பாசத்துடன்... குமிழியின் நேசம் பகிர விழைகிறேன்!!!
மதுரையை களமாகக் கொண்ட கதை.
மதுரை மண்ணின் வாசம்... மல்லிகையை போல மணம் வீசுகிறது.
எழுத்தாளர் தனது எளிய நடையில், வழமைபோல நம்மை கவர்கிறார்.
வருண பாண்டியன், பெயரில் மட்டும் அல்ல!
குணத்தாலும் பாண்டியர்களுக்கு உண்டான விழிப்பற்ற, எளிதாக நம்பும், அவசரக்காரனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான். அவசர புத்தியினால் எதிர்கொள்ளும் சங்கடங்களை சரி செய்ய எடுத்துக் கொள்ளும் அவனது முயற்சிகளை, இயல்பான நடையால் பகிர்ந்து கொண்டிருக்கிறார், ஆசிரியர்.
சிவுனியா, ஆதரவற்ற நிலையில் தாயின் அரவணைப்பில் வளர்ந்த பெண். 90-களில் பிறந்த பெண்ணாக சிவு சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். உலகம் அறிந்தவளாய் இல்லாமல், நட்பை நம்பி, எதிர்பாரா இடரில் சிக்கி நிற்கும் நிலை அருமையாக ஆசிரியரால் எடுத்தாளப்பட்டிருக்கிறது.
வெளுத்ததெல்லாம் பாலாக எண்ணி தனது தோழி அபர்ணாவை நம்பி ஏமாந்தவள், திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையில், சூடு கண்ட பூனையாக அவளின் வாழ்க்கையை விழிப்போடு எதிர்கொள்கிறாள்.
செங்கமலம், அருமையான தாயாக இருந்தாலும், அறியாமையினாலும், அவசரத்தினாலும் தனது மகளின் மனதில் குழப்பத்தை விதைத்து, தனது தவற்றிற்கு பிராயச்சித்தம் செய்ய முடியாதவராய் வந்து போகிறார்.
கோதை அருமையான கதாபாத்திரம். சிறந்த தாய். அருமையான மாமியார்.
இராமலிங்கம், கதிர், இரவி போன்ற கதாபாத்திரங்கள் அவரவர் பாத்திரங்களை மெருகேற்றியிருக்கும் வண்ணம், ஆசிரியர் அருமையாக எழுதியிருக்கிறார்.
மொத்தத்தில், அருமையான கதைக்களம்.
பருவ வயதில்... பக்குவம் இல்லா பாதசாரியைப் போல வாழ்வின் நிகழ்வுகளை எதிர்கொண்டால் உண்டாகும், சமூக துன்பங்களை கூறி, அதிலிருந்து மீள எடுத்துக் கொள்ளும் கால அவகாசம், கருவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
யாரும் மிஸ் பண்ணிறாம... கண்டிப்பா படிங்க...
படிச்சிட்டு... உங்களோட கருத்துகளையும் மறக்காமல் பகிர்ந்து, ஆசிரியரை ஊக்கப்படுத்துங்கள்.
அன்புடன்... சரோஜினி