• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் 3 (பருவம் 3 /வெற்றிக்கொடி)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
மணிபல்லவம் - மூன்றாம் பருவம்

வெற்றிக்கொடி

கலந்து நிறைவடைய வேண்டிய கடலைச் சார்வதற்கு முன்னால் தமக்கெனத் தனிப்பெயரும் தனித் தனித் துறைகளும் ஓட்டமும் கொண்டு அலைந்துவரும் ஆறுகளைப்போல உணர்ந்திருப்பதற்கும் உணர வேண்டிய நிறைவுக்கும் நடுவிலுள்ள இடைவெளி தான் மனித வாழ்க்கை. பாயும் நதிகள் கடலோடு கலந்து நிறைந்த பின் தனிப் பெயரும் இல்லை துறையும் இல்லை. நிறைவுக்கு அளவும் இல்லை. எழுவாயாகிய தொடங்குமிடமும் இல்லை. இறுவா யாகிய முடியுமிடமும் இல்லை. குறைவைத் துணைக் கொண்டு நிறைவை அளக்க இயலுமோ? பின்னமும், சிதைவும் உடையதனைக் கொண்டு பின்னமும் சிதைவும் இல்லாத முழுமையை அளப்பது எப்படி? கணிப்பதுதான் எப்படி?

தனியே பிரித்துப் பார்த்தால் ஒன்றாகி விடுவதும், ஒன்றாக்கிப் பார்த்தால் தனியே பிரிந்து விடுவதுமாக இந்த உலகத்தில்தான் எத்துணைத் தத்துவங்கள்! நீர் இல்லாத வெறுங்குடத்தில் வெறுமை என்று சுட்டிச் சொல்லப்படுவதும் ஆகாயமே. குடம் உடைந்து போனால் உடைகிறவரை குடத்துள்ளே இருந்த சிறு வெளியும் பெருவெளியாகி ஆகாயத்தில் கலந்துவிடுகிறது. ஓடுகின்ற ஆற்று நீரிலும், எரிகின்ற தீபத்திலும், பாயும் தண்ணிரும். எரியும் சுடரும் ஒன்றாகவே தெரிந்தாலும், அத்தந்த வினாடிகளில் பாய்வதும் எரிவதுமான நீரும் சுடரும் வேறு வேறுதான். உயிரியக்கமும், இப்படிப் புடை பெயர்வது தெரியாமல் மாறிக் கொண்டிருப்பதுதான் என்பதை ஞானப்பசி தீர்ந்தவனாகத் திருநாங்கூர்ப் பூம்பொழிலிலிருந்து புறப்பட்டு காவிரிப் பூம்பட்டினத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது இளங்குமரன் நினைத்தான். அதிகாலைப் பூவைப்போல் இப்போது அவன் மனம் தூயதாக இருந்தது. கூர்மையான ஊசியின் முனையிற் மிகச் சிறிய கடுகும் தங்கி நிற்க முடியாதது போல ஞானத் தெளிவினாலே துணுகிச் சிந்திக்கப் பழகியிருந்த அவன் மனத்தில் சிறிது எண்ணங்களும் குறுகிய ஆசைகளும் தங்க இடமின்றி நழுவி முன்பு உடல் வலிமையோடு பார்த்த உலகத்துக்கும், இன்று மனவலிமையோடு பார்க்கிற உலகத்துக்கும் நடுவேதான் எவ்வளவு வேறுபாடுகள்! அந்த வலிமையோடு பார்த்த உலகத்தில் தானே எல்லாவற்றையும் அழிக்க முடியும் என்ற தன் ஆணவமே மிகுந்து தோன்றியது. இந்த வலிமையோடு பார்க்கிற உலகத்தில் தானும் எல்லாவற்றையும் வளர்க்கவும் வாழ்விக்கவும் முடியும் என்று தோன்றுகிறது. உலகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற எல்லாருடைய துன்பங்களும் நீங்கிச் சமமான மகிழ்ச்சி எங்கும் பரவ வேண்டுமென்று இதயத்தில் எல்லையற்ற கருணை பொங்குகிறது. எல்லையற்ற அனுதாபம் பெருகுகிறது. தன் முதுகு நிறையச் சுமையைத் தாங்கிக் கொண்டு நடக்கிறவன் அந்தச் சுமையால் கூனிக் குறுகி நடப்பதைப்போல் ஆசைகள் கனத்து அழுத்தும்போது அறிவும் தயங்கி மந்தமடைவதுண்டு. வினையின் நீங்கி விளங்கிய அறிவினால் மனத்தில் ஆசைச் சுமைகளேயின்றிக் குறைத்துக் கொண்டு புறப்பட்டிருந்த இளங்குமரன் பூம்பொழிலின் வாயிற்புறம் விசாகை தன்னை வாழ்த்திய விதத்தை நினைத்துக் கொண்டான். ‘இந்தக் கொடி வெற்றிக் கொடியாக உயரட்டும்’ என்று அவன் வலக் கரத்தில் தாங்கியிருந்த ஞானக்கொடியைக் காண்பித்து வாழ்த்தியிருந்தாள் அவள்.

விசாகையின் வாழ்த்தை நினைத்துக் கொண்டு தன் கையிலிருந்த கொடியைத் தானே உற்றுப் பார்க்கிறான் இளங்குமரன். ஞானத்தின் ஒளிக்கு அடையாளம் போல் ஒரு தீபம், சில ஏடுகள் - இவை அந்தக் கொடியில் இலங்கும் உருவங்களாய் வரையப் பெற்றிருக்கின்றன. எது வெற்றி? எது தோல்வி: ஓர் எல்லையில் நின்று பார்க்கும்போது வெற்றியாகத் தெரிவது, மற்றோர் எல்லையில் நின்று பார்த்தால் தோல்வியாகத் தெரி கிறதே! மனிதர்களின் நியதிப்படி பார்த்தால் தங்கள் மனம் நினைத்தது நினைத்தவாறே, விரும்பியது விரும்பிய வண்ணமே விளைந்தால் அது வெற்றி, அல்லாதது தோல்வி. ஒரு விளைவை வெற்றியாகவும் தோல்வியாகவும் எடுத்துக் கொள்வது அந்த விளைவை அனுபவிக்கும் மனப்பக்குவத்தைப் பொறுத்ததுதான்.

காவிரிப்பூம்பட்டினத்தை நெருங்க நெருங்கச் சாலைகளில் கூட்டம் நிறைந்திருந்தது. நீலநாகமறவர் தேரை மெல்லச் செலுத்தினார். தீபாலங்காரங்களும் வாண வேடிக்கைகளுமாக எதிரே மாபெரும் கோநகரம் தெரிந்தது. கடல் அலைகளின் ஓசையோடு இந்திரவிழா ஆரவாரங்களும் கேட்டன. நகரத்தின் ஒளி அலங் காரங்கள் நீர்ப்பரப்பில் பிரதிபலித்து மேலும் அழகு உண்டாக்கிக் கொண்டிருந்தன. இனிமையான இசை ஒலிகள் காற்றில் மிதந்து வந்தன. பூம்புகாரின் எல்லைக்குத் தேர் வந்ததும் இளங்குமரன் தன் மனத்தில் ஒரு சங்கல்பம் செய்யத் தொடங்கினான்:

‘இந்த ஆரவாரங்களுக்கு நடுவே என் அறிவைக் காப்பாற்று. இந்த வேகத்துக்கு நடுவே எனக்கு நிதானத்தைக் கொடு. இந்தக் கூட்டத்துக்கு நடுவே என்னுடைய தியானத்துக்குத் தனிமையைக் கொடு. தேன் பாத்திரத்துள் சுவைப்பதற்கு இறங்கும் வண்டு அதனுள்ளேயே மூழ்கி மாண்டு போவது போல் கண்ணுக்கினியனவும் செவிக்கினியனவும் நாவுக்கினியனவும் வாசனைக்கு இனியனவும் ஆகிய சுவை வெள்ளங்களில் மூழ்கி அழிந்து விடாமல் நீந்திக் கரையேறுகிற ஆற்றலை எனக்குக் கொடு. நினைவின் அருவங்களாகிய கனவுகளிலிருந்து என் மனம் விலகி நிற்கட்டும். மெய்யொளியை மறைக்கும் பொய்யொளிகளை என் கண்கள் காணக் கூசட்டும். வெற்றுரைகளைக் கேட்காமல் என் செவிகள் மூடிக் கொள்ளட்டும். வெற்றுரைகளைப் பேசாமல் என் நா அடங்கட்டும்.’

தங்கள் தேர் செல்லும் வழியின் இரு புறமும் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் தேருக்குள்ளே நோக்கிக் கை கூப்பி வணங்குவதையும் முகம் மலர்வதையும் நீலநாக மறவர் பார்த்துக் கொண்டே குதிரைகளைச் செலுத்தினார். தாமே அடிக்கடி பின்புறம் திரும்பி இளங்குமரனைப் பார்த்தார் அவர். பவழச் செஞ்சுடர் மேனியும் பன்மடங்கு பெருகிய அழகோடு காந்தி திகழும் கனிந்த முகமண்டலமுமாகக் கொடியேந்தி நிற்கும் குமரக்கடவுளைப் போலத் தேரில் நின்று கொண்டிருந்தான் இளங்குமரன். பிறரால் வணங்கப்படும் தன்மை அல்லது பிறரை வணங்குவிக்கும் தன்மை எதுவோ அது அவன் தோற்றத்திலேயே இரண்டறக் கலந்திருந்தது. புனிதமான சகல சக்திகளும் வாய்ந்த இளந்துறவியொருவனை வணங்குவதாக நினைந்து அவனை வணங்கினார்கள் வழிப் பயணம் செய்த மக்கள்.

அவன் பயணம் செய்த தேர் ஆலமுற்றத்தில் வந்து நின்றபோது, அவனுடைய வாழ்க்கைத்தேர் மூன்றாவது பருவத்தில் வந்து நின்றது. வலது பாதத்தை முன் வைத்து கீழே இறங்கினான் இளங்குமரன். கடற்காற்றிலே அவன் கரத்திலிருந்த கொடி அசைந்தாடியது. மேலே வாகை மரத்திலிருந்து தற்செயலாக உதிர்ந்த பூக்கள் அந்தக் கொடியின் மேலே விழுந்தன.

“இந்தப் பூக்கள் போரைத் தொடங்கும் முன்பே உனது கொடிக்கு வெற்றிவாகை சூடுகின்றன” என்றார் நீலநாக மறவர்.

“இந்த விநாடியில் இங்கே உதிர்ந்த இதே பூக்களை மானசீகமாக எடுத்துக் கொண்டு போய் என் குருவின் பாதங்களில் உதிர்க்கிறேன் நான்” - என்று சொல்லி வணங்கினான் இளங்குமரன், அவன் கண்கள் குருவின் உருவத்தை பாவனை புரிய மூடின.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1. புதிய பூம்புகார்

அவ்வளவு காலம் திருநாங்கூரில் இருந்த பின் இன்று மறுபடியும் வந்து பார்க்கிறபோது காவிரிப்பூம்பட்டினம் முன்பிருந்ததைக் காட்டிலும் பெரிய நகரமாக வளர்ந்திருந்தது போல் காட்சியளித்தது இளங்குமரனுக்கு. நீலநாக மறவருடைய படைக்கலச் சாலையில் அன்று மாணவர்களாக இருந்த பலர் இன்று பயிற்சி முடிந்து வெளியேறி யிருந்தார்கள். இன்று புதிய மாணவர்கள் வந்தி ருந்தார்கள். படைக்கலச் சாலையில் அன்று செடிகளாயிருந்த மாங்கன்றுகள் இன்று மாமரங்களாகிப் பூத்திருந்தன. ஆலமுற்றத்து மரத்தில் ஏற்கனவே இருந்த எண்ணற்ற வீழ்துகள் தவிர இன்னும் புதிய வீழ்துகள் மண்ணில் இறங்கி ஊன்றிக் கொண்டிருந்தன. படைக்கலச் சாலையின் தோட்டத்தில் அன்று சின்னஞ்சிறு குட்டிகளாகத் தாவித் திரிந்து கொண்டிருந்த மான்கள் இன்று கொம்பு கிளைபடரக் குட்டிகள் துணைபடரத் தோன்றின.

அவனுடைய மனத்தைப் போலவே உலகமும் வளர்ந்திருந்தது. மாறியிருந்தது. ஒரு பக்கத்தில் கொல்லர்கள் பழைய வேல்களுக்குத் துரு நீக்கியும் புது வேல்களை வார்த்தும் - பணி புரிந்து கொண்டிருந்தார்கள். அவற்றைப் பார்த்தவுடன் வேலையும் பெண்ணின் விழியையும் ஒப்பிட்டுக் கூறிய நீலநாகமறவர் தனக்கு அறிவுரை சொல்லிய நாளை நினைத்துக் கொண்டான் இளங்குமரன்.

படைக்கலச் சாலையில் நீலநாக மறவருடைய இருக்கையில் தன்னுடைய ஓவியம் இருப்பதைக் கண்டு அது அங்கே எப்படி வந்தது என்று அவன் வியந்தபோது நீலநாகமறவரே அது படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சியை அவனுக்குக் கூறினார்:

“நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் நீ திருநாங்கூருக்குப் போய்ச் சேர்ந்திருந்தாய். இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு வந்தவர்கள் உன்னைக் கொலை செய்யும் நோக்கத்தோடு தேடி வந்ததாக அந்த ஓவியன் எனக்குச் சொன்னான்” என்றார் நீலநாகமறவர். அதைக் கேட்டு அவன் அதிர்ச்சி கொள்ளவில்லை. பழைய நாட்களாயிருந்தால், “என்னைக் கொலை செய்யும் மனிதர்கள் இருக்கிறார்களா?” என்று திமிரோடு எண்ணியிருக்கும் அவன் மனம். இன்றோ, ‘நான் என்றால் எனது உடல் அன்று. நான் என்பது எனது ஆன்மா. ஆன்மாவை எவராலும் கொலை செய்ய முடியாது’ என்று சிந்தித்தது அவன் மனம்.

இளங்குமரன் இந்திரவிழாவின் முதல் நாளாகிய அன்று மாலை படைக்கலச் சாலையை சேர்ந்த பெரிய யானை ஒன்றில் ஏறிக் கொண்டு வாதிடுவதற்காக உயர்த்திய கொடியுடனே புறப்பட்டபோது அவனால் வெற்றி கொள்ள முடியாத வாதத்தையும் முல்லையையும் உடன் கொண்டு வாயிலில் வந்து வழி மறித்தார் வீரசோழிய வளநாடுடையார்.

“நலமாக இருக்கிறீர்களா ஐயா? உங்களோடு கதக்கண்ணன் வரவில்லையா?” என்று புன்முறுவல் பூத்தவாறு விசாரித்த அவனை நோக்கிச் சீறினார் அவர்.

“நலத்துக்கென்ன கேடு? சாகாததுதான் பெரிய குறை தம்பீ! நீ இன்னும் சிறிது காலம் என்னையும், இந்தப் பெண்ணையும் ஏமாற்றிக் கொண்டு திரிந்தால் அந்தக் குறையும் தீர்ந்துவிடும்.”

அந்தக் கிழவர் தன்மேல் பெருங்கோபத்தோடு வந்திருக்கிறார் என்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. நிர்விகாரமான நோக்குடன் அவன் பக்கத்தில் நின்ற முல்லையைப் பார்த்தான். அவள் வளர்ந்து நிறைந்திருந்தாள். அவன் பார்வையில் நாணிக்குழைந்து முல்லை தலைகுனிந்தாள். இளஞ்சூரியனின் ஒளியோடு திகழும் இளங்குமரன் முகத்தையும் கண்களையும் காணக்கூசின அவள் கண்கள். உலகில் உள்ள அறிவின் பரிசுத்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிரே யானை மேல் அமர்ந்திருக்கக் காண்பதுபோல் அவளுக்குப் பயமாகவும் இருந்தது. இப்போது கொடியை ஏந்திக் கொண்டிருக்கும் அவனுடைய இதே கையில் எத்தனையோ புண்களுக்குத் தன் கைகளால் மருந்து தடவி ஆற்றிய நாட்களை நினைத்துக் கொண்டாள் முல்லை. இந்தக் கைகளையும் தோளையும் தொடுவது விளையாட்டாக இருந்த காலம் போய், தொட நினைப்பது தயக்கத்துக்குரிய காரியமாகி விட்ட நிலையில் தான் இருப்பதை அவள் உணர்ந்தாள்.

வளநாடுடையார் முன்பிருந்ததை விடத் தளர்ந் திருந்தார். தலை நாணற் பூவைப்போல் நரை கண்டு வெளுத்திருந்தது. ஆயினும் எரிந்தாலும் போகாத சந்தனக் கட்டையின் மணம்போல் குடி வழி வந்த வீரக்களை சுருங்கிய முகத்தில் இன்னும் ஒடுங்காமல் விரிந்து தெரிந்தது. சண்டைக்குக் கொடி கட்டிக் கொண்டு வந்து நிற்கும் அவரிடம் இளங்குமரன் அமைதியான முறையில் பேசினான்.

“ஐயா! பட்டி மண்டபத்தில் சமயவாதம் புரிவதற் காக நான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த நகரத்தில் பல நாட்டு அறிவாளிகள் சந்தித்துப் போரிடுவதற்கு இந்திரவிழா நாட்கள்தாம் வாய்ப்பு ஏற்படுத்துகின்றன. நம்முடைய சொந்த விவாதத்தை என்றைக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாமே? நானும் குருகுல வாசம் முடிந்து காவிரிப்பூம்பட்டினத்துக்கே திரும்பி விட்டேன். இனிமேல் நாம் சந்தித்துக் கொள்வதும் அரிய காரியம் இல்லையே...”

“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை தம்பீ! அந்தத் திருநாங்கூர்க் கிழவனும் இந்த ஆலமுற்றத்து மனிதனும் சேர்ந்து உன்னைச் சரியான பித்தனாக மாற்றியிருக்கிறார்கள். உன்னிடம் மிக முக்கியமான செய்தியொன்று பேச வேண்டும்.இந்திரவிழா முடிந்ததும் ஒரு நாள் தனியாக வந்து சேர்” என்று வேண்டா வெறுப் புடன் கூறிவிட்டு முல்லையோடு திரும்பிச் சென்றார் வளநாடுடையார். ஆலமுற்றத்துக் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது, தான் வந்திருப்பது தெரிந்து தந்தையும் மகளும் படைக்கலச் சாலைக்குள்ளும் வந்து சென்றிருக்க வேண்டும் என்று அவர்கள் வரவைப் பற்றி அதுமானம் செய்தான் இளங்குமரன்.

யானையைச் செலுத்திக் கொண்டு இரண்டு மூன்று வீதிகளைக் கடந்து நாளங்காடியை நோக்கித் திரும்பிய போது அவனுடைய பழைய நண்பர்கள் சிலர் கை கோர்த்தபடி எதிரே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. இப்போது அவர்கள் யாவரும் வளர்ந்து உடற்கட்டும் பெற்றிருந்தனர்.

அவர்கள் தன்னை அடையாளம் தெரிந்து கொள்வார்கள் என்ற நினைப்போடு யானையின் நடையை மெதுவாக்கி நிற்கச் செய்தான் இளங்குமரன். ஆனால் அவர்கள் அவனை யாரோ பெரிய ஞானி என்ற வழக்கமான மதிப்புக்காக உற்றுப் பாராமல் மேல் நோக்கிக் கைகூப்பிவிட்டு முன்னே நடந்து சென்றார்கள். அவனுக்கு அவர்கள் எல்லாரையும் எல்லாவற்றையும் நினைவிருந்தது. அவனை அவர்கள் எல்லாருக்கும் நினைவில்லை. அவன் மாறியிருந்தான். எதிரே வருகிறவர்கள் செலுத்திய வணக்கங்களையும் மதிப்புகளையும் தன் குருவின் பிரதிநிதியாயிருந்து அவர்கள் சார்பில் வாங்கி அவற்றை அவருக்கே அனுப்பி வைக்கப் பட்டதாகப் பாவித்துக் கொண்டு சென்றான் அவன்.

