- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
அத்தியாயம் 62 -- லட்சிய வெறி
பவானி தன் தாயாரைப் பற்றி நெகிழ்ந்து கூறிய வார்த்தைகளைக் கேட்டு உமா காந்தன் உருகிப் போனான்.
"உண்மையிலேயே அந்த ஒரு விஷயத்தில் நீ துரதிருஷ்டசாலிதான் பவானி. என் தாயாருடன் நெருங்கிப் பழக உனக்குக் கொடுத்து வைக்கவில்லை அல்லவா? இரண்டு நாட்கள்தான் இப்போது அவளுடன் இருந்தேன். அதற்கு மேல் தங்க பயம். எனக்கு, அவளுக்கு, அவள் பெற்றோருக்கு எல்லோருக்கும் ஆபத்து என்ற எண்ணத்தில் கிளம்பிவிட்டேன். ஆனால் அந்த இரண்டு நாட்களும் அவள் அள்ளிக் கையில் வைத்த பழையது சாப்பிட்ட திருப்தி என் வாழ்நாளெல்லாம் இருக்கும். அமிர்தம்தான் அது. நான் புறப்பட்ட போது அவள் பெட்டியைத் திறந்து அடியில் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த என் கதர் பைஜாமா ஜிப்பாக்களை எடுத்துத் தந்தாள். ' அம்மா! நான் எப்படியும் உன்னைத் தேடி வருவேன் என்று எதிர்பார்த்து இவற்றைப் பின்னோடு எடுத்து வந்தாயா?' என்று கேட்டேன். 'நீ எங்கேடா என்னை விட்டுப் பிரிந்தாய்? அண்ணன் தம்பி இரண்டு பேரும் சரி, உன் அப்பாவும் சரி. சதா என்னோடுதான் இருக்கிறீர்கள்! என்றாள்.
" 'அம்மா அண்ணாவும் நானும் இவ்வளவு பெரிய தவறுகளைச் செய்திருக்கிறோமே என்றேன்.' "
" 'தெரியுமே! என்னை இந்தக் கோலத்தில் நிறுத்தி வைத்திருப்பதே நீங்கள் இரண்டு பேரும் பண்ணின காரியங்கள் தானே' "
" 'அப்படி இருந்தும் இவ்வளவு அன்பு காட்டுகிறாயே, அம்மா' "
" ' அதற்குப் பெயர்தான் தாய்ப் பாசம் என்கிறதுடா, இது தெரியாதா?' " என்றாள்.
இதைச் சொல்லி வரும் போது உமாகாந்தனுக்குத் தொண்டை கரகரத்தது. பவானிக்கோ கண்களில் நீர் திரையிட்டு எதிரே பாதையை மறைத்தது. கண்ணீரை விரல்களால் துடைத்தவள், பொறாமை எட்டிப் பார்ப்பது போன்ற தொனியில், " என்ன இருந்தாலும் அம்மா என்றால் உசத்திதான். சிறையில் இருந்தபோது இத்தனை காலமாக எனக்கு ஒரு கடிதம்கூடப் போடாமல் இருந்துவிட்டீர்கள் அல்லவா?" என்றாள்.
" எப்படி எழுதுவேன் பவானி? என் அப்பா உன் கண்களுக்கு என்னைத் தேசபக்தனாக்கியிருந்தது எனக்குத் தெரியாது. திருட் டுப் பட்டத்துடன் கம்பி எண்ணச் சென்றவன் நான். அந்த அவமானத்தை தாங்கிக் கொண்டு உனக்கு எப்படி எழுதுவேன்? உண்மையை வெளியிடுவதில்லை என்றும் என் அண்ணனைக் காப்பாற்றுவது என்றும் தீர்மானித்த பிறகு என் நிலைமையை ஒரு கடிதத்தில் எப்படி விளக்குவேன்?"
" என்னைப்பற்றி எப்படி அறிந்தீர்கள்? நான் ராமப்பட்டணத்தில் இருப்பது எப்படித் தெரிந்தது?"
" கல்கத்தாவிலிருந்து புறப்படுவதற்குமுன் உன் வீட்டுக்கு ஃபோன் செய்தேன். நெம்பர் நினைவிருந்தது. எப்படியாவது சில நிமிஷ மேனும் உன்னிடம் தனியாகப் பேச ஆவல். இடத்தைச் சொல்லிக் குறிப்பிட்ட நேரத்தில் அங்கே உன்னை வரச்சொல்லலாம் என்று எண்ணினேன். உன் பெற்றோர் பேசியிருந்தால் ஒரு வேளை சந்தேகப்பட்டு, ' நான் யார்? என்ன விஷயம்? என்றெல்லாம் கேட்டிருப்பாரகளோ என்னமோ! ஆனால் என் அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு வேலைக்காரன் பேசினான்: 'பவானி அம்மாவா? அவங்க ராமப்பட்டணத்தில் மாமா வீட்டுக்குப் போய் மாசக்கணக்கா ஆகிறதே' என்றான். அவ்வளவுதானே எனக்கு வேண்டியது? ஆனால் உன்னைத் தொடர்ந்து என் அண்ணாவும் ராமப் பட்டணத்துக்கே வந்திருக்கிறான் என்பது உன்னைச் சந்தித்த பிறகுதான் எனக்குத் தெரியும். என் தாயாருடன் பேசிக்கொண்டிருந்த போது கோவர்த்தனன் பற்றி நான் எதுவுமே கேட்கவில்லை. அவளாக ஏதோ கூற வந்த போதும் நான் சுவாரசியம் காட்டவில்லை. ' அவன் கதை எனக்கு எதற்கு அம்மா?' என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். ஆனால் அவன் கதைதான் தொடர்கதையாக என்னைப் பின் தொடர்கிறது!"
