• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பாகம் 5 : (பருவம் 5 / நிறை வாழ்வு )

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5.8. கருத்தில் மூண்ட கனல்


கிளர்ந்த உணர்வுகளும் விம்மிப் பூரிக்கும் தோள்களுமாக இளங்குமரன் எதிரே பார்த்தான். மணிநாகபுரத்து மாளிகையின் ஓவியமாடத்து அறையி லிருந்து நேர் கீழே தணிவாகத் தென்பட்ட முற்றத்தில் எமகிங்கரர்களைப் போன்ற தோற்றமுடைய முரட்டு நாகமல்லர்கள் ஐம்பது அறுபது பேர் - ஆயுத பாணிகளாக அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர். போர்க் கோலம் புனைந்து கொண்டாற் போன்ற தோற்றத்தோடு குலபதியும் அங்கே அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு உட்பக்கம் திரும்பி ஓவிய மாடத்தை நோக்கினான். அங்கே மணிமார்பன் சில ஓவியங்களைப் பிரதி செய்து கொண்டு நிற்பது தெரிந்தது.

‘இந்தக் காரியங்கள் எல்லாம் இவ்வளவு விரைவாக நிகழ்வதன் நோக்கமென்ன?’ என்று இளங்குமரன் தனக்குள் சிந்திக்கத் தொடங்கியபோதில்,

“எதிரே நிகழ்கிறவற்றையெல்லாம் பார்த்தாய் அல்லவா?” என்று கேட்டுக்கொண்டே அருட்செல்வர் வளநாடுடையாரோடு அங்கு வந்து சேர்ந்தார். அவன் இப்போது புதிதாகத் தெரிந்து கொண்டவற்றால் அந்த முனிவருக்கு அதிக நன்றிக்கடன் பட்டிருந்தான்.

“எப்போதோ நிகழ்ந்து முடிந்தவற்றையெல்லாம் இந்த ஏடுகளில் பார்த்தேன். இப்போது நிகழ்கிறவற்றை என் எதிரே பார்க்கிறேன். இழந்தவற்றுக்காக வேதனைப் படுகிறேன். பெற வேண்டியவற்றுக்காகக் கிளர்ச்சி அடை கிறேன். இவ்வளவையும் தெரிந்து கொண்ட பின் உங்கள் மேல் என் நன்றி பெருகுகிறது. என்னை வளர்த்து ஆளாக்கிய காலத்தில் என்னை வளர்ப்பதைத் தவிர வேறு தவங்களைச் செய்ய மறந்திருக்கிறீர்கள் நீங்கள். இது பெரிய காரியம். இதற்குக் கைம்மாறு செய்ய எனக்குச் சக்தியில்லை” என்று முனிவரை நோக்கி அவன் நாத் தழுதழுக்கக் கூறினான். முனிவர் அவன் அருகில் வந்து அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு அன்போடும் பாசத்தோடும் பேசலானார்:

“கைம்மாறு எதிர்பார்த்துக் கொண்டு நானும் இவற்றை யெல்லாம் செய்யவில்லையப்பா! இன்று உன் மேல் நான் கொண்டிருக்கிற இதே அபிமானத்தை உன் தந்தை அமுதசாகரன் வாழ்ந்த காலத்தில் அவன் மேலும் கொண் டிருந்தேன். உன் தந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட கொடுந் துன்பங்கள் என்னை பற்றும் பாசமும் உள்ள வெறும் மனிதனாக்கிவிட்டன. அந்தக் கணத்திலிருந்து நான் உனக்காக மட்டும் தவம் செய்யத் தொடங்கி விட்டேன். அந்த தவம் இன்று நிறைவேறுகிறது. இனிமேல்தான் என்னுடைய மெய்யான தவங்களை நான் செய்யத் தொடங்க வேண்டும்.”

“உங்கள் தவம் நிறைவேறுகிற விநாடிகளில் என் தவம் அழிகிறது. நான் படித்துப் படித்துச் சேர்த்திருந்த பொறுமை இப்போது எவ்வளவோ முயன்றும் என்னிடம் நிற்காமல் நழுவுகிறது.”

“அப்படி நழுவ வேண்டுமென்றுதான் இவ்வளவு காலம் நானும் காத்திருந்தேன். இதோ கீழே உன்னுடைய தாய்மாமன் மகனாகிய குலபதி பட்டினப்பாக்கத்து ஏழடுக்கு மாளிகையையே இரவோடிரவாகச் சூரையாடிக் கொள்ளை யிட வேண்டுமென்று படை திரட்டிக் கொண்டு நிற்கிறான். நீ யாரைச் சந்தித்துப் பழிவாங்க வேண்டுமோ அவனிடம் காண்பிப்பதற்காக உன் நண்பனான ஓவியன் மணிமார்பனைக் கொண்டு இந்த ஓவியங்களைப் பிரதி செய்யச் சொல்லியிருக்கிறேன். நீ போகும்போது இவற்றையும் உன்னோடு கொண்டு போ. குலபதியும் அந்த நாகமல்லர்களும் உன்னோடு பூம்புகாருக்கு வருகிறார்கள். வளநாடுடையாரும் ஓவியனும் வேறு வருகிறார்கள். பூம்புகாரில் நீலநாகரும் இருக்கிறார்.”

“ஏன் நீங்கள் வரவில்லையா?”

“நான் இனிமேல் பூம்புகாருக்கு வருகிற எண்ணமில்லை. உனக்கு இவற்றையெல்லாம் உணர்த்தியபின் இன்று என் மனச்சுமை குறைந்துவிட்டது. இந்த விநாடியிலிருந்து நான் மெய்யாகவே எல்லாப் பாசங்களையும் உதறிய பூரணத் துறவியாகி விட்டேன். இங்கேயே சமந்த கூடத்துக் காட்டில் எங்காவது போய்க் கடுமையான தவ விரதங்களில் இனி ஈடுபட எண்ணியிருக்கிறேன். இன்று இப்போது நீ எனக்குச் செய்ய முடிந்த கைம்மாறு, என் வழியில் நான் போவதற்கு விடுவதுதான். மறுபடி உன்னைக் காண வேண்டுமென்று எனக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போது நானே உன்னைத் தேடிக் கொண்டு வருவேன். கடமை நிறைவேறிய பின்னும் பற்றுப் பாசங்களை உதற முடியாமல் நான் இருந்து விடுவேனாயின் என்னுடைய துறவு நெறி பொய்யாகிவிடும்.”

“சுவாமீ! நீங்கள் எல்லாப் பற்றுப் பாசங்களையும் உதறிவிட்டுப் போகிற போக்கில் நான் எதையும் உதற முடியாமல் என்னைக் கோபதாப உணர்ச்சிகளில் பிணைத்து விட்டுப் போகிறீர்களே? இது நியாயமா?”

“நன்றாக விடுபட வேண்டுமானால் நன்றாகக் கட்டுண்டுதான் தீர வேண்டும். நீ இப்போது கட்டுப் படுவதும் அப்படித்தான். இரும்புக் கவசங்களாலும், ஆயுதங்களாலும் கட்டுண்டு உடம்போடும் விடுபட்ட மனத்தோடும் நீலநாகர் வாழவில்லையா? அப்படி நீயும் வாழ்வாய் எனக்கு விடை கொடு.”

அருட்செல்வருடைய பிரிவு வேதனையைக் கொடுத்தாலும் இளங்குமரன் அவருடைய விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க விரும்பாமல் விடை கொடுத்தான். எட்டு அங்கமும் தோய வீழ்ந்து வணங்கி அவருடைய பாதங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். மற்றவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு அவர் சமந்த கூடத்திற்கு புறப்பட்டுப் போனார். அனலும் வெப்பமும் மிகுந்த நேரத்தில் எங்கிருந்தாவது நல்ல குளிர் காற்றுச் சில்லெனப் புறப்பட்டு வருவதுபோல் வேதனையும் துன்பமும் படுகிறவர்களின் வாழ்க்கையில் உதவி புரிவதற் கென்றே இப்படிச் சில ஞானிகள் நடுவாக வந்து பொறுப்புடனே துணை செய்துவிட்டுப் போகிறார்கள். இப்படிப் பயன் கருதாமல் உதவி செய்ய வருகிறவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாயிருக்க வேண்டும் என்று அருட் செல்வரைப் பிரிந்தபோது இளங்குமரன் எண்ணினான். எல்லாம் புரிந்துகொண்டு எவற்றை உணர வேண்டுமோ அவற்றை உணர்ந்து கிளர்ச்சியுற்ற மனத்தோடு நின்ற இளங்குமரன் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சி மாறுதல்களை ஒவ்வொன்றாக நினைத்தான். படிப்படியாக நடந்து மலையேறி வந்தவன் உயரத்தில் போய் நின்று கொண்டு இனிமேல் போவதற்கு இதைவிட உயரமானது எதுவு மில்லையே என்று மலைப்போடு நடந்து வந்து வழியைத் திரும்பிப் பார்ப்பது போலிருந்தது அந்த நிலை.

முதன் முதலாகப் பட்டினப்பாக்கத்துப் பெரு மாளிகைத் தோட்டத்தில் அந்த பெருநிதிச் செல்வர் தன்னைச் சந்தித்ததையும் தன் கழுத்தின் வலதுபக்கத்துச் சரிவில் கருநாவற்பழம் போலிருந்த கருப்பு மச்சத்தை உற்றுப் பார்த்தபின், “அருட்செல்வ முனிவர் நலமா யிருக்கிறாரா?” என்று குறும்புத்தனமாகத் தன்னை நோக்கிக் கேட்டதையும், தான் அன்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறியபோது ஒற்றைக் கண்ணன் தன்னை இரகசியமாகப் பின் தொடர்ந்ததையும் இப்போது வரிசையாக நினைத்துப் பார்த்துப் புரிந்துகொண்டான் இளங்குமரன். இந்த எண்ணங்களையும் தன் குடியின் ஒரு தலைமுறை உயிர்களும் செல்வங்களும் அந்தப் பெருநிதிச் செல்வனால் அழிக்கப்பட்டிருப்பதையும் ஞாபகத்திற்குக் கொண்டுவந்து பார்த்தபோது அவனுடைய கருத்தில் கனல் மூண்டது. அந்த விநாடியில் அத்தகைய புதிய உணர்வுகளைத் தாங்கிக் கொண்டிருக்கும்போது தன் முகம் எப்படியிருக்கிறதென்று ஓவிய மாடத்தில் பதித்திருந்ததொரு கண்ணாடியில் பார்த்தான் இளங்குமரன். உணர்ச்சிகளின் சிறுமை எதுவும் படியாமல் பளிங்குபோல் இருந்த அவன் முகம் சற்றே கறுத்திருந்தது. இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்ததனால் ஏற்பட்ட உணர்ச்சிகள் ஒருபுறமும், இவை தெரிந்ததனால் இழந்த உணர்ச்சிகளை எண்ணி வருந்தும் வருத்தம் ஒருபுறமுமாக இளங்குமரன் சிறிது போது மலைப்படைந்து நின்றான். தன் தாயும் தந்தையும் சந்திப்பதாக வரையப்பட்டிருந்த ஓவியத்தின் அருகே சென்று சில விநாடிகள் கண்ணிமையாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் கீழேயிருந்த ஏடுகளை எடுத்துப் பார்த்துத் தன் தந்தையின் சுவை நிறைந்த கவிதைகளைச் சிறிது நாழிகை உணர்ந்து மகிழ்ந்தான். கீழே போய்க் குலபதியை அழைத்துக் கொண்டு வந்து நின்றார் வளநாடுடையார்.

“தம்பீ! குலபதியின் இரகசியப் படையிலிருக்கும் மல்லர்கள் ஒவ்வொருவரும் பத்து எதிரிகளை அடித்துக் கொல்லுகிற ஆற்றலுடையவர்கள். இவர்களோடு நாம் எல்லோரும் இன்று மாலையே பூம்புகாருக்கு கப்பலேற வேண்டும்” என்று வளநாடுடையார் கூறியபோது சில கணங்கள் இளங்குமரன் மெளனமாயிருந்தான். பின்பு ஒவ்வொரு சொல்லாகச் சிந்தித்துப் பேசுகிறவனைப் போலப் பேசினான்:

“ஐயா! யாருடைய வெறுப்பினால் என்னுடைய குடி இப்படிச் சீரழிந்ததோ அவருடைய செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு அவற்றை நமது கப்பல் நிறைய நிரப்பியபின் பூம்புகாரிலிருந்து இரவோடிரவாகத் திரும்பிவிட வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் போலிருக்கிறது. என் விருப்பம் அது அன்று. இவ்வளவு கெடுதலும் செய்வதற்குக் காரணமாக அந்த மனத்தில் இருந்த தீய எண்ணங்களை ஒவ்வொன்தாக வெளியேற்றிப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். பெண் சம்பந்தமாக ஏமாறியவர்களும், பொன் சம்பந்தமாக ஏமாறியவர்களும் அந்த ஏமாற்றத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் மேல் எவ்வளவு குரோதமுற முடியும் என்பதற்கு இந்த மனிதர் உதாரணமாயிருக்கிறார். என் தந்தையையும் தாயையும் இவர் அழித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருப்பது தான் பேதைமை. உலகத்தில் பாடும் குலத்தின் கடைசிக் கவியின் கடைசிக் குரல் ஒலிக்கிற வரை அதில் என் தந்தையின் கருத்தும் தொனித்துக் கொண்டிருக்கும். உலகத்துப் பெண் குலத்தின் ஒவ்வொரு தலைமுறைப் பேரழகிலும் என் தாயின் அழகும் எங்கோ ஓரிடத்தில் எழில் பரப்பிக் கொண்டிருக்கும். படைப்பின் செல்வங்களிலிருந்து எதையும், எந்த மனிதர்களும் திருடி ஒளித்துவிடவோ, அழித்து நிர்மூலம் செய்துவிடவோ முடியாது. என் தாய்மாமன் காலாந்தக தேவரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டதாகத் திருப்திப்படலாம். இதோ அவரைப் போலவே அரும்பு மீசையும் அழகிய தோற்றமுமாக விளங்கும் குலபதியின் முகத்தில் தெரிகிற கவர்ச்சி அவரைத்தானே நினைவூட்டுகிறது, என் தாய் மாமனுடைய ஓவியத்தை இந்த மாடத்தில் பார்த்தபோது ஒரு தொடர்பும் தெரியாமலே குலபதியின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன் நான். மனிதன் பிறரையும் பிறருடைய எண்ணங்களையும் கொல்ல முடியும். அந்த எண்ணங்களும் அதே எண்ணங்களைக் கொண்ட புதிய பரம்பரையும் தோன்றுவதைத் தடுக்க முடியாது. இவற்றையெல்லாம் அறியத் தவித்துத் தவித்து அந்த அறியும் ஆசையே என்னுடைய கருத்தில் கனன்று கொண்டிருந்த காலத்தில் இவை எனக்குத் தெரியவில்லை. குருகுல வாசம் செய்து ஞானப்பசி தீர்ந்து, கல்வியினாலும் தத்துவ மயமான எண்ணங்களாலும் அந்தக் கனல் அவிழ்ந்து போய் மனத்தில் அது இருந்த இடம் குளிர்ந்திருக்கும் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இத்தனை காலமான பின்பும் அது அழியாமல் நீறுபூத்த நெருப்பாக அடிமனத்தில் என்னுள் எங்கோ எரிந்து கொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு காலம் எப்படி எவருக்குக் கடமைப் பட்டிருந்தாலும் தாம் ஒரு துறவி என்ற நினைப்பை இழந்துவிடாமல் ஒரே ஒரு கணத்தில் எல்லாப் பற்றுப் பாசங்களையும் உதறிவிட்டு அருட் செல்வர் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டார் பார்த்தீர்களா? அப்படி என்னால் போக முடியவில்லை என்பதை உணரும் போதே நான் ஏதோ ஒருவிதத்தில் பக்குவப்படவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தப் பக்குவத்தை அடைவதற்கு இந்தச் சோதனையை நான் ஏற்றுக்கொள்வது அவசியம்தான். ஆனால், இந்தச் சோதனையில் நான் தனியாகப் புகுந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறேனே ஒழியப் பிறருடைய துணைகளை விரும்பவில்லை. குலபதியின் இரகசியப் படையிலிருக்கிற மல்லர்களும், குலபதியும் நம்மோடு, பூம்புகாருக்கு வரவே கூடாது.

“நான் ஒரு கவியின் மகன். கவிகள் வார்த்தைகளாலேயே பிறருடைய உணர்ச்சிகளையும் மனத்தையும் வென்றுவிடும் சத்தியப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய சொற்களே அவர்களுக்குப் பெரிய ஆயுதங்கள். நான் என்னுடைய குலப்பகைவனைத் தனியே நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன். அப்படிச் சந்திக்கப் புறப்படுவதற்காக இன்று மாலை வரை தாமதம் செய்ய வேண்டியதுகூட அநாவசியம். நான் இந்த விநாடியே புறப்படுகிறேன்” என்று கூறிக்கொண்டே தன் தாயின் ஓவியத்தருகே இருந்த ஏடுகளையும், தான் முதல் நாளிரவு படித்திருந்த ஏடுகளையும் எடுத்துக்கொண்டு சில சித்திரங்களைப் பிரதி செய்துகொண்டிருந்த மணிமார்பன் அருகே சென்றான் இளங்குமரன். அவன் அதுவரை கூறியவற்றைக் கேட்டு மனக்குழப்பம் அடைந்திருந்த குலபதி, “ஐயா! இதென்ன என்னுடைய அத்தையின் அருமைப் புதல்வர் திடீரென்று இப்படி எல்லாத் திட்டங்களையும் மாற்றுகிறாரே! என்னையும் நான் இத்தனை காலமாக இந்தக் காரியத்திற்காகவே சோறிட்டு வளர்த்த இந்த மல்லர்களையும் பூம்புகாருக்கு வரக் கூடாதென்கிறாரே இவர்? என் அத்தையும் அவள் நாயகரான கவிஞர் அமுதசாகரும் என் தந்தையாரும் அந்தப் பட்டினப்பாக்கத்து மாளிகைச் செல்வரிடம் போய்த் தனிமையில் உயிரைப் பறிகொடுத்த வேதனைகள் போதாதென்று இவரும் போய் அப்படி ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது” என்று கலக்கத்தோடு வளநாடுடையாரிடம் கூறினான்.

“அப்படியெல்லாம் ஒன்றும் ஆகிவிடாது குலபதி! இளங்குமரனுக்குச் சிறுவயதிலிருந்தே இப்படிப் பிடிவாத குணம் உண்டு. நடுவில் ஒடுங்கியிருந்த அந்தக் குணம் இப்போது மறுபடி மெல்லத் தோன்றுகிறதோ என்னவோ? எப்படி இருந்தாலும் நீ இப்போது அவன் சொற்படியே நடந்துகொள்வதுதான் நல்லது. நானும் மணிமார்பனும் எப்படியும் அவனோடு பூம்புகாருக்குச் செல்வோம். அங்கே நீலநாகரைச் சந்தித்து அவரிடம் கலந்தாலோசித்த பின் இளங்குமரனுக்குப் பாதுகாப்பாக என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் அவனுக்கும் தெரியாமலே செய்துவிடுவோம். தவிர அறிவாளிகளின் பிடிவாதம் நல்ல முடிவைத்தான் தருமென்று என் அனுபவத்தில் நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நீயும், உன்னைச் சேர்ந்த மல்லர்களும் எங்களோடு வர வேண்டாம். இளங்குமர னுடைய போக்குப்படியே போய்க் காரியத்தைச் சாதிக்கலாம்” என்று குலபதிக்கு மறுமொழி கூறினார் வளநாடுடையார். குலபதியும் அரை மனத்தோடு அதற்கு இணங்கினான்.

இளங்குமரன் பயணத்திற்கு முன்பு நீராடி விட்டுத் தூய்மையாக வந்து தன் பெற்றோர்களின் ஓவியத்தை வணங்கினான். தாய் மாமனாகிய காலாந்தக தேவனுடைய ஓவியத்தையும் வணங்கினான். பின்பு மணிமார்பனை நோக்கி, “நீ பிரதி செய்த ஓவியங்களை எடுத்துக்கொண்டு புறப்படு” என்றான். அப்போது குலபதி இளங்குமரன் அருகே வந்து, “ஐயா! பட்டினியாக வெறும் வயிற்றோடு போகாதீர்கள். இது உங்கள் மாளிகை. இங்கே நிரம்பிக் கிடக்கும் செல்வங்களையெல்லாம் ஆளவேண்டியவர் நீங்கள். என்னையும் இந்த மாளிகையின் செல்வங்களையும் தான் கைவிட்டு விட்டுப் போகிறீர்கள். நானும் என் வீரர்களும் உங்களோடு பூம்புகாருக்கு வரக்கூடாதென்றும் பிடிவாதமாக மறுக்கின்றீர்கள். மறுபடியும் நான் உங்களை எப்போது சந்திக்கப்போகிறேனோ? இன்று புறப்படுமுன் என்னோடு அமர்ந்து பசியாறிவிட்டுச் செல்லுங்கள்” என்று நெகிழ்ந்த குரலில் வேண்டிக் கொண்டான்.

சில கணங்கள் அந்த நெகிழ்ச்சிக்குக் கட்டுப்பட்டு ஒன்றும் சொல்லாத் தோன்றாமல் தயங்கி நின்றான் இளங்குமரன். அந்த வேண்டுகோளைச் சொல்லியவனுடைய முகத்தையும், அதைக் கேட்டுத் தயங்கி நிற்பவனுடைய முகத்தையும் பார்த்து அந்த விநாடியில் அங்கே சூழ்ந்து நின்ற எல்லாருடைய மனங்களும் தவித்துக் குமுறி மெளனமாகவே உள்ளுக்குள் அழுதன. தயங்கி நின்ற இளங்குமரன் மெல்ல நடந்து போய்க் கண்கலங்கி எதிரே நின்று கொண்டிருந்த குலபதியைத் தோளோடு தோள் சேரத் தழுவிக்கொண்டு அவனை நோக்கிப் புன்சிரிப்புடனே சொல்லலானான்:

“குலபதி என்னுடைய பசி மிகவும் பெரியது. அது மிக நீண்ட காலத்துப் பசி. பல பிறவிகளாக நிறையாமலே வருகிற பசி. அதன் ஒரு பகுதி திருநாங்கூரில் நான் குருகுல வாசம் செய்தபோது நிறைந்தது. இன்னொரு பகுதி பூம்புகாரில் சமயவாதிகள் அணிவகுத்து நின்ற ஞான வீதியில் அவர்களை நான் சந்தித்து வென்றபோது நிறைந்தது. இன்னொரு பகுதி இந்தத் தீவுக்கு வந்து என் குடிப்பிறப்பைப் பற்றி நான் தெரிந்து கொண்ட பின்பு நிறைந்தது. இனி மீதமிருக்கிற பசியும் நான் பூம்புகாருக்குப் போனவுடன் நிறைந்துவிடும். இந்த முறை என் பிறவி முழுமையடைந்து விட வேண்டுமென்று நான் இடை விடாமல் மனத்திற்குள்ளேயே விடுபட்டுப் பறப்பதற்குத் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் உடம்பில் அதிகமான சக்தியும் இரக்கமும் ஓடி நான் யாரைச் சந்தித்து நியாயம் கேட்க வேண்டுமோ அவரிடம் என் அந்தரங்கத்துக்கு மாறாக நடந்து கொண்டு விட நேருமோ என்ற பயத்தினால் அந்தச் சோதனை முடிகிறவரை விரதமிருக்க எண்ணு கிறேன். ஆகவே என்னை உண்பதற்கு அழைக்காதே. எனக்கு விடை கொடு.”

“இந்த மாளிகையும் இதன் செல்வங்களையும் ஆள வேண்டியவன் நான் என்று நீ கூறுகிறாய். என்னுடைய சிறு பருவத்திலிருந்தே இந்த வகையான செல்வங்கள் மதிப்புள்ளவையாக எனக்குத் தோன்றவில்லை. நான் தவச்சாலையில் ஒரு முனிவருடைய வளர்ப்புப் பிள்ளை யாக வளர்ந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம். அந்தத் தவச்சாலையும் பூம்புகாரின் மயானத்தருகே அமைந் திருந்தது. மனிதனுடைய ஆசைகளும், நினைவுகளும், கனவுகளும் நம்பிக்கைகளும் அழிந்து மண்ணோடு கலந்து விடுகிற பூமியில் நடந்து நடந்து அந்த மண்ணின் குணமே எனக்குப் படிந்து விட்டதோ என்னவோ? எனக்காகப் பிறரை அநுதாபப்பட விடுவது கூட என் தன்மானத்துக்கு இழுக்கு என்று கருதி மானமே உருவாக நான் நிமிர்ந்து நின்ற நாட்களும் என் வாழ்வில் உண்டு. எல்லோருக்காகவும் எல்லா வேளைகளிலும் அநுதாபப்படும் மனம் தான் ஞானபூமி என்று நானே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தனது எண்ணத்தில் தவம்செய்த நாட்களும் என் வாழ்வில் உண்டு. என்னுடைய வாழ்க்கையே ஒவ்வொரு பருவத்திலும் எனக்குப் பாடமாக வாய்த்திருக்கிறது. ஆனால் எல்லாப் பருவத்திலும் சேர்ந்து நான் மொத்தமாக அலட்சியம் செய்த ஒரு பொருள் செல்வமும் சுகபோகங்களும் தான். துக்கமயமான அநுபவங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி எந்த வேளையிலும் நெருப்பில் இளகும் பொன்னாக ஒளிர வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று தன் மனத்தைத் திறந்து பேசினான் இளங்குமரன். மேலே ஒன்றும் கேட்கத் தோன்றாமல் குலபதியின் நாக்கு அடங்கிவிட்டது. வளநாடுடையாரும், மணிமார்பனும், அவன் மனைவி பதுமையும் உடன்வர இளங்குமரன் அன்று நண்பகலில் பூம்புகாருக்குக் கப்பலேறினான். சங்குவேலித் துறைக்கு வழியனுப்ப வந்திருந்த குலபதி இளங்குமரனுக்கு விடைகொடுக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டான்.

“ஐயா! என் அத்தையின் புதல்வராகிய நீங்கள் உங்கள் வாழ்வின் ஒரு பருவத்தில் முரட்டு வீரராக வாழ்ந்திருக்கிறீர்கள்! மற்றொரு பருவத்தில் கல்விக் கடலாகப் பெருகியிருக்கிறீர்கள். பின்பு ஞானியாக நிறைந்திருக்கிறீர்கள்! இறுதியில் நெருப்பிலே இளகும் பொன்போலச் சான்றாண்மை வீரராக உயர்ந்திருக்கிறீர்கள். இவற்றை யெல்லாம் என் குடும்பப் பெருமையாக நான் எண்ணிப் பூரிக்கிறேன். ஆனால் மறுபடி எப்போது உங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்து சேரப் போகிறீர்கள்? வேற்று மனிதர் வந்து தங்குவது போல இரண்டு நாள் வந்து இருந்துவிட்டுப் பிரிவையும் ஆற்றாமையையும் எனக்கு அளித்துவிட்டுப் போகிறீர்களே? இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?” என்று குலபதி குமுறியபோது, “விரைவில் வருகிறேன் கவலைப்படாதே!” என்று கூறி அருள்நகை பூத்தான் இளங்குமரன்.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்துப் பூம்புகார்த் துறையில் வந்து இறங்கிய போதுதான் இளங்குமரன் குலபதியின் வேண்டுகோளையும் சொற்களையும் இரண்டாம் முறையாக நினைவு கூர்ந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5.9. நியாயத்தின் குரல்

பூம்புகார்த் துறையில் இளங்குமரன் முதலியவர்கள் வந்து இறங்கியபோது இருள் பிரியாத வைகறை நேரமாயிருந்தது. துறைமுகத்தைச் சூழ்ந்துள்ள பகுதிகளையும் எதிரே பரந்து கிடந்த வெள்ளிடை மன்றம் என்னும் நிலப் பரப்பையும் மெல்லிருள் கவிந்து போர்த்தியிருந்தது. அலைகளின் ஓசையும் துறையை அடுத்த கரை நிலப் பரப்பில் குவிந்திருந்த பல்வேறு பண்டங்களைக் காவல் செய்வோர் இடையிட்டு இடையிட்டுக் கூவும் எச்சரிக்கைக் குரல்களுமாகத் துறைமுகம் வேறு ஒலியற்றிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னைச் சிறு குழந்தையாகக் கைகளில் ஏந்திக்கொண்டு தன் தாய் ஆதரவும் துணையுமில்லாத பேதைப் பெண்ணாய் இதே துறைமுகத்தில் வந்து நின்ற போதாத வேளையை இப்போது கற்பனை செய்து பார்க்க முயன்றது இளங்குமரனின் மனம். கரையிலிருந்த பார்வை மாடத்தில் ஏறி விடிகாலையின் அமைதியில், மெல்ல மெல்ல உறங்கிச் சோர்ந்தபோன மணப் பெண்ணைப் போலத் தெரியும் நகரத்தைச் சிறிது நாழிகை பார்த்துக் கொண்டு நின்றான் இளங்குமரன். கப்பல் கரப்புத் தீவிலிருந்து சுரமஞ்சரியோடு திரும்பிய காலை வேளை ஒன்றில் நீண்ட நாட்களுக்கு முன்பு இன்று போல இதே பார்வை மாடத்தில் ஏறி நின்று நகரத்தைப் பார்த்த நிகழ்ச்சி அவனுக்கு நினைவுக்கு வந்தது. அன்று பார்த்த நகரத்திற்கும் இன்று பார்ப்பதற்கும்தான் எவ்வளவு வேறுபாடு?