தெருத் திருப்பங்களிலும், நான்கு வீதிகள் சந்திக்கும் சதுக்கங்களிலும் இளைஞர்கள் பலப்பரீட்சை செய்து கொள்வதற்காகக் கிடந்த இளவட்டக் கற்களைக் கண்ட போது மனத்துக்குள் சிரித்துக் கொண்டான் இளங்குமரன்.

யானை நாளங்காடியை அடைந்தபோது வானில் நிலா எழுந்தது. ஒரு கையில் மதுக் கலயத்தையும் இன்னொரு கையில் இளம் பருவத்தினளான ஆடல் மகள் ஒருத்தியையும் பற்றிக் கொண்டிருந்த களி மகன் ஒருவன் வந்து இளங்குமரனை வளைத்துக் கொண்டான்.

“இந்த உலகம் பொய். உயிர்கள் பொய். இதை எவரும் படைக்கவில்லை. மதுவினால் உண்டாகும் மயக்கம் போலப் பஞ்ச பூதங்களின் மயக்கம் இது. இதற்குக் காரணமும் இல்லை. காரணனும் இல்லை” என்று மது வெறியில் உளறிய அந்தப் பூதவாதிக்குப் பதில் சொல்லாமல் சிரித்தான், இளங்குமரன். இந்திர நீலம்போல் இருண்ட கூந்தலும், வெறியிற் சிவந்த கண் களுமாக அந்தக் களிமகனின் பிடியிலிருந்த கணிகைப் பெண், “நீ என் அன்பனுக்குப் பதில் சொல்ல முடியாமல் தோற்றாய்!” என்று இளங்குமரனை நோக்கிக் கைகொட்டிச் சிரித்தாள்.

‘தன் உணர்வோடு பேசாதவர்களுடைய வாதத்தைச் செவிமடுத்து மறுப்பதுதான் தோல்வி. உங்கள் வாதத்துக்கு நான் மறுமொழி கூறாமலிருப்பதனாலேயே நீங்கள் எனக்குத் தோற்றீர்கள்’ என்று எண்ணிச் சிரித்துக் கொண்டே மேலே சென்றான் இளங்குமரன். அந்தப் பெண்ணும், களிமகனும் முகத்தைக் கோணிக் கொண்டு அவனுக்கும் அவன் அமர்ந்திருந்த யானைக்கும் அழகு காண்பித்துச் சிரித்தார்கள். இப்படி விடரும், தூர்த்தருமான களிமக்கள் பலர் நாளங்காடியில் சுற்றிக் கொண்டிருப்பது வழக்கம்தான். இந்திரவிழா நாட்களில் இந்தக் கீழ் மக்களைச் சாதாரண நாட்களிலும் அதிகமாகக் காணலாம்.

நாளங்காடியிற் முன்பு ஒரு காலத்தில் தன்னை நிற்கச் செய்து மணிமார்பன் என்ற பாண்டிய நாட்டு ஓவியன் சித்திரம் தீட்டிய மரத்தருகில் வந்ததும், அந்த நினைவால் கவரப்பட்டு அங்கே யானையை ஒரு கணம் நிறுத்தினான் இளங்குமரன். அன்றிருந்தது போலவே அந்த மரத்தில் முல்லைக்கொடி புதராகப் படர்ந்திருந்தது. அதன் கீழே ஓர் அழகிய இளைஞன் மனைவியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

யானை அருகே வந்து நின்றதும் பயந்தாற்போல் எழுந்தார்கள் அவர்கள். அப்படி எழுந்தபோது அந்த இளைஞனின் முகத்தை நன்றாகப் பார்த்த இளங்குமரன். சற்றே வியப்புடன் “மணிமார்பா” - என்று மெல்லக் கூப்பிட்டான். திகைப்போடு அண்ணாந்து பார்த்தனர் அந்த இளைஞனும் அவன் மனைவியும். இளைஞனுக்கு யானை மேலிருந்த இளங்குமரனைப் புரிந்து கொள்ளச் சிறிது நேரமாயிற்று. புரிந்ததும் அவன் ஆவல் மேலிட்டவனாகப் பேசலானான்: “ஐயா! வணங்குகிறேன். இவள் என் மனைவி. ஊர் திரும்பிய சில நாட்களில் எனக்குத் திருமணமாகிவிட்டது. மனைவியோடு மீண்டும் இந்திரவிழாப் பார்க்க இங்கே வந்தேன். இந்த இடத்துக்கு வந்ததும் பழைய நினைவுகள் எல்லாம் எழுந்தன. அந்தப் பழைய கதையைத்தான் இப்போது இவளிடம் கூடச் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் எப்படியோ மாறிவிட்டீர்களே! முதலில் எனக்கு அடையாளமே தெரியவில்லை. இவ்வளவு குறிப்பாக நம் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது யார் என்று பார்த்தால் நீங்கள் யானைமேல் உட்கார்ந்திருக்கிறீர்கள்.”

“சித்திரக்காரனுக்குக் கூடப் பழகிய முகம் மறப்பதுண்டோ, மணிமார்பா? பார்த்த முகங்களையெல்லாம் நினைவிலும் கண்ணிலும் பதிய வைத்துக் கொள்கிற கலை அல்லவா உங்களுடையது.”

“மறந்தது என் தவறு இல்லை ஐயா, இவள் வந்த பின்புதான் இப்படி ஆகிவிட்டது. தன் முகத்தைத் தவிர வேறு எதுவும் எனக்கு நினைவில் தங்காமல் செய்து விட்டாள் இந்தப் பொல்லாத பெண்” - என்று மனைவியை வம்புக்கு இழுத்தான் மணிமார்பன். அந்தப் பெண்ணின் அழகிய கன்னங்களில் நாண ரேகைகள் நளினமாக ஓடின. இளங்குமரன் சிரித்தபடி மணிமார்பனை மேலும் கேட்டான்:

“மறுபடியும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு பயப்படாமல் இந்த நகரத்துக்குள் நுழையும் தைரியம் உனக்கு எங்கிருந்து கிடைத்தது அப்பனே?”

“இவளுடைய கண்களிலிருந்து” என்று மனைவியைச் சுட்டிக் காண்பித்தான் மணிமார்பன். சித்திரக்காரனுக்கென்றே பிறந்த எழிலோவியம் போன்ற அந்தப் பாண்டி நாட்டுப் பெண் மேலும் நாணமடைந்தாள்.

“இவரை வணங்க வேண்டும். பெண்ணே! ‘உன் பெயருக்குப் பொருத்தமாக மார்பில் மணிமாலை அணியச் செய்கிறேன்’ -என்று இந்த மனிதர் அன்றைக்கு என்னை வாழ்த்திய வாழ்த்துக்கள்தாம் எனக்கு இன்று இந்த வாழ்வை அளித்திருக்கின்றன” என்று தன் மனைவியிடம் உணர்ச்சி பொங்கக் கூறினான் மணிமார்பன். அந்தப் பெண் தரை மண் தோய வீழ்ந்து இளங்குமரனை வணங்கினாள். மணிமார்பனும் சேர்ந்து வணங்கினான். கொடியைச் சற்றே இடக்கரத்துக்கு மாற்றிக் கொண்டு யானை மேலிருந்தே அவர்களை வாழ்த்தினான் இளங்குமரன். வாழ்த்திவிட்டு வாழ்த்திய கையை அப்படியே வைத்துக் கொண்டு, “என்னுடைய மனத்திலும் உடம்பிலும் சத்துவ குணமும், சத்துவ குணத்துக்குரிய தூய இரத்தமும் ஓடாத காலத்தில் இதே கையினால் உன்னை ஒரு முறை அறைந்தனுப்பியிருக்கிறேன். மணிமார்பா! அதை நீ மறந்து என்னை மன்னித்திருப்பாய் அல்லவா?” என்று கேட்டான் இளங்குமரன்.

“பழைய புண்ணைக் கீறாதீர்கள். அது முன்பே ஆறிவிட்டது” என்று கைகூப்பினான் ஓவியன். அந்த இளங் காதலர்களுடைய மகிழ்ச்சி உரையாடலைத் தான் தலையிட்டு அழித்திட விரும்பாமல் மேலே புறப்பட்டான் இளங்குமரன்.

அப்போது, “ஐயா! இந்திரவிழா முடிந்து ஊருக்குப் போவதற்குள் நானும் என் மனைவியும் ஆலமுற்றத்துக்கு ஒருநாள் வருகிறோம். அந்தப் பெரியவர் அன்று என்னைக் காப்பாற்றித் தக்க வழித்துணையோடு பாண்டிய நாட்டுக்கு அனுப்பியிராவிட்டால் இன்று நான் இப்படி மங்கல வாழ்வு வாழ முடிந்திராது. அவரையும் பார்த்து வணங்க வேண்டும்” என்றான் மணிமார்பன்.

“ஆகா, அவசியம் வாருங்கள்” என்று கூறிவிட்டு யானையைச் செலுத்திக் கொண்டு சென்றான் இளங்குமரன். பூதச் சதுக்கத்துக்கு எதிரே வந்தபோது கூட்டத்தின் நெருக்கடியினால் ஒரு தேரும் அவனுடைய யானையும் ஒன்றிற்கொன்று விலகி வழிவிட முடியாமல் எதிரெதிரே நின்றன. நெருக்கடி தீரட்டும் என்று சிறிது நேரம் காத்திருந்தான் அவன். வழி விலகலாம் என்ற நிலை ஏற்பட்ட பின்பும் எதிரேயிருந்த தேர் விலகாமல் நிற்பதைக் கண்டு அதிலிருந்தவர்களைப் பார்த்தான் இளங்குமரன். அதிலிருந்தவர்கள் தேரை நிறுத்திக்கொண்டு தன்னைச் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை யாரென்று இன்னும் நன்றாகப் பார்த்தான். அவர்கள் யாரென்று விளங்கிக் கொண்டுகூட அவன் மனம் அமைதி யிழக்கவில்லை. முகம் மலர்ச்சி இழக்கவில்லை.

“வழியை விடுகிறீர்களா? போக வேண்டும்?” என்றான் இளங்குமரன்.

“நன்றாகப் போகலாமே! உங்கள் வழியை நாங்கள் ஒன்றும் இடுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கவில்லையே?”

இந்தப் பதிலைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான். “இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்க்க முடிந்தாலும் நீங்கள் பிறர் வழியை மறித்துக் கொண்டிருப்பது உங்களுக்கே தெரியும். ஆனால் உங்களுக்குத்தான் ஒரு கண் இல்லையே?”

இதைக் கேட்டுக் கீழே தேரின் முன்புறம் நின்று கொண்டிருந்த நகைவேழம்பரின் ஒரு கண்ணும், பின்புறமிருந்த பெருநிதிச் செல்வரின் இரண்டு கண்களும் சினத்தால் சிவந்தன
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
2. அறிவுப் போர்க்களம்
இடையீடின்றி நெருங்கி வளர்நத பசும் புல்வெளியில் பால் குடம் சரிந்தது போல் நாளங்காடியின் அடர்ந்த மரக் கூட்டங்களுக்குள்ளே நிலவு கதிர் பரப்பிக் கொண்டிருந்தது. எதிர்ப் பக்கத்தே வழியை மறித்தாற் போல் நின்ற தேரிலிருந்து தன்னைச் சினத்தோடு நோக்கிய நகைவேழம்பரையும் பெருநிதிச் செல்வரையும் சிரித்துக் கொண்டே பார்த்தான் இளங்குமரன். அந்தப் பார்வையும் சில கணங்கள்தான். அதன் பின் கூட்டம் விலகி வழி ஏற்பட்டிருந்த வேறு பக்கமாக யானையைத் திருப்பிச் செலுத்திக் கொண்டு சென்றான் அவன். நாளங்காடியில் இன்று சந்தித்த இந்த இருவரும் அவனுடைய மனத்தில் கடுமையான வெறுப்புக்கும் குரோதத்துக்கும் உரியவர்களாக இருந்த காலமும் உண்டு. இன்றோ அவனுடைய மனத்திற்குள் எவர் மேலும் வெறுப் பில்லை; எவர் மேலும் குரோதமில்லை. உருவுடன் கூடிய ஆசைகளும் உருவமற்ற ஆசைகளும் எதுவுமே இல்லை. மேலே மிக உயர்ந்த வானப் பரப்பில் பறக்கும் பறவை சிறகுகளைத் தவிர வேறெந்தப் பாரமும் இல்லாமல் பறந்து செல்வது போல் அவனுடைய நினைவுகளின் போக்குக் கீழேயிருந்து மிக உயரமான இடத்தில் மிக உயரமான மார்க்கத்தில் சென்றது. விருப்பு வெறுப்புக்களில் சாயாத நிலையான மனத்தைச் ‘சமசித்தத்துவம்’ என்று கூறியிருந்தார் நாங்கூர் அடிகள். சமசித்தத்துவத்தை அடைய முயன்று கொண்டிருந்தான் இளங்குமரன். அப்படிப்பட்ட சித்தத்தோடு பார்க்கிற போது உலகமே விசித்திரம்தான்.

சாயவும் கோணவும் செய்யாமல் ஒருநிலைப்பட்ட மனத்தோடு இன்னதைக் காணலாம், இன்னதைக் காணக் கூடாது என்ற சம்பிரதாய எல்லைகளையும் கடந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரிவன எல்லாம் அநுதாபத்துக்கும், பரிதாபத்துக்கும் உரியனவாகவே தென்படுகின்றன. துன்பப்படுகிறவர்கள், இன்பப்படுகிறவர்கள், துன்பமும் இன்பமும் கலந்து படுகிறவர்கள் எல்லாரும் இந்த உலகத்தில் நெஞ்சில் சுகமோ, துக்கமோ எதையோ சுமந்து கொண்டு திரிகிறார்கள். உடம்பையும் பொருட் சுமைகளையும், தேரிலோ, குதிரையிலோ பிறரிடம் கொடுத்தோ சுமக்கச் செய்வது போலச் சுமக்கச் செய்ய முடியாதது நெஞ்சின் சுமை. நினைப்பதைச் சொல்ல இயலாமல் சுமப்பதைத் தவிர்க்க முடியாமல் குழந்தையின் துன்பம் போல் தனக்குற்றதைச் சொல்ல மொழியின்றிச் சொன்னாலும் அவற்றுக்கு உணர்த்தும் ஆற்றலின்றித் தவிப்பது ஒப்ப இந்திர விழாக் கூட்டத்தில் தெரிந்த முகங்களில் எல்லாம் தான் இரங்குவதற்கான ஏதோ ஒர் உணர்வைத் தேடிக் கொண்டிருந்தான் இளங்குமரன். சுகத்தைச் சுமந்தால் என்ன? துக்கத்தைச் சுமந்தால் என்ன? சுமை என்னவோ சுமைதானே? சுமைக்கு உள்ளடங்கிய பொருள் உப்பானாலும் வெல்லமானாலும், சுமக்கிறவனுக்குக் கனமான சுமையாவது போலத்தானே நினைவுகளும்? உப்புச் சுமையை விட வெல்லச் சுமை அதிகமாகக் கனத்தாலும் கனக்கலாம்.

‘மதுவிலிருந்து பிறக்கும் மயக்கம் போல ஐம்பெரும் பூதங்களின் மயக்கமே இந்த உலகம்’ என்று வெறியுடன் கூறிக் கொண்டு வந்த அந்தக் களிமகனிலிருந்து, கனல் பொறி பறக்கும் பார்வையால் தன்னை எரித்துவிடுவது போலப் பார்த்த நகைவேழம்பர், பெருநிதிச் செல்வர் வரை எல்லாருடைய நெஞ்சிலும் சுமை இருப்பது இளங்குமரனுக்கு விளங்கிற்று. ஆசையாக இருக்கிறவரை அதுவே ஒரு சுமை. ஆசை நிறைவேறி விட்டால் ‘நிறைவேறி விட்டது’ என்று நினைத்து நினைத்துப் பூரிக்கும் திருப்தியே ஒரு சுமை. எண்ணியது நிறைவேறா விட்டால் நிராசையும், அதனால் ஏமாற்றம் உண்டாவதும் சுமையே. ஆகாயத்தில் பறக்கும் பறவையைப் போல நெஞ்சில் சுகதுக்கச் சுமையில்லாத நாங்கூர் அடிகளைப் போன்றவர்களே உயர்ந்த நினைவுகளில் சஞ்சரிக்க முடிகிறதென்று எண்ணினான் இளங்குமரன். அவருடன் பழகிய பயனாலே தனக்கும் அந்த நிலை ஒரளவு வந்ததெனவும் நம்பினான்.

இப்படிச் சிந்தனையில் ஆழ்ந்த மனத்தோடு யானையைச் செலுத்திக்கொண்டு நான்கு பெரிய வீதிகள் சந்திக்கும் நாளங்காடிச் சதுக்கத்துக்கு வந்திருந்தான் அவன். அந்த இடத்தில் அவன் வெற்றி கொள்ள வேண்டிய போர்க்களம் காத்திருந்தது. அங்கே பல்வேறு சமயங்களைச் சேர்ந்த அறிஞர்கள் பிறரை வாதத்துக்கு அழைக்கும் கோலத்தில் கொடி கட்டிக் கொண்டு கூடி யிருந்தார்கள். எங்கும் அறிவொளிரும் கண்கள். சுவடிகள் நிறைந்த கைகள். எதிர்த்து வாதம் புரிவதற்காக மற்றவர்களை அழைக்கும் கொடிகள். வாதிடுபவர்களின் திறமையைக் காண்பதற்காகக் கூடியிருந்தவர்களின் முகங்களில் எல்லையில்லாத ஆர்வம் தெரிந்தது. யானையிலிருந்து கீழிறங்கி கொடியும் கையுமாக, அந்த ஞான வீதிக்குள் நுழைந்தான் இளங்குமரன். அங்கிருந்த வயது மூத்த அறிஞர்களுக்கு நடுவே பேரெழில் நம்பியாகிய இளைஞன் ஒருவன் கொடி ஏந்திய கையினனாக நுழைந்தவுடன் கூடியிருந்த காவிரிப்பூம்பட்டினத்துப் பொது மக்களுக்கு ஆர்வம் பெருகிற்று. இனிமேல் இங்கே சுவையான நிகழ்ச்சிகளைக் காணப்போகிறோம் என்பது போன்ற உற்சாகமும் அவர்களுக்கு உண்டாயிற்று.

“இந்தப் பெரிய உலகம் முழுவதும் படைப்புக்கு முழு முதற் காரணனாகிய தேவன் ஒருவன் இட்ட முட்டை. படைப்புக்கு நல்வினை தீவினைகள் காரணமில்லை; தேவன் ஆணை ஒன்றே போதும்” என்று தனது கொடிக்குக் கீழே நின்று இரைந்து கூவிக் கொண்டிருந்த ஒரு பிரமவாதிக்கு முன்னால் போய் நின்றான் இளங்குமரன்.

ஒளிமயமான உடலோடு கந்தருவருலகத்து இளைஞன் ஒருவன் போல எதிரே வந்து கொடியை ஊன்றிக் கொண்டு நிற்கும் இளங்குமரனைக் கண்டவுடன், அந்தப் பிரமவாதி தான் திரும்பத் திரும்பக் கூறிக் கொண் டிருந்தவற்றை நிறுத்திவிட்டு அவனை உற்றுப் பார்த்தார். அவருடைய பார்வையைக் கண்டு இளங்குமரன் புன்னகை பூத்தான்.

“உச்சந் தலையில் இருந்து உள்ளங் கால் வரை தேடுவதுபோல என்னிடம் எதைப் பார்க்கிறீர்கள், ஐயா?”

“எதையா? பார்க்க வேண்டியதைத்தான் பார்க்கிறேன். நீயோ இளம் பிள்ளையாகத் தோன்றுகிறாய். காற்றாடியைப் பறக்கவிட்டு மகிழ வேண்டிய கைகளில் கரையில்லாத ஞானத்தின் சின்னமாகிய இந்தக் கொடியை ஏந்திக் கொண்டு வந்து நிற்கிறாய். என்னைக் காட்டிலும் குறைந்த அறிவுள்ளவர்களோடு நான் வாதிடுவது ஏகதேசம்* என்னும் தருக்கக் குற்றமாகி விடுமே?”

