• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3.20. தீவினைப் பரவுகிறது

புவன மோகினி பேயறையப்பட்டு ஓடி வருகிறவளைப் போல் ஓடி வந்ததைக் கண்டவுடன் மகாராணி, குழல்வாய்மொழி, விலாசினி எல்லோரும் திகைப்போடு விரைந்து வந்து அவளைச் சூழ்ந்து கொண்டனர்.

"என்னம்மா? ஏன் இப்படி நிலைகெட்டுத் தடுமாறி ஓடி வருகிறாய்? என்ன நடந்தது?" என்று அந்தப் பெண்ணை நிறுத்தி நிதானப்படுத்தி விசாரித்தார்கள், பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும். பயந்து வெளிறிய கண் பார்வையால் தன்னைச் சூழ்ந்து நின்றவர்களை ஒவ்வொருவராகப் பார்த்தாள் புவன மோகினி. மகாராணியாரையும், விலாசினியையும் பார்த்து விட்டுக் குழல்வாய்மொழியின் மேல் அவள் பார்வை திரும்பிய போது அவள் கண்கள் சுருங்கி வெறுப்புப் படர முகம் சிறுத்தது. அவளைப் பார்க்க விருப்பம் இல்லாதவள் போல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு விட்டாள் புவன மோகினி.

இதைக் கண்டு குழல்வாய்மொழியின் உள்ளம் அவமானப்பட்டு விட்டது போலக் கொதித்தது. புவன மோகினி என்ற சாதாரணமான வண்ணமகள் தன்னிடம் இப்படி நடந்து கொண்டாளே என்று வேதனையாக இருந்தது அவளுக்கு. 'பகவதியைப் பற்றி விசாரித்துக் கொண்டு வரப்போன புவன மோகினி உண்மையைத் தெரிந்து கொண்டு வந்து விட்டாளோ? அதனால்தான் என் முகத்தை இப்படி வெறுப்போடு பார்க்கிறாள் போலும்! ஐயோ, நான் ஏன் இந்தச் சமயத்தில் இங்கே இருக்க நேர்ந்தது? நான் மறைத்து வைத்த உண்மை என் முன்னாலேயே வெளிப்பட்டு என்னைத் தலைகுனிய வைக்க வேண்டுமா?' என்று மனத்துக்குள் எண்ணிப் பதற்றமடைந்தாள் குழல்வாய்மொழி.

"வண்ணமகளே! ஏன் இப்படிப் பதற்றமும் பயமும் அடைந்து வாய் பேசாமல் நிற்கிறாய்? நீ பகவதியைப் பற்றி விசாரித்துக் கொண்டு வரச் சென்ற இடத்தில் என்ன நடந்தது? சொன்னால்தானே எங்களுக்குத் தெரியும்? சொல் அம்மா?" என்று மகாராணி புவன மோகினியைக் கேட்டார். புவன மோகினி வெறுப்பும் அச்சமும் கலந்த முகபாவத்தோடு மறுபடியும் குழல்வாய்மொழியை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்துவிட்டு பதில் சொல்லத் தயங்குவது போல் நின்றாள். இனிமேலும் தான் அங்கேயே நின்று கொண்டிருந்தால் வெளிப்படையாக அவமானப்பட்டுத் தலைகுனிய நேர்ந்து விடும் என்று அஞ்சினாள் குழல்வாய்மொழி.

"உள்பக்கம் போய்விட்டு இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன்" என்று ஏதோ அவசர காரியமாகச் செல்கிறவளைப் போல் சொல்லிவிட்டு மெல்ல நழுவிச் சென்றாள் குழல்வாய்மொழி. முகத்திலோ, குரலிலோ, தான் அங்கிருந்து செல்வது மற்றவர்களுக்கு அநாகரிகமாகத் தோன்றிவிடுவதற்குரிய குறிப்பே காட்டாமல் சுபாவமாகச் சொல்கிறவளைப் போல் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு உட்புறமாகச் சென்றுவிட்டாள் அவள். சென்றுவிட்டாள் என்று முடித்துச் சொல்வது தவறு. செல்வது போல் போக்குக் காட்டிவிட்டு அருகேயிருந்த ஒரு கதவுக்குப் பின் மறைந்து நின்று கொண்டாள். புவன மோகினி என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்டு அறிந்து கொள்ளும் ஆவல் அவளுக்கு இருக்குமல்லவா? செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு விநாடிக்கு விநாடி விரைவாகத் துடிக்கும் நெஞ்சத் துடிப்புடன் கதவு மறைவில் நின்றாள் அவள்.

"இன்னும் ஏன் அம்மா தயங்குகின்றாய்? இடையாற்று மங்கலத்துப் பெண் இருக்கும் போதுதான் அவள் முகத்தைப் பார்த்துப் பேசக் கூசி மருண்டு நின்றாய்? அவளோ உள்ளே போய்விட்டாள். பயப்படாமல் நீ சொல்ல வேண்டியதைச் சொல்லலாம்" என்று பவழக்கனிவாயர் புவன மோகினியைத் தூண்டிக் கேட்டார்.

"பெண்ணே! இன்னும் எங்கள் பொறுமையைச் சோதித்துக் கொண்டு நிற்காதே! சொல்" என்று மகாராணியும் தூண்டவே புவனமோகினி வாய் திறந்தாள்.

"அதை நான் எப்படிச் சொல்வேன், தேவி! சொல்வதற்கே நாக் கூசுகிறது எனக்கு. கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போகிற பாதையில் மகாமண்டலேசுவரருக்கு எதிராக கலவரங்களும் குழப்பங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பெரியவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் பற்றி மிகக் கேவலமான முறையில் பேசிக் கொள்கிறார்கள். குழல்வாய்மொழியும், நாராயணன் சேந்தனும் ஈழத்துக்குப் பயணம் செய்த கப்பலில் பகவதியும் சென்றாளாம். மகாமண்டலேசுவரர் தம்முடைய சூழ்ச்சியால் அந்தப் பெண் பகவதியை ஈழ நாட்டிலிருந்து திரும்ப முடியாதபடி அங்கேயே இறக்கும்படி செய்துவிட்டாராம். தளபதி வல்லாளதேவனைப் போர்க்களத்துக்கு போகக்கூடாதென்று தடுத்துச் சிறைப்படுத்தினாராம். மகாமண்டலேசுவரருடைய காவலிலிருந்து தப்பித் தளபதியும் ஆபத்துதவிகள் தலைவனும் கழற்கால் மாறனார் முதலியவர்களோடு சேர்ந்து கொண்டு ஒரு பெரிய கலகக் கூட்டத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் முரட்டுக் கொள்ளைக் கூட்டத்தைப் போல் ஆயுதபாணிகளாகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். நான் தப்பி ஓடி வரத் தெய்வம்தான் துணை புரிந்தது. போகிற வழியில் இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டேன். ஆனால், இவை எவ்வளவுக்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் பலர் கூறக்கேட்ட போது நம்பாமலும் இருக்க முடியவில்லை. இந்த நிலையில் கலக்கமுற்றுப் பதறி ஓடி வந்த போது கலகக்காரரிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் உயிர் பிழைத்து வரவேண்டுமே என்ற பயம் இங்கு வந்து சேர்கிற வரை என்னை விடவில்லை. ஒரு வழியாக அரண்மனைக்கு வந்து உங்களிடமே நடந்ததைக் கூறிவிட்டேன்." பேசி முடிப்பதற்குள் புவன மோகினிக்கு மூச்சு இரைத்தது. அச்சத்தினாலும் குழப்பமான மன நிலையினாலும் சொற்கள் தடைப்பட்டு உருக்குலைந்து வெளிவந்தன. அவள் அவ்வாறு பேசி நிறுத்திய பின் அங்கு ஒரு விதமான அமைதி நிலவியது.

அவள் சொல்லி முடித்த பின்பும் சிறிது நேரம் வரையும் மகாராணிக்கும் முதியவர்களுக்கும் அவளுடைய சொற்களில் நம்பிக்கை உண்டாகவே இல்லை. மகாராணி சோகம் தோய்ந்த குரலில் கூறலானார்:

"பவழக்கனிவாயரே! இதெல்லாம் உண்மையாயிருக்கு மென்றே என்னால் நம்பமுடியவில்லையே? பகவதி எப்போது இலங்கைக்குப் போனாள்? மகாமண்டலேசுவரர் ஏன் அவளைக் கொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்? தளபதிக்கும் அவருக்கும் அவ்வளவு பெரிய பகைமை இருப்பதற்கு ஒரு காரணமும் இல்லையே? இந்த மாதிரிச் செய்திகளையெல்லாம் மகாமண்டலேசுவரர் மேல் வெறுப்புக் கொண்ட கூற்றத் தலைவர்கள் யாராவது பொய்யாகத் திரித்து விட்டிருப்பார்களோ? இது என்ன கெட்ட காலம்? ஒரு பக்கத்தில் நாட்டின் எதிர்காலத்தையே முடிவு செய்து நிர்ணயிக்கும்படியான போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் இன்னொரு பக்கத்தில் இப்படி உள்நாட்டுக் குழப்பம் எழுந்தால் எவ்வளவு கேவலம்?"

"மகாராணி! நீங்கள் கூறுவது போல் எனக்கும் இதில் நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது. பகவதி ஈழ நாட்டில் போய் மரணமடைந்திருந்தால் குமாரபாண்டியருக்குத் தெரியாமலா போகும்? அவ்வளவேன்? நம்மோடு இங்கேயே தங்கியிருக்கும் மகாமண்டலேசுவரரின் பெண் குழல்வாய்மொழியைக் கேட்டால் எல்லா விவரமும் தானே தெரிந்து விடுகிறது. எங்கே அந்தப் பெண்ணை உள்ளேயிருந்து இப்படிக் கொஞ்சம் கூப்பிட்டு அனுப்புங்களேன். உடனே விசாரித்து விடலாம்" என்று பவழக்கனிவாயர் கூறியவுடன், "இதோ நான் போய் உடனே இடையாற்று மங்கலத்து நங்கையை உள்ளேயிருந்து கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன்" என்று விலாசினி சென்றாள். அப்போது அதங்கோட்டாசிரியர் கூறினார்: "மகாராணி! நம்பிக்கை உண்டாவதும், உண்டாகாததும் நம் எண்ணங்களின் அடிப்படையைப் பொறுத்தது. ஆனால் நெருப்பில்லாமல் புகையாது. வெளியில் இவ்வளவு பெரிய கலவரம் எழ வேண்டுமானால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கத்தான் வேண்டும்."

"காரணம் இருக்கிறதோ இல்லையோ? இவையொன்றும் நல்ல காலத்துக்கு அறிகுறியாகத் தோன்றவில்லை. மனக்கலக்கம்தான் அதிகமாகிறது" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் மகாராணி. அந்தச் சமயத்தில் குழல்வாய்மொழியைத் தேடிக் கொண்டு உள்ளே சென்றிருந்த விலாசினி திரும்பி வந்தாள்.

"மகாராணி! இடையாற்று மங்கலத்து நங்கையைக் காணவில்லை. அநேகமாக அரண்மனையின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றிப் பார்த்து விட்டேன். எங்கே போனாளென்று தெரியவில்லை" என்று திரும்பி வந்து விலாசினி கூறிய போது எல்லாரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

"உள்ளே சென்று வருகிறேன் என்று போனவள் அதற்குள் எங்கே சென்று விட முடியும்? நன்றாகத் தேடிப் பாருங்கள். அரண்மனைக்குள்ளே தான் எங்காவது இருப்பாள்!" என்றார் அதங்கோட்டாசிரியர். அவர்கள் இவ்வாறு திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அரண்மனையின் பிரதான வாயிலான பராந்தகப் பெருவாயிலைக் காக்கும் காவலர்களில் ஒருவன் அங்கு வந்து வணங்கி நின்றான். அவன் மகாராணியை நோக்கிக் கூறினான்:

"சற்று முன் இடையாற்று மங்கலத்திலிருந்து அம்பலவன் வேளான் என்ற படகோட்டி மகாமண்டலேசுவரரின் புதல்வியாரைச் சந்தித்து ஏதோ முக்கியமான செய்தி தெரிவிக்க வேண்டுமென அவசரமாக வந்தான்! நான் அவனை உள்ளே அனுப்புவதற்குத் தயங்கிக் கொண்டிருந்த போது மகாமண்டலேசுவரரின் திருப்புதல்வியாரே அந்தப் பக்கமாக வந்து விட்டார்கள். சந்தித்துப் பேசிக் கொண்டதும் அவசரமாக இடையாற்று மங்கலம் போவதாகத் தங்களிடம் கூறிவிடுமாறு என்னிடம் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள் இடையாற்று மங்கலத்து நங்கை" என்று தெரிவித்துவிட்டுக் காவலன் போய்விட்டான்.

"மகாராணியாரைச் சந்தித்து விடைபெற்றுக் கொள்ளாமல் போவதற்கு அவ்வளவு அவசரமான காரியம் என்ன தான் வந்து விட்டதோ? இருந்தாலும் இடையாற்று மங்கலத்து நங்கைக்கு இவ்வளவு அலட்சியம் ஆகாது!" என்று உதட்டைக் கடித்துக் கொண்டு சொன்னாள் விலாசினி.

"பரவாயில்லை! அது அந்தப் பெண்ணின் சுபாவம். அதைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. புவன மோகினி வந்து தெரிவித்த செய்திகள் உண்மைதானா? என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கேட்டு என் மனம் ஒரேயடியாகக் கலங்கிப் போயிருக்கிறது. போர்க்களத்திலிருந்து ஒரு தகவலும் இல்லை. இடையாற்று மங்கலத்துக்குச் சென்றுவிட்டுக் கூடிய விரைவில் அரண்மனைக்கு வந்து விடுவதாகச் சொல்லிச் சென்ற மகாமண்டலேசுவரரை இன்னும் காணோம்" என்று மகாராணி வானவன்மாதேவியார் கூறினார்.

"மகாராணிக்கு அந்தக் கவலை வேண்டாம். புவன மோகினி கூறியவை உண்மையா, இல்லையா என்பதை இன்று மாலைக்குள் நானும் அதங்கோட்டாசிரியர் பிரானும் விசாரித்துக் கூறிவிடுகிறோம்" என்று உறுதி தெரிவித்த பவழக்கனிவாயர் ஆசிரியரையும் அழைத்துக் கொண்டு அப்போதே வெளிக் கிளம்பினார். ஒரு நினைவிலும் மனம் பதியாமல் அவர்கள் உண்மையை விசாரித்துக் கொண்டு திரும்பும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் மகாராணி. விலாசினியும் புவன மோகினியும் உடனிருந்து ஆறுதல் தோன்றப் பேசிக் கொண்டிராவிட்டால் அன்றைய தினம் மகாராணிக்குத் தன் நினைவு தடுமாறிப் பித்துப் பிடித்திருக்கலாம். அந்த அளவுக்கு மனம் குழம்பியிருந்தது.

அந்தி மயங்கிய சிறிது நேரத்துக்குப் பின் பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் திரும்பி வந்தார்கள். அவர்கள் என்ன கூறப் போகிறார்களோ என்று அறியப் பதை பதைத்துக் கொண்டிருந்தது மகாராணியின் நெஞ்சம். திரும்பி வந்தவர்களின் முகத்தில் மகிழ்ச்சியோ, மலர்ச்சியோ தென்படவில்லை. வாட்டமே மிகுந்திருந்தது.

"மகாராணி! காலையில் புவன மோகினி வந்து கூறியவற்றில் பொய் எதுவும் இல்லை. எங்கு பார்த்தாலும் மகாமண்டலேசுவரருக்கு எதிராகக் கலகம் விளைவிப்பதற்குப் பலர் புறப்பட்டிருக்கிறார்கள். கழற்கால் மாறனார் முதலிய கூற்றத் தலைவர்களும், தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனும், இந்தக் கலகக் கூட்டத்துக்கு முதன்மையாளர்களாயிருக்கிறார்கள். தளபதியின் தங்கை ஈழ நாட்டில் இறந்தது உண்மைதானாம். அதற்கும், தளபதி போர்க் களத்துக்குப் போய்த் தலைமை தாங்கிப் போர் செய்ய முடியாமற் போனதற்கும் மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிதான் காரணமென்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்" என்று அவர்கள் கூறினார்கள்.

"பொய்! முழுப் பொய்! நான் இவற்றை நம்பவே மாட்டேன். அவர் அப்பழுக்கற்ற நேர்மையாளர்" என்று ஆவேசமுற்றவர் போல் கூச்சலிட்டார் மகாராணி. மற்றவர்கள் அவரிடம் என்ன சொல்வதென்று புரியாமல் வாயடைத்துப் போய்த் திகைத்து நின்றார்கள்.

மகாராணியே மீண்டும் பேசினார். "நான் இப்போதே இடையாற்று மங்கலத்துக்குப் புறப்பட்டுப் போகிறேன். அவரைப் பார்த்துக் கேட்கிறேன். அப்போதாவது உண்மை தெரிகிறதா, இல்லையா என்று பார்க்கிறேன்."

