• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் 4 - பிரளயம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பதாம் அத்தியாயம்

"மரணமே! வா!"

மௌல்வி சாகிபு சுட்ட துப்பாக்கி குண்டு குறி தவறி தப்பிப் போயிருக்க வேண்டும். ஏனெனில் வண்டி போவது அதனால் தடைப்படவில்லை. கோவேறு கழுதை மிரண்டு வேகமாக வண்டியை இழுத்துக் கொண்டு ஓடியது. ஓடிய வண்டியிலிருந்து பையன் ஏதோ உரத்த சத்தமிட்டுத் திட்டிக் கொண்டு போனது காதில் விழுந்தது. "சீதா! என்னுடைய ஜோசியம் தவறிவிட்டது. சகுனம் கெட்டுவிட்டது, இந்த இடத்தில் இனித் தங்குவதற்கு இல்லை; புறப்படு உடனே!" என்றார் மௌல்வி சாகிபு. அடுத்த ஏழெட்டு தினங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் சீதாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாகவே தோன்றவில்லை. சில சமயம் பல பூர்வ ஜன்மங்களிலே நடந்த சம்பவங்களாகத் தோன்றின. சில சமயம் கனவிலே காணும் தெளிவில்லாச் சம்பவங்களைப் போலத் தோன்றின. பற்பல கதைகளிலும் இதிகாச புராணங்களிலும் படித்த நிகழ்ச்சிகளாகத் தோன்றின. எப்பொழுதோ யாரோ சொல்லிக் கேட்ட சம்பவங்களைப் போலிருந்தன. அந்தச் சம்பவங்களி லெல்லாம் அவளும் ஒரு பாத்திரமாக இருந்த போதிலும், அவளுடைய உடம்பிலிருந்து ஆவியானது தனியே பிரிந்து போய் நின்று அந்த பயங்கர நிகழ்ச்சிகளையெல்லாம் காண்பது போலிருந்தது. வெளியிலே நிகழ்ந்த காரியங்களையும் காட்சி களையும் தவிர சீதாவின் மனதிலும் பல காட்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. லலிதாவின் காலில் விழுந்து அவள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். சௌந்தரராகவனிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டாள். வஸந்தியைக் கட்டித் தழுவி ஆசி கூறினாள். மாமனாரையும் மாமியாரையும் வணங்கினாள். தாரிணியைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள். சூரியாவிடம் கோபித்துக் கொண்டு திட்டினாள். தந்தையின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கொஞ்சினாள். ரஸியா பேகத்தின் முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். காந்திமகானைத் தன் இதய பீடத்தில் அமர்த்திக் கும்பிட்டாள். இடையிடையே அவளுடைய பேதை உள்ளம், "மரணமே! வா!" என்று கூவிக்கொண்டிருந்தது. அவளுடைய காதில் அடிக்கடி அலை ஓசை முழங்கிற்று.
பகல் வேளைகளில் சீதாவும் அவளுடைய தந்தையும் மலை குகைகளிலும் காட்டுப் புதர்களிலும் பாழடைந்த மசூதிகளிலும் மறைந்து கொண்டிருந்தார்கள். இருட்டிய பிறகு பீதி நிறைந்த உள்ளத்துடன் முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு பிரயாணம் செய்தார்கள். வழியிலே அவர்கள் தீப்பிடித்து எரிந்த கிராமங்களையும் பட்டணங்களையும் தாண்டிப் போகவேண்டியிருந்தது. எரிந்த வீடுகளிலிருந்து எழுந்த ஜுவாலைகள் சுற்றிலும் நெடுந்தூரத்துக்கு இரவைப் பகலாக்கின. அந்த ஜுவாலைகளின் வெளிச்சத்தில் கரிய பயங்கர உருவங்கள் யமகிங்கரர்களைப் போல் கையில்கொடிய ஆயுதங்களுடனே ஊளையிட்டுக் கொண்டு அலைந்தன. அம்மாதிரி இடங்களுக்கு அருகிலும் நெருங்காமல் தந்தையும் மகளும் நெடுந்தூரம் சுற்றி வளைத்துக் கொண்டு போனார்கள். இரவு நேரங்களில் சாலையோடு போய்க் கொண்டிருக்கும் போது முன்னால் காலடிச் சத்தம் கேட்டாலும் அவர்கள் நெஞ்சு திடுக்கிடும்; பின்னால் காலடிச் சத்தம் கேட்டால் உள்ளம் பதைக்கும். சில சமயம் திடுதிடுவென்று ஜனங்கள் பெரும் கூட்டமாக ஓடி வரும் சத்தம் கேட்கும். இருவரும் பக்கத்துக் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்வார்கள். பயந்து ஓடும் ஜனங்களைத் துரத்திக்கொண்டு பின்னால் ராட்சதக் கூட்டத்தினர் ஓடி வருவார்கள். அவர்கள் போடும் பயங்கரமான சத்தத்துடன் ஸ்திரீகள் குழந்தைகளின் பரிதாப ஓலக் குரலும் சேர்ந்து ஒலிக்கும். ஓலக் குரல் அடங்கி வெகு நேரமான பிறகும் சீதாவின் காதில் அலை ஓசை கேட்டுக் கொண்டிருக்கும். அவளுடைய நெஞ்சம் "மரணமே! வா!" என்று அழைக்கும். நடந்து நடந்து சீதாவின் கால்களில் வலி எடுத்து இரத்தம் கட்டியது பின்னர் வீக்கமும் கண்டது. "இனி நடக்க முடியாது" என்று அவளுடைய கால்கள் கெஞ்சின. "அப்பா! என்னைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் போய்விடுங்கள்!" என்று சீதா தந்தையிடம் கெஞ்சினாள். "முடியாது, தாயே முடியாது!" என்று மௌல்வி சாகிபு தலையை அசைத்தார். "எப்படியும் நான் சாகப்போகிறேன்; உங்கள் கையினால் சாகிறேனே? எதற்காகச் சித்திரவதை?" என்றாள் சீதா.
அதற்கும் மௌல்வி சாகிபு இணக்கம் காட்டவில்லை. தந்தையின் தோளைப் பிடித்துக்கொண்டு சீதா மெள்ள மெள்ளத் தடுமாறி நடந்தாள். அவளுடைய உள்ளம் "மரணமே! வா!" என்று அழைத்தது. அவளுடைய காதில் அலை ஓசை அதிகமாகிக் கொண்டிருந்தது. சாலையில் அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய புழுதிப் படலம் கிளம்பி ஆகாசத்தை மறைத்தது. ஒரு பெரும் இரைச்சல் கேட்டது. அது என்னவென்று தெரிந்து கொள்வதற்காகச் சீதாவும் அவள் தந்தையும் சாலையைவிட்டு ஒதுங்கி ஒரு பாழடைந்த 'குருத்வார'த்துக்குள் ஒளிந்து கொண்டார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒரு மாபெருங் கூட்டம் வந்தது. அந்தக் கூட்டத்தாரைக் காப்பதற்குத் துப்பாக்கிப் பிடித்த சீக்கிய சோல்ஜர்கள் உடன் சென்றார்கள். வயோதிகர்கள், குழந்தைகள், ஸ்திரீகள், புருஷர்கள், நோயாளிகள், கர்ப்ப ஸ்திரீகள், ஒட்டகை வண்டிகள், கழுதை வண்டிகள், மாட்டு வண்டிகள், இரண்டொரு லாரிகள், மூட்டை முடிச்சுக்கள், பெட்டி பேழைகள் இவை அடங்கிய நீண்ட ஊர்வலம் போய்க் கொண்டே இருந்தது. சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள் ஒரு மைல் நீளமுள்ள ஊர்வலம். "இந்தக் கூட்டத்தோடு நாமும் போய்விடலாமா?" என்று மௌல்வி சாகிபு கேட்டார். "வேண்டாம் அப்பா! இந்தப் புழுதியையும் நாற்றத்தையும் கூச்சலையும் என்னால் தாங்க முடியாது! பைத்தியம் பிடித்துவிடும்?" என்றாள் சீதா. ஊர்வலம் சென்ற வழியில் பயங்கரமான துர்நாற்றம் கிளம்பி வான வெளியின் காற்றையெல்லாம் விஷமாக்கி விட்டது. சீதாவும் அவளுடைய தந்தையும் வேறொரு குறுக்குச் சாலையைப் பிடித்துக்கொண்டு சென்றார்கள்.
ஒரு சின்ன ரயில்வே ஸ்டேஷனை அவர்கள் அடைந்தார்கள். வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தார்கள். யாராவது வந்து வெயிட்டிங் ரூமுக்குள் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் சீதாவுக்குப் 'பகீர்' என்னும். ரயிலுக்காகக் காத்திருந்த நேரம் முடிவில்லாமல் நீண்டு கொண்டேயிருந்தது. சீதா உட்கார்ந்தபடியே சிறிது கண்ணயர்ந்தாள். பெரும் அலை ஓசை கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். கேட்டது ரயில் வரும் சத்தம் என்று தெரிந்து கொண்டாள். இருவரும் பிளாட்பாரத்துக்குள் போனார்கள். ரயிலில் கூட்டம் சொல்லமுடியாது. எல்லா வண்டிகளும் உட்புறம் பூட்டப்பட்டிருந்தன. சீதாவுக்கு அந்த ரயிலில் ஏறுவதற்கே பிடிக்கவில்லை. ஆனால் மௌல்வி சாகிபு வற்புறுத்தினார். வண்டி வண்டியாகச் சென்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டு கடைசியில் ஒரு வண்டிக் கதவைத் திறக்கச் செய்தார். இரண்டு பேரும் ஏறிக் கொண்டார்கள். வண்டியிலிருந்தவர்கள் தாங்கள் வந்த வழியில் பார்த்த பயங்கரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ரயில் மெள்ள மெள்ளப் போய்க்கொண்டிருந்தது. ரயிலில் சக்கரங்கள் சுழன்ற சத்தம் சீதாவின் காதில் அலை ஓசையைப் போல் கேட்டுக் கொண்டிருந்தது. "மரணமே! வா!" என்று அவளுடைய உள்ளம் கூவிக் கொண்டிருந்தது. ஒரு ரயில்வே ஜங்ஷனில் ரயில் நின்றது, நின்ற ரயில் மறுபடி லேசில் கிளம்புகிற வழியாக இல்லை. நேரமாக ஆக ரயிலிலிருந்தவர்களின் கவலை அதிகமாயிற்று. ரயில்வே ஸ்டேஷனிலும் வெளியிலும் ஏகக் கூச்சலும் குழப்பமுமாயிருந்தன.
மௌல்வி சாகிபு திடீரென்று "அதோ தாரிணி" என்றார். சீதா ஆவலுடன் அவர் காட்டிய திசையைப் பார்த்தாள். ஆம்; கொஞ்ச தூரத்தில் கூட்டத்துக்கு நடுவில் சூரியாவும் தாரிணியும் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருகணம் அவர்களுடைய முகங்கள் தெரிந்தன. மறுகணம் கூட்டத்தில் மறைந்து விட்டன. "சீதா, கொஞ்சம் பொறு! அவர்களைப் பார்த்துக் கொண்டு வருகிறேன்!" என்று அப்பா சொல்லிவிட்டு வண்டியிலிருந்து இறங்கி ஓடினார். அடுத்த நிமிஷம் அவரும் ஜனக் கூட்டத்தில் மறைந்து விட்டார். பிறகு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாக இருந்தது. சீதாவுக்கு அந்தமாதிரி பல யுகங்களுக்குப் பிறகு ஒரு பயங்கரமான கூச்சல் கேட்டது. அதைக் காட்டிலும் கோரமான காட்சி கண் முன்னால் தென்பட்டது. நூற்றுக்கணக்கான முரட்டு மனிதர்கள் கையில் கத்திகளுடன் பாய்ந்து வந்தார்கள். பிளாட்பாரத்தில் நின்றவர்கள் பலரைக் கொன்றார்கள். எங்கே பார்த்தாலும் இரத்தக்களறி ஆயிற்று. அந்த மனிதர்கள் ரயிலுக்குள்ளும் பாய்ந்து ஏறினார்கள். சீதா இருந்த வண்டியை நோக்கி ஐந்தாறு பேர் ஓடி வந்தார்கள். சீதா பீதியினாலும் அருவருப்பினாலும் கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய மனதில், "கடைசியாக நம்முடைய பிரார்த்தனை நிறைவேறிவிட்டது! மரணம் வந்து விட்டது!" என்ற நினைவு தோன்றியது. தடதடவென்று ரயிலுக்குள் நாலைந்து பேர் ஏறினார்கள். மூடிய கண்களுடனே அடுத்த கணத்தில் தன்னுடைய மார்பில் கத்தி பாயும் என்று சீதா எதிர் பார்த்தாள். ஆனால் கத்தி பாயவில்லை; கண்ணும் திறக்கவில்லை. மறுபடியும் வண்டிக்குள் தனக்கருகில் ஏதோ கலவரம் நடக்கிறதென்பதை உணர்ந்தாள். யாரோ அவளைப் பிடித்துத் தள்ளினார்கள். தொப்பென்று கீழே விழுந்தாள். அவள் மேல் ஏறி மிதித்துக் கொண்டு யாரோ ஓடினார்கள்.
"சீதா! சீதா!" என்ற இனிய குரலுடன் மெல்லிய மிருதுவான கரங்கள் அவளை எடுத்துத் தூக்கின. கண்ணை விழித்துப் பார்த்து அவை தாரிணியின் கரங்கள் என்பதை அறிந்தாள். தன்னைத் தூக்கிய கரங்களில் ஒன்றிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருப்பதையும் கண்டாள், "அக்கா" என்று அலறினாள். அந்த மூன்று தினங்கள் சீதாவின் வாழ்க்கையில் மிகவும் ஆனந்தமான நாட்கள். ஏதோ ஒரு ஊரில் யாரோ ஒருவருடைய வீட்டின் மேல் மச்சில் ஜன்னல் கதவுகளையெல்லாம் அடைத்துக்கொண்டு ஒளிந்திருந்த நாட்கள்தான். சாலையிலாவது வெளிச்சம் உண்டு; காற்று உண்டு இங்கே அது கூடக் கிடைக்காது. எனினும் தன்னுடன் பிறந்தவள் என்று தெரியாதபோதே தன் உள்ளத்தின் அன்பையெல்லாம் கவர்ந்து விட்ட தாரிணியுடன் வசித்தபடியால் அந்த நாட்கள் ஆனந்தமாயிருந்தன. ரயிலில் கொலை செய்யப்படாமல் சீதாவைக் காப்பாற்றிய தாரிணி அவளை இந்த இடத்தில் கொண்டுவந்து சேர்த்திருந்தாள். சீதா தனக்கும் தாரிணிக்கும் உள்ள உறவைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். "இதெல்லாம் உனக்கு முன்னமே தெரியாதா அக்கா?" என்று கேட்டாள். "இந்தச் சந்தேகம் எனக்கு வெகுகாலமாகவே இருந்து வந்தது. ஆனால் நான் எவ்வளவு கேட்டும் அந்தக் கிழவரும் கிழவியும் உண்மையைச் சொல்ல மறுத்து விட்டார்கள்?" என்றாள் தாரிணி. "என்ன அநியாயம்? எதற்காக அப்படிச் செய்தார்கள்? அக்கா என்று தெரியாமலேயே உன்னிடம் என் பிராணனை வைத்திருந்தேனே! தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவு பிரியமாயிருந்திருப்பேன்? நாம் எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கலாம்." என்றாள் சீதா.
தன்னிடம் பொறாமை கொண்டு சீதா படுத்திய பாடெல்லாம் தாரிணிக்கு நினைவு வந்தது. ஆனால் அதை இப்போது சீதாவுக்கு ஞாபகப்படுத்தவில்லை. "போனதைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயன் என்ன? அதற்கெல்லாம் சேர்த்து இப்போது வட்டி போட்டு நாம் சந்தோஷமாயிருக்கலாம்!" என்றாள் தாரிணி. "அதற்கென்ன சந்தேகம்? என் துன்பங்கள் எல்லாம் தீர்ந்து விட்டன. இனிமேல் எனக்கு சந்தோஷத்துக்கு என்ன குறைவு?" என்றாள் சீதா. எனினும் இருவருடைய இதய அந்தரங்கத்திலும் சந்தேகமும் பயமும் இல்லாமற் போகவில்லை. விழித்துக் கொண்டிருந்தபோதெல்லாம் தாரிணியின் கழுத்தைச் சீதா கட்டிக்கொண்டு அந்தரங்கம் பேசினாள். தூங்கும்போது தாரிணியின் மேலே கையைப் போட்டுக் கொண்டு தூங்கினாள். எங்கே தன்னை விட்டு விட்டுத் தாரிணி போய்விடப் போகிறாளோ என்ற பயம் அவளுடைய மனதின் ஆழத்தில் குடி கொண்டிருந்தது. சீதாவின் பயம் சீக்கிரத்திலேயே உண்மையாயிற்று. தாரிணியிடமிருந்து அவள் பிரிய வேண்டிய சமயம் வந்தது. இதைப்பற்றி அறிந்ததும் சீதா முரண்டு பிடித்தாள். "நான் உன்னைவிட்டுப் போக மாட்டேன். நீ என்னை விட்டுப் போனால் குத்திக் கொண்டு சாவேன்!" என்றாள். தாரிணி பலவிதமாக அவளுக்குச் சமாதானம் கூறினாள். "நான் டில்லியில் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன் அதுவரையில் பொறுத்திரு, பெஷாவரில் என்னுடைய சிநேகிதி நிரூபமா இருக்கிறாள். அவளைப் பார்த்து அழைத்துக்கொண்டு வரவேண்டும்!" என்றாள். அந்தச் சகோதரிகளுக்குள் நெடுநேரம் விவாதம் நடந்தது. கடைசியாகச் சீதா, "அக்கா! நீ ஒரு வாக்குறுதி கொடுத்தால் நான் உன்னைப் பிரிந்து போகச் சம்மதிப்பேன்!" என்றாள். "கேள்! அம்மா!" என்றாள் தாரிணி.
"டில்லிக்குப் போகும் வழியில் நான் இறந்துவிட்டால் நீ அவரைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டும். அப்படி நீ சத்தியம் செய்து கொடுத்தால் நான் உன்னைப் பிரிவேன்!" என்றாள் சீதா. "இது என்னப் பைத்தியக்காரத்தனம்!" என்று தாரிணி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சீதா கேட்கிறதாக இல்லை. தாரிணி மறுக்க மறுக்க சீதாவின் வெறி அதிகமாகி வந்தது! கடைசியில் தாரிணி, "அடியே! நீ செத்து நான் உயிரோடிருந்து உன் புருஷனும் என்னைக் கலியாணம் செய்து கொள்வதற்குச் சம்மதித்தால் நான் கலியாணம் பண்ணிக் கொள்கிறேன்" என்றாள். முஸ்லிம் ஸ்திரீகள் பர்தா அணிந்து கொள்வது போன்ற புர்க்கா ஒன்றைச் சீதாவுக்குத் தாரிணி அளித்தாள். அந்த உடையில் கண்களால் பார்ப்பதற்கு மட்டும் துவாரம் இருந்தது. மற்றபடி தலையிலிருந்து கால்வரையில் சீதாவை அந்த அங்கி மூடிவிட்டது. நள்ளிரவில் மௌல்வி சாகிபும் சீதாவும் அந்த வீட்டு மெத்தை அறையிலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். வாசலில் தயாராக ஜீப் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை ஓட்டுவதற்கு ஒரு போலீஸ் டிரைவர் காத்திருந்தான். சீதா தாரிணியைக் கட்டிக் கொண்டு, "அக்கா வாக்குறுதியை மறந்துவிடாதே!" என்றாள். அவளுடைய தந்தை தாரிணியின் தலை உச்சியை முகந்து பார்த்துவிட்டு, "அம்மா! என்னுடைய குற்றங்களை மன்னித்துக் கொள்!" என்று சொன்னார். மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் தாரிணியின் கண்களில் கண்ணீர்த் துளிகள் பிரகாசித்தன. "அப்பா! தங்களுக்கு நான் கொடுத்த தொந்திரவுகளையெல்லாம் மன்னியுங்கள்!அதற்கெல்லாம் பிராயச்சித்தமாகத் தங்களுக்கு வாழ்நாளெல்லாம் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு எனக்கு கொடுத்து வைத்திருக்குமோ, என்னமோ?" என்றாள்.
போலீஸ் கான்ஸ்டபிள் ஓட்டிய ஜீப் வண்டி அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. வழியில் நேர்ந்த பல தடங்கல்களையும் தாண்டிக் கொண்டு சென்றது. சாலைகளில் சில இடங்களில் கூட்டமாக ஜனங்கள் போய்க்கொண்டி ருந்தார்கள். அந்த இடங்களில் ஜனக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஜீப் சென்றது. சில இடங்களில் சாலைகளில் மரங்களை வெட்டித் தள்ளியிருந்தார்கள். அந்த இடங்களில் சாலையிலிருந்து பக்கத்தில் இறங்கிக் கடந்து சென்றது. சில இடங்களில், ஐயோ! என்ன பயங்கரம்; சாலைகளில் கிடந்த மனித உடல்களின்மீது ஏறிச் சென்றது! அந்த உடல்களிலிருந்த உயிர்கள் எப்போதோ போய்விட்டன! இனி அவற்றின் பேரில் ஜீப் வண்டி ஏறினால் என்ன? ரோட் என்ஜின் ஏறினால்தான் என்ன? சாலையில் ஜீப் வண்டி வேகமாகப் போக ஆரம்பித்த புதிதில் சீதாவுக்குத் தான் அபாயங்களையெல்லாம் ஒருவாறு கடந்து விட்டதாகத் தோன்றியது. ஆனால் சீக்கிரத்திலேயே அது பொய் நம்பிக்கை என்று ஏற்பட்டது.ஏனெனில் அவர்களைத் தொடர்ந்து இன்னொரு ஜீப் வண்டி கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஆனால் அது இந்த வண்டியைத் தொடர்ந்து வருகிறது என்று ஏன் நினைக்க வேண்டும்? தங்களைப் போலவே அபாயத்துக்குத் தப்பித்துச் செல்லும் மனிதர் களாயிருக்கலாமல்லவா? இருக்கலாம். என்றாலும் தங்களைப் பிடிப்பதற்காகவே அந்த வண்டி வருகிறது என்னும் எண்ணத்தைச் சீதாவினால் போக்கிக் கொள்ள முடியவில்லை. அந்த வண்டியில் யமன் தன்னைத் தொடர்ந்து ஓடி வருகிறான் என்றே எண்ணினாள். யார் கண்டது? முதலில் நினைத்தபடியே இந்தப் பிரயாணத்தில் தனக்கு மரணம் நேரிடலாமோ, என்னமோ? "மரணமே! வா, சீக்கிரம் வா!" என்று அவள் உள்ளம் ஜபித்து அவளுடைய காதில் அலை ஓசையின் இரைச்சல் அதிகமாயிற்று.
ஒரு நதிக்கரையில் வந்து ஜீப் வண்டி நின்றது. நல்ல வேளை! கொஞ்ச நேரமாகப் பின் தொடர்ந்து வந்த வண்டியின் சத்தம் கேட்க வில்லை அது வெறும் பிரமைதான். என்ன அதிசயம்? இங்கே சூரியா வந்து நிற்கிறானே? நமக்கு முன்னால் எப்படி வந்தான்? அதோடு ஒரு படகையும் அமர்த்தி வைத்துக் கொண்டு தயாராயிருக்கிறானே? சூரியா சூரியாதான்! அம்மாஞ்சிக்கு இணை யாரும் இல்லை. தந்தையையும் மகளையும் சூரியாவிடம் ஒப்படைத்து விட்டுப் போலீஸ்காரன் ஜீப் வண்டியைத் திருப்பினான். அவனும் சூரியாவும் ஏதோ சமிக்ஞை பாஷையில் பேசிக் கொண்டார்கள். அதைப்பற்றியெல்லாம் விசாரிக்க அப்போது நேரம் இல்லை. பிற்பாடு கேட்டுக் கொண்டால் போகிறது. சூரியா அவர்களுடைய கையைப் பிடித்துப் படகிலே ஏற்றி விட்டான், தானும் ஏறிக்கொண்டான். படகுக்காரன் படகை நதியில் செலுத்தினான். படகு நகர்ந்ததும் சீதாவின் பயம் அடியோடு நீங்கிற்று. உள்ளத்தில் உற்சாகமே உண்டாகிவிட்டது. அது பாஞ்சால நாட்டின் பஞ்ச நதிகளின் ஒன்றான 'சேனாப்' என்று அறிந்தாள். பிரவாகம் அலை மோதிக் கொண்டு சென்றது; காற்று விர்ரென்று அடித்தது. சீதா தன்னுடைய பர்தா உடையைக் கழற்றிப் படகில் வைத்தாள். மௌல்வி சாகிபுவைப் பார்த்து, "அப்பா! நீங்களும் உங்களுடைய வேஷத்தைக் கலைத்துவிட்டுப் பழையபடி ஆகிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றாள். "சீதா! இந்த வேஷத்தைப் பற்றிக் குறை சொல்லாதே! இதன் மூலமாய்த்தானே உன்னைக் காப்பாற்ற முடிந்தது?" என்றார் மௌல்வி சாகிபு. "அதுதான் காப்பாற்றியாகிவிட்டதே? இனிமேல் அபாயம் ஒன்றுமில்லையே?" என்றாள் சீதா. "அவசரப்படாதே, அம்மா; டில்லி போய்ச் சேர்ந்ததும் வேஷத்தை மாற்றி விடுகிறேன்!" என்றார் மௌல்வி சாகிபு. ஆனால் உலகத்தில் மனிதர்கள் நினைக்கிறபடியோ, விரும்புகிறபடியோ, என்னதான் நடக்கிறது? அபாயத்துக்குப் பயப்பட்டுக் கொண்டிருக்கிற சமயத்தில் அது வராமல் போய் விடுகிறது. "இனி ஒரு பயமும் இல்லை" என்று எண்ணியிருக்கும் சமயத்தில் திடீரென்று எங்கிருந்தோ பேரிடி வந்து விழுகிறது.
நதியில் மூன்றில் ஒரு பங்கு தூரம் படகு சென்றிருக்கும். அப்போது அவர்கள் வந்த சாலையில் சற்றுத் தூரத்தில் ஒரு புழுதிப்படலம் தெரிந்தது. புழுதியைக் கிளப்பிய மற்றொரு ஜீப் வண்டி அடுத்த நிமிஷம் நதிக்கரையில் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து மனிதன் கீழே குதித்ததைச் சீதா பார்த்தாள். அவன் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. நதியில் சென்று கொண்டிருந்த படகை அவன் உற்றுப் பார்த்தான். அடுத்த நிமிஷம் கையிலிருந்த துப்பாக்கியைத் தூக்கிக் குறிபார்த்துச் சுட்டான். இதையெல்லாம் பார்த்தவண்ணம் பிரமித்துப் போயிருந்த சீதாவின் காதில், "ஐயோ! செத்தேன்!" என்ற கூச்சல் பக்கத்திலிருந்து கேட்டது. சீதா திரும்பிப் பார்த்தாள், தன் தந்தையின் கன்னத்தில் இரத்தம் சொட்டுவதையும் அவர் படகின் ஓரமாகச் சாய்வதையும் பார்த்தாள். ஆற்றில் விழாமல் அவரைப் பிடித்துக் கொள்வதற்காகப் பாய்ந்து ஓடினாள். படகு ஆடிச் சாய்ந்தது; சீதா நதியின் பெருவெள்ளத்தில் விழுந்தாள். முடிவில்லாத நேரம் சீதா தண்ணீருக்குள் கீழே கீழே கீழே போய்க்கொண்டிருந்தாள். பிறகு தன்னுடைய பிரயாசையின்றியே மேலே வருவதை உணர்ந்தாள். முகம் தண்ணீருக்கு மேலே வந்தது, கண்கள் ஒருகணம் திறந்தன. சற்றுத் தூரத்தில் தன் தந்தை கன்னத்தில் இரத்தக் காயத்துடன் தத்தளித்து நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச தூரத்தில் சூரியா அதே மாதிரி நீந்திக் கொண்டிருந்தான். ஆனால் அவர்களில் யாரும் சீதா தலை தூக்கிய பக்கம் பார்க்கவில்லை. படகோ வெகு தூரத்தில் இருந்தது.
அலை ஒன்று சீதாவை நோக்கி வந்தது. அது ஒரு அடி உயர அலைதான். ஆனால் படகையும் மற்ற இருவரையும் மறைத்தபடியால் அது மலை அளவு உயரமாகச் சீதாவுக்குத் தோன்றியது. பொங்கும் கடலைப்போல் ஓசை செய்து கொண்டு அந்த அலை விரைந்து வந்து சீதாவை மோதியது. சீதா பயத்தினால் கண்ணை மூடிக்கொண்டாள். மறுபடியும் தண்ணீரில் முழுகப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றியது. இந்தத் தடவை முழுகினால் முழுகியதுதான்; மறுபடி எழுந்திருக்கப் போவதில்லை. "மரணமே! வா!" என்று அவள் அடிக்கடி ஜபம் செய்து கொண்டிருந்தது பலித்துவிட்டது. இந்தத் தடவை நிச்ச யமான மரணந்தான். அலை வந்து தாக்கியது, நீரில் முழுகும் தறுவாயில் சீதாவின் மனக்கண்ணின் முன்னால் ஒரு காட்சி புலப்பட்டது. தாரிணியும் சௌந்தரராகவனும் கைபிடித்துக் கலியாணம் செய்து கொள்ளும் காட்சிதான் அது. சீதாவின் மனதில் அந்த கண நேரக் காட்சி ஆனந்தத்தையும் அமைதியையும் உண்டு பண்ணியது. "ஆகா! அவர்கள் சந்தோஷமாயிருப்பார்கள்!" என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் முழுகினாள். குழந்தை வஸந்தியின் பால் வடியும் முகமும், சூரியாவின் ஆர்வம் ததும்பிய முகமும், மௌல்வி சாகிபுவின் முகமும் வரிசையாகப் பவனி வந்தன. சுவரிலிருந்த படத்திலிருந்து காந்தி மகாத்மா வின் முகம் தனியாகத் தோன்றிப் புன்னகை செய்து மறைந்தது. பின்னர் சிறிது நேரம் காதில் 'ஹோ' என்ற அலை ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகு எல்லா நினைவும் அழிந்தது. ஆழங்காணாத அமைதி; எல்லைகாணாத இருள்; நிசப்தம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்து ஒன்றாம் அத்தியாயம்