பார்வை மாடத்திலிருந்து கீழே இறங்கி உடனிருந்த மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு நீலநாகருடைய ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குச் சென்றான் இளங்குமரன். போகும்போது வளநாடுடையார் அவனிடம் கூறலானார்:

“தம்பீ! நீ பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குச் சென்று அங்கே உன்னுடைய குலப் பகைவரைச் சந்திக்கும் போது அந்த ஓவியனையும் உன்னோடு அழைத்துப் போவது அவசியம். இந்த ஓவியன் அந்த மாளிகையில் சில நாட்கள் தங்கியிருந்த காரணத்தால் அதன் ஒவ்வொரு பகுதிகளைப் பற்றியும் இவனுக்கு ஓரளவு தெரியும்.”

இதைக் கேட்டு இளங்குமரன் பதில் சொல்லாமல் சிரித்தான். பின்பு மெளனமாக மேலே நடந்தான். அவர்கள் எல்லாரும் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையை அடைந்தபோது நீலநாகர் நீராடி முடித்துத் திருநீரு துலங்கும் நெற்றியோடு கோவிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த அருங்காலை நேரத்தில் அவர்கள் எல்லாரும் வரக்கண்டு நீலநாகர் பெருமகிழ்ச்சி கொண்டார்.

“இளங்குமரா! இதற்கு முன்பு எப்போதும் இல்லாதபடி இந்த முறை உன் பிரிவு என்னை மிகவும் வேதனைப் படுத்திவிட்டது. ஒவ்வொரு நாளும் நீ எப்போது திரும்பி வரப்போகிறாய் என்று நினைத்து நினைத்துத் தவித்துப் போய்விட்டேன் நான். நல்லவேளையாக நான் எதிர் பார்த்த காலத்துக்கு முன்பே நீ மணிபல்லவத்திலிருந்து திரும்பி வந்துவிட்டாய்” என்று கூறி இளங்குமரனை அன்போடு வரவேற்றார். அவர். இளங்குமரன் அவரை வணங்கிவிட்டுச் சிறிது நேரம் வாயிலில் நின்றபடியே அவரிடம் பேசிக்கொண்டிருந்த பின்பு உள்ளே சென்றான். அவனைப் பின் தொடர்ந்தாற் போல் ஓவியனும் அவன் மனைவியும் கூட உள்ளே சென்றுவிட்டார்கள். வளநாடுடையார் மட்டும் நீலநாக மறவரிடம் ஏதோ தனியாகப் பேச விரும்புகிறவர் போல் நின்றார். அவர் நிற்கும் குறிப்பு நீலநாகருக்குப் புரிந்துவிட்டது. உடனே “என்ன வளநாடுடையாரே! இந்தப் பிள்ளை ஏன் இப்படிக் கலங்கிக் கறுத்துப் போயிருக்கிறான்?” என்று நீலநாகர் இளங்குமரனைப் பற்றி அவரைக் கேட்டார்.

“நாமிருவரும் பேசிக்கொண்டே போகலாம். நீங்கள் கோவிலுக்குப் புறப்படுமுன் ஆலமுற்றத்து மரத்தடியில் உங்களோடு சிறிது நேரம் நான் தனியாகப் பேச வேண்டும்” என்றார் வளநாடுடையார். நீலநாகரும் அதற்கு இணங்கிய பின் இருவரும் நடந்தனர்.

கடலருகேயுள்ள ஆலமுற்றத்துக் கரையில் மரகதத் தகடு வேய்ந்து பசும் பந்தலிட்டது போலப் பரந்திருந்த ஆலமரத்தின் கீழே மணற்பரப்பில் வளநாடுடையார் நீலநாகரோடு அமர்ந்துகொண்டார்.

“நீலநாகரே! இதுவரை உங்களிடம் மாற்றிச் சொல்லியிருந்த பொய் ஒன்றை இப்போது உண்மையாகவே வெளியிட நேருகிறது. அதறக்காக முதலில் நீங்கள் என்னைப் பொருத்தருள வேண்டும். அருட்செல்வ முனிவர் இறந்து போய்விட்டதாக நான் நீண்ட நாட்களுக்கு முன்பு உங்களிடம் வந்து கூறியது பொய். அவர் மணிபல்லவத் தீவில் உயிரோடு வாழ்ந்து வருகிறார். இளங்குமரன் இந்தப் பயணத்தின்போது அவரைச் சந்தித்தான். தன் பிறப்பைப் பற்றிய பல உண்மைகளை அவரிடமிருந்து தெரிந்து கொண்டான். முனிவர் எனக்கும் அவற்றைக் கூறினார்...” என்று தொடங்கிச் சொல்லிக் கொண்டே வந்தார். தாம் சொல்லியவற்றால் நீலநாகருடைய முகத்தில் என்ன மாறுதல் விளைந்திருக்கிறதென்று அறிய விரும்பி யவராகப் பேச்சை நிறுத்திக் கொண்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். நீலநாகர் சிரித்துக்கொண்டே அவருக்கு மறுமொழி கூறினார்:

“உடையாரே! இந்தச் செய்தியை நீங்கள் என்னிடம் மறைத்ததனால் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. அருட் செல்வருடைய தவச்சாலை தீப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னால் அவரே என்னைச் சந்தித்துச் சில பொறுப்புக்களையும் இளங்குமரனைக் கவனித்துக் கொள்ளும் கடமையையும் என்னிடம் ஒப்படைத்தார். அன்று அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களிலிருந்தே இவர் எங்கோ நீண்ட தொலைவு விலகிச் செல்ல விரும்புகிறார் என்று நான் அவரைப் பற்றிப் புரிந்து கொண்டேன். ஆனால் சில நாட்கள் கழித்துத் தவச்சாலையில் பற்றிய நெருப்பிலே அவரும் மாண்டு போனார் என்று நீங்கள் வந்து கூறியபோது அந்தச் செய்தி எனக்குப் பேரிடியாக இருந்தது. அதை நம்பவும் முடியவில்லை, நம்பியும் ஆக வேண்டியிருந்தது. அதனால் என்ன? நாம் உயிரோடு இருப்பதாக நினைத்து நம்பிக் கொண்டிருந்த ஒருவர் இறந்து போய் விட்டால் தான் நமக்கு ஏமாற்றம், துக்கம் எல்லாம் உண்டாகின்றன. நாம் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் உயிரோடிருக்கிறார் என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே?”

“இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் இப்போது நமக்குத் தெரிந்துவிட்டது நீலநாகரே! இன்னாரென்றும் எதற்காகவென்றும் தெரியாமல் இந்தப் பூம்புகாரில் இளங்குமரனுக்குக் கேடு சூழ்ந்ததற்கு மூலகாரணமானவர் யாரென்று தெரிந்துவிட்டது. நீங்கள் அந்தக் கபாலிகை யிடம் போய் விசாரித்துத் தெரிந்துகொள்ள முயன்றீர்கள். அதைவிடத் தெளிவாக இப்போது அருட்செல்வர் எல்லா வற்றையும் கூறிவிட்டார்...” என்று தொடங்கி எல்லாச் செய்திகளையும் நீலநாகருக்குச் சொல்லி முடித்தார் வளநாடுடையார்.

எல்லாவற்றையும் கேட்ட நீலநாகர் கொதிப்படைந்தார். இவ்வளவையும் தெரிந்துகொண்ட பின்னுமா இந்தப் பிள்ளை இளங்குமரன் இப்படி அமைதியாயிருக்கிறான்? பூம்புகார்த் துறையில் வந்து இறங்கிய மறுகணமே அந்தப் பெருமாளிகைக்குப் போய்ச் சூறையாடியிருக்க வேண்டாமோ?”

“நீங்களாகவோ நானாகவோ இருந்தால் அப்படிச் சூறையாடியிருப்போம் நீலநாகரே! இளங்குமரனை என்னால் புரிந்து கொள்ளவே முடியவிலலை. எந்த நோக்கத்துடனோ அவன் பெரிதும் அமைதியாயிருக்கிறான். ‘உன் கடமைகளை உனக்கு நினைவுபடுத்தியாயிற்று. இனி நான் என் வழியில் போக வேண்டும். சமந்த கூடத்துக் காட்டில் போய்த் தவத்தில் மூழ்கப் போகிறேன். எனக்கு விடை கொடு’ என்று அருட்செல்வ முனிவரும் மணிநாகபுரத்திலிருந்தே விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். இந்தப் பிள்ளையின் தாய்மாமன் மகன் குலபதி பட்டினபாக்கத்துப் பெருநிதிச் செல்வனைப் பழிவாங்குவதற்காக ஒரு படையே திரட்டி வைத்திருந்தான். அவனையும் அவன் படைகளையும்கூடத் தன்னோடு வரக் கூடாதென இவன் மறுத்து விட்டான். மணிநாகபுரத்திலிருந்து கப்பலில் திரும்பி வரும்போது ‘மேலே செய்ய வேண்டி யவைகளைப் பற்றி இனி என்ன திட்டம்’ என்று கேட்டுப் பலமுறை நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். இவன் அப்போதெல்லாம் நன்றாக முகம் கொடுத்துப் பேச வில்லை. ‘பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குப் போவதாயிருந்தால் தனியாகப் போகாதே, உன்னோடு ஓவியனையும் துணையாய் அழைத்துக்கொண்டு போ’ என்று இங்கு வந்து கரை சேர்ந்ததும் கூறினேன். அதற்கும் மறுமொழி கூறாமல் மெளனமாயிருந்து விட்டான். கருணை, பரிவு, சாந்தம் என்றெல்லாம் இந்தப் பிள்ளை வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எனக்குத் தயக்கமாயிருக்கிறது. கொலை பாதகங்களுக்கும் அஞ்சாத எதிரியிடம் இவன் வெறுங்கையோடு போய் நிற்கப் போகிறானே என்று எண்ணினால்தான் எனக்குப் பயமாயிருக்கிறது. இதைத்தான் உங்களிடம் தனிமையில் சொல்ல விரும்பினேன். இன்று பகலிலோ, மாலையிலோ, இளங்குமரன் பட்டினப்பாக்கத்திற்குப் புறப்பட்டால் அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்படியாவது நீங்கள் அவனுக்குப் பாதுகாப்பாகப் பின்தொடர வேண்டும். இந்தப் பொறுப்பை உங்களிடம் கொடுத்து விட்டேன். இனி நான் நிம்மதியாகப் புறவீதியில் என்னுடைய இல்லத்திற்குச் சென்று என் மகளைப் பார்த்து இளங்குமரன் திரும்பி வந்திருக்கிற செய்தியை அவளுக்குச் சொல்லலாம். அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிற செய்தியாயிருக்கும் இது” என்று சொல்லிவிட்டு எழுந்திருந்தார் வளநாடுடையார்.

“உங்களுக்கு இதைப்பற்றிய பயமே வேண்டாம், வளநாடுடையாரே! எல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறி வளநாடுடையாருக்கு விடை கொடுத்து அனுப்பினார் நீலநாகர்.

பின்பு கோவிலுக்குப் போய் வழிபாட்டை முடித்துக் கொண்டு படைக்கலச் சாலைக்குத் திரும்பினார். ஓவியன் மணிமார்பனை மட்டும் தனியே அழைத்து, “நான் படைக்கலச் சாலையின் உட்புறம் இளைஞர்களுக்கு வாட்போர் பயிற்சி அளித்துக் கொண்டிருப்பேன் தம்பீ! உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும். நீ இளங்குமரனை அருகிலிருந்து கவனித்துக் கொண்டேயிரு. அவன் எங்காவது வெளியேறிச் சென்றால் உடனே அதை நீ என்னிடம் வந்து சொல்ல வேண்டும்” என்று கூறி அவனிடம் வேண்டிக் கொண்டு படைக்கலச் சாலையின் உள்ளேயிருந்த தோட்டத்துப் பக்கமாகச் சென்றார் நீலநாக மறவர். படைக்கலச் சாலையில் அதன் பின்பு அன்று மாலைப் போது அமைதியாகக் கழிந்தது.

மணிமார்பன் இளங்குமரனுக்கு அருகிலேயே இருந்தான். இளங்குமரன் அன்று உணவு உண்ணவில்லை. ஏழெட்டு முறை திரும்பத் திரும்ப குளிர்ந்த தண்ணிரில் மூழ்கி நீராடிவிட்டு வந்தான். மெளனமாக உட்கார்ந்து தியானம் செய்தான். சிறிதுபோது ஏதோ உள்முகமான ஆனந்தத்தில் ஈடுபட்டதுபோல் அவன், இதழ்கள் சிரித்தன. இன்னும் சிறிதுபோது தாங்க முடியாத தவிப்பினால் உள்ளே குமுறுவதுபோல் அவனுடைய கண்கள் கலங்கி நீர் மல்கின. அருகில் இருந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே இளங்குமரனைக் கவனித்து வந்த மணிமார்பனுக்கு அந்த நிலையில் அவனிடம் பேசவே பயமாயிருந்தது. அன்று அவனுடைய முகத்தில் காண்பதற்கரிய தெய்வீகமான அமைதியைக் கண்டான் மணிமார்பன்.

“ஐயா! மணிநாகபுரத்தில் புறப்பட்ட நாளிலிருந்து இப்படிக் கொலைப் பட்டினி கிடக்கிறீர்களே? இது எதற்காக? உடம்பில் வெம்மையை அழிக்க விரும்பும் கடுந் துறவியைப் போல் கணத்துக்கு கணம் குளிர்ந்த நீரில் மூழ்கிவிட்டு வருகிறீர்களே? இதெல்லாம் என்ன கொடுமைகள்?” என்று பொறுக்க முடியாத தவிப்போடு இளங்குமரனைக் கேட்டான் ஓவியன். இளங்குமரன் இதழ்கள் பிரியாமல் மோன நகை புரிந்தான். பின்பு மணிமார்பனை நோக்கிச் சொன்னான்:

“நண்பனே! மணிநாகபுரத்திலிருந்து புறப்பட்ட வேளையிலிருந்து என் மனத்திலும் உடம்பிலும் நெருப்புப் போல் ஏதோ ஓருணர்வு விடாமல் கனன்று கொண்டேயிருக்கிறது. உண்ணா நோன்பிலும், நீராடலிலும், தியானத்திலுமாக இந்தக் கனலை அவித்துவிட்டு என் மனத்தில் கனிந்த அருள் போய்விடாமல் நான் காத்துக் கொள்ள முயல்கிறேன். எந்த எந்த நிலைகளில் எந்த எந்தக் காரணங்களால் குரோதமும் கோபமும் கொண்டு கொதிக்க முடியுமோ அப்போதும் மனத்தைக் கவிழவிடாமல் சம நிலையில் வைத்துக்கொள்ள முயல்வதுதான் மெய்யான சான்றாண்மை. இரசங்களுக்கெல்லாம் மேலானதும் முதிர்ந்தும் முடிந்த முடிபாக நிற்பதுமாகிய நிறைகுணம் இந்தச் சாந்தரசம்தான். நம்முடைய கோபம் தன் முழு உருவமும் கிளர எழவேண்டிய இடம் எதுவோ அங்கேயும் கூட அதை அடக்கி நின்று சிரிப்பதுதான் உயர்ந்த அடக்கம். என்னால் அப்படி அடங்கி நிற்க முடியுமா என்று முயன்று பார்க்கிறேன் நான். முடியும் என்று தோன்றும்போது என் இதழ்களில் சிரிப்பு மலர்கிறது. முடியாதோ என்று சந்தேகம் வரும்போது என் கண்கள் கலங்குகின்றன.”

“உங்கள் கோபம் நியாயமாயிருக்கும்போது நீங்கள் ஏன் அதை அடக்க வேண்டும்? எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அந்தப் பெருநிதிச் செல்வரின் முயற்சிகளில் உங்களைக் கொன்று அழிப்பதும் ஒன்றாயிருக்கிறது. உங்கள் கழுத்தின் வலது பக்கத்திலுள்ள மச்சத்தைக்கூட அடையாளத்திற்காக அந்த ஒவியத்தில் வரையவேண்டுமென்று என்னிடம் பிடிவாதம் பிடித்தார்களே அந்தக் கொடி யவர்கள்! நல்ல வேளையாக அந்த ஓவியம் இங்கே படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்துவிட்டது. இல்லா விட்டால் அதை அடையாளமாகக் கொலையாளிகள் கையில் கொடுத்து அனுப்பி உங்களைத் தேடித் தீர்த்து விடுவது அவர்கள் நோக்கமாக இருந்தது.”

இதைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான்.

“நான் எந்தக் கோபத்தை அழிக்க விரும்புகிறேனோ அதே கோபத்தை வளர்க்க நீ உன் சொற்களால் முயல் கிறாய் மணிமார்பா!” என்று கூறியபடியே எழுந்து போய் விட்டான் இளங்குமரன். மறுபடி அவன் திரும்பி வந்த போது நீராடிய ஈரம் புலராத கோலத்தில் அவனைப் பார்த்தான் மணிமார்பன்.

அப்போது படைக்கலச் சாலையில் மரங்களிடையே மாலைவெயில் சரிந்திருந்தது. சிறிது நேரத்தில் மணி மார்பனிடமிருந்து ஓவிய மாடத்தில் பிரதி செய்து கொண்டு வந்த ஓவியங்களைக் கேட்டு வாங்கிக் கொண்டு மாலை வெயிலினிடையே நெருப்புப் பிழம்பு நடந்து போவது போல் நடந்து போய்ப் படைக்கலச் சாலையின் வாயிலைக் கடந்து வெளியேறினான் இளங்குமரன். பின்னாலேயே சிறிது தொலைவு அவனைத் தொடர்ந்து சென்ற மணிமார்பன், “பசியோடும் தளர்ச்சியோடும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் இப்போது?” ' என்று கேட்டான். இந்தக் கேள்விக்கும் இளங்குமரன் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே விரைந்து போய் விட்டான். ஆனாலும் மணிமார்பனுக்கு அப்போது இளங்குமரன் போகுமிடம் புரிந்துவிட்டது. உடனே நீலநாக மறவரிடம் போய்ச் சொல்வதற்காகப் படைக்கலச் சாலையின் உட்பக்கம் விரைந்தான் அவன். படைக்கலச் சாலையின் முன்முற்றத்தில் இருந்த பவழ மல்லிகை மரத்தடியில் தற்செயலாக வந்து நின்று கொண்டிருந்த பதுமை, “அவர் எங்கே இவ்வளவு அவசரமாகப் போகிறார்?” என்று பின்தொடர்ந்து போய்விட்டுத் திரும்பி உள்ளே வந்து கொண்டிருந்த தன் கணவரிடம் கேட்டாள். அந்தக் கேள்வி தன் காதில் விழுந்தும் அப்போதிருந்த பரபரப்பான மனநிலையில் அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு நிற்கத் தோன்றாமல் நீலநாகரைத் தேடிக் கொண்டு அவன் ஓட வேண்டியிருந்தது.

இளங்குமரன் பட்டினப்பாக்கத்தை அடையும்போது இருட்டிவிட்டது. அவனுடைய உடல் தளர்ந்திருந்தாலும் மனம் துய்மையான உணர்வுகளால் உறுதிப்பட்டிருந்தது. இதே பட்டினப்பாக்கத்து வீதிகளில் தான் நடக்கும் போதே தரையதிர முன்பு நடந்த காலத்தை நினைத்துச் சிரித்துக்கொண்டே சென்றான் இளங்குமரன். பசிச் சோர்வினால் அவன் கால்கள் மெல்ல மெல்ல நடந்தன.

‘என்னுடைய வாழ்க்கையே முடிவில்லாததொரு பெரிய வீதிதான். அதன் கடைக்கோடியில் அது நிறைகிற எல்லையை நோக்கி இப்போது நான் நடந்து கொண்டிருக்கிறேன். இந்த முடிவில்லாத பெரிய வீதியில் திருநாங்கூரில் ஒதுங்கியபோதும், விசாகை என்னும் புனிதவதியரிடம் பழகியபோதும் நான் கற்று நிறைந்த குணச் செல்வங்களை இதன் எல்லைக்குப் போவதற்குள் என்னிடமிருந்து யாரும் கொள்ளையடித்து விடக் கூடாது. எந்தக் கீழான உணர்ச்சித் துடிப்பினாலும் நான் என்னுடைய உயர்ந்த பாவனைகளை இழந்துவிடக் கூடாது. நான் நிறைய வேண்டும். நிறைவுக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கும் நடுவில் எந்த விதத்திலும் நான் குறைபட்டுப் போய்விடக்கூடாது.’

இப்படி எண்ணிக்கொண்டே தன்னுடைய குலப் பகைமை குடியிருக்கும் ஏழடுக்கு மாளிகைக்கு முன்னால் போய் நின்றான் இளங்குமரன். சில கணங்கள் அவனுடைய கால்கள் உள்ளே நுழைவதற்குத் தயங்கின. மனத்தில் ஏதோ ஓர் உணர்ச்சி மலையாக வந்து வீழ்ந்து கனத்தது. ‘இந்த மாளிகையின் எல்லையில்தான் என் தந்தையும் தாயும் அல்பாயுளாக இறந்து போனார்கள்’ என்ற வேதனை நினைவு வந்து உடம்பைச் சிலிர்க்க வைத்தது. நெஞ்சு கனன்றுவிட முயன்றது. கைகள் துடிக்கத் தவித்தன. நடுநிலையிலிருந்து பிறழ்ந்து சரிந்துவிட முயன்ற தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவன் அந்த மாளிகைக்குள் நுழைந்தான். வாயில் நின்று காத்துக் கொண்டிருந்த காவலர்கள் ஓடிவந்து அவனைத் தடுத்தனர்.

“யார் நீங்கள்? எதற்காக உள்ளே போக வேண்டும் என்று சொல்லுங்கள்?”

“நான் இப்போது என்னை யாரென்று சொல்வதென எனக்கே புரியவில்லை. யாரோ ஓர் இளந்துறவி உங்களைக் காண வந்திருக்கிறான் என்று உள்ளே போய் இந்த மாளிகைக்கு உரியவரிடம் நீங்கள் சொல்லுங்கள்.”

“இந்த மாளிகைக்கு உரியவர் நோயுற்றுப் படுத்த படுக்கையாயிருக்கிறார். இந்தத் தளர்ந்த நிலையில் அவர் யாரையும் சந்திக்க மாட்டார்.”

“என்னைச் சந்திப்பார். என்னை அவரும், அவரை நானும் சந்தித்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது. நீ போய்ச் சொல்.”

காவலர்களில் ஒருவன் உள்ளே போனான். காவலன் உள்ளே போனபின் தற்செயலாக அந்த மாளிகையின் மேற்புரம் சென்ற இளங்குமரனின் பார்வை அங்கே ஒரு மாடத்தின் நுனியில் சித்திரம்போல் அசையாமல் நின்று கீழ்நோக்கி இமையாத கண்களால் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சுரமஞ்சரியைச் சந்தித்தது. இந்தப் பார்வைக்காக, இந்தச் சந்திப்புக்காக இவற்றுக்கென வாய்க்கும் விநாடிகளுக்காகவே யுக யுகாந்தரமாகக் காத்துக் கொண்டிருந்தது போன்ற ஆசையும் காதலும் அவள் கண்களில் தெரிந்தன. ‘என்னுடைய தவிப்பு - என்னுடைய வேட்கை எல்லாம் உங்களுடைய அழகிலிருந்து பிறந்தவை. உங்களுடைய கண்களையும் தோள்களையும் நான் சந்திக்க நேர்ந்த கணங்களிலிருந்து நான் உங்களுக்காகவே நெகிழ்ந்து போய்த் தவிக்கிறேன்’ என்று அந்தக் கண்கள் அவனிடம் பேசின. முகத்தையே ஆர்வம் மணக்கும் பூவாக மலர்த்திக் கொண்டு காலில் விழுந்து அர்ப்பணமாகிவிடத் தவித்துக் கொண்டு நிற்பது போல நிற்கும் அவள் கண்களைத் தொடர்ந்து சந்திக்கப் பயந்து தலை குனிந்து கீழே பார்க்கத் தொடங்கினான் இளங்குமரன்.

உள்ளே போயிருந்த காவலன் திரும்பி வந்து தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு இளங்குமரனை அழைத்தான். அவனைப் பின்தொடர்ந்து உள்ளே போவதற்கு முன் கடைசியாக இளங்குமரன் மேலே நிமிர்ந்து பார்த்தபோது சுரமஞ்சரியின் கவர்ச்சி நிறைந்த கண்களில் ஈரம் பளபளத்து மின்னியது. அவளுடைய மயக்கும் கண்கள் இப்போது மழைக் கண்களாயிருந்தன. இதயத்தில் ஏதோ ஒரு மென்மையான பகுதிவரை ஊடுருவித்தாக்கும் அந்தப் பார்வையிலிருந்து தன்னைத் தானாகவே விடுவித்துக் கொண்டு உள்ளே புகுந்தான் இளங்குமரன்.

அந்தக் காவலன் அவனைப் பெருநிதிச் செல்வர் நோய்ப் படுக்கையில் இருந்த கூடத்திற்குள் அழைத்துக் கொண்டு போய்விட்டான். அந்த கூடத்திற்குள் முதல் அடி பெயர்த்து வைத்தபோது அவன் கால்கள் நடுங்கின. அவன் எந்தப் பக்கமாக அந்தக் கூடத்திற்குள் நுழைந்தானோ அந்தப் பக்கம் தலைவைத்துத் தான் கட்டிலில் அவரும் படுத்திருந்தார். தலையைத் திருப்பாமலே உள்ளே யாரோ அடிபெயர்த்து வைத்து வரும் ஓசையைக் கேட்டு உணர்ந்தே அவர் படுக்கையிலிருந்தபடி வினவினார்.

“யார் நீங்கள்?”

“நான் ஒரு கவியின் மகன்!”

“கவியின் மகனுக்கு இங்கென்ன வேலை? கவிகள் இந்த மாளிகையின் வாயிற்படியில் துணிவாக ஏறிவந்து நிற்க முடியாதே? அப்படி யாராவது கவிகள் என்று சொல்லிக்கொண்டு இந்த மாளிகையின் படிகளில் ஏறினால் கடைசி படிகளில் ஏறுவதற்குள் அவர்கள் காலை முறித்துவிடச் சொல்லிக் காவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேனே? பல ஆண்டுகளாக இந்த மாளிகையின் வழக்கமாயிற்றே இது?”

“கவிகளின் பரம்பரைமேல் உங்களுக்கு ஏன் இத்தனை குரோதம்?” என்று இளங்குமரன் சிரித்துக்கொண்டே கேட்டான். அவனுடைய இந்தக் கேள்வியைச் செவியுற்று, “இது எங்கோ கேட்ட குரல்போல் இருக்கிறதே? நீ யார் அப்பா? இப்படி என் முகத்துக்கு முன்னால் வந்து நின்று பேசு. யாரோ சந்நியாசி என்னைத் தேடி வந்திருப்பதாக அல்லவா காவலன் கூறினான்?” என்றார் பெருநிதிச் செல்வர். சிறிது நேரம் பேசியதிலேயே அவர் குரல் கரகரத்துத் தளர்ந்திருந்தது. இளங்குமரன் தான் நின்ற இடத்திலிருந்தே அவருக்கு மறுமொழி கூறலானான்.

