• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முகவுரை


அவதார புருஷர்கள் பலர் தோன்றிய பெருமை உடையது நம் நாடு. யுகதிருப்பங்களில் அரசியல், சமூகம், இலக்கியம், சமயம் இவை சீர்குலைவதற்கான நிமித்தங்கள் தோன்றும் பொழுது, கடவுள்தன்மை மிக்க மகான்கள் எதிர்பாராத விதமாய் வருகின்றார்கள். குறைபாடுகளைத் தீர்த்து விட்டு அதிசயமான வழியில் மறைகின்றனர். புத்தபிரான், சங்கரர், சைதன்யர், இராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற பெருந்தகையோரின் மரபில் வந்து அண்மையில் நம் கண்முன்பே திருச் செயல்களை நிகழ்த்தியவர் காந்தி மஹாத்மா. மற்ற அவதார புருஷர்களிடம் தென்படாத தனிச்சிறப்பு இவருக்கு உண்டு. மக்களோடு ஒருவராக இவர் இழைந்து பழகியவர்; ஏழையின் உள்ளதை உணர்ந்தவர்; கடல் போன்ற எதிர்ப்புகளுக்கு அசையாத மலை போன்ற உறுதியினர்; தீவிர உண்மைகளைச் சோதனை செய்வதில் சற்றும் தளராதவர்; உடல் வருந்தினாலும் உள்ளத் தெளிவை விடாதவர்; முரணாக நின்று போரிட்ட மூட நம்பிக்கையை விலக்கத் தம் மன்னுயிரையும் இழக்கத் துணிந்தவர். "நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்,ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம், இன்பமே எந்நாளும் துன்பமில்லை" என்ற அப்பரது வாக்கை மெய்ப்பித்தவர்.

அற்புதங்கள் நிரம்பிய இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத முற்றிலும் தகுதி உள்ள ஓர் இலக்கிய கர்த்தா தமிழ் நாட்டுக்குக் கிடைத்தது அதன் பெரும் பாக்கிய மென்றே கூறலாம். இன்று தமிழ் மொழியை உயர்ந்த பீடத்தில் வைத்த பெருமை 'கல்கி'யையே சாரும். தமிழர் இதயத்தில் என்றென்றும் இடம் கொண்ட அவர் ஆக்கிய இந்தத் திவ்ய சரிதை எத்துணை அழகு வாய்ந்ததாய் இருக்க வேண்டும்! இதைப் புத்தக வடிவில் வெளியிடும் எமக்கு ஏற்படும் மகிழ்ச்சி ஒரு புறம் இருக்கட்டும். தாம் சிருஷ்டி செய்த இவ்வரிய செல்வத்தை அனைவரும் படித்து இன்புறுவதைப் பாராமல் அவர் பரமபதம் அடைந்ததுதான் எங்களுடைய பெருங்குறை. இருந்தாலும் நித்திய உலகிலிருந்து இந்தச் சிறு முயற்சியின் மீது தம் நோக்கைச் செலுத்தி அவர் எங்களுக்கு நிறைவான ஆசி தருவாரென்பது திண்ணம். தமிழன்பர்கள் இந்நூலை வரவேற்பதன் மூலம் அவருடைய திருக்குறிப்பைப் பெற்றவராவோம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1. லண்டன் மார்க்கம்


மாந்தருள் ஒருதெய்வம்.

தாய் நாட்டுக்குப் போகிற வழியில் லண்டனில் ஸ்ரீகோகலேயைச் சந்தித்துப் பேசுவதற்காக மகாத்மா காந்தி இங்கிலாந்துக்குப் பயணமானார். அவருடன் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் மிஸ்டர் காலன்பாக் என்னும் ஜெர்மன் நண்பரும் பிரயாணப் பட்டார்கள்.

1914-ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் மகாத்மா கப்பல் ஏறி ஆகஸ்டு மாதம் 5 - ஆம் தேதி லண்டனை அடைந்தார். அதற்கு முதல்நாள் ஆகஸ்டு மாதம் 4 - ஆம் தேதி முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகி விட்டது.

லண்டன் நகரை அடைந்ததும் மகாத்மா ஸ்ரீகோகலேயைப் பற்றி விசாரித்தார். கோகலே பாரிஸுக்குப் போயிருக்கிறார் என்றும் யுத்தம் தொடங்கி விட்டபடியால் திரும்பி வருவதற்குத் தாமதப்படலாம் என்றும் தெரிந்தது. இந்தியாவில் தாம் செய்யவேண்டிய தேசத் தொண்டைக் குறித்து ஸ்ரீ கோகலேயிடம் மகாத்மா பேச விரும்பினார். கோகலேவைப் பாராமல் இந்தியாவுக்குப் போக விரும்பவில்லை. ஆகையால் அவர் திரும்பி வரும் வரையில் லண்டனிலேயே தங்கி யிருக்கத் தீர்மானித்தார்.

லண்டனிலிருந்தபோது யுத்தம் சம்மந்தமாகத் தம்முடைய கடமை என்னவென்ற யோசனை ஏற்பட்டது. தென்னாப்ரிக்காவில் போயர் யுத்தத்தின் போது செய்தது போல இந்த யுத்தத்திலும் பிரிட்டனுக்கு உதவி செய்வது இந்தியர்களுடைய கடமை என்று மகாத்மா தீர்மானித்தார். எனவே அச்சமயம் இங்கிலாந்தில் படிப்பதற்காக வந்திருந்த இந்திய மாணவர்களையும் மற்ற இந்தியர்களையும் திரட்டி அவர்களிடம் தமது அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். "ஆங்கில மாணாக்கர்கள் யுத்த சேவையில் எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள், பார்த்தீர்களா? அதுபோல இந்திய மாணாக்கர்களும் யுத்த சேவை செய்வதற்கு முன் வர வேண்டும்" என்று சொன்னார்.

இந்தியர்களில் சிலர் அதை ஆட்சேபித்தார்கள் "ஆங்கிலேயர் சுதந்திர புருஷர்கள்; ஆளும் சாதியினர்; ஆகையால் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் யுத்தம் செய்தாக வேண்டும். சுதந்திரம் இல்லாத அடிமை இந்தியர்கள் எதற்காக யுத்த சேவையில் ஈடுபட வேண்டும்? ஆங்கிலேயரக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை நமக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்வதல்லவா நம்முடைய கடமை" என்றார்கள். இந்த வாதத்தை மகாத்மா ஒப்புக்கொள்ளவில்லை.

"இங்கிலாந்துக்கு ஏற்பட்டுள்ள கஷ்டத்தை நம்முடைய சந்தர்ப்பமாக உபயோகித்துக் கொள்வது நியாயம் அல்ல. யுத்தம் நடக்கும் வரையில் நம்முடைய கோரிக்கைகளை வற்புறுத்தக் கூடாது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பை நாம் பெற்று வருகிறோம். ஆகையால் யுத்தத்தில் பிரிட்டனுக்கு உதவி செய்ய வேண்டும்" என்று வற்புறுத்தினார்.

மகாத்மாவின் யோசனையை இந்தியர்கள் பலர் ஒப்புக் கொண்டார்கள். யுத்த சேவைக்காக வாலண்டியர் படையில் சேர்வதாகத் தங்கள் பெயர்களையும் கொடுத்தார்கள். இவர்களில் இந்தியாவின் எல்லா மாகாணத்தினரும் எல்லா மதத்தினரும் இருந்தார்கள்.

இதனால் திருப்தி யடைந்த மகாத்மா அச்சமயம் இந்தியா மந்திரி பதவி வகித்த லார்ட் குரூவுக்குக் கடிதம் எழுதினார்.தாமும் தம்மைச் சேரந்த இந்தியர்களும் சைன்ய சேவையில் ஈடுபட விரும்புவதாகவும் அதற்கு வேண்டிய பயிற்சி பெறத் தயாரா யிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்தார். லார்ட் குரூ முதலில் சிறிது தயங்கி விட்டுப் பிறகு மகாத்மா எழுதிய வண்ணம் இந்தியர்களின் சைன்ய சேவையை ஒப்புக் கொள்வதாகப் பதில் எழுதினார்.

முதலில் டாக்டர் காண்ட்லி என்பவரின் கீழ் பிரதம சிகிச்சை முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. எண்பது இந்தியர்கள் பயிற்சி பெற்றார்கள். ஆறுவாரத்துக்கெல்லாம் நடந்த பரீட்சையில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் தேறினார்கள்.

இந்த நாட்களில் காந்திஜிக்குப் பழக்கமான பல இந்தியர்களில் ஒருவர் டாக்டர் ஜீவராஜ் மேத்தா. அப்போது இவர்இங்கிலாந்தில் வைத்தியப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தார். மகாத்மாவின் தலைமையில் சைன்ய சேவைப் படையில் சேர்ந்தார். பிற்காலத்தில் டாக்டர் ஜீவராஜ் மேத்தா காந்தி மகாத்மாவுக்கு உடல்நோய் ஏற்பட்ட காலங்களிலும் காந்திஜி உண்ணாவிரதம் இருந்த காலங்களிலும் அவருடைய நம்பிக்கைக்கு உரிய வைத்தியராய் விளங்கினார். தற்சமயம் டாக்டர் ஜீவராஜ் மேத்தா பரோடா சமஸ்தான பிரதம மந்திரி பதவி வகித்துப் பரோடாவைப் பம்பாய் மாகாணத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

அக்காலத்திலேதான் மகாத்மா காந்தி முதன் முதலாக ஸ்ரீமதி சரோஜனி தேவியையும் சந்தித்தார். போர் வீரர்களுக்கு உடுப்புக்களும் காயம் பட்டவர்களுக்குக் கட்டுகள் போடும் துணிகளும் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்ட பெண்மணிகளின் சங்கம் ஒன்று லண்டனில் இருந்தது. அந்தச் சங்கத்தில் ஸ்ரீமதி சரோஜினி தேவி அங்கத்தினர். ஒருசமயம் போர் வீரர்களின் உடுப்புக்காக வெட்டப் பட்டிருந்த ஒரு குவியல் துணிகளை மகாத்மா காந்தியிடம் ஸ்ரீமதி சரோஜினி தேவி கொடுத்து அவற்றை உடைகளாகத் தைத்துக்கொண்டு வரும்படி சொன்னாராம். மகாத்மா அவ்விதமே தைத்துக்கொடுத்தாராம்.

பிற்காலத்தில் இந்தியாவில் மகாத்மா ஆரம்பித்து நடத்திய இயக்கங்களில் ஸ்ரீமதி சரோஜினி தேவி எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.மகாத்மாவிடம் ஸ்ரீமதி சரோஜினி தேவி கொண்டிருந்த பக்தி அளவற்றது. பாதகன் கோட்ஸேயினால் மகாத்மா சுடப்பட்டு இறந்த சம்பவம் ஸ்ரீமதி சரோஜினியின் இருதயத்தைப் பெரிதும் பாதித்துப் பலவீனப் படுத்திவிட்டது. காந்திமகான் காலமாகி ஒரு வருஷத்துக்கெல்லாம் ஸ்ரீமதி சரோஜினி தேவியும் அவரைத்தொடரந்து விண்ணுலகம் சென்றார் அன்றோ?

பிரதம சிகிச்சையில் பயிற்சி பெற்றுப் பரீட்சையிலும் தேறியவர்களுக்கு இராணுவ டிரில் பயிற்சி அளிக்குமாறு கர்னல் பேக்கர் என்பவர் நியமிக்கப் பட்டார். இவர் தேவைக்கு அதிகமாகவே இந்தியர்கள் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கினார்.தென்னாப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீ ஸோராப்ஜி அதாஜானியா என்பவர் இது விஷயமாக மகாத்தமாவுக்கு ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்தார். "இந்த அதிகாரி நம்மீது தர்பார் நடத்தப் பார்க்கிறார். அர்த்தமற்ற உத்தரவுகளைப் போடுகிறார். இவர் செலுத்தும் தர்பார் ஒருபுறமிருக்க, இவர் தமக்கு உதவியாக நியமித்துக்கொண்டிருக்கும் ஆங்கில இளைஞர்களும் தங்களை எஜமானர்கள் என்று எண்ணிக்கொண்டு நம்மைக் கேவலமாக நடத்துகிறார்கள். இந்த அதிகார தட புடலை எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது!" என்று சொன்னார். ஆயினும் அவரைப் பொறுமையாக இருக்கும்படியும் கர்னல் பேக்கரிடம் நம்பிக்கை வைக்கும்படியும் காந்தி மகாத்மா கேட்டுக் கொண்டார்.

"இப்படித்தான் நீங்கள் நம்பிக்கை வைத்து வைத்து ஏமாந்துபோகிறீர்கள். இதனால் உங்களுக்கும் எங்களுக்கும் கஷ்டத்தைத் தேடித்தருகிறீர்கள்!" என்றார் அதாஜானியா. அவர் சொன்னது உண்மை என்று சீக்கிரத்தில் ஏற்பட்டு விட்டது. கர்னல் பேக்கரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது. அவர் 'கார்ப்போரல்'களாக நியமித்திருந்த ஆக்ஸ்போர்டு மாணாக்கர்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிகாரம் செலுத்தினார்கள். இந்தியர்களுடைய சுய மரியாதைக்குப் பங்கம் நேரும் நிலைமை ஏற்பட்டு விட்டது.

இதன் பேரில் மகாத்மா மேற்படி தலைமை அதிகாரியிடம் போய் இந்தியர்களுடைய கருத்தைத் தெரிநவித்தார்.
"என்னிடம் நேரே நீங்கள் வந்து புகார் சோல்லக்கூடாது. நான் நியமித்திருக்கும் 'கார்ப்போரல்'களிடம் முதலில் புகார் சொல்லவேண்டும். அதுவும் அவரவர்களே புகார் சொல்ல வேண்டுமே தவிர, நீங்கள் மற்றவர்களுக்காகப் பேசக்கூடாது" என்றார் கர்னல் பேக்கர்.

மகாத்மா திடுக்கிட்டார். எனினும் நிதானமாகத் தமது கட்சியை எடுத்துரைத்தார். "இந்தியர்களைச் சைன்ய சேவைக் காகத் திரட்டியவன் நான்தான். ஆகையால் அவர்களுக்காக நான் பேசுவதற்கு அநுமதி கொடுக்கவேண்டும். எங்களுடைய சம்மதம் கேட்காமல் 'கார்ப்போரல்'களை நீங்கள் நியமித்திருக்கிறீர்கள். இது சரியல்ல. அவர்களை அனுப்பிவிட்டு எங்களுக்குள்ளேயே சில படைத் தலைவர்களை நியமிப்பது தான் முறை" என்று கூறினார்.

கர்னல் பேக்கருக்கு மகாத்மாவின் யோசனை பிடிக்கவில்லை. அவருக்குக் கோபம் வந்து விட்டது. "நான் நியமித்த 'கார்ப்போரல்'களை விலக்க வேண்டும் என்றா சொல்கிறீர்?" அது இராணுவக் கட்டுப்பாட்டுக்கு விரோதம்!" என்று கடுமையாகப் பேசினார்.

காந்திஜி தமது தென்னாப்பிரிக்கா அநுபவத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே இந்தியப்படைக்குத் தாமே தலைவராயிருந்ததை எடுத்துச் சொன்னார். அது ஒன்றும் கர்னல் பேக்கரின் காதில் ஏறவில்லை.

இதன்பேரில் இந்தியர்கள் கூட்டம் போட்டுச் சைன்ய சேவையிலிருந்து விலகிக்கொன்வது என்று தீர்மானித்தார்கள். இது இராணுவக் கட்டுப்பாட்டுக்கு விரோதமான காரியமாதலால்அதன் பலாபலன்களை மகாத்மா நன்கு எடுத்துச் சொன்னார். இந்த விஷயமாகச் சத்தியாக்கிரஹம் செய்யவேண்டியிருக்கும் என்றும் இராணுவத் தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் கூறினார். அதற்கெல்லாம் தாங்கள் தயார் என்று இந்தியர்கள் சொன்னார்கள்.

பின்னர் காந்திஜி தமது வழக்கமான முறையை அநுசரித்து இந்தியா மந்திரி லார்ட் குரூவுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு லார்ட் குரூ எழுதிய பதில் வழவழ முறையில் அமைந்திருந்தது.

"தென்னாப்பிரிக்கா நிலைமைக்கும் இவ்விடத்து நிலைமைக்கும் வித்தியாசம் உண்டு. படைப் பிரிவுத் தலைவர்களை மேலதிகாரிதான் நியமிக்க வேண்டும். ஆயினும் இனிமேல் படைத் தலைவர்களை நியமிக்கும்போது உங்களைக் கலந்து கொண்டு நியமிக்கும்படி செய்கிறேன் " என்று இந்தியா மந்திரி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் மகாத்மா காந்தி பாரிச வாயுவினால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானார். அவர் படுத்திருந்த சமயத்தில் இந்திய சைன்ய சேவைப் படையில் பிளவு ஏற்பட்டு விட்டது. ஒரு பகுதியினர் அதிகாரிகளுடன் சண்டை போடுவதில் பயனில்லை என்று தீர்மானித்துச் சைன்ய சேவை செய்ய இணங்கினார்கள். அச்சமயத்திலா நெட்லி என்னும் இடத்திற்குக் காயமடைந்த போர்வீரர்கள் ஏராளமாக வந்திருந்தார்கள். அவர்களுக்குச் சேவை புரிய ஆள் தேவையாயிருந்தது. சேவை செய்ய இணங்கிய இந்தியர்கள் அந்த இடத்துக்கு அனுப்பப் பட்டார்கள்.

நோயாளியாகப் படுத்திருந்த காந்திஜியைப் பார்ப்பதற்கு உதவி இந்தியா மந்திரி ராபர்ட்ஸ் பலமுறை வந்தார். சேவைக்குப் போகாமல் பின்தங்கிய இந்தியர்களையும் சேவை செய்யப் போகச் சொல்லும்படி காந்திஜியைக் கேட்டுக் கொண்டார். அவர்களுடைய சுயமரியாதைக்குப் பங்கம் எதுவும் நேராது என்று உறுதி கூறினார். அதன் பேரில் காந்திஜி பின் தங்கியவர்களையும் சேவைக்குப் போகும்படி சொன்னார். அவர்களையும் நெட்டிலிக்குப் போனார்கள். ஆனால் மகாத்மா மட்டும் உடல் நோய் காரணமாகப் போக முடியவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
2 . ஜன்ம பூமி


காந்தி மகாத்மாவுக்கு இங்கிலாந்தில் பாரிச வாயு நோய் கண்டிருந்தபடியால் அவர் சைனிய சேவைக்குப் போக முடியாமற் போயிற்றல்லவா? டாக்டர் ஜீவராஜ் மேத்தா காந்திஜிக்கு மேற்படி நோய் நீங்கச் சிகிச்சை செய்தார். ஆனால் டாக்டர் குறிப்பிட்ட உணவு வகைகளை மகாத்மா உட்கொள்ள முடியவில்லை. நிலக்கடலை, வாழைப்பழம், எலுமிச்சப்பழம், தக்காளிப்பழம், திராட்சைப்பழம் - இவையே அப்போது மகாத்மாவின் முக்கிய உணவாக இருந்தன. பருப்பு வகைகளையும் தானியங்களையும் உட்கொள்ளுவதை அடியோடு விட்டிருந்தார். பாலும் சாப்பிடுவதில்லை.