"எங்கும் கலகக்காரர்கள் ஆயுதங்களோடு திரிகிற இச்சமயத்தில் தாங்கள் தனியே இடையாற்று மங்கலம் புறப்படுவது கூடாது" என்று எல்லோருடைய குரல்களும் ஒன்றாக எழுந்து ஒலித்து மகாராணியைத் தடுத்தன. மகாராணி அதைக் கேட்கவில்லை. மறுநாள் பொழுது புலர்ந்ததும், புவன மோகினியை உடன் அழைத்துக் கொண்டு சிவிகையில் இடையாற்று மங்கலம் புறப்படுவதற்கு உறுதி செய்து கொண்டு விட்டார் அவர். அந்தப் பிடிவாதத்தை எப்படித் தடுப்பதென்று தெரியாமல் ஆசிரியரும், பவழக்கனிவாயரும், விலாசினியும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள். இவர்களையெல்லாம் இதே நிலையில் விட்டு விட்டு மறுபடியும் போர்க்களத்துக்குச் சென்றால், அங்கே குமாரபாண்டியனின் நிலையைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு விடலாம்.

நள்ளிரவில் படைவீரர்களின் பாசறைகள் இருந்த பகுதியில் கலவரமும் குழப்பமும் எழுந்ததாகச் சென்ற பகுதியில் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? "படை வீரர்களுக்குள் ஏதாவதொரு சாதாரணமான தகராறு உண்டாயிருக்கலாம். அதை நாமிருவரும் போய் உடனே தீர்த்து விடலாம்" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டு எழுந்து சென்ற குமார பாண்டியனும், சக்கசேனாபதியும் அங்கே போய்ப் பார்த்தவுடன் திடுக்கிட்டார்கள்.

படை வீரர்களல்லாத வெளி மனிதர்கள் பாசறைப் பகுதிகளில் வந்து வீரர்களைக் கூட்டம் கூட்டி ஏதேதோ கூறி மனத்தை மாற்றிக் கொண்டிருந்தார்கள். குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் அந்த இடத்தை அணுகியவுடன் ஒரே எதிர்ப்புக் குரல்களாக எழும்பின.

"மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிகளுக்கு அடிபணியமாட்டேன்" என்றது ஒரு குரல்.

"தளபதி வல்லாளதேவர் வராவிட்டால் நாளையிலிருந்து களத்தில் இறங்கிப் போர் செய்ய மாட்டோம்!" என்றது மற்றொரு குரல். தொடர்ந்து அதே இரண்டு எதிர்ப்பு வாக்கிய ஒலிகள் நூற்றுக்கணக்கில் பெருகி ஒலித்தன. எந்தக் காரியங்களுக்காகப் பயந்து மகாமண்டலேசுவரர் தன்னிடம் வாக்குறுதிகள் வாங்கினாரோ அவை பயனில்லாமற் போய்விட்டதைக் குமாரபாண்டியன் அந்த நள்ளிரவில் அங்கு கண்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3.21. பொருள்மொழிக் காஞ்சி

சேந்தன் மகாமண்டலேசுவரரின் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தான்; கதறினான். அழுது அலறினான். தொழுது புலம்பினான். "சுவாமி! நான் ஒரு வகையிலும் தங்கள் குமாரிக்குத் தகுதியற்றவன். அழகும், இளமையும் நிறைந்த தங்கள் பெண்ணின் இன்பக் கனவுகள் என்னால் சிதையக் கூடாது" என்றெல்லாம் அவன் கூறிய வார்த்தைகளை அவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

"அதிகம் பேசாதே! நீ எனக்குச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாய். நான் கொடுப்பதை வாங்கிக் கொண்டு தான் ஆகவேண்டும். என் பெண்ணின் கைகளை ஒரு நாட்டின் இளவரசனிடம் பிடித்துக் கொடுப்பதை விட உனக்குக் கொடுப்பதில் ஆயிரம் மடங்கு இன்பமடைகிறேன் நான். ஒரு காரியத்தை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று நான் தீர்மானித்துக் கொண்ட பின் மாற்றவே மாட்டேன்! எனக்காக நீ இன்று வரை அடிமை போல் உழைத்திருக்கிறாய். பொருளை வாரிக் கொடுத்து மட்டும் ஈடு செய்ய முடியாத நன்றி இது" என்றார் மகாமண்டலேசுவரர்.

சேந்தன் அதற்கு மேல் அவருடைய கட்டளையை மறுத்துப் பேசும் சக்தி இழந்தான். சிவன் கோவில் குறட்டில் ஒரு தூண்டில் கல்லோடு கல்லாகச் சமைந்து போய் உட்கார்ந்து விட்டான். தாங்கிக் கொள்ள முடியாத சோதனையைத் தாங்கிக் கொள்ள வேண்டுமென்றே அந்த இரவு அவன் வாழ்வில் இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து சேர்த்ததா? தங்கத்துக்கு இரும்பால் பூண் பிடிக்கிறது போல் செல்வச் செருக்குடன் கூடிய இறுமாப்பு நிறைந்த குழல்வாய்மொழிக்குத் தான் தகுதியற்றவன் என்பது தோன்றித் தோன்றி நினைவு நெருப்பாக அவன் உள்ளத்தை வாட்டியது. 'செழிப்பும், கொழிப்புமாக உயர்ந்து நிற்கும் தங்கச் சிலை போன்ற குழல்வாய்மொழி எங்கே? நேற்று வரை அவளை இடையாற்று மங்கலத்து இளவரசியாகக் கருதி ஊழியனைப் போல் பணிபுரிந்த நான் எங்கே? அவளோ நானோ இப்படி ஒரு நினைவைக் கனவில் கூட நினைத்திருக்க முடியாதே! மகாமண்டலேசுவரர் ஏன் இப்படிப் பிடிவாதமாகச் சோதனை செய்கிறார்' என்று எண்ணியவாறே நெடுநேரம் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். இரவு நீண்டு வளர்ந்தது. சேந்தன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு இருளில் எதிரே பார்த்தான். மகாமண்டலேசுவரர் உட்கார்ந்த இடத்திலேயே தூணில் சாய்ந்திருந்தார். கண்கள் மூடியிருந்தன. மகுடத்தை எடுத்த பின் அன்று அந்த மனிதருடைய முகத்தில் அவ்வளவு அமைதி எவ்வாறு வந்து பொருந்தியதென்று வியந்தான் சேந்தன். அந்த ஒரே நாளில், ஒரு சில நாழிகைகளில் அவர் கிரங்கி இளைத்துத் தளர்ந்து விட்டது போல் அவருடைய தோற்றம் காட்சியளித்தது. உள்ளே எரிந்து கொண்டிருந்த சிவன் கோவில் விளக்கின் மங்கலான ஒளியில் தூணில் சாய்ந்திருக்கும் அந்த அறிவு மலையை இமையாமல் பார்த்தான் அவருடைய அந்தரங்க ஊழியன். அவர் உணவே உட்கொள்ளவில்லை என்ற நினைவு அவனுக்கு ஏற்பட்டதும் பரபரப்போடு எழுந்து அருகிற் சென்று, "சுவாமி!" என்று மெல்லக் கூப்பிட்டான். அவர் கண் விழித்து, "என்ன வேண்டும், சேந்தா?" என்று புன்னகையோடு கேட்டார்.

"தாங்கள் சாப்பிட வேண்டும்."

"சேந்தா! நம்முடைய வள்ளுவர் பெருமான் இந்தச் சமயத்தில் நான் நினைத்துப் பார்ப்பதற்கென்றே ஓர் அழகான குறளை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்."

"என்ன குறள் சுவாமி, அது?"

"'மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து'

என்பது தான் அப்பா அந்தக் குறள். இனிமேல் நான் சாப்பிடுகிற சாப்பாடு அடுத்த பிறவியில் இருக்கும். என்னைத் தொந்தரவு செய்யாதே. நீ போய்ப் பேசாமல் தூங்கு."

சேந்தன் இதைக் கேட்டுப் பொறுக்க முடியாமல் அழுதுவிட்டான்.

"அழாதே! நீ ஏன் அழுகிறாய்? ஆயிரக்கணக்கான பசுக்களுக்கு நடுவே தன் தாய்ப் பசுவை இனம் கண்டு அடையும் கன்றுக் குட்டி போல் வினைப் பயன் யாரையும் தவறவிடாது. மேலே வீசி எறியப்பட்ட பொருள் கீழே வீழ்ந்துதான் ஆக வேண்டும். இதுவரையில் நல்வினைகள் என்னை மேலே வீசி எறிந்திருந்தன. நான் உயர்ந்த நிலையில் இருந்தேன். இப்போது அவை கைவிட்டு விட்டன. அதனால் நான் வீழ்ந்து விட்டேன்."

"சுவாமி! இப்படியெல்லாம் பேசாதீர்கள். நீங்கள் பேசப் பேச எனக்கு அழுகை குமுறிக் கொண்டு வருகிறது."

"தான் அறியுமுன் உலகத்துக்குத் தன் அனுபவ உண்மைகளில் முடிந்தவற்றை மொழிந்து விட்டுப் போவது நம் தமிழ்நாட்டு மரபு அப்பா! அதைப் 'பொருள்மொழிக் காஞ்சி' என்பார்கள். இதுவரையில் நான் கூறியவற்றையெல்லாம் அப்படிப்பட்ட வகையில் ஏற்றுக் கொள். போ! நீ போய்த் தூங்கு! என்னைக் கொஞ்சம் தனிமையில் மூழ்க விடு."

சேந்தன் எழுந்து போனான். தூக்கம் வரக்கூடிய நிலையா அது? அத்தனை ஆண்டுகளாக அந்த மேதையின் நிழலில் வாழ்ந்த வாழ்க்கையை மனத்தில் அசை போட்டுக் கொண்டே தூண்டிலில் விழுந்து கிடந்தான் அவன். கண்ணீர், கோவில் குறட்டை ஈரமாக்கியது.

விடிந்தது. முதல் நாள் மாலை செய்தது போலவே பறளியாற்றில் போய் நெடுநேரம் நீராடிவிட்டு ஈர உடையோடு வந்தார் மகாமண்டலேசுவரர். பிறகு சிவன் கோவிலுள் போய்த் தியானத்தில் அமர்ந்தார். சேந்தனும் நீராடிவிட்டு அவருக்குப் பூக்கொண்டு வந்து கொடுத்தான். அவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சேந்தனை ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். கொண்டு வந்து கொடுத்தான். ஏதோ எழுதத் தொடங்கினார்.

கதிரவன் மேற்கே சாய்கிற நேரத்துக்கு குழல்வாய்மொழியோடு அம்பலவன் வேளான் அங்கே வந்து சேர்ந்தான். வருகிற போது இருவருமே பெரிய அளவில் பதற்றமும் பரபரப்பும் அடைந்திருந்தனர்.

"சுவாமி! தளபதியும் கழற்கால்மாறனாரும், ஒரு பெரிய கலகக் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு இடையாற்று மங்கலத்தை நோக்கி வெறியோடு தாக்குவதற்கு ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் தங்கள் புதல்வியாரும் அவர்களிடம் அகப்படாமல் இங்கு வந்து சேர்ந்ததே தெய்வத்துணையால்தான்" என்று அம்பலவன் வேளான் கூறியதைக் கேட்டு மகாமண்டலேசுவரர் அதிர்ச்சியடைந்து விடவில்லை.

"நான் எதிர்பார்த்ததுதான். வரட்டும், விரைவாக வரட்டும்" என்று சர்வசாதாரணமாகப் புன்முறுவலோடு பதில் சொன்னார் அவர். "அப்பா மகாராணிக்குக் கூட இதெல்லாம் தெரிந்து விட்டது. புவன மோகினி என்ற பணிப் பெண் போய்ப் பார்த்துக் கொண்டு வந்து கூறினாள்" என்று குழல்வாய்மொழி சொன்னபோதும் வியப்படையவில்லை அவர்.

"பெண்ணே! உலகம் முழுவதும் தெரியட்டும். தெரிய வேண்டியதுதானே? மறைப்பதற்கு இனி என்ன இருக்கிறது? நான் இப்போது படுகிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! அதைப் போக்குவது உன் கையில் இருக்கிறது!" என்று தம் பெண்ணிடம் சொல்லிவிட்டு அருகிலிருந்த சேந்தனையும், அம்பலவன் வேளானையும் சிறிது தொலைவு விலகிப் போய் இருக்குமாறு குறிப்புக் காட்டினார்; அவர்கள் சென்றார்கள்.

"நான் என்ன அப்பா செய்ய வேண்டும்!" என்று கேட்டாள் குழல்வாய்மொழி.

"எனக்காக நீ மகத்தான தியாகம் செய்ய வேண்டும் மகளே!"

குழல்வாய்மொழி கண்களில் நீர் அரும்ப மருண்டு தயங்கி நின்றாள். மகுடமிழந்து, கம்பீரமற்றுச் சாதாரண மனிதரைப் போல் சிவன் கோவிலில் கிடக்கும் தந்தையைக் கண்டு பிழையப் பிழியக் கண்ணீர்ச் சிந்தி அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

"என்னம்மா அப்படி என்னைப் பார்க்கிறாய்? இந்த இரண்டு மூன்று நாட்களில் நான் இவ்வளவு இளைத்துப் போய்விட்டேனே என்று தானே பார்க்கிறாய்? போகட்டும்; என் இளைப்பைக் கண்டு நீ வருந்த வேண்டாம். நான் கேட்டதற்கு மறுமொழி சொல்!"

"நான் எதைத் தியாகம் செய்ய வேண்டும், அப்பா?" குழல்வாய்மொழியின் குரலில் துயரம் கரகரப்படைந்து ஒலி மங்கியது.

"நான் ஒரு மனிதனுக்குத் தவிர்க்க முடியாதபடி கடன்பட்டிருக்கின்றேன், மகளே! அந்தக் கடனை உன் தியாகத்தால் தீர்க்க வேண்டும். செல்வச் செருக்கோடு வளர்ந்து விட்ட உனக்கு மற்றவர்களை அதிகாரம் செய்யவும், ஆளவும் ஆட்படுத்தவும் தான் தெரியும். ஆனால் இன்று தொடங்கி நீ இன்னொருவருக்கு ஆட்பட்டு அடங்க வேண்டிய காலம் வந்து விட்டது. என்னுடைய அறிவின் அகந்தை அழிந்து விட்டது. அது போலவே உன்னுடைய அன்பின் அகந்தையும் அழிய வேண்டியதுதான். செல்வம், செருக்கு, பிடிவாதம், முரண்டு இவற்றையெல்லாம் மறந்துவிட்டால்தான் நான் கூறுகிற தியாகத்தை நீ செய்ய முடியும் அம்மா?"

"உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன் அப்பா!"

"இப்போது சொன்ன வார்த்தை மெய்தானே மகளே? எனக்காக எதையும் செய்வாய் அல்லவா?"

தந்தையின் இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் குழல்வாய்மொழி விசும்பலோடு அழத் தொடங்கிவிட்டாள். "நான் எப்போது அப்பா உங்கள் சொல்லை மீறியிருக்கிறேன்? என்னைத் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்களே?" என்று அவள் அழுகைக்கிடையே கேட்ட போது அவர் சிரித்துக் கோண்டே சொன்னார்:

"அப்படியானால் கேள்! இந்தக் கணமே குமாரபாண்டியனைப் பற்றிய உன் கனவுகளை அழித்து விடு. தன் வாழ்நாளில் எனக்காகவே தன்னை அடிமையாக்கிக் கொண்டு உழைத்த இந்த நன்றியுள்ள மனிதன் சேந்தனை மணந்து கொண்டு அவனோடு செல்; இது என் கட்டளை?"

"அப்பா...!" என்று அலறினாள் குழல்வாய்மொழி. அதற்கு மேல் வார்த்தைகளே எழவில்லை அவளுக்கு. அப்படியே மின்னற்கொடி போல் சுருண்டு அவர் காலடியில் விழுந்தாள் அவள். 'கோ'வென்று கதறியழுத மகளின் தவிப்பு அவர் மனத்தை மாற்றவில்லை. "அப்பா என்னைக் கொன்று விடுங்கள். என்னால் இந்தத் தியாகத்தைச் செய்ய முடியாது" என்று அவள் கதறிய போது அவர் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்துப் பேசுபவர் போல் அவளைத் தூக்கி நிறுத்தி முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசினார்.

"உன்னை ஏன் கொல்ல வேண்டும் அம்மா? என்னைக் கொன்று கொள்கிறேன் நான். சொன்ன வார்த்தையைக் கேட்காத ஒரு முரட்டுப் பெண்ணைப் பெற்றதற்காக என்னை நானே கொன்று கொள்கிறேன். தியாகம் செய்து புகழ் தேடிக் கொள்ளும் உயர்ந்த பண்புள்ள மகளை நான் பெறவில்லை போலிருக்கிறது. கொடுத்து வைத்ததுதானே கிடைக்கும்? நீ போ. உன் விருப்பம் போல வாழு!" என்று சொல்லிவிட்டு மேலாடையால் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பி நடந்தார் அவர். நடை தள்ளாடித் துவண்டது.

"நில்லுங்கள்."

