• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 33 -- "சம்மதம்"; "சம்மதம்!"




கமலாவின் உடல் வெட வெட வென்று நடுங்குவதைப் பார்த்த மறு கணமே ரங்கநாதனுக்குப் புரிந்து போயிற்று; 'அவள், அந்தக் கடிதத்தைத் தான் படித்துப் பார்த்துவிடக்கூடாதே என்ற கவலையில் தான் பயப்படுகிறாள்!' அவர் புன்னகையுடன் கடித்தத்தை இரண்டாகவும் பிறகு நான்காகவும் மடித்தார்.

"கமலா! உன் உடம்புக்கு என்ன? ஏன் இப்படி நடுங்குகிறது?" என்றார்.

அவருக்குக் கடிதத்தைப் படிக்கும் உத்தேசம் இல்லை என்பதை அவர் அதை மடித்த விதத்திலிருந்தே உணர்ந்துவிட்ட கமலாவின் நடுக்கம் குறைந்து விரைவில் நின்றும் விட்டது.

"ஒன்றுமில்லை" என்று தலைகுனிந்து முணுமுணுத்தாள் அவள்.

"உடம்புக்கு ஒன்றுமில்லையா? அப்படியானால் என்னைக் கண்டு பயந்துபோய்த்தான் நடுங்கினாயா? நான் என்ன பார்ப்பதற்கு அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறேன்?"

"அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றாள் கமலா.

"உடம்புக்கும் ஒன்றுமில்லை. என்னைப் பார்த்தாலும் பயமா யில்லை. பிறகு உடல் நடுங்குவானேன்? ஒருவேளை இந்தக் கடிதத்தை நான் படித்து விடுவேன் என்ற பயத்தால் உன் உடல் அப்படிப் பதறியதா? கவலைப்படாதே கமலா! பிறர் கடிதங்களைப் படித்துப் பார்க்கும் கெட்ட பழக்கம் எனக்குக் கிடையாது!"

கமலாவுக்குத் திடீரென்று துணிச்சல் எப்படித்தான் வந்ததோ? கிண்டலும் கேலியும் கோபமும் ஆங்காரமும் கொப்பளிக்க, "அடடா, அது எனக்குத் தெரியாதா? நீங்கள் எப்படிப்பட்ட உயர்ந்த மனிதர்! எவ்வளவு பெரிய பணக்காரர்! உங்களுக்கெல்லாம் அற்பத்தனமான கெட்ட பழக்கங்கள் இருக்குமா என்ன?" என்றாள்.

ரங்கநாதன் சிரித்தார். "புரிகிறது கமலா, நையாண்டி நன்றாகப் புரிகிறது. பிறர் கடிதத்தைப் படிக்கும் கெட்ட பழக்கம் எனக்கு இல்லை என்றுதான் சொன்னேனே யொழிய என்னைப் பரம உத்தமமான, தெய்வீக புருஷனாக நான் வர்ணித்துக் கொள்ளவில்லை. நான் சாமானிய மனிதன் தான். பலவித ஆசாபாசங்களும் பலவீனங்களும் உடையவன் தான். அதே சமயம் பிறர் கடிதத்தைப் படிப்பது போன்ற சில கெட்ட பழக்கங்களை அண்ட விடாமல் என்னை நானே காத்துக் கொள்ளும் மனோபலமும் பெற்றவன். கமலா நீயே யோசித்துப் பார். எனக்கு இருக்கிற செல்வத்துக்கு நான் எவ்வளவோ தீய பழக் கங்களுக்கு அடிமையாகிக் கெட்டலையலாம். என்னைக் கேட்பார் இல்லை. ஆனாலும் நான் இந்த ஊரில் நற்பெயர் எடுத்துக் கௌரவமாக வாழவில்லையா? என்னை யாரேனும் வெறுக்கும்படியோ இழித்துரைக்கும்படியோ நடந்து கொண்டிருக்கிறேனா? சொல்!"

கமலாவுக்கு அவர் கூறுவதில் உள்ள நியாயம் புரிந்தபோது ஆங்காரத்துடன் அவரைக் கிண்டல் பண்ணுவது போலத் தான் பேசியது தவறு என்று உணர்ந்து வருந்தினாள். ரங்கநாதனிடம் கெட்ட பழக்கங்கள் ஏதும் கிடையாது என்பதுடன் பரோபகாரி என்றும் ஊரில் நற்பெயர் எடுத்திருந்தார். 'லக்ஷ்மிகடாச்சத்தைப் பெற்றவர், செல்வம் ஈட்டும் ஆற்றலை உடையவர் என்பதற்காகவே ஒருவரை வெறுப்பது அநியாயமல்லவா? தமது சொத்துக்கெல்லாம் ஒரு வாரிசு வேண்டும் என்று ஆசையால் அவர் என்னை மணந்துகொள்ள விரும்பியதில் என்ன தவறு? அவர் இஷ்டத்துக்குப் பணியுமாறு அவர் என்னையோ அல்லது அப்பா-அம்மாவையோ வற்புறுத்தவில்லையே? இவர்கள்தாமே அந்தச் சம்பத்துக்களை யெல்லாம் பார்த்து மலைத்துப் போய்ப் பேராசைப்பட்டு இராப் பகலாக அதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்?'

அவளுடைய மனம் இளகியுள்ளதைப் படித்துவிட்டவராக அவர் தொடர்ந்தார். "உன் பெற்றோரை நான் என் பங்களாவுக்கு வரச் சொல்லி என் ஐசுவரியத்தைக் காட்டியது கூடத் தவறோ என்று என் மனத்தில் ஓர் உறுத்தல் கமலா? இரண்டு நாட்களாக அந்த உறுத்தலை அனுபவித்துவிட்டு இனியும் தாளாது என்ற நிலையில்தான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். நீ வீட்டில் தனியாக இருப்பதே ஒரு விதத்தில் அனுகூலமாய்ப் போயிற்று. உன் பெற்றொர் இருந்தால் உன் னைப் பேசவே விடமாட்டார்கள்.

'அவளுக்கு என்ன தெரியும்? பெரியவர்கள் பார்த்துச் சொன்னால் சரி என்று கூறிவிட்டுப் போகிறாள்.' என்பது போல் எதையாவது சொல்லியே என்னைச் சரிகட்டிவிடுவார்கள். ஆனால் எனக்கு உன்னுடைய மனப்பூர்வமான சம்மதம் இந்தத் திருமணத்துக்கு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அது உன்னுடைய சுதந்திரமான முடிவாகவும் இருக்க வேண்டும். அப்படித் தெரிந்து கொண்ட பிறகுதான் இந்தக் கல்யாணம் நடக்கும். இல்லாதபோனால் அச்சடித்த திருமண அழைப்பிதழ்களை அடுப்பிலே போட்டுவிட்டுச் சிவனே என்று இருந்து விடுகிறேன்."

கமலாவின் மனம் கரைந்துருகிற்று. 'மெய்யாலுமே பெரிய மனிதர் என்றால் இவர்தாம் பெரிய மனிதர்' என்று எண்ணினாள். ஆனால் அவருக்கு என்ன பதில் கூறுவது என்பதொன்றும் அவளுக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. 'திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டால் மட்டும் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது? கல்யாணம் கையில் தாலியுடன் ஓடி வரப் போகிறாரா? அல்லது இந்தக் குடும்பத்தில் தரித்திரம் நீங்கிவிடப் போகிறதா? நான் தான் பெரிய படிப்புப் படித்து உத்தியோகத்தில் அமர்ந்துவிடப் போகிறேனா? அல்லது அம்மா என்னைத் தரித்திரப் பீடை என்று கரித்துக் கொட்டுவதை நிறுத்திவிடப் போகிறாளா? வசவும் திட்டும் அதிகரிக்கப் போகிறது. அவ்வளவுதான். வலிய வந்த ஸ்ரீதேவியை உதைத்துத் தள்ளினேன் என்பதாக அப்பாவுக்குக்கூட என் மீது ஆதங்கம் உண்டாகி வெறுத்துப் பேசலாம்.'

"நான்... நான்" என்று தட்டுத் தடுமாறித் தயங்கினாள் கமலா.

"வேண்டாம் கமலா, அவசரமில்லை. நீ இன்னும் கொஞ்சம் யோசித்துவிட்டே வேணுமானாலும் பதில் சொல்லு. பாதகமில்லை." என்றார் ரங்கநாதன். தொடர்ந்து, "இதோ பார், நீ பதிலே கூற வேண்டாம். இந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தால் உன் மனம் எனக்கு உடனே தெரிந்து போய்விடும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. ஆனால் நான் அப்படிச் செய்யப் போவதில்லை. கடிதத்தை இதோ மேஜையில் மேல் வைத்து அது மறுபடியும் பறந்துவிடாமலிருக்க இந்தப் புத்தகத்தையும் அதன் மேல் வைக்கிறேன். இதை மறந்து விடுவோம். என்னையும் என் ஆசைகளையும்கூட சிறிது நேரம் மறந்துவிடுவோம். உன் வாழ்க்கை, உன் எதிர்காலம் இவற்றைப் பற்றிச் சிந்திப்போம். நான் உனக்கு வழங்க எண்ணுகிற எதிர்காலத்தில் வாலிப மிடுக்குடைய கணவன் என்ற ஓர் அம்சத்தைத் தவிர உனக்குச் சகலத்தையும் என்னால் கொடுக்க முடியும். அன்பும் ஐசுவரியமும் சாதிக்கக்கூடிய சகலத்தையும் நீ பெற லாம். யௌவனம் என்னிடமிருந்து விடை பெற்றுவிட்டதேயொழிய நான் இன்னமும் திடகாத்திரமாகவே இருக்கிறேன். ஊர் ஊராகப் போக வேண்டுமா? உல்லாசமாக உலகைச் சுற்றி வர வேண்டுமா? நகை நட்டு பூண வேண்டுமா? எதுவானாலும் சொல். உன் ஆசைகளையெல்லாம் கட்டளை களாக மதித்து நிறைவேற்றுவேன். இதற்கெல்லாம் பிரதியாக நான் உன்னிடம் கேட்பது மனைவி என்ற ஸ்தானத்தில் அமர்ந்து அன்பையும் தோழமையையும் எனக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றுதான் கமலா! அபரிமிதச் செல்வம் என்ற கடலுக்கு மத்தியில் தனிமை என்ற ஏகாந்தத் தீவில் இருக்கிறேன் நான். என்னிடம் கொஞ்சம் இரக்கம் காட்டுவாயா?"

கமலாவின் நெஞ்சம் நெகிழ்ந்தது. கண்களில் கருணை பொங்கியது. அதே நேரத்தில் தன்னால்கூட ஒருவருக்கு உதவ முடியும். தன்னிடம்கூடக் கெஞ்சிக் கேட்கிற மாதிரியாக ஏதோ ஓர் அம்சம் இருக்கிறது என்ற எண்ணத்தில் கர்வம் எட்டிப் பார்த்தது!

'முடியாது என்று முகத்தில் அடித்ததுபோல் இவருக்குப் பதில் கூறி விடுவது பெரிய காரியம் இல்லை. பிறகு அம்மா அப்பாவின் கோப தாபங்களுக்கு ஆளாகாதிருக்க வீட்டை விட்டு ஓடிவிடுவதும் பெரிய விஷயமல்ல.

அப்படி ஓடிச் சென்ற பிறகு பிச்சை எடுப்பதோ அல்லது வேலை செய்து பிழைப்பதோ கூடச் சிரமமில்லை. ஆனால் அப்படித் தன்னந்தனியாகப் பாதுகாப்பின்றி உலகில் வாழும் போது தன்னைப் புதிய ஆபத்துக்கள் சூழாது என்பது என்ன நிச்சயம்? இந்த யுத்த காலத்தில் உணவுக்குத்தான் பஞ்சமே யொழியக் கயவர்களுக்கா பஞ்சம்? இந்தப் பாழும் உலகையே துறந்து செத்தொழியலாம்தான் ஆனால் அதனால் என்னத்தைச் சாதித்ததாகும். எதை நிரூபித்ததாகும்? அதைவிட....அதைவிட....'

ஒரு முடிவுக்கு வந்தவளாக ரங்கநாத முதலியாரை நிமிர்ந்து பார்த்தாள் கமலா.

"நீங்கள் எனக்காக ஒரு காரியம் செய்வீர்கள் என்றால் நான் இந்தத் திருமணத்துக்கு மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறேன்" என்றாள்.

"என்ன?" என்று கேட்டார் முதலியார்.

"என்னைப் படிக்க வைக்க வேண்டும். எஸ். எஸ். எல். ஸி மட்டுமில்லை. அதற்கு மேலே கல்லுரிப் படிப்பும் நான் பெற வேண்டும். டாக்டராக அல்லது வக்கீலாக என்னை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த ராமப்பட்டணத்திலேயே எல்லோரும் அதிசயிக்க நான் தொழில் நடத்த வேண்டும். செய்வீர்களா?"

ரங்கநாத முதலியார் தாம் சற்றும் எதிர் பார்க்காத இந்தக் கோரிக்கையைக் கேட்டுச் சில விநாடிகள் பிரமித்துப் போனார். பிறகு பெரிதாகச் சிரித்தார்.

"எதற்குச் சிரிக்கிறீர்கள்? பைத்தியக்கார ஆசை என்றா?"

"சேச்சே! அதெல்லாம் இல்லை, கமலா. நீ கோரிக்கை என்றதும் நான் ஏதேதோ அபத்தமான கற்பனைகளில் இறங்கிவிட்டேன். உன்னுடைய பரிசுத்தமான மனத்தை உணராத மூடனாக, சொத்தையெல்லாம் உன் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று நீ கேட்கப் போகிறாய் என்று நினைத்து விட்டேன். என்னை மன்னித்துவிடு, கமலா. இத்தனை எளிய, சாமானியக் கோரிக்கை என்றதும் மகிழ்ச்சி தாங்கவில்லை எனக்கு. கமலா! டாக்டருக்கு உன்னைப் படிக்க வைப்பது மட்டுமில்லை. நீ பட்டம் பெற்று வந்ததும் தலைவியாக விளங்கிப் பணியாற்ற இந்த ராமப்பட்டணத்தில் ஒரு தர்ம ஆஸ்பத்திரியே கட்டித் தருகிறேன். போதுமா?"

கமலா சட்டென்று கிழக்கு முகமாக அவர் முன் விழுந்து வணங்கினாள். அவள் நிமிர்ந்த போது அவரது வலக்கரம் அவள் சிரத்தைத் தொட்டு ஆசிர்வதித்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 34 -- திருமண அழைப்பிதழ்



வாசலில் விளக்கு ஏற்றிவிட்டு வந்த கமலா வெகு உற்சாகமாகச் சமையல் காரியங்களில் ஈடுபட்டாள். அடுப்பு மூட்டத் தான் கடைசியாக எழுதிய கடிதத்தையும் அதற்கு முன்பாக அரைகுறையாக எழுதிக் கிழித்துப் போட்ட கடிதங்களையும் பயன்படுத்திக் கொண்டாள்.

