• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 62 -- லட்சிய வெறி



பவானி தன் தாயாரைப் பற்றி நெகிழ்ந்து கூறிய வார்த்தைகளைக் கேட்டு உமா காந்தன் உருகிப் போனான்.

"உண்மையிலேயே அந்த ஒரு விஷயத்தில் நீ துரதிருஷ்டசாலிதான் பவானி. என் தாயாருடன் நெருங்கிப் பழக உனக்குக் கொடுத்து வைக்கவில்லை அல்லவா? இரண்டு நாட்கள்தான் இப்போது அவளுடன் இருந்தேன். அதற்கு மேல் தங்க பயம். எனக்கு, அவளுக்கு, அவள் பெற்றோருக்கு எல்லோருக்கும் ஆபத்து என்ற எண்ணத்தில் கிளம்பிவிட்டேன். ஆனால் அந்த இரண்டு நாட்களும் அவள் அள்ளிக் கையில் வைத்த பழையது சாப்பிட்ட திருப்தி என் வாழ்நாளெல்லாம் இருக்கும். அமிர்தம்தான் அது. நான் புறப்பட்ட போது அவள் பெட்டியைத் திறந்து அடியில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த என் கதர் பைஜாமா ஜிப்பாக்களை எடுத்துத் தந்தாள். ' அம்மா! நான் எப்படியும் உன்னைத் தேடி வருவேன் என்று எதிர்பார்த்து இவற்றைப் பின்னோடு எடுத்து வந்தாயா?' என்று கேட்டேன். 'நீ எங்கேடா என்னை விட்டுப் பிரிந்தாய்? அண்ணன் தம்பி இரண்டு பேரும் சரி, உன் அப்பாவும் சரி. சதா என்னோடுதான் இருக்கிறீர்கள்! என்றாள்.

" 'அம்மா அண்ணாவும் நானும் இவ்வளவு பெரிய தவறுகளைச் செய்திருக்கிறோமே என்றேன்.' "

" 'தெரியுமே! என்னை இந்தக் கோலத்தில் நிறுத்தி வைத்திருப்பதே நீங்கள் இரண்டு பேரும் பண்ணின காரியங்கள் தானே' "

" 'அப்படி இருந்தும் இவ்வளவு அன்பு காட்டுகிறாயே, அம்மா' "

" ' அதற்குப் பெயர்தான் தாய்ப் பாசம் என்கிறதுடா, இது தெரியாதா?' " என்றாள்.

இதைச் சொல்லி வரும் போது உமாகாந்தனுக்குத் தொண்டை கரகரத்தது. பவானிக்கோ கண்களில் நீர் திரையிட்டு எதிரே பாதையை மறைத்தது. கண்ணீரை விரல்களால் துடைத்தவள், பொறாமை எட்டிப் பார்ப்பது போன்ற தொனியில், " என்ன இருந்தாலும் அம்மா என்றால் உசத்திதான். சிறையில் இருந்தபோது இத்தனை காலமாக எனக்கு ஒரு கடிதம்கூடப் போடாமல் இருந்துவிட்டீர்கள் அல்லவா?" என்றாள்.

" எப்படி எழுதுவேன் பவானி? என் அப்பா உன் கண்களுக்கு என்னைத் தேசபக்தனாக்கியிருந்தது எனக்குத் தெரியாது. திருட் டுப் பட்டத்துடன் கம்பி எண்ணச் சென்றவன் நான். அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு உனக்கு எப்படி எழுதுவேன்? உண்மையை வெளியிடுவதில்லை என்றும் என் அண்ணனைக் காப்பாற்றுவது என்றும் தீர்மானித்த பிறகு என் நிலைமையை ஒரு கடிதத்தில் எப்படி விளக்குவேன்?"

" என்னைப்பற்றி எப்படி அறிந்தீர்கள்? நான் ராமப்பட்டணத்தில் இருப்பது எப்படித் தெரிந்தது?"

" கல்கத்தாவிலிருந்து புறப்படுவதற்குமுன் உன் வீட்டுக்கு ஃபோன் செய்தேன். நெம்பர் நினைவிருந்தது. எப்படியாவது சில நிமிஷ மேனும் உன்னிடம் தனியாகப் பேச ஆவல். இடத்தைச் சொல்லிக் குறிப்பிட்ட நேரத்தில் அங்கே உன்னை வரச்சொல்லலாம் என்று எண்ணினேன். உன் பெற்றோர் பேசியிருந்தால் ஒரு வேளை சந்தேகப்பட்டு, ' நான் யார்? என்ன விஷயம்? என்றெல்லாம் கேட்டிருப்பாரகளோ என்னமோ! ஆனால் என் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு வேலைக்காரன் பேசினான்: 'பவானி அம்மாவா? அவங்க ராமப்பட்டணத்தில் மாமா வீட்டுக்குப் போய் மாசக்கணக்கா ஆகிறதே' என்றான். அவ்வளவுதானே எனக்கு வேண்டியது? ஆனால் உன்னைத் தொடர்ந்து என் அண்ணாவும் ராமப் பட்டணத்துக்கே வந்திருக்கிறான் என்பது உன்னைச் சந்தித்த பிறகுதான் எனக்குத் தெரியும். என் தாயாருடன் பேசிக்கொண்டிருந்த போது கோவர்த்தனன் பற்றி நான் எதுவுமே கேட்கவில்லை. அவளாக ஏதோ கூற வந்த போதும் நான் சுவாரசியம் காட்டவில்லை. ' அவன் கதை எனக்கு எதற்கு அம்மா?' என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். ஆனால் அவன் கதைதான் தொடர்கதையாக என்னைப் பின் தொடர்கிறது!"

பின் தொடரவில்லை. முந்திக் கொண்டே போய்விட்டது. நம் வருகைக்காகக் காத்திருக்கிறது. அதோ பாருங்கள்! சாலைக்குக் குறுக்கே தடுப்பு ஏற்படுத்திவிட்டுப் போலீஸ்காரர்கள் நிற்பதை" என்றாள் பவானி. காரின் வேகத்தைத் தணித்தவாறே.