நடந்து சென்றவர் நின்று திரும்பிப் பார்த்தார். குழல்வாய்மொழிதான் கூப்பிட்டிருந்தாள். அருகில் வந்து நின்று தந்தையின் முகத்தையே பார்த்தாள் அவள். விநாடிகள் உணர்ச்சிகளில் கரைந்து கொண்டிருந்தன. அவர் முகத்தையும் கண்களையும் பார்க்கப் பார்க்க அவள் மனத்தில் கல்லாக இருந்த ஏதோ ஓர் உணர்வின் இறுக்கம் இளகி நெகிழ்ந்தது. அடுத்த கணம் அழுக்குத் துடைக்கப்பட்ட கண்ணாடிபோல் அவள் முகபாவம் புனிதமானதொரு மாறுதல் அடைந்தது. கண்களில் உறுதியான ஒளி வந்து குடி கொண்டது.

"அப்பா! நான் சேந்தனை மணந்து கொள்கிறேன்" என்று திடமான குரலில் சொன்னாள் குழல்வாய்மொழி. அவர் ஆச்சரியத்தோடு முகமலர்ந்து அவளைப் பார்த்தார். அவளைச் சிறுகுழந்தை போல் கருதி அருகில் அழைத்துத் தழுவி உச்சிமோந்தார். "சேந்தா! இங்கே வா!" என்று உற்சாகத்தோடு அழைத்தார் அவர். சேந்தன் ஓடிவந்து வணங்கினான்.

"இந்தா! உன் மனைவியை அழைத்துக் கொண்டு போ! இருவரும் பறளியாற்றில் நீராடி வாருங்கள்..." பல நாட்கள் பழகிய காதலனை அணுகுவது போல் குழல்வாய்மொழி அவனை அணுகி வந்தாள். சேந்தன் கூசிப் பயந்து ஒதுங்க முயன்றான். அவள் விடவில்லை.

"ஒதுங்கினால் மட்டும் உறவு போகாது; வாருங்கள்!" குழல்வாய்மொழி துணிவாக அவன் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போனாள். அந்தக் கை தன் மேல் பட்ட போது மலர்க்கொத்து ஒன்று தீண்டியது போன்ற உணர்வை அடைந்தான் சேந்தன். அவன் உடல் சிலிர்த்தது. வயிற்றுப் பசியுள்ள பிச்சைக்காரனுக்குப் பட்டுப் பீதாம்பரம் கிடைத்தது போல் அவன் எண்ணத்தில் தாழ்வு மனப்பான்மையும் கூச்சமும் உண்டாயின. குழல்வாய்மொழி கலகலப்பாகப் பேசிப் பழக முயன்றும் சேந்தன் கூசிக் கொண்டேயிருந்தான். அவளால் அவ்வளவு சுலபமாகத் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள முடிந்ததென்று அவனுக்குப் புரியவே இல்லை.

இருவரும் நீராடி விட்டுச் சிவன் கோயில் அடைவதற்குள் இடையாற்று மங்கலம் தீவைச் சுற்றி ஒரு பெருங்குழப்பம் உண்டாயிற்று. கூட்டம் கூட்டமாக ஆயுதம் தாங்கிய முரட்டு மனிதர்கள் ஓடிவந்தார்கள். மரங்களெல்லாம் வெட்டப்படும் ஓசை காதைப் பிளந்தது. ஒரே கலகம், ஓலம் தான்; கலகக் கும்பல் தீவை நெருங்கிவிட்டது.

அந்த நேரத்தில் குழல்வாய்மொழியையும், சேந்தனையும் சிவன் கோவிலுக்குள் அழைத்துப் போய் மலர் தூவி ஆசி கூறினார் மகாமண்டலேசுவரர். பின்பு இருவரையும் வெளியே அழைத்து வந்தார். "இங்கிருந்து போய் எங்கேயாவது நன்றாக வாழுங்கள். அது போதும். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். கலகக் கூட்டம் வந்துவிட்டது. வேறு வழியாகத் தப்புங்கள்" என்று அவர்களை அவசரப்படுத்தினார் மகாமண்டலேசுவரர்.

"அப்பா! நீங்களும் எங்களோடு வந்து விடுங்கள். இங்கே இருக்க வேண்டாம்" என்றாள் குழல்வாய்மொழி.

"இல்லை! நான் வரப்போவதில்லை. நீங்கள் புறப்படுங்கள்" என்று சொல்லிவிட்டு உள்ளே போய் ஓர் ஓலையை எடுத்து வந்து சேந்தனிடம் கொடுத்தார். "சேந்தா, எப்போதாவது முடிந்தால் இந்த ஓலையை மகாராணியிடம் கொடுத்துவிடு" என்று சொன்னவர் இருவரையும் ஒருமுறை நன்றாகப் பார்த்து விட்டு விருட்டென்று சிவன் கோவிலுள் நுழைந்து கதவை அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டார். வெறித்தனமாக கூச்சல்களோடு ஆட்கள் ஓடிவரும் ஓசை மிக அருகில் கேட்டது.

சேந்தன் குழல்வாய்மொழியை இழுத்துக் கொண்டு ஓடினான். புதர்களிலும் மரக்கூட்டங்களின் அடர்த்தியிலும் பதுங்கிப் பதுங்கி ஆற்றைக் கடந்து இரவோடு இரவாக முன்சிறைக்குப் போகிற வழியில் நடந்தார்கள் அவர்கள்.

மகாமண்டலேசுவரர் சிவன் கோயில் கதவைத் திறந்து கொண்டு வந்த போது இடையாற்று மங்கலம் மாளிகை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அழகான நந்தவனமும், வசந்த மண்டபமும் சீரழிக்கப்பட்டிருந்தன. உருக்குலைந்து சீரழிந்து எரிந்து கொண்டிருக்கும் அந்தத் தீவைப் பார்த்துக் கொண்டே கோவில் குறட்டில் நின்ற மகாமண்டலேசுவரர் கால் தளர்ந்து போனதன் காரணமாக மெதுவாக உட்கார்ந்தார். தாகம் நெஞ்சை வறளச் செய்தது. தொண்டைக் குழியை ஏதோ அடைத்தது. கண்கள் விழி தெரியும்படி சொருகின. வாய் கோணியது. மெல்லச் சாய்ந்து படுத்துக் கொண்டார். பின்பு எழுந்திருக்கவேயில்லை. மறுநாள் காலையில் தளபதி வல்லாளதேவனும் கழற்கால் மாறனாரும் தற்செயலாக அங்கே வந்து அவருடைய சடலத்தைக் கண்டனர்.

"மனிதர் நம்மை முந்திக் கொண்டு விட்டார்!" என்று கூறிக் கொடுமையாகச் சிரித்தவாறே அந்த உடலைப் புரட்டித் தள்ளினான் தளபதி. பழி வாங்கி விட்ட பெருமிதம் அவனுக்கு!

அருணோதயத்தின் அழகை அனுபவித்துக் கொண்டே முன்சிறை அறக்கோட்டத்தின் வாயிலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த கோதை யாரோ வருகிற காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தாள்.

அவள் எதிரே நாராயணன் சேந்தனும் குழல்வாய்மொழியும் வந்து நின்று கொண்டிருந்தனர். கோதைக்கு மைத்துனனைக் கண்ட மகிழ்ச்சி பிடிபடவில்லை. "வாருங்கள், மைத்துனரே! ஓய்வாக வந்திருக்கிறீர்களே..." என்று ஆர்வத்தோடு வரவேற்றாள்.

"ஓய்வுதான்! நிரந்தரமான ஓய்வு - நெடுங்காலத்துக்கு ஓய்வு" என்று சிரித்துக் கொண்டே கூறினான் சேந்தன். அதற்குள் அண்டராதித்தனும் அங்கு வந்துவிட்டான். சேந்தனும் குழல்வாய்மொழியும் அண்டராதித்தனையும் கோதையையும் வணங்கி ஆசி பெற்று உள்ளே சென்றார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3.22. கலகக் கனல் மூண்டது

போர்க்களத்தில் அந்த இரவில் மூண்ட கலவரங்களை அடக்கி விட முயன்றனர் குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும். கலகம் அடங்கவில்லை. மேலும் மேலும் பெருகி வளர்ந்தது. கலகத்துக்குக் காரணமான செய்திகளைப் போர்க்களத்துப் பாசறைகளில் பரப்புவதற்கு வந்த வெளியாட்கள் எல்லோரையும் இருளில் சரியாகப் பார்க்க முடியவில்லையாயினும் அதில் முக்கியமான ஒருவனைக் குமாரபாண்டியன் பார்த்துவிட்டான். அவ்வாறு பார்க்கப்பட்டவன் வேறு யாருமில்லை, ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் தான்! ஆபத்துக் காலங்களில் நன்றியுணர்ச்சியோடு அரச குடும்பத்துக்கு உதவி புரிந்து பாதுகாக்க வேண்டிய அவன் இப்படிக் கலகக்காரனாக மாறியிருப்பதைக் கண்டு குமாரபாண்டியன் உள்ளம் கொதித்தான். கோட்டாற்றிலிருந்து வந்திருந்த தென்பாண்டிப் படைவீரர்களில் பெரும்பாலோர் பாசறைகளை விட்டு வெளியேறிக் கலகக்காரர்களோடு சேர்ந்து கொண்டு விட்டனர். குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்தத் துரோகம் நடந்தது. சாம, தான, பேத, தண்ட முறைகளில் எதனாலும் அவர்களால் அதைத் தடுக்க இயலவில்லை.

"இளவரசே! காரியம் கை மீறிப் போய்விட்டது. பார்த்துக் கொண்டே சும்மாயிருப்பதில் பயனில்லை. உடனே தளபதியைப் போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கச் சொல்லி அரண்மனைக்கோ, மகாமண்டலேசுவரருக்கோ தூதனுப்புங்கள். தளபதி வந்துவிட்டால் இந்தக் கலகம் அடங்கிப் போகும்" என்றார் சக்கசேனாபதி.

"சக்கசேனாபதி! தளபதியைப் போர்க்களத்துக்கு வரவழைத்து விடுவது அவ்வளவு எளிய காரியமல்ல. அதில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கின்றன. அந்தச் சிக்கல்களை உங்களிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் நான் மாட்டிக் கொண்டிருக்கிறேன்."

"நீங்கள் சொல்லாவிட்டாலும் நானாகச் சிலவற்றைப் புரிந்து கொண்டேன், இளவரசே! மகாமண்டலேசுவரருக்கும் தளபதிக்கும் உள்ளூரப் பெரிய பகைமை ஏதோ இருக்க வேண்டும். தளபதி இந்தப் போரில் கலந்து கொள்ள முடியாமற் போனதற்குக் கூட மகாமண்டலேசுவரர் காரணமாயிருக்கலாம். அதனால் தான் இந்தக் கலகமே மூண்டிருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது."

"சக்கசேனாபதி! உங்களுக்குத் தெரிந்தது சிறு பகுதிதான். ஆனால் அவை சரியான அனுமானங்களே! அதற்கு மேற்பட்டவற்றைத் தெரிவிக்க ஆவல் இருந்தும் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்ட காரணத்தால் இயலாத நிலையில் இருக்கிறேன்."

"வேண்டாம்! அவற்றை தெரிந்து கொள்ளும் அவசியம் எனக்கு இப்போது இல்லை. ஆனால் இந்தக் கலகத்தைத் தடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள். தளபதி எங்கேயிருந்தாலும் சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு வரவழைக்கச் செய்யுங்கள்."

"நான் மகாமண்டலேசுவரருக்கும் என் அன்னைக்கும் இங்குள்ள நிலைமையை விவரித்து உடனே திருமுகங்கள் எழுதுகிறேன்."

"சொல்லிக் கொண்டே நிற்காதீர்கள், இளவரசே! உடனே உங்கள் பாசறையில் போய் அமர்ந்து எழுதத் தொடங்குங்கள். நான் இங்கே சிறிது நேரம் கவனித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி குமாரபாண்டியனைப் பாசறைக்கு அனுப்பி விட்டுத் தாம் மட்டும் தனியே இருளில் நடந்தார் சக்கசேனாபதி. கலகத்தின் காரணம் பற்றிக் குமாரபாண்டியர் தம்மிடம் கூறாமல் மறைக்கும் மர்மச் செய்திகள் எவையோ அவற்றைத் தெரிந்து கொண்டு விடவேண்டுமென்று கிளம்பி விட எண்ணினார். தமது தோற்றத்தைத் தென்பாண்டி நாட்டின் சாதாரணமான ஒரு படைவீரனின் தோற்றம் போல எளிமையாக்கிக் கொண்டு பாசறைகளைப் புறக்கணித்துக் கலகக்காரர்களோடு ஓடிப்போன பாண்டியப் படையைப் பின்பற்றி அவரும் சென்றார். தாமும் அவர்களில் ஒருவனைப் போலக் கலந்து கொண்டு அவர்களோடு பேச்சுக் கொடுத்துப் பார்த்ததிலேயே எல்லாக் காரணங்களும் அவருக்கு ஒருவாறு விளங்கிவிட்டன. குமாரபாண்டியர் சொல்லத் தயக்கியவற்றையும் அவர் தெரிந்து கொண்டார். எல்லாம் தெரிந்து கொண்டு திரும்பி வந்த அவர் நேரே குமாரபாண்டியனின் பாசறைக்குச் சென்றார். பாசறையில் தீப ஒளி எரிந்து கொண்டிருந்தது. மகாமண்டலேசுவரருக்கும் தன் தாய்க்கும் எழுத வேண்டிய திருமுக ஓலைகளை எழுதி விட்டுக் காத்திருந்தான் குமாரபாண்டியன்.

"வாருங்கள் சக்கசேனாபதி! நான் வந்து எழுத வேண்டிய அவசர ஓலைகளை எழுதிவிட்டு இவ்வளவு நேரமாக நீங்கள் வருவீர்களென்று விழித்துக் கொண்டு காத்திருக்கிறேன். அதற்குள் நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்?" என்று தன்னை நோக்கிக் கேட்ட குமாரபாண்டியனின் முகத்தைச் சிரித்தவாறே கூர்ந்து பார்த்தார் சக்கசேனாபதி.

"சக்கசேனாபதி! இந்த நெருக்கடியான நிலைமையில் என் முகத்தைப் பார்த்தால் சிரிப்புக்கூட வருகிறதா உங்களுக்கு?"

"உங்கள் முகத்தைப் பார்த்துச் சிரிக்கவில்லை இளவரசே! சில முக்கியமான செய்திகளை இவ்வளவு நேர்ந்த பின்பும் என்னிடம் கூடச் சொல்லாமல் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, அதை நினைத்துச் சிரித்தேன்."

"அப்படி எவற்றை நான் உங்களிடம் மறைத்தேன்?"

"சொல்லி விடட்டுமா?"

"நீங்கள் அவற்றைத் தேடித் தெரிந்து கொண்டிருந்தால் சொல்லித் தானே ஆக வேண்டும்?" என்று சோர்ந்த குரலில் சொன்னான் குமாரபாண்டியன்.

"மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சியில்தான் பகவதி ஈழ நாட்டில் இறந்து போனாளென்று கலகக்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் அவருடைய சூழ்ச்சியால் படைகள் போருக்குப் புறப்படுகிற சமயத்தில் தளபதி மட்டும் இரகசியமாகச் சிறை வைக்கப்பட்டானாம். அதே போல் ஆபத்துதவிகள் தலைவனையும் சூழ்ச்சி செய்து சிறைப்படுத்த முயன்றாராமே அவர்? நீங்கள் கப்பலில் வந்து விழிஞத்தில் இறங்கியதும் மகாமண்டலேசுவரர் உங்களைத் தனியே அழைத்துக் கொண்டு போய், 'பகவதியின் மரணத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது' என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டாராமே? தளபதியை இரகசியமாகச் சிறைப்படுத்தியிருக்கிற அந்தரங்கத்தையும் சொல்லி அதையும் யாரிடத்திலும் கூற வேண்டாமென்று உங்களிடம் கேட்டுக் கொண்டாராம். ஆனால், அதே சமயத்தில் இருளில் அதே இடத்தில் நின்று கொண்டு, காவலைத் தாண்டி தப்பி ஓடிவந்த தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனும், நீங்களும் மகாமண்டலேசுவரரும் பேசியவற்றை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஒரு கல்லைக் கூட மகாமண்டலேசுவரர் மேல் தூக்கி எறிந்தார்களாமே?" இவ்வாறு கூறிக் கொண்டே வந்த சக்கசேனாபதியை இடைமறித்து, "இவற்றையெல்லாம் இப்போது உங்களுக்கு யார் கூறினார்கள்?" என்று குமாரபாண்டியன் கேட்டான்.

"யாரும் என்னிடம் வந்து கூறவில்லை. கலகக்காரர்களுக்கு நடுவே போய்க் கலந்து கொண்டு அவற்றைத் தெரிந்து கொண்டேன்!" என்றார் சக்கசேனாபதி.

"தெரிந்து கொண்டவை இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?"

