் யார் யார் என்று உனக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?" "உங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் எனக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே?" "உனக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் தெரிந்தால் போதும். ஊரில் உள்ளவர்களை எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை." பொங்கி வந்த கோபத்தைச் சீதா அடக்கிக் கொண்டாள். சற்று நேரம் இருவரும் மௌனமாயிருந்தார்கள். "ஏன் ஸார்? அவள் யார் என்று சொல்லமாட்டீர்களா!" மௌனம். "நம்ம பக்கத்து மனுஷியா? இந்த ஊர்க்காரியா?" மௌனம். "என்னோடு ஏன் பேசப் போகிறீர்கள்? இதற்குத்தான் 'வாக்கிங்' அழைத்து வந்தீர்களாக்கும்?" என்று கூறிய சீதாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. இதற்குத்தான் அழைத்துவர மாட்டேன் என்று சொன்னேன். பெண்களின் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டாயல்லவா? சனியன்!" என்று சொல்லிக் கொண்டே ராகவன் பசும்புல் தரையிலிருந்து எழுந்தான். "நான் ஒன்றும் சனியன் இல்லை" என்று சீதா கூறி இன்னும் முணுமுணுத்தாள். சீதாவின் குற்றமற்ற இளம் உள்ளத்தில் துன்பத்தின் வித்து விதைத்தாகிவிட்டது. அது முளைத்து வளர்ந்து மரமாகி என்னென்ன பலன்களைத் தரப் போகிறதோ, யார் கண்டது?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நான்காம் அத்தியாயம்

சாலை முனையில்

உலாவச் சென்று திரும்பி வந்த அன்றிரவு சீதா வெகு நேரம் தூங்கவில்லை. புதுடில்லியில் புதுக் குடித்தனம் போட்ட பிறகு முதன் முதலாகத் தன் பிரிய நாயகன் தன்னை உலாவ அழைத்துச் சென்ற தினத்தில், தான் அசட்டுத்தனமாக நடந்து கொண்டு அவனுக்கு எரிச்சல் உண்டாக்கியதை நினைத்து நினைத்து வருந்தினாள். இருந்தாலும் அவர் எதற்காக, 'அவள் யார் என்பதைச் சொல்ல மறுக்க வேண்டும் என்ற எண்ணம் ஊசியினால் நெஞ்சைக் குத்துவதுபோல் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. சென்னை பத்மாபுரத்தில் மாமனார் வீட்டில் வசித்த போது, சில கோள் - சொல்லிப் பெண்கள் ராகவனுடைய பழைய காதலைப் பற்றி ஊரில் ஏற்பட்டிருந்த வதந்தியை அவளிடம் பிரஸ்தாபித்தார்கள். அப்போது அவள் அதை நம்பவில்லை. பொறாமையினால் சொல்கிறார்கள் என்றே எண்ணினாள். அந்த வம்புப் பேச்சு இப்போது ஞாபகத்துக்கு வந்தது. 'ரயிலில் பார்த்த பெண் அவள்தானோ, என்னமோ? தினம் தினம் ஆபீஸுக்குப் போகிறதாகச் சொல்லி விட்டுப் போகிறாரே, அவளைப் பார்க்கத்தான் போகிறாரோ என்னமோ?' என்று தோன்றியது. "என்ன மூடத்தனம்? அவள்தான் எங்கேயோ போய்விட்டாளே?
மேலும், ரயிலில் அவளைப் பார்த்துவிட்டு இவர் அதிசயப்பட்டதிலிருந்து அவ்வளவு பழக்கப்பட்டவளாகவே தோன்றவில்லை. அப்படி இருக்க நாமாக மனத்தை ஏன் புண்படுத்திக் கொள்கிறோம்? 'பெண் புத்தி பேதைமை' என்று சொல்லுவது வாஸ்தவந்தான்!" என்று தன்னைத் தானே கண்டித்துக் கொண்டாள். "லலிதாவைப் பார்க்க வந்த இடத்தில் அவளைப் பிடிக்கவில்லை என்று சொல்லி என்னை வலியக் காதலித்து மணந்து கொண்டாரே; அப்படி என்னை ஆட்கொள்ள வந்த உத்தம புருஷரைப் பற்றி வீண் சந்தேகம் கொள்வது எவ்வளவு பிசகு? கூடவே கூடாது!" என்று தனக்குதானே புத்தி சொல்லிக் கொண்டாள். இனிமேல் அன்று சாயங்காலம் நடந்தது போல் நடப்பதற்கே இடங்கொடுக்கக் கூடாது என்றும், அவருக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றிக் கேட்கவே கூடாது என்றும் சங்கல்பம் செய்து கொண்டாள். இவ்வளவு திடமான தீர்மானத்துக்கு வந்த பிறகும், "ஏதோ நான் தெரியாத்தனமாகக் கேட்டு விட்டதாகவே இருக்கட்டும்; 'அவள் யார்' என்று சொல்லியிருந்தால் என்ன? எதற்காக மறுக்க வேண்டும்?" என்ற நினைவு தோன்றி வேதனை செய்தது.
இந்த வேதனை நிறைந்த சிந்தனையெல்லாம் மறுநாள் பொழுது விடிந்ததும், தூக்கத்தில் கண்ட துர்சொப்பனம் விழித் தெழுந்ததும் மங்கி மறைவது போல், சீதாவின் மனத்திலிருந்து மறையத் தொடங்கியது. ராகவனுக்குக் காலை காப்பி கொண்டு கொடுத்த போது அவன் அவளைப் பார்த்துச் செய்த புன்னகையில் அடியோடு மறைந்துவிட்டது. வழக்கம்போல் ராகவன் ஆபீஸுக்கு புறப்பட்டபோது சீதா வஸந்தியைத் தூக்கிக்கொண்டு வந்தாள். ராகவன் அவளைக் கையில் வாங்கிக் கொண்டு கொஞ்சினான். தோளில் சாத்திக் கொண்டு தட்டிக் கொடுத்தான்; கன்னத்தை மெதுவாகக் கிள்ளினான். "வஸந்தி! என்னோடு நீ ஆபீஸுக்கு வருகிறாயா?" என்று கேட்டான். "வதேன் அப்பா! இப்பவே வதேன்!" என்றாள் வஸந்தி. "சரிதான்; உன்னை அழைத்துக் கொண்டு போனால் நான் வேலை செய்தாற் போலத்தான்!" என்றான். சமையல் அறையிலிருந்து வந்த காமாட்சி அம்மாள், "வஸந்திக்கும் வயதாகும்போது உன்னைத் தோற்கடித்து விடுவாள், பார்! உன்னைவிடப் பெரிய உத்தியோகம் பார்ப்பாள்!" என்றாள். "அதைப் பற்றிச் சந்தேகம் என்ன? அவளுடைய அம்மா யார்? சீதாவுக்குப் பிறந்த பெண் சோடையாகப் போய் விடுவாளா?" என்றான் ராகவன். சீதாவுக்குப் பெருமை தாங்கவில்லை.
"நான் என்ன அவ்வளவு கெட்டிக்காரியா? வஸந்தி முழுக்க முழுக்க என் மாமியாரைக் கொண்டிருக்கிறாள். அதனால்தான் இவ்வளவு சமர்த்தாயிருக்கிறாள். நீங்கள் வேணுமானால் இரண்டு பேருடைய முகத்தையும் ஒத்திட்டுப் பாருங்கள்!" என்றாள் சீதா. காமாட்சி அம்மாளுடைய சந்தோஷத்தைச் சொல்லி முடியாது. "ஆகக் கூடி உங்கள் இரண்டு பேருக்குள்ளேயே வஸந்தியின் சமர்த்தைப் பங்கு போட்டுக் கொள்ளப் பார்க்கிறீர்கள். எனக்குக் கொஞ்சம் கூடக் 'கிரெடிட்' கொடுக்க நீங்கள் தயாராயில்லை!" என்று ராகவன் சொல்லி வஸந்தியை அம்மாவிடம் ஒப்புவித்து விட்டு ஆபீஸுக்குப் புறப்பட்டான். மேலும் ஒரு வாரம் சென்றது ராகவனாகத் தன்னை 'வாக்கிங்' போக மறுபடி அழைப்பான் என்று சீதா எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அதைப்பற்றிப் பிரஸ்தாபிக் கிறதாகக் காணப்படவில்லை. ஆகையால் சீதாவே அந்தப் பேச்சை எடுக்க வேண்டியதாயிற்று. "வெளியே போய் அதிக நாளாயிற்றே? இன்றைக்குப் போகலாமா?" என்று சீதா கேட்டாள். "போகலாம் ஆனால் நீ அன்றைக்குக் கேட்டது போல் அசட்டுத்தனமான கேள்வி ஒன்றும் கேட்கக் கூடாது. கேட்கிறதில்லை என்று ஒப்புக்கொண்டால் போகலாம்!" என்றான் ராகவன்.
"நான் கேட்கவில்லை; அப்படி ஏதாவது நான் தப்பித் தவறிக் கேட்டாலும் நீங்கள் கோபித்துக் கொள்ளாமல் பதில் சொல்லுங்களேன்!" என்றாள் சீதா. "அதெல்லாம் முடியாது நீ அசட்டுத்தனமாக ஏதாவது கேட்டால் எனக்குக் கோபந்தான் வரும்! அதைவிட வெளியே போகாமலிருப்பதே நல்லது" என்றான் ராகவன். "நான் ஒன்றும் கேட்கவில்லை; ஊமையைப் போல் இருக்கவேண்டும் என்றாலும் இருக்கிறேன்" என்றாள் சீதா. "பார்த்தாயா இங்கேயே ஆரம்பித்து விட்டாயே? நான் வரவில்லை!" என்றான் ராகவன். சீதா பயந்துவிட்டாள்; "நான் சாதாரணமாகத்தான் சொன்னேன் கோபித்துக் கொண்டு சொல்லவில்லை வாருங்கள், போகலாம்" என்றாள். இன்றைக்கு வேறொரு பக்கம் போனார்கள்; போகும்போது பேச்சு அதிகமில்லை. தப்பாக ஏதாவது பேசிவிடக் கூடாது என்று சீதா சர்வ ஜாக்கிரதையாக இருந்தாள். ராகவனும் அக்கம் பக்கம் அதிகமாகப் பார்க்கவில்லை. சீதா தான் எதிரில் வந்த ஸ்திரீகளை எல்லாம் உற்றுப் பார்த்துக்கொண்டு போனாள். பச்சைப் புல் வட்டம் ஒன்று வந்தது; அதன் இடையிடையே அழகிய பூஞ்செடிப் புதர்கள் சில இருந்தன. "நடந்தது போதும்; இங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துவிட்டுத் திரும்பலாம்" என்றாள் சீதா.
பசும்புல் வட்டத்தைச் சுற்றிச் சில பெஞ்சிகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் சிலர் உட்கார்ந்திருந்தார்கள்; ராகவனும் சீதாவும் ஒரு பூஞ்செடிப் புதரின் அருகில் அமர்ந்தனர். பெஞ்சிகளில் ஒன்றில் ஒரு பார்ஸி கனவானும் அவர் மனைவியும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய இரு குழந்தைகளும் புல் தரையில் ஓடியாடுவதைப் பார்த்து அவர்கள் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்! "வஸந்தியையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கலாம் இங்கே ஓடி விளையாடுவாள்!" என்றாள் சீதா. "இவ்வளவு தூரம் அவளால் நடக்க முடியுமா? அல்லது அவளைத் தூக்கிக் கொண்டுதான் வர முடியுமா? காரிலேதான் அழைத்துக் கொண்டு வரவேண்டும்!" என்றான் ராகவன். "ஆமாம்" என்றாள் சீதா; சற்றுப் பொறுத்து, "அம்மாவையும் குழந்தையையும் அழைத்துப்போய் டில்லி அதிசயங்களை எல்லாம் காட்ட வேண்டாமா?" என்று கேட்டாள். "காட்ட வேண்டியதுதான் ஆனால் வஸந்திக்கு இந்த வயதில் ஒன்றும் தெரியாது. அம்மாவுக்கு ஊர் சுற்றுவதில் ஆசை கிடையாது. 'கோயில் இல்லை, குளம் இல்லை, மசூதியையும் மண்ணாங்கட்டியையும் பார்த்து எனக்கு என்ன ஆக வேண்டும்?' என்கிறாள். ஆனாலும் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமையாதலால் குதுப்மினாருக்கும் கோட்டைக்கும் உங்கள் எல்லாரையும் அழைத்துப் போகலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்றான் ராகவன்.
இதைக் கேட்ட சீதா, வீட்டிலிருந்து புறப்படும்போது ஏற்பட்ட மனச் சோர்வு நீங்கிக் குதூகலமடைந்தாள். "ஆமாம், தாஜ்மகாலுக்கு எப்போது போகிறது? முதல் முதல் நாம் இங்கு வந்தபோதே அழைத்துப் போவதாகச் சொன்னீர்கள். அதற்குள் சீமைப் பிரயாணம் வந்துவிட்டது; ஞாபகம் இருக்கிறதா?" என்றாள் சீதா. "ஞாபகம் இல்லாமல் என்ன? அதைப் பற்றியும் யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன். தாஜ்மகாலுக்குப் போவதாயிருந்தால் பௌர்ணமியன்று போகவேண்டும். அப்போதுதான் அதன் அழகை நன்றாய் அனுபவிக்கலாம்!" என்றான் ராகவன். "நிலா வெளிச்சத்தில் தாஜ்மகாலைப் பார்த்தால் தேவலோகத்து மேனகையின் மாளிகை மாதிரி இருக்கும் என்று ஒரு தடவை சொல்லியிருக்கிறீர்கள்." "ஆமாம்; பகலிலே தாஜ்மகாலைப் பார்த்தால் பளிங்குக்கல் மாளிகையாகத் தோன்றும்; நிலா வெளிச்சத்தில் பார்த்தால் பூரண சந்திரனுடைய கிரணங்களைக் கொண்டே கட்டியதாகத் தோன்றும்!" "ஏன், ஸார் அடுத்த பௌர்ணமியன்று போய் வரலாமே? என்ன சொல்கிறீர்கள்!" "பார்க்கலாம்!" "அம்மாவையும் வஸந்தியையும் அழைத்துக்கொண்டு தானே போக வேண்டும்?" இதற்கு ராகவன் பதில் சொல்லவில்லை. அவனுடைய மனது வேறு எங்கேயோ அதற்குள் போய்விட்டதாக தோன்றியது.
சூரியாஸ்தமனமாகி இருள் சூழ்ந்து வந்தது. புதுடில்லிக்குச் சோபை அளித்த ஆயிரக்கணக்கான மின்சாரத் தீபங்கள் ஒளிரத் தொடங்கின. நாலாபுறத்திலும் பச்சைப் பசும் மரங்களின் இடையிடையே அந்த மின்சார தீபங்கள் ஒளிர்ந்தது அற்புதமான காட்சியாயிருந்தது. அப்போது பனிக்காலம் முடியும் சமயம். இலேசாகப் பனி விழத் தொடங்கியது. சீதாவின் உள்ளம் அச்சமயம் குளிர்ந்திருந்ததுபோல் உடம்புக்குக் குளிர்ந்தது. இருவரும் பசும்புல் தரையிலிருந்து எழுந்து வீடு நோக்கி நடந்தார்கள். திரும்பி வரும்போது தூரம் அதிகமாயிருப்பது போலத் தோன்றியது. கிட்டத்தட்ட வீட்டுக்குச் சமீபம் வந்துவிட்டார்கள். வீட்டுச் சாலைக்குத் திரும்ப வேண்டிய இடத்தில் சாலை ஓரத்து மேடையில் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். முதலில் வந்த சீதா திடுக்கிட்டு மிரண்டு ஒரு கணம் நின்றாள்; ஒரு அடி பின் வாங்கினாள். இதன் காரணம் அவளுக்கு எதிரில் ஒரு பெரிய மரத்தோரமாகக் கையில் பிடித்த கத்தியுடன் ஒரு ஸ்திரீ நின்று கொண்டிருந்ததுதான். இலேசான பனிப்படலம் சல்லாத் திரையைப் போல் அந்த ஸ்திரீயை மூடியிருந்தது.
