• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 53 -- கொடூரப் புன்னகை




நடிப்புக் கலை சிரமமானதாக நாடக ஒத்திகைகளின் போது தோன்றவே இல்லை. சமூக சேவா சங்க அங்கத்தினர்கள் பலரும் பார்த்துப் பிரமிக்கும்படி அவள் வெகு இயல்பாகத் தான் ஏற்ற பாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடித்தாள். ஆனால் இப்போது மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் கூறுவது ஒன்றுமே தனக்குப் புரியாததுபோல் நடிக்க நேர்ந்த போதுதான் அந்தக் கலை உண்டமையில் எவ்வளவு சிரமமான ஒன்று என்பதை அவள் உணர்ந்தாள். "நீங்கள் எங்கே, எப்போது வேட்டைக்குப் போனீர்கள்? அதிலும் ஒரு புலியைச் சுடும் அதிர்ஷ்டம் உங்களுக்கு எப்படி அடித்தது? ஏலமலைக் காட்டில் அதிகபட்சம் நரி அல்லது ஓநாய் போன்ற துஷ்ட மிருகங்கள்தாம் உண்டு என்று சொல்வார்களே?" என்றாள்.

"இது இரண்டு கால் புலி" என்றார் மாஜிஸ்திரேட், அவளைக் கூர்ந்து நோக்கியவாறு. "நாலு கால் புலியைவிடப் பயங்கரமானது! கதர்ச் சட்டை போட்டுக்கொண்டு சாது போல் ஊரை ஏமாற்றும்!"

பவானி தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டு, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?" என்றாள்.

"புரிய வைக்கிறேன், பவானி! இப்படி உட்கார்" என்று கூறி, கோவர்த்தனன் சோபா ஒன்றில் அமர்ந்து பவானியை அருகில் உட்காருமாறு ஜாடை காட்டினார்.

"எனக்கு இப்போ நேரமில்லையே? ஹைகோர்ட்டுக்குப் போக வேண்டிய ஒரு வழக்கை ஆராய்ந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்ற பவானி அவர் காட்டிய இடத்தில் அமராமல் எதிரே ஒற்றை சோபாவில் அமர்ந்தாள்.

"பாதகமில்லை. இதுவும் ரொம்ப முக்கியமான விஷயம்தான். ரொம்ப நேரம் உன்னைத் தாமதப்படுத்த மாட்டேன், சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்...பவானி! இது நாள் வரை நான் உன்னிடம் கூறத் தயங்கிக் கொண்டிருந்த விஷயங்களை இப்போது செல்லியே தீரவேண்டியிருக்கிறது. இனியும் தாமதிப்பதற்கில்லை. என்னைப் பற்றி இதுவரை உன்னிடம் ஒரு விவரமும் நான் சொன்னதில்லை அல்லவா? இப்போது கூறுகிறேன், கேள்! நானும் உன்னைப் போல் கல்கத்தாவிலிருந்து இங்கு வந்து சேர்ந்தவன்தான்!"

"அப்படியா!" என்று அளவற்ற ஆச்சரியத்துடன் வினவினாள் பவானி.

"ஆமாம்" என்றார் கோவர்த்தனன்.

"இன்னும் கேள்! என் தகப்பனார் பெயரைக்கூறினால் மேலும் ஆச்சரியப்படுவாய் நீ!"

"கருணாகரனா?"

"கரெக்ட்! என் தம்பி உமாகாந்தன் தான் உன் கல்லூரிக் கதாலன்!"

பவானியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. "அவர் தமக்கு ஓர் அண்ணன் இருப்பதாக என்னிடம் சொல்லவல்லையே?"

"தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும் அவன் எங்களிடம் கூறவே இல்லையே? உங்கள் இருவர் இடையிலும் கல்லூரியில் ஏற்பட்ட சிநேகம் காதலாக மலர்ந்தது என்பதற்கு முதல் அடையாளம், நீ எங்கள் தகப்பனாரைத் தேடிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தாயே, அப்போதுதான் கிடைத்தது!"

"நான் கருணாகரனைத் தேடி வந்தது உங்களுக்குத் தெரியுமா?" என்றாள் பவானி வியப்புடன்.

"அப்போது தெரியாது. அச்சமயம் நான் வெளியே போயிருந்தேன். திரும்பி வந்ததும் என் தகப்பனார் சொன்னார்."

"என்ன சொன்னார்?"

"'நல்லவன் போல் நடித்து நம்மையெல்லாம் ஏமாற்றியது போதாதென்று பாவம், இந்த இளம் பெண்ணை வேறு உமாகாந்த் ஏமாற்றியிருக்கிறான்' என்று அனுதாபப்பட்டார்."

"என்னது! ஏமாற்றுவதா?"

"ஆமாம், பவானி! என் அப்பா உமாகாந்த் பற்றி உன்னிடம் என்ன கூறினார்? தேசபக்தத் தியாகி; ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ரகசிய சதித் திட்டத்தில் ஈடுபட்டதால் உள்ளே தள்ளிவிட்டார்கள் என்றுதானே?"

"ஆமாம்."

"அதுவும் ஓர் ஏமாற்று வேலைதான்! அவர் கூறியது முழுப் பொய்!"

"பொய்யா? எதற்காகப் பொய் சொல்லி என்னை ஏமாற்ற வேண்டும்?" ------------

128.jpg "பின்னே, தம் மகன் பாங்கில் கொள்ளை அடித்துவிட்டு அகப்பட்டுக் கொண்டான்; கம்பி எண்ணுகிறான் என்று ஒரு பெண்ணிடம் ஒப்புக் கொள்ள எந்தத் தகப்பனுக்கு மனம் வரும்?"

"எனக்குத் தலையைச் சுற்றுகிறது" என்றாள் பவானி.

"ஸ்டெடி! ஸ்டெடி!" என்று அன்பும் ஆதரவுமாகக் கூறியபடியே பரிவுடன் எழுந்து வந்து தன் சட்டைப் பையிலிருந்த கைக்குட்டையால் அவள் நெற்றியில் முத்து முத்தாய் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்தார் கோவர்த்தனன். உரிமையோடு உள்ளே சாப்பாட்டு அறைக்குச் சென்று அங்கிருந்த மண் கூஜாவிலிருந்து ஜில்லென்ற தண்ணீர் கொண்டு வந்து உபசரித்தார்.

"இப்படி நீ கலங்கிப் போவாய் என்பதால்தான் இத்தனை நாள் வரை உன்னிடம் இதையெல்லாம் சொல்லாமலே இருந்தேன், பவானி. என் தம்பி பற்றி அவமானத்துக்குரிய விஷயங்களைப் பேச எனக்கு மனமும் வரவில்லை.

"இப்போது மட்டும் மனம் வந்ததாக்கும்" என்றாள் பவானி, கோபத்தை மறைத்துக் கொள்ளாமல்.

"வேறு வழியில்லை, பவானி! நீ கோபப் பட்டாலும் நான் கூறித்தான் ஆகவேண்டும். உமாகாந்த் ஜெயிலிலிருந்து தப்பிவிட்டான். அவனைப் பின்துரத்திக் கொண்டு இரண்டு ஸி.ஐ.டி.கள் அவன் புகைப்படத்துடன் வந்திருக்கிறார்கள். சில காலம் முன்பு எனக்கும் உமாகாந்துக்கும் இடையில் உள்ள உருவ ஒற்றுமை பற்றிக் கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்தார்கள். 'பயங்கரக் குற்றவாளி அவன்; சீக்கிரம் கண்டுபிடியுங்கள்' என்று ஓர் அதட்டல் போட்டு அனுப்பி வைத்தேன். இன்று காலை அந்தக் கையாலாகாத பேர் வழிகள் மறுபடியும் என்னிடம் வந்தார்கள்."

"வந்து....?" - நெஞ்சத் துடிப்புடன், ஆனால் அமைதி இழந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் வினவினாள் பவானி.

"ஏலமலைக் காட்டில் அவன் ஒளிந்து திரிந்திருக்கிறான். இவர்களும் விடாமல் தேடியிருக்கிறார்கள். மலைச் சாரலில் உள்ள சின்னச் சின்ன கிராமங்களிலெல்லாம் விசாரித்திருக்கிறார்கள். கடைசியில் துப்பறிந்து ஒரு குடிசைக்குள் இருந்தவனைப் பிடிக்கப் போனபோது அவன் தப்பி ஓடியிருக்கிறான். ஒரு ஸி.ஐ.டி. அவனை நோக்கிக் கைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான்...."

ஏற்கனவே பவானிக்குத் தெரிந்த விஷயம்தான் என்றாலும் அவளுக்கு இப்போதும் தூக்கிவாரிப் போட்டது.

"பவானி! நீ உன் காதலனாகக் கருதி வந்த ஒருவனைப் பற்றி இப்படியெல்லாம் நான் பேச நேர்ந்ததற்காக எவ்வளவு வருத்தப்படுகிறேன், தெரியுமா? என் தம்பியைக் குறித்து மட்டமாகப் பேச வேண்டியிருக்கிறதே என்பதைவிட அதிகமாக உன் காதலனைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறதே என்பதால் நான் கலங்கி நிற்கிறேன். ஆனாலும் உண்மைகளை எத்தனை நாள் மறைக்க முடியும்? மனசைக் கல்லாக்கிக் கொண்டு கூற வேண்டிய தருணம் வந்துவிட்டது. நீயும் உள்ளத்தைத் திடப்படுத்திக் கொண்டு கேட்டுத்தான் ஆக வேண்டும்."

"சொல்லுங்கள்! அடிபட்ட புலி என்று ஆரம்பத்திலேயே நீங்கள் குறிப்பிட்டதால் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று ஊகிக்கிறேன்" என்று நாத் தழுதழுக்கப் பேசினாள் பவானி. அவள் கண்களில் தளும்பி நின்ற நீரைக் கோவர்த்தனன் துடைக்க அனுமதியாமல் ஒருபுறம் திரும்பிப் புடவைத் தலைப்பால் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

கோவர்த்தனன் ஏமாற்றம் அடைந்தவராக ஒரு பெருமூச்சுடன் திரும்ப வந்து தமது இருக்கையில் அமர்ந்தார்.

"துப்பாக்கித் தோட்டா உராய்ந்து சென்ற காயத்துடனேயே அவன் தட்டுத் தடுமாறி ஓடியிருக்கிறான். ஏலமலைக் காட்டுப் பகுதிக்குள் புகுந்து இவர்களுக்கு டிமிக்கிக் கொடுத்து விட்டு மாயமாய் மறைந்து விட்டிருக்கிறான். இதுகள் இரண்டும் கையைப் பிசைந்து கொண்டு இன்று காலை என்னிடம் வந்து நிற்கின்றன. நன்றாக 'டோஸ்' கொடுத்து அனுப்பினேன்."

"ஏன், தம்பி தப்பி விட்டானே என்று சற்று சந்தோஷப்படக் கூடாதா?"

"அது எப்படி முடியும், பவானி? ஒரு வக்கீலாக இருந்து கொண்டு இப்படிக் கேட்கிறாயே? சட்டத்துக்குமுன் எல்லோரும் சமம் அல்லவா? என் தம்பி என்பதால் ஒரு குற்றவாளி தப்பித்துக் கொண்டதற்காக நான் சந்தோஷப்பட முடியுமா?"

"அப்புறம்?"

"அப்புறமென்ன? அவனுக்குப் பலமாக அடிபட்டிருக்கிறது; அதிக தூரம் போக முடியாது; வைத்திய உதவி இல்லாமல் அதிக நாட்கள் உயிர் தரிக்க முடியாது. எனவே இந்த வட்டாரத்திலேயே யாரிடமாவது

'தஞ்சம்' என்று வந்து சரணடைய் வேண்டியதுதான். எந்த டாக்டர் அவனைப் பரிசோதித்தாலும் குண்டு பட்ட காயம் என்று உடனே புரிந்துக் கொண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்துவிடுவார். சீக்கிரமே அவன் அகப்பட்டுக் கொள்வான். ஆனால் அடிபட்ட புலி ஆபத்தானதும்கூட. போகிற பிராணன் எப்படி இருந்தாலும் போகப் போகிறது, பின்னோடு இன்னும் நாலு பேரை எமலோகப் பட்டணத்துக்கு அழைத்துப் போகலாம் என்று பழி வாங்கும் உணர்ச்சி எழும். அதனால்தான் முக்கியமாக உன்னை எச்சரிக்க வந்தேன். அவன் இங்கே வந்தாலும் வரலாம். போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யட்டுமா?" என்ற கோவர்த்தனன் பவானியை மறுபடியும் கூர்ந்து கவனித்தார்.

"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். தோட்டக்காரன், சமையல்காரன் எல்லாரும் இருக்கிறார்கள். மாமா குணசேகரனும் இருக்கிறார். எனக்கென்ன கவலை, அல்லது பயம்? ஒரு ஃபோன் செய்தால் நீங்களும் ஓடி வரப் போகிறீர்கள்!"

"யோசனை பண்ணாதே, பவானி! ஏதாவது உதவி தேவை என்றால் உடனே ஃபோன் பண்ணு!" பவானி அதற்கு ஆகட்டும் என்று பதில் கூறவில்லை. அதற்கு பதிலாக, "எனக்கு இத்தனை நாட்களாகப் புரியாமலிருந்த ஒரு விஷயம் இப்போதுதான் அர்த்தமாகிறது" என்றாள்.

"என்ன அது?" "உங்களை முதன் முதலாக ராமப்பட்டணத்தில் பார்த்த போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்.

என்னையும் அறியாமல் உங்களிடம் ஒரு மதிப்பும் மரியாதையும் என்னிடம் ஏற்பட்டு வளர்ந்தது. உமாகாந்தின் ஜாடைகளை உங்களிடம் நான் கண்டதால்தான் என் மனம் அப்படி உங்களிடம் கவர்ந்து இழுக்கப் பட்டிருக்கிறது."

"மதிப்பும் மரியாதையும் உருவாக்கிய கவர்ச்சி மட்டும்தானா பவானி? அதற்கு அதிகமாக ஒன்றுமில்லையா?" என்று ஏக்கத்துடன் கேட்டார் கோவர்த்தனன்.

பவானி இதற்கும் பதில் கூறாமல், "எனக்குப் புரியாமல் இருக்கும் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன்" என்றாள். "உமாகாந்த் பாங்கில் கொள்ளை அடித்தார் என்பதை என்னிடம் வேணுமானால் உங்கள் அப்பா மறைக்கலாம். ஆனால் ஒரு பெரிய பாங்குக் கொள்ளையை எப்படி உலகின் பார்வையிலிருந்து மறைப்பது? பத்திரிகைகள், ரேடியோ எதிலுமே அப்படி ஒரு செய்தி இடம் பெற வில்லையே?"

"என் அப்பாவுக்குக் கல்கத்தாவில் இருந்த செல்வாக்கு உனக்குத் தெரியாது பவானி. இந்தச் செய்தி பத்திரிகைகளுக்கு எட்டவே இல்லை. போலீசுக்குச் சில பத்திரிகை நிருபர்கள் ஃபோன் செய்து கேட்டபோது அவர்கள் கேள்விப்பட்டது வதந்தியாக இருக்கும் என்று போலீஸார் கூறிவிட்டனர். ஏன் தெரியுமா? போலீஸ் ஐ.ஜி.யிடம் விஷயத்தைப் பத்திரிகைகளுக்கு வெளியிட வேண்டாம் என்று என் அப்பா கேட்டுக் கொண்டார். அவரும் சம்மதித்து அப்படியே உத்தரவு பிறப்பித்து விட்டார். பாங்கு நிர்வாகிகளும் விஷயம் வெளியாவதை விரும்ப வில்லை. அவர்களுக்கென்னவோ பணம் திரும்பக் கிடைத்து விட்டது. திருடனும் கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டான். பத்திரிகையில் செய்தி வெளியானால் பாங்குக்கு வீணான அவப் பெயர்தானே? எனவே, விஷயத்தை அமுக்கிவிட்டார்கள். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கேஸ் நடந்த போது கவனித்த ஓரிரு பத்திரிகை நிருபர்களை என் அப்பா விலைக்கு வாங்கிவிட்டார்!"

"எல்லாவற்றுக்கும் சரியான பதிலைத் தயாராக வைத்திருக்கிறீர்கள்!" என்றாள் பவானி.