நிலைமை இப்படியிருந்த பொது ஸ்ரீ கோகலே பாரிஸிலிருந்து வந்து சேர்ந்தார். காந்திஜி நோய்வாய்ப்பட்டிருந்தது ஸ்ரீ கோகலேயுக்குக் கவலை அளித்தது. உணவு சம்பந்தமாக டாக்டருக்கும் காந்திஜிக்கும் ஏற்பட்டிருந்த தகராறையும் கோகலே அறிந்தார். பழ உணவே சிறந்த உணவு என்னும் மகாத்மாவின் கொள்கையில் கோகலேயுக்கு நம்பிக்கை இல்லை. டாக்டர் சொல்லுகிறபடி காந்திஜி உணவு உட்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். நெடுநேரம் இந்த உபதேசத்தைச் செய்தார். கடைசியில் மகாத்மா யோசிப்பாதற்கு இருபத்திநாலு மணி நேரம் அவகாசம் கேட்டுப் பெற்றார்.

அன்றிரவெல்லாம் காந்திஜி தமது உணவுப் பரிசோதனையைப் பற்றியும் கோகலேயின் போதனையைப் பற்றியும் ஆலோசித்துக் கடைசியாக ஒரு சமரச முடிவுக்கு வந்தார். அந்த முடிவு வருமாறு; - தேக சுகத்தை மட்டும் முன்னிட்டுத் தாம் கைக்கொண்டிருந்த விரதங்களை டாக்டரின் யோசனைப்படி தளர்த்தி விடலாம். ஆனால் ஆத்ம சாதனத்தை முன்னிட்டு அனுசரித்த உணவுக்கட்டுபாடுகளைக் கைவிடக்கூடாது.

ஸ்ரீ கோகலேயிடம் மகாத்மா தமது முடிவைத் தெரிவித்தார். தானியங்களும் பருப்பு வகைகளும் உட்கொள்ளுவதாகவும் ஆனால் பாலும் மாமிசமும் சாப்பிடுவது அசாத்தியம் என்றும் சொன்னார். "பிரதிக்ஞையை மீறிப் பாலும் மாமிசமும் உட்கொள்ளுவதைக் காட்டிலும் மரணமே மேல் என்று கருதுகிறேன். தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும்" என்று மகாத்மா கோகலேயிடம் கேட்டுக் கொண்டார்.

மகாத்மாவின் இந்த முடிவு ஸ்ரீ கோகலேயுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அவருடைய ஆத்ம சாதன நோக்கத்தையும் பிரதிக்ஞையில் உறுதியையும் கருதி டாக்டர் ஜீவராஜ் மேத்தாவிடம்"காந்தி ஒப்புக்கொண்ட வரையில் சரி. மேலும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றார்.

டாக்டர் கூறியபடி காந்திஜி ஓரளவு உணவை மாற்றிக் கொண்டார். மேலுக்கு மருந்து தடவி டாக்டர் மேத்தா மகாத்மாவுக்கு சிகிச்சை செய்து வந்தார். ஆயினும் பலன் ஒன்றும் தெரியவில்லை.

டாக்டர் அல்லின்சன் என்னும் இயற்கை வைத்தியரின் யோசனைப்படி காந்திஜி பச்சைக் கறிகாய்களைச் சாப்பிடத் தொடங்கினார். அதை முழுதும் கையாண்டு பார்க்க உடல் நோய் இடங்கொடுக்கவில்லை.

டாக்ட‌ல் ஜீவ‌ராஜ் மேத்தாவோ தாம் சொல்லுகிற‌ப‌டி ம‌காத்மா முழுதும் கேட்டுக் க‌டைபிடித்தால் தான் நோயைக் குண‌ப்ப‌டுத்த‌ முடியும் என்று கூறினார்.

இந்த நிலையில் ஒரு நாள் மிஸ்டர் ராபர்ட்ஸ் மகாத்மாவைப் பார்க்க வந்தார். அவருடைய நோய் கடுமையாகியிருப்பதைக் கவனித்தார். "நீங்கள் சைன்ய சேவைக்காக நெட்லிக்குப் போகும் எண்ணத்தை விட்டுவிட வேண்டியது தான். இன்னும் கடுமையான குளிர்காலம் வரப்போகிறது. அதை உங்க‌ளால் தாங்க‌ முடியாது. நீங்க‌ள் இந்தியா தேச‌த்துக்கு உட‌னே திரும்பி விடுவ‌துதான் ந‌ல்ல‌து. அங்கே தான் உங்க‌ளுக்கு உட‌ம்பு ந‌ன்றாக‌க் குண‌ம‌டையும். அப்போதும் இந்த‌ யுத்த‌ம் ந‌ட‌ந்துகொண்டிருந்தால் நீங்க‌ள் உத‌வி செய்வ‌த‌ற்கு எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் கிடைக்கும்" என்று மிஸ்டர் ராபர்ட்ஸ் கூறியது சரியான யோசனையாக மகாத்மாவுக்குத் தோன்றியது.
---
+ஜன்ம தேசம் செல்வதற்காக மகாத்மா தம்முடைய தர்மபத்தினியுடன் கப்பல் ஏறினார். மிஸ்டர் காலன்பாக் ஜெர்மானியராகையால் அவர் இநதியா தேசம் போவதற்கு அநுமதிச் சீட்டு கிடைக்கவில்லை. எவ்வளவு முயன்றும் பயனில்லை.

காந்திஜி கப்பல் ஏறிப் பிரயாணம் செய்து சூயஸ் கால்வாயை அடைந்ததும் அவருக்கு உடம்பு பூரண சௌக்யம் அடைந்துவிட்டது. கடற்பிரயாணத்தின் தூய்மையான காற்றே தாம் குணமடைந்ததற்குக் காரணம் என்று மகாத்மா கருதினார்.

பத்து வருஷம் பிரிந்திருந்த பிறகு காந்திஜி ஜன்ம பூமியான இநதியாவுக்கு வந்து சேர்ந்தார். பம்பாய்த் துறைமுகத்தை அடைந்து கப்பலிலிருந்து இறங்கினார்.
---- ------- -----
போனிக்ஸ் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காந்திஜிக்கு முன்னாலேயே இந்தியா வந்து சேர்ந்திருந்தார்கள். தாம் இந்தியாவுக்கு வரும் வரையில் அவர்கள் ஸ்ரீ ஆண்ட்ரூஸின் யோசனைப்படி நடக்க வேண்டும் என்று மகாத்மா சொல்லியிருந்தார். அவர்களை ஸ்ரீ ஆண்ட்ரூஸ் முதலில் காங்ரி குருகுலத்துக்கு அழைத்துப் போனார். இந்தக் குருகுலம் புகழ்பெற்ற சுவாமி சிரத்தானந்தரால் ஸ்தாபிக்கப்பட்டு அவருடைய தலைமையின்கீழ் நடந்து வந்தது.

போனிக்ஸ் கோஷ்டியார் சிலகாலம் காங்ரியில் வசித்த பிறகு மகாகவி ரவீந்திரநாத தாகூரின் சாந்தி நிகேதனத்துக்குச் சென்றார்கள். இரண்டு இடங்களிலும் அவர்கள் மிக்க அன்புடன் நடத்தப்பட்டார்கள்.
---- --------- -----
மகாத்மா பம்பாயில் இறங்கியபோது போனிக்ஸ் ஆசிரமத்தார் சாந்திநிகேதனத்தில் இருந்தார்கள். அவர்களிடம் போய்ச் சேரவேண்டும் என்று மகாத்மா மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆயினும் உடனே புறப்பட முடியாமல் அவருக்குப் பம்பாயில் சில அலுவல்கள் ஏற்பட்டன.

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா நடத்திய சத்தியாக்கிரஹப் போரைப் பற்றிய விவரங்கள் இந்தியாவில் பரவி யிருந்தன. ஆகையால் மகாத்மாவுக்கு பல வரவேற்புகளும் உபசாரங்களும் நடந்தன.

ஸ்ரீ ஜெகாங்கீர் பெடிட் என்பவர் பம்பாயில் அப்போது வசித்த பார்ஸி கோடீசுவ‌ரர்க‌ளில் ஒருவ‌ர். அவருடைய ஜாஜ்வல்யமான அரண்மனையை யொத்த இல்லத்தில் ஒரு விருந்து நடந்தது. இந்த விருந்துக்கு பம்பாயின் பிரபல செல்வர்கலும் பிரமுகர்களும் வந்திருந்தார்கள்.எல்லாரும் நவநாகரிக உடை தரித்து வந்திருந்தார்கள். ஆனால் மகாத்மாவோ பழைய கர்நாடக கத்தியவார் பாணியில் இடுப்பில் வேஷ்டியும் உடம்பில் நீண்ட அங்கியும் தலைப்பாகையும் அணிந்திருந்தார். அவ்வளவு நாகரிக மனிதர்களுக்கு மத்தியில் காந்திஜி பேசிப் பழகுவதற்குத் திணறிப்போனார். பெடிட் மாளிகையின் பெருமிதமும் பிரகாசமும் அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டன. ஆயினும் ஸர் பிரோஸிஷா மேத்தாவின் அன்பும் ஆதரவும் காந்திஜி ஒருவாறு சமாளித்துக் கொள்ள உதவி செய்தன.

பிறகு, குஜராத்திகள் மகாத்மா காந்தியைத் தங்கள் மாகாணத்தவர் என்று உரிமை பாராட்டி உபசார விருந்து நடத்தினார்கள். குஜராத் மாகாணத்தவராகிய ஜனாப் ஜின்னாவும் இந்த விருந்துக்கு வந்திருந்தார். காந்திஜியை வரவேற்றுப் பாராட்டி ஆங்கிலத்தில் இனிய சொற்பொழிவு ஒன்றும் செய்தார். விருந்துக்கு வந்திருந்த இன்னும் பலரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள்.

ஆனால் மகாத்மா காந்தி உபசாரத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய சமயம் வந்தபோது "இங்கே எல்லாருக்கும் குஜராத்தி தெரியுமாதலால் குஜராத்தியிலேயே பேச விரும்புகிறேன்! நம் தாய்மொழி இருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு இங்கிலீஷில் ஏன் பேச வேண்டும்?" என்று ஆரம்பித்தார். காந்திஜியின் தாய்மொழிப்பற்றை அனைவரும் பாராட்டினார்கள். இங்கிலீஷில் பேசுவதே கௌரவம் என்று கருதப்பட்டுவந்த காலத்தில் மகாத்மா துணிந்து குஜராத்தியில் பேசியதை மெச்சினார்கள். இந்த அநுப‌வ‌த்தினால் ம‌காத்மாவுக்கு இந்தியாவில் தம்முடைய கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யலாம் என்னும் தைரியம் உண்டாயிற்று.

பம்பாயிலிருந்து மகாத்மா ஸ்ரீ கோகலேயைச் சந்திபதற்காக பூனாவிற்குப் புறப்பட எண்ணினார். பூனாவுக்கு புறப்படுவதற்கு முன்னால் பம்பாய் கவர்னரைப் பார்க்கும்படி கோகலேயிடமிருந்து தந்தி வந்தது. அப்போது பம்பாயின் கவர்னராயிருந்தவர் லார்ட் வில்லிங்டன். (பின்னால் இவர் சென்னை மாகாணத்தின் கவர்னராகவும் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்.)

லார்ட் வில்லிங்டன் வழக்கமான யோகஷேம விசாரணைகுப்பிறகு, "உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இங்கே நீங்கள் அரசாங்க சம்பந்தமான நடவடிக்கை எதுவும் தொடங்குவதாயிருந்தால், முதலில் என்னை வந்து பார்த்துப் பேசி விட்டுத் தொடங்க வேண்டும்!" என்று கூறினார்.

அதற்குக் காந்திஜி, " நான் அனுசரிக்கும் சத்தியாக்கிரஹ முறையில், எந்தக் காரியமானாலும் எதிராளியின் மனதை அறிந்து ஒத்துப்போக முயற்சி செய்வதே முதல் விதியாகும். ஆகையால் கண்டிப்பாகத் தங்களுடைய யோசனையைக் கடைப் பிடிப்பேன்" என்றார்.

"உங்களுக்கு எப்போது விருப்பமோ அப்போதெல்லாம் நீங்கள் என்னை வந்து பார்க்கலாம். என்னுடைய அரசாங்கம் வேண்டுமென்று அநீதி எதுவும் செய்யாது என்பதைக் காண்பீர்கள்" என்றார் லார்ட் வில்லிங்டன் துரை.

இதே லார்ட் வில்லிங்டன் 1932 -ஆம் வருஷத்தில் இந்தியாவின் இராஜப் பிரதிநிதியாக வந்திருந்தபோது மகாத்மா அவரைப் பேட்டி காண அநுமதி கேட்டார். லண்டன் வட்டமேஜை மகாநாட்டினால் பயன் விளையாமல் மகாத்மா திரும்பி இந்தியாவிற்கு வந்ததும் மறுபடியும் சத்தியாக்கிரஹப் போர் தொடங்குவதற்கு முன்னால் தம்முடைய கட்சியை எடுத்துச் சொல்லி, சமரசத்துக்கு வழி உண்டா என்று பார்க்க விரும்பினார். இதற்காகவே மகாத்மா லார்ட் வில்லிங்டனின் பேட்டி கோரினார். ஆனால் வில்லிங்டனோ மகாத்மாவைப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் விரோதியாகக் கருதி, பேட்டி கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்!

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நன்மைக்குப் பாதகம் ஏற்படாத வரையில் பிரிட்டிஷார் நாகரிகமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வது வழக்கம். சாம்ராஜ்யத்துக்கு ஆபத்து என்று ஏற்பட்டால் பிரிட்டிஷாரின் தயை, தாட்சண்யம், நாகரிகம், மரியாதை எல்லாம் பறந்து போய் விடும்!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3 . சுங்கவரி நீக்கம்


பம்பாயில் கவர்னர் லார்ட் வில்லிங்டனைச் சந்தித்துப் பேசிய பிறகு மகாத்மா பூனாவுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ கோகலே மகாத்மாவை மிக்க அன்புடம் வரவேற்றார். இந்திய ஊழியர் சங்கம் என்ற பெயருடன் ஸ்ரீ கோகலே நடத்தி வந்த ஸ்தாபனம் மிகவும் பிரசித்தி பெற்றது. மெத்தப் படித்த அறிவாளிகள் பலர் அந்த ஸ்தாபனத்தில் அங்கத்தினராகியிருந்தார்கள். சொற்ப ஊதியம் பெற்றுக்கொண்டு அவர்கள் தேச சேவையும் சமூக சேவையும் செய்து வந்தார்கள். ஸ்ரீ கோகலேயைப் போலவே இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த அனைவரும் இந்திய அரசியலில் 'மிதவாத கொள்கை'யைக் கடைபிடித்தார்கள். ஸ்ரீ கோகலேயுக்குப் பிறகு மேற்படி சங்கத்தின் தலைவாரகிப் பிரிசித்தியடைந்தவர் மகா கனம் வி. எஸ். சீனிவாச சாஸ்திரியார். இன்னொரு பிரபல அங்கத்தினர் பண்டித ஹ்ரிதயநாத குன்ஸ்ரு. தற்சமயம் ஹரிஜன சேவா சங்கத்தின் காரியதரிசியாக இருந்து அரும்பெரும் தொண்டு செய்துவரும் ஸ்ரீ தக்கர் பாபாவும் மேற்படி சங்கத்தைச் சேர்ந்தவரே.

காந்திஜி இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்ற விருப்பம் ஸ்ரீ கோகலேயுக்கு இருந்தது. ஆனால் இந்திய ஊழியர் சங்கத்தின் மற்ற அங்கத்தினர் காந்திஜியுடன் பல விஷயங்களையும் பற்றிப் பேசியபோது சங்கத்தின் கொள்கைகளுக்கும் மகாத்மாவின் கொள்கைகளுக்கும் மிக்க வித்தியாசம் இருப்பதைக் கண்டார்கள். ஆகவே காந்திஜியை இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்துக்கொள்வது உசிதமாயிராது என்று கருதினார்கள். மகாத்மாவுக்கு இது ஏமாற்றமாயிருந்தது. தம்முடைய கொள்கைகளுக்கு எவ்விதமான பங்கமும் இல்லாமல் இந்திய ஊழியர் சங்கத்திலே சேர்ந்து தொண்டு செய்யலாம் என்று மகாத்மா நினைத்தார்.

மகாத்மா இந்திய ஊழியர் சங்கத்தில் சேரவேண்டும் என்பதில் மகாத்மாவைக் காட்டிலும் ஆர்வம் கொண்டிருந்தவர் ஸ்ரீ கோகலே. ஆனால் அவர் சங்கத்தின் மற்ற அங்கத்தினர் சொல்வதற்கு மாறாக நடக்க விரும்பவில்லை. அவர் மகாத்மாவுக்குச் சமாதானமாக கூறியதாவது: "உங்களுடைய கொள்கை எப்படியிருந்தாலும் நீங்கள் ராஜி செய்து கொள்வதில் ஆர்வங் கொண்டவர் என்பதை இந்தச் சங்கத்தின் அங்கத்தினர் இன்னும் உணரவில்லை. அதைச் சீக்கிரத்தில் அவர்கள் உணர்ந்து தங்களைச் சேர்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அப்படி அவர்கள் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் தங்களிடம் அவர்களுக்கு மரியாதையும் அன்பும் இல்லையென்று எண்ணவேண்டாம். உண்மையில் தங்களிடம் உள்ள மரியாதையினாலேயே தங்களுடைய தன் மதிப்புக்கும் கொள்கைகளுக்கும் பங்கம் வரக்கூடாது என்று கருதுகிறார்கள். தாங்கள் விதிமுறைகளின்படி அங்கத்தினர் ஆகாவிட்டாலும் என்வரையில் தங்களைச் சங்கத்தில் சேர்ந்தவராகவே கருதப் போகிறேன்".

இதற்குப் பதிலாக மகாத்மா ஸ்ரீ கோகலேயுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கூறியதவாது: - "இந்திய ஊழியர் சங்கத்தில் நான் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் போனிக்ஸிலிருந்து நான் கூட்டி வந்திருந்தவர்களோடு தனியாக ஒரு ஆசிரமம் ஸ்தாபித்துத் தொண்டு செய்ய விரும்புகிறேன். நான் குஜராத்தைச் சேர்ந்தவனாதலால் அங்கே ஆசிரமம் ஸ்தாபிப்பது பொருத்தமாய் இருக்கும். தங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும்".

இதைக்கேட்ட கோகலே, "ரொம்ப சந்தோஷம். அப்படியே செய்யுங்கள். ஆனால் ஆசிரமம் ஸ்தாபிப்பதற்கு வேண்டிய செலவுகளுக்குப் பணம் வேறு யாரிடமும் கேட்கக் கூடாது. செலவு முழுதும் நானே கொடுப்பதற்கு விரும்புகிறேன்!" என்றார். உதவி செய்வதற்கு ஒரு ஆப்தர் இருக்கிறார் என்ற எண்ணம் காந்திஜிக்கு உற்சாகம் ஊட்டியது.

ஸ்ரீ கோகலே வாய்ப்பேச்சோடு நில்லாமல் இந்திய ஊழியர் சங்கத்தின் பொக்கிஷத்தாரரைக் கூப்பிட்டுக் காந்திஜியின் பெயரால் ஒரு பெயரேடு வைத்துக்கொண்டு அவர் கேக்கும் பணத்தையெல்லாம் கொடுத்து வரும்படி உத்தரவிட்டார்.