புகையில் கண்ணைக் கரித்தபோது 'சனியன்' என்று வையவில்லை. 'பெண்ணாய்ப் பிறந்தேனே' என்று அலுத்துக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, 'இன்னும் கொஞ்ச நாட்கள்தான் அடுப்பு ஊதுகிற வாழ்க்கை' என்று எண்ணிக் கொண்டாள். ரங்கநாதமுதலியார் பங்களாவில் பட்டுப் புடவை சரசரக்க இடுப்பில் சாவிக் கொத்து கலகலக்கத் தான் வளைய வருவதைக் கற்பனை செய்து கொண்டாள். சாதம் வெந்து இறங்குவதற்குள் கமலா மெட்ரிக் எழுதித் தேறிவிட்டாள். சாம்பார் கொதி வந்து இறங்குவதற்கு முன் அவள் பட்டணத்தில் ஜாகை வைத்துக் கல்லூரியில் சேர்ந்து எஃப். ஏ. படித்து முடித்தாகிவிட்டது. தயிர் கடைந்து முடிப்பதற்குள் அவள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டமும் பெற்று விட்டாள். அப்பா, அம்மா, விசுவுக்குச் சாப்பிடத் தயாராகத் தட்டு போட்டு தண்ணீர் எடுத்து வைப்ப தற்குள் மேநாடுகளுக்குப் போய் எம். டி. பட்டமும் பெற்றுத் திரும்பி விட்டாள். கடைசியாக அப்பளாம் சுட்டுக் கொண்டிருந்தபோது அவளுக்காக ராமப்பட்டணத்தில் பெரிய ஆஸ்பத்திரி உருவாகிவிட்டது! அதில் அவள் மிடுக்குக் குறையாத பரிவுடன் வளைய வந்து நற்பணியாற்றும் நேர்த்தியைக் கண்டு பவானி பிரமித்துப் போனாள். கல்யாணம் ஆனந்தக் கண்ணீர் தளும்ப நின்றான்.

குமட்டித் தணலில் கையைச் சுட்டுவிட்டது. கமலா உதறிக் கொண்டே நிமிர்ந்தபோது வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கருகிய அப்பளம் காமாட்சி அம்மாள் கண்ணில் படாதவாறு அடுப்புக்குப் பின்னால் ஒளித்து வைத்துவிட்டு, சூடு பட்ட விரலை உதடுகளுக்கிடையில் வைத்துச் சப்பிக் கொண்டே ஓட்டமும் நடையுமாகச் சென்று கதவைத் திறந்தாள்.

விசுப் பயல் புதுச் சட்டை, டிராயர் அணிந்த கோலத்தில் முதலில் உள்ளே நுழைந்தான். "என்னடா, இது, ஜவுளிக் கடையிலேயே டிரஸ் பண்ணிக் கொண்டாயா?" என்று கமலா புன்னகையுடன் கேட்டாள்.

பெரிய பெரிய பொட்டலங்களுடன் உள்ளே நுழைந்த காமாட்சி அம்மாள், "அளவு பார்க்கிறேன்னு பழைய துணிக்கு மேலேயே போட்டுக் கொண்டான். அப்புறம் கழற்ற மனசு வரலை. குழந்தைதானே?" என்றாள்.

மாசிலாமணி குதிரை வண்டிக்குக் கூலி கொடுத்துவிட்டுப் படியேறி வந்தார்.

"ஏண்டா, அக்காவுடைய கல்யாணத்துக்கு போட்டுக்க டிரஸ் வாங்கிவிட்டு இப்பவே அழுக்கா அடிக்கலாமா?" என்றாள் கமலா.

"சேச்சே! இதுவா கல்யாண டிரஸ்? அதற்கு ஸூட் தைக்கக் கொடுத்திருக்கு. இது சும்மா பள்ளிக்கூடத்துக்குப் போட்டுக் கொண்டு போகத்தான்" என்றான் விசு.

"கடைத் தெருவையே உன் அம்மா விலைக்கு வாங்கியாச்சு" என்றார் மாசிலாமணீ.

காமாட்சி அம்மாள் கூடத்தின் மையத்தில் அமர்ந்து துணி மூட்டையை அவிழ்த்துத் தன் பட்டுப் புடவையை எடுத்து நெஞ்சோடு வைத்துக் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டாள்.

"இந்த மாதிரி அழகு பார்க்க உள்ளங்கை அகலக் கண்ணாடி போதாது. ஆளுயர நிலைக் கண்ணாடி தேவை" என்றார் மாசிலாமணி.

"அதுக்கென்ன. மாப்பிள்ளை வீட்டில் இல்லாத கண்ணாடிகளா?"

அவிழ்ந்த மூட்டையில் கூரைப் புடவை தெரிந்தது. பக்கத்தில் ஒரு சிறு நகைக் கடைப் பெட்டியும் இருந்தது. தாலியாகத்தான் இருக்கும். தனது அர்த்தமுள்ள எதிர்காலத்தின் அழகுமிக்க சின்னங்கள் என எண்ணினாள் கமலா.

"கமலா! உட்கார்ந்து பாரேன். உனக்குப் பிடிச்சிருக்கா என்று" - மாசிலாமணி தூண்டவே கமலா அமர்ந்து புடவையைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். "ரொம்ப பிடிச்சிருக்கு அப்பா. அம்மா தேர்ந்தெடுத்தால் குறை இருக்குமா என்ன?"

அவள் குரலில் தொனித்த திருப்தி மாசிலா மணியைத் துணுக்குற வைத்தது. 'இது என்ன, இந்தப் பெண் சிறுமியாக இருந்த போது கல்யாண விளையாட்டு விளையாடினாளே, அதுதான் இதுவும் என்று நினைக்கிறாளா? அல்லது காணாததைக் கண்ட மகிழ்ச்சியில் பேசுகிறாளா?'

"வீட்டுக்காரர் வந்துவிட்டுப் போனார், அப்பா!"

"படிப்புத்தான் வரலையே தவிர கமலா கெட்டிக்காரிதான். 'வீட்டுக்காரர்' என்று இரண்டு அர்த்தம் தொனிக்கப் பேசுகிறாள் பாருங்க" என்றாள் காமாட்சி.

"கல்யாண அழைப்பிதழ்களை அச்சடித்து விட்டாராம். கொண்டு வந்து கொடுக்க வந்தாராம். நீங்கள் இல்லாததால் என்னிடம் தந்து விட்டுப் போனார். - சொல்லிக்கொண்டே கட்டோடு அவற்றை எடுத்து வந்தாள் கமலா. "அளவாகத்தான் அச்சடித்தாராம். அதுவும் இந்த ஊரில் இல்லை. மெட்ராஸுக்கு எழுதி அச்சடித்துத் தபாலில் அனுப்பச் சொல்லியிருக்கிறார். இந்த ஊரில் யாருக்கும் அழைப்பிதழ் தர வேண்டாம் என்று சொல்லச் சொன்னார். வெளியூரில் இருக்கிற நெருங்கிய உறவுக்காரர்களுக்கும் முக்கிய நண்பர்களுக்கும் மட்டும் அனுப்பச் சொன்னார். இல்லாத போனால் ஊர் வம்பை விலைக்கு வாங்கியதாகும் என்றார்."

"ரொம்ப சரி, யாரைத் தெரியும் நமக்கு இந்த ஊரிலே? எஞ்சி மிஞ்சிப் போனால் அந்த ராங்கிக்காரி பவானி; அவளைவிட்டால் அந்தப் பிள்ளையாண்டான் கல்யாணம். இவர்களுக்குத் தெரிவிக்கலைன்னா என்ன குடிமுழுகிப் போயிடும்? டேய், விசு! நாளைக்குப் பள்ளிக் கூடத்தில் போய் என் அக்காவுக்குக் கல்யாணம் என்று டமாரம் அடித்து வைக்காதே! பிச்சு இழுத்துப்பிடுவேன். மூன்றாம் பேருக்குத் தெரியாமல் கல்யாணம் நடந்து முடியணும்" என்றாள் காமாட்சி.

இதற்குள் கட்டைப் பிரித்து ஓர் அழைப்பிதழை எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பித்திருந்தார் மாசிலாமணி.

"......திருநீர் மலை க்ஷேத்திரத்தில் நடக்கிறபடியால், தாங்கள் இஷ்டமித்திர பந்துக்களுடன் வந்திருந்து......"

"அப்பா, தேதி என்ன என்று படித்தீர்கள்?" என்று கேட்டான் விசு. "நாடகம் நடக்கிற அதே தேதியா?"

"ஆமாம், அதனால் என்னடா? டிக்கெட்தான் கிழிந்து போய்விட்டதே!"

"அந்த ஓசி டிக்கெட் கிழிந்தால் என்ன? நாலு டிக்கெட் காசு கொடுத்து வாங்கிக்க நமக்குத் தெரியாதாக்கும்" என்றாள் காமாட்சி.

அவள் அப்போது பாக்கிப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தாள்.

நாடகம் நடக்கும் தினமே நல்ல முகூர்த்த நாளாக அமைந்தது ரொம்ப வசதி என்று ரங்கநாத முதலியார் கருதியிருப்பார் என்பது கமலாவுக்குப் புரிந்தது. ராமப்பட்டணம் ஊரே நாடக அரங்கேற்றம் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கும். இளைஞர்களின் சிந்தனையெல்லாம் அங்கே ஒருமுகப்பட்டிருக்கும் போது இவர்கள் முதல்நாள் திருநீர் மலைக்குக் கிளம்பிச் செல்வதை யாரும் கவனிக்கமாட்டார்கள். வாலிப மிடுக்குடைய சீர்திருத்தவாதிகளின் முட்டுக்கட்டை ஏதுமின்றித் திருமணம் 'ஜாம்ஜாம்' என்று நடந்தேறும்!

"என்னடா, பிரமாத நாடகம்? கமலாவின் கல்யாணம் நடந்து முடியட்டும். தினம் ஒரு நாடகம் அல்லது சினிமா பார்க்கலாம்" என்றாள் காமாட்சி.

"என்ன தான் இருந்தாலும் 'கணையாழியின் கனவு' நாடகம் போல் ஆகுமா அப்பா? இவர் இரண்டாவது முறை நாடகம் போடறாளோ இல்லையோ? கல்யாணம் மாமாவும் பவானி அக்காவும் சேர்ந்து நடிக்கறதை மறுபடியும் பார்க்க முடியுமோ என்னவோ?"

அந்த விநாடியில் கமலாவின் நெஞ்சில் ஒரு வேதனை ஏற்பட்டது. 'தனக்குத் திருமணம் நிச்சயமாகி பிடித்தமான ஓர் எதிர்காலமும் உறுதியான பிறகும் தன் மனம் இவ்வாறு சங்கடப்படக் கூடாது; பவானி அக்காவும் கல்யாணம் மாமாவும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்று தம்பி கூறியதுமே ஒரு துன்பம் இதயத்தை ஊடுருவக் கூடாது; இது தவறு' என்று அவள் நினைத்தாள். ஆயினும் அவள் அறிவு கூறியதை மனம் ஏற்காமல் தொடர்ந்து துயரப்பட்டுக் கொண்டுதான் இருந்தது!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 35 -- இருள் நிலவாகுமா?



மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் தமது பங்களா வாசல் போர்ட்டிகோவில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே வந்தார். டென்னிஸ் டிரெஸ்ஸில் இருந்தவர் நேராக மாடியில் தமது படுக்கை அறைக்குப் போய் அவற்றைக் களைந்துவிட்டு ஹவுஸ் கோட் ஒன்றை அணிந்து இடுப்பில் நாடாவை முடிந்தபடியே மீண்டும் கீழே இறங்கி வந்தார். வரவேற்பு அறையில் இருந்த அலங்காரமான அலமாரி யொன்றைத் திறந்தார். உள்ளே நோட்டம் விட்டு விட்டு, "மணி! மணி!" என்று உரக்க அழைத்தார்.

"ஸார்! வந்துட்டேன்" என்று பதில் கொடுத்தபடியே சமையலறையிலிருந்து வந்த மணி, தோளிலிருந்து தொங்கிய அழுக்குத் துண்டில் கையைத் துடைத்தபடி நின்றார்.

"சோடா இருக்கான்னு பார்த்து வாங்கிக் கொண்டு வந்து வைக்கப்படாது? தினமும் அதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டுமா நான்?"

"சோடாதானே? ரெடியா இருக்கே? மார்க்கெட்டுக்குப் போய் வாங்கி வந்த சாமான்களோடு அடுப்பங்கரையிலேயே வைச்சுட்டேன். சமையலுக்கு நேரமாகி விடவே அதில் கவனம் போய்விட்டது."

"சரி, சரி! சீக்கிரம் கொண்டுவந்து இங்கே அடுக்கு. ஒவ்வொரு தடவையும் நான் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார வியாபாரி மாதிரி சோடா சோடான்னு அலற வேண்டியிருக்கு!"

மணி சமையலறைக்குச் சென்று ஒரு பெரிய துணிப் பையுடன் திரும்பினார். அதிலிருந்து ஸ்பென்ஸர் சோடாக்களை எடுத்து அலமாரியில் வரிசையாக அடுக்கினார். கூடவே, "ஸார்! நான் சொல்றேன்னு கோபிக்கப் படாது. நீங்க இங்கே உத்தியோகத்தை ஏற்று வந்தபோதே உங்க அப்பா என்னிடம் சொல்லி அனுப்பினார்...." என்று இழுத்தார்.

"ஷட் அப்!"

"நான் வாயை மூடிக் கொண்டு போய்விட்டால் உங்க அப்பாவுக்குத் துரோகம் செய்தவனாவேன்."

"அவரா உனக்குச் சம்பளம் தருகிறார்? நகரு!"

மணி அப்பால் சென்று துணிப் பையை மடித்துக் கொண்டே பேசினார். "இன்று நீங்கதான் சம்பளம் கொடுக்கிறீங்க. ஆனா என் பன்னிரண்டாவது வயதிலிருந்தே உங்க அப்பாகிட்டே வேலை செய்து வந்தவன் நான். 'மணி! கோவர்த்தனன் தெற்கே துணையில்லாமல் போகக் கூடாது என்பதற்காகத்தான் உன்னையும் பின்னோடு அனுப்பறேன். எவ்வளவு நல்லவனானாலும் தனியே இருக்கும்போது மனசு சில சமயம் தடுமாறிப் போய்விடும். அவன் பிறந்த தினத்திலிருந்தே அவனை உனக்குத் தெரியும். அவனுக்குச் சமைத்துப் போடுவது மட்டும் உன் வேலை இல்லை. என் ஸ்தானத்திலிருந்து அவனை நீ கவனித்துக் கொள்ளணும்' என்றார்.