"உண்மை எப்போதும் தெளிவானது. குழப்பம் இல்லாதது. ஒரு வக்கீலான உனக்குத் தெரியாததா?" என்றார் கோவர்த்தனன். "பவானி! உமாகாந்திடம் நீ இனியும் ஏமாந்து போகக் கூடாது. சிறையிலிருந்து தப்பி ஓடி வந்த ஒருவனுக்கு என்றுமே நிம்மதியில்லை. அவனால் எங்கும் வேலை தேடிக் கொள்ளவோ, உத்தியோகம் பார்க்கவோ முடியாது. சுதந்திரமாக நாலு பேர் அறியவளைய வருவது அவனுக்குச் சாத்தியமில்லை. யாராவது அவனுக்கு அடைக்கலம் தந்து அவனை மறைத்து வைத்து வேளா வேளைக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தால்தான் உண்டு. இதை எதிர்பார்த்து உமாகாந்தன் உன்னிடம் வருவான். சிறையிலிருந்து தப்பியதும் அவன் நேரே கல்கத்தா சென்று உன்னைப் பற்றி விசாரித்திருப்பான். நீ இங்கே சுயமாகச் சம்பாதிக்கிறாய் என்று அறிந்ததும் அது தனக்கு அனுகூலமாயிற்று என்ற எண்ணத்துடன் இந்தப் பக்கம் வந்திருக்கிறான். ஸி.ஐ.டி.கள் சதா பின் துரத்தியதால் இதுவரை உன்னை அவனால் அணுக முடியாமல் இருந்திருக்கிறது. ஆனால் எப்படியும் அவன் உன்னுடன் தொடர்பு கொள்ள முயல்வான் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீ அவனை மறைத்து வைத்துக் காப்பாற்ற மறுத்தால் அவனுக்குக் கோபம் வரும். அந்தக் கோபத்தில் அவன் என்ன செய்வான், எப்படி நடந்து கொள்வான் என்றே சொல்ல முடியாது! அதே நேரத்தில் ஒரு பாங்குக் கொள்ளைக்காரன் உன்னை மிரட்டிப் பணிய வைக்கவும் நீ அனுமதிக்க முடியாது. உன் நிலைமை தர்ம சங்கடமானதுதான். ஜாக்கிரதை!"

"என்னை எச்சரிப்பதற்காகவும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவுமேதான் நீங்கள் கல்கத்தாவிலிருந்து என்னைப் பின் தொடர்ந்து இந்த ஊருக்கு வந்து சேர்ந்தீர்களா என்ன? நீங்கள் பேசுவதைப் பார்த்தால் அப்படியல்லவா நினைக்கத் தோன்றுகிறது?"

"அதுவும் வாஸ்தவம்தான், பவானி. நீ என் தகப்பனாரை வந்து பார்த்துவிட்டுப் போனாய், உமாகாந்தைப் பற்றி அன்புடன் விசாரித்தாய் என்பதை அறிந்ததிலிருந்து நீ உமாகாந்தின் காதலியாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். தகாத ஒருவன் மீது காதல் கொண்ட உன்னிடம் எனக்கு அனுதாபம் பொங்கியது. உன்னைப் பற்றி உன் கல்லூரி மாணவ மாணவியர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்துத் தெரிந்து கொண்டேன்.

அப்புறம் உன் வீட்டு வேலைக்காரன் ஒருவனை என் கைக்குள் போட்டுக் கொண்டு அவ்வப்போது அங்கு நடப்பனவற்றை அறிந்தேன். தண்டனைக் காலம் முடிந்ததும் உமாகாந்த் நேரே உன்னைப் பார்க்கத்தான் வருவான் என்று உணர்ந்திருந்தேன். அச்சமயம் என் தம்பியால் உனக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்ற கவலை எனக்கு இருந்தது. உன்னைக் காப்பாற்ற வேண்டிய கடமையை நானே ஏற்றுக் கொண்டேன். நீ பி.எல். தேறியதும் தொழில் நடத்த இந்த ஊரைத் தேர்ந்தெடுத்தாய். ஜப்பான்காரன் வரும் போது நீ கல்கத்தாவில் இருக்க வேண்டாம் என்று உன் பெற்றோர் கருதியதுதான் முக்கிய காரணம் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே நானும் அங்கிருந்து புறப்பட்டு வந்து இங்கே எனக்கு உத்தியோகம் கிடைக்குமாறு ஏற்பாடு செய்து கொண்டேன். உனக்காக எவ்வளவு சிரமப்படுகிறேன், பார்த்தாயா?

"இங்கே வந்த பிறகு தொழில் முறையிலும் சமூக சேவா சங்கத்திலும் அடிக்கடி நாம் நெருங்கிப் பழக நேர்ந்தது. என் கடமை உணர்வு நாளாவட்டத்தில் காதலாகவும் அரும்பி விட்டது. மலர்ந்து மணம் பரப்பவும் அந்தக் காதல் காத்திருக்கிறது. ஆனால் பவானி என்ற வன தேவதை அந்த அரும்பு மலர அனுமதி தர மறுக்கிறாள்! என்ன செய்ய?" - ஒரு சோகமான நெடுமூச்சுடன் தாம் அமர்ந்திருந்த ஆசனத்தில் சரிந்து சாய்ந்தார் கோவர்த்தனன்.

பவானியின் நெஞ்சம் கோவர்த்தனனுக்காக நெகிழ்ந்து கொடுத்தது. மாடியில் இருக்கும் காதலனை எண்ணி அவள் மனம் பதை பதைத்தது. என்ன செய்வது, என்ன பேசுவது என்று புரியாமல் தயங்கினாள்.

கடைசியில், "இவ்வளவு தூரம் என்னிடம் சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பதற்காக நான் உங்களுக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். நன்றி சொல் கிறேன், வந்தனம் தெரிவிக்கிறேன்! திரும்பத் திரும்ப இதுதானா? இவற்றை இவ்வளவு சுலபமாகச் சொல்கிற உன் வாயில் காதலிக்கிறேன் என்ற சொல் மட்டும் நுழையமாட்டேன் என்கிறதே, ஏன்?" - எரிச்சலும் ஆத்திரமுமாகக் கேட்டார் கோவர்த்தனன். பவானிக்கு அழுகையே வந்துவிடும் போலாகி விட்டது. அவரை எப்படியாவது அனுப்பி வைத்தால் போதும் என்கிற நிலையில்ல், "இந்தக் களேபரமெல்லாம் ஒருவாரு அடங்கட்டும். தப்பியோடிய கைதி மறுபடியும் சிறைப்படட்டும். அப்புறம் நம்மைப் பற்றி யோசிக்கலாம்" என்றாள்.

"அதுவும் சரிதான்" என்றார் கோவர்த்தனன். "இங்கு வந்துள்ள ஸி.ஐ.டிகள் வெறும் உதவாக்கரைகள். சென்னையில் கமிஷனருக்கு ஃபோன் போட்டுக் கெட்டிக்காரர்களாக இன்னும் நாலு பேரைத் தேர்ந் தெடுத்து அனுப்பச் சொல்கிறேன்" என்று கூறியவாறே எழுந்து வாசலை நோக்கி நடந்தார் கோவர்த்தனன். "நான் வரட்டுமா, பவானி? உமாகாந்த் பற்றி நான் கூறிய தெல்லாம் ஞாபகமிருக்கட்டும். ஹி இஸ் அடேன்ஜரஸ் ஃபெல்லோ! சிறைப்படுவதற்கு முன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைக் குத்திக் காயப்படுத்தியிருக்கிறான். சிறையிலிருந்து தப்பிய போதும் இரண்டு காவலர்களைத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறான். மறுபடியும் பிடிபட்டால்...." கோவர்த்தனன் காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டார்..... "எந்த ஜட்ஜானாலும் குறைந்தபட்சம் பத்து வருஷம் தீட்டி விடுவார்! விஷயம் தெரிந்து அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் யாரானாலும் அவர்கள்பாடும் அகப்பட்டுக் கொண்டால் திண்டாட்டம்தான். ஹார்பரிங் அ கிரிமினல். இரண்டு வருஷமாவது கம்பி எண்ண வேண்டியிருக்கும்!"

பவானியின் மேனி இதைக் கேட்டு நடுங்குவதைப் பார்த்தார் கோவர்த்தனன். கொடூரமான ஒரு திருப்திப் புன்னகையுடன் காரைக் கிளப்பிச் செலுத்திக் கொண்டு போனார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 54 -- "பவானியின் காதலன்"



இரண்டு நாட்கள் கழித்துக் கல்யாணசுந்தரம் மறுபடியும் கமலாவின் வீட்டுக்குப் போனான். கமலாவும் விசுவும் மட்டும் இருந்தார்கள். 'நல்ல வேளையாகப் போயிற்று, கமலாவுடன் சற்று மனம் விட்டுப் பேசலாம்' என்று அவன் சந்தோஷப்பட்டது தப்பாகப் போயிற்று. கமலா அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. முகம் காட்டாமல் தலை குனிந்து கொண்டோ அல்லது வெட்கப்பட்டுக் கதவுக்குப் பின் மறைந்திருந்தோ பேசினாளா என்றால் அதுவும் கிடையாது.

"அப்பாவும் அம்மாவும் கோவிலுக்குப் போயிருக்காங்களாக்கும்?" என்றான் கல்யாணம். பதில் இல்லை. "திரும்புவதற்கு நேரமாகுமோ?" என்றான். அதற்கும் பதில் இல்லை. "இப்பத்தான் போனார்களா? அல்லது கிளம்பி ரொம்ப நேரமாச்சா?" என்று மீண்டும் ஒரு கேள்வியைப் போட்டுப் பார்த்தான்.

"என்னவோ கேட்கிறாரே, பதில் சொல்லேண்டா" என்றாள் கமலா விசுவைப் பார்த்து.

"ஓ! பேச வருகிறதே! திடீரென்று ஊமையாகி விட்டாளாக்கும் உன் அக்கா என்று நினைத்தேன்!"

"ஊமையாவது, ஒண்ணாவது! கல்யாணம் மாமா! இன்னைக்குக் காலையிலே அக்கா மறுபடியும் சுத்தியைக் கையில் போட்டுக் கொண்டபோது கொடுத்த சாபங்களையும் வசவுகளையும் கேட்காமல் போயிட்டேளே! மிஷின்கன்லேருந்து குண்டுகள் பறக்கிற மாதிரி சடசடவென்று பொழிந்து தள்ளினா! அம்மாவே அசந்து போயிட்டாள்னா பார்த்துக் கொள்ளுங்களேன்!"

கல்யாணம், விசு பேசி முடிக்கும் வரை காத்திராமல், பதறி, பாய்ந்து, கமலாவின் அருகே சென்று அவள் கையைப் பிடித்துப் பார்த்து, "எங்கே காயம்? எங்கே? எங்கே?" என்று கேட்டான்.

"போதும் உங்கள் கரிசனம்" என்று கமலாகையை உதறினாள். "காயம் கையில் ஒன்றுமில்லை, நெஞ்சில்!"

"ஐயய்யோ! நெஞ்சில் எப்படி அடிபட்டது?"

"உங்களாலேதான். மனத்தில் இருப்பதை முன்னாலேயே சொல்லி யிருந்தால் இப்படி ஊர் சிரிக்கும்படி யாகியிருக்குமா?"

"ஊராரெல்லாம் எதற்குச் சிரிக்கிறார்கள்?"

"விசுவைக் கேளுங்கள்!"

"என்னடா பயலே அக்காவிடம் என்னடா உளறிக் கொட்டினாய்?"

"நான் ஒன்றும் உளரவில்லை; உண்மையைத்தான் சொன்னேன், மாமா! பள்ளிக் கூடப் பசங்கள் உங்களைத் தூரத்தில் பார்க்கிறபோதே, 'கமலாவின் கல்யாணம்' என்று கூறிச் சிரிக்கிறாங்க. அதைச் சொன்னேன். இவளுக்கு அது அவமானமாய் இருக்காம்!"

"இதிலே என்ன அவமானம்? பசங்கள் பேசறதிலேதான் என்ன தப்பு? நான் கமலாவின் கல்யாணம்தான்!"

"நீங்கள் முதலிலேயே உங்கள் மனத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு பேசியிருந்தால் இவ்வளவும் நடந்திருக்காதல்லவா? ஒன்றிலிருந்து ஒன்றாக எவ்வளவு தப்பபிப்பிராயங்கள், எவ்வளவு வேண்டாத நிகழ்ச்சிகள் எத்தனை ஏச்சுப்பேச்சுக்கள் கோபதாபங்கள்?"

"நீயும்தான் அவசரப்பட்டு அசட்டுக் காரியம் செய்தாய்! அந்தக் கிழவரைக் கல்யாணம் செய்து கொள்ள ஏன் சம்மதித்தாய்?"

"நீங்கள் அந்தப் பவானியின் மோக வலையிலே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தீர்கள். என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டீர்கள் என்று நினைத்தேன்."

"இதோ பார், கமலா! நீ என்ன வேணுமானாலும் சொல்லு. ஆனால் மிஸ் பவானியைப் பற்றி மட்டும் தப்பாக எதுவும் பேசாதே!"

"அடேயப்பா! பவானி என்கிற பெயரைச் சொல்வதற்குள்ளே இத்தனை கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே! நான் அப்படி என்ன தகாத வார்த்தை சொல்லிட்டேன்?"

"இன்னும் என்ன கூற வேண்டும்? மோகவலை வீசினாள், மயக்கு மொழி பேசினாள் என்றெல்லாம் ஊரிலே இருக்கிற காலிப் பசங்கள் தான் ஏதோ உளறுகிறார்கள் என்றால் அத்தகைய சொற்களை நீயும் பயன்படுத்தலாமா? என் மனத்தையே நான் சரியாகப் புரிந்து கொள்ளாதது என் தவறு. அதற்காகப் பவானியின் நடத்தைக்குக் களங்கம் கற்பிப்பது போல் எதுவும் சொல்லக் கூடாது! அது மகாபாவம்! அவளைப் போல் ஒண்டர்ஃபுல் லேடியை நான் பார்த்ததே இல்லை! என்ன படிப்பு. என்ன அறிவு! அவ்வளவு ஞானம் இருந்தும் எத்தனை அடக்கம்! எவ்வளவு இனிய சுபாவம்!"

"ஒரேயடியாக வர்ணிக்கிறீர்களே!"

"உண்மையைத்தான் கூறுகிறேன். உன்னைப் பற்றிப் பவானி எவ்வளவு உயர்வாகப் பேசுகிறாள் தெரியுமா? நீ இப்படிச் சொன்னாய் என்று தெரிந்தால் எவ்வளவு வருத்தப் படுவாள்!"

"அடடா! நான் அக்காவைப் பற்றி என்ன தகாத விஷயமாகக் கூறிவிட்டேன் என்று இப்படிப் பதறுகிறீர்கள்? உங்களைப் பற்றித்தானே நான் சொன்னேன்? நீங்கள் பவானியிடம் மோகம் கொண்டிருக்கலாம்; பவானி அக்கா வேறு ஒருவரிடம் மோகம் கொண்டிருக்கலாம்...."

வாக்கியத்தை முடிப்பதற்கு முன்பே, 'ஐயோ! தவறு செய்து விட்டோமே; பவானி அக்காவுக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டோமே!' என்று கமலாவுக்குத் தோன்றியது. அதே கணத்தில் சுளீரென்று அவள் கன்னத்தில் வலி தெரிந்தது!

வலியை உணர்ந்து கண்களில் கண்ணீரும் பீறிட்ட பிறகுதான் வலியின் காரணத்தை உணர்ந்தாள் கமலா. 'கல்யாணம் தன்னைக்கை நீட்டி அடித்திருக்கிறான்!' விண் விண் என்று இன்னமும் வேதனை தரும் அளவுக்குப் பலமாக விழுந்த அறை!

'தம்பி விசுவுக்கு எதிரே இப்படி அவமானப்படுத்துமளவுக்கு நாம் என்ன அப்படிப் பெரிய தவறு செய்துவிட்டோம்? உண்மை பேசியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' கமலா பிரமித்து நின்றாள்.

கல்யாணத்துக்கும் கஷ்டமாகப் போய்விட்டது. என்னதான் தனக்குப் பவானி மீது மதிப்பிருந்தாலும் கமலாவைக் கைநீட்டி அடிக்கத் தனக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்தான். "மன்னிச்சுடு, கமலா! உன்னை அடித்த இந்தக் கையை வெட்டிவிடலாம் என்று ஆத்திரமாக வருகிறது எனக்கு. இருந்தாலும் நீ மற்றவர்களைப் பற்றி, அதுவும் பவானியைப் பற்றி அவதூறாகப் பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை" என்றான்.

"நான் ஒன்றும் கற்பனை செய்து கதை அளக்கவில்லை; நிஜத்தைத்தான் கூறினேன். வேண்டுமானால் பவானியின் வீட்டுக்கே நேரில் போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்!" என்றாள் கமலா. பவானியிடம் கொடுத்த வாக்கைக் காப்பதைவிடக் காதலனிடம் தான் பொய் பேசாதவள் என்பதை நிரூபித்துக் கொள்வது அவசரமாகவும் முக்கியமாகவும் பட்டது அவளுக்கு.

"என்னத்தைப் பார்க்கிறது?" என்றான் கல்யாணம், ஆத்திரத்துடன்.