"நிறைய உண்டு! மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிகளையெல்லாம் தங்களிடம் கூறி தங்களை அழைத்து வருவதற்காகவே தன் தங்கை பகவதியை இலங்கைக்கு மாறு வேடத்தில் அனுப்பினானாம் தளபதி. அவள் தங்களோடு திரும்பி வரும் காட்சியைக் காணவே காவலிலிருந்து தப்பி விழிஞத்துக்கு ஓடி வந்து பார்த்தானாம். அவன் தங்கை இறந்த செய்தியைக் கேட்டவுடன் அவனுக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்பட்டதாம். போதாதக்குறைக்குத் தாங்களும் மகாமண்டலேசுவரருடைய சூழ்ச்சிக்கு இணங்கி அவருக்கு வாக்குறுதிகள் கொடுத்தது அவனுக்குச் சினம் மூட்டியதாம். அவனும் ஆபத்துதவிகள் தலைவனும் போய்க் கழற்கால்மாறனாரைப் பார்த்தார்களாம். எல்லோருமாக ஒன்று சேர்ந்து முயன்று ஒரு பெரிய கலகக் கூட்டத்தைத் திரட்டினார்களாம். அந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத் தளபதியும் கழற்கால் மாறனாரும் தலைமை தாங்கிக் கொண்டு இடையாற்று மங்கலத்தை வளைத்துத் தாக்குவதற்குப் போயிருக்கிறார்களாம். மற்றொரு பகுதியைத்தான் ஆபத்துதவிகள் தலைவன் இங்கே கூட்டிக் கொண்டு வந்து படை வீரர்களை மனம் மாற்றுவதற்கு முயன்றதை நாம் பார்த்தோமே?"

"சக்கசேனாபதி! தளபதியின் தங்கை இறந்து போனதற்கு மகாமண்டலேசுவரர் எந்த விதத்திலும் காரணமில்லை என்பது உங்களுக்கும் தெரியும்!"

"இப்போதுதான் உறுதியாகத் தெரியும். ஏனென்றால் நீங்கள் ஈழ நாட்டிலிருந்து கப்பலில் புறப்படுகிறவரை காட்டில் இறந்து போன பெண் பகவதியா, இல்லையா என்ற சந்தேகத்திலிந்து மீளவில்லையே. அதனால் எனக்கும் அது உறுதியாகத் தெரியாமற் போய்விட்டது, இளவரசே!"

"சக்கசேனாபதி! தமனன் தோட்டத்துத் துறையிலிருந்து கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சேந்தனிடமும் குழல்வாய்மொழியிடமும் விசாரித்து இறந்த பெண் பகவதிதான் என்று நான் உறுதியாகத் தெரிந்து கொண்டு விட்டேன். அதனால் என் கடற்பயணம் முழுவதும் சோகத்திலேயே கழிந்தது. விழிஞத்தில் வந்து இறங்கியதும் அந்தத் துயர உண்மையை எல்லோரிடமும் சொல்லிக் கதறிவிட வேண்டுமென்றிருந்தேன். மகாமண்டலேசுவரர் வாய்ப்பூட்டுப் போட்டு விட்டார். அதன் காரணமாகத்தான் நீங்களாகத் தெரிந்து கொள்கிற வரையில் உங்களிடம் கூடச் சொல்ல முடியாமல் போயிற்று. இவ்வளவு பெரிய கலகங்களெல்லாம் அதன் மூலம் உண்டாகுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை!"

"நாம் எதிர்பார்க்கிறபடியே எல்லாம் நடந்தால் விதி என்று ஒன்று இல்லாமலே போய்விடும் இளவரசே!"

"பாசறையிலுள்ள படை வீரர்களை மனம் மாற்றிக் கலைத்துக் கொண்டு போகிற அளவுக்குத் தளபதி வல்லாளதேவன் கெட்டவனாக மாறுவானென்று நான் நினைக்கவே இல்லை!"

"எவ்வளவு நல்ல மனிதனையும் சந்தர்ப்பம் நன்றி கெட்டவனாக மாற்றலாம். அந்த ஒரு மனிதனுக்காக இத்தனை ஆயிரம் படை வீரர்களும் மனம் மாறுகிறார்களே! அதற்கென்ன காரணம் சொல்லுகிறீர்கள்?"

"விட்டுத் தள்ளுங்கள்! உங்களுடைய ஈழத்துப் படைகளும், கரவந்தபுரத்து வீரர்களும், சேரப் படைகளும் இருக்கின்றன. தென்பாண்டிப் படைகளில் சில பத்தி வீரர்கள் போரைப் புறக்கணித்து விட்டு ஓடுவதால் நமக்கு ஒன்றும் குறைந்து விடாது!"

"இப்படி அலட்சியமாகப் பேசுவதுதான் தவறு! ஆயிரமிருந்தாலும் சொந்தப் படைகளைப் பிரிந்து போகவிடுவது கூடாது. நீங்கள் எந்த வகையில் முயற்சி செய்வீர்களோ எனக்குத் தெரியாது. தளபதியையும் ஆபத்துதவிகள் தலைவனையும், அவர்களோடு சேர்ந்திருக்கும் கழற்கால் மாறனார் முதலியவர்களையும் நம்முடன் தழுவிக் கொள்ள வேண்டும். நம்முடைய இந்த உட்பகையை எதிர்த்தரப்பினர் தெரிந்து கொள்ள நேர்ந்தால் பின் இரண்டே நாட் போரில் அவர்கள் நம்மை வென்று விட முடியும்?"

"நீங்கள் சொல்வதெல்லாம் நியாயந்தான்! ஆனால் அவர்களைச் சமாதானப்படுத்தித் தழுவிக் கொள்வது எளிதில் முடிகிற காரியமல்லவே?"

"இளவரசே! நீங்களே நேரில் போனால் இரண்டு நல்ல காரியங்கள் முடியும். தளபதி வெறிபிடித்துப் போய் இடையாற்று மங்கலத்தைத் தாக்கச் சென்றிருக்கிறானாம். அதனால் மகாமண்டலேசுவரரும் நீங்களும் சேர்ந்தே தளபதியைச் சந்தித்துச் சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்து வந்து விடலாம். நீங்கள், உங்களுடைய அன்னையார், மகாமண்டலேசுவரர் மூவருமாகச் சேர்ந்து சமாதானப்படுத்துகிற போது தளபதி ஒப்புக் கொள்வான்."

"நான் போய் முயற்சி செய்கிறேன். நீங்கள் ஒருவராகவே இரண்டு நாளைக்குப் போரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நான் போய் வர இரண்டு நாட்களாகலாம்."

"ஒருவாறு இரண்டு நாட்கள் சமாளித்துக் கொள்ள முடியும். நம் படைகளின் கை தளர்ந்து பின் வாங்க நேர்ந்தாலும் மூன்றாம் நாள் காலை நீங்கள் தளபதியோடும் படைகளோடும் வரவில்லையானால் முடிவுக்கு நான் பொறுப்பில்லை."

"பயங்கரமான நிபந்தனை விதிக்கிறீர்களே, சக்கசேனாபதி!"

"அதைத் தவிர வேறு வழியில்லை, இளவரசே! நீங்கள் தளபதியைச் சந்தித்து அழைத்து வரப் போகாவிட்டால் அதை விட விரைவிலேயே நாம் தோற்றுவிடுவோம்."

"இந்த வார்த்தையைச் சொல்லத்தான் இவ்வளவு படைகளோடு கடல் கடந்து வந்தீர்களோ? நீங்கள் எனக்கு அளிக்கும் நம்பிக்கை இதுதானா?"

"உங்கள் நாட்டின் உட்பகைக் குழப்பங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்? புறப்பட்டுப் போய் உட்பகைக் கலகங்களைத் தவிர்த்து ஒற்றுமையை ஏற்பாடு செய்ய முயன்று பாருங்கள். ஏற்பாடு முடிந்தால் மூன்றாம் நாள் காலை பதினோரு நாழிகை வர என்னால் முடிந்த மட்டும் இந்தப் போர்க்களத்தைச் சமாளிக்கிறேன். அதற்குள் வர இயலாமற் போனால் பின்பு நீங்கள் இங்கு வரவே வேண்டாம். நானும் என்னோடு வந்த வீரர்களில் உயிர் பிழைத்தவர்களும் தப்பியோடிக் கப்பலேறி விடுவோம்!"

"நீங்கள் இப்படிச் சொல்வதற்கு என்ன அர்த்தம்?"

"அந்த அர்த்தத்தை வெளிப்படையாக வேறு சொல்ல வேண்டுமா? உங்களுக்குப் புரியவில்லையா?"

"புரிகிறதே! தோற்று விடுவேன் என்கிறீர்கள்."

"அதை ஏன் என் வாயாற் சொல்ல வேண்டும்? ஒரு வேளை நீங்கள் சமாதானப்படுத்தித் தளபதி வல்லாளதேவனை அழைத்து வந்தால் நமக்கே வெற்றியாக முடியலாம்!"

"சக்கசேனாபதி! அப்படியானால் மூன்றாம் நாள் காலை பதினோரு நாழிகை வரை இந்தப் போர்க்களத்தில் தோல்வி நிழல் நம் பக்கம் படர விடாமலிருக்கும்படிப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நீங்கள் ஏற்கிறீர்களா?"

"ஆகா! உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன்."

"நான் உங்களை நம்பிப் போய்விட்டு வரலாமா?"

"தாராளமாகப் போய்வரலாம்!"

"யாரங்கே! என்னுடைய பிரயாணத்துக்குக் குதிரை கொண்டு வா!" என்று குமாரபாண்டியன் பாசறைக்குள்ளிருந்து தன் ஏவலனைக் கூவிக் கட்டளையிட்டான். குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அவன் வெளியே வந்து ஏறிக் கொண்டான். "சக்கசேனாபதி! வருகிறேன். விதி இருந்தால் சந்தித்து வெற்றி பெறுவோம்" என்று பாசறை வாயிலில் நின்றவரிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு குதிரையைச் செலுத்தி இருளில் மறைந்தான் குமாரபாண்டியன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3.23. மாதேவியின் கண்ணீர்

மகாமண்டலேசுவரரைப் பற்றி யார் சொல்லியும் அதை நம்பாமல் பொழுது விடிந்ததும் இடையாற்று மங்கலத்துக்குப் புறப்படுவதற்கிருந்த மகாராணி, அப்படிப் புறப்பட வேண்டிய அவசியமே இல்லாமற் போய்விட்டது. பொறி கலங்க வைக்கும்படியான அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மகாராணி வானவன்மாதேவி மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பலவித மனக் குழப்பங்களாலும், முதல் நாளிரவு நன்றாக உறக்கம் வராததாலும், தளர்ந்து போயிருந்த அவருக்கு அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

'இடையாற்று மங்கலத்தையும், அதைச் சுற்றியுள்ள அழகான இடங்களையும், கலகக்காரர்கள் நெருப்பு வைத்துக் கொளுத்தி விட்டார்கள். முதல் நாள் இரவு முழுவதும் மகாமண்டலேசுவரர் யார் கையிலும் அகப்படவில்லையாம். காலையில் இடையாற்று மங்கலத்துச் சிவன் கோவில் குறட்டில் அவர் இறந்து கிடப்பதைக் கண்டார்களாம்' என்று கேள்விப்பட்ட இந்தச் செய்திதான் மகாராணியை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டது.

புவன மோகினியும், விலாசினியும், மகாராணியின் உடலைத் தாங்கிக் கொண்டு மூர்ச்சை தெளிந்து நினைவு வருவதற்கேற்ற சைத்தியோபசாரங்களைச் செய்தனர். பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும் கவலையோடு நின்று கொண்டிருந்தார்கள்.

அந்தச் செய்தியைத் தெரிவிப்பதற்கு வந்த அரண்மனை மெய்க்காவற் படை ஒற்றனை மேலும் சில கேள்விகளைத் தூண்டிக் கேட்டார் பவழக்கனிவாயர்.

"நேற்று காலையில் தானே அந்தப் பெண் குழல்வாய்மொழி இங்கிருந்து புறப்பட்டு இடையாற்று மங்கலத்துக்குப் போனாள்? அவள் போய்ச் சேர்ந்தாளோ, இடைவழியிலேயே கலகக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டாளோ? அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே?" என்று பவழக்கனிவாயர் கேட்ட கேள்விக்கு ஒற்றன் கீழ்க்கண்டவாறு மறுமொழி கூறினான்.

"சுவாமி! மகாமண்டலேசுவரரின் புதல்வியும் அந்தரங்க ஒற்றன் நாராயணன் சேந்தனும் கலகக்காரர்கள் கையில் சிக்கவில்லையாம். அவர்களையும் எப்படியாவது பிடித்து விடுவதென்று கலகக்காரர்கள் வலை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்!" இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் மகாராணியின் மூர்ச்சை தெளிந்தது. எழுந்து உட்கார்ந்து மிரள மிரள விழித்தார் அவர். சுற்றிலும் நிற்பவர்களைப் பார்த்தார். தட்டுத் தடுமாறி எழுந்த பின்பு நீண்ட நேரம் அவர் அந்த அறையிலிருந்து வெளியில் வரவே இல்லை. "மனம் நொந்திருப்பவர்களைத் தனியே விடக் கூடாது! நீங்களும் போய் உடன் இருங்கள்" என்று புவன மோகினியையும் விலாசினியையும் அனுப்பினார் அதங்கோட்டாசிரியர். அந்தப் பெண்கள் இருவரும் மகாராணி வானவன்மாதேவியாரின் அறைக்குள் தயங்கித் தயங்கிச் சென்றார்கள்.

அறை நடுவே உட்கார்ந்து பச்சைக் குழந்தை போல விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் மகாராணி. அவர் மடியில் ஒரு பழைய ஓலை கிடந்தது. விலாசினியையும் புவன மோகினியையும் நிமிர்ந்து பார்த்து மகாராணியார் குறிப்புக் காட்டி அவர்களை உட்காரச் சொன்னார். கண்களைத் துடைத்துக் கொண்டு தன் மடியில் கிடந்த ஓலையை விலாசினியின் கையில் எடுத்துக் கொடுத்தார் மகாராணி. அவள் அதை வாங்கிக் கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று கேட்பது போல் மகாராணியின் முகத்தைப் பார்த்தாள்.

"விலாசினி! இந்த ஓலையில் எழுதியிருக்கும் பாட்டைப் பற்றி உனக்கு நினைவிருக்கிறதா?" என்று அவர் அவளைக் கேட்டார். அந்த ஓலையிலிருந்த பாட்டை ஒரு முறை மனத்திற்குள் படித்துப் பார்த்துக் கொண்டே விலாசினி, "மகாராணி! இது முன்பு ஒருமுறை கோட்டாற்றுப் பண்டிதரிடம் தாங்கள் எழுதி வாங்கிக் கொண்ட பாட்டு அல்லவா? பகவதி இங்கே தங்கியிருக்கும் போது இந்தப் பாட்டைக் கொடுத்து அடிக்கடி அவளைப் பாடச் சொல்லிக் கேட்பீர்களே?" என்றாள். பகவதி என்ற பெயரைக் கேட்டவுடன் மறுபடியும் கண்ணீர் அரும்பியது மகாராணியின் கண்களில். "இப்போதும் அவள் பாடிக் கேட்க வேண்டும் போல் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பாவிப் பெண் கண்காணாத தேசத்தில் போய் மாண்டு போனதாகச் சொல்லுகிறார்களே, விலாசினி! நான் இப்போது சொல்லப் போகிற செய்தி இதற்கு முன்பு உனக்குத் தெரிந்திருக்காது. ஒரு நாள் இரவு மனவேதனை தாங்க முடியாமல் அரண்மனை நந்தவனத்திலிருந்த பாழுங்கிணற்றில் வீழ்ந்து என்னை மாய்த்துக் கொள்வதற்கு இருந்தேன். அப்போது அந்த நள்ளிரவில் என்னைக் கைப்பிடித்துத் தடுத்துக் காப்பாற்றியது யார் தெரியுமா? அந்தப் பெண் பகவதிதான். அவள் காப்பாற்றியிராவிட்டால் இன்று என்னை யார் உயிரோடு பார்க்க முடியும்? அவள் போய்விட்டாள். நான் இருக்கிறேன். அவளுடைய தமையன் வீராதி வீரனாகப் போர்க்களத்தில் நின்று போரிட வேண்டியதை மறந்து இந்தத் தென்பாண்டி நாட்டின் அறிவுச் செல்வரைக் கொன்று கலகமிடும் கொள்ளைக் கூட்டத் தலைவனாக மாறிவிட்டான். எவ்வளவு கேவலமான காரியம்? மகாமண்டலேசுவரர் இறந்து போய் விட்டார் என்று கேட்கும் போது என் உடல் பயத்தாலும், துக்கத்தாலும் நடுங்குகிறது, பெண்ணே! நேற்று நாமெல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இடையாற்று மங்கலத்துக்கு ஓடிப் போனாளே குழல்வாய்மொழி, அவள் கதி என்ன ஆயிற்றோ? போர்க்களத்து நிலைமைகளைப் பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை. வடக்கே பகைவர்களோடு போர் செய்து கொண்டிருக்கிற சமயத்தில் நம்மோடு நாமே போரிட்டுக் கொள்ளும் இந்தக் கலகத்தைத் தளபதி ஏன் உண்டாக்கினானோ? தேசத் துரோகியாக மாறவேண்டுமென்று நன்றியை மறந்து துணிந்து விட்டானா வல்லாளதேவன்? இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா! கரிக் குப்பைக்கு நடுவில் வைரத்தைப் பார்ப்பது போல் இத்தனை துன்பத்துக்கும் நடுவில் இந்த ஒரு பாட்டை எடுத்துப் பார்த்தால் எனக்குச் சிறிது மெய்யுணர்வு உண்டாகிறது. கொஞ்சம் இதைப் படி, கேட்டு ஆறுதல் அடைகிறேன்" என்று சோகம் கனிந்த உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளால் வேண்டிக் கொண்டார் மகாராணி. விலாசினி படிக்கலானாள்:

  • "இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல
    வளமையும் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம்
    உளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும்
    விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்து கொள்மின்!"
  • பாட்டைக் கேட்டு விட்டு மகாராணி கூறலானார்:

    "நிலையாத பொருள்களை நிலைப்பனவாக எண்ணி மயங்கியிருந்தால் இப்படித்தானே அந்தப் பொருள்கள் அழியும் போது துக்கப்பட வேண்டியிருக்கிறது? நிலையாததையெல்லாம் படைத்துவிட்டு நிலைத்திருப்பது எதுவோ அதை நினைக்கப் பழகிக் கொண்டிருந்தால் இப்போது என் மனம் இப்படிக் குமுறுமா? உணர்ச்சி நப்பாசைகளையும், எண்ண அழுக்குகளையும் வைத்துக் கொண்டே மெய்யுணர்வை இழந்து விட்டேனே? விலாசினி! துக்கத்தையும், ஏமாற்றங்களையும் அனுபவிக்க இந்தப் பாட்டின் அர்த்தம் கடல் போல் விரிவடைந்து கொண்டே போவது போல் ஒரு பிரமை உண்டாகிறது, பார்த்தாயா?" அந்தப் பாட்டைக் கேட்டு மகாராணி பேசிய வார்த்தைகளால் அவருடைய மனம் எந்த அளவுக்கு வேதனையும், விரக்தியும் அடைந்து போயிருக்கிறதென்பதையும் விலாசினி உணர்ந்தாள்.