"லெக்சர் முடிந்ததா?" - கேட்டுக் கொண்டே அலமாரிக்குள்ளிருந்து ஒரு கண்ணாடிக் கோப்பையை எடுத்துத் தன் நெஞ் சுயரத்துக்கு வந்த அலமாரியின் மேல் பரப்பில் வைத்தார் கோவர்த்தனன். அடுத்து விஸ்கி பாட்டிலையும் எடுத்து வைத்துவிட்டு, சோடா ஒன்றை உடைத்தார்.

"எனக்கு இங்கே சில வார்த்தைகளைக் கூறச் சந்தர்ப்பம் அளித்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன், வணக்கம்" என்று சொற்பொழிவை முடித்தார் மணி.

கோவர்த்தனன் சிரித்தார்.

"குளிக்க வெந்நீர் ரெடி; சாப்பாடும் தயார்!"

"வெந்நீரில் நீ குளி. உனக்குத்தான் பச்சைத் தண்ணீர் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. வெய்யில் காலத்திலும் வெந்நீர் வேண்டும். எனக்கு எதற்கு? இப்பத்தான் டென்னிஸ் ஆடிட்டு வந்தேன். வியர்வை அடங்கியதும் குளித்துவிட்டுச் சாப்பிட வரேன். நீ போய் டேபிளை 'அரேஞ்ச்' பண்ணு." மணி சென்றதும், கோவர்த்தனன் மீண்டும் அலமாரிக்குள் கண்ணோட்டம் விடக் குனிந்தார். அதில் ஃபிரேம் போட்டு நிமிர்த்தி வைத்திருந்த பவானியின் இரு படங்களையும் எடுத்து அலமாரி மீது பார்வையாக வைத்தார். மதுவை அருந்தியபடியே அவற்றை மாறி மாறிப் பார்த்தார். ஒன்றில் அவள் வக்கீல் உடையில் இருந்தாள்; மற்றொன்றில் டென்னிஸ் உடையில் கையில் மட்டை ஏந்தி நின்றாள். உதடுகளைக் குவித்து இரு படங்களையும் நோக்கிக் காற்றை முத்தமிட்டார்.

கோவர்த்தனன். பிறகு டென்னிஸ் உடையிலிருந்த பவானி படத்தை ஒரு கையில் எடுத்துக்கொண்டு மற்றொரு கரத்தில் மதுக் கோப் பையுடன் நடந்து சென்று சோபாவில் அமர்ந்தார்.

அந்தப் படங்களைத் தருமாறு அவர் முதலில் பவானியைத்தான் கேட்டார். அவள் கண்டிப்பாக மறுத்துவிடவே அவர் வேறு வழியை நாட வேண்டியதாயிற்று. கிளப் ஸூவனியரில் போடுவதற்காக எடுக்கப் பட்ட படங்கள் அவை என்பது கோவர்த்தனனுக்குத் தெரியும். அவற்றை எடுத்த ஸ்டூடியோ சொந்தக்காரரையும் தெரியும். வெகு சுலபமாக, பவானிக்குத் தேவை என்று கூறியே அவற்றுக்கு மறு பிரதிகள் போட்டுக் காசு கொடுத்து வாங்கி வந்து விட்டார். ஃபிரேம் போட்டும் வைத்துக் கொண்டார்.

பவானி இப்போதெல்லாம் அடிக்கடி டென்னிஸ் ஆட வருவதில்லை. ஒரு நாள் வந்தால் இரண்டு தினங்கள் நாடக ஒத்திகையின் தீவிரத்தைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொண்டாள். மாஜிஸ்டிரேட் வேறு யாருடனாவது ஆடிவிட்டு வீடு திரும்ப வேண்டியிருந்தது. அவளுடன் ஆடும்போது ஏற்படாத சோர்வு வேறு யாருடனாவது ஆடி விட்டு வந்தால் உண்டாயிற்று. எதையோ பறிகொடுத்து விட்டுத் திரும்புவது போல் காணப்படுவார் கோவர்த்தனன். பவானி கல்யாணத்தைக் காதலிக்கிறாள் என்பதற்கோ அல்லது தம்மை வெறுக்கிறாள் என்பதற்கோ எந்த விதமான சாட்சியமும் மாஜிஸ்டிரேட் டுக்குப் புலப்படவில்லை. என்றாலும் அவள் தம்மை விட்டு விலகி விலகிப் போவதுபோல் கோவர்த்தனனுக்கு ஒரு பிரமை ஏற்பட்டது. இந்த இழப்பை மறக்கத்தான் அவர் மதுவின் துணையை நாடினார். கிளப்பில் ஆரம்பித்த பழக்கம் வீட்டுக்கே குடிவந்து விட்டது. மணியை விட்டே சோடாவும் ஸ்காச் விஸ்கியும் வாங்கிக் கொண்டு வந்து வைக்கச் சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

அந்தப் பெரிய வீட்டில் தாம் தன்னந் தனியாக இருக்க நேரிட்டதை ஏதோ பெரிய துர்ப்பாக்கியமாகக் கருதினார் கோவர்த்தனன். பவானி மட்டும் இங்கே தம்முடன் இருக்குமாறு வந்துவிடக் கூடுமானால் இந்தப் பெரிய வீட்டில் தனிமை அவரைத் திரும்பிய பக்கமெல்லாம் தாக்காது. வீடு மட்டுமல்ல; வாழ்க்கையே வெறுமையும் வெற்றிடமு மாகத் தோன்றும் நிலை வினாடிப் போதில் மாறிவிடும். பவானியின் வெள்ளி மணி நாதச் சிரிப்பொலி இவற்றில் நிரம்பி மங்களகரமாகி விடும். சூன்யங்கள் ஓவியங்களாகும், வறட்சிகள் அருவிகளாகும்; இருள்கள் நிலவுகளாகும்; வெம்மைகள் தண் புலன்களாகும்!

எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு, ஏதோ சதி செய்கிறார்கள். தமக்குத் துரோகம் இழைக்கிறார்கள். நியாயமாகவும் இயல்பாகவும் தமக்குக் கிடைக்க வேண்டிய மகிழ்ச்சிகளை இல்லாமல் செய்து நெஞ்சில் அடிக்கிறார்கள்!

அவர் மதுவை இன்னும் ஒரு மிடறு விழுங்கினார்.

"வெறும் வயிற்றில் அதைக் குடிக்க வேண்டாம். கெடுதல்; சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்றால் இதை அவ்வப்போது கொரித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி ஓர் அகன்ற கிண்ணத்தில் மிக்சர் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனார் மணி. நெய் விட்டுப் பொன்னிறமாக வறுத்த முந்திரிப் பருப்புக்களைத் தாராளமாகவே அதில் கலந்திருந்தார்.

பெரிய வெள்ளி ஸ்பூனில் அதைச் சிறிது அள்ளி வாயில் போட்டுக் கொண்ட கோவர்த்தனன் நெஞ்சோடு அணைத்திருந்த பவானி யின் படத்தை எதிரே பிடித்துப் பார்த்தார். 'பவானி! ஏன் என்னை இப்படிச் சித்திரவதை செய்கிறாய்? உன் மனம் கொஞ்சம் இரங்கினால் போதும். என் வாழ்க்கை எத்தனை ஆனந்த மயமாகி விடும்! உன் கண்கள் தரும் போதைக் கிறக்கம் இருக்கும்போது மதுவை நான் ஏன் நாடப் போகிறேன்? மணிக்கு என்னைக் கோபித்துக் கொள்ளக் காரணமே அகப்படாமல் தவிப்பான், பவானி!"

வாசலில், "ஸார்!" என்று குரல் கேட்டது.

கோவர்த்தனன் கோப்பையைக் காலி செய்து வைத்து விட்டு, "யார் அது?" என்று கேட்டவாறே எழுந்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 36 -- பாங்குக் கொள்ளை!



போர்ட்டிகோவில் காருக்குப் பக்கத்தில் நின்ற இருவரும் கோவர்த்தனனுக்கு சல்யூட் செய்தனர்.

"என்ன விஷயம்?" என்றார் கோவர்த்தனன் வராந்தாவில் நின்று.

இருவரும் பாக்கெட்டுகளிலிருந்து அடையாளச் சீட்டுக்களை எடுத்து நீட்டியவாறே "ஸி.ஐ.டி." என்றனர்.

அடையாளச் சீட்டுக்களைப் பார்க்க அவசியமில்லை என்பது போல் கரம் அசைத்துவிட்டு, "என்ன வேணும்?" என்றார் கோவர்த்தனன்.

"கல்கத்தா சென்ட்ரல் ஜெயில்லேயிருந்து ஒரு கைதி 'எஸ்கேப்' ஆகிவிட்டான் ஸார்! சென்னைக்கு அவன் வந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு ஃபோட்டோவும் மெஸ்ஸேஜும் அனுப்பி வைச்சாங்க. மெட்ராஸில் அலர்ட்டாகி அலசியதிலே இந்தப் பக்கம் அவன் வந்து தலைமறைவாகி யிருக்கலாம்னு துப்புக் கிடைச்சுது.

"ஸோ? அரெஸ்ட் வாரண்ட் வேணுமா? நாளைக்கு கோர்ட்டுக்கு வாங்க."

"நோ ஸார். ஏற்கனவே வாங்கி வைத்திருக்கிறோம்."

"பின்னே? ஆசாமியைக் கண்டுபிடிச்சீங்களா இல்லையா?

" இன்னும் இல்லை ஸார். போட்டோவைக் காட்டி விசாரிச்சுக்கிட்டு வருகிறோம். அவர்களில் சிலர்...."

"என்ன சொல்றாங்க?"

"அந்தப் படத்தைப் பார்த்தால் உங்களைப் போலவே இருப்பதாகச் சொன்னாங்க."

"நான்ஸென்ஸ்! என்ன விளையாடறீங்களா? இல்லே குடிச்சுட்டு வந்தீங்களா? என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. கெட் அவுட்!"

"எக்ஸ்கியூஸ் மி ஸார்! கோபப்படாதீங்க. அவங்க பேச்சுக்கு நாங்க மதிப்புக் கொடுக்கலைதான். ஆனாலும் டியூட்டியைச் செய்தாகணுமே!"

கோவர்த்தனனுக்கு எரிச்சலாக வந்தது. இன்று ஒரே கடமை வீரர்கள் மயம். பவானி நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதால் ஒத்திகைக்குப் போக வேண்டியது தன் கடமை என்கிறாள். வீட்டுக்கு வந்தால் மணி குடிக்கக் கூடாது என்று எச்சரிப்பது தன் கடமை என்கிறான். போதாக் குறைக்கு இந்த ஸி.ஐ.டி.க்கள் வேறு கடமையைச் செய்ய வந்து விட்டார்கள்! "சரி, டியூட்டியைச் செய்தாச்சுல்ல? என்னைப் பார்த்தாச்சு. நான் அவனைப் போலில்லை யல்லவா? நீங்கள் கிளம்பலாம். எனக்கு வேலை இருக்கு."

"ஸாரி ஸார். அவங்க சொன்னதிலே அவ்வளவா தப்பில்லைன்னுதான் உங்களைப் பார்த்ததும் தோன்றுகிறது. அந்த ஃபோட்டோ கிட்டத்தட்ட உங்களைப் போலவேதான் இருக்கு. உங்களுக்கு மீசை இல்லை, கண்ணாடி போட்டிருக்கிங்க, கொஞ்சம் 'யங்' காத் தெரியறீங்க. ஆனால் இவற்றால் ஒற்றுமைகளை மறைக்க முடியவில்லையே?"

கோவர்த்தனனுக்குத் திடும்மென்று உடல் நெடுக ஒரு மின்னல் பாய்ந்தது போல் இருந்தது. நிலை வாசலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, "எங்கே கொடுங்கள் அந்தப் படத்தை" என்று கேட்டு வாங்கிப் பார்த்தார். அவர் கரம் லேசாக நடுங்கியது. தலையைச் சுற்றவும் ஆரம்பித்தது. அது மது அருந்தியதன் விளைவா அல்லது இந்தப் படத்தைப் பார்த்ததனால் உண்டான கலக்கமா? உடலின் பதற்றத்தையோ மனத்தின் உளைச்சலையோ அவர்களிடம் காட்டிக் கொள்ளாதிருக்கப் பெரு முயற்சி செய்து இயல்பாக நடப்பது போல் அடியெடுத்து வைத்து, அவர் வராந்தாவில் இருந்த பிரம்பு நாற்காலிகளுள் ஒன்றில் அமர்ந்தார். படத்தை ஒரு முறைக்கு இரு முறையாகப் பார்ப்பது போலும் யோசிப்பது போலும் சற்று நேரத்தைக் கடத்தினார். பிறகு "பாங்க் ராபரியா?" என்றார்.

ஸி.ஐ.டி.க்கள் வியப்படைந்தனர். "ஆமாம் ஸார்! பாங்குக் கொள்ளைதான். உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார் அவர்களில் ஒருவர்.

"நான் சம்பவம் நிகழ்ந்தபோது கல்கத்தாவில்தானே இருந்தேன்?" என்றார் கோவர்த்தனன் "எனக்கு இந்தக் கேஸ் நன்றாகத் தெரியும். நான் லா பிராக்டிஸ் ஆரம்பித்து நன்றாக முன்னுக்கு வந்து கொண்டிருந்த சமயம். எங்கள் வக்கீல்கள் வட்டாரத்திலே ஒரே ஸென்ஸேஷன். இவன் கொள்ளையடிச்சான், அகப்பட்டுக் கொண்டு கம்பி எண்ணினான் என்பதால் இல்லை. அது சகஜம். இந்தப் பயலோட அப்பா ஊரிலே பெரிய மனுஷன். செல்வாக்குள்ளவன். பொது ஜனங்களுக்கு ஒரு விவரமும் தெரிய வராதபடி நியூஸ் பேப்பர் ஆபிஸ் முதலாளிங்களுக்கெல்லாம் ஃபோன் பண்ணி விஷயத்தை அப்படியே அமுக்கிட்டான். அதுதான் எங்களைப் பொறுத்த மட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. புரியுதா?"

"எஸ் ஸார்!"