"பவானியின் காதலனை" என்றாள் கமலா ரோஷத்துடன்.

"சீச்சி! பைத்தியம் முற்றிப் பிதற்றுகிறாய்! நான் வருகிறேன். உன்னை மதித்து உன் வீட்டு வாசலை மிதித்ததே தவறு!" கல்யாணம் கோபத்துடன் திரும்பி வாசல் பக்கம் போனான். கமலா ஓடிப் போய் வழி மறித்து நின்று, அவன் கரங்களைப் பற்றிக் கொண்டாள். கண்களில் நீர் பெருகித் தாரை தாரையாகக் கன்னங்களில் வழிந்தோட, "நான் பெரிய தவறு செய்து விட்டேன்; கோபத்தில் ஏதோ பேசிவிட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பவானி அக்கா எனக்குத் தெய்வம் மாதிரி பல சந்தர்ப்பங்களில் உதவியிருக்கிறார்கள். அக்காவிடம் போய் எதையும் கேட்டு விடாதீர்கள்! உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்" என்றாள்.

"கண்டிப்பாக இதைப் பற்றிக் கேட்டு விட்டுத்தான் மறு காரியம் பார்க்கப் போகிறேன்! இப்போதே நேரே பவானி வீட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன்!" என்றான் கல்யாணம்.

"ஐயோ! நான் அக்காவுக்குச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேனே; ஆத்திரத்தில் ஏதோ உளறி விட்டேன். அதை மறந்து விடுங்களேன்; பிளீஸ்!" என்றாள் கமலா.

"ஒரு நாளும் மறக்க முடியாது! எப்படி மறக்கும்? சாமானிய விஷயமா இது?"

"இதோ பாருங்கள், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு ரகசியம் இருக்கும். அதற்காக அவர்களைத் தவறாக எண்ணக் கூடாது. இப்போ என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். என் வாழ்க்கையிலும் கூட ஒரு ரகசியம் இருக்கத்தான் செய்கிறது."

கல்யாணம் தூக்கிவாரிப் போட்டதுபோல் அவளைத் திரும்பிக் கூர்மையாகப் பார்த்தான். "ஆ! என் அம்மா கூறியது நிஜம்தானா? 'வாயைக் கழுவிக் கொண்டு வா' என்று அவளிடம் சீறினேனே நான்; அது தான் தப்பா?"

"ஐயோ! நான் அதைச் சொல்லவில்லை. அது முழுப் பொய்!" என்று அலறினாள் கமலா. "ஊரிலே வேலையற்ற விடலைகள் நாலு பேர் கட்டிவிட்ட கதை. என்னைப் பார்த்தால் அவ்வளவு கேவலமானவளாகவா தோன்றுகிறது, உங்களுக்கு?" நெஞ்சு வெடித்துவிடும் போல் அவன் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள் கமலா.

கல்யாணத்தின் உள்ளத்தில் கருணை பொங்கியது. "இல்லை, கமலா! நான் அதை நம்பவேயில்லை. 'பணத்துக்கு ஆசைப்பட்டு ஊர் ஊராகப் போய்க் கிழவர்களாகப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்வதே உனக்குக் காரியம்' என்று கடவுளே என் எதிரில் வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்." அவன் குனிந்து அவள் தோள்களைப் பற்றி எழுப்பிக் கைக் குட்டையால் அவள் கண்ணீரைத் துடைத்தான். "கபடமில்லாத இந்தக் கண்கள், மாசு மறுவற்ற இந்த முகம், அவமானம் தாங்காமல் துவளும் இந்த உடல் எல்லாம் எனக்கு உண்மையை உணர்த்து கின்றன கமலா....ஆனால்......வேறு என்ன ரகசியம் இருக்கமுடியும் உன் வாழ்க்கையில்?"

"வந்து....வந்து...." விசும்பலுக்கிடையில் வார்த்தைகள் வெளிப்பட மறுத்தன.

"சொல்லு, கமலா!" அவன் ஆதரவாக அவள் முதுகைத் தடவினான்.

"நான் ....நான்....எனக்கு...."

கல்யாணத்துக்குச் சிரிப்பு வந்து விட்டது.

"நான்.... நீ...... எனக்கு.....உனக்கு! என்ன ரகசியம் பொதிந்து கிடக்கிறது இதற்குள்ளே?"

"அப்பாவும் அம்மாவும் என்... சொந்தப் பெற்றோர்கள் இல்லை.... அநாதையான என்னை எடுத்து வளர்த்தார்கள். எனக்கே இந்த விவரம் சமீபத்தில்தான் தெரியும்.

"ஓ! இவ்வளவுதானே!" என்றான் கல்யாணம். "இதை நானும் பவானியும் என் றைக்கோ ஊகித்துவிட்டோம். அவர்கள் உன்னை நடத்தும் விதத்திலிருந்து இதைத் தெரிந்து கொண்டு பல தடவை எங்களுக் குள் பேசிக் கொண்டிருக்கிறோம்."

"இதை அறிந்தால் நீங்கள் என்னை வெறுத்துவிடுவீர்களோ என்றுதான் பயந்தேன். 'யாருக்குப் பிறந்தவளோ, என்ன ஜாதியோ?' என்று அருவருப்படைவீர்களே என்று ஒரே கவலை."

"சேச்சே! அப்படியெல்லாம் எண்ணுகிறவனாயிருந்தால் சமூக சேவா சங்கம் என்று எதற்காக நடத்துகிறேன்? சீர்திருத்த நாடகம் ஏன் போடப் போகிறேன்? அசடே! அதையெல்லாம் நினைத்து நீ இனியும் கவலைப் பட்டுக் கொண்டிராதே! எங்கே, சிரி பார்க்கலாம்?" கல்யாணம் கமலாவின் முகவாயைப் பற்றினான். அவள் நாணிக் கோணித் தன் முகத்தை எங்கே புதைத்துக் கொள்வது என்று புரியாமல் 'களுக்' கென்று சிரித்தபடி அவன் நெஞ்சிலேயே சாய்ந்தாள்.

"ஆல் இஸ் வெல், தட் எண்ட்ஸ் வெல்!" என்று விசு தன் ஆங்கிலப் பாடம் ஒன்றின் கடைசி வரியைக் கூறிய போதுதான் அவன் அங்கிருப்பது அவர்கள் நினைவுக்கு வந்தது. திடுக்கிட்டு விலகிக் கொண்டார்கள்!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 55 -- யாரை நம்புவது?



தண்மதி விரித்த வெள்ளி நிலவு. இரவுக் கன்னிக்கு இதமளிக்கவென்று வீசிய தென்றல் காற்று. மொட்டை மாடியில் உமாகாந்தனும் பவானியும் அவள் மாமா குணசேகரனும் விச்ராந்தியாக அமர்ந்திருந்தார்கள். பவானி ரொம்ப உற்சாகமாக இருந்தாள். உமாகாந்த் இவ்வளவு சீக்கிரம் எழுந்து நடமாட ஆரம்பிப்பான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. டாக்டர் கொடுத்த நல்ல மருந்து உமாகாந்தின் இயற்கையான திடகாத்திரமான தேக வாகு, பவானியின் பணிவிடை எல்லாம் சேர்ந்து அவனைத் துரிதமாக உடல்தேற வைத்தன. முகம் மட்டும் சற்றே வெளிறியிருந்தாலும் அவன் வதனத்தில் அவள் முன்பு பார்த்துத் தன் மனத்தைப் பறி கொடுத்திருந்த ஜீவ களை திரும்பியிருந்தது.

"பவானி! ஏதாவது பாடேன்" என்றார் மாமா குணசேகரன். அப்படி ஓர் அழைப்புக்காகவே காத்திருந்தவள் போல் உடனே மகிழ்ச்சியோடு பாட ஆரம்பித்தாள் பவானி.

அந்தத் தோட்டத்தில் ஒரு மாமரத்தில் வாசம் புரிந்த குயில் ஏற்கனவே பகலெனக் காய்ந்த வெண்மதியால் குழப்பம் அடைந்திருந்தது. இப்போது பவானியின் இனிய சாரீரம் ஒலிக்கவே, தன் இனத்தைச் சேர்ந்த சகாக்கள் விடிந்து கூவுவதாக எண்ணி அதுவும் பதிலுக்கு குரலெடுத்துப் பாட ஆரம்பித்தது.

பாட்டு முடிந்ததும் உமாகாந்தன் நெடுமூச் செறிந்தான்.

"களைப்பாக இருக்கிறதா? பால் கொண்டு வருகிறேன். சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்ளலாமே" என்றாள் பவானி.

"இருந்த கொஞ்சநஞ்ச சோர்வையும் உன் பாட்டு போக்கிவிட்டது பவானி. ஆனால் இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஆனந்த வாழ்க்கை எனக்குக் கிட்டப் போகிறது என்று எண்ணியபோது தான் ஏக்கத்தில் பெருமூச்சு பிறந்தது. என் உடம்பு குணமாகிவிட்டது. பவானி, உன்னிடமும் உன் மாமாவிடமும் நான் விடைபெற வேண்டிய தருணம் வந்து விட்டது!"

"இது என்ன அசட்டுத்தனம்?" என்று சற்றுக் கோபமாகக் கேட்டாள் பவானி.

"நான் இங்கே தொடர்ந்து இருப்பதுதான் அசட்டுத்தனம்" என்றான் உமாகாந்த். "உங்களை ஆபத்துக்குள்ளாக்க நான் விரும்பவில்லை. என்னை ஸி.ஐ.டி.கள் பின் தொடர்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் அளிப்பது தவறு என்பது எனக்குத் தெரியும்.

"சட்டத்தின் உடும்புப் பிடியிலிருந்து ஒருவனை எப்படி மீட்பது என்று பவானிக்குத் தெரியும்" என்றார் குணசேகரன். உமாகாந்த் இதைக் கேட்டுச் சிரித்துவிட்டான். பவானி அந்தச் சிரிப்பில் மகிழ்ந்து புன்னகை புரிந்தாள். பால் நிலவின் வெண் முத்துக்கள் பிரகாசித்தன.

"குணசேகரன் ஸார்! உங்கள் மருமகளின் ஆற்றலை நான் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணாதீர்கள். ஆனால் என்னைக் காப்பாற்ற பவானியின் சட்ட ஞானம்கூடப் போதாது. அவளை ஓர் இக்கட்டான நிலையில் வைக்க நான் விரும்பவில்லை. எனக்கு நீங்கள் உதவியதற்கெல்லாம் நன்றி கூறிவிட்டு என் வழியே போக வேண்டியவன்தான் நான். ஆனால் அதற்கு முன்பாக என்னைப் பற்றிப் பவானி மனத்தில் ஏதும் தப்பபிப்பிராயங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை நீக்கிவிட மட்டும் விரும்புகிறேன்.

"ஆமாம், தப்பபிப்பிராயம் ஏற்பட்டுத்தான் இருக்கிறது" என்றாள் பவானி. "தண்டனைக் காலம் முடியும் முன்னர் உங்களை யார் தப்பித்துக் கொண்டு வரச் சொன்னது? இன்னும் இரண்டு வருஷங்கள் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாதா? ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கவில்லையே? சிறை புகத் தயங்காத தேச பக்தத் தியாகிக்கு முழுத் தண்டனைக் காலத்தையும் அனுபவிக்கும் நெஞ்சுரம் வேண்டாமா?"

"தேச பக்தனாகச் சிறை சென்றிருந்தால் அந்த நெஞ்சுரம் எனக்கு நிச்சயம் இருந்திருக்கும் பவானி!"

"அப்படியானால் உங்கள் தகப்பனார் என்னிடம் கூறியதெல்லாம் பொய்தானா?" திகைப்பும் வியப்புமாகக் கேட்டாள் பவானி.

"பவானி! நான் பாங்கில் கொள்ளை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பெற்றுச் சிறை சென்றேன். ஆனால் சந்தர்ப்பக் கோளாறினால் சில சமயம் குற்றமற்றவரும் சிறைபுக நேர்வதுண்டு என்பது வக்கீலாகிய உனக்குத் தெரியுமே!"

"எனக்கு ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. நீங்கள் சிறை புகக் காரணம் எதுவானாலும் சரி. அதனால் என் காதல் மாறப் போவதில்லை என்பதுதான் அது."

உமாகாந்தனின் மேனி சிலிர்த்தது. "குணசேகரன் ஸார்! என்னைப் போன்ற பாக்கியசாலி இந்த உலகில் வேறு யார் உண்டு?" என்றான்.

"எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது" என்றார் குணசேகரன். "உன் அப்பா இவளிடம் ஒன்றைச் சொல்ல, இப்போது நீ வேறு ஒரு கதை கூறப் போகிறாயா?"

"ஆமாம், ஸார்! கதை சொல்லத்தான் போகிறேன். கேட்டுவிட்டு எதை நம்புவது என்று நீங்களே தீர்மானிக்க வேண்டியதுதான். என்னிடம் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க எந்தச் சாட்சியமும் இல்லை" என்றான் உமாகாந்தன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 56 கைதியின் கதை



மகாலக்ஷ்மி பாங்கின் பிராஞ்சு மானேஜர் கருணாகரனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் சட்டப் படிப்பு முடித்துக் கொண்டு உத்தியோகம் ஏற்கும் நிலையில் இருந்தான். இளைய பையன் உமாகாந்தன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் தேசபக்தி மிக்கவன். இரண்டொரு முறை மறியல் செய்து தடியடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு வந்தான். இன்னும் சிறை செல்லும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.

'பிள்ளை இப்படி நடந்து கொள்கிறானே, நாளைக்கு இவன் சிறைக்குப் போகும்படி நேர்ந்தால் என்ன செய்வது?' என்று ரொம்பவும் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார் கருணாகரன். அவன் சிறை சென்றால் அது தனக்குப் பெரிய அவமானம் என்று நினைத்தார். 'ஆனமட்டும், "மறியல், போராட்டம் இதெல்லாம் வேண்டாம். சிரத்தையாகப் படித்துத் தேறி நல்ல உத்தியோகத்தில் அமர்கிற வழியைப் பார்" என்று எடுத்துச் சொன்னார். ஆனால் உமாகாந்தன் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே யில்லை. சுதந்திரப் போரில் தானும் இயன்றமட்டும் ஈடுபட்டதுடன் புரட்சியாளர் பலருக்கு இரகசியமாக உதவியும் வந்தான்.

அவனுடைய இந்தப் போக்கினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கருணாகரனுக்கு இருந்த ஒரே ஆறுதல், மூத்த மகனாவது சமர்த்தா யிருக்கிறானே, சட்டப் படிப்பை முடித்துக் கொண்டு நல்ல உத்தியோகத்தில் அமரத்தயாராய் இருக்கிறானே என்பதுதான். உமாகாந்தனை உள்ளத்திலிருந்து ஒதுக்கிக் கோவர்த்தனனை அடிக்கடி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் உண்மையில் தமையன் கோவர்த்தனன் கெட்ட சகவாசங்களால் குடிப்பது, பணம் வைத்துச் சீட்டாடுவது போன்ற காரியங்களில் இறங்கி மார்வாரிகளிடம் ஏகமாகக் கடன்பட்டிருந்தான். இது தகப்பனாருக்குத் தெரியாது. ஒரு கட்டத்தில், "உடனே கடனைத் திருப்பித் தராவிட்டால் வாரண்டு" என்று மார்வாரி கடைசி எச்சரிக்கை செய்து விட்டான். 'அவன் வீட்டு வாசலுக்கே வந்து ரகளை செய்தால் என்ன நடக்கும்? என்னைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பா மனமுடைந்து போய் அதிர்ச்சியில் இறந்தே விடுவார். அப்படி ஒருவேளை இந்தச் செய்தி கேட்டு அவர் இதயம் நின்றுபோக வில்லை என்றாலும் ஒரு முழக் கயிறு தேடுவார். அவர் மானஸ்தர். இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவது?' என்று கோவர்த்தனன் யோசித்துக் கொண்டிருந்தான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் சற்றும் எதிர்பாராத விதமாக உமாகாந்தனுக்கும் தகப்பனார் கருணாகரனுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஒன்று நிகழ்ந்தது. அதைக் கேட்டுக் கொண்டே இருந்த கோவர்த்தனன், தான் மார்வாரியின் இரும்புப் பிடியிலிருந்து தப்பிக்க ஒரு வழி புலப்பட்டு விட்டது என்று எண்ணினான். தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையில் நடந்த சொற்போரைக் காது கொடுத்துக் கேட்டான்.

காயம் பட்ட தேசத் தொண்டர்களின் உதவி நிதிக்காகத் தன் தகப்பனாரிடம் கணிசமான தொகையை நன்கொடையாகக் கேட்டான் உமாகாந்தன்.