சாலை ஓரத்து தீபஸ்தம்பத்தில் லாந்தர் போல் கூடு அமைந்து விளங்கிய மின்சார விளக்கின் பரந்த ஒளி பனிப்படலத்தின் வழியாகப் புகுந்து அந்த ஸ்திரீயின் வெளிறிய முகத்தை மங்கலாக எடுத்துக் காட்டியது. நாடக மேடைகளில் சில சமயம் மெல்லிய வெள்ளைச் சல்லாவினால் மூடிய ஆவி உருவங்களைக் கொண்டு வந்து காட்டுகிறார்களே, அதைப் போல் அந்த ஸ்திரீயின் உருவம் காட்சி அளித்தது. கையில் கத்தி பிடித்த பெண் உருவத்தைக் கண்டதும் சீதா தயங்கிப் பின்வாங்கினாள். பின்னால் அடி எடுத்து வைத்த அதே நேரத்தில் அந்த ஸ்திரீயை முன்னால் ஒரு சமயம் பார்த்திருப்பதாகச் சீதாவுக்கு நினைவு வந்தது. ஈனமான மெலிந்த 'ஓ' என்ற சப்தம் ஒன்று அவள் வாயிலிருந்து வந்தது. பின்னால் வந்த ராகவன் சீதாவைக் கையினால் தாங்கிக்கொண்டு, "என்ன?" என்றான். 'அதோ' என்று கையைக் காட்டினாள் சீதா. ராகவன் பார்த்த போது அந்தப் பெண் உருவம் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. அரை நிமிஷத்துக்குள் இருளிலும் பனியிலும் மறைந்துவிட்டது.இந்தச் சம்பவம் எந்தவிதமான உணர்ச்சியையோ கிளர்ச்சியையோ ராகவன் மனதில் உண்டாக்கவில்லை. "அசடே! புதுடில்லிச் சாலையில் எத்தனையோ பேர் வருவார்கள்; போவார்கள், நீ எதற்காகப் பயப்படுகிறாய்?" என்றான் ராகவன். "நான் பயப்படவில்லை" என்றாள்; ஆயினும் அவளுடைய உள்ளத்தில் இன்னதென்று சொல்லமுடியாத பீதி குடிகொண்டு விட்டது. அந்தப் பீதியினால் அப்போது அவளால் ஒன்றும் பேச முடியவில்லை. இராத்திரி படுக்கப் போகும் சமயத்தில் ராகவனிடம் சாவகாசமாக அந்த ஸ்திரீயைப் பற்றிய விவரங்களைச் சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஐந்தாம் அத்தியாயம்

ஹரிபுரா காங்கிரஸ்

ராகவனும் சீதாவும், வீட்டு வாசலுக்கு வந்தபோது உள்ளே கலகலவென்று குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் சென்றதும் சூரியா வஸந்திக்கு விளையாட்டுக் காட்டிச் சிரிக்கப் பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். "ஓகோ! அம்மாஞ்சியா? எப்போது வந்தாய்?" என்று சீதா குதூகலத்தொனியில் கேட்டாள். "வந்து அரைமணியாச்சு, அத்தங்கா! நீங்கள் திரும்பி வருவதற்கு ரொம்ப நாழிகையாகுமோ என்னமோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். மாப்பிள்ளை, ஸார்! வஸந்தி உங்கள் பேரில் குறை சொல்கிறாள்! பாட்டியை ஒண்டியாக விட்டு விட்டு நீங்கள் எங்கேயோ தொலைந்து போய் விட்டீர் களாம்! பாட்டியைப் பார்த்துக் கொள்வதற்காக வஸந்தி வீட்டிலேயே இருக்கிறாளாம்! எப்படி இருக்கிறது கதை!" என்றான் சூரியா. ராகவனுக்குக் குபீர் என்று சிரிப்பு வந்து விட்டது. வஸந்தியைத் தூக்கிக் கொண்டு, "துஷ்டப் பெண்ணே! அப்படியா நீ சொன்னாய்?" என்று பொய்க் கோபத்துடன் கேட்டான். "அப்பதித்தான் சொன்னேன்! பின்னே என்னை ஏன் ஆத்திலே வித்துத்துப் போனே?" என்றாள் வஸந்தி. "அம்மாஞ்சி! காங்கிரஸ் எப்படி நடந்தது?" என்று சீதா கேட்டாள். "பிரமாதமாக நடந்தது!" என்றான் சூரியா.
"உன் அம்மாஞ்சி போயிருக்கிறபோது பிரமாதமாக நடக்காமல் பின் எப்படி நடக்கும்?" என்றான் ராகவன். "காங்கிரஸ் நடந்ததைப்பற்றிக் கதை கதையாகச் சூரியா சொல்கிறான். முதல்லே எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுங்கள்; சமையல் ஆறிப்போகிறது. சாவகாசமாக உட்கார்ந்து கதையைக் கேட்கலாம்!" என்றாள் காமாட்சி அம்மாள். சாப்பிட்டு விட்டு உட்காரும் ஹாலுக்கு வந்த பிறகு சூரியா ஸ்ரீ சுபாஷ்சந்திரபோஸின் தலைமையில் நடந்த ஹரிபுர காங்கிரஸ் விமரிசைகளை வர்ணித்தான். ராகவன் கூட வழக்கமான அலட்சியமோ வெறுப்போ காட்டாமால் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு வந்தான். கதையை முடித்துவிட்டுச் சூரியா, "எல்லாம் நன்றாய்த்தான் நடந்தது, ஆனால் எங்களுக்கு மட்டும் அவ்வளவு திருப்தி இல்லை!" என்றான். "எங்களுக்கு மட்டும், என்றால், என்ன அர்த்தம்? நாங்கள் என்பது யார்?" என்று ராகவன் கேட்டான். "சோஷலிஸ்ட் பார்ட்டியைச் சொல்கிறேன் நான் அந்தப் பார்ட்டியைச் சேர்ந்தவன்" என்றான் சூரியா. "சோஷலிஸ்ட் பார்ட்டி என்றால் என்ன?" என்று சீதா கேட்டாள். சூரியா பதில் சொல்வதற்குள் ராகவன், "சோஷலிஸ்ட் பார்ட்டி என்றால் பணக்காரன், ஏழை, புத்திசாலி, மடையன் நல்லவன், கெட்டவன், மனிதன், மாடு எல்லாவற்றையும் சரி மட்டமாக்கிச் சமுத்திரத்தில் அமுக்கிவிடுவது என்று அர்த்தம்!" என்றான். "அத்தங்கா! நீ பயந்துபோய் விடாதே! மாப்பிள்ளை தமாஷுக்காகச் சொல்கிறார்?" என்றான் சூரியா. "போகட்டும்; காங்கிரஸில் இப்போது மகாத்மா காந்தியின் செல்வாக்கு எப்படியிருக்கிறது?" என்று ராகவன் கேட்டான். "மகாத்மாவின் செல்வாக்குக்கு என்ன குறைவு?
அவருடைய செல்வாக்கினால் தானே எங்கேயோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் இந்த வருஷம் காங்கிரஸ் இவ்வளவு சிறப்பாக நடந்தது!" "காந்தியின் போக்கிலேயே விட்டால் இந்திய தேசத்தில் ஆண்டிப் பரதேசிகள்தான் மிஞ்சுவார்கள். எல்லாரும் கையில் கப்பறையை எடுக்க வேண்டியதுதான். ஆனால் பிச்சை போட யாரும் இருக்க மாட்டார்கள். காந்தியின் செல்வாக்கு இருக்கிற வரையில் இந்தியா ஒரு நாளும் உருப்பட போவதில்லை" என்று ராகவன் கோபமாகப் பேசினான். "வேண்டாமடா, ராகவா! காந்தியைப் பற்றி நீ இப்படியெல்லாம் பேசாதே! காந்தியை மகான் என்றும் அவதார புருஷர் என்றும் ஜனங்கள் சொல்கிறார்களே?" என்றாள் காமாட்சி அம்மாள். "ஜனங்கள் சொல்வதற்கென்ன? குருட்டுத்தனமாக எதை வேணுமானாலும் சொல்வார்கள்! மகாத்மாவின் செல்வாக்கைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?" என்று ராகவன் கேட்டான். "மகாத்மாவைப்பற்றி உங்களைப்போல் நான் நினைக்கவில்லை. அவர் மகான்! இந்திய தேசம் எவ்வளவோ அவரால் நன்மை அடைந்திருக்கிறது. ஆனாலும் சில விஷயங்களில் அவருடன் மாறுபடுகிறோம். உதாரணமாக, சுதேச மன்னர்களின் விஷயத்தில் மகாத்மா மிக்க பிற்போக்காக இருக்கிறார். அவர்களைப் பற்றிக் காங்கிரஸில் பேசவே கூடாது என்கிறார். நாங்களோ சுதேச மன்னர்கள் எல்லோரையும் அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் சொல்லுகிறோம்" என்றான் சூரியா.
"தயவு செய்து நீங்கள் இரண்டு பேரும் மகாத்மா காந்தியைப் பற்றி ஒன்றும் பேசாதீர்கள் எனக்குக் கேட்க கஷ்டமா யிருக்கிறது. 'மகாத்மா காந்திதான் தெய்வம்' என்று என் அம்மா சொல்லி இருக்கிறாள். அதற்கு விரோதமாக யார் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்" என்றாள் சீதா. "நீயும் கூட அரசியல் விஷயத்தைப் பற்றிப் பேச வந்து விட்டாயா?" என்றான் ராகவன். "அத்தங்கா! மகாத்மா காந்தி தெய்வமாகவே இருக்கட்டும். தெய்வத்திடம் வரம் கேட்பது உண்டல்லவா? அந்த மாதிரிதான் நாங்களும் மகாத்மாவிடம் கோரிக்கை செய்கிறோம்" என்றான் சூரியா. "தெய்வம் என்று ஒப்புக்கொண்டால் அப்புறம் வரம் கேட்பது என்ன? எந்தச் சமயம் கொடுக்க வேண்டும் என்று தெய்வத்துக்குத் தெரியாதா? நாம் கேட்டுத்தானா தெய்வம் கொடுக்க வேண்டும்?" என்றாள் சீதா. இந்தக் கேள்வி ராகவனுக்கு வியப்பையளித்தது."சூரியா! உனக்கும் உன் அத்தங்காவுக்கும்தான் சரி. அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லு, பார்க்கலாம்!" என்றான்."அத்தங்காளின் சாமர்த்தியம் எங்களுக் கெல்லாம் அப்போதே தெரியுமே! அதனாலேதான் லலிதா 'அத்தங்கா அத்தங்கா' என்று உயிரை விட்டுக்கொண்டிருக்கிறாள். இராத்திரி தூக்கத்திலே கூட அத்தங்காளைப் பற்றி உளறுகிறாளாம்!" என்றான் சூரியா.
இதிலிருந்து ராஜம்பேட்டையிலும் தேவபட்டணத்திலும் உள்ள பந்து ஜனங்களைப்பற்றி பேச்சு ஏற்பட்டுச் சிறிது நேரம் நடந்தது. "சூரியா! ஹரிபுராவுக்கு நீ பம்பாய் வழியாகப் போயிருக்கலாமே? டில்லி வழியாக வந்தது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் அல்லவா இருக்கிறது?" என்று ராகவன் கேட்டான். "உங்கள் தாயாரிடம் நான் வடக்கே போகப் போவதாகச் சொன்னேன். 'எங்களை டில்லியில் கொண்டு விட்டு விட்டுப் போயேன்' என்று சொன்னார் அதனால்தான் வந்தேன்!" "நான் என்னத்தைக் கண்டேன்? வடக்கே என்றால் டில்லிக்குப் பக்கத்திலே இருக்கும் என்று நினைத்தேன்!" என்றாள் காமாட்சி அம்மாள். "இங்கே உள்ளவர்களும் அப்படித்தான் மதராஸ்காரன் என்றால் இராமேஸ்வரத்தைப் பற்றி விசாரிப்பார்கள். சென்னை மாகாணம் முழுவதும் இராமேசுவரத்துக்குப் பத்து மைல் சுற்றளவில் இருப்பதாக இவர்களுக்கு எண்ணம்!" என்றான் ராகவன். "ராமேஸ்வரம் என்றதும் ஞாபகம் வருகிறது. ஏண்டா, அப்பா ராகவா! என்னைக் காசிக்கு எப்போ அழைத்துக் கொண்டு போகிறாய்?" என்று காமாட்சியம்மாள் கேட்டாள். "ஆகட்டும், ஆகட்டும் மெள்ள மெள்ளப் பார்க்கலாம். முதலில் டில்லியைப் பார்த்து வைப்போம். நாளைக்கு உங்களை எல்லாம் அழைத்துப் போய் டில்லி நகரத்தைச் சுற்றி காட்டலாம் என்று எண்ணி யிருக்கிறேன்." "சூரியா! நீ டில்லியைச் சுற்றிப் பார்த்திருக்கிறாயா?" என்று சீதா கேட்டாள். "இன்னும் பார்க்கவில்லை, நாளைக்குத்தான் சுற்றிப் பார்க்கலாமென்று திட்டம் போட்டிருக்கிறேன்." "பழம் நழுவி வாயில் விழுந்தது போலாயிற்று. எங்களுடன் நீயும் வந்து சேர்ந்துகொள்! பேச்சாவது சுவாரஸ்யமாயிருக்கும்!" என்றான் ராகவன்.
அன்றிரவு சீதா ஒரே உற்சாகமாக இருந்தாள். சூரியாவிடம் ராகவனுக்கு இருந்த அலட்சிய பாவமும் வெறுப்பும் நீங்கி அவனுடன் சுமுகமாகப் பேசியதையும் அவனை டில்லி சுற்றிப் பார்க்க வரும்படி அழைத்ததையும் நினைத்து நினைத்து மகிழ்ந்தாள். தூங்குவதற்கு முன்னால் அவள், சாலை முனையில் பார்த்த ஸ்திரீயைப் பற்றி ராகவனிடம் சொல்லவேண்டும் என்று உத்தேசித்தாள். ஆகையால், "இன்றைக்கு ஒரு பொம்மனாட்டியைப் பார்த்தோமே!..." என்று ஆரம்பித்தாள். "மறுபடியும் உன் பொம்மனாட்டி கதையை ஆரம்பித்து விட்டாயா?" என்றான் ராகவன். அப்போது சீதாவின் மனத்தில் இருந்த ஸ்திரீ வேறு; ராகவன் எண்ணிக்கொண்ட ஸ்திரீ வேறு. ஆனாலும் ராகவன் அவ்விதம் வெடுக்கென்று பேசியதும் சீதா சிறிது தயங்கி தனக்குள் சிந்தித்துப் பார்த்தாள். 'சந்தோஷமா இருக்கிற சமயத்தில் வேண்டாத விஷயத்தைப் பற்றிப் பேசித் தொந்தரவை விலைக்கு வாங்கிக் கொள்வானேன்?' என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டாள். எனினும் அவளுடைய மனதிலிருந்து கையில் கத்தியுடன் சாலை முனையில் நின்ற ஸ்திரீயின் தோற்றத்தை அடியோடு அகற்ற முடியவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஆறாம் அத்தியாயம்

பாதிக் கல்யாணம்

"வெள்ளைக்காரன் ரொம்பக் கெட்டிக்காரன் என்றல்லவா இத்தனை நாள் எண்ணிக் கொண்டிருந்தேன்? அவனிடத்தில் அசட்டுத்தனம் இருக்கிறது! இல்லாவிட்டால் எங்கே பார்த்தாலும் பாழும் கோட்டையும், மயானமும் மசூதியுமாயிருக்கும் இந்த ஊருக்குத் தலைநகரத்தைக் கொண்டு வருவானா? சிவனே என்று கல்கத்தாவிலேயே இருக்கக் கூடாதோ?" இவ்விதம் டில்லியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து வீட்டுக்குள் பிரவேசிக்கும் போது காமாட்சி அம்மாள் தன்னுடைய அபிப்பிராயத்தைத் தெரிவித்தாள். "என்ன, அம்மா, இப்படிச் சொல்கிறீர்களே? செங்கோட்டையிலே பார்த்தோமே ஷாஜஹானின் அரண்மனை? அது ஒன்று போதாதோ? என்ன அழகு! என்ன அழகு! இந்த டில்லி அரண்மனையே இவ்வளவு அழகாயிருக்கிறதே! இன்னும் ஆக்ரா அரண்மனையும் தாஜ்மகாலும் எப்படியிருக்குமோ?" என்றாள் சீதா. "எனக்கு மோத்தாகார் வாந்தாம்! தோங்கா வந்திதான் வேணும். சூரியா மாமா! என்னை நேத்திக்குத் தோங்காவிலே ஏத்திந்து போதயா?" என்றாள் வஸந்தி. ஹிந்தி பாஷையில் உள்ளது போல், வஸந்தியின் மழலை மொழியிலும் நேற்றும் நாளையும் ஒன்றாக இருந்தன. "ஆகட்டும் வஸந்தி! உன்னை டோங்கா வண்டியில் நேற்றைக்கும் ஏற்றிக்கொண்டு போகிறேன்; நாளைக்கும் ஏற்றிக்கொண்டு போகிறேன்!" என்றான் சூரியா.
எல்லோரும் வீட்டுக்குள் பிரவேசித்து ஹாலில் போட்டிருந்த சோபாக்களில் உட்கார்ந்தார்கள். "இங்கிலீஷ்காரன் ஏதோ தெரியாத்தனமாய் டில்லிக்கு வந்து விட்டான். இங்கிலீஷ்காரனை விரட்டி விட்டுச் சுயராஜ்யம் ஆளவேண்டும் என்று சொல்லும் சூரியா கூட இந்த ஊருக்கே வந்து சேர்ந்திருக்கானே, அம்மா! இந்த வேடிக்கைக்கு என்ன சொல்லுகிறது?" என்றான் ராகவன். "இங்கிலீஷ்காரனை விரட்டுகிறதற்கு வேறு எங்கே போகிறது. அவன் இருக்கிற இடத்துக்குத்தானே வரவேண்டும்?" என்று சூரியா கேட்டான். "அப்படியென்றால் நீ அதற்காகத்தான் டில்லிக்கு வந்திருக்கிறாய் என்று சொல்லு; இங்கிலீஷ்காரனை விரட்டிஅடிக்கப் போவது நிச்சயந்தானாக்கும்!" என்றான் ராகவன். "நாம்தான் இன்றைக்குப் பார்த்து விட்டு வந்தோமே; கோரிமுகம்மது காலத்திலிருந்து எத்தனை ராஜ்யங்கள் இந்த டில்லியில் இருந்திருக்கின்றன? அவை எல்லாம் போனது போல் இங்கிலீஷ் ராஜ்யமும் போக வேண் டியது தானே? இங்கிலீஷ்காரன் மட்டும் இங்கே சாசுவதமா இருக்கப் போகிறானோ?" என்றான் சூரியா. "யார் கண்டது இந்தப் பாழடைந்த பட்டணத்திலேதான் இருக்க வேண்டும் என்பது இங்கிலீஷ்காரனுடைய தலைவிதியாயிருந்தால்?" என்றாள் காமாட்சி அம்மாள்.