“நீங்கள் எங்கோ கேட்ட குரல்தான் இது! நியாயத்தின் குரல். எந்தப் பிறவியிலாவது உங்கள் செவிகளில் விழுந்திருக்கும். இப்போது மறுபடி அதைக் கேட்கிறீர்கள். இப்போது, உங்களிடம் பேசுவது என் குரல் அல்ல. இது நியாயத்தின் குரல். கவி அமுதசாகரருக்கும் அவருடைய காதலி மருதிக்கும், காலாந்தகருக்கும் நீங்கள் புரிந்த அநியாயங்கள் எல்லாம் பார்த்த காலத்தில் கூடப் பொறுமையாயிருந்து விட்ட நியாய தேவதை இன்று உங்களைத் தேடிவந்து இப்போது என் குரலில் பேசுகிறது” என்று அவன் கூறியபோது படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து திரும்பினார் அவர். அவருடைய கண்கள் பின்புறம் வேகமாகத் திரும்பிப் பார்த்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5.10. கருணை வெள்ளம்

பசித்துக் கிடந்த புலி இரை கண்டு பாய்வது போல் பாய்ந்து திரும்பிய பெருநிதிச் செல்வரின் கண்களில் முதல் காட்சியாகத் தென்படும்படி தன் தாயின் ஓவியத்தைக் காட்டினான் இளங்குமரன். படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் ஒற்றைக் காலின் பலத்தினாலும் ஊன்றுகோலின் பலத்தினாலும் தளர்ந்தும் தயங்கியும் நின்ற அவர் வியப்பும் அச்சமும் மாறி மாறித் தெரியும் கண்களால் அந்த ஓவியத்தைப் பார்த்தார். எந்தப் பெண்ணுடைய கண்களின் அழகைத் தான் அடைய முடியாமல் பல ஆண்டுகளுக்கு முன் அமுதசாகரன் என்ற கவி தன்னை ஏமாற்றினானோ அந்தக் கண்களை இப்போது மீண்டும் இந்த ஓவியம் தனக்குக் காட்டுவதை உணர்ந்தார் அவர். ‘இந்த மயக்கும் விழிகளில் என்னை நோக்கி மலர்ந்திருக்க வேண்டிய கனவு அப்படி மலராமற் போனதால் தான் அன்று என் மனத்தில் குரோதம் பிறந்தது. அந்தக் குரோதம் ஏற்கெனவே பலவகையில் கொடியவனாயிருந்த என்னை இன்னும் கொடிய அரக்கனாக மாற்றியது. உள் நெருப்பாக வீழ்ந்து விட்ட தீய உணர்ச்சிகள் இன்னும் என்னுள் எங்கோ கனன்று கொண்டிருக்கின்றன. இல்லா விட்டால் இந்தப் பிள்ளையை இப்போது எதிரே காண்கிற நிலையிலும் என் நினைவுகள் இப்படிக் கொதிப்பதற்குக் காரணமில்லையே?’ என்று தனக்குள் விரைந்து எழும் எண்ணங்களோடும், அந்த எண்ணங்களின் மாறுபட்ட சாயல்கள் சிறிதும் தெரியாத முகத்தோடும் நின்றார் பெருநிதிச் செல்வர். அப்படி நின்றபோது அவருடைய செவிகளில் மறுபடியும் நியாயத்தின் குரலாய் இளங்குமரனுடைய பேச்சு எதிரேயிருந்து ஒலிக்கத் தொடங்கியது”

“இதோ இந்த ஒவியங்களையும் பாருங்கள். இவர்களை யெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன். நினைவில்லாவிட்டால் நினைவு படுத்துவதற்காகவே நான் வந்திருக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியபடியே தன் தந்தை அமுதசாகரருடைய ஓவியத்தையும், தாய்மாமனான காலாந்தக தேவருடைய ஓவியத்தையும் அவர் முன்பு காட்டினான் இளங்குமரன். அந்த விநாடி வரை அவன் முகத்தில் சிரிப்புக் குன்றவில்லை. ஆனால் எதிரே நின்றுகொண்டு அவற்றை யெல்லாம் பார்க்கும்போது அவருக்கோ பதில் பேச நா எழாமல் உள்ளேயே கட்டுண்டு அடங்கிப் போய்விட்டாற் போலிருந்தது. நகைவேழம்பருடைய சாவுக்குப் பின்பு அருவாள மறவனும், அவனுடைய தோழனும் தன்னைப் புறக்கணித்துவிட்டுச் சென்றதிலிருந்து உலகமே தனக்கு முன் இருண்டு போய் அவநம்பிக்கைகள் சூழ்வதுபோல் பிரமை கொண்டு தளர்ந்து படுத்த படுக்கையாகியிருந்தார் அவர். இவ்வளவு காலம் கொடுமைகளும், சூழ்ச்சியும் செய்வதற்குக் காரணமாகத் தன் மனத்தில் இறுகிப் போயிருந்த உணர்வுகள் இப்போது எதற்கோ உடைந்து தளர்ந்து விட்டாற் போல அவருக்கே அச்சமாக இருந்தது. ஏதோ ஒரு வழியில் ஏதோ ஒரு காரணத்துடன் மூச்சு இரைக்கும்படி ஓடத்தொடங்கிய கால்கள் அந்த முடிவு தெரியாத வழியின் மேல் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றவுடன் நெஞ்சுத் துடிப்பின் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத தளர்ச்சியாலோ, இனிமேலும் ஒரு முடிவும் தெரியாத இந்த வழியில் தொடர்ந்து எதற்காகப் போவது என்று மலைப்பதனாலோ அப்படியே சோர்ந்து நின்றுவிடுவதைப் போன்று தமது பயங்கரமான வாழ்க்கையில் மேலே என்ன செய்வதெனத் தோன்ற முடியாத மலைப்போடு வழி தெரியாமல் இன்று மயங்கி நின்றார் பெருநிதிச் செல்வர்.

‘இன்று இந்த முன்னிரவுப் போதில் இளங்குமரன் எனக்கு முன்பு இப்படிச் சிரித்துக் கொண்டே வந்து நிற்பதற்குப் பதில் ஆறாத சினத்துடன் உருவிய வாளும் கையுமாக என் எதிரியாக வந்திருந்தால்கூட நான் பயமின்றி நிமிர்ந்து நின்றிருப்பேன். இப்படிச் சிரித்துச் சிரித்து இந்தப் பொறுமையையும் நிதானத்தையுமே ஆயுதங்களாகக் கொண்டு என்னைக் கொல்கிறானே இந்தப் பிள்ளை?’ என்று எண்ணி, அந்தப் பொறுமையாலும், நிதானத்தாலும் கூடத் தாக்கப்பட்டவராய்த் தளர்ந்து போய் நின்றார் அவர்.

தனக்கு முன்னால் அவருடைய தொடர்ந்த மெளனத்தையும் திகைப்பையும் கண்டு உணர்ந்த இளங்குமரன் தன் வசமிருந்த ஓவியங்களையும் சுவடிகளையும் ஒரு புறமாக வைத்துவிட்டு இன்னும் அருகில் நெருங்கிச் சென்று அவரோடு பேசினான்:

“ஐயா! நீங்கள் ஏன் இப்படி வாய்திறந்து மறுமொழி கூறாமல் எனக்கு முன் திகைத்து நிற்கிறீர்கள்? நான் ஏழை. என் கைகளில் இப்போது ஆயுதங்கள் இல்லை. மனத்தில் கோபமும் இல்லை. என் குடும்பத்தின் இணையற்றதொரு தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களின் உயிர்களையும், செல்வங்களையும், நம்பிக்கைகளையும், நீங்கள் அழித்து நிர்மூலமாக்கியிருக்கிறீர்கள். அப்படியிருந்தும் உங்களை மலர்ந்த முகத்தோடும், சிரித்த வாயோடும் சந்திக்க வேண்டுமென்றுதான் ஆசையாயிருக்கிறது எனக்கு. இந்த மாளிகைக்குள்ளே இன்று நான் நுழையும்போது உங்கள் காவலாளிகள் நீங்கள் நோயுற்றுப் படுத்த படுக்கையா யிருப்பதாகக் கூறினார்கள். உங்களுக்கு வந்திருக்கும் நோய் எதுவோ அதற்காகவும் நான் அநுதாபப்படுகிறேன்.”

“உன்னுடைய அதுதாபத்திற்காக நான் ஏங்கித் தவித்துக் கொண்டு கிடக்கவில்லை. நீ இங்கிருந்து உடனே வெளியேறிப் போய்விடு. நீ இங்கே தாமதித்து நின்றால் உன் உயிரே என் நோய்க்கு மருந்தாக வேண்டுமென்று கூட நான் ஆசைப்பட நேரலாம். இப்படிச் சிரித்துக் கொண்டு என் கண்களுக்கு முன் நிற்காதே. இந்தச் சிரிப்பு என்னை என்னவோ செய்கிறது. நான் கொலைக்கு அஞ்சாதவன், சில நாட்களாக என் மனமும் ஒரு நிலையில் இல்லை. நான் எந்தக் கணத்தில் எப்படி மாறுவேன் என்று சொல் வதற்கும் முடியாது. மறுபடியும் நான் கொலைகாரனாவதற்கு வாய்ப்பளிக்காதே. வந்த வழியே திரும்பிப் போய் விடு.”

அவருடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு இளங்குமரன் முன்னிலும் நிறைவாகச் சிரித்தான். சிரித்துக் கொண்டே முகத்துக்கு முகம் சந்திக்க முடிந்த அண்மையில் இன்னும் அவரை நெருங்கி நின்று கொண்டு மறுமொழி கூறினான்:

“ஐயா! இப்போது எனக்குப் புரிந்துவிட்டது. உங்களுக்கு வந்திருக்கும் நோய் என்னவென்று நான் விளங்கிக் கொண்டேன். செய்த தீவினைகள் பழுத்து அவற்றின் விளைவை அநுபவிக்கும் காலம் வரும்போது மனிதர்களுக்கு இந்தத் தவிப்பு ஏற்படத்தான் செய்யும். சில நாட்களாக உங்கள் மனம் ஒரு நிலையில் இல்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் உங்கள் மனம் ஒருநிலைப்படாத தன்மை இப்போது சில நாட்களாக மட்டும் உங்களைப் பற்றியிருப்பதாய் நீங்கள் நினைப்பது தான் தவறு. தொடக்கத்திலிருந்தே உங்கள் மனத்திற்கு அந்த நிலையில்லாத் தன்மை உண்டு என்று தான் நான் நினைக்க முடிகிறது. ஒருநிலைப்பட்ட மனம் உங்களுக்கு இருந்திருந்தால் தொடக்க நாளிலிருந்தே நீங்கள் வேறு விதமாக வாழ்ந்திருக்க முடியும். தான் மட்டும் வாழ ஆசைப்படுகிற மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் வாழ ஆசைப்படுகிற சான்றோர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். பிறரை அழித்துக் கொண்டே தான் மட்டும் வாழ ஆசைப்படும் விலங்குக் குணம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். இந்த மூன்றாவது வகை மனிதர்களுக்கு இக்குணமே நாளுக்கு நாள் வெளிப்படாத நோயாய்ப் பெருகி உள்ளுக்குள்ளேயே வளர்கிறது. இந்த நோய் முற்றி இதை வளர்த்துக் கொண்டவன் தன்னுடைய தீயசக்திகள் எல்லாம் தனக்குப் பயன்படாமல் ஒவ்வொன்றாய்த் தன்னைக் கைவிடுகின்றன என்பதை உணரும்போது தன் முன் தனக்கு எதிரே அதுவரை தெரிந்து கொண்டிருந்த உலகமே இருண்டுபோய் விடுகிறதாக எண்ணி மலைக்கிறான். இந்த இருளில் சிக்கிக் கொண்டவர் யாராயிருந்தாலும் பரிதாபத்துக்குரியவர். உங்களைச் சுற்றி இப்போது சூழும் இருள் அத்தகையது. இப்போது இந்த இருளில் நீங்கள் தவிப்பதைப் பார்த்து நீங்கள் பகைக்குலத்தின் கடைசிக் கொழுந்தாகிய நான் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்து கொண்டிருக்கிறேனோ என்று நீங்கள் என்மேல் சந்தேகப்படலாம். அப்படிச் சந்தேகப்படுவதும் மனித இயற்கைதான். ஆனால் என் மேல் அந்தச் சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். உங்கள் மேல்கூட நான் கருணை காண்பிக்க முடியும். உங்களைப் பகைமையின் எல்லையாகக் குறி வைத்துக்கொண்டு குமுறுவதற்குப் பதில் என்னால் எவ்வளவு அதுதாபப்பட முடியுமோ, அவ்வளவு அநுதாபத்திற்கும் உங்களையே எல்லையாக்கிக் கொண்டு நான் கருணை வெள்ளமாய்ப் பெருகி, அதில் நீங்களும் மூழ்கி எழுதுவதற்கு இடமளிக்க முடியும். நீங்கள் என் தந்தையை இந்த மாளிகையின் நிலவறையில் துடிக்கத் துடிக்கக் கொன்றிருக்கிறீர்கள். என் தாயின் இனிய நினைவுகளும் மங்கல நம்பிக்கைகளும் அழிவதற்கும் அவள் இறப்பதற்கும் காரணமாயிருந்தீர்கள். என்னுடைய தாய் மாமன் காலாந்தக தேவரை ஏமாற்றி அழைத்துப் போய்க் கொலை செய்துவிட்டு அவர் எனக்கு அணிவிக்கக் கொண்டு வந்திருந்த நவரத்தின ஐம்படைத் தாலியையும் பிறவற்றையும் கொள்ளையடித்தீர்கள். என்னையும் எனக்குப் பாதுகாப்பாயிருந்து வளர்த்த அருட்செல்வ முனிவரையும் பலமுறை கொன்றுவிட முயன்றீர்கள். இப்போது இன்று இந்த நிலையிலும் என்னைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்துகிறீர்கள். என் குலத்து முன்னோர்களைக் கொன்றாற் போலவே என்னையும்கூட உங்களால் கொன்றுவிட முடியும். ஆனால் ‘நாம் இன்னாரைக் கொன்றோம்’ என்று ஒவ்வொரு நாளும் உங்கள் மனச்சாட்சியின் ஞாபகக் குரல் இடை விடாமல் உங்களுக்குள்ளேயே ஒலித்துக் கொண்டிருக்குமே, அந்த ஒலியை உங்களால் ஒருபோதும் கொல்ல முடியாதே?...”

இவற்றைக் கேட்டுப் பெருநிதிச் செல்வரின் உடல் நடுங்கியது. உடம்பு முழுவதும் பாதாதி கேசபரியந்தம் தீப்பற்றி எரிவதுபோல் வெம்மைப்பட்டு வேர்த்தது. எதிரே வந்து நின்றுகொண்டு நியாயத்தைப் பேசுகிறவனுடைய சொற்களே ஒவ்வொன்றாகப் புறப்பட்டுப் பாய்ந்து துளைக்கும் அம்புகளாக வந்து தாக்கித் தன்னை வீழ்த்தி விட்டாற் போல ஒரு கையால் நெஞ்சை அழுத்திக் கொண்டு தளர்ந்து போய்ப் பின்னால் சிறிது சிறிதாக நகர்ந்து கட்டிலில் அமர்ந்தார் அவர். அமர்ந்தபடியே மற்றொரு கையிலிருந்த ஊன்றுகோலை நெஞ்சருகே கொண்டுபோய் இரண்டு கைகளும் நடுங்கிடப் பிடியைத் திருகி அந்த ஐம்படைத் தாலியை எடுத்து இளங்குமரனுக்கு முன்னால் வீசி எறிந்தார்.

தரையில் மின்னல் விழுந்து நெளிவதைப் போலத் தனக்கு முன் வீழ்ந்து கிடந்த அந்தப் பொருளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவன் நின்றபோது அதை அவனுக்கு முன் வீசி எறிந்ததைவிட வேகமாகத் தன்னுடைய சொற்களை வீசி எறிவதுபோல் குமுறிக் குமுறிப் பேசலானார் அவர்:

“உன்னுடைய தாய்மாமனிடமிருந்து நான் கொள்ளை யடித்து விட்டதாக நீ சொல்லிக் குறைபட்டுக் கொள்கிற பொருளை இதோ உன் காலடியில் தூக்கி எறிந்து விட்டேன். இதை எடுத்துக் கொண்டு போய்விடு. என்னுடைய கோபத்தை வளர்க்காதே. நான் மிகவும் பலவீனமான நிலையிலிருக்கிறேன். இந்நிலையில் எப்படி நடந்து கொள்வேனென்று எனக்கே தெரியாது! சந்தர்ப்பம் மறுபடி என்னைக் கொலைகாரனாக்கி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

“உங்களுடைய கோபத்தைப் பார்த்து எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் இந்த விதமான கோபம் கோழைகளுக்குத்தான் சொந்தமானது. யாரிடம் தவிர்க்க முடியாத காரணத்திற்காகக் கோபப்பட வேண்டுமோ அங்கே கூட அந்தக் கோபத்தை இழந்து விட்டு நிற்கவும், சிரிக்கவும் பக்குவமான வீரனால் முடியும். எல்லாவற்றுக்கும் பிடிவாதமாக முயல்வதைப் போலவே எல்லா ஆசைகளையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு இருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு முன்னால் வந்து நிற்பது என்னுடைய செல்வங்களை உங்களிடம் இருந்து மீட்டுக்கொண்டு போவதற்காக அன்று. எப்படி வாழக்கூடாதோ அப்படி நீங்கள் இதுவரை வாழ்ந்துவிட்டீர்கள். இதற்காக உங்களைப் பாராட்ட முடியாது. ஆனால் மன்னிக்கலாம். மன்னிக்க முடியும். அளவுக்கு மீறிய வறுமையைப் போலவே நீங்கள் கொடுமையும் துரோகமும், சூழ்ச்சியும் புரிந்து சேர்த்திருக்கும் அளவுக்கு மீறின செல்வமும் உங்களைச் சார்ந்துள்ள நோய்தான். நோயாளிகள், துன்பப்படுகிறவர்கள், ஏழைகள் ஆகியோர் மேல் எல்லாம் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே எனக்கு நிறைய அநுதாபம் உண்டு. இலஞ்சி மன்றத்திலும், உலக அறவியலிலுமுள்ள நோயாளிகளுக்காக நான் என் மனத்தின் உள்ளேயே அநுதாபப்பட்டு அழுவதுண்டு. அப்படி உங்களுக்காகவும் நான் அநுதாபப்பட்டு அழ முடியும். இதோ ஒருகணம் இப்படி என் பக்கமாகத் திரும்பித் தலை நிமிர்ந்து பாருங்கள். என்னுடைய உறவுகளையும், செல்வங்களையும், உங்களுடைய குரோதத் திற்கும் கொடுமைக்கும் சிறிது சிறிதாக இழந்து பறி கொடுத்துவிட்ட நான் அப்படி இழந்துவிட்ட உண்மையைத் தெரிந்துகொண்ட பின்னும் உங்களுக்கு முன்னால் உங்களைவிட நிம்மதியோடும், நிதானத்தோடும் சிரித்துக் கொண்டு நிற்க முடிகிறது. நீங்களோ இவ்வளவு பெரிய மாளிகையில் எவ்வளவு என்று கணித்துச் சொல்ல முடியாத அவ்வளவு செல்வத்தைச் சேர்த்து ஆண்டு கொண்டிருந்தும், இப்போது எனக்கு முன்னால் நிம்மதியும் நிதானமும் இழந்து தோன்றுகிறீர்கள். உங்களைப் பார்த்து நான் கோபப்பட ஒன்றுமில்லை. ஆனால் இரக்கப்படுவதற்கும் கருணை கொள்வதற்கும் உங்களிடம் நிறையப் பலவீனங்கள் இருக்கின்றன...” என்று சொல்லிக்கொண்டே வந்த இளங்குமரனை மேலே பேச விடாமல் செய்யும் ஆத்திரத்தோடு துள்ளி எழுந்து பின்னால் பிடித்துத் தள்ளிவிட முயன்றார் பெருநிதிச் செல்வர். அவருடைய கைகள் அவனை நோக்கி மேலெழுந்து ஓங்கின.

ஆனால் அவர் அப்படிச் செய்வதற்கு ஆத்திரத்தோடு கைகளை ஓங்கிக் கொண்டு நின்றபோது அந்தக் கைகள் இரண்டும் அதே நிலையில் மரத்துப் போனாற் போல் தயங்கிவிட, அவர் செயலிழக்கும்படிச் செய்யவல்ல கம்பீர ஆகிருதி ஒன்று அந்தக் கூடத்துக்குள் புயல் புகுந்தது போலப் பிரவேசித்தது.

“நிறுத்து! இளங்குமரனுக்கு இந்த மாளிகையில் ஏதாவது நேர்ந்தால் உன்னுடை குலத்தையே பூண்டோடு அழித்து விடுவேன். இந்தப் பெரிய நகரத்தையே என் கைகளால் ஆட்டிப் படைக்கிற வலிமை இருந்தும், நான் இவ்வளவு காலமாக எதற்கும் வைரம் கொண்டு குமுறியதில்லை. என்னைப் போன்றவர்களின் கோபத்திற்கு எவ்வளவு சக்தி உண்டு என்று நானே நிரூபித்துக் காட்ட வேண்டிய காலம் வந்து விட்டது போலிருக்கிறது” என்று எரிமலையாகக் கொதித்து பேசும் சொற்களோடு நீலநாக மறவர் மணிமார்பன் பின் தொடர அங்கு வந்து நின்றார்.

சோழநாட்டிலேயே பெரிய வீரராகிய நீலநாகர் அங்கு வந்து நின்றதைக் கண்டபோது பெருநிதிச் செல்வரின் உணர்வுகள் ஒடுங்கின. கண்களுக்கு முன்னால் உலகம் இன்னும் அதிகமாக இருண்டு போவதுபோல் தோன்றியது. அந்தத் தோற்றத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசிக் கொண்டு கீழே குனிந்து தரையைப் பார்த்தார் அவர்.

“தம்பீ! இந்த மனிதனிடம் வாயினால் பேசி நியாயம் கேட்டுப் பயனில்லை. கைகளால் பேச வேண்டும். எவ்வளவு பாவங்களைச் செய்யக் கூடாதோ அவ்வளவு பாவங்களையும் செய்துவிட்டு மேலும் செய்வதற்குப் பாவங்களைப் தேடிக் கொண்டிருக்கிறவன் இவன்” என்று சொல்லிக் கொண்டே தனக்கு அருகில் வந்த நீலநாகரை இளங்குமரன் அவ்வளவாக மகிழ்ச்சியோடு வரவேற்கவில்லை. உள்ளடங்கிய மெளனத்தோடு சில விநாடிகள் அசையாது நின்றபின், ஒரு காலத்தில் தனக்கு வீரத்தைக் கற்பிக்கும் ஆசிரியராக இருந்த அந்தப் பெருவீரரை நோக்கி இளங்குமரன் இப்போது ஒரு கேள்வி கேட்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
“ஐயா! யாருடைய துணையுமில்லாமல் நம்முடைய பகையை நாமே தனியாக எதிர்கொள்ளலாம் என்று திடமான எண்ணத்தோடு புறப்பட்டு வந்திருக்கிற வீரனுடைய பெருமிதம் உயர்ந்ததா, இல்லையா?”

“உயர்ந்தது மட்டுமில்லை, இணையில்லாமல் உயர்ந்தது! அப்படிப்பட்ட வீரமுள்ளவர்கள் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வதோடு தங்களைச் சார்ந்துள்ள வீரம் என்னும் குணத்தையே பெருமைப் படுத்துகிறார்கள், இளங்குமரா!”

“மிகவும் நல்லது ஐயா! அத்தகைய தன்னம்பிக்கை வாய்ந்த வீரன் தன் எதிரியைத் தான் மட்டும் சந்திக்க வேண்டிய களத்தில் தனக்குத் துணையாக எவரேனும் பின்தொடர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியுமோ?”

நீலநாகர் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறமுடியாமல் அப்படியே அயர்ந்துபோய் நின்றுவிட்டார். மேல் நோக்கி ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய பார்வை கூசித் தாழ்ந்தது. இளங்குமரனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை அவர் எதிர்பார்க்கவே இல்லை. இதனால் சுட்டிக் காட்டப்படுகிற குற்றம் தன்னுடையது என்பதை உணர்ந்தபோது அவருக்கு மிகவும் நாணமாயிருந்தது. அப்போது இளங்குமரனுக்கு அவர் கூறிய மறுமொழிச் சொற்கள் ஒலி குன்றித் தன் தவற்றைத் தானே அங்கீகரித்துக் கொண்டது போன்ற தொனியோடு வெளிப்பட்டன.

“தம்பீ! என்னைப் பொறுத்துக்கொள். நான் உனக்குத் துணையாயிருக்க வேண்டுமென்ற ஆவலோடு இங்கு வந்ததை நீ இப்படி உன் பெருமைக்குக் குறைவாக நினைப்பதாயிருந்தால் என்னைப் பொறுத்துக்கொள். பிறர் மேல் நமக்குள்ள மிகுதியான வெறுப்பினால் சில வேளைகளில் தாம் தவறு செய்து விடுவதைப் போலவே, பிறர் மேல் நமக்குள்ள அதிகமான அன்பினால் சில தவறுகளைச் செய்து விடுகிறோம். உன் மேலுள்ள அன்பின் மிகுதியால் உனக்கு இங்கே என்னென்ன கெடுதல் நேருமோ என்று எண்ணிக் கொண்டு நான் பின் தொடர்ந்தேன். மேலும் எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல் பசித்துத் தளர்ந்த உடம்பும் உணர்வுகள் நெகிழ்ந்த மனமுமாக நீ இங்கே புறப்பட்டதாக மணிமார்பன் என்னிடம் வந்து கூறினான். அவன் என்னிடம் வந்து கூறிய சூழ்நிலையும் என்னை ஆத்திரமடையச் செய்து விட்டது.”

“உங்களுடைய அன்புக்கும் பாசத்திற்கும் நான் நிறைந்த நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் பெருமாளிகைச் செல்வரை வெற்றி கொள்வதற்கு நான் ஆயுதங்களோடு வரவில்லையே என்று நீங்கள் கவலைப் பட்டு எனக்குத் துணையாக என்னைப் பின் தொடர்ந்திருக்க வேண்டியதில்லை. எனக்கு நான் இவரிடம் பேச முடிந்த சொற்களை விடப் பெரிய ஆயுதங்கள் வேறு எவையும் இருக்க முடியாது. என்னை எதிர்ப்பதற்கு என் சொற்களை விடப் பெரிய வேறு ஆயுதங்கள் எவையும் இவரிடம் இருக்க முடியாது.”

“உயிரை அழிப்பதில் சொற்களைக் காட்டிலும் விரைந்து முயலும் இயல்பு ஆயுதங்களுக்கு இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம் தம்பீ”

“ஒப்புக் கொள்கிறேன். ஆனால் என் நாவிலிருந்து பிறக்கும் நியாயமான சொற்களுக்கு மறுமொழி சொல்ல முடியாதவரை இவர் எனக்குத் தோற்றுப் போய்க் கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். இவர் வேண்டுமானால் என் உடம்பை அழிக்கலாம். ஆனால் அப்படி அழித்தோம் என்ற நினைவைத் தன் மனத்திலிருந்து என்றுமே இவரால் அழிக்க முடியாது. இந்த நிலையில் நீங்கள் எனக்குச் செய்யும் பெரிய துணை என்னை இவரோடு தனியே விடுவதுதான். இவரை என்னுடைய எதிரி என்று நான் நினைக்கவில்லை. என் வாழ்க்கையிலேயே நான் இதுவரை அநுதாபம் கொள்ள நேர்ந்தவர்களை யெல்லாம் விட அதிகமாக அநுதாபம் கொள்ளுவதற்கு உரியவர் இவர் என்று தான் எண்ணுகிறேன். என்னுடைய இந்தப் பரந்த அதுதாபத்தைச் சான்றாண்மை எனக்குத் தந்திருக்கிறது. இதை இவர் மேல் நான் செலுத்த முடிவதற்குத் தடையாக உங்கள் வரவு எனக்குத் தோன்றுகிறது.”

“என்னை மன்னித்துவிடு. நான் இங்கே உனக்கு அத்தகைய தடையாக நிற்க விரும்பவில்லை” என்று கூறி விட்டு மறுபடியும் இளங்குமரனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்குக் கூசியவராக மணிமார்பனையும் கைப்பற்றி இழுத்துக் கொண்டு நீலநாகர் அங்கிருந்து வேகமாக வெளியேறினார். எவ்வளவு ஆவேசமாகவும் ஆத்திரமாகவும் அவர் அந்த மாளிகைக்குள் நுழைந்தாரோ அவ்வளவிற்குத் தளர்ந்து துவண்டு குனிந்த தலையோடு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியால் தன் தந்தைக்குச் சமமான அந்தப் பெருவீரரின் மனம் புண் பட்டிருக்குமோ என்று உள்ளூர வருந்தினாலும் அப்பொழுது தான் நிற்கும் சூழ்நிலையில் இதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று மனத்தைத் தேற்றிக் கொண்டவனாகத் தான் எதிர்க்க விரும்பாத தன் எதிரியின் பக்கம் பார்த்தான் இளங்குமரன். முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டு நின்றிருந்தார் பெருநிதிச்செல்வர். இளங்குமரன் சிரித்துக் கொண்டே நிதானம் மாறாத குரலில் அவரைக் கேட்டான்:

“இப்போது இங்கிருந்து வெளியேறிச் செல்கிறாரே, இந்த ஆலமுற்றத்துப் பெரியவர் குறிக்கிட்டிராவிட்டால் நீங்கள் என்னைக் கீழே பிடித்துத் தள்ளியிருப்பீர்கள். அப்படித் தள்ளி விட்ட பின்பு இன்னும் கொடுமையாக ஏதேனும் செய்து என்னை அழிக்கவும் முயன்றிருப்பீர்கள் அல்லவா? இப்போதும் உங்கள் முயற்சிக்குப் பழுதில்லை. நான் தனியாகத்தான் உங்கள் முன் நிற்கிறேன். எந்த விதமான கோபதாபங்களும் இல்லாமல், நீங்கள் அதிக பட்சமாக எனக்குச் செய்ய முடிந்த பெருங்கொடுமை எதுவாயிருந்தாலும் அதற்கு என்னை இலக்காக்கிக் கொள்ளத் துணிந்து தான் நிற்கிறேன். உங்களுக்குத் தோன்றுவதைச் செய்யலாம்.”

இளங்குமரனின் இந்தச் சொற்களைக் கேட்டு அவர் அவன் பக்கமாகத் திரும்பினார். அவ்வாறு திரும்பிய போது அவர் முகம் வெளிறினாற் போலப் பயந்து தோன்றியது. கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. முகத்திலும் கழுத்திலும் வேர்த்துப் பெருகியிருந்தது. பிச்சை கேட்டது போல் ஒடுங்கி நலிந்த குரலில் அவனருகே வந்து மன்றாடினார் அவர்.

“தயைகூர்ந்து நீ என் எதிரே நிற்காமல் போய்விடு! உன்னைப் பார்ப்பதற்குப் பயமாயிருக்கிறது. உன் கண்களின் பார்வை கணத்துக்குக் கணம் நெருப்பாகி என்னைச் சுடுகிறது. உன்னுடைய சொற்கள் என்னைக் கொல்வதற்கு முன் உன் பார்வையே கொன்றுவிடும்போல் இருக்கிறது. நான் என் வாழ்வில் இப்படிப்பட்ட எதிரியை இதுவரை சந்தித்ததில்லை. என் மனம் உன் முன்னால் பதறி நடுங்குகிறது. எனக்குள்ளேயே ஏதோ நெருப்பு மூண்டது போல் பற்றி எரிகிறது. நீ சொல்லியது உண்மை தான். எப்படி வாழக்கூடாதோ அப்படி நான் வாழ்ந்து விட்டேன். இப்படி வாழ்ந்து விட்டதைப் பாராட்ட முடியா விட்டாலும் மன்னிக்க முடியும் என்று நீ சொல்கிறாய். ஆனால் உன்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ள எனக்குத் துணியவில்லை. நான் மன்னிப்பதற்குக் கூடத் தகுதியற்றவன். நீ என்மேல் அநுதாபம் செலுத்துவது உண்மையானால் எனக்கு ஒர் உதவி செய். இந்த உதவியைத் தவிர வேறு எதையும் இனிமேல் நீ எனக்குச் செய்ய முடியாது.”

“சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?”

“பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். என்னுடைய செல்வமும், பீடும் போய்விட்டால் இந்தப் பெரிய நகரத்தில் அரசனிலிருந்து ஆண்டி வரை என்னை யாரும் மதிக்கமாட்டார்கள். ஏனென்றால் செல்வம் ஒன்றைத் தவிர என்னை மதிப்பதற்குரிய வேறு நிலையான காரணங்களை நான் பெறவில்லை. இந்தச் செல்வங்கள் என்னை விட்டுப் போகும்போது நானும் உலகத்தை விட்டுப் போய்விட வேண்டும். இனிமேல் நான் வாழக்கூடாது. நல்ல நண்பர்களும், நல்ல குணங்களும் இருந்திருந்தால் நான் இப்படியெல்லாம் கெட்டுப் போயிருக்க மாட்டேன். இவ்வளவு பாவங்களுக்கு அதிபதியாகவும் ஆகியிருக்க மாட்டேன். பூர்வ புண்ணியம் உள்ளவர்களுக்குத் தான் நல்ல குணங்களும் நல்ல நண்பர்களும் வாய்ப்பார்கள் போல் இருக்கிறது. எனக்கு அவையெல்லாம் கொடுத்து வைக்கவில்லை. நான் பிறவியிலேயே கெட்டவன். உன் தாயின் அழகை அடைய முடியாமல் ஏமாற்றம் அடைந்த போது அந்தச் சிறிய ஏமாற்றத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள இயலாமல் மேலும் கெட்டவனாக மாறினேன். சுற்றியிருந்தவர்கள் என்னைக் கொடிய வழியிலேயே தூண்டி விட்டு விட்டார்கள். இனி நான் மாற முடியாது. ஆனால் சாக முடியும்.

“என்னைத் துடிக்கத் துடிக்கக் கொன்று பழிவாங்க வேண்டிய நீயோ என் முன்னால் வந்து சிரித்துக் கொண்டு நிற்கிறாய். என் மேல் கூட அநுதாபப்படுவதாகச் சொல்கிறாய். என்னுடைய இந்தச் செல்வங்கள் உனக்குப் பெரியவையாகத் தோன்றவில்லை. நீ உன் மனத்தையே செல்வமாக வளர்த்துக் கொண்டிருக்கிறாய். இருப்பினும் நீ ஒன்று செய்ய வேண்டும். என்னைக் கொன்றுவிட்டு இந்தச் செல்வங்களையெல்லாம், உனக்குரியவையாக்கிக் கொண்டு நீ வாழவேண்டும். நானே என்னைக் கொன்று கொள்ள முடியும். ஆனால் அதற்கும் எனக்கு உறுதியான மனம் வாய்க்கவில்லை. உன்னுடைய பரிசுத்தமான கண்பார்வை, சத்தியமான சொற்கள், எதிரியையும் வசப்படுத்திவிடும் புன்னகை இவற்றாலேயே நீ என்னை முக்கால் பகுதி கொன்று விட்டாய். மீதமிருக்கும் கால் பகுதியையும் உன் கைகளாலேயே நீ அழித்துவிடு! கடைசி வேளையில் நான் மனம் மாறி உனக்குத் தோற்றுப் போக ஆசைப்படுகிறேன். உன்னைப் போன்று தூய்மையான மனம் உள்ளவன் என்னை வெற்றி கொள்ள அநுமதித்து நான் தோற்பதனால், வருகிற பிறவியிலாவது எனக்குப் புண்ணியம் வாய்க்கும். இதோ நீ என்னைக் கொன்று கொள். என்னை வென்றுகொள்” என்று கதறிக் கொண்டே பொறியற்ற பாவைபோல் தளர்ந்து அவனுக்கு முன் முழந்தாள்களை மண்டியிட்டுக் கொண்டு அமர்ந்தார் அவர்.

அவருடைய சொற்களைக் கேட்டு இளங்குமரன் கைகட்டி நின்று கொண்டு நகைத்தான். அவர் நிலையைக் கண்டு பரிதாபமாயிருந்தது அவனுக்கு. இந்த மாறுதலை வியந்து கொண்டே அவருக்கு மறுமொழி கூறினான் அவன்.

“ஐயா! பிறரை வென்றுவிட வேண்டும் என்ற ஆசை கூடத் துறவிக்கு இருக்கக்கூடாது. வெற்றிக்கும் ஆசைப் படாத மனம்தான் துறவியின் செல்வம். அந்தச் செல்வம் தோல்வியினாலும் குறையாது. உங்கள் மனத்தில் இவ்வளவு காலமாக இப்படிக் கொடுமை செய்து வாழக் காரணமாக நின்ற பலம் எது என்று பரிசோதனை செய்து பார்க்க மட்டும் தான் நான் விரும்பினேன். உங்களை வெல்லவும், கொல்லவும் நான் விரும்பவில்லை. வெற்றியைக்கூட என்னால் விட்டுக் கொடுக்க முடியும். அப்படிப் பலமுறை என் வாழ்வில் நேர்ந்திருக்கிறது.

“முகுந்தபட்டர் என்ற ஞானி எனக்கு அறிவில் தோற்றுப் போக ஆசைப்பட்டார். உங்கள் மகள் சுரமஞ்சரியும், வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லையும் எனக்குக் காதலில் தோற்றுப்போக ஆசைப்பட்டார்கள். இன்று நீங்கள் எனது சொற்களுக்குத் தோற்றுப் போய்விட்டதாகச் சொல்கிறீர்கள். இப்படித் தற்செயலாக நேரும் தோல்வி களை அங்கீகரித்துக் கொள்வதே வெற்றியாகி விடுமோ என்று வெற்றி அகங்காரத்திற்குப் பயந்து கொண்டிருக்கிறேன் நான். எல்லா ஆசைகளையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு வேண்டுமல்லவா? யாரை அதிகமாக வெறுக்க வேண்டுமோ அவர்கள் மேல் கூட அன்பு செய்யத் துணிந்து விட வேண்டும். அந்த நிலைதான் கருணையின் இறுதி எல்லை. உங்கள் பாவங்களை நீங்களே உணர்கிறீர்கள். அந்த உணர்ச்சி மாறுதலை வாழ்த்துகிறேன். அவ்வளவு போதும் எனக்கு. நான் வருகிறேன்” என்று அவரை வாழ்த்திவிட்டு மாபெரும் தியாகியாய் அவன் அங்கிருந்து வெளியேற முற்பட்டான். ஆனால் அவன் அந்தக் கூடத்திலிருந்து வெளியேறி மாளிகையின் பிரதான வாயிலைக் கடப்பதற்குள் கண்ணிரும் கம்பலையுமாய்ச் சுரமஞ்சரி ஓடிவந்து அவனுடைய வழியை மறித்துக் கொண்டுவிட்டாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5.11. பரிவு பெருகியது

கார்காலத்து மலைச் சிகரத்தின் இரு புறமும் மேகங்கள் படிந்தாற் போல் சுரமஞ்சரியின் நெற்றியின் மேல் இரு புறமும் சுருண்டு குழன்று சரிந்திருந்த கருங்கூந்தல் கவர்ச்சி மிகுந்த அவள் முகத்துக்குச் சோகமயமானதோர் அழகைத் தந்து கொண்டிருந்தது. ஊற்றுக் கண்களைப் போல் அவளுடைய விழிகளில் நீர் பெருகிற்று. பட்டின் மென்மையும் பவழத்தின் செம்மையும் பொருந்திய அவள் இதழ்கள் அப்போது அவனிடம் பேசுவதற்குச் சொற்களைத் தேடித் துடிப்பது போல் துடித்துக் கொண்டிருந்தன. நிலாவிலிருந்து தளிர்த்த தளிர்கள் போல் மென்மையாகவும் பொன்னிற் கொழுந்து முளைத்தாற் போல் கவரும் நிறமுடையனவாகவும் இருந்த அவள் கைவிரல்கள் வணங்குகிற பாவனையில் அவனை நோக்கிக் குவிந்தன. அந்த ஆற்றாமையை, அந்தத் தவிப்பைக் கண்டும் காணாதது போல எப்படிக் கடந்து மேலே தன் வழியில் போவதென்று புரியாமல் இளங்குமரன் தயங்கி நின்றான். உலகத்திலுள்ள பரிசுத்தமான பூக்கள் எல்லாம் எதிரே வந்து நிற்கும் அவளுடைய உடம்பிலிருந்து மணப்பது போல் ஒரு நறுமணம் சூழ்ந்து கொண்டு கிளர்வதை இளங்குமரன் உணர்ந்தான். அந்தப் பரிமள நறுமணம் வலையைப் போல் தன்னைப் பிணித்து விட முயன்ற வேளைகளை ஒவ்வொன்றாய் நினைத்துக் கொண்டு நன்றாகத் தலை நிமிர்ந்து நிர்ப்பயமாக அவள் கண்களைச் சந்தித்தான். பின்பு வேண்டினான்.

“என்னுடைய வழியை எனக்கு விடு.”

“விட்டுவிடுகிறேன். ஆனால் அப்படி விடுவதற்குமுன் எனக்கு உங்களிடமிருந்து ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வழியில் நானும் உங்களோடு சேர்ந்து நடந்து வர அனுமதி அளியுங்கள். அதற்கு மனம் இல்லா விட்டால் இதே வழியில் விழுந்து சாவதற்காவது ஒப்புக் கொள்ளுங்கள். இப்படி இந்த வழியில் விழுந்து இறந்து போனால் அடுத்த பிறவியிலாவது நீங்கள் நடந்து போகிற பாதையில் புல்லாக முளைத்து உங்கள் பாதங்களில் மிதிபடுவேன். இல்லை இல்லை. புல்லாக முளைத்தாலும் யாராவது வேரோடு பறித்து எறிந்து விடுவார்கள். கல்லாகவே கிடந்து உங்கள் கால்களில் மிதிபட வேண்டும் நான். உங்கள் கால்கள் என்மீது மிதிபடுகிற ஒவ்வொரு முறையும் அகலிகை மேல் இராமன் திருவடி பட்டதும் நிகழ்ந்தது போல் எனக்கு உயிர் வரவேண்டும். உங்கள் பாதங்கள் என்மேல் படாத நேரங்களில் மறுபடி நான் உயிரற்ற கல்லாகிவிட வேண்டும்.”

“உன் ஆசை விநோதமானதாயிருக்கிறது. சாவதைவிட உயர்ந்த இலட்சியம் ஏதாவது உன் வாழ்க்கையில் உனக்கு இருக்க வேண்டும்.”

“அப்படி ஓர் இலட்சியம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அந்த இலட்சியத்திற்குப் பொருளானவருக்கு என்னைக் காண்பதற்கே அலட்சியமாயிருக்கும் போது நான் வாழ்ந்துதான் என் பயன்? உலகத்திற்கெல்லாம் அநுதாப மழை பொழிகிற அந்தக் கருணை முகில் என்னுடைய விருப்பத்திற்கு மட்டும் வறண்டு போகக் காரணமென்னவென்று புரியாமல் தவிக்கிறேன் நான்.”

“உனக்குப் புரியாமல் நீ தவிப்பதற்கெல்லாம் நான் எப்படி மறுமொழி கூற முடியும்?”

“இந்தத் தவிப்பு உங்களிடமிருந்து பிறந்தது. உங்களோடு இணைந்து நிறைந்து விடக் காத்திருப்பது. உங்களுடைய புறக்கணிப்புக்கு அப்பால் சாவைத் தவிர இந்தத் தவிப்புக்கு வேறு மருந்தில்லை.”

“நான் யாரையும் புறக்கணிக்கவில்லை! என் வழியில் தடையாக நிற்க வேண்டாமென்று மட்டும் சொல்கிறேன்.”

அவனோடு மேலே பேசுவதற்குச் சொற்கள் கிடைக்காமல் கண்ணிர் பெருகும் விழிகளோடும் வணங்குவதற்காகக் கூப்பிய கைகளோடும் நின்றாள் சுரமஞ்சரி. எதிரே போவதற்கு முந்திக்கொண்டு நிற்கிற அவனுடைய கண்களையும் தோள்களையும் பார்த்து இத்தனை கால மாக அவற்றை எண்ணி அவற்றுக்காகவே தவம் செய்து வந்த தன் மனத்தின் நம்பிக்கைகள் தளரப் பெரு மூச்செறிந்தாள். கப்பல் கரப்புத் தீவில் இருண்ட மழை நாள் ஒன்றில் இந்தக் காவிய நாயகனின் பொன்நிறத் தோள்கள் மீது தலைசாய்த்து உறங்க முயன்ற வேளை நினைவு வந்தது அவளுக்கு. அந்த விநாடியை வாழ்த்திக் கொண்டுதான் இத்தனை காலமாக அவள் வாழ்ந்திருக்கிறாள்.

ஒவ்வொன்றாய்த் தளர்ந்து கொண்டிருந்த தன் நம்பிக்கைகளை விட்டு விடாமல் இளங்குமரனுடைய பாதங்களுக்கு முன் பூமாலை சரிவதுபோல் முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டு அவள் பேசலானாள்:

“இப்போது இந்த உணர்ச்சிமயமான வேளையில் உங்கள் பாதங்களில் இடுவதற்கு வேறு பூக்கள் என்னிடம் இல்லை. என் உயிரையே பூவாகக் கருதிக் கொண்டு உங்கள் பாதங்களில் அர்ப்பணம் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. உங்களோடு இணைந்துவிடும் ஒரே இலட்சியத்திறக்காகத்தான் இந்த உயிரும் இதன் நினைவுகளும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. உங்களோடு இணைவதற்கு முடியாத உயிர் வாழ்க்கை எனக்கு இனி வேண்டியதில்லை. என்னுடைய இந்த உயிரைப் போக்கிக் கொள்ளுமுன் மனத்தில் இந்தக் கணத்தில் தவிக்கிற தவிப்பு ஒன்றை உங்களிடம் வெளிப் படையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட வேண்டும்.”

அவளுடைய தவிப்பு, கண்ணிர், வேதனை எல்லாவற்றையும் கண்டு தயங்கி நின்றான் இளங்குமரன். முதல் முதலாக இந்தப் பெண்ணிடமிருந்து ஓவியன் மணி மார்பன் மடல் கொண்டு வந்தபோதும், கப்பல் கரப்புத் தீவில் நெகிழ்ந்த உணர்ச்சிகளோடு இவள் நெருங்கி நின்ற போதும் தன் மனத்தில் தாழம்பூ மணம் பரப்பிய வேளைகளை நினைத்துக் கொண்டான். தன்னையே அந்தப் பெண்ணுக்கு ஆளக் கொடுப்பதைத் தவிர வேறு எந்த மருந்தினாலும் தணிக்க முடியாத அவள் வேதனையைக் கண்டு அவன் மனமும் அனுதாபப்பட்டது. ஆனால் இத்தனை காலம் வளர்த்த மனத்தை ஒரு பெண்ணின் அழகுக்கு விட்டுக் கொடுப்பதா என்று ஒர் எண்ணம் தயங்கியது. தடுத்தது. அவனுள்ளே இப்படி இந்த மனப்போராட்டம் நடந்து கொண்டிருந்த போது அவள் அவனைக் கேட்டாள்:

“உங்களைச் சந்தித்த நாளிலிருந்து, நான் உங்களுக்காகச் சிறிது சிறிதாகத் தோற்றுப்போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா?”

“இருக்கலாம். ஆனால் உன்னை வெற்றிகொள்ள முயன்றதாகவோ வென்றதாகவோ எனக்கு நினைவில்லையே!”

“இது ஒரு விசித்திரமான தோல்வி! இந்தத் தோல்வியை எப்படி நிரூபிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. நான் பெண், பேதைத் தன்மை நீங்காதவள். அநுதாபத் திற்குரியவள். பிறர்மேல் அநுதாபப்படும் மனம்தான் பெரிய செல்வம் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு நாளங்காடிக் கூட்டத்தில் அந்தத் தொழுநோய் முதிய வளைக் காப்பாற்றும் போது நீங்களே கூறினர்களே, அந்த விதமான அநுதாபத்திற்கு நான் மட்டும் பாத்திரமாக முடியாதவளா? நானும் ஒரு நோயாளிதான். எனக்கு வந்திருக்கிற நோய்க்குப் பெயர் ஆசை, வேட்கை, காதல் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நோய்க்கு மருந்தாவதற்குக் கூசிக்கொண்டு நீங்கள் மேலே நடந்து போகத்தான் விரும்புகிறீர் களானால், உங்களைத் தடுக்கும் ஆற்றல் எனக்கில்லை. ஆனால் இந்தக் கடைசி விநாடியிலும் நான் துணிவாக இன்னொரு காரியம் செய்ய முடியும். வேறொரு விதத்தில் முயன்று உங்கள் அநுதாபத்திற்கு நானும் பாத்திரம்தான் என்பதை நிரூபிக்க முடியும்!”

“அது எப்படியோ?”

“சொல்கிறேன், உலகத்தில் மிகவும் துன்பமான முயற்சி நம்மிடம் அன்பு செலுத்தாதவர் மேல் நாம் உயிரையே வைத்து அன்பு செய்து தவிப்பதுதான். நீங்கள் அந்தக் கூடத்தில் என் தந்தையோடு பேசிக் கொண்டிருந்தவற்றை யெல்லாம் கதவோரமாக ஒதுங்கி நின்று நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். இறுதியாக நீங்கள் அவரிடம் சொல்லிய வார்த்தைகளை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். யாரை அதிகமாக வெறுக்கிறோமோ அவர்கள் மேல்கூட அன்பு செய்யத் துணிய வேண்டும். அதுதான் கருணையின் இறுதி எல்லை என்று கூறினர்களா, இல்லையா?”

“கூறினேன். ஆனால் உன்னை நான் வெறுக்கவும் இல்லை; விரும்பவும் இல்லை. உன்னைப் போல் பேரழகு வாய்ந்த பெண்கள் இந்த உலகத்தில் பலர் இருக்கிறார்கள். இந்த அழகிலும் நான் உன் பெருமையைக் காணவில்லை. உன்னைப் படைத்த கடவுளின் பெருந்தன்மையைத் தான் காண்கிறேன். ஒரே உடம்பில் இவ்வளவு அழகையும் நிறைத்து அனுப்பியவனுடைய பெருந்தன்மை சிறந்தது தான். இந்த அழகை உன் செல்வமாகக் கருதி இதற்காக நான் என்னை இழந்துவிட வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது பேராசையல்லவா?”

“பேராசையாகவே இருக்கட்டும்! நான்தான் பேதைப் பெண். கல்வியின் பலமோ, தத்துவங்களால் தெளிந்த மனமோ, வைராக்கியங்களோ இல்லாதவள். நீங்கள் ஞான வீரர். வெற்றிக்குக் கூட ஆசைப்படாதவர். வெற்றியைக் கூட விட்டுக் கொடுக்கவும், தோல்வியைச் சிரித்த முகத்தோடு அங்கீகரித்துக் கொள்ளவும் முடியுமென்று பெருமைப் படுகிறவர். அப்படி இருந்தும் எனக்காக விட்டுக் கொடுப்பதற்கு மட்டும் உங்கள் மனம் துணியத் தயங்குகிறது. இந்த உலகத்தில் சுரமஞ்சிரயைத் தவிர எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்த உங்களால் முடியும். அப்படித் தானே? உங்களைப் போல் அன்பு செலுத்துவதில் கூட பட்சதாபம் வைத்துக் கொண்டிருக்கிறவரை நான் எப்படித் துறவியாக ஏற்றுக் கொள்ள முடியும்?”

இதைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான்.

“நீ என் வழியை விடமாட்டாய் போலிருக்கிறது. உன் பேச்சு முடிவில்லாத வாதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதழ்கள் துடிக்க, கண்கள் கலங்கிப் பெருக நீ வந்து நிற்கிற கோலத்தைப் பார்த்தாலும் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. உன் வழியும் உனக்குக் கிடைக்காமல், என் வழியும் எனக்குக் கிடைக்காமல், இரண்டு பேரும் இப்படி ஒருவருடைய வழியை மற்றொருவர் மறித்துக்கொண்டு எவ்வளவு நேரம் தவிக்க முடியும்? இந்தத் தவிப்புக்கு முடிவு இருவருக்குமே தெரிய வேண்டும். அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது பெண்ணே! நீ எதைக் கேட்க வந்தாயோ. அதையே பொருளாகக் கொண்டு என்னிடம் வாதத்தைத் தொடங்கு. பல்லூழி காலத்துக்கு முன்பு ஆயிரம் பிரம்ம ஞானிகள் கூடியிருந்த பெருஞ்சபையில் ஞானமலையாகிய யாக்ஞவல்கியரைத் தன்னோடு பிரம்ம வாதம் புரிய முன்வருமாறு கார்க்கி என்ற பெண்மணி தனியாய் நின்று அழைத்திருக்கிறாள். அப்படி நீயும் என்னை அழைக்க முடியும்.”

“ஐயா! நீங்கள் என்னை ஏளனம் செய்கிறீர்கள் போலும். வெறுங்கையோடு வந்திருக்கிற எதிரியை வாட் போருக்கு வா என்றழைப்பது போலிருக்கிறது உங்கள் செயல். மைத்திரேயி, கார்க்கி போன்ற வேத காலத்துப் பெண்கள் எங்கே? பேதைத் தன்மையைத் தவிர வேறொன்றும் தெரியாத நான் எங்கே? எனக்கு அவ்வளவு அறிவு வலிமை இருந்தால் உங்கள் மேல் வைத்த மனத்தை மீட்டுக் கொண்டு நான் துறவியாகப் போய்விட முடியும். ஆனால் இப்போதுள்ள நிலையில் நான் பெரும் பேதை. உங்களை அடைய முடியாவிட்டால் சாவதைத் தவிர வேறெதுவும் நோக்கமில்லாதவள்.”

“பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதிமட்டும் நல்லதாக இருக்க வேண்டும்.”

“எதை வெற்றி பெற முடியுமென்கிறீர்கள்.”

“எதை விரும்புகிறார்களோ அதைத்தான். விரும்பியதை விரும்பியபடியே அடைவதைவிடப் பெரிய வெற்றி ஏதும் பேதைகளுக்கு இருக்க முடியாது.”

“அப்படியானால் உங்கள் மேல் ஆசைப்படுவதைத் தவிர வேறெதையும் கற்காத பேதையான என்னோடு வாதிடவும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?”

“மறுக்கவில்லை.”

“ஒருவரிடம் கைகூப்பி ஒரு பொருளை ஈயென இரத்தல் இழிந்தது தானே?”

“ஆமாம்! இழிந்ததுதான்.”

“இரப்பவருக்கு ஈயமாட்டேனென்று மறுப்பது?”

“அதைவிட இழிந்தது.”

“இழிந்த செயலைச் செய்ய விரும்புவது உயர்ந்த மனிதர்களுக்குத் தகுமா?”

“தகாது! தகாது!”

“அப்படியானால் நான் கேட்கும் ஒன்றை நீங்கள் எனக்கு ஈந்தருள வேண்டும்.”

“நான் துறவி. என்னிடம் ஈவதற்கு ஒன்றுமில்லை. நானே கொடுப்பவர்களைத் தேடிக் கொண்டிருப்பவன்.”

“பொய்! இது பெரிய பொய்! முதன் முதலாக உங்களை மற்போரில் வென்ற வீரராகப் பூம்புகார் கடற்கரையில் சந்தித்தபோது நான் கொடுக்கிறவளாக இருந்தேன். நீங்கள் நான் கொடுத்ததை வாங்கிக் கொள்ள மறுக்கும் அளவு மானத்தின் எல்லையில் போய் நின்று கொண்டு என் பரிசைப் புறக்கணித்தீர்கள். இப்போது நான் உங்களிடமிருந்து பிச்சை கேட்கிறவளாக இருக்கிறேன். கேட்கிற பிச்சையும் அன்புப் பிச்சை. கொடுக்க முடிந்த பிச்சையைத் தான் மண்டியிட்டுப் பணிந்து கேட்கிறேன். இந்தப் பிச்சையையும் கொடுக்க முடியாதென நீங்கள் மறுக்கிறீர்கள். நான் கொடுக்க முடிந்தவளாக இருந்த காலத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள மறுத்தீர்கள். நான் கையேந்திப் பிச்சை கேட்டுக் கொண்டு நிற்கிற காலத்தில் நீங்கள் கொடுக்க மறுக்கிறீர்கள். நிறைந்த மனமுடையவர்களுக்குக் கொடுக்க மறுப்பதும் இழிவு அல்லவா!”

“ஒன்றுமே இல்லாதவன் எதைக் கொடுக்க முடியும் பெண்ணே?”

“பொய் சொல்லாதீர்கள். நீங்கள் கொடுக்க முடிந்தவர். கொடுப்பதற்கு உங்களிடம் வள்ளன்மை இருக்கிறது.”

“இருந்தால் கேள். அப்படி இருப்பது எதுவானாலும் தருகிறேன்” இந்த வார்த்தைகளைச் சொல்லும்போதே தான் மெல்ல மெல்ல அவளுக்குத் தோற்றுக் கொண்டிருப்பது போன்ற தளர்ச்சியை இளங்குமரன் அடைந்து விட்டான். அந்தப் பெண்ணின் தந்திரமான கேள்விக்கு முன்னால் தான் பேதையாகிவிட்டாற் போலவும், அவள் தன்னை வீழ்த்தும் புத்திக் கூர்மையைப் படிப்படியாகப் பெற்று விட்டாற் போலவும் உணர்ந்து சோர்ந்தான் அவன்.

அதுவரை அழுது கொண்டிருந்த சுரமஞ்சரி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள். அவள் கண்களில் நளினமான உணர்வுகள் பிறந்தன. அவனுடைய மனத்தின் தளர்ச்சி அவளுக்குப் புரிந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5.12. காவிய நாயகன்

அந்த நேரம் தன் வாழ்க்கையில் தனக்கு நல்வினைப் பயன் விளைய வேண்டிய மங்கல வேளையாக இருந்ததனாலோ பூர்வ புண்ணிய வசத்தினாலோ சுரமஞ்சரியின் நாவில் புத்தியும் யுக்தியும் கலந்து திறமை வாய்ந்த சொற்களாகவும், கேள்விகளாகவும் இளங்குமரனை நோக்கிப் பிறந்தன. தன் காதலை இன்னும் அதிக உரிமையோடு நிலைநாட்ட வேண்டும் என்ற துணிவு அவனுடைய சோர்விலிருந்து அவளுக்குக் கிடைத்தது. ‘பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதி மட்டும் நல்லதாக இருக்க வேண்டும்’ - என்று சற்று முன் அவனே தன்னிடம் கூறிய சொற்களை நினைத்துக் கொண்டாள் அவள். அந்தச் சொற்களை நினைவு கூர்வதன் மூலம் அவனைத் தானும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளுக்குக் கிடைத்தது. தன்னுடைய விதி நன்றாகத்தான் இருக்கிறது என்றாற் போல் அப்போது அவள் மனத்தில் ஒரு துணிவும் தோன்றியது. அந்தத் துணிவோடு அவள் அவனை நோக்கிப் பேசினாள்.

“நான் கேட்பது எதுவாயிருந்தாலும் அது உங்களிடம் உள்ளதானால் தருவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்!”

“ஆம்! தருவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறேன். கேட்டுப் பெற்றுக்கொள்.”

“உங்களையே எனக்குத் தந்துவிடுங்கள்! இந்த அழகிய உடம்பை நான் ஆள்வதற்கு அளியுங்கள். கண்டு நிறைவடைய முடியாத நயங்கள் பிறக்கும் இந்தக் கண்கள், மெளனமாய் எந்நேரமும் முறுவல் பூத்துக்கொண்டே யிருக்கும் இந்த இதழ்கள், அழகு செழித்து நிமிர்ந்த பரந்த இந்தச் சுந்தரமணித் தோள்கள்- இவையெல்லாம் எனக்கு உரிமையாக வேண்டும். கொடுப்பதற்கு அவசியம் நேரும்போது உயிர் உடம்பு மனம் முதலிவற்றையும் கூடக் கொடுத்து விடுவது தான் கொடையின் உயர்ந்த இலட்சணம் என்பார்கள். கொடுக்க முடிந்தவராக இருந்து கொண்டே கொடைக்கு மறுப்பது உங்களைப் போன்றவருக்கே அழகில்லை” என்று கூறியவாறே தாமரை மலர்களை இடுவதுபோல் தன் கைகளை அவனுடைய பாதங்களில் இட்டு மேலே நடந்து போவதற்கிருந்த அந்தத் தங்க நிறத் தாள்களைத் தடுத்து நிறுத்தும் தடையானாள் சுரமஞ்சரி. சில்லென்று பூவிழுந்தாற்போல, தன் பாதங்களைப் பற்றிக் குளிர்ந்த உணர்வைப் பாய்ச்சும் அந்தக் கைகளின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளத் தோன்றாமல் திகைத்து நின்றான் இளங்குமரன்.

மிகுந்த பசியினாலும் மனத்தின் பரிபூரணமான பாவனைகளாலும் நடந்து போவதே காற்றில் மிதப்பது போல் கனமற்றிருந்த அந்த வேளையில் சுரமஞ்சரியின் வேண்டுகோளைத் தடுக்கவும் முடியாமல், அங்கீகரித்துக் கொள்ளவும் முடியாமல் தயங்கி நின்றான் அவன். எப்படியெப்படி எல்லாமோ வளர்த்த மனத்தையும், பிடிவாதங்களையும் இப்படி இந்தப் பெண்ணின் தந்திரமான வாதத்தில் தோற்று விட்டதை நினைத்த போது அவனுள் அழுகை பொங்கியது. இவ்வளவு காலம் தன் வைராக்கியத்துக்குத் துணை நின்ற விதி இன்று தன்னைக் கைவிடப் போவதை எண்ணி வேதனை கொண்டான் அவன். எந்தவிதத்தினாலும் தன்னை வெற்றி கொள்ளத் தகுதியில்லாத ஓர் எதிரிக்குத் தான் தோற்றுப் போய்விட்டதாக அவன் மனம் தவித்தது. தனக்குத்தானே நினைப்பும் துணையுமின்றித் தனியாய் அமைந்தது.