கருணாகரனோ, "ஊரில் இருக்கிற நன்றி கெட்ட நாய்க்கெல்லாம் சிகிச்சை பண்ண இங்கே என்ன பணம் கொட்டி வைத்திருக்கிறதா?" என்றார்.

"அப்பா! நீங்கள் தேசபக்தர்களை அவமரியாதையாகப் பேசியதை மறந்து விடுகிறேன், பணம் கொடுத்தால்!" என்று உமா காந்தன் பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான்.

"பணத்துக்குத் திருடப் போக வேண்டியதுதான்" என்றார் கருணாகரன்.

"அதை நீங்கள் சுலபமாகச் செய்யலாமே? மகாலக்ஷ்மி பாங்கின் பிராஞ்சு மானேஜர் தானே நீங்கள்!" என்றான் உமா.

தகப்பனாருக்குப் பொல்லாத கோபம் வந்து விட்டது. "அடப் பாவி! என்னைப் பார்த்தா அப்படிச் சொன்னாய்? நான் வேலை செய்கிற பாங்கில் நானே கொள்ளையடிக்க வேண்டும் என்று சொல்ல உனக்கு நாக்குக் கூசவில்லையா?" என்று மிகுந்த ஆத்திரத்தோடுகேட்டார்.

"கொள்ளையடித்தால் என்ன?" என்று துடுக்காகப் பேசினான் உமாகாந்தன். "பாங்கில் இருக்கும் பணமெல்லாம் எங்கேயிருந்து வந்தது? ஏழைகளைக் கொள்ளை யடித்து அடைந்த பணத்தைப் பணக்காரர்கள் பாங்கில் போட்டு வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதானே?" என்றான்.

உமாகாந்தன் ஒரு தீவிர சோஷலிஸவாதி. ஆகவே அவன் விளையாட்டாக இப்படிப் பேசவில்லை. இளமை வேகத்துடன் அன்று அவன் மனப்பூர்வமாக நம்பியதையே கூறினான்.

அவன் தகப்பனாரோ நன்றி விசுவாசம், தர்ம நியாயம் முதலிய பண்புகளில் ஊறித் திளைத்து வளர்ந்தவர். எனவே அவரால் தம் மகனுடைய பேச்சைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ரௌத்திராகாரமானார். "அட, சண்டாளா! நீ உருப்பட மாட்டாய் என்று நான் என்றைக்கோ தீர்மானித்து விட்டேன். உன் படிப்புக்கும் அதற்கும் இதற்குமென்று இத்தனை காலம் நான் செலவழித்ததெல்லாம் தண்டம். என் முகத்திலேயே இனி விழிக்காதே! வீட்டை விட்டு வெளியே போ!" என்று ஆவேசத்துடன் கத்தினார். அவர் மனைவியும் மூத்த மகனும் அவரைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றனர். அவர் பிடிவாதக்காரர். அந்தப் பிடி வாதத்தைக் குறையின்றி மகன் உமாகாந்தனும் பெற்றிருந்தான். எனவே அவன் வெளியேறி விட்டான்.

அன்றிரவு கருணாகரனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. யாரோ பாங்கியைக் கொள்ளை யடிப்பது போல் கனவு கண்டார். திடுக்கிட்டு விழித்துக் கொண்டவர் பாங்கின் வாசல் சாவி, இரும்பு அறைச் சாவி எல்லாம் பத்திரமாக இருக்கின்றனவா என்று ஒரு தடவை பார்க்க நினைத்து வீட்டின் இரும்பு பீரோவைத் திறந்தார். அவருக்கு பகீரென்றது. பாங்குச் சாவி வழக்கமாக அவர் வைக்குமிடத்தில் காணோம்! அவருக்கு உடனே உமாகாந்தன் ஞாபகம்தான் வந்தது. அவன்தான் பழி வாங்கும் நோக்கத்துடன் பாங்குச் சாவியைத் தனக்குத் தெரியாமல் கொண்டு போய் விட்டான் என்று தீர்மானித்து விட்டார். பாங்கியை நோக்கிப் பரபரப்புடன் ஓடினார். அந்த இரவு நேரத்தில் வாகன வசதி ஒன்றும் கிடைக்காது. நல்ல வேளையாக பாங்கு ரொம்ப தூரத்திலும் இல்லை. கிளை அலுவலகம் அமைந்திருந்த அதே பேட்டையில் தான் அவருக்கு வீடு. என்றாலும் வயதுக் கால்த்தில் பழக்கமில்லாத விதமாக ஓட நேர்ந்ததில் அவருக்கு ஒரேயடியாக வியர்த்துக் கொட்டி, இறைக்கவும் செய்தது. அதையொன்றும் பொருட்படுத்தாமல் அவர் விரைந்தார். பாங்கியை நெருங்கிய போது யாரோ ஒருவன் சுவர் ஏறிக் குதித்து வெளியேறுவது போல் நிழலாகத் தெரிந்தது. "யார் அது?" என்று அதட்டினார். பதில் இல்லை. ஓடிப் போய்ப் பார்த்தார். பாங்கியின் இரும்பு அறை திறந்து கிடந்தது. பணப்பெட்டி காலியாக இருந்தது. நெஞ்சம் பதறித் துடிக்க அவர் வாசலுக்கு வந்தார். வாட்ச் மேன் அடிபட்டு மயங்கி விழுந்திருப்பதைப் பார்த்தார். 'திபுதிபு' வென்று யாரோ ஓடும் சத்தம் கேட்டது. இவர் கூடவே, "திருடன்! திருடன்! பிடி, பிடி!" என்று கத்திக்கொண்டு ஓசை கேட்ட பக்கமாகச் சாலையில் விரைந்தார்.

உமாகாந்தன் வீட்டை விட்டு வெளியேறும் போது அவன் தாயார் அவனைத் தனியே சந்தித்து அழுதாள். "அப்பாதான் கோபத்தில் ஏதாவது சொல்கிறார் என்றால் நீயும் உடனே பந்த பாசங்களை அறுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவதா?" என்று புலம்பினான். உமா காந்தன் பிடிவாதமாக இருந்தான். கடைசியில் அவள் அவனிடம் ஒரு வாக்குறுதி வாங்கிக் கொண்டாள். அன்றிரவு அவன் அப்பாவும் அண்ணாவும் தூங்கிய பிறகு அவர்களுக்குத் தெரியாமல் அவன் வீடு திரும்ப வேண்டும்; அவள் கையால் இன்னும் ஒருவேளை சாப்பாடாவது சாப்பிட வேண்டும்; அப்புறம் அவளிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போக வேண்டும். உமாகாந்தன் மனம் இளகி இதற்குச் சம்மதித்தான்.

தாயாருக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவன் வீட்டுக்குத் திரும் பியபோது தன் தகப்பனார் வீட்டை விட்டு எங்கோ தலைதெறிக்க ஓடுவதைப் பார்த்தான். அவரைப் பின்தொடர்ந்து அவர் அறியாமல் சென்றான். அவரும் அப்போதிருந்த பரபரப்பில் திரும்பிப் பார்க்கவே தோன்றாமல் ஓடிக் கொண்டிருந்தார். அவர் பாங்கை நெருங்கியபோது உமாகாந்தன் சற்றுத் தயங்கி ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொண்டான்.

அவனுக்கு அவர் போக்கு விசித்திரமாகப்பட்டது. சீக்கிரமே புதிருக்கு விடையும் கிடைத்தது. பாங்கின் உள்ளே யிருந்து ஒரு பெரிய தோல் பையுடன் மதில் ஏறிக் குதித்து வெளிப்பட்ட ஒருவன் எதிர்த் திசையில் ஓட ஆரம்பிப்பதைப் பார்த்தான் உமா காந்தன். கருணாகரனோ "யாரது!" என்று அதட்டினாரே யொழிய அவனைத் தொடராமல் பாங்கின் உள்ளே சென்றார், கவலையோடு. களவு போயிருக்கிறதா என்று பார்ப்பதே முதல் காரியமாக எண்ணினார் போலும். ஆனால் உமாகாந்தன் அந்தத் திருடனை விட வில்லை. பின் துரத்தினான். ஒரு சில வினாடிகளில் திருட்டுப் போனதைப் புரிந்து கொண்டு, வெளியே வந்த கருணாகரனும் உமாகாந்தனைப் பின் தொடர்ந்து ஓடி வந்தார்.

"திருடன்! திருடன்!" என்று அவர் போட்ட கூச்சல் ஒரு பீட் கான்ஸ்டேபிள் காதில் விழுந்தது. அவன் விசிலை ஊதிக் கொண்டு கருணாகரனையும் முந்திக்கொண்டு ஓடினான்.

உமாகாந்தனுக்கு, பின்னால் தன் தகப்பனாரும் போலீஸ்காரரும் துரத்தி வருவது புரிந்தது. தன்னையே திருடன் என்று நினைத்து விடுவார்களோ என்று உள்ளூற அவனுக்குப் பயம். இருந்தாலும் உண்மைத் திருடனைவிடக் கூடாது என்று வேகத்தை அதிகரித்தான். கடைசியில் ஒரு தாவுத் தாவித் திருடனைப் பிடித்தே விட்டான். தெரு விளக்கின் மங்கலான ஒளி அவன் மீது விழுந்தது. கோவர்த்தனன்!

"தம்பி! என்னைக் காப்பாற்று! இது வெளியே தெரிந்தால் என் வாழ்க்கை பாழாவது மட்டுமல்ல; நம் தந்தையின் இதயம் உடைந்து விடும்" என்றான் தமையன்.

உமாகாந்தனுக்கு ஒன்றும் வழி தோன்றவில்லை. பேசாமல் பணம் அடங்கிய தோல் பையையும் பாங்குச் சாவிகளையும் தான் வாங்கிக்கொண்டான். "நீ ஓடிப்போ! நான் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறேன்" என்றான். அவன் சென்று மறைந்த திசைக்கு எதிர்த் திசையில் உமாகாந்தன் ஓடத் தொடங்கினான் - அண்ணனைத் தப்புவிப்பதற்காக. ஓரிரு நிமிஷங்களுக்குள் பின் துரத்தி வந்த போலீஸ்காரரின் குண்டாந்தடி பறந்து வந்து அவன் தலையின் பின்புறத்தைத் தாக்கியது. அவன் அப்படியே சுருண்டு விழுந்தான். கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் தம் மகன் உமாகாந்தன் எனக் கண்டார் கருணாகரன். அன்று மாலைதான், 'பாங்கைக் கொள்ளையடிப்பதுதானே?' என்று அவன் கேட்டது அவர் நினைவுக்கு வந்தது. "சீ! உன்னைப் பெற்ற பாபத்தைக் கழுவ ஏழு ஜன்மம் எடுத்தாலும் போதாது!" என்றார்.

தனக்கும் தகப்பனாருக்கும் இடையில் பாங்குக் கொள்ளை பற்றி வாக்குவாதம் நடந்ததும் அதைத் தொடர்ந்து தான் வீட்டை விட்டு வெளியேறியதும்தான் தன் அண்ணன் கோவர்த்தனனுக்கு பாங்கில் திருடத் தைரியம் அளித்திருக்கிறது என்பது உமாகாந்தனுக்குப் புரிந்தது. பாங்கு கொள்ளையடிக்கப் பட்டிருப்பது மறுநாள் காலை தெரிய வரும்போது உமாகாந்தன் மீதுதான் இயல்பாகத் தகப்பனாருக்குச் சந்தேகம் எழும் என்று கோவர்த்தனன் எண்ணியிருக்கிறான். ஆனால் கோவர்த்தனன் போட்ட திட்டம் திசை மாறிப் போயிற்று. உமா காந்தனை மறுநாள் காலை போலீஸார் தேடிக் கொண்டிருப்பதற்குப் பதில் அன்றிரவே கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டான். கோவர்த்தனன் பற்றி உமாகாந்தன் வாய் திறக்கவில்லை. தன்னையே குற்றவாளியக்கிக் கொண்டான். ஆறு வருஷங்கள் தண்டனை கிடைத்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 57 -- பவானியின் கட்டளை



தான் கைதியான கதையைக் கூறிவிட்டுக் கடைசியாக உமாகாந்தன் சொன்னான். "பவானி! நீ நம்புகிறாயோ இல்லையோ, நடந்தது இதுதான். தேசபக்தன் என்ற முறையில் ஆயுட் காலத்துக்குச் சிறையிலிருப்பேன்; ஆனால் திருடன் என்ற பட்டத்துடன் செய்யாத குற்றத்துக்குச் சிறை வாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லை. வேதனை பிடுங்கித் தின்றது. அதனால் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் தப்பித்துக் கொண்டு வந்தேன். இந்த நாட்டை விட்டு வெளியேறு முன் உன்னை ஒரு தடவை பார்த்து என் கதையைக் கூறிவிட வேண்டும் என்பதுதான் எனக்கு ஒரே ஆசை. அது நிறைவேறி விட்டது. இனி நான் கள்ளத் தோணி ஏறலாம்" என்றான்.

"கள்ளத் தோணியா?' என்று வியப்புக்கு மேல் வியப்படைந்தவளாகக் கேட்டாள் பவானி.

"ஆமாம், பவானி! ரயிலேறிச் சென்று பிறகு கோடிக்கரையை அடைந்துவிட்டால் அங்கிருந்து படகில் இலங்கைக்குப் போய் விடுவேன். அப்புறம் எப்படியாவது மலாய் நாட்டை அடைந்து விடுவேன். அங்கே நேதாஜி சுதந்திரப் படை திரட்டி வருகிறார் அல்லவா? அதில் சேர்ந்து விடுவேன். நான் சிறையிலிருந்து தப்பியதே அந்த நோக்கத்தில்தான்!"

பவானியின் முகம் வெளிறிற்று. தேகம் நடுங்கியது. பதற்றத்துடன், "அழகுதான்! அத்தனை ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உடல் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?" என்று அதட்டலாகச் சொன்னாள். தவமிருந்து பெற்ற பொக்கிஷம் அது கிடைத்த கணத்திலேயே கைநழுவிப் போய்விடும் போலிருந்தது. அப்படி அதைப் பறி கொடுப்பதா? என்று தவித்தது அவள் உள்ளம்.

"பவானி! உடம்பில் பலம் சேரட்டும் என்று சொல்லிக் கொண்டு இங்கே உட்கார்ந்திருந்தால் மட்டும் ஆபத்து இல்லையா?" என்று கேட்டான் உமாகாந்தன். "உன்னையும் சேர்த்தல்லவா ஆபத்துக்கு உள்ளாக்கிய வனாவேன்! என்னைப் போக விடு, பவானி! அதற்கு முன் மூன்று வரங்களைக் கொடு!"

"நான் தான் என்னையே கொடுத்திருக்கிறேனே?" என்று விம்மினாள் பேதை.

அவள் கரங்களைப் பற்றி விரல்களை வருடினான். "எனக்குத் தெரியாதா அது பவானி? நான் இப்போது சொன்ன கதை உங்கள் இருவருடன் மட்டும் இருக்க வேண்டும். இது முதல் வரம். இரண்டாவது, உன் புகைப்படம் ஒன்று கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும். மூன்றாவது..... மூன்றாவது...."

"மூன்றாவது....?"

"கொஞ்சம் பணம் வேண்டும். நீண்ட தூரப் பயணம் அல்லவா?"

பவானி அழுதுகொண்டே சிரித்தாள்.

"அப்பாடா! இதைக் கேட்க நீங்கள் இவ்வளவு தயங்க வேண்டுமா? அதுவும் என்னிடம்?" என்றாள். தொடர்ந்து, "மூன்று வரங்களை நான் தருகிறேன்; பதிலுக்கு நீங்கள் எனக்கு ஒரே ஒரு வரம் கொடுங்கள்" என்றாள்.

"என்ன பவானி? திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டுப் போலீஸாருக்குப் பயந்து சதா ஓடி ஒளிந்து திரிந்து கொண்டிருக்கும் நான் உனக்கு என்ன வரம் தர முடியும்?"

"நீங்கள் போகும் இடத்துக்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள். அதுதான் நான் வேண்டும் வரம். உங்களால் முடியாத காரியமில்லையே?"

"பவானி!" என்று அதுவரையில் மௌனமாக இருந்த அவள் மாமா குணசேகரன் அதட்டினார். "இது என்ன அசட்டுத்தனம்?"

உமாகாந்தனோ தேகமெல்லாம் புல்லரித்துப்போகச் சிலிர்த்துக் கொண்டான்.

"பவானி! நிஜமாகவா சொல்கிறாய்? நான் மேற்கொள்ளப் போகும் பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பது உனக்குத் தெரியாதா? தெரிந்தும் இந்தப் பரதேசியோடு புறப்பட்டு வரத் தயாராக இருக்கிறாயா? உன் காதல் அவ்வளவு ஆழமானதா? எவ்வளவு பாக்கியசாலி நான்!"

