• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
37. பேரிடி விழுந்தது!


மகாத்மா காந்தி தம்முடைய தர்ம யுத்தத்தின் இறுதிப் போருக்குப் பிறகு பர்தோலியைக் குருக்ஷேத்திரமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆகவே 1922-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி பர்தோலிக்குப் பிரயாணமானார். அன்று காலைப் பிரார்த்தனையின்போது சபர்மதி ஆசிரமவாசிகளிடம் மகாத்மா விடை பெற்றுக் கொண்டார். ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி உள்பட அனைவரும் கண்ணீரும் கம்பலையுமாக மகாத்மாவுக்கு விடை கொடுத்தார்கள். பர்தோலிக்குப் போருக்குப் போகிறவர் எப்போது திரும்பி வருவாரோ என்பதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாமலிருந்தது. திரும்பி வருவாரோ அல்லது வரவே மாட்டாரோ, யாருக்குத் தெரியும்? இந்த எண்ணத்தினால் அனைவருடைய உள்ளங்களும் கசிந்துருகிய போதிலும் அவர்கள் தங்கள் துயரத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மகாத்மா இல்லாத சமயத்தில் ஆசிரமத்தின் வேலைகளை யெல்லாம் இயன்ற வரையில் சரிவர நடத்தி வருவதாக வாக்களித்தார்கள். மகாத்மாஜி அவர்களுக்கெல்லாம் பகவத் கீதையை வழிகாட்டியாகக் கொண்டு அவர்களுடைய கடமைகளை நிறைவேற்றி வரும்படியாக உபதேசித்தார்.

பர்தோலியில் மகாத்மாவுக்கு மகத்தான வரவேற்பு காத்திருந்தது. பர்தோலி வாசிகள் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும் பொறுப்பும் பாக்கியமும் தங்களுக்குக் கிடைத்துள்ளன என்பதை உணர்ந்திருக்கிறார்கள். பழைய கிரேக்க ராஜ்யத்தின் சுதந்திரத்துக்குப் பாரஸீகர்களால் ஆபத்துவந்தபோது தர்மாபைலே என்னும் கணவாயில் சில கிரேக்கவீரர்கள் நின்று போராடி தங்கள் உயிரை அர்ப்பணம் செய்து கிரேக்க நாட்டின் சுதந்திரத்தை நிலை நாட்டியது சரித்திரப் பிரசித்தமான சம்பவம். "பர்தோலி பாரதநாட்டின் தர்மாபைலே" என்னும் பல்லவியைக் கொண்ட சுதந்திர கீதம் ஒன்று அச்சமயம் பர்தோலியின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாடப்பட்டு வந்தது.

பர்தோலியில் மகாத்மாவுக்குத் துணை நின்று பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவதற்காகப் பம்பாயிலிருந்து ஸ்ரீவி.ஜே. படேலும் சூரத்திலிருந்து ஸ்ரீ தயாள்ஜி, கல்யாண்ஜி முதலியவர்களும் வந்துசேர்ந்தார்கள். 29 - ஆம் தேதி பர்தோலி தாலூகா மகாநாடு நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஆயினும் ஒருவிதமான குழப்பமோ, கூச்சலோ இல்லாமல் மகாநாடு நடந்தது. காந்தி மகான் எங்கே சென்று தங்கினாலும் அங்கே உள்ளூர் ஜனங்கள் வந்து கூட்டம் போடுவது சர்வசாதாரண வழக்கம் அல்லவா? ஆனால் பர்தோலியில் மகாத்மா காந்தி தங்கியிருந்த ஜாகைக்கு அநாவசியமாக யாரும் வரவேயில்லை.

பர்தோலி பிரதிநிதிகளில் முக்கியமான சிலரை மகாத்மாவே தமது ஜாகைக்குக் கூப்பிட்டனுப்பினார். பொதுஜனச் சட்ட மறுப்புக்குக் காந்திஜி விதித்திருந்த நிபந்தனைகளில் ஒன்று பர்தோலியில் வாழும் 88,000 ஜனங்களுக்கும் வேண்டிய துணியை அவர்களே இராட்டை - கைத்தறியில் உற்பத்தி செய்துகொள்ள வேண்டும், வெளியிலிருந்து ஒரு கஜம் துணிகூட வரவழைக்கக் கூடாது என்பது. இந்த நிபந்தனையைப் பூரணமாக நிறைவேற்றுவதற்கு இன்னும் பதினைந்து நாள் தவணை கொடுப்பதாக மகாத்மா கூறினார். ஆனால் பர்தோலி தலைவர்களோ "எங்களுக்குத் தவணைவெண்டியதில்லை" என்று சொல்லிவிட்டார்கள். பிப்ரவரி௴ 1 - ஆம் தேதியிலிருந்து ஒரு அங்குலத் துணிகூட வெளியூரிலிருந்து தருவிப்பதில்லையென்று சொன்னார்கள். கட்டை வண்டிகளில் இராட்டினத்தை ஏற்றிக் கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கிராமங் கிராமமாகச் சென்று வேண்டியவர்களுக் கெல்லாம் கொடுத்து வந்தார்கள். அப்போது பர்தோலி தாலூகா சாலைகளில் இது ஒரு அற்புதமான காட்சியாயிருந்தது.

ஜனவரி 29- நடைபெற்ற பர்தோலி தாலூகா மகாநாட்டில் நிறைவேறிய முக்கியமான தீர்மானம், "தேசத்தின் விடுதலைக்காக அந்தத் தாலூகா வாசிகள் தாவர - ஜங்கம சொத்துக்களை இழக்கவும், சிறைப்படவும், அவசியமானால் உயிரையும் தியாகம் செய்யவும் சித்தமாயிருக்கிறார்கள்" என்று பறையறைந்து சொல்லிற்று. அத்துடன் மகாத்மாவின் தலைமையில் அஹிம்சையைக் கடைப்பிடித்துப் பொது ஜனச் சட்ட மறுப்பைப் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தொடங்குவதென்றும் தாலுகா வாசிகள் சர்க்காருக்கு இனி நில வரியோ வேறு வரிகளோ கொடுக்கக் கூடாதென்றும் மேற்படி மகாநாடு தீர்மானித்தது.

பர்தோலி மக்களின் இத்தகைய கட்டுப்பாடும் உத்வேகமும் மகாத்மாவுக்கு எல்லையற்ற உற்சாகத்தை அளித்திருந்தது. பம்பாய் மாகாணத்தில் பலபகுதிகளிலிருந்தும் பற்பல பிரமுகர்கள் பர்தோலிக்கு வந்தார்கள். ஆனால் மகாத்மாவின் ஆசிரமத்தில் அனுசரிக்கப்பட்ட கட்டுப்பாடு அவர்களில் சிலருக்கு சங்கடத்தை அளித்தது. உதாரணமாக, ஸ்ரீ வி.ஜே படேல் அவர்களுக்கு அதிகாலையில் எழுந்து பழக்கமில்லை. அதோடு அவருக்குக் கொஞ்சம் வாத நோயும் உண்டு. ஆசிரமத்திலோ காலை 4 மணிக்கே அனைவரும் எழுந்து பிரார்த்தனைக்கு வந்தாக வேண்டும். ஸ்ரீ வி.ஜே.படேலைக் காலை நாலு மணிக்கு எழுப்பியபோது, அவர், "நாராயணா! நாராயணா! இப்படியும் தொந்தரவு படுத்துவது உண்டா?" என்று புகார் செய்தார். ஆனால் புகாரை யார் கேட்கிறார்கள்? அவரும் கட்டாயமாகப் பிரார்த்தனைக்குப் போக வேண்டியதாயிருந்தது. ஆத்ம சாதனத்துக்கு இத்தகைய விரதங்களும் கட்டுப்பாடுகளும் அவசியம் என்பது மகாத்மா காந்தியின் கொள்கை. "ஆத்ம சாதனம் இங்கே யாருக்கு வேண்டும்? இந்தியாவுக்குச் சுதந்திரம் அல்லவா வேண்டும்?" என்பது ஸ்ரீ படேலின் கேள்வி. ஆனால் இந்தக் கேள்வியை அவர் மகாத்மாவிடம் கேட்கவில்லை. இந்தியாவின் சுதந்திரம் மகாத்மாவின் தலைமையினாலேயே கிடைக்கக் கூடியதாயிருந்தது. எனவே, அதற்காக "ஆத்ம சாதனத்தைத் தேடக்கூட நான் தயார்!" என்றார் ஸ்ரீ வி.ஜே. படேல்.

இவ்விதம் ஒருவார காலம் சென்றது. ஒவ்வொரு நாளும் மகாத்மா பர்தோலி ஜனங்களுக்கு மேலே செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றி அறிக்கைகள் விடுத்து வந்தார். ஜனங்கள் மகாத்மா காந்தியின் கட்டளைகளை அணுவளவும் வழுவாமல் நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகி வந்தார்கள்.

காந்திஜி வைஸ்ராய் ரெடிங்குக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்துக்கு இந்திய சர்க்கார் 6-ஆம் தேதி பதில் அறிக்கை விட்டார்கள். அதில் மகாத்மாவின் மீது இல்லாத குற்றங்களையெல்லாம் சுமத்தியிருந்தார்கள். இந்தக் குதர்க்க அறிக்கைக்குப் பிப்ரவரி 7-ஆம் தேதி மகாத்மா ஒரு பதில் விடுத்தார். அந்தப் பதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும் படியான சக்தி வாய்ந்ததாயிருந்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தாரின் குதர்க்கங்களுக்கு மகாத்மா அவ்வளவு உத்வேகமான தீவிர மொழிகளில் பதில் சொல்லியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலைமையில், பிப்ரவரி 8-ஆம் நாள் எதிர்பாராத பேரிடி யொன்று விழுந்தது. சௌரி-சௌராவில் நடந்த கோர சம்பவத்தைப் பற்றிய செய்தி வந்தது. ஐக்கிய மாகாணத்தில் கோரக்பூர் ஜில்லாவில் சௌரி-சௌரா ஒரு சிறு பட்டணம். மேற்படி கோரக்பூர் ஜில்லாவில் முப்பத்திநாலாயிரம் தேசீயத் தொண்டர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்று சில நாளைக்கு முன்பு ஒரு உற்சாகமான செய்தி வந்திருந்தது. அவர்களில் எத்தனை பேர் கதர் உடுத்தியவர்கள் என்று காந்திஜி விசாரித்ததற்கு 'நாலில் ஒரு பங்கு பேர் தான் கதர் உடுத்தியவர்கள்' என்று தகவல் கிடைத்தது. இந்த நிலை மகாத்மாவுக்குத் திருப்தியளிக்கவில்லை. நாலில் ஒரு தொண்டர்தான் கதர் உடுத்துகிறார் என்றால் அஹிம்சை நெறியை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்க முடியும் என்ற கவலையை மகாத்மா தம் அருகிலிருந்தவர்களிடம் வெளியிட்டார்.

இப்படி மகாத்மாவுக்கு ஏற்கனவே கவலையளித்திருந்த அதே ஜில்லாவிலிருந்துதான் இப்போது அந்தப் பயங்கரமான செய்தி வந்தது. சௌரி-சௌராவில் வெறிகொண்ட ஜனக்கூட்டம் ஒரு போலீஸ் ஸ்டே ஷனைத் தாக்கி நெருப்பு வைத்து இருபத்தொரு போலீஸ் ஜவான்களை உயிரோடு கொளுத்திக் கொன்று விட்டது.

பம்பாயிலும் சென்னையிலும் நடந்த குற்றங்களுக்கு ஏதேனும் ஓரளவு சமாதானம் சொல்ல இடமிருந்தது. ஆனால் இந்தக் கோர பயங்கரச்செயலுக்கு என்ன சமாதானத்தைச் சொல்ல முடியும்? மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையை மக்கள் கொஞ்சங்கூட அறிந்துகொள்ளவில்லை என்று தானே அதிலிருந்து ஏற்படும்! சௌரி-சௌராவில் நடந்ததுபோல் தேசமெல்லாம் நடக்காது என்பது என்ன நிச்சயம்? அதன் பயனாகத் தேசம் எவ்வளவு விபரீதமான தீங்குகளை அடைய நேரும்?

