- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
அத்தியாயம் 53 -- கொடூரப் புன்னகை
நடிப்புக் கலை சிரமமானதாக நாடக ஒத்திகைகளின் போது தோன்றவே இல்லை. சமூக சேவா சங்க அங்கத்தினர்கள் பலரும் பார்த்துப் பிரமிக்கும்படி அவள் வெகு இயல்பாகத் தான் ஏற்ற பாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடித்தாள். ஆனால் இப்போது மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் கூறுவது ஒன்றுமே தனக்குப் புரியாததுபோல் நடிக்க நேர்ந்த போதுதான் அந்தக் கலை உண்டமையில் எவ்வளவு சிரமமான ஒன்று என்பதை அவள் உணர்ந்தாள். "நீங்கள் எங்கே, எப்போது வேட்டைக்குப் போனீர்கள்? அதிலும் ஒரு புலியைச் சுடும் அதிர்ஷ்டம் உங்களுக்கு எப்படி அடித்தது? ஏலமலைக் காட்டில் அதிகபட்சம் நரி அல்லது ஓநாய் போன்ற துஷ்ட மிருகங்கள்தாம் உண்டு என்று சொல்வார்களே?" என்றாள்.
"இது இரண்டு கால் புலி" என்றார் மாஜிஸ்திரேட், அவளைக் கூர்ந்து நோக்கியவாறு. "நாலு கால் புலியைவிடப் பயங்கரமானது! கதர்ச் சட்டை போட்டுக்கொண்டு சாது போல் ஊரை ஏமாற்றும்!"
பவானி தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டு, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?" என்றாள்.
"புரிய வைக்கிறேன், பவானி! இப்படி உட்கார்" என்று கூறி, கோவர்த்தனன் சோபா ஒன்றில் அமர்ந்து பவானியை அருகில் உட்காருமாறு ஜாடை காட்டினார்.
"எனக்கு இப்போ நேரமில்லையே? ஹைகோர்ட்டுக்குப் போக வேண்டிய ஒரு வழக்கை ஆராய்ந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்ற பவானி அவர் காட்டிய இடத்தில் அமராமல் எதிரே ஒற்றை சோபாவில் அமர்ந்தாள்.
"பாதகமில்லை. இதுவும் ரொம்ப முக்கியமான விஷயம்தான். ரொம்ப நேரம் உன்னைத் தாமதப்படுத்த மாட்டேன், சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்...பவானி! இது நாள் வரை நான் உன்னிடம் கூறத் தயங்கிக் கொண்டிருந்த விஷயங்களை இப்போது செல்லியே தீரவேண்டியிருக்கிறது. இனியும் தாமதிப்பதற்கில்லை. என்னைப் பற்றி இதுவரை உன்னிடம் ஒரு விவரமும் நான் சொன்னதில்லை அல்லவா? இப்போது கூறுகிறேன், கேள்! நானும் உன்னைப் போல் கல்கத்தாவிலிருந்து இங்கு வந்து சேர்ந்தவன்தான்!"
"அப்படியா!" என்று அளவற்ற ஆச்சரியத்துடன் வினவினாள் பவானி.
"ஆமாம்" என்றார் கோவர்த்தனன்.
"இன்னும் கேள்! என் தகப்பனார் பெயரைக்கூறினால் மேலும் ஆச்சரியப்படுவாய் நீ!"
"கருணாகரனா?"
"கரெக்ட்! என் தம்பி உமாகாந்தன் தான் உன் கல்லூரிக் கதாலன்!"
பவானியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. "அவர் தமக்கு ஓர் அண்ணன் இருப்பதாக என்னிடம் சொல்லவல்லையே?"
"தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும் அவன் எங்களிடம் கூறவே இல்லையே? உங்கள் இருவர் இடையிலும் கல்லூரியில் ஏற்பட்ட சிநேகம் காதலாக மலர்ந்தது என்பதற்கு முதல் அடையாளம், நீ எங்கள் தகப்பனாரைத் தேடிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தாயே, அப்போதுதான் கிடைத்தது!"
"நான் கருணாகரனைத் தேடி வந்தது உங்களுக்குத் தெரியுமா?" என்றாள் பவானி வியப்புடன்.