பிழைத்த அகதி

குளிர் என்றால் இன்னதென்பதை அறிய வேண்டுமானால் டில்லியில் குளிர்காலத்தில் வசிக்க வேண்டும். கனமான கம்பளிச் சட்டைகளுக்குள்ளும் பஞ்சடைத்த ரஜாய் மெத்தைகளுக்குள்ளும் அந்தக் குளிர் புகுந்து, தோல், சதை, இரத்தம் இவற்றை ஊடுருவிக் கொண்டு சென்று எலும்புக்கு உட்புறத்திலும் புகுந்து பனிக்கட்டியைப்போல் சில்லிடச் செய்யும் சக்தியுடையது. 1948-ம் வருஷம் ஜனவரி மாதத்தில் டில்லியில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகக் குளிராயிருந்தது. நாட்டை விட்டு, ஊரை விட்டு வீட்டை விட்டு, உற்றார் உறவினரை விட்டு ஓடிவந்த இரண்டு லட்சம் அகதிகள் டில்லி மாநகரின் வீதிகளிலும் சுற்றுப்புறங்களிலும் குளிரில் விறைத்துக் கொண்டு கிடந்தார்கள். அவர்கள் உடம்பு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததே தவிர உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அகதியின் இருதயத்திலும் கோபத் தீ கொழுந்து விட்டெரிந்தது. அந்தத் தீ டில்லி நகரிலுள்ள பத்து லட்சம் ஜனங்களின் இருதயத்தையும் பற்றி எரித்துக் கொண்டிருந்தது. அந்தக் கோபத்தீயை அணைத்துச் சாந்தம் உண்டுபண்ண ஒரு மகான் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். மாலை ஏழு மணிக்கு ஜந்தர் மந்தர் சாலையில் ஒரு மோட்டார் வண்டி மூடுபனிப் படலத்தைக் கிழித்துக்கொண்டு விரைந்து சென்றது. சாலையின் வண்டிப் போக்கு வரவோ மனுஷர்களின் நடமாட்டமோ அதிகம் இல்லையாதலால் மோட்டார் ஓட்டுவதில் ஜாக்கிரதை தேவையாயிருக்கவில்லை. ஆனால் இது என்ன? திடீரென்று ஒருவன் குறுக்கே வந்து விழுகிறானே? கடவுளே! பலமாகப் 'பிரேக்'கைப் போட்டதில் 'கார்' 'கர்புர்ர்' என்ற சத்தத்துடன் மோட்டார் நின்று ஒரு குலுங்குக் குலுங்கிற்று. அந்த மனிதன் ஒரு மயிரிழையில் தப்பினான்! அடப்பாவி! சாலை ஓரத்திலுள்ள நடைபாதையில் நடந்து போகக்கூடாதோ! பஞ்சாபிலிருந்து வந்து குவிந்திருக்கும் அகதிகளில் ஒருவனாயிருக்கவேண்டும். வேணுமென்று உயிரைப் போக்கிக் கொள்வதற்காக வந்து விழுகிறான் போலிருக்கிறது.
நின்ற மோட்டார் வண்டியிலிருந்து இருவர் இறங்கினார்கள்; ஒரு புருஷன்; ஒரு ஸ்திரீ. அவர்கள் சௌந்தரராகவனும் பாமாவுந்தான். விழுந்தவனுக்கு ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்று பார்ப்பதற்காக அவர்கள் முன்னால் சென்றார்கள். அதே சமயத்தில் கீழே விழுந்த மனிதன் எழுந்து நின்றான். அவன் உடையினாலும் தோற்றத்தினாலும் ஒரு பஞ்சாப் அகதியைப் போலவே காணப்பட்டான். ஆயினும் அவன் முகத்தின் தோற்றம் அவன் யார் என்பதை வெளிப்படுத்திவிட்டது. "அடே! இது என்ன கூத்து? சூரியா! நீ எப்படி இங்கே வந்து முளைத்தாய்? யாரோ பஞ்சாப் அகதி தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தான் என்றல்லவா நினைத்தேன்?" என்றான் சௌந்தரராகவன். ராகவனையும் பாமாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த சூரியா பதில் சொல்லலாமா, வேண்டாமா என்று தயங்கினது போலக் காணப்பட்டது. பிறகு மனதில் அவன் ஒரு முடிவு செய்து கொண்டது அவனுடைய முகத்தில் பிரதிபலித்தது. "நீங்கள் நினைத்ததில் பாதி சரிதான், மிஸ்டர் ராகவன்! நானும் ஒரு அகதிதான். ஆனால் நான் உயிரை விடுவதற்கு முயற்சி செய்யவில்லை. என் உயிரை வைத்துக் கொண்டிருப்பது இன்னும் கொஞ்ச காலத்துக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. இந்த மட்டும் என்பேரில் உங்கள் வண்டியை ஏற்றாமல்விட்டீர்களே? அதற்காக மிக்க வந்தனம்!" என்றான் சூரியா. "அதற்காக வந்தனம் தேவையில்லை. இந்த மோட்டாரின் துரிதமான 'பிரேக்'குக் குத்தான் வந்தனம் செலுத்த வேண்டும். பரிகாசப் பேச்சு இருக்கட்டும், சூரியா! இப்போது நீ எங்கே போய்க்கொண்டி ருக்கிறாய்? இல்லாவிட்டால் என்னோடு கொஞ்சம் வந்து விட்டுப் போகலாமே? உன்னிடம் பல விஷயங்கள் கேட்க வேண்டும்; பல விஷயங்கள் சொல்லவேண்டும்!" என்றான் ராகவன். "எனக்கு அவசர வேலை இருக்கத்தான் இருக்கிறது. ஆனாலும் அரை மணி நேரம் பின்னால் போவதால் பாதகமில்லை" என்றான் சூரியா. அவனுக்கும் சௌந்தரராகவனிடம் பல விஷயங்கள் கேட்கவேண்டியிருந்தது; சொல்ல வேண்டியிருந்தது.
சௌந்தரராகவனுடைய பழைய வீட்டு வாசலில் வண்டி நின்றது. பாமா வண்டியிலிருந்து இறங்காமல் விடைபெற்றுக் கொண்டாள். மற்ற இருவரும் இறங்கினார்கள். வீட்டுக்குள்ளே நுழைந்தபோது சூரியாவின் உள்ளம் பதைபதைத்தது. முன்னே அந்த வீட்டுக்குள் பிரவேசித்தபோதெல்லாம் சீதா இருந்து தன்னை வரவேற்றாள். ஒருதடவை துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளத் தயாராயிருந்த சீதாவைச் சூரியா காப்பாற்றினான். அந்தப் பழைய ஞாபகங்கள் எல்லாம் அணை உடைந்த வெள்ளம் போல் அவன் மனதில் புகுந்து கொந்தளிப்பை உண்டாக்கின. "சூரியா! இந்த வீடு எவ்வளவு சூனியமாயிருக்கிறது, பார்!" என்று ராகவன் கூறியபோது சூரியாவுக்கு அழுகையே வந்து விட்டது, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். "உங்களுடைய உத்தியோகம் மறுபடியும் கிடைத்து விட்டதா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம்; கிடைத்துவிட்டது. இல்லாவிட்டால், இந்த வீடு கிடைத்திருக்குமா? உத்தியோகம் கிடைத்த பிறகுகூட இந்த வீட்டைச் சம்பாதிப்பதற்குப் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. இதிலே ஒரு பஞ்சாபி வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினேன். ஆனாலும் இந்தப் பஞ்சாபிகளைப்போல் கோழைத் தடியர்களை நான் பார்த்ததேயில்லை. பஞ்சாபியர் எல்லோரும் வீரர்கள் என்று ஒரு காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தேன். சுத்தப் பிசகு! இவர்கள் சென்ற வருஷம் ஆகஸ்டு மாதத்தில் மேற்குப் பஞ்சாபிலிருந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தார்களே, அந்தக் காட்சியை நீ பார்த்திருந்தாயானால்....." "நீங்கள் அதைப் பார்த்தீர்களா?" என்று சூரியா கேட்டான். "ஆமாம், பார்த்தேன்." "அதெப்படி? நீங்கள்தான் போன ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி கல்கத்தாவுக்குப் போயிருந்தீர்களே?" என்றான் சூரியா. "ஓகோ! நினைவு வருகிறது, நீ அப்போது இங்கேதான் இருந்தாயல்லவா? உன்னிடம்கூட நான் கல்கத்தா போகிறது பற்றிச் சொன்னேனே! சூரியா! அதுமுதல் நீ இங்கேதான் இருக்கிறாயா? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று ராகவன் கேட்டான்.
"என்னத்தைச் செய்கிறது? அங்குமிங்கும் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறேன்" என்றான் சூரியா. "அங்குமிங்கும் என்றால்....." "இந்த அகதி முகாம்களில்தான், ஏதாவது என்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்." உடனே சௌந்தரராகவன் மிக்க ஆவலுடன், "சூரியா! எந்த அகதி முகாமிலாவது நமக்குத் தெரிந்தவர்கள் யாரையாவது பார்த்தாயா?" என்று கேட்டான். "நமக்குத் தெரிந்தவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?" "தாரிணியை அல்லது வஸந்தியைத்தான்." "இல்லை, மிஸ்டர் ராகவன்! அவர்களைப்பற்றி நான் உங்களைக் கேட்கலாம் என்றல்லவா நினைத்துக் கொண்டு வந்தேன்." "இவ்வளவுதானா?" என்று ராகவன் பெருமூச்சு விட்டான். "அவர்களைப்பற்றி உங்களுக்கு ஒன்றுமே தகவல் கிடைக்க வில்லையா?" என்று சூரியா கேட்டான். "அப்படியும் சொல்வதற்கில்லை, இரண்டு மாதத்துக்கு முன்னால் ஒரு அதிசயமான கடிதம் வந்தது. அது தாரிணியின் கையெழுத்தில் இருந்தது. தானும் குழந்தை வஸந்தியும் பத்திரமாக இருப்பதாகவும் கூடிய சீக்கிரம் வந்து சந்திப்பதாகவும் எழுதியிருந்தது. அதில் வேடிக்கை என்னவென்றால் கடிதம் சீதா பெயருக்கு எழுதப்பட்டி ருந்தது. அதிலிருந்து சீதாவின் கதி தாரிணிக்குத் தெரியாது என்று அறிந்து கொண்டேன்." "சீதாவின் கதி என்ன?" என்று சூரியா கேட்டான்.
அவன் முகம் அப்போது ஒரு பெரிய ஆச்சரியக் குறியாக நீண்டது. "அது ஒரு பெரிய சோகக்கதை, சூரியா! உலக வாழ்க்கையில் என்னைப்போல் துரதிர்ஷ்டங்களுக்கு உள்ளானவர்கள் யாருமே இல்லை. வெண்ணெய் திரண்டு வரும் சமயத்தில் தாழி உடைந்ததுபோல் பல சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையிலேயே நடந்துவிட்டன. அதிலும் கடைசியாகச் சீதாவை நான் இழந்ததைப் போன்ற துரதிர்ஷ்டம் வேறு ஒன்றுமே இல்லை. ஆகா! பஞ்சாபில் ஹௌஷங்காபாத்தில் ஒரு வருஷ காலம் நாங்கள் எவ்வளவு ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண் டிருந்தோம் தெரியுமா? அது கடவுளுக்கே பொறுக்க வில்லை!..." "கடவுளை ஏன் இழுக்கிறீர்கள், ராகவன்! கடவுள் என்ன செய்வார்? என் தகப்பனார் கிட்டாவய்யரை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவர் மூன்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்துப் பிறகு 'உங்கள் இஷ்டம்போல வாழ்க்கை நடத்துங்கள்' என்று தண்ணீரைத் தெளித்து விட்டுவிட்டார். அது மாதிரிதான் கடவுளும் செய்திருப்பார் என்பது என் நம்பிக்கை. இந்த உலகத்தையும் மனிதர்களையும் கடவுள் படைத்துவிட்டு 'உலகத்தைச் சொர்க்கமாக்குவதோ நரகமாக்கு வதோ உங்கள் இஷ்டம்!' என்று மனிதர்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து விட்டிருக்க வேண்டும்! ஆகையால் உலகத்தில் நடக்கும் காரியங்களுக்குக் கடவுளைப் பொறுப்பாக்குவது நியாயமல்ல!... போகட்டும் சீதாவைப் பற்றிச் சொல்லுங்கள்!" என்றான் சூரியா. "ஆகஸ்டு 14இல் உன்னை நான் இந்தப் புது டில்லியிலே பார்த்துக் 'கல்கத்தா போகிறேன்' என்று சொன்னேன் அல்லவா? அதிலிருந்து ஆரம்பித்துச் சொல்கிறேன்" என்றான் ராகவன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்து இரண்டாம் அத்தியாயம்