"உமாகாந்த்! நீ செய்வது கொஞ்சமும் சரியில்லை. உன் வாழ்க்கையைத்தான் ஏதோ அண்ணனுக்காகவும், தேசத்துக்காகவும் தியாகம் செய்வதாகக் கூறிக்கொண்டு பாழடித்துக் கொண்டாய். பவானியின் வாழ்க்கையையும் குட்டிச்சுவராக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கோபமாகக் கேட்டார் குணசேகரன்.

"மாமா! இது என்ன இப்படிப் பேசுகிறீர்கள்? ஒரு பெண் தன் மனம் விரும்பியவனுடன் இருந்து அவன் வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வது தவறா? அவள் தன் மாமாவின் சொற்படி கேட்டு ஒரு கொள்ளைக்காரனை, தம்பியைக் குற்றவாளி யாக்கிய கோழையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் அவள் வாழ்க்கை குட்டிச்சுவராகாதா?"

"கோவர்த்தனன் அப்படிப்பட்டவர் என்பதற்கு என்ன சாட்சி? இவன் வார்த்தை தானே?"

"நீதிமன்றத்துக்குத்தான் மாமா சாட்சியங்கள் வேண்டும். உள்ளம் என்கிற நியாய ஸ்தலத்துக்கு மனச்சாட்சியே போதும்" என்றாள் பவானி நாத் தழுதழுக்க.

"கோவர்த்தனனை நீ கல்யாணம் செய்து கொள்வதா? அவன் இந்த ஊரில்தான் இருக்கிறானா?" என்று உமாகாந்த் அதிசயத்துடன் கேட்டான்.

"ஆமாம் உமா! நீங்கள் சிறையிலிருந்து விடுதலை பெற்றோ அல்லது தப்பித்துக் கொண்டோ வரும்போது நேரே கல்கத்தா சென்று அங்கு என்னைப் பற்றி விசாரித்து என்னைத் தேடிக் கொண்டு இங்கே தான் வருவீர்கள் என்று அவருக்குத் தெரியும். அதனால் இந்த ஊருக்கு வந்து சதா என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். என்னை எப்படியாவது கல்யாணம் செய்து கொண்டு விட்டால் பிறகு இந்த ஜன்மத்தில் உங்களால் அவருக்கு எந்த ஆபத்தும் நேராது அல்லவா? அந்த நிம்மதியைப் பெறுவதற்காகத் தம்மாலான முயற்சிகளை யெல்லாம் செய்து பார்க்கிறார். நானும் அவர் தாக்குதலுக்கு ஈடு கொடுத்து இதுநாள் வரை தட்டிக் கழித்துக் கொண்டே வந்திருக்கிறேன்.

"உங்களைப் பின் தொடர்ந்து காயப்படுத்திய சி.ஐ.டிக்கள் கூட அவருடன் அடிக்கடி தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களை 'அடிபட்ட புலி' என்று வர்ணித்து உங்களுக்கு அடைக்கலம் கொடுப்பது பெரிய குற்றம் என்று என்னை எச்சரித்து விட்டுப் போனார். அப்போது நீங்கள் தூக்க மருந்து சாப்பிட்டுவிட்டு மாடி அறையில்தான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்."

"நான் இங்கிருப்பது தெரிந்து விட்டதா அவனுக்கு?" கலவரத்துடன் கேட்டான் உமாகாந்தன்.

"இல்லை. ஆனால் நீங்கள் இங்கே என்னைத் தேடி வரலாம்; தஞ்சம் புகலாம் என்று சந்தேகிக்கிறார்."

"பவானி! நான் இனி இங்கே தொடர்ந்து இருப்பது ரொம்ப ஆபத்து. எனக்கு மட்டுமல்ல. உனக்கும் மாமா குணசேகரனுக்கும் கூடத்தான். எனக்கு விடை கொடு! நான் கிளம்புகிறேன்."

"நான் கேட்ட வரம்?"

"வரம் கேட்பவர் தாழ்ந்த நிலையிலும் வரம் கொடுப்பவர் உயர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும் பவானி. இன்று நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தவன்."

இந்தச் சமயத்தில் வாசல் கதவை யாரோ தடதடவென்று தட்டும் சத்தம் கேட்டது. "பவானி, பவானி! குணசேகரன் ஸார்!" என்று கூப்பிடும் குரலும் அடுத்து ஒலித்தது.

"கல்யாணம் அல்லவா வந்திருக்கிறான்! நீங்கள் இங்கேயே பேசிக் கொண்டிருங்கள். நான் கீழே போய் என்ன விஷயம் என்று கேட்டு அவனை அனுப்பி விட்டு வருகிறேன்" என்றார் குணசேகரன்.

"நாம் அதிகாலையில் எழுந்து காரில் புறப் படலாம். இப்போது சீக்கிரம் படுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பவானி உமாகாந்தனைக் கைத்தாங்கலாகப் பற்றிப் படுக்கை அறைக்கு அழைத்துப்போனாள்.

கீழே சென்ற குணசேகரனிடம் "பவானி எங்கே?" என்று வினவினான் கல்யாணம்.

"அவள் மாடியில் படுத்துக் கொண்டு விட்டாள். என்ன விஷயம்?" என்றார் குணசேகரன்.

"ரொம்ப அவசரம்! அவளை நான் உடனே பார்த்தாக வேண்டும்" என்று கூறிப் படியேறத் தொடங்கினான் கல்யாணம். தடுக்கப் போன குணசேகரனை முரட்டுத்தனமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் படிகள் மீது பாய்ந்து ஏறினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 58. -- ரங்கநாதன் மனமாற்றம்.



கமலாவிடமும் அவள் தம்பி விசுவத்திடமும் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய கல்யாணத்தின் மனம் ஒரு நிலையில் இல்லை. 'நீங்கள் பவானியிடம் காதல் கொண்டிருக்கலாம்; பவானி அக்கா வேறு ஒருவர்மீது ஆசை வைத்திருக்கலாம்' என்று கமலா கூறியது திரும்பத் திரும்ப அவன் நினைவுக்கு வந்து அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. 'அது உண்மையாக இருக்குமா? அதனால்தான் தன் காதலை ஏற்கப் பவானி மறுத்துவிட்டாளா? கமலா கூறியது நிஜமாகத்தான் இருக்கும். இல்லாமலா 'வேண்டுமானால் அவள் வீட்டுக்கு இப்போதே போய்ப் பாருங்களேன்!' என்று கமலா ஒரு வேகத்தோடு கூறினாள்? கூடவே, 'பவானி அக்காவிடம் ஏதும் கேட்டுவிடாதீர்கள். இது பரம ரகசியம்' என்றும் கெஞ்சினாளே! சீச்சீ! இதிலெல்லாம் என்ன ஒளிவு மறைவு வேண்டிக் கிடக்கிறது? பவானி ஒருவனை விரும்பினால் அது பற்றி வெளிப்படையாகக் கூறி அவனை மணந்து கொள்வதுதானே? யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவனை வீட்டுக்குள் வைத்திருந்து உபசரிப்பதென்பது எவ்வளவு கேவலம்? இதைச் சும்மா விடக்கூடாது. பவானியைக் கேட்டுவிடத்தான் வேண்டும். ஆனால் எனக்கு எப்படி விவரம் தெரிய வந்தது என்று அவள் கேட்டால்? கமலாவை இதில் இழுப்பானேன்? வேறு ஏதோ காரணமாகப் பவானி வீட்டுக்குப் போவது போலவும் அங்கே அவள் காதலனை யதேச்சையாகச் சந்தித்துவிட்டது போலவும் நடிக்க வேண்டியதுதான்! என்னை பவானி மணந்து கொள்ளாவிட்டால் போகட்டும், பாதகம் இல்லை; அதற்காக அவள் ஓர் அந்நியனைத் தன் வீட்டில் ஒளித்து வைத்துக் கொண்டு கொஞ்சிக் குலாவுவதைச் சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது!'

பவானி கல்யாணத்தின் காதலை ஏற்காததால் அவன் மனம் விகாரப்பட்டுப் போயிருந்தது. பவானியின் ரகசியக் காதலனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று துடித்தான். 'உன் ரகசியம் அம்பலமாகி விட்டது பார்' என்று காண்பித்துக்கொள்வதில் தன் பழிவாங்கும் உணர்ச்சிக்குத் தீனி போட்டுக் குரூரத் திருப்தியடைய ஆசைப் பட்டான். ஆனால் இதனை யெல்லாம் அவன் உள்ளம் ஒப்புக்கொள்ளவில்லை. வேறு ஏதோ நல்ல சமாதானங்களைக் கற்பித்துக் கொண்டது!

'என்ன காரணத்தைக் கூறிக் கொண்டு இப்போது அவள் வீட்டுக்குச் செல்வது?' என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதே போல ரங்கநாத முதலியாரிடமிருந்து அழைப்பு வந்தது! ஸ்தல யாத்திரை கிளம்பியிருந்த அவர் பாதியிலேயே திரும்பி வந்திருந்தார். வந்ததும் வராததுமாகக் கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்று ஓர் ஆளிடம் சொல்லி அனுப்பினார். கல்யாணமும் பரபரப்படைந்தவனாக அவர் பங்களாவுக்குப் போய்ச் சேர்ந்தான்.

ரங்கநாத முதலியாரின் மனப் போக்கில் பெரிய மாறுதல் காணப்பட்டது. அவர் இரண்டொரு க்ஷேத்திரங்களுக்குத்தான் போனாராம். அதற்குள் ஞானோதயம் ஏற்பட்டு விட்டதாம். மேலே யாத்திரையைத் தொடராமல் திருப்பி விட்டாராம். மதுரை மீனாட்சிக்குத் தீபாராதனை நடக்கும் சமயம் மனத்தில் உதித்த யோசனையை நிறைவேற்றிவிட்டுப் பிறகுதான் யாத்திரையை மீண்டும் தொடரப் போகிறாராம்!

"அப்படி என்ன புரட்சிகரமான எண்ணம் உதயமாகி விட்டது உங்களுக்கு?" என்று கேட்டான் கல்யாணம். "சொல்கிறேன் கேள். கமலா எவ்வளவு சின்னப் பெண்! எனக்குப் பெண்ணாகவே இருக்கக் கூடியவள் இல்லையா?'

"இல்லை, பேத்தியாகவே விளங்கக் கூடியவள்" என்றான் கல்யாணம்.

"ரொம்பச் சரி. அப்படித்தான் எனக்கும் தோன்றியது. என்னுடைய பேத்திக்குச் சமதையாக எண்ண வேண்டியவளை நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைத்தது எவ்வளவு பெரிய பாவம்! ஆனால் அதையே நான் புண்ணியமென்றுகூட நான் கருதினேன். அந்தக் குடும்பத்துக்கு நன்மை செய்யவே அவளைத் திருமணம் செய்து கொள்வதாக என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்."

"அவர்களது ஏழைமை நீங்கும் என்று கணக்குப் போட்டிருப்பீர்கள். ரொம்பப் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதாக நினைத்திருப்பீர்கள்."

"அதுமட்டுமில்லை கல்யாணம்; அந்தப் பெண்ணைப் படிக்க வைப்பதாகச் சொன்னேன். டாக்டருக்குப் படித்து மேல்நாடுகளுக்குக்கூட அவள் பயற்சி பெறச் செல்லலாம் என்று ஆசை காட்டினேன். அவள் திரும்பி வந்ததும் இங்கே ஒரு தர்ம ஆஸ்பத்திரி தொடங்க உதவுவதாகவும் கூறினேன். ஆக மொத்தம் அவளை மணந்து கொள்வதன் மூலம் அவளுக்கு மட்டுமின்றி இந்த ஊருக்கே பெரிய சேவை புரிவதாக என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்."

"மதுரை மீனாட்சியைப் பார்த்ததும் இதெல்லாம் தப்புக் கணக்கு என்று புரிந்துவிட்டதாக்கும்!"

"அதற்கும் மேலே கூட ஓர் உண்மை பளிச்சிட்டது."

"என்ன அது?"

"உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் இந்த ஊருக்கும் நான் நன்மை புரிய விரும்பினால்..."

"விரும்பினால்....?"

"அந்த நல்ல காரியங்களைக் கமலாவை மணந்து கொள்ளாமலேயே நான் நிறைவேற்றலாமே என்று மீனாட்சி என்னிடம் சொன்னாள்!"

"தேவலாமே! கெட்டிக்காரக் கடவுள்தான்! சரியான போடு போட்டிருக்கிறாள்" என்றான் கல்யாணம்.

"ஆமாம் அப்பா, ஆமாம்! மீனாட்சியல்லவா? என் அகக் கண்களைத் திறந்து விட்டாள். எனக்குப் புத்தி வந்தது. கமலாவைக் கல்யாணம் செய்து கொண்டால் நல்ல காரியங்களைச் செய்வது. இல்லாத போனால் இல்லை என்று இருக்கக் கூடாது; கமலாவைக் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து கொண்டேன்!"

"பலே! பலே! ரங்கநாதன் ஸார்! நான்மட்டும் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தால் ஓர் அவசரச் சட்டம் உடனே பிறப்பிப்பேன்! இந்த நாட்டின் பணக்காரர்கள் யாரும் மதுரை மீனாட்சியைத் தரிசனம் பண்ணக் கூடாது என்று உத்தரவு போடுவேன்!"

"அடப் பாவமே! ஏனப்பா அப்படி?"

"பின்னே என்ன ஸார்? எல்லாரும் உங்களைப் போல் மீனாட்சியைத் தரிசனம் பண்ணப்போய், அவளும் எல்லாச் செல்வந்தர்களின் அகக்கண்களையும் திறந்து விட்டாளானால், அப்புறம் என்னைப் போன்ற சமூகப் பணியாற்ற ஆசைப்படுகிறவர்களின் கதி என்ன ஆவது? எங்களுக்கு வேலையே இல்லாமல் போய் விடும் அல்லவா? சமூகப் பணி, சீர்திருத்தம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, வயிற்றுப்பாட்டுக்கு ஒழுங்காகச் சம்பாதிக்கிற வழியைப் பார்க்க வேண்டிய தாகிவிடுமே!"

"விளையாட்டு இருக்கட்டும் கல்யாணம். நான் கமலாவை என் மகளாகத் தத்து எடுத்துக் கொண்டு என் செல்வத்தில் பெரும் பகுதியை அவளுக்கு எழுதி வைப்பது என்று தீர்மானித்து விட்டேன். நீ அவளை அவசியம் கல்யாணம் பண்ணிக் கொள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் உடனே குழந்தை குட்டி, குடும்பக் கவலை என்று ஏற்படுத்திவிடாதே! அவளைப் படிக்க வை. என் மகள் டாக்டராகாவிட்டாலும் நாலு டாக்டர்களை வேலை வாங்குகிற அளவுக்குச் சாமர்த்தியமும் அறிவும் பெற்றாக "விளையாட்டு வேண்டாம், இதிலிருந்து விளையப் போகும் ஒரு வினையையே சொல்கிறேன். என் அம்மாவுக்கு நான் கமலாவைக் கலயாணம் பண்ணிக் கொள்வதில் விருப்பமில்லை. நூறு குற்றங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இப்போது நீங்கள் கமலாவுக்குச் சொத்து எழுதி வைத்துவிட்டதாகத் தெரிந்தால் உடனே திருமணத்துக்குச் சம்மதித்துவிடுவாள். 'கமலாவைப் போன்ற கண்ணான பெண் கிடைப்பாளோ!' என்று பெருமைப் பட்டுக்கொள்வாள். ஆனால் ஊரார் என்ன பேசுவார்கள்? பணத்துக்கு ஆசைப்பட்டுப் பண்ணிக் கொள்கிறார்கள் என்றுதானே சொல்வார்கள்?"

"ஊராருக்கு என்ன? நான் கமலாவைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால் என்னைத் திட்டித் தீர்த்திருப்பார்கள். நீ பண்ணிக்கொண்டால் அதற்கும் ஓர் உள்நோக்கம் கற்பித்து உன்னை ஏசுவார்கள். நீ ஊரார் வாய்க்குப் பயந்து வாழப் போகிறாயா? ஊருக்கும் உனக்கும் உகந்தது என்று தோன்றுவதைச் செய்யப் போகிறாயா?"

"மதுரை மீனாட்சி பேரில் பாரத்தைப் போட்டுவிட்டு மேலே ஆகவேண்டியதைக் கவனிக்க வேண்டியதுதான்!" என்றான் கல்யாணம்.

"பலே! அப்படிச் சொல்லுடா சிங்கக் குட்டி!" என்று ஆமோதித்தார் ரங்கநாதன். "அப்படியானால் ஒன்று செய். இப்போதே போய்ப் பவானியிடம் அவளை நான் உடனே பார்க்க விரும்புவதாக்க் கூறி அழைத்து வா. சட்ட பூர்வமாக எல்லாம் ஒழுங்காக நான் செய்ய வேண்டும். நீ எனக்கு மாப்பிள்ளையாக வரப் போவதால் இந்த விஷயத்தில் உன் அப்பாவின் உதவியை நான் கோருவது சரியாகாது" என்றார் ரங்கநாதன்.