இத்தகைய வேதனை நிறைந்த எண்ணங்களைச் சௌரி-சௌரா நிகழ்ச்சி பற்றிய செய்திகள் மகாத்மாவின் மனதில் உண்டாக்கின. மிக முக்கியமான விஷங்களைக் காந்திஜி தம் அந்தராத்மாவின் புத்திமதிப்படி ஒரு நொடியில் தீர்மானித்து விடுவதுதான் வழக்கம். ஆகவே இப்போதும் பர்தோலி சட்ட மறுப்பைக் கைவிடுவது என்று ஒரே நிமிஷத்தில் மகாத்மாதீர்மானித்து விட்டார். இத்தகைய தீர்மானத்துக்கு வரக் கூடிய தீரபுருஷர் இந்த உலகத்திலேயே மகாத்மாவைத் தவிர யாரும் இருக்க முடியாது என்று சொன்னால், அது மிகையாகாது. ஏனெனில், முதல் நாள் 7-ஆம் தேதி தான் வைஸ்ராய்க்குக் கடுமையான முறையில் மகாத்மா பதில் அளித்திருந்தார். பர்தோலி ஜனங்கள் துடி துடித்துக் கொண்டிருந்தார்கள். தேசமக்கள் எல்லோரும் பர்தோலியை நோக்கிக்கொண்டிருந்தார்கள். சிறையிலே இருந்த பதினாயிரக் கணக்கான காங்கிரஸ் வாதிகளும் பர்தோலி இயக்கத்தை எதிர்நோக்கியிருந்தார்கள்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இயக்கத்தை ஆரம்பியாமல் நிறுத்துவது என்று வேறு யாரால் முடிவு செய்ய முடியும். மகாத்மா முடிவுசெய்து விட்டாலும் அதைக் காங்கிரஸ் காரிய கமிட்டி மூலம் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் அல்லவா? அதற்காகப் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி பர்தோலியில் காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டத் தீர்மானித்துக் காரியக் கமிட்டி அங்கத்தினருக்குப் பின்வரும் கடிதத்தை மகாத்மா எழுதினார்:-
அந்தரங்கம் (பிரசுரத்துக்கு அல்ல)
பர்தோலி, 8-2-1922
பிரிய நண்பரே!

பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கும் தறுவாயில் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தது இது மூன்றாவது தடவை. 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் முறையும், சென்ற நவம்பர் மாதத்தில் பம்பாயில் இரண்டாவது முறையும். அதிர்ச்சி பெற்றேன். இப்போது மறுபடியும் கோரக்பூர் ஜில்லாவில் நடந்த சம்பவங்கள் என்னைப் பெரிதும் கலங்க வைத்துவிட்டன. தேசத்தின் மற்றப் பகுதிகளிக் பலாத்காரக் குற்றங்கள் நிகழும் போது பர்தோலியில் அட்டும் அஹிம்சைப் போரினால் பலன் விளையாது. பூரண அஹிம்சையை நிலை நிறுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே நான் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தத் திட்டம் போட்டேன். பாதி பலாத்காரமும் பாதி அஹிம்சையுமாக நடக்கும் இயக்கத்தில் நான் சம்பந்தப்பட முடியாது. அத்தகைய இயக்கத்தினால் சுயராஜ்யம் வந்தாலும் அது உண்மையான சுயராஜ்யமாயிராது, ஆகையால் பர்தோலியில் 11 - ஆம் தேதி காரியக் கமிட்டி கூட்டத்தைக் கூட்டுகிறேன். இந்தக் கூட்டத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நீடித்துத் தள்ளிப் போடுவதைப்பற்றி யோசிக்கப்படும். அப்படி நீண்ட காலம் தள்ளிப்போட்டால்தான் தேசத்தை நிர்மாண முரையில் தயார் செய்து அஹிம்சையை வேரூன்றச் செய்ய முடியுமென்று நான் கருதுகிறேன். தாங்கள் கூட்டத்துக்கு வர முடியாவிட்டால் தங்கள் அபிப்பிராயத்தை எழுதி அனுப்பக் கோருகிறேன்.இது விஷயமாகத் தங்கள் நண்பர்கள் பலரையும் கலந்து யோசித்து அவர்களுடைய அபிப்பிராயத்தையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
  • தங்கள்
    உண்மையுள்ள,
    (ஒப்பம்) எம். கே. காந்தி
  • காந்திஜியின் இந்த முடிவு தெரிய வந்ததும் ஆசிரமவாசிகளே திடுக்கிட்டார்கள் என்றால், மற்றவர்களைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மகாத்மாவினிடம் பக்தி கொண்டவர்கள் அனைவரும் மேற்படி செய்தியினால் மிக்க மனச்சோர்வு அடைந்தார்கள். மகாத்மாவை ஏற்கனவே விரோதித்தவர்களோ அளவில்லாத கோபத்தை அவர்மீது சொரிந்தார்கள்.

    ஆயினும் மகாத்மா ஒரே பிடிவாதமாக இருந்தார். 11 - ஆம் தேதி கூடிய காரியக் கமிட்டியில் தீவிர விவாதம் நடந்தது. ஸ்ரீ கேல்கர் போன்ற சிலர் மகாத்மாவின் முடிவைப் பலமாக எதிர்த்தார்கள். மற்றவர்கள் மகாத்மாவிடம் உள்ள பக்தியினால் அடங்கி யிருந்தார்கள். விவாதத்தின் முடிவில், எல்லாவித சட்ட மறுப்புகளையும் நிறுத்தி வைத்துத் தேச மக்கள் நிர்மாண வேலையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற தீர்மானம் காரியக் கமிட்டியில் நிறைவேறியது.

    மறுநாள் 12 - ஆம் தேதி அதாவது என்றைய தினம் பர்தோலி யுத்தம் தொடங்குவதாக இருந்ததோ அதே தினத்தில், மகாத்மா காந்தி சௌரி-சௌரா பயங்கர நிகழ்ச்சியை முன்னிட்டு ஐந்துநாள் உண்ணாவிரதம் தொடங்கினார்.

    காரியக் கமிட்டி தீர்மானத்துடனும் மகாத்மாவின் உபவாசத்துடனும் காரியம் முடிந்துபோய்விடவில்லை. தேசமெங்கும் அதிருப்தி கடல்போலப் பொங்கியது. மகாத்மாவின் ஆத்ம சகாக்கள் என்று கருதப்பட்டவர்கள் பலர் அவரை எதிர்த்துத் தாக்கினார்கள்.

    தென்னாப்பிரிக்காவில் ஒரு சமயம் மகாத்மா சத்தியாக்கிரஹத்தை நிறுத்தியபோது அவர் இந்தியர்களைக் காட்டிக் கொடுத்து விட்டதாக எண்ணி ஒரு பட்டாணியன் அவரை தடியால் அடித்து அவருடைய மண்டையை உடைத்துவிட்டான் அல்லவா? ஏறக்குறைய அத்தகைய சூழ்நிலை தேசத்தில் ஏற்பட்டுவிட்டது. "காரியத்தைக் கெடுத்து விட்டார் மகாத்மா!" என்று கூக்குரல் எங்கும் எழுந்தது. யாரும் அவரைத் தடியால் அடிக்கவில்லை; அவ்வளவுதான். தடியால் அடிப்பதைக் காட்டிலும் கொடுமையான குரோத மொழிகளை மகாத்மாவின் தலைமீது பொழிந்தார்கள். அவ்வளவையும் சத்தியத்துக்காகவும் அஹிம்சைக்காகவும் மகாத்மா சகித்துக் கொண்டார். கடல் கடைந்த போது எழுந்த விஷயத்தை விழுஙங்கிப் புவனத்தைக் காப்பாற்றிய நீலகண்டனைப்போல் அச்சமயம் காந்திஜி விளங்கினார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
38. நெருப்பைக் கொட்டினார்கள்


சௌரி சௌரா பயங்கரச் சம்பவத்துக்காக மகாத்மா பிப்ரவரி 12 - ஆம் தேதி உபவாசம் ஆரம்பித்து ஐந்து நாள் விரதம் இருந்தார். 17 - ஆம் தேதி மாலை 5 மணிக்கு மகாத்மாவின் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ கிருஷ்ணதாஸ் உண்ணாவிரத பூர்த்தி பாரணைக்காகக் கொஞ்சம் பாலும் சில திராட்சைப் பழங்களும் ஆரஞ்சு ரஸமும் கொண்டு வந்தார். காந்திஜி ஸ்ரீமத் ராமதாஸ் என்னும் இன்னொரு சீடரை அழைத்துப் பகவத் கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தைப் படிக்கச் சொன்னார். கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கவனமாகச் சிரவணம் செய்தார். அச்சமயம் பாபு ராஜேந்திர பிரஸாத், சேத் ஜம்னாலால் பஜாஜ், ஸ்ரீமதி அனசூயாபென் முதலியவர்கள் மகாத்மாவின் அருகில் இருந்தார்கள். மகாத்மாவின் கண்ணில் என்றுமில்லாத வண்ணம் சில கண்ணீர்த் துளிகள் துளிர்த்து வழிவதை அவர்கள் பார்த்து மனம் உருகினார்கள். சௌரி – சௌரா காந்திஜியின் மனதை எவ்வளவு புண்படுத்தி யிருக்கவேண்டும் என்பதை உணர்ந்தார்கள். ஆம்; அதில் வியப்பு என்ன? எந்த இயக்கத்தினால் இந்தியாவக்குக் கதிமோட்சத்தை அளிக்கலாம் என்று நம்பிக்கை கொண்டு மகாத்மாகாந்தி அல்லும் பகலும் அனவரதமும் வேலை செய்து வந்தாரோ, அந்த இயக்கத்தை இப்போது ஆரம்பிக்க முடியாமற் போய்விட்டதல்லவா?

இதனால் மகாத்மாவின் மனம் எவ்வளவு தூரம் புண்ணாகி யிருக்கவேண்டும் என்று அறியாது அரசியல் வாதிகளும் தேசபக்தர்களும் அவருடைய தலைமீது நெருப்பைக் கொட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் காந்திஜி பொறுமையாகச் சகித்துக்கொண்டார். ஆனால் இதற்கெல்லாம் பரிகாரமான ஒரு நிகழ்ச்சியும் ஏற்பட்டது. மகாத்மா உபவாசம் நிறுத்திய மறுநாள் அதாவது பிப்ரவரி 18௳ மௌலானா முகமதலியையும் டாக்டர் கிச்லூவையும் பீஜப்பூர் சிறையிலிருந்து தூலியா சிறைக்குக் கொண்டு போனார்கள். அந்த ரயில் பாதையின் மத்தியில் பர்தோலி ரயில்வே ஸ்டேஷனும் இருந்தது. இதை அறிந்த மகாத்மா ரயில்வே நிலையத்தில் அவர்களைப் பார்த்து விட்டு வரும்படி ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவரை அனுப்பினார். ஸ்ரீ கிருஷ்ண தாஸ் சில ஆரஞ்சுப் பழங்களையும் எடுத்துக்கொண்டு பர்தோலி ரயில் நிலையத்துக்குப் போனார். மௌலானாவைச் சந்தித்துக் காந்திஜி முதல் நாள்தான் உபவாச விரதத்தை முடித்திருந்தபடியால் அவர்களைப் பார்க்க வரவில்லை யென்று கூறினார்.

ஆனால் மௌலானாவுக்கு இது சமாதானம் அளிக்கவில்லை. மகாத்மாவை ரயில் நிலையத்தில் சந்திக்க அவர் எவ்வளவோ ஆவலாயிருந்தார். மகாத்மா வரவில்லை யென்று அறிந்ததும் மௌலானா அடைந்த ஏமாற்றத்துக்கு அளவேயில்லை. பர்தோலியை விட்டுப் புறப்படுவதற்குள் எப்படியாவது மகாத்மாவைப் பார்க்க விரும்புவதாக ஸ்ரீகிருஷ்ணதாஸிடம் மௌலானா கூறினார். ஸ்ரீ கிருஷ்ணதாஸ் ஓடோடியும் சென்று காந்திஜியினிடம் மௌலானாவின் விருப்பத்தைத் தெரிவித்தார். மகாத்மா தம்முடைய பலவீனத்தை மறந்து உடனே புறப்பட்டு ரயில் நிலையத்துக்குச் சென்றார். மகாத்மாவைக் கண்டதும் மௌலானா முகம்மதலியும் டாக்டர் கிச்லூவும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. காந்திஜி அருகில் வந்ததும் அவரை அவர்கள் ஆலிங்கனம் செய்துகொண்டு கண்ணீர் உகுத்தார்கள். தாங்கள் சிறையாளிகள் என்பதையும் போலீஸ் பாதுகாப்பில் இருப்பதையும் ஒரு நிமிஷம் மறந்தே விட்டார்கள். ஆரம்ப உணர்ச்சிப் பெருக்குக் கொஞ்சம் குறைந்ததும் மௌலானா "பாபுஜி! 'சௌரி-சௌராவின் பாதகம்' என்ற கட்டுரையைத் தங்களைத் தவிர இந்த உலகத்திலேயே வேற யாரும் எழுதியிருக்க முடியாது. அவ்விதம் நம்மிடமுள்ள குறையைச் சங்கோசமின்றித் தயக்கமின்றி ஒப்புக்கொள்ளக் கூடியவர் வேறு யார்? சௌரி-சௌராவுக்குப் பிறகு பர்தோலி இயக்கத்தைத் தாங்கள் தள்ளிப்போட்டது ரொம்ப சரியான காரியம்" என்றார். இரண்டு மூன்று நிமிஷத்துக்குள்ளே ரயில் புறப்பட்டு விட்டது. "மகாத்மா காந்திக்கு ஜே!" என்று திரும்பத் திரும்ப மௌலானா கோஷித்துக்கொண்டே போனார். தலைவரிடம் இத்தகைய அன்பையும் நம்பிக்கையையும் கண்டவர்கள் கண்களிலெல்லாம் கண்ணீர் தளும்பியது.