    அறை வாயிலில் அந்தச் சமயத்தில் ஒரு காவலன் அவசரமாக வந்து வணங்கி நின்றான். "தேவி! குமாரபாண்டியர் அவசரமாகப் போர்க்களத்திலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார். தங்களைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறார்" என்று அந்தக் காவலன் கூறியதும், விலாசினியும், புவன மோகினியும் விருட்டென எழுந்து அந்த இடத்திலிருந்து ஒதுங்கிச் சென்றனர். மகாராணியின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கண்கள் அறை வாயிலை நோக்கிப் பதித்து நிலைத்தன.

    வாட்டமடைந்த தோற்றத்தோடு பயணம் செய்து களைத்துக் கறுத்த முகத்தில் கவலையும் பரபரப்பும் தென்பட வேகமாக அறைக்குள் நுழைந்தான் குமாரபாண்டியன். அவனைக் கண்டதும் துயரம் பொங்க, "குழந்தாய்! இந்த நாட்டின் அறிவுச் செல்வரைப் பறி கொடுத்து விட்டோமே!" என்று கதறினார் மகாராணி.

    "அம்மா! என்ன நடந்து விட்டது? நிதானமாகச் சொல்லுங்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் குழப்பங்களையும், கவலைகளையும் சுமந்து கொண்டு போர்க் களத்திலிருந்து இங்கே ஓடி வந்திருக்கிறேன். நீங்கள் எதையோ சொல்லிக் கதறுகிறீர்களே?" என்று அருகில் வந்து அமர்ந்து வினவினான் இராசசிம்மன்.

    "சொல்லிக் கதறுவதற்கு இனி என்ன இருக்கிறது? இலங்கையில் உன்னைத் தேடி வந்த இடத்தில் பகவதி இறந்து போனாள் என்ற உண்மையை இங்கு வந்ததுமே நீ என்னிடம் சொல்லியிருக்கக் கூடாதா? எல்லோருமாகச் சேர்ந்து அதை மறைத்தீர்கள். தளபதியைப் போர்க்களத்துக்கு வர விடாமல் செய்தீர்கள். அவற்றால் எத்தனை பெரிய உள்நாட்டுக் கலகம் எழுந்து விட்டது. மகாமண்டலேசுவரர் மாண்டு போனார். இடையாற்று மங்கலம் தீயுண்டு அழிந்து விட்டது. இன்னும் என்ன நடக்க வேண்டும் அப்பா? எல்லாவற்றையும் கேட்ட பின்பும் துக்கத்தையும் உயிரையும் தாங்கிக் கொண்டு சாக மாட்டாமல் உட்கார்ந்திருக்கிறேன் நான்" என்று தன் தாயின் வாயிலிருந்து மகாமண்டலேசுவரரின் மரணச் செய்தியைக் கேட்ட போது அப்படியே திக்பிரமை பிடித்துப் போய் அயர்ந்து கிடந்தான் இராசசிம்மன். பயமும் திகைப்பும் உண்டாக்கும் அந்தத் துயரச் செய்தி மனத்தில் உறைந்து நாவுக்குப் பேசும் ஆற்றல் உண்டாகச் சில கணங்கள் பிடித்தன அவனுக்கு. அவனால் அதை நம்புவதற்கே முடியவில்லை.

    "அம்மா! மகாமண்டலேசுவரர் இறந்து விட்டார் என்று உண்மையாகவே சொல்கிறீர்களா அல்லது என்னைச் சோதனை புரிகிறீர்களா?"

    "சோதனை நான் செய்யவில்லையப்பா! உன்னையும் என்னையும் இந்த தேசத்தையும் விதி சோதனை செய்கிறது. தெய்வம் சோதனை செய்கிறது. நம்பிக்கைகள் சோதனை செய்கின்றன" என்று சொல்லிக் கொண்டே குலுங்கக் குலுங்க அழுதார் மகாராணி.

    "மகாராணி மனங் குழம்பிப் போயிருக்கிறார்கள். நடந்தவற்றை நாங்கள் சொல்கிறோம்" என்று அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் அங்கு வந்தார்கள். எல்லாவற்றையும் அவர்களிடம் கேட்டு அறிந்த போது அவனும் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். அவனுக்கும் அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.

    "அம்மா! விழிஞத்தில் இறங்கியதும் பகவதியின் மரணத்தை யாருக்கும் கூற வேண்டாமென்று மகாமண்டலேசுவரர்தான் வாக்குறுதி வாங்கிக் கொண்டார். தளபதி சிறைப்படுத்தப்பட்டிருக்கும் செய்தியும் இரகசியமாக இருக்க வேண்டுமென்று அவர் தான் சொன்னாரம்மா! தளபதி சிறையிலிருந்து தப்பித் தங்கையின் மரணத்தைத் தெரிந்து கொண்டதுமல்லாமல் அதற்கு மகாமண்டலேசுவரர்தான் காரணமென்று தப்பாக அவர் மேல் வன்மம் கொண்டு விட்டான். அதன் விளைவுகள் இவ்வளவு கொடுமையாக முடியுமென்று நான் நினைக்கவே இல்லை. அம்மா! இங்கே தான் இப்படி என்றால் அங்கே போர்க்களத்திலும் புகுந்து கலகம் செய்து பாசறையிலுள்ள தென்பாண்டி வீரர்களையெல்லாம் மனம் மாற்றி இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். உங்களையும், மகாமண்டலேசுவரரையும் கலந்து கொண்டு தளபதி வல்லாளதேவனை எப்படியாவது சமாதானப்படுத்திப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்லலாமென்று நான் ஓடி வந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் நீங்கள் இவ்வளவு பெரிய பேரிடியை என் காதில் போடுகிறீர்கள். நான் என்ன தான் செய்யப் போகிறேனோ? இப்போதுள்ள படைகளை வைத்துக் கொண்டு இரண்டு நாள் போரைக் கூடச் சமாளிக்க முடியாதென்று சக்கசேனாபதி கையை விரித்து விட்டார்."

    "போரைச் சமாளித்து வெற்றி பெற்றாலும் இனி என்ன பயம் மகனே? கடமையையும், நன்றியையும் போற்றி வந்த தூய வீரனாக இருந்த தளபதி கண்மூடித்தனமான வெறிச் செயலில் இறங்கிவிட்டான். கூற்றத் தலைவர்களும் அவனோடு சேர்ந்து கொண்டு விட்டார்கள். எவ்வளவோ சாமர்த்தியமாக இருந்த மகாமண்டலேசுவரரும் கெடுமதி நெருங்கியதாலோ என்னவோ, இப்படியெல்லாம் செய்து தம்மையும் அழித்துக் கொண்டு விட்டார். தளபதியைச் சிறைப்படுத்தியும், பகவதியின் மரணத்தை மறைத்தும் அவர் சூழ்ச்சிகள் செய்திராவிடில் இந்தக் கலகமே ஏற்பட்டிராது. அழியப் போகிற தீவினையின் விளைவு நெருங்கிவிட்டால் எவ்வளவு பெரிய அறிவாளிக்கும் நாணயம் தவறிவிடும் போலிருக்கிறதே!" என்று மகாராணி விரக்தியோடு மறுமொழி கூறினார்.

    "அம்மா நீங்களும் இப்படி மனம் வெறுத்துப் பேசினால் நான் என்ன செய்வது? சேர நாட்டுப் படைத் தலைவனும், பெரும்பெயர்ச்சாத்தனும் இந்தப் போரில் வீர மரணம் அடைந்தார்கள். கடல் கடந்து வந்த சக்கசேனாபதி இரவும் பகலும் நம் வெற்றிக்காக முயல்கிறார். இந்தச் சமயத்திலா தளர்வது? வாருங்கள்! நானும் நீங்களுமாகப் போயாவது தளபதியைக் கெஞ்சிப் பார்க்கலாம். அவன் மனம் இரங்காமலா போய்விடுவான்? அம்மா! எல்லாத் துன்பங்களையும் மறந்து புறப்படுங்களம்மா, கடைசியாக முயல்வோம்" என்று தாயின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கெஞ்சினான் இராசசிம்மன். மூன்றாம் நாள் காலை பதினொரு நாழிகைக்குள் தளபதியோடு போர்க்களத்துக்கு வரவில்லையானால் வெற்றியைப் பற்றி நினைப்பதற்கில்லை யென்று சக்கசேனாபதி கூறியனுப்பியிருந்த நிபந்தனையையும் தாயிடம் கூறி முறையிட்டான் அவன்.

    அவனுக்குப் பதில் சொல்வதற்காக மகாராணி வாயைத் திறந்தார். அவர் பேசத் தொடங்குமுன் அரண்மனை வாயிலில் 'விடாதே! பிடி! கொல்லு' என்ற வெறிக் குரல்களோடு பலர் ஓடிவரும் ஓசையும் "ஐயோ! காப்பாற்றுங்கள்" என்று ஓர் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து ஓலமிட்டு அபயம் கோரும் அடைக்கலக் குரலும் எழுந்தன. அதைக் கேட்டு யாவரும் திடுக்கிட்டுத் திகைத்தனர். "இராசசிம்மா! ஓடு; அது என்னவென்று போய்ப் பார்!" என்று மகனைத் துரத்தினார் மகாராணி. இராசசிம்மன் உட்பட எல்லோருமே அந்தக் குழப்பம் என்னவென்று பார்ப்பதற்காக எழுந்து வாசற்புறம் ஓடினார்கள். மகாராணி, விலாசினி, புவன மோகினி ஆகிய பெண்கள் மட்டும் போகவில்லை.

    அரண்மனையில் பராந்தகப் பெருவாயிலில் மூடு பல்லக்கு ஒன்று கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டிருந்தது. பின்னால் உருவிய வாள்களும், வேல்களுமாக யாரோ சில முரட்டு மனிதர்கள் துரத்தி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். மூடு பல்லக்கு அருகிலிருந்து குழல்வாய்மொழியும், நாராயணன் சேந்தனும் அபயக் குரல் கொடுத்து அலறியவாறு உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தார்கள். என்ன கூப்பாடு என்று பார்ப்பதற்காக வெளியே வந்த குமாரபாண்டியனும் மற்றவர்களும் இந்தக் காட்சியைக் கண்டு திகைப்பும் வியப்பும் அடைந்து மருண்டு போய் நின்றனர். இன்னதென்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.

    பின்னால் துரத்தி வந்த கூட்டம் கணத்துக்குக் கணம் அதிகமாயிற்று. ஆயுதபாணிகளாகத் தாக்குவதற்கு ஓடி வருவது போல் வந்த அவர்களுடைய வெறித்தனமும் கூப்பாடுகளும் பெருகின. உள்ளே உட்கார்ந்திருந்த மகாராணி முதலியவர்களும் ஆவலை அடக்க முடியாமல் பார்ப்பதற்காக எழுந்து ஓடி வந்து விட்டார்கள். 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று அலறிக் கொண்டே ஓடி வந்த குழல்வாய்மொழியும், சேந்தனும் மகாராணியின் காலடியில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் இருவரும் பயந்து நடுங்கி முகத்தில் கொலையச்சம் பரவியது போல் தோற்றமளித்ததை எல்லோரும் கண்டனர். இருவரும் ஓயாமல் அழுதிருந்த சாயல் தெரிந்தது.

    "தாயே! எங்களைக் கொல்ல ஓடிவருகிறார்கள். நீங்கள் தான் அடைக்கலம் அளித்துக் காப்பாற்ற வேண்டும்" என்று மகாராணியிடம் முறையிட்டுக் கதறினார்கள், குழல்வாய்மொழியும் சேந்தனும். எல்லோருக்கும் அவர்கள் நிலை ஒருவாறு புரிந்து விட்டது.

    உடனே குமாரபாண்டியன் வாயிற்புறம் பார்த்தான். கலகக் கூட்டம் வரம்பு மீறிக் காவலைக் கடந்து உள்ளே நுழைய முயன்று கொண்டிருந்தது.

    "காவலர்களே! பராந்தகப் பெருவாயிலை மூடிவிட்டு உட்புறம் கணைய மரங்களை முட்டுக் கொடுங்கள். கோட்டைக்குள் யாரும் நுழைய விடாதீர்கள்" என்று சிங்க முழக்கம் போன்ற குரலில் கட்டளையிட்டன் இராசசிம்மன். அடுத்த விநாடி ஒன்றரைப் பனை உயரமும் முக்காற்பனை அகலமும் உள்ள அந்தப் பிரம்மாண்டமான கதவுகள் மூடப்படும் ஒலி அரண்மனையையே அதிரச் செய்து கொண்டு எழுந்தது.

    "குழல்வாய்மொழி! எங்களையெல்லாம் தவிக்க விட்டுப் போய் விட்டாரே அம்மா உன் தந்தை? அவர் இருந்த பெருமைக்கு இப்படியெல்லாம் ஆகுமென்று யாராவது எதிர்பார்த்தோமா?" என்று தணிக்க முடியாமல் கிளர்ந்தெழும் துக்கத்தோடு அந்தப் பெண்ணைத் தழுவிக் கொண்டு கதறினார் மகாராணி. குழல்வாய்மொழி குமுறிக் குமுறி அழுதாள்.

    "தேவி! அவருடைய காலம் முடிந்து விட்டது. எங்களைத் தப்பி வாழச் செய்துவிட்டு அவர் போய்விட்டார். இரவோடு இரவாக இடையாற்று மங்கலத்திலிருந்து நாங்கள் இருவரும் முன்சிறைக்குப் போய்விட்டு இப்போது ஒரு முக்கிய காரியமாக வந்தோம். யாருக்கும் தெரியாமல் மூடு பல்லக்கில் வந்தோம். அரண்மனைக்கு அருகில் வந்த போது இந்தக் கலகக்காரர்கள் எப்படியோ தெரிந்து கொண்டு துரத்தத் தொடங்கி விட்டார்கள். நல்ல வேளையாகக் காப்பாற்றி அபயமளித்தீர்கள். தம்முடைய அந்திம நேரத்தில் மகாமண்டலேசுவரர் தங்களிடம் சேர்த்து விடச் சொல்லி ஓர் ஓலையை என்னிடம் அளித்துச் சென்றார்" என்று சொல்லிக் கொண்டே இடுப்பிலிருந்து அந்த ஓலையை எடுத்தான் சேந்தன். துக்கம் அவன் குரலையே மாற்றியிருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3.24. சிதைந்த கனவுகள்

அரண்மனைக் கோட்டைக் கதவுகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. வெளிப்புறம் பராந்தகப் பெரு வாயிலுக்கு அப்பால் கலகக் கூட்டம் வெள்ளமெனப் பெருகிக் கொண்டிருந்தது. கலகக்காரர்களின் வெளிக் கூப்பாடுகள் பயங்கரமாக ஒலித்தன. சேந்தனையும், குழல்வாய்மொழியையும் வெளியே அனுப்பாவிட்டால் கதவை இடித்துக் கொண்டு உள்ளே புகுந்து விடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

இத்தகைய பயங்கரமான சூழ்நிலை வெளியே நிலவிக் கொண்டிருக்கும் போதுதான் சேந்தன் தான் கொண்டு வந்திருந்த மகாமண்டலேசுவரரின் இறுதிக் காலத்தில் எழுதப்பட்ட ஓலைச் சுருளை விரித்து மகாராணியிடம் கொடுத்தான்.