இந்தக் கோரிக்கையை அவர் வெளியிடவே காத்திருந்தவன் போல் கல்யாணம் "இதோ இப்போதே போகிறேன்; பவானியைக் கையோடு அழைத்து வருகிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 59 -- கல்யாணத்துக்கு அவமானம்.



பவானியின் மாம குணசேகரன் தன்னைத் தடுப்பதைப் பொருட்படுத்தாமல் தடதடவென்று மாடிப் படிகளில் ஏறினான் கல்யாணம்.

அதற்கு முன் மொட்டை மாடியிலிருந்து உமாகாந்தைக் கைத்தாங்கலாகப் பற்றிப் படுக்கை அறைக்குள் அழைத்துப் போயிருந்தாள் பவானி. கதவைச் சாத்தினாள், ஆனால் தாளிடவில்லை. மாமா குணசேகரன் கல்யாணத்தை வாசலிலேயே நிறுத்தச் சாக்குப்போக்குக் கூறி அனுப்பி விடுவார் என்ற நம்பிக்கையில் உமாகாந்தைப் படுக்கவைத்தாள். "நாளைக் காலையில் நாம் சீக்கிரமே புறப்பட்டு விடலாம். நிம்மதியாகத் தூங்குங்கள்" என்றாள். உமாகாந்தன் அவள் கரத்தை எடுத்துக் கன்னத்தில் ஒத்திக் கொண்டு உள்ளங்கையில் இதழ்களைப் பதித்தான்.

அதே சமயம், "பவானி! பவானி!" என்று அழைத்தபடியே கதவைப் 'படா' ரென்று திறந்து கொண்டு உள்ளே வந்தான் கல்யாணம். பவானியையும் கமலா குறிப்பிட்ட அவள் காதலனையும் ஒருசேரப் பார்த்து ஓரிரு விநாடிகள் பிரமித்து நின்றான்!

பின்னாலேயே குணசேகரன் இரைக்க இரைக்க ஓடி வந்தார். "நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் என்னை ஒதுக்கித் தள்ளி விட்டு வந்திருக்கிறான், பவானி!" என்றார்.

பவானி திகைப்பு நீங்கியவளாகக் கோபத்துடன் எழுந்து நின்றாள். "யூ ஸில்லி இடியட்! கெட் அவுட்!" என்றாள்.

"ஆமாம், நான் ஸில்லி இடியட்தான்! தெய்விகமான உன் பெயரையும் அழகான வெளித்தோற்றத்தையும் அறிவாற்றலையும் பார்த்து ஏமாந்து போனேன் அல்லவா? அத்தனைகத்தனை உன் மனம் விகாரமானது என்பது எனக்குப் புரியாமல் போய்விட்டது அல்லவா?"

"கெட் அவுட், யூ மானர்லெஸ் புரூட்!" என்று கத்தியவாறு ரௌத்திராகாரத்துடன் இரண்டு அடி முன்னால் எடுத்து வைத்தாள் பவானி.

"பேஷாகப் போகிறேன்! ஆனால் முதலில் நான் வந்த காரியத்தைக் கூறிவிட்டு..."

அவனைத் தொடர விடாமல் பவானி, "பேசாதே! நீ சொல்லும் ஒரு வார்த்தையைக்கூட நான் கேட்க விரும்பவில்லை" என்றாள். "மாமா! எதற்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? கிக் ஹிம் அவுட்!"

பவானி முன்னேற முன்னேறக் கல்யாணம் அவளுக்கு இடம் கொடுத்துப் பின்வாங்கி அறைக்கு வெளியே வந்திருந்தான். மாடிப்படிகளை நெருங்கியும் விட்டான். ஆனால் அவன் பார்வை பார்வை மட்டும் பவானியை நோக்கித்தான் இருந்தது. முதுகுப் புறம்தான் மாடிப் படிகளைப் பார்க்க இருந்தது. "பவானி!" என்று மீண்டும் ஏதோ கூற ஆரம்பித்தான் கல்யாணம். இப்போது அவனுக்குத் தான் அத்துமீறிப் பிரவேசித்தது தவறு என்றும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தோன்றிவிட்டிருந்தது. ஆனால் பவானி எதையும் செவி மடுக்கும் மனநிலையில் இல்லை. கோபத்தின் உச்ச கட்டத்தை அடைந்திருந்தாள். "ஏனய்யா? உனக்கு வெட்கம் மானம் இல்லையா? வேலைக்காரனைக் கூப்பிட்டுக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினால் தான் போவாயா?" என்று கேட்டபடியே மேலும் இரண்டடி எடுத்து வைத்தாள்.அவளுக்கு வழி விட்டு ஓரடி பின்னால் நகர்ந்தான் கல்யாணம். அவ்வளவுதான், மாடிப் படியில் இசகு பிசகாகக் காலை வைத்துத் திபுதிபுவென்று உருண்டு விழுந்தான். படிக்கட்டில் இடையிலிருந்த ஒரு திருப்பத்தில்தான் அவன் சலனம் தடைப்பட்டு நின்றது.

சுவரில் மோதிக் கொண்டதில் அவன் மண்டையில் 'விண், விண்'ணென்று வலி தெறித்தது. ஆனால் அதை விடவும் அதிகமாக இருந்தது அவமானம் பிடுங்கித் தின்றதால் வேதனை. மிச்சமிருந்த படிக்கட்டில் விடுவிடென்று இறங்கி, வாசலைத் தாண்டி, தோட்டத்தைக் கடந்து, வீதியில் தான் நிறுத்தியிருந்த காரில் ஏறி, அதனைக் கிளப்பினான். அந்தச் சமயம் பார்த்து அது கிளம்ப மறுத்து அவன் பொறுமையைச் சோதித்தது. "சீ நன்றி கெட்ட ஜன்ம்மே! இப்படி கழுத்தறுப்பதற்குப் பவானியுடம் கற்றுக்கொண்டாயா?" என்று ஆவேசத்துடன் கேட்டுக் கீழே இறங்கிப் 'படா'ரென்று கதவைச் சாத்தி, போதாக் குறைக்குக் காரை ஓர் உதையும் விட்டான்!

நடக்க ஆமர்பித்த கல்யாணத்தை அவன் கால்கள் நேரே மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் வீட்டுக்கு அழைத்துப் போயின. அவர் வராந்தாவில் அமர்ந்து நிலாவை வெறித்து நோக்கியபடி எட்டாவது கோப்பை ஸ்காட்ச் விஸ்கியைக் கண்டத்தில் கவிழ்த்துக் கொண்டிருந்தார்.

'எதற்காக இங்கு வந்து சேர்ந்தோம்?' என்று அவரை நெருங்கிப் பார்த்ததும்தான் யோசித்தான் கல்யாணம். "இனம் இனத்தைச் சேரும் என்பதற்கு ஏற்பப் பவானியால் அவமதிக்கப் பட்ட நீ பவானியின் நிராகரிப்பால் குன்றிப் போயிருக்கிற கோவர்த்தனனைத் தேடி வந்திருக்கிறாய் என்று அவன் மனம் சரியாகவே பதில் கூறிற்று.

ஆனால் "என்ன கல்யாணம்? எங்கே வந்தாய்?" என்று கோவர்த்தனன் கேட்ட போது, "சும்மாத்தான் இப்படி வ‌ந்தேன்" என்றுதான் சொன்னான் கல்யாணம்.

"தமிழ் அகராதியிலிருந்தே 'சும்மா' என்ற வார்த்தையை நீக்கிவிட வேண்டும் என்றார் கோவர்த்தனன்.

"என்ன சார் அப்படிச் சொல்லிவிட்டீர்கள்! 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கிற திறமரிது, அரிது!' என்று தாயுமானார் அலறியிருக்கிறாரே.

"அவர் சும்மா இருப்பதுதானே? எதற்காக அத்தனை பாடல்களை எழுதி வைத்து நம் பிராணனை வாங்குகிறார்? போனால் போகட்டும். நீ வந்த காரியத்தைச் சொல்லு!"

"காரியம் என்று அப்படி ஒன்றுமில்லை. உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்."

"பார்த்தாயிற்று அல்லவா? போகலாமே?"

"இன்றைக்கு என் ஜாதக விசேஷம் போலிருக்கிறது, எங்கே போனாலும் வரவேற்பு ஒரு மாதிரி இருக்கிறது."

இன்னும் எங்கே போயிருந்தாய்?"

"பவானி வீட்டுக்குப் போனேன்."

"எனக்குப் பிடிக்காத காரியம். தெளிவாகச் சொல்கிறேன். இனிமேல் பவானி வீட்டுக்குப் போவதை நீ நிறுத்தி விடு!"

"தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது!"

"அப்படி யென்றால்"

"இனிமேல் அவள் வீட்டுக்குப் போவதில்லை என்று நானும் சற்று முன்புதான் முடிவு செய்தேன்."

"ஓ! பவானியே வாசல் பக்கத்துக்கு வழிகாட்டி விட்டாளா? அவள் சொன்ன உடனே கிளம்பி விட்டாயா? இல்லை வேலைக்காரனைக் கூப்பிட வேண்டியிருந்ததா?"

"அவ்வளவுக்கு நான் வைத்துக் கொள்வேனா? மாடிப் படியில் பின்னங் கால்களை வைத்தேன்; நேரே கீழே வந்து சேர்ந்து விட்டேன்!"

கோவர்த்தனன் சிரித்து விட்டு "சரி, இனிமேலாவது அந்தப் ப‌க்கம் தலை காட்ட வேண்டாம்" என்றார். பிறகு "பவானிக்கு உடம்பு எப்படி இருக்கு? தேவலமா?" என்று வினவினார்.

"உடம்பா? நான் பார்த்தவரையில் சரியாகத்தானே இருந்தாள்? என்றான் கல்யானம்.

"இல்லை, இல்லை! உனக்குத் தெரியாது. பவானிக்கு இன்ஃபுளூயென்ஸா. அதனால் கோர்ட்டுக்கு வர முடியவில்லை என்று சொல்லி அனுப்பினாள். அவள் சம்பந்தப்பட்ட கேஸைக்கூட இரண்டு வாரங்கள் ஒத்திப் போட்டிருக்கிறேன். நானே அவளைப் போய் விசாரிப்பதாக இருந்தேன். ஆனால் டாக்டர்கள் 'விசிட்டர்கள் யாரும் வராமலிருந்தால் நல்லது' என்று உத்தரவிட்டிருப்பதாக அவள் மாமா சொன்னார். அதனால்தான் போகவில்லை."

"ஆமாம், ஆமாம்! இன்ஃப்ளூயன்ஸா வந்திருக்கிறார். நானும் கூடப் பார்த்தேன்!"

"என்னப்பா கிண்டல் பண்ணுகிறாய்? 'இன்ஃப்ளூயன்ஸா வந்திருக்கிறார்' என்றால் என்ன அர்த்தம்?"

"நான் பார்த்த இன்ஃபுளூயன்சாவுக்கு இரண்டு கால், இரண்டு கை, இரண்டு கண் எல்லாம் இருக்கு என்று அர்த்தம்! மிஸ்டர் இன்ஃப்ளூயன்ஸா பவானியின் படுக்கையில் சயனித்து, அவளைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு, அவள் கைகளைப் பிடித்துக் கன்னத்தில் ஒற்றிக் கொண்டு, அவளைத் தன் இரு கண்களாலேயும் விழுங்கி விடுகிறவரைப் போல பார்த்துக் கொண்டிருந்தார்! மிஸ்டர் இன்புளுயன்ஸா ரொம்ப ஆபத்தான பேர்வழிதான்!"

கோவர்த்தனன் மதுக் கோப்பையை 'ஸ்டூல்' மீது வைத்து விட்டு எழுந்தார். அவருக்கு உடல் தள்ளாடியது. கல்யாணத்தை நெருங்கி அவன் சட்டையை முறுக்கிப் பிடித்துக் கொண்டார். "அடேய்! நீ சொல்வது நிஜம்தானா! பொய்யாக இருந்தால் உன்னை ஷூட் பண்ணி விடுவேன்!" என்றார்.

பிறகு மெள்ளத் திரும்பி மது போதை ஏறியதால் ஏற்பட்ட இலேசான தடுமாற்றத்துடன் நடந்து வீட்டுக்குள்ளே சென்றார். அவர் மறுபடியும் வாசலுக்கு வந்த போது அவர் கரத்தில் இருந்த துப்பாக்கி, சந்திரக் கிரணம் ஒன்று பட்டுத் தெறித்ததால் மின்னியது!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 60 -- தப்பியோடத் திட்டம்



பவானி பற்றி அவதூறாகப் பேசியதாகக் கருதி அதற்காகத் தன்னைச் சுடுவதற்காகத் தான் துப்பாக்கி கொண்டு வருகிறார் கோவர்த்தனன் என்று முதலில் கல்யாணம் நினைத்தான். ஆனால் அவரோ, "கல்யாணம்! இன்புளூயன்ஸாவை ஒழித்துக் கட்டினால்தான் பவானிக்கு நல்லது. ஏன், உலக மக்கள் எல்லோருக்கும் நிம்மதி. அதனாலே நான் போய் மிஸ்டர் இன்புளூயன்ஸாவை விரட்டி விட்டு வருகிறேன், ஓகே?" என்று கூறியபடியே தம் காரில் ஏற ஷெட்டை நோக்கி நடந்தார். "அவன் தகராறு பண்ணினால் ஐ வில் ஷூட் ஹிம்!"

குடிபோதையில் இருக்கும் அவரிடம் போய்த்தான் பவானி வீட்டில் பார்த்ததைக் கூறியே இருக்க வேண்டாம் என்று கல்யாணத்துக்கு இப்போது தோன்றியது. 'என்ன விபரீதம் இதனால் நிகழப் போகிறதோ?' என்று பயந்தான். 'ஏதாவது தாறுமாறாக இவர் செய்யாதிருக்க வேண்டுமே' என்று எண்ணியபோது தானும் பின்னோடு செல்வது உசிதம் என்று கருதினான்.

ஷெட் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த அவர் பின்னோடு நடந்தபடியே, "இப்போது என்ன அவசரம்? காலையில் பார்த்துக்கொள்ளலாமே?" என்றான்.

"என்ன! நீதிக்குக் குறுக்கே நிற்கிறாயா? சட்டம் தன் கடமையை ஆற்ற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறாயா?" என்று முடிந்த மட்டில் குரலில் கம்பீரத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார் கோவர்த்தனன். "இதற்குத் தண்டனை என்ன தெரியுமா? ஐ வில் ஷூட் யூ!"

"அட பாவமே! எல்லாவற்றுக்கும் ஒரே தண்டனை தானா? எதற்கெடுத்தாலும் 'ஐ வில் ஷூட் யூ' தானா?" என்று முணு முணுத்துக் கொண்ட கல்யாணம், அவரைத் தனியே அனுப்ப அஞ்சியவனாக, "அப்படியானால் நானும் பின்னோடு வருகிறேன்; ஐ வில் ஹெல்ப் யூ" என்றான்.

காரோட்ட அவரை அனுமதிக்கக் கூடாது என்று முடிவு கட்டியவனாக, "நான் ஓட்டிக் கொண்டு வருகிறேன், நீங்கள் இப்படி உட்காருங்கள்" என்று அவர் காரின் பின் கதவைத் திறந்து பிடித்தான்.

"தாங்க் யூ மை ஃபிரண்ட்!" என்றார் கோவர்த்தனன். ஆனால் துப்பாக்கி மட்டும் கல்யாணத்தின் தலையைக் குறி பார்த்த படியே இருந்தது. "இன்னும் இரண்டே நிமிஷத்தில் நாம் பவானி வீட்டில் இருக்கணும். இல்லாதபோனால் ஐ வில் ஷூட் யூ" என்றார்!

கல்யாணம் கனத்த இதயத்துடன் கார் ஓட்டிச் சென்றான். பவானிக்கும் கமலாவுக்கும் தான் பெரிய துரோகம் இழைத்து விட்டதாக அவன் மனம் இடித்துக் காட்டியது. அதற்குப் பரிகாரமாகத் தான் என்ன செய்ய முடியும் என்று யோசித்தான். ஒரு வழியும் புலப்படவில்லை.

"சீக்கிரம்! சீக்கிரம்! வேகமாகப் போ!" என்று துப்பாக்கி முனையை அவன் தலையில் தட்டித் துரிதப்படுத்தினார் கோவர்த்தனன்.

பவானி வீட்டு வாசலில் கார் நின்ற சமயம் கோவர்த்தனனுக்கு முன்பாகக் கல்யாணம் பாய்ந்து ஓடினான் பவானியை எச்சரிக்க விரும்பி.