காந்திஜி பூனாவை விட்டுப் புறப்படும் முன் இந்திய ஊழியர் சங்கம் அவருக்கு ஒரு விருந்து நடத்தியது. மகாத்மா விரும்பிய பழங்களும் கொட்டைகளும்தான் உணவில் முக்கிய உணவுப் பொருட்கள். கோகலேவின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. கோகலே தங்கியிருந்த அறையிலிருந்து விருந்து நடந்த இடம் சில அடி தூரத்திலேயே இருந்தது. கோகலே அந்த இடத்துக்கு நடந்து வந்தார். விருந்துக்கு அவர் வரவேண்டிய அவசியமில்லை என்று காந்திஜியும் பிறரும் கூறியதை கோகலே கேட்கவில்லை. மகாத்மாவினிடம் அவர் கொண்டிருந்த அன்பு காரணமாக வரத்தான் வருவேன் என்று பிடிவாதம் பிடித்து கொண்டு வந்தார். விருந்து நடந்த இடத்துக்கு வந்ததும் மூர்ச்சை அடைந்து விழுந்து விட்டார். அங்கிருந்து அவரை தூக்கிக்கொண்டு போய் அவருடைய அறையில் சேர்த்தார்கள். இதற்குமுன் சில தடவை இம்மாதிரி கோகலே மூர்ச்சித்து விழுந்திருந்தபடியால் அதைக்குறித்து யாரும் பயப்படவில்லை. கோகலேயும் மூர்ச்சை தெளிந்து சுய உணர்வு பெற்றவுடனே விருந்து நடக்கட்டும் என்று சொல்லி அனுப்பினார். அவ்வாறே விருந்து நடந்தது.

ஆனால் கோகலே இந்த முறை மூர்ச்சையடைந்தது சாதாரண விஷயமாகப் போய்விட வில்லை. அதற்குப் பிறகு கோகலே உடல் வலிவு பெறவில்லை. அந்திய காலம் அவரை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

பூனாவிலிருந்து காந்திஜி இராஜகோட்டைக்கும் போர்பந்தருக்கும் சென்றார். அவருடைய தமையனார் முன்னமே காலஞ் சென்று விட்டார். காலஞ்சென்றவரின் மனைவியையும் மற்ற உறவினர்களையும் பார்க்க விரும்பி போனார்.

காந்தி மகாத்மாவின் உடை நாளுக்கு நாள் எளிமையாகி வந்தது. பாரிஸ்டர் வேலை தொடங்கியபோது மேனாட்டு நாகரிக உடுப்புத் தரித்திருந்தார்.தென்னாப்ரிக்காவில் போராட்டத்தில் இறங்கிய பிறகு அங்கே இந்தியத் தொழிலாளர்களைப் போல எளிய உடையை தரிக்கத் தொடங்கினார். ஆனால் இதுவும் பாதி மேனாட்டு முறையில் இருந்தது. தென்னாப்பிரிக்காவை விட்டு இந்தியா வந்தபோது கத்தியவாரில் அந்தஸ்து வாய்த்தவர்கள் உடுக்கும் உடை தரித்திருந்தார்.

இந்த உடையில் வேஷ்டி, உட்சட்டை, நீண்ட மேலங்கி, அங்கவஸ்திரம், தலைப்பாகை ஆகியவை இருந்தன. பம்பாயிலிருந்து ராஜகோட்டைக்குக் கிளம்பும்போது மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்ய மகாத்மா தீர்மானித்தார். அத்துடன் கத்தியவார் உடையில் நீண்ட மேலங்கியையும் உத்தரியத்தையும் புறக்கணித்து விட்டார். அலங்காரமான தலைப்பாகைக்கு பதிலாக எட்டணா விலையுள்ள காஷ்மீர் குல்லா ஒன்று வாங்கி வைத்துக் கொண்டார். மூன்றாம் வகுப்பில் ஏழைகளோடு பிரயாணம் செய்தபோது இம்மாதிரி எளிய உடுப்பு தரிப்பது தான் உசிதம் என்று கருதினார்.

அப்பொழுது பம்பாய் மாகாணத்தில் சில இடங்களில் பிளேக் நோய் பரவியிருந்தது. ஆகையால் வழியில் வாத்வான் என்னும் ஸ்டே ஷனில் பிரயாணிகள் வைத்தியப் பரிசோதனை செய்யப் பட்டார்கள். காந்திஜிக்குக் கொஞ்சம் ஜுரம் இருந்தது. அவரைப் பரிசோதனை செய்த உத்தியோகிஸ்தர் "நீர் இராஜ கோட்டை சென்றதும் அங்குள்ள பெரிய வைத்திய அதிகாரியிடம் சென்று ஆஜர் கொடுக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அந்த வாத்வான் ஸ்டே ஷனிலேயே மோதிலால் என்னும் தையற்காரர் ஒருவர் வந்து காந்திஜியை சந்தித்தார். அப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு நேராக உட்பட்ட பிரதேசத்திலிருந்து கத்தியவார் சமஸ்தானப் பிரதேசத்துக்குள் நுழையும் இடத்தில ஒரு சுங்கம் ஏற்படுத்தியிருந்தர்கள். இது வீரம் காம் ஸ்டே ஷனில் இருந்தது. பிரயாணிகளையும் அவர்களுடைய சாமான்களையும் பரிசோதனை செய்து சுங்கவரி விதித்து வசூலித்தார்கள். இதனால் பிரயாணிகள் மிக்க தொந்தரவுக்கு ஆளானார்கள். மேற்படி மோதிலால் என்னும் தையற்காரர் மகாத்மாவிடம் வீரம்காம் சுங்கவரி அநீதியைப்பற்றிப் பேசுவதற்காகவே வந்திருந்தார். அதைக் குறித்த எல்லா விவரங்களையும் எடுத்துச் சொன்னார். காந்திஜிக்கு அப்பொது சுரமாயிருந்தபடியால் அதிகம் பேச முடியவில்லை. ஆகையால் எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டு ஒரே ஒரு கேள்வி கேட்டார்.

"நீங்கள் சிறைபுகுவதற்கு சித்தமா" என்பதுதான் அந்தக் கேள்வி. சிறை என்ற வார்த்தையைக் கேட்டு மோதிலால் பயப்பட்டு விடவும் இல்லை; ஆவேசமான பதில் சொல்லவும் இல்லை; " தாங்கள் தலைமை வகித்து நடத்தினால் நானும் இன்னும் பலரும் சிறை புகுவதற்குத் தயார். தாங்கள் கத்தியவாரைச் சேர்ந்தவர்கள். ஆகையால் தங்கள் பேரில் எங்களுக்கு முதல் உரிமை உண்டு. தாங்கள் தலைமை வகித்து நடத்தி இந்த அநீதியை ஒழிக்க வேண்டும்" என்று நிதானமாகப் பதில் சொன்னார். மகாத்மாவுக்கு இந்தப் பதில் மிகவும் பிடித்திருந்தது. தையற்கார மோதிலால் மீது மதிப்பும் அபிமானமும் ஏற்ப‌ட்டன‌. "ச‌ரி பார்க்க‌லாம்" என்று பதில் சொல்லிவிட்டுப் பிரயாணத்தைத் தொடர்ந்தார்.

மகாத்மா இராஜகோட்டையை அடைந்ததும் பெரிய சுகாதார அதிகாரியைப் பார்க்கப் போனார். இதற்குள் இராஜகோட்டையில் மகாத்மாவின் பெயர் பிரசித்தி அடைந்திருந்தது. எனவே அந்த உத்தியோகஸ்தர் மகாத்மா தம்மிடம் வர நேர்ந்தது பற்றி வருத்தப்பட்டார். ரயிலில் வைத்திய பரிசோதனை செய்தவர் மீது கோபம் அடைந்தார். மகாத்மா இனி தம்மிடம் வர வேண்டியதில்லை யென்றும் மகாத்மா இருக்கும் இடத்துக்கு இன்ஸ்பெக்டரை அனுப்பிவைப்பதாகவும் கூறினார்.

மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தபடியினால் மகாத்மாவுக்கு மேற்கூறிய அநுபவம் கிடைத்தது. மூன்றாம் வகுப்பில் பிரயாணம்செய்து பிரயாணிகள் அடையும் கஷ்டங்களை நேரில் தெரிந்து கொள்வதில் மகாத்மாவுக்கு எப்போதும் ஆர்வம் இருந்தது. மகாத்மா இது சம்பந்தமாகக் கூறியிருப்பதாவது-- "பெரிய மனிதர்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்யப் பிரியப்பட்டால் ஏழைகள் உள்ளாக வேண்டியிருக்கும் எல்லா விதிகளுக்கும் அவர்களும் உள்ளாக வேண்டியது அவசியம். ரயில் உத்தியோகஸ்தர்களும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளைச் சகோதர மனிதர்களாகவே பாவிப்பதில்லை என்பதும், கேவலம். ஆடு மாடுகளாகப் பாவிக்கிறார்கள் என்பதும், என்னுடைய அநுபவம். படித்த பணக்கார வகுப்பாரில் சிலர் தாங்களாகவே ஏழைகளின் அந்தஸ்தை ஏற்க முன்வர வேண்டும். அவர்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்யவேண்டும். ஏழைகளுக்குக் கிடைக்காத எந்த வசதியையும் தாங்கள் பெறக்கூடாது. பிரயாணத்தில் ஏற்படும் அவமதிப்புக்களுக்கும் அநீதிகளுக்கும் தலைகுனிந்து போகாமல் அவற்றைத் தொலைப்பதற்காகப் போராட வேண்டும்." இவ்வாறு எழுதிய மகாத்மா காரியத்திலும் அவ்விதமே நடந்து காட்டியிருக்கிறார்.

கத்தியவாரில் காந்திஜி எந்தப் பகுதிக்குப் போனாலும் வீரம்காம் சுங்க வரித்தொல்லையைப் பற்றி ஜனங்கள் புகார் செய்தார்கள். இது சம்பந்தமாக லார்ட் வில்லிங்டன் கொடுத்திருந்த வாக்குறுதியை மகாத்மா பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். வீரம்காம் சுங்கவரி சம்பந்தமாகச் சகல விவரங்களையும் சேகரித்து ஜனங்களுக்கு அது பெரிய அநீதிதான் என்பதை உறுதி செய்துகொண்டார். பிறகு பம்பாய் அரசாங்கத்துக்கு அந்த விவரங்களைத் தெரிவித்துக் கடிதம் எழுதினார். முதலில் லார்ட் வில்லிங்டனுடைய காரியதரிசியையும் பிறகு லார்ட் வில்லிங்ட‌னையும் பேட்டி கண்டார். அவர்கள் வாயினால் அநுதாபம் தெரிவித்துவிட்டு, "இது இந்திய சர்க்காரைச் சேர்ந்த விஷயம். ஆகையால் இந்திய‌ சர்க்காருக்கு எழுதிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள்.

மகாத்மா இந்திய சர்க்காருக்கும் எழுதினார். பயன் ஒன்றும் கிட்டவில்லை. அப்போது கவர்னர் ஜெனரலா யிருந்த லார்ட் செம்ஸ்போர்டைச் சந்தித்து வீரம்காம் சுங்கத்தைப்பற்றிய விவ‌ர‌ங்க‌ளை எடுத்துக் கூறினார். "இப்ப‌டியும் உண்டா?" என்று லார்ட் செம்ஸ்போர்ட் அதிச‌ய‌ப்ப‌ட்டு விசார‌ணை ந‌ட‌த்தித் த‌க்க‌து செய்வ‌தாக‌ வாக்க‌ளித்தார். சில நாளைக்கெல்லாம் வீர‌ம்காம் சுங்க‌ம் எடுத்து விட‌ப்ப‌ட்ட‌து!

சர்க்காருடன் கடிதப் போக்குவரவு நடந்து கொண்டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி பகஸ்ரா என்னுமிடத்தில் பேசிய போது "வேறு வ‌ழிக‌ள் ப‌ய‌ன் த‌ராவிட்டால் சத்தியாகிரஹத்தைக் கைக்கொள்ள நேரலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் தான் மகாத்மா பம்பாய் சர்க்காரின் காரியதரிசியைப் பார்க்க நேர்ந்தது. காந்திஜியின் பேச்சைக் காரியதரிசி குறிப்பிட்டு, "இந்தப் பயமுறுத்தலுக்கு சர்க்கார் இணங்கி விடுவார்கள் என்பது உம்முடைய எண்ணமா?" என்று கேட்டார்.

"நான் கூறியதில் பயமுறுத்தல் ஒன்றுமில்லை. குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள நியாயமான வழி ஒன்றை மக்களுக்கு எடுத்துக் காட்டினேன். சத்தியாகிரஹ‌ம் பலாத்காரம் சிறிதும் அற்ற ஆயுதம். அதைப்பற்றி ஜனங்களுக்கு எடுத்துச் சொல்வது என் கடமை. பிரிட்டிஷ் அரசாங்கம் மிக்க வலிமை பொருந்தியது என்று எனக்குத் தெரியும். ஆனால் சத்தியாகிரஹம் தோல்வியே அறியாத ஆயுதம் என்பதில் எனக்குச் சிறிதும் சந்‌தேக‌ம் இல்லை" என்று ம‌காத்மா காந்தி ப‌தில் அளித்தார்.

வீரம்காம் சுங்கவரியைப் ப‌ற்றிய‌ கிள‌ர்ச்சியை ம‌கா‌த்‌மா காந்தி இந்தியாவில் ச‌த்தியாக்கிர‌ஹ இய‌க்க‌த்தின் ஆர‌ம்ப‌ ந‌ட‌வ‌டிக்கை என்று க‌ருதினார். அது வெற்றிக‌ர‌மாக‌ முடிந்த‌து ஒரு சுப‌ச‌குன‌ம் அல்ல‌வா?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
4. சாந்தி நிகேதனம்


இராஜகோட்டையிலிருந்து காந்திஜி ஸ்ரீ ரவீந்திர நாதரின் சாந்திநிகேதனத்துக்குச் சென்றார். ஏற்கெனவே அவ்விடத்துக்குப் போனிக்ஸ் பண்ணையில் வசித்தவர்கள் போயிருந்தார்கள். அவர்கள் சாந்திநிகேதனத்தில் மிக அன்பாக நடத்தப்பட்டு வந்தார்கள். அவர்களுக்குத் தனியாக இடம் கொடுக்கப் பட்டிருந்தது. அவர்களுக்குத் தலைவர் ஸ்ரீ மகன்லால் காந்தி. இவர் சாந்திநிகேதனத்திலும் போனிக்ஸ் ஆசிரமத்தில் நடத்திய வாழ்க்கை முறையையே தாமும் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைப்பிடிக்கும்படி செய்துவந்தார்.

காந்திஜி சாந்தி நிகேதனம் அடைந்ததும் அவரை அங்கிருந்த ஆசிரியர்கள் மாணாக்கர்கள் எல்லாருமே அன்பு வெள்ளத்தில் முழுகும்படி செய்தார்கள். தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருந்த ஆண்ட்ரூஸும் பியர்ஸனும் அப்போது அங்கே இருந்தார்கள். இவர்கள் தவிர, பரோடா கங்காநாத் வித்யாலயத்திலிருந்து சாந்திநிகேதனத்துக்கு வந்திருந்த காகாசாகேப் காலேல்கர் என்பவரைக் காந்திஜி இங்கே சந்தித்தார். பிற்காலத்தில் காகா சாகிப் காந்திஜியின் சிறந்த நண்பர்களில் ஒருவர் ஆனார்.

சாந்தி நிகேதனத்தை அடைந்த காந்திஜி வெகு சீக்கிரத்திலேயே அங்கிருந்த ஆசிரியர்கள்--மாணாக்கர்கள் எல்லாருடனும் சிநேகம் செய்து கொண்டார். மறுநாளே அவர்களுடன் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதம் செய்ய ஆரம்பித்தார். போனிக்ஸ் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாங்களே சமையல் செய்து கொண்டார்கள். அஅதுமாதிரியே சாந்தி நிகேதன மாணாக்கர்களும் சமையற்காரர்களைப் போகச்சொல்லிவிட்டுத் தாங்களே சமையல் செய்து கொண்டால் என்ன என்று மகாத்மா கேட்டார். இதனால் பிள்ளைகளுக்குத் தேகதிடமும் மனோதிடமும் வளரும் என்று சொன்னார். இது சம்பந்தமாக ஆசிரியர்களுக்குள்ளே இரண்டு கட்சிகள் ஏற்பட்டன. ஒரு கட்சியார் மகாத்மாவின் யோசனையை ஆதரித்தார்கள். இன்னொரு கட்சியார் அது நடக்காத காரியம் என்று தலையை அசைத்தார்கள்.

காந்திஜியின் யோசனை மாணாக்கர்களுக்குப் பிடித்திருந்தது. புதுமையான காரியம் என்றாலே பிள்ளைகள் விரும்புவது இயல்பு அல்லவா? மகாகவி ரவீந்திரரிடம் போய்ச் சொன்னார்கள். உபாத்தியாயர்களும் மாணாக்கர்களும் சம்மதித்தால் தமக்கு ஆட்சேபம் இல்லை என்று குருதேவர் சொன்னார். மாணாக்கர்களைப் பார்த்து "சுயராஜ்யத்தின் திறவுகோல் இந்தச் சோதனையில் அடங்கியிருக்கிறது!" என்று கூறினார்.

பின்னர் சாந்திநிகேதனத்தில் ஆசிரியர்களின் மேற்பார்வையில் மாணாக்கர்களே சமையல் செய்யும் சோதனை சில காலம் நடந்தது. கூட்டம் கூட்டமாகப் பிரிந்து ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு கூட்டத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது பியர்ஸன் என்னும் ஆங்கிலேய அறிஞர் இந்தப் பரிசோதனையில் பூரண உற்சாகத்துடன் ஈடுபட்டார். தம் உடல் நலத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர் சமையல் அறையில் வேலை செய்தார். சமையல் அறையையும் சுற்றுப் புறங்களையும் சுத்தம் செய்யும் வேலையை ஆசிரியர்கள் சிலர் ஒப்புக்கொண்டிருந்தார்கள். எம்.ஏ.பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கையில் மண்வெட்டி பிடித்து வேலை செய்வதைப் பார்க்க மகாத்மா காந்திக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது.

ஆனால் சாந்தி நிகேதனத்தில் இந்தச் சோதனை சில காலந்தான் நடந்தது. சோதனையில் ஈடுபட்டவர்கள் கொஞ்ச காலத்துக்கெல்லாம் களைப்படைந்து போனார்கள். பியர்ஸன் முதலிய சிலர் மட்டும் இறுதிவரை அந்தச் சோதனையை விடாமல் நடத்தி வந்தார்கள்.

காந்தி மகாத்மா சில காலம் சாந்தி நிகேதனத்தில் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்திருந்தார். ஆனால் இறைவனுடைய விருப்பம் வேறு விதமாயிருந்தது. ஒரு வாரத்திற்குள்ளே ஸ்ரீ கோகலே மரணமடைந்தார் என்னும் செய்தி வந்து காந்திஜியின் உள்ளத்தைக் கலக்கியது. சாந்தி நிகேதனம் துயரத்தில் மூழ்கியது. மகாத்மா காந்தி தமது பத்தினியையும் ஸ்ரீமகன்லால் காந்தியையும் அழைத்துக் கொண்டு பூனாவுக்குப் பிரயாணமானார்.

இந்தப் பிரயாணத்தின் போதும் காந்திஜி மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் உள்ள கஷ்டங்களை அனுபவித்து அறியும்படியாக நேர்ந்தது. இது சம்பந்தமாக மகாத்மா காந்தி எழுதியிருப்ப தாவது:-
"மூன்றாம் வகுப்புப் பிரயாணிகள் டிக்கட் வாங்குவதில்கூட எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகவேண்டியிருக்கிறதென்பதை பர்த்வானில் அநுபவித்து அறிந்தோம். 'மூன்றாம் வகுப்பு டிக்கட்டுகள் இதற்குள் தரமுடியாது' என்று முதலில் சொன்னார்கள். அதன்மீது நான் ஸ்டேஷன்மாஸ்டரைக் காணச் சென்றேன். அவரைக் கண்டுபிடிப்பதே கஷ்டமாயிருந்தது. யாரோ ஒருவர் தயவு வைத்து அவர் இருக்குமிடத்தைத் தெரிவித்தார். அவரிடம் சென்று எங்களுடைய கஷ்டத்தை எடுத்துக்கூறினோம். அவரும் அதே பதிலையே தெரிவித்தார். ஆகவே காத்திருந்து டிக்கட் ஜன்னல் திறந்ததும் சென்றேன். ஆனால் டிக்கட் வாங்குதல் எளிய காரியமாயில்லை." அங்கு "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்னும் சட்டம் அமுலில் இருந்தது. மற்றவர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும் என்று எண்ணிய பலசாலிகளான பிரயாணிகள் ஒருவர் பின் ஒருவராய் வந்து என்னை இடித்துத் தள்ளிக் கொண்டேயிருந்தார்கள். ஆகவே முதலில் டிக்கட் வாங்குவதற்குப் போனவனாகிய நான் ஏறக்குறையக் கடைசியில் தான் டிக்கட் பெற முடிந்தது.