* வாதி - பிரதிவாதி இருவரில் ஒருவரது பலக்குறைவு

“ஞானத்தின் நிறைவையோ குறைவையோ தோற்றத்திலிருந்தும் பருவத்திலிருந்துமே தெரிந்து கொண்டுவிட முடியுமா? முடியுமானால் காட்சியைத் தவிர மற்ற அளவைகள் எல்லாம் பொய்யாகி விடுமே? காட்சியே அளவையும் துணிவும் ஆனால் எனக்கு நீங்கள் சொன்ன அதே தருக்கக் குற்றத்தை உங்களுக்கும் நான் சொல்லலாமே. ஊன்றுகோலை ஊன்றித் தொண்டு கிழவராய்த் தள்ளாடி நடக்க வேண்டிய முதிய வயதிலே தளர்ந்த கைகளில் கொடியோடு நிற்கிறீர்களே? ஊக்கமும் உற்சாகமும் கற்ற நூல்களின் எந்தப் பகுதியிலும் எந்த விநாடியிலும் மனத்தை இணைத்து கொள்ள முடிந்த ஞாபகமும் உள்ள இளைஞனாகிய நான், மூப்பினால் இவற்றையெல்லாம் இழந்திருக்கும் உங்களோடு வாதம் புரிய விரும்புவதும் ஏகதேசம் என்னும் தருக்கக்குற்றம் ஆகுமே. பசுவின்கால் குளம்பைக் காட்டிலும் அதற்குப் பின்னால் முளைத்த கொம்பு வலியதாவதுபோல் முன் தோன்றியதனினும் பின்தோன்றியது வலிமையுடையதென்னும் நியாயமும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே...?”

இதைக் கேட்டபின் கண்களை அகலவிரித்து இளங்குமரனை வியப்போடு பார்த்தார் அந்தப் பிரமவாதி. ‘யாரோ சிறுபிள்ளை, தன்னை வம்புக்கு இழுக்க வந்திருக்கிறான்’ என்று நினைத்ததற்கு முற்றிலும் மாறாக எதிரே நிற்பவன் பழுத்த ஞானமும் தருக்க நியாய வழிகளில் நல்ல தேர்ச்சியும் உள்ளவன் என்று அறிந்ததும் தன்னுடன் அறிவுப் போரிட வந்திருப்பவன் தனக்குச் சரியான எதிரிதான் என்ற நிறைவோடு அவர் வாதிட முன் வந்தார்.

“பால் தயிராவது போலப் பிரமமே உலகமாகத் திரிந்து ஆக்கம் பெற்றிருக்கிறது. உயிர்களுக்கு நல்வினை, தீவினை இரண்டும் முதல்வனாகிய இறைவன் ஆணையினால் வருமென்பது பொருந்தாது. உலகத்து மக்கள் ஒன்றைச் செய்வதற்குக் கருவியும், துணைக் கருவிகளும் வேண்டி நிற்றல் போல இறைவனுக்கு இவ்வுலகைப் படைக்கும் காலத்தில் துணைக் கருவிகள் வேண்டியதில்லை. வேண்டும் என்றால் முழு முதலாகிய இறைவனின் சுதந்திரத்திற்கு அது இழிவாகும் அல்லவா?” என்று பரிணாம விவாதத்தைத் தொடங்கினார் பிரமவாதி.

“நீங்கள் கூறுவது பொருந்தாது. இருவினைகள் துணைக் கருவிகளாகவே அமையும். பிறவி வினையினால் வந்தது, வினைக்கு விளைவாகியது. நல்வினைக்குப் பயன் இன்பம்; தீவினைக்குப் பயன் துன்பம். பயன்களை நுகர்வதற்குப் பிறந்தே ஆக வேண்டும். பழத்தினுள் அடங்கிய வித்துக்கள் மீண்டும் முளைப்பது போல வினைகள் பழுத்த பின் பயன் தோன்றுவது தவறாது. புனருற்பவமாகிய மறுபிறப்பில் வினைவித்துக்கள் முளைக்கும். ஒரு நகரத்து அரசன் தன் நகரத்தைக் காப்பதற்குக் காவலர்களை நியமிப்பதுபோல இறைவனுடைய நியமனம் பெற்று இரு வினைகள் ஆணை நடத்தும். ஆகையினால் உங்களுடைய பரிணாம வாதத்துக்குப் பொருள் இல்லை. எந்தவிதமான பயனும் இல்லை.”

“நல்லது! அப்படியானால் நீ இதற்குப் பதில் சொல்! வினைகள் உண்டு என்பதற்கும் அவை உயிர்க்குப் பயனாகத் தொடரும் என்பதற்கும் அவை முதல்வன் ஆணையால் நடக்கும் என்பதற்கும் சான்று என்ன? உள்ள பொருளானால் அப்பொருள் தோன்ற வேண்டும். வினைகளுக்குத் தோற்றம் ஏது?”

“தோற்றமற்றவையெல்லாம் இல்லாப் பொருள்கள் என்பது உங்களுடைய முடிவானால் இந்த உலகமாகிய முட்டையை இட்டவனாக நீர் கூறும் தேவன் தோன்றாமையின் இல்லாதவனாவான். இல்லாப் பொருள்கள் எல்லாம் தோற்றமுடையனவும் அல்ல, தோன்றாப் பொருள்களெல்லாம் இல்லாதனவும் அல்ல. உள்ளதாவதொரு பொருளை மறுப்பதற்கே இல்லை என்னும் சொல் பயன்படும். ஆகையினால் நீர் இல்லையென்று மறுப்பதனாலேயே அது உள்ளதாகின்றது. பொருள் தோன்றிய பின்பே அதற்குக் குணந்தோன்றும் என்பது தருக்க நூல் முடிவாதலால் ‘வினைகள் இல்லை’யென அவற்றுக்கு இன்மையாகிய குணத்தை நீர் கற்பிக்கத் தொடங்கியதனாலே அதற்கு முன்பே அவை உள்ளனவாகக் கருதி உடன்பட்டீர். முற்பிறவியில் சேர்த்த வினைகளில் அப்போதே நுகர்ந்தவை போக எஞ்சிய வினைகள் ‘சஞ்சிதம்’ எனப் பெயர் பெறும்.

“ஆசைப்பட்டு அடைந்த இன்பமும் இன்பப்பட்டு அடைந்த ஆசைகளுமாக விருப்பம் அடங்காமல் வளர்வதைப் போலத் துன்பப்படுவதனால் பெற்ற ஆசைகளும் ஆசைப்படுவதனால் பெற்ற துன்பங்களுமாக வினைகள் உயிருக்குப் பயனாகத் தொடரும் இயல்பின. சூதாடுகிறவர்கள் சூதில் பொருளை இழக்க இழக்க, இழந்தவற்றைப் பெறுவதற்காக மேலும் அவ்விளையாட்டின் மேல் பெருங்காதல் கொள்வர். இழந்தவற்றைப் பெற்ற பின்பும் மேலும் மேலும் பெறுகிற ஆசையால் காதல் பெருகும். ஆகவே சூதாடுகிறவர்களுக்குத் தோற்றுத் துன்பப்படுகிற போதும் ஆசை; வென்று இன்பப்படுகிற போதும் ஆசையே. ஆசையாகிய துன்பமும், துன்பமாகிய ஆசையும் மாறி மாறி நிலவும் சூதாடுமிடம்போல உயிர்கள் ஏதாவதொரு வினை எஞ்சி நிற்கும் படியே தொடரும்.

  • ‘இழத்தொறு உம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழந்தொறுஉம் காதற்று உயிர்’

  • என்ற ஆன்றோர் வாக்கை நீரும் கேள்விப்பட்டது உண்டு அல்லவா? காந்தத்துக்கு நேராக இரும்பைப் பிடிக்கும் போது அந்தக் காந்தமே இரும்பை வலித்து இழுத்துக் கொள்ளுதல் போல இறைவன் துகர்வித்தலாலே வினைப் பயனை உயிர்கள் நுகரும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்...”

    என்று இளங்குமரன் கூறி விளக்கியபோதில் மேலே அவனிடம் என்ன கேட்பது என்று தோன்றாமல் தடு மாறினார் அந்தப் பிரமவாதி. அவர் தலை குனிந்தார். ஏதேதோ சுவடிகளைப் புரட்டினார். மீண்டும் சுவடிகளைக் காட்டிவிட்டு நிமிர்ந்தார். ஏதோ கேட்கத் தொடங்கிவிட்டுக் கேள்வியை முடிக்காமலே மறுபடி தலைகுனிந்தார். அப்போது குனிந்த அவருடைய தலை மீண்டும் நிமிரவே இல்லை. சுற்றிலும் கூடியிருந்த பெரு மக்களிடமிருந்து நாவலோ நாவல் என வெற்றிக் குரல் முழக்கம் எழுந்தது. அந்த முழக்கம் மேலே எழுந்து ஒலிக்கத் தொடங்கிய அதே நேரத்தில் அவருடைய கொடி கீழே விழுந்தது.

    இளங்குமரன் அந்த வெற்றியின் செருக்கில் தன் மனம் கனத்துப் போகாமல் குருவை தியானித்துக் கொண்டு சுற்றிலும் ஒலித்த வாழ்த்தொலிகளைக் கேட்பதிலும் உணர்வதிலும், உதாசீனனாகி மேலே நடந்தான்.

    உலகத்துப் பொருள்களின் பொதுத்தன்மை, சிறப்புத் தன்மை, கூட்டத்தன்மை ஆகியவற்றை விவரித்துக் கொண்டே ‘வைசேடிகன்’ ஒருவன் இளங்குமரனுக்கு முன்னால் வந்து தன்னுடைய கொடியை நட்டான். காது செவிடுபடும்படி உரத்த குரலில் பேசினான் அவன். .

    “பொருள்களிலே நீர், ஒலி, ஊறு, உருவம், சுவை ஆகிய நான்கு குணங்களை உடையது. தீ ஒலி, ஊறு, உருவம் ஆகிய மூன்று குணங்களை உடையது. காற்று, ஒலி, ஊறு ஆகிய இரண்டே குணங்களை உடையது. ஆகாயம் ஓசைக் குணம் ஒன்றே உடையது” என்று செவிகளைத் துளைக்கிறாற் போன்ற பெருங்குரலில் ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பக் கத்தினான் அந்த வைசேடிகன். அவனைப் பார்த்து, “இப்போது இந்தக் கணமே ஆகாயம் தனது ஓசைக் குணத்தை இழந்து விட்டது, ஐயா!” என்று சொல்லி மெல்லச் சிரித்தான் இளங்குமரன். “ஏன்? எப்படி இழந்தது?” என்று வைசேடிகன் வெகுண்டு கேட்டபோது, “ஆகாயத்தின் ஓசைக் குணம் அவ்வளவும் இப்போது உங்களுக்கே வந்துவிட்டது. இல்லாவிட்டால் இவ்வளவு பலமாகக் கத்துவீர்களா?” என்று நிதானமாகச் சொல்லிக் கூட்டத்தில் சிரிப்பலைகளை எழச் செய்தான் இளங்குமரன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3. வன்னி மன்றம்

இந்திரவிழாவின் காரணமாக அறிஞர்கள் ஒன்று கூடியிருந்த நாளங்காடிச் சதுக்கத்தில் தன்னை எதிர்ப்பவரைத் தலைகுனியச் செய்யும் இணையில்லாத ஞானத்தோடு இளங்குமரன் சமயவாதம் புரிந்து கொண்டிருந்த இதே சமயத்தில் பூம்புகாரின் வேறொரு பகுதியில் அவனை அழித்து ஒழிப்பதற்குச் சமயத்தைத் தேடி வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இரண்டு மனிதர்கள்.

புறநகரில் சக்கரவாளக் கோட்டத்து மதிலருகே நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் தாங்களிருவரும் ஏறி வந்திருந்த தேரை நிறுத்திவிட்டுப் பேசியவாறே நடந்து கொண்டிருந்தார்கள். பூதம் நின்ற வாயிலில் மேல் நோக்கி வானளாவ நிற்கும் பூதச் சிலையின் தலையிலே சூட்டினாற்போல் நிலவின் ஒளி பரவிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் அவர்கள் இருவரையும் தவிர வேறு மனித சஞ்சாரமே இல்லை. நகரமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மாபெரும் திருவிழா தொடங்கியிருக்கும் போது சுடுகாட்டுக் கோட்டத்துக்குப் போகிற பாதையில் வேறு யார்தான் வருவார்கள்?

பெருநிதிச் செல்வர் ஆத்திரம் அடைந்தாற் போன்ற கண்டிப்பான குரலில் நகைவேழம்பரிடம் பேசிக் கொண்டு வந்தார்.

“உலகத்தையெல்லாம் ஏமாற்றுகிற சாமர்த்தியத்தை வைத்துக் கொண்டு நீரே சில சமயங்களில் பிறரிடம் ஏமாந்து விடுகிறீர் நகைவேழம்பரே! இந்தப் பிள்ளையாண்டான் துறவியாகி எங்கோ கண்காணாத நாடுகளுக்குச் சென்றுவிட்டதாகக் கூறினிரே. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் இப்படிக் கொடி சுமந்த தோற்றத்தோடு யானைமேல் அமர்ந்து இவன் இங்கே வருவானென்று நீர் எதிர்பார்க்கவில்லையோ? சாதுரியமாக வாழ விரும்புகிறவன் தங்களுடைய வழிகளில் வேண்டாதவர்களுடைய குறுக்கீட்டை எந்தக் கணத்திலும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

“உமக்கும் எனக்கும், நிர்ப்பயமான வாழ்க்கை சாகின்ற வரையில் இருக்க முடியாது. பயமுறுத்தி வாழ வழி செய்து கொண்டவர்கள் பயந்து பயந்து வாழ்வது தான் நியதி. பிறரை அலற அலற, அழ அழப் பயமுறுத்திய நாட்களை நீரும் மறந்திருக்க மாட்டீர்; நானும் மறக்கவில்லை. உம்முடைய திறமையை யெல்லாம் செலவழித்து இரண்டு முறை இந்தப் பிள்ளையாண்டானைக் கொலை செய்ய முயன்றீர். முடியவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே இந்திர விழாவின் முதல்நாள் இரவில் சம்பாபதி வனத்தில் இவனையும் இவன் வளர்ப்புத் தந்தையையும் சேர்த்து அழித்துவிடுவதற்காக முரட்டு நாகர்கள் இருவரை ஏவினோம். முடியவில்லை. பின்பு இவனும் இவனை வளர்த்த அருட்செல்வரும் தங்கியிருந்த தவச்சாலைக்குத் தீ வைக்க ஏற்பாடு செய்தோம். அந்த ஏற்பாட்டிலும் அருட்செல்வ முனிதான் எரிந்து சாம்பலானார். இந்தப் பிள்ளை அப்போது தவச் சாலையில் இல்லாததால் தப்பிவிட்டான். இவன் சாகாமல் வளர்ந்து நமக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்பது தான் தெய்வ சித்தம் போலி ருக்கிறது!” என்று பெருநிதிச் செல்வர் கூறியதைக் கேட்டு நகைவேழம்பர் சிரித்தார்.

“தெய்வ சித்தம் என்று ஒன்று இருப்பதாக நம்புகிற அளவு நீங்கள் தளர்ந்து விட்டீர்களே. நம் சித்தபடி இவ்வளவும் நடந்திருப்பதைக் கண்ட பின்பும் உங்களுக்கு எப்படி இந்தப் பிரமை ஏற்பட்டது? எல்லா ரகசியமும் தெரிந்த அந்தக் கிழட்டு முனிவனே மண்ணோடு மண்ணாகிப் போனபின் இந்தப் பிள்ளையாண்டானைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே? முன்பாவது நாலுபேரை அடித்துத் தள்ளுகிற வலிமை இவன் உடம்பில் இருந்தது. இப்போது வெறும் ஏட்டுச் சுரைக் காயாகி விட்டான். தெய்வமில்லை, சித்தமுமில்லை. எல்லாம் நாம் ஆசைப்படுகிற விதமே நடக்கிறது. நடத்துகிறோம், இனியும் நடக்கும்.”

“அப்படித் தடையில்லாமல் நடப்பதனால் தான் எனக்குப் பயமாயிருக்கிறது, நகைவேழம்பரே! யாருக்கும் தெரியாத நேரம் என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்டு திருடினாலும் திருடனுக்குத் தன் செயலில் அதிகமான பயம்தான்! நீடித்து நிலைக்க வேண்டிய காரியத்துக்கு ஒரு தடையும் இல்லாமல் போவதே பெரிய தடை என்பார்கள். நிற்கவும் நிலைக்கவும் ஆசைப்படுகிற காரியத்துக்குத் தடையின்மையே அவலட்சணம். யாரும் சந்தேகப்படாமல் இருப்பதைப் பார்த்தே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. யாரும் எதிர்த்து வராமல் இருப்பதே எனக்குப் பெரிய எதிர்ப்பாகப்படுகிறது. யாரும் பயமுறுத்தாமல் இருப்பதே எனக்குப் பெரிய பயத்தைத் தருகிறது. போதாத குறைக்கு இந்தப் பிள்ளையாண்டானுக்கு நீலநாக மறவருடைய ஆதரவு வேறு இருக்கிறது. வீட்டுக்குள் அடைத்து விட்டதனால் என் மகள் சுரமஞ்சரியின் ஆதரவு இனி இவனுக்குக் கிடைக்க வழியில்லை.”

“ஒருவேளை வானவல்லியின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்கலாம்” என்று ஒரு வார்த்தைக்காகச் சொல்கிறவர் போலச் சொல்லிச் சிரித்தார் நகைவேழம்பர். பெருநிதிச்செல்வர் கடுமையாக அதனை மறுத்தார்.

“அது ஒருகாலும் சாத்தியமில்லை, நகை வேழம்பரே!”

“சாத்தியமில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எவனுடைய கண்களில் தன்னுடைய ஆசைகள் பிறவாமல் பிறருடைய ஆசைகளைப் பிறப்பிக்கும் ஆற்றல் நிறைந்திருக்கிறதோ அவனுடைய கண்களின் முன் பெண்கள் நிறையிழத்தலைத் தவிர்க்க இயலாது! இந்தப் பிள்ளையின் கண்கள் அத்தகையவை...” என்றார் நகைவேழம்பர்.

இருவருக்கும் வேண்டாத வழியிலிருந்து அந்தப் பேச்சைத் திருப்பினார் பெருநிதிச் செல்வர். “இப்படிப் பார்த்தாலும் இன்னும் இந்தப் பிள்ளையை அழிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. அதை வற்புறுத்தத்தான் இவ்வளவு சொன்னேன் நகைவேழம்பரே!”

“அழிப்பது பெரிய காரியமில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த முயற்சியின் அருகில் போகும் போது எப்படியோ நான் தோற்றுவிடுகிறேன். கடைசியாக இவனை அழிக்கும் எண்ணத்துடன் இவனது ஓவியத்தைப் பலரிடம் கொடுத்தனுப்பிய போதும் இப்படியேதான் ஆயிற்று. ஆலமுற்றத்து முரடனிடம் நான் அடி வாங்கிக் கொண்டு வந்ததுதான் மீதம்.”

“அதெல்லாம் பழைய கதை. இப்போது என்ன செய்யப் போகிறீர் என்று சொல்லும்.”

இதற்குச் சிறிது நேரம் மறுமொழி கூறாமல் இருந்தார் நகைவேழம்பர். அவர் ஏதோ சிந்திப்பது போலிருந்தது.

“உமக்குக்கூட இப்படிச் செயல்களுக்கு எல்லாம் யோசனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதா?”

“யோசனை ஒன்றுமில்லை. இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று திட்டமிட்டேன். தேர் இங்கேயே நிற்கட்டும். வாருங்கள் நடந்தே உட்பக்கம் போய் வரலாம். இந்தக் காரியத்தைப் ‘பைரவி’ மூலமாகச் செய்தால் நினைத்தபடி முடியும். இப்போது போனால் சுடுகாட்டுக் கோட்டத்தில் வன்னி மன்றத்தின் அருகே அவளைச் சந்திக்கலாம்” என்றார் நகை வேழம்பர்.