எல்லாப் பற்றுக்களையும் களைந்துவிட்டுத் தன் வழியில் விரைந்து நடக்கும்போது இன்று இந்த வேளை யில் தன்னுடைய பாதங்களைச் சுற்றி வளைக்கும் பூங்கரங்களின் பற்றில் இருந்து மீள முடியாத விதத்தில் தான் சிறைப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தான் அவன். தோல்வியின் தளர்ச்சியால் கலங்கும் மனத்தோடு மேலே இளங்குமரன் நிமிர்ந்து கொண்டு வானத்தைப் பார்த்தான். ‘நான் முற்றிலும் இருண்டு விடவில்லை’ என்பது போல நட்சத்திரங்கள் அங்குமிங்குமாக மின்னிக் கொண்டிருந்தன. அந்த வானத்தில் தோன்றும் மேகங்கள் மறுபயன் கருதாமல் உலகத்துக்கு மழையைக் கொடுத்துக் கொண்டிருப்பது அவனுக்கு நினைவு வந்தது. அதே வானில் பயன் கருதாமல் சூரிய சந்திரர்கள் மாறி மாறி ஒளியைப் கொடுப்பதும், வேற்றுமை ஏற்றத் தாழ்வுகளை பாராமல் காற்று வீசுவதும் ஆகிய உலகின் நிரந்தரமான தியாகங்களை நினைவு கூர்ந்தான் இளங்குமரன். ‘இவளுக்கு என் மன்த்தையும் உடலையும் நான் தோற்பதா?’ என்று உள்ளே கலங்கும் கருத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவளுக்குத் தோற்றுப் போகவும் துணிந்தான் அவன். உயர்ந்த கொடையாளியின் பரந்த மனப்பக்குவத்தோடு அவள் கேட்டதற்கு மறுப்பின்றித் தன்னைக் கொடுத்து விடவும் குழைந்தது அவன் கருத்து. தன் உடம்பையும், மனத்தையும் கூடக் கேட்கிறவளுக்கு மறுக்காமல் தியாகம் செய்துவிடத் துணிந்தான் அவன். ‘உடம்பும் மனமும் தூய்மையாய் நிறைந்த செல்வங்கள், அவற்றை யாருக்காகவும் இழக்கக் கூடாது’ என்று தன் வாழ்வில் கடைசியாகத் தான் சேர்க்க ஆசைப்பட்ட செல்வங்களையும்கூட அவளிடம் அவன் தோற்றுப் போய்க் கொடுத்துவிட இசைந்து விட்டான். இந்த முடிவுக்கு வந்த பின் நிர்மலமான உள்ளத்தோடும் எதை இழக்கிறானோ அதை இழக்கிற துன்பமும்கூடத் தெரியாத சிரித்த முகத்தோடும் கீழே குனிந்து சுரமஞ்சரியைப் பார்த்தான் இளங்குமரன். அவள் அவன் காலடியில் பூவாக விழுந்து கிடந்தாள். பூமாலையை எடுப்பது போல் முதன் முதலாக அவளைத் தன் கைகளால் தொட்டுத் தூக்கி நிறுத்தினான். அப்படி அவனுடைய கைகள் தன்னைத் தீண்டியபோது சுரமஞ்சரி இந்த உலகத்தில் தன்னைப் போல் பாக்கியசாலி வேறு யாருமே இல்லை என்று எண்ணிப் பெரு மிதப்பட்டாள். மேலேயிருந்து யாரோ பணிபுலராத பூக்களை மலை மலையாக அள்ளித் தன்மேல் சொரிவது போல் அவள் உடல் சிலிர்த்தது. அந்த விநாடிகள் முடிவு பெறாமல் நித்தியமாகி அப்படியே பல யுகங்களாகத் தொடர்ந்து வளரலாகாதா என்ற தாபத்தோடு, கண்களில் மகிழ்ச்சி மலர அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் அவளிடம் பேசினான்.

“உன்னுடைய வார்த்தைகளுக்கு நான் தோற்றுப் போய்விட்டேன். என்னுடைய தோல்வியை நானே ஒப்புக் கொள்கிறேன்.”

“இல்லை! இல்லை! அப்படிச் சொல்லாதீர்கள், நான்தான் தொடக்கத்திலிருந்து உங்களுக்குத் தோற்றுப் போய்க் கொண்டு வருகிறேன். என்னுடைய தோல்வி நேற்று வரை அங்கீகரிக்கப் படவில்லை. அது யாரால் அங்கீகரிக்கப்பட வேண்டுமோ அவரால் இன்று அங்கீகரிக்கப்பட்டு விட்டது அவ்வளவுதான். இதை என் வெற்றி யாகக் கூறினீர்களானால் ‘பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதி மட்டும் நல்லதாக இருக்க வேண்டும்’ என்று நீங்களே சிறிது நேரத்துக்கு முன் சொன்னாற் போல என் விதி நன்றாக இருந்தது என்பதற்கு மேல் நான் பெருமைப்பட இதில் எனது முயற்சி வேறு ஒன்றுமில்லை.”

“உன் விதி உனக்கு நன்றாயிருந்த வேளையில் என் விதி என்னைக் கைவிட்டு விட்டது. சுரமஞ்சரி! நீ இந்த வெற்றியை நன்றாகத் கொண்டாடலாம். ஏனென்றால் இந்த நகரத்தில் நாளங்காடி ஞான வீதியில் கூடிய பல நூறு தத்துவ ஞானிகளுக்கும், சமயவாதிகளுக்கும் கூட அவர்களுடைய அறிவின் பலத்தால் அடைய முடியாமற் போன வெற்றி இது. நீ உன்னுடைய உணர்ச்சிகளின் பலத்தாலேயே இந்த வெற்றியை என்னிடம் அடைந்து விட்டாய். ஆனால் இப்படி இப்போது உன்னுடைய வார்த்தைகளுக்குத் தோற்றவனின் மனத்தில் பெருகும் பரிதாபத்தை மட்டும் அளக்கவே முடியாது...”

“இன்று எந்த வார்த்தைகளால் உங்களை நான் வென்றதாகச் சொல்கிறீர்களோ அவை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த வார்த்தைகள்தாமே ? நம்முடைய முதல் சந்திப்பின்போது கடற்கரையில் நான் உங்களுக்கு மணி மாலை பரிசளிக்க முன்வந்த சமயத்தில், கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தது. கொள்ளமாட்டேன் என மறுப்பது அதைவிட உயர்ந்தது என்று அன்றைக்கு நீங்கள் என்னிடம் கூறிய வார்த்தைகளைத் தான் இன்றைக்கு நான் உங்களிடம் பேசினேன். அன்று நீங்கள் என்னை வென்று விடக் காரணமாயிருந்த அதே வார்த்தைகள் இன்று நான் உங்களை வெற்றி கொள்ளக் காரணமாயிருந்தனவோ என்னவோ? எப்படியிருந்தாலும் வெற்றி உங்களுடைய வார்த்தைகளுக்குத்தானே?”

“வார்த்தைகள் பூக்களைப் போன்றவை. யார் நன்றாகத் தொடுத்தாலும் அவை அழகாயிருக்கும். வென்றவர்கள் பெருமைப்படவும் தோற்றவர்கள் துயரப் படவும் ஒரே விதமான வார்த்தைகளே காரணமாயிருக்குமானால் என்ன செய்யலாம்?”

“வென்றவர் தோற்றவர் என்ற பிரிவே நமக்குள் இங்கு இல்லை அன்பரே! இந்தத் தோல்வியிலும் நீங்கள் தான் என்னை வென்றிருக்கிறீர்கள். என்னுடைய வாழ்வில் கடைசி விநாடி வரை உங்களுக்குத் தோற்றுக் கொண்டிருப்பதைவிட வேறெந்தப் பெருமையும் எனக்கு வேண்டாம். தலைமுறை தலைமுறையாகப் பெண்கள் அன்பினால் பிறருக்குத் தோற்றுப் போவதைத்தான் பாக்கியமாகக் கருதி வந்திருக்கிறார்கள். ஆண்களின் வாழ்வில் வேண்டுமானால் வெற்றியடையவதனால் பெருமை இருக்கலாம். பெண்ணின் வாழ்க்கையில் அன்புக்காகத் தோற்றுக் கொண்டேயிருப்பதை விடப் பெரிய நிகழ்ச்சி வேறொன்றும் இல்லை. வாழ்க்கை முழுவதும் துணையாக்கிக் கொண்டு நடப்பதற்காக வளைகள் குலுங்கும் கையால் நாங்கள் எந்த ஆண்மகனின் கையைப் பற்றுகிறோமோ அந்த விநாடியிலிருந்து எங்கள் மனம் அவனுக்கு மட்டும் தோற்றுப் போவதில் சுகம் காணத் தொடங்கி விடுகிறது. மலையிலிருந்து கீழே இறங்கும் அருவி அப்படித் தாழ்ந்து கீழே வீழ்வதனாலேதான் உல்லாசமடைகிறது. செடிகளில் அழகும் மணமும் நிறைந்த பூக்கள் சூடிக் கொள்வோர் காலடியில் உதிர்வதற்காகவே பூக்கின்றன. உதிர்ந்த பூ திரும்பவும் கிளைக்குப் போக ஆசைப்பட முடியுமோ? வீழ்ந்த அருவி மறுபடி தான் பிறந்து வந்த இடமான நீல மலைச் சிகரத்துக்கு ஏறிப் போக ஆசைப்பட முடியுமோ? பெண் தன்னை இழந்து விடுவதில்தான் சுகம் பெறுகிறாள்” என்று கூறியவாறே தன் வளைக் கரத்தால் அவன் கரத்தைப் பற்றினாள் சுரமஞ்சரி. அவன் அவள் கையைத் தடுக்கவில்லை.

“நீ பெற வேண்டிய சுகங்களுக்காக உன் தெய்வத்தை மனமார வணங்கி வேண்டிக்கொள் சுரமஞ்சரி!”

“நேற்று வரை பல வேறு தெய்வங்களை நான் வணங்கியிருக்கிறேன். இன்று நான் வணங்குவதற்கு வேறு தெய்வங்கள் இல்லை. நீங்கள் ஒருவரே என் தெய்வமாகி விட்டீர்கள்.”

“உன்னுடைய தெய்வத்தை நீ எந்த வழியில் நடத்திக் கொண்டு போக வேண்டுமோ அந்த வழியில் நடத்திக் கொண்டு போ!”

“கட்டளையே தவறானதாயிருக்கிறதே? தெய்வ மல்லவா தன்னைச் சேர்ந்தவர்களை வழி நடத்திக் கொண்டு போக வேண்டும்? இன்னொரு நிகழ்ச்சியும் எனக்கு நினைவு வருகிறது. ஓவியர் மணிமார்பனோடு நீங்கள் இந்த மாளிகையில் நுழைந்த முதல் நாள் ‘பிறருடைய வழிக்கு அடங்கி நடந்து நமக்குப் பழக்கமில்லை. எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் எப்படி நடந்து போக வேண்டுமென்று நமக்குத் தெரியும்’ என்று தணியாத தன்மான உணர்ச்சியுடனே என்னிடம் பேசினர்கள். அதே மனிதர்தானா இன்று இப்படி என் முன் ‘எந்த வழியில் நடத்த வேண்டுமோ அந்த வழியில் என்னை நடத்திக் கொண்டு போ’ என்று கூறுகிறீர்கள். இந்த மாறுதலை என்னால் நம்பவே முடியவில்லையே?”

“ஓர் எல்லையின் கடைசிப் புள்ளியில் போய் நிற்பவர்கள் அங்கிருந்து திரும்பி நடந்தால் அதற்கு நேரேயுள்ள எதிர் எல்லைக்குத்தான் நடக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கடைசியாக ஏறிப்போய் நிற்கிற எல்லை எதுவோ அதற்கு அப்பால் போவதற்கும் நோக்கமாகக் கூறிக்கொள்வதற்கும் ஒன்றுமே இருப்பதில்லை. என்னுடைய எல்லையிலிருந்து நான் திரும்பி நடக்க வேண்டுமென்று தானே நீ இந்தக் கையால் என்னைப் பற்றி இழுக்கிறாய்?”

“அவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டுச் சுர மஞ்சரி கண் கலங்கினாள். சில விநாடிகள் ஏதோ வேதனைக்குரிய சிந்தனைகளினால் மனம் வருந்துகிற சாயல் அவள் முகத்தில் தெரிந்தது. பின்பு தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக அவன் கையைப் பற்றியிருந்த தன் வளைக்கரத்தை மெல்ல விடுவித்துக் கொண்டு “இப்படி உள்ளர்த்தம் நிறைந்த வார்த்தைகளால் என்னைக் கொல்லாதீர்கள். உங்கள் வழியில் நீங்கள் விரும்புகிறார் போல என்னை அழைத்துச் செல்லுங்கள். தோற்றவர் களை அழைத்துச் செல்லும் முறையை வென்றவர்கள் தானே முடிவு செய்ய வேண்டும்” என்றாள்.

“அப்படியானால் என்னோடு என் வழியில் புறப்படு.”

“இதோ புறப்படுகிறேன்” என்று சொல்லியபடியே பெருமாளிகையின் வாயிற்படியருகே போய்த் தன் உடலின் பல பகுதிகளைப் பிணைத்துக் கொண்டிருந்த பொன் சுமைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அந்தப் படியில் குவித்தாள் சுரமஞ்சரி. இறுதியாகக் கால்களின் மாணிக்கச் சிலம்புகளையும் கழற்றி வைத்துவிட்டு அவற்றைப் பற்றிய மனத்தின் ஆசைகளும் அறவே கழன்று போய் அவள் எழுந்து புறப்படுவதற்காக நிமிர்ந்தபோது அவளுடைய முன் நெற்றியில் மேலேயிருந்த கண்ணிர் வெதுவெதுப்பாகச் சிந்திச் சிதறியது.

திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்து பார்த்தாள் சுரமஞ்சரி. அவள் அந்த அணிகலன்களையெல்லாம் கழற்றி வைத்த படிக்கு ஒருபடி மேலே அவளுடைய தந்தை கண்கலங்கி நீர் பெருக வந்து நின்றுகொண்டிருந்தார்.

“இப்படித் தோற்றுப் போகத் துணிகிற மனம் உன் தந்தைக்கு இல்லையே, சுரமஞ்சரி! உன் தந்தைக்கு இந்தக் குணம் இருந்திருந்தால் தன் வாழ்வில் அவர் தொடக் கத்திலிருந்தே செம்மையாக வாழ்ந்திருக்கலாம் அம்மா...” என்று நாத் தழுதழுத்து நெகிழ்ந்த குரலில் அவர் அவளை நோக்கிக் கூறியபோது, அவருக்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு. தான் அப்போது நின்று கொண்டிருந்த படிக்கு அடுத்த மேற் படியில் ஏறித் தன் தந்தைக்கு ஏதாவது ஆறுதலாய்ச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் என்ன சொல்வதென்று புலப்படவில்லை. அந்தப் பாசத்தையும் மனத்திலிருந்து கழற்றினாள் அவள்.

“இன்று அமைதியான இந்த இரவு வேளையில் என் தாயும், சகோதரி வானவல்லியும், தோழி வசந்தமாலையும் நன்றாக உறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது! ‘சுரமஞ்சரி எந்த வழியில் யாருடன் நடந்து போவதற்காக இத்தனை காலம் தவம் செய்து கொண்டிருந்தாளோ அந்த வழியில் அந்தத் துணையோடு இந்த இருளில் புறப்பட்டுப் போய் விட்டாள்’ என்று எல்லாரிடமும் நாளைக்கு விடிந்ததும் சொல்லி விடுங்கள் அப்பா. மனம் இருந்தால் இப்போது எங்களுக்கு ஆசியும் கூறி அனுப்புங்கள்” என்று சொல்லிக் கொண்டே படிகளில் இறங்கித் திரும்பிச் சென்று தன்னை வென்றவனுக்கு அருகில் நின்றபடி தன் தந்தையை நோக்கி வணங்கினாள் சுரமஞ்சரி.

“ஆசி கூற மனம் இருக்கிறதம்மா! ஆனால் தகுதி இல்லையே?” என்று இளங்குமரனின் பக்கமாகத் திரும்பிக் கைகளைக் கூப்பினார் அவர். அந்த நிலையில் அவரைக் கண்டு இளங்குமரனுக்கும் அநுதாபம் பெருகியது.

பெருமாளிகைத் தோட்டத்திலிருந்து முன் இரவிலேயே மலர்ந்து விட்ட பூக்களின் மணம் பரவத் தொடங்கியிருந்தது. சுரமஞ்சரியைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு அங்கி ருந்து வெளியேறுவதற்காக மெல்ல நடந்தான் இளங்குமரன். இருவரும் மாளிகையின் கடைசி வாயிலையும் கடந்து இருள் உறங்கும் பட்டினப்பாக்கத்துத் தெருவில் இறங்கிச் சென்றபோது, “சுரமஞ்சரி! இன்று மாலை இந்த மாளிகைக்குள் நுழையும்போது நான் துறவியாக நுழைந்தேன். இப்போது ஒரு பெண்ணின் கையையும் நினைவையும் சுமந்து கொண்டு மிகப் பெரிய வாழ்க்கைச் சுமையோடு திரும்புகிறேன்” என்று அவளுடைய காதருகே சிரித்துக் கொண்டே சொன்னான் இளங்குமரன். அவன் அந்த வார்த்தைகளைச் சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தாலும், அவளுக்கு அவற்றைக் கேட்டு வேதனையாகத்தான் இருந்தது. அவன் தன்னுடைய தோல்வியையே திரும்பத் திரும்ப எண்ணி உருகுவது அவளுக்குப் புரிந்தது.

“தோற்றுப் போனதற்காக வருந்திக்கொண்டே பேசுவது போல் அடிக்கடி பேசுகிறீர்கள் நீங்கள். இந்த விதமான பேச்சு என்னைப் புண்படுத்துகிறது” என்று தன் மனக் குறையைச் சொன்னாள் அவள்.

அந்தச் சொற்கள் இனியும் அப்படிப் பேசவிடாமல் அவன் நாவைக் கட்டுப்படுத்தி அடக்கி விட்டன, மெளன மாக மேலே நடந்தான் அவன். விடுபட்ட பறவைகள் போல அமைதியான அந்த இரவு நேரத்தில் பூம்புகாரின் வீதிகளில் சுற்றினார்கள் அவர்கள்.

நீண்ட நேரத்துக்குப் பின் நடந்து நடந்து களைத்த நிலையில் பெளத்த மடத்துக்கு முன்னாலிருந்த ஒரு மகிழ மரத்தடியில் சுரமஞ்சரியோடு அமர்ந்தான் இளங்குமரன். அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுரமஞ்சரி அங்கே பசிக் களைப்பைக் கண்டாள்.

“உங்களுடைய முகத்தில் பசிச் சோர்வு தெரிகிறது! நீங்கள் பல வேளைகளாக உண்ணவில்லை போலிருக்கிறது?”

“பல வேளைகளாக அல்ல; பல நாட்களாகவே உண்ணவில்லை. இப்போது தான் என் பசி எனக்குத் தெரிகிறது. நீயும் என்னைப்போலவே பசிச் சோர்வோடு தான் தெரிகிறாய்!”

“நம்முடைய இல்லறம் இருவர் வயிற்றிலும் இப்படிப் பசியோடு தொடங்குகிறது. ஆனால் என்னை விட அதிகம் பசித்துப் போயிருக்கிறீர்கள். நீங்கள்” என்று சொல்லிச் சிரித்தாள் சுரமஞ்சரி. அடுத்த கணம் அவளுடைய சிரிப்பை அவன் சொற்கள் அடக்கின. அவளை அந்தச் சொற்களால் பரிசோதனை செய்தான் அவன்.

“எந்தவிதமான செல்வங்களும் இல்லாத ஓர் ஏழையைக் காதலிப்பதால் எவ்வளவு வேதனைகள் பார்த்தாயா? என் பசிக்கும் சோறில்லை. உன் பசிக்கும் சோறில்லை. இருவர் பசிக்கும் இருவர் துயரத்துக்கும் இந்த மரத்தடி மண்தான் புகலிடம் போலிருக்கிறது!”

“ஏன் இல்லை? கணவனுடைய வயிறு நிரம்புவதை விடப் பெரிய திருப்தி மனைவிக்குக் கிடையாது. இன்று நீங்கள் எனக்குக் கிடைத்த புண்ணிய தினம். இதை நான் கொண்டாட வேண்டும். உங்களுக்கு என் கையால் நான் சோறு படைக்க வேண்டும்! பிச்சை எடுத்து வந்தாவது அதைச் செய்வேன்” என்று கூறிக்கொண்டே அவள் ஆவேசத்தோடு அங்கிருந்து எழுந்து சென்றாள்.

சுரமஞ்சரி பெளத்த மடத்துக்கு அருகே யாத்திரிகர்களுக்குச் சோறிடுவதற்காக இருந்த அறக்கோட்டம் ஒன்றில் போய் ஒரு பெரிய வாழை இலை நிறையச் சோறு வாங்கி வந்து இளங்குமரனுக்கு முன்னால் வைத்தாள். தன் கையால் ஒவ்வொரு பிடியாக எடுத்து அந்தச் சோற்றை அவன் கையில் இட்டபோது அவள் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இலையிலிருந்த மீதத்தைத் திரட்டிக் கடைசிப் பிடியை அவள் அவன் கையில் வைத்தபோது அந்தச் சோற்றை அப்படியே கைமறித்து அவள் வாய்க்கு இடுவதற்குக் கொண்டு போனான் இளங்குமரன், சுரமஞ்சரி அவன் கையால் அதை உண்பதற்கு நாணித் தலையைக் குனிந்து கொண்டாள். தன்னிடம் அன்பு செய்வதை விடப் பெருமைப்படத் தக்க செல்வங்கள், உறவுகள், பாசங்கள், வேறெவையுமே இல்லை என்பதை நிரூபித்து விட்ட அந்தப் பேரழகுப் பேதையை மலர்ந்த விழிகளால் நோக்கி அவளை ஏற்றுக் கொண்ட நாயகன் என்ற உரிமையோடு இளங்குமரன் முதல் முறையாகப் பார்த்தான். அந்தப் பார்வையே அப்போது அவளை மணப்பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது.

“சுரமஞ்சரி! என்னுடைய சோதனைகளில் எல்லாம் நீ வெற்றி பெற்றுவிட்டாய். எல்லாப் பற்றுக்களையும் இழந்துவிட்டு ஏதாவது ஒரு பற்றில் மட்டும் இலயிப்பவனைத் துறவி என்கிறார்கள். நீயும் அப்படி உன் செல்வங்களையும் உறவுகளையும் இழந்து விட்டு என்னில் கலந்து என்னோடு மட்டும் இலயித்து விட்டாய். உன்னுடைய இந்தத் தவத்தை நான் ஏற்றுக்கொண்டு அருள் செய்துதான் ஆக வேண்டும்” என்று இந்த வார்த்தைகளைச் சொல்லியபோது அவனுடைய மனம் நிறையப் பரிவு பெருகியிருந்தது. அந்தப் பரிவைச் சுரமஞ்சரிக்கும் அளிக்க அவன் மனம் இணங்கிற்று. அந்த எல்லையற்ற பரிவு வெள்ளத்தில் அவள் மூழ்கவும் இடம் கொடுத்தான் அவன். இரண்டாம் முறையாக அவன் கையிலிருந்த சோற்றை அவள் உண்ணும்போது சிறு குழந்தைபோல் அவன் தோளில் சாய்ந்திருந்தாள்.

“இந்த ஒருகை சோற்றில் என்னுடைய நெடுங் காலத்துப் பசி தணிந்துவிட்டது அன்பரே! என்னிடமிருந்து என் கையால் எதையுமே ஏற்றுக் கொள்ள மறுத்த நீங்கள் இன்று ஏற்றுக் கொண்டீர்கள். கொடுக்க வேண்டும் என்ற மெய்யான பரிவோடு எனக்கும் உங்கள் கையால் உண்ணக் கொடுத்தீர்கள். இந்த விநாடியோடு செத்துப் போய்விட்டாலும் இனி எனக்குக் கவலையில்லை. இந்த ஒரே ஒரு விநாடியில் ஆயிரம் ஊழிகள் உங்களோடு வாழ்ந்து அநுபவங்களைப் பெற்றுவிட்டாற் போன்ற திருப்தி எனக்குக் கிடைத்துவிட்டது” என்று மகிழ்ச்சி மிகுதியினால் சுரமஞ்சரியின் சொற்கள் முற்றாத மழலைச் சொற்களாய்க் குழைந்து ஒலித்தன.

“பேதைப் பெண்ணே! இப்போதுதான் நீ வாழத் தொடங்கியிருக்கிறாய். அதற்குள் ஏன் சாவதற்கு ஆசைப் படுகிறாய்?” என்று கேட்டுக்கொண்டே இளங்குமரன் தன்மேல் சாய்ந்திருந்த அவளுடைய குழற் கற்றையைப் பரிவோடு கோதினான். மேலே மரத்தின் கிளையிலிருந்து குயில் ஒன்று கூவியது. காற்றில் ஆடியசைந்த மகிழ மரத்தின் கிளைகள் அவர்கள் மேல் பூக்களைச் சிந்தின.

“இந்தக் குயில் ஏன் இப்படிக் கூவுகிறது சுரமஞ்சரி?”

“விடிவதற்காக...”

“யாருக்கு விடிவதற்காக?”

“ஒரு பேதைப் பெண்ணுடைய வாழ்க்கையில் விடிந்து ஒளி கிடைப்பதற்காகத்தான்!”

இந்தக் குறும்பு நிறைந்த பதில் வார்த்தைகளைக் கூறிவிட்டுத் தன் சிரிப்பைத் தானே அடக்கிக்கொள்ள முடியாமல் சுரமஞ்சரி சிரித்தபோது அவனுடைய சிரிப்பும் பிறந்து அதில் கலந்து எதிரொலித்து இணைந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5.13. முடியாத கோலம்

விடிகின்ற நேரத்துக்கே உரிய சில்லென்ற குளிர் காற்று உடம்பில் பட்டு இளங்குமரன் கண்விழித்தான். மரத்தடியில் பொற்காசுகள் சிதறினாற் போல் மகிழம் பூக்கள் உதிர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தன. விடியப் போகிறது, விடியப் போகிறது என்று! இந்த உலகத்துக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி மங்கல வாழ்த்தெடுப்பது போலப் பறவைகள் காலைக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. கதிரவனின் முதற்கதிர்கள் மண்ணில் படுவதற்குள்ளேயே நீராடித் தவ ஒழுக்கங்களை முடித்து விடும் ஆவலோடு காவிரிக்குச் செல்லத் தொடங்கியிருந்த அந்த நகரத்து மறையவர்களின் மந்திர ஒலிகளும், பெளத்தர்களின் அற முழக்கமும் அங்கங்கே பூம்புகாரின் வீதிகளிலிருந்து ஒலிக்கத் தொடங்கியிருந்தன. இன்னும் இருள் புலரவில்லை. அறிந்தும் அறிய முடியாதபடி தெரிந்தும் தெரிய முடியாதபடி பேதை இருட்டு என்பார்களே அப்படி எங்கும் ஓர் இருட்டு சூழ்ந்திருந்தது. வழக்கம்போல் இந்த வேளையில் இளங்குமரனுக்குக் கண்கள் விழித்துக் கொண்டன. எழுந்திருந்து நீராடப் போவதற்கு ஆசையா யிருந்தது. ஆனால் எழுந்திருப்பதற்கும் முடியவில்லை.

தாயோடு ஒன்றிக் கொண்டு உறங்கும் சிறு குழந்தை போல் சுரமஞ்சரி அவனுடைய வலது தோளைத் தன் தலைக்கு அணையாகக் கொண்டு குளிருக்கு ஒடுங்கினாற் போல் ஆழ்ந்து கண்ணயர்ந்து கொண்டிருந்தாள். ஏழு உலகங்களையும் வென்று ஆளும் இணையற்ற வெற்றி போல் கவலையில்லாமல் உறங்கும் அந்தப் பேதையைப் பார்த்தபோது அவளுடைய உறக்கத்தைக் கலைக்கும் துணிவை இழந்து அப்படியே அசையாமல் இருந்தான் இளங்குமரன். அவளுடைய எழில் நிறைந்த உடல் அவன் தோளில் சரிந்த மல்லிகை மாலையாய் மணந்து கொண்டிருந்தது. சந்திர பிம்பமாய்த் தெரிந்த அவள் முகம் அந்த உறக்கத்திலும் ஏதோ நல்ல கனவு காண்பது போலச் சிரிப்பைக் காண்பித்துக் கொண்டிருந்தது. மனத்திலும், கண்களிலும் அவளுக்காகவே நிறைந்த பரிவோடு தனக்காக எல்லாச் சுகங்களையும் இழந்துவிட்டு எல்லாச் செல்வங்களையும் தோற்றுவிட்டு இப்படி இந்த மரத்தடியில் வந்து வெறுந்தரையில் உறங்கும் அந்தப் பேதையைப் பார்த்துக் கொண்டே வியந்தான் இளங்குமரன். அந்தப் பொன்னுடலில் வைகறைக் குளிர் படாமல் தன்னுடைய மேலாடையை எடுத்து மெல்லப் போர்த்தினான். ‘விரும்பியதை விரும்பியபடியே அடைவதைவிடப் பெரிய வெற்றி எதுவும் பேதையர்களுடைய வாழ்வில் இருக்க முடியாது’ என்று முதல் நாள் அவளைக் கடுமையாக வெறுத்துப் புறக்கணிப்போடு கூறியிருந்த தானே இப்போது இப்படி அவளைக் குழந்தை போல் பேணிப் போற்றி உறங்கச் செய்வதையும், அவளுடைய உறக்கம் கலையலாகாதே என்று கவலைப்படுவதையும் எண்ணியபோது அவன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். அந்தத் தோல்வியை உணர்ந்த போது அவனுக்கு வெட்கமாக இருந்தது. அதே சமயத்தில் சுகமாகவும் இருந்தது. பொழுது புலர்ந்தும் புலராமலும் இருந்த அந்த நேரத்தைப் போலவே அவன் மனமும் குளிர்ந்து மணந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு காலைப்போது அவன் வாழ்க்கையில் இதுவரை விடிந்ததில்லை.