வண்டி வந்து சேர்ந்தது. அதில் ஏறுதல் மற்றொருபிரம்மப் பிரயத்தனமாயிற்று. வண்டியில் ஏற்கனவே இருந்த பிரயாணிகளுக்கும், ஏற முயற்சித்த பிரயாணிகளுக்கும் இடையே வசைமொழிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளலும் நிகழ்ந்தது. பிளாட்பாரத்தில் மேலும் கீழும் ஓடி அலைந்தோம். 'இங்கு இடமில்லை' என்னும் பதிலே எங்கும் கிடைத்தது. கார்டினிடம் சென்று சொன்னேன். அவர் 'அகப்பட்ட இடத்தில் உள்ளே ஏற முயற்சி செய்யும்; இல்லாவிடில் அடுத்த வண்டியில் வாரும்' என்றார்.

மூன்றாம் வகுப்பு ரயில்வே பிரயாணிகளின் துயரங்களுக்கு ரயில்வே அதிகாரிகளின் யதேச்சாதிகாரமே காரணம் என்பதில்ஐயமில்லை. ஆனால் பிரயாணிகளின் முரட்டு சுபாவம், ஆபாச வழக்கங்கள், சுயநலம், அறியாமை முதலியவைகள் அத்துயரங்களை அதிகப்படுத்துகின்றன. இதில் பரிதாபமான விஷயம் யாதெனில், தாங்கள் தவறுதலாகவும், ஆபாசமாகவும், சுயநலத்துடனும் நடந்து கொள்கிறோமென்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. தாங்கள் செய்வதெல்லாம் இயற்கையே என்று அவர்கள் விஷயத்தில் படித்தவர்களாகிய நாம் காட்டும் அலட்சியமே என்று கூறலாம்.

மகாத்மா காந்தி பூனா வந்து சேர்ந்து கோகலேயின் சிரார்த்த காரியங்கள் எல்லாம் நிறைவேறிய பிறகு, இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்வது பற்றி மற்றும் ஒரு முறை சிந்தனை செய்தார். கோகலேயைக் குரு பீடத்தில் வைத்து மகாத்மா அவரிடம் பக்தி செலுத்தியவர். இப்போது கோகலே காலமாகி விட்டபடியினால் அவர் ஸ்தாபித்த சங்கத்தில் சேர்ந்து அவர் ஆரம்பித்து வைத்த பணிகளை நிறைவேற்றுவது தமது கடமை என்று கருதினார். மீண்டும் இந்திய ஊழியர் சங்கத்தின் அங்கத்தினரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். முன் போலவே அந்த அங்கத்தினர்களுக்குள் அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. சிலர் மகாத்மாவைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றார்கள். சிலர் கூடாது என்றார்கள். மகாத்மாவைச் சேர்த்துக் கொள்வதை எதிர்த்தவர்கள் இந்திய ஊழியர் சங்கத்தின் இலட்சியங்கள் - கொள்கைகளுக்கும் மகாத்மாவின் இலட்சியங்கள் - கொள்கைகளுக்கும் அடிப்படையான வேற்றுமைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்கள். கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்திய ஊழியர் சங்க அங்கத்தினர் கூட்டம் நடத்தி அதில் பெரும்பான்மையினரது அபிப்பிராயத்தின்படி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

மகாத்மா இதை விரும்பவில்லை. தாம் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்வதற்கு ஒரு சிலர் விரோதமாயிருந்தாலும் அதில் சேர மகாத்மா இஷ்டப்படவில்லை. சிலருக்கு விரோதமாகப் பெருபான்மை வோட்டுப் பெற்று ஒரு ஸ்தாபனத்தில் சேர்வதில் என்ன நன்மை ஏற்படமுடியும்கோகலேயிடம் தாம் வைத்திருந்த பக்திக்கு அது உகந்ததாகுமா? - இப்படி யோசித்துக் கடைசியாக மகாத்மா தமது விண்ணப்பத்தை வாபஸ் வாங்கிக்கொண்டார். இதன் காரணமாக இந்தியா தேசம் அடைந்த நன்மைக்கு அளவே கிடையாது என்று சொல்லலாம். தாம் மேற்படி சங்கத்தில் சேராததே நல்லது என்றும் தாம் சங்கத்தில் சேர்வதை எதிர்த்தவர்களே தமக்கு நன்மை செய்தவர்கள் என்றும் பிற்காலத்தில் காந்திஜி கருதினார். மேற்கண்டவாறு விண்ணப்பத்தை வாபஸ் பெற்று கொண்டதனால் சங்கத்தின் அங்கத்தினருடன் மகாத்மா காந்தியின் சிநேக பாந்தவ்யம் வளர்ந்து நீடித்திருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5 . சபர்மதி ஆசிரமம்


கும்பகோணத்தில் மாமாங்கம்(மகாமகம்) என்னும் திருவிழா பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நடைபெறுகிறதல்லவா? அதுபோல வடக்கே இமயமலைச் சாரலில் உள்ள ஹரித்வாரம் என்னும் ஷேத்திரத்தில் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை 'கும்பமேளா' என்னும் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.1915ஆம் வருஷத்தில் 'கும்பமேளா' உற்சவம் வந்தது. அந்த உற்சவத்திற்கு லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருவது வழக்கம். அவர்களுக்குச் சேவை செய்வதற்காக இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஒரு சேவைப்படை அனுப்பப்பட்டது. இதையறிந்த மகாத்மா தாமும் போனிக்ஸ் கூட்டத்தாருடன் ஹரித்வார உற்சவத்திற்குப் போக விரும்பினார். உற்சவத்தைப் பார்ப்பதும் யாத்ரீகளுக்குச் சேவை செய்வதும் தவிர, ஹரித்வாரத்துக்குப் பக்கத்தில் ஸ்ரீ முன்ஷிராம் நடத்தி வந்த குருகுலத்தைப் பார்க்கவேண்டும் என்ற நோக்கமும் மகாத்மாவுக்கு இருந்தது.

சுவாமி சிரத்தானந்தர் என்ற புனிதமான பெயரை கேள்விபடாதவர் யார்? கிலாபத் இயக்கம் நடந்த காலத்தில் டில்லியில் உள்ள புகழ் பெற்ற ஜும்மா மசூதிக்குள் சென்று அங்கு கூடியிருந்த திரளான முஸ்லிம்களுக்குப் பிரசங்கம் செய்தவரும் அவர்தான். சில காலத்துக்குப் பிறகு வெறி கொண்ட முஸ்லிம் ஒருவனால் குத்தி கொல்லப்பட்டவரும் அவரே தான். அந்த சுவாமி சிரத்தானந்தர் சந்நியாசியவதற்கு முன்னால் ஸ்ரீ முன்ஷிராம் என்ற பெயர் தாங்கி கொண்டிருந்தார். ஹரித்வாரதுக்குப் பக்கத்தில் காங்ரி என்னுமிடத்தில் ஸ்ரீ முன்ஷிராம் நடத்திவந்த குருகுலம் அந்த காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது.

கும்பமேளா உற்சவத்தில் போனிக்ஸ் ஆசிரமவாசிகள் மிகச் சிறந்த தொண்டு செய்தார்கள். ஆனால் மகாத்மா அந்தத் தொண்டில் அதிகமாக ஈடுபடவில்லை. ஏனெனில் மகாத்மா தென்னாப்ரிக்காவில் நடத்திய போராடத்தின் வரலாறு இதற்குள்ளே பலருக்குத் தெரிந்து போயிருந்தது. எனவே உற்சவத்துக்கு வந்த யாத்ரீகர்கள் பலர் மகாத்மா காந்தியையும் பார்க்க வந்தார்கள். அவர்களுடன் பேசுவதற்கும் மதம், சமூகம், அரசியல் முதலிய விஷயங்களைப் பற்றி விவாதிப்ப தற்குமே நேரம் சரியாயிருந்தது.

கும்பமேளாவில் காந்திஜி பார்த்த பல காட்சிகள் அவருக்கு வெறுப்பை அளித்தன. 'சாதுக்கள்' என்று சொல்லப்பட்ட சந்நியாசி வே ஷதாரிகளின் நடவடிக்கைகள் காந்திஜிக்குப் பிடிக்கவே இல்லை. மதத்தின் பெயரால் பல ஏமாற்றுகள் நடப்பதையும் காந்திஜி கவனித்தார். உதாரணமாக, ஐந்து கால் உள்ள பசுமாடு ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டிருந்தது. பசுவைப் போற்றுகிற ஹிந்துக்கள் பலர் மேற்படி ஐந்து கால் பசுவைத் தெய்வ அம்சம் உள்ளதாகக் கருதி அதை வழிபட்டு அதன் சொந்தக்காரனுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் போனார்கள். ஐந்து கால் பசு முதலில் காந்திஜிக்கு வியப்பு அளித்தது. பிறகு, விசாரித்து்ப பார்த்ததில், உண்மையில் அந்தப்பபசுவுக்கு ஐந்து கால் இல்லை என்றும், ஒரு கன்றுக் குட்டியின் காலை வெட்டி ஒட்ட வைத்திருக்கிறது என்றும் தெரிந்து கொண்டார்! இந்தக்கொடூரமான செயல் மகாத்மாவின் கருணை நிறைந்த உள்ளத்தைப் பெரிதும் பாதித்தது.

மொத்தம் பதினேழு லட்சம் ஜனங்கள் அந்த வருஷத்துக் கும்பமேளா உற்சவத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களில் மிகப் பெரும்பாலோர் உண்மையான பக்தியுடனே புண்ணியந் தேடிக் கொள்வதற்காகவே வந்திருந்தார்கள் என்பதைக் காந்திஜி அறிந்திருந்தார். ஆனால் சில மோசக்காரர்கள் அக்கிரம தந்திரங்களைக் கையாண்டு பக்தியுள்ள பாமர மக்களை ஏமாற்றி வந்தார்கள். இதற்குப் பிராயச்சித்தமாகத் தாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று காந்திஜிக்குத் தோன்றியது. ஒருநாளில் தாம் சாப்பிடும் உணவில் ஐந்து பொருள்களுக்கு மேல் சேர்த்துக்கொள்வதில்லை யென்றும், இருட்டிய பிறகு எதுவும் சாப்பிடுவதில்லை என்றும் விரதம் எடுத்துக்கொண்டார். இந்த விரதத்தை மகாத்மா தம் அந்திய நாள் வரையில் நிறைவேற்றினார்.

கும்பமேளா உற்சவம் முடிந்த பிறகு காந்திஜி ஸ்ரீ முன்ஷிராமின் குருகுலத்துக்குச் சென்றார். காந்திஜியின் வரலாற்றைத் தெரிந்து கொண்டிருந்த ஸ்ரீ முன்ஷிராம் அங்கேயே காந்திஜியும் அவருடைய சகாக்களும் தங்கிவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் காந்திஜியின் மனதில் இதற்கு முன்னாலேயே தம்முடைய இலட்சியங்களை நிறைவேற்றுவதற்குரிய தனி ஆசிரமம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்ற எண்ணம் உதயமாகி யிருந்தது. அத்தகைய ஆசிரமத்தை ஆமதாபாத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார். ஏனெனில், தாம் பிறந்த நாடாகிய குஜராத்திலே தான் தம்முடைய தொண்டைச் சரிவரச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஆமதாபாத்தோ குஜராத்தின் தலைநகரம். கைத்தறி நெசவுக்குப் பெயர்போன இடம். எனவே, இராட்டைக்கும் கைத்தறிக்கும் புத்துயிர் தரவேண்டும் என்னும் காந்திஜியின் நோக்கம் ஆமதாபாத்தில் நிறைவேறக்கூடும். மேலும் அந்நகரில் வசித்த குஜராத்தி செல்வர்களிடமிருந்து தாம் ஆரம்பிக்கும் ஆசிரமத்துக்குப் பணஉதவி பெறவும் கூடும். ஆரம்ப காலத்தில் எந்த ஆசிரமந்தான் பண உதவி இல்லாமல் நடக்க முடியும்.?

எனவே, காங்ரி குருகுலத்தைப் பார்த்ததும் மகாத்மா நேரே ஆமதாபாத்துக்குப் புறப்பட்டார். அங்கே பல நண்பர்கள் காந்திஜிக்கு ஆசிரமம் ஸ்தாபிப்பதில் உதவி செய்வதாகச் சொன்னார்கள். அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தீண்டாமையைப் பற்றிப் பேச்சு வந்தது. "நான் நடத்தும்ஆசிரமத்தில் தீண்டாமையை அனுசரிப்பது நினைக்கவும் முடியாத காரியம்" என்று காந்திஜி கூறினார். "மற்ற அம்சங்களில் தகுதியுடைய தீண்டா வகுப்பினர் ஒருவர் ஆசிரமத்தில்சேர முன் வந்தால் அவசியம் அவரைச் சேர்த்துக் கொள்வேன்" என்றும் உறுதியாகச் சொன்னார். ஆனால், அந்த நண்பர்கள், "ஆசிரமத்தில் சேரக்கூடிய தகுதியுடைய தீண்டாதவர் எங்கிருந்து வரப்போகிறார்!" என்று சொல்லித் திருப்தி அடைந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவர் அகப்படவே மாட்டார் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

ஆமதாபாத்திலேயே ஆசிரமம் ஸ்தாபிப்பது என்று முடிவாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆமதாபாத்துக்குப் பக்கத்தில் கோச்ராப் என்ற கிராமத்தில் ஸ்ரீ ஜீவன்லால் தேசாய் என்னும் பாரிஸ்டருக்கு ஒரு பங்களா இருந்தது. அதை வாடகைக்குக் கொடுக்க மேற்படி பாரிஸ்டர் சம்மதித்தார். அந்தப் பங்களாவிலேதான் முதன் முதலில் ஆசிரமம் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆசிரமத்துக்குப் பெயர் என்ன கொடுப்பது என்ற கேள்வி எழுந்தது. "சேவாசிரமம்" "தபோவனம்" என்னும் பெயர்களைச் சில நண்பர்கள் குறிப்பிட்டார்கள். "தபோவனம்" என்பது அதிக டாம்பீகமான பெயர் என்று காந்திஜிக்குத் தோன்றியது. "சேவாசிரமம்" பிடித்திருந்தாலும் பூரணதிருப்தி அளிக்கவில்லை. கடைசியாக இந்தியாவின் விடுதலைக்கு மகாத்மா எந்த வழியைக் கையாண்டு காட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தாரோ, அந்த வழியைக் குறிப்பிடும் பெயராக இருக்க வேண்டும் என்று "சத்தியாக்கிரஹ ஆசிரமம்" என்னும் பெயர் இடப்பட்டது.

ஆரம்பத்தில் இருபத்தைந்து ஸ்திரீ புருஷர்கள் ஆசிரமத்தில் இருந்தார்கள். இவர்களில் சிலர் போனிக்ஸ் ஆசிரமத்தில் காந்திஜியோடு இருந்தவர்கள். மற்றவர்கள் இந்தியாவில் புதிதாகச் சேர்ந்தவர்கள். அந்த ஆரம்ப ஆசிரமத் தொண்டர்கள் இருபத்தைந்து பேரில் பதின்மூன்றுபேர் தமிழர்கள் என்று காந்தி மகாத்மா தமது சுயசரிதத்தில் எழுதி வைத்திருக்கிறார். தமிழர்களுக்கு இது எவ்வளவு பெருமையான விஷயம் என்று சொல்லவும் வேண்டுமோ?

ஆசிரமம் ஆரம்பித்துச் சிலமாதங்களுக்குள்ளே நேர்ந்த ஒரு பெருஞ் சோதனையைப் பற்றியும் மகாத்மா எழுதியிருக்கிறார். தகுதியுள்ள தீண்டா வகுப்பினர் எவரும் ஆசிரமத்தில் சேர்வதற்கு வரப்போவதில்லை யென்று ஆமதாபாத் நண்பர்கள் கருதினார்கள் அல்லவா? அவர்களுடைய எண்ணத்துக்கு மாறாக ஒரு காரியம் நிகழ்ந்தது. இந்திய ஊழியர் சங்கத்து அங்கத்தினரில் மகாத்மாவிடம் மிகுந்த அபிமானம் கொண்டவர் ஸ்ரீ அமிருதலால் தக்கர். (இன்றைக்கும் ஹரிஜனத் தொண்டில் மனப்பூர்வமாக ஈடுபட்டுள்ள தக்கர் பாபா அவர்கள் தான்.) அவரிடமிருந்து காந்திஜிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தக்கர் பாபா, "தீண்டா வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் தங்கள் ஆசிரமத்தில் சேர விரும்புகிறார்கள். ஒழுக்கமும் அடக்கமும் படைத்தவர்கள். அவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?" என்று கேட்டிருந்தார். இவ்வளவு சீக்கிரத்தில் இத்தகைய சோதனை ஏற்படும் என்று மகாத்மா எதிர்பார்க்கவில்லை. ஆசிரமத்துக்கு உதவி செய்து வந்த ஆமதாபாத் நண்பர்களுக்கு இது பிடிக்காது என்பது தெரிந்தே இருந்தது. ஆயினும் அதற்காக மகாத்மா தம் வாழ்க்கை தர்மத்தின் அடிப்படையான கொள்கையை மாற்றிக் கொள்வதென்பது நினைக்கக்கூடிய காரியமா?

கடிதத்தை மற்ற ஆசிரமவாசிகளுக்குக் காந்திஜி படித்துக் காட்டினார். அவர்களும் உற்சாகமாக அதை வரவேற்றார்கள். எனவே தீண்டா வகுப்புக் குடும்பத்தினரை அனுப்பும்படி மகாத்மா கடிதம் எழுதினார். சில நாளில் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். மூன்றே பேர் அடங்கிய குடும்பம். குடும்பத் தலைவரின் பெயர் துதா பாய்; அவர் மனைவியின் பெயர் தனி பென்; அவர்களுடைய புதல்வியின் பெயர் லக்ஷ்மி. அப்போது லக்ஷ்மி தவழும் பிராயத்துக் குழந்தை. துதாபாய் பம்பாயில் ஆரம்பப் பாடசாலையில் உபாத்தியாயராயிருந்தவர். சத்தியாக் கிரஹ ஆசிரமத்தின் விதிகளையெல்லாம் நன்கு தெரிந்து கொண்டு அந்த விதிகளின்படி நடப்பதாக ஸ்ரீ துதாபாய் ஒப்புக் கொண்டார். அதன்பேரில் அக்குடும்பத்தார் ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு நடந்தவற்றைக் குறித்து மகாத்மா எழுதியுள்ள வரலாறு பின்வருமாறு:-

"ஆசிரமத்துக்கு உதவி புரிந்து கொண்டிருந்த நண்பர்களிடையே இது பெருங் கிளர்ச்சியை உண்டு பண்ணிற்று. முதலில் கிணறு விஷயமாகக் கஷ்டம் ஏற்பட்டது. கிணற்றைப் பங்களாவின் சொந்தக்காரரும் உபயோகித்து வந்தார். ஏற்றம் இறைத்து வந்த மனிதன் எங்களுடைய தொட்டியிலிருந்து தண்ணீர்த் துளிகள் சிந்துவதால் தனக்குத் தீட்டு ஏற்பட்டு விடுமென்று கூறி ஆட்சேபித்தான். ஆதலின் எங்களைத் திட்டவும், துதாபாயைத் தொந்தரவு செய்யவும் தொடங்கினான். வசவுகளைப் பொறுத்துக் கொண்டு தண்ணீர் இழுத்துவரும்படி நான் அனைவருக்கும் சொன்னேன். நாங்கள் திரும்பத் திட்டாததை அந்த மனிதன் கண்டபோது வெட்கமடைந்து எங்களைத் தொந்தரவு செய்வதை நிறுத்தி விட்டான்.