பைரவி என்ற பெயரைக் கேட்டதும் பெருநிதிச் செல்வரின் முகம் பயத்தினால் இருண்டது.

“பைரவியா, அந்தப் பைசாசத்தையா இப்போது பார்க்க வேண்டுமென்கிறீர்கள்?” என்று தயங்கினார் பெருநிதிச் செல்வர்.

“கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதுபோல் இருந்தால் ஒன்றும் முடியாது. இந்த அகாலத்தில் சுடுகாட்டுக் கோட்டத்தைக் கடந்து போகக் கூசுகிறீர்கள். நீங்கள் கூசினால் கூசிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.”

“நான் ஒன்றும் கூசவில்லை. இதோ வருகிறேன். புறப்படுங்கள்” என்று உறுதியானதொரு தீர்மானத்துக்கு வந்தவரைப்போல முன்னால் நடந்தார் பெருநிதிச் செல்வர். நகைவேழம்பரும் தொடர்ந்தார். சக்கரவாளக் கோட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி நீண்ட தொலைவு நடந்துபோன பின் அடர்ந்த வன்னிமரங்கள் நிறைந்த ஓரிடத்தை அடைந்ததும் இருவரும் நின்றார்கள். அங்கே சுற்றிலும் கபாலங்கள் கிடந்தன. அருவருக்கத்தக்க முடை நாற்றம் வீசியது. சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த கொள்ளித் தீயில் எலும்புகளும் கபாலங்களும் அச்சுறுத்தும் விதத்தில் தெரிந்தன. வன்னிமரங்களின் கீழே அங்கங்கே கபாலிகர்கள் தனியாகவும் கூட்டமாகவும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வெறிக் கூப் பாடுகள் ஒலிப்பதும் அடங்குவதுமாக இருந்தன. மயானத்தின் கோரச் சூழ்நிலை நிலவிய அந்தப் பகுதியின் ஒருமூலையில் தரையோடுதரையாகத் தாழ்ந்து முள் நிறைந்த கொடிகளால் குடிசையைப் போலப் படர விட்டிருந்த வன்னி மரப்பந்தல் ஒன்றின் வாயிலருகே சென்று ‘பைரவி’ - என்று விநயமாகக் குரல் கொடுத்தார் நகைவேழம்பர். முதலில் உள்ளேயிருந்து மறுமொழி இல்லை. பின்பு முன்னிலும் உரத்த குரலில் அதே பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார் அவர். பாய்ந்து வெளியே வரும் அவசரத்தில் வன்னி முட்கள் கீறிய குருதி சாம்பர் பூசிய உடலில் செந்நிறம் காட்டிடக் கையிலிருந்த கபாலம் பயத்தைக் காட்டிட முரட் டுப் பேய்ப் பெண் ஒருத்தி வந்து நின்றாள். அந்தக் கபாலிகப் பெண்ணுக்கு முன் பெருநிதிச் செல்வர் மெய் நடுங்கி நிற்க நகைவேழம்பர் சிரித்தபடியே சுபாவமாகப் பேசுவதற்குத் தொடங்கினார். “நீண்ட நாட்களுக்குப் பின் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறோம் பைரவி! வந்திருக்கிற காரியமும் அவசியமானதுதான்.”

“அது இரண்டு பேரும் சேர்ந்து வந்திருப்பதைப் பார்த்தாலே தெரிகிறதே” என்று சொல்லிக் கோரமாகச் சிரித்தாள் பைரவி.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
4. புகழ் வெள்ளம்

வாழ்நாளெல்லாம் அறிவுப்போரிலேயே செலவிட்டு வெற்றிமேல் வெற்றிபெற்ற பெரு மக்கள் ஒவ்வொருவராகத் தனக்குத் தோற்பதைப் பார்த்தபோது இளங்குமரனுக்குத் தயக்கமாக இருந்தது. வெற்றியை மெய்யின் வெற்றியாகவும் தோல்வியைப் பொய்யின் தோல்வியாகவும் நினைத்து மனம் விகாரமடையாமல் காத்துக் கொண்டான். வாதத்தில் அவன் வென்று முன் னேற முன்னேற ‘நாவலோ நாவல்’ என வெற்றி முழக்கமிடும் புகழ்க் குரல்கள் மிகுந்து ஒலித்தன. கண்களை அகல விழித்து அவனையே தெய்வீக ஆற்றலாகக் கருதிப் பார்க்கும் முகங்கள் அதிகமாயின. பார்க்கிற கண்களில் எல்லாம் பார்க்கப்படுகிற கண்களின் மேல் பக்தி பிறந்தது.

‘அலை அலையாகப் புரண்டு வரும் இந்தப் புகழ் வெள்ளத்தில் நான் நிற்க வேண்டிய எல்லையில் கால்களும் என் மனம் நிற்க வேண்டிய எல்லையில் நினைவுகளும் தரித்து நிற்க முடியாமல் மிதந்து போகும் படி ஆகிவிடக் கூடாது. எல்லையற்ற இந்தப் புகழைப் பார்க்கும்போது எனக்குப் பயமாயிருக்கிறது. படிப்பினால் அழிந்த ஆணவத்தைப் படிப்பின் பயனாகப் பெற்றால், மறுபடியும் அதை எப்படி அழிக்க முடியும். புகழை உணர்வதற்கும், உணர்ந்ததை நினைத்து அநுபவிப்பதற்கும் மனத்தில் பழகியும், பழக்கியும், புகழுக்கே அடிமையாகிவிடாமல் நான் விழிப்பாயிருக்க வேண்டும். புகழில் அழிந்தால் நான் விரைவாக மூப்படைந்துவிடுவேனோ என்று நடுங்குகிறேன். புகழில் மிதந்தாலோ நான் சோம்பற் குணமுடையவனாகி விடுவேனோ என்று அஞ்சுகிறேன். புகழ் என்னுடைய முயற்சிகளை ஒடுக்கிவிடலாம். என் மனம் இலக்கு வைத் திருக்கின்ற குறிக்கோள்களை மறைத்துப் பொய்யான இலக்குகளையும் காட்டிவிடலாம்...

‘புகழ் வெள்ளத்தின் அலைகளே! சூழ்ந்திருப்பவர் முகங்களிலும் கண்களிலும் என்னை நோக்கி மலரும் பிரசித்திகளே! பிரதாபங்களே! நான் நிறுவிய உண்மைகளைப் போய்ச் சார்ந்து கொள்ளுங்கள்? என்னை விட்டு விடுங்கள்’ என்று, புகழில் மனம் நனைந்து போகாமல் ஆணவத்துக்குக் காரணமான நினைவுகளை விலக்கி விட்டு அவன் நடந்தபோது அவன் விலக்கிய ஆணவங்களே ஓருருவம் ஆனாற் போன்று எதிரே வந்து அவனை வாதத்துக்கு அழைத்தான் ஓர் இளைஞன். அந்த இளைஞனுடைய உருவமும் அவன் பேசிய சொற்களும் நின்ற நிலையுமே இளங்குமரனைத் தடுத்து நிறுத்தின. அவனுடைய தோற்றத்தைப் போலவே சொற்களும் அழகாயிருந்தன.

“உயிர் என்றும் ஆன்மா என்றும் தனியாக எதுவும் இல்லை. என்னுடைய உடம்பே உயிர். அதுவே ஆன்மா. நான் இளைத்தேன். நான் பருத்தேன். நான் கறுத்தேன் - என் உடம்பைச் சுட்டிக் காட்டியே குணங்களும், தொழில் நிகழ்ச்சிகளும் கூறப்படுகின்றன. எனவே தேகமே ஆன்மா என்று நான் கூறுகிறேன். இந்த முடிவை நீ எப்படி மறுக்க இயலும்?” - இப்படித் திமிரோடு பேசினான் அந்த இளைஞன்.

அந்த இளைஞனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னான் இளங்குமரன்: “தம்பீ! உன்னுடைய முடிவே உன் கருத்துக்குப் பெரிய மறுப்பாக இருக்கிறதே, நான் வேறு மறுக்க வேண்டுமா? நீ எந்தக் கருத்தைச் சொல்வதற்குத் துணிகிறாயோ, அந்தக் கருத்துக்கே மாறான முடிவைத் தருகிறது உன்னுடைய சித்தாந்தம். இப்படி வாதத்தைத் தொடங்குவதே ‘அவ சித்தாந்தம்’ என்னும் தருக்கக் குற்றம். ஆனாலும் கேள். உன்னையும் உன் உடம்பையும் இணைத்து வார்த்தையால் கூற வேண்டுமானால் நீ எப்படிக் கூறுவாய்?”

“இது என்ன கேள்வி? ‘எனது உடம்பு’ என்று கூறுவேன், அல்லது ‘என்னுடைய உடம்பு’ என்று கூறுவேன்” என்றான் அந்த இளைஞன்.

“கூறுவாய் அல்லவா? நீயே உடம்பாகவும் உடம்பே ஆன்மாகவும் இருப்பாயானால் என் உடைய - உடம்பு என்று ஏன் உடைமையும் உடையவனும் வேறாக இருப்பதைத் தொடர்புபடுத்திக் கூறுவது போல் பேசுகிறாய்? உன் பேச்சிலிருந்தே உயிர் வேறு உடம்பு வேறு என்பது தெரிகிறதே? உடையவனையும் உடைமையையும் சம்பந்தப்படுத்துகிற தொடர்பு இரண்டு வகை யானது. உடையவனிலிருந்து பிரித்தால் தனித்தும் இயங்குகிற உடைமை, பிரித்தால் தனித்தும் இயங்காத உடைமை என்பனவே அவை. ‘எனது உடம்பு’ என்கிறாய். இதில் உன்னையும் உடம்பையும் தனித்தனியாகப் பிரிக்க இயலாது. எனது வீடு என்று சொல்கிறாய். இதில் உன்னையும் வீட்டையும் தனித்தனியே பிரிக்க இயலும். பிரிக்க முடியாமல் தன்னோடு தானாகவே இணைந்த சம்பந்தத்துக்குத் தற்கிழமை என்றும், பிரிக்க முடிந்த சம்பந்தத்துக்குப் பிறிதின் கிழமை என்றும் பெயர். உடம்போடு ஆன்மாவுக்கு உள்ள சம்பந்தம் தற்கிழமை. இதே நீயே உன்னுடைய சொற்களால் ஒப்புக்கொண்டவன் ஆகிறாய் தம்பீ! சாருவாக மதத்தில் மிக இளம் பருவமாகிய இந்த வய திலேயே உனக்குப் பெரும் பற்று ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது. இளமையில் உன்னைக் கவர்வன வெல்லாம் என்றும் உன்னைக் கவர முடியும் என்று நினைக்காதே. சாருவாகர்கள் அழகிய சொற்களை மட்டுமே காதலிக்கிறார்கள். சொற்களுக்கு அப்பால் அவற்றின் பயனாக உள்ளவற்றைப் பற்றி அவர்கள் நினைப்பதே இல்லை. இரண்டு சொற்களில் விளக்க வேண்டிய கருத்தை இருபது சொற்களால் அடுக்கி விளக்குவது வாதமுறைக்கு முரண்பாடான பிழைகளில் ஒன்று. தேவைக்கு அதிகமான சொற்களைக் கொண்டு எந்தப் பொருளை வற்புறுத்த முயல்கிறாயோ அந்தப் பொருள் அப்படி வற்புறுத்துவதனாலேயே நைந்து போகும். எல்லையை மீறி உண்டாகும் பலமே ஒரு பலவீனம். அதிகமாக முறுக்கப்பட்ட கயிறு அதனாலேயே அறுந்து போவதைப் பார்த்திருப்பாய். ‘சொற் பல்குதல்’ என்பது தருக்கத்தில் குற்றம். அந்தக் குற்றத்தை உன் போன்ற சாருவாகர்கள் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறீர்கள்.”

இவற்றையெல்லாம் கேட்டதும் அந்தப் பிள்ளை எவ்வளவு வேகமாக எதிர்த்து வந்து நின்றானோ அவ்வளவு வேகமாகத் துவண்டு போனான். “தம்பீ! நிறைவடையாத அறிவுக்குப் ‘புல்லறிவு’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். புல்லறிவினால் ஏற்படுகிற ஆண்மை உறுதியானது என்று நம்பி அதையே வாதத்துக்குப் பலமாகக் கொண்டு வாதிடுவதற்கு வரக் கூடாது. மேட்டு நிலத்தில் உள்ள முற்றாத இளம் புல்லைக் கிழட்டுப் பசு மேய்ந்தது போல் நிறைவடையாத நுகர்ச்சியால் வந்த புல்லறிவாண்மை வாதத்துக்குப் பயன் படாது” என்று போவதற்கு முன் அவனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பினான் இளங்குமரன்.

அந்தக் கூட்டத்தில் இப்போது இளங்குமரனுக்கு முன்னால் வந்து நிற்பதற்கே பயப்படுகிறவர்கள் அதிகமானார்கள். இவன் ஞானத்தை நிறைத்துக் கொள்வதற்கான நூல்களை மட்டும் கற்றுக் கொண்டு வரவில்லை. மற்றவர்களை வெல்வதற்கான தவவலிமையையும் சேர்த்துப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறான். இவனுக்கு முன்னால் நிற்கும் போதே நம்மடைய கல்வி குறைபாடு உடையதாக நமக்குத் தோன்றுகிறதே என்று தயங்கினார்கள். வைதிக சாத்திரங்களாகிய மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் ஆகிய ஆறு தரிசனங்களிலும் வல்லவர்கள் பலர் அந்தக் கூட்டத்தில் இருப்பது இளங்குமரனுக்கு விளங்கிற்று. ‘நீருட் கிடப்பினும் கல்லிற்கு மெல்லென்றல் சால அரிதாவதை’ப் போல நூல்களைக் கற்றிருந்தும் அவற்றில் மனம் தோயாத காரணத்தால்தான் அவர்களெல்லாம் மலைத்து நிற்கின்றார்களென்று அவனுக்குப் புரிந்தது. எதிரே வந்து தன்முன் கொடியை நடுவதற்கு இன்னும் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்துக் கொண்டு நின்றான் அவன். யாரும் வருவதாகத் தோன்றவில்லை. இரவு வளர்ந்து நேரமாகிவிட்ட படியால் கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது. நெருங்கி நின்ற பெருங்கூட்டம் கலைந்ததனால் இளங்குமரன் தனது யானையை நிறுத்திவிட்டு வந்த இடத்துக்குப் போவதற்கு வழியில்லை. தேரும் சிவிகையும் குதிரைகளுமாக முந்திக் கொண்டு விரைந்த அந்தக் கூட்டத்தில் இருந்தாற்போல் இருந்து பரிதாப கரமான துயரக்குரல் ஒன்று எழுந்தது. கூட்டத்தில் மிக அருகிலிருந்து எழுந்த அந்தக் குரலை கேட்டு இளங்குமரன் திரும்பினான். கண் பார்வை மங்கி முதுகு கூன் விழுந்து மூதாட்டி ஒருத்தி கூட்டத்தில் திணறிக் கொண்டிருந்தாள். ஊன்றுகோலையே கண்ணாகக் கொண்டு நடந்து கொண்டிருந்த அவள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தினால் நெருக்குண்டு தடுமாறி விழுந்தாள். ஏதோ ஒரு பல்லக்கின் முன் பக்கத்துக் கொம்பைச் சுமந்து கொண்டு வந்த யவனன் ஒருவன் கீழே குனிந்து பாராததனால் கவனக் குறைவாய் அந்த மூதாட்டியை மிதிப்பதற்கிருந்தான்.

அவளைக் கைதூக்கி நடத்திக் கொண்டுபோய் நேரான வழியில் விடுவதற்காக இளங்குமரன் ஓடினான். அந்த முதுமகள் விழுந்த இடத்திலிருந்தவர்களே அதற்குள் அவளைத் துரக்கி விட்டிருக்கலாம், ஏனோ செய்யவில்லை. மிதிப்பதற்கிருந்த பல்லக்குத் தூக்கிக் கூட கீழே பார்த்துவிட்டு அருவருப்போடு துள்ளி விலகுவதையும் இளங்குமரன் கண்டான். சுற்றிலும் இருந்தவர்கள் கூசி விலகுவதையும், கீழே விழுந்திருப்பவளைப் பார்த்து ஏதோ இரைவதையும் கவனித்து இன்னும் வேகமாக நடந்து அவளை அணுகினான் அவன். அருகிற் போனதும் மற்றவர்கள் அவனைத் தடுத்தார்கள்.

“தொடாதீர்கள், அவளுக்குப் பெரு நோய்” என்று பல குரல்கள் இளங்குமரனை எச்சரித்தன. தன் உடம்பின் அழகால் தானே பெருமிதப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இப்படி ஓர் உதவி செய்ய நேர்ந்திருந்தால் அவன் பயந்து பின் வாங்கியிருப்பானோ, என்னவோ? இப்போது அப்படிப் பயந்து பின்வாங்கவில்லை. கையை முன் விரித்துக் குனிந்தான் அவன். அப்படிக் குனிந்தபோது, “ஐயோ! வேண்டாம். கீழே கிடக்கிறவள் உங்களைப் பெற்ற தாயாக இருந்தாலும் தீண்டத்தகாத நோய் இது” என்று இனிய குரல் ஒன்று மேலே பல்லக்கிலிருந்து ஒலித்தது. ஒரு விநாடி அந்தக் குரலுக்குரியவளைப் பார்ப்பதற்காக நிமிர்ந்தான் இளங்குமரன். பார்த்தபோது பார்க்கப்பட்ட முகத்தினால் தானே சிறிது வியப்பு அடைவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. சுரமஞ்சரியா என்று அவன் நாவிலிருந்து மிகவும் மெல்ல ஒலித்த பெயர் அவளுக்குக் கூடக் கேட்டுவிட்டது போலிருக்கிறது. “சுரமஞ்சரி இல்லை. அவளுடைய சகோதரி வானவல்லி” என்று அந்தப் பெண் மறுமொழி கூறினாள். அப்படி மறுமொழி கூறும்போது அவள் முகத்தில் பயத்தின் நிழல் படிந்து மறைவதைக் காண முடிந்தது. அந்த உணர்ச்சி நிழலில் அவள் வேறு எதையோ மறைத்துக் கொள்ள முயல்வது தெரிந்தது. இளங்குமரன் சிரித்துவிட்டு அவளை நோக்கி சொன்னான்:

“அம்மணி! நீங்கள் இதைப் பெருநோய் என்று சொல்லிப் பயப்படுகிறீர்கள். பயப்படுத்துகிறீர்கள்! இதை விடக் கடுமையான பெருநோய் ஒன்று இருக்கிறது. அதை உங்களுக்குச் சொல்லட்டுமா? பிறருடைய துன்பத்தைக் கண்டு மனம் இரங்காமல் தன்னுடைய கெளரவத்தையே நினைத்துக் கூசுகிற மனத்தில், அந்தக் கூச்சம்தான் பயங்கரமான பெருநோய். நெடிய வார்த்தைகளைச் சொல்லிப் பிறரை ஏவியும் கட்டளையிட்டும் ஆள்வதையோ, வேகமாகத் தேரிலும் சிவிகை யிலும் ஏறிப்போவதையோ தான் செல்வத்தின் இலட்சணங்களாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் செல்வமாக நினைப்பது துன்பப்படுகிறவர்கள் மேல் உண்டாகிற அதுதாபத்தையும் உதவி செய்யும் ஆவலையும்தான். மனத்தை அரித்தெடுக்கின்றதனால் ஆசைதான் ‘பெருநோய்’ என்கிறேன் நான். என் கண்களுக்கு முன்னால் இந்தப் பிரபஞ்சத்தில் என்னிலிருந்து அந்நியமாகவும் அயலாகவும் தெரிகிற எல்லா உயிர்களும் எந்தக் கணமும் சிறிது கூடத் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்று - மற்றவர்களுக்குத் துன்பம் வரக்கூடாது என்பதற்காக எனக்குள்ளேயே நான் மனப்பூர்வமாக அஞ்சி அநுதாபப்படுகிற உணர்வு தான் பெரிய செல்வமென நம்புகிறேன். பெற்ற தாயாயிருந்தாலும் தீண்டத் தகாத நோய் இது என்று பயமுறுத்துகிறீர்கள். நான் இந்த உலகத்தை இப்போது பார்க்கிற பார்வையில் எல்லாப் பெண்களிலும் தாயைக் காண்கிறேன். எல்லாத் தாய்களிலும் பெண்ணைக் காண்கிறேனில்லை. எல்லாப் பெண்களிலும் என் தாயைக் காண்கிறேன். என் தாய்மையையே உணர்கிறேன்...”

