• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் 3 - ' 'எரிமலை'

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முதல் அத்தியாயம் :

ஊதுவத்தி வியாபாரி

தேவபட்டணத்துத் தேரோடும் வீதியில் ஒரு குதிரை வண்டி கடகடவென்று சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. வண்டிக் குள்ளே ஒரு இளம் பிரயாணி உட்கார்ந்திருந்தான். அவன் தலையிலே பல வர்ணக் கோடுகள் போட்ட உருமாலையைத் தலைப் பாகையாகக் கட்டிக் குஞ்சம் தொங்கவிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தால், மத்திய இந்தியாவிலிருந்து வரும் வியாபாரியைப் போல் காணப்பட்டது. அவனுக்குப் பக்கத்தில் இருந்த தகரப் பெட்டியும் துணி மூட்டையும் மேற்கூறிய ஊகத்தை உறுதிப்படுத்தின. அட்வகேட் ஆத்மநாதய்யரின் வீட்டு வாசலில் வந்து வண்டி நின்றது. இளைஞன் வண்டிக்குள்ளிருந்தபடியே வண்டிக்காரனுக்கு வாடகைப் பணம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பெட்டியையும் ஒரு கையில் துணி மூட்டையையும் எடுத்துக்கொண்டு வண்டியி லிருந்து இறங்கினான். "நிற்கட்டுமா, சேட்; ஜல்தி வருவீர்களா?" என்று வண்டிக்காரன் கேட்டதற்கு, "நை! தும் ஜாவ்!" என்றான் அந்த வாலிபன். ஜட்கா வண்டி புறப்பட்டுச் சென்றது. "ஆத்மநாதய்யர் வீட்டு வாசலில் இரும்புக் கம்பிக் கதவண்டை அந்த வாலிபன் நின்று உள்ளே எட்டிப் பார்த்தான். ஒரு இளம் பெண்மணியின் முகம் தெரிந்தது. "ஊதுவத்தி வேண்டுமா, அம்மா! அத்தர் புனுகு ஜவ்வாது வேண்டுமா? பெனாரிஸ் ஸில்க் வேண்டுமா?" என்று அவ்வாலிபன் கேட்டதற்கு, உள்ளேயிருந்து, "ஒன்றும் வேண்டாம், போ" என்று ஒரு பெண் குரலில் பதில் வந்தது. "என்னம்மா, இப்படி ஒரேயடியாய் ஒன்றும் வேண்டாம் என்று சொல்றே? இந்த வீட்டில்தானே நாளைக்குக் குழந்தைக்குச் சஷ்டிஅப்த பூர்த்திக் கலியாணம் என்று சொன்னாங்க?" என்று சொல்லிக் கொண்டே அந்த மார்வாரி இளைஞன், பூட்டப்படாமல் வெறுமே சாத்தியிருந்த இரும்புக் கம்பிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

வீட்டுத் தாழ்வாரத்துக்கும் வெளி கேட்டுக்கும் மத்தியில் இருந்த சுமார் பத்து அடி அகலமுள்ள இடத்தில் ஒரு பன்னீர் மரம், ஒரு மனோரஞ்சிதச் செடி, சில அழகிய பல வர்ணக் குரோடன்ஸ் செடிகள் ஆகியவை இருந்தன. வீட்டின் வாசல் திண்ணைக்கு அருகில் ஒரு இளம் பெண்ணும் ஒரு வயதான ஸ்திரீயும் நின்றார்கள். "பார்த்தாயோ இல்லையோ, இவன் சொல்லுகிறதை! குழந்தைக்கு ஒரு வயது ஆகப்போகிறது; சஷ்டிஅப்தபூர்த்திக் கல்யாணமாம்!" என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தாள் அந்த இளம் பெண். "திடுதிடுவென்று உள்ளே நுழைந்து வருகிறானே? கேள்வி முறையில்லையா? கதவைப் பூட்டி வைக்கவேண்டும்!" என்றாள் வயதான ஸ்திரீ. உள்ளே நுழைந்த இளைஞன் அவர் களுடைய பேச்சைக் கவனியாதவன் போல், "அரே பாப்ரே! இங்கே இருக்கிற புஷ்பங் களில் வாசனை நம்முடைய ஊதுவத்தி, அத்தர், சவ்வாது வாசனையைத் தோற்கடித்துவிடும் போலிருக்கிறதே!" என்றான். பிறகு பெட்டியையும் மூட்டையையும் கொண்டு போய்த் திண்ணையில் வைத்து, "ஏன்! அம்மா! நிஜமாக ஊதுவத்தி, அத்தர், புனுகு, சவ்வாது ஒன்றும் வேண்டாமா?" என்று சொல்லிக்கொண்டே பெட்டியைத் திறந்ததும், உள்ளேயிருந்து ஊதுவத்தியின் மணம் கம் மென்று வீசிற்று. "ஏன், லலிதா! நல்ல ஊதுவத்தியாயிருக்கிறதே! கொஞ்சம் வேணுமானால் வாங்கிவைக்கலாமே?" என்று லலிதாவின் தாயார் சரஸ்வதிஅம்மாள் சொன்னாள். "ஒன்றும் வேண்டாம்! நீ கொண்டு போ, அப்பா!" என்றாள் லலிதா. "அப்படி முகத்திலடித்தது போல் சொல்லாதே, சின்னம்மா! பெரியம்மா சொல்கிறதைக் கேள்!" என்று ஊதுவத்தி வியாபாரி சொல்லிவிட்டு, சரஸ்வதிஅம்மாளைப் பார்த்து, "ஊரிலேயிருந்து கிட்டாவய்யர் வந்திருக்கிறார்களா? அவர்களுடைய மூத்தபிள்ளை கங்காதரஐயர் வந்திருக்கிறார்களா?" என்றான்.

"ஏது, ஏது! உனக்கு எல்லாரையும் தெரியும் போலிருக்கிறதே! நீ யாரப்பா?" என்று கேட்டாள் சரஸ்வதி அம்மாள். "காலம் அப்படி ஆகிவிட்டது! என்ன செய்யலாம்? பெற்ற தாய்க்குப் பிள்ளையை அடையாளம் தெரியாமல் போய்விட்டது!" என்று ஊதுவத்தி வியாபாரி சொல்லிவிட்டுத் தலையில் சுற்றியிருந்த வர்ணக் கோட்டு முண்டாசைக் கையில் எடுத்தான். "அம்மா! நம்ம சூரியாண்ணா?" என்று கூவினாள் லலிதா. "அட என் கண்ணே!" என்று சொல்லிக்கொண்டு சரஸ்வதி அம்மாள் தன்னுடைய குமாரனைக் கட்டிக்கொண்டாள். "ஏன் சூரியா! இது என்ன வேஷம்! சகிக்கவில்லையே?" என்றாள் லலிதா. "சும்மா உங்களை யெல்லாம் ஒரு தமாஷ் செய்யலாம் என்று நினைத்தேன்!" என்றான் சூரியா. உடனே சரஸ்வதி அம்மாள், "தமாஷாவது, மண்ணாங் கட்டியாவது? அழகாயிருக்கிறது! லலிதாவின் மாமனார் இப்போது கோர்ட்டிலேயிருந்து வந்துவிடுவார். உன்னை இந்தக் கோலத்திலே பார்த்தால் ஏதாவது நினைத்துக் கொள்வார். உன் அப்பா, அண்ணா எல்லாரும் இராத்திரி ரயிலிலே வருகிறார்கள். இந்த வேஷத்தை கலைத்துவிட்டு மறு காரியம் பார்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "ஆகட்டும்! ஆனால் வேஷத்தைக் கலைப்பதற்கு என்னை அரை மணி நேரம் தனியா இருக்க விடவேண்டும். லலிதா! மேலே உன் அகத்துக்காரர் அறை காலியா கத்தானே இருக்கிறது?" என்று சூரியா கேட்டான். லலிதா பதில் சொல்வதற்குள் சரஸ்வதி அம்மாள், "காலியாகத்தான் இருக்கிறது, ஆனால் இந்தப் பெண் அந்த அறையில் யாரும் போவதற்கு விடுவதில்லை. மாப்பிள்ளையின் படத்தை அங்கே மாட்டியிருக்கிறாள். அந்தப் படத்துக்குத் தினம் பூத்தொடுத்து மாலை போடுகிறது இவளுக்கு ஒரு வேலை! சத்தியவானுக்காகச் சாவித்திரி கூட இப்படித் தபசு இருந்திருக்க மாட்டாள்! ஏண்டாப்பா சூரியா? உனக்குச் சமாசாரம் தெரியுமோ, இல்லையோ?" என்றாள்.

"மாப்பிள்ளை ஜெயிலுக்கு போயிருக்கிறதைத்தானே சொல்கிறாய்? அது எனக்குத் தெரியாமல் இருக்குமா, அம்மா! ஆனால் பத்திரிகையிலே படித்ததும் ஒரே ஆச்சரியமாகத்தான் இருந்தது, நம்ம பட்டாபி இப்படித் துணிந்து இறங்குவான் என்று நான் நினைக்கவே யில்லை" என்றான் சூரியா. "ஆனால் ஒன்று,சூரியா! இவர் மற்றவர்களையெல்லாம் போலக் கோர்ட்டைக் கொளுத்தினார், தண்டவாளத்தைப் பெயர்த்தார், பாலத்தை உடைத்தார் என்றெல்லாம் பெயர் வாங்கிக்கொண்டு ஜெயிலுக்குப் போகவில்லை. போன அக்டோ பர் இரண்டாம் தேதி காந்தி மகான் ஜயந்தியில் காந்திஜியைச் சிறையில் வைத்திருப்பதைக் கண்டித்துப் பொதுக் கூட்டத்தில் பேசினார். அதற்காக இவரைப் பிடித்துப் போட்டுவிட் டார்கள்!" என்றாள் லலிதா. "இந்தக் கஷ்டமெல்லாம் என்னத்திற்காக, எப்போது முடியப் போகிறது என்று தெரியவில்லை. எல்லாம் என்னுடைய துரதிருஷ்டந்தான்! நீயானால் இப்படி அம்மா அப்பாவுக்குப் பிள்ளை யாக இராமல் போய்விட்டாய்! ஊர் ஊராய் அலைந்து கொண்டிருக்கிறார். லலிதாவை எவ்வளவோ நல்ல இடம் என்று பார்த்துக் கொடுத்தேன். அவளுடைய தலையெழுத்து இப்படி இருக்கிறது!" என்று சரஸ்வதி அம்மாள் வருத்தப்பட்டுக் கொண்டு சொன்னாள். "நம்ம ராமாயணத்தை அப்புறம் வைத்துக்கொள்ளலாமே, அம்மா! முதலிலே சூரியா அவன் காரியத்தைப் பார்க்கட்டும், எல்லாரும் வருவதற்குள்ளே!" என்றாள் லலிதா. "உன் அகத்துக்காரரின் அறையை இரண்டுநாள் நான் வைத்துக் கொள்ளலாம் அல்லவா லலிதா?" "பேஷாக வைத்துக் கொள்ளலாம்; நீயும் அவரும் எவ்வளவு சிநேகம் என்று எனக்குத் தெரியாதா? அடிக்கடி உன்னைப்பற்றி அவர் பேசிக் கொண்டிருப்பார். அவருடைய அறையிலே உனக்கு இல்லாத பாத்தியதை வேறுயாருக்கு?" என்றாள் லலிதா.

ரேழி அறையிலிருந்த மச்சுப்படி வழியாகச் சூரியா பெட்டி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு மேலே போய்ப் பட்டாபி ராமனுடைய அறையில் ஆக்கிரமித்துக் கொண்டான். அந்த அறை வெகு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. மேஜை, அதன் மேலிருந்த மைக்கூடு, பேனா, புத்தக அலமாரி, கோட் ஸ்டாண்டு எல்லாம் ஒரு தூசி துப்பு இல்லாமலிருந்தன. சுவர் மூலைகளில் ஒரு ஒட்டடை கிடையாது. ஒரு பக்கச் சுவரில், சரஸ்வதி அம்மாள் சொன்னது போல் பட்டாபிராமன் படம் காணப்பட்டது. இன்னொரு பக்கச் சுவரில் மகாத்மா காந்தி படம் இருந்தது. இரண்டு படங்களும் அப்போதுதான் தொடுத்துப் போட்ட பூ மாலைகளுடன் விளங்கின. மல்லிகைப் பூவின் மணம் அறையில் கம்மென்று நிறைந்திருந்தது. பின்னோடு தன்னை அறையிலே கொண்டுவிட வந்த லலிதாவைப் பார்த்து, "என்ன லலிதா! மகாத்மா காந்தியையும் உன் அகத்துக்காரரையும் ஒன்றாக வைத்து விட்டாய் போலிருக்கிறதே! இனிமேல் உன் புருஷனையும் 'மகாத்மா பட்டாபிராமன்' என்று அழைக்க வேண்டியது தான் போலிருக்கிறது!" என்றான் சூர்யா. "மகாத்மா காந்தி உலகத்திலேயே பெரியவர்; ஆகையால் அவரைப் பூஜிக்கிறேன். உன்னுடைய சிநேகிதர் எனக்குத் தெய்வம்; ஆகையால் அவரையும் பூஜை செய்கிறேன்!" என்றாள் லலிதா. "உன்னுடைய பக்தியை ரொம்பப் பாராட்டுகிறேன், லலிதா! உன்னுடைய மாமியார் கூடக் காலமாகி விட்டாளாமே?" "அவர் கண்ணை மூடி இப்போது இரண்டு வருஷம் ஆகிறது. போன வருஷத்தில் உயிரோடிருந்து பிள்ளை ஜெயிலுக்குப் போனதைப் பார்த்திருந்தால் நெஞ்சு உடைந்து போயிருப்பார். என்னுடைய நெஞ்சு கல் நெஞ்சு, அதனால் உயிரோடிருக்கிறேன். அண்ணா! என் மாமியாரைப்பற்றி நான் புகார் கூறியதையெல்லாம் நினைத்தால் எனக்கு இப்போது வெட்கமாயிருக்கிறது.

அவரைப் போல் உத்தமி இந்த உலகத்திலேயே கிடைக்க மாட்டார். என் பேரில் அவருக்கிருந்த பிரியம் அப்புறந்தான் எனக்குத் தெரிய வந்தது. என்னைக் குற்றம் கூறியதெல்லாம் என்னுடைய நன்மைக்காகவே என்று தெரிந்து கொண்டேன். கேள், சூரியா! என் மாமியார் சாகும் போது என் கையை அவருடைய கையால் பிடித்துக் கொண்டே செத்துப் போனார். அவருடைய பிள்ளையைப் பற்றிக் கூட அவ்வளவு கவலை காட்டவில்லை." "உலகமே அப்படித்தான் இருக்கிறது, லலிதா! நாம் ரொம்ப நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பொல்லா தவர்களாகி விடுகிறார்கள். பொல்லாதவர்கள் நல்லவர்களாகி விடுகிறார்கள். உலகத்தின் இயல்பே மாறுதல்தானே? சீதாவின் புருஷன் சௌந்தர ராகவன் இப்படிப்பட்ட மூர்க்கனாவான் என்று யார் எதிர்பார்த்தார்கள்? உன்னுடைய அதிர்ஷ்டக்கட்டையைப் பற்றி அம்மா சொன்னாளே? பட்டாபிக்குக் கொடுக்காமல் சௌந்தர ராகவனுக்கு உன்னைக் கலியாணம் செய்து கொடுத்திருந்தால் அப்போது தெரிந்திருக்கும். ஐயோ! சீதா படுகிற கஷ்டத்தை நினைத்தால் எனக்கு இதயம் வெடித்து விடும் போலிருக்கிறது. "ஆம் அண்ணா! அதைப்பற்றி நீ எனக்கு விவரமாகச் சொல்ல வேண்டும். டில்லிக்குப் போன புதிதில் எவ்வளவோ உற்சாகமாகக் கடிதம் எழுதியிருந்தாள். வர வரக் கடிதம் வருவதே குறைந்து போய்விட்டது. கடைசியாக அவள் எழுதிய கடிதங்கள் ஒரே துக்கமயமாயிருக்கின்றன. குழந்தையைக் கூட மாமியாருடன் மதராஸுக்கு அனுப்பி விட்டாளாமே? எதற்காக?" "விவரமாகப் பிற்பாடு சொல்லுகிறேன்.

மொத்தத்தில் சீதாவின் வாழ்க்கை நரக வாழ்க்கையாகிவிட்டது. உன்னுடைய நிலைமை எவ்வளவோ தேவலை உன் மாமனார் எப்படி இருக்கிறார்?" "என் மாமனார் என் பேரில் காற்றும் படக்கூடாது என்கிறார். வீட்டுக்கு நான்தான் எஜமானி, இரும்புப் பெட்டிச் சாவி என்னிடந்தான் இருக்கிறது. குழந்தைக்கு நாளைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம் வேண்டாம் என்று சொன்னேன். 'இவர் ஜெயிலில் இருக்கும்போது கலியாணம் எதற்கு?' என்றேன். என் மாமனார், 'அதெல்லாம் கூடாது; வீட்டுக்கு முதல் பிள்ளைக் குழந்தை; கட்டாயம் அப்த பூர்த்திக் கலியாணம் செய்ய வேண்டும்' என்று சொல்லிவிட்டார். அதற்குத் தகுந்தாற்போல் இவரும் சிறைச்சாலையிலிருந்து எழுதியிருந்தார்." "எதிர் வீட்டுக்கும் உங்களுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் எப்படியிருக்கிறது; போக்கு வரவு நின்றது நின்றதுதானா?" "இது வரையில் அப்படித்தான்! ஆனால் இரண்டு நாளைக்கு முன்பு இவருடைய சிநேகிதர் அமரநாதனும் அவர் மனைவி சித்ராவும் கல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறார்கள். நாளைக் காலையில் மாமனாரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு அவர்களைப் போய் அழைத்துவிட்டு வரலாமென்றிருக்கிறேன். எதிர் வீட்டுக்காரர்கள் வராமல் என்ன கலியாணம் வண்டிக்கிடக்கிறது?" "அப்படியே செய், லலிதா! கட்டாயம் போய் அவர்களை அழைத்துவிட்டு வா! நான் இன்று ராத்திரியே எதிர் வீட்டுக்குப் போய் வரலாம் என்றிருக்கின்றேன்.

நானும் உன் புருஷனும் அமரநாதனும் எதிர்வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து எத்தனை நாள் குஷியாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம் தெரியுமா? அப்படிச் சிநேகமாயிருந்தவர்கள் திடீரென்று விரோதம் செய்து கொள்ள எப்படித்தான் முடிந்ததோ, தெரியவில்லை!" "இவருக்கு அந்த விஷயம் ஒன்றும் பிடிக்கவேயில்லை. சூரியா! எல்லாம் கிழவர்கள் செய்த வேலை. தகப்பனாரிடம் உள்ள பக்தியினாலே தான் இவர் சும்மா இருந்தார்!" இந்தச் சமயத்தில் சுண்டுப் பயல் இப்போது நன்றாய் வளர்ந்து வாலிபப்பருவத்தை அடைந் திருந்தவன் தடதடவென்று மாடிப்படி ஏறி வந்தான். "சூரியா வந்திருக்கிறானாமே எங்கே?" என்று கேட்டுக் கொண்டே இறைக்க இறைக்க ஓடி வந்தவன், சூரியாவைப்பார்த் துத்திகைத்து நின்று, "ஐயையோ! இவனா சூரியா? முகத்திலே மீசை வைத்துக் கொண்டிருக்கிறானே?" என்றான். "சுண்டு! என் மீசை உனக்குப் பிடிக்கவில்லையா? அப்படியானால் அதை எடுத்தெறிந்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சூரியா முகஷவரம் செய்து கொள்ள ஆரம்பித்தான். வடநாட்டு உடையை களைந்தெறிந்து விட்டு, வேஷ்டி ஜிப்பா அணிந்ததும் பழைய சூரியாவாகக் காட்சி அளித்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இரண்டாம் அத்தியாயம்

"ஜப்பான் வரட்டும்!"

அன்றிரவு சுமார் எட்டு மணிக்குச் சூரியா எதிர்வீட்டுக்குப் போகலாமென்று புறப்பட்டுச் சென்றபோது அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன் போல் அமரநாத் நின்று கொண்டிருந்தான். "வருக! வருக! சுதந்திர வீரர் சூரியாவின் வரவு நல்வரவாகுக!" என்று தமாஷ் செய்து கொண்டே சூரியாவின் கைகளைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துப் போனான் அமரநாத். கூடத்தில் போட்டிருந்த ஸோபாக்கள் ஒன்றில் உட்கார்ந்து வர்ண நூலினால் பூவேலை செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண். இவர்கள் உள்ளே வந்ததும் அவள் எழுந்தாள். அமரநாத் அவளைப் பார்த்து, "சித்ரா! என் அருமை நண்பன் சூரியாவை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். சூரியா! இவள்தான் என்னை மணம் புரிந்த பாக்கியசாலி சித்ரா. பெயர் சித்ராவாக இருப்பதற்கேற்பச் சித்திரக் கலையில் மிகத் தேர்ந்தவள். அணில் போட்டால் கிட்டத்தட்ட ஆடு மாதிரி இருக்கும்!" என்று சொன்னான். சூரியா சிரித்துக்கொண்டே, "ஆடு போட்டால் எப்படி இருக்கும்?" என்று கேட்டான். சித்ரா பளிச் சென்று, "ஆடு போட்டால் அமரநாத் மாதிரி இருக்கும்" என்று கூறினாள்."பார்த்தாயா, சூரியா! இதிலிருந்து என்ன ஏற்படுகிறது? இந்த மாதரசியின் இதய கமலத்தில் எப்போதும் எழுந்தருளி யிருப்பது இந்த அமரநாத் என்று தெரிகிறதல்லவா! ஆகா! என்னைப் போன்ற பாக்கியசாலி யார்?" என்றான் அமரநாத். "குடியிருக்க வீடு கிடைப்பதுதான் இந்தக் காலத்தில் கஷ்டமாயிருக்கிறதே! ஒருவருடைய இதய கமலத்தில் இன்னொ ருவர் குடியிருக்கிறது என்று வைத்துக் கொண்டால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும்!" என்றாள் சித்ரா.

இந்தத் தம்பதிகளின் அன்யோன்ய உல்லாசப் பேச்சைக் கேட்ட சூரியா, 'புருஷன் மனைவி என்று இருந்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்?' என்று எண்ணிக் கொண்டான். வெளிப்படையாக, "அமரநாத்! உங்கள் மனைவியைப் பற்றி லலிதா வர்ணித்திருந்ததெல்லாம் சரிதான்!" என்று சொன்னான். "லலிதா என்பது யார்?" என்று சித்ரா ஒரு கேள்வி போட்டாள். "இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்? உங்களுக்கு எதிர் வீட்டில் இருக்கும் என்னுடைய சகோதரி லலிதாவைத் தான் சொல்கிறேன்.""ஓகோ! எங்கள் சத்துரு வீட்டு நாட்டுப் பெண்ணையா? நான் அவளைப்பார்த்து எத்தனையோ வருஷம் ஆயிற்றே! என்னைப்பற்றி அவள் என்ன வர்ணித்திருக்க முடியும்?" என்று கேட்டாள் சித்ரா. "முன்னே எழுதியிருந்ததைத்தான் சொல்கிறேன் அவளும் தாங்களும் ரொம்ப சிநேகிதம் என்று எழுதியிருந்தாள்." "சிநேகமும் இல்லை, ஒன்றுமில்லை; நாங்கள் ஜன்ம விரோதிகள் அல்லவா?" இதற்குள் அமரநாத், "சூரியா! முனிசிபல் எலெக்ஷன் விஷயமாக இந்த இரண்டு வீட்டுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டதல்லவா? அது விஷயத்தில் இவளுக்கு ரொம்பக் கோபம், அந்தக் கோபத்தை இப்படிக் காட்டுகிறாள்!" "எனக்குக் கோபம் ஒன்றுமில்லை, மனிதர்கள் இப்படி மூடர்களாயிருக்கிறார்களே என்று பரிதாபந்தான். மொத்தத்தில் நமது தமிழ் நாட்டு ஜனங்கள் வாழத் தெரியாதவர்கள்.வாழும் வகை தெரிய வேண்டுமானால் கல்கத்தாவுக்குப் போய் வங்காளிகளுக்கு மத்தியில் இரண்டு வருஷமாவது இருந்துவிட்டு வரவேண்டும்!" என்றாள் சித்ரா. "நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன். தமிழ்நாட்டார் மற்றவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்க முடியும்?" என்றான் சூரியா.

"இதைக் கேள், சூரியா! எலெக்ஷன் சண்டைக்குப் பிறகு இவளை இங்கே வைத்துக் கொண்டு காலட்சேபம் செய்ய முடியாது என்று தான் முக்கியமாக நான் கல்கத்தாவுக்குப் போனேன். போன பிறகு, ஏண்டாப்பா போனோம் என்று இருக்கிறது. இவளுக்கு வங்காளி நாகரிகத்தில் அத்தனை மோகம் பிறந்துவிட்டது. அதுவும் நேதாஜி சுபாஷ் மலாய் நாட்டில் சுதந்திர இந்திய சர்க்காரை ஸ்தாபித்திருக்கிறார் என்று தெரிந்த பிறகு இவளுக்கு ஒன்றுமே தலைகால் புரியவில்லை. ஆகாச விமானம் ஒன்று கிடைத்தால் என்னை இவள் பரிதவிக்கவிட்டு நேதாஜி போஸிடம் பறந்து போய்விடுவாள்!" என்றான் அமரநாத். இந்தச் சமயத்தில் வாசலில் ஆள்வரும் சத்தம் கேட்கவே, சித்ரா, "மாமனார் வருகிறார் போலி ருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே எழுந்து, மச்சுப்படி ஏறத் தொடங்கினாள். "நாளை ஆண்டு நிறைவுக்கு உங்களை வந்து லலிதா அழைப்பாள்! அவசியம் வரவேண்டும்" என்றான் சூரியா. தாமோதரம்பிள்ளை உள்ளே வந்ததும், இளைஞர்கள் இருவரும் எழுந்து நின்றார்கள். "அப்பா! யார் பார்த்தீர்களா? அடையாளம் தெரிகிறதா?" என்று அமரநாத் கேட்டான். "ஓகோ! நம்ம சூரியா போலிருக்கிறதே! ஒருவேளை தவறாகச் சொல்கிறேனோ? கண் அவ்வளவு துல்லியமாக இல்லை; வயதாகி விட்டதல்லவா?" என்றார் தாமோதரம்பிள்ளை. "சூரியாதான், அப்பா! சூரியாவே தான்!" என்றான் அமரநாத். "நமஸ்காரம்" என்றான் சூரியா. தாமோதரம்பிள்ளை அவருடைய ஆபீஸ் அறைக்குப் போய் விடுவார் என்று அமரநாத் நினைத்ததற்கு மாறாக அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தார். வாலிபர்கள் இருவரும் உட்கார்ந்த பிறகு சூரியாவை அவர் மறுபடியும் உற்றுப் பார்த்தார். "ஆமாம், சூரியாதான்! என்ன ஓய்! சூரியநாராயண ஐயரே! நீர் எங்கேயோ ஆப்கானிஸ்தானத்தில் இருக்கிறதாகச் சொன்னார்கள்; மாஸ்கோவில் பார்த்ததாகச் சொன்னார்கள்; அப்புறம் ஸைகானுக்கு வந்து விட்டதாகச் சொன்னார்கள்; கடைசியில் நம்ம ஊரிலே இருக்கிறீரே? இந்தியாவின் சுதந்திரம் எந்த மட்டில் இருக்கிறது? எங்கே கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறீர்?" என்றார்.

"மாமா! என்னைப்பற்றி இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்துக் கொண்டு, எந்த நாட்டுக்குப் போயிருக்கிறேன் என்றெல்லாம் விசாரித்து வைத்திருக்கிறீர்களே? அதற்காகச் சந்தோஷம், ஆனால் நான் எந்த அயல் நாட்டுக்கும் போகவில்லை. இந்தியாவின் சுதந்திரம் இந்தியாவிலே தான் இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஆப்கானிஸ்தானத்துக்கு ஏன் போக வேண்டும்?" என்றான் சூரியா. "அப்படிச் சொல்லாதேயும், ஓய் சூரியநாராயண ஐயரே. நேதாஜி போஸ் மலாய் நாட்டில்தானே சுதந்திர இந்திய சர்க்காரை ஸ்தாபித்திருக்கிறாராம்? அப்புறம், ஜயப்பிரகாச நாராயணன் நேபாளத்திலோ திபெத்திலோ இந்தியாவின் சுதந்திரத்தை ஸ்தாபித் திருப்பதாகச் சொல்கிறார்கள்! அதெல்லாம் பொய்யா?" "உண்மையில் இந்தியாவின் சுதந்திரம் ஆமத்நகர் சிறைச்சாலையில் காந்தி மகாத்மா, நேருஜி முதலிய தலைவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது!" என்றான் அமரநாத். "சூரியநாராயண ஐயரே! அமரநாத் சொல்வதை நீர் ஒத்துக் கொள்கிறீரா?" என்றார் தாமோதரம்பிள்ளை. "மாமா! என்னைச் சூரியா என்று அழைத்தால்தான் இனிமேல் பதில் சொல்வேன். "சரி அப்பா, சூரியா! இப்போது சொல்லு! இந்தியாவுக்குச் சுதந்திரம் எந்த வழி மூலமாக வரப் போகிறதென்று நினைக்கிறாய்?" என்று தாமோதரம்பிள்ளை கேட்டார். "சொல்ல முடியாது மாமா! எந்த வழியினாலும் வரும்; எல்லா வழியி னாலும் வரும். ஆனால் வரும்போது அதைக் கைப்பற்ற ஜனங்கள் தயாராயிருக்க வேண்டும். இதற்கு நம்முடைய ஜனங்களைத் தயார் செய்வது தான் இப்போது நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை..."