"அப்போது தெரியாது. அச்சமயம் நான் வெளியே போயிருந்தேன். திரும்பி வந்ததும் என் தகப்பனார் சொன்னார்."
"என்ன சொன்னார்?"
"'நல்லவன் போல் நடித்து நம்மையெல்லாம் ஏமாற்றியது போதாதென்று பாவம், இந்த இளம் பெண்ணை வேறு உமாகாந்த் ஏமாற்றியிருக்கிறான்' என்று அனுதாபப்பட்டார்."
"என்னது! ஏமாற்றுவதா?"
"ஆமாம், பவானி! என் அப்பா உமாகாந்த் பற்றி உன்னிடம் என்ன கூறினார்? தேசபக்தத் தியாகி; ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ரகசிய சதித் திட்டத்தில் ஈடுபட்டதால் உள்ளே தள்ளிவிட்டார்கள் என்றுதானே?"
"ஆமாம்."
"அதுவும் ஓர் ஏமாற்று வேலைதான்! அவர் கூறியது முழுப் பொய்!"
"பொய்யா? எதற்காகப் பொய் சொல்லி என்னை ஏமாற்ற வேண்டும்?" ------------
128.jpg "பின்னே, தம் மகன் பாங்கில் கொள்ளை அடித்துவிட்டு அகப்பட்டுக் கொண்டான்; கம்பி எண்ணுகிறான் என்று ஒரு பெண்ணிடம் ஒப்புக் கொள்ள எந்தத் தகப்பனுக்கு மனம் வரும்?"
"எனக்குத் தலையைச் சுற்றுகிறது" என்றாள் பவானி.
"ஸ்டெடி! ஸ்டெடி!" என்று அன்பும் ஆதரவுமாகக் கூறியபடியே பரிவுடன் எழுந்து வந்து தன் சட்டைப் பையிலிருந்த கைக்குட்டையால் அவள் நெற்றியில் முத்து முத்தாய் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்தார் கோவர்த்தனன். உரிமையோடு உள்ளே சாப்பாட்டு அறைக்குச் சென்று அங்கிருந்த மண் கூஜாவிலிருந்து ஜில்லென்ற தண்ணீர் கொண்டு வந்து உபசரித்தார்.
"இப்படி நீ கலங்கிப் போவாய் என்பதால்தான் இத்தனை நாள் வரை உன்னிடம் இதையெல்லாம் சொல்லாமலே இருந்தேன், பவானி. என் தம்பி பற்றி அவமானத்துக்குரிய விஷயங்களைப் பேச எனக்கு மனமும் வரவில்லை.
"இப்போது மட்டும் மனம் வந்ததாக்கும்" என்றாள் பவானி, கோபத்தை மறைத்துக் கொள்ளாமல்.
"வேறு வழியில்லை, பவானி! நீ கோபப் பட்டாலும் நான் கூறித்தான் ஆகவேண்டும். உமாகாந்த் ஜெயிலிலிருந்து தப்பிவிட்டான். அவனைப் பின்துரத்திக் கொண்டு இரண்டு ஸி.ஐ.டி.கள் அவன் புகைப்படத்துடன் வந்திருக்கிறார்கள். சில காலம் முன்பு எனக்கும் உமாகாந்துக்கும் இடையில் உள்ள உருவ ஒற்றுமை பற்றிக் கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்தார்கள். 'பயங்கரக் குற்றவாளி அவன்; சீக்கிரம் கண்டுபிடியுங்கள்' என்று ஓர் அதட்டல் போட்டு அனுப்பி வைத்தேன். இன்று காலை அந்தக் கையாலாகாத பேர் வழிகள் மறுபடியும் என்னிடம் வந்தார்கள்."
"வந்து....?" - நெஞ்சத் துடிப்புடன், ஆனால் அமைதி இழந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் வினவினாள் பவானி.
"ஏலமலைக் காட்டில் அவன் ஒளிந்து திரிந்திருக்கிறான். இவர்களும் விடாமல் தேடியிருக்கிறார்கள். மலைச் சாரலில் உள்ள சின்னச் சின்ன கிராமங்களிலெல்லாம் விசாரித்திருக்கிறார்கள். கடைசியில் துப்பறிந்து ஒரு குடிசைக்குள் இருந்தவனைப் பிடிக்கப் போனபோது அவன் தப்பி ஓடியிருக்கிறான். ஒரு ஸி.ஐ.டி. அவனை நோக்கிக் கைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான்...."