அவனுடைய தத்துவத்தை இதற்கு மேல் கேட்க விருப்பமில்லாதது போல் அந்த அழகிய முகம் பல்லக்குக்குள் மறைந்தது. உடனே பட்டுத் திரையும் விழுந்து பல்லக்கை மூடியது.

உலகத்திலேயே அதைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சியைத் தரக்கூடிய காரியம் வேறொன்று இல்லாதது போல் சிரத்தையோடு அந்த மூதாட்டியைத் தொட்டுத் தூக்கி ஊன்றுகோலைக் கையில் எடுத்துக் கொடுத்துச் சிறிது தொலைவு தழுவினாற் போலத் தாங்கி நடத்திக் கொண்டு போய், நெருக்கமில்லாத வழியில் அனுப்பி விட்டுத் திரும்பினான் இளங்குமரன். திரும்புமுன் அந்த முதுமகள் கூறிய நன்றியுரை இன்னும் தன் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருப்பதாக உணர்ந்தான் இளங்குமரன்.

“பழுத்துத் தளர்ந்த பாகற் பழம்போல் இமைகள் தொங்கிப் பார்வையை மறைக்கிறதப்பா. நீ யாராயிருந்தாலும் உன்னை ஒருமுறை கண்குளிரப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால் பார்க்க முடியவில்லை. என்னால் உன்னுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லையானாலும் அகத்தைப் பார்க்க முடிகிறது. பிறர்மேல் கருணை கொள்வதையே பெரு நிதியாகக் கருதும் நெஞ்சுக்கு உரியவன் எப்படி இருக்க முடியுமென்று நினைத்து நினைத்து - அந்த நினைப்பு களையே கோடுகளாக இழுத்து என் நெஞ்சில் உன் உருவத்தை எழுதிப் பார்க்கிறேன். அப்படி எழுதிப் பார்க்கும்போது சாந்தம் திகழும் கண்களை அகல விழித்து அவற்றில் பெருகும் கருணையையே அழகாகக் கொண்டும் நித்திய செளந்தரியத்தின் எல்லைகளாய் இரண்டு கைகளை நீட்டிக் கொண்டும் நீ உருவாகி நிற்கிறாய்!” என்று அந்த முதுமகள் நாத் தழுதழுக்கச் சொல்லியபோது அவளுடைய சொற்களில் மனமும் உணர்வுகளும் குழைந்து பரிவு பெருக நின்றான் இளங்குமரன். அவளுக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டு மென்று அவன் நினைத்ததும் சொல்ல வரவில்லை. அவள் பேசியதைக் கேட்ட பின்பு அவனுக்குப் பேசவே வரவில்லை.

அந்த முதுமகள் நிறைய கற்றவளாய் இருக்க வேண்டுமென்று அவளுடைய சொற்களிலிருந்து புரிந்தது. அவளுடைய சொற்களுக்குப் பின் தன்னுடைய சொல் லாமையே - மெளனமே மதிப்பு நிறைந்ததென்று எண்ணிக் கொண்டு யானை நின்ற இடத்துக்குத் திரும்பி நடந்தான் அவன்.

அவ்வாறு நடக்கும்போது தன்னுடைய பழைய சொற்களையே மறுபடியும் நினைத்துக் கொண்டான். எல்லாருடைய தாய்களிலும் என்னுடைய தாய் இருக்கிறாள். என்னுடைய தாயாரைத் தெரிந்து கொள்கிற வரை எல்லாப் பெண்களையும் தாயாகவே பார்க்கிறேன் நான், தாயாகவே உணர்கிறேன்.

‘இன்று இந்த மூதாட்டிக்கு உதவினோம் என்று திரும்பத் திரும்ப நினைத்து இப்படி நினைப்பதாலேயே மனத்தில் கர்வச் சுமை ஏறிவிடுமோ’ என்ற பயத்தை உணர்ந்தவனாக யானைமேல் ஏறினான் இளங்குமரன்.

மீண்டும் புகழில் நனைந்து விடாமலும், மிதந்து விடாமலும் தன்னைத் தன் நிலையில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற விழிப்பு அவனுக்கு ஏற்பட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5. இருண்ட சமயம்

‘மறுபடியும் நாளைக்கு இந்த அறிவுப் போர்க்களத்தில் வந்து எதிரிகளைச் சந்திக்கலாம். இன்று இவ்வளவில் திரும்புவோம்’ என்ற தீர்மானத்தோடு யானையை ஆலமுற்றத்து வழியில் செலுத்துவதற்கு இருந்தான் இளங்குமரன். அப்போது அவனுடைய யானைக்கு முன்னால் கபாலிகப் பெண் ஒருத்தி வந்து நின்றாள். பொது இடங்களில் இப்படித் துணிந்து புறப்பட்டு வந்து பழகும் வழக்கம் இல்லாத கபாலிக சமயத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை எதிரே கண்டதும் இளங்குமரன் சிறிது திகைப்படைந்தான். சம்பாபதி வனத்திலும் சக்கரவாளக் கோட்டத்தைச் சுற்றியிருந்த காடுகளிலும் விடலைப் பிள்ளையாய் நண்பர்களோடு சுற்றித் திரிந்த காலத்தில் அவன் கபாலிகர்களை நிறையப் பார்த்திருக்கிறான். அந்தச் சமயங்களில் எல்லாம் எலும்பு மதம் என்றும் மண்டையோட்டு மதம் என்றும் அவனும் நண்பர்களும் வேடிக்கையாகச் சொல்லி அந்தச் சமயத்தைப் பற்றி எள்ளி நகையாடுவதும் உண்டு.

இப்போது அதே மண்டையோட்டு மதத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி எதிரே வந்து நிற்கிறாள்.

“உங்களுக்கு என்ன வேண்டும் அம்மணீ? இந்த நாளங்காடிச் சதுக்கத்திலும், இதன் அழகிய சுற்றுப் புறங்களிலும் நீங்கள் விரும்புகிற விதமான பொருள்களில் எதுவும் கிடைக்க வழியில்லையே? எலும்புகளும், சுடலைச் சாம்பலும் இல்லாத இடத்துக்குக்கூட நீங்கள் வருவதுண்டோ?” என்று அவளை நோக்கிக் கேட்டான் இளங்குமரன்.

அவன் தங்கள் சமயத்துக் கொள்கைகளை இகழ்ந்தாற் போன்ற தொனியில் பேசியதால் சிறிதே சினம் கொண்டவளாகி அவனை உறுத்துப் பார்த்தாள் அவள்.

“நாங்கள் எங்கும் வருவோம். பயப்படுவதற்கு நாங்கள் கோழைகள் அல்ல. கொடிய வீரத்தையே சிவமாகக் காண்கிற எங்களால் எந்த இடத்திலும் நாங்கள் விரும்பியவாறு சென்று செயற்பட முடியும்.”

“அம்மணீ! நீங்கள் எப்போதும் பயப்படுவதில்லை; ஆனால் உங்களைப் பார்க்கிறவர்கள் பயப்படாத நேரமும் இல்லை. ‘எந்த இடத்திலும் நாங்கள் விரும்பிய சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்ள முடியு’மென்று கூறினீர்களே - அது மட்டும் மறுக்க முடியாத உண்மை என்று நானும் ஒப்புக் கொள்கிறேன், அம்மணீ! இவ்வளவு நேரம் வரை இந்திரவிழாக் கோலம் பூண்டு மங்கல வினை நிகழும் வீடுபோலத் தோன்றிக் கொண்டிருந்த இந்த இடத்தில் நீங்கள் ஒருவர் வந்து நின்றவுடனேயே மயானத்தின் சூழ்நிலை உண்டாகி விட்டது பாருங்களேன்! இதிலிருந்தே நீங்கள் சொல்லியது மெய்யென்று தெரிந்து கொள்ள முடிகிறதே” என்று நகை விளைக்கும் சொற்களாலேயே அவளை வாதில் நலியச் செய்தான் இளங்குமரன். ஆனால் அவளோ, அவனிடம் வேறு வேண்டுகோள் விடுத்தாள்:

“நானே உன்னை வாதுக்கு அழைக்க வரவில்லை, அழைத்துக் கொண்டு போவதற்குத்தான் வந்தேன்.”

“எங்கே அழைத்துக் கொண்டு போக வந்தீர்கள்? ‘அழைத்துக் கொண்டு’ என்று நீங்கள் சொற்களை உச்சரித்த போது ‘அழைத்துக் கொன்று’ என்பதுபோல் அல்லவா என் செவிகளில் ஒலித்தது. கபாலிகர்கள் அசைவர்களாயிற்றே? அதனால்தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது, அம்மணீ.”

“இதில் சிந்திப்பதற்கும் தயங்குவதற்கும் ஒன்றுமில்லை. இந்த நகரத்திலேயே மிகவும் குறைவானவர்கள் நாங்கள்? சக்கரவாளக் கோட்டத்தில் சுடுகாட்டுக்கு அருகிலுள்ள வன்னி மரங்களின் நிழலிலேயே எங்கள் உலகம் அடங்கிப் போய்விடுகிறது. அதற்கு இப்பால் அகநகரிலும் புறநகரிலுமகாகப் பரவிக் கிடக்கும் இந்தப் பட்டினத்தின் விதவிதமான வாழ்க்கை வளங்களைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது.”

“அகநகரிலும் புறநகரிலும் வாழ்ந்தவர்கள் தலையெல்லாம் உங்கள் கையிலிருக்கும்போது நீங்கள் கவலைப்படுவானேன்?”

“எதைச் சொல்கிறாய் நீ?”

“இறந்தபின் இந்தப் பட்டினத்தின் மக்கள் அத்தனை பேருடைய கபாலங்களையும் நீங்கள்தானே ஆளுகிறீர்கள்?”

“இகழ்ச்சியை வளர்க்காதே, தம்பீ! வன்னி மன்றத்தில் எங்கள் குரு காத்துக் கொண்டிருப்பார். நீ உடனே என்னுடன் அங்கு வந்து அவரோடு வாதம் புரிய வேண்டும்.”

“இந்த நள்ளிரவில்தான் வாதம் புரிய வேண்டுமா? நாளைக்குப் பகலில் வரலாமென்று பார்க்கிறேன். எல்லா வாதங்களும் நடைபெறும் இந்த இடத்துக்கே உங்கள் குரு வந்தாலும் நல்லதுதான். அவர் என்னைச் சந்திப்பதோடு மற்றவர்களையும் சந்தித்து வாதிடலாம்.”

“அது சாத்தியமில்லை, அப்பனே! எங்கள் குரு வயது மூத்தவர்; எங்கும் வர இயலாதவர். நள்ளிரவுக்குப் பின்புதானே எங்களுடைய உலகமே உதயமாகிறது. பகலில் வாதம் புரிய வந்து என்ன பயன்?”

“உண்மைதான், அம்மணி! உங்கள் சமயமே இருண்ட சமயத்தில்தான் தன் செயல் முறைகளைத் தொடங்குகிறது.”

“அதனால்தான் இந்த இருண்ட சமயத்தில் உன்னை வந்து அழைக்கிறேன். யார் வந்து வாதுக்கு அழைத்தாலும் மறுக்காமல் வருவதுதான் மெய்யாகவே ஞானபலம் பெற்றவனுக்கு இலட்சணம். ஞானிக்கு இருள் என்ன? ஒளி என்ன? உன்னுடைய மனத்தில் தைரியமிருந்தால் என்னோடு வா. இல்லையானால் முடியாதென்று சொல்!”

இதைக் கேட்டு இளங்குமரன் யானை மேலிருந்து கீழே இறங்கினான்.

“அழைத்துச் செல்லுங்கள் வருகிறேன்” என்றான் அவன்.

அந்த முரட்டுக் காபாலிக நங்கை பிசாசு போல் முன் நடந்தாள். பூதகிக்கு அருகில் கண்ணபிரான் சென்றது போல் கொடியேந்திய கையினனாக இளங்குமரன் அவள் நடந்த வழியே தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். அவள் தன்னை அழைத்துச் சென்ற சக்கரவாளக் கோட்டத்து வழிகள் ஒரு காலத்தில் தான் பழகிய வழிகள் என்பதை நினைத்துக் கொண்டே சென்றான் அவன். இருந்தாற்போல் இருந்து எதையோ நிறுத்திக் கொண்டு கேட்பவள் போல் அவள் நடப்பதை நிறுத்தி விட்டு அவனை நோக்கித் திரும்பி, “நீ கபாலிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறாய் அப்பனே?” என்று கேட்டாள். இளங்குமரன் பதில் சொல்லாமல் நின்றான்.

“அதற்குள் நீ ஊமையாகி விட்டாயா? எனக்குப் பதில் சொல்! உன்னைத்தான் கேட்கிறேன் நான். கபாலிகர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“இப்போது உங்களுடைய குருவோடு வாதம் புரிவதற்கு என்னை அழைத்துச் செல்கிறீர்களா? நீங்களே என்னோடு வாதம் புரிய விரும்புகிறீர்களா?”

“நானும் சிறிது வாதம் புரிவதற்கு ஆசைப்படுகிறேன் என்றுதான் வைத்துக் கொள்ளேன். கபாலிகர்களைப் பற்றி உன் கருத்து என்ன?”

“அதுதான் சொன்னேனே! ‘இருண்ட சமயத்தில் தான் எங்கள் உலகம் உதயமாகிறது’ என்று நீங்கள் கூறிய சொற்களே உங்களுக்கு உரிய இலட்சணம். எல்லாருடைய நினைவுகளும் - எல்லாச் சமயத்தாருடைய நினைவுகளும் மயானத்தில் போய் அழி கின்றன. ஆனால் கபாலிகர்களாகிய உங்களுடைய நினைவுகளோ மயானத்திலிருந்துதான் பிறக்கின்றன. வாழ்ந்து அழிகிறவர்களிடையே அழித்து வாழப் பார்க்கிற இலட்சியம் உங்களுடைய சமயத்துக்கு வாய்த்திருக்கிறது.”

“எங்கே, இன்னொரு தரம் அதையே சொல்.”

“வாழ்ந்து அழிகிறவர்களிடையே அழித்து வாழ முயல்வது உங்கள் இலட்சியம்.”

“அந்த இலட்சியத்தை இப்போது நான் நிறைவேற்றலாம் என்று பார்க்கிறேன் அப்பனே!” இப்படிக் கூறியவாறே வெறிநகையில் பயங்கர ஒலி அந்தச் சக்கரவாளத்துக் காடு எங்கும் எதிரொலிக்கப் பேய்த் தோற்றமாகிய விசுவரூபமெடுத்தாற் போல அந்தக் கபாலிகை வாளை ஓங்கிக்கொண்டு சூறாவளியாக மாறி அவன் மேல் பாய்ந்தாள்.

“வாதம் புரிவதற்கு அழைத்து வந்தீர்களா? இப்படி வதம் புரிவதற்கு அழைத்து வந்தீர்களா?” என்று சற்றே விலகி நின்றுகொண்டு நிதானமாகக் கேட்டான் இளங்குமரன்.

“கபாலிகர்களாகிய எங்களுக்கு வாதம், வதம் இரண்டுமே ஒன்றுதான்” என்று முன்னிலும் கடுமையான வெறியோடு அந்தப் பூதகி அவன்மேற் பாய்ந்த போது பின்னாலிருந்து கற்குன்றுகள் விழுந்ததுபோல இரண்டு கைகள் அவளுடைய பிடரியில் விழுந்து அவள் கழுத்தை அழுத்தி நெரிக்கத் தொடங்கின. அந்தப் பிடியைத் தாங்க முடியாமல் அவளுக்கு விழியும் நாக்கும் பிதுங்கின. சுடுகாட்டு நரி ஊளையிடுவதைப் போல் கோரமான வேதனைக் குரல் அவள் தொண்டையிலிருந்து புறப்பட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
6. திருவிழாக் கூட்டம்

நாளங்காடியில் நெருங்கி நின்ற பெருங்கூட்டம் கலைந்தபோது யவனர் சுமந்து நின்ற அந்தப் பல்லக்கும் மெல்ல நகர்ந்தது. ஆனால் பல்லக்குக்கு உள்ளேயிருந்தவர்களின் சிந்தனை மட்டும் அந்த இடத்தை விட்டுச் சிறிதும் நகரவே இல்லை. கூட்டத்தில் தடுமாறி விழுந்த கிழவியைக் கண்டதும் அவளைத் தூக்கி விடுவதற்காக அதிராமல், பதறாமல், பூ உதிர்வது போல் அவன் நடந்த நிதான நடையையும், புன்னகையுடனே தலை நிமிர்ந்து மனத்தை அரித்தெடுக்கின்றதனால் ஆசைதான் பெருநோய் - என்று எண்ணத்திலே தைக்கும்படி வார்த்தைகளைச் சொல்லிய துணிவையும் நினைத்து நினைத்து, நினைவு அந்த இடத்திலிருந்து நகராதபோது பல்லக்கு மட்டும் நகர்ந்து முன்னேறிச் சென்றது. அதுவரை உட்கார்ந்திருந்த தோழி வாய்திறந்து மெல்லக் கேட்டாள்:

“அது ஏனம்மா அப்படிப் பொய் சொன்னிர்கள்? ‘சுரமஞ்சரியா’ என்று அவர் கேட்டபோது இவ்வளவு நீண்டகால இடைவெளிக்குப் பின் முதல் முறையாக அவரைச் சந்திக்கிற நீங்கள் ஆர்வத்தை மறைக்காமல் ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டிருக்கலாமே? எதற்காக வானவல்லியின் பெயரைச் சொல்லி உங்களை நீங்களே மறைத்துக் கொண்டீர்கள்...?”

“மாளிகையிலிருந்து வெளியேறி வருவதற்கே வாய்ப்பில்லாமல் என்னைத் தந்தையார் சிறை வைத்திருக்கிறார் என்பதை அதற்குள் மறந்துவிட்டாயா? இந்திர விழாவின் முதல்நாளாகிய இன்றைக்கு நகரத்தைச் சுற்றிப் பார்க்கும் ஆசையை அடக்க முடியாமல் அங்கே வானவல்லியைச் சுரமஞ்சரியாக நடிக்கச் செய்துவிட்டு இங்கே நான் வானவல்லியாக நடிப்பதாய் ஒப்புக்கொண்டு புறப்பட்டதைக் கூடவா அதற்குள் மறந்துவிட்டாய்?” என்று இரகசியம் பேசு கிறாற் போன்ற மெல்லிய குரலில் கேட்டாள் சுரமஞ்சரி.

“ஒன்றும் மறக்கவில்லை. மறப்பதற்கு எனக்குப் பித்துப் பிடித்துவிட்டதா? என்ன? நான் சுரமஞ்சரி தான் என்று நீங்கள் அவரிடம் ஒப்புக் கொள்வதனால் உங்கள் இரகசியம் ஒன்றும் வெளியாகிவிடப் போவதில்லையே? இவ்வளவு காலத்துக்குப் பின்பும் உங்களை நினைவு வைத்துக்கொண்டு கேட்டவரிடம் ஏமாற்றமளிக்கும் மறுமொழியை நீங்கள் கூறியிருக்க வேண்டாமே என்றுதான் சொன்னேன், அம்மா.”

“என்னுடைய மறுமொழி அவருக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் என்றா நீ நினைக்கிறாய்?. அப்படி நீ நினைப்பதாயிருந்தால் உன்னைப் போல் உலகம் தெரியாதவள் வேறு யாரும் இருக்க முடியாது. எல்லாப் பெண்களிலும் தாயைக் காண்கிறேன். எல்லாத் தாய்களிலும் பெண்ணைக் காண்கிறேனில்லை என்று நெகிழ்ச்சியும் நெருக்கமும் இல்லாமல் முகத்தில் அறைந்தாற்போல் பேசுகிற மனிதரிடத்தில் ‘நான்தான் சுரமஞ்சரி’ - என்பதைச் சொல்வதனால் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது?”