பவானியை அவள் மாமா குணசேகரன் லாக்-அப்பில் காண வந்தார். அவளிடம் மாஜிஸ்திரெட் கோவர்த்தனன் கூறிய யோசனையை விவரித்தார். " 'உமாகாந்தன் சிறையிலிருந்து தப்பிய குற்றவாளி என்று எனக்குத் தெரியாது; ஏதோ மனிதாபிமானத்தால் காயம்பட்டவனுக்கு உதவ முற் பட்டேன்; பிறகு அவன் தப்பிச் செல்ல வேண்டி என்னைக் காரோட்டி வருமாறு கட்டாயப்படுத்தினான்; அதற்கு இணங்கா விட்டால் கொன்று விடுவதாக மிரட்டினான்' என்று நீ எழுதித் தரவேண்டும். நீ விடுதலை பெற அது ஒன்றுதான் வழி, பவானி!"

"அப்படிப் பொய்யான ஒரு வாக்குமூலம் எழுதித் தந்து நான் விடுதலை பெற விரும்பவில்லை, மாமா! நீங்கள் உமாவிடம் பேசுங்கள். அவர் வழக்கை நான் நடத்தச் சம்மதிக்க வேண்டும் என்று வற்புறுத்துங்கள். கோர்ட்டில் அவர் உண்மைகளைக் கூற ஒப்புக் கொள்ளச் செய்யுங்கள். அதற்கு மட்டும் அவர் சம்மதித்தால் குறுக்கு விசாரணையில் மாஜிஸ்திரேட்டைச் சந்தி சிரிக்கப் பண்ணி விடுவேன் நான். உமாகாந்த் நிச்சயம் விடுதலை பெற்று விடுவார்."

குணசேகரன் உமாகாந்திடம் போய் நடந்ததையெல்லாம் விவரித்தார். மாஜிஸ்திரேட் கோவர்த்தனனின் யோசனையையும் பவானியின் பதில் யோசனையையும் கூறினார்.

"குணசேகரன் ஸார்! ஆபத்தான ஒரு கட்டத்தில் அண்ணனுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை ஒரு நாளும் மீறமாட்டேன். அப்படி நான் செய்தால் இத்தனை நாட்கள் நான் சிறையிலிருந்து பட்ட அவதிக்கெல்லாம் என்ன அர்த்தம்? அத்தனையும் வியர்த்தமாக அல்லவா முடியும்?"

"குற்றமற்றவன் சிறையில் வாடுவதும் குற்றவாளி வெளியே சுதந்திரமாக உலாவுவதும் என்ன நியாயம்?"

"தண்டிப்பது கடவுள் பொறுப்பு. மன்னிப்பது மனிதன் பாக்கியம்."

"உன் லட்சிய வெறி எனக்கொன்றும் புரியவில்லை" என்றார் குணசேகரன். "இத்தனை நாட்களாய் உன்னை நீயே வருத்திக் கொண்டாய். இப்போது உன்னைக் காதலிப்பது தவிர வேறு ஒரு தவறும் செய்தறியாத என் மருமகளையும் சிறையில் தள்ளி விடப் போகிறாய். இதொன்றுதான் எனக்குத் தெளிவாகிறது."

"நீங்கள் கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம், ஸார்! மாஜிஸ்திரேட் கேட்டது போன்ற வாக்குமூலத்தைப் பவானி எழுதாவிட்டால் என்ன? நான் எழுதித் தருகிறென். போலீஸாருக்கு அதுவே போதும். 'பவானிக்கு நான் சிறையிலிருந்து தப்பிய கைதி என்று தெரியாது; கருணையினால் உதவினாள்; நான் சற்றுக் குணமடைந்ததும் ஸி.ஐ.டிகளிடமிருந்து தப்ப அவள் காரைப் பயன் படுத்திக் கொண்டேன்; பவானியை மிரட்டிக் காரோட்டி வரச் செய்தேன்' இவ்வளவு தானே எழுத வேண்டும்? எங்கே, ஒரு பேனாவும் தாளும் கொடுங்கள்!"

"ஐயய்யோ! நான் அப்படி ஒரு கடிதத்தை உன்னிடமிருந்து எழுதி வாங்கிப் போய் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்ததாகத் தெரிந்தால் அப்புறம் பவானி என்னைச் சும்மாவிட மாட்டாள். அக்கினியாகச் சொற்களைக் கொட்டி என்னை வறுத்தெடுத்து விடுவாள். வேண்டாமப்பா, வேண்டாம்!"

"நீங்கள் வாங்கிக் கொள்ளாவிட்டால் என்ன? இங்கே வருகிற இன்ஸ்பெக்டரிடம் எழுதிக் கொடுத்து அனுப்புகிறேன். கோவர்த்தனனுக்கு"

"என்னமோ செய், என் காதில் மட்டும் போடாதே! நான் வருகிறேன்" என்றார் குணசேகரன்.

சில மணி நேரம் கழித்துப் பவானி இருந்த லாக்-அப் அறைக் கதவு திறந்தது. "நீங்கள் போகலாம்" என்றார் இன்ஸ்பெக்டர்.

பவானிக்கு என்ன நடந்திருக்க வேண்டும் என்று உடனே புரிந்து விட்டது. உமாகாந்தனின் வக்கீல் என்ற முறையில் அவனைப் பார்க்க அனுமதி பெற்று உடனே போனாள்.

"நீங்கள் இப்படிச் செய்தது கொஞ்சம் கூடச் சரியில்லை. இப்போதுகூட ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை. உங்கள் வக்கீலாக இருந்து வாதாட அனுமதி கொடுங்கள். கோர்ட்டில் விசாரிக்கும்போது என் கேள்விகளுக்கு உண்மைகளைப் பதிலாகச் சொல்லுங்கள். நீங்கள் நிச்சயம் விடுதலை பெறலாம்" என்றாள்.