‘என்னை அடைவதற்காக இவள் செய்த தவம் பெரியது! என்னைப் பெறுவதற்காக இவள் இழந்த சுகங் களும் செய்த தியாகமும் இணையற்றவை’ என்று தனக்குள் தானே சொல்லிக் கொண்டவனாகச் செந்தாமரைப் பூவைப்போல் தன் மார்பின்மேல் படர்ந்து பற்றிக் கொண் டிருந்த அவள் கையை மெல்ல எடுத்து இளங்குமரன் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். அந்தக் கையின் மென்மையும், தண்மையும், நளினமுமான நீண்ட விரல்களும், பவழமல்லிகை மணப்பது போன்ற மயக்கமும் ஒருகணம் அவனுடைய நினைவிலிருந்து விலகின. அவனுள் ஓடும். இரத்தம் தன் குலப் பகைவரையும் அவர் கொடுமைகளையும் நினைவூட்டிற்று. உயர்ந்த பாவனைகளால் அந்தத் தீய நினைவை அடக்கிக் கொண்டு பரிவுடனே மறுபடி அவளது கையை எடுத்து அவன் தன் கண்களில் ஒற்றிக் கொண்டபோது அவளே விழித்துக் கொண்டுவிட்டாள். அவனுக்கு வெட்கமாகி விட்டது. வெட்கத்தோடு அவள் கையை மெல்ல விடுவித்தான் அவன். அவளோ அவன் விடுவித்த கையை அவனிடமிருந்து மீட்டுக் கொள்ளவே முயலாதவளாய் அந்த நிலையில் தான் விழிப்பதைவிட உறங்குவதே நல்லதென்று திருட்டுத் தீர்மானமும் செய்து கொண்டவளாகப் பொய் உறக்கம் உறங்கினாள். அதைப் புரிந்துகொண்டு அவன் புன்னகை பூத்தான்.

அவளுக்கு அந்த விளையாட்டைத் தொடரும் ஆசையிருந்தும் தொடர முடியாத சூழ்நிலையில் அடக்க முடியாத சிரிப்போடு எழுந்து உட்கார்ந்தாள். “இந்தக் கை எந்தப் பிறவியிலோ சக்தி வாய்ந்த தேவதைகளின் கோவில்களுக்குப் பூச்சுமந்து பூச்சுமந்து புண்ணியம் சேர்த்திருக்க வேண்டும். அதன் பயன் சற்றுமுன் இதற்குக் கிடைத்துவிட்டது. இது பாக்கியம் செய்த கை” என்று சிவப்பு நிறம் படரும் கிழக்கு வானத்தைப் பார்த்துக் கொண்டே அவனுக்குச் சொன்னாள் சுரமஞ்சரி. அவன் தொட்டு ஆண்ட நினைவின் சுகம் அவளுடைய கையிலும் மனத்திலும் நிறைந்திருப்பதை அவளுடைய வார்த்தைகள் பரிபூரணமாய்த் தொனித்துக் கொண்டு பேசின. முறுவல் கிளரும் முகத்தினனாய்த் தன் கைகள் நிறையக் கீழே உதிர்ந்திருந்த மகிழம் பூக்களை அள்ளிக் கொண்டு அவள் பக்கம் திரும்பிப் பாக்கியம் செய்த அந்தக் கையை மலர்த்தி அதில் நிறைத்தான் இளங்குமரன்.

இப்போதும் அவனுடைய கண்களின் பார்வையே அவளைப் புதுமணப் பெண்ணாக அலங்கரித்தது.

“புறப்படு! நீராடப் போகலாம். பொழுது நன்றாக விடிவதற்கு முன்பு காவிரியில் போய் நீராடிவிட்டு வர வேண்டும்” என்று எழுந்து நடந்தான் அவன். அவள் மெளனமாய் அவனைப் பின்தொடர்ந்தாள். எல்லாரும் எழுவதற்கு முன்பு நகரமே அந்தரங்கமாக எழுந்து நீராடி விட்டு இன்னும் ஈரம் புலராமல் இருப்பது போல் வீதிகளில் எங்கும் மென்குளிர் பரவியிருந்த அந்த வேளையில் நடந்து போவதே சுகமாக இருந்தது.

புறவீதிக்கு அருகே இலவந்திகைச் சோலையின் மதிலை ஒட்டியிருக்கும் காவிரிப் படித்துறையில் போய் நீராடலாம் என்ற கருத்துடன் சுரமஞ்சரியை அழைத்துச் சென்றான் இளங்குமரன். புறவீதியில் நுழைந்ததும் பக்கத்திலிருந்த மலர் வனங்களின் மணமும் சேர்ந்து அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த வழி நடைக்கு இங்கிதமான சூழலைப் படைத்தது.

“இப்படி ஒரு காலைப் போது என் வாழ்வில் இதுவரை விடிந்ததில்லை” என்று அவன் கண் விழித்ததும் தானாகவே எதை நினைத்தானோ அதை அந்த வீதியில் புகுந்தபோது சுரமஞ்சரியும் அவனிடம் கூறினாள். இதே போலப் பணி புலராத காலை வேளை ஒன்றில் இந்தக் காவிய நாயகனை அடைவதற்காகத் தான் விரத மிருந்து இருகாமத்திணையேரியில் நீராடிக் காமன் கோட்டத்தை வலம் வந்த நிகழ்ச்சியை இன்று நினைவு கூர்ந்தாள் அவள். அந்த நினைவு இன்று தன் வாழ்வில் கைகூடிவிட்டதை உணர்ந்த பெருமையோடு புதிய கிளர்ச்சி பெற்றவளாகப் புறவீதியில் புகுந்தபோது அவள் அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு அவன் அருகில் இன்னும் நெருக்கமாக நடக்கலானாள். அவளுடைய கையை அவனும் அப்போது விலக்கிவிட்டுத் தனியே நடக்க முடியவில்லை.

மறக்குடி மக்கள் மிகுந்து வசிக்கும் புறவீதியில் அந்த வைகறை வேளையில் மனைப் பெண்கள் வாயில்கள் தோறும் தண்ணிர் தெளித்துக் கோலமிடும் காட்சிகள் விதியில் இருசிறகிலும் நிறைந்து தோன்றின.

காவிரியில் நீராடுவதற்காகச் சுரமஞ்சரியோடு கை கோத்து நடந்து சென்று கொண்டிருந்த இளங்குமரன் அந்த வீதியின் நடுப்பகுதியில் ஏதோ ஒரு வீட்டருகே வந்ததும் மேலே நடக்கத் தோன்றாமல் சோர்ந்தாற் போலக் கால்கள் தயங்கிட நடுவழியில் நின்றான்.

“ஏன் நின்றுவிட்டீர்கள்? நடக்கத் தளர்ச்சியாக இருக்கிறதா?” என்று சுரமஞ்சரி கனிந்த குரலில் அவனைக் கேட்டாள்.

“தளர்ச்சிதான்! இந்த இடத்தில் தளர்ந்து நிற்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தோன்றவில்லை” என்று அவனிடமிருந்து அவளுக்குப் பதில் வந்தது.

இவர்களுடைய அந்த உரையாடலில் கவரப்பட்டவளாக வீதியில் அந்த வீட்டு வாயிலில் உற்சாகமாகப் பாடியபடி கோலமிட்டுக் கொண்டிருந்த பெண் ஒருத்தி நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் அப்படியே திகைத்து நின்றாள். அவளுடைய தனிமையின் உல்லாச வெளியீடாகிய பாட்டு இதழ்களில் அப்படியே அடங்கிப் போய் நின்றது.

“முல்லை! நீ நலமாயிருக்கிறாயா?” என்று அன்புடனே அவளை நோக்கிக் கேட்டான் இளங்குமரன். கோலமிட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் யார் என்று இப்போது சுரமஞ்சரிக்கும் புரிந்தது. தான் இட்டுக் கொண்டிருந்த கோலத்தை அரைகுரையாக நிறுத்திவிட்டு ஆவலோடு இளங்குமரனுக்கு அருகே வந்த அந்தப் பெண் அவன் தன்னை நலம் விசாரித்ததற்கு மறுமொழி கூறாமல், அதிக அக்கறையோடு அவனை வேறொரு கேள்வி கேட்டாள்:

“உங்கள் பக்கத்தில் நிற்பது யார்?”

“என்னுடைய வாழ்க்கைத் துணைவி சுரமஞ்சரி.”

இளங்குமரனுடைய நாவிலிருந்து மிகத் தெளிவாக ஒலித்த இந்த வார்த்தைகளைக் கேட்டு முல்லையின் கையில் இருந்த கோலப் பேழை கீழே நழுவி விழுந்து உடைந்தது. இளங்குமரன் இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்தான்.

“இதென்ன காரியம் செய்தாய் முல்லை? கோலப் பேழையைக் கீழே போட்டு உடைத்துவிட்டாயே?”

“ஆம், உடைத்துத்தான் விட்டேன்.”

“அரைகுறையாக நிறுத்தியிருக்கிற இந்தக் கோலத்தை இனி எப்படி முடிப்பாய்...”

“...”

“உனக்கு எப்போதுமே இந்தப் பரபரப்பும் பதற்றமும் கூடாது முல்லை.”

“...”

பதில் பேசாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு சிலையாக நின்ற முல்லையின் கண்களில் நீர் பெருகி வருவதை இளங்குமரன் கண்டான். இப்படி நடக்கும் என்றுதான் அவன் எதிர்பார்த்தான். அவன் எதிர்பார்த்த படியே நடந்தது. ஏதோ கோபம் நிறைந்த பேச்சைப் பேசுவதற்குத் துடிப்பது போல் முல்லையின் செவ்விதழ்கள் துடித்தன. எதிரே நிற்கிற அவளுடைய முகம் உணர்ச்சிகளின் மயானமாகி அங்கே எந்த ஆசைகளோ எரிந்து அழிவதையும் அவன் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு கணம் பின்னால் திரும்பிப் பக்கத்தில் நின்ற சுரமஞ்சரியின் மேல் அவன் தன் பார்வையைப் படரவிட்டான். அவள் பயந்தாற்போல் அவன் முதுகுக்குப்பின் ஒண்டி நின்று கொள்ள முயன்று கொண்டிருந்தாள். மறுபடி அவன் முன் பக்கமாக முல்லையைத் திரும்பிப் பார்த்தபோது,

“ஒரு விநாடி நில்லுங்கள். இதோ வருகிறேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு நடைப்பிணம் போலத் தளர்ந்து வீட்டின் உள்ளே சென்றாள் முல்லை. அவள் வீட்டுக்குள்ளே சென்றிருந்த நேரத்தில் சுரமஞ்சரி மெல்லிய குரலில் அவன் காதருகே ஒரு கேள்வி கேட்டாள்:

“இது என்ன வேதனை? இந்தப் பெண் ஏன் இப்படிக் கண் கலங்குகிறாள்?”

“இதன் காரணம் உனக்குத் தெரியத்தான் வேண்டுமோ?”

“அப்படி ஒன்றுமில்லை. கேட்கத் தோன்றியது கேட்டேன்.”

“நீ எதைப் பெற்று மகிழ்ந்து கொண்டிருக்கிறாயோ அதைப் பெற முடியாமல் அழுகிறாள் அவள்.”

அவன் சுரமஞ்சரிக்கு இப்படிப் பதில் கூறிக் கொண்டிருக்கும்போதே முல்லை உள்ளிருந்து திரும்பி வந்துவிட்டாள். ஒன்றும் பேசாமல் புயல் புறப்பட்டு வருவது போல் நடந்து வந்து, தனக்கு முன்னால் அவள் கைநீட்டித் தன்னிடம் அளித்த பொருள்களை வாங்கிக் கொண்டு அவைகளை என்னவென்று பார்த்தான் இளங்குமரன்.

திருநாங்கூரில் குருகுலவாசம் செய்த காலத்தில் அவளுடைய பிறந்த நாள் மங்கலத்துக்குப் பரிசாக அவன் அளித்த பாடல் உள்ள ஏட்டையும் அப்போது அவன் கொடுத்திருந்த நாகலிங்கப் பூவையும் இப்போது அவனிடமே திருப்பி அளித்திருந்தாள் அவள். அந்தப் பூவின் இதழ்கள் வாடிச் சருகாகியிருந்தன.

“முல்லை! நீ என்னுடைய நன்றிக்கு உரியவள். சிறு வயதிலிருந்தே உன் கைகளால் நான் பல நாள் உணவு பெற்றிருக்கிறேன். என்னுடைய உடம்பில் நான் புண்பட்டு வந்த போதெல்லாம் நீ என் காயங்களை மருந்திட்டு ஆற்றி யிருக்கிறாய். அப்படியெல்லாம் நன்றிக் கடன் பட்டிருந்தும் என்னுடைய இந்த உடம்பை நான் உனக்குக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. என் உடம்பையும் மனத்தையும் நான் இந்தப் பெண் சுரமஞ்சரிக்குத் தோற்றுப் போய் இவளுக்காகத் தியாகம் செய்துவிட்டேன். யாரை அதிகமாக வெறுக்கிறோமோ அவர்கள் மேலும் கூட அன்பு செலுத்தத் துணிந்துவிட வேண்டுமென்றுதான் இந்தப் புதிய வாழ்க்கைக்கு நான் என்னைத் தியாகம் செய்தேன். அதே போல நீயும் இப்போது ஒரு தியாகம் செய்ய வேண்டும். நான் என்னால் அதிகமாக வெறுக்கப் பெற்ற இவளுக்கே என்னை விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்தது போல நீ உன்னால் அதிகமாக விரும்பப்பட்ட என்னை உன் விருப்பங்களிலிருந்தும், ஆசைகளிலிருந்தும், கனவுகளிலிருந்தும் விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்து விட வேண்டும். இது உன்னால் முடியும். என்னுடைய நன்றியின் நினைவாக இந்தப் பாடலும், இந்தப் பழம் பூவும் உன்னிடம் இருப்பதைக்கூட நீ விரும்பவில்லையா?”

“நன்றி என்ற வார்த்தைக்கு இனிமேல் அர்த்தமில்லை. என்னை ஏமாற்றிவிட்டு என்னுடைய அழகைப் புகழ்கிற நன்றி எனக்கு வேண்டாம். இந்த ஏட்டிலிருக்கும் பாடலில் அப்படிப்பட்ட நன்றிதான் இருக்கிறது. நன்றியை எதிர் பார்க்கிற இடத்திலிருந்தும் கூட ஏமாற்றங்கள் மட்டுமே கிடைக்கிற உலகம் இது. மெய்யான நன்றி இந்த உலகத்திலேயே இல்லை. ஏட்டிலும் எழுத்திலும் புகழ்கிற இந்தப் போலி நன்றிக்காகவா இத்தனை காலம் நான் ஏங்கிக் கிடந்தேன்? எதை எதையெல்லாம் ஆசைப்பட்டுத் தவித் தேனோ அதையெல்லாம் கூடத் தியாகம் செய்யச் சொல்லுகிறீர்களே? இந்த நன்றியைத் தியாகம் செய்வதுதானா எனக்குப் பெரிய காரியம்?”

“உன்னைப் போன்றவர்களின் தியாகம்தான் இந்த உலகத்துக்கு அழகிய சரித்திரங்களைக் கொடுக்கிறது முல்லை! கணவன் மனைவி என்ற உறவுகளை அடைவதும் இழப்பதும் நம்முடைய உடம்பின் வாழ்க்கைக்கு அப்பால் பொய்யாய் மறைந்து போகிற சாதாரண அநுபவங்கள். குணங்கள் தான் என்றும் நிலைத்து வாழப் போகின்றவை. குணங்களால் வரும் புகழ்தான். காவியங்களில் வாழும். காலமெல்லாம் வாழும். அந்த நிறை வாழ்வுக்குத்தான் நான் ஆசைப்படுகிறேன்.”

“என்னைப் போன்ற பேதைப் பெண்ணுக்கு என்றும் எதனாலும் தணியாத குறைவாழ்வை அளித்துவிட்டு நீங்கள் மட்டும் நிறைவாழ்வு வாழ ஆசைப்படுகிறீர்களே?” என்று அவனை நோக்கிக் கூறிக் கொண்டே வந்தபோது முல்லையின் குரலில் அழுகை ஊடுருவிப் பேச்சைத் தடைப்படுத்திற்று. கண்களில் இடையறாத நீர்ப்பெருக்கு உடைந்து பெருக, அவள் தனக்குமுன் தவித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து இளங்குமரன் திகைத்தான்.

அழுகையால் உடைந்து தளரும் குரலில் அவளே மேலும் அவனை நோக்கிக் கூறினாள்:

“நீங்கள் என்னுடைய வாழ்வில் இறுதிவரை எனக்குத் துணையாக வர முடியாமல் இந்தப் பெரு மாளிகைப் பெண் உங்களை நடுவழியிலேயே என்னிடமிருந்து பிரித்துக் கொள்வாள் என்பது அன்றே எனக்குத் தெரியும். முதன் முதலாக இந்திர விழாவின் போது பூத சதுக்கத்தில் படையலிடுவதற்காக என்னுடன் எனக்குத் துணையாக வந்து முழு வழிக்கு துணை வராமல் பாதி வழியிலேயே என்னை மறந்துவிட்டு இவளோடு இவள் பல்லக்கில் ஏறிப் போனவர்தானே நீங்கள்?”

“உன்னுடைய துக்கத்தில் சிறு குழந்தைபோல் நீ எதை எதையோ இணைத்துப் பேசி என்மேல் குற்றம் சுமத்துகிறாய். உன் வேதனைகளை நான் உணர்கிறேன். ஆனால் உன்னை எப்படி ஆறுதல் கொள்ளச் செய்வதென்றுதான் எனக்குத் தெரியவில்லை.”

“எனக்கு யாருடைய ஆறுதலும் வேண்டாம். நான் அழுது அழுது சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று கூறிவிட்டுக் கிளர்ச்சியற்ற தளர் நடையாய் நடந்து அவள் தன் வீட்டுக்குள் போவதற்குத் திரும்பியபோது,

“இந்தக் கோலத்தை முடிக்காமல் இப்படி அரை குறையாக விட்டுப் போகிறாயே முல்லை?” என்று இளங்குமரன் அவளைக் கேட்டான்.

“இந்தக் கோலத்துக்குத் தொடக்கம்தான் உண்டு. இறுதி தெரியவில்லை. முடிவும் இல்லை. நான் இதை முடிக்கப் போவதுமில்லை” என்று போகிற போக்கில் அழுகைக்கிடையே அவள் கூறிவிட்டுப் போன மறுமொழி அவனுடைய நெஞ்சின் ஆழத்தில் போய்த் தைத்துப் புண்படுத்தியது.

அவளுடைய அந்த மறுமொழியில் அவனுடைய வாய்ச் சொற்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இருந்தது. மனம் கேட்ட கேள்விக்கும் பதில் இருந்தது. அந்தச் சொற்களின் பொருள் எல்லை எவ்வளவுக்கு நீள்கிறது என்று புரியாமல் தவித்து நின்றான் அவன். சுரமஞ்சரியும் அவனுக்குப் பின்னால் மருண்டு போய் நின்றாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5.14. வழிகள் பிரிகின்றன

தான் இட்ட கோலத்தைத் தானே மிதித்துக் கொண்டு வீட்டுக்குள்ளே திரும்பிப் போய்விட்டாள் முல்லை. அவளுடைய சொல்லம்புகளால் தாக்கப் பெற்றுத் தலை தாழ்ந்து போய்த் தன்மனமும் உணர்வுகளும் அவளுக்குப் பட்ட நன்றிக் கடனைத் தீர்க்க வழியின்றி முடிவு தெரியாமல் மனத்தின் உள்ளேயே அழுது புலம்பிடத் தயங்கி நின்றான் இளங்குமரன். அவனுடைய கைகளில் அவள் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போயிருந்த அந்தப் பழைய ஏடும் காய்ந்த பூவும் மலையத்தனை சுமையாய் மாறிக் கொண்டு கனத்தன.

‘நன்றிச்சுமை இவ்வளவு கனமானதா?’ என்று எண்ணியபடியே கையிலிருந்த பொருள்களையும் தரையிலிருந்த முடிவடையாத கோலத்தையும் பார்த்துக் கொண்டே நின்றான் அவன். தனக்குள்ளே மட்டும் கேட்கிற குரலில் அவன் மனம் பெரிதாய் ஓலமிட்டு அழுதது.

தாழ்ந்துபோன தலை நிமிராமல் முடிவற்ற பல கணங்களாக அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் கோலத்தை மிதித்துக்கொண்டு இன்னும் நான்கு கால்கள் உள்ளேயிருந்து முன்னால் நடந்து வந்தன. வருகிறவர்கள் யார் என்று அறிவதற்காக அவன் எதிரே நிமிர்ந்து பார்த்தான். உள்ளேயிருந்து வளநாடுடையாரும், அவர் மகன் கதக்கண்ணனும் வந்து நின்று கொண்டிருந்தார்கள்.

அந்தக் கிழவருடைய கண்கள் அவனை நோக்கி நெருப்புக் கோளங்களாகக் கனன்றன. மீசை துடிதுடித்தது. இந்த முதுமையில் இவ்வளவு கோபத்தையும் கொதிப்பையும் தாங்கிக்கொள்ள எனக்கு ஆற்றலில்லை என்பது போல அவருடைய உடல் நடுங்கியது. இந்த நிலையில் அந்தக் கிழட்டுச் சிங்கத்தைப் பார்ப்பதற்கே அவனுக்குப் பயமாயிருந்தது. தன் நாவிலிருந்த தைரியத்தையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு பேசுவது போல அவருடைய கண்களை நேருக்கு நேர் பாராமல் மூன்றே மூன்று வார்த்தைகளை ஒவ்வொன்றாக எண்ணி அவரிடம் பேசினான் இளங்குமரன்:

“நீங்கள் என்னை மன்னித்துவிட வேண்டும்.”

“உன்னை நான் ஒருக்காலும் மன்னிக்க முடியாது. நீ பெரிய ஞானியாயிருக்கலாம். திருநாங்கூரில் பல ஆண்டுகள் புற உலக நினைவே இன்றிக் கல்வி கற்றிருக்கலாம். ஆனால் உனக்கு எல்லாவற்றையும் கற்பித்த உன்னுடைய குருவினிடம் நீ ஒன்றுமட்டும் கற்க மறந்து விட்டாய். அதற்குப் பெயர் நன்றி.”

“அதைக் கற்க இன்னொரு பிறவி எடுக்கிறேன் ஐயா! இந்தப் பிறவியில் அது முடியாமல்தான் போய்விட்டது. நினைத்துப் பார்த்தால் நான் உங்கள் குடும்பத்துக்கும் உங்களுக்கும் நிறைய நன்றிக் கடன் பட்டிருப்பது எனக்கே தெரிகிறது. ஆனால் அந்தக் கடனை எந்த விதத்தில் நான் தீர்க்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே விதத்தில் தீர்ப்பதற்கு இந்தப் பிறவியில் நான் இயலாதவனாகி விட்டேன். இந்தப் பிறவியில் என்னுடைய அனுபவங்கள் எல்லாம் சத்திய சோதனைகளாகி விட்டன. சத்திய சோதனைகளில் இறங்குகிறவர்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களைக் கூட ஏமாறச் செய்து விடும் படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க முடியாமல் அடைந்துதான் ஆக வேண்டியிருக்கிறது. என்னுடைய குலப்பகைவரான எதிரியை நான் பழி வாங்கும் நோக்குடன் படைதிரட்டிப் புறப்பட மறுத்தபோது என் மாமன் மகனான குலபதிக்கு அது பெரிய ஏமாற்றமா இருந்தது. என் எதிரியை நான் சந்தித்து நியாயம் கேட்கிற முறையில் கொடுமையும் வன்மையும் வேண்டும் என்று எனக்குத் துணையாய்ப் பின் தொடர்ந்த நீலநாகரை நான் மறுத்துத் திருப்பி அனுப்பிய போது அவருக்கு ஏமாற்றமா இருந்தது, உங்கள் மகள் முல்லையை நான் மணம் புரிந்து கொள்ளாமற் போனது உங்களுக்கு ஏமாற்றமாயிருக்கிறது. சத்தியத்தை ஏமாற்றக் கூடாதென்று நாம் ஏதோ செய்தால் அதன் மறுபுறம் அந்தச் செய்கையால் ஏமாறிய மனிதர்கள் வந்து நிற்பதைக் காண்கிறோம். மனிதர்களுக்கு மட்டும் திருப்தியாக நடந்து கொண்டால் சத்தியத்தை ஏமாற்றியதாக முடிகிறது. சத்தியத்துக்குத் திருப்தியாக நடந்து கொண்டுவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால் அந்தச் சமயத்தில் அதே காரணத்தால் தாங்கள் ஏமாறியதாகச் சொல்லிக் கொண்டு மனிதர்கள் வந்து கண்கலங்கி நிற்கிறார்கள்.”

“உபதேசம் போதும்! இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளுவதற்கு நாங்கள் கற்றுத் துறை போகவில்லை. பொது மனிதர்களையும் பொதுவான மனித உறவுகளையும் தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. எங்களுடைய வாழ்க்கையிலே இரண்டே இரண்டு எல்லைகள்தான் உண்டு. ஒன்று வீரம், மற்றொன்று அன்பு. இந்தக் குடும்பத்தில் எவரும் இந்த விநாடி வரை வீரத்தில் ஏமாறியதில்லை. ஆனால் இன்று இந்தக் குடும்பத்துப் பெண்ணொருத்தி அன்பில் ஏமாறிவிட்டாள். வெற்றியைத் தவிர வேறு வளர்ச்சிகளைக் கண்டறியாத இந்த வீரக் குடியின் வாழ்க்கையில் இன்று என் மகள் காதலிலே தோற்றுப் போய் வீழ்ந்து விட்டாள். இன்று காலையில் உலகத்துக்கெல்லாம் பொழுது விடிந்தது. என் மகளுக்கு மட்டும் இருண்டு போய்விட்டது. உன்னுடைய இதயத்துக்கு உணரும் சக்தி இருந்தால் அறுபட்டு வீழ்ந்த பூங்கொடிபோல உள்ளே அவள் குமுறிக் குமுறி அழுது கொண்டிருப்பதை நீயும் உணர முடியும். ஆனால் நீ கல்நெஞ்சன். பகைவர்களுக்கு நல்லவனாகி உறவினர்களை ஏமாற்றும் வஞ்சகன்.

“நீ மணிபல்லவத்திலிருந்து திரும்பி வந்துவிட்ட செய்தியை நான் இங்கு வந்து கூறியவுடனே என் மகள் இன்று காலை இந்த வீட்டின் படிகளில் நீ ஏறி வருவாய் என்று ஆவலோடு எதிர்பார்த்து நேற்றிரவிலிருந்தே எப்போது விடியும் எப்போதும் விடியும் என்று விடிவதற்காகவே இரவெல்லாம் கண் விழித்துக் காத்திருந்து விடிந்ததும் வாயிலில் தண்ணிர் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் கோலம் இதோ இப்படி முடியாமல் முடிந்துவிட்டது.”

“...”

சிறிது நேரம் மேலே ஒன்றும் பேச வராத மெளனத் தவிப்புக்குப் பின் வளநாடுடையார் முகத்தைத் திருப்பிக் கொண்டு வெறுத்தாற் போல் உள்ளே போய்விட்டார். மீண்டும் அவன் முகத்தைப் பார்த்து அவனோடு பேசும் விருப்பமே இல்லாதவராகத் திரும்பிப் போவது போலிருந்தது அவர் நடை. அப்படிப் போவதற்கு முன் இளங்குமரன் தன் வாழ்க்கைத் துணைவியோடு அவரை வணங்க முற்பட்டதும் வீணாயிற்று. அந்த வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமலே அவர் விரைந்து உள்ளே போய்விட்டார்.

