• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் 3 - ' 'எரிமலை'

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பதினொன்றாம் அத்தியாயம்

ராகவன் மனக் கவலை

ரஜினிபூர் மாஜி திவான் ஆதிவராகாச்சாரியார் புதுடில்லியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். சுதேச சமஸ்தான மன்னர்களுக்குச் சட்ட சம்பந்தமான யோசனை சொல்லும் உத்தியோகம் அவருக்குக் கிடைத்திருந்தது. இந்த உத்தியோகத்தில் வேலை கொஞ்சம்; வருமானமும் செல்வாக்கும் அதிகம். எனினும் அவருடைய புதல்விகள் தாமாவுக்கும் பாமாவுக்கும் மட்டும் இன்னும் கலியாணம் ஆனபாடில்லை. புதுடில்லி சமூக வாழ்க்கையில் அவர்கள் மிக்க பிரபலம் அடைந்திருந்தார்கள். வைஸ்ராய் மாளிகையிலும் மற்றும் சுதேச மன்னர்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் கொடுக்கும் பார்ட்டிகளிலும் தாமா பாமா சகோதரிகளைத் தவறாமல் காணலாம். இன்றைக்கும் அவர்கள் தந்தையுடன் ஒரு பார்ட்டிக்குப் போய்விட்டு இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள். அதே பார்ட்டிக்குச் சென்றிருந்த சௌந்தரராகவனும் அவர்களுடன் வந்தான். அவர்கள் நாலு பேரும் சீட்டு விளையாடத் தொடங்கினார்கள். ஆட்டம் சிறிது நகர்ந்ததும் பாமா, "மிஸ்டர் ராகவன்! உங்கள் மனைவியை ஏன் பார்ட்டிக்கு அழைத்து வரவில்லை? இன்னும் உடம்பு சரியாகவில்லையா?" என்று கேட்டாள். "உடம்பு ஒரு மாதிரி சரியாகிவிட்டது ஆனால் சுரம் அடித்துக் கிடந்ததிலிருந்து அவளுடைய மனது பேதலித்துப் போயிருக்கிறது. வீட்டுக்குப் போனால் ஓயாத புகாரும் ஒழியாத அழுகையுந்தான்!" என்றான் ராகவன். "அவ்வளவு கடுமையாகச் சுரம் அடித்துக் கிடந்தவளுக்கு நீங்கள் கொஞ்ச நாள் இடமாறுதல் கொடுக்க வேண்டும் இங்கேயே வைத்துக் கொண்டிருப்பது தவறு!" என்றாள் தாமா.

"அது எனக்கு தெரியாமலா இருக்கிறது? ஆனமட்டும் நான் சொல்லிப் பார்த்தாகி விட்டது. மதராஸுக்குப் போய் என் அம்மாவுடன் சில நாள் இருந்துவிட்டு அவளுடைய பந்துக்களையும் பார்த்துவிட்டு வரும்படி எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது. அவள் சம்மதம் கொடுத்தால்தானே? என் பாடு ரொம்பவும் சங்கடமாயிருக்கிறது. ஆபீஸுக்குப் போனால் அங்கே ஒருவிதக் கஷ்டம்; வீட்டுக்குப் போனால் இன்னொருவிதக் கஷ்டம். என்ன செய்கிறதென்று தெரியவில்லை. ஒரு சமயம் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகலாமா என்று தோன்றுகிறது. இங்கே எப்போதாவது வந்து உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேனே இம்மாதிரி சந்தர்ப்பங்களிலேதான் கொஞ்சம் மன நிம்மதி ஏற்படுகிறது." "வீட்டிலே உள்ள கஷ்டம் சரி; ஆபீஸில் உங்களுக்கு என்ன கஷ்டம்?" என்று தாமா கேட்டாள். "உங்கள் தகப்பனாரைக் கேட்டுப் பாருங்கள், சொல்லுவார். திவான் சாகிப்! நான் முஸ்லிம் ஆகிவிடலாம் என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றான் ராகவன். ஆதிவராகாச்சாரியார் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் சீட்டைக் கவனித்துக் கொண்டிருந்தார். "இது என்ன கூத்து? நீர் எதற்காக முஸ்லிம் ஆக வேண்டும்?" என்று பாமா ஆச்சரியம் ததும்பக் கேட்டாள்.

"இப்போதெல்லாம் முஸ்லிமாயிருந்தால்தான் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் பிரமோஷன் கிடைக்கிறது. எனக்கு நாலு வருஷத்துக்குப் பிறகு உத்தியோகத்தில் சேர்ந்தவனை எனக்கு மேலே தூக்கிப் போட்டிருக்கிறார்கள். போன வருஷம் எனக்குக் கீழே வேலை பார்த்தவனுக் கெல்லாம் 'எஸ் ஸார்!' சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படியாவது அவன் மகா மேதாவியா? மூளை உள்ளவனா? ஒன்றும் இல்லை. 'மகா மூடன்' என்ற பட்டத்துக்கு மிகவும் தகுதியுள்ளவன். அவன் கீழே நான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த அவமானத்தை என்னால் பொறுக்க முடியவில்லை. திவான் சாகிப்! எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள். நான் இஸ்லாம் மதத்தில் சேர்ந்து விடட்டுமா? அல்லது இந்த உத்தியோகத்தை ராஜினாமா செய்து விடட்டுமா?" என்று ராகவன் கேட்டான். "இரண்டும் வேண்டாம்; கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டிரும்!" என்று ஆதிவராகாச்சாரியார் முதல் முறையாகத் திருவாய் மலர்ந்தார். "பொறுத்துக் கொண்டிருந்தால் என்ன ஆகிவிடும்? இந்த நிலைமையில் மாறுதல் ஏதாவது ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?" "ஏற்படலாம் என்றுதான் நினைக்கிறேன் இந்த காங்கிரஸ் தலைவர்களுக்குக் கொஞ்சம் புத்தி வந்தால் நிலைமை கட்டாயம் மாறிவிடும். இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ்காரர்களின் தவறு தான். யுத்தத்தில் ஒத்துழைப்பதாகச் சொல்லிக் கொண்டு ஜில்லா உத்தியோகங்களையும் கைப்பற்ற வேண்டிய சமயத்தில் சிறைக்குள் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த யுத்த சமயத்தில் காங்கிரஸ்காரர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் வைஸ்ராய் நிர்வாக சபையின் பாதிக்கு மேற்பட்ட ஸ்தானங்கள் கிடைத்திருக்கும். காங்கிரஸ்காரர்கள் செய்யும் தவறு முஸ்லிம் லீகர்களுக்குச் சௌகரியமாய்ப் போயிருக்கிறது. முக்கியமான உத்தியோகங்களில் எல்லாம் முஸ்லிம்கள் வந்து நன்றாக உட்கார்ந்து கொள்கிறார்கள்..."

"காங்கிரஸ்காரர்கள் வந்துவிட்டால்தான் என்ன நடந்து விடும் என்று நினைக்கிறீர்கள், திவான் சாகிப்! அவர்களும் முஸ்லிம்களுக்குத் தான் சலுகை கொடுப்பார்கள். 'சிறுபான்மையோருக்கும் நியாயம்' வழங்குவதாகச் சொல்லிக் கொண்டு பெரும்பான்மையோர் தலையில் மண்ணை வாரிப்போடுவார்கள்! எனக்கு என்னமோ ஹிந்து மகாசபையின் கொள்கைகள் தான் பிடித்திருக்கிறது. இங்கிலீஷ்காரர்களோடு சண்டை போடுவது கூட அவ்வளவு முக்கியமில்லை. முதலில் முஸ்லீம்களை ஒழித்துக் கட்டவேண்டும். எட்டுக் கோடி முஸ்லீம்களை இந்தியாவில் வைத்துக் கொண்டு சுயராஜ்யம் வந்துதான் என்ன பிரயோஜனம்?" "என்ன மிஸ்டர் ராகவன்! சற்று முன்னால் முஸ்லிம் ஆகிவிடப் போவதாகச் சொன்னீர்; இப்போது முஸ்லிம்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிறீரே?" என்று பாமா கேட்டாள். "பின்னே என்ன செய்கிறது? ஒன்று முஸ்லிம்களைத் தொலைத்துத் தலை முழுக வேண்டும்; அது முடியாவிட்டால் எல்லோரும் முஸ்லிம் ஆகிவிடுவதே நல்லது. அப்போது உத்தியோகங்களில் இந்தப் பாரபட்சம் காட்ட முடியாதல்லவா? எங்கேயாவது சுதேச சமஸ்தானத்தில் ஒரு உத்தியோகம் வாங்கிக் கொடுங்கள் என்று உங்கள் தகப்பனாரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அவர் கவனிக்கிற வழியாயில்லை. திவான் சாகிப் சொன்னால் உடனே இந்த தரித்திரம் பிடித்த உத்தியோகத்தை ராஜினாமாச் செய்யத் தயாராயிருக்கிறேன்."

"அப்பா! ராகவனுடைய கோரிக்கையை நீங்கள் கொஞ்சம் கவனிக்கிறதுதானே?" என்றாள் பாமா. "எல்லாம் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால் ராகவன் ராஜினாமா செய்து விடக் கூடாது. ஒரு வேலையில் இருக்கும் போதே இன்னொரு வேலை கிடைத்தால் தான் கிடைத்தது; விட்டுவிட்டால் கிடைக்காது!" என்றார் மாஜி திவான். "இப்படித் தான் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள், ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் பார்க்கிறேன்" என்றான் ராகவன். "அது கிடக்கட்டும், ராகவன்! நீர் முஸ்லிம் அல்ல - ஹிந்து என்பது ஒன்றைத் தவிர உத்தியோகத்தில் 'பிரமோஷன் கிடைக்காததற்கு வேறு காரணம் எதுவும் இல்லையா?" என்று தாமா கேட்டாள். "மதராஸி என்ற காரணமும் இருக்கத் தான் இருக்கிறது. என்னுடைய துரை வரவு செலவு மந்திரியாயிருந்த காலத்தில் முக்கியமான வேலைகளுக்கெல்லாம் மதராஸியைத் தேடிப் பொறுக்கிப் போடுவார். இப்போது மதராஸி என்றால் புது டில்லியில் வேப்பங்காயாக இருக்கிறது. இவர்களுக்கு முதலாவதாக யாராவது மகம்மதியர் வேண்டும். மகம்மதியர் இல்லாவிட்டால் மதியில்லாத மகாமூடனாயிருக்க வேண்டும். ஆனால் மதராஸி மட்டும் உதவாது. இந்தியாவைத் தற்சமயம் ஆளும் முகமது துக்ளக்குகள், அறிவுக்கு அமித லாப வரி போட்டாலும் போடுவார்கள்!"

இப்போது ஆதிவராகாச்சாரியார் சம்பாஷணையில் மீண்டும் கலந்துகொண்டு, "பாமா அதைச் சொல்லவில்லை ராகவன்! உம் பேரில் இன்னொரு புகார் இருப்பதாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருக்கிறதே? உமக்குத் தெரியாதா?" என்று கேட்டார். "தெரியாதே! அது என்ன புகார்?" என்றான் சௌந்தரராகவன். "புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு மாதம் நீர் உம்முடைய வீட்டில் ஒளித்து வைத்திருந்தீராமே? அது உண்மையா?" "தாரிணியைப் பற்றிச் சொல்கிறீர்களாக்கும். அவள் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவள் என்பது கட்டுக்கதை. அவளை நான் என் வீட்டில் ஒளித்து வைத்திருக்கவும் இல்லை. சீதாவுக்கு உடம்பு ரொம்ப மோசமாயிருந்தபோது, கிட்ட இருந்து பணிவிடை செய்து அவள் உயிரைக் காப்பாற்றினாள். தாரிணி எவ்வளவு சாது! எவ்வளவு புத்திசாலி! என்பதுதான் உங்கள் புதல்விகளுக்குத் தெரியுமே?" என்றான் ராகவன். "சாதுவாயும் புத்திசாலியாயும் இருக்கலாம் அதனால் புரட்சிக்காரியாயிருக்கக் கூடாது என்று ஏற்படாது?" என்றாள் பாமா. "அப்படியே வைத்துக்கொண்டாலும் அதற்கு நான் எப்படி பொறுப்பாளி? அவள் புரட்சிக்காரி என்பது எனக்கு எப்படித் தெரியும்? அது போகட்டும் இந்தப் புதுடில்லியில் அசல் புரட்சி இயக்கத் தலைவர்கள் எவ்வளவு பெரிய உத்தியோகஸ்தர்களின் வீடுகளில் மறைந்திருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? கருணாவதிதேவி எங்கே ஒளிந்திருந்தாள்? சந்த்ரகாந்த் ஸின்னா யார் வீட்டில் மூன்று மாதம் ஒளிந்திருந்தான்? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை என்ன செய்து விட்டார்கள்? என் பேரில் மட்டும் புகார் சொல்லுவானேன்?"

"அவர்கள் எல்லோரும் ரொம்பப் பெரிய பதவிகளில் உள்ளவர்கள். ஆகையால் யாரும் புகார் செய்யத் துணியமாட்டார்கள். உம்முடைய விஷயம் அப்படியில்லையே, ராகவன்! நீ உத்தியோகத்தில் பிரமோஷனை எதிர்பார்க்கிறவராயிற்றே!" "அதுமட்டுமல்ல, அப்பா! இவர் ஒரு புரட்சிக் காரியை ஒளித்து வைத்திருந்தார் என்று புகார். இவருடைய மனைவி சீதா ஒரு புரட்சிக்காரனுக்கு உதவி செய்வதாகப் புகார். இந்த ஊரிலிருந்து சென்னை மாகாணத்திற்குப் போன ஒரு கடிதத்தில் இவர் மனைவி சீதாவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததாம். அந்தக் கடிதம் சூரியா என்பவருக்கு எழுதப்பட்டதாம். நேற்று ஒரு பார்ட்டியில் ஒரு சி.ஐ.டி. உத்தியோகஸ்தர் என்னிடம் சீதாவையும் சூரியாவையும் பற்றி விசாரித்தார். அவர்களுக்குள் ஏதாவது உறவு உண்டா?" என்று பாமாதேவி கேட்டாள். "உறவு உண்டு, அவர்கள் அத்தங்காவும் அம்மாஞ்சியும் ஆகவேண்டும்" என்றான் ராகவன். "அப்படியானால் சரிதான்! அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தர் கொஞ்சம் விரஸமாகக் கூடப் பேசினார்...." "அது என்ன?" என்று ராகவன் பரபரப்புடன் கேட்டான். "அவர்கள் இரண்டு பேரும் 'லவர்ஸ்' (காதலர்கள்) என்பதாக ஏதேனும் வதந்தி உண்டா என்று கேட்டார். எனக்குச் சீதாவை நன்றாகத் தெரியுமாதலால் 'அதெல்லாம் சுத்தப் பொய்; அவதூறு' என்று சொல்லி, அந்த சி.ஐ.டி.காரர் தமது வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி செய்தேன்."

"நீங்கள் செய்தது ரொம்ப சரி ஆனாலும் அந்தச் சூரியா ஒரு காலிப் பயல் என்பது உண்மை. கொஞ்ச நாளைக்கு முன்பு சந்நியாசி வேஷம் போட்டுக்கொண்டு மதராஸில் என் தாயார் வீடு சென்று பார்த்தானாம். என்னென்னமோ அனாவசியமான கேள்வியெல்லாம் கேட்டானாம். அவன் மறுபடியும் என் கண்ணில் தென்பட்டால் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு மறுகாரியம் பார்ப்பேன். அவன் பேரில் ஏதாவது அரெஸ்ட் வாரண்ட் இருக்கிறதா, உங்களுக்குத் தெரியுமா?" "தெரியாமல் என்ன? மதராஸ், பம்பாய், மத்திய மாகாணம் ஆக மூன்று மாகாணங்களில் அவன் பேரில் வாரண்ட் இருக்கிறதாம்!" "நல்ல காரியம்! சூரியாவைப் போன்றவர்களைச் சிறையிலே தள்ளினால் தேசத்துக்கே க்ஷேமம். சுதந்திர இயக்கம் தூய்மை அடையும்!" என்று ராகவன் சொல்லிக்கொண்டே டெலிபோன் அருகில் சென்றான். "இந்த நேரத்தில் யாருடன் டெலிபோன் பேசப் போகிறீர்கள்?" என்று பாமா கேட்டாள். "வீட்டில் என் மனைவி தூங்கிவிட்டாளா என்று தெரிந்து கொண்டு தான் நான் செல்வது வழக்கம். அவள் விழித்துக் கொண்டிருக்கும்போது சென்றால் தேள் கொட்டுவதுபோல் கொட்டி விடுவாள். இராத்திரியெல்லாம் இரண்டு பேருக்கும் சிவராத்திரிதான்!" என்றான் ராகவன். "ஐயோ! பாவம்! உங்களுடைய நிலைமை பரிதபிக்கத்தக்கது தான்" என்று சொன்னாள் பாமா. சௌந்தர ராகவன் டெலிபோனில் தன்னுடைய வீட்டு நம்பரைக் கூப்பிட்டான். அதற்குப் பதில் உடனே வந்தது. டெலிபோனில் பேசிய குரலைக் கேட்டதும் ராகவனுடைய முகத்தில் ஆச்சரியமும் ஆத்திரமும் பொங்கி கோரத்தாண்டவம் புரிந்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பன்னிரண்டாம் அத்தியாயம்

"சூரியா! போய்விடு!"

டெலிபோனில் ராகவனுடைய குரலைக் கேட்ட அதே சமயத்தில் சீதாவின் முகத்தையும் சூரியா பார்த்தான். ஏதாவது தவறு நேர்ந்து விட்டதோ என்ற எண்ணத்தில் அவன் உள்ளம் குழம்பிற்று. ராகவன், "யார்? சூரியாவா?" எப்போது வந்தாய்!" என்று கேட்டதற்கு, "இன்றைக்குத் தான்!" என்று பதில் அளித்தான். "ஓகோ! நான் வருகிற வரையில் இருப்பாயல்லவா?" என்று ராகவன் கேட்டான். "ஆகா! இருக்கிறேன்!" என்றான் சூரியா. பிறகு, "அத்தங்கா! மாப்பிள்ளை பேசுகிறார்!" என்று சொல்லி டெலிபோன் ரிசீவரைச் சீதாவின் கையில் கொடுத்தான். ரிஸீவரைக் காதில் வைத்துக் கொண்டபோது சீதாவின் முகம் மேலும் பீதியைக் காட்டியது. ராகவன் என்ன கேட்டான் என்பது சூரியாவின் காதில் விழவில்லை. சீதா, "இல்லையே! இன்றைக்குத்தானே வந்திருக்கிறான்!" என்று சொன்ன போது அவள் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளித்ததைச் சூரியா பார்த்தான். பிறகு, "சரி, சரி இருக்கச் சொல்கிறேன்!" என்று சொல்லிவிட்டு டெலிபோன் ரிஸீவரை வைத்து விட்டாள். "அத்தங்கா! மாப்பிள்ளை என்ன சொன்னார்? எதற்காக உன் கண் இப்படி கலங்கியிருக்கிறது?" என்று சூரியா கவலையுடன் கேட்டான்.

சீதா சிறிது நேரம் எங்கேயோ பார்த்துக்கொண்டு சும்மா இருந்தாள். பிறகு திடீரென்று விம்மிக்கொண்டே, "சூரியா! நீ போய்விடு! உடனே போய்விடு!" என்றாள். "அத்தங்கா! இது என்ன? எதற்காக என்னைப் போகச் சொல்கிறாய்? மாப்பிள்ளை இருக்கச் சொல்லியிருக்கிறாரே?" என்றான் சூரியா. "அதனாலே தான் உன்னைப் போகச் சொல்கிறேன். என்னிடமும் உன்னை இருக்கப் பண்ணும்படிதான் சொன்னார். ஆனால் எனக்கு என்னமோ பயமாயிருக்கிறது. சூரியா! நீ இன்றைக்கு இங்கே இருந்தால் ஏதாவது அபாயம் நேரிடும் என்று தோன்றுகிறது போய்விடு!" "நான் அவசரப்பட்டுக்கொண்டு போனால்தான் அபாயம் வரும். அவர் இரு என்று சொல்லியிருக்கும்போது நான் போகலாமா? வீண் சந்தேகத்துக்கு இடமாகாதா?" "சந்தேகம் இனிமேல்தானா வரப்போகிறது? உனக்கு ஒன்றுமே தெரியவில்லை, சூரியா! பச்சைக் குழந்தையாய் இருக்கிறாய்! நம் இருவர் பேரிலும் தகாத சந்தேகம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. என்னை அவர் படுத்துவதெல்லாம் அதற்காகத் தான்." "சுத்த மூடத்தனம்; என் பேரில் மாப்பிள்ளைக்குச் சந்தேகமாவது! அவர் இப்போது வரட்டும்; நேரிலே கேட்டு விடுகிறேன். அவருக்கு உன்னைக் கலியாணம் செய்து வைத்ததே நான் தானே?" என்றான் சூரியா.

"நீதான்! நீ செய்த பெரிய தவறு அது தான்! நேரில் பார்த்துப் பேசுவதினால் அவருடைய சந்தேகத்தை நீ போக்கி விட முடியாது. ஏதாவது நீ பதில் சொன்னால் அவருடைய கோபம் அதிகமாகும். நீ இன்றைக்கு இங்கே இருந்தால் நிச்சயமாகக் கொலை விழும்! அந்தப் பாவத்துக்கு என்னை ஆளாக்காதே! தயவு செய்து போய்விடு! உன் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்!" சீதாவின் வெறி நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகி வருவதைச் சூரியா கவனித்தான். ஆனாலும் அவனுக்குப் போக மனம் வரவில்லை. "சீதா! பதட்டம் வேண்டாம்! கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்! நான் இப்போது போய்விட்டால் அவருடைய சந்தேகத்தை உறுதிப் படுத்துவதுபோல் ஆகாதா?" என்றான். "உறுதிப்பட்டால் படட்டும் அவரையே தெய்வம் என்று நானெண்ணிக்கொண்டிருந்தும் எப்போது சந்தேகப்படுகிறாரோ, அப்போது அவருடைய சந்தேகத்தை உண்மையாக்கி விட்டால்தான் என்ன? அதனாலேயே என்னை எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகும்படி உன்னைக் கேட்டேன்; ஆனால் நீ பயங்கொள்ளி, கோழை, ஸ்திரீகளின் சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழியப் பேசுவாயே தவிர, அதற்காக ஒரு துரும்பு எடுத்துப் போடமாட்டாய். உன்னை நான் நம்பியிருக்கவும் இல்லை. ஒரு நாளைக்கு இவரை விட்டு விட்டு ஓடவே போகிறேன். உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்; என்னை வீண் கஷ்டத்துக்கு ஆளாக்காமல் உடனே போய்விடு. உன்னால் எனக்கு உபகாரம் இல்லாவிட்டாலும் அபகாரமாவது இல்லாமல் இருக்கட்டும்."

இனிமேல் தான் அங்கு இருந்தால் சீதாவின் இரத்த நரம்புகள் வெடித்து அவள் மூர்ச்சையாகி விடுவாள் என்று சூரியா பயந்தான். போய்விட வேண்டியதுதான்; ஆனால் அப்புறம் என்ன? சீதாவின் நிலையைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது? ஆம்; டெலிபோன் ஒன்று இருக்கிறதே! டெலிபோன் மூலம் நாளைக்கு விசாரித்துக் கொள்ளலாம். இன்றைக்கு ஒரு இராத்திரி நடக்கிறது நடக்கட்டும். நாளை தாரிணியுடன் யோசித்துக் கொண்டு சீதா விஷயமாக என்ன செய்கிறது என்று தீர்மானிக்கலாம். "சரி அத்தங்கா! நீ இவ்வளவு வற்புறுத்துகிறபடியால் நான் போகிறேன். அப்புறம் நாம் எப்போது சந்திப்பது? நாளைக்கு டெலிபோன் பண்ணட்டுமா?" "ஆமாம்; நாளைக்குப் பதினொரு மணிக்கு மேல் டெலிபோனில் பேசு எல்லாம் சொல்கிறேன்." "அத்தங்கா! ஒரே ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். உனக்கு உண்மையில் உதவி தேவையாயிருந்தால் நான் அதற்கு பின்வாங்க மாட்டேன். உன்னுடைய மனதைத் திடப்படுத்திக்கொண்டு சொல்லு. என்ன சொல்கிறாயோ, அந்தப்படி செய்யத் தயாராயிருக்கிறேன். உன்னுடைய க்ஷேமந்தான் எனக்குப் பெரிது; தேச விடுதலை கூட அப்புறந்தான்!" என்றான் சூரியா.

இப்படிச் சூரியா சொன்னபோது அவனுடைய மனதில் உண்மையாக எண்ணியதையே சொன்னதாகக் கூற முடியாது. அவசரப்பட்டுச் சீதா ஏதாவது செய்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தினால் அவளைத் தைரியப்படுத்துவதற்காகவே சொன்னான்.ஆனால் சீதா, சூரியா சொன்னதை நூற்றுக்கு நூறு பங்கு உண்மையாகவே எடுத்துக்கொண்டு, "ரொம்ப வந்தனம், அம்மாஞ்சி! அபாய காலத்தில் உன்னுடைய உதவியைக் கோரும்படி அம்மா எனக்குச் சொல்லியிருந்தாள்; அவளுடைய வாக்கு வீண் போகவில்லை.நாளைக்கு மத்தியானத்துக்கு மேலே டெலிபோனில் பேசு. நானும் அதற்குள் நன்றாக யோசித்து வைக்கிறேன். அவசரப்பட்டு ஒரு காரியத்தைச் செய்தோம் என்ற பெயர் வேண்டாம். இல்லாவிட்டால் இப்போதே என்னை அழைத்துக்கொண்டு போகும்படி சொல்லியிருப்பேன்!" என்றாள் சீதா. சூரியா புறப்பட எழுந்தான் சீதாவிடமிருந்து எடுத்துக் கொண்ட கைத்துப்பாக்கியை முன்னமேயே கால்சட்டையின் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தான். 'இந்தப் பித்துக்குளிகளின் வீட்டில் துப்பாக்கி இருப்பது ஆபத்து. நம்மிடம் இருந்தால் ஒரு சமயம் பயன்படும்' என்று முடிவு செய்திருந்தான். அதன்படி கைத்துப்பாக்கியுடன் கிளம்பிச் செல்ல ஆயத்தமானான். அப்போது வாசலில் 'பாம்' 'பாம்' என்ற சத்தம் கேட்டது.

மோட்டார் கார் 'விர்' என்று வேகமாக வந்து வீட்டு வாசலில் நின்றது சீதாவும் சூரியாவும் திகைத்து நின்றார்கள். ராகவன் வண்டியை வீட்டு முகப்பில் நிறுத்திவிட்டு இறங்கி 'விடுவிடு' என்று உள்ளே வந்தான். சூரியாவையும் சீதாவையும் மாற்றி மாற்றி வெறித்துப் பார்த்தான். அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்த குரோதம் அவனுடைய பார்வையில் ஒருவாறு தெரிந்தது. ஆனால் வாய் வார்த்தையில் குரோதத்தைக் காட்டிக் கொள்ளாமல், "என்ன சூரியா? புறப்படத் தயாராக நிற்கிறாய் போலிருக்கிறதே?" என்றான். "ஆமாம், மாப்பிள்ளை! போக வேண்டும் மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதல்லவா? நீங்கள் வந்ததும் புறப்படலாம் என்று காத்துக் கொண்டிருந்தேன்" என்றான் சூரியா. "அதென்ன இத்தனை நேரம் கழித்து எங்கே போவாய்? பெரிய 'நைட் பர்ட்' (இராத்திரி சஞ்சாரப் பறவை) ஆகிவிட்டாய் போலிருக்கிறதே!" "நீங்களும் என் தோழனாகத் தான் இருக்கிறீர்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களே?" என்று சூர்யா கொஞ்சம் துடுக்காகப் பதில் சொல்லி ராகவனுடைய கோபத்தைக் கிளறிவிட்டான். "நான் ஓரிடத்தில் மிக முக்கியமான வேலையாகப் போக வேண்டியிருந்தது."