"உன் வாதத் திறமையெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் உன் வேண்டுகோளுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்." என்றான் உமாகாந்தன்.

"உங்களுக்கு உங்களுடைய அர்த்தமற்ற, அபத்தமான வாக்குறுதிதான் முக்கியம். நான் எக்கேடு கெட்டுப்போனாலும் உங்களுக்குக் கவலை இல்லை"என்று பவானி கூறி விம்மினாள்.

"என்னை மன்னித்துவிடு, பவானி!" என்றான் உமாகாந்தன்.

"இப்போது மன்னிக்கமாட்டேன். இன்னும் நாலு வருஷமோ ஆறு வருஷமோ தண்டனை பெற்று மறுபடியும் சிறையிலிருந்து விட்டு வெளியே வரும்போது, பவானி என்ற தலை நரைத்த கிழவி ஒருத்தி உங்களுக்காக இங்கேயே காத்திருப்பாள். அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள். அப்போதுதான் மன்னிப்பேன்" என்று அழுது கொண்டே சொன்னாள் பவானி.

உமாகாந்தன் மெய்சிலிர்த்தான். "எத்தனையோ கற்புக்கரசிகளைப் பற்றிப் புராணங்களில் படித்திருக்கிறேன். உனக்கு நிகராக யாருமில்லை" என்றான்.

" நானும் எத்தனையோ சத்தியசந்தர்களைப் பற்றிப் புராணங்களில் படித்திருக்கிறேன். உங்களைவிட அசடான ஒருத்தர் கிடையாது" என்று கூறிப் பவானி கண்ணீருக் கிடையில் புன்னகை பூத்தாள். மழை ஓய்ந்ததும் கதிரவனைப்பார்த்துச் சிரிக்கும் மலராக விளங்கியது அவள் முகம். "போகட்டும். ஒரு வாக்குறுதி கொடுங்கள்" என்றாள்.

"என்ன பவானி?"

" நாலு வருஷமோ ஆறு வருஷமோ தண்டனைக் காலம் எதுவானாலும் முழுக்க அனுபவித்துவிட்டு வாருங்கள். மறுபடியும் தப்பி ஓடி வந்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்!"

உமாகாந்தன் உரக்கச் சிரித்தான். " அப்படியே ஆகட்டும், பவானி! ஆனால் இந்த முறை தண்டனையை அனுபவிப்பது எனக் கொன்றும் அவ்வளவு சிரமமாக இராது. உன் ஆழ்ந்த அசைக்க முடியாத காதலைப் புரிந்து கொண்டிருக்கிறேன். என்னை நீ தவறாக எண்ணவில்லை என்றும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இவை போதும். ஆறு வருஷமானாலும் ஆறு நாட்களாக ஓட்டிவிட்டு ஓடி வந்து விடுவேன்" என்றான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 63 -- உல்லாச வேளை




அன்று மாலை வாங்கிய ஓர் உயர் ரக விஸ்கி பாட்டிலுடன் கோவர்த்தனனைப் பார்க்கப்போனான் கலயாணம். மல்லிகை மலர்ந்து மணம் பரப்பும் நேரம். கோவர்த்தனன் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகையுடன் நைட் குவீன் மலர்களின் மணமும் சேர்ந்து நறுமணம் கனமாகச் சூழ்ந்திருந்தது.

"எங்கேப்பா வந்தாய் மறுபடியும்?" என்றார் கோவர்த்தனன்.

"உங்கள் வெற்றியைக் கொண்டாடத்தான் ஸார்!" என்று சொல்லிக் கொண்டேதான் கொண்டு வந்திருந்த பொட்டலத்தைப் பிரித்தான் கல்யாணம்.

"எதைச் சொல்கிறாய்? என்ன வெற்றி பெற்றுவிட்டேன் நான்?" " என்ன ஸார், அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? மிஸ்டர் இன்ஃபுளூவென்ஸாவைப் பிடித்து உள்ளே தள்ளவில்லையா? இனிமேல் பவானியை நீங்கள் அடையத் தடை என்ன இருக்கிறது? முகூர்த்த நாள் பார்க்க வேண்டியதுதானே பாக்கி?" என்ற கல்யாணம் பிரித்த பெட்டிக்குள்ளிருந்து மதுப் பாட்டிலை எடுத்து மேஜையின் மீது வைத்தான்.

முழுசும் புதுசுமான ஜானிவாக்கர் புட்டியைப் பார்த்ததும் கோவர்த்தனன் முகம் மலர்ந்தது.

"அதைச் சொல்கிறாயா? பவானி அந்தத் தடியனிடமிருந்து காப்பாற்றப்பட்டதற்குச் சந்தோஷப்படவேண்டியதுதான். கம் லெட் அஸ் ஸெலிபரேட்! யூ மஸ்ட் ஜாயின் மி" என்றார் கோவர்த்தனன். தோட்டக்காரனை அழைத்து வராந்தாவிலிருந்த வசதியான நாற்காலிகள் இரண்டைத் தோட்டத்தில் எடுத்துப் போடச்சொன்னார். "இந்தாப்பா! அந்தக் காஃபி டேபிளையும் இப்படி கொண்டு வந்து போடு. அப்புறம் மணியைக் கூப்பிடு" என்றார்.

"இத்தனை மல்லி மலர்களின் வாசனையும் இனி வீண்போகாது ஸார். சரம் சரமாகத் தொடுக்கச் செய்து பவானிக்குக் கொண்டையைச் சுற்றி நீங்களே உங்கள் கரத்தால் சூட்டலாம்" என்றான் கல்யாணம்.