"ஏன், அம்மா! இப்படி டில்லியைப் பற்றிக் குறை சொல்கிறீர்களே? பிரிதிவிராஜனுடைய கோயிலும் அரண்மனையும் இருந்த இடம் எவ்வளவு நன்றாயிருந்தது? எனக்கு அந்த இடத்தை விட்டு வருகிறதற்கு மனதே இல்லை!" "சிவ சிவா! கோயிலை இடித்து மசூதி கட்டியிருக்கிறது! அதைப் பார்க்கிறதற்கு என்னை வேறே அழைத்துக்கொண்டு போய் விட்டீர்கள். இந்த ஊரைப் பார்த்த பாவம் காசிக்குப் போய்க் கங்கையிலே ஸ்நானம் பண்ணினால்தான் தீரும்!" என்றாள் காமாட்சி அம்மாள். "இந்த ஊரில் யமுனை இருக்கிறதே, மாமி! யமுனையும் புண்ணிய நதிதானே? யமுனையில் ஸ்நானம் செய்தால் பாவம் போய்விடாதோ?" என்றான் சூரியா. "அதென்னமோ, இந்த ஊரில் யமுனை, யமுனையாகவே எனக்குத் தோன்றவில்லை. பாகவதத்திலே சொல்லியிருக்கிற யமுனை நதி இதுதான் என்றா சொல்கிறாய்?" "சாக்ஷாத் அந்த யமுனையேதான் இது; பின்னே எப்படியிருக்கும் என்று எதிர்பார்த்தீர்கள்? யமுனைக் கரையில் கடம்ப மரத்தின் கீழே நின்று கிருஷ்ண பகவான் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பார் என்று நினைத்தீர்களோ? அது துவாபரயுகம், இது கலியுகம்" என்றான் ராகவன்.
"கலியுகம் என்றுதான் நன்றாய்த் தெரிகிறதே! அடாடா! உன் தகப்பனார் பாகவதம் தசமஸ்கந்தத்திலிருந்து படித்துக் காட்டி அர்த்தம் சொல்வார். யமுனையில் கிருஷ்ண பகவானும் கோபிகா ஸ்திரீகளும் நம் கண் முன்னால் நிற்பதுபோல் இருக்கும். கிருஷ்ணனும் கோபிகைகளும் வேண்டாம். கிருஷ்ணன் மேய்த்த பசு மாட்டைக் கூடக் காணோமே. மந்தை மந்தையாய் எருமை மாடு யமுனையில் விழுந்து கிடக்கிறதே?" "கிருஷ்ணன் பசு மாடு மட்டுந்தான் மேய்த்தாரோ, எருமை மாடும் சேர்த்து மேய்த்தாரோ! நமக்கு எப்படி நிச்சயமாய்த் தெரியும்?" என்று ராகவன் சொன்னான். "கிருஷ்ணன் ஒருநாளும் எருமை மாடு மேய்த்திருக்க மாட்டார். பசு மாடு தான் மேய்த்திருப்பார்? பாகவதத்தில் சொல்லியிருப்பதெல்லாம் பொய்யா இருக்குமா!" "ஒருவேளை பாகவதத்தில் வரும் கிருஷ்ண பகவான் பசு மாடு மேய்த்திருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் சினிமாக்களில் வரும் கிருஷ்ண பரமாத்மாக்கள் எருமை மேய்க்கத்தான் லாயக்கானவர்கள்!"
"சினிமாவும் கினிமாவும் நான் என்னத்தைக் கண்டேன்?.. அது எப்படியாவது இருக்கட்டும் என்னைக் காசிக்கு எப்போது அழைத்துக் கொண்டு போகிறாய், ராகவா!" "காசிக்குப் போனால் இதைவிட அதிகமாய்க் குறை சொல்லுவீர்கள்! கங்கை நதி கூடப் பார்க்கிறதற்கு ஒரு மாதிரியாகவே இருக்கும்? நம்ம காவேரி தீரத்தைப்போல் இரண்டு பக்கமும் ஒரே சோலையாயிருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்!" "ஏன் ஸார்! காசிக்குப் போவது இருக்கட்டும்! ஆக்ராவுக்கு எப்போது போகிறது?" என்று சீதா கேட்டாள். "ஆக்ராவைப் பார்க்காவிட்டால் நீ தூங்கமாட்டாய் போலிருக்கிறது. வருகிற பௌர்ணமியன்று போகலாம். சூரியா! நீயும் வருகிறாய் அல்லவா!" என்றான் ராகவன். "கட்டாயம் வருகிறேன் எங்கே நீங்கள் என்னைக் கூப்பிடாமல் இருந்து விடுவீர்களோ என்று என்னுடைய நெஞ்சு திக், திக் என்று அடித்துக் கொண்டிருக்கிறது!" என்றான் சூரியா. அன்று டில்லியைப் பார்க்கச் சூரியாவையும் அழைத்துக் கொண்டு சென்றது ராகவனுக்குச் சில விஷயங்களில் மிகவும் சௌகரியமாயிருந்தது. சீதா தன்னையே எல்லாக் கேள்விகளும் கேட்பதற்குப் பதிலாக மாற்றி மாற்றிச் சூரியாவையும் சில கேள்வி கேட்டாள். மிக உற்சாகமாகச் சூரியா பதில் சொல்லிக் கொண்டு வந்தான். வேடிக்கை பார்க்கப் போகும் இடங்களில் ஸ்திரீகளுடன் பேசுவதற்கும் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதற்கும் ஒரு தனிப் பொறுமையும் சாமர்த்தியமும் வேண்டும். ராகவனுக்கு அந்த ஆற்றல் இல்லை; சூரியாவுக்கு இருந்தது. இது ராகவனுக்கு மிகவும் சௌகரியமாயிற்று.
பழைய அரண்மனையையோ, மசூதியையோ, கோட்டையையோ, பார்க்கப் போனால், ராகவன் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு, "நீங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்!" என்று சொல்லிவிடுவான். அவர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையில் இவன் தன்னுடைய தனிப்பட்ட சிந்தனைகளில் மனதை ஈடுபடுத்திக் கொண்டிருப்பான். அப்படித் தனிப்படச் சிந்தனை செய்வதற்கு என்ன இருந்தது என்று கேட்டால், ஆம், ஒரு விஷயம் இருக்கத்தான் இருந்தது. அந்த இடங்களுக்கெல்லாம் முன்னொரு சமயம் யாரை அழைத்துக் கொண்டு வந்து பார்த்தானோ, அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனைதான்! அன்றைக்கு டில்லி ரயில்வே நிலையத் தில் தான் பார்த்தவள் தாரிணியா, இல்லையா? இல்லையென்றால், அவ்வளவு தத்ரூபமாகத் தாரிணியைப் போலவே எப்படி உருவம் பெற்றிருக்க முடியும்? இரண்டு பெண்களுக்குள் அவ்வளவு அபூர்வமான உருவ ஒற்றுமை இருக்க முடியுமா? தாரிணியாக இருந்தால், அவள் இறந்த செய்தி பொய்யாகத் தானே இருக்க வேண்டும்? தாரிணியாகவே இருக்கட்டும், அல்லது அவளைப் போல அபூர்வ உருவ ஒற்றுமையுள்ளவளாக இருக்கட்டும். அந்தப் பெண்ணை மறுபடியும் ஒரு தடவை சந்தித்து விசாரித்து உண்மையைத் தெரிந்து கொண்டாலன்றித் தனக்கு மனநிம்மதி ஏற்படாது என்று ராகவனுக்குத் தோன்றியது. ஆனால் அவளை எப்படிச் சந்திப்பது? எங்கேயென்று தேடுவது? ஆக்ரா பக்கம் போகும் பாசஞ்சர் ரயிலிலேதான் அவள் ஏறியிருந்தாள் என்பது ராகவனுடைய நினைவில் இருந்தது. ஒருவேளை ஆக்ராவிலேயே அவள் இருந்தாலும் இருக்கலாம். அல்லது ஆக்ரா போகும் போது வழியில் எங்கேயாவது அவளைச் சந்திக்கலாம். யார் கண்டது? உலகத்தில் இதைக்காட்டிலும் அதிசயமான எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கவில்லையா? இம்மாதிரியான பற்பல நோக்கங்களுடனே ராகவன் அடுத்த பௌர்ணமியன்று ஆக்ராவுக்குப் போவதென்று திட்டம் போட்டான்.
சூரியா வருகிறதாகச் சொன்னதும், "நீங்களும் வருகிறீர்களா அம்மா?" என்று ராகவன் கேட்க, "போதும்! போதும்! இன்றைக்குப் பார்த்தது ஏழு ஜன்மத்துக்குப் போதும்! பிருந்தாவனம், வடமதுரை, காசி இப்படிப் புண்ணிய க்ஷேத்திரங்களுக்குப் போவதானால் சொல்லு! வருகிறேன். பாழும் கோட்டையையும், இடிந்த மசூதியையும் பார்க்கப் போவதாயிருந்தால் நான் வரவில்லை! குழந்தையைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறேன்" என்றாள் காமாட்சி அம்மாள். "ரொம்ப சரி! நானும் அம்மாதிரிதான் எண்ணினேன். இந்தத் தடவை நாங்கள் ஆக்ராவுக்குப் போய்விட்டுத் திரும்பி விடுகிறோம். அப்புறம் ஒரு தடவை சூரியாவையும் உங்களையும் சேர்த்து க்ஷேத்திர யாத்திரைக்கு அனுப்பி விடுகிறேன். ஏன், சூரியா! என்ன சொல்லுகிறாய்? அம்மாவை அழைத்துக் கொண்டு போய் வருகிறாயா?" என்று ராகவன் கேட்டான். "அதற்கென்ன ஆட்சேபணை? இந்தியாவின் புராதன க்ஷேத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று ஆசை எனக்கும் இருக்கிறது. மாமியைப் போல் பக்தியுள்ளவர்களை அழைத்துப் போகக் கொடுத்து வைக்க வேண்டாமா?" என்று சொல்லி விட்டுச் சூரியா புறப்பட்டான். அவன் போன பிறகு, "ராகவா! சூரியா தங்கமான பிள்ளை, எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது; என் தங்கை பெண் அம்புஜத்துக்கு இரண்டு வருஷமாய் வரன் தேடிக் கொண்டிருக்கிறார்களே? நம்ம சூரியாவுக்குக் கொடுத்தால் என்ன?" என்றாள் காமாட்சி அம்மாள். "கொடுத்தால் என்ன? திவ்யமாகக் கொடுக்கலாம். நீங்கள் எப்போது தீர்மானித்து விட்டீர்களோ, அப்போது பாதி கலியாணம் நடந்தது போலத்தான்! சூரியா சம்மதித்தால் பாக்கிப் பாதி கலியாணம் செய்துவிடலாம்."
"எல்லாம் தானே சம்மதித்துவிடுகிறான்; அம்புஜத்துக்கு என்ன குறைச்சல்? கொஞ்சம் கறுப்பாயிருந்தாலும் முகத்தில் நல்ல களை. சூரியாதான் காங்கிரசில் சேர்ந்தவனாயிற்றே! அவன் அப்படியெல்லாம் ஒன்றும் தகராறு பண்ணமாட்டான்." "சூரியா சம்மதித் தால் எனக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை. நான் குறுக்கே நிற்கவில்லை தாராளமாக அம்புஜத்தைச் சூரியாவுக்குக் கலியாணம் பண்ணி வையுங்கள்!" "நம்ம சீதாவும் கொஞ்சம் என்னுடன் சேர்ந்து சொன்னால் சூரியா சம்மதித்து விடுவான்" என்றாள் காமாட்சி அம்மாள். "அதென்னவோ, அம்மா! சூரியாவுக்குக் கலியாணப் பேச்சு அவ்வளவு பிடிக்கவில்லைபோல் தோன்றுகிறது. சூரியாவின் அம்மா யாரோ ஒரு பெண்ணை அவனுக்குப் பார்த்திருந்தாளாம். அது பிடிக்காமல் தான் சூரியா வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டான் என்று பிரஸ்தாபம். என்னைக் கேட்டால், கலியாண விஷயத்தை மட்டும் அவரவர்களுக்கே விட்டு விடுவது நல்லது என்பேன். தாயார் தகப்பனார் தலையிடவே கூடாது. இஷ்டப் பட்டவர்களைக் கலியாணம் செய்து கொள்வதற்குத் தடை செய்யவும் கூடாது; இஷ்டப்படாதவர்களைக் கலியாணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தவும் கூடாது. அப்படி வற்புறுத்துகிற தாயார் தகப்பனாரைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு விட வேண்டும்!" என்று சீதா ஆத்திரமாகப் பேசினாள். இவ்விதம் சீதா கூறியது இது இரண்டாவது தடவை. அதைக் கேட்டு காமாட்சி அம்மாளின் முகம் சுருங்குவதை ராகவன் கவனித்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஏழாம்அத்தியாயம்

லலிதாவின் கடிதம்

"என் உயிருக்குயிரான தோழி சீதாவுக்கு லலிதா எழுதிக் கொண்டது. நீ டில்லிக்குப் போய்ச் சேர்ந்ததும் எழுதிய கடிதத்தைப் பெற்று அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். அத்தனை தூரம் போன பிறகும் நீ என்னை மறந்து விடாமல் கடிதம் எழுதியிருக்கிறபடியால் நீதான் என்னுடைய உண்மையான பிராண சிநேகிதி என்பதில் சந்தேகம் என்ன? நாம் இரண்டு பேரும் உயிரோடிருக்கும் வரையில் நம்முடைய சிநேகம் இப்படியே இருந்து வரவேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். புதிய இடத்தில் புதுக் குடித்தனம் போட்டதில் உனக்கு வேலை அதிகமாயிருக்கும். ஆகையினால் தான் அவ்வளவு கொஞ்சமாக எழுதிவிட்டாய் என்று நினைக்கிறேன்! வார்த்தைகளை எண்ணிப் பார்த்தேன், மொத்தம் முப்பத்தாறு வார்த்தைகள் இருந்தன. இவ்வளவு கொஞ்சமாக நீ இதற்கு முன் எப்போதும் எழுதியதில்லை. புதுக் குடித்தனம் போடும் வேலையெல்லாம் தீர்ந்ததும் நீ எப்போதும் போல் விவரமாகக் கடிதம் எழுத வேண்டும் ஏழெட்டுப் பக்கத்துக்கு குறையக் கூடாது. நான் ராஜம்பேட்டையிலிருந்து இந்தக் கடிதத்தை எழுதுவது உனக்கு ஒருவேளை அதிக ஆச்சரியமாயிருக்கும்; ஒருவேளை ஆச்சரியமாயிராது. ஆனால் நீ கொஞ்சமாவது ஆச்சரியப்படுவாய் என்று நம்புகிறேன். நான் இங்கே எதற்காக வந்தேன் என்று தெரிந்தால் கட்டாயம் ஆச்சரியப்பட்டே தீர்வாய்.
சீதா! நான் சொல்லாமலே காரணத்தைக் கண்டுபிடி, பார்க்கலாம். கண்டுபிடிக்க முடியவில்லையா? ஒரு 'க்ளூ' கொடுக்கிறேன். என்னுடைய கை ஒவ்வொன்றிலும் இப்போது அரை மணங்கு பளுவுள்ள வளையல்கள் ஏறியிருக்கின்றன. முழங்கை வரையில் வளையல் மயந்தான்! இப்போது காரணம் தெரிகிறதா, சீதா! எனக்கு வளைகாப்புக் கல்யாணம் நடந்து நாலு நாள் ஆகிறது. வளை காப்புக்காகத் தான் இந்த ஊருக்கு வந்தேன். அடுத்த மாதம் சீமந்தம் வைத்திருக்கிறது. அதற்குள் தேவபட்டணத்துக்குத் திரும்பிப் போக வேண்டும். சீமந்தக் கலியாணம் புக்ககத்தில்தான் நடக்க வேண்டுமென்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ? என் அம்மா இப்போதுதான் உண்மையான சந்தோஷம் அடைந்திருக்கிறாள். நடுவிலே ரொம்பவும் என்னைத் திட்டிக் கொண்டும் குறைபட்டுக் கொண்டும் இருந்தாள். 'உடன் எடுத்த பெண்கள் எல்லாரும் கையில் இரண்டு வயதுக் குழந்தையுடன் இருக்கிறார்கள்; நீ இப்படி மரமாயிருக்கிறாயே, ஜடமே!' என்று ஓயாமல் பிடுங்கி எடுத்துக் கொண்டிருந்தாள். 'குழந்தை பிறப்பதும் பிறக்காததும் கடவுளுடைய செயல் அல்லவா?' என்று நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அம்மாவின் மனது சமாதானம் அடையவில்லை.