பின் தொடரவில்லை. முந்திக் கொண்டே போய்விட்டது. நம் வருகைக்காகக் காத்திருக்கிறது. அதோ பாருங்கள்! சாலைக்குக் குறுக்கே தடுப்பு ஏற்படுத்திவிட்டுப் போலீஸ்காரர்கள் நிற்பதை" என்றாள் பவானி. காரின் வேகத்தைத் தணித்தவாறே.
பவானியை அவள் மாமா குணசேகரன் லாக்-அப்பில் காண வந்தார். அவளிடம் மாஜிஸ்திரெட் கோவர்த்தனன் கூறிய யோசனையை விவரித்தார். " 'உமாகாந்தன் சிறையிலிருந்து தப்பிய குற்றவாளி என்று எனக்குத் தெரியாது; ஏதோ மனிதாபிமானத்தால் காயம்பட்டவனுக்கு உதவ முற் பட்டேன்; பிறகு அவன் தப்பிச் செல்ல வேண்டி என்னைக் காரோட்டி வருமாறு கட்டாயப்படுத்தினான்; அதற்கு இணங்கா விட்டால் கொன்று விடுவதாக மிரட்டினான்' என்று நீ எழுதித் தரவேண்டும். நீ விடுதலை பெற அது ஒன்றுதான் வழி, பவானி!"
"அப்படிப் பொய்யான ஒரு வாக்குமூலம் எழுதித் தந்து நான் விடுதலை பெற விரும்பவில்லை, மாமா! நீங்கள் உமாவிடம் பேசுங்கள். அவர் வழக்கை நான் நடத்தச் சம்மதிக்க வேண்டும் என்று வற்புறுத்துங்கள். கோர்ட்டில் அவர் உண்மைகளைக் கூற ஒப்புக் கொள்ளச் செய்யுங்கள். அதற்கு மட்டும் அவர் சம்மதித்தால் குறுக்கு விசாரணையில் மாஜிஸ்திரேட்டைச் சந்தி சிரிக்கப் பண்ணி விடுவேன் நான். உமாகாந்த் நிச்சயம் விடுதலை பெற்று விடுவார்."
குணசேகரன் உமாகாந்திடம் போய் நடந்ததையெல்லாம் விவரித்தார். மாஜிஸ்திரேட் கோவர்த்தனனின் யோசனையையும் பவானியின் பதில் யோசனையையும் கூறினார்.
"குணசேகரன் ஸார்! ஆபத்தான ஒரு கட்டத்தில் அண்ணனுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை ஒரு நாளும் மீறமாட்டேன். அப்படி நான் செய்தால் இத்தனை நாட்கள் நான் சிறையிலிருந்து பட்ட அவதிக்கெல்லாம் என்ன அர்த்தம்? அத்தனையும் வியர்த்தமாக அல்லவா முடியும்?"
"குற்றமற்றவன் சிறையில் வாடுவதும் குற்றவாளி வெளியே சுதந்திரமாக உலாவுவதும் என்ன நியாயம்?"
"தண்டிப்பது கடவுள் பொறுப்பு. மன்னிப்பது மனிதன் பாக்கியம்."
"உன் லட்சிய வெறி எனக்கொன்றும் புரியவில்லை" என்றார் குணசேகரன். "இத்தனை நாட்களாய் உன்னை நீயே வருத்திக் கொண்டாய். இப்போது உன்னைக் காதலிப்பது தவிர வேறு ஒரு தவறும் செய்தறியாத என் மருமகளையும் சிறையில் தள்ளி விடப் போகிறாய். இதொன்றுதான் எனக்குத் தெளிவாகிறது."
"நீங்கள் கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம், ஸார்! மாஜிஸ்திரேட் கேட்டது போன்ற வாக்குமூலத்தைப் பவானி எழுதாவிட்டால் என்ன? நான் எழுதித் தருகிறென். போலீஸாருக்கு அதுவே போதும். 'பவானிக்கு நான் சிறையிலிருந்து தப்பிய கைதி என்று தெரியாது; கருணையினால் உதவினாள்; நான் சற்றுக் குணமடைந்ததும் ஸி.ஐ.டிகளிடமிருந்து தப்ப அவள் காரைப் பயன் படுத்திக் கொண்டேன்; பவானியை மிரட்டிக் காரோட்டி வரச் செய்தேன்' இவ்வளவு தானே எழுத வேண்டும்? எங்கே, ஒரு பேனாவும் தாளும் கொடுங்கள்!"