ஏற்கனவே பவானிக்குத் தெரிந்த விஷயம்தான் என்றாலும் அவளுக்கு இப்போதும் தூக்கிவாரிப் போட்டது.
"பவானி! நீ உன் காதலனாகக் கருதி வந்த ஒருவனைப் பற்றி இப்படியெல்லாம் நான் பேச நேர்ந்ததற்காக எவ்வளவு வருத்தப்படுகிறேன், தெரியுமா? என் தம்பியைக் குறித்து மட்டமாகப் பேச வேண்டியிருக்கிறதே என்பதைவிட அதிகமாக உன் காதலனைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறதே என்பதால் நான் கலங்கி நிற்கிறேன். ஆனாலும் உண்மைகளை எத்தனை நாள் மறைக்க முடியும்? மனசைக் கல்லாக்கிக் கொண்டு கூற வேண்டிய தருணம் வந்துவிட்டது. நீயும் உள்ளத்தைத் திடப்படுத்திக் கொண்டு கேட்டுத்தான் ஆக வேண்டும்."
"சொல்லுங்கள்! அடிபட்ட புலி என்று ஆரம்பத்திலேயே நீங்கள் குறிப்பிட்டதால் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று ஊகிக்கிறேன்" என்று நாத் தழுதழுக்கப் பேசினாள் பவானி. அவள் கண்களில் தளும்பி நின்ற நீரைக் கோவர்த்தனன் துடைக்க அனுமதியாமல் ஒருபுறம் திரும்பிப் புடவைத் தலைப்பால் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
கோவர்த்தனன் ஏமாற்றம் அடைந்தவராக ஒரு பெருமூச்சுடன் திரும்ப வந்து தமது இருக்கையில் அமர்ந்தார்.
"துப்பாக்கித் தோட்டா உராய்ந்து சென்ற காயத்துடனேயே அவன் தட்டுத் தடுமாறி ஓடியிருக்கிறான். ஏலமலைக் காட்டுப் பகுதிக்குள் புகுந்து இவர்களுக்கு டிமிக்கிக் கொடுத்து விட்டு மாயமாய் மறைந்து விட்டிருக்கிறான். இதுகள் இரண்டும் கையைப் பிசைந்து கொண்டு இன்று காலை என்னிடம் வந்து நிற்கின்றன. நன்றாக 'டோஸ்' கொடுத்து அனுப்பினேன்."
"ஏன், தம்பி தப்பி விட்டானே என்று சற்று சந்தோஷப்படக் கூடாதா?"
"அது எப்படி முடியும், பவானி? ஒரு வக்கீலாக இருந்து கொண்டு இப்படிக் கேட்கிறாயே? சட்டத்துக்குமுன் எல்லோரும் சமம் அல்லவா? என் தம்பி என்பதால் ஒரு குற்றவாளி தப்பித்துக் கொண்டதற்காக நான் சந்தோஷப்பட முடியுமா?"
"அப்புறம்?"
"அப்புறமென்ன? அவனுக்குப் பலமாக அடிபட்டிருக்கிறது; அதிக தூரம் போக முடியாது; வைத்திய உதவி இல்லாமல் அதிக நாட்கள் உயிர் தரிக்க முடியாது. எனவே இந்த வட்டாரத்திலேயே யாரிடமாவது
'தஞ்சம்' என்று வந்து சரணடைய் வேண்டியதுதான். எந்த டாக்டர் அவனைப் பரிசோதித்தாலும் குண்டு பட்ட காயம் என்று உடனே புரிந்துக் கொண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்துவிடுவார். சீக்கிரமே அவன் அகப்பட்டுக் கொள்வான். ஆனால் அடிபட்ட புலி ஆபத்தானதும்கூட. போகிற பிராணன் எப்படி இருந்தாலும் போகப் போகிறது, பின்னோடு இன்னும் நாலு பேரை எமலோகப் பட்டணத்துக்கு அழைத்துப் போகலாம் என்று பழி வாங்கும் உணர்ச்சி எழும். அதனால்தான் முக்கியமாக உன்னை எச்சரிக்க வந்தேன். அவன் இங்கே வந்தாலும் வரலாம். போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யட்டுமா?" என்ற கோவர்த்தனன் பவானியை மறுபடியும் கூர்ந்து கவனித்தார்.