"இராசசிம்மா! இதைப் படித்துச் சொல்" என்று குமாரபாண்டியனிடம் அதைக் கொடுத்தார் மகாராணி. துக்கம் அடைக்கும் நலிந்த குரலும், நீரரும்பும் கண்களுமாக அவர் அப்போது தோற்றமளித்த நிலை எல்லோருடைய உள்ளங்களையும் உருக்கியது. சேந்தனும் கண்கலங்கிப் போய் வாட்டத்தோடு காட்சியளித்தான். குழல்வாய்மொழி தலை நிமிரவே இல்லை. கண்கள் சிவந்து முகம் வீங்கி அழுதழுது சோகம் பதிந்த கோலத்தில் நின்றாள் அவள். மற்றவர்கள் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். குமாரபாண்டியன் எல்லோரும் கேட்கும்படியாக மகாமண்டலேசுவரரின் இறுதித் திருமுக ஓலையை இரைந்து படித்தான்.

"அன்புக்கும், மதிப்புக்கும் உரிய மகாராணி வானவன்மாதேவிக்கு, இடையாற்று மங்கலம் நம்பி இறுதியாக எழுதும் திருமுகம். தேவி, இந்தத் திருமுக ஓலையை நீங்கள் படிக்கு முன் நான் இவ்வுலக வாழ்வினின்று விடைபெற்றுச் சென்று விடுவேன். என்னுடைய மரணத்துக்காக நீங்களோ, குமாரபாண்டியரோ சற்றேனும் வருந்த வேண்டியதில்லை. இந்த விநாடிக்குப் பின் இனி ஒரு கணம் வாழ்ந்தாலும் நானோ என் அறிவோ எதிலும் வெற்றி பெற முடியாது. தீபத்தில் எண்ணெய் வற்றியதும் திரியும், சுடருமே அழிந்து விடுகிற மாதிரி நல்வினைப் பயன் நீங்கியதும் எவ்வளவு பெரிய மனிதராயிருந்தாலும் அறிவும், முயற்சியும் பயன்படாது! அருள் கலக்காத முரட்டு அறிவுக்கு என்றாவது ஒருநாள் இந்தத் தோல்வி ஏற்படத்தான் செய்யும். தளபதி வல்லாளதேவன் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலே என்னென்னவோ செய்து விட்டான். அதைப் போல் இறுதியில் சில சமயம் நானும் அவனைப் புரிந்து கொள்ளாமல் என்னென்னவோ செய்து விட்டேன். அறிவும் வீரமும் பகைத்துக் கொண்டதால் ஒரு நாட்டுக்கு எவ்வளவு கெடுதல்கள்? எப்போதாவது முடிந்தால் ஒரே ஒரு சந்தேகத்தை மட்டும் நீங்கள் தளபதிக்குத் தெளிவு செய்து விட வேண்டும். 'அவன் தங்கையின் மரணத்துக்கு நான் காரணமில்லை' என்பது தான் நீங்கள் அவனுக்குத் தெளிவு செய்ய வேண்டிய மெய். பெரிய காரியங்களை நிறைவேற்ற முடியாமல் இலட்சிய பங்கமும் மானக்கேடும் ஏற்பட்டால் வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுவது நம் தமிழ்க் குலத்து மரபு. நானும் இடையாற்று மங்கலத்துச் சிவன் கோயில் குறட்டில் அமர்ந்து வடக்கு நோக்கி இந்த வாழ்வை முடித்துக் கொள்ளத் தீர்மானித்து விட்டேன். சாவு தீர்மானப்படிதான் வரவேண்டு மென்பதில்லையே? என் தீர்மானத்தை முந்திக் கொண்டு வந்தாலும் அதை வரவேற்க நான் தயங்க மாட்டேன்.

"இந்தக் கடைசி நேரத்தில் யாரும், எப்போதும், எதிர்பாராத ஒரு காரியத்தை நான் செய்யப் போகிறேன். இத்தனைக் காலமாக என்னிடம் உண்மையாக ஊழியம் செய்த நாராயணன் சேந்தனுக்கு என் மகள் குழல்வாய்மொழியை மணம் முடித்துக் கொடுத்து விடப் போகிறேன். இதை விடப் பெரிய நன்றி அவனுக்கு நான் வேறென்ன செய்ய முடியும்?..."

இரைந்த குரலில் படித்துக் கொண்டே வந்த குமார பாண்டியன் படிப்பதை நிறுத்தி விட்டுத் தலை நிமிர்ந்து சேந்தனையும், குழல்வாய்மொழியையும் மாறிமாறிப் பார்த்தான். அடாடா! அப்போது குமாரபாண்டியனின் முகத்தில்தான் எத்தனை விதமான உணர்ச்சிச் சாயல்கள் சங்கமமாகின்றன. அவனைப் போலவே மற்றவர்களுடைய பார்வையும் சேந்தன் மேலும் குழல்வாய்மொழியின் மேலும் தான் திரும்பிற்று. சேந்தனும், குழல்வாய்மொழியும் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டவர்களைப் போல் தலை நிமிராமலிருந்தார்கள். முகத்தில் உணர்ச்சிகளின் சூறாவளி தோன்றி விழிகள் சிவந்து போய்க் குழல்வாய்மொழியிடம் எதையோ கேட்டு விடுவதற்குத் துடித்தன குமாரபாண்டியனின் உதடுகள். அவளோ அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அந்தச் சமயத்தில், "மேலே படி" என்று மகாராணியின் தழுதழுத்த குரல் அவனைத் தூண்டியது. குமாரபாண்டியன் மேலே படிக்கலானான். முதற் பகுதியைப் படித்ததை விட இப்போது அவன் குரல் நைந்திருந்தது. "எனக்கு மகளாகப் பிறந்த காரணத்தால் குழல்வாய்மொழிக்கு இருக்கிற அகந்தையும், ஆணவமும் இந்தப் புதிய உறவு மூலம் அழிந்து விட வேண்டுமென்பது என் ஆசை. என் பெண்ணையும், சேந்தனையும் துன்பங்களும், பகைகளும் பெருகி வரும் சூழலில் தனியே ஒரு பாதுகாப்புமின்றி விட்டுச் செல்கிறேன். அவர்கள் வாழ வேண்டும். நாட்டில் எனக்கிருக்கும் எதிர்ப்பின் பகைமை அவர்களை அழிக்க முயலாமல் உங்களுக்கு அடைக்கலமாக அவர்களை அளிக்கிறேன். எப்படியாவது அவர்களை வாழவிடுங்கள். என்னுடைய அறிவின் பிடிவாதங்களால் இந்த நாட்டுக்கு விளைந்த துன்பங்களுக்காக என்னை மன்னியுங்கள். குமாரபாண்டியரையும் மன்னிக்கச் சொல்லுங்கள். 'மகாமண்டலேசுவரர்' என்ற மனிதரை ஒரு கெட்ட சொப்பனம் கண்டது போல் மறக்க முயலுங்கள்!"

குமாரபாண்டியன் அதைப் படித்து முடித்தான். மழை பெய்து ஓய்ந்தாற் போன்ற ஒரு வகை அமைதி அவர்களிடையே நிலவியது. அந்த அமைதிக்கு நேர்மாறாக வெளியே கலகக்காரர்களின் வெறியாட்டம் நடந்து கொண்டிருந்தது. பராந்தகப் பெருவாயிலை இடித்துத் தகர்த்து விட்டு உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

மகாமண்டலேசுவரரின் ஓலையைப் படித்து முடித்த பின் சிறிது நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றார் மகாராணி. குழல்வாய்மொழியின் உள்ளம் எப்படி அந்த மணத்துக்கு உட்பட்டதென்று புரியாமல் மனங் குமுறி நின்றான் குமாரபாண்டியன். "இராசசிம்மா! வீரமும் வெற்றியும் அரியணையேறி ஆளும் திருவும் இன்னும் உனக்குக் கிடைக்கிற காலம் வரவில்லை போலிருக்கிறது! மகாமண்டலேசுவரரோ போய்விட்டார். அவருடைய இந்த ஓலையைப் படித்த பின் என் நம்பிக்கைகளே அழிந்து விட்டன போல் துயரமாயிருக்கிறது எனக்கு. தளபதி ஆகாதவனாகிவிட்டான். கூற்றத்தலைவர்களும் ஆகாதவர்களாகி விட்டார்கள். இனி யாரை நம்பி, எதை நம்பி நாம் வெற்றியை நினைக்க முடியும்? எனக்கு ஒரு வழியும் தோன்றவில்லை அப்பா! போ, உன்னால் முடியுமானால் இன்னும் சிறிது நேரத்துக்குள் இந்த அரண்மனையைக் கலகக்காரர் கையில் சிக்கிவிடாமல் காப்பாற்று. அதற்குள் நான் மகாமண்டலேசுவரரின் பெண்ணையும், அவள் கணவன் சேந்தனையும் இங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போய் விடுகிறேன்" என்று குமாரபாண்டியனை நோக்கி வேண்டிக் கொண்டார் மகாராணி.

"அம்மா! இப்படி ஒரேயடியாக நம்பிக்கையிழந்து பேசினால் என்ன செய்ய முடியும்? நாம் இருவரும் தளபதியையும் கூற்றத் தலைவர்களையும் சந்தித்துப் பேசிச் சமாதானப்படுத்தலாம்" என்றான் இராசசிம்மன்.

"மகனே! இந்த நாட்டின் வெற்றியைப் பற்றிக் கவலைப்பட்டால் என்னிடம் அடைக்கலம் அளிக்கப்பட்ட இவர்களை யார் காப்பாற்றுவது? இவர்களுக்கு அழிவு வராமல் வாழவைக்க வேண்டுமென்பது மகாமண்டலேசுவரருடைய கடைசி ஆசை. அதை நான் முதலில் நிறைவேற்றியாக வேண்டும். நம்பிக்கையைக் காப்பாற்றிய பின் நாட்டைக் காப்பாற்ற வருகிறேன். நீ போய் நான் கூறியபடி வாயிற்புறத்துக் காவலை உறுதியாக்கு... நிற்காதே... உடனே செல்!" - மகாராணியின் குரலில் பரபரப்பு நிறைந்திருந்தது. கடைசியாக ஒருமுறை குழல்வாய்மொழியைப் பார்த்துவிட்டு நடந்தான் இராசசிம்மன். அவன் காவலை கெட்டிப் படுத்துவதற்காக பராந்தகப் பெருவாயிலுக்குச் சென்றதும், சேந்தனையும், குழல்வாய்மொழியையும் தழுவி அழைத்துக் கொண்டு தமது அந்தரங்க அறைக்குச் சென்றார் மகாராணி. புவன மோகினியைக் கூப்பிட்டு, "புவன மோகினி! இந்த அரண்மனைக் கருவூலத்திலுள்ள விலைமதிப்பற்ற உயர்ந்த ஆடையணிகலன்களையெல்லாம் தேர்ந்தெடுத்து இந்தப் பெண்ணை அலங்கரித்து வா" என்று சொல்லிக் குழல்வாய்மொழியை அவளுடன் ஆவலோடு அனுப்பினார்.

சேந்தன் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் அவனையும் பட்டுப் பீதாம்பரங்கள் உடுத்தி மணக்கோலம் பூண்டு வரச் செய்தார். பவழக்கனிவாயர், ஆசிரியர், விலாசினி எல்லோரையும் சூழ இருக்கச் செய்து குழல்வாய்மொழியையும் சேந்தனையும் மாலை மாற்றிக் கொள்ளுமாறு செய்து மணக்கோலம் கண்டு மகிழ்ந்தார். எல்லோருமாகச் சேர்ந்து மணமக்களுக்கு மங்கல வாழ்த்துக் கூறினார்கள். அந்தச் சமயத்தில் இராசசிம்மன் வேகமாகவும், பரபரப்பாகவும் அங்கே ஓடி வந்தான். அவன் முகத்தில் பயமும், குழப்பமும் தென்பட்டன.

"அம்மா! பராந்தகப் பெருவாயில் தகர்ந்து விட்டது. கலகக்காரர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள். இப்போதிருக்கிற வெறியையும் ஆவேசத்தையும் பார்த்தால் அவர்களைச் சமாதானப்படுத்த முடியாது போலிருக்கிறது. 'மகாமண்டலேசுவரரின் மகளையும் ஒற்றனையும் கொன்று பழிவாங்குவோம்' என்று கூச்சலிட்டுக் கொண்டு கொலை வெறியோடு ஓடி வருகிறார்கள். ஒரு விநாடி கூட இனிமேல் இங்கே தாமதிப்பதற்கில்லை. எப்படியாவது இவர்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று கலவரம் மிகுந்த குரலில் பதற்றத்தோடு கூறினான் குமாரபாண்டியன். குழல்வாய்மொழியை மணக்கோலத்தில் கண்ட போது அந்தக் குழம்பிய சூழ்நிலையிலும் ஏதோ சில மெல்லிய உணர்ச்சிகள் அவன் உள்ளத்தைக் கசக்கிப் பிழிவது போலிருந்தது. அவன் தன் மனத்தையும் கண்களையும் அடக்கிக் கொண்டான். ஏக்கத்தைப் பெருமூச்சாக வெளித் தள்ளினான். எங்கோ வெறித்து நோக்கியவாறு நின்ற மகாராணி அவனைப் பார்த்துக் கூறினார்:

"இராசசிம்மா! எல்லோரும் வெளியேறி விடலாம். உனக்கும் எனக்கும் இந்த அரண்மனையில் ஒரு வேலையும் இல்லை. உன்னுடைய எண்ணங்களும், என்னுடைய ஆசைகளும் நிறைவேறும் காலம் இன்னும் வரவில்லை போலிருக்கிறது. பாண்டியப் பேரரசின் பெருமையும், புகழும் பரவுவதற்குரிய நிலை உன் தந்தையின் காலத்துக்குப் பின் இல்லையோ என்னவோ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். கவலைப்பட்டுப் பயனில்லை. நீ போய் அந்தப்புரத்துக்குள் நுழையும் பிரதான வாயில்களை அடைத்து விட ஏற்பாடு செய். போர்க்காலங்களில் அரண்மனைப் பெண்கள் தப்பி வெளியேறுவதற்காக நந்தவனத்து நீராழி மண்டபத்துக்கருகிலிருந்து ஒரு சுரங்க வழி போகிறது. நீயும் வா! நாமெல்லோரும் அந்த வழியாக வெளியேறி விடலாம். சுசீந்திரத்துக்கு அருகிலுள்ள பாதிரித் தோட்டத்தில் கொண்டு போய்விடும் அந்த வழி. அங்கிருந்து பவழக்கனிவாயர் முதலியவர்களோடு சேந்தனையும் குழல்வாய்மொழியையும் பாதுகாப்பாக முன்சிறைக்கு அனுப்பி வைத்து விடலாம். அறக்கோட்டத்தில் போய்த் தங்கிக் கொண்டால் பின்பு அவர்கள் பாடு கவலையில்லை" என்று மகாராணி கூறிய போது சேந்தன் குறுக்கிட்டான்: "தேவி! எங்கள் இருவருக்காகவும் தாங்கள் துன்பப்படக்கூடாது. நாங்கள் முன்சிறையில் என் தமையனோடு போய்த் தங்கிவிட்டால் பின்பு எங்களுக்கு ஒரு குறையும் வராமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கலகக்காரர்களின் பகைமையும், பழிவாங்கும் வெறியும் உள்ளவரை நாங்களும் இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து வாழ்வதற்குத்தான் விரும்புகிறோம்" என்று நாராயணன் சேந்தன் பணிவுடனும் குழைவுடனும் மேற்கண்டவாறு பேசினான்.

"எப்படியோ நன்றாக வாழவேண்டும் நீங்கள். அது மகாமண்டலேசுவரரின் கடைசி ஆசை. அதைக் காப்பாற்றுவதற்கும், நிறைவேற்றுவதற்கும் நான் கடமைப்பட்டவள். வாருங்கள், நாம் இங்கிருந்து வெளியேறிச் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. புவன மோகினி! நீ அந்தத் தீபத்தை எடுத்துக் கொள். சுரங்கப் பாதைக்குள் இருட்டு அதிகமாக இருக்கும்" என்று கூறிக் கொண்டே முன்னால் நடந்தார் மகாராணி. குமாரபாண்டியன் அந்தப்புரத்துக் கதவை அடைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவர்களோடு வந்து சேர்ந்து கொண்டான். அந்தச் சமயத்தில் அவனுடைய முகத்தைக் காண்பவர்களுக்கு உலகத்திலுள்ள நிராசையெல்லாம் அங்கே வந்து குடி கொண்டு விட்டது போல் தோன்றியது. போர்க்களத்தில் சக்கசேனாபதியிடம் வாக்களித்து விட்டு இரவோடு இரவாகக் கிளம்பியபோது அவன் மனத்தில் உருவாகி எழுந்து ஓங்கி நின்ற நம்பிக்கை மாளிகை இப்போது தரைமட்டமாகி விட்டதைப் போல் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. மகாமண்டலேசுவரரின் மரணம், குழல்வாய்மொழியின் வினோதமான திருமணம், கலகக் கூட்டத்தின் பழிவாங்கும் வெறி, மகாராணியின் அவநம்பிக்கை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நினைக்கும் போது தன்னுடைய இனிய கனவுகளில் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டது போல் உணர்ந்தான் அவன். அன்றொரு நாள் மழையும், புயலும் வீசிய இரவில் ஈழ நாட்டுக் காட்டில் பாழ்மண்டபத்து இருளில் உட்கார்ந்து வாழ்க்கையின் முழுமையைப் பற்றிச் சிந்தித்ததை மறுபடியும் நினைத்துப் பெருமூச்சு விட்டான் அவன்.