இப்போதுதான் அவளுடைய மனக் குறை தீர்ந்து சந்தோஷமாயிருக்கிறாள்; என்னைத் திட்டாமலும் இருக்கிறாள். திட்டு வதற்குப் பதிலாக 'இந்தப் பெண் பெற்றுப் பிழைக்க வேண்டுமே? பிரசவத்துக்கு இங்கே அனுப்புவார்களோ, அனுப்ப மாட்டார்களோ, தெரியவில்லையே! அம்பிகே! பராசக்தி!' என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். ஓயாத புலம்பலாயிருந்தாலும் சந்தோஷமான புலம்பல் தான். சீதா! உனக்கு வளைகாப்பு, சீமந்தம் நடைபெறவில்லை என்பது எனக்கு ஞாபகம் வருகிறது. உன் அகத்துக்காரர் சீமந்தத்துக்காகச் சீமையிலிருந்து வர முடியாது என்று சொல்லி விட்டதாக எழுதியிருந்தாயல்லவா? உன் அகத்துக்காரர் அவ்விதம் எழுதியது ஒரு விதத்தில் நன்மையாக முடிந்தது. அதுவரையில் என் அம்மாவின் மனதில் உன் பேரில் கொஞ்சம் கோபம் இருக்கத் தான் இருந்தது. என்னைப் பார்ப்பதற்கு என்று வந்தவர் உன்னைக் கலியாணம் செய்து கொண்டது பற்றித்தான் கோபம். ஆனால் உனக்குச் சீமந்தம் நடக்கவில்லை என்ற செய்தியை அறிந்ததும் அம்மாவுக்கு உன் பேரில் இருந்த கோபம் மாறிவிட்டது. 'அந்தப் பெண் சீதா இங்கே நல்ல வேளையாக இருந்தாளோ, அப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை எனக்கு வாய்க்காமல் பிழைத்தேனோ!' என்று உற்சாகத்துடன் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் என் அம்மாவைப் போல் நானும் நினைப்பதாக நீ எண்ணிக் கொள்ளாதே! ஒருநாளும் இல்லை. 'வளைகாப்பு நடக்காவிட்டால் என்ன, சீமந்தமும் நடக்காவிட்டால்தான் என்ன? உன் கணவர் உன்னிடம் வைத்திருக்கும் அன்புக்கு ஈடு ஏது, இணை ஏது? புருஷனுடைய அன்பும் ஆதரவும் முக்கியமா? வளைகாப்பும் சீமந்தமும் முக்கியமா? சாஸ்திரம் என்பார்கள்; சம்பிரதாயம் என்பார்கள். சாஸ்திரமாவது, மண்ணாங்கட்டியாவது? வெள்ளைக்காரர்களும், கிறிஸ்தவர்களும் சீமந்தமா பண்ணிக் கொள்கிறார்கள்! அவர்களுடைய குழந்தைகள் நன்றாயில்லையா?' என்று சூரியா ஒரு சமயம் சொன்னான். அவன் சொன்னதை நானும் ஆமோதித்தேன். என்னுடைய அபிப்பிராயத்தில், கணவனுடைய அன்புக்கு மிஞ்சிய பாக்கியம் இந்த உலகத்தில் ஒன்றுமேயில்லை. இந்த விஷயத்தில் நீ மிக்க பாக்கியசாலி நான் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை.
இவ்விதம் நான் எழுதியதிலிருந்து என் கணவர் பேரில் நான் புகார் கூறுவதாக எண்ணாதே! இவர் என்னிடம் வைத்திருக்கும் ஆசைக்கும் அன்புக்கும் அளவே கிடையாது. ஆனாலும் ஒரு விஷயத்தைச் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. என் குறையை உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? என் ஆருயிர்த் தோழி! இத்தனை நாள் சொல்லாததை, எழுதாததை இன்று தெரியப்படுத்துகிறேன். எவ்வளவோ இவர் என் பேரில் ஆசையுள்ளவராயிருந்தும் பல விஷயங்களில் அம்மாவுக்குப் பிள்ளையா யிருக்கிறார்! அம்மா இட்ட கோட்டை இவர் தாண்டுவதில்லை. மற்ற காரியங்களில் அம்மாவிடம் பக்தியோடு இருக்கட்டும், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தாலி கட்டிய மனைவி விஷயத்திலே கூடவா அப்படி இருக்கிறது? அம்மா உத்தரவு கொடுத்தால் தான் என்னை எங்கேயாவது அழைத்துப் போவார். இதைப் பற்றி நான் எப்போதாவது குறை தெரிவித்துக் கொண்டால், 'உன்னிடம் எனக்குள்ள அந்தரங்க அன்பு உனக்குத் தெரியாதா? அம்மா இஷ்டப்படி நடக்காவிட்டால் வீட்டில் வீண் கலகம் ஏற்படும். பொறுத்தார் பூமி ஆள்வார்!' என்று உபதேசம் செய்கிறார்.
என் மாமியாரின் குணத்தைப்பற்றி முன்னமே குறிப்பாக எழுதியிருக்கிறேன், சீதா! கலியாணத்தின் போது எவ்வளவு பரம சாதுவாயிருந்தாள்! அப்புறம் சீக்கிரத்தில் தன்னுடைய சொரூபத்தைக் காட்டி விட்டாள். கலியாணத்தின்போது சீர்வகையறா சரியாகச் செய்யவில்லையென்று இரண்டு வருஷம் சாந்திக் கலியாணம் பண்ணாமலே வைத்திருந்தாள். அப்பா சரணாகதி என்று அவள் காலில் விழுந்து அவள் இஷ்டப்படியெல்லாம் சீர் செய்ய ஒப்புக்கொண்ட பிறகுதான் சம்மதம் கொடுத்தாள். சாந்திக் கலியாணத்தின் போது அவளுடைய இஷ்டப்படியெல்லாம் சீர் செய்த பிறகாவது சந்தோஷம் அடைந்தாளா? அதுவும் இல்லை. இத்தனை நாள் ஒருவரிடமும் சொல்லாததை உன்னிடம் இப்போது சொல்கிறேன் சீதா! என் மாமியார் ரொம்பப் பொல்லாதவள், ராட்சஸியேதான்! என்னை அவள் படுத்திவைக்கிற பாட்டுக்கு அளவேயில்லை. ஓயாமல் ஒழியாமல் என் மேல் புகார் செய்து கொண்டிருப்பதே அவளுக்கு வேலை. நான் எது செய்தாலும் அவளுக்குப் பிசகாகப்படுகிறது. ஒரு காரியத்தைச் செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை என்று கேட்கிறாள். 'சுயபுத்தி வேண்டாமா? எதுவும் ஒருவர் சொல்லித் தான் செய்ய வேண்டுமா?' என்கிறாள். நானாக ஏதாவது செய்து விட்டாலோ, 'உன்னை யார் செய்யச் சொன்னது? நான் ஒருத்தி இருக்கிறேனே கேட்கக் கூடாதா?' என்கிறாள். தொட்டதற்கெல்லாம் எரிந்து விழுகிறாள், வேண்டாம் என்கிற நாட்டுப்பெண் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் ஒன்றும் படாமலிருந்தாலும் குற்றம் என்பதாக இருக்கிறது.
என்னுடைய நாத்தனார் ஒருத்தியைக் கொடுத்திருக்கிற இடத்தில் அவள் அவ்வளவாகச் சுகப்படவில்லையாம்; அவளை ரொம்பக் கஷ்டப்படுத்துகிறாளாம். அதற்கு நான் என்னடி செய்வேன்? அந்தக் கோபத்தை எல்லாம் என் பேரில் காட்டுகிறாள் என் மாமியார்! நன்றாயிருக்கிறதல்லவா? இவர் இருக்கிறாரே, இவரைப்பற்றி என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. என் பேரில் ரொம்ப ஆசையாகத்தானிருக்கிறார். ஆனால் ஆசை மட்டும் இருந்து என்ன பிரயோசனம். 'அம்மாவுக்கு இது பிடிக்காது; அம்மாவுக்கு அது வருத்தம் தரும்' என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, ஏதடா, இவளும் ஒரு மனுஷிதானே என்று நினைத்துப் பார்ப்பதேயில்லை! தாயார் தகப்பனாரை விட்டு, அண்ணன் தம்பிகளை விட்டு, பிறந்த ஊரையும் வீட்டையும் தெரிந்த மனுஷாள் எல்லாரையும் விட்டுத் தம்மையே கதியென்று நம்பி வந்தவளாயிற்றே என்று ஒரு தடவையாவது எண்ணிப் பார்த்திருப்பார் என்று தோன்றவில்லை. தேவபட்டணத்தில் இத்தனை நாள் இருந்தேனே? ஒரு நாளைக்கு என்னை இவர் ஒரு சினிமா பார்க்க அழைத்துப் போனதில்லை. ஒருநாள் சாயங்காலம் என்னை இந்த ஊர் நந்தவனத்துக்கு அழைத்துப் போனதில்லை. பழைய காலத்து மனுஷர்களாயிருந்தால் கோயில் குளம் தேர் திருநாளுக்காவது அழைத்துப் போவார்களே? அதுவும் இல்லை. கொஞ்சம் நாளைக்கு முன்னால் பண்டித ஜவஹர்லால் நேரு இந்த ஊருக்கு வந்திருந்தார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஊரெல்லாம் திரண்டு போனார்கள். நானும் வருகிறேன் என்று ஆனமட்டும் சொன்னேன்.
'அம்மா கோபித்துக் கொள்வாள்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். எதற்கு எடுத்தாலும் 'அம்மா, அம்மா, அம்மா' தான்! எனக்கு ஒரு நாள் கோபமாயிருந்தது. 'எத்தனை நாள் இப்படி என்னை ஜெயிலில் வைத்திருக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டு விட்டேன். வழக்கம் போல் புன்சிரிப்புச் சிரித்துவிட்டு, 'கொஞ்சம் நாள் பொறுத்துக் கொண்டிரு. நாம் தனிக் குடித்தனம் போய் விடுவோம்; அப்புறம் நீ வைத்ததுதான் சட்டம். இரண்டு பேரும் கைகோத்துக் கொண்டு தினம் தினம் தெருவில் ஊர்கோலம் போவோம்' என்று சொன்னார்.உண்மையாகத்தான் சொன்னாரா பரிகாசத்துக்குச் சொன்னாரா என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன் நிச்சயம் தெரியவில்லை. இவர் தனிக் குடித்தனம் போவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாகவில்லை. ஒவ்வொரு சமயம் இவருக்கு என்னத்துக்கு இந்த வக்கீல் வேலை என்று தோன்றுகிறது. எங்கேயாவது தூர தேசத்தில், பம்பாய் - கல்கத்தா - டில்லியில், ஏதாவது ஒரு உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ளக்கூடாதா என்று தோன்றுகிறது. நல்ல சமயம் பார்த்துச் சொல்லலாம் என்று இருக்கிறேன். என்னுடைய அதிர்ஷ்டம் எப்படியிருக்கிறதோ?
சீதா! நீ பாக்கியசாலி! எல்லா விஷயத்திலும் என்னுடைய நிலைமைக்கு நேர்மாறாயிருக்கிறது உன்னுடைய நிலைமை. உன் மாமனாரும் மாமியாரும் உன்னைத் தாங்குகிறார்கள். தரையில் உன் கால் படக்கூடாது என்று அவ்வளவு அன்பாய் இருக்கிறார்கள். கணவரோ இந்தியாவின் தலைநகரத்தில் உத்தியோகம் பார்க்கிறார். கலியாணம் ஆன உடனேயே டில்லிக்கு அழைத்துப் போனாரே! இப்போது கேட்க வேண்டுமா! எல்லா இடங்களுக்கும் உன்னை அழைத்துப் போவார். தினம் தினம் சினிமாவுக்குப் போவீர்கள். ஏதோ நீயாவது இப்படிச் சந்தோஷமாயிருக்கக் கொடுத்து வைத்திருக்கிறாயே என்பதை எண்ணித்தான் இப்போதெல்லாம் நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த ராஜம்பேட்டைக்கு வந்தது முதல் எனக்கு உன்னுடைய ஞாபகமே வந்து கொண்டி ருக்கிறது. தினம் தினம் தபால் ரன்னர் 'ஜிங் ஜிங்' என்று மணி அடித்துக் கொண்டு வருகிற சத்தத்தைக் கேட்டதும், பம்பாயிலிருந்து உன் கடிதத்தை எதிர்பார்த்து நான் தபாலாபீஸுக்கு ஓடிய காலம் நினைவுக்கு வருகிறது.
குளத்தங்கரைக்குப் போனால், படிக்கட்டுகளில் உட்கார்ந்து நாம் மனோராஜ்யம் செய்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. நீ சொன்ன கதையெல்லாம் ஞாபகம் வருகிறது. லைலா மஜ்னூன், அனார்க்கலி, ரோமியோ ஜூலியட், சகுந்தலை, சம்யுக்தை முதலியவர்கள் எதிரில் வந்து நிற்கிறார்கள், அடியே! காதல் காதல் என்று சொல்வதெல்லாம் உண்மையிலும் உண்டா? அல்லது கதைகளிலே மட்டுந்தானா? இத்தனை நாளும் இந்தியாவின் சக்ரவர்த்தியாயிருந்த எட்டாவது எட்வர்ட் ராஜா யாரோ ஒரு பெண்ணின் காதலுக்காக ராஜ்யத்தைத் துறந்து விட்டாராமே? இது உண்மையா, சீதா! இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று என்னால் நம்ப முடியவில்லையே? நேற்று அம்மாவும் நானும் சுண்டுவும் வண்டி கட்டிக் கொண்டு காவேரிக்குக் குளிப்பதற்குப் போயிருந்தோம். போகும் போதும் வரும்போதும் உன்னுடைய நினைவாகவே இருந்தது. வழியில் மதகடியில் தபால்கார பாலகிருஷ்ணனுடன் சூரியா குத்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்த காட்சி அப்படியே எதிரில் நடப்பது போல் இருந்தது. சீதா! சூரியா உங்களுடன் டில்லிக்கு வந்ததையும், வழியில் உங்களுக்கு ஒத்தாசையாக இருந்ததையும் உன் கடிதத்திலிருந்து அறிந்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன். ஒருவேளை டில்லியிலேயே சூரியா தங்கிவிடலாம் என்று அவன் சொன்னதாக எழுதியிருக்கிறாய். ஏனென்றால், நீ அவனைக் கவனித்துக் கொள்வாய் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. சூரியா, ஏன் திடீரென்று படிப்பை விட்டுவிட்டான்? ஏன் இப்படி உலகத்தையே வெறுத்தவன் போலப் பேசுகிறான் என்று கேட்டிருந்தாய். அப்போது எனக்குத் தெரியவில்லை. இந்தத் தடவை ராஜம்பேட்டைக்கு வந்தபோது தான் தெரிந்தது.
என் மூத்த தமையன் கங்காதரன் இருக்கிறானே, அவனை உனக்கு அதிகமாகத் தெரியாது. ஒரே ஒரு தடவை நம்முடைய கலியாணத்தின் போது மட்டுந்தான் நீ பார்த்திருக்கிறாய். கங்காதரனை எனக்கு எப்போதுமே பிடிக்காது; முரட்டுக் குணம். அவனால் நம்முடைய கலியாணத்தின் போது ஒரு பெரிய சங்கடம் நேர்வதற்கு இருந்ததாம். குடியானத் தெரு ஆள் ஒருவனை, சொன்ன உடனே ஏதோ ஒரு வேலையைச் செய்யவில்லை என்பதற்காகக் கங்காதரன் அடித்து விட்டானாம். குடியானத் தெரு ஆட்கள் கட்டுப்பாடு பண்ண ஆரம்பித்து விட்டார்களாம். இதைத் தெரிந்து கொண்டு சூரியா குடியானத் தெருவுக்குப் போய் அண்ணாவுக்குப் பதிலாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டானாம். இதன் பேரில் குடியான ஆட்கள் சமாதானம் அடைந்தார்களாம். அடுத்த கோடை லீவுக்கு இரண்டு பேரும் ஊருக்கு வந்திருந்தபோது கங்காதரன் சூரியாவைச் சண்டைப் பிடித்தானாம். 'எனக்காக உன்னை யாரடா மன்னிப்புக் கேட்டுக் கொள்ளச் சொன்னது?' என்று. சூரியா ஏதோ பதில் சொன்னானாம்.அதற்குப் பதிலாக அண்ணா அவனை அடித்தானாம். சூரியா அடியைப் பொருத்துக் கொண்டு பொறுமையாயிருந்தானாம்.
இப்படிச் சூரியா இருந்தும் கங்காதரனுடைய கோபம் தீரவில்லை, மனஸ்தாபம் முற்றிக் கொண்டிருந்தது. போன வருஷம் சூரியா இங்கே வந்திருந்தபோது ஏதோ மனைக்கட்டுத் தகராறில் சூரியா குடியானவர்கள் கட்சி பேசினானாம். மறுபடியும் கங்காதரன் சூரியாவை அடித்து விட்டானாம். அக்கிரகாரத்தில் எல்லாரும் கங்காதரன் கட்சியாம். இதனால் சூரியா மனக்கசப்பு அடைந்து 'உங்கள் சொத்துக்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; எனக்குப் பங்கு வேண்டாம்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டானாம். குடும்பத்துப் பணம் வேண்டாம் என்பதற்காகவே படிப்பையும் விட்டு விட்டானாம். இந்த விவரமெல்லாம் இந்தத் தடவை ராஜம்பேட்டைக்கு வந்த போதுதான் எனக்கு நன்றாய்த் தெரிந்தது. ஏனெனில், அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சூரியாவைப் பற்றிப் பேசி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில சமயம் 'உன்னால் தான் வந்தது' 'உன்னால் தான் வந்தது' என்று சண்டை பிடித்துக் கொள்கிறார்கள்.