ராகவன் துயரம்

கல்கத்தாவுக்குச் சௌந்தரராகவன் போன அன்றைக்கு அங்கே சுதந்திரத் திருநாள் குதூகலமாகக் கொண்டாடப் படுவதைக் கண்டான். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கட்டித் தழுவிக் கொள்வதைப் பார்த்தான். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஏகோபித்து ஒரே குரலில், "ஜே ஹிந்த்" என்றும், "வந்தே மாதரம்" என்றும், "ஹிந்து முஸ்லிம் ஏக் ஹோ!" என்றும் கோஷ மிடுவதைக் கேட்டான். சென்ற வருஷத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் கொன்று இரத்த வெள்ளம் பெருகிய அதே கல்கத்தாவில்தானா இதெல்லாம் நடைபெறுகிறது என்று அதிசயித்தான். இனி இந்தியாவுக்கு அதிர்ஷ்ட காலந்தான் என்று தீர்மானித்துக் கொண்டான். அமரநாதனின் வீட்டில் சென்ற வருஷம் விட்டுவிட்டுப்போன தன் உத்தியோக சம்பந்தமான தஸ்தாவேஜிகளை வாங்கிக்கொண்டு புறப்பட்டான். திரும்ப டில்லிக்கு வந்தபோது பஞ்சாப்பில் தீப்பிடித்து எரியும் விஷயம் தெரியவந்தது. ஸ்ரீ மதி பாமா அவனைத் தேடிக் கண்டுபிடித்துப் பஞ்சாப்பில் நடப்பதைப் பற்றியெல்லாம் சொன்னாள். அத்துடன் தான் ஹௌஷங்காபாத் சென்றிருந்ததையும், தன்னுடன் வந்து விடும்படி சீதாவை அழைத்ததையும், அவள் வர மறுத்ததையும் பற்றிக் கூறினாள். சௌந்தரராகவனுக்குச் சீதாவின் பேரில் சிறிது கோபமாகத்தான் இருந்தது. 'பாமாவுடன் அவள் புறப்பட்டு வந்திருந்தால் எவ்வளவு சௌகரியமாகப் போயிருக்கும்?" என்று எண்ணினான். ஆனாலும் அதைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. எப்படியாவது சீதாவையும் குழந்தை வஸந்தியையும் காப்பாற்றியாக வேண்டும். புலியின் குகைக்குள் நுழைவது போலவும், தீப்பிடித்து எரியும் பஞ்சாலைக்குள் பிரவேசிப்பது போலவும், பாம்புப் புற்றுக்குள் கையை விடுவது போலவும் பஞ்சாப்புக்குள் சென்றாக வேண்டும்.
பாமாவின் தைரியமும் சாமர்த்தியமும் பலருடன் சரளமாகப் பழகும் இயல்பும் இச்சமயம் ராகவனுக்கு மிக்க உதவியாயிருந்தன. பாமாவின் பேரில் அவனுக்கு ஏற்கனவே இருந்த அருவருப்பெல்லாம் இப்போது மாறிவிட்டது. பெண்கள் என்றால் இப்படித்தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. இரண்டு பேரும் ஆகாச விமானத்தில் இடம் பிடித்துக் கொண்டு லாகூர் போய்ச் சேர்ந்தார்கள். நல்ல வேளையாக லாகூரில் இன்னும் அவர்களுடைய கம்பெனியின் கிளை வேலை செய்து கொண்டிருந்தது. கம்பெனி உத்தியோகஸ்தன் என்ற முறையில் சௌந்தரராகவன் லாகூருக்குப் பிரயாண அநுமதிச்சீட்டுப் பெறுவது சாத்தியமாயிற்று. லாகூரில் ஒரு பகுதி பற்றி எரிந்து கொண்டிருந்தது. தெருக்கள் எல்லாம் குத்தும் கொலையும் பிணக்காடுமாயிருந்தன. பஞ்சாப்பின் உள் பிரதேசங்களில் நிலைமை இன்னும் பயங்கரம் என்று சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாகச் சௌந்தரராகவனையும் பாமாவையும் நடை உடை பாவனைகளைக் கொண்டு ஹிந்து மதத்தினர் என்று உடனே தெரிந்து கொள்ளுதல் கஷ்டமாயிருந்தது. ஆங்கிலோ இந்தியர்கள் என்றோ, பார்ஸிகள் என்றோ அவர்களைக் கருதும்படியிருந்தது. ஆகையால் உள் நாட்டில் அவர்கள் பிரயாணம் செய்வதில் அவ்வளவு அபாயம் இல்லை என்பதாகத் தெரிந்து கொண்டார்கள். ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களின் தயவினால் ஒரு ஜீப் வண்டி சம்பாதித்துக் கொண்டு பிரயாணமானார்கள்; வழியெல்லாம் அவர்கள் பார்த்த காட்சிகள் அவர்களுக்குச் சீதாவின் கதியைப் பற்றிய கவலையையும் பயத்தையும் உண்டாக்கின. ஆயினும் எப்படியோ கடைசியில் ஹௌஷங்காபாத் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் போய்ச் சேர்ந்த சமயம் அந்த ஊரில் படுகொலைக்குத் தப்பிப் பிழைத்தவர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் சேர்த்து வைக்கப் பட்டிருந்தது. பாதுகாப்புக்குச் சீக்கிய சோல்ஜர்கள் வந்ததும் தப்பிப் பிழைத்தவர்களின் பிரயாணம் தொடங்குவதாயிருந்தது. அதிகாரிகளின் அநுமதியுடன் சௌந்தரராகவனும் பாமாவும் அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து தேடித் தேடிப் பார்த்தார்கள்.
சீதாவையாவது குழந்தையையாவது காணவில்லை. பிறகு துணிச்சலாக ஊருக்குள்ளேயே புகுந்தார்கள். சௌந்தர ராகவன் குடியிருந்த வீட்டை நோக்கிச் சென்றார்கள். வீடு இருந்த இடத்தில் இடிந்து கரியுண்ட சில குட்டிச்சுவர்களும் கல்லும் கரியும் சாம்பலும் கலந்த கும்பல்களும் கிடந்தன! சில இடங்களிலிருந்து இன்னும் இலேசாகப் புகை வந்து கொண்டிருந்தது! ராகவன் அவனுடைய வாழ்நாளிலே என்றும் இல்லாத விதமாக அன்றைக்கு அங்கேயே உட்கார்ந்து விம்மி விம்மி அழுதான். பாமாவும் அவனுடன் சேர்ந்து 'ஓ'வென்று கதறினாள். இதற்குள்ளே அந்த வேடிக்கையைப் பார்ப்பதற்கு ஜனக்கூட்டம் சேரத் தொடங்கியது. பின்னோடு வந்திருந்து போலீஸ் அதிகாரி அவர்களை அங்கிருந்து புறப்படும்படி வற்புறுத்தினார். கிளம்புகிற சமயத்தில் ஒரு பையன் அவர்களை நெருங்கி வந்தான். அவனை முன்னர் பார்த்திருந்த ஞாபகம் ராகவனுக்கு இருந்தது. அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் கோவேறு கழுதை வண்டியுடன் அவன் ராகவனைப் பார்த்து, "சாகிப்! ஒரு சமாசாரம் சொல்லவேண்டும்!" என்றான். அவனை ஜீப் வண்டியில் ஏறிக்கொள்ள சொன்னான் ராகவன். வண்டி புறப்பட்ட பிறகு "என்ன விஷயம்?" என்று கேட்டான். அந்த வீட்டிலிருந்த அம்மாள் சாகவில்லையென்றும் அவளை ஒரு முஸ்லிம் கிழவர் அழைத்துக்கொண்டு போனதாகவும் தன்னுடைய வண்டியில் ஏறிக்கொண்டுதான் அவர்கள் போனதாகவும் பையன் கூறினான். குழந்தையைப் பற்றி யாதொரு தகவலும் தெரியாது என்று சொன்னான். இரவெல்லாம் அவர்கள் பிரயாணம் செய்து விடியும் சமயத்தில் ஒரு பாறைக்குப் பின்னால் தங்கினார்கள் என்பதையும் சொல்லி அந்த இடத்தைக் காட்ட முடியும் என்று கூறினான். அந்தப் பையனையும் ஜீப் வண்டியில் அழைத்துக்கொண்டு போனார்கள். பையன் காட்டிய இடத்தில் கட்டை வண்டியின் சக்கரச் சுவடுகள் தெரிந்தன. அது மட்டுமல்லாமல் சீதா வழக்கமாக அணியும் கண்ணாடி வளையல் ஒன்று அங்கே உடைந்து கிடந்தது. அதைப் பார்த்ததும் ராகவனுடைய துயரம் பன்மடங்கு ஆயிற்று.
துயரம் விரைவில் கோபமாக மாறியது. யாரோ ஒரு முஸ்லிம் கிழவன் சீதாவைக் கொண்டுபோய் விட்டதாக எண்ணினான். அவளை எங்கே கொண்டு போய் விற்கப் போகிறானோ, அல்லது என்ன செய்யப் போகிறானோ? அதைக் காட்டிலும் சீதா செத்துப் போயிருந்தால், எரிந்து போன வீட்டிலேயே இருந்து மாண்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்குமே! சீதாவுக்கு நேரக்கூடிய கதியை நினைக்க நினைக்க ராகவனுக்குக் கோபம் பொங்கி வந்தது. இதற்கு யார் பேரிலாவது பழிக்குபழி வாங்கவேண்டும் என்று ஆத்திரம் பொங்கியது. பையனை இறக்கி விட்டுவிட்டு ராகவனும் பாமாவும் ஜீப் வண்டியை ஓட்டிக்கொண்டு விரைந்து சென்றார்கள். வழியில் எங்கேயாவது ஒரு முஸ்லிம் தனியே போவதைக் கண்டால் அவனை ராகவன் கைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுப் போனான். இதைப் பாமா தடுக்கப் பார்த்தும் பயன்படவில்லை. வழியில் ஒரு ஊரில் அவர்கள் இராத்திரி தங்கும்படி நேர்ந்தது தங்கிய வீடு ஒரு பிரபல ஹிந்து வக்கீலின் வீடு. ஏற்கெனவே கம்பெனி உத்தியோகம் சம்பந்தமாக அவருடன் சௌந்தரராகவனுக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. அந்த ஊரில் ஹிந்துக்கள் அதிகமாதலால் அதுவரை அபாயம் ஏற்படவில்லை. ஆனால் எந்த நிமிஷம் அபாயம் வருமோ என்று எதிர்பார்த்துத் தயாராயிருந்தார்கள். ராகவன் அவருடைய வீட்டில் தங்கிய இரவு ஒரு செய்தி வந்தது. ஒரு ஹிந்துப் பெண்ணுக்கு முஸ்லிம் ஸ்திரீகள் அணியும் பர்தா உடையைப் போட்டு ஒரு முஸ்லிம் கிழவன் ஜீப் வண்டியில் வைத்து அழைத்துப் போகிறான் என்பது அந்தச் செய்தி. சுற்றுப்புறங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக அவர்கள் வைத்திருந்த துப்பறியும் ஒற்றர்கள் இந்தச் செய்தியைக் கொண்டு வந்தார்கள். இதைக் கேட்டதும் சௌந்தரராகவனுக்கு ஒருவேளை அந்தப் பெண் சீதாவாயிருக்கலாம் என்ற சந்தேகம் உதித்தது.
இல்லாவிட்டால்தான் என்ன? ஒரு ஹிந்து ஸ்திரீக்கு அபாயம் நேர்ந்திருக்கிறது என்றால், அதைத் தடுக்காமல் தான் உயிர் வாழ்ந் திருப்பதில் என்ன பிரயோஜனம்? பழைய காலத்து ராஜபுத்திர வீரர்கள் தங்களுடைய குலப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றுவதற்காகச் செய்த வீர சாகஸச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் ராகவனுக்கு அப்போது நினைவு வந்தது. உடனே அந்த ஜீப் வண்டி எந்தச் சாலையில் போகிறது என்று தெரிந்து கொண்டு அதே சாலையில் சௌந்தரராகவன் தன் வண்டியையும் விட்டான். வழியில் பல தடங்கல்கள் நேர்ந்தன. ஆயினும் முன்னால் போன வண்டியை விட்டுவிடாமல் தொடர்ந்து போனான். ஒரு இடத்தில் முன் வண்டி தப்பிப் போய் விட்டதாகவே தோன்றியது. பிறகு அது பெரிய சாலையிலிருந்து, பிரிந்து குறுக்குச் சாலையில் திரும்பியிருக்க வேண்டும் என்று ஊகித்து அதே குறுக்குச் சாலையில் தானும் திரும்பினான். சிறிது நேரத்துக்கெல்லாம் 'சேனாப்' நதியின் கரையை அடைந்தான். அங்கே ஒரு படகு ஏறக்குறைய நடு ஆற்றில் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு முஸ்லிம் கிழவனும் ஒரு ஹிந்து ஸ்திரீயும் இருப்பதை ராகவன் பார்த்து விட்டான். அதற்கு மேல் பார்ப்பதற்கோ யோசிப்பதற்கோ என்ன இருக்கிறது? வேறு எந்த விதத்திலும் அந்தப் படகைப் பிடிக்கவோ தடுக்கவோ முடியாது. துப்பாக்கியை எடுத்துக் கிழவனைக் குறி பார்த்துச் சுட்டான். குறி தவறாமல் குண்டு பட்டது. கிழவன் படகிலிருந்து சாய்ந்து தண்ணீரில் விழுந்தான். அதற்குப் பிறகு நடந்ததை ராகவன் எதிர்பார்க்கவில்லை. படகிலிருந்த பெண்ணும் இன்னொரு மனிதனும் தண்ணீரில் குதித்தது போலத் தோன்றியது. படகில் படகோட்டி மட்டுமே பாக்கியிருந்தான். ராகவனுக்கு அப்போது வெறியே பிடித்திருந்தது. அந்தப் படகோட்டி மனிதனையும் நோக்கிச் சுட்டான். படகு குண்டுபட்டு ஓட்டையாகியிருக்க வேண்டும். சிறிது நேரத்துக்கெல்லாம் படகு கவிழ்ந்து விட்டது. இந்தச் சம்பவம் ராகவனுடைய வெறியைத் தணித்தது. தான் செய்தது நியாயமோ என்னமோ என்ற ஐயம் எழுந்தது. நியாயந்தான் என்று மனதை உறுதி செய்து கொண்டான். ஒருவேளை படகில் இருந்தது சீதாவாக இருக்கலாமோ என்ற சிறு சந்தேகம் எழுந்தது.
அப்படியிருக்க முடியாது என்றும், சீதாவாக இருந்தால் அந்த முஸ்லிம் கிழவன் நீரில் விழுந்ததைக் கண்டு அவளும் விழுந்திருக்க நியாயமில்லையென்று எண்ணி ஆறுதல் பெற்றான். ஒருவேளை அப்படிச் சீதாவாயிருந்தால் என்ன? ஒரு முஸ்லீம் வீட்டுக்குப் போய்ப் பலவந்தத்துக்கு ஆளாகி உயிர் வாழ்வதைக் காட்டிலும் அவள் நதியில் முழுகி இறப்பதே மேலல்லவா? பிறகு ராகவனும் பாமாவும் பல அபாயங்களைத் தாண்டி டில்லிக்கு வந்து சேர்ந்தார்கள். வந்த பிற்பாடு ராகவனுடைய மனது கேட்கவில்லை. டில்லியில் உள்ள அகதி முகாம்களில் மட்டும் அல்லாமல் பானிபெத், கர்னால், குருக்ஷேத்திரம் முதலிய ஊர்களில் உள்ள அகதி முகாம்களில் எல்லாம் போய்த் தேடிப் பார்த்தான். எங்கும் சீதாவைப் பற்றியாவது வஸந்தியைப் பற்றியாவது தகவல் கிடைக்கவில்லை. அவர்கள் இருவரும் இறந்து போயிருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வரவேண்டிய தாயிருந்தது. ஆனால், இரண்டு மாதத்துக்கு முன்பு சீதாவின் பெயருக்குத் தாரிணியிடமிருந்து வந்த கடிதமானது சௌந்தர ராகவனுக்கு மறுபடியும் மனக் குழப்பத்தை உண்டாக்கியது. "சூரியா, இப்போது நீ எங்கே தங்கியிருக்கிறாய்?" என்று சௌந்தரராகவன் கேட்டான். "இன்னும் ஒரு இடம் என்று நிலையாக ஏற்படவில்லை. ஏற்பட்டதும் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். தங்களுக்கும் பாமாவுக்கும் திருமணம் நடக்கும்போது எனக்குக் கட்டாயம் அழைப்பு அனுப்பவேண்டும் மறந்து விடக்கூடாது" என்று சூரியா கூறினான். அவனுடைய முகத்தில் வெறுப்பும் வேடிக்கையும் கலந்த குரூரமான புன்னகை காணப்பட்டது. "ஆகா! அதைப் பற்றி உனக்கு எப்படித் தெரிந்தது, சூரியா? நாங்கள் இன்னும் யாரிடமும் சொல்ல வில்லையே?" என்றான் ராகவன். "சொல்லுவானேன்? ஊகித்துத் தெரிந்து கொள்ளக் கூடியதுதானே? பாவம்! நீங்கள் எத்தனை காலம் சூனியமாக இருக்கும் இந்தப் பெரிய வீட்டில் தனியாகக் குடியிருக்க முடியும்?" "ஆம், அப்பா! நீயாவது என்னுடைய நிலைமையைத் தெரிந்து அநுதாபப்படுகிறாயே? உலகத்தில் சுயநலம் அதிகமாகிப் போய்விட்டது?
பிறர் கஷ்டத்தைக் கவனித்து அநுதாபப்படுவாரே இல்லை. அதுவும் தியாகிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு சுயநலம் பிடித்தவர்களாகப் போயிருக்கிறார்கள், தெரியுமா? அவர்களை உத்தேசித்தால் நம்முடைய மாஜி திவான் ஆதிவராகாச்சாரியார் போன்றவர்கள் எவ்வளவோ தேவலை!" என்றான் ராகவன். "ஆமாம்; உலக இயல்பே அப்படித்தான். நல்லவர்கள் கெட்டவர்கள் ஆவார்கள், கெட்டவர்கள் நல்லவர்கள் ஆவார்கள். தியாகிகள் சுயநலத்தை மேற்கொள்வார்கள். சுயநலம் பிடித்தவர்கள் பரோபகாரிகள் ஆவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் காந்தி மகான் ஒருவர் மட்டும் மாறாமல் இருந்து கொண்டு திண்டாடுகிறார்!" ஆம், உன்னுடைய காந்தி மகானை நீதான் புகழ வேண்டும். காந்தி செய்கிற அநியாயத்தை எங்களால் பொறுக்க முடியவில்லை. அவர் எதற்காக இந்தப் புது டில்லியில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது; கோபமாய்க் கூட இருக்கிறது. இவ்வளவு அகதிகளையும் இவர்கள் படுகிற துயரங்களையும் பார்த்துவிட்டுப் பாகிஸ்தானுக்குப் பரிந்து பேச எப்படித்தான் மகாத்மாவுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை. பட்டினி கிடந்து சர்தார்படேலைக் கட்டாயப்படுத்தியல்லவா பாகிஸ்தானுக்கு அறுபது கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தார்? அவரை 'மகாத்மா' என்று சொல்வதற்கே என் நாக்குக் கூசுகிறது." "கூசினால் சொல்ல வேண்டாமே! சொல்லாம லிருப்பதால் மகாத்மாவுக்கு நஷ்டமில்லை, உங்களுக்கும் கஷ்டம் இல்லை. நாங்கள் என்னமோ சில பைத்தியக்காரர்கள், மகாத்மா எது சொன்னாலும் எது செய்தாலும் அதுவே சரி என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதனாலும் யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்லை. போகட்டும், உங்கள் கலியாணம் எப்போது?" என்றான் சூரியா.
"அதைப் பற்றித்தான் தயக்கமாயிருக்கிறது, சூரியா! நான் இப்படியே என் வாழ்க்கையை நடத்த முடியாது என்பது நிச்சயம். ஆனால் சீதாவைப் பற்றியோ உறுதியாக ஒன்றும் தெரியவில்லை. போதாதற்கு, தாரிணியின் கடிதம் வேறு என் மனதை அடியோடு குழப்பி விட்டிருக்கிறது..." "தாரிணியின் கடிதம் இந்த விஷயத்தில் உங்கள் மனதைக் குழப்புவானேன்?" என்றான் சூரியா. "உன்னிடம் சொன்னால் என்ன, ஒருமாதிரி உனக்கு முன்னமேயே தெரிந்த விஷயந்தான். தாரிணி என்னுடைய முதற்காதலி, சூரியா! சீதாவை இழந்ததினால் எனக்கேற்பட்ட மனத்துயரத்தை மாற்றக்கூடியவள் தாரிணி ஒருத்திதான். ஒருவேளை உனக்கு இந்த விஷயத்தில் ஆட்சேபணை இருக்கக் கூடும். ஆனாலும் நீ இதில் தலையிடாம லிருந்தால் நல்லது" என்றான் ராகவன். "மன்னிக்க வேண்டும், ராகவன்! நான் அப்படியெல்லாம் பிறர் காரியத்தில் தலையிடுகிறவன் அல்ல. ஒரு தடவை பிறர் காரியத்தில் தலையிட்டு விட்டு அதன் பலன்களை இன்றுவரை அநுபவித்துக் கொண்டிருக்கிறேன், போதும் போதும் என்றாகிவிட்டது. சீதா செத்துப் போயிருந்து ஒருவேளை ஆவி வடிவத்தில் இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தால் நீங்களும் தாரிணியும் கலியாணம் செய்து கொள்வதைப் பார்த்து ஆனந்தமடைவாள். உங்கள் கலியாணத்துக்கு வந்திருந்து சீதா ஆசிகூடக் கூறுவாள்!" என்றான் சூரியா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்து நான்காம் அத்தியாயம்

சீதாவின் ஆவி

தலைக்கு மேலே வெள்ளம் ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே இருந்தது. நெற்றியின் மேலே அலை மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே இருந்தது. காதில் 'ஹோ' என்று இரைந்த அலை ஓசை பல்லாயிரம் மக்களின் சோகம் நிறைந்த ஓலத்தையொத்த அலை ஓசை, மற்ற எல்லா ஓசைகளையும் அமுக்கிக் கொண்டு மேலெழுந்த பேரலையின் பேரோசை கேட்டுக் கொண்டே, கேட்டுக் கொண்டே இருந்தது. தலைக்கு மேல் ஓடிய வெள்ளத்தின் பாரமும் நெற்றியில் மோதிய அலையின் வேகமும் காதில் தாக்கிய அலை ஓசை இரைச்சலும் முடிவில்லாமல், இடைவெளியில்லாமல் நீடித்துக்கொண்டே இருந்தன. இல்லை, இல்லை; முடிவில்லாமல் இல்லை! அப்பாடா! கடைசியாக இதோ வெள்ளம் வடிந்து வருகிறது. நெற்றியில் அலையின் மோதலும் குறைந்து வருகிறது. இதோ வெள்ளம் வடிந்துவிட்டது. கழுத்துக்குக் கீழே இறங்கிவிட்டது. மூச்சுவிட முடிகிறது; கண்ணால் பார்க்க முடிகிறது. ஆனால் காதிலே அலை ஓசை கேட்பது மட்டும் நின்றபாடில்லை. வேறு ஒரு சத்தமும் கேட்க முடியவில்லை. இது என்ன? எங்கே இருக்கிறேன்? என்னத்தைப் பார்க்கிறேன்? இங்கே எப்படி வந்தேன்? படகிலிருந்து நதியில் விழுந்து முழுகியவள் இங்கே எப்படி வந்தேன்? செத்துப் போன பிறகு இங்கே வந்து சேர்ந்தேனா? இதுதான் மறு உலகமா? மறு உலகமாயிருந்தால் இருட்டும் குப்பையும் நிறைந்து துர்நாற்றம் அடிக்கும். இந்த இடம் நரக வீடாகத்தான் இருக்க வேண்டும்! நான் செய்திருக்கும் பாவங்களுக்கு நரகத்தைத் தவிர வேறு என்ன இடம் கிடைக்கும்? பதியை விட்டுவிட்டு ஓடிப்போனவளுக்கு வேறு என்ன கதி கிடைக்கும்? அருமைச் சிநேகிதி லலிதாவுக்குத் துரோகம் செய்தவளுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்! சொற்ப பாவம் செய்தவர்கள் கொஞ்சநாள் நரகத்திலிருந்துவிட்டு அப்புறம் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்று கேட்டதுண்டு? ஆனால் எனக்குச் சொர்க்கத்தின் ஆசையே வேண்டியதில்லை. என்றென்றைக்கும் இந்த நரகத்தில் கிடந்து உழல வேண்டியதுதான்?
இதோ என் தலைமாட்டில் நிற்கிறது யார்? யமனா? யமதூதனா? இல்லை தெரிந்த முகமாயிருக்கிறதே? எப்போதோ பார்த்த மாதிரி இருக்கிறதே?... கையில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார்? இல்லை; தண்டாயுதமில்லை. வேறு எந்த ஆயுதமும் இல்லை. அது ஒரு கிண்டி; மண்ணால் செய்த கிண்டி. அதன் நீண்ட குறுகிய மூக்கு வழியாகத் தண்ணீர் சொட்டுகிறது. எதற்காக நம்முடைய நெற்றியில் ஜில் என்று குளிர்ந்த தண்ணீரை விடுகிறார்? ஆகா எத்தனை இதமாயிருக்கிறது? இந்த மனிதர் யார்...... சீதா சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். படுக்கை என்பதும் தரையில் விரித்திருந்த ஒரு பழைய கம்பளிதான். அது உடம்பின் மேல் பட்ட இடங்களில் சொர சொரவென்று குத்தியது. அதைப் பொருட்படுத்தாமல் தன் நெற்றியில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை விட்ட ஆசாமி யார் என்று நன்றாகத் திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதரின் மெலிந்த சுருங்கிய முகத்தில் அப்போது புன்னகை மலர்ந்தது. ஆகா இந்த மனிதர் என் அப்பா அல்லவா; பழைய அப்பா துரைசாமி ஐயர் அல்லவா? அந்தத் தாடியுள்ள மௌல்வி சாகிபு அல்ல. இளைத்து மெலிந்து கறுத்துப் போயிருக்கிறார். கன்னங்களின் எலும்பு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறது; கண்கள் குழி விழுந்திருக்கின்றன. ஆயினும் பழைய அப்பாதான்; சந்தேகமில்லை. அந்த மௌல்வி சாகிபு என் தந்தை என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு வந்தது ஏதோ வஞ்சகம் போலிருக்கிறது. அவரிடமிருந்து நிஜமான அப்பா என்னைக் காப்பாற்றி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். ஒருவேளை அதெல்லாம் அந்தப் பயங்கர நிகழ்ச்சிகள் எல்லாம் கனவுதானோ, என்னமோ? - எல்லாவற்றுக்கும் அப்பாவைக் கேட்டுப் பார்க்கலாம்!
சீதா பேச முயன்றாள், தகப்பனாரிடம் தன் மனதிலெழுந்த சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயன்றாள். "நீங்கள் என் அப்பா துரைசாமி ஐயர்தானே? எதற்காகக் கிண்டியிலிருந்து சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை என் நெற்றியில் விடுகிறீர்கள்? நாம் எங்கே இருக்கிறோம்? சூரியா எங்கே?" குழந்தை வஸந்தி எங்கே? இவர் - என் அகத்துக்காரர் எங்கே?" என்று இவ்வளவு கேள்விகளையும் கேட்க அவள் மனம் விரைந்தது; நாக்குத் துடித்தது; உதடுகள் திறந்தன; மூடின ஆனால் வார்த்தை ஒன்றும் வரவில்லை. முயன்று முயன்று பார்த்ததும் வார்த்தை ஒன்றும் வெளிவரவில்லை. அப்பா ஏதோ சொல்லுவது போலிருந்தது. வாயைத் திறந்து திறந்து மூடினார். பேச்சில்லாத சினிமாப் படங்களில் பாத்திரங்கள் வாயைத் திறந்து மூடுவது போலிருந்தது. பேசியது ஒன்றும் அவள் காதில் விழவில்லை; காதில் விழவேயில்லை. எப்படிக் காதில் விழும்? வேறு சத்தம் எதுவும் காதில் விழ முடியாதபடிதான் இந்தப் பயங்கரமான அலை ஓசை ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கிறதே! இதுதான் என்னைப் பைத்தியமாக அடித்துக்கொண்டு வருகிறது. "எதற்காகத் தப்பிப் பிழைத்தோம்; நதியில் முழுகிச் செத்துத் தொலைந்து போயிருக்கக் கூடாதா?" என்ற எண்ணத்தை உண்டாக்கி வருகிறதே! ஒரு நிமிஷத்துக்குள்ளே சென்ற சில மாதத்து அநுபவங்கள் எல்லாம் சட், சட்டென்று ஞாபகம் வந்தன. குருக்ஷேத்திரம் முகாமில் கண்ணுக்கெட்டிய தூரம் போட்டிருந்த ஆயிரக்கணக்கான அகதி முகாம் கூடாரங்கள் கண் முன்னால் வந்தன. உடுக்க ஒரு துணிக்கு மேல் இல்லாத லட்சக்கணக்கான அகதி ஸ்திரீகளும் குழந்தைகளும் நினைவுக்கு வந்தார்கள். சில நாள் குடி தண்ணீருக்குப் பட்ட கஷ்டம் நினைவு வந்தது.
இன்னும் சில நாள் பெருமழை பெய்து கூடாரத்துக்குள் முழங்கால் ஆழம் தண்ணீர் நின்ற காட்சி நினைவுக்கு வந்தது. தனக்குக் கடுமையான சுரம் வந்ததும் அப்பாவும் சூரியாவும் தனக்குச் செய்த சிசுருஷைகளும் நினைவுக்கு வந்தன. ஒரே ஒரு நாள் அகதி முகாமில் ஓரிடத்தில் பெருங்கூட்டத்தைக் கண்டு தான் அங்கே சென்று பார்த்ததும் காந்தி மகாத்மா கூட்டத்தின் நடுவில் நின்று ஏதோ பேசியதும் நினைவுக்கு வந்தன. துரதிர்ஷ்டம், அந்த அவதார புருஷர் பேசிய பொன் மொழியைத் தன் காதுகள் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை! காந்திமகான் ஏறியிருந்த காருக்குப் பின்னால் சென்ற பெரும் ஜனக் கூட்டத்தோடு அவளும் சென்றாள். அகதி முகாமிலிருந்து அவர் புறப்பட்டபோது தானும் அவருடன் போய்விடப் பிரயத்தனம் செய்தாள் அந்த முயற்சி பலிக்கவில்லை. பக்கத்திலிருந்தவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு கடுங்குளிர் காலம் வந்தது. அந்தக் குளிரிலும் பனியிலும் கூடாரத்தில் வசித்தால் தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று அப்பாவும் சூரியாவும் எண்ணினார்கள். ஆகையால் ஒரு மச்சுக் கட்டிடத்துக்கு அழைத்துப்போக வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ரொம்பவும் சிரமப்பட்டு அகதி முகாம் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு குருக்ஷேத்திரத்திலிருந்து பிரயாணமானார்கள். பானிபத் என்னும் பட்டணத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே அதிர்ஷ்டவசமாக ஒரு பழைய காலத்து முஸ்லிம் பக்கிரியின் சமாதி மண்டபம் காலியாயிருந்தது. அந்த இடத்தை இவர்கள் பிடித்துக் கொண்டார்கள், அதில் வசித்து வந்தார்கள். அடிக்கடி சீதாவுக்குத் திடீர் என்று பிரக்ஞை தவறிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சமயங்களில் அவளைக் கட்டை மாதிரி போட்டுவிட்டது. குளிர்ந்த தண்ணீரைக் கிண்டி மூக்கு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாய் நெற்றியில் விட்டுக் கொண்டிருந்தால் பிரக்ஞை திரும்ப வந்தது. அப்பா இன்றைக்கும் அம்மாதிரி செய்துதான் உணர்வு வரப் பண்ணியிருக்கிறார்.
சூரியா டில்லிக்குப் போயிருக்கிறான், ஆம்; டில்லியிலேயே ஜாகை கிடைக்குமா என்று பார்த்து வரப் போயிருக் கிறான். தாரிணியையும் வஸந்தியையும் இவரையும் பற்றிக்கூட ஏதாவது தகவல் கிடைக்குமா என்று விசாரித்து வருவதற்குப் போயிருக்கிறான். அது மட்டுமல்ல; காந்தி மகாத்மாவைப் பற்றி விசாரித்துக் கொண்டு வருவதற்கும் போயிருக்கிறான். சீதாவின் மனதிற்குள் அடிக்கடி தான் இனி வெகுகாலம் பிழைத்திருப்பது துர்லபம் என்று தோன்றிக் கொண்டிருந்தது. பிழைத்திருக்க அவள் விரும்பவும் இல்லை. பேசும் சக்தியை வாய் இழந்து விட்டது. பேச முயன்றால், தாடைகள் வலிப்பதைத் தவிர வேறு பயன் ஒன்றுமில்லை. காதோ கேட்கும் சக்தியை அடியோடு இழந்துவிட்டது. ஒரு பயங்கரமான அலை ஓசை காதில் சதா சர்வகாலமும் கேட்டுக் கொண்டிருந்தது. எப்படியும் சீக்கிரம் தன் உயிர் போவது நிச்சயம். அதற்குள் தன் அருமைக் குழந்தை வஸந்தியை ஒரு தடவை பார்த்துக் கட்டி முத்தமிடவேண்டும். அப்புறம் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் விழிப்பிலும் தூக்கத்திலும் நன்மையிலும் தீமையிலும் தன்னுடைய வழிபடு தெய்வமாகக் கொண்டு போற்றி வந்த காந்தி மகாத்மாவை இன்னொரு தடவை தரிசிக்க வேண்டும். அவருடைய புனிதமான திருமேனியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். அவருடைய மனோரதம் இவ்வளவு தான். இதையெல்லாம் பற்றிச் சீதா மின்னல் மின்னும் வேகத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அப்பா துரைசாமி ஐயர் சூடான டீ போட்டுக்கொண்டு வந்தார். சீதா வாங்கிக் சாப்பிட்டாள்; பிறகு அப்பாவைத் தொட்டுக் கூப்பிட்டு, சமிக்ஞையினால், "சூரியா எங்கே? இன்னும் வரவில்லையா?" என்று விசாரித்தாள். அப்பாவும் சமிக்ஞையினால் "இன்னும் வரவில்லை!" என்று தெரிவித்தார்.சீதாவின் முகம் முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது. டில்லியில் இன்னும் கலகம் நின்றபாடில்லை என்று சொன்னார்களே, ஒருவேளை சூரியாவுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என்று எண்ணினாள். ஆமாம்; இந்த துரதிர்ஷ்டக்காரிக்கு உதவி செய்தவர்களோ, சிநேகமாயிருந்தவர்களோ, யார்தான் கஷ்ட நஷ்டங்களை அடையாமலிருந்தார்கள்? நான் இந்த உலகத்தை விட்டுத் தொலைந்து போனால் எத்தனையோ பேர் சுகமடைவார்கள். ஆனாலும் எனக்கு இன்னும் முடிவு காலம் வரவில்லையே? பஞ்சாப் பயங்கரத்தில் எத்தனையோ லட்சம் பேர் செத்துப் போனார்கள்; நான் மட்டும் சாகவில்லையே? எல்லா ஆபத்துக் களுக்கும் பிழைத்து உட்கார்ந்திருக்கிறேனே? சீதா தன் தலைமாட்டில் பத்திரமாய் வைத்திருந்த காந்தி மகாத்மாவின் படத்தை எடுத்துப் பார்த்தாள். "பாபுஜீ! என்னைத் தங்கள் சிஷ்ய கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளக்கூடாதா? என்னாலான பணிகள் செய்து கொண்டிருக்க மாட்டேனா?" என்று இரங்கி வேண்டினாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்தைந்தாம் அத்தியாயம்