"வழக்கறிஞர் வட்டாரத்திலே அதிகமாக இவனைப் பற்றிப் பேச மற்றொரு காரணம் இவன் ஒரு தீவிர சோஷலிஸ்டு, புரட்சி இயக்கத்துக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே பாங்கைக் கொள்ளையடித்தான் என்பது என்ன நான் சொல்ற்து சரிதானா?"

ஆமாம் ஸார். மெட்ராஸுக்கு வந்த மெஸ்ஸேஜிலே அப்படித்தான் கண்டிருக்கிறது." "பெரிய கிரிமினல் அப்பா இவன். எப்பேர்ப்பட்ட கில்லாடியா யிருந்தால் சிறையிலிருந்து தப்பி வந்திருப்பான்! சீக்கிரமே பிடிச்சு மறுபடியும் உள்ளே தள்ளலேன்னா சமூகத்துக்கே ஆபத்து. அண்டர் கிரௌண்ட் இயக்கத்துக்கு ஆதரவா இவன் என்ன வேணுமானாலும் செய்வான். கொலைக்குக் கூடத் தயங்க மாட்டான். நீங்க என்ன இப்படி அலட்சியமா இருக்கீங்க?"

"இல்லை ஸார்! எங்களால் முடிந்த்ததையெல்லாம் செய்துக்கிட்டுத்தான் இருக்கிறோம்."

"அப்படிச் சொல்லிப் பிரயோஜனமில்லே! இப்ப எங்கிட்ட எதுக்கு வந்தீங்க? இவனைக் கண்டு பிடிக்க முடியல்லேன்னு ஒப்பாரி வைக்கவா? யூ மஸ்ட் ஃபைண்ட் ஹிம். அதுவும் சீக்கிரமாப் பிடிக்கணும். இல்லேன்னா போலிஸ் இலாகாவுக்கே அவமானம். நானே உங்களைப் பற்றி புகார் பண்ணும்படி யிருக்கும். இப்போ யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. தெரியுமல்லவா? யுத்த முயற்சிக்கு இந்த அண்டர் கிரௌண்ட் பேர்வழிங்க பெரிய முட்டுக்கட்டை என்பதைப் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்களா!"

"ஆமாம் ஸார்; தெரியும் ஸார்."

"என்னய்யா தலையாட்டிப் பொம்மை மாதிரி எதைச் சொன்னாலும் 'ஆமாம் ஸார், எஸ் ஸார்'னு பேசறீங்களே யொழிய காரியத்திலே ஒண்ணையும் காணோம்?" படத்தை அவர்கள் பக்கமாகக் கோபத்துடன் வீசினார் கோவர்த்தனன். ஒருவர் குனிந்து பொறுக்கிக் கொண்டார்.

"இன்னும் ஒரு வாரத்துக்குள் எனக்கு நிலைமை பற்றி ரிப்போர்ட் பண்ணுங்க. இல்லாத போனால் நான் கவர்னருக்கு இதுபற்றி எழுதும்படி இருக்கும்."

"அதற்கு அவசியம் நேராது ஸார். அவசரப்படாதீங்க. நாங்க எப்படியும் கண்டு பிடிச்சுடறோம்."

"யாரோ உளறினான் என்பதற்காக நான்தான் இந்தக் கைதியா என்று சோதித்துப் பார்க்க வந்தீங்களா?அப்படி நீங்க வந்ததும் ஒரு விதத்தில் நல்லதாப் போச்சு. டிபார்ட்மெண்ட் எவ்வளவு மோசமா செயல்படுகிறது என்பதை எனக்குப் புரிய வைச்சீங்க. ஏம்பா அசப்பிலே பார்த்தா ஒரே மாதிரியா அமையறது ஆண்டவன் படைப்பிலே உண்டு என்பது உங்களுக்குத் தெரியாதா? எத்தனை வருஷ சர்வீஸ் உங்களுக்கு?"

"பதினைஞ்சு வருஷம்."

"எனக்குப் பன்னிரண்டு."

"அவ்வளவு சர்வீஸ் ஆனவங்க மாதிரி தெரியலையே. நடத்தையிலே அனுபவத்தின் சுருசுருப்போ திறமையோ காணுமே."

"இன்னும் கஷ்டப்பட்டுத் தேடறோம் ஸார்!" செய்யுங்க. உங்கள் முயற்சியின் பலனை எனக்கு ஒரு வாரத்துக்குப் பிறகு வந்து சொல்லுங்க."

அவர்கள் போன பிறகு உள்ளே வந்த கோவர்த்தனன் சோடா கலப்பதற்காக விஸ்கியைக் கோப்பையில் ஊற்றப்போனார். சட்டென்று மனம் மாறியவராக ஒரு வாய் பாட்டிலோடு கவிழ்த்துக் கொண்டார் எரிச்சலுடன் தொண்டையில் மது இறங்கியபோதிலும் அவரது மன எரிச்சலை விட அது அதிகமாகத் தெரியவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 37 -- கப்பல் போன்ற கார்




கல்யாணம் தனது காரின் ஹாரனை அழுத்தினான். இஞ்சின் போட்ட கடபுடா சத்தத்துக்கும் மேலாக அது, "பாம்! பபாம்! பாம்" என்று ஒலித்தது. அப்படி அவன் ஹாரனை உற்சாகமாக முழக்கியதற்குக் காரணம், சாலையின் குறுக்கே மாட்டு மந்தையோ அல்லது அதிகமான மனித நடமாட்டமோ இருந்ததால் அல்ல, தெரு ஓரத்தில் சென்று கொண்டிருந்த விசுவின் கவனத்தைக் கவரவே.

விசு ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு அலட்சியமாக நடந்து கொண்டிருந்தான். அது கல்யாணத்தை வியப்பில் ஆழ்த்தியது. வழக்கமாகக் கல்யாணம் காரில் செல்வதைப் பார்த்தால், கை காட்டி நிறுத்தி, "மாமா! மாமா! லிஃப்ட் மாமா? பள்ளிக்கூட வாசலில் விட வேண்டாம். அந்தத் தெரு முனையில் நிறுத்திண்டால் இறங்கிக்கறேன். நீங்க நேரே கோர்ட்டுக்கோ, கிளப்புக்கோ போய் விடலாம்" என்று கெஞ்சுவான் விசு. கல்யாணம் சும்மாவாவது சற்று நேரம் பிகு பண்ணிக் கொண்டிருந்து விட்டுப் பிறகு ஏற்றிக் கொள்வான். ஆனால் இன்று விசு வண்டியை நிறுத்தாததுடன், கல்யாணம் அழைத்தும் திரும்பிப் பார்க்கவில்லை. 'என்ன திடீர் கர்வம் வந்து விட்டது இந்தப் பயலுக்கு? அல்லது யாரேனும் என்னைப் பற்றி ஏதாவது தாறுமாறாகக் கூறிப் பேசிப் பழகுவதற்குத் தடை உத்தரவு போட்டிருக்கிறார்களா?' தெரிந்து கொள்ளாமல் மேலே செல்வதற்குப் பிடிக்கவில்லை கல்யாணத்துக்கு. சிறுவன் தானே என்று அலட்சியப்படுத்த அவன் சுபாவம் இடம் தரவில்லை.

காரைச் சாலை ஓரமாகச் செலுத்தி நிறுத்தினான். இடப் பக்கத்துக் கதவைத் திறந்து விட்டு, "ஏறிக்கொள் விசு" என்றான்.

"வேண்டாம் மாமா! எனக்கு டப்பா கார் பிடிக்காது! நீங்க போங்க!" என்றான் விசு.

"ஆமாம், நீ பெரிய கோமகன் பாரு! உனக்கு முன்னால் ரோல்ஸ் ராய்ஸ் கார் வந்துநிற்கும்!"

"ரோல்ஸ் ராய்ஸ் இல்லே மாமா; பிளிமத்! பெரிய்ய்ய்ய கார்! கப்பலத்தனை பெரிசு! அதிலேதான் இனிமேல் போவேன்!"

கல்யாணம் துணுக்குற்றான். 'என்ன சொல்கிறான் இவன்? திடீரென்று அத்தனை ஐசுவரியம் இந்தக் குடும்பத்துக்கு எப்படிக்கிடைத்தது?'

"பலே! லேட்டஸ்ட் மாடலா? ஸ்டீரிங் கீரா?" விசுவிடம பேச்சை வளர்க்க அவனுக்குப் பிடிச்ச திசையிலேயே உரையாடலைத் தொடர்ந்தான் கல்யாணம்.

"ஆமாம் மாமா! மாக்ஸிமம் ஸ்பீட் மணிக்கு 120 மைல். ஆனால் இந்த ஊருக்குள் அத்தனை வேகமாகப் போக முடியாது. இங்கே எருமை மாடுகளுடனும் கழுதைகளுடனும் போட்டி போட்டுக் கொண்டு மனுஷாளும் நடு ரோட்டுக்குச் சொந்தம் கொண்டாடறாளே. மெட்ராஸ் ட்ரங்க் ரோடிலே ஓட்டி னால் நூறுமைல் வேகத்திலே பிய்ச்சுக்கும் கார்! மலை மேலே எல்லாம் 'அலாக்கா' ஏறும். உங்க டப்பாக் கார் மாதிரி இஞ்சின் ஹீட் ஆகி ரேடியேட்டர் கொதிக்காது."

கல்யாணத்துக்குச் சந்தேகம் தட்டியது. 'ராமப்பட்டணத்திலே பெரிய கார் வைத்திருப்பவர்கள் எண்ணி இரண்டோ மூன்றோ பேர்கள்தாம். அவர்களில் பிளிமத் சொந்தக்காரர் ரங்கநாத முதலியார்!'

"நீலக் கலரா?"

"இல்லை, பச்சை! லைட் கிரீன்."

'சந்தேகமே யில்லை. ரங்கநாத முதலியார் காரைத்தான் குறிப்பிடுகிறான், விசு!'

"ரங்கநாதன் ஜாலி ரைட் அழைச்சுண்டு போனாரா?"

"இல்லையே. கடைத் தெருவுக்குப் போகக் கார் வேணும்னு கேட்டோம். அனுப்பிச்சார். அப்புறம் திருநீர்மலைக்குப் போகப் போகிறோம்."

'ரங்கநாதனா கார் அனுப்பினார்! அழுக்காகி விடும் என்று தாமே அதில் ஏறத் தயங்குபவ ராயிற்றே! ராமப்பட்டணத்துக்குள் முக்கால் வாசி இடங்களுக்கு நடந்தே போய் விடுவாரே! அவர் இவர்களுக்குக் கார் தருவவாவது? அதுவும் திருநீர்மலைக்குப் போக?'

"அங்கே என்னடா விசேஷம்?"

"அதை மட்டும் கேட்காதீங்க மாமா! அது டாப் ஸீக்ரெட்!"

"டேய், டேய்! நேக்கு மட்டும் சொல்லுடா!"

கல்யாணம் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டான். அவனுக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. ஆனால் உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருந்தது.

"ஐயோ, அம்மா என் முதுகிலே தோசை வார்த்துடுவா!"

"டேய்! நான் பிராமிஸ் பண்ணறேன். சத்தியமா ஒருத்தரிடமும் கூறமாட்டேன்."

"ரகசியத்தைச் சொன்னால் எனக்கு என்ன தருவே?"

"சாக்லேட்!"

"பூ! எங்க வீட்டிலே நேற்றுதான் பெரிய டப்பா நிறையச் சாக்லேட் வாங்கி இருக்கா அம்மா!"

'ஆமாம், ஆமாம்! பிளிமத் காரிலே போகிறவனுக்கு சாக்லேட் என்ன பிரமாதம்! ரங்கநாதன் சாக்லேட் தொழிற்சாலையையே வாங்கிக் கொடுத்து விடுவாரே! அவரால் கொடுக்க முடியாத விஷயமாச் சொல்லி இவனுக்கு ஆசை காட்ட வேண்டும்.'

"உன் பள்ளிக்கூடம் இருக்கிற தெரு முனை வரையில் இந்தக் காரை நீ ஓட்டி வரலாம்" என்றான் கல்யாணம்.

விசுவின் முகம் உடனே பிரகாசமடைந்தது. "கியர் போடலாமா?"

"ஓ எஸ்! ஆனா நான் சொன்னபடி கேட்டுச் சமர்த்தா நடக்கணும். இல்லாதபோனால் ஆக்ஸிடெண்ட் ஆயிடும்."

"சேச்சே! ஐயா ஓட்டும்போது ஆக்ஸிடெண்ட் ஆகிறதாவது! எத்தனை வருஷ சர்வீஸ் எனக்கு? ஹூம்" என்று பெரிய மனித தோரணையில் பேசியவாறு காரில் ஏறிக் கல்யாணத்துக்கு மிக அருகே இடப்புறமாக மண்டியிட்டு அமர்ந்தான் விசு. "கிளட்ச்சை அழுத்துங்க மாமா! காரை ஸ்டார்ட் பண்ணி கியர் போடறேன்" என்றான், வலக்கரத்தால் ஸ்டியரிங்கைப் பற்றியபடி.

'பிள்ளையாரப்பா! ஆபத்து ஒன்றும் நேராமல் காப்பாற்று' என்று வேண்டிக் கொண்டான் கல்யாணம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 38 -- படை கிளம்பியது!




இரண்டு நாட்கள் கழித்துக் கல்யாணம் சமூக சேவா சங்கக் கட்டிட வாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போனபோது அவன் முகம் பேயறைந்த மாதிரி இல்லை; அதைவிட மோசமாக இருந்தது.

"என்ன ஆயிற்று உங்களுக்கு? இன்று ஃபைனல் டிரெஸ் ரிகர்சல் என்று தெரிந்து தாமதமாக வந்தீர்கள். எதையோ பறி கொடுத்துவிட்டது போல் நிற்கிறீர்கள். டயலாக்கை உளறிக் கொட்டுகிறீர்கள்!" என்றாள் பவானி.

"ஆமாம். எனக்கு மனமே சரியில்லை" என்றான் கல்யாணம். "உங்களுக்கெல்லாம் நான் எடுத்திருக்கிற முடிவை எப்படி விவரிக்கிறது; அதை நீங்கள் எந்த விதமாக ஏற்றுக் கொள்ளப் போறீங்க என்பதை எண்ணினால் ஒரே குழப்பமா யிருக்கு."

"போச்சுடா! ஸ்குரூ லூஸா? திருப்புளி கொண்டு வரட்டுமா?"

"பழுதுபார்க்கப்பட வேண்டிய மூளை ரங்கநாதனுடையது" என்றான் கல்யாணம்.

"புரியும்படிதான் சொல்லுங்களேன். சுற்றி வளைப்பானேன்?" என்றாள் பவானி.