“பயன் விளைய வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டே எல்லாக் காரியங்களையும் செய்ய முடியுமா? பெரு நோய்க்காரியான அந்தக் கிழவியைத் தொட வேண்டாமென்று நீங்களாகத்தானே வலுவில் அவரை எச்சரித்தீர்கள். என்ன பயனை எதிர்பார்த்து அந்த எச்சரிக்கையைச் செய்தீர்கள், அம்மா?”

வசந்தமாலையின் இந்தக் கேள்விக்குச் சுரமஞ்சரியால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் நாணித் தலைகுனிந்தாள்.

“ஒரு பயனையும் எதிர்பார்த்து எச்சரிக்கை செய்யவில்லை. ஏதோ மனத்தில் தோன்றியது, செய்தேன்” என்று வெட்கத்தினால் ஒடுங்கிய குரலில் அவளிடமிருந்து பேச்சுப் பிறந்தது.

“ஏதோ தோன்றியதென்று சொல்லிவிட்டுத் தோன்றியிருப்பதை உங்களுக்குள்ளேயே அந்தரங்கமாக வைத்துக்கொள்ள முயல்கிறீர்களே? ஏதோ தோன்றியதென்றுதான் காமன் கோவிலை வலம் வந்தீர்கள். ஏதோ தோன்றியதென்றுதான் அன்றைக்கு அந்த ஓவியனிடத்தில் மடல் எழுதிக் கொடுத்து அனுப்பினர்கள். ஏதோ தோன்றியதென்றுதானே முதன் முதலாக அவரைச் சந்தித்த இந்திர விழாவின்போது மணிமாலையைக் கழற்றிப் பரிசளிக்கத் துணிந்தீர்கள். இப்படியே அவரைப் பார்க்கும்போதும் நினைக்கும் போதும் உங்களுக்கு ஏதோ தோன்றிக்கொண்டே இருக்கிறது.”

இதைக் கேட்டு சுரமஞ்சரி சிரித்தாள். அவளுடைய கண்களில் மென்மையான உணர்வுகளின் சாயல்கள் மாறி மாறித் தோன்றின. வெளிப்படலாமா வேண்டாமா என்று தயங்குவது போல் இதழ்களில் ஏதோ ஒரு கனிவு நிறைந்து நின்று தயங்கியது.

“நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் முகத்தில் சிரிப்பைப் பார்க்கிறேன் அம்மா! பூமியின் வறட்சியைத் தணிப்பதற்காக மேகங்கள் கனியும் வானத்தைப்போல் உங்கள் வதனத்திலே எதற்காகவோ நளினமான உணர்வுகள் கணிகின்றனவே! நீங்கள் இந்தச் சில விநாடிகளில் அதிகமான அழகைப் பெற்றுவிட்டாற் போல் தோன்றுகிறீர்கள், அம்மா! நான் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் இதோ என் தலைக்கு மேல் பல்லக்கிற் பதித்திருக்கும் கண்ணாடியில் நீங்களே உங்களுடைய முகத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

சுரமஞ்சரி தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். வசந்தமாலை கூறியது மெய்தான், தன் முகத்தில் மலர்ச்சி உண்டாகியிருப்பதைச் சுரமஞ்சரி தானே உணர்ந்தாள். தனக்கு அந்த மலர்ச்சியைத் தந்தவனைப் பற்றி அவளுடைய சிந்தனைகள் படர்ந்தன. இப்போது கொடிபோல் இளைத்திருந்த அவன் தோற்றமும், தீயில் உருகி ஓடும் மாற்றுக் குறையாத பொன்னின் நிறமும், படிப்பினால் ஒளி பெற்றிருக்கும் முகமும் கண்களும் அவள் நினைவில் ஒவ்வொன்றாகத் தோன்றின. ஒவ்வொரு புள்ளியாக வைத்துக் கொண்டு இறுதியில் எல்லாப் புள்ளிகளையும் கோடுகளால் இணைத்துக் கோலமாக்குவதுபோல அவனுடைய தனித்தனி அழகுகளையும் தனித்தனிச் சிறப்புகளையும் ஒவ்வொன்றாக எண்ணிக் கூட்டி மனதுக்குள்ளேயே அந்த ஆண்மைக் கோலத்தை வரைந்து பார்த்தாள் அவள். நாளுக்கு நாள் அவன் தன்னிடமிருந்து நீண்ட தொலைவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை எண்ணியபோது துக்கத்தினால் நெஞ்சை அடைத்தது. கண்களில் நீர் நெகிழ்ந்தது. மனத்தை அடைத்த துக்கத்தை வார்த்தைகள் வெளிக் கொணர முடியவில்லை. நினைத்தாள் - சில ஆண்டுகளுக்கு முன் இதேபோல் இந்திரவிழாவின் முதல்நாள் ஒன்றில் மற்போரில் வென்ற வீரனாக அவனைச் சந்திக்க நேர்ந்ததையும் இன்று மீண்டும் சொற்போரில் வெல்லும் வீரனாகச் சந்திப்பதையும், இந்த இரண்டு சந்திப்புக்களுக்கும் நடுவில் எப்போதோ ஒரு கணத்தில் தன் மனத்தையே அவன் வெற்றி கொண்டதையும் அதன்பின் கணம் கணமாகத் தன் மனமே அவனுக்குத் தோற்றுப் போய்க் கொண்டு வருவதையும் - சேர்த்து நினைத்தாள் சுரமஞ்சரி. முதற் பார்வையிலேயே தன் கண்களில் நிறைந்து கொண்ட அந்தச் சுந்தர மணித் தோள்களை நினைத்தபோது அவள் நெட்டுயிர்த்தாள்.

‘மழையும் புயலுமாகக் கழிந்த ஏதோ ஓர் இரவில் கடலின் நடுவே கப்பல் கரப்புத் தீவில் நான் சாய்ந்து கொள்வதற்கு அணையாக நீண்ட கை இது. இந்த அழகிய கைகள் உதவி செய்வதற்கு மட்டுமே முன் விரிகின்றன. அன்புடன் தழுவிக்கொள்ள நீள்வதில்லையே என்று எண்ணி எண்ணி நான் பெருமூச்சு விடுவதுதான் கண்ட பயன். துன்பப்படுகிறவர்களின் துன்பத்தைக் களை வதற்காக விரைந்து முன் நீளும் இந்தக் கைகள் அன்பு செலுத்துகிறவளுடைய அன்பை ஏற்றுக் கொள்வதற்கு மட்டும் ஏன் தயங்குகின்றனவோ? உடம்பெல்லாம் அழுகி நாறும் பெருநோய் பிடித்த கிழவியைத் தீண்டுவதற்கும் கூசாத கைகள் தன்னையே நினைத்துத் தனக்காக ஏங்கிக்கொண்டும் தவித்துக் கொண்டுமிருக்கும் பெண்ணுக்கு முன்னால் மட்டும் ஏன் துவண்டு போய் விடுகின்றனவோ? ‘துன்பப்படுகிறவர்களுக்கு உதவும் அது தாபத்தையே செல்வமாக நினைக்கிறேன்’ என்கிறாரே. நான் இவரையே எண்ணி ஏங்கித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேனே. எனக்கு இவரிடமிருந்து என்ன அநுதாபம் கிடைத்தது? எதிர்பார்க்கிற இடத்திலிருந்து கிடைக்க வேண்டிய அன்பைப் பெற முடியாமல் வேதனைப்படுகிற என்னுடைய காதலும் ஒரு துன்பந் தானே?’

தனக்குள் தானே சுரமஞ்சரி இப்படி நினைத்துக் கொண்டிருந்தபோது பல்லக்கின் திரையை விலக்கி வெளியில் பார்த்துக் கொண்டிருந்த வசந்தமாலை, “அம்மா! அம்மா! அதோ அங்கே பாருங்கள்” என்று பரபரப்போடு கூறிக் கவனத்தை வெளிப்புறமாகத் திரும்பினாள். சுரமஞ்சரி வெளியே தலை நீட்டிப் பார்த்தாள். கூட்டத்தில் ஓவியன் மணிமார்பனும் ஓர் அழகிய இளம் பெண்ணும் கைகோர்த்தபடி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

நெடுங்காலத்துக்குப் பின் அவனைக் கண்ட ஆவலை அடக்க முடியாமல் “வசந்தமாலை! மணிமார்பனைக் கூப்பிடடி. அவரைப் பற்றிய விவரங்களை யெல்லாம் மணிமார்பனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்றாள் சுரமஞ்சரி, வசந்தமாலை கூப்பிடுவதற்குள் மணிமார்பனும் அவனுடன் சென்ற பெண்ணும் கூட்டத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். வசந்தமாலை “ஐயா ஓவியரே!” என்று விளித்த குரல் கூட்டத்திலிருந்த வேறு பலரைப் பல்லக்கின் பக்கமாகத் திரும்பிப் பார்க்கச் செய்ததைத் தவிர வேறு ஒரு பயனும் விளையவில்லை. வசந்தமாலை ஏமாற்றத்தோடு சுரமஞ்சரியிடம் அலுத்துக் கொண்டாள்:

“எப்போதுமே திழவிழாக் கூட்டத்தில் இந்தத் தொல்லைதான். நாம் யாரையோ அழைத்தால் வேறு யாரோ திரும்பிப் பார்க்கிறார்கள்.”

“வாழ்க்கையே திருவிழாக் கூட்டத்தில் அழைப்பது போல்தான் இருக்கிறதடி வசந்தமாலை! நாம் யாரை அழைக்கிறோமோ அவர்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. யாருடைய செவிகளில் கேட்க வேண்டும் என்பதற்காக நம்முடைய இதயத்திலிருந்து ஆசையும் நாவிலிருந்து சொற்களும் பிறக்கின்றனவோ, அவருடைய செவி களுக்கு அவை எட்டுவதே இல்லை. யாரை நினைத்தோ கூவுகிறோம். நினைவுக்குக் காரணமாகாத யாரோ பதிலுக்குத் திரும்பிப் பார்க்கிறார்கள். யாருக்காகவோ கண் திறக்கிறோம். ஆனால் திறந்த கண்களுக்கு முன்னால் வேறு யாரோ தென்படுகிறார்கள். என்ன உலகமோ? என்ன வாழ்க்கையோ? எல்லாமே சாரமில்லாமல் தெரிகிறதடீ!” என்று தன் தலைவி கூறியபோது அவளுடைய வார்த்தைகள் இதயத்தின் ஆழத்தில் குவிந்து கிடக்கும் சோகத்தையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து கொட்டுவதை வசந்தமாலை உணர்ந்தாள்.

“மாளிகையிலிருந்து வெளியேற முடியாமல் இத்தனை காலம் சிறைப்பட்டுக் கிடந்தபோதும் இதே வார்த்தைகளைத்தான் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இன்று வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றிப் பார்க்கும் போதும் இதே வார்த்தைகளையே சொல்லுகிறீர்களே?”

“அடி அசடே! உடம்பைக் கட்டிப் போடுவதுதான் சிறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? மனம் விரும்புவதையும் நினைப்பதையும் அடைய முடியாமையே ஒரு சிறைதான்.” இப்படிக் கூறித் துயரத்தைத் தவிர வேறெந்த உணர்வையும் காட்டாத வறட்சியான தொரு நகை புரிந்தாள் சுரமஞ்சரி. தலைவியின் மனம் அளவற்று நொந்து போயிருப்பது தோழிக்குப் புரிந்தது. அவள் பேச்சைத் திருப்பி வேறு வழிக்குக் கொண்டு போனாள்: “விரைவில் மாளிகைக்குத் திரும்பிவிடுவது நல்லதம்மா! உங்கள் தந்தையாரும் நகைவேழம்பரும்கூட இந்தப் பக்கமாகத்தான் தேரில் புறப்பட்டு வந்திருக்கிறார்களாம். எங்கேயாவது அவர்கள் பார்வையில் நாமிருவரும் தென்பட்டால் வம்பு வந்து சேரும்” என்று தலைவியிடம் மெல்லக் கூறிவிட்டு வெளியே பல்லக்குத் தூக்குகிறவர்களுக்குக் கேட்கிறபடி இரைந்த குரலில் வேகமாகச் செல்வதற்கான கட்டளையை இட்டாள் வசந்தமாலை. பல்லக்குத் தூக்குகிறவர்கள் நடையைத் துரிதமாக்கிக் கொண்டு முன்னேறினார்கள்.

“இந்திர விழா முடிவதற்குள் மணிமார்பனை எப்படியும் சந்தித்துவிட முயற்சி செய்ய வேண்டுமடி, வசந்தமாலை.”

“முயற்சி செய்வதைப் பற்றித் தடையில்லை. ஆனால் முயற்சி நிறைவேறுவதும், நிறைவேறாமற் போவதும் நம் கையில் இல்லை.”

“எதற்கும் முயன்று பார்க்கலாமே! இந்திர விழா முடிவதற்குள் இன்னும் ஒருநாள் வானவல்லி சுரமஞ்சரியாகவும் சுரமஞ்சரி வானவல்லியாகவும் நடித்தால் போயிற்று?”

“நம்முடைய சாமர்த்தியத்தை நகைவேழம்பரும் உங்கள் தந்தையாரும் புரிந்துகொள்ளவோ, சந்தேகப்படவோ செய்யாதவரை எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் அம்மா! திருவிழாக் கூட்டத்தில் நடப்பது போல நாம் சிறிதும் எதிர்பாராமல் அவர்கள் இருவரும் நம் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டால் எல்லாம் சீரழிந்து போகுமே?” என்று பயத்தோடு பதில் சொன்னாள் வசந்தமாலை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
7. பூக்களும் பேசின!

தன் கழுத்தை நெரிக்கும் வலிய கைகளின் பிடியில் சிக்குண்டு அந்தக் கபாலிகை விகாரமாகக் கூக்குரலிட்ட மரண ஒலம் சக்கரவாளத்தைச் சூழ்ந்திருந்த காடெல்லாம் எதிரொலித்தது. இளங்குமரன் வியப்படைந்து பார்த்தான். கபாலிகைக்குப் பின்புறம் நீலநாகமறவருடைய முகம் தெரிந்தது. அவள் கழுத்தை இறுக்கும் கரங்கள் அவருடையவை என்று கண்டான்.

“ஐயா! விட்டுவிடுங்கள்... பாவம்... இவள் நமக்கு என்ன கொடுமையைச் செய்வதற்கிருந்தாளோ அந்தக் கொடுமையையே இவளுக்கு நாம் செய்து பழி சுமக்க வேண்டாம்” என்றான் இளங்குமரன்.

“கொலை வெறி பிடித்த பேய் மகளே! இனி இத்தகைய செயலைச் செய்யவும் நினைக்காதே. செய்ய நினைத்தாயோ நீ செய்ய நினைத்தது உனக்கே செய்யப்படும். இதோ இப்படி ஒரு விநாடி என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போய்த் தொலை...” என்று இடி முழக்கக் குரலில் எச்சரித்துவிட்டுக் கீழே தள்ளுவது போலக் கைகளின் பிடியிலிருந்து அவளை உதறினார் நீலநாக மறவர்!

நிலைகுலைந்து விழுந்த பைரவி எழுந்து ஓடுவதற்கு முன்னால் தன்னை ஒடுக்கிய பெருவலிமை எது என்று காண்பவள் போல் ஒருகணம் திரும்பி நிமிர்ந்து பார்த்தாள். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக நின்ற அந்தக் கம்பீர ஆகிருதியைப் பார்த்தாளோ இல்லையோ, அலறி யடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓட்டமெடுத்தாள் அவள்.

“ஒடிப் போய்விடு!... மறுபடி திரும்பிப் பார்த்தாயோ எல்லாக் கபாலங்களுக்கும் நடுவே உன்னுடைய கபாலமும் கிடக்கும்” - நீலநாகருடைய இந்த வார்த்தைகள் அவளை இன்னும் வேகமாக விரட்டின. குதிகால் பிடரியில் படுகிறாற்போல் ஓடி மறைந்தாள் கபாலிகை.

“நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று இளங்குமரன் தன்னைக் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் இடியிடித்து ஓய்ந்ததெனப் பெரியதாய்ச் சிரித்தார் நீலநாக மறவர். அவரிடம் மேலும் கூறினான் இளங் குமரன்:

“என் மனத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று சிறிதும் சந்தேகமே உண்டாகவில்லை, ஐயா! ஏதோ இவள் வந்து சொன்னாள், நம்பிவிட்டேன். சுடுகாட்டுக் கோட்டத்தில் வன்னி மன்றத்தின் அருகே தன்னுடைய குரு காத்துக் கொண்டிருப்பதாகவும், அவருடனே சமயவாதம் புரிவதற்கு நான் வரவேண்டும் என்றும் அழைத்தாள். உடனே புறப்பட்டு விட்டேன்.”

“நீ புறப்பட்டது தவறில்லை, இளங்குமரா! அறிவின் முடிந்த எல்லை கருணை. பிறர் மேல் இரக்கம், எவ்வளவு தீயவுண்மை பொதிந்ததாயிருந்தாலும் நல்லதாகவே பாவித்தல் இவைதாம். ஆனால் சூழ்ச்சியின் முடிந்த எல்லையோ சந்தேகம் மட்டும்தான். நீயும் நானும் இப்போது வேறு எல்லைகளில் வந்து நிற்கிறோம், நீ ஞானத்தையே வீரமாகக் கொண்டு ஞானவீரனாக வந்து நிற்கிறாய். நான் எப்போதும் போல் வீரத்தையும் ஞானமாகவே கொண்டு நிற்கிறேன். எதையும் எதிர் மறையாக எண்ணிப் பார்த்துவிட்டுப் பின்புதான் உடன்பாடாக எண்ணிப் பார்க்க வேண்டுமென்பது வீரனின் சிந்தனைச் சூழ்ச்சிகளில் முதன்மையானது. உடன்பாடாகவே எண்ணிப் பார்ப்பது ஞானியின் பாவனை. கொடியும் கையுமாக யானைமேல் ஏறிக் கொண்டு நீ படைக்கலச் சாலையிலிருந்து புறப்பட்ட சிறிது நாழிகைக் கெல்லாம் நானும் உன்னைப் பின்தொடர்ந்து புறப் பட்டேன் என்பது உனக்குத் தெரியாது. நாளங்காடியில் நீ நின்ற இடங்களிலும் சென்ற இடங்களிலும் மறைந்து மறைந்து, தோன்றாத் துணையாக உன்னைப் பின் தொடர்ந்தேனென்பதும் உனக்குத் தெரிந்திருக்க முடியாது. நீ எதையும் சத்தியமாகவே உடன்பட்டுப் பாவனை செய்து கொண்டிருப்பதால் அங்கிருந்து புறப்படுகிறபோது சமயவாதம் புரியப் போவதையும் வேறுபட்ட கருத்துடைய அறிஞர்களைச் சந்திக்கப் போவதையும் மட்டும்தான் நினைத்துக் கொண்டு. புறப்பட்டாய். நானோ உன்னுடைய பகைவர்கள், உன்னைக் கொல்ல நினைத்துத் திரிந்து கொண்டிருப்பவர்கள், எல்லாரையும் எண்ணிப் பின் தொடர்ந்தேன். நீ உன்னுடைய அறிவுக்குப் பகைவர்களாக எதிரே வந்து கொடி நடப் போகிறவர்களை மட்டும் எதிர்பார்த்து வந்தாய். நானோ உன்னுடைய உயிருக்குப் பகைவர்களை எதிர்பார்த்தும், எதிர்த்துப் பார்க்கவும் வந்தேன். நீ பிரமவாதியைச் சொற்களால் மடக்கி வென்றதையும் சாருவாகனனின் செருக்கை வேரோடு சாய்த்து வென்றதையும், ‘கருணைதான் செல்வம்’ என்று அந்தப் பல்லக்குச் செல்லக் குமரிக்குப் பதில் சொல்லிவிட்டுக் கீழே விழுந்த முதுமகளைத் தூக்கி வழியனுப்பியதையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த நான் கடைசியில் இந்தக் கபாலிகையின் பொய்யான வேண்டுகோளுக்கு நீ செவி சாய்த்தபோது தான் மகிழ்வதை நிறுத்திக் கொண்டு சந்தேகப்படத் தொடங்கினேன். இவள் உன்னிடம் பேசிய விதமும், அந்த அகாலத்தில் வன்னி மன்றத்துக்கு அழைத்த முறையும் எனக்குச் சந்தேகமூட்டின. நீ இவளோடு புறப்பட்டால் நானும் பின்தொடர்வதென்று முடிவு செய்தேன். அப்படியே நடந்தது.”