இந்த நிகழ்ச்சியினால் மகாத்மாவுக்கு ஓரளவு மனச்சாந்தி ஏற்பட்டது. ஆனால் இவ்வாறு மகாத்மா கைக்கொண்ட முறையே சரியானது என்று கருதியவர்கள் மிகச் சிலர் தான். மற்றவர்கள் அதை ஒபபுக்கொள்ளவில்லை. மகாத்மா காந்தி செய்தது பெரிய தவறு என்றும், காரியசித்தி அடையும் சமயத்தில் மகாத்மா தேசத்தைப் பின்னுக்கு இழுத்து விட்டார் என்றும் சொன்னார்கள். மகாத்மாவுக்கு இந்தியாவின சுதந்திரத்தைக் காட்டிலும் அஹிம்சா தர்மப்பிரசாரமே பெரிது என்றார்கள். தேசமெங்கும் பரிபூரண அஹிம்சை நிலவும் வரையில் காத் திருப்பது என்றால், இந்த யுகத்தில் இந்தியா சுதந்திரம் அடையப் போவதில்லை என்று சொன்னார்கள்.

இந்தமாதிரி குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர தேசத்துப் பத்திரிகைகளிலே அதிகமாக வெளியாயின. டில்லியில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் காந்திஜியின் பூரண நம்பிக்கைக்கு உகந்த சகாக்களும் அவரைப் பலமாகத் தாக்கினார்கள்.

பர்தோலி வரிகொடா இயக்கத்தையும் இந்தியா முழுவதிலும் தனிச் சட்ட மறுப்பையும் கூட நிறுத்தி வைத்து நிர்மாண வேலையில் கவனம் செலுத்துவது என்று காரியக் கமிட்டியில் தீர்மானம் செய்யப்பட்டது அல்லவா? அதை ஊர்ஜிதம் செய்வதற்காக அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி டில்லியில் பிப்பரவரி 24-ஆம் தேதி கூடியது. அதற்காக 22-ஆம் தேதியன்று மகாத்மா காந்தி டில்லிக்குப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னால் பர்தோலி மக்களுக்கு ஒரு விண்ணப்பம் விடுத்தார்.

"பொதுஜனச் சட்ட மறுப்பை இப்போது ஆரம்பிக்க முடியாமல் நீடித்துத் தள்ளிப்போட நேர்ந்ததற்கு நீங்கள் பொறுப்பாளிகள் இல்லை. உங்கள் கடமையை நீங்கள் நன்கு நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால் இந்தியா ஒரு தேசம். எங்கேனும் ஒரு இடத்தில் தவறு நேர்ந்தால் அது தேசம் முழுவதையும் பாதிக்கிறது. ஆகையினாலேயே சௌரி-சௌரா நிகழ்ச்சி காரணமாக பர்தோலி இயக்கத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. இதற்காக நீங்கள் மனச் சோர்வு அடையக்கூடாது.

பலாத்கார யுத்தத்தில் தலைவன் படைகளை 'முன்னேறுங்கள்' என்றால் முன்னேற வேண்டும். 'பின்வாங்குங்கள்' என்றால் பின்வாங்கியே தீர வேண்டும். இது அஹிம்சைப் போருக்கும் பொருந்தும். ஆகையால் கொடுக்கவேண்டிய வரிகளையெல்லாம் காலாகாலத்தில் கொடுத்துவிடுங்கள். எந்தச் சட்டத்தையும் மீறாதீர்கள். நிர்மாணத் திட்டத்தில் முழு உற்சாகம் காட்டி வேலை செய்யுங்கள். நிர்மாண வேலையின் மூலமாகச் சுதந்திரத்தின் சாராம்சத்தை நாம் அடைந்தவர்களாவோம்!*

பர்தோலி வாசிகளுக்கு எவ்வளவோ ஏமாற்றமும் மனத்தாங்கலும் இருந்த போதிலும் அவர்கள் மகாத்மாவின் கட்டளையை நிறைவேற்றினார்கள். பர்தோலி வாசிகளைப்போல் இந்தியா முழுவதும் காந்தி மகாத்மாவின் போதனைக்குக் கட்டுப்பட்டு நடந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அதற்கு நாம் கொடுத்து வைக்கவில்லை.

அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்காக மகாத்மாஜி டில்லிக்குப் பிப்ரவரி 23-ஆம் தேதி வந்துசேர்ந்தார். அங்கே அவருக்குப் பல கடிதங்கள் காத்திருந்தன. சிறைக்குள்ளேயிருந்து பல நண்பர்களும் சகாக்களும் கடிதம் எழுதியிருந்தார்கள். டில்லி, லக்நௌ, ஆக்ரா முதலிய ஊர்களின் சிறைகளிலிருந்து கடிதங்கள் வந்திருந்தன. அவையெல்லாம் பர்தோலி தீர்மானத்தைப் பலமாக எதிர்த்துக் கண்டிப்பதாகவே இருந்தன. அந்தச் சமயத்தில், அவ்வளவு தூரம் சர்க்காரை அறை கூவி அழைத்த பிறகு பொதுஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவிடுவதை யாரும் ஆதரிக்கவில்லை. அ.இ.கா. கமிட்டி கூட்டத்துக்கு நேரில் ஆஜரானவர்களும் அவ்விதமே மகாத்மாவுடன் மாறுபட்டார்கள். சுவாமி சிரத்தானந்தர், "இந்தியா முழுவதும் அமைதியை எதிர்பார்ப்பது என்பது நடவாத காரியம்; ஆகையால் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டு வேறு முறைகளைப் பார்க்க வேண்டியதுதான்!" என்றார். வங்காளத்திலிருந்து வந்த பிரதிநிதிகள் மிக்க அதிருப்தி தெரிவித்தார்கள். மகாத்மா நிர்மாணத் திட்டத்தை அளவுக்கு மீறி வற்புறுத்துவதாக அவர்கள் சொல்லி, "மிட்னாபூரில் ஜனங்கள் கதர் கட்டிக் கொள்ளாமலே சர்க்காருடன் போர் நடத்தி யூனியன் வரியை ரத்து செய்வதில் வெற்றி பெற்றுவிட்டார்கள்." என்பதை உதாரணமாக எடுத்துக் காட்டினார்கள். இதனாலெல்லாம் மகாத்மா முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் கூடத் தமது கொள்கைகளையும் திட்டங்களையும் சரிவர அறிந்து கொள்ளவில்லை யென்ற நம்பிக்கையை அடைந்தார். ஆகையால் பர்தோலி சட்டமறுப்பை நிறுத்தி வைத்தது ரொம்பவும் சரியான காரியம் என்ற முடிவுக்கு வந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஹக்கீம் அஜ்மல்கானின் அக்கிராசனத்தின் கீழ் கூடியது. மகாத்மா முதலிலேயே தம்முடைய கருத்தை வெளியிட்விட்டார். "பரிபூரண அஹிம்சையில்லாமல் என்னால் இயக்கத்தை நடத்த முடியாது. உங்களுடைய கருத்து மாறுபட்டிருந்தால் நான் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்" என்றார். இதை அநேகர் விரும்பவில்லை. மகாத்மாவின் தலைமை இல்லாமல் இந்தியாவின் விடுதலை கை கூடாது, எந்த இயக்கத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது என்று அவர்கள் கருதினார்கள். பர்தோலி தீர்மானத்தைப் பலமாக எதிர்த்த சுவாமி சிரத்தானந்தரே இந்தக் கூட்டத்தில் "மகாத்மாஜி! நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன இயக்கம் நடத்த முடியும்? தங்களுடைய தலைமையை இழக்க நாங்கள் தயாராயில்லை!" என்றார். ஆனால் காந்திஜியின் தலைமையை இழப்பதற்கம் ஒரு சிலர் தயாராயிருந்தார்கள். மகாராஷடிரத்தைச் சேர்ந்த டாக்டர் மூஞ்சேயும் கல்கத்தாவிலிருந்து வந்த ஸ்ரீ ஜே. என். சென்குப்தாவும் மகாத்மாவின் பேரில் நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

ஒரு கமிட்டி நியமித்து, ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த பிறகு, தேசத்துக்கு நேர்ந்த தீமைகளையெல்லாம் விசாரிக்கச் சொல்லவேண்டும் என்று டாக்டர் மூஞ்சே பிரேரணை செய்தார். ஸ்ரீ அப்யங்கர், மௌலானா ஹஸரத் மோகினி முதலியவர்கள் தீவிரமாக டாக்டர் மூஞ்சேயை ஆதரித்தார்கள். வேறு சிலர் மகாத்மாவை ஆதரித்துப் பேசலானார்கள். வாதப் பிரதி வாதங்கள் முற்றி மனக் கசப்பு வளரும் போலிருந்தது.

இச்சமயத்தில் ஹக்கீம் அஜ்மல்கான் உடம்பு சரியாயில்லையென்று சொல்லி எழுந்து போனார். மகாத்மாவையே தமக்குப் பதிலாகச் சபையை நடத்தும்படி ஏற்படுத்திவிட்டுப் போனார். மகாத்மா தலைமைப் பீடத்தில் அமர்ந்ததும் நிலைமையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. ஏனெனில், தம்மைத் தாங்கிப் பேச விரும்பிய யாரையம் மகாத்மா பேசவதற்கு அனுமதிக்கவில்லை. தம்மீது குற்றங் கூற விரும்பியவர்கள் தங்களுடைய மனதைத்திறந்து சொல்ல விரும்பியதெல்லாம் சொல்ல அநுமதித்தார். இதனால் சபையில் ஒர பெரிய மாறுதல் ஏற்பட்டது. குற்றங் கூறியவர்களுக்கும் கொஞ்ச நேரத்தக் கெல்லாம் அலுத்துப் போய்விட்டது. டாக்டர் மூஞ்சே தங்கள் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக மகாத்மாஜி தமது கட்சியை எடுத்துச் சொல்லவேண்டும் என்றம் கேட்டுக்கொண்டார். மகாத்மாஜி அதற்க இணங்க வில்லை. "நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. சபையோர் தங்கள் சொந்த அபிப்பிராயத்தை யொட்டித் தீர்மானிக்கட்டும். என்னுடைய திட்டம் பிடிக்காவிட்டால் நான் விலகிக் கொள்ளத் தயார்" என்ற மட்டும் சொன்னார். வோட்டுக்கு விடப்பட்ட போது டாக்டர் மூஞ்சேயின் தீர்மானமும் ஸ்ரீ ஜே. எம். சென்குப்தாவின் தீர்மானமம் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்தன. பர்தோலி தீர்மானம் மகாத்மாவே ஒப்புக்கொண்ட சிற்சில மாறுதல்களுடன் நிறைவேறியத. இதன் பிரகாரம் பொதஜனச் சட்டமறுப்பு யோசனை இப்போதைக்குக் கைவிடப்பட்டது. மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தனிப்பட்ட சட்டமறுப்புத் தொடங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது; அதற்குரிய நிர்மாணத் திட்ட நிபந்தனைகள் முன்னைவிடக் கடுமையாயின.

டில்லியிலிருந்து மகாத்மா காந்தி சபர்மதிக்குத் திரும்பி வந்தார். இனி கதர் உற்பத்தி, தேசீயக் கல்வி, தீண்டாமை விலக்கு, ஹிந்து மஸ்லிம் ஒற்றுமை ஆகிய நிர்மாணத் திட்டங்களில் தம்முடைய பூரண கவனத்தையும் செலத்தத் தீர்மானித்து மகாத்மா அந்த வேலைகளைத் தொடங்குவதற்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் அதற்கு இடங்கொடுக்கவில்லை. மகாத்மாஜி பிறருடைய பாவங்களக்கு உண்ணாவிரத பிராயச்சித்தம் செய்து, அஹிம்சா தர்மத்தைப் பாதுகாப்பதற்காகப் பொதுஜனச் சட்ட மறுப்பையும் நிறுத்தி வைத்த பிறகு அவரைக் கைது செய்து விசாரணை நடத்த முன்வந்தனர். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் இந்த இழிதகைமையான செயலைக் குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
39. கைதிக் கூண்டில்!