கோவர்த்தனன் அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்தார். உற்சாகமாக, " உன்னை என்னமோ என்று நினைத்தேன். ரொம்ப சாமர்த்தியமாகப் பேசுகிறாயே" என்றவர், சமையல் அறையிலிருந்து வந்து நின்ற மணியைப் பார்த்து," சோடா,ஐஸ் கொண்டு வா. அப்படியே கொரிக்க ஏதாவது வைச்சிருப்பியே, அதையும் எடுத்து வா" என்றார்.

"கூடவே கொஞ்சம் சர்க்கரையும் வேண்டும்" என்றான் கல்யாணம். மணி தன்னை அப்போது பார்த்த பார்வையில் ஒருவித எதிர்ப்பு குடிகொண்டிருப்பது கல்யாணத்துக்குப் புரிந்தது. ஆனால் ஏன், எதற்காக என்பதை அவனால் உணர முடியவில்லை.

"சர்க்கரை எதற்கு?" என்றார் கோவர்த்தனன்.

"கமலாவுக்கும் எனக்கும் கல்யாணம். பவானிக்கும் உங்களுக்கும் கல்யாணம். நீங்கள் என் வாயில் சர்க்கரை போடுங்கள். நான் பதிலுக்கு உங்கள் நாவை இனிக்கச் செய்கிறேன்"

"பேஷ், பேஷ்!" என்று தலையசைத்தார் கோவர்த்தனன்.

சில வினாடிகளில் உருளைக்கிழங்கு வறுவல்,வறுத்த முந்திரிப் பருப்பு, காரா பூந்தி, ஐஸ் சோடா, சர்க்கரை எல்லாம் வ்ந்து சேர்ந்தன.

அவற்றை வைத்துவிட்டு ஏதோ கூற விரும்பியவர் போல ஒரு கணம் தயங்கினார் மணி. அதற்குள், " நீ போகலாம்" என்று அவரை அனுப்பி விட்டார் கோவர்த்தனன்.

" இந்த சமையல்காரரை எங்கே பிடித்தீர்கள்?" என்றான் கல்யாணம்.

"ரொம்ப காலமாக எங்கள் வீட்டிலேயே இருக்கிறான். என்னைத் தூக்கி வளர்த்து எல் லாம் செய்திருக்கிறான். அதனால் அவனுக்குக் கொஞ்சம் சலுகை அதிகம். இப்போ நீ இங்கிருப்பதால் வாயை மூடிக் கொண்டு போய் விட்டான். இல்லாத போனால் நான் குடிக்கக் கூடாது, சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சண்டை பிடித்திருப்பான். அப்புறம் ஓர் அதட்டல் போட்டுத்தான் அவனை அடக்க வேண்டியிருக்கும். தினமும் இவனுடன் இது விஷயத்தில் ஒரு போராட்டம் நடத்துகிறேன். ஆனால் மனுஷன் ரொம்ப நல்ல மாதிரி. கமான் ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்" என்றார் கோவர்த்தனன்.

"எஸ், ஐ வில் ஹெல்ப் மை ஸெல்ஃப்" என்று கல்யாணம் தனது டிரிங்கைத் தானே தயாரித்துக் கொள்ள ஆரம்பித்தான். பாண்ட் பாக்கெட்டிலிருந்து இரண்டு எலுமிச்சம் பழங்கள் வெளிப்பட்டன. சாவிக்கொத்திலிருந்த பேனாக் கத்தியால் ஒரு பழத்தை வெட்டிச் சாறு பிழிந்தான், இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டுச் சோடாவைக் கலந்தான். லெமனேடைக் கரத்தில் ஏந்தி "சீர்ஸ்" என்றான்

கோவர்த்தனன் அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு "சீர்ஸ்" என்று கூறி விஸ்கியை விழுங்கினார்.

"பவானிக்கு விடுதலை கிடைக்கச் செய்து விட்டீர்களாமே, எப்படி ஸார் அதைச் சாதித்தீர்கள்? நீங்கள் விருமபியபடி அவள் வாக்குமூலம் எழுதிக் கொடுத்து விட்டாளா?"

" அவள் தரவில்லை, அதனால் என்ன? உமாகாந்தனே எழுதிக் கொடுத்துவிட்டான். அது போதாதா?"

"பேஷாகப்போதும். இப்போது உமாகாந்தன் நிலை என்ன?"

" பழைய பாக்கி இரண்டு வருஷங்கள். இப்போ தப்பி ஓடிய குற்றத்துக்காக மேலும் மூன்று வருஷங்கள்....."

" ஆக மொத்தம் ஐந்து வருஷங்கள்."

" அவசரப்படாதே, அப்பா! அவனைப் போலீஸார் பிடித்துச் சோதித்தபோது அவனிடம் நேதாஜியின் இயக்கம் பற்றிய பிரசாரப் பிரசுரங்கள் பல இருந்தன. நேதாஜியின் படங்களையும் ஏராளமாய் வைத்திருந்தாள்.

அவற்றை ரகசியமாக விநியோகிக்க எண்ணியிருக்கிறான். ராஜத்துவேஷக் குறச்சாட்டும் சேர்ந்துகொள்கிறது."

"அதற்கு மேலும் இரண்டு வருஷங்கள் தீட்டிவிட வேண்டியதுதானே! ஏழு வருஷங்களுக்குக் கவலை இல்லை" என்ற கல்யாணம் திடீரென்று நினைத்துக் கொண்டவன் போலக் கேட்டான்: "ஏன் சார், நான் கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே...... உங்களுக்கும் உமாகாந்தனுக்கும் இடையில் முக ஜாடையில் நிறைய ஒற்றுமை இருக்கிறதே?"

"அது விஷயம் தெரியாதா, உனக்கு?" என்றார் கோவர்த்தனன். "அவன் என் சொந்தத் தம்பிதான்."