"சீதா! எனக்குச் சூரியாவைப் பற்றி நினைக்க நினைக்க வருத்தமாயிருக்கிறது. சூரியா ரொம்ப நல்ல பிள்ளையடி! என்னிடம் அவனுக்கு எவ்வளவு ஆசை தெரியுமா! என்னிடம் மட்டும் என்ன? உன்னிடத்தில் கூட அவனுக்கு எவ்வளவு அபிமானம் உண்டு. டில்லியில் இருக்கும் வரையில் அவனை நீ கவனித்துக்கொள். வேளா வேளைக்குச் சாப்பிடச் சொல். சூரியாவை மட்டும் நீ கொஞ்சம் கவனித்துக் கொண்டால் என் அம்மா கூட உன் பேரில் ரொம்ப சந்தோஷப்படுவாள்? இந்தக் கடிதம் ரொம்ப ரொம்ப நீளமாய்ப் போய் விட்டது. இது நான் மூன்று நாளாய் எழுதி இன்றைக்கு முடிக்கிறேன். என் மனத்திற்குள் வெகு நாளாய் வைத்திருந்ததை எல்லாம் கொட்டிவிட்டேன். புக்ககத்தில் இருக்கும்போது இவ்வளவு நீளம் கடிதம் எழுத எனக்கு அவகாசம் ஏது? மேலும் அங்கே இருக்கும் போது இதையெல்லாம் கடிதத்தில் எழுதவும் முடியாது. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று பயமாயிருக்கும். ஏதாவது நான் அசட்டுத்தனமாக எழுதியிருந்தாலும் மன்னித்துக்கொள். இந்த உலகத்தில் என்னுடைய அருமைத் தோழி நீ ஒருத்தித்தான். என் மனதில் உள்ள குறையைச் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்? சீக்கிரம் விவரமாகப் பதில் எழுது. இப்படிக்கு, சதா உன் நினைவாகவேயிருக்கும் அன்பார்ந்த சிநேகிதி, லலிதா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
எட்டாம் அத்தியாயம்

சீதாவின் பதில்

லலிதாவின் கடிதம் சீதாவின் உள்ளத்தில் பலவித உணர்ச்சிகளை உண்டாக்கியது. லலிதாவின் புக்கக வாழ்க்கையைக் குறித்து அனுதாபம் ஏற்பட்டது. அதே சமயத்தில் லலிதாவின் நிலையுடன் தன்னுடைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தபோது அவளுடைய அந்தரங்கத்தில் ஒருவித மகிழ்ச்சியும் உண்டாயிற்று. "என்னதான் இருந்தாலும் இவள் இவ்வளவு குறை சொல்லிப் புலம்பக் கூடாது!" என்று ஒரு பக்கத்தில் தோன்றியது. உடனே, "பாவம்! வேறு யாரிடத்தில் சொல்லிக் கொள்வாள்? அவள் அம்மாவோ பெரும் பைத்தியம்!" என்ற எண்ணமும் தோன்றியது. "அம்மம்மா! எத்தனை நீளம் கடிதம் எழுதுகிறாள். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டியதை ஒன்பது வார்த்தைகளில் சொல் கிறாளே?" என்று அலுத்துக்கொண்டாள். கடைசியாக ஒருவாறு கடிதத்தைப் படித்து முடித்த பிறகு பின்வரும் பதிலை எழுதினாள்."என் பிரியமுள்ள தோழி லலிதாவுக்கு; உன்னுடைய கடிதம் கிடைத்தது. அதைப் படித்தபோது கொஞ்சம் வருத்தம் உண்டாயிற்று. உன் பேரில் கோபமாயும் இருந்தது. இவ்வளவு விஷயங் களையும் உன் மனதிற்குள் இத்தனை நாளும் மூடி வைத்துக் கொண்டிருந்தாயல்லவா? இதுதானா உண்மையான சிநேகிதத்துக்கு இலட்சணம்? போனது போகட்டும்; இனிமேல் இன்பமோ, துன்பமோ, சுகமோ, துக்கமோ, எதுவாயிருந்தாலும் உடனுக்குடனே எனக்கு நீ விஸ்தாரமாகக் கடிதம் எழுதி விட வேண்டும். ஒருவருக்கொருவர் சிநேகிதமாயிருப்பது பின் எதற்காக? சுக துக்கங்களைப் பகிர்ந்து அனுபவிப்பதற்குத் தானல்லவா?
காதல் என்பது கதைகளிலே மட்டும் அல்ல; இந்த உலகத்திலும் உண்டு என்பது நிச்சயம். அதற்கு என்னுடைய வாழ்க்கையே அத்தாட்சி! அடியே! லலிதா! உண்மையில் நான் பாக்கியசாலிதானடி; ஆனால் இந்தப் பாக்கியம் ஒருவிதத்தில் உன்னால் தான் எனக்குக் கிடைத்தது என்பதை ஒருநாளும் மறக்க மாட்டேன். எனக்குப் பதிலாக இன்றைக்கு நீ இங்கே இந்த அழகான புதுடில்லி பங்களாவில் இருந்திருக்கலாம் என்பதை நினைக்கும் போது என்னமோ பண்ணுகிறது. உனக்கு எப்படி நான் நன்றி செலுத்துவேன்! என்னுடைய சமாசாரம் இருக்கட்டும், உன்னுடைய புக்ககத்து வாழ்க்கையைப் பற்றி நீ எழுதியிருப்பதைப் படித்து வருத்தம் அடைந்தேன். உலகம் எவ்வளவோ முன்னேற்ற மடைந்திருக்கும்போது நாகரிகம் இவ்வளவாகப் பரவியிருக்கும் காலத்தில் உன் புக்ககத்து மனிதர்களைப் போன்றவர்களும் இருப்பது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது! உன்னைச் சிறையில் போட்டு அடைத்து வைத்திருப்பதுபோல் அல்லவா வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது? அதை நினைத்தால் எனக்கு அசாத்தியக் கோபம் வருகிறதடி. ஆனால் ஒரு விஷயம் உன் கணவன் பட்டாபிராமன் உன்னைச் சினிமாவுக்கு அழைத்துப் போகாததினாலேயே அவனுக்கு உன்பேரில் அபிமானம் இல்லை என்று நினைத்து விடாதே! இது பட்டிக்காட்டுப் பெண்கள் பேசுகிற பேச்சு. புருஷர்களுக்கு எத்தனையோ சௌகரிய அசௌகரியங்கள் இருக்கும். அதையெல்லாம் கவனித்து நாம்தான் நல்ல மாதிரி நடந்து கொள்ளவேண்டும். நம்முடைய புருஷன் வேறொரு பெண்ணிடம் பேசிவிட்டால் அதனால் குடி முழுகிப் போய்விட்டது என்று நாம் நினைத்துக் கொள்ளக்கூடாது; நாகரிகமே தெரியாத படிப்பற்ற ஸ்திரீகள்தான் அப்படியெல்லாம் சந்தேகப்படுவார்கள்.
உன் மாமியாரைப்பற்றி நீ எழுதியிருப்பதையும் நான் முழுதும் ஒப்புக்கொண்டு விட முடியாது. எல்லாம் நாம் நடந்து கொள்வதைப் பொறுத்தது. பிறந்தகத்தை விட்டுப் புக்ககத்துக்குப் போனால் அப்புறம் பிறந்தகத்துப் பாசமே இருக்கக்கூடாது. மாமனார் மாமியார்தான் தாயார் தகப்பனார் என்று எண்ணி நடந்து கொள்ள வேண்டும். என்னுடைய 'ஓர்ப்படி' மாமியாரிடம் இருந்து குடித்தனம் செய்ய முடியாது என்று நினைத்துத் தான் பிறந்த வீட்டுக்குப் புருஷனையும் அழைத்துக் கொண்டு போய் விட்டாள். ஆனால் நான் எப்படியிருக்கிறேன், பார்! என் மாமியார் என்னிடம் வைத்திருக்கும் அபிமானத்துக்கு அளவே கிடையாது. 'பெற்ற பெண் கூட இவ்வளவு பிரியமாயிருக்க மாட்டாள்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். நீயும் உன் தாயார் தகப்பனாரை அடியோடு மறந்துவிட்டு மாமியாரும் மாமனாருந்தான் பெற்ற தாயும் தகப்பனும் என்று நினைத்து நடந்து கொள்ளு, அப்போது அவர்கள் எப்படி மாறிவிடுகிறார்கள், பார்! சூரியா காங்கிரஸுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து விட்டான். லலிதா! மிகவும் சந்தோஷமான ஒரு செய்தி. என் அகத்துக்காரருக்குச் சூரியாவை ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது. இருவரும் அன்னியோன்னிய சிநேகிதர்களாகி விட்டார்கள். ஓயாமல் காங்கிரஸைப்பற்றியும் இங்கிலீஷ் சர்க்காரைப்பற்றியும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேச ஆரம்பித்து விட்டால் பேச்சின் சுவாரஸ்யத்தில் சாப்பாட்டைக் கூட மறந்து விடுகிறார்கள். சில சமயம் நான் ஒருத்தி இருப்பதைக் கூட மறந்து விடுகிறார்களடி! எப்படியிருக்கிறது வேடிக்கை!
சென்ற ஞாயிற்றுக்கிழமை எல்லாருமாக இந்த டில்லியிலுள்ள குதுப்மினார் கோட்டை, ஜந்தர் மந்தர் முதலிய இடங்களுக்குப் போய் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்தோம். சூரியாவும் எங்களுடன் வந்ததுதான் மிகவும் சந்தோஷமாயிருந்தது. நாளைய இரவு நாங்கள் ஆக்ராவுக்குப் புறப்படப் போகிறோம். சூரியாவும் எங்களுடன் வருகிறான் ஆனால் என் மாமியார் வரவில்லை. குழந்தையைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பதாகச் சொல்லிவிட்டார். உலகத்தில் ஒன்பது மகா அதிசயங்களில் ஒன்றாகிய தாஜ்மகால் ஆக்ராவில்தான் இருக்கிறது. நீ சரித்திரப் புத்தகத்தில் படித்திருக்கிறாய் அல்லவா? ஷாஜஹான் சக்கரவர்த்தி தன்னுடைய பட்டத்து ராணி மும்தாஜின் ஞாபகார்த்தமாகக் கட்டிய அற்புதக் கட்டிடம் தாஜ்மஹால், முக்கியமாக, அதைப் பார்த்துவிட்டு வரத்தான் நாங்கள் போகிறோம். ஆக்ராவிலிருந்து ஓர் இரவு ரயில் பிரயாணம் செய்தால் ரஜினிபூர் என்று ஒரு ஊர் இருக்கிறதாம், அது ஒரு சுதேச ராஜாவின் ஊராம். அங்கே ஒரு விஸ்தாரமான ஏரியும் ஏரியின் நடுவில் ஒரு அழகான நீராழி மண்டபமும் உண்டாம். ஏரிக்கரை ஓரத்தில் ஆயிரம் பதினாயிரக்கணக்கில் வெள்ளை வெளேர் என்ற நிறமுடைய கொக்குகள் வந்து மந்தை மந்தையாக உட்கார்ந்து விட்டு, அவ்வளவும் சேர்ந்தாற்போல் பறந்து போகுமாம். அதைப் போன்ற அழகான காட்சி உலகத்திலேயே கிடையாதாம். ஆக்ராவிலிருந்து அங்கேயும் போய் வரலாமென்று இவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சூரியா ஆக்ராவிலிருந்து திரும்பி வந்துவிட வேண்டுமென்றும் ஏதோ ஒரு கூட்டம் தனக்கு இருக்கிறதென்றும் சொல்லிக் கொண்டிருக்கிறான். "கூட்டமும் ஆச்சு! மண்ணாங்கட்டியும் ஆச்சு!" என்று இவர் நேற்றைக்கு சூரியாவுடன் சண்டை பிடித்தார்.சூரியாவை நான் கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன், லலிதா! அவனைப்பற்றி நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். சூரியா நம்மிருவருக்கும் செய்திருக்கிற உதவிக்கு நான் அவனுக்கு எவ்வளவு செய்தாலும் தகும். நல்ல சமயம் பார்த்து இவரிடம் சொல்லி அவனுக்கு ஒரு உத்தியோகம் பண்ணி வைக்கச் செய்யலாமென்று எண்ணியிருக்கிறேன். என்னுடைய மாமியாருடைய தங்கை பெண் ஒருத்திக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். சூரியாவுக்குப்பண்ணிக் கொள்ளலாம் என்று மாமியார் சொல்கிறார். அந்த மாதிரி நடந்தால் எனக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். சூரியா இங்கேயே குடியும் குடித்தனமுமாய்த் தங்கிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? அப்போது நீ கூடச் சில சமயம் இங்கே வந்து விட்டுப் போவாய் அல்லவா?
பம்பாயில் உன்னை எல்லா இடங்களுக்கும் அழைத்துக் கொண்டு போய்க் காட்டிய நினைவு எனக்கு வருகிறது. டில்லியிலும் பார்க்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் உன்னை அழைத்துக்கொண்டு போய்க் காட்டுவது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கும் தெரியுமா? இதோ இவர், 'வெளியில் உலாவப் போவதற்கு நேரமாகி விட்டது' என்று அவசரப்படுத்துகிறார். ஆகையால் இந்தக் கடிதத்தை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். ஆக்ராவிலிருந்து திரும்பி வந்த பிறகு மறுபடியும் விவரமான கடிதம் எழுதுகிறேன். இப்படிக்கு, உன் பிரிய சிநேகிதி, சீதா. - குறிப்பு: நான் டில்லிக்கு வந்த அன்று ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சிறு சம்பவம் நடந்தது. அதைப்பற்றி என்னமோ ஏதோ என்று எனக்கு ரொம்பவும் கவலையாயிருந்தது. ஆனால் கவலைக்குச் சிறிதும் இடம் இல்லையென்று இப்போது நிச்சயமாகிவிட்டது. என்னுடைய அசட்டுத்தனமான சந்தேகத்தைப் பற்றி மறுமுறை நாம் நேரில் சந்திக்கும்போது சொல்கிறேன். அதைக் கேட்டால் நீ விழுந்து விழுந்து சிரிப்பாய் - சீதா."
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஒன்பதாம் அத்தியாயம்

மல்லிகை மாடம்

ரயில் வண்டி ஆக்ராவை நெருங்கிக் கொண்டிருந்த போது சூரியாவுக்கும் ராகவனுக்கும் விவகாரம் முற்றி அவர்களுடைய குரல் ரயிலின் சத்தத்தையும் மிஞ்சிக் கேட்டது. "காங்கிரஸை வரவர மிதவாதம் பற்றிக் கொண்டு வருகிறது. மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் ஏற்பட்டதினால் என்ன மாறுதலைக் கண்டோம்? ஒன்றுமில்லை! கவர்னர் முதல் கிராம முனிசீப் வரையில் முன்போலவே அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். போலீஸ் கெடுபிடியும் முன்போலவே தான் இருக்கிறது!" என்று சொன்னான் சூரியா. "அது மட்டுமா? ரயில் முன் போலவே ஓடிக்கொண்டிருக்கிறது. தபால்கள் முன் போலவே டெலிவரி ஆகிக்கொண்டிருக்கின்றன. மாஜிஸ்ட்ரேட்டுகள் முன் போலவே திருடர்களை தண்டித்து வருகிறார்கள் - இப்படியெல்லாம் புகார் செய்வாய் போலிருக்கிறதே! நல்ல சோஷலிஸ்ட் நீ பின்னே என்னதான் செய்யவேண்டும் என்கிறாய்? கவர்னர் முதல் கிராம முனிசீப் வரையில் போலீஸ்காரர்கள் உள்பட எல்லா உத்தியோகங்களையும் அதிகாரங்களையும் சட்ட திட்டங்களையும் ஒழித்து விட வேண்டும் என்கிறாயா? ஒழித்துவிட்டால் அரசாங்கம் எப்படி நடக்கும்! அரசாங்கமே வேண்டாம் என்கிறாயா?" என்றான் ராகவன்.