டில்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலிருந்து மகாத்மா சபர்மதி சத்யாக்கிரஹ ஆசிரமத்துக்குத் திரும்பி வந்தார். அவருடைய உள்ளம் அமைதி இழந்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் முடிவாக மகாத்மாவின் தீர்மானத்துக்கு அதிக வோட்டுக்கள் வந்தது பற்றி அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை.

தெரிந்தோ, தெரியாமலோ, பலருடைய மனதிலும் பலாத்காரம் குடியிருப்பதைக் கண்டேன். ஆகவே, எனக்குத் தோல்வி ஏற்படவேண்டும் என்றே பிரார்த்தித்தேன். நான் அதிகமாகப் பயப்படுவது பெரும்பான்மை வோட்டுப் பலத்தைக் கண்டுதான். என்னை ஆதரிப்பவர்கள் வெகு சிலராயிருக்கும் சமயங்களிலேயே என்னால் மிகவும் முக்கியமான வேலை செய்ய முடிந்திருக்கிறது" என்ற காந்திஜி டில்லியிலிருந்து திரும்பி வந்ததும் "எங் இந்தியா"வில் குறிப்பிட்டார். மேலும் காந்திஜி எழுதியதாவது:--

"காங்கிரஸ் ஊழியர்களில் ஓரளவு ஏமாற்றத்தையும் உற்சாகக் குறைவையும் நான் எதிர்பார்த்தேன். ஆனால் இப்படிப்பட்ட சண்டமாருத எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் ஊளியர்களிடையில் நிர்மாண திட்டத்தை நிறை வேற்றுவதில் உற்சாகத்தையே காணவில்லை. 'இது என்ன சமூக சீர்திருத்த இயக்கமா?' என்று கேட்டார்கள். இம்மாதிரி ஜீவகாருண்யத் தொண்டுகளைச் செய்து பிரிட்டிஷாரிடமிருந்து ஆதிகாரத்தைக் கைக்கொள்ள முடியுமா?' என்றும் கேட்டார்கள். ஆகவே அஹிம்சையின் அடிப்படையைப் பெரும்பாலோர் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை யென்றே ஏற்பட்டது. அ.இ.கா. அங்கத்தினர்களுக்கு நான் எச்சரிக்கை செய்தேன்:- 'உங்களுக்கு நம்பிக்கையில்லாவிட்டால் என் தீர்மானத்தை ஒப்புக்கொள்ள வேண்டாம்; நிராகரித்து விடுங்கள்' என்று. அப்படி எச்சரிக்கை செய்த பிறகும் பெரும்பான்மையோர் என்னுடைய பிரேரணையை மாறுதல் ஒன்றுமின்றி ஒப்புக் கொண்டார்கள். ஆகவே அவர்கள் இனித் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். சட்ட மறுப்புப்போரை இப்போதைக்கு மறந்துவிட்டு நிர்மாண வேலையில் ஈடுபட வேண்டும். நம்முடைய கால் தவறியபடியால் வழுக்கி விழுந்து விட்டோம். இப்போதாவது நாம் ஜாக்கிரதையடைந்து நமது காலை ஊன்றி வைக்காவிட்டால் வெள்ளம் நம்மை அடித்துக் கொண்டே போய்விடும்"

இவ்வாறு காந்திஜ காங்கிரஸ் தீவிரவாதிகளையும் அவசரக்காரர்களையும் நிதானப்படுத்துவதில் தமது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கையில், அதிகார வர்க்கத்தார் தங்களுடைய ஆயுதத்தைத் தீட்டிக்கொண்டிருந்தார்கள். தேசமெல்லாம் சோர்வு குடிகொண்டிருக்கும் இந்தச் சமயமே மகாத்மாவைக் கைது செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் என்று முடிவு செய்தார்கள். இந்த முடிவு ஒருவாறு வெளிப்பட்டுப் போயிற்று. "மகாத்மாவைக் கைது செய்யப்போகிறார்கள்" என்ற வதந்தி பரவியது. இது மகாத்மாவின் காதிலும் விழுந்தது. உடனே காந்திஜி "நான் கைது செய்யப்பட்டால்" என்ற கட்டுரையை எழுதினார். மார்ச்சு 9-ஆம் தேதி "எங் இந்தியா" வில் இக்கட்டுரை வெளியாயிற்று.

நாம் சுதந்திரத்துக்குத் தகுதியானவர்கள் தான் என்பதை நிரூபிப்பதற்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் வரப்போகிறது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் அதிகார வர்க்கம் எதிர்பார்ப்பதுபோல் கலகமும் குழப்பமும் உண்டானால் அதிகார வர்க்கத்துக்கு அத வெற்றியாகும். 'அஹிம்சைப் புரட்சி யென்பது ஒருநாளும் நடவாத காரியம்' என்று சொல்லும் மிதவாத நண்பர்களின் கட்சிக்கும் அது ஜயமாகும். சர்க்காரும் சர்க்காரை ஆதரிப்பவர்களும் கொண்டிருக்கும் பயம் வீண் பயம் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும். என்னைக் கைது செய்தால் அதற்காக ஹர்த்தால்களோ, ஊர்வலங்களோ, கோஷங்களுடன் கூடிய ஆர்ப்பாட்டங்களோ எங்கும் நடக்கக் கூடாது. என்னைக் கைது செய்ததும் தேசமெங்கும் பூரண அமைதி குடி கொண்டிருக்குமானால் அதை என்னுடைய தேசத்தார் எனக்குச் செய்த மகத்தான மரியாதையாகக் கருதுவேன். அதற்கு மேலே, காங்கிரஸின் நிர்மாண திட்டங்கள் எல்லாம் 'பஞ்சாப் எக்ஸ்பிரஸ்" வேகத்தில் நடைபெற்றால் மகிழ்ச்சி அடைவேன். அஹிம்சை, சமூக ஒற்றுமை, தீண்டாமை விலக்கு, கதர், இந்த நாலு திட்டங்களும் சுயராஜ்யத்தின் நாலு தூண்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.

இவ்விதம் பொது மக்களின் கடமையைக் குறிப்பிட்டு விட்டு மகாத்மாஜி மேற்படி கட்டுரையைப் பின்வருமாறு முடித்திருந்தார்.:--

"தற்சமயம் என்னை மக்களின் மத்தியிலிருந்து நீக்கிச் சிறைக்கு அனுப்புவதினால் பல நன்மைகள் விளையும் என்று கருதுகிறேன். முதலாவது என்னிடம் 'மாயமந்திர சக்திகள்' இரப்பதாகச் சலெர் கொண்டிருக்கும் குருட்டு நம்பிக்கை போகும். இரண்டாவதாக ஜனங்கள் என்னுடைய தூண்டதலினாலேதான் சுயராஜ்யம் வேண்டுகிறார்கள். அவர்களுக்காகச் சுதந்திரப் பற்று இல்லை என்ற கூற்று பொய்யாகும். மூன்றாவது, என்னை அப்புறப்படுத்திய பிறகும் மக்கள் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றினால் சுயராஜ்யம் ஆளுவதற்கு மக்களின் தகுதி நிரூபணமாகம். நாலாவது சுயநல காரணம் ஒன்றும் இருக்கிறது. ரொம்பவும் அலுப்படைந்திருக்கும் என்னுடைய துர்ப் பல சரீரத்துக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். இவ்வளவு நாள் நான் செய்த வேலையின் காரணமாக இந்த ஓய்வுக்கு நான் தகுதி பெற்றிருக்கிறேன் அல்லவா?". காந்திஜி இவ்விதம் எழுதிய கட்டுரை வெளியான இரண்டு தினங்களுக்கெல்லாம் அந்த மகான் கோரிய ஓய்வை அவருக்குக் கொடுக்க அதிகார வர்க்கத்தார் முன் வந்தார்கள்.

மார்ச்சு 8-ஆம் தேதியன்று மகாத்மா கைது செய்யப்படுவார் என்ற வதந்தி பரவியது. ஆனால் அதைக் குறித்து ஆசிரமவாசிகள் சிறிதும் பரபரப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் அதை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள். ஜனாப் சோடானி சாகிப்பின் கோரிக்கையின் பேரில் 8-ஆம் தேதி மகாத்மா ஆஜ்மீருக்குச் சென்றார். 10-ஆம் தேதி திரும்பி வந்தார். அன்றைக்கு ஆஜ்மீரிலிருந்து ஆசிரமத்துக்கு வந்த தந்திச் செய்தி சந்தேகாஸ்பதமா யிருந்தபடியால் ஆசிரமவாசிகள் சிறிது பரபரப்பை அடைந்தார்கள். எங்கேயோ வெளியூரில், தாங்கள் இல்லாத இடத்தில், மகாத்மாவைக் கைது செய்து கொண்டுபோய் விடுவார்களோ என்ற கவலை உண்டாயிற்று. ஆகையினால் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் காந்தி முதலியவர்கள் மகாத்மாஜி திரும்பி வரவேண்டிய வண்டியை எதிர்நோக்கிச் சபர்மதி ஸ்டே ஷனுக்கு விரைந்து சென்றார்கள்.

ஒரு சமயம் காந்திஜி பின்வருமாறு எழுதினார்:- "எனக்கும் ஹிந்து மதத்துக்குக் உள்ள பாந்தவ்யம் எனக்கும் என் பத்தினிக்கும் உள்ள பாந்தவ்யத்தைப் போன்றது. ஸ்ரீமதி கஸ்தூரிபாயிடம் நான் பல குறைகளைக் காண்கிறேன். ஆனாலும் அந்தக் குறைகளையுடையவளிடம் அசைக்க முடியாத நேசமும் பற்றும் எனக்கு உண்டு. இதுபோலவே ஹிந்து மதத்தில் நான் பல குறைகளைக் கண்டாலும் அதனிடம் எனக்குள்ள அபிமானம் மிக ஆழ்ந்த அபிமானம், அதை ஒரு நாளும் அசைக்க முடியாது."

காந்திஜி இவ்வாறு ஸ்ரீமதி கஸ்தூரிபாயை ஹிந்து மதத்துக்கு ஒப்பிட்டது ஹிந்து மதத்துக்கே கௌரவம் அளிப்பதாகும் என்று நாம் கருதுகிறோம். காந்தி தமது பத்தினியிடம் பல குறைகளைக் கண்டிருக்கலாம். ஆனால் நம்முடைய அன்னை கஸ்தூரிபாயிடம் நாம் ஒரு குறையையும் காணவில்லை. நாம் காண்பதெல்லாம் அவருடைய பெருமைதான். காந்திஜி தேசத்தின் முடிசூடா மன்னராய் விளங்கியபோதும் தேசமெல்லாம் காந்திஜியைக் குற்றங் கூறிக் கோபித்துக்கொண்ட போதும் அன்னை கஸ்தூரிபாயின் பக்தி அவரிடம் ஒரேவிதமாக மாறாமலிருந்தது. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் கஸ்தூரி பாய் உட்பட்டார். அவர் கொடுத்த கஷ்டங்களை யெல்லாம் மகிழ்ச்சியுடன் அநுபவித்தார். ஆனால் தமக்குத் தெரியாமல் தம் கணவரைச் சிறைக்குக் கொண்டுபோய் விடுவார்களோ என்ற எண்ணம் மட்டும் அவரைத் துணுக்கத்துக்கு உள்ளாக்கியது. சபர்மதி ஸ்டே ஷனுக்கு விரைந்து ஓடினார். நல்லவேளையாக, பயந்தபடி ஒன்றும் நடைபெறவில்லை. காந்திஜி குறிப்பிட்ட ரயிலில் வந்து இறங்கினார். சின்னஞ்சிறு குழந்தையைப் போல் சிரித்துக் கொண்டும் தமாஷ் செய்து கொண்டும் காந்திஜி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்.

அன்று மாலைப் பிரார்த்தனை ஆசிரமத்தில் வழக்கத்தைக் காட்டிலும் அதிக சிரத்தையும் உருக்கமும் உள்ளதாக நடை பெற்றது. பிரார்த்தனை முடிந்ததும் பலருடைய கண்களில் நீர் ததும்பியது. ஆனால் மகாத்மாவோ வழக்கத்தைக் காட்டிலும் அதிக குதூகலத்துடன் ஆசிரமத்துக் குழந்தைகளைக் கூட்டி வைத்துக்கொண்டு அவர்களில் தாமும் ஒரு குழந்தையைப்போல் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். பிறகு, வழக்கம்போலக் கடிதங்களுக்குப் பதில் எழுதத் தொடங்கினார். அச்சமயம் ஆமதாபத்திலிருந்து பல நண்பர்கள் வந்து ஊரில் பரவியுள்ள வதந்தியைப் பற்றி மகாத்மாவிடம் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் காந்திஜி தைரியம் சொல்லித் திருப்பி அனுப்பினார்.