"ஐயய்யோ! நான் அப்படி ஒரு கடிதத்தை உன்னிடமிருந்து எழுதி வாங்கிப் போய் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்ததாகத் தெரிந்தால் அப்புறம் பவானி என்னைச் சும்மாவிட மாட்டாள். அக்கினியாகச் சொற்களைக் கொட்டி என்னை வறுத்தெடுத்து விடுவாள். வேண்டாமப்பா, வேண்டாம்!"
"நீங்கள் வாங்கிக் கொள்ளாவிட்டால் என்ன? இங்கே வருகிற இன்ஸ்பெக்டரிடம் எழுதிக் கொடுத்து அனுப்புகிறேன். கோவர்த்தனனுக்கு"
"என்னமோ செய், என் காதில் மட்டும் போடாதே! நான் வருகிறேன்" என்றார் குணசேகரன்.
சில மணி நேரம் கழித்துப் பவானி இருந்த லாக்-அப் அறைக் கதவு திறந்தது. "நீங்கள் போகலாம்" என்றார் இன்ஸ்பெக்டர்.
பவானிக்கு என்ன நடந்திருக்க வேண்டும் என்று உடனே புரிந்து விட்டது. உமாகாந்தனின் வக்கீல் என்ற முறையில் அவனைப் பார்க்க அனுமதி பெற்று உடனே போனாள்.
"நீங்கள் இப்படிச் செய்தது கொஞ்சம் கூடச் சரியில்லை. இப்போதுகூட ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை. உங்கள் வக்கீலாக இருந்து வாதாட அனுமதி கொடுங்கள். கோர்ட்டில் விசாரிக்கும்போது என் கேள்விகளுக்கு உண்மைகளைப் பதிலாகச் சொல்லுங்கள். நீங்கள் நிச்சயம் விடுதலை பெறலாம்" என்றாள்.
"உன் வாதத் திறமையெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் உன் வேண்டுகோளுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்." என்றான் உமாகாந்தன்.
"உங்களுக்கு உங்களுடைய அர்த்தமற்ற, அபத்தமான வாக்குறுதிதான் முக்கியம். நான் எக்கேடு கெட்டுப்போனாலும் உங்களுக்குக் கவலை இல்லை"என்று பவானி கூறி விம்மினாள்.
"என்னை மன்னித்துவிடு, பவானி!" என்றான் உமாகாந்தன்.
"இப்போது மன்னிக்கமாட்டேன். இன்னும் நாலு வருஷமோ ஆறு வருஷமோ தண்டனை பெற்று மறுபடியும் சிறையிலிருந்து விட்டு வெளியே வரும்போது, பவானி என்ற தலை நரைத்த கிழவி ஒருத்தி உங்களுக்காக இங்கேயே காத்திருப்பாள். அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள். அப்போதுதான் மன்னிப்பேன்" என்று அழுது கொண்டே சொன்னாள் பவானி.
உமாகாந்தன் மெய்சிலிர்த்தான். "எத்தனையோ கற்புக்கரசிகளைப் பற்றிப் புராணங்களில் படித்திருக்கிறேன். உனக்கு நிகராக யாருமில்லை" என்றான்.
" நானும் எத்தனையோ சத்தியசந்தர்களைப் பற்றிப் புராணங்களில் படித்திருக்கிறேன். உங்களைவிட அசடான ஒருத்தர் கிடையாது" என்று கூறிப் பவானி கண்ணீருக் கிடையில் புன்னகை பூத்தாள். மழை ஓய்ந்ததும் கதிரவனைப்பார்த்துச் சிரிக்கும் மலராக விளங்கியது அவள் முகம். "போகட்டும். ஒரு வாக்குறுதி கொடுங்கள்" என்றாள்.
"என்ன பவானி?"
" நாலு வருஷமோ ஆறு வருஷமோ தண்டனைக் காலம் எதுவானாலும் முழுக்க அனுபவித்துவிட்டு வாருங்கள். மறுபடியும் தப்பி ஓடி வந்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்!"
உமாகாந்தன் உரக்கச் சிரித்தான். " அப்படியே ஆகட்டும், பவானி! ஆனால் இந்த முறை தண்டனையை அனுபவிப்பது எனக் கொன்றும் அவ்வளவு சிரமமாக இராது. உன் ஆழ்ந்த அசைக்க முடியாத காதலைப் புரிந்து கொண்டிருக்கிறேன். என்னை நீ தவறாக எண்ணவில்லை என்றும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இவை போதும். ஆறு வருஷமானாலும் ஆறு நாட்களாக ஓட்டிவிட்டு ஓடி வந்து விடுவேன்" என்றான்.