"அதானே பார்த்தேன். அவனைத் தேடிக் கொண்டு ஸி.ஐ.டிகள் அவன் போட்டோவை ஒரு சமயம் என்னிடம் ஏலமலைக் கிராமம் ஒன்றில் காண்பித்தார்கள். 'இவனை எங்காவது பார்த்ததுண்டா?' என்றார்கள். எனக்கு உடனே உங்கள் ஞாபகம் வந்தது. ஆனால் நான் ஒன்றும் சொல்லவில்லை. 'எதற்கு வம்பு' என்ற பேசாமல் இருந்துவிட்டேன்."

அதனால் என்ன? அவர்கள் வேறு பலரிடம் விசாரித்துக் கொண்டு கடைசியில் என்னைத் தேடியே வந்துவிட்டார்கள். அப்படி வந்ததே நல்லதாயிற்று. நான் என் அதிகாரத்தைக் காட்டியதில்தான் அவர்கள் சுறுசுறுப்படைந்தார்கள். இல்லாத போனால் அந்தச் சோம்பேறிகளாவது உமாகாந்தனைப் பிடிப்பதாவது?"

அது சரி சார், சொந்தத் தம்பியைப் பிடிப்பதில் நீங்கள் இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டுமா? அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்கத்தான் வேண்டுமா? தம்பியாச்சே என்று இலேசான தண்டனையுடன் விட்டுவிடக்கூடாதா?"

இப்படிக் கேட்ட கல்யாணம் கோவர்த்தனனுக்குப் பின்னால் அடர்ந்து உயர்ந்து வளர்ந்திருந்த குரோட்டன்ஸ் செடியின் மறைவில் ஏதோ அசைவது உணர்ந்து துணுக்குற்றான். அது சமையல்காரர் மணி என்பது தெரிந்ததும் அவனுக்குப் பரபரப்பு ஏற்பட்டது. 'எதற்கு அவன் இப்படி ஒளிந்திருந்து சம்பாஷணையை ஒட்டுக் கேட்கிறான்?" மணி மறைந்திருப்பதைக் கவனியாததுபோல் நடந்து கொண்டான் கல்யாணம்.

இதற்குள் இரண்டு தடவை பாட்டிலைக் கண்ணாடி டம்ளரில் கவிழ்த்த கோவர்த்தனன் கல்யாணத்தினிடம் ஏற்பட்டிருந்த மாறுதல் எதையும் கவனிக்கவில்லை. அவனுக்குப் பதில் கூறும் முகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

"மிஸ்டர் கல்யாணம்! சட்டம் என்று வரும்போது அங்கே அண்ணன் தம்பி உறவுக்கு இடமேதும் இல்லை. முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் வக்கீலாகிய உனக்கு இது தெரிய வேண்டாமா?"

" வாஸ்தவம்தான் ஸார்" என்றான் கல்யாணம். அதே சமயம் மறைவிலிருந்த மணி தன் கைகளைப் பிசைவதையும் கவனித்துவிட்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 64 -- கடைசி பானம்!



பவானிக்கும் கமலாவுக்கும் தான் இழைத்துவிட்ட நம்பிக்கை துரோகத்துக்குப் பரிகாரமாக ஏதாவது செய்ய நினைத்தான் கல்யாணம். கோவர்த்தனன் உமாகாந்திடம் காட்டும் வெறுப்புக்குப் பின்னணியில் கடமை உணர்ச்சிக்கும் மேலாக ஏதோ அந்தரங்கம் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று அவனுக்கு. ஏற்கனவே ஸி.ஐ.டி.க்கள் உமாகாந்தின் படத்தை அவனிடம் காட்டியபோது கோவர்த்தனின் முக ஜாடையை அதில் கண்டு அவன் அதிசயித்திருந்தான். உமாகாந்தனைப் பவானி வீட்டில் நேரில் சந்தித்த பிறகு அவன் குழப்பம் அதிகரித்திருந்தது. எனவேதான் ஒரு பாட்டில் விஸ்கியுடன் கோவர்த்தனனைத் தேடி வந்தான் கல்யாணம். அவர் நாவைத் தளர்த்தி ஏதாவது பேசவைக்கலாம் என்ற அபிப்பிராயம் அவனுக்கு இருந்தது.

ஆனால் கோவர்த்தனன் நிறையப் பேசிய போதிலும் கல்யாணம் எதிர்பார்த்ததுபோல் புதிய திருப்பம் ஏதும் ஏற்படக் கூடிய தகவலாக ஒன்றும் தெரிய வரவில்லை. உமாகாந்தனைத் தன் தம்பி என்றே ஒப்புக்கொண்ட கோவர்த்தனன், அதற்காக அவனிடம் கருணை காட்ட முடியாது என்று அழுத்தமாகக் கூறினார்.

இதையெல்லாம் ஒளிந்து கேட்டுக்கொண்டிருந்த சமையல்காரர் மணி நடந்துகொண்டவிதம் மட்டும் கல்யாணத்துக்கு ஆச்சரியம் அளித்தது. 'இந்த மனுஷன் எதற்காக மறைந்திருந்து நான் கோவர்த்தனனிடம் பேசுவதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்? உமாகாந்தன் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் கையைப்பிசைகிறாரே எதற்கு?" என்று எண்ணினான். மணியின் கோபத்தை அல்லது தாபத்தை வேண்டுமென்றே மேலும் தூண்டிவிடத் தீர்மானித்துப் பேசினான்.

"நன்றாகச் சொன்னீர்கள் சார்! மனுநீதிச் சோழன் அல்லது சிபிச் சக்கரவர்த்தி பரம்பரையில் உதித்தவரா யிருக்க வேண்டும் நீங்கள்! சொந்தத் தம்பி என்பதற்காகச் சட்டத்தை மறந்து நீங்கள் காரியம் செய்ய முடியுமா? 'ஐயோ பாவம்! பிழைத்துப் போகட்டும்' என்று பாங்குக் கொள்ளைக் காரர்களையும், ராஜத் துரோகிகளையும் வெளியே நடமாட விட்டால் என்னவாகிறது? அராஜகம் தாண்டவமாடும்! இந்த மாதிரி ஆசாமிகளைச் சிறையில் தள்ளினால் கூடப் போதாது ஸார். நாற்சந்தியில் நிற்கவைத்துத் தண்டிக்க வேண்டும்!"