அப்படி வந்தவர்களில் கடைசியாகத் திரும்பிப் போனவர்கள் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர், ஜனாப் ஷுவாயிப் குரேஷீ, ஸ்ரீமதி அனசூயாபென் ஆகியவர்கள். இவர்களில் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் "எங் இந்தியா" பத்திரிகையின் பதிப்பாளர். இவர்கள் மூவரும் இரவு பத்து மணிக்கு மகாத்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். இவர்கள் போனவுடனே மகாத்மாவும் வேலையை நிறுத்திவிட்டுப் படுக்கப் போக எழுந்தார். சில நிமிஷங்களுக்கெல்லாம் ஜனாப் குரேஷியும் ஸ்ரீமதி அனசூயாபென்னும் மட்டும் திரும்பி வந்தார்கள். ஆசிரம எல்லையிலிருந்து ஆமதாபாத் புறப்படும் இடத்தில் போலீஸ் சூபரிண்டெண்டும் போலீஸ் ஜவான்களும் வந்திருக்கிறார்கள் என்றும், ஸ்ரீ சங்கர்லால் பாங்கரைக் கைது செய்து விட்டார்கள் என்றும், மகாத்மாவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்கள். இந்தச் செய்தி ஒரு நிமிஷத்துக்குள் ஆசிரமம் முழுவதும் பரவிவிட்டது. ஆசிரமத்தில் வசித்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் வந்து மகாத்மாவைச் சூழ்ந்து கொண்டார்கள்.

மகாத்மா நீண்டகாலமாகச் செய்த தவம் நிறைவேறியவரைப்போல் சந்தோஷமடைந்தார். ஜனாப் ஷுவாயிப் குரேஷியிடம், "இராஜகோபாலாச்சாரியார் விடுதலையாகி வருகிற வரையில் நீங்கள் 'எங் இந்தியா' வைப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் வந்ததும் அவரிடம் ஆசிரியப் பொறுப்பை ஒப்புவித்து விடுங்கள்!" என்று சொன்னார்.

ராஜாஜி டிசம்பர் கடைசியில் வேலூரில் 144-வது உத்திரவை மீறியதற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை அடைந்தார். அவர் விடுதலையாகும் தேதி நெருங்கியிருந்தது. காந்திஜி தீர்க்கமாக யோசித்து, "நான் சிறைப்பட்டால் என் கொள்கைக்கு இணங்க 'எங் இந்தியா'வை நடத்தக்கூடியவர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார்தான்" என்று முடிவுகட்டித் தெரிவித்திருந்தார். அதையே இப்பொழுதும் சொன்னார்.

பிறகு ஆசிரமவாசிகள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே பேசி அவர்களை உற்சாகப்படுத்தி சிரிப்பூட்டி விடைபெற்றார். இது முடிந்ததும் எல்லாரும் சேர்ந்து "வைஷ்ணவ ஜனதோ" கீதத்தைப் பாடும்படி சொன்னார். பிள்ளைப் பிராயத்தில் மகாத்மாவின் உள்ளத்தில் பதிந்த இந்தக் கீதத்தை ஒவவொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் மகாத்மா பாடச் சொல்வது வழக்கம். அவ்வாறே இச் சமயத்திலும் அந்தக் கீதத்தைப் பாடச்சொல்லிக் கேட்ட பிறகு மகாத்மா பிரயாணமானார்.

அந்தச் சமயத்தில் மௌலானா ஹஸரத் மோஹினி வந்த சேர்ந்தார். இவர் மகாத்மா காந்தியைப் பலதடவையும் எதிர்த்துப் போராடியவர். ஆமதாபாத் காங்கிரஸிலேகூட எதிர்த்தார். அப்படிப்பட்டவர் இப்போது கண்ணுங்கண்ணீருமாக வந்தார். இச்சமயத்தில் அவர்வந்தது மகாத்மாவுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இருவரும் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அஹிம்சை அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு இனிப் பூரண ஆதரவு தருவதாக மௌலானா கூறினார்.

காந்திஜியையும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கரையும் சபர்மதி சிறைக்குக் கொண்டு போனார்கள். அங்கே பலமான இரும்புக்கம்பிக் கதவுகள் போட்ட இரு அறைகளில் அவர்கள் அடைக்கப் பட்டார்கள். ஒவ்வொரு அறையிலும் ஒரு இரும்புக் கட்டில், ஒரு கயிற்று மெத்தை, ஒரு தலையணை, ஒரு ஜமக்காளம், ஒரு கம்பளம் இவை இருந்தன. அறைகளுக்கு வெளியே தாழ்வாரம் இருந்தது.

இந்தச் சிறை வாசல் வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் இன்னம் சில ஆசிரமவாசிகளும் சென்றார்கள். சிறைக்குள்ளே காந்திஜியை அனுப்பிக்தைவைச் சாத்திப் பூட்டும் வரையில் ஸ்ரீமதி கஸ்தூரிபாய் தமது பதியின் அருகில் இருந்துவிட்டுப் பின்னர் ஆசிரமத்துக்குத் திரும்பினார்.

காந்திஜியின் உள்ளத்தில் அன்றிரவு அமைதி குடிகொண்டிருந்தது. ஆனால் அன்னையின் உள்ளம் எப்படித் தத்தளித்தது என்பதை யாரால் விவரிக்க முடியும்? "இன்னம் எத்தனை காலம், எத்தனை தடவை, இப்படியெல்லாம் இந்தக் கிழவர் சிறைபுக வேண்டும் இந்த நாட்டுக்காக!" என்று அன்னையின் மனம் கஷ்டப்பட்டிருந்தால் அதில் வியப்பு ஒன்று மிராது. ஆனால் அவ்விதம் மனம் கஷ்டப்பட்டதாக ஸ்ரீமதி கஸ்தூரி பாய் அணுவளவும் காட்டிக்கொள்ளவில்லை.

மறுநாள் மார்ச்சு 11 - ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் ஆலன் பிரௌன் ஐ.சி.எஸ். அவர்களின் கோர்ட்டுக்கு மகாத்மாவையும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கரையும் அழைத்துச் சென்றார்கள். "எங் இந்தியா" பத்திரிகையில் 29-9-'21, 15-12-'21, 23-2-'22 தேதி இதழ்களில் வெளியான மூன்று கட்டுரைகளுக்காக 124-ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப்படுகிறதென்று தெரியவந்தது. மேற்படி கட்டுரைகளின் தலைப்புகள் "இராஜ விசுவாசத்தைக் கெடுத்தல்", "புதிரும் விடையும்", "சிங்கத்தின் பிடரி குலுங்குகிறது" என்பவையாகும். இந்தக் கட்டுரைகள் கோர்ட்டில் படிக்கப்பட்டன. இவை "எங் இந்தியா"வில் வெளியாயின என்பதற்கும் "எங் இந்தியா" வின் ஆசிரியர் மகாத்மாகாந்தி, பதிப்பாளர் ஸ்ரீ சங்கர்லால் பாங்கர் என்பதற்கும் சம்பிரதாயமான சாட்சியங்கள் பதிவு செய்யப் பட்டன. ஜில்லா மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் சார்பீல்டு, ஜில்லா போலிஸ் சூபரிண்டெண்ட் மிஸ்டர் ஹீலி, ஒரு ஸப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஸி.ஐ.டி. உத்தியோகஸ்தர் ஆகியவர்கள் சாட்சி சொன்னார்கள். சாட்சியங்களைப் பதிவுசெய்த பிறகு மிஸ்டர் ஆலன் பிரௌன் ஐ.சி,எஸ். குற்றப் பத்திரிகையைப் படித்தார். ஆமதாபாத் செ ஷன்ஸ் ஜட்ஜு மிஸ்டர் சி. என். புரும்பீல்டு ஐ.சி.எஸ். மன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடை பெற வேண்டும் என்று முடிவு கூறினர்.

1922-ஆம் வருஷத்திலே கூட ஒரு ஜில்லாவின் பிரதம உத்தியோகஸ்தர்கள், ஜட்ஜுகள் முதலியோர்கள் ஐரோப்பியர்களாகவே இருப்பதை வாசகர்கள் கவனிப்பார்களாக. அதைக் கவனித்தால்தான் மகாத்மாஜியின் தலைமையில் இந்தியாவின் விடதலைப் போர் வெற்றி அடைந்து இன்று நம்மை நாமே ஆண்டுகொள்ளும் நிலைமை ஏற்பட்டிருப்பது எவ்வளவு மகத்தான சாதனை என்பது தெரியவரும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
40. தண்டனை.


ஆமதாபாத் செ ஷன்ஸ் கோர்ட்டில் 1922-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 18-ஆம் தேதி அந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாபெரும் விசாரணை நடந்தது. முப்பது கோடி மக்களின் உள்ளத்தில் குடி கொண்டிருந்த மகத்தான தலைவர் கைதிக் கூண்டிலே நின்றார். அவர் பெயர் ஸ்ரீ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அன்னிய நாட்டிலிருந்து வந்த அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி ஒருவர் நீதிபதியின் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவர் பெயர் மிஸ்டர் ஸி. என். புரூம்பீல்டு ஐ. சி. எஸ்.

மேற்படி வழக்கு விசாரணையின் விவரங்கள் பத்திரிகையில் வெளியானபோது கைதிக் கூண்டிலே நின்றது மகாத்மா காந்தியா அல்லது பிரிட்டிஷ் சர்க்காரா என்றும் சந்தேகம் தோன்றும்படி யிருந்தது.

பாவம்! ஜில்லா ஜட்ஜ் மிஸ்டர் புரூம்பீல்டு திணறிப் போனார்! அவருடைய திணறலுக்கு அறிகுறி அவர் கூறிய தீர்ப்பில் தெளிவாக இருந்தது. பம்பாய் சர்க்காரின் அட்வகேட் ஜெனரல் ஸர். ஜே.டி. ஸ்ட்ராங்மான் அரசாங்கத்தின் சார்பாக மேற்படி வழக்கை நடத்தினார். எதிரிகளான காந்தி மகாத்மாவுக்கும் ஸ்ரீ சங்கர்லால் பாங்கருக்கும் வக்கீல் கிடையாது. எதிர் வழக்காடுவதாக அவர்களுக்கு உத்தேசமேயில்லை.

ஆரம்பத்தில் நீதிபதி குற்றப் பத்திரிகை வாசித்துக் காட்டினார். "எங் இந்தியா" வில் எழுதிய மூன்று கட்டுரைகளக்காக எதிரிகள் பேரில் 124-ஏ பிரிவின்படி வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அரசாங்கத்தின் பேரில் துவே ஷத்தை உண்டாக்குதல், வெறுப்பை வளர்த்தல் அநீதியைப் பெருக்குதல் ஆகியவை மேற்படி பிரிவின்கீழ் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்கள். இவற்றின் கருத்தை நீதிபதி விளக்கிச் சொல்லிவிட்ட, "மிஸ்டர் காந்தி!" நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா? அல்லது விசாரிக்கப்பட விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.

மகாத்மா:- குறிப்பிட்ட குற்றங்கள் எல்லாவற்றையும் செய்ததாக ஒப்புக் கொள்கிறேன். குற்றப் பத்திரிகையில் அரசரின் பெயரை குறிப்பிடாமல் விட்டிருக்கிறது. இது சரியான காரியம்.

நீதிபதி:- மிஸ்டர் பாங்கர்! நீங்கள் குற்றவாளி என்று ஒப்புக் கொள்கிறீர்களா! அல்லது கோர்ட்டில் விசாரணை கோருகிறீர்களா?

பாங்கர்:- குற்றவாளி என்று ஒப்புக்கொள்கிறேன்.

இந்தக் கட்டத்தில் அட்வகேட் ஜெனரல் ஸர் ஜே.டி. ஸ்ட்ராங்மான் குறுக்கிட்டார். "எதிரிகள் குற்றவாளிகள் என்று ஒப்புக்கொண்ட பொதிலும் முழு விசாரணையையும் நடத்த வேண்டும் என்ற நான் கோருகிறேன். சாட்சிகள் விசாரிக்கப் படவேண்டும்" என்றார்.

நீதிபதி:- நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. எதிரிகள் குற்றவாளி என்று ஒபபுக்கொண்ட பிறகு சாட்சி விசாரணை எதற்கு? தண்டனை விஷயம் தீர்மானிக்கப் படவேண்டும். அது சம்பந்தமாக நீங்கள் சொல்வதையும் மிஸ்டர் காந்தி சொல்வதையும் கேட்கத் தயாராயிருக்கிறேன்.