“ஐயா! எதிர்மறையாக எண்ணிப் பார்ப்பதற்கும் சந்தேகப்படுவதற்கும் எனக்குத் தோன்றவே இல்லையே? கையைக் கூப்பி வணங்கினாற் போன்ற மதிப்போடு இவள் கூப்பிட்டவுடனே மெய்யென்று நம்பிவிட்டேன்.”

“ஞானம் உலகத்தை நம்பிக்கை மயமாகவும் கருணை மயமாகவும் பார்ப்பதற்கு உன்னைப் பழக்கியிருப்பது நல்லதுதான். ஆனால் கையை ஓங்கிக்கொண்டு அறைய வருகிற பகைவர்களைக் காட்டிலும் கைகூப்பிக் கொண்டு மனம் கூசாமல் வருகிற பகைவர்கள் பயங்கர மானவர்கள். உலகத்தில் கையைக் கூப்பிக்கொண்டு நண்பர்போல் வரும் பகைவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ‘தொழுத கை உள்ளும் படை நடுங்கும் ஒன்னார் அழுத கண்ணிரும் அனைத்து’ என்று படித்திருப்பாயே?”

“படித்திருக்கிறேன். ஆனால் அது அரச தந்திரிகளுக்கும் மதி அமைச்சர்களுக்கும் சொன்ன உண்மை அல்லவா?”

“ஒவ்வொரு மனமும் ஓர் அரசுதான். அது அரச தந்திரமும் அமைச்சும் இருந்தால் மனத்தையும் மனோ ராச்சியத்தையும் அற்புதமாக ஆளலாம்.”

“எல்லாவற்றையும் விட வேண்டுமென்று நான் கற்று வந்திருக்க, எல்லாவற்றையும் ஆள்வதற்கு நீங்கள் வழி சொல்லிக் கொடுக்கிறீர்கள் ஐயா!” என்றான் இளங்குமரன்.

இதைக்கேட்டு நீலநாக மறவர் புன்னகை புரிந்தார். “ஒன்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் மற்றொன்றை விட முடியுமா, இளங்குமரா? கவலையில்லாமல் உன்னுடைய அறிவுப் போராட்டத்தை நடத்து. அறிவுடையவனுக்கு அந்த அறிவே பெரிய அரண். வேறு பாதுகாப்பு அவசியமில்லை. ஆனால் கண்ணுக்கு அழகாயிருக்கிறதென்று மற்றவர்கள் புகழும் மையைக் கண்ணே கண்டு அநுபவிக்க முடியாதது போல அறிஞனுக்கும் மயக்கங்கள் வருவதுண்டு. இதுபோல் உயிர் போகிற ஆபத்துக்களும் அப்படி மயங்கி வரும். இன்று நீ இந்தக் கபாலிகையிடம் சிக்கிக்கொண்டதற்கும் அப்படிப் பிறழ்ந்த அநுமானம்தான் காரணம்! இந்த நகரத்து எல்லைக்குள் நான் ஒருவன் உயிரோடு இருக்கிற வரை உன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. வா, போகலாம்” என்று அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நீலநாக மறவர். இருவரும் யானைமேல் ஏறிக்கொண்டு படைக்கலச் சாலைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அப்போது பின்னிரவு தொடங்கும் நேரமாகியிருந்தது. மேகங்களே இல்லாத தெளிந்த வானத்தில் ஆலமுற்றத்துக் கோவிலுக்கு அப்பால் முழுநிலா அற்புதமாகத் தோன்றிக் கொண்டிருந்தது. வானில் ஊர்ந்து திரிந்து வந்து அலுத்ததுபோல் அந்தப் பின்னிரவு நிலாவில் சற்றே ஒளிமங்கியுமிருந்தது.

ஏமாற்றத்தால் அன்று யாரிடமோ சாவதற்கிருந்த தன் உயிரைக் காத்த திருவருளை எண்ணி ஆலமுற்றத்தை நோக்கிக் கைகூப்பி வணங்கினான் இளங்குமரன். அந்த நேரத்துக்குப் பின்பும் நீலநாக மறவர் சில நாழிகைகள் உறங்கினார். இளங்குமரனுக்கு உறக்கம் வரவில்லை. கண்களை மூடியபடி அன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வந்து சிந்தித்தவாறே படுத்திருந்தான் அவன். விடிகிற நேரம் நெருங்கியது.

ஆலமுற்றத்து மரத்தில் காகங்கள் கரைந்தன. எங்கோ கோழி ஒன்று விடிகாலைக் குரல் எழுப்பியது. விடிவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாழிகைகள் இருக்கும் என்று தோன்றியது. அப்போது நீலநாக மறவர் அவனை எழுப்பி அழைத்துக் கொண்டு ஆலமுற்றத்துக் கடற்கரை ஓரமாக உலாவப் புறப்பட்டுவிட்டார். கரையோரத்து நெய்தற் கழிமுகங்களில் பூத்திருந்த தாழம்பூக்களின் நறுமணம் வெள்ளமாய்ப் பரவிக் கொண்டிருந்தது. “பூக்களுக்கு மணம்தான் பாஷை, மணம்தான் அர்த்தம். மணம்தான் இலக்கணம். மணம்தான் கவி, மணம்தான் அலங்காரம்” என்று பூம்பொழிலில் குருகுல வாசம் செய்த காலத்தில் திருநாங்கூர் அடிகள் அடிக்கடி கூறிய வாக்கியங்களை இன்றும் இளங்குமரன் நினைவு கூர்ந்தான். திருநாங்கூரில் இருந்தபோது அடிகளும் இதேபோல வைகறையில் அவனை அழைத்துக்கொண்டு உலாவப் புறப்பட்டு விடுவார். அப்படிப் பனிபுலராக் காலையில் அடிகளோடு புறப்பட்டுப் போகும்போது இப்படி எத்தனை எத்தனையோ அழகிய சிந்தனைகள் அவரிடமிருந்து பூத்து அவன் செவிகளில் உதிர்ந்திருக்கின்றன.

தாழம்பூக்களின் மணத்தை உணர்ந்தபோது அவனுக்கு ஏதேதோ பழைய நினைவுகள் எல்லாம் உண்டாயின. அந்த நினைவுகளும் புதரில் பூத்த தாழம்பூக்களைப் போலப் பூத்திருக்கும் இடம் தெரியாமல் மணத்தையே பாஷையாகக் கொண்டு அவனிடம் பேசின.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
8. நச்சுப் பாம்புகள்

போது நள்ளிரவையும் கடந்து விட்டது. வெறி ஒடுங்கிச் சோர்வு மிகுந்ததால் வன்னிமன்றத்தில் கபாலிகர்களும் உறங்கிப் போய்விட்டார்கள். மரக்கிளைகள் ஆடி உராயும் மர்மச் சப்தமும் காற்று சுழித்துச் சுழித்து வீசும் ஒசையும் இடை இடையே - அந்த ஒசைகளைக் கலைத்துக் கொண்டு ஆந்தையும், கோட்டானும் அலறுகிற விகாரமும், கூகை குழறும் குரலும் சேர்ந்து வன்னி மன்றத்துக்குக் கணம் கணமாகப் பயங்கரச் சூழ்நிலையைப் படைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தன. தொடங்கினால் முடிவதற்குச் சிறிது நேரமாகும்படி நீண்டு இழுபட்டுக் கேட்கும் நரியின் ஊளைக் குரல்வேறு. ஆண்டலை என்னும் பிணம் தின்னிப் பறவைகள் உயரமும் தோற்றமுமாக ஆள் நடந்து வருவது போலப் பறவை உடலும் மனிதத் தலைபோன்ற சிரமும் கொண்டு சுற்றித் திரிந்தன. இரவில் நெருப்புக் கனிகளாகத் தோன்றும் அவற்றின் கண்கள் காண்பதற்கு அச்ச மூட்டுவனவாயிருந்தன.

இந்தச் சூழ்நிலையில் நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் பைரவியின் குடிசை வாயிலில் காத்துக் கொண்டிருந்தார்கள். பைரவி இன்னும் திரும்பவில்லை. பெருநிதிச் செல்வருக்குப் பயத்தினால் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. கைகள் எதையும் செய்யாம லிருக்கும் போதே நடுங்கின. மெளனமாக இருக்கும் போது பேசிக் கொண்டிருந்தால் பயம் தீரும் போலவும், பேசிக் கொண்டிருக்கும் போது பேச்சை நிறுத்திவிட்டு மெளனமானால் பயம் தீரும் போலவும் மாறி மாறிப் பேசியும், பேசாமலும் பயந்து கொண்டே இருந்தார் அவர்.

“இப்படிப்பட்ட செயல்களுக்குப் பைரவிதான் முற்றும் பொருத்தமானவள். அவளை இத்தகைய செயலுக்கு அனுப்பினால் நிச்சயமாக வெற்றியை எதிர்பார்க்கலாம். அவளுடைய கைகளுக்கு முடியாத காரிய மென்று எதுவும் இல்லை” என்று நகைவேழம்பர் புகழ் பாடிக் கொண்டிருந்த போதே பைரவி அலறிப் புடைத்தவாறு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கி இரைத்துக் கொண்டு நின்றாள். பதற்றத்தில் நிகழ்ந்ததைத் தொடர்பாகச் சொல்ல வர வில்லை அவளுக்கு. தயங்கித் தயங்கி ஏதோ சொன்னாள். சொல்லில் தெளிவில்லை. சொல்லப்பட்டவற்றிலும் துணிவில்லை. சொற்களை முழுமையின்றி அரற்றினாள்.

கொடுமையே வடிவான அவளும் தோற்றுப் போய் வந்தாள் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது. “நிற்கவும் நிலைக்கவும் வேண்டிய காரியத்துக்குத் தடையின்மையே பெரிய அவலட்சணம் என்று சற்று முன் கூறினீர்களல்லவா அந்த அவலட்சணம் ஏற்பட்டுவிடாமல் தடை நேர்ந்துவிட்டது” என்று குத்தலாகச் சொல்லிச் சிரித்தார் நகைவேழம்பர். இதைக் கேட்டுப் பெருநிதிச் செல்வருக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது. “என் சித்தப்படியே எல்லாம் நடக்கிறதென்று வீறாப்பு பேசினர்களே! உங்கள் சித்தப்படி, இதுவும் நடப்பது தானே?” என்று நகைவேழம்பரைப் பதிலுக்குச் சாடினார் அவர். இருவரும் ஒருவரையொருவர் சொற்களால் சாடிக்கொண்டே திரும்பினார்கள். சக்கர வாளத்தைக் கடந்து மதிற்சுவருக்கு இப்பால் பூதம் நின்ற வாயிலுக்கு வெளிப்புறம் அவர்களிருவரும் வந்தபோது எங்கிருந்தோ ஒர் ஆந்தை ஒற்றைக் குரல் கொடுத்தது.

“ஆந்தை ஒற்றைக்குரல் கொடுக்கிறது. நல்ல சகுனம்தான். இன்று தோல்வி அடைந்து விட்டாலும் நம் முயற்சிக்கு என்றாவது வெற்றி கிடைக்கும்” என்று தேரில் ஏறிக்கொண்டே சொன்னார் நகைவேழம்பர்.

“உமக்குப் பட்சி சாத்திரம் கூடத் தெரியுமோ நகைவேழம்பரே” - பெருநிதிச் செல்வர் இயல்பாக இப்படி வினாவுகிறாரா, ஏளனம் செய்யும் குரலில் வினாவுகிறாரா என்பைதப் புரிந்து கொள்ள முயன்று சில வினாடிகள் ஒன்றும் புரியாமல் திகைத்தார் நகைவேழம்பர். பின்பு திகைப்பு நீங்கியவராக “ஆகா! பட்சி சாத்திரம் மட்டுமில்லை. பட்சிகளுக்கு வலை விரிக்கும் சாத்திரமும் தெரியும். ஆந்தை ஒற்றைக் குரல் கொடுத்தால் சாவு என்று பொருள். நாம் யாரைக் கொல்ல முயன்று கொண்டிருக்கிறோமோ அவனுக்குச் சாவு நெருங்குகிறது என்பதைத்தான் இந்த ஆந்தை சொல்கிறது” என்றார்.

“நீர் விளக்கம் சொல்வது போல் அல்லாமல் ஆந்தையின் குரலைக் கேட்ட உமக்கோ, எனக்கோ அது சகுனம் சொல்லியிருந்தால்...”

“சொல்லியிருந்தால் இந்தக் கணமே அந்த ஆந்தைக்குச் சாவு என்று பொருள். சகுனங்களை நமக்கு ஏற்றாற்போல் இணைத்துப் பார்க்க வேண்டுமே தவிரச் சகுனங்களுக்கு ஏற்றாற்போல் நாம் மாற்றிக்கொண்டு வேதனைப்படலாமோ...?”

“ஓகோ! எதையும் உமக்கு ஏற்றாற்போல வளைத்து மாற்றிப் பார்க்கிறவரா நீர்...?”

பெருநிதிச் செல்வரின் இந்தக் கேள்விக்கு நகைவேழம்பரிடமிருந்து மறுமொழியில்லை. அவர் விழிப்படைந்தார். தேர் விரைந்து போய்க் கொண்டிருந்தது. அமைதியான அந்த நேரத்தில் தேர்ச் சக்கரங்களின் ஒசையே எங்கும் பரவி நிறைவது போல் அதுவே பெரிய ஒசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது தொலைவு சென்றதும் ஒரு தாழம் புதரருகே புற்றுக்களின் நடுவே மகுடி வாசித்துக் கொண்டிருந்த பாம்புப் பிடாரன் ஒருவனை அவர்கள் கண்டார்கள். தேரிலிருந்தபடியே நிலவொளியில் அந்த நாகரினத்துப் பாம்பாட்டி மகுடி வாசிப்பதை அவர்கள் கண்டுகொண்டே செல்ல முடிந்தது. இந்த இடத்திலிருந்து தேர் சிறிது தொலைவு சென்றபின் எதையோ அவசரமாக நினைத்துக் கொண்டவர் போல் தேரை மறுபடியும் திருப்பி அதே இடத்துக்குச் செலுத்தினார் நகைவேழம்பர். எதற்காகத் தேர் திருப்பப்படுகிறது என்பதைப் பெருநிதிச் செல்வரிடமும் கூறவில்லை. தம்மிடம் கூறாமலே தேர் திருப்பப்படுவதைக் கண்டு அவர் பயமும் திகைப்பும் ஒருங்கு அடைந்தாலும், பயத்தைச் சற்றே மறைத்துக் கொண்டு திகைப்பு மட்டும் வெளிப்படுகிற குரலில், “ஏன்? எதற்காகத் தேரைத் திருப்புகிறீர்கள் நகைவேழம்பரே! வன்னி மன்றத்தில் எதையாவது மறந்து வைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.

அவருடைய கேள்விக்குப் பதில் கூறாமல் குதிரைகளை விரட்டியடித்துக் கொண்டு போனார் நகைவேழம்பர். நாகர் இனத்துப் பாம்புப் பிடாரன் மகுடி வாசித்துக் கொண்டிருந்த புற்றருகே போய்த் தேர் நின்றது. அதற்குள் குதிரைகளுக்கு வாயில் நுரை தள்ளியிருந்தது. அவ்வளவு வேகத்தில் விரட்டியிருந்தார் அவர். அந்த இடத்துக்கு வந்ததும் தாம் தேரிலிருந்து முதலில் கீழே குதித்து நின்றுகொண்டு “இறங்கி வாருங்கள்! இவனிடத்தில் ஒரு காரியம் இருக்கிறது” என்று பாம்பாட்டியைச் சுட்டிக் காண்பித்துப் பெருநிதிச் செல்வரை அழைத்தார் நகைவேழம்பர். ‘எதற்காகத் தேரைத் திருப்புகிறாய் என்று நான் கேட்டபோது என்னை மதித்துப் பதில் சொல்லாத இவனுடைய அழைப்பை மதித்து நான் ஏன் கீழே இறங்க வேண்டும்’ என்று நினைத்தவராய்ச் சில கணங்கள் நகைவேழம்பருடைய வார்த்தைகளையே கேட்காதவர் போலத் தேரிலேயே இருந்தார் பெருநிதிச் செல்வர். பின்பு நகைவேழம்பரைப் போலக் கொடுமையானவர்களை நேருக்கு நேர் அலட்சியம் செய்வது சமயோசிதமாகாது என்று தமக்குத்தாமே உணர்ந்தவராகத் தேரிலிருந்து கீழே இறங்கினார்.

“இவனுடைய மகுடி ஒசையால் இந்தப் பகுதியில் மூலைக்கு மூலை நாகங்கள் புறப்பட்டு ஊர்ந்து கொண்டிருக்குமே? இங்கு எதற்காகத் தரையில் இறங்க வேண்டுமென்கிறீர்கள்? தாழம் புதரும், புற்றுக்களும், பிடாரனும் பார்த்தாலே பயமாக இருக்கிறதே...?” என்று வார்த்தைகளை நீட்டி இழுத்த பெருநிதிச் செல்வரை ஏறிட்டுப் பார்த்தார் நகைவேழம்பர். விஷமமாகச் சிரித்துக்கொண்டே பார்த்தார். பார்த்துவிட்டுப் பதறாத குரலில் உள்ளர்த்தமாகப் பல செய்திகளையெல்லாம் நிறைத்து நிறுத்திய வார்த்தைகளால் சுருக்கமாக ஒரு கேள்வி கேட்டார்.

“பயப்படுகிற எதையும் நீங்கள் செய்வதே இல்லையோ?”

பெருநிதிச் செல்வர் இதைக் கேட்டு அப்படியே வெலவெலத்துப் போனார். இந்தக் கேள்வியின் மூலமாக நகைவேழம்பர் எதை நினைவுபடுத்துகிறார் என்று பழைய நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்க்கவும் முயன்றார். எதையும் நினைவுபடுத்துகிறாற் போலவும் இல்லை. எல்லாவற்றையும் நினைவுபடுத்திக் குத்திக் காட்டுவது போலவும் இருந்தது. எல்லாவற்றிலும் பயங்கரமான ஏதோ ஒன்றை மட்டும் நினைவுறுத்துவது போலவும் இருந்தது. இந்தக் கேள்வியைக் கேட்கிறபோது நகைவேழம்பரின் பேச்சும் வன்மையாகவே இருந்தது. மனத்தில் ஏதேதோ அதிர்ச்சிகள் பேசிட, வாய் ஒன்றும் பேசாமல் நகைவேழம்பரைப் பின்பற்றிப் பாம்புப் பிடாரன் இருந்த இடத்துக்கு நடந்தார் பெருநிதிச் செல்வர். கொடி கொடியாய்க் கிளை விட்டு வளர்ந்திருந்த அந்தப் புற்றுக்களின் நுனித் துவாரங்களைப் பார்த்தவாறே கவனம் கலையாமல் மகுடி ஊதிக் கொண்டிருந்தான் அந்த முரட்டுப் பிடாரன். தனக்குப் பின்னால் மிக அருகில் யாரோ இருவர் வந்து நிற்பதை அறிந்து கொண்டானாயினும் அவன் திரும்பிப் பார்க்க வில்லை. பயத்தினால் புற்று நுனிகளெல்லாம் பெருநிதிச் செல்வருக்குச் சர்ப்பங்களாகவே தோன்றின. நெருப்பில் காட்டிய தருப்பைப் புல்லின் அழலோடிய துணிகளைப் போல் செக்கச் செவேலெனப் பிளந்த நாக்குகள் நெளிய ஒரு படம் புற்றிலிருந்து வெளி வந்து தெரிந்தது. பெரு நிதிச் செல்வர் பயந்து பதுங்கி நகைவேழம்பரைத் தழுவிக் கட்டிக்கொள்வதுபோல அவரோடு அவராக ஒண்டினார். சாதிக்காயின் மேல் நரம்போடிப் படர்ந்த சாதிப் பத்திரிபோல் நச்சு நாவுகள் நெளியப் புற்றுத் துளையிலிருந்து பொங்கி ஒழுகிப் பெருகி வழியும் கருமையாய் ஒரு பெரிய கருநாகம் வெளிவந்தது. மகுடியை ஒரு கையாலேயே வாசித்துக் கொண்டு மற்றொரு கையால் சர்ப்பத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த வேரைப் பிடித்தான் பிடாரன். தரையில் அவனைச் சுற்றிலும் பாம்பைச் சிறைப் பிடித்து அடைத்துக் கொண்டு போகும் பேழைகள் கிடந்தன. பயத்தின் மிகுதியால் நகைவேழம்பரையும் இழுத்துக் கொண்டு பின்னுக்கு நகர்ந்தார் பெருநிதிச் செல்வர்.