"நானும் முக்கிய வேலையாகத் தான் போகவேண்டியிருக்கிறது. இன்று இராத்திரி சில சிநேகிதர்களைச் சந்திப்ப தாகச் சொல்லியிருக்கிறேன்." "அழகுதான்! இத்தனை நேரம் கழித்துச் சிநேகிதர்களைச் சந்திக்கவாவது! சந்தித்து? என்ன செய்வீர்கள் எங்கேயாவது கொள்ளையடிக்கப் போகிறீர்களா, என்ன?" "கொள்ளையடிக்கப் போகிறவர்களும் இராத்திரியில் போவார்கள்; அவர்களைப் பிடிக்கப் போகிறவர்களும் இராத்திரியிலே தான் போய் ஆக வேண்டும்? இந்தியா தேசத்தைக் கவர்ந்த கொள்ளைக்காரர்களைத் துரத்தியடிக்கும் கைங்கரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் உங்களுக்குத் தெரியாதா, மாப்பிள்ளை? "எனக்கு எப்படித் தெரியும்? உன் அத்தங்காளுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அவளை நீ அடிக்கடி வந்து பார்த்து விட்டுப் போகிறாய் அல்லவா...!" "அடிக்கடி நான் வந்து பார்ப்பதில்லையே? மூன்று மாதத்துக்கு முன்னால் ஒரு தடவை வந்திருந்தேன். அப்போது நீங்கள் வெளியூருக்கு போயிருந்தீர்கள், உங்கள் தாயார் இருந்தார் அவரைத் தரிசித்து விட்டுப் போனேன்." "அது கிடக்கட்டும், அப்பா! இப்போது நீ எங்கெங்கேயோ போய்விட்டு வந்தாயாம். மதராஸுக்குக் கூடப் போயிருந் தாயாம். அவ்விடத்து விஷயங்கள் எல்லாம் உன்னிடம் தெரிந்து கொள்ளலாம் என்றல்லவா இவ்வளவு அவசரமாக ஓடி வந்தேன்? நீ போக வேண்டும் என்கிறாயே? இராத்திரி இங்கே தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகக்கூடாதா?"

"இல்லை ஸார்! நான் அவசியம் இப்போதே போக வேண்டும். மதராஸில் உங்கள் தாயாரையும் குழந்தையையும் பார்த்தேன். குழந்தை இங்கே வரவேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் வழியில் எனக்குப் பல ஜோலிகள் இருந்தபடியால் அவளை நான் அழைத்து வரவில்லை. மற்ற விவரங்கள் எல்லாம் இன்னொரு நாள் சாவகாசமாகச் சொல்லுகிறேன். "இன்னொரு நாள் என்றால் என்றைக்கு?" என்று ராகவன் கேட்டான். "சௌகரியப்பட்டால் நாளைக்கே வருகிறேன்; இல்லாவிட்டால் மறுநாள் வருகிறேன். என்னுடைய பிரயாண விவரங்கள், அனுபவங்கள் எல்லாம் சொல்கிறேன்." "சரி; அப்படியானால் போய் வா! நாளைக்கு வருகிறதாயிருந்தாலும் இரவிலே தான் வருவாயாக்கும்!" "ஆமாம்; போலீஸ்காரர் கண்ணுக்குப் படாமல் வருவதாயிருந்தால் இராத்திரியில் தான் வரவேண்டியிருக்கிறது. என்னுடைய காரியங்கள் சம்பந்தமாக உங்களுக்குத் தொந்தரவு எதுவும் விளைவதை நான் விரும்பவில்லை. சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறீர்கள் அல்லவா? அதுவும் சாமானிய உத்தியோகமா?" "ஓஹோ! அவ்வளவு தயவு என் பேரில் வைத்திருக்கிறாயா? போகட்டும்! ராஜம்பேட்டை கிட்டாவய்யர் குமாரன் தலையில் இப்படியா எழுதியிருக்க வேண்டும்?"

"என் தலையில் எப்படி எழுதியிருக்கிறது; எதைப் பற்றிச் சொல்கிறீர்கள்!" "இப்படிப் போலீஸ்காரர்களுக்குப் பயந்து திருடனைப் போல் இராத்திரியில் ஒளிந்து திரிய வேண்டியிருப்பதைப் பற்றித் தான். இருக்கட்டும், சூரியா! உன்னுடைய சிநேகிதி தாரிணி எங்கே இருக்கிறாள்? அவளை நீ பார்ப்பதுண்டா?" சூரியா சீதாவின் முகத்தைப் பார்த்தான் அவளுடைய முகம் கொடூரமாவதைக் கவனித்தான். "தாரிணி இந்த ஊரிலேதான் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். ஒருவேளை பார்த்தாலும் பார்ப்பேன் ஆனால் நிச்சயம் சொல்வதற்கில்லை." "பார்த்தால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது என்றும் அவளை நான் சந்திக்க விரும்புவதாயும் சொல்லு; அவளுடைய இருப்பிடம் உனக்குத் தெரியுமா?" "பழைய இருப்பிடம் தெரியும் ஆனால் இப்போது தாரிணி அங்கே இல்லை. வேறு ஜாகைக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறாளாம்." "பழைய ஜாகை எனக்குத் தெரியும்; புது இடம் தெரியாது. ஒரு நாள் பழைய டில்லியில் ஜும்மா மசூதிக்குப் பக்கம் நான் போய்க்கொண்டி ருந்தபோது தாரிணி மாதிரி ஒருத்தி போவது தெரிந்தது. அவளே தான் என்று நினைத்துப் பார்த்துப் பேசுவதற்காகப் போனேன். திடீரென்று அவள் குறுகலான சந்து ஒன்றில் புகுந்து அவசரமாகச் சென்று அங்கே ஒரு வீட்டுக்குள் புகுந்தாள். எப்படியும் அவளைப் பார்த்துவிடுவது என்று வீட்டுக் கதவை இடித்தேன். அந்த வீதி துருக்க வீதி போலிருக்கிறது.

நூறு முஸ்லீம்கள் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டு சண்டைக்கு வந்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பி வருவது பெரும் பாடாகி விட்டது சூரியா! முதலில் நீங்கள் இந்த நாட்டிலிருந்து துருக்கர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லா விட்டால் நம் இந்திய தேசம் உருப்படப் போவதில்லை."நாங்கள் அப்படி நினைக்கவில்லை; முஸ்லிம்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்; நம் சகோதரர்கள் அவர்களை எப்படி ஒழித்துக் கட்ட முடியும்? வெள்ளைக்காரர்களை அடித்து விரட்டி விட்டால், அப்புறம்..." "அப்புறம் நீங்கள் வைத்ததுதான் சட்டமாயிருக்கும் அரசாங்கமே உங்கள் கையில் வந்துவிடும்." "அது எனக்குத் தெரியாது, மாப்பிள்ளை! சுதந்திரப் போரில் நாங்கள் எல்லாம் உயிர் துறக்க நேரிட்டாலும் நேரிடலாம். ஆனால் ஒன்று நிச்சயம் இந்த நாட்டு ஜனங்களின் பிரதிநிதிகள் இந்தியாவைக் கூடிய சீக்கிரம் ஆளப் போகிறார்கள். நேரமாகிவிட்டது; நான் போய் வருகிறேன்" என்று சொல்லி விட்டுச் சூரியா புறப்பட்டுச் சென்றான். அவன் போவதைப் பொருட்படுத்தாமல் ராகவன் சோபாவில் உட்கார்ந்தபடி இருந்தான். ஆனால் சீதா சூரியாவின் பின்னோடு வாசல் வரையில் போனாள். வாசற்படிக்கு அருகில் வந்ததும், "சூரியா! என் தலை மேல் ஆணை! நாளைக்குக் கட்டாயம் எனக்கு டெலிபோன் பண்ணு!" என்று மெதுவான குரலில் கூறினாள். "சரி, அத்தங்கா!" என்றான் சூரியா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பதின்மூன்றாம் அத்தியாயம்

"பதிவிரதையானால்...?"

வாசல் வரையில் சூரியாவைக் கொண்டு போய் விட்டு விட்டுச் சீதா திரும்பி உள்ளே வந்தாள். உட்கார்ந்திருந்த ராகவன் ஆக்ரோஷத்தோடு எழுந்து நிற்பதைக் கண்டாள். "அவனிடம் என்னடி இரகசியம் பேசினாய்?" என்று ராகவன் கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டான். இன்னது சொல்கிறோம் என்பதை நன்கு உணராமலேயே "நான் என்ன பேசினால் உங்களுக்கு என்ன?" என்றாள் சீதா. "என்ன சொன்னாய்?... எனக்கு என்னவா?" என்று சொல்லி ராகவன் சீதாவின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான். சீதா பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு, "இவ்வளவுதானா? இன்னொரு கன்னம் பாக்கி இருக்கிறது!" என்றாள். "ஓகோ அப்படியா? காந்தி மகாத்மாவின் சிஷ்யை ஆகிவிட்டாயாக்கும்! இந்தா! வாங்கிக்கொள்!?" என்று இன்னொரு கன்னத்திலும் அறைந்தான். சீதா அவனை வெறிக்கப் பார்த்துவிட்டுச் சமையலறையை நோக்கிப் போனாள். "எங்கே அவசரமாய்ப் போகிறாய்? இங்கே வா! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுப் போ!" என்று ராகவன் கத்தினான். சமையல் உள்ளேயிருந்த டம்ளரில் ஓவல்டின் எடுத்துக் கொண்டு வந்து மேஜை மீது வைத்தாள். "வெறும் ஓவல்டினா? அல்லது விஷத்தைக் கலந்து கொண்டு வந்தாயா?" என்று ராகவன் கேட்டான். "ஆமாம்!" என்றாள் சீதா. "அப்படியானால் நீயே சாப்பிடு...! வேண்டாம்; உனக்கும் இந்த உலகத்தில் வேலை கொஞ்சம் பாக்கியிருக்கிறது. இவ்வளவு சீக்கிரத்தில் உலகத்தை விட்டுப் போய்விடாதே!" என்று சொல்லிக்கொண்டே ராகவன் டம்ளரைக் கையிலெடுத்து அதிலிருந்த ஓவல்டின் பானத்தை ஜன்னல் வழியாக வீசிக் கொட்டினான்.

"இப்பேர்ப்பட்ட கொலை பாதகியை வீட்டில் வைத்துக் கொண்டு நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். நாளைக்கு நான் புறப்பட்டுப் போய்விடுகிறேன்" என்றாள் சீதா. "எங்கே போவதாக உத்தேசம்?" என்றான் ராகவன். "போகிறவள் எங்கே போனால் உங்களுக்கு என்ன? நீங்கள் ஏன் கேட்க வேண்டும்?" என்றாள் சீதா. "உனக்கு நான் தாலி கட்டிய புருஷனா யிருக்கிறபடியால் தான் கேட்டேன். முன்னே நான் போகச் சொன்னபோதெல்லாம் 'போகமாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தாய். இப்போது நாளைக்கே போகிறேன் என்கிறாயே? எங்கே போவதாக உத்தேசம்? யாருடன் போவதாக உத்தேசம்? சூரியாவுடனா?" "சூரியா அழைத்துக்கொண்டு போனால் அவனுடன் போகிறேன்; இல்லாவிட்டால் தனியாகப் போகிறேன்" என்றாள் சீதா. "சூரியா உன்னை எங்கே அழைத்துப் போகப் போகிறான்! அவன்தான் நித்திய கண்டம் பூரணாயுசாகப் போலீஸுக்குப் பயந்து ஒளிந்து திரிகிறானே! நீ தனியாகத் தான் போகும்படி இருக்கும், எந்த ஊருக்குப் போகப் போகிறாய்?" "எங்கேயாவது தொலைந்து போகிறேன்; நீங்கள்தான் வாய் ஓயாமல் தொலைந்து போ என்கிறீர்களே?" "இப்போதும் அதைத்தான் சொல்கிறேன், திவ்யமாய்த் தொலைந்து போ! போவதற்கு முன்னால் நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போ!" "தொலைந்து போகப் போகிறவளிடம் கேள்வி என்ன கேட்பது? பதில் என்ன சொல்வது?" "பதில் சொல்லத்தான் வேண்டும் உன்னையும் சூரியாவையும் பற்றி எனக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது." "என்ன சந்தேகம்?" "என்ன சந்தேகமா? உங்களுடைய நடத்தையைப் பற்றிய சந்தேகந்தான்." "ரொம்ப சந்தோஷம்." "சந்தோஷமா?" என்று சொல்லி ராகவன் சீதாவின் ஒரே கன்னத்தில் இன்னும் இரண்டு பலமான அறை கொடுத்தான்.

சீதா அவ்விடமிருந்து நகரவும் இல்லை; கண்ணீர் விடவும் இல்லை; முகத்தைச் சுருக்கக்கூட இல்லை. "ரொம்ப சந்தோஷம் என்னை ஒரே அடியாக அடித்துக் கொன்று விடுங்கள்!" என்றாள். "எதற்காக உன்னைக் கொல்ல வேண்டும் என்கிறாய்?" என்றான் ராகவன். "கொன்று விட்டால் நாளைக்கு நான் ஓடிப் போக வேண்டிய அவசியமிராது" என்றாள் சீதா. "உன் மனதில் ஏதோ களங்கம் இருக்கிறது. குற்றமுள்ள நெஞ்சு அடித்துக் கொள்கிறது ஆகையால் தான் 'ஓடிப் போகிறேன்' என்று சொல்கிறாய்." "என் மனதில் களங்கமும் இல்லை; நெஞ்சில் குற்றமும் இல்லை." "பின் எதற்காக 'ஓடிப் போகிறேன்' என்கிறாய்? கட்டிய புருஷனை விட்டு விட்டு ஏன் ஓடவேண்டும்?" "உங்களுடைய மனது வேற்றுமைப்பட்டுவிட்டது. இனிமேல் நமக்குள் ஒட்டாது மனது ஒட்டாதவர்கள் எப்படிச் சேர்ந்து வாழ முடியும்?" "என் மனது வேற்றுமைப்பட்டுவிட்டது என்றால், அதற்குக் காரணம் உன்னுடைய நடத்தை தான். நான் இல்லாத சமயம் பார்த்து சூரியா எதற்காக உன்னைப் பார்க்க வருகிறான்? இதோ பார்! நீ உண்மையில் பதிவிரதையாக இருந்தால்...?" "பதிவிரதையாக இருந்தால்..? கடவுளே! இது என்ன விசித்திர உலகம்?" என்றாள் சீதா.

"மாயா உலகத்தைப் பற்றிய வேதாந்தப் பேச்செல்லாம் அப்புறம் இருக்கட்டும். நீ பதிவிரதையாயிருந்தால் நான் இப்போது சொல்லப் போகிறதைச் செய்ய வேண்டும் செய்வாயா?" என்றான் ராகவன். சீதா மௌனமாக இருந்தாள். "நான் சொல்வதைச் செய்வாயா, மாட்டாயா? சொல்லு பதில்!" என்று ராகவன் அதட்டினான். "இன்ன காரியம் என்று தெரியப்படுத் தினால், என்னால் முடியும் முடியாது என்று சொல்லுகிறேன்!" "காரியத்தை முதலில் சொல்ல முடியாது நான் எது சொன்னாலும் நீ செய்யத் தயாராயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த வீட்டை விட்டு நடந்து விட வேண்டும்." "நான்தான் போகத் தயார் என்று சொல்லிவிட்டேனே? இந்த நிமிஷமே வேண்டுமானாலும் கிளம்பி விடுகிறேன்." "ஆனால் நான் சொன்னதை மட்டும் செய்ய மாட்டாயாக்கும்?" "இன்ன காரியம் என்று சொல்லாமல் எப்படிச் செய்வதாக ஒப்புக்கொள்ள முடியும்?" "ஏன் முடியாது? புருஷன் சொல்வது எதுவானாலும் செய்ய வேண்டியது மனைவியின் கடமையல்லவா?" "அன்யோன்ய தம்பதிகளாயிருந்தால் சரிதான் ஆனால் உங்கள் மனம் பேதலித்துவிட்டது. என் பேரில் உங்களுக்குச் சந்தேகம்; உங்கள் பேரில் எனக்குச் சந்தேகம். அப்படியிருக்கும் போது காரியம் இன்னதென்று தெரியாமல் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?"

"என் பேரில் உனக்குச் சந்தேகமா? அழகாய்த்தானிருக்கிறது. அப்படியே இருக்கட்டும்; நீ செய்ய வேண்டியதைச் சொல்கிறது. இப்போதே - இந்த நிமிஷமே போலீஸ் ஸ்டேஷனை நீ டெலிபோனில் கூப்பிட்டு, சூரியா இங்கு வந்து விட்டுப் போனதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்." "ஒரு நாளும் மாட்டேன்." "ஏன் மாட்டாய்? சூரியா பேரில் உனக்கு என்ன அத்தனை கரிசனம்?" "சூரியா என்னுடைய மாமாவின் பிள்ளை. நம் இருவருக்கும் கலியாணம் பண்ணி வைத்ததே அவன்தான். இப்போது சூரியா தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வருகிறான். என்னிடமும் உங்களிடமும் நம்பிக்கை வைத்து, நாம் காட்டிக் கொடுக்க மாட்டோ ம் என்று உறுதியாக நம்பி, அவன் என்னைப் பார்க்க வந்தான். அவனைப் போலீஸுக்குக் காட்டிக் கொடுப்பது துரோகம்; மகா பாவம்." "உன்னுடைய அம்மாஞ்சி சூரியாவினால் எனக்குப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. புரட்சி வேலைகளில் அவன் ஈடுபட்டவன். அப்படியிருந்தும் சர்க்கார் உத்தியோகஸ்தனாகிய என் வீட்டுக்கு அவன் வந்தது பெரும் பிசகு. அதனால் எனக்கு உத்தியோகத்தில் பிரமோஷன் தடைப்பட்டு விட்டது. எனக்குக் கீழே இருந்தவர்கள் எல்லாரும் எனக்கு மேலே போய் விட்டார்கள். இன்றைக்குத் தகவலாவது கொடுக்காவிட்டால், என்னுடைய உத்தியோகம் போய்விடும்." "போனால் போகட்டும், உத்தியோகத்துக்காகச் சிநேகிதத் துரோகமான இந்தக் காரியம் செய்ய வேண்டாம். நான் வீடு வீடாகப் பிச்சை எடுத்தாவது ஏதோ கொண்டு வருகிறேன்."

"சீ! நாயே! உன்னுடைய பிச்சைக் காசை எதிர்பார்த்து நான் ஜீவிக்க வேண்டுமாக்கும்! அதெல்லாம் முடியாது. உன்னுடைய மூடத்தனத்துக்காக இரண்டாயிரம் ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகத்தை விட்டுவிடச் சொல்கிறாயா? ஒரு நாளும் மாட்டேன். இந்தச் சங்கடம் குறுக்கிடாவிடில் சீக்கிரத்தில் இன்னும் பெரிய உத்தியோகம் எனக்குக் கிடைக்கும். மாதம் மூவாயிரம் நாலாயிரம் சம்பளம் வரும். அதையெல்லாம் விட்டு விடச் சொல்கிறாயா? உன்னுடைய புத்தி உலக்கைக் கொழுந்துதான்." "அப்படியே இருக்கட்டும் ஆனால் நான் போலீஸுக்கு ஒரு நாளும் தகவல் சொல்லமாட்டேன்; அதைக் காட்டிலும் உயிரையே விட்டு விடுவேன்." "எனக்குத் தான் தெரியுமே? உன்னுடைய யோக்கியதை வெளியாகட்டும் என்று உன்னை 'டெலிபோன்' பண்ணச் சொன்னேன் வெளியாகிவிட்டது. இங்கே நிற்காதே! போ! தொலை!" என்று சீதாவின் கழுத்தைப் பிடித்துப் படுக்கை அறைப் பக்கமாக அவளை ராகவன் தள்ளினான்! சீதா படுக்கையறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். கண்களில் ஒரு சொட்டு ஜலம் கூட வரவில்லை. கன்னத்தில் கணவன் அடித்த இடத்தில் விண் விண் என்று தெறித்துக் கொண்டிருந்தது. இன்று நடந்ததெல்லாம் உண்மையா அல்லது தூங்கும்போது கனவு கண்டோ மா என்று வியந்தாள்.

ராகவன் இருந்த அறையில் டெலிபோன் கருவியை 'டயல்' செய்யும் சத்தம் கேட்டது. உடனே சீதாவின் காதுகள் கூர்மையாயின; அவளது உள்ளம் ஒருமுகப்பட்டது. "ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா?" என்று ராகவனுடைய குரல் காதில் கேட்டதும் சீதா பளிச்சென்று எழுந்து ஓடி வந்தாள். டெலிபோன் ரிஸீவரை வைத்திருந்த ராகவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, "யாருக்கு டெலிபோன் செய்கிறீர்கள்?" என்று கேட்டாள். கோபத்தினால் முகம் கறுத்துக் கண்கள் சிவந்து கொடூரமாய் விழித்த ராகவன், "உனக்கு என்ன அதைப்பற்றி?" என்றான். "எனக்கு ஏன் சம்பந்தம் இல்லை? நீங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் பண்ணப் போகிறீர்கள் சூரியாவைப் பற்றி. அதற்கு நான் ஒருநாளும் விடமாட்டேன். என்னைக் கொன்றுவிட்டு டெலிபோன் செய்யுங்கள்" என்றாள் சீதா. "நாளைக்கு நான் ஆபீஸிலிருந்து டெலிபோன் பண்ணினால் என்ன செய்வாய்?" என்றான் ராகவன். "அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என் காதில் விழாதிருந்தால் சரி " என்றாள் சீதா. "சூரியாவிடம் உனக்கு என்ன அவ்வளவு அக்கறை? உனக்கும் அவனுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை, என்று சொன்னாயே!" "அப்படி நான் சொல்லவில்லை இந்த உலகத்திலேயே சூரியா ஒருவன் தான் என் பேரில் அபிமானம் உள்ளவன். எனக்காக எது வேணுமானாலும் செய்யத் தயாராயிருப்பவன். அவனை நீங்கள் காட்டிக் கொடுப்பதை நான் எப்படிப் பார்த்துக் கொண் டிருக்க முடியும்?" என்று சீதா கேட்டாள். "அடி பாதகி! சூரியாவின் மோகம் உன்னை எவ்வளவு தூரம் பைத்தியமாக்கி யிருக்கிறது என்று இப்போதல்லவா தெரிகிறது?" "ரொம்ப சந்தோஷம்." "என்னடி சந்தோஷம்? என்ன சந்தோஷம்?" என்று சொல்லிக்கொண்டு கையை ஓங்கினான் ராகவன். "இவ்வளவு படுபாதகமான விஷயத்தைச் சொல்லியும் உங்கள் நாக்கு அறுந்து விழாதது பற்றிச் சந்தோஷம்."

"என் நாக்கு அறுந்து விழவேண்டுமா? சாபம் வேறு கொடுக்கிறாயா?" என்று சொல்லிக்கொண்டே மிதமிஞ்சிய கோபாக்கிரந்தனாகியிருந்த ராகவன், டெலிபோன் ரிஸீவரை வைத்திருந்த கையினாலேயே ஓங்கி ஒரு அடி அடித்தான். அந்த அடி சீதாவின் காதின் மேல் விழுந்தது. அவ்வளவுதான்; சீதாவின் முகத்தில் திடீரென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது; கண்களில் நீர் ததும்பிற்று. அடித்த காதைக் கையினால் பொத்திக் கொண்டாள். "அம்மா! அம்மா! அலை ஓசை கேட்கிறதே! அம்மா! என்னை அழைத்துக் கொண்டு போ அம்மா!" என்று விம்மலும் அழுகையுமாகக் கதறினாள். முகத்திலும் கண்களிலும் வெறி தாண்டவமாடியது! சீதாவுக்கு 'ஹிஸ்டீரியா' வந்துவிட்டது என்று ராகவன் உணர்ந்தான். உடனே அவளை மெதுவாகப் பிடித்து சோபாவில் உட்கார வைத்தான். தானும் பக்கத்தில் உட்கார்ந்தான், "வேண்டாம் சீதா! வேண்டாம்? நான் உன்னைச் சோதனையல்லவா செய்தேன்? உண்மையென்று நினைத்துக்கொண்டாயா?" என்று சாந்தமான குரலில் பேசிக் கொண்டே முதுகிலே இலேசாகத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் சீதா சோபாவில் குப்புறப் படுத்துக் கொண்டாள். விம்மலும் அழுகையும் நின்றன சீதா நித்திரையில் ஆழ்ந்து விட்டாள்.

வீட்டுக்கு வெளியிலே சென்ற சூரியா, காம்பவுண்டு கேட்டின் கதவைத் திறந்து மூடிவிட்டு, மறுபடியும் தோட்டத் துக்குள் நுழைந்து வீட்டின் ஒரு ஓரமாகச் செடிகள் மரங்களின் மறைவில் சத்தமின்றி நடந்து வந்தான். ராகவனும் சீதாவும் இருந்த அறையின் ஜன்னலுக்கு அருகில் மறைவாக நின்று நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தான். பேசிய விஷயங்கள் எல்லாம் நன்றாகக் காதில் விழவில்லை. ஆனால் கண்கள் எல்லாவற்றையும் நன்கு பார்த்தன. ராகவன் டெலிபோன் கட்டையால் சீதாவை அடித்ததையும் அவள், "அம்மா! அம்மா!" என்று அலறியதையும் பார்த்த பிறகு சூரியாவால் பொறுக்க முடியவில்லை. கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடலாமா என்று ஒரு கணம் நினைத்தான். ஆனால் அது தவறு என்றும் பல முக்கியமான காரியங்கள் பாக்கி இருப்பதால் இன்னும் ஒரு நாள் பொறுத்திருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தான். அடுத்த காட்சியையும் பார்த்துவிட்டுச் சூரியா அங்கிருந்து நடையைக் கட்டினான்.