"ஆமாம் பவானி, சொல்லத்தான் வேண்டும்! சொல்ல வேண்டிய நேரம் வந்தும் விட்டது. விசுவிடம் ரகசியத்தை வெளியிடுவதில்லை என்று சத்தியம் செய்து தந்தேன். ஆனால் அதைக் காப்பாற்றப் போனால் என் மனச்சாட்சி என்னைச் சும்மா விடாது; வதைத்துவிடும். மாசிலாமணி குடும்பத்தை ரங்கநாதன் வீட்டிலே குடி வைத்ததே நான்தான் என்பதால் எனக்கு இதில் ரொம்பவும் பொறுப்பு உண்டு. நண்பர்களே கேளுங்கள்! பவானி! நீங்களும் கேளுங்கள்!

"ரங்கநாதன் அந்த ஏழைக் குடும்பத்தின் அநாதரவான நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை விலைக்கு வாங்கி விட்டார்! அந்தப் பெண் கமலாவை மணந்து கொள்ளப் போகிறார். அறுபது வயதுக் கிழவனுக்கும் பதினெட்டு வயதுக் குமரிக்கும் திருமணம்!"

"ஆ! அக்கிரமம், அநியாயம். இதை அநுமதிக்கவே கூடாது" என்பது போல் பல குரல்கள் பரபரப்புடன் எழுந்தன. பவானி மட்டும் அமைதியாக இருந்தாள்.

"திருநீர்மலையில் இரகசியமாகத் திருமணத்தை நடத்தத் திட்டம். அதுவும் நமது நாடகம் இங்கு அரங்கேறும் அதே தினத்தில் கல்யாணத்தை வைத்துக் கொண்டிருக்கிறது அந்த கிழக் கோட்டான்! ஏன் தெரியுமா? எல்லோருடைய கவனமும் நாடகத்தில் இருக்கும். கல்யாணப் பார்ட்டி கிளம்பிப் போவதை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற கருத்தில் தான்! ஆனால் நாம் ஏமாந்துபோகப் போவதில்லை. இந்த நீசத்தனமான காரியத்தைத் தடுத்து நிறுத்தியே தீருவோம்!"

"ஆமாம்! கிளம்பலாம்! போகலாம்! உடனே புறப்படு!" என்று குரல்கள்எழுந்தன.

"பவானி! நீங்களும் வருகிறீர்களல்லவா?" என்றான் கல்யாணம்.

"நான் வருவதும் வராததும் என் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்திருக்கிறது!"

"இதில் கேட்க இன்னும் என்ன இருக்கிறது?"

"எவ்வளவோ இருக்கிறது. கமலாவை நீங்கள் காதலிக்கவில்லை என்று முன்பு நீங்கள் சொன்னீர்கள். இப்போது உங்கள் மனம் மாறிவிட்டதா என்று தெரிய வேண்டும். அப்படி யென்றால் எனக்கு ரொம்ப சந்தோஷம். ரங்கநாத முதலியாரை அவள் மணந்து கொள்ளக் கூடாதென்றால் நீங்கள் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயாரா யிருக்கிறீர்கள் என்று நான் நம்பலாமா? திருநீர்மலைக்கு எப்படி போகப் போகிறீர்கள்? எப்போது உங்களுக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது? இந்தச் சந்தேகங்க ளெல்லாம் நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும். கடைசியாக, இந்தத் திருமணத்தை எப்படித் த‌டுத்து நிறுத்த‌ப் போகிறீர்க‌ள் என்ப‌தையும் யோசிப்ப‌து ந‌ல்ல‌து!"

"ப‌வானி! எளிதான‌ ஒரு பிர‌ச்னையை நீங்க‌ள் சிக்க‌லுள்ள‌தாக்குகிறீர்க‌ள். க‌ம‌லாவை நான் முன்பும் காத‌லிக்க‌வில்லை, இப்போதும் காத‌லிக்க‌வில்லை. ஆனால் அத‌ற்காக‌ ஒரு கிழ‌க்கோட்டான் ஒரு ப‌ச்சைக் கிளியைக் கொத்திக் கொண்டு போவ‌தைப் பார்த்துக் கொண்டு நான் சும்மாயிருக்க‌ முடியாது. இந்த‌ச் ச‌ங்க‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளுக்குச் சில‌ ல‌ட்சிய‌ங்க‌ள் உண்டு. அந்த‌ ல‌ட்சிய‌ங்க‌ளுக்கு மாறாக‌க் காரிய‌ங்க‌ள் ந‌ட‌க்கும்போது கை க‌ட்டிச் சும்மா நிற்ப‌து கோழைத்த‌ன‌ம். திருநீர்ம‌லைக்குப் போக‌ ஒரு ப‌ஸ்ஸுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். இன்னும் ஒரு ம‌ணி நேர‌த்தில் இந்த‌ச் ச‌ங்க‌த்தின் வாச‌லுக்கு வந்துவிடும். இரவோடு இரவாகப் புறப்பட்டால் திருநீர்மலைக்கு அதிகாலையில் முகூர்த்த நேரத்துக்கு முன்பாகவே போய்ச் சேர்ந்து விடலாம். திருமணப் பந்தலில் நாம் அனைவரும் போய் நின்று, தேவையானால் சத்தியாக்கிரகமே செய்து கமலாவைக் காப்பாற்ற‌லாம். எனக்கு எப்போது இந்தச் செய்தி தெரியவந்தது என்று கேட்டீர்கள். இரண்டு தினங்களுக்கு முன்பாகத் தான் தெரிந்து கொண்டேன்.

இந்தக் கல்யாணத்தை எப்படித் தடுப்பது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னர் உங்கள் எல்லோரிடமும் பேச நினைத்தேன். இடையில் பஸ்ஸுக்கும் ஏற்பாடு பண்ணினேன். ரங்கநாத முதலியாரும் மாசிலாமணி குடும்பமும் மெய்யாலுமே கிளம்பிச் செல்கின்றனரா என்று கண்காணிக்கவும் செய்தேன். இன்று பிற்பகல் அவர்கள் புறப் பட்டுச் சென்று விட்டார்கள். விசுவுக்கு நான் கொடுத்த வாக்குறுதியும் என்னை உடனே பேச விடாமல் தடுத்தது. போதுமா பவானி? திருப்திதானா? இப்போதாவது நாம் புறப்படலாமா?"

பவானி சிரித்தாள். "கல்யாணம்! அரும் பெரும் சாதனைகளைப் புரிந்த வீரனைப் போல் பேசுகிறீர்களே! உம்? உங்களைப் பற்றி நான் எவ்வளவோ உயர்வாக எண்ணி வந்தேன். இன்று எனக்குப் பெரிய ஏமாற்றம் அளித்து விட்டீர்கள்!"

"எந்த விதத்தில்? நான் என்ன தவறு செய்தேன்? தயவுசெய்து விளக்கினால் நல்லது" என்று சற்று விரைப்புடன் வினவினான் கல்யாணம்.

"சத்தியாக்கிரகம் என்ற சொல்லை உபயோகித்தீர்கள். ஆனால் நீங்கள் செய்ய எண்ணியுள்ள காரியம் துராக்கிரகம்தான். இரண்டு நாட்களுக்கு முன்பே உங்களுக்கு இந்த விவரம் தெரியுமென்றால் நீங்கள் உடனே ரங்கநாத முதலியாரை அணுகி நயமாகப் பேசி அவர் மனத்தை மாற்ற முயன்றிருக்கலாம். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை. திருமண தினத்தன்று கல்யாணப் பந்தலில் கலாட்டா செய்து ஒரு பரபரப்பை ஏற்படுத்த ஆசைப்படுகிறீர்கள். ரங்கநாத முதலியாரை அப்போதுதான் நன்றாக அவமானப்படுத்தியதாகும். வெட்கித் தலை குனிய வைத்ததாகும் என்று திட்டம் போட்டிருக்கிறீர்கள்."

"ரங்கநாத முதலியாரிடம் நான் நயமாகப் பேசியிருந்தால் அவர் உடனே என் சொற்படி கேட்டு நடந்து கொண்டிருப்பாராக்கும்? பவானி! ரங்கநாத முதலியாரை உங்களைவிட நான் நன்றாக அறிவேன். அவர் உடனே போலீஸ் பாதுகாப்பை நாடியிருப்பார். நம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் போயிருக்கும்."

"அப்படி நீங்கள் கருதுவதா யிருந்தால் சத்தியத்தின் வெற்றியில், தார்மிக வற் புறுத்தலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்" என்றாள் பவானி. "கமலா, அவள் பெற்றோர், ரங்கநாதன், உங்கள் தகப்பனார், அவசியமானால் ஊரிலுள்ள மற்றப் பெரியவர்கள் எல்லாரிடமுமே நாம் பேசியிருக்கலாம். இப்படி ஒரு திருமணம் நடக்க அனுமதிப்பது தவறு என்று ஆரோக்கியமான ஓர் எதிர்ப்புணர்ச்சியை வளர்த்திருக்கலாம்."

"போகாத ஊருக்கு வழி சொல்லுகிறீர்கள். இரண்டு நாட்களில் நடக்கக் கூடிய காரியமா, வெகுஜன அபிப்பிராயத்தை வளர்ப்பது என்பது?"

"நாளைக்கு நாடகம் என்று அறிவித்திருக்கிறீர்களே; டிக்கட் விற்றிருக்கிறீர்களே; காசு கொடுத்தவர்களுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்?"

"நாடகத்தை ஒரு வாரம் ஒத்திப் போடுவதில் ஒன்றும் குடிமூழ்கிப் போய் விடாது. இப்போது வாங்கியிருக்கிற டிக்கெட்டை வைத்துக் கொண்டே எல்லோரும் அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரலாம் என்று அறிவித்து விடலாம். ஆனால் கல்யாணத்தை நாளைக்கு நிறுத்தாமல் போனால் போனதுதான். அந்த அநீதியை அப்புறம் நேராக்கவே முடியாது."

"அநீதி என்று எப்படித் தீர்மானித்தீர்கள்? கமலாவே இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதித்திருந்தால்?"

"ஏது, நீங்களே பக்கத்திலிருந்து நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தது மாதிரிப் பேசுகிறீர்களே?"

"இல்லை. ஆனால் ஒரு பெண்ணின் மனத்தை இன்னொரு பெண்ணால் புரிந்து கொள்ள முடியும். அதிலும் கமலாவின் மனம் எப்படிச் செயல்படும் என்பதை நான் நன்றாக உணர முடியும்."

"அப்படியே அவள் சம்மதித்திருந்தாலும் அது பெற்றோரின் வற்புறுத்தலால் அல்லது ஒரு வீம்புக்காகத்தான் இருக்கும். பின்னால் அதற்காக அவள் ரொம்ப வருத்தப் படுவாள்."

"மிஸ்டர் கல்யாணம்! முடிவாகச் சொல்கிறேன். நீங்கள் செய்யப் போகும் காரியம் அநாகரிகமானது. எனக்குச் சம்மத மில்லை. சட்ட ரீதியிலோ அல்லது தார்மீக ரீதியிலோகூட உங்களுக்கு இதைச் செய்ய அருகதை இல்லை. நான் போய் வருகிறேன். நாடக ஒத்திகையைத் தொடர்வதானால் என் வீட்டுக்குச் சொல்லி அனுப்புங்கள்."

பவானி விடுவிடுவென்று நடந்து சங்கக் கட்டிடத்தின் வாசலுக்கு வந்து காரில் ஏறினாள்.

அவள் சென்ற பிறகு கல்யாணம் தன் நண்பர்களைப் பார்த்து, "என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டான்.

அவன் குரலில் இப்போது முன்பிருந்த வேகம், உறுதி ஏதுமில்லை. பவானிக்கு இந்தக் காரியம் பிடிக்கவில்லை. கோபித்துக் கொண்டு போய் விட்டாள் என்றதும் அவனுக்கு உற்சாகம் குறைந்து விட்டது. அவள் பிரமாதமாகத் தன் ஏற்பாடுகளைப் பாராட்டுவாள் என்று எதிர்பார்த்து வந்ததற்கும் அவள் உண்மையில் நடந்து கொண்ட விதத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்! "நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். நான் யாரையும் வற் புறுத்தத் தயாராயில்லை. நாம்பாட்டுக்கு இந்தத் திருமணத்தைப் பற்றிய விவரம் ஒன்றுமே தெரியாதது போல இருந்து விடலாம். நாடகத்தைத் தொடர்ந்து நடத்தலாம்"என்றான்.

ஓரிரு விநாடிகள் மௌனம் நிலவியது. அதையடுத்து ஒரு தீவிரவாதி, கணீரென்று பேசினான். "ஏன் தயங்குகிறீர்கள்? உங்களை யெல்லாம் பார்த்துத்தான் மகாகவி பாரதி, 'வாய்ச் சொல்லில் வீரரடி' என்று பாடினான். 'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை சொல்வாரடி' என்றான். கமலாவுக்கு இப்படி நீங்கள் வஞ்சனை செய்யலாமா? முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா? அந்தப் பவானி, தானே கமலாவின் கழுத்தில் கல்லைக் கட்டிக் கடலிலும் தள்ளுவாள் போல் இருக்கிறது. அவள் பேச்சைக் கேட்டு மயங்கி விடாதீர்கள். ஒரு பெரிய அக்கிரமம் நமக்குத் தெரிந்து நடக்கும்போது சும்மா இருப்பது பேடித்தனம்" என்று ஆவேசத்துடன் சொன்னான்.

"ஆமாம். புறப்படுங்கள், போகலாம்" என்றான் இன்னொருவன். உடனே அதைத் தொடர்ந்து, "பஸ் வந்து விட்டதா? கிளம்பலாமா? முகூர்த்தம் எத்தனை மணிக்கு? நாடகம் ஒத்திப் போடப்பட்டிருப்பதாகத் தண்டோராப் போடச் சொல்லுவோமா? அவரவர் வீட்டுக்குப் போய் ஒரு 'ஸெட்' துணி மணிகளுடன் அரை மணி நேரத்தில் இங்கு திரும்பி வந்து விடுவோம்" என்றெல்லாம் பலவாறாகப் பேசி முடிவுகளுக்கு வந்தார்கள்.

கல்யாணம் இனி நான் நினைத்தாலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்ந்தான். தான் அணையை உடைத்து விட்டது போலவும் அந்த வெள்ளம் தன்னையே அடித்துச் செல்வது போலவும் அவனுக்குத் தோன்றியது!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 39 -- தந்திரம்!




பவானி வீடு திரும்பும் நோக்கில் காரில் ஏறிப் புறப்பட்டவள், பாதி தூரம் போன உடனேயே மனம் மாறியவளாக ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியார் இல்லத்துக்குச்சென்றாள்.