பண உதவியெல்லாம் நிறுத்தப்பட்டது. ஆசிரம விதிகளை அனுசரிக்கக் கூடிய தீண்டாதார் எங்கே கிடைப்பர் என்று கேள்வி கேட்ட நண்பர், அத்தகைய ஒருவர் வருவார் என எதிர்பார்க்கவேயில்லை.

சமூக பகிஷ்காரத்தைப் பற்றிய வதந்திகளும் ஏற்பட்டன. இவற்றிற்கெல்லாம் நாங்கள் ஆயத்தமாயிருந்தோம். எங்களைப் பகிஷ்காரம் செய்து சாதாரண வசதிகள் அளிக்கவும் மறுத்த போதிலும் ஆமதாபாத்தை விட்டுப் போகக்கூடாதென்றும், அதைக் காட்டிலும் தீண்டா வகுப்பினர் வசிக்குமிடஞ் சென்று அங்கே உடலுழைப்பினால் கிடைக்கும் பொருளைக் கொண்டு காலட்சேபம் செய்தல் நலமென்று என் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன்.

நிலைமை கடைசியில் நெருக்கடியாயிற்று. ஒருநாள் மகன்லால் காந்தி வந்து, "கையில் இருந்த பணமெல்லாம் ஆகிவிட்டது. அடுத்த மாதச் செலவுக்குப் பணமே கிடையாது!" என்று தெரிவித்தார்.

"அப்படியானால் நாம் தீண்டா வகுப்பாரின் இருப்பிடம் செல்வோம்" என்று அமைதியாகப் பதிலளித்தேன். இத்தகைய சோதனை எனக்கு நேர்ந்தது இது முதல் முறையன்று. சோதனை நேர்ந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆண்டவன் கடைசி நிமிஷத்தில் எனக்கு உதவி அனுப்பியே வந்தார். ஆசிரமத்தின் பொருளாதார நிலைமையைப் பற்றி மகன்லால் எச்சரிக்கை செய்து அதிக காலம் ஆவதற்குள் ஒரு நாள் காலை ஆசிரமக் குழந்தைகளில் ஒரு குழந்தை ஓடி வந்து, ஸேத் ஒருவர் வாசலில் மோட்டார் வண்டியில் காத்திருப்பதாகவும் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் கூறியது. அவரைப் பார்க்கச் சென்றேன். "ஆசிரமத்துக்குக் கொஞ்சம் பொருளுதவி செய்ய விரும்புகிறேன்; ஏற்றுக்கொள்வீர்களா?" என்று அவர் கேட்டார்.

"நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன். தற்போது எங்கள் பணமெல்லாம் செலவழிந்து வெறுங்கையுடன் இருக்கிறோம்" என்றேன். "நாளை இந்த நேரத்திற்கு இங்கே வருகிறேன். தாங்கள் இருப்பீர்களா? என்று அவர் கேட்டார். "ஓ, இருக்கிறேன்" என்றேன். அத்துடன் அவர் புறப்பட்டுச் சென்றார்.

மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்குச் சரியாக வண்டி வாசலில் வந்து நின்றது. குழல் ஊதிற்று. குழந்தைகள் செய்தி கொண்டு வந்தார்கள். ஸேத் உள்ளே வரவில்லை. அவரைப் பார்க்க நான் வெளியே வந்தேன். அவர் என் கையில் 13,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு வண்டியை விட்டுக் கொண்டு சென்றார்.

இந்த உதவியை நான் எதிர்பார்க்கவே யில்லை. அதிலும் எவ்வளவு புதிய முறையில் உதவி! அந்தக் கனவான் அதற்கு முன் ஆசிரமத்துக்கு வந்ததேயில்லை. அவரை அதற்கு முன் ஒரே ஒரு முறைதான் பார்த்திருப்பதாக எனக்கு ஞாபகம். அவர் ஒருவித விசாரணையும் செய்யவில்லை. ஆசிரமத்தைப் பார்வையிடவும் இல்லை. வந்து பணங் கொடுத்துவிட்டு உடனே போய் விட்டார்! இந்த உதவியின் காரணமாக, தீண்டாதார் இருப்பிடத்துக்கு நாங்கள் குடிபோக வேண்டிய அவசியம் இல்லாமற் போயிற்று. இன்னும் ஓராண்டுக்குப் பணத்தைப் பற்றிய கவலையில்லையென்று தைரியமடைந்தோம்.

துதாபாய் குடும்பத்தைச் சேர்த்துக் கொண்டது ஆசிரமத்துக்கே ஒரு நல்ல படிப்பினையாயிற்று. ஆரம்பத்திலேயே ஆசிரமத்தில் தீண்டாமை பாராட்ட மாட்டோமென்று உலகுக்குப் பகிரங்கமாய் அறிவித்து விட்டோம். ஆசிரமத்துக்குஉதவி செய்ய விரும்பியவர்களை எச்சரித்தவர்களானோம். இத்துறையில் ஆசிரமத்தில் வேலையும் பெரிதும் எளிதாயிற்று. இவையெல்லாம் நன்கு தெரிந்தும், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்த ஆசிரமச் செலவுகளை வைதிக ஹிந்துக்களே பெரும்பாலும் கொடுத்து வந்தார்கள். தீண்டாமையின் அடிப்படை ஆட்டங் கொடுத்துப் போய்விட்டது என்பதற்கு இது அறிகுறியல்லவா?..."

பின்னரும் சிலகாலம் கோச்ராப்பில் ஆசிரமம் நடந்து வந்தது. பிறருடைய வாடகைக் கட்டடத்தில் நெடுங்காலம் ஆசிரமம் நடத்த முடியாது என்றும் சொந்த இடம் சம்பாதித்து ஆசிரமத்தை நிலைப்படுத்த வேண்டும் என்றும் மகாத்மா கருதினார். இந்தச் சமயத்தில் கோச்ராப் கிராமத்தில் பிளேக் நோய் பரவியது. கிராமத்து ஜனங்களைச் சுகாதார விதிகளை அனுஷ்டிக்கும்படி செய்வதற்கான சக்தியும் செல்வாக்கும் ஆசிரம வாசிகள் அப்போது பெற்றிருக்க வில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீ புஞ்சா பாய் ஹீராசந்து என்னும் வியாபாரி ஆசிரமம் ஸ்தாபிக்கத் தகுந்த நிலம் சம்பாதித்துக் கொடுப்பதற்கு முன் வந்தார். அவரும் காந்திஜியும் ஆமதாபாத்தைச் சுற்றித் தக்க நிலம் தேடி அலைந்தார்கள். ஆமதாபாத்துக்கு நாலு மைல் தூரத்தில் சபர்மதி நதிக்கரையில் அத்தகைய இடத்தைக் கண்டுபிடித்தார்கள். ஒரு வாரத்திற்குள் அந்த நிலம் வாங்கப் பட்டது. நிலத்தில் கட்டடமோ, மரமோ ஒன்றும் இல்லை. ஆயினும் ஆசிரமத்தை உடனே அவ்விடத்துக்கு மாற்றிவிட வேண்டும் என்று மகாத்மா தீர்மானித்தார். ஆசிரமவாசிகள் வசிப்பதற்க்குக் கித்தான் கூடாரங்கள் போடப்பட்டன. அப் போது ஆசிரமவாசிகள் ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளு மாக நாற்பது பேர் இருந்தார்கள். எல்லாரும் கித்தான் கூடாரங்களுக்கு வந்து சேர்ந்தார்கள்.

இவ்விதமாக, மகாத்மாவின் வாழ்க்கைச் சரிதத்தில் மிகப் பிரசித்திபெற்ற சபர்மதி சத்தியாக்கிரஹ ஆசிரமம் ஆரம்பமாயிற்று.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
6. இராஜ குமார் சுக்லா


இந்தியாவின் அரசியல் சரித்திரத்தில் 1917-ஆம் வருஷம் மிகவும் முக்கியமான வருஷமாகும். அந்த ஆண்டில் இந்தியாவின் சுதந்திரப் போருக்குப் பலம்தரக் கூடிய பல சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றில் முக்கியமானது 'சம்பரான் சத்தியாக் கிரஹம்' என்று பெயர் பெற்றது. அந்த நிகழ்ச்சியின் மூலம் மகாத்மா காந்தியின் ஆத்மசக்தியின் பெருமையை இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரையில் இந்திய மக்கள் எல்லாரும் நன்கு அறிந்து கொண்டார்கள்.
.
பீஹார் மாகாணத்தில் சம்பரான் ஒரு ஜில்லா. இமயமலையின் அடிவாரத்தின் அருகில் உள்ளது. ஜனக மகாராஜன் ஆட்சிபுரிந்த விதேக நாடு என்பது அதுதான். அங்கே அவுரித் தோட்டங்கள் அதிகம். பெரும்பாலான அவுரித் தோட்டங்கள் ஆங்கில முதலாளிகளுக்குச் சொந்தமானவை. சம்பரானிலுள்ள ஒவ்வொரு குடியானவனும் இருபது ஏக்கரா நிலம் பயிர் செய்தால் அதில் மூன்று ஏக்கரா கட்டாயம் அவுரி பயிரிய வேண்டும் என்னும் விதி அங்கே அமுலில் இருந்தது. அந்த மூன்று ஏக்கராவில் விளையும் அவுரிப் பயிர் நிலச்சுவாந்தாரனைச் சேரும். இவ்விதம் கட்டாயமாக அவுரி பயிரிடும் முறைக்குத் 'தீன் கதியா' முறை என்ற பெயர் வழங்கிற்று. .
.
1917-ஆம் ஆண்டுக்கு முன்னால் இந்த விவரம் ஒன்றும் காந்தி மகானுக்குத் தெரியவே தெரியாது. 1916-ஆம் ஆண்டின் இறுதியில் லக்னௌ நகரில் காங்கிரஸ் மகாசபை கூடியபோது இராஜகுமார் சுக்லா என்பவர் காங்கிரஸ் விடுதியில் மகாத்மாவின் ஜாகையைத் தேடிக் கொண்டு வந்து கண்டுபிடித்தார். இராஜகுமார் சுக்லா சம்பரான் ஜில்லா குடியானவர்களில் ஒருவர். கட்டாய அவுரிப் பயிர் செய்து கஷ்டப்பட்டவர்.தம்மைப் போலவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான குடியானவர்களுக்குக் கதிமோக்ஷம் பிறக்கவேண்டும் என்ற அவா அவர் மனதில் குடிகொண்டிருந்தது. எனவே மகாத்மாவைக் கண்டு அவரிடம் சம்பரான் குடியானவர்களின் கஷ்டங்களைச் சொன்னார். சம்பரானுக்கு நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அவர் கூறிய விஷயங்கள் மகாத்மாவுக்குத் தெளிவாக விளங்கவில்லை. எனவே இராஜகுமார் சுக்லா "எங்கள் வக்கீல் பாபுவை அழைத்து வருகிறேன். அவர் எல்லாம் தெளிவாகச் சொல்வார்!" என்று கூறிவிட்டுப் போய் பாபு விரஜ கிஷோர் பிரஸாதை அழைத்துக்கொண்டு வந்தார். பின்னாளில் பாபு விரஜகிஷோர் பிரஸாதும் பாபு ராஜேந்திர பிரஸாதும் தேசத்தொண்டில் மகாத்மாவின் சிறந்த துணைவர்கள் ஆனார்கள். ஆனால் அச்சமயம் பாபு விரஜகிஷோரைப் பற்றி மகாத்மாவுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டாகவில்லை. ஒன்றுமறியாத ஏழைக் குடியானவர்களிடம் பணம் பறிக்கும் வக்கீல்களில் ஒருவர் என்று எண்ணினார். எனவே, பாபு விரஜ கிஷோர் கூறியதை யேல்லாம் கேட்டுக்கொண்டு, "நிலைமையை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் ஒன்றுமே சொல்வதற்கில்லை. ஆனால் நீங்கள் இதைப் பற்றிக் காங்கிரஸில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவது நல்லது" என்று சொன்னார். அதன்படியே ஸ்ரீ விரஜ கிஷோர் சம்பரான் குடியானவர்களிடம் அநுதாபம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றைக் காங்கிரஸில் கொண்டுவந்து நிறைவேற்றினார். .
.
இதைக்கொண்டு இராஜகுமார் சுக்லா திருப்தியடைந்து விடவில்லை. "தாங்கள் சம்பரானுக்கு வந்து நேரில் நிலைமை யைப் பார்க்கவேண்டும்." என்று அவர் மகாத்மாவிடம் சொன்னார். "ஆகட்டும்; அந்தப் பக்கங்களில் சுற்றுப் பிரயாணம் செய்வதற்கு வரும்போது சம்பரானுக்கு வருகின்றேன்" என்றார் மகாத்மா. அவர் கான்பூருக்குப் போனபோது இராஜ குமார் சுக்லா அவரைப் பின் தொடர்ந்தார். "இவ்விடத்திலிருந்து சம்பரான் அதிக தூரம் இல்லை. வருகிறீர்களா?" என்று கேட்டார். மகாத்மா அப்போது அவகாசம் இல்லை என்று கூறிவிட்டு ஆமதாபாத் ஆசிரமத்துக்குச் சென்றார். இராஜகுமார் சுக்லா அங்கேயும் போனார். கடைசியாக, காந்திஜி "நான் கல்கத்தாவுக்கு இத்தனாந்தேதி வருகிறேன். அங்கே வந்து என்னைச் சம்பரானுக்கு அழைத்துப் போங்கள்!" என்று சொன்னார். .
.
மகாத்மா கல்கத்தாவுக்குப் போகு முன்பே இராஜகுமார் சுக்லா அங்கே சென்று ஸ்ரீ பூபேந்திரநாத் வஸுவின் வீட்டில் காந்திஜிக்காகக் காத்திருந்தார். இவ்வாறு, கல்வியறிவு அதிகம் இல்லாத ஒரு குடியானவனுடைய உறுதி காரணமாகத் தேசத்துக்கே ஒரு புதிய ஆதர்சம் ஏற்படலாயிற்று. .
.
காந்திஜியும் இராஜகுமார் சுக்லாவும் கல்கத்தாவில் ரயில் ஏறிப் பாட்னாவுக்கு வந்து சேர்ந்தார்கள். பாட்னாவில் காந்திஜிக்குத் தெரிந்த நண்பர் யாரும் இல்லை. இராஜகுமார் சுக்லாவுக்குத் தெரிந்தவர்களோ அவரை மிகக் கீழான மனிதராகக் கருதினார்கள். பாபு ராஜேந்திரப் பிரஸாத்தின் பங்களாவுக்கு மகாத்மாவைச் சுக்லா அழைத்துச் சென்றார். பாபு ராஜேந்திர பிரஸாத் அச்சமயம் ஊரில் இல்லை. அவருடைய வீட்டு வேலைக்காரர்கள் காந்திஜியையும் சுக்லாவையும் இலட்சியம் செய்யவில்லை. அவர்கள் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் இழுப்பதைக்கூட வேலைக்காரர்கள் ஆட்சேபித்தார்கள். தண்ணீர்த் துணிதெளித்தால் தீட்டாய்ப் போய்விடுவோம் என்று சொன்னார்கள். மற்ற மாகாணங்களைக் காட்டிலும் பீஹாரில் தீண்டாமை மிகக் கடுமை என்பதை காந்திஜி அறிந்து கொண்டார். இராஜகுமார் சுக்லாவினால் தமக்கு அதிக உதவி கிடைக்காது என்பதையும் கண்டு கொண்டார். குதிரை லகானைத் தாமே இழுத்துப் பிடிக்க வேண்டியதுதான் என்று தீர்மானம் செய்தார். .
.
பாட்னாவில் மௌலானா மஷ்ருல் ஹக் என்னும் பிரசித்தமான தேசீய முஸ்லீம் தலைவர் வசித்து வந்தார். அவர் லண்டனில் பாரிஸ்டர் பரீட்சைக்குப் படித்த காலத்தில் மகாத்மாவுக்கு அவருடைய அறிமுகம் ஏற்பட்டிருந்தது. பிற்பாடு 1915-ஆம் வருஷத்துப் பம்பாய் காங்கிரஸின்போது மகாத்மா அவரைச் சந்தித்தார். பாட்னாவுக்கு எப்போதாவது வந்தால் தம் இல்லத்துக்கு வந்து தங்கும்படி மௌலானா மஷ்ருல் ஹக் காந்திஜியிடம் சொல்லியிருந்தார். அதை இப்போது ஞாபகப்படுத்திக் கொண்டு மகாத்மா அவருக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பினார். மௌலானா மஷ்ருல் ஹக் உடனே தமது மோட்டாரில் ஏறி வந்து மகாத்மாவைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். .
.
காந்திஜி அவரிடம் தம் வந்த காரியத்தைத் தெரிவித்தார். சம்பரான் விஷயமாக விசாரணை செய்வதற்குத் தாம் எந்த ஊருக்குப் போகவேண்டுமோ அந்த ஊருக்குத் தம்மை முதல் ரயிலில் ஏற்றி அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். முஸபர்பூருக்கு முதலில் செல்வது நலம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆகவே அன்று மாலை மகாத்மாவை முஸபர்பூருக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார் மௌலானா மஷ்ருல் ஹக். .
.
முஸபர்பூரில் அச்சமயம் ஆச்சாரிய கிருபளானி வசித்து வந்தார். அந்நகரில் இருந்த அரசாங்கக் கலாசாலையில் அவர் ஆசிரியராயிருந்து சில நாளைக்கு முன்பு அந்த உத்தியோகத்தை ராஜினமா செய்திருந்தார். மகாத்மா வரும் செய்தி அறிந்து ஆச்சாரிய கிருபளானி ஒரு பெரும் மாணாக்கர் கூட்டத்துடன் நள்ளிரவில் ஸ்டே ஷனுக்கு வந்து மகாத்மா காந்தியை வரவேற்றார். ஆச்சாரிய கிருபளானி தமது நண்பரான ஆசிரியர் மல்கானியின் பங்களாவில் வசித்து வந்தார். மகாத்மா காந்தியை அவர் அந்தப் பங்களாவுக்கு அழைத்துப் போனார். .
.
மறுநாள் காலையில் மகாத்மா வந்திருக்கும் செய்தி அறிந்து முஸபர்பூர் வக்கீல்கள் பலர் அவரைப் பார்க்க வந்தார்கள். வந்தவர்களில் இராம நவமி பிரஸாத் என்பவர், "இராஜகுமார் சுக்லா உங்களிடம் சொல்லியிருக்கும் விவரங்கள் எல்லாம் உண்மை தான். அது விஷயமாக நீங்கள் ஏதாவது வேலை செய்வதாக இருந்தால், அரசாங்க கலாசாலை ஆசிரியரின் வீட்டில் தங்கியிருந்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. எங்களில் ஒருவர் வீட்டுக்கு வந்து தங்கவேண்டும். கயா பாபு என்பவர் இங்கே பிரபல வக்கீல். அவர் சார்பாக உங்களை அழைக்கவே நான் வந்தேன். நாங்கள் எல்லாரும் சர்க்காருக்கு விரோதமாக எந்தக் காரியமும் செய்வதற்குப் பயந்தவர்கள்தான். ஆயினும் எங்களால் இயன்ற உதவியைத் தங்களுக்குச் செய்கிறோம். இந்த மாகாணத்தின் தலைவர்களான பாபு விரஜ கிஷோர் பிரஸாத்துக்கும் பாபு இராஜேந்திர பிரஸாத்துக்கும் தந்தி கொடுத்து அவர்களை வரவழைக்கிறோம்!" என்று சொன்னார். .
.
இதன் பேரில் மகாத்மா கயா பாபுவின் வீட்டுக்குப் போனார். தர்பங்காவிலிருந்து விரஜ கிஷோர் பிரஸாதும் பூரியிலிருந்து இராஜேந்திர பிரஸாதும் சீக்கிரத்தில் வந்து சேர்ந்தார்கள். அவர்களைப்பற்றி மகாத்மா தம்முடைய பழைய அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. தாம் எண்ணியதுபோல அவர்கள் ஏழைக் குடியானவர்களிடம் பணம் பறிப்பவர்கள் அல்லவென்றும் நேர்மையும் பரோபகார சிந்தையும் உள்ளவர்கள் என்றும் அறிந்தார். விரைவிலேயே மகாத்மாவுக்கும் மேற் கூறிய இரு பீஹார் தலாவர்களுக்கும் நெருங்கிய நட்பு உண்டாயிற்று. இவர்களில் பாபு விரஜ கிஷோர் பிரஸாதின் மருமகன்தான் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவரான ஸ்ரீ ஜெயப்பிரகாச் நாராயண் அவர்கள். .
.
நிலைமையை நன்றாய்த் தெரிந்துகொண்ட பிறகு காந்திஜி கூறியதாவது:-- "குடியானவர்களின் சார்பாகக் கோர்ட்டுகளில் வழக்காடி அவர்களுக்கு உதவி செய்ய நீங்கள் முயன்று வந்திருக்கிறீர்கள். ஆனால் அந்த வழியில் எனக்கு நம்பிக்கை இல்லை. முதலில் குடியானவர்களைப் பயத்திலிருந்து விடுதலை செய்யவேணாடும். 'தீன்கதியா' முறையை அடியோடு ஒழிக்க வேண்டும். இரண்டு நாளில் இங்கிருந்து திரும்பிப்போய் விடலாம் என்ற எண்ணத்துடன் நான் இங்கு வந்தேன். ஆனால் அது சாத்தியமில்லை என்று காண்கிறேன். இரண்டு வருஷம் இங்கே இருக்கும்படி நேர்ந்தாலும் நேரிடலாம். அதற்கு நான் தயார். நீங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா?" .
.
"என்ன விதமான உதவி வேண்டும்" என்று பாபு விரஜ கிஷோர் கேட்டார். முதலில் தம்முடன் அவர்கள் வந்து குடியானவர்கள் சொல்வதைத் தமக்கு மொழிபெயர்த்துச் சொல்லவேண்டும் என்றும், பத்திரிகைகளுக்கு எழுதுவது, கடிதப் போக்குவரத்து செய்வது முதலிய குமாஸ்தா வேலை அதிகம் இருக்கும் என்றும், கடைசியாகச் சிறைக்குப் போகும் படி நேரந்தாலும் நேரலாம் என்றும் மகாத்மா காந்தி சொன்னார்." .
.
"உங்களுடனேயே இருந்து மொழிபெயர்ப்பு வேலை குமாஸ்தா வேலை செய்வதற்குத் தயாராயிருக்கிறோம். சிறைக்குப் போகிறதென்பது முற்றும் எங்களுக்குப் புதிய விஷயம். அதற்கும் சித்தமாக முயல்கிறோம்" என்று அந்தப் பீஹார் நண்பர்கள் காந்திஜியிடம் சொன்னார்கள். .
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
7. எதிர்பாராத வெற்றி.