நள்ளிரவுக்குப் பிற்பட்ட பின்னிரவில் பழைய டில்லி நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த சூரியாவின் உள்ளம் அன்று வரை இல்லாத மாதிரிக் கொந்தளித்தது. "தேசம் எப்படி போனால் என்ன? சுதந்திரம் எக்கேடு கெட்டால் என்ன? தேசத்தையும் சுதந்திரத்தையும் கவனிக்க எத்தனையோ பேர், ஆனால் சீதா அனாதை, திக்கற்றவள். அவளைச் சந்தோஷமாக வைப்பதுதான் என்னுடைய முதல் கடமை. அந்தக் கடமையை எப்படி நிறைவேற்றுவது? நாளைக்குத் தாரிணியைக் கேட்டுக்கொண்டு தீர்மானிக்க வேண்டும். அதுவரையில், பாவம் அந்த ராட்சதனிடம் அகப்பட்டுக் கொண்ட என் அத்தங்காள் உயிரோடு இருக்க வேண்டுமே!" இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்த வண்ணம் சூரியா நடந்தான். போக வேண்டிய இடம் போய்ச் சேர்ந்து படுத்துக்கொண்ட பிறகும் தூக்கம் வந்தபாடில்லை அன்று அவனுக்குச் சிவராத்திரியாயிற்று.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பதினான்காம் அத்தியாயம்

இருண்ட மண்டபம்

மறுநாள் மாலை நேரத்தில் சூரியா மீண்டும் வெள்ளி வீதியின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். அவன் உள்ளம் பெரிதும் கலக்கமடைந்திருந்தது. முதல் நாள் இரவு உறக்கம் இல்லாமையும் மனதில் அமைதி இல்லாமையும் முகத்தில் நன்றாகத் தெரிந்தன. அன்று காலை பதினோரு மணிக்குச் சூரியா சீதாவுக்கு டெலிபோன் செய்தான். இரண்டு தடவை டெலிபோனில் வேறு யாரோ பேசிக் கொண்டிருந்தபடியால் கிடைக்கவில்லை. மூன்றாவது தடவை சீதாவின் குரல் கேட்டது. "சூரியா! சற்று முன்னால் நீ என்னைக் கூப்பிட்டுப் பேசினாயா?" என்றாள் சீதா. "இரண்டு தடவை கூப்பிட்டேன்; ஆனால் நீ கிடைக்கவில்லை?" என்றான் சூரியா. "அரைமணிக்கு முன்னால் டெலிபோன் மணி அடித்தது. நீயாகத் தான் இருக்கும் என்று எடுத்தேன். ஆனாலும் முன் ஜாக்கிரதையாக 'யார்?' என்று கேட்டேன். 'நான்தான் சூரியா! எப்போது சந்திக்கலாம்'? என்று குரல் கேட்டது. அது உன் குரல் இல்லையென்று சந்தேகித்து டெலிபோனை வைத்து விட்டேன். இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றாள் சீதா. "ஆச்சரியமாக இருக்கிறதே! அப்படி யார் கேட்டிருப்பார்கள்? எதற்காக? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே? ஒருவேளை உன் அகத்துக்காரர் தானோ என்னமோ?" என்றான் சூரியா. "இல்லை; என் அகத்துக்காரர் குரல் இல்லை; இருந்தால் எனக்கு உடனே தெரிந்திருக்கும். அது போனாற் போகட்டும்; நான் இன்றைக்கு உன்னை அவசியம் சந்திக்க வேண்டும். எங்கே எப்போது சந்திக்கலாம்?" என்று சீதா பரபரப்புடன் கேட்டாள்.

"எங்கே சந்திக்கிறது? சந்தித்தால் உன் வீட்டில் தான் சந்திக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து வருகிறேன்!" என்றான் சூரியா. "முடியாது! முடியாது! இன்றைக்கு என்னைப் பார்க்காவிட்டால் அப்புறம் என்னை உயிருடன் பார்க்க மாட்டாய். இங்கே நீ வரவேண்டியதும் இல்லை வந்தால் பெரிய ஆபத்தாக முடியும். நான் பழைய டில்லிக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்?" "இது என்ன யோசனை, சீதா! நீ தனியாகப் புறப்பட்டு வருவாயா? அவருக்குத் தெரியாமல் இருக்குமா? அப்படித் தெரிந்தால் ஏற்கெனவே வீண் சந்தேகப்படுகிறவர்..." "யார் என்ன சந்தேகப்பட்டாலும் சரிதான், இன்று சாயங்காலம் உன்னை நான் பார்த்தேயாக வேண்டும். இவருக்கு இன்றைக்குப் பார்ட்டி இருக்கிறது. நேரங்கழித்துத்தான் வருவார்? அதற்குள் உன்னைப் பார்த்துவிட்டுத் திரும்பி விடுவேன்." "அப்படியானால் நானே அவ்விடம் வந்துவிடுகிறேன்?" "கூடவே கூடாது இந்த வீட்டுப் பக்கமே இனிமேல் நீ வரக்கூடாது. சாயங்காலம் ஆறு மணிக்கு நான் பழைய டில்லி வந்து சேருகிறேன். எனக்குப் பயம் ஒன்றுமில்லை உன்னை எங்கே பார்க்கிறது?" சூரியாவுக்கு, டவுன் ஹாலுக்குப் பின்னால் உள்ள மைதானந்தான் உடனே நினைவுக்கு வந்தது; அங்கே வரும்படியாகச் சொன்னான். சீதாவும் சரியென்று சொல்லி டெலி போனைக் கீழே வைத்துவிட்டாள். அது முதல் சூரியாவின் உள்ளம், 'சீதாவிடம் ஏன் அப்படி சொன்னோம்.பிடிவாதமாக வரக்கூடாது என்று சொல்லாமற் போனோமே இதனால் சீதாவுக்கு மேலும் என்ன கஷ்டம் நேருமோ என்னமோ?' என்று கவலைப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையில் நேற்று ஏற்பாடு செய்திருந்தபடி தாரிணியையும் மற்ற நண்பர்களையும் பார்த்தாக வேண்டும்! அதற்காகத் தான் இப்போது சூரியா வெள்ளி வீதியில் போய்க்கொண்டிருந்தான். தாரிணியைப் பற்றி எண்ணியதும் முதல் நாள் மூன்று பேர் தாரிணியைப் பிடித்துக் கொடுத்தால் லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியது நினைவு வந்தது. இந்த ஞாபகம் சூரியாவின் மனக்குழப்பத்தை மேலும் அதிகமாக்கியது. 'இரத்த வாசல்' என்று பெயர் பெற்ற பயங்கர சரித்திர சம்பவங்கள் நடந்த இடத்தைத் தாண்டிச் சென்றதும், ஆஜானு பாகுவான முஸ்லீம் லீக் தொண்டர் ஒருவர் பச்சைச் சட்டைக்காரர் சூரியாவின் பேரில் மோதிக் கொண்டு, "மாப்கீஜீயே! குவாதே ஆஜம் ஜிந்தாபாத்!" என்றார். அந்த ஆசாமி வேண்டு மென்றே தன் பேரில் மோதிக்கொண்டு விஷமத்துக்காக மன்னிப்புக் கோருகிறார் என்று எண்ணிய சூரியா கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தான். ஆசாமியின் கண் சிமிட்டலைக் கண்டதும் நேற்று போலீஸ் உடையில் காட்சி தந்தவரே தான் என்று அறிந்து, "இதென்ன இன்றைக்கு இந்த வேஷம்?" என்றான் சூரியா. "தினம் ஒரே வேஷம் போட்டா பிழைப்பது எப்படி? உன்னைக் கூட ஜாக்கிரதை செய்யும்படி தலைவர் சொன்னார். நீ நேற்று மாதிரியே இன்றும் இருக்கிறாயே?" என்றார் முஸ்லீம் லீக் தொண்டர். "அதனால் என்ன? இங்கே என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது" என்றான் சூரியா. "அப்படிச் சொல்லுவதற்கில்லை; உன்னைப்பற்றி சி.ஐ.டி. விசாரணை பலமாயிருக்கிறதாகத் தகவல் வந்திருக்கிறது." "தலைவர் ஜாகையில் இருக்கிறாரா?" "இருக்கிறார், நீ எனக்கு ஐம்பது அடிக்குப் பின்னால் தொடர்ந்து வா! ரொம்ப நெருங்கியும் வராதே; ரொம்பத் தூரமாகவும் போய்விடாதே!" என்று சொல்லிவிட்டு அந்த ஆசாமி விடுவிடு என்று மேலே நடந்தார்.

அவர் கூறியபடியே சூரியா பின் தொடர்ந்தான். ஜும்மா மசூதியின் வலது பக்கத்து வீதியிலிருந்து குறுக்கே பிரிந்து சென்ற ஒரு குறுகிய வீதியில் முஸ்லீம் தொண்டர் பிரவேசித்தார். அந்த வீதியிலிருந்து மறுபடியும் பிரிந்து சென்ற சந்துகளின் வழியாக மடக்கி மடக்கித் திரும்பி நடந்தார். கடைசியில், சூரிய வெளிச்சம் என்பதையே அநேகமாகக் கண்டிராத ஒரு குறுகிய தெருவில், முஸ்லீம் லீக் கொடி பறந்த ஒரு வீட்டின் வாசலில் நின்றார். சூரியா வந்து சேர்ந்ததும் இருவரும் வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். முன் முகப்பு அறையில் முஸ்லிம் மௌல்வி போல் காணப்பட்ட ஒருவர் குரான் ஷெரிப்பைப் போல் தோன்றிய அரபு எழுத்துப் புத்தகம் ஒன்றைத் தடவித் தடவிப் படித்துக் கொண்டிருந்தார். வந்தவர்களை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டு மௌல்வி சாகிப் மறுபடியும் புத்தகம் படிப்பதில் ஆழ்ந்தார். 'இந்த மௌல்வி யார்? எங்கேயோ பார்த்திருக்கிறோமே?' என்று சூரியா எண்ணமிடுவதற்குள்ளே முஸ்லிம் தொண்டர் அவனுடைய கையைப் பிடித்து, ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக வைத்திருந்த பழைய புத்தக அலமாரிக்குப் பின்புறம் அழைத்துச் சென்றார். அலமாரிக்கும் சுவருக்கும் மத்தியில் ஒருவர் சிரமப்பட்டு நுழைய இடைவெளி இருந்தது. அங்கே சுவரில் ஒரு கதவும் இருந்தது. தொண்டர் அந்தக் கதவைத் திறந்து சூரியாவை உள்ளே பிடித்துத் தள்ளிவிட்டு கதவைச் சாத்திக்கொண்டார். சூரியா ஒரு நிமிஷம் இருட்டில் தடுமாறினான். அடுத்த நிமிஷம் ஒரு மிருதுவான பெண்ணின் கரம் அவனுடைய கையைப் பற்றியது. தாரிணியின் குரல், "என்னுடன் வாருங்கள்" என்று அவனை அழைத்தது. தாரிணியின் கையைப் பிடித்துக் கொண்டு இருளில் நடந்து சென்ற போது சூரியாவுக்குப் பழைய காலத்து இராஜமாளிகைக்குள்ளே இரகசிய குகை வழியாகப் பிரவேசிப்பது போல் உணர்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குள் அவன் மனம் அதிசயமான ஆகாசக் கோட்டைகளை எல்லாம் நிர்மாணித்தது.

மிக மங்கலான வெளிச்சமுள்ள ஒரு பழைய காலத்து மண்டபத்துக்குள்ளே சூரியா வந்து சேர்ந்தான். அந்த மண்டபத்தின் கல் தூண்கள் பழமையைக் குறிப்பிட்டன. மேல் தளம் மிகவும் தாழ்வாக, ஆள் நின்றால் மேலே ஒரு அடிதான் பாக்கியிருக்கும்படி அமைந்திருந்தது. ஆனால் மண்டபம் விஸ்தாரமாக இருந்தது. நாதிர்ஷா, ஆமத்ஷா முதலிய கொடிய கொள்ளைக்காரர்களுக்கு டில்லி அடிக்கடி இரையாகி வந்த காலங்களில் வெள்ளி வீதியின் செல்வம் மிகுந்த வியாபாரிகள் சிலர் இந்த மண்டபத்தில் தங்களுடைய விலை உயர்ந்த பொக்கிஷங்களைப் பத்திரப்படுத்தி வந்தார்கள். அந்த இருண்ட மண்டபம் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து, அதற்கு வழி தெரிந்து கொண்டு உள்ளே பிரவேசிப்பது மிகவும் பிரயாசையான காரியமாதலால், அதில் ஒளித்து வைக்கப்பட்ட பொக்கிஷங்கள் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டன. அந்தப் பழைய இரகசிய மண்டபம் இப்போது புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைமை ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கியது. மண்டபத்தில் அச்சமயம் சுமார் இருபது பேர் இருந்தார்கள். சிலர் தனியே படுத்துப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் கும்பல் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் சுருட்டுப் பிடித்தார்கள்; சிலர் படுத்துத் தூங்கினார்கள். அவர்களுடைய உடைகள் விதவிதமாக இருந்தன. சுவரில் ஒரு ஆணியில் போலீஸ் தலைப்பாகையும் உடைகளும் தொங்குவதைச் சூரியா கவனித்தான். நேற்றுத் தன்னைத் தாரிணி இருக்குமிடம் அழைத்துச் சென்ற ஆசாமி அணிந்திருந்த உடை தான் அது என்பதையும் தெரிந்து கொண்டான்.

தனியே உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த ஒருவரைத் தாரிணி சுட்டிக்காட்டி, "அதோ தலைவர்!" என்றாள். சூரியா அவரிடம் சென்று, "இன்குலாப் ஜிந்தாபாத்!" (புரட்சி வாழ்க) என்று கோஷித்தான். புது ஆசாமி வந்திருப்பதைக் கண்டதும் எல்லாரும் வந்து கும்பலாகத் தலைவரைச் சுற்றி உட்கார்ந்தார்கள். "எங்கெங்கே போயிருந்தீர்? போன இடங்களில் எல்லாம் நாட்டின் நிலைமை எப்படியிருக்கிறது?" என்று சூரியாவைத் தலைவர் கேட்டார். "மத்திய மாகாணத்துக்கும், ஆந்திர தேசத்துக்கும் மதராசுக்கும் போயிருந்தேன். கிட்டத்தட்ட மதுரை வரையில் போனேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் ஜனங்களின் உள்ளம் எரிமலை போலக் குமுறிக் கொண்டிருந்தது. எந்த நிமிஷமும் எரிமலை வெடித்து நெருப்பைக் கக்கத் தொடங்கலாம். அந்த அக்கினிப் பிரவாகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி எரிந்து பொசுங்கி சாம்பலாகப் போகப் போகிறது." "உம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரமென்ன? எதைக் கொண்டு சொல்லுகிறீர்?" "சென்னையில் பென்ஷன் வாங்கும் மாஜி சப் ஜட்ஜ் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஹிட்லர் ஜயித்து இந்தியாவுக்குள் பிரவேசிக்கப் போகும் தினத்தை நிர்ணயிக்க ஜோசிய சாஸ்திரத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறார். தேவபட்டணத்தில் திவான் பகதூர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நெடுங்காலம் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்திருந்தவர். 'ஜப்பான் காரன் வந்தால்தான் இந்தியாவுக்குக் கதிமோட்சம்' என்றார். எங்கெங்கே போனாலும் சாதாரண ஜனங்கள் 'இங்கிலீஷ்காரன் யுத்தத்தில் கட்டாயம் தோற்பான்; இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி ஒழிந்து போகும்' என்ற ஆசையுடன் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்."

"ஆசையும் நம்பிக்கையும் இருந்து என்ன பிரயோஜனம்? பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிப்பதற்கும் சுயராஜ்யம் அமைப்பதற்கும் ஜனங்கள் எந்த விதத்தில் உதவி செய்யத் தயாராயிருக்கிறார்கள்? சென்ற வருஷத்தைப் போல இந்த ஆகஸ்டு 9-ந் தேதி தேசமெங்கும் புரட்சி இயக்கம் சுடர் விட்டு ஓங்கும் என்று எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லையே!" "அந்த விஷயம் தான் ஏமாற்றமாயிருக்கிறது ஜெர்மெனியோ, ஜப்பானோ படை யெடுத்து வந்து இந்தியாவுக்கு விடுதலை கிட்டும் என்று பெரும்பாலோர் ஆசைப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். இன்னும் பலர் சுபாஷ் பாபு மலாய் நாட்டிலிருந்து சைன்யம் திரட்டிக் கொண்டு பர்மா வழியாக வரப் போகிறார் என்று எதிர் பார்க்கிறார்கள். சுதந்திரத்துக்காக நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் பெரும்பாலோர் மனதில் படவில்லை. பெயரும் செல்வாக்கும் இல்லாத தொண்டர்கள் சிலர் அங்கங்கே புரட்சிக் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மேல் போலீஸார் பிரயோகிக்கும் பயங்கர முறைகள் பொது ஜனங்களைப் பீதியில் ஆழ்த்துகின்றன. போலீஸ் பயங்கரத்துக்கு ஓர் உதாரணத்தை நானே பார்த்தேன்.." தேவபட்டணத்தில் வக்கீல் ஆத்மநாதய்யர் வீட்டில் ஆண்டு நிறைவுக் கலியாணத்தின் போது நடந்த போலீஸ் அட்டூழியத்தைப்பற்றிச் சூரியா விவரித்துக் கூறினான்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் புரட்சித் தலைவர் சொன்னார்: "மற்ற நாடுகளில் சுதந்திரப் போர் நடத்தியவர்கள் இதைக்காட்டிலும் எத்தனையோ மடங்கு பயங்கரங்களை அனுபவித்திருக்கிறார்கள். நீண்ட அன்னிய ஆட்சியின் பயனாக நம் ஜனங்கள் அடியோடு தீரத்தை இழந்து கோழைகளாகி விட்டார்கள். ஆனாலும் அங்கங்கே ஒரு சிலராவது பிடிவாதமாயிருக்கும் வரையில் நம்பிக்கை உண்டு. மக்களின் மனதிலுள்ள மனக்கசப்பு திடீரென்று ஒரு சமயம் பொங்கி எழாமற் போகாது. குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கும் வரையில் புரட்சித் தீ அணையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சூரியா! உன்னுடைய வருகையைப்பற்றி இந்த ஊர்ப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விசாரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நீ இன்றைக்கே இந்த ஊரை விட்டுப் போய்விடுவது நல்லது. கல்கத்தாவுக்குப் போகிறாயா? அங்கே முக்கிய காரியம் இருக்கிறது?" என்றார் தலைவர். "ஓ! போகிறேன்!" என்றான் சூரியா. ஒருவேளை சீதா பிடிவாதம் பிடித்தால் அவளையும் கல்கத்தாவில் கொண்டுபோய் விடுவதற்குச் சௌகரியமாயிருக்கும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். கல்கத்தாவில் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றித் தலைவர் அவனுக்கு விவரமாகக் கூறினார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பதினைந்தாம் அத்தியாயம்

"இன்னொருவர் இரகசியம்"

மௌல்வி சாகிப் உட்கார்ந்து குரான் படித்துக் கொண்டிருந்த அறையின் ஒரு மூலையில் மரத்தினாலான குறுகிய மச்சுப் படிகள் அமைந்திருந்தன. சூரியாவும் தாரிணியும் இருண்ட மண்டபத்திலிருந்து அந்த அறைக்குள் வந்து மச்சுப்படி ஏறி மேலே சென்றார்கள். மாடி அறையில் கிடந்த இரண்டு பழைய பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். "கல்கத்தாவுக்கு எப்போது கிளம்புவதாக உத்தேசம்?" என்று தாரிணி கேட்டாள். "இன்றைக்கே புறப்பட்டாலும் புறப்படலாம். போவதற்கு முன்னால் சீதாவின் விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். நீங்கள் டில்லியிலேயே இருக்கப் போகிறீர்களா?" என்று சூரியா வினவினான். "இல்லை; நான் பம்பாய் போகப் போகிறேன். பம்பாய் மாகாணத்தில் ஸதாரா ஜில்லாவில் ஆங்கில ஆட்சியின் அடிச்சுவடு கூட இல்லாமல் துடைத்து விட்டார்களாம். ஜனங்களின் குடியரசு சர்க்கார் நடைபெறுகிறதாம். இங்கிலீஷ் சர்க்காருக்கு ஒரு பைசாக் கூட வரி வசூல் ஆவதில்லையாம். அந்த அதிசயத்தை நேரில் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி எனக்கு உத்தரவு பிறந்திருக்கிறது. ஸதாரா ஜில்லாவில் நடப்பது போல் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு ஜில்லாவிலே நடந்தால் போதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மங்களம் பாடி விடலாம்."

"ஸதாராவுக்கு நீங்கள் தனியாகவா போகப் போகிறீர்கள்?" "தனியாகப் போனால் என்ன? யார் என்னை என்ன செய்து விடுவார்கள்?" "அப்படியா நினைக்கிறீர்கள்? ஒரு சமாசாரத்தைக் கேளுங்கள். நேற்று மைதானத்தில் நாம் பேசி முடித்த பிறகு நீங்கள் முதலிலே போய்விட்டீர்கள் அல்லவா? நீங்கள் போய்ச் சிறிது நேரத்துக்கெல்லாம் மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். உங்களைப் பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்! முதலில் என் காதுகளை நான் நம்பவில்லை.அப்புறம் அவர்கள் உண்மையாகவே அப்படிச் சொல்வதாகத் தெரிந்து கொண்டேன்." "இது என்ன விந்தை? எனக்காக ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவா சொன்னார்கள்? அப்படிப்பட்ட பைத்தியக்காரர்கள் யார்? போலீஸ்காரர்களாய் இருக்க முடியாது. புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவருக்கே ஐயாயிரம் ரூபாய்களுக்கு மேல் அவர்கள் பரிசு தரமாட்டார்களே? ஒருவேளை உங்களைக் 'கோட்டா' செய்வதற்காக அவ்விதம் சொல்லியிருப் பார்களோ!" "அதெல்லாம் இல்லை; அவர்கள் உண்மையாகவே அவ்விதம் சொன்னார்கள் என்பது நிச்சயம். பிற்பாடு கூட என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து அரண்மனை ஆட்கள் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு ராஜாவோ நவாப்போ அவர்களுடைய எஜமானராயிருக்க வேண்டும்."

தாரிணி கலகலவென்று சிரித்துவிட்டு, "நல்ல வேடிக்கை சூரியா! ஒரு யோசனை! நம் இயக்கத்தை நடத்துவதற்குப் பணம் இல்லாமல் திண்டாடுகிறோம். இப்போது ஒரு வழி கிடைத்திருக்கிறதே? அடித்த அடியில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து விடலாமே. நீங்கள் இன்று கல்கத்தா போவதை ஒத்திப் போட்டு விட்டு எப்படியாவது அந்தப் பைத்தியக்காரர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். என்னை அவர்களிடம் ஒப்புவித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு விடுங்கள்" என்றாள். "இந்த வழியில் பணம் சேகரித்துப் புரட்சி நடத்திச் சுதந்திரம் பெறுவதைக் காட்டிலும் இந்தியா அடிமை நாடாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!" என்றான் சூரியா. "எதனாலே அவ்வாறு சொல்கிறீர்கள்? கிடைக்கிற பணத்தை வேண்டாம் என்று சொல்லுவானேன்? அப்படியே அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னைப் பிடித்துக்கொண்டு போனால் என்ன செய்து விடுவார்கள்? நான் என்ன சிறு குழந்தையா? அல்லது என்னைக் கடித்துத் தின்று விடுவார்களா?" "அப்படிக் கூடச் செய்வார்கள்தான்! ஏன் செய்ய மாட்டார்கள்? தாரிணி! இந்த உலகத்தில் மனுஷர்கள் என்ற ரூபத்தில் எத்தனை ராட்சஸர்கள் உலாவுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனக்கும் நேற்று இராத்திரி தான் அது துல்லியமாகத் தெரிய வந்தது.

சீதா அந்த ராட்சஸ ராகவனிடம் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாட்டைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது!" "அது என்ன விஷயம்? முன்னாலேயே நான் கேட்காமல் போனேனே? நேற்று இரவு சீதாவின் வீட்டுக்குப் போயிருந்தீர்களா? சீதா என்ன சொன்னாள்? ராகவனைப் பற்றி ரொம்பப் புகார் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிகிறது" என்றாள் தாரிணி. "சீதா சொல்லி நான் தெரிந்து கொள்ளவில்லை. சீதா முதலில் சொன்னதையெல்லாம் நான் நம்பக்கூடவில்லை. மூளை பிசகிப் போய் உளறுகிறாள் என்றே நினைத்தேன். நேரில் என் கண்ணால் பார்த்த பிறகு தான் சீதா உண்மையில் பத்தில் ஒன்று கூடச் சொல்லவில்லை என்று அறிந்து கொண்டேன்." பிறகு சூரியா, சீதாவின் வீட்டுக்குத் தான் போனதிலிருந்து நடந்ததையெல்லாம் விவரமாகச் சொன்னான். கதையைக் கேட்டுக் கொண்டு வந்த தாரிணியின் முகத்தில் கவலையும் துயரமும் குடிகொண்டன. "இதையெல்லாம் நீங்கள் நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான் நம்பவே மாட்டேன். ராகவன் இவ்வளவு மூர்க்கமான மனிதர் என்று நான் நினைக்கவே இல்லை." "யார் தான் நினைத்தார்கள்? இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால், அவர்களுடைய கலியாணத்தை நான் நடத்தி வைத்திருப்பேனா? சீதாவின் தகப்பனாரிடமிருந்து வந்த தந்தியை மறைத்து வைத்துக் கலியாணம் தடைப்படாமல் செய்திருப்பேனா?" "பிறத்தியாருடைய காரியங்களில் தலையிடுவது எவ்வளவு பிசகு என்று இதிலிருந்து தெரிகிறது. பெண்ணின் தகப்பனார் நன்றாக யோசிக்காமல் அவ்விதம் தந்தி அடித்திருப்பாரா? அதில் நீங்கள் தலையிட்டிருக்கக் கூடாது."

"இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? இத்தனை நேரம் சீதா மைதானத்துக்கு வந்திருந்தாலும் வந்திருப்பாள். அவளிடம் நான் என்ன சொல்வது? என்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக்கொண்டு போகட்டுமா?" என்று கேட்டான் சூரியா. "சீதாவின் வாழ்க்கையில் நீங்கள் தலையிட்டு ஒரு தடவை தவறு செய்தது போதாதா? மறுபடியும் அம்மாதிரி செய்ய வேண்டாம். நீங்கள் அவளைக் கல்கத்தாவுக்கு அழைத்துப் போனால் அத்துடன் அவளுடைய வாழ்க்கை முடிந்துவிடும். சீதாவுக்கு ஏதாவது தைரியம் சொல்லி அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு நீங்கள் போங்கள். நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன். இன்று இரவே ராகவனைப் பார்த்துப் பேசுகிறேன்" என்றாள் தாரிணி. "இன்று ராத்திரியே ராகவனை எப்படிப் பார்ப்பீர்கள்?" என்ற சூரியாவின் கேள்வியில் ஆவலும் கவலையும் தொனித்தன. "அவர் போகிற பார்ட்டிக்கே நானும் போக எண்ணியிருக்கிறேன்" என்றாள் தாரிணி. "இது என்ன விபரீதம்! உங்கள் பெயரில் டில்லிப் போலீஸாரிடம் ஏற்கெனவே புகார் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். உத்தியோகஸ்தர்களின் பார்ட்டிக்கு எப்படிப் போவீர்கள்?" "என் பெயரில்தானே புகார் இருக்கிறது? ஆனால் அந்தப் பெயர் என்னுடையது என்று ஒருவருக்கும் தெரியாது. இன்றைக்குப் பார்ட்டி கொடுக்கிறவர் வைஸ்ராய் நிர்வாக சபை மெம்பர். அவருடைய மனைவி எனக்கு ரொம்ப சிநேகிதம். இன்றைக்குப் பார்ட்டிக்குப் போய்விட்டு அவர் வீட்டிலேயே இரண்டு நாள் தங்கியிருக்கப் போகிறேன். அவரிடம் கவர்ன்மெண்ட் பாஸ் வாங்கிக் கொண்டு தான் பம்பாய்க்குப் பிரயாணமாவேன்."