இதைக் கேட்டுக் காந்திஜி புன்னகை புரிந்தார். விசாரணைச் சடங்குகள் அவசியமில்லை என்னம் அபிப்பிராயமே மகாத்மாவுக்கும் இருந்தது. பிறகு ஸர் ஜே.டி. ஸ்ட்ராங்மான் எதிரிகளுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதற்குக் காரணங்களை எடுத்துச் சொன்னார். குறிப்பிட்ட இந்த மூன்று கட்டுரைகளும் ஏதோ யோசியாமல் எழுதப்பட்ட விஷயங்கள் அல்லவென்றும், நெடுநாளாகவே மிஸ்டர் காந்தி அரசாங்க துவேஷப் பிரசாரம் செய்து வந்திருக்கிறார் என்றும் எடுத்துக் கூறினார். "எங் இந்தியா" பத்திரிகையிலிருந்து இன்னும் சில கட்டுரைகளைத் தம் கட்சிக்கு ஆதாரமாகக் குறிப்பிட்டார். "இந்தக் கட்டுரைகளில் மிஸ்டர் காந்தி அஹிம்சையை வற்புறுத்தி யிருக்கிறார் என்பது உண்மைதான். அதனால் ஏதேனும் பிரயோஜனம் உண்டா? இந்தக் கேள்விக்குச் சௌரி சௌராவிலும், சென்னையிலும், பம்பாயிலும் நடந்த சம்பவங்கள் பதில் சொல்லுகின்றன. இந்தச் சம்பவங்களினால் எவ்வளவோ பேர் கஷ்ட நஷ்டங்களை அடைந்திருக்கிறார்கள். இதையெல்லாம் கவனித்துக் கோர்ட்டார் தண்டனையைத் தீர்மானிக்க வேண்டும்" என்று கூறி முடித்தார்.

நீதிபதி:-- மிஸ்டர் காந்தி! தண்டனை சம்பந்தமாக நீங்கள் ஏதாவது சொல்லிக்கொள்ள விரும்புகிறீர்களா?

காந்திஜி:-- நான் ஒரு வாக்கு மூலம் கொடுக்க விரும்புகிறேன்.

நீதிபதி:-- வாக்குமூலத்தை எழுத்தில் எழுதிக்கொடுத்து விட்டால் ரிகார்டில் சேர்த்துக் கொள்வேன்.

காந்திஜி:-- வாக்கு மூலம் எழுதியிருக்கிறேன். கோர்ட்டில் படித்துவிட்டுக் கொடுத்து விடுகிறேன்.

மகாத்மாவின் விருப்பத்தின்படி வாக்கு மூலத்தைக் கோர்ட்டில் படிப்பதற்கு நீதிபதி சம்மதம் கொடுத்தார்.

எழுதியிருந்த வாக்கு மூலத்தைப் படிப்பதற்கு முன்னால் மகாத்மா வாய்மொழியாகச் சில வார்த்தைகள் சொன்னார்.

"அட்வகேட் ஜெனரல் என்னைப்பற்றி கூறியவற்றை நான் முழுதும் ஒப்புக்கொள்கிறேன். இப்போதுள்ள அரசாங்க முறையின் மீது அப்ரீதியை உண்டாக்குவதில் நான் அளவில்லாத ஆத்திரம் கொண்டிருந்தேன். "எங் இந்தியா"வுக்கு ஆசிரியராவதற்கு முன்னாலேயே இந்த வேலையை ஆரம்பித்து விட்டேன். பம்பாய், சென்னை, சௌரி-சௌரா சம்பவங்களுக்கு என் பேரில் அட்வகேட் ஜெனரல் பொறுப்புச் சுமத்துவதையம் நான் ஒப்புக்கொள்கிறேன். நெருப்புடன் விளையாடுகிறேன் என்பது எனக்குத் தெரிந்துதான் இருந்தது. அஹிம்சை என்னுடைய மதத்தின் முதற்கொள்கை; கடைசிக் கொள்கையும் அதுவே. ஆனாலும் என்னுடைய தேசத்துக்கு மகத்தான தீங்கிழைத்த ஆட்சி முறையை என்னால் சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை. ஆகவே இந்தப் போரில் துணிந்திறங்கினேன். என்னுடைய நாட்டு மக்கள் சில இடங்களில் வெறி கொண்டு பயங்கரச் செயல்களை நிகழ்த்திவிட்டார்கள். அதன் பொறுப்பை நான் தட்டிக் கழிக்க விரும்பவில்லை. இந்தக் குற்றத்துக்கு அதிகமான தண்டனை எதுவோ அதை எனக்கு விதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ..... "

உலக சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நடை பெற்றிருக்கின்றன. ஆனால் எந்தக் கோர்ட்டிலாவது, எந்த வழக்கிலாவது, இப்படிக் 'குற்றவாளி' என்று கைதிக்கூண்டில் நின்றவர் ஒருவர், "எவ்வளவு அதிகமான தண்டனை உண்டோ அதை எனக்கு அளிக்க வேண்டும்!" என்று கேட்டதுண்டா? கிடையாது. இத்தகைய விந்தை இந்தப் புண்ணிய பூமியிலே தான் நடந்தது. ஆமதாபாத் செ ஷன்ஸ் கோர்ட்டில் 1922-ஆம் வருஷம் மார்ச்சு 18 - ஆம் தேதி நடந்தது.

காந்திஜி பின்னர் தாம் எழுத்து மூலம் ஏற்கனவே தயாரித்திருந்த வாக்கு மூலத்தைப் படித்தார். அந்த வாக்கு மூலத்தில், தாம் எப்படிப் பூரண இராஜ விறுவாசியாகத் தமது வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாக ஏமாற்றமடைந்து, முடிவில் அரசாங்கத்தின்மேல் விரோதத்தைப் பரப்புவதையே தம்முடைய வாழ்க்கை இலட்சியமாகக்கொள்ள நேர்ந்தது, என்பதை விவரித்தார்.

அந்த வாக்கு மூலத்தில் காந்திஜி கூறிய வார்த்தை ஒவ்வொன்றும் சத்தியத்தின் ஒளியினால் சுடர்விட்டுப் பிரகாசித்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளையும் இந்திய மக்களின் மாசுகளையும் ஒருங்கே தகிக்கும் அக்கினி ஜ்வாலையாக அந்த வாக்குமூலம் திகழ்ந்தது.

"தென்னாப்பிரிக்காவில் 1893-ஆம் ஆண்டில் என்னுடைய பொது வாழ்க்கை ஆரம்பமாயிற்று. அந்த நாட்டில் பிரிட்டிஷ் அதிகாரத்துடன் எனக்கேற்பட்ட முதல் அனுபவம் அவ்வளவு சந்தோஷகரமாயில்லை. நான் இந்தியனாயிருந்த காரணத்தினால் எனக்கு மனித உரிமைகளே இல்லை என்று அறிந்தேன்.

இதனால் நான் திகைப்படைந்து விடவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி நல்ல ஆட்சிதான் என்றும், இந்தியர்களை நடத்தும் முறை அதில் ஏற்பட்ட சிறு கேடு என்றும், அந்தக் கேட்டைப் போக்கிவிடலாம் என்றும் நம்பினேன். ஆகையால் சர்க்காருடன் மனப்பூர்வமாக ஒத்துழைத்தேன்.

1899-ல் போயர் யுத்தம் ஏற்பட்ட போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கே அபாயம் நேர்ந்தது. அந்த நிலைமையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு என் மனப் பூர்வமான ஊழியத்தை அளித்தேன். போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்குப் பணிவிடை செய்வதற்காகத் தொண்டர்படை திரட்டினேன். 1906-ஆம் ஆண்டில் ஸூலூ கலகத்தின்போதும் அத்தகைய ஊழியம் புரிந்தேன். இந்த ஊழியங்களுக்காகத் தென்னாப் பிரிக்கா சர்க்கார் எனக்கு மெடல்கள் வழங்கினர். இந்திய சர்க்காரும் 'கெய்ஸரி ஹிண்ட்' தங்கப் பதக்கம் எனக்கு அளித்தார்கள். இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் யுத்தம் மூண்ட போது நான் இங்கிலாந்தில் இருந்தேன். லண்டனில் வசித்த இந்தியர்களைக்கொண்டு யுத்த சேவைக்குத் தொண்டர் படை திரட்டினேன். கடைசியாக 1918-ல் டில்லியில் நடந்த யுத்த மகா நாட்டில் லார்ட் செம்ஸ்போர்டு செய்த விண்ணப்பத்தை முன்னிட்டு, என் உடல் நலம் கெட்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், கெயீரா ஜில்லாவில் சேனைக்கு ஆள் திரட்டும் வேலை செய்தேன். இந்த ஊழியங்களையெல்லாம் நான் செய்த போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் என்னுடைய நாட்டாருக்குப் பூரண சம அந்தஸ்துக் கிடைக்கப்போகிறதென்று எதிர்பார்த்தேன்.

ராவ்லட் சட்டத்தின் மூலம் எனக்கு முதலாவது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அச்சட்டம் என்னுடைய ஜனங்களின் சுதந்திரத்தை அடியோடு பறிப்பதாயிருந்தது. பிறகு பஞ்சாப் பயங்கர சம்பவங்கள் தொடர்ந்தன. இந்தியாவில் முஸ்லிம்களுக்குப் பிரிட்டிஷ் முதல் மந்திரி அளித்த வாக்குறுதி காற்றில் விடப்பட்டதையும் கண்டேன்.

இவ்வளவுக்கும் பிறகு கூட, அமிருதசரஸ் காங்கிரஸில் மாண்டகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை ஒப்புக்கொண்டு நடத்திவைக்க வேண்டும் என்று நான் போராடினேன். அதன் மூலம் பஞ்சாப்-கிலாபத் அநீதிகளுக்குப் பரிகாரம் கிடைக்கும் என்று நம்பினேன்.

என்னுடைய நம்பிக்கை பாழாயிற்று. பஞ்சாப் கொடுமைகளுக்குக் காரணமாயிருந்த அதிகாரிகள் அவர்களுடைய உத்தியோகங்களில் நீடித்திருந்தார்கள். புதிய சீர்திருத்தங்களின் மூலம் இந்தியாவின் செல்வம் மேலும் சுரண்டப்படும் என்பதும் இந்தியாவின் அடிமைத்தனம் நீடிக்கும் என்பதும் தெளிவாயின."

பிரிட்டிஷ் ஆட்சியினால் இந்தியா அடைந்துள்ள தீங்குகளை மகாத்மா விவரித்து விட்டும் மேலும் கூறியவதாவது:-

"இந்திய மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக ஏற்பட்ட சட்டங்களுக்குள்ளே 124-ஏ முதன்மை ஸ்தானம் வகிக்கிறது. இந்திய மக்களின் பேரன்புக்குப் பாத்திரமான தேச பக்தர்கள் பலர் மேற்படி சட்டத்தின்கீழ்ச் சிறைப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இந்தச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப் பட்டதை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். தனிப்பட்ட அதிகாரி யார் பேரிலும் எனக்கு வெறுப்பு கிடையாது. அரரரிடத்திலும் எனக்கு அப்ரீதி கிடையாது. ஆனால் இந்தியாவில் முன் நடந்த எந்த ஆட்சியைக் காட்டிலும் அதிக தீங்கு செய்திருக்கும் பிரிட்டிஷ் ஆட்சி முறையை வெறுப்பது என்னுடைய கடமை. இந்த ஆட்சி முறையில் விசுவாசம் வைப்பது பாவம். எனக்கு விரோதமான சாட்சியங்களாகக் குறிப்பிட்ட கட்டுரைகளை எழுதியது நான் செய்த பெரும் பாக்கியம்.

சட்டப் பிரகாரம் நான் செய்திருப்பது பெருங்குற்றந்தான்; ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் அது என்னுடைய பரம தர்மம். ஆகவே நீதிபதியாகிய தாங்கள் என்னை குற்றமற்றவன் என்று கருதினால் தங்களுடைய உத்தியோகத்தை ராஜினாமா செய்ய வேண்டும். என்னைக் குற்றவாளி என்று கருதினால் சட்டப்படி அதிகமான தண்டனை எது உண்டோ, அதை அளிக்கவேண்டும்"

இவ்விதம் மகாத்மா காந்தி உலக சரித்திரத்திலேயே பிரசித்தி பெறக்கூடிய வாக்குமூலத்தைப் படித்து முடித்தார். சற்று நேரம் கோர்ட்டில் நிசப்தம் நிலவியது. கோர்ட்டில் இம்மாதிரி வாக்கு மூலத்தை யாரும் அதுவரை கேட்டதுமில்லை; கேள்விப்பட்டதுமில்லை.