பானிபத் முகாம்

பானிபத் என்னும் சிறு நகரம் இந்திய சரித்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. டில்லிக்கு வடக்கே சுமார் முப்பது மைல் தூரத்தில் அந்தப் பட்டணம் இருக்கிறது. இந்தியாவின் சரித்திரப் போக்கை மாற்றி அமைத்த மூன்று பெரிய சண்டைகள் அங்கே நடந்திருக்கின்றன. பட்டாணிய வம்சத்தின் கடைசி அரசனான இப்ராஹிம் லோடி டில்லியில் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் நொண்டித் தைமூர் என்பவனின் சந்ததியில் வந்த பாபர் டில்லி மீது படையெடுத்து வந்தான். பாபருடைய பத்தாயிரம் வீரர்களும் இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் போர் வீரர்களும் பானிபத் நகருக்கு அருகில் விஸ்தாரமான மைதானத்தில் சந்தித்தார்கள். லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சோற்றுப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். பாபரின் பத்தாயிரம் வீரர்கள் கட்டுப்பாடு பெற்ற வீரர்கள். அன்றியும் பாபரிடம் பீரங்கிகள் சில இருந்தன. எனவே, இப்ராஹிம் லோடியின் ஒரு லட்சம் வீரர்களும் சொற்ப நேரத்துக்குள்ளே பெருந் தோல்வியடைந்து நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். பாபர், டில்லி பாதுஷா ஆனான். சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற மொகலாய மன்னர்களின் சாம்ராஜ்யம் டில்லியில் ஆரம்ப மாயிற்று. பின்னர், பதினான்கு வயதுப் பாலனாகிய அக்பர், அதே பானிபத் போர்க்களத்தில், ஹேமுவின் மாபெரும் சைன்யத் தைத் தோற்கடித்துத் தன் தந்தையான ஹுமாயூன் இழந்துவிட்ட டில்லி சாம்ராஜ்யத்தை மீண்டும் அடைந்தான். இதற்கு இருநூறு வருஷங்களுக்கும் பிறகு பாரஸீகத்திலிருந்து ஆமத் ஷா என்னும் பெரும் மன்னன் டில்லி மீது படையெடுத்து வந்தான். அப்போது மத்திய இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆண்டு வந்த மகாராஷ்டிரர்கள் ஒரு பெரும் சைன்யத் தைத் திரட்டிக் கொண்டு போனார்கள். மீண்டும் அதே பானிபத்தில் மிகப் பெரும் சண்டை நடந்தது. அதில் மகாராஷ்டிர சேனா வீரர்கள் படுதோல்வியடைந்தார்கள். அந்தச் சண்டையிலிருந்து மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம் ஆரம்பமாயிற்று.
இத்தகைய பிரசித்தி பெற்ற பானிபத் நகரத்தில், இந்திய சரித்திரத்தையே, மாற்றி அமைத்த சண்டைகள் பல நடந்த மைதானத்தில், இப்போது ஆயிரக்கணக்கான கூடாரங்கள் போட்டிருந்தன. அவற்றில் பஞ்சாப் அகதிகள் குடியிருந்தார்கள். ஆறு மாதத்திற்கு முன் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள் இப்போது கந்தைத் துணி உடுத்தி வயிற்றுப் பசியை ஆற்றக் காய்ந்த ரொட்டிகள் எப்போது கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். பெண்டு பிள்ளைகளை இழந்தவர்களும், பெற்றோர்களை இழந்தவர்களும், கணவனை இழந்தவர்களும், தம்மைத் தவிர குடும்பம் அனைத்தையும் இழந்தவர்களும் அந்தக் கூடாரங்களில் வசித்தார்கள். தங்களுடைய கண்ணெதிரே தங்கள் உற்றார் உறவினருக்குப் பயங்கரமான கொடுமைகள் இழைக்கப்படுவதைப் பார்த்துச் சித்தப் பிரமை கொண்ட பித்தர்கள் பலரும் அங்கே இருந்தார்கள். சூரியா கொஞ்ச காலமாக அந்த அகதிகள் முகாமில் தன்னாலியன்ற தொண்டு செய்து கொண்டிருந்தான். ஆகையால் அவன் அன்று விடுதிக்குள் நுழைந்த உடனே அவனைப் பலர் சூழ்ந்து கொண்டார்கள் "டில்லியில் என்ன நடக்கிறது? இன்னும் அங்கே ஹிந்து- முஸ்லிம் சண்டை நடப்பது உண்மைதானா? காந்தி மகாத்மா இப்படி அநியாயம் செய்யலாமா? முஸ்லிம்களுக்காக இவர் எதற்காகப் பரிந்து பட்டினி கிடக்க வேண்டும்? டில்லியில் முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றிய வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்றும் வெளியேறியவர்களைக் கூப்பிட்டுக் குடிவைக்க வேண்டும் என்று சொல்கிறாராமே? இது என்ன அநீதி? பாகிஸ்தானத்திலே நாங்கள் விட்டுவந்த எங்கள் வீடுகளையெல்லாம் திருப்பிக் கொடுப்பார்களா? டில்லியில் அகதிகள் தங்கியிருக்கும் முஸ்லிம் மசூதிகளையெல்லாம் காலிசெய்து முஸ்லிம்களிடம் ஒப்புவிக்க வேண்டும் என்கிறாராமே? இது சரியா? முஸ்லிம்கள் ஹிந்துக்களின் கோயில்களையும் சீக்கியர்களின் குருத்துவாரங்களையும் நெருப்பு வைத்துக் கொளுத்தி மண்ணோடு மண்ணாக்கி விட்டார்களே! அப்படியிருக்க ஹிந்து அகதிகள் சில காலம் மசூதிகளில் தங்கியிருந்து விட்டால் மோசம் என்ன?
அவர்களை ஏன் விரட்டி அடிக்க வேண்டும்"- இப்படி எல்லாம் அகதிகள் கேட்டார்கள். ஒரு ஸ்திரீ பரபரவென்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து சூரியாவைப் பார்த்து, "டில்லியில் சுயராஜ்யம் ஸ்தாபனமாகிவிட்டது என்று சொல் கிறார்களே! அது நிஜந்தானா? நம்முடைய தலைவர்கள் ராஜ்யம் ஆளுகிறார்கள் என்று சொல்கிறார்களே? அதுவும் உண்மை தானா?" என்று கேட்டாள். "ஆமாம்; ஆமாம்" என்றான் சூரியா. "அப்படியானால் எனக்கு ஒரு புதுத் துணி (நயா கபடா) கிடைக்குமா?" என்று வினவினாள் அந்த ஸ்திரீ, அவள் உடுத்தியிருந்த சேலை ஆயிரம் கந்தலாயிருந்தது. சூரியா கண்ணில் துளிர்ந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, கிடைக்கும்" என்றான். கேள்வி கேட்டவர்கள் எல்லாருக்கும் கூடிய வரையில் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தான். அகதி முகாமின் தலைமை அதிகாரியைப் பார்த்துத் தான் திரும்பி வந்து விட்டதைத் தெரியப்படுத்தி விட்டு மேலே பானிபத் பட்டணத்துக்குள் போனான். பானிபத் பட்டணம் மற்றும் பல வட இந்தியாவின் பட்டணங்களைப் போலவே சந்தும் பொந்துமாயிருந்தது. தெரு வீதிகள் மேட்டில் ஏறிப் பள்ளத்தில் இறங்கின. வீதிகளிலும் சந்து வழிகளிலும் கருங்கல்களைப் பதித்திருந்தபடியால் வண்டிகள் கடக்முடக் என்று கஷ்டப்பட்டுக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஒருகாலத்தில், அதாவது ஆறு மாதத்திற்கு முன்பு, பானிபத் பட்டணத்தில் பாதிப் பேர் முஸ்லிம்களா யிருந்தார்கள். அவர்களும் அந்தப் பட்டணத்தில் வசித்த மற்ற ஹிந்துக்களும் அந்யோன்யமாக இருந்தார்கள். இஸ்லாமிய மதத்தின் மகான்கள் சில பானிபத்தில் சமாதி அடைந்திருக்கிறார்கள். அந்தச் சமாதிகளுக்கு வருஷந்தோறும் உற்சவம் நடப்பதுண்டு. அந்த உற்சவத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களோடு உற்சாகமாய்க் கலந்து கொள்வதுண்டு. ஹிந்து - முஸ்லிம்கள் அண்ணன் தம்பிகளைப்போல் பலநூறு ஆண்டுகளாகப் பானிபத்தில் வாழ்ந்து வந்தார்கள்.
இப்போதோ, பானிபத் தெருக்களில் ஒரு முஸ்லிம் புருஷனையோ, ஸ்திரீயையோ குழந்தையையோ பார்க்க முடியாது. அவ்வளவு பேரும் ஊரைவிட்டு வீட்டை விட்டு நாட்டை விட்டு போய்விட்டார்கள். மேற்குப் பஞ்சாபில் கொடுமைக்காளான ஹிந்து அகதிகள் ஆயிரக்கணக்கில் தங்கள் துயரக் கதைகளைச் சொல்லிக் கொண்டும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை முகத் தோற்றத்தின் மூலம் காட்டிக் கொண்டும் மேலும் மேலும் வந்துகொண்டிருந்த போது கிழக்குப் பஞ்சாப் ஹிந்துக்களின் இரத்தம் கொதித்தது. அவர்களில் பலர் வெறிகொண்டு பழிக்குப்பழி வாங்க எழுந்தார்கள். ஆனால் அதற்குள்ளே முஸ்லிம்கள் மூட்டை கட்டிக்கொண்டு புறப்படத் தொடங்கிவிட்டார்கள். டில்லியிலிருந்து அமிருதசரஸ் வரையில் கிழக்குப் பஞ்சாப் முழுவதிலும் பெயருக்கு ஒரு முஸ்லிம்கூட இல்லாமற் போய்விட்டது. பானிபத்திலும் அப்படியேதான்! ஊருக்குள்ளே உற்சாகமோ கலகலப்போ இல்லை. வீதிகளில் நடமாட்டமும் குறைவுதான். தப்பித்தவறிப் பார்த்தவர்களின் முகங்கள் களையிழந்திருந்தன. சுமாரான அகலமுள்ள தெருக்களையும் குறுகலான சந்து பொந்துகளையும் கடந்து சூரியா சென்றான். ஒரு சந்திலிருந்து குறுக்குக் கால் நடைபாதை ஒன்று செங்குத்தான மேட்டின் மேலே ஓடியது அதன் வழியே சூரியா போனான். மேட்டின் உச்சியில் ஒரு மசூதி இருந்தது. அநாதையான ஸ்திரீ அகதிகளுக்கு அந்த மசூதிக்குள்ளே இடம் தரப்பட் டிருந்தது. அந்தப் பெண்களில் சிலர் ராட்டினத்தில் நூல் நூற்றார்கள். சிலர் தையல் இயந்திரங்களில் குழந்தைகளுக்குரிய சட்டை தைத்தார்கள். சிலர் சிங்காரப் பூக்கூடைப் பின்னினார்கள். ஆனால் அந்த ஸ்திரீகளின் முகத்தில் உயிர்க் களை கிடையாது. அவர்களுடைய குழிவிழுந்த கண்களில் ஒளி என்பதே இல்லை. எதிரில் உள்ளவற்றைக் குருடர்கள் பார்ப்பதைப் போல் அவர்கள் காதில் விழுந்ததாகவே தோன்றுவதில்லை. உயிரற்ற பிரேதங்களை ஏதோ ஒரு மந்திர சக்தியால் எழுப்பி உட்கார வைத்து வேலை செய்யப் பயிற்றுவதைப் போலவே இருந்தது. நரகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டுத் திரும்பி வந்தவர்களின் முகத்தோற்றம் இப்படித்தான் இருக்கும் போலும்!
இவர்களையெல்லாம் பரிதாப நோக்குடன் பார்த்துக் கொண்டே சூரியா மசூதியைக் கடந்து அப்பால் சென்றான். ஒரு மிகக் குறுகிய சந்தில் இருந்த இருளடைந்த வீட்டில் பிரவேசித்தான். அதிலேதான் சீதாவும் அவள் தகப்பனாரும் வசித் தார்கள். சீதாவுக்குச் சுய உணர்வு வந்த பிறகு அவள் சமையல் அறையில் காரியம் செய்யப் புகுந்தாள். துரைசாமி ஐயர் முன்னறையில் பத்திரிகை படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். "சூரியா, வா! என்ன இவ்வளவு தாமதம்? நேற்று ராத்திரியே ஏன் வரவில்லை?" என்று கேட்டார். சூரியா சும்மா இருந்தான். "ஏன் அப்பா, மௌனமாக இருக்கிறாய்? டில்லியில் ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டார் துரைசாமி ஐயர். "வழக்கமான விசேஷந்தான்; வேறொன்று மில்லை, எங்கே பார்த்தாலும் துவேஷம், குரோதம், பீதி?- யார் மனதிலும் நிம்மதி கிடையாது." "காந்தி மகாத்மாவின் பிரார்த்தனைக்கு இந்தத் தடவை நீ போகவில்லையா? பிரார்த்தனைக்குப் போனால் மனம் நிம்மதியடைகிறது என்று சொல்லுவாயே!" "போனேன்; ஆனால் அங்கேயும் இந்தத் தடவை மனம் சாந்தியடையவில்லை. மகாத்மா தற்சமயம் டில்லியில் இருப்பதே தப்பு என்று தோன்றுகிறது. வேறு எங்கேயாவது அவர் போய்விட்டால் நன்றாயிருக்கும்." "இது என்ன, இப்படி ஆரம்பித்து விட்டாய், தம்பி! மகாத்மா டில்லியில் இருந்தால் உனக்கு என்ன வந்தது?" "எங்கே பார்த்தாலும், காந்திஜியைப் பற்றிக் கோபமாகப் பேசுகிறார்கள். அவருடைய காரியங்கள் டில்லியில் யாருக்கும் பிடிக்கவில்லை. உத்தியோகஸ்தர்கள், காங்கிரஸ்காரர்கள், வியாபாரிகள், மற்ற பொது ஜனங்கள் எல்லாருமே அவரிடம் வெறுப்பாயிருக்கிறார்கள். அகதிகளுடைய கோபத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. காந்திஜி எந்த முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேசுகிறாரா, அவர்களாவது அவரிடம் நன்றி செலுத்து கிறார்களா என்று கேட்டால், அப்படியும் தெரியவில்லை."
"பெரியவர்கள் 'யதார்த்தவாதி பஹுஜன விரோதி' என்று தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? யார் எப்படிப் பேசினாலும் யார் என்ன மாதிரி நடந்து கொண்டாலும் மகாத்மாஜிக்கு ஒரு பரமானந்த சிஷ்யை இருக்கிறாள். உன் அத்தங்காளைத்தான் சொல்கிறேன். நீ ஒரு தடவை அவளை அழைத்துக்கொண்டு போய் மகாத்மாவின் தரிசனம் பண்ணி வைக்கவேண்டும். அந்தப் புண்ணிய புருஷரின் தரிசனத்தால் ஒரு வேளை சீதாவின் சித்தப்பிரமை மாறினாலும் மாறலாம். இன்றைக்கு ஒரு தடவை சீதாவுக்கு மயக்கம் போட்டுவிட்டது. மறுபடி ஸ்மரணை வரப் பண்ணுவதற்கு ரொம்பவும் கஷ்டமாய்ப் போய்விட்டது. உன்னையும் என்னையும் தவிர வேறு யாராலேயும் அதைச் சகிக்க முடியாது." "சீதா மகாத்மாஜியைத் தரிசிக்க வேண்டும் என்றால் சீக்கிரமே அழைத்துப் போக வேண்டும். அதிக நாள் காந்திஜி டில்லியில் இருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. அங்கே சூழ்நிலை அப்படி இருக்கிறது. பிரார்த்தனைக் கூட்டத்தில் யாரோ குண்டு எறிந்த விஷயம் தெரியும் அல்லவா?" "தெரியாமல் என்ன? பத்திரிகைகளிலேதான் படித்தோமே, அதற்கெல்லாம் மகாத்மாகாந்தி பயந்துவிடுகிறவரா, என்ன?" "அவர் பயப்படவுமில்லை; இலட்சியம் செய்யவுமில்லை. பத்திரிகையில் படித்தபோது எனக்கும் ஏதோ வேடிக்கை மாதிரிதான் தோன்றியது. அங்கே போய்ப் பார்த்தபோது வேடிக்கையாக இல்லை, குண்டு வெடித்ததில் ஒரு பக்கத்துச் சுவரே இடிந்து போயிருக்கிறது." "மகாத்மா பயப்படா விட்டாலும் நீ ரொம்பப் பயந்து போயிருக்கிறாய். அது போனால் போகட்டும், சூரியா! டில்லியில் வேறு யாரையாவது பார்த்தாயா? ஏதாவது செய்தி உண்டா?" என்று துரைசாமி ஐயர் கேட்டார். "பார்த்தேன்! உங்கள் அருமையான மாப்பிள்ளையைப் பார்த்தேன்!" என்று சூரியா சொன்னதும் துரைசாமி ஐயரின் முகத்தில் திடீரென்று ஆர்வத்தின் அறிகுறி தோன்றியது. "நீ அவனை எதற்காகப் பார்த்தாய்? நான்தான் பார்க்க வேண்டா மென்று சொல்லி யிருந்தேனே?" "நானாகத் தேடிக்கொண்டு போய்ப் பார்க்கவில்லை, சந்தர்ப்பம் அப்படி நேரிட்டது. உங்கள் மாப்பிள்ளை மூன்றாந் தடவையாக என்னைக் கொன்றுவிடப் பார்த்தார்! சாலையோடு போய்க் கொண்டிருந்தவன் பேரில் மோட்டாரை விட்டு ஓட்டிவிடலாம் என்று பார்த்தார். கடவுள் அருளால் தப்பிப் பிழைத்தேன்."
"நீ பிழைத்துக்கொண்டாய் என்றுதான் தெரிகிறதே!அப்புறம் என்ன? உன்னோடு அவன் பேசினானா? ஏதாவது உன்னைக் கேட்டானா?" "பேசாமல் என்ன? கேட்காமல் என்ன? என்னை மோட்டாரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துப் போனார். சீதாவைப் பற்றி எனக்கு ஏதாவது தெரியுமோ என்று கேட்டார்." "நீ என்ன பதில் சொன்னாய்?" "சீதா செத்துப்போய் விட்டாள் என்று சொல்லி வைத்தேன்!" "அட பாவி எதற்காக அப்படிச் சொன்னாய்?" "பின்னே என்ன சொல்லச் சொல்கிறீர்கள்! உங்கள் குமாரியோ தான் உயிரோடு இருப்பது அந்த மனுஷருக்குத் தெரியவே கூடாது என்கிறாள். அவரோ மறுபடியும் கலியாணம் செய்துகொள்ளத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்!" "அவனுக்கு இன்னொரு கலியாணம் வேறேயா? அந்தக் கிராதகனை எவள் கலியாணம் செய்து கொள்ளுவாள்?" "அத்திம்பேரே! அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? உங்கள் மூத்த பெண் ஒருத்தி இருக்கிறாளே?அவளைப் பற்றித் தான் அவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்." இத்தனை நேரமும் சாய்ந்து படுத்திருந்த துரைசாமி ஐயர் சடக்கென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். "சூரியா! தாரிணியைப் பற்றி ஏதாவது அவன் சொன்னானா?" என்று கேட்டார். தாரிணி சீதாவின் பெயருக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பற்றிச் சூரியா அவருக்குத் தெரிவித்துவிட்டு, "தாரிணியும் வஸந்தியும் பிழைத்திருக்கிறார்கள் அந்த வரையில் நல்ல செய்திதான்!" என்றான். "தாரிணியை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். சூரியா! நீ சொன்னது போல் ஏதாவது நடந்துவிட்டால் தடுக்க வேண்டும்" என்று பரபரப்புடன் கூறினார் துரைசாமி. "தாரிணியைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் நான் டில்லியில் இருந்தாக வேண்டும். எப்படியும் உங்கள் மாப்பிள்ளையின் வீட்டைத் தேடிக்கொண்டு அவள் வருவாள். நான் டில்லியில் இருந்தால் கண்டுபிடித்து விடுவேன்" என்றான் சூரியா.
"அப்படியே செய்யலாம்! நாம் எல்லோருமே வேணுமானாலும் டில்லிக்குப் போய்விடலாம்." "அத்திம்பேரே! நான் ஒரு யோசனை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்பீர்களா?" என்று சூரியா நயமாகக் கூறினான். "அது என்ன யோசனை? புதிதாக என்ன சொல்லப் போகிறாய்? சொல், கேட்கலாம்!" என்றார் துரைசாமி. "யோசனையைச் சொல்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். உங்கள் குமாரி சீதாவை முதன் முதலில் நான் ராஜம்பேட்டைச் சாலையில் சந்தித்தேன். வண்டி குடை சாய்ந்து அதன் பக்கத்திலிருந்த ஓடையில் விழுந்தாள். அவளைக் காப்பாற்றுவதற்காக ஓடினேன். ஆனால் ஓடையில் தண்ணீர் முழங்கால் ஆழந்தான் என்று தெரிந்ததும் ஏமாற்றமடைந்தேன். அதற்குப் பிறகு எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. தங்களுடைய தந்தியை மறைத்து வைத்து, சீதாவுக்கும் சௌந்தரராகவனுக்கும் கலியாணம் ஆவதற்கு நானே காரணமானேன்." "அதற்காக உன்னை நான் எத்தனையோ தடவை சபித்தாகிவிட்டது அப்புறம் சொல்!" என்றார் கிழவர். "அத்திம்பேரே! நல்ல எண்ணத்துடன் நான் அப்போது செய்த தவறுக்கு அப்புறம் பல தடவை பிராயச்சித்தம் செய்து விடவில்லையா? கைத் துப்பாக்கியினால் சுட்டுக் கொள்ளப் போனவளை நான் தடுத்துக் காப்பாற்றவில்லையா?" "காப்பாற்றினாய்; ஆனால் அதற்குப் பிறகு என்ன ஆயிற்று? உன்னால் அவள் எத்தனை கஷ்டங்களுக்கு உள்ளானாள்? நான் மட்டும் உங்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிராவிடில் அவளுடைய கதி என்ன ஆகியிருக்கும்?"
"அதுவும் போனால் போகட்டும், சேனாப் நதியின் பயங்கரமான வெள்ளத்தில் அவள் முழுகிச் சாகாமல் நான் காப்பாற்றவில்லையா? அவளைக் கரையேற்றிக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு உங்களையும் காப்பாற்றுவதற்கு வந்தேன். நீங்கள் என்னை அமுக்கிக் கொன்று விடப் பார்த்தீர்கள். கடவுள் அருளால், - இல்லை, அல்லாவின் அருளால், இருவரும் பிழைத்தோம். உங்களை முஸ்லிம் என்று எண்ணிக் கொண்டு அக்கரையிலிருந்து ஒரு முஸ்லிம் படகுக்காரன் வந்து காப்பாற்றினான். பிறகு அவனிடமிருந்து நாம் தப்பிப் பிழைத்தபாடு தெய்வம் அறிந்து போயிற்று." "உனக்கென்ன பைத்தியமா, சூரியா! அந்தப் பயங்கர அநுபவங்களையெல்லாம் எதற்காக மறுபடியும் ஞாபகப்படுத்துகிறாய்?" "எதற்காகவென்றால், சீதாவின் பேரில் எனக்குள்ள உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்காகத்தான். நீங்கள் அவளைப் பெற்று வளர்த்தீர்கள். நான் அவளை இரண்டு தடவை யமதர்மனின் கையிலிருந்து விடுதலை செய்தேன். இப்போதுள்ள சீதாவின் உயிர் பழைய உயிர் அல்ல. நான் அவளுக்குக் கொடுத்த புதிய உயிர். ஆகையால் ராகவனுக்கு இப்போது சீதாவின் பேரில் எந்தவித பாத்தியதையும் இல்லை. நீங்கள் இதை ஒப்புக் கொண்டால் நாம் இருவரும் ராகவனிடம் நேரில் சென்று சீதாவுக்கு விவாக விடுதலை கொடுத்து விடும்படி வற்புறுத்துவோம்!....." "அவன் விடுதலை கொடுத்துவிட்டால்?...." என்று துரைசாமி ஐயர் கேட்டார். அவருடைய முகம் கோபத்தினால் சிவந்திருந்தது. "தாங்களே ஊகித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன். சொல்ல வேண்டும் என்றால் சொல்கிறேன். விவாகப் பிரிவினை ஆனபிறகு நானே சீதாவை மணம் செய்து கொள்ளுகிறேன். கலியாணம் செய்துகொண்டு அவளை காஷ்மீருக்கு அழைத்துப் போகிறேன். இல்லாவிட்டால் நோபாளத்திற்கு அழைத்துப் போகிறேன். புதிய இடங்களைப் பார்த்துப் புதிய மனிதர்களுடன் பழகினால் சீதாவின் சித்தப்பிரமை நீங்கிவிடும். அத்திம்பேரே! உங்கள் குமாரியைக் கடைசி வரை காப்பாற்றுவதாகச் சத்தியம் செய்து கொடுக்கிறேன்."
துரைசாமி ஐயரின் பக்கத்தில் ஒரு கைத்துப்பாக்கி கிடந்தது. அதை அவர் எடுத்துக் கொண்டார்; சூரியாவை நோக்கிக் குறிபார்த்தார். "சூரியா! முன்னொரு தடவை இந்தத் துப்பாக்கி குறி தவறிவிட்டது. இரண்டாவது தடவை நிச்சயமாய்க் குறி தப்பாது. சீதாவைப்பற்றி இப்படி மறுபடியும் ஒரு தடவை பேசினாயோ உன்னைக் கட்டாயம் சுட்டுக் கொன்று விடுவேன்!" என்றார். சூரியா சற்று நேரம் தலைகுனிந்த வண்ணமிருந்தான்; பிறகு நிமிர்ந்து பார்த்தான். "அத்திம்பேரே! எனக்கு நிச்சயமாகப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது, இல்லாவிட்டால் இப்படி நான் உளறியிருக்க மாட்டேன்" என்றான். "பைத்தியம் பிடித்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கிறாயல்லவா? அதனால் புத்தி தெளிவு இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது என்று ஏற்படுகிறது; போகட்டும். நீ இப்போது உளறியதை நானும் மறந்து விடுகிறேன்; நீயும் மறந்து விடு! டில்லிக்குப் புறப்படுவதற்கு யத்தனம் செய்!" "டில்லிக்குப் போக வேண்டியதுதான், ஆனால் இங்கேயுள்ள அகதிகளை விட்டுப் போக வேண்டுமே என்று வருத்தமாயிருக்கிறது. அத்திம்பேரே! பத்து வருஷ காலமாகச் 'சுதந்திரம்! சுதந்திரம்!' என்று அலறிக் கொண்டிருந்தேன். சுதந்திரம் என்னமோ வந்து விட்டது. ஆனால் அந்தச் சுதந்திரம் இவ்வளவு கசப்பு மருந்தாக இருக்குமென்று கனவிலும் கருதவில்லை!" என்றான் சூரியா. "மருந்து என்றால் கசப்பாகத்தானிருக்கும். அதற்குப் பயப்பட்டு என்ன செய்கிறது?" என்றார் கிழவர். துரைசாமி ஐயர் இன்னும் துப்பாக்கியைக் கையிலே வைத்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் சீதா அங்கு வந்தாள். சூரியாவைப் பார்த்ததும் அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது.
அதற்குள் அவளுடைய பார்வை தன் தந்தையின் கையில் வைத்திருந்த துப்பாக்கியின் பேரில் சென்றது. துரைசாமி ஐயரைச் சீதா துயர முகத்துடன் உற்றுப் பார்த்தாள். அவளுடைய கண்களிலிருந்து சலசலவென்று கண்ணீர் பொழிந்தது. துரைசாமி ஐயரின் கையிலிருந்து கைத்துப்பாக்கி நழுவி விழுந்தது. அதை எடுத்துச் சீதாவின் கையில் கொடுத்துச் சமிக்ஞையினால் அதைத் தூர எறிந்து விடும்படி சொன்னார். பிறகு சூரியாவைப் பார்த்து, "சூரியா! சூரியா!" உன் அத்தங் காளுக்கு மயக்கம் வந்துவிடப் போகிறது. காந்தி மகாத்மாவைப் பார்க்க அவளை டில்லிக்கு அழைத்துக்கொண்டு போவதாகச் சொல்!" என்றார். சூரியா மகாத்மா காந்தியின் படத்தைச் சுட்டிக் காட்டி, அவரைப் பார்ப்பதற்குச் சீதாவை அழைத்துக் கொண்டு போவதாக ஜாடையினால் தெரியப்படுத்தினான். சீதா தந்தையின் முகத்தைப் பார்த்தாள். அவரும் 'சரிதான்' என்று சமிக்ஞை செய்தார். உடனே சீதாவின் கண்ணீர் நின்றது. அவள் முகம் பிரகாசம் அடைந்தது. அவளுடைய கண்களில் ஒரு புதிய ஒளி பிறந்தது. பேதைப் பெண்ணே! வாழ்க்கையில் உன்னுடைய கடைசி மனோரதமாவது நிறைவேறப் போகிறதா? பிறந்ததிலிருந்து கஷ்டமும் நஷ்டமும் உன்னுடைய ஜாதக ரீதியாக இருக்கும் போது நீ விரும்பும் அந்த மகா பாக்கியம் மட்டும் உனக்கு எப்படிக் கிட்டும்?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்தாறாம் அத்தியாயம்