இத்தருணத்தில் கல்யாணம் எதிர்பார்த்த நற்பலன் கிடைத்தது. இதற்குமேல் பொறுத் திருக்க முடியாதவனாக மணி முன்னால் பாய்ந்து வந்தார். "வாயை மூடுய்யா! ஏதோ போகட்டும் என்று பார்த்தால் மேலே மேலே பேசிக் கொண்டே போகிறாயே!"

கோவர்த்தனன் திடுக்கிட்டார். மணி அங்கே மறைவிலிருந்து உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார் என்பது அவருக்கு அப்போதுதான் தெரிந்தது. "மணி உள்ளே போ!" என்று அதட்டினார்.

"முடியாது!" என்றார் மணி! "முடியவே முடியாது. இத்தனை நாட்களாக எனக்கு மூக்கணாங் கயிறு போட்டு வைத்திருந்தாய். இப் போது நான் அதை அறுத்துக் கொண்டு விடுதலை பெற்று விட்டேன். இனி என்னால் சும்மா இருக்க முடியாது! உமாகாந்துக்கு மறுபடியும் நீ கடுமையான தண்டனை விதிக்கப்போவதைப் பார்த்துக் கொண்டு நான் பேசாமல் இருக்க மாட்டேன்."

"மணி! நீ எனக்குக் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று? சத்தியத்தை மீறலாமா நீ!"

"இத்தனை நாட்களாக அதற்குக் கட்டுப் பட்டுத்தான் இருந்தேன். ஆனால் இப் போது உன் நடத்தை எல்லை மீறிப் போகிறது. நான் பொறுமை இழந்து நிற்கிறேன்."

"அப்படியானால் சரி, நடந்ததை யெல்லாம் விவரமாகச் சொல்லு" என்று அமைதியாகக் கூறினார் கோவர்த்தனன். பிறகு கல்யாணம் பக்கம் திரும்பி, "அப்பனே! நீயும் பவானி போலவே உமாகாந்தனை விடுவிக்க மிகவும் ஆவலுள்ளவனா யிருப்பது எனக்குத் தெரியும். சற்று நேரமாகச் சும்மா என்னிடம் நடித்துக் கொண்டிருந்தாய் இல்லையா? உமாகாந்தனை விடுவிக்க ஏதாவது சாட்சியம் அகப்படுமா என்று பார்க்கத்தானே என் வாயைக் கிளறிக் கொண்டிருந்தாய்? இதோ கிடைத்து விட்டது. மணியைச் சாட்சிக் கூண்டில் ஏற்று; உமாகாந்தனை விடுவித்து விடலாம் நீ!"

அளவற்ற வியப்பும் திகைப்பும் அடைந்தவனாகக் கல்யாணம் மணியையும் கோவர்த்தன்னையும் மாறி மாறிப் பார்த்தான். கோவர்த்தனன் மணியை நோக்கி, "சொல்லேனப்பா ஏன் தயங்குகிறாய்? சொல்லு!" என்றார்.

"கூறுகிறேன்! கல்யாணம் ஸார், கேளுங்கள்!" என்ற மணி ஆவேசம் வந்தது போல் படபடவென்று பல வருஷங்களுக்கு முன் ஒரு நாள் இரவு நடந்தவற்றைச் சொல்லலானார்.

மணி ரொம்பக் காலமாகக் கருணாகரன் வீட்டில் சமையல்காரராக வேலை பார்ப்பவர். கோவர்த்தனனையும் உமாகாந்தனையும் தோளில் தூக்கி வளர்த்தவர். உமாகாந்தன் தன் தகப்பனாருடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அன்றிரவு மணிக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. புரண்டு புரண்டு படுத்தார். நள்ளிரவு சுமாருக்கு ஏதோ அரவம் கேட்க, எழுந்து போய்ப் பார்த்தார். கருணாகரன் பாங்குச் சாவியை வழக்கமாக வைக்கும் இடத்தில் தேடிவிட்டு அது காணாமல் பரக்கப் பரக்க ஓடுவதைக் கவனித்தார். உடனேயே அவர் மனமும் கருணாகரன் உள்ளத்தைப் போலவே முதலில் பாங்குச் சாவிக்கும் உமாகாந்தனுக்கும்தான் முடிச்சுப் போட்டது. என்றாலும் ஏதோ சந்தேகம் உதித்தது. கருணாகரன் வாசல் கதவைப் பரபரப்புடன் திறந்து ஓடினாரே தவிர தாழ்ப்பாளை நீக்கவில்லை. ஆகவே அவருக்கு முன்பாகவே யாரோ வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறியிருக்கிறார்கள்! யார் அது? மணி கோவர்த்தனன் அறையில் எட்டிப் பார்த்தார். அவனைக் காணோம். வீடு முழுக்கத் தேடினார். எங்கும் அவன் இல்லை. கருணாகரனின் மனைவி, தன் பிள்ளை உமாகாந்தனுக்குக் கடைசியாக ஒரு முறை தன் கையால் சாப்பாடு போடவேண்டும் என்ற ஆசைப்பட்டு அவனைத் தன் கணவருக்குத் தெரியாமல் வரச் சொல்லி யிருந்தாள். அவனுக்காகக் கொல்லைக் கதவைத் தாழ்ப்பாள் போடாமல் சாத்தி வைத்து விட்டுச் சமையலறையில் படுத்தவள் இலேசாகக் கண் அயர்ந்துவிட்டாளோ என்னமோ மணிக்குத் தெரியாது. எட்டிப் பார்ப்பதுகூட மரியாதைக் குறைவாக அவருக்குத் தோன்றியது.