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். தோட்டக்காரன், சமையல்காரன் எல்லாரும் இருக்கிறார்கள். மாமா குணசேகரனும் இருக்கிறார். எனக்கென்ன கவலை, அல்லது பயம்? ஒரு ஃபோன் செய்தால் நீங்களும் ஓடி வரப் போகிறீர்கள்!"
"யோசனை பண்ணாதே, பவானி! ஏதாவது உதவி தேவை என்றால் உடனே ஃபோன் பண்ணு!" பவானி அதற்கு ஆகட்டும் என்று பதில் கூறவில்லை. அதற்கு பதிலாக, "எனக்கு இத்தனை நாட்களாகப் புரியாமலிருந்த ஒரு விஷயம் இப்போதுதான் அர்த்தமாகிறது" என்றாள்.
"என்ன அது?" "உங்களை முதன் முதலாக ராமப்பட்டணத்தில் பார்த்த போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்.
என்னையும் அறியாமல் உங்களிடம் ஒரு மதிப்பும் மரியாதையும் என்னிடம் ஏற்பட்டு வளர்ந்தது. உமாகாந்தின் ஜாடைகளை உங்களிடம் நான் கண்டதால்தான் என் மனம் அப்படி உங்களிடம் கவர்ந்து இழுக்கப் பட்டிருக்கிறது."
"மதிப்பும் மரியாதையும் உருவாக்கிய கவர்ச்சி மட்டும்தானா பவானி? அதற்கு அதிகமாக ஒன்றுமில்லையா?" என்று ஏக்கத்துடன் கேட்டார் கோவர்த்தனன்.
பவானி இதற்கும் பதில் கூறாமல், "எனக்குப் புரியாமல் இருக்கும் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன்" என்றாள். "உமாகாந்த் பாங்கில் கொள்ளை அடித்தார் என்பதை என்னிடம் வேணுமானால் உங்கள் அப்பா மறைக்கலாம். ஆனால் ஒரு பெரிய பாங்குக் கொள்ளையை எப்படி உலகின் பார்வையிலிருந்து மறைப்பது? பத்திரிகைகள், ரேடியோ எதிலுமே அப்படி ஒரு செய்தி இடம் பெற வில்லையே?"
"என் அப்பாவுக்குக் கல்கத்தாவில் இருந்த செல்வாக்கு உனக்குத் தெரியாது பவானி. இந்தச் செய்தி பத்திரிகைகளுக்கு எட்டவே இல்லை. போலீசுக்குச் சில பத்திரிகை நிருபர்கள் ஃபோன் செய்து கேட்டபோது அவர்கள் கேள்விப்பட்டது வதந்தியாக இருக்கும் என்று போலீஸார் கூறிவிட்டனர். ஏன் தெரியுமா? போலீஸ் ஐ.ஜி.யிடம் விஷயத்தைப் பத்திரிகைகளுக்கு வெளியிட வேண்டாம் என்று என் அப்பா கேட்டுக் கொண்டார். அவரும் சம்மதித்து அப்படியே உத்தரவு பிறப்பித்து விட்டார். பாங்கு நிர்வாகிகளும் விஷயம் வெளியாவதை விரும்ப வில்லை. அவர்களுக்கென்னவோ பணம் திரும்பக் கிடைத்து விட்டது. திருடனும் கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டான். பத்திரிகையில் செய்தி வெளியானால் பாங்குக்கு வீணான அவப் பெயர்தானே? எனவே, விஷயத்தை அமுக்கிவிட்டார்கள். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கேஸ் நடந்த போது கவனித்த ஓரிரு பத்திரிகை நிருபர்களை என் அப்பா விலைக்கு வாங்கிவிட்டார்!"
"எல்லாவற்றுக்கும் சரியான பதிலைத் தயாராக வைத்திருக்கிறீர்கள்!" என்றாள் பவானி.