ஜனவரி 31ம் தேதி

சீதாவின் துர்ப்பாக்கியமானது அவளுடைய கடைசி மனோரதம் நிறைவேறுவதற்கும் குறுக்கிடவே செய்தது. அவர்கள் இரண்டு மூன்று நாளைக்கெல்லாம் பிரயாண வசதி செய்து கொண்டு டில்லிக்குப் புறப்படுவது என்று தீர்மானித்திருந்தார்கள். ஆனால், அதற்குள்ளே, அதாவது ஜனவரி மாதம் 30ம் தேதி மாலையில், பேரிடி போன்ற செய்தி ரேடியோவின் மூலம் உலக மெல்லாம் பரவியதுபோலப் பானிபத் பட்டணத்துக்கும் வந்துவிட்டது. முதலில் யாருக்குமே அந்தச் செய்தியில் நம்பிக்கை பிறக்கவில்லை. 'உண்மைதானா, உண்மைதானா?' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். "மகாத்மாவையாவது, மனிதனாகப் பிறந்த ஒருவன் சுடவாவது?" என்றார்கள். ரேடியோவில் நேரில் கேட்டவர்கள்கூட அதில் ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி இருக்கலாம் என்று சந்தேகித்தார்கள். பாகிஸ்தான் ரேடியோ டில்லி ரேடியோவைப் போல் பாசாங்கு செய்து ஏமாற்றி அந்தப் பயங்கரமான செய்தியை விஷமத்துக்காகப் பரப்பியிருக்கிறது என்று எண்ணினார்கள். இன்னும் சிலர் டில்லி நகரில் உள்ள முஸ்லிம்கள் டில்லி ரேடியோவைக் கைப்பற்றி அவ்விதம் பொய்ச் செய்தியை வெளியிடுவதாகச் சந்தேகித்தார்கள். வேறு சிலர், "அப்படியே மகாத்மாவை ஒரு பாதகன் சுட்டிருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் அந்த மகானுடைய உயிர் பிரிந்திருக்குமா? ஏதோ அவசரப்பட்டுச் செய்தி சொல்லிவிட்டார்கள். 'பிழைத்து விட்டார்' என்ற சந்தோஷச் செய்தி சீக்கிரத்தில் வந்து விடும்!" என்று நினைத்தார்கள். இரவு 8-30க்கு எல்லாச் சந்தேகமும் தீர்ந்துவிட்டது. பண்டித ஜவஹர்லால்ஜியும், சர்தார் படேலும் அவர்களுடைய சொந்தக் குரலில் தெள்ளத் தெளிய பேசிய பிறகு, தொண்டை அடைக்க விம்மிக் கொண்டே மகாத்மா கொல்லப்பட்ட செய்தியைச் சொன்ன பிறகு, வேறு சந்தேகம் என்ன இருக்க முடியும்?
அகதி முகாமில் அந்தக் கொடூரமான செய்தியைக் கேட்ட சூரியா தன்னுடைய சொந்த ஜாகைக்கு ஓடினான். துரைசாமி ஐயர் அச்சமயம் சீதாவை மூர்ச்சை தெளிவிக்க முயன்று கொண்டிருந்தார். சுமார் ஐந்தரை மணிக்குச் சீதா 'வீல்' என்று கத்திவிட்டு உணர்வை இழந்து ஢ழுந்ததாகத் துரைசாமி ஐயர் சொன்னார். பிறகு சூரியா ரேடியோ மூலம் வந்த கொடிய செய்தியைத் தெரிவித்தான். அதனால் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மன வேதனை ஒருபுறமிருக்க சீதாவுக்குத் தெரிவிப்பதா வேண்டாமா என்றும் யோசிக்க வேண்டியதாயிற்று. தெரிவித்தால் அதனால் அவளுடைய இருதயம் பாதிக்கப் படலாம். ஆனால் தெரிவிக்காமலே இருந்து விட முடியுமா? வருங்காலத்தில் என்றென்றைக்கும் அவளுடைய மனம் வேதனைப்படாதா? அதைக் காட்டிலும் அவளை டில்லிக்கு அழைத்துப் போய் மகாத்மா காந்தியின் புனிதத் திருமேனியை யாவது தரிசனம் செய்து வைப்பது நல்லதல்லவா? கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சீதாவுக்கு உணர்வு வந்தது. வழக்கத்தைக் காட்டிலும் அவளுடைய ஆயாசமும் பிரமிப்பும் அதிகமாயிருந்தன. தான் இனி அதிகம் காலம் பிழைத்திருக்க முடியாது என்றும், ஆகையால் காந்திஜியைத் தரிசிக்க உடனே டில்லிக்குப் போகவேண்டும் என்றும் அவள் சமிக்ஞையினால் வற்புறுத்திச் சொன்னாள். இதன் பேரில் மற்ற இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். காலையில் சூரியா அவளை டில்லிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டியதுதான். சமயோசிதம் போல் காந்திஜியின் மரணத்தைப் பற்றி அவன் அவளுக்குத் தெரிவிக்க வேண்டியது. அல்லது அவளே பார்த்துத் தெரிந்து கொள்ளும்படி விட்டுவிட வேண்டியது. அந்தச் சந்தர்ப்பத்தில் டில்லிப் பிரயாணம் போய் வருவதற்கு வேண்டிய தெம்பு துரைசாமி ஐயருக்கு இல்லையாதலால் அவர் வரவில்லை என்று சொல்லிவிட்டார். சீதாவைப் பத்திரமாக அழைத்துக்கொண்டு போய் ஜாக்கிரதையாகத் திரும்பி வரும்படி ஆயிரந்தடவை சூரியாவுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
சீதாவின் வாழ்க்கையில் மறுபடியும் ஒரு தடவை கனவில் நடப்பவை போன்ற சம்பவங்கள் நடந்தன. பானிபத்தி லிருந்து டில்லிக்குப் போகும் சாலையில் அன்று போன ஜனக் கூட்டத்தைப் பார்த்ததும் அவளுக்கு ஏதேதோ சந்தேகங்கள் உதித்தன. சூரியாவோ அவளுடைய கேள்வி ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் தலையை அசைத்துக் கொண்டு வந்தான். கடைசியாக, அவர்கள் டில்லியை அடைந்தார்கள். பழைய டில்லியிலிருந்து ஒரு பெரிய ஜன சமுத்திரம் புதுடில்லியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார்கள். கனவில் நடப்பவளைப் போல் நடந்து சீதாவும் சென்றாள். கூட்டத்தில் தவறிப் போய் விடாமல் சூரியா கண்ணுங் கருத்துமாக அவளைத் தொடர்ந்து போய்க்கொண்டி ருந்தான். அவனுடைய நெஞ்சை ஒரு பெரிய பாரம் அமுக்கிக் கொண்டிருந்தது. சீதாவுக்குச் செய்தியைச் சொல்லும் தைரியம் இன்னமும் அவனுக்கு வரவில்லை. இனிமேல் சொல்லவேண்டிய அவசியமும் கிடையாது. சிறிது நேரத்துக்கெல்லாம் சீதாவே காந்தி மகாத்மாவின் திருமேனியைப் பார்த்துத் தெரிந்து கொள்வாள். ஆனால் அவ்விதம் பார்த்த உடனே அவளுக்கு ஏதாவது நேராமல் இருக்க வேண்டுமே? இத்தனை கூட்டத்துக்கு மத்தியில் அவள் உணர்விழந்து விழாமல் இருக்கவேண்டுமே?...... சூரியாவும் சீதாவும் போய்ச் சேர்ந்த சமயம், மகாத்மா திருமேனியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகும் சமயமாயிருந்தது. எப்படியோ படாதபாடுபட்டு அந்த ஜன சமுத்திரத்துக்குள் இடித்துப் புடைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் காந்தி மகாத்மாவின் திருமுகத்தைப் பார்க்கக்கூடிய சமீபத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஏதோ ஒரு மகத்தான முக்கியமான சம்பவத்தை தெரிந்து கொள்ளப் போகிறோம் என்ற பரபரப்போடு சீதாவும் கூட்டத்துக்குள் புகுந்து விரைந்து சென்றாள். புஷ்பங்களைக் கொட்டி அலங்கரித் திருந்த மோட்டார் ரதத்தில் மகாத்மாவின் திருமேனி கிடந்த நிலையையும் அவருடைய திருமுகத்தின் தோற்றத்தையும் பக்கத்தில் மாபெரும் தலைவர்கள் உட்கார்ந்திருந்த காட்சியையும் சுற்றிலும் நின்ற மக்கள் கூட்டத்தின் சோக முகங் களையும் கண்ணீரையும் கம்பலையையும் பார்த்ததும் சீதாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது.
லட்சக்கணக்கான ஜனங்கள் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தில் காது செவிடுபடும்படியான ஓலம் எழுந்துகொண் டிருந்தது. சீதாவின் காதில் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த அலை ஓசையானது ஜனசமுத்திரத்தின் இரைச்சலோடு ஒன்றாகக் கலந்தது. காந்திஜியின் நிலை இன்னதென்று அறிந்ததும் அவளுடைய நெஞ்சு விம்மி எழுந்து தொண்டையை அடைத்தது. பின் கழுத்துக்கு மேலே இரு செவிகளுக்கும் மத்தியில் ஏதோ ஒரு நரம்பு, வீணையின் மந்திரத் தந்தி அறுந்தாற்போல், படீரென்று வெடித்து அறுந்தது. அந்த ஓசை மேற்கூறிய இருவகைப்பட்ட அலை ஓசையையும் பிளந்து கொண்டு சென்று அவளுடைய மண்டைக்குள்ளேயே பாய்ந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் பிரமிப்பு நீங்கி மனம் தெளிவுற்றது, சிந்தனா சக்தி திரும்ப வந்தது. ஆகா! இந்த மகா புருஷரைத் தரிசிக்கும் சந்தர்ப்பம் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ தடவை நெருங்கியிருந்தும் பல காரணங்களினால் அப்போதெல்லாம் தவறிப் போய்விட்டது. அவருடைய உயிர் பிரிந்த பிறகு நடக்கும் இறுதி ஊர்வலத்தின் போதுதானா காந்திஜியின் திருமேனியைப் பார்க்கும்படி நேரவேண்டும்? எத்தனை தடவை மகாத்மாவின் ஆசிரமத்துக்கே போய்விட வேண்டும் என்றும், அவருடைய தொண்டுக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துவிடவேண்டும் என்றும் எண்ணியிருப்பாள்? தன் உடம்பில் அணிந்துள்ள ஆபரணங்களையெல்லாம் அவரிடம் கழற்றிக் கொடுத்துவிடவேண்டும் என்று எவ்வளவு முறை ஆசைப்பட்டிருப்பாள்? அந்த ஆசையெல்லாம் இனிமேல் நிறைவேறப் போவதில்லை. சீதா! நீ இந்த உலகத்தில் எதற்காகப் பிறந்தாய்? உன்னுடைய உள்ளத்தின் ஆசை ஒவ்வொன்றும் இவ்விதம் அவலமாகப் போவதற்குத்தானா பிறந்தாய்? உற்றார் உறவினருக்குக் கஷ்டம் கொடுப்பதற்காகவேயா பிறந்தாய்? காந்தி மகாத்மாவிடம் பாவியாகிய நீ பக்தி வைத்திருந்தாயே? அது காரணமாகவே இவருடைய முடிவு இப்படி ஆயிற்றோ? நூற்றிருபத்தைந்து வயது வாழ்வேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாரே? அவரை உயிரோடு நீ தரிசிக்கக் கூடாது என்பதற்காகவே போய் விட்டாரோ?....
இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே சீதா ஊர்வலத்தோடு போய்க்கொண்டிருந்தாள். சில சமயம் ஜனக் கூட்டத்தின் நெருக்கமும் அவளை அந்தப் புஷ்ப ரதத்துக்கு வெகுதூரத்துக்கு அப்பால் கொண்டு வந்து தள்ளிவிடும். மறுபடியும் அவள் முண்டியடித்துக் கொண்டு புஷ்பரதம் போகும் இடத்தை நோக்கி நெருங்கிச் செல்வாள். காந்திஜியின் திருமேனியை, அவருடைய திருக்கரத்தை, அல்லது பாதகமலத்தைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் அடக்க முடியாமல் எழுந்தது. இது காரணமாகவே அவள் புஷ்ப ரதத்தை நெருங்குவதற்கு அவ்வளவு பெருமுயற்சி செய்தாள். இதற்கிடையில் சூரியா அவளைப் பிரிந்துவிடும்படி நேர்ந்தது. காந்திமகானைப் பார்த்த பிறகு சூரியாவைப் பற்றிச் சீதா ஒரு கணமும் நினைக்கவில்லை. சூரியாவோ அவளைப் பிரிந்ததினால் ஏற்பட்ட பீதியுடனும் எப்படியாவது அவளைத் திரும்பக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்துடனும் கூட்டத்தில் அங்குமிங்கும் இடித்துப் பிடித்துக் கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தான். கடைசியாக, பிற்பகல் சுமார் நாலுமணிக்கு யமுனை நதிக்கரைக்கு வந்து ஊர்வலம் முடிவடைந்தது. சிதையும் அடுக்கப்பட்டது, இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. அப்போது அங்கே திரண்டிருந்த ஜன சமுத்திரத்தின் வெளி வரம்புக்குச் சீதா வந்து விட்டாள். அவளால் எவ்வளவோ முயன்றும் கூட்டத்தைப் பிளந்துகொண்டு உள்ளே போக முடியவில்லை. சிதையில் நெருப்பு வைத்தாகிவிட்டது! செந்தழலின் கொழுந்து அதோ கிளம்பி வானை எட்டப் பார்த்தது. ஏழு கடல்களும் கொந்தளித்தாற் போன்ற ஒரு பெரும் ஓலக்குரல் அப்பெருங் கூட்டத்தில் எழுந்தது. அதற்குமேல் சீதாவினால் அங்கே நிற்க முடியவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது, தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது; உலகமே முடிந்து விட்டது. தன்னுடைய ஆசைகள் மனோரதங்கள் எல்லாம் எரிந்து பொசுங்கிப் பஸ்மீகரமாகிப் பிடி சாம்பலாய் மாறிவிட்டன; இனி அங்கே நின்று கொண்டிருப்பதில் என்ன பயன்?
சீதா திரும்பிச் சென்றாள்; எங்கே செல்வது என்று தெரியாமல் கால்போன வழியே அவளும் போய்க்கொண்டிருந்தாள். அப்போதும் சூரியாவின் ஞாபகம் அவளுக்கு வரவில்லை. வேறு எந்த ஞாபகமும் அவளுக்கு வரவில்லை. உலகத்துக்கு ஒளி தந்த ஜோதி மறைந்துவிட்டது. இனி என்றைக்கும் இந்த உலகத்தில் காரிருள் சூழ்ந்திருக்கும் என்ற ஒரே எண்ணம் அவள் மனதில் குடிகொண்டிருந்தது. வாழ்க்கையில் இத்தனை துன்பங்களை அனுபவித்த பிறகும் யாரிடம் அடைக்கலம் புகுந்து யாருக்குத் தொண்டு செய்வதன்மூலம் தன்னுடைய வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்யலாம் என்று இதய அந்தரங்கத்தில் அவள் நம்பிக் கொண்டிருந்தாளோ, அந்த மகான் போய் விட்டார் என்ற நினைவு ஒன்றே மேலோங்கியிருந்தது. இனிமேல் அவள் எங்கே போனால் என்ன? என்ன செய்தால் என்ன? வருகிற யமன் வந்தே தீருவான்! வரட்டும்! அதைப் பற்றி என்ன கவலை? யாரைப் பற்றித்தான் கவலைப்படவேண்டும்? குழந்தை வஸந்தி! ஆம், அவளைப் பற்றி என்ன! அவள் உயிரோடிருக் கிறாளா? இருந்தால் அவளை யார் காப்பாற்றுவார்கள்? ஏன்? கடவுள் காப்பாற்றுகிறார். கடவுள்! கடவுள் என்று ஒருவர் இருந்தால் உலகத்தில் இத்தனை கொடுமைகளையும் துன்பங்களையும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டிருப்பவர் கடவுள் ஆவாரா? அவரைக் கடவுள் என்று சொல்ல முடியுமா? ஆனால் காந்திஜி அத்தகைய கருணைக் கடலான கடவுளைப் பற்றி ஓயாது சொல்லிக்கொண்டிருந்தது ஏன்? அந்த மகானுடைய நம்பிக்கைக்கு ஆதாரம் இல்லாமலா இருக்கும்! இப்படி எண்ணிக்கொண்டே நடந்து, நடந்து, நடந்து, சீதா போய்க் கொண்டிருந்தாள். எங்கே போகிறோம் என்று தெரியாமல் நடந்து போய்க் கொண்டிருந்தாள். கடைசியாக ஓரிடத்துக்கு வந்ததும் கால் ரொம்ப வலிக்கிறதென்று தெரிந்தது. உடம்பு தள்ளாடிற்று; காலையிலிருந்து உணவு இல்லையல்லவா? ஒரு பங்களாவின் வெளி மதில் சுவரைப் பிடித்துக் கொண்டு நின்றாள். வீட்டுக்குள்ளேயிருந்து கீதம் ஒன்று கேட்டது. வானொலியின் மூலம் வந்த கீதம்? உள்ளத்தை உருக்கிக் கண்ணீர் வருவிக்கும் கீதம்! உடலையும் உயிரையும் நெகிழச் செய்யும் கீதம்!
"ஹரி! தும் ஹரே ஜனஜீ பீரு!" ("ஹரீ! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக!") ஆகா! இது என்ன? நமக்குக் காது கேட்கிறதே! பாட்டுக் கேட்க முடிகிறதே! அமுத வெள்ளத்தைப்போல் காதில் பாய்கிறதே! இத்தனை நாள் கேட்ட அலை ஓசை எங்கே போயிற்று? அந்த இடைவிடாத பயங்கரச் சத்தம் எப்படி மறைந்தது? காந்தி அடிகளே! கருணாநிதியே! தங்களுடைய மரணத்திலே எனக்கு வாழ்வு அளித்தீர்களோ! காந்தி மகானுக்கு மிகவும் பிரியமான அந்த மீரா கீதத்தை, அவருடைய திருமேனி எரிந்து கொண்டிருந்த சமயத்தில், வானொலி நிலையத்தார் ஒலிபரப்பினார்கள். பாட்டு மேலும் சீதாவின் காதில் கேட்டது:- "ஹரி! மக்களின் துன்பத்தை நீ போக்குவாயாக! "நீ முன்னம் துரோபதையின் ஆடையை வளர்த்து அவள் மானத்தைக் காக்கவில்லையா? "பாலன் பிரஹ்லாதனுக்குக் கருணை புரிந்து காப்பாற்றவில்லையா? "கிழவனாகிய கஜ ராஜனுடைய மரண பயத்தைப் போக்கி அருள்புரியவில்லையா? "துன்பம் எங்கெங்கே இருக்கிறதோ அங்கெல்லாம் எழுந்தருளியிருப்பவன் அல்லவா நீ? "ஹரி! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக!" பாட்டைக் கேட்டுக்கொண்டு சீதா மெய்மறந்து நின்றாள் பாட்டு நின்றது. நாலா பக்கமும் மோட்டார் ஹாரன்கள் அலறும் ஓசை கேட்டது; மற்றும் பல சத்தங்கள் கேட்டன. சுற்றுமுற்றும் பார்த்தாள் நன்றாக இருட்டிவிட்டது. பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனி மூடிய மரங்கள் சோகமே உருவாகக் காட்சி அளித்தன. ஜனங்கள் காந்திஜி காலமான சம்பவத்தைக் குறித்துப் பற்பல பாஷைகளில் பேசிக்கொண்டு சாலையோடு போய்க்கொண்டிருந்தார்கள். சுற்றுமுற்றும் சீதா பார்த்தபோது, தான் பிடித்துக் கொண்டு நின்ற மதில் சுவரையும் கவனிக்க நேர்ந்தது. ஆகா! இது என்ன? இது யாருடைய வீடு? நம்முடைய வீடு போலிருக்கிறதே! நாம் பல வருஷ காலம் நமக்குச் சொந்தம் என்று எண்ணி வாழ்ந்த வீடுதான் இது! இந்த வீட்டில் இப்போது யார் இருப்பார்கள்? ஏன் அவர்தான் இருக்க வேண்டும். அவர்தான் ரேடியோ கேட்கிறார் போலிருக்கிறது. கடவுளே நம்மை இந்த இடத்தில் கொண்டுவந்து விட்டிருக்கிறார். உள்ளே போய் ஏன் அவரைப் பார்க்கக்கூடாது? "போனதெல்லாம் போகட்டும்; இனிப் புதிய வாழ்வு தொடங்குவோம்!" என்று ஏன் சொல்லக்கூடாது? இதையெல்லாம் அவரிடம் என்னால் சொல்ல முடியுமா? காது கேட்கச் செய்த பகவான் பேசும் சக்தியையும் கொடுத்துத்தான் இருப்பார் அல்லவா?- சீதாவின் நாக்கு முன்னெல்லாம் போல் நன்றாகப் புரண்டது போலத் தோன்றியது. நன்றாகப் பேச முடியும் என்று தோன்றியது! மதில் சுவரின் வாசல் திறந்துதான் இருந்தது. சீதா உள்ளம் நடுங்க, கால் தள்ளாட, அந்தப் பங்களாத் தோட்டத்துக்குள்ளே பிரவேசித்தாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்தேழாம் அத்தியாயம்