கதக்கண்ணன் மட்டும் தன்னுடைய அகன்ற பெரிய விழிகளிலே கோபம் கனல இளங்குமரனையே இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றான். அவனுடைய அந்தப் பார்வை இளங்குமரனைச் சுட்டெரித்தது. அவன் கூசி நின்றான். சிறிது நேரத்தில் தந்தையைப் போலவே, கதக்கண்ணனும் வெறுப்போடு உள்ளே திரும்பியபோது பின்புறமிருந்து பழைய நண்பனாகிய இளங்குமரனின் நெகிழ்ந்த குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது:

“கதக்கண்ணா! உன் தந்தையைப் போலவே நீயும் என்னை மன்னிக்க விரும்பவில்லையென்று தெரிகிறது. உன்னாலும் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. நீலநாகருடைய படைக் கோட்டத்தில் நீயும் நானும் ஒருசாலை மாணவர் களாக இருந்து பயின்ற நாட்களும், அப்போது தொடங்கிப் பழகிய நட்பும், உறவுகளும் மறந்து இப்போது இந்த ஒரே ஒரு கணத்தில் என்னை வெறுத்துப் பிரிகிற துணிவை உன்னால் எவ்வாறு அடைய முடிந்ததோ? இதைக் கண்டு நான் வியப்படைகிறேன். குடி வழி வந்த பரம்பரை வீரம் இப்படிக் கடுமையான துணிவையும் உனக்குத் தந்திருக்கிறதோ என்னவோ? உன்னுடைய இந்த வெறுப்புக்காகவும் நான் வருத்தப்படவில்லை. நீங்கள் வெறும் மனித உறவுகளுக்காக மட்டுமே நட்புச் செய்யத் தெரிந்தவர்கள். அந்த உறவுகள் உடையும்போது உங்கள் மனங்களும் மாறி விடுகின்றன. உங்களுடைய வாழ்வில் வீரமும் அன்புமே உங்களுக்கு எல்லைகள். அதில் ஓர் எல்லையை அழிப்பதற்கு என்னையறியாமலே நான் காரணமாயிருந்திருக்கிறேன். எனக்குப் புரிகிறது. அதற்காக என் மனமும் நோகிறது. மறுபடியும் பிறந்து இந்தப் பழங் கடனைத் தீர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது தவிர இப்போது நான் வேறொன்றும் முடியாதவனாக இருக்கிறேன். இந்த நிலையில் என்னுடைய வறுமை எனக்கே தெரிகிறது.

“முடிந்தால் உன் தங்கை முல்லையிடம் சொல்! நான் என்னுடைய தோள்களிலும் மார்பிலும் பட்டுக்கொண்டு வந்த புண்களை எல்லாம் முன்பு, ஒரு காலத்தில் அவள் தன் கைகளால் மருந்திட்டு ஆற்றியிருக்கிறாள். ஆனால் இன்று இந்தக் காலை வேளையில் அவளே என் மனத்தில் உண்டாக்கியிருக்கிற புண்ணை எங்கே எப்படி எந்தப் பிறவியில் ஆற்றிக் கொள்வது என்ற வேதனையோடு தான் நான் போகிறேன் என்று சொல். இதைத் தவிர இப்போது அவளுக்குச் சொல்ல என்னிடம் வேறு ஒன்றுமில்லை.”

இவ்வாறு கூறிவிட்டுச் சுரமஞ்சரியோடு தன் வழியில் விலகி நடந்தான் இளங்குமரன். வீதியில் சிறிது தொலைவு சென்றபின் அவன் மறுபடி திரும்பிப் பார்த்தபோது வரிசையாய் எல்லா வீடுகளின் முன்பும் முழுமையாயிருந்த கோலத்துக்கு நடுவே அந்த ஒரே ஒரு கோலம் மட்டும் அரைகுறையாயிருந்து தனியாய்த் தெரிந்தது. ஆம்! அந்தக் கோலம் முடியவில்லை. அதைத் தொடங்கியவளுக்கே எப்படி முடிப்பதென்று தெரியவில்லை.

அந்த வீதியின் கோடியில் திரும்பியபோது அதுவரை அடங்கிக் கொண்டிருந்த துயரம் கட்டுடைந்து வெடித்தாற் போல் அழுகை பொங்கும் குரலில் சுரமஞ்சரி அவனிடம் கூறினாள்:

“நான் ஒருத்தி உங்கள் வாழ்வில் குறுக்கிட்டு உங்களை அடைந்ததால் உங்களுக்கு எவ்வளவோ துன்பங்களை யெல்லாம் உண்டாக்கிவிட்டேன்.”

இதைக் கேட்டு அவன் சிரித்தான்.

“நானே விரும்பி ஏற்றுக் கொண்ட துன்பம் தானே இது? என்னைத் தோற்கக் கொடுத்து எனக்கு இன்பமாக நானே அங்கீகரித்துக் கொண்ட துன்பம் நீ! இப்போது மட்டும் திடீரென்று உன் மனத்தில் ஏன் இந்தக் கலக்கம் ஏற் படுகிறது? உனக்குக் கிடைத்த வெற்றிக்காக நீயே பயப்படுகிறாயா? என்னோடு வாதிட்டு முறையாக நீ என்னை வென்றதாக நினைத்துப் பெருமை கொள்வதை விட்டு விட்டுப் பேதை போல் நீ ஏன் வருந்துகிறாய்? உன் மேல் எனக்கு ஒரு கோபமும் இல்லை. உனக்குத் தோற்ற இடமே என்னுடைய வாழ்வில் சத்திய சோதனையின் நிறைவான இடமாகவும் இருக்கலாம். அந்த விநாடியில் நான் என்னுடைய சத்தியத்துக்கு மிகவும் அருகே நின்றிருக்கிறேன். என்னுடைய குணங்கள் தோல்வியிலும் நான் வெற்றியே பெற எனக்கு உதவியிருக்கின்றன. ஆற்றோடு மிதந்து வந்த பூமாலை நீராடிக் கெண்டிருந்தவன் மூழ்கியெழுந்தபோது அவனுக்கு நோக்கமும் எண்ணமும் இல்லாதபடியே அவன் கழுத்தில் நேர்ந்தது போலத்தான் எனக்கு நீயும் கிடைத்திருக்கிறாய்.”

“அப்படி உங்களை அடைந்தது என் பாக்கியம்தான்.”

பேசிக்கொண்டே நடந்து நடந்து அவர்கள் காவிரிக் கரையை அடைந்திருந்தார்கள். பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டது. காவிரிக்கரை மரக் கூட்டங்களில் இளம் கதிரொளி பொன்வெயில் தூவிக் கொண்டிருந்தது.

“இப்படித் தனியாக ஓர் ஆண்பிள்ளையோடு கால்கள் நோவ நடந்து துணை செய்வோரும், தோழிமாரும் இன்றி வந்து காவிரியில் நீராடும் சந்தர்ப்பம் இதற்கு முன் உன் வாழ்வில் என்றுமே நேர்ந்திருக்காது சுரமஞ்சரி.”

“இன்று இவ்வளவு பெரிய துணையோடு நேரவேண்டு மென்பதற்காகவே இதுவரை இப்படி நேரமால் இருந்தது போலும்.”

“தெரிந்துகொள்! இப்படி எதிர்பாராதது நேர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கை வீதியில் நம்மோடு நெருங்கிய துணையாக வரத் தவிப்பவர்கள்கூட ஏதேதோ கோபதாபங்களால் பாதி வழி யிலேயே நின்று போகிறார்கள். துணையாய் எப்போது எதற்காக வந்தார்கள் என்று தெரியாமல் நாமே சிலரை மறந்து விடுகிறோம். கடைசிவரை உடன் வருவதற்கு எவரேனும் சிலரால்தான் முடிகிறது. இந்த யாத்திரையில் நாமே சிலரை நடுவழியில் தவிக்கத் தவிக்க விட்டுவிட்டு மேலே நடந்து வந்துவிடுகிறோம். அதற்காகக் கலங்கி அந்த இடத்திலேயே நின்று அழிந்துகொண்டிருக்கவும் முடிவ தில்லை. கலங்காமல் மேலே நடந்து விடவும் தயக்கமாயிருக்கிறது. அந்தத் தயக்கம் நாம் இன்னும் மனிதர்கள் தான் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறது. நம்முடைய கல்வி, மனப்பக்குவம், பயிற்சியடைந்த உணர்வுகள் எல்லாம் அந்த விநாடிகளில் நம்மைக் கைவிட்டு விடுகின்றன. நாம் முயன்று சேர்த்துக் கொண்ட ஞானங்கள் எல்லாம் நம்மிடமிருந்து பிரிந்து நின்று கொண்டு அதோ அதுதான் உன் பிறப்பிலேயே நீ கொணர்ந்த சொந்த ஞானம் என்று நம்மிடம் மீதமிருக்கும் புத்தியைச் சுட்டிக் காட்டிச் சிரிக்கின்றன. ஈரேழு பதினான்கு புவனங்களையும் ஆட்டிப் படைக்கிற தவவலிமை பெற்ற பெரு முனிவர்களும் இந்த விதமான தளர்ச்சியைத் தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார்கள்.”

“நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை. ஆனால் நிறைகுடமாகிய உங்கள் மனமும் இப்போது எதற்காகவோ கலங்கித் தவிக்கிறதென்று மட்டும் புரிகிறது.”

“உனக்கு அவ்வளவு புரிந்தால் போதும் சுரமஞ்சரி!” என்று கூறிவிட்டுக் காவிரி நீரில் குளிப்பதற்கு இறங்கினான் இளங்குமரன். அவளும் இறங்கினாள்.

இருவரும் நீராடி கரையேறிய வேளையில் “இப்போது என் கண்கள் எதிரே காண்பது கனவில்லையே?” என்று பழகிய குரல் ஒன்று மிக அருகிலிருந்து அவர்களைக் கேட்டது. இளங்குமரன், சுரமஞ்சரி இருவருமே அந்தக் குரலைப் புரிந்து கொண்டு நிமிர்ந்து பார்த்தார்கள்.

மேலேயிருந்து ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவி பதுமையும் காவிரியில் நீராடுவதற்காகப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப்பின் ஓவியன் மணிமார்பனைச் சந்தித்த சுரமஞ்சரிக்கு அவனிடம் பேசவும் நலம் தெரிந்து கொள்ளவும் ஆவல் எழுந்தது. அந்த ஆவலும் நாணமும் போராடக் கணவ னோடு ஒன்றினாற்போல நின்றாள் அவள். நினைத்த சொற்களைப் பேச வரவில்லை. அதற்குள் ஓவியனே அவர்களை நோக்கிப் பேசினான்:

“ஐயா! நீங்கள் இருவரும் இப்படியே சிறிது நேரம் நில்லுங்கள். இந்தக் காட்சி என் கண்களில் நிறையட்டும். உமையொரு பாகனாகச் சிவபெருமான் நிற்பதுபோல் இந்தக் காலை வேளையில் எங்களுக்குக் காட்சியளிக்கிறீர்கள். இந்தப் புனிதமான வைகறை வேளையில் இதைக் கண்ட கண்கள் வாழ்க. ஓவியத்தில் பல முறை இப்படி உங்களை ஒன்று சேர்த்து எழுதி மகிழ்ந்திருக்கிறேன் நான். எனக்குத் திருமணமாகிய சில தினங்களில் நானும் என் மனைவியும் இயற்கை வளம் காண்பதற்காக பொதிகை மலைக்கு மகிழ்ச்சி உலாப் புறப்பட்டுப் போயிருந்தோம். அன்று என் மனைவி பதுமை என் மனத்துக்குப் பெரிதும் விருப்பமான ஓவியம் எதையாவது நான் அந்த மலைச் சூழலில் வைத்து வரைய வேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டாள். என் மனத்தில் முதல் முறையாக நான் பூம்புகாருக்கு வந்து திரும்பிய காலத்திலிருந்து நாளும் இடைவிடாமல் எழுதிக் கொண்டிருக்கிற ஓவியம் எதுவோ அதையே அன்று பொதிகை மலையில் அவளுக்கும் வரைந்து காண்பித்தேன். அந்த ஓவியத்தில் காதலர் இருவர் கற்பனையாய் ஒன்று சேர்ந்திருந்தனர். அவர்கள் மெய்யாகவே ஒன்று சேர்ந்திருப்பதை இன்று நானும் என் மனைவியும் இப்போது எங்கள் கண் எதிரே காண்கிறோம். நீங்கள் இருவரும் வாழ்க்கைப் படகில் இன்று ஒன்றாகவே பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள். காதற் படகில் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்வதாக நான் என் மனைவியிடம் முன்பே வரைந்து காட்டி மகிழ்ந்த ஓவியங்கள் கணக்கற்றவை.”

“மணிமார்பா! நீ பரிசுத்தமான கலைஞன். அதனால் தான் உன்னுடைய பழைய கற்பனைகள் எல்லாம் இன்று உன் கண்களே காணும்படி மெய்யாக மலர்கின்றன. இதோ என் பக்கத்தில் நாணி நிற்கிற பெருமாளிகைப் பெண் இப்படி என்னை அடைந்ததற்காக நன்றி செலுத்த வேண்டியவர்கள் யாராவது இருப்பார்களானால் அது நீ மட்டும்தான். நீண்ட காலத்துக்கு முன்பு அன்று இந்திர விழாக் கூட்டத்தில் நீ என்னைச் சந்தித்தபோது என் உருவத்தை ஒரே ஒருமுறை வரைந்து கொள்வதற்கு மட்டும் உன்னிடம் நான் இணங்கினேன். ஒன்றும் தெரியாத அப்பாவிக் கலைஞனைப் போலிருந்து கொண்டே என் வாழ்க்கையை இப்படி வேறு விதமாக மாற்றி வரைந்து முடித்திருக்கிறாய் நீ! யாரை அதிகமாக வெறுத்தேனோ அவளுக்குப் பக்கத்திலேயே இன்று இப்படி நெருங்கி நின்று விடும்படியான சந்திப்புக்கள் தொடக்கத்தில் அன்று உன் காரணமாகவே நேர்ந்தன.

“இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு எண்ணிப் பார்க்கும்போது நான் உனக்கும் சிறிது தோற்றுப் போயிருப்பதை உணர்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு சுரமஞ்சரி எணாக்கு எழுதிய மடலை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, ‘இப்படிப் பெண்களின் அன்பினால் உலகத்தில் மகாகாவியங்கள். பிறந்திருக்கின்றன ஐயா!’ என்று நீ என்னிடம் கூறியபோது ‘அப்படி மகா காவியங்களைப் படைக்கின்ற அன்பை அந்த ஏழடுக்கு மாளிகையி லிருந்து எதிர்பார்க்க முடியாது’ என மறுமொழி கூறி உன்னை மறுத்தேன் நான். ‘அன்பின் சக்தி அளப்பரியது. அதற்குமுன் சாதாரண உணர்வுகள் தோற்று விடுகின்றன. ஒரு காலத்தில் இதே பெண்ணின் சிரிப்புக்கு - நீங்கள் தோற்றுப்போனால்கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்’ என்று அன்றைக்கு என்னிடம் அறைகூவி விட்டு அதன் விளைவாக நான் உணர்ச்சி வசப்பட்டு உனக்குச் செய்த துன்பத்தையும் நீ ஏற்றுக் கொண்டு போயிருந்தாய். சொன்னபடியே இன்று எங்களை இந்தக் கோலத்தில் சேர்த்துப் பார்த்த பின்பும் நீ ஆச்சரியப்படாமல்தான் நிற்கிறாய். நேற்றிரவு நீலநாகரை அழைத்துக் கொண்டு பட்டினப்பாக்கத்து மாளிகைக்கு வந்தபோதும் நீ என் நிலைகளைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. இன்று இந்த மாறுதலைக் கண்டும் சிரித்துக் கொண்டுதான் நிற்கிறாய்!”

“அப்படி எல்லாம் என் வார்த்தைகளுக்குப் பெரிய பெரிய அர்த்தங்களைக் கற்பிக்காதீர்கள். ஏரல் எழுத்துப் போல் நான் நினையாததெல்லாம், நினைத்துத் திட்டமிட்டதை ஒப்பத் தற்செயலாக நடந்திருக்கின்றன. அந்தப் பெருமாளிகைச் செல்வருக்கும் உங்களுக்கும் உள்ள பகைமைகள் உங்களுக்கே நன்றாகத் தெரிந்த பின்பும் நீங்கள் இப்படி விட்டுக் கொடுத்துக் கருணை மறவராக நிற்பதுதான் இந்த வாழ்வுக்குக் காவியப் பெருமையைத் தருகிறது. ஆனால் நீலநாகரைப் போன்றவர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.”

“அவர் இதை ஒப்புக் கொள்ளாததற்கும் அவருக்கு என் மேலுள்ள அன்புதான் காரணம் மணிமார்பா! அவர் ஒரு பெரிய மலைச்சிகரம். அதே உயரத்துக்கு நீ வேறு சிகரங்களைத் தேடக் கூடாது. எல்லா மனிதர்களுடைய மனத்தையும் அந்தச் சிகரத்தின் உயரத்தினால் அளக்கவும் முயலக்கூடாது. கருங்கல்லாய் இறுகிப் போயிருக்கும் அந்தச் சிகரத்தின் உச்சியிலிருந்து கூடப் பாசமும், அன்பும் ஊறிப் பெருகுவதுண்டு.”

“உண்மைதான் ஐயா! வயிற்றுப் பசியும் கவலைகளும் இல்லாத உலகம் ஒன்று ஏற்பட்டால் அங்கே அன்புதான் விலை மதிப்பற்ற செல்வமாக இருக்கும். மற்ற எல்லாச் செல்வங்களும் மதிப்பிழந்து போகும். மற்ற எல்லாச் செல்வங்களும் மதிப்போடு இருக்கிற காரணத்தால்தான் சில சமயங்களில் பசி, கவலை, குரோதங்களினால் அன்பைப் பற்றி மறந்து போகிறோம். இந்தப் பெரு மாளிகைச் சகோதரியாருடைய தந்தையும் அவரைச் சேர்ந்தவர்களும் இத்தனை காலம் குரோதத்தினால் தான் அன்பை மறந்து போயிருந்தார்கள் போல் இருக்கிறது. ஆனால் இப்போது உங்களருகே நாணி நிற்கும் இந்தச் சகோதரியார் தன் குடும்பத்தின் வரலாற்றையே மாற்றி விட்டுப் புது வழியில் உங்களோடு இறங்கி வந்துவிட்டார்” என்று கூறிக்கொண்டே நீராடுவதற்காக கீழே படிகளில் இறங்கினான் மணிமார்பன்.

அவனும் பதுமையும் நீராடிவிட்டு வருகிறவரை இளங்குமரனும் சுரமஞ்சரியும் கரையில் காத்திருந்தார்கள்.

தன்னருகே நீராடிய ஈரம் புலராமல் மேகக் காடாய்ச் சரிந்த சுரமஞ்சரியின் கூந்தலிலிருந்து கிளரும் நறுமணங்களை உணர்ந்து இளங்குமரன் தன் கண்களால் அவளை நன்றாகப் பார்க்கத் தொடங்கியபோது, எல்லா அணி கலன்களையும் இழந்த பின்பும் பிறந்த போதே உடன் பிறந்து, வளர்ந்த போதே உடன் வளர்ந்து நிறைந்த இயற்கை வனப்புகளையே போதுமானவைகளாகக் கொண்டு பேரழகியாய் மணந்து கொண்டிருந்தாள் அவள். ‘இவற்றில் தெரியும் அழகு மிகுதியா? நாணம் மிகுதியா?’ என்று பிரித்துக் காண முடியாத கவர்ச்சி நிறைந்த கண்கள், ‘நான் கனிந்திருக்கிறேன்! நான் கனிந்திருக்கிறேன்’ என்பதைச் சொல்ல மொழியின்றித் துடிப்பதுபோல மெல்ல அசையும் செல்லச் செவ்விதழ்களின் நகைக் கனிவு வார்த்தைகளால் பேச முடியாததைப் பேசும் நளினமான சிரிப்பு, இவ்வளவும் நிறைந்து தோன்றினாள் சுரமஞ்சரி. காலைக் கதிரொளியில் அவள் முகமும் கைகளும் பாதங்களும் மெருகிட்ட செம்பொன்னாகி மின்னின.

எத்தனை அழகுகள்! எத்தனை அழகுகள்! அத்தனை அழகுகளையும் புதிதாய் இன்றுதான் புரிந்துகொள்வது போல் அவளைப் பார்த்தான் இளங்குமரன்.

இப்போது மூன்றாவது முறையாகவும் அவனுடைய பார்வையே அவளைப் புதுமணப் பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது.

“சுரமஞ்சரி ! உன்னுடைய நாணமே உனக்குப் பெரிய அணிகலன்.”

“அது உங்களுடைய பார்வையிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. உங்கள் கண்களின் பார்வையாலேயே நான் அலங்கரிக்கப்படுகின்றேன்.”

“அப்படியானால் வேறுவிதமான அலங்காரங்களுக்கு நீ ஆசைப்படவில்லை போலும்.’

இந்தச் சொற்களைக் கேட்டு அவளுடைய இதழ்களில் அதுவரை சுரந்திருந்த நகை சற்றே மலர்ந்து புன்னகையாய்ப் பிறந்தது. பின்பு பெருநகையாகவும் வளர்ந்தது. மெல்ல நெகிழ்ந்த பவழச் செவ்வாயில் பற்கள் முத்துக்களாய் ஒளி வீசின. விடிகாலையில் ஒவ்வோர் இதழாய் மலரும் பூவைப்போல் அவள் முகத்தில் உணர்ச்சிகள் மலர்ந்து கொண்டும் மணந்து கொண்டும் நின்றன. கன்னங்களில் குங்குமச் சிவப்பு பரவியது. கால் விரல் தரையைக் கிளைக்கலாயிற்று.

‘இன்று இந்த வேளையில் தன் முன் இப்படி நாணிக் குலைந்து நிற்கிற இதே பெண்தானா நேற்று அப்படி யெல்லாம் ஆற்றல் வாய்ந்த சொற்களைத் தேடித் தனக்கு முன் வாதிட்டாள்?’ என்று எண்ணி வியந்தான் இளங்குமரன். அவள் அழகுகள் ஒவ்வொன்றும் இப்போதுதான் புரிந்த புதுமைகளாய் அவன் மனத்தில் நிறைந்தன.

மணிமார்பனும் அவன் மனைவியும் நீராடிவிட்டுக் கரைக்கு வந்தபின்பு எல்லாருமாக அங்கிருந்து ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குப் புறப்பட்டுப் போனார்கள். எல்லாரும் படைகலச் சாலைக்குள் நுழைகிறபோது சுரமஞ்சரி மட்டும் வாயிலிலேயே தயங்கி நின்றாள்.

முன்பு ஒருநாள் பின்னிரவு வேளையில் நகரமே உறங்கிக் கிடந்த பேரமைதியினிடையே வசந்தமாலையும் தானுமாகத் தேர் ஏறி வந்து இதே படைகலச் சாலையில் இளங்குமரனைத் தேடியபோது, வாயிற்கதவருகே நின்று தன்னைத் தடுத்த அந்த இரும்பு மனிதரை நினைத்துக் கொண்டு பயந்தாள் அவள்.

சுரமஞ்சரி மருண்டு போய்த் தயங்கி நிற்பதன் காரணம் இளங்குமரனுக்குப் புரிந்தது.

“பயப்படாமல் என்னோடு உள்ளே வா. உலகத்தில் எல்லாரும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் தாம். நீலநாகரும் அகற்கு விதிவிலக்கில்லை. நீ இப்போது இங்கே என் வாழ்க்கைத் துணையாகி என்னுடனே வருகிறாய்...” என்று இளங்குமரன் அவளைக் கைப்பற்றி உள்ளே அழைத்துக்கொண்டு போனான்.

அவனையும் சுரமஞ்சரியையும் சேர்த்துப் பார்த்ததும் நீலநாகர் வெறுப்போடு அலட்சியமாகத் தலையைக் குனிந்து கொண்டார். பின்பு இளங்குமரனிடம் நேருக்கு நேர் பேச விரும்பாதவர் போல மணிமார்பனை விளித்துப் பேசினார்:

“மணிமார்பா! உன்னுடைய நண்பன் இப்போது இங்கே எதற்காக வந்திருக்கிறான்? தன்னுடைய தோல்வியைக் கொண்டாடுவதற்காக இப்படி இங்கே திரும்பி வந்திருக்கிறானா என்று அவனைக் கேள்!”

“எந்தத் தோல்வியைச் சொல்கிறீர்கள்?” என்று இளங்குமரனே சிரித்தபடி அவரை எதிர்க்கேள்வி கேட்டான். எனினும் அவர் அவன் பக்கம் திரும்பாமலே பேசினார். முதலில் இருந்த கடுமை மட்டும் சற்றே குறைந்து விட்டாற் போல அவருடைய பேச்சு அவனை நோக்கியே பிறந்தது.

“இதே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் கற்றுப் பயின்று உரமேறிய இணையற்ற வீரமும், திருநாங்கூர் அடிகளிடம் குருகுலவாசம் செய்து பெற்ற வரம்பிலா ஞானமும் இப்படி இந்தப் பகைவன் மகளின் வளை சுமக்கும் கைகளுக்காகத் தோற்றுப்போய் விட்டாற் போலிருக்கிறது. இந்தத் தோல்விக் கோலத்தை நானும் காண வேண்டும் என்று என் முன்னாலே வந்து இப்படி நிற்க வெட்கமாக இல்லையா உனக்கு?”

“வெட்கமாக இல்லை. பெருமையாகத்தான் இருக்கிறது. என் பெருமைக்குக் குறைவின்றி நானே விரும்பித் தோற்ற தோல்விதான் இது. இந்தத் தோல்வியில் எந்த விதமான தாழ்வையும் நான் உணரவில்லை. பெருமைப் படத்தக்க தோல்வி இது. எல்லாவற்றையும் வென்று கைப்பற்றி நிமிர்ந்து நிற்கும் துணிவைப் போல எல்லாவற்றையும் விட்டு விடுகிற துணிவும் வீரனுக்கு இருக்க வேண்டும் என்று நீங்களே என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறீர்கள். யாரை மிக எளிதாக நம்மாலே வென்றுவிட முடியும் என்று நாம் உணர்கிறோமோ அவர்களுக்கே தோற்றுப்போய், விட்டுக் கொடுத்து விடுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது. பரிபூரணமான தெய்வீக இன்பம் அது. இந்த விதமான தோல்விக்குக் காரணமாக இருப்பது நமது கருணைதானே ஒழியப் பலவீனமன்று. தங்களால் வெல்ல முடிந்தவர்கள் மேலும் கருணை கொண்டு அவர்கள் தங்களுக்கு ஒப்பான நிலையில் தங்களை எதிர்த்து வெற்றி பெற முடியாததை எண்ணி இரங்கி அவர்களுக்கும் வெற்றி மகிழ்ச்சியை அளித்துப் பார்க்கலாமே என்ற பெருந்தன்மையோடு தோற்கிற தோல்வியைச் சான்றோர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தத் தோல்வி சான்றாண்மையின் இலக்கணம். இதில் வெற்றியைவிட அதிகமான சுகம் உண்டு. அந்தச் சுகத்தை இப்போது நான் அடைந்து விட்டேன்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
  • ‘சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
    துலையல்லார் கண்ணும் கொளல்.’
என்று சால்பின் பண்பு சொல்லப்பட்டிருக்கிறது. பெரிய காரியங்களைச் சாதிப்பதற்காகவே மனத்தை ஆள வேண்டும் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். பிறருக்காக விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்கிற இந்தத் தோல்வி பெரிய காரியமில்லை என்று நீங்கள் எப்படிக் கூற முடியும்? அன்பையும் வீரத்தையும் தவிர, எங்கள் வாழ்வுக்கு வேறு எல்லைகள் இல்லை என்கிறார் வளநாடுடையார்! நீங்களோ நெகிழ்ச்சியில்லாத முரட்டு வீரம் ஒன்றைத் தவிர உங்கள் வாழ்வுக்கு வேறு எல்லையே இல்லை என்கிறீர்கள். தியாகப் பண்பு என்ற ஒன்று எனது வாழ்க்கையின் இணையற்றதொரு பேரெல்லையாக இருப்பதை நீங்களெல்லாம் மறந்துபோய் விட்டீர்களோ, என்னவோ? நெகிழ்ச்சியே சிறிதும் இல்லாத கொடுமை மறவராக நீங்கள் உங்களுடைய வாழ்க்கையைப் பழக்கிக் கொண்டுவிட்டீர்கள்.”

“என்னை நான் அப்படிப் பழக்கி வைத்துக் கொண்டிருந்தது உண்மைதான்! ஆனால் உன்மேல் பாசமும் அன்பும் கொள்ளத் தொடங்கிய நாளிலிருந்து அந்த இறுகிய குணத்தினின்றும் நான் என்னைத் தளர்த்திக் கொள்ளும்படி ஆகிவிட்டது. அப்படித் தளர்த்திக் கொள்ள நேராமல் நான் என் போக்கிலேயே இருந்திருந்தால் எவ்வளவோ விதங்களில் எனக்கு நன்றாயிருக்கும். உன் மேல் அன்பு கொண்ட காரணத்தால் எனக்கு உண்டாகிய கவலைகள் ஏற்பட்டிருக்காது. நான் என்னுடைய கடமைகளைத் தவிர வேறு எந்தவிதமான உலக பந்தங்களிலும் சிக்கியிருக்க மாட்டேன். உன்னைப் போல் அழகும் வீரமும் ஞானமும் நிறைந்த இளைஞன் ஒருவனை என் மாணவனாக இந்த வாழ்க்கை வழியில் சந்தித்திருக்கா விட்டால் நான் எந்த மனிதன் மேலும் அன்பு, நெகிழ்ச்சி, பாசம், நமக்கு வேண்டியவனுக்கு இன்ன இடத்திலே இன்னது நேரிட்டு விடுமோ என்ற கவலை இவற்றை யெல்லாம் உலகத்தில் நான் உணர்வதற்குக் காரணமாக இருந்த முதல் மனிதன் நீ; கடைசி மனிதனும் நீதான்.