"உங்களுடைய சாமர்த்தியத்தை நினைத்தாலே எனக்கு மூர்ச்சை போட்டு விடும்போலிருக்கிறது. நானுந்தான் சிற்சில வேஷங்கள் போட்டுக்கொண்டு சி.ஐ.டி.காரர்களிடமிருந்து தப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் செய்யும் காரியங்கள் ஒரே பிரமிப்பாயிருக்கின்றன." "நாம் ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போது உடனே சென்று சீதாவைக் கவனியுங்கள். சீதாவின் தேக நிலைமையையும் மனோ நிலைமையையும் உத்தேசிக்கையில் அவள் தனியாக மைதானத்துக்கு வருவது பற்றி எனக்குப் பயமாயிருக்கிறது. இப்போது டில்லி நகரில் எங்கே பார்த்தாலும் அன்னிய சோல்ஜர்களும் சுதேசி சிப்பாய்களும் அலைந்தவண்ணம் இருக்கிறார்கள்." "சோல்ஜர்களும் சிப்பாய்களும் மட்டுந்தானா? சுதேச சமஸ்தானக் கழுகுகளும் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. தாரிணி! நீங்களும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்." "என்னை நான் பார்த்துக் கொள்வேன்; கவலை வேண்டாம். சீதாவைப் பற்றித்தான் கவலையாயிருக்கிறது. தயவு செய்து நீங்கள் உடனே போங்கள். சீதாவைச் சந்தித்து எப்படியாவது சமாதானப்படுத்தி இன்று ராத்திரி அவள் வீட்டில் கொண்டு சேருங்கள். ராகவனுடைய குணத்தில் இன்றைய தினமிருந்தே மாறுதல் இருக்கும், அதற்கு நான் ஜவாப்தாரி." "அந்த மூர்க்கன் ராகவனை நீங்கள் பார்த்துப் பேசுவது என்பது எனக்குப் பிடிக்கவேயில்லை அவன் வெறும் தூர்த்தன்!" "எனக்கு மட்டும் ராகவனைப் பார்த்துப் பேசப் பிடிக்கிறதா? சீதாவின் நன்மைக்காக அவ்விதம் செய்யப் போகிறேன்." "தாரிணி! ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்வீர்களா? சீதாவின் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பதின் காரணம் என்ன?" "அவள் புரட்சி வீரர் சூரியாவின் அத்தங்காள் என்னும் காரணம் போதாதா?"

"என்னுடைய அத்தங்காள் என்பதற்காக அப்படிப் பணிவிடை செய்து அவளுடைய உயிரைக் காப்பாற்றத் தோன்றி யிராது. அவளுடைய வசை மொழிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடைய க்ஷேமத்தைக் கருதவும் தோன்றாது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும்." "உங்களுடைய ஊகம் உண்மை தான்! அதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. உங்களுக்குச் சீதாவிடம் இருக்கும் அக்கறையைக் காட்டிலும் எனக்கு அதிகம் இருக்கக் காரணம் உண்டு. ஆனால் தயவு செய்து அந்தக் காரணம் என்னவென்று கேட்க வேண்டாம். அது இன்னொருவருடைய ரகசியம்; அவருடைய சம்மதம் இல்லாமல் நான் அதைச் சொல்லக் கூடாது" என்றாள் தாரிணி. "போனால் போகட்டும் சீதாவிடம் உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருப்பதால் பம்பாய்க்குப் போகும் போது சீதாவின் தகப்பனாரைப்பற்றி ஏதாவது தகவல் உண்டா என்று விசாரியுங்கள். அவருடைய பழைய விலாசம் தருகிறேன். சீதாவின் நிலைமையை அவரிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பொறுப்புக் குறையும்." "சூரியா! ஆச்சரியப்பட வேண்டாம்! சீதாவின் தகப்பனார் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஆனால் அவரால் தற்சமயம் சீதாவுக்கு உதவி செய்ய முடியாது. அவருடைய தற்போதைய நிலைமையைச் சீதா அறிந்தால் சந்தோஷப் படவும் மாட்டாள்." சீதாவின் தகப்பனார் ஏதோ பெரிய கிரிமினல் குற்றம் செய்து நீண்ட கால தண்டனையடைந்து சிறையில் இருக்க வேண்டும் என்று சூரியா நினைத்துக் கொண்டிருந்தான். தாரிணியின் வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக நினைத் தான். ஆனால் சட்டென்று அவனுடைய மனக் கண்ணின் முன்னால் ஒரு முகம் வந்து நின்றது. தாடி வளர்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் மௌல்வியின் முகம் அது. "தாரிணி! கீழே ஒரு மௌல்வி சாகிப் உட்கார்ந்து குரான் வாசித்துக் கொண்டிருக்கிறாரே? அவர் யார்? சொல்ல முடியுமா?" என்று கேட்டான். "சொல்ல முடியும் சூரியா! அந்த மௌல்வி சாகிபுதான் என்னுடைய தகப்பனார்!... தாங்கள் மூர்ச்சையடைந்து விழுவதற்குத் திண்டு மெத்தை கொண்டு வரட்டுமா?" என்றாள் தாரிணி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பதினாறாம் அத்தியாயம்

சீதாபஹரணம்

அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் ஒரே மாதிரி குறுகலாயும் அசுத்தம் நிறைந்துமிருந்த சந்துகள் வழியாகச் சூரியாவை முஸ்லீம் லீக் தொண்டர் அழைத்துச் சென்று சற்று தூரத்தில் ஜும்மா மசூதி தெரியும் இடம் வந்ததும், "அதோ! ஜும்மா மசூதி! இனிப் போய் விடுவீர் அல்லவா?" என்றார். "வந்தனம்! இவ்வளவு தூரம் கூட நீங்கள் வந்திருக்க வேண்டிய தில்லை" என்று சொல்லிவிட்டுச் சூரியா மைதானத்தை நோக்கி நடந்தான். நடக்கும்போதே அவனுடைய கால்கள் தடுமாறின. டில்லி நகரமே அவனைச் சுற்றிச் சுழல்வது போலிருந்தது. தாரிணி ஒரு முஸ்லீம் மௌல்வியைத் தன்னுடைய தகப்பனார் என்று சொன்னது அவ்வளவு தூரம் அவனுக்கு அதிர்ச்சி உண்டு பண்ணி விட்டது. அந்தச் செய்தியினால் அவனுடைய ஆகாசக் கோட்டைகள் பல தகர்ந்து இடிந்து அவன் தலை மீது விழுந்து கொண்டிருந்தன. ஆம்; அந்தச் செய்தி உண்மையானால் அவனுடைய வாழ்க்கையின் போக்கே மாற வேண்டியதுதான். ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்துகொள்ள வேண்டுமானால் தானும் ஒரு முஸ்லீம் ஆக வேண்டும். ஆயிரமாயிரம் வருஷங்களாக நிலைபெற்று உலகத்துக்கெல்லாம் வழி காட்டும் ஜோதியாக விளங்கும் சநாதன ஹிந்து தர்மத்தைத் துறந்துவிட அவன் தயாராயில்லை.

"ஒருவேளை பொய்யாயிருக்குமோ? நமக்குப் போக்குக் காட்டுவதற்காக அப்படிச் சொல்லியிருப்பாளோ?" என்ற எண்ணம் தோன்றியவுடனே, இன்னொரு விதமான சிந்தனைப் போக்கில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஆகா! அந்தப் பெண்ணை எந்த விதத்திலும் நம்புவதற்கில்லை. ஒரு பக்கத்தில் புரட்சிக்காரர்களுக்கு மத்தியில் தீவிர புரட்சிக்காரியாக விளங்கு கிறாள். இன்னொரு பக்கத்தில் பெரிய பெரிய சர்க்கார் உத்தியோகஸ்தர்களுடன் சிநேகம் வைத்துக்கொண் டிருக்கிறாள். ஆங்கில நவீனங்களிலே யுத்த காலத்தில் அழகு வாய்ந்த பெண்கள் ஒற்று வேலை செய்வதைப் பற்றிப் படித்திருக்கிறோ மல்லவா? அவர்கள் எந்தக் கட்சிக்காக ஒற்று வேலை செய்கிறார்கள் என்பதைக் கடைசி வரையில் கண்டுபிடிக்க முடிகிற தேயில்லை. இந்தத் தாரிணியையும் அந்த ரகத்தில் சேர்க்க வேண்டியதுதான். "என்னைப் பிடித்துக் கொடுத்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளுங்கள்!" என்று எவ்வளவு சர்வ சகஜமாகக் கூறினாள். வைஸ்ராய் நிர்வாக சபை அங்கத் தினர்களுடன் சாதாரணமாகப் பழகக்கூடியவள் தன்னைப் போன்ற ஏழை வாலிபனிடம் அன்பு கொண்டிருப்பதாகச் சொல்வதை எப்படி நம்புவது? சௌந்தரராகவனிடம் அவளுக்கிருக்கும் செல்வாக்கைப் பற்றி நினைத்தாலும் பலவித சந்தேகங்களுக்கு இடம் ஏற்படுகிறது. சீதா விஷயத்தில் இவளுடைய உண்மையான மனப்பாங்கு தான் என்ன? சீதாவின் க்ஷேமத்தில் அவள் அக்கறை கொண்டிருப்பதாகச் சொன்னதெல்லாம் ஏதோ ஒரு அந்தரங்க நோக்கத்துடன் இருக்குமோ? அப்படியானால் அந்த நோக்கம் என்ன?

அந்தப் பேதைப் பெண் சீதாவை இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஏறக்குறைய பைத்தியமாக அடித்து விட்டார்கள்? தாரிணியின் வார்த்தையை நம்பி அந்த அனாதையை கைவிட்டுத் தான் கல்கத்தாவுக்குப் போய்விடுவது சரியா? இவ்வித மெல்லாம் யோசனை செய்து கொண்டே ஜும்மா மசூதியைத் தாண்டி அப்பால் வெள்ளி வீதிக்குள் சூரியா பிரவேசித்தான். டவுன் ஹாலை அடைந்ததும் அங்கே வீதி ஓரத்தில் சீதா தன்னந்தனியாக நிற்பதைக் கண்டான். விரைந்து அவளிடம் சென்று, "சீதா! நீ இங்கே வந்து ரொம்ப நேரமாகி விட்டதா?" என்றான். "கால் மணி நேரந்தான் ஆயிற்று; ஆனாலும் சாலையில் போகிறவர்கள் என்னை உற்று உற்றுப் பார்த்துவிட்டுப் போவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இன்னும் ஐந்து நிமிஷத்துக்குள் நீ வராவிட்டால் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுவது என்று எண்ணி கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீ வந்து விட்டாய்!" என்று சொன்னாள் சீதா. சூரியாவின் மனதில் அப்போது, ஐந்து நிமிஷம் கழித்து 'வராமற் போனோமே!' என்று தோன்றியது. அப்படித் தாமதித்திருந்தால் சீதா திரும்பிப் போயிருப்பாள். தனக்குப் பொறுப்பு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும். மறுகணம் சூரியாவுக்குத் தன்னுடைய சுயநல எண்ணம் வெட்கத்தை அளித்தது. அனாதை சீதாவுக்கு யாருமே சிநேகம் இல்லை; அனுதாபத்துடன் அவளுக்கு உதவி செய்வாரும் கிடையாது. நாமும் இப்படி அவளைக் கைவிட எண்ணினால்?...

இருவரும் டவுன் ஹாலுக்குப் பின்புறமுள்ள சாலையின் வழியாகக் காந்தி மைதானத்தை நோக்கி நடந்தார்கள். முதல் நாள் தாரிணியுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அதே மரத்தடிக்குச் சூரியா சீதாவை அழைத்துச் சென்றான். வழியில் அவர்கள் ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில் நடக்கும் போது சூரியாவின் மனம் சீதாவின் விஷயத்தில் தன்னுடைய கடமை என்ன என்பதைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது. மரத்தடியில் சென்று உட்கார்ந்ததும் சீதா அக்கம் பக்கம் பார்த்து விட்டு, "அம்மாஞ்சி! நீ உடனே இந்த ஊரை விட்டுப் போய்விடு! உன்னைப் போலீஸார் பிடிப்பதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டெலிபோனில் உன் மாதிரி பேசி என்னிடம் விஷயம் தெரிந்து கொள்ள முயன்றவர்கள் போலீஸார் தான். இதை எப்படியாவது உன்னிடம் சொல்லி விட்டுப் போகத்தான் நான் முக்கியமாக இங்கே வந்தேன். டெலிபோனில் சொல்வதற்கும் பயமாயிருந்தது. நடுவில் யாராவது டெலிபோனில் பேச்சை ஒட்டுக் கேட்டாலும் கேட்கக் கூடுமல்லவா? இன்றைக்கு ராத்திரியே புறப்பட்டுப் போய்விடு, சூரியா!" என்று படபடவென்று பேசினாள் .

"அத்தங்கா! என்னைப் பற்றி உனக்கு ஏன் இவ்வளவு கவலை? போலீஸார் என்னைப் பிடித்துவிட்டால் தான் என்ன? எந்த நிமிஷமும் கைதியாகிச் சிறைக்குப் போவதற்கு நான் தயாராகத் தான் இருக்கிறேன். உன்னுடைய விஷயத்தைப் பற்றிப் பேசு சீதா! நேற்றிரவு நான் வாசலில் போவதாகப் போக்குக் காட்டி விட்டுத் தோட்டத்திற்குத் திரும்பி வந்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னை ராகவன் கை நீட்டி அடித்ததைப் பார்த்தபோது எனக்கு இரத்தம் கொதித்தது. கைத்துப்பாக்கியால் சுட்டுவிடலாம் என்று கூட எண்ணினேன். நீ உன் அகத்துக்காரர் மீது புகார் சொன்னபோது எனக்கு அவ்வளவு நம்பிக்கை உண்டாகவில்லை. ஸ்திரீகளுடைய சுபாவமே புகார் சொல்வதுதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் ராகவன் உன்னை நடத்திய விதத்தைப் பார்த்த பிறகு சந்தேகமில்லாமல் போய் விட்டது. இப்பேர்ப்பட்ட ராட்சதன் உனக்குப் புருஷனாக வாய்த்தானே, நான் அதற்குக் காரணமாயிருந்தேனே என்று எண்ணி எண்ணி நேற்று இரவெல்லாம் நான் தூங்கவில்லை. இப்படிப்பட்ட புருஷனை விட்டு விட்டு நீ ஓடிப் போக எண்ணினால் நான் உன் பேரில் குற்றம் சொல்லமாட்டேன். நானே உன்னை அழைத்துப் போகத் தயாராயிருக்கிறேன். என்னுடன் நீயும் வா! அமரநாத்தின் வீட்டில் உன்னை ஒப்புவித்து விட்டுப் பிறகு நான் என் காரியத்தைப் பார்க்கிறேன். அமரநாத்தும் அவன் மனைவி சித்ராவும் எனக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் உன்னை வைத்துக் காப்பாற்றுவார்கள்...."

இவ்வளவு நேரம் அரைமனதாகக் கேட்டுக் கொண்டிருந்த சீதா இப்போது குறுக்கிட்டு, "சூரியா! அந்த யோசனை யெல்லாம் இனி வேண்டாம். நான் என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்!" என்று சொன்னாள். "அத்தங்கா! அந்த மாதிரி முடிவு செய்ய வேண்டாம். நீ எதற்காக உயிரை விடவேண்டும்? ராகவனைப் போன்ற ஈவிரக்கமில்லாத கிராதக னுக்காகவா? என்னுடைய உடம்பில் மூச்சு உள்ள வரையில் உன்னை நான் சம்ரக்ஷிப்பேன். இந்த உலகமெல்லாம் உனக்கு விரோதமாயிருந் தாலும் நான் உன்னுடைய கட்சியில் இருப்பேன். ஏதாவது கெட்ட பெயர் வருகிறதாயிருந்தால் அந்தக் கெட்ட பெயரை நான் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன். உயிரை விடுகிற எண்ணத்தை மட்டும் நீ விட்டு விட வேண்டும்!" என்று சூரியா உணர்ச்சி பொங்கக் கூறினான். "சூரியா! உயிரை விடுவது பற்றி யார் பேசினார்கள்? உயிரை விடும் உத்தேசம், என் அகத்துக்காரரை விட்டுப் போகும் உத்தேசம் இரண்டையும் நான் கைவிட்டு விட்டேன். அவருடைய மனம் போல் நடந்து அவருடைய திருப்தியைச் சம்பாதித்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டேன். உனக்கு ஒருவேளை வியப்பாயிருக்கும். நேற்று இராத்திரி சம்பவத்துக்குப் பிறகு இத்தகைய தீர்மானம் நான் எப்படிச் செய்தேன் என்று ஆச்சரியப்படுவாய். ஒருவேளை நம்பக்கூட மாட்டாய், ஆனாலும் நான் சொல்வது உண்மை. இன்றைக்கு மத்தியானம் ஒரு பத்திரிகையில் கஸ்தூரிபாய் காந்தியின் சரித்திரத்தை வாசித்தேன். அதுதான் என் மனதை மாற்றி விட்டது. கஸ்தூரிபாய் காந்தி எப்படி யெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறாள் தெரியுமா? எழுபதாவது வயதில் ஜெயிலுக்குப் போயிருக்கிறாள்! அவள் அல்லவா உத்தமி; நானும் என் கணவர் இஷ்டப்படி இனிமேல் நடந்து கொள்கிறது என்று தீர்மானித் திருக்கிறேன்."

சூரியாவின் தலையிலிருந்து ஒரு பெரிய பாரம் நீங்கியது போலத் தோன்றியது. சீதாவின் முடிவு அவனுடைய இருதயத்துக்கு உகந்ததாயிருந்தது. ஆனால் அவனுடைய அறிவு அந்த முடிவை ஆட்சேபித்தது. சீதாவைப் பார்த்து அவன் கூறியதாவது; "ஸ்திரீகளின் மனதைக் கண்டுபிடிக்கவே முடியாது என்கிறார்களே, அது வாஸ்தவமாகத்தானிருக்கிறது. பெண்களின் சஞ்சலப் புத்தியைப் பற்றிப் பெரியோர்கள் சொல்லியிருப்பதிலும் தவறில்லை. இரண்டுக்கும் நீயே உதாரண மாயிருக்கிறாய். நேற்று இரவு எப்படிப் பேசினாய்? இன்றைக்கு எப்படிப் பேசுகிறாய்? புருஷன் என்ன கொடுமை செய்தாலும் மனைவி பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கட்சியை நான் ஒப்புக்கொள்ள முடியாது. அதெல்லாம் பழைய காலம்; பெண்களை அடிமைப்படுத்தப் புருஷர்கள் எழுதி வைத்த சாஸ்திரங்கள் சொல்லும் கடமை. 'ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம்' என்பது இந்தக் காலத்துத் தர்மம். கஸ்தூரிபாய் காந்தியைப் பற்றிக் கூறுகிறாயே? கஸ்தூரிபாயின் கணவர் உலகம் போற்றும் உத்தமர். மகாத்மா காந்தியோடு மற்றவர்களை இணை சொல்ல முடியுமா?"

"சூரியா! காந்திஜியின் இஷ்டத்தைப்போல் கஸ்தூரிபாய் நடந்து கொள்ள ஆரம்பித்தபோது அவர் மகாத்மா ஆகியிருந்தாரா? இல்லையே? ரொம்ப சாதாரண மனிதராகத் தானே இருந்தார்? அப்போது முதல் கஸ்தூரிபாய் கணவரைத் தெய்வம் என்று நினைத்து நடந்தபடியால் தான் காந்திஜி மகாத்மா ஆனார். பெண்களின் சுதந்திரத்தைப் பற்றியும் நான் யோசித்துப் பார்த்தேன். சூரியா! எனக்கு இவர் எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்துத் தான் இருந்தார்! நான் எங்கே போனாலும் ஏன் போனாய் என்று கேட்பதில்லை. யாரோடு பேசினாலும் ஏன் பேசினாய் என்று கேட்பதில்லை. நான் தான் அவரை அப்படியெல்லாம் கேட்டு அவருடைய வாழ்க்கையை நாசமாக்கினேன். எனக்கு அவர் பூரண சுதந்திரம் கொடுத் திருந்தார். நான் அவருக்கு எந்தவிதமான சுதந்திரமும் கொடுக்கவில்லை. யோசிக்க யோசிக்கத் தப்பெல்லாம் என் பேரில் தான் என்று உணர்கிறேன். என்னுடைய மூளை எப்படியோ கெட்டுப் போயிருந்தது. இப்போது நிச்சயமாக முடிவு செய்து விட்டேன். இனிமேல் நீ என் மனதை மாற்ற முயல்வதில் பயனில்லை" என்றாள் சீதா.

சூரியா திகைத்துப் போய்விட்டான் "நான் உன் மனதை மாற்ற முயலவேயில்லை. எப்படியாவது நீ ராகவனுக்கு உகந்த மாதிரி நடந்து அவனைச் சீர்திருத்தினால் சரிதான். நீயும் ராகவனும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினால் அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷம் வேறில்லை. புறப்படு, போகலாம்! இருட்டி விட்டது. உன்னை உன்னுடைய வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு என் காரியத்தைப் பார்க்கப் போகிறேன்" என்றான். "நீ என்னுடன் வரவேண்டாம்; ஒரு டாக்ஸி பிடித்து என்னை அதில் ஏற்றிவிட்டால் போதும். இல்லாவிடில் நானே பிடித்துக் கொள்கிறேன்" என்று சீதா சொன்னாள். "அது மாத்திரம் முடியாது, சீதா! என்னுடைய கடமையை நான் செய்தே தீருவேன். இப்போதெல்லாம் டில்லியில் எங்கே பார்த்தாலும் அபாயம் அதிகமாகி வருகிறது. ஸ்திரீகள் தனியாகப் போவது உசிதமல்ல அதிலும் இருட்டிய பிறகு போகவே கூடாது." "எனக்கு என்ன அபாயம் வந்துவிடும், சூரியா! நீ எதற்காக என்னைப் பற்றி வீணில் பயப்படுகிறாய்?"

"உனக்குத் தெரியாது, நேற்றுச் சாயங்காலம் தாரிணியும் நானும் இதே மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண் டிருந்தோம்.." "தாரிணியோடு இந்த இடத்திலேயே பேசிக் கொண்டிருந்தாயா? என்னிடம் சொல்லவே இல்லையே?" என்று கேட்ட சீதாவின் குரலில் இத்தனை நேரம் இல்லாத ஈருஷை தொனித்தது."உன்னிடம் சொல்லச் சந்தர்ப்பம் ஏற்படாதபடியால் சொல்லவில்லை; அதனால் என்ன?""அதனால் என்ன? ஒன்றுமில்லை; நீயும் தாரிணியும் எதைப் பற்றிப் பேசிக் கொண்டி ருந்தீர்கள்? இந்த மரத்தின் அடிக்கு எதற்காக வந்தீர்கள்?" "தனியாகப் பேச வேண்டியிருந்தது; அதனால்தான் வந்தோம் இன்றைக்கு நாம் இருவரும் வரவில்லையா?" "தனியாக நீங்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்டேன்." "பல விஷயங்களைப் பற்றியும் பேசினோம். முக்கியமாக, புரட்சி இயக்கத்தை மேலே நடத்துவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், உன்னைப் பற்றியும் பேசினோம்." "என்னைப் பற்றி என்ன பேசினீர்கள்? தாரிணியுடன் நீ என்னைப் பற்றிப் பேசுவதற்கு அவசியம் என்ன?" என்று சீதா கேட்டாள். "உன்னுடைய உடல்நிலையும் உள்ளத்தின் நிலையும் சரியாயில்லாதது பற்றிப் பேசினோம். உனக்கு எப்படி உதவி செய்வது என்று யோசித்தோம்."

"எனக்கு ஒரு உதவியும் தேவையில்லை. என்னமோ சொல்ல வந்தாயே அதைச் சொல்! நீயும் தாரிணியும் இங்கே பேசிக் கொண்டிருந்தீர்கள் அப்புறம்?" "தாரிணி போன பிறகு நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு மூன்று ஆசாமிகள் வந்தார்கள். வந்து லோகா பிராமமாகக் கொஞ்ச நேரம் பேசினார்கள். பிறகு தங்கள் நோக்கத்தை வெளியிட்டார்கள். அதாவது தாரிணியை அவர்கள் கைப்பற்றிக் கொண்டு போவதற்கு நான் உதவி செய்தால் எனக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்! நன்றாயிருக்கிறதல்லவா?" "இது என்ன அநியாயம்? அப்படிப்பட்ட மனிதர்கள் யாராயிருக்கும்?" என்றாள் சீதா. "ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து ஆட்கள் என்று தோன்றியது. இந்த 1943-ஆம் வருஷத்தில் வைஸ்ராய் வேவலின் ஆட்சியின் கீழ் டில்லி நிலைமை இப்படி இருக்கிறது. இருட்டிலே உன்னைத் தனியாக அனுப்ப எப்படி எனக்கு மனம் வரும்?" "சூரியா! என் விஷயத்தில் அந்த மாதிரிக் கவலை உனக்கு வேண்டாம். தாரிணியைப் போன்ற அழகிக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னால், எனக்கும் அப்படிச் சொல்வார்களா? என் மூஞ்சி இருக்கிற லட்சணத்துக்கு என்னை ஏலம் போட்டாலும் ஒரு லட்சம் பைசாக்கூட யாரும் கொடுக்க மாட்டார்கள். என் அகத்துக்காரர் தாரிணியை வேண்டாம் என்று சொல்லி விட்டு என்னை இஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டாரே, அதை நினைத்தால் அவருக்கு எவ்வளவோ நான் நன்றியோடிருக்க வேண்டும்."

"அப்படி நீயிருப்பதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்று உன்னை உன் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன். அது என்னுடைய கடமை இல்லாவிட்டால் என் மனது அடித்துக் கொண்டேயிருக்கும்." "சூரியா! உன்னை வரவேண்டாம் என்று நான் சொல்லுவது உனக்காகத் தான். எங்கள் வீட்டுக்கருகில் போலீஸார் வட்டமிட்டுக் கொண்டிருக் கிறார்கள். நீ அவ்விடம் வந்தால் உடனே உன்னை அரெஸ்டு செய்து விடுவது என்று காத்திருக்கிறார்கள்..." "அரெஸ்டைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை என்றுதான் முன்னமே சொன்னேனே?" "உனக்குக் கவலையில்லை என்பது சரிதான். நீ எப்போது கைதியாவோம், ஜெயிலுக்குப் போய் நிம்மதியாயிருப்போம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். ஆனால் என் அகத்துக்காரர் சர்க்கார் உத்தியோகஸ்தர் என்பதை நீ கவனித்தாயா? எங்களுடைய வீட்டில் உன்னைக் கைது செய்யும்படி நேர்ந்தால் அவருடைய நிலைமை என்ன ஆகும்? அவருடைய உத்தியோகத்துக்கு ஆபத்து வராதா?" சூரியா ஒரு நிமிஷம் திகைத்து ஸ்தம்பித்துப்போய் விட்டான். பிறகு "மன்னிக்க வேண்டும், சீதா! அந்த விஷயத்தை நான் எண்ணிப் பார்க்கவேயில்லை. போகட்டும்; நான் உன் வீடு வரையில் வரவில்லை. வீட்டுக்குக் கொஞ்ச தூரம் வரையில் வருகிறேன். அப்புறம் நீ தனியே போய்விடு இவ்வளவாவது செய்தால் தான் என் மனம் நிம்மதியடையும்" என்றான் சூரியா. "நல்லது; அப்படியே செய் உன் மனது நிம்மதி அடையட்டும்" என்று சீதா சம்மதித்தாள்.