சம்பரான் குடியானவர்களுடைய குறைகளை விசாரித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் தோட்ட முதலாளிகளையும் சர்க்கார் அதிகாரிகளையும் காந்திஜி சந்தித்துத் தாம் செய்யப் போகும் வேலையைப் பற்றி அறிவித்துவிட விரும்பினார். பீஹார் மாகாணத்தில் ஒவ்வொரு ஜில்லாவுக்கும் ஒரு கலெக்டரும் மூன்று அல்லது நாலு ஜில்லாக்களுக்கு ஒரு கமிஷனரும் உண்டு. கமிஷனர் ஆதிக்கம் வகிக்கும் பிரதேசத்துக்கு டிவிஷன் என்று பெயர். சம்பரான், திர்ஹத் டிவிஷனில் இருந்தது. மகாத்மா திர்ஹத் கமிஷனரைச் சந்திக்க விரும்புவதாகக் கடிதம் எழுதினார். அம்மாதிரியே சம்பரான் தோட்டக்காரர் சங்கத்தின் காரியதரிசிக்கும் எழுதி அனுப்பினார். .
.
தோட்டக்காரர் சங்கத்தின் காரியதரிசி தமது மனக் கருத்தைக் காந்திஜியிடம் உள்ளபடி வெளியிட்டார். "நீர் யார், ஐயா, இங்கு வந்து விசாரணை செய்வதற்கு? நீர் இந்த ஜில்லாக்காரரா? இந்த மாகாணத்தைச் சேர்ந்தவரா? தோட்ட முதலாளிகளுக்கும் குடியானவர்களுக்கும் மத்தியில் வந்து குறுக்கிடுவதற்கு உமக்கு என்ன உரிமை? யார் அதிகாரம் கொடுத்தது? பேசாமல் வந்த வழியே திரும்பிப் போய்ச் சேரும்; சொந்தக் காரியம் இருந்தால் போய்ப் பாரும். அப்படி ஏதாவது சொல்லிக்கொள்ள விரும்பினால் காகிதத்தில் எழுதித் தபாலில் அனுப்பும். நீர் சொல்லும் எந்த விஷயத்தையும் இப்போது நான் கேட்கத் தயாராயில்லை!" என்றார். .
.
பிறகு காந்திஜி திர்ஹத் டிவிஷன் கமிஷனரைப் பார்க்கப் போனார். அந்த நாளில் இந்தியாவில் அதிகார வர்க்கத்தின் அமுல் பிரமாதம். ஒவ்வொரு ஜில்லா கலெக்டரும் தம்மை அந்த ஜில்லாவின் யதேச்சாதிகாரியாகவே நினைத்துக்கொள்வார். நாலு கலெக்டருக்கு மேற்பட்ட கமிஷனரைப் பற்றிக் கேட்க வேண்டுமா? காந்திஜியை அவர் அதட்டவும் மிரட்டவும் தொடங்கினார். "திர்ஹத் டிவிஷனை விட்டு உடனே வெளி யேறிப் போய்விடும். அதுதான் உமக்கு நல்லது. வெளியேறவில்லை யென்றால் அதன் பலனை அநுபவிக்க நேரிடும்!" என்று கமிஷனர் எச்சரிக்கை செய்தார். .
.
மகாத்மா காந்தி திரும்பி வந்து விரஜகிஷோர் பாபு முதலிய நண்பர்களிடம் நிலைமையை எடுத்துரைத்தார். "தோட்டக்கார முதலாளிகள் வெகு கோபமா யிருக்கிறார்கள். கமிஷனர் துரையோ அவர்களைக் காட்டிலும் கடுமையா யிருக்கிறார். ஆகையால் விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே என்னைக் கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பி விடுவார்கள். எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். நான் கைது செய்யப்படுவதாயிருந்தால் மோத்திஹாரிலாவது பெட்டியாவிலாவது கைது செய்யப்படுவது நல்லது" என்று காந்திஜி கூறினார். .
.
மோத்திஹாரி, திர்ஹத் டிவிஷனின் தலைநகரம். பெட்டியா இராஜகுமார் சுக்லாவின் கிராமத்துக்கு அருகில் இருந்த பட்டணம். அந்தப் பிரதேசத்திலேதான் குடியானவர்கள் அதிகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகையினாலேயே மகாத்மா அங்கே சென்று தாம் கைதி யாகவேண்டும் என்று விரும்பினார். .
.
உடனே காந்திஜியும் அவருடைய தோழர்களும் புறப்பட்டு மோத்திஹாரி பட்டணத்தை அடைந்தார்கள். அங்கே பாபு கோரக் பிரஸாத் என்பவர் வீட்டில் தங்கினார்கள். மோத்தி ஹாரிக்கு ஐந்து மைல் தூரத்தில் ஒரு கிராமத்தில் ஏழைக் குடியானவன் ஒருவன் துன்புறுத்தப்பட்டதாக அன்று செய்தி வந்தது. மறுநாள் காலையில் மேற்படி கிராமத்துக்கு மகாத்மா வும் பாபு தாராநிதர் பிரஸாத் என்பவரும் யானை மீது ஏறிக் கிளம்பினார்கள். நம்முடைய நாட்டில் மாட்டு வண்டிப் பிரயாணம் எவ்வளவு சாதாரணமோ அப்படி சம்பரானில் யானைப் பிரயாணம் சர்வ சாதாரணமாகும். .
.
காந்திஜி ஏறியிருந்த யானை இரண்டரை மைல் தூரம் போவதற்குள் பின்னால் ஒரு குதிரை வண்டி வந்து யானையைப் பிடித்தது. அந்த வண்டியில் போலீஸ் சேவகன் ஒருவன் இருந்தான். அவன் மகாத்மாவிடம் "போலீஸ்சூபரிண்டெண்ட் துரை தம்முடைய வந்தனத்தை உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார்!" என்றான். இதன் கருத்து என்னவென்பது காந்திஜிக்குத் தெரிந்துவிட்டது. ஆகவே தாரா நிதர்பாபுவிடம் "நீங்கள் மேலே போங்கள்!" என்று சொல்லிவிட்டுக் காந்திஜி போலீஸ் தூதன் கொண்டுவந்த வன்டியில் ஏறிக் கொண்டார். வண்டி நகரத் தொடங்கியதும் போலீஸ் தூதன் ஓர் உத்தரவை மகாத்மாவிடம் கொடுத்தான். அதில், "சம்பரான் ஜில்லாவை விட்டு உடனே வெளியேறவும்" என்று எழுதியிருந்தது. .
.
ம‌காத்மா இற‌ங்கியிருந்த‌ வீடு போய்ச் சேர்ந்த‌தும் போலீஸ் சேவ‌க‌ன் உத்த‌ர‌வைப் பெற்றுக் கொண்ட‌த‌ற்குக் கையொப்ப‌ம் கேட்டான். ம‌காத்மா "ஆக‌ட்டும்; கையொப்ப‌ம் த‌ருகிறேன்" என்றார். உடனே ஒரு காகிதத்தில் "உத்தரவைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் நான் தொடங்கியுள்ள ஆராய்ச்சி முடியும் வரையில் சம்பரானை விட்டுப் போகும் உத்தேசம் இல்லை" என்று எழுதிக் கையொப்பம் இட்டுக் கொடுத்தார். .
.
சிறிது நேரத்துக்கெல்லாம் இன்னொரு உத்தரவு வந்தது. அதில் "144-வது பிரிவின்படி போட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்காக நாளைக்கு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்து சேரவும்" என்று கண்டிருந்தது. .
.
அன்று இரவெல்லாம் காந்திஜியும் அவருடைய சகாக்களும் தூங்கவேயில்லை. மறுநாள் என்ன நடக்கும் என்பது பற்றியும் காந்திஜி சிறைப்பட்ட பின்னர் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். காந்திஜி தாம் எழுத வேன்டிய கடிதங்களையெல்லாம் எழுதி முடித்தார். .
.
மறுநாள் மோத்தி ஹாரி நகரம் கண்ட காட்சியைப்போல் அதற்குமுன் எந்த நாளிலும் கண்டதில்லை என்று அந்த நகர்வாசிகள் சொன்னார்கள். மகாத்மாவைப் பற்றியோ அவர் தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியப் போராட்டத்தைப் பற்றியோ அந்த இமயமலை அடிவாரப் பிரதேசத்தில் அதிகம் பேருக்குத் தெரிந்திருக்க‌ நியாய‌மில்லை. இந்த‌ நாளிலேபோல‌ அப்போது ப‌த்திரிகைக‌ளின் செல்வாக்கும் அதிக‌ம் இல்லை. எனினும் ம‌காத்மா காந்தி வந்‌த‌து, அவ‌ருக்கு 144-வ‌து உத்த‌ர‌வு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து, அத‌ற்கு அவ‌ர் கீழ்ப்ப‌டிய மறுத்தது ஆகிய செய்திகள் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் இரவுக்கிரவே பரவி விட்டன. காலையிலே பார்த்தால் பாபு கோரக் பிரஸாத் வீட்டைச் சுற்றிலும் ஜனங்கள் ஆயிரக் கணக்கிலே கூடியிருந்தார்கள். .
.
இந்தியாவில் பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் ஓர் உத்தரவு போடுவது, அதற்குக் கீழ்ப்படிய மாட்டேன் என்று ஓர் இந்தியர் மறுதளிப்பது, - என்பது அதுவரை என்றும் நடவா நிகழ்ச்சிகள் ஆகும். ஆகையால் அந்த நிகழ்ச்சிகள் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்ததிலும், அத்தகைய அதிசய மனிதரைப் பார்க்க ஜனங்கள் திரண்டு வந்ததிலும் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா? .
.
சம்பரானில் மட்டுமல்ல; இந்தியா தேசம் முழுவதிலுமே அச்செய்தி பரவியபோது மக்கள் சொல்லமுடியாத கிளர்ச்சியை அடைந்தார்கள். மேலே என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள். .
.
மகாத்மா கோர்ட்டுக்குப் போகவேண்டிய நேரம் நெருங்கிற்று. ஜனக்கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாயிற்று. காந்திஜி கோர்ட்டுக்குப் போகப் புறப்பட்டபோது வீதியெல்லாம் ஜனசமுத்திரமாயிருந்தது. கோர்ட்டைச் சுற்றிலும் அப்படியே பெருங்கூட்டம். .
.
இந்தச் சமயத்தில் மக்கள் திரண்டு எழுந்து வந்து தம்மிடம் காட்டிய அன்பைக் குறித்து மகாத்மா கூறுகிறார்:- .
.
"சம்பரானில் என்னை யாருக்கும் தெரியாது. சம்பரான் குடியானவர்களோ கல்வி அறிவு இல்லாதவர்கள். சம்பரான் கங்கை நதிக்கு வெகு வடக்கே நேபாளத்துக்கு அருகில் இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்தியாவின் மற்றப் பகுதிகளுக்கும் அதற்கும் தொடர்பே இல்லை. அந்தப் பிரதேசத்தில் காங்கிரஸைப் பற்றி யாருக்கும் தெரியாது. காங்கிரஸின் பெயரைக் கேள்விப்பட்டிருந்த சிலரும் அதில் சேரப் பயந்திருந்தார்கள். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ வேலை செய்து எங்கள் வருகைக்கு முன் ஏற்பாடுகள் செய்துவைக்கத் தூதர்கள் யாரையும் நாங்கள் அனுப்பிவைக்கவில்லை. எனினும் சம்பரான் குடியானவர்கள் என்னை நெடுங்கால நண்பனைப்போல் வரவேற்றார்கள். இந்தக் குடியானவர்களின் சந்திப்பில் நான் ஆண்டவனையும் அஹிம்சையையும் சத்தியத்தையும் நேருக்கு நேர் தரிசித்தேன். இந்த சத்திய தரிசனம் பெறுவதற்கு என்னை உரியவனாக்கியது எது? ஜனங்களிடம் நான் கொண்டிருந்த அன்பேயல்லாமல் வேறு எதுவும் சொல்வதற்கில்லை. சம்பரானில் அந்தத் தினம் என் வாழ்நாளிலேயே என்றும் மறக்க வொண்ணாத தினமாகும். சட்டப்படி விசாரணைக்கு உள்ளானவன் நான் என்றாலும் உண்மையில் அரசாங்கமே அப்போது குற்றவாளியின் கூண்டில் ஏறி நின்றதாகத் தோன்றியது. கமிஷனர் எனக்கு விரித்த வ்லையில் என்னை அவர் பிடிக்க வில்லை. அந்த வலையில் அரசாங்கத்தையே விழும்படி செய்தார்!" .
.
கோர்ட்டில் விசாரணை ஆரம்பமாயிற்று. ஆனால் சர்க்கார் தரப்பில் அரசாங்க வக்கீலுக்கும் மாஜிஸ்ட்ரேட்டுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் இன்னது செய்வதென்றே தெரிய வில்லை. வழக்கைத் தள்ளிப்போடும்படி சர்க்கார் வக்கீல் மாஜிஸ்ட்ரேட்டைக் கேட்டுக்கொண்டார். ஆனால் காந்திஜி குறுக்கிட்டு, "உத்தரவை மீறிய குற்றத்தை நான் ஒப்புக் கொள்ளப் போகிறேன். ஆகையால் வழக்கைத் தள்ளிவைக்க யாதொரு முகாந்திரமும் இல்லை!" என்று சொன்னார். பிறகு தாம் எழுதிக்கொண்டு வந்திருந்த வாக்குமூலத்தைப் படித்தார். அதன் சாராம்சமாவது:- .
.
"அதிகாரிகள் 144-வது பிரிவின்படி போட்ட உத்தரவை நான் மீறி நடப்பதாக வெளிப்படையாகத் தோன்றும். இந்த நடவடிக்கையை நான் மேற்கொண்டதின் காரணத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஜீவகாருண்யத்தொண்டு செய்யும் நோக்கத்துடன் நான் இந்தப் பிரதேசத்துக்கு வந்தேன். இங்குள்ள குடியானவர்கள் தங்களை அவுரித்தோட்ட முதலாளிகள் கொடுமைப் படுத்துவதாகவும், நான் வந்து உதவி செய்யவேண்டும் என்றும் என்னை அழைத்தார்கள். ஆனால் உண்மை நிலையை நேரில் கண்டு அறிவதற்கு முன்னால் நான் எதுவும் செய்யமுடியாது என்று சொன்னேன். ஆகையால் அவுரித் தோட்ட முதலாளிகள், சர்க்கார் அதிகாரிகள் இவர்களுடைய ஒத்துழைப்புடன் நிலைமையை ஆராய்ந்து தெரிந்துகொள்ள எண்ணி வந்தேன். வேறு நோக்கம் எதுவும் எனக்குக் கிடையாது. என்னுடைய வருகையினால் பொது அமைதிக்குப் பங்கமும் உயிர்ச் சேதமும் நேரிடலாம் என்று உத்தரவில் கண்டிருக்கிறது. இதை நான் நம்பமுடியவில்லை. இத்தகைய காரியங்களில் நான் அதிக அநுபவமுள்ளவன். ஆனால் அதிகாரிகளோ வேறு விதமாக எண்ணுகிறார்கள். அவர்களுக்குக்கிடைத்திருக்கும் தகவல்களை ஆதாரமாகக்கொண்டே அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும், நான் சட்டத்துக்கு அடங்கிய பிரஜை. ஆகையால் உத்தரவைப் பெற்றவுடனே அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் அவ்விதம் செய்தால் நான் என்னுடைய கடமையில் தவறியதாகும் என மனச்சாட்சி அறிவுறுத்தியது. நான் யாருடைய நலத்தை முன்னிட்டு இங்கு வந்தேனோ அவர்களைக் கைவிட்டுப் போவதாகவே முடியும். ஆகையால் நானாக இங்கிருந்து போகக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். என் மனச்சாட்சி ஒரு விதமாகவும் சர்க்கார் அதிகாரி களின் முடிவு வேறு விதமாகவும் கட்டளையிடும்போது சர்க்கார் அதிகாரிகளின் உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பை அவர்களுக்கே விட்டு விடுவதுதான் நியாயமாகும். தற்போது இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பின்கீழ் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கைக்கொள்ளக் கூடிய வழி இது ஒன்றுதான். உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டு அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்று அநுபவிக்கத் தயாராயிருக்கிறேன். எனக்கு விதிக்கப்படப் போகும் தண்டனையை எவ்வகையிலும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. சட்டம், அரசாங்க அதிகாரம் இவற்றின்மேல் மதிப்புக் குறைவினால் நான் இந்த உத்தரவை மீறவில்லை. சட்டங்களுக்கெல்லாம் மேற்பட்ட மனச்சாட்சி என்னும் சட்டத்துக்குக் கீழ்ப்படியும் பொருட்டே இந்த 144-வது உத்தரவை மீறத் துணிந்தேன்." .
.
இத்தகைய வாக்குமூலம் காந்திஜி கொடுத்த பிறகு விசாரணையைத் தள்ளிப் போடுவதற்குக் காரணம் ஒன்றும் இல்லை அல்லவா? மாஜிஸ்ட்ரேட்டும் அரசாங்க வக்கீலும் திடுக்கிட்டுப் போனார்கள். இந்த மாதிரி ஒரு அநுபவம் இதற்கு முன் அவர்களுக்கு ஏற்பட்டதே யில்லை. ஆகையால் இன்னது செய்வது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. மாஜிஸ்ட்ரேட் பிற்பாடு தீர்ப்புக் கூறுவதாகச் சொல்லி, அதற்காக ஒரு தேதி யும் குறிப்பிட்டார். பின்னர் கோர்ட்டு கலைந்தது. .
.
நடந்ததை யெல்லாம் தெரிவித்து இராஜப் பிரதிநிதிக்கும், பண்டித மாளவியாவுக்கும், பாட்னா நண்பர்களுக்கும் மகாத்மா காந்தி தந்தி கொடுத்தார். .
.
மகாத்மா தந்தி கொடுப்பதற்கு முன்னாலேயே அவர்களுக்குச் செய்தி போய் விட்டது. இந்தியா தேசமெங்கும் அந்தச் செய்தி பரவிவிட்டது. தேசத்தில் அரசியல் அறிவு பெற்றவர்கள் எல்லாரும் அடுத்தபடி என்ன செய்தி வருகிறதோ என்று ஆவலுடன் எதிர்பார்க்கலானார்கள். .
.
பிரிட்டிஷ் அதிகாரி போட்ட உத்தரவைத் தனி மனிதர் ஒருவர் மீறியிருக்கிறார். மீறியதோடல்லாமல் அதைக் கோர்ட்டில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு தண்டனை கொடுக்கும்படியும் கேட்டிருக்கிறார்! இந்த மாதிரி அதிசயத்தை இதற்கு முன்னால் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நேர்ந்த இந்த அவமதிப்பைப் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்? பிரிட்டிஷ் சிங்கம் என்ன செய்யப் போகிறது? .
.
பிரிட்டிஷ் சிங்கம் கர்ஜனை புரிந்தது. ஆனால் அது போர் கர்ஜனை அல்ல; வாலைச் சுருட்டிக் கொண்டு குகைக்குத் திரும்பிச் செல்லும் கர்ஜனை. கத்தியோ துப்பாக்கியோ ஆள் பலமோ பண பலமோ ஆயுத பலமோ, - ஒன்றும் இல்லாத மனிதரின் ஆத்ம சக்திக்கு முன்னால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் தலை வணங்கிற்று! .
.
வைஸ்ராய் செம்ஸ் போர்டு தமது நிர்வாக சபை அங்கத்தினருடன் கலந்தாலோசித்து பீஹார் லெப்டினன்ட் கவர்னருக்குச் செய்தி அனுப்பினார். லெப்டினன்ட் கவர்னர் திர்ஹத் டிவிஷன் கமிஷனருக்குத் தாக்கீது அனுப்பினார்: கமிஷனர் மாஜிஸ்ட்ரேட்டுக்குச் செய்தி அனுப்பினார். .
.
தீர்ப்புக் கூறுவதற்காகக் குறிப்பிட்ட நாள் வருவதற்கு முன்னதாகவே மாஜிஸ்ட்ரேட்டிடமிருந்து மகாத்மாவுக்குச் செய்தி வந்தது. "லெப்டினன்ட் கவர்னர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவு அனுப்பியிருக்கிறார். அதன்படி வழக்கு வாபஸ் பெறப்பட்டது" என்று மாஜிஸ்ட்ரேட் தெரிவித்திருந்தார். சம்பரான் ஜில்லா கலெக்டரிடமிருந்து காந்திஜிக்கு ஒரு கடிதம் வந்தது. "அவுரித் தோட்டங்களில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி நீங்கள் உத்தேசித்திருக்கும் விசாரணையைத் தடையின்றி நடத்தலாம். அதற்கு வேண்டிய எல்லா உதவியும் செய்யத் தயாராயிருக்கிறேன்" என்று கலெக்டர் ஹேகாக் எழுதியிருந்தார். .
.
இவ்வாறு காந்தி மகான் இந்தியாவில் முதன் முதலாகத் தொடங்கிய சாத்வீகச் சட்டமறுப்பு அதி சீக்கிரத்தில் மகத்தான வெற்றியாக முடிந்தது. .
.
அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மகாத்மாஜி சம்பரான் குடியானவர்களின் நிலைமை பற்றிய விசாரணையைச் சாங்கோபாங்கமாக நடத்தினார். இதன் பலனாக அக்குடியானவர்களின் குறைகள் பெரும்பாலும் நிவர்த்தியாயின. .
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
8. கிராமத்தொண்டு