பின்னர், நீதிபதி புரூம்பீல்டு தமது கடமையை நினைவு படுத்திக்கொண்டு ஸ்ரீ சங்கர்லால் பாங்கரைப் பார்த்து நீங்கள் ஏதாவது சொல்லப்போகிறீர்களா? என்று கேட்டார்.

அதற்கு ஸ்ரீ பாங்கர், "குறிப்பிட்ட கட்டுரைகளை அச்சிட்டுப் பிரசுரித்தது என்னுடைய பாக்கியம் என்று கருதுகிறேன். நான் குற்றவாளி என்று ஒப்புக்கொள்கிறேன். தண்டனையைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை" என்றார்.

நீதிபதி புரூம்பீல்டு பின்வரும் தீர்ப்பை எழுதிக் கோர்ட்டில் படித்தார்:-

"மிஸ்டர் காந்தி! குற்றவாளி என்று ஒப்புக்கொண்டதால் என்னுடைய வேலையை ஒரு விதத்தில் சுலபமாக்கிவிட்டீர்கள். ஆனாலும் உங்களுக்குத் தண்டனை என்ன கொடுப்பது என்பது எந்த நீதிபதியையும் திணறச் செய்யக் கூடிய கடினமான பிரச்னைதான். சட்டமானது மனிதர்களுக்குள் பெரியவர்கள் சின்னவர்கள் என்ற பேதம் காட்டக்கூடாது. ஆனபோதிலும் நான் விசாரித்திருக்கிற அல்லது விசாரிக்கக் கூடிய பிற குற்றவாளிகளுடனே உங்களை ஒன்றாகப்பாவிப்பது இயலாத காரியம். கோடிக் கணக்கான உங்கள் தேச மக்கள் உங்களை மாபெரும் தலைவராகவும் மகத்தான தேச பக்தர் என்றும் கருதுகிறார்கள் என்பதை நான் மறந்துவிட முடியாது. உங்களுடைய அரசியல் கொள்கைகளுடன் மாறுபட்டவர்களும் உங்களை உயர்ந்த இலட்சியங்களுடைய உத்தம புருஷராகக் கருதுகிறார்கள். எனினும் நான் உங்களை ஒரே ஒரு முறையில்தான் பார்க்க வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் சட்டத்துக்கு உட்பட்ட பிரஜை; சட்டத்தை மீறிக் காரியம் செய்ததாக நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் பலாத்காரத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்து வந்திருப்பதை நான் மறந்துவிட வில்லை. பல சமயங்களில் பலாத்காரம் நிகழாமல் தடுப்பதற்கும் முயன்றிருக்கிறீர்கள். ஆனாலும் உங்களுடைய அரசியல் பிரசாரத்தின் இயல்பும், யாரிடையே பிரசாரம் செய்தீர்களோ அவர்களுடைய இயல்பும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்தும் உங்களுடைய பிரசாரம் பலாத்காரத்திலேயே வந்துமுடியும் என்பதை எப்படி நீங்கள் அறிந்து கொள்ளாமலிருந்தீர்கள் என்பதை என்னால் அறிந்து கொள்ளவே முடியவில்லை.

உங்களைச் சுதந்திரமாக விட்டுவைப்பது எந்த அரசாங்கத்துக்கும் முடியாத காரியமாக செய்துவிட்டீர்கள். இதைக் குறித்து இந்தியா தேசத்தில் உண்மையாக வருத்தப்படாதவர்கள் யாருமே இல்லை. உங்களுக்கு நான் செலுத்தவேண்டிய கடமையையும் பொது நன்மைக்காக நான் செய்யவேண்டிய கடமையையும் சீர்தூக்கிப் பார்த்துத் தண்டனை விஷயமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். பன்னிரண்டு வருஷங்களூக்கு முன்னால் கிட்டத்தட்ட இதே விதமான வழக்கு ஒன்று இதே சட்டத்தின் கீழ் நடைபெற்றது. பால கங்காதர திலகரின் வழக்கைச் சொல்லுகிறேன். அவர் மீது முடிவாக விதிக்கப்பட்ட தண்டனை ஆறு வருஷம் வெறுங்காவல். ச்ரி திலகருடன் உங்களை ஒப்பிட்டு நடத்துவது நியாயமே என்று நீங்களே ஒப்புக் கொள்வீர்கள். ஒவ்வொரு குற்றத்துக்கும் இரண்டு வருஷம் வீதம் மொத்தம் ஆறு வருஷம் வெறுங்காவல் தண்டனை உங்களுக்கு அளிப்பது என் கடமை என்று கருதி அவ்விதமே தீர்ப்பளிக்கிறேன். ஆறு வருஷத்துக்கு முன்னதாகவே இந்தியாவின் நிலைமையில் ஏற்படும் மாறுதலினால் உங்களுடைய தண்டனைக் காலத்தைக் குறைத்து அரசாங்கம் உங்களை விடுதலைசெய்வது சாத்யமானால் அதன்பொருட்டு என்னைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி வேறு யாருக்கும் இராது."

இந்தியாவை அரசு புரிய வந்த ஆங்கிலேய அதிகாரிகளில் ஒரு சிலர் தீர்க்க திருஷ்டியும் பெருந்தன்மையும் படைத்தவர்களாயிருந்திருக்கிறார்கள். அவர்களில் மிஸ்டர் புரூம்பீல்டும் ஒருவர். மகாத்மாவின் பெருமையையும் அவருடைய தலைமையில் இந்தியா சுதந்திரம் அடையப் போகிறது என்பதையும் ஒருவாறு மிஸ்டர் புரூம்பீல்டு உணர்ந்திருந்தார். அத்தகைய உத்தம புருஷரைத் தண்டிக்க வேண்டி யிருக்கிறதே என்று கஷ்டப்பட்டுக் கொண்டே அவர் தீர்ப்பளித்திருப்பது நன்றாய்த் தெரிகிறதல்லவா?

பின்னர், ஸ்ரீ சங்கர்லாலுக்கு ஒரு வருஷம் வெறுங்காவலும் ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிபதி அளித்தார். தீர்ப்பைக் கேட்ட பிறகு காந்திஜியும் தம்முடைய திருப்தியைப் பின் வருமாறு தெரிவித்துக் கொண்டார்:-

"ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். லோகமான்ய பாலகங்காதரதிலகருடன் என்னை ஒப்பிட்டுக் கூறியதைப் பெறற்கரும் பேறாகவும் கருதுகிறேன். எனக்குத் தாங்கள் கொடுத்திருக்கும் தண்டனையைக் காட்டிலும் குறைவாக வேறு எந்த நீதிபதியும் கொடுத்திருக்க முடியாது. தாங்கள் என்னை நடத்தியதைக் காட்டிலும் மரியாதையாக யாரும் நடத்தி யிருக்கவும் முடியாது!"

இதைக் கேட்டுவிட்டு நீதிபதி புரூம்பீல்டு கோர்ட்டை விட்டுச் சென்றார். மனதில் பெரும் பாரத்துடனேதான் அவர் சென்றிருக்க வேண்டும். காந்திஜியோ முகமலர்ச்சியுடன் தம்மைச் சுற்றி நின்றவர்களைப் பார்த்தார். ஆசிரம வாசிகளும் நண்பர்களும் அவருடைய பாதங்களைத் தொட்டு விடை பெற்றுக் கொண்டார்கள். இப்படிச் செய்கையில் சிலர் கண்ணீர் விட்டார்கள்; சிலர் விம்மி அழுதார்கள். காந்திஜி ஒவ்வொருவருக்கும் ஆறுதலாகச் சில வார்த்தைகள் சொல்லி தைரியப்படுத்தினார். ஸ்ரீ சங்கர்லால் பாங்கரும் புன்னகையுடன் விளங்கினார். அவர் குதூகலமாயிருப்பதற்குக் கேட்பானேன்? உலக சிரேஷ்டராகிய உத்தம புருஷருடன் கைதிக் கூண்டில் நின்று தண்டனை அடைந்து சிறை செல்லுவதற்கு எவ்வளவு அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்?

நண்பர்கள் அனைவரும் மகாத்மாஜி வற்புறுத்தியதன் பேரில் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றார்கள். பிறகு போலீஸார் மகாத்மாவையும் ஸ்ரீசங்கர்லால் பாங்கரையும் சபர்மதி சிறைக்குக் கொண்டு போனார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
41. சிறை வாழ்வு


பூனாவுக்குச் சமீபத்தில் எரவாடா என்ற பெயரையுடைய ஊர் ஒன்று இருக்கிறது. அந்த ஊரைப் பற்றியாவது அதில் உள்ள பெரிய சிறைச் சாலையைப் பற்றியாவது அதற்கு முன்பு பலருக்குத் தெரியாது. தெரிந்த சிலரும் அந்த ஊரைப் பற்றி அதிகமாகச் சிந்தித்ததில்லை. திடீரென்று எரவாடா சிறை இந்தியா தேசத்தின் கவனத்தைக் கவர்ந்தது. சரித்திரத்திலே தனக்கு ஓர் இடத்தையும் சம்பாதித்துக் கொண்டது.

காந்திஜியின் விசாரணை, தீர்ப்பு எல்லாம் முடிந்ததும் அவரைச் சபர்மதி சிறையிலிருந்து எரவாடாவிலிருந்த பெரிய சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தார்கள்.

சிறைக் கதவு மூடியதும் மகாத்மாவின் உள்ளத்தில் நீண்ட காலமாக அவரை விட்டுப் பிரிந்திருந்த சாந்தி மீண்டும் வந்து குடிகொண்டது. அவ்வாறே வெளியில் இந்தியா தேசத்தின் நாடு நகரங்களிலும் அமைதி குடிகொண்டிருந்தது.

காந்திஜி ஆறு வருஷம் தண்டனை அடைந்த செய்தி மக்களின் உள்ளத்தில் பெருங் கலக்கத்தை உண்டாக்கியது. ஆயினும் அதன் காரணமாக நாட்டில் எங்கும் கலகம் அல்லது குழப்பம் ஏற்படவில்லை. கடையடைப்பு, ஹர்த்தால் முதலியவையும் நடைபெறவில்லை. இது விஷயத்தில் காந்திஜியின் இறுதிக் கட்டளையை நாட்டு மக்கள் பரிபூரணமாக நிறைவேற்றி வைத்தார்கள்.

"நான் சிறைப்பட்டால் கடையடைப்பு வேண்டாம்; கூட்டமும் வேண்டாம்!" என்று காந்திஜி திருப்பித் திருப்பி வற்புறுத்தியிருந்தது மக்களின் மனதைப் புண்படுத்தியிருந்தது. அதைக் காட்டிலும் சௌரி சௌரா சம்பவங் காரணமாக மகாத்மா மேற்கொண்ட பிராயச்சித்தமும் மக்களின் கண்களைத் திறந்திருந்தது.

'அஹிம்சை' என்று மகாத்மா சொல்வது ஏதோ காரணார்த்தமாக வெளிக்குச் சொல்லும் விஷயம் அல்லவென்பதையும், அஹிம்சை அவருடைய ஜீவிய தர்மம் என்பதையும் மக்கள் அறிந்துகொண்டு விட்டார்கள். அவ்விதம் அறிந்துகொண்டிருந்ததைக் காந்திஜி சிறைப்பட்ட சமயத்தில் நிரூபித்தும் காட்டிவிட்டார்கள்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாத்மாஜி திரும்பி வந்ததிலிருந்து அவர் விஷயத்தில் இந்திய அரசாங்கத்தார் தனி மரியாதையுடனேயே நடந்து வந்தார்கள். அவருடைய நடவடிக்கைகளைத் தடை செய்ய நேர்ந்த காலங்களிலும் சர்வ ஜாக்கிரதையுடன் காரியம் செய்தார்கள். இரண்டு மூன்று தடவை அவரைக் கைது செய்து உடனே விட்டு விட்டார்கள். கோர்ட்டில் விசாரணை நடந்து மகாத்மாவைத் தண்டித்துச் சிறைக்கு அனுப்பியது இதுதான் முதல் தடவை! இந்த விசாரணையின் போது நீதிபதி புரூம் பீல்டு வெகு கண்ணியமாக நடந்து கொண்டார். மகாத்மாவை மிக்க மரியாதையுடன் நடத்தினார். தீர்ப்பிலேயே "மகாத்மா மற்ற சாதாரணக் கைதியைப் போன்றவர் அல்ல" என்பதையும் குறிப்பிட்டார்.