"தம்பி! இப்பத்தானே பவானியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டாய்! அரை மணி கூட ஆகவில்லையே! அதற்குள் திரும்பி வந்திருக்கிறாயே?" என்றார் மாமா குணசேகரன்.

"இந்தத் தடவை உன் பாச்சா ஒன்றும் என்னிடம் பலிக்காது. அப்போ கொஞ்சம் ஏமாந்துட்டேன். மறுபடியும் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டு மாடிப் படிகளில் பாய்ந்தேறப் பார்க்காதே!

எனக்கு கொஞ்சம் மல் யுத்தப் பயிற்சி உண்டு. முறுக்கிப் பிழிந்து கொடியிலே உலர்த்திடுவேன்" என்று கோபமாகக் கூறி வந்தவர், மாஜிஸ்திரேட் கோவர்த் தனன் துப்பாக்கி சகிதம் உள்ளே வருவதைப் பார்த்து மௌனமானார்.

"பவானி எங்கே?' என்றார் கோவர்த்தனன் தடித்த குரலில்.

"தூங்குகிறாள். நான் தான் சொன்னேனே உங்களிடம். அவளுக்கு ஜுரம் என்று. அவளைத் தொந்தரவு செய்வதற்கில்லை.

"வேணாம். அவள் ஓய்வாக இருக்கட்டும். ரெஸ்ட் இஸ் குட் ஃபார் ஹர். மிஸ்டர் இன்புளூயன்ஸா எங்கே? அவனை அழைத்துவா!"

"இன்புளூயன்ஸாவாவது? இலுப்பக்காவாவது? யாரை அழைத்து வருவது? என்ன உளறுகிறீர்?" என்றார் குணசேகரன். ஆனால் மாஜிஸ்திரேட் கூறியது அவருக்குப் புரியாமல் போகவில்லை. அவர் கரத்தில் இருந்த துப்பாக்கி அவரை மிரட்டியது. கோவர்த்தனனின் பதவி அவரை அச்சுறுத்தியது.

"மிஸ்டர் குணசேகரன்! என்னை ஏமாற்றப் பார்க்காதீர்!" என்ற மாஜிஸ்திரேட் ஒவ்வொரு அறையாக நோட்டம் விட ஆரம்பித்தார். கல்யாணம் குடி போதையில் அவர் ஏதாவது ஏடாகூடமாகச் செய்து விடப்போகிறாரே என்ற கவலையில் பின்னோடு சென்றான்.

மாடியில் பவானியும் அவள் காதலனும் தங்கியிருந்த அறை காலியாக இருப்பதைப் பார்த்ததும் கல்யாணத்துக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. ஆனால் மாஜிஸ்திரேட் பவானியின் அறையை அனுபவப்பட்ட பாணியில் ஆராயத் தொடங்கினார். டிரெஸ்ஸிங் டேபில் இழுப்பறைகளைத் திறந்து பார்த்தார். மேஜை டிராயர்களைக் குடைந்தார். படுக்கையைப் புரட்டிப் போட்டார். திரைச் சீலைகளுக்குப் பின்னால் கண்ணோட்டம் செலுத்தினார். அறையின் ஒரு மூலையிலிருந்த அழுக்குத் துணிக் கூடையைக் காலால் உதைத்துத் தள்ளி உருட்டினார். திறந்து கொண்ட அதனுள்ளிருந்து பவானியின் புடவை ஒன்றுடன் வெள்ளைக் கதர்த்துணியும் எட்டிப் பார்த்தது. "ஆகா!" என்று வியப்பொலி எழுப்பியவாறு கோவர்த்தனன் அந்த கதர்த் துணியை வெளியே உருவினார். அழுக்குப் படிந்த வெள்ளைக் கதர் ஜிப்பா, பைஜாமா வெளிப் பட்டது. ஜிப்பாவின் ஒரு பக்கத் தோளில் ரத்தக் கறை படர்ந்து படிந்திருந்தது!

"தே ஹாவ் எஸ்கேப்ட்! தே ஹாவ் எஸ் கேப்ட்" என்று திரும்பத் திரும்பக் கூச்சலிட்டபடியே கீழே ஃபோன் இருந்த அறையை நோக்கி விரைந்தார் கோவர்த்தனன்.

பவானியின் புத்திசாலித்தனத்தை தமக்குள் மெச்சிக் கொண்டார் அவள் மாமா. கல்யாணம் வந்துவிட்டுப் போன மறு கணமே அவள், "மாமா! இந்த மனுஷன் ஏற்கனவே என்னிடம் காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்தவர். போதாக் குறைக்கு இங்கே இப்போது அவமானப்பட்டுத் திரும்புகிறார். அதனால் குயுக்தியாக அவருக்கு ஏதாவது செய்யத் தோன்றும். ஒரு கல்யாணத்தை நிறுத்த பஸ் ஏற்பாடு செய்துகொண்டு போன வராயிற்றே! அதனால் இப்போது என்னை வம்பில் மாட்டி வைக்க அவர் நினைத்தால் வியப்பதற்கில்லை. நானும் உமாவும் நாளைக் காலைவரையில் காத்திருக்க முடியாது. இப்போதே உடனே புறப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு மளமளவென்று ஒரு ஸூட் கேஸில் அவசியமான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டாள். வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டாள். குண சேகரனிடம் ஒரு 'செக்' எழுதித் தந்து மறுநாள் பாங்கிலிருந்து டிராஃப்ட் வாங்கி அனுப்புமாறு வெளியூர் வக்கீல் நண்பர் ஒருவரின் விலாசமும் கொடுத்தாள். உமாகாந் தனுக்காகக் குணசேகரனின் துணிமணிகள் சிலவற்றையே பெட்டிக்குள் திணித்தாள். உமாகாந்தனை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். கல்யாணம் வந்து போன பத்தாவது நிமிஷம் அவள் ஓட்டிக் கொண்டு சென்ற கார் தோட்டத்தைக் கடந்து சுற்றுச் சுவர் வாசலைத் தாண்டிச் சாலையில் ஓடத் தொடங்கிற்று.

அவளது இந்த முன்யோசனையையும் செயல் திறனையும் ஒரு பக்கம் நினைத்துப் பெருமைப் பட்டாலும் கூடவே குணசேகரனைப் பலவித அச்சங்கள் பீடித்தன. 'கோவர்த்தனன் இப்போது என்ன செய்யப் போகிறான்? பவானி போலீஸாரிடம் பிடிபட்டால் நாம் என்ன பண்ணுவது? அகப்பட்டுக் கொள்ளாமல் மலேயாவுக்குக் கப்பலேறி விட்டாளென்றாலும் அவள் பெற்றோருக்கு நாம் என்ன பதில் சொல்வது?' என்றெல்லாம் பல கேள்விகள் அவர் மனத்தைக் குடைந்தெடுத்தன.

சுமார் ஐந்தாறு மணி நேரத்துக்குப் பிறகு 'பவானி போலீஸாரிடம் அகப்பட்டுக்கொள்வாளா, மாட்டாளா?' என்ற கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. பல பலவென்று விடிந்து, சுரிய கிரணங்கள் எங்கும் பரவி இருளை விரட்டி நம்பிக்கை ஒளி பரப்பும் வேளையில், பட்சிகள் எல்லாம் மற்றொரு தினத்தை வரவேற்றுக் கீதமிசைக்கும் தருணத்தில் 'பவானியும் உமாகாந்தனும் பிடிபட்டார்கள்' என்ற செய்தி வந்து சேர்ந்தது.

ரத்தக்கறை படிந்த துணியைப் பார்த்ததும் "தப்பிவிட்டார்கள், தப்பி விட்டார்கள்" என்று கூறிக் கொண்டே கீழே ஃபோன் இருந்த இடத்தை நோக்கிச் சென்ற மாஜிஸ்திரேட் கோவர்த்தனன், தமது பதவி அளித்த செல்வாக்கைப் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பிரயோகித்ததில் அவர் விரும்பிய நல்ல பலன் கிடைத்துவிட்டது. ராமப் பட்டணத்திலிருந்து செல்லும் பிரதான சாலைகள் ஒவ்வொன்றிலும் ஆங்காங்கே உள்ள ஊர்களில் போலீஸ் ஸ்டேஷன்களுக்குத் தகவல் கொடுத்து கார் நம்பரையும் கூறியதில், பாதைக்குக் குறுக்கே தடுப்பு ஏற்படுத்தி, பவானியையும் உமாகாந்தனையும் பிடித்து விட்டார்கள். போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் திரும்பவும் ராமப்பட்டணத்துக்கே வந்து கொண்டிருக்கிறார்கள்!

கோவர்த்தனன் உறக்கத்தால் கனத்த கண்ணிமைகளைச் சிரமப்பட்டுத் திறந்து குணசேகரனிடம் கூறினார்;

"மிஸ்டர்! என் வேலை முடிந்தது. நான் இதோ வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு ஒரு 'டிப்' கொடுத்துவிட்டுப் போகிறேன். பவானி இரண்டு வருஷங்கள் சிறை வாசம் அனுபவிக்காமல் இருக்க வேண்டுமானால் ஒரே ஒரு உபாயம்தான் இருக்கிறது.

அந்தப் பயல் - அதாவது மிஸ்டர் இன்ஃபுளூயன்ஸா - ஒரு தேசத் துரோகி, சிறையிலிருந்து தப்பி வந்தவன் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது என்றும் அவனை இதற்கு முன் தன் வாழ் நாளில் தான் பார்த்ததே இல்லை என்றும் பவானி எழுதித் தரவேண்டும். காயம் பட்டிருக்கும் ஒருவனுக்குக் கருணை காட்டும் எண்ணம் தவிர தனக்கு வேறு ஓர் உள் நோக்கமும் இல்லை என்று வாக்குமூலம் தரவேண்டும். அவன் தன்னைப் பலவந்தமாகக் கார் ஓட்டி வருமாறு பணித்தான். தப்பிக்க உதவவில்லையானால் கொன்று விடுவதாக மிரட்டினான் என்று எழுத வேண்டும். புரிந்ததா? இப்படி ஒரு 'ஸ்டேட்மெண்ட்' எழுதி மேன்மை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியிடம் மன்னிப்புக் கோரினால் அவளை உடனே விடுவித்துவிட நான் ஏற்பாடு செய்கிறேன். அப்படி ஒரு வாக்குமூலம் எழுதி வாங்கும் பொறுப்பு உம்முடையது. இதைச் செய்யாமல் சட்டப்படி காரியம் நடக்கட்டும் என்று பேசாமல் இருந்தீரானால் உமது மருமகளை மறுபடியும் இரண்டோ மூணோ வருஷங்களுக்குப் பிறகுதான் கண்ணால் பார்க்க முடியும். புரிந்ததா? எவ்வளவு சீக்கிரம் அந்த வாக்குமூலத்தைப் பெற்று வருகிறீரோ, அவ்வளவுக்கு நல்லது!"

இவ்விதம் கூறிவிட்டு மாஜிஸ்திரேட் வாசலில் நின்ற தமது காரில் ஏறிச் சென்று விட்டார். வரும்போது தம்முடன் வந்த கல்யாணத்தை அவர் அடியோடு மறந்துதான் விட்டாரோ அல்லது வேண்டுமென்றே அலட்சியம் செய்தாரோ, உபசாரத்துக்குக்கூட அவன் தம்முடன் வருகிறானா என்று கேட்காமல் போய்விட்டார்.

அவர் போனதும் கல்யாணம் குணசேகரன் பக்கம் திரும்பி "ஸார்.....!" என்று ஆரம்பித்தான்.

"யூ ராஸ்கல்! நீ ஏண்டா இன்னும் இங்கே நிற்கிறாய்!" என்று எரிந்து விழுந்தார் அவர்.

கல்யாணம் பேசாமல் திரும்பி வருத்தத்தோடும் ரோஷத்தோடும் விடுவிடுவென்று நடந்து சாலைக்கு வந்து சேர்ந்தான். அங்கே அவன் விட்டுச் சென்ற டப்பாக் கார் பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. உலகின்மீதே தனக்கு ஏற்பட்ட வெறுப்பையெல்லாம் ஒன்று திரட்டி அதன் மீது காட்டுகிறாற்போல 'பானெட்' மீது ஒரு குத்து விட்டான். அதில் ஒரு சொட்டை விழுந்தது. வலித்த கையைத் தடவி விட்டுக் கொண்டவன் என்ன நினைத்தானோ, ஏறி அமர்ந்து, 'ஸ்டார்ட்' செய்தான். அது 'மக்கர்' பண்ணாமல் உடனே உறுமிக்கொண்டு புறப்பட்டது!

'நல்ல சகுனம்தான்' என்று எண்ணிக் கொண்டான் கல்யாணம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 61 -- பயணம் முடிந்தது!



"இந்த ஆபத்தான பயணத்தை என்னுடன் சேர்ந்து நீயும் மேற்கொண்டிருக்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, பவானி! ஏதோ கனவு போலிருக்கிறது" என்றான் உமாகாந்தன்.

காரை வெகு வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த பவானி, "கனவாகவே முடிந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கல்யாணம் ரொம்பக் கோபமாகத் திரும்பிப் போயிருக்கிறார். என்ன செய்வாரோ தெரியாது. கோடிக்கரையை நாம் அடைந்து உங்கள் திட்டப்படி கள்ளத்தோணியில் ஏறிய பிறகுதான் எதையும் நிச்சயமாகத் தீர்மானிக்கலாம்" என்றாள்.

"பாவம், உன் மாமா குணசேகரன் நிலைமைதான் ரொம்ப தர்மசங்கடமாகப் போய்விட்டது. அவரை நம்பித்தானே உன் பெற்றோர் உன்னை ராமப்பட்டணத்துக்கு அனுப்பி வைத்தார்கள்? பெரிய பொறுப்பு இல்லையா அவருக்கு? உன் பெற்றோருக்கு அவர் என்ன பதில் சொல்வார்?"

"ஆறு பெருகெடுத்தோடிக் கடலில் சங்கமமாகிவிட்டது என்று கூறட்டும்; மொட்டு வெடித்து மலர, மணம் காற்றோடு கலந்தது என்று சொல்லட்டும். பருவ மழை உரிய காலத்தில் பெய்தது. பூமி குளிர்ந்தது என்று விளக்கட்டும். இந்த இயற்கை நியதிகளை மாற்ற முடியுமானால்தான் நான் உங்களை அடைவதை அவர்களால் தடுக்க முடியும்."

கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஆர்வத்துடன் உமாகாந்தன் பவானியின் இடக்கரத்தைப் பற்றினான்.

"உம்....உம்...! விளையாட்டெல்லாம் இப்போது வேண்டாம். 'ஸ்பீடா மீட்ட'ரைப் பாருங்கள்! என் இரண்டு கரங்களுக்கும் 'ஸ்டியரிங்'கில் வேலை இருக்கிறது" என்றாள் பவானி.

"எப்படியாவது நாம் மலேயாவை அடைந்து விடுவதாக வைத்துக் கொண்டாலும் நம் வாழ்க்கை அங்கேயும் நிம்மதியின்றித்தான் தொடரும் பவானி! "இங்கே ஸி.ஐ.டி.களுக்குப் பயந்து வாழ்ந்தோமென்றால் அங்கே ஜப்பானியர்களின் குண்டு வீச்சுக்கு அஞ்சி வாழும்படி இருக்கும்."

"இதற்கு அது எவ்வளவோ மேல். இங்கே நீங்கள் மறுபடியும் சிறைப்பட்டால் தனிமையை என்னால் தாங்கவே முடியாது. அங்கே வாழ்வோ சாவோ எதுவானாலும் நாம் சேர்ந்து அனுபவிக்கலாம் இல்லையா? சுதந்திரமாக வாழ்ந்து பாரதத்தின் சுதந்திரத்துக்கும் இயன்றவரை உழைக்கலாம் அல்லவா?"

"தேவலாமே! நீ இவ்வளவு தீவிர தேச பக்தை என்பது எனக்கு இதுவரை தெரியாமல் போயிற்றே!"

"எல்லாம் சகவாச தோஷம்தான்!"

"அப்படி எத்தனை நாள் என்னுடன் பழகி விட்டாய்? கல்லூரியில் பட்டும் படாமலும் ஏதோ நண்பர்களாகப் பழகினோம். பிறகு நான் சிறைக்குப் போய்விட்டேன். இப்போது மறுபடியும் சந்தித்து முழுசாக ஒரு வாரம்கூட ஆகவில்லையே?"

"அதென்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்? யுகம் யுகமாக உங்களுடன் தானே நான் நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கிறேன்" என்றாள் பவானி.

"அப்பப்பா! ஒரு தடவைகூடப் பேச்சில் என்னை ஜெயிக்க விடமாட்டாய்!" என்றான் உமாகாந்தன்.