சம்பரான் ஜில்லாவில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி மகாத்மாவின் விசாரணை ஆரம்பமாயிற்று. குடியானவர்களிடம் அவர்களுடைய கஷ்டங்களைப்பற்றி வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டன. வாக்கு மூலத்தில் உண்மையை அப்படியே சொல்ல வேண்டும் என்றும் கொஞ்சங்கூட மிகைப்படுத்தக் கூடாது என்றும் மகாத்மா வற்புறுத்தினார். ஒவ்வொரு குடியானவனும் வாக்குமூலம் கொடுத்ததும் அவனை நன்றாகக் குறுக்கு விசாரணை செய்தார்கள். குறுக்குவிசாரணையில் எந்த விஷயமாவது சந்தேகத்துக்கு இடம் என்று ஏற்பட்டால் அதைப் பதிவு செய்யாமல் தள்ளிவிட்டார்கள்.

குடியானவர்கள் கூட்டங் கூட்டமாக வாக்குமூலம் கொடுக்க வந்தபடியால் ஏக காலத்தில் ஏழெட்டுப் பேர் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியதா யிருந்தது. இதற்கு மகாத்மாவுக்கு உதவி செய்வதற்காகப் பாபு பிரஜகிஷோர் பிரஸாத், ராஜேந்திர பிரஸாத் முதலிய பிரசித்தமான பீஹார் வக்கீல்கள் வந்திருந்தார்கள். அவர்கள் மகாத்மாவுடன் வசித்தபடியால் அவர்களுடைய வாழ்க்கை முறைகளைக் குறித்து மகாத்மா தம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க நேர்ந்தது. ஒவ்வொரு வக்கீலும் ஒரு சமையற்காரனையும் ஒரு வேலைக்காரனையும் அழைத்து வந்திருந்தார்கள். இராத்திரி நடுநிசிக்குத்தான் போஜனம் அருந்துவார்கள். அவர்கள் தங்களுடைய செலவை யெல்லாம் தாங்களே செய்துகொண்ட போதிலும் அவர்களுடைய ஆடம்பர வாழ்க்கை மகாத்மாவுக்குப் பிடிக்கவில்லை. சிநேகமுறையில் பரிகாசம் செய்து அவர்களைச் சீர்திருத்த முயன்றார். கடைசியாக அந்த வக்கீல்கள் தங்களுடைய தனித்தனி சமையற்காரர்களையும் வேலைக்காரர்களையும் அனுப்பி விட்டார்கள். மகாத்மாவுடன் தொண்டு செய்து அனைவருக்கும் ஒரே சமையல் சாப்பாடு என்றும், எல்லாரும் ஒரே சமயத்தில் வந்து சாப்பிடவேண்டும் என்றும் ஏற்பட்டது. எல்லாருக்கும் பொதுவாக எளிய சைவ உணவு தயாரிக்கப்பட்டது. இவ்வாறு அந்த ஆரம்ப நாட்களிலேயே காந்திமகான் தம்முடைய சகாக்களைக் கூட தியாக வாழ்க்கைக்குத் தயார் செய்யலானார்.

கிராமங்களுக்குச் சென்று கிராமவாசிகளின் நிலைமையை அறிய அறிய, அவர்களுக்குக் கல்வி அறிவை ஊட்டினால் அன்றி நிரந்தரமான முன்னேற்றம் ஏற்படாது என்று தெரியவந்தது. ஆகவே சம்பளதுக்காகவன்றித் தொண்டு செய்தல் என்ற முறையில் கிராமப் பள்ளிக்கூடம் நடத்தக் கூடியவர்கள் தேவை என்று மகாத்மா விண்ணப்பம் விடுத்தார். இந்த வேண்டுகோளின் பேரில் தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொண்டர்கள் வந்தார்கள். மகாத்மாவின் அந்தரங்கக் காரியதரிசியாகயிருந்து அற்புதமான தொண்டுசெய்த ஸ்ரீ மகாதேவதேஸாய் இந்த நாளிலேதான் மகாத்மாவை வந்து அடைந்தார். சத்தியாக்கிரஹ ஆசிரமத்திலிருந்து ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தியும் ஸ்ரீ தேவதாஸ் காந்தியும் இன்னும் சில தொண்டர்களும் வந்து சேர்ந்தார்கள்.

முதலில் பரிச்சார்த்தமாக ஆறு கிராமங்களில் ஆறு பள்ளிகூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த பள்ளிகூடங்களில் குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் கணக்குப்போடவும் கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும் அவர்களுக்குத் தூய்மையும் நல்ல பழக்க வழக்கங்களும் கற்பித்தலே முக்கியமானதென்று காந்திஜி வற்புறுத்தினார்.

கிராமத் தொண்டுசெய்ய முன் வந்தவர்களில் பல பெண்மணிகளும் இருந்தார்கள். இவர்களில் ஸ்ரீமதி அவந்திகாபாய் கோகலே நடத்திய பள்ளிக்கூடம் மிகச் சிறந்த மாதிரிப் பள்ளிக்கூடமாக விளங்கிற்று. பள்ளிக்கூடங்கள் நடத்த கிராமங்களிலும் அவற்றுக்குச் சுற்றுவட்டாரங்களிலும் வேறு வகைப்பட்ட சமூகத் தொண்டுகளும் தொடங்கப்பட்டன.

கிராமவாசிகள் பொதுவாக அறியாமையில் மூழ்கியிருந்தார்கள். சுகாதாரம் சம்பந்தமாக அவர்களுடைய அறியாமை பயங்கரமாயிருந்தது. கிராமங்களில் வீதிகளும், சந்துகளும் குப்பை மயமாயிருந்தன. கிணறுகளைச் சுற்றியும் சேறும் கும்பியுமாக கிடந்தன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே சொறி சிரங்கு முதலிய சரும வியாதிகளினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள்.

எனவே, மகாத்மாவினால் பள்ளிக்கூடம் நடத்துவதுடன் திருப்தி அடைந்து இருக்க முடியவில்லை. வைத்திய உதவியும் சுகாதார முயற்சியும் தொடங்கவேண்டும் என்று விரும்பினார். இந்த வேலைக்குப் பொறுப்பு வகித்து நடத்த இந்திய ஊழியர் சங்கத்திலிருந்து ஓர் ஊழியரை அனுப்பவேண்டும் என்று எழுதிக் கேட்டார். அதன்படி டாக்டர் தேவ் என்பவர் வந்து சேர்ந்தார்.

கிராமவாசிகள் டாக்டரிடம் சிகிச்சை செய்துகொள்ள வந்தார்கள். ஆனால் சுகாதார விதிகளை அனுசரிப்பதில் அவர்கள் சிரத்தை கொள்ளவில்லை. வயலில் பாடுபட்டு உழைத்து வேலை செய்யும் தொழிலாளிகள் கூடத் தங்கள் வீடு அசுத்தத்தைத் தாங்கள் சுத்தப்படுத்த முன் வரவில்லை. எவ்வளவு சொன்னாலும் அவர்கள் கேட்கும் வழியாக இல்லை.

காந்தி மகான் இதனால் மனம் சோர்ந்து விடவில்லை. நாமே செய்து காட்டவேண்டும் என்று டாக்டர் தேவிடம் சொன்னார். அதன்பேரில் டாக்டர் தேவும் அவர் கீழ் வேலை செய்த தொண்டர்களும் ஒரு கிராமத்தைச் சுத்தம் செய்து காட்டுவது என்று தீர்மானித்தார்கள். தங்களுடைய சக்திகளையெல்லாம் திரட்டி அந்த ஒரு கிராமத்தில் உபயோகப் படுத்தினார்கள். கிராமத்தைச் சென்று அடையும் சாலைபுறங்களையும் வீடுகளின் வாசற்புரங்களையும் கூட்டிச் சுத்தம் செய்தார்கள். கிணறுகளிலிருந்து துரு எடுத்துச் சுத்தப் படுத்தினார்கள். அழுக்குத் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளங்களைத் தூர்த்து மூடினார்கள். இதையெல்லாம் பார்த்த பிறகு அந்தக் கிராமத்து ஜனங்கள் கொஞ்சம் வெக்கப்பட்டு ஊரைத் தாங்களே சுத்தம் செய்வதற்கு முன்வந்தார்கள். இந்த மாதிரி பல கிராமங்கள் சுத்தமாயின. இத்தகைய தொண்டு நடந்து கொண்டிருந்த கிராமங்களுக்கு மகாத்மா அடிக்கடி சென்று பார்வையிட்டு வந்தார். அப்போது காந்திஜி அடைந்த ஒரு அனுபவத்தைப் பல பொதுக்கூட்டங்களில் பின்னால் சொல்லியிருக்கிறார். "சத்தியசோதனை" என்னும் தமது சுய சரிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். மனதை உருக்கும் அச்சம்பவம் வருமாறு:-

"பிதிஹர்வா என்னும் சிறு கிராமத்தில் எங்கள் பள்ளிக்கூடம் ஒன்றிருந்தது. அதற்கருகிலிருந்த மற்றொரு சிறு கிராமத்தைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அங்கே நான் கண்ட ஸ்திரீகளில் சிலர் மிகவும் அழுக்கான ஆடை தரித்திருந்தார்கள். அவர்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைப்பதில்லை யென்று கேட்கும்படி கஸ்தூரிபாயிடம் சொன்னே. அவள் அவ்வாறே அவர்களைப் பார்த்துக் கேட்டாள். அப்போது அந்த ஸ்திரீகளில் ஒருத்தி கஸ்தூரிபாயைத் தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று கூறியதாவது:

'இங்கே பாருங்கள். வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டி அல்லது அலமாரி ஏதாவது இவ்வீட்டில் இருக்கிறதா? நான் அணிந்திருக்கும் புடவை ஒன்றுதான் எனக்கு இருக்கிறது. அதை நான் எப்படித் துவைப்பேன்? மகாத்மாஜியிடம் சொல்லி இன்னொரு சேலை வாங்கித்தாருங்கள். அப்போது தான் தினந்தோறும் ஸ்நானம் செய்து சுத்தமான ஆடை அணிந்துகொள்வதாக வாக்குறுதி தருகிறேன்.'

இந்நிலைமை ஏதோ அபூர்வமானதென்று எண்ணவேண்டாம். இந்தியக் கிராமங்கள் பலவற்றிலும் உள்ள நிலைமைக்கு இது ஓர் உதாரணமே யல்லாது வேறில்லை. இந்தியாவில் கணக்கற்ற குடிசைகளில் ஜனங்கள் எவ்விதத் தட்டுமுட்டுச் சாமான்களுமின்றி, மாற்றிக்கட்டிக்கொள்ள இரண்டாவது துணியுமின்றி, மானத்தை மூட ஒரே கந்தையுடன் வாழ்கிறார்கள்."

சம்பரான் கிராமங்களில் மகாத்மா அடைந்த மேற்கூறிய அநுபவந்தான் பின்னால் காந்திஜி இராட்டை இயக்கத்தை ஆரம்பிப்பதற்கும், கிராமவாசிகள் தங்கள் சுய தேவைகளைத் தாங்களே பூர்த்திசெய்து கொள்ள வேண்டும் என்னும் இயக்கத்தை நடத்துவதற்கும் மூலகாரணமாயிருந்தது.
** ** **
குடியானவர்களிடம் வாக்குமூலம் வாங்கும் வேலை ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் பதிவாகிவிட்டன. வாக்குமூலங்கள் பதிவு செய்த இடத்தில் சி.ஐ.டி. போலீஸ்காரர்களும் இருப்பார்கள். அதை மகாத்மா ஆட்சேபிக்கவில்லை. சி.ஐ.டி. போலீஸார் இருக்கும்போதே வாக்குமூலம் கொடுக்கச் செய்தால்தான் குடியானவர்களுக்குத் தைரியம் உண்டாகும் என்று மகாத்மா கருதினார்.

வாக்குமூலங்களின் போக்கைத் தோட்ட முதலாளிகள் அறிந்தபோது அவர்களுடைய கோபம் அதிகமாயிற்று. மகாத்மாவின் விசாரணையைத் தடைப்படுத்தி நிறுத்துவதற்குப் பல முயற்சிகள் செய்தார்கள். மகாத்மாவின் கிராமத் தொண்டுக்கும் இடையூறு விளைவிக்கப் பார்த்தார்கள். மூங்கில் புல்லினால் கட்டியிருந்த ஒரு பள்ளிக்கூடக் குடிசைக்கு அவர்களுடைய தூண்டுதலினால் தீ வைக்கப்பட்டது. அதன் பலன் ஒரு விதத்தில் நல்லதே ஆயிற்று. தொண்டர்கள் மூங்கில் புல் குடிசை இருந்த இடத்தில் பள்ளிக்கூடத்துக்காகச் செங்கல் கட்டடம் கட்டி விட்டார்கள்.

பிறகு ஒரு நாள் பீஹார் சர்க்காரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. "உங்களுடைய விசாரணை நீண்டு கொண்டே போகிறதே! சீக்கிரம் முடித்துக் கொண்டு பீஹாரை விட்டுப் போனால் நன்றாயிருக்கும்!" என்பது அக்கடிதத்தின் சாராம்சம்.

"விசாரணை சீக்கிரம் முடிவதற்கில்லை. இரண்டில் ஒன்று செய்து அரசாங்கம் என்னுடைய விசாரணையை நிறுத்திவிடலாம். ஒன்று, குடியானவர்களின் குறைகள் உண்மை என்று ஒப்புக்கொண்டு அவற்றை நிவர்த்திக்க ஏற்பாடு செய்யலாம்.அல்லது, உத்தியோக முறையில் சர்க்காரே குடியானவர்களின் குறைகளை விசாரித்து முடிவு செய்ய ஒரு கமிட்டி நியமிக்கலாம். இந்த இரண்டில் ஒன்று செய்தால் என்னுடைய விசாரணையை நிறுத்திக் கொள்கிறேன்" என்று மகாத்மா பதில் எழுதினார்.

அப்போது பீஹாரின் லெப்டினண்ட் கவர்னராயிருந்தவர் ஸர் எட்வர்ட் கேட் என்னும் நல்ல ஆங்கிலேயர். தம்மை வந்து பார்க்கும்படியாக மகாத்மா காந்திக்கு அவர் கடிதம் எழுதினார். அதன்பேரில் காந்திஜி கவர்னரைப் போய்ப் பார்த்தார். "தங்கள் விருப்பத்தின்படியே சம்பரான் குடியானவர்களின் குறைகளை விசாரித்து நிவர்த்திப்பதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப் போகிறேன். அந்தக் கமிட்டியில் தாங்களும் அங்கத்தினரா யிருக்கவேண்டும்" என்று சொன்னார் ஸர் எட்வர்ட் கேட்.