"அரசாங்கமே வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அரசாங்கம் என்றால், இங்கிலீஷ்காரர்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐ.சி.எஸ். அரசாங்கந்தான் என்பது உங்களுடைய எண்ணம். இங்கிலீஷ்காரர்கள் வருவதற்கு முன்னால் நம்முடைய தேசத்தில் அரசாங்கமே கிடையாதா?" "ஏன் கிடையாது? பேஷாக உண்டு! இங்கிலீஷ்காரர்கள் வருவதற்கு முன்னால் நம் தேசத்தில் அங்க, வங்க, கலிங்க, குக்குட, கர்நாடக, மராட்ட முதலிய ஐம்பத்தாறு ராஜாங்கங்கள் இருந்தன; ராஜாக்களும் இருந்தார்கள். சுல்தான்களும், பாதுஷாக்களும் கூட இருந்தார்கள், அவரவர்கள் இஷ்டமே சட்டமாக அரசாட்சி நடத்தினார்கள். அத்தகைய ராஜாக்களின் ஆட்சிக்கு நாம் திரும்பிப் போகவேண்டும் என்கிறாயா? நீதான் சுதேச சமஸ்தானங்களையே ஒழித்துவிட வேண்டும் என்கிறாயே!" "ஆம்; சுதேச ராஜ்யங்களையெல்லாம் ஒழித்துவிட வேண்டியதுதான். அந்தப் பழைய ஹைதர் காலத்து ஆட்சிக்கோ பேஷ்வா காலத்து ஆட்சிக்கோ போகவேண்டும் என்று நான் சொல்லவில்லை. பழைய ஆட்சி வேண்டாம் என்றால், புதிய ஆட்சி என்பது இங்கிலீஷ்காரர்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐ.சி.எஸ். ஆட்சிதானா? உலகத்தில் வேறு தேசங்கள் இல்லையா? அந்தந்த தேசங்களில் அரசாங்கம் நடக்கவில்லையா?
"நடக்கிறது, அப்பனே நடக்கிறது; ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது. இத்தாலியில் முஸோலினி ஆட்சியும் நடக்கிறது. இங்கிலாந்திலிருந்து திரும்பும்போது ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் நான் போய்விட்டு வந்தேன். கல்விக்கும் நாகரிகத்துக்கும் பெயர் போன ஐரோப்பாவில் நடக்கும் அரசாங்க முறைகளைப் பார்த்தால் ஆங்கில ஆட்சி முறை எவ்வளவு மேலானது என்று உனக்குத் தெரியும். அங்கே எல்லாம் ஜனநாயகம் என்பது மருந்துக்கும் கிடையாது. சுதந்திரம் என்ற பேச்சையே எடுக்கக்கூடாது..." "அதைப்பற்றி நமக்கென்ன கவலை? ஹிட்லரும் முசோலினியும் எவ்வளவு பொல்லாதவர்களாயிருந்த போதிலும் அவரவர்களுடைய நாட்டுக்குள்ளேதான் இருக்கிறார்கள்? இங்கிலீஷ்காரர்களைப் போல உலகத்தையே கட்டியாள அவர்கள் ஆசைப்படவில்லையே? பிற நாடுகளையெல்லாம் தங்களுடைய கொடுங்கோல் ஆட்சிக்கு உள்ளாக்கவில்லையே..." "உனக்கு எப்படித் தெரியும்? அவர்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்கள் சொரூபத்தைக் காட்டுவார்கள். இங்கிலீஷ்காரர்களை விட எவ்வளவோ பொல்லாதவர்களாயிருப்பார்கள். சீனாவில் ஜப்பான் செய்கிற அநியாயத்தைப் பார்!"
"இங்கிலீஷ்காரர்களுடைய கொட்டத்தை அடக்கக்கூடிய கீழ்நாடு ஜப்பான் ஒன்றுதான். சீனாவில் ஜப்பான் அக்கிரமம் செய்வதாகச் சொல்லுகிறதெல்லாம் இங்கிலீஷ்காரர்கள் செய்யும் பிரசாரந்தானே? உண்மை நமக்கு எப்படித் தெரியும்? என்னைக் கேட்டால் இங்கிலீஷ்காரர்களின் அரசாட்சியைக் காட்டிலும் வேறு எந்த அரசாட்சியும் மேல் என்று சொல்லுவேன். இங்கிலீஷ் ஆட்சி ஒரு தேசத்தின் ஆத்மாவையே அழித்துவிடுகிறது. தேச மக்களுக்குள் பிரிவையும் பிளவையும் உண்டாக்குகிறது..." "சூரியா! நன்றாகச் சொன்னாய்? நமது தேசத்தில் ஏற்கனவேயுள்ள பிளவுகளையும் பிரிவுகளையும் விடவா இங்கிலீஷ் ஆட்சியால் அதிகம் உண்டாகிவிட்டது?" "இங்கிலீஷ்காரர்கள் தலையிடாமலிருந்தால் நம்மிடையேயிருந்த பிளவுகளும் பிரிவுகளும் இதற்குள் தீர்ந்து போயிருக்கும்!" "சரித்திரத்தையே பொய் என்று நீ சாதிக்கப் பார்க்கிறாய்! உன்னோடு எப்படி விவாதம் செய்வது?" என்று அலுத்துக் கொண்டான் ராகவன். இந்தச் சமயத்தில், "போதும் உங்கள் பேச்சு! சண்டையை நிறுத்துங்கள்; ஆக்ரா ஸ்டேஷன் வந்துவிட்டது!" என்றாள் சீதா.
"நேபிள்ஸ் நகரத்தைப் பார்த்துவிட்டுச் செத்துப் போகவும்!" என்று மேனாட்டில் ஒரு வசனம் வழங்குகிறது."ஆக்ராவைப் பார்க்கும் வரையில் உயிரோடிருக்கவும்!" என்று இந்தியாவில் பிறந்தவர்களுக்கு நாம் சொல்லுகிறோம். இந்திய தேசத்தின் மத்திய கால மகோந்நதத்தையும் கலை வளத்தையும் அறிந்துகொள்ள விரும்புவோர் ஆக்ரா நகரைப் பார்க்கவேண்டும். மனிதனுடைய உள்ளமானது கற்பனை செய்யக்கூடிய இன்பமயமான சொர்க்க பூமியும் கந்தர்வ லோகமும் எப்படியிருக்குமென்று தெரிந்து கொள்ள விரும்புவோர் ஆக்ராவை அவசியம் பார்க்கவேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மொகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகரை டில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றி, ஆக்ராவுக்கு உயர்வையளித்தார். அக்பரின் பேரன் ஷாஜஹான் சக்கரவர்த்தி, ஆக்ராவின் சொப்பனபுரியைப் போன்ற பற்பல பளிங்கு மாளிகைகளும் தாஜ்மகாலையும் கட்டி ஆக்ரா நகரை உலக சரித்திரத்தில் என்றும் நிலை பெறக்கூடிய அமரபுரியாக்கினார். ஆக்ராவுக்கு போகிறவர்கள் சாதாரணமாக முதலில் அந்நகரின் பழைய கோட்டையிலுள்ள அரண்மனைகளைப் பார்க்கப் போவார். பார்த்து வியந்து, "இதைக் காட்டிலும் அதிகமான அற்புதம் என்ன இருக்கபோகிறது!" என்று எண்ணிக்கொண்டு தாஜ்மகாலைப் பார்க்கச் செல்வார்கள். தாஜ்மகாலைப் பார்த்ததும் அதிசயிக்கும் சக்தியையுங்கூட இழந்து பிரமித்து நிற்பார்கள்.
அந்த முறையைப் பின்பற்றி ராகவனும் சீதாவும் சூரியாவும் முதலில் ஆக்ரா கோட்டைக்குப் போனார்கள். கோட்டைச் சுவரின் உயரத்தையும், நேற்றுதான் கட்டியது போல் புத்தம் புதியதாக விளங்கிய அதன் தோற்றத்தையும் கண்டு வியந்தார்கள். கோட்டை வாசலின் கம்பீரமான அமைப்பைப் பார்த்து அதிசயித்தார்கள். பிறகு உள்ளே பிரவேசித்து திவானி ஆம் என்னும் பொது ஜனசபா மண்டபத்தை நோக்கிச் செல்கையில் பக்கத்தில் காணப்பட்ட ரோஜா மலர்த் தோட்டத்தைச் சீதா பார்த்தாள்; உடனே அந்தப் பக்கம் ஓடினாள். சில நிமிஷத்துக்கெல்லாம் திரும்பி வந்து, "ஏன், ஸார்! அனார்க்கலி இங்கேதான் புஷ்பம் விற்றுக் கொண்டிருந்திருப்பாள்; சலீம் இங்கேதான் அவளைச் சந்தித்திருப்பான்; இல்லையா? இருவரும் எந்தச் சுரங்க வழியாக யமுனைக் கரைக்குப் போனார்களோ!" என்றாள். "அனார்க்கலியின் ஞாபகம் இன்னும் உன்னை விட வில்லையா?" என்று நகைத்தான் ராகவன். "அதெப்படி அனார்க்கலியை நான் மறக்க முடியும்? அனார்க்கலி புஷ்பம் விற்ற இடத்தைப் பார்ப்பதற்காகத்தானே நான் முக்கியமாக இங்கு வந்தேன்?" என்றாள் சீதா. "அனார்க்கலி என்றால் யார்!" என்று சூரியா கேட்டான். "அதுகூடத் தெரியாதா உனக்கு? அனார்க்கலி கதையை நீ வாசித்ததே இல்லையா?" என்றாள் சீதா. "வாசித்ததில்லை, அத்தங்கா! எனக்குக் கதையும் நாவலும் அவ்வளவாகப் பிடிக்காதே!" என்றான் சூரியா.
"நம்ம சூரியாவுக்கு நாவலும் கதைகளும் படிக்க நேரம் ஏது? காரல்மார்க்ஸைக் கட்டிக்கொண்டு அழுவதற்குத்தான் அவனுக்குப் பொழுது சரியாயிருக்குமே?" என்று எகத்தாளம் செய்தான் ராகவன். "அம்மாஞ்சு! நான் சொல்கிறேன், தெரிந்துகொள்! அனார்க்கலி என்றால் மாதுளை மொக்கு என்று அர்த்தம். இளவரசன் சலீம் அவளுக்குக் கொடுத்த பெயர் அது!..." "சலீம் என்பது யார்?" "அது கூடவா தெரியாது? ஜஹாங்கீர் சிம்மாசனம் ஏறுவதற்கு முன்னால் அவன் பெயர் சலீம்..." "சீதாவை என்னமோ என்று நினைக்காதே, சூரியா! மொகலாயர் சரித்திரத்தில் அவள் பெரிய எக்ஸ்பர்ட்! ஜதுநாத் சர்க்காருக்கும் வின்சென்ட் ஸ்மித்துக்கும் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சீதாவினிடம் தான் அவர்கள் கேட்க வருவது வழக்கம்." "இவர் இப்படித்தான் பரிகாசம் பண்ணுவார், அம்மாஞ்சி! நான் சொல்கிறதைக் கேட்டுக் கொள். ஜஹாங்கீர் சிறுபிள்ளையா இருக்கும்போது அவனை வளர்த்த தாய் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு ஒரு பெண் இருந்தாள், அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்துவிட்டு சலீம் அவளுக்கு 'மாதுளை மொக்கு' என்று பெயரிட்டு அழைத்தான். அவளையே கலியாணம் செய்து கொள்வதாகவும் வாக்களித்திருந்தான்..." இப்படிக் கதை சொல்லிக் கொண்டே அவர்கள் திவானிகாஸ் என்னும் அழகிய பளிங்குக்கல் சபா மண்டபத்தை அடைந்தார்கள். மண்டபத்தின் அழகிய தூண்களையும் மேல் விதானத்தையும் விதவிதமான சித்திர வேலைப்பாடுகளையும் கண்டு அதிசயித்தார்கள்.
பிறகு அரண்மனையின் அந்தப்புரத்துக்குச் சென்றார்கள். அங்கே ஷாஜஹானின் புதல்விகள் ரோஷனாராவும் ஜஹானாராவும் வசித்த இடங்களைப் பார்த்தார்கள்; கண்ணாடி மகாலைப் பார்த்தார்கள். பிறகு அந்தப்புரத்து ராணிகளும் சேடிகளும் ஜலக்ரீடை செய்வதற்காக அமைந்த பளிங்குக்கல் குளங்களைப் பார்த்தார்கள். அந்த நாளில் ராணிகளின் தூபுரங்களோடும் சிலம்புகளோடும் போட்டி இட்டுக்கொண்டு சலசலவென்ற சத்தத்துடன் தெளிந்த நீர் ஓடிக்கொண்டிருந்த பளிங்குக்கல் ஓடைகளைப் பார்த்தார்கள். "அடாடா? இந்த அரண்மனை அந்தப்புரத்தில் ராணிகளும் ராஜகுமாரிகளும் வசித்துக் கொண்டிருந்த காலத்தில் எப்படியிருந் திருக்கும்?" என்றாள் சீதா. "எப்படியிருந்திருக்கும்? இங்கே வசித்தவர்களுக்கு நரகமாக இருந்திருக்கும்; சிறைச்சாலையாக இருந் திருக்கும். கூண்டில் அடைக்கப்பட்ட கிளிக்குத் தான் வசிக்கும் கூண்டைப் பார்த்தால் என்ன தோன்றும்? தங்கத்தினால் செய்து ரத்தினங்கள் இழைத்த கூண்டாயிருந்தாலும், கிளிக்கு அதன் கூண்டு சிறைச்சாலை தானே?" என்றான் சூரியா. "பலே சூரியா! அத்தங்காளுக்குச் சரியான அம்மாஞ்சி நீதான்!" என்றான் ராகவன். "நீங்கள் இரண்டு பேருமாய்ச் சேர்ந்துகொண்டு எனக்கு அசட்டுப் பட்டம் கட்டப் பார்க்கிறீர்கள். இந்த மாதிரி சலவைக்கல் அரண்மனையைச் சிறைச்சாலை என்று சொன்னால் அது உண்மை யாகிவிடுமா? இந்த மாதிரி ஒரு சிறைச்சாலை கட்டி அதில் இருக்கச் சொன்னால் யார்தான் இருக்கமாட்டேன் என்பார்கள்? என்னை இருக்கும்படி சொன்னால் இருந்து விடுவேன்!" என்றாள் சீதா.
"சீதா! இந்த அரண்மனைகளைப் பார்த்து அவ்வளவு மயங்கிவிடாதே! இவற்றைக் கட்டிய பாதுஷாக்களும் ராஜாக்களும் இருந்த காலத்தில் இந்த நாட்டில் எந்த ஸ்திரீயும் பத்திரமாயிருக்க முடியவில்லை. அரசனுடைய கண்பார்வைக்கு எந்தப் பெண்ணாவது ஆளாகிவிட்டால், ஒன்று அவள் உயிரை இழக்க வேண்டும்; அல்லது கற்பை இழக்க வேண்டும் என்ற நிலைமையாயிருந்தது. ஏதோ கடவுள் அருளால் இங்கிலீஷ் அரசாங்கம் இந்திய தேசத்திற்கு வந்தது" என்றான் ராகவன். "அதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். இங்கிலீஷ் ஆட்சி வந்ததினால் என்ன ஆகிவிட்டது? இன்றைக்கும் இங்கிலீஷ் மேலதிகாரத்திற்கு உட்பட்ட சுதேச சமஸ்தானங்களில் மகாராஜாக்கள் என்னவெல்லாம் அக்கிரமம் பண்ணுகிறார்கள்." "உங்கள் சண்டையை மறுபடியும் ஆரம்பித்துவிடாதீர்கள். நீங்கள் சொல்லுவது ஒன்றும் சரியில்லை. நானும் கொஞ்சம் சரித்திரம் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். சிவாஜி மகாராஜாவின் முன்னால் முஸ்லிம் ஜாகீர்தாரின் பெண்ணைக் கொண்டுபோய் நிறுத்தியதும் என்ன சொன்னார்? 'அம்மணி! என்னுடைய தாயார் உன்னைப்போல் அழகாயிருந்தால் நானும் எத்தனையோ அழகாயிருந்திருப்பேனே?' என்று சொல்லி விட்டு அந்தப் பெண்ணைச் சகல மரியாதைகளுடன் தகப்பனாரிடம் சேர்ப்பித்துவிடவில்லையா? இந்த அரண்மனையைக் கட்டிய ஷாஜஹானையே பாருங்கள். மும்தாஜ் பீகத்தைக் கலியாணம் செய்துகொண்ட பிறகு இன்னொரு ஸ்திரீயை அவன் கண்ணெடுத்துப் பார்த்தானா? மும்தாஜ் செத்த பிறகு கூட அவளை ஷாஜஹான் மறக்கவில்லையே? அவளுக்காக எத்தனை கோடி ரூபாய் செலவு செய்து தாஜ்மகாலைக் கட்டினான்? அதோ பாருங்கள்!" என்றாள் சீதா.