"சுதந்திரத்துக்கு நம்முடைய ஜனங்களைத் தயார் செய்கிறதா? சூரியா! அது ஒருநாளும் முடியாத காரியம். நம்முடைய ஜனங்களைச் சுதந்திரத்துக்குத் தயார் செய்ய வேண்டுமானால் அதற்கு வழி என்ன தெரியுமா? ஜப்பான்காரன் படையெடுத்து வந்து இந்தியாவைப் பிடித்து ஒரு பத்து வருஷமாவது ஆட்சி நடத்த வேண்டும். நம்ம ஜனங்களுக்கு ஜப்பான்காரன் தான் சரி. அவன் உச்சிக்குடுமிகளையெல்லாம் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிச் சாதி வித்தியாசம், மத வித்தியாசம் எல்லாவற்றையும் அடியோடு ஒழிக்க வேண்டும். அரிசியும் பருப்பும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் சவுக்கினால் நாலு அடி அடித்து மாமிசமும் மீனும் சாப்பிடச் செய்ய வேண்டும். பத்து வருஷம் இப்படி ஜப்பானிய ஆட்சியிலே இருந்தால் இந்தியா சுதந்திரத்துக்கு லாயக்காகும்! என்ன சொல்கிறாய், சூரியா!" "நான் அதை ஒப்பவில்லை; ஜப்பான் ஆட்சியில் பத்து வருஷம் இருந்தால் அதற்குப் பிறகு இன்னும் 140 வருஷம் ஜப்பான் ஆட்சியிலே இருக்க நேரிடும். ஆனால் ஜப்பானியர்கள் அவ்வளவு மூடர்கள் என நான் நினைக்கவில்லை. இந்தியாவைத் தாங்கள் ஜயிப்பதற்குப் பதிலாக, நேதாஜி சுபாஷ்போஸுக்கு உதவி செய்து அவரைக் கொண்டு இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டவே பார்ப்பார்கள். இந்தியாவை ஜயித்து ஆள்வதைக் காட்டிலும் இந்தியாவைச் சிநேகமாக வைத்துக் கொள்வதுதான் ஜப்பானுக்கு அனுகூலம்." "ஜப்பானுக்கு எது அனுகூலம் என்று உமக்குத் தெரிந்திருக்கிறது, ஓய்! அது ஜப்பானுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே?

நாய் குரைத்ததைப் பார்த்து ஒருவன் பயப்பட்டானாம். 'குரைக்கிற நாய் கடிக்காது' என்கிற பழமொழி தெரியாதா? என்று இன்னொருவன் சொன்னானாம். 'பழமொழி எனக்குத் தெரியும்; ஆனால், அந்த நாய்க்குத் தெரிந்திருக்க வேண்டுமே!' என்றானாம் பயந்த பேர்வழி. அந்த மாதிரி, நேதாஜிக்கு உதவி செய்வதின் அனுகூலத்தை ஜப்பான் உணர்ந்திருக்க வேண்டுமே?" "நேதாஜி படையில் இதுவரை ஐம்பதினாயிரம் வீரர்கள் சேர்ந்திருக்கிறார்களாம். ஜப்பான்தான் ஆயுதம் கொடுத்து உதவியிருக்கிறதாம்!" என்றார் அமரநாத். ஐம்பதினாயிரம் வீரர்கள் என்றால் அவ்வளவு அதிகமா? அவர்களைக் கொண்டு இந்தியா தேசத்தையே பிடித்துவிட முடியுமா?" என்றார் தாமோதரம்பிள்ளை. "நேதாஜி ஐம்பதினாயிரம் பேரோடு வந்தால் இந்தியாவில் அவருடன் சேர்வதற்கு ஐம்பது லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்!" என்றான் சூரியா. "வங்காளத்தில் மட்டுமே ஐம்பது லட்சம் பேர் சேர்வார்கள். கல்கத்தாவெல்லாம் ஓயாமல் இதைப்பற்றியே பேச்சாக இருக்கிறது" என்றான் அமரநாத். "ஐம்பது லட்சம் பேர் சேரட்டும்; ஐந்து கோடிப் பேர் வேணுமானாலும் சேரட்டும். நேதாஜி புது டில்லிக்கு வந்து சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளட்டும், நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால் அரசனை நம்பிப் புருஷனைக் கைவிடுகிற காரியம் மட்டும் உதவாது. நேதாஜி எப்போதோ வரப்போகிறார் என்பதற்காக இப்போது இங்கே சில தறிதலைகள் 'ஸாபொடாஜ்' வேலையில் இறங்குகிறார்களே, அது சுத்த முட்டாள்தனம்.

ஜப்பான் வருகிறவரையில் காத்திருப்பது தானே! அதற்குள்ளே ரயிலைக் கவிழ்க்கிறேன், பாலத்தை உடைக்கிறேன் என்று ஆரம்பிக் கிறார்களே! 'ஸாபொடாஜ்' வேலைகள் அரசாங்கத் துரோகம் மட்டுமல்ல, பொது ஜனத் துரோகம். நான் ஜட்ஜாயிருந்தால் அப்படிப்பட்ட காரியம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிப்பேன். "இவ்விதம் தாமோதரம்பிள்ளை சொல்லி வந்த போது சூரியாவின் முகத்தில் ஒரு மாறுதல் காணப் பட்டது. மலர்ந்திருந்த அவன் முகம் சட்டென்று சுருங்கிற்று. இந்த மாறுதலை அமரநாத் கவனித்தான். அமரநாத் கவனித்தான் என்பதைச் சூரியாவும் தெரிந்து கொண்டான். தெரிந்து கொண்டதும் அமரநாத்தின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். சூரியாவின் கண்கள் ஏதோஒரு உறுதியை அமரநாத்தினிடம் எதிர்பார்த்ததாகத் தோன்றியது. அமரநாத்தின் கண்கள் அந்த உறுதியைச் சூரியாவுக்கு அளித்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மூன்றாம் அத்தியாயம்

ஆண்டு நிறைவில் அடிதடி

சிரஞ்சீவி பாலசுப்பிரமணியன் ஆண்டு நிறைவுக் கலியாணம் மேளதாளத்துடன் சிறப்பாக ஆரம்பமாயிற்று. கலியாண வீட்டில் எல்லாரும் வெகு உற்சாகமாக இருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் சூரியாவின் எதிர்பாராத வருகைதான். நெடுநாளாகப் பாராத பிள்ளையைப் பார்த்துக் கிட்டாவய்யரும், அவருடைய மனைவியும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள். லலிதாவின் குதூகலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய தில்லை. தன்கணவன் சிறைச்சாலையில் இருப்பதைக் கூட அவள் அன்றைக்கு மறந்து கலியாண ஏற்பாடுகளில் உல்லாசமாக ஈடுபட்டு ஓடியாடிக் கொண்டிருந்தாள். லலிதாவின் மாமனார் ஆத்மநாதய்யருக்கு, சூரியாவின் வருகை காரணமாக எதிர் வீட்டுத் தாமோதரம்பிள்ளையுடன் மறுபடியும் பேச்சுவார்த்தை தொடங்கியது பற்றி மிகவும் சந்தோஷம் உண்டாயிற்று. சூரியாவுக்கும் அன்றைக்கு என்றுமில்லாத உற்சாகம் ஏற்பட்டிருந்தது. அப்பா அம்மா முதலியவர்கள் தன்னை எப்படி வரவேற்பார்களோ என்று அவன் மனத்தில் ஏற்பட்டிருந்த சந்தேகம் நீங்கிற்று. அமரநாதன் தன்னுடைய சிநேகத்தை மறந்து விடவில்லை என்பதும் அவனுடைய தகப்பனார் தாமோதரம்பிள்ளை கூடத் தன்னுடன் சல்லாபமாகப் பேசியதும் அவனுடைய உற்சாகம் வளரக் காரணமாயிருந்தன. இது மட்டுமா, அவனுடன் பெருஞ்சண்டை போட்ட தமையன் கங்காதரன் இன்று அன்பாகப் பேசினான். "சூரியா! அப்பாவுக்கு வயதாகிவிட்டது அவரால் பண்ணைக் காரியங்களைக் கவனிக்க முடியவில்லை. நானும் என் வேலையைவிட்டு கிராமத்துக்குப் போய்இருப்பது முடியாத காரியம். நீதான் ராஜம்பேட்டைக்குப்போய் அப்பாவுக்கு ஒத்தாசையாயிருக்க வேண்டும்.

குடியானவர்கள் விஷயத்தில் உன் இஷ்டம் போல் எப்படி வேணுமானாலும் செய்துகொள்; நான் ஆட்சேபிக்கவில்லை. ஐந்து வருஷம் அலைந்தது போதும், பேசாமல் ஊருக்கு வந்துவிடு!" என்று கங்காதரன் கூறியது சூரியாவுக்கு மிக்க ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. எல்லோரும் தன்னிடம் இவ்வளவு அன்பாக இருப்பது ஏன் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டான். எல்லாரும், "சூரியா! சூரியா!" என்று அவனைப் பிரமாதப்படுத்துவதைப் பார்த்துவிட்டு லலிதாவின் சீமந்த புத்திரி பட்டுவும் அவனுடன் அதி விரைவில் சிநேகமாகி விட்டாள். சூரியாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு வேறு யார் அழைத்தாலும் வரமாட்டேன் என்று அந்தக் குழந்தை பிடிவாதம் பிடித்தது. இதனாலெல்லாம் சூரியா வெகு நாளாக அறியாத உற்சாகத்துடன் இருந்த சமயத்தில் காலை சுமார் எட்டு மணிக்கு, வாசலில் தபால்காரன் வந்தான். தபால்கார னுடைய குரல் சூரியாவுக்கு ஏற்கனவே கேட்ட குரலாகத் தொனித்தது. உடனே லலிதா, "தெரியுமா, அண்ணா உனக்கு? தபால்கார பாலகிருஷ்ணன் இப்போது இந்த ஊருக்கு மாற்றலாகி வந்துவிட்டான். இந்த வீதிக்கு அவன் தான் இப்போது தபால் கொண்டு வந்து கொடுக்கிறான்!" என்றாள். அவள் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே, "இந்த வீட்டிலே கே.எஸ். நாராயணன் என்று யாராவது வந்திருக்கிறார்களா?" என்று பாலகிருஷ்ணன் கேட்டது சூரியாவின் காதில் விழுந்தது.

உடனே சூரியா வீட்டுக்கு வெளியே சென்று "என்ன, பாலகிருஷ்ணா! சௌக்கியமா? என்னை நினைவு இருக்கிறதா?" என்று கேட்டான். "ஓகோ! நீங்கள்தானா ஸார்? அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். என்ன சேதி! என்ன சமாசாரம்? எப்போது வந்தீர்கள்? இந்தக் கடிதம் உங்களுக்குத்தானா பார்த்துச் சொல்லுங்கள்!" என்று ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். விலாசம் தாரிணியின் கையெழுத்தில் இருப்பதைக் கண்டு சூரியா ஆவலுடன் அதை வாங்கி, "ஆமாம், எனக்குத் தான்!" என்றான். "ஓகோ! கே.சூரிய நாராயணய்யர் என்ற பெயரை கே.எஸ். நாராயணன் என்று சுருக்கிக் கொண்டீர்களாக்கும்! நினைத்தேன்; நினைத்தேன். லலிதா அம்மாளுக்குக் கூட ஒரு கடிதம் இருக்கிறது, அதையும் நீங்களே..." என்று சொல்வதற்குள், லலிதா அங்கு வந்து சேர்ந்தாள். "இந்தாங்க அம்மா உங்களுக்கு ஒரு கடிதம். குழந்தைக்கு இன்றைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம் போலிருக்கிறது. ராஜம் பேட்டையிலே நடந்த கலியாணம் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது!" என்று சொல்லிக்கொண்டே பாலகிருஷ்ணன் லலிதாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். பிறகு சூரியாவைப் பார்த்து, "ஸார்! மதகடியில் நாம் சண்டை போட்டோ மே ஞாபகம் இருக்கிறதா? கடிதத்தை நான் பிரித்துப் பார்த்துவிட்டேன் என்று கோபித்துக் கொண்டீர்களே?" என்றான். "அதைப்பற்றி இப்போது என்ன? எந்தக் காலமோ நடந்தது!" என்று சொன்னான் சூரியா. "அதற்காகச் சொல்லவில்லை; இப்போது உங்களிடம் கொடுத்தேனே, அந்தக் கடிதத்தை நான் பிரித்துப் பார்க்கவில்லை என்பதற்காகத் தான் சொன்னேன் தெரிகிறதா?"

சூரியா உடனே சந்தேகத்துடன் தன் கையிலிருந்த கடிதத்தை முன்னும் பின்னும் திருப்பி உற்றுப் பார்த்தான். பால கிருஷ்ணன் புன்னகையுடன், "என்ன, ஸார்! பிரித்துப் பார்த்திருக்கிறதா!" என்று கேட்டான். "இல்லை" என்றான் சூரியா. "அதற்காகத் தான் சொன்னேன்; ஒருவேளை பிரித்துப் பார்த்திருந்தாலும் பிரித்தது நான் இல்லை. பழைய ஞாபகத்தை வைத்துக்கொண்டு என் பேரில் சந்தேகப்படாதீர்கள்; தெரிகிறதா? லலிதா அம்மா! உங்கள் கடிதத்தையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை. மிஸ்டர் சூரியா பெரிய சந்தேகப்பிராணி ஆயிற்றே! அவர் என் பேரில் சந்தேகப்படக் கூடாது! நான் போய் வரட்டுமா?" "போஸ்டுமேன்! மத்தியானம் இங்கே வந்து சாப்பிட்டுவிட்டுப் போகலாமே?" என்றாள் லலிதா. "அந்தக் காலம் மலையேறிப் போச்சு; இப்போ எனக்கும் குடும்ப பாரம் சுமந்திருக்கிறது. மத்தியானம் வீட்டுக்குச் சாப்பிடப் போகாவிட்டால் நல்ல டோ ஸ் கிடைக்கும். சாப்பாடு கிடக்கிறது அம்மா! மனது நல்ல மனதாயிருக்க வேண்டும் அவ்வளவுதான். மிஸ்டர் சூரியா! உங்கள் கடிதத்தை நான் பிரித்துப் பார்த்ததாக எண்ணிக் கொள்ள வேண்டாம், தெரிகிறதா? என்ன லலிதா அம்மா, நான் சொல்கிறது என்ன?" என்று சொல்லிக் கொண்டே பாலகிருஷ்ணன் நடையைக் கட்டினான். அவன் கொஞ்ச தூரம் போனதும் சூரியா லலிதாவைப் பார்த்து, "பாலகிருஷ்ணனுடைய கிறுக்கு முன்னைவிட அதிகம் போலிருக்கிறதே? இப்படி உளறுகிறானே?" என்றான்.

"அவன் ஒன்றும் உளறவில்லை, அண்ணா! அவனுக்குக் கிறுக்கும் இல்லை. பாலகிருஷ்ணன் சொன்னதில் அர்த்தம் உனக்குப் புரியவில்லையா?" "அவன் சொன்னதில் அர்த்தம் வேறே இருக்கிறதா?" என்று கேட்டான் சூரியா. "ஏன் இல்லை? உனக்கு இது தெரியாதது ஆச்சரியமாயிருக்கிறது. வடக்கேயெல்லாம் ஒருவேளை இந்த வழக்கம் கிடையாதோ என்னமோ? இவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து எனக்கு வரும் கடிதங்களையெல்லாம் பிரித்துப் பார்த்துவிட்டுத் தான் அனுப்புகிறார்கள்; இதற்கு 'சென்ஸாரிங்' என்று பெயராம்..." சூரியாவுக்கு 'சுருக்' என்றது, மறுபடியும் கடிதத்தை முன் பின் திருப்பிப் பார்த்துவிட்டுத் தைரியமாக, "எனக்கு வந்திருக்கும் கடிதத்தை யாரும் பிரித்துப் பார்க்கவில்லை" என்றான். "உனக்கு எப்படித் தெரியும், பிரித்துப் பார்க்கவில்லை என்று? சில கடிதங்களைப் பகிரங்கமாகப் பிரித்துப் பார்த்து மேலே 'சென்ஸார் செய்யப்பட்டது' என்று சீட்டை ஒட்டி விடுவார்களாம். இன்னும் சில கடிதங்களைப் பிரித்து தெரியாதபடி திருப்பி ஒட்டிவிடுவார்களாம். எனக்கு இரண்டு விதமாகவும் வருவதுண்டு." "உன் அகத்துக்காரர் சிறையிலிருந்து உனக்கு எழுதும் கடிதங்களை அப்படியெல்லாம் பிரித்துப் பார்த்து அனுப்பலாம். ஆனால், நான் இன்றைக்கு வந்தவன்தானே? என் கடிதத்தை எதற்காகப் பிரிக்கிறார்கள்?" "அப்படியில்லை, அண்ணா, இந்த வீட்டு மேல் விலாசம் இருப்பதால் ஒருவேளை பிரித்துப் பார்த்திருப்பார்கள். நீயும் அப்படி இலேசுபட்டவன் அல்லவே? என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறாய் அல்லவா? நமக்குப் பார்த்தால் உறை பிரிக்கப்பட்டதாகவே தெரியாது. ஆனால் பாலகிருஷ்ணனுக்குப் பார்த்தவுடனே தெரிந்து போய்விடும். அவன் சொன்னதிலிருந்து நம் இரண்டு பேருக்கும் வந்த கடிதங்களைப் பிரித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றுக்கும் கடிதத்தைப் படித்துப் பார்க்கலாம்!"

இவ்விதம் சொல்லிக் கொண்டே லலிதா உறையைப் பிரித்தாள். உள்ளேயிருந்த கடிதத்தைப் பார்த்ததும் அவளுடைய முகம் மலர்ந்தது. "இவர் தான் ஜெயிலிலிருந்து எழுதியிருக்கிறார்! குழந்தையின் ஆண்டு நிறைவு அன்றைக்குச் சரியாக வந்து சேரும்படியாக எழுதியிருக்கிறார்.அவர் மட்டும் இங்கே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? நீ வந்ததற்காக எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?" என்றாள் லலிதா. இதற்குள் உள்ளேயிருந்து அம்மா கூப்பிடும் குரல் கேட்கவே லலிதா வீட்டுக்குள் சென்றாள். சூரியாவும் தனக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் பார்த்தான். பிரிக்கும்போதே அவன் மனதிலிருந்த கலக்கம் அகன்றுவிட்டது கடிதம் எழுதியிருப்பது தாரிணி. ஸி.ஐ.டி. போலீஸுக்கு உபயோகப்படக்கூடிய எந்த விஷயமும் அவள் எழுதியிருக்கமாட்டாள். புரட்சிக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதும்போது மனிதர்களின் உண்மைப் பெயர்களைக் கூடக் குறிப்பிடுவதில்லை, எல்லோருக்கும் மாறு பெயர்கள் இருந்தன. தாரிணிக்குச் 'சரித்திரம்' என்று பெயர் சூரியாவுக்கு 'தூதன்' என்று பெயர். இப்படி யெல்லாம் முன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும்போது ஸி.ஐ.டி. பிரித்துப் பார்த்து என்ன தெரிந்து கொள்ள முடியும்? சூரியா எண்ணியது போலவே தாரிணியின் கடிதத்தில் போலீஸுக்கு உபயோகப்படக்கூடிய விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் வேறுவிதக் கவலை சூரியாவுக்குத் தரக்கூடிய விஷயம் இருந்தது. தாரிணி வெகு சுருக்கமாகச் சில வரிகள் தான் எழுதியிருந்தாள். "அத்தங்காளின் நிலைமை முன்னைவிட மோசமா யிருக்கிறது. உடம்பு, மனது ஒன்றும் சரியாயில்லை; உங்களைச் சந்திக்க விரும்புகிறாள். கூடிய சீக்கிரம் வந்து சேரவும், நீங்கள் உடனே வந்து சேராவிட்டால் ஏதாவது விபரீதமாக முடியலாம். - சரித்திரம்."

இந்தக் கடிதம் சூரியாவை ரொம்பவும் கலக்கிவிட்டது. தென்னாட்டுக்கு எந்த வேலையை முன்னிட்டு வந்தானோ அது பூர்த்தியாகி விட்டதாகச் சொல்வதற்கில்லை. ஆயினும் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பிப் போக வேண்டியது தான். ஆகா! இது என்ன தொல்லை! நல்ல அத்தங்காள் வந்து சேர்ந்தாள், தன்னுடைய வேலையையெல்லாம் கெடுப்பதற்கு! அந்த மூர்க்கன், அவளுடைய கணவன், இப்படியும் ஒரு மனிதன் உண்டா? சீதாவின் வாழ்க்கை எப்படி முடியப் போகிறதோ, தெரியவில்லையே? ஆண்டு நிறைவுக் கலியாணத்துக்காக வைதிகப் பிராமணர்களும் பந்துமித்திரர்களும் வரத் தொடங் கினார்கள். சூரியாவும் வீட்டுக்குள்ளே சென்றான், வைதிககாரியங்கள் ஆரம்பமாயின. வைதிகர்கள் வேத மந்திரங்களை ஓதினார்கள். ஸ்திரீகள் 'கௌரீ கலியாணம்' பாடினார்கள். நாதஸ்வர கோஷ்டியர் ஜாம்ஜாம் என்று முழங்கினார்கள். சூரியாவும் சற்று நேரத்தில் மேற்படி வைபவங்களில் முழுதும் மனதை ஈடுபடுத்தினான். தான் வந்த காரியத்தையும் புது டில்லி அத்தங்காளின் கஷ்டத்தையும் மறந்து விட்டான் என்றே சொல்லலாம். காலை மணி 10-30 ஆயிற்று; தாமோதரம்பிள்ளை தம்முடைய ஆபீஸ் அறையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். டெலிபோன் மணி அடித்தது; ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு பேசினார். "ஹலோ! தாமோதரம்பிள்ளை பேசுகிறது, போலீஸ் ஸ்டேஷனா? என்ன விசேஷம் - எதிர் வீட்டிலா? - ஓகோ? - நான் எதிர்வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கிறது கூடக் கிடையாதே... உங்களுக்குத் தான் நன்றாய்த் தெரியுமே?..இல்லை, நான் பார்க்கவில்லை. தெரியாது, ஒன்றுமே தெரியாது!... வாருங்கோ! வாருங்கோ! பேஷாய் வாருங்கோ! எல்லாத் தமாஷையும் என் வீட்டிலிருந்தே பார்க்கிறேன்!"

டெலிபோன் ரிஸீவரை வைத்த பிறகு தாமோதரம்பிள்ளை மேலே நோக்கியவண்ணம் இரண்டு நிமிஷம் யோசித்துக் கொண்டிருந்தார்; பிறகு, "அமரநாத்!" என்று அழைத்தார். அமரநாத் அறைக்குள்ளே வந்தான். "எங்கேயோ புறப்படுகிறாப்போல் இருக்கே?" என்றார். "ஆம், அப்பா! நானும் சித்ராவும் எதிர்வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம் போகலாமல்லவா!" "அவசியம் போகலாம், அமர்நாத்! நீ எதிர் வீட்டுக் கலியாணத்துக்குப் போவதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை ஆனால் ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்." "என்னத்தை யோசிக்கறது! நானும் சித்ராவும் கட்டாயம் போகத் தான் போகிறோம். நியாயமாய்ப் பார்த்தால் நீங்கள் கூட வரலாம். எத்தனை நாளைக்கு மனதிலே துவேஷத்தை வளர விட்டுக் கொண்டிருக்கிறது!" "கூடாது, கூடாது! துவேஷத்தை வளரவிடவே கூடாது. உண்மையில் நான் கூடக் கலியாணத்திற்கு வருவதாகத் தான் இருந்தேன் அதற்குள் ஒரு தடை குறுக்கிட்டிருக்கிறது..?" "அது என்ன தடை, அப்பா?" "உன் சிநேகிதன் சூரியாவைப் பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்கு ஏதோ தகவல் வந்திருப்பது போலத் தோன்றுகிறது...?" "என்ன? என்ன?" என்று திடுக்கிட்டுக் கேட்டான் அமர்நாத். "ஆமாம்; சூரியாவைப்பற்றி ஏதோ சி.ஐ.டி. தகவல் வந்திருக்கும் போலிருக்கிறது. இப்போது டெலிபோனில் டி.எஸ்.பி. என்னைக் கேட்டார். 'சூரியா என்கிற பையன் எதிர் வீட்டுக்கு வந்திருக்கிறது தெரியுமா' என்று கேட்டார்..?" "நீங்கள் என்ன சொன்னீர்கள்?"

"எனக்கும் எதிர் வீட்டுக்கும் தான் ஜன்ம விரோதமாயிற்றே?" என்றேன். 'வீட்டு வாசலில் ஒரு புதிய இளைஞனைப் பார்க்கவில்லையா?" என்று கேட்டார். அங்க அடையாளம் கூடச் சொன்னார். 'தெருவிலே நின்று வருகிறவர் போவோரையெல்லாம் பார்ப்பது தான் எனக்கு வேலையா?" என்று நான் பதிலுக்குக் கேட்டேன்." "அப்புறம்" "அப்புறம் என்ன? சீக்கிரத்தில் போலீஸார் இங்கே வரப் போகிறார்கள்? எதிர் வீட்டில் அமளி துமளிப்படும். இந்த நிலைமையில் நான் எப்படி எதிர் வீட்டுக்குப் போவது? என்னை அங்கே பார்த்தால் டி.எஸ்.பி.யிடம் சொன்னது பொய் என்று ஏற்பட்டுவிடும் அல்லவா!" "அப்பா! இப்போது என்ன செய்யலாம்? சூரியாவுக்கு ஓர் எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா?" "அது உன் இஷ்டம் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்; அப்புறம் உன் உசிதம் போலச் செய். ஒரு விஷயம், எச்சரிக்கை செய்வதாயிருந்தால் உடனே செய்ய வேண்டும். இன்னும் பதினைந்து நிமிஷத்தில் போலீஸ் படை இங்கே வந்து விடும். சூரியாவை அரஸ்டு செய்து கொண்டு போனால், அவன் அறியாத உண்மைகளையெல்லாம் சொல்லும்படி செய்வார்கள்... நம்ஊர்ப் போலீஸ்காரர்கள் இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்வார்கள் என்று நீ கனவிலே கூட எண்ணியிருக்க முடியாது; தெரிகிறதா?"

"அப்பா! நீங்கள் சொல்லும்போதே எனக்கு மயிர்க்கூச்சல் உண்டாகிறது. ஆனால் சூரியாவுக்கு இப்போது வெறுமனே எச்சரிக்கை செய்து என்ன பிரயோசனம்? இன்னும் பதினைந்து நிமிஷத்திலே போலீசார் வந்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்கள். அதற்குள் அவன் எப்படித் தப்பிக்க முடியும்? எங்கே போய் ஒளிந்து கொள்வான்!" "இதையெல்லாம் என்னைக் கேட்டு என்ன பயன்? நீயும் உன்னுடைய சிநேகிதனும் எப்படியாவது போங்கள். திடீரென்று அவன் எங்கே போய் ஒளிந்து கொள்வான்? அக்கம் பக்கத்தில் யாராவது உதவி செய்தால் தான் தப்பித்துக் கொள்ளலாம்." "அப்பா! மன்னித்துக் கொள்ளுங்கள்; சூரியாவுக்கு இந்த வீட்டில் அடைக்கலம் கொடுக்கலாமா?" "மறுபடி என்னைக் கேட்கிறாயே? இந்த வீட்டில் எனக்கு எவ்வளவு பாத்தியதை உண்டோ , அவ்வளவு உனக்கும் உண்டு; உன்னிஷ்டம் போல் செய். மேலே மாடியில் பின்கட்டு அறையில் போட்டுப் பூட்டிச் சாவியை வேணுமானாலும் காணாமல் அடித்துவிடு! ஆனால் உன் இஷ்டம் என்னை இந்த விஷயமாக ஒன்றுமே கேட்க வேண்டாம்! தெரிந்ததா!" மறு நிமிடம் அமரநாத் வெளியேறி எதிர் வீட்டுக்குச் சென்றான். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் சூரியாவைக் கூட்டிக் கொண்டு திரும்பினான். மேல் மச்சுக்கு அழைத்துப் போய்த் தகப்பனார் சொற்படி பின்கட்டு அறையில் அடைத்துக் கதவைப் பூட்டினான்.

சில நிமிஷத்துக்கெல்லாம் வீதியில் தட தட தட தட என்று மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. மோட்டார் சைக்கிளுடன் ஜீப் ஒன்றும் வந்தது. வீதியின் இரு புறத்திலிருந்தும் போலீஸார் மார்ச் செய்து கொண்டு வந்தார்கள். கைதிகளைப் போட்டு அடைத்துக் கொண்டு போகும் இரும்புக் கூண்டு போட்ட போலீஸ் வண்டி ஒன்றும் வந்தது. ஆத்மநாதய்யரின் வீட்டு வாசலிலும் கொல்லையிலும் போலீஸ் ஜவான்கள் நின்று கொண்டார்கள். அப்புறம் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. வைதிகப் பிராமணர்கள் மந்திரம் சொல்வதை நிறுத்திவிட்டு வெளியில் ஓடிவந்தார்கள். அவர்களையெல்லாம் குண்டாந்தடியால் அடித்துப் போலீஸார் வீட்டுக்குள்ளே விரட்டினார்கள். "யாரையும் வெளியில் விட வேண்டாம்" என்று ஒரு பெரும் அதிகாரக் குரல் உத்தரவிட்டது. ரேழியில் உட்கார்ந்திருந்த நாதஸ்வரக்காரர்கள் வெளியேறப் பார்த்தார்கள். அதன் பயனாகத் தவுல் வாத்தியம் இரண்டு பக்கமும் படார் என்று கிழிந்தது. நாதஸ்வரக் குழாயும் ஒத்து வாத்தியமும் நொறுங்கின. ஜாலராத் தாளங்கள் சுக்குநூறாயின. போலீஸ் உத்தியோகஸ்தர்கள் வீட்டுக்குள்ளே பிரவேசிக்கப் பார்த்தபோது கிட்டாவய்யர் வந்து வாசற்படியில் நின்றார். தன்னுடைய பிள்ளையைப் பிடிக்கத் தான் வந்திருக்கிறார்கள் என்று ஒருவாறு தெரிந்து கொண்டார் போலும். பையன் வெளியேறி விட்டான் என்பது அவருக்குத் தெரியாது. ஆகையால் கையைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக நின்று, "உள்ளே வைதிக காரியம் நடக்கிறது; ஒருவரும் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் என் செத்த உடம்பை மிதித்துக் கொண்டு தான் போகவேண்டும்" என்றார். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் மண்டையில் ஒரு அடி, கழுத்தில் ஒரு கல்தா.

ஆத்மநாதய்யர் முன் வந்து, "ஏன், ஸார், இவ்வளவு தடபுடல் செய்கிறீர்கள்? சாவதானமாகப் பரிசோதனை செய்து யார் வேண்டுமோ அவரைக் கொண்டு போங்கள் யாரும் தடுக்கவில்லை. வீணாகப் பெண் பிள்ளைகளைப் பயப்படுத்த வேண்டாம்" என்றார். ஆத்மநாதய்யருடைய சாந்தமான பேச்சின் பயனாக அவருக்கு மண்டையில் இரண்டு அடி கிடைத்தது. அவ்வளவு தான்; போலீஸார் தடதட என்று வீட்டுக்குள்ளே பிரவேசித்தார்கள். முன்கட்டிலும் பின்கட்டிலும் மேல் மாடியிலும் ஒவ்வொரு அறையாகப் புகுந்து தேடினார்கள். காலில் தட்டுப்பட்டதை எல்லாம் உதைத்துத் தள்ளினார்கள். கையில் அகப்பட்டதை எல்லாம் உடைத்து நொறுக்கினார்கள். எதிரில் தட்டுப்பட்டவர்களைப் பிடித்துத் தள்ளினார்கள்; அல்லது தடியால் அடித்தார்கள். படுக்கையறைக்குள்ளே புகுந்து மெத்தை தலையணைகளைப் பிய்த்து எறிந்தார்கள். சாமான் அறைக்குள்ளே புகுந்து சட்டி பானைகளை உடைத்தார்கள். சமையல் கட்டுக்குள்ளே பிரவேசித்து அடுப்பிலே கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் பாத்திரத்தில் குண்டாந்தடியை விட்டுத் துளாவிப் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் தேடி வந்த ஆசாமி எங்கேயும் அகப்படவில்லை.

வீட்டு ஸ்திரீகள் இன்னது செய்வது என்று தெரியாது அழுது கொண்டே அங்குமிங்கும் ஓடினார்கள்; குழந்தைகள் 'கோ' என்று கதறினார்கள். இதற்குள் ஒருவாறு சமாளித்துக்கொண்டு எழுந்து வந்து கிட்டாவய்யர், "எதற்காக எல்லாரும் இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்? எல்லோரும் பேசாமலிருங்கள்; நடக்கிறது நடக்கட்டும்; பகவான் ஒருவர் இருக்கிறார்" என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். முதலில் போலீஸார் தாங்கள் தேடி வந்த ஆசாமி கங்காதரனோ என்று அவனைப் பிடித்து நாலு அடி கொடுத்தார்கள். ஆனால் அவனுடைய தலையில் வைத்திருந்த கட்டுக்குடுமி, புரட்சிக்காரன் அவன் இல்லை என்பதை நிரூபித்தது பிறகு அவனை விட்டுவிட்டார்கள். அநாவசியமாக அடிபட்ட கங்காதரன், "எனக்கு அப்போதே தெரியும், நான் சொன்னால் யார் கேட்கிறார்கள். அந்தக் காலிப் பயலை வீட்டுக்குள்ளேயே விடக்கூடாது என்று சொன்னேன், கேட்டீர்களா? அருமைப் பிள்ளை என்று செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விட்டீர்கள். அவன் தான் சனீசுவரனுடைய அவதாரம் ஆயிற்றே? வரும்போதே சங்கடத்தையும் கூட அழைத்துக் கொண்டு வருவானே?" என்று இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தான். போலீஸார் வீடு முழுவதும் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தும் பயனில்லை; தேடிய ஆசாமி அகப்படவில்லை. மேலே, கீழே, அறைக்குள்ளே,அலமாரிக் குள்ளே, அரிசி மூட்டைக்குள்ளே, சாம்பார் பாத்திரத்துக்குள்ளே, மெத்தை தலையணைக்குள்ளே, எங்கேயும் அவனைக் காணவில்லை. தரையிலே சுரங்க அறை ஏதேனும் இருக்குமோ என்று சில போலீஸ் ஜவான்கள் குண்டாந்தடியால் தட்டிக் கூடப் பார்த்தார்கள்; அதிலும் பயனில்லை. அரை மணி நேர அமர்க்களத்துக்குப் பிறகு போலீஸ்காரர்களுக்குத் திரும்பி போக உத்தரவு பிறந்தது.

தாமோதரம்பிள்ளை தம்முடைய வீட்டு வாசலில் வந்து நின்று எதிர்வீட்டில் நடந்த அமர்க்களத்தை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். பார்க்கப் பார்க்க, அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. வந்த காரியம் பயன்படாமல் போலீஸ்காரர்கள் வெளியில் வந்ததையும் அவர் பார்த்தார். அவர் தம்முடைய சிநேகிதர் டி.எஸ்.பி.யின் அருகில் சென்று, "இன்று நீங்கள் செய்த காரியம் எனக்கு வெட்கத்தை உண்டாக்குகிறது. இந்தப் பஞ்சாங்கப் பிராமணர்களை இப்படித் தடியால் அடித்ததில் உங்களுக்கு என்ன திருப்தி? இந்தச் சூரத்தனத்தை எல்லாம் ஜப்பானியரிடம் அல்லவா காட்ட வேண்டும்!" என்றார். "மிஸ்டர் பிள்ளை, நீங்கள் விஷயம் தெரியாமல் பேசுகிறீர்கள். 'ஸாபோடாஜ்' கோஷ்டியைச் சேர்ந்த ஒரு பையன் இந்த வீட்டுக்கு வந்திருந்ததாகத் தகவல் கிடைத்தது. காவேரிப் பாலத்தை வெடி வைத்து இடிக்கச் சதியாலோசனை நடந்திருக்கிறது.." "ஆமாம்; காவேரிப் பாலத்தை இடித்து விட்டார்கள், போங்கள், ஸார்! அவர்களுடைய மூளையைச் சொல்கிறதா? உங்களுடைய அக்கிரமத்தைச் சொல்கிறதா? இப்படியெல்லாம் செய்துதானா இராஜாங்கத்தினிடம் விசுவாசத்தை வளர்த்து விட முடியும்?...சரி...தேடிய பையன் அகப்பட்டானா?" "பையன் இந்த வீட்டில் இல்லை ஆனால் இந்த டவுனிலே தான் இருக்கிறான் எப்படியும் பிடித்து விடுவோம்?" என்றார் டி.எஸ்.பி. மோட்டார் சைக்கிளும், ஜீப்பும், குண்டாந்தடிப் போலீஸும் ஏக ஆர்ப்பாட்டத்துடன் அவ்விடத்தி லிருந்து புறப்பட்டுச் சென்றன. ஆத்மநாதய்யரின் வீட்டுக்குள்ளே லலிதாவின் விம்மல் சத்தம் கேட்டது. அத்துடன் அவளுடைய இரண்டு குழந்தைகளின் அழுகைச் சத்தமும் கலந்தது. இவ்வாறு சிரஞ்சீவி பாலசுப்பிரமணியனின் ஆண்டு நிறைவுக் கலியாணம் சிறப்பாக முடிவடைந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நான்காம் அத்தியாயம்

பால சந்நியாசி

இரவு மணி பத்து அடித்தது வானத்தைக் கருமேகங்கள் மூடிக்கொண்டிருந்தன. பொச பொசவென்று மழைத் தூற்றல் போட்டுக் கொண்டிருந்தது. சிலுசிலுவென்று குளிர்ந்த காற்று அடித்துக் கொண்டிருந்தது. ஆத்மநாதய்யர் வீட்டுக்குள் சந்தடி இன்னும் அடங்கவில்லை. ஆனால் தாமோதரம்பிள்ளையின் வீட்டில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு விட்டன. வீட்டில் இருளோடு நிசப்தம் குடிகொண்டிருந்தது. வீட்டுக்குப் பக்கத்துச் சந்திலிருந்து ஒரு மோட்டார் வண்டி வந்து தாமோதரம்பிள்ளை வீட்டு வாசலில் நின்றது. அடுத்த நிமிஷம் வீட்டுக் கதவு திறந்தது. இருளடைந்திருந்த வீட்டின் உட்புறத்திலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டு வந்தது. அந்த உருவத்தின் மீது மங்கலான வீதி விளக்கின் ஒளி விழுந்த போது, இடுப்பில் காஷாயம் தரித்துக் கையில் கமண்டலம் ஏந்திய பால சந்நியாசியின் உருவம் என்று தெரிய வந்தது. அந்தப் பால சந்நியாசி திண்ணை ஓரத்தில் நின்று வீதியின் இருபுறமும் எதிர்ப் பக்கமும் கவனித்துப் பார்த்தார். ஒருவரும் இல்லை என்று அறிந்ததும் மோட்டார் வண்டிக்குள் திறந்திருந்த கதவின் வழியாகப் பாய்ந்து ஏறினார். மறுகணம் வண்டி சத்தம் செய்யாமல் புறப்பட்டது. சிறிது நேரம் வரையில் வண்டிக்குள்ளேயும் நிசப்தம் நிலவியது. தேவபட்டணத்துத் தெருக்களைத் தாண்டி அப்பாலிருந்த சாலையில் வண்டி பிரவேசித்ததும், வண்டி ஓட்டிய அமரநாத், "அப்பா! பிழைத்தோம், இனிப் பயமில்லை!" என்றான். "எனக்கு என்னமோ இன்னும் கொஞ்சம் பயமாகத்தானிருக் கிறது. இந்த மோட்டாரில் இருக்கிற வரையில் எனக்குப் பயந்தான் இறங்கிவிட்டால் கவலையில்லை. எனக்காக நீ இவ்வளவு பெரிய அபாயத்துக்கு உட்பட எண்ணியதை நினைத்தால்...?"

"இந்த தேசத்திலேயே நீ ஒருவன் தான் எதற்கும் துணிந்த வீராதி வீரன் என்று எண்ணம் போலிருக்கிறது!" "அப்படியில்லை, அமரநாத், எந்த நிமிஷத்திலும் கைதியாவதற்குத் தயாராகவே நான் இருந்து வருகிறேன். என்றைக்காவது ஒரு நாள் கைதியாகியே தீரவேண்டும். உன் விஷயம் அப்படியல்ல எனக்காக நீ கஷ்டப்பட வேண்டி நேர்ந்தால்..." "உனக்காக நான் ஒன்றும் கஷ்டப்பட வில்லை. உனக்காக கஷ்டப்பட்டவர்கள் உன் தகப்பனார், தமையன், உன் தங்கையின் மாமனார் முதலியவர்கள். எல்லாரும் இன்றைக்குச் செம்மையாக அடி வாங்கினார்கள். உன் தங்கையும் அம்மாவும் பட்ட வேதனை கொஞ்சமல்ல. அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதற்குள்ளே எனக்குப் பிராணன் போய்விட்டது." "அதை நினைத்தால் எனக்கு அவமானமாயிருக்கிறது. என்றைக்காவது ஒரு நாள் அவர்களுடைய முகத்தில் விழிக்க வேண்டி நேர்ந்தால், என்ன சமாதானம் சொல்வேன்? அவர்களை அடிபடும்படி விட்டுவிட்டு நான் தப்பித்துக் கொண்டதைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்...?" "ஒன்றும் நினைக்க மாட்டார்கள் எப்படியாவது நீ தப்பித்துக் கொண்டாயே என்று சந்தோஷப்படுவார்கள். இப்போதும் கூட உன் கதி என்ன ஆயிற்றோ என்று தான் அவர்களுக்குக் கவலை. நீ நிச்சயமாய்த் தப்பித்துக் கொண்டாய் என்று தெரிந்தால் அவர்களுடைய கவலை நீங்கிவிடும்." "என்ன தான் இருந்தாலும் நான் இன்று செய்தது ரொம்ப அவமானமான காரியந்தான். உன்னுடைய வற்புறுத்தலைக் கூட நான் பொருட்படுத்தி யிருக்க மாட்டேன். அவர்களை அடிபட விட்டு நான் ஒளிந்து கொண்டிருக்க என் மனம் இடம் கொடுத்திராது. டில்லியில் இருந்து என் அத்தங்கா சீதாவைப் பற்றிக் கடிதம் வரவில்லையென்றால் நானே போலீஸ் அதிகாரிகளிடம் சென்று என்னை ஒப்புக் கொடுத்திருப் பேன்.""அதனால் யாருக்கும் எந்தவிதச் சந்தோஷமும் ஏற்பட்டிராது. உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மன வேதனைப் பட்டிருப்பார்கள், என் தகப்பனார் உள்படத்தான்!"

"தாமோதரம்பிள்ளை என் விஷயத்தில் காட்டிய அனுதாபத்தை நினைத்தால் தான் எனக்குப் பரம ஆச்சரியமா யிருக்கிறது." "அதற்குக் காரணம் என்னவென்று உனக்குத் தோன்றுகிறது? ஊகித்துச் சொல், பார்க்கலாம்!" "காரணம் வேறு என்ன இருக்க முடியும்? நான் உன்னுடைய சிநேகிதன் என்ற காரணந்தான்." "அதெல்லாம் இல்லை; இங்கிலீஷ்காரன் சிங்கப்பூரில் அடிபட்டதி லிருந்து நம்மவர்கள் எல்லாருடைய மனமும் மாறிப் போயிருக்கிறது. இந்த இங்கிலீஷ் ராஜாங்கம் எப்படியும் இந்தியாவை விட்டுப் போய்விடப் போகிறது என்று சிறு பிள்ளைகள் முதல் வயது முதிர்ந்த கிழவர்கள் வரையில் எல்லாரும் நம்புகிறார்கள்..." "அதற்கும் உன்னுடைய தகப்பனார் எனக்குச் செய்த உதவிக்கும் என்ன சம்பந்தம்?" "சம்பந்தம் இருக்கிறது; நாளைக்கு இங்கிலீஷ்காரன் இந்தியாவை விட்டுப் போய்விட்டால், அடுத்தாற்போல் அதிகாரத்துக்கு யார் வருவார்கள்? உன்னைப் போன்ற காங்கிரஸ் புரட்சிக் காரர்கள் ஒருவேளை வந்தாலும் வருவீர்கள். எல்லாவற்றுக்கும் 'கப்பலில் பாதிப் பாக்குப் போட்டு வைக்க லாம்' என்று கருதி தான் அப்பா உன்னைத் தப்புவிக்க முன் வந்தார்." "அது உண்மையானால், உன் தகப்பனாரின் பாதிப் பாக்கு நஷ்டந்தான். என்னைப் போன்ற ஓட்டைக் கப்பலில் பாக்குப் போட்டு என்ன பிரயோஜனம்? ஆனால், நீ சொல்லும் காரணத்தை நான் ஒரு நாளும் ஒப்புக் கொள்ள மாட்டேன். உன்னுடைய சிநேகிதன் என்ற காரணத்துக்காகவும் என் பேரில் உள்ள பிரியத்தினாலுந்தான் இந்தக் காரியம் செய்திருக்க வேண்டும்." "போனால் போகட்டும், நீ சொல்கிறபடி வைத்துக் கொள்ளலாம். உன் அத்தங்காளின் விஷயம் என்னவோ சொன்னாயே?" "என் தங்கை லலிதாவைப் பார்க்க வந்த மாப்பிள்ளை தனக்குச் சீதாவைத் தான் பிடித்திருக்கிறது என்று சொல்லி அவளைக் கலியாணம் செய்து கொண்டானல்லவா? அந்தக் காதல் கலியாணம் பற்றி அப்போது நாமெல்லோரும் பிரமாதமாய்ப் பேசிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா? உண்மையில் அந்தக் கலியாணம் பெரிய துரதிர்ஷ்டமாய் முடிந்திருக்கிறது. அவர்களுடைய இல்வாழ்க்கையில் சந்தோஷமே கிடையாது அமரநாத்! ஓயாமல் சண்டை தான்."

"நீ வீணாக மிகைப்படுத்திக் கூறுகிறாய், சூரியா! நம்முடைய தேசத்தில் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது தம்பதிகள் ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லை என்று அர்த்தமா? நானும் சித்ராவும் தினம் டஜன் தடவை சண்டை போட்டுக் கொள்கிறோம்..." "உங்களுடைய விஷயம் வேறு, அமரநாத்! உங்களைப் போன்ற தம்பதிகள் உலகத்தில் வெகு அபூர்வம். உங்களுடைய சண்டையெல்லாம் காதலர்களின் சண்டை; வேடிக்கைச் சண்டை. சீதா - சௌந்தரராகவனுடைய விஷயம் அப்படியல்ல பூனையும் எலியும் போல அவர்களுடைய வாழ்க்கை நடந்து வருகிறது." "சௌந்தரராகவன் சீமைக்குப் போய் வந்தவன்; பெரிய சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவன். ஆகையால் தன் மனைவி ஆங்கில தோரணையில் நவநாகரிகமாக வாழ வேண்டும் என்று நினைக்கலாம். உன் அத்தங்காள் அதற்குச் சம்மதியாமல் இருக்கலாம். எனக்குத் தெரியும்; எத்தனையோ ஐ.சி.எஸ். காரர்கள் இந்தக் காரணத்துக்காகவே மனைவியைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்." "சீதா விஷயத்தில் அந்தக் காரணம் சொல்ல முடியாது அமரநாத்! முதலிலே ஒருவேளை கொஞ்சம் தயங்கியிருக்கலாம். பிற்பாடு சௌந்தரராகவன் நாகரிக ஏணியில் ஒரு படி ஏறினால் சீதா இரண்டு படி ஏறினாள். எனக்கு கூட, 'ஐயோ! அத்தங்கா இப்படி மாறிப்போய்விட்டாளே?' என்று வருத்தமாயிருந்தது. அதனால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை சௌந்தரராகவனுடைய மூர்க்கத்தனம் மேலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது." "இப்போது தெரிகிறது, எனக்குக் காரணம். நம்மில் இங்கிலீஷ் படித்த இளைஞர்கள் கலியாணமான புதிதில் தங்களுடைய மனைவிமார் நவநாகரிகமடைந்து எல்லாருடனும் கூச்சமின்றிப் பழக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்புறம் அவர்களுக்கு இது பிடிக்காமல் போய்விடுகிறது. ஹிந்து தர்மத்தின்படி பெண்கள் அடக்கமாக இருந்தால் தான் நல்லது என்று நினைக்கிறார்கள். அப்படி ஆண் பிள்ளைகள் நினைக்கும் போது பெண் பிள்ளைகளுக்குப் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப்போகப் பிடிப்பதில்லை... நான் சொல்கிறதைக் கேள், சூரியா! அந்தத் தம்பதிகள் விஷயத்தில் நீ ஒன்றும் தலையிடாமல் இருந்துவிடு. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகப் போய்விடும்!" "அப்படி என்னால் இருக்க முடியவில்லை, அமரநாத்! வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்ட என் அத்தை இறப்பதற்கு முன்னால் தன்னுடைய அனாதைப் பெண்ணைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டாள் அதை என்னால் மறக்க முடியவில்லை!" என்றான் சூரியா.

சாலையின் இருபுறத்திலும் கழனிகளில் தண்ணீர் ததும்பி அலை மோதிக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் காவேரி நதியின் பிரவாகம். மேட்டார் வண்டி சாலை வளைவில் திரும்பும் போது நெடுந்தூரத்துக்கு மோட்டார் விளக்கின் வெளிச்சம் அடித்து நாலாபுறமும் பரவியிருந்த நீர்வளத்தைக் காட்டியது. கழனியிலும் காவேரியிலும் இலேசான மழைத் தூற்றல் விழுந்தபோது உண்டான சலசலசல சத்தம் மந்திர ஸ்தாயி சங்கீதத்தைப் போல் மனதுக்கு அமைதியை உண்டாக்கியது. நல்ல சங்கீதக்கச்சேரியின் நடுவில் அரசியல் சம்பாஷணை தொடங்கும் ரசிகர்களைப் போல் திடீர் திடீரென்று தவளைகள் உற்சாகமடைந்து வரட்டுக் கூச்சல் போட்டன. மோட்டார் வண்டியின் முன் கண்ணாடியில் விழும் மழைத் துளிகளைத் துடைக்கும் கருவிகள் டக் டக் என்ற சத்தத்தோடு தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன. "அடாடா! நீர்வளம் என்றால் இது அல்லவா நீர்வளம்? வடநாட்டில் பல பகுதிகளை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் வறண்ட பிரதேசங்கள், இந்த மாதிரி நீர்வளம் எங்கேயும் கிடையாது" என்றான் சூரியா. "நீ வங்காளத் துக்கு வந்ததில்லை, சூரியா! தமிழ்நாட்டைக் காட்டிலும் நீர்வளம் நிறைந்தது வங்காளம். அதிலும் கீழ் வங்காளம் அதிக வளம் பொருந்தியது. மழைக் காலத்தில் எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயந்தான்!" என்று அமரநாத் கூறினான்.

"அப்படிப்பட்ட நீர்வளம் நிறைந்த தேசத்தில் இப்போது பஞ்சம் என்று சொல்கிறாயே?" என்றான் சூரியா. "அதுதானே வேடிக்கை! நான் சொல்லுவதை மட்டும் என்ன? பத்திரிகைகளில் நீ பார்க்கவில்லையா; வெளி ஜில்லாக்களிலிருந்து வரும் ஜனங்கள் சாலை ஓரங்களில் விழுந்து சாகிறார்கள்." "கல்கத்தா நிலைமை அப்படியிருக்கும்போது நீ மறுபடியும் அங்கே போகப் போவதாகச் சொல்கிறாயே." "போகாமல் என்ன செய்வது? உத்தியோகம் இருக்கிறதல்லவா? வங்காளத்தில் பஞ்சம் என்றால், கல்கத்தாவிலுள்ள நாற்பது லட்சம் பேரும் சாப்பாடு இல்லாமல் செத்துப் போய் விடுவார்கள் என்பதில்லை." "தெரியும், தெரியும் உண்மையில் அரிசிப் பஞ்சமே இல்லை; பணப் பஞ்சம் தான். பணம் இருந்தால் அரிசிக்குப் பஞ்சமில்லை . இருக்கிற அரிசியைச் சில சண்டாளர்கள் வாங்கிச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கொள்ளை லாபத்துக்காக ஏழை எளியவர்கள் உயிர் பலி கொடுக்கப்படுகிறது அப்படித்தானே, அமரநாத்!" "ஆம்; அப்படித்தான் இத்தகைய பேராசை பிடித்த கிராதகர்கள் நம்முடைய நாட்டில் இருக்கிறார்கள். இந்த நாட்டுக்குத் தான் நீ பூரண சுதந்திரம் வேண்டும் என்கிறாய்." "இங்கிலீஷ்காரன் எப்போது இந்த நாட்டைவிட்டு வெளியேறுகிறானோ, அப்போது இப்படிப்பட்ட தீமைகள் ஒழிந்து போய்விடும். பிரிட்டிஷ் ஆட்சியினால் வந்த கேடுகள் தானே இவையெல்லாம்?" "ஆனால், இங்கிலீஷ்காரன் இந்தியாவைவிட்டுப் போய் விடுவான் என்று நீ நம்புகிறாயா? உண்மையாகச் சொல்!" என்றான் அமரநாத். "கட்டாயம் ஒருநாள் இங்கிலீஷ்காரன் இந்த நாட்டை விட்டுப் போகத்தான் போகிறான். காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையில் நான் பிரயாணம் செய்திருக்கிறேன். அமரநாத்! வங்காளத்துக்கு மட்டும் தான் வரவில்லை. நான் போன இடத்திலே யெல்லாம் ஜனங்களுடைய மனது கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டேன். இந்தியா தேசம் ஒரு பெரிய எரிமலையாகி யிருக்கிறது. எந்தச் சமயத்தில் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்குமோ தெரியாது. ஏதாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட வேண்டியது தான்; நாற்பது கோடி ஜனங்களும் சீறி எழுந்து புரட்சி செய்யப் போகிறார்கள். அந்தப் புரட்சி நெருப்பிலே பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பஸ்பமாகப் போகிறது. அது மட்டுமா? நாட்டைப் பிடித்த எல்லாப் பீடைகளும் எரிந்து பொசுங்கிச் சாம்பலாகப் போகின்றன."

"போதும், சூரியா! போதும்! நம்மைச் சுற்றிலும் ஒரே குளிர்ச்சியாயிருக்கிறது. இருந்தாலும் உன்னுடைய பேச்சு இந்த மோட்டாருக்குள் டெம்பரேச்சரையே அதிகமாக்கிவிட்டது. எரிமலை வெடிக்கிறபோது வெடிக்கட்டும், பார்த்துக் கொள்ளலாம்... அதோ மயிலம்பட்டி ஸ்டேஷன் வந்துவிட்டது; இப்போது நாம் பிரியவேண்டும்!" என்றான் அமரநாத். சற்று தூரத்தில் விளக்குகள் மினுக்கின. ஒரு சின்னக் கட்டிடம், கைகாட்டி முதலிய ரயில்வே ஸ்டேஷன் சின்னங்கள் மங்கலாகத் தெரிந்தன. தேவபட்டணம் ஸ்டேஷனில் ரயில் ஏறுவது அபாயம் என்று அமரநாத் இந்தப் பட்டிக்காட்டு ஸ்டேஷனுக்குச் சூரியாவைக் கொண்டு விட்டான். வண்டி ஒரு மரத்தடியில் நின்றது, நல்லவேளையாகத் தூறல் குறைந்திருந்தது. சூரியா கதவைத் திறந்துகொண்டு வண்டியிலிருந்து கீழே இறங்கினான். "சூரியா! உன்னை இப்போது பார்த்தால் சாக்ஷாத் விவேகானந்த சுவாமியைப் போலிருக்கிறது. பார்க்கிறவர்கள் 'யாரோ மகான்; பால சந்நியாசி' என்று நினைத்துக் கொள்வார்கள்!" என்றான் அமரநாத். "உண்மையில் நான் 'பால சந்நியாசி' அல்ல; போலி சந்நியாசி. இந்தப் புனிதமான வேஷத்தைப் பொய்யாகப் போட வேண்டியிருப்பது பற்றி எனக்கு மிக்க வருத்தமாயிருக்கிறது..." "ஆனால் இந்த வேஷம் போதும் என்று நினைக்கிறாயா? சி.ஐ.டி. புலிகள் இதற்கு ஏமாந்து போய்விடுவார்களா?" என்று அமரநாத் கேட்டுக்கொண்டே வண்டியிலிருந்து இறங்கினான். "சொல்லுவதற்கில்லை, தென்னிந்தியர்கள் எல்லாக் காரியங்களிலும் கெட்டிக்காரர் களா யிருப்பதுபோலவே சி.ஐ.டி. வேலையிலும் கெட்டிக்காரர்களாய் இருக்கிறார்கள். வட இந்தியாவில் சி.ஐ.டி. சுத்த மோசம். சம்பந்தமில்லாதவர்களைத் தான் பிடிப்பார்கள். இத்தனை தூரம் நான் பிரயாணம் செய்திருக்கிறேன்; தேவபட்டணத்தில் எப்படியோ கண்டு கொண்டு விட்டார்கள். பார்! எல்லாம் கடவுள் சித்தம்போல் நடக்கும். டில்லிக்கு ஒரு தடவை போய்விட்டேனா னால், அப்புறம் என்ன ஆனாலும் பாதகமில்லை! நான் போய் வரவா?" என்றான் சூரியா.

அமரநாத் சூரியாவின் கையைப் பிடித்துக் குலுக்கிய வண்ணம் "உன்னை இப்படி விட்டுப் போவது எனக்கு எவ்வளவோ கஷ்டமா யிருக்கிறது; ஆனாலும் வேறு வழியில்லை. சூரியா! இந்தியா தேசமெங்கும் பிரயாணம் செய்த நீ வங்காளத்துக்கு மட்டும் ஏன் வராதிருக்க வேண்டும்? டில்லியில் உன் காரியம் முடிந்ததும் கல்கத்தாவுக்கு வந்துவிடு. கல்கத்தா புரட்சிக்காரர் கூட உன்னைப் பிடிக்க மாட்டார்கள். வேறு யாரையாவது தேடிக்கொண்டு போவார்கள். கல்கத்தாவுக்கு வந்து என் வீட்டில் சில காலம் தங்கி இரு. என் கல்கத்தா விலாசம் ஞாபகம் இருக்கிறதல்லவா?" என்றான். "டில்லிக்குப் போய் என் காரியம் முடிகிறவரையில் நான் பிடிபடாதிருந்தால், கட்டாயம் கல்கத்தா வருகிறேன், அமரநாத்! விலாசம் ஞாபகம் இருக்கிறது!" என்று சூரியா கூறினான். அப்போது அடித்த மின்னல் ஒளியில் அவனுடைய கண்களில் துளித்திருந்த கண்ணீர்த் துளிகள் முத்துப் போலப் பிரகாசித்தன. அமரநாத் மேலே ஒன்றும் சொல்லாமல் மௌனமாக வண்டியைத் திருப்பிக்கொண்டு போனான். இருட்டிலே தன்னந்தனியே நடந்து சென்று சூரியா ரயில்வே ஸ்டேஷனை அடைந்தான். அங்கேயிருந்த இரவு ஸ்டேஷன் மாஸ்டரும் குமாஸ்தாவும் இரண்டு போர்ட்டர்களும் அந்தப் பால சந்நியாசியின் முக தேஜஸைப் பார்த்துப் பிரமித்தார்கள். "சுவாமி எங்கேயிருந்து வருகிறது? எங்கே போகிறது?" என்று அவர்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் சுவாமியிடமிருந்து "ஹர ஹர மகாதேவ" என்ற ஒரு பதில் தான் வந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் தெற்கே போகும் ரயில் வரவே சந்நியாசி பிளாட்பாரத்துக்குள்ளே சென்றார். கேட்டில் நின்ற போர்ட்டர் அவரை நிறுத்தலாமா என்று பார்த்தான். அதற்குள் இரவு ஸ்டேஷன் மாஸ்டர், "வேண்டாம், அப்பா! சாமியாரை நிறுத்தாதே!" என்று சொன்னார்.

பிளாட்பாரத்தில் வந்து நின்ற ரயில் ஓரமாகப் பால சந்நியாசி விடுவிடு என்று நடந்து சென்றார். தேவபட்டிணம் ஸ்டேஷனில் அமரநாத் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த இரண்டாம் வகுப்பு டிக்கட் சந்நியாசியிடம் இருந்தது. ஆனால் அவர் மூன்றாம் வகுப்பு வண்டிகளைப் பார்த்துக்கொண்டே போனார். மழையை முன்னிட்டு அநேக வண்டிகளில் ஜன்னல் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. ஒரு வண்டியில் சில ஜன்னல்கள் திறந்திருந்தன. சாமியார் அந்த வண்டியில் ஏறினார். ஒவ்வொரு அரை பெஞ்சியிலும் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அல்லது ஒருவர் காலை மடக்கிக் கொண்டு படுத்திருந்தார். ஒரே ஒரு அரை பெஞ்சியில் மட்டும் ஒரு மனிதன் சப்பணம் போட்டு உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு டைரியும் பென்சிலும் இருந்தன. பால சந்நியாசி நேரே அந்தப் பெஞ்சியண்டை போய் நின்று, "ஹரஹர மகாதேவா" என்றார். அந்த மனிதன் நிமிர்ந்து பார்த்துவிட்டு, "உட்காருங்கோ, சாமி!" என்றான். சாமியார் உட்கார்ந்து மடியில் செருகியிருந்த சிறு பட்டுப் பையை எடுத்து, அதிலிருந்து கொஞ்சம் விபூதி எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு, "திருச்செந்தூர் முருகா!" என்றார். "சாமி எவ்விடத்துப் பிரயாணமோ?" என்று அந்த மனிதன் கேட்டான். "இந்தக் கட்டை காசிக்குப் போய்த் திரும்பி வருகிறது. இராமேசுவரம் போக ஆசை! முருகன் அருள் எப்படியோ?" என்றார் பால சந்நியாசி. "சாமியிடம் டிக்கட் இருக்கிறதா?" என்று அந்த மனிதன் கேட்டான்.

"மதுரை வரையில் இருக்கிறது; ஒரு பக்தர் வாங்கிக் கொடுத்தார். அதற்கப்பால் முருகனுடைய சித்தம்!" என்று சொல்லிக் கொண்டே சந்நியாசி இடுப்பில் செருகியிருந்த டிக்கட்டை எடுத்துக் காட்டினார். "இது இரண்டாம் வகுப்பு டிக்கட் அல்லவா? சாமி தவறி மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏறிவிட்டதே!" "இல்லை; இல்லை தெரிந்து தான் ஏறினேன். பக்தன் வாங்கிக்கொடுத்தாலும் இந்தக் கட்டைக்கு இரண்டாம் வகுப்பில் போக விருப்பமில்லை. ஆகையால் ரயில் இங்கே நின்றதும் இரண்டாம் வகுப்பிலிருந்து இறங்கி மூன்றாம் வகுப்பில் ஏறலாயிற்று!" அந்த மனிதனுக்கு ஒரே ஆச்சரியமாக போய்விட்டது. "சாமியார் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் எங்கே பார்த்தாலும் போலிச் சாமியார்கள் தான் அதிகமாய்ப் போயிருக்கிறார்கள்!" என்றான். "முருகன் செயல்!" என்றார் பால சந்நியாசி. ரயில் போய்க்கொண்டிருந்தது; வெளியே மழைத் தூறல் போட்டுக்கொண்டிருந்தது; உள்ளே பிரயாணிகள் தூங்கி வழிந்தார்கள். சாமியாருக்கும் அவருடைய புதிய பரமானந்த சீடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை. "அப்பனே! உன் மனதிலே கவலை குடிகொண்டிருக்கிறது!" என்றார் சந்நியாசி. "ஆமாம் சாமி! வீட்டிலே சம்சாரத்துக்கு உடம்பு சரியில்லை. ஒரு மாதமாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் வருகிறேன். ஒன்றும் குணம் தெரியவில்லை அதற்குள் இந்த 'டியூடி' வந்துவிட்டது."

சாமியார் விபூதிப் பையை எடுத்து, "இந்தா! காசி விசுவநாதர் கோயில் விபூதி. இதைக் கொண்டுபோய் பக்தியுடன் உன் சம்சாரத்தின் நெற்றியில் இடு குணமாகிவிடும்!" என்றார். பயபக்தியுடன் அந்த மனிதன் விபூதியை வாங்கிக்கொண்டு டைரியிலிருந்து ஒரு ஏட்டைக் கிழித்து அதில் பொட்டணம் கட்டினான். "அந்த ஒரு கவலைதானா? இன்னும் ஏதாவது உண்டா?" "வேறு ஒன்றும் பெரிய கவலையில்லை. இன்றைக்கு போகிற காரியம் ஜயமானால் நல்லது. 'பிரமோஷன்' கிடைக்கும் இல்லாவிட்டால் 'பிளாக் மார்க்' கிடைக்கும்." "யாரோ ஒரு ஆளைத் தேடிக்கொண்டு நீ போகிறாய் இல்லையா, அப்பனே?" "உண்மை! உண்மை! சாமியாருக்கு ஞான திருஷ்டி கூட உண்டு போல் இருக்கிறது." "திருச்செந்தூர் முருகன் செயல்!" என்றார் சாமியார். "நான் தேடிப் போகிற ஆசாமி அகப்படுவான்களா, சாமி!" "இந்தக் கட்டைக்கு என்ன தெரியும், அப்பா? அந்த ஆசாமி இந்த ரயிலிலே தான் இருக்கிறதாக இவ்விடத்தில் உதயமாகிறது!" என்று சாமியார் தம் நெற்றியை விரல்களால் தட்டிக் கொண்டார். "இந்த ரயிலிலே ஐந்நூறு பேர் இருக்கிறார்கள். அங்க அடையாளம் ஒன்றும் இல்லாமல் ஆளைக் கண்டுபிடி என்று சொன்னால், என்னத்தைச் செய்வது, சாமி! சர்க்கார் வேலையைப் போல் அதிலும் இந்த சி.ஐ.டி. உத்தியோகத்தைப் போல், தொல்லை பிடித்த வேலை வேறொன்றுமில்லை?" என்றான் சீடன். "உண்மை அப்பனே, உண்மை! இந்தத் தரித்திரம் பிடித்த வேலையை நீ விட்டுவிடு! திருச்செந்தூர் முருகன் அருளால் உனக்கு வேறு நல்ல வேலை கிடைக்கும்!" என்றார் சாமியார்.

ரயில் திண்டுக்கல் ஜங்ஷனை அடைந்தது; சி.ஐ.டி. கேசவன் பால சந்நியாசியைப் பார்த்து, "சாமி! நான் இவ்விடத்தில் இறங்கி இன்னும் இரண்டு வண்டி தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன். தாங்கள் இங்கேயே இருந்து என் இடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு டிக்கட்டைப் பற்றிச் சாமி கவலைப்பட வேண்டாம். மதுரையில் நான் டிக்கட் வாங்கித் தருகிறேன்" என்றான். "இந்தக் கட்டைக்கு டிக்கட் இருந்தாலும் ஒன்றுதான்; இல்லாவிட்டாலும் ஒன்றுதான். முருகன் ரயிலில் ஏறச் சொன்னால் ஏறும்; இறங்கச் சொன்னால் இறங்கும்" என்றார் பால சந்நியாசி. பத்து நிமிஷத்துக் கெல்லாம் அந்த சி.ஐ.டி. கேசவன் ஒரு ரயில்வே போலீஸ் உத்தியோகஸ்தரை அழைத்துக் கொண்டு திரும்பி வந்தான். தான் உட்கார்ந்திருந்த பெஞ்சு காலியாயிருந்ததைப் பார்த்துத் திகைத்தான். ஒருவேளை வேறு வண்டியாயிருக்கும் என்று அங்குமிங்கும் ஓடிப்போய்ப் பார்த்தான்; பயனில்லை. பிறகு அதே வண்டிக்கு வந்து உள்ளே தூங்கி வழிந்த பிரயாணிகள் சிலரைப் பார்த்து, "இங்கேயிருந்த சாமியார் எங்கே?" என்று கேட்டான். யாரைக் கேட்டாலும், "தெரியாது; நாங்கள் பார்க்கவில்லை!" என்றார்கள். இதற்குள் வண்டி புறப்படும் நேரமாகி, விசில் ஊதிவிட்டது. போலீஸ் உத்தியோகஸ்தர் அவனை இரண்டு திட்டுத் திட்டிவிட்டுத் திரும்பிப் போனார். சி.ஐ.டி. கேசவன் ரயிலில் ஏறிப் பழைய இடத்திலேயே போய் உட்கார்ந்து கொண்டான். "எல்லாம் முருகன் செயல்!" என்று சொல்லிக் கொண்டே சட்டைப் பையிலிருந்து விபூதிப் பொட்டணத்தை எடுத்துப் பிரித்துக் காசி விசுவநாதர் விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஐந்தாம் அத்தியாயம்

வெற்றி ரகசியம்

சென்னை மாநகரின் சிரோரத்தினமாக விளங்கி வந்த பத்மாபுரத்தில் "தேவி ஸதனம்" என்னும் பங்களாவில் ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகள் துர்வாச முனிவராக உருக்கொண்டிருந்தார். தன்னுடைய இதய கமலத்திலிருந்து பொங்கி வந்த குரோதமோகமாற்சரியங்களைப் பேனா முனை வழியாகக் காகிதத்தில் தீட்டிக் கொண்டிருந்தார். "தார்மிக கேஸரி" என்னும் ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை, எழுதிய காகிதம் தீப்பட்டு எரியுமாறு அவ்வளவு உத்வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. சில காலமாக மேற்படி பத்திரிகையின் பத்திகளில் ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியாருக்கும் பேராசிரியர் பரிவிராஜகசர்மாவுக்கும் மாபெரும் விவாத யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்த யுத்தத்துக்கு மூல காரணம் சாஸ்திரியார் பத்மாபுரம் சர்வக்ஞ சங்கத்தில் நிகழ்த்திய ஒரு பிரசங்கந்தான். ஹிந்து சமுதாயத்தில் அநாதி காலமாக ஏற்பட்டுள்ள வருணாசிரமத்தின் சிறப்பைச் சாஸ்திரியார் மேற்படி பிரசங்கத்தில் சாங்கோபாங்கமாக விளக்கினார். வர்ணாசிரம தர்மத்தை மேற்கொள்ளாததினால் மேனாடுகள் எப்படிப் பயங்கரமான யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்டு தவிக்கின்றன என்று எடுத்துக் காட்டினார். நாலு வர்ணங்களைப் பற்றிச் சொல்லி விட்டு நாலு ஆசிரமங்களைப் பற்றிக் கூறும்போது, சந்நியாச ஆசிரமத்தின் மகிமையைப் பற்றி மிக விஸ்தாரமாக எடுத்துச் சொன்னார். காலாகாலத்தில் சந்நியாச ஆசிரமத்தை மேற் கொள்ள முடியாதவர்கள் அந்திக் காலம் நெருங்கிவிட்டதென்று தெரிந்த பிறகாவது 'ஆபத் சந்நியாசம்' வாங்கிக் கொள்வதின் அவசியத்தை இலேசாகக் குறிப்பிட்டார். சாஸ்திரியாரின் மேற்படி பிரசங்கத்தின் சாராம்சம் சற்று விரிவாகவே தினப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

மேற்கண்ட கருத்துக்கள் சாதாரணமாகப் பேராசிரியர் பரிவிராஜகசர்மா ஒப்புக்கொள்ளக் கூடியவைதான். ஆயினும் சாஸ்திரியார் பிரசங்கம் செய்து அது பத்திரிகையிலும் வந்து விட்ட காரணத்தினால் ஏதாவது ஒரு விதத்தில் அதைத் தாக்குவது சர்மாவின் இன்றியமையாத கடமையாயிற்று. எனவே, "தார்மிக கேஸரி"க்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதன் சாராம்சமாவது: "இந்தக் காலத்தில் சிலர் சந்நியாச ஆசிரமத்தைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து பேச ஆரம்பித்திருக் கிறார்கள். உண்மையில் பழைய வேத காலத்து ஹிந்துக்கள் சந்நியாசத்துக்கு அவ்வளவு உயர்வைக் கொடுக்கவில்லை. சஹதர்மினி இல்லாதவன் யாகம் செய்வதற்கு உரியவனாகக் கருதப்படவில்லை. அத்திரி, பிருகு, ஆங்கிரஸர், அகஸ்தியர், வசிஷ்டர், வாமதேவர், பராசரர் முதலிய மகரிஷிகளுக்குப் பத்தினிகள் இருந்தார்கள். கௌதம புத்தருடைய காலத்துக்குப் பிறகு தான் இந்தியாவின் சந்நியாசத்துக்குச் சிறப்பு ஏற்பட்டது. 'ஆபத் சந்நியாசம்' வாங்கிக் கொள்ளும் வழக்கம் மிக்க அபத்தமானது. புதல்வர்கள் சரிவரச் சிரார்த்தம் செய்ய மாட்டார்களோ என்று பயந்தவர்கள் தான் கடைசி காலத்தில் அவசர அவசரமாகச் சந்நியாசம் பெறுவார்கள். சில அபூர்வமான புத்திர சிகாமணிகள் தகப்பனாருக்கு சிரார்த்தம் செய்யும் சங்கடம் இல்லாமற் போவதற்காக தகப்பனாரைக் கட்டாயப்படுத்தி மொட்டையடித்துக் காஷாயம் கட்டிவிடுவதும் உண்டு. ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரியாருக்கு இத்தகைய விபத்து எதுவும் நேராது என்று நம்புகிறேன். சாஸ்திரியார் இம்மாதிரியெல்லாம் உளறிக் கொட்டாமல் தமது திருவாயை மூடிக்கொண்டிருந்தாரானால் ஹிந்து தர்மத்துக்குப் பேருதவி செய்தவராவார்."

இத்தகைய அவதூறு நிறைந்த கடிதத்தைப் படித்துவிட்டு ராவ்பகதூர் பத்மலோசனை சாஸ்திரியார் அளவில்லாத கோபம் கொண்டது இயல்பேயல்லவா? அவர் எழுதிய மறுப்புக் கடிதத்தில் பேராசிரியர் சர்மாவை வெளு வெளு என்று வெளுத்திருந்தார். "ஹிந்து சமயத்தில் சந்நியாச ஆசிரமத்துக்கு உயர்வு கொடுக்கவில்லையென்று எந்த மூட சிகாமணி எந்த நிரட்சரகுட்சி சொல்லுவான்? இந்தியாவில் ஹிந்து தர்மத்தை நிலை நாட்டிய மகா புருஷரான ஆதி சங்கராச்சாரியார் சந்நியாசி அல்லவா? நம்முடைய காலத்தில் ஹிந்து தர்மத்தின் உயர்வை உலகமெல்லாம் உணரும்படி செய்தவர் சுவாமி விவேகானந்தர் அல்லவா? இன்று திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் ரமண மகரிஷியின் பெருமையை உணராத ஜடமாக யார் இருக்க முடியும்? இராமாயண காலத்தில் இந்தியாவிலே சந்நியாச ஆசிரமத்துக்கு எவ்வளவு பெருமை இருந்தது என்பதை வால்மீகி பகவான் சந்தேகத்திற்கு இடமின்றிச் சொல்லி இருக்கிறார். சீதாதேவி எவ்வளவு பயபக்தி மரியாதையுடன் அவனை உபசரிக்கிறாள்? சந்நியாசத்துக்கு அவ்வளவு மரியாதை அந்தக் காலத்தில் இருந்தபடியால் அல்லவா இராவணன் சந்நியாச கோலம் பூண்டு சீதையிடம் வந்தான்? நிற்க, ஆசிரமங்களை எப்படி வரிசைப்படுத்தியிருக்கிறது என்பதிலிருந்து எது உயர்ந்த ஆசிரமம் என்பதை அறியலாம். பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்னும் வரிசையில் கடைசியில் இருப்பதனாலேயே அது எல்லா ஆசிரமங்களுக்கும் சிகரமானது என்று வ ஢ளங்கவில்லையா? சாதாரணமாக எல்லோருக்கும் இது விளங்கக் கூடிய விஷயந்தான். மெத்தப் படித்த மேதாவியான பேராசிரியர் சர்மாவின் அபார மூளைக்கு மட்டும் இது விளங்கவில்லை போலும்!"

இவ்வாறு சாஸ்திரியார் எழுதிய விவாதத்தைக் கடைசி வார்த்தையாக இருக்கும்படி விட்டுவிட்டுப் பேராசிரியர் சர்மா சும்மா இருந்து விடுவாரா? மீண்டும் அவர் எழுதத்தான் செய்தார். "ராவ்பகதூர் பத்மலோசன சாஸ்திரிகள் தாம் மெத்தப் படித்தவர் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார். அப்படியானால் கொஞ்சம் படித்தவர் என்று ஏற்படுகிறது. ஆனால் அந்தக் கொஞ்சமும் எதைப் படித்தாரோ தெரியவில்லை. இந்தியாவின் சரித்திரத்தைத் தொட்டுப் பார்த்ததேயில்லையென்று திட்டமாய்த் தெரிகிறது. புத்தருக்குப் பிறகு இந்தியாவிலே சந்நியாசத்துக்குப் பெருமை ஏற்பட்டது என்று தான் சொன்னேன். சாஸ்திரியார் ஸ்ரீ சங்கராச்சாரியாரையும், சுவாமி விவேகானந்தரையும், ஸ்ரீ ரமண ரிஷிகளையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மூவரும் புத்தருக்கு முன்னாலிருந்தவர்கள் என்பது சாஸ்திரியாரின் எண்ணம் என்று தெரிகிறது. ஆனால் சாஸ்திரியார் சொல்லிவிட்டதால் சரித்திரம் வந்த வழியே திரும்பிப் போய்விடாது. சாஸ்திரியார் 'இராவண சந்நியாசி'யைக் குறிப்பிட்டது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். இராமாயண காலத்திலே சந்நியாச ஆசிரமம் போலிகளுக்கும் மோசக்காரர்களுக்கும் வேஷமாகி விட்டது என்பதை வால்மீகி பகவான் நன்றாக ஸ்தாபனம் சய்திருக்கிறார். ஆசிரம வரிசைக் கிரமத்தில் சந்நியாசம் கடைசியில் வருவதால் அதுவே உயர்ந்த ஆசிரமம் என்று சாஸ்திரியார் சாதிக்கிறார். இதே மாதிரி வர்ணங்களிலும் கடைசி வர்ணமே உயர்ந்தது என்று சாஸ்திரியார் ஒப்புக்கொள்கிறாரா? அப்படி ஒப்புக்கொண்டால் நானும் சந்நியாசத்தின் உயர்வை ஒப்புக்கொண்டு சாஸ்திரியாருக்கு இப்போதே 'ஆபத் சந்நியாசம்' வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்.

சாஸ்திரிகளின்பாடு இப்போது மிகவும் சங்கடமாகத்தான் போய்விட்டது. தம்முடைய வாதங்களில் உள்ள பலக் குறைவைக் கோபத்தினாலும் சாபத்தினாலும் இட்டு நிரப்புமாறு காரசாரமுள்ள பதில் ஒன்றை எழுதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பிரயத்தனம் காரணமாகச் சாஸ்திரியார் ரௌத்ராகாரம் கொண்டிருந்தபோது, அவருடைய பங்களாவின் வாசலில், "பவதி பிட்சாந் தேஹி" என்று குரல் ஒன்று கேட்டது. மேல்மாடித் தாழ்வாரத்திற்கு வந்து சாஸ்திரியார் எட்டிப் பார்த்தார். இளம் பிராயத்துத் துறவி ஒருவர் நிற்பதைக் கண்டார். அவருக்கு ஏற்பட்ட வியப்பைச் சொல்லி முடியாது. தம் வாழ்நாளிலேயே இதுவரையில் இல்லாத பரபரப்புடன் மச்சுப்படிகளை மூன்று மூன்று படியாகக் குதித்துத் தாண்டிக் கொண்டு கீழே இறங்கினார். பின்கட்டிலிருந்த தமது வாழ்க்கைத் துணைவியை அழைத்து "காமாட்சி! ஒரு அதிசயத்தைக் கேள்! வாசலில் யாரோ பால சந்நியாசி வந்து நிற்கிறார். முகத்திலே தேஜஸ் ஜொலிக்கிறது. 'பிட்சாந்தேஹி!' என்ற வார்த்தை கேட்டதும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. வாசற்கதவுச் சாவியைச் சீக்கிரம் கொண்டுவா! ஒரு மகானை எத்தனை நேரம் வாசலிலே நிறுத்தி வைக்கிறது? சாக்ஷாத் ஆதிசங்கரரே திரும்ப அவதாரம் எடுத்து வந்திருப்பது போலிருக்கிறது. நம் பிதாமகர்கள் செய்த பாக்கியம் நம் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். என்ன பேசாமல் நிற்கிறாயே?" என்று இரைந்தார்.

இதற்குள் வாசற்புறம் எட்டிப் பார்த்து யாரோ ஒரு சந்நியாசி நிற்பதைத் தெரிந்து கொண்ட காமாட்சி அம்மாள் "எதற்காக இவ்வளவு படபடப்பாய் பேசுகிறீர்கள்? வாசற் கதவு திறந்துதானிருக்கிறது. அப்படி அதிசயமான மகான் எங்கேயிருந்து வந்து குதித்து விடப் போகிறார்? இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சாமியாராயிருக்கும் ஏதாவது நன்கொடை வசூலிப்பதற்காக வந்திருக்கிறார் போலிருக்கிறது!" என்றாள். இதைக் கேட்டதும் சாஸ்திரியாரின் உற்சாகம் கொஞ்சம் தணிந்தது. காமாட்சி அம்மாள் சொன்னதைப் போலவே இராமகிருஷ்ண மடம் அல்லது கௌடியா மடத்திலிருந்து யாராவது நன்கொடை கேட்க வந்திருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் அப்படியிருந்தால், "பவதி பிக்ஷாந்தேஹி!" என்று கேட்டிருக்க மாட்டாரல்லவா? இந்த எண்ணம் கொஞ்சம் தைரியத்தை ஊட்டியது. எப்படியிருந்தாலும் பார்த்து விடலாம் என்று வாசற் பக்கம் சென்றார். காமாட்சி அம்மாளும் வஸந்தியும் பின்னோடு வந்தார்கள். இதற்குள் சாமியாரும் கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் பிரவேசித்தார். சந்நியாசியை நெருங்கி நின்று பார்த்ததும் சாஸ்திரியாரும் காமாட்சி அம்மாளும், 'தெரிந்த முகமாய்த் தோன்றுகிறதே; யாராக இருக்கும்?' என்று திகைத்தார்கள். "மாமி என்னை அடையாளம் தெரிகிறதா?" என்று சுவாமியார் கேட்டதும் காமாட்சி அம்மாளுக்குப் பளிச்சென்று உண்மை தெரிந்துவிட்டது. "நம்ம சூரியாவைப் போலிருக்கிறதே? இது என்ன கோலம்?" என்றாள் காமாட்சி அம்மாள். "நம்ம சூரியா போலிருக்கிறதா? என்ன உளறுகிறாய்? நம்ம சூரியா என்றால் யார்?" என்றார் சாஸ்திரியார்.

"ராஜம்பேட்டை கிட்டாவய்யர் பிள்ளை சூரியா தான் வேறு எந்தச் சூரியாவைச் சொல்லப் போகிறேன்?" "நிஜமாகவா? அதனாலேதான் எனக்குக் கூடப் பார்த்த முகமாகத் தோன்றியது" என்றார் சாஸ்திரியார்."ஆமாம்; பூர்வாசிரமத்தில் இந்தக் கட்டையின் பெயர் சூரியா தான்; இந்த ஆசிரமத்தில் சுதந்திராநந்தர்" என்று சொன்னார் சந்நியாசி."அப்படியா? ரொம்ப சந்தோஷம் பழம் நழுவிப் பாலில் விழுவது போலாயிற்று!" என்று உபசரித்துக் கொண்டே சாஸ்திரிகள் ஸ்ரீ சுதந்திராநந்தரை அழைத்துச் சென்று ஹாலில் சோபாவில் உட்காரச் செய்தார்.காமாட்சி அம்மாள், "இத்தனை சின்ன வயதில் இது என்ன கோலம்? அப்பா அம்மா சம்மதித்தார்களா? காலாகாலத்தில் ஆகவேண்டியதெல்லாம் ஆகி வயதான பிறகு சந்நியாசம் வாங்கிக் கொண்டால் பாதகமில்லை!" என்றாள். சுவாமியார் பதில் சொல்வதற்குள் சாஸ்திரியார் குறுக்கிட்டு, "ரொம்ப லட்சணம்! உன்னைக் கேட்டுக் கொண்டு தான் சந்நியாசி ஆகவேணும் போலிருக்கிறது. உலகத்தைத் துறந்து ஆசிரமம் வாங்கிக்கொண்ட பிறகு, அப்பா யார்? அம்மா யார்? பிரிவிராஜகர் ஆன பிறகு, உலக பந்தமே கிடையாது; குடும்ப பந்தம் எப்படி வரும்? அவள் கிடக்கிறாள், சுவாமிகளே! தங்களைப் போல் பால வயதில் வைராக்கிய மடைந்து ஆயிரம் பேர் சந்நியாசம் வாங்கிக் கொண்டு ஸநாதன தர்மத்தைப் பிரசாரம் செய்வது என்று ஆரம்பித்தால் ஸநாதன தர்மம் உத்தாரணமே ஆகிவிடும். அது இருக்கட்டும்; தாங்கள் எங்கே, எப்போது இந்த ஆசிரமத்தை மேற்கொண்டது? எந்த மகானிடம் ஆசிரமம் வாங்கிக் கொண்ட பிறகு எங்கெங்கே போய் வந்தது? இந்த நகரத்தில் எத்தனை நாள் தங்குவதாக உத்தேசம்? எல்லாம் விவரமாகச் சொல்ல வேண்டும். காமாட்சி! நீ சமையலறைக்குப் போய்க் கொஞ்சம் கவனி. சாஸ்திரோத்தமாகச் சுவாமிகளுக்குப் பிக்ஷை பண்ணி வைக்க வேண்டும்; ஒரு குறையும் ஏற்படக் கூடாது தெரிகிறதா?" என்றார்.

"நன்றாய்த் தெரிகிறது எல்லாம் ஒரு குறைவுமில்லாமல் நடந்துவிடும், நீங்கள் கவலைப்பட வேண்டாம்!" என்று சொல்லி விட்டுக் காமாட்சி அம்மாள் பின்கட்டுக்குச் சென்றாள். அவளுடன் வஸந்தியும் போனதைப் பார்த்த பால சந்நியாசி, "வஸந்தி! என்னை ஞாபகம் இல்லையா? பேசமாட்டேன் என்கிறாயே?" என்றார். வஸந்தி அப்படியும் சுவாமியாருடன் பேசாமல் பாட்டியைக் குனியச் சொல்லி அவள் காதோடு, "ஏன், பாட்டி! சூர்யா மாமா எதற்காகத் தலையை மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்? திருப்பதிக்குப் போய்விட்டு வந்தாரா?" என்று கேட்டதும் எல்லோரும் சிரித்து விட்டார்கள். வஸந்தியையும் அழைத்துக் கொண்டு காமாட்சி அம்மாள் பின்கட்டுக்குச் சென்ற பிறகு சாஸ்திரியார், "ஆமாம்; தாங்கள் எப்படி இந்த ஆசிரமத்தை மேற்கொண்டது? ஏதோ காங்கிரஸில் சேர்ந்து 'குவிட் இந்தியா' இயக்கத்துக்குப் பாடுபட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்களே?" என்றார்."ஆம்? அதுவும் உண்மை தான்; 'குவிட் இந்தியா' இயக்கத்துக்காகத்தான் ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன்.ஹரித்துவார் போயிருந்த சமயத்தில் அங்கே ஒரு சுவாமியாரைத் தரிசித்தேன்.தரிசித்த வேளை, விட்டகுறை வந்து தொட்டுக் கொண்டது.அவரிடம் சிஷ்யனாகி ஒரு வருஷம் இருந்து தொண்டு செய்தேன்.பிறகு ஆசிரமம் பெற்றுக் கொண்டு க்ஷேத்திர யாத்திரை செய்து வருகிறேன்.இப்போது ராமேசுவரத்துக்குப் போய்த் திரும்பி வருகிறேன்!" என்றார் பால சந்நியாசி.

"தங்களுடைய பூர்வீகர்களிலே யாராவது மகான்கள் இருந்து யாக யக்ஞங்கள் செய்திருக்க வேண்டும். அதனாலே தான் இந்தப் பிராயத்தில் இப்படிப்பட்ட பாக்கியம் தங்களுக்குக் கிடைத்தது. ஈரேழு பதினாலு தலைமுறையும் தங்களால் கடைத்தேறப் போகிறது. இந்த நகரிலே எத்தனை நாள் தங்குவதாக உத்தேசம்?" "இன்றைக்கும் நாளைக்கும் இருந்துவிட்டு நாளை மறுநாள் புறப்படலாம் என்று நினைக்கிறேன்." "அதெல்லாம் கூடவே கூடாது; இங்கே ஒரு மாதமாவது தங்கியிருக்க வேண்டும். இருக்கிற வரையில் நம்முடைய கிரஹத்திலேயே பிக்ஷை, பூஜை எல்லாம் வைத்துக்கொள்ளலாம். சர்வக்ஞ சங்கத்தின் ஆதரவில் உபந்நியாசங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன். ஸநாதன தர்மத்தைப் பற்றியும் முக்கியமாக வர்ணாசிரம தர்மத்தைப் பற்றியும் உபந்நியாசம் செய்யவேண்டும். ஹிந்து சமூகத்தில் சந்நியாசத்துக்கு எவ்வளவு பெருமை என்பது எல்லாரும் மறந்து விட்டார்கள். பரிவிராஜக சர்மாவைப் போன்ற படித்த முட்டாள்கள் கூட இந்த விஷயத்தில் தப்பபிப்பிராயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய உபந்நியாசங்கள் அவர்களையெல்லாம் வாயடைத்துப் போகும்படி செய்ய வேண்டும். இந்தச் சமயத்தில் வாசற்பக்கமிருந்து ஒரு இளம் பெண்மணி உள்ளே வந்தாள். அவள் தூய வெள்ளைக் கதருடை தரித்திருந்தாள். தலையில் மாத்திரம் மிக்க நவநாகரிக முறையில் 'பாப்' செய்யப்பட்டுப் பரட்டையாகத் தொங்கியது. ஆனால் நடையுடை பாவனையெல்லாம் அடக்கமாக இருந்தன. "நமஸ்காரம் மாமா! சௌக்கியமா? மாமி உள்ளே சமையலறையில் இருக்கிறாரா?" என்று கேட்டுக்கொண்டே அவள் பின்கட்டுக்குச் சென்றாள்.

"இந்த அம்மாள் யார்?" என்று சுவாமியார் கேட்கவும், "உனக்குத் தெரியாது? இவள்தான் என்னுடைய மூத்த நாட்டுப் பெண். இவளுடைய வாழ்க்கையில் திடீரென்று இந்த மாறுதல் ஏற்பட்டு விட்டது. இவளுடைய சிநேகிதிகள் சிலர் 1942 ஆகஸ்டு இயக்கத்தில் சிறைக்குப் போயிருக்கிறார்களாம். இவளுடைய இன்னொரு சிநேகிதி பர்மாவில் நேதாஜி சுபாஷ் பாபுவின் ஐ.என்.ஏ.யில் சேர்ந்திருக் கிறாளாம். இதெல்லாம் சேர்ந்து இவளையும் இப்படிக் கதர், காங்கிரஸ், பைத்தியமாக அடித்து விட்டது. ஆனால் மொத்தத்தில் நல்ல மாறுதல் தான். இவள் இந்த வீட்டுக்கு வந்து இருப்பதாகக் கூடச் சொல்கிறாள். ஆனால் நான் தான் கொஞ்ச நாள் போகட்டுமே என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவள் இங்கிருக்கும்போது போலீஸ்காரர்கள் வந்து இவளைப் பிடித்துக் கொண்டுபோனால், என்னுடைய பென்ஷனுக்கு அல்லவா ஆபத்து வந்து தொலையும்?" என்றார் சாஸ்திரியார். "ஆனால் தங்கள் பென்ஷனுக்கு இப்போது ஆபத்து வந்தாலும் சுயராஜ்யம் வந்தவுடன் பென்ஷனும் திரும்பி வந்துவிடும் அல்லவா?" என்றார் சந்நியாசி. "வரலாம் வரலாம், ஆனால் இந்த மாதிரி இளம் பெண்கள் வேலை செய்துதானா, இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வரப்போகிறது? மகாத்மா காந்தி, வல்லபாய்ப் படேல், ஜவாஹர்லால் நேரு முதலியவர்கள் சிறை புகுந்ததற்கே சுயராஜ்யம் வரவில்லையே?" "அப்படியானால் இந்தியாவுக்குச் சுயராஜ்யம் வரவே வராது என்று நினைக்கிறீர்கள்?" என்றார் சந்நியாசி.

"யார் சொன்னது? இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கட்டாயம் வரத்தான் போகிறது. ஆனால் இவர்களாலெல்லாம் வரப்போவ தில்லை; கடவுளுடைய சித்தத்தினால் வேறு வழியில் வரப் போகிறது. கலிபுருஷர் ஜெர்மனியில் அவதாரம் எடுத்திருக்கிறார்; ஹிட்லரைத் தான் சொல்கிறேன். ஹிட்லர் ருஷியாவின் மேல் படையெடுத்தது முட்டாள்தனம் என்று சில பிரகஸ்பதிகள் இங்கே சொல்கிறார்கள். ஹிட்லரை விட இவர்கள் மேதாவிகள் என்கிற எண்ணம். ஹிட்லர் ருஷியாவின் மீது படையெடுத்ததே இந்தியாவை நோக்கமாக வைத்துக் கொண்டுதான்! ஸ்டாலின் கிராடைப் பிடித்தவுடன், ஒரே தாவில் இந்தியாவிலே ஆகாச விமானத்தில் வந்து இறங்கப் போகிறார். ஐம்பதினாயிரம் ஆகாச கப்பல்களில் துருப்புகளும் வந்து இறங்கப் போகின்றன. ஹிட்லர்தான் ஸ்பஷ்டமாகச் சொல்லிவிட்டாரே, உலகத்திலேயே ஆரிய ஜாதி தான் உயர்ந்த சாதி என்று? அப்படியானால் இந்தியாவிலேதானே உலக சாம்ராஜ்யத்தின் தலைநகரத்தை ஸ்தாபித்தாக வேண்டும்? ஹிட்லர் இந்தியாவில் வந்து இறங்கிய உடனே செய்யப் போகிற முதல் வேலை என்ன தெரியுமா? 'சாதி வித்தியாசம் கூடாது' என்று சில பிரகஸ்பதிகள் உளறிக்கொண்டிருக்கிறார்களே, அவர்கள் எல்லாரும் தலையிலே துணியைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்! உலகத்திலுள்ள ஜனங்களையெல்லாம் அடால்ப் ஹிட்லர் நான்கு வர்ணங்களாகப் பிரித்துவிடப் போகிறார். அப்போது அல்லவா தெரியப் போகிறது வர்ணாசிரம தர்மத்தின் பெருமை? பிழைத்துக் கிடந்தால் நானும் பார்க்கத்தான் போகிறேன்?" என்றார் சாஸ்திரியார்.

அங்கே தேவபட்டிணத்தில் தாமோதரம்பிள்ளை, "ஜப்பான்காரன் வந்து எல்லாச் சாதிகளையும் ஒன்றாக்கப் போகிறான்" என்று சொன்னதையும், இங்கே சாஸ்திரிகள், "ஹிட்லர் வந்து வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்டப் போகிறார்" என்று சொல்வதையும் மனதிற்குள் சுவாமியார் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டார். அதனால் தன்னை மீறி வந்த சிரிப்பைப் அடக்கிக்கொண்டு, "ஆனால் சில பேர் ஹிட்லர் தோற்றுப் போய்விடுவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே!" என்றார். "அப்படிச் சில பேர் உளறிக் கொண்டிருக்கிறார்கள், நானும் கேட்டுத் தான் இருக்கிறேன். இவர்கள் இப்படி உளறினால் நடக்க வேண்டியது நடக்காமல் போய்விடுமா? ஹிட்லர் எப்பேர்ப்பட்ட வாழ்க்கை நடத்துகிறார் என்பது தெரியுமல்லவா? மாமிசம் சாப்பிடுவதில்லை; மதுபானம் செய்வதில்லை; ஸ்திரீகளின் முகத்தில் விழிப்பதில்லை. பிறந்ததிலிருந்து பிரம்மச்சரிய விரதம். சுவாமிகளே! ஹிட்லரைச் சாதாரண மனுஷன் என்று எண்ணிவிட வேண்டாம். அவர் ஹடயோகி; கலிபுருஷனுடைய அவதாரம். ஸமஸ்கிருத பாஷையைக் கரைத்துக் குடித்த மகாபண்டிதர்கள் இப்போது ஜெர்மனியில் தான் இருக்கிறார்கள் என்பது தெரியும் அல்லவா? ஒருநாள் ஜெர்மன் ஸயன்டிஸ்டுகளை எல்லாம் ஹிட்லர் கூப்பிட்டார். 'உங்கள் அசட்டு ஆராய்ச்சிகளையெல்லாம் மூட்டை கட்டி வையுங்கள்; அதர்வண வேதத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்.

ஜெர்மன் ஸயன்டிஸ்டுகள் அப்படியே செய்தார்கள். அதன் பலன் என்ன வி. ஒன்று, வி. இரண்டு வி. மூன்று என்பதாகப் புதுப் புது ஆயுதங்கள் புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன! இங்கிலீஷ்காரர்கள், அமெரிக்கர்கள், ருஷ்யர்கள் எல்லோரும் முழி முழியென்று முழிக்கிறார்கள்! எல்லாம் அதர்வண வேதத்திலுள்ள இரகசியம் என்று இவர்களுக்கெல்லாம் தெரியாது. இன்னும் ஒரு விஷயம் தெரியுமோ இல்லையோ? ஹிண்டு ஜோதிஷ சாஸ்திரத்தின்படி நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டு தான் ஹிட்லர் ஒவ்வொரு காரியத்தையும் ஆரம்பித்தார். செக்கோஸ்லோவேகியா மீது படையெடுத்த போதும் அப்படி; பிரான்ஸைப் பிடிக்க கிளம்பிய போதும் அப்படி; இல்லாவிட்டால் நெப்போலியன் பிறந்த பிரான்ஸ் தேசத்தைப் பத்தே நாளில் பிரியைக் கட்டி இழுத்திருக்க முடியுமா? நான் சொல்கிறது என்ன?" என்று சாஸ்திரியார் நிறுத்தினார். "கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!" என்று பால சந்நியாசி பட்டுக் கொள்ளாமல் சொன்னார். "கவனமாக கேட்டு என்ன பிரயோஜனம்? மனதிலே வாங்கிக் கொள்ள வேண்டும். இன்னொரு சர்வ இரகசியமான விஷயம். நாள் நட்சத்திரம் பார்த்துச் சொல்வதற்கு ஹிட்லர் எப்பொழுதும் பக்கத்திலே வைத்துக் கொண்டிருக்கிற ஆசாமி யார் என்று சுவாமிகளுக்குத் தெரியுமா?" "அது யார்! தெரியாதே?" "நான் சொல்லுகிறேன்; மன்னார்குடி பஞ்சு சாஸ்திரிகள் பிரசித்தமாயிருந்தாரே, தெரியுமோ இல்லையோ? நாலு வேதம் ஆறு சாஸ்திரம் தெரிந்த மகான்.

அவருடைய சாக்ஷாத் பெண் வயிற்றுப் பேரன் பிச்சு சாஸ்திரிகளைத் தான் எப்போதும் ஹிட்லர் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறாராம். எப்பேர்ப்பட்ட ஜெனரல் ஆகட்டும், பீல்டு மார்ஷல் ஆகட்டும், சீப் ஆப் ஸ்டாப் ஆகட்டும், யார் வந்து 'இதுதான் சமயம்; படை கிளம்ப வேண்டும்!' என்று சொன்னாலும் ஹிட்லர், 'ஊஹூம்' என்று சொல்லிவிடுவாராம். பிச்சு சாஸ்திரிகள் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்துப் 'படை கிளம்பலாம்' என்று சொன்னால் தான், புறப்பட உத்தரவு கொடுப்பாராம்! அதன் பலன் என்ன? ஜயத்துக்கு மேல் ஜயம்! வெற்றிக்கு மேல் வெற்றி! உலகமே ஹிட்லரின் காலடியில் வந்து கொண்டிருக்கிறது. அங்கே ஹிட்லர் நம்முடைய சாஸ்திரங்களுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுக்கிறார். இங்கே சில பிரகஸ்பதிகள் 'பழம் பஞ்சாங்கம்' என்று பரிகாசம் செய்கிறார்கள்! என்னத்தைச் சொல்கிறது? எந்தக் குட்டிச் சுவரிலே போய் முட்டிக் கொள்கிறது என்று கேட்கிறேன்." இவ்விதம் சாஸ்திரியார் சரமாரியாகப் பொழிந்ததைச் சந்நியாசி வேறு வழியின்றிக் கேட்டுக் கொண்டிருந்தார். இவ்வளவு படித்த மனிதர், பி.ஏ., பட்டம் பெற்றவர், ஸப் ஜட்ஜு உத்தியோகம் பார்த்தவர், உலக அனுபவம் பெற்றவர், இத்தகைய குருட்டு நம்பிக்கையைப் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டிருப்பது குறித்து அவருடைய மனதில் ஒரு பகுதி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தது.

பரம்பரையாக வந்து இரத்தத்தில் ஊறிப்போன நம்பிக்கைகளைக் கைவிடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல போலும் என்று எண்ணினார். அதே சமயத்தில் அவருடைய மனதில் இன்னொரு பகுதி 'இவருடைய சளசளப்பு எப்போது ஓயும்? காமாட்சியம்மாளிடம் தனியாகச் சீதாவைப் பற்றிப் பேச எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும்?" என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் சாஸ்திரிகள் பேச்சை நிறுத்துவதற்குச் சாமியார் ஒரு வழி கண்டுபிடித்தார். "நீங்கள் சொல்லுவதெல்லாம் சரியாயிருக்கலாம். ஆனால் இப்படி இறைந்து பேசுகிறீர்களே? இப்போது தான் எங்கே பார்த்தாலும் சி.ஐ.டி.க்காரர்கள் வட்டமிட்டுக் கொண்டிருக் கிறார்களே? யார் காதிலாவது விழுந்து ரிப்போர்ட்டு செய்தால் வீண் வம்பு அல்லவா?" என்றார். சாஸ்திரியாரின் சரமாரியான பிரசங்கம் அந்தக் கணமே பளிச்சென்று ஓய்ந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஆறாம் அத்தியாயம்

கலியாணம் அவசியமா?

சாஸ்திரியார் மாடி ஏறிச் சென்றதும், காமாட்சி அம்மாள் வார்த்தைகளைப் பொழிந்தாள்: "சூரியா! இது என்ன இப்படிப்பட்ட காரியம் செய்து விட்டாய்? இந்த வயதில் சந்நியாசமாவது? இவர் ஓயாமல் 'சந்நியாசம் வாங்கிக் கொள்ளப் போகிறேன்' 'சந்நியாசம் வாங்கிக் கொள்ளப் போகிறேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் வீட்டை விட்டு அசைகிற வழியாகக் காணோம். வயதாக ஆக, பாச பந்தம் அதிகமாகி வருகிறது. மூத்த நாட்டுப் பெண் வேறு வந்து செல்லம் கொஞ்ச ஆரம்பித்திருக்கிறாள். நீ இந்த வயதில் காஷாயம் வாங்கிக் கொண்டாயே? கொஞ்சங்கூட நன்றாயில்லை. உன்னை எப்படிக் கூப்பிடுவது என்றே எனக்குத் தெரியவில்லை. 'சுவாமிகளே! வாங்கள்! போங்கள்!' என்று மரியாதையாகச் சொல்ல வேண்டுமோ, என்னமோ?" என்றாள். "மாமி, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். தாராளமாய்ச் 'சூரியா' என்றும் 'வா' 'போ' என்றும் சொல்லுங்கள். உங்களிடம் நிஜத்தைச் சொல்லி விடுகிறேன். ஒரு காரியார்த்தமாக இந்த வேஷம் போட்டுக் கொண்டேன். உண்மையில் நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டு சாமியார் ஆகிவிடவில்லை" என்றான் சூரியா. "இது என்ன கூத்து? போயும் போயும் எதற்காக இந்த வேஷம் போட்டுக்கொண்டாய்? இந்தக் காலத்துப் பிள்ளைகளின் காரியமே வேடிக்கையாகத் தான் இருக்கிறது. ஒருவேளை சினிமாவிலே, கினிமாவிலே சேர்ந்திருக்கிறாயா, என்ன?"

"அதெல்லாம் இல்லை, மாமி! நான் சுயராஜ்ய இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன் அல்லவா?" "சுயராஜ்யமும் ஆச்சு, மண்ணாங்கட்டியும் ஆச்சு! இந்தக் காஷாய வேஷத்தைக் கலைத்துவிட்டு மறு காரியம் பார்! உனக்குக் கலியாணத்துக்குப் பெண் பார்த்து வைத்திருக்கிறேன், உன்னை இந்தக் கோலத்தில் பார்த்ததும் எனக்குப் பகீர் என்றது." "மாமி! கலியாணம் அவ்வளவு அவசியமான காரியமா? கலியாணம் செய்து கொண்டவர்கள் எல்லோரும் சந்தோஷமாயிருக்கிறார்களா?" என்று சூரியா கேட்டான். "எத்தனையோ பேர் கலியாணம் செய்து கொண்டு பிள்ளையும் குட்டியுமாய்ச் சந்தோஷமாய்த்தானிருக் கிறார்கள் . சில பேருடைய தலை எழுத்து சந்தோஷமாயிருக்க முடிகிறதில்லை. அப்படிப் பார்த்தால் உலகத்திலே யார்தான் எப்போதும் ந்தோஷமாயிருந்தார்கள்? இராமன் சீதையைக் கலியாணம் செய்து கொண்டு எவ்வளவோ கஷ்டப்பட்டார். அதனால் இராமர் கலியாணமே செய்து கொண்டிருக்கக் கூடாது என்று சொல்லமுடியுமா?" என்றாள் காமாட்சி அம்மாள். "இராமரும் சீதையும் ஒருவருக்கொருவர் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள். அதனால் அவர்கள் சந்தோஷமாயிருந்தார்கள். தம்பதிகள் அன்யோன்யமாயிருந்து மற்றவர்களால் எவ்வளவு கஷ்டம் நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம்; சந்தோஷமாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் காலத்துத் தம்பதிகள் அப்படி இல்லையே?" என்றான் சூரியா.

"நீ எதைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறாய் என்று எனக்குத் தெரிகிறது. சூரியா! என் பிள்ளையும் நாட்டுப் பெண்ணும் அன்யோன்யமா யில்லை என்றுதானே சொல்கிறாய்? அது வாஸ்தவந்தான். பெரியவர்கள் சொல்லுகிறதைக் கேட்காமல் தான்தோன்றித் தனமாகக் காரியம் செய்ததினால் வந்த வினை இது. கலியாணம் நிச்சயம் செய்வது என்றால், ஜாதகம் பார்த்துச் செய்ய வேண்டும் என்று எதற்காகப் பெரியவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்? இந்த மாதிரியெல்லாம் ஏடாகூடமாக ஆகக் கூடாது என்றுதான் நான் அப்போதே அடித்துக் கொண்டேன்; 'எல்லாவற்றுக்கும் ஜாதகம் வாங்கிப் பார்த்து விடலாம்' என்று நான் சொன்னதை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. எப்போது பார்த்தாலும் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்தப் பிராமணருக்குக் கூட அப்போது புத்தி எங்கேயோ போய்விட்டது! உன் அத்தங்காள் ஜாதகத்தில் என்ன தோஷம் இருந்ததோ, என்னமோ? உன் தங்கை லலிதாவைப் பார்ப்பதற்காகத்தானே நாங்கள் ஊருக்கு வந்திருந்தோம்? லலிதாவின் ஜாதகமும் ராகவனுடைய ஜாதகமும் பொருந்தியிருந்தது. அப்படி நடந்திருந்தால் இந்தக் கஷ்டமெல்லாம் வந்திராது!" என்றாள் காமாட்சி அம்மாள்.

"இப்போது என் அத்தங்கா படுகிற கஷ்டத்தையெல்லாம் என் தங்கை பட்டிருப்பாள்!" என்றான் சூரியா. காமாட்சி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. "நன்றாய் சொன்னாய் சூரியா! உன் அத்தங்காள் பரம சாது. ராகவன் தான் அவளைக் கஷ்டப்படுத்துகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயாக்கும்! கலியாணம் ஆன புதிதில் நானும் உன் அத்தங்காளைச் சாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட நாட்டுப் பெண் எனக்குக் கிடைத்தாளே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். போகப் போகத் தான் தெரிந்தது; உன் அத்தங்காள் எப்படிப்பட்ட ராட்சஸி என்று. அவளுக்குச் சீதை என்று பெயர் வைத்தது ரொம்பத் தப்பு. சூர்ப்பநகை, தாடகை என்று வைத்திருக்க வேண்டும்?" என்றாள். "சாதுப் பெண்ணாயிருந்தவள் எப்படித் திடீரென்று ராட்சஸியாகி விட்டாள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் அல்லவா?" காரணம் என்ன காரணம்? அவளைச் சாதுப் பெண் என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோமே, அதுதான் தப்பு! உலகத்தில் துஷ்டைகள் எத்தனையோ பேரை நானும் பார்த்திருக்கிறேன். உன் அத்தங்காளைப் போல் பார்த்ததே இல்லை! ஒவ்வொரு சமயம் எனக்குப் பயமா இருக்கிறது. சூரியா! ஏதாவது விஷத்தைக் கிஷத்தைக் கலந்து..." "ஐயையோ! அப்படிச் சொல்லாதீர்கள்; அம்மா! எப்பேர்ப்பட்ட ராட்சஸியாக இருந்தாலும் புருஷனுக்கு விஷம் வைத்துக் கொல்லும்படி அவ்வளவு பாதகியாயிருப்பாளா?" என்று அலறினான் சூரியா.

"மெள்ளப் பேசுடா, அப்பா! மெள்ளப் பேசு! புருஷனுக்கு விஷம் வைத்துவிடுவாள் என்று நான் சொல்லவில்லையே! கிராமாந்தரத்துப் பெண்கள் சிலர் புருஷனை வசப்படுத்தி வைத்துக் கொள்வதற்கு என்று எண்ணிக் கொண்டு மருந்து வைத்து விடுவதுண்டு. அது பல புருஷனுக்கு யமனாக முடியும். உன் அத்தங்காள் அவ்வளவு அசடு அல்ல; அப்படிச் செய்யவும் மாட்டாள். தான் விஷத்தைக் குடித்துவிட்டு ராகவன் பேரில் பழியைப் போட்டு விடுவாளோ என்றுதான் பயப்படுகிறேன். "புருஷன் படுத்தும் கொடுமை தாங்காமல் செத்துப் போகிறேன்!" என்று எழுதி வைத்துவிட்டுச் செத்தாலும் சாவாள்! அவளுடைய மூர்க்கத்தனத்தை நினைத்தால் சில சமயம் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது..." "மாமி! விஷங்குடித்துச் செத்துபோக வேண்டும் என்று நினைப்பதற்குச் சீதாவின் மனது எவ்வளவு வெறுத்துப் போயிருக்க வேண்டும்? அப்படி மனது வெறுப்பதற்குக் காரணமில்லாமலா இருக்கும்? உங்கள் பிள்ளை பேரில் தப்பே இல்லையென்றால், வேறு என்ன காரணம் இருக்க முடியும்?" என்றான் சூரியா. இதற்குக் காமாட்சி அம்மாளின் பதில் சொல் மாரியாக வந்தது: "என் பிள்ளை பேரில் தப்பு இல்லையென்று யார் சொன்னது? எவ்வளவோ தப்பு உண்டு.

உன் தங்கையைப் பார்ப்பதற்காகப் போனவன், இந்த ரதியைத் தெருவிலே பார்த்துவிட்டு மயங்கிப் போய் 'இவளைத்தான் கலியாணம் செய்து கொள்வேன்' என்றானே? அது பெரிய தப்புத் தான். ஒரு செப்புக்காசு வரதட்சணை இல்லாமல் கலியாணம் செய்து கொண்டதும் தப்புத் தான். குப்பையில் கிடந்தவளைக் கொண்டு போய்க் கோபுரத்தில் வைத்தானே, அதுவும் தப்புத் தான். அந்த நாளில் எவ்வளவோ நான் அடித்துக் கொண்டேன். 'இவ்வளவு இடங்கொடுக்காதே!' என்று; இவன் கேட்கவில்லை. ஆக்ரா எங்கே, சிம்லா எங்கே, காஷ்மீர் எங்கே, என்று அழைத்துக் கொண்டு திரிந்தான். என்னைக் காசிக்கு அழைத்துக் கொண்டு போக அவனுக்குச் சாவகாசம் கிடைக்கவில்லை. சீதாவை லண்டனுக்கு அழைத்துக் கொண்டு போகக்கூடத் தயாராயிருந்தான். வைஸ்ராய் வீட்டுப் பார்ட்டிகளுக்கும் அழைத்துக் கொண்டு போனான். இங்கிலீஷ் படிக்க வைத்தான்; அன்னிய புருஷர்களோடு கை குலுக்கவும் ஒரே சோபாவில் உட்கார்ந்து பேசவும் மோட்டார் கார் ஓட்டவும் கற்றுக் கொடுத்தான். அப்படியெல்லாம் செய்த தப்புகளின் பலனை இப்போது அனுபவிக்கிறான். அவனுடைய ஜாதகத்தில் அப்படி எழுதியிருந்தது! இன்னொரு புருஷனாயிருந்தால் இப்படிப்பட்ட பெண்டாட்டியை விறகுக்கட்டையால் அடித்துத் துரத்திவிட்டு வேறு கலியாணம் செய்து கொண்டிருப்பான்!..." இந்த ரீதியில் காமாட்சி அம்மாளுடன் பேசுவதில் பயனில்லையென்று சூரியா அறிந்து கொண்டான்.

பேச்சை வேறு பாணியில் ஆரம்பித்தான். "மாமி! நான் ஏதோ என் அத்தங்காளுக்குப் பரிந்து பேசுவதாகவும் உங்கள் பிள்ளையைக் குற்றம் சொல்வதாகவும் நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடாது. சீதா தாயில்லாப் பெண் என்பது உங்களுக்குத் தெரியும். தகப்பனார் உயிரோடிருக்கிறாரா, இல்லையா என்பது ஒருவருக்கும் தெரியாது. உங்களையும் உங்கள் பிள்ளையையும் தவிர அவளுக்குக் கதி கிடையாது. அடித்து விரட்டினால் குளத்திலே கிணற்றிலே விழுந்து சாக வேண்டியது தான். சீதாவை உங்கள் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொடுப்பதற்கு நானும் ஒரு வகையில் பொறுப்பாயிருந்தவன். நான் வற்புறுத்திச் சொன்னபடியினாலே தான் என் அப்பா அம்மா இந்தக் கலியாணத்துக்குச் சம்மதித்தார்கள். சீதாவின் தாயாரையும் நான்தான் சம்மதிக்கப் பண்ணினேன். என் அத்தையை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதல்லவா? வாழ்நாளெல்லாம் கஷ்டப்பட்டவள், 'நான்தான் கஷ்டப்பட்டே காலம் கழித்து விட்டேன்; சீதாவாவது நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டுச் சௌக்கியமாயிருக்கட்டும்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த கலியாணத்தை நடத்தி வைத்ததற்காக என்னை ஆயிரம் தடவை 'மகராஜனாயிரு!' என்று வாழ்த்தினாள். அதையெல்லாம் நினைத்து இப்போது உங்கள் பிள்ளையும் நாட்டுப் பெண் இருக்கிற நிலையையும் எண்ணும்போது எனக்கு எவ்வளவோ துக்கமாயிருக்கிறது. அதனால் நான் எடுத்துக் கொண்ட முக்கியமான வேலைகள் கூடத் தடைப்பட்டுப் போகின்றன. ஏதாவது முயற்சி பண்ணி உங்கள் பிள்ளையும் சீதாவும் சந்தோஷமாயிருக்கப் பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசை; அதனாலே தான் உங்களிடம் வந்தேன். சீதா என்ன தப்புச் செய்கிறாள் என்று தெரிந்தால் அவளுக்குப் புத்தி சொல்லித் திருப்ப முயற்சி செய்வேன்."

சூரியாவின் இந்த நயமான பேச்சினால் காமாட்சி அம்மாளின் கோபம் கொஞ்சம் தணிந்தது. "எனக்கும் அந்த ஆசை இல்லையா, சூரியா! ராகவனும் சீதாவும் முன்போல் சந்தோஷமாக இருந்தால் அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷம் வேறு கிடையாது. ஆனால் காரணம் என்பதாக ஒன்று இருந்தால்தானே சொல்வதற்கு! மனத்திற்குள் அவர்களுக்கு ஒருவர் பேரில் ஒருவர் பிரியம் இருக்கிறது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் தினம் பொழுது விடிந்தால் சண்டையும் ரகளையும் நடப்பதில் குறைவில்லை, எல்லாவற்றுக்கும் உன் அத்தங்காளின் வாயாடித்தனந்தான் காரணம். வருகிற போது பேசவே தெரியாத ஊமையைப் போல வந்தாளே, அவளுக்கு இத்தனை வாய் எப்படி வந்ததோ, எனக்கே ஆச்சரியமாய்த் தானிருக்கிறது. அவன் ஒன்று சொன்னால் இவள் நாலு சொல்லுவது என்று ஏற்பட்டுவிட்டது. அவன் எது சொன்னாலும் இவள் மறுத்துச் சொல்லாமல் விடுவதில்லை. எங்கேயாவது இவளை அழைத்துப் போகாவிட்டால் 'ஏன் அழைத்துப் போகவில்லை!' என்று சண்டை பிடிக்கிறது. அழைத்துக் கொண்டு போனால் திரும்பி வரும்போது'ஏன் அவளோடு பேசினீர்கள்?' 'ஏன் இவளோடு பேசினீர்கள்?' என்று ஓயாமல் பிடுங்கி எடுக்கிறது. வெளியிலே வாசலிலே போய் உத்தியோகம் பார்த்துவிட்டு வருகிறவனை இப்படிப் போட்டு வதைத்தால் அவன்தான் என்ன செய்வான்? சில சமயம் அவனுக்கும் ரௌத்ராகாரம் வந்துவிடுகிறது. கோபம் வந்திருக்கும் வேளையிலாவது எதிர்த்துப் பேசாமலிருக்கத் தெரிகிறதா? அதுவும் இல்லை. உனக்குத் தான் அந்தத் தாரிணி என்கிற பெண்ணை நன்றாகத் தெரியுமே! அவளைக் கேட்டுப் பார்!

நான் காசிக்குப் போயிருந்தபோது சீதாவுக்குச் சுரம் வந்து பிழைப்பது துர்லபம் என்று ஆகிவிட்டது. அந்தச் சமயத்தில் தாரிணி வந்து இரவு பகலாக இவளுக்குச் சிசுருஷை செய்து காப்பாற்றினாள். உடம்பு சௌகரியமானதும் சீதா அவளைத் திட்டிய திட்டுக்கு அளவே இல்லை. நாக்கில் நரம்பில்லாமல் அவளையும் ராகவனையும் பற்றிப் பேசினாள். தாரிணி அவ்வளவையும் பொறுத்துக் கொண்டு சமாதானமாக நல்ல வார்த்தை சொல்லிவிட்டுப் போய்ச் சேர்ந்தாள். ஒரு சமயம் அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சலை நான் கொட்டிக் கொண்டேன். இந்த வீட்டில் பூஜை அறையில் அவள் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து ராகவனைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதம் கொடுக்கும்படி கேட்டாள். அவள் என்ன சாதியோ என்னமோ என்ற காரணத்தினால் கண்டிப்பாக முடியாது என்று சொல்லி விட்டேன். இப்போது நினைத்துப் பார்த்தால் அது பெரிய தப்பு என்று தோன்றுகிறது. தாரிணியைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் என் பிள்ளை எவ்வளவோ சந்தோஷமாக இருந்திருப்பான், அதற்கு நான் தடையாக நின்றேன். அந்தப் பெண்ணின் வயிற்றெரிச்சல் தான் இப்படி என்னையும் என் பிள்ளையையும் படுத்தி வைக்கிறது என்று தோன்றுகிறது." இதைக் கேட்ட சூரியா சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். தாரிணியின் பேரில் அவனுக்குக் கோபம் வந்தது. பழைய கதை இப்படி எல்லாம் இருக்கும்போது ராகவன் சீதாவின் வாழ்க்கையில் தாரிணி தலையிட்டிருக்கவே கூடாது என்று எண்ணினான். அவளுடைய மனதிலும் ராகவனுடைய மனதிலும் பழைய சிநேகத்தின் பாசம் இல்லை என்பது என்ன நிச்சயம்? ஆகையால் அவர்கள் விஷயத்தில் சீதா அசூயைப் படுவதிலே தான் என்ன தவறு?

இவ்விதம் எண்ணிக்கொண்டே போன சூரியா சட்டென்று அந்த எண்ணப் போக்குக்கு முட்டுக்கட்டை போட்டு நிறுத்தினான். "மாமி! நடந்துபோன காரியத்தைப் பற்றி, அது வேறு விதமாய் நடந்திருக்க கூடாதா என்று யோசிப்பதில் என்ன பிரயோஜனம்? பிரம்மா தலையில் எழுதின எழுத்தை யார் மாற்றி எழுத முடியும்? உங்கள் பிள்ளை சந்தோஷமாயிருப்பதற்கு என்ன வழி என்றுதான் இனி மேல் நாம் பார்க்க வேண்டும். சீதாவின் வாயாடித்தனத்தைப் பற்றி நீங்கள் சொன்னதை நான் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவளுக்கு என்னால் முடிந்த வரையில் புத்திமதி சொல்லிப் பார்க்கிறேன். நீங்களும் நல்ல முறையில் கொஞ்சம் சொல்லிப் பாருங்கள். டில்லிக்கு எப்போது வரப்போகிறீர்கள்?" என்று கேட்டான். "ராகவனிடமிருந்து எப்போது கடிதம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் டில்லிக்குப் போவதென்றால் ஒரு விதத்தில் பயமாகவும் இருக்கிறது. புருஷன் மனைவி சண்டையில் இந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடப் போகிறதே என்று பயப்படுகிறேன். உன்னிடம் சொன்னால் என்ன? உனக்குத் தெரிந்திருக்க வேண்டியது தான். ஒரு தடவை சீதா இந்தப் பச்சைக் குழந்தையிடம் ஏதோ அப்பாவிடம், 'அம்மாவை வையாதே, அடிக்காதே!' என்று சொல்லியிருக்கிறாள். அவனும் முரட்டுத்தனமாகத் தன் கோபத்தை இந்தக் குழந்தையிடம் காட்டி இரண்டு அடி அடித்துவிட்டான் குழந்தைக்குச் சுரம் வந்துவிட்டது..." "ஐயோ!" என்றான் சூரியா. "நீ 'ஐயோ' என்று பரிதாபப்படுகிறாயல்லவா? ஆனால் சீதா என்ன செய்தாள் தெரியுமா? குழந்தைக்குச் சுரம் என்பதை மூன்று நாள் வரையில் ஒருவரிடமும் சொல்லவில்லை. அப்புறம் ராகவனுக்கு எப்படியோ தெரிந்து டாக்டரை அழைத்துக் கொண்டு வந்தான். குழந்தை பிழைப்பது புனர் ஜன்மம் ஆகிவிட்டது. உன் அத்தங்காளின் ராட்சசத்தனத்தைப் பார்த்தாயல்லவா?" என்றாள்.

சூரியாவின் மனதிற்குள் அது சீதாவின் ராட்சசத்தனமா, அல்லது தன் புருஷனைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால் அப்படிச் செய்தாளா என்ற சந்தேகம் தோன்றியது. அதைப்பற்றிக் காமாட்சி அம்மாளிடம் வாதிப்பதில் பயனில்லை என்று தீர்மானித்து, "போனதெல்லாம் போகட்டும், நான் நாளைக்காலை டில்லி புறப்படுகிறேன். டில்லி போய்ச் சேர்ந்ததும் சீதாவைப் பார்த்துப் பேசிவிட்டு உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். எப்படியாவது தகராறைத் தீர்த்து வைத்து உங்கள் பிள்ளையும் நாட்டுப் பெண்ணும் நன்றாயிருக்கும்படி செய்வோம்!" என்றான். "நானும் அதற்காகவே தான் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டி ருக்கிறேன். சூரியா! உலகத்திலேயே அவர்கள் இரண்டு பேரிடத்திலும் இந்தக் குழந்தை இடத்திலும் தான் எனக்குப் பாசம். நீ சீதாவிடம் பேசுகிறபடி பேசு. அதோடு சீதாவின் ஜாதகம் எங்கேயாவது கிடைக்குமா என்று பார்த்து வாங்கி அனுப்பு. அவளுடைய ஜாதகத்தில் ஒருவேளை ஏதாவது தோஷம் இருந்தால் அதற்கு வேண்டிய சாந்தியைப் பண்ணச் சொல்லலாம்!" என்றாள் காமாட்சி அம்மாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஏழாம் அத்தியாயம்

வெள்ளி வீதியிலே

சரித்திரத்தில் புகழ் பெற்ற டில்லி மாநகருக்கு மறுபடியும் நேயர்களை அழைத்துச் செல்ல வேண்டியதாகிறது. 1943-ம் வருஷத்தின் பிற்பகுதியில் டில்லி நகரம் அதிவிரைவாகப் பணப் பெருக்கமும் ஜனப் பெருக்கமும் அடைந்து கொண்டு வந்தது. யுத்தம் இந்தியாவின் எல்லையை நெருங்கி வந்து கொண்டிருந்ததை முன்னிட்டுத் தலைநகரில் யுத்த முஸ்தீப்புகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் சோல்ஜர்களும் அமெரிக்க சோல்ஜர்களும் கூர்க்க சிப்பாய்களும் சீக்கியத் துருப்புகளும் தென் இந்திய வீரர்களும் எங்கே பார்த்தாலும் காணப்பட்டார்கள். டாக்ஸி கார்களுக்கும், டோ ங்கா வண்டிகளுக்கும், ரிக்ஷாக்களுக்கும் கூட என்றுமில்லாத கிராக்கி ஏற்பட்டிருந்தது. இத்தகைய நிலைமையில் டில்லி ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கிய சூரியாவுக்கு வண்டி எங்கே கிடைக்கப் போகிறது. ஸ்டேஷன் வாசலில் வந்து நின்ற சூரியா ஐந்து நிமிஷம் தயங்கி நின்று யோசனையில் ஆழ்ந்திருந்தான். புதுடில்லிப் பக்கம் நடையைக் கட்டுவதா அல்லது முதலில் பழைய டில்லிக்குப் போவதா என்னும் பிரச்சனை தான் அவனை அத்தகைய சிந்தனைக்கு உள்ளாக்கியிருந்தது. கடைசியில் பழைய டில்லிக்கே சீட்டு விழுந்தது. விடுவிடு என்று பழைய டில்லியை நோக்கி நடந்தான். பழைய டில்லியில் 'சாந்தினி சவுக்' என்னும் வீதிக்கு வந்ததும் சூரியாவின் நடை மெதுவாயிற்று. அவனுடைய உள்ளமோ சில நூறு வருஷம் பின்னால் சென்று அந்தப் பிரசித்தி பெற்ற 'வெள்ளி வீதி'யில் அவ்வப்போது நடந்த சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக்கலாயிற்று.

அந்தச் 'சாந்தினி சவுக் ஒரு காலத்தில் உலகத்திலேயே மிகப் பணக்கார வீதி என்று பெயர் பெற்றிருந்தது. தங்க நகைக் கடைகளும் நவரத்தின ஆபரணக் கடைகளும் உலகமெங்குமிருந்து வந்த பலவித அபூர்வமான பொருள்களின் கடைகளும் அவ்வீதியில் இருந்தன. மன்னாதி மன்னர்களெல்லாம் அணிய விரும்பக்கூடிய பட்டுப் பட்டாடைகளும் ரத்தினக் கம்பளங்களும் பல கடைகளில் விற்கப்பட்டன. அந்த வீதியில் வசித்தவர்கள், கடை வைத்திருந்தவர்கள் அனைவரும் செல்வத்தில் சிறந்த சீமான்கள். இப்படியாகச் செல்வம் குவிந்திருந்த இடத்துக்கு ஆபத்துக்கள் வருவது இயற்கை யேயல்லவா? ஆபத்து ஒரு தடவை அல்ல, எத்தனையோ தடவைகள் அந்த வெள்ளி வீதிக்கு வந்தது. ஐந்நூற்றைம்பது வருஷங்கள் முன்னால் மங்கோலியா தேசத்திலிருந்து தைமூர் என்னும் அசுரன் ஒரு பெரிய ராட்சதப் படையுடன் வந்தான். அச்சமயம் டில்லியில் முகம்மது துக்ளக் என்னும் பாதுஷா அரசாண்டான். தைமூரும் முகம்மது துக்ளக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். இது காரணமாகத் தைமூர் கருணை காட்டினானா? இல்லை. முகம்மது துக்ளக்கின் சைன்யத்தை டில்லிக் கோட்டை வாசலிலே தோற்கடித்து நகருக்குள் புகுந்தான். ஆயிரமாயிரம் பிரஜைகளைக் கொன்று குவித்தான்; வெள்ளி வீதியின் செல்வத்தைக் கொள்ளையடித்தான்; இரத்தின கம்பளங்களின் மீது இராஜ குமாரர்களும் இராஜகுமாரிகளும் நடமாடிய இடமெல்லாம் இரத்த ஆறு ஓடும்படி செய்தான்.

தைமூர் டில்லியில் இரண்டு வாரம் தங்கியிருந்து ஹதாஹதம் செய்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றான். அவன் போன பிறகு டில்லி நகரம் ஒரு பயங்கர சொப்பனத்திலிருந்து விழித்து எழுந்தது போல எழுந்தது. கண்டது கனவல்லவென்றும் உண்மையான பயங்கரம் என்றும் உணர்ந்தது. ஆயினும், அந்த அதிசயமான ஜீவசக்தியுள்ள நகரம் மறுபடியும் அதிசீக்கிரத்தில் சீரும் செல்வமும் பெற்றுக் குபேர புரியாயிற்று. இரத்த ஆறு ஓடிய 'வெள்ளி வீதி'யில் மறுபடியும் தங்க மொகராக்கள் குலுங்கும் சத்தமும் இராஜ குமாரிகளின் பாதச் சிலம்பின் சத்தமும் கேட்கத் தொடங்கின. டில்லியின் சரித்திரத்தில் முந்நூற்று நாற்பது வருஷங்கள் சென்றன. பாபர் முதல் ஔரங்கசீப் வரையில் மொகலாய சக்ரவர்த்திகள் வீற்றிருந்து அரசு செலுத்திய இடத்தில் இப்போது முகம்மதுஷா என்பவன் அரசு புரிந்தான். அப்போது பாரஸீகத்திலிருந்து நாதிர்ஷா என்னும் கொடிய அரக்கன் பெரும் சைன்யத்துடன் படையெடுத்து வந்தான். மறுபடியும் 'சாந்தினி சவுக்'குக்கு ஆபத்து வந்தது. 'சாந்தினி சவுக்'குக்கு அருகில் இருந்த மசூதியின் கோபுரத்தில், உட்கார்ந்து கொண்டு நாதிர்ஷா தன் மூர்க்கப் படைகள் டில்லி வாசிகளைப் படுகொலை செய்யும் காட்சியைப் பார்த்துக் களித்தான். கொலைக்குப் பிறகு கொள்ளையும் அடித்தான். மீண்டும் அந்த வீதியில் இரத்த ஆறு ஓடியது; இரத்த ஏரி தேங்கி நின்றது. இந்த பயங்கர சம்பவத்தின் ஞாபகார்த்தமாக அந்த வீதியின் ஒரு முனையிலுள்ள வாசலுக்குக் 'கூனிதர்வாஜா' (இரத்த வாசல்) என்னும் பெயர் இன்று வரையில் வழங்கி வருகிறது.

நாதிர்ஷா வந்து போன இருபது வருஷத்துக்கெல்லாம் அவனுடைய ஸ்தானத்துக்கு வந்திருந்த ஆமத்ஷா அப்தாலி என்பவன் டில்லி மீது படை எடுத்து வந்தான். நாதிர்ஷா பாக்கி வைத்து விட்டுப் போன செல்வத்தை எல்லாம் ஆமத்ஷா கொள்ளையடித்தான்; படுகொலையும் நடத்தினான். இந்தத் தடவையும் அந்த டில்லி நகரில் பெரும் கொடுமைக்கு உள்ளான பகுதி 'வெள்ளி வீதி' தான். ஆமத்ஷாவுக்குப் பிறகு ஸிந்தியாக்களும், ஹோல்கார்களும் ரோஹில்லர்களும் படையெடுத்து வந்து தங்கள் பங்குக்குக் கொள்ளை யடிக்கும் கைங்கரியத்தைச் செய்தனர். கடைசி கடைசியாகப் பிரிட்டிஷாருடைய பெரும் கருணைக்கு டில்லி மாநகரம் பாத்திரமாயிற்று. 1857-ம் ஆண்டில் 'சிப்பாய்க் கலகம்' என்று அழைக்கப்பட்ட புரட்சி தோல்வியுற்றதும் பிரிட்டிஷ் துருப்புகள் டில்லியைப் பழி வாங்கின. ஒரு வாரம் நகரமெல்லாம் கொள்ளையும் கொலையுமாக இருந்தது. ஒரு வாரத்துக்குப் பிறகு பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் சைன்யத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். வரைமுறை இல்லாமல் கொலை செய்ததை நிறுத்தி, முறைப்படி விசாரித்துக் கலகக்காரர்களைத் தண்டிக்கத் தொடங்கினார்கள்! நாதிர்ஷாவும் ஆமத்ஷாவும் படுகொலை நடத்திய அதே வெள்ளி வீதியில் பிரிட்டிஷ் இராணுவ கோர்ட்டின் தூக்குமரம் நாட்டப்பட்டது. சுமார் ஆயிரம் பேர் தூக்கிலிடப்பட்டார்கள்.

அத்தகைய பயங்கரச் சம்பவங்களுக்கு இடமான சரித்திரப் பிரசித்தி பெற்ற 'சாந்தினி சவுக்'கென்னும் வெள்ளி வீதியில் சூரியா நடந்து சென்று கொண்டிருந்தான். நடந்து கொண்டிருக்கையில் அவனுடைய மனக்கண்ணின் முன்னால் மேற்கூறிய சரித்திர நிகழ்ச்சிகள் எல்லாம் வரிசைக்கிரமமாக வந்து கொண்டிருந்தன. அந்த நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்து பார்த்தபோது அவனுடைய உடம்பு சிலிர்த்தது. ஒவ்வொரு சமயம் தலை சுற்றுவது போலிருந்தது. இன்னொரு பக்கத்தில் அளவில்லாத அதிசயம் அவனைப் பற்றிக்கொண்டிருந்தது. இவ்வளவு கொடூரங்களுக்கும் பயங்கரங்களுக்கும் உள்ளான இந்த வெள்ளி வீதி இன்றைய தினம் எவ்வளவு கலகலப்பாயிருக்கிறது! எத்தனை கடைகள்? அவற்றில் எவ்வளவு விலை உயர்ந்த பொருள்கள்! வீதியில் நடப்பதற்கு இடமின்றி நெருங்கியிருக்கும் ஜனக்கூட்டத்தை என்னவென்று சொல்வது? எத்தனை விதமான ஜனங்கள்? எத்தனை நிலத்தினர்? எத்தனை மதத்தினர்? ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், வங்காளிகள், பஞ்சாபியர், தென்னிந்தியர், இங்கிலீஷ் டாம்மிகள், அமெரிக்க நிபுணர்கள் அம்மம்மா! இது என்ன கூட்டம்? இது என்ன பணப் பெருக்கம்? அமெரிக்கர்கள் எப்படிப் பணத்தை வாரி இறைக்கிறார்கள்? 'சரித்திரம் திரும்பி வரும்' என்று சொல்கிறார்களே?

ஒருவேளை 'மறுபடியும் இந்த வெள்ளி வீதிக்குத் துர்த்திசை ஏற்படுமா? கொள்ளையும் கொலையும் இங்கே நடக்குமா? இரத்த ஆறு ஓடுமா? ஜெர்மானியரோ, ஜப்பானியரோ, ருஷியரோ, இங்கே படையெடுத்து வருவார்களா? மறுபடியும் இந்த வெள்ளி வீதி ரணகளம் ஆகுமா...? இப்படியெல்லாம் சூரியா சிந்தித்துக்கொண்டே நடந்தான். மனம் சிந்தனை செய்து கொண்டிருக்கையில் கண்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன. யாரையோ, எதையோ, அவனுடைய கண்கள் சுற்றிச் சுழன்று தேடிக் கொண்டிருந்தன. ஆயினும் பலன் கிட்டவில்லையென்று அவனுடைய முகத்தில் காணப்பட்ட ஏமாற்றமான தோற்றம் தெரிவித்தது. சூரியா வெள்ளி வீதியைக் கடந்து இன்னும் அப்பால் சென்று கடைசியாக ஜும்மா மசூதியை அடைந்தான். ஷாஜஹான் சக்கரவர்த்தி கட்டியதும் இந்தியாவிலேயே பெரியதுமான அந்த கம்பீர மசூதியைக் கீழிருந்து அண்ணாந்து பார்த்தான். பிறகு அதன் படிகளில் ஏறினான், முக்கால்வாசிப் பார்த்தான். பிறகு சற்றுத் தூரத்திலிருந்த கோட்டையைப் பார்த்தான். கோட்டைக்கும் மசூதிக்கும் நடுவிலிருந்த பகுதி ஒரு காலத்தில் ஜன நெருக்கம் வாய்ந்த பகுதியாயிருந்ததென்றும், அங்கிருந்த ஆயிரக்கணக்கான வீடுகளையும் மசூதிகளையும் பிரிட்டிஷ் துருப்புகள் பீரங்கி வைத்து இடித்து நாசமாக்கித் திறந்தவெளியாகச் செய்துவிட்டார்கள் என்றும் நினைவு கூர்ந்தான். அவன் நின்று கொண்டிருந்த புகழ்பெற்ற ஜும்மா மசூதி கூட பிரிட்டிஷ் துருப்புகளின் ஆதிக்கத்தில் கொஞ்ச காலம் இருந்தது. தைமூரும் நாதிர்ஷாவும் ஆமத்ஷாவும் காட்டுமிராண்டிகள் என்று சொல்லத்தக்க பழைய காலத்து ராட்சதர்கள்.

ஆனால் படித்தவர்கள் என்றும் நாகரிகமடைந்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் பிரிட்டிஷார் இந்த டில்லி மாநகரில் செய்த அக்கிரமங்களைப்பற்றி என்னவென்று சொல்வது? அவற்றை எண்ணிப் பார்த்தபோது சூரியாவின் இரத்தம் கொதித்தது. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய அற்பமாற்சரியங்களை ஒழித்துப் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு ஓட்டும் காலம் வருமா? பழைய டில்லியிலும் புது டில்லியிலும் யூனியன் ஜாக் கொடி இறங்கி இந்திய சுதந்திரக் கொடி பறக்கும் நாள் வருமா? அந்த நாளைப் பார்க்கத் தனக்குக் கொடுத்து வைத்திருக்குமா...? இவ்விதம் சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது யாரோ தன் இடது கையை இரும்புப் பிடியாகப் பிடித்ததை உணர்ந்து சூரியா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
எட்டாம் அத்தியாயம்

மரத்தடியில்

இரும்பையொத்த கையினால் தன் கையை அவ்விதம் பிடித்தவன் ஆஜானுபாகுவான ஒரு போலீஸ்காரன் என்பதைக் கண்டான். ஒரு கணநேரத்துக்குள் சூரியாவின் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் பாய்ந்து சென்றன. இத்தனை நாட்கள், இத்தனை தூரம் பிரயாணம் செய்தபோதெல்லாம் பிடிபடாமல் வந்து கடைசியாக இந்த டில்லி நகரின் முழுச் சோம்பேறிப் போலீஸ்கார னிடந்தானா சிக்கிக்கொள்ள வேண்டும்? அதுவும் தான் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்கள் சில பாக்கியிருக்கும் போது? இன்னும் இரண்டு நாள் அவகாசம் தனக்குக் கிடைத்திருக்க கூடாதா? இவ்விதம் ஏற்பட்ட மனக் கலக்கத்தைச் சூரியா வெளியில் காட்டிக்கொள்ளாமல், "யார் நீ? எதற்காக என் கையைப் பிடிக்கிறாய்?" என்று அதட்டலாகக் கேட்டான். போலீஸ்காரன், "இன்ஸ்பெக்டர் சாகிப் உன்னைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்!" என்று சொன்னதும் சூரியாவின் கலக்கம் அதிகமாயிற்று. "உன் இன்ஸ்பெக்டர் சாகிப்பை எனக்குத் தெரியாது, அவரிடம் எனக்கு என்ன வேலை? நான் வர முடியாது!" என்று சொன்னான். அதற்கு அந்தப் போலீஸ்காரன், "இன்ஸ்பெக்டர் சாகிப்பை பார்த்தால் இப்படிச் சொல்ல மாட்டாய் சீக்கிரம் வா" என்று கூறினான்.

இதை அவன் கூறிய குரல் சூரியாவின் மனதில் ஏதோ ஒரு சந்தேகத்தை உண்டாக்கியது. குரலைக் காட்டிலும் அதிகமாக அந்தப் போலீஸ்காரனுடைய முகத்தில் தோன்றிய புன்னகையும் கண்சிமிட்டலும் சூரியாவின் மனதில் குழப்பத்தை உண்டாக்கின. இதற்குள் ஜும்மா மசூதியின் படிகளில் அவர்கள் நின்ற இடத்துக்கு அருகில் கூட்டம் அதிகமாகச் சேர ஆரம்பித்தது. சிலர் போலீஸ்காரனுக்கும் சூரியாவுக்கும் நடந்த விவாதத்தைக் கவனிக்கவும் தொடங்கியிருந்தார்கள். இதையெல்லாம் ஒரு வினாடி நேரத்துக்குள் எண்ணிப் பார்த்து, எப்படியிருந்தாலும் அந்தப் போலீஸ்காரனுடன் போவதே நல்லது என்று சூரியா தீர்மானித்தான். "சரி; வருகிறேன் இன்ஸ்பெக்டர் சாகிப் எங்கே இருக்கிறார்?" என்று கேட்டான் சூரியா. "பேசாமல் என்னுடன் வா! ஆனால் ரொம்ப நெருங்கி வராதே! கொஞ்ச தூரத்திலேயே என் பின்னால் வந்து கொண்டிரு! இன்ஸ்பெக்டர் சாகிப்பிடம் நான் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் நடந்தான். சூரியாவுக்கு இப்போது தைரியம் அதிகமாயிற்று. தான் தப்பித்துக் கொள்வதற்குச் சௌகரியமாகப் போலீஸ்காரன் முன்னால் சென்றதினாலும், அவன் திரும்பிக் கூடத் தன்னைப் பார்க்காததினாலும் சூரியாவின் மனதில் ஏற்கனவே தோன்றிய எண்ணம் உறுதிப்பட்டது. போலீஸ்காரன் போன வழியே அவனைத் தன் கண் பார்வையிலிருந்து தவற விடாமல், பின்னால் நடந்து சென்றான். போலீஸ்காரன் ஜும்மா மசூதியைச் சுற்றி ஜேஜே என்று நெருங்கி நின்ற ஜனக்கூட்டத்தின் வழியாகப் புகுந்து நடந்து வெள்ளி வீதிக்குச் சென்று மணிக்கூண்டை அடைந்தான். பிறகு டவுன் ஹால் காம்பவுண்டுக்குள் புகுந்து போய் அதன் பின்புறத்தில் கொஞ்ச தூரத்தில் இருந்த விசாலமான மைதானத்தை அடைந்தான்.

இன்று 'காந்தி மைதானம்' என்ற பெயர் பெற்று விளங்கும் அந்த மைதானத்தில் ஆங்காங்கே சில மரங்களும் செடிகளும் இருந்தன. மைதானத்தின் விளிம்பை அடைந்ததும் போலீஸ்காரன் நின்று திரும்பிப் பார்த்தான். சூரியா சமீபத்தில் வந்த உடனே அவன் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு மரத்தைச் சுட்டிக்காட்டி, "அந்த மரத்துக்குப் பின்னால் இன்ஸ்பெக்டர் சாகிப் இருக்கிறார், போய்ப் பார்த்துக் கொள்! இன்ஸ்பெக்டர் சாகிப்பும் நீயும் பேசும்போது நான் அருகில் இருப்பது நன்றாயிராது. உங்களுக்குள் எத்தனையோ இரகசியங்கள் இருக்கும்!" என்று சொல்லி மறுபடியும் புன்னகை புரிந்தான். சூரியா பொங்கி வந்த வியப்புடனே போலீஸ்காரன் சுட்டிக்காட்டிய மரத்தை நோக்கிச் சென்றான். மரத்தின் அருகில் போகும்போது அதன் பின்னால் ஒரு பெண் உட்கார்ந்து கையில் வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தை ஆழ்ந்த கவனத்துடன் படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. "அவள் யார்?" என்ற எண்ணம் சூரியாவின் உள்ளத்தில் உதயமாவதற்குள், அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு அந்தப் பெண் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவள் தாரிணி என்று கண்டதும் சூரியாவுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. "வருக! வருக! வீரர் சூரியாவின் வரவு நல்வரவாகுக!" என்றாள் தாரிணி. "ஓகோ! இன்ஸ்பெக்டர் சாகிப் நீங்கள்தானா? அந்தப் போலீஸ்காரர் என் கையைப் பிடித்ததும் ஒரு நிமிஷம் திணறிப் போய்விட்டேன்!" என்று சொல்லிக்கொண்டே சூரியா தாரிணிக்கு எதிரில் உட்கார்ந்தான். மேலும் தொடர்ந்து, "உங்களுடைய சாமர்த்தியம் எனக்குத் தெரிந்த விஷயந்தான். ஆயினும் ஒரு போலீஸ்காரனையே உங்கள் வலையில் சிக்க வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை," என்று சொன்னான்.

"போலீஸ்காரனைப் பார்த்து எதற்காக அவ்வளவு பயம்? புரட்சி வீரர் சூரியாவே போலீஸ்காரனுக்குப் பயப்பட்டால் மற்றவர்களின் கதி என்ன?" என்று தாரிணி கேட்டாள். "பயம் என்று நான் சொன்னேனா? எத்தனையோ இடங்களில் எவ்வளவோ வேஷம் போட்டு எத்தனையோ தந்திரம் செய்து போலீஸாரிடம் தப்பி வந்தேன். புனிதமான சந்நியாசி வேஷங்கூடப் போட்டுக்கொண்டேன். அப்படியெல்லாம் செய்து இத்தனை தூரம் டில்லிக்கு வந்துவிட்டுத் தங்களைச் சந்திக்காமல், விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமல், போலீஸ் 'லாக் - அப்'புக்குப் போகிறதென்றால் திகைப்பாயிராதா?" "போன காரியமெல்லாம் பூர்த்தியாயிற்றா?" என்று தாரிணி கேட்டாள். "எப்படி பூர்த்தியாகும்? அதற்குள்ளே தான் தலை போகிற காரியம் என்று தங்களிடமிருந்து கடிதம் வந்து விட்டதே? அந்தக் கடிதத்தினால் தேவப்பட்டணத்தில் நேர்ந்த விபரீதங்களைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். எதற்காக அப்படிக் கடிதம் எழுதினீர்கள்? சீதாவுக்கு அவ்விதம் என்ன நேர்ந்துவிட்டது? உண்மையில் சீதாவை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது. ஒரு தனிப்பட்ட மனுஷிக்காக எவ்வளவோ முக்கியமான தேசீய காரியங்கள் தடைப்பட்டுப் போகிறதென்றால்?..." "நான் அவ்விதம் நினைக்கவில்லை; கோபுரத்தைப் பொம்மை தாங்குகிறது என்று நினைத்துக்கொள்வது போல நம்மாலேதான் தேசத்தின் காரியங்கள் நடக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்கிறோம். தெய்வ சித்தம் ஒன்று இருக்கிறது; அதன் சட்டப்படி எல்லாம் நடக்கின்றன. தேசத்தை நாம் காப்பாற்ற முயல்வதைவிட நமக்குத் தெரிந்திருக்கும் ஒருவரின் கஷ்டத்தைப் போக்கினால் கைமேல் பலன் உண்டு" என்றாள் தாரிணி.

"கடைசியாக நாம் சந்தித்த பிறகு தத்துவ ஆராய்ச்சி பலமாகச் செய்திருக்கிறீர்கள். முன் தடவை நாம் பேசிய போது தனி மனிதர்களுடைய சுக சௌகரியங்களைக் காட்டிலும் தேச நன்மையே பெரிது என்று முடிவு செய்தோம். இந்த மாறுதலுக்கு காரணம் என்னவோ தெரியவில்லை." "உங்கள் அத்தங்காதான் காரணம் தேசம் எந்தக் கேடாவது கெட்டுப் போகிறது சீதாவின் கஷ்டம் நீங்கினால் போதும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது." "சீதாவின் பேரில் உங்களுக்கு அளவில்லாத கருணை உண்டாகியிருக்கிறது. அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை." "ஒருவரிடம் ஒருவர் பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டுமா என்ன?" "வேண்டியதில்லைதான், பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டியதில்லை என்பதினாலேதான் ஸ்திரீகள் முதல் நம்பர் அயோக்கியர்கள் பேரில் காதல் கொள்ளுகிறார்கள்?" "நீங்கள் சொல்வது எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. ஸ்திரீகள் அயோக்கியர்கள் மீது மட்டுமே காதல் கொள்ளுகிறார்கள் என்றா சொல்லுகிறீர்கள்? அப்படியானால் அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஸ்திரீகள் காதல் கொள்ளக்கூடிய யோக்கியர்கள் சிலரும் இருக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட யோக்கியர் ஒருவரைத் தெரியும்" என்று தாரிணி கூறிவிட்டு எங்கேயோ பார்த்தாள். சூரியா எரிச்சலுடன், "அப்பேர்ப்பட்ட தனிப் பெரும் யோக்யன் யார் என்று எனக்கும் தெரியும். அவன் பெயர் சௌந்தரராகவன், இல்லையா?" என்றான். "நான் சௌந்தரராகவனை நினைத்துக் கொண்டு பேசவில்லை. என்றாலும் அவரையும் நான் அயோக்கியர் என்று சொல்ல மாட்டேன். ஏதோ சில தவறுகள் அவர் செய்யக் கூடும். ஆனால் சீதாவிடம் அவருக்கு எவ்வளவோ அன்பு உண்டு என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். சீதா தன்னுடைய வீண் சந்தேகங்களினால் அவருடைய அன்பையெல்லாம் விஷமாகச் செய்து விடுகிறாள்" என்றாள் தாரிணி. "போகட்டும்; ராகவனுடைய அந்தரங்கத்தைச் சீதாவை விட நீங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?"

"சில சமயம் ஒரு பொருளுக்கு மிகவும் சமீபத்திலிருப்பவர்களைக் காட்டிலும் கொஞ்சம் தூரத்திலிருப்பவர்களுக்கு அதன் சொரூபம் நன்றாய்த் தெரிகிறது. அதனால் சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்தை என்னால் நன்றாய் அறிந்து கொள்ள முடிந்தது." "யார் கண்டார்கள்? சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்துக்கு நீங்கள் அதிக சமீபத்தில் இருக்கலாமல்லவா?" "சூரியா! நீங்கள் ஏதோ விகல்பமாகப் பேசுகிறீர்கள், இத்தனை நேரமும் அறியாமற் போனேன். இப்படிப் பேசுவதானால் நான் உங்களுடன் பேசுவதற்கே இஷ்டப்படவில்லை, நீங்கள் எழுந்து போகலாம்!" "இந்த மைதானம் உங்களுக்குச் சொந்தமா என்ன?" "சரி; அப்படியானால் நான் எழுந்து போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு தாரிணி எழுந்தாள். "சூரியா பரபரப்புடன், "தாரிணி! நான் சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நான் கூறியது பிசகு தான்; தயவு செய்து உட்காருங்கள்! சீதா விஷயமாக நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போங்கள்" என்றான். தாரிணி மறுபடி உட்கார்ந்து "திடீரென்று உங்களிடம் இந்த மாறுதல் காணப்படுவதன் காரணம் தெரியவில்லை. யாரோ ஏதோ சொல்லி உங்கள் மனதைக் கெடுத்திருக்கிறார்கள். சீதாவைப் பார்த்துவிட்டு இங்கு வந்தீர்களா?" என்றாள். "இல்லை; ஸ்டேஷனில் இறங்கியதும் நேரே இங்கு வந்தேன். என்னுடைய அறைக்குக் கூடப் போகவில்லை சீதா எப்படி இருக்கிறாள்? அவள் விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்." "அவள் மனதில் ஏதோ ஒரு விஷம் புகுந்திருக்கிறது. ஏதோ ஒரு சந்தேகம் குடிகொண்டிருக்கிறது. அதனாலேயே அவளுடைய குடும்ப வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறது. அவளுடைய ஆயுளுக்கே அபாயம் வந்துவிடும் போலிருக்கிறது. நீங்கள் உடனே போய் விசாரித்து அவளுடைய மனதிலுள்ளதைத் தெரிந்து கொள்ள முயல வேண்டும். சில நாளைக்கு அவளை எங்கேயாவது அனுப்பி வைத்தாலும் நல்லது."

"அவள் எந்த ஊருக்குப் போவாள்? போவதற்கு எந்த ஊர் இருக்கிறது? நான் சொல்கிறேன், தாரிணி! சீதா இனிமேல் சுகமடைவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது; அவள் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் ஆனால் ஹிந்து சாஸ்திரமும் பிரிட்டிஷ் சட்டமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆகையால் துன்பப்பட்டுச் சாகவேண்டியது தான்." "நான் கூடச் சில சமயம் நினைத்ததுண்டு. சீதா விவாகரத்து செய்துவிட்டு உங்களைக் கலியாணம் செய்து கொண்டால் எவ்வளவு சந்தோஷமாயிருப்பாள் என்று." "ஒரு நாளும் இல்லை; நீங்கள் நினைப்பது பெருந்தவறு. சீதாவிடம் என்னுடைய அபிமானம் அந்த விதமானது அன்று. அத்தையிடம் நான் கொண்ட அபிமானம் அவளுடைய பெண்ணின் க்ஷேமத்தில் அக்கறை கொள்ளச் செய்திருக்கிறது. மற்றபடி அவளுடைய இலட்சியங்களுக்கும் என்னுடைய இலட்சியங்களுக்கும் பொருந்தவே பொருந்தாது. சீதா பட்டுப்பூச்சி இனத்தைச் சேர்ந்தவள். பட்டிலும் பகட்டிலும் பளபளப்பிலும் படாடோ பத்திலும் பிரியம் கொண்டவள். பார்ட்டிகளுக்குப் போவதே ஜன்ம சாபல்யம் என்று எண்ணியிருக்கிறவள்..." "சீதா பிறக்கும்போதே இந்த மாதிரி குணங்களுடனே பிறந்தாளா? எல்லாம் பின்னால் ஏற்பட்ட பழக்க வழக்கங்கள் தானே?" "அது எப்படி இருந்தால் என்ன? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். தேவப்பட்டணம் போலீஸாரிடமிருந்து தப்புவதற்காக நான் சந்நியாசி வேஷம் பூண்டேன். அந்த வேஷத்திலேயே நான் சில நாள் இருக்க நேர்ந்தது. அப்போது உண்மையாகவே நான் சந்நியாசி ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. மதராஸில் காமாட்சி அம்மாளைப் பார்த்துப் பேசிய பிறகு அந்த எண்ணம் பலம் பெற்றுத் தீர்மானம் ஆயிற்று."

"தங்களுடைய தீர்மானத்தை நான் மிகவும் மெச்சுகிறேன்." "எல்லா விஷயத்திலும் நம்முடைய கருத்துக்கள் ஒத்திருப்பது பற்றிச் சந்தோஷம்" என்றான் சூரியா. "எனக்கும் சந்தோஷந்தான்; ஆனால் காமாட்சி அம்மாள் தங்களுடைய குருநாதரானது எப்படி?" "சீதாவைப் பற்றி விசாரிப்பதற்காக அந்த அம்மாளிடம் போயிருந்தேன். சீதாவுக்கு டைபாய்ட் சுரம் வந்தது பற்றியும் நீங்கள் அவளுக்குச் சிசுரூஷை செய்து பிழைக்க வைத்தது பற்றியும் தெரிவித்தாள்." "அவ்வளவுதானா! அதிலிருந்து எப்படிச் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும் உறுதி ஏற்பட்டது?" "காமாட்சி அம்மாள் இன்னும் சில விஷயங்களும் சொன்னாள். ராகவனுடைய இளம்பிராயத்தில் அவன் வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ள இஷ்டப்பட்டதைப் பற்றியும் அவளும் அதற்கு ஆவலாயிருந்தது பற்றியும் சாதி வித்தியாசம் காரணமாகத் தான் அதற்குச் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டது பற்றியும் சொன்னாள். தாயாருடைய வாக்கை இவ்வளவு பக்தியாக நிறைவேற்றி வைத்த சௌந்தரராகவனை நான் மனதார மெச்சினேன்." "நீங்கள் இன்றைக்கு ஒரு மாதிரி பேசி வந்ததின் காரணம் இப்போது தெரிகிறது. ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணின் இப்போதைய அபிப்பிராயத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாள் சொன்னாளா?" "இல்லை; அவளுக்கு எப்படி அது தெரியுமா? ஆனால், 'ராகவன் அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒருவேளை சந்தோஷமாயிருந்திருப்பான்' என்று சொன்னாள்."

தாரிணி சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, "இதற்கும் தங்களுடைய சந்நியாசத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டாள். "நான் எப்போதாவது கலியாணம் செய்து கொள்ளுவதாயிருந்தால், அவள் இன்னொரு ஆசாமியிடம் காதல்கொண்டிருப் பதாகத் தெரிந்தால் நான் சந்நியாசம் வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?" "நீங்கள் நினைப்பது முற்றும் தவறு; அந்தப் பெண்ணின் இதயத்தில் ராகவனுக்கு இப்போது கொஞ்சம் கூட இடமில்லை. நீங்கள் சந்நியாசி ஆனதாகத் தெரிந்தால் அவளும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி கன்னிகா மடத்தைச் சேர்ந்து விடுவாள்." சூரியா ஆர்வத்துடன் தாரிணியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, "இது உண்மைதானா?" என்று கேட்டான். "தங்களுடைய இருதயத்தையே கேட்டுப் பார்க்கிறதுதானே?" என்று சொன்னாள் தாரிணி. "என் இருதயம் சொல்லியதை நம்புவதற்கு இதுவரை எனக்குப் பயமாயிருந்தது. அவ்வளவு பெரிய பாக்கியம் இந்த துரதிர்ஷ்டசாலிக்கு எப்படிக் கிடைக்கும் என்றும், இருதயம் நம்மை ஏமாற்றுகிறது என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன்." "இருதயம் ஏமாற்றவில்லை; சலன சுபாவமுள்ள அறிவு தான் ஏமாற்றிற்று. சீதாவையும் அதே அறிவு தான் ஏமாற்றுகிறது. நீங்கள் உடனே சென்று அவளுடைய நிலையைத் தெரிந்து கொண்டு வாருங்கள். சீதாவை நான் பார்த்து இருபது நாள் ஆகிவிட்டது எப்படியிருக்கிறாளோ என்று கவலையா இருக்கிறது?" "அப்படியே ஆகட்டும், நாளைக்கு நாம் இந்த இடத்திலேயே சந்திக்கலாமா?"

"கூடவே கூடாது; சுற்றுமுற்றும் பாருங்கள் நம்மை எத்தனை பேர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். நாளைக்கு ஜாகையில் சந்திக்க வேண்டியது தான். நம்முடைய நண்பர்கள் உங்களுடைய அனுபவங்களைக் கேட்க ஆவலுள்ளவர் களாயிருக்கிறார்கள். நாளைக்கு இதே நேரத்துக்கு மணிக்கூண்டுக்கு அருகில் வாருங்கள். போலீஸ்காரன் இந்துலால் உங்களைச் சந்தித்து ஜாகைக்கு அழைத்துக் கொண்டு வருவான். இப்போது என்னுடன் தொடர்ந்து வரவேண்டாம். நான் அந்தப் போலீஸ்காரன் அருகில் போய்ச் சேரும் வரையில் தாங்கள் அந்த மரத்தடியிலே உட்கார்ந்திருப்பது நல்லது." இவ்விதம் கூறிவிட்டுத் தாரிணி எழுந்து நடந்தாள். சூரியா அங்கேயே உட்கார்ந்து தாரிணியும் போலீஸ்காரனும் மறையும் வரையில் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஒன்பதாம் அத்தியாயம்

இதயம் நின்றது

தாரிணி கண்ணுக்கு மறைந்ததும் சூரியா அங்கிருந்து எழுந்து செல்லலாம் என்று நினைத்தான். அச்சமயம் இத்தனை நேரமும் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்த மூன்று மனிதர்கள் தன்னை நோக்கி வருவதைச் சூரியா பார்த்தான். அவர்கள் அருகில் வரட்டும் என்று காத்திருந்தான். மூன்று மனிதர்களும் வந்து சூரியாவைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். "தம்பி! உனக்கு எந்த ஊர்?" என்று அவர்களில் ஒருவன் கேட்டான். "எனக்கு மதராஸ்!" என்றான் சூரியா. "ஆ! மதராஸ்!" என்று மூன்று பேரும் சேர்ந்து சொன்னார்கள். சற்றுப் பொறுத்து, "இங்கு ஒரு பெண் உட்கார்ந்திருந்தாளே, அவள் உனக்கு என்னமாக வேணும்?" என்று ஒருவன் கேட்டான். "அவள் என் சிநேகிதி!" என்றான் சூரியா. "ஆகா! அவள் உன் சிநேகிதி!" என்றார்கள் மூன்று பேரும் சேர்ந்தாற்போல். அதற்குப் பிறகு சற்று நேரம் சம்பாஷணை நகரவில்லை. சூரியா பொறுத்துப் பார்த்துவிட்டு, "உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றான். "பஹுத் அச்சா! அப்படிக் கேள் சொல்கிறோம்" என்றான் ஒருவன். "பஹுத் அச்சா! அப்படிக் கேள் சொல்கிறோம்" என்றார்கள் மற்ற இருவரும். அவர்கள் ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கலாம் என்று ஏற்கனவே சந்தேகித்தான். இப்போது அவர்கள் பல்லவி, அனுபல்லவி முறையில் பேசுவதிலிருந்து அந்தச் சந்தேகம் உறுதிப்பட்டது.

"சொல்லுங்கள்; கேட்பதற்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் சூரியா. "அந்தப் பெண்ணின் சிநேகம் உனக்கு வேண்டாம்!" என்று ஒருவன் சொன்னான். மற்ற இருவரும் அதையே திருப்பிச் சொன்னார்கள். "ஏன் அந்தப் பெண்ணிடம் என்ன கெடுதல்? அவளிடம் சிநேகம் செய்தால் என்ன?" என்று சூரியா கேட்டான். "பெரிய இடத்துச் சமாசாரம்!" என்றான் ஒருவன். "ஆமாம் ரொம்பப் பெரிய இடத்துச் சமாசாரம்" என்றார்கள் மற்ற இருவரும். "அப்படியானால் அந்த ரொம்பப் பெரிய இடத்திலே போய்ச் சொல்லுங்கள் என்னிடம் ஏன் சொல்லவேண்டும்?" என்றான் சூரியா. மூன்று பேரில் ஒருவருடைய முகத்தை ஒருவர் பார்த்தார்கள். "எனக்கு நேரமாகிறது; நான் போய் வருகிறேன்" என்றான் சூரியா. மூன்று பேரில் ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, "சொல்லி விடலாமா?" என்று கேட்டான். "சொல்லிவிடலாமா?" என்று அவர்களும் கேட்டார்கள். முதல் மனிதன் சூரியாவைப் பார்த்து, "தம்பி! உனக்குப் பணம் வேணுமா?" என்றான். "எவ்வளவு?" என்று சூரியா கேட்டான். முதல் மனிதன் மற்றவர்களைப் பார்த்து, "எவ்வளவு என்று கேட்கிறான்; சொல்லட்டுமா?" என்றான். "சொல்லு!" என்றார்கள். "தம்பி! உனக்கு லட்சம் ரூபாய் பணம் வேண்டுமா? ஒரு லட்சம் ரூபாய்!" என்றான் முதல் மனிதன். சூரியா கொஞ்சம் திகைத்துப் போனான். மெதுவாகச் சமாளித்துக் கொண்டு, "கள்ள நோட்டா? நிஜப் பணமா?" என்றான். "ஆகா! கள்ளநோட்டு!" என்று சொல்லிவிட்டு மூவரும் சிரித்தார்கள். பிறகு முதல் மனிதன், தம்பி! நிஜப் பணம்! ஒரு லட்சம் ரூபாய் நோட்டு வேண்டாமென்றால் தங்கமாகத் தருகிறோம்!" என்றான்.

"ஆமாம் தங்கமாகத் தருகிறோம்!" என்றார்கள் மற்றவர்கள். "கொடுங்கள்" என்று சூரியா கையை நீட்டினான். "கெட்டிக்காரப் பையன்; பணத்துக்குக் கையை நீட்டுகிறான்!" என்று சொல்லிவிட்டு மூவரும் சிரித்தார்கள். கடைசியில் ஒருவன் மென்று விழுங்கிக்கொண்டு, "ஒரு லட்சம் ரூபாய் சும்மாக் கிடைக்குமா? எங்களுக்கு ஒரு உதவி செய்தால் கிடைக்கும்!" என்றான். "என்ன உதவி?" என்றான் சூரியா. "சற்று முன்னால் நீ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாயே? அவளைக் கொண்டு வரும்படி எங்களுக்குப் பெரிய இடத்து உத்தரவு கிடைத்திருக்கிறது. அதற்கு நீ உதவி செய்தால் லட்சம் ரூபாய் ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்!" சூரியா இம்மாதிரி ஏதோ வரப்போகிறது என்று எதிர் பார்த்தான். ஆயினும் அதைக் காதால் கேட்டதும் சொல்ல முடியாத கோபம் வந்தது. கோபத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டான். இப்போது கோபித்துக்கொண்டு என்ன பயன்? அவர்கள் மூன்று பேர்; முரட்டுத் தடியர்கள். அவர்களுடன் சண்டை பிடிப்பதால் பல காரியங்கள் கெட்டுப் போகும். மேலும் அவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன என்று அவனுக்கு இன்னும் சந்தேகமாயிருந்தது.

கொஞ்ச நேரம் யோசிப்பதுபோலப் பாசாங்கு செய்துவிட்டு, "இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள்; யோசித்துப் பதில் சொல் கிறேன்" என்றான். "எப்போது எங்கே சந்திக்கலாம்!" என்று முதல் மனிதன் கேட்டான். "இதே இடத்தில் இதே நேரத்தில் நாளை மறுநாள் சந்திக்கலாம்!" என்றான் சூரியா. "உன்னுடைய ஜாகை எங்கே?" என்று ஒருவன் கேட்டான். "ஜாகை எங்கே?" என்று மற்ற இருவரும் கேட்டார்கள். "தற்போது எனக்கு ஜாகை எதுவும் இல்லை; இனிமேல் தான் தேட வேண்டும்!" என்று சொல்லிக்கொண்டு சூரியா எழுந்தான் அவர்களும் எழுந்தார்கள். சூரியா எங்கே போனாலும் அவர்களும் சற்றுத் தூரத்தில் பின் தொடர்ந்து வந்தார்கள். காரியம் இல்லாத இடங்களுக்கெல்லாம் சூரியா சென்று அந்த மூன்று பேருடைய பார்வையிலிருந்து தப்புவதற்கு இரவு வெகுநேரமாக ஢விட்டது. ஆயினும் சீதாவை அன்று இரவு எப்படியும் பார்த்துவிடுவது என்ற தீர்மானத்துடன் நடந்தான். சீதா தன்னுடைய வீட்டில் அறையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தாள். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் 'டிக் டிக், டிக், டிக்' என்று அடித்துக் கொண்டி ருந்தது. சீதாவின் இதயம் கடிகாரத்தின் 'டிக்' சத்தத்தோடு ஒத்து அடித்துக் கொண்டிருந்தது. கடிகாரத்தின் ஒவ்வொரு 'டிக்'கும் தன்னுடைய வாழ்நாளின் இறுதியை அருகில் கொண்டுவந்து கொண்டிருக்கிறது என்பது சீதாவுக்குத் தெரிந்துதானிருந்தது. கடிகார முள் நள்ளிரவின் பன்னிரண்டு மணியை நெருங்க நெருங்க, சீதாவின் இதயத்தில் குத்தியிருந்த துன்ப முள்ளின் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது.

மணி பதினொன்றரை ஆகிவிட்டது, அவளுடைய ஆயுளில் இன்னும் அரை மணி நேரந்தான் பாக்கியிருக்கிறது. அதற்குள் எத்தனையோ காரியங்கள் செய்தாக வேண்டும். குழந்தைக்குக் கடிதம் எழுத வேண்டும்; இவருக்கும் நாலு வரி எழுதத்தான் வேண்டும். ஆனால் எத்தனை முயன்றாலும் ஒன்றும் எழுத வரவில்லையே, என்ன செய்கிறது. சரியாக மணி பன்னிரண்டுக்குக் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு செத்துப் போவது என்று சீதா முடிவு செய்திருந்தாள். அதற்குத் தயாராவதற்காக ஒன்பது மணிக்கே ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டாள். சாகிறபோது அவலட்சணமாக எதற்குச் சாகவேண்டும்? நாலு பேர் வந்து பார்க்கிறவர்கள், "அடடா! இப்பேர்ப்பட்ட அழகியை மனைவியாகப் படைத்தும் இந்த ராகவனுக்கு அவளை வைத்துக்கொண்டு வாழக் கொடுத்து வைக்கவில்லையே?" என்று சொல்ல வேண்டாமா? அதற்காகவே ஆடை ஆபரணங்களைப் பூண்டு அழகு செய்துகொண்டு வந்து எழுதுவதற்கு உட்கார்ந்தாள். வஸந்திக்கு முதலில் கடிதம் எழுதி வைக்க எண்ணினாள். ஆனால் குழந்தையை நினைத்துக் கொண்டதும் அழுகை அழுகையாக வந்தது. அவளைப் பார்க்காமல் செத்துப் போகிறோமே என்ற எண்ணத்தினால் நெஞ்சு பிளந்து விடும் போலிருந்தது. குழந்தைக்கு என்ன எழுதுவது? "உன் அப்பா என்னைக் கொன்று விட்டார்! அவரை நீ எனக்காகப் பழி வாங்கு" என்று எழுதலாமா? சீச்சீ! இது என்னை பைத்தியக்கார எண்ணம்? முதலில் லலிதாவுக்குக் கடிதம் எழுதலாம் என்று ஆரம்பித்தாள். "என் ஆருயிர்த் தோழி லலிதாவுக்கு..." என்பதற்கு மேல் ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. லலிதாவை நினைத்ததும் பழைய ஞாபகங்கள் எல்லாம் பொங்கிக்கொண்டு வந்தன.

ஆகா! ராஜம்பேட்டையில் கலியாணத்துக்கு முன்னால் லலிதாவும் தானும் கூடிக் குலாவி அந்தரங்கம் பேசிய நாட்கள் எவ்வளவு ஆனந்தமாக இருந்தன? அப்புறம் இவர் பெண் பார்க்க வந்த போதும், லலிதாவுக்குப் பதிலாகத் தன்னை மணப்பேன் என்று சொன்னபோதும் தான் அடைந்த களிப்பு என்ன? இப்போது அனுபவிக்கும் நரக வேதனை என்ன? தான் அப்போது லலிதாவுக்குச் செய்த துரோகந்தான் இப்போது தன்னை வந்து இப்படிப் பீடித்திருக்கிறதோ? லலிதாவுக்கு என்ன எழுதுவது? "என்னை மன்னித்துவிடு!" என்று எழுதுவதா? அப்படி எழுதினால் அவளுக்கு அர்த்தமே ஆகாதே! எதற்காக மன்னிப்பு என்று கேட்பாளே? தன்னுடைய துயரத்தைச் சொன்னால் கூட அவளுக்கு விளங்காது. அவள் ஆனந்தமான இல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். சந்தோஷமாய் இருக்கிறவர்களுக்குத் துக்கப்படுபவர்களின் துக்கத்தை அறிந்து கொள்ளக் கூட முடியாது. "என் புருஷன் என்னைக் கஷ்டப்படுத்துகிறான்!" என்றால், "வெறுமனே ஒரு புருஷன் கஷ்டப்படுத்துவானா? உன்னுடைய நடத்தையில் ஏதாவது கெடுதல் இருக்கும்!" என்று சொல்வார்கள். அதிலும் இல்வாழ்க்கையில் சந்தோஷமாயிருப்பவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். லலிதாவுக்கு இப்போது என்ன எழுதி என்ன பிரயோஜனம்? சந்தோஷமாயிருக்கிறவளிடம் போய்த் தன்னுடைய துக்கத்தைச் சொல்லிக் கொள்வானேன்? அப்படிச் சொல்லிக்கொண்டு அவள் பரிதாபப்படுவதாக வைத்துக் கொள்ளலாம்.

அதனால் சாகப் போகிற தனக்கு என்ன உபயோகம் ஏற்படப் போகிறது? இவருக்குக் கடிதம் எழுதலாம் என்றால், அதைப் பற்றி நினைக்கும்போதே அவளுடைய இதயம் வெடித்து விடும் போலிருந்தது; என்னத்தை எழுதுவது? "இந்த உலகத்தில் தங்களைத் தவிர எனக்கு வேறு கதியில்லை. தாங்களே என்னை வெறுத்து விட்டீர்கள் இனி இந்தப் பூமியில் இருந்து தான் என்ன பயன்!" என்று எழுதலாமா? "ஓயாமல் 'தொலைந்து போ!' 'தொலைந்து போ!' என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே? அதன்படி இதோ தொலைந்து போகிறேன்" என்று எழுதி வைக்கலாமா? இவ்விதம் எண்ணியதும் சீதாவின் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் உதிர்ந்தது. ராகவன் தன்னை எத்தனையோ விதத்தில் கொடுமைப்படுத்தியதெல்லாம் சீதாவின் மனதை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஆனால் 'தொலைந்து போ!' 'தொலைந்து போ!' என்று சில காலமாக அவன் அடிக்கடி சொல்லி வந்தது அவளை எல்லையில்லாத துன்பத்துக்கு ஆளாக்கியது. எங்கே தொலைந்து போகிறது? தன்னை அழைத்துக் கொள்ள யார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? தாயில்லை; தகப்பனாரைப் பற்றித் தகவல் இல்லை; வேறு எங்கே தொலைந்து போகிறது? ஒரு வழியாகச் செத்து தொலைந்து போக வேண்டியது தான்! ஆகா! சீதையைப் பூமாதேவி அழைத்துக் கொண்டது போல் தன்னையும் அழைத்துக் கொள்ளக்கூடாதா? சகுந்தலையை அவள் தாயார் அழைத்துக்கொண்டு போனது போல் தன்னைத் தன்னுடைய தாயார் அழைத்துக் கொண்டு போகக்கூடாதா?

அப்படியெல்லாம் கதைகளிலே தான் நடக்கும், உண்மை வாழ்க்கையில் நடைபெறாது. தானே சுட்டுக்கொண்டு செத்துப் போனால் தான் போனது! நல்ல வேளையாக இவர் கைத் துப்பாக்கி வாங்கி வைத்திருக்கிறார்! அதற்காகத் தன் கணவருக்கும் நன்றி செலுத்த வேண்டியது தான். கடிதத்தில் அவ்விதம் நன்றி செலுத்துவதாக எழுதி வைக்கலாமா? ஐயோ! இந்தக் கடிகாரத்துக்கு என்ன இத்தனை அவசரம்? ஏன் இவ்வளவு வேகமாக இது ஓடுகிறது? ஏன் இவ்வளவு துரிதமாக இருதயம் அடித்துக் கொள்கிறது. இதோ மணி பன்னிரண்டுக்கு நெருங்கி வந்துவிட்டதே இன்னும் சில நிமிஷந்தானே பாக்கி இருக்கிறது? பன்னிரண்டு மணி அடித்ததும் தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாகச் சீதா தீர்மானம் செய்திருந்தாள். பன்னிரெண்டரை மணிக்கு அவர் வருவார். வருவதற்குள்ளே காரியம் முடிந்து போய்விட வேண்டும். அவர் வீட்டிலிருக்கும்போது இந்தக் காரியம் தான் செய்தால், வீணாக அவர் பேரில் பழி விழுந்தாலும் விழும். "இருந்தும் கெடுத்தாள்; இறந்தும் கெடுத்தாள்!" என்ற அபகீர்த்தி தனக்கு ஏன் ஏற்பட வேண்டும். குழந்தை வஸந்தி தாயில்லாப் பெண்ணானால், தகப்பனாராவது அவளுக்கு இருக்க வேண்டாமா? அந்த இரண்டு நிமிஷமும் ஆகிவிட்டது கடிகாரம் டிங், டிங், டிங் என்று பன்னிரண்டு மணி அடித்தது. மணியை மனதில் எண்ணிக்கொண்டே வந்த சீதா, பன்னிரண்டு மணி அடித்து முடிந்ததும் கைத் துப்பாக்கியைக் கையில் எடுக்க எண்ணினாள். அந்தச் சமயத்தில் அறையில் அருகில் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது. சீதாவின் இதயத்தின் துடிப்புச் சட்டென்று நின்றது; அவளுடைய கை செயலற்றுப் போயிற்று. வருகிறவர் யார்? அவர்தானா? சீக்கிரம் வந்துவிட்டாரா? மனத்துக்கு மனது விஷயம் தெரிந்து போய்த் தன்னைக் காப்பாற்றுவதற்காக வருகிறாரா? கைத் துப்பாக்கியைப் பார்த்ததும் தான் செய்ய எண்ணிய காரியத்தை ஊகித்து அறிந்து கொள்வாரா? தன்னுடைய மனவேதனையைத் தெரிந்து கொள்வாரா? தன்னிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வாரா?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பத்தாம் அத்தியாயம்

ஒரே வழிதான்!

காலடிச் சத்தம் வெகு சமீபத்தில் வந்த பிறகும் சீதா திரும்பிப் பார்க்கவில்லை. எதற்காகத் திரும்பிப் பார்க்க வேண்டும்? தான் என்ன செய்ய எண்ணியிருந்தாள் என்பதை அவர் தெரிந்து கொள்ளட்டும்; அருகில் வந்து கைத் துப்பாக்கியைப் பார்த்துத் திடுக்கிடட்டும்; தன்னை ஏதாவது கேட்கட்டும், பிறகு பதில் சொல்லிக் கொள்ளலாம். வந்த ஆசாமி சீதாவுக்குப் பின்புறம் வந்து சமீபமாக நின்றான். சட்டென்று கையை நீட்டிக் கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான்; பிறகு "சீதா!" என்றான். குரல் ராகவனுடைய குரல் அல்ல என்பதை அறிந்ததும் சீதா வியப்புடன் திரும்பிப் பார்த்தாள். வந்திருப்பவன் சூரியா என்பதைத் தெரிந்து கொண்டாள். இதனால் அவள் மனதில் அளவற்ற ஏமாற்றம் உண்டாயிற்று. அதே காலத்தில் ஓர் விந்தையான மாறுதல் அவள் மனப்போக்கில் ஏற்பட்டது. தான் உயிரை விட்டு விடுவது என்கிற தீர்மானத்தைச் சீதா அந்தக் கணத்தில் மாற்றிக் கொண்டாள். உயிரோடு எவ்வளவு நாள் இருக்கலாமோ இருந்து ராகவனுக்கு எவ்வளவு மனக்கிலேசம் அளிக்கலாமோ அவ்வளவும் அளிக்க வேண்டுமென்று எண்ணினாள். இந்தத் திடீர் நோக்கம் நிறைவேறுவதற்கு சூரியாவின் உதவி தனக்குத் தேவை. அதற்குத் தகுந்தபடி அவனிடம் நடந்து கொள்ளவேண்டும்.

"அம்மாஞ்சி! நீயா? நல்ல சமயத்தில் தான் வந்தாய்; வா!" என்று வரவேற்றாள். "அப்படி ஒன்றும் நல்ல சமயமாக எனக்குத் தோன்றவில்லையே? நீ செய்ய உத்தேசித்திருந்த காரியத்துக்குத் தடங்கலாக அல்லவா நான் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது?" "நான் என்ன செய்ய உத்தேசித்ததாக எண்ணினாய்!" "நள்ளிரவில் கைத்துப்பாக்கியைத் தயாராக வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது எதற்காக இருக்கும்?" "ஏன்? திருடன் வந்தால் அவனைச் சுடுவதற்குத் தயாராக வைத்திருக்கலாம்." "புது டில்லியில் திருடன் வந்தால் அவ்வளவு சுலபமாய் வந்து விடுவானா? வாசற் காவற்காரன் இருக்கிறானே?" "காவற்காரன் இருந்தால் உன்னை எப்படி உள்ளே விட்டான்?" "அவன் நன்றாய்த் தூங்கிக் கொண்டிருக்கிறான் நான் சத்தம் செய்யாமல் உள்ளே வந்துவிட்டேன்." "ஆம்; இந்த ஊர் வேலைக்காரர்களே இப்படித்தான். ஓயாமல் தூங்கி விழுவார்கள்... பின்னே, கைத் துப்பாக்கி எதற்காக வைத்திருக்கிறேன் என்று நினைத்தாய்? என்னைச் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதற்காக என்று நினைத்தாயா?" "அப்படியில்லையென்றால் மிக்க சந்தோஷமடைவேன். உன் முகத்தையும் கண்ணீர் ததும்பும் கண்களையும் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது. எனக்கு இவ்விடமிருந்து வந்த கடிதமும் அவ்விதம் எண்ணும்படி செய்தது." "கடிதம் யார் எழுதியது." "அதைப்பற்றி உனக்கு என்ன கவலை, சீதா! யாரோ எழுதினதாக வைத்துக் கொள்ளலாம்." "கடிதத்தில் என்ன எழுதியிருந்தது? அதையாவது எனக்குச் சொல்லலாமா?"

"நீ மிகவும் மனக் கஷ்டத்துக்கு உள்ளாகியிருப்பதாக எழுதியிருந்தது. என்ன மனக் கஷ்டம் என்பதை நேரில் தெரிந்து கொள்ளலாம் என்றுதான் வந்தேன். உண்மையில் உனக்குக் கஷ்டம் ஒன்றுமில்லையா, அத்தங்கா! அப்படியானால், என் கவலை தீர்ந்தது. நான் உடனே திரும்பிப் போய் என்னுடைய வேலையைப் பார்ப்பேன்." "சூரியா! உன்னிடம் உண்மையை மறைப்பதில் என்ன பயன்? உன்னுடைய உதவி எனக்குத் தேவையாயிருக்கிறது. அதனால்தான் 'நல்ல சமயத்தில் வந்தாய்' என்றேன். நான் சுட்டுக்கொண்டு சாகத் தயாராயிருந்தேன். சூரியா! ஆனால் சாவதற்கு முன்னால் என் ஆசைக் கண்மணிக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஒன்றும் எழுதவே தோன்றவில்லை. உன்னிடம் சொன்னால் நீ நேரிலே போய்த் தெரிவித்து விடுவாயல்லவா? மதராஸுக்கு எப்போதாவது போகாமலா இருக்கப் போகிறாய்?" என்று சீதா பரிதாபம் நிறைந்த குரலில் கூறினாள். "அத்தங்கா! கொஞ்ச நாளைக்கு முன்பு நான் மதராஸுக்கும் தேவப்பட்டணத் துக்கும் போயிருந்தேன்." "அப்படியா? மதராஸில் வஸந்தியைப் பார்த்தாயா!" என்று சீதா பரபரப்புடன் கேட்டாள். "பார்த்தேன், உன் மாமனார் மாமியாரையும் பார்த்தேன்!" "வஸந்தி எப்படியிருக்கிறாள்? உன்னிடம் பேசினாளா?" "உடம்பு நன்றாக இருக்கிறாள்; ஆனால் குழந்தையின் மனம் குன்றிப்போயிருக்கிறது; அப்பா அம்மாவைப் பார்ப்பதற்கு ஏங்கிப் போயிருக்கிறாள். அப்படிப்பட்ட குழந்தையை விட்டு விட்டுச் சுட்டுக் கொண்டு சாவதற்கு உனக்கு எப்படி மனம் வந்தது என்று நினைத்தால் எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது."

"இதிலிருந்தே என்னுடைய நிலைமையை நீ தெரிந்து கொள்ளலாமே, சூரியா! பெற்ற பெண்ணைத் தூரதேசத்துக்கு அனுப்பிவிட்டு அவளைப் பார்க்காமல் சாவதற்கு இலேசில் மனம் துணியுமா? அப்படிப்பட்ட நரக வேதனையை வாழ்க்கையில் நான் அனுபவித்துக் கொண்டிருகிறேன்." "அத்தங்கா! நரக வேதனையும் சொர்க்க சுகமும் நாமே செய்து கொள்வதுதான். 'கடவுளுடைய ராஜ்யம் உனக்குள்ளே' என்பதை நீ கேட்டதில்லையா?" "அந்த வேதாந்தமெல்லாம் என் விஷயத்தில் இனிமேல் உபயோகமில்லை, அம்மாஞ்சி! என்னுடைய நரகத்தை நானே சிருஷ்டி செய்து கொள்ளவும் இல்லை. நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் என்னை இந்த நரகத்திலே தள்ளினீர்கள். இவரை நான் கலியாணம் செய்து கொண்டது பெரும் பிசகு, சூரியா! எங்கள் இருவருக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லை. இவர் யாராவது ஒரு வெள்ளைக்காரிச்சியையோ பார்ஸிக் காரியையோ கலியாணம் செய்துகொண்டிருக்க வேண்டும். உன்னுடைய சினேகிதி தாரிணி இருக்கிறாளே அவளைப்போல ஒருத்தியையாவது..." "பிறரைப்பற்றி நாம் எதற்காகப் பேசவேண்டும் சீதா!" "பேசாமல் என்ன செய்வது? என்னுடைய வழிக்கு அவர்கள் வராமலிருந்தால் நானும் பேசவேண்டியதில்லை. அந்தத் தாரிணியும் என் மாமியாரும் சேர்ந்து எனக்கு விஷம் கொடுத்துக் கொல்லப் பார்த்தார்கள், சூரியா? அதுவும் நான் படுத்த படுக்கையாய்க் கிடந்தபோது என் மாமியாரைப்பற்றி எவ்வளவோ மேலாக நான் எண்ணியிருந்தேன். அவள் எப்பேர்ப்பட்ட ராட்சஸி என்று கொஞ்ச நாளைக்கு முன்புதான் தெரிந்தது." "உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா, சீதா! நீ சாகக் கிடந்தபோது அவர்கள் இருவரும் உனக்கு இரவு பகல் பணிவிடை செய்து உன்னைக் காப்பாற்றினார்கள். அவர்களைப் பற்றி இவ்வளவு கொடுமையாகப் பேசுகிறாயே!"

"அவர்கள் பணிவிடை செய்து என்னைக் காப்பாற்றியது உனக்கு எப்படித் தெரியும்? அவர்கள் சொல்லித்தானே தெரியும்? நான் அவ்வளவு அறிவற்றவள் அல்ல. ஒரு நாள் இரவு தாரிணியும் மாமியாரும் கூடிக்கூடி இரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு, டாக்டர் வழக்கமாகக் கொடுத்த மருந்தில் இன்னொரு வெள்ளைப் பவுடரை தாரிணி கலந்து கொடுத்தாள். நான் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு செய்தாள். எனக்கும் அப்போது உண்மை தெரியாது; மருந்தைச் சாப்பிட்டு விட்டேன். சற்று நேரத்துக்கெல்லாம் கண்ணைச் சுற்றிக்கொண்டு மயக்கமாய் வந்தது. கொடுத்த விஷம் போதவில்லை போலிருக்கிறது. காலையில் எப்படியோ பிழைத்து எழுந்தேன். அது முதல் ஜாக்கிரதையாகி விட்டேன். தாரிணி மருந்து கலந்து கொடுத்தால் அதைச் சாப்பிடுவதாக ஜாடை செய்து எச்சில் பாத்திரத்தில் கொட்டி விடுவேன். அப்போது இன்னும் என் மனதில் கொஞ்சம் சபலமிருந்தது. இப்போது அதுவும் போய்விட்டது. துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு நான் சாவது உனக்குப் பிடிக்காவிட்டால் தாரிணியைக் கேட்டு கொஞ்சம் விஷம் வாங்கிக்கொண்டு வந்து கொடு!" "அத்தங்கா! உண்மையிலேயே உனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு படுபாதகமான வார்த்தையைச் சொல்லியிருக்கமாட்டாய். உனக்குச் சுரமாக இருக்கும் போது தூக்கமில்லாமல் கஷ்டப்படுகிறாயே என்பதற்காக அவர்கள் யோசித்துத் தூக்க மருந்தைக் கொடுத்திருப்பார்கள்.."

"ஆமாம்; ஒரேயடியாய்த் தூங்குவதற்குத் தான் மருந்து கொடுத்தார்கள். ஆனால் அதற்கு வேண்டிய அளவு கொடுக்கவில்லை ஆகையால் விழித்துக்கொண்டு விட்டேன்!" "அப்படி உனக்கு சந்தேகமாயிருந்தால் உடனே உன் புருஷனிடம் சொல்லியிருக்கலாமே?" "சொல்லியிருக்கலாம்; ஆனால் அவர் நம்பியிருக்க மாட்டார், உன் அருமை அத்தங்காளின் பேச்சை நீயே நம்பவில்லையே? திரும்பித் திரும்பிப் பேசிப் பயன் இல்லை. நான் அனாதை; திக்கற்றவள்! என் பேச்சை யாரும் நம்பப்போவதில்லை. நீ எதற்காக வந்தாய்? உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு நீ போ!" என்று சீதா சொல்லிக் கலகலவென்று கண்ணீர் உதிர்த்தாள். "என் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகிறதாயிருந்தால் நான் எவ்வளவோ முக்கியமான காரியங்களை விட்டுவிட்டு ஆயிரம் மைல் பிரயாணம் செய்து வந்திருக்க மாட்டேன்; என்னுடைய காரியத்தை மட்டுமல்ல; தேசத்தின் காரியத்தைக் கூட விட்டுவிட்டு வந்திருக்கிறேன். நீ எப்படியாவது சந்தோஷமாயிருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கு என்ன வழி என்று சொல். உன் புருஷனிடம் உனக்கு என்ன குறை என்று சொன்னால், அவனையே கேட்டு விடுகிறேன். என் தலையை அவன் இறக்கிவிடமாட்டான் அவனிடம் எனக்குப் பயம் ஒன்றும் கிடையாது..." "உனக்கு பயமில்லை; ஆனால் எனக்குப் பயமாயிருக்கிறது. அவரிடம் நீ பேசுவதினால் எனக்கு நல்லது ஒன்றும் விளையாது. உன் பேரில் வரும் கோபத்தை என் பேரில் வைத்துத் தாக்குவார். எனக்கு அவர் பேரில் என்ன குறை என்று கேட்கிறாய். என்னுடைய மனக்குறையைச் சொன்னால் உனக்குப் புரியவே புரியாது. பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கே புரியவில்லை! உனக்கு எப்படிப் புரியும்? 'பார்ட்டிக்கு வா!' என்று சொல்லி அழைத்துப் போகிறார்.

அங்கே முப்பது ஸ்திரீகளுக்கு முன்னால் என்னை அவமானப்படுத்துகிறார். நான் எவ்விதமாக நடந்து கொண்டாலும் அது தப்பாகப் போய்விடுகிறது. நான் கலகலப்பாக நாலு பேரிடம் பேசிக்கொண்டிருந்தால் 'சுத்த அதிகப்பிரசங்கி! உன் அசட்டுத்தனத்தை எதற்காக இப்படிக் காட்டிக்கொள்கிறாய்? வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கக் கூடாதா? என் மானம் போகிறதே!' என்கிறார். இப்படி இவர் சொல்கிறாரே என்பதற்காகப் பேசாமலிருந்தால், 'ஏன் இப்படி ஏதோ பறிக்கொடுத்தவளைப் போல இருந்தாய்? நாலு பேரிடம் கலகலப்பாகப் பேசத் தெரியாத ஜன்மத்தைக் கலியாணம் செய்து கொண்டேனே?' என்கிறார். சிரிக்காவிட்டால் 'நகைச்சுவையை அறியாத நிர்மூடம்!' என்கிறார். துக்கம் தாங்காமல் மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால், 'இங்கேயிருந்து ஏன் என் பிராணனை வாங்குகிறாய்? எங்கேயாவது தொலைந்து போ!' என்கிறார். 'தொலைந்து போ!' என்ற வார்த்தையைக் கேட்டுக் கேட்டு என் மனது புண்ணாகிவிட்டது! நான் எங்கே தொலைந்து போவேன்? எனக்குப் போக்கிடம் எங்கே இருக்கிறது? ஒரேயடியாக இந்த உலகத்திலிருந்து தொலைந்து போவதைத் தவிர வழி ஒன்றுமில்லை. அம்மாஞ்சி, அந்தத் துப்பாக்கியை கொடுத்து விட்டுப்போ!"

"அத்தங்கா! உயிரை விடுகிற பேச்சை மறந்து விடு! அப்படி நீ அனாதையாகப் போய்விடவில்லை. நான் ஒருவன் இருக்கும் வரையில் உன்னை 'அனாதை'யாக விட்டுவிடமாட்டேன். எப்பேர்ப்பட்ட கஷ்டமாயிருந்தாலும் அதற்குப் பரிகாரம் ஏதாவது இல்லாமற் போகாது. கொஞ்ச நாள் நீ பொறுத்துக் கொண்டிரு! நான் யோசித்து ஏதாவது ஒரு பரிகாரம் கண்டுபிடிக்கிறேன்." "ஒரு நாள் கூட என்னால் இனிமேல் பொறுக்க முடியாது. நான் உயிரோடு இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது ஆனால் அந்த வழி உனக்குச் சம்மதமாயிராது." "அது என்ன வழி என்று சொல்! என்னால் முடியுமா என்று பார்க்கிறேன்." "என்னை இங்கிருந்து அழைத்துக் கொண்டு போ! இந்த டில்லி நகரம் எனக்கு நரகமாகிவிட்டது; இந்த நரகத்திலிருந்து என்னை அழைத்துக் கொண்டு போ! இந்த வீடு எனக்கு சிறைச்சாலையாகி விட்டது; இந்தச் சிறையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு போ! நீ பார்த்து என்னை எங்கே அழைத்துப் போனாலும் நான் வருகிறேன், பம்பாய்க்கு, கல்கத்தாவுக்கு, லாகூருக்கு, இலங்கைக்கு, லண்டனுக்கு, அமெரிக்காவுக்கு எங்கே வேணுமானாலும் உன்னோடு புறப்பட்டு வரத் தயாராயிருக் கிறேன்...!" "அத்தங்கா! அப்படி ஒரு காலம் வந்தால், அதற்கு அவசியம் ஏற்பட்டால், அங்கேயெல்லாம் உன்னை அழைத்துப் போகிறேன். ஆனால் அதற்கு இப்போது சமயம் அல்ல. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் நான் ஈடுபட்டிருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் வேறு காரியத்தில் பிரவேசிப்பதில்லை' என்று பல நண்பர்களின் மத்தியில் சபதம் செய்திருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடையட்டும்! அதற்குப் பிறகு..."

"சூரியா! இந்தியாவின் சுதந்திரப் போரில் ஸ்திரீகளுக்குப் பங்கு எதுவும் இல்லையா? தாரிணி செய்து புரட்டுகிறதை நான் செய்து புரட்டமாட்டேனா? நான் ஒன்றுக்கும் லாயக்கற்றவள் என்று இவரைப்போல் நீயும் நினைக்கிறாயா? நீ மட்டும் என்னை அழைத்துக் கொண்டு போ! நான் எப்பேர்ப்பட்ட காரியம் எல்லாம் செய்கிறேன் என்று பார்! 'சுதந்திரம்', 'சுதந்திரம்' என்று சொல்லிக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சந்திலும் பொந்திலும் ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள். வேஷம் போட்டுக் கொண்டு ஊரையும் பேரையும் மாற்றி வைத்துக் கொண்டு இராத்திரி வேளை பார்த்து அங்குமிங்கும் அலைகிறீர்கள். என்னை மட்டும் நீ அழைத்துக் கொண்டு போ! ஜான்ஸி ராணியைப்போல் கையில் வாள் பிடித்துக் குதிரை மீதேறி யுத்தகளத்துக்குச் சென்று யுத்தம் செய்கிறேன். தேசமெல்லாம் திரிந்து சுதந்திரப் போருக்கு ஆயிரம் பதினாயிரம் வீரர்களைத் திரட்டுகிறேன்; கோழைகளை வீரர்களாக்குகிறேன். பிரான்ஸ் தேசத்து ஜோன்ஆப்ஆர்க் என்னும் வீரப் பெண்மணியைப் போல் இந்தியாவின் சுதந்திரத்தை நான் நிலைநாட்டுகிறேனா இல்லையா, பார்!" "சீதா! ஜான்ஸிராணியைப் போலும் ஜோன்ஆப்ஆர்க்கைப் போலும் சுதந்திரப் போர் செய்யும் காலம் இது அல்ல. ஆகாசவிமானத்திலிருந்து குண்டு போட்டு ஆயிரம் பதினாயிரம் ஜனங்களைக் கொல்லும் காலம் இது. இங்கிலீஷ் சர்க்காரோடு பகிரங்கமாகச் சண்டை போட்டுச் சுதந்திரத்தை நிலைநாட்ட முடியாது. இந்தத் தேசத்தில் இப்போது பகிரங்கமாக ஒரு பொதுக் கூட்டம் கூட்ட முடியாது. 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்று கோஷிக்க முடியாது. எப்படிப் படை திரட்டுவது? யுத்தகளத்துக்கு போவது? காலத்துக்குத் தகுந்த முறையை அனுசரிக்க வேண்டும்."

"அப்படியானால் ஒன்று செய்! என்னை அழைத்துக் கொண்டு போய்க் காந்தி மகாத்மாவின் ஆசிரமத்தில் விட்டு விடு! அங்கே என்னைப்போல் கஷ்டப்பட்டவர்களும் அனாதைகளும் பலர் இருப்பதாக அறிகிறேன். சீமையிலிருந்து வந்த வெள்ளைக்காரி கூட ஒருத்தி இருக்கிறாளாம்! முஸ்லீம் பெண் ஒருத்தி இருக்கிறாளாம்! அவர்களைப்போல் நானும் மகாத்மா இட்ட கட்டளையை நிறைவேற்றிக் கொண்டி ருக்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு என்னை வந்து அழைத்துக் கொண்டு போ!" "அத்தங்கா! மகாத்மா சிறையில் இருக்கிறார். அவருடைய ஆசிரமத்தில் இப்போது யார் இருக்கிறார்களோ தெரியாது. புதியதாக யாரையும் ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்." "அப்படியானால் ஒன்று செய், சூரியா! என்னை எங்கேயாவது ஒரு நல்ல சினிமாக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடு! சினிமாவில் நான் எப்படி நடித்துப் பெயர் வாங்குகிறேன், பார்! எத்தனையோ தமிழ் சினிமாவும், ஹிந்தி சினிமாவும் பார்த்திருக்கிறேன். ஒன்றிலாவது சோகமான கட்டங்களில் நடிக்க யாருக்கும் தெரியவில்லை. சினிமாவில் நடிக்க எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் சோக நடிப்பில் இணையற்ற நட்சத்திரம் என்று பெயர் வாங்கி விடுவேன்! என்ன சொல்கிறாய், சூரியா!"

சூரியா எதுவும் சொல்ல முடியாமல் திகைத்துப் போயிருந்தான். ஜான்ஸிராணி எங்கே, மகாத்மாவின் ஆசிரமம் எங்கே, சினிமா நட்சத்திரம் எங்கே! சேர்ந்தாற்போல் இந்த மூன்று காரியங்களிலும் ஆசை செலுத்தும் தன் அத்தங்காளின் மனோநிலை அவனுக்கு அளவில்லா வியப்பை அளித்தது. சீதாவுக்கு உண்மையிலேயே கொஞ்சம் சித்தப்பிரமை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆகையால் இன்றைக்கு ஏதாவது சமாதானமாகச் சொல்லிவிட்டு போகலாமென்றும், நாளைக்கு தாரிணியைக் கேட்டுக் கொண்டு தீர்மானிக்கலாம் என்று முடிவு செய்தான். "அத்தங்கா, எனக்குச் சினிமா விஷயம் ஒன்றும் தெரியாது; சினிமாக்காரர்களையும் தெரியாது. ஆகையால் நீ கடைசியாகச் சொன்னதும் முடியாத காரியம். ஆனால் சில நாளைக்கு நீ வேறு எங்கேயாவது போயிருக்க வேண்டும் என்றால், அதற்கு இடமில்லாமற் போகவில்லை. ராஜம்பேட் டயில் நீ போய் இருக்கலாம் என்று சொல்வேன். என் அம்மா சமாசாரம் எனக்குத் தெரியும். உன்னை அவளுக்குப் பிடிக்காது; ஆகையால் ராஜம்பேட்டையை நான் சொல்லவில்லை. தேவபட்டிணத்தில் லலிதா இருக்கிறாள், அல்லவா? உன்னை நினைத்து நினைத்து அவள் உருகிப் போகிறாள். இந்த உலகத்தில் லலிதாவைப்போல் உன்னிடம் அன்பு கொண்டவர்கள் யாருமே இருக்க முடியாது. நீ சந்தோஷமாயில்லை என்று தெரிந்து அவள் படுகிற வருத்தத்தைச் சொல்லி முடியாது.லலிதாவின் புருஷன் இப்போது சிறையில் இருக்கிறான்.அவனும் என் அத்தியந்த சிநேகிதன் என்பது உனக்குத் தெரியுமே.லலிதாவின் மாமனார் ரொம்ப நல்ல மனுஷர்.நீ தாராளமாகத் தேவபட்டிணத்துக்குப் போய்ச் சில மாதம் இருக்கலாம்.உன் குழந்தையையும் அங்கே வரவழைத்துக் கொள்ளலாம்" என்று கூறினான்.

"லலிதா என்னிடம் எவ்வளவு அன்பு கொண்டவள் என்பது எனக்குத் தெரியாதா, சூரியா! அவள் சந்தோஷமா யிருக்கிறாள் என்பதை நினைத்தால் எனக்கும் சந்தோஷமாயிருக்கிறது. லலிதாவுக்குத் துரோகம் செய்து இவரை நான் கலியாணம் செய்து கொண்டதாக ஒரு காலத்தில் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது அவளுக்குப் பெரிய நன்மை செய்ததாக அறிந்து சந்தோஷப்படுகிறேன். இவரை அவள் கலியாணம் செய்து கொண்டிருந்தால் இப்போது நான் படுகிற கஷ்டத்தையெல்லாம் அவள் பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் லலிதா வீட்டில் போய் நான் இருக்க மாட்டேன். என்னுடைய எண்ணம் என்னவென்பதை இன்னமும் நீ அறிந்து கொள்ளவில்லை. நான் எங்கே போனேன் என்ன ஆனேன் என்பது இவருக்குத் தெரியக் கூடாது. தேவபட்டணத்துக்குப் போனால் இரண்டு நாளில் இவருக்குத் தெரிந்து போய்விடுகிறது. அதில் என்ன பிரயோஜனம்? இவர் என்னைத் தேடி அலையும்படியாகவும், கவலைப்படும்படியாகவும் எங்கேயாவது தூரதேசத்துக்கு, சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு நான் போக விரும்புகிறேன். அப்படிப்பட்ட இடத்துக்கு என்னை நீ அழைத்துக் கொண்டு பேவதாக இருந்தால் சொல்லு! இல்லாவிட்டால் உன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போ!" "அந்த மாதிரி நாம் இருவரும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போனால் உன் புருஷனும் சரி, மற்றவர்களும் சரி, என்ன நினைத்துக் கொள்வார்கள்?

ஏதாவது தப்பாக எண்ணிக் கொள்ள மாட்டார்களா? வீண் சந்தேகத்திற்கு இடமாயிராதா? இதைப்பற்றி நீ யோசித்துப் பார்த்தாயா?" என்றான் சூரியா. "தப்பாக எண்ணிக் கொண்டால் எண்ணிக் கொள்ளட்டும்; சந்தேகப்பட்டால் படட்டும். எனக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. மூன்று மாதத்திற்கு முன்னால் இவர் என்ன செய்தார் தெரியுமா? யாரோ ஒரு பெண்ணுடன் காரில் ஏறிக் கொண்டார். பானிபெட்டுக்குச் சமீபத்தில் இவருடைய காரும் ஒரு மிலிடெரி லாரியும் மோதிக்கொண்டன. இவருக்குக் காயம் ஒன்றுமில்லை; ஆனால் அந்தப் பெண்ணுக்குக் காயம். இந்த விஷயம் புது டில்லியெல்லாம் சிரிப்பாய் சிரித்தது. அதற்காக அவரை யார் என்ன செய்துவிட்டார்கள்? புருஷர்கள் மட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எந்தச் சட்டத்தில் சொல்லியிருக்கிறது?" "அத்தங்கா! அந்த மாதிரிச் சட்டம் ஒன்றும் கிடையாது. தப்பான காரியத்தைப் புருஷன் செய்தாலும் பிசகு தான்; பெண் செய்தாலும் பிசகு தான். ஆகையினால் தான் நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்ள ஢ல்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது; அதைச் சொல்லுகிறேன், கேள். தேவபட்டணத்தில் எனக்கு இரண்டு சிநேகிதர்கள் உண்டு என்று உனக்குத் தெரியும் அல்லவா? ஒருவன் தான் லலிதாவின் கணவன் பட்டாபிராமன். இன்னொருவன் பட்டாபிராமன் வீட்டுக்கு எதிர்வீட்டு அமரநாதன். அவனும் அவனுடைய மனைவி சித்ராவும் கல்கத்தாவில் இருக்கிறார்கள். நான் தேவபட்டணம் போயிருந்தபோது அவர்களும் தற்செயலாக வந்திருந்தார்கள். அமரநாதனும் அவன் மனைவியும் ரொம்ப நல்லவர்கள். சித்ராவுக்கு உன்னைப்பற்றி லலிதா எல்லாம் சொல்லியிருக்கிறாள்.

என்னுடைய யோசனை என்ன தெரியுமா? உன்னைப் பக்கத்து ஸ்டேஷன் எதற்காவது அழைத்துப் போய் ரயில் ஏற்றி விட்டு விடுகிறேன். நீ கல்கத்தாவுக்கு போய், அமரநாத் - சித்ரா வீட்டில் சில காலம் நிம்மதியாக இரு. இதற்குள் உன் புருஷன் இங்கே என்ன செய்கிறான் என்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவசியம் ஏற்பட்டால் நீ போயிருக்கிற இடத்தைச் சொல்லுகிறேன்." "அதுதான் கூடாது; அவருக்குத் தெரியவே கூடாது! எனக்கு இஷ்டமானபோது தெரிவித்துக் கொள்வேன் சூரியா. நான் கல்கத்தாவுக்குப் போகத் தயார். ஆனால் இன்றைக்கோ நாளைக்கோ என்னை நீயே அழைத்துப் போகவேண்டும். இங்கே நாளைக்குப் பிறகு என்னால் இருக்க முடியாது. தனியாகப் போகவும் முடியாது. ஒருவேளை நீ என்னை அழைத்துப் போவது உன்னுடைய சிநேகிதி தாரிணிக்குப் பிடிக்காமலிருக்கலாம். அவளிடம் உனக்குப் பயமாயிருந்தால் அதையும் இப்போதே சொல்லிவிடு!"

"சீதா! என்னென்னமோ விசித்திரமான எண்ணங்கள் உன் மனதில் குடிகொண்டிருக்கின்றன. எனக்கு யாரிடத்திலும் பயம் கிடையாது. நாம் செய்கிற காரியம் நமக்கே சரியாயிருக்க வேண்டுமல்லவா? ஆகையால் கொஞ்சம் யோசிப்பதற்கு அவகாசம் கொடு!" என்றான் சூரியா. "பேஷாக யோசித்துச் சொல்! செய்கிற யோசனையை இங்கேயே செய்துவிடு! இத்தனை நாள் கழித்து அம்மாஞ்சி வந்திருக்கிறாய்; தாகத்திற்குத் தண்ணீர் வேண்டுமா என்று கூட நான் கேட்கவில்லை. இதோ உள்ளே போய்க் கொஞ்சம் ஓவல்டின் கலந்து கொண்டு வருகிறேன். அது வரையில் யோசனை செய்து கொண்டிரு!" என்று சொல்லிவிட்டுச் சீதா சமையலறைக்குள் போனாள். சூரியாவின் உள்ளம் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்தது. 'இது என்ன! இவ்வளவு பயங்கரமான பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோ மே! இது சரியாக முடியுமா? அல்லது கேடாக முடியுமா?' என்று அவன் மனம் தத்தளித்தது. இந்த நெருக்கடியிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ள முடியுமா என்று யோசித்தான். இந்தச் சமயத்தில் டெலிபோன் மணி அடித்தது. வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சூரியாவின் மனதில் இரவு பன்னிரண்டு மணிக்கு மேலே யார் டெலிபோனில் பேசுவார் என்ற யோசனை கூடத் தோன்றவில்லை. ரிஸீவரை கையில் எடுத்துக்கொண்டு, "ஹலோ! யார் அது!" என்று கேட்டான். டெலிபோன் மணிச் சத்தத்தைக் கேட்டுவிட்டுச் சீதா சமையல் அறை உள்ளேயிருந்து பரபரப்புடன் வந்தாள். சூரியா ரிஸீவரைக் கையில் எடுத்துப் பேசுவதைப் பார்த்ததும் அவள் முகத்தில் பீதியின் அறிகுறி தோன்றியது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top