அவர்கள் எல்லோரும் நந்தவனத்துக்குப் போய்ச் சுரங்கப்பாதை ஆரம்பிக்கிற இடத்தை அடைந்தனர். விதியைப் பின் தொடரும் பேதை மனிதனைப் போல் குமாரபாண்டியனும் அவர்களைப் பின்பற்றி அங்கே சென்றான். அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே துக்கம் வடியும் குரலில் "செல்வா! உன் முன்னோர் மன்னாதிமன்னராக வாழ்ந்து இறந்த இந்த அரண்மனையை இறுதியாக ஒருமுறை பார்த்துக் கொள். இனி இந்த மாபெரும் அரண்மனை இருப்பதும், இல்லாததும் உனக்குக் கிடைப்பதும், கிடைக்காததும் விதியின் ஆணையைப் பொறுத்தது" என்றார் மகாராணி. இராசசிம்மன் நிமிர்ந்து பார்த்தான். கதவுகள் உடையும், சுவர்கள் இடிபடும் ஒலியுமாக அந்த அரச மாளிகை முடிவின் எல்லையில் இருந்தது. எல்லாரும் சுரங்க வழிக்குள் இறங்கிவிட்டனர். புவன மோகினி தீபத்தோடு முன்னால் சென்றாள். கடைசியாகக் குமாரபாண்டியனும் அதற்குள் இறங்கி மறைந்தான். ஊழ்வினையே சுரங்கமாகி வழிநடத்திச் செல்கிற மாதிரி ஒரு பொய்த் தோற்றம் உண்டாயிற்று.

எல்லோரும் சுரங்க வழியில் நடந்து செல்லும் போது ஓரிடத்தில் சேந்தன் விரைவாக நடந்து முன்சென்று விட்டதால் குழல்வாய்மொழி சற்றுப் பின் தங்கிச் சென்றாள். தளர்ந்து துவண்டு மென்னடையில் மெதுவாகச் சென்று அவளை நெருங்கினான் குமாரபாண்டியன். கொதிக்கும் மனத்துடன் ஏதோ ஒரு கேள்வியை அவளிடம் கேட்டு விடத் துடித்தான் அவன். ஆனால் குழல்வாய்மொழி அவனை அருகில் நெருங்கவிடவில்லை. அவன் விரைந்து வருவது கண்டு தான் முந்திக் கொண்டு சென்றுவிட்டாள். அப்படி அவள் நடையை வேகப்படுத்திக் கொண்டு முந்தின போது அவளுடைய கூந்தலிலிருந்து இரண்டு மல்லிகைப் பூக்கள் உதிர்ந்தன. அவளை நெருங்கி ஏதோ கேள்வி கேட்கும் துடிப்புடனே வந்த குமாரபாண்டியனின் காலடியில் அந்த மல்லிகைப் பூக்கள் மிதிப்பட்டதும் அப்படியே தயங்கி நின்றுவிட்டான். காலில் மிதிபட்ட பூக்களையும் முன்னால் விரைந்து சென்று சேந்தனை ஒட்டி நடக்கும் குழல்வாய்மொழியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றான் அவன். அவனுடைய மனத்துக்குள் ஏதோ ஒரு மெல்லிய உணர்வும் அப்படி மிதிபட்டு விட்டது போலிருந்தது. மிதிபட்ட பூக்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே மேலே நடந்தான் குமாரபாண்டியன். சுரங்கப் பாதை முடிந்து வெளியேறுகிற வரையில் யாரோடும் யாரும் பேசிக் கொள்ளவில்லை.

சுசீந்திரம் பாதிரித் தோட்டம் வந்தது. மகாராணி குழல்வாய்மொழியையும், சேந்தனையும் கையைப் பற்றிப் பவழக்கனிவாயரிடம் ஒப்படைத்தார். "பவழக்கனிவாயரே! அதங்கோட்டாசிரியரே! இவர்களை முன்சிறை அறக்கோட்டத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கலைகளுக்கும், மணியம்பலத்துக்கும் என்றும் அழிவில்லை. நீங்கள் உள்ளவரை சேந்தனும், குழல்வாய்மொழியும் வாழ்வதைக் கண்டு வாழ்ந்து மகிழுங்கள்!" என்று மகாராணி கூறிய போது, "தேவி! தாங்களும் காந்தளூர் மணியம்பலத்தில் வந்து எங்களுடனே இருந்து விடலாமே!" என்றார் பவழக்கனிவாயர்.

"நான் இருக்க வேண்டிய இடத்தை நானே முடிவு செய்து கொண்டு விட்டேன். நீங்கள் போய் வாருங்கள்" என்று கண்டிப்பாகச் சொன்னார் மகாராணி. யாரும் மறுத்துப் பேச முடியவில்லை. மகாராணியையும், குமாரபாண்டியனையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டு எல்லோரும் புறப்பட்டுப் போய்விட்டார்கள். புவன மோகினி ஒருத்தி மட்டும் மகாராணியாரோடு இருந்து கொண்டாள்.

"மகனே! மேகத்தால் மறைக்கப்படும் சந்திரனைப் போல் இன்னும் சிறிது காலம் பாண்டி நாடு பகைவர் ஆட்சியில் தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது. என்னைப் பிறந்த வீட்டில் - சேர நாட்டு வஞ்சமாநகரத்தில் கொண்டு போய்விட ஏற்பாடு செய். இந்தப் பெண் புவனமோகினி என்னோடு துணை வருவாள். எங்கு போய் என்ன செய்வாயோ? மறுபடியும் நீ ஆளாகி இந்த நாட்டை வென்று ஆள்வதற்கு வந்தால் அப்போது நான் உயிரோடு இருந்தால் நாம் மீண்டும் சந்திப்போம்" என்று மகாராணி கூறிய போது குமாரபாண்டியன் உணர்ச்சி வசப்பட்டுச் சிறு பிள்ளைபோல் அழுது விட்டான். வஞ்சிமாநகர் புறப்படு முன் தென்பாண்டி நாட்டுக் கோவில்களுக்கெல்லாம் கடைசியாக ஒரு முறை சென்று தரிசனம் செய்ய வேண்டுமென்று மகாராணி ஆசைப்பட்டார். அந்த ஆசையை நிறைவேற்ற இரண்டு நாட்கள் செலவழித்தான் குமாரபாண்டியன். மூன்றாம் நாள் காலை ஒரு பல்லக்கும் சுமப்பதற்கு ஆட்களும் தேடி மகாராணியையும், புவனமோகினியையும் ஏற்றி அனுப்பினான். அப்போது, "அம்மா! வஞ்சிமாநகரத்துக்கு இங்கிருந்து அதிக நாட்கள் பயணம் செய்ய வேண்டும். கவனமாகப் போய்ச் சேருங்கள். நான் போர்க்களத்துக்குப் போய் போரைக் கவனிக்கிறேன். நல்வினை இருந்தால் மறுபடியும் சந்திப்போம்!" என்று மனங் கலங்கிக் கூறினான்.

"இராசசிம்மா! உனக்கு என் பயணத்தைப் பற்றிக் கவலை வேண்டாம் - வஞ்சிமாநகரப் பயணத்தை விட நீண்ட வாழ்க்கைப் பயணத்தை நான் கண்டாயிற்று. இனிப் பயமில்லை. போய் வா! வெற்றியானால் வென்று வா. தோல்வியானால் எங்கேயாவது போய் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்" என்று அவன் மனக் கலக்கத்தைத் தேற்றி வாழ்த்திவிட்டு நிம்மதியாக வஞ்சிமாநகரத்துக்குப் புறப்பட்டார் மகாராணி. தாயைத் தன்னிடமிருந்து பிரிக்கும் அந்தப் பல்லக்குப் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற குமாரபாண்டியன் அதன் தோற்றம் கண் பார்வையிலிருந்து மறைந்ததும் கண்ணில் துளிர்த்த நீர் முத்துக்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினான். நான்கு புறமும் விழிகள் பார்க்க முடிந்த அளவு சுற்றிலும் பார்த்தான். மேலே வானத்தை அண்ணாந்து நோக்கினான். அந்தத் தென் பாண்டி நாடு, அதன் வளம், அதன் அழகு, அதன் செல்வங்கள், அதன் தெய்வத் திருக்கோவில்கள் எல்லாம் சூனியமாய்ப் பாழ் வெளியாய் ஒன்றுமற்ற பழம் பொய்களாகத் திடீரென்று மாறிவிட்டன போலிருந்தது. தன் பெருமையையும், புகழையும், இளவரசன் என்ற பதவியையும் மறந்து எவனோ ஒரு பேதை இளைஞன் போல் நடந்தான் அவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
3.25. புதியதோர் பெரு வாழ்வு

மகாராணியை வஞ்சிமா நகரத்துக்குச் சிவிகை ஏற்றியனுப்பி விட்டு போர்க்களம் நோக்கிப் புறப்பட்ட குமாரபாண்டியன் நடு வழியிலேயே அந்தத் துன்பச் செய்தியைத் தெரிந்து கொண்டான். வேதனைப்படுகிற அளவு கூட அவன் உள்ளத்தில் அப்போது தெம்பில்லை. 'முதல் நாள் காலை பதினொரு நாழிகையளவில் வெள்ளூரை வடதிசைப் படைகள் கைப்பற்றி விட்டனவாம். சக்கசேனாபதியும் அவரோடு எஞ்சியிருந்த ஈழநாட்டு வீரர்களும் விழிஞத்துக்கு ஓடிக் கப்பலேறி விட்டார்களாம்' என்ற செய்திதான் அது. அதைத் தெரிந்து கொண்டவுடன், 'சக்கசேனாபதியின் மேல் குற்றமில்லை! அவர் என்ன செய்வார்? பாவம், பதினொரு நாழிகை வரை என்னை எதிர்பார்த்திருப்பார். நான் மட்டுமென்ன? நானும் போக வேண்டியதுதான். எனக்கு மட்டும் இங்கே என்ன வைத்திருக்கிறது? வெற்றியை நினைத்து வந்தேன். எல்லா வகையிலும் தோல்விதான் கிடைத்தது. பரவாயில்லை. இந்தப் பரந்த உலகத்தில் எங்கேயாவது ஒரு மூலையில் என் ஏக்கங்களையும் நிராசைகளையும் சுமந்து கொண்டு வாழ்வதற்கு இடமில்லாமலா போய்விடப் போகிறது? ஏக்கங்களும், நிராசைகளும், தோல்விகளும், அவநம்பிக்கைகளும் இருக்கின்றவரை நான் வெற்றியை எண்ணித் துடித்துக் கொண்டே இருப்பேன்!' என்று தனக்குத் தானே மெல்லச் சொல்லிக் கொண்டான். தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வேறு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் திரும்பி விழிஞத்துக்குப் புறப்பட்டான் அவன். சோர்வும், துயரமும் தன் மனத்திலிருந்து நீங்கித் தோல்விகளை மறந்து போக வேண்டுமானால் அப்படி மறக்கச் செய்வதற்குரிய ஏற்ற பரிபூரணமான உல்லாச நினைவு ஒன்று அப்போது அவனுக்குத் தேவைப்பட்டது. முழுமையும், செழுமையும் நிறைந்த அந்த உல்லாசம் தனக்குக் கிடைக்க முடியுமென்றே அவனுக்குத் தோன்றியது. கண்களை மெல்ல மூடி மனத்திலிருந்த மற்ற எண்ணக் குப்பைகளையெல்லாம் ஒதுக்கியெறிந்து நினைவை ஒருமைப்படுத்தி எதையோ நினைக்க முயன்றான் அவன்.

அடுத்த கணமே அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. கொவ்வைச் செவ்வாயும் அதில் குமிண் சிரிப்புமாக மண்ணுலகத்துச் சூதுவாதுகள் பதியாத மதிவதனம் ஒன்று குமாரபாண்டியனின் உருவெளித் தோற்றத்தில் தெரிந்தது. 'காலம் காலமாய் வளர்ந்தோடும் நாட்களின் சுழற்சியைக் கணக்கிட்டுக் கொண்டு உங்களுக்காகவே தேய்ந்து ஓய்ந்து போய்க் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது வந்து என் தவத்துக்கு வெற்றியைக் கொடுக்கப் போகிறீர்கள்?' - என்று அந்த அழகு முகத்தின் பவழ இதழ்கள் திறந்து தன் காதருகே மெல்ல வினவுவது போல் ஓர் உணர்ச்சிப் பிரமை அவனுக்கு ஏற்பட்டது. 'மின்னலில் ஒளியெடுத்து முகில்தனில் குழல் தொடுத்து' என்று அந்த மகா சௌந்தரியத்தை வியந்து அதனால் தூண்டப்பெற்றுத் தான் முன்பு பாடிய கவிதையை அவன் முணுமுணுத்தான். இவ்வாறாக விழிஞத்துக்குச் செல்லும் போது அவன் நடந்து செல்லவில்லை. மதிவதனி என்னும் இனிய நினைவுகளைத் தென்றல் காற்றின் அலைகளாக்கித் தன் உணர்வுகளை மிதக்கச் செய்து விரைந்தான். அந்த விரைவில் அவன் மனம் தாங்கிக் கொண்டிருந்த நினைவும், கனவும், உணர்வும் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் மதிவதனி என்னும் எழில்.

குமாரபாண்டியன் விழிஞத்தை அடையும் போது இரவு நீண்டு வளர்ந்திருந்தது. விழிஞத்து அரச மாளிகைக்குப் போய் அங்கிருந்த குதிரைக்காரக் கிழவனை எழுப்பி அவனிடம் இருந்து வலம்புரிச் சங்கைப் பெற்றுக் கொண்டு துறைமுகத்துக்குச் சென்றான் அவன். ஆள் நடமாட்டம் குறைந்திருந்த அந்த இரவு நேரத்தில் தன்னை இன்னாரென்று எவரும் அடையாளம் கண்டு கொள்ள விடாமல் ஒதுங்கித் தயங்கி நடந்தான் அவன். 'தென்பாண்டி நாட்டின் வளமும் பெருமையும் மிக்க ஒரே துறைமுகப் பட்டினமாக மேற்குக் கடற்கரையில் இலங்கும் அந்த நகரம் இன்னும் இரண்டொரு நாட்களில் வடதிசையரசர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு விடும். அதன் பின் எங்கு நோக்கினும் சோழர் புலிக்கொடி பறக்கும்! அதற்கப்புறம் சிறிது காலத்தில் அவ்வழகிய துறைமுக நகரம் ஒரு காலத்தில் பாண்டியர்களுக்குச் சொந்தமாக இருந்தது என்று பழங்கதை பேசுவதோடு நின்று போகும்' என்று இப்படியெல்லாம் நினைத்த போது குமாரபாண்டியனுக்கு மனம் கொதிக்கத்தான் செய்தது. துயரத்தோடு நடந்து போய்ப் புறப்படுவதற்குத் தயாராக இருந்த ஒரு யவனக் கப்பலில் ஏறினான் அவன். இருளாயிருந்தாலும் அவன் ஏறுவதைக் கப்பலின் தளத்திலிருந்து பார்த்து விட்ட மீகாமன் ஓடி வந்து ஏறக்கூடாதென்று விழிகளை உருட்டிக் கோபத்தோடு பார்த்துப் பயமுறுத்தினான்.

அவன் தடுப்பதன் குறிப்பைப் புரிந்து கொண்ட குமாரபாண்டியன் மெல்லச் சிரித்துக் கொண்டே தன் இரண்டு முன் கைகளையும் அழகு செய்திலங்கும் விலை மதிப்பற்ற பொற் கடகங்களைக் கழற்றி, "இந்தா, இதை வைத்துக் கொள்! என்னை இக் கப்பலில் பயணம் செய்ய விடு" என்று சொல்லிக் கொடுத்தான். அவற்றை வாங்கிக் கொண்டதும் கண்கள் வியப்பால் விரியக் குமாரபாண்டியனைப் பார்த்தான் அந்த மீகாமன். மரியாதையோடு விலகி நின்று ஏறிக் கொள்ள வழிவிட்டு வணங்கினான். குமாரபாண்டியன் கப்பலில் ஏறி அதிகம் ஒளி பரவாத ஓரிடம் தேடித் தளத்தில் உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து பார்க்கும் போது, அந்த இருளில் விழிஞம் துறைமுகமும் அதற்கு அப்பால் பன்னெடுந் தொலைவு இரவால் மூடுண்டிருக்கும் தென்பாண்டி நாடும், தன்னைக் கைவிட்டு நீக்கி எங்கோ விலக்கி அனுப்புவது போல் அவனுக்கு ஓர் ஏக்கம் உண்டாயிற்று. அந்த ஏக்கம் சில சொற்களாக உருப்பெற்றது. நிராசையைச் சொற்களாக்கிக் கப்பலிலுள்ள மற்றவர்கள் காதில் விழுந்து விடாதபடி மெல்லத் தனக்குள் முணு முணுத்தான் அவன்.