ராகவனும் தாரிணியும்

,dd>தோட்டத்துக்குள் பிரவேசித்த சீதா தயங்கித் தயங்கி நடந்து வீட்டு வாசற்படியோரமாக வந்து நின்றாள். உள்ளேயிருந்து கீதம் வருவது நின்று விட்டது. ரேடியோவில் யாரோ பேசுவது கேட்டது. வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. ஆயினும் உட்புறம் தாளிடவில்லையென்று தெரிந்தது. வீட்டுக்குள்ளே அவர்தான் இருக்கிறார்; சந்தேகமில்லை. வாசலில் வேலைக்காரன் யாரும் இல்லை. திடீரென்று கதவைத் திறந்துகொண்டு உள்ளே போய் நின்றால் அவர் என்ன நினைப்பார்? திடுக்கிட்டுப் போவாரோ, என்னமோ? அவர் பேச்சு தன் காதில் விழும். ஆனால் அவருடன் பேசுவதற்குத் தனக்குத் தைரியம் வருமா? பேசும் சக்தி நாக்குக்கு இருக்குமா? நாக்குப் புரண்டாலும், தொண்டை அடைத்துக்கொண்டு விடாதா? இவ்விதம் எண்ணிச் சீதா வீட்டு வாசற்படியில் தயங்கிக் கொண்டு நின்றபோது, இன்னும் யாரோ வெளி மதில் கேட்டின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. தன்னுடைய செவிப்புலனின் சக்தி முன்னைக் காட்டிலும் எவ்வளவு அதிக கூரியதாயிருக்கிறது என்பதைச் சீதா நினைத்து வியந்தாள். ஆனால் வியப்பைத் தொடர்ந்து பயம் வந்தது. யார் வருகிறார்களோ, என்னமோ? தன்னைக் கண்டதும் என்ன சொல்வார்களோ, என்னமோ? - வாசற்படியிலிருந்து உடனே சென்று வீட்டுச் சுவருக்கு அப்பால் மறைந்துகொண்டு நின்றாள். வருகிறது யார் என்பதை உன்னிப்பாகக் கவனித்தாள். வந்தவள் - ஆம், வந்தவள் ஸ்திரீதான், - தலையோடு கால் வரையில் மூடிய முஸ்லிம் பர்தா உடை தரித்துக்கொண்டு வந்தாள். இரண்டு கண்களினாலும் பார்ப்பதற்கு மட்டும் அந்த உடையில் இரண்டு துவாரங்கள் இருந்தன. ஐயோ! இவள் யார்? எதற்காக இந்த நேரத்தில் இங்கே வருகிறாள்? கடவுளே! இந்த வீட்டில் இப்போது யாரோ முஸ்லிம் இருக்கிறார்கள் போலிருக்கிறது. தெரியாத்தனமாகவல்லவா இங்கே வந்துவிட்டோ ம்? நல்ல வேளை, வீட்டுக்குள்ளே நுழையாமல் தப்பினோம். இந்த ஸ்திரீ வீட்டுக்குள்ளே பிரவேசித்ததும் நாம் தப்பி ஓடிப்போய் விட வேண்டும்! தப்பி எங்கே ஓடுவது? எங்கே? எங்கே? யமுனைக்கரைக்கா? காந்தி மகாத்மாவினுடைய புனிதத் திருமேனி இன்னும் அங்கே எரிந்து கொண்டிருக்குமா? அல்லது எரிந்து அடங்கிச் சாம்பலாகியிருக்குமா? அத்தனை கூட்டமும் இதற்குள் கலைந்து போயிருக்குமா? நாம் தனியாக அவ்விடத்தில் பக்கத்திலே சென்று நின்று அவருடைய திருமேனியின் சாம்பலையாவது தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ளலாமா?.......

,dd>அந்த முஸ்லிம் பர்தா ஸ்திரீ மெள்ள மெள்ளச் சத்தம் கேட்காதபடி அடி எடுத்து வைத்து நடந்து, வீட்டு வாசற்படிக் கருகில் வந்தாள். சீதாவைப் போலவே அவளும் சிறிது நேரம் தயங்கினாள். எதற்காகத் தயங்குகிறாள்? இவள் இந்த வீட்டுக்கு உரியவளானால் ஏன் தயங்கி நிற்க வேண்டும்? அந்த ஸ்திரீ படிகளில் ஏறித் தாழ்வாரத்தில் நின்றாள். மறுபடியும் தயக்கத்துடன் நடந்து சென்று வீட்டின் வாசற் கதவை நெருங்கி விரல்களின் பின் கணுக்களினால் கதவைத் தட்டினாள். 'டண், டண்' என்று கதவில் விரல் கணுக்கள் தட்டிய சத்தம் சீதாவின் காதில் நன்றாகக் கேட்டது. அதிசயம் அதிசயம்! கேட்கும் சக்தி எவ்வளவு கூர்மையாகியிருக்கிறது! காந்தி மகாத்மாவினுடைய அருள்தான் இது! வீட்டுக்குள்ளே யிருந்து ஆங்கில பாஷையில் "கெடின்!" (உள்ளே வருக) என்ற குரல் வந்தது. அந்தக் குரலைக் கேட்டதும் சீதாவின் தேகம் சிலிர்த்தது. பன்னிரண்டு வருஷத்துக்கு மேலே அந்தக் குரல் அவளுக்கு எல்லையற்ற இன்பத்தையும் எல்லையற்ற துன்பத்தையும் அளித்திருக்கிறது. சொல்ல முடியாத ஆர்வத்தை அந்தக் குரல் அவள் மனதில் எழுப்பிவிட்ட காலம் உண்டு. அளவில்லாத வெறுப்பையும் கோபத்தையும் எழுப்பிய நாட்களும் உண்டு. அவர்தான்: தன்னைக் கைப்பிடித்து மணந்து கொண்ட மன்னர்தான்; தன் கழுத்தில் தாலி கட்டித் தாரமாக்கிக் கொண்ட மணவாளர்தான். வீட்டுக்குள்ளே இருப்பவர் அவர்தான். இந்தப் பர்தா அணிந்த ஸ்திரீக்கு அவரிடம் என்ன வேலை? இவள் யார்? இவளை முன்னாலே அவருக்குத் தெரியுமா? இன்றைக்கு இவள் வருவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரா? அதிலும் காந்தி மகாத்மாவின் உடல் தீக்கிரையான இந்தப் புண்ணிய தினத்திலா? இவளால் அவருக்கு ஏதேனும் தீங்கு வருவதாயின் அதைத் தான் தடுக்க வேண்டாமா?...... இப்படி ஆயிரம் எண்ணங்கள் சீதாவின் மனதில் உதித்தன.

,dd>அந்தப் பர்தா ஸ்திரீ கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனதைச் சீதா பார்த்தாள். தானும் உள்ளே போகவேண்டும், போய் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்ற அதிதீவிரமான ஆவல் சீதாவைப் பற்றிக் கொண்டது. அவளுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அந்த ஆவல் தோன்றி அவளைச் சித்திரவதை செய்தது. சீதா பல்லைக் கடித்துக் கொண்டு யோசனை செய்தாள். வாசற்புறமாக அவளும் போவதில் பயனில்லை. உள்ளே நுழைந்ததும் இருக்கும் பெரிய அறையிலேதான் ரேடியோ இருக்கிறது. அங்கேதான் அவரும் உட்கார்ந்திருக்கிறார். தான் வாசற் பக்கமாகப் போனால் உடனே பார்த்து விடுவார். தெரிந்து கொள்ள விரும்பிய விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியாமற் போகலாம். கொல்லைப் புறமாகப் போனால் என்ன? கதவு திறந்திருந்தால் மிக்க சௌகரியம். யாருக்கும் தெரியாமல் பக்கத்து அறைக்குப் போய் நின்று அவளுடைய பேச்சைக் கேட்கலாம். அந்த ஸ்திரீயை இன்னார் என்பதாகவும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். கொல்லைக் கதவு தாளிட்டிருந்தால் படுக்கையறையின் ஜன்னல் ஓரத்தில் நின்று அவர்களுடைய சம்பாஷணையைக் கேட்கலாம். அதிலிருந்து ஒருவாறு நிலைமை இன்னதென்று தெரிந்துகொள்ளலாம்..... சீதாவின் கால்கள் அவளை வீட்டின் பின் பக்கத்துக்கு இழுத்துச் சென்றன. பின் பக்கத்துக் கதவு தாளிடவில்லை தொட்டதும் அக்கதவு திறந்து கொண்டது. 'கிறீச்' சத்தம்கூடப் போடவில்லை. அடிமேல் அடி வைத்து மெள்ள மெள்ள நடந்து சீதா உள்ளே சென்றாள். ரேடியோ வைத்திருந்த முக்கிய அறைக்குப் பக்கத்து அறைக்குள் பிரவேசித்தாள். அந்த அறையிலிருந்து ரேடியோ அறைக்குள் போவதற்காக ஏற்பட்ட வாசற்படியின் பாதிக் கதவுகள் இலேசாகத் திறந்திருந்தன. அவசியமானால் அந்தக் கதவு இடுக்கு வழியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு இப்போது அவசியம் இல்லை. முதலில் பேச்சைக் கவனித்துத் தெரிந்து கொள்ளலாம். சீதாவின் கால்கள் தள்ளாடிக் கொண்டிருந்தன. சுவர் ஓரமாகக் கிடந்த சோபாவில் சத்தமின்றி உட்கார்ந்து கொண்டாள்.

,dd>"யார் நீ? இங்கே எதற்காக வந்தாய்? வேறு யார் வீடோ என்று நினைத்துக் கொண்டு வந்தாய் போலிருக்கிறது. போ! போ சீக்கிரம்! நான் இங்கே தனியாக இருக்கிறேன். வீட்டில் பெண் பிள்ளை யாரும் இல்லை! போ உடனே!" என்று ராகவனுடைய கடுமை மிக்க குரல் கூறியது. அவனுடைய குரலில் தொனித்த கடுமை சீதாவின் செவிகளுக்கு மிக இனிமையாயிருந்தது. "வீட்டில் பெண் பிள்ளை யாரும் இல்லை!" என்ற வார்த்தைகள் அவளுக்கு அளவில்லாத ஆனந்தத்தை அளித்தன. ஒரு நிமிஷம் மௌனம் குடிகொண்டிருந்தது. ரேடியோவை முன்னமேயே ராகவன் மூடியிருக்க வேண்டும். மறுபடியும் ராகவன் கடுங்குரலில் கூறினான்:- "ஏன் சும்மா நிற்கிறாய்? போகிறாயா? போலீஸைக் கூப்பிடட்டுமா? வேலைக் காரத் தடிப்பயல்கள் இரண்டு பேரும் போய்த் தொலைந்து விட்டார்கள். அவர்கள் வரட்டும் சொல்கிறேன் கதவைத் தாளிடாதது தப்பாய்ப் போயிற்று. பாகிஸ்தானிலிருந்து ஓடி வந்த அகதிச் சனியன்போல அல்லவா இருக்கிறது!....." இந்தச் சமயத்தில் ராகவனுடைய பேச்சுத் தடைப்பட்டது. "ராகவன்! மன்னிக்க வேண்டும்! உங்களுக்கு அதிக நேரம் தொந்தரவு கொடுப்பதாக உத்தேசமில்லை, சீக்கிரம் போய் விடுகிறேன்!" என்று ஒரு பெண்ணின் குரல் கூறியது. அந்தக் குரலைக் கேட்டதும் சீதாவின் உடம்பு முழுதும் மறுபடியும் ஒரு தடவை சிலிர்த்தது. அது தாரிணியின் குரல் தான். எழுந்து ஓடிப்போய், "அக்கா!" என்று அலறி அவளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. அந்த ஆசையை மிகவும் கஷ்டப்பட்டு அவள் அடக்கிக் கொண்டாள். ஆவலை அடக்கிக் கொள்வதற்கு மிக முக்கியமான காரணம் இருந்தது. தான் இருப்பது - தான் உயிரோடிருப்பது - தன் கணவருக்குத் தெரியவே கூடாது! அந்த மன உறுதியை நிறைவேற்றியே தீர வேண்டும். "தாரிணி! தாரிணி! நீயா இந்த வேஷத்தில் வந்திருக்கிறாய்? எதற்காக இந்த பயங்கரமான முகமூடி? உட்காரு, தாரிணி! உட்காரு! உன்னை நான் அப்படிப் போகச் சொல்லுவேனா? எத்தனை நாளாக உன்னைப் பார்க்க வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருக்கிறேன்! தயவு செய்து உட்காரு!" என்றான் ராகவன். "ஆகட்டும், ஐயா! எனக்கும் மிக்க களைப்பாயிருக்கிறது. நான் சொல்ல வந்ததை உட்கார்ந்தே சொல்லிவிடுகிறேன். அதிக நேரம் இவ்விடத்தில் இருக்க மாட்டேன். ஐந்து நிமிஷத்தில் சொல்லிவிட்டுப் போய் விடுகிறேன்!" என்றாள் தாரிணி.

,dd>"ஐந்து நிமிஷமா? ஐந்து நிமிஷத்தில் நீ போனால் நான் விட்டு விடுவேனா உன்னை?" என்றான் ராகவன். "சற்று முன்னால் 'வீட்டில் பெண்பிள்ளை யாரும் இல்லை! போ உடனே!" என்று சொன்னீர்களே?" "அது உனக்காகச் சொன்னேனா! யாரோ அகதிச் சனியனாக்கும் என்று நினைத்துக்கொண்டு சொன்னேன்." "நானும் ஒரு அகதிச் சனியன்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள். சீக்கிரத்தில் நான் போகவும் வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை வஸந்தி கவலைப்படத் தொடங்கி விடுவாள்...." "தாரிணி! வஸந்தி எங்கே? ஏன் இப்போதே அவளையும் அழைத்து வரவில்லை? குழந்தை சௌக்கியமா யிருக்கிறாளா?" "சௌக்கியமாயிருக்கிறாள் அவளைப் பற்றி உங்களுக்குச் சொல்வதற்காகவே இன்றைக்கு வந்தேன். எப்போது குழந்தையைக் கொண்டு வந்து விடும்படி சொல்கிறீர்களோ, அப்போது கொண்டு வந்து விட்டு விடுகிறேன்....." "கொண்டு வந்து விடுகிறேன் என்றா சொல்கிறாய்? சரி, கொண்டு வந்துவிடு! அந்தத் தாயில்லாக் குழந்தையை இந்தச் சூனியமான வீட்டில் அழைத்து வைத்துக்கொண்டு நான் திண்டாட வேண்டியதாயிருக்கும். அதனால் என்ன?" "ஐயா! தாயில்லாக் குழந்தை என்று ஏன் சொல்கிறீர்கள்? சீதாவைப் பற்றி நிச்சயமாக உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?" "தெரியும், தாரிணி! என்னைப் போன்ற அபாக்கியசாலி இந்த உலகத்தில் வேறு யாருமே இருக்க மாட்டார்கள். சீதா சேனா நதியில் முழுகி இறந்துவிட்டாளாமே. சூரியா நேரில் பார்த்தானாம்!" இந்தச் சமயத்தில் விம்முகிற சத்தம் கேட்டது. விம்முகிறது யார் என்று சீதாவுக்குத் தெரியவில்லை. ராகவனாகவும் இருக்கலாம்! தாரிணியாகவும் இருக்கலாம். உள்ளே பாய்ந்து ஓடிச் சென்று தான் உயிரோடு இருப்பதைத் தெரிவித்து விட்டால் என்ன? இல்லை, கூடவே கூடாது! சீதா பிடிவாதமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு எழுந்திராமல் உட்கார்ந்திருந்தாள். "சூரியா நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான் நம்பியிருக்க மாட்டேன், இன்னமும் தேடிக்கொண்டு தானிருப்பேன். ஹௌஷங்காபாத்தில் அவளையும் குழந்தையையும் தனியாக விட்டு விட்டு நான் இந்தப் பாழும் உத்தியோகத்துக்காக ஓடி வந்ததை நினைத்தால் எனக்கு நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அப்படித் திடீரென்று பேய் பிசாசுகளாவார்கள் என்று எனக்கு என்ன தெரியும்?...."

,dd>"ராகவன்! போனதை நினைத்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம். சீதா உண்மையில் பாக்கியசாலி; நதி வெள்ளத்தில் மூழ்கி இறந்து போய்விட்டாள். உயிரோடிருக்கும் நாம்தாம் துர்பாக்கியசாலிகள். உலகத்துக்கே ஓர் உத்தமராயிருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்தோம் கேட்டோ மல்லவா? இந்த மனவேதனையை அநுபவிக்காமல் போய்விட்டவள் அதிர்ஷ்டசாலிதானே!" "நேற்று இராத்திரி இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கும் அவளுடைய நினை வாகவே இருந்தது. சீதா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு துக்கப்பட்டிருப்பாள் என்று அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். சீதாவுக்கு மகாத்மாவிடம் ஒரு தனி பக்தி. அதிலும் நாங்கள் ஹௌஷங்க பாத்தில் ஒரு வருஷம் இருந்த காலத்தில் அவள் மகாத்மா காந்தியைப் தெய்வமாகவே நினைத்துப் பூஜை செய்து கொண்டிருந்தாள்....." சீதா புண்ணியம் செய்தவள், நான் போய் வருகிறேன் மிஸ்டர் ராகவன்! நாளைக் காலையில் தங்கள் குமாரியை அழைத்துக் கொண்டு வந்து தங்களிடம் விட்டு விடுகிறேன்." "இதென்ன சொல்லுகிறாய், தாரிணி! முன் பின் தெரியாதவர்கள் பேசுவது போலப் பேசுகிறாயே? எங்கே போக வேண்டும் என்கிறாய்? நீ எங்கே தங்கியிருக்கிறாய்? குழந்தையை எங்கே விட்டு விட்டு வந்திருக்கிறாய்? இரண்டு மாதத்துக்கு முன்னாலே சீதா பெயருக்கு நீ கடிதம் எழுதியிருந்தாயே? உன்னை நான் எதிர்பார்த்துக் கொண்டு தானிருந்தேன். இத்தனை காலமும் என்ன செய்தாய்? எங்கே இருந்தாய்?" என்று ராகவன் படபடவென்று பல கேள்விகளைக் கொட்டினான்.

,dd>அந்தக் கடிதம் எழுதிய அடியோடு இந்த ஊருக்கு வந்து விட்டேன். ஜும்மா மசூதிக்கும் அருகில் நானும் என் பெற்றோர்களும் முன்னொரு சமயம் வசித்த வீட்டுக்குப் போனேன். அன்றைக்கே அந்தப் பிரதேசத்தில் கலகம் தொடங்கி விட்டது. இரண்டு மாதமாக வீட்டை விட்டு வெளியே புறப்பட முடியவில்லை. குழந்தையை அழைத்து வரப் பயமாயிருக்கிறது. அதனாலே தான் இத்தனை நாள் தாமதம். இன்றைக்கு இந்த டில்லி நகர் முழுவதும் மகாத்மாவின் இறுதி ஊர்வலத்துக்குப் போய்விட்டது. நானும் தைரியமாகப் புறப்பட்டு வந்தேன்" என்றாள் தாரிணி. "இன்றைக்கு இந்த நகரத்தில் வெளியில் புறப்படாமல் வீட்டிலேயே இருந்தவன் நான் ஒருவன்தான் போலிருக்கிறது. இந்த வீட்டில் இருந்த வேலைக்காரர்கள்கூட மகாத்மா காந்தியின் கடைசி தரிசனத்துக்குப் போய்விட்டார்கள். நான் வீட்டிலேயே இருந்து ரேடியோ மூலம் எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதுவும் ஒரு விதத்தில் நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில் நீ இங்கே வந்து என்னைக் காணாமல் திரும்பிப் போயிருக்கலாமல்லவா?" "ஆமாம்; நீங்கள் வீட்டில் இருந்தது நல்லதாகத்தான் போயிற்று. நான் போய் வருகிறேன். நாளைக்கு......." "நாளைக்கு என்கிற பேச்சு வேண்டாம். இப்போதே நான் கார் எடுத்துக்கொண்டு வருகிறேன். போய் வஸந்தியை அழைத்து வருவோம். ஆனால் அந்தத் தாயில்லாக் குழந்தையை என் தலையிலே கட்டிவிட்டு நீ தப்பிப் போய்விடலாம் என்று நினைக்காதே! என்னால் அந்தப் பொறுப்பை வகிக்க முடியாது. நீ இந்த வீட்டில் சீதாவின் ஸ்தானத்தில் இருந்து வஸந்தியையும் வளர்ப்பதாக ஒப்புக் கொண்டால்தான் அந்தப் பொறுப்பை நான் ஒப்புக்கொள்ள முடியும்." "ஐயா! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சீதாவின் ஸ்தானத்தில் நான் இருக்க வேண்டும்' என்று சொல்வதின் அர்த்தம் என்ன? இன்னும் உங்களுக்கு அந்தப் பழைய பைத்தியம் விடவில்லையா?" "பழைய பைத்தியம் விடவில்லைதான். இந்த உடம்பிலே உயிர் உள்ள வரையில் என்னை அப்பைத்தியம் விடாது தாரிணி!" "உங்களுக்கு ஓர் இரகசியம் தெரியாது. அதனாலேதான் இன்னமும் இப்படிச் சொல்கிறீர்கள். சீதா என் சொந்தத் தங்கை; என் உடன் பிறந்த சகோதரி."

,dd>"அது எனக்குத் தெரியாத இரகசியம் அல்ல. நீ சீதாவின் சொந்தத் தமக்கை என்பதைச் சூரியா சொன்னான். இன்னொரு விஷயமும் அவன் கூறினான். நீ என்னைக் கலியாணம் செய்து கொண்டால் அதைக் காட்டிலும் சீதாவின் ஆத்மாவுக்குச் சாந்தி அளிக்கக்கூடியது வேறொன்றுமிராது என்று சொன்னான். நீயே யோசித்துப் பார், தாரிணி! இந்த வீட்டிலிருந்து வஸந்தியை வளர்ப்பதற்கு உன்னைக் காட்டிலும் தகுதியுடையவள் உண்டா? நீ மட்டும் என்னைக் கலியாணம் செய்து கொள்வதாக ஒப்புக்கொண்டால்... வேண்டாம்; இன்றைக்கு இந்தப் பேச்சு உனக்குப் பிடிக்காது. பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு நம் எல்லோருடைய மனமும் கலங்கிப் போயிருக்கிறது. நாம் இப்போது போய்க் குழந்தையை அழைத்துக் கொண்டு வரலாம். ஆனால் நீ உன்னுடைய முகமூடியை மட்டும் உடனே எடுத்து விட வேண்டும். இன்னும் இந்தப் பயங்கரமான உடையை நீ தரித்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை." "ஆகட்டும், ஐயா! இந்தப் பர்தா உடையை எடுத்து விடுகிறேன்; எடுக்கத்தான் வேண்டும். ஆனால் கலியாணம் பேச்சைத் தள்ளிப் போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதை இப்போதே பேசி முடித்துவிட்டால் என் மனது நிம்மதியடையும்....." "எனக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை, தாரிணி! பேஷாக இப்போதே பேசி முடிவு செய்யலாம். ஆனால் பேசுவதற்குத் தான் என்ன இருக்கிறது? நீ உன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டியதுதான். நானோ பதினாறு வருஷ காலமாகத் தவம் செய்கிறேன்." "என்னுடைய விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு முன்னால் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.