கொஞ்ச நேரம் கழித்து வாசல் பக்கமாக வியர்க்க விறுவிறுக்கச் சந்தடியின்றி ஓடிவந்து தன் அறைக்குள் கோவர்த்தனன் நுழைந்து இழுத்துப் போர்த்துக் கொண்டு படுப்பதை மணி பார்த்தார். அவனை உலுக்கி எழுப்பி உட்கார வைத்து, "எங்கே போயிருந்தாய்?" என்று அதட்டலாகக் கேட்டார். கோவரத்தனன் அரண்டு போய்விட்டான். "உனக்குப் புண்ணியமாகப் போகட்டும். இன்றிரவு நான் வீட்டைவிட்டு வெளியேறியதாக யாரிடமும் சொல்லாதே" என்று கெஞ்சினான். மேலும் துருவி விசாரித்தபோது கோவர்த்தனனுக்கு உண்மையை ஒப்புக் கொள்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. உமாகாந்தன் தக்க சமயத்தில் வந்து குற்றத்தைத் தான் ஏற்றுக் கொண்டு இவனைத் தப்புவித்ததைக் கூறினான்.

தொடர்ந்து சொன்னான். "உமாகாந்தன் எப்படியானாலும் இந்த வீட்டில் இனி அடி எடுத்து வைக்க மாட்டான். அதிலேயே அப்பா மனமுடைந்து போயிருக்கிறார். இப்போது நானும் திருட்டுப் பட்டம் சுமந்து சிறை சென்றால் அப்பாவின் இதயம் வெடித்து விடும். அவரை உயிரோடு கொன்ற பாபத்தைக் கட்டிக் கொள்ளாதே. நான் வீட்டை விட்டு வெளியேறியதை வெளிவிடாதே! எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடு!"

மணி மானஸ்தரான கருணாகரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடும் என்ற பயத்தில் சத்தியம் பண்ணிக் கொடுத்தார். ஆனால் எமன் வேறு உருவத்தில் வந்து கருணாகரனை அழைத்துப் போய்விட்டான். சில நாட்களுக்குப் பிறகு கோவர்த்தனன் கடன்பட்டிருந்த மார்வாடி வந்து அட்டகாசம் செய்தபோது கருணாகரன் படுக்கையில் விழுந்தார். பிறகு அவர் எழுந்திருக்கவே யில்லை.

இந்த நிகழ்ச்சிகளை விவரித்த மணி, கடைசியில் சொன்னார்; "நாலு வருஷங்களாகப் பல்லைக் கடித்துக் கொண்டு இவனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன். இன்னும் இரண்டு வருஷங்கள்தான்; உமாகாந்தன் விடுதலை பெற்று வந்துவிடுவான் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். அவனைச் சந்தித்து மன்னிப்புக் கேட்கும் தினத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சற்று முன் நீங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதிலிருந்து இவன் மேலும் ஏழெட்டு வருஷம் உமாவுக்குச் சிறைத் தண்டனை கொடுத்துவிட உத்தேசித்திருப்பது தெரிகிறது. இந்தச் சூழ்ச்சியை நான் முறியடித்தே ஆகவேண்டும்."

"கேட்டுக் கொண்டாயா கல்யாணம்?" என்றார் கோவர்த்தனன். இதுவரை உமா காந்தனை விடுவிக்க உனக்கோ பவானிக்கோ சாட்சியமே இல்லாதிருந்தது. இப்போது அது அகப்பட்டு விட்டது" என்று கூறிச் சிரித்தபடியே தமது சட்டைப் பையிலிருந்து இரண்டு உறைகளை எடுத்து மேஜையின் மீது போட்டார். "இவற்றை இன்றே தபாலில் சேர்க்க வேண்டும் என்று எண்ணி யிருந்தேன். ஆனால் தபாலுக்கு நேரமாகி விட்டது. உன்னிடம் ஒப்படைக்கிறேன் கல்யாணம், நீயே உரிய அதிகாரிகளிடம் சேர்ப்பித்துவிடு!"

"என்ன இவை?" என்றான் கல்யாணம் திகைப்புடன்.

"ஒன்று என் ராஜிநாமாக் கடிதம். மற்றொன்று என் குற்றத்தை நானே ஒப்புக் கொண்டு எழுதிய வாக்குமூலம்."

"மாஜிஸ்திரேட் ஸார்! இது என்ன தாக்குதலுக்கு மேல் தாக்குதலா யிருக்கிறதே!" என்றான் கல்யாணம் நாத் தழுதழுக்க.

மணி நின்றபடியே விசும்பி அழுதார்.

"கல்யாணம், நான் சொல்வதைக் கவனி. மணி, நீயும் கேட்டுக் கொள்!" என்றார் கோவர்த்தனன். "இந்த வாக்குமூலத்தையும் ராஜிநாமாக் கடிதத்தையும் கல்யாணம் இங்கு வந்த பிறகு நான் எழுதவில்லை. அதற்கு முன்பே எழுதி என் பாக்கெட்டில் வைத்திருந்தேன். அந்த மட்டில் ஒப்புக்கொள்வீர்களல்லவா?"

"உண்மைதான் ஸார், நான் இங்கே வந்த பிறகு, நீங்கள் விஸ்கி டம்ளரைத் தவிர பேனாவையோ தாளையோ கையால் தொடவில்லையே?" என்றான் கல்யாணம்.

"கரெக்ட்! ஆக, மணியின் சாட்சியம் உனக்கு அகப்பட்டு விட்டபடியால் இனி நான் தப்ப முடியாது என்ற நிலையில் இவற்றை நான் எழுதவில்லை. அதற்கு முன்பே எழுதி விட்டேன். எழுதத் தூண்டியது என்ன தெரியுமா?"

"தெரியவில்லையே ஸார்!"