கூடை போலப் பிரம்பினால் நெருக்கமாய்ப் பின்னிய வட்டப் பேழையில் சாமர்த்தியமாக அந்தச் சர்ப்பத்தை அடைத்து மூடி அதன்மேலே சிறு கல் ஒன்றையும் தூக்கி வைத்தான் பிடாரன். பின்பு விலகி நிற்கும்படி அவர்களுக்குச் சொல்லிவிட்டு மேலும் மகுடி ஊதலானான். புற்றில் இன்னொரு படம் தெரிந்தது. தொடர்ந்து வேறு வேறாக அடுத்த இரண்டு துவாரங்களிலும் படங்கள் தெரிந்தன. பிடாரன் சாதுரியமாய் வேலை செய்தான். அவனிடம் மீதமிருந்த பேழைகளும் நிரம்பின. கிடைத்த பாம்புகளையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டு அவன் மகுடியை நிறுத்திவிட்டு எழுந்தான். நகைவேழம்பர் அவனைப் பற்றி அவனிடமே விசாரித்தார். இந்திர விழாவில் வேடிக்கை விளை யாட்டுக்கள் செய்து பாம்பாட்டிக் காட்ட வந்திருப் பதாகவும் அது தன் தொழில் என்றும் அவன் சொன்னான். நகைவேழம்பர் அவனிடமே மேலும் கேட்டார். “இந்த நச்சுப் பாம்புகளை எப்படிப் பொது இடங்களில் வைத்து ஆட்டுவாய்? இவற்றைக் கண்டாலே மக்கள் பயப்படுவார்களே?”

“ஆட்டுவதற்குக் கொண்டு போகும் முன்பே நச்சுப் பல்லைப் பிடுங்கி விடுவோம் ஐயா! பிடுங்கா விட்டாலும் இவற்றை ஆட்டும் வேர் எங்களிடம் உண்டு” என்றான் பிடாரன். நகைவேழம்பர் மிக அருகில் சென்று குழைவான குரலில் அவனிடம் வேண்டினார்:

“நீ எங்களுக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்...”

“என்ன செய்ய வேண்டும் ஐயா?”

“நீ உன் பாம்புப் பேழைகளுடன் எங்களோடு எங்கள் தேரில் வரவேண்டும்..” என்றார் நகைவேழம்பர்.

பிடாரன் எதற்காகவோ தயங்கினான்.

“இந்திர விழாவின் எல்லா நாட்களிலும் சேர்த்து நீ எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாத்தியத்தை விட அதிகமாகச் சம்பாதிக்கும் வாய்ப்பைச் சில நாழிகைகளிலேயே உனக்கு நான் ஏற்படுத்தித் தர முடியும்.”

பாம்புகளைச் சிறைப்படுத்திய தைரியசாலி ஆசைக்குச் சிறைப்பட்டான். நச்சுப் பாம்புகளே தன்னை தீண்டாமல் பிடித்தவன் ஆசைப் பாம்புக்குக் கடிபட்டான். “ஐயையோ! தேரிலா? பாம்புப் பேழைகளும் இவனும் வந்தால் நாம் எப்படிப் போவது?” என்று பதறிய பெருநிதிச் செல்வரின் காதருகே சென்று. மந்திரம் போட்டது போல ஏதோ சொன்னார் நகைவேழம்பர். அவ்வளவுதான். பெருநிதிச் செல்வர் முகம் மலரச் சம்மதம் தந்துவிட்டார். பாம்புப் பிடாரன் பேழைகளும் தானுமாகத் தேரின் பின் பக்கத்துச் சட்டத்தில் ஏறிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். பேழைகளைக் கவனமாகப் பற்றிக் கொள்ளும்படி அவனை எச்சரித்துவிட்டு நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் தங்கள் இடங்களில் ஏறிக்கொண்டனர். தேர் பட்டினப் பாக்கத்துக்கு விரைந்தது.

மாளிகைக்குத் திரும்பியதும் பெருநிதிச் செல்வரை மட்டும் உறங்குவதற்கு அனுப்பிவிட்டுப் பிடாரனை அழைத்துக் கொண்டு தம் பகுதிக்குச் சென்ற நகைவேழம்பர் பணியாட்களை எழுப்பி மாளிகைத் தோட் டத்திலிருந்தும் வெளியேயுள்ள பூங்காக்களிலிருந்தும் குவியல் குவியலாகப் பூக்களைக் கொண்டு வரச் செய்தார். பூக்கள் குவிந்தன. பொழுதும் புலர்ந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
9. தொழுத கையுள்ளும்...

பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையில் பூக்கள் குவிந்து பொழுது விரிந்து கொண்டிந்த இதே வேளையில்தான் இளங்குமரன் ஆலமுற்றத்துக் கடல் ஓரமாக நீலநாக மறவருடன் நடந்து கொண்டிருந்தான். அங்கே நெய்தல் நிலத்துக் கழி முகங்களில் மலர்ந்திருந்த தாழம்பூக்களின் மணத்தை நுகர்ந்தபோது, இந்தத் தாழம்பூக்களின் மணத்தையே நான் அடிக்கடி உணர நேர்கிறதே என்று நினைத்துத் தனக்குத்தானே மெல்லச் சிரித்துக் கொண்டான் அவன். உலகத்துப் பூக்களிலும் அவற்றின் மணத்திலும் நாங்கூர் அடிகள் தெய்வத்தையே பார்க்கிறார். நானோ ‘இவ்வளவு நாள் கற்ற பின்னும் பழைய மனிதர்களையும் பழைய உறவுகளையும் பழைய நினைவுகளையும் தவிர வேறெதையும் இவற்றின் மணத்தில் காண முடிய வில்லையே’ என்று எண்ணியபோது இளங்குமரனுக்கு ஏக்கமாகத்தான் இருந்தது. வாசனையின் வழியே மனம் போகக் கூடாதென்பதைத்தான் அவன் கற்றிருந்த தத்துவங்கள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தன. அவனோ கால்கள் நடந்த வழி மனமும், மனம் நடந்த வழியே கால்களும் செல்லாமல் இரண்டும் வேறு வேறு வழிகளுக்கு முரண்டிக் கொண்டு போகிற வேதனையை இன்று அதிகாலையில் உணர்ந்தான். நீராடித் தூய்மை பெற்றுத் திரும்பிய போது மனமும் கால்களும் ஒரே வழியில் நடக்கும் ஒருமை நிலையோடு அவன் நீலநாகமறவருடன் படைக்கலச் சாலைக்குள் நுழைந்தான். புனலாடிக் குளிர்ந்த உடம்பினாலும் தியானத்தினாலும் மனம் தூய நினைவுகளிலும் மூழ்கியிருந்தது. பழைய கலக்கம் இல்லை.

அவர்களை எதிர்பார்த்து அப்போது ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவியும் படைக்கலச் சாலையில் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். நீலநாகமறவர் மணிமார்பனைக் கண்டதுமே அடையாளம் புரிந்து கொண்டார்.

“பாண்டிய நாட்டுப் பிள்ளையாண்டானா? எப்பொழுது வந்தாய்?” என்று அன்போடு அவனை விசாரித்தார் நீலநாகமறவர். மனைவியோடு இந்திர விழாக் காண வந்திருப்பதை இவரிடம் கூறினான் மணிமார்பன். “எங்கே தங்கியிருக்கிறாய் தம்பீ?” என்று மேலும் கேட்டார் அவர். இலவந்திகைச் சோலையின் மதிற்புறத்தில் உள்ள ஓர் அறக்கோட்டத்தில் தங்கியிருப்பதாகக் கூறினான் அவன். அதைக் கேட்டதும் அவர் முகம் கலக்கத்தைக் காட்டியது.

“இந்த ஊரில் உனக்குப் பழைய பகைவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டிருந்தும் நீ இப்படியெல்லாம் பொது இடங்களில் தங்கலாமா? முன்பாவது நீ தனிக்கட்டை, இப்போது உன்னைப் பற்றி கவலைப்படவும் நீ கவலைப்படவும், இந்தப் பெண்ணும் இருக்கிறாளே, முதலிலேயே இங்கு வந்து தங்கியிருக்கக் கூடாதோ? இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இலவந்திகைச் சோலைக்குப் போய் உங்கள் பொருள் களையெல்லாம் எடுத்துக் கொண்டு இன்று மாலைக்குள் இருவரும் இங்கே வந்துவிடுங்கள். இந்திர விழா முடிந்து ஊர் திரும்புகிற வரை இங்கேயே தங்கலாம்” என்றார் நீலநாகமறவர். அப்படியே செய்வதாக இணங்கினான் மணிமார்பன். சிறிது நேரம் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்து விட்டு இளங்குமரனும், நீலநாகரும் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினர்.

செய்யவேண்டிய வழிபாடுகளையும் நியமங்களையும் முடித்துக் கொண்டு அன்று காலையிலேயே சமய வாதத்துக்குப் புறப்பட்டு விட்டான் இளங்குமரன்! புறப்படும்போது நீலநாகர் எச்சரித்தார்: “நேற்றைய அனுபவத்தை மறந்துவிடாதே, கவனமாக நடந்து கொள். ஒவ்வொரு விநாடியும் நான் உனக்குத் துணையாயிருப்பதென்பது இயலாத காரியம். நான் ஒரு விநாடி சோர்ந்திருந்தால் அந்த ஒரு விநாடியைப் பயன்படுத்திக்கொண்டு உன் பகைவர்கள் உனக்கு எவ்வளவோ செய்துவிடலாம்.”

இதைக்கேட்டு இளங்குமரன் மெல்லச் சிரித்தான். “அறிவுடையவனுக்கு அந்த அறிவே பெரிய அரண் என்று நீங்கள்தானே நேற்றுக் கூறினிர்கள்! அதை நம்பித்தான் தனியே போகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். இன்று நடந்தே புறப்பட்டுச் செல்வதென்று தனக்குள் நினைத்திருந்தபடியே செய்தான் அவன்.

வேடிக்கை, விளையாடல், கலை, களிப்பு என்று இந்திர விழாக் கூட்டம் பலவிதமான நுகர்ச்சிகளில் சிதறியிருந்தாலும் அறிவில் இன்பம் காணுகிற கூட்டம் நாளங்காடியில் ஒரு மூலையிலிருந்த அந்த அறிவுப் போர்க்களத்தில் கூடியிருந்தது. இந்திர விழாவின் இரண்டாவது நாட் காலையாகிய அன்று பூத சதுக்கத்தில் படையலிடுவோர், பாடுகிடப்போர் கூட்டம் மிகுதியாயிருந்தது. அதனால் நேரம் காலையாயினும் சமயவாதிகளைச் சுற்றிலும் கூடக் கூட்டம் அதிகமாயிருந்தது. இளங்குமரன் அந்தக் கூட்டத்தில் நுழைந்து தன் கொடியை ஊன்றியபோது கூடியிருந்தவர்களிடம் பெரிதும் ஆர்வம் பிறந்தது. அவர்களிற் பலர் முதல்நாள் அவனுடைய வாதத்தில் திறமை கண்டதின் காரணமாக இன்றும் இதைக் காணலாம் என்னும் ஆவலால் வந்தவர்கள். கூட்டத்தில் ஒரு பகுதியினர் இளங்குமரன் உள்ளே நுழைந்து கொடி ஊன்றியதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவனை வரவேற்றதிலிருந்தே அந்த ஆர்வம் புலப்பட்டது. அன்றைக்கு இளங்குமரனுக்கு வாய்த்த முதல் எதிரி ஒரு சாங்கியனாக அமைந்தான். தத்துவங்களில் மிகவும் வல்லவனாகிய அந்தச் சாங்கியன் மிடுக்காக நடந்து சிரித்துக் கொண்டே இளங்குமரனுக்கு எதிரில் வந்து தன் கொடியை நட்டான். அவனுடைய சிரிப்பு ‘நீ என் தத்துவங்களுக்கு முன்னால் வெறும் சிறுபிள்ளை. உன்னை வெல்வதற்கென்று எனக்குத் தனி முயற்சி எதுவும் வேண்டியதேயில்லை’ என்று இளங்குமரனை எள்ளி நகையாடுகிற விதத்தில் தெரிந்தது. சாங்கியன் கூர்மையான அம்பைக் குறிவைத்து எய்வது போல் தன் முதல் கேள்வியைத் தொடுத்தான்: “உலகம் உள்ள பொருளாகச் சொல்லப்பட்டது. தானே தோன்றி தானே அழியப்போகிற உலகத்துக்கு முதற் காரணமே போதுமே? நிமித்த காரணமாக ஒரு செய்பவன் எதற்கு?” இந்தக் கேள்வியிலும் அவன் தோற்றத்தில் இருந்தாற் போலவே மிடுக்கு இருந்தது. இளங்குமரன் தெளிவான முறையில் அவனுக்கு மறுமொழி தந்தான்: “செய்வோர் இல்லாமல் வினை செய்யப்படுவது முடியுமோ? செய்பவன் செய்து உண்டாக்கிய பின்பு தானே பொருள் உள்ளதாகும்? உத்தேசம் பண்ணிக் கொள்ளாமல் இலக்கணம் பண்ணுவது தருக்கத்தில் குற்றமல்லவா? நான் ‘மலடியீன்ற மகன்’ என்பதுபோல் உத்தேசமும் இல்லாமல் இலக்கணமும் இல்லாமல் வீணான வார்த்தைகளைச் சொல்கிறீர்களே? உள்ளதை உள்ளதென்று உணரும் அறிவுக்கு உபலத்தி என்று பெயர். இல்லதை இல்லதென்று உணரும் அறிவுக்கு அநுபலத்தி என்று பெயர். கண்முன் தெரிகிற உலகத்தை உபலத்தியாக உணரும் நாம் அதற்குச் செய்தவன் உண்டு என உணருவதே நியாயம். செய்யப்பட்ட பொருள் உபலத்தியாகும்போது செய்தவன் மட்டும் அநுபலத்தியாவது எப்படிப் பொருந்தும்? பொருந்துமானால் ‘வாக்கிய பேதம்’ என்னும் குற்றமுடைய பேச்சை நீங்கள் பேசுகிறீர்கள். கவிகள் அலங்காரத்துக்காக வாக்கிய பேதம் செய்யலாம். தருக்கத்தில் சிறு சொல்லுக்கும் மதிப்பு அதிகம். நெருப்புக் காய்வது போல் நெருங்காமலும் விலகாமலும் சொல்லை அளவாகத் தொடுத்து வாதிடவேண்டும். ஒளியைக் கண்டு உணர்வது உபலத்தி. இருளைக் கண்டு உணர்வது அநுபலத்தி. ஆலம்பழத்தின் அளவுள்ள சிறு நெருப்பைக் கொண்டு ஏழு எட்டு வேள்விக் குழிகளில் பெருநெருப்பை வார்க்க முடிவதுபோல் தருக்கத்தில் சிறு சொல்லுக்கும் பெரும்பயன் விளைய வேண்டும். சிறியதில் இருந்து பெரியவற்றைப் பயனாக விளைத்துக் காட்ட வேண்டும்.”

இதைக் கேட்டுச் சாங்கியன் சிறிதும் அயரவில்லை. தனது அடுத்த கேள்வியைத் தொடுத்தான். “நீர் தன் மேல் உருண்டு அலைந்து ஆடினாலும் நான் பற்றின்றித் தாங்கி இருக்கும் தாமரை இலைபோல் புத்தி ஐம்பொறிகள் வழியாக நுகர்ச்சியை ஏற்றுக் கொள்ளும், புத்திக்கும் அப்பால் வேறொருவன் எதற்கு?”

“உமது கேள்வி நன்றாயிருக்கிறது. அழகாகப் பதில் சொல்ல முடியாதவர்கள் கேள்விகளையாவது அழகாகக் கேட்க முடியும். சாங்கியராக இருந்த நீர் அறிந்தது அழகாகக் கேள்வி கேட்கும் அறிவு ஒன்றுதான் போலி ருக்கிறது. ஆன்மா ஒன்றித்து நின்று காட்டாவிடின் புத்தியும் ஐம்பொறிகளும் நுகரமாட்டா என்பதை நீர் தெரிந்து கொள்ளவில்லையா? உமக்குக் கண்கள் இருக்கின்றன. அவற்றுக்குப் பார்க்கும் ஆற்றலும் இருக்கிறது. ஆயினும் செறிந்து மண்டிய இருளில் உம்முடைய கண்களால் ஏன் எதையும் பார்க்க முடிவதில்லை? கண்களும், பார்க்க ஆற்றலும் தவிர உம்முடைய விழிகளையும் - கானும் ஆற்றலையும் நீர் காணவேண்டிய பொருளோடு ஒன்றிப்பதற்கு அவற்றின் வேறாகிய ஒளியும் வேண்டுமா, இல்லையா?”

மேலே என்ன கேட்பதென்று தயங்கிய சாங்கியன் விழித்தான். ஆனால் இன்னும் ஏதோ கேட்பதற்கு அவனுடைய உதடுகள் மட்டும் துடித்தன. அதற்குள் கூட்டத்தில் இளங்குமரனைப் புகழும் வெற்றிக் குரல்கள் முழங்கத் தொடங்கிவிட்டன. கொடியும், மிடுக்கான பார்வையோடு கூடிய முகமும் தாழத் திரும்பி நடந்தான் சாங்கியன்.

அப்போது கூட்டத்தில் ஏதோ பரபரப்பு ஏற்பட்டது. யாரோ வழி விலகிக்கொண்டு உள்ளே வருவதற்கு முயல்வது போலத் தோன்றியது. இளங்குமரன் பார்த்தான். இரண்டு மூன்று பெண்களும் அவர்களுக்குப் பின்னால் பெரிய கூடையைச் சுமந்து கொண்டு யவனப் பணியாளன் ஒருவனும் உள்ளே வந்து கொண்டிருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாரென அவனுக்குத் தெரிந்தது. பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைப் பெண்கள். ஒரேவிதமான கோலத்தில் விளங்கிய இருவரில் ஒருத்தி சுரமஞ்சரியாகவும், இன்னொருத்தி வானவல்லியாகவும் இருக்க வேண்டும் என்று அவன் அதுமானித்தான். மூன்றாவதாகக் கடைசியில் வந்தாள் வசந்தமாலை,

அவர்களுடைய அழகு அலங்கார ஒளியினாலும் அவர்கள் பரவவிட்ட மணத்தினாலும் கூட்டமே அவர்கள் பக்கம் கவரப்பட்டது. இளங்குமரன் மட்டும் சலனமின்றி நின்றான். மூன்று பெண்களும் அவனுக்கு மிக அருகில் வந்து தலை தாழ்த்தி அவனை வணங் கினார்கள். மூவரிலும் முதலில் நின்ற பெண் வணங்கிய படியே நிமிர்ந்து “என்னைத் தெரியவில்லையா? நான் தான் சுரமஞ்சரி” என்று மெல்லச் சொன்னாள். சலனமின்றி நின்ற இளங்குமரன், “நேற்று நீங்கள் வானவல்லியாக இருந்தது மெய்யா? இன்று நீங்கள் சுரமஞ்சரியாக இருப்பது மெய்யா? இரண்டில் எது மெய்?” என்று பதறாமல் கேட்டான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top