இருவரும் அந்த மரத்தடியிலிருந்து புறப்பட்டார்கள். மைதானத்திலிருந்து வெள்ளி வீதிக்குப் போகும் சாலை ஜன நடமாட்டம் இல்லாமலிருந்தது. அந்தச் சாலையில் ஓரிடத்தில் ஒரு பெரிய மோட்டார் நின்று கொண்டிருந்தது. அதனுடைய பின்புறத்திலிருந்த 1111 என்னும் நம்பர் சூர்யாவின் மனதில் பதிந்தது. வண்டிக்குள் இரண்டு பேர் இருந்தார்கள். வண்டிக்கு வெளியில் சாலை ஓரத்து வேலிக்கருகில் நின்று இருவர் சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். வண்டியைத் தாண்டிச் சென்ற போது சூரியாவின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. ஆனால் அதைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் அதுவல்ல என்பதை உணர்ந்தான். பின்னர் கொஞ்சம் வேகமாகவே நடந்தான். சூரியாவும் சீதாவும் வெள்ளி வீதியை அடைந்து மணிக்கூண்டுக்கு அருகில் ஒரு டாக்ஸியைப் பிடித்தார்கள். அதில் ஏறி உட்கார்ந்ததும், வண்டி புதுடில்லியை நோக்கிப் போயிற்று. அவர்கள் ஏறிய டாக்ஸியைப் பின்னால் ஒரு மோட்டார் வண்டி தொடர்ந்து வருகிறது என்று சூரியா சந்தேகித்தான். அதை நிச்சயம் செய்துகொள்ள முடியவில்லை! புது டில்லிச் சாலையில் மோட்டார் வண்டிகள் முன்னும் பின்னும் போகாமலா இருக்கும்? வண்டி வேகமாய்ச் சென்றது; ஜந்தர் மந்தர் என்னும் வான சாஸ்திர ஆராய்ச்சிக் கூடத்தைக் கடந்ததும் சீதா, "இங்கேயே வண்டியை நிறுத்திவிடலாம். எங்களுடைய வீடு இன்னும் கொஞ்ச தூரந்தான் இருக்கிறது" என்றாள்.

"சரி என்று சொல்லிச் சூரியா வண்டியை நிறுத்தச் செய்தான். "நான் இவ்விடம் இறங்கிக் கொள்ளட்டுமா? நீ வீட்டுக்குப் போய் வண்டியை அனுப்பிவிடுகிறாயா?" "வேண்டாம்! டாக்ஸிக் காரில் போய் இறங்கினால் வேலைக்காரர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள். நடந்து போனால் வழக்கம்போல் உலாவப்போய் வருவதாக எண்ணிக் கொள்வார்கள். இங்கிருந்து நடந்தே போய்விடுகிறேன். இரண்டு பர்லாங்கு தூரம் கூட இராது" என்றாள் சீதா. "சரி" என்றான் சூரியா. சீதா வண்டியிலிருந்து இறங்கியதும், "இன்று ராத்திரியே கல்கத்தா போகப் போகிறாயல்லவா? கட்டாயம் போய்விடு, சூரியா!" என்றாள். "போகத்தான் போகிறேன், சீதா?" "நாம் மறுபடியும் எப்போது சந்திக்கிறோமோ என்னமோ? ஆனால் என்னிடம் உனக்குள்ள அபிமானத்தையும் நீ எனக்குச் செய்திருக்கும் உதவியையும் ஒருநாளும் நான் மறக்கமாட்டேன்" என்றாள் சீதா. "நானும் உன்னை ஒருநாளும் மறக்க முடியாது, அத்தங்கா!" சீதா சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். சூரியா வண்டியிலிருந்து இறங்கி அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான். வெண்ணிலா துல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளின் தோட்டங்களிலிருந்து இரவு பூக்கும் மலர்களின் சுகந்தம் வந்துகொண் டிருந்தது. காற்று மிருதுவாக வீசிற்று; பக்கத்து வீடு ஒன்றிலிருந்து, "ஸோஜா ராஜ குமாரி! ஸோஜா!" என்னும் கிராமபோன் கீதம் கேட்டுக் கொண்டிருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் சீதா மேலே மேலே அந்தச் சாலையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தது ஏதோ ஒரு சினிமாப் படத்தில் வரும் காட்சியைப் போல் தோன்றியது. சீதாவின் வருங்கால பாக்கியம் எப்படியோ? அவளுடைய மன மாறுதலைப்பற்றி அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா? அல்லது நம்மிடம் அவ்விதம் சொல்லிவிட்டுச் சென்று, விஷத்தை அருந்திச் சாகப் போகிறாளா? அப்படி நேர்ந்தால் அந்தச் சாவில் நமக்கு பொறுப்பு இல்லாமல் போகுமா?" என்று சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த கார் சூரியாவைத் தாண்டிப் போயிற்று. அதனுடைய நம்பர் 1111 என்பது மறுபடியும் அவனுடைய கண்ணில் பட்டுக் கவனத்தில் பதிந்தது. வேகமாகச் சென்ற அந்த மோட்டார் கார் பட்டென்று பிரேக் போடப்பட்டுச் சீதாவின் அருகில் நின்றது. வண்டியிலிருந்து இரண்டு பேர் குதித்தார்கள். சீதாவைப் பலவந்தமாகக் காருக்குள் தள்ளினார்கள். தாங்களும் ஏறிக்கொண்டார்கள், கதவு சாத்தப்பட்டது. வண்டி 'கிர்' என்ற சத்தத்துடன் திரும்பி சூரியா நின்ற வழியாகவே மறுபடியும் வரத் தொடங்கியது.

இவ்வளவும் சுமார் அரை நிமிஷத்துக்குக் குறைவான நேரத்தில் நடந்துவிட்டது. சூரியாவின் மூளை சற்று நேரம் செயலிழந்து போயிருந்தது. ஆனால் அந்த வண்டி நின்ற இடத்தைத் தாண்டிச் சென்றபோது மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. வண்டிக் குள்ளிருந்து 'அம்மாஞ்சி' என்ற தீனக்குரல் வந்தது போலத் தோன்றியது. சூரியா தன் கால்சட்டைப் பையிலேயே வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்த வண்டியின் டயர்களை நோக்கிச் சுட்டான். டயர் மீது குண்டு படவில்லை. சட்டென்று பக்கத்தில் நின்ற டாக்ஸிக்குள் ஏறிக்கொண்டு, "அதோ அந்த வண்டிக்குப் பின்னால் விடு! உனக்கு வேண்டியதைத் தருகிறேன்! இல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொன்று விடுவேன்!" என்றான். "பெட்ரோல் குறைவாக இருக்கிறது, சாகிப்!" என்றான் வண்டியின் டிரைவர். "அதனால் பரவாயில்லை பெட்ரோல் இருக்கிறவரையில் வண்டியை ஓட்டு சீக்கிரம்!" என்றான் சூரியா. இந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ்காரன் அங்கு வந்து "சுட்டது நீதானா? அந்தத் துப்பாக்கியை இப்படிக் கொடு!" என்று கேட்டான். சூரியா அந்தப் போலீஸ்காரனைப் பிடித்து வேகமாக ஒரு தள்ளுத் தள்ளினான். போலீஸ்காரன் தூரப் போய் விழுந்தான். "ஜாவ்! ஜாவ்!" என்று சூரியா அதட்டினான். டாக்ஸி டிரைவரும் மூளை குழம்பிப் போய் வண்டியை அதி வேகமாக விட்டுச் சென்றான். விழுந்த போலீஸ்காரன் எழுந்து மூன்று தடவை விசில் ஊதினான். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு ஜீப் வண்டி வந்தது. அதில் நாலு போலீஸ்காரர்கள் இருந்தார்கள். இந்தப் போலீஸ்காரனும் அதில் ஏறிக்கொண்டு ஏதோ சொன்னான். ஜீப் வண்டி இரண்டு வண்டிகளைத் தொடர்ந்து அதிவேகமாகச் சென்றது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பதினேழாம் அத்தியாயம்

யமுனை தடுத்தது

சீதாவை ஏற்றிக்கொண்ட மோட்டார் புது டில்லியிலிருந்து ஷாஜஹான் புரத்தை நோக்கி அதிவிரைவாகச் சென்றது. வெள்ளி வீதி வழியாகப் போய், ஜும்மா மசூதியைத் தாண்டி, செங்கோட்டையை வலப் புறத்தில் விட்டு, ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து அப்பால் சென்று, யமுனைப் பாலத்தை நெருங்கிற்று. முதலில் சிறிது நேரம் சீதா திக்பிரமை கொண்டிருந்தாள். பின்னர் சூரியாவின் எச்சரிக்கை நினைவு வந்தது. தன்னைப் பின் தொடர்ந்து சூரியா வருகிறான் என்ற எண்ணத்தினால் சற்றுத் தைரியமாயிருந்தாள். எப்படியும் சூரியாவின் கார் இந்தக் காரைப் பிடித்துவிடும் என்று நம்பியிருந்தாள். ஆனால் யமுனைப் பாலத்தைக் கார் நெருங்கியதும் அவளுடைய மனதில் 'திக்' என்றது. அது மிகவும் குறுகலான பாலம், வண்டிகள் ஒரு வரிசை தான் அதில் போகலாம். இரண்டு பக்கத்திலிருந்தும் வரும் வண்டிகள் ஒரே சமயத்தில் அந்தப் பாலத்தில் போக முடியாது. பாலத்தின் இரு முனைகளிலும் போலீஸ்காரர்கள் நிற்பார்கள். ஒரு பக்கத்துக் கார்களை விடும்போது மற்றொரு முனையில் உள்ள போலீஸ்காரர்கள் அங்கு வரும் கார்களையெல்லாம் தடுத்து நிறுத்தி வைப்பார்கள். பிறகு இந்த முனையிலிருந்து கார்களை விடும்போது அந்த முனையிலிருந்து வரும் வண்டிகளை நிறுத்தி வைப்பார்கள். இது சீதாவுக்கு நினைவு வந்தது. தான் ஏறியுள்ள வண்டியைப் பாலத்தில் போக விட்டு விட்டு, பின்னால் வருகிற சூரியாவின் காரை நிறுத்திவிட்டால் என்ன செய்கிறது என்ற துணுக்கமடைந்தாள். சூரியாவின் வண்டியோ பின்னால் இரண்டு பர்லாங்கு தூரத்தில் வந்து கொண்டிருந்தது.

சீதா பயந்தவண்ணமே ஆயிற்று; அவள் ஏறியிருந்த வண்டி பாலத்தில் சென்றதும், பின்னால் வருகிற வண்டிகள் நிற்க வேண்டும் என்று போலீஸ்காரன் கையைக் காட்டி விட்டான். சீதாவின் வண்டி பாலத்தைக் கடந்தவுடனே அந்த முனையில் காத்திருந்த வண்டிகள் பாலத்தில் விடப்படுவதைச் சீதா கவனித்தாள். உடனே ஒரு பெரும் பீதி சீதாவை பற்றிக் கொண்டது. அவளுடைய வயிற்றிலிருந்து குடல் மேலே கிளம்பி மார்பை அடைத்தது போலவும் மார்பிலிருந்து நெஞ்சு கிளம்பித் தொண்டையை அடைத்தது போலவும் இருந்தது. தலைக்குள்ளே வெடிகுண்டு வெடித்து நாலாபுறமும் சிதறிச் சென்றது போலத் தோன்றியது. தன்னையறியாத ஆக்ரோஷத்துடன் 'வீல்' என்று ஒரு தீர்க்கமான கூச்சல் போட்டுக் கொண்டு சீதா ஓடுகிற காரிலிருந்து குதிக்க முயன்றாள். பக்கத்திலிருந்த மனிதன் அவளுடைய முகத்தைப் பார்த்து ஓங்கி ஒரு அறை கொடுத்தான் உடனே சீதாவின் கூச்சல் நின்றது. காரிலிருந்து குதிக்கும் முயற்சியும் நின்றது. வண்டிக்குள் நிசப்தம் குடிகொண்டது. எதிர்ப்புறமாகப் போய்க்கொண்டிருந்த வண்டிகளிலிருந்து சிலர் இந்த வண்டியிலிருந்து ஏதோ கூச்சல் வந்ததைக் கவனித்துக் காரை உற்றுப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடியாதபடி சீதாவை ஏற்றிக் கொண்டிருந்த மோட்டார் வண்டி அதிவேகமாகச் சென்றது.

அந்த முரட்டு மனிதன் முகத்தில் கொடுத்த அறை சீதாவுக்கு தன் சுய புத்தியைத் திருப்பிக் கொடுத்தது. ஒரு நொடியில் அவள் மனம் அமைதி அடைந்தது. தன்னுடைய நிலைமையைப் பற்றிச் சீதா நிதானமாக யோசிக்கத் தொடங்கினாள். சாயங்காலம் சூரியா தனக்கு எச்சரிக்கை செய்தபோது தான் அலட்சியமாகப் பேசியதை ஞாபகப்படுத்திக் கொண்டாள். இப்போது தனக்கு உண்மையிலேயே ஆபத்து வந்து விட்டது. யார் தன்னைக் கொண்டு போகிறார்கள்? எதற்காகக் கொண்டு போகிறார்கள்? வட இந்தியாவில் அவ்வப்போது நடந்த நர கோரங்களைப் பற்றியும் பெண் விற்பனையைப் பற்றியும் அவள் கேள்விப்பட்டிருந்த வரலாறுகள் அலையலையாக நினைவுக்கு வந்தன. எங்கேயாவது கொண்டுபோய்த் தன்னை விற்று விடுவார்களோ என்று எண்ணிய போது அவளுடைய தேகம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் நடுங்கியது. அல்லது ஒருவேளை யாராவது ஒரு துர்த்தனான மகாராஜா அல்லது நவாபின் அந்தப்புரத்தில் கொண்டு போய்த் தன்னைச் சேர்த்து விடுவார்களோ? இந்த மாதிரிச் சம்பவங்களைப் பற்றியும் அவள் கேட்டிருந்தாள்; கதைகளிலும் பத்திரிக்கைகளிலும் படித்திருந்தாள். தன் விஷயத்தில் அப்படியெல்லாம் நடக்கக் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை ஆனால் இப்போது...? ஒரு விஷயம் நிச்சயம் வெறும் கூச்சல் போடுவதினாலோ பலாத்காரத்தினாலோ இந்த யமகிங்கரர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முடியாது.

தான் படித்திருந்த நாவல்களில் இம்மாதிரியான அபாயத்துக்குள்ளான பெண்கள் என்னென்ன விதமான தந்திரங்களைக் கையாண்டு தப்பினார்கள் என்று யோசித்துப் பார்த்தாள். ஞாபகத்துக்கு வந்தது ஒன்றும் தன் விஷயத்தில் காரியத்துக்கு உதவும் என்றும் தோன்றவில்லை. தெய்வாதீனமான உதவிகளும் சந்தர்ப்பங்களும் கிடைத்ததினாலேயே அவர்கள் தப்பியிருக் கிறார்கள். தனக்கோ, வந்த உதவியையும் தெய்வம் குறுக்கே நின்று தடுத்துவிட்டது! ஆகா! யமுனா நதியே! கண்ணன் விளையாடிய புண்ணிய யமுனா நதியே! உனக்கு நான் என்ன அபசாரம் செய்தேன்? ஏன் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டாய்? நல்ல சமயத்தில் சூரியாவைத் தடுத்து நிறுத்தி விட்டாயே? எத்தகைய பயங்கரமான படுகுழியில் விழப் போகிறேனோ தெரியவில்லையே? ஆனால் அதற்குள்ளாக ஏன் நிராசை அடைய வேண்டும்? சூரியா எப்படியும் தொடர்ந்து வராமல் இருந்து விடுவானா? கால் மணி தாமத மாயிருக்கும் அவ்வளவுதானே? அதற்காகத் தன்னைப் பின் தொடர்வதை விட்டு விடுவானோ? ஒருநாளும் மாட்டான் வந்து கொண்டு தானிருப்பான். ஆகையால் இந்தக் காரை எங்கேயாவது தாமதப்படுத்தினால் நல்லது; அது ஒன்றுதான் வழி எப்படிக் காரைத் தாமதப்படுத்துவது? ஆம்; எங்கேயாவது ஊர் கண்ட இடத்தில் 'தாகமாயிருக்கிறது' என்று சொல்லலாம். அப்புறம் 'பசிக்கிறது' என்று சொல்லலாம். அதற்கு அந்த மனிதர்களோடு நல்லதனமாகப் பேசி முன்னாடியே சிநேகம் செய்து கொள்ள வேண்டும்.

இப்படிச் சீதா தீர்மானித்து எப்படிப் பேச்சுத் தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அந்த மனிதனே பேசினான். "மகளே நீ கூச்சல் போடாமலும் தொந்தரவு கொடுக்காமலும் இருந்தால் உமக்கு ஒரு கஷ்டமும் ஏற்படாது. நன்மைதான் ஏற்படும் உன்னை அடிக்க நேர்ந்ததற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன்!" என்றான். அந்த மனிதன் நடுப்பிராயத்தைக் கடந்த முதிய மனிதன் என்பதைச் சீதா கவனித்திருந்தாள். அவனுடைய குரலும் பேச்சின் பாணியும் உண்மையாகவே அவன் அன்புடனும் அனுதாபத்துடனும் பேசுகிறான் என்று தெரியப்படுத்தின. ஆகையால் சீதா மனதைத் திடப்படுத்திக் கொண்டு "நீங்கள் யார்? என்னை எங்கே அழைத்துக்கொண்டு போகிறீர்கள்?" என்று கேட்டாள். "அப்படிக் கேள், சொல்கிறேன்! உன்னை உன் மாதாஜியிடம் அழைத்துப் போகிறோம்" என்று அந்த மனிதன் சொன்னான். சீதாவுக்கு குபீர் என்று சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. அவளுடைய மாதாஜி இறந்து எத்தனையோ வருஷம் ஆயிற்று. அகண்ட காவேரிக் கரையில் அன்னையின் உடம்பு எரிந்து சாம்பலாகி எவ்வளவோ காலம் ஆயிற்று. அதற்குப் பிறகு சென்ற காலம் ஒரு யுகம் போலத் தோன்றியது. இப்போது இந்த வடக்கத்தியான் "உன்னை உன் தாயாரிடம் அழைத்துப் போகிறேன்" என்கிறான் இது என்ன பைத்தியக் காரத்தனம்?

ஒருவேளை கனவு காண்கிறோமா? அல்லது தனக்கு மரணமே சம்பவித்து விட்டதா! மரணத்துக்குப் பிறகு நடப்பதா இது? இவர்கள்தான் யம தூதர்களா? உண்மையிலேயே மறு உலகத்தில் உள்ள தன் தாயாரிடம் தன்னை அழைத்துச் செல்கிறார்களா....அப்படி இருக்க முடியாது மறு உலகப் பிரயாணம் மோட்டாரில் நடைபெறும் என்று கேட்டதே இல்லையே? இந்த மனிதர்களும் ஆவி வடிவத்தினராகத் தோன்றவில்லையே? சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளச் சீதா தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டாள். கிள்ளிய இடத்தில் வலித்தது தான் உயிரோடும் உடலோடும் இருப்பது நிச்சயம். பின்னர், இந்த மனிதன் இப்படிச் சொல்லுவதின் அர்த்தம் என்ன? அவன் சொன்னதைத் தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் சீதாவுக்கு உதித்தது. "என்னை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?" என்று அந்த மனிதனைப் பார்த்து மறுபடி கேட்டாள். "அதுதான் சொன்னேனே? உன் தாயாரிடம் அழைத்துப் போகிறோம். சகோதரரும் உன்னைப் பார்க்க ஆவலாயிருக் கிறார்!" என்று அம்மனிதன் சொன்னான். சீதாவின் திகைப்பு அதிகமாயிற்று சகோதரன்! தன்னுடைய சகோதரன்! சீதாவுக்கு முன்னால் பிறந்த ஆண் குழந்தையைப் பற்றி அவளுடைய தாயார் சில சமயம் கூறியதுண்டு. ஆனால் பிறந்து மூன்று மாதத்திற்குள் அந்தக் குழந்தை செத்துப் போயிற்று. அதைக் குறித்து அடிக்கடி அவள் தாயார் புலம்புவாள். "அவன் முகத்திலே பால் வடிந்தது, ராஜகளை சொட்டியது சிரித்தால் ரோஜா மொட்டு மலருவதைப் போல இருக்கும்.

அவன் உயிரோடிருந்தால் எனக்கு ஒரு கவலையும் இல்லை. உன் தகப்பனார் இந்த மாதிரி இருப்பதைப் பற்றிக் கவலைப் படவே மாட்டேன். எனக்கும் உனக்கும் கொடுத்து வைக்கவில்லை!" என்று ராஜம்மாள் அடிக்கடி புலம்பியது சீதாவுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் அந்தக் குழந்தை தான் பிறப்பதற்கு இரண்டு வருஷம் முன்பே செத்துப் போயிற்று. வேறு சகோதரன் தனக்குக் கிடையாது. ஆகா! உண்மையிலேயே ஒரு சகோதரன் மட்டும் தனக்கு இருந்திருந்தால்?.... இத்தகைய கஷ்டங்கள் எல்லாம் நேர்ந்திருக்குமா? இந்த மனிதன் தன்னைப்பார்க்க சகோதரன் காத்துக்கொண்டிருப்பதாக உளறுகிறான்! எதற்காக இம்மாதிரி இவன் பொய் சொல்ல வேண்டும்?..... சீதாவின் எண்ணப் போக்கில் திடீரென்று ஒரு தடை ஏற்பட்டது. ஏதோ ஒரு நிழல் போன்ற எண்ணம் ஆச்சரியமான சந்தேகம் சாத்தியமென்று நம்புவதற்கு முடியாத அபிலாஷை... தோன்றியது. ஆனால் ஏன் உண்மையாயிருக்க முடியாது? இந்த மனிதன் எதற்காக இப்படிப்பட்ட பொய்யைக் கற்பனை செய்து சொல்ல வேண்டும்? தன்னுடைய பிறப்பைக் குறித்து ஏதோ ஒரு மர்மம் இருக்க வேண்டும் என்று சில சமயம் தான் பகற்கனவு கண்டது உண்மையாயிருக்குமோ? "கல்யாணத்தை நிறுத்தி விடவும்" என்று தன் தகப்பனார் தந்தி அடித்ததின் காரணத்தை அவர் சொல்லவே இல்லை. அதைப் பற்றித் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களில் ஏதேனும் உண்மை இருக்குமோ? சீச்சீ! என்ன அசட்டுத்தனம்! ஓயாமல் கற்பனைக் கதைகளும் மர்மம் நிறைந்த நாவல்களும் படித்ததின் பலனே இந்தப் பிரமையெல்லாம் என்று பல தடவை அவற்றை ஒதுக்கித் தள்ளியிருக்கிறோமே? மறுபடியும் அந்தப் பிரமைகளுக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்?

ஆனால் இப்போது தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் கற்பனைக் கதைகளையெல்லாம் மிஞ்சியதாயிருக்கிறதே! துப்பறியும் நாவல்களில் வரும் மர்மத்தைக் காட்டிலும் பெரிய மர்மமாயிருக்கிறதே! உண்மையில் இந்த மனிதர்கள், யார்? எதற்காகத் தன்னைக் கொண்டு போகிறார்கள்? போகுமிடத்தில் என்னுடைய கதி என்ன ஆகப் போகிறது!... கொஞ்ச தூரத்தில் தீப வரிசைகள் தெரிந்தன. ஏதோ ஒரு பட்டணத்தை நெருங்குகிறோம் என்பதற்கு அறிகுறியான சந்தடி கேட்டதுடன் மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டு வந்தது. ஒருவேளை சூரியா பின்தொடர்ந்து வருவதாயிருந்தால் அவனுக்கு இந்தக் காரைப் பிடிக்க அவகாசம் ஏற்படுவதற்கு யுக்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மறுபடியும் சீதாவின் மனதில் உதித்தது. "எனக்கு வயிற்றைப் பசிக்கிறது; தாகம் எடுக்கிறது சாப்பிடுவதற்காவது குடிப்பதற்காவது ஏதாவது கிடைக்குமா?" என்று சீதா கேட்டாள். காரைத் தாமதப்படுத்த வேண்டும் என்றுதான். "ஆகட்டும்; பார்க்கலாம்" என்றான் அந்த மனிதன். சீதாவுடன் இதுவரையில் ஹிந்தியில் பேசி வந்தவன் காரின் முன் பகுதியில் இருந்தவர்களிடம் வேறொரு பாஷையில் ஏதோ பேசினான். அந்த பாஷை பஞ்சாபியாகவோ அல்லது மார்வாரியாகவோ இருக்க வேண்டும் சீதாவுக்கு நன்றாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு பட்டணத்தின் குறுகலான வீதிகளின் வழியாகக் கார் சென்றது. கடைத் தெருவில் ஒரு ஹோட்டலுக்கு எதிரில் நின்றது. அந்த ஹோட்டல் வாசலில் பூரிகள், லட்டுகள் மற்றும் தித்திப்புப் பண்டங்கள் விற்பதற்கு வைத்திருந்தன.அந்தப் பண்டங்களின் மீது ஆயிரம் கோடி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அடுப்பில் சட்டுவத்தில் கொதித்துக் கொண்டிருந்த பழைய நெய்யின் மணம் சாக்கடை நாற்றத்தோடு கலந்து வந்து மூக்கைத் தாக்கியது. வாய் அகன்ற பெரியதொரு பித்தளைச் சட்டுவத்தில் கெட்டியான பால் காய்ந்து கொண்டிருந்தது. காரிலிருந்து ஒருவன் இறங்கி அந்தக் கடையண்டை போனான்.

சீதாவுக்கு ஒரு கணம் அங்கே கூச்சல் போட்டு ரகளை செய்யலாமா என்று தோன்றியது. உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். தெருவிலே போய்க் கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்ததும், "இங்கே கூச்சல் போடுவது ஒரு ஆபத்திலிருந்து இன்னொரு ஆபத்தில் தாண்டிக் குதிப்பதாகும்" என்று அவளுக்குத் தோன்றியது. அது மட்டுந்தானா காரணம்? அவளுடைய உள்ளத்தின் அந்தரங்கத்தில், இந்தப் பிரயாணத்தின் முடிவுதான் என்ன? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் குடிகொண்டிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். மனித உள்ளத்தின் விசித்திரங்களைப் பூரணமாகக் கண்டறிந்தவர்கள் யார்? இறங்கிய மனிதன் பூரியும் மிட்டாயும் பொட்டணம் கட்டி எடுத்துக் கொண்டு, ஒரு பெரிய மண் சட்டியில் கொதிக்கின்ற பாலும் வாங்கிக் கொண்டு காரில் வந்து ஏறினான். வண்டியைத் தாமதப்படுத்தலாம் என்கிற சீதாவின் நோக்கம் அவ்வளவாக நிறைவேறவில்லை. ஏனெனில் ஐந்து நிமிஷத்துக்கு மேல் அந்த இடத்தில் வண்டி நிற்கவில்லை. அந்தப் பட்டணத்தைக் கடந்து கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் சாலையின் இருபுறமும் ஒரே பொட்டல் திடலாகக் காட்சியளித்தது. குட்டை குட்டையான கருவேல மரங்களையும் குத்துக் குத்தான புரசஞ் செடிகளையும் தவிர வேறு எதுவும் காணப்படவில்லை. கொஞ்ச தூரம் அந்தச் சாலையில் சென்ற பிறகு கார் மறுபடியும் நின்றது. சீதாவைப் பார்த்து அந்த மனிதன், "பூரியும் மிட்டாயும் சாப்பிடுகிறாயா?" என்று கேட்டான். பூரி மிட்டாயின் பேரில் மொய்த்திருந்த ஈக்களின் ஞாபகம் வரவே சீதா, "வேண்டாம்" என்றாள். "பசிக்கிறது என்று சொன்னாயே?" என்று அந்த மனிதன் கேட்டான். "பூரி மிட்டாய் பிடிக்காது, அரிசிச் சாதம்தான் எனக்குப் பிடிக்கும்" என்று சொன்னாள் சீதா. "ஆகா; இந்தப் பெண்ணின் பேச்சைப் பார்! அரிசிச் சாதம் வேண்டுமாம்!" என்று சொல்லி அந்த மனிதன் சிரித்தான். பிறகு, "கொஞ்சம் பாலாவது சாப்பிடு" என்றான். அதையும் வேண்டாம் என்று சொல்லுவது சந்தேகத்துக்கு இடமாகும் என்று சீதா எண்ணி, "சரி சாப்பிடுகிறேன்" என்றாள். மண் சட்டியிலிருந்து டம்ளரில் பாலை ஊற்றிச் சீதாவிடம் கொடுத்தார்கள். பால் கமகமவென்று ஏலக்காய், குங்குமப்பூ மணம் வீசிக்கொண்டி ருந்தது. சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும் இருந்தது.