பவானி சிரித்தாள். "சிறையிலிருந்து எப்படி நீங்கள் தப்பினீர்கள்? அதைச் சொல்லுங்கள். களைப்பையும் தூக்கத்தையும் விரட்ட உதவும்."

"அதற்கும் ஜப்பான்காரன்தான் உதவினான் பவானி. ஒரு நாள் மாலை சிறைச்சாலைச் சுவர் ஓரமாக நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று அபாய அறிவிப்பு சங்கு அலறியது. அவ்வளவுதான், வார்டர்களானால் என்ன, கைதிகளானால் என்ன, உயி ருக்குப் பயப்படாதவன் யார்? அவரவரும் சிறைக்குள்ளே அமைக்கப் பட்டிருந்த 'டிரென்ச்சு'க்குள் பதுங்குவதற்காக ஓடினார்கள். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தேன் நான். முன்னேற் பாட்டின்படி நானும் வேறு மூன்று கைதிகளும் நாங்கள் உடைத்துக் கொண்டிருந்த கருங்கள் ஜல்லிக் குவியல்களுக்குப் பின்னாலேயே பதுங்கிக் கொண்டோம். வார்டர்கள் தலை மறைந்ததும் அந்த மூவரும் கோபுரம் போல் நின்று எனக்குத் தோள் கொடுத்துத் தூக்கி விட்டார்கள். பதினைந்தடிச் சுவரின் மீது அவர்கள் உதவியுடன் ஏறுவது சிரமமாக இல்லை. அந்தப் பக்கம் குதிப்பதுதான் அச்ச மளிப்பதாய் இருந்தது. வந்தது வரட்டும் என்று கண்களை மூடிக் கொண்டு குதித்தேன். நல்ல வேளை கைகால் ஏதும் முறியவில்லை.

"அப்புறம்?"

"நன்றாக இருள் கவியும்வரை ஒரு பாதாளச் சாக்கடையின் உள்ளே இடுப்பளவு நீரில் துர்நாற்றத்தைச் சகித்துக் கொண்டு நின்றேன். அபாயம் நீங்கியதற்கு அறிகுறியாகச் சங்கொலிப்பதும் போலீஸார் என்னைத் தேட இங்குமங்கும் விரைவதும் இலேசாகக் கேட்டன. மனசு கிடந்து திக் திக்கென்று அடித்துக்கொண்டது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சந்தடி யெல்லாம் அடங்கி விட்டது. நன்றாக இருட்டியிருக்கும் என்று தோன்றியபோது மெல்ல வெளியே வந்து இருளில் பதுங்கிப் பதுங்கி நடந்தேன். கங்கையில் இறங்கிச் சாக்கடை அழுக்குப் போகக் குளித்தேன்.

"அந்த அதிகாலை நேரத்தில் ஆற்றங்கரையில் ஒரு பெரியவர் குளித்துவிட்டுச் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் கண்களை மூடித் தியானத்தில் இருந்த சமயம் கரையில் இருந்த அவர் துணி மணிகளை எடுத்துக் கொண்டு சந்தடியின்றி ஓடிவிட்டேன். சிறிது தூரம் போய் ஒரு மரத்துக்குப் பின்னால் உடைகளை அணிந்து கொண்டு கைதி உடைகளை ஒரு பெரிய பாறாங்கல்லைச் சுற்றிக் கட்டி ஆற்றில் எறிந்து விட்டேன். மகராஜன் துணிமணிகளை எனக்குத் தந்தது மட்டுமல்ல; அதில் ஒரு மணி பர்ஸும் வைத்திருந்தான். அதிலிருந்த பணம் என் தாயாரின் சொந்தக் கிராமத்துக்கு நான் வந்து சேரும்வரை எனக்குப் போதுமானதாய் இருந்தது. நல்லவேளை! பர்ஸில் விலாசமும் இருந்தது. அம்மாவிடம் பணம் கேட்டுப் போஸ்டல் ஆர்டர் வாங்கி அனுப்பி விட்டேன்."

"உங்கள் தாயார் கல்கத்தாவிலிருந்து கிராமத்துக்கு வந்து விட்டாரா? ஏன்?"

"அது உனக்குத் தெரியாதா? ஆம்; தெரிய நியாயம் இல்லைதான். நான் கையும் களவுமாகப் பிடிபட்டதே என் தகப்பனாருக்குப் பெரிய அதிர்ச்சி. அதுவும் அவர் வேலை பார்த்து வந்த பாங்கியிலேயே அவர் மகன் கொள்ளையடித்து விட்டதை - அந்த அவமானத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. போதாக் குறைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் என் அண்ணனுக்குக் கடன் கொடுத்த மார்வாடி வீட்டுக்கு வந்து கத்தியிருக்கிறான். இந்த இரண்டாவது அதிர்ச்சி ஏற்பட்டபோது என் தகப்பனார் இதயம் பாதிக்கப்பட்டு விட்டது. எப்படியோ சமாளித்துக் கொண்டு தம் சேமிப்பையெல்லாம் துடைத்தெடுத்து மார்வாடியிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் அப்போது படுக்கையில் விழுந்தவர் பின்னர் எழுந்திருக்கவே இல்லை. சீக்கிரமே இரண்டாவது 'ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டு உயிர் துறந்தார். வைதவ்ய நிலை அடைந்த என் தாயார் கல்கத்தாவில் வாழப் பிடிக்காதவளாகத் தன் சொந்தக் கிராமத்துக்குப் பெற்றோருடன் வசிக்கப் போய்விட்டாள். அங்கிருந்து அவள் தன் துயரத்தை யெல்லாம் வடித்து எழுதிய கடிதம் எனக்குச் சிறைச்சாலையில் கிடைத்தது.

"பவானி! நான் சிறையிலிருந்து தப்ப முடிவு செய்ததற்கு என் தாயாரின் கண்ணீர்க் கறை படிந்த முகம் சதா என் நினைவில் தோன்றிக் கொண்டிருந்தது ஒரு காரணம்" என்றான் உமாகாந்தன்.

"பாவம்! அவரை ஒரு தடவை சந்தித்து ஆறுதல் கூடச் சொல்லாமல் மலேயாவுக்கு உங்களுடன் கப்பலேறிவிடப் போகிறேனே என்று எண்ணினால் எனக்கே வெட்கமாக இருக்கிறது" என்றாள் பவானி. அங்கிருந்து பத்தாவது மைல் கல்லில் அவர்கள் பயணம் முடிந்துவிடப் போவதை அக்கணத்தில் அறியாதவளாக.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 61 -- பயணம் முடிந்தது!



"இந்த ஆபத்தான பயணத்தை என்னுடன் சேர்ந்து நீயும் மேற்கொண்டிருக்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, பவானி! ஏதோ கனவு போலிருக்கிறது" என்றான் உமாகாந்தன்.

காரை வெகு வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த பவானி, "கனவாகவே முடிந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கல்யாணம் ரொம்பக் கோபமாகத் திரும்பிப் போயிருக்கிறார். என்ன செய்வாரோ தெரியாது. கோடிக்கரையை நாம் அடைந்து உங்கள் திட்டப்படி கள்ளத்தோணியில் ஏறிய பிறகுதான் எதையும் நிச்சயமாகத் தீர்மானிக்கலாம்" என்றாள்.

"பாவம், உன் மாமா குணசேகரன் நிலைமைதான் ரொம்ப தர்மசங்கடமாகப் போய்விட்டது. அவரை நம்பித்தானே உன் பெற்றோர் உன்னை ராமப்பட்டணத்துக்கு அனுப்பி வைத்தார்கள்? பெரிய பொறுப்பு இல்லையா அவருக்கு? உன் பெற்றோருக்கு அவர் என்ன பதில் சொல்வார்?"

"ஆறு பெருகெடுத்தோடிக் கடலில் சங்கமமாகிவிட்டது என்று கூறட்டும்; மொட்டு வெடித்து மலர, மணம் காற்றோடு கலந்தது என்று சொல்லட்டும். பருவ மழை உரிய காலத்தில் பெய்தது. பூமி குளிர்ந்தது என்று விளக்கட்டும். இந்த இயற்கை நியதிகளை மாற்ற முடியுமானால்தான் நான் உங்களை அடைவதை அவர்களால் தடுக்க முடியும்."

கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஆர்வத்துடன் உமாகாந்தன் பவானியின் இடக்கரத்தைப் பற்றினான்.

"உம்....உம்...! விளையாட்டெல்லாம் இப்போது வேண்டாம். 'ஸ்பீடா மீட்ட'ரைப் பாருங்கள்! என் இரண்டு கரங்களுக்கும் 'ஸ்டியரிங்'கில் வேலை இருக்கிறது" என்றாள் பவானி.

"எப்படியாவது நாம் மலேயாவை அடைந்து விடுவதாக வைத்துக் கொண்டாலும் நம் வாழ்க்கை அங்கேயும் நிம்மதியின்றித்தான் தொடரும் பவானி! "இங்கே ஸி.ஐ.டி.களுக்குப் பயந்து வாழ்ந்தோமென்றால் அங்கே ஜப்பானியர்களின் குண்டு வீச்சுக்கு அஞ்சி வாழும்படி இருக்கும்."

"இதற்கு அது எவ்வளவோ மேல். இங்கே நீங்கள் மறுபடியும் சிறைப்பட்டால் தனிமையை என்னால் தாங்கவே முடியாது. அங்கே வாழ்வோ சாவோ எதுவானாலும் நாம் சேர்ந்து அனுபவிக்கலாம் இல்லையா? சுதந்திரமாக வாழ்ந்து பாரதத்தின் சுதந்திரத்துக்கும் இயன்றவரை உழைக்கலாம் அல்லவா?"

"தேவலாமே! நீ இவ்வளவு தீவிர தேச பக்தை என்பது எனக்கு இதுவரை தெரியாமல் போயிற்றே!"

"எல்லாம் சகவாச தோஷம்தான்!"

"அப்படி எத்தனை நாள் என்னுடன் பழகி விட்டாய்? கல்லூரியில் பட்டும் படாமலும் ஏதோ நண்பர்களாகப் பழகினோம். பிறகு நான் சிறைக்குப் போய்விட்டேன். இப்போது மறுபடியும் சந்தித்து முழுசாக ஒரு வாரம்கூட ஆகவில்லையே?"

"அதென்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்? யுகம் யுகமாக உங்களுடன் தானே நான் நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கிறேன்" என்றாள் பவானி.

"அப்பப்பா! ஒரு தடவைகூடப் பேச்சில் என்னை ஜெயிக்க விடமாட்டாய்!" என்றான் உமாகாந்தன்.

பவானி சிரித்தாள். "சிறையிலிருந்து எப்படி நீங்கள் தப்பினீர்கள்? அதைச் சொல்லுங்கள். களைப்பையும் தூக்கத்தையும் விரட்ட உதவும்."

"அதற்கும் ஜப்பான்காரன்தான் உதவினான் பவானி. ஒரு நாள் மாலை சிறைச்சாலைச் சுவர் ஓரமாக நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று அபாய அறிவிப்பு சங்கு அலறியது. அவ்வளவுதான், வார்டர்களானால் என்ன, கைதிகளானால் என்ன, உயி ருக்குப் பயப்படாதவன் யார்? அவரவரும் சிறைக்குள்ளே அமைக்கப் பட்டிருந்த 'டிரென்ச்சு'க்குள் பதுங்குவதற்காக ஓடினார்கள். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தேன் நான். முன்னேற் பாட்டின்படி நானும் வேறு மூன்று கைதிகளும் நாங்கள் உடைத்துக் கொண்டிருந்த கருங்கள் ஜல்லிக் குவியல்களுக்குப் பின்னாலேயே பதுங்கிக் கொண்டோம். வார்டர்கள் தலை மறைந்ததும் அந்த மூவரும் கோபுரம் போல் நின்று எனக்குத் தோள் கொடுத்துத் தூக்கி விட்டார்கள். பதினைந்தடிச் சுவரின் மீது அவர்கள் உதவியுடன் ஏறுவது சிரமமாக இல்லை. அந்தப் பக்கம் குதிப்பதுதான் அச்ச மளிப்பதாய் இருந்தது. வந்தது வரட்டும் என்று கண்களை மூடிக் கொண்டு குதித்தேன். நல்ல வேளை கைகால் ஏதும் முறியவில்லை.

"அப்புறம்?"

"நன்றாக இருள் கவியும்வரை ஒரு பாதாளச் சாக்கடையின் உள்ளே இடுப்பளவு நீரில் துர்நாற்றத்தைச் சகித்துக் கொண்டு நின்றேன். அபாயம் நீங்கியதற்கு அறிகுறியாகச் சங்கொலிப்பதும் போலீஸார் என்னைத் தேட இங்குமங்கும் விரைவதும் இலேசாகக் கேட்டன. மனசு கிடந்து திக் திக்கென்று அடித்துக்கொண்டது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சந்தடி யெல்லாம் அடங்கி விட்டது. நன்றாக இருட்டியிருக்கும் என்று தோன்றியபோது மெல்ல வெளியே வந்து இருளில் பதுங்கிப் பதுங்கி நடந்தேன். கங்கையில் இறங்கிச் சாக்கடை அழுக்குப் போகக் குளித்தேன்.

"அந்த அதிகாலை நேரத்தில் ஆற்றங்கரையில் ஒரு பெரியவர் குளித்துவிட்டுச் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் கண்களை மூடித் தியானத்தில் இருந்த சமயம் கரையில் இருந்த அவர் துணி மணிகளை எடுத்துக் கொண்டு சந்தடியின்றி ஓடிவிட்டேன். சிறிது தூரம் போய் ஒரு மரத்துக்குப் பின்னால் உடைகளை அணிந்து கொண்டு கைதி உடைகளை ஒரு பெரிய பாறாங்கல்லைச் சுற்றிக் கட்டி ஆற்றில் எறிந்து விட்டேன். மகராஜன் துணிமணிகளை எனக்குத் தந்தது மட்டுமல்ல; அதில் ஒரு மணி பர்ஸும் வைத்திருந்தான். அதிலிருந்த பணம் என் தாயாரின் சொந்தக் கிராமத்துக்கு நான் வந்து சேரும்வரை எனக்குப் போதுமானதாய் இருந்தது. நல்லவேளை! பர்ஸில் விலாசமும் இருந்தது. அம்மாவிடம் பணம் கேட்டுப் போஸ்டல் ஆர்டர் வாங்கி அனுப்பி விட்டேன்."

"உங்கள் தாயார் கல்கத்தாவிலிருந்து கிராமத்துக்கு வந்து விட்டாரா? ஏன்?"

"அது உனக்குத் தெரியாதா? ஆம்; தெரிய நியாயம் இல்லைதான். நான் கையும் களவுமாகப் பிடிபட்டதே என் தகப்பனாருக்குப் பெரிய அதிர்ச்சி. அதுவும் அவர் வேலை பார்த்து வந்த பாங்கியிலேயே அவர் மகன் கொள்ளையடித்து விட்டதை - அந்த அவமானத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. போதாக் குறைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் என் அண்ணனுக்குக் கடன் கொடுத்த மார்வாடி வீட்டுக்கு வந்து கத்தியிருக்கிறான். இந்த இரண்டாவது அதிர்ச்சி ஏற்பட்டபோது என் தகப்பனார் இதயம் பாதிக்கப்பட்டு விட்டது. எப்படியோ சமாளித்துக் கொண்டு தம் சேமிப்பையெல்லாம் துடைத்தெடுத்து மார்வாடியிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் அப்போது படுக்கையில் விழுந்தவர் பின்னர் எழுந்திருக்கவே இல்லை. சீக்கிரமே இரண்டாவது 'ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டு உயிர் துறந்தார். வைதவ்ய நிலை அடைந்த என் தாயார் கல்கத்தாவில் வாழப் பிடிக்காதவளாகத் தன் சொந்தக் கிராமத்துக்குப் பெற்றோருடன் வசிக்கப் போய்விட்டாள். அங்கிருந்து அவள் தன் துயரத்தை யெல்லாம் வடித்து எழுதிய கடிதம் எனக்குச் சிறைச்சாலையில் கிடைத்தது.

"பவானி! நான் சிறையிலிருந்து தப்ப முடிவு செய்ததற்கு என் தாயாரின் கண்ணீர்க் கறை படிந்த முகம் சதா என் நினைவில் தோன்றிக் கொண்டிருந்தது ஒரு காரணம்" என்றான் உமாகாந்தன்.

"பாவம்! அவரை ஒரு தடவை சந்தித்து ஆறுதல் கூடச் சொல்லாமல் மலேயாவுக்கு உங்களுடன் கப்பலேறிவிடப் போகிறேனே என்று எண்ணினால் எனக்கே வெட்கமாக இருக்கிறது" என்றாள் பவானி. அங்கிருந்து பத்தாவது மைல் கல்லில் அவர்கள் பயணம் முடிந்துவிடப் போவதை அக்கணத்தில் அறியாதவளாக.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top