“மறுபடியும் உன்னிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீ மீண்டும் என் வாழ்க்கையில் குறக்கிடாதே. அன்பையும் பாசங்களையும் என்னை உணரச் செய்யாதே. கடுமையான வீரத் துறவியாகவே என்னை வாழவிடு. உன்னைச் சந்திப்பதற்கு முன்பு எப்படியிருந்தேனோ அப்படிக் கர்ம வீரனாக வாழவிடு. நீ இங்கிருந்தால் எனக்கு உன்மேல் ஏற்பட்டுவிட்ட பாசங்களாலேயே நான் என் வழியில் கடுமையான இறுக்கத்தோடு வாழ முடியாமல் போய்விடலாம். உன்னுடைய வாழ்வு எப்படி யிருந்தாலும் நீ மலர்ந்த மனத்தைப் பெற்றவன். கட்டுகளுக்கு நடுவேயும் விடுபட்டு வாழ முடிந்தவன். நான் இப்போது எதை உன்னுடைய தோல்வியாக நினைத்து ஏளனம் செய்கிறேனோ அதையே நீ உன்னுடைய வெற்றியாக என்னிடம் நிரூபிக்கிறாய். அப்படி நிரூபிப்பதற்கு நீ கற்றிருக்கிற கல்வியும், தத்துவங்களும் உனக்குத் துணை செய்கின்றன. நீ நிரூபிப்பதை மறுப்பதற்கு என்னிடம் சொற்கள் இல்லை.”

எப்படியோ கோபத்தோடு பேச்சைத் தொடங்கிக் கொதித்தவர் இறுதியில் இப்படித் தன்னை நோக்கிக் கண் கலங்கி நின்றபோது, இளங்குமரனுக்கு அவருடைய உண்மை நிலை புரிந்தது. அந்தப் பெரு வீரருடைய கண்களையும் கலங்கச் செய்துவிட்ட பாவத்துக்கு வருத்தியவனாகிய அவன் தயங்கி நின்றான். முல்லையைப் போலவே இவரும் வேறு ஒருவிதமான அன்புப் பிடிவாதத்தினால் தான் தன்னிடம் இந்தச் சினமும் இந்தக் கலக்கமும் அடைந்து நிற்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. தன்மேல் அவர் வைத்துவிட்ட அன்பே அவரை இந்த இரண்டுங் கெட்ட நிலைக்கு ஆளாக்கி வேதனைப் படுத்துகிறது என்பதை அவன் விளங்கிக்கொண்டான்.

அந்த நிலை விளங்கியவுடனே தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவனால் தெளிவாக உணர முடிந்தது. அப்படி உணர்ந்த உடனே சுரமஞ்சரியோடு அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் அவன். பின்பு நிதானமாக எழுந்து நின்றுகொண்டு, “எங்களுக்கு விடை தந்தருளுங்கள் ஐயா! உங்களுடைய கடுமையான வீர வாழ்க்கைக் கடமை மறுபடி உங்களுடைய கிடைக்கட்டும். கடுமையான வாழ்க்கையினால் இந்தச் சோழநாட்டுக்கு அந்த ஆயிரமாயிரம் புதிய வீரர்கள் தோன்ற வேண்டும். அதற்கு நான் ஒருவன் தடையாக இருக்க விரும்பவில்லை. என்மேல் அன்பு கொள்வதன் காரணமாக வீரர்களைத் தோற்றுவிக்கிற பெருவீரரின் மனம் அப்படிச் சலனமடைய நேர வேண்டாம்” என்று நெகிழ்ந்த மனத்தோடு அவரை வேண்டிக்கொண்டு தன் மனைவியுடனே புறப்பட முற்பட்டான் இளங்குமரன்.

நீலநாகர் இளங்குமரனுக்காக மட்டும் இதுவரை சற்றே நெகிழ்ந்து திறந்திருந்த தம் மனத்தின் உணர்ச்சிக் கதவுகளை இப்போது நன்றாக இறுக்கி அடைத்துக் கொண்டு மறுபடியும் கர்ம வீரராக மாறி அவர்களை வாழ்த்தி விடை கொடுத்தார். அப்படி விடை கொடுத்த போது அவர் கண்களில் நீர் கலங்கவில்லை. மனத்தில் எந்தப் பாசமும் இல்லை. சலனங்களே இல்லாமல் மனம் தெளிந்திருந்தது. இளங்குமரனும் சுரமஞ்சரியும் படைக் கலச் சாலையிலிருந்து வெளியேறிய போது மணிமார்பனும் அவன் மனைவியும் கூட அவர்களோடு சேர்ந்தே புறப்பட்டுவிட்டார்கள்.

அன்று மாலை பூம்புகார் நகரம் நான்கு பேர்களுக்குத் தன் எல்லையிலிருந்து மானசீகமான விடைகொடுத்தது. இந்த நால்வரும் தன் மண்ணின் மேல் நின்றும் நடந்தும் ஆடியும் ஓடியும் பழகிய நாட்களை அந்தப் பழம் பெரும் நகரம் என்றுமே மறக்க முடியாதுதான். இவர்கள் அங்கு வாழ்ந்த நாட்களில் இவர்களுக்கு ஏற்பட்ட சுகதுக்கங்களும் வெற்றி தோல்விகளும் அந்த நகரத்துக்கு நன்றாக நினைவிலிருக்கும். அதன் மண்ணிலும் காற்றிலும் அந்த நிகழ்ச்சிகள் சுவடுகளாய் அழியாமல் மணந்துகொண்டே யிருக்கும்.

ஓவியன் மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும், பாண்டிய நாட்டுக்குப் புறப்பட்டார்கள். “நண்பனே! மறுபடியும் வாழ்க்கை வீதியில் எங்காவது என்றாவது சந்திப்போம்” என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத் தான் இளங்குமரன். சுரமஞ்சரி நன்றி நிறைந்த கண்களால் ஓவியனை நோக்கிக் கைகூப்பினாள். அவர்கள் செல்ல வேண்டிய வழிகள் பிரிந்தன. வீதியில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் தான். நெருங்கிப் பழகிய பல பேர்களுடைய வழிகளிலிருந்து இவர்களும் இவர்களுடைய வழிகளிலிருந்து அந்தப் பல பேரும் இன்று இந்த மாலை வேளையில் இப்படிப் பிரிந்து விலகிப் போய்விட்டார்கள். மறுபடி சந்திக்க நேர்கிற வரை இவையெல்லாமே பிரிவு தான். மறுபடி சந்தித்தாலும் அதன் பின்னும் மறுபடி பிரிவு இருக்கும். இப்படிச் சந்திப்பும் பிரிவும்தான் வாழ்க்கை. சந்தித்தால் பிரிவதையும், பிரிந்தால் சந்திப்பதையும் தவிர்க்க முடியாது.

“விரைவில் வருகிறேன், கவலைப்படாதே” என்று மணிநாகபுரத்திலிருந்து தான் புறப்பட்டு வரும்போது தன் தாய் மாமன் மகனான குலபதியிடம் கூறிவிட்டு வந்திருந்த சொற்களை நினைவு கூர்ந்தவனாகத் தன் துணைவி சுரமஞ்சரியோடு மணிபல்லவத் தீவுக்குப் புறப்பட்டான் இளங்குமரன்.

அன்று மாலை இளங்குமரன் சுரமஞ்சரியோடு கப்பல் ஏறுவதற்காகப் பூம்புகார்த் துறையில் நின்று கொண்டிருந்த சமயத்தில் அப்போதுதான் மணிபல்லவத்திலிருந்து வந்து கரை சேர்ந்த கப்பல் ஒன்றிலிருந்து விசாகை எதிரே இறங்கி வந்துகொண்டிருந்தாள். இந்தச் சந்திப்பு வியக்கத் தக்கவாறு அங்கே நேர்ந்தது. இளங்குமரன் சுரமஞ்சரியை விசாகைக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டுத் தன் வாழ்வில் நிகழ்ந்த புது மாறுதல்களை எல்லாம் அவளிடம் சொன்னான்.

அவையெல்லாவற்றையும் கேட்டுவிட்டு விசாகை புன்முறுவல் பூத்தாள். பின்பு அவனை நோக்கிச் சொல்லலானாள்:

“இப்போது நாம் இங்கே எதிரெதிர்த் திசைகளில் எதிரெதிர் வழிகளில் பிரிவதற்காக இந்த மாலை வேளையில் விடை பெறுகிறோம். நெடுங்காலத்துக்கு முன் இப்படி ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும் என்றுதான் என் தந்தை என்னைச் சுயம்வர மண்டபத்துக்குள் அழைத்துப் போய் நிறுத்தினார். அன்று நான் இந்த வாழ்வின் வாயிற்படிக்கருகே போய் விட்டுத் திரும்பி வேறு வழியில் வந்தேன். நீங்களோ இதற்கு எதிர் வழியிலிருந்து நடந்து வந்து இந்த வழிமேல் நின்று கொண்டீர்கள். உங்களை வாழ்த்துகிறேன். உங்களுடைய இந்தத் தோல்விக்கும் எல்லையற்ற கருணைதான் காரணமாக இருக்கிறது. இதே வாழ்க்கையோடு இந்த உலகத்தில் நான் தனியாக என்னால் முடிந்த அறங்களைச் செய்து கொண்டிருக்கிறேன். இந்த உடம்பில் உயிரும், கைகளில் பிச்சைப்பாத்திரமும் இருக்கிற வரை விசாகையின் தருமம் குறைவில்லாமல் நடைபெறும். நீங்களும் இல்லற வாழ்வில் உங்களால் முடிந்த தருமங் களைச் செய்யுங்கள். என் துறவு நெறி நான் மட்டும் தனியாகச் செய்கிற அறம். உங்கள் மனைவாழ்வோ நீங்கள் இரண்டுபேரும் சேர்ந்து செய்கிற அறம். ஆகவே நீங்கள் தான் என்னைக் காட்டிலும் அதிகமான அறங்களை இனிமேல் உலகத்துக்குச் செய்ய வேண்டும்.

“நான் புத்த பூர்ணிமைக்காக யாத்திரை புறப்பட்டு வருகிறபோதெல்லாம் மணிநாகபுரத்துக்கும் வந்து உங்களைக் காண்பேன். நான் கூறியபடியே அலைகளைக் கடந்து அலைகளின் நடுவே போய் நீங்கள் வாழப் போகிறீர்கள். நீங்கள் பிறந்த தீவைப் போலவே உங்கள் வாழ்வும் தத்துவமாக நிலைத்து நிற்கட்டும். ஞானிகள் மணிபல்லவத் தீவைச் சக்தி பீடமாகக் கூறுகிறார்கள். முறையாகச் சுற்றி நிலை திரும்புகிற தேர்போல உங்கள் வாழ்வு அங்கே போய் நிறைகிறது” என்று கூறி விசாகை அவர்களை வாழ்த்தி விடை கொடுத்தாள்.

அப்போது, விசாகை தன்னைப் பிரிந்து செல்வதற்கு இருந்த அந்தக் கடைசி விநாடியில் இளங்குமரன் அவளிடம் ஓர் உதவி கோரினான்.

“அம்மையாரே! பாத்திரத்திலிருந்து இட முடியாத பிச்சை ஒன்று இந்தக் கடைசி விநாடியில் உங்களிடமிருந்து எனக்கு வேண்டும்.”

“என்ன பிச்சை அது?”

“பசிக்கிற வயிறுகளுக்கும், தவிக்கிற மனங்களுக்கும் ஆறுதல் அடையத்தக்க நிறைவு உங்களிடமிருந்தே கிடைக்க வேண்டும். இந்தப் பூம்புகாரின் புறவீதியில் உங்களுடைய ஆறுதலுக்காக ஒரு பேதைப் பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். முதலில் நீங்கள் அவளுடைய துக்கத்தைப் போக்க வேண்டும். அதன்பின் அவளை வேறு விதமான வாழ்க்கைக்குத் துணியும்படி பயிற்ற வேண்டும்?”

“யார் அந்தப் பேதைப் பெண்?”

“வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லை. அவளைச் சந்தித்து அவளுடைய துன்பங்களுக்கு நீங்கள் அடிக்கடி ஆறுதல் கூற வேண்டும்.”

“அவளுக்கு என்ன துன்பம்?”

“உங்களைப் போன்ற புனிதவதிகளுக்குப் பெரிதாகப்படாத துன்பம் அது! அந்தத் துன்பத்தை என் சொற்களால் நான் உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. அப்படிச் சொல்வதற்கு நானும் என் மனமும் கூசி நிற்பதற்குரிய செய்தி அது. அந்தப் பெண்ணின் துன்பங் களுக்கு இனிமேல் உங்கள் வார்த்தைகள் தான் மருந்தாக வேண்டும். ஆனால் இந்த வேண்டுகோளை நான் உங்களிடம் வேண்டியதாக அவளுக்குத் தெரியலாகாது.”

“புரிகிறது! துக்கமும் வேதனையும் நிறைந்து கிடக்கும் இந்த உலகத்தின் பொது வழிகளிலிருந்து பிரித்து என்னுடைய வழியில் நான் அழைத்துக் கொண்டு போவதற்கு ஒரு பெண்ணை நீங்கள் எனக்குச் சுட்டிக் காட்டுகிறீர்கள். அவளை அந்த வழியில் அழைத்துச் செல்ல எனக்கு ஒரு மறுப்பும் இல்லை. இந்த உதவியை அவசியம் உங்களுக்கு நான் செய்கிறேன்” என்று ஒப்புக் கொண்டாள் விசாகை, தன் கண்களின் பார்வையாலேயே புண்ணியத்தைப் பரப்பவல்ல அந்தத் தெய்வீகப் பெண்ணுக்கு இப்போது மீண்டும் வணக்கம் செலுத்தி விடை கொடுத்தான் இளங்குமரன். சுரமஞ்சரியும் பயபக்தியோடு விசாகையை வணங்கினாள். “நீ கொடுத்து வைத்தவள் பெண்ணே! எவராலும் வெல்ல முடியாத மனத்தை உன் அறிவினால் வென்றிருக்கிறாய்” என்று தன்னை வணங்கிய சுர மஞ்சரியை வாழ்த்திவிட்டுச் சென்றாள் விசாகை.

இளங்குமரன் சுரமஞ்சரியோடு அந்தக் கப்பலில் ஏறிய போது பூம்புகார் நகரின் மேல் அந்திமாலை சூழ்ந்து கவிந்து கொண்டிருந்தது. நகர வீதிகளின் மாடங்களில் எல்லாம் அந்தி விளக்குகள் மின்னத் தொடங்கியிருந்தன.

“இந்த நகரத்தையும் இதன் உறவுகளையும் விட்டுப் பிரிவதனால் உன் மனம் எந்த விதத்திலும் கலங்க வில்லையா, சுரமஞ்சரி?”

“நான் அடைந்திருப்பது பெரிதாக இருக்கும்போது இழந்ததை எண்ணி வருந்த முடியாது.”

“இழந்ததை எண்ணி வருந்தத்தான் வேறு ஒருத்தி இருக்கிறாளே” என்று கூறியபடி இளங்குமரன் சுரமஞ்சரியைச் சோதனை செய்யும் குறிப்போடு அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். அவளுடைய கண்களில் கலக்கம் தெரிந்தது. அதே கலக்கத்தை அப்போது தன் கண்களுக்கு முன் அங்கே இல்லாத இன்னொரு முகத்திலும் கற்பனை செய்து பார்த்தான் அவன். அந்தக் கற்பனையே வேதனை அளிப்பதாயிருந்தது.

கப்பல் நகர்ந்தது. கரை மெல்ல மெல்ல விலகியது. விசாகையின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டான் அவன். எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள் அவை!

‘முறையாகச் சுற்றி நிலைதிரும்புகிற தேர்போல் உங்கள் வாழ்க்கை அங்கே போய் நிறைகிறது.’

அப்போது சுரமஞ்சரி மெல்லிய குரலில் அவனைக் கேட்டாள்:

“நம்முடைய பயணம் எப்போது முடியும்? என்றைக்கு நாம் கரை சேருவோம்?”

“எந்தப் பயணத்தைப் பற்றிக் கேட்கிறாய் சுரமஞ்சரி? நம்முடைய இந்தப் பயணம் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அதற்கு அப்புறம்தான் நம்முடைய சொந்தப் பயணம் தொடங்குகிறது. அந்தப் பயணத்திலிருந்து நாம் கரை சேர எவ்வளவு காலமாகுமோ? விசாகையைப் போல் நான் தனியாகவே நடத்த முடியாமல் போய்விட்ட பயணம் அது. இனிமேல் அதற்காகக் கவலைப்பட்டும் பயனில்லை. நன்றாக விடுபட வேண்டுமானால் நன்றாகக் கட்டுண்டு தான் தீரவேண்டுமென்று அருட்செல்வ முனிவர் அன்றொரு நாள் சிரித்தபடியே என்னிடம் கூறிவிட்டுப் போனார். அந்த சில வார்த்தைகளுக்குள் இவ்வளவு பெரிய விளைவுகள் அடங்கியிருக்கு மென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. உன்னை ஏற்றுக் கொண்டதோடு என் பாசங்கள் முடிந்து விடவில்லை. இனிமேல்தான் ஒவ்வொரு பாசமாகத் தொடரப் போகிறது, என் தாய்மாமன் மகனான குலபதி மணிநாகபுரத்தில் எனக்காகவே என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டி ருப்பான். நாமும் அங்கே போய்த்தான் இனிமேல் வாழப் போகிறோம். நம்முடைய வாழ்க்கையைப் பார்த்தே இனி அவன் தன்னுடைய பழைய துக்கங்களை எல்லாம் மறந்து விடுவான்...” என்று கூறி நெட்டுயிர்த்தான் இளங்குமரன்.

கடலில் அலைகள் சரிந்து சரிந்து மீண்டு கொண்டிருந்தன. பூம்புகார் தொலைவில் மங்கியது. அதன் சதுக்க நினைவுகள் அவர்கள் மனங்களில் தங்கின. தன்னருகே கரையைப் பார்த்தபடி கண் கலங்கி நின்று கொண்டிருந்த சுரமஞ்சரியை நோக்கிச் சிரித்தான் இளங்குமரன்.

அவனுடைய அந்தப் பார்வை அவளை மணப் பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது. அதற்கு நாணி நிமிர்ந்தும் நிமிராமலும் நளினமாகத் தலையைச் சாய்த்து கடைக்கண்களால் அவனைக் காண முயன்றாள் அவள்.

அவள் அப்படிப் பார்க்க முயன்ற முகம் எதுவோ அதிலிருந்து அவளுடைய வாழ்க்கை பிறந்தது. அவ னுடைய கண்பார்வையினால் அவள் மலர்ந்து நின்றாள். பின்பு அந்த மலர்ச்சி வாடவே இல்லை. அப்படியே நெடுங்காலத்துக்கு வாழ்கின்ற நித்தியமான மலர்ச்சியாய் அது வளர்ந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
5.15. ஆறாத நெருப்பு

காவிரியின் நீர்ப்பெருக்கைப் போல வற்றாமல் ஓடிக் கொண்டிருந்த கால வெள்ளத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு அப்பால் மறுபடியும் ஒரு நிகழ்ச்சி.

நாற்பது ஆடிப் பெருக்குகளும், நாற்பது இந்திர விழாக்களும் கனவுகளாய் விரைந்து ஓடி மறைந்த பின் நாற்பத் தொன்றாவது ஆண்டின் சித்திரை மாதமும் பிறந்துவிட்டது!

அதோ! அந்த வள்ளுவ முதுமகன் வச்சிரக்கோட்டத்து முரசை யானை மேலேற்றி முரசறைந்து கொண்டே ‘பசியும் பிணியும் நீங்கி வளம் சுரக்க வேண்டும்’ என்ற மங்கல வாக்கியத்துடன் தொடங்கி இந்த ஆண்டிலும் இந்திர விழா வரப்போவதை நகரத்துக்கு அறிவிக்கிறான்; தேச தேசாந்திரங்களில் இருந்தெல்லாம் இந்திர விழாவுக்காக மக்கள் வந்து பூம்புகாரில் கூடுகிறார்கள். நகரம் திருவிழாக் கோலம் கொண்டு பொலிகிறது. அந்த ஆண்டு இந்திர விழாவின் கோலாகலத்தில் சமயவாதிகளின் பங்கு வழக்கம்போல் நிறைந்திருந்தது.

அந்தத் திருவிழாவின் இடையே ஒருநாள் சமயவாதிகள் மிகுந்து கூடியிருக்கும் நாளங்காடி வானவீதியில் இப்படி ஒரு விநோதமான சம்பவம் நடைபெறுகிறது.

அன்று காலையில் போது விடிந்ததிலிருந்து அந்த ஞான வீதியில் கூடியிருந்த சமயவாதிகள் யாவரும் ஒரு பெண்ணின் வாதத்துக்கு எதிர் நிற்க முடியாமல் தொடர்ந்து தோற்றுப் போய்க் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணைக் கண்டு அதிசயப்படாதவர் இல்லை. வரிசையாய்ப் பல பேர்களுடைய நாவற்கிளைகளை வீழ்த்திவிட்டு வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். அவள் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவள் என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கூறிக் கொண்டனர்.

அந்தப் பெண்ணைப் பற்றியச் செய்திகள் நகர் முழுவதுமே பரபரப்பாகப் பரவியிருந்தன. அவள் சமயவாதிகளை வென்று வெற்றி மேல் வெற்றி பெறும் இந்த அதிசயத்தைக் காண நாளங்காடியில் இடம் போதாமல் பெருங் கூட்டம் கூடிவிட்டது. அந்த அதிசயப் பெண்மணியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் கடல் கடந்த நாடுகளிலிருந்து இந்திர விழா பார்க்க வந்தவர்கள் எல்லாம் கூட நகரின் வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதை மறந்து விட்டு நாளங்காடியில் வந்து கூடியிருந்தனர். அவ்வளவு சிறப்பாக இந்திர விழாவுக்குப் பெருமையூட்டிக் கொண்டிருந்தது அவளுடைய அறிவுப்போர். காலையிலிருந்து பொழுது சாய்கிற நேரம் நெருங்குகிற வரை அவளை எதிர்த்து வெல்வதற்கு யாரும் இல்லை. எதிர்த்து வந்து கொடியை ஊன்றியவர்கள் எல்லாம் அவளுக்குத் தோற்றுக் கொண்டேயிருந்தார்கள்.

சாயங்கால வேளை, தோற்றவர்கள் கைகளிலிருந்து வரிசையாய்ச் சரிந்து வீழ்ந்து கிடந்த நாவற் கிளைகளுக்கு நடுவே மதம் பிடித்த பெண் யானை போன்ற அறிவுச் செருக்குடனும் “என்னை எதிர்த்து வந்து வாதிடுவதற்கு இன்னும் யாரேனும் உண்டோ?” என்ற வினாவுடனும் நிமிர்ந்து நிற்கிறாள் அந்தப் பெண். அவளுடைய வயதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடி துறவு ஒழுக்கங் களாலும் புலனடக்கத்தாலும் பொலிவு பெற்ற முகத் தோற்றம் அவளுக்கு வாய்த்திருக்கிறது. அவளுடைய தழல் நிற மேனியைத் துறவு நெறிக்குறிய சீவர ஆடை அணி செய்து கொண்டிருக்கிறது.

கையில் கொடியேந்தி நின்று கொண்டு மலர்ந்த முகமும் தூய சிரிப்புமாக வாதுக்கு வருகிறவர்களை எதிர்பார்க்கிறாள் அவள். அவளுக்கு எதிரியே கிடைக்கவில்லை. அந்த ஞான வீதியில் அவளே தன்னிகரற்று நின்று கொண்டிருக்கிறாள்.

மனைவியோடும் குழந்தை குட்டிகளோடும் இந்திர விழா பார்க்கக் கடல் கடந்து வந்திருந்த நாகநாட்டு முதியவர் ஒருவர் அவளை நோக்கி குனிந்து தலை நிமிராமல் கூட்டத்தின் ஒரு கோடியிலிருந்து விரைந்து நடந்து வருகிறார்.

அருகே வந்து அவள் முகத்தை ஏறிட்டு நிமிர்ந்து பாராமலே, “நான் உன்னோடு வாதிட வந்திருக்கிறேன்” என்றார் அவர்.

இதைக் கேட்டு அவள் அலட்சியமாகச் சிரிக்கிறாள்.

“முதியவரே! இந்த வயதில் மனைவி மக்களோடு இந்திர விழாப் பார்க்க வந்த இடத்தில் இங்கே என்னைப் போல ஒரு பெண்ணுக்குத் தோற்க ஆசையாக இருக்கிறதா உமக்கு!”

“நீ என்னை வென்று பின்னர் பேச வேண்டிய வார்த்தைகள் இவை!”

“இத்தனை பேர்களை வென்ற எனக்கு உங்களை வெல்வது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.”

“முடிந்தால் வென்றுகொள். ஒரு காலத்தில் உன்னைப் போல் நானும் இந்த வீதியில் வெற்றி நடை நடந்திருக் கிறேன்.”

“இன்று தளர்நடை நடக்கிறீர்கள்.”

இந்த வார்த்தைகளால் தாக்கப்பட்டுக் கோபத்தோடு அவளருகில் நெருங்கி வந்து நன்றாக அவளை நிமிர்ந்து பார்த்தார் அவர்.

அவள் அந்த மனிதரின் முகத்தைப் பார்த்துவிட்டு அப்படியே அயர்ந்து போய் நின்றாள். அவளுடைய கையிலிருந்த கொடி நழுவியது. மனத்திலிருந்து பகைமை நழுவியது, மனமும் உடம்பும் புல்லரித்து நடுங்கின.

“முல்லை! நீயா?” என்று அந்த மனிதர் தாங்கொணாத வியப்போடு தன்னை நோக்கிக் கேட்ட கேள்விக்கு அவள் மறுமொழி கூறவில்லை. விழிகளில் கண்ணிர் பெருக நின்றாள். எந்த மனிதரை எண்ணி எண்ணிப் பல ஆண்டுகளுக்கு முன்பே அவள் தன்னைத் தோற்றுப் போயிருந்தாளோ அந்த மனிதரே இப்போது இப்படி முதியவராய் வந்து எதிரே நிற்கிறார். அந்த மனிதரின் அருகே நின்ற மக்களையும் சிறுவர் சிறுமிகளையும் அவர்களின் தாயையும் ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள் முல்லை.

“ஐயா! உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே ஒரு முறை எதற்கோ தோற்றுப் போயிருக்கிறேன் நான். மீண்டும் என்னைப் புண்படுத்தாமல் இங்கிருந்து போய் விடுங்கள்” என்று வாதத்தைத் தொடங்காமலே தான் அவனிடம் தோல்வியடைந்து விட்டதாகச் சொன்னாள் அவள். சுற்றிலும் கூடியிருந்த கூட்டத்துக்கு இது வியப்பாக இருந்தது. பெரிய பெரிய ஞான வீரர்களின் கொடிகளை யெல்லாம் துணிந்து வாதிட்டுச் சாய்த்த வீராங்கனை இன்று இந்தத் தளர்ந்த மனிதருக்கு முன் ஏன் இப்படித் தன் கொடியைத் தானே சாய்த்துக் கொண்டு தோற்றுப் போய் நின்றாள் என்று கூட்டத்தில் கூடியிருந்தோர் புரியாமல் மருண்டனர்.

“இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்னும் ஒருமுறை என்னை அறிவில் தோல்வியடையச் செய்து பார்க்க உங்களுக்கு ஆசையாயிருக்கிறதா? உங்களிடம் முன்பு நான் அன்பில் தோற்றதை மறக்கவே எனக்கு இத்தனை ஆண்டுகள் போதவில்லை. நான் படித்த நூல்களும் என்னுடைய துறவும், விசாகை எனக்குச் சொல்லிப் பயிற்றிய தத்துங்களும் கூட இன்னும் என் உள்ளத்தின் பழைய நெருப்பை அவிக்க முடியவில்லை. அதே நெருப்பை இன்று நீங்கள் மேலும் வளர்க்க விரும்புகிறீர்களா?” என்று அவள் தன்னை நோக்கிக் கேட்ட கேள்விக்கு மறுமொழியின்றித் தலையைக் குனிந்து கொண்டு வந்தது போலவே திரும்பினான் இளங்குமரன்.

தன் மனைவி மக்களை உடனழைத்துக் கொண்டு அவன் அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறியபோது, “சுரமஞ்சரி நாம் திரும்பவும் இன்றே மணிநாகபுரத்துக்குக் கப்பலேறி விடுவோம். இவ்வளவு காலத்துக்குப் பின்பு இந்த நகரத்துக்கு நாம் புறப்பட்டு வந்த வேளை நல்ல வேளையில்லை போலிருக்கிறது” என்று மனைவியிடம் கூறினான்.

“ஏன்?” என்று அவன் மனைவி சுரமஞ்சரி திகைத்துப் போய் அவனைக் கேட்டாள்.

“உனக்கு இவளைத் தெரிகிறதா சுரமஞ்சரி?” என்று பதிலுக்குத் தன் மனைவியைக் கேட்டான் அவன்.

அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

“நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்த நகரின் புறவீதியில் ஒரு காலை வேளையில் நீயும் நானும் காவிரிக்கு நீராடப் போய்க் கொண்டிருந்தபோது தன்னுடைய கோலத்தை முடிக்கத் தெரியவில்லை என்று அழுது கொண்டு ஓடினாளே; அவளுடைய புதுக்கோலம் இது.”

“பாவம்! இத்தனை காலத்துக்குப் பின்னும் அவளுடைய மன நெருப்பு ஆறவில்லை போலிருக்கிறது” என்ற சுரமஞ்சரியும் அவனோடு சேர்ந்து கொண்டு அந்தப் பெண்ணுக்காக அநுதாபப்பட்டாள்.

ஆனால் மற்றொரு புறம் அவனுக்கு முன் தன் நாவற் கிளையைத் தானே சாய்த்த அந்தப் பேதைப் பெண்ணோ நாளங்காடியின் ஒரு மூலையில் யாருமில்லாததொரு மரத்தடியில் போய் கண்ணிர் பெருக வீற்றிருந்தாள்.

அவளுடைய துயரத்துக்கு முடிவு ஏது! பாவம்! காலம் அதை ஆறச் செய்யட்டும்!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top