சீதா பால் சாப்பிட்டவுடன் கார் மறுபடியும் கிளம்பிற்று. சிறிது நேரத்துக்கெல்லாம் சீதாவுக்கு கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. இது தூக்கம்தானா? அல்லது மயக்கமா? ஒருவேளை பாலில் எதையாவது கலந்து கொடுத்திருப் பார்களா? சீதா உடம்பு சுரமாய்க் கிடந்தபோது ஒவ்வொரு நாள் மருந்து சாப்பிட்ட பிறகு இப்படித்தான் மயக்கமும் தூக்கமும் கலந்து வந்தது என்பது ஞாபகம் வந்தது. "ஐயோ! மயக்க மருந்து எதற்காகக் கொடுத்தார்கள். தன்னைக் கொன்று விடுவார் களோ? கொன்று அந்த வனாந்தரத்தில் எறிந்து விடுவார்களோ? ஐயோ! இந்தக் கதிக்கா ஆளாகப் போகிறேன். என் அருமைக் கண்மணியைப் பார்க்காமல் போகிறேன்? ஆகா! அவருக்கு நன்றாய் வேண்டும்! நான் கொலையுண்டு செத்துப் போனதை அறிந்து அவர் சந்தோஷப்படட்டும்! ஒரு கணம் கூச்சல் போடலாமா என்று சீதா நினைத்தாள். ஆனால் கூச்சல் போட முடியவில்லை. கண்ணைச் சுழற்றியது தலை சுற்றியது; உடம்பு சோர்ந்தது. சாலையில் மறுபடியும் வண்டி நின்றது போலத் தோன்றியது. எதிரில் வந்த ஒரு வண்டி பக்கத்தில் நின்றது ஏதோ தெரியாத பாஷையில் பேசிக் கொண்டார்கள். கிணற்றுக் குள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது. புதிதாக வந்த காரிலிருந்து ஒரு மூதாட்டி இறங்கி வந்து சீதா இருந்த வண்டியில் அவள் பக்கத்தில் ஏறிக் கொண்டது போலிருந்தது. அப்புறம் சீதா அடியோடு நினைவை இழந்து நித்திரையில் ஆழ்ந்தாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பதினெட்டாம் அத்தியாயம்

மண்டை உடைந்தது

வைஸ்ராயின் நிர்வாக சபை அங்கத்தினர் கொடுத்த ஜாஜ்வல்யமான இரவு விருந்து முடிவடைந்து, விருந்தாளிகள் அவரவர்களுடைய கார் கிடைத்துப் புறப்படுவதற்கு அரைமணி நேரம் ஆயிற்று. வழக்கம்போல் ராகவனுடைய காரில் மாஜி திவானும் அவருடைய புத்திரிகளும் ஏறிக் கொண்டார்கள்; வண்டி போய்க் கொண்டிருந்தபோது தாமாவும் பாமாவும், விருந்தில் பார்த்தவை களையும் கேட்டவைகளையும் பற்றிச் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வழக்கம் போல ராகவன் அந்த பேச்சுக்களில் கலந்து கொள்ளாமல் மௌனமாக இருந்தான். மாஜி திவானுடைய பங்களா வாசலில் வண்டி நின்றதும் அவரும் அவருடைய புதல்விகளும் காரிலிருந்து இறங்கினார்கள் ராகவன் இறங்கவில்லை. "மிஸ்டர் ராகவன்! நீங்கள் வரவில்லையா? ஒரு ஆட்டம் போடலாமே?" என்று தாமா கேட்டாள். "இல்லை; இன்றைக்கு வீட்டுக்குச் சீக்கிரமாகப் போக வேண்டும்" என்றான் ராகவன். அப்போது பாமா தாமாவிடம் ஏதோ இரகசியமாகச் சொல்ல இருவரும் கலகலவென்று சிரித்தார்கள். ராகவன் வண்டியிலிருந்து இறங்கி பங்களா முகப்பு வரையில் அவர்களுடன் சென்று, அங்கே நின்றான். "நீங்கள் எதற்காகச் சிரித்தீர்கள் என்று எனக்குத் தெரியும்" என்றான். "பின்னே தெரியாமல் இருக்குமா? விருந்தில் தாரிணியைப் பார்த்துப் பேசியதில் மதி மயங்கிப் போயிருக்கிறீர்கள் என்று சொன்னேன். அது உண்மைதானே?" என்று சொல்லித் தாமா மறுபடியும் சிரித்தாள். "அதில் ஒரு பாதிதான் உண்மை; தாரிணியைப் புரட்சிக்காரி என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்களே? அது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிந்து கொண்டீர்களா?" என்று ராகவன் கேட்டான். "மிஸ்டர் ராகவன்! அது எப்படித் தவறு என்று சொல்கிறீர்கள்?"

"புரட்சிக்காரியாயிருந்தால் இன்றைய விருந்துக்கு வந்திருக்க முடியுமா? விருந்து கொடுத்த நிர்வாக சபை அங்கத்தினரும் அவருடைய மனைவியும் தாரிணியிடம் எவ்வளவு சிநேகமாக நடந்து கொண்டார்கள் பார்க்கவில்லையா? இன்னும் என்ன அத்தாட்சி வேண்டும்?" "ஓ! ராகவன்! சில காரியங்களில் நீங்கள் இன்னும் பச்சைக் குழந்தையாக இருக்கிறீர்கள்! தாரிணி புரட்சிக்காரியாயிருந்தால் அவள் இன்றைய விருந்துக்கு வந்திருக்க முடியாதா? அது அவள் எவ்வளவு சாமர்த்தியசாலி என்பதைக் காட்டுகிறது!" "நம்முடைய சி.ஐ.டி. போலீஸார் எவ்வளவு சாமர்த்தியசாலிகள் என்பதையும் காட்டுகிறது?" என்றான் ராகவன். "அதுவும் உண்மை சி.ஐ.டி. போலீஸார் வேண்டுமென்று தான் அவளை விட்டு வைத்திருக்கிறார்கள். டில்லியில் புரட்சிக் கூட்டம் தங்கும் இரகசிய இடம் ஒன்று இருக்கிறது. அதைக் கண்டுபிடிப் பதற்காக அவளைப் பிடிக்காமல் சும்மா விட்டு வைத்திருக்கிறார்கள்!" என்றாள் தாமா. "அப்படியா? நம்ப முடியாத விஷயமாக இருக்கிறதே!" "நீங்கள் நம்ப முடியாத விஷயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. அது போகட்டும் இன்றைக்கு வீட்டுக்குப் போவதற்கு அவசரம் என்ன?" "இரண்டு நாளாகச் சீதாவுக்கு உடம்பு அதிகமாயிருக்கிறது. அவளுடைய மனோநிலை மேலும் கெட்டிருக்கிறது. அதனால் தான் சீக்கிரம் வீடு போகிறேன். ஒரு மாதம் லீவு எடுத்து அவளை மதராஸில் கொண்டு போய் விட்டு வரலாம் என்று இருக்கிறேன்." "ஓகோ! இப்போது தெரிகிறது; நீங்களும் சீதாவும் மட்டும் போகிறீர் களா? தாரிணியும் கூட வருகிறாளா?" "நீங்கள் சீதாவை மதராஸில் கொண்டு போய் விட்டு விட்டுப் பம்பாய்க்குப் போகப் போகிறீர்களாக்கும்!" "உங்களுக்கு எப்படித் தெரிந்தது? கிட்ட இருந்து கேட்டது போலச் சொல்லுகிறீர்களே?" என்றான் ராகவன் அதிசயத்துடன். "பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும் என்ற பழமொழி தெரியாதா?" என்றாள் பாமா.

இந்தச் சமயத்தில் பங்களாவுக்குள்ளே டெலிபோன் மணி அடித்தது. ஏற்கெனவே பங்களாவுக்குள் சென்றிருந்த ஸ்ரீ ஆதிவரா காச்சாரியார் டெலிபோனை எடுத்து "யார்?" என்று கேட்டு விட்டு, "மிஸ்டர் ராகவனுக்கு டெலிபோன்" என்றார். ராகவன் உள்ளே போய் டெலிபோனை வாங்கிச் செய்தியைக் கேட்டான். அவனுடைய முகத்தில் கவலையும் பயமும் குடிகொண்டன. "என்ன? என்ன?" என்று தாமாவும் பாமாவும் கேட்டார்கள். "சீதா சாயங்காலம் வெளியில் உலாவச் சென்றவள் இன்னும் திரும்பி வரவில்லையாம் வேலைக்காரன் சொல்கிறான்!" "சீக்கிரம் போய்ப் பாருங்கள்; சாயங்காலம் எட்டு மணி சுமாருக்கு ஜந்தர் மந்தர் பக்கத்தில் ஏதோ கலாட்டா என்றும் துப்பாக்கிச் சத்தம் கேட்டது என்றும் விருந்தில் பேசிக் கொண்டார்கள்!" என்றாள் தாமா. "சீதாவுக்கும் துப்பாக்கிச் சத்தத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?" என்று ராகவன் கேட்டான். "இந்தக் காலத்தில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை. எல்லாவற்றுக்கும் உடனே போய்ப் பாருங்கள். ஏதாவது உதவி தேவையாயிருந்தால் எங்களுக்கு டெலிபோன் பண்ணத் தயங்க வேண்டாம்!" என்றாள் பாமா. "ஆமாம் அப்பா! சீக்கிரம் போய்ப் பார்! அவசியமாயிருந்தால் டெலிபோன் பண்ணு!" என்றார் ஆதிவராகாச்சாரியார்.

சௌந்தரராகவன் வீடு போய்ச் சேர்ந்த பிறகு புதிய விவரம் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. சாயங்காலம் வழக்கம் போல் உலாவச் சென்ற அம்மாள் திரும்பி வீட்டுக்கு வரவில்லை என்று மட்டும் வேலைக்காரர்கள் சொன்னார்கள். "யாராவது சிநேகிதர்கள் வீட்டிலிருந்து டெலிபோன் ஏதாவது வந்ததா?" என்று ராகவன் கவலையுடன் கேட்டான். "சிநேகிதர்கள் வீட்டிலிருந்து டெலிபோன் வரவில்லை. ஆனால் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து நாலு தடவை கூப்பிட்டார்கள்" என்று சமையற்காரப் பையன் சொன்னான். ராகவன் சிறிது திடுக்கிட்டு, "போலீஸ் ஸ்டேஷனிலிருந்து என்ன செய்தி வந்தது?" என்று கேட்டான். "ஒன்றும் இல்லை எஜமான் வீட்டுக்கு வந்துவிட்டாரா? என்று கேட்டார்கள் அவ்வளவுதான்!" என்றான் சமையற்காரப் பையன். பிறகு ராகவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு டெலிபோன் செய்தான். அவனுக்குத் தெரிந்த சிநேகிதரான போலீஸ் உத்தியோகஸ்தர் பேசினார். "யார் மிஸ்டர் ராகவனா? உங்களை ஒன்பது மணியிலிருந்து கூப்பிட்டுக் கொண்டி ருக்கிறேன். விருந்துக்குப் போய் இப்போது தான் திரும்பினீர்கள் போலிருக்கிறது! இங்கே உடனே புறப்பட்டு வந்தால் நல்லது!" என்றார்."என்ன விசேஷம்?" என்று ராகவன் கேட்டான் "விசேஷத்தை நேரில் தான் சொல்ல வேண்டும். உடனே புறப்பட்டு வாருங்கள்!" என்று சொன்னார் போலீஸ் அதிகாரி. "இங்கே எனக்கு ஒரு தொந்தரவு நேர்ந்திருக்கிறது. என்னுடைய மனைவி சீதா சாயங்காலம் உலாவச் சென்றவள் இன்னும் திரும்பி வரவில்லை தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை!" "ஓஹோ! அப்படியா சமாசாரம்? நீங்கள் உடனே புறப்பட்டு வரவேண்டியது இன்னும் முக்கியமாகிறது!" என்றார் அதிகாரி.

சௌந்தரராகவன் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் இன்ஸ்பெக்டர் முதலில் சீதாவைப் பற்றி அவனிடமிருந்து தகவல் கேட்டுக்கொண்டார். வேலைக்காரர்கள் சொல்வதை அவரிடம் கூறிவிட்டு "உங்களிடம் ஏதாவது தகவல் கிடைத் திருக்கிறதா?" என்று ராகவன் கேட்டான். "கிடைத்திருக்கிறது ஆனால் உபயோகமான தகவல் இல்லை!" என்றார் இன்ஸ்பெக்டர். பிறகு, ஒரு கைத்துப் பாக்கியை எடுத்து மேஜை மேல் வைத்து, "இது யாருடையது, தெரியுமா?" என்றார். ராகவன், அதைப் பார்த்துத் திடுக்கிட்டான் பிறகு தயக்கத்துடன் "எனக்குத் தெரியாதே!" என்றான். "ராகவன்! என்னிடமே மறைக்கப் பார்க்கிறீரா? அழகாயிருக்கிறது!" என்றார் இன்ஸ்பெக்டர். "இல்லை; ஆமாம்; மன்னிக்க வேண்டும் முதலில் பார்த்த போது தெரியவில்லை; என்னுடையது தான் எப்படிக் கிடைத்தது?" என்று உளறித் தடுமாறினான் ராகவன். "நீங்கள் தகவல் கொடுத்திருந்தீர்கள் அல்லவா? அந்தப் புரட்சிக்கார ஆளிடந்தான் இருந்தது அவனுக்கு எப்படிக் கிடைத்திருக்கும்? யார் கொடுத்திருப்பார்கள்?" "சத்தியமாக எனக்குத் தெரியாது!" என்றான் ராகவன். பிறகு அவனை இன்ஸ்பெக்டர் போலீஸ் ஸ்டேஷன் 'லாக் - அப்' அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கே சூரியா தலையிலும் தோளிலும் கட்டுக்களுடன் உணர்வின்றிப் படுத்திருந்தான். "இவனைக் கைது செய்வது சுலபமான காரியமாயில்லை. நாலு போலீஸ் ஜவான்களைத் திமிறிக்கொண்டு தப்பிக்கப் பார்த்தான். அதன் பயனாக இவன் மண்டையிலும் தோளிலும் நல்ல அடி! மண்டை பிளந்தே விட்டது!" என்றார் இன்ஸ்பெக்டர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
பத்தொன்பதாம் அத்தியாயம்

இது என்ன உலகம்?

மறுநாள் பிற்பகலில் சௌந்தரராகவன் மாஜி திவான் ஆதிவரகாச்சாரியார் வீட்டுக்கு வந்தபோது அவனுடைய முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. பல நாள் கவலைப்பட்டு இராத்தூக்கமின்றிக் கண் விழித்ததினால் ஏற்படக்கூடிய சோர்வு அவனுடைய முகபாவத்திலும் குழி விழுந்த கண்களிலும் பிரதிபலித்தது. "என்ன சார்! உங்களைப் பார்த்தால் பெண்டாட்டியைப் பறி கொடுத்தவன் மாதிரி இருக்கிறதே!" என்று கூறிப் பாமா ராகவனை வரவேற்றாள். சுருக்கென்று கூரிய ஊசியினால் உடம்பிலே எங்கேனும் குத்தினால் முகம் எப்படிச் சுருங்குமோ, அப்படி ராகவனுடைய முகம் சுருங்கிப் பொறுக்க முடியாத வேதனையைக் காட்டியது. "நீங்கள் கூட இப்படி அனுதாபம் இல்லாமல் பேசுவீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. நான் போய் வருகிறேன்!" என்று அழமாட்டாக் குறையாகச் சொல்லிவிட்டு ராகவன் திரும்பிப் போக யத்தனித்தான். அப்பொழுது தாமா எழுந்து வந்து ராகவனுக்கு முன்னால் நின்று மறித்துக்கொண்டு, "அவள் கிடக்கிறாள், ஸார்! பாமாவுக்கு நாக்கிலே விஷம்! எல்லாரையும் விரட்டியடிப்பது தான் அவளுடைய வேலை. அதனால் தான்.." என்று ஆரம்பித்தவள் தயங்கி வாக்கியத்தை நடுவில் நிறுத்திவிட்டு, "நீங்கள் வந்து உட்காருங்கள்! உங்களிடம் எங்களைப் போல் அனுதாபம் உள்ள சிநேகிதர்கள் இந்த டில்லியில் யாரும் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயந்தானே!" என்று சொன்னாள்.

ராகவன் திரும்பிப் போகும் உத்தேசத்தைக் கைவிட்டுச் சோபாவில் உட்கார்ந்தான். "டில்லியில் மட்டும் என்ன? எங்கேயும் எனக்குச் சிநேகிதர்கள் கிடையாது. உத்தியோக சிநேகம் ரயில் சிநேகத்தை விட மோசமானது. நல்ல நிலைமையில் இருக்கும் வரையில் எல்லாரும் பிராண சிநேகிதர்கள் போல நடிப்பார்கள். ஏதாவது கொஞ்சம் கஷ்டம் வந்து விட்டால் எல்லாரும் கையை விரித்து விடுவார்கள். முழுகுகிற கப்பலிலிருந்து எலிகள் ஓடுவது போல ஓடிப்போய் விடுவார்கள். நீங்களும் உங்கள் தகப்பனாரும் அதற்கு விதிவிலக்கு என்றும் நீங்கள் என்னுடைய உண்மையான சிநேகிதர்கள் என்றும் நம்பியிருக்கிறேன். நல்லதோ, கெட்டதோ, உங்கள் தகப்பனாரிடம் சொல்லி யோசனை கேட்டால் மனம் நிம்மதி அடைகிறது, இப்போது அப்பா எங்கே?" என்றான்."அப்பாவின் சிநேகிதர் பாங்கர் கஜான்ஜியாவை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவரும் இன்னும் சிலரும் சேர்ந்து இன்றைக்கு ஒரு புதிய இன்ஷியூ ரன்ஸ் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். அதற்காக அப்பா போயிருக்கிறார். புதிய கம்பெனியில் அப்பாவும் ஒரு டைரக்டர்" என்றாள் தாமா.

"சில பேர்களுக்குத் திடீரென்று யோகம் பிறந்து விடுகிறது. இந்த கஜான்ஜியா ஐந்து வருஷத்துக்கு முன்னால் சாதாரண மனிதராயிருந்தார். இப்போது ஐந்தாறு கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். இத்தனைக்கும் ஆசாமிக்கு இங்கிலீஷில் கையெழுத்துப் போடக் கூடத் தெரியாது. என்னைப் போல் எத்தனையோ பேர் 'எக்னாமிக்ஸ்' படித்துப் பட்டம் பெற்றுவிட்டு வாழ்நாள் எல்லாம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு காலம் கழிக்கிறார்கள். இவ்வளவு லட்சணமான உத்தியோகத் துக்கும், மேலே உள்ள மூடர்கள் எப்போது சீட்டுக் கிழிப்பார்களோ என்று பயந்து நடக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு அவ்விதம் எனக்கு நேர்ந்து விட்டது!" என்று சொன்னான் சௌந்தரராகவன். "என்ன? என்ன?" "சீட்டுக் கிழித்துவிட்டார்களா?" "உத்தியோகம் போய்விட்டதா?" "எதற்காக?" "அக்கிரமமாயிருக்கிறதே!" என்று தாமாவும் பாமாவும் மாற்றி மாற்றிப் பொழிந்தார்கள். "இன்னும் வேலை அடியோடு போய்விடவில்லை. விசாரணை முடியும் வரையில் 'ஸஸ்பெண்டு' செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்ப எடுத்துக்கொண்டாலும் எனக்கு வேலைக்குத் திரும்பிப் போகும் உத்தேசம் இல்லை. வெகு நாளாக வேறு உத்தியோ கத்துக்குச் சிபாரிசு செய்யும்படி அப்பாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு இதுதான் சமயம் அப்பா இந்தச் சமயம் எனக்கு உதவி செய்தேயாக வேண்டும் இல்லாவிட்டால் வேறு வழியில்லை."

"அப்பாவுக்கு அதில் கஷ்டம் ஒன்றுமிராது. கஜான்ஜியாவின் பாங்கிலோ இன்ஷியூரன்ஸ் கம்பெனியிலோ பேஷாக உங்களுக்கு வேலை போட்டுத் தரச் சொல்லுவார். உங்கள் விஷயத்தில் அப்பாவுக்கு ரொம்ப அபிமானமும் சிரத்தையும் உண்டு என்று தான் தெரியுமே? ஆகையால் உத்தியோகத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நடந்ததையெல்லாம் தயவுசெய்து விவரமாய்ச் சொல்லுங்கள். என்ன காரணத்துக்காக உங்களை 'ஸஸ்பெண்டு' செய்தார்களாம்? விசாரணை எதற்காக?" என்று தாமா கேட்டாள். அப்போது பாமா, "இதையெல்லாம் கேட்டு அவரை ஏன் தொந்தரவு செய்கிறாய்? பாவம்! அவர் சம்சாரத்தைப் பறி கொடுத்துவிட்டு அதைப் பற்றிப் பேசிப் புலம்புவதற்காக வந்திருக்கிறார்!" என்றாள். "சீ! நீ சும்மா இரு! அவள் கிடக்கிறாள் நீங்கள் சொல்லுங்கள், சார்!" என்றாள் தாமா. "இன்றைக்கு நான் ஆபீஸுக்குப் போனதும் இலாகாத் தலைவர் கூப்பிட்டு அனுப்பினார். 'சரி, ஏதோ வரப் போகிறது' என்று எண்ணிக்கொண்டு போனேன். அதற்குத் தகுந்தாற்போல் அவரும், 'ராகவன்! உங்களை ஸஸ்பெண்ட் செய்து வைக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. அதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன். காரணம் உங்களுக்கே தெரிந்திருக்க கூடியதுதான்!" என்றார். 'எனக்குக் காரணம் ஒன்றும் தெரியவில்லை. தயவு செய்து தாங்களே சொல்லிவிட்டால் நல்லது' என்றேன். 'அப்படியானால் சொல்கிறேன் புரட்சிக்காரர்களுக்கு அடிக்கடி உம்முடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக உம் பேரில் புகார்' என்றார்.

'அது எப்படி என் பேரில் புகார் ஏற்பட முடியும்? புரட்சிக்காரனைப் பற்றி நான்தானே போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன்?' என்று கேட்டேன். 'மிஸ்டர் ராகவன்! நீர் மிக்க அறிவாளி! என்றார் இலகாத் தலைவர். 'உங்கள் நற்சாட்சிப் பத்திரத்துக்காக மிக்க வந்தனம்!' என்றேன். 'எனக்கு வந்தனம் தேவையில்லை, நீர் மிக்க அறிவாளியாகையால் விசாரணையின்போது இதை ஒரு காரணமாகச் சொல்ல வேண்டாம். அந்தப் புரட்சிக்காரப் பையனைப்பற்றிப் போலீஸார் தகவல் அறிந்து கைது செய்வதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்தச் சமயத்தில் நீர் தகவல் கொடுத்ததினால் என்ன பிரயோசனம்? தப்பித்துக் கொள்வதற்காகக் கடைசி நேரத்தில் தகவல் கொடுத்ததாகவே ஏற்படும்!' என்றார். இதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். முதலில் இன்னது சொல்வதென்று தெரியவில்லை. கார்டினல் உல்ஸி மரணதண்டனைக்கு ஆளானபோது சொன்னது நினைவு வந்தது. 'என்னுடைய அரசருக்கு நான் செய்த சேவை என் ஆண்டவனுக்குச் செய்திருந்தால் இந்தக் கதியை அடைந்திருக்க மாட்டேன்!' என்று உல்ஸி சொன்ன வாக்கியத்தை நானும் சொன்னேன். 'உம்முடைய அரசருக்கு நீர் உண்மையாகச் சேவை செய்யவில்லை என்பதுதான் உம் பேரில் புகார், தெரிகிறதா? சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிலும் புது டில்லி செகரடேரியட்டில் வேலை பார்ப்பவர்கள், ஸீஸருடைய மனைவியைப் போல் சந்தேகத்துக்கு இடங்கொடாதவர்களாக இருக்க வேண்டும். இது யுத்த காலம் என்பது உமக்கு நினைவில் இருக்கிறதல்லவா? யுத்தத்திலும் மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறோம். இதை உத்தேசித்துத் தான் இத்தனை காலமும் இல்லாத வழக்கமாக ஒரு இராணுவ தளபதியை இந்தியாவின் வைஸ்ராய் ஆக்கியிருக்கிறார்கள். தளபதி வேவல் இந்தியாவின் வைஸ்ராயாக வந்ததைக் கொண்டு யுத்த நிலைமையின் நெருக்கடியை நீர் ஊகிக்கலாமே?' என்றார்.

அதற்கு நான், 'ஆம், பேஷாக ஊகிக்கலாம்! இந்த வேவல் எங்கேயாவது எந்த யுத்த களத்திலாவது இருந்தால் கட்டாயம் கோட்டை விட்டுவிடுவார் என்றுதானே அவரைப் பிடித்து வைஸ்ராயாகப் போட்டிருக்கிறார்கள்?' என்றேன். ஆபீஸர் சிரித்துவிட்டு, 'இந்த அபிப்பிராயத்தை நாளைக்கு விசாரணை நடக்கும்போது சொல்லலாம், இப்போது போய்வாரும்!' என்றார். 'என் பேரில் என்ன குற்றம்? என்ன சந்தேகம்? அதைச் சொல்லவில்லையே?' என்று கேட்டேன். 'விசாரணையில் எல்லாம் விவரமாகச் சொல்வார்கள். நான் ஒரு குறிப்பு வேண்டுமானால் கொடுக்கிறேன். கைது செய்யப்பட்டவனிடம் உம்முடைய கைத்துப்பாக்கி இருந்தது சந்தேகத்துக்கு ஒரு காரணம்' என்றார். 'கைத்துப்பாக்கியை அவன் திருடியிருக்கலாம் அல்லவா?' என்று கேட்டேன். 'திருடியிருக் கலாம் ஆனால் அதற்கு ருசு வேண்டும்.சந்தேகத்துக்கு இன்னொரு காரணம், உம்முடைய மனைவி திடீரென்று நேற்று ராத்திரி காணாமற் போனது' என்று ஆபீஸர் சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. 'என் மனைவி காணாமற் போனதற்கும் நாம் பேசும் விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்டேன். அதற்கு ஆபீஸர் சொன்ன பதிலைக் கேட்டதும் என்னுடைய கவலைகள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டேன்; குபீரென்று சிரித்து விட்டேன். அதை நினைத்தால் இப்போது கூட எனக்குச் சிரிப்பு வருகிறது!" என்று சொல்லிவிட்டு ராகவன் முகத்தில் அசடு வழிய, பலவீனமான சிரிப்பு ஒன்று சிரித்தான்.