பவானியைப் பார்த்ததுமே அவர், "வாங்க, வாங்க! ஒரு வார்த்தை சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே" என்றார்.

"அழகுதான் நீங்கள் எவ்வளவு பெரிய ஸீனியர் லாயர்! உங்களை நான் கூப்பிட்டுஅனுப்புவதா?"

"வயதால் பெரியவனாக இருந்தால் போதுமா? செல்வாக்கு என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதோடு பெண்மைக்குரிய சலுகைகளும் உங்களுக்கு உண்டு. அதை மதிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது."

"உங்கள் வாதம் இரண்டையும் நான் ஏற்பதற்கில்லை. இந்த ஊரில் உங்களுக்கு இல்லாத செல்வாக்கு நேற்று வந்த எனக்கு என்ன இருக்கிறது?" என்றாள் பவானி. "இரண்டாவது, ஆண்களோடு சரிநிகர் சமானமாகக் கருதப்பட வேண்டும் என்றுதான் என்போன்றவர்கள் ஆசைப்படுவோமே யன்றிப் பெண் என்பதற்காகத் தனிச் சலுகை காண்பிப்பதை விரும்ப மாட்டோம்."

"சரி, உங்கள் விஜயம் அடியேனுக்கு நீங்கள் அளித்த கௌரவமாகவே இருக்கட்டும். என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பி, டீ,ஓவல்டின்...."

உள்ளே செல்லத்தின் குரல் உரக்கக் கேட்டது. "நானும் இரண்டு நாட்களாக முட்டிக் கொண்டிருக்கிறேன். 'காப்பிக் கொட்டை வாங்கணும்' என்று. யாராவது காதில் போட்டுக் கொண்டால்தானே? ஒருத்தர் சட்டப் புத்தகமே சரணாகதின்னு அடைஞ்சு கிடக்கிறார். இன்னொருத்தன் 'நாடகம், நாடகம்' என்று கூத்தடிக்கிறான். இந்த லட்சணத்தில் வரவங்க போறவங்க எல்லோருக்கும் எப்படியாவது நான் காப்பி போட்டுக் கொடுத்தாக வேண்டும்! நான் என்ன மந்திரக்கோல் வைச்சுக்கிட்டிருக்கேனா, இல்லை, குழாயைத் திறந்தால் காப்பியா கொட்டுமா?"

பவானி கலவரம் அடைந்தவளாக, "நோ, நோ! எனக்கு ஒன்றுமே வேண்டாம் ஸார்!"என்றாள்.

"காப்பி வேண்டாம். மோர்? சாத்தீர்த்தம்? தண்ணீர்?"

"எதுவும் வேண்டாம். நான் இப்பத்தான் நம்முடைய சங்கத்தில் டிபன், காப்பி சாப்பிட்டுவிட்டு வந்தேன்."

"நாடக ஒத்திகை நடக்கிறதோ இல்லையோ, டிபன் காப்பியை எல்லாரும் கச்சிதமாக முடித்துக் கொள்வீர்கள் போலிருக்கு."

"நேற்று வரை ஒத்திகை சரியாகத்தான் சார் நடந்தது. இன்றுதான் தகராறாகிவிட்டது. நானும் கிளம்பி வந்துவிட்டேன்."

"ஏன் என்ன விஷயம்?"

"கல்யாண விஷயம்தான்."

"என்ன பண்ணினான் அவன்? வர வர அவன் போக்கே எனக்குப் பிடிக்கவில்லை. ரொம்ப அதிகப்பிரசங்கியாக இருக்கிறான். பாருங்க, 'ஏண்டா, நாடகத்தில் எனக்கு ஒரு சான்ஸ் தர வேண்டாமா? என்றால் சிரிக்கிறான். எனக்கு நடிக்கத் தெரியாதாம். நீங்க பார்த்திருக்கிறீங்களா? ஹாம்லெட்.... 'டு பீ ஆர் நாட் டு பீ'....ன்னு நான் ஆரம்பிச்சா....."

"அடடா! நான் உங்க மகன் கல்யாணத்தைக் குறிப்பிடவில்லை. அவர் 'அக்கிரமக் கல்யாணம்' என்று கருதுகிற ஒரு திருமணத்தைப் பற்றிப் பேச வந்தேன்."

"அதென்ன புது மாதிரி கல்யாணம்? வைதிகக் கல்யாணம், சீர்திருத்தக் கல்யாணம் என்றெல்லாம் தான் உண்டு. அக்கிரமக் கல்யாணம் என்று புதிதாக ஒன்று முளைத்திருக்கிறதா?"

"ஸார்! வேடிக்கைக்கு இது நேரமில்லை. ரங்கநாத முதலியார் உங்க 'கிளையண்ட்' தானே? அதனால் உங்களிடம் பேசிவிட்டுப் போவது நல்லது என்று நினைத்தேன். அவர் கமலாவை மணந்துகொள்ளப் போகிறார். நாளைக்குத் திருநீர்மலையில் யாரும் அறியாமல் தாலி கட்டிவிட ஏற்பாடு. ஆனால் இந்த விஷயம் உங்கள் பிள்ளைக்குத் தெரிந்துவிட் டது. தமது நண்பர்களோடு பெருங்கூட்டமாகப் பஸ்ஸில் புறப்பட்டுப் போய்க் கல்யாணத்தை நிறுத்திவிடத் தீர்மானித்திருக்கிறார்."

"நிறுத்திவிட்டுப் போகட்டுமே, உங்களுக்கு அதனால் என்ன நஷ்டம்?"

"ரங்கநாதனுக்கு நீங்கள்தானே வக்கீல்?"

"ஆமாம், அதனால் அவர் செய்கிற அக்கிரமத்துக்கெல்லாம் பக்கபலமாக நிற்க வேண்டுமா?"

"நான் அப்படிச் சொல்லவில்லை."

"மிஸ் பவானி, உங்களுக்குக் கமலா மீது என்ன கோபம்? அவள் அந்தக் கிழவருக்கு வாழ்க்கைப்பட்டுவிட வேண்டும் என்பதில் உங்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை?"

"நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். கமலாவின் உள்ளம் எனக்கு நன்றாகத் தெரியும். அவளிடம் எனக்குள்ள அக்கறையால்தான் நான் வாதாடுகிறேன். அவள் முழுச் சம்மதத்துடன் இந்தத் திருமணம் நடக்கிறது என்றே நான் நம்புகிறேன். அப்படியானால் இவர்கள் போய்க் கல்யாணத்தை நிறுத்த என்ன உரிமை பெற்றிருக்கிறார்கள்? மேலும் ரங்கநாதமுதலியாரின் வக்கீல் என்ற முறையில் அவருக்கு மணப் பந்தலில் நேரக்கூடிய அவமானத்தை நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ என் நோக்கத்தையே சந்தேகிக்கிறீர்கள்."

"கல்யாணம் வரட்டும். விசாரிக்கிறேன்" என்றார் கோபால கிருஷ்ணன். "உங்களுக்குப் பழமொழி தெரியும் இல்லையா? 'குரைக்கும் நாய் கடிக்காது' என்று. இவர்கள் வாய்ச் சொல் வீரர்கள்."

"அப்படித் தோன்றவில்லை. தீவிரமாய் இருக்கிறார்கள். இவர்கள் ரத்தம் கொதிக்கிறதாம்."

'அடடா! அது ஆபத்தாயிற்றே! ஆற வைத்துவிட வேண்டியதுதான்."

"ஆறாதாம்! இவர்கள் உடலில் ஓடுவது தமிழ் ரத்தமாம்!"

"அடேடே! அப்படியானால் மற்றவர் உடம்பில் ஓடுவது இங்கிலீஷ் ரத்தமோ?"

"இன்று மாலையே அவர்கள் பஸ்ஸில் புறப்படுகிறார்கள். விடிவதற்குமுன் திருநீர்மலை போய்ச் சேர்ந்துவிட உத்தேசம்."

"நானும் போகிறேன். பின்னோடு."

"அவர்கள் கல்யாணத்தைத் தாலி கட்டும் சமயத்தில் நிறுத்திவிடப் போவதாகச் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். ஊரில் இரண்டாம் பேர் அறியாமல் திருமணத்தை முடித்துக் கொள்ளத் தீர்மானித்த ரங்கநாதனை வியப்பில் ஆழ்த்தவே போவதாகப் பாவனை செய்வார்கள். போய், 'அத்தனை பேருக்கும் கல்யாண விருந்து ஏற்பாடு செய்தால்தான் ஆச்சு' என்று பிடிவாதம் பிடிக்கப் போவதாகச் சொல்வார்கள்."

"நியாயம்தானே! அவருடைய வக்கீலான எனக்கே விஷயம் தெரிவிக்கவில்லையே அவர். நானும் இவர்களோடு போய் நிற்கத்தான் போகிறேன். தாலி கட்டி முடிந்த பிறகு இரண்டு தொன்னை பாயசமாவது உறிஞ்சிக் குடிக்காமல் ஊர் திரும்பப் போவதில்லை."

பவானி புன்னகையுடன், "பெஸ்ட் ஆஃப் லக், நான் வரட்டுமா?" என்றாள்.

"சீக்கிரம் கிளம்புங்கள். கல்யாணம் வரும் போது நீங்கள் இங்கிருப்பது நல்லதில்லை."

பவானி வாசலுக்கு வந்தபோது உள்ளேசெல்லத்தின் குரல் பெரிதாக ஒலித்தது.

"அந்த ராங்கிக்காரி மினுக்கிக் கொண்டு வந்து நம்ம குழந்தையைப் பற்றி என்னென்னமோ பழி சுமத்திட்டுப் போறா. நீங்களும் பல்லை இளிச்சுக்கிட்டுக் கேட்டுக்கிட்டிருக்கீங்களே!"

"இந்தா, வாயை மூடு!" என்று அவளுக்கும் மேலே குரலை உயர்த்தி அதட்டினார் கோபாலகிருஷ்ணன். "உன் பிள்ளைக்கு ஏகமாய்ச் செல்லம் கொடுக்கப் போக இப்போ அவன், நான் வெளியே தலைகாட்டவே முடியாதபடி செய்துவிடுவான் போலிருக்கு. இங்கே பவானி வந்து போனதைப் பற்றி நீ மூச்சு விடப்படாது. மீறி வாயைத் திறந்தே உன்னைத் தள்ளி வைச்சுட்டு அந்தப் பவானி யையே இரண்டாம்தாரமாய்க் கல்யாணம் செய்து கொண்டுவிடுவேன்! தெரிந்ததா? உம்!"

பவானி காரியசித்தியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் காரில் ஏறினாள். 'இப்பத்தான் உண்மையான ஹோம்ரூல் - வீட்டை ஆளும் - கோபாலகிருஷ்ணன்!" என்று அவள் வாய் முணுமுணுத்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 40 -- எதிர்த் தந்திரம்!



ராமப்பட்டணத்திலிருந்து பஸ் புழுதியைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டது. ஆனால் கிளம்பிய வேகத்தில் அதனால் வெகுதூரம் போய்விட முடியவில்லை. ஊர் எல்லையைத் தாண்டியதுமே உள்ள குறுகிய பாலத்தைக் கடக்க முடியாமல் நின்றுவிட்டது. காரணம் பாலத்தில் ஒரு மாட்டு வண்டி மையத்தில் நின்றிருந்ததுதான். அதிலிருந்து கோபாலகிருஷ்ணன் ஒரு பெட்டி, கூஜா சகிதம் இறங்கினார்.

பஸ்ஸைநோக்கி நடந்து வந்து அதில் ஏறியபடியே, "என்னை ஏமாற்றிவிட்டுப் புறப்படலாம் என்று பார்த்தீர்களா? அதெல்லாம் இந்த ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனிடம் பலிக்காது. தம்பிங்களா!" என்றார்.

அப்புறம் ஜன்னல் வழியாகத் தலையை நீட்டி,"ஆறுமுகம்! வண்டியை வீட்டுக்குத் திருப்பி ஓட்டுடா! பஸ் போகட்டும்!" என்று உரக்கக் கத்தினார்.

"அம்மாவிடம் கல்யாணமும் நானும் இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி விடுவோம்னு சொல்லு..... துணைக்கு வேணும்னா மதுரவல்லி வீட்டோடு வந்து இருக்கட்டும்."

"சரிங்க" என்றான் ஆறுமுகம். பஸ் தொலைவில் வருவதைப் பார்த்துவிட்டுப் பாலத்தை அடைத்துச் சற்றுமுன் வண்டியை நிறுத்தியவன், இப்போது பஸ்ஸுக்கு வழி விட்டு 'ஜல் ஜல்' என்று சதங்கை ஒலிக்கச் சென்றான்.

"போகட்டும், போகட்டும்! ரைட்!" என்றார் கோபாலகிருஷ்ணன். பஸ் மீண்டும் நகரத் தொடங்கியதும், "ஏண்டா, கல்யாணம்! நல்ல பிள்ளைக்கு அடையாளமா சொல்லிக்காமல் கிளம்பி விட்டாயாக்கும்"என்றார்.

"எப்படிப்பா, உங்களுக்கு விஷயம்தெரிஞ்சுது?"

"நீதான் சங்கத்தின் காண்டீன் பையனை உன் அம்மாவிடம் ரகசியமா அனுப்பி வைச்சியே? அவன் உன் அம்மாவின் உருட்டல், மிரட்டல் பேச்சு காதில் விழுந்தவுடனே அவள் தான் வீட்டு எஜமானனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, உன் உத்தரவுப்படி எஜமானியம்மாளைத் தேடி நேரே என்னிடம் வந்துவிட்டான்! ஒரு பெட்டியிலே உனக்கு இரண்டு சட்டை வேஷ்டி வைத்துக் கொடுக்குமாறு கேட்டான். 'எதுக்குடா' என்றேன்."

"உடனே எல்லாவற்றையும் உளறிக் கொட்டி விட்டானா?" என்று கல்யாணம் பதற்றமும் கோபமுமாகக் கேட்டான்.

"பின்னே? ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணனின் குறுக்கு விசாரணையில் யாராவது தப்ப முடியுமா, என்ன? அவன் காப்பி ஆற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த போதுதான் நீங்க உங்க திட்டத்தை உருவாக்கினீங்களாம்!"

"என்னப்பா, சொன்னான்?"

"நீங்க இப்போ செய்து கொண்டிருக்கும் காரியத்தைத்தான் விவரித்தான். 'திருநீர்மலையில் ரங்கநாத முதலியார் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கிறார். ஆனால் கல்யாணம் ஸாருக்கு எப்படியோ விஷயம் அம்பலமாகி விட்டது. நண்பர்களோடு போய் அவரை அதிசயத்தில் ஆழ்த்தப் போகிறார்' என்றான்."