"கமிட்டியில் அங்கத்தினன் ஆவதால் குடியானவர்களின் கட்சி பேசும் உரிமை எனக்கு இல்லாமற் போய்விடக்கூடாது. கமிட்டியின் முடிவு திருப்திகரமா யில்லாவிட்டால் குடியானவர்களுக்கு யோசனை சொல்லி நடத்தும் உரிமையும் எனக்கு இல்லாமற் போய்விடக் கூடாது. அப்படியானால், நான் கமிட்டியில் இருக்க ஒப்புக்கொள்கிறேன்" என்றார் காந்திஜி.

இந்த நிபந்தனைகளை ஸர் எட்வர்ட் கேட் ஒப்புக்கொண்டார். ஸர் பிராங்க் ஸ்லை என்னும் ஆங்கிலேயர் தலைமையில் சர்க்கார் கமிட்டி நியமிக்கப்பட்டது. அதில் மகாத்மாவும் அங்கத்தினரானார். உத்தியோக முறையில் விசாரணை நடந்தது. குடியானவர்களின் குறைகள் எல்லாம் உண்மையானவையே என்று கமிட்டியார் கண்டார்கள். அநீதிகளை ஒழிப்பதற்குரிய சிபார்சுகளும் செய்தார்கள். அந்தச் சிபார்சுகளை அனுசரித்துச் சீக்கிரத்திலேயே சட்டம் ஏற்பட்டது. நூறு வருஷகாலமாக அந்தப் பிரதேசத்தில் அமுலில் இருந்துவந்த "தீன் கதியா" முறை ஒழிந்தது. இத்துடன் சம்பரான் ஜில்லாவில் தோட்டக் கார முதலாளிகளின் ராஜ்யமும் முடிவுற்றது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
9. தொழிலாளர் தோழன்


இந்தியாவில் இப்போதெல்லாம் தொழிலாளர் இயக்கம் பிரமாதப் படுகிறது. பல தொழிலாளர் சங்கங்களும் தொழிலாளர் காங்கிரஸ்களும் போட்டியிட்டுக் கொண்டு தொழிலாளருக்குத் தொண்டு செய்து வருகின்றன. தேச நலனைக் கவனியாது சிலர் தொழிலாளரைத் தூண்டிவிட்டு வேலை நிறுத்தம் செய்யப் பண்ணுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்றனர். அரசியல் செல்வாக்குப் பெறுவதற்காகவே பலர் தொழிலாளர் இயக்கங்களில் சேருகிறார்கள்.

முதன் முதலாக இந்தியாவில் தொழிலாளர் இயக்கத்துக்கு உயிர் கொடுத்துப் பலப்படுத்தியவர் காந்தி மகாத்மாவேயாவர். இந்தியாவில் முதலாவது பெரிய தொழிலாளர் வேலை நிறுத்தம் மகாத்மாவின் தலைமையிலேயே நடந்தது. அந்த இயக்கம் பூரண அஹிம்சா தர்ம முறையில் நடந்து மகத்தான வெற்றியும் அடைந்தது. அதன் காரணமாக இந்தியா தேசம் முழுவதிலும் தொழிலாளரின் நிலை ஓரளவு உயர்ந்தது என்று சொல்லுவது மிகையாகாது. அந்த வேலை நிறுத்தத்தின் விவரம் பின்வருமாறு'

சம்பரானில் குடியானவர்களின் நிலைமையைப் பற்றி விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கும்போதே ஆமதாபாத்திலிருந்து மகாத்மாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் ஸ்ரீமதி அனசூயா பென். ஆமதாபாத்தில் ஆலைகள் அதிகம். அவற்றில் வேலை செய்த தொழிலாளரும் அதிகம். அவர்கள் பெற்று வந்த சம்பளமோ மிகமிகக் குறைவு. சில காலமாக ஆலைத் தொழிலாளர் சம்பள உயர்வு கோரிக் கிளர்ச்சி செய்து வந்தார்கள். ஸ்ரீமதி அனசூயாபென் என்னும் பெண்மணி அத்தொழிலாளர்களூக்கு உதவி செய்து வந்தார். பல நாள் கிளர்ச்சி நடந்தும் பலன் ஒன்றும் கிட்டவில்லை. அதன் பேரில் ஸ்ரீமதி அனசூயா பென் மகாத்மாவுக்குக் கடிதம் எழுதினார். அதில் ஆமதாபாத் தொழிலாளருக்கு வழிகாட்டி உதவ வேண்டும் என்று கேட்டிருந்தார். மகாத்மா சம்பரான் வேலை முடிந்ததும் ஆமதாபாத்துக்கு வருவதாகப் பதில் எழுதினார்.

அவ்வாறே சம்பரானில் திருப்திகரமான முடிவு ஏற்பட்டதும் மகாத்மா ஆமதாபாத் சென்றார். தொழிலாளரின் நிலைமையை விசாரித்து அறிந்த பிறகு அவர்களுடைய கட்சியில் நியாயம் இருப்பதாகக் கண்டார். எனினும் தொழிலாளரின் போராட்டத்துக்கு அவர் தலைமை வகித்து நடத்துவதில் ஒரு தர்ம சங்கடம் இருந்தது. அதுவரை ஆமதாபாத் ஆலை முதலாளிகள் பலர் மகாத்மா சத்தியாக்கிரஹ ஆசிரமம் ஸ்தாபிப்பதற்கு உதவி புரிந்து வந்தார்கள். ஆலை முதலாளிகளுக்குத் தலைவர் ஸ்ரீ அம்பாலால் சாராபாய். தொழிலாளர் கட்சிக்குத் தலைமை வகித்த ஸ்ரீமதி அனசூயாபென் ஸ்ரீ அம்பாலாலின் சகோதரி. ஆகவே போராட்டம் ஏற்பட்டால் எல்லாருக்குமே மனச் சங்கடம் உண்டாகும். இதையெல்லாம் உத்தேசித்து மகாத்மா ஆலை முதலாளிகளிடம் சென்று, விவாதத்தை மத்தியஸ்தர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டார். முதலாளிகள் இந்த யோசனையை வன்மையாக மறுத்து விட்டார்கள். "எங்களுக்கும் எங்கள் தொழிலாளர்களுக்கும் இடையே மூன்றாவது மனிதர் வந்து மத்தியஸ்தம் செய்வதா? அதற்கு நாங்கள் இணங்கவே முடியாது!" என்று சொல்லி விட்டார்கள்.

காந்திஜிக்கு வேறு வழி யில்லாமற் போயிற்று. ஆலைத் தொழிலாளருக்கு வேலை நிறுத்தம் செய்யும்படி யோசனை சொல்ல நேர்ந்தது. ஆனால் அவ்விதம் அவர்களுக்கு யோசனை கூறும்போது மகாத்மா நாலு நிபந்தனைகளையும் குறிப்பிட்டார். "இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதாயிருந்தால் நான் உங்களுக்குத் தலைமை வகிக்கிறேன். இல்லாவிட்டால் நான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார். நாலு நிபந்தனைகளும் வருமாறு.

(1) எந்த நிலைமையிலும் தொழிலாளர் பலாத்காரத்தைக் கைக்கொள்ளக்கூடாது.

(2) கட்டுப்பாட்டை மீறி எந்தத் தொழிலாளராவது வேலைக்குப் போனால் அவர்களை மற்றவர்கள் நிர்ப்பந்திக்கக் கூடாது.

(3) வேலை நிறுத்தத்தின்போது வாழ்க்கை நடத்துவதற்குப் பிச்சை எடுக்கக்கூடாது.

(4) வேலைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடித்தாலும் உறுதியாக நிற்கவேண்டும். வேறு தொழில் செய்து பிழைக்க வேண்டும்.

மேற்படி நாலு நிபந்தனைகளையும் தொழிலாளர் தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் கூட்டி அதில் மகாத்மாவின் நிபந்தனைகளை அவர்களுக்குத் தெளிவாகத் தெரியப் படுத்தினார்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கேட்டுக்கொண்ட பின்னர் தொழிலாளர்கள் ஒருமுகமாக வேலை நிறுத்தம் செய்யத் தீர்மானித்தார்கள். முதலாளிகள், ஒன்று தங்கள் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது மத்தியஸ்தத்துக்கு விடச் சம்மதிக்க வேண்டும் என்றும் அதுவரையில் வேலைக்கு யாரும் திரும்பிப் போவதில்லை யென்றும் சபதம் செய்தார்கள்.

இந்த வேலை நிறுத்தம் நடந்தபோதுதான் மகாத்மாவுக்கு முதன் முதலாக ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஸ்ரீ வி.ஜே.படேல், ஸ்ரீ வல்லபாய் படேல் முதலிய குஜராத்தித் தலைவர்கள் அறிமுகமானார்கள்.

வேலைநிறுத்தம் ஆரம்பமான பிறகு தினந்தோறும் சபர்மதி நதிக்கரையில் தொழிலாளர் கூட்டம் நடந்து வந்தது. ஆயிரக்கணக்கில் தொழிலாளிகள் கூட்டத்துக்கு வந்தார்கள். மகாத்மா ஒவ்வொரு நாளும் பேசினார். அவர்களுடைய சபதத்தையும் தம்முடைய நாலு நிபந்தனைகளையும் ஞாபகப்படுத்தினார்.

தொழிலாளிகள் தினந்தோறும் ஆமதாபாத் நகரத்தின் வீதிகளில் அமைதியாக ஊர்வலம் நடத்தினார்கள். "தோழர்களே! சபதத்தைக் காப்பாற்றுங்கள்!" என்று எழுதிய துணிக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள்.

மகாத்மா அடிக்கடி ஆலை முதலாளிகளைப் போய்ப் பார்த்து வந்தார். தொழிலாளிகளுக்கு நீதி வழங்குமாறு வேண்டிக் கொண்டார். அதில் பயன் விளையவில்லை. "நாங்களும் சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் சபதத்தை நாங்கள் மீற முடியாது. தொழிலாளிகள் எங்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் மூன்றாம் மனிதர்கள் வந்து குறுக்கிடுவதை எப்படி நாங்கள் பொறுக்க முடியும்?" என்றார்கள் முதலாளிகள்.

வேலை நிறுத்தம் மொத்தம் மூன்று வார காலம் நடந்தது. முதல் இரண்டு வாரம் வரையில் ஆலைத்தொழிலாளிகள் தைரியமாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். அதற்குப் பிறகு சிலர் தளர்ச்சி அடைய ஆரம்பித்தார்கள். சபதத்தை மீறி வேலைக்குச் செல்வோரைப் பார்த்து மற்ற பெரும்பான்மையோர் கோபம் கொள்ள ஆரம்பித்தார்கள். ஒன்று அவர்கள் பலாத்காரத்தில் இறங்கிவிடலாம் அல்லது தாங்களும் சோர்வு அடைந்து வேலைக்குத் திரும்பி விடலாம் என்று காணப்பட்டது. பொதுக் கூட்டத்துக்கு வந்த தொழிலாளிகளின் முகத்தில் சோர்வும் கிலேசமும் குடிகொண்டிருந்தன. இதை யெல்லாம் பார்த்த மகாத்மாவின் மனதில் கவலை உண்டாயிற்று. தொழிலாளர் வேலை நிறுத்தம் தோல்வியடைந்து விடுமே என்பதைப் பற்றிய கவலையைக் காட்டிலும் அவர்கள் தினந்தோறும் செய்து வந்த பிரதிக்ஞையைக் கைவிட்டு விடலாம் என்ற எண்ணம் காந்திஜிக்கு அதிக மன வேதனையை அளித்தது. இந்த நிலைமையில் என்ன செய்வது என்ற சிந்தனை அவர் உள்ளத்தில் ஓயாமல் இருந்து கொண்டிருந்தது. ஒரு நாள் பொதுக் கூட்டத்தில் மகாத்மா பேசிக் கொண்டிருக்கையில் பளிச்சென்று ஓர் ஒளி உதயமாயிற்று. தாம் செய்ய வேண்டியது இன்ன தென்று தெரிந்தது. உடனே அந்த க்ஷணத்திலேயே மகாத்மா அதைத் தொழிலாளரிடம் வெளியிட்டார்: "நீங்கள் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் வேலைக்குத் திரும்புவதில்லை யென்று திரும்பத் திரும்பப் பிரதிக்ஞை செய்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களில் சிலர் உறுதி குலைந்து வேலைக்குத் திரும்புவதைப் பார்க்கிறேன். இந்த மாதிரி சத்தியப் பிரதிக்ஞை செய்துவிட்டு அதை மீறுவதைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை. ஆகையால் இந்த வேலை நிறுத்தம் முடியும் வரையில் நான் உண்ணாவிரதம் இருக்கத் தீர்மானித்து விட்டேன்!" என்றார்.

தொழிலாளர் அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். தங்களுக்காக மகாத்மா பட்டினி விரதம் இருக்கப் போகிறார் என்பதைக் கேட்டு அவர்களுடைய உள்ளம் உருகியது. 'வேண்டாம்; வேண்டாம்; நீங்கள் உபவாசம் இருக்கக் கூடாது. எங்களுடைய தவறுக்காக நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்களுடைய பிரதிக்ஞையை நாங்கள் ஒரு நாளும் மீற மாட்டோம். உயிர் போனாலும் சபதத்தைக் காப்பாற்றுவோம். நீங்கள் பட்டினி கிடக்கக் கூடாது" என்று தொழிலாளர்கள் கதறினார்கள்.

"என்னுடைய உபவாசத்தைப் பற்றி நீங்கள் கவலைப் பட்டுப் பயனில்லை. வேலை நிறுத்தம் முடிந்த பிறகு தான் நான் இனி உணவு அருந்தப் போகிறேன். ஆனால் நீங்கள் உங்கள் பிரதிக்ஞையைக் காப்பாற்றுவதானால் வெறுமனே சோம்பியிருப்பதில் பயனில்லை. பொது ஜனங்களிடம் சென்று பிச்சை எடுத்தலும் கூடாது. அவரவர்களுக்கு ஏதாவது வேலை தேடிக் கொள்ள வேண்டும். உயிர் வாழ்வதற்கு வேண்டிய ஊதியம் கிடைத்தாலும் போதும் என்று கிடைத்த வேலையைச் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்கள் சபதத்தை நிறைவேற்ற முடியும்!" என்றார் மகாத்மா.

மகாத்மாவின் இந்த மகத்தான முடிவு தெரிந்து பிறகு தொழிலாளிகள் யாரும் வேலைக்குத் திரும்பவில்லை. அவரவர்களும் வேறு வேலை பார்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள். ஸ்ரீ வல்லபாய் படேல் வேலை நிறுத்தம் செய்தவர்களில் சிலருக்கு ஆமதாபாத் நகர சபையின் கீழ் வேலை தேடிக் கொடுத்தார். சபர்மதி ஆசிரமத்தில் கைத்தறி நெசவுப் பள்ளிக் கூடம் ஒன்று அப்போதுதான் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கூடத்தின் அடித்தளத்தை நிரப்ப ஏராளமான மணல் வேண்டியிருந்தது. இந்த வேலைக்குத் தொழிலாளரில் பலரை உபயோகிக்கலாம் என்று ஸ்ரீ மகன்லால் காந்தி சொன்னார். ஸ்ரீமதி அனசூயா பென் முதலில் வழி காட்டினார். கூடையில் மணலை வாரித் தம் தலைமேல் வைத்துக் கொண்டு போய்க் கொட்டினார். அவரைப் பின்பற்றி ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் மணல் கூடை தூக்கிச் சென்றார்கள்.

இப்படி யெல்லாம் எத்தனை நாளைக்கு நடக்கமுடியும்? நிலைமை நெருக்கடியாகத்தான் தோன்றியது. ஆனால் காநதி மகாத்மாவின் உண்ணா விரதம் ஆமதாபாத் ஆலை முதலாளி களின் மனதை இதற்குள் கலங்கப்பண்ணி யிருந்தது. அவர்கள் கூடி ஆலோசித்தார்கள். அவர்களுடைய பிரதிநிதிகள் மகாத்மாவிடம் வந்து தங்கள் புகாரைத் தெரிவித்தார்கள். "தாங்கள் உண்ணாவிரதம் இருப்பது நியாயமல்ல. தங்களிடம் நாங்கள் மதிப்பும் அபிமானமும் உள்ளவர்கள். இப்படித் தாங்கள் பட்டினி கிடப்பதால் எங்களைத் தர்ம சங்கடமான நிலையில் கொண்டு வைத்து விட்டீர்கள். இது தங்களுக்கு அழகல்ல" என்று முதலாளிகளின் பிரதிநிதிகள் கடிந்து கொண்டார்கள்.

இதற்கு மகாத்மா,"என்னுடைய உண்ணா விரதத்துக்காக நீங்கள் உங்கள் உறுதியை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை. உங்களை உத்தேசித்து நான் உபவாசம் இருக்கவில்லை. தொழிலாளிகள் பிரதிக்ஞை தவறுவதைத் தடுக்கவே உண்ணா விரதம் இருக்கிறேன்." என்று சொன்னார். இந்தச் சமாதானத்தை அவர்கள் ஒப்புக்கொள்ள வில்லை.

ஆலை முதலாளிகளின் தலைவர் ஸ்ரீ அம்பாலால் சாராபாய் என்று பார்த்தோம் அல்லவா? அவரும் அவருடைய மனைவி ஸாரளா தேவியும் மகாத்மாவிடம் மிக்க அன்பு வைத்திருந்தார்கள். மகாத்மா காந்தி பட்டினி யிருப்பது அவர்களுக்கு மிக்க மன வேதனையை அளித்தது.

மூன்று தினங்கள் மகாத்மாவின் உண்ணா விரதம் நீடித்திருந்தது. இதற்குள் ஆலை முதலாளிகளின் மனம் இளகி விட்டது. ஏதாவது சமரச முடிவு காண்பதில் எல்லாரும் சிரத்தை கொண்டார்கள். ஸ்ரீமதி அனசூயாபென் வீட்டில் சமரசப் பேச்சுகள் நடந்தன. முதலாளி-தொழிலாளி தகராறைப் பற்றி விசாரித்து முடிவு கூறுவதற்கு ஸ்ரீ ஆனந்த சங்கர துருவா என்பவர் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். இருபத்தோரு நாள் நடந்த ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவு பெற்றது. காந்திஜியின் உண்ணா விரதமும் முடிவடைந்தது.

இந்த மாதிரி சந்தோஷமான சமரச முடிவு ஏற்பட்டதைக் கொண்டாடுவதற்காகத் தொழிலாளரின் கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு ஆலை முதலாளிகளும் ஐரோப்பியக் கமிஷனரும் வந்திருந்தார்கள். கமிஷனர் துரை அக்கூட்டத்தில் பேசினார். இவ்வளவு பெரிய வேலை நிறுத்தம் கொஞ்சங்கூடக் கலவரம் இன்றி இருபத்தோரு நாள் நடந்து முடிந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இதற்குக் காந்திஜிதான் காரணம் என்பதை அந்த உத்தியோகஸ்தர் உணர்ந்திருந்தார். ஆகையால் அவர் தொழிலாளரைப் பார்த்து, "நீங்கள் எப்போதும் காந்திஜி சொல்லும் புத்திமதியைக் கேட்டு அதன்படியே நடக்க வேண்டும்" என்று கூறினார்.

ஆனால் இதே ஐரோப்பியக் கமிஷனர் கெயிரா ஜில்லா விவசாயிகளைப் பார்த்து, "காந்திஜி சொல்லும் வார்த்தைகளை நீங்கள் கேட்கக் கூடாது. கேட்டால் உருப்படாமற் போவீர்கள்!" என்று எச்சரிக்கை செய்யும்படியான சந்தர்ப்பம் வெகு சீக்கிரத்திலேயே வருவதற்கிருந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top