"அப்படிச் சிரிக்கும்படியாக உங்களுடைய இலாகாத் தலைவர் என்னதான் சொன்னார்? சர்க்கார் உத்தியோகஸ்தர் களிலே அவ்வளவு நகைச்சுவை உடையவர்கள் கூட இருக்கிறார்களா?" என்று பாமா கேட்டாள். "அவர் அப்படி நகைச்சுவை உடையவர் அல்ல; ஹாஸ்ய உணர்ச்சியுடனும் பேசவில்லை. ஆனால் அவர் சொன்னது அவ்வளவு விசித்திர விஷயமாயிருந்த படியால் தான் சிரித்தேன். சீதாவும் ஒரு புரட்சிக்காரியாம்; அவளும் சூரியாவும் சதி செய்து சட்டவிரோதமான பல காரியம் செய்து வந்தார்களாம். இந்தியத் துருப்புகளின் போக்குவரவைப் பற்றி இரகசிய ரேடியோ மூலம் சத்துருத் தேசங்களுக்குத் தகவல் கொடுத்து வந்தார்களாம், நானும் அவர்களுக்கு உடந்தையாம். போலீஸுக்குத் தகவல் சொல்வது போலச் சொல்லி விட்டு, அவர்களுக்கும் எச்சரிக்கை செய்து தப்பித்துக் கொள்ளும்படி செய்து விட்டேனாம். சீதா மட்டும் எங்கேயோ போய்ப் பதுங்கிக் கொண்டிருகிறாளாம் எப்படி இருக்கிறது கதை?" "கதைக்கு என்ன? நன்றாய்த்தானிருக்கிறது ஒரு நாள் திடீரென்று போலீஸார் இந்த வீட்டுக்கு வந்து சோதனை போட்டாலும் போடுவார்கள். சீதா இங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாளோ என்று பார்ப்பதற்கு!" "என்ன மூடத்தனம்! புது டில்லிப் போலீஸார் எதை வேணுமானாலும் நம்பி விடுவார்கள் போலிருக்கிறது." சொல்லுகிறவர்கள் பக்குவமாய்ச் சொன்னால், கேட்பவர்கள் நம்புவதற்கு என்ன? ஏற்கெனவே போலீஸார் வெறும் வாயை மெல்லுகிறவர்கள், அவர்களுக்கு ஒரு பிடி அவலும் கிடைத்து விட்டால்?" "பாமா! மறுபடி ஏதோ மர்மமாகப் பேசுகிறீர்களே? பக்குவமாக யார் என்னத்தைச் சொல்லியிருக்க முடியும்?" என்று ராகவன் கேட்டான்.

"ராகவன்! இது விஷயமாக உங்களுக்கு ஒன்றும் சந்தேகமே உதிக்கவில்லையா? உங்கள் மனைவியையும் அந்த வாலிபனையும் பற்றிப் போலீஸுக்கு யாராவது உளவு சொல்லியிருக்க வேணும் என்று தோன்றவில்லையா? நீங்களும் அவர்களுக்கு உடந்தை என்று கூடச் சொல்லியிருக்க வேணும். இல்லாத வரையில் உங்கள் பேரில் இவ்வளவு சந்தேகப்பட்டு நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். "கடவுளே! இப்படியும் இருக்க முடியுமா? யார் அந்த மாதிரிப் பொய் உளவு கொடுத்திருப்பார்கள்!" "நேற்று மாலை நடந்த டின்னர் பார்ட்டியில் யாரோடு கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தீர்கள்? அவளாயிருக்கலாம் அல்லவா? உங்களுடைய குடும்பத்தின் அந்தரங்க விவகாரங்கள் வேறு யாருக்குத் தெரியும்? வேறு யார் அப்படி நம்பிக்கை ஏற்படும்படி சொல்லியிருக்க முடியும்?" "தாரிணியையா சொல்லுகிறீர்கள்; அழகாயிருக்கிறது? முந்தாநாள் அவளைப் புரட்சிக்காரி என்றீர்கள். இன்றைக்கு அவள் எங்களைப் பற்றி உளவு சொல்லி இருப்பாள் என்கிறீர்கள் இது என்ன வேடிக்கை?" "வேடிக்கை ஒன்றுமில்லை; உங்கள் ஆபீஸர் சொன்னது போல் நீங்கள் அறிவாளிதான். ஆனால் சிற்சில விஷயங்களில் நீங்கள் பச்சைக் குழந்தை போல் உலகமே தெரியாதவராயிருக்கிறீர்கள். நான் முந்தாநாள் சொன்னதற்கும் இன்று சொல்வதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. புரட்சிக்காரர்களுக்கு மத்தியில் தாரிணி புரட்சிக்காரி தான். அப்படி நடித்தால்தானே புரட்சி இயக்கத்தைப் பற்றிய உளவுகளைச் சேகரித்து சர்க்காருக்குச் சொல்ல முடியும்?" "தாரிணியைச் சர்க்காருக்காக ஒற்று வேலை செய்கிறவள் என்றும் பொய்க் குற்றம் சாட்டுகிறவள் என்றுமா சொல்லுகிறீர்கள்? ஐயோ! இது என்ன உலகம்?"

இப்படி ராகவனுடைய வாய் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுடைய மனம், 'தாரிணியைப் பற்றிய உண்மை அப்படி இருந்தாலும் இருக்கலாமோ' என்று எண்ணியது .'இல்லாவிட்டால் அவ்வளவு பெரிய சர்க்கார் பதவியில் உள்ளவர் களிடம் அவளுக்கு எப்படி அத்தனை செல்வாக்கு இருக்க முடியும்? அவர்களுடன் அவ்வளவு சர்வ சுலபமாக எப்படிக் கலந்து பழக முடியும்?' என்னும் ஐயங்கள் உதித்தன. "இது என்ன உலகம்?" என்ற ராகவனுடைய கேள்விக்குப் பதிலாகப் பாமா, "இது மிக மோசமான உலகம். பொய்யும் சூதும் மோசமும் தந்திரமும் நிறைந்த உலகம். இந்த உலகத்தில் உங்களைப் போன்ற சாதுக்கள் சிலரும் இருக்கிறார்கள். போகட்டும்; தங்கள் மனைவியின் விஷயம் என்னதான் ஆயிற்று? அதைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்ததா?" "ஒன்றும் தெரிய வில்லை இதில் ஒரு துயரகரமான தமாஷ் சேர்ந்திருக்கிறது. நேற்று ராத்திரி நான் உங்களிடம் கூடச் சொன்னேனே? இனிமேல் என் வாழ்க்கையையே புதிய முறையில் தொடங்குவது என்றும் சீதாவுடன் மனம்ஒத்த இல்லறம் நடத்துவது என்றும் தீர்மானித்திருந்தேன். அவ்விதம் தீர்மானித்துக்கொண்டு வீட்டுக்குப் போய்ப் பார்த்தால், அவளைக் காணவே காணோம்! இதற்கு என்ன சொல்வது?" என்றான் சௌந்தரராகவன்.

"அற்ப மானிடர்களாகிய நம்முடைய உத்தேசத்துக்கெல்லாம் மேலாக விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா? அந்த விதி ஜயித்து விட்டது!" என்றாள் தாமா. "நான் அப்படி விதியின் மேல் பழியைப் போடமாட்டேன். சாதுவாகிய சௌந்தர ராகவனின் நல்ல உத்தேசத்தை ஒரு பெண்ணின் துர்மதி ஜயித்து விட்டது என்று சொல்வேன்" என்றாள் பாமா. "நீ கொஞ்சம் வாயை மூடிக் கொண்டிரு! தெரிகிறதா?" என்று தாமா அதட்டிவிட்டு, "ஏன் சார்! சீதாவைப் பற்றி ஒன்றுமே தகவல் இல்லை யென்றா சொல்கிறீர்கள்? கைது செய்யப்பட்ட சூரியாவிடமிருந்து விவரம் ஒன்றும் கிடைக்கவில்லையா? போலீஸ் இன்ஸ் பெக்டர் உங்களுக்குத் தெரிந்த சிநேகிதர் ஆயிற்றே?" என்று கேட்டாள். "தெரிந்த சிநேகிதர் தான்! முன்னொரு சமயம் எனக்குப் பெரிய உதவி செய்திருக்கிறார். இப்பொழுதும் அவரையே நம்பிக்கொண்டிருக்கிறேன். இந்த ஊரிலே சூரியாவின் விசாரணை பகிரங்கமாக நடந்தால் என் மானம் போய்விடும், நாகபுரிக்கு அனுப்பிவிடுங்கள் என்று கேட்டதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். என் பேரில் அந்தரங்க விசாரணை நடந்தால் என் பக்கம் பேசுவதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் சீதாவைப் பற்றி ஒன்றும் அவரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சூரியாவின் மண்டையில் பட்ட அடியினால் அவன் இன்னும் நல்ல அறிவு வராமல் கிடக்கிறான்.

மயக்கத்தில் பேசுகிறபோது, 'சீதா! சீதா!' 'ஆபத்து வந்து விட்டது!' 'பிடித்து விட்டார்கள்!' என்று உளறுகிறான். அவன் ஏறியிருந்த டாக்ஸி டிரைவரிடம் என்னை அழைத்துப் போய் என் முன்னிலையில் விசாரித்தார் அவன் கூறிய விவரம் விசித்திரமா யிருக்கிறது. ஷாஜஹானாபாத் வெள்ளி வீதியில் ஒரு வாலிபனும் ஒரு பெண்ணும் வண்டியில் ஏறிக் கொண்டார் களாம். ஜந்தர் மந்தர் சாலைக்கு வந்ததும் அந்தப் பெண் வண்டியிலிருந்து இறங்கி நடந்தாளாம். கொஞ்ச தூரம் போவதற்குள் இன்னொரு கார் வந்து அவள் பக்கத்தில் நின்றதாம். அந்தப் பெண்ணைப் பலவந்தமாக ஏற்றிக் கொண்டு கார் விரைவாகச் சென்றதாம். சூரியா சொன்னதின் பேரில் இந்த டாக்ஸி டிரைவரும் பின்தொடர்ந்து வண்டியை விட்டானாம். ஆனால் யமுனைப் பாலத்தில் அந்த வண்டி போனபிறகு இந்த டாக்ஸியை நிறுத்தி விட்டார்களாம். உடனே போலீஸ் வண்டி வந்து பிடித்துக் கொண்டது என்று சொல்கிறான். அவன் சொல்லும் சில அடையாளங்களிலிருந்து பலவந்தமாகப் பிடித்துக் கொண்டு போகப்பட்டவள் சீதாவாயிருக்கலாம் என்று எண்ண இடம் இருக்கிறது. ஆனால் இந்தப் புது டில்லியில் 1943-ம் வருஷத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்று எண்ணும்போது நம்பிக்கைப்படவில்லை. மேலும் சீதாவை அப்படி யார் எதற்காகப் பிடித்துக்கொண்டு போக வேண்டும்? இதையெல்லாம் நினைக்க நினைக்கத் தலை சுற்றுகிறது!" என்றான் ராகவன்.

"ஆமாம்; முன்னால் போன வண்டியைப் பற்றித் தகவல் கண்டுபிடிக்கப் போலீஸார் முயற்சி எதுவும் செய்யவில்லையா?" என்று பாமா கேட்டாள். "செய்தார்கள் நாலாபுறமும் தந்தி கொடுத்து டெலிபோன் செய்து குறிப்பிட்ட வண்டி வந்தால் நிறுத்தும்படி சொல்லியிருந்தார்கள். டாக்ஸி டிரைவர் முன்னால் சென்ற காரின் நம்பர் கொடுத்திருந்தான். அந்தக் கார் இங்கிருந்து நூறாவது மைலில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அதில் பெண் ஒருவரும் இல்லை என்று தகவல் வந்திருக் கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்று காலையில் என்னை டெலிபோனில் கூப்பிட்டுச் சொன்னார்!" "ஆகவே உங்கள் மனைவி சீதா போனவள் போனவள் தான்! மிஸ்டர் ராகவன்! உங்களுக்கு என் மனமார்ந்த அனுதாபம்!" என்றாள் பாமா. "எனக்கு இவரிடம் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ஊரெல்லாம் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை இவர் அறிந்து கொள்ளாமல் கண்கள் திறந்திருந்தும் குருடராயிருந்தார் அல்லவா? இவருக்கு இது நன்றாய் வேணும்!" என்றாள் தாமா. "எது விஷயத்தில் நான் குருடனாய்ப் போனேன்? ஊரெல்லாம் என்ன பேசிக்கொண்டார்கள்?" என்று கேட்டான் ராகவன். "அதை வேறு விண்டு சொல்ல வேண்டுமா? நீங்கள் சீதாவை இத்தனை நாள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்ததே பிசகு என்று சொன்னார்கள். இப்போது அவளே ஒரேயடியாகத் தொலைந்து போய்விட்டாள்! அதற்காக வருத்தப்படுவானேன்? உண்மையில் சந்தோஷப்பட வேண்டும்!"

தாமா எதைக் குறிப்பிடுகிறாள் என்பதை ராகவன் தெரிந்து கொண்டு, சற்று நேரம் தலை குனிந்து மௌனமாக இருந்தான். "எப்படியோ என் வாழ்க்கை பாழாகிவிட்டது. இத்தனை நாள் ஆபீஸ் வேலை இருந்தது; அதுவும் போய்விட்டது. இனி மேல் வாழ்க்கையில் என்ன இருக்கிறது?" "ஏன் இல்லை! மதராஸில் அழகான சமர்த்துக் குழந்தை இருக்கிறது. குழந்தையை அழைத்து வைத்துக் கொண்டு நீங்கள் நிம்மதியா இருப்பதை யார் தடுப்பார்கள்!" ராகவனுடைய கண்களில் நீர் ததும்பியது. "குழந்தையை அழைத்து வந்தால்; முதலில், 'அம்மா எங்கே?' என்று கேட்பாளே? அதற்கு என்ன சொல்வது? மேலும் குழந்தையை அழைத்து வந்தால் யார் பார்த்துக் கொள்வார்கள்!" என்றான். "அதில் என்ன கஷ்டம்? குழந்தையை அழைத்து வருவதற்குள்ளே வீட்டில் இன்னொரு தாயாரைத் தயார் செய்து விட வேண்டும்! வீட்டுக்கு எஜமானியாச்சு! குழந்தைக்குத் தாயார் ஆச்சு! வேலையைப் பற்றிக் கவலையும் வேண்டியதில்லை. இந்த வேலை போய்விட்டால் அப்பா கட்டாயம் இதைவிடப் பெரிய சம்பளம் உள்ள உத்தியோகம் வாங்கித் தருவார்!"

ராகவன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது, 'இன்னொரு தாயார் தயாரிப்பது பற்றித் தாமா சொன்னதின் கருத்து என்ன வாயிருக்கும் என்று யோசித்துக்கொண்டே போனான். ஒருவாறு புரிந்தது ஆனால் அவனுடைய மனம்அதைப்பற்றி நினைக்கவும் இடம் கொடுக்கவில்லை. வீட்டை அடைந்ததும் வேலைக்காரர்கள் முகங்களில் சோகக்களையுடன் நிற்பதைப் பார்க்கச் சகியாமல் உள்ளே போனான். ஒவ்வொரு அறையாக வளையவந்தான்; அங்குமிங்கும் நடனமாடினான். ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு சாமானும் படமும் சீதாவின் ஞாபகத்தைக் கொண்டு வந்தன. அந்த வீட்டுக்கு வந்த புதிதில் அன்பும் அருமையுமாக வாழ்ந்த நாட்களின் சம்பவங்கள் ஞாபகம் வந்து அவன் உள்ளத்தை உருக்கின. பிற்காலத்தில் அவர்க ளுக்குள் நடந்த சண்டைகளும் நினைவு வந்தன. சண்டைகளை நினைத்தபோதெல்லாம் குற்றம் தன் பேரில்தான் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் இனிப் பச்சாதாபப்பட்டு என்ன பிரயோசனம்? போனவள் இனித் திரும்பி வரப் போகிறாளா? அல்லது அவள் இருந்த இடத்தில் இன்னொரு ஸ்தீரியை கொண்டு வந்து வைக்கத்தான் தனக்கு மனம் வருமா? தன் வாழ்க்கை யைப் புதுவிதமாகத் தொடங்கிச் சண்டை சச்சரவு இல்லாமல் பழைய நாட்களைப் போல் இல்வாழ்க்கை நடத்த வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு வீடு வந்த தினத்தில் அல்லவா இப்படி நடந்து விட்டது?

தன்னுடைய நல்ல உத்தேசம் இவ்வாறு வீணாகிவிட்டதே? யோசித்துப் பார்க்கப் பார்க்க, சீதா தன்னிடம் வெறுப்புக் கொண்டு தான் வீட்டை விட்டு ஓடிப்போயிருக்க வேண்டும் என்று ராகவனுக்கு நிச்சயமாய்த் தோன்றியது. தன்னுடைய கொடுமை பொறுக்க முடியாமலே தான் போய்விட்டாள். எங்கே போயிருப்பாள்? ஒருவேளை யமுனையில் விழுந்து உயிரை விட்டிருப்பாளோ? அல்லது குழந்தையைப் பார்ப்பதற்காகச் சென்னைக்கு ரயில் ஏறிப் போயிருப்பாளோ? அப்படியானால், சீக்கிரத்தில் தனக்குத் தகவல் தெரிந்து போய்விடும். சூரியா கைதியானதற்கும் சீதா காணாமற் போனதற்கும் உண்மையில் ஏதேனும் சம்மந்தம் இருக்குமா! ஒருநாளும் இருக்க முடியாது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதைத் தான். தாமாவும் பாமாவும் சூரியா - சீதா இவர்களின் பேரில் கெட்ட எண்ணம் உண்டாகும்படியாக ஜாடை ஜாடையாகப் பேசியதையெல்லாம் எண்ணிப் பார்த்து, அந்தப் பேச்சுக்களில் ஏதேனும் உண்மை இருக்க முடியுமா என்று சிந்தித்துப் பார்த்தான். ஒரு நாளும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான். சில சமயம் தானும் சீதாவின் மனம் நோகும்படி சூரியாவைப் பற்றிப் பேசிய துண்டுதான். அதற்கெல்லாம் காரணம் சீதாவின் நடத்தையைப் பற்றித் தனக்கு ஏற்பட்ட சந்தேகம் அல்ல. அப்படிப்பட்ட கேவலமான சந்தேகம் லவலேசமும் தனக்கு எந்த நாளிலும் ஏற்பட்டதில்லை. சூரியாவின் பேரில் தனக்கு ஏற்பட்ட ஆத்திரத்துக்கெல்லாம் உண்மையான காரணம் என்ன? அவனைப் பற்றிப் போலீஸுக்குத் தகவல் கொடுக்கும்படியாக அவ்வளவு நீசத்தனமான காரியம் தான் செய்யப் புகுந்ததின் உண்மைக் காரணம் என்ன?

தன்னுடைய இருதய அந்தரங்கத்தை நன்கு சோதனை செய்து பார்த்து ராகவன் அந்த உண்மையைக் கண்டு பிடித்தான். தாரிணிக்கும் சூரியாவுக்கும் ஏற்பட்டிருந்த சிநேகந்தான் தன்னுடைய ஆத்திரத்துக்கெல்லாம் காரணம். அதனால் ஏற்பட்ட குரோதத்தைச் சீதாவின் பேரில் காட்டி அவளுடைய வாழ்க்கையை நரகமாகச் செய்ததினாலேயே இந்த விபத்துக்குத் தான் ஆளாக நேர்ந்தது. முதல் நாள் மாலையில் நடந்த பார்ட்டியில் தாரிணி தன்னைக் கெஞ்சி வேண்டிக் கொண்டதெல்லாம் ஞாபகம் வந்தது. சீதாவை மதராஸில் கொண்டுபோய் விட்டுப் பம்பாய்க்கு வரும்படியும் வந்தால் தன் பிறப்பைக் குறித்த ஓர் அந்தரங்கத்தை வெளியிடுவதாகவும் தாரிணி சொன்னாள். அந்த ரகசியம் என்னவாயிருக்கும்? தாமாவும் பாமாவும் தாரிணியைச் சர்க்காரின் உளவுக்காரி என்று சொன்னது சுத்த அபத்தம். அது ஒருநாளும் உண்மையாயிராது. அந்தச் சகோதரிகள் வெகு பொல்லாதவர்கள். யார் பேரிலாவது குறை சொல்லுவது தான் அவர்களுடைய தொழில். அவர்களுடைய சகவாசம் உதவவே உதவாது. இந்தச் சமயத்தில் தனக்கு ஆறுதல் சொல்லக் கூடியவளும் உதவி செய்யக் கூடியவளும் தாரிணி தான். தாரிணியை எப்படியாவது சந்தித்து அவளிடம் ஆலோசனை கேட்க வேண்டும். சீதா போய்விட்டதைப் பற்றி அவளிடம் உடனே சொல்லி விட வேண்டும். இன்னும் இரண்டு நாள் நேற்றைக்குப் பார்ட்டி கொடுத்த உத்தியோகஸ்தர் வீட்டிலே இருப்பேன் என்று சொன்னால் அல்லவா? அங்கே அவளைக் கூப்பிட்டுப் பார்க்கலாம். டெலிபோனை எடுத்து ராகவன் விசாரித்தான். மேற்படி உத்தியோகஸ்தர் வீட்டில் தாரிணி இல்லையென்று பதில் வந்தது. அந்த நிமிஷத்தில் ராகவனுக்குத் தன்னுடைய வருங்கால வாழ்க்கையெல்லாம் சூனியமாகத் தோன்றியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இருபதாம் அத்தியாயம்