,dd>என் தங்கை சீதாவுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்....." "என்ன சத்தியம் செய்து கொடுத்தாய்? எதற்காக?" "உங்களுக்குச் சம்மதம் என்றால் நான் உங்களை மணந்து கொள்கிறேன் என்று சீதாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தேன். "அதை நிறை வேற்றுவதாக உத்தேசமா? காற்றிலே பறக்க விட்டு விடுவதாக உத்தேசமா?" "சீதா உயிருடன் இருந்தபோது என்னால் அவளுக்குப் பல கஷ்டங்கள் நேர்ந்தன. கடைசியில் அவளைப் பாதுகாக்க நான் செய்த ஏற்பாடும் பயனில்லாமற் போயிற்று. சீதாவின் ஆவியாவது நிம்மதி அடைய வேண்டாமா? ஆகையால் அவளுக்கு நான் கொடுத்த வாக்கை மீறப் போவதில்லை. நீங்கள் என்னைக் கலியாணம் செய்துகொள்ளச் சம்மதித்தால் எனக்கும் அதில் சம்மதம். ஆனால் நீங்கள் யோசித்துச் சொல்ல வேண்டும்....." சீதா இதுவரை தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து நின்றாள். பேதைப் பெண்ணே! ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய்? போய்விடு! உடனே ஓடிப் போய்விடு! உன் மனம் நன்றாயிருக்கும்போதே இங்கிருந்து போய்விடுவது நல்லது. ஒருவேளை உன் புத்தி மாறிக் கெட்டுப் போய்விடலாம் அல்லவா? இவ்வாறு சீதாவின் உள்மனம் அவளுக்கு அறிவுறுத்தியது. சிறிதும் சத்தம் செய்யாமல் அடிமேல் அடி வைத்து நடந்தாள். கொல்லை வழியாகவே வெளியில் வந்து வீட்டைப் பிரதட்சணம் சுற்றிக் கொண்டு வாசற்பக்கம் வந்தாள். மதில் சுவரின் வாசற்படியைத் தாண்டி வீதியை அடைந்ததும் அதிவேகமாக நடந்தாள். நாலாபுறமும் இருண்டு கொண்டு வந்தது. சீதா! என்ன காரியம் செய்து விட்டாய்? இன்னும் ஐந்து நிமிஷம் நீ அந்தப் பக்கத்து அறையிலேயே இருந்திருக்கக் கூடாதா?
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்தெட்டாம் அத்தியாயம்

மணி அடித்தது!

இந்த அத்தியாயத்தை எழுதுவதற்கு மிகவும் தயக்கமாயிருக்கிறது. மனம் வேதனைப்படுகிறது; கையும் கூசுகிறது. எனினும் எழுதியேயாகவேண்டும் கதையை முடிக்க வேண்டிய கடமை ஒன்று இருக்கிறதல்லவா? இம்மாதிரியான வரலாற்றுத் தொடர்கதை எழுதுவதில் ஒரு பெரிய கஷ்டம் இருக்கிறது. ஆசிரியனோடு சேர்ந்து வாசகர்களும் கதையைக் கற்பனை செய்துகொண்டு வருகிறார்கள், மேலே இப்படித்தான் நடக்க வேண்டும் என்று முடிவு கட்டுகிறார்கள். கதாநாயகி இறந்து விடக் கூடாதென்று சிலரும் கதாநாயகி இறந்துதான் ஆகவேண்டும் என்று சிலரும் வற்புறுத்துகிறார்கள். கதாநாயக னுக்குத் தண்டனை கிடைக்க வேண்டுமென்று சிலரும் அவனுக்குப் பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று சிலரும் எதிர்பார்க் கிறார்கள். கதை ஆசிரியன் பெரிய தர்ம சங்கடத்தில் அகப்பட்டுக் கொள்கிறான். கதாபாத்திரங்களுக்கு உண்மையாக நிகழ்ந்த முடிவை உண்மையுடன் கூறுவதா, அல்லது வாசகர்களின் விருப்பத்தையொட்டி மாறிச் சொல்லுவதா என்ற கடினமான பிரச்னை ஏற்படுகிறது. எவ்வளவு கசப்பான உண்மையாயிருந்தாலும், அது எழுதுவதற்கும் படிப்பதற்கும் எவ்வளவு மன வருத்தம் தருவதாயிருந்தாலும், நடந்தது நடந்தபடி சொல்லி விடுவதே கதை ஆசிரியனுடைய தர்மமும் கடமையும் ஆகுமல்லவா? இங்கே இவ்வளவு நீண்ட பீடிகை போடுவதற்குக் காரணம் என்னவென்பதை வாசகர்கள் ஊகித்தறிந் திருப்பார்கள். மேலே வருவதை எழுதுவதற்குத் தயக்கந்தான் காரணம்.ஆனால் எத்தனை நேரந்தான் தயங்கவும் தள்ளிப் போடவும் முடியும்?
தாரிணி சௌந்தரராகவனைப் பார்த்து "நீங்கள்தான் நன்றாக யோசித்துச் சொல்ல வேண்டும்" என்று கூறியது, ராகவன் சிறிது எரிச்சலுடன், "மறுபடியும் 'யோசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும்' என்றே சொல்லிக் கொண்டிருக்கிறாயே? யோசிப்பதற்கு என்ன இருக்கிறது?" என்று கேட்டான். "நீங்கள் இப்படித்தான் சொல்வீர்கள். ஆயினும் நான் என்னுடைய கடமையைச் செய்தாக வேண்டும். உங்களுடைய தாயாரும் தகப்பனாரும் உற்றார் உறவினரும் என்ன சொல்லுவார்கள் என்று யோசியுங்கள்." "சுத்தப் பைத்தியக்காரத்தனம்! அவர்களையெல்லாம் நான் மறந்து எத்தனையோ நாளாயிற்று. என்னுடைய பெற்றோர்கள் தற்சமயம் அவர்களுடைய மூத்த பிள்ளையுடனும் மூத்த மாட்டுப் பெண்ணுடனும் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். என்னை அவர்கள் கவனிப்பதில்லை அவர்களை இப்போதெல்லாம் நானும் நினைப்ப தில்லை....." "இப்போது நினைப்பதில்லையென்றால் எப்போதும் விட்டுப் போய்விடுமா? இரத்த பாசம் ஒரு நாளும் விடாது அதற்கு என்னுடைய தகப்பனாரைக் காட்டிலும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?" "நல்ல தகப்பனார் உன் தகப்பனார்! பெற்ற பெண்கள் இருவருக்கும் சத்துருவாயிருந்தார்......." "உங்கள் பெற்றோர்களை நீங்கள் கவனிக்காவிட்டால் போகட்டும். இந்தப் புது டில்லியில் நீங்கள் உத்தியோகம் செய்து வாழ்க்கை நடத்த வேண்டுமல்லவா? என்னை நீங்கள் கலியாணம் செய்து கொண்டால் எல்லாரும் என்ன நினைப்பார்கள்?" "ஒன்றும் நினைக்கமாட்டார்கள், அப்படி ஏதாவது நினைத்தால் என்னைக் கொடுத்துவைத்த அதிர்ஷ்டசாலி என்று நினைப்பார்கள். தாரிணி! இந்தப் புது டில்லியில் உன்னைப் போன்ற அழகி ஒருத்தி உண்டா? நாகரிகத்திலும் நடை உடை பாவனையிலும் உன்னை மிஞ்சக் கூடியவள் எவளேனும் உண்டா? கிளப்புகளுக்கும் பார்ட்டிகளுக்கும் உன்னை என்னுடன் அழைத்துக்கொண்டு போவதைப் போல் பெருமை தரும் விஷயம் வேறு உண்டா....?"
தாரிணியை மூடியிருந்த உடைக்குள்ளிருந்து அமுங்கி ஒலித்த சிரிப்பின் சத்தம் வந்தது. அதைக் கேட்டதும் ஏனோ சௌந்தர ராகவனுக்கு உடல் சிலிர்த்தது; விவரமில்லாத பீதி ஒன்று உண்டாயிற்று. "தாரிணி! இது என்ன சிரிப்பு! இந்த வேளையில்தான், இந்தச் சந்தர்ப்பத்தில்தான் சிரிப்பது என்பது கிடையாதா?" என்றான். தாரிணி எழுந்து நின்றாள். "சிரித்தது பிசகுதான்; மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னதான் சொன்னாலும் இன்னும் ஒருநாள், - இருபத்தினாலு மணி நேரம் - உங்களுக்கு யோசிக்கச் சாவகாசம் கொடுக்கிறேன். நாளைக்கு இதே நேரத்துக்குக் குழந்தையை அழைத்துக்கொண்டு வருகிறேன்" என்று சொன்னாள். "உன்னுடைய பிடிவாத குணம் முன்னைப் போலவேதான் இன்னும் இருக்கிறது. தாரிணி! போனால் போகட்டும், உன் இஷ்டப்படியே நாளைச் சாயங்காலம் வஸந்தியை அழைத்துக் கொண்டுவா! ஆனால் போவதற்கு முன்னால் இந்தப் பயங்கரமான பர்தா உடையை எடுத்துவிட்டு உன் முகத்தையாவது காட்டி விட்டுப்போ! இல்லா விட்டால் உன்னைப் போக விடமாட்டேன். நானே பலாத்காரமாக உன் முகமூடியை அகற்றி விடுவேன்!" என்றான். இந்தக் கடைசி வார்த்தையைச் சொல்லும்போது ராகவனுக்கு சீதா அடிக்கடி பாடும் வழக்கமான ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. "தில்லித்துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்" என்ற பாரதியாரின் கண்ணன் பாட்டு சீதாவுக்கு தெரியும். டில்லியில் முகமூடி தரித்த பர்தா முஸ்லிம் ஸ்திரீகளைப் பார்க்கும்போதெல்லாம் சீதா அந்தப் பாட்டைப் பாடிக் காட்டுவாள். ராகவனும் அதை ரசித்துக் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பான்.
அந்தப் பாட்டு இப்போது ராகவனுக்கு நினைவு வந்ததும் அவனுடைய உடம்பு மீண்டும் சிலிர்த்தது. ராகவனுடைய அந்த வார்த்தைகளைக் கேட்ட தாரிணி சிறிது நேரம் நின்ற இடத்திலேயே நின்றாள். அவளுடைய மனதுக்குள் ஏதோ போராட்டம் நடந்தது போலும். ஒரு நிமிஷம் தயங்கி நின்ற பிறகு, "தங்கள் விருப்பத்தை இப்போதே நிறைவேற்றுகிறேன். என் பேரில் குற்றம் சொல்ல வேண்டாம்!" என்று தாரிணி சொல்லிவிட்டு அவளை மூடியிருந்த பர்தா உடையைக் கழற்றிக் கீழே நழுவி விழச் செய்தாள். உல்லாசமாக இயற்கை வனப்புகளைப் பார்த்துக்கொண்டு மலைச்சாரல் வழியாகப் போய்க் கொண்டிருந்த ஒருவனுடைய தலையில் திடீரென்று பாராங்கல் விழுந்து, கண்ணிலே கொள்ளிக் கட்டை குத்தி, காலிலே ஆயிரம் தேள்கள் கொட்டி, எதிரே பயங்கரமான பிசாசு ஒன்று தோன்றி அவனுடைய கழுத்தைப் பிடித்து அமுக்கினால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது ராகவனுக்கு. பர்தா உடையைக் கழற்றியதும் எதிரில் தோன்றிய உருவம், சௌந்தரராகவன் பலமுறை பார்த்து இதயத்தில் பதித்து வைத்துக் கொண்டிருந்த தாரிணியின் மோகன உருவம் அல்ல; அவன் பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்த சௌந்தரிய வடிவம் அல்ல! சீதாவுக்கு உடன் பிறந்த சகோதரியின் பூரண சந்திரனையொத்துப் பொலிந்த முகம் அல்ல. அவன் பார்த்தது ஒரு கோர ஸ்வரூபம். ஒரு கை துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உருவம். ஒரு கண் இருந்த இடத்தில் வெறுங்குழி இருந்த உருவம். வலது நெற்றிப் பொட்டிலிருந்து இடது கன்னத்தின் ஓரம் வரையில் ஒரு நீண்ட பெரிய பிளவு ஓடியிருந்த பயங்கர வடிவம். மகா சிற்பி ஒருவன் அமைந்திருந்த தெய்வீகச் சிலையை வெறிகொண்ட கஜினி முகம்மது தாக்கி உடைத்த பிறகு சிதைந்துபோன சிலை எப்படி இருக்குமோ அப்படித் தோற்றமளித்த பரிதாப உருவம்.
சௌந்தரராகவன் பீதியினாலும் பயங்கரத்தினாலும் பரிதாபத்தினாலும் அருவருப்பினாலும் கதிகலங்கியவனாய் திகைத்து நின்றான். சற்று நேரம் திறந்த கண்கள் திறந்தபடி, திறந்த வாய் திறந்தபடி, பார்த்துக்கொண்டே நின்றான். அப்புறம் நிற்க வலிவற்றவனாய்த் தொப்பென்று ஸோபாவில் விழுந்தான். அந்த உருவம் வாய் திறந்து பேசியது. முன் பல் இரண்டு இல்லாதபடியால் வாயைத் திறந்தபோது அந்த கோர ஸ்வரூபம் மேலும் பயங்கரமாகக் காட்சி தந்தது. "ஐயா! மன்னிக்க வேண்டும், தங்களுக்கு இந்தத் துன்பத்தை இன்று தரவேண்டாம் என்றுதான் நினைத் தேன். ஆனால் நீங்கள் கேட்கவில்லை உடையை எடுக்கும்படி பிடிவாதம் பிடித்தீர்கள்!" என்று தாரிணி கூறினாள். ஆம், அது தாரிணியின் குரல்தான்! சந்தேகமில்லை. எவ்வளவு சின்னாபின்னமடைந்திருந்த போதிலும் அந்த முகம் தாரிணியின் முகந்தான்! ஆனாலும் சௌந்தரராகவன் அதை நம்புவது எளிதாக இல்லை. இது வேறு யாராகவாவது இருக்கலாகாதா என்றும் தன்னை இந்தப் பயங்கர ஏமாற்றத்துக்கு உள்ளாக்க யாரோ செய்த சூழ்ச்சியாக இருக்கக்கூடாதா என்றும் எண்ணினான். "நான் போய் வருகிறேன், ஒரு நாள் முழுதும் யோசித்துப் பதில் சொல்லுங்கள். ஒரு நாள் என்ன? ஒரு வாரம் வேண்டுமானாலும் யோசித்துச் சொல்லுங்கள்!" என்றாள் தாரிணி. சௌந்தரராகவனுடைய தலைக்கு உட்புறம் நூறு குட்டிப் பிசாசுகள் புகுந்து கொண்டு 'ஹஹஹஹஹஹா!" என்று பரிகசித்துச் சிரித்தன. "போகாதே, தாரிணி! போகாதே! ஏதாவது சொல்லி விட்டுப் போ! இல்லாவிட்டால் எனக்கு இப்போதே பைத்தியம் பிடித்துவிடும்!" என்று ராகவன் அலறினான். தாரிணி உட்கார்ந்தாள், "தயவு செய்து பதறாதீர்கள்; வீணாக அலட்டிக் கொள்ளாதீர்கள். நான் என்ன சொல்ல வேண்டும்? கேளுங்கள், சொல்கிறேன்!" என்றாள். ராகவன் தாரிணியை ஒரு தடவை காலோடு தலை வரை உற்றுப் பார்த்துவிட்டு மேஜைமீது தன் முகத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு விம்மினான். "ஐயா! தாங்கள் எத்தனையோ தத்துவங்கள் படித்தவர். படித்த தத்துவங்களையெல்லாம் இப்போது தயவு செய்து ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். விதியை வெல்ல யாரால் முடியும்? நடந்து போனதை நினைத்துத் துக்கப்பட்டு ஆவதென்ன?" என்று சொன்னாள் தாரிணி.
சௌந்தரராகவன் தலை நிமிர்ந்தான். "தாரிணி! அந்த விதி என்னை எதற்காக உயிரோடு வைத்திருக்கிறது? இந்தக் கோரக் காட்சியைக் காண்பதற்காகத்தானா? கல்கத்தாவில் சுரம் அடித்துக் கிடந்தபோதே நான் இறந்து போயிருக்கக் கூடாதா?" என்று கதறினான். "விதியை வெல்லும் சக்தியை நமக்குக் கடவுள் கொடுக்கவில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் துக்கத்தையும், வெல்லும் சக்தியைக் கொடுத்திருக்கிறார். இன்றைக்குக் காந்தி மகான் இறந்ததை நினைத்து இந்தத் தேசமெல்லாம் வருத்தப்படுகிறது. இன்னும் ஒரு மாதம் போனால் எல்லோரும் மகாத்மாவை மறந்துவிடப் போகிறார்கள். அவரவர்களின் காரியத்தைப் பார்க்கப் போகிறார்கள் இந்த உலகத்தில் எந்தவிதமான சுகமும் இன்பமும் சாசுவதமல்ல; அதுபோலவே கஷ்டமும் துன்பமும் சாசுவதம் அல்ல. துன்பத்தை மறந்துவிடும் சக்தியைக் கடவுள் நமக்கு அளித்திருக்கிறார்" என்றாள் தாரிணி. "கடவுள் என்று சொல்லாதே! கடவுள் இல்லை என்று நான் சத்தியம் செய்வேன். உன்னை இந்தக் கோலத்தில் பார்த்த பிறகு கடவுளிடம் எப்படி நம்பிக்கை உண்டாகும்?" என்றான் ராகவன். "நான் இந்தக் கோலமான பிறகுதான் கடவுளிடம் எனக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. ஐயா! என்னை வளர்த்த தாயையும் உங்கள் குழந்தை வஸந்தியையும் காப்பாற்றினேன். நல்ல சமயத்தில் கடவுள் என்னை அவர்கள் இருந்த இடத்தில் கொண்டு போய் விட்டார்; அந்தப் பிரயத்தனத்திலேதான் என்னுடைய ஒரு கை போயிற்று; ஒரு கண் போயிற்று; முகத்தில் இந்தக் கத்திக் காயம் ஏற்பட்டது. ஆனால் என்னை வளர்த்த தாயை நான் காப்பாற்ற முடிந்தது; என் உயிருக்குயிரான சகோதரியின் குழந்தையை நான் காப்பாற்ற முடிந்தது. இது கடவுளின் கருணை அல்லவா?" பிறகு ரஜினிபூர் ராஜ்யத்தில் ஒரு முஸ்லிம் மசூதியில் பல ஸ்திரீகள் அடைக்கப்பட்டிருந்ததையும், அந்த மசூதியைக் கொளுத்திவிட்டு அதில் இருந்தவர்களையெல்லாம் கொன்று விடச் சில வெறியர்கள் முயன்றதையும், தான் தன்னந்தனியாக அவர்களை எதிர்த்து நின்றதையும், அதற்குள் ரஜினிபூர் மகாராணி படைகளுடன் வந்து தன்னையும் மசூதியில் இருந்த ஸ்திரீகள் எல்லாரையும் காப்பாற்றியதையும் பற்றித் தாரிணி கூறினாள். சௌந்தரராகவன் ஏற்கனவே அந்த விவரங்களையெல்லாம் பத்திரிகையில் படித்திருந்தான். அப்போது அந்த முஸ்லிம் மசூதியை இந்த ரஜினிபூர் மகராணி எதற்காக காப்பாற்றினாள் என்று ஆத்திரப்பட்டான். இப்போது தாரிணி கூறிய செய்தி அவனுடைய உள்ளத்தில் சொல்லமுடியாத குழப்பத்தை உண்டு பண்ணியது. கடவுளே! அந்த மசூதியில் இருந்தல்லவா தன்னுடைய குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கிறாள்? ரஜினிபூர் மகாராணி நல்ல சமயத்தில் வந்து காப்பாற்றி யிராவிட்டால்? அரைமணி நேரம் கழித்துச் சென்றிருந்தால்?- ஒருவேளை இது கடவுளின் கருணைதானா?.... அந்தச் சமயத்தில் 'கண கண கண'வென்று டெலிபோன் கருவியின் மணி அடித்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
முப்பத்தொன்பதாம் அத்தியாயம்

கடவுளின் கருணை

,dd>மனிதர்களைச் சிற்றறிவினர் என்றும் கடவுளைப் பேரறிவாளன் என்றும் பெரியோர்கள் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். கடவுளுடைய செயல்களையும் அச்செயல்களின் காரணங்களையும் நாம் அறிய முடிவதில்லை. அறிந்தால் நாம் மனிதத் தன்மையைக் கடந்து தெய்வத்தன்மைக்கே உரியவர்களாகி விடுவோம் அல்லவா? உலகத்தில் பிறப்பவர்கள் பலர் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையில் துன்பப்பட்டே மடிந்து போகிறார்கள். ஒரு சுகத்தையும் காணாமல் கண்ணை மூடிவிடுகிறார்கள். அக்கிரமக்காரர்களின் அநியாயக் கொடுமைகளுக்கு ஆளாகிச் சாகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு நெஞ்சு கொதிக்கிறது. கடவுள் ஒருவர் இருந்தால் அவர் இத்தகைய கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கிறார் என்று எண்ணுகிறோம். கடவுள் ஒருவர் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அவரைத் 'தீனபந்து' என்று சொல்வது பெரும் பொய் என்று முடிவு செய்கிறோம். இதே உலகத்தில் பிறக்கும் வேறு சிலர் என்றைக்கும் சுக போகிகளாய் இருந்துவிட்டுப் போவதைப் பார்க்கும்போது, "ஆஹா! கடவுள் ஒருவர் இருந்தால் அவர் எத்தகைய பாரபட்ச முடையவராயிருக்க வேண்டும்?" என்று வியப்புறுகிறோம். இவையெல்லாம் நம்முடைய சிற்றறிவைக்கொண்டு பேரறிவாள னாகிய இறைவனுடைய செயல்களைக் கணிக்கப் பார்ப்பதினால் ஏற்படும் விபரீதங்கள் என்று பெரியோர்கள் அறிவுறுத்தி யிருக்கிறார்கள். அன்னை ஒருத்திக்கு நாலு குழந்தைகள் இருக்கின்றன. மூன்று குழந்தைகள் சுகமாயிருக் கின்றன. ஒரு குழந்தை மட்டும் நோய்ப்பட்டு மெலிந்து போயிருக்கிறது. அதன் ஜீரண சக்தி குன்றியிருக்கிறது. எழுந்து நடப்பதற்கும் முடியாமல் அந்தக் குழந்தை படுத்த படுக்கையாயிருக்கிறது. தாயார் மற்ற மூன்று குழந்தைகளுக்கும் நல்ல வளமான உணவு கொடுக்கிறாள். சோறும் கறி வகைகளும் பட்சணங்களும் பழமும் அக்குழந்தைகளுக்கு ஊட்டுகிறாள். மெலிந்த நோயாளிக் குழந்தைக்கு அத்தகைய நல்ல உணவு கொடுக்காமல் வெறும் கஞ்சி கொடுக்கிறாள். நோயாளிக் குழந்தை என்ன நினைக்கிறது? "பார்! நம்முடைய தாயாருக்குத்தான் எத்தனை பட்சபாதம்? நான் மெலிந்தவன்; எனக்கு நல்ல போஷாக்கு வேண்டும்; ஆயினும் எனக்கு வெறும் கஞ்சியைக் கொடுக்கிறாள். என்னுடைய அண்ணன்மார் நல்ல தடியர்களா யிருக்கிறார்கள். அவர்களுக்கு என் அன்னை நல்ல புஷ்டியான உணவைக் கொடுக்கிறாள்! இது என்ன அநியாயம்? இது என்ன பட்சபாதம்!" என்று எண்ணமிடுகிறது.

,dd>குழந்தை சிற்றறிவு படைத்தது, அதனால் அதற்குத் தன் தாயின் செயல் அர்த்தமாகவில்லை. தன்பேரில் உள்ள அன்பினாலேதான் அன்னை அவ்விதம் தனக்குப் பத்தியமாகக் கஞ்சி கொடுக்கிறாள் என்பதை அக்குழந்தை அறிந்துகொள்ள முடியவில்லை. உண்மையில் தன் தாயார் மற்ற மூன்று குழந்தைகளையும் விடத் தன்னைப் பற்றியே ஓயாக் கவலை கொண்டி ருக்கிறாள் என்பதை அக்குழந்தை அறியவில்லை. கடவுளைப் பற்றிப் புகார் கூறும் மாந்தர்கள் அந்தக் குழந்தையின் நிலையில் உள்ளவர்களே! கடவுளின் கருணையையோ, அக்கருணையை அடிப்படையாகக் கொண்ட அவருடைய செயல் களையோ அறிந்துகொள்ளும் சக்தி தம்முடைய சிற்றறிவுக்குக் கிடையாது. ஆகையினாலேயே குறைப்படுகிறோம்; குற்றம் கூறுகிறோம். அது காரணமாகவே நம் துன்பத்தையும் அதிகப்படுத்திக் கொள்கிறோம். நோய்ப்பட்ட குழந்தைக்குத் தன் அன்னையிடம் பூரண நம்பிக்கையிருந்தால், அது மேற்சொன்னபடியெல்லாம் எண்ணி மனம் வெம்ப வேண்டியதில்லை. குழந்தை யின் உடல் நோய்ப்பட்டிருந்தாலும் அதன் மனமாவது நிம்மதியாயிருக்கும். அதுபோலவே கடவுளுடைய செயல்களின் காரண காரியங்களை அறிந்து கொள்ளுவதற்கு வேண்டிய அறிவு நமக்கில்லாவிட்டால் பாதகம் இல்லை. கடவுளிடம் நம்பிக்கை யிருந்தால் போதும். அந்த நம்பிக்கையானது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எல்லாவிதமான துன்பங்களையும் சகித்துக் கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கிறது. எவ்வளவு கஷ்டங்கள் சூழ்ந்திருக்கும் போதும் மன நிம்மதியுடன் வாழ்வதற்கு வேண்டிய தைரியத்தை அளிக்கிறது. மன நிம்மதியைக் காட்டிலும் ஒரு மனிதன் இந்த உலகத்தில் வேண்டிப் பெறக்கூடிய பேறு வேறு என்ன இருக்கிறது?....