இதனாலெல்லாம் சிறையிலும் மகாத்மாவைச் சரியாக நடத்துவார்கள் என்றும் அவருக்கு அவசியமான சௌகரியங்களைச் செய்து கொடப்பார்கள் என்றும் அனைவரும் எதிர்பார்த்தார்கள். முப்பத்தைந்து கோடி மக்களின் ஒப்பற்ற தலைவரை சிறையிலே அடைத்தாலும், அங்கேயும் சமஅந்தஸ்துள்ள அரசரை நடத்துவதுபோல் அல்லவா நடத்த வேண்டும்! உலகத்தை உய்விக்க வந்த அவதார புருஷர் என்று கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் தலைவரை எவ்வளவு மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று சொல்லவும் வேண்டுமா?

ஆம்; சொல்ல வேண்டியதில்லைதான். இந்திய அதிகார வர்க்கத்தார் எவ்வளவு மோசமானவர்களாயினும் அவர்களுக்குக்கூட இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் எல்லாரும் நினைத்தது தவறு என்று சீக்கிரத்திலேயே தெரியவந்தது! அந்த விஷயத்தை அவர்களுக்கு வற்புறுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் நேரிட்டது. இந்த அவசியத்தை நேரில் பார்த்து வற்புறுத்திச் சொன்னவர் நம்முடைய தலைவர் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் அவர்கள்.

காந்திஜியின் விசாரணை நடைபெற்ற சமயத்தில் ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் வேலூர் சிறைச் சாலையில் இருந்தார். காந்திஜி சிறைப்பட்ட சில தினங்களுக் கெல்லாம் ராஜாஜி விடுதலையடைந்தார். அவரும் மகாத்மாவின் கடைசிப் புதல்வரான ச்ரி தேவதாஸ் காந்தியும் மகாத்மாவைப் பேட்டி காண்பதற்காகப் பூனாவுக்குப் போனார்கள். சிறையில் மகாத்மாவைக் கண்டு பேசினார்கள். அங்கே கண்டதும் கேட்டறிந்ததும் அவர்களுடைய மனதைப் பெரிதும் புண்படுத்தின. மகாத்மாவைச் சிறையில் சரியானபடி நடத்தவில்லை யென்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். மறுநாள் ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியார் பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கை விடுத்தார். "எங் இந்தியா" வில் ஒரு கட்டுரையும் எழுதினார். உண்மையுடனும் உணர்ச்சி வேகத்துடனும் எழுதப்பட்ட அக்கட்டுரையின் சாராம்சம் பின்வருமாறு:-

"கைதிக் கூண்டில் நின்ற மகாத்மாவைப் பார்த்து நீதிபதி புரூம்பீல்டு மிக அழகான சில வார்த்தைகளைச் சொன்னார். இதுவரை உங்களைப்போன்ற ஒருவரை நான் விசாரித்ததும் இல்லை; இனி விசாரிக்கப்போவதுமில்லை. இந்த தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் உங்களை ஒரு மகா தேசபக்தராகவும் மாபெருந் தலைவராகவும் எண்ணிப் போற்றுகிறார்கள். உங்களுடன் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கொண்டவர்களும் உங்களை உத்தம இலட்சியங்களையுடைய சத்புருஷர் என்று மதிக்கிறார்கள்.'

"இவ்விதம் நம்முடைய எதிரி என்று நினைக்கக்கூடியவர் பகிரங்கமாகச் சொன்னதிலிருந்து மகாத்மாவின் உடலைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள சிறை அதிகாரிகள் தங்களுக்கு எப்பேர்ப் பட்ட மகா பாக்கியம் கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து நடப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்; அற்பத்தனமான பழி வாங்கும் நோக்கத்துடன் காந்திஜியைச் சிறையில் நடத்த மாட்டார்கள் என்று நம்பினோம். இப்படியெல்லாம் எதிர்பார்த்த தில் மிகப் பெரும் ஏமாற்றம் அடைந்தோம்.

"காந்திஜியின் கடைசிப் புதல்வர் ஸ்ரீ தேவதாஸும் நானும் மகாத்மாவின் விசாரணையின்போது கோர்ட்டில் இருக்கக் கொடுத்து வைக்கவில்லை. எங்கள் கடமையில் ஈடுபட்டிருந் தோம். ஆகையால் ஏப்ரல் 1- மகாத்மாவைச் சிறை விதிகளின்படி பேட்டி கண்டு வருவதற்காகச் சென்றோம். சிறை வாசலில் நின்று இரும்புக் கம்பிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். சில நிமிஷத்துக்கெல்லாம் அரைத் துணி மட்டும் உடுத்த அந்த மெலிந்த உருவம் குதித்தோடி வந்ததைக் கண்டதும் எங்கள் இருதயம் நின்றுவிடும் போலிருந்தது. ஜெயில் சூபரிண்டெண்டின் அறைக்குள் அவரை இட்டுச் சென்று, எங்களையும் அங்கு வரச் சொல்லி அழைத்துச் சென்றார்கள். அதிகார வர்க்க அமுல் சட்டத்தின் பிரகாரம் சிறையின் அரசராகிய சூபரிண்டெண்ட் துரை தம்முடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். மகாத்மாஜியோ நின்று கொண்டே எங்களுடன் பேசும்படி நேர்ந்தது. பேச்சின் நடுவே ஜெயில் சூபரிண்டெண்டும் ஜெயிலரும் அடிக்கடி குறுக்கிட்டபடியால் எங்களுடைய சம்பாஷணையின் நேரமும் எதிர் பார்த்ததைவிட நீண்டு விட்டது.

"என்னதான் மூடி மறைக்கப் பார்த்தாலும் எங்களுக்கு உண்மை இன்னதென்பது தெரிந்து விட்டது. அதனால் அளவில்லா ஏமாற்றமும் உண்டாயிற்று. சிறை அதிகாரிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொறுப்பு எவ்வளவு மகிமை வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்ளவில்லை யென்பதைக் கண்டோம். நீதிபதி புரூம்பீல்டின் பண்பாடு இவர்களுக்கில்லை. ஆகையால் காந்திஜி எப்படிப் பட்டவர் என்பதையும் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. கெயிஸரையும், நெப்போலியனையும் விட எத்தனையோ மடங்கு உயர்ந்த மகான் என்பதை இவர்கள் அறியவில்லை. உலகமே போற்றி வணங்கக்கூடிய அவதார புருஷர் நம்மிடைய பொறுப்பில் விடப்பட்டிருப்பது நம் பூர்வ ஜன்ம பாக்கியம் என்று இவர்கள் பெருமையடையவில்லை. சோக்ரதர் என்ன, கௌதமபுத்தர் என்ன, ஏசுநாதர் என்ன, இப்படிப்பட்ட மகா புருஷர்களின் வரிசையில் சேர்த்து மண்ணுலகும் விண்ணுலகும் வணங்கக்கூடிய பெரியவருக்குச் சிசுருஷை செய்யும் பேறு கிடைத்ததே என்று எண்ணி இவர்கள் இறும்பூது கொள்ளவில்லை. ஏசுவையும் சோக்ரதரையும் கஷ்டப் படுத்தியவர்கள் அறியாமையில் மூழ்கியவர்கள் ஆனால் காந்திஜி எத்தகையவர் என்பதை அவருடைய எதிரிகள்கூட உணரும்படி உலகப் பிரமுகர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள். ஆகவே காந்திஜியைச் சிறையில் கஷ்டப்படுத்தும் இந்த அற்ப அதிகாரிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது இந்தப் பெரும் பொறுப்பை இந்த அற்ப புத்தியுள்ள சிறை அதிகாரிகளிடம் ஒப்புவித்து விட்ட சர்க்காரைப் பற்றித்தான் என்னவென்று கூறுவது!

"காந்திஜி தம்முடைய சொந்தப் படுக்கையை உபயோகிக்கவும் அநுமதிக்கப்படவில்லை. சிறையில் கொடுக்கும் தம்பளியில் படுத்துக் கொள்கிறார். தலையணை கூடக் கொடுக்க வில்லை.

"காந்திஜி பெரும்பாலும் பழ உணவு அருந்தி வாழ்கிறவர் என்பது பிரசித்தம். ஆயினும் சிறையில் அவருக்கு இரண்டு ஆரஞ்சுப்பழம் எண்ணிக் கொடுக்கிறார்கள். கொஞ்சம் ரொட்டியும் வெள்ளாட்டுப் பாலும் அளந்து கொடுக்கிறார்கள். இந்தச் சொற்ப உணவைக்கொண்டே காந்திஜியும் வற்றி உலர்ந்து போன உடம்பைக் காப்பாற்றிக் கொள்வார். அவருக்குப் போதிய உணவு தரவில்லையே என்பதற்காக நான் வருத்தப்பட வில்லை. ஆனால் சிறை அதிகாரிகள் இந்தத் தெய்வ மனிதரை அறிந்து நடக்கத் தெரியாத குருடர்களாயிருக்கிறார்களே என்றுதான் வருந்துகிறேன்.

"தூக்குத் தண்டனை கைதிகளை தனி அறையில் அடைத்திருப்பதுபோல் மகாத்மாஜியையும் அடைத்து வைத்திருக்கிறார்கள். இரவில் அறையில் போட்டுப் பூட்டிவிடுகிறார்கள். வராந்தாவில் படுக்கும்படி விட்டால் ஓடிப்போய் விடுவார் என்ற பயம் போலும்! பக்கத்தில் பேச்சுத் துணைக்கு ஒரு மனிதரும் கிடையாது. அவர் வழக்கமாகப் பாராயணம் செய்யும் மதநூல்கள் வேண்டுமென்றால் சர்க்காருக்கு விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டுமாம்! படிக்கப் புத்தகமும் இல்லாமல் பேச்சுத் துணைக்கு ஆளும் இல்லாமல் தனி அறையில் மகாத்மாஜியை வைத்திருப்பது என்றால், இதை வெறுங்காவல் என்று சொல்ல முடியுமா? கடுங்காவலை விடக் கேடானது ஆகாதா?

இதெல்லாம் ஏமாற்றமாகவும் துயரமாகவுமே இருக்கிறது. ஆயினும் நம்முடைய பெருந்தலைவரை இந்தக் கஷ்டங்கள் எல்லாம் ஒன்றும் செய்துவிட மாட்டா என்று நாம் ஆறுதல் அடையலாம். அரசாங்கத்தின் அற்பத்தனத்தைக் கண்டு நாம் கோபம் கொள்ளக் கூடாது. அது நம் தலைவரின் போதனைக்கு மாறானது. பொறுமையைக் கடைப்பிடித்து மகாத்மாவின் கட்டளைகளைக் காரியத்தில் நிறைவேற்ற வேண்டும். அதுதான் நமது கடமை."

இவ்விதம் ராஜாஜி விடுத்த அறிக்கையானது தேசமெங்கும் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கியது. அதிகார வர்க்கத்தின் தூங்கும் மனச்சாட்சிகூட விழித்து எழுந்தது. மகா வீரனாகிய நெப்போலியனை ஸெண்ட் ஹெலீனா என்னும் தீவில் சிறைப்படுத்தித் துன்புறுத்திய பழிச்சொல் பிரிட்டிஷாரை ஏற்கனவே அடைந்திருக்கிறது. மகாத்மாவைச் சிறையில் கேவலமாக நடத்தினார்கள் என்னும் அபகீர்த்தியும் தங்களை வந்து அடைவதற்குப் பிரிட்டிஷாரே விரும்பவில்லை. உடனடியாக மகாத்மாவை நடத்தும் விதத்தில் சில நல்ல மாறுதல்கள் ஏற்பட்டன. ஆனால் செய்த தவறை ஒப்புக்கொண்டால் அதிகார வர்க்கத்தின் மதிப்புக்குப் பங்கம் வந்து விடுமல்லவா? ஆகையால் ராஜாஜியின் அறிக்கையில் கண்ட விஷயங்களை மறுத்துச் சர்க்கார் அறிக்கை ஒன்றும் வெளி வந்தது. அதில் காந்திஜிக்குச் சிறையில் செய்து கொடுத்திருக்கும் சௌகரியங்களைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆனால் இம்மாதிரி முழுப் பூசினிக்காயைச் சோற்றில் மறைக்கும் காரியம் ராஜாஜியிடம் பலிக்குமா? மீண்டும் ராஜாஜி விடுத்த அறிக்கையில், சர்க்கார் அறிக்கையை வரிவரியாக எடுத்துப் பிய்த்து வாங்கிவிட்டார். அந்த அறிக்கையில் குறிப்பிட்ட வசதிகள் எல்லாம் தாம் மகாத்மாவைச் சந்தித்த பிறகு செய்து கொடுத்தவையாகவே இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டினார்.

முடிவில் *காந்திஜியைச் சிறையில் நல்லபடியாக நடத்துவதற்கு ஏற்பாடு ஆயிற்று. இதை அறிந்த தேசமக்கள் ஒருவாறு மன அமைதி பெற்றனர்.

"மாந்தருக்குள் ஒரு தெய்வம்" இரண்டாம் பாகம் முற்றுப் பெற்றது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top