"உண்மை எப்போதும் தெளிவானது. குழப்பம் இல்லாதது. ஒரு வக்கீலான உனக்குத் தெரியாததா?" என்றார் கோவர்த்தனன். "பவானி! உமாகாந்திடம் நீ இனியும் ஏமாந்து போகக் கூடாது. சிறையிலிருந்து தப்பி ஓடி வந்த ஒருவனுக்கு என்றுமே நிம்மதியில்லை. அவனால் எங்கும் வேலை தேடிக் கொள்ளவோ, உத்தியோகம் பார்க்கவோ முடியாது. சுதந்திரமாக நாலு பேர் அறியவளைய வருவது அவனுக்குச் சாத்தியமில்லை. யாராவது அவனுக்கு அடைக்கலம் தந்து அவனை மறைத்து வைத்து வேளா வேளைக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தால்தான் உண்டு. இதை எதிர்பார்த்து உமாகாந்தன் உன்னிடம் வருவான். சிறையிலிருந்து தப்பியதும் அவன் நேரே கல்கத்தா சென்று உன்னைப் பற்றி விசாரித்திருப்பான். நீ இங்கே சுயமாகச் சம்பாதிக்கிறாய் என்று அறிந்ததும் அது தனக்கு அனுகூலமாயிற்று என்ற எண்ணத்துடன் இந்தப் பக்கம் வந்திருக்கிறான். ஸி.ஐ.டி.கள் சதா பின் துரத்தியதால் இதுவரை உன்னை அவனால் அணுக முடியாமல் இருந்திருக்கிறது. ஆனால் எப்படியும் அவன் உன்னுடன் தொடர்பு கொள்ள முயல்வான் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீ அவனை மறைத்து வைத்துக் காப்பாற்ற மறுத்தால் அவனுக்குக் கோபம் வரும். அந்தக் கோபத்தில் அவன் என்ன செய்வான், எப்படி நடந்து கொள்வான் என்றே சொல்ல முடியாது! அதே நேரத்தில் ஒரு பாங்குக் கொள்ளைக்காரன் உன்னை மிரட்டிப் பணிய வைக்கவும் நீ அனுமதிக்க முடியாது. உன் நிலைமை தர்ம சங்கடமானதுதான். ஜாக்கிரதை!"
"என்னை எச்சரிப்பதற்காகவும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவுமேதான் நீங்கள் கல்கத்தாவிலிருந்து என்னைப் பின் தொடர்ந்து இந்த ஊருக்கு வந்து சேர்ந்தீர்களா என்ன? நீங்கள் பேசுவதைப் பார்த்தால் அப்படியல்லவா நினைக்கத் தோன்றுகிறது?"
"அதுவும் வாஸ்தவம்தான், பவானி. நீ என் தகப்பனாரை வந்து பார்த்துவிட்டுப் போனாய், உமாகாந்தைப் பற்றி அன்புடன் விசாரித்தாய் என்பதை அறிந்ததிலிருந்து நீ உமாகாந்தின் காதலியாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். தகாத ஒருவன் மீது காதல் கொண்ட உன்னிடம் எனக்கு அனுதாபம் பொங்கியது. உன்னைப் பற்றி உன் கல்லூரி மாணவ மாணவியர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்துத் தெரிந்து கொண்டேன்.
அப்புறம் உன் வீட்டு வேலைக்காரன் ஒருவனை என் கைக்குள் போட்டுக் கொண்டு அவ்வப்போது அங்கு நடப்பனவற்றை அறிந்தேன். தண்டனைக் காலம் முடிந்ததும் உமாகாந்த் நேரே உன்னைப் பார்க்கத்தான் வருவான் என்று உணர்ந்திருந்தேன். அச்சமயம் என் தம்பியால் உனக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்ற கவலை எனக்கு இருந்தது. உன்னைக் காப்பாற்ற வேண்டிய கடமையை நானே ஏற்றுக் கொண்டேன். நீ பி.எல். தேறியதும் தொழில் நடத்த இந்த ஊரைத் தேர்ந்தெடுத்தாய். ஜப்பான்காரன் வரும் போது நீ கல்கத்தாவில் இருக்க வேண்டாம் என்று உன் பெற்றோர் கருதியதுதான் முக்கிய காரணம் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே நானும் அங்கிருந்து புறப்பட்டு வந்து இங்கே எனக்கு உத்தியோகம் கிடைக்குமாறு ஏற்பாடு செய்து கொண்டேன். உனக்காக எவ்வளவு சிரமப்படுகிறேன், பார்த்தாயா?