,dd>இந்த வேதாந்த விசாரணைகளையெல்லாம் இவ்விடத்தில் நாம் நுழைத்திருப்பதற்கு அவ்வளவு முக்கியமான காரணம் ஒன்றுமில்லைதான். இனிச் சொல்லவேண்டியிருப்பதைச் சொல்லுவதில் நமக்கு ஏற்படும் தயக்கந்தான் உண்மையான காரணமாகும். வாசகர்கள் தயவுசெய்து மன்னிக்கும்படி கோருகிறோம். தாரிணி சொன்னதையெல்லாம் கேட்டு அளவில்லாத மனக்குழப்பத்துக்கு உள்ளாகியிருந்த சௌந்தரராகவனுக்கு அந்த டெலிபோன் அடித்த மணி ஒரு வரப்ரசாதமாகத் தோன்றியது. பேச்சை மாற்ற அது ஒரு சாதனம் ஆகுமல்லவா! "இந்த வேளையில் யார் டெலிபோனில் கூப்பிடுகிறார்கள்!" என்று எரிச்சலாகச் சொல்லிக்கொண்டே சௌந்தரராகவன் டெலிபோனை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு, "யார் அது?" என்று கேட்டான். டெலிபோனில் அவனுக்கு கிடைத்த செய்தி மிக அதிசயமான செய்தியாயிருக்க வேண்டும். அவனுடைய முகத் தோற்றத்தில் அவ்வளவு மாறுதல் காணப்பட்டது. டெலிபோனை வைத்துவிட்டுத் தாரிணியைத் திரும்பிப் பார்த்து, "கேட்டாயா, தாரிணி! சீதா ஆற்றில் முழுகி இறந்து விட்டாள் என்பது பெரும் பொய். சூரியா அந்த மாதிரி என்னிடம் எதற்காகப் புளுகினான் என்று தெரியவில்லை. உனக்குத் தெரியுமே, மாஜி திவானுடைய மகள் பாமாவை! அவளுடைய வீட்டில் இப்போது சீதா இருக்கிறாளாம். அங்கே சூரியாவும் இருக்கிறானாம். பாமா என்னை உடனே புறப்பட்டு வரச் சொல்லுகிறாள்! நீயும் வரு.....?" என்று சொன்னவன், சொல்ல வந்த வார்த்தையைப் பூர்த்தி செய்யாமல் சட்டென்று நடுவில் நிறுத்தினான். அவனுடைய குரலில் தொனித்த குதூகலத்தைத் தாரிணி நன்றாக அர்த்தம் செய்து கொண்டாள். சீதா உயிரோடிருக்கிறாள் என்பதனால் மட்டும் ஏற்பட்ட குதூகலம் அல்ல அது. ஒரு கையும் ஒரு கண்ணும் இழந்த இந்தக் கோரஸ்வரூபத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இனி அவனுக்கு இல்லையல்லவா? தாரிணி கேட்ட கலியாண சம்பந்தமான கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இனிமேல் இல்லையல்லவா?

,dd>"ஆமாம், நானும் வருகிறேன்!" என்றாள் தாரிணி. அவளைத் தன்னுடன் அழைத்துப் போக ராகவனுக்கு அவ்வளவு ஢ருப்பமில்லையென்பது தாரிணிக்குத் தெரிந்துதானிருந்தது. ஆயினும் சீதா உயிரோடிருக்கும் செய்தியை அறிந்த பிறகு அவளை உடனே போய்ப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? ராகவன் விரைந்து சென்று காரை எடுத்தான். தாரிணி பின் ஸீட்டில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். வண்டி போய்க் கொண்டிருந்தபோது ராகவன், டெலிபோன் பேச்சில் தான் அறிந்த சில விவரங்களைக் கூறினான்;- "சீதாவும் அவள் தகப்பனாரும் இத்தனை நாளும் பானிபத்தில் இருந்தார்களாம். இன்றைக்குக் காந்திஜியின் கடைசி ஊர்வலத்துக்காகச் சீதாவைச் சூரியா அழைத்து வந்தானாம். கூட்டத்தில் இருவரும் பிரிந்து போய் விட்டார்களாம். கூட்டம் கலையும் சமயத்தில் சூரியா பாமாவைத் தற்செயலாகச் சந்தித்துச் சீதாவைப் பிரிந்தது பற்றிச் சொன்னானாம். போலீஸுக்கு டெலிபோன் பண்ணித் தேடச் செய்யலாம் என்று இருவரும் பாமாவின் வீட்டுக்கு வந்தார்களாம். அங்கே அந்த வீட்டு வாசலிலேயே சீதா பிரக்ஞையற்றுக் கிடந்தாளாம். உள்ளே எடுத்துப் போய்ச் சிகிச்சை செய்து வருகிறார்களாம், டாக்டரும் ந்திருக்கிறாராம். இந்தச் சூரியா எதற்காக என்னிடம் அவ்வளவு பெரிய பொய்யைச் சொன்னான் என்று தெரியவில்லை. சீதா ஆற்றில் முழுகி இறந்து விட்டாள் என்று சொன்னானே? எவ்வளவு பெரிய அயோக்கியன் அவன்?...." தாரிணி அப்போது, "வீணாக ஏன் வைகிறீர்கள்? அவரைக் கேட்டால் அல்லவா உண்மை தெரியும்? ஒருவேளை உங்களைச் சந்தித்தபோது சீதா உயிரோடிருப்பது அவருக்குத் தெரியாமலிருந்திருக்கலாம்!" என்றாள். "இருந்தாலும் இருக்கலாம், ஆனாலும் என்ன அதிசயம் பார், தாரிணி! சீதா இன்றைக்கு அகப்பட்டது ஓர் அற்புதம் இல்லையா? கடவுளுடைய கருணை என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்!" என்றான் ராகவன்.

,dd>வண்டி பாமா வீட்டு வாசலில் போய் நின்றது. வண்டிச் சத்தம் கேட்டதும் பாமாவும் சூரியாவும் தயாராக வாசற்பக்கம் வந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கிய ராகவனைப் பாமா கையைப் பிடித்து, "சீக்கிரம் வாருங்கள்!" என்று அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். போகும்போதே ராகவன், "சூரியா! நன்றாக என்னை ஏமாற்றினாய், போனால் போகட்டும்! வண்டியில் தாரிணி இருக்கிறாள் அவளைக் கவனித்துக் கொள்!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். தாரிணியின் கோர ஸ்வரூபத்தைப் பார்த்ததும் சூரியாவின் மனப்போக்கு எப்படியிருக்கும் என்று சௌந்தரராகவனுடைய மனம் அச்சமயம் எண்ணமிட்டது. பரபரப்புடன் மோட்டார் வண்டியை அணுகி வந்த சூரியாவைப் பார்த்துத் தாரிணி, "என் அருகில் நெருங்க வேண்டாம், சூரியா! நான் அசுத்தமானவள்!" என்றாள். "அதை நான் ஒரு நாளும் நம்ப மாட்டேன். தாரிணி! எது எப்படி யிருந்தாலும் உன்னைப் போல் புனிதமான பொருள் இந்த உலகில் வேறொன்று இருக்க முடியும் என்று ஒப்புக்கொள்ள மாட்டேன்!" என்று சொன்னான் சூரியா. "அதைப்பற்றி அப்புறம் பேசலாம். சீதாவுக்கு உடம்பு எப்படியிருக்கிறது?" என்று தாரிணி கேட்டாள். "பிழைக்க மாட்டாள் என்று டாக்டர் சொல்கிறார். இப்போதுதான் கொஞ்சம் பிரக்ஞை வந்திருக்கிறது. பிரக்ஞை வந்ததும் உன் பெயரையும் வஸந்தியின் பெயரையும் சொன்னாள்" என்றான் சூரியா. "ஐயோ! அப்படியானால் உடனே போய்க் குழந்தையை அழைத்து வரவேண்டும். நம்முடைய பழைய வீட்டிலே இருக்கிறாள்! நீங்கள் என்னுடன் வருவீர்களா?" என்றாள் தாரிணி. "அவசியம் வருகிறேன், பாவம்! ராகவன் சீதாவின் அந்திய காலத்திலாவது அவளுடன் சிறிது நேரம் தனியாக இருந்து அவளுடைய மனம் குளிரச் செய்யட்டும்" என்றான் சூரியா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நாற்பதாம் அத்தியாயம்

"பாக்கியசாலி சீதா!"

டாக்டர் இஞ்செக்ஷன் செய்வதற்காக மருந்து தயாரித்துக் கொண்டிருந்தார். பாமா அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். ராகவன் சீதாவின் தலையைத் தன் மடியில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தான். அடிக்கடி அவன் விம்முகிற சத்தம் கேட்டது. சீதா தட்டுத் தடுமாறிச் சொன்னாள்:- "நீங்கள் ஏன் அழ வேண்டும்? எனக்கு இதைவிட வேறு பாக்கியம் கிடைக்குமா? கஸ்தூரிபாய் தெய்வத்தைப்போல நானும் தாலி கட்டிய புருஷன் மடியில் படுத்துச் சாக வேண்டும் என்று தவம் செய்து கொண்டிருந்தேன் அந்தத் தவம் பலித்துவிட்டது. என்னைப் போலப் பாக்கியசாலி யார்? நீங்கள் அழவேண்டாம்!" என்றாள். சௌந்தரராகவனைத் துக்கம் ஒரு பக்கமும் வெட்கம் இன்னொரு பக்கமும் பிடுங்கித் தின்றன. "சீதா! இந்த மாதிரியெல்லாம் பேசாதே! உனக்கு உடம்பு ஒன்றுமில்லை. சீக்கிரம் சுகமடைந்து பிழைத்து எழுந்திருப்பாய்!" என்றான். "அதெல்லாம் இல்லை, நான் இனி வெகு நேரம் உயிரோடிருக்க மாட்டேன். அதென்னமோ அப்படி எனக்குத் தோன்றுகிறது. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. தாரிணி அக்காவும் நீங்களும் பேசிக்கொண்டிருந்ததை நான் ஒட்டுக் கேட்டேன். அதற்காகத் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். 'உங்களை மணந்துகொள்ளச் சம்மதம்' என்று தாரிணி அக்கா சொன்னதை என் காதால் கேட்டேன். உடனே புறப்பட்டு வந்துவிட்டேன், எனக்கு இனி ஒரு குறையும் இல்லை. அக்கா இப்போது எங்கே? அவளைக் கொஞ்சம் வரச் சொல்லுங்கள். அவளுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேணும்." "வஸந்தியை அழைத்துக்கொண்டு வரத் தாரிணி போயிருக்கிறாள். நீ நினைப்பது போலெல்லாம் ஒன்றும் நடவாது, சீதா! என்னைப் பரிதவிக்க விட்டு நீ போவது கடவுளுக்கே பொறுக்காது!" என்றான் ராகவன். அதே சமயத்தில் கடவுளை நினைத்து, "பகவானே! இந்த ஒரு தடவை மட்டும் சீதாவைக் காப்பாற்றி விடு. அப்புறம் நான் யோக்கியமாய் நடந்து கொள்ளுகிறேன் இனிமேல் ஒரு பிசகும் செய்யமாட்டேன். சுயநலத்துடன் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன்!" என்று மனமாரப் பிரார்த்தனை செய்தான். ராமேசுவரம் முதல் காசி வரையில் உள்ள கோயில் தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டான். அந்த நிமிஷத்துக்கு முன்னால் ராகவன் எந்த நாளிலும் அவ்வளவு தீவிர ஆஸ்திகனாக இருந்ததில்லை.
இஞ்செக்ஷன் மருந்து ஏற்றிய ஊசியுடன் டாக்டர் வந்தார். ஊசி குத்திவிட்டு, "சரி, நான் போய் வருகிறேன். காலையில் நிலைமை எப்படியிருக்கிறது என்று டெலிபோன் செய்யுங்கள்!" என்றார். டாக்டருடன் வாசல் வரையில் சென்ற பாமா திரும்பி வந்ததும் ராகவனைப் பார்த்து, "உங்கள் மனைவிக்கு உங்களிடம் ஏதாவது சொல்லிக்கொள்ள வேணுமா, மனதில் ஏதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்டு விடுவது நல்லது" என்றாள். ராகவன் கோபமுற்று, "இது என்ன நான்ஸென்ஸ்? நீங்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நலமாயிருக்கும்!" என்றான். அப்போது சீதா, "அவர் மேல் எதற்காக வீணில் கோபித்துக் கொள்கிறீர்கள்? அவர் கேட்கச் சொல்வது நியாயந்தான், என் மனதில் ஒரு ஆசை இருக்கத்தான் இருக்கிறது. நான் கண்ணை மூடிய பிறகு நீங்கள் தாரிணி அக்காவைக் கட்டாயம் கலியாணம் செய்து கொள்ள வேண்டும். அக்கா எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாள், அதை மீறமாட்டாள்" என்றாள். சற்று நேரத்துக்கெல்லாம் தாரிணியும் சூரியாவும் வஸந்தியுடன் வந்து சேர்ந்தார்கள். எத்தனை எத்தனையோ கஷ்டங்களைப் பார்த்திருந்த வஸந்திக்குத் தன் தாயாரின் நிலைமை எந்தவித உணர்ச்சியையும் தரவில்லை. பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். "இத்தனை நாள் எங்கே அம்மா ஒளிந்து கொண்டிருந்தாய்?" என்றாள். சீதா தன்னுடைய துவண்ட கைகளைத் தூக்கிக் குழந்தையைத் தன் முகத்தோடு சாத்திக்கொள்ள முயன்றாள். ஆனால் அவளுடைய கையில் அதற்கு வேண்டிய பலம் இல்லை. அதைப் பார்த்த தாரிணி குழந்தையின் முகத்தைத் தாயின் முகத்தோடு சேர்த்து வைத்தாள். சீதா அண்ணாந்து நோக்கினாள், முகமூடி தரித்த உருவத்தைப் பார்த்து, மிக மெல்லிய குரலில், "இது யார்?" என்று கேட்டாள். "என்னை உனக்குத் தெரியவில்லையா, சீதா!" என்றாள் தாரிணி. அவள் யார் என்பதைக் குரலிலிருந்து சீதா தெரிந்து கொண்டாள்.
"வந்து விட்டாயா, அக்கா! ரொம்ப சந்தோஷம் என் மனது குளிர்ந்து விட்டது. நீ இவரிடம் பேசிக்கொண்டிருந்ததை நான் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு இனிமேல் ஒரு கவலையும் இல்லை. ஆனால் முகத்தை ஏன் மூடிக் கொண்டிருக்கிறாய்? திறந்து விடு! அக்கா! நான் சாவதற்கு முன்னால் உன்னுடைய முகத்தை ஒரு தடவை பார்க்கவேணும். பார்த்துவிட்டால், அந்த ஞாபகமாகவே மேல் உலகத்துக்குப் போவேன். போகும்போது வானத்தில் பூரண சந்திரனைப் பார்த்து அக்காவின் முகத்தைப் போல் அழகாயிருக்கிறதா என்று ஒத்துப் பார்த்துக் கொண்டு போவேன்!....." இப்படி பேசிக் கொண்டேயிருக்கையில் சீதாவின் கண்கள் தாமாக மூடிக்கொள்ளத் தொடங்கின. தாரிணி சீதாவின் கையைப் பிடித்து நாடி பார்த்தாள். மிக மெலிவாயும் அதிவேகமாயும் அடித்தது. கூண்டிலிருந்து கிளி பறந்து செல்லும் காலம் நெருங்கிவிட்டது என்பதைத் தாரிணி உணர்ந்தாள். "சீதா! இதோ என் முகத்திரையை எடுக்கிறேன். கண்ணைத் திறந்து ஒரு தடவை என்னைப் பார்! பயந்து போய் விடாதே! உன்னுடைய குழந்தை வஸந்தியை நான் காப்பாற்றுவதற்கு முயற்சித்த போது இந்த மாதிரி ஆயிற்று. ஆனால் இதற்காக நீ சிறிதும் வருத்தப்பட வேண்டாம்......." இந்த வார்த்தை ஒன்றும் சீதாவின் காதில் விழவில்லை. திரை விலகி தாரிணியைப் பார்த்தவுடன் சீதாவின் முகம் அணையுந் தறுவாயில் தீபம் சுடர் விடுவதுபோல் காந்தி வீசிப் பிரகாசித்தது. முன்னைக் காட்டிலும் மெதுவான குரலில், வியப்பும் ஆனந்தமும் ததும்பிய குரலில் கூறியதாவது; "அக்கா! உன் முகந்தான் என்ன அழகாயிருந்தது? முன்னே நான் பார்த்த போது இருந்ததைக் காட்டிலும் இப்போது உன் முகத்தில் களை சொட்டிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அழகை இந்த உலகத்தில் நான் பார்த்ததேயில்லை. தேவலோகத்திற்குப் போனால் அங்கேயும் உன்னைப் போன்ற ரூபவதியைப் பார்ப்பேனா என்பது சந்தேகந்தான். உன்னைப் பார்த்துக் காதலித்த என் கணவர் என்னைக் காதலிக்கவில்லையென்றால் அதில் அதிசயம் என்ன இருக்கிறது? நான் பாக்கியசாலி, அக்கா! ஒரு குறையும் இல்லாமல் மன நிம்மதியுடன் நான் போகிறேன், ஒருவரும் எனக்காகத் துக்கப்பட வேண்டாம்! சூரியா எனக்காக ரொம்ப வருத்தப்பட்டு உருகுவதாய்ச் சொல்வான். அவனை வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லு."
சீதா தன்னுடைய பெயநச் சொன்னது காதில் விழுந்ததும் சூரியா அருகில் வந்து அவள் முகத்துக்கு அருகில் குனிந்து, "சீதா! நான் இதோ இருக்கிறேன்" என்றான். அச்சமயம் சௌந்தரராகவன் கூடச் சூரியாவைத் தடுக்க முயலவில்லை. சீதா மிக மெல்லிய குரலில், "லலிதாவுக்கு கடிதம் எழுது; என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டதாக எழுது!" என்றாள். "இவ்வளவுதானா, சீதா! எனக்கு நீ சொல்ல வேண்டியது வேறொன்றுமில்லையா?" என்றான் சூரியா! "இல்லை, வேறொன்றும் இல்லை சூரியா! நான் பாக்கியசாலி! சீக்கிரம் கலியாணம் செய்துகொள்!" என்றாள் சீதா. சீதா பாக்கியசாலிதான்; இல்லை என்று யார் சொல்ல முடியும்? சூரியா விம்மினான், சௌந்தரராகவன் கதறினான். தாரிணியும் வஸந்தியும் பாமாவும்கூடத் துயரத்தின் மிகுதியால் அலறி அழுதார்கள். ஆனால் சீதாவின் காதில் அதெல்லாம் விழவில்லை. அவளுடைய உணர்விலும் தோன்றவில்லை. சீதாவின் உயிர் அநித்தியமான உடலை விட்டுப் பிரிந்தது. ஆகாய வெளியில் மிதந்து சென்றது. மேலே மேலே மேலே போய்க்கொண்டே இருந்தது. வானவில்லின் வண்ணங்களிலே தோய்ந்து சென்றது. வெள்ளிய மேக மண்டலங்களின் வழியாகப் புகுந்து சென்றது. மந்தமாருதம் ஏந்திக் கொண்டு வந்த சுகந்த பரிமளத்தை முகர்ந்துகொண்டு சென்றது. இனிமையின் எல்லை என்று சொல்லக்கூடிய இசை இன்பத்தை அநுபவித்துக் கொண்டு சென்றது. சிறிது நேரத்துக்கெல்லாம் தேவலோகத்துப் பாரிஜாத மந்தார விருட்சங்களின் மலர்கள் பொலபொலவென்று உதிர்ந்தன. அவை சீதாவின் உயிரைச் சுற்றிச் சுழன்று கொண்டே வந்தன. தங்க நிறமும் ரோஜா நிறமும் மாந்தளிரின் நிறமும் கொண்ட மேனிகளுடனே கந்தர்வ கின்னரர்கள் வான வெளியில் ஆங்காங்கே நின்று "வருக! வருக! என்று இன்னிசையுடன் வரவேற்றார்கள். சீதாவின் உயிர் மேலே மேலே போய்க்கொண்டிருந்தது. அற்புத சௌந்தர்யம் வாய்ந்த தேவகணங்களின் உருவங்கள் மெல்லிய மேகத் திரைக்குள்ளே மறைந்து காணப்பட்டது.
ஆகா! அந்த உருவங்களின் சிலவற்றைச் சீதாவுக்குத் தெரியும்; நன்றாகத் தெரியும். அதோ லைலாவும் மஜ்னுவும் ஆடிப் பாடிக்கொண்டு போகிறார்கள். அதோ சத்தியவானும் சாவித்திரியும் கைகோத்துக்கொண்டு உலாவுகிறார்கள். இதோ உல்லாசமாய் அன்னப் படகில் மிதந்து செல்கிறவர்கள் ரோமியோவும் ஜுலியத்துமாகவே இருக்க வேண்டும். நளனுக்கும் தமயந்திக்கும் என்ன அவசரமோ தெரியவில்லை! இறகு கட்டிக்கொண்டு அவர்கள் பறக்கிறார்கள். பறந்தால் பறக்கட்டும்; இவர்களையெல்லாம் பார்த்து இப்போது என்ன ஆகவேண்டும்? நாம் பார்க்க விரும்பியது அன்னை கஸ்தூரிபாயை அல்லவா? அவர் எங்கே இருப்பார்? சொர்க்கலோகங்களிலெல்லாம் மேலான சொர்க்கலோகத்திலேதான் இருப்பார்? - இன்னும் மேலே மேலே போக வேண்டியதுதான். ஆகா! இது என்ன பிரகாசம்? இது என்ன ஜோதி? தேஜோமயமான உருவம் ஒன்று எங்கிருந்தோ வருகிறதா? அடடா! அதோ போகிறதே? இவர்கள், - நம்மைச் சுற்றி நிற்கும் தேவ கந்தர்வ கின்னரர்கள், என்ன பேசிக் கொள்கிறார்கள்? மின்னலைப் போல் தோன்றி, கோடி சூரியர்களைப்போல் பிரகாசித்து, ராமபாணத்தைப்போல் விரைந்து செல்லும் வடிவத்தைச் சுட்டிக்காட்டி என்ன சொல்லிக் கொள்கிறார்கள்?- "தெரிகிறது. தெரிகிறது!" "காந்தி மகாத்மாவின் ஜோதி" என்றல்லவா ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிறார்கள்?- வான வெளியிலே பொழிந்த நறுமலர்களும் வீசிய மந்த மாருதமும், மிதந்து வந்த தேவகானமும் தேவர் தேவியரின் உபசரிப்பு, - எல்லாம் காந்தி மகாத்மாவுக்காகத்தான் போலும்! நான் பாக்கியசாலிதான்; சந்தேகமில்லை, மகாத்மாவின் ஆவி வானுலகம் செல்லும் அதே நாளில் நாமும் இங்கே வரும்படியான பேறு கிடைத்ததல்லவா? ஆனால் அவரை விடக்கூடாது! விட்டுப் பிரியக்கூடாது அந்த ஜோதி போன வழியே போனால் அன்னை கஸ்தூரிபாயைக் காணலாம். காந்திஜியின் ஆத்மா கஸ்தூரிபாயின் ஆத்மா இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு போகாமல் வேறு எங்கே போகும்? ஜோதி போன வழியிலேயே சீதாவின் ஆவியும் சென்றது. மேலே மேலே போய்க்கொண்டே இருந்தது. ஆனால் விரைவில் அந்த ஜோதி போன வழி தெரியாமல் போய் மறைந்துவிட்டது.
ஆயினும் சீதாவின் ஆசை நீங்கவில்லை; நம்பிக்கை குன்றவில்லை. வானவெளியிலேயே போய்க் கொண்டேயிருந்தால் எப்படியும் அந்த ஜோதியைக் கண்டுபிடிக்காமலா போவோம்? சீதாவின் ஆவி பற்பல உலகங்களையும் தாண்டிக்கொண்டு சென்றது. நட்சத்திர மண்டலங்களைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டு சென்றது. ஆகா! எத்தனை உலகங்கள்! எத்தனை சூரியர்கள்! எத்தனை சந்திரர்கள்! எத்தனை நட்சத்திரங்கள்! 'அகிலாண்ட கோடி' என்று சொல்வது எவ்வளவு உண்மை? இவ்வளவையும் தாண்டி அப்பாலே போக முடியுமா? 'அப்பாலுக்கு அப்பாலே' என்று சொல்லக்கூடிய இடம் ஒன்று உண்டா? உண்டு; அவசியம் உண்டு, அத்தனை அண்டங்களையும் புவனங்களையும் சூரிய சந்திரர்களையும் கணக்கில்லா நட்சத்திர மண்டலங்களையும் தாண்டி வந்தாகிவிட்டது. இனி ஒரே நீல நிறத்து வானவெளிதான்! முடிவில்லாத வானவெளி; எல்லையில்லாத நீல நிறம்; ஆதியும் அந்தமும் இல்லாத ஆனந்த வெள்ளம். சீதா பாக்கியசாலி என்பதைக் குறித்துச் சந்தேகம் என்ன?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top