அப்போது அவர்கள், மல்லிகை மாடம் என்று பெயர் பெற்ற அரண்மனைப் பகுதியின் மேல் தாழ்வாரத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து பார்த்தால் யமுனை நதிக்கு அக்கரையில் தாஜ்மகாலின் அற்புதத் தோற்றம் காணப்படும். மூன்று பேருமே சிறிது நேரம் வரையில் அந்தக் காட்சிக்குத் தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்தவர்களாய்ப் பார்த்துக் கொண்டே நின்றார்கள். பிறகு சீதா, "நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கப் பார்க்கிறீர்களே? ஷாஜஹான் சக்கரவர்த்தி எப்பேர்ப்பட்டவன் என்று தாஜ்மகாலைப் பார்த்தால் தெரியவில்லையா? எவ்வளவு சிரமம் எடுத்து, எவ்வளவு பிரயத்தனம் பண்ணி, எவ்வளவு செலவு செய்து, தாஜ்மகாலை ஷாஜஹான் கட்டியிருக்க வேண்டும்? மும்தாஜிடம் அவருக்கு எவ்வளவு ஆசை, எவ்வளவு காதல் இருந்திருக்க வேண்டும்? தாஜ்மகாலைக் கட்டியது மட்டுமா? கட்டிய பிறகும் ஆயுள் முடியும் வரையில் தினம் தினம் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்து கடைசியில் செத்துப் போனானாம். அவன் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டேயிருந்தது இந்த மல்லிகை மாடத்திலிருந்து தான் போலிருக்கிறது!" "ஆமாம், சீதா! உன்னுடைய ஊகம் உண்மைதான். இந்த இடத்தில் இருந்தபடியேதான் ஷாஜஹான் தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே செத்துப் போனான்!" என்றான் ராகவன். "ஏன் தெரியுமா, அத்தங்கா! நான் படித்த சரித்திரத்தைச் சொல்லுகிறேன். ஷாஜஹான் அரசாங்கப் பொக்கிஷத்தை இப்படியெல்லாம் வீண் விரயம் செய்தது, அவனுடைய மகன் ஔரங்கசீப்புக்குப் பிடிக்கவில்லையாம். தகப்பனாரைச் சிறைப்படுத்தி இந்தக் கோட்டையிலே அடைத்து வைத்து, 'நீங்கள் உங்களுடைய அருமை மனைவியின் ஞாபகமாகக் கட்டிய கட்டிடத்தைச் சதா சர்வ காலமும் பார்த்துக் கொண்டே இருங்கள்!" என்று சொல்லி விட்டானாம். ஷாஜஹான் இங்கேயே இருந்து தாஜ்மகாலைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இறந்தானாம்!" என்றான் சூரியா.
"ஷாஜஹானுக்குச் சரியான தண்டனைதான். நான் ஔரங்கசீப்பாயிருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேன்!" என்றான் ராகவன். "அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்! இப்பேர்ப்பட்ட அற்புதமான காட்சிகளைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி பேசுகிறீர்களே! உங்களுக்கெல்லாம் கண் எங்கே போயிற்று?" என்றாள் சீதா. உண்மையில் அந்தச் சமயம் ராகவன், சூரியா இருவருடைய கண்களும் தூரத்தில் தெரிந்த தாஜ்மகாலையோ அல்லது பக்கத்திலே இருந்த அற்புதமான பளிங்குக்கல் சித்திரங்களையோ பார்க்கவில்லை. அந்த மல்லிகை மாடத்தின் தாழ்வாரத்தின் வழியாக எதிர்ப்புறமிருந்து வந்து கொண்டிருந்தவர்களின் மீது அவர்களுடைய பார்வை போயிருந்தது. மூன்று பேர் வந்து கொண்டிருந்தார்கள், இருவர் ஸ்திரீகள்; ஒருவர் ஆடவர். கராச்சி காங்கிரஸின் போது விமான கூடத்தில் ராகவன் பார்த்த பெண்கள்தான் அவர்கள் இருவரும். ஒருத்தி தாரிணி; இன்னொருத்தி அவளுடைய சிநேகிதி. ராகவன் செயலற்று நின்றான், தாரிணியின் முகத்திலிருந்து அவனுடைய கண்கள் அப்பால் இப்பால் நகரவில்லை. வேறு யாரையும் எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. எங்கே இருக்கிறோம், யாருடன் வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் அவனுடைய உள்ளம் மறந்து விட்டது. எதிரில் தாரிணி வருகிறாள் என்கிற ஒரு நினைவுதான் அவனுடைய மனதில் நிலை பெற்றிருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பத்தாம் அத்தியாயம்

பகற் கனவு

ஒரு நிமிஷ நேரம் இந்தப் பூமண்டலம் மட்டுமின்றி ஈரேழு பதினாலு உலகங்களும் ஸ்தம்பித்து நின்றன. சப்தமயமான பிரபஞ்சத்தில் மிக மெல்லிய இலை அசையும் சத்தம் கூடக் கேளாத நிசப்தம் குடிகொண்டிருந்தது. வாயுபகவானும் தன்னுடைய இயற்கையான சலனத்தை மறந்து நின்றுவிட்டதாகத் தோன்றியது. பிறகு எங்கேயோ அதலபாதாளத்திலிருந்து பேசுவது போலச் சௌந்தரராகவனுடைய குரல் கேட்டது. "நான் காண்பது உண்மையா? அல்லது கனவு காண்கிறேனோ?" என்றான். "தாஜ்மகாலைச் சொல்கிறீர்களா? ஆம்; அதைக் 'காதல் கனவு' என்றும் 'பளிங்குக்கல் சொப்பனம்' என்றும் கவிகள் வர்ணித்திருக்கிறார்கள். ஆனாலும் இங்கு நின்று பார்க்கும் போது தாஜ்மகால் என்பது வெறும் கனவல்லவென்றும் நிஜக் கட்டிடந்தான் என்றும் தோன்றுகிறது!" இந்தப் பதிலைத் தாரிணி கூறினாள். இடையில் தாரிணியின் தோழி நிருபமா தலையிட்டு, "இவர் மிஸ்டர் ராகவன் அல்லவா? என்ன அதிசயமான சந்திப்பு?" என்றாள். "ஆம்; அந்தத் துரதிர்ஷ்டசாலி நான் தான்!" என்றான் ராகவன் நிருபமாவைப் பார்த்து. "ஆகா! இவ்வளவு அடக்கம் உங்களுக்கு எப்போது வந்தது? உங்கள் பின்னால் நிற்கும் பெண் யார்?" என்று நிருபமா கேட்கவும் ராகவனுடைய முகம் கொஞ்சம் சுருங்கியது. "அவரிடம் அதைக் கேட்பானேன்? உன்னால் ஊகிக்க முடியவில்லையா, நிருபமா? அவருடைய அருமை மனைவியாகத் தான் இருக்க வேண்டும்!" என்று தாரிணி கூறினாள். "இது உண்மைதானா?" என்று நிருபமா பிடிவாதமாகக் கேட்டாள். "உண்மைதான்!" என்று ராகவன் மென்று விழுங்கினான்.
"ஹா ஹா! எவ்வளவு அழகான பெண்! இப்படிப்பட்டவளைக் கலியாணம் செய்து கொண்டும் உம்மை துரதிர்ஷ்டசாலி என்று சொல்லிக் கொள்கிறீரே! நல்ல வேடிக்கை இது" என்று கூறி நகைத்துவிட்டு, "அதோ பின்னால் வருகிற இளைஞர் யார்?" என்று கேட்டாள் நிருபமா. "என்னுடைய மனைவியின் பந்து" என்று ராகவன் முணுமுணுத்தான். "எனக்குக் கூடத் தெரிந்த முகமாய்த் தோன்றுகிறது. சமீபத்தில் எங்கேயோ பார்த்திருக்கிறேன்" என்றாள் தாரிணி. "இந்தப் பையனை நீ எப்படிப் பார்த்திருக்க முடியும்? வேறு யாரையோ பார்த்துவிட்டுத் தவறாகச் சொல்கிறாய்!" என்றான் சௌந்தரராகவன். இதற்குள் சூரியா கொஞ்சம் முன்னால் வந்து, "இவர் சொல்வது பிசகில்லை, ஹரிபுரா காங்கிரஸில் இவரை நான் பார்த்தேன்" என்று சொல்லிவிட்டு, தாரிணியை நோக்கி, "நீங்கள் சோஷலிஸ்ட் கட்சிக் கூட்டத்துக்கு வந்திருந்தீர்கள் அல்லவா?" என்றான். ஹரிபுரா காங்கிரஸ் என்றதும் எட்டு வருஷத்துக்கு முன்னால் நடந்த கராச்சி காங்கிரஸ் ராகவனுடைய ஞாபகத்துக்கு வந்தது. கராச்சி விமானக்கூடமும் அங்கே முதன் முதலில் தான் தாரிணியைச் சந்தித்த சந்தர்ப்பமும் நினைவுக்கு வந்தன. இதற்கிடையில் தாரிணியின் மதுரமான குரல், "ஆம்; சோஷலிஸ்ட் கூட்டத்துக்கு நான் வந்திருந்தேன். அங்கே நீங்கள் பிரமாதமான பிரசங்கம் ஒன்று செய்தீர்கள். அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை!" என்று கூறியது கனவிலே கேட்பது போல் ராகவன் காதில் விழுந்தது.
சற்று அவன் நிதானித்துத் தாரிணி சூரியாவைப் பற்றித்தான் அவ்விதம் சொல்கிறாள் என்பதை அறிந்து கொண்டான். தன்னுடைய எழுத்துத் திறமையைக் குறித்துத் தாரிணி ஒரு சமயம் பாராட்டிப் பேசியது அவனுக்கு நினைவு வந்தது."ஓகோ! சூரியா அவ்வளவு பெரிய அதிகப்பிரசங்கி என்று எனக்குத் தெரியாதே?" என்றான்."அதிகப்பிரசங்கம் ஒன்றும் இவர் செய்யவில்லை.சுருக்கமாகத் தான் பேசினார்; பேசிய வரையில் அற்புதமாய்ப் பேசினார்" என்றாள் தாரிணி."ஏழை பணக்காரன் எல்லாம் ஒன்றாகி விடவேண்டும்; சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்; சுதேச ராஜாக்களை ஒழித்து விட வேண்டும் என்றெல்லாம் வெளுத்துக் கட்டினானாக்கும்!இப்படியெல்லாம் தீவிரமாகப் பேசுவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை.யார் வேணுமானாலும் இப்படி தடபுடலாய்ப் பேசலாம்!" என்றார் ராகவன். நிருபமா மறுபடியும் குறுக்கிட்டு, "தயவு செய்து கொஞ்சம் உங்கள் விவாதத்தை நிறுத்தி ஒரு நிமிஷம் இடைவெளி கொடுங்கள். என்னுடைய கணவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். இவர்தான் மிஸ்டர் வேணி பிரசாத் பி.ஏ.,எல்.எல்.பி.; இந்த ஊரில் பிரபல வக்கீல்; ஆனால் பிராக்டிஸ் மட்டும் கிடையாது! இப்போதைக்கு இவருடைய மனைவியின் சிநேகிதர்களை வீட்டுக்கு அழைத்து உபசரிப்பது தான் இவருக்கு முக்கிய வேலை. தாரிணி எங்கள் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள். நீங்களும் வந்து தங்கினால் இவருக்கு மிக்க சந்தோஷமாயிருக்கும். எங்களால் முடிந்த சௌகரியம் செய்து கொடுப்போம். ஆக்ராவில் எத்தனை நாள் தங்கியிருப்பதாக உங்களுடைய உத்தேசம்?" என்று சௌந்தரராகவனைப் பார்த்து நிருபமா கேட்டாள்.
"இன்றைக்கும் நாளைக்கும்தான்; தங்களுடைய அன்பார்ந்த அழைப்புக்காக வந்தனம். ஆனால் இன்னொரு சமயம் வருகிறோம். பொய் சொல்லுகிறவர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க எனக்கு இஷ்டமில்லை." "அது என்ன? யார் பொய் சொன்னது?" என்று நிருபமா கேட்டாள். "உங்களுடைய தோழிதான், நீங்களே கேளுங்கள்; இவள் இறந்து போய்விட்டதாகக் கடிதம் எழுதியது உண்டா இல்லையா என்று?" தாரிணி புன்னகை புரிந்து, "நான் இறந்து போய் விட்டதாக நானே எப்படி எழுதியிருக்க முடியும்?" என்றாள். "நீ எழுதாவிட்டால் வேறு யாரையோ கொண்டு எழுதச் சொல்லியிருக்கிறாய்!" "நான் இறந்து போனது என்னமோ உண்மையான செய்திதான்!" "அப்படியானால் இப்போது இங்கே எப்படி இருக்கிறாய்?" "இறந்து போனவள் மீண்டும் பிழைத்தெழுந்தேன்." "எதற்காக?" என்று ராகவன் கடுமையாகக் கேட்டான். "இறந்து போன பிறகு தங்களுக்கு நான் கொடுக்க வேண்டிய இரண்டாயிரம் ரூபாயைப் பற்றி நினைவு வந்தது. அதை நினைத்து நினைத்து நீங்கள் இராத் தூக்கம் இல்லாமல் தவிப்பீர்களே என்று எண்ணி மறுபடியும் பிழைத்து எழுந்து வந்தேன்."
"பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும். நீ ஒரே அண்டப் புளுகாய்ப் புளுகுகிறாய். அன்றைக்கு டில்லி ஸ்டேஷனில் பார்த்த போது, 'நான் தாரிணி இல்லை' என்று சொன்னாயே? அந்தப் பொய் எதற்காகச் சொன்னாய்?" "அப்படி நான் சொல்லவில்லையே? 'பழைய தாரிணி நான் இல்லை'யென்று தான் சொன்னேன். மேலே சொல்வதற்குள் ரயில் நகர்ந்துவிட்டது." "ஆகா! முன்னைப் போலவே எதற்கும் காரணம் சொல்லிச் சமாளித்துக் கொள்கிறாய்" என்றான் ராகவன். "நான் எல்லா விஷயங்களிலும் முன்னைப் போலவேதான் மாறாமல் இருக்கிறேன். மற்றவர்களும் அப்படியிருந்தால் இந்த மாதிரி பேச்சுக்கே இடமிராது போனால் போகட்டும். உங்களை மறுபடியும் எங்கே சந்திப்பது? பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லவா!" "அதற்கு அவசரம் ஒன்றுமில்லை; மெதுவாய் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் உங்களை மறுபடியும் நான் சந்திக்க வேண்டும், தாஜ்மகால் பார்த்தாகிவிட்டதா?" "சாயங்காலம் மஞ்சள் வெளியில் பார்த்துவிட்டு இரவு பூரண சந்திரனுடைய நிலவிலும் பார்க்கலாம் என்று உத்தேசம்." "நாங்களும் அந்த நேரத்திற்குத்தான் வருவதாக இருக்கிறோம். பாக்கி விஷயம் அங்கே பேசிக் கொள்ளலாம்." "இதற்குள் இரண்டு கோஷ்டியும் பிரிந்து வெவ்வேறு வழி போக வேண்டிய இடம் வந்தது; விடை பெற்றுக் கொண்டு பிரிந்தார்கள்.
தாரிணி முதலியவர்கள் போனதும் இத்தனை நேரமும் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமல் மௌனமாயிருந்த சீதா, "ஏன்னா! இந்த ஸ்திரீ யார்?" என்று கேட்டாள். "உன் அம்மாஞ்சியைக் கேட்டுத் தெரிந்துகொள்!" என்றான் ராகவன். "அம்மாஞ்சியைக் கேட்பானேன்? நீங்கள்தான் சொல்லுங்களேன்! உங்களுக்குத் தெரியாதா!" "பேஷாகத் தெரியும்! உன்னைப்போல் அவளும் ஒரு ஸ்திரீ தான்!" "ஸ்திரீதான் என்று எனக்கும் தெரிந்தது. ஆனால் உருவத்திலே தான் ஸ்திரீயே தவிர, நடவடிக்கை எல்லாம் ஆண்பிள்ளை மாதிரி! புருஷனாய்ப் பிறந்திருக்க வேண்டியவள்; தவறிப் பெண்ணாய்ப் பிறந்து விட்டாள் போலிருக்கிறது." "நீ சொல்வது ரொம்ப சரி; ஆகவே அந்தப் பெண்ணாய்ப் பிறந்த புருஷனோடு நான் பேசுவதினால் உனக்கு மனக்கஷ்டம் ஏற்படாதல்லவா?" "மனக் கஷ்டமா? எனக்கு எதற்காக மனக் கஷ்டம்? அசல் பெண்ணாய்ப் பிறந்தவளோடு நீங்கள் பேசினால்தான் எனக்கு என்ன வந்தது? என்னைச் சுத்தப் பட்டிக்காடு என்று நினைத்துக் கொண்டீர்களா? நானும் பம்பாய் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள்தான்." "அந்த மகத்தான விஷயத்தை மறந்து போய்விட்டேன் தயவுசெய்து மன்னிக்க வேணும். "
"ஆனால் என்னிடம் எதையும் மறைத்துப் பேசினால் மட்டும் எனக்குப் பிடிக்காது. டில்லி ரயில்வே ஸ்டேஷனில் நீங்கள் ஓடிப் போய் பேசினவள் இவள்தான்? அதை எதற்காக மறைக்க வேண்டும்?" "பார்த்தாயா? சூரியா, உன் அத்தங்காளின் சமர்த்தை? இவளிடம் பயந்துகொண்டு நான் எதையோ மறைத்தேனாம்! நம்ம பக்கத்துப் பெண்களிடம் இதுதான் ஒரு பெரும் சங்கடம் வெறும் சந்தேகப் பிராணிகள்?" "நான் ஒன்றும் சந்தேகப் பிராணி இல்லை. 'ரயில்வே ஸ்டேஷனில் பார்த்துப் பேசியவள் யார்?' என்று நான் கேட்டதற்குத் 'தெரியாது' என்று ஏன் மெழுகி மறைத்தீர்கள்?" "மெழுகவும் இல்லை; மறைக்கவும் இல்லை தெரிந்தவளாக்கும் என்று போய்ப் பேசினேன். அவள் இல்லை என்று சாதித்தாள்; அப்படியிருக்க, 'யார்? யார்?' என்று நீ துளைத்தால் நான் என்ன பதில் சொல்வது? இப்போது அவளும் நானும் பேசிக் கொண்டிருந்தோமே? அதிலிருந்து உனக்கு விஷயம் தெரியவில்லையா?" "ஏதோ இங்கிலீஷில் பேசிக் கொண்டிருந்தீர்கள்! என்ன பேசினீர்கள் என்று நான் கண்டேனா? அவ்வளவு இங்கிலீஷ் எனக்குத் தெரியாது." "தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு சும்மா இரு."