"என் தம்பி உமாகாந்தனின் தியாகம்தான்! இப்போது அவன் பிடிபட்டதும் பவானி அவனை வழக்காடுமாறு வேண்டினாள். அவன் மறுத்து விட்டான். இரண்டாவது தடவையாகத் திருட்டுக் குற்றத்தைத் தன்மீதே சுமத்திக் கொண்டான். அதுமட்டுமில்லை. பவானியை விடுவிக்க வேண்டும் என்பதற்காக மறுபடியும் புதிய குற்றச்சாட்டுக்களை தன்மீதே சுமத்திக் கொண்டான். அவளுக்குத் தன்னை யார் என்று தெரியாது என்றும் தப்பிச் செல்லத் தனக்கு உதவுமாறு அவளைத் தான்தான் நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் வாக்குமூலம் எழுதிக் கொடுத்தான். இந்த வாக்குமூலம் அவனுக்குக் கிடைக்கக்கூடிய தண்டனையை மேலும் அதிகரிக்கும் என்பதை பவானியோ அவனுக்காகத் தன் இளமையை உணர்ந்திருந்தும் இப்படிச் செய்தான்.யெல்லாம் தியாகம் புரியத் தயாரானாள்.

சிறைத் தண்டனைகளை முழுமையாக அனுபவித்துவிட்டு அவன் திரும்பும்வரை தான் காத்திருக்கத் தீர்மானித்தாள். இந்தத் தியாகப் போட்டியை அறிய வந்தபோது எனக்கு என்னுடைய நீசத்தனத்தின் பயங்கரம் புரிந்தது. அந்தக் காதலர்களைப் பிரித்து வைப்பது மாபாதகம் என்று பட்டது. அதனால்தான் இந்தக் கடிதங்களை எழுதினேன். கல்யாணம்! இதை நன்றாக நினைவில் வைத்துக்கொள். பவானியிடமும் உமாகாந்தனிடமும் மறக்காமல் சொல்லு! என் மனம் மாறியது உமாகாந்தன் - பவானியின் பரஸ்பரத் தியாகங்களால்தான்; மணி சாட்சியம் கூற முன் வந்ததால் அல்ல."

கல்யாணம் கண் கலங்கக் கனத்த இதயத்துடன் கடிதங்களை எடுத்துப் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளப் போனான்.

"என் எதிரிலேயே ஒரு முறை படித்துப்பார்த்துவிடு கல்யாணம்; அப்புறம் வேறு உறைகளில் வைத்துக்கொள்ளலாம்" என்றார் கோவர்த்தனன்.

கல்யாணம் உறைகளைக் கிழித்துப் படித்தான். சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தன இரு கடிதங்களும்.

பாக்கெட்டில் அவற்றை வைத்துக்கொண்டு கோவர்த்தனன் கரங்களைப் பற்றினான் அவன். அவரோ அவனைத் தம் மார்புற இறுகித் தழுவிக்கொண்டார். "கல்யாணம்! நான் உன்னிடம் பல தடவைகளில் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன். அதையெல்லாம் மறந்துவிடு" என்றார்.

"ஆகட்டும் ஸார், வருகிறேன்" என்று கூறி விடைபெற்றான் கல்யாணம்.

கோவர்த்தனன், தாரை தாரையாகக் கண்ணீர் உகுத்தபடி நின்ற மணி பக்கம் திரும்பிச் சொன்னார்: "மணி! நான் குடிக்கக் கூடாது என்று அடிக்கடி வற்புறுத்தி வந்தாயல்லவா? நாளை நான் ஜெயிலுக்குப் போனால் எப்படிக் குடிக்க முடியும்? அதனால் திஸ்வில் பி மை லாஸ்ட் டிரிங். இந்தக் கடைசி பானத்தை நீயே உன் கையால் ஊற்றிக் கொடு, பிளீஸ்!" என்றார்.

கேட்டை நோக்கி நடந்த கல்யாணத்தின் காதில், "திஸ் வில் பி மை லாஸ்ட் டிரிங்" என்று கோவர்த்தனன் கூறியது விழுந்தது. ஆனால் அதை அவன் அப்போது சரியாக அர்த்தம் பண்ணிக் கொள்ளவில்லை. அந்தக் கடைசி மதுபானத்தை மணி ஊற்றிக் கொடுத்துவிட்டு அப்பால் போன பிறகு, கோவர்த்தனன் அதில் விஷத்தைக் கலந்த விஷயம் அவர் மூச்சுப் பிரிந்த பிறகுதான் பரவியது.

அது சம்பந்தமாகவும் யாதொரு சந்தேகமும் யாருக்கும் ஏற்படாதிருக்க மூன்றாவதாக ஒரு கடிதத்தையும் முன்னேற்பாடாக எழுதித் தமது சட்டைப் பையில் வைத்திருந்தார் கோவர்த்தனன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 65 -- மலர் அம்புகள்!* ***



(அமரர் கல்கியின் கையெழுத்தில் உள்ள அத்தியாயம்)***

கல்யாணத்துக்கும் கமலாவுக்கும் பிரமாத ஆர்ப்பாட்டங்களுடன் கல்யாணம் நடந்தது.

அதற்கு பவானியும் உமாகாந்தனும் வந்திருந்தார்கள். அவர்கள் திரும்பிக் காரில் போகிறார்கள்.

"இந்தமாதிரியெல்லாம் வீண் ஆடம்பரம் இல்லாமல் நம் கல்யாணத்தை செய்து விட வேண்டும்" என்றான் உமா.

"நமக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே! இன்னும் என்னாத்திற்கு?" என்றாள் பவானி.

"எப்போது ஆயிற்று?"

"இதற்குமுன் எத்தனையோ ஜன்மங்களில் நமக்குக் கல்யாணம் ஆகியிருக்கிறது!" என்றாள் பவானி.

(*கடைசி அத்தியாயத்தை அமரர் கல்கியின் கையெழுத்திலேயே சுருக்கமாகக் காண்கிறோம்.)

சுபம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top