"அவ்வளவுதானா, அப்பா?"

"இவ்வளவு போதாதா? இன்னும் என்ன? ரங்கநாத முதலியார் என் ஆப்த நண்பர். அவருக்கு நான்தான் வக்கீல். அப்படியிருந்தும் அவர்தான் எனக்கு விஷயத்தைத் தெரிவிக்காமல் ஏமாற்றினார் என்றால் நீயுமா அப்பாவுக்குத் தெரியாமல் கம்பி நீட்டப் பார்க்கணும்?"

நிம்மதிப் பெருமூச்சு விட்டான் கல்யாணம். "அதற்கில்லை, அப்பா! உங்க நன்மையை உத்தேசித்துத்தான் நான் கூற வில்லை. உங்களுக்கு விஷயம் தெரியவந்தால் வராமலிருக்க உங்க மனசு கேட்காது. ஆனால் பஸ் பயணம் சிரமம். உட்கார்ந்தபடியே போகணும். அதுவும் இரவு நேரம். கண் விழித்தால் உடம்புக்கு ஆகுமா?"

"உன் கரிசனம் கிடக்கட்டும். கல்யாணம். சரீரத்துக்காகப் பார்த்துச் சிநேகத்தை விட்டு விட முடியுமா? எத்தனை வருஷப் பழக்கம் எனக்கும் ரங்கநாதனுக்கும்!"

"நீங்க வந்ததே நல்லதாப் போச்சுப்பா" என்றான் கல்யாணம், ஈனஸ்வரத்தில்.

"ஆமாம். எல்லோருமே திடும்மென்று போய் நிற்கிறோம். அதனால் மத்தியானச் சாப்பாடு எப்படியானாலும் இரவு விருந்து பிரமாதமாய் அமையணும்னு போனதுமே சொல்லிவிடலாம். லட்டு மலை, பாதாம்கீர் ஆறு, சாம்பார் சமுத்திரம்! கல்யாணம் உனக்குப் பாதாம்கீர் ரொம்பப் பிடிக்குமே!" என்று கூறிச் சிரித்தார் கோபாலகிருஷ்ணன்.

கல்யாணத்துக்கு அப்போதே விளக்கெண்ணெயை விழுங்கியது போலிருந்தது. அவன் நண்பர்கள் யாரும் பேசவில்லை. என்ன செய்வது? எப்படி நடந்து கொள்வது என்ப தொன்றும் புரியாமல் யோசித்துக் களைத்துப் போய் உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு, கோபாலகிருஷ்ணன் தலையும் ஆடிவிழ ஆரம்பித்தது. மனம் பதைக்கக் கண் விழித்து அமர்ந்திருந்தவன் கல்யாணம் ஒருவன்தான்.

நண்பர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் தான் ஒரு கையாலாகாதவனாக அவமானப்பட்டு நிற்பது போல் உணர்ந்தான். 'நினைத்த காரியம் என்ன? நடப்பது என்ன? அப்பாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு கல்யாணத்தை நிறுத்துவது எப்படிச் சாத்தியம்? அவர் அதட்டலுக்கு எல்லோரும் அடங்கிப் போய் விட வேண்டியதுதான். யாருக்குமே தைரியம் வராது! அப்புறம் அப்பாவே குறிப்பிட்டது போல் லட்டு மலைக்கும், பாதாம்கீர் ஆறுக்காகவுமே ஆசைப் பட்டு இந்த இளைஞர் பட்டாளம் கல்யாணத்துக்குச் சென்றதாகும். பின்னால் இந்தத் தோல்வியைச் சுட்டிக் காட்டி நண்பர்கள் என்னைக் கிண்டல் செய்யும்போது அதை எப்படிப் பொறுத்துக் கொள்வது? அதுதான் போகட்டும், அத்தனை தூரம் மார் தட்டிப் பேசிவிட்டு வந்தாயே, பவானியிடம்! அவள் முகத்தில் இனி எப்படி விழிப்பது?' நினைக்க நினைக்கக் கல்யாணத்தின் மனம் பதறியது.

மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ஒரு சின்ன ஊரில் பஸ் நின்றது. டிரைவரும் கண்டக்டரும் டீ சாப்பிட்டு வர இறங்கினார்கள். கல்யாணம் பஸ்ஸுக்குள் நோட் டம் விட்டான். கோபாலகிருஷ்ண முதலியார் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். கல்யாணம் பஸ்ஸை விட்டு இறங்கி டிரைவர், கண்டக்டரைப் பின்தொடர்ந்தபோது அவனுடன் அவன் நண்பர்கள் இருவர் மட்டுமே வந்தார்கள். மற்றவர்கள் அரைத் தூக்கத்திலோ ஆழ்ந்த உறக்கத்திலோ இருந்தனர்.

டீ அருந்திக் கொண்டிருந்த டிரைவர், கண்டக்டரைத் தனியே அழைத்தான் கல்யாணம். அவர்களிடம் அந்தரங்கமாகச் சில வார்த்தைகள் பேசினான் இரு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து இருவர் பாக் கெட்டிலும் மடித்துச் செருகினான். பஸ்ஸுக்கு அனைவரும் திரும்பிய பின்னர் இளைஞர்களிடையே சங்கிலித் தொடர்போல் ஒரு செய்தி அந்தரங்கமாகப் பரவியது.

திருநீர்மலையை அடைய இன்னும் பதினைந்து மைல் தூரம் இருக்கும்போது பஸ் 'திடும்' மென்று நின்று விட்டது. டிரைவர் கிளப்பிக் கிளப்பிப் பார்த்தார். ஊஹூம்! அவர் ஜம்பம் சாயவில்லை.

"எல்லோரும் கொஞ்சம் கீழே இறங்கித் தள்ளறீங்களா?" என்றார் திரும்பிப் பார்த்து.

"அப்பா! நீங்கள் இறங்க வேண்டாம். நாங்கள் வாலிபர்கள் இறங்கித் தள்ளுகிறோம்"என்றான் கல்யாணம்.

"அழகுதான்! எனக்கு அப்படி என்ன வயசாகி விட்டது? நானும் ஒரு கை கொடுக்கிறேன்" என்று கொட்டாவி விட்டுக் கொண்டே இறங்கினார் கோபாலகிருஷ்ணன்.

எல்லோரும் பஸ்ஸை தள்ளினார்கள். பஸ் புறப்பட்டது. நகர்ந்தது! "ஸ்டாப்! ஸ்டாப்!" என்று கத்திக் கொண்டே இளை ஞர்கள் அதன் பின்னால் ஓடினார்கள். பஸ் நகர்ந்து கொண்டிருக்கும்போதே அதில் தொத்திக் கொண்டு ஏறினார்கள். பஸ் நிற்கவே யில்லை. வாலிபர்கள் ஓடி வந்து ஏறிக் கொள்ளும் வேகத்தில் நகர்ந்துக் கொண்டே யிருந்தது. "அப்பா சீக்கிரம் வாங்க! சீக்கிரம்!" என்று கூறியபடி கல்யாணமும் ஓடினான். பஸ்ஸில் பாய்ந்து ஏறிக் கொண்டான்.

கோபாலகிருஷ்ண முதலியார் பத்தடி ஓடினார். அதற்கு மேல் அவரால் முடியவில்லை; இரைத்தது."ஹோல்டான்! ஹோல்டான்!" என்று கத்தினார். பஸ் டிரைவர் அவர் கூச்சலை லட்சியம் செய்யாமல் வேகத்தை அதி கரித்தார். வாலிபர்கள் அனைவரும் பஸ்ஸில் இருந்தார்கள். வயோதிகர் மட்டும் வீதியில் நின்றார்!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 41 -- கல்யாணத்தில் கலாட்டா!



கமலாவைப் பாயில் அமரச் செய்து தலைவாரத் தொடங்கினாள் காமாட்சி அம்மாள்.

"அநாவசியமா உனக்குச் சிரமம். தலை சாமானெல்லாம் வைத்துப் பின்ன வேண்டி யிருக்கு. இல்லாத போனால் நானே பின்னிக் கொண்டுவிடுவேன்" என்றாள் கமலா.

"சரி, சரி! ரொம்பத்தான் பிகு பண்ணிக் கொள்ளாதே! நாளைக்குத் தலைவாரிப் பின்ன ஒருத்தி, புடவை கட்டிவிட ஒருத்தின்னு வேலைக்காரிகளை நியமித்துக் கொள்வாய். நான் பின்னுவது இதுதானே கடைசித் தடவை?" என்றாள் காமாட்சி.

'முதல் தடவையும் இதுதானே' என்று கூற நினைத்தாள் கமலா. ஆனால் சொல்ல வில்லை. அவளுக்கு நினைவு தெரிந்து காமாட்சி அம்மாள் அவளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விட்டதோ தலைவாரிப் பின்னியதோ எதுவும் கிடையாது. எனவே இன்றைய திடீர்க் கரிசனம் அவளுக்குப் புரியவும் இல்லை; பிடிக்கவும் இல்லை.

"இந்தா, இப்படிக் குனிஞ்சுண்டா எப்படிப் பின்னுகிறது? தலையை நிமிர்த்து. மணையில் உட்கார்ந்த பிறகு வெட்கப்பட்டுக் கொள்ளலாம்" என்ற காமாட்சி, கமலாவின் முதுகிலே உள்ளங்கையை வைத்து ஓர் அழுத்து அழுத்தினாள். விடுபட்ட ஸ்பிரிங் சுருள் போல் 'விண்'ணென்று நிமிர்ந்தாள் கமலா. எதிரே யிருந்த கண்ணாடியில் அவள் முகம் காமாட்சிக்குத் தெரிந்தது.

"அடி பாவி! நல்ல நாளும் அதுவுமா எதுக்குடி இப்படி அழறே? கண்ணீரை மறைக்கத்தான் அப்படிக் குனிந்த தலை நிமிராமல் இருந்தாயா? அங்கே போய் மணையில் உட்கார்ந்த பிறகு இப்படிக் கண்ணீர் விட்டுக் கலங்கினாயோ தெரியும் சேதி! எதற்கு இப்படி எதையோ பறி கொடுத்து விட்டது போல் முகத்தை வைத்துக் கொள்கிறாய்? உனக்கு என்ன கேடு வந்துவிட்டது? கோடீசுவரன் வந்து குப்பையிலே கிடந்த உன்னை அரண்மனையிலே வைக்கிறேன் என்கிறான். அதற்குக் கசக்கிறதோ? நாளைக்கு அந்த மாளிகையின் எசமானியாக இருக்கும்போது என்னைத் திரும்பிகூடப் பார்க்க மாட்டாய்!"

"நான் ஒன்றும் அப்படி நன்றி கெட்டவள் இல்லை, அம்மா! நாளைக்கு நீங்களே தெரிந்து கொள்வீர்கள்."

"நாளைக்கு எங்களுக்கு நீ சாதிக்கப் போவது கிடக்கட்டும்; இன்றைக்கு எங்கள் மானத்தைக் காப்பாற்று. ஏதாவது ஏறுமாறாக நீ செய்து விட்டால் உன் அப்பாவும் நானும் கல்லைக் கட்டிக் கொண்டு கடலிலே விழ வேண்டியதுதான். அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொள்ளாதே! மாலை மாற்றும் போதிலிருந்தே சிரித்த முகமாகச் சந்தோஷமாக இருக்க வேண்டும். புரிந்ததா?"

"சரியம்மா" என்றாள் கமலா.

கல்யாணப் பந்தலில் ரங்கநாதனும் கமலாவும் பட்டுப் பாயில் உட்கார்ந்திருந்தார்கள். மேளம் முழங்கிற்று. புரோகிதர் உரக்க மந்திரம் சொன்னார்.

"என்னய்யா, கல்யாணப் பெண்ணுக்குமேல் நீர் வெட்கப்படுகிறீரே! நிமிர்ந்து ஜம் மென்று உட்காருமேன்" என்றார் ரங்கநாதனின் நெருங்கிய உறவினர் ஒருவர், உரிமையோடு. "விரைப்பாக உட்காருகிற ஜோரிலேயே ஒரு பத்து வயசைக் குறைச்சுடலாங்கிறேன்!"

ரங்கநாதன் முகத்தில் வாட்டம் படர்ந்தது. 'வயது விஷயத்தை இத்தருணத்தில் அந்த உறவினர் வேண்டும் என்றே நினை வூட்டினாரா அல்லது மனப்பூர்வமான நல் லெண்ணத்தில் பேசினாரா? இந்தச் சொல்லம்பு கமலாவை எப்படிப் பாதித்திருக்குமோ? அவர் கவலையோடு கமலாவை ஒரு முறை திரும்பிப் பார்த்தார். அவள் தலை குனிந்திருந்ததால் முகத்தைப் பார்க்க முடியவில்லை. என்றாலும் அவள் அமர்ந்திருந்த நிலையிலும் அழகை ரசிக்க முடிந்தது. தலைகொள்ளாத ஆபரணங்கள். புஷ்பம்; புதுப் பட்டு ரவிக்கையின் 'பஃப்' மடிப்புக்குக் கீழிருந்து புறப்பட்டு முழங்காலைச் சுற்றி வளைத்த வாழைத் தண்டுக் கரங்கள். புடவைக் கொசுவங்களுக்கு இடையிலிருந்து நீண்ட செம் பஞ்சுக் குழம்பு பூசிய பாதங்கள். அவற்றின் ஐந்து விரல்களையும் தனித் தனியே தொட்டுப் பார்த்து அவற்றின் மென்மையை ரசிக்க வேண்டும் என்று எண்ணினார் ரங்கநாதன். 'விரல்களை மட்டும்தானா?' என்று எண்ணியபோது அவருக்கு மேனி சிலிர்த்தது. கமலா தன்னிடம் மனப்பூர்வமாகத் திருமணத்துக் குச்சம்மதம் தெரிவித்த தினத்தை எண்ணிப் பார்த்தார் அவர்.

"ஒட்டும் தையலுமாக இருந்த அந்தப் பழம் புடவையிலேயே அவள் எத்தனை அழகாகக் காட்சி அளித்தாள்! இனி அவளை எப்படியெல்லாம் அலங்கரித்து ஆசை தீரப் பார்க்கலாம்!"