"இப்படி எரிந்து விழத்தான் உங்களுக்குத் தெரியும்; அன்பாக ஒரு வார்த்தை சொல்லத் தெரியாது." இதையெல்லாம் கேட்டுக்கொண்டு பின்னால் சூரியா வந்து கொண்டிருந்தான். பாரதியாரின் பாடலில், "தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமா?" என்ற வரிகள் அவனுடைய நினைவுக்கு வந்தன. அடடா! இவர்களுடைய இன்பமயமான இல்வாழ்க்கையில் இந்த ஒரு துளி விஷம் கலந்து விட்டதாகவல்லவா காணப்படுகிறது? என்று மனதிற்குள் பச்சாதாபப்பட்டான். "அத்தங்கா! நீ அந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னது கொஞ்சமும் சரியல்ல; உத்தமமான தேச சேவகி அவள். ஹரிபுரா காங்கிரஸில் அவள் ஓடி ஓடித் தொண்டு செய்ததைப் பார்த்திருந்தாயானால் அவளுடைய குண மேன்மை உனக்குத் தெரிந்திருக்கும். அவள் 'பானி சாஹியே;' (தண்ணீர் வேண்டுமா?) என்று கேட்கும் வார்த்தையின் இனிமையினாலேயே தாகம் தணிந்துவிடும். அவளைப் பற்றி நீ ஒன்றும் தவறாக எண்ணிக் கொள்ளாதே!" என்று ஒரு குட்டிப் பிரசங்கம் செய்தான் சூரியா. "நீ பெரிய அதிகப்பிரசங்கி என்று தாரிணி சொன்னது சரிதான்? ஒரே வர்ணிப்பாய் வர்ணிக்கிறாயே!" என்றான் ராகவன். அதற்குப் பிறகு ஆக்ரா கோட்டையில் பாக்கியிருந்த கட்டிடங்களை அவர்கள் சுற்றிப் பார்த்தார்கள். ஆனால் முன்னைப் போல் அவ்வளவு உற்சாகம் யாருக்கும் இல்லை. "நடந்து நடந்து எனக்குக் காலை வலிக்கிறது; ஓட்டலுக்குப் போகலாமா?" என்றாள் சீதா. "ஆமாம்; பளிங்குக் கல்லாலேயே எல்லாக் கட்டிடங்களும் கட்டியிருப்பதால் ஒன்றைப் போலவே இன்னொன்று இருக்கிறது. ஒரு வித்தியாசமும் இல்லை; திரும்பிப் போக வேண்டியதுதான். சாயங்காலம் தாஜ்மகால் வேறே பார்க்க வேண்டும் அல்லவா?" என்றான் ராகவன். "தாஜ்மகாலைப் பற்றியும் இப்படித்தான் சொல்வீர்களோ, என்னமோ? அதுவும் பளிங்குக் கல்லால் கட்டியதுதானே?" என்று சொன்னான் சூரியா.
"ஆஹா! அது வேறு விஷயம்; தாஜ்மகால் கட்டிடமே இல்லை. அது உயிருள்ள தெய்வீக சிற்ப வடிவம்; இந்தியாவில் மொகலாயர் காலத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் ஜீவ பிம்பம்; ரதியும் மன்மதனும் பவனி வரும் வெண்மலர் விமானம்; சந்திர கிரணங்களையும் மந்தமாருதத்தையும் வானவில்லின் வர்ணங்களையும் காதல் இன்பத்தையும் குழைத்து எழுதிய உயிர்ச் சித்திரம்; ஒரு தடவை பார்த்தவர்களின் உள்ளத்திலிருந்து என்றென்றும் அகலாத சௌந்தர்ய மோகினி. தாஜ்மகாலை பார்க்காத ஜன்மம் மனித ஜன்மமேயல்ல!" என்று ராகவன் சொல்மாரி பொழிந்தான். மூவரும் ஆக்ராவில் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றார்கள். சாப்பிட்டுவிட்டுச் சிரமபரிகாரம் செய்து கொண்டார்கள். சீதா பட்டுப் பூச்சியின் பலவர்ண இறகுகள் போல் பிரகாசித்த உடைகள் அணிந்திருந்தாள். சிலந்திப் பூச்சியின் கூண்டைப் போல் தோன்றிய மெல்லிய சல்லாத் துணியைத் தலை பாதி மறையும்படியாகப் போர்த்திக் கொண்டிருந்தாள். விலை மதிக்க முடியாத முத்து மாலைகளையும் ரத்தின ஹாரங்களையும் அணிந்திருந்தாள். பாதங்களையும் விரல் நகங்களையும் செம்பஞ்சுக் குழம்பினால் அலங்கரித்து அழகு படுத்திக் கொண்டு இருந்தாள்.
வெண்ணிலாவின் நிறத்தையொத்த பளிங்குக் கல்லினால் கட்டி, பலவர்ண இரத்தினக் கற்களினால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த அரண்மனையின் மண்டபங்களிலும் மாடங்களிலும் அங்குமிங்கும் நடமாடினாள். ஆங்காங்கு, பளிங்குக் கல் வாய்க்கால்களில் சலசலவென்று ஓடிய நீரோடையைப் பார்த்து மகிழ்ந்தாள். சிற்சில இடங்களில் நீரோடையில் சிறு குளங்கள் அமைந்திருந்தன. அந்தக் குளங்களில் அன்று மலர்ந்த குமுதங்களும் தாமரைகளும் செங்கழுநீர்ப் பூக்களும் கொடிகளுடனும் இலைகளுடனும் காணப்பட்டன. இன்னும் சில குளங்களில் அன்று பூத்த ரோஜா மலர்களைக் கொட்டியிருந்தார்கள். புஷ்பங்களின் வாசனையோடு, ராணி நூர்ஜஹான் கண்டுபிடித்து உலகத்துக்கு அளித்த ரோஜா அத்தரின் வாசனையும் அகிற்புகை வாசனையும் கலந்து பரிமளித்தன. குளங்களின் ஓரமாக நின்று, மலர்ந்து மிதந்த புஷ்பங்களைச் சில சமயம் சீதா உற்றுப் பார்த்தாள். சில சமயம் ஸ்படிகம் போன்ற தண்ணீரில் தன்னுடைய பொன் மேனியின் அழகைக் கண்ட ஆனந்தத்தினால் அவளுடைய தேகமெல்லாம் சிலிர்த்தது. திடீரென்று அவளைச் சுற்றிப் பல பணிப் பெண்கள் நின்றார்கள். எங்கிருந்து வந்தார்களோ தெரியாது எல்லாரும் அழகிகள்தான். படமெடுத்து ஆடி அவ்வப்போது சீரும் நாக சர்ப்பத்தின் அழகை அவர்களுடைய அழகு ஒத்திருந்தது.
நாகப் பாம்பு தன் நீண்ட நாவை நீட்டுவது போல் அந்தப் பணிப் பெண்கள் எல்லாரும் சீதாவை நோக்கித் தங்கள் ஆட்காட்டி விரலைச் சுட்டிக் காட்டினார்கள், நெருப்புத் தழலைப் போல் அவர்களுடைய கண்கள் பிரகாசித்தன. "இவள்தான்!" இவள்தான்!" என்று சொல்லி ஏககாலத்தில் எல்லாரும் சீறினார்கள். "வா! எங்களுடன் வா!" என்று சீதாவை அழைத்தார்கள். அவர்களுடைய அழைப்பை மறுக்க முடியாமல் சீதா அவர்களுடன் சென்றாள். விசாலமான பளிங்குக் கல் மண்டபம் ஒன்றில், தோகை விரித்த மயிலைப் போல் பின்புறச் சாய்வு அமைந்த ரத்தின சகிதமான சிம்மாசனத்தில் மொகலாய மன்னனின் பட்ட மகிஷி அமர்ந்திருந்தாள். "ஆஹா! அந்த மாதரசியின் கர்வந்தான் என்ன? சீதாவை, "வா!" என்று கூட அழைக்கவில்லை; உட்காரவும் சொல்லவில்லை. "இந்த அசட்டுப் பைத்தியக்காரி யார்? எதற்காக இவளை இவ்விடம் கொண்டு வந்தீர்கள்?" என்று பணிப் பெண்களைப் பார்த்துச் சக்ரவர்த்தினி கேட்டாள். "மஹாராணி! இவள்தான் நம் இளவரசரின் காதலைக் கவர்ந்த காதகி? ராஜபுத்திர மங்கை சீதா!" என்று ஒரு பணிப்பெண் கூறினாள். "ஓகோ! அப்படியா? இவளுக்குத் தக்க தண்டனை விதிப்போம். இன்று நள்ளிரவு வரையில் இவள் உயிரோடு இருக்கட்டும்!" என்று அரசியின் ஆக்ஞை பிறந்தது.
அந்தி மாலையில் அரண்மனை உத்தியான வனத்தில் சீதா அங்குமிங்கும் அலைந்தாள். ரோஜா மலர்களையும் மல்லிகைப் பூக்களையும் பறித்து முகர்ந்தாள். அவளுடைய மனதில் கவலை குடிகொண்டிருந்த போதிலும் இளவரசர் வந்து தன்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது. இளவரசருடைய முகத்தோற்றத்தை எண்ணிப் பார்த்தபோது மொகலாய உடை தரித்த சௌந்தரராகவனுடைய வடிவமும் முகமும் சீதாவின் அகக்கண் முன்னால் வந்தன. மாலை மயங்கி இருளான போது அவளுடைய உள்ளத்தில் திகில் தோன்றியது. அதிதுரிதமாக நள்ளிரவு நெருங்கி வந்தது. அரண்மனையை ஜோதிமயமாகச் செய்து கொண்டிருந்த தீபங்கள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டன. பிறகு சீதா இருளும் தானும் தனிமையுமாக ஆனாள். சலவைக்கல் சுவரில் அமைந்திருந்த சித்திரப் பலகணி வழியாகச் சந்திரனுடைய கிரணம் ஒன்று உள்ளே புகுந்து சீதாவின் கன்னத்தைத் தொட்டுத் தன்னுடைய மனமார்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டது. திடீரென்று அறைக்கு வெளியே பேச்சுக் குரல் கேட்டது. "அடியே! தூங்கிவிட்டாள் போலிருக்கிறதடி!" "இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே தூக்கமாய்த் தூங்க வேண்டியவள் தானே!" "எனக்கு என்னமோ இவளை ஒரேயடியாக் கொன்று விடுவதில் விருப்பமில்லை. அனார்க்கலியைச் சிறையில் அடைத்ததுபோல் இவளையும் அடைத்துவிட்டால், தானே பைத்தியம் பிடித்துப் புலம்பிச் சாகிறாள்!" "எல்லாவற்றுக்கும் மகாராணியைக் கேட்டுக் கொண்டு வருவோம், வாருங்கள்!"
பேச்சுக் குரல்கள் நின்று மௌனம் குடிகொண்டது. உடல் நடுக்கத்துடன் சீதா எழுந்தாள்; இனி அங்கே ஒரு கணம் தாமதிப்பது ஆபத்தாகிவிடும். உடனே கிளம்பி எப்படியாவது இந்த அந்தப்புரச் சிறைச்சாலையிலிருந்து தப்பித்து ஓடிப் போக வேண்டும். இளவரசர் இங்கு வந்து தன்னைத் தப்புவிப்பார் என்று நினைப்பது மதியீனம். தான் இங்கு இருப்பதே அவருக்குத் தெரியாதே. பின் எப்படிக் காப்பாற்றுவார்?' 'டில்லியிலேயே இருக்கவும், ஆக்ராவுக்கு வரவேண்டாம்' என்று இளவரசர் சொன்னதைக் கேட்காமல் அல்லவா வந்து விட்டோம். இருள் சூழ்ந்த அந்தப்புரத்தின் தாழ்வாரங்கள் வழியாகச் சீதா தட்டுத்தடுமாறி நடந்து சென்றாள். கையினால் சுவர்களைத் தடவிக் கதவு உள்ள இடத்தைத் தேடிக் கொண்டே சென்றாள். ஆங்காங்குப் பலகணிகளின் வழியாக வந்த நிலா வெளிச்சம் அவளுக்கு ஒருவாறு வழிகாட்டிக் கொண்டிருந்தது. பல இடங்களில் சுவரைக் கதவு என்று எண்ணி ஏமாந்தாள். கதவு தட்டுப்பட்டாலும் அதைத் திறக்க முடியாமல் ஏமாற்றமடைந்தாள். ஒரு யுகம் போலத் தோன்றிய ஒரு நாழிகை நேரம் இப்படி அலைந்து திரிந்த பிறகு கடைசியில் ஒரு கதவு அவள் கையை வைத்ததும் திறந்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள, வாசற் படியைத் தாண்டினாள். வெளியே வந்ததும் தன் எதிரே பிரம்மாண்டமான கோர ராட்சஸ உருவம் ஒன்று நிற்பதைக் கண்டு திகைத்து நின்றாள். அந்த உருவம் யார் என்பதை அவள் அறிவாள். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத அலி அவன். அதோடு செவிட்டு ஊமை; காது கேளாது, பேசவும் முடியாது. ஆனால் அவன் கண் பார்வை தீட்சண்யமானது.
தன்னுடைய கடமை என்னவென்பதும் அவனுக்கு நன்றாய்த் தெரியும். அந்தப்புரத்திலிருந்து வெளியே போகிறவர்களைத் தடுப்பது அவனுடைய முதற்கடமை. மீறிப் போக யத்தனிப்பவர்களைக் கொஞ்சமும் தாட்சண்யம் பாராமல் கண்ட துண்டமாக வெட்டுவதற்காக அவன் கத்தி வைத்திருந்தான். கத்திக்கு இரையாகாமல் தப்பி ஓடுகிறவர்களைக் குத்திக் கொல்வதற்காக ஈட்டியும் வைத்திருந்தான். இவனைப் போல் பல அலிகள் மொகலாய பாதுஷாவின் அந்தப்புரத்தைப் பாதுகாத்து வந்தார்கள். இவற்றையெல்லாம் நன்கறிந்திருந்த சீதா நடுநடுங்கினாள். அந்த அலியோ ஒரு வார்த்தையும் பேசாமல் அவளை உற்றுப் பார்த்து விழித்தான். அவ்வளவுதான்; சீதா பீதியினால் தன்னை மறந்து விட்டாள். "சூரியா! சூரியா!" என்று கதறினாள். தன்னைக் காப்பாற்றுவதற்காகத் தன் அம்மாஞ்சி சூரியா அந்தக் கோட்டைக்குப் பக்கத்தில் எங்கேயோ ஒளிந்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அதனாலேதான், "சூரியா!" என்று அவள் கதறினாள்.
சீதாவின் கதறலுக்கு ஒரு பதில் குரல் வந்தது. "இங்கே சூரியா இல்லை; நான் இருக்கிறேன்; வருகிறேன்!" என்று அந்தக் குரல் சொல்லிற்று. அது யாருடைய குரல் என்று சீதா அதிசயப்பட்டுக் கொண்டிருக்கையில் வெண்ணிலவு பிரகாசித்த நிலா முற்றத்துக்கு அப்பால் இருள் சூழ்ந்திருந்த மண்டபத்திலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டு வந்தது. கொஞ்ச தூரம் வந்ததும் அது யாருடைய உருவம் என்பது சீதாவுக்குத் தெரிந்து போயிற்று. அன்றொரு நாள் தன் தாயார் நோயாய்ப் படுத்திருந்தபோது அவளைப் பார்க்க வந்து பணமும் நகையும் கொடுத்து விட்டுப் போன ஸ்திரீதான். புதுடில்லிச் சாலை முனையில் கையில் கத்தியுடன் மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாளே, அவள்தான்! அந்த ஸ்திரீ இப்போதும் அக்கத்தியைக் கையில் பிடித்திருந்தாள். நிலா வெளிச்சத்தில் கத்தியில் சுடர் விளிம்பு தழல் கீற்றைப்போல் பிரகாசித்தது. அந்த ஸ்திரீ யார்? அவள் எதற்காக வருகிறாள்? அலியைக் கொன்று தன்னைக் காப்பாற்ற வருகிறாளோ? அல்லது அந்தப்புரத்திலிருந்து தப்ப முயன்றதாகத் தன்னையே கொன்று விடுவதற்குத்தானோ?... "அத்தங்கா! அத்தங்கா! இது என்ன தூங்கிக்கொண்டே பேசுகிறாய்? எழுந்திரு!" என்றான் சூரியா. சீதா கண் விழித்தாள்; பட்டப்பகலில் தான் தூங்கியது மட்டுமல்லாமல், பயங்கரமான கனவு கண்டு பிதற்றியும் இருக்க வேண்டும் என்று தெரிந்து வெட்கினாள். வெட்கத்தை மறைப்பதற்காக, "நான் ஒன்றும் பிதற்றவில்லையே, சூரியா! இவர் எங்கே போனார்?" என்று கேட்டாள். "டோங்கா கொண்டு வருவதற்காக வாசலுக்குப் போனார். எழுந்திரு, சீக்கிரம்! தாஜ்மகாலுக்குப் புறப்பட வேண்டாமா? மணி நாலு அடித்துவிட்டதே!" என்றான் சூரியா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top