"இங்கே வந்த பிறகு தொழில் முறையிலும் சமூக சேவா சங்கத்திலும் அடிக்கடி நாம் நெருங்கிப் பழக நேர்ந்தது. என் கடமை உணர்வு நாளாவட்டத்தில் காதலாகவும் அரும்பி விட்டது. மலர்ந்து மணம் பரப்பவும் அந்தக் காதல் காத்திருக்கிறது. ஆனால் பவானி என்ற வன தேவதை அந்த அரும்பு மலர அனுமதி தர மறுக்கிறாள்! என்ன செய்ய?" - ஒரு சோகமான நெடுமூச்சுடன் தாம் அமர்ந்திருந்த ஆசனத்தில் சரிந்து சாய்ந்தார் கோவர்த்தனன்.
பவானியின் நெஞ்சம் கோவர்த்தனனுக்காக நெகிழ்ந்து கொடுத்தது. மாடியில் இருக்கும் காதலனை எண்ணி அவள் மனம் பதை பதைத்தது. என்ன செய்வது, என்ன பேசுவது என்று புரியாமல் தயங்கினாள்.
கடைசியில், "இவ்வளவு தூரம் என்னிடம் சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பதற்காக நான் உங்களுக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி சொல் கிறேன், வந்தனம் தெரிவிக்கிறேன்! திரும்பத் திரும்ப இதுதானா? இவற்றை இவ்வளவு சுலபமாகச் சொல்கிற உன் வாயில் காதலிக்கிறேன் என்ற சொல் மட்டும் நுழையமாட்டேன் என்கிறதே, ஏன்?" - எரிச்சலும் ஆத்திரமுமாகக் கேட்டார் கோவர்த்தனன். பவானிக்கு அழுகையே வந்துவிடும் போலாகி விட்டது. அவரை எப்படியாவது அனுப்பி வைத்தால் போதும் என்கிற நிலையில்ல், "இந்தக் களேபரமெல்லாம் ஒருவாரு அடங்கட்டும். தப்பியோடிய கைதி மறுபடியும் சிறைப்படட்டும். அப்புறம் நம்மைப் பற்றி யோசிக்கலாம்" என்றாள்.
"அதுவும் சரிதான்" என்றார் கோவர்த்தனன். "இங்கு வந்துள்ள ஸி.ஐ.டிகள் வெறும் உதவாக்கரைகள். சென்னையில் கமிஷனருக்கு ஃபோன் போட்டுக் கெட்டிக்காரர்களாக இன்னும் நாலு பேரைத் தேர்ந் தெடுத்து அனுப்பச் சொல்கிறேன்" என்று கூறியவாறே எழுந்து வாசலை நோக்கி நடந்தார் கோவர்த்தனன். "நான் வரட்டுமா, பவானி? உமாகாந்த் பற்றி நான் கூறிய தெல்லாம் ஞாபகமிருக்கட்டும். ஹி இஸ் அடேன்ஜரஸ் ஃபெல்லோ! சிறைப்படுவதற்கு முன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைக் குத்திக் காயப்படுத்தியிருக்கிறான். சிறையிலிருந்து தப்பிய போதும் இரண்டு காவலர்களைத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறான். மறுபடியும் பிடிபட்டால்...." கோவர்த்தனன் காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டார்..... "எந்த ஜட்ஜானாலும் குறைந்தபட்சம் பத்து வருஷம் தீட்டி விடுவார்! விஷயம் தெரிந்து அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் யாரானாலும் அவர்கள்பாடும் அகப்பட்டுக் கொண்டால் திண்டாட்டம்தான். ஹார்பரிங் அ கிரிமினல். இரண்டு வருஷமாவது கம்பி எண்ண வேண்டியிருக்கும்!"
பவானியின் மேனி இதைக் கேட்டு நடுங்குவதைப் பார்த்தார் கோவர்த்தனன். கொடூரமான ஒரு திருப்திப் புன்னகையுடன் காரைக் கிளப்பிச் செலுத்திக் கொண்டு போனார்.