"திருமாங்கல்யதாரணம் ஆகலாமா?" என்று மாப்பிள்ளையையும் அருகிலிருந்த வேறு இரு பெரியவர்களையும் கேட்டு அனுமதி பெற் றுக் கெண்டார் புரோகிதர். அச்சமயத்தில் சத்திரத்தின் வாசலில் பஸ் வந்து நின்றது. கல்யாணமும் அவர் நண்பர்களும் இறங்கித் திபுதிபுவென்று ஓடி வந்தார்கள். சிலர் நேரே மேளகாரரிடம் போய் நாயனத்தையும் தவிலையும் பிடுங்கிக் கொண்டு தெருப்பக்கம் சென்றார்கள். ஒருவன் சர்க்கரைத் தட்டை எடுத்துத் தரையில் சிதறினான். இன்னொருவன் சந்தனக் கிண்ணத்தைக் கவிழ்த்தான். வேறு ஒரு திடகாத்திர தேகம் உள்ளவன் புரோகிதரைத் தூக்கி நிறுத்தி மண்டபத்துக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனான். ஒருவன் ரங்கநாதன் கரத்திலிருந்த தாலியை வெடுக் கென்று பிடுங்கிக்கொண்டான். மற்றொருவன் விரித்திருந்த ஜமக்காளம் ஒன்றை இழுத்து ரங்கநாதனின் மீது போட்டான்.

பந்தலில் இருந்தவர்கள் எழுந்து இரைச்சலும் கூச்சலும் இட்டுக் கொண்டு அங்குமிங் கும் ஓடினார்கள். பந்தல் ஒரு மூலையில் சரிந்து விழுந்தது. ஒருவன் "நெருப்பு! நெருப்பு!" என்று கத்தினான். "ஜப்பான்காரன் வந்து விட்டான்" என்றுகூட ஒரு கேலிக் குரல் எழுந்தது! ஜப்பான்காரன் வந்து விட்டதாக நம்பினார்களோ இல்லையோ, வாலிபர்கள் சிலர் 'ரௌடி' களாக மாறிக் கல்யாணத்தைக் கலைப்பதை எல்லாரும் புரிந்து கொண்டார்கள். ரங்கநாத முதலியாரின் அழைப்பை ஏற்று வந்திருந்த சொற்ப விருந்தினரும் பரபரப்படைந்து கிளம்பினார்கள். அந்த வாலிபக் கூட்டத்தை எதிர்க்கவும் அச்சம்; அங்கே இருக்கவும் பயம். தப்பினால் போதும் என்று சத்திரத்தைவிட்டு, வாசல் பந்தலைவிட்டு தெருவைவிட்டு, ஊரைவிட்டேகூட ஓடினார்கள். ஊர் எல்லை தாண்டிய பிறகுதான் நின்று திரும்பிப் பார்த்தார்கள்.

அமர்ந்த நிலையில் இருந்த, ரங்கநாத முதலியார் மீது விழுந்த ஜமக்காளம் அவரை நாலா புறமும் நன்றாக மூடியது. நாலு பேராகச் சேர்ந்து அவரைக் குண்டுக் கட்டாக மூட்டை தூக்குவதுபோல் தூக்கிக் கொண்டு வாசலுக்குப் போனார்கள். பஸ்ஸின் உள்ளே உருட்டி விட்டார்கள். பின்னோடு தாங்களும் ஏறிக்கொண்டு ஜமக்காளத்தின் முடிச்சை இறுக்கினார்கள்.

காமாட்சி அம்மாள் கமலாவைத் தோளில் சார்த்தியபடி ஒரு மூலையில் பயந்து நடுங்கியவாறு நின்றாள். கமலா விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். விசு, "அப்பா! எனக்குப் பயமாக இருக்கு, அப்பா!" என்று திரும்பத் திரும்பக் கூறியபடி மாசிலாமணியின் கால்களைக் கட்டிக் கொண்டு நின்றான். அவரோ ஏதொன்றும் புரியாமல் பிரமித்துப் போயிருந்தார்.

கல்யாணம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் திட்டம் சரி வர நிறைவேறியதைத் தெரிந்து கொண்டு மூலையில் இருந்த கமலாவையும் அவள் தாயாரையும் நெருங்கினான்.

"கமலா! நான் இப்போது இங்கே தாமதிப்பதற்கில்லை. உடனே ராமப்பட்டணம் திரும்ப வேண்டும். இன்னும் சற்று நேரத்தில் என் அப்பா இங்கே வருவார். உங்களையெல்லாம் பத்திரமாக ஊருக்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பார். நீ கவலைப் படாதே! உனக்கு இனி அந்தக் கிழக் கோட் டான் ரங்கநாதன் ஒரு தொந்தரவும் தராது. நன்றாக அவருக்குப் பாடம் கற்பித்து விட்டோம்!"

விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்த கமலாவுக்குத் திடீரென்று எங்கிருந்துதான் அத்தனை துணிச்சலும் ஆவேசமும் வந்ததோ தெரியாது. கண்ணீர் வடிந்து கரை படிந் திருந்த முகத்தை விருட்டென்று நிமிர்த்தினாள். கோபமும் தாபமும், ஏக்கமும் ஏமாற்றமும் பிரதிபலிக்கக் கல்யாணத்தை நேருக்கு நேர் பார்த்தாள். பிறகு, "சீ! நீயும் ஓர் ஆண்பிள்ளையா?" என்றாள்.

கல்யாணத்துக்குத் தன் தலையில் இடியே விழுந்துவிட்டது போல் இருந்தது. அவன் என்ன பதில் சொல்வது. எப்படி நடந்து கொள்வது என்று புரியாமல் திகைத்தான்.

இதற்குள் வாசலில் பஸ் ஹாரன் ஒலி கேட்டது. பஸ்ஸில் ஏறாமல் அவனுடன் நின்ற வாலிப நண்பர்கள் ஓரிருவர், "கல்யாணம்! சீக்கிரம் வாப்பா! விளக்க உரையெல்லாம் அப்புறம் நடக்கலாம்" என்று துரிதப் படுத்தினார்கள். அங்கே காலதாமதம் செய்வது ஆபத்து என்று நினைவூட்டினார்கள்.

கல்யாணம், கமலாவை, 'என்னை மன்னித்துவிடு' என்பது போல் ஒரு முறை பார்த்தான். "எல்லாம் உன்னுடைய நன்மைக்குத்தான் செய்தேன், கமலா! இப்போதில்லை யானாலும் என்றாவது ஒருநாள் இதை நீ புரிந்து கொள்வாய்" என்றான். பிறகு 'விருட்டென்று திரும்பிச் சென்று வாசலில் புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டான்.

திருநீர்மலையிலிருந்து கிளம்பி ராமப்பட்டினம் நோக்கிச் சுமார் அரை மணி நேரம் பயணப்பட்ட பிறகுதான் பஸ்ஸுக்குள் இருந்த மூட்டையை இளைஞர்கள் அவிழ்த்தார்கள். ரங்கநாத முதலியார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மெல்ல எழுந்து அவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை அவர். அவர் கோபமாய்ச் சீறியிருந்தால் வாலிபர்களுக்கும் பதிலுக்கு ஏச வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், அவரோ பாய்வதற்கு முன் பதுங்கும் புலியாகக் காணப்பட்டார். 'கிழட்டுப் புலியானாலும் புலி புலிதான்' என்பது போல் இருந்தது அவர் நடந்து கொண்டவிதம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 42 -- "பழிக்குப் பழி!"



"ரங்கநாத முதலியாரா? என்னைத் தேடி வந்திருக்கிறாரா? இதோ வந்து விட்டேன்" என்றாள் பவானி.

மாடியில் அவள் தன் தனி அறையில் உள் பக்கம் கதவைத் தாளிட்டுக் கொண்டு உமாகாந்துடன் உரையாடிக் கொண்டிருந்தாள். ஏன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தாள் என்று கூடச் சொல்லலாம்! அவள் கட்டிலில் குப்புறப் படுத்திருக்க எதிரே தலையணை மீது உமாகாந்தின் படம் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருசமயம் அவள் பவானியாக இருந்து கோபிப்பாள். உடனே உமாகாந்தாக மாறிச் சமாதானம் கூறுவாள். மீண்டும் பவானியாக மாறி வம்புக்கு இழுப்பாள். அல்லது அந்தரங்கங்களைப் பறிமாறிக் கொள்வாள்.

பவானியாகவும் உமாகாந்தாகவும் மாறிமாறி விளங்கிய நிலை மாறி ஒரே தருணத்தில் அவளே இருவராகவும் இருப்பாள். அப்புறம் நீ, நான் என்ற பேதமின்றி உமாகாந்தின் நினைவில் தன்னை அடியோடு கரைத்துக் கொண்டுவிடுவாள்.

இப்படி அவள் ஏதோ ஓர் இனம் புரியாத இன்ப உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோதுதான் அவள் மாமா குணசேகரன் கதவைத் தட்டி ரங்கநாதமுதலியார் வந்திருக்கும் விஷயத்தைக் கூறினார்.

பவானிக்கு உடனே அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று புரிந்துவிட்டது. ஏனெனில் அவர் அவள் வீடு தேடி வருவதற்கு முன்பாகவே திருநீர்மலையில் நடந்த கலாட்டா பற்றிய விவரங்கள் எல்லாம் அவளை நாடி வந்து விட்டன. அவளை மட்டுமா? ராமப்பட்டணம் ஊர் முழுவதுமே அதுபற்றித்தான் பேச்சு. எனவே, ரங்கநாத முதலியார் எதற்காக வந்திருக்கிறார் என்பது புரிந்தாலும் அவர் தன்னைத் தேடி வந்தது பவானிக்கு வியப்பாக இருந்தது. 'நியாயமாக அவர் தமது வக்கீல் ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனையல்லவா நாடிப் போயிருக்க வேண்டும்? கோபாலகிருஷ்ணனிடம் தான் கூறி எச்சரித்து அனுப்பியது என்னவாயிற்று? ஏன் அவரால் தமது மகனின் போக்கைத் தடுத்து நிறுத்த முடியவில்லை?' இந்தக் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக மனத்தில் எழ அவள் உமாகாந்தின் படத்தில் அப்போதைக்கு கடைசி முறையாகக் காதல் முத்திரை பதித்துவிட்டு அதனை மேஜையின் இழுப்பறையில் துணிமணிக்கு அடியில் மறைவாக வைத்தாள். கீழே இறங்கி வந்தாள்.

"வாருங்கள், வாருங்கள்!" என்று ரங்கநாத முதலியாரை வரவேற்று ஃபானை இயக்கி விட்டுவிட்டு அவர் எதிரே அமர்ந்தாள் பவானி. அவர் எப்படி ஆரம்பிப்பது, என்ன பேசுவது என்று தயங்குவார் என எதிர்பார்த்தவளாகத்தானே வழிவகுத்துத் தந்தாள். "ரங்கநாதன் ஸார்! திருநீர்மலையில் ஏதேதோ அனுசிதமான காரியங்கள் நடந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். வாஸ்தவம்தானா? என்னை உங்கள் மகள் போல் பாவித்துக் கொண்டு சொல்லுங்கள். பாரம் குறையும்" என்றாள்.

இதற்காகவே காத்திருந்தவர் போல் ரங்கநாத முதலியார் மடை திறந்தவெள்ளமாக அங்கு நடந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்தார். முறையீடுகளுக்கிடையில் கல்யாணத்தையும் அவன் தோழர்களையும் ஐந்தாறு முறை வைது வைத்தார். "அந்த விடலைகள் உங்களைக்கூடப் பின்னோடு வருமாறு அழைத்தார்களாமே? கேள்விப்பட்டேன். ஆனால் இது தகாத செயல் என்று கூறி அவர்களுடன் போக மறுத்து விட்டீர்களாம். அதற்காக உங்களைப் பாராட்டிவிட்டு அப்படியே எனக்காக நீங்கள் கேஸ் நடத்தி என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் வந்தேன்" என்று முடித்தார் ரங்கநாதன்.

"அது எப்படி சாத்தியம், மிஸ்டர் ரங்கநாதன்? நேற்று வரை ஹோம்ரூல் கோபால கிருஷ்ணன் தாமே உங்களுக்கு வக்கீல்! அவரையே கேஸ் நடத்தச் சொல்லலாமே? அவர் மகன்தான் இந்தக் கலாட்டாவில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்றாலும் கோபாலகிருஷ்ணன் நேர்மையானவர். சொந்த விருப்பு வெறுப்புக்கள், பாசங்கள் தமது தொழிலைப் பாதிக்க விடமாட்டார்."

"அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று பவானியின் கருத்தை மறுத்தார் ரங்கநாதன். "அவரே இவர்களைக் கிளப்பி விட்டுவிட்டுப் பின்னணியில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறார். பஸ்ஸில் அவரும் கூடவே ஏறி வந்தாராம். ஆனால் திருநீர்மலையை நெருங்கியதும், 'நான் வந்தால் நன்றாயிராது. ரங்கநாதன் என் நெருங்கிய நண்பன். அதனால் இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்ல். நீங்கள் போய்க் காரியத்தை முடியுங்கள்' என்றாராம்.

"அப்புறம் இவர் வேறு பஸ் பிடித்துப் போயிருக்கிறார். அதற்குள் இந்தக் கலாட்டா வெல்லாம் நடந்து முடிந்து விட்டது. கோபால கிருஷ்ணன், மாசிலாமணி குடும்பத்தை ராமப் பட்டணத்துக்குப் பத்திரமாகத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்."

"என்னால் இதை நம்பவே முடியவில்லை" என்றாள் பவானி. "கோபாலகிருஷ்ணனுக்கு இவர்கள் திட்டத்தைப் பற்றி நான்தான் கூறினேன். 'இந்த வாலிபர்களின் விபரீதப் போக்கைத் தடுத்து நிறுத்த உங்களால்தான் முடியும்' என்றேன். அவரும் அவர்களோடு கல்யாணத்துக்குக் கிளம்புவது போல் சென்று கண்காணித்துக் கொள்வதாக வாக்களித்தார்."

"அப்படிக் கூறி உங்களை ஏமாற்றினாரோ அல்லது வழியில் மனம் மாறி அந்த உதவாக்கரைகளுடன் சேர்ந்து கொண்டாரோ, எப்படியானாலும் அவர் கலாட்ட நடந்த சமயம் திருமண மண்டபத்துக்கு வரவேயில்லையே. ஏன்? என்னை அவமானப்படுத்த வேண்டும் என்றே தகம்பனாரும் மகனும் எத்தனை காலமாகத் திட்டம் போட்டிருந்தார்களோ, எனக்குப் பழிக்குப் பழி வாங்கியாக வேண்டும்" என்றார் ரங்கநாதன்.

பவானி சற்று நேரம் யோசித்துவிட்டு, "நீங்கள் கேஸ் போடுவதற்குப் பதிலாக கமலா வீட்டார் போட்டால் நன்றாயிருக்குமே" என்றாள்.

"எப்படியோ பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தாகி விட்டது" என்று தீர்மானமாகச் சொன்னார் ரங்கநாத முதலியார்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top