  • 'திருமுடியும் அரியணையும் பெருவீரத்
    திருவாளும் நினைப்பொழியக்
    கருதரிய தென்பாண்டி நிலம் மறந்து
    கருணைமிகு தாய் மறந்து
    சிறுதெரிவை மதிவதனி சிரிப்பினுக்குச்
    செயல்தோற்று நினைவலைந்து
    பொருதுமனம் பிடித்திழுக்கப் பிடித்திழுக்கப்
    போகின்றேன் போகின்றேன்.'
  • உணர்ச்சித் துடிப்பில் உருவான சொற்களைத் திரட்டி இப்படி முணுமுணுத்த போது இந்தச் சொற்களின் மூலம் தாய்த் திருநாடாகிய தென்பாண்டி நாட்டினிடமே விடைபெற்றுக் கொண்டு விட்டது போல் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. கப்பல் புறப்பட்டு விட்டது. செம்பவழத் தீவில் தன்னை இறக்கிவிடுமாறு மீகாமனிடம் போய்ச் சொல்லிவிட்டு மறுபடியும் அந்த இருண்ட மூலைக்கு வந்தான். தன்னிடமிருந்த வலம்புரிச் சங்கை மார்போடு சேர்த்துத் தழுவினாற் போல் வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்தான். அந்தக் கப்பலில் யாரோ ஏளனமாகச் சிரித்துக் கொண்டே பேசிய சில வார்த்தைகளை அவன் செவிகள் கேட்டன.

    "மறுபடியும் தென்பாண்டி நாடு போரில் தோற்றுவிட்டதாம் ஐயா! தளபதியே பாண்டியப் பேரரசுக்கு எதிராக மாறிவிட்டானாம். எல்லோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மகாமண்டலேசுவரர் இறந்து விட்டாராம். மகாராணி வஞ்சிமா நகரத்துக்குத் தப்பிப் போய்விட்டாராம். அந்தப் பயந்தாங்கொள்ளி இளவரசன் இராசசிம்மன் எங்கோ போய்விட்டானாம்."

    "தெரிந்த விஷயம் தானே ஐயா! யார் தோற்றாலென்ன? யார் வென்றாலென்ன? நம்முடைய கப்பல் விழிஞத்துக்கு வந்து போவது நிற்கப் போவதில்லை. பேச்சை விடுங்கள்!" என்று மீகாமன் அலட்சியமாகப் பதிலளித்ததையும் இருளில் முடங்கிப் படுத்திருந்த குமாரபாண்டியன் கேட்டான். அந்தச் சொற்கள் 'சுளீர் சுளீரெ'ன்று தன் நெஞ்சில் அறைவது போலிருந்தது அவனுக்கு. தென்பாண்டி நாடு, வெற்றி, தோல்வி, போர், இளவரசுப்பட்டம், மரபு எல்லாவற்றையும் பழங் கனவுகள் போல் மறந்து விடத் துடித்தது அவன் உள்ளம்.

    'மறக்கத்தான் போகிறேன்! நாளைக்குச் செம்பவழத் தீவில் இறங்கி அந்த வெண்முத்துப் பற்களின் சிரிப்பைப் பார்த்த பின் எல்லாவற்றையும் மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கத்தான் போகிறேன்!' என்று வற்புறுத்தி நினைத்துக் கொண்டு மனச்சாந்தி பெற்று உறங்கினான் அவன். உறக்கமென்றால் தானாக உண்டாக்கிக் கொண்ட உறக்கம் தான் அது. அந்தப் போலி உறக்கத்திலும் நினைவுகளின் மூட்டத்திலுமாகக் கப்பலின் இரவுப் பயணத்தைக் கழித்து விட்டான் குமாரபாண்டியன். விடிந்ததும், "ஐயா! எழுந்திரு! இதோ செம்பவழத் தீவு வந்துவிட்டது" என்று மீகாமன் வந்து எழுப்பினான். கப்பல் செம்பவழத் தீவின் கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. மீகாமனும் மற்றவர்களும் தன் முகத்தைப் பார்த்து விடாமல் மேலாடையால் தலையைப் போர்த்தியது போல் முக்காடிட்டுக் கொண்டு கப்பலிலிருந்து இறங்கினான் குமாரபாண்டியன். அவன் உள்ளம் இன்பக் கிளர்ச்சி கொண்டு பொங்கியது. அவலக் கவலைகளற்ற, வெற்றி தோல்விகள் இல்லாத ஒரு புதிய போக பூமியை மிதித்துக் கொண்டு நிற்பது போல் அவன் பாதங்கள் உணர்ந்தன. கவலையற்றுப் பொங்கும் உற்சாகத்துடன் வலம்புரிச் சங்கின் ஊதுவாயை இதழ்களில் வைத்து முழக்கினான் அவன். நீராடி எழுந்த கன்னிகை போல் வைகறையின் மலர்ச்சியில் அந்தத் தீவின் அழகு பன்மடங்கு சோபித்தது. அந்தத் தீவின் கடைவீதித் திருப்பத்தில் நின்று கொண்டு கப்பல் வந்து நிற்பதையும், அதிலிருந்து ஒருவர் இறங்குவதையும் பார்த்தவாறு இருந்தாள் ஓர் இளம்பெண். குமாரபாண்டியனின் சங்கொலி அந்தப் பெண்ணின் செவிகளில் அமுதமாகப் பாய்ந்தது. அந்த ஒலியைக் கேட்ட மறுகணமே அவள் பேதைப் பருவத்துச் சிறுமிபோல் உற்சாகத்தோடு கடற்கரையை நோக்கி ஓடலானாள். அந்தப் பெண்ணின் ஓட்டம் காட்டில் தன் போக்கில் ஓடும் புள்ளிமானை நினைவு படுத்தியது. அவள் அவனை நெருங்கிவிட்டாள். சங்கநாதம் செய்து கொண்டு மணல் திடலில் நின்ற குமாரபாண்டியன் அவளைக் கண்டதும், "மதிவதனீ!" என்று கூவினான். அந்தக் கூவலில் தான் ஊழிஊழியாகத் தேங்கி நின்று சுமந்து போனது போன்ற அன்புத் துடிப்பின் தொனி எத்தனை உருக்கமாக ஒலிக்கிறது? அவள் வந்து அவனெதிரே நின்று பார்த்தாள். பார்த்துக் கொண்டேயிருந்தாள். முழு மதியைக் கறைதுடைத்தாற் போன்ற முகத்தில் மலர்ந்து அகன்ற கயல்விழிகளால் அவனைப் பருகிவிடுவது போல் நோக்கிய நோக்கம் பெயரவே இல்லை. கல்பகோடி காலம் பிரிந்து நின்று விரகதாபத்தில் நலிந்து அன்பு தாகத்தால் வாடிய காதலி போல் அவள் கண்கள் காட்சியளித்தன.

    "மதிவதனி! நான் வந்து விட்டேன். இனி உன்னைப் பிரிந்து போகமாட்டேன். அன்றொரு நாள் நீ என் உயிரைக் காப்பாற்றினாய். உன்னைக் காப்பாற்றுவதற்கு இன்று நான் வந்திருக்கிறேன்!" என்று கூறியவாறே அவள் அருகில் நெருங்கி அவளைத் தழுவிக் கொண்டான் குமாரபாண்டியன். அன்புப் பெருக்கில் பேச்செழாமல் வாய்மூடி நின்ற மதிவதனி "என் தவம் வெற்றி பெற்று விட்டது" என்று மெல்ல வாய்திறந்து நாக்குழறச் சொன்னாள்.

    "வா, போகலாம்! நம்முடைய வாழ்க்கை இனி இந்தத் தீவின் எல்லைக்குள் ஆரம்பமாகிறது!" என்று அவளைத் தழுவி அணைத்தவாறே நடந்தான் குமாரபாண்டியன்.

    அவளோடு அப்படி நடந்த போது அன்பையும் இன்பத்தையும் அனுபவித்துச் சுதந்திரமான எளிமையுடன் காதல் வாழ்வு வாழ்வதற்காகவே ஒரு புதிய பிறவி எடுத்திருப்பது போல் குமாரபாண்டியனுக்குத் தோன்றியது. கடல் அலைகளும், இளைஞாயிற்றின் மாணிக்கச் செங்கதிர்களும், காற்றும், வானமும், பூமியும் அந்தக் காதலர்களுக்கு நல்வரவு கூறுவது போல் அதியற்புதமானதொரு சூழ்நிலை அன்று காலையில் அந்தத் தீவில் நிலவியது. எல்லா இன்பமும் துய்த்துப் பல்லூழி காலம் வாழட்டுமென்று அந்தக் காதலர்களை வாழ்த்திவிட்டு வஞ்சிமா நகருக்குச் செல்வோம். நாம் மகாராணி வானவன்மாதேவியைப் பார்க்க வேண்டுமல்லவா?

    தென்பாண்டி நாட்டை வடதிசை மன்னர்கள் கைப்பற்றிய பின் சோழப் பேரரசுக்குட்பட்ட நிலமாகிவிட்டது அது. தளபதியும், கழற்கால் மாறனாரும் கலகக் கூட்டத்தைக் கலைத்து விட்டு எங்கோ ஓடிப் போய்விட்டார்கள். இந்த நிகழ்ச்சிகளெல்லாம் நடந்து முடிந்து ஆறு திங்கட் காலம் கழிந்து விட்டது. சேந்தனும் குழல்வாய்மொழியும், அன்பு மயமான இல்லற வாழ்க்கையை முன்சிறையில் நடத்தி வருகிறார்கள். காந்தளூர் மணியம்பலத்தில் சோழ அரசின் ஆட்சிக்குட்பட்டு அதங்கோட்டாசிரியரும் பவழக்கனிவாயரும் எப்போதும் போல் தமிழ்ப்பணி புரிந்து வருகிறார்கள். அதங்கோட்டாசிரியர் விலாசினிக்குத் திருமணம் முடிப்பதற்காகத் தக்க மணமகனைத் தேடிக் கொண்டிருக்கிறார். தென்பாண்டி நாடு பழைய அமைதியும், வளமும் பெற்றுச் செழிப்பாக இருக்கிறது. இவ்வளவும் தெரிந்த பின், இனி வஞ்சிமாநகருக்குப் போனால் நம்முடைய உள்ளத்தை உருக்கும் உண்மை ஒன்றை தெரிந்து கொள்ள நேருகிறது. வஞ்சிமாநகரத்தின் கீழ்பால் ஊர்ப்புறத்தில் குணவாயிற் கோட்டமென்னும் தவப்பள்ளி ஒன்று நெடுங்காலமாக இருந்து வருகிறது. தூய தோற்றமும், அருளொளி திகழும் முகமும் கொண்ட துறவியர் பலர் அக்கோட்டத்தில் வசித்து வருகின்றனர். இதோ அக்கோட்டத்தினுள் நுழைந்து உள்ளே போகிறோம் நாம். திருக்குண வாயிலாகிய இத் தவச் சாலையின் வாயிலில் பிரம்மாண்டமான மரங்களின் நிழலில் இதோ ஆடவரும் பெண்டிருமாக எத்தனை துறவியர் வீற்றிருக்கின்றனர், பாருங்கள். மரங்கள் அடர்ந்த இம் முன் பகுதியைக் கடந்து உள்ளே செல்வோம். அதோ, தாமரைப்பூ வடிவமாக அமைந்த ஒரு பெரிய பளிங்கு மேடை! அதன் மேல் அமர்ந்திருக்கும் மூதாட்டியை நன்றாக உற்றுப் பார்த்தால் இன்னாரென்று தெரிந்து கொள்ளலாம். நன்றாகக் கூர்ந்து பாருங்கள்.

    ஆம்! மகாராணி வானவன்மாதேவி அங்குத் தவக்கோலம் பூண்டு வீற்றிருக்கிறார். வேறோர் இளம் பெண்ணும் தவக்கோலத்தில் அவரருகே இருந்து பணிவிடை புரிந்து கொண்டிருக்கிறாள். சற்று நெருங்கிப் பார்த்தால் அவளைப் புவன மோகினி என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். மகாராணி விழிகளை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அமைதியான இந்தச் சமயத்தில் அங்கு ஓர் ஆச்சரியம் நிகழ்கிறது. சீரழிந்து உருத் தெரியாது தோற்றம் மாறிப் போய் வல்லாளதேவனும், கழற்கால் மாறனாரும் அங்கு ஓடி வருகிறார்கள். "தேவீ! எங்களை மன்னிக்க வேண்டும். எங்களுடைய வெறியால் எத்தனையோ கெடுதல்களைச் செய்துவிட்டோம். மகா பாவிகள் நாங்கள்" என்று கதறியவாறே ஓடி வந்து வணங்கினார்கள்! அவர்கள் கண்கள் கலங்கி அழுகை முட்டிக் கொண்டு வர இருந்தது. மகாராணி கண்களைத் திறந்து அவர்களைச் சிரித்துக் கொண்டே பார்த்தார். அவர் முகத்தில் சிறிதும் மாறுதல் ஏற்படவில்லை. ஒரே சாந்தம் நிலவியது, "ஓ நீங்களா? உட்காருங்கள்" என்று அருளின் கனிவு நிறைந்த குரலில் கூறினார் அவர்.

    "நாங்கள் பாவிகள், கெட்டவர்கள். உங்களுக்கு முன் உட்காரக் கொஞ்சமும் தகுதியற்றவர்கள்!"

    "சந்தர்ப்பம் மனிதர்களைப் பாவிகளாகவும், கெட்டவர்களாகவும் ஆக்கலாம். இனியாவது நல்லதாக இருக்கட்டும். போய் நல்வினையைத் தேட முயலுங்கள் இந்த விசாலமான தவப்பள்ளியில் இன்னும் நிறைய இடம் இருக்கிறது. உங்களையும் உங்களைப் போல வர இருக்கும் இன்னும் எத்தனையோ பேரையும் இந்தத் திருக்குண வாயிலின் கதவுகள் எப்போதும் திறந்த வண்ணம் வரவேற்கக் காத்திருக்கின்றன" என்று புன்னகையோடு சொல்லிவிட்டு அவர்கள் பதிலை எதிர்பாராமல் மறுபடியும் கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் மகாராணி.

    வல்லாளதேவனும், கழற்கால் மாறனாரும் அந்தத் தவக்கோலத்தை வணங்கிவிட்டு அந்தக் குணவாயிற் கோட்டத்தின் உள்ளே சென்றனர். சில நாழிகைகளுக்குப் பின் அவர்களும் தவக்கோலத்தோடு வந்து அமர்ந்த போது தியானத்தில் ஆழ்ந்திருந்த மகாராணி கண் திறந்து பார்த்தார். அவர் வதனத்தில் அருள் நகை மலர்ந்தது. ஒரு கணம் தான்! மறுபடியும் அவர் விழிகள் மூடிக் கொண்டன. அப்போது அந்தப் பக்கமாகக் குணவாயிற் கோட்டத்தைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த வஞ்சிமாநகரத்துப் பொதுமக்கள் சிலர் கீழ்க்கண்டவாறு தங்களுக்குள் உரையாடிக் கொண்டு சென்றது அவர் செவியிலும் விழுந்தது.

    "அதோ பத்மப் பளிங்கு மேடையில் அருளொலி திகழ வீற்றிருக்கும் அந்தத் தவ மூதாட்டி யார் தெரியுமா?"

    "யார்?"

    "அவர் சேரநாட்டு மன்னன் மகளாய்ப் பிறந்து பாண்டி நாட்டு மன்னன் பராந்தகனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பாண்டிமாதேவியாகப் பெருவாழ்வு வாழ்ந்தவர். இப்போது தவவாழ்வு வாழ்கிறார் இங்கே!"

    இந்த உரையாடலைச் செவியுற்ற போது துன்பம் நிறைந்த முன் பிறவி ஒன்றை யாரோ நினைவுபடுத்தினாற் போலிருந்தது அவருக்கு. அவர் சிரித்துக் கொண்டார்.

    'உலகம் உயிர்ப் பூக்களின் நந்தவனம்! அங்கே துன்பங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் நடுவாக நடந்து போய்விட வேண்டும்' என்று தியானத்துக்கு நடுவே நினைத்துக் கொண்டு மெய்யுணர்வில் மூழ்கினார் அவர். காலம் சுழன்று வளர்ந்து பெருகிக் கனத்து நீண்டு கொண்டே இருந்தது.
பாண்டிமாதேவி முற்றிற்று
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top