சிங்காரப் பூங்காவில்

சீதாவுக்கு உணர்வு வந்தபோது பட்சிகளின் கானம் கலகலவென்று அவள் செவியில் கேட்டுக் கொண்டிருந்தது. இடை யிடையே இலைகள் அசைந்தாடும் போது உண்டாகும் சலசலப்புச் சத்தமும் கேட்டது. இவற்றுடன் கண்ணனுடைய இடையில் அணிந்த மணிச் சதங்கைகள் குலுங்குவது போன்ற 'கிண்கிணி'ச் சத்தம் சில சமயம் கலந்து கொண்டிருந்தது. வேறு நினைவே யில்லாமல் அந்த இனிய சப்தங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாள். மூடியிருந்த கண்ணிமைகளைத் திறப்பதற்கு மனம் வரவில்லை. கடிகாரத்தில் மணி அடிக்கும் சத்தம் அவளை அந்த இன்பமயமான நாத உலகத்திலிருந்து பூவுலகத்துக்குக் கொண்டு வந்தது. மணி ஆறு அடித்தது; உடனே அவளுடைய கண் இமைகள் திறந்தன. சுற்றும் முற்றும் மேலும் கீழும் அவள் கண்ட காட்சி அவளைத் திகைப்படையச் செய்தது. தந்தத்தைப் போல வெண்மையும் பளபளப்பும் கொண்ட சலவைக் கல் சுவர்கள் நாலுபுறமும் அவளைச் சூழ்ந்திருந்தன. கீழ்த் தரையும் சலவைக் கல் பதித்தது தான். ஆனால் அதில் பெரும் பகுதியை சித்திர விசித்திரமான இரத்தினக் கம்பளம் மூடியிருந்தது. மேலே இருந்து கண்ணாடிக் குஞ்சலங்களுடன் கூடிய விதவிதமான வேலைப்பாடு அமைந்த 'குளோப்' விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. பளிங்குச் சாளரங்களின் வழியாகச் சில சமயம் உள்ளே புகுந்த இனிய காலை நேரத்துக் காற்று அந்த விளக்குகளை ஆட்டிவிட்ட போது கண்ணாடிக் குஞ்சலங்கள் ஒன்றோடொன்று மோதிக் கிண்கிணிச் சத்தத்தை உண்டாக்கின.
அத்தகைய அறையின் மத்தியில் சப்ரமஞ்சக் கட்டிலில் பட்டு மெத்தை மேல் வெல்வெட் தலையணைகளுக்கிடையில் தான் படுத்திருந்ததைச் சீதா அறிந்தாள். சிறிது நேரம் திகைப்பாயிருந்தது, முதல் நாள் இரவு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு வந்து, நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மை தான் என்பதை நிரூபித்துக் கொண்டு அவளுடைய முகத்தில் அடிபட்ட இடத்தில் 'விண் விண்' என்று இலேசான வலி உணர்ச்சி இருந்து கொண்டிருந்தது. ஆகையால் அந்தச் சம்பவங்கள் எல்லாம் உண்மையே தான்! தன்னைச் சில வடக்கத்தி மனிதர்கள் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு வந்ததும், சூரியா இன்னொரு காரில் தன்னைத் தொடர்ந்து வந்ததும், சூரியாவின் வண்டி யமுனைப் பாலத்தின் முனையில் தடுத்து நிறுத்தப் பட்டதும் உண்மை தான். வழியில் ஒரு ஊரில் தான் பசிக்கிறது என்று சொன்னதும், தனக்காகப் பூரி, மிட்டாய், பால் வாங்கிக் கொண்டு வந்ததும் உண்மை தான். பாலைச் சாப்பிட்ட பிறகு அதில் மயக்க மருந்து கலந்திருக்குமோ என்ற சந்தேகம் உண்டானதும் வேறு வண்டிக்கு மாற்றப்பட்டதும் அதில் ஒரு ஸ்திரீ தனக்குத் துணையாக ஏறியதுங்கூட உண்மையாகத் தான் இருக்க வேண்டும். அந்தப் பிரயாணம் இந்த அரண்மனையில் வந்து முடிவடைந்திருக்கிறது. ஆம்; இது யாரோ ஒரு மகாராஜா வின் அரண்மனை என்பதில் சந்தேகம் இல்லை. பலகணியின் வழியாகப் பார்த்தபோது வெளியிலே அழகான பூங்காவனம் தோன்றியது. செடிகளும், கொடிகளும், மரங்களும் பூத்துக் குலுங்கிய அந்தப் பூம்பொழிலில் ஆங்காங்கு பளிங்குக் கல் தடாகங்களும் தடாகங்களின் மத்தியில் முத்துத் துளிகளை வீசி விசிறிய நீர்ப் பொழிவுகளும் தோன்றின. பூங்காவனத்துக்கு அப்பால் அடுக்கடுக்கான மாட கூடங்களுடனும் கலசங்கள் ஸ்தூபிகளுடனும் மாளிகைகள் தென்பட்டன. ஆம்; அது மாமன்னர் வாழும் அரண்மனைத் தான். ஆனால் எந்த மன்னருடைய அரண்மனை? எதற்காகத் தன்னை இந்த அரண்மனைக்குப் பலாத்காரமாகப் பிடித்து வந்திருக்கிறார்கள்!
சுதேச சமஸ்தானங்களின் மகாராஜாக்கள் அந்தக் காலத்திலே கூடச் செய்யும் அக்கிரமமான காரியங்களைப் பற்றிச் சீதா எத்தனையோ கேள்விப்பட்டுத்தானிருந்தாள். பம்பாய் நகரில் மலபார் குன்றில் நடந்த பயங்கரமான கொலையைப் பற்றி அவளுக்குத் தெரியாதா என்ன? எல்லாம் தெரிந்த விஷயம் தான். அப்படி யாரேனும் ஒரு மகாராஜா தன் பேரில் மோகம் கொண்டு தன்னை இங்கே கொண்டுவரச் செய்திருப்பானோ? அவ்விதமானால் எந்த விதத்தில் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ளுவது என்று சிந்தனை செய்தாள். பற்பல முறைகளைப் பற்றி யோசித்தாள். தப்பித்துக் கொள்ளப் பெரு முயற்சி செய்து பார்க்க வேண்டும்; முடியாமற் போனால் தற்கொலை செய்து கொள்ள வழி தேட வேண்டும். எந்த முறையைக் கைக்கொள்வதாயிருந்தாலும் ஆரம்பத்தில் நயமாகவும் நல்லதனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்தச் சமயத்தில் சமீபத்தில் காலடிச் சத்தம் கேட்கவே சீதா பீதியடைந்து படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். அந்த அறையின் கதவு இலேசாகத் திறக்கப்பட்டபோது அவளுடைய நெஞ்சத்தின் கதவும் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆனால் உள்ளே வந்தவள் ஒரு சாதாரண தாதிப் பெண் என்று பார்த்தவுடனே தெரிந்தது. வந்தவள் ஹிந்தி பாஷையில் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசினாள். பக்கத்து அறையில் முகம் கழுவிக் கொள்ளலாம் என்றும் காலைச் சிற்றுண்டி தயாராயிருக்கிற தென்றும் அவள் சொன்னதாகச் சீதா தெரிந்து கொண்டாள். அவளைப் பல கேள்விகள் கேட்கச் சீதா விரும்பினாள்; ஆனால் பேசுவதற்கு நா எழவில்லை; துணிவும் ஏற்படவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி முகம் கழுவிக் கொள்ளச் சென்றாள்.
காலைச் சிற்றுண்டி அருந்திய பிற்பாடு தூக்க மருந்தினால் ஏற்பட்ட மயக்கம் முழுதும் தெளியவில்லை. மறுபடியும் படுக்கையில் படுத்தாள். அரைத் தூக்கமும் அரை விழிப்புமாய் இருந்த சமயத்தில் இரண்டு மூன்று குரல்கள் பேசிக்கொண்டே வருவது கேட்டது. குரல்களில் ஸ்திரீயின் குரல் ஒன்றும் இருந்தது. அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பித் தூங்குவது போலப்பாசாங்கு செய்து அசையாமலிருந்தாள். வந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண் டார்கள். பேசியதெல்லாம் சீதாவுக்கு விளங்கவில்லை, ஆயினும் "மகாராஜா," "மகாராணி" என்னும் சொற்கள் நன்கு விளங்கின. "தூக்க மருந்தின் சக்தி இன்னும் இருக்கிறது!" என்று ஒரு குரல் கூறியது. அந்தக் குரல் முதல் நாள் இரவு தன்னை மோட்டாரில் ஏற்றி அழைத்து வந்தவனின் குரல் என்று சீதா அறிந்து கொண்டாள். "இவள் என் சகோதரிதானா? நிச்சயமா?" சந்தேகமில்லை. ராஜ மாதாவின் கட்டளையை அப்படியே நிறைவேற்றி விட்டேன்!" என்றது இன்னொரு குரல். முதிர்ந்த மாதரசி ஒருத்தியின் குரல், "இந்தப் பெண் இந்த அரண்மனையில் உன்னைப்போலவே வளர்ந்திருக்க வேண்டியவள். விதியானது அவளை இத்தனை காலமும் பிரித்து வைத்திருந்தது" என்று கூறியது. இதைக் கேட்ட சீதாவின் உடம்பு சிலிர்த்தது; உள்ளம் பரவசம் அடைந்தது. ஆயினும் அப்போது கண் விழித்து எழுந்திருக்க அவளுக்கு மனம் வரவில்லை. ஒருவேளை இதெல்லாம் கனவோ, என்னமோ? கண்ணை விழித்தால் ஒருவேளை மறைந்து விடுமோ என்னமோ?.. இத்தகைய நெஞ்சக் கலக்கத்தில் மூடிய கண்ணைத் திறவாமல் இருந்தாள் சீதா.
சில நிமிஷத்துக்கெல்லாம் அந்த மூதாட்டியின் குரல் "கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வரலாம்!" என்று சொல்லியது, இத்துடன், வந்திருந்தவர்கள் திரும்பச் சென்றார்கள். அவர்கள் கொஞ்ச தூரம் போவதற்கு அவகாசம் கொடுத்த பிறகு சீதா விழித்துப் பலகணி வழியாகப் பார்த்தாள். கும்பலாகச் சென்றவர்களில் ராஜ மாதா யார் என்றும் ராஜ குமாரர் யார் என்றும் ஊகித்துத் தெரிந்து கொள்வதில் கஷ்டம் ஒன்றும் ஏற்படவில்லை. தூக்கம் நன்றாகக் கலைந்துவிட்டது; படுத்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்தாள் தான் படுத்திருந்த இடம் அரண்மனைப் பூங்காவனத்தின் மத்தியில் இருந்த மாளிகை என்று தெரிந்தது. பூந்தோட்டத்தைச் சுற்றி நாலுபுறத்திலும் இதை விடப் பெரிய பெரிய மாட மாளிகைகள் காணப்பட்டன. மாளிகைகளுக்கு மத்தியில் தோன்றிய இடைவெளி வழியாகப் பார்த்தால் தூரத்தில் நீல நிறத்து ஏரி நீர் படர்ந்திருந்தது. இது எந்த ஊர் அரண்மனை? எந்த ராஜாவின் சிங்கார மாளிகை? யார் வளர்த்த பூந்தோட்டம்? இந்த மகிமையான ராஜரீகச் செல்வங்களில் எல்லாம் தனக்கும் உரிமை உண்டா? விதி வசத்தினால் இத்தனை காலமும் பிரிந்திருக்க நேரிட்டதா? ராஜ குலத்திலே பிறந்த ராஜகுமாரியான நான் விதியின் விளையாட் டினால் ஏழைக் குடும்பத்தில் வளர்ந்து எளிய வாழ்க்கை நடத்தி எல்லையில்லாத கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கும்படி நேரிட்டதா?அந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் இப்போது உண்மை யிலேயே முடிவு வந்துவிட்டதா?அந்த மூதாட்டி யார்? தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னைதானா.பெரிய தாயார் அல்லது சிறிய தாயார் உறவு பூண்டவளா! அந்த அழகிய ராஜகுமாரன் தன்னுடன் பிறந்த சகோதரனா?... ஆகா! இதெல்லாம் உண்மையாயிருக்க முடியுமா? சிறு வயதில் தான் கண்ட கற்பனைக் கனவுகள், கட்டிய ஆகாசக் கோட்டைகள், மனோராஜ் யங்கள் எல்லாவற்றையும் விட இப்போது நடந்திருப்பது அதிசயமா இருக்கிறதே?
அதிசயந்தான்! உலகத்தில் இந்த நாளிலும் எத்தனையோ அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த அதிசயங்களில் ஒன்று தன் வாழ்க்கையிலும் நடந்து விட்டிருக்கிறது. தான் ராஜகுலத்தில் பிறந்த ராஜகுமாரி என்பது உண்மை தான். இல்லாவிட்டால் தன்னை இங்கே கொண்டு வருவதற்கு இவ்வளவு பிரயத்தனம் ஏன் செய்திருக்க வேண்டும்? அந்த மூதாட்டியும் ராஜகுமாரனும் பேசியதிலிருந்து அது நிச்சயம் என்று ஏற்படுகிறது. இந்த விஷயம் எல்லாம் அவருக்குத் தெரியும்போது அவருடைய மனதின் நிலை எப்படியிருக்கும்? ராஜ வம்சத்தில் பிறந்த ராஜகுமாரியைத் தான் மணந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்தது பற்றிப் பெருமை கொள்வாரா? தன்னை இத்தனை காலமும் இவ்வளவு கொடூரமாக நடத்தியது பற்றி வருத்தப்படுவாரா? இதற்குப் பிறகும் அவரையே கணவர் என்றும் கடவுள் என்றும் கருதித் தான் நடந்துகொள்ளப் போவது குறித்து மகிழ்ச்சியடைவாரா? இனிமேலாவது தன்னை அவமதித்து அலட்சியமாய் நடத்தாமல் அன்புடன் போற்றி அருமையாக வைத்துக் கொள்வாரா? நியாயமாகப் பார்த்தால் தன்னிடம் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும்! தனக்கு இழைத்த அநீதிகளுக்காகவும் கொடுமைகளுக்காகவும் வருந்திப் பச்சாதாபப்பட வேண்டும். இனிமேல் அப்படியெல்லாம் நடந்து கொள்ளுவதில்லையென்று உறுதிமொழியும் கொடுக்க வேண்டும். ஆனால் அப்படி மன்னிப்புக் கோர வேண்டும் என்று தான் வற்புறுத்தப் போவதில்லை. அந்த மாதிரியெல்லாம் அவரை அவமானப்படுத்தத் தனக்கு ஒரு நாளும் மனம் வராது. அவர் ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் உடனே நிறுத்த அவருடைய வாயைத் தன்னுடைய கையினால் பொத்தி, "வேண்டாம்! வேண்டாம்!" என்று சொல்ல வேண்டும்.
எப்படி இருந்தாலும் அவர் தன்னுடைய கணவர் அல்லவா? ஏழையும் அனாதையுமாயிருந்த தன்னை ஆசைப்பட்டு மணந்த மணவாளர் அல்லவா? செல்வத்திலே பிறந்து செல்வத்திலே வளர்ந்த லலிதாவை வேண்டாம் என்று சொல்லித் தன்னை விரும்பிக் கலியாணம் செய்துகொண்ட பிராணநாதர் அல்லவா? அவர். லலிதாவுக்கு இதெல்லாம் தெரியும்போது என்ன நினைப்பாள்? சந்தோஷப்படுவாளா? அசூயைப்படுவாளா? தன் அருமைத் தோழிக்கு இத்தகைய அதிர்ஷ்டம் கிடைத்தது பற்றிச்ந்தோஷப்படத்தான் செய்வாள். ஆயினும் மனதிற்குள்ளே கொஞ்சம் அசூயையும் இல்லாமற் போகாது. கல்யாணத்துக் கென்று காலணாச் செலவு செய்ய நாதியற்று இரவல் மணப்பந்தலில் மாலையிட்ட அனாதைச் சீதா ஒரு பெரிய சமஸ்தானத் தின் ராஜ குடும்பத்தில் பிறந்த ராஜகுமாரி என்று தெரிந்தால் கொஞ்சமாவது அசூயை உண்டாகாமல் இருக்குமா? மனுஷர்களுக்குச் சாதாரணமாக உள்ள பொறாமை லலிதாவுக்கு மட்டும் எப்படி இல்லாமற் போகும்? அதெல்லாம் இருக்கட்டும், இப்போது இவர்களிடம் தான் எப்படி நடந்து கொள்வது? தன் விஷயத்தில் இவர்களுடைய உத்தேசம் என்னவாக இருக்கும்? எதற்காக இவ்வளவு மர்மமாகவும் பலவந்தமாகவும் தன்னைப் பிடித்துக் கொண்டு வரச் செய்திருக் கிறார்கள்? இவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் பேச வேண்டும். தன்னை இங்கே கொண்டு வருவதற்கு அவர்கள் கையாண்ட முறையைத் தான் விரும்பவில்லையென்று காட்டி விட வேண்டும். மேலே அவர்கள் என்ன சொன்னாலும் சுலபத்தில் இணங்கிவிடக் கூடாது. அவர்களுடைய நோக்கம் இன்னதென்று தெரிந்துகொண்டு அதற்குத் தக்கபடி யோசித்துப் பதில் சொல்ல வேண்டும்.
அடாடா! இந்தமாதிரி சமயத்தில் சூரியாவின் உதவியும் யோசனையும் தனக்குக் கிடைக்குமானால் எவ்வளவு நலமாயிருக்கும்? ஐயோ! பாவம்! சூரியா இப்போது எங்கே எந்த நிலையில் இருக்கிறானோ? ஒருவேளை இன்னமும் என்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறானோ? அல்லது போலீஸார் அவனைப் பிடித்துக் கொண்டு விட்டார்களோ என்னமோ! இந்த அரண்மனையில் தன்னுடைய நிலைமை இன்னதென்று தெரிந்ததும் முதற்காரியமாகச் சூரியாவைப் பற்றி விசாரிக்க வேண்டும். விசாரித்து அவனுக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும். பார்க்கப் போனால் அவனைத் தவிர தன்னிடம் உண்மையான அபிமானம் உள்ளவர்கள் வேறு யார்? அவனைப் போல் தனக்காகக் கஷ்ட நஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கத் தயங்காத வர்கள் வேறு யார்? இவ்வாறெல்லாம் சிந்தனை செய்த வண்ணம் சீதா அந்த அழகிய அரண்மனை உத்தியான வனத்தில் உலாவித் திரிந்தாள். ஆங்காங்கு நின்று செடிகளில் பூத்துக் குலுங்கிய புஷ்பக் கொத்துக்களிலிருந்து ஒவ்வொன்றைப் பறித்து முகர்ந்தாள். மரக் கிளையின் மீது அமர்ந்து கீதமிசைத்த பட்சிகளை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள். நடந்து அலுத்துக் கால்களும் வலி எடுத்த பிறகு அந்தப் பூங்காவனத்தில் போட்டிருந்த சலவைக் கல் மேடை ஒன்றின் மீது உட்கார்ந்தாள்.
அவளுடைய உள்ளத்தின் கற்பனா சக்தி விசுவரூபம் எடுத்துப் பூமியையும் வானத்தையும் அளாவிக் கொண்டு நின்றது. அவளுடைய சித்தம் மரங்களின் உச்சி மீது உலாவி வானத்துப் பறவைகளுடன் குலாவி மேக மண்டலங்களில் திரிந்து இன்ப ஒளிக் கடலில் நீந்தி விளையாடியது. காலக் கணக்கெல்லாம் குழப்பமடைந்து, ஒரு நிமிஷ நேரம் நூறு வருஷமாக நீடித்தது. ஆயிரம் வருஷம் அரை நிமிஷமாய்ப் பறந்தது. எத்தனை எத்தனையோ மனோராஜ்யங்கள் எழுந்து உடனே சிதைந்து விழுந்தன. மின்னல் நேரத்தில் ஆகாச வெளியில் அற்புதமான கோட்டைகள் தோன்றின. அதே வேகத்தில் அவை மறைந்தன. அன்பும் ஆசையும் இன்பமும் துன்பமும் குரோதமும் குதூகலமும் அலை அலையாகவும் மலை மலையாகவும் கொந்தளித்து மேலெழுந்து நொடிப் பொழுதில் அடங்கின. அவர்கள் மறுபடியும் வந்தார்கள் ராஜமாதா, ராஜகுமாரர், அவர்களுடன் அந்தரங்கப் பணியாள் மூவரும் வந்தார்கள். சீதா அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள் கண் கொட்டாத ஆவலுடன் மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். ராஜமாதாவின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. "மகளே! உன்னைச் சிங்கார மாளிகையில் தேடிவிட்டு வருகிறோம். அதற்குள் தோட்டத்தைச் சுற்ற ஆரம்பித்து விட்டாயா? மிகவும் சந்தோஷம். இந்த அரண்மனைத் தோட்டத்திலே உலாவ உனக்குப் பூரண உரிமை உண்டு. இந்த அரண்மனையிலேயே வசிப்பதற்கும் உனக்குப் பாத்தியதை உண்டு. இதையெல்லாம் கேட்க உனக்கு வியப்பாயிருக்கிறதா?" என்று ராஜமாதா கேட்டாள்.
சீதா மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. எத்தனையோ கேள்விகள் கேட்க அவளுடைய உள்ளம் துடித்துக் கொண்டி ருந்தது. ஆனால் பேச முடியாதபடி உணர்ச்சி அவளுடைய தொண்டையை அடைத்தது. மேலும் ராஜமாதாவிடம் ஹிந்தி பாஷையில் பேசுவதற்கு வேண்டிய சக்தி தன்னிடம் இருக்கிறதா என்பது பற்றிச் சந்தேகம் உதித்தது. டில்லியில் வசித்த காலத்தில் வேலைக்காரர் களுடன் பேசிப் பழகியதனால் ஏற்பட்ட ஹிந்தி பாஷை ஞானம் இந்த மகத்தான சந்தர்ப்பத்துக்குப் போதுமானது. "மகளே, ஏன் பேசாமலிருக்கிறாய்? நாங்கள் உனக்கு அன்னியர்கள் அல்ல. நான் உன்னுடைய சிறிய தாயார்; இவன் உன்னுடைய சகோதரன். காலம் செய்த கோலத்தினால் இத்தனை நாளும் நீ வேறு எங்கேயோ வசிக்க நேரிட்டது" என்றாள். சீதாவுக்கு ஒரே பிரமிப்பா யிருந்தது வியப்பும் மகிழ்ச்சியும் போட்டியிட்டுக் கூத்தாடின. தான் எண்ணிய எண்ண மெல்லாம் உண்மைதான்; கனவுமல்ல, கருணையுமல்ல. ஏழைச் சீதா உண்மையில் ராஜ குலத்தில் பிறந்த ராஜகுமாரி! அற்புதம் என்றால் இதுவல்லவா அற்புதம்? அதிர்ஷ்டம் என்றால் இதைப் போன்ற அதிர்ஷ்டம் வேறு என்ன உண்டு.
"மகளே! இன்னும் நீ பேசவில்லை ஒருவேளை உன்னை இங்கே கொண்டு வந்த முறை உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது! அதனால் கோபமாய் இருக்கிறாயாக்கும்! ஆனால் உனக்கு நான் பல தடவை சொல்லி அனுப்பியும் எங்களிடம் வரச் சம்மதிக்கவில்லை. ஆகையினால் தான் உன்னைக் கட்டாயப்படுத்தி அழைத்து வருவது அவசியமாயிற்று. நீயே யோசித்துப் பார்! உன் சகோதரனுக்குச் சீக்கிரத்தில் மகுடாபிஷேகம் நடக்கப் போகிறது. அதற்கு முன்னால் இந்தக் குடும்பத்தில் உனக்குச் செய்யப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்துவிட வேண்டுமென்று இவன் பிடிவாதம் பிடித்தான். அப்படியானால் உன்னைப் பலவந்தமாகக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழி என்ன?" என்றாள் ராஜமாதா. இந்தச் சமயத்தில் ராஜகுமாரரும் சம்பாஷணையிலே சேர்ந்து கொண்டார்: "சகோதரி! அம்மா சொல்வது சரிதான் தங்களைப் பலவந்தமாக இங்கே கொண்டு வரச் செய்ததற்குக் காரணம் என் ஆவலே. பிரயாணத்தின் போது ஏதாவது கஷ்டம் ஏற்பட்டி ருந்தால் அதற்காக மன்னிக்க வேண்டும். மேலும் தாங்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பெரு முயற்சி செய்து வருகிறீர்கள் என்று அறிவேன். அதற்குக் குந்தகம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. உண்மையில் எனக்கே இந்தச் சமஸ்தானத்து ராஜாவாக முடிசூட்டிக்கொள்வதில் விருப்பமில்லை. வெள்ளைக்காரர்களைத் துரத்தியடித்துவிட்டு இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. அதற்கு இந்த யுத்த சமயத்தைக் காட்டிலும் நல்ல சமயம் கிடைப்பது அரிது. ஆனாலும் என் தாயாரின் வற்புறுத்தலுக்காகவே இந்த ராஜ்யப் பொறுப்பை ஒப்புக் கொள்ளப் போகிறேன். தாங்கள் என்னுடன் இருந்து ஒத்தாசை செய்ய வேண்டும் சகோதரியே! ஒத்தாசை செய்வீர்களா?"
சீதாவுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்ட மாதிரி இருந்தது. இது என்ன கூத்து? இவர்கள் என்னென்னமோ சொல்கிறார்களே? ஒருவேளை இவர்கள் பேசுகிற ஹிந்தி பாஷை சரியாகப் புரியாததினால் இப்படியெல்லாம் நமக்குத் தோன்றுகிறதோ? இதற்கு மேல் சும்மா இருக்கக் கூடாதென்று தீர்மானித்து, "நான் ஒரு அபலை ஸ்திரீ; என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? மேலும் என்னுடைய புருஷரிடம் கேட்க வேண்டாமா? என்னுடைய பதிக்குத் தெரியாமல் என்னை நீங்கள் கொண்டு வந்ததே பிசகு!" என்றாள். இந்த வார்த்தைகளைக் கேட்ட ராஜமாதாவும் ராஜகுமாரரும் மலை சரிந்து தலையில் விழுந்தவர் களைப்போல் பிரமித்துப் போய் நின்றார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்; பிறகு சற்று விலகி நின்ற மூன்றாவது ஆளின் முகத்தையும் பார்த்தார்கள். "நன்றாய்ப் படித்திருக்கிறாள் என்று நீர் சொன்னீரே? இந்த மாதிரிக் கொச்சையான ஹிந்தி பேசுகிறாளே?" என்று ராஜமாதா கேட்டாள். "கணவனைப்பற்றிப் பேசுகிறாளே? கல்யாணம் ஆகியிருக்கிறதா, என்ன?" என்று ராஜகுமாரர் கேட்டார். மூன்றாவது ஆசாமி திகைத்த முகத்துடன் சீதாவைப் பார்த்து, "உங்களுக்கு கலியாணம் ஆகியிருக் கிறதா?" என்று கேட்டான். "ஏன் ஆகவில்லை? ரொம்ப காலத்துக்கு முன்பே ஆகிவிட்டது! குழந்தை கூட இருக்கிறது!" என்றாள் சீதா. ராஜகுமாரர், "இதென்ன அதிசயம்? அம்மணி தாங்கள் யார்? எந்த ஊர்?" என்று கேட்டார். சீதாவுக்கு எதனாலோ கோபம் அதிகமாகிக் கொண்டிருந்தது. "நான் யார் என்று தெரியாமலா என்னைப் பிடித்துக் கொண்டுவரச் செய்தீர்கள்?" என்றாள்.
"அம்மணி! தயவு செய்து சொல்லுங்கள் தங்கள் பெயர் என்ன? தங்களுடைய பெற்றோர்களின் பெயர் என்ன?" என்று ராஜகுமாரர் கேட்டார். "தாராளமாகச் சொல்கிறேன் என் பெயர் சீதா! என் தந்தை பெயர் துரைசாமி ஐயர். என் தாயாரின் பெயர் ராஜாம்மாள், என் கணவன் பெயர் சௌந்தரராகவன். என் மாமியாரின் பெயர் காமாட்சி அம்மாள். என் அருமை மாமனாரின் பெயர் பத்மலோசன சாஸ்திரிகள். இன்னும் யார் யாருடைய பெயர் உங்களுக்குத் தெரியவேண்டும்?" "போதும், அம்மணி! போதும்! கியான்தாஸ்! இது என்ன மூடத்தனம்? இது என்ன அசம்பாவிதம்! இந்தத் தவறு எப்படி நேர்ந்தது?" என்று ராஜகுமாரர் பணியாள் மீது எரிந்து விழுந்தார். கியான்தாஸ் தன் சட்டைப் பையிலுள்ள புகைப்படத்தை எடுத்து சீதாவுடன் ஒப்பிட்டு இரண்டு மூன்று தடவை உற்றுப் பார்த்தான். "தவறு நேர்ந்துவிட்டது! ஐயோ! தவறு நேர்ந்து விட்டது. இந்தப் பெண்ணும் அவள் மாதிரியே இருக்கிறாள். ஆனால் அவள் அல்ல! அடடா! எவ்வளவு பெரிய தவறு நேர்ந்து விட்டது? இப்போது என்ன செய்வது?" என்று கியான்தாஸ் கூடச் சேர்ந்து அங்கலாய்த்தான். சீதாவைப் பார்த்து ராஜமாதா, "பெண்ணே! உண்மையாகச் சொல்லிவிடு! உன்னுடைய பெயர் தாரிணி இல்லையா?" என்று கேட்டாள்.
அந்த ஒரே கேள்வியின் மூலம் சீதாவுக்குச் சகல விவரங்களும் தெரிந்துவிட்டன.அவளுடைய ஆகாசக் கோட்டை களும் மனோராஜ்ய மாளிகைகளும் இடிந்து தகர்ந்து பொடிப் பொடியாகிக் காற்றிலே பறந்து மண்ணிலே விழுந்து மண்ணோடு மண்ணாகி மறைந்து தொலைந்து போயின! ஆகா! இந்த முழு மூடர்கள் தன்னைத் தாரிணி என்று தவறாக எண்ணி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தனை நேரம் அது தெரியாமல் நாமும் ஏமாந்து ஏதேதோ கோட்டை கட்டி கொண்டிருந் தோமே? ஆசாபங்கத்தினாலும் அசூயையினாலும் ஆங்காரத்தினாலும் சீதாவின் உள்ளம் எரிமலையாகியது. எரிமலை கக்கும் தீயின் கொழுந்தைப்போல் வார்த்தைகள் சீறிக்கொண்டு வந்தன. "நான் தாரிணி இல்லை; நான் உங்கள் தூர்த்த ராஜ குலத்தில் பிறந்தவளும் இல்லை. தளுக்கினாலும் குலுக்கினாலும் மூடப் புருஷர்களை மயங்க வைக்கும் மாயக்காரியும் அல்ல. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஏழைப் பெண். தாலி கட்டிய புருஷனோடு மானமாய் ஜீவனம் செய்து வந்தேன். உங்களுடைய முழு மூடத்தனத்தில் இந்த மாதிரி என்னை அலங்கோலப்படுத்தி விட்டீர்கள். இனி என்னுடைய கதி என்ன?" என்று சீதா அலறினாள். "பெண்ணே! வீணாகக் கத்தாதே! நடந்தது நடந்து விட்டது. நீ இருந்த இடத்தில் உன்னைத் திருப்பிக் கொண்டு போய் விட்டுவிடச் சொல்கிறேன்?" என்றாள் ராஜமாதா. "உங்களுக்கு என்ன? திருப்பிக் கொண்டு போய் விடுகிறேன் என்று சுலபமாய் சொல்லிவிடுகிறீர்கள். இப்படித் தெறிகெட்டு எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்தவளை அவர் திருப்பிச் சேர்த்துக் கொள்ள வேண்டாமா?
நீங்கள் மகா பாவிகள்! இரக்கமற்ற சுயநலப் பிண்டங்கள்! உங்களுடைய வம்சம் அடியோடு நாசமாகிப் பூண்டற்றுப் போகும்..."அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல் ராஜமாதாவும் ராஜகுமாரரும் விரைந்து சென்றார்கள். போகும்போதே அவர்கள் அந்த மூன்றாவது ஆளை ஏதோ பலமாகக் கண்டித்துக் கொண்டு போக அந்த ஆள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டும் சமாதானம் சொல்லிக்கொண்டும் போனான். அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும் சீதா விம்மி அழத் தொடங்கினாள். இதயத்தின் அடிவாரத்தில் வெகு காலமாக மறைந்து கிடந்த துக்கம் பொங்கிப் பீறிக்கொண்டு வந்தது. கொதிக்கின்ற கண்ணீர் தாரை தாரையாகப் பெருகி கன்னத்தைச் சுட்டது. பழைய காலத்துக் காவியங்களிலே வரும் கற்புக்கரசிகளைப் போலச் சீதாவுக்கு மட்டும் சக்தியிருந்தால் அந்த மூன்று பேரையும் அந்த க்ஷணமே சுட்டு எரித்துச் சாம்பலாக்கி இருப்பாள். தண்டனை அளிக்கும் அதிகாரம் உடைய அரசியாயிருந்தால் தாரிணியைச் சுண்ணாம்புக் காளவாயில் போடும்படி கட்டளையிட்டிருப் பாள்.ஆகா! எங்கே போனாலும் அந்தப் பாதகியல்லவா தன்னுடைய சத்துருவாக வந்து சேருகிறாள்? தன்னுடைய ஆசை களைப் பங்கமுறச் செய்து தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்குவதற்கென்றே தாரிணி பிறந்தவள் போலும்! அடி! மோகன உருவம் கொண்ட பயங்கர ராட்சஸியே! கலிகால சூர்ப்பணகை என்றால் உனக்கல்லவா தகும்? உன்னை மானபங்கம் செய்து புத்தி புகட்ட எந்த வீர புருஷனாவது முன் வரமாட்டானா? சூரியாவிடம் சொன்னால் அவனாவது செய்யமாட்டானா? அப்படி யாரும் உன்னைப் பழிவாங்க முன் வராவிட்டால் அடுத்த முறை உன்னைப் பார்க்கும்போது நானே விஷம் கொடுத்துக் கொன்றுவிடுகிறேன், பார்! அவமானத்துக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளான சீதாவின் மனதில் இது போன்ற பயங்கர எண்ணங்கள